Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 596

” பார்ப்பனத் தலைமை உள்ள அமைப்பு ” – புதிய ஜனநாயகம் கேள்வி-பதில்

1

நான் தொடர்ந்து படித்துவரும் நல்ல, முற்போக்கான பத்திரிகை ‘புதிய ஜனநாயகம்’. ஆனால், உங்கள் அமைப்பு பார்ப்பனத் தலைமை உள்ள அமைப்பாம். “என்னதான் முற்போக்காகப் பேசினாலும் எழுதினாலும் பார்ப்பனியம் புரட்சி செய்யாது” என்று வாதிடும் இங்குள்ள சில அன்பர்களுக்கு என்னால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. இதற்குத் தெளிவானதொரு பதில் அளிக்கவும்.

எஸ்.குமார், கும்பகோணம்

டாக்டர் அம்பேத்கர், “பார்ப்பான் புரட்சி செய்ய மாட்டான்’’ என்று கூறியுள்ளார். சமூக, பண்பாடு, பொருளாதாரப் புரட்சிக்கே இவ்வாறு கூறியுள்ளார். நமது மார்க்சிய அரசியல் புரட்சிக்கு நிச்சயம் அவரது கூற்று மிகச் சரியாகப் பொருந்தும், ஆதிக்க உணர்வு எல்லா மனிதர்க்கும் இயற்கைதான் எனினும் பார்ப்பனர்களுக்கு வளர்ப்பு முறையில் அது ஏற்பட்டுள்ளது.

தற்போது சமூக, பொருளாதார சூழ்நிலைகளால் புரட்சிகர இயக்கங்களில் சேர்ந்து புரட்சிக்கு பாடுபடலாம். தக்க சூழ்நிலை வரும் போது அவர்களது ஆதிக்க உணர்வு வெளிப்படும். அது புரட்சிகர அமைப்பைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும். எனவே அவர்களை அமைப்புத் தலைமைக்கு ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதே அமைப்புக்கு உகந்ததாக இருக்கும் என நினைக்கிறேன். தங்கள் பதில் என்ன?

— நிரந்தரன், பெரிய புறங்கணி

தமிழினவாதிகளின் “தாயகம்” திராவிடர் கழகத்தின் “உண்மை” ஆகிய ஏடுகள் மூலம் அறிய வந்ததாகக் கூறிக் கொண்டு, இதேபோன்று எமது அமைப்பில் “பார்ப்பனத் தலைமை” என்கிற கேள்விக்கு சரியாக ஓராண்டுக்கு முன்பு (1992 ஜூனில்) புதிய ஜனநாயகத்தில் பதில் எழுதியுள்ளோம். ஓராண்டாகியும் எமது விளக்கத்திற்கு மறுப்பும் பதிலும் அவர்களிடம் கிடையாது. ஆனால் கொஞ்சமும் நேர்மையற்ற முறையில் தமது அவதூறுகளை மட்டும் பரப்பி வருவதாகத் தெரிகிறது. நாம் முன்பு அளித்த பதில் சாராம்சமாகப் பின்வருமாறு.

  1. பிறப்பால் பார்ப்பனர்களாகவும், இருப்பால் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் வாழும் ஒரு சில தோழர்கள், எமது அமைப்பின் முக்கியப் பொறுப்புகளில் இருப்பது உண்மையே! இதை நாங்கள் பகிரங்கப்படுத்தவோ, மூடிமறைக்கவோ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அவர்கள்தான் எமது அமைப்பின் தலைமையாக இருப்பதாகக் கூறுவது அப்பட்டமான பொய்யும் அவதூறுமாகும். அதே சமயம், அவர்கள் மற்ற பிற தோழர்களைப் போலவே கடின உழைப்பும், அர்ப்பணிப்பும், சித்தாந்த – கொள்கை உறுதியும், தகுதியும், அனுபவமும், மக்களையும் புரட்சியையும் நேசிப்பதும் இருப்பின் ஜனநாயகபூர்வமான முறையில் தலைமைக்கு வரவும் தடை ஏதும் கிடையாது. ஏனென்றால் இந்த அமைப்புக்குள் சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு எதுவும் கிடையாது. இன்ன சாதிப் பிறப்புடையவர்கள் தலைமைக்கு வரலாம் அல்லது வரக்கூடாது என்கிற விதி எதுவும் எமது அமைப்பில் கிடையாது. இது ஒரு மார்க்சிய- லெனினிய அமைப்பு. இங்கே சாதி அடிப்படையிலான கம்யூனிஸ்டுகளிடையே வகைப்பிரிவுகள் இல்லை. ஏனென்றால் சமுதாயத்தில் சாதியை ஒழிப்பதற்கு முன் புரட்சிகர அமைப்புகளில் சாதியை ஒழித்திட வேண்டும் என்பதுதான் எமது கொள்கை. அதுமட்டுமல்ல; எமது அமைப்பின் அரசியல், சித்தாந்த, கொள்கை மற்றும் அமைப்பு முடிவுகள் முற்றிலும் ஜனநாயக மத்தியத்துவ அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. அப்படி இருக்கும் போது இது பார்ப்பனத் தலைமையுடையது, அவர்கள்தான் முடிவுகள் எடுத்து வழிநடத்துகிறார்கள் என்கிற அவதூறு இதில் இயங்கிவரும் தோழர்கள் அனைவரையும் இழிவுபடுத்துவதாகும்.
  2. பார்ப்பன சனாதன வருணாசிரம சாதிய அமைப்பை முற்றாகத் துடைத்தெறியாமல் இந்த நாட்டின் ஐனநாயகப் புரட்சியோ அதன் ஒரு அங்கமாகிய தேசிய இன விடுதலையோ பூர்த்தியாகாது; இந்த அமைப்பை எப்படியாவது தக்கவைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தும் அனைவரும் ஜனநாயகப் புரட்சிக்கும், தேசிய இன விடுதலைக்கும் எதிரிகள்தாம். அப்படிப்பட்ட எதிரிகளாகப் பார்ப்பனர்கள் அனைவரையுமே கருத முடியாது. பார்ப்பன மற்றும் பார்ப்பனர் அல்லாத பிற மேல் சாதிகளையும் சேர்ந்த நிலப்பிரபுக்களையும், தரகு அதிகார முதலாளிகளையும், அவர்களின் அரசியல் பிரதிநிதிகளையுமே எதிரிகளாகக் கருத முடியும். அவ்வாறின்றி ‘பார்ப்பன சாதி – வருணாசிரமப் பிறப்புடைய அனைவருமே எதிரிகள், “உள்ளிருந்தே அடுத்துக் கெடுக்கும் நரித்தனம்” அவர்களுடைய பிறவிக்குணம். அதற்கு விதிவிலக்குக் கூட கிடையாது’ என்பதுதான் தமிழினவாத, திராவிட (பூர்வகுடி) இனவாதக் கட்சிகள், குழுக்களின் நிலைப்பாடு. இது முற்றிலும் தவறானது. பகுத்தறிவுக்கே எதிரானது. மார்க்சிய லெனினிய சித்தாந்தத்துக்கு மாறானது; (பூர்வகுடி) இனவாத சித்தாந்தம் (Racialism) ஆகும்.
    “பிறவிக்குணம்” என்று எதுவுமே கிடையாது; ஒருவரது குணநலன்கள் அவரது சமூக வாழ்வால்தான் உருவாகிறது. தீர்மானிக்கப்படுகிறது. பிறவியினால் அல்ல. பிறப்பு என்பது ஒரு விபத்தைப் போன்ற தற்செயலாக நிகழ்வது; அதை வைத்துக் கொண்டு எவரது சமூக, அரசியல் தகுதிகளையும் தீர்மானிக்கக் கூடாது. இதுதான் பகுத்தறிவு. அரசியல் மார்க்சிய- லெனினியக் கண்ணோட்டம்.குறிப்பிட்ட வருண சாதிப் பிறப்புத்தான் மனிதர்களது குணநலன்களையும், சமூக-அரசியல் தகுதிகளையும் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக வைக்க வேண்டும் என்பது உண்மையிலேயே பார்ப்பன சனாதன சித்தாந்தம் ஆகும். இதுவேதான் நாஜி சித்தாந்தத்தின் மூலகர்த்தா நீட்சே உருவாக்கிய தத்துவம். இதன் அடிப்படையில்தான் ஆரிய இனமே உலகை ஆளும் அறிவும், திறமையும் தகுதியும் உடையது என்ற இட்லரின் கோட்பாடு வகுக்கப்பட்டு ஆரிய இனமல்லாதாரை அடிமைப்படுத்தவும், வேட்டையாடவும் கிளம்பினர். நீட்சே – இட்லரின் சித்தாந்தத்தைப் போன்றதுதான் திராவிட (பூர்வகுடி) இனவாதமும் ஆகும். ஆகவே இதை நாம் ஏற்கவில்லை.
  3. பார்ப்பனர்களின் “அடுத்துக் கெடுக்கும் நரித்தனம்” பற்றி தமிழர்களை எச்சரித்துவரும் பல்வேறு கட்சிகளும் குழுக்களும்கூட தமது வசதிக்கேற்ப பார்ப்பனர்களை சேர்த்துக் கொள்கின்றனர். மணியம்மையைப் பொருந்தாத் திருமணம் செய்து கொண்டு “சொத்துக்களுக்கு வாரிசாக்குவது” என்ற யோசனையை பெரியாருக்குக் கொடுத்த ராஜாஜி அவரது திராவிட இயக்கத்தவரைவிட நம்பகமானவராகக் கருதப்பட்டார். வி.பி. ராமன் அண்ணாதுரைக்கும், குகன் கருணாநிதிக்கும் ஆலோசகர்களாக வைத்துக் கொள்ளப்பட்டனர். சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு வீரமணியும், குடும்பத்தின் பத்திரிகை சங்கிலித் தொடரை நடத்துவதற்கு கருணாநிதியும் பார்ப்பனர்களிடம் பொறுப்பளித்தனர். பா.ம.க.வின் கோவை மாவட்டத்துக்கும் “தினப்புரட்சி” நாளேட்டிற்கும் பொறுப்பானவர்களில் ஒரு முக்கியப் புள்ளி பிறப்பால் பார்ப்பனர். இது ஒருபுறம் இருக்க, பார்ப்பனர்களை எதிர்ப்பது, ஆனால் அவர்கள் உருவாக்கிய பார்ப்பன சனாதன வருணாசிரம அடிப்படையிலான சாதிகளை அங்கீகரித்து, ஆதரித்து தம்மை சத்திரியர், வைசியர் என்று பெருமை பாராட்டிக்கொள்வதோடு சூத்திரர், பஞ்சமர், சண்டாளர் ஆகிய வருணங்களின் வழிவந்த சாதிகளைச் சேர்ந்த மக்களை இழிவுபடுத்துவதும் பார்ப்பனத் தன்மை உடையதுதான்.
  4. எல்லாவற்றுக்கும் மேலானது. அரசியல், சித்தாந்தம், கொள்கை, நடைமுறை ஆகியவற்றில் பார்ப்பனீயத்துடன் எந்த வகையிலாவது சமரசம் செய்து கொள்கிறோமா என்பதுதான் முக்கியமானது. நாம் புலிகளை ஆதரிக்காதவர்கள் என்று அறிந்தும் “இவர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்கள்” எனக் குற்றஞ்சாட்டி நமது தோழர்கள் மீது “தடா”, தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் அரச துரோக வழக்குகள் போட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆனால் எங்களைப் போல “பார்ப்பன பாசிச எதிர்ப்பு” முழக்கத்தை முன் வைத்துப் போராடாது மழுப்பும் கட்சிகளும், குழுக்களும் இதைப் பார்ப்பனத் தலைமை என அவதூறு செய்கின்றனர். தங்களை புலி, சிங்கம், யானையைப் போன்ற புறநானூற்று வீரர்கள் என்று பீற்றிக் கொண்டவர்கள் எல்லாம் ராஜீவ் கொல்லப்பட்ட 1991 மே 21-ம் தேதி நள்ளிரவுக்குப் பிறகு எங்கே போனார்கள்? ‘ராஜீவைக் கொன்ற தாணு போதைமருந்துக்கும, வரைமுறையற்ற பாலுறவுக்கும் அடிமையானவள்; அவளும், சிவராசன், சுபா போன்றவர்களும் சி.ஜ.ஏ ஏஜெண்டுகள்’ என்று எழுதியும் பேசியும் “நரித்தனமாக” நடந்து கொள்வதுதான் அரசியல் விவேகம் என நியாயப்படுத்தினார்கள். அந்த இக்கட்டான நெருக்கடி, அடக்குமுறை நாட்களிலும் துணிந்து பாசிச பார்ப்பன எதிர்ப்பு, ஈழ ஆதரவு நிலையெடுத்து போராடிய எமது அமைப்பின் தலைமையையும், தமிழின உணர்வையும் சந்தேகிப்பதற்கு இப்படிப்பட்டவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?

“பார்ப்பனத் தலைமை” என்கிற அவதூறுக்கு எதிராக நாம் அளித்த மேற்கண்ட விளக்கத்துக்கும் கேள்விகளுக்கும், அந்த அவதூறைப் பரப்பிவரும் எந்தத் தரப்பினரிடம் இருந்தும் இதுவரை பதில் வரவில்லை. மாறாக அவதூறைத் தொடர்கின்றனர். அவர்களது நேர்மையின்மையை இதுவே அம்பலப்படுத்துகிறது. இதுவே, இப்போது பதிலளிக்க எடுத்துக்கொண்ட கேள்விகளுக்கும் விளக்கமாக உள்ளது. மேலும், பார்ப்பனப் பிறப்புடைய அனைவரையும் பற்றி அம்பேத்கார் அவநம்பிக்கை கொண்டிருந்தார் என்பது உண்மையானால் அவர் ஏன் ஒரு பார்ப்பனப் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்? மகாத்மா பூலேவுக்குப் பிறகு, பார்ப்பன சனாதன வெறியரான திலகருக்கு எதிராக சமரசமின்றிப் போராடிய மாபெரும் சீர்திருத்தவாதியான ராணடே ஒரு பார்ப்பனர் என்றாலும் அவரை ஒரு மாமனிதர் என்று ஏன் போற்றினார்?

“அம்பேத்காரைப் போன்று ஒரு தாழ்த்தப்பட்டவரது தலைமையினால்தான் அச்சமுதாயம் விடுதலை அடைய முடியும்; அத்தலைமையினால்தான் தாழ்த்தப்பட்டவர்களது பிரச்சனைகளை உணரவும், புரிந்துகொள்ளவும் உறுதியாக போராடவும் முடியும். மற்றபிற சாதியினர் குறிப்பாக மேல் சாதிக்காரர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விடுவார்கள்” என்று கூறிக்கொண்டு தாழ்த்தப்பட்ட சாதிகளின் ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒரு தலைமை, ஒரு அமைப்பு எனப் பல நூறு அமைப்புகள் தோன்றியுள்ளன. பெரியார் ஈ.வெ.ரா.வைக்கூட தாழ்த்தப்பட்ட சாதிகள் தமது தலைமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியாரும் தம்மைச் சூத்திரர்களின் பிரதிநிதியாகவும், அம்பேத்காரைத் தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதியாகவும் கருதிப் பேசினார் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இப்படியே போனால் வன்னியருக்கு ராமதாசும், நாயுடுகளுக்கு கெங்குசாமியும்தான் தலைவர்கள் என்பதுகூட நியாயமாகிவிடும். இத்தகைய அணுகுமுறை சமுதாய, இன அரசியல் விடுதலைக்கும் புரட்சிக்கும் சரியானதுதானா?

இது ஒருபுறம் இருக்கட்டும். நமது கருவறை நுழைவுப் போராட்டம் திராவிடர் கழகம் உட்பட அனைத்து அரசியல் சமூக இயக்கங்களிலும் உள்ள முற்போக்கு, ஜனநாயக சக்திகளிடம் பெருத்த ஆதரவைப் பெற்றிருக்கிறது. பாசிச பார்ப்பன ஜெயா கும்பலுடன் சமரசம் செய்துகொண்டும், பெரியாரைப் பூசையறைத் தெய்வமாகவும் அவரது போதனைகள் தொழுகைக்குரிய மந்திரங்களாகவும் மாற்றி செயலிழக்கச் செய்துள்ள திராவிடர் கழக வீரமணிக்கு நமது கருவறை நுழைவுப் போராட்டம் கலக்கத்தை ஏற்படுத்தியது. தமது நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக சுயவிளக்கமளிக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் முகாமடித்து நமது அமைப்புகளில் ‘பார்ப்பனத் தலைமை’ பற்றிய அவதூறு பரப்பி வருகிறார்.

“பார்ப்பனராகப் பிறந்த அனைவருமே நம்பிக்கைத் துரோகம் செய்துவிடுவார்கள். அடுத்துக் கெடுக்கும் நரித்தனம். சூழ்ச்சியும் அவர்களது ரத்தத்திலேயே ஊறியவை; இதற்கு விதிவிலக்கே கிடையாது” என்பதுதான் வீரமணி போன்றவர்களது வாதம். ஆனால் திராவிடர் கழகத்தின் அனுபவமும், அணுகுமுறையுமே இதற்கு மாறானது என்பதற்குச் சான்றுகள் கூறமுடியும்.

“1923 டிசம்பர் 15-ம் நாள். சட்டசபைத் தலைவராக இருந்த ஸர்.பி.ராஜகோபாலாச்சாரியார் உத்தியோகம் காலாவதி முடிந்து ஓய்வெடுத்துக் கொண்டார். அவர் முதன்முதலில் சட்டசபைத் தலைவரானபோது நமது கட்சியார் பலருக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. முதலில், அவர் பொதுவாழ்வில் ஈடுபட்டு அனுபவம் பெறாதவர். வாழ்நாள் முழுவதும் உத்தியோக மண்டலத்தில் வாழ்ந்தவர். ஒரு பிராமணரல்லாதார் கட்சி அதிகாரப் பதவி வகிக்கும் போது ஒரு பிராமணர் பட்சபாதமின்றி நடந்துகொள்வாரா என்ற சந்தேகமும் பலருக்கு இருந்தது.

“ஆனால் புத்திமானானான சர். ராஜகோபாலாச்சாரியார் தலைமை பதவியேற்ற சொற்ப காலத்துக்குள் எல்லோருடைய சந்தேகங்களையும் நீக்கிவிட்டார். அவர் தலைவராக இருந்த மூன்று வருச காலத்தில் எந்த மெம்பரையும் அலட்சியமாக நடத்தியதில்லை. சட்டசபையில் உக்கிரமான விவாதங்கள் நடக்கும் போது உண்டாகக்கூடிய அசம்பாவிதங்களை எவர் மனமும் புண்படாமல் தீர்ப்புக் கூறுவதில் அவர் வெகு சமர்த்தர். பிராமணர் அல்லாதார் என்ற துவேசம் அவரிடம் எட்டுணையும் கிடையாது.

‘’பிறப்பால் நான் பிராமணனாயினும், மனத்தால் நான் அல்லாதானே என அவர் வெகு பெருமையாகக் கூறிக்கொள்வாராம். எனவே, அவர் உத்தியோகம் வகித்துப் பிரிந்த கடைசி நாளன்று சர்வகட்சியாராலும் நன்றாகப் பாராட்டப் பெற்றார்.”

(பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு : நீதிக் கட்சி வரலாறு பக். 66)

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குத் (1937-40) தலைமையேற்று வழிநடத்திய பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி போன்ற தலைவர்களின் வரிசையில் ஒன்பதாவது சர்வாதிகாரியாக போராட்டத் தளபதியாக இதே ராஜகோபாலாச்சாரியார் இருந்தார். அப்போராட்டத்தில் பங்கு கொண்டு இரண்டு முறை சிறை சென்ற வேலூர் துளசி அம்மாள் பிறப்பால் பார்ப்பனரே; அதற்காக அவர்களது தமிழ்ப்பற்றைச் சந்தேகிக்க முடியுமா?

அதே போன்று பிறப்பால் பார்ப்பனரான மறைந்த சென்னை மேயர் எஸ்.கிருஷ்ணமூர்த்தியின் மீது பெரியாரும் அண்ணாதுரையும் மதிப்பு வைத்திருந்தனர் என்பதை மறுக்கமுடியுமா?

இல்லை – இப்போது “முரசொலி” ஆசிரியர் குழுவில் உள்ள “சின்னக் குத்தூசி” பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும், ‘அவர் பார்ப்பனீயத்துடன் சமரசம் செய்து கொண்டார். திராவிட இயக்கத்துக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்’ எனக் குற்றஞ்சாட்ட முடியுமா?

அதற்கு மாறாக, ஆட்சியில் இருந்த போது இந்திரா, ராஜீவுக்கும், பார்ப்பனதாசன் எம்.ஜி.ஆருக்கும் சாமரம் வீசியதோடு பார்ப்பன ஜானகியின் அற்ப ஆட்சிக்கும் முட்டுக்கொடுத்தும் பார்ப்பன –பாசிச ஜெயாவிடம் கைநீட்டி ஆதாயம் பெற்று ஆதரவும் காட்டி வருகிறார் வீரமணி. பார்ப்பனரல்லாத பிறப்பு இத்தகைய துரோகங்கள் செய்யாதவாறு அவரைத் தடுக்க வில்லையே!

ஆகவேதான் கூறுகிறோம்; பிறப்பு என்பது தலைமையின் தகுதியாக இருக்க முடியாது. வாக்கும், வாழ்வும்தான் அதற்கான அடிப்படையாக இருக்க முடியும.

– புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 1993

கருவானூர் யாதவ சாதி வெறியின் சிறுநீர் கொடூரம் – நேரடி ரிப்போர்ட்

5

ம்முடைய வாயில் யாரேனும் சிறுநீர் கழிப்பதை கற்பனை செய்ய முடியுமா? தலித் மக்களைப் பொறுத்த வரை இத்தகை கொடுமைகள் கற்பனைகள் அல்ல.

வாயில் மலம் திணிக்கப்பட்ட திண்ணியம் கருப்பையா, பத்தாண்டுகளுக்கு முந்தைய ஆதிக்க சாதிவெறியின் சான்று. கருவானூர் அரவிந்தன் சமீபத்திய உதாரணம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கருவானூர் கிராமத்தில் உள்ள குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர் அரவிந்தன். கருவானூரில் பெரும்பான்மை சாதி யாதவர்கள், மொத்தம் நூறு குடும்பங்கள். குறவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மிகச்சிறுபான்மை, மொத்தம் பத்து குடும்பங்கள்.

2015 மார்ச் 3-ம் தேதி ஊரில் நடந்த பெருமாள் கோவில் திருவிழாவிற்கு அரவிந்தன், பக்கத்து ஊரில் உள்ள தனது மாமா பையன் தினேஷை வரவழைத்திருக்கிறார். திருவிழா நாளன்று இரவு பதினோரு மணியளவில் தினேஷ் ஒரு மரத்தின் கீழ் செல்போனில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது அங்கே வந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் பலர் கும்பலாக சேர்ந்து,கொண்டு தங்களை தாக்கியதோடு அரவிந்தனை தாக்கி அவர் வாயில் சிறுநீர் கழித்ததாக தினேஷும் அரவிந்தனும் மட்டுமல்ல ஏனைய குறவர் சமூகத்தை சேர்ந்த மக்களும் கூறுகின்றனர்.

எதிர்தரப்போ, “அரவிந்தனும், தினேஷும் தங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்களிடம் கலாட்டா செய்து கையைப் பிடித்து இழுத்ததால் தான் சண்டை வந்தது, வாயில் சிறுநீர் கழிக்கவில்லை, இதில் சாதிப்பிரச்சினை எதுவும் இல்லை” என்றும் மறுக்கின்றனர். இந்த செய்தி கிட்டத்தட்ட அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.

இந்தப் பிரச்சனை நாடாளுமன்றத்திலும் கேரள எம்.பி கொடிக்குனில் சுரேஷால் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து கலாட்டா செய்த அ.தி.மு.க எம்.பிகள் ஆதிக்க சாதியினர் கூறிய அதே காரணத்தை கூறி இரு இளைஞர்களையும் குற்றவாளிகளாக்கினர்.

உண்மை அறிய கருவானூருக்கு சென்றோம்.

நாங்கள் சென்ற போது கருவானூர் முழுமையாக போலீசின் கட்டுப்பாட்டில் இருந்தது. விசாரணைக்கு பிறகே போலீசார் உள்ளே செல்ல அனுமதித்தனர். முதலில் ஆதிக்க சாதியினரிடம் பேசினோம்.

ஊருக்குள் இருக்கும் ஆதிக்க சாதியினர் வீடுகளுக்கு மத்தியில் இருக்கும் ஒரே குறவர் சாதி வீடு அரவிந்தனுடையது மட்டும் தான். முதலில் அவருடைய வீட்டுக்கருகில் உள்ள ஆதிக்க சாதி பெண்களிடம் கேட்ட போது அனைவரும் பதில் சொல்ல மறுத்துவிட்டார்கள்.

“குறவர் சாதி இளைஞர்கள் உங்க பொண்ணுங்க கையை பிடிச்சு இழுத்ததா சொல்றங்களே, அப்படி ஏதும் நடந்துச்சா?” என்று கேட்ட போது

“தெரியவில்லையே” என்றுதான் சொன்னார்கள்.

கையைப் பிடித்து இழுத்த கதை ஊர்ப் பெண்களுக்கே தெரியவில்லை என்றால் இழுக்கப்பட்ட பெண்கள் யார்?

“இதுக்கு முன்னாடி இந்த மாதிரி சம்பவம் ஏதும் நடந்திருக்கா?” என்று கேட்ட போது,

“அப்படி ஒன்னு கூட நடந்தது இல்லை” என்றார்கள்.

“உங்க சாதி பொண்ணோ பையனோ அவங்க சாதி பசங்க பொண்ணுங்கள கல்யாணம் பண்ணியிருக்காங்களா?” என்றால்,

“இதுவரைக்கும் அப்படி எதுவும் நடக்கலைங்க” என்று பதிலளித்தார்கள்.

இவை தாண்டி பொதுவில் பெண்களில் பலர் வாயைத் திறக்கவே இல்லை. பேசியவர்களில் பெரும்பான்மை எதுவும் தெரியாது என்று சாதித்தனர்.

கருவானூர் ஒரு டீ கடை கூட இல்லாத கிராமம். டீ கடைக்கு பதிலாக இருந்தது ஒரு பெட்டிக்கடை தான். அங்கு அமர்ந்திருந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்.

“பசங்களுக்குள்ள என்ன பிரச்சினை, திருவிழாவில் என்ன நடந்தது ?”

“சரியாத் தெரியலைங்க, நானும் அன்னைக்கு திருவிழாவுக்கு வந்திருந்தேன். நாங்க எல்லாம் கோவில்ல இருந்தோம் அப்ப கூத்து நடந்துக்கிட்ருந்தது. அந்த பசங்க ஏதோ பொண்ணுங்கள கிண்டல் பண்ணதாவும் அதை இவங்க கேட்டதாவும் அதுல பிரச்சினை வந்ததாவும் சொல்றாங்க.”

“பெரிய சாதி பொண்ணுங்கள கிண்டல் பன்ற அளவுக்கு எப்படி குறவர் இன பசங்களுக்கு தைரியம் வந்துச்சு ?” என்றதும் லேசாக சிரித்தவாறே.

“அப்படி தானேங்க இப்பல்லாம் நடக்குது, என்ன பன்றது?” என்றார்.

இந்த உரையாடலை கவனித்துக்கொண்டிருந்த சீனிவாசன் பேசினார்.

“ஊருக்குள்ள எந்த பிரச்சினையும் இல்லைங்க, பத்திரிகைகாரங்க தான் அப்படி இப்படின்னு எழுதியிருக்காங்க” என்றார்.

“எந்தப் பிரச்சினையும் இல்லைன்னா குறவர் பசங்கள இந்தப் பசங்க அடிக்கலைங்கிறீங்களா ? இது சாதி பிரச்சினை இல்லைன்னா எதுக்கு ஊரே போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கு ?”

“போலீஸ் அவங்களுக்காகத் தான் வந்திருக்காங்க.”

“அவங்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு தானே போலீஸ் வந்திருக்கு ?”

“அப்படின்னு அவங்க புகார் கொடுத்ததால வந்திருக்காங்க.”

“அந்த மக்கள் மேல எவ்வளவு மோசமான தாக்குதல் நடந்தாலும் ஊருக்குள்ளயே கட்டப்பஞ்சாயத்து பேசி தீர்க்கிறதா சொல்றாங்களே உண்மையா ?”

“அப்படி எல்லாம் இல்லைங்க. எந்த பிரச்சினையா இருந்தாலும் அதை ஊருக்குள்ளேயே பேசித் தீர்த்துக்கலாம், எதுக்கு போலீசு கேசுன்னு போகணும்னு பெரியவங்க சொல்றதை தான் அப்படி சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.”

“சரி பசங்களுக்குள்ள எதுக்காக சண்டை நடந்துச்சி, பொண்ணுங்க பிரச்சினையா ?”

“இது பொண்ணுங்க பிரச்சினையே இல்லைங்க, பசங்க பிரச்சினை. எங்க பொண்ணுங்ககிட்ட அப்படி எல்லாம் வம்புக்கு வர முடியாது. அவங்களுக்கு அந்தளவுக்கு தைரியமும் இல்ல.”

“அப்படின்னா வாயில மூத்திரம் போனது ?”

“அது பத்தி தெரியலைங்க, அப்படி நடந்ததா நாங்க கேள்விப்படலை.”

“மேல் சாதி ஆண்கள் குறவர் பெண்கள்கிட்ட ரொம்ப தப்பா நடந்துகிட்டதா சொல்றாங்களே ?”

“என்ன தப்பா நடந்துகிட்டாங்க, அப்படி ஒன்னு சொல்ல முடியுமா ?:

“அரவிந்தனுடைய அக்கா கலா ஒரு நாள் காட்டுக்கு வெளிக்கு போகும் போது அவங்க மேல பாய்ஞ்சு நைட்டியை கிழிச்சு அவங்களை பலாத்காரம் பண்ண முயற்சி செஞ்ச மேல் சாதி பையன் ஒருத்தன் மேல புகார் வந்து ஊருக்குள்ள பஞ்சாயத்து பேசி தீர்த்ததா சொல்றாங்களே ?”

