Wednesday, November 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 385

பார்ப்பனிய ஆணாதிக்கம் தான் பாஜக-வின் இந்திய தனித்துவம் !

அரசியல் சட்ட ஒழுக்கமும் இந்திய தனித்துவமும் !

”மண உறவை மீறிய பாலுறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று ஆக்கப்பட்டுவிட்டால், குடும்பம் என்ற நிறுவனமே நொறுங்கிவிடும். இது ஒழுக்கக் கேட்டுக்கு வழிவகுக்கும்.  இந்தியப் பண்பாட்டின்படி திருமணம் என்பது புனிதமானது. அந்த புனிதத்தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டும், தனித்துவம் வாய்ந்த இந்திய சமூகக் கட்டமைப்பையும் அதன் பண்பாட்டையும் பாதுகாக்கும் பொருட்டும்தான் மக்கள் பிரதிநிதிகள் இந்த சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே எக்காரணம் கொண்டும் இ.த.ச. 497-ஐ ரத்து செய்யக்கூடாது” என்று உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டது மோடி அரசு.

திருமணமும் குடும்பமும் இந்தியாவில் மட்டும் நிலவும் பண்பாடுகள் அல்ல. பெண்ணின் காதலையும் பாலியல் உரிமையையும் கட்டுப்படுத்துகின்ற ஆணாதிக்கமும் உலகெங்கும் நிலவுவதுதான்.  மண உறவை மீறிய பாலுறவை குற்றமாகக் கருதும் ஆணாதிக்கச் சட்டங்களும் உலகம் முழுவதும் இருந்திருக்கின்றன. அப்படியானால், இதில் இந்திய சமூக கட்டமைப்புக்கே உரிய தனித்துவம் என்று மோடி அரசால் வலியுறுத்தப்படுவது எது என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய கேள்வி.

ஆணாதிக்கத்துடன் இணைந்திருக்கும் சாதிய அகமண உறவு என்கிற, பார்ப்பனிய தந்தைவழி ஆதிக்கம்தான் பா.ஜ.க. அரசின் கவலைக்குரிய இந்திய தனித்துவம்’’.

”தனது கணவன் அல்லாத வேறொரு ஆணுடன் ஒரு பெண்  உறவு வைத்துக் கொள்வதற்கு, அவளுடைய கணவன் நேரடியாக ஒப்புதல் தெரிவிக்கவேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. சாடைமாடையான ஒப்புதலை அளித்திருந்தால் கூட, அந்த உறவு தண்டிக்கத்தக்க குற்றமல்ல” என்று கூறுகிறது இ.த.ச. 497. ( if there is consent or connivance of the husband of a woman who has committed adultery, no offence can be established.)

”பிள்ளை இல்லாமல்  குலம் நசிவதாக இருந்தால் அப்போது அந்தப் பெண்ணானவள் தன் கணவன் மற்றும் மாமனாரின் அனுமதியைப் பெற்றுக் கொண்டு தன் மைத்துனன் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலை முறைக்கு உட்பட்ட பங்காளி இவர்களோடு மேற் சொல்கிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ளலாம்” என்கிறது மனுநீதி.

தன்னுடைய மனைவி யாரேனும் ஒரு தீண்டாச் சாதிக்காரனுடன் சேர்ந்து விட்டால் என்ன செய்வது? என்பதுதான் மாதொருபாகன் நாவலில் பெண்ணுடைய கணவன் வெளிப்படுத்தும் கவலை.

ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் மறைந்த எம்.எஸ்.கோல்வால்கர்.

”எந்த வர்க்கத்தைச் (சாதியையும் மொ-ர்) சேர்ந்த திருமணமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய முதல் பிள்ளைக்கு ஒரு நம்பூதிரிதான் அப்பனாக இருக்க வேண்டும். அதற்குப் பின்னர்தான் அவளுடைய கணவனின் மூலம் அவள் மற்ற பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற  விதி இருந்தது… இதனை ஒழுக்கக்கேடு என்று கூற முடியாது” என்கிறார்  கோல்வால்கர், (ஆர்கனைசர், ஜனவரி-2,1961, பக்கம்-5)

மதம், சாதி, ஆணாதிக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒழுக்கம், மரபு என்பவைதான் பா.ஜ.க. அரசின் கவலைக்குரிய “இந்திய தனித்துவம்’’. இவற்றுக்கு  எதிராக, தனிநபரின் உரிமை, கவுரவம், அந்தரங்கம், சமத்துவம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் அரசியல் சட்ட ஒழுக்கத்தை (constitutional morality)  இத்தீர்ப்பு முன்நிறுத்துவதால், சமூக ஒழுங்கு குலைந்துவிடும் என்பதுதான் மோடி அரசு நீதிமன்றத்தில் வெளிப்படுத்திய குமுறல்.

♦ ♦ ♦

”திருமணம் என்பது ஒரு ஒப்பந்தமாக இருந்தாலும் சரி, மதப்புனிதம் சார்ந்த நடவடிக்கையாக இருந்தாலும் சரி, அது ஒரு பெண் தன் உடல் மீது கொண்டிருக்கும் அதிகாரத்தைப் பறிக்க முடியாது” என்பதுதான் இ.த.ச. 497 ஐ ரத்து செய்கின்ற இந்தத் தீர்ப்பின் மையக்கருத்து.

ஆனால், வல்லுறவு குற்றம் தொடர்பான இ.த.ச பிரிவு 375,  ”மனைவியின் வயது 15-க்கு குறைவாக இல்லாதவரை, அந்தப் பெண்ணுடன் கணவன் கொள்ளும் பாலுறவை வல்லுறவு என்று கருதமுடியாது” என்று கூறுகிறது. தற்போது உச்ச நீதிமன்றம் இ.த.ச. 497 குறித்து வழங்கியிருக்கும் தீர்ப்பை இ.த.ச. பிரிவு 375 மறுதலிக்கிறது.

சமீபத்தில் டில்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கில், ”மண உறவில் நிகழும் வல்லுறவு தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டால், திருமணம் என்ற நிறுவனமே தகர்ந்து விடும் என்றும், இத்தகைய சட்டம் ஆண்களைத் துன்புறுத்துவதற்கான கருவியாக மாறிவிடும் என்றும்” வாதிட்டது மோடி அரசு.

படிக்க:
தேர்தல் ஜுரம் : கன்னையா குமார் , உமர் காலித் மீது 3 ஆண்டுகளுக்குப் பின் குற்றப்பத்திரிகை தாக்கல் !
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?

”மண உறவில் மனைவியின் மீது கணவன் நிகழ்த்தும் வல்லுறவு’’ (Marital Rape) நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டிருக்கிறது. எனினும் புகழ்மிக்க பாரதப் பண்பாட்டின்படி’’, திருமணம் என்பது வல்லுறவு கொள்வதற்கு ஆணுக்கு வழங்கப்படும் அனுமதிச்சீட்டு.  வல்லுறவுக்கான பரிகாரமாகவும், தண்டனையாகவும் கூட திருமணம் பரிந்துரைக்கப்படுவதை நாம் பார்க்கிறோம்.  திரைப்படங்களும் மரத்தடி பஞ்சாயத்துகளும் மட்டுமல்ல, உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றங்களுமே இதைச் செய்கின்றன.

பெண்ணுக்கு தன் உடல் மீது உள்ள உரிமையை உத்திரவாதம் செய்யும் தீர்ப்பை செப். 27-ம் தேதியன்று வழங்கியது உச்ச நீதிமன்றம். அத்தகைய உரிமை ஒரு தலித் பெண்ணுக்கு கிடையாது என்று நிலைநாட்ட அக்டோபர் மாதம், சிறுமி ராஜலட்சுமி கொல்லப்பட்டாள். நந்தீஷும் சுவாதியும் நவம்பர் மாதம் கொல்லப்பட்டனர். இவை சாதி வெறியர்கள் எழுதிய தீர்ப்புகள். அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது” என்று அமித்ஷா சொன்னது சபரிமலை தீர்ப்புக்கு மட்டும் பொருந்துவது அல்ல.

ஆணாதிக்கத்துக்கும் சாதி ஆதிக்கத்துக்கும் எதிரான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து வழங்கப்படும் தீர்ப்புகள் ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.

அஜித்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

இட ஒதுக்கீடு : சலுகையா ? அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமையா ?

முன்குறிப்பு:- சிலருக்கு இந்த பதிவை படித்த பின்னர் வயிறு, நெஞ்சு என்று சகலமும் எரியும். அதனால் இப்பதிவை தவிர்க்கவும்.

ன்று (ஜன-15) காலை எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு இரண்டு பிராமணர்கள் வந்தார்கள். இருவருக்கும் ஐம்பது வயதிருக்கும் . வெள்ளை வேட்டி நெற்றி நிறைய திருநீறு , தலையில் குடுமியுடன் இருந்தார்கள். ஒவ்வொரு வீட்டு வாசல் முன்பும் நின்று ஏதோ மந்திரங்கள் சொன்னார்கள். அதற்கு அந்த வீட்டில் இருந்தவர்கள் காசு கொடுத்தார்கள். எனக்கு வியப்பாக இருந்தது. எங்கள் வீட்டு முன்பும் நின்று மந்திரங்கள் சொன்னார்கள். நான் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றேன். வீட்டுக்குள்ளிருந்து அம்மா வந்து அவர்களிடம் காசு கொடுத்தார்கள். பொதுவாக கூர்க்கா, போஸ்ட்மேன்கள், குப்பை சேகரிப்பவர்கள் எங்கள் பகுதிக்கு பொங்கல் இனாம் வாங்க வருவார்கள். வருடம் முழுக்க அவர்கள் செய்யும் சேவைக்கு நாங்கள் தரும் ஊக்கத்தொகை அது. ஆனால் எந்த வேலையும் செய்யாமல் யாருன்னே தெரியாத இரண்டு பேர் இப்படி வந்து காசு வாங்கிக்கொண்டு போவது வியப்பாக இருந்தது. சற்று தாமதமாகத்தான் தெரிந்தது. இது ஒருவித பிச்சை என்று.

சென்னை மாநகரில் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற பிச்சைக்காரர்களை சந்திக்கிறேன். ஆனால் இது எனக்கு புதிதாகவும், விநோதமாகவும் இருந்தது. பிச்சைக்காரர்கள் என்றால் நாம் அவர்களிடம் சற்று இரக்கமாகவோ, பரிதாபமாகவோத்தான் காசு போடுவோம். ஒருசிலர் அருவருப்பாக பார்த்து துரத்துவதுமுண்டு. ஆனால், முதல்முறையாக ஒரு சமூகம் பிச்சைக்காரர்களை மரியாதையாகவும், கவுரமாகவும் நடத்துவதை இன்று காலையில்தான் எங்கள் தெருவில் பார்த்தேன். அந்த இரண்டு பேருக்கும் உடலில் எந்த குறையும் இல்லை. திடமாகவே இருந்தார்கள். உடல் குறையுள்ளவர்கள் கூட சுயமரியாதையுடன் ஏதாவது ஒரு வேலை செய்யும் இந்த காலத்தில் வெறும் இரண்டு மந்திரங்கள் மட்டுமே சொல்லி தெருமுழுக்க பிச்சை எடுத்துக்கொண்டு போவது என்ன நியாயம்? எனது அம்மாவிடம் சொன்னபோது வாயில் அடிச்சுக்கஅது பிச்சை இல்லை. தருமம். யாசகம் கேட்டு வரும் பிராமணர்களை துரத்துவது பஞ்சமாபாவம் என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று புரிந்தது. பிச்சை எடுத்தாலும் கூட அதுக்கு ஒரு பிறப்பு வேண்டும். இதுவே வேறு ஜாதி ஆள் ஒருத்தர் இப்படி கவுரவப்பிச்சை கேட்டு வந்திருந்தால் கண்டிப்பாக எங்கள் தெரு ஆட்கள் அடித்து விரட்டியிருப்பார்கள். வீட்டுக்கு வெளியே வரிசையாக துணிகள் காயவைத்திருந்தோம். காற்றில் பறந்த அந்த துணிகள் மேல் உரசிவிடாமல் கவனமாக சென்றார்கள். பொதுவாக பிராமணர்கள் ஜலம், காசில் மட்டும் தீட்டு பார்க்க மாட்டார்கள் என்று எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது.

படிக்க:
உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
தாழ்த்தப்பட்ட மக்கள் வேண்டுவது சீர்த்திருத்தமா? புரட்சியா?

பிராமணர்கள் மேல் எனக்கு உள்ள வெறுப்புதான் இந்த பதிவு என்று நினைக்க வேண்டாம். சென்னையில் உள்ள பிரபலமான அபிராமி மால்-ஐ இம்மாத இறுதியில் மூடப்போகிறார்கள். அதன் உரிமையாளர் செட்டியார். அவர் அண்மையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அபிராமி மால்-ஐ இடித்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்போவதாகவும் அங்கு சைவ உணவு உண்பவர்களுக்கு மட்டுமே வீடு விற்கப்போவதாகவும் அறிவிப்பு செய்கிறார். செட்டியார்கள் அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள். எப்படி இந்த முடிவு என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தப்பகுதியில் (புரசைவாக்கம்) ஜெயின் சமூக மக்கள் அதிகம் என்று நினைக்கிறேன். அவர்கள் பொதுவாக கூடிவாழ்வார்கள். அநேகமாக அவர்கள் வாங்குவார்கள் என்று நினைத்துதான் இதை யோசித்திருக்கலாம்.

பத்தில் எட்டு வீடுகளை ஜெயின்கள் வாங்கினால் கூட மிச்சம் இரண்டு வீட்டில் சைவ உணவு உண்பவர்களை வைத்துவிட்டால் பிரச்சினை எதுவுமில்லை என்று அவர் யோசித்திருக்கலாம்.

சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வேண்டாம் என்ற பிரச்சாரம்.

ஜெயின் சமூகம் என்றதும் இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது. ஜெயின்களில் ஏழைகள் குறைவு. அப்படி இருந்தாலும் மற்ற ஜெயின்கள் அவர்களுக்கு உதவி செய்து மேலே தூக்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட செட்டியார்களும் இப்படித்தான். இப்படி இந்தியாவில் ஆயிரம் சமூகங்கள் உள்ளன. எல்லா சமூக ஏழைகளும், பிச்சைக்காரர்களும் ஒரேமாதிரி இருப்பதில்லை. உலகத்தில் இரண்டே வர்க்கம்தான். பணம், பணம் இல்லாதவன் என்று உறுதியாக நம்புபவன் நான். ஆனால் அதிலும் பிரிவுகள் உள்ளன. எல்லா ஜாதி ஏழைகளுக்கும் சிறப்பு கவுரவம் கிடைப்பதில்லை.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு தரவேண்டும் என்ற கோரிக்கை இப்போது மெல்ல மெல்ல ஒலிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று ஒரு நண்பர் ஊரறிந்த சிந்தனையாளர். எழுத்தாளர் அனந்தகிருஷ்ணன் (முன்பு நடந்த ஒரு பஞ்சாயத்தில் என்னை பிளாக் செய்துள்ளார் மடையர். இல்லாவிட்டால் அங்கேயே பதிலடி தந்திருப்பேன்) எழுதிய பதிவொன்றின் ஸ்க்ரீன் ஷாட்டை கொண்டுவந்தார். அயோக்கியத்தனத்தின் உச்சக்கட்டம் அந்த பதிவு. பதிவின் சாராம்சம். இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கொண்டுவரவேண்டும். முதல் பத்தாண்டுகளுக்கு பிராமணர்களுக்கு விதிவிலக்கு தரவேண்டும். பிறகு மெல்ல சமத்துவம் (!?) வந்தபிறகு அந்த இடஒதுக்கீடை பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் தரவேண்டும். தனக்கு ஒரு கண்போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண் போகணும் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? ஆனால் இவர்களுக்கு கண்போகாது. பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்டால் தன்னோட இலைக்கும் வந்துவிடும் இல்லையா?

இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறி ஐடி நிறுவனங்களில் வேலைபார்க்கும் இளைஞர்களிடம் கூட இந்த தவறான புரிதல் உள்ளது. இடஒதுக்கீடு என்பது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது இல்லை. அது சமூகத்தில் பின்தங்கியவர்கள் என்பதற்காக கொடுக்கப்பட்டது. அது சலுகை இல்லை. பல நூறாண்டு கால அடக்குமுறைக்கு எதிராக போராடி பெற்ற உரிமை. அப்படி என்றால் ஏழைகள் அப்படியே ஏழைகளாக இருக்கவேண்டுமா? அப்படி இல்லை. ஆனால் கண்டிப்பாக எல்லா ஜாதி ஏழைகளும் ஒன்றில்லை. எல்லா ஏழைகளையும் நாம் பிச்சைக்காரர்கள் போல நடத்துவதில்லை என்ற கசப்பான உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

முகநூலில்: Vinayaga Murugan

ஓசூர் : விளைநிலங்களில் புகுந்த காட்டு யானைகள் – பரிதவிக்கும் விவசாயிகள்

சூருக்கு அருகில் சானமாவை அடுத்துள்ள பீர்ஜேப்பள்ளி என்கிற கிராமத்தில் கடந்த ஜனவரி-13 அன்று காலை வனப்பகுதியிலிருந்து ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் தாக்குதலில் பலத்தக் காயங்களுடன் உயிர்த்தப்பியிருக்கிறான் லோகேஷ் என்ற சிறுவன். அக்கிராம மக்கள் மேற்கண்ட துணிச்சலான நடவடிக்கையின் காரணமாக உயிர்த்தப்பிய லோகேஷ், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான்.

இந்த சம்பவம் என்றில்லை, சமீபகாலமாக தொடர்ச்சியாக இது போன்று காட்டு யானைகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருவதாகவும், வனத்துறையின் சார்பில் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியும் ஓசூர் – தர்மபுரி சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள். கோரிக்கையை பரிசீலிக்கிறோம், விரைவில் ஏற்பாடு செய்கிறோம், என்று பொதுவான வாக்குறுதிகளைக்கூறி வழக்கம்போல கூட்டத்தை கலைத்தது போலீசும் வனத்துறையும்.

விவசாயி வெங்கடேஷ்.

‘’ஒரு மாதத்திற்கு முன் நம்ம பக்கத்து ஊரை சேர்ந்த விவசாயி 55 வயதுடைய செல்வப்பா என்பவரை அவரது வீட்டிற்கே வந்து வீட்டு வாசலில் வைத்தே யானை மிதித்து கொன்றுப்போட்டு விட்டது. அந்த சம்பவம் நடந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒருமுறை யானைகள் வந்து ஒரு ஐந்து பேரை தூக்கி வீசிப்போட்டது. ரெண்டு நாளைக்கு முன்ன கூட, பக்கத்து ஊரில் வயசு பையன் ஒருத்தனை யானை மிதிச்சி மீண்டு வந்திருக்கான். இப்பவெல்லாம் தினம்தோறும் யானைகள் தொந்தரவு அதிகமாகிவிட்டது.’’ என்கிறார், சானமாவு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வெங்கடேஷ்.

‘’ஐந்து வருடங்களுக்கு முன் காட்டுப்பன்றி, மான்கள் மற்றும் ஓரிரு யானைகள் என்ற வகையில் வந்து தொந்தரவு செய்து எங்களது விவசாயத்தை நாசம் செய்து வந்தது. அதிலிருந்து ஓரளவிற்கு தப்பிக்க ராவும்பகலுமாக காவல் காத்துக் கொண்டோம். இப்பெல்லாம் கடந்த மூன்று நான்கு வருடங்களாக அவ்வாறு தனியே வருவதில்லை. கூட்டம் கூட்டமாகவே வருகிறது. ஊரே திரண்டு வந்து விரட்ட வேண்டியதாகிறது.

