Monday, August 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 259

கொரோனா ஊரடங்கு : உதவிப்பணிகள் மேற்கொள்ளும் மதுரை மக்கள் அதிகாரம் !

துரை யா. ஒத்தக்கடை கொரோனா உதவிக்குழு மூலமாக உலகனேரி, காளிகாப்பான், புதுப்பட்டி, திருமோகூர், ராஜகம்பீரம் மற்றும் ஒத்தக்கடையின் பல பகுதிகள் என ஏழு நாட்களில் 3500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு கபசுர குடிநீரும் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடுகளில் சொந்தமாக தைத்து 200-க்கும் மேற்பட்ட மக்களுக்கான முகக் கவசமும் மக்கள் அதிகாரம் தோழர்கள் விநியோகம் செய்தனர்.

மேலும், நலிந்த தொழிலாளர்கள், உடல் ஊனமுற்றோர், கணவரை இழந்த பெண்கள் மற்றும் ஆதரவற்ற 20 குடும்பங்களுக்கு “மதுரை மாநகர் கொரோனா உதவிக்குழு” ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் மூலமாக பொருட்கள் பெறப்பட்டு முதல் சுற்றாக- ரூபாய் 1000 மதிப்பளவிலான 10 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 1 லிட்டர் எண்ணெய், பிரட், பிஸ்கட், நாப்கின் மற்றும் மளிகை பொருட்களும் இரண்டாவது சுற்றாக, அடுத்த 20 தொழிலாளர் குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, அரை கிலோ துவரம் பருப்பு, அரை கிலோ உளுந்து மற்றும் மளிகைப் பொருட்களும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மூன்றாவதாக, 5 கிலோ அரிசி, பருப்பு, எண்ணெய், பிஸ்கட் மற்றும் மளிகை சாமான் அடங்கிய பொருட்களுடன் 27 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கான உதவியை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் மூலமாக பெறப்பட்டு பொருள்கள் வாங்கி விநியோகிக்கப்பட்டது.

யா.ஒத்தக்கடை பகுதியில் மக்கள் அதிகாரம் தோழர்கள் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் துணையோடு நன்கொடை பெற்று தொடர்ச்சியாக பல்வேறு உதவிகளை சமூக இடைவெளியைக் கடைபிடித்து செய்து வருகின்றனர். ஆகையால், இந்த கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டு பட்டினியோடு வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி,

மக்கள் அதிகாரம்,
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு : 98943 12290.

கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மக்களுக்கு கிடைக்குமா ?

3

கோவிட்-19 கொள்ளை நோய் எவ்வகையில் முடியும் ? தற்போது பரிசோதனையில் உள்ள ஏதேனும் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் வெற்றி பெற்றால், இன்னும் சில மாதங்களில் முடிந்துவிடும் என்பது பொதுவான ஒரு விருப்பம். இன்னும் சில வருடங்களில் ஒரு தடுப்பூசி கிடைக்கப் பெற்றால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த வைரசை ஒழித்துவிடமுடியும்.

எனினும் ஒரு கொள்ளைநோய் உண்மையில் இவ்வாறான வகையில் கடந்து செல்லும் என்பதை சொல்ல முடியாது. கொரோனா வைரஸ் பிரச்சினைக்கான சிகிச்சைகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரிந்தாலும், கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவை அனைத்து மக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக இருப்பதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. சொல்லப் போனால், முந்தைய பிற கொள்ளை நோய்களுக்கான சிகிச்சை முறைகள் மற்றும் தடுப்பு மருந்துகள் எவ்வாறு காப்புரிமைகளின் (Patents) கீழ் புதைக்கப்பட்டு, யார் வாழவேண்டும், யார் சாகவேண்டும் என்பது மருந்து நிறுவனங்களால் எப்படித் தீர்மானிக்கப்பட்டு முடிக்கப்பட்டதோ, அவ்வகையிலேயே கோவிட்-19 கொள்ளை நோயும் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

ஒரு விஞ்ஞானி பிரேசில் சவோ பவுல், ஹார்ட் நிறுவனத்தில் கோவிட்-19 எதிர்ப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படம். (படம் – நன்றி : த கார்டியன்)

பொதுவாக, ஒரு சரக்கின் மீது தனிச்சிறப்பான கட்டுப்பாட்டை செலுத்தவல்ல நிறுவனங்களான ஏகபோகங்களை முதலாளித்துவ சந்தையின் தோல்விகளாகவும், இதனை வணிகப் போட்டிச் சட்டங்களின் மூலமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்றும் எண்ணுகிறோம். மருத்துவ காப்புரிமைகளும் சட்டப்பூர்வமான ஏகபோகங்களுக்கு நிகரானவையாகும். மருத்துவக் காப்புரிமைகள், மருத்துவம் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு மூலதனமிடும் மருந்து நிறுவனங்களுக்கான பரிசு.

முக்கியமாக இந்த காப்புரிமைகள் 20 ஆண்டுகளுக்கு மட்டுமே நீடிக்கக் கூடியவை – தற்காலிகமானவை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் எதார்த்தத்தில் இந்த மருந்துகளின் சூத்திரங்களில் சிறுமாற்றங்களைச் செய்து அதற்குக் காப்புரிமை பதிவு செய்வதன் மூலம் இந்த காலகட்டத்தை அதிகரித்துக் கொள்கின்றன, மருந்து நிறுவனங்கள். இதன் மூலம் சந்தைப் போட்டியை தவிர்த்து விடுவதோடு, பெரும் மருந்து நிறுவனங்களின் கையில் அதன் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அளிக்கின்றன.

படிக்க:
♦ கொரோனா நிவாரணப் பணிகளில் மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !
♦ கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்

1996-ம் ஆண்டு அமெரிக்காவில் எச்.ஐ.வி – எயிட்ஸ் நோய்க்கான சிகிச்சையை சில மருந்து நிறுவனங்கள் ஒன்றிணைந்து சந்தைக்குக் கொண்டு வந்தன. மீளூட்டு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் கலப்பை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சைமுறை எச்.ஐ.வி. வைரசால் உண்டாக்கூடிய மரணத்தை நாட்பட்ட பிணியாக மாற்றவல்லவை. இந்த சிகிச்சையை ஒரு நபருக்கு வழங்க ஆண்டுக்கு 6500 பவுண்டுகள். (1996-ம் ஆண்டில் இந்திய மதிப்பின் படி ரூ.4,55,000). உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த விலைக்குத்தான் விற்கப்பட்டது. சிகிச்சையே எடுக்க முடியாதபடிக்கு விலை இருந்தது. இலட்சக்கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டு இறந்த பின்னர், கடந்த 2004-ம் ஆண்டுதான் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இந்த சிகிச்சையை பயன்படுத்த முடிந்தது.

கொரோனா வைரஸுக்கான சிகிச்சைகளுக்கான வாய்ப்பை மருத்துவ ஏகபோகங்கள் எவ்வாறு தடை செய்துள்ளன என்பதை ஏற்கெனவே நாம் பார்த்து வருகிறோம். சுகாதாரப் பணியாளர்களுக்கு போதுமான N95 முகக்கவசங்கள் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் 3M என்ற நிறுவனம் சுவாசப் பாதுகாப்பு உபகரணங்களுக்கான சுமார் 400க்கும் மேற்பட்ட காப்புரிமைகளை வைத்துக் கொண்டு, அதனைப் பிற நிறுவனங்கள் தயாரித்து அமெரிக்காவில் வழங்க முடியும் என்பதை கட்டுப்படுத்துகிறது. இந்த கொள்ளை நோய்ச் சூழலில் காப்புக் கருவிகளின் உற்பத்தியை அதிகரிக்க, 3M நிறுவனம் தனது காப்புரிமைகளை விடுவிக்க வேண்டும் என பல அரசியல்வாதிகள் கேட்டுள்ளனர்.

கோவிட்-19 பரிசோதனைகள் மிகவும் பற்றாக்குறையாக இருப்பதற்கு மத்தியில், ஒரு பிரெஞ்சு பரிசோதனைக் கருவி உற்பத்தியாளர், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அவசர ஒப்புதலுக்காக ஒரு சோதனைக் கருவியை வடிவமைத்து சமர்ப்பித்தார். ஜப்பானைச் சேர்ந்த சாஃப்ட்பேங்க் குழுமத்தைச் சார்ந்த ஒரு நிறுவனம் அதற்கு எதிராக காப்புரிமை மீறல் வழக்குத் தொடுத்தது. (பின்னர் அது திரும்பப் பெறப்பட்டது)

தற்போது பரிசோதனையில் இருக்கக் கூடிய கொரோனா வைரசிற்கான நம்பிக்கைதரக் கூடிய சிகிச்சைகளில் பெரும்பான்மையானவை காப்புரிமையோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. இன்ஃப்ளூவன்சா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஃபாவிபிராவிர் , எச்.ஐ.வி சிகிச்சைக்காக கலெட்ரா என்ற பெயரில் விற்கப்படும் ’இயோப்பினவின் மற்றும் ரிட்டொனவிர் மருந்துகளின் கலவை மருந்து’ ஆகியவை குறைந்த காலகட்ட காப்புரிமையைக் கொண்டுள்ளன. கிலீட் எனும் உயிரி தொழில்நுட்ப நிறுவனம் வரும் 2038 ஆண்டு வரைக்குமான பல முக்கிய மருந்துகளின் காப்புரிமையைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம்தான் எபோலா வைரசிற்கான மருந்தான ரெம்டெசிவிர்-ஐ உருவாக்கியது.

இந்த ரெம்டெசிவிர் மருந்தை கொரோனா வைரசிற்கு மருந்தாக பயன்படுத்துவதைத் தடுக்க இந்நிறுவனம் இம்மருந்திற்கு “ஆதரிக்கப்படவேண்டிய மருந்து” (Orphan Drug) தகுதியைக் கோரியது. “ஆதரிக்கப்படவேண்டிய மருந்து” தகுதியில் உள்ள ஒரு மருந்து என்பது – அரிதான ஒரு நோய்க்கு தயாரிக்கப்படும் மருந்தாகும். அரசாங்க அதனை லாபகரமான முறையில் தயாரிக்க முடியாது என்ற வகையான மருந்தாகும். ஆனால் கோவிட்-19 இதற்கு நேர் எதிரானது. அது அரிதான நோயும் அல்ல. அந்த நிறுவனம் பின்னர் இந்த முயற்சியைக் கைவிட்டது.

படிக்க:
♦ சாபு மண்டல் ஒரு தொழிலாளி – கொரானாவும், முன்னேற்பாடு ஏதும் செய்யாத அரசும் அவரை கொன்றுவிட்டன !
♦ கொரோனா நிவாரணம் : ஏப்ரல் 26 ஞாயிறு அன்று தமிழக அளவில் அரசை வலியுறுத்தும் கவன ஈர்ப்பு நிகழ்வு

கோவிட்-19-க்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், அது பல காப்புரிமைகளால் அமுக்கப்படுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு. தற்போது தடுப்பு மருந்துகள்தான் மிகப்பெரிய வியாபாரம். உதாரணத்திற்கு நிமோனியாவினால் ஏற்படும் குழந்தை மரணங்களை எடுத்துக் கொள்ளலாம். தற்போது நிமோனியாவிற்கு இரண்டு தடுப்பு மருந்துகள் நடைமுறையில் இருக்கின்றன. அவை ப்ஃபிசர் மற்றும் க்லாக்சோஸ்மித்க்லைன் ஆகிய இருநிறுவனங்களின் காப்புரிமையால் அழுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியா ப்ஃபிசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை பயன்படுத்துகிறது. ஒரு குழந்தைக்கான முழு திட்டத்திற்கான மருந்தின் விற்பனை விலை $250 (இன்றைய ரூபாய் மதிப்பில் ரூ. 19,125) ஆகும். ஆனால் கவி (GAVI) எனும் உலகளாவிய தடுப்பூசி / நோயெதிர்ப்புக் கூட்டணி நிறுவனத்தினால் மானிய விலையில் 8 பவுண்டுக்கு (ரூ. 756) இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கில் இம்மருந்தின் தேவை இருக்கும் சூழலில், இந்த மானியவிலையும் கூட கட்டுப்படியானதாக இல்லை. இதன் காரணமாக குழந்தைகளில் வெகு சிறிய பங்கினரே இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. நிமோனியாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து 40 ஆண்டுகள் கழிந்த பிறகும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நோய்க்கு 1,27,000 குழந்தைகள் உயிரிழக்கின்றன. நிலைமை இப்படி இருக்கையில் இந்த தடுப்பு மருந்து மட்டும் ப்ஃபிசர் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 4.5 பில்லியன் பவுண்டு (ரூ. 42,562 கோடி) வருமானத்தை ஈட்டித் தந்து கொண்டிருக்கிறது.

மருத்துவ சிகிச்சைகளின் மீதான ஏகபோக கட்டுப்பாட்டைக் கையாளுதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுத்து வருவதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. காப்புரிமைகளுக்கு உரிமம் பெறுதல் கட்டாயமாக்கப்படுவது பிரபலமாகி வருகிறது. சட்டப்பூர்வமான வகையில் அந்த நாடுகள் ஒரு பொருளின் மீதன காப்புரிமையை தற்காலிக ரத்து செய்யலாம். கொள்ளை நோய் சூழல், கட்டாய உரிமத்தை அவசியப்படுத்துவதாக கடந்த மாதத்தில் சிலி அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பிற நாடுகளும் இதைப் பின்பற்றின.

இஸ்ரேல் இயோப்பினவிர் மற்றும் ரிட்டோனவிர் ஆகிய தடுப்பு மருந்துகளுக்கு கட்டாய உரிமம் வழங்கியுள்ளது. கோவிட்-19 தொடர்பான அனைத்து காப்புரிமைகளுக்கும் சுகாதார அமைச்சர் கட்டாய உரிமம் வழங்கவேண்டும் என ஈக்குவேடார் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. கனடாவும், ஜெர்மனியும் தங்களது காப்புரிமை சட்டத்தில் விரைவான கட்டாய உரிமம் வழங்குவதற்கான திருத்தத்தை மேற்கொண்டுள்ளன. பிரேசில் கட்டாய உரிமத்தகை எளிமைப்படுத்துவதற்கான சட்டத்திருத்தத்தை தனது காப்புரிமை சட்டத்தில் மேற்கொள்வதற்கான வழிமுறையில் உள்ளது.

இந்த நடவடிக்கைகள் பயனுள்ளவைதான் என்றாலும் ஒவ்வொரு நாடும் தனியாகவே இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதாகிறது. மேலும் கொரோனா வைரஸ் சிகிச்சைகளைப் பெறுவதற்கு காப்புரிமைகள் மட்டும் தடையாக இல்லை. உலகளாவிய கோவிட்-19 தொழில்நுட்ப சேர்மம் (Global Covid-19 Technology Pool) ஒன்றை உருவாக்குவதற்கான முன்மொழிதலை கோஸ்டா ரிகா நாடு உலக சுகாதார நிறுவனத்திடம் முன்வைத்திருக்கிறது. இந்த தொழில்நுட்ப சேர்மத்தில், தேவையான காப்புரிமை, வடிவமைப்புகள், வர்த்தக ரகசியங்கள் மற்றும் மென்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அறிவுசார் சொத்துரிமைகளும் அனைத்தும் உட்கொண்டுவரப்படும். அந்த சேர்மம் தங்களது கண்டுபிடிப்புகளை பகிர்ந்து கொள்ளவும், உலகளாவிய அளவில் அது கிடைக்கச் செய்யவும் அரசாங்கங்களை ஊக்கப்படுத்தும்.

இந்த முன்மொழிதல் திட்டமாக நிறைவேறுவதிலிருந்து வெகுதூரம் பின் தங்கியிருந்தாலும், இதற்கான ஆதரவு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் ஆட்சியாளர்கள் இந்த கருத்தாக்கத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்கள். உலக சுகாதார மையத்தின் இயக்குனர் ஜெனரல் கோஸ்டா ரிக்காவின் இந்த முன் மொழிதலை வரவேற்றிருக்க, யூனிடெய்ட் (UNITAID) அமைப்பும் இத்திட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதாக அறிவித்திருக்கிறது.

இது ஒரு கொள்ளைநோய் என்ற வகையில், எந்த ஒரு கார்ப்பரேட்டும் தம்மை கோவிட்-19-க்கான ஏகபோகமாக நிலைநாட்டிக் கொள்ள முடியாது. கோவிட்-19 சிகிச்சைகள் ஏகபோக கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டிருந்தால் அனைவருக்கும் சிகிச்சை சென்றடைவதில் நாம் உண்மையில் வெற்றி பெறுவோம். இது ஒருவேளை நடந்தால், கோவிட் 19 மட்டுமல்லாது பிற நோய்களிலிருந்து தப்பிப் பிழைக்க இத்தகைய மருந்தக அமைப்புதான் நமக்குத் தேவை என்பதை நாம் உணர முடியும்.