“அது பத்தி எனக்கு எதுவும் தெரியாதுங்க. நம்ம ஊர்ல அப்படி எதுனா நடந்துச்சா என்ன ?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொருவரிடம் சீனிவாசன் தெலுங்கில் கேட்டார். அவரோ, முகத்தை சுழித்துக்கொண்டு, ‘போய்யா நீ வேற இதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு’ என்பதை போல அலுத்துக்கொண்டார். பிறகு பள்ளி மாணவர்கள் சிலரை பார்த்தோம். அவர்களும் குறிப்பாக பேசவில்லை.

ஊரே சொல்லி வைத்ததைதான் பேசுகிறது என்பதுதை அறிந்துகொண்டதால் அடுத்து அரவிந்தனையும், தினேஷையும் பார்க்க ஆயத்தமானோம். அப்போது தமிழ்நாடு சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் தாமோதரன் ஊருக்குள் வந்து கொண்டிருந்தார். கோனார்களின் வட இந்தியக் கட்சி இங்கேயும் சாதி சார்ந்து திரட்ட முயற்சிப்பது ஆச்சரியமல்ல. ஒரு காரிலிருந்து தாமோதரன் இறங்கினார். அதுவரை காணாமல் போயிருந்த ஆண்கள் அனைவரையும் அப்போது தான் பார்க்க முடிந்தது.

தாமோதரன் கீழே இறங்கியதும் பட்டாசை வெடித்தனர். குறவர் குடியிருப்பு அருகே பட்டாசு எதையோ நினைவுபடுத்தும் வண்ணம் வெடித்தது. தாமோதரனை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்திய போலீசார் “ஊருக்குள் போகக்கூடாது” என்றனர்.

“தான் எந்த பிரச்சினையிலும் ஈடுபட வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட இளைஞர்களையும் (தாக்குதலில் ஈடுபட்ட ஆதிக்க சாதி இளைஞர்களையும்) அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்து ஆறுதல் கூற என்னை போக விடுங்கள்” என்றார்.

அரவிந்தனிடம், ‘பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் செய்துகொள்ளலாம்’ என்று கூறிய டி.எஸ்.பி,  “இப்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், நீங்க திரும்பி போய்டுங்க சார்” என்று தாமோதரனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். இறுதியில், “ஊரில் உள்ள அரசமரத்தடியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் உட்கார்ந்து பேசுங்க. நாங்க அவங்களை கூட்டிட்டு வர்றோம்” என்று அவரை கோவிலில் கொண்டு வந்து உட்கார வைத்தனர்.

சமாஜ்வாதி சாதிவெறி ஆள்திரட்டல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பிறகு, “சரி விடுங்க நான் அவங்களை கூட பார்க்கல, பெருமாள் கோவிலுக்கு போய் சாமி தரிசனம் பன்னனும் அதுக்காவது அனுமதிப்பீங்களா” என்றார். போலீசார் அவரை கோவிலுக்குச் செல்ல அனுமதித்தனர். மொத்த கூட்டமும் அவர் பின்னால் சென்றது. எனக்கு ஒன்னும் தெரியாது, நான் அன்னைக்கு ஊரிலேயே இல்லை, திருவிழாவுக்கே போகவில்லை, வேற யார்கிட்டயாவது கேளுங்க என்று பதிலளித்த அனைவரும் அந்த கூட்டத்தில் இருந்தனர்.

நாங்கள் அரவிந்தன் வீட்டை நோக்கிச் சென்றோம். பாதி வழியில் எங்களை வந்தது அழைத்துக்கொண்ட அரவிந்தன் அவருடைய வீட்டிற்கு அழைத்துச்சென்றார். வீட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு இடத்தில் நின்று, “சார் நீங்க இது வழியா வாங்க நான் அப்படியே வந்துடுறேன்” என்று கூறிவிட்டு எங்களுடைய பதிலை எதிர்பார்க்காமல் சுமார் நூற்று ஐம்பது மீட்டர் சுற்றிக்கொண்டு வந்தார். நாங்கள் நேர் பாதையிலிருந்து வெறும் ஐம்பதடி தூரத்தில் வீட்டை அடைந்தோம். இந்த சுற்று வழி எதற்கு? ஆதிக்க சாதியினர் இருக்கும் தெரு வழியாக அரவிந்தனோ அவரது மக்களோ இன்று வரை நடக்க கூடாது.

வீட்டில் தினேஷ் அமர்ந்திருந்தார். உடன் அரவிந்தனின் அம்மா, பாட்டி மற்றும் அத்தை ஆகியோர் இருந்தனர்.

என்ன நடந்தது என்பது பற்றி தினேஷ் கூற ஆரம்பித்தார்.

தினேஷ் - அரவிந்தன்
தினேஷ் – அரவிந்தன்

“ஊர்ல திருவிழா நடக்குது நீ வாடான்னு அரவிந்தன் எனக்கு ஃபோன் பன்னி கூப்பிட்டான் சார், அதனால திருவிழா அன்னை நான் ஒரு ஏழரை மணிக்கே இங்க வந்துட்டேன். நைட்டு ஒரு பதினோரு மணி இருக்கும், அப்ப கோவில்ல கூத்து நடந்துகிட்டிருந்துச்சி. எனக்கு ஒரு ஃபோன் கால் வந்ததுனால பேசுறதுக்காக அங்கிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு புளிய மரத்துக்கு கீழே வந்து நின்னு பேசிக்கிட்டிருந்தேன். அப்ப ஒரு ஆறு பேரு வந்தானுங்க, வந்து யார்டா நீ, எந்த ஊர்டா, இங்க என்னாடா பன்றன்னு கேட்டானுங்க.

நான் கனகம்பட்டி தான், பேரு தினேஷ், அரவிந்தன் வீட்டுக்கு வந்திருக்கேன்னு சொன்னேன். கனகம்பட்டில எங்க, ஊருக்குள்ள இருக்கியா ரோடு மேல இருக்கியான்னு கேட்டானுங்க. ரோடு மேல தான் இருக்கேன்னு சொன்னேன். ரோடு மேல இருக்கன்னா கொறப்பயனா நீன்னு கேட்டாங்க.

எதுக்கு சாதியச் சொல்லி பேசுறீங்கன்னு கேட்டதுக்கு, எங்களையே எதிர்த்து பேசுறீயான்னு அதுல ஒருத்தன் அடிச்சிட்டான். உடனே நான் அரவிந்தன்கிட்ட போய் நடந்ததை சொல்லி வந்து கேளுடான்னு சொன்னேன். அவனும் வந்து கேட்டான், கேட்டதுக்கு அவனையும் சேர்த்து அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

என்னை பருத்தி தோப்புக்குள்ளயும் அவனை மாந்தோப்புக்குள்ளயும் இழுத்துட்டு போய் அடிச்சாங்க. என்னோட ஃபோன் காசு எல்லாத்தையும் புடுங்கிகிட்டாங்க.

அப்ப உங்களை என்ன பன்னாங்க அரவிந்த் ?

தினேஷ்
தினேஷ்

தினேஷையும் என்னையும் அடிச்சு ஆளுக்கொரு பக்கம் இழுத்துட்டு போய்ட்டாங்க. அப்புறம் நான் தினேஷை பார்க்கல, அவன் எங்கையாவது தப்பிச்சு போயிருப்பான்னு நினைச்சேன். அதுக்கப்புறம் ஒரு பனிரெண்டு மணி போல ரகுபதி, பாலாஜின்னு ரெண்டு பேரு வந்து உன்னை யாரோ கூப்பிடுறாங்கன்னு கூப்பிட்டாங்க. அவங்க சொன்ன இடத்துக்கு வந்து பார்த்தா அப்பயும் பத்து பேர் தினேஷை அடிச்சிட்டிருந்தானுங்க. நான் போனதும் இந்த கொறத் தே.. பையன் தான் இவனுக்கு சப்போர்ட்டுக்கு வந்தான்னு சொல்லி என்னை மறுபடி அடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.

என்னை அடிச்சி மறுபடியும் மாந்தோப்புக்குள்ள இழுத்துட்டு போனானுங்க. அங்க ஒரு கல்லு மேல முட்டி போட வச்சி ரெண்டு பேரு என் தொடை மேல ஏறி நின்னு மிதிச்சானுங்க. வலி தாங்க முடியாம கத்துனதுக்கு, சாமல்பட்டி மணிங்கிறவன் கொறத் தே.. பயலே என்னடா கத்துறன்னு வாயில துணிய வச்சி திணிச்சி கழுத்துல பெல்ட்டை சுத்தி இறுக்கி, இது ஸ்டியரிங் புடிச்ச கைடான்னு சொல்லி கன்னத்துலயே மாறி மாறி அறைஞ்சான்.

மத்தவனுங்க எல்லாம் சட்டைய கிழிச்சி செருப்பு, கம்பி, பெல்ட்ன்னு எல்லாத்துலயும் அடிச்சானுங்க. வலி தாங்க முடியல, தாகமா தவிச்சு தண்ணி தண்ணின்னு கேட்டேன். அதுக்கு சாமல்பட்டி மணிங்கிறவன், இந்த கொறத் தே.. பையனுக்கு தண்ணி வேணுமாம் மூத்திரத்தை கொடுங்கடான்னு சொன்னான். உடனே தேவேந்திரன்கிறவன் அப்படியே என் வாயில யூரின் பாஸ் பண்ணிட்டான்.

அதுக்கப்புறம் என்ன ஆச்சுன்னு எனக்குத் தெரியல. அந்தப் பக்கம் ஒரு பப்ளிக் டாய்லெட் இருக்கு அதுக்கு பின்னாடி கொண்டு வந்து போட்ருக்கானுங்க. காலையில அந்த பக்கம் வந்த எங்க மாமா தான் என்னை தூக்கிட்டு வந்து வீட்ல போட்டாரு.

என்னை வீட்டுல கொண்டு வந்து சேர்த்த கொஞ்ச நேரத்துல அந்த பசங்களோட அம்மா அப்பா ஊர்க்காரங்க எல்லாம், அரவிந்தன் எங்கன்னு கேட்டுக்கிட்டு எங்க வீட்டுக்கு முன்னாடி கூடிட்டாங்க. வந்தவங்க எல்லாம் என் பையன் அடிச்சானா, என் பையன் அடிச்சானான்னு கேட்டாங்க.

அடிச்சது யார்ன்னு எனக்குத் தெரியும் நான் பார்த்துக்கிறேன் விடுங்கன்னு சொன்னேன். நீ எங்க பார்த்துக்கிறியோ பார்த்துக்க எங்களுக்கும் போலீஸ்ல ஆள் இருக்கு நாங்களும் பார்த்துக்கிறோம்னாங்க.

அப்புறம் நானும் மாமாவும் வண்டியை எடுத்துக்கிட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினோம். ரோட்ல இருக்க அரச மரத்துக்கிட்ட ஒரு மாரியம்மன் கோவில் இருக்கு, அங்கே எல்லோரும் கூட்டமா கூடி நின்னுகிட்டு எங்களை ஹாஸ்பிடலுக்கு போக விடாம வழியை மறிச்சுக்கிட்டு, பஞ்சாயத்து பேசிட்டு தான் போகனும், ஊருக்கு கட்டுப்படுறீங்களா இல்லையான்னு சொல்லி வண்டி சாவிய புடுங்கிகிட்டாங்க.

அரவிந்தனின் முதுகில் தழும்புகள்
அரவிந்தனின் முதுகில் தழும்புகள்

 

பஞ்சாயத்துக்கு கட்டுப்பட முடியாதுன்னு ஒரு மணி நேரமா நிக்கிறோம். அந்த நிலைமையிலயும் எங்களை போக விடாம தடுத்துக்கிட்டு நிக்கிறாங்க. கடைசில, போறதுன்னா பிரைவேட் ஹாஸ்பிடலுக்கு போங்க கவர்மெண்ட் ஹாஸ்பிடலுக்கு போகாதீங்கன்னு சொன்னாங்க. என்னால அதுக்கு மேல நிக்க முடியல மயக்கம் வர்ற மாதிரி ஆகிடுச்சு. சரி பிரைவேட் ஹாஸ்பிடலுக்கே போறோம்னு சொல்லிட்டு கனகம்பட்டிக்கு வந்து தினேஷையும் கூட்டிகிட்டு ஊத்தங்கரை கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆனோம்.

ஹாஸ்பிடலுக்கு ரெண்டு போலீஸ்காரங்க வந்தாங்க. அதுல சேட்டுங்கிறவரு தான் எங்கிட்ட வாக்குமூலம் வாங்கினாரு. ரெண்டு நாள் ஊத்தங்கரை ஹாஸ்பிடல்ல இருந்தோம், 6-ம் தேதி தர்மபுரியில் அட்மிட் ஆனோம். 11-ம் தேதி டிசார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தோம். வீட்டுக்கு வந்து எஃப்..ஐ.ஆர் காபியை வாங்கி பார்த்தா நான் சொன்ன எதுவுமே அதுல இல்ல. உடனே தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநில துணைத்தலைவர் ரவியை பார்த்து விசயத்தை சொன்னேன். 13-ம் தேதி நானும் அவரும் போய் மறுபடியும் ஒரு எஃப்.ஐ.ஆர் கொடுத்தோம்.”

“வாக்குமூலத்துல என்ன சொல்லிருந்தீங்க என்ன இல்லை ?”

“கம்பில அடிச்சது, பெல்ட்டால கழுத்தை இறுக்கினது, யூரின் பாஸ் பன்னது, கொறத் தே.. பயான்னு ஜாதிப் பேரைச்சொல்லி திட்டினது எதுவுமே இல்ல. சும்மா கையிலயும், பெல்ட்லயும் அடிச்சதா இருந்துச்சு.”

“அடிச்சவங்களை எல்லாம் உங்களுக்கு தெரியுமா ?”

“எல்லோரையும் தெரியாது சிலரைத் தெரியும். ஏழு பேரை அடையாளம் காட்டியிருக்கேன்.”

“மொத்தம் எத்தனை பேர் அடிச்சாங்க ?”

“நாற்பது பேர் இருக்கும்.”

“இப்ப ஊருக்குள்ள நிலைமை எப்படி இருக்கு?”

அரவிந்தன்
அரவிந்தன்

“ஊரே எங்க மேல பகையா இருக்கு. 9 -ம் தேதி நாங்க தருமபுரில இருந்தோம். வீட்ல யாரும் இல்ல. அந்த நேரம் பார்த்து வீட்டுக்கதவை உடைச்சி டி.வி, சிலிண்டர், டி.வி.டி பிளேயர் எல்லாத்தையும் எடுத்துட்டு போய்ருக்காங்க. யார் மேல கம்ப்ளெய்ண்ட் கொடுக்குறது? யாரு செஞ்சதுன்னு தெரிஞ்சா கொடுக்கலாம் யாருன்னே தெரியாதப்ப என்ன செய்றதுன்னு தெரியாம அப்படியே விட்டுட்டோம். ஆனா கொறவரே கொறவரோடதை திருடிருப்பாங்கன்னு அவங்க சொல்றாங்க.”

“கைதானவங்க எல்லாம் இப்ப ஜாமீன்ல வந்துட்டாங்க, ஊருக்குள்ள உங்களை பார்க்கும் போது எப்படி நடந்துக்கிறாங்க ?”

“எங்களுக்கு இப்ப உயிருக்கு பாதுகாப்பே இல்லை, யார் என்ன பண்ணுவாங்கன்னு தெரியல. ஊருக்குள்ள இருக்க கடைகளில் நின்னுக்கிட்டு, இந்த கொறத் தே.. பசங்கள விடமாட்டோம். ஒவ்வொருத்தனையா வெட்டி சாய்ப்போம், நாய்க்கனா கொறவனான்னு பார்க்கலாம்கிறாங்க.”

“அவங்க பொண்ணுங்கள நீங்க கிண்டல் பண்ணதாவும் அவங்க மேல கீ செயின் லைட்டை அடிச்சதாவும் சொல்றாங்களே?”

“தினேஷை அடிச்சாங்கன்னு நான் போய் கேட்டேன் சார் இது தான் நடந்த உண்மை. இதை எப்படி எல்லாம் ஜோடிச்சிருக்காங்க, என்ன நடந்துச்சிங்கிறதை எல்லாத்தையும் சட்டமே தீர்மானிக்கட்டும்.”

“உண்மையான பிரச்சினை என்னன்னா, பெருமாள் கோவில் ஏழு கிராம மக்களுக்கும் பொதுவானது. அங்கே தலித் மக்கள் கால் வைக்கக்கூடாது, திருவிழாவுக்கு வரக்கூடாது, இந்த நிலைமையில வெளியூர்காரனையும் கூட்டிட்டு வந்துருக்கானேன்னு தான் பொண்ணு கைய புடிச்சு இழுத்தான், கிண்டல் பண்ணிணான்னு பொய் சொல்றாங்க. அதை உண்மைன்னு நிரூபிச்சா என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏத்துக்குவேன்” என்று உணர்ச்சிவயப்பட்ட அரவிந்தன் இந்த தாக்குதலுக்கு பின்னால் இருந்த உண்மையான காரணத்தை, குறவர்களை கோவிலுக்கு வரவிடாமல் தடுக்கும் தீண்டாமை தான் இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்பதை தனது பதிலின் மூலம் அழுத்தமாக கூறினார்.

அரவிந்தனின் பாட்டி
அரவிந்தனின் பாட்டி

மேற்கொண்டு

“நாங்க வயசு பசங்க சார் எங்க மேல இந்த குற்றச்சாட்டை சொன்னா கூட பரவாயில்லை. எங்க மாமாவுக்கு 31 வயசு, அவரு திருவிழாவுக்கே வரல. எங்க தாத்தாவுக்கு 67 வயசு அவரும் திருவிழாவுக்கு வரல. 67 வயசான பெரியவர் பொண்ணுங்க கையை பிடிச்சு இழுத்ததா கம்ப்ளெய்ண்ட் கொடுத்திருக்காங்க” என்றார்.

திருவிழா நடந்த மறுநாளே அரவிந்தன் மருத்துவமனையிலிருந்தபடி போலீசிடம் புகார் அளித்திருக்கிறார். அவருடைய வாக்குமூலம் போலீசாரால் வேண்டுமென்றே தவறாக பதிவு செய்யப்பட்டதை அடுத்து 13-ம் தேதி மீண்டும் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதற்கு பிறகும் புகார் அளிக்காத ஆதிக்க சாதியினர் பொறுமையாக 20-ம் தேதி தான் காவல் நிலையத்திற்கு சென்றிருக்கின்றனர், அதாவது 18 நாட்கள் கழித்து. உள்ளூர் ஆதிக்கசாதி கட்டப்பஞ்சாயத்து மூலமே பிரச்சினையை தீர்த்துக்கொள்ளலாம் என்று காத்திருந்தது தான் தாமதத்திற்கு காரணம்.

இதற்கு முன்பும் பல முறை இக்கிராமத்தில் சாதியக் கட்டப்பஞ்சாயத்துகள் இம்மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது. அரவிந்தன் கட்டப்பஞ்சாயத்திற்கு கட்டுப்படாமல் காவல் நிலையத்திற்கு சென்றதால் வேறு இல்லாமல் ஆதிக்க சாதியினரும் ஒரு பொய் புகாரை கொடுத்திருக்கின்றனர்.

அரவிந்தனின் அம்மா
அரவிந்தனின் அம்மா

“இதற்கு முன்பு நடந்த சில கட்டப்பஞ்சாயத்துகளைப் பற்றி சொல்லுங்களேன் ?”

“மாதம்மான்னு ஒருத்தங்க கர்ப்ப பை ஆப்ரேஷன் பண்ணியிருந்தாங்க, ஒரு பிரச்சினையில அவங்களை அடிச்சி ஆப்ரேஷன் பண்ணுன இடமெல்லாம் செப்டிக் ஆகி கிருஷ்ணகிரி ஹாஸ்பிடல சேர்த்திருந்தாங்க. போலீஸ்ல கேசும் கொடுத்திருந்தாங்க. உடனே ஊர்க்காரங்க எல்லாம் அவங்கள பார்த்து ஒனக்கு ஊர் வேணுமா இல்ல கேஸ் வேணுமான்னு மிரட்டி கட்டப்பஞ்சாயத்து பன்னி, கேஸ் கொடுத்தா ஊருக்குள்ள தண்ணி விட மாட்டோம், வழி விடமாட்டோம், கடையில எதுவும் தர மாட்டோம்னாங்க. அடிச்சவங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிச்சு கேசை வாபஸ் வாங்க வச்சு பிரச்சினையை முடிச்சிட்டாங்க.

இன்னொன்னு, எங்க மாமாவையும் அக்காவையும் அடிச்சி கைகால் உடைச்ச கேஸ். போலீஸ்ல புகார் கொடுத்து ஒரு வருஷமா கேஸ் நடந்துச்சு. அப்புறம் அதையும் இதே மாதிரி ஒரு முடிவுக்கு கொண்டு வந்துட்டாங்க.

அடுத்து, எங்க அத்தை காட்டுக்கு வெளிய போனப்ப அங்க மேல பாஞ்சி நைட்டியை கிழிச்சி, மானபங்கப்படுத்த முயற்சின்னு கேஸ். அந்த கேசும் ஒரு வருஷம் நடந்துச்சி. கேஸ் நடத்தினா ஊருக்குள்ள வாழ முடியாதுங்கிறதுனால வேற வழி இல்லாம ஒரு வருஷத்துக்கு மேல கேசை நடத்த முடியாம ஊரோடு ஒத்துப்போறோம்னு சொல்லிட்டோம். மானபங்கப்படுத்தினவனுக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் விதிச்சு பிரச்சினையை முடிச்சாங்க.”

“உங்க பிரச்சினையையும் கட்டப்பஞ்சாயத்து மூலம் தீர்க்க முயற்சி பண்றாங்களா ?”

“ஆமா எங்ககிட்ட நேரடியா பேசுறது இல்ல. எங்க தாத்தா மூலமாவும் மற்ற சொந்தக்காரங்க மூலமாவும் முயற்சி செஞ்சுகிட்டு தான் இருக்காங்க.”

“நீங்க வழக்கை நடத்துறதுல உறுதியா இருக்கீங்க ஆனா கேசை தொடர்ந்து நடத்தினா குடிநீர் கிடைக்காது, பாதை விடமாட்டாங்க, மளிகை பொருட்கள் கிடைக்காது அதுக்கெல்லாம் என்ன பண்ணுவீங்க ?”

“அதெல்லாம் ஊருக்குள்ள கிடைக்காட்டி பரவாயில்லை சார். ஒரு டிராக்ட்டர் தண்ணி 500 ரூபாய் ஆகுது ஆனாலும் பரவாயில்ல எங்க சமுதாய மக்கள் எல்லோருக்கும் சேர்த்து அந்த தண்ணியை மொத்தமா வாங்கிக்குவோம். பாதையை பொருத்த வரைக்கும் சுத்தி வளைச்சு போகனும். மளிகை பொருள் எல்லாம் கல்லாவியில் (கல்லாவி பக்கத்து ஊர்) கிடைக்குது. அங்கிருந்து மொத்தமா வாங்கிக்குவோம். ஆனா கேசை விட்டுட்டு கட்டப்பஞ்சயத்துக்கு உடன்படுறதா மட்டும் இல்லை. இதோடு இந்த பிரசினையை ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்னு நினைக்கிறோம்.”

“சிங்கப்பூர் போற திட்டம் ?”

ஆதிக்கசாதி பெண்கள்
ஆதிக்கசாதி பெண்கள்

“சிங்கப்பூர் போறது இப்போதைக்கு முடியதுன்னு நினைக்கிறேன். கேசுக்காக போலீசு கூப்பிட்டா போகனும், கோர்ட்டுக்கு போகனும், அதனால இப்போதைக்கு போக முடியாது.”

“ஊருக்குள்ள ரெண்டு சாதிக்குள்ளயும் இதுவரை கல்யாணம் ஏதாவது நடந்திருக்கா ?”

“ஒண்ணு கூட நடந்தது இல்ல.”

“அந்த சாதி பொண்ணுங்கள காதலிக்கணும்னு நீங்க விரும்பிருக்கீங்களா ?”

“நாங்க இங்க இருக்கிறதே இல்ல சார், நான் பெங்களூர்ல வேலை செய்றேன். எங்க வேலை உண்டு நாங்க உண்டுன்னு இருப்போம். அப்படி எல்லாம் நினைச்சது இல்ல.”

“சரி எதார்த்த்தில் தான் இல்லை கற்பனையில கூட நினைச்சது இல்லையா ?”

“இல்லை நினைச்சது இல்லை.”

“ஏன் ?”

“ஏன்னா அவங்க மேல் சாதி நாம கீழ் சாதின்னு நினைச்சிக்கிறது. அதனால அதையெல்லாம் யோசிச்சு கூட பார்த்தது இல்ல.”

“உங்களுக்கு எத்தனை வயசு ?”

“இருபது.”

“தினேஷ் உங்களுக்கு ?”

“பதினெட்டு.”

“இந்த சாதி பொண்ணுங்களை விடுங்க, வேற யாரையாவது காதலிக்கிறீங்களா ?”

“இல்லை சார்.”

“இதுவரை யாரையுமே காதலிச்சதில்லையா ?”

“அதுக்கெல்லாம் எங்க சார் நேரம் இருக்கு. பெங்களூர்ல வேலை செய்ற இடத்திலேயே தான் தங்கியிருக்கேன். அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.”

“உங்களுக்கு தெரிஞ்சி ரெண்டு சாதிக்குள்ளயும் ஒரு கல்யாணம் கூட நடந்தது இல்லையாம்மா?” என்று அரவிந்தன் அம்மாவிடம் கேட்டோம்.

“இல்லைங்க.”

“உங்க பையனை இப்படி செஞ்சவங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கனும்னு நினைக்கிறீங்க ?”

“ஏதாவது நல்ல தண்டனையா கொடுக்கட்டும். நாலு வருஷம் ஜெயில்ல வைக்கட்டும். யார் தப்பு பண்ணியிருந்தாலும் தண்டனை கொடுக்கட்டும். ஆனா என் பையன் அப்படி பண்ணல” என்றார்.

“பொண்ணுங்க மேல சின்னதா கைப்பட்டாலே கேஸ் கொடுக்கிற இந்த காலத்துல கையப்புடிச்சு இழுத்தோம்னு சொல்றவங்க இருபது நாள் கழிச்சு கேஸ் கொடுக்க என்ன சார் காரணம்? எது உண்மை எது பொய்ன்னு கடவுளுக்குத் தெரியும் சார்! சட்டப்படி என்ன நடக்குதோ நடக்கட்டும்” என்றார் அரவிந்தன்.

அரவிந்தனின் வீடு
அரவிந்தனின் வீடு

“தலித் இளைஞர்கள் எல்லாம் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ், பல்சர் பைக்கை வச்சுக்கிட்டு மேல் சாதி பெண்களை காதலிச்சு ஏமாத்துறாங்கன்னு ராமதாஸ் சொல்றாரே அதை பத்தி என்ன நினைக்கிறீங்க, உங்ககிட்ட பல்சர் பைக் இருக்கா ?”

“பைக்கு இருக்கு ஆனா என்னோடது இல்ல, எங்க மாமாவோடது, அதுவும் பல்சர் இல்ல. தலித் பசங்க இப்படி பன்றாங்க அப்படி பன்றாங்கன்னு அவருக்கு எப்படித் தெரியும். இந்த ஊர்ல என்ன நடக்குதுன்னு அவருக்கு தெரியுமா? அவர் ஊர்ல என்ன நடக்குதுன்னு அவர் சொல்லலாம். எல்லா எடத்திலயும் என்ன நடக்குதுன்னு சொல்றதுக்கு அவர் என்ன கடவுளா?

தலித் பசங்க அந்த பொண்ணை லவ் பன்றாங்க இந்த பொண்ண லவ் பன்றாங்கன்னு சொல்றது எல்லாம் அவங்க அரசியலுக்கு தான். அவங்க மெஜாரிட்டியா இருக்காங்க நாங்க மெஜாரிட்டியா இல்ல. குறவரோ, பறையரோ, அருந்ததியரோ நாங்க எங்க சாதியை பத்தி எங்கேயும் சொல்றது இல்ல. ஆனா அவங்களோ, நாங்கல்லாம் பாட்டாளி மக்கள் கட்சிடா, யாதவர் கட்சிடா அப்படிம்பாங்க. ஜாதியா சரி இருந்துட்டு போகுதுடா, ஜாதியப்பத்தி சொன்னா கடையில ஒருத்தன் சும்மா பொருள் தரமாட்டான், உழைச்சா தான் காசுன்னு நாங்க எங்க வேலையை பார்த்துக்கிட்டு இருக்கோம்.”

“மொத்தம் நாற்பது பேர் சேர்ந்து தாக்கியிருக்காங்க ஆனா ஏழு பேர் மேல தான் வழக்கு போடப்பட்டிருக்கு மற்றவங்க மேல போடாததற்கு என்ன காரணம் ?”

“ஏழு பேரை தான் எனக்கு தெரியும் மத்தவங்க எல்லாம் வெளியூர்காரங்க. தெரியாதவங்க மேல எப்படி கேஸ் கொடுக்கிறது? அடிச்சதுல முக்கியமானவன் சாமல்பட்டி மணிங்கிறவன் அவனை கைது பண்ணல. சாமல்பட்டில மணின்னு ஒரு ஆளே இல்லைன்னு போலீசு சொல்லுது. ஆனா அவன் என்னை அடிக்கும் போது சமல்பட்டில வந்து டிரைவர் மணின்னா யார்ன்னு கேட்டுப்பார்டா கொறத் தே.. பயலேன்னு சொல்லித் தான் அடிச்சான்.

போலீஸ்காரங்க அவங்களுக்கு சாதகமா நடந்துக்கிறாங்க. அதுக்கு காரணம் போலீஸ்ல அவங்க ஆளுங்க நிறைய இருக்காங்க. டி.எஸ்.பி கூட பேசும் போது என்ன சொல்றார்னா ‘ஒன்னுக்கு போனதெல்லாம் ஒரு விசயமாப்பா, இதையெல்லாம் ஏன் பெருசுபடுத்துறீங்க. பீஸ் கமிட்டி வச்சு நான் ஏதாவது பணம் வாங்கி தர்றேன் பேசாம சமாதானமா போங்கன்னு சொல்றாரு. குற்றவாளிகளை தண்டிக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே இப்படி பேசுறாரு.