வனத்துறையினரிடம் ஆயிரம் முறை முறையிட்டும் அவர்கள் யாரும் காதில் போட்டுக் கொள்வதில்லை… ஆயிரம் முறை மனுக் கொடுத்தும் ஒரு பிரயோசனமும் இல்லை… நாங்கதான் மக்கள் எல்லாம் இளைஞர்கள் எல்லாம் திரண்டுவந்து இந்த யானைகளை விரட்டி வருகிறோம்.

சிறிய அளவில்கூட விவசாயம் செய்யமுடியல. கிணத்துல தண்ணியெல்லாம் இருந்தும் எங்களால் பயிர் செய்யமுடியல. நாங்களே சாப்பிடக்கூட விவசாயம் செய்துக்கொள்ள முடியவில்லை.‘’ என்கின்றனர், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.

விவசாயி சங்கரப்பா.

‘’முன்பு கடலைக்காய், பீன்ஸ், கேரட், சவ்சவ், கோசு, நெல், ராகி, சோளம், தக்காளி என பயிர்செய்துவந்த நாங்கள் இப்போது வேறுவழியின்றி கீரைவகைகளை மட்டுமே பயிர் செய்துவருகிறோம். அதையும் விட்டுவைப்பதில்லை மிதித்து துவைத்து நாசம் செய்துவிடுகிறது’’ என கண்ணீர் வடிக்கிறார், மற்றொரு விவசாயியான சங்கரப்பா.

மேலும், ‘’மக்கள் திரண்டு இதுமாதிரி போராடினால்தான் அப்போதைக்கு ஒரு இரண்டுபேரை வனத்துறையினர் என்று சொல்லி கார்டுகளை நியமிக்கிறார்கள். அந்த இருவரையும் நாங்கள்தான் பராமரிக்கவேண்டும். அவர்களிடம் ஒரு துப்பாக்கிப் போன்ற நவீன ஆயுதங்களோ எதுவும் தரப்படுவதில்லை. பாவம் அவர்களையே நாங்கதான் எங்க மக்களில் ஒருவராக பாதுகாக்கிறோம்.’’ என்கின்றனர்.

‘’கால்நடைகளை மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது வனத்துறை. விவசாயமும் பண்ணாம, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் ஓட்டிப்போகவும் முடியாமல் வீட்டுக்குள்ளயே முடங்கியிருக்க முடியுமா?’’ என்று கேள்வியெழுப்புகின்றனர், இக்கிராம மக்கள்.

‘’ஊருக்குள் இருந்த நிலங்களை மூன்று ஆண்டுகளுக்கு முன் விற்றுவிட்டுதான் என் மகள்கள் நான்கு பேரை நான் கட்டிக்கொடுத்துவிட்டு, இப்ப இந்த ரோட்டோரம் ஒரு வீடு வாங்கி வந்து குடியேறியிருக்கிறேன். எல்லோரும் என்னைப்போல செய்யமுடியுமா? நிறையபேர் இந்த நிலம் – வீட்டோடவே எங்களது உயிர் போகட்டும் என்று இருக்கிறார்கள்’’ என்கிறார், விவசாயி வெங்கடேஷ்.

‘’எனக்குத் தெரிந்து இந்தப் பகுதிகளில் நிறைய  கிரானைட் கம்பெனிகள் புதிது புதிதாக முளைத்திருக்கின்றன. ஆளுயரத் தடுப்புச் சுவர்களையும் எழுப்பியிருக்கின்றனர். சூழலியல் மாறுபாடுகள் ஒருபுறமிருக்க, யானைகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும்; தொடர்ந்து வனங்களின் அடர்த்திக் குறைந்து வருவதும் பிரதான காரணங்களாக இருக்கின்றன.’’ என்கிறார், அப்பகுதியைச் சேர்ந்த தோழர் ஒருவர்.

படிக்க:
உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !

‘’யானைகளுக்குத் தேவையான குடிநீர் குட்டைகள் உணவு கிடைக்க தேவையான நடவடிக்கைகள் வனத்துறை சார்பில் எடுக்க வேண்டும். யானைகள் செல்லும் வகையில் இயற்கை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியைச் சுற்றி கல்சுவர், கம்பி வலை அமைக்க வேண்டும். போதுமான அனுபவமும் பயிற்சியும் பெற்ற வனக்காவலர்களை கண்காணிப்பில் ஈடுபடுத்த வேண்டும்.’’ என்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர், அக்கிராம மக்கள்.

இயற்கையாக வாழ முடியாத போதே யானைகள் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களை நோக்கி வருகின்றன. நாட்டு மக்களையே வாழ விடாத இந்த அரசு, காட்டு யானைகளை மட்டும் வாழ வைத்துவிடுமா என்ன?

தகவல் :
புதிய ஜனநாயகம் செய்தியாளர், ஒசூர்.

இங்கு கைதிகளும் இல்லை நீதிபதிகளும் இல்லை !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 53

மாக்சிம் கார்க்கி
வளது பயம் ஒரு துர்நாற்றம் போல் அவளது தொண்டையில் கமறியெழுந்து அவளைத் திணறச் செய்தது. விசாரணை தினத்தன்று. தனது இதயத்தை அழுத்திக்கொண்டிருக்கும் அந்தப் பெரும் மனப்பாரத்தைச் சுமந்துகொண்டுதான் தாய் நீதிமன்றத்துக்குச் சென்றாள்.

தெருவெல்லாம் சுற்று வட்டாரத் தொழிலாளர் குடியிருப்பிலிருந்து வந்தது. அவளுக்கு அறிமுகமான பல தொழிலாளர்கள் அவளை வரவேற்றார்கள். அவள் வாய்திறந்து எதுவும் பேசாமல் அவர்களுக்குத் தலை வணங்கிக் கொண்டே அந்த ஜனக்கூட்டத்தைக் கடந்து சென்றாள் நீதி மன்றத்திலும் அதற்கு வெளியேயுள்ள நடை வழிகளிலும் விசாரணைக்கைதிகளின் உறவினர்கள் கூடிக் குழுமி, தணிந்த குரலில் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசிக்கொள்ளும் பேச்சு தாய்க்கு அபரிமிதமாகப்பட்டது, அவளுக்கு அது புரியவில்லை . எல்லோரும் ஒரே மாதிரியான சோகத்துக்கு ஆளாகி நின்றார்கள். தாயும் இதை அறிந்திருந்தாள்; அதனால் அவளுக்கு மனப்பாரம்தான் அதிகமாயிற்று.

“என் பக்கத்திலே உட்கார்” என்று ஒரு பெஞ்சில் ஒதுங்கி இடம் கொடுத்துக்கொண்டே கூறினான் சிஸோவ்.

அவள் பணிவோடு உட்கார்ந்து, தன் உடுப்பைச் சரியாக இழுத்து விட்டுக்கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது கண்முன்னால் பச்சை, சிவப்புப் புள்ளிகளும், கோடுகளும், மஞ்சள் நாடாக்களும் நடனமிட்டன.

”எங்கள் கிரிகோரியை உன் மகன்தான் இதில் இழுத்து விட்டுவிட்டான்” என்று அவளுக்கு அடுத்தாற்போல் இருந்த ஒரு பெண் முனகினாள்.

”வாயை மூடு, நதால்யா!” என்று கோபத்தோடு சொன்னான் சிஸோவ்.

தாய் அந்தப் பெண்ணைப் பார்த்தாள். அவள் தான் சமோய்லவின் தாய். அவளை அடுத்து அவள் கணவன் உட்கார்ந்திருந்தான். சுமூகமான தோற்றமும், மெலிந்த முகமும், வளர்ந்து பெருகிய சிவந்த தாடியும் வழுக்கைத் தலையுமாகக் காட்சியளித்த அவன் தன் கண்களை நெரித்து ஏறிட்டுப் பார்த்தான்; உள்ளுக்குள் பட்டுக்கொண்டிருந்த சிரமத்தால் அவனது தாடி நடுநடுங்கிக்கொண்டிருந்தது.

வெளிப்புறத்திலிருந்து பனி படிந்துள்ள உயர்ந்த ஜன்னல்களின் வழியாக, மங்கிய ஒளி மயக்கம், நீதி மன்றத்துக்குள்ளே பரவி ஒளி செய்தது. ஜன்னல்களுக்கு மத்தியில் அலங்காரமான முலாம் சட்டத்தில் அமைந்த ஜார் அரசனின் சித்திரம் தொங்கிக்கொண்டிருந்தது. அதன் இருபுறத்தையும் கருஞ்சிவப்பான ஜன்னல் திரைகள் மடிமடியாகத் தொங்கி மறைத்துக்கொண்டிருந்தன. அந்தச் சித்திரத்துக்கு முன்னால் பச்சைத் துணியால் மூடப்பட்டிருந்த ஒரு பெரிய மேஜை அந்த ஹாலின் அகலம் முழுவதையுமே வியாபித்துக்கொண்டிருந்தது. கைதிக் கூண்டுகளுக்குப் பின்னால், வலதுபுறச் சுவரையொட்டி இரண்டு மரப்பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. இடது புறத்தில், கருஞ்சிவப்பு, துணிவைத்துத் தைக்கப்பட்ட கைநாற்காலிகள் இரு வரிசையாகப் போடப்பட்டிருந்தன. தங்க நிறப் பித்தான்களைக் கொண்ட பச்சை உடுப்புக்கள் அணிந்த கோர்ட்டுச் சேவகர்கள் வாய் பேசாது முன்னும் பின்னால் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். அந்த மப்பும் மந்தாரமும் நிறைந்த சூழ்நிலையில் உள்ளடங்கி ஒலிக்கும் பேச்சுகளும், பற்பல மருந்துகளின் கார நெடியும் கலந்து நிறைந்தன. இவையெல்லாம் – இந்த வர்ண பேதங்கள், பிரகாசம், குரல்கள், நெடி எல்லாம் – கண்ணையும் காதையும் உறுத்தின; சுவாசத்தோடு இதயத்தில் புகுந்து அர்த்தம் ஒன்றுமற்ற பய வேதனையை நிரப்பின.

திடீரென யாரோ உரத்தக் குரலில் பேசினார்கள். தாய் திடுக்கிட்டாள். எல்லோரும் எழுந்து நிற்பதைக் கண்டு அவளும் சிஸோவின் கையைப் பற்றிப் பிடித்தவாறே எழுந்து நின்றாள்.

இடதுபுறமாக இருந்த ஒரு பெரிய கதவு திறந்தது மூக்குக்கண்ணாடி அணிந்த ஒரு வயதான மனிதர் ஆடியசைந்து கொண்டு உள்ளே வந்தார். அவரது சாம்பல் நிறக் கன்னங்களில் மெல்லிய வெள்ளையான கிருதாக்கள் அசைந்து கொடுத்தன. மழுங்கச் செய்யப்பட்ட அவரது மேலுதடு பற்களேயற்ற வாய் ஈறுக்குள் மடிந்து போயிருந்தது. அவரது மோவாயும் தாடையும் அவரது உத்தியோக உடுப்பின் உயர்ந்த காலர்மீது சாய்ந்து கழுத்தே இல்லாதது போல் தோற்றமளித்துக்கொண்டிருந்தது. கொழுத்துத் திரண்ட நெட்டையான வெள்ளை மூஞ்சி இளைஞன் ஒருவன் கை கொடுத்து அவரை மேலேற்றிவிட்டான். அவர்களுக்குப் பின்னால் தங்க நிறக்கரை வைத்துத் தைத்த உத்தியோக உடைகளோடு மூன்று பேர் வந்தார்கள், சாதாரண உடையணிந்து மூன்று பேர் வந்தார்கள்.

அந்த நீண்ட மேஜை முன்னால் அவர்கள் உட்கார்ந்து முடிப்பதற்கே வெகு நேரம் பிடித்தது. அவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன் மழுங்கச் சவரம் செய்து வழவழப்போடு விளங்கும் சோம்பல் முகமுள்ள ஒரு மனிதன் அந்த வயோதிகரின் பக்கம் குனிந்து தனது தடித்த உதடுகளை என்னவோ போல அசைத்துக்கொண்டு, ரகசியமாக ஏதோ சொல்லத் தொடங்கினான். அந்தக் கிழவர் நிமிர்ந்து அவன் கூறுவதை அசையாமல் கேட்டார். அவரது கண்ணாடிக்குப் பின்னால், இரு சிறு புள்ளிகள் மாதிரி தோன்றும் உணர்ச்சியற்ற கண்களைத் தாய் கண்டாள்.

அந்த மேஜையின் ஓரமாகக் கிடந்த எழுதும் சாய்வு மேஜைக்கு அருகே ஒரு நெட்டையான வழுக்கைத் தலை ஆசாமி நின்று கொண்டிருந்தான்; அவன் தொண்டையைக் கனைத்துச் சீர்படுத்திக்கொண்டே தஸ்தாவேஜுக்களைப் புரட்டிக் கொண்டிருந்தான்.

அந்தக் கிழவர் முன்புறமாகக் குனிந்து பேசத்தொடங்கினார். எடுத்த எடுப்பில் அவரது பேச்சு தெளிவாக ஒலித்தது; அப்புறம் அந்தப் பேச்சு அவரது மெல்லிய உதடுகளுக்குள்ளாக மடிந்து உள்வாங்கிப் போய்விட்டது.

”விசாரணை தொடங்குகிறேன் …. அவர்களைக் கொண்டு வாருங்கள்…”

”பார்’ என்று தாயை முழங்கையால் இடித்து நிமிர்ந்து நின்றவாறே மெதுவாகச் சொன்னான் சிஸோவ்.

கைதிக் கூண்டுக்குப் பின்புறமுள்ள கதவு திறந்தது. பளபளக்கும் வாளைத் தோளில் சாத்தியவாறே ஒரு சிப்பாய் வந்தான், அவனைத் தொடர்ந்து பாவெல், அந்திரேய், பியோதர் மாசின் கூஸெவ் சகோதரர்கள். சமோய்லவ், புகின், சோமவ் முதலியோரும். தாய்க்கு அறிமுகமில்லாத ஐந்து இளைஞர்களும் வந்து சேர்ந்தார்கள். பாவெல் அவளைப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அந்திரேய் பல்லைக் காட்டி, தலையை ஆட்டினான். அவர்களது புன்னகையும், உற்சாகம் நிறைந்த முகங்களும், அசைவுகளும் அந்த நீதிமன்றத்தின் உம்மணா மூஞ்சிச் சூழ்நிலையை மாற்றி அதைத் தளரச் செய்தது. உத்தியோக உடுப்புகளின் பொன்னொளி ஜாலம் மங்கிப் போயிற்று. தைரியம் மீண்டும் தாயிடம் குடிபுகுந்தது. அந்தக் கைதிகள் தம்மோடு கொணர்ந்த அமைதியான தன்னம்பிக்கையும் ஜீவ சக்தியும் அவளுக்கு வலுவூட்டின. அவளுக்குப் பின்னுள்ள பெஞ்சிகளில், இத்தனை நேரமும் சோர்ந்து அசந்து போய் நின்ற மக்கள். தங்களுக்குள் குசுகுசுத்துப் பேசத் தொடங்கினார்கள்.

“அவர்கள் பயப்படவே இல்லை!” என்று சிஸோவ் ரகசியமாகச் சொன்னான். சமோய்லவின் தாயோ உள்ளுக்குள்ளாகப் பொருமத் தொடங்கினாள்.

‘அமைதி” என்று ஒரு கடுமையான குரல் ஒலித்தது.

“முதலிலேயே நான் உங்களை எச்சரித்து விட வேண்டும்…” என்று சொன்னார் அந்தக் கிழவர்.

முன்னாலுள்ள பெஞ்சியின் மீது பாவெலும் அந்திரேயும் ஒருவர் பக்கம் ஒருவராக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களோடு மாசின், சமோய்லவ். கூஸெவ் சகோதரர்கள் முதலியோரும் உட்கார்ந்திருந்தார்கள். அந்திரேய் தன் தாடியை எடுத்துவிட்டிருந்தான், ஆனால் மீசையை மட்டும் வளரவிட்டிருந்தான். அந்த மீசை வளர்ந்து படிந்து அவனது உருண்டை முகத்தைப் பூனை முகம் மாதிரி காட்டிக்கொண்டிருந்தது. அவனது முகத்தில் ஏதோ ஒரு புதுமை இருந்தது. கூர்மையும் குத்தலும் நிறைந்த பாவம் அவனது முகத்தில் தோன்றியது. கண்களில் ஏதோ ஒரு கருமை தென்பட்டது. மாசினுடைய மேலுதட்டில் இரு கரிய கோடுகள் காணப்பட்டன. அவனது முகம் உப்பி உருண்டு கொண்டிருந்தது. சமோய்லவின் சுருட்டைத் தலை எப்போதும் போலவே இருந்தது. இவான் கூஸெவ் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

”ஆ பியோதர் பியோதர் என்று தலையைக் குனிந்து கொண்டே முணுமுணுத்தான் கிஸோவ்.

அந்தக் கிழவர் தமது உத்தியோக உடுப்பின் காலருக்குள் அசையாமல் புதைந்து கிடந்த தலையைக் கொஞ்சம் கூட அசைக்காமல், நிமிர்ந்தும் பார்க்காமல் கைதிகளைப் பார்த்து ஏதேதோ கேள்வி கேட்டார், அந்தத் தெளிவற்ற கேள்விக் குரலைத் தாயும் கேட்டுக்கொண்டிருந்தாள். அந்தக் கேள்விகளுக்கு, தன் மகன் கூறிய அமைதியான சுருக்கமான பதில்களையும் அவள் கேட்டாள். பிரதம நீதிபதியும் அவரது சகாக்களும் தன் மகன் விஷயத்தில் குரூரமாகவும் கொடுமையாகவும் நடந்து கொள்ள முடியாது என்று அவளுக்குத் தோன்றியது. அந்த நீண்ட மேஜைக்கு எதிரே இருந்தவர்களின் முகத்தைப் பார்த்து விசாரணையின் முடிவை அவள் ஊகிக்க முயன்றாள்; அவளது ஊகத்தால், அவளது இதயத்தினுள்ளே ஒரு நம்பிக்கை வளர்ச்சி பெற்று ஓங்குவதை அவள் உணர்ந்தாள்.

ஒரு வெள்ளை முக ஆசாமி ஒரு தஸ்தாவேஜை உணர்ச்சியற்று ஒரே குரலில் வாசித்தான். மந்திரத்தால் கட்டுப்பட்டவர்கள் மாதிரி அதைக் கேட்ட ஜனங்கள் ஆடாது அசையாது உட்கார்ந்திருந்தார்கள். விசாரணைக்காக நிற்பவர்களைப் பார்த்து, நாலு வக்கீல்கள் உணர்ச்சியோடும் அமைதியோடும் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது அசைவுகள் பலமாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன. அவர்கள் பெரிய கரும் பறவைகளைப்போல் தோன்றினார்கள்.