கட்டுரையாளர்கள் : அச்சல் பிரபலா, எல்லென் டி ஹோயென்
தமிழாக்கம்: நந்தன்
மூலக்கட்டுரை, நன்றி :  த கார்டியன். 

பின்குறிப்பு : இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் UNITAID மற்றும் GAVI ஆகிய அமைப்புகள் பில்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் துணையுடன் நடத்தப்பட்டு வரும் அமைப்புகள் ஆகும். ஒருபுறம் இதுபோன்ற அறக்கட்டளைகள் மூலம் மருத்துவத்தை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முயற்சிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் பில் கேட்ஸ், இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் மருந்து ஏகபோகங்களையும் கையில் வைத்துக் கொண்டிருக்கிறார். பெரும்பான்மையான மக்களை உயிருடன் மட்டும் வைத்திருப்பது என்ற அளவில் பராமரித்து வரும் இத்தகைய அறக்கட்டளைகளின் புரவலர்கள்தான் மருந்தக ஏகபோகங்களில் முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கொள்ளை நோய் என்ற வகையில் கோவிட்-19-ஐ எதிர்கொள்ள ஒன்றிணைய முனைந்திருக்கும் சில நாடுகளும் கூட சாதாரண நிலைமைகளில் எக்காரணம் கொண்டும் காப்புரிமைகளை ரத்து செய்வது அல்ல, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் கூட துணியாது. உலக முதலாளித்துவக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் மருந்து நிறுவனங்களின் ஏகபோகத்தை ஆதராத்துடன் அம்பலப்படுத்தும் விதமாகவே இக்கட்டுரையை தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம்.

கொரோனா நிவாரணப் பணிகளில் மதுரை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !

கொரோனா ஊரடங்கால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கு அவர்களது வறுமை நிலையை மட்டுமே கருத்தில்கொண்டு மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பாக அரிசி, பருப்பு உள்ளிட்ட பலசரக்குப் பொருட்கள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த முத்துப்பட்டி, நைனாகுளம், ஈசனி, மானாமதுரை, மூங்கிலூரணி, மற்றும் சில கிராமங்கள் மதுரை மாவட்டத்தைச் சார்ந்த வலையங்குளம், குசவன்குண்டு, குதிரை குத்தி மற்றும் மதுரை நகர் உதிரி தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் மேலவாசல் ஆகிய பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

05-04-2020, 07-04-2020, 13-04-2020, 18-04-2020 ஆகிய நாட்களில் நான்கு கட்டமாக செயற்குழு உறுபினர்கள் வி.அய்யாக்காளை, வெ.பிச்சை, உறுப்பினர்கள் பெ.ரா.பெருமாள், சிதம்பரம், ஆதித்தன் டெய்லர் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் உதவியுடன் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு எவ்வித பாகுபாடும் பாராமல் வழங்கப்பட்டது. கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பேரசிரியர்கள் சிலர் மனமுவந்து அளித்துவரும் நன்கொடைகள் மூலமாக இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. துணைத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் அவர் குடியிருக்கும் திரு நகர் பகுதியில் தன்னார்வலர்களுடன் இணைந்து கப சுரக் குடி நீர் மற்றும் உணவுப்பொருள் வினியோகம் செய்துவருகிறார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன், மதுரை மாவட்ட நிர்வாகத்தில் தன்னார்வலராகப் பதிவு செய்து கொண்டதுடன் 20 பேர் கொண்ட “மதுரை மா நகர் கொரோனா உதவிக்குழு” அமைத்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி வருகிறார்.

படிக்க:
♦ கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்
♦ நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

காவல்துறையின் கெடுபிடிகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காதது, விலைவாசி உயர்வு, போக்குவரத்துப் பிரச்சினை இத்தனையும் தாண்டி பாதிக்கப்பட்டவரை அணுகும் போது அங்கே இருக்கும் தேவையும் நமது உதவியும் எதிர்விகிதத்தில் காணப்படுகிறது. அத்தனை பேருக்கும் எப்படித் தருவது. அரசு என்ன செய்கிறது?

அரசு, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு மட்டும் ரூ.1000/- மற்றும் அரிசி, பருப்பு, பாமாயில், கோதுமை இலவசமாக வழங்கியுள்ளது. கூலி ஏழை மக்கள் நெருங்கி வாழும் சில பகுதிகளில் ரூ.200/- க்கு மற்ற மளிகைப் பொருட்கள் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பிற அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள் மட்டும் இலவசமாக வழங்கியுள்ளது. நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு ரூ.1000/- மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு கஷ்டப்படுகிற அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கிவிட்டதாக திருப்தி அடைந்துகொள்கிறது. ஆனால் உண்மை நிலவரம் என்ன? ஒரு மாதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இது போதுமானது தானா என்பது பற்றி அரசு கவலைப்படவில்லை.

வளையங்குளம் பகுதியில் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் ம.உ.பா.மை. தோழர்கள் :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

குடும்ப அட்டை இல்லாமலும், நலவாரியங்களில் உறுப்பினராக இல்லாமலும் பல ஆயிரம் உள்ளுர் மக்கள், புலம் பெயர்ந்த மக்கள் உள்ளனர். இவர்களைப் பற்றி அரசு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. எந்த உதவியும் இல்லாமல் பட்டினி கிடப்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அப்படிப்பட்ட குடும்பங்களைப் பற்றி நமது மைய உறுப்பினர்கள் தகவல் தெரிவிக்கும் போது அவர்கள் அரசின் எந்த உதவியும் பெறாதவர்கள் என்பதை உறுதி செய்த பின்பே உதவ முடியும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அவ்வாறு தெரிந்துகொள்வதற்கு மாவட்ட நிர்வாகம் அப்படிபட்டவர்களின் பட்டியல் ஏதாவது வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. தொடக்கத்தில் அழைப்பை ஏற்றுப் பேசிய அதிகாரிகள் தற்போது லைனில் வருவது அரிதாகி வருகிறது. கொரோனாவுக்கு முந்திய அதே அரசு நிர்வாகம் தான் இப்போதும் இருந்துவருகிறது. ‘அதே மணம்; அதே குணம்!’

இவை தவிர நகர்ப் புறங்களில் கவனிப்பாரற்று சுற்றித் திரிந்தவர்கள் பிடிக்கப்பட்டு அரசு நிர்வாகத்துக்குச் சொந்தமான கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு தன்னார்வலர்களின் ஒத்துழைப்புடன் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவை தவிர அம்மா உணவகங்கள் மூலமாகவும் நீண்ட வரிசையில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அன்றாடம் உழைத்துப் பிழைத்துவரும் கோடிக்கணக்கான மக்களின் பசிப் பிணியைப் போக்க இவை போதுமா என்றால் அரசு இது போதும் என்றுதான் சொல்கிறது. ஆனால் யாரோ சிலருக்கு மட்டுமே இது போதுமானதாக இருக்கலாம். பெரும்பான்மை மக்களுக்கு இது போதுமானது இல்லை. யாருடைய வேண்டுகோளும் இல்லாமல் தாமாக முன்வந்து பிறருக்கு உதவ வேண்டும் என்ற தொண்டுள்ளம் கொண்ட பலரும், பல இயக்கங்கள், நிறுவனங்களும் மனமுவந்து உதவுவதன் காரணமாகவே கொரோனா பசிப்பிணி தமிழ் நாட்டில் ஓரளவு துடைக்கப்படுகிறது. இதையும் பொறுத்துக்கொள்ள முடியாத அரசு அதற்கும் தடைவிதிக்க முயன்று தோற்றுள்ளது.

இந்தச் சூழலில் நம்முடைய இயக்கத் தோழர்கள் தன்னார்வலர்களுடன் இணைந்து இப்பணியைத் தொடர்ந்து வருகின்றனர். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்கள் இவ்வாறு வழிகாட்டப்பட்டுள்ளனர். “அரசு கைவிடும் இடத்தில் மக்களுக்கு கை கொடுப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அரசைத் தட்டிக்கேட்க நம்மோடு மக்கள் வரவேண்டும் அல்லவா?”

மானாமதுரை மூங்கிலூரணி பகுதியில் நிவாரணப்பணிகளில் ஈடுபடும் ம.உ.பா.மை. தோழர்கள் :

This slideshow requires JavaScript.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை மாவட்டக் கிளை.
உதவிக்கு : கொடுக்க – வாங்க : 73393 26807.

கொரோனா வைரஸ் : ஓர் அறிவியல் அறிமுகம்

புதிய கொரோனா வைரஸ் – சார்ஸ்-CoV-2 உலகம் முழுவதும் பரவி வருகிறது. இத்தொற்று நோய் பரவும் வீதத்தை கட்டுக்குள் வைக்க உலக நாடுகள் அனைத்திலும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

எல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன.

எல்லா நாடுகளிலுமே அன்றாட வாழ்க்கை முடங்கி சாலைகள் தெருக்கள் வெறிச்சோடியுள்ளன. இந்நிலையில் கொரோனோ வைரஸ் குறித்து பல்வேறு வதந்திகள், சதிக் கோட்பாடுகள், போலி அறிவியியல் கருத்துக்கள் மற்றும் அபத்தங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு பீதியூட்டி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்த எளிமையான அறிவியியல் அறிமுகத்தை அறிந்து கொள்வது அவசியமாகிறது.

வைரஸ் (உயிர்நுண்மம்) என்பது புரதங்கள், நொதிகள் மற்றும் மரபணு பொருட்களை கொண்ட மிகச்சிறிய தொற்று துகளாகும். இவை பாக்டீரியா போன்ற நுண்ணுயிகளை விட மிகச் சிறியவை. உலகில் கோடிக்கணக்கான வைரஸ்கள் உள்ளன. இவ்வுலகிலுள்ள வைரஸ்களை வரிசையாக வைத்தால் அது நமது விண்மீன் மண்டலமான பால்வெளி மண்டலத்தின் விட்டம் சுமார் 1 இலட்சம் ஒளியாண்டுகள்களை விட நீளமாக இருக்கும். ஒரு ஒளியாண்டு என்பது 9 இலட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோமீட்டராகும்.

இதனால், கோடிக்கணக்கான வைரஸ்கள் மனிதர்களை தாக்கி அழிக்க காத்துக் கொண்டிருக்கின்றன என்று அச்சப்படத் தேவையில்லை. எல்லா வைரஸ்களுமே மனிதர்களை, விலங்குகளை தாக்குவதில்லை. மிகப் பெரும்பாலான வைரஸ்கள் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்களை மட்டுமே தாக்குகின்றன.

வைரஸ் தாமாக ஆற்றலை உள்வாங்கி வளரவோ அல்லது இனப்பெருக்கம் செய்யவோ திறனற்றவை. அவை இயங்குவதற்கு ஓம்புயிர்கள் (Host) தேவைப்படுகின்றன. அதாவது மற்றொரு உயிரினத்தின் உயிரணுக்களில் உட்புகுந்து, அவற்றின் பொறிமுறையைப் பயன்படுத்தி அவை தம்மைப் பெருக்கிக் கொள்கின்றன. இதனால் இவை ஒட்டுண்ணிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.

எல்லா ஓம்புயிர் உயிரணுக்களுக்குள்ளும் (செல்கள் – cell) ஒரு வைரசால் உட்புகுந்துவிட முடியாது. செல்களின் வெளிச்சுவர் வைரஸ் உட்புகுவதை தடுத்துவிடும். படையெடுக்கும் எதிரிகளைத் தடுக்கும் கோட்டையைப் போல சுவர் செயலாற்றுகிறது.

வைரஸ் (உயிர்நுண்மம்) என்பது புரதங்கள், நொதிகள் மற்றும் மரபணு பொருட்களை கொண்ட மிகச்சிறிய தொற்று துகளாகும். இவை பாக்டீரியா போன்ற நுண்ணுயிகளை விட மிகச் சிறியவை.

ஆனால் எந்நேரமும் முற்றிலும் பூட்டி சீல் வைக்கப்பட்ட கோட்டை போல செல்கள் இருக்க முடியாது. செல்களின் எல்லா இயக்கத்துக்கும் ஆற்றலும், பல புரதப் பொருள்களும் தேவை. செல்களுக்கு தேவையான, சரியான புரதப்பொருள்கள் வந்து செல் சுவரை அடையும் போது சுவரின் மேல் அவற்றை பற்றி பொருந்தும் வகையில் திருகுவெட்டுப்புதிர் (Jigsaw puzzle) போன்ற ஏற்பிகள் இருக்கின்றன. அந்த புரதங்களின் மேற்பகுதி பகுதி சாவி வடிவில் இருக்கும். செல்சுவற்றில் உள்ள ஏற்பியின் மேல் இந்த சாவி வடிவம் பொருந்தும்போது கதவு திறந்து புரதம் உள்ளே செல்ல முடியும். அதாவது சரியான அடையாள அட்டையோடு சரியான கைரேகையைக் காட்டினால் தான் உட்செல்ல முடியும்.

பாக்டீரியா முதல் மனிதன் வரை ஒவ்வொரு உயிரிலும் உள்ள உயிரணுக்களின் (செல்களின்) பாதுகாப்பு அம்சங்களும் வெவ்வேறானவை. அதாவது வெவ்வேறு பூட்டு – சாவிகள். ஒரு வைரஸ் செல்சுவற்றை ஊருடுவிச் செல்ல அது அந்த செல் ஏற்றுக்கொள்ளும் சரியான புரத வகையையும், ஏற்பியில் சரியாகப் பொருந்தும் வடிவத்தையும் கொண்ட சாவி முட்களை மேற்பரப்பில் கொண்டிருக்க வேண்டும். இது போலி அடையாள அட்டையையும், போலி கைரேகையையும் கொண்டு உள்ளே புகுவது போல.

எல்லா வைரஸ்களாலும் எல்லா உயிரணுக்களையும் தாக்கிவிட முடியாது. ஒரு குறிப்பான கோட்டைச் சுவருக்கு பொருத்தமான போலி கைரேகையும், அடையாள அட்டையையும் கொண்ட வைரஸ்களால் மட்டுமே அந்த சுவரை ஊடுருவ முடியும். அதனால் எல்லா வைரஸ்களுமே மனிதசெல்களில் உட்புகுவதில்லை. சில நூற்றுக்கணக்கான வைரஸ்கள் மட்டுமே மனித செல்களைத் தாக்குகின்றன.

கொரோனா என்பது ஒரு வைரசின் பெயரல்ல. அது ஒரு குடும்பத்தின் பெயர். கொரோனா என்றால் லத்தீன் மொழியில் மகுடம்(கிரீடம்) என்று பொருள்.

கொரோனா என்பது ஒரு வைரசின் பெயரல்ல. அது ஒரு குடும்பத்தின் பெயர். கொரோனா என்றால் லத்தீன் மொழியில் மகுடம்(கிரீடம்) என்று பொருள். பந்து வடிவில் இருக்கும் கொரோனா வைரஸ்கள் மீது குறிப்பிட்ட புரதங்களால் ஆன கொம்புகள் உள்ளன. இவை நுண்ணோக்கி வழியே பார்க்கும்போது மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடத்தைப் (கிரீடத்தைப்) போன்ற தோற்றத்தை தருகின்றன. இப்புரத முனைகளைக் கொண்டே விலங்குகள் மற்றும் மனித செல்களை ஊடுறுவி உள்நுழைகிறது. இக்குடும்பத்தில் மனிதர்களை தாக்கும் வைரஸ், பறவைகளை தாக்கும் வைரஸ், விலங்குகளை தாக்கும் வைரஸ் என பற்பல இனப்பிரிவுகள் உண்டு.

சில வகையான வைரஸ்கள் நேரடியாக மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகின்றன. சில வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதருக்கு வந்து பின் மனிதரிடமிருந்து மனிதருக்கு பரவுகின்றன. சில நேரங்களில் விலங்குகளைத் தாக்கக்கூடிய ஒரு வைரஸ் சடுதி மாற்றத்தால் ஏற்படும் பிறழ்வுகளின் (Random Mutations) மூலம் மனிதர்களை தாக்குபவையாக பரிணமித்து மனிதர்களை தாக்குகின்றன.

இந்த கொரோனா வைரசை சீனா உருவாக்கி பரப்பியுள்ளது; இல்லை அமெரிக்கா உருவாக்கி பரப்பியுள்ளது; இல்லை, இல்லை ரஷ்யா உருவாக்கி பரப்பியுள்ளது என்று பல சதிக் கோட்பாடுகள் வலம் வருகின்றன. ஆனால், இதுவரை ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரஸ்கள் எவையுமே புற உலகின் சூழலுக்கு தாக்குப் பிடிக்கவில்லை. அதிலும் எல்லா நாடுகளின் தட்பவெப்ப சூழலுக்கும் தாக்குப் பிடிக்கும் வைரஸை உருவாக்குவதென்பது அவ்வளவு எளிதானதும் அல்ல.