திருவிழா நடந்த கிருஷ்ணன் கோவில்
திருவிழா நடந்த கிருஷ்ணன் கோவில்

குறவர் சங்க மாநிலத் துணைத்தலைவர் ரவி டி.எஸ்.பியை பார்த்து மனு கொடுத்த போதும், இதையெல்லாம் பெருசுபடுத்தாதீங்க எஸ்.சி/எஸ்.டி ஆக்ட்டெல்லாம் நான் ஆயிரம் கேஸ் பார்த்திருக்கேன் எதுவுமே நின்னது இல்ல, பேசி பணம் வாங்கித்தர்றேன் சமாதானமா போய்டுங்கன்னு பேசியிருக்காரு. அது நிக்கட்டும் நிக்காம போகட்டும் சார் நீங்க கேசை பைஃல் பண்ணி நடவடிக்கை எடுங்கன்னு சொன்ன பிறகு தான் அப்படி பேசுறதை நிறுத்தியிருக்காரு.

காவல் துறை மக்களுக்கு நண்பன்னு சொல்றாங்க, ஆனா அவங்க எதிரிகளுக்கு தான் நண்பனே தவிர பாதிக்கப்பட்டவங்களுக்கு இல்லை. பாதிக்கப்பட்டவங்களுக்கு முக்கியமான எதிரியே போலீஸ் தான்.

இந்த பசங்களுக்கு இந்த வயசுலயே இவ்வளவு சாதிவெறி இருக்குன்னா எதிர்காலத்துல எப்படி இருப்பாங்க சார். எதுக்கு இவ்வளவு ஜாதிவெறி ? இந்த கிராமத்துக்குள்ள தான் இப்படி நடந்துக்க முடியும் இதுக்கு வெளிய போய் இப்படி இருக்க முடியுமா ?

இவங்க சொல்றதை கேட்கலைன்னா தண்ணி விட மாட்டாங்க, வழி விடமாட்டாங்க, பொருள் கொடுக்க மாட்டாங்கன்னா எவ்வளவு அநியாயம் சார் ? எங்க அக்கா பையன் ஒரு சின்ன குழந்தை, அவன் ஒரு ரூபாயை எடுத்துக்கிட்டு மிட்டாய் வாங்க கடைக்கு போயிருக்கான். ‘ஏய் ஒங்க சாதிக்கெல்லாம் நாங்க தர்றது இல்ல போ போ’ அப்படியினிருக்காங்க. ஒரு குழந்தைக்கிட்ட கூட எப்படி நடந்துக்கிறாங்க பாருங்க.

இந்த ஊருக்கு வெளிய இந்த கட்டுப்பாடெல்லாம் செல்லுமா?” என்று கேள்வி எழுப்பியவர் அருகில் இருந்த நமது பையை சுட்டிக்காட்டி,

“ந்த பேகை தச்சது யாருன்னு யாருக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியுமா எனக்குத் தெரியுமா? இதை தச்சது ஒரு பறையரா இருக்கலாம், குறவரா இருக்கலாம், அருந்ததியரா இருக்கலாம். ஒரு கம்பெனில வேலை தர்றாங்கன்னா ஜாதி பார்த்தா வேலை தர்றாங்க? படிப்புக்காக தான் வேலை தர்றாங்களே தவிர ஜாதிக்காக இல்லை.

இங்கே காலம் காலமா இப்படி தான் சார் நடக்குது. நாளைக்கு எங்களுக்கு கல்யாணம் ஆகி குடும்பம் குழந்தைங்கன்னு உருவாகலாம். அப்பவும் இப்படி ஊர்க்கட்டுப்பாடு, பொருள் தர மாட்டோம், நடக்க விடமாட்டோம்கிற நிலைமை இருக்கக்கூடாது. இதெல்லாம் எங்க அம்மா அப்பா காலத்தோட முடியனும்.

karuvanur-caste-atrocity-11அவங்க பாட்டுக்கு அவங்க இருக்கட்டும் எங்க பாட்டுக்கு நாங்க இருக்கோம். நாங்க கீழ் சாதி தாங்க இல்லைன்னு சொல்லலை, ஆனா யாரா இருந்தாலும் உழைச்சா தான் சோறு. அவங்க வேலையை அவங்க பாக்கட்டும் எங்க வேலையை நாங்க பாக்குறோம். இந்த நிலைமையை ஒரு முடிவுக்கு கொண்டு வரனும்னு தான் நாங்க இப்ப ஊருக்கு கட்டுப்படாம துணிச்சலா இறங்கியிருக்கோம்.”

“பெங்களூர்ல என்ன வேலை செய்றீங்க ?”

“கேஸ் கட்டிங், வெல்டிங் வேலை சார். சிங்கப்பூர் போகலாங்கிறதுக்காக பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனுக்காக தான் ஊருக்கு வந்தேன். திருவிழா நடக்குது அதுக்காக வரணும்னே வரல வந்த இடத்துல இப்படி ஆகிடுச்சு. எனக்கு அப்பா இல்ல அம்மா மட்டும் தான் இருக்காங்க. வெளிநாடு போனா ஏதோ கொஞ்சம் சம்பாதிக்கலாம்னு நினைச்சேன். இப்ப அதுவும் முடியாம போச்சு” என்றார்.

அத்துடன் அரவிந்தனுடனான உரையாடலை முடித்துக்கொண்டு விடைபெற்றோம் அப்போது மாலை நான்கு மணியாகிவிட்டது. அவருடைய வீட்டை விட்டு கிளம்பி பேருந்துக்காக சாலைக்கு வந்தோம். காலையில் எங்களோடு பேருந்தில் வந்த, வாட்ச்மேன் வேலை செய்யும் பெரியவரும் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தார். பகலில் தூங்கி எழுந்து மீண்டும் வேலைக்கு கிளம்பிவிட்டார். இவருக்கு கிடைக்கும் மாதச் சம்பளம் 5000 ரூபாய். வேலையோ 12 மணி நேரம், ஆனால் ஆதிக்க சாதி !

இக்கிராமத்தில் ஆதிக்க சாதியினர் என்று கூறிக்கொள்ளும் நூற்றுச் சொச்ச குடும்பங்களில் யாரும் நிலப்பிரபுக்களோ பண்ணையார்களோ இல்லை. கொஞ்சம் போல தரிசு நிலத்தை வைத்துக் கொண்டு மழைக்காக காத்திருக்கும் சாதாரண மக்கள் தான். அரவிந்தனை போல பல இளைஞர்கள் வெளியூர்களில் வேலை செய்கிறார்கள், பலர் லாரி டிரைவர்களாக இருக்கின்றனர். பிறர் கூலி வேலைகளிலும், விவசாய வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.

தம்மை யாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் இவர்கள் நாயக்கர்கள், நாயுடுகள் என்றும் கூறிக்கொள்கின்றனர். தாய் மொழி தெலுங்கு, சாதி சான்றிதழில் யாதவர்கள் என்று பதிவு செய்திருக்கின்றர். தலித் மக்களை எல்லா சாதிகளும் ஒரே மாதிரி ஒடுக்குவதில்லை. இவர்கள் பார்க்க அமைதியாக இருக்கின்றனர். ஆனால் இவர்களின் சாதி ஆதிக்கம் பிற ஆதிக்க சாதியின் ஒடுக்குமுறைக்கு சற்றும் சளைத்தது இல்லை.

ஊர் மக்களே எதிர்த்த போதும் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ராமச்சந்திரன் ஊருக்குள் இருந்த தன்னுடைய நிலத்தை அரவிந்தனுக்கு விற்றார். அந்த இடத்தின் மதிப்பு 51,000 ரூபாய். அரவிந்தன் அதில் 40,000 ரூபாயை கொடுத்துவிட்டார். மேலும் கொடுக்க வேண்டியது 11,000 ரூபாய் தான். அந்த 11,000 ரூபாய்க்காக நிலப்பட்டாவை அரவிந்தனிடம் கொடுக்காமல் தன் கையிலேயே வைத்திருக்கிறார் ராமச்சந்திரன்.

ஊர் மக்களே எதிர்த்த போதும் அரவிந்தனை ஊருக்குள் வீடு கட்ட அனுமதித்த ராமச்சந்திரன் முட்டாள் அல்ல. அனைத்தையும் திட்டம் போட்டு தான் செய்திருக்கிறார். தற்போது அரவிந்தன் மீதும் அவருடைய மாமா, தாத்தா மீதும் பொய் புகார் அளித்திருப்பதும் இந்த ராமச்சந்திரன் தான். இவருடைய பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக தான் புகார் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் பணம் கொடுத்த பிறகும் வீட்டுமனை பட்டா தனக்கு கிடைக்குமா கிடைக்காதா என்கிற அச்சத்தில் இருக்கிறார் அரவிந்தன்.

இவர்கள் தேவர் சாதி வெறியர்களை போலவோ, வன்னியர்களைப் போலவோ முரட்டுத்தனமான நடந்துகொள்வதில்லை, ஆனால் தலித் மக்களை அடக்கி ஒடுக்கி ஆதிக்கம் புரிவதில் அவர்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல.

கிருஷ்ணகிரி மாவட்டம் முன்பு தருமபுரி மாவட்டத்துடன் இணைந்திருந்தது. நக்சல்பாரி இயக்கங்கள் இருந்ததால் தருமபுரி மாவட்டத்திற்கு என்று ஒரு புரட்சிகர பாரம்பரியமும் மரபும் இருந்தது.

1980 களில் வெளிப்படையான சாதி ஒடுக்குமுறை என்பது இப்பகுதிகளில் சுத்தமாக இல்லை என்றே கூறலாம். பல்வேறு சாதிகளுக்கு இடையில் சாதி மறுப்பு திருமணங்கள் நடப்பது மிகச்சாதாரண நிகழ்வாக இருந்தது. ஆனால் இன்று நக்சல்பாரி இயக்கங்கள் பின்னடைவை சந்தித்ததன் விளைவாகவும், சாதிவெறிக்கட்சிகள் வளர்ந்ததன் காரணமாகவும் நத்தம் காலனி தாக்குதல் போன்ற சம்பவங்கள், இம்மாவட்டத்தின் முற்போக்கு வர்க்க ஒற்றுமை மரபுக்கே இழிவைத் தேடித்தர துவங்கியிருக்கின்றன. அதில் ஒன்றாக இப்போது கருவானூரும் இணைந்திருக்கிறது.

சாதி ஒடுக்குமுறை நடக்கும் அனைத்து இடங்களிலும் போலீசு சாதிவெறியர்களுக்கு ஆதரவாக தான் இருக்கிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய காவல் துறையே சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சக்தியாக மாறியிருப்பதை போல, குற்றங்களை விசாரித்து நீதி வழங்க வேண்டிய நீதிபதிகளே கிரிமினல் குற்றவாளிகளாக மாறியிருக்கின்றனர். அவர்களிடமிருந்து நேர்மையான நியாமான தீர்ப்பை, அதுவும் சாதி ஆதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான இது போன்ற வழக்குகளில் எதிர்பார்ப்பது குதிரைக்கு கொம்பு முளைக்கும் என்று காத்திருப்பதை போன்றது. சில விதிவிலக்குகளை தவிர இந்திய நீதிமன்றங்கள் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு கடுமையான தண்டனைகள் அளித்ததாக வரலாறே இல்லை.

சுண்டூர், பதானிதோலா, லஷ்மண்பூர் பதே, கயர்லாஞ்சி, பரமக்குடி என்று ஒவ்வொரு ஊராக கூறிக்கொண்டே போகலாம். அத்தனை வழக்குகளிலும் நீதி மன்றங்கள் சாதிவெறியர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டிருக்கின்றன. சொல்லப்போனால் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு நீதிமன்றங்கள் பாதுகாப்பான இடமாகவே இருக்கின்றன.

சாதி ஒடுக்குமுறைக்கான தீர்வு நீதிமன்றங்களிலோ சட்டத்திலோ இல்லை. ஆதிக்க சாதியில் உள்ள ஜனநாயக சக்திகளை அணிதிரட்டி சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டங்களை நடத்துவதிலும், இறுதியில் இந்த பார்ப்பனிய சாதிய சமூகத்தை முற்றாக மாற்றியமைப்பதிலும் தான் சாதி ஒடுக்குமுறைகளுக்கான தீர்வு இருக்கிறது.

இந்தியா இன்றும் எப்படி இருக்கிறது என்பதற்கு கருவானூர் ஒரு சான்று. தாழ்த்தப்பட்ட மக்கள் எப்படி அன்றாடம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதற்கு அரவிந்தன் ஒரு இரத்த சாட்சியம். ஜனநாயக உணர்வு கொண்டோர் வெட்கி தலைகுனிவதோடு இந்த சாதி அமைப்பை வெட்டவும் முன் வரவேண்டும்.

– வினவு செய்தியாளர்கள்.

மக்களின் எமன் கோவிலூர் TCPL உடையார் ஆலையை மூடு !

0

கோவிலூர் சுற்றுப்புற மக்களின் எமனாக விளங்கும் டி.சி.பி.எல் இரசாயன ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடு

காரைக்குடி அருகாமையில் உள்ள கோவிலூரில் அமைந்துள்ள இரசாயன ஆலைதான் தமிழ்நாடு கெமிக்கல் பிரைவேட் லிமிடேட். இந்த ஆலையில் சமீபத்தில் 12-02-2015 அன்று விசவாயு கசிவு ஏற்பட்டது. இந்த விசவாயு கசிவில் மிகப்பெரிய அளவில் சேதாரம் ஏற்படாவிட்டாலும் அந்தப்பகுதியில் வாழும் மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறி உள்ளனர். ஆலையினுள் வேலை செய்த தொழிலாளர்கள் மயக்கமடைந்துள்ளனர். விபத்தினை அறிந்த
அதிகாரிகள், சுற்று வட்டாரத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.

அருகாமை பள்ளிகளுக்கு அதிகாரிகள் அறிவிக்கும் முன்னரே சென்ற கோவிலூர் மக்கள் மாணவர்களை வெளியேற்றியுள்ளனர். இந்த பாதிப்பை தொடர்ந்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் இந்த ஆலையினை தற்காலிகமாக மூடுவதாகவும், விபத்து எதனால் ஏற்பட்டது என்பதை கண்டறிய மாசுhfகட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒப்புதல் வழங்குவதாகவும் கூறினர்.

இதன் பிறகுதான் அந்த மக்களின் பல்வேறு பாதிப்புகள் இப்போதல்ல 1980-களிலிருந்தே ஆரம்பமாகி அப்போதிருந்தே போராட ஆரம்பித்து விட்டனர். பல்வேறு போராட்டங்களை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் காசு வாங்கி கொண்டு துரோகமிழைத்திருக்கிறார்கள். இப்போதும் அமைதிக்கூட்டம் எனும் பெயரில் ஆலையினை இயக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் தான் இப்பிரச்சனையை கையிலெடுத்துள்ளது புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மற்றும் தோழமை அமைப்புகள். அதன் தொடக்கமாக 24.04.2015 அன்று காரைக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் மையமாக

  • கோவிலூர் ஆலையை நிரந்திரமாக இழுத்து மூடு
  • ஆலையின் சொத்துக்களை பறிமுதல் செய்
  • ஆலையின் கழிவால் பாதிக்கபட்ட விவசாயிகள், ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் மக்களுக்கு நிவாரணம் வழங்கு
  • கண்மாய் கழிவுநீர் நஞ்சானதும், விவசாயம் முற்றிலும் அழிந்ததும் தெரிந்தும், மறைக்கும் மரமண்டை தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
  • போலிசும், கலெக்டரும், அதிகாரிகளும், ஓட்டுப்பொறுக்கி அரசியல்வாதிகளும் சாராய உடையாரின் கைப்பாவைகளே

போன்ற முழக்கங்கள் இருந்தன.

கோவிலூர் டி.சி.பி.எல் ஆலையை மூடு
கண்மாய் கழிவுநீர் நஞ்சானதும், விவசாயம் முற்றிலும் அழிந்ததும் தெரிந்தும், மறைக்கும் மரமண்டை தான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்.

தலைமையேற்று உரையாற்றிய தோழர் மாணிக்கம் பு.ஜ.தொ.மு கூறியதாவது,

“எம்.ஜி.ஆர் காலத்தில் துவங்கப்பட்ட ஆலை, முதலில் அரசு மற்றும் தனியார் கூட்டுடன்தான் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்திலிருந்தே ஆலை நட்டத்தில்தான் இயங்கியுள்ளது. பின்பு ஜப்பான் சென்று பயின்று வந்தவர்களால் ஆலை இலாபத்தில் இயங்கியது. இந்த இலாப விகிதம் அதிகமாக கிடைத்த காலத்தில்தான் தமிழ்நாடு அரசின் பங்கு முற்றிலுமாக விலக்கிக்கொள்ளப்பட்டு ஆலை சாராய உடையாரின் கையில் ஒப்படைக்கப்பட்டது. ஆலை ஆரம்பித்து 40 ஆண்டுகளாக தொடர்ந்து நச்சுக்காற்றை சுவாசிக்கும் மக்கள் பல்வேறு நோய்களினால் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.

1980-களுக்கு பிறகு ஆலை ஆரம்பித்த 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே மக்கள், “இந்த ஆலையிலிருந்து வெளிவரக்கூடிய நச்சுவாயு மூச்சுத்திணறலை ஏற்படுத்தும்” என்றும், “இந்த ஆலைக்கழிவுகளால் தான் நமது விவசாயம் பாதிப்படைந்துள்ளது” என்பதையும் உணர்ந்து போராட ஆரம்பித்துள்ளார்கள். அப்போதெல்லாம் மக்களுடன் இருந்த ஊர்க்காரர்கள் சிலரும், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகமாடி போராட்டத்தை மழுங்கடிப்பார்கள். இன்றுவரை தொடர்ந்து இவ்வேலையை செய்து வருகின்றனர்.

12-02-2015 அன்று ஏற்பட்ட விசவாயுக்கசிவின் போது மக்களுக்கு உடனடியாக தகவல் தராமல் 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகுதான் கூறியுள்ளனர், ஆலை நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகள். அமராவதிபுதூர் குருகுளம் பகுதியில் அமைந்துள்ள பள்ளிக்கூடத்திற்கு விடுமுறை தந்துள்ளனர். இந்தப் பள்ளி ஆலையிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. அங்கே ஏன் விடுமுறை தரவேண்டும்? ஆலை வெடித்தால் 20 கி.மீ சுற்றளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்துதான் விசயத்தை மாவட்ட ஆட்சியர் கல்வித்துறை அதிகாரிகளிடமும் அனைத்து பகுதிகளுக்கும் தெரிவித்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்னொருபக்கம் ஆபத்தில்லை என்று ஆர்.டி.ஓ, டி.எஸ்.பி சொல்கிறார்கள். பின் ஏன் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தனர்.

எங்களுக்கு பல்வேறு பாதிப்புகள் உள்ளது. ஆலையினை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் சாலை மறியல் செய்தால் அதிகாரிகளும் ஓட்டுப்பொறுக்கிகளும் நிர்வாகத்திற்கு ஆதரவாக ஆலையை தொடர்ந்து இயக்குவதற்காக பேசிக்கொண்டு உள்ளனர். இவர்கள் மக்களுக்கானவர்களா?

கோவிலூர் டி.சி.பி.எல் ஆலையை மூடு
ஆலையினை நிரந்தரமாக மூட வேண்டும் என்று மக்கள் சாலை மறியல் செய்தால் அதிகாரிகளும் ஓட்டுப்பொறுக்கிகளும் நிர்வாகத்திற்கு ஆதரவாக ஆலையை தொடர்ந்து இயக்குவதற்காக பேசிக்கொண்டு உள்ளனர்.

ஆபத்து ஒன்றும் இல்லை என்று பேசுபவர்கள் ஒன்று முதலாளிகள் கையாளாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிர்வாகத்திடம் காசு வாங்கியவர்களாக இருக்க வேண்டும். இன்றைக்கு ஆபத்து இல்லை என்று பேசுபவர்கள் 1984-ல் போபால் விசவாயு கசிவிற்கு முன்பும் இதேபோல் தான் பேசினார்கள்

இங்கு ஏற்கெனவே கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த 800 ஏக்கர் விவசாய நிலங்கள் விளைவதற்கு தகுதியில்லாமல் அழிந்து போய் உள்ளன. இந்த ஆலையிலிருந்து வெளிவரும் நச்சுக்காற்றால் ஆஸ்துமா, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, கருக்கலைதல், ஊனமுற்ற குழந்தைகள் பிறத்தல் போன்ற எண்ணற்ற பாதிப்புகள் உள்ளன. இந்த ஆலை வெடித்தால் 20 கி.மீ அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது.

இந்த ஆலை ஆரம்பத்திலிருந்து எந்த பராமரிப்பும் இல்லாமல் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் தொடர்ந்து வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், கோவிலூர் பெரிய கண்மாய் நீர் நஞ்சாகியுள்ளது. இந்த கண்மாய் நீர்தான் இங்கு ஒட்டு மொத்த விவசாயத்தையும் அழித்துள்ளது.

அதுமட்டுமல்ல, காரைக்குடிக்கு நீர் ஆதாரமாக விளங்கும் சம்பை ஊற்று 5-6 வருடங்களில் வறண்டு போகும் அபாயமும் உள்ளது. ஏனென்றால், சம்பை ஊற்றின் அருகாமையில் அமைந்துள்ள ஐந்து போர்கள் மூலம் ஒரு நாளைக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கிறார்கள். காரைக்குடி பகுதிக்கு சப்ளை செய்யக்கூடிய நீரின் அளவை விட இது மூன்று மடங்கு அதிகம். எனவே, தண்ணீர் தட்டுப்பாடு அபாயமும் உள்ளது.

ஆலை ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறது என்று நினைத்தால் அது நம்மை நாமே தற்கொலை செய்வதற்கு சமம். ஆதலால் இந்த ஆலை மூடப்பட வேண்டும். இதை மூடும் வரை எமதுபோராட்டம் தொடரும்” என்று தலைமையுரையினை முடித்தார்

கோவிலூர் டி.சி.பி.எல் ஆலையை மூடு
பேச்சு வார்த்தை அல்ல எங்கள் கோரிக்கை. ஆலையை நிரந்தரமாக இழுத்து மூடு என்பதே எங்கள் கோரிக்கை

அடுத்ததாக பு.ஜ.தொ.மு சிவகங்கை பகுதியை சேர்ந்த தோழர் கணேசன் பேசும் போது,

“1984-ல் போபால் ஆலை வெடித்தது; 25,000 பேர் இறந்தனர்; ஐந்து லட்சம் மக்கள் பாதிப்படைந்தனர். 25 ஆண்டுகளாக போராடியும் இன்று வரையும் நிவாரணம் வழங்கவில்லை. ஆனால், அந்த ஆலை முதலாளியை காங்கிரசு அரசின் ராஜீவ் காந்தி அமெரிக்காவிற்கு அரசு செலவில் அனுப்பி வைத்தார். அந்த பாதிப்புகள் பல ஆண்டுகள் கழித்தும், இன்றும் ஊனமுற்ற குழந்தை பிறப்பது என்பது தொடர்கதையாகியுள்ளது. அதே போல், இந்த ஆலையும் வெடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று பேசினார்.

பு.ஜ.தொ.மு தோழர் சரவணன் பேசும் போது, “பல தொலைக்காட்சிகள் வர்றாங்க. ஏதாவது ஒன்று இந்த ஆலைக்கு எதிரான விசயங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து ஒளிபரப்ப தயாரா? இங்கு எவ்வளவு பத்திரிகைகள் வந்து பக்கம் பக்கமா எடுத்துட்டு போறாங்க. ஆனால் நாளைக்கு ஒரு வரி கூட வராது. ஏனென்றால் அரசு ஆலை முதலாளியுடன் நேரடியாக தொடர்பு கொண்டு கொல்லைப்புறம் வழியாக வாங்கிக்கொண்டு போய் விடுவார்கள். இது போக, மக்கள் போராட்டம் தன்னெழுச்சியாக வந்து விடக்கூடாது என்பதும் காரணம்.

நியாயமான போராட்டம் வேண்டும் என்றால் ஓட்டுக்கட்சிகளை தூக்கி எறிந்து விட்டு புரட்சிகர இயக்கங்களில் அணிதிரள்வோம், இவர்கள் தான் மக்களுடன் இறுதிவரை இருப்பார்கள்” என எழுச்சியாக பேசி உரையினை நிறைவு செய்தார்.

கோவிலூர் டி.சி.பி.எல் ஆலையை இழுத்து மூடு
மக்களுக்கு சிக்கனம் கற்பிக்கும் போது இங்கே உடையாருக்கு 30 லட்சம் லிட்டர் தண்ணீரை வாரி வழங்குகிறார்கள். ஈரத்துணியை உடம்பை துடைத்தால் அதுகூட குளியல் தான். அதையும் விள்ம்பரம் பண்ணுங்களேன்.

அடுத்து பு.ஜ.தொ.மு காரைக்குடி நகர அமைப்பாளர் தோழர் கல்யாணகுமார் பேசும் போது, “கெமிக்கல் ஆலை துவங்கும் போது இந்த பகுதியில் உள்ள இப்போது 45 வயது நிரம்பியவர்கள் பலர் 6, 7 வயது சிறார்களாக அப்போது இருந்தார்கள். அந்த காலகட்டத்தில், பால்மணம் மாறாத சிறார்களிடம் கூட இரண்டு ரூபாய் சலைவைத்தாள் கொடுத்து கையொப்பம், கைநாட்டு வாங்கி உள்ளனர். ஆலைக்கு தடையில்லா சான்று வாங்க எவ்வளவு கேவலமான அணுகுமுறைகளை கையாண்டுள்ளனர் இந்த அதிகாரிகள். இவர்கள் தான் நம்ம பிரச்சனையை தீர்ப்பார்களாம்.

என்று மக்களை போராட அறைகூவி அழைத்து தன் உரையை முடித்தார்.

அதன் பிறகு பு.ஜ.தொ.மு இராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராசன் பேசியதாவது

“கோவிலூர் அருகாமையில் உள்ள பாதாரகுடியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து வரும் தகவலின்படி இங்கு பிறக்கும் 90% சதவீதம் குழந்தைகள் மூச்சு இறைப்புடன் பிறக்கின்றனர். மேலும், கருக்கலைப்பு ஏற்படுகிறது, ஆண்மைக் குறைவு உள்ளது என்று மாவட்ட சுகாதார ஏட்டிலே பதிவாகி உள்ளது. இதற்கான ஆதாரங்களை கேட்கும் போது தர மறுக்கிறார்கள். ஏனென்றால், ஒட்டுமொத்த அரசின் உறுப்பும் முதலாளிகளுக்காகத்தான் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மண் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு ஆய்வு செய்யும் இடத்தில் பொய்யான முகவரியையும் கொடுக்க வேண்டி உள்ளது. உண்மையான முகவாரியை கொடுத்தால் சரியாக ஆய்வு செய்வார்களா? மாட்டார்கள் என்பதே உண்மை

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் என்ன? அவை தயாரிக்கபடும்போது ஏற்படும் தீமை என்ன? என்பதையெல்லாம் ஆய்வு செய்து அது மக்களுக்கு அதிகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றால் அந்த ஆலைகளை அனுமதிக்க முடியாது என்று கூறி தடுத்துதானே இருக்க வேண்டும். அதை மாசுக்கட்டுபாட்டு வாரியம் செய்யவில்லை. பின் எதற்கு இத்துறை?

1984-ல் போபால் விசவாயு கசிவின் போது ஆலையினுள் இருந்த யாரும் சாகவில்லை. ஆலையின் வெளியில் இருந்த 25,000 சாதாரண மக்கள் தான் இறந்தார்கள். இதன் காரணம் என்ன? ஆலை வெளியில் உள்ள மக்கள் தொழிற்சாலையில் என்ன தயாரிக்கிறார்கள், விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது என்பது எதுவும் தெரியாது. இப்பிரச்சனைகளை கூறினால் மக்கள் ஆலையை இயங்க விடமாட்டார்கள் என எண்ணி திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இதன்பின் உள்ளது முதலாளியின் லாபவெறி.

இயற்கை வளக் கொள்ளைக்கெதிராக கார்மாங்குடியில் மக்கள் நடத்திய போராட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. அதிகாரிகளிடம் கூறி பயன் இல்லை என்று ஆற்றில் இறங்கி முற்றுகையிட்டு தடுத்தார்கள் மணற்கொள்ளையினை. அதைப்போன்ற போராட்டம் தான் இங்கு தேவை” என்பதை விளக்கினார்.

இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைசெயலாளர் தோழர் காளியப்பன் ஆற்றிய உரை

“உலகத்திலே பலம் வாய்ந்த இராணுவ வல்லமை பொறுந்திய நாடுகளான அமெரிக்கா, பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து போன்றவைகள் இந்த TCPL-உடன் வியாபாரம் செய்கிறார்கள். அனைத்து தொழில்நுட்பமும் கையில் வைத்திருக்கிறார்கள், அப்புறம் ஏன் சாராய உடையாரை எதிர்பார்த்து நிற்க வேண்டும்?

கோவிலூர் டி.சி.பி.எல் ஆலையை இழுத்து மூடு
பராமாரிப்பு செய்திருந்தால் அந்த கோர விபத்தை தடுத்திருக்க முடியும். அதை ஆலை முதலாளி செய்ய மாட்டான். காரணம், மக்களின் உயிரை விட அவனுக்கு லாபம் தான் முக்கியம்.

ஏனென்றால், அந்த நாட்டில் உற்பத்தி செய்தால் அந்த நாட்டு மக்கள் தடுப்பார்களோ இல்லையோ அந்த அரசு அங்கு நிறுவ அஞ்சுகிறது. அது போன்ற நாடுகள் இந்தியாவிற்கு வர காரணம் ‘இந்தியர்கள் விழிப்புணர்வற்றவர்கள், போராட மாட்டர்கள், எப்பேர்பட்ட விபத்து ஏற்பட்டாலும் அதை இந்தியர்கள் தலையில் கட்டிவிடலாம், ஏனெனில் இந்தியர்கள் உயிர் அவர்கள் நாட்டு பன்றியைவிட கேவலமானது’ எனும் எண்ணம் தான் காரணம்.

இப்படி ஒரு கட்டத்தில் தமிழ் நாட்டில் பல்வேறு தொழிற்சாலைகள் அரசின் மூலம் உருவாக்கப்பட்டன. தமிழ் நாடு அரசின் தொழிற்சாலை வளர்ச்சி கழகத்தின் சார்பில் TCPL நிறுவபட்டது. இந்த நிறுவனத்திடமிருந்து 86-களில் சாராய உடையாருக்கு தாரைவார்க்கப்பட்டது எம்.ஜி.ஆரால்..