“நான் யாரையும் கொலை செய்யவில்லை; எதையும் திருடவில்லை. ஆனால் ஒருவரையொருவர் திருடவும், கொலை செய்யவும் தூண்டிவிடும் இந்த வாழ்க்கை அமைப்புத்தான் நான் எதிர்க்கிறேன்…”

அந்தக் கிழ நீதிபதிக்கு அருகில் இருந்த நாற்காலியில் ஒரு கொழுத்த உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவரது சிறு கண்கள் கொழுத்த சதைப் பகுதிக்குள் புதைந்து போயிருந்தன. இன்னொரு கைப் பக்கத்தில் கூனிய தோள்களும் வெளுத்த முகமும், சிவந்த மீசையும் கொண்ட இன்னொரு உப நீதிபதி உட்கார்ந்திருந்தார். அவர் தமது தலையைச் சோர்வோடு நாற்காலியின் பின்புறம் சாய்த்து கண்களைப் பாதி மூடியவாறே சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். அரசாங்க வக்கீலும் களைப்புணர்ச்சியோடும் எரிச்சலோடும் இருப்பதாகத் தோன்றியது. நீதிபதிகளுக்குப் பின்னால் மூன்று முக்கிய பிரமுகர்கள் உட்கார்ந்திருந்தார்கள், ஒருவர் நகரத்து மேயர் – அவர் கனத்துத் தடித்த ஆசாமி; அவர் தமது கன்னத்தைத் தடவிக்கொடுத்தவாறு உட்கார்ந்திருந்தார். மற்றொருவர் பிரபு வம்சத் தலைவர் –  நரைத்த தலையும் சிவந்த கன்னமும் நீண்ட தாடியும், கவர்ச்சிகரமான விசாலமான கண்களும் கொண்டவர் அவர். அடுத்தாற்போல் ஜில்லா அதிகாரி இருந்தார். பெரிய தொந்தியுள்ள ஆசாமி அவர். தொந்தி விழுந்திருப்பது அவருக்கு மனச்சங்கடத்தை உண்டு பண்ணியது போல் தோன்றியது. ஏனெனில் அவர் தமது கோட்டினால் அந்தத் தொந்தியை எவ்வளவோ மறைக்க முயன்றும், முடியவில்லை .

“இங்கு கைதிகளும் இல்லை . நீதிபதிகளும் இல்லை !” என்று பாவெலின் உறுதியான குரல் ஒலித்தது. ”பிடிபட்டவர்களும் பிடித்தவர்களும்தான் இருக்கிறார்கள்.”

எல்லோரும் அமைதியானார்கள். சில விநாடிகள் வரையிலும் கரகரவென்று எழுதிச் செல்லும் பேனாவின் சத்தத்தையும், அவளது இதயத் துடிப்பையும் தவிர வேறு எதையுமே தாய் கேட்கவில்லை.

பிரதம நீதிபதியும் அடுத்தாற்போல் என்ன நடக்கப்போகிறது என்பதையே கவனித்துக் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அவரது உதவி நீதிபதிகளும் நிலையிழந்து அசைந்து கொடுத்தார்கள். முடிவாக அவர் சொன்னார் “ஹம்… அந்திரேய், நஹோத்கா நீங்கள் குற்றவாளி என்று ஒத்துக்கொள்கிறீர்களா?”

படிக்க:
உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை
தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்

அந்திரேய் மெதுவாக எழுந்தான்; நிமிர்ந்து நின்றான். மீசையை இழுத்துவிட்டான், தன் புருவங்களுக்குக் கீழாக, அந்தக் கிழ நீதிபதியைப் பார்த்தான்.

“நான் எப்படி என் குற்றத்தைக் கூற முடியும்?” என்று நிதானமாக இனிமையாக தோள்களை உலுப்பிக் கொண்டே கூறினான் அந்திரேய். “நான் யாரையும் கொலை செய்யவில்லை; எதையும் திருடவில்லை. ஆனால் ஒருவரையொருவர் திருடவும், கொலை செய்யவும் தூண்டிவிடும் இந்த வாழ்க்கை அமைப்புத்தான் நான் எதிர்க்கிறேன்…”

” சுருக்கமாகப் பதில் சொல்க” என்று அந்தக் கிழவர் சிரமப்பட்டுச் சொன்னார்.

தனக்குப் பின்னால் உள்ள பெஞ்சிகளிலுள்ளவர்கள் பரபரத்துக் கொண்டிருப்பதைத் தாயால் உணர்ந்துகொள்ள முடிந்தது. ஜனங்கள் குசுகுசுத்து ரகசியம் பேசினார்கள், அங்குமிங்கும் அசைந்தார்கள். அந்த வெள்ளை மூஞ்சி ஆசாமியின் பேச்சினால் தம் மீது படர்ந்துவிட்ட தூசி தும்புகளைத் துடைத்துவிடுவது போலவும் நடந்துகொண்டார்கள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

நூல் அறிமுகம் : கோவிலுக்குள் காவிப் பாம்பு !

42-வது புத்தகக் காட்சியையொட்டி புதிய வரவாக இரண்டு சிறு நூல்களை கொண்டுவந்திருக்கிறது, கீழைக்காற்று வெளியீட்டகம். அதில் ஒன்று, “கோவிலுக்குள் காவிப் பாம்பு’’. வினவு இணைய தளம், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக இவ்வெளியீடு அமைந்திருக்கிறது.

“கோவிலுக்குள் காவிப் பாம்பு’’ என்ற நூலில், “சபரிமலைத் தீர்ப்பு: எது மத உரிமை? வழிபடும் உரிமையா, தடுக்கும் உரிமையா?’’, “தேவதாசி முறை: நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !’’, “ஜீன்ஸ் பயங்கரவாதம்: தினமணியின் திருக்கோவில் லூலாயி’’, “கோவில் கடைகள் – மண்டபங்களில் நாத்திகர்களுக்கு உரிமை இல்லை’’, “இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி’’, “அச்சப் பத்து (தெருவில் அருளியது)” – துரை. சண்முகம் கவிதை ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

… பூரி ஜெகன்னாதர் கோவிலில் தேவதாசி முறையை நீட்டிக்க முயற்சிகள் நடந்த 1996-ம் ஆண்டில் புதிய கலாச்சாரம் இதழில் வெளிவந்த கட்டுரை இது. தேவதாசி முறை குறித்த வரலாற்றுப் புரிதலை இக்கட்டுரை ஏற்படுத்தும்.

ஜெகன்னாதபுரி, தீண்டாமையை ஆதரித்தும், பெண்கள் வேதம் படிக்கக் கூடாது என்றும், இன்றுவரை குரலெழுப்பித் திரியும் பூரி சங்கராச்சாரியின் திருத்தலம். இவ்வூர்க் கோயிலின் தெய்வமான பூரி ஜெகன்னாதருக்கு விமரிசையாக நடத்தப்படும் நாபகலிபார் என்ற திருவிழா 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடம் (1996) கொண்டாடப்பட இருக்கிறது.

இவ்விழாவில் ஜெகன்னாதருக்காகக் கதறி அழுது, 10 நாட்கள் விதவையாக வாழும் சடங்கு ஒன்றிற்கு தேவதாசிகள் தேவை. கோவிலின் கடைசி தேவதாசியான கோகிலபிரபா 1993-இல் மறைந்த போது தனக்கென்று வாரிசாக யாரையும் நியமிக்கவில்லை. தற்போது உயிருடன் வாழும் பரஸ்மணி, சசிமணி என்ற முன்னாள் தேவதாசிகளும் வாரிசுகள் யாரையும் நியமிக்காமல், கோவில் சேவைகளிலிருந்து விலகி வாழ்கின்றனர்.

இப்படி தேவதாசிகள் இல்லாமல் போனால் நாபகலிபார் திருவிழாவை எப்படி நடத்துவது? பழி பாவத்துக்கு அஞ்சிய போவில் நிர்வாகம் உடனடியாக வேலையில் இறங்கியது. பதிவேடுகளைப் புரட்டியது. 1988-ஆம் ஆண்டில் கஜால் குமாரி ஜெனா என்ற பெண்ணும், அவரது சீடர்களான ஏனைய நான்கு பெண்களும் தேவதாசி சேவைக்கு விண்ணப்பித்திருந்தனர். தூசி தட்டிய விண்ணப்பங்களை 7 ஆண்டுகளுக்குப் பிறகு கையிலெடுத்த நிர்வாகம் ஐவரையும் நேர்காணலுக்கு வருமாறு அழைத்தது.

இந்த நூற்றாண்டின் (20-1ம் நூற்றாண்டு) தொடக்கம் வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் இருந்ததாக தெரிய வருகின்றது. பல நூறு ஆண்டுகள் வலுவாக நீடித்திருந்த தேவதாசி முறை தேவதாசி ஒழிப்புச் சட்டம் மூலம் ஏனைய கோவில்களில் ஒழிக்கப்பட்டாலும் பூரியில் மட்டும் இன்று வரை உயிருடன் உள்ளது ஏன்?

‘’ஏனென்றால் தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் தேவதாசி முறை விபச்சாரமாகப் பரிணமித்தது போல் பூரியில் நடக்கவில்லை. இங்கு மட்டும் தான் உண்மையாக உள்ளது’’ என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர்.

எது உண்மை? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன கடைசி தேவதாசி கோகில பிரபா உண்மையில் தனது உறவுப் பெண்கள் இருவரை தத்தெடுத்து தேவதாசியாவதற்குரிய அனைத்துப் பயிற்சிகளையும் அளித்துள்ளார். இருப்பினும் அந்தப் பெண்கள் இருவரும் தேவதாசியாவது அவமானகரமானது என்பதை உணர்ந்து இறுதியில் மறுத்துவிட்டனர். மேலும், 1954, 55-இல் கோவில் நிர்வாகத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும் போது 30-க்கும் மேற்பட்ட தேவதாசிகள் கடவுளுக்கு சேவை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் சமூக வாழ்க்கைக்குத் திரும்பி விட்டனர். தேவதாசிகளது ஆரம்பமும் முடிவும் வறுமையோடு பிணைந்திருக்கிறது என்பது ஆச்சரியமில்லா உண்மை. (நூலிலிருந்து பக்.19-21)

1930 களில் தேவதாசி முறையை எதிர்த்துக் கிளம்பிய இயக்கத்தை அறியும்போது வாழையடி வாழையாக சனாதனிகளின் குரல் இன்றைக்கிருப்பது போல் ஒலிப்பதைக் கேட்க முடியும். பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கமும், காங்கிரசாரும் இந்தியப் பெண்கள் சங்கத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் தேவதாசி முறையை ஒழிக்க போராடி வந்தார்கள்.

தேவதாசி ஒழிப்பு மசோதாவைக் கொண்டு வந்தபோது, இராஜாஜி அதில் அக்கறையில்லாமல் நடந்து கொண்டார் என்பதை முத்துலட்சுமி கூறுகிறார். காங்கிரசில் ராஜாஜிக்கு போட்டியான சத்திய மூர்த்தி அய்யர், ‘’ இன்றைக்கு தேவதாசி முறையை ஒழிக்கச் சொல்வீர்களானால் நாளைக்கு பார்ப்பனர்களை அர்ச்சகராக்குவதையும் எதிர்க்கலாம். தேவதாசிகளை ஒழித்துவிட்டால் பகவானின் புண்ணிய காரியங்களை யார் செய்வார்’’ என்று வாதிட்டார்.

‘’ பகவானுடைய புண்ணியத்தை இதுவரை எங்கள் குலப் பெண்கள் பெற்றுவந்தனர். வேண்டுமானால் இனி அவரது (சத்திய மூர்த்தி அய்யர்) இனப் பெண்கள் அந்தப் புண்ணியத்தை ஏற்றுக்கொள்ளட்டுமே? அது என்ன எங்கள் குலத்திற்கே ஏகபோக காப்பிரைட்டா?’’ என்று திருப்பிக் கேட்டார் முத்துலட்சுமி ரெட்டி.

இந்துத்துவ முகங்களில் மிதவாதத்தை காங்கிரசும், தீவிரவாதத்தை பாரதீய ஜனதாவும் இன்றைக்கு பிரதிநிதித்துவம் செய்வது போன்று அத்னைக்கு ராஜாஜியும், சத்தியமூர்த்தியும் விளங்கினார்கள்.

இச்சூழலில்தான் 1882-இல் தாசி குலத்தில் பிறந்து, இளவயதிலேயே பொட்டுக் கட்டிவிடப்பட்டுவிட்ட இராமாமிர்தம் அம்மையார், தன் சொந்த அனுபவங்களைக் கொண்டு, தேவதாசி ஒழிப்பை வலியுறுத்தி ‘’ தாசிகள் மோசவலை’’ எனும் நாவலை மிகுந்த சிரமத்துகிடையில் 1936-இல் வெளியிட்டார். (நூலிலிருந்து பக்.25-26)

இந்துக்களின் கோவில்களில் மதச்சார்பற்ற அரசுக்கு என்ன வேலை?’’ என்பது புதிய முழக்கமல்ல. தொண்ணூறுகளின் துவக்கத்தில் இருந்தே சங்கரிவார அமைப்புகள் குறிப்பாக இந்து முன்னணி, இந்த முழக்கத்தை எழுப்பி வந்துள்ளது. கடந்த 2-ம் தேதி (பிப்ரவரி, 2018) மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் ‘ஏற்பட்ட’ தீ விபத்தைத் தொடர்ந்து தற்போது இக்கூச்சல் காதை அடைக்கிறது.

சொல்லப்போனால், கடந்த காலங்களில் கருவறைத் தீண்டாமை கேள்விக்குட்படுத்தப்பட்ட அனைத்து சந்தரப்பங்களிலும் க உறிப்பாக, ம.க.இ.க. நடத்திய கருவறை நுழைவுப் போராட்டம், சிதம்பரம் கோவிலில் தமிழ்பாடும் உரிமைக்கான போராட்டம், இந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமித்தபோது என எல்லா சந்தர்ப்பங்களிலும் மேற்படி எதிர்க் கோரிக்கையை இந்துத்துவ அமைப்புகள் எழுப்பி வந்துள்ளன. (நூலிலிருந்து பக்.44)

படிக்க:
தில்லைக் கோவில் மீட்பு மாநாடு : உரைகள் , தீர்மானங்கள் , படங்கள்
சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !

கோவில்களைக் காப்பாற்றுவது என்பது இனிமேலும் மதம் பிரச்சினை அல்ல கோவில்களுக்கு சமூகத்தில் இருக்கும் செல்வாக்கைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அவற்றின் சொத்து – பாரம்பரிய வரலாற்று மதிப்பை காப்பாற்ற மக்கள் அனைவரும் களமிறங்கியாக வேண்டும். அறநிலையத்துறையை வலுப்படுத்த வேண்டும்.

கோவில் மட்டுமல்ல, அனைத்து ஆதீனங்களும், மடங்களும் கூட அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும். அவை அனைத்திற்கும் தமிழகம் முழுவதும் ஏராளமான நிலங்களும், இதர சொத்துக்களும் உள்ளன. மதங்களில் பக்தி, ஆன்மீகம் மட்டுமே சாமி யார்களுக்கும், கடவுளர்களுக்கும் சொந்தமாக இருக்க வேண்டும். இவை தவிர அனைத்தும் மக்கள் சொத்துக்களாக அங்கீகரிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் மன்னர்களும், நம்பூதிரிகளும் அடித்த கொள்ளையை இன்றுவரை தண்டிக்க முடியவில்லை. பாபாராம் தேவ், அஸ்ராம் பாபு, ராம்ரஹீம், நித்தியானந்தா போன்ற சாமியார்கள் பொறுக்கித்தனத்தில் மட்டுமல்ல, ஊழல் முறைகேடுகளிலும் முன்னணி வகிக்கிறார்கள்.

ஆக, வரும் காலத்தில் இவர்களைக் கட்டுப்படுத்துவது என்பது வெறும் சொத்துக்கள் என்ற வகையில் மட்டுமல்ல, தேச விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கே அது முன் நிபந்தனையாக தேவைப்படுகிறது.

தமிழக கோவில்கள் இந்து அறநிலையத்துறையில் இருந்து இந்துமதவெறிக் கும்பல்களின் கையில் செல்லுமானால் இவர்களுக்கு ஊருக்கு ஊர் ஒரு ஆயுத முகாம் உருவாகிவிடும். அங்கே அப்பாவி மக்களை வெறியேற்றுவது, இளைஞர்களை அடியாட் படைகளாக மாற்றும் வண்ணம் பயிற்சி கொடுப்பது என பல முறைகேடுகள் நடக்கும். இவற்றுக்கு கோவில்களில் உள்ள மக்கள் சொத்துக்கள் பயன்படும். அனுமதிக்க போகிறோமா? (நூலிலிருந்து… பக்.53)

பக்கம்: 56
விலை: ரூ.55.00

♦ ♦ ♦

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…

உச்ச நீதிமன்றத்தில் மூன்று குமாரசாமிகள் | சிறப்புக் கட்டுரை

ருதலைப்பட்சமாக அமைந்த தீர்ப்புகள் பல உண்டு. சட்டத்தின் ஓட்டைகளுக்குள் புகுந்துகொண்டு குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்த தீர்ப்புகளும் பல உண்டு. இத்தகைய இழிபுகழ் தீர்ப்புகளில் விஞ்சி நிற்பது மண்டபத்தில் எழுதப்பட்டு வாசிக்கப்படும் தீர்ப்புகள்தான் – அவை எண்ணிக்கையில் குறைவு என்றபோதும். அப்படியான தகுதியைப் பெற்றிருக்கிறது, ரஃபேல் போர் விமானக் கொள்முதல் குறித்த வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு.

இப்போர்விமானக் கொள்முதல் நடைமுறை, விமானத்தின் விலை, இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனம் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது குறித்தெல்லாம் உச்சநீதி மன்றத்திடம் என்னென்ன விளக்கங்களை மோடி அரசு அளித்திருந்ததோ, அதனை அச்சுப் பிசகாமல் தீர்ப்பில் குறிப்பிட்டு நரேந்திர மோடியை ஊழல்-முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து காப்பாற்றியிருக்கிறது, உச்சநீதி மன்றம்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்.

“பிழையான” தீர்ப்பை அளித்ததில் நீதிபதி குமாரசாமிதான் கில்லாடி என நாம் நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இதோ நாங்களும் இருக்கிறோம் எனக் கோதாவில் குதித்திருக்கிறார்கள், ரஃபேல் தீர்ப்பை அளித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகிய மூவரும்.
இந்தத் தீர்ப்பை ஈயடிச்சான் காப்பி (cut and paste) தீர்ப்பு என விமர்சித்திருக்கிறார், பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சரும் பத்திரிகையாளருமான அருண் ஷோரி. அப்படிப்பட்ட இத்தீர்ப்பைக் கீறிப் பார்ப்பதற்கு முன், ஊழலுக்கு ஒரு புதிய தன்மையை, பரிணாமத்தை அளித்திருக்கும் இந்த வழக்கின் பின்னணியைச் சுருக்கமாக வாசகர்களுக்கு நினைவுபடுத்திவிடலாம்.

126, 36-ஆக சுருங்கிப்போனதன் பின்னணி

முந்தைய காங்கிரசு கூட்டணி ஆட்சியில் பிரான்சு நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 126 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டு, அதில் 18 போர் விமானங்களைப் பறக்கும் நிலையில் பெறுவதென்றும், மீதமுள்ள 108 விமானங்களை இந்தியாவில், பெங்களூரிலுள்ள பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸில் தயாரிப்பதென்றும், அதற்குரிய தொழில்நுட்பங்களை டஸால்ட் நிறுவனம் இந்தியாவிற்குத் தருவதோடு, விமானங்கள் அனைத்திற்கும் சட்டப்படியான தயாரிப்பு உத்தரவாதம் (Sovereign guarantee) அளிக்க வேண்டுமென்றும் விதிகளும், நிபந்தனைகளும் உருவாக்கப்பட்டு, இதற்கான ஒப்பந்தம் முடிவாகும் நிலையில்தான் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு கூட்டணி ஆட்சி தோற்றுப்போய், நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது.

உச்சநீதி மன்ற நீதிபதி கே.எம். ஜோசப்.

எனினும், 126 ரஃபேல் போர்விமானங்களை வாங்கும் முந்தைய ஆட்சியின் முடிவு கைவிடப்படாமல், அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்துவந்தன. மார்ச் 2015-இல் ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடிய நிலையை எட்டிவிட்டதாக நாடாளுமன்றத்திலும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஏப்ரல் 2015-இல் பிரான்சு நாட்டுக்குச் சென்ற நரேந்திர மோடி, அந்நாட்டுத் தலைநகர் பாரீசில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், டஸால்ட் நிறுவனத்திடமிருந்து பறக்கும் நிலையில் 36 போர் விமானங்களை 720 கோடி யூரோ டாலர்கள் விலையில் வாங்கும் முடிவை அறிவித்தார்.

126 போர் விமானங்களை வாங்குவது என்ற பழைய முடிவு கைவிடப்பட்டு, புதிய ஒப்பந்தம் முடிவாகியிருப்பது அப்பொழுதுதான் இந்திய இராணுவ அமைச்சருக்கே தெரிய வந்தது. அப்பொழுது இராணுவ அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கரை மோடி பாரீசுக்குக் கூட்டிச் செல்லவில்லை. அந்தச் சமயத்தில் மனோகர் பாரிக்கர், தனது சொந்த மாநிலமான கோவாவில் ஒரு மீன் கடையைத் திறந்துவைத்துக் கொண்டிருந்தார். எனினும், தனது முகத்தில் வழிந்த அசடையும், அதிர்ச்சியையும் வழித்துப்போட்டுவிட்டு, இது பிரதம மந்திரியின் முடிவு. நான் அதனை ஆதரிப்பேன்” என கோவாவில் மீன்கடையின் முன்நின்றபடி அறிவித்தார்.

மேலும், முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் 715 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த ஒரு விமானத்தின் விலை, மோடியின் புதிய ஒப்பந்தத்தில் 1,650 கோடி ரூபாயாக அதிகரித்தது; பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் கழித்துக் கட்டப்பட்டு, அனில் அம்பானியின் நிறுவனம் பங்குதாரராக இணைத்துக் கொள்ளப்பட்ட விவரங்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கசிந்து வெளியே வந்தன.

உச்சநீதி மன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்.

இப்புதிய ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சிகளும், பல்வேறு சமூக ஆர்வலர்களும் எழுப்பிய எந்தவொரு கேள்விக்கும் சந்தேகத்துக்கும் குற்றச்சாட்டுக்கும் மோடியும் அவரது சகாக்களும் பொதுவெளியில் மட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும்கூட நியாயமான விளக்கங்களை அளிக்க மறுத்தனர். மாறாக, தேசப் பாதுகாப்பு என்ற பூச்சாண்டியைக் காட்டியும் பொய்களை அவிழ்த்துவிட்டும் இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை மூடிமறைத்தனர். ஒரு நாளல்ல, இரண்டு நாளல்ல, கடந்த மூன்றாண்டுகளாகவே மோடி அரசும் பா.ஜ.க.வும் இந்த சித்து விளையாட்டை நடத்திவந்தனர். கடந்த காங்கிரசு ஆட்சியில் நடந்த ஊழல்களை அக்குவேறு ஆணி வேறாகத் துணிந்து அம்பலப்படுத்திய தேசியப் பத்திரிகைகள், ரஃபேல் ஊழல் குறித்து கண்டும் காணாமல் நடந்துகொண்டன.

இந்தப் பின்னணியில்தான் மோடி அரசு அறிவித்திருக்கும் ரஃபேல் போர்விமான கொள்முதல் குறித்து நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண் ஆகிய மூவர் இணைந்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இவர்களுக்கு முன்பே இக்கொள்முதல் குறித்து விசாரணை நடத்தக் கோரி மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவ்வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரணை நடத்திய உச்சநீதி மன்றம், கொள்முதல் நடைமுறையில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை, எந்தவொரு தனிநபருக்கும் சலுகை காட்டப்படவில்லை எனக் குறிப்பிட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மறுத்து விட்டது.

சாகடிக்கப்பட்ட உண்மைகள்

நரேந்திர மோடி தன்னிச்சையாக அறிவித்த புதிய கொள்முதலில் ஒரு விமானத்தின் விலை முந்தைய ஒப்பந்த விலையைவிட இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டிருந்த மர்மம்தான் இந்த வழக்கின் மையமான புள்ளி. இந்த முடிச்சை அவிழ்த்துவிட்டால், மீதமுள்ள இரண்டு முடிச்சுகளும் – இராணுவ அமைச்சருக்கே தெரியாமல் கொள்முதலை அறிவித்தது, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸைக் கழட்டிவிட்டு அனில் அம்பானியைப் பங்குதாரராகச் சேர்த்துக்கொண்டது – தானாகவே அவிழ்ந்துவிடும்.

ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, வழக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்களுக்குள் நுழையமாட்டோம் எனக் கூறி, வழக்கின் அடிப்படையையே ஆட்டங்காண வைத்தனர். பின்னர், விலை உள்ளிட்ட விவரங்கள் பற்றிய அறிக்கையை மூடிமுத்திரையிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்திடம் அளிக்குமாறு உத்தரவிட்டனர். எனினும், மோடி அரசு நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையின் நகலோ, விவரங்களோ வழக்கைத் தொடுத்த மனுதாரர்களுக்குத் தரப்படவில்லை. தேசப் பாதுகாப்பு கருதி சில விடயங்கள் இரகசியமாக இருக்க வேண்டும்” என இந்த அநீதிக்குப் பொழிப்புரை கூறினார்கள் நீதிபதிகள். விமானக் கொள்முதல் நடைமுறை, விலை குறித்து அரசு அளித்த அறிக்கைக்குப் பதில் அளிக்க மனுதாரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில்தான் இத்தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.

பிரான்ஸ் நாட்டுத் தலைநகர் பாரீசில் பிரெஞ்சு அதிபருடன் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி இராணுவ அமைச்சருக்கேகூடத் தெரிவிக்காமல், தன்னிச்சையாக பாரீசில் அறிவித்த 36 போர்விமானங்கள் வாங்கும் முடிவை, சிறிய விதிமீறல்’’தான் எனச் சப்பைகட்டி நியாயப்படுத்தியிருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 126 போர் விமானங்களை வாங்கும் பழைய ஒப்பந்தம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடிவுக்கே வராமல் முட்டுச்சந்தில் நின்றுபோனதால்தான், புதிய ஒப்பந்தத்தை அறிவிக்க வேண்டிய நிலைக்கு மோடி தள்ளப்பட்டதாக”த் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

போரின்போதுதான் உண்மைகள் கொல்லப்படும் என்பார்கள். ஆனால், ஆயுதத் தளவாடங்களை வாங்குவதில்கூட உண்மையைத் துணிந்து கொன்றுபோட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

நரேந்திர மோடி புதிய ஒப்பந்தத்தை அறிவிப்பதற்குப் பத்து நாட்கள் முன்புதான், அதாவது மார்ச் 28, 2015 அன்றுதான் டஸால்ட் நிறுவன செயல் தலைவர் எரிக் ட்ராப்பியர், 126 போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக அறிவித்தார்.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.சுவர்ண ராஜூ, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், டஸால்ட் நிறுவனங்களுக்கு இடையேயான வேலைப்பகிர்வு ஒப்பந்தம் (workshare agreement)கையெழுத்தாகி, அதனைப் பழைய ஒப்பந்தம் ரத்தாவதற்கு முன்பே அரசிடம் ஒப்படைத்துவிட்டதாக” செப்.2018-இல் பகிரங்கமாக வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார்.

இவையிரண்டும் பழைய ஒப்பந்தம் செயலுக்கு வரும் நிலையை எட்டிவிட்டதைக் காட்டுகிறதேயொழிய, நீதிபதிகள் குறிப்பிடுவதைப் போல மூன்றாண்டுகளாக முடிவுக்கு வராமல் முட்டுச்சந்தில் சிக்கியிருப்பதைக் காட்டவில்லை. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இவ்வழக்கில் உண்மையைக் கூறவில்லை. மாறாக, பா.ஜ.க.வின் பிரச்சாரப் பீரங்கிகளாகச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

டஸால்ட் நிறுவனத் தலைவர் எரிக் ட்ராப்பியர், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி மற்றும் பிரான்ஸ் நாட்டு இராணுவ அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லி.

போர்ச்சூழல் போன்ற அவசர, அசாதாரணமான நிலைமைகளில் மட்டும்தான் ஆயுதத் தளவாடங்கள் வாங்கும் முடிவுகளைத் தன்னிச்சையாக பிரதம மந்திரி எடுக்க முடியுமே தவிர, அமைதிக் காலங்களில் தளவாடங்களை வாங்குவதற்கான முறையீடுகள் அந்தந்தப் படைப்பிரிவுகளிலிருந்து வந்த பிறகே, அரசாங்கத் தலைமை முடிவெடுக்க முடியும். நரேந்திர மோடி இந்த விதிமுறையை மீறியிருப்பதோடு, தனது தன்னிச்சையான முடிவுக்கு இராணுவ அமைச்சர், இராணுவ அதிகாரிகளை ரப்பர் ஸ்டாம்புகளாகப் பயன்படுத்தி ஒப்புதலும் பெற்றிருக்கிறார்.

அவர்கள் போட்டுக்கொண்ட சட்டதிட்டங்களை அவர்களே ஒருபொருட்டாக மதிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டிய உச்சநீதி மன்றம், இந்த விதிமீறலின் பின்னுள்ள உள்நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டிய உச்சநீதி மன்றம், அதற்குப் பதிலாக நரேந்திர மோடியின் களவாணித்தனத்தைச் சிறிய விதிமீறல் எனச் செல்லமாகக் குட்டிச் சென்றுவிட்டது.

உச்ச நீதிமன்றம் சொன்ன வாழைப்பழக் கதை

“அம்பானியின் நிறுவனத்தைப் பங்குதாரராகத் தேர்ந்தெடுத்தது டஸால்ட் நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவு. அதற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை” என பா.ஜ.க. கும்பல் கூறிவரும் பொய்யை, பிரான்சு நாட்டின் முன்னாள் அதிபர் பிரான்ஸுவா ஹொலாந்த் அளித்த பேட்டியில் போட்டு உடைத்தார். அனில் அம்பானி நிறுவனத்தை மோடி அரசுதான் பரிந்துரைத்தது; அந்நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர டஸால்ட் நிறுவனத்திற்கு வேறு வழியில்லை” என்பதுதான் அவர் அளித்த நேர்காணலின் சாரம். உச்சநீதிமன்றமோ முன்னாள் பிரான்சு அதிபர் கூறியதை, யாரோ தெருவில் செல்லும் நபர் கூறியதைப் போல ஒதுக்கித்தள்ளியதோடு, ஹொலந்த் கூறியதை அனைத்துத் தரப்பும் மறுத்துள்ளன என எதிர்வாதத் தையும் தனது தீர்ப்பில் முன்வைத்தது.

படிக்க:
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
நூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே

அதனை மறுத்தவர்கள் யார்? மோடி அரசு, டஸால்ட் நிறுவனம் மற்றும் அனில் அம்பானி. குற்றத்தின் நிழல் படிந்தவர்கள் மறுத்ததற்கு முக்கியத்துவம் தந்திருக்கும் உச்சநீதி மன்றம், முன்னாள் அதிபரின் கூற்றுக்கு, அதுவும் நரேந்திர மோடி புதிய ஒப்பந்தம் போட்டுக்கொள்வதற்கு யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரோ, அவரது நேர்காணலை அலட்சியப்படுத்துகிறதென்றால், நீதிபதிகளின் நடுநிலையும் நேர்மையும் நம்மை நடுங்கச் செய்கிறது! ஸ்வீடன் வானொலியில் வெளியான செய்தியொன்றை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வு செய்த பிறகுதான் போஃபர்ஸ் ஊழல், அதன் முழு பரிமாணத்தோடு அம்பலமானது. ரஃபேல் விமான பேர ஊழலிலோ புலனாய்வையே முடக்கிப் போடுகிறது உச்சநீதி மன்றம்.

“ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனம் தான் தேர்ந்தெடுக்கும் இந்தியப் பங்குதாரரின் தகுதிகளோடு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, அந்த இந்திய நிறுவனத்தின் ஆறு மாத வேலையறிக்கையை அளிக்க வேண்டும். அதனை ஆயுதக் கொள்முதல் குழுவின் மேலாளர் ஆய்வு செய்ய வேண்டும். இராணுவ அமைச்சர் தன் கைப்பட அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்” என்றவாறு ஆயுத பேரக் கொள்முதலில் பங்குதாரரை இணைத்துக் கொள்வதற்குப் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

பத்திரிகையாளரும் பா.ஜ.க.வின் முன்னாள் அமைச்சருமான அருண் ஷோரி மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா.

நரேந்திர மோடி புதிய ஒப்பந்தம் குறித்து அறிவித்த பிறகுதான் இந்த விதிமுறைகளுள் பல முன்தேதியிட்டு மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை அம்பலப்படுத்தினாலும், அதனை உச்சநீதி மன்றம் கண்டுகொள்ள மறுத்துவிட்டது. எனினும், பங்குதாரராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் குறிப்பிட்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பது இன்றுவரை கைவிடப்படவில்லை.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் சுகோய் உள்ளிட்ட போர் விமானங்களையே தயாரித்து அளித்துவரும் நிலையில், அனில் அம்பானியின் நிறுவனமோ இராணுவத்திற்காக ஒரு குண்டூசியைக்கூட இதுவரை தயாரித்து அளித்ததில்லை. அந்த நிறுவனமே புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்படுவதற்கு ஒரு சிலநாட்கள் முன்புதான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட உப்புமா கம்பெனியிடம் ரஃபேல் போர்விமான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கும் முடிவு திரைமறைவு பேரங்கள் இன்றி நடந்திருக்காது.

இவை அனைத்தையும் பார்க்க மறுத்த உச்ச நீதிமன்றம், 2012-ஆம் ஆண்டிலேயே டஸால்ட் நிறுவனம் அம்பானி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்துகொண்டுவிட்டது என பா.ஜ.க. கூறிவரும் தகிடுதத்தத்தைத் தனது தீர்ப்பிலும் வாந்தி எடுத்திருக்கிறது. பழைய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டது, மூத்தவர் முகேஷ் அம்பானியின் நிறுவனம். புதிய ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டிருப்பது இளையவர் அனில் அம்பானியின் நிறுவனம். இந்த வேறுபாடை மறைத்துவிட்டு அந்த அம்பானியும் இந்த அம்பானியும் ஒன்றுதான் என பா.ஜ.க.வோடு சேர்ந்துகொண்டு உச்சநீதி மன்றமும் சாதிக்கிறது. கவுண்டமணி – செந்தில் ஜோடியின் வாழைப்பழக் கதை தோற்றது போங்கள்!

விலையைச் சொன்னால் ஆபத்து! யாருக்கு?

ஆயுதத் தளவாடங்களின் விலையைத் தீர்மானிக்க விலை தீர்மானிக்கும் குழு, ஆயுதத் தளவாடக் கொள்முதல் குழு எனப் பல அடுக்குகள் உள்ளன. ஆனால், 36 ரஃபேல் போர்விமானங்கள் என்ன விலைக்கு வாங்குவது என்பதை இந்தக் குழுக்கள் தீர்மானிக்கவில்லை. இராணுவ அமைச்சரின் தலைமையில் செயல்பட்டுவரும் ஆயுதத் தளவாடக் கொள்முதல் குழு இப்போர் விமானங்களின் விலையைத் தீர்மானிப்பதைப் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவிடம் தாரைவாரத்தது. எனது நினைவில் இருந்து சொல்வதென்றால், இதுவொரு விசித்திரமான, விநோதமான முடிவு” எனக் கொள்முதல் குழுவின் முடிவை விமர்சிக்கிறார், இராணுவ அமைச்சக முன்னாள் உயர் அதிகாரி சுதான்ஷு மோகந்தி.

சொத்துக் குவிப்பு குற்றவாளி ஜெயாவை நிரபராதி என விடுதலை செய்த கணிதப்புலி குமாரசாமி.

விலையைத் தீர்மானிக்கும் குழுவில் இருந்த மூன்று இராணுவ அதிகாரிகள் 36 போர் விமானங்களை 520 கோடி யூரோ டாலர்கள் என்ற விலையில் வாங்கலாம் எனப் பரிந்துரை செய்திருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவோ விலையைத் தன்னிச்சையாக 820 கோடி யூரோ டாலர்கள் என அதிகரித்துப் பின்னர் அதனை 720 கோடி யூரோ டாலர்களாகக் குறைத்திருக்கிறது. இன்னொருபுறம் 520 கோடி யூரோ டாலர்கள் என்ற விலையில் வாங்கலாம் எனப் பரிந்துரைத்த மூன்று அதிகாரிகளையும் விலையைத் தீர்மானிக்கும் குழுவில் இருந்து அதிரடியாகக் கழட்டியும்விட்டது, மோடி அரசு.

பொதுவெளியில் காணக் கிடைக்கும் இந்தத் தகவல்களை உச்சநீதி மன்றம் புலனாய்விற்கும் உட்படுத்தவில்லை; பொருட்டாக எடுத்துக் கொள்ளவுமில்லை. மாறாக, விலை விபரங்களைப் பொதுவெளியில் தெரிவிப்பது தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும்” என மோடி அரசிற்குப் பின்பாட்டு பாடியது. இன்னொருபுறத்தில், விமான விலை விவரங்களை மைய தணிக்கைத் துறையிடம் அரசு அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில் தணிக்கைத் துறை அளித்த அறிக்கையை நாடாளுமன்ற பொது கணக்குக் குழு ஆய்வு செய்திருக்கிறது. அந்த அறிக்கை சுருக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவெளியிலும் காணக் கிடைக்கிறது” எனத் தீர்ப்பில் சுத்தமான ஆங்கிலத்தில் எழுதி, ஏறத்தாழ 58,000 கோடி ரூபாய் விலையில் ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி அரசு முடிவு செய்திருப்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டுவிட்டதைப் போன்ற சித்திரத்தை உருவாக்கியிருக்கிறது.

மைய தணிக்கைத் துறை ரஃபேல் போர் விமான விலை குறித்து எந்தவொரு அறிக்கையையும் நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவிற்கு இதுநாள்வரை அளிக்கவில்லை என்பதே உண்மை. வைக்காத அறிக்கையை நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்துவிட்டதாகவும், அந்த அறிக்கை சுருக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டிருப்பதோடு, பொதுவெளியிலும் காணக் கிடைப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதெல்லாம் மாபெரும் பொய், மோசடி. தீர்ப்பு வெளியானவுடனேயே இந்தப் பித்தலாட்டத்தனத்தை காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயும் அம்பலப்படுத்தி, மோடி அரசு உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிவிட்டதாகக் குற்றஞ்சுமத்தினர்.

குட்டு அம்பலப்பட்டவுடன் யோக்கியனாக அவதாரமெடுத்த மோடி அரசு, விலை விபரங்களை தணிக்கைத் துறையிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறோம்” என்று மட்டும்தான் அறிக்கையில் கூறியிருக்கிறோம். மற்றதெல்லாம், தணிக்கைத் துறை ஆய்வு செய்த பின் நடைபெறும் வழக்கமான நடைமுறைகளைப் பற்றி, அதாவது, சி.ஏ.ஜி. அறிக்கை பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது, அந்த அறிக்கையின் சுருக்கப்பட்ட வடிவம் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுகிறது” எனப் பொதுவாகத்தான் குறிப்பிட்டிருக்கிறோம். உச்சநீதி மன்றம் நாங்கள் கூறிய பொதுவான நடைமுறைகளை, நடந்துவிட்டதாக, இறந்த காலத்தில்” தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. எனவே, இந்த இலக்கணப் பிழையைத் திருத்தித் தீர்ப்பை வெளியிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருக்கிறது.

ஜெயாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி குமாரசாமிக்கு கணக்கில் கோளாறு என்றால், ரஃபேல் போர்விமான ஊழல் வழக்கில் இருந்து மோடியை விடுவித்திருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஆங்கில இலக்கணத்தில் கோளாறு போலும்!

36 ரஃபேல் போர்விமானக் கொள்முதல் குறித்து உச்சநீதி மன்றத்திடம் அளிக்கப்பட்டிருக்கும் இரகசிய அறிக்கையில் என்ன இருக்கிறது என்பது இரண்டு தரப்புக்கு மட்டும்தான் தெரியும். ஒன்று மோடி அரசு, மற்றொன்று தீர்ப்பை எழுதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

மோடி அரசு கூறுவது போல அந்த அறிக்கை இருந்தால், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிழையான தீர்ப்பை அளித்திருக்கிறார்கள் என்பது நிச்சயம். பிழையான தீர்ப்பின் மூலம் ஊழல், முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து மோடியைப் பாதுகாக்க வேண்டிய காரணம், நோக்கம் ஆகியவை விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

மாறாக, அறிக்கையில் இருப்பதைத்தான் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள் எனக் கொண்டால், மோடி அரசு உச்சநீதி மன்றத்தை ஏமாற்றிவிட்டது என்பது நிச்சயம். அதேசமயம், மோடி அரசு அளித்த விவரங்களை கனம் நீதிபதிகள், தமது அறிவைக் கொண்டு உண்மையா, பொய்யா என ஏன் ஆராய்ந்து பார்க்கவில்லை என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். நெற்றிக் கண்ணைத் திறந்தாலும், குற்றம் குற்றம்தானே!

ஆக, ரஃபேல் போர்விமானக் கொள்முதல் வழக்கில் மோடி அரசு மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிற்கவில்லை. பிழையான தீர்ப்பின் மூலம் மோடியை விடுவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் குற்றவாளிக் கூண்டில் நிற்கிறார்கள்.

செல்வம்

புதிய ஜனநாயகம், ஜனவரி 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

நூல் அறிமுகம் : ஐ.டி. துறை நண்பா, சினிமா, இசை உள்ளிட்ட நூல்கள் !

புதிய கலாச்சாரம் வெளியீடாக இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த நூல்கள் குறித்து ஏற்கெனவே வினவு தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. எனினும், புதிய வாசகர்கள் பயன்பெறும் பொருட்டு அந்நூல்களை மீண்டுமொருமுறை சுருக்கமாக அறிமுகம் செய்கிறோம். இந்நூல்கள் அனைத்தும் சென்னை புத்தகக் காட்சியில் கீழைக்காற்று அரங்கில் (அரங்கு எண்: 147, 148) கிடைக்கும்.

இசை போதை பொழுதுபோக்கு போராட்டம்

நாட்டுப்புற இசையைப் பயன்படுத்திப் புரட்சிகர அரசியலைக் கொண்டு செல்வது. என்ற அளவில்தான் எமது துவக்ககால இசை முயற்சிகள் அமைந்திருந்தன. புதிய முயற்சிகள் ஒவ்வொன்றும் புதிதாய்க் கற்றுக் கொள்ள வேண்டியதன் தேவையை நடைமுறையிலிருந்து எமக்கு உணர்த்தின. புரட்சி செய்வதற்கு இசையறிவு ஒரு கட்டாயமான முன்நிபந்தனை அல்லவெனினும், மக்களை மயக்கத்திலாழ்த்தும் ஒரு போதைப் பொருளாக ஆளும் வர்க்கம் இசையைப் பயன்படுத்தும்போது அதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

காதலைப் பாலியல் வெறியாகவும், மகிழ்ச்சியைக் களிவெறியாட்டமாகவும் துயரத்தை விரக்தியாகவும் மடைமாற்றி விடுவதன் மூலம் மக்களின் இசைரசனையையும் வாழ்வியல் மதிப்பீடுகளையும், அதனூடாகச் சமூக உணர்வையும் சிதைப்பதில் திரையிசை வெற்றி பெற்றுள்ளது. இன்னொருபுறம் காலாவதியாகிப் போன மன உணர்வுகளை வெளியிடும் தியாகய்யர் போன்றோரின் இசை, காலத்தை வென்ற இசையாகவும், திரையிசைக்கு மாற்றாகவும் முன் நிறுத்தப்படுகிறது.

களவாடிய இசையே கர்நாடக இசை என்பதை நாம் புரிந்து கொண்டால் மட்டும் போதாது.

நம் மரபில் எதைக் கொள்வது – எதைத் தள்ளுவது, பிற நாட்டு இசை மரபுகளில் எவற்றைச் செரித்துக் கொண்டு நமது விடுதலைக்கான இசையைப்படைப்பது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்தப் புரிதலின் அடிப்படையில் எழுதப்பட்டவைதான் புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த இசை விமர்சனக் கட்டுரைகள். அக்கட்டுரைகள் இங்கே நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர்கள் முறையாக இசை பயின்றவர்கள் இல்லை என்றாலும், அறியாமையிலிருந்து விடுபடும் தம் சொந்த முயற்சியையே வாசகர்கள் அனைவரின் அனுபவமாக மாற்றியுள்ளனர் என்று கூறலாம்.

நுகர்வோனை ரசிகனாக மாற்றுவதும் அடிமையைச் சுதந்திர மனிதனாக மாற்றுவதுமே நமது இலட்சியம். இதை சாதிக்க வேண்டுமெனில் வெகுசன அடிமைத்தனத்தின் ஆன்மாவையும், விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் அதன் மொழியையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அறிந்து கொள்ள முயல்வோம். (மேலும் படிக்க)

பக்கங்கள்: 112
விலை: ரூ.40.00 (அக்-2002 பதிப்பு)

♦ ♦ ♦ 

மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்

வினவுத் தளத்தில் மும்பைத் தாக்குதல் குறித்து ஆறு பாகங்களாக வெளிவந்த தொடர் கட்டுரை ம.க.இ.க சார்பில் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. மேலும் இதற்கு வந்த மறுமொழிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டுள்ளன.

… இசுலாமிய சர்வதேசியம் என்பது நிறைவேறவே முடியாத ஒரு அபத்தம். அன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, இன்று அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும், இசுலாமிய நாடுகளின் மக்களை அடிமைப்படுத்துவதற்கும் பயன்பட்டு வரும் ஒரு கருவி. அவ்வளவே. ஆனால், மூலதனத்தின் சர்வதேசியமும், அதனை முன் தள்ளும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் நாம் எதிர்கொண்டிருக்கும் உண்மைகள். உலக மக்களால் எதிர்க்கப்பட வேண்டிய உண்மையான எதிரிகள். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இந்த உண்மையான எதிரிகளைத் தப்பவிடுவதுடன், அவர்களுடைய கையாளாகவே நமது நாடு மாறிவிடக்கூடாது என்று எச்சரிப்பதே இக்கட்டுரைகளின் நோக்கம். (மேலும் படிக்க)

பக்கம் – 88
விலை ரூ.35

♦ ♦ ♦ 

ஜீன்ஸ் பேண்ட்டும் பாலியல் வன்முறையும்

ஒரு குக்கிராமத்தில் நடக்கும் சம்பவம் கூட செய்தியாக உடனுக்குடன் ஊடகங்களில் இடம் பெறும் வண்ணம் தொழில் நுட்பமும், செய்திகளுக்கான வலைப் பின்னலும் அபாரமாக வளர்ந்துள்ளது. ஆனால் தமக்கு வெளியே உள்ள வாழ்க்கையைப் பற்றி மக்கள் தெரிந்து கொண்டு சமூக மனிதனாக பரிணமிப்பதற்கு இந்த வளர்ச்சியே உதவிவிடுவதில்லை. காதல், தற்கொலை, கொலை குறித்த செய்திகள் எல்லாம் மலிவான ரசனையைக் கருத்தில் கொண்டு பரபரப்பிற்காகவே வெளியிடப்படுகின்றன. நவீன வாழ்க்கையின் சீரழிவுகள் மற்றும் தோற்றுப் போன உறவுகளின் சாட்சியங்களாக  வெளிப்படும் இத்தகைய சம்பவங்கள் எதுவும் அதற்குரிய கவலையுடனோ அக்கறையுடனோ ஊடகங்களால் வெளியிடப்படுவதில்லை. இதன் விளைவாக, ஒரு கள்ளக்காதல் கொலை கூட அதிர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக,  தானும்  அத்தகையதொரு முயற்சியில் இரகசியமாய் இறங்கலாமென்ற  திருட்டுத்தனமான ஆசையை வாசகனின் மனதில் ஏற்படுத்துகின்றது.  அதிர்ச்சியின் இடத்தை ஆசை நிரப்புகிறது. விளைவு என்னவென்றால் ஏற்கனவே போலியான உறவுகளால் நீர்த்துப் போயிருக்கும் வாழ்க்கை உறவுகள் தம்மைப் பற்றிய சுய விமரிசனமின்றி காரியவாதத்தையும், பிழைப்பு வாதத்தையும் மாற்றாகத் தேடிக் கொள்கின்றன. (மேலும் படிக்க)

பக்கம் – 48
விலை ரூ.25

♦ ♦ ♦

ஐ.டி துறை நண்பா …

ஐ.டி என்று பரவலாக அறியப்படும் தகவல் தொழில் நுட்பத் துறை சமீபத்திய ஆண்டுகளில் வளர்ந்திருப்பது அனைவரும் அறிந்ததே. வீட்டு வாடகை உயர்ந்தது முதல் நட்சத்திர விடுதிகளின் வார விடுமுறைக் கொண்டாட்டம் வரை பல்வேறு விசயங்களில் இந்தத் துறையின் செல்வாக்கும் நமக்கு தெரிந்த விசயம்தான். தீடீரென்று பலரது வாழ்க்கையை ஜாக்கி வைத்து தூக்கிய பெருமையும் இத்துறைக்கு உண்டு. ஒரு காவியம் போல வியந்தோதப்படும் இந்தத் துறையின் இன்றைய நிலை என்ன?….

அமெரிக்கா திவாலின் பிரதிபலிப்பாக இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும், ஐ.டி ஊழியர்கள் தமது எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக தொழிற்சங்கங்களில் திரளவேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால் பல வாசகர்கள்- இத்துறையில் பணியாற்றுபவர்கள்- அவற்றை அலட்சியமாக மறுத்தார்கள். தங்களுக்கொன்றும் பாதிப்பில்லை எனவும் ஆக்ரோஷமாக தெரிவித்தார்கள். சில வாசகர்கள் அந்தக் கட்டுரையின் சாரத்தை ஏற்றுக் கொண்டதோடு ஐ.டி துறையின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைப் பற்றிஆதாரங்களுடன் தெரிவித்தார்கள். இங்கே அந்தக் கட்டுரையும் அதற்கான மறுமொழிகளையும் வெளியிட்டுள்ளோம்….

முதலாளித்துவத்தின் அநீதியான உலகமயம் எப்படிப் பார்ததாலும் இப்படித்தான் ஒரு அழிவை மக்களுக்கு தர முடியும். இதை அரசியல் ரீதியாக புரிந்து கொள்வதும், அதற்கெதிராய் செயல் படுவதும் காலம் நம்மிடம் கோரும் கடமையாகும். அந்த கடமைக்கு வாசகரை தயார் செய்யும் பணியில் இந்த நூலும் ஒரு பங்காற்றும் என்ற நம்பிக்கையுடன் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். (மேலும் படிக்க)

பக்கம் – 72
விலை ரூ.35

♦ ♦ ♦

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம். நான்காம் தொழிற்புரட்சியைப் பற்றியும், நாளை உலகை ஆளப்போவது மக்களா, முதலாளித்துவத்தின் எந்திரங்களா? என்பதன் அறிவியல் விளக்கத்தையும், அதன் சமூகவியல் நடைமுறையையும் எளிய முறையில் விளக்குகிறது இந்நூல். “செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்”  எனும் இந்த நூல் இத்தகைய துறையில் அநேகமாக தமிழில் வெளிவரும் முதல் நூல் என்று நம்புகிறோம். இதன் சிறப்பு முதல் நூல் என்பதல்ல, நிகழ்கால – எதிர்கால உலகை தீர்மானிப்பதாக இருக்கும் ஒரு நவீன அறிவியல் மற்றும் அரசியல் துறை குறித்து வாசகர்களுக்கு ஆரம்ப அறிமுகத்தை செய்கிறது. (மேலும் படிக்க)

பக்கம்: 80
விலை : ரூ.60

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொங்கல் | புகைப்படங்கள்

ருப்புத் துணியை பிடுங்குகிறாயா!
நாங்கள்
கருப்புத் துண்டை பறக்கவிட்டு
எதிர்ப்போம்!

எங்கள் வீடுகளில் கோலமிட்டு
உன்னை துரத்தும்
முழக்கங்கள் எழுப்புவோம்!

உனது பலத்தால்
மன்றங்களை, தீர்ப்பாயத்தை
பணிய வைப்பாய்!

எங்கள் மனங்களில்
எரிகின்ற தீயை
உன்னால் அணைக்க முடியுமா?

உன்னை துரத்தும் வரை
ஓயமாட்டோம்!

சிறப்புசட்டம் இயற்று !
ஸ்டெர்லைட்டை விரட்டு !

படிக்க:
அடக்கு முறையை எதிர்கொண்டு ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதே வீரம் !
ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !

தொகுப்பு:

நூல் அறிமுகம் : புதிய கலாச்சாரம் நூல் தொகுப்புகள் !

மாத மாதம் வாசித்தவுடன்
வீசி விடும் காகிதமாக அல்ல
மாதங்கள் கடந்தாலும்
மீண்டும் வாசிப்பைக் கோரும்
தேவைப்படும் நேரங்களாய்
புதிய சிந்தனையாய்
புதிய தெம்பளிக்கும் உற்ற தோழனாய்..
நீங்கள் வாசிக்கவும்.. யோசிக்கவும் ..
புதிய கலாச்சாரத்தின் தொகுப்புகள் …
பல்வேறு தலைப்புகளில்…

அழகிய வடிவமைப்பில் கையடக்க பெட்டகத்துடன் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் (எண்: 147, 148) கிடைக்கிறது.

 

தொகுப்பு – 1  எதிர்த்து நில்
விலை: ரூ. 100.00

♦ எதிர்த்து நில்
♦ பேரிடர்: புயலா – அரசா?
♦ தூத்துக்குடி முதல் நியமகிரி வரை : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள்!
♦ அன்றே கொன்றது கஜா புயல் நின்று கொல்கிறது அரசு!

 

தொகுப்பு – 2 இலுமினாட்டி பிக்பாஸ் கோக்-பெப்சி
விலை: ரூ. 90.00

♦  கோக் – பெப்சி: கொலைகார கோலாக்கள்!
♦  செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமையுகம்
♦  ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள்
♦  தாய்மார்களைக் காப்பாற்றுவது நவீன மருத்துவமா?
இலுமினாட்டி பைத்தியமா?

 

தொகுப்பு – 3 சினிமா
விலை: ரூ. 80.00

♦  ஊடகங்களை நம்பலாமா?
♦  ஹாலிவுட் : கவர்ச்சி ஆக்கிரமிப்பு
♦  ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா …
ஹீரோவா ஜீரோவா?
♦  ரஜினி : வரமா – சாபமா?

 

தொகுப்பு – 4 பறிபோகும் கல்வி
விலை: ரூ. 80.00

♦  அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள்?
♦  மருத்துவ எமன்!
♦  கல்வி வியாபாரம்: வாங்க சார், வாங்க!
♦  நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி!

 

தொகுப்பு – 5 நுகர்வு மயக்கம்
விலை: ரூ. 150.00

♦  உங்களுக்குள் ஒரு பாலியல் குற்றவாளி!
♦  நுகர்வு – கழிவு – பண்பாடு
♦  போர்னோ : இருளில் சிக்கும் இளமை
♦  இதயத்தை மீட்பது எப்படி?
♦  ஆன்மீகக் கிரிமினல்கள்!
♦  சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா, பா.ஜ.க-வா?


தொகுப்பு – 6 விடாது காவி

விலை: ரூ. 140.00

♦  விடாது கருப்பு மோடியின் கபட நாடகம்
♦  மோடியின் டிஜிட்டல் பாசிசம்
♦  மோடி அரசின் தாக்குதல்கள்!
♦  ஊழல் பரிவார் “உத்தமர் மோடி!
♦  மீடியாவை மிரட்டும் மோடி!
♦  பா.ஜ.க தோல்வி :
மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது!

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…

தண்டனை பயங்கரமாய்த் தோன்றவில்லை , விசாரணைதான் பயங்கரமாகத் தோன்றுகிறது

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 52 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
“ஓடு! ஓடு!” என்று காலைத் தரையில் உதைத்துக்கொண்டே மெதுவாகக் கத்தினாள் தாய்.

அவளது காதுகளில் கிண்ணென்று இரைந்தது. பலத்த கூச்சல்களை அவள் கேட்டாள். சுவரின் மீது மூன்றாவது தலையும் தோன்றியது. தாய் தனது நெஞ்சை அழுத்திப் பிடித்துக்கொண்டு திக்குமுக்காடும் மூச்சோடு கவனித்துப் பார்த்தாள். தாடியில்லாத ஓர் இளைஞனின் வெளிர் முடித் தலை ஒரு குலுக்குக் குலுக்கியவாறே மேலெழுந்தது. ஆனால் மறுகணமே அது மீண்டும் உள்வாங்கிக்கொண்டது. கூச்சல்கள் உரத்தும் உத்வேகத்துடனும் ஓங்கி ஒலித்தன. விசில்களின் கீச்சுச் சப்தங்களைக் காற்று ஆகாயத்தில் பரப்பி ஒலிக்கச் செய்தது. மிகயில் சுவரை ஒட்டி நடந்தான். அவன் அதனைக் கடந்து சிறைச்சாலைக்கும், ஊரின் வீடுகளுக்கும் இடையேயுள்ள வெட்டவெளி மைதானத்தைக் கடந்து சென்றான். அவன் மிகவும் மெதுவாகவும் தலையை அதிகமாக நிமிர்ந்தும் நடப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனது முகத்தை அந்தச் சமயத்தில் ஒரு முறை பார்க்க நேர்ந்தவர்கள் அதை என்றென்றும் மறக்க மாட்டார்கள். அப்படி இருந்தது அந்த முகத்தோற்றம்.

“சீக்கிரம், சீக்கிரம்!” என்று முணுமுணுத்தாள் தாய். சிறைச்சாலைச் சுவருக்கு அப்பால் ஏதோ மோதியறையும் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து கண்ணாடிச் சில்லுகள் நொறுங்கி விழும் சப்தத்தை அவள் கேட்டாள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன் தனது காலைப் பூமியில் அழுத்தி ஊன்றியவாறே குதிரைக் கயிற்றைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தான். அடுத்தவன் தன் முஷ்டியை வாயருகே கொண்டுபோய் சிறைச்சாலையை நோக்கிச் சத்தமிட்டான். அவன் சத்தமிட்டு முடிந்த பிறகு அதற்குப் பதில் எதிர்பார்த்துக் காதைத் திருப்பிச் சாய்த்துக் கேட்டான்

தாய் மிகுந்த சிரமத்தோடு நாலா திசைகளிலும் தலையைத் திருப்பிப் பார்த்தவாறே நின்றாள். அவளது கண்கள் எல்லாவற்றையும் பார்த்தன, ஆனால் எதையும் நம்ப மறுத்தன. எந்த ஒரு காரியம் மிகுந்த சிக்கலும் அபாயம் நேரக்கூடிய பயபீதியும் நிறைந்த எண்ணத்தை அவள் மனத்தில் ஏற்படுத்தியிருந்ததோ, அதே காரியம் மிகவும் சுளுவாக எளிதாக சீக்கிரமே நடந்து முடிந்துவிட்டது. அதனது துரித சக்தி தாயை ஆட்கொண்டு அவளது புலன்களை மரத்துப்போகச் செய்தது. பின் ஏற்கெனவே மறைந்து சென்றுவிட்டான். ஒரு நெட்டையான மனிதன் நீண்ட கோட்டை அணிந்து கொண்டு தெரு வழியாக நடந்து சென்றான், அவனுக்கு முன்னால் ஓர் இளம் யுவதி ஓடிக்கொண்டிருந்தாள். மூன்று சிறைக் காவலாளிகள் சிறைச்சாலை மூலையிலிருந்து தாவி ஓடி வந்தார்கள். மூன்று பேரும் தங்கள் வலது கைகளை நீட்டியவாறு ஒருவர் அருகில் ஒருவராக ஓடிவந்தார்கள். அந்தச் சிப்பாய்களில் ஒருவன் அவர்களைச் சந்திப்பதற்காக ஓடினாள். அடுத்தவன் குதிரையைச் சுற்றிச் சுற்றி ஓடியவாறே அதன் முதுகில் ஏறுவதற்கு முயன்று கொண்டிருந்தான்.

ஆனால், அந்தக் குதிரையோ முரட்டுத்தனமாக. மேல்நோக்கித் தாவிக்குதித்தது. அந்தக் குதிரை தாவிக் குதிக்கும்போது எல்லாமே தாவிக் குதிப்பது மாதிரி இருந்தது. விசில் சப்தங்கள் இடைவிடாது அழுத்தமாக ஒலித்தன. அவற்றின் கீச்சுக் குரல்கள் தாயின் உள்ளத்திலே அபாய உணர்ச்சியைக் கிளப்பிவிட்டன. அவள் நடுங்கினாள் இடுகாட்டின் வேலிப்புறமாக, அந்தக் காவலாளிகளின் மீது ஒரு கண் வைத்தவாறே நடந்தாள். ஆனால், அந்தக் காவலாளிகளும் சிப்பாய்களும் சிறைச்சாலையின் வேறொரு மூலையைக் கடந்து மறைந்து சென்றார்கள். கொஞ்ச நேரத்தில் பித்தானிடப்படாத கோட்டோடு ஒரு மனிதன் அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவன் தான் சிறைச்சாலை உபதலைவன் என்று அடையாளம் கண்டு கொண்டான். எங்கிருந்தோ போலீஸ்காரர்களும், பரபரக்கும் ஜனக்கூட்டமும் கூடி வந்தார்கள்.

குதூகலத்தோடு சுற்றியாடுவது போல் காற்று சுழன்று வீசியது. காற்று வாக்கில் தாயின் காதுகளில் உடைந்து கலகலக்கும் கூச்சல்களும், விசில் சப்தங்களும் ஒலித்தன. இந்தக் குழப்பத்தைக் கண்டு தாய் குதூகலமடைந்தாள். தனது நடையை எட்டிப் போட்டு நடந்தவாறே சிந்தித்தாள்.

”சமயங்களில், அவர்கள் பாஷாவிடம் முரட்டுத்தனமாகப் பேசத் தொடங்குவார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. ‘ஏ முஜீக் உன்னைத்தான். முஜீக்குக்குப் பிறந்தவனே உனக்கென்னடா துர்ப்புத்தி?” என்று கேட்பார்களோ என்று பயம்.

“அவனும் கூட இப்படிச் சுலபமாய்த் தப்பி வந்திருக்கக்கூடும்!” திடீரென்று ஒரு மூலையிலிருந்து இரண்டு போலீஸ்காரர்கள் ஓடிவந்தார்கள்.

“நில்” என்று அவளை நோக்கி ஒருவன் மூச்சு வாங்கியவாறே கத்தினாள். ”தாடிக்கார மனுஷன் ஒருவனை நீ பார்த்தாயா?”

அவள் தோட்டமிருக்கும் திசையைச் சுட்டிக் காட்டினாள்.

”அவன் அந்தப் பக்கமாகத்தான் ஓடினான்” என்று அமைதியாகச் சொன்னாள் அவள். ”ஏன்?’

“இகோரவ்! விசிலை ஊது”

தாய் வீட்டை நோக்கி நடந்தாள். அவள் எதற்காகவோ வருத்தப்பட்டாள். அவளது மனத்தில் கசப்பும் வருத்தமும் கலந்த உணர்ச்சி தென்பட்டது. வெட்ட வெளியைக் கடந்து தெருவுக்குள் வந்தபோது அவளைக் கடந்து ஒரு வண்டி சென்றது. அந்த வண்டிக்குள் அவள் பார்த்தாள். அதற்குள் வெளிர் மீசையும், வெளுத்துச் சோர்ந்த முகமும் கொண்ட ஓர் இளைஞனைக் கண்டாள். அவனும் அவளைப் பார்த்துவிட்டான். அவன் பக்கவாட்டில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். எனவே அவனது இடது தோளைவிட வலது தோள் உயர்ந்து காணப்பட்டது.

நிகலாய் அவளை குதூகலத்தோடு வரவேற்றான். ”சரி, என்ன நடந்தது?” ”எல்லாம் சரிவர நடந்துவிட்டதாகவே தோன்றுகிறது.”

அவள் தப்பி வந்ததைப்பற்றி சாங்கோபாங்கமாக விரிவாகச் சொல்லத் தொடங்கினாள். எனினும் அவள் வேறு யாரோ சொன்ன விஷயத்தைத் திருப்பிச் சொல்வது மாதிரிப் பேசினாள். நான் கண்ணால் கண்டதையே அவள் நம்ப மறுத்துச் சந்தேகிப்பது போலிருந்தது.

”அதிருஷ்டம் நம் பக்கம் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே கைகளைத் தேய்த்துக் கொண்டான் நிகலாய். “உங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடக்கூடுமே என்று நான் பயந்த பயம் சைத்தானுக்குத்தான் தெரியும். நீலவ்னா, நான் சொல்வதைக் கேளுங்கள். விசாரணையை எண்ணிப் பயந்து கொண்டிருக்காதீர்கள். எவ்வளவு சீக்கிரம் விசாரணை முடிகிறதோ அவ்வளவு சீக்கிரம் பாவெல் சுதந்திரம் அடைவான். நாடு கடத்துவதற்காகக் கொண்டு செல்லும்போதே, அவன் தப்பி வந்துவிடக்கூடும். விசாரணையைப் பொறுத்தவரையில் இப்படித்தான் நடக்கப்போகிறது…..”

படிக்க:
நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?

”அவன் கோர்ட்டு நடவடிக்கைகளை விவரித்துக் கூறினான். அவன் அவளை எவ்வளவுதான் தேற்றினாலும் கூட, தான் எதையோ கண்டு தனக்குள் தானே அஞ்சிக் கொண்டிருப்பதாக அவனது பேச்சிலிருந்து உணர்ந்து கொண்டாள் தாய்.

”கோர்ட்டில் நான் ஏதாவது தப்புத் தண்டாவாகப் பேசிவிடுவேன் என்றோ, அல்லது நீதிபதிகளிடம் எதையாவது கேட்டுவிடுவேன் என்றோ பயப்படுகிறீர்களா?” என்று திடீரெனக் கேட்டாள் அவள்.

அவன் துள்ளியெழுந்து கைகளை எரிச்சலோடு ஆட்டிக்கொண்டான்.

“இல்லவே இல்லை” என்று புண்பட்ட குரலில் சொன்னான் அவன்.

”நான் பயந்துவிட்டேன். அதுதான் உண்மை. ஆனால் நான் எதைக் கண்டு பயப்படுகிறேன் என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.” அவள் பேசுவதை நிறுத்தினாள். அவளது கண்கள் அறையைச் சுற்றி வட்டமிட்டன.

”சமயங்களில், அவர்கள் பாஷாவிடம் முரட்டுத்தனமாகப் பேசத் தொடங்குவார்களோ என்று எனக்குத் தோன்றுகிறது. ‘ஏ முஜீக் உன்னைத்தான். முஜீக்குக்குப் பிறந்தவனே உனக்கென்னடா துர்ப்புத்தி?” என்று கேட்பார்களோ என்று பயம். பாவெல் கர்வம் நிறைந்தவன். அப்படித்தான் பதிலும் சொல்லுவான். அல்லது அந்திரேய் அவர்களைக் கிண்டல் செய்து எதையாவது சொல்வான். எல்லோருமே சூடானவர்கள். எனவே, அந்த மாதிரி விசாரித்து இனி நாம் அவர்களைக் காண முடியாதபடி செய்துவிடுவார்கள்!”

நிகலாய் பதில் பேசாமலே முகத்தைச் சுழித்தான்: தாடியை இழுத்துவிட்டுக் கொண்டான்.

”இந்த மாதிரி எண்ணங்களை என்னால் ஒதுக்கித்தள்ளவே முடியவில்லை ” என்று அமைதியாகச் சொன்னாள் தாய். “எனவேதான் இந்த விசாரணை எனக்கு அத்தனை பயங்கரமாய்த் தோன்றுகிறது ! அவர்கள் ஒவ்வொன்றாகப் பார்த்து அலசி ஆராய்ந்து பார்க்கத் தொடங்கிவிட்டால்! அதுதான் பயங்கரமாயிருக்கிறது எனக்குத் தண்டனை பயங்கரமாய்த் தோன்றவில்லை. விசாரணைதான் பயங்கரமாகத் தோன்றுகிறது. அதை எப்படிச் சொல்வது என்பதும் தெரியவில்லை …”

தான் சொல்வதை நிகலாய் புரிந்துகொள்ளவில்லை என்பதை அவள் உணர்ந்தாள். அந்த உணர்ச்சியால் தனது எண்ணங்களை வெளியிட்டுச் சொல்வது கூட அவளுக்குச் சிரமமாயிருந்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! புதிய கலாச்சாரம் ஜனவரி மின்னிதழ் !

இந்துத்துவ அரசியல்

பா.ஜ.க தோல்வி

ந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களான சத்தீஸ்கர், இராஜஸ்தான், மத்தியபிரதேசத்தில் ஆட்சியிழந்துள்ளது பாஜக.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் பாஜக-வின் இந்த வீழ்ச்சி முற்போக்காளர்களுக்கு மட்டுமின்றி மோடி அரசின் பொருளாதார தாக்குதல்களால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கும் கூட மகிழ்ச்சியை தந்திருக்கலாம். எனினும் இந்த தோல்வியால் உண்மையிலேயே மாற்றம் வருமா?

மோடி அரசின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி-யால் சிறுதொழில்கள் கடுமையான நசிவைச் சந்தித்து வருகின்றன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். விவசாயிகளோ மோடியின் ஆட்சியில் பொருளாதார இழப்பையும் அதை எதிர்த்துப் போராடினால் துப்பாக்கிச் சூட்டையும் சந்தித்துள்ளனர்.

கிராமப்புற விவசாயிகள் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்கள் மத்தியிலும் ஆதரவை இழந்த மோடி அரசு இன்னமும் நகர்ப்புறத்து நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தின் ஆதரவோடு இருக்கிறது.

இராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் தொகுதிகளின் அடிப்படையில் பாஜக பின்தங்கினாலும் காங்கிரசை விட ஓரிரண்டு சதவீதங்கள் மட்டுமே குறைந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறது. 2014 பாராளுமன்ற தேர்தல் வாக்குகளோடு ஒப்பிடும்போது இப்போதைய வாக்கு வங்கி சரிந்திருக்கிறது. எனினும் இவ்வளவு பெரிய பொருளாதார தாக்குதல்களுக்குப் பிறகும் பாஜக-வுக்கு கணிசமாக மக்கள் வாக்களித்திருப்பது ஏன்?

பிற ஓட்டுக் கட்சிகளைப் போல் தேர்தல் அரசியலை நம்பி மட்டும் பாஜக இருக்கவில்லை. இந்தியா முழுவதும் பரவியுள்ள ஆர்.எஸ்.எஸ் – தொடர்ந்து நாட்டு மக்களிடையே இந்துத்துவ அரசியலை பிரச்சாரம் செய்து வருகிறது. மோடி அரசு இருப்பதால் அந்தப் பிரச்சாரம் அரசு அதிகாரவர்க்க ஆதரவோடும், ஆளும் வர்க்க உதவியோடும் எல்லா இடங்களிலும் நுழைந்திருக்கிறது. உணவு, உடை, இருப்பிடம், காதல், மணம், இலக்கியம், கல்வி, கலை என ஒன்று விடாமல் பார்ப்பனியப் பண்பாடு போற்றப்படுகிறது; மறுக்கும் மக்கள் தேசவிரோதிகளாக முத்திரை குத்தப்படுகிறார்கள். இராணுவம், அதிகாரவர்க்கம், நீதிமன்றம், ஊடகம் என அனைத்தையும் ஊழல்படுத்தி காவி மயமாக்கியிருக்கிறது சங்கபரிவாரம்.

இந்தத் தேர்தல் முடிவுகள் நமக்கு விட்டுச் செல்லும் பாடங்களை தொகுத்தளிக்கிறது இந்த வெளியீடு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது ! – புதிய கலாச்சாரம் ஜனவரி 2019 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு ‘Add to cart’ அழுத்துங்கள்
5 மாநில தேர்தலில் பாஜக தோல்வி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

“பா.ஜ.க தோல்வி : மகிழ்ச்சி அடையலாம் மெத்தனம் கூடாது !” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த மாட்டேன் :இராஜஸ்தான் பாஜக வேட்பாளர் வாக்குறுதி
  • மோடி ஆட்சியில் வேலை இழப்பு சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !
  • மோடி நாட்டுக்கு நல்லது செய்கிறார்: ரஜினி பாராட்டு!
  • தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதான மணிப்பூர் பத்திரிகையாளருக்கு ஓராண்டு சிறை !
  • இந்தியாவை இந்து நாடாக அறிவியுங்கள் மோடிஜி ! மேகாலயா நீதிபதி கோரிக்கை !
  • இராஜஸ்தான் : பண்டாரம் பரதேசிகள் உருவாக்கிய பள்ளி பாடத்திட்டம் ! என்ன எழவு நாடிது ?
  • இராஜஸ்தான் : உலகின் முதல் பசு அமைச்சர் சுயேட்சையிடம் தோற்றார்
  • மோடி பிரச்சாரம் செய்த தொகுதிகளில் மண்ணைக் கவ்விய பாஜக !
  • ஐந்து மாநில தேர்தலில் பாஜக தோல்வி : மகிழ்ச்சியடையலாம் ! எனினும் மெத்தனம் கூடாது !
  • யோகி ஆதித்யநாத் : பசுவைக் கொன்றவர்களுக்கு வழக்கு ! போலீசைக் கொன்றவர்களுக்கு விடுதலை !
  • பந்தளத்தில் 12 ஓட்டு! போராட்டத்தில் 2 பேர்! கேரளாவில் கெத்துகாட்டும் பாஜக!
  • ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் : ரஜினி – அதிமுக – சிவசேனா சலம்பல் !
  • சத்தீஸ்கரில் பாரதிய ஜனதா தோல்வி ஏன் ? தினமலரின் பயங்கரமான ஆய்வு !
  • ஏண்ணே ! வெற்றிகரமான தோல்வின்னா என்னாண்ணே ?
  • பாஜக – வின் தோல்வியை சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா ?
  • தெலுங்கானாவில் பொய்த்துப் போன பாஜக கனவு !
  • நோட்டாவுக்கு ஆப்பு வைப்பார்களா ஓட்டுக் கட்சிகள் ?
  • ஓட்டுப் போடுவது மட்டுமே பாஜக – வை தோற்கடிக்கும் ஒரே வழியா ?
  • மோடியின் உடனடி விவசாயக் காப்பீடு : மற்றுமொரு ஜூம்லா !
  • கஜா புயலுக்கு பட்டை நாமம்! சோமநாதர் கோவிலுக்கு தங்கக் கூரை!
  • உயர்சாதியினரை பகைத்தால் பாஜக வெல்ல முடியாது : உ.பி. எம்.எல்.ஏ-வின் பார்ப்பனிய குமுறல்
  • ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்காத மக்களின் மனநிலை என்ன ?
  • சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

ஊடகங்களை மிரட்டும் மோடி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

நூல் அறிமுகம் : சினிமா – திரை விலகும் போது …

1985 அக்டோபர் முதல் 2003 பிப்ரவரி வரை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய கலாச்சாரம் இதழில் , பொதுவெளியில் ‘தரமான’வை என்று கொண்டாடப்பட்ட அக்காலகட்டத் தமிழ்த் திரைப்படங்களை மாற்றுப் பார்வையில் மதிப்பீடு செய்து எழுதப்பட்ட சினிமா விமர்சனங்களின் தொகுப்பு இந்நூல். படங்கள் பழையனவாக இருந்தாலும், ஒரு சினிமாவை எப்படிப் பார்ப்பது என்பதை உணர்த்தும் ஒரு நூல்.

மிழ் மக்கள் கடந்த எழுபது ஆண்டுகளாகத் திரையுலகின் பால் கொண்டிருக்கும் உணர்ச்சிகரமான ஈடுபாடு என்பது, 365 நாட்களும் திரையுலக மாந்தர்களின் நிழல் மற்றும் நிஜக் கதைகளைக் கண்டு, கேட்டு, படித்தும்தான் கழிக்க முடியும் என்றாகிவிட்டது. பொங்கலும், தீபாவளியும் ஏன் அரசு விழாக்களான குடியரசு தின, சுதந்திர தினங்கள் கூட வெள்ளித் திரையின்றிக் கொண்டாட முடிவதில்லை. திரையுலகக் கிசுகிசுக்களைப் படிக்கும் வழக்கம் நமது மக்களின் வாசிப்பு முறையையே மாற்றி விட்டது. செய்தி ஊடகங்களும் அரசியல் – சமூகச் செய்திகளைச் சினிமா போல சூடு குறையாமல் பரபரப்புடன் விற்பனை செய்து வருகின்றன.

இந்நிலையில் திரைப்பட விமரிசனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன என்றாலும், சினிமா மீது சமூக நோக்கிலான விமரிசனக் கண்ணோட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதையே தமிழ்ப் பத்திரிக்கைகள் கடைப்பிடித்து வருகின்றன. ஒரு திரைப்படத்தில் விறுவிறுப்பு இருக்கிறதா, இல்லையா என்ற மலிவான ரசனையைத் தான் குமுதம், விகடன் முதலான வணிகப் பத்திரிக்கைகள் விமரிசனமென்ற பெயரில் கற்றுத் தருகின்றன. இதை ‘தினத்தந்தி’ பாணி விமரிசனம் என்று தரங்குறைந்ததாகக் கருதும் சிறு பத்திரிக்கைகளோ, சினிமா என்ற அறிவியலின் தொழில்நுட்பங்கள் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கிறதா என்று தமது விமரிசனப் புலமையைப் பறைசாற்றுகின்றன,

முன்னது ரசிகனது கைதட்டலையும், பின்னது படைப்பாளியின் ‘மேதைமை’யையும் வியந்தோதுகின்றன. எமது விமரிசனங்கள் இவ்விரண்டிலிருந்தும் வேறுபடுகின்றன. ஒரு இயக்குநரின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம், அது காதல், குடும்பம், தேசபக்தி, மதநல்லிணக்கம் என எதுவாக இருந்தாலும் சினிமா என்ற முன்னேறிய கலையின் மூலம் யாருடைய நலனுக்காக, எப்படி வெளிப்படுகிறது, ஒரு ரசிகனை உணர்ச்சிவசப்படுத்துவதன் மூலமாக எவ்வாறு பலவீனமாக்குகிறது என்பதைத்தான் எமது விமரிசனங்கள் கண்டுபிடிக்க விரும்புகின்றன. முக்கியமாக ஆளும் வர்க்கக் கண்ணோட்டம் ஒரு இயக்குநரின் அற்பவாத உணர்ச்சி என்ற ஃபார்முலாவில் குழைக்கப்பட்டு, ஒரு ரசிகனின் சமூகக் கருத்தை மறைமுகமாகப் பாதிப்பதுதான் சினிமாவின் பலம். இந்த ரசிகர்களில் சாதாரண நபர்கள் மட்டுமல்ல, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அறிவுஜீவி ரசிகர்களும், இன்ன பிற அறிவாளி, பேராசிரியப் பெருமக்களும் உண்டு.

அதனால்தான் எம்மால் விமரிசனம் செய்யப்பட்ட படங்கள்  பல இவர்களால் பாராட்டும், பரிசும் கொடுத்துப் புகழப்பட்டன. பம்பாய், மகாநதி, வேதம் புதிது, அழகி இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம். அவ்வகையில் எமது விமரிசனப் பார்வை தமிழில் தனித்து நிற்கின்றன. அதேசமயம் எந்த அளவுக்குத் தனித்து நிற்கின்றனவோ அந்த அளவுக்கு மக்கள் நோக்கிலான ஒரு சமூகக் கண்ணோட்டத்தைக் கூர்மையாக உருவாக்கியும் வருகின்றன.

படிக்க:
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?
மேற்கு தொடர்ச்சி மலை : செங்குத்து வாழ்க்கையின் படம் | ராஜ்

செல்வாக்குமிக்க திரையுலக ரசனையிலிருந்து மக்களை மீட்டெடுத்து புதிய ஜனநாயகப் பண்பாட்டை, அதன் உண்மையான அழகை அடையாளம் காட்டுவதற்கு இவ்விமரிசனங்கள் உதவி செய்யும். அவ்வகையில் தமிழ் மக்கள் இசைவிழாவின் பதினொன்றாம் ஆண்டில் இந்நூல் வெளிவருவது பொருத்தமானதே. புதிய கலாச்சாரம் ஏட்டில் சுமார் இருபது ஆண்டுகளாக ஹாலிவுட் முதல் தமிழ்த் திரையுலகம் வரை பல படங்கள் மீது வெளியான இவ்விமரிசனங்கள், எந்த ஒரு திரைப்படத்தையும் சமூக நோக்கிலிருந்து அணுகுவதற்கு வாசகருக்குப் பயனளிக்கும்.  – ஆசிரியர் குழு, புதிய கலாச்சாரம், பிப்ரவரி, 2004. (இந்நூலுக்கான முன்னுரையிலிருந்து…)

நூல்: சினிமா : திரைவிலகும் போது…
(புதிய கலாச்சாரம் இதழில் வெளியான கட்டுரைகள்)

வெளியீடு: புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084..

தொலைபேசி: 99411 75876, 97100 82506
மின்னஞ்சல்: vinavu@gmail.com

பக்கங்கள்: 206
விலை: ரூ 70.00

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…

பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

0

தவியேற்ற சில மணி நேரங்களிலேயே சுற்றுச்சூழலுக்கு எதிராகவும் பாதுக்காக்கப்பட்ட அமேசான் மழைக்காடுகளுக்கு எதிராகவும் ஒரு நிர்வாக ஆணையை பிறப்பித்துள்ளார் பிரேசிலின் புதிய அதிபர் சயீர் பொல்சனரோ (Jair Bolsonaro). இதுவரை பழங்குடி மக்களின் பாதுகாப்பில் இருந்த அமேசான் காடுகளை வேளாண்துறை நிறுவனங்கள் ஆட்டுவிக்கும் விவசாயத்துறை அமைச்சகத்திடம் வழங்குவதற்கான ஒரு ஆணையைதான் அவர் பிறப்பித்துள்ளார்.

அதிபர் சயீர் பொல்சனரோ.

இதற்கு பழங்குடி தலைவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர். தற்போது பிரேசிலின் மொத்த நிலப்பரப்பில் பாதுகாக்கப்பட்ட [அமேசான்] காடுகள் 13 விழுக்காடாக உள்ளது. ஏற்கனவே காடழிப்பு தொடர்ந்து நடந்து வரும் சூழலில் வேளாண்துறை நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் இந்நடவடிக்கையானது தாங்கள் பாதுகாத்து வரும் காடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

“இனி காடழிப்பு தீவிரமாக நடக்கும். மேலும் பழங்குடி மக்கள் மீது வன்முறையும் ஏவப்படும்” என்று பிரேசில் பழங்குடி மக்களின் குரல் (Articulation of Indigenous People of Brazil) அமைப்பின் நிர்வாக ஒருங்கிணைப்பாளரான டினாமன் டக்ஸா (Dinaman Tuxá) கூறினார். “பழங்குடி மக்கள் பாதுகாவலர்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்கள்” என்று அவர் மேலும் கூறினார்.

“காடுகளை அழிக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது” என்று பழங்குடி மக்களின் தலைவர்களுள் ஒருவரான சோனியா கௌஜஜாரா (Sonia Guajajara) பதிவிட்டிருந்தார். சோசலிசம் மற்றும் சுதந்திரக் கட்சியின் (Socialism and Freedom party) சார்பில் துணை அதிபருக்கு இவர் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாக்கப்பட்ட காடுகளின் எல்லைகளை முந்தைய ஆட்சிகளில் பழங்குடியினரின் நிறுவனமான புனாய் (Funai) நிர்வகித்தது. தற்போது இது நீதி அமைச்சகத்திடம் இருந்து புதிய பெண்கள், குடும்பம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்தின் கீழ் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒரு சுவிஷேச பாதிரியாரின் கட்டுப்பாட்டில் அது செயல்படும்.

ஒரு நிர்வாக ஆணை மூலம் எடுக்கப்பட்ட இம்முடிவு அரசு சாரா நிறுவனங்கள் மீதான பெரும் அதிகாரத்தை பொல்சனரோ அரசின் செயலருக்கு கொடுத்திருக்கிறது.

இந்த தற்காலிக ஆணையானது காங்கிரசிடமிருந்து ஒப்புதல் வாங்கவில்லை எனில் 120 நாள்களில் காலாவதியாகிவிடும். இது அந்நாட்டிற்குள் இயங்கும் சர்வதேசிய அமைப்புகள் மற்றும் அரசுசாரா நிறுவனங்களின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், உடன் சேர்ந்து இயங்கவும், ஒருங்கிணைக்கவும், மேலதிகாரம் செலுத்தவும் பிரேசில் அரசின் செயலாளரான கார்லோஸ் ஆல்பர்டோ தாஸ் சாண்டோஸ் குரூஸ் (Carlos Alberto Dos Santos Cruz) அலுவலகத்திற்கு அதிகாரத்தை அளித்திருக்கிறது.

பிரேசிலுக்குள் மூக்கை நுழைப்பதாக பிரேசிலைச் சேர்ந்த மற்றும் சர்வதேச என்.ஜி.ஓக்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டிய பொல்சனரோ இம்முடிவினை ஆதரித்து டுவிட்டரில் கருத்திட்டுள்ளார். “பழங்குடிகளது நிலம் மற்றும் ஆப்பிரிக்க மக்களின் நிலப்பகுதிகள் (quilombos) ஆகியவை ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 15 விழுக்காட்டிற்கு மேலிருப்பதாக அவர் கூறினார். வெறும் பத்து இலட்சம் மக்கள் மட்டுமே வாழும் இப்பகுதி உண்மையான பிரேசிலிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தொண்டு நிறுவனங்களால் சுயநலத்திற்காகவும் தவறான வகையிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் பதிவிட்டிருந்தார்.

பழங்குடி மக்களுக்கான நலத்துறை ஒதுக்கீடுகள் இனி குறைக்கப்படும் என்று புதிய நலத்துறை அமைச்சரான லூயிஸ் ஹென்றிக் மண்டேட்டா (Luiz Henrique Mandetta) கூறினார். “பழங்குடி மக்களை விட தற்போது குறைவாகவே பொது மக்களுக்கு சுகாதார நிதி ஒதுக்கப்படுகிறது” என்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன் வைத்தார்.

பழங்குடி மக்களுக்கான எல்லையை நீக்குவதாகவும், சுற்றுச்சூழல் நிறுவனங்களின் அதிகாரத்தை குறைத்து பழங்குடிகளுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் சுரங்கம் தோண்டவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வேளாண்மை செய்ய ஏற்பாடு செய்வதாகவும் கடந்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பொல்சனரோ கூறினார். இவரது ஆணை ஆப்பிரிக்கா மக்களுடைய நிலப்பகுதிகள் (quilombos – முன்னாள் ஆப்பிரிக்க அடிமைகளுடைய சந்ததிகளின் நிலப்பகுதிகள்) மீது அதிகாரத்தை செலுத்த பிரேசில் வேளாண்துறை அமைச்சகத்திற்கு வழிவகை செய்கிறது.

புதிய வேளாண்துறை அமைச்சராக பதவியேற்ற பின் தெரசா கிறிஸ்டினா டயஸ் (Tereza Cristina Dias), சுற்றுச்சூழலை பலிகடா கொடுத்து வளர்ந்துள்ள வேளாண்துறைக்கு எதிரான குற்றச்சாட்டுகளிடமிருந்து அதனை பாதுகாத்துள்ளார்.

படிக்க:
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !

”பிரேசில் அமேசானை பாதுகாக்க வேண்டுமென்றால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தங்களது சொந்தக் காடுகளை அழித்து வளர்ந்த நாடுகள்தான் செலவழிக்க வேண்டும்” என்று தொலைக்காட்சி சுவிசேச போதகரும் பொல்சனரோவின் நெருங்கிய நண்பருமான சிலாஸ் மலபியா (Silas Malafaia) கூறினார்.

“ஆங்கில மொழி பேசும் வெளிநாட்டவர் (gringos – ஆங்கில மொழி பேசும் வெளிநாட்டவர் குறிப்பாக ஐக்கிய அமெரிக்க ஆண்களை ஸ்பானிய அல்லது டச்சு மொழி பேசும் இலத்தின் அமெரிக்க மக்கள் கிரிங்கோஸ் என்று அழைக்கின்றனர்) அவர்களது காடுகளை அழித்துவிட்டதால், அனைத்தையும் நாங்கள் பாதுகாக்க வேண்டுமா?” என்று அவர் கேட்டிருக்கிறார்.

“பொல்சனரோ அவரது அரசாங்கத்தை மோசமான பாதைக்கு அழைத்து செல்ல தொடங்கிவிட்டார்” என்று முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரினா சில்வா (Marina Silva) டிவிட் செய்துள்ளார்.

“மீண்டுமொரு காலனியாதிக்கத்தை நாங்கள் எதிர்கொள்ளப் போகிறோம் அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்” என்று பழங்குடி தலைவர்களுள் ஒருவரான டக்சா கூறுகிறார்.

 

மூன்றாம் உலக நாடுகள், முழுவதும் கார்ப்பரேட் சேவைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கின்றன. பிரேசில் பழங்குடியினருக்கு வந்திருக்கும் இந்த நிலை கடந்த 2007-ம் ஆண்டு வாக்கிலேயே மத்திய இந்தியாவின் பழங்குடியினருக்கு நிகழ்ந்திருக்கிறது. வேதாந்தா உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைக்காக ஒட்டுமொத்த பழங்குடி இன மக்களையும் விரட்டியடிக்க, சல்வா ஜூடும் எனும் கொலைகாரப் படையை உருவாக்கி கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை உட்பட அனைத்து வகையான ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டது அன்றைய மத்திய காங்கிரசு அரசு. அதற்கு முழு ஆதரவு தந்து பச்சைப் படுகொலைகளை நடத்தி முடித்தது சட்டீஸ்கர் மாநில அன்றைய பாஜக அரசு.

அடுத்ததாக மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்ததும், கார்ப்பரேட்டுகள் காடுகளையும், மலைகளையும், அனைத்து இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். சுற்றுச் சூழல் விதிமுறைகளையும் கார்ப்பரேட்டுகள் மீறுவதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வருவது முதல் சுற்றுச்சூழல் தொடர்பான என்.ஜி.ஓ-க்களைத் தடை செய்வது வரையில் அனைத்து கார்ப்பரேட் சேவைகளையும் செய்து கொடுத்தது மோடி அரசு.

கார்ப்பரேட் மூலதனக் கொள்ளையின் பாதுகாவலராக இங்கு மோடி அமர்ந்திருப்பது போல், பிரேசிலில் ஒரு பொல்சனரோ வீற்றிருக்கிறார்.

 


நன்றி: தி கார்டியன்
கட்டுரையாளர்: டாம் பிலிப்ஸ்
தமிழாக்கம்: சுகுமார்

தப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 52

மாக்சிம் கார்க்கி
திகைப்பும் சோர்வும் கவிந்து சூழ்ந்த மனத்தோடு தாய் மேலும் இரண்டு நாட்கள் வரை பளு நிறைந்த சோகத்துடன் காத்திருந்தாள். மூன்றாவது நாளன்று சாஷா வந்தாள். நிகலாயிடம் பேசினாள்.

“எல்லாம் தயார். இன்று ஒரு மணிக்கு …” ”அவ்வளவு சீக்கிரமா?” என்று அதிசயித்துக் கேட்டான் அவன்.

“ஏன் கூடாது? ரீபினுக்காகத் துணிமணிகள் தேட வேண்டியதும், அவன் போயிருக்க ஒர் இடம் தேடுவதும்தான் பாக்கி, மற்றதையெல்லாம் கோபுனே செய்து முடித்துவிடுவதாகச் சொல்லிவிட்டான். பின் ஒரே ஒரு தெருவை மட்டும்தான் கடந்து வரவேண்டும். உடனே மாறுவேடத்தில் இருக்கும் நிகலாய் வெஸோவ்ஷிகோவ் அவனைச் சந்தித்து, அவன் மீது ஒரு கோட்டைப் போட்டு மூடி தலையிலே ஒரு தொப்பியையும் வைத்து, அவனை கூட்டிக்கொண்டு போய்விடுவான். நான் சகல துணிமணிகளோடும் காத்திருப்பேன். அவன் வந்ததும் அழைத்துக்கொண்டு போவேன்.”

“பரவாயில்லை . சரி. ஆனால், கோபுன் என்பது யார்?” என்று கேட்டான் நிகலாய்.

“உங்களுக்கு அவனைத் தெரியும். அவனுடைய அறையில்தான் நீங்கள் யந்திரத் தொழிலாளிகளுக்கு வகுப்பு நடத்தினீர்கள்.”

“ஆமாம். ஞாபகமிருக்கிறது. அவன் ஒரு தினுசான ஆசாமி.”

“அவன் ஓர் ஓய்வூதியம் பெறும் சிப்பாய் ஒரு தகரத் தொழிலாளி. அவனுக்கு அறிவு வளர்ச்சி காணாது தான். என்றாலும் எந்த பலாத்காரத்தையும் அவன் முழு மூச்சோடு எதிர்ப்பவன். அவன் ஒரு தினுசான தத்துவார்த்தவாதி” என்று கூறிக்கொண்டே ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள் சாஷா . தாய் வாய் பேசாது அவள் கூறியதைக் கவனித்துக்கொண்டிருந்தாள். அவள் மனத்தில் ஒரு மங்கிய எண்ணம் வளர்ந்தோங்கியது.

“கோபுன் தன் மருமகனையும் விடுவிக்க எண்ணுகிறான். எவ் சென்கோவை ஞாபகமிருக்கிறதா? உங்களுக்குக்கூட அவனைப் பிடித்திருந்ததே. எப்போதுமே அவன் ஓர் அதிசுத்தக்காரப் பகட்டான ஆசாமிதான்.

நிகலாய் தலையை அசைத்தான்.

”அவன் சகல ஏற்பாடுகளையும் செய்துவிட்டான் என்று மேலும் தொடங்கினாள் சாஷா. ஆனால் நமது முயற்சி வெற்றியடையுமா என்பதில் எனக்குச் சந்தேகம் தோன்றி வருகிறது. எல்லாக் கைதிகளும் வெளியே காற்று வாங்கிக்கொண்டிருக்கும் வேளையில் தான் இது நடக்கப்போகிறது. ஆனால், அந்தச் சமயத்தில் அவர்கள் இந்த ஏணியைப் பார்த்துவிட்டால், பல பேர் அதை உபயோகித்துத் தப்பித்து ஓட எண்ண லாம். அதுதான் பயமாயிருக்கிறது.”

அவள் தன் கண்களை மூடி மௌனத்தில் ஆழ்ந்தாள். தாய் அவளருகே சென்றாள்.

”அப்படியானால் அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து காரியத்தையே கெடுத்துவிடுவார்கள்…”

மூன்று பேரும் ஜன்னலருகிலேயே நின்றார்கள். நிகலாய்க்கும் சாஷாவுக்கும் பின்னால் தாய் நின்று கொண்டிருந்தாள். அவர்கள் இருவரது விறுவிறுப்பான பேச்சு தாயின் உள்ளத்தில் பற்பல உணர்ச்சிகளை எழுப்பியது.

”நானும் போகிறேன்” என்று திடீரெனச் சொன்னாள் அவள். ”ஏன்?” என்று கேட்டாள் சாஷா.

”நீங்கள் போக வேண்டாம், அம்மா. ஏதாவது நேர்ந்துவிடக்கூடும். போகாதீர்கள்” என்று போதித்தான் நிகலாய்.

தாய் அவனைப் பார்த்தாள்.

” இல்லை. நான் போகிறேன்” என்று மெதுவாக, ஆனால் உறுதியோடு சொன்னாள் அவள்.

இருவரும் ஒருவரையொருவர் சட்டெனப் பார்த்துக் கொண்டார்கள்.

”எனக்குப் புரிகிறது” என்று சொல்லிக்கொண்டே தோளைக் குலுக்கிக் கொண்டாள் சாஷா. பிறகு அவள் தாயின் பக்கமாகத் திரும்பி, அவளது கையைப் பிடித்தெடுத்து தாயின் உள்ளத்தைத் தொடும் எளிய குரலில் பேசினாள்.

”ஆனால், நீங்கள் சிந்தித்து உணர வேண்டும். அப்படி நடக்குமென்று வீண் நம்பிக்கை கொள்வதில் அர்த்தமே இல்லை…”

”என் அன்பே!” என்று நடுநடுங்கும் கையால் அவளை இழுத்து அணைத்துக் கொண்டே கத்தினாள் தாய். ”என்னையும் கூட்டிச் செல்லுங்கள். நான் ஒன்றும் உங்கள் வழிக்கு இடைஞ்சலாயிருக்க மாட்டேன். நான் போகத்தான் வேண்டும்! தப்பிச் செல்வது நடக்கக்கூடிய காரியம் என்று என்னால் நம்பவே முடியவில்லை.”

“இவள் எங்களோடு வருகிறாள்!” என்று நிகலாயைப் பார்த்துச் சொன்னாள் அந்தப் பெண்.

”அது உங்கள் பாடு” என்று தலையைத் தொங்கவிட்டவாறே பதில் சொன்னான் நிகலாய்.

”ஆனால், நாம் இருவரும் சேர்ந்து போகக்கூடாது. நீங்கள் அந்த வெட்டவெளி மைதானத்துக்கு அப்பாலுள்ள தோட்டத்திலே போய் இருக்கவேண்டியது. அங்கிருந்தே சிறைச் சாலைச் சுவரைக் காண முடியும். ஆனால் யாராவது உங்களைப் பிடித்து ஏதாவது கேள்வி கேட்டால், அங்கு வந்ததற்கு என்ன காரணம் கூறுவீர்கள்?”

“ஏதாவது சொல்லிச் சமாளித்துவிடுவேன்” என்று ஆர்வத்தோடு சொன்னாள் தாய்.

”மறந்துவிடாதீர்கள். சிறைச்சாலைக் காவலாளிகளுக்கு உங்களை நன்றாகத் தெரியும்!” என்று எச்சரித்தாள் சாஷா, “அவர்கள் உங்களை அங்குக் கண்டுவிட்டால்….”

”அவர்கள் என்னைக் காணமாட்டார்கள் !

தாய் தனது உள்ளத்திலே எழுந்த ஒரு நம்பிக்கையினால் புத்துயிர் பெற்றுப் பார்த்தாள். அந்த நம்பிக்கைச் சுடர் அவளது இதயத்திலே கொஞ்சம் கொஞ்சமாகக் கனன்று விரிந்தது. இப்போது திடீரென்று ஒரு ஜுர வேகத்துடன் பிரகாசமாக விம்மியெழுந்து எரிந்தது.

“ஒரு வேளை அவனும் கூட ”

ஒரு மணி நேரம் கழித்துத் தாய் சிறைச்சாலைக்குப் பின்புறமுள்ள வெட்ட வெளியில் இருந்தாள். ஊசிக்காற்று சுள்ளென்று வீசியது. அந்தக் காற்று அவளது உடைகளைப் பிளந்து புகுந்து வீசியது. உறைந்து போன தரையில் மோதியறைந்தது. அவள் சென்றுகொண்டிருந்த தோட்டத்தைச் சுற்றியுள்ள முள்வேலியை அசைத்தாட்டியது. அதன் பின்னர் உருண்டோடிச் சென்று சிறைச்சாலைச் சுவர் மீது முழுவேகத்தோடும் முட்டி மோதியது. சிறைச்சாலைக்குள்ளே எழும் மனிதக் குரல்களை அந்தக் காற்று வாரியெடுத்து வான வெளியில், நிலவின் தொலை முகட்டை அவ்வப்போது ஒரு கணம் காட்டி காட்டிப் பறந்தோடும் மேக மண்டலத்தில் சுழற்றிவிட்டெறிந்தது.

படிக்க:
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !

தாய்க்குப் பின்னால் அந்தத் தோட்டம், முன்புறத்தில் இடுகாடு. அவள் நின்ற இடத்திலிருந்து வலது புறமாக சுமார் எழுபது அடி தூரத்தில் சிறைச்சாலை. இடுகாட்டுக்கு அருகே ஒரு சிப்பாய் ஒரு குதிரையை நடத்திக் கூட்டிக்கொண்டு போனான். அவனுக்கு அருகே இன்னொரு சிப்பாய் தரையைக் காலால் மிதித்துக்கொண்டும், சத்தமிட்டுக்கொண்டும். சிரித்துக்கொண்டும் . சீட்டியடித்துக் கொண்டும் நின்றான். சிறைச்சாலையின் அருகே ஆள் நடமாட்டமே இல்லை.

அவர்களைக் கடந்து, இடுகாட்டை வளைந்து சூழ்ந்த வேலிப்புறமாக, தாய் மெதுவாக நடந்து சென்றாள். போகும்போது முன்னும் பின்னும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டே சென்றாள். திடீரென அவளது கால்கள் பலமிழந்து உழன்றன. தரையோடு தரையாய் உறைந்து போன மாதிரி கனத்து விறைத்தன. ஒரு மூலையிலிருந்து விளக்கேற்றுபவர்கள் வருவது போலவே தன் தோள்மீது ஓர் ஏணியைச் சுமந்து கொண்டே அவசர அவசரமாகக் குனிந்து நடந்து வந்தான். ஒருவன், பயத்தினால் கண்கள் படபடக்க, தாய் அந்தச் சிப்பாய்களைப் பார்த்தாள். அவர்கள் ஓர் இடத்தில் நின்றுகொண்டிருந்தார்கள்; குதிரை அவர்களைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது. ஏணியோடு வந்து கொண்டிருந்த அந்த மனிதனை அவள் பார்த்தாள். அவன் அதற்குள் ஏணியைச் சுவர் மீது சாய்த்து அதன்மீது நிதானமாக ஏறிக்கொண்டிருந்தான். அவன் சிறைச்சாலை முகப்பைப் பார்த்துக் கையை ஆட்டிவிட்டு, விறுவிறென்று கீழிறங்கி, சிறைச்சாலையின் மூலையைக் கடந்து சென்று மறைந்து போனான். தாயின் உள்ளம் படபடத்துத் துடித்தது. ஒவ்வொரு விநாடியும் நிலையாய் நிற்பதுபோல் தோன்றியது. சிறைச்சாலையின் சுவர் கறை படிந்து. ஆங்காங்கே காரை விழுந்து உள்ளுக்குள் உள்ள செங்கல்லை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது. அதன் நிறம் மாறிப்போன கறுத்த பின்னணியில் அந்த ஏணி அவ்வளவாகக் கண்ணுக்குத் தெரியவில்லை. திடீரென்று ஒரு கரிய தலை சிறைச் சுவருக்கு மேலே தெரிந்தது. அப்புறம் அந்த உருவம் சுவரின்மீது தத்தித் தவழ்ந்து, மறுபுறம் இறங்கத் தொடங்கியது. அடுத்தாற்போல் ஒரு கோணல்மாணலான தொப்பி தலையை நீட்டியது. ஒரு கரிய கோணல் பூமியிலே உருண்டு விழுந்தது; மறு கணம் அது எழுந்து நின்று மூலையை நோக்கி ஓடி மறைந்தது. மிகயில் நிமிர்ந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தான், தலையை ஆட்டிக்கொண்டான்…..”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

 

நூல் அறிமுகம் : மஹத் – முதல் தலித் புரட்சியின் உருவாக்கம் | ஆனந்த் தெல்தும்டே

தோழர் ஆர்.பி. மோரே அவர்களால் முதலாவது மஹத் மாநாட்டைப் பற்றி எழுதப்பட்ட விவரணையால் இந்த நூல் முதன்மையாக உத்வேகம் பெற்றது. அந்த மாநாட்டின் முதன்மை அமைப்பாளர் அவரே. அந்த மாநாடு தலித் மக்கள் தங்களுடைய குடிமை உரிமைகளுக்காக ஒரு காவியப் புகழ் வாய்ந்த போராட்டத்தை நடத்துவதற்கு இட்டுச் சென்றது.

தோழர் மோரே, மஹத் மாநாட்டை நடத்துவதற்குத் தான் எப்படி திட்டம் வகுக்க நேர்ந்தது என்பதை நினைவு கூர்ந்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு நீண்ட கட்டுரையினை மராத்தி மொழியில் எழுதியிருந்தார். அக்கட்டுரை, மஹத்தில் உள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் கல்லூரியின் ஆண்டு மலரில் பிரசுரிக்கப் பட்டிருந்தது. பிற்பாடு, அக்கட்டுரை ஒரு குறு நூல் வடிவத்தில் பதிப்பிக்கப்பட்டு, வரையறைக்குட்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்பட்டது. மராத்தி மொழி வாசகர்கள் கூட அதைப் பற்றி அறிந்து கொள்ளாமல்தான் இருந்தார்கள். தலித் மக்களின் இந்த முதலாவது போராட்டத்தின் உருவாக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் கொண்டிருக்கக்கூடிய ஒரு விரிந்த வாசகப் பரப்புக்கு மேற்கண்ட இந்த வரலாற்றுப் பூர்வமான ஆவணம் கிடைக்குமாறு செய்ய வேண்டுமென்ற தேவை உணரப்பட்டது. அதன் காரணமாகவே அந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது.

இந்தப் போராட்டம் பற்றிய விரிவான தலையங்கங்களை பாபா சாஹேப் அம்பேத்கர் தாமே ‘பகிஷ்க்ருத் பாரத்’ பத்திரிகையில் எழுதி வந்திருக்கிறார். இப்பத்திரிகை தீண்டப்படாத மக்களின் முன்னேற்றத்திற்காக அவர் நிறுவிய ‘பகிஷ்க்ருத் ஹிட்காரிணி சபா’வின் இதழ். மஹத் மாநாட்டையும், அதையடுத்துத் தொடர்ந்த சத்தியாக் கிரகத்தையும் பற்றிய, அதைச் சூழ்ந்து அமைந்த அம்சங்கள் பற்றிய தகவல்களை இந்தத் தலையங்கங்களே கூட கணிசமான அளவுக்கு வழங்குகின்றன; கெடுவாய்ப்பாக மராத்தியில் எழுதப்பட்ட பிரதிகளுடனேயே இவை கட்டுண்டவையாக அமைந்திருக்கின்றன. அவற்றுள் ஒரு சில பகுதிகள், மகாராஷ்டிர அரசாங்கத்தினால் பதிப்பிக்கப்பட்டுள்ள ‘டாக்டர் அம்பேத்கர் பேச்சுகளும் எழுத்துகளும்’ தொகுப்புகளின் 17-வது தொகுதியில் அச்சிடப்பட்டிருக்கின்றன.

ஆனந்த் டெல்டும்ப்டே.

மற்றொரு முக்கியமான தரவும் உள்ளது. அது சி.பி. காயர்மோட் அவர்களால் எழுதப்பட்ட பல்தொகுதிகள் கொண்ட மராத்தி மொழி வரலாற்று நூல். இந்த நூலின் தொகுதிகளுடைய முக்கியத்துவம் எதுவெனில், டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் பற்றிய ஏராளமான தரவுகளை அவை உண்மையில் கொண்டுள்ளன என்பதே. ஆனால் பதிப்பாசிரியரின் மெருகேற்றலோ, ஆசிரியரின் மறுவிளக்கமோ இல்லாமல் அப்படியே தரவுகளாக உள்ளன. இவையன்றி மராத்தியில் அங்கங்கே சிதறிக் கிடக்கிற பல குறிப்புகளும் கிடைக்கின்றன. மஹத் மாநாட்டையும், அதே போல சத்தியாக் கிரகத்தையும் அமைத்து நடத்திய பிரதான அமைப்பாளர்களுள் ஒருவரான ஏ.வி.சித்ரேவினுடைய வாழ்க்கை வரலாற்று நூல் அவற்றுள் ஒன்று. இந்த நூல், ஏனைய ஆவணங்களில் காணக்கிடைக்காத, தவறிப்போன அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறது. இவற்றோடு கூட, அரசாங்க ஆவணக் காப்பகமும் இந்தப் போராட்டம் பற்றிய ஆவணங்களைக் கொண்டிருக்கிறது என அறிய முடிந்தது. எமது தேடல், ஆவணக் காப்பகத்தில் மிகப்பெரும் எண்ணிக்கை அளவுடைய ஆவணங்கள் இடம்பெற்றுள்ளதை உறுதிப்படுத்தியது. குறிப்பாக, முதல் மாநாட்டுக்குப் பிறகு, ‘சத்தியாக்கிரக மாநாடு’ என்றழைக்கப்படும் இரண்டாவது மாநாட்டை நடத்துவதைப் பற்றியவையாக இருந்த பல ஆவணங்கள் அங்கிருந்தன. காலனிய அரசு நிர்வாகம், இந்தப் போராட்டங்களை எப்படிப் பார்த்தது என்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்சத்தை அவை பிரதிபலித்தன. போராட்டங்களைப் பற்றிய நிர்வாகத் தரப்பிலான கண்ணோட்டத்தை இந்த ஆவணங்கள் வழங்குபவையாக இருப்பதால் முக்கியமானவை ஆகும். முதலாவது, இரண்டாவது மஹத் மாநாடுகளின் வரலாறுகளைக் கட்டமைப்பதில் இந்த எல்லா வகையான தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் சாதிய அமைப்பு என்ன என்பதைப் புரிந்து கொள்ளாமல் மஹத் மாநாடுகளின் முழுமையான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதென்பது சாத்தியமில்லை. மஹத் போராட்டத்திற்கு முன்னர், சாதிமுறைக்கு எதிரான வரலாற்றுப்பூர்வமான எதிர்ப்பு இலக்கியங்களைப் புரிந்து கொள்வதென்பதும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்ததே. எனவே, மஹத்துக்கு முன்னதாகப் பல்வேறு பகுதிகளில், சாதிகளின் தோற்றம் எப்போது நடந்ததோ அந்த காலத்திலிருந்தே வளர்ச்சியடைய ஆரம்பித்த தலித்துகளின் முழுமையான வடிவம் பெறாத இயக்கங்கள் தோன்றிப் பரவிய கால வரையிலான வரலாற்றுச் சித்திரத்தின் பரிணாமப் பண்பை கட்டியெழுப்புவதற்காக ஓர் அத்தியாயம் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதே போல, சமகாலத் தலித் இயக்கத்தின் அனுபவம் சார்ந்த அம்சங்களுடன் மஹத் போராட்டத்தினை இணைக்கக்கூடிய வகையில் அப்போராட்டத்தின் இயல்பைப் பற்றிய பின்னூட்டப் பார்வையை வழங்கும் பொருட்டு நூலின் இறுதிப்பகுதியில் மற்றோர் அத்தியாயமும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. இவ்விரு அத்தியாயங்களுமே மஹத் போராட்டத்தை அதனுடைய வரலாற்றுப் பின்னணிச் சூழலுடன் பொருத்துவதற்காகவே கொடுக்கப்பட்டுள்ளன… (நூலாசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே எழுதியுள்ள முன்னுரையிலிருந்து சில பகுதிகள்)

படிக்க:
கோவை : விவசாய நிலங்களின் வழியே உயர் அழுத்த மின்வட பாதை அமைக்கப்படுவது ஏன் ?
பாஜக ஆட்சியில் ஒரு மதக் கலவரம்கூட கிடையாது | புருடா விடும் அமித்ஷா !

… நாட்டுப்புற வழக்காற்றில், மஹத் என்பது சாவதார் குளத்து சத்தியாக்கிரகத்துடனே இணைந்திருக்கிறது. உண்மையில், அந்தப் போராட்டம் ஒரு போதும் நடைபெறவேயில்லை. முதல் மாநாட்டின் போது குளத்தை நோக்கிய தலித் நடைப்பயணமும், தங்களுடைய குடிமையியல் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ளுவதற்காக குளத்தின் நீரை அவர்கள் அருந்தியதும் மார்ச் 20, 1927 அன்று நடைபெற்ற நிகழ்வுகள். அது ஒரு சத்தியாக்கிரகமல்ல. ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுடைய மாநாடு அது. அங்கு, மாநாட்டுக்கு முந்தின நாள் இரவு, திடுதிப்பென்று தங்களின் சிவில் உரிமையைப் பயன்படுத்தியதாக வேண்டுமென்று அந்த மாநாடு தன்னெழுச்சியாக முடிவு செய்தது. இந்த முதலாவது மாநாட்டின் தொடர்ச்சியாக இரண்டாவது மாநாடு அமைந்தது. சாதி இந்துக்களின் தீவிரமான, மூர்க்கம் நிறைந்த எதிர்ப்புக்கு இது ஓர் எதிர்வினையாக இருந்தது. இந்தமுறை ஒரு சத்தியாக்கிரக மாநாடாக உணர்வுபூர்வமான விழிப்புணர்வுடன் திட்டமிடப்பட்டிருந்தது. சாவதார் குளத்தருகே மனுஸ்மிருதியை எரிப்பதென்றும், தலித்துகளுக்காக அது திறக்கப்படும்வரை தொடர்ந்து நடைபெறும் வகையில் ஒரு போராட்டத்தைத் தொடங்குவதென்றும் திட்டமிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் மாநாடு தொடங்குவதற்குச் சற்றே முன்னதாக, சில பழமைவாத சாதி இந்துக்களால் மோசடியான தந்திரங்கள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றம் மூலம் இந்தப் போராட்டத்திற்குத் தடையுத்தரவு பெறப்பட்டது. அதன் காரணமாக பிந்தைய போராட்டத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுமாறு நேர்ந்தது. இந்த இரு மாநாடுகளையுமே சத்தியாக்கிரக மாநாடுகள் என்று ஒன்று சேர்த்துக் கூறப்பட்டு வருவது இந்த விதத்தில் தவறான கூற்றாகும். பின், மஹத் என்பதென்ன? மஹத்தில், உண்மையில் துல்லியமாக நடந்தது என்ன? தலித் உணர்வு உலகில் அது இந்த அளவுக்கு அதிகபட்ச முக்கியத்துவத்தை ஏன் பெற்றிருக்கிறது? சமகால தலித் இயக்கத்திற்கு அதனுடைய பாரம்பரியம் என்ன? எதிர்கால சந்ததிக்கு அதன் படிப்பினைகள் எவை?…

மஹத்தில்தான் தலித்துகள் தங்களுடைய குடிமை உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்குத் தாமாகவே முதல் தடவையாக உணர்வுப்பூர்வமாக ஒன்று திரண்டனர். மைய நீரோட்டப் பகுதி சார்ந்த அறிவுஜீவிகள் மஹத் போராட்டத்தை குடியுரிமைகள் சாரந்த போராட்டம் என அழைப்பதற்கு விருப்பமற்று அசட்டையாக இருந்தார்கள். இன்றைய நாட்களில் தலித்துகளுடன் தொடர்புடைய எந்த ஒரு விசயத்தைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தாலும் அதனுடன் ‘தலித்’ என்ற முன்னொட்டைப் பொருத்தியே குறிப்பிடும் ‘சாதிய’ச் சாயை படிந்த ஒரு புதிய சொல்லாடல் பரிணாமம் பெற்று வளர்ந்துள்ளது. இப்படியாக தலித்துகளின் குடியிருமைகள் தலித் உரிமைகளாகிவிட்டன. ஒரு தலித் எழுத்தாளரால் எழுதப்படுவது ‘தலித் எழுத்து’ ஆகிவிட்டது. அரசாங்கப் பதவிகளை ஒரு வேளை தலித் வகிப்பார்களேயானால், அப்பதவிகளை வகிப்போர் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்களுடைய சாதி பற்றிய குறிப்புடன் சேர்த்தேதான் – எவ்வித தீங்கிழைக்கும் எண்ணம் இல்லாவிடினுங்கூட – குறிப்பிடப்பட்டு வருகின்றன. (நூலிலிருந்து… பக்.11-13)

நூல்: மஹத் (முதல் தலித் புரட்சியின் உருவாக்கம்)
ஆசிரியர்: ஆனந்த் தெல்தும்ப்டே
தமிழில்: கமலாலயன்

வெளியீடு: பாவை பிரிண்டர்ஸ் (பி) லிட்.,
16, (142), ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014.
தொலைபேசி: 044 – 28482441

பக்கங்கள்: 590
விலை: ரூ 550.00

சென்னையில் 42-வது புத்தகக் கண்காட்சியில் குடும்பத்துடன் பங்கேற்று நூல்களை வாங்குங்கள் !

நாள் : 04-01-2019 முதல் 20-01-2019 வரை
நேரம்: வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி

இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை – 35

அனைத்து முற்போக்கு நூல்களையும் ஒரே இடத்தில் உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறது…

சென்னை புத்தகக் காட்சியில் நூல் வாங்க…

கீழைக்காற்று வெளியீட்டகம்

கடை எண் : 147, 148

கீழைக்காற்று அலுவலக முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
அலைபேசி: 99623 90277


இதையும் பாருங்க…