மரபணுவைப் படியெடுத்தல் (Genome sequencing) மூலம் வைரஸ், பாக்டீரியா முதல் பல்வேறு உயிரினங்களின் மரபணுவை படியெடுத்து மரபணு தொடரை ஒப்பிட்டு ஆய்வுகளைச் செய்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட கொரோனா வைரஸ் வவ்வால்களை தாக்கி வந்தது என்றும், சடுதி மாற்ற பிறழ்வுகள் (Random mutation) மூலம் மனிதனை தாக்கும் பரிணாமமடைந்துள்ளன என்றும் ஆய்வாளர்கள் மரபணுவை படியெடுத்தல் மூலம் நிரூபித்து விட்டனர்.

இந்தக் குறிப்பிட்ட கொரோனா வைரஸ் வவ்வால்களை தாக்கி வந்தது என்றும், சடுதி மாற்ற பிறழ்வுகள் (Random mutation) மூலம் மனிதனை தாக்கும் பரிணாமமடைந்துள்ளன என்றும் ஆய்வாளர்கள் மரபணுவை படியெடுத்தல் மூலம் நிரூபித்து விட்டனர்.

அதாவது வவ்வால்களை தாக்கிய வைரஸ்கும் இப்போது மனிதனை தாக்கும் வைரஸ்கும் இடையிலான மரபணு ஒற்றுமைகளை கொண்டும், அவற்றின் மீதுள்ள புரதக் கொம்புகளின் ஒற்றுமை வேற்றுமைகளைக் கொண்டும் இது ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டது அல்ல என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது.

இந்தப் புதிய கொரோனா வைரஸ் – சார்ஸ்-CoV-2 வுடன் சேர்த்து மொத்தம் ஏழு கொரோனா வைரஸ்கள் உள்ளன. இவற்றில் 229E, NL63, OC43, HK01 ஆகிய நான்கும் ஆபத்தற்ற சளி, காய்ச்சலை உருவாக்கும். MERS-CoV மற்றும் SARS-CoV ஆகிய இரண்டும் விலங்குகளைத் தாக்குபவையாக இருந்து பரிணமித்து மனிதர்களைத் தாக்கின. இவை தொற்று ஏற்பட்ட சிலருக்கு மரணத்தை விளைவிப்பவையாக இருந்தன. இந்த புதிய கொரோனா வைரஸ் சார்ஸ்-CoV-2 வவ்வால்களிடமிருந்து அல்லது எறும்புண்ணியிடமிருந்து மனிதனுக்குப் பரவி பரிணாமம் அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மனிதரைத் தாக்கும் வைரசாக இருந்தாலும் அது எல்லா செல்களையும் தாக்குவதில்லை. திசு செல், குருதி வெள்ளையணு, சிவப்பணு என்று மனித உடலில் பல்வேறு செல்வகைகள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட வகை வைரஸ் ஒரு குறிப்பிட்ட செல்வகையை மட்டுமே தாக்கும். கொரோனா வைரஸ்கள் மூச்சுக் குழாய், நுரையீரல் உள்ளிட்ட சுவாச அமைப்பைத் தாக்குகிறது.

கொரோனா வைரஸ் முதலில் மேல் சுவாசக் குழாயையும், பின்னர் அதன் கிளைகளையும் தாக்குகிறது. இதனால் அவை சிதைவுறுகின்றன. இச்சிதைவால் இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன.

எல்லா வைரஸ்களும் ஓம்புயிர் செல்களினுள் சென்ற உடன் அந்த செல்களின் ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு தம்மை பல்பிரதி (Multiple Copies) எடுத்துக் கொள்கின்றன. பின்னர் அந்த செல்லை சேதப்படுத்திவிட்டு அல்லது முழுவதுமாக அழித்துவிட்டு மற்ற செல்களைத் தாக்குவதற்கு வெளியேறுகின்றன. ஒரு செல் அல்லது சில செல்களில் வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் அது நோயறிகுறியாக வெளித் தெரிவதில்லை. வைரஸ் தொற்று நோயறிகுறியாக வெளித் தெரிவதற்கு குறிப்பிட்ட அளவு செல்கள் பாதிப்படைந்திருக்க வேண்டும். வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து நோயறிகுறியாக வெளித் தெரிவதற்கு இடைப்பட்ட காலம் நோயரும்பு காலம் (Incubation Period) எனப்படுகிறது.

தொற்றிய வைரஸ் நமது எதிர்ப்பு சக்தியோடு போர் புரியத்தேவையான தனது படைபலத்தை பெருக்க எடுத்துக்கொள்ளும் போருக்குத் தயாராகும் காலம், காத்திருப்பு காலமே நோயரும்பு காலம். சில வைரஸ்கள் நோயரும்பு காலம் முடிந்த பின்னர் தான் ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும். சில வைரஸ்கள் நோயரும்பு காலம் முடியும் முன்னரே மற்றவருக்குப் பரவுகின்றன. இந்த புதிய கொரோனா வைரசின் நோயரும்பு காலம் 14 முதல் 21 நாட்கள். ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு 5 முதல் 14 நாட்களுக்குள் மற்றவரைத் தொற்ற ஆரம்பிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புதிய கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 14 நாட்களுக்குப் பிறகு பின்வரும் நோய்க்குறிகள் தோன்றலாம்.

காய்ச்சல்
தொண்டை வலி
இருமல்
மூக்கடைப்பு
உடல் அசதி
சோர்வு
வயிற்றுப்போக்கு
மூச்சு திணறல்
மூச்சுவிடுவதில் சிரமம், ஆகியவை ஏற்படலாம்.

சுவாச அமைப்பைத் தாக்குவதால் வீசும் காற்றில் இந்த வைரஸ் பரவியுள்ளதென்று பயப்படத் தேவையில்லை

சுவாச அமைப்பைத் தாக்குவதால் வீசும் காற்றில் இந்த வைரஸ் பரவியுள்ளதென்று பயப்படத் தேவையில்லை. நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள நபரிடமிருந்து இருமல், தும்மல் போன்றவற்றால் ஒரு மீட்டர் தொலைவு வரை இந்த வைரஸ் பரவலாம். தொற்றுள்ள நபர் தனது மூக்குப் பகுதியை தொட்டுவிட்டு தொடும் எந்தப் பொருளிலும் வைரஸ் இருக்கலாம். அதை தொட்டு நாம் நமது மூக்கு, வாய், கண் இவற்றைத் தொடும் போது நமக்கும் தொற்று ஏற்படலாம்.

கொரோனா வைரஸ் முதலில் மேல் சுவாசக் குழாயையும், பின்னர் அதன் கிளைகளையும் தாக்குகிறது. இதனால் அவை சிதைவுறுகின்றன. இச்சிதைவால் இருமல், தும்மல் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. இதையடுத்து வைரஸ் நுரையீரலில் உள்ள செல்களைத் தாக்கத் துவங்குகிறது. இப்போது நோயெதிர்ப்பு அமைப்பு தூண்டப்பட்டு அது நுரையீரல், சுவாச அமைப்பில் தன் வேலையைத் துவங்குகிறது. இதற்குள் சுவாச அமைப்பில் மிக அதிக சேதத்தை வைரஸ் உருவாக்கிவிட்டதால், நோயெதிர்ப்பு மிகைஇயக்கம் (Hyper Active) செய்யத் துவங்கும். அதனால் அதிகமான திரவங்களை நுரையீரல் பகுதியில் சுரக்க வைக்கும். ஏற்கனவே சிதைவுற்ற சுவாசக் குழாய், நுரையீரல், இப்போது அதைப் பழுது பார்க்க நுரையீரலில் நிறைந்துள்ள நோயெதிர்ப்பு திரவங்கள் ஆகியவற்றால் உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் குறைகிறது. இதனால், மூச்சு திணறல், நிமோனியா போன்றவை ஏற்படுகின்றன.

இந்த ஆக்சிஜன் குறைபாட்டால் மற்ற உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. ஏற்கனவே நீரிழிவு, இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், மற்ற உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் உள்ளுறுப்புகள் செயலிலப்பதன் மூலம் மரணம் வரை செல்கிறது.

இதனால் புதிய கொரோனா நோய்த் தொற்றினாலே மரணம் என்று அச்சப்படத் தேவையில்லை. இந்நோய் தொற்று ஏற்பட்டவர்களில் 80% பேர் லேசான காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கத் தேவையின்றியே மீண்டுள்ளனர். 20% பேருக்குத் தான் மூச்சுத் திணறல் போன்ற சிரமங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கத் தேவை ஏற்படுகிறது. 6% பேருக்கு மட்டுமே மோசமான நோய்தாக்குக்கு (Critically ill) உள்ளாகி சுவாச அமைப்பு செயலிழப்பு போன்றவற்றால் மிகத் தீவிர சிகிச்சைக்கான தேவை ஏற்படுகிறது. 2.6 முதல் 4% பேர் மட்டுமே மரணமடைகின்றனர். முதலில் நோய்க்குறிகள் தோன்ற ஆரம்பித்ததிலிருந்து மோசமான நோய்தாக்கு நிலைக்கு செல்ல மூன்று முதல் ஏழு நாட்கள் ஆகலாம்.

எக்காலத்திலும் சுகாதாரத்துறை / மருத்துவமனை வசதிகளின் திறனளவுக்குள் தொற்றை கட்டுக்குள் வைக்கும் போது மட்டுமே தேவையானவர்களுக்கு மருத்துவ வசதியை அளிக்க முடியும். அந்த அடிப்படையிலேயே உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையின் அடிப்படையில் உலக நாடுகள் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன.

– மார்ட்டின்

உதவிய கட்டுரைகள்:

சாபு மண்டல் ஒரு தொழிலாளி – கொரானாவும், முன்னேற்பாடு ஏதும் செய்யாத அரசும் அவரை கொன்றுவிட்டன !

“அவர்களில் ஒரு மனிதரின் சொற்கள்தான் என்னைப் பெரிதும் துன்புறுத்தின. அவர் ஒரு தச்சர். பெயர் ராம்ஜித். நேபாள எல்லையில் இருக்கும் கோரக்பூருக்கு டில்லியிலிருந்து நடந்தே செல்வது என்ற திட்டத்துடன் கிளம்பியிருந்தார். “மோடிஜி இதனைச் செய்வது என்று முடிவு செய்வதற்கு முன், எங்களைப் பற்றி யாரும் அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஒருவேளை எங்களைப் பற்றி அவருக்குத் தெரியாமலும் இருக்கலாம்” என்றார் ராம்ஜித்.

“எங்களை” என்று அவர் குறிப்பிட்டாரே, அவர்களின் எண்ணிக்கை சுமார் 46 கோடிப் பேர்.

கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில்” அருந்ததி ராய் மேற்கண்டவாறு எழுதினார். அப்படி ஒரு குடும்பத்தினரின் கதை தான் இந்தக் கட்டுரை!

***

புலம்பெயர்ந்த தொழிலாளியான சாபு மண்டல் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது செல்போனை ரூ. 2500க்கு விற்றார்.

பீகாரில் இருந்து குர்கானில் குடியேறிய 35 வயதான சாபு மண்டல் ஒரு வண்ணம் பூசும் தொழிலாளியாவார். கடந்த வியாழக்கிழமை காலை, தனது செல்பேசியை ரூ. 2,500 க்கு விற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு சிறிய மின்விசிறி மற்றும் சில மளிகை பொருட்களை வாங்கினார். அந்த பொருட்களுக்கக அவரது பெரிய குடும்பமான  மனைவி, அவரது பெற்றோர், மற்றும் அவரது நான்கு குழந்தைகள் (ஐந்து மாத கைக்குழந்தை உட்பட) காத்திருந்தார்கள்.

அவர் வீடு திரும்பிய போது அவரது மனைவி பூனம் மகிழ்ச்சியடைந்தார். காரணம் குடும்பத்தினருக்கு புதன்கிழமை முழுவதும் சாப்பிட எதுவும் இல்லை. அதற்கு முன்பே, பகுதியில் இலவசமாக விநியோகிக்கப்படும் உணவையும் அல்லது பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியைத்தான் அவர்கள் நம்பியிருந்தார்கள்.

சாபு மண்டலின் மனைவி பூனம் சமைக்கத் தொடங்குவதற்கு முன்பு, கழுவுதற்குச் சென்றார். அதே நேரத்தில் அவரது தாயார் குழந்தைகளை அழைத்துக் கொண்டு  வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மரத்தடியில் உட்காரச் சென்றார். மண்டலின் மாமியார் அருகிலுள்ள குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இப்படியாக குடும்பத்தினர் வெளியே இருந்தபோது, மண்டல் தனது குடிசையின் கதவை மூடி, ஒரு கயிற்றைப் பயன்படுத்தி, கூரையிலிருந்து தூக்கில் தொங்கி இறந்து போனார்.

தற்கொலை செய்து மாண்டுபோன வண்ணம் பூசும் தொழிலாளி சாபு மண்டலின் மனைவி அவரது குழந்தைகளுடன் நொறுங்கிப் போய் அமர்ந்துள்ளார்.

“அரசின் கதவடைப்பும், ஊரடங்கும் தொடங்கியதிலிருந்து என் கணவர் மிகவும் பதற்றமாய்த்தான் இருந்தார். வேலையும் இல்லை. பணமும் இல்லை. இலவச உணவைத் தான் முழுமையாக நம்பியிருந்தோம், ஆனால் எல்லா நாளும் இலவச உணவு கிடைப்பதில்லை” என்கிறார் பூனம்.

குர்கான் காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, மண்டல் “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்று கூறினார்கள்.

“நேற்று பிற்பகல் இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அந்த நபர் புலம்பெயர்ந்த தொழிலாளி, மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரது உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த குடும்பம் இந்த விஷயத்தில் மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆகையால், முதல் தகவல் அறிக்கை (FIR) எதுவும் பதிவு செய்யப்படவில்லை” என்று பிரிவு 53 காவல் நிலைய எஸ்.எச்.ஓ தீபக் குமார் தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாக அதிகாரிகள் 35 வயதான மண்டலை “மனநலம் பாதிக்கப்பட்டவர்” என்று வலியுறுத்தினார்கள். “இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், தொற்று நோய் பரவியதால், அந்த நபர் சற்று கலக்கம் அடைந்தார். உணவு கிடைப்பது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை, அருகிலேயே உணவு விநியோக இடமும் உள்ளது” என்று ஒரு மாவட்ட அதிகாரி கூறினார்.

படிக்க:
♦ லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !
♦ நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

சரஸ்வதி கஞ்சில் வசிப்பவர்களுக்கு அருகில் பிரிவு 56-ல் உணவு விநியோகிப்பதற்கான சமூக மையம் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

“பிரிவு 56 லும், வஜிராபாத்திலும் உணவு விநியோகம் உள்ளது. ஆனால் அவை நடந்துபோய் வாங்க சாத்தியமில்லாத தொலைவில் இருக்கின்றன. நான் ஊனமுற்றவன். எனது துணைவியார் மிக வயதானவர். பிள்ளைகளும் நடந்து கூட்டி செல்லமுடியாத சின்ன குழந்தைகளாக இருக்கின்றார்கள். அதுவும் பசியோடு அழைத்து செல்வது சாத்தியமில்லை.” என மண்டலின் மாமனார் உமேஷ் கூறினார்.

பீகாரைச் சேர்ந்த சரஸ்வதி குஞ்சின் மற்றொரு குடியிருப்பாளரான ஃபிரோஸ், “சில போலீசார் வெளியே செல்பவர்களை மோசமாக நடத்துவதால் குடியிருப்பாளர்கள் வெளியே செல்ல பயப்படுவதாகவும்” கூறினார்.

“உணவு விநியோகத்தில் யாரேனும் விடுபட்டிருந்தால், அது சரிசெய்யப்படும்” என மாவட்ட நிர்வாக அதிகாரி கூறினார். “உணவு விநியோகத்திற்கான முயற்சிகள் அதிகரிக்கப்படும்” என ஒரு அதிகாரி கூறினார்.

15 ஆண்டுகளுக்கு முன்புதான் பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த மண்டல் குர்கானுக்கு குடிபெயர்ந்து வண்ணம் பூசும் தொழிலாளியாக பணிபுரிந்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் திருமணம் செய்துகொண்டு தனது குடும்பத்தை நகரத்திற்கு மாற்றினார். கடந்த பல மாதங்களாக, அவர்கள் சரஸ்வதி குஞ்சில் வசித்து வந்தனர். இரண்டு குடிசைகளுக்கு தலா ரூ .1,500 வாடகைக்கு செலுத்தினார். கடந்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பலிருந்து வேலைகள் கிடைப்பது சிரமமாகிவிட்டது” என்று உமேஷ் கூறினார்.