தமிழகத்தில் முதன்முறையாக சுயநிதி கல்லூரி ஆரம்பித்து கல்வியை வியாபாரமாக்கி கொள்ளை அடிக்க உதவியது எம்.ஜி.ஆர். இந்த அயோக்கியத்தனம் மூலம் பயன் பெற்றது அயோக்கியன் உடையார். இதே எம்.ஜி.ஆர் காலத்தில்தான் டாமின் எனப்படும் அரசு கிரானைட் நிறுவனத்தை பி.ஆர்.பழனிசாமியிடம் கொடுத்தார், அதான் இன்று கிரானைட் கொள்ளை நடக்கிறது

மோடிக்கு பல அதானிகள் எப்படியோ அப்படித்தான் எம்.ஜி.ஆருக்கு உடையாரும்.

நாங்கள் இந்த ஆலையை மூட வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால், பலர் கூறலாம் தொழில் வளர வேண்டாமா என்று!

இங்கு சோடியம் ஹைட்ரோ சல்பேட் ஆண்டுக்கு 4600 MT என்ற உற்பத்தி திறன் மிகக் குறுகிய காலத்தில் 8000 MT உற்பத்தித் திறன் கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது. இப்படி பிரமாண்ட லாபம் கொண்டதாக மாற்றப்பட்ட பின்பு தான், கடந்த இரண்டுமாதத்திற்கு முன் ஏற்பட்ட விசவாயு கசிவு. அதன் பின்பு தான் நமக்கு அதில் அவ்வளவு பாதிப்புகள் என்று உணர்ந்துள்ளோம். ஆனால், ஆலையில் எவ்வளவு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எவ்வளவு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, எவ்வளவு நீர் மாசுபட்டுள்ளது. கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்பட்டால் இவ்வளவு பாதிப்புகள் அவசியம் இருக்கும்.

தோல் தொழிற்சாலையில் தேக்கி வைக்கப்பட்ட கழிவுகள் சுவரை உடைத்துக்கொண்டு 10 தொழிலாளர்களின் மீது பாய்ந்ததின் காரணமாக அவர்கள் உயிரிழந்து போனார்கள். அந்த தோல் தொழிற்சாலையில் இங்கு தயாரிக்கப்படக் கூடிய இரசாயனம் கலந்துள்ளது. இந்த ரசாயனம் தான் உணவு பதப்படுத்துவதற்கு, பேப்பர் தயாரிப்பில், மருந்து தயாரிக்க, துணிகள் தயாரிக்க பயன்படுகிறது. அத்துடன் அதன் பாதிப்புகளும் மிக அதிகம். இதை பாதுகாக்க வேண்டிய சுற்றுச்சூழல் துறைகளெல்லாம் முதலாளிகளின் பாக்கெட்டிலே என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

இப்போது TCPL தற்காலிகமாக மூடப்படுவதற்கு காரணம், ஏதோ மக்களுக்கு நல்லது செய்யத்தான் என்று எண்ண வேண்டாம், இது விபத்தின் பாதிப்பை சரி செய்வதற்கான நாடகம் தான்.

ஆலைகளில் ஏன் விபத்து ஏற்படுகிறது?

24,000 பேரை காவு கொண்ட போபாலில் கூட 15 லட்சம் ரூபாய் செலவழித்து பராமாரிப்பு செய்திருந்தால் அந்த கோர விபத்தை தடுத்திருக்க முடியும். அதை ஆலை முதலாளி செய்ய மாட்டான். காரணம், மக்களின் உயிரை விட அவனுக்கு லாபம் தான் முக்கியம். அதனால் தான் தீங்கு விளைவிக்கக்கூடிய ஆலைகளை முதலாளிகளிடம் ஒப்படைக்கக் கூடாது என்கிறோம். மாறாக அரசிடம் இருக்க வேண்டும், மக்கள் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்கிறோம்.

TCPL ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவணத்திடம் தொழில்நுட்பம் வாங்கிக்கொண்டு வந்துள்ளோம். அது மிகவும் பாதுகாப்பானது ISO தரச்சான்றிதழ் வாங்கி உள்ளோம் என்று தம்பட்டம் அடிக்கிறார்கள். ISO தரச்சான்றிதழ் ரூ 50,000 பணம் கொடுத்தால் யாருக்கு வேண்டுமனாலும் வழங்கக்கூடிய ஒரு தனியார் நிறுவனம்தான் ISO. ஜப்பானின் மிட்சுபிஷி நிறுவனம் ஒரு கொலைகார கம்பெனி அதனுடன் தான் சாராய உடையார் கூட்டு, இது தான் இவர்களின் பாதுகாப்பின் லட்சணம்.

இந்த நாட்டை கார்ப்பரேட் முதலாளிகளும் உள் நாட்டு தரகு முதலாளிகளும் வரன் முறையின்றி இயற்கை வளங்களை சூறையாடி பேரழிவை உண்டாக்குகின்றனர். இதை இந்த அரசு உடனிருந்து செய்கிறது. இந்தக் கொள்ளைக்கு எதிராக இருந்தால் அவர்கள் தான் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். இந்தக் கொள்ளை தான் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதற்கு எதிராக போராட புரட்சிகர இயக்கங்களின் கீழ் அணி திரள வேண்டும்” என்று அழைப்பு விடுத்து உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக பு.ஜ.தொ.மு பரம்பகுடி தோழர் ஆனந்த் அவர்களின் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

தகவல்
பு.ஜ.செய்தியாளர்.
சிவகங்கை.

தொடர்புக்கு
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சிவகங்கை
9443175256

கோவை ஐயர் கம்பெனி வீட்டில் தொழிலாளர் போராட்டம்

0

கோவை தடாகம் ரோட்டில் வேலாண்டிபாளையத்தில் பெஸ்ட் கம்பெனி உள்ளது. இதன் கிளைகளாக கௌரி மெட்டல், ரோட்டோரா-1, ரோட்டோரா-2, என்பெஸ்ட் என ஒரு குரூப்பாக ஒரே முதலாளியின் கீழ் உள்ளது. இதன் நிறுவனர் காலஞ்சென்ற ஜெ.கௌரி சங்கர்.

பெஸ்ட் கம்பெனி போராட்டம்
தொழிலாளிகளைச் சுரண்டும் ஐயர் கம்பெனிக்கு ஐயர் ஜனாதிபதி அளிக்கும் விருது!

இதனை மக்கள் ஐயர் கம்பெனி என்றே குறிப்பிடுவார்கள். இப்பொழுது ஐயரின் மகள் ஸ்ரீப்ரியா கம்பெனியை நிர்வாகிக்கிறார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் நிலையில் சுமார் 300 தொழிலாளிகள் நேரடியாக பணி புரிகிறார்கள்.

பெஸ்ட் கம்பெனி போராட்டம்
எட்டு மணி நேர வேலை இல்லை; இ‌எஸ்‌ஐ, பி‌எஃப், பணிக்கொடை கிடையாது;

ஐயர் கம்பெனியின் அநீதி என்னவென்றால் ஒரு தொழிலாளி கூட நிரந்தரம் செய்யப்படவில்லை; எட்டு மணி நேர வேலை இல்லை; இ‌எஸ்‌ஐ, பி‌எஃப், பணிக்கொடை கிடையாது; பொதுவாக தொழிலாளி எனும் அங்கீகாரமே இல்லை. எல்லோருமே காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் தான். காண்ட்ராக்ட் என்றால் முறைப்படி தொழிற்சாலை ஆய்வாளர் அலுவலகத்தில், தொழிலாளர் துறையிடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விபரம் கேட்டதில் யாருமே காண்ட்ராக்டர் இல்லை எனத் தகவல் வந்தது.

கோவையில் கவுண்டர், நாயக்கர் போன்ற ஆதிக்க சாதியினர் பஞ்சாலைகள், பொறியியல் தொழிற்சாலைகள் மிகப் பெரிய அளவில் நடத்துகிறார்கள். அவர்கள் எல்லாம் குறைந்த பட்சம் இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் உரிமைகளுடன் தொழிலாளி என அங்கீகரித்து சங்கம் வைக்கும் உரிமைகளையும் கொடுத்தார்கள். ஆனால், ஐயர் கம்பெனியில் மட்டும் 50 ஆண்டுகளாக எந்த சலுகைகளையும் வழங்காமல் ஏமாற்றி வந்தார். தொழிலாளர்களை ஏமாற்றியத்தில் கோவையில் ஐயர் திறமைக்கு ஈடு இணை யாருமில்லை. தொழிற்சங்க இயக்கம் கோவையில் உச்சமாக இருந்த நாட்களிலும் ஐயர் மிகச் சாமர்த்தியமாக செயல்பட்டு எல்லா ஓட்டுக் கட்சிகளுக்கும் முறையாக தேர்தல் நிதி கொடுத்து, கோயில்களுக்கு குடமுழுக்குகள் நடத்தி தொழிலாளர்களை அட்டைப்பூச்சி போல உறிஞ்சி மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்தார். இதர ஆதிக்க சாதி முதலாளிகளை வியக்க வைத்தார். தற்போது அவரது மகளும் அதே பாணியில் நடத்துகிறார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விபரம் கேட்டதில் யாருமே காண்ட்ராக்டர் இல்லை எனத் தகவல் வந்தது.

[கடிதங்களை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

இ‌.எஸ்‌.ஐ, பி‌.எஃப் உரிமைகளும் கூட தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு வில் இணைந்த பிறகுதான் 2015 ஜனவரியில் தான் கிடைத்தது. 480 நாட்கள் வேலை செய்தால் நிரந்தரம் எனும் சட்டம் உள்ளது. ஆனால் ஐயர் கம்பெனியில் 4800 நாட்கள் வேலை செய்தாலும் நிரந்தரம் கிடையாது.

கோவை பெஸ்ட் கம்பெனி போராட்டம்
எங்களைத் தொழிலாளர்கள் என அங்கீகரிக்க வேண்டும். மாதச் சம்பளம் வேண்டும். இ‌.எஸ்‌.ஐ கார்டு வேண்டும். பி‌.எஃப் ரசீது வேண்டும.

இந்நிலையில் பெஸ்ட் கம்பெனியின் சங்கமாக இணைந்த தொழிலாளர்கள் மட்டும்,

  • எங்களைத் தொழிலாளர்கள் என அங்கீகரிக்க வேண்டும்.
  • மாதச் சம்பளம் வேண்டும்.
  • இ‌.எஸ்‌.ஐ கார்டு வேண்டும்.
  • பி‌.எஃப் ரசீது வேண்டும

என பு.ஜ.தொ.மு தலைமையில் போராட்டத்தில் இறங்கினார்கள். உடனே முதலாளி ஸ்ரீப்ரியா தொழிலாளர்களை பிரித்தாளத் துவங்கினார். இருந்தாலும் அஞ்சாமல் தொழிலாளர்கள் கம்பெனி கேட் முன்பு பந்தல் அமைத்து இரவும் பகலும் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு வெயில் மழையை பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள். இன்றோடு போராட்டம் 18-வது நாளை எட்டியுள்ளது.

கோவை பெஸ்ட் கம்பெனி போராட்டம்
கம்பெனி கேட் முன்பு பந்தல் அமைத்து இரவும் பகலும் அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு வெயில் மழையை பொருட்படுத்தாமல் போராடி வருகிறார்கள்.

தொழிலாளர் துறையில் தொழிற் தகராறு கிளப்பினால் நிர்வாகம் வருவதே இல்லை. தொழிலாளர் துணை ஆணையரும் வாய்தாவுக்கு வாய்தா என இழுத்தடித்து வருகிறார். முதலமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர் சகல இடங்களிலும் முறைப்படி புகார் தெரிவிக்கப்பட்டுவிட்டாயிற்று. அவர்களும் வழக்கம் போல் வாங்கி வைத்துவிட்டு ஆறுதலாக சில வார்த்தைகளைக் கூறி அனுப்பி வைக்கிறார்கள்.

கடந்த மாதம் கௌரி மெட்டல் கிளையில் மெஷினில் சிக்கி ஒரு தொழிலாளியின் ஆட்காட்டி விரலும் நடுவிரலும் துண்டானது. அதனையொட்டி இ‌.எஸ்‌.ஐ தென் மண்டல அலுவலகத்தில் புகார் செய்த பிறகுதான் போராடியவர்களுக்கு இ‌.எஸ்‌.ஐ உரிமையே கிடைத்தது. 50 ஆண்டுகளாக இ‌.எஸ்‌.ஐ கூட இல்லாமல் ஆட்டையைப் போட்டது ஐயர் கம்பெனி.

கோவை பெஸ்ட் கம்பெனி போராட்டம்
50 ஆண்டுகளாக இ‌.எஸ்‌.ஐ கூட இல்லாமல் ஆட்டையைப் போட்டது ஐயர் கம்பெனி..

இனிமேலும் பொறுப்பதற்கில்லை, மோதுவோம் என முடிவெடுத்து ஏப்ரல் 10-ம் தேதியிலிருந்து வேலை நிறுத்தம் துவங்கியது. உடனே அன்று மாலை ஆறு மணிக்கு பத்து ஐயர்கள் கம்பெனிக்குள்ளேயே யாகம் வளர்த்தனர். அது இன்று வரை தொடர்கிறது. மாலை ஆறு மணி முதல் 7 மணி வரை யாகம் நடத்த ஒரு ஐயருக்கு கூலி 175 ரூபாய். அது போக சாப்பாடு போன்ற சலுகைகள் உண்டு. இப்படியாக ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து யாகம் நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேலைகள் நடக்கிறது. ரவுடிகளுக்கு பணம் கொடுத்து தொழிலாளர்களை ஒடுக்க முயற்சித்தனர். ஓட்டுக்கட்சி ரவுடிகளும் பு.ஜ.தொ.மு சங்கம் என்றவுடன் ஒதுங்கிக் கொண்டனர்.

கோவை பெஸ்ட் கம்பெனி போராட்டம்
ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்து யாகம் நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேலைகள் நடக்கிறது.

இறுதியாக, தொழிலாளர்கள் குடும்பத்தினர் 27-ம் தேதி காவல்துறையில் தகவல் தெரிவித்து முதலாளி ஸ்ரீப்ரியா வீட்டுக்குள் புகுந்து போராட்டம் நடத்தினார்கள். சாய்பாபா காலனி காவல் துறை மூன்று வேன்களோடும், ஜீப்புகளோடும், 50-க்கும் மேற்பட்ட காவலர்களோடு களம் புகுந்தனர். உளவுப் பிரிவு போலீசாரும் படை பரிவாரங்களோடு வந்தனர். தொழிலாளர்களின் மனைவிமார்கள் அனைவரும் ஒரு சேர அறிவித்துவிட்டனர். “எங்களை கைது செய்தாலும் கவலையில்லை. தாராளமாக செய்து கொள்ளுங்கள், சிறைக்கு செல்லத் தயார்” என அறிவித்தவுடன் காவல் துறை ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் அமைத்து காத்து வருகின்றனர்.

கோவை பெஸ்ட் கம்பெனி போராட்டம்
தொழிலாளர்கள் குடும்பத்தினர் 27-ம் தேதி காவல்துறையில் தகவல் தெரிவித்து முதலாளி ஸ்ரீப்ரியா  வீட்டுக்குள் புகுந்து போராட்டம் நடத்தினார்கள்.

பெண்களும், “எங்களிடம் ஸ்ரீபிரியா மேடம் பேச வேண்டும். பிரச்சினையை முடிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர். முதலில் முடியாது என்று மறுத்த மேடம் கடைசியில் பணிந்து “நாளை பேச்சு வார்த்தை நடத்தலாம். வாருங்கள்” என அழைப்பு விடுத்த காரணத்தால் காலை 10 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்தது. “நாளையும் முதலாளி வழக்கம் போல் ஏமாற்றுவார் எனத் தெரிந்தால் பிரச்சினை முடியவில்லை என்றால் நாளை மறுநாள் வருவோம்” என மிரட்டி விட்டு வந்துள்ளனர்.

போட்டோகிராபர் ஜாய்
தொழிலாளிகளின் ஒவ்வொரு செயலையும் படம் பிடிக்க ஜாய் என்னும் நபரை வேலைக்கு வைத்துள்ளார் ஸ்ரீப்ரியா.

கோவையில் செயல்படும் சங்கங்கள் அதிகபட்சமாக அதுவும் சி‌.ஐ‌.டி‌.யு வினர் காதில் பூ வைக்கும் போராட்டம், ஒப்பாரி போராட்டம், நாமம் போடும் போராட்டம், அரை நிர்வாணப் போராட்டம் என தொழிலாளர்களை இழிவுபடுத்தும் போராட்டங்களைத் தான் நடத்துவார்கள். ஆனால், நம்முடைய முற்றுகைப் போராட்டம் கம்பெனி அமைந்துள்ள வேலாண்டிபாளையத்தை கலக்கி எடுத்தது. கடந்த பத்து நாட்களாக தோழர்கள் முழக்கங்கள் பொறித்த மேலங்கி அணிந்து வீடு வீடாக பிரச்சாரம் செய்து நிதியும் வாங்கி வருகிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி உள்ளது. இதனால் கம்பெனி சார்பில் மிகப் பிரமாண்டமான கட் அவுட் வைத்து தன்னிலை விளக்கம் தரும் அளவுக்கு நமது தோழர்கள் பிரச்சாரம் வீச்சாக நடைபெற்று வருகிறது. இவை போக கம்பெனி முன்பு அமர்ந்துள்ள தொழிலாளிகளின் ஒவ்வொரு செயலையும் படம் பிடிக்க வேலாண்டிபாளையத்தில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ள ஜாய் என்னும் நபரை வேலைக்கு வைத்துள்ளார் ஸ்ரீப்ரியா. அவனும் சிறிதும் கூச்சமின்றி கம்பெனி முன்பு கேமராவோடு நின்று கொண்டிருக்கிறான்.

நமது தோழர்களின் முழக்கங்கள் பொறித்த மேலங்கி பிரச்சாரம் மக்களிடையே நல்லபடியான விளைவுகளை தோற்றுவித்தது. படித்த அனைவரும், “ஐயர் கம்பெனி இவ்வளவு மோசமாகவா நடக்குது..?” என கேள்வி எழுப்புகிறார்கள். கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி மக்களை ஏமாற்றி வந்த கும்பல் தற்போது பிளக்ஸ் வைத்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாக்கி உள்ளோம்.

கோவை பு.ஜ.தொ.மு பெஸ்ட் கம்பெனி
கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி மக்களை ஏமாற்றி வந்த கும்பல் தற்போது பிளக்ஸ் வைத்து விளக்கம் கொடுக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாகியுள்ளது.

சி‌ஆர்‌ஐ தொழிலாளர்கள் ஒரு புறம் போராட பெஸ்ட் தொழிலாளர்கள் மறுபுறம் போராட பு.ஜ.தொ.மு கோவைத் தொழிலாளி வர்க்கத்திடையே நம்பிக்கையை உருவாக்கி வருகிறது. மாநகர காவல் துறையும் ஏதாவது அசம்பாவிதம் நடக்காதா..? என கடுமையான கோபத்துடன் காத்திருக்கிறது. நாமும் என்ன ஆனாலும் பின்வாங்கப் போவதில்லை என உறுதியுடன் உள்ளோம். போராட்டம் எனும் உலைக்களத்தில் தான் பு.ஜ.தொ.மு புடம் போடப்படும் என ஆவலாய் உள்ளோம்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மே நாள் சூளுரை : ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்

1

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

இந்த ஆண்டு மேதினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையை உழைக்கும் வர்க்கத்தின் முன் வைக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கு சவால்விட்டு, தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டங்களைத் தொடுக்குமாறு கோருகிறது.

ndlf-may-day-notice-sliderஆம், நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் தீராத, மீள முடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப்போய், எதிர்நிலை சக்திகளாக (Bankrupted, Failed, Collapsed, and Opposite force) மாறி விட்டன. அவை மேலும் முன்னோக்கி நகர முடியாமல், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டன. ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத சுமையாகப் போய்விட்டன. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்? இதுதான் இப்போது நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கேள்வியாகும்.

மத்தியில் பிரதமர், மாநிலத்தில் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாநிலத் தலைமை போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் ஆகிய உயர்பதவி வகிப்பவர்களே கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இருந்த போதிலும், இவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது நியமிக்கப்படுகிறார்கள். இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட இந்தக் கிரிமினல் குற்றவாளிகளிடமே இரகசிய ஆவணங்களையும், அதிகாரத்தையும் கொடுத்து நாட்டை ஆளும் நிலை நிலவுகிறது.

நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் தீராத, மீள முடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப்போய், எதிர்நிலை சக்திகளாக (Bankrupted, Failed, Collapsed, and Opposite force) மாறி விட்டன.

உளவுத்துறை, போலீசு, நீதிமன்றங்கள் ஆகிய குற்றத்தடுப்பு அரசு அதிகார அமைப்புகளை இந்தக் கிரிமினல் குற்றவாளிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். நாட்டின் குடிமக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாக, எங்கும் நீக்கமற நிறைந்து, வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாக அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் அடக்குமுறை நிறுவனங்கள் உள்ளன. இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகார அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைத்தால், அவர்களைத் தண்டிப்பதற்கு உச்சநீதிமன்றமே அஞ்சுகிறது. நீதிபதிகளோ பாலியல், கிரிமினல் குற்றவாளிகளாக, ஊழல் கிரிமினல் கும்பல்களின் எடுபிடிகளாக, நீதியே விற்பனைச் சரக்காக என்று நிர்வாணமாகி நிற்கிறது நீதித்துறை.

எங்கும் எதிலும் சட்டவிதிகள், நீதியின்படியான அரசு நிர்வாகம் கிடையாது. சட்டவிதிகளும், நீதியும் மக்களுக்கு எதிரானவையாக உள்ளன. அரசு நிர்வாகம் முழுவதிலும் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் நிரம்பி வழிகின்றன. அரசியல் அமைப்பு முழுவதும் கிரிமினல்மயமானதாகி விட்டது. கிரிமினல் குற்றக் கும்பல்கள், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள், போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு, சிவில் சமூகத்தின் மீது ஏறி மிதித்து, முற்று முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.

அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படைப் பொதுச் சுகாதாரம், மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு ஆகியவை எல்லாம் கானல்நீராகவே உள்ளன. இவை இன்று கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல்களின் மற்றும் கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டன.

நாட்டின் பொருளாதாரமோ ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக உற்பத்திப் பின்னடைவு, தேக்கவீக்கம், அந்நிய செலாவணிப் பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாத கடும் நெருக்கடிக்குள் சிக்கி விட்டது. அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படைப் பொதுச் சுகாதாரம், மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு ஆகியவை எல்லாம் கானல்நீராகவே உள்ளன. இவை இன்று கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல்களின் மற்றும் கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டன. கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக விவசாயிகள், மீனவர்கள், பழங்குடி மக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. காடுகள், மலைகள், கடல், நிலம், நீர்நிலைகள், ஆகாயம் ஆகிய எல்லா வளங்களும் நாட்டின் பொருளுற்பத்திக்குப் பயன்படுவதைவிட, பன்னாட்டு உள்நாட்டு ஏகபோகங்களின் கொள்ளையின் பொருட்டு சூறையாடப்படுகின்றன. உழைக்கும் மக்களோ கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.

ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச்சிறுபான்மையினர் மீது பார்ப்பனப் பாசிச பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன. சாதி, மதவெறி அமைப்புகள் பார்ப்பன பாசிசத்தின் தலைமையிலான இணை அதிகார மையங்களாக வளர்ந்து வருகின்றன.

ஒடுக்கப்படும் சாதியினர், மதச்சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்க முடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரிகத்தின் உச்சநிலையை எட்டிவிட்டன. நாட்டின் சமூக பண்பாட்டு விழுமியங்கள், அமைப்புக் கட்டுமானங்கள் முழுவதும் நொறுங்கி விழும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல்வெறித் தாக்குதல்கள் காரணமாக மக்கள்தொகையில் முக்கால் பங்குக்கும் மேலானவர்கள் வாழத்தகுதியற்றதாக நாடு மாறிவிட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச்சிறுபான்மையினர் மீது பார்ப்பனப் பாசிச பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன. சாதி, மதவெறி அமைப்புகள் பார்ப்பன பாசிசத்தின் தலைமையிலான இணை அதிகார மையங்களாக வளர்ந்து வருகின்றன.

ndlf-may-day-bannerஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு மேலும் விரிவாக ஆய்வு செய்தால், நாட்டின் ஒட்டுமொத்தச் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளதை எவரும் எளிதில் காணமுடியும். ஆளும் வர்க்கங்களும், அரசும், ஆட்சியாளர்களும் இவை எவற்றையும் தீர்க்க முடியாமல் திணறுவதையும் சிக்கித் தவிப்பதையும் காண முடியும். அவர்களின் கையாலாகத்தனத்தையும் தோல்வியையுமே இவை காட்டுகின்றன.

இந்தக் கட்டமைப்பைத் தாங்கிப் பிடிக்கின்ற, மக்களிடம் நியாயப்படுத்தி அங்கீகாரம் பெற்றுத் தந்துவந்த சித்தாந்தங்களும், அரசியல் கொள்கைகளும், பண்பாட்டு நெறிமுறைகளும், நீதி நெறிமுறைகளும், அரசியல் சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் கூட திவாலாகி, தோற்றுப்போய் விட்டன என்பதையும், சித்தாந்த, அரசியல், பண்பாட்டு ஆயுதங்கள் கருவிகள் எல்லாவற்றையும் பிரயோகித்துப் பார்த்தும் நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் நாடு மென்மேலும் நெருக்கடி எனும் கருந்துளைக்குள் (blackhole) போயக் கொண்டிருக்கும் பரிதாப நிலையையுமே இவை வெளிச்சம் காட்டுகின்றன.

இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணும் ஆயுதங்கள், கருவிகள் எதுவுமின்றி நிற்கின்ற ஆளும் வர்க்கங்களும் அதன் பல்துறை வல்லுனர்களும், சித்தாந்தவாதிகளும் அரசியல்வாதிகளும் இனி ஆளத் தகுதியற்றவர்களாக, நிர்வாகம் நடத்த வக்கற்றவர்களாக, சித்தாந்த அரசியல் ஓட்டாண்டிகளாக ஆகிவிட்டனர் என்பதையும், ஆள்வதற்கு மக்களிடமிருந்து பெற்ற நியாயவுரிமைகளை அவர்கள் தக்கவைக்க முடியாமல் முற்றிலும் அம்பலமாகி நிற்கிறார்கள் என்பதையும்தான் இது தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.

இவை அனைத்தும் கூறுகின்ற செய்தி இதுதான். நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஒரு உச்சநிலையை எட்டிவிட்டன. அரசும், ஆளும் வர்க்கங்களும் ஆளும் தகுதியை இழந்துவிட்டன. இனி தனித்தனிச் சிக்கல்களுக்கு தனித்தனி தீர்வுகளும் கோரிக்கைகளும், முழக்கங்களும் முன்வைத்து தனித்தனி இயக்கங்கள் நடத்தித் தீர்வுகாண முடியாது. இந்தக் கட்டுமானங்கள் எவையொன்றையும் சீர்திருத்தவும் முடியாது.

நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகள்
தற்போதைய அரசியல் கட்டமைப்புக்கு
வெளியேதான் உள்ளன!

அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின்
அதிகாரத்தைத் தட்டிக் கேட்க
வேண்டும்!

அவர்களின் அதிகாரத்துக்கு
சவால்விட வேண்டும்!

தங்களுக்கான அதிகார அமைப்புகளை
மக்கள் தாமே கட்டி எழுப்ப வேண்டும்!

மே நாள் சூளுரை :

ஆளும் அருகதையற்ற
அரசுக் கட்டமைப்பை
வீழ்த்துவோம்!

மக்கள் அதிகாரத்தை
நிறுவுவோம்!

மேதின பேரணி – ஆர்ப்பாட்டம்

1. தருமபுரி 

[போஸ்டர்களை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

பேரணி துவங்குமிடம் : வேல் பால் டிப்போ அருகில் நேரம் : மாலை 3 மணி
பேரணி தலைமை : தோழர்.பரசுராமன், மாநிலத் துணைத் தலைவர், பு.ஜ.தொ.மு

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : BSNL அலுவலகம் அருகில்.
ஆர்ப்பாட்டத் தலைமை : தோழர்.கோபிநாத், வட்டாரச் செயலாளர், வி.வி.மு., பென்னாகரம்.
சிறப்புரை:
தோழர்.முத்து, வி.வி.மு
.
தோழர்.ராஜா, மாவட்ட அமைப்பாளர், பு.மா.இ.மு., தருமபுரி.
நன்றியுரை: தோழர்.சிவா, வட்டாரக் குழு உறுப்பினர், வி.வி.மு., பென்னாகரம்.

சுவர் விளம்பரங்கள்

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

விவசாயிகள் விடுதலை முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்

2. புதுச்சேரி

ndlf-may-day-posterதகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் – புதுச்சேரி

3. கோவில்பட்டி

may-day-2015-kovilpatti

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி

4. சென்னை

மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம்

பேரணி துவங்குமிடம் : ஜேம்ஸ் கல்லறை – கல்லறைப் பேருந்து நிறுத்தம் அருகில், பூந்தமல்லி

ஆர்ப்பாட்டம் : அம்பேத்கர் சிலை – நீதிமன்றம் அருகில், பூந்தமல்லி

தலைமை : தோழர் சிவா, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர், புதிய ஜனநாயகத்  தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு

சிறப்புரை : தோழர் விஜயகுமார், மாநிலப் பொருளாளர், புதிய ஜனநாயகத்  தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு

நேரம் : காலை 10 மணி நாள் : 01-05-2015 வெள்ளிக்கிழமை

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்

ஜெயாவுக்கு தேள் கொட்டினால் தினமணிக்கு நெறி கட்டும்

6

conspiracy-theory-caution_0ன்னர்களுக்கு தேள் கொட்டினால் அரசவைப் புலவர்களுக்கு நெறிகட்டுவது தமிழ் மரபு. என்ன இருந்தாலும் அண்டிப் பிழைப்பதில் உள்ள சுகமும், பாதுகாப்பும், எலும்புத் துண்டும் நேர் வழியில் இல்லை அல்லவா?

அவ்வழியில் பவானி சிங் நியமனம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை ஒட்டி ஏகப்பட்ட சட்ட, சாத்திர, சாணக்கிய வாதங்களை அடுக்குகிறார், தினமணியின் வைத்தி.

சாரமாகச் சொன்னால் ஒரு வன்புணர்ச்சி நடைபெறுகிறது என்று வையுங்கள்! நாமெல்லாம் புணர்ந்தவனை பொளந்து கட்ட பொங்கியெழும் போது, பொறுக்கியை காப்பாற்றும் முகமாக அவனைப் பற்றி இல்லாதது, பொல்லாததையெல்லாம் இட்டுக்கட்டி நல்லவனாக்கும் கிரிமினல் லாயர் சூட்கேஸ் சகிதம் வருவார்கள் அல்லவா! அரசவைப் புலவர் வைத்தியும் அப்பேற்பட்ட லாயரின் வாயைக் கொண்டிருக்கிறார்.

பவானி சிங் நியமனம் தவறு என்றாலும் மறு விசாரணை தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பதை வைத்தி மாமா முதலில் எடுத்து வைக்கிறார். இது தீர்ப்பு குறித்த விளக்கம் என்று இன்னும் தினமணியின் நடுநிலை வேடத்தை நம்பும் கோயிந்துகள் நம்பலாம்.

ஆனால், அந்த விளக்கத்தினுள்ளே மாபெரும் அர்த்த சாஸ்திரத்தின் பொழிப்புரை மறைந்துள்ளதை அடுத்து வரும் பத்திகளில் அசால்ட்டாக பிட்டு வைக்கிறார் சாணக்கிய வைத்தி.

போயஸ் தோட்டத்து மந்திரவாதி வைத்தி
போயஸ் தோட்டத்து மந்திரவாதி வைத்தி

ஒரு வழக்கில் வாதம் புரியும் அரசு வழக்குரைஞர் அந்த வழக்கின் மேல்முறையீடுகளிலும் வாதிடலாம் என்று குற்றவியல் சட்டப் பிரிவு 301 சொல்கிறதாம். இதைத்தான் நீதிபதி பானுமதி ஏற்று பவானி சிங் நியமனம் தவறில்லை என்று குறிப்பிட்டதாக எழுதுகிறார் வைத்தி. தற்போது உச்சநீதிமன்றத்தின் மூவர் அமர்வு இந்த நியமனத்தை தவறு என்று தீர்ப்பளித்திருப்பதை இப்படி மறைமுகமாக மறுக்கிறார் மாமா. இருப்பினும் நீதியின் தீர்ப்புக்கு வணங்குவதாக கூறி அவமதிப்பு வழக்கு அபாயங்களிலிருந்தும் காத்துக் கொள்கிறார்.

அதே நேரம் இந்தத் தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம்தான் சுயமுரண்பாட்டோடு நடந்துள்ளதாக அடுத்து நிரூபிக்கிறார். அதாவது, இந்த மேல்முறையீட்டு வழக்கு முழுவதும் 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதே உச்சநீதிமன்றம்தானாம். அதைத்தான் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி குறிப்பிட்டு, அன்பழகனது மனுவை நிராகரித்தாராம்.

இதன்படி ஒரு வழக்கு எத்தனை காலத்திற்குள் நடக்க வேண்டும் என ஒரு நீதிமன்றம் முடிவெடுத்து விட்டால் பிறகு குற்றவாளியே அரசு தரப்பில் வாதாட வழக்குரைஞரை நியமிப்பதெல்லாம் பிரச்சினை இல்லையாம். எதற்கு இப்படி சுற்றி வளைக்க வேண்டும் வைத்தி சார்? ஜெயலலிதாவையோ இல்லை வைத்தியையோ நீதிபதியாக்கினால் ஒரு விநாடியில் வழக்கு முடிந்து விடுமே! பக்கத்து இலை பாயாசம் மற்றும் பங்சுவாலிட்டி மேல என்னமா ஒரு லவ்வு………

சொத்துக் குவிப்பு வழக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏன் உத்திரவிட்டது? இந்த வழக்கை இந்தியாவிலேயே இப்படி ஒரு முன்னுதாரணம் இல்லாத அளவுக்கு ஆயிரெத்தெட்டு வழிகளில் இழுத்தடித்தது யாராய்யா? வாய்தா ராணி என்று பட்டமே இங்கு பொன்னெழுத்தில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டதெல்லாம் வைத்திக்கு புரியாது என்றால் அவருக்கு பிடித்திருப்பது பைத்தியமா இல்லை பக்தியா?

எந்த மாநிலத்தில் வழக்கு நடைபெறுகிறதோ அந்த மாநிலம்தான் வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என்றால் அப்படி நியமிக்காத கர்நாடக அரசைத்தான் நீதிமன்றம் கண்டித்திருக்க வேண்டுமாம். மாறாக தமிழக அரசை கண்டிருத்திருப்பது கண்டு பூணுல் சிவக்கக் கேட்கிறார் தினமணி வைத்தி.

conspiracy-theoriesஇதன்படி சொத்துக்குவிப்பு வழக்கில், ஏதோ நல்ல மனது காரணமாக கிடைக்கும் சொத்துக்களை குவித்து விட்ட  தோழிகளுக்கு பதில் அந்த சொத்துக்களை வம்படியாக திணித்த தொழிலதிபர்களைத்தான் டின் கட்டியிருக்க வேண்டும். ஒரு வீட்டிற்குள் பீரோ இருப்பதால்தான் பீரோ புல்லிங் திருடன் திருடுகிறான். இதற்கு பீரோ உரிமையாளரை கைது செய்யாமல் திருடியவரை கைது செய்வது நியாயமா என்று கேட்கிறார் நிமிர்ந்த நன்னடைக்கு சொந்தம் கொண்டாடும் மாமா.

சொல்லப் போனால் அம்மா அரசை கண்டித்திருக்கும் வாசகங்களை மேன்மை தாங்கிய நீதிபதிகள் பதிவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்று போல்டாக போடுகிறார். போயஸ் தோட்டத்திற்காக இப்படி மானங்கெட்டு போனாலும் உச்சநீதிமன்றத்தை எதிர்க்கும் தைரியம் வைத்தி மாமா அல்லாது யாருக்கு வரும்? ஒரு வேளை சோ-வுக்கு வரலாம்.

பவானி சிங்கின் வாதங்களை புறக்கணித்து விட்டு, நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்ட முற்பட்டிருப்பது  அந்த நீதிபதியின் (குமாரசாமியின்) கௌரவத்தை குலைப்பதாகாதா என்று சீறுகிறார் நிலத்தில் அஞ்சாத நெறிகளுக்கு சொந்தக்காரரான வைத்தி.

ஜெயா எனும் ஊழல் பெருச்சாளியின் வழக்கை ஒரு மாபெரும் ஊழல் பிரச்சினையாக கருதியே தீர்ப்பளிக்க வேண்டும் என்ற தொனியில் நீதிமன்றம் கூறியிருப்பதைத்தான் இப்படி சாடுகிறார். இது நீதிபதி குமாரசாமியின் மீதான அக்கறையா இல்லை அம்மாவை அண்டிப்பிழைத்து வாழும் ஒரு அற்பத்தின் வியாக்கியானமா என்று யாருக்கும் குழப்பம் வரவே வராது.

ஏனெனில், உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வழங்கிய பிறகு மேல்முறையீட்டில் அந்தத் தீர்ப்பின் குறைகளை சுட்டிக் காட்டி, சரியான புரிதலுடன் –  அப்ஃளிகேஷன் ஆஃப் மைண்ட் – தீர்ப்பு எழுதப்படவில்லை என்று கூற உச்சநீதிமன்றத்திற்கு உரிமை இருக்கிறதாம். மாறாக, அந்த சுட்டிக்காட்டலை இப்போதே செய்ய நினைப்பது தவறான முன்னுதாரணம் என்று கன்னம் பழுக்க பேசுகிறார் ஜென்டில்மேன் வைத்தி.

என்ன செய்ய! நீதித்துறை என்பதே ஆதித்யா சேனலில் வரும் வண்டு முருகனது சிரிப்பு மன்றம் என்பதை சொத்துக் குவிப்பு வழக்கின் இத்தனை ஆண்டுகளில் எண்ணிறந்த முறைகளில் ஜெயா கும்பல் நிரூபித்தாலும் எச்சக்கலைகளுக்கு எப்படி புரியும்? ஜாமீனை மீனாக நினைத்த வண்டு முருகனது உதவியாளர்கள் போல, தாமதத்தை அம்மாவுக்கு எரிச்சலூட்டும் விடயங்களில் மட்டும் தேடுகிறது தினமணி.  அதன்படி ஜெயா கும்பல் தண்டிக்கப்படும் வாய்ப்பை உருவாக்குவது மட்டும் நீதித்துறையின் தவறான முன்னுதாரணமாம்.

இதே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதே ஜெயாவுக்கு சட்ட விரோதமாக பிணை வழங்கினாரே அப்போது இதே வைத்தி எந்த கோவிலுக்கு மா விளக்கு வைக்க போயிருந்தார்?

மேல்முறையீட்டில் பவானி சிங் வாதிட்டது குறித்து தி.மு.கவுக்கு பெரும் ஆட்சேபணை இருந்தாலும் அவர்களது உள்நோக்கம் புதிய வழக்குரைஞரை நியமித்து தீர்ப்பு வழங்கப்படுவதை தாமதப்படுத்துவது என்று ஜேம்ஸ்பாண்ட் போல புலனாய்வு செய்து கூறுகிறார் வைத்தி.

பவானி சிங்கை தி.மு.கவிற்கு மட்டும் பிடிக்காதாம்.
பவானி சிங்கை தி.மு.கவிற்கு மட்டும் பிடிக்காதாம்.

பவானி சிங்குதான் வேண்டுமென்று ஜெயாவின் வக்கீல் படை எல்லா நீதிமன்றங்களிலும் வேர்க்க விறுவிறுக்க போராடியதும், அதற்கு பிராயச்சித்தமாக பவானி சிங்கும் அதிக சம்பளத்திற்கு பிகு பண்ணி பிறகு நீதிபதி குமாரசாமி கேள்வி கேட்கும் போது அச்சு அசலாக தில்லானா மோகானாம்பாள் வைத்தி போல சிரித்தாரே? பாம்பின் கால் பாம்பறிய வேண்டுமே மிஸ்டர் வைத்தி?

ஜெயாவின் சொத்து முறைகேடுகளை பச்சை பச்சையாக காப்பாற்றும் முயற்சியில் பவானி சிங் ஈடுபட்டது ஏதோ தி.மு.கவிற்கு மட்டும் ஆட்சேபணை ஏற்படுத்துமென்றால் இந்த வைத்தி சார் துன்னுவது அரிசியா இல்லை நரகலா என்று கேட்பது ஒன்றும் அநாகரிகமில்லையே?

தீர்ப்பை தாமதப்படுத்துவதால் தி.மு.கவிற்கு என்ன பயன்? ஜெயாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டால் அடுத்த தேர்தலில் அ.தி.மு.கவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் தி.மு.கவுக்கு உண்டாம். அதனால்தான் வழக்கை இழுத்து தேர்தல் முடியும் வரை ஆதாயம் அடைய தி.மு.க சதி செய்கிறது என்று போயஸ் தோட்டத்து மந்திரவாதி போல ஜோசியம் கூறுகிறார் வைத்தி.

இந்த வழக்கில் தி.மு.க விற்கு என்ன ஆதாயம் என்பது இருக்கட்டும். ஜனநாயகம், அரசு, கட்சிகள், நேர்மை, நீதிமன்றம், வழக்கு, ஊழலற்ற ஆட்சி இந்த வஸ்துகளுக்கு என்ன பாதிப்பு என்பதை திருவாளர் வைத்தி ஏன் யோசிக்க வில்லை? ஊழல் குற்றவாளிகள் தண்டிக்ப்பட வேண்டும், அந்தத் தண்டனை இங்கே தவறு செய்யும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்குமென்று ஏன் முழங்க முடியவில்லை?

ஆக பவானி சிங் நியமனம் குறித்த வழக்கு தி.மு.கவிற்கு ஆதாயமா இல்லை இந்த தீர்ப்பு குறித்து இப்படி ஜேப்படி திருடன் போல வெட்கம் கெட்டு பேசுவதால் தினமணிக்கு ஆதாயமா?

பவானி சிங் நியமனம் செல்லாது என்றாலும் மீண்டும் விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை தினமணி வைத்தி மனதார பாரட்டுகிறாராம். அதன் மூலம் இந்த வழக்கை தாமதப்படுத்தும் தி.மு.கவின் சதி முறியடிக்கப்பட்டதாம்.

உயர்நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் ஜெயா விடுவிக்கப்படுவார் எனும் நிலையில் தி.மு.க தலைவர் அன்பழகனது வழக்கு அதை மாற்றி விட்டது என்று கால் முதல் தலை வரை எரிச்சலுடன் புலம்புகிறார் வைத்தி. நல்லது, இந்த தாமதத்திற்கான அறச்சீற்றம் வாய்தா ராணியின் இழுத்தடிப்புகள் குறித்த மகிழ்ச்சியின் மற்றுமொரு பக்கம் என்றால்…………

தினமணியின் மறுபக்கம் என்ன? அம்மணமா?

படிக்க: தினமணியின் தலையங்கம் – தீர்ப்பால் வந்த தெளிவு!

மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு

23

puthiya-kalacharam-may-2015மாட்டுக்கறி பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் – மே 2015 வெளியீடு

அன்பார்ந்த நண்பர்களே,

புதிய கலாச்சாரம் சார்பில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 2015 மே நாள் முதல் மாதம் ஒரு வெளியீடு கொண்டுவர இருக்கிறோம். மோடி தலைமையில் பா.ஜ.க கும்பல் ஆட்சி அமைத்த பின், ஒருபுறம் நாட்டு மக்களின் வாழ்வை நாசமாக்கும் பொருளாதாரக் கொள்கைகள் ஏகாதிபத்திய விசுவாசத்துடன் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் இந்துமதவெறி நிகழ்ச்சி நிரலும் திணிக்கப்படுகிறது.

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள், கல்வித் துறை பார்ப்பன மயமாக்கம், ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு அரசு விருதுகள்.. என்று நீளும் இந்தப் பட்டியலில் சமீபத்திய வரவு மாட்டுக்கறி மீதான தடை.

இந்தியாவின் உழைக்கும் மக்கள் குறிப்பாக நகர்ப்புறத் தொழிலாளிகள் உண்ணும் மாட்டுக்கறியை மராட்டியத்தில் தடை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே குஜராத்தில் இருக்கும் இத்தடைச்சட்டம் இனி இந்தியாவெங்கும் கொண்டு வரப்படலாம்.

இதன்படி, இனி நாம் எதை உண்பது என்பதை இனி பார்ப்பனக் கூட்டம் கும்பல்தான் முடிவு செய்யுமா என்பதே நம் முன் உள்ள கேள்வி. புனிதப்பசு என்ற பார்ப்பன – ஆதிக்க சாதிக்கருத்தியலின் அடிப்படையில்தான் இச்சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது என்ற போதிலும், அதனை மறைத்துக் கொண்டு விவசாயிகளின் நன்மைக்காக என்று விளக்கம் சொல்கிறது பா.ஜ.க. மாட்டுக்கறி உண்டால், வெட்டினால், விற்றால், வாங்கினால் சிறைத் தண்டனை என்று மிரட்டுகிறது.

பார்ப்பனியத்திற்கும், தீண்டாமைக்கும் எதிரான போராட்டத்தில் மாட்டுக்கறி ஒரு முக்கியமான ஆயுதம். சாதி ஆதிக்கத்திற்கு எதிரான குறியீடாகவும் அது இருக்கிறது. அவ்வகையில், பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான கருத்தியல் ஆயுதமாக இந்நூல் பயன்பட வேண்டுமென விழைகிறோம்.

நன்றி!

தோழமையுடன்,
புதிய கலாச்சாரம்.

பொருளடக்கம்

  1. மாட்டுக்கறி தடைச்சட்டம் வலக்கரத்தில் கோமியம் இடக்கரத்தில் ஹாம்பர்கர்
  2. பண்டைய இந்தியாவில் மாட்டுக்கறி சாப்பிடுவது இயல்பாக இருந்தது! வரலாற்று அறிஞர் டி.என்.ஜா நேர்காணல்
  3. இந்தியாவில் மாடுகள் : புனிதமா… பொருளாதாரமா?
  4. கோசாலை – காப்பகமா, காட்சிக்கூடமா?
  5. மராட்டியத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை பா.ஜ.க பாசிசம்
  6. சிறுகதை கொழுப்பு – சா. செல்வராசு
  7. குஜராத்தில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் பயங்கரவாதிகளாம்!
  8. தமிழ் மக்களின் உணவு புலால்
  9. விரைவில் பிரியாணிக்குத் தடை மோடி அரசு அடக்குமுறை
  10. யாகத்திற்கு பசுவை வெட்டலாம் மகா பெரியவாள் வாக்குமூலம்
  11. பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!
  12. ஆவின்றி அமையாது உலகு நாம் அறிந்திராத மாட்டின் பயன்பாடுகள்
  13. மாட்டுக்கறி தின்பவர்கள் மாவோயிஸ்டுகளாம்!
  14. கருவாடுக்கு எதிராக ‘தி இந்து’வின் பார்ப்பனத் திமிர்!
  15. மாமி-மாட்டுக்கறி-நக்கீரன் : பார்ப்பன கும்பலின் தீண்டாமை வெறி!

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

யூ.ஜி.சி விதிகளை மீறும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூடு

2

UGC விதிமுறைகளை மீறி நடக்கும், கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் நர்சிங் நிறுவனங்களை இழுத்து மூடு!  –  பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம்

sai-catering-rsyf-demo-11UGC விதிமுறைகளைகளை மீறி மோசடி செய்யும் கல்வி நிறுவனங்களை இழுத்து மூட வலியுறுத்தி புரட்சிகர மாணவர்  – இளைஞர் முன்னணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில், 24.04.2015 அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பதற்காக, தேர்வு நடத்துவது, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால் சஸ்பெண்ட் செய்து விடுவதாக வீடுகளுக்கு போன் செய்து மாணவர்களை மிரட்டுவது என்று அமிர்தா, அன்னம்மாள், மற்றும் சாய் நிறுவன நிர்வாகங்கள் மாணவர்களை அச்சுறுத்தியுள்ளனர்.

sai-catering-rsyf-demo-21இருந்தாலும் அதையும் மீறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னை மாநகரப் பொருளாளர் தோழர் ராஜா தலைமையில் UGC விதிகளை மதிக்காமல், நிறுவனங்களை நடத்தி மாணவர்களை ஏமாற்றிய நிறுவனங்களை இழுத்து மூட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலான முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

sai-catering-rsyf-demo-09இழுத்து மூடு ! இழுத்து மூடு !
தமிழக அரசே இழுத்து மூடு !
மாணவர்களை சுரண்டிக் கொழுக்கும்
பெற்றோர்களின் பணத்தைப் பறிக்கும்
கேட்டரிங் பார்மசி பயிற்சி நிறுவனங்களை
இழுத்து மூடு ! இழுத்து மூடு !
தமிழக அரசே இழுத்து மூடு !

கைது செய் ! சிறையிலடை !
மாணவர்களின் சம்பளத்தை
திருடித்தின்ற முதலாளிகளை
மாணவர்களின் சான்றிதழை
தரமறுக்கும் அயோக்கியர்களை
கைது செய் ! சிறையிலடை !

தடை செய் !    தடை செய் !
யூ.ஜி.சி விதிமுறைகளை மீறி
கேட்டரிங், பார்மசி படிப்புக்களை
நடத்துகின்ற கல்வி நிறுவனங்களை
தடை செய் !    தடை செய் !

பெற்றோர்களே ! மாணவர்களே !
படிக்கும் போதே ஹோட்டல் வேலை
படித்த உடனே கப்பல் வேலை
கலர் கலராய் மோசடி செய்யும்
தனியார் கல்வி நிறுவனங்களை
இழுத்து மூடும் அதிகாரத்தை
கையில் எடுப்போம் ! கையில் எடுப்போம் !

அணி திரள்வோம் ! அணி திரள்வோம் !
அமைப்பாக அணி திரள்வோம் !
திரும்பப் பெறுவோம் ! திரும்பப் பெறுவோம் !
கட்டிய பணத்தையும் சான்றிதழ்களையும்
திரும்பப் பெறுவோம் !  திரும்பப் பெறுவோம் !
ஒழித்துக்கட்டுவோம் ! ஒழித்துக்கட்டுவோம்
கல்வி தனியார்மயத்தை ஒழித்துக் கட்டுவோம் !

தோழர் ராஜா தனது உரையில், “இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள்,  கவர்ச்சியான விளம்பரங்களை செய்து, மாணவர்களையும், பெற்றோர்களையும் கவர்ந்து, ஏமாற்றி மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றனர். இப்படிப்பட்ட நிறுவனங்களின் போலியான விளம்பரங்களை நம்பி பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதியில் நிற்கின்றனர். அவர்கள் ஒரு சங்கமாக இணைத்து போராடாமல், கல்வி தனியார் மயத்தை வீழ்த்த முடியாது” என்றார்.

sai-catering-rsyf-demo-02சென்னை மாநகர இணை செயலாளர் தோழர் மருது, கண்டன உரை ஆற்றினார். அவரது உரையில், “டி. வி விளம்பரங்கள், மாணவர்களை கவரும் வகையில் உள்ளன. ஆனால் உண்மையில், இப்படிப்பட்ட நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் கொத்தடிமை நிலையில் தான் உள்ளனர். பகுதி நேர வேலை என்ற பெயரில் ஹோட்டல்களுக்கு  வேலைக்கு அனுப்பி, தட்டு கழுவுவது போன்ற வேலைகளை செய்ய வைத்து சம்பளத்தையும் பறிக்கின்றனர்.

UGC விதிமுறைகளை மீறி நடத்தப்படும் நிறுவனங்கள் என்றாலும், திட்டமிட்டே இந்த அரசு அவற்றை ஊக்குவிக்கிறது. தனியாரால் நடத்தப்படும் இது போன்ற பொறியியல், கேட்டரிங் நிறுவனங்கள் யாரும் நுழைய முடியாத மர்மக் கோட்டையாகவே உள்ளன. இப்படிப்பட்ட நிறுவனங்களை நடத்த எந்தத் தகுதியும் தேவையில்லை. 10/10 அறை இருந்தால் போதும் என்ற நிலை தான் உள்ளது. இப்படிப்பட்ட நிறுவனங்களில் மாணவர்கள் கொத்தடிமைகளாக மாட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

sai-catering-rsyf-demo-05இந்நிலைமை யூ.ஜி.சிக்கோ, கல்வித் துறைக்கோ, அரசுக்கோ தெரியாமல் இல்லை. தெரிந்தே நடக்கும் இந்த பகற்கொள்ளைக்கு அடிப்படையே கல்வி தனியார்மயம்தான். இந்தக் கொள்ளையை நடத்துவதற்கு அனுமதி அளித்த அரசிடமே இனியும் கெஞ்சுவது நியாயமில்லை. அதிகாரத்தை கையில் எடுக்காமல் தீர்வு இல்லை. அப்படிப்பட்ட போராட்டங்களை வழி நடத்துவதை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி முன்னெடுக்கும்” என்று கூறினார்.

sai-catering-rsyf-demo-06ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கேட்டரிங் மாணவர்கள் கல்வி தனியார்மயத்தினால் பாதிக்கப்பட்ட இத்துறை மாணவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்; தன்மானத்துடன் தங்களின் வாழ்வுரிமைக்காக போராடுகிறார்கள்;  தங்களுடைய உரிமைக்காக மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இது போன்ற நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் உரிமைக்கான போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்கள், மாணவர் வர்க்கமாக பு.மா.இ.மு தலைமையில்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தமிழகம் முழுவதும் உள்ள கேட்டரிங் மாணவர்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுக்க சங்கமாக அணிதிரளாமல் இப்பிரச்சினையை தீர்க்க முடியாது என்பதை அறிவிக்கும் விதமாக இப்போராட்டம் அமைந்தது.

–    தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.
9445112675

புதுவை பல்கலைக் கழகத்தை சீரழிக்கும் துணைவேந்தர்

2

புதுவைப் பல்கலைக்கழகம் மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (MHRD) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) ஆகியவற்றின் மேலாண்மையில் இயங்கும் மத்தியப் பல்கலைக் கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் அரசின் எல்லாத் துறைகளும் செயலிழந்து, உச்சகட்டச் சீரழிவை சந்தித்து முடங்கிப்போய் இருப்பதற்கான நிதர்சனமான சாட்சியமாக நிற்கிறது . அங்கு நடைபெற்றுவரும் பல்வேறு சீரழிவுகளும், முறைகேடுகளும், மாணவர் விரோத மற்றும் ஊழியர் விரோத நடவடிக்கைகளும் சந்திசிரித்து ஊடகங்களில் அன்றாடச் செய்தியாகியுள்ளன.

அவற்றை எதிர்த்து நாள்தோறும் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்தவண்ணம் உள்ளன. ஆசிரியர்களும், ஊழியர்களும் புதுவை நகரிலும், வளாகத்திலும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்க, தங்களது விடுதிக்குத் தண்ணீர்கூட பல நாட்கள் தரத் துப்பில்லாத நிர்வாகத்தைக் கண்டித்து நள்ளிரவில் காலி பாத்திரங்களுடன் தமது விடுதிகளைவிட்டு வெளியேறி வீதியில் அமர்ந்து போராடியுள்ளனர் மாணவிகள். அப்படி என்னதான் பிரச்சனை இந்தப் பல்கலைக்கழகத்தில்?

பேராசிரியர் சந்திரா கிருஷ்ணமூர்த்தி
முன்னாள் மத்திய அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர், நளினி சிதம்பரத்தின் நெருங்கிய தோழி, பார்ப்பன சாதியில் பிறந்தவர் போன்ற அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்ததால் புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்ற “பேராசிரியர்” சந்திரா கிருஷ்ணமூர்த்தி.

முன்னாள் மத்திய அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் உறவினர், நளினி சிதம்பரத்தின் நெருங்கிய தோழி, பார்ப்பன சாதியில் பிறந்தவர் போன்ற அடிப்படைத் தகுதிகளைப் பெற்றிருந்ததால் புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் பெற்றார் “பேராசிரியர்” சந்திரா கிருஷ்ணமூர்த்தி. அவர் பிப்ரவரி1, 2013 அன்று பதவியேற்ற பின்னர் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியும், மாணவர் சேர்க்கையும் முடங்கிப்போய், ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும் ஒரு பத்தாண்டுகளுக்கு முந்தைய நிலைக்குச் சரிந்துள்ளது. முக்கியக் கோப்புகள் பலவும் ஆண்டுக்கணக்கில் தேங்கிப்போய் பணிகள் எதுவும் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கோப்புகளின் மீது எந்த முடிவுகளும்  எடுக்கப்படாமல் தனக்கு வேண்டியவர்கள் என்றால் விதிகளுக்குப் புறம்பாக எதுவும் செய்வதும், வேண்டாதவர்கள் என்றால் காலவரையற்றுக் கிடப்பில் போடுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளின் நிர்வாக நடைமுறை.

தன்னைச் சந்திப்பதற்காக முன்அனுமதி பெற்றுவரும் உயர் அலுவலர்கள், துறைத்தலைவர்கள், புல முதன்மையர்கள் (Deans) என்று எல்லோரையும் மணிக்கணக்கிலும் நாள் கணக்கிலும் காக்கவைத்துச் சந்திப்பதே அம்மையாருக்கு வாடிக்கை. ஆனால் அவருக்கு நெருக்கமானவர்கள் எந்த அனுமதியோ, அறிவிப்போ, காத்திருப்போ எதுவுமின்றி எப்போது நினைத்தாலும் தன் அறைக்குள் பிரவேசிக்கும் சுதந்திரம் வழங்கியுள்ளார், இந்தத் துணைவேந்தர். காத்திருந்து காத்திருந்தே கணிசமான காலத்தை விரையமாக்கி தங்களது கல்வி மற்றும் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குமுறுகின்றனர் பேராசிரியர்களும் ஊழியர்களும்.

கடந்த துணைவேந்தர் காலத்தில் தொடங்கப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஐந்து கட்டிடங்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றைத் திறக்கும் தருவாயில் வேலைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்பட்டு, வேலைகள் அனைத்தும் முடிந்த பின்னரும்கூட திறக்கக் கூடாது என்பதில் உறுதியுடன் இருக்கிறார் இந்தத் துணைவேந்தர். அக்கட்டிடங்கள் புதிய 24 மணிநேர நூலகம், சுற்றுச்சூழல் துறை, தகவல் தொடர்பியல் துறை என பல்வேறு பயன்பாடுகளுக்கு எப்போதோ திறக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, நூலகம் திறக்கப்படாததால் மாணவர்கள் அமர்ந்து படிக்க ஒழுங்கான இடம் இல்லாமல் உள்ளனர்.

தனக்கென்று பிரத்தியேகமாக 3 பல்கலைக்கழக கார்கள் பயன்படுத்துவது, 25 இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகச் செலவில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பங்களாவைச் செப்பனிட்டு நீச்சல் குளம் அமைத்தது, மனம்போனபோக்கில் செலவழிப்பது என்று எல்லா விதங்களிலும் ஒரு மினி ஜெயலலிதாவாகத் திகழ்ந்து வருகிறார் இந்தச் சீமாட்டி.

ஆய்வுசெய்யத்தான் கட்டிடங்கள் இல்லை என்றால், ஆய்வேட்டைச் சமர்ப்பித்த பின்னரோ ஆய்வு மாணவர்கள் எதிர்கொள்ளும் சூழல் இன்னும் பயங்கரமானது. ஆய்வேட்டைச் சமர்ப்பித்துவிட்டு ஆண்டுக் கணக்கில் காத்திருக்கின்றனர் மாணவர்கள். ஆனால் ஆய்வேடுகள் தேர்வாளர்களுக்கு திருத்துவதற்காக அனுப்பப்படுவதே இல்லை. ஆய்வேட்டை எந்தத் தேர்வாளரிடம் (External Examiners) அனுப்புவது என்று முடிவுசெய்து குறிக்க (Tick பண்ணுவதுதான் வேலை!) வேண்டிய துணைவேந்தரோ இந்தச் சாதாரணப் பணியை முடிப்பதற்கு மாதக் கணக்கில் காலம் தாழ்த்துகிறார். அப்புறம் அவருக்குக் கீழ் உள்ள பணியாளர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? ஆய்வை முடித்து தனது வாழ்வில் செட்டில் ஆவது, பணிவாய்ப்பைத் தேடுவது ஆய்வு மேற்படிப்புக்குச் (Post-Doctorate) செல்வது என்று பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் சமர்ப்பித்த தமது ஆய்வேடு குறித்து ஏதேனும் வேலை நடக்கிறதா என்று தனியாக ஓர் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது!