“மாசு காரணமாக கட்டுமான வேலைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் கட்டுமான நிறுவனங்கள் வேலையை நிறுத்திவிட்டன. அதன் பிறகும், வேலை சிறிதளவே கிடைத்தது. கூலியாக கிடைப்பதை வைத்துக்கொண்டு சமாளித்தோம். ஊரடங்குக்கு முன்பு கடந்த ஒரு மாதமாக, அவருக்கு ஓரிரு நாட்களில் மட்டுமே வேலை கிடைத்தது. ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தால், தன்னாலும் வேலை செய்ய முடியவில்லை” என்கிறார் உமேஷ் . தனக்கு கிடைத்த சிறிய வேலைகளால் இரு வீடுகளையும் மண்டல் தான் பராமரித்து வந்தார்.

மார்ச் 22 மாலை குர்கானில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடனேயே, குடும்பத்தினர் கையில் பணமில்லாமல் தான் இருந்தோம். வீட்டு உரிமையாளரும், ஒன்று, இரண்டு முறை வாடகை கேட்டார். இது கூடுதல் அழுத்தத்தை தந்தது.

வேலை இழந்த அனைவரும் ஒவ்வொரு நாளும் உணவு விநியோகிக்கப்படுவதை கவனித்து ஓடி ஓடி வாங்க தொடங்கினர். நாங்களும் அப்படித்தான் வாங்கினோம். கொஞ்சம் தாமதித்து போனாலும், எதுவும் கிடைக்காது” என பூனம் கூறினார்.

”வியாழக்கிழமை காலை, என் கணவர் ரூ. 10000-த்துக்கு வாங்கிய தொலைபேசியை விற்க முடிவு செய்தார். அதை விற்று, கிடைத்தப் பணத்தில் கொஞ்சம் உணவுப்பொருட்களும், அதிகரித்து வரும் வெயிலால், வீட்டுக்கூரை தகரம் என்பதால், வீட்டிற்குள் வெக்கையால் இருக்கமுடியாமல் போனது. அதற்காக ஒரு மின்விசிறியும் வாங்கினார்” என்றார் பூனம்.

“நாங்கள் எல்லோரும் மனஅழுத்தத்தில் இருந்தோம். எங்கள் எல்லோரையும் கவனிக்க கூடிய பொறுப்பில் இருந்ததால், அவருக்கு எங்களை விட மனஅழுத்தம் இருந்தது. எங்களுக்கும் அது தெரியும். ஆனால், அவர் தற்கொலை செய்துகொள்வார் என நாங்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.” என்கிறார் பூனம்.

மண்டலின் குடும்பத்தினர் வெள்ளிக்கிழமை காலை குர்கானில் இறுதி சடங்குகளை மேற்கொண்டனர். “டெம்போ, ஆம்புலன்ஸ் மற்றும் பிற சடங்குகளுக்கு என எந்த செலவிற்கும் எங்களிடம் எதுவும் இல்லை. தெரிந்தவர்களிடமும், குர்கானில் உள்ள எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்களிடமும் நிதி நன்கொடையாகக் கேட்டோம், ரூ.5 ஆயிரம் தான் வசூலிக்க முடிந்தது. எனது மருமகனின் கடைசி சடங்குகள் கூட கடன் வாங்கிய பணத்தில்தான் செய்யப்பட்டது,” என்றார் உமேஷ்.

“மொத்த குடும்பத்தையும் தாங்கிய குடும்பத் தலைவரை இழந்த துக்கம் ஒருபுறம். இனி எங்களுக்காக சம்பாதிக்க யாரும் இல்லை என்ற உண்மையை நாங்கள் எதிர்கொள்ளவேண்டும். நெருக்கடி நிலைமை சரியான பிறகு, வீட்டு வேலைகள் செய்யலாம் என்று இருக்கிறேன். வேலையை தேடவேண்டும். ஆனால் இன்னும் 15 நாட்கள் உள்ளன,” என்று பூனம் கூறினார்.


தமிழாக்கம்: குருத்து
மூலக்கட்டுரை, நன்றி :  இந்தியன் எக்ஸ்பிரஸ். 

கொரோனா கால துயர் துடைப்பில் திருவண்ணாமலை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் !

திருவண்ணாமலை நகருக்கு அருகில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் வசித்துவரும் குடுகுடுப்பைச் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் கரோனா கால ஊரடங்கால் வருவாய்க்கு வழியின்றி பசியால் வாடுவதை அறிந்து அவர்களுக்கு உதவிகள் செய்யும் பணியை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மேற்கொண்டது.

18.04.2020 அன்று நேரில் சென்று உண்மை நிலவரத்தை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யுமாறு சமூக தன்னார்வலர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அம்மக்களின் தேவை குறித்து காணொளி உள்ளிட்ட விவரங்களோடு சமூகவலைதயங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேரில் சென்று உதவமுடியவில்லை என்றால் பொருளாகவோ, பணமாகவோ தருமாறு பொதுமக்களிடம் கோரப்படது. அதன் அடிப்படையில் பலர் பொருளாகவும், பணமாகவும் கொடுத்து உதவினர்.

படிக்க:
♦ நமது இந்தியக் கல்வி முறையின் கோரமுகம் !
♦ லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !

19.04.2020 அன்று அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த உதவி குறித்து சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியான பிறகு வழக்கறிஞர் பாசறை பாபு மூலம் தடை சாமிகள் அசிரமத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். திருவண்ணாமலை ஒன்றிய தி.மு.க சார்பிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நகரின் மிக அருகில் வசிக்கும் மக்களுக்குக்கூட மாவட்ட நிர்வாகம் உதவ முன்வராத போது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் முயற்சி எடுத்து பழங்குடி மக்களின் பசியைப் போக்கி உள்ளனர்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை.

நமது இந்தியக் கல்வி முறையின் கோரமுகம் !

நாம் பள்ளிகளில் பெறும் கல்வியானது நம்மை கட்டுப்படுத்துகின்றதா அல்லது விடுவிக்கின்றதா என்கிற கேள்வியை கேட்டுக் கொள்ள வேண்டிய முக்கியமான தருணம் இது. நாம் படைப்பூக்கமுள்ளவர்கள் ஆகிறோமா அல்லது நமது அழகியல், கலை ஆர்வம், மனிதத்தன்மை போன்றவற்றை இழக்கிறோமா?

ஒவ்வொரு நாளும் நமது கல்வி முறை நமக்கு துரோகமிழைக்கிறதா?

நான் முதலில் என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தில் இருந்து துவங்குகிறேன். பத்தாம் வகுப்பு படிக்கும் ஒவ்வொரு மாணவனும் எதிர் கொள்ளும் தயக்கம், அடுத்து பதினோராம் வகுப்பில் எந்தப் பிரிவை தெரிவு செய்வது என்பது தான். பெரும்பாலும், இந்த முடிவை பெற்றோர் அல்லது குறிப்பிட்ட பாடப் பிரிவுக்கு சமூகம் அளித்துள்ள அந்தஸ்து ஆகியவை தான் தீர்மானிக்கிறது. என்னதான் குறிப்பிட்ட பாடப் பிரிவை மற்றவற்றை விட மேலாக கருதுவது தவறு என்கிற புரிதல் இருந்தாலும் இவ்வாறு தான் நடக்கிறது. சமூகம் வரிசைக்கிரமமான இந்த பாகுபாட்டின் அடிப்படையில் தான் செயல்படுகின்றது.

“எனது நெருங்கிய தோழி”

என்னுடைய நெருங்கிய தோழிக்கு வணிகவியல் பிரிவை தேர்ந்தெடுக்க விருப்பம்; ஆனால் அவளது பெற்றோர் அறிவியல் பிரிவை தெரிவு செய்ய வைத்தனர். “நமது மொத்த குடும்பமும் பள்ளியில் அறிவியல் பிரிவை எடுத்து தான் படித்துள்ளது – எனவே நீயும் அதைத் தான் தெரிவு செய்ய வேண்டும். அறிவியல் பிரிவை எடுத்துப் படித்தால் தான் உனக்கு நல்ல எதிர்காலம் அமையும்” என்பது அவளது தந்தையின் கருத்து. இத்தனைக்கும் அவர் ஒரு பொறியாளர்.

அவளுக்கு அறிவியலின் மேல் ஆர்வம் இல்லை என்பதால் பதினோராம் வகுப்பில் என்ன முயற்சித்தும் சரியாக படிக்க முடியவில்லை. நாட்கள் செல்லச் செல்ல ஆர்வமிழந்து தனிமைப்பட்டுப் போனாள். தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது அவளால் தன் பெற்றோரிடம் அது குறித்துப் பேச முடியவில்லை. இத்தனைக்கும் தன்னுடைய ஆசிரியரிடம் அவளால் தனது பிரச்சினைகளைக் குறித்து மனம் திறந்து பேச முடிந்தது.

இறுதியில் அந்த ஆசிரியர் அவளது பெற்றோரை அழைத்து விருப்பமில்லாத பாடப் பிரிவை திணிப்பதால் எந்த பயனும் இல்லை என்பதை எடுத்துச் சொல்லி அவள் விரும்பும் பாடப் பிரிவுக்கு மாற அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அந்த தந்தையோ தன் மகளின் ‘தோல்வியை’ தனக்கு நேர்ந்த அவமதிப்பாகவும் இழிவாகவும் கருதினார். குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்ல தன் மகள் தவறி விட்டதாக கருதினார். அந்த சூழலிலும் அவரது கண்களுக்கு மகளின் “குறைந்த மதிப்பெண்களே” தெரிந்தன – அவளது கண்ணீர் தெரியவில்லை. ஓராண்டாக தன் மகள் அடைந்திருக்க கூடிய துயரங்கள் அவருக்குப் புரியவில்லை.

சிக்கலின் ஆழம் என்னவென்பதை தந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை; அவளின் தாயோ அமைதியாக இருந்தார்.

எல்லா முடிவுகளையும் குடும்பத் தலைவரே எடுக்க வேண்டும் என்பது பரவலான நம்பிக்கை என்பதால் அவளது தந்தையே அவளின் தெரிவுகளையும் அவளைக் கேட்காமலேயே தீர்மானித்தார். “உன்னால் அறிவியலைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், நீ கலைத் துறையை எடுத்துப் படிக்கத் தான் லாயக்கு” என்றார்.

ஒவ்வொரு பாடப் பிரிவும் ஒரு ஏணிப்படி போல் அமைந்த வரிசைக் கிரமமான மதிப்பைப் பெற்றுள்ளது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இவ்வாறு பாடப் பிரிவுகளுக்கு இடையே கற்பிக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகள் எந்தளவுக்கு நமது சிந்தனையை மாசுபடுத்தியுள்ளது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

படிக்க:
♦ 5, 8 பொதுத்தேர்வு : குலக்கல்வியின் 21-ம் நூற்றாண்டு வெர்சன் !
♦ நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

“அந்நியமாதல்”

எனது தோழி அதன் பின் அனைத்திலிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்தாள். 12ம் வகுப்பு முழுவதும் அவளுக்கு கொடுமையான அனுபவமானது. அவள் பள்ளியையும், புத்தகங்களையும்.. ஏன், கல்வியையே கூட வெறுக்கத் துவங்கினாள். கழுத்தை நெறிக்கும் வகுப்புகளுக்கும், புத்தகங்களுக்கும் இடையில் அவள் தனது ஓவிய நோட்டிலும் பென்சிலிலும் ஆறுதல் தேடினாள். எனது தோழி மிகச் சிறந்த ஓவியர்; அவளுக்கு அபாரமான படைப்புத்திறன் இருந்தது. நோக்கமற்ற ஓவியங்களை வரைவதில் இருந்து துல்லியமான உருவப்படங்களை வரைவது வரை அவளது கரங்கள் அற்புதங்களை நிகழ்த்தின.

தனது ஆர்வம் எதில் உள்ளது என்பதை அவள் கண்டு கொண்டாள். 12ம் வகுப்புக்குப் பின் நுண்கலை படிக்க விரும்பினாள். எனினும் அந்தக் கனவை தன் தந்தையிடம் சொல்ல அஞ்சினாள். தனது ஓவியங்களை அவரிடம் காட்டக் கூட பயந்தாள். அவள் பொதுத் தேர்வின் இறுதியில் 75 சதவீத மதிப்பெண் எடுத்த போது அவளது தந்தையின் ஆங்காரம் அதிகரித்தது. தன் குடும்பத்தாரின் முந்தைய சாதனைகளோடு ஒப்பிட்டு இழிவு படுத்தும் போக்கு தொடரத் தொடர, அவள் தன்னையே இழக்கத் துவங்கினாள்.

மீண்டும் அவளது விருப்பத்தைக் கேட்காமலேயே தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பிரிவை எடுத்துப் படிக்க அவளது தந்தை வலியுறுத்தினார். பொதுவாக எல்லா மாணவர்களுக்கும் மகிழ்ச்சிகரமாக அமையும் கல்லூரி முதலாம் ஆண்டு அவளைப் பொருத்தவரை பெரும் சித்திரவதையாக அமைந்தது. அந்த சமயத்திலும் தொடர்ந்து வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கச் சொல்லி அவளை நெருக்கிக் கொண்டே இருந்தனர்.

முதலாம் ஆண்டின் இறுதியில் அவளது தந்தை சிவில் சர்வீஸ் தேர்வுகள் எழுதச் சொல்லி வற்புறுத்த துவங்கினார். அந்த சமயம் ஒரு நாள் அவள் மிகுந்த கவலையுடன் என் வீட்டிற்கு வந்தது நினைவில் உள்ளது. வந்ததும் அழத் துவங்கினாள் – அந்தக் கண்ணீரே அனைத்தையும் சொன்னது. அவளது இருதயம் குத்திக் கிழிக்கப்பட்ட வலியை என்னால் உணர முடிந்தது. சிவில் சர்வீஸ் பரீட்சையில் முதல் முயற்சியிலேயே தேர்வாகாவிடில் தனக்கு திருமணம் முடித்து வைத்து விடுவதாக தன் தந்தை கூறியதை உடைந்த குரலில் சொன்னாள்.

பரீட்சைகளின் அழுத்தம், மதிப்பெண்கள், சிவில் சர்வீஸ் தேர்வு, உடைந்து நொறுங்கிப் போன கனவுகள், திருமண அச்சம், தோல்வி குறித்த அச்சம் என எல்லாமாகச் சேர்ந்து அவளது ஆன்மாவை கிழித்துப் போட்டது. ஒரே ஒரு முறையாவது உன் தந்தையிடம் பேசலாமே என்று அவளிடம் சொன்னேன். உன்னுடைய ஆர்வம் குறித்து அவருக்கு தெரியப்படுத்தலாமே என்றேன். தேவைப்பட்டால் உன் சார்பாக நான் அவரிடம் பேசட்டுமா என்று கேட்டேன். “அவர் புரிந்து கொள்ள மாட்டார். எப்போதும் புரிந்து கொள்ள மாட்டார்” என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தாள். நீ பேசினால் அதற்கும் என்னைத் தான் திட்டுவார் என்றாள். குடும்பத்துக்கு வெளியே இதையெல்லாம் பேசலாமா எனக் கேட்பார் என்றாள்.

சில மாதங்கள் கழிந்தது. ஒவ்வொரு நாளும் அவள் தத்தளித்துக் கொண்டிருந்தாள். அவள் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு படிக்க முயன்றாள். ஆனால், இந்த முறை அவளால் தன்னையே அதில் திணித்துக் கொள்ள முடியவில்லை. அச்சம் மெல்ல மெல்ல அவளை ஆட்கொண்டது. அவள் இயல்பாக மூச்சு விட முயற்சித்தாள். “இந்த கொந்தளிப்புகளில் இருந்து தப்பிக்க வேண்டும்” என அடிக்கடி என்னிடம் சொல்வாள்.

படிக்க:
♦ கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வடசென்னை மக்கள் உதவிக்குழு !
♦ நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!

ஒரு அக்டோபர் மாத மத்தியில் அவள் தூக்கிட்டு செத்துப் போனாள். அவள் தற்கொலை செய்து கொண்டாள்.

அவள் ஒரு விதிவிலக்கு அல்ல. அவளது தற்கொலை அவளுடையது மட்டுமல்ல. அவளும் நம்மைப் போலவே இந்த விஷம் பரவிய, அடக்குமுறை கொண்ட, குறுகலான கல்வி முறையின் ஒரு விளை பொருள் தான். அவளது மரணம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது. இந்தக் கொடூரமான அமைப்புமுறை அவளைத் திட்டமிட்டுக் கொன்றது. இந்த அமைப்பு முறையில் கிஞ்சிற்றும் மனித சாரம் கிடையாது; ‘வெற்றி’ ‘தரவரிசை’ மற்றும் ‘முதலிடம்’ போன்ற குறுகலான கண்ணோட்டத்தின் மூலம் அவளது பெற்றோரை குருடர்களாக்கியது இந்த அமைப்பு முறை.