யார் எப்படிப்போனாலும் தனது சுகபோகத்திற்கு எந்தக் குறையும் வைத்துக்கொள்வதில்லை இந்தப் “பேராசிரியர்”. தனக்கென்று பிரத்தியேகமாக 3 பல்கலைக்கழக கார்கள் பயன்படுத்துவது, 25 இலட்சம் ரூபாய் பல்கலைக்கழகச் செலவில் தனக்கு வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழக பங்களாவைச் செப்பனிட்டு நீச்சல் குளம் அமைத்தது, மனம்போனபோக்கில் செலவழிப்பது என்று எல்லா விதங்களிலும் ஒரு மினி ஜெயலலிதாவாகத் திகழ்ந்து வருகிறார் இந்தச் சீமாட்டி.

இவற்றையெல்லாம் வைத்து இவர் ஒரு மினி ஜெயா என்று நீங்கள் நம்பத் தயாரில்லையா? பல்கலைக்கழகத்தின் முக்கிய உயர் பொறுப்புகளுக்கு தகுதிவாய்ந்தவர்களை நிரந்தரமாக முறைப்படி தேர்வுசெய்து பணியிலமர்த்தாமல், தனது கைக்கூலிகள், நிர்வாக அறிவோ அடிப்படை அருகதையோ அற்ற தனது அடிவருடிகளை அப்பொறுப்புகளில் தற்காலிக (In Charge) நிலையிலேயே ஓராண்டிற்கும் மேலாக வைத்துள்ளார், இந்தத் துணைவேந்தர். பன்னீர்செல்வம் என்ற பேராசிரியர் பொம்மைப் பதிவாளராக நீட்டிய தாள்களில் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போடும் தனது வேலையைச் செய்கிறார், தமிழகத்தின் டம்மி முதல்வர் பன்னீர்செல்வத்தைப் போலவே. பூணூல் தகுதி பெற்றிருப்பவர்களும், அவர்களை அண்டிப்பிழைக்கக் கொஞ்சமும் அஞ்சாதவர்களும் இவ்வாறே தமது சாதிக்கும் விசுவாசத்திற்கும் தக்கபடி பதவிகள் பெற்றுள்ளனர்.

இந்த முறைகேடுகளோடு, இத்தகைய துணைவேந்தரின் நிர்வாகத்தில் மாணவர் விரோத நடவடிக்கைகளுக்கும் கொஞ்சமும் பஞ்சமில்லை. சென்ற ஆண்டு ஏப்ரல் 6-7-ம் தேதிகளில் ஹரிஹரன் என்ற பார்ப்பனப் பேராசிரியரும் பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ராதாகிருஷ்ணன் என்ற தமிழ்த்துறை மாணவனை செய்யாத குற்றங்களை ஒப்புக்கொள்ளச் சொல்லி அடைத்து வைத்துத் துன்புறுத்தினர். பின்னர் நடைபெற்ற மாணவர் போராட்டங்களால் நிலைகுலைந்துபோன நிர்வாகம் பெயரளவில் ஒரு விசாரணை நடத்தியது. ஆனால், இதுவரை அந்த விசாரணை அறிக்கையை வெளியிடவும் இல்லை, யார்மீதும் நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஹரிஹரனை மொத்தம் 28 பல்கலைக்கழகப் பொறுப்புகளில் அமரவைத்து அழகு பார்க்கிறார் துணைவேந்தர்! பெண்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்களைக் கண்டறியத் துப்பில்லாமல் ஒரு அப்பாவி ஏழை மாணவனை அடித்துத் துன்புறுத்திய ஹரிஹரன் கும்பலையோ அதற்குத் துணைபோன இந்தத் துனைவேந்தரையோ இந்த அரசமைப்பும், நீதிப் பரிபாலனமும் எதுவும் செய்யவில்லை, மாறாக அவர்களின் பதவிகளைப் பாதுகாக்கின்றன.

பன்னீர்செல்வம் என்ற பேராசிரியர் பொம்மைப் பதிவாளராக நீட்டிய தாள்களில் காட்டிய இடங்களில் கையெழுத்துப் போடும் தனது வேலையைச் செய்கிறார், தமிழகத்தின் டம்மி முதல்வர் பன்னீர்செல்வத்தைப் போலவே. பூணூல் தகுதி பெற்றிருப்பவர்களும், அவர்களை அண்டிப்பிழைக்கக் கொஞ்சமும் அஞ்சாதவர்களும் இவ்வாறே தமது சாதிக்கும் விசுவாசத்திற்கும் தக்கபடி பதவிகள் பெற்றுள்ளனர்.

ஈவ்-டீசிங் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு எதிராக நின்று, உடற்க்கல்வித்துறை பேராசிரியர் பிரவீன் என்ற தனது அடிவருடிக்கு ஆதரவாக ஈவ்-டீசிங் புகார் கொடுத்த மாணவிகளை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கியது நிர்வாகம். இதனால் சென்னை உயர்நீதி மன்றத்தின் கண்டனத்தைப் பெற்று 20,000 ரூபாய் ஒவ்வொரு பாதிக்கப்பட்ட மாணவிக்கும் நட்டஈடு வழங்கி அவர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள பணிக்கப்பட்டது நிர்வாகம். மேலும் மாணவிகளுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழலை உருவாக்கி, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்களையும் பாதுகாத்து வருகிறார் இந்தத் துணைவேந்தர்.

இந்தக் கேவலமான நிலையில்தான் தமது விடுதிகளுக்குத் தண்ணீர்கூட நாள்கணக்கில் வரவில்லை என்பதால் கொதித்துப்போன மாணவிகள் 23-ம் தேதி வியாழன் அன்று நள்ளிரவில் பல்கலைக்கழகச் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

“பேராசிரியர்” சந்திரா கிருஷ்ணமூர்த்தி பல பொய்யான தகவல்களைக் கொடுத்தே இப்பதவிக்கு வந்துள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட வேண்டுமானால் குறைந்தது 10 ஆண்டுகளாவது பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று இந்த அரசின் விதிகள் கூறுகின்றன. ஆனால், பேராசிரியர் நிலையில் (Professor) பணியாற்றாத ஒருவர் இங்கு எல்லாச் சட்டங்களையும் மீறி துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றால் நடப்பது ஜனநாயக அரசா மனுநீதி அரசா? மொத்தம் 10 ஆய்வு மாணவர்களை உருவாக்கியிருப்பதாகப் புளுகியிருக்கிறார் இந்தத் துணைவேந்தர். ஆனால் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமான PUTA தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள தகவல்களின்படி ஒரு ஆய்வு மாணவர் மட்டுமே இவரது மேற்பார்வையில் ஆய்வு முடித்துள்ளார். மேலும் சி.பி.ஐ விசாரணையை எதிர்நோக்கியுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட எல்லாக் குற்றக்கும்பல்களுக்கும் பாதுகாப்பு அரணாய் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் துணைவேந்தர்.

இவரது நியமனத்தை செல்லாததாக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் மனிதவள அமைச்சகத்திற்கும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அனுப்பியவண்ணம் உள்ளனர். மேலும் ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு மூன்று முறை பேரணிகளும் மற்றும் முற்றுகையும், இரண்டு முறை உண்ணாவிரதங்களும் நடத்தியுள்ளன.

இந்தக் கேவலமான நிலையில்தான் தமது விடுதிகளுக்குத் தண்ணீர்கூட நாள்கணக்கில் வரவில்லை என்பதால் கொதித்துப்போன மாணவிகள் 23-ம் தேதி வியாழன் அன்று நள்ளிரவில் பல்கலைக்கழகச் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தத் துணைவேந்தர் கடந்த காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் டெல்லியில் தொடர்ந்து செல்வாக்குச் செலுத்துகிறார். பார்ப்பனப் பாசிச பங்காளிகள் மத்தியில் வீற்றிருக்கும்போது தனது பதவி பறிபோய்விடுமோ என்று கவலைப்பட துனைவேந்தருக்குக் காரணங்கள் இல்லைதான்! அதுமட்டுமின்றி, தானே எங்கோ ஒரு பல்கலைக்கழகத்தில் காசுகொடுத்து பட்டம் வாங்கியுள்ள மனிதவள அமைச்சரா இந்தத் துணைவேந்தரின் முறைகேடுகளைத் தடுக்கப் போகிறார்?

நீதிமன்றங்கள் தற்காலிகத் தீர்வுகளைத் தந்தாலும் தானே ஊழல்மயப்பட்டு அழுகி நாறும் இந்த அரசமைப்பு இப்பல்கலைக்கழகத்தின் சீர்கேடுகளைச் சரிசெய்யும் என்று இனியும் நம்ப காரணங்கள் எதுவும் இல்லை. நேர்மையும் உறுதியும் கொண்ட பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், மக்கள் என அனைவரும் இனைந்து போராடுவது மட்டுமே மக்களின் பொதுச்சொத்தான புதுவை பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்க ஒரேவழி. ஏனென்றால், இந்தப் பல்கலைக்கழகத்தின் சீர்கேடானது அதன் வளாகத்தோடு முடிந்துவிடும் பிரச்சனையல்ல, உண்மையில் தோற்றுப் போய் நிற்கும் மொத்த அரசமைப்பின் வகைமாதிரியே இந்தப் பல்கலைக்கழகம்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி (பு.மா.இ.மு.),
புதுச்சேரி அமைப்புக்குழு.

மின்னஞ்சல்: rsyfront.pu@gmail.com

இது தொடர்பான செய்திகள்

பவானி சிங் நியமனம் மட்டும்தான் செல்லாதா ?

9

ரைக் கொள்ளையடித்து சொத்து சேர்த்த ஜெயலலிதா மீதான லஞ்ச வழக்கில், அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

பவானி சிங் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

கொள்ளைக் கூட்டத் தலைவி ஜெயலலிதா
1991-96-ம் ஆண்டில் ஜெயா-சசி கும்பல் தமிழகத்தையே மொட்டையடித்தது.

“வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெறுவதால் அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு எந்த உரிமையும் இல்லை. அதே நேரம் இவ்வழக்கில் மறு விசாரணைக்கு அவசியமில்லை” என்று அந்தத்  தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

1991-96-ம் ஆண்டில் ஜெயா-சசி கும்பல் தமிழகத்தையே மொட்டையடித்தது. அந்த ஊழல் மலையின் சிறு துளிதான் இந்த சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கியிருந்தது. பின்னர் 2001-ம் ஆண்டில் பாசிச ஜெயா மீண்டும் தமிழகத்தை ஆண்ட போது இந்த வழக்கில் எல்லா முறைகேடுகளும் நடந்தன. அப்போது தி.மு.க தலைவர் அன்பழகன் தொடுத்த வழக்கின் விளைவாகத்தான் இவ்வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது.

அதிலும் ஜெயா கும்பல் பல்வேறு இழுத்தடிப்புகளையும், மோசடிகளையும் செய்து “இதுதாண்டா நீதித்துறையின் இலட்சணம்” என்று கேலிக்கூத்தாக்கியது. இருப்பினும் வாய்தா ராணியையும் அவரது கூட்டாளிகளையும் குற்றவாளி என்று 2014, செப்டம்பர் 27-ம் தேதி  தீர்ப்பளித்து சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்தது, சிறப்பு நீதிமன்றம்.

ஜெயா உச்சநீதிமன்ற பிணை
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் முறைகேடான தீர்ப்பின் காரணமாக பிணை பெற்று வெளியே வந்தது, ஜெயா கும்பல்

சிறை சென்ற ஜெயா கும்பல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிணை மனு நிராகரிக்கப்பட்டாலும், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியின் முறைகேடான தீர்ப்பின் காரணமாக பிணை பெற்று வெளியே வந்தது. பிறகு உச்சநீதிமன்ற உத்திரவின்படி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் ஜெயா கும்பலின் மேல் முறையீட்டு மனு விசாரிக்கப்பட்டு வந்தது. இதில்தான் அரசுத் தரப்பில் பவானிசிங் ஆஜரானார். பச்சையாகவும், வெளிப்படையாகவும் ஜெயா தரப்புக்கு ஆதரவாக அவர் வைத்த வாதங்களும், கேள்விகளும் காலாகாலத்திற்கு நீதித்துறையின் அருகதையை வெளிப்படுத்தும் சாட்சியமாக இருக்கும்.

ஜெயா மீதான ஊழல் வழக்கில் அரசுத் தரப்பில் வாதாட, அதே ஜெயா கட்டுப்படுத்தும் அரசின் உத்தரவுப்படி பவானிசிங் ஆஜரானது வெளிப்படையாக நடைபெற்றாலும் அது குறித்து இங்கே பெரிய அதிர்ச்சி ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை.

தி.மு.க பொதுச்செயலாளர் அன்பழகன் மட்டும் இதை எதிர்த்து வழக்கு தொடர, அது உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட பிறகு அவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் நீதிபதிகள் மதன் லோகூர் மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. பவானி சிங் நியமனம் செல்லும் என்று தீர்ப்பளித்த நீதிபதி பானுமதி, விழா ஒன்றில் பாசிச ஜெயாவை புரட்சித் தலைவி என்று அழைத்திருக்கிறார். நீதித்துறை அனைவருக்கும் சமமாக நடந்து கொள்வதில்லை என்பது பொதுவான உண்மையாக இருந்தாலும் ஜெயாவின் வழக்கில் அது பச்சையான திமிருடன் அறிவிக்கப்பட்டது.

பாசிஸ்ட் ஜெயா
ஜெயா கும்பல்தான் குற்றவாளி என்று வாதிட்டிருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் சேம் சைடு கோல் போடுகிறார் என்றால் அந்த வழக்கு எப்படி நடந்திருக்கும்?

பிறகு மூவர் அடங்கிய அமர்வில் பவானிசிங் நியமனம் செல்லாது என்று தற்போது தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயதார்த்தம் செல்லாது என்று அறிவித்திருக்கும் நீதிமன்றம் திருமணத்தை மட்டும் அங்கீகரித்திருக்கிறது. ஜெயா கும்பல்தான் குற்றவாளி என்று வாதிட்டிருக்க வேண்டிய அரசு வழக்கறிஞர் சேம் சைடு கோல் போடுகிறார் என்றால் அந்த வழக்கு எப்படி நடந்திருக்கும்?

அதாவது,  மேல் முறையீட்டு வழக்கு விசாரணையில் மறு விசாரணை தேவையில்லை என்று நீதிபதிகள் கூறியிருக்கின்றனர். பவானி சிங் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்திருக்கும் வாதத்தை நீதிபதி குமாரசாமி ஏற்கக் கூடாது என்று தடுத்திருக்கின்றனர். கர்நாடக அரசு மற்றும் அன்பழகன் தரப்பில் எழுத்துபூர்வமான வாதங்களை ஒரு நாளுக்குள் தாக்கல் செய்ய வேண்டும், அதை கருத்தில் கொண்டு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

பவானி சிங்
ஊரறிய உலகறிய பேசி, வாதிட்டு, ஒரு வெளிப்படையான சதிகாரராக நடந்து கொண்ட அரசு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு என்ன தண்டனை?

இவை அனைத்திற்கும் என்ன பொருள்? பவானி சிங்கை முறைகேடாக நியமித்து வழக்கை குழி தோண்டி புதைக்க முயன்ற தமிழக அரசு, அதை ஆணையிட்டு நடத்தும் ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதா அவரது அடிமைகள் ஓ.பி.எஸ் முதலான அற்பங்கள் அனைவருக்கும் என்ன தண்டனை?

சாட்சியங்களை கலைப்பார் என்று பிணை மறுக்கும் நீதிமன்றம், இங்கே நீதிமன்றத்தையே கலைக்கும் வல்லமை கொண்ட ஜெயாவை சுதந்திரமாக போயஸ் தோட்டத்தில் குந்த வைத்து பா.ஜ.க மோடி அரசுடன் ஒப்பந்தம் போட்டு இவ்வழக்கை சீர்குலைக்க முயல்வதற்கு ஆசீர்வாதம் அளித்திருப்பதற்கு என்ன பொருள்?

அரசு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வது சகஜம் என்றாலும் இங்கே ஊரறிய உலகறிய பேசி, வாதிட்டு, ஒரு வெளிப்படையான சதிகாரராக நடந்து கொண்ட பவானி சிங்கிற்கு என்ன தண்டனை? அவருக்கு இவ்வழக்கின் மூலம் அளிக்கப்பட்ட தமிழக மக்களின் பல இலட்ச ரூபாயை பறிக்காமல் விட்டு வைத்திருப்பது என்ன நீதி?

ஜெயா சொத்துக்குவிப்பு வழக்கு
வழக்கை குழி தோண்டி புதைக்க முயன்ற தமிழக அரசு, அதை ஆணையிட்டு நடத்தும் ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதா அவரது அடிமைகள் ஓ.பி.எஸ் முதலான அற்பங்கள்.

மேலாக, பலான பவானி சிங் நியமனமே செல்லாது என்று அறிவித்துவிட்டு அவரது வாதத்தை கணக்கில் கொள்ளாமல் தீர்ப்பு அளியுங்கள் என்றால் என்ன பொருள்? இவையெல்லாம் என்ன முறைகள், முன்னுதாரணங்களின் கீழ் வரும்? ஒரு நாளில் கர்நாடக அரசும் தி.மு.க தரப்பும் தாக்கல் செய்ய வேண்டுமென்றால் என்ன பொருள்? இது என்ன பரபரப்பு செய்திகளை காட்டும் தொலைக்காட்சியா?

இங்கே நமது கேள்வி என்னவென்றால் நாடறிந்த ஒரு ஊழல் தலைவரைக் காப்பாற்ற இங்கே ஆளும் வர்க்கம் அனைத்தும் எப்படி ஒரு குரலில் சேர்ந்து வேலை செய்கிறது என்பதே! ஊடகங்கள் அனைத்தும் ஓரிரு விதிவிலக்கு தவிர இந்த வழக்கை ஒரு தொழில் நுட்ப சிக்கலாகவே பேசுகின்றன. உண்மையில் ஜெயா கும்பல் நடத்தியிருக்கும் சதி, அதற்குத் துணை போன அரசு, நீதி அமைப்புகள் குறித்து இங்கே யாரும் வாதங்களை வைக்கவில்லை. இது ஜெயா மீதான பயத்தினால் அல்ல, ஆளும் வர்க்கம் திவாலாகி வருவதை விட்டுக் கொடுக்காத எச்சரிக்கையினால் வருவது.

இனி நீதிபதி குமாரசாமி, ஜெயா கும்பலை குற்றவாளி என்று அறிவித்தாலும் இன்னும் அதை அமல்படுத்த முடியாத அளவுக்கு ஏகப்பட்ட ஓட்டைகளையும், வாய்ப்புகளையும் இவ்வழக்கில் கொண்டு வந்து விட்டார்கள். மேலாக, கிரிமினல் பிரதமர் மோடி இருக்கும் போது, அவரது ஆசி பெற்ற உச்சநீதிமன்றம் இருக்கும் வரையிலும் பார்ப்பன பாசித்தின் இளைய பங்காளியான ஜெயலலிதாவை காப்பாற்றுவதையே ஆளும் வர்க்கம் செய்யும்.

ஊழல் வழக்கில் ஜெயா கும்பலை நாம்தான் தண்டிக்க வேண்டும். அந்த கும்பலின் சொத்துக்களை பறிமுதல் செய்து மக்கள் சொத்துக்களாக அறிவிக்க வேண்டும். இந்தப் போராட்டங்கள் வீச்சாக நடைபெற்றால் மட்டுமே நீதித்துறையிலிருந்து நீதியை எதிர்பார்க்க முடியும்.

சரஸ்வதி நதி : வடிவேலு தொலைத்த கிணறு!

14

‘வரலாற்றில்’ தொலைந்து போன சரஸ்வதி நதியை மீட்கப் போகிறதாம் ஹரியானா மாநில அரசு. பிப்ரவரி, 2015-லிருந்து ஆதி பத்ரா பகுதியில் இதற்கான ஆய்வுகளை, மாநில அரசின் வனத்துறை மேற்கொண்டு வருகின்றது.

சரஸ்வதியைத் தேடி
சரஸ்வதி நதியை மீட்கப் போகிறதாம் ஹரியானா மாநில அரசு. (படம் : நன்றி thehindu.com )

13 மார்ச், 2015 தேதியன்று யமுனா நகரில் நடந்த கூட்டமொன்றில் பேசிய மாநில பாரதிய ஜனதா முதல்வர் மனோகர் லால் கட்டர், ஆதிபத்ராவில் துவங்கவுள்ள சரஸ்வதி நதிக்கான அகழ்வாய்வு மிகப் பெரிய திட்டமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்காகவே அரசு உயரதிகாரிகள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட உள்ள சரஸ்வதி நதிக்கான நீராதாரத்தைத் தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

தமக்கு கிடைக்காத கல்வி குறித்து “சரஸ்வதி கடாட்சம் கிடைக்கவில்லை” என்று ஏழை மக்கள் முடித்துக் கொள்வார்கள். இங்ஙனம் ‘உயர் சாதி’ இந்துக்களிடம் சிக்கியுள்ள கல்வி சரஸ்வதி ஒரு புறம் என்றால் ஆர்.எஸ்.எஸ் கூட்டம் உருவாக்கியிருக்கும் சரஸ்வதி நதி இன்னொரு அவதாரம்.

ஆதிக்கத்தை தொடர வேண்டுமென்றால் வரலாற்றில் “ஏ டூ இசட்” வரை சகல பொய்களையும் கச்சிதமாக எழுப்ப வேண்டும். ஆகவே ஹரப்பா – சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நதி நாகரீகம் என்றே அழைக்கப்பட வேண்டும், மறைந்து போன சரஸ்வதி நதிக்கரையில் தான் வேதகால நாகரீகம் உச்சகட்ட வளர்ச்சியடைந்திருந்தது….. என இவற்றையெல்லாம் நிலைநாட்ட இந்துத்துவ கும்பல் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் கரடியாக கத்திக் கொண்டிருக்கிறது.

சங்கமத்தில் முழுக்கு
‘ஆரியர்கள் வந்தேறிகள் இல்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் தான் இந்தியாவின் சரஸ்வதி நதி தீரத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறிய ஆதி குடிகள்’

அதாவது, ‘இந்த நாட்டின் திராவிடர்கள், பழங்குடியினர் உள்ளிட்ட எல்லா இன மற்றும் மொழிக் குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஆரியர்களும் வேறு வேறு அல்ல; சரஸ்வதி நதிக்கரையில் வைத்து எழுதப்பட்ட ஆரிய இலக்கியங்களின் அடிப்படையிலான கலாச்சாரம் – அதாவது சமஸ்கிருதம், பார்ப்பனியம், சாதி – மொத்தமும் இந்திய கலாச்சாரமே’ என்பதை நிலைநாட்டும் முயற்சிகளை இந்துத்துவ கும்பல் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

இந்த விளக்கங்கள் எந்தளவுக்கு நீள்கிறது என்றால், ‘ஆரியர்கள் வந்தேறிகள் இல்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் தான் இந்தியாவின் சரஸ்வதி நதி தீரத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு குடியேறிய ஆதி குடிகள்’ என்கிறார் சமீபத்தில் மோடி அரசால் பத்மவிபூஷன் விருது அளிக்கப்பட்ட அமெரிக்க சாமியார் டேவின் ஃப்ராலே (வாமதேச சாஸ்திரிகள்).

சமஸ்கிருதம் தான் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்யும் பிரச்சாரத்துக்கு ”ஆதாரங்கள் சப்ளை” செய்யப் போகும் ஆய்வாளர் இவர் தான்.

சங்க பரிவார பிரச்சாரம்
பிரச்சாரங்களுக்குத் தேவையான ஆதாரங்களை சப்ளை செய்வது.

தங்கள் பிரச்சாரங்களுக்குத் தேவையான ஆதாரங்களை சப்ளை செய்வதற்காகவே நட்வர் ஜா, ராஜாராம் போன்ற பல்வேறு ‘அறிஞர்களை’ உற்பத்தி செய்து அவர்களின் ’ஆய்வு’ அறிக்கைகளை, தமது ஆட்சிக்காலங்களில் நடந்த அறிவியல் மாநாடுகளில் சமர்பிக்கச் செய்தது இந்துத்துவ கும்பல். அறிவியல் மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்டதாலேயே அவற்றில் உள்ள உளறல்களை இந்துத்துவ இணையச் சில்லுண்டி அறிஞர் பெருமக்கள் மேற்கோள் காட்டி தங்களுக்குள் மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

ஆனால் பரிதாபம் என்னவென்றால், இந்துத்துவ வரலாற்று அறிஞர்களால் சிந்து சமவெளி நாகரீகத்தைக் கைப்பற்றச் செய்யப்படும் முயற்சிகள் ஒவ்வொன்றும் மொத்த ஆய்வுலகத்தையும் நகைப்பில் ஆழ்த்துகிறது. ஹரப்பாவில் ’கண்டுபிடிக்கப்பட்ட’ குதிரையும், ‘சரஸ்வதி நதியிலிருந்து உலகமெங்கும் பரவிச் சென்றது மனித இனம்’ என்ற விளக்கமும் மிகக் கேவலமாக அம்பலப்பட்டு சந்தி சிரித்தது.

“அரசர் ஆடையில்லாமல் அம்மணமாக வீற்றிருக்கிறார்” என்ற உண்மையை அவர்களது அரசவையில் உள்ள எவரும் இன்று வரை எடுத்துச் சொல்லவில்லை. விளைவு? ஆர்.எஸ்.எஸ் ஷாகாவின் தயாரிப்பான மோடி, அறிவியலே வெட்கப்படுமளவு விஞ்ஞானியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.

சரஸ்வதியில் பிடிக்கும் முயற்சி
குதிரையில் விட்டதை சரஸ்வதியில் பிடிக்கும் முயற்சியை காவி கோஷ்டிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

திருவாளர் மோடி அவர்கள், புராண காலத்தில் இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததற்கான ஆதாரமாக சிவகாசி ஓவியரால் வரையப்பட்ட விநாயகரின் படத்தை முன்வைத்திருப்பதை வாசகர்கள் அறிவார்கள். இன்னும் சில ஆண்டுகள் கழித்து ’அறிவியல்’ மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட இந்த ’அறிவியல்’ உரையிலிருந்து அரவிந்தன் நீலகண்டன் போன்றோர் மேற்கோள் காட்டி எழுதும் நூலை கிழக்கு பதிப்பகம் பதிப்பிக்கலாம்; இந்து கடவுளர்களையே உருவாக்கிய சிவகாசி ஓவியர்களின் வரலாற்றை அறிந்தவர்கள் ஆதித்யா சானல் பார்க்க வேண்டிய அவசியமில்லை.

போகட்டும். எத்தனை அடித்தாலும் தாங்குவதற்கு முதுகோ, மானமோ இல்லை என்பதால் குதிரையில் விட்டதை சரஸ்வதியில் பிடிக்கும் முயற்சியை காவி கோஷ்டிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

’காணாமல்’ போன சரஸ்வதி நதியைத் தேடும் பாரதிய ஜனதாவின் முயற்சி புதிதல்ல. 2014-ம் ஆண்டில் நீர்வளத் துறை அமைச்சரான உமா பாரதி சரஸ்வதி நதியை மீண்டும் உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும் என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். முன்பு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் இம்முயற்சியை 2002-ம் ஆண்டே எடுத்தது குறிப்பிடத்தக்கது. என்றாலும், சரஸ்வதி நதியை இன்னும் தயாரித்து தீர்ந்தபாடில்லை.

சரஸ்வதியை தேடி
இல்லாத கலாச்சார பாரம்பரிய பெருமைகளை இந்துக்களின் மூளைக்குள் திணிக்கும் நடவடிக்கைகள்.

இல்லாத கலாச்சார பாரம்பரிய பெருமைகளை இந்துக்களின் மூளைக்குள் திணிக்கும் நடவடிக்கைகளில் அப்போதைய பாரதிய ஜனதாவின் கலாச்சாரத் துறை அமைச்சரான ஜக்மோகன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். “சரஸ்வதி நதியை உருவாக்கும் முயற்சியைப் பொருத்த வரை, அதில் கிடைக்கப் போகும் வெற்றி தோல்விகளை விட அம்முயற்சி உண்டாக்கும் தேசியப் பெருமிதமே முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

கிணறு : வடிவேலுவின் வார்த்தைகளின் படி…

சரஸ்வதியைத் தேடுவதிருக்கட்டும், முதலில் அவள் கருப்பா சிவப்பா என்பதிலேயே பல குழப்பங்கள் இருக்கின்றன. “சரஸ்வதி நதி புராண காலத்தில் இமயத்தில் உற்பத்தியாகி கங்கைக்கும் யமுனைக்கும் நடுவே ஓடி உத்திரபிரதேச மாநிலம், அலகாபாத் நகரின் திரிவேணி சங்கமத்தில் கலந்தது; தற்போதும் அந்த நதி கண்ணுக்குத் தெரியாமல் பூமிக்கு அடியில் ஓடிக் கொண்டிருக்கிறது” என்பது ‘இந்துக்களின் நம்பிக்கை’.

இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அலகாபாத்தில் கும்பமேளா நடக்கிறதாம். இந்துக்களின் நம்பிக்கையை கிளறிவிட்டோ, இல்லை, வேக வைத்தோ வயிறு வளர்க்கும் கட்சிதான் பாரதிய ஜனதா என்பதைச் சொல்லத் தேவையில்லை. அந்த ‘நம்பிக்கையின்’ அடிப்படையிலேயே பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது, சேது கால்வாய்த் திட்டம் முடக்கப்பட்டது. ஆனால், சரஸ்வதியின் விசயத்தில் இந்துக்களின் நம்பிக்கையும் இந்துத்துவாவின் நம்பிக்கையும் வேறு வேறாக இருக்கிறது.

சரஸ்வதி நதி பற்றிய புரட்டு
‘சரஸ்வதி நதி ஹரியானா மாநிலம் ஆதி பத்ராவில் உற்பத்தியாகி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத்தின் வழியே தெற்கு நோக்கிப் பாய்ந்து கட்ச் அருகில் கடலில் கலந்தது’

இந்துத்துவ கும்பலைப் பொருத்தவரை, ‘சரஸ்வதி நதி ஹரியானா மாநிலம் ஆதி பத்ராவில் உற்பத்தியாகி ஹரியானா, ராஜஸ்தான், குஜராத்தின் வழியே தெற்கு நோக்கிப் பாய்ந்து கட்ச் அருகில் கடலில் கலந்தது’ என்கிறார்கள். இதில் ஒரு டெக்னிக்கல் பிரச்சினை இருக்கிறது – அதாவது, அந்தப் பகுதி நிலப்பரப்பின் புவியியல் தன்மையையின் படி நிலம் தென்மேற்கான சரிவு கொண்டது. புவியியலை கணக்கில் எடுத்துக் கொள்வதானால், உருவாக்கப்பட உள்ள சரஸ்வதி நதி பாகிஸ்தான் எல்லைக்குள்ளும் சென்றாக வேண்டும்.

அந்தோ பரிதாபம்! எதிர்கால அகண்ட பாரதத்தில் இடம் பெறவுள்ள பாகிஸ்தான் தற்போதைக்கு மாட்டுக்கறி தின்னும் முசல்மான்களின் வசம் உள்ளது. கோட்டைத் தாண்டிப் போனால் கவட்டைக்குள் கம்பை விட்டுச் சுத்தும் ஆபத்து உள்ளது. வேறு வழி? ”கோதாவரீ.. இந்திய எல்லைக் கோட்டுக்கு உள்ளேயே கோட்டைக் கிழிடி” என்கிறது இந்துத்துவ கும்பல்.

விட்டால் கொஞ்ச நாட்களில் சிந்துவெளி நாகரீகமே இன்றைய இந்தியாவில்தான் தோன்றியது என்றும், மொகஞ்சதாரோ, ஹரப்பா கண்டுபிடிப்புகளெல்லாம் வெள்ளையர் சதி என்றும் கூற வாய்ப்பிருக்கிறது.

வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபீப்
“சரஸ்வதி நதியை கற்பனை செய்வது” – வரலாற்று அறிஞர் இர்ஃபான் ஹபீப்

வேத புராணங்களில் – குறிப்பாக ரிக் வேதத்தில் –  சரஸ்வதி நதி குறித்து வரும் சில குறிப்புகள் அதை, சிந்து நதிக்கு இணையாக ஓடிய பெரு நதியாகச் சித்தரிக்கின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தைப் பறை சாற்றும் ஆதாரங்கள் அனைத்துமே சிந்து நதிக்கரையை ஒட்டிய சமவெளிப் பகுதியில் இருந்து கிடைத்தவை. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை தற்போதைய பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்துள்ளன.

ஆரியர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், வேத நாகரீகம் தான் இந்திய நாகரீகம் என்ற தங்களது சிந்தாந்தத்திற்கு முட்டுக் கொடுக்க வேண்டுமென்றால், சிந்து சமவெளி நாகரீகத்தை பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் கொண்டு வந்தாக வேண்டும்; சிந்து சமவெளி நாகரீகத்தை சரஸ்வதி நதி நாகரீகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். ஆக, ரிக் வேதத்தில் சொல்லப்படும் சரஸ்வதி நதியின் பாதை எப்படி இருந்தால் தங்களது விளக்கங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்பதை உத்தேசித்தே தற்ப்போது ஆதி பத்ராவில் நிலத்தைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்.

எனில் பிரயாகையையும், திரிவேணி சங்கமமும்?

இந்துத்துவ தாக்குதல்
‘சமஸ்கிருதம், பார்ப்பனியம், சாதி – மொத்தமும் இந்திய கலாச்சாரமே’

சரஸ்வதி நதி வற்றிப் போன பின் கிழக்கு நோக்கி நகர்ந்த மக்களின் தொன்ம நினைவுகள் என்கிறார்கள். அதாவது இந்துக்களின் ’நம்பிக்கைக்கு’ அலகாபாத் – இந்துத்துவாவின் நம்பிக்கைக்கு ஆதி பத்ரா!

சரி, நதியின் பாதையை வரையறுத்தாயிற்று.. தண்ணீருக்கு எங்கே போவது? கடைசியாக கிடைத்த தகவல்களின் படி போர்வெல் போட்டு பூமியைக் குடைந்து கொண்டிருக்கிறார்களாம். ஆதி பத்ரா என்பது ஹரியானாவின் சிர்சா மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி. சிர்சா மாவட்டம் ஏற்கனவே வறண்ட பகுதி. எனவே நிலத்தடி நீர் தீர்ந்து போனால்? அக்கம் பக்கத்தில் உள்ள நீராதாரங்களில் உள்ள நீரை மடைமாற்றி விட்டு எப்படியாவது சரஸ்வதியை உருவாக்கியே தீர்வது என்ற லட்சிய வெறியில் உள்ளனர் காக்கி டவுசர்கள். இனி விவசாயிகள் சரஸ்வதி நதிக்காக நிலத்தடி நீரை இழப்பதோடு தற்கொலையும் செய்து கொள்ள வேண்டும் போல.

வடிவேலு வெட்டிய கிணறு : வட்டமா சதுரமா முக்கோணமா?

நாகா சாமியார்
அரசியல் கழிசடைத்தனமான விளையாட்டிற்கு மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கான கோடிகளில் கொட்டப்படும்.

ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட சரஸ்வதி நதியைப் பற்றிய குறிப்புகளே முரண்பட்டவையாக உள்ளன. நான்கு வேதங்கள் என்று சொல்லப்படும் ரிக், யஜூர், சாம, அதர்வன ஆகியவற்றின் சமஸ்கிருத சுலோகங்களின் தொகுப்புகள் ஒரே காலகட்டத்தில் ஒரே நபராலோ அல்லது ஒரு குழுவாலோ எழுதப்பட்டவை அல்ல.

மொழியியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி காலத்தால் முந்தையதாகச் சொல்லப்படும் ரிக் வேதத்தின் பகுதிகள் சுமார் முன்னூறு ஆண்டுகால இடைவெளியில் எழுதப்பட்டவை (கி.மு 1500 – 1200). எழுதப்பட்டவை என்று சொல்வதை விட பாடப்பட்டவை – அப்போது சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் கிடையாது.

ரிக்வேத சுலோகங்களைப் பாடியவர்கள் யாரும் தாங்கள் பாடும் பாடல்கள் பிற்காலத்தில் வேதங்களாக அறியப்படும், புனிதமாக போற்றப்படும் என்ற தன்னுணர்வில் இருந்து அவற்றைப் பாடவில்லை. தாங்கள் பாடுவது (இன்றைக்கு 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாம் புரிந்து கொண்டிருக்கும் பொருளிலான) வேதங்கள் என்ற புரிதலும் அவர்களுக்குக் கிடையாது. நாடோடி நாகரீகத்தில் இருந்த ஆரியர்களின் ஆரம்ப கால கட்ட புரிதலே இப்பாடல்கள். மேற்படியாக இயற்றப்பட்ட பாடல்களை குப்தர்களின் காலமான 6-ம் நூற்றாண்டில் தான் வேதங்களாக எழுத்து வடிவில் தொகுத்துள்ளனர்.

இந்துத்துவ முயற்சிகள்
குழப்பமான வர்ணனைகளை தற்போதைய புவியியல் கூறுகளோடு பொருத்தும் முயற்சிகள் இந்துத்துவ கும்பலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த ‘வேத கால’ பாடல்களில் சொல்லப்படும் சரஸ்வதி நதி என்பதைப் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வர இயலாது.

முதலாவதாக,  ரிக்வேதத்தின் நதி சூக்தத்தில் வரும் பாடல் ஒன்று (X.75.5) நதிகளை கங்கையில் துவங்கி சுஷோமா வரை கிழக்கு மேற்காக பட்டியலிடுகிறது. இந்தப் பாடலும் வேறு சில பழைய பகுதிகளில் வரும் குறிப்புகளும் சரஸ்வதி நதியை சட்லெஜ் – யமுனை நதிகளுக்கு இடையில் ஓடிய நதியாக முன்வைக்கின்றன. ஏறக்குறைய இந்த புவியியல் விவரணைகளின்படி பார்த்தால், ஹரியானாவின் தானேஸ்வர் பகுதியில் ஓடும் ஒரு சிறு ஒடையான சிர்ஸுதி என்ற நதியைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

இரண்டாவதாக, ரிக்வேதத்தின் மற்றொரு பாடல் (VII, 95.2) மலையில் துவங்கி சமுத்திரம் வரை ஓடிய நீண்டதொரு நதியாக குறிப்பிடுகிறது. பிந்தைய காலத்தில் இயற்றப்பட்ட வேறு சில புராணப் பாடல்கள் மற்றும் மகாபாரதத்தில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே நடந்த இறுதிச் சண்டையின் போது குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதி குறித்த வர்ணனைகள் அந்நதி பாலைவனத்தோடு கலந்து கரைந்து போனதாகச் சொல்கின்றன.

ஆக மூலத்திலேயே குழப்பம்.

நாகா சாதுக்கள்
‘காக்கர் – ஹக்ரா நதி நீண்டதும் இல்லை, இமயத்தில் உற்பத்தியாகவும் இல்லை, கடலில் கலக்கவும் இல்லை, அது ஒரு ஜீவ நதியும் இல்லை.

இந்தக் குழப்பமான வர்ணனைகளை தற்போதைய புவியியல் கூறுகளோடு பொருத்தும் முயற்சிகள் இந்துத்துவ கும்பலால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ‘சிந்து நதிக்கு இணையாக தற்போதைய இந்திய எல்லைக்குள்ளும் பாகிஸ்தானின் எல்லையைத் தொட்டும் ஓடக்கூடிய சிறு நதியான கக்கர்-ஹக்ரா (Ghaggar – hakra) தான் முன்னொரு காலத்தில் சரஸ்வதி நதியென்று அழைக்கப்பட்டது’ என்ற கருதுகோளை அறுதி உண்மை போல் முன்வைக்கிறார்கள். சிர்ஸூதி நதி கக்கர் நதியோடு இணைந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த விளக்கத்தில் மூன்று பிரச்சினைகள் எழுந்தன.

முதலாவதாக, சிர்ஸூதி நதி கக்கரோடு இணைந்தது வேதகால கடவுள்களின் செயலால் அல்ல – மாட்டுக்கறி தின்னும் முசல்மானான பெரோஸ் ஷா துக்ளக்கின் (1351 – 88) கைங்கர்யத்தால். அதற்கு முன் துக்ளக் தனது ஆட்சிக்காலத்தில் பாசன வசதிக்காக இந்த இரண்டு நதிகளையும் இணைத்து காக்கர்-ஹக்ரா நதியை ராஜஸ்தானின் ஹர்னி கேரா வரை ஓட வைத்துள்ளார்.

தீனாநாத் பத்ரா
ஆர்.எஸ்.எஸ் ஷாகாகளில் உற்பத்தி செய்யப்பட்ட ‘விஞ்ஞானிகளை’ களமிறக்கி பல ’ஆய்வுக்’ கட்டுரைகளை வெளியிடச் செய்தனர். (ஆர்.எஸ்.எஸ் ‘ஆய்வாளர்’களில் ஒருவர் தீனாநாத் பத்ரா)

நியாயமாகப் பார்த்தால், சிர்ஸூதியை காக்கர் நதியோடு சேர்த்து மேலும் கொஞ்சம் தூரம் ஓட வகை செய்து கொடுத்த பெரோஸ் ஷா துக்ளக்கிற்குத்தான், இந்து முன்னணி ராம கோபாலன் அலகு குத்தி காவடி எடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, வேத பாடல்களில் சொல்லப்பட்ட விளக்கத்தின் படி காக்கர் – ஹக்ரா நதி நீண்டதும் இல்லை, இமயத்தில் உற்பத்தியாகவும் இல்லை, கடலில் கலக்கவும் இல்லை, அது ஒரு ஜீவ நதியும் இல்லை.

மூன்றாவதாக, காக்கர் சமவெளிப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வில் கிடைத்த அலூவிய படிமத்தை ஆய்வு செய்த மேரி ஆக்னஸ் கவுண்டி குழுவினர் (1983 – 87) கடந்த பத்தாயிரம் ஆண்டுகளில் இந்தப் பகுதியின் ஊடாக இமயத்திலிருந்து எந்த நதியும் பாய்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவினர்.

மிஷேல் தனினோ
புதுவை அரவிந்தர் ஆசிரம கஞ்சா யோகத்தில் ஞானதீக்‌ஷை பெற்ற மிஷேல் தனினோ.

காக்கர்- ஹக்ரி தான் புராணகாலத்தில் தொலைந்து போன சரஸ்வதி நதி என்ற விளக்கத்திலிருந்த முரண்பாடுகளை பிற வரலாற்று, புவியியல், மொழியியல் துறைகளைச் சார்ந்த அறிஞர்கள் முன்வைத்து சுற்றி வளைத்து எல்லா கேட்டையும் பூட்டிய பின்னும் இந்துத்துவ கும்பல் அடங்கவில்லை – அதற்கெல்லாம் கொஞ்சம் கூச்ச நாச்சம் வேண்டுமல்லவா?

ஆர்.எஸ்.எஸ் ஷாகாகளில் உற்பத்தி செய்யப்பட்ட ‘விஞ்ஞானிகளை’ களமிறக்கி பல ’ஆய்வுக்’ கட்டுரைகளை வெளியிடச் செய்தனர். மேற்படி ஆய்வுக் கட்டுரைகளை பல இடங்களில் மேற்கோள்காட்டி ஆதாரங்களை ஏற்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட்டனர்.

அந்த வகையில் பிரான்சைச் சேர்ந்த மிஷேல் தனினோ என்ற ஆய்வாளர் The Lost River என்கிற நூல் ஒன்றை எழுதியுள்ளார். மிஷேல் தனினோ விஞ்ஞானப் படிப்பை பாதியில் கைவிட்டதோடு, புதுவை அரவிந்தர் ஆசிரம கஞ்சா யோகத்தில் ஞானதீக்‌ஷை பெற்றவர். முக்கியமாக இவருக்கும் புவியியல் அறிவியல், நிலவியல், தொல்லியல், மொழியியல் முதலான அறிவுத்துறைக்கும் யாதொரு தொடர்புமில்லை. இருப்பினும், ‘ஒரு வெள்ளைக்காரரே சரஸ்வதி நதியை ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்’ என்று இந்துத்துவ சில்லறைகள் இதை போற்றுகின்றன.

வெவ்வேறு அறியலாளர்கள் முன்வைக்கும் கருதுகோள்களில் இருந்து இந்துத்துவ நோக்கங்களுக்கும் விளக்கங்களுக்கும் பொருத்தமானவற்றை முறைகேடாக பொறுக்கியெடுத்து ஆஃப் பாயில் உண்மையாக தனது நூலை எழுதியுள்ளார். ஒப்பிட்டுப் புரிந்து கொள்வதற்காக – நமது தமிழ்தேசிய அரைகுறைகள் லெமூரியா காண்டம் பற்றியும், ‘தமிழ் தான் மில்கி வே கேலக்சியிலேயே முதல் மொழி’ என்கிற ரீதியிலும் வெளியிடும் “அறிவியல்” நூல்களை இதற்கு இணையாகச் சொல்லலாம். தனினோ எழுதியதை தமிழாக்கம் செய்து வெளியிட்ட பத்ரியின் கிழக்கு பதிப்பகம் எப்பேற்பட்ட தரத்தோடு இயங்குகிறது என்பதற்கு இந்த கூமுட்டை நூல் ஒரு எடுப்பான சான்று.

பத்ரியின் கிழக்கு பதிப்பகம்
பத்ரியின் கிழக்கு பதிப்பகம் எப்பேற்பட்ட தரத்தோடு இயங்குகிறது என்பதற்கு இந்த கூமுட்டை நூல் ஒரு எடுப்பான சான்று.

இந்தக் கோமாளித்தனம் ஒரு பக்கமிருக்க, ருடால்ப் வோன் ரோத் என்ற ஆய்வறிஞர், வேதகாலத்தவர்கள் சிந்து நதியைக் குறிப்பதற்கான இன்னொரு பெயராக சரஸ்வதி நதியை பயன்படுத்தினார்கள் என்கிறார். வோன் ரோத்தின் விளக்கப்படி, சமஸ்கிருதத்தில் நதியை குறிக்க சிந்து அல்லது சரஸ்வதி என்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகிறது என்பது மற்றொரு ஆய்வாளரான ஜிம்மரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சமஸ்கிருத அறிஞரான கே.சி சட்டோபாத்யா போன்றோரும் அதை அங்கீகரிக்கின்றனர்.

இறுதியாக, லிவியு ஜியோசான் என்ற புவியியல் ஆய்வாளர் வேதங்களில் சொல்லப்படும் சரஸ்வதி நதி குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டு (high resolution topographic data, geomorphologic analysis and sediment dating)  அவ்வறிக்கையை 2012-ல் வெளியிட்டுள்ளார். அதன்படி, “காக்கர் – ஹக்ரா நதியானது பருவமழையினால் நீரூட்டப்பட்ட நதி” என்றும், “கடந்த பத்தாயிரம் வருடங்களில் (holocene) ஹரியானாவின் குறுக்காக இமயத்தின் பனிச்சிகரங்கள் உருகி அதனால் நீரூட்டப்பட்ட நதி எதுவும் ஓடவில்லை” என்றும் தெளிவாக நிலைநாட்டப்பட்டுள்ளது.

எனினும், ஜியோசானின் ஆய்வறிக்கையை அறிவியல் பூர்வமாக எதிர்கொள்ளும் திராணியற்று வழக்கம் போல் தொன்மம், நம்பிக்கை, வேதம் போன்ற வஸ்துக்களை தூவி இந்துமதவெறியர்கள் எதிர்கொள்கின்றனர். முன்னர் குதிரை இலட்சினைக்கு நடந்ததே, சரஸ்வதி பில்டபுக்கும் நடந்தது. வரலாற்றறிஞர்கள் இந்த நகைச்சுவை இம்சைகளை ரசிக்கிறார்களா, இல்லை, இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறதே என்று வெறுக்கிறார்களா தெரியவில்லை.

லிவியு ஜியோசான்
வேதங்களில் சொல்லப்படும் சரஸ்வதி நதி குறித்து ஒருங்கிணைந்த ஆய்வு மேற்கொண்ட புவியியல் ஆய்வாளர் லிவியு ஜியோசான்

இக்கட்டுரையின் அடிக்குறிப்பில் அது தொடர்பாக வெளியான ஆய்வறிக்கைகள், மற்றும் இந்துத்துவ கும்பல் வைத்த அரைகுறை ”விஞ்ஞான” எதிர்வினைகள், அவை தொடர்பாக ஆய்வுலகில் நடந்த விவாதங்கள் மற்றும் அவை எப்படி முறியடிக்கப்பட்டது என்பதற்கான இணைப்புகள் உள்ளன.

எப்படிப் பார்த்தாலும் சரஸ்வதி நதி என்று வேதங்களில் சொல்லப்படுவது ஒன்று கற்பனையானதாகவோ அல்லது வேறு ஒரு பெரிய நதியைப் பற்றிய வர்ணனையாகவோ அல்லது ஆரியர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையில் இருந்த வேறு ஒரு நதியைப் பற்றிய பழைய நினைவுகளாகவோ அல்லது சட்லெஜ் யமுனைக்கு இடையே ஓடி கடலில் கலக்காத சிறிய ஓடையாகவோ, அல்லது நதி தேவதை குறித்த வேத காலத்தவர்களின் விவரணைகளாகவோ தான் இருந்திருக்க வேண்டும் – அல்லது இவை எல்லாமாகவும் இருந்திருக்கலாம் (ரிக் வேதம் தான் பல காலகட்டத்தில் பலரால் பாடப்பட்டதாயிற்றே, ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த சரஸ்வதியைப் பற்றிச் சொல்லியிருக்க கூடிய வாய்ப்பும் உள்ளது)

ஆனால் சர்வ நிச்சயமாக இந்துத்துவ கும்பல் தற்போது போட்டுக் காட்டும் வரைபடத்தில் இருப்பது போன்ற ஒரு ஜீவ நதி எந்தக் காலத்திலும் அங்கே பாய்ந்திருக்க வாய்ப்பே இல்லை.

இல்லாத கிணற்றைத் தேடும் இந்துத்துவ முயற்சி, கோமாளித்தனமா?

இல்லை, இது நரித்தனம். பழைய புராணங்களின் கற்பனைக் கதைகளைத் தேடும் இந்துத்துவ முயற்சிகள் ஒவ்வொன்றும் மக்களை மத அடிப்படையில் திரட்டி இந்துக்களின் ஓட்டுக்களைப் பொறுக்க பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பல் செய்யும் சதிகள். ஹரியானாவின் ஆதி பத்ராவில் இருந்து ராஜஸ்தான் வழியே குஜராத்தின் கட்ச் பிராந்தியம் வரை மசூதிகளையும் சர்ச்சுகளையும் இந்துக்களின் புனித ‘நம்பிக்கையின்’ பேரில் உடைப்பதற்கான பிரச்சாரங்கள் இனி வேகமெடுக்கும்.

இந்த அரசியல் கழிசடைத்தனமான விளையாட்டிற்கு மக்களின் வரிப்பணம் லட்சக்கணக்கான கோடிகளில் கொட்டப்படும். புராணக் கதையான ராமாயணத்தில் வந்த கதாபாத்திரமான இராமனை முன்வைத்து அயோத்தியில் நடத்தப்பட்ட வெறியாட்டங்கள் மொத்த நாட்டையும் கலவரங்களால் அழச்செய்தது. அயோத்தியில் கற்றுக் கொண்ட பாடத்தை தேசமெங்கும் விரிவு படுத்தும் முயற்சியின் துவக்கப் புள்ளியாகவே இந்த முயற்சிகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே பாரதிய ஜனதா – ஆர்.எஸ்.எஸ் கும்பலை இந்த நாட்டில் இருந்து விரட்டாமல் மக்கள் மட்டுமல்ல, வரலாறு, அறிவியல் போன்ற கல்வித்துறைகளும் நிம்மதியாக இருக்க முடியாது.

–    தமிழரசன்.

இது தொடர்பான சுட்டிகள்

ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு – எட்டாண்டு போராட்டம் !

1

ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட மூவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்த மக்கள் உரிமைப் பாது காப்பு மையத்தின் பொது நல வழக்கு!

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு
ஜோசப் கண் மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட மூவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றுத் தந்த மக்கள் உரிமைப் பாது காப்பு மையத்தின் பொது நல வழக்கு!

திருச்சி ஜோசப் கண்மருத்துவமனையின் பெரம்பலூர் கிளை சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் என்ற பெயரில் 2008-ம் ஆண்டு 66 ஏழை மக்களின் பார்வையைப் பறித்த சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமுடியாது. அந்த கொடூர நிகழ்வின் குற்றவாளிகளுக்கெதிரான வழக்கின் தீர்ப்பு 22.04.2015 அன்று திருச்சி தலைமைக் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் வழங்கப்பட்டது.

மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் நெல்சன் ஜேசுதாசன், நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர் தாமஸ், பெரம்பலூர் மருத்துவமனை நிர்வாக அதிகாரி மருத்துவர் அசோக் ஆகிய மூவருக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. இதில் நெல்சன் ஜேசுதாசன் 2013-ம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயாவிடம் “தனியார் நிறுவனங்களில் சிறந்த நிர்வாகி” என்ற விருது பெற்றவர். கிரானைட் மாஃபியா- நரபலி நாயகன் பி.ஆர். பழனிச்சாமி “சிறந்த ஏற்றுமதியாளர்” விருதை ஜனாதிபதியிடம் பெறும் போது, 66 பேரின் கண்களைப் பறித்த இவருக்கு மாநில அளவு விருது கூட கிடைக்காமல் போனால் எப்படி? என்ற உயரிய நோக்கில் ஊழல் ராணி அளித்த சிறிய விருதுதான் இது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நால்வரை, “அவர்கள் மீதான குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை” என்று சொல்லி விடுவித்து விட்டார் தலைமைக் குற்றவியல் நடுவர் ஸ்ரீதர். இதில் மூன்று பேர் பெண் மருத்துவர்களாவர். அவர்களின் கவனக்குறைவு குறித்து விசாரித்து அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவ கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளார். “அதனிடம் நன்னடத்தைச் சான்று பெற்ற பின்னரே மருத்துவத் தொழிலைத் தொடர வேண்டும்” என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு
“இந்தத் தீர்ப்பு ஏழை மக்களை வஞ்சிக்கும் வகையிலானது”

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடாக ரூ. 2,30,000 முதல் 5,80,000 வரை வயது மற்றும் வருவாய் அடிப்படையில் நிர்ணயித்து, “மருத்துவமனை நிர்வாகம் இடைக்காலமாக தந்த ஒரு லட்சத்தை கழித்துக்கொண்டு மீதித் தொகையை 7.5 சத வட்டியுடன் ஒரு மாதத்திற்குள் தர வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

தீர்ப்பை மாலை 3 மணிக்குத்தான் நீதிபதி அறிவித்தார் என்றாலும் காலையில் நீதிமன்றம் தொடங்கிய போதே மருத்துவமனை தரப்பு வழக்கறிஞரிடம், “ குற்ற விசாரணை முறைச் சட்டம் 398-ஐப் பார்த்துக்கொள்ளுங்கள், கடைசி நேரத்தில் கஷ்டப்பட வேண்டாம்” என்று அக்கறையுடன் டிப்ஸ் கொடுத்தார். அப்போதே தண்டனை உறுதி என்பதும், ஆனால் 3 ஆண்டுக்கு குறைவான தண்டனைதான் என்பதும் உறுதியானது. அந்த வகையில் மருத்துவமனை தரப்பில் பிணை எடுப்பதற்கான முழு தயாரிப்புடன் வந்திருந்தனர். வழக்கைத் தொடர்ந்து கண்காணித்து வந்த பத்திரிகையாளர்கள், மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும் குழுமியிருந்தனர்.

சி.பி.ஐ போலீஸ் மற்றும் அரசு வழக்கறிஞர்
சி.பி.ஐ போலீஸ் மற்றும் அரசு வழக்கறிஞர்

தீர்ப்பை அறிவித்தவுடன், “இந்தத் தீர்ப்பு ஏழை மக்களை வஞ்சிக்கும் வகையிலானது” என்பதை உணர்ந்த நாம், உடனடியாகவே அதே நீதிமன்ற வாயிலிலேயே இதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்ட துணைச்செயலரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞருமான தோழர் வாஞ்சிநாதன் இதற்குத் தலைமை தாங்கினார். பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உறவினர்கள் 40 பேருடன் திருச்சி மக்கள் உரிமைப்பாதுகாப்பு மைய வழக்கறிஞர் தோழர் சங்கர், செயற்குழு உறுப்பினர்கள், விருத்தாசலம் வழக்கறிஞர்கள் மற்றும் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கியக்கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி போன்ற அமைப்புகளின் தோழர்களும் கணிசமாகத் திரண்டிருந்தனர். ஏழை மக்களுக்கெதிரான நீதித்துறையின் போக்கை எதிர்த்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

“66 பேரின் கண்ணைப் பறித்த கொடுமையை மோட்டார் வாகன விபத்து போன்ற ஒரு கவனக் குறைவு என்பதாக வகைப்படுத்தி இந்திய தண்டனைச் சட்டம் 338-ன் படி வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது. 6 நிமிடத்தில் ஒரு அறுவை சிகிச்சை, அத்தனை பேருக்கும் நோய்த்தொற்று ஏற்படும் படி ஒரே கையுறை… என்று மருத்துவ நெறிமுறை எதையுமே மதிக்காமல் நிர்வாகத்தின் லாப வெறிக்கேற்பவும் ஏழை மக்களை கிள்ளுக்கீரையாகக் கருதியும் செய்த தவறை மிகச் சாதாரணமான கவனக்குறைவாகப் பார்த்து வழங்கிய இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது; உயர்நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலுமான எமது போராட்டம் தொடரும்” என்று அறிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஜோசப் கண் மருத்துவமனை தீர்ப்பு
“66 பேரின் கண்ணைப் பறித்த கொடுமையை மோட்டார் வாகன விபத்து போன்ற ஒரு கவனக் குறைவு என்பதாக வகைப்படுத்தி தீர்ப்பு”

மருத்துவமனை நிர்வாகம் மட்டுமின்றி நீதிமன்றமும் ஏழைகளை ஏளனமாகப் பார்ப்பது கண்டிக்கப்பட்டது. “இதுவே பணக்காரர்கள், அரசியல்வாதிகளின் கண்கள் பறிபோயிருந்தால் தீர்ப்பு இப்படி வந்திருக்குமா? மருத்துவர்கள் விடுவிக்கப்பட்டிருப்பார்களா? 66 பேரை நடை பிணமாக்கிய வழக்கில் இவ்வளவு குறைந்த தண்டனையும் அற்பமான நட்ட ஈடும் அறிவிக்கப்பட்டிருக்குமா?” என்கிற கேள்விகளை எழுப்பி இந்த தீர்ப்பின் வர்க்க சார்பு கண்டிக்கப்பட்டது. அத்துடன்,  “மக்களின் உயிருடன் அலட்சியமாக விளையாடும் மருத்துவர்களை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை” என்பதை சுட்டிக்காட்டி அத்தகைய சட்டத்தை உருவாக்க வேண்டிய அவசியம் குறித்து அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் பலரும் நடைபிணமாக வாழும் தங்கள் வாழ்க்கையின் அவலங்களை வேதனையுடன் விவரித்து பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தனர். பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை தீர்ப்பு
பெண்கள் கண்ணீர் விட்டு கதறினர்.

இதற்கிடையில் அனைத்து ஆவணங்களையும் தயாரித்துக்கொண்டு எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு பிணைகேட்டனர். நாம் வெளியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக நீதிபதி பிணை தர மறுத்துவிட்டு, “அம்மாவே ஜெயிலுக்கு போயிருக்காங்க இவங்களுக்கென்ன?” என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார். குற்றவாளிகளின் தரப்பு அத்துடன் நின்று விடாமல் திருச்சி மாவட்ட தலைமை நீதிபதியிடம் சென்று பிணைக்கு நின்றனர். அங்கும் PRPC வழக்கறிஞர் தோழர் சங்கர் சென்று அவர்களுக்கு பிணை கொடுக்கக் கூடாதென்று பேசினார். இதனால் அவர்களுக்கு பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களிடம், மேல்முறையீடு செய்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவும், குறைந்த தண்டனை பெற்றவர்களுக்கு கூடுதல் தண்டனை கிடைக்கச் செய்யவும், இழப்பீட்டுத் தொகையை உயர்த்திப் பெறவும் முயற்சிக்கலாமென்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தோம்.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை தீர்ப்பு
“மக்களின் உயிருடன் அலட்சியமாக விளையாடும் மருத்துவர்களை தண்டிக்க எந்த சட்டமும் இல்லை”

இந்த மருத்துவ மனைகள், இலவச கண் சிகிச்சை முகாம் என்ற பெயரில் கூட்டம் கூட்டமாக மக்களைத் தேடிப்பிடித்து கொண்டு வந்து சோதனைச்சாலை எலிகளைப் போல கொடுமைப்படுத்துகின்றனர். ஆனால், உண்மையில் இது இலவசமுமில்லை. சேவையும் இல்லை. அரசு, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தை அமைத்து, அதன் தலைவராக உள்ள மாவட்ட ஆட்சியர் மூலம் இத்தகைய முகாம்களை நடத்த அனுமதித்து ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கும் நிதி உதவியும் செய்கிறது. அந்த நிதியையும் பெற்றுக்கொண்டு மக்களை இப்படி புழு, பூச்சிகளைப் போல நடத்தும் திமிர் இந்த தனியார் மருத்துவ மனைகளுக்கு எப்படி வருகிறது?

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை
மக்களின் உயிரையும் கூட தனியார் முதலாளிகளிடம் பணயம் வைப்பதுதான் இதற்கு அடிப்படை.

மக்களுக்கு மருத்துவம் வழங்கும் தனது பொறுப்பை தட்டிக்கழித்து அரசு, தனியாரிடம் தள்ளி விடுவதால்தான் மருத்துவத்திலும் தனியாரின் மனிதத் தன்மையற்ற கொள்ளை அரங்கேறுகிறது. முதலாளிகளுக்கு வரியைக்குறைப்பது, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்து கொடுப்பது, விவசாயிகளின் நிலத்தையும் பறித்துக்கொடுப்பது என்று சேவை செய்யும் அரசு, மக்களின் உயிரையும் கூட தனியார் முதலாளிகளிடம் பணயம் வைப்பதுதான் இதற்கு அடிப்படை.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மக்கள் உரிமைப்பாதுகாப்பு மையம் தலையிட்டு பாதிக்கப்பட்ட மக்களை பெருமுயற்சியெடுத்து ஒன்று சேர்த்து ஒரு பொது நல வழக்கு போட்டிருக்க வில்லையென்றால் இந்த அளவுக்கு கூட மக்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்கப் போவதில்லை. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக இப்படி மருத்துவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கப் போவதுமில்லை. ஆனால், இந்த குறைந்த பட்ச காரியத்தை சாதிக்கவே நாம் 8 ஆண்டு கால நீண்ட போராட்டத்தை நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நடத்த வேண்டியிருந்தது. சொல்லப்போனால், மலையைக் கிள்ளி எலியைப் பிடித்துள்ளோம் என்பதுதான் நிலைமை.

பாதிக்கப்பட்ட மக்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

முதலாளிகளுக்காகவே இயங்கும் இந்த அரசையும் நீதிமன்றம் உள்ளிட்ட அதன் எந்த அங்கத்தையும் நம்புவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. மொத்தத்தில் தனியார் மயத்தை ஒழிக்காமல் மக்களுக்கு வாழ்வில்லை என்பதையே இத்தீர்ப்பு உணர்த்துகிறது.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுபாப்பு மையம்,
தமிழ்நாடு.

பேச-94432 60164.

லெனினை சந்திக்க வேண்டுமா ? போராடுங்கள் !

1

ஏப்ரல் -22 | லெனின் பிறந்த தினம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கோவை

போராட்டப் பந்தலே.., கொண்டாட்டத் திடலாய்..!

“போராட்டமே மகிழ்ச்சி” என்றார், பேராசான் மார்க்ஸ். போராட்டமும் கொண்டாட்டமும் ஒருங்கே அமைந்தால், சொல்லவொண்ணா மகிழ்ச்சிதான். மார்க்ஸ் போராட்டமே மகிழ்ச்சி எனக் கூறியது, கம்யூனிஸ்டுகளுக்கு; கலை இரவு நடத்தும் கோமாளிகளுக்கல்ல.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
போராட்டமும் கொண்டாட்டமும் ஒருங்கே – சி.ஆர்.ஐ பம்ப்ஸ் முன்பு லெனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

கோவை சி‌.ஆர்‌.ஐ கம்பெனி கதவடைப்பு செய்து கிட்டத்தட்ட 29 நாட்களாகின்றன. கதவடைப்பு செய்த மறு கணமே அங்கு போராட்டம் என அமர்ந்த தொழிலாளிகள் இன்று வரை போராட்டத்தைத் தொடர்கின்றனர். இடையில் 10 தொழிலாளிகளை பணி நீக்கம் வேறு செய்திருக்கிறார்கள் அவர்களும் போராட்டப் பந்தலில் தொடர்கின்றனர். இப்படியான தொடர்ச்சியான போராட்டம் ஒன்றை வேறு எந்த தொழிற்சங்கமும் இது வரை சந்தித்ததில்லை.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
முதலாளித்துவ நச்சுக் கிருமி சி‌.ஆர்‌.ஐ சவுந்திரராஜனுக்கு ஆன்டி வைரசாக (Anti-Virus) பு.ஜ.தொ.மு.

இதை விட அவமானகரமான விசயம் இன்னொன்று உள்ளது; தமிழகத்தின் தொழில் முனையங்களில் முக்கியமானது கோவை. இங்கு பல பத்தாண்டுகளாக சங்கம் வைத்திருக்கும் போலி கம்யூனிஸ்டுகள் ஒரு கம்பெனி முதலாளியின் பெயர் போட்டு போஸ்டர் போடவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ துணிவதில்லை.

அது சரி, போலிகளின் பத்திரிகை ஆண்டு மலர்களில் விளம்பரங்களில் ஜொலிக்கும் முதலாளிகளின் பெயர்கள், சுத்தி அரிவாளுடன் போஸ்டரில் வந்தால் முதலாளிகளுக்கு அசிங்கம் அல்லவா….? அவ்வளவு அக்கறை இவர்களுக்கு.

ஏற்கெனவே இதே சி‌.ஆர்‌.ஐ கம்பெனியின் வேறு யூனிட்டில் சங்கம் தொடங்க முயற்சித்த சி‌.ஐ‌.டி‌.யு வை விசிறியடித்தார் முதலாளி சவுந்திரராஜன். கோவையில் இருக்கும் டெக்ஸ்மோ போன்ற இதர பம்பு தொழிற்சாலை தொழிலாளிகளே பார்த்து பரிதாபப் படும் அளவுக்கு கொத்தடிமை போல தொழிலாளிகளை நடத்துபவர் சவுந்திரராஜன்.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
“போங்கடா டேய், நாங்க ஐ‌.டி துறையிலேயே சங்கம் தொடங்கிட்டோம்.”

உலகப் புகழ் பெற்று சீனா வரை சென்றிருப்பதோடு வித விதமான விளம்பர வசனங்களால் தொலைக்காட்சிகளையும் நிரப்புகிறது சி‌ஆர்‌ஐ பம்ப்ஸ். ஆனால் இந்த புகழுக்குப் பின்னர் நிறைந்திருக்கும் தொழிலாளிகளின் சோக கீதம் யாரும் அறியாதது. அந்த சோக கீதத்தை போர் நாதமாக மாற்றியது பு.ஜ.தொ.மு. கோவையின் எட்டுத் திக்கும் H1N1 இன்ஃபுளூயன்சா வைரஸ் கிருமி பற்றி விழிப்புணர்வுப் பதாகை வைத்திருக்கும் முதலாளித்துவ நச்சுக் கிருமி சி‌.ஆர்‌.ஐ சவுந்திரராஜனுக்கு ஆன்டி வைரசாக (Anti-Virus) பு.ஜ.தொ.மு வந்து வாய்த்திருக்கிறது.

“ஐயையோ, சி‌.ஆர்‌.ஐ கம்பெனியா அங்கெல்லாம் சங்கம் தொடங்க முடியாது” என்று பதறியவர்கள் கண்ணெதிரேயே அதே சி‌.ஆர்‌.ஐ யில் சங்கம் தொடங்கி வருடம் நான்காகிறது.

இப்போது உரிமைக்கான போராட்டம் ; வர்க்கப் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 29 நாள் போராட்டமேல்லாம் சி‌.ஐ‌.டி‌.யு கனவிலும் நினைத்துப் பார்த்திராத ஒன்று. 29 நாட்கள் இங்கு முதலாளியையும் கம்பெனியையும் எண்ணி மன நெருக்கடி, நண்பர்களின் கேள்விகள், குடும்பத்தாரின் கேள்விகள், உறவினர்களின் கேள்விகள், அவ நம்பிக்கைப் பேச்சுக்கள் என எரியும் தீப்பிழம்பின் நடுவினில் எரியாத கற்பூரத் துண்டுகளாய் தொழிலாளிகள். அவர்களுக்கு ஒரே ஒரு உற்ற துணையாய் வழிகாட்டும் சங்கமான பு.ஜ.தொ.மு.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
எரியாத கற்பூரத் துண்டுகளாய் தொழிலாளிகள். அவர்களுக்கு உற்ற துணையாய் வழிகாட்டும் பு.ஜ.தொ.மு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், சின்னியம்பாளையம் தியாகிகள், ஸ்டேன்ஸ் மில் தியாகிகள் போன்ற பல தீரர்களின் போர்க்குணத்தை வரித்துக் கொண்ட சங்கமாய், முதலாளிகளை நடுநடுங்க வைக்கும் சங்கமாய், நக்சல்பாரி சங்கமாம் பு.ஜ.தொ.மு இந்த போராட்டத்தை சிறிதும் உணர்வு குன்றாமல் தலைமையேற்று நடத்தி வருகிறது.

வரலாற்றை சில சமயம் முன்கர்த்த வேண்டியிருக்கிறது என்பது ஆசான் லெனினின் கூற்று. அதன்படி பார்த்தால், காலங்காலமாக பொருளாதார வாதத்திலும் ஓட்டுச் சீட்டு அரசியலிலும் மூழ்கிக் கிடந்த தொழிலாளிகளை, அரசியலற்று இருந்த தொழிலாளிகளை, கோவைத் தொழிலாளர் சமூகத்தை புதியதொரு வடிவத்துக்கு போர்க்குணம்மிக்க போராட்டங்களுக்கு இழப்புகளுக்கு அஞ்சாத போராட்டங்களுக்கு நாங்கள் வடித்துக் கொண்டிருக்கிறோம். ஆம்., நாங்கள் வரலாற்றை முன்னகர்த்திக் கொண்டிருக்கிறோம். இந்தப் போராட்டப் பந்தலில் தான் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஆசானாகிய தோழர் லெனின் பிறந்த நாளை கோவையின் ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தின் ஒரே பிரதிநிதியான பு.ஜ.தொ.மு புரட்சிகர உத்வேகத்துடன் உற்சாகத்துடனும் கொண்டாடியது.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
தோழர் லெனின் பிறந்த நாளை கோவையின் ஒட்டு மொத்த பாட்டாளி வர்க்கத்தின் ஒரே பிரதிநிதியான பு.ஜ.தொ.மு புரட்சிகர உத்வேகத்துடன் உற்சாகத்துடனும் கொண்டாடியது.

ஏப்ரல் 22 காலை எஸ்‌.ஆர்‌.ஐ, சி‌.ஆர்‌.ஐ, எம்பெஸ்ட், கௌரி மெட்டல் மற்றும் பெரோலிங்க்ஸ் கிளைகளில் வாயிற்கூட்டம் நடத்தி இனிப்பு வழங்கி துண்டுப் பிரசுரம் கொடுத்து கொண்டாடப்பட்டது. அதே போல் கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் சார்பில் முருகன், சி‌.எஸ்‌.டபில்யு கம்போடியா, ரங்கவிலாஸ் மற்றும் பங்கஜா மில் கிளைகளிலும் விழாக்கள் நடத்தப்பட்டது. இறுதியாக கடந்த 29 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் சி‌.ஆர்‌.ஐ கம்பெனி முன்பு லெனின் பிறந்த நாள் போராட்டமாக நிகழ்த்தப்பட்டது.

சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்கள் கதவடைப்புக்கு எதிராக கம்பெனி வாயில் முன்பு கொட்டகை அமைத்து வெயில் மழை என அனைத்தையும் எதிர்கொண்டு இம்மியளவும் அகலாமல் தங்களது போராட்டத்தினை நடத்திக் கொண்டுள்ளனர்.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
போராட்டம் நடந்தும் உற்சாகம் குறையாமல் தோழர்கள் பாட்டாளி வர்க்கத்தின் வீரப்புதல்வர்கள் அணிதிரண்டனர்.

லெனின் உருவம் தாங்கிய மிகப்பெரிய விளம்பர பதாகை சி‌.ஆர்‌.ஐ கேட் முன்பு கட்டப்பட்டது. செங்கொடிகள் 29 நாட்களாக கம்பெனி முன்பு தொடர்ந்து பறந்து கொண்டிருக்கின்றன. 29 நாள் போராட்டம் நடந்தும் உற்சாகம் குறையாமல் தோழர்கள் பாட்டாளி வர்க்கத்தின் வீரப்புதல்வர்கள் அணிதிரண்டனர்.

கிளைத் தலைவர் தோழர் மூர்த்தி தனது தலைமையுரையில், “தோழர் லெனின் அவர்களிடம் கற்றுக் கொண்டு நமது போராட்டம் வெற்றி நடை போடும்” என்றார்.

கிளைச் செயலாளர் தோழர் குமாரவேல் தனது உரையில், “முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்கும் மாபெரும் ஆயுதம் லெனினியமே” என முழங்கினார்.

வாழ்த்துரை வழங்கிய பெரோலிங்க்ஸ் நித்தியானந்தன் லெனின் சிறப்புகளை பட்டியலிட்டு காட்டி அவ்வழியில் தங்கள் ஆலையில் நடந்த கதவடைப்பை முறியடித்ததை நினைவு கூர்ந்து உணர்வூட்டினார்.

தில்லைக் கோயில் போராட்டத்திற்கு சிறை சென்றதற்காக ரூட்ஸ் கம்பெனியின் எச்‌ஆர் “உன்னால் முடியும்” வசனப் புகழ் தன்னம்பிக்கை தகர டப்பா கவிதாசனால் பழிவாங்கப்பட்ட தோழர் கவியரசு முதலாளித்துவ பயங்கரவாதம் மனிதத் தன்மையற்றது என்பதை விளக்கினார்.

பங்கஜா மில் செயலாளர் தோழர் கோபால், “வெற்றி அடையும் வரை போராட்டம் தொடர வேண்டும்” என உற்சாகமூட்டினார். மாவட்ட அமைப்பாளர் தோழர் கோபிநாத் தனது பேச்சில் லெனின் சிறப்புகளை பட்டியலிட்டார்.

ஏப்ரல் 22 லெனின் பிறந்தநாள்
“வெற்றி அடையும் வரை போராட்டம் தொடர வேண்டும்”

இறுதியாக, பு.ஜ.தொ.மு மாநில துணைத் தலைவர் விளவை இராமசாமி “தோழர் லெனின் தூங்கவும் மாட்டார், மற்றவர்களையும் தூங்க விடமாட்டார். தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி பழைய வாழ்க்கையில் முதலாளிகளின் அடிமையாக வாழ அனுமதிக்காமல் தட்டி எழுப்புவார். கோவை பாட்டாளி வர்க்கத்தின் மரபுப்படி போராடும் சி‌.ஆர்‌,ஐ தொழிலாளர்கள் தோழர் லெனின் பிறந்த நாளை தங்கள் கம்பெனி முன்பு கொண்டாடுவதன் மூலம் சிறப்பு சேர்க்கின்றனர்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
தோழர் லெனின் தூங்கவும் மாட்டார், மற்றவர்களையும் தூங்க விடமாட்டார். தொழிலாளர்கள் தங்கள் விருப்பப்படி பழைய வாழ்க்கையில் முதலாளிகளின் அடிமையாக வாழ அனுமதிக்காமல் தட்டி எழுப்புவார்.

கடந்த 29 நாட்களாக கம்பெனி முன்பு கோடை மழை பல முறை கொட்டிய போதும், கோடை வெயில் கொளுத்திய போதும், கொசுக்கள் தொடர்ந்து கடித்த போதும் அஞ்சாமல் அசராமல் போராடும் கணங்கள் மகத்தானவை. இதற்கு ஈடு இணை இல்லை. நாம் உன்னதமானவர்கள், நமது போராட்டம் உன்னதமானது. ஆனால், சி‌ஆர்‌ஐ முதலாளி சவுந்திர ராஜனோ மிகவும் கேவலமானவர். முதலாளி மீதான நமது கோபத்தை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். முதலாளி நமது இளமைக் காலத்தை உறிஞ்சியதும் கடந்த காலத்தை களவாடிவிட்டான். கதவடைப்பு செய்து நிகழ்காலத்தை நாசம் செய்து விட்டான். நாளை எப்படி பிழைப்பது எனும் நிலைக்கு தள்ளி எதிர்காலத்தையும் சூறையாடுகிறான். நமது குடும்பத்தின் எதிர்காலம், குழந்தைகளின் எதிர்காலம் அனைத்தையும் பறித்தவனை பழிவாங்கியே தீர வேண்டும்.

நாம் இப்போது கம்பெனியை சுற்றியுள்ள சின்னவேடம்பட்டி உடையாம்பாளையம், மணியகாரன்பாளையம், சரவணம்பட்டி என பத்து ஊர்களில் மக்களிடம் வீடு வீடாக முதலாளியின் கொடூரத்தை விளக்கி துண்டுப் பிரசுரம் கொடுத்துள்ளோம். அடுத்து அவன் குடியிருக்கும் பீளமேடு, ஆவாரம்பாளையம் பகுதிகளிலும் களம் காண வேண்டும்.

உலக முதலாளிகளை நடு நடுங்க வைத்த தோழர் லெனின் பிறந்த நாளை கொண்டாடுவதன் மூலம் இந்த ஒரு முதலாளியை வீழ்த்த முடியும். நமது போராட்டத்தின் எல்லை எது? கால வரையறை என்ன? நமது போராட்டத்தின் எல்லை கதவடைப்பு நீங்கி கதவு திறக்க வேண்டும். எத்துணை நாள் ஆனாலும் அத்துணை நாளும் போராட வேண்டும். கோவையில் இது போல ஒரு போராட்டத்தை கடந்த ஆண்டுகளில் யாரும் நடத்த வில்லை. நாம் நடத்துகிறோம். இதன் மூலம் கோவையின் ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் தட்டி எழுப்புகிறோம். கோவைத் தொழிலாளர்களை ஏற்கெனவே செயல்பட்ட பொருளாதார வாதிகள் ஊமையாக்கி விட்ட்னர். அதன் ஒட்டு மொத்த சுமையை நாம் சுமப்பதால் நமக்கு சிறிது சிரமம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் நாம் வெல்வோம்.

முதலாளித்துவ கொடூரம் என்பது நமது புற அம்சம், நம்முடைய லெனின் சிந்தனை என்பது அக அம்சம். அக அம்சத்தை தோழர் லெனின் போதனைகளை படிப்பதன் மூலம் வலுவாக்குவோம். எத்தகைய புற நிலைமையையும் நமது புரட்சிகர சிந்தனையில் வலுவூட்டப் பெற்ற போராட்டத்தால் மாற்றி அமைக்க முடியும். இதுதான் தோழர் லெனின் நமக்கு காட்டிய வழி.

நமது கம்பெனியில் எஃகு என்பது புற அம்சம், அதை நமது உழைப்பு எனும் அக நிலையில் பம்புகளாக மாற்றி அமைக்கிறோம். எஃகு உலோகத்தை விட கடினமானவன் அல்ல நமது முதலாளி. அவன் கொடூரத்தை நாம் மாற்ற முடியும். நமது குடும்பத்தோடு குழந்தைகளோடு போராட்டத்தை விரிவு படுத்துவோம். நமக்கு வாழ்வு கிடைக்கும் வரை நீதி கிடைக்கும் வரை முதலாளி சவுந்திரராஜன் தூங்க அனுமதிக்கக் கூடாது. கம்பெனியை திறக்கா விட்டால் அவன் கோவை மண்ணில் நடமாடும் உரிமையை முடக்க வேண்டும். போலீசு ஜெயிலுக்கெல்லாம் குலையாது உறுதி; வெற்றிதான் இறுதி. இதுவே லெனின் போதனை” என முடித்தார்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
முதலாளி சவுந்திரராஜன் தூங்க அனுமதிக்கக் கூடாது. கம்பெனியை திறக்கா விட்டால் அவன் கோவை மண்ணில் நடமாடும் உரிமையை முடக்க வேண்டும்.

எஸ்‌.ஆர்‌.ஐ கிளைத் தலைவர் தோழர் துரை நன்றி கூறினார். பின்னர் அனைவருக்கும் இனிப்பு, காரம், காபி வழங்கப்பட்டது. நிகழ்ச்சி நிறைவு பெற்றது. போராட்டம் தொடர்கிறது.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை

தோழர் லெனினின் 146-வது பிறந்தநாள் விழா மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்களால் 22-04-2015 அன்று மாலை 6 மணியளவில் சென்னை சேத்துப்பட்டு பகுதியில் நடத்தப்பட்டது. முன்னதாக, சுற்று வட்டாரப் பகுதிகளில் லெனின் பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் லெனின் பிறந்தநாள் விழா.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் லெனின் பிறந்தநாள் விழா.

விண்ணதிரும் பறையோசையோடு கூட்டம் தொடங்கியது. செஞ்சட்டை அணிந்த தோழர்கள் முழக்கமிட்டனர். ஆங்காங்கே இருந்த மக்கள் கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் குவிந்தனர். தோழர் லெனின் படம் வைக்கப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்துக்கு தோழர் காமராஜ் தலைமையேற்று நடத்தினார். தோழர் அஜிதா சிறப்புரையாற்றினார்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
விண்ணதிரும் பறையோசையோடு கூட்டம் தொடங்கியது.

“சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஜெயாவின் பிறந்தநாளை அவரது கழகத் தொண்டர்கள் காலாண்டுக்கு மேலாக கொண்டாடிவரும் இந்நேரத்தில், தோழர் லெனினின் பிறந்தநாளைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? அவர் சாதித்தது என்ன?

உலகப் பரப்பளவில் ஆறில் ஒரு பகுதியைக் கொண்டது ரஷ்யா. ஜார் மன்னனின் கொடுங்கோன்மை ஆட்சியிலிருந்து ரசியாவை மீட்டெடுத்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புரட்சியை சாதித்துக் காட்டியவர் தோழர் லெனின். சாதாரண விவசாயி கூட விமானத்தில் பறந்து உரம் வாங்கி வரும் நிலை ரசியாவில் இருந்தது. இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் அமைச்சர்களைக் கூட்டி ஆலோசனை கேட்கிறார்கள். ஆனால், பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் மக்களிடையே ஆலோசனை நடத்தி அதை திட்டமாக வகுத்து ஓராண்டுக்குள் ரசியநாடு முழுவதும் மின்சாரமில்லாத இடமே இல்லை என்ற நிலைமையே மக்களோடு சாதித்தார்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் மக்களிடையே ஆலோசனை நடத்தி அதை திட்டமாக வகுத்தார்

எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியிலும், புரட்சி ஒன்றையே தனது லட்சியக் கனவாகக் கொண்டு புரட்சியை நடத்தி, உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கு பாட்டாளிவர்க்க தலைமையிலான ஆட்சிதான் மக்களாட்சி என்று அறுதியிட்டு உறுதியாக நிகழ்த்திக் காட்டியவர், தோழர் லெனின்” என்று தோழர் உரையாற்றினார்.

ஆர்.எஸ்.எஸ்-ஐ அம்பலப்படுத்தி பாடப்பட்ட எச்சரிக்கை பாடல் மக்கள் உணர்வை தட்டி எழுப்பியது. கம்யூனிசம் வெல்லும் என்ற பாடல் நம்பிக்கையூட்டியது.

நாம் லெனினுடைய வாரிசுகள், ரசியப் புரட்சியைப் போன்று பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான இந்தியப் புரட்சியை நடத்த வேண்டும் என்ற உணர்வை அளிக்கிறது, தோழர் லெனின் பிறந்தநாள்.

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் பிறந்த நாளில் உழைக்கும் மக்களின் அதிகாரத்தைக் கைப்பற்ற சூளுரைப்போம்!

ஏப்ரல் 22 புதுச்சேரி பு.ஜ.தொ.மு
‘படிப்பறிவற்ற அழுக்குச் சட்டையை அணிந்த இவர்களா தலைமையேற்கப் போகிறார்கள்’ – ஏளனம் பேசிய முதலாளித்துவ வர்க்கத்துக்கு பாடம் புகட்டினார் லெனின்.

ப்ரல்-22 : ‘மார்க்சியம் என்பது வெறும் வெற்று வார்த்தை; இது நடைமுறைக்கு பொருந்தாது. அடிமைகள் போல் வேலை செய்யும் இவர்களா ஆட்சியை நடத்தப் போகிறார்கள்’ என்றும், ‘படிப்பறிவற்ற அழுக்குச் சட்டையை அணிந்த இவர்களா தலைமையேற்கப் போகிறார்கள்’ எனவும் தொழிலாளர்களை ஏளனமாகப் பேசிய முதலாளித்துவ அறிவிலிகளுக்குப் பாடம் புகட்டி, மார்க்ஸ் சொன்னவை வெறும் வார்த்தை ஜாலங்களோ, கற்பனைக்கெட்டாத கதைகளோ அல்ல. அது அனைத்து ஜீவன்களையும் வாழவைக்கும், இயற்கைக்கும் ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் தேவையான உன்னதமான சமூகக் கட்டமைப்பு என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டி ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் சொர்க்கத்தை மண்ணிலேயே படைக்கும் சக்தி பாட்டாளி வர்க்கம் மட்டுமே என்பதை உணர வைத்த கம்யூனிச ஆசான் தோழர் லெனின் பிறந்த நாள்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
ஒட்டு மொத்த உலக மக்களுக்கும் சொர்க்கத்தை மண்ணிலேயே படைக்கும் சக்தி பாட்டாளி வர்க்கம் மட்டுமே என்பதை உணர வைத்தார் கம்யூனிச ஆசான் தோழர் லெனின்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த தோழர். லெனினின் தேவை, இன்றைய அரசியல் சூழலில் எவ்வளவு இன்றியமையாதது என்பதை பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாகத் திகழ்கின்ற தொழிலாளர்களுக்கு உணர்த்தும் வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயல்படும் இணைப்பு சங்கங்களில் வாயிற்கூட்டங்கள் நடத்தி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப் பட்டது. தோழர் லெனின் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வாயிற்கூட்டங்கள் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
தோழர் லெனின் உருவம் பொறித்த முகமூடி அணிந்து வாயிற்கூட்டங்கள் .

ஒவ்வொரு ஆலை வாயிலிலும், முகமூடி அணியும் போதும், இனிப்புகள் வழங்கும் போதும், இதில் உள்ளவர் யார் என்பதை தொழிலாளிகள் கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். நாம் அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன் இன்றைய அரசியல் சூழலில் அவரது தேவையை உணர்த்திப் பேசினோம். புதிதாக கட்டப்பட்ட சங்கங்களில் தோழர் லெனினைப் பற்றியும் இன்றைய அரசியல் சூழல் தொழிலாளர்களுக்கு எவ்வளவு அபாயகரமாக மாறியுள்ளதை அரசியல் ரீதியாக உணர்த்திப் பேசும் போது, அனைவரும் கவனத்துடன் கேட்டனர்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
இன்றைய அரசியல் சூழலில் லெனினின் தேவை

வாயிற்கூட்டங்களில் பேசிய தோழர்கள், “இன்று மக்களின் சொத்துக்களைச் சுரண்டிக் கொள்ளையடித்து சொத்துக்களைச் சேர்த்த ஓட்டுக் கட்சிக் கழிசடைகள் தமது சுயவிளம்பரத்திற்காக, அல்லக்கைகள் மூலமும் தனது சொந்தப் பணத்திலும், உயிரே, உடன்பிறப்பே என்றெல்லாம் சொல்லி மக்களே வெறுக்கும் வகையில் தங்களது பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
தனிநபர் துதிபாடுவது என்ற அடிப்படையில் இல்லாமல், தோழர் லெனின் அவர்களின் பிறந்த நாளை, நாம் நினைவு கூர்கிறோம்.

இத்தகைய சூழ்நிலையில் மேற்கூறிய தனிநபர் துதிபாடுவது என்ற அடிப்படையில் இல்லாமல், தோழர் லெனின் அவர்களின் பிறந்த நாளை, நாம் நினைவு கூர்கிறோம். தோழர் லெனின் தலைமையிலான அழுக்குச்சட்டைக்காரர்களின் ஆட்சி உலகத்திற்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. இன்றைய ஆட்சியின் மோசடிகளையும் மக்களுக்கு எதிரான தன்மையையும் ஒப்பீட்டு ரீதியில் உணர்ந்து கொள்வதன் மூலம் நமக்கான உண்மையான ஆட்சி முறை எந்தத் தத்துவத்தில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவற்றை உணர்வதற்காகவே தோழர் லெனின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது என கூட்டத்தின் நோக்கத்தைப் பற்றி விளக்கிப் பேசப்பட்டது. தொழிலாளர்கள் அனைவரும் ஆர்வமுடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டு தோழர். லெனினைப் பற்றித் தெரிந்து கொண்டனர்.

ஏப்ரல் 22, லெனின் பிறந்தநாள்
சுரண்டலற்ற புதிய உலகம் படைக்க உறுதியேற்போம்

மேலும், உழைக்கும் மக்களுக்கு எதிரான, மக்களை ஆளும் தகுதியற்ற, நொறுங்கி விழும் இந்த அரசுக் கட்டமைப்பை அடித்து வீழ்த்தி மக்களுக்கே அதிகாரம் வழங்கும் அமைப்புக்களை நிறுவ பாட்டாளி வர்க்க ஆசான்கள் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோர் நமக்கு காட்டிய வழியில் சுரண்டலற்ற புதிய உலகம் படைக்க உறுதியேற்போம் என்ற அறைகூவலுடன் வாயிற்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 89801.

நர்மதா ஆறு யாருக்குச் சொந்தம் ? – கார்ட்டூன்

0

ருசிக்கும் ஒவ்வொரு துளியிலும் உழவனின் ரத்தம்
இதுவா உனக்கு குளிர்பானம் ?

cocacola-cartoonபடம் : ஓவியர் முகிலன்

செய்தி : கோக் எனும் பன்னாட்டு கம்பெனியால் நர்மதை ஆற்றில் மட்டும் நாள் ஒன்றிற்கு 30 லட்சம் லிட்டர் நீர் உறிஞ்சப்படுகிறது