அவளது மரணத்திற்குப் பின் நான்கு வருடம் கழித்து இன்று பத்தாம் வகுப்பு படிக்கும் அவளது இளைய சகோதரியும் அடுத்து 11ம் வகுப்பில் அறிவியல் பிரிவை எடுத்துப் படிக்க நிர்பந்திக்கப் படுகிறாள். கல்வி குறித்த தங்களது கண்ணோட்டம் ஏற்படுத்திய இழப்பை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்தக் கல்வி முறை எப்படி தங்களை முற்றிலுமாக ஏமாற்றியது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

முற்றிலும் தனிப்பட்ட இந்த தகவல்களை நான் சொல்வதற்கு காரணம், தனிப்பட்ட ஒவ்வொன்றும் அரசியல்மயமானது என்பதற்காகத் தான். நமது தனிப்பட்ட அனுபவங்கள் ஒவ்வொன்றும் நம்மைச் சுற்றியுள்ள சமூக மற்றும் கலாச்சார நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டவையே என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.

என் தோழியின் தற்கொலைக்குப் பின் நமது மொத்த கல்வி முறையும் எந்தளவுக்கு தவறானது என்பதை நான் புரிந்து கொண்டேன். நமக்குள் கருணையை உருவாக்க அது தவறி விட்டது. நமது உணர்வுகளை கூர்தீட்டுவதற்கு பதில் மழுங்கடித்து விட்டது. நம்மைச் சுற்றிலும் உள்ள மனிதர்களைக் குறித்து அக்கறை கொள்ள அது பயிற்றுவிக்கவில்லை. மேலும் இந்த கல்வி முறையானது பொறுப்பற்ற, போலியான, கற்பனையான ‘வெற்றி’ என்கிற கருத்தாக்கத்தைக் கொண்டு நம்மை மொத்தமும் குருடர்களாக்கி விட்டது.

‘தப்பிக்க ஏதும் வழியுண்டா?’

இது போன்ற நெருக்கடியான தருணங்களில் மாற்று கல்வி முறை குறித்து சிந்திப்பது அத்தனை சுலபமல்ல. எனினும் நாம் கல்வியின் இயங்கியல் (dynamics of Education) குறித்த தேடலைத் துவங்க வேண்டும். தனிநபர்களாக நாம் இதுவரை (இந்த கல்வி முறையில் இருந்து) கற்றுக் கொண்டதை மூளையில் இருந்து அழிப்பது அவசியம் என்பதை உணர வேண்டும்.

ஒருமைப்பாடு, அனுசரித்துப் போதல் போன்றவற்றின் மீது கட்டமைக்கப்பட்ட ஒரு கல்வி முறை நமக்குத் தேவையில்லை. மாறாக நமக்குத் தேவையான கல்வி முறையானது பன்முகத்தன்மைக்கு இடமளிப்பதாகவும், படைப்பூக்கம் கொண்டதாகவும் இருக்க வேண்டும். ஓர்முனையிலான உரையாடும் சூழலில் சொல்லிக் கொடுக்கப்பட்டவைகளை தாண்டி ஒவ்வொன்றையும் படைப்பூக்கத்துடனும், விமர்சனப்பூர்வமாகவும் அணுகும் சிந்தனையை வளர்க்க கூடியதாக இருக்க வேண்டும். செயல்முறைக் கற்றலின் வழியே மாணவர்களுக்கு மத்தியில் பரஸ்பர அன்பும் கருத்துப் பரிமாற்றமும் நிகழ்வதை உறுதி செய்யும் விதமான கல்வி முறையே நமக்குத் தேவை – மாறாக, முதலாளித்துவ கல்வி முறையை போல் சந்தைப் போட்டிக்குள் நம்மை அள்ளித் திணிக்க கூடாது.

இது போன்ற ஒரு கல்வி முறைக்கு நாம் போராட வேண்டும், அதை நோக்கி வேலை செய்ய வேண்டும்.


கட்டுரையாளர் : Apoorva Pandey, a masters student at centre for the study of social systems,
Jawaharlal Nehru University.

தமிழாக்கம் :  தமிழண்ணல்
மூலக் கட்டுரை :  த வயர். 

ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! இணையவழி பொதுக்கூட்டம் !

5

ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! இணையவழி பொதுக்கூட்டம் !

  • மனிதகுலத்தை அழித்து வரும் ஏகாதிபத்திய வைரஸ்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாப்போம் !

நாள் : 22.04.2020, மாலை 6 மணி முதல் 7:15 வரை.
இடம் : பு.மா.இ.மு முகநூல் பக்கம்.

தலைமை :

தோழர் த.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு.

சிறப்புரை :

தோழர் சுதேஷ்குமார்
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு.

தோழர் காளியப்பன்
மாநில இணைச் செயலாளர், ம.க.இ.க.

ம.க.இ.க-வின் புரட்சிகர பாடல்கள்.

அனைவரும் பாருங்கள் ! பகிருங்கள் !!

தோழமையுடன் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு. 94451 12675.

***

ஏப்ரல் 22 தோழர் லெனினின் 150வது பிறந்தநாள் ! 

  • மனிதகுலத்தை அழித்து வரும் ஏகாதிபத்திய வைரஸ்களிடமிருந்து உலகத்தைப் பாதுகாப்போம் !

♦ கொள்ளைநோய் கொரோனா கொலைகள் பொருளாதார நெருக்கடி பட்டினிச்சாவுகள் !
♦ இது தோற்றுப்போன உலக முதலாளித்துவத்தின் கோரவிளைவு !
♦ உலகமயமான உற்பத்தி – நிதிமூலதன லாபவெறி – சுற்றுச்சூழல் நாசம் !
♦ இவையே பெருந்தொற்றின் மூல ஊற்று ! சோசலிசமே ஒரே மாற்று !

உழைக்கும் மக்களே !

♦ ஊரடங்கையும், பட்டினிச்சாவையும் திணிக்கும் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிப்போம் !
♦ லெனின் பாதையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம் !

தோழமையுடன் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு. 94451 12675.

குடியுரிமை திருத்தச் சட்ட வழக்கில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் !

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கில் தம்மை நீதிமன்ற நண்பனாக (அமிகஸ் கியுரி – amicus curiae) இணைத்துக் கொள்ளக் கோரும் மனுவை இந்திய உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது, ஐ.நா. மனித உரிமை ஆணையம்.

“இச்சட்டம் பாரபட்சம் காட்டும் கருவியாகப் பயன்படுத்தப்படும் என்பதால், இதன் காரணமாக நாடற்றவர்கள் உருவாகும் அபாயமிருப்பதாக” ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் ஆண்டனியோ குடேரஸ் குடியுரிமை திருத்தச் சட்டத்தை விமர்சித்திருந்தார். “இச்சட்டம் அடிப்படையிலேயே பாரபட்சமானது” என ஐ.நா. மனித உரிமை ஆணையம் இச்சட்டத்திற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த விமர்சனங்களின் தொடர்ச்சியாக சர்வதேச அமைப்பான ஐ.நா. மனித உரிமை ஆணையம், தானே முன்வந்து, தன்னை நீதிமன்ற நண்பனாக இணைத்துக் கொள்ளக் கோரும் மனுவைத் தாக்கல் செய்திருப்பது எதிர்பாராத அதிர்ச்சியை பா.ஜ.க. அரசிற்கு ஏற்படுத்தியிருக்கிறது.

ஐ.நா. மனித உரிமை ஆணையர் மிச்சேல் பேச்லெட்.

“இந்திய உச்ச நீதிமன்றத்தின் விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டே இந்த மனுவைத் தாக்கில் செய்திருப்பதாக”க் கூறியிருக்கிறது ஐ.நா. மனித உரிமை ஆணையம். மேலும், “ஐ.நா. மன்றப் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் எண்.48/141, மனித உரிமைகளைக் காக்கவும், அவற்றை வளர்தெடுக்கவும் மற்றும் உலக நாடுகளுக்கு இது குறித்து ஆலோசனைகளை வழங்கவும் தமக்குப் பொறுப்பும் கடமையும் அளித்திருக்கும் அடிப்படையிலும்; சர்வதேச மனித உரிமை நியதிகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றத்திடம் விளக்கிக் கூறும் வகையிலும் மட்டுமே இந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாகவும்” அவ்வாணையம் விளக்கமும் அளித்திருக்கிறது.

“இந்திய ராஜதந்திர வரலாற்றிலேயே இது நிச்சயமாக முன்னேப்போதும் கண்டிராத ஒன்று” என முன்னாள் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் குறிப்பிட்டிருப்பதிலிருந்தே, ஐ.நா. மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்திருக்கும் மனுவின் முக்கியத்துவத்தை யாரும் உணர்ந்து கொள்ளலாம்.

ஒரு அசாதாரணமான சட்டத்திற்கு எதிராக அசாதாரணமான முறையில் தொடுக்கப்பட்டிருக்கும் மனு இது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தால் ஏற்கப்படமால் நிராகரிக்கப்பட்டாலும்கூட இது நரேந்திர மோடி அரசுக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்டிருக்கும் முக்கியமானதொரு பின்னடைவாகும்.

படிக்க:
♦ உ.பி., குஜராத்தை பின்பற்ற வேண்டுமா அல்லது தமிழ்நாடு, கேரளாவை பின்பற்ற வேண்டுமா ?
♦ நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு பாதிக்கப்படும் தொழிலாளர்கள் !

இந்திய அரசின் வெளியுறவுத் துறை, “குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். சட்டங்களை இயற்றும் அதிகாரம் இந்திய நாடாளுமன்றத்தின் இறையாண்மையோடு தொடர்புடையது. எந்தவொரு வெளிநாட்டு அமைப்பிற்கும் இந்திய இறையாண்மை தொடர்பான விவகாரங்களில் தலையிடுவதற்கான அங்கீகாரமோ தகுதியோ கிடையாது” என எச்சரித்து இம்மனுவிற்கு எதிராக அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் ஆண்டனியோ குடேரஸ்

ஐ.நா. மனித உரிமை ஆணையம் இந்த வழக்கில் தன்னை மனுதாரராகச் சேர்த்துக்கொள்ளக் கூறவில்லை. நீதிமன்ற நண்பனாக, மனித உரிமை குறித்து சர்வதேச நியதிகளும், ஒப்பந்தங்களும் கூறுவதென்ன என விளக்கும் அடிப்படையில் மட்டுமே வழக்கில் சேர்த்துக் கொள்ளக் கூறியிருக்கிறது. வலதுசாரி நரேந்திர மோடி அரசால் மட்டுமல்ல, நடுநிலையாளர்கள் எனக் கூறிக்கொள்ளும் பலராலும்கூட ஐ.நா. மனித உரிமை ஆணையம் இவ்வழக்கில் இம்மட்டில் தலையிடுவதைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“இந்த வழக்கின் மனுதாரர்களுள் ஒரு பிரிவினரே சர்வதேச மனித உரிமை நியதிகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பார்கள் என்பதால், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மனு அவசியமற்ற ஒன்று” எனக் கூறுகிறது, தி இந்து நாளிதழ்.

“குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில்தான் பரிசீலிக்கப்பட வேண்டுமெயொழிய, அதனைச் சர்வதேச ஒப்பந்தங்கள் அடிப்படையில் பரிசீலிக்கத் தேவையில்லை” எனக் கூறியிருக்கிறார், மூத்த வழக்குரைஞர் மோகன் பராசரன். சுருக்கமாகச் சொன்னால், ஐ.நா. மனித உரிமை ஆணையம் தாக்கல் செய்திருக்கும் இந்த மனு ஆளும் இந்துத்துவக் கும்பலுக்கு மட்டுமின்றி, நடுநிலையாளர்கள் பலருக்கும்கூட தொண்டையில் சிக்கிய முள் போலாகிவிட்டது.

***

இந்தியாவின் போலி சுதந்திரம் போன்றே, சொல்லிக் கொள்ளப்படும் இந்திய இறையாண்மையும் போலியானதுதான். இதுவொருபுறமிருக்க, உலகமயக் காலக்கட்டத்தில் எது உள்நாட்டு விவகாரம், எது சர்வதேச விவகாரம் என்பதைக் கறாராகப் பிரிக்கும் எல்லைக்கோடு எதுவும் இல்லை. ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கமும், அவர்களின் அறிவார்ந்த பிரதிநிதிகளும் தமது நலனுக்கு ஏற்றாற்போலத் தான் இதற்கு வியாக்கியனம் அளித்து வருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக, இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தயாரித்து அறிவிக்கும் பட்ஜெட் இறையாண்மை மிக்கதொரு நடவடிக்கையாகும். ஆனாலும், அப்பட்ஜெட்டில் எந்தளவிற்குப் பற்றாக்குறையை அனுமதிப்பது என்பதையும் கல்வி, சுகாதாரம், உணவு உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு எவ்வளவு மானியம் ஒதுக்கீடு செய்வது என்பதையும் உள்நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்ப மைய அரசு தன் விருப்பப்படித் தீர்மானித்துவிட முடியாது. மாறாக, ஏகபோக நிதி நிறுவனங்களும், சர்வதேச அமைப்புகள் என்ற பெயரில் செயல்பட்டு வரும் உலக வங்கி உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் கைத்தடி அமைப்புகளும் விதிக்கும் நிபந்தனைகளுக்கு ஏற்றபடிதான் இந்த ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்படுகின்றன.

குறிப்பாக, மைய அரசின் நிதிப் பற்றாக்குறை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மூன்று சதவீதத்திற்குள் இருக்க வேண்டும் என்பதுதான் மேற்கூறப்பட்ட ஏகபோக நிதி மூலதனக் கும்பலின் நிபந்தனை. இதனை ஏற்று நிறைவேற்றும் விதத்தில் 2003-ஆம் ஆண்டிலேயே நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் சட்டமொன்றை இயற்றி, அதற்கேற்பவே பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. கரோனா தொற்றை எதிர்கொள்ள மைய அரசு ஒதுக்கியிருக்கும் 1.70 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான ஒதுக்கீடுகளும்கூட, இந்தச் சட்டத்திற்குட்பட்டுத்தான் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது, இந்து நாளேடு.

இந்திய மக்கள் ஒரு பேரபாயத்தை எதிர்கொண்டுவரும் துயரமான நிலையிலும்கூட, அந்நிய ஏகாதிபத்திய நிறுவனங்கள் விதித்திருக்கும் பற்றாக்குறை விதியை மீறாமல், அதற்குப் பணிந்து நடந்துகொண்டுள்ள மோடி அரசுதான், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் மனுவிற்கு எதிராக இறையாண்மை என்ற பூச்சாண்டியைத் தூக்கிக் காட்டுகிறது.

உலகமயமும், உலக வர்த்தகக் கழகமும் நடைமுறைக்கு வந்த 1990-களிலேயே,  ஒரு தேசத்தின்/நாட்டின் இறையாண்மை என்ற கருத்து காலாவதியாகிவிட்டதாக ஏகாதிபத்தியவாதிகளும், அவர்களின் உள்ளூர் கைத்தடிகளும் அறிவித்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ஏகாதிபத்திய நிதி மூலதனம் ஒரு நாட்டினுள் நுழைந்து இலாபம் ஈட்டுவதற்கு அந்நாட்டின் சட்டங்கள் எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது. அப்படியிருப்பின் அதற்கேற்ப அந்நாட்டின் சட்டங்கள் கைவிடப்பட்டோ, திருத்தப்பட்டோ, ஏகபோக நிதிமூலத்தின் இலாபத்தைப் பாதுகாக்கும் அடிப்படையில் மட்டுமே சட்டங்களும் விதிகளும் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் பொருள்.

படிக்க:
♦ குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் சித்தாந்த வேர்கள் !
♦ நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !

ஒரு தேசத்தின், நாட்டின் இறையாண்மை என்பது அந்நாட்டு மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதைத் தவிர வேறு எதுவுமாக இருக்க முடியாது. இந்த வரையறையின்படி பார்த்தால், இந்திய நாட்டின் போலித்தனமான இறையாண்மையும்கூட முப்பது ஆண்டுகளுக்கு முன்பே ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் பலிபீடத்தில் படையலாக வைக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை. எனவே, ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் மனுவை இறையாண்மையின் அடிப்படையில் எதிர்ப்பதற்கு மைய அரசிற்கு அறம் சார்ந்த அடிப்படை எதுவும் கிடையாது.

மேலும், குடியுரிமைச் சட்டத் திருத்த விவகாரத்தில் அந்நிய அமைப்பு தலையிட அனுமதிக்க முடியாது எனச் சவால்விட்டு வரும் மோடி அரசுதான், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்புரிமைகளை வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்த விவகாரத்தில் மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதற்காக, அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ஜம்மு காஷ்மீருக்கு அழைத்து வந்து, சுற்றிக் காண்பித்து அறிக்கைவிடச் செய்தது. மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா?

உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளுள் ஏதாவது ஒன்றை இந்திய அரசு மீறிவிட்டதாக அக்கழகத்தின் உறுப்பு நாடுகள், குறிப்பாக ஏகாதிபத்திய நாடுகள் குற்றஞ்சுமத்தினால், அதற்கான விசாரணையும், தீர்ப்பும் இந்தியச் சட்டங்களின்படி இந்திய நீதிமன்றங்களில் நடைபெறுவதில்லை. உலக வர்த்தகக் கழகத்தின் தீர்ப்பாயங்களில்தான் வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. அப்பொழுதெல்லாம் இந்திய அரசோ, ஆளும் வர்க்க அறிவுஜீவிகளோ இந்திய இறையாண்மை குறித்து மூக்கைச் சிந்துவதில்லை.

ஐயா, பயப்படாதீங்க… இது வரைவுதான்….

இந்திய அரசு சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களில் மட்டும் கையெழுத்திட்டிருக்கவில்லை. சமூக மற்றும் அரசியல் உரிமைகள், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் குறித்த சர்வதேசிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டிருக்கிறது. ஒரு சாதாரண வர்த்தக ஒப்பந்தத்தை இந்திய அரசு மீறும்போது, உலக வர்த்தகக் கழகத் தீர்ப்பாயம் அதில் தலையிட்டு இந்திய அரசு மீது வழக்குத் தொடுத்து விசாரிக்கலாம் எனும்போது, சர்வதேச மனித உரிமை ஒப்பந்தங்களை இந்திய அரசு மீறும்போது அவ்விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஏன் தலையிடக் கூடாது? உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனைகளாலோ, வழக்கு விசாரணைகளாலோ பாதிப்புக்குள்ளாகாத “இந்திய இறையாண்மை”யின் புனிதம்,  ஐ.நா. மனித உரிமை ஆணையம் நீதிமன்ற நண்பனாகத் தலையீடு செய்வதால் பாதிப்புக்குள்ளாகிவிடுமா?

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்டிருந்தாலும், அச்சட்டத் திருத்தம் பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவிற்குள் தஞ்சமடைந்திருக்கும் அகதிகளின் குடியுரிமையைத் தீர்மானிப்பதில் முசுலிம் மதத்தினரைப் பாகுபடுத்தும் வண்ணம் மதத்தை அளவுகோலாகப் பயன்படுத்துவதால், இப்பிரச்சினையில் ஐ.நா. மனித உரிமை ஆணையம் தலையிடுவதற்கு நியாயம் உண்டு. அம்மன்றம் தலையிடுவதை இறையாண்மை என்ற பூச்சாண்டியைக் காட்டி தடுத்து நிறுத்த மோடி அரசு முயலுவதை நாம் அனுமதிக்க முடியாது.

இதுவொருபுறமிக்க, இந்திய உச்ச நீதிமன்றம் ஆளும் இந்து மதவெறிக் கும்பலின் கைத்தடியாகச் செயல்பட்டு வருவது பல்வேறு வழக்குகளில் அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்புகள், உத்தரவுகள் – ரஃபேல் ஊழல் வழக்கு, பாபர் மசூதி நில உரிமை வழக்கு, அய்யப்பன் கோவிலில் பெண்கள் வழிபடும் வழக்கு உள்ளிட்டவை – வழியாக அம்பலமாகிவிட்டது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமெனக் கோருவதுகூடத் தவறாகிவிடாது.

– செல்வம்

உ.பி., குஜராத்தை பின்பற்ற வேண்டுமா அல்லது தமிழ்நாடு, கேரளாவை பின்பற்ற வேண்டுமா ?

ந்த ஊரடங்கால் கீழ்நடுத்தரவர்க்கத்தினரும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்களும் கடுமையான துன்பத்தில் இருக்கிறார்கள். இதனை எதிர்கொள்ள வேண்டுமென்றால், நாட்டு மக்கள் அனைவருக்குமே ரேஷன் அட்டை தர வேண்டும்; இந்திய உணவுக் கழக கிடங்குகளில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தானியங்களை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என பலரும் சொல்லிவிட்டார்கள்.

மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவிகளை அளித்தாலும் அவை ரேஷன் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். நியாயவிலைக் கடைகளை நடத்துவதில் முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டிலும் அரிசி வாங்கக்கூடிய கார்டுகளுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கும்.

இப்படி தெரிவுசெய்து உதவிகளை வழங்குவதால் உதவிகளைப் பெற வேண்டிய பலர், உதவி கிடைக்காமல் போகிறார்கள் என அமர்த்தியா சென், ஷான் த்ரே, அபிஜித் பேனர்ஜி, ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்களிலிருந்து சோனியாகாந்தி வரை பலரும் சொல்லிவிட்டார்கள்.

இந்தியாவில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் இருந்தாலும்கூட, நகர்ப்புறத்தில் 50 சதவீதம் கிராமப் புறங்களில் 75 சதவீதம் மக்களையே அது பாதுகாக்கிறது. அதாவது ஒட்டுமொத்தத்தில் 67 சதவீதம் பேர் மட்டுமே அந்தச் சட்டத்தின் வரம்பிற்குள் வருகிறார்கள்.

இந்த 67 சதவீதம் பேரிலும் கிட்டத்தட்ட 11 கோடிப் பேருக்கு ரேஷன் கிடைக்காது என்கிறது தி வயர் இணையதளத்தில் வந்துள்ள ஒரு கட்டுரை.

காரணம், இந்தச் சட்டம் 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து உணவு தானியத்தைப் பிரித்தளிக்கிறது. 2011ல் மக்கள் தொகை 121 கோடி. ஆனால், 2020ல் இந்தியாவின் மக்கள் தொகை 137 கோடி. இதில் 67 சதவீதம் பேருக்கு உணவு தானியங்களை வழங்க வேண்டுமென்றால் 92.1 கோடி பேருக்கு வழங்க வேண்டும். ஆனால் வழங்கப்படுவதென்னவோ, முந்தைய கணக்குப்படி 81.3 கோடி பேருக்குத்தான். ஆக, ரேஷன் பொருள் கிடைக்க வேண்டிய 10.8 கோடி பேருக்கு, பொருட்கள் கிடைக்காது.

இதில் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் வெளிமாநிலத் தொழிலாளர்கள்.
இந்தப் பிரச்சனைக்கு அமர்தியா சென், அபிஜித் பேனர்ஜி, ரகுராம் ராஜன் போன்றவர்கள் ஒரு தீர்வை வழங்குகிறார்கள். அதாவது ஆறு மாதங்களுக்கு செல்லத்தக்க ரேஷன் அட்டைகளை வழங்கி, அவற்றின் மூலம் உணவு தானியங்களை வழங்குவது.

படிக்க:
♦ நெல்லை : கொரோனா ஒழிப்பு தூய்மைப் பணியாளர்களின் அவலநிலை !
♦ உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது ?

இப்படி வழங்குவதற்குத் தேவையான உணவு தானியங்கள் இந்திய உணவுக் கழக கிடங்குகளில் தேங்கிக் கிடக்கின்றன. தற்போது 7.7 கோடி மெட்ரிக் டன் தானியங்கள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. வரும் அறுவடை சீசனில் 4 கோடி டன்கள் கொள்முதல் செய்யப்படும். 110 கோடி மக்களுக்கு மாதம் 10 கிலோ அரிசியை கொடுத்தால்கூட, 6.6 கோடி டன் தானியம்தான் தேவைப்படும்.

சமாளிக்க முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்குக் கொடுப்பதால் ஏற்படும் கூடுதல் செலவைவிட, விலையில்லா அரிசி இல்லாவிட்டால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் சிலர் விட்டுப்போனால் ஏற்படும் சமூகச் செலவு அதிகம் என்கிறார்கள் ரகுராம் ராஜன், அமர்தியா சென், பேனர்ஜி ஆகியோர்.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வராதவர்களின் சதவீதம் நாட்டிலேயே பிஹாரில்தான் அதிகம். 14.17 சதவீதம். அதற்கு அடுத்த இடம் உத்தரப்பிரதேசத்திற்கு. நமக்கெல்லாம் முன்மாதிரியாக வைக்கப்படும் குஜராத்தில் 7.46 சதவீதம் பேர் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வருவதில்லை.

இதில் சிறப்பாக செயல்படுவது தமிழ்நாடும் கேரளாவும். கேரளாவில் 2.82 சதவீதம். தமிழ்நாட்டில் 3.72 சதவீதம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் முரளிதரன் காசி விஸ்வநாதன் 

உணவுக்கு கையேந்தி தெருவில் நிற்கும் அமெரிக்கா.. என்ன நடக்கப்போகிறது ?

ண்மையில் நாம் காணும் காட்சிகள் நம்ப முடியாமல் திகைக்க வைக்கின்றன. ‘ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அமெரிக்கர்கள் கையேந்தி சாலையில் நிற்பார்கள்’ என்று சில மாதங்களுக்கு முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் நாம் நம்பியிருப்போமா? ஆனால், இன்றைய நிஜம் இதுதான்.

அமெரிக்காவில்… கொரோனா வைரஸால் வேலையிழந்தோர், வீடற்றோர் என லட்சக்கணக்கானோர் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். இவர்களுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இலவச உணவு விநியோகம் செய்கின்றன. இவற்றை வாங்குவதற்காக மக்கள் பல கி.மீ. தூரத்துக்கு வரிசையில் நிற்கிறார்கள்.

ஏப்ரல் 21 நிலவரப்படி அமெரிக்காவில் சுமார் 7,87,901 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 40,000 பேர் இறந்து போயிருக்கின்றனர்.

பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா, நியூயார்க், கலிஃபோர்னியா, ஃப்ளோரிடா என பெரும்பான்மையான மாகாணங்களில்.. இலவச உணவுக்காக மக்கள் மணிக்கணக்காக காத்துக்கிடக்கின்றனர். இந்திய நிலைமைக்கும் அவர்களுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, இங்கே நம் மக்கள் நெருக்கி அடித்துக்கொண்டு கூட்டமாக நிற்கிறார்கள். அங்கு கார்களில் நிற்கிறார்கள். நியூயார்க் போன்ற நகரங்களில் இத்தகைய கார்களையும் காண முடியவில்லை. Food bank line-களில் பெரும் மனிதர் கூட்டம் வரிசையில் நிற்கிறது. வாங்கிய வேகத்தில் பசி பொறுக்க முடியமால் அங்கேயே சாப்பிடுகின்றனர்.

அமெரிக்கா பற்றி நமக்கு இருக்கும் மனச் சித்திரம் வேறு. ஆனால், ஒரு சின்னஞ்சிறு வைரஸ் அமெரிக்காவை பிய்த்து சிதைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் கொரோனாவின் உச்சத்தை இன்னும் அமெரிக்கா தொடவில்லை. இப்போதே இந்த நிலைமை என்றால், உச்சத்துக்குப் போகும்போது என்னவாகும்? இத்தகைய இக்கட்டான நிலைமைகளில் மக்களின் உணவை கூட உத்தரவாதப்படுத்த இயலாத நிலையில்தான் இருக்கிறது அமெரிக்க வல்லரசு.

குறைந்தபட்சம் ஒவ்வொரு மாகாணத்திலும் 10 ஆயிரம் பேர் இத்தகைய Food bank line-களில் நிற்பதாக செய்திகள் சொல்கின்றன. “நாங்கள் வாரம் 60 ஆயிரம் பேருக்கு உணவு வழங்குகிறோம். ஆனால், எங்களின் சேவை பகுதியில் மட்டும் 12 லட்சம் பேருக்கு உணவு தேவைப்படுகிறது.’’ என்கிறார், The San Antonio Food Bank என்ற தன்னார்வ நிறுவனத்தின் சி.இ.ஓ., எரிக் கூப்பர்.

படிக்க:
♦ நீடிகப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன ? வாஞ்சிநாதன் | காணொளி
♦ உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் ?

கடந்த ஏப்ரல் 9-ம் தேதி டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள San Antonio என்ற இடத்தில் இலவச உணவு பொருட்களை பெறுவதற்காக சுமார் 6,000 கார்கள் ஏழு கிலோமீட்டர் நீளத்துக்கு வரிசையில் நின்றன. சில குடும்பங்கள் 12 மணி நேரம் முன்னதாகவே வந்து வரிசையில் காத்திருந்தனர். ஏப்ரல் 10-ம் தேதி கலிஃபோர்னியாவில் உணவுப் பொருட்களை பெறுவதற்கு 5,000 கார்கள் வரிசையில் நின்றன.

இவ்வாறு உணவு வாங்க வரிசையில் நிற்கும் இவர்கள் அனைவரும் ஏழைகள் என்று சொல்ல முடியாது. பெரும்பான்மையானோர் பணிபுரியும் பிரிவை சேர்ந்தவர்கள். இப்படி ஒரு நிலை தங்களுக்கு ஏற்படும் என்பதை கனவிலும் நினைத்துப் பார்த்திராதவர்கள். “வரிசையில் நிற்பவர்களில் சுகாதாரத் துறை ஊழியர்கள் முதல் ஊபர் ஓட்டுனர் வரை பலரும் இருக்கின்றனர். பெரும்பாலும் வேலையிழந்தவர்கள்” என்கிறார் எரிக் கூப்பர்.

ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தன்னார்வ குழு உணவு விநியோகம் செய்கிறது. பெரும்பாலும் வாரம் ஒருமுறைதான் உணவு விநியோகம். அந்த தகவலை அறிந்துகொண்டு அங்கு மக்கள் கூட்டம் குவிகிறது. ஆனால், உணவு போதவில்லை. பல மணி நேரம் வரிசையில் நின்றவர்கள் உணவு கிடைக்காமல் ஏமாந்து திரும்புகின்றனர்.

***

1930-களில் கிரேட் டிப்ரஷன் என்று சொல்லப்படும் உலகப் பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டது. அப்போது அமெரிக்கர்கள் ரொட்டித் துண்டுகளுக்காக வீதிகளில் வரிசையில் நின்றார்கள். அவை, breadlines என்று அழைக்கப்பட்டு பின்னர் கிரேட் டிப்ரஷ்னனின் குறியீடாகவும் அச்சொல் மாறியது. அந்த breadlines இப்போது neo-breadlines ஆக, food lines- என்ற பெயரில் உருவம் எடுத்துள்ளது.

உண்மையில் அமெரிக்காவில் காணப்படும் இந்தப் பட்டினிக் காட்சிகள் நம்மை திகைக்க வைக்கின்றன. இத்தனை நாள் நாம் கண்ட செல்வ செழிப்பான அமெரிக்கா எங்கே போனது? எல்லோரிடமும் கார் இருக்கிறது. அடுத்த வேலை உணவுக்கு காசு இல்லை; இருப்பது கை நிறைய கடன் அட்டைகள் மட்டுமே.

இனி என்ன செய்வது? இந்த நிலைமை எப்போது சரியாகும்? சரியாகும் வரையிலும் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? குடும்பத்தை எப்படி ஓட்டுவது? தவணைகளை எப்படி கட்டுவது? பைத்தியம் பிடித்தது போல் திரிகின்றனர். பி.பி.சி. வெளியிட்டுள்ள பல வீடியோக்களில் வேலையிழந்தோர், சில வார்த்தை பேசுவதற்குள் உடைந்து அழுகிறார்கள்.

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் அமெரிக்காவில் 1 கோடியே 70 லட்சம் பேர் வேலையில்லாதோருக்கான உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே இதுவரை அரசின் உதவிகள் சென்று சேர்ந்துள்ளன. மீதியுள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்குப் பதிலாக வேலைக்குச் செல்வதற்கு மறைமுகமாக வலியுறுத்தப்படுகிறார்கள்.

வேலைக்குச் சென்றால் நோய் தாக்குமே? அதைப்பற்றி அரசுக்கு என்ன கவலை? உற்பத்தி பாதிக்கப்படக் கூடாது, அவ்வளவுதான்.

“தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்காக நாம் ஊதியம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்” என்று ட்ரம்ப் ‘கணத்த’ மனதுடன் கூறியதை இணைத்து இதைப் புரிந்துகொள்ள முடியும். அதிகாரிகள் மட்டத்தில் இதை வெளிப்படையாக கூறவும் செய்கின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக வேலைக்குச் செல்லாதோருக்கான வேலையின்மை உதவித் தொகையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன. ‘செத்தாலும் பரவாயில்லை; வேலைக்குப் போ..’ என்கிறார்கள்.

இந்த நிலைமை தொடரும்போது, மிக விரைவில் சமூக அமைதியின்மை உருவாகும். உலகிலேயே குடிமக்கள் அதிகம் பேர் துப்பாக்கி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. இப்போதுவரை துப்பாக்கி கடைகள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டுவரப்பட்டு விற்பனை நடைபெறுகிறது. அங்கு வாங்கிக் குவிக்கப்படும் லட்சக்கணக்கான துப்பாக்கிகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்.

இந்த துப்பாக்கிகளைக் காட்டிலும், பெரும்பகுதி மக்களை சூழ்ந்திருக்கும் வறுமை, வேலையின்மை, நிச்சயமற்ற நிலை… போன்றவை உருவாக்கும் சமூகக் கொந்தளிப்புதான் தீவிரமான பங்காற்றப் போகிறது.

“இத்தகைய நிலை தொடர்ந்தால் ஒரு சமூக புரட்சியை எதிர்கொள்ள வேண்டிய நிலை அரசுகளுக்கு ஏற்படும்” என்று ‘எச்சரிக்கிறார்’ புகழ்பெற்ற பொருளாதார ஊடகமான Bloomberg-ன் ஆசிரியர் குழுவில் இருக்கும் Andreas Kluth.

“இந்த கொந்தளிப்பானது, அமெரிக்காவை விட மக்கள் அடர்த்தி மிகுந்த ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்தியாவிலும் அதிகமாக ஏற்படும்’’ என்று சொல்லும் Kluth, “இந்த நெருக்கடி நிலை முடிவுக்கு வந்ததும் உலகம் முன்பு போலவே இயங்கும் என எண்ணுவது அப்பாவித்தனமானது. இப்போது உருவாகியுள்ள இந்த கோபமும், கசப்பும் நாம் யூகிக்கவியலாத புதிய வழிமுறைகளில் வெளிப்படும். அவை, பெருந்திரள் மக்கள் இயக்கங்களாக அல்லது கிளர்ச்சி இயக்கங்களாக மாறக்கூடும். பழங்கால ஆட்சி முறைகளை எதிரி என கருதி மக்கள் ஒதுக்கி வைத்ததைப் போன்ற நிலைமை இன்றைய அரசுகளுக்கு உருவாகக்கூடும்” என்கிறார்.

வரப்போகும் நிலைமைகளை Andreas Kluth முன்னறிவிக்கிறார். அதேசமயம் கொரோனாவுக்கு பிந்தைய உலகத்தில் தொழிலாளர்களின் கொந்தளிப்பை கையாள்வதற்கு முதலாளிகளுக்கு புதிய வழிமுறைகள் எதுவும் தேவைப்படாது. அதற்கு இவ்வுலகின் ஆகப்பழைய ஆயுதம் ஒன்றே போதுமானது. அதன் பெயர் பட்டினி.

பசியுடன் பரிதவிக்கும் தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு வேலைக்கு எடுத்து, விட்டதை பிடிக்க மேலும் வெறியுடன் சுரண்டுவார்கள். மிச்சமிருக்கும் வளங்களை மானியங்களின் பெயரால்; சந்தையை ஸ்திரப்படுத்துவதன் பெயரால் அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும்.

அரசு என்பது பெரும் நிறுவனங்களின் திட்டவட்டமான அடியாளாக மாறும். கொரோனாவால் பிழைத்தவர்கள் யாரும் இவர்களிடம் தப்பிக்க முடியாது. அதற்கு மாஸ்க் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. மாறாக இருக்கும் ‘மாஸ்க்’ கழட்டப்பட வேண்டும். இது மக்களுக்கான அரசு என்ற மாஸ்க்கையும், அப்படியான நம் நம்பிக்கைகளையும் கழற்றினால், அதன் பின்னே தென்படும் உண்மை நம் கண்களுக்கு புலப்படலாம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் பாரதி தம்பி

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் வடசென்னை மக்கள் உதவிக்குழு !

கொரானா நோய்த் தொற்றை முன்வைத்து மக்கள் எந்தவித முன் தயாரிப்பையும் செய்யவிடாமல் அரசு ஊரடங்கை அறிவித்துவிட்டது. பெரும்பான்மையான மக்கள் அன்றாட கூலிக்கு வேலை செய்து, அதுவே பற்றாக்குறையாக வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது, இவர்களைப் பற்றிய கவலை இல்லாமல் அரசு ஊரடங்கை அமுல்படுத்துகிறது.

பகுதிகளில் இளைஞர்களிடம் மக்களின் நிலையை விசாரிக்கும் பொழுது, மக்கள் வருமானமில்லாமல் கடும் போராட்டத்துடன் தான் இருக்கிறார்கள் என தெரிவித்தார்கள். இதை நண்பர்களிடம் தெரிவித்த பொழுது, மக்களின் நிலை குறித்து நிறைய வருத்தம் இருந்தாலும், நோய்த் தொற்றும், ஊரடங்கு அமுலில் இருக்கும் பொழுது எப்படி செயல்படுவது என தயங்கினார்கள். இதே நண்பர்கள் தான் சென்னை மழை வெள்ளத்தின் பொழுது கழுத்தளவு தண்ணீரில் கடந்து போய் மக்களுக்கு பொருட்கள் விநியோகித்தவர்கள், கஜா புயலின் பொழுது மக்களிடம் இருந்து நன்கொடையாக பணத்தையும், பொருட்களையும் திரட்டி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைத்தவர்கள்.

கொரானா காலத்தில் பெரும்பான்மையான மக்கள் நெருக்கடியில் வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது, அதை எப்படி நம்மால் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கமுடியும்? இதே நெருக்கடி காலத்தில் தான், மருத்துவர்கள், மருத்துவ துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் இயங்கிக்கொண்டுத்தான் இருக்கிறார்கள். ஆகையால் நம்மால் முடிந்ததை செய்வோம். அது நமது கடமை என பேசிய பொழுது ஏற்றுக்கொண்டார்கள். ஐந்து வழக்கறிஞர்கள், ஒரு எழுத்தாளர், சில சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து வடசென்னை மக்கள் உதவிக்குழு என்ற பெயரில் வாட்சப் குழுவை ஆரம்பித்தோம். அவரவர் கையிலிருந்த பணத்தை முதலில் தந்தார்கள். பிறகு நண்பர்களுக்கு வாட்சப் மூலம் செய்தி அனுப்பினோம். நல்லதொரு செயலை முன்னெடுத்துள்ளீர்கள் என பாராட்டு தெரிவித்தார்கள். தங்களால் இயன்ற தொகையை தர துவங்கினார்கள். சிறுக சிறுக பணம் சேரத்துவங்கியது.

புதுவண்ணை பகுதியில் அன்னை இந்திரா நகர் பகுதியில் நம்முடன் ஏற்கனவே சமூக செயல்பாடுகளில் நம்மோடு வேலை செய்திருந்த சமூக அக்கறை கொண்ட இளைஞர்களை தொடர்பு கொண்டு பேசினோம். தங்கள் பகுதிகளில் மிகவும் சிரமப்படுகிறவர்களை கண்டறிந்து தெரிவியுங்கள் என்றோம். அவர்களும் பொறுப்பாக ஒரு பட்டியல் தயாரித்து அனுப்பினார்கள். சில மூட்டை அரிசியை வாங்கினோம். அதை ஐந்து கிலோ, ஐந்து கிலோவாக 100 பண்டல்களாக மாற்றினோம். பட்டியலில் உள்ளவர்களுக்கு இளைஞர்கள் மூலம் டோக்கன் வழங்கினோம். குழுவில் உள்ள வழக்கறிஞர்களின் அலுவலகத்திற்கு நேரம் சொல்லி ஐந்து ஐந்து பேர்களாக வரவழைத்தோம். சானிடைசர் வழங்கி, பொருட்களை வழங்கினோம்.

படிக்க:
♦ கொரோனா ஊரடங்கு : வழியும் களஞ்சியம் ! வறுமையில் மக்கள் !!
♦ கொரோனா நிவாரண நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் ! செய்திகள் படங்கள்

இப்படி நிவாரண உதவி வழங்கிய செய்திகளை வாட்சப்பில் மீண்டும் நண்பர்களிடம் தெரிவித்தோம். குழுவில் உள்ள எழுத்தாளர் திரைத்துறையில் சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கும் ஒரு திரை இயக்குநரிடம் நன்கொடை கேட்டதற்கு, தன் பெயரை வெளியில் சொல்லவேண்டாம் என ரூ. 10000 தந்தார். நண்பர்களின் நண்பர்களும் உதவிகள் தந்தார்கள். கூகுள் பே மூலம் பணமும் அனுப்பிவைத்தார்கள்.

புதுவண்ணை சுனாமி குடியிருப்பு, சிவன் நகரில் வாழும் மக்களுக்கு இந்த முறை அரிசியோடு பருப்பும் வாங்கி 100 குடும்பங்களுக்கு கொடுத்தோம். அடுத்து, ராயபுரம், காசிமேடு பகுதிகளில் மிகவும் சிரமப்பட கூடிய மக்களை இளைஞர்கள் மூலம் கண்டறிந்து 100 குடும்பங்களுக்கு பொருட்கள் விநியோகித்தோம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்தமுறை அரிசி, பருப்பும் கூடுதலாக சமைப்பதற்கு எண்ணெயும் வாங்கி திருவெற்றியூர் டோல்கேட் பகுதிகளில் வாழும் தூய்மை பணி (துப்புரவு வேலை) செய்பவர்களுக்கும், ஆட்டோ தொழிலாளிகளுக்கும், இன்னும் சில குடும்பங்களுக்கும் சேர்த்து மொத்தம் 100 குடும்பங்களுக்கு விநியோகித்தோம்.

ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து ஏப்ரல் 15 வரை வட சென்னை பகுதிகளில் வாழும் 400 குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை இந்த குழு மூலம் செய்திருக்கிறோம்.

வடசென்னை மக்கள் உதவிக்குழு வாட்சப் குழுவில் உள்ள நாங்கள் நேரில் சந்திக்காமல், அடிக்கடி போனில் பேசிக்கொள்கிறோம். ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பரிமாறிக்கொள்கிறோம். பேசி, முறையாக திட்டமிட்டுக்கொள்கிறோம். பொருட்களை வாங்குவதிலும், விநியோகிப்பதிலும் முறையாக செயல்படுகிறோம். தன்னார்வத்துடன் இளைஞர்களும் வேலைகளில் ஈடுபடுகிறார்கள். மக்கள் பணிகளில் தொடர்ந்து ஈடுபட ஈடுபட நமக்கு அனுபவமும், மக்களுடைய பணத்தை கையாள்வதால் பொறுப்பும் அதிகரிக்கிறது.

தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவோம். கொரானாவிலிருந்து நம் மக்களை காப்போம்.

மக்கள் பணியில் இணைத்துக்கொள்ள தொடர்பு கொள்ளுங்கள்.

தொலைபேசி எண்கள்:

9941314359
8825643335
7397468117

இப்படிக்கு,
வடசென்னை மக்கள் உதவிக்குழு,
சென்னை.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

நீடிக்கப்படும் ஊரடங்கு நடக்க வேண்டியது என்ன ? வாஞ்சிநாதன் | காணொளி

கொரோனா தாக்குதலைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கு குறித்தும், இத்தருணத்தில் அரசு செய்திருக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும். எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டியவை குறித்தும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் அளித்துள்ள பேட்டியின் காணொளி. பாருங்கள்… பகிருங்கள்…

நன்றி : அறக்கலகம்.

உலக சுகாதார மையத்துக்கான நிதியை அமெரிக்கா வெட்டியது ஏன் ?

“எனது நிர்வாகத்திடம் உலக சுகாதார மையத்துக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவியை நிறுத்தி விடுமாறு நான் இன்றைக்கு உத்தரவிட்டுள்ளேன். கொரோனா வைரஸ் பரவலுக்கு அதன் மோசமான நிர்வாகம் எந்தளவுக்கு காரணமாக இருந்தது என்பதைக் குறித்த விசாரணை நடந்து வருகிறது. எல்லோருக்குமே இதில் என்ன நடந்தது என்று தெரியும்” என ஏப்ரல் 14ம் தேதி அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்காவுக்கெல்லாம் கொரோனா வராது என்று முதலில் சவடால் பேசி வந்த டிரம்ப், பிறகு அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து தற்போது பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில் சீனா தான் அனைத்துக்கும் காரணம் எனப் பேசி வருகிறார். ஜனவரி மாதத்தின் மத்திய பகுதி வரை இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவாது என சீன அரசு சொல்லி வந்ததை உலக சுகாதார மையம் ஏற்று பிரச்சாரம் செய்ததாகவும், அந்நிறுவனத்தின் இது போன்ற சீனச் சார்பு நடவடிக்கைகளே வைரஸ் பரவலுக்கு காரணமாகி விட்டது என்றும் டிரம்ப் குற்றம் சுமத்துகிறார்.

மேலும் சீனாவில் வைரஸ் தொற்று அறியப்பட்டதும் அங்கே என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள உலக சுகாதார மையம் தவறி விட்டது என்றும், சீன அரசின் இரும்புத் திரையைக் கடந்து தணிகை செய்யப்பட்டு வரும் செய்திகளை அப்படியே நம்பியது எனவும் குறிப்பிட்டுள்ளார். சீன அரசு சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்க தேவையில்லை என்று சொன்னதையும் உலக சுகாதார மையம் அப்படியே ஏற்றுக் கொண்டதாக டிரம்ப் சுட்டிக்காட்டுகிறார்.

டிரம்பின் இந்த முடிவை பல்வேறு சர்வதேச நாடுகளும் கடுமையாக எதிர்த்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவுக்கு வால் பிடிக்கும் நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் ஐரோப்பிய யூனியனும் டிரம்பின் முடிவை விமரிசித்துள்ளன. குறிப்பாக ஜெர்மன் அரசு மிகக் கடுமையாக எதிர்த்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளவில் ஒரு பேரழிவை ஏற்படுத்தி வரும் இந்த சூழலில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதோ மற்றவரை பலிகடா ஆக்குவதோ பலனளிக்காது என்றும் இந்த சூழலில் உலக சுகாதார மையம் போன்ற ஒரு பொதுவான அமைப்பை முடக்குவது சரியல்ல என்றும் இந்நாடுகள் குறிப்பிடுகின்றன.

அமெரிக்காவிற்கு உள்ளேயே டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. சில முதலாளித்துவ பத்திரிகைகள், பிப்ரவரி மாத இறுதி வரை டிரம்ப் சுமார் 14 முறை சீனாவின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசியதை மேற்கோள் காட்டி, தற்போது அமெரிக்க கொரோனா நிலவரம் கைமீறிப் போவதை உணர்ந்த டிரம்ப் பழியை சீனாவின் மீது போட முயல்வதாக குற்றம் சாட்டுகின்றன. உலக சுகாதார மையத்துக்கு நிதிப் புரவலராக உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்சும் டிரம்பின் முடிவு தவறானது என விமரிசித்துள்ளார்.

உலக சுகாதார மையத்திற்கான நிதியை அமெரிக்கா வெட்டவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளது அந்நிறுவனத்தின் உதவியை பெரிதும் சார்ந்துள்ள இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளை கடுமையாக பாதிக்கும். எனினும், இவ்விசயத்தில் இந்தியா மிக மென்மையான எதிர்ப்பை பதிவு செய்துள்ள அதே சமயம், பல்வேறு ஆப்ரிக்க நாடுகளோ மிகக் கடுமையாக சாடியுள்ளன.

படிக்க:
♦ கொரோனா – கருத்துப்படங்கள் !
♦ அமெரிக்கா : கொரோனாவுக்கு பலியாகும் கருப்பின ஏழை மக்கள் !

உலக சுகாதார மையத்திற்கு அதன் உறுப்பு நாடுகளும் நிதி உதவி அளிக்கின்றன. கடந்தாண்டு இந்தியா சுமார் 4.1 மில்லியன் டாலர் நிதி அளித்துள்ளது. அதே ஆண்டில் அமெரிக்கா சுமார் 500 மில்லியன் டாலர் நிதியளித்துள்ளது.

கொரோனா வைரசின் தோற்றம் என்னவென்பதைக் குறித்து இன்னமும் ஒரு தெளிவான முடிவுக்கு விஞ்ஞான உலகம் வந்தடையவில்லை. வௌவால்கள் மூலம் பரவியிருக்கலாம் அல்லது வேறு மிருகங்கள் மூலம் பரவி இருக்கலாம் என்பதெல்லாம் ஒரு கருதுகோள் அளவிலேயே உள்ளது. அதன் தோற்றம் குறித்தும், அதை வெல்வது எப்படி என்பதைக் குறித்தும் அறிவியல் உலகம் ஒரு முடிவுக்கு வர மேலும் சில காலம் ஆகலாம். எனினும், அது சீனத்துப் பரிசோதனைச் சாலையில் உருவாக்கப்பட்ட உயிரி ஆயுதம் என்று வாட்சாப் விஞ்ஞானிகளும் இன்னபிற சதிக் கோட்பாட்டாளர்களும் பரப்பி வருகின்றனர்.

உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோசையும், சீனாவையும் டிரம்ப் குறிவைப்பதற்கு மேற்படி வில்லேஜ் விஞ்ஞானிகளின் கற்பனைக் கதைகள் மட்டும் காரணங்களாக இல்லை. டிரம்பின் முடிவின் பின் அவரது அரசியல் நலன் ஒளிந்துள்ளது. எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் மீண்டும் போட்டியிட இருக்கிறார் டிரம்ப். இந்த நிலையில் தான் கொரோனா வைரஸ் அமெரிக்காவை ஆட்டிப்படைத்து வருகின்றது. மொத்த நாடும் முடங்கியுள்ள நிலையில் நோயால் அதிகரித்து வரும் மரணங்களும், அது உண்டாக்கும் அச்சமும் ஒரு புறம் என்றால் நொறுங்கிச் சரிந்து வரும் பொருளாதாரம் இன்னொரு புறம் மக்களை நெருக்கி வருகிறது. கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார நிலவரம் மிக மோசமாக இருக்கும் என்றும், வேலையிழப்புகள் அதிகரிக்கும் என்றும் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

படிக்க:
♦ குளோரோகுயின் மாத்திரைகள் : அமெரிக்காவின் மிரட்டலும், 56 இஞ்ச்சும் !
♦ கொரோனா நிவாரண நடவடிக்கையில் மக்கள் அதிகாரம் ! செய்திகள் படங்கள்

எனவே இதற்கெல்லாம் காரணமாக ஒரு எதிரியை சுட்டிக்காட்ட வேண்டிய அரசியல் தேவை டிரம்புக்கு உள்ளது. பல பத்தாண்டுகளாக “ரஷிய அரக்கனிடம்” இருந்து உலகைக் காக்கும் பொறுப்பை தலையில் சுமப்பதாக அமெரிக்க மக்களை வெறியூட்டி தமது ஏகாதிபத்திய சுரண்டலையும், ஆக்கிரமிப்புப் போர்களையும் நியாயப்படுத்திக் கொண்டனர் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினர். இப்போது “ரஷிய அரக்கனின்” இடத்தை “சீன டிராகன்” பிடித்துக் கொண்டுள்ளது.

தனது தோல்விக்கான காரணத்தை ஒரு அந்நியரின் மேல் சாட்டி அந்த அந்நியருக்கு எதிரானதாக தேச வெறியை கட்டமைப்பது பாசிஸ்டுகளின் வழக்கமான தந்திரம் – இந்தியர்களாகிய நாம் இந்த தந்திரத்தை பார்த்து வருகிறோம். அதன் அமெரிக்க வடிவம் தான் டிரம்பின் சீன எதிர்ப்பு அரசியல். ஆனால், பாசிஸ்டுகளின் இடம் எது என்பதை வரலாறு தொடர்ந்து பதிவு செய்தே வந்துள்ளது – இந்த முறை அதை கொரோனா வைரஸ் செய்யும்.


– தமிழண்ணல்
நன்றி :  த வயர். 

ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு !

ஷாஹீன் பாக் போராட்டம் : அக்கினிக் குஞ்சு!

டந்த டிசம்பர் 15 தேதியன்று குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராகப் போராடிய டெல்லி  ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்திய போலீசும், ஏ.பி.வி.பி. குண்டர்களும், இப்படியோர் எதிர்வினையைக் கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். டிசம்பர் அன்றே, பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள ஷாஹீன் பாக் பகுதியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் கூடித் தொடங்கிய போராட்டம் 50 நாட்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பெண்களால் தலைமை தாங்கப்படும் இப்போராட்டத்தில் சாதி  மதத்திற்கு அப்பாற்பட்டு பல்லாயிரம் ஆண்களும், பெண்களும் தினமும் கலந்து கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.), தேசியக் குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஆகிய இந்துத்துவ திரிசூலத்திற்கு எதிராகக் கண்டனங்களை முழங்குகின்றனர்.

ஷாஹீன் பாக்கை முன்னுதாரணமாகக் கொண்டு ஜார்க்கண்டின் வசேபூர், இராஜஸ்தானின் ஜெய்ப்பூர், உத்தரபிரதேசத்தின் அலகாபாத், கான்பூர், எட்டாவா மற்றும் லக்னோ, பீகாரில் பாட்னா மற்றும் கயா, மும்பையின் ஆசாத் மைதானம், கொல்கத்தாவில் உள்ள பார்க் சர்க்கஸ் மைதானம் என நாட்டின் பல்வேறு நகரங்களிலும் பெண்கள் கூடித் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பீகாரின் கிஷன்கஞ்ச், கோபால்கஞ்ச், பகதூர்கஞ்ச் போன்ற இதுவரை அறியப்படாத சிறுநகரங்களிலும், சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் புனேவிலும் பெண்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். அனைவரின் கோரிக்கையும் ஒன்றுதான், சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யைக் கைவிடு!”

ஷாஹீன் பாக்கில் போராடிக் கொண்டிருக்கும் பெண்களில் ஆகப் பெரும்பான்மையானோர் தச்சர், வெல்டர், வாட்ச்மேன், பெயிண்டர், டிரைவர் வேலைகளில் ஈடுபடும் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களோடு வியாபாரிகள் உள்ளிட்ட பிற வர்க்கத்தினரும் சேர்ந்து பங்களிப்பும் ஆதரவும் கொடுத்து வருகின்றனர்.

மும்பையிலோ நான்கில் மூன்று பங்கு பெண்கள் நன்கு கல்வியறிவு பெற்ற, வசதியான குடும்பப் பிண்ணனி கொண்டவர்கள், தொழில் வல்லுநர்கள், மேலாண்மைப் பட்டதாரிகள், மென்பொருள் வல்லுநர்கள், சுயதொழில் செய்வோர், பன்னாட்டு நிறுவன நிதி ஆலோசகர்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்த போராட்டம் சாதி, மதம் வர்க்கங்களைத் தாண்டி, ஆண் வித்தியாசங்களைக் கடந்து இந்திய மக்களை ஒன்றிணைந்திருக்கிறது என்பதற்கு இந்தப் போராட்டக் களங்கள் கட்டியம் கூறுகின்றன.

பணமதிப்பு நீக்கத்தைக் கொண்டு வந்து எங்களது பணத்தைப் பறித்துக் கொண்டபோதுகூடப் பொறுத்துக் கொண்டோம். ஆனால், எங்களது குடியுரிமையைப் பறிப்பதை எப்படிப் பொறுக்க முடியும்?” எனக் கேள்வியெழுப்புகிறார் ஒரு பெண்மணி. மோடி  அமித் ஷா கும்பல் கடந்த ஆறாண்டுகளாக உருவாக்கி வரும் முஸ்லிம்கள் மீதான வெறுப்பையும், மாட்டுக் கறி தடை, பசுப் பாதுகாப்பு என்ற முகாந்திரத்தில் முஸ்லிம்களின் மீது ஏவிவிட்டுவரும் வன்முறையையும், பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட பொருளாதாரரீதியான தாக்குதல்களையும் கண்டு மனதுக்குள் குமுறிக் கொண்டிருந்த உழைக்கும் மக்கள் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பின் மூலமாக வெடித்திருக்கிறார்கள்.

ஜாமியா மிலியா மாணவர்கள் மீதான தாக்குதலைத் தமது சொந்தக் குழந்தைகள் மீதான தாக்குதலாகவே, தமது குழந்தைகளின் எதிர்காலத்தின் மீதான தாக்குதலாகவே உணர்ந்திருக்கிறார்கள் ஷாஹீன் பாக்கில் போராடும் தாய்மார்கள். மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, பிழைப்பு தேடி வந்த இக்குடும்பங்களின் குழந்தைகள் படிக்க விரும்பும் இடமாகவும், கனவுக் கல்வி நிறுவனமாகவும் இருக்கிறது ஜாமியா மிலியா பல்கலைக்கழகம். இவர்களோடு ஏதாவொரு வகையில் தொடர்புடையதாக, இவர்களது பிள்ளைகளோ, உறவினர் பிள்ளைகளோ படிக்கும் இடமாக ஜாமியா பல்கலை இருந்து வருகிறது. இம்மாணவர்கள் மீதான தாக்குதல் அனைவரையும் உலுக்க, எந்தவொரு முறையான அணிதிரட்டலும் இல்லாமலேயே, அக்கம் பக்கத்தாரை அழைத்து போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். என் குழந்தைகள் சிறியவர்கள், ஆனால், அவர்கள் வளர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு ஒருநாள் செல்வார்கள். எதிர்காலத்தில் இது போன்று ஏதாவது நடக்கும் நாளைப் பற்றி சிந்திக்கவே நடுக்கமாக இருக்கிறது” எனத் தனது உணர்வை வெளிப்படுத்துகிறார் அஃப்ரீன்.

படிக்க :
தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !
♦ கடலூர் : தூய்மைப் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்த மக்கள் அதிகாரம் !

தமது புத்தகப்பைகளுடன் வரும் கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் இளம்பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்கள், குடும்பப் பெண்கள் என ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகின்றன போராட்டக் களங்கள். இப்போராட்டத்தில் கலந்து கொள்ளும் பெரும்பான்மை இஸ்லாமியப் பெண்களுக்கு இதுதான் முதல் போராட்டம். முதலில் முழக்கம் போடுவது, தேசிய கீதம் பாடுவது என ஆரம்பித்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் கவிதை படித்தல், பாடல்கள் பாடுதல், வீதி நாடகங்கள் நடித்தல், ஷயாரி (கஸல்) பாடல்கள் இசைத்தல், ஓவியங்கள் வரைதல் மற்றும் பொது சமையலில் ஈடுபடல் எனப் படைப்பூக்கம் கொண்டதாகப் போராட்டத்தை மாற்றியிருக்கின்றனர். போராட்டம், எங்களுக்குத் திருவிழா போல இருக்கிறது என்கிறார் மும்பை போராட்டக் களத்தில் நிற்கும் ஒரு பெண்மணி.

பொதுவாக, முஸ்லிம் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள், அரசியல் பேசமாட்டார்கள் என்ற பின்தங்கிய நிலையை இப்போராட்டங்கள் உடைத்திருக்கின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமாக அரசியல்ரீதியாக மாபெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறார்கள் என்பதை அவர்களது வார்த்தைகளே காட்டுகின்றன.

இங்கு நாங்கள் 38 நாட்களுக்கு மேலாகப் போராடி வருகிறோம். போராட்டம் என்றால் என்னவென்றே இதற்கு முன்னர் வரை எங்களுக்குத் தெரியாது. இருந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” எனும் நஸ்ரின் பேகம், இப்போராட்டத்தால் நாங்கள் படைவீரர்களைப் போன்று உணர்கிறோம்” என்கிறார் உற்சாகம் ததும்ப. அரசியல் நம்மை பாதிக்காது என்று நினைத்து, குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு அரசியலை விட்டுவிட்டோம். நான் ஒரு முஸ்லிம் என்பதாலேயே என் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவேன் என்ற அச்சம், இன்று செய்தித்தாள்களில் அச்சிடப்பட்ட அரசியலைப் படித்துப் புரிந்துகொள்ளச் செய்துள்ளது” என்கிறார் பன்னாட்டு நிறுவனத்தின் நிதி ஆலோசகரான நாசியா.

இந்த எதிர்ப்பு முஸ்லிம் சமூகம் தங்களுக்குள்ளும் முஸ்லிமல்லாதவர்களுடனும் ஒன்றிணைய உதவியுள்ளது” என்கிறார், நாக்பாடாவில் உள்ள பத்லுபுராவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஜூவேரியா கான். மேலும், ஷாஹீன் பாக் போராட்டம் தொடங்கிய பின்னர், உள்துறை அமைச்சர் மற்றும் மோடியின் உரைகளை நான் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். மோடி ஏன் உண்மையை வெளிப்படுத்தவில்லை? நாங்களும் இந்த நாட்டின் ஒரு பகுதி. எனவே, மோடி ஏன் எங்கள் சமூகத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை? என்று கேள்வியெழுப்புகிறார்.

தன்னுடைய பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ஒரு வார காலத்திற்குள் நடக்கவிருக்கும் நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த நாட்டின் குடிமக்களாக இருக்க எங்களுக்கு அனுமதி இல்லை என்றால், இந்தத் தேர்வுகளால் என்ன பயன்?” என்று நெஞ்சைத் துளைக்கும் பார்வையுடன் கேட்கிறார் 16 வயது மாணவி அல்வீனா ஆஃப்ரீன்.

நாங்கள் கல்வி, வேலைகள், சிறந்த சுகாதாரம் ஆகியவற்றைத் தான் விரும்புகிறோம். சி.ஏ.ஏ. அல்ல” என்கிறார் கொல்கத்தாவில் போராட்டத்தைத் தொடங்கிய திருமதி ஜமீல். மேலும், இப்போது நகரத்தின் பேசுபொருளாக மாறியுள்ள போராட்டத்தைத் தனிநபராக எப்படித் தொடங்கினார், அதற்கான தைரியம் அவருக்கு எப்படி வந்தது என்ற கேள்விக்குப் பதிலளித்த ஜமீல், ஜே.என்.யு. நடத்தப்பட்ட தாக்குதல், நாடு ஆபத்தில் இருப்பதை எனக்கு உணர்த்தியது. நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தைரியத்தைத் தந்தது. சுமார் 60 பெண்களை ஒன்றாக இணைத்தேன், எங்களுடன் பல்வேறு கல்லூரி  பல்கலைக்கழக மாணவிகள் 15 பேர் இணைந்தார்கள், நாங்கள் இங்கே அமர்ந்தோம்” என்கிறார்.

லக்னோ, மும்பை ஆகிய இடங்களில் போராட்ட முன்னணியாளர்கள் மீதும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மீதும் வழக்கு போட்டுள்ளது, போலீசு. எந்த நேரத்திலும் போலீசால் தாங்கள் தாக்கப்படலாம் என்பதை போராட்டக் களத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் உணர்ந்தே இருக்கிறார்கள். இருப்பினும் பெண்கள் மனவுறுதியுடன் தங்கள் போராட்டத்தைத்  தொடர்ந்து நடத்தி வருகின்றனர். சி.ஏ.ஏ. ஓர் இன்ச்கூடப் பின்வாங்க முடியாது என்று சொன்ன அமித்ஷாவிற்குப் பதிலடியாய், சி.ஏ.ஏ. திரும்பப்பெற வைக்காமல், இங்கிருந்து ஒரு மில்லி மீட்டர்கூட நகரமாட்டோம்” என்கிறார் ஷாஹீன் பாக் போராளி.

இஸ்லாமியப் பெண்களின் இத்தகைய உணர்வும், காவி கும்பல்களின் மிரட்டலுக்கு எதிரான போராட்ட உறுதியும் பலதரப்பட்ட மக்களின் ஆதரவை வென்றெடுத்துள்ளது. பல்வேறு நகரங்களில் நடைபெறும் போராட்டங்களில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்வதோடு, தங்களது பங்களிப்பையும் செய்து வருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த விவசாயிகள், 9 பேருந்துகளில் உணவுப் பொருட்களை எடுத்துவந்து, சமூக சமையல் கூடத்தை நிறுவி, ஷாஹீன்பாக்கில் போராடும் பெண்களுக்கு தினமும் இருவேளை உணவளித்து வருகின்றனர்.

எந்தவித அரசியல் கட்சிகளின் தலைமையுமின்றி இஸ்லாமியப் பெண்களால் தொடங்கப்பட்ட போராட்டம் மக்கள் திரள் போராட்டமாக இந்தியாவெங்கும் பரவி வருகிறது. தமிழகத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு, கோலப் போராட்டமாக வடிவம் பெற்றது. பொது மக்களின் இத்தகைய எதிர்ப்புகளைக் கண்டுதான் காவி கும்பலும் அஞ்சுகிறது. அதனால்தான் நாங்கள் டெல்லியில் ஆட்சி அமைத்தால் ஒரே நாளில் போராட்டத்தை ஒடுக்கிவிடுவோம் என்றும், துப்பாக்கியால் சுட்டும் போராட்டத்தில் ஊடுருவி பாகிஸ்தான் வாழ்க என முழக்கமிட்டுப் போராட்டத்தைச் சீர்குலைக்கவும் முயற்சிக்கிறது, காவி கும்பல்.

ஒரு கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் பௌதீக சக்தியாக மாறும் என்ற மார்க்சின் வார்த்தைக்குச் சான்றாக அமைந்துள்ளன நாடெங்கும் சி.ஏ.ஏ. எதிரான போராட்டங்கள்!

வசந்தன்

(புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2020 இதழில் வெளியான கட்டுரை)


மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart