தீஸ்தா சேதல்வாத் நேர்காணல் : குஜராத் இனப்படுகொலையும் நீதித்துறையும்
ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முதல் பாகம்.
கேள்வி
குஜராத் முஸ்லீம் இனப்படுகொலை நடந்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அன்றைய குஜராத் முதல்வர் மோடி இன்று நாட்டின் பிரதமர். அவரது வலது கையான அமித் ஷா இன்று பா.ஜ.க தேசியத் தலைவர். சிறையிலிடப்பட்ட மாயா கோத்னானி, பாபு பஜ்ரங்கி மற்றும் வன்சாரா, பிற போலீஸ் அதிகாரிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இது மதச்சார்பின்மை மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் தோல்வியா? அல்லது நீதிமன்றம், ஊடகங்கள் அடங்கிய இந்த அரசமைப்பின் தோல்வியா?
தீஸ்தா சேதல்வாத்
இரண்டும்தான். பாசிசத்திற்கு எதிரான போராட்டம் நீதிமன்ற வழக்குகளாக மட்டும் குறுக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. 2002 எதை குறிக்கிறதோ அதற்கான எதிர்ப்பு மக்கள் மத்தியில் கட்டியமைக்கப்படாமல், எதிர்க் கட்சிகளின் தேர்தல் அரசியலுக்கு தேவைப்படும் போது மட்டும் ஒரு அடையாள நடவடிக்கையாக அது நடக்கிறது.
அந்த வகையில், இது அனைத்து மதச்சார்பற்ற சக்திகளின் தோல்வி. உலகெங்கிலும் உள்ளது போல நம் நாட்டிலும் உரிமைகள் எழுத்தில் இருந்தாலும், அரசியல் சட்டத்தில் தரபபடடிருநதாலும், மககள் அதற்காக போராடாமல் அநத உரிமைகளை நடைமுறையில் பெற முடியாது.
நீதிமன்றங்களைப் பொறுத்தவரை, நாம் சாதிய அடிப்படையிலான, மத அடிப்படையிலான, முழுவதும் ஜனநாயகப்படுத்தப்படாத இந்த அமைப்பின் கதவுகளை தொடர்நது தட்ட வேணடும். சான்றாக அரசியலமைப்பின் பிரிவு 21, “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்கிறது. ஆனால், நீதிமன்றத்திற்கு போகாமல் அந்த உரிமையை வெனறெடுக்க முடியாது.
குஜராத்தை பொறுத்தவரை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை மற்றும் அக்கறையுள்ள குடிமக்கள் தீர்ப்பாயத்தின் அறிக்கை ஆகியவற்றில் நீதிபதிகள் எங்களைப் போன்ற செயல்பாட்டாளர்கள் கூறுவதை உறுதிப்படுத்தியிருககினறன. இல்லையெனில் உச்ச நீதிமன்றம் வெகு காலத்திற்கு முன்பே எங்கள் வழக்குகளை தள்ளுபடி செய்திருக்கும்.
கேள்வி
நீதிக்கான இந்தப் போராட்டத்தின் தற்போதைய பின்னடைவுகளுக்கு முதன்மையான காரணம் மோடி அதிகாரததுககு வநததா? அலலது இநத அமைபபு, தான் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொணட அறஙகளை கைவிட்டு வருகிறதா?
தீஸ்தா சேதல்வாத்
மோடி அதிகாரத்துக்கு வந்ததுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலுக்கு 3 மாதஙகளுக்கு முன்பு குஜராத் உயர்நீதிமன்றம் மாயா கோத்னானிக்கு பிணை வழங்க மறுத்து விட்டது. பெரும்பான்மை பலத்துடன் புதிய அரசு பதவியேற்றபிறகு அதே நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியிருக்கிறது.
அதற்கு எதிராக, பாதிககப்பட்டவர்களும், சி.ஜே.பி.யும் (நீதி மறறும் அமைதிக்கான குடிமக்கள் அமைப்பு) ஒரு பொதுநல வழக்கு மூலமாக உசசநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தோம். உயர்நீதிமன்றம் பிணை வழங்கியதோடு மட்டுமல்லாமல், தண்டனையையும் குறைத்திருந்தது. “விசாரணை நடத்தாமல் எப்படி தண்டனையை குறைக்க முடியும்” என்று அந்த விசித்திரமான உத்தரவை நாங்கள் கேள்விக்குள்ளாக்கினோம். இது தலைமை நீதிபதி தத்து மற்றும் 2 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தலைமை நீதிபதி தத்து அரசியல்வாதிகளுக்கு பிணை கிடைத்தே தீர வேண்டும் என்று கருதலாம். (அவர்தான் ஜெயலலிதாவுக்கு பிணை வழங்கியவர்); ஆனால், இந்த வழக்கில் அவர் நடந்து கொண்டது விசித்திரமாக இருந்தது.
“நான் குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியிடம் தொலைபேசியில் பேசி, தண்டனையை எப்படி குறைத்தீர்கள் என்று கேட்டு அதை திருத்தச் சொல்கிறேன்” என்றார் அவர். எங்கள் வழக்கறிஞர், “தொலைபேசியில் பேசுகிறேன் என்கிறீர்களே அதற்கு என்ன பொருள்? இது போல எல்லா வழக்குகளிலும் உயர்நீதிமன்றங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உத்தரவுகளை மாற்றச் சொல்வீர்களா” என்று கேட்டார்.
இரவோடு இரவாக, மாயா கோத்னானியின் வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு போட்டு உத்தரவை திருத்தக் கோரினர். தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி சகாய் உத்தரவை மாற்றிக் கொடுக்கிறார்.
இது சட்ட நடைமுறை அல்ல. முறைப்படி, ‘தண்டனையை குறைத்த தவறு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்க வேண்டும்; அதை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும்.’ பிணை வழங்கவே விரும்பினாலும், இதுதான் நடைமுறை. அதற்கு மாறாக இப்படி ஏன் செய்ய வேண்டும்?
இது நடந்தது போது, நாங்கள் இது பற்றி அனைவருக்கும் வழக்கமாக அனுப்புவது போல மின்னஞ்சலில் தகவல் அனுப்பினோம். ஆனால், எதிர்க்கட்சிகள் யாரும் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை.
தலித் படுகொலைகளாக இருந்தாலும் சரி, சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகள் அவை குறித்து தமது குரலை விடாப்பிடியாக எழுப்புவதில்லை.
ஆனால், வலது சாரிகள் தொடர்ந்து நீதிமன்றத்தின் மீது அழுத்தம் கொடுக்கின்றனர்; தடை செய்யப்பட்ட விஷயங்களையும் பேசுகின்றனர். ராமர் கோவில் வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தின் முன் உள்ளது, எனவே அது குறித்து வெளியில் பேசக் கூடாது, ஆனால் அவர்கள் பேசுகின்றனர்.
இவ்வாறு, இந்த வழக்குகளை தொடர்ந்து அரசியல் ரீதியாக துடிப்பாக எதிர்ப்பதில் பிரச்சனை உள்ளது. சட்டபூர்வமான எதிர்ப்பில் நாங்கள் ஈடுபட்டிருப்பதால், எங்களுக்கு ஒரு வரம்பு வைத்துக் கொள்கிறோம். ஆனால், மற்றவர்கள் தமது குரலை எழுப்பலாம். மற்றவர்கள் பேச நாங்கள் அமைதியாக இருத்தல் என்பதுதான் திட்டமாக இருக்க வேண்டும்.
குஜராத்தோடு தொடர்பில்லாத இன்னொரு உதாரணம் சொல்கிறேன். மோடி சென்ற ஆண்டு நேபாளத்திற்கு சென்றார். ரீடிஃப் இணைய தளத்தில் இது பற்றி ஒரு சின்ன செய்தி வெளியானது.
மோடி பசுபதிநாத் கோவிலுக்குச் சென்ற போது, 2,400 கிலோ சந்தன மரம் மற்றும் பல கிலோ சுத்த நெய் வழங்கியிருக்கிறார். இதற்கான மொத்தச் செலவு ரூ 4 கோடி இருக்கும் என பத்திரிகையாளர்கள் மதிப்பிட்டிருந்தனர். இந்தப் பணத்தை யார் கொடுத்தார்கள்? பிரதமர்களுக்கு அவ்வளவு பணம் ஏது, அவர்களது சம்பளம் அவ்வளவு கிடையாது. மேலும், ஒரு சுதந்திரமான, மதசார்பற்ற, ஜனநாயக நாட்டின் பிரதமர் இது போன்ற ஒன்றைச் செய்வது சரியா?
சென்ற இரண்டு நாடாளுமன்ற அமர்வுகளில் இந்தக் கேள்வியை எழுப்பும்படி நான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முயற்சித்து வருகிறேன். அது எழுப்பப்படவில்லை.
கேள்வி
சென்னைக் கூட்டத்தில் பேசும்போது, “நமது அரசியல் சட்டம் என்பது வங்கிக் கையிருப்பு இல்லை; நமக்கு நாமே கொடுத்துக் கொண்ட ஒரு புனித வாக்குறுதி. அரசியல் சட்டம் வழங்கும் மதிப்பீடுகளை மக்கள் மதிக்கும் அளவுக்குத்தான் மதச்சார்பின்மை இந்த நாட்டில் பிழைத்திருக்கும்” என்று ஜாவித் குறிப்பிட்டார்.
கார்ப்பரேட்டுகளால் திட்டமிடப்பட்டு, மோடி வளர்ச்சி நாயகன் என்று முன்வைக்கப்பட்டுதானே பிரச்சாரம் செய்யப்பட்டது? மோடியின் இப்போதைய வெற்றியை மக்களின் மதச்சார்பின்மைக்குக் கிடைத்த தோல்வியாக பார்க்க முடியுமா?
தீஸ்தா சேதல்வாத்
நம் நாட்டில் தேர்தல் அரசியல் இப்படித்தான் செயல்படுகிறது. மோடிக்கான பிரச்சாரத்தில் மயங்கி பல்வேறு பிரிவினரும் வாக்களித்திருந்தனர்.
மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகள் முழுக்க முழுக்க தோல்வி அடைந்து விட்டன. அவர்கள், தங்களது குறுகிய நலன்களை ஒதுக்கி வைத்து விட்டு, மோடி அதிகாரத்துக்கு வந்து விடாமல் தடுக்க ஒன்றுபட்டிருக்க வேண்டும்.
இப்போது, ஆம் ஆத்மி கட்சி வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களுக்கு சித்தாந்தம் இல்லை, முசாஃபர் நகர் பற்றி அவர்கள் பேசவே இல்லை, மதவாதம் அவர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இல்லை. சச்சார் குழு அறிக்கை அவர்களுக்கு முக்கியமானது இல்லை. தேர்தல்களுக்கு முன்னர் கெஜ்ரிவால், குஜராத்துக்கு சென்றார், வளர்ச்சி குறித்து பேசினார், ஆனால், 2002 பற்றி குறிப்பிடவேயில்லை.
ஆனால், அதனாலேயே அவர்களை நாம் ஒரேயடியாக ஒதுக்கி விட முடியுமா? நாம் அப்படி ஒரு தூய்மைவாத நிலைப்பாட்டை எடுத்தால் யார் மிஞ்சியிருப்பார்கள். இந்த வெற்றிடம் நிரப்பப்படும் வரை இந்த நிலைமை தொடரும்.
(நேர்காணல் தொடரும்)
நேர்காணல்: வினவு செய்தியாளர்கள்
குடந்தை மணல் கொள்ளை – மக்கள் நேரடி நடவடிக்கை !
மணல் கொள்ளையை வேடிக்கை பார்த்தால் கொள்ளிடம் ஆறு கூண்டோடு அழிந்து விடும்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் கொள்ளிடம் ஆற்றில் அரியலுர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்காவிலுள்ள மதனத்தூர் முதல் அடிக்காமலை வரை மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதி தஞ்சை மவட்டத்திலும் மற்றொரு பகுதி அரியலுர் மாவட்டத்திலும் உள்ளது. இப்பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையின் காரணமாக நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இவையன்றி இப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு மூலம் நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு குடிநீர் எடுத்து செல்லப்படுகிறது. இந்த மணற்கொள்ளையின் காரணமாக இந்த குடிநீர் திட்டங்களும் இந்த பகுதி குடிநீர் ஆதாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிராக போராடக்கூடிய நபர்களை தனிப்பட்ட முறையில் மிரட்டுவதும் அல்லது பணத்தை கொடுத்து சரிகட்டுவது என நடைபெற்று வருகிறது.
இந்த மணற்கொள்ளை பற்றி தெரிந்த உடன் இதற்கு எதிராக போராடுவது என்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக முடிவு செய்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. முதற்கட்டமாக நீலத்தநல்லூர், அத்தியூர், மகாராஜபுரம் பஞ்சாயத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.
ராமலிங்கம் என்ற விவசாயி நம்முடன் தொடர்புகொண்டு, “மணற்கொள்ளையால் நாங்கள் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கோம். மோட்டர் போட்டா போர்செட்டில் தண்ணி வரமாட்டேங்குது. நாங்க எல்லாம் எப்படி விவசாயம் செய்வது என்று தெரியவில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் நம்முடன் சேர்ந்து கிராமம் கிராமமாக பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் முதல்நாளே மணற்குவரி மேனேஜர் சந்தித்து, “என்ன செய்யப் போறீங்க” என்று கேட்டார்.
விவசாயி ராமலிங்கம், “குவாரி மூடினால் தான் நாங்கள் விவசாயம் செய்யமுடியும்” என்றார்.
மேனேஜர், “டூவிலர் ஓட்டுபவர்கள் எல்லாம் ஹெல்மெட் போடுனுன்னு சட்டம் இருக்கு அதை யார் பாலொ பண்ணுறா” என்றார்.
விவசாயி ராமலிங்கம், “அதற்குத்தான் போலீஸ் பைன் போடுது” என்றார்.
மேனேஜர், “அத உடுங்க. எவ்வளவு வேண்டுமானாலும் பணம் வாங்கிக்குங்க. நீங்க எதுவும் தலையிடாதிங்க” என்று சொல்ல,
“நீ கொடுக்கும் காசை நம்பி வயல்களை இழக்கத் தயாராக இல்லை” என்று கூறி மறுத்து விட்டார்.
மீண்டும் ராமலிங்கத்தை தொடர்பு கொண்டு, “பல்வேறு அதிகாரிகள் தொடங்கி முதலமைச்சர் பன்னீர்செல்வம் வரை இதில் தலையிட்டு நடத்துகின்றனர். அதனால் வீணாகபகையை வளர்த்துக் கொள்ளாதீங்க” என்று மிரட்டல் பாணியில் பேசியிருக்கின்றனர்.
“யார் செய்தால் என்னங்க? தப்பு தப்பு தானே! இதை பார்த்துகிட்டு எப்படி சும்மா இருக்க முடியும். இதற்கு எதிராக எங்களால் முடிந்ததை செஞ்சிக்கிட்டு இருக்கோம்” என்று பதில் கூறி அனுப்பியுள்ளார்.
வழக்கமாக மிரட்டுவதன் மூலமாகவும், பணம் கொடுப்பதன் மூலமாகவும் காரியம் சாதிக்கும் இந்த கும்பலுக்கு ஒரு புது அனுபவம் கொடுக்கப்பட்டது.
இதனிடையே அய்யாநல்லூர் இளைஞர்களை கூட்டி இது சம்பந்தமாக விளக்கப்பட்டது. அடுத்த நாள் காலை 10 மணிக்கு நம்மை தொடர்புகொண்ட இளைஞர்கள், “உடனடியாக உங்களை சந்திக்க வேண்டும்” என்று சொன்னார்கள். அதன்படி, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தை சார்ந்த தோழர் நேரில் சென்று அவர்களை சந்தித்தார்.
சுமார் 30 இளைஞர்கள் அங்கு கூடியிருந்தனர். “நீங்க பேசினதை கேட்டு ராத்திரி முழுக்க தூக்கமே வரலங்க. நாம இதுக்கு எதாவது செய்யணும்” என்று கூறி விறுவிறுவென ஆற்றில் இறங்கி நடக்கத் தொடங்கினர். இளைஞர்களின் உணர்வுகளை அங்கீகரித்து நாமும் உடன் சென்றோம். ஆறு சின்னாபின்ன படுத்தப்பட்டு இருப்பதை பார்த்த இளைஞர்கள் ஆத்திரப்பட்டு கிட்டாச்சி இயந்திரங்களை நிறுத்தச் சொல்லி சத்தமிட்டனர். அங்கு செயல்பட்ட 9 கிட்டாச்சி எந்திரங்களும் நிறுத்தப்பட்டன.

உடனே ஓடிவந்த சூப்பர்வைசர், “என்ன விசயம்” என்று கேட்டார்.
“எங்க ஆத்தை வெட்டி கொள்ளை அடிக்கிறிங்க. அதை நிறுத்துவதற்கு வந்து இருக்கோம்” என்றதும் உடனடியாக மேனேஜருக்கு போன் செய்து இளைஞரிடம் போனை கொடுத்தார்.
மேனேஜரும், “சொல்லுங்க, நாங்க உங்களுக்கு என்ன செய்யணும்” என்ற வார்தைகளுடனே பேசதொடங்கினார்.
“எங்களுக்கு என்ன செய்யணும்? நீங்க ஆத்தவிட்டு வெளியே போகணும்” என்று பதில் கொடுத்தனர்.
அதற்கு மேனேஜரோ, கீறல் விழுந்த ரெக்காடு போல மீண்டும், மீண்டும், “உங்களுக்கு என்ன செய்யணும்” என்று சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறினார்.

காசுக்கு ஆசைபடாமல் மண்ணை காக்க போராடியவர்களை இதுவரை பார்த்ததில்லை என்பதாலேயே அவரால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், “என்ன சொன்னதையே திரும்பத் திரும்ப பேசிகிட்டு இருக்கிங்க. உங்களிடம் கொடுக்கப்பட்ட அனுமதியை எடுத்துகிட்டு நேரில் வாங்க, நாம பேசலாம்” என்றதும்,
“நான் வெளியூரில் இருக்கேன் தம்பி, என்னால் உடனே வரமுடியாது” என்றார்.

“அப்போ உங்களுக்கு கீழ் உள்ளவங்களை அனுப்பி வையுங்கள்” என்றதும் அடுத்த 5 நிமிடத்தில் நம்மை நோக்கி ஓடிவந்தார் ஒருவர்.
மணல் கொள்ளை அடிக்கும் கும்பலின் கீழ் செயல்படும் நபர் என்று நினைத்து பேசதுவங்கியவுடன் தான் தெரிந்தது அவர் பொதுபணித்துறை அதிகாரி என்று. ‘உங்களுக்கு கீழ் உள்ள நபர்களை பேச அனுப்பவும் என்று மணற்குவாரி கும்பலிடம் நாம் கூறியதை அவர்கள் சரியாக புரிந்து கொண்டுள்ளனர்’ என்று உணர்ந்தபடி பேச தொடங்கினோம்.
எடுத்த எடுப்பிலேயே, “தம்பி இங்கே எல்லாம் சரியா நடந்துக்கிட்டு இருக்குது. சட்டப்படிதான் எல்லாம் செய்கிறோம். எதுக்கு எல்லாத்தையும் தடுத்து நிறுத்தினீங்க?” என்றார்.
“மொத்தம் எத்தனை அடி ஆழம் வெட்ட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது” என்று கேட்டதும், “6 அடி கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
15 அடிக்கு மேல் வெட்டிய பள்ளத்தில் தேங்கியிருக்கும் நீர்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
உடனடியாக, அவரை கையோடு அழைத்துக் கொண்டு, 15 அடிக்கும் மேல் வெட்டப்பட்டு நீர் தேங்கியுள்ள ஒரு குழியில் இளைஞர்களை இறக்கி, “இதற்கு என்ன சொல்லுறீங்க” என்று கேட்டதும் திருதிருவென விழித்தார்.
இதற்கிடையே வாங்கிய காசுக்கு பொறுப்பாக பணியாற்ற காவல்துறை அங்கு விரைந்து வந்தது. இதைப் பார்த்த இளைஞர் ஒருவர், “நாம தண்ணி வேணும், ரோடு வேணும்னு போராட உட்கர்ந்தா ஒரு பயலும் வரமாட்டங்குறான். இப்பமட்டும் எவ்வளவு வேகமா வர்றாங்க. பார்றா” என்று கிண்டலடித்தார்.

இங்கு ‘சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு’ இருப்பதைப் பார்த்து பதறிய காவல்துறை ஆய்வாளர், “தம்பி, எல்லாம் சட்டபடி நடந்து கொள்ளுங்க. நீங்க கலெக்டர் கிட்ட மனுகொடுங்க, இல்லை என்றால் படமெடுத்து வாட்சப் அல்லது பேஸ்புக்கில் கலெக்டருக்கு அனுப்புங்க” என்றார்.
“அது எல்லாம் சரிதாங்க உங்க வீட்டுக்கு திருட வந்தா திருடனை பிடித்து கட்டி போடுவீங்களா, இல்லாட்டி கம்ப்ளெய்ண்ட் கொடுக்கப் போவீங்களா” என்றதும்,
“நாம் எதற்கு இதை கேட்கிறோம்” என்று புரிந்து கொள்ளாமலேயே, “கட்டிபோட்டு பிடித்து கொடுப்பது சரி தான்” என்றார்.
“அதைத்தான் நாங்க இப்ப செய்யுறோம். மணல் கொள்ளை போவுது வந்து புடிங்க” என்றதும் ‘நம்முடைய வேலைக்கே வம்பாபோவுது’ என்று உணர்ந்தவர்,
“நீங்க அவங்க கிட்ட பேசிக்கிங்க” என்று பொதுபபணித்துறை அதிகாரியை கைகாட்டினார்.

பொதுப்பணித்துறை அதிகாரியிடம், “உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நீர் இருக்கும் பகுதியில் மணல் அள்ளக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. ஆனால் நீரிலேயே இறங்கி கிட்டாச்சி மூலம் மணல் அள்ளுகிறார்கள்” என்று காட்டினோம்.
மேலும் 9 கிட்டாச்சி இருப்பதை காட்டி, “எத்தனை இயந்திரத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது?” என்று கேட்டோம்.
“3 தான் அனுமதி” என்று கூறி நம் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு, “சார் இது எல்லாம் ஓ.பி.எஸ் அவருடைய தம்பி நேரடி கண்ட்ரோல்ல நடக்குதுங்க சார். நீங்க சொல்லுறபடி செய்யுறதுக்கு எனக்கு அதிகாரம் இல்லை” என்றார்.
அதிகாரிகள் நம்மிடம் கையை பிடித்து கெஞ்சுவதை பார்த்து சகிக்க முடியாத காவல்துறை வேகமாக நம்மிடம் வந்து, “சார், உங்களுக்கு என்ன தான் பிரச்சனை” என்று கேட்டார்.

“குடிமக்கள் எங்களோட பிரச்சனையை அதிகாரியிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். இதுல உங்களுக்கென்ன பிரச்சனை” என்று கேட்டதும் என்ன சொல்வதென்று தெரியவில்லை விலகி நின்றார்.
இதற்கிடையே இளைஞர்கள், “இதுக்கு மேல இவங்க கிட்ட பேசி புரியோஜனம் இல்லை. நாம ஊர் மக்களிடம் பேசி அடுத்த கட்டமாக நாம என்ன செய்யலாம் என்று முடிவு செய்யலாம்” என்றனர்.
அதை அங்கீகரித்து இதை அதிகாரிகளிடம் அறிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வந்தோம்
நம்முடன் வந்த இளைஞர்களோ, “ஒரு 30 பேர் திரண்டு 2 மணி நேரம் குவாரியை முடக்கி வைக்கமுடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏதோ ஆத்திரத்தில் புரப்பட்டு வந்தோம். ஆனால் இங்கு வந்த பிறகு மணல் குவாரிக்கு பின்னாடி யார், யார் இருக்காங்க. அதிகாரிகள் எப்படி எல்லாம் துணைபோறாங்க என தெரிந்து கொண்டோம்” என்றனர்.

நாம் குவாரியை விட்டு வெளியேறியபோது நம்மை நோக்கி வந்த காவல்துறை அதிகாரி ஒருவர், “தம்பி, நானும் இந்த தண்ணியை குடிச்சிதான் வாழுறன். உங்கபக்கம் ஞாயம் இருக்கு. நாங்க அரசாங்க சம்பளத்தை நம்பி வாழுறோம். அதனால் அரசாங்கம் சொல்லுறததான் கேட்கமுடியும். அதனால நீங்க எங்களை சட்டை செய்யாமல் போராடுங்க” என்றார்.
அந்த காவல்துறை அதிகாரி, “அரசாங்கம் என்றால் மக்கள்தான். தான் வாங்கும் சம்பளம் மக்கள் தரும் சம்பளம்” என்பதை உணர்வில்லை.
இந்த அதிகார வர்க்கம் அதை உணரும்படி போராட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்வோம்.
தகவல்
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
குடந்தை
நாங்கள் தொழிலாளிகள் , ஆசான் லெனினின் மாணவர்கள்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் டி.டி.கே பி.டி.எல் தொழிலாளர்கள் “சட்ட விரோத ஆலை மூடலைக் கைவிடு” என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாட்டாளி வர்க்க பேராசான் லெனினின் 146-வது பிறந்த நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆலைவாயில் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
19.04.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் முன்னிலையில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம், பு.ஜ.தொ.மு லைட் விண்ட் ஸ்ரீராம் கிளை, கும்முடிப்பூண்டி பகுதி ஆகிய மூன்று அணிகள் போட்டியிட்டன.
கைப்பந்தாட்டப் போட்டி
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இதில் லைட்விண்ட் ஸ்ரீராம் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர், லெனின் குறித்த புத்தகங்களை பரிசாக வழங்கினார்.

ஆலைவாயில் கூட்டங்கள்…
பட்டாபிராம் TI மெட்டல் ஃபார்மிங் சங்கத்தில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத்தின் தலைவர் தோழர் செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் தோழர் மகேஷ்குமார் வரவேற்றார். பு.ஜ.தொ.மு- வின் மாநிலப் பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் ஆசான் லெனினது படத்துக்கு மாலையணிவித்து கொடியேற்றினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அவர் தனது சிறப்புரையில, லெனினை பாட்டாளி வர்க்கம் ஏன் கொண்டாட வேண்டும் என்பதை எடுத்துக் கூறினார். திருவள்ளூர் மாவட்ட இணைச்செயலாளர் தோழர் மு.முகிலன், ஆவடி-அம்பத்தூர் பகுதி தலைவர் தோழர் ம.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பு.ஜ.தொ.மு-வின் ஜி.எஸ்.எச்., இண்டெக்ரா ஆகிய கிளைச்சங்க உறுப்பினர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மாவட்டத்திலுள்ள அனைத்து இணைப்பு கிளைச் சங்கங்களிலும், ஆசான் லெனினின் உருவப்படம் வைத்து, கொடியேற்றி இனிப்பு வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மற்ற சங்கங்களில் பகுதி முன்னணியாளர்கள் முன்னிலையில் அந்தந்த சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டு ஆசான் லெனின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடினர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
கும்மிடிப்பூண்டி பகுதி சங்கங்களில் மாவட்டத் தலைவர் தோழர் விகந்தர் கொடியேற்றினார். மாவட்டச் செயலாளர் செல்வகுமார் உரையாற்றினார். “ஆசான் லெனின் பிறந்த நாளை நாம் ஏன் கொண்டாட வேண்டும்? ஜார் மன்னனுக்கு ஒத்ததான பாசிச நடவடிக்கைகளை கையாளும் மோடிக்கெதிராய் தொழிலாளிகள் கிளர்ந்தெழ வேண்டும். அத்தகைய தொழிலாளி வர்க்க ஆட்சி அமைக்க பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் பிறந்த நாளில் உறுதியேற்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

SRF மணலியில் நடந்த விழாவில் கிளைச் செயலாளர் ஞானபிரகாஷ் தலைமையில், கிளை பொருளாளர் ஆனந்தபாபு உரையாற்றினார்.
எஸ்.ஆர்.எஃப் மணலி கிளை ஆலைவாயில் கூட்டம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மாவட்டத்திலுள்ள அனைத்துச் சங்கங்களில் உள்ள தொழிலாளர்களையும் ஆலைவாயில் முன் கூட்டி பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாட்டாளி வர்க்கம் என்ற வகையில் ஆசான் லெனின் பிறந்த நாளை உயர்த்திப் பிடிக்க வேண்டியஅவசியத்தை தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த கூட்டங்கள், வண்ண வன்ண பிழைப்புவாதிகளை அம்பலப்படுத்துவதாகவும், புரட்சிகர தொழிற்சங்கத்தின் கடமைகளை நிலை நிறுத்துவதாகவும் அமைந்தது.

தொழிலாளர்களுக்கு வினியோகிக்கப்பட்ட பிரசுரம்
அன்பார்ந்த தொழிலாளத் தோழர்களே!
வணக்கம். அழுக்குச் சட்டை தொழிலாளர்களை அரசாள வைத்த ஆசான் லெனினின் 145-வது பிறந்த தினம் இன்று. சிறப்புமிக்க இந்த நாளைக் கொண்டாடுவது பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்கிற வகையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆசான் லெனின் பிறந்த நாளை நாம் கொண்டாடுகிறோம்.
லெனின் பிறந்த நாளை ஏன் கொண்டாட வேண்டும் ?

1870-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதியில் ரஷ்ய நாட்டில் பிறந்தார், லெனின். “இந்த உலகத்தில் எதுவுமே மாறாது” என்ற கருத்தை உடைத்து, “மாற்றம் ஒன்று தான் மாறாதது” என்ற கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் வகுத்தளித்த விஞ்ஞானத்தை நடைமுறையில் சாதித்துக் காட்டியவர் லெனின்.
“நீங்க நாலு பேரு செவப்பு சட்டை போட்டுட்டு, கொடி பிடிச்சி கோஷம் போட்டா எல்லா பிரச்சனையும் தீந்துடுமா?” என்று அறியாமையினால் இன்றைக்கு கேள்வி கேட்பவர்களைப் போலவே வரலாறு நெடுக கேள்வி கேட்டு வந்திருக்கிறார்கள்; ரஷ்யாவிலும் கேட்டார்கள். “தொழிலாளர்களால் அரசாள முடியுமா” என்றும், “முதலாளிகள் இல்லாமல் தொழில் துறை வளர்ச்சி சாத்தியமா” என்றும் ஏளனமாகப் பேசினர். உலக வரலாற்றில் முதன்முறையாக, ரஷ்யாவில் சோசலிச புரட்சியை நடத்திக்காட்டி, தொழிலாளி வர்க்கத்தால் அரசாள முடியும், முதலாளிகள் இல்லாமல் தொழில்துறை வளர்ச்சி சாத்தியம் என்று நிரூபித்துக் காட்டினார் லெனின்.
கொடுங்கொல் ஆட்சி புரிந்து வந்த ஜார் மன்னனின் ஆட்சி, லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியால் வீழ்த்தப்பட்டது. உலக முதலாளித்துவத்தின் செவிப்பறையில் ஓங்கி அடிக்கும் வண்ணம், தொழிலாளிகள்-விவசாயிகள் நேச அணியை உருவாக்கி, முதலாளித்துவ கொடுங்கோன்மைக்கு சாவுமணி அடித்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிலநாட்டினார்,லெனின். உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக வாழ்நாள் முழுதும் போராடிய ஆசான் லெனினின் பிறந்த நாளை உயர்த்திப் பிடிக்க வேண்டியது தொழிலாளர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமை.
ஆசான் லெனினை நாம் வரித்துக் கொள்ள வேண்டும்!
பிறந்து வளர்ந்து, படித்து முடித்து வேலை தேடி, கிடைத்த பின் வீடு கட்டி திருமணம் செய்து, குழந்தை பெற்று, அதையும் தன்னைப் போலவே வளர்த்து கடைசியில் மாண்டு போகும் அற்பத்தனமான வாழ்க்கையை வாழவில்லை, ஆசான் லெனின். தன் மனைவி, தன் குழந்தை, தன் குடும்பம் என வட்டமிட்டுக்கொண்டு சொத்து சேர்த்துக்கொள்ளவில்லை. சக மனிதர்கள் வறுமையில் உழன்ற போது, அடக்குமுறைக்கும், சுரண்டலுக்கும் ஆளான போது, அதனை அவனது தலைவிதியென்றும், பூர்வஜென்ம பாவமென்றும் வியாக்கியானம் பேசி ஒதுங்கிச் செல்லவில்லை. மாறாக சமுதாயத்தை ஆய்வு செய்தார். அது விதியல்ல, ஜார் மன்னனின் பேயாட்சியில் முதலாளித்துவ கொடுங்கோன்மையால் விளைந்த சதி என்று தொழிலாளர்களுக்கு உணர்த்தினார். சுரண்டலில் கொழுத்த முதலாளி வர்க்கத்தை உழைக்கும் மக்களின் முன் அம்பலப்படுத்தி அவர்களை விரட்டியடித்தால் ஒழிய உழைக்கும் மக்களுக்கு விடிவு இல்லை என்பதை உணர்த்தியதோடு நில்லாமல் வழிநடத்தவும் செய்தார்.
முழக்கமிடுதல்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
உலகின் முதல் சோசலிசப் புரட்சி
உலகின் முதல் சோசலிச அரசு 1917 நவம்பர் 07 அன்று நிறுவப்பட்டது. ஆசான் லெனின் தலைமையிலான இந்த ஆட்சியில் வறுமை ஒழிப்பு, விலைவாசி குறைப்பு, அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவம், சுகாதாரம் என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டது, உலகின் சிறந்த நாடாகவும், அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய நாடாகவும் வளர்ந்து நின்றது , ரஷ்யா.
ஆங்கிலேய ஏகாதிபத்திய கொடுங்கோன்மையை வீழ்த்துவதற்கு இந்திய நாட்டு இளைஞர்களை அறைகூவி அழைத்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங், தனது கருத்தை நாடறியச் செய்ய வேண்டுமென்பதற்காக, உயிர்ச் சேதம் விளைவிக்காத வெடிகுண்டை நாடாளுமன்றத்தில் வீசிய போது அவரை ஏகாதிபத்திய தீவிரவாதியாக சித்தரித்து தூக்கிலிட்டுக் கொன்றது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். பகத்சிங்கின் பிணத்தைக் கூட கண்டு அஞ்சினார்கள். இறந்த உடலைத் துண்டு, துண்டாக வெட்டி சட்லஜ் நதிக்கரையில் வீசினார்கள் காலனியாதிக்கவாதிகள். அன்று பகத்சிங்கின் உடலைக் கண்டு அஞ்சியதைப் போலத்தான் இன்று ஆசான் லெனின் குறித்தும், கம்யூனிசம் குறித்தும் அஞ்சி நடுங்குகின்றது, ஆளும் வர்க்கம்.
ஒடுக்கப்படுகின்ற வர்க்கங்களின் விடுதலைக்கென்று ஒரு தத்துவம் உள்ளது. அதுதான் கம்யூனிசம்! அந்த கம்யூனிச தத்துவமெனும் ஆயுதத்தை நாம் முதலாளிகளுக்கெதிராக நீட்டி விடக்கூடாது என்பதால் தான் தத்துவத்தையும் , அதனை வளர்த்தெடுத்த தலைவர்களையும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்கிறது, ஆளும் வர்க்கம். அவதூறும் செய்து வருகிறது. ஆளும் வர்க்கத்தின் இருட்டடிப்புகள், அவதூறுகள் அத்தனையையும் முறியடித்து ஆசான்களையும், கம்யூனிசத் தத்துவத்தையும் உலகறியச் செய்ய வேண்டும். நம்முடைய ஆசான்களை நாம் தானே உயர்த்திப் பிடிக்க வேண்டும்!
நமது நாட்டில் புரட்சி மலர லெனின் பிறந்த நாளில் உறுதியேற்போம்
ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் உழைக்கும் மக்கள் வதைக்கப்பட்டதைப் போலவே இன்று நமது நாட்டிலும் பாசிச நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள். முதலாளிகளின் நலன்களுக்காக நாடு நாடாக பறந்து கொண்டிருக்கிறார், பிரதமர். தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதன் மூலம் தொழிலாளிகளை முதலாளிகளுக்கு கொத்தடிமைகளாக்கும் வேலையைச் செய்வது, அவசரச் சட்டங்கள் போட்டு உழைக்கும் மக்களை மரணக்குழியில் தள்ளுவது என அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் கிஞ்சித்தும் தயக்கமின்றி செய்து வருகிறது மோடி அரசு.
தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகள் மிகத்தீவிரமாக அமுல்படுத்தத்தப்பட்டதன் விளைவாக மக்கள் ஓட்டாண்டிகளாகி நடுத்தெருவில் நின்று கொண்டிருக்கின்றனர். தண்ணீர், கல்வி, மருத்துவம் என அனைத்தும் தனியார்மயம். வேலை தற்காலிகம், பசி பட்டினி தான் நிரந்தரம்! மக்களைக் காக்கவோ, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவோ முதலாளிகளுக்கு சேவை செய்யும் இந்த அரசால் முடியாது என்பது நிருபணமாகியுள்ளது.
அரசும் அதன் உறுப்புகளும் ஆளத் தகுதியிழந்து நிற்கிறது. போலீசு, நீதித்துறை, இராணுவம் அனைத்துமே மக்களுக்கானதில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆளும்வர்க்கமே தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்ட பிறகும் நாம் அமைதியாய் இருக்க முடியாது.ஆசான் லெனின் காட்டிய வழியில் தொழிலாளி வர்க்கமாக ஒன்றிணைந்து திவாலாகிப் போன,ஆளத் தகுதியற்ற இந்த அரசமைப்பை அடித்து நொறுக்குவோம். மக்களுக்கான அதிகார அமைப்புகளை நிறுவுவோம். அதை செய்து முடிக்க ஆசான் லெனின் பிறந்த நாளில் உறுதியேற்போம்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர்
சிப்ரோபிளாக்சசின்
“ஐயா! ஐயா! டாக்டர் ஐயா!”
உரத்த சப்த்ததுடன் யாரோ வாசல் கதவைப் பிடித்து உலுக்குவது கேட்டது. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பதினொரு மணிக்குத் தான் மருத்துவ ஆலோசனை அறை வேலைகளை முடித்துவிட்டு, இரவுச் சாப்பாட்டிற்குப் பின் ஏதோ ஒரு புத்தகத்தினைப் படிக்க ஆரம்பித்தேன். இரவு படுப்பதற்கு தாமதமாக செல்வது எனக்கு வழக்கமாகிவிட்டது. மார்கழி குளிர் காரணமாக பாப்பாவிற்கு ஏற்பட்டுள்ள ஆஸ்துமா, அவளின் தூக்கமின்மையே மனைவியையும் விழிப்புடன் வைத்திருக்கச் செய்த்து. எனவே வாசல் குரலுக்கு எந்த எதிர்ச் செயலுமின்றி புத்தகத்தினுள் ஆழ்ந்திருந்த என்னை என் மனைவி உசுப்பினாள்.

“வாசல்ல யாரோ கத்துறாங்க கேக்குதுல்ல போய்ப் பாருங்க. இந்தச் சனியன் வேற இருமிகிட்டே இருக்கு, முழிச்சிக்கப் போவுது.”
“இரு இரு, புத்தகத்துல அடையாளம் வைக்கிற அட்டைய காணோம். இந்த பக்கத்த முடிச்சிட்டுப் போறேன்” என்றவாறு அந்தப் பக்கத்தை முடிக்காமலே புத்தகத்தை மூடினேன்.
கதவைத் திறந்து விளக்கைப் போட்டவாறு வாசல் நோக்கி முன்னேறினேன். வெளி விளக்கை எரியவிட்டவுடன் “யாரது?” என்றேன். “ஐயா, ஆம்பட்டங்க, காலைல ஆசுபத்திரிக்கு வந்தோங்க. இப்ப சுரம் தாங்கலங்க, அதான் அழைச்சிகிட்டு வந்தேன்” என ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
நான் கதவைத் திறந்து அவர்களை உள்ளே அழைத்தேன். ஆணும் பெணமணுமாய் நன்றாகத் தெரிந்த முகங்கள். ஆனால் பெயர் ஞாபகம் இல்லை. அழுக்கான சேலை குளிருக்காக அதையே முக்காடாய் தலைக்கு சுற்றி போர்த்திருந்தாள். அவளது கணவன், முகம் மட்டும் தெரியும் வண்ணம் ஒன்றோ, இரண்டோ அழுக்குப் போர்வைகளைச் சுற்றிக் கொண்டிருந்தார். அதையும் மீறி குளிராலும், காய்ச்சலாலும் அவர் பற்கள் கிட்டித்துக் கொண்டிருப்பதையும் உணரமுடிந்தது.
உட்காரச் சொன்னேன். முடியாமல் வாசல் பெஞ்சிலேயே படுத்துவிட்டார்.
“காலைலதானம்மா ஆஸ்பத்திரியில பார்த்து மருந்து எழுதிக் கொடுத்தேன். அதுக்குள்ள என்ன?” என்றேன், சற்று எரிச்சலுடன். கிராமத்து மக்களுக்கு இப்படித்தான். காய்ச்சலோ வாந்தியோ, வயிற்றுப் போக்கோ அப்படியே மருந்து கொடுத்தவுடன் மாறிவிட வேண்டும். இதனால்தான் டாக்டர்களைவிட பூசாரிகள் எளிதில் ஏமாற்றித் திரிகிறார்கள்.
“இல்லைய்யா, ஆசுபத்திரி மாத்திரல கேக்கலய்யா, சுரம் தாங்கல”
“எத்தனை நாளா சுரம் இருக்கு?”
“நேத்திலேருந்து தாங்க.”
“நேத்திலேருந்துதான். கவலைப்படாதீங்க” என்றவாறு வெப்பமானியை வைத்து உடல் வெப்பத்தைப் பரிசோதித்தேன். காய்ச்சல் 104 இருந்தது. “ஒரு நாள் சுரத்திற்கு ரொம்ப பயப்பட வேண்டாம். இந்த பனியில வைரஸ் கிருமியால் கூட ஃபுளு ஜுரம் வரும். அதனால காய்ச்சல் மாத்திரையை மட்டும் விடாம குடுங்க.” என்றேன்.
“ஆசுபத்திரி மாத்திர வேண்டாங்க. நீங்க வேற குடுங்க” அந்தப் பெண்ணின் வாதம் எனக்கு வேடிக்கையாக இருந்தது. அப்போதுதான் உற்றுப் பார்த்தேன். “எந்த ஊரு, ஆம்பட்டமா, உங்க பேரு என்ன பஞ்சவர்ணமா?” என்றதும் அந்தப் பெண் மிகுந்த மகிழ்ச்சியுடன் “ஆமாய்யா… போன மாசம் மார்ல சீழ்வச்சி நீங்கதானே ஆபரேசன் பண்ணி விட்டீங்க. எம் புருஷனையும் எப்படியாவது காப்பாத்துங்க”என்றாள்.
இப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு விவசாய குடும்பம். தாய்ப்பால் கொடுக்கும் இப்பெண், குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு வயலுக்கு களை எடுக்க செல்வதும், அவசர அவசரமாக திரும்பியவுடன், அழுக்கையும், வியர்வையையும் பொருட்படுத்தாமல் ஏணையில் ஒண்ணுக்கு ஈரத்துடன் கிடக்கும் பிள்ளையை மாரோடு அணைத்துக் கொண்டதன் காரணமாகவோ என்னவோ வலது மார்பகத்தில் சீழ்கட்டி ஏற்பட்டிருந்தது. மார்பகத்திற்கு பிரத்தியேகமான கவனிப்பு தேவை என்பதாலும், கூச்சம் காரணமாகவும் வேறு மருத்துவரிடம் போகுமாறு பரிந்துரைத்தேன்.
“நன்னிலத்துக்கும், திருவாரூருக்கும் போனோம். ஆனா முன்னூறு, நானூறு ஆவுங்கிறாங்க. அதனால திரும்பிட்டோங்க” என்றாவது மறுநாளே என்னிடம் வந்தார்கள். நானே சிகிச்சை அளிக்க நேர்ந்தது. கிட்டதட்ட அரைலிட்டருக்கும் மேல் சீழ் எடுக்கப்பட்டது. சுகாதார நிலையத்திலேயே தொடர் சிகிச்சையளித்து நலமானது.
“அதுசரி! இந்த குளிர்லயும், பனியிலயும், இருட்டுல ஆமபட்டத்துலருந்து வயலுக்குள்ள நடந்து வந்துக்கிறீங்களே. விளக்கு ஒன்னும் எடுத்துக்கிட்டு வரலயா? இரணடும் சின்ன குழந்தைகளாச்சே யார்கிட்ட விட்டுட்டு வந்தீங்க?” என்றவாறு ஊசிக் குழாயில் மருந்தினை எடுத்து நோயாளியை நோக்கி நகரந்தேன். பாவம் அவர் நோயினால் பேச இயலாதவாறு இருந்தார்.
சட்டென்று அந்தப் பெண்ணின் குரல் கரகரப்பானது. கமறும் குரலில் “நல்லா இருக்கனுங்க நீங்க. உங்க கை பட்டதுமே நல்லாயிடும். வீட்டுல பிள்ளைங்கள பார்த்துக்க யாரும்இல்ல. ரெண்டையும் தூங்கப்போட்டுட்டு ஓடியாந்துட்டேன். சீக்கிரம் போனுங்க.” என்றதும் எனக்கு மனது உடைந்து போனது.
ஏனெனில், அது அந்த பெண்ணின் ஒன்றைக் குரலாய் எனக்குத் தெரியவில்லை. ஓராயிரம் ஏழை விவசாயத் தொழிலாளிகளின் குரலாலத்தான் ஒலித்தது. நள்ளிரவில் நண்டும் சிண்டுமாய் இரண்டு குழந்தைகள், ஆதரவற்ற நிலையில், எவர் உதவியுமின்றி, வயலுக்கு நடுவிலுள்ள ஒரு குடிசையில் விட்டு விட்டு, இருட்டில் நினைவு தப்பிய கணவனை சிகிச்சைக்கு அழைந்து வரும் நிலைமையை நினைத்துப் பார்ப்பவர்களுக்குத்தான் அந்தக் கொடிய நிலை புரியும். நான் ஏதும் பேசாமல் ஊசி போட்ட பின் மருந்துச்சீட்டை எழுதிக் கையில் கொடுத்தேன்.
“மாத்திரைக்கு என்ன பண்ணுவீங்க? புத்தகரம் போயில்ல மாத்திரை வாங்கணும்?” என்றேன். புத்தகரம் என் வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.
அதற்குள் அந்தப் பெண் தட்டுத் தடுமாறி முந்தானையின் முடிச்சை அவிழ்த்து அதற்குள்ளிருந்து கசங்கிய ஒர ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து என்னிடம் நீட்டியவாறு சற்று கூச்சத்துடன் “இதாங்க ஐயா இருக்க வைச்சுக்குங்க, மாத்திரை காலைல வாங்கிக்கிறோம். கையில பணமில்லீங்க. அறுப்பு கிறுப்பு ஆரம்பிச்சாத்தான் கைல காசு இருக்கும். காலைல ஆருகிட்டயாச்சும் கடன் வாங்கி மாத்திரை வாங்கி குடுத்துர்றேங்க.”
மார்கழி மாதத்தில் குளிர் மட்டுமல்ல, வறுமையும் சேர்ந்தல்லவா இவர்களை வாட்டுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதில் விவசாயிகளின் வாழ்க்கையும் ஒளிந்துள்ளதோ என்றவாறு மேசையிலிருந்து பாராசிடமால் மாத்திரை சிலவற்றை எடுத்து அவரிடம் கொடுத்து, “காச அப்புறம் வாங்கிக்கிறேன். இந்த பணத்தை வைச்சு காலைல முதல்ல மருந்து வாங்கிக் கொடுங்க” என்றேன்.
குளிராலும், நன்றியுணர்வாலும் நடுங்கும் கைகளை இருவரும் கூப்பினர். கணவரைத் தாங்கியவாறு அப்பெண் நடக்க ஆரம்பித்தாள். இதற்குள் என் மனைவி பொறுமை இழந்து வாசல்வரை வந்து விட்டாள். “நடுராத்திரியில் என்ன அங்க ஒரே பேச்சு? சட்டுபுட்டுன்னு பார்த்து அனுப்பிவிட்டு வரக் கூடாதா?” என லேசாகச் சீறினாள்.
“நீ பாட்டுக்கு லைட்ட அணைச்சிட்டு தூங்க வேண்டியது தானே!” என்றேன். “எவ்வளவு நேரம்? எனக்கு பயமா இருக்குல்ல. லைட்ட போட்டா பாப்பா முழிச்சிக்குறா,” என்றவாறு என் மனைவி முன்னால் நடந்தாள். என்ன பயம் இவளுக்கு? இவளுடைய பயமும், அந்தப் பெண்ணின் பயமின்மையும்….
அடுத்த சில தினங்களுக்கு வாழ்க்கை வழக்கம்போல் கழிந்தது. அந்தப் பெண்ணையும் அவள் கணவனையும் மறந்து போனேன்.
ஒரு வாரம் சென்றிருக்கலாம். ஒரு நாள் நான் மருந்துவமனையில் பணியில் இருந்தபோது ஒரு கட்டை வண்டியில் இருந்து அதே நோயாளியை இறக்கினர். மெதுவாக கைத்தாங்கலாகக் கொண்டுவந்து மருத்துவமனை முன் உள்ளிருந்த பெஞ்சில் படுக்க வைத்தனர். அதற்குள் மருத்துவ ஊழியர்கள் பதறிக் கொண்டு வந்தனர். “ஏப்பா அப்படி வெராந்தாவுல படுக்க வைக்க வேண்டியதுதான” என்றார் கம்பவுண்டர்.
“வாந்தி வயித்தால கேசுகளை உள்ள கொண்டு வந்து போட்டா யாரு கழுவுறது” என முணுமுணுத்தார் துப்புரவாளர்.
இதற்குள் அந்தப் பெண் இடுப்பிலிருந்த குழந்தையை அணைத்தவாறு, “சார் நீங்கதான் அவர காப்பாத்தணும். ரொம்ப புண்ணியமா போவும் உங்களுக்கு” என்று தரையில் விழுந்து கும்பிட எத்தனித்தாள்.
நான் தடுத்தவாறு “இருங்கம்மா அவசரப்படாதீங்க பார்ப்போம்” என்றேன். அதற்குள் வண்டியோட்டி மாடுகளை அவிழ்த்துக் கட்டிவிட்டு உள்ளே வந்தவர் “இந்த…. நீ போ வெளில, ஐயா இருக்காங்கல்ல, எல்லாம் பாத்துக்குவாங்க” என்றார்.
நான் அவரிடம், “இவரு பேரு என்னாங்க?” என்றேன், “பளனிச்சாமிங்க” என்றார். “பழனிச்சாமி நாக்க நீட்டுங்க” என்றேன் நோயாளியிடம், மிகவும் பலவீனமாக நாக்கை நிட்டினார். நாக்கு உலர்ந்து வெள்ளை படிந்திருந்தது.
உடலைத் தொட்டேன். உடல் கொதித்தது. “ஜூரம்தானா, வேற ஏதும் இருக்கா?” என்றேன். குழந்தையுடன் மீண்டும் அப்பெண் உள்ளே நுழைந்தாள். கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த நீரை பழைய வெளுத்த நைலக்ஸ் புடவைத் தலைப்பில் துடைக்க முனைந்தாள். நைலக்ஸ் அவளது கணீரை உள்வாங்க மறுத்தது.
“நீங்க ஊசி போட்டு ரெண்டு நாளைக்கு நல்லா இருந்ததுங்க. அப்புறம் சுரம் வந்து உடல் செரிக்கல ஒரே வாந்தி. சீதம் சீதமா வயித்தால வேற போவுதுங்க” என்றார்.
நான் வயிற்றில் கை வைத்துப் பாரிசோதித்தேன். கல்லீரலும், மண்ணீரலும் வீங்கிப் பெருந்திருந்தது. டைபாய்டு காய்ச்சலாக இருக்கவேண்டும் எனினும் பலரைப் போல் நான் வழக்கமா டைபாய்டு நோய்க்கு என உள்ள குளோரோம்பினிகால் மருந்தினை பரிந்துரைப்பதில்லை. எதற்கும் டைபாய்டு நோய் என தீர்மானிக்கும் ‘வைடால்’ இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். நோயாளியின் பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்க வேண்டுமே, எனவே குளோரோம்பினிகால் மருந்தினை கொடுக்க தீர்மானித்து, வார்டில் படுக்கச் செய்து சிரைவழி நீர்மம் மருந்துகளும் அளித்தேன்.
வசதியற்ற மருந்துவமனையிலும் அந்த மருந்துவம் அவர்களுக்கு மகத்தானதாக பட்டிருக்க வேண்டும். ஆயினும் நோயாளிக்கு காய்ச்சல் குறையவே இல்லை. காய்ச்சல் ஏறி ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. எனவே ‘வைடால்’ பரிசோதனை செய்ய தீர்மானித்தேன்.
துணைக்கு யாருமற்று அனாதரவாக நிற்கும் பெண்ணிடம் இதைக் கூறுவதற்கே எனக்கு கஷ்டமாக இருந்தது.
“இதப்பாரும்மா டைபாய்டு காய்ச்சல் மாதிரி தெரியுது. ஆனா அதுக்கு மருந்து கொடுத்தும் கேட்க மாட்டேங்குது. இரத்தம் எல்லாம் டெஸ்ட் பண்ணித்தான் பார்க்கணும். நீங்க ஏதாவது பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போங்க அல்லது ஒரு ஐம்பது ரூபாய் ஆகும். ஒரு ரத்த டெஸ்ட் மட்டுமாவது பண்ணுங்க” என்றேன். அப்பெண்ணின் குழந்தைகள் இருவரும் அங்குள்ள வேப்ப மரத்தடியில் ஒளிந்து பிடித்து விளையாடிக் கொண்டிருந்தன.
கண்களில் நீர்மல்க “கொஞ்சம் இருக்க வர்றேன்” என்றவாறு வேப்பமரத்திற்குப் போய் சின்னவனைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பெரியவனுக்கு முதுகில் ஒரு அடி கொடுத்து இழுத்துக் கொண்டு நகர்ந்தாள். சற்று நேரத்திற்கெல்லாம் பணத்துடன் வந்தாள் அப்பெண். அந்தக் ‘கதையைக்’ கேட்பதற்கு என் மனம் இணங்க வில்லை. இரத்தம் எடுத்துக் கொடுத்தனுப்பிப் பரிசோதனை செய்தேன்.
சோதனை ‘டைபாய்டு நோய்’ என்பதை உறுதி செய்த்து. எனக்குள் குழப்பம், பின்னர் ஏன் குளோரோம்பினிகால் வேலை செய்யவில்லை? மருந்து எதிர்ப்பு குணம் ஏற்பட்டிருக்குமோ? கவலையுடன் புத்தகங்களை ஆராய்ந்தேன். சமீபத்திய மருந்துவ ஆய்வு இதழ் ஒன்று சிக்கியது. இதழ் விவாதத்திலிருந்த முக்கிய விஷயம் – Drug resistant typhoid – Danger in india – “இந்தியாவில் அபாயம் – மருந்து எதிர்ப்பு டைபாய்டு நோய்”
வழக்கமான மருந்துகளுக்கு பதிலாக கிளாக்சோ நிறுவனம் இவ்வகை நோய்களுக்கு புது மருந்தினைக் கண்டு பிடித்துள்ளது. ‘சிப்ரோபிளாக்கசின்’: இது ஒருவகை குயினோலின் வகை மருந்து என விளக்கங்கள் நீண்டன. உதவிக்காக திருவாரூரில் எம்.டி. படித்த மருத்துவரைத் தொடர்பு கொண்டேன். அவர் இதனை உறுதிப்படுத்தினார்.
“இந்த மருந்து லேட்டஸ்டா இப்பத்தான் வந்திருக்கு சிவா. இத கிளாக்சோ அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஆஸ்பத்திரியில கிடைக்கிறதில்லை. மாத்திரை ஒன்று 28, முப்பது ரூபாய் வரும். நீங்க சொல்ற நிலைமையில இருக்கிற பேஷண்டுக்கு ஐ.வி.யாத்தான் கொடுக்கிறது நல்லது. ஐ.வி. மருந்து 125 ரூபாய் ஆகும்.” என்றார்.
எனக்குத் தலை சுற்றியது. குழந்தைகளுக்கும் தனக்கும் தலைக்கு எண்ணெய் தேய்க்கக்கூட வழியில்லாத அந்தப் பெண்ணிடம் எப்படிக் கூறுவது?
வேறு வழியில்லாமல் அந்தப் பெண்ணை அழைத்து விவரமாக விளக்கம் கூறினேன். “குறைந்தது மருந்துக்கே 1000 ரூபாய் ஆகும். உங்க கஷ்டம் எனக்குத் தெரியும். நம்ம ஊரு கவர்மெண்டு ஆஸ்பத்திரிலயெல்லாம் இன்னும் அந்த மருந்து வரலயாம். அதனால நீங்க எதுக்கும் காரைக்கால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்க. அங்க இருக்கலாம். என்னால முடிஞ்சத எல்லாம் நான் செஞ்சுட்டேன்” என்றவுடன் அந்தப் பெண் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.
நான் அந்தப் பெண்ணை ஏறிட்டு நோக்க அஞ்சி வண்டியோட்டியிடம் “எப்படி கொண்டு போகப் போறீங்க; காரைக்கால் தானே?” என்றேன்.
“இல்லைங்க சார் அந்த பெண்ணு ஒரு ரெண்டாங்கெட்டான். சொந்தபந்தமும் யாருமில்லை, நீங்களே முடியாதுன்ன பிறகு என்ன செய்யுறது. வீட்டுக்குத்தான் கொண்டு போறோம்.”
மறுநாள் காலை வண்டி கட்டிக் கொண்டு அதே ஆள் வந்தான். நான் அந்தப் பெண்ணை ஏறிட்டு நோக்க அஞ்சி வண்டியோட்டியிடம் “எப்படி கொண்டு போகப் போறீங்க; காரைக்கால் தானே?” என்றேன்.
“இல்லைங்க சார் அந்த பெண்ணு ஒரு ரெண்டாங்கெட்டான். சொந்தபந்தமும் யாருமில்லை, நீங்களே முடியாதுன்ன பிறகு என்ன செய்யுறது. வீட்டுக்குத்தான் கொண்டு போறோம்.”
எனக்குள் மண்டைக்குள் ஏதோ வெடிப்பது போல இருந்தது. எளிதில் குணமாகும் இந்த நோயை இப்படிச் சிக்கலாக்கியது யார்? அவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? சிக்கலான நோய்க்கு ஏன் ஒரு பன்னாட்டு நிறுவனம் மட்டுமே மருந்து தயாரிக்க வேண்டும்? ஏன் அவர்களே விலையை நிர்ணயிக்க வேண்டும்?
இரண்டு நாட்கள் கழித்து பழனிச்சாமி வீட்டிலேயே இறந்து போன செய்தி வந்தது.
பத்துநாள் கழித்து கருமாதிப் பத்திரிகை கொடுக்க சிலர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம் ‘பழனிச்சாமிக்கு என்ன வியாதி சார்’ என்றார்.
நான் அவர் கேட்டதற்குப் பதில் சொல்லாமல் விட்டுவிட்டேன்.
பின்குறிப்பு : டைபாய்டு நோய்க்கு மருந்தாகும் ‘குளோரோம்பினிகால்’ எனும் மருந்து ஏனோ பலனளிக்காத நிலையில், ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றாக ‘சிப்ரோபிளாக்சசின்’ மருந்தினைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்தின. அறிமுகமாகும் முதல் 5 ஆண்டுகளுக்கு (‘காட்’ ஒப்பந்தத்திற்கு முந்திய நிலை) காப்புரிமை உண்டு என்பதால் மிக அதிக விலையில் விற்று கொள்ளை லாபம் அடித்தனர். இச்சம்பவம் நடந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகியிருக்கும்.(தற்போது 30 ஆண்டுகள்) அப்போது இம்மருந்து வாங்க இயலாமல், அந்நோய்க்குப் பலியான ஏழைக் கூலி விவசாயி ஒருவரின் கதை இது.
– சிவசுப்ரமணிய ஜெயசேகர், மருத்துவர்
________________________________
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2000
________________________________
புரட்சிக்கு குறைவாக எதையும் ஏற்காத பிடிவாதக்காரர் !
ஏப்ரல்- 22, லெனின் பிறந்தநாள்
புரட்சி பிறக்கட்டும்

புரட்சிக்கு குறைவாக
எதையும் ஏற்காத
பிடிவாத புரட்சியாளரின்
பிறந்த நாளை
எப்படிக் கொண்டாடுவது?
அவரைப் பற்றி பேசலாம்
அதை
லெனின் காதுகள் சகிப்பதில்லை…
அவர் வாழ்வை வியக்கலாம்
ஆனால்
அது லெனினுக்குப் பிடிப்பதில்லை…
என்னதான் பேசினாலும்
இறுதியில்,
” நீ என்ன செய்தாய் புரட்சிக்கு?”
எனும்
நேர் கொண்ட பார்வை லெனின் !
ஒரு தொழிலாளியிடம்
இன்று நீ
அரசியல் பேசி
வர்க்க உணர்வுக்கு
கொண்டு வரும்
பிரசவ வலியில்…
லெனின் பிறக்கிறார்!
ஒரு தொழிற்சங்கத்தின்
கிளை தொடங்கும்
உற்சாக உதடுகளில்
லெனின் சிரிக்கிறார்!

விழுந்து எழுந்து
விடாப்பிடியாய்
நடை பழகும் குழந்தையின்
உறுதியைக் கொண்டிருக்கும்
ஒரு தோழனின்
தன் முயற்சியில்
லெனின் தவழ்கிறார்!
சுயநலன் மறுத்ததற்காய்
சொந்தம் விலகி,
சுகம் ஒன்றே குறிக்கோளாய்
சுற்றம் நழுவி,
குடும்பமே கூட வராது
குறை சுமத்தும் தருணத்திலும்
உழைக்கும் மக்களுக்காய்
உணர்ச்சி குன்றாது
அடியெடுக்கும் கால்களில்
லெனின் நடக்கிறார்!
புவியில்
ஒரு புல்லின் அழகையும்
சீரழிக்கும் முதலாளித்துவத்தின்
வேரழிக்க துடி துடிக்கும்
இதயத்தில்
லெனின் வாழ்கிறார்!
எறும்பின் உழைப்பையும்
சுரண்டும்
இயற்பகை ஏகாதிபத்தியத்தின்
கொடுங்கரம் முறிக்கும்
விசையின் இயற்பெயர்
விளாதிமிர் இலியிச் லெனின்.

கார்ப்பரேட் பயங்கரத்தை
அழி!
கம்யூனிச ஆசான்
லெனின் முகத்தில் விழி!
காவிப் பாசிசம் நொறுக்கு
லெனின் பிறந்த நாள்
அதற்கு!
வாடும் மலரில்
நீர் தெளித்துக் கொண்டே
சுடு சொல்லை
உதடுகளில் தெளிக்கும்
உழைப்பாளி பெண்….
கொதிக்கும் வெயிலில்
உருகும்
வாழ்க்கைத் துளிகளை
கூச்சமின்றி திருடும்
அதிகாரத்திற்கு எதிராக
மனதில் வெடிக்கும்
சாலையோர உழைப்பாளி…

இன்னும்… மாணவர், மீனவர்
விவசாயி தொழிலாளி என
கோடிக்கணக்கான குரல்கள்
குவியும் ஒரு சொல்;
“இந்த அரசை ஒழிக்காமல்
இனி வாழ்க்கையில்லை!”
இதற்குப் பெயர்தான் புரட்சி
இதற்குப் பெயர்தான் லெனின்
லெனின்
உங்களுக்கு பிடிக்குமெனில்
போராட்டக் களங்கள்
புதிதாய் பிறக்கட்டும்!
– துரை.சண்முகம்
விழுப்புரம் குழந்தைகள் படுகொலை – ஆர்ப்பாட்டம்
- விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 10 பச்சிளம் குழந்தைகள் படுகொலை…
- உயிரைக் காக்கும் பொறுப்புள்ள மருத்துவமனையே உயிரை எடுக்கிறது…
- ஆள்வதற்கு பொறுப்பேற்ற அரசோ ஆளத் தகுதியிழந்து கிடக்கிறது….
கடந்த 16,17 ஆகிய தேதிகளில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அடுத்தடுத்து 8 குழந்தைகள் மரணமடைந்தன.
உடனடியாக இதை அம்பலப்படுத்தி சுவரொட்டிகள் ஒட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த நாட்களில் மேலும் 2 இரண்டு குழந்தைகள் இறந்தனர் . இதனைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து இரண்டு நாள் பேருந்து பிரச்சாரம் செய்தனர். மருத்துவமனையை சுற்றியுள்ள சிந்தாமணி, முண்டியம்பாக்கம், பனையபுரம், விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் மக்களிடம் வீடு வீடாக சென்று பிரசுரம் கொடுத்து பிரச்சாரம் செய்தனர். மருத்துவமனையின் சீர்கேடுகளை ஏராளமான மக்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக 3௦௦ சுவரொட்டிகள் ஒட்டி 21/04/2015 செவ்வாய் அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய விழுப்புரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இணைச்செயலர் தோழர் ரஞ்சித் தன்னுடைய தலைமை உரையில் “குழந்தைகளின் படுகொலைக்கு காரணம் கேட்டால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மீதே பழியை போடுகின்றனர் மருத்துவமனை நிர்வாகமும் அதிகாரிகள் மற்றும் ஆய்வுக் குழு நிபுணர்களும். குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல், கொஞ்சமும் வெட்கப்படாமல் ரௌடிகளை போல் அதிகாரத்திமிருடன் நடந்து கொள்கிறார், மருத்துவமனை டீன். மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க துப்பில்லாமல், திட்டமிட்டு தனியார்மயமாக்கப்பட்டதன் விளைவு தான் இப்படுகொலை” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அடுத்ததாக கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் அவர்கள் பேசும்போது “அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களே ஒரு கிரிமினல் கும்பலாகவும், தனியார் மருத்துவமனையின் புரோக்கர்களாகவும் தான் செயல்படுகின்றனர். இது போக, தாங்களாகவே சொந்தமாக கிளினிக் வைத்துக் கொண்டு மக்களிடம் கொள்ளையடித்து வருகின்றனர். ஒரு நேர்மையான மருத்துவர் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையோடு நடந்து கொள்ள வேண்டும். ஆனால், இப்பொழுது டாக்டர்கள் அவ்வாறு இருப்பது இல்லை. நேர்மையான டாக்டர்கள் பலர் சீரழிந்து போய்விட்டனர்.
அதற்கு உதாரணம் தான் விழுப்புரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் லட்சுமணன். அவர் ஒரு சிறந்த முடநீக்கியல் மருத்துவர். தேவையற்ற பரிசோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யமாட்டார். ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பார். ஆனால் தற்போது அ.தி.மு.க. கட்சியில் சேர்ந்து சீரழிந்தது மட்டுமில்லாமல் 10 குழந்தைகள் மரணம் குறித்து ஒரு வார்த்தை கூட பேச முன்வரவில்லை; மருத்துவமனையை கூட இந்த நிமிடம் வரை எட்டிக்கூட பார்க்கவில்லை.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மாறாக, உட்கட்சி பதவிகளுக்கு நடக்கும் தேர்தலில் வெகு தீவிரமாக தீயாய் வேலை செய்து வருகிறார். இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மற்றும் துறை சார்ந்த ஆதிகாரிகள் கூட்டமோ கிரிமினல் குற்றவாளி ஜெயாவின் விடுதலையை வேண்டி யாகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இனியும் இந்த ஓட்டுக்கட்சிகளை நம்பி பலன் இல்லை. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட்டு சேர்ந்து கொண்டு மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். இந்த அரசு கட்டமைப்பை தகர்த்தெறிந்து விட்டு நமக்கான அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். அதற்கு மக்கள் நக்சல்பாரிகள் தலைமையில் அணிதிரள வேண்டும்” என அறைகூவினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் “மருத்துவமனையில் நடக்கும் விஷயத்தை பற்றி சிறப்பாக போஸ்டர் போட்டுள்ளீர்கள். நீங்கள் சொல்வது போல் லஞ்சம், ஊழல் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். குறிப்பாக, பாண்டிச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையான பத்மாவதி மருத்துவமனை அரசு மருத்துவனையில் துப்புரவு பணியை மருத்துவமனைக்கு வெளியில் மேற்கொள்ளும் ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்களை வைத்தே உள்ளே பல வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். தனியார் மயம் வெகுவேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. rmo மணிவண்ணன் ஏராளமான லஞ்சம் வாங்குகிறார்” என்று கூறினார்.
கல்வி, மருத்துவம் தனியாருக்கு!
சாராயக்கடையோ மக்களுக்கு !
எல்லாமே தனியாருன்னா
மயிற புடுங்கவா அரசாங்கம்!
ஒழித்துக் கட்டுவோம்! ஒழித்துக் கட்டுவோம்!
தனியார்மயத்தை ஒழித்து கட்டுவோம்!
உழைக்கும் மக்களே, பெரியோர்களே!
ஓட்டுப்போட்டு தேய்ந்தது போதும்
பட்டினி கிடந்தது மாய்ந்தது போதும்!
ஓட்டு கட்சிகளை தூக்கி எறிந்து
உழைக்கும் மக்கள் கமிட்டியாக
ஒன்றிணைவோம்! ஒன்றிணைவோம்!
நக்சல்பாரி பாதையிலே
நாட்டை காக்க போராடுவோம்!
தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விழுப்புரம்
சுயமரியாதை தமிழகமா ? சுரணையற்ற தமிழகமா ?
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்துக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்து நிறுத்தியிருக்கும் பார்ப்பன சிவாச்சாரியர்களின் வழக்கு 8 வருடங்களாக தூங்கிக் கொண்டிருந்தது. அதன் மீதான விசாரணை இப்போது உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பார்ப்பன ஜெயா அரசோ, அறநிலையத் துறைக்கு எதிராக நடக்கும் வழக்கில் அறநிலையத் துறை அதிகாரிகளை அனுப்பாமல் சதி செய்து வருகிறது.
உச்சிக் குடுமி மன்றத்தின் யோக்கியதை பற்றி ஜெயா சொத்து குவிப்பு வழக்கு, சிதம்பரம் தில்லைக் கோயில் வழக்கு ஆகியவற்றில் நாம் அறிந்தது தான். எனினும், உச்சிக் குடுமி மன்றத்தை அம்பலப்படுத்தும் விதமாகவும், தமிழக மக்களுக்கு சுயமரியாதை ஊட்டும் விதமாகவும் 21-4-2015 அன்று மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், மக்கள் கலை இலக்கியக் கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள், “சூத்திரன், பஞ்சமன் தொட்டால் சாமிக்குத் தீட்டா?” என்ற முழக்கத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட முழக்கத் தட்டிகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ம.உ.பா.மையத்தின் தோழர் வாஞ்சிநாதன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். “தாலி என்பது இந்துக்களின் அடையாளம் என்று பேசும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ், சிவசேனா கும்பல் ஏன் இந்த அர்ச்சகர் மாணவர்களுக்காக குரல் கொடுக்கவில்லை?. ஏனெனில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் சாமி சிலையைத் தொடக் கூடாது, தொட்டால் சாமி தீட்டாகிவிடும் என்ற மனுநீதி அவர்களது.
மேலும், இந்த வழக்கில் நாங்கள் தோற்றால் பார்ப்பன ஜெயா அரசும், உச்சநீதிமன்றமும் தான் காரணம். உச்சநீதிமன்றத்தில் தோற்றால் நாங்கள் வீதியிலிறங்கி எங்கள் போராடத்தைத் தொடர்வோம்” என்று அவர் பேசினார்.
துண்டறிக்கை வினியோகம்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் அரங்கநாதன் பேசும் போது, “ஆகம விதிகளைத் தமிழிலும், சமஸ்கிருதத்திலும் கற்றுள்ளோம். ஆனால் எங்களுக்கு பணியாணை வழங்கவில்லை, தமிழக அரசு. நாங்கள் வேலை வேண்டும் என்று மட்டும் போராடவில்லை, சூத்திரன், பஞ்சமன் என்னும் பார்ப்பன இழிவுக்கு எதிராகவும் போராடுகிறோம்” என்றார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்த ஆர்ப்பாட்டம், சுயமரியாதை உணர்வை தட்டியெழுப்பும் விதமாக இருந்தது.
பெரியார் காலத்தில், தான் பார்ப்பான் என்று சொல்லவே அஞ்சினார்கள். அந்த அளவுக்கு சுயமரியாதை கொண்டிருந்தது தமிழகம். ஆனால், இன்றோ பார்ப்பனக் கூட்டம் பெரியார் திடலுக்குள் நுழையவும், பெரியார் படத்தை செருப்பால் அடிக்கவும் துணிந்திருக்கிறதென்றால் என்ன அர்த்தம். தமிழன் சுரணை அற்றவன் என்பது தானே!.
ஆடு, மாடுகளை ஓட்டிக் கொண்டு வந்த ஆரிய-பார்ப்பனக் கூட்டம் சாதி என்ற பெயரில் நம்மை அடக்கி ஒடுக்கி அடிமைப் படுத்தியது. இன்றும் அடக்கி ஒடுக்கப் பார்க்கிறது. “நாம் இந்து” என்று நம்மை ஏமாற்றப் பார்க்கிறது இந்த நயவஞ்சகக் கூட்டம்.
நாம் எல்லாரும் இந்து என்றால், நம்மை கோயிலுக்குள் விடச் சொல்வோம், அர்ச்சகர் உரிமையைத் தரச் சொல்வோம். முடியுமா? முடியாது. பார்ப்பனக் கூட்டத்தின் நயவஞ்சகத்தை இனியாவது உணர்வோம். சுயமரியாதை உணர்வோடு போராடும் மாணவர்களுக்கு துணை நிற்போம்.
பார்ப்பன பாம்புகளையும், அதன் குட்டிகளான இந்து மதவெறி அமைப்புகளையும் தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க, சுயமரியாதையை மீட்டெடுக்க தமிழக மக்களை போராட்டக் களத்திற்கு அழைக்கிறோம்.
பார்ப்பன அடிமைத்தளையை அறுத்தெறிவோம், பெரியார் பிறந்த மண் என நிரூபிப்போம்.
-பு.ஜ. செய்தியாளர்
சென்னை
இந்தியர்களுக்கு எதற்கு இரண்டு சிறுநீரகங்கள் ?
தனியார்மயம், கார்ப்பரேட் மயம்: மருத்துவத் துறையைச் சீரழித்து வரும் நோய்கள்! – பகுதி – 2
ஏழைகளுக்கு மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதைக் கைவிடும் அரசு, மருத்துவ சுற்றுலாவை – வெளிநாட்டு நோயாளிகளுக்கு உலகத் தரத்தில் மருத்துவ சிகிச்சை அளிப்பதை – புதிய தேசிய நலக் கொள்கையாக அறிவிக்கிறது. மருத்துவ சுற்றுலாவை அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் வாய்ப்பாகக் கருதும் அரசு, அதனை ஏற்றுமதித் தொழிலுக்குச் சமமாகக் கருதி, அச்சிகிச்சையை மேற்கொள்ளும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கு மேலும்மேலும் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இந்தச் சலுகைகளின் பொருள், இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்து வெளிநாட்டுப் பயணிகளின் சிகிச்சைக்கு மானியம் வழங்குவதாகும்.
அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கு நமது ஆட்சியாளர்கள் எதனையும் செய்யத் தயங்கமாட்டார்கள். இந்தியர்களுக்கு எதற்கு இரண்டு சிறுநீரகங்கள், ஒன்றை விற்று நாட்டை வளமாக்கலாமே என்றுகூட விரைவில் அறிவிப்பு வெளிவரலாம். இந்திய அளவில் சிறுநீரக வியாபாரம் மருத்துவ சுற்றுலாவுடன் இணைந்திருப்பதைப் பொதுமக்கள் கவனத்தில் கொண்டால், நாம் மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

சில பத்தாண்டுகளுக்கு முன் இதய நோய் அல்லது சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நிலைவந்தால், ஏழை எளிய மக்கள் விதி முடிந்துவிட்டது என்பதாக, மரணத்தை எதிர்கொள்வதாக இருந்த நிலை இன்று மாறியிருக்கிறது. ஆனால், இது எப்படிப்பட்ட மாற்றம்? காசு இருந்து செலவு செய்தால் இந்நோய்களைக் குணப்படுத்த இயலும் அல்லது மரணத்தை ஒத்திப்போட முடியும். மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள், அரசு ஆதரவு, காப்பீடு பாதுகாப்பு இல்லாத நிலையில், அடித்தட்டு மக்களை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தைக்கூடப் பெரும் கடனாளியாக மாற்றிவிடுகிறது. மகாராஷ்டிரம், பஞ்சாப், ஆந்திரம் முதலான மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் குறித்து விரிவாக ஆய்ந்து தொடர்ந்து எழுதிவரும் பத்திரிகையாளர் பி.சாய்நாத், இத்தற்கொலைக்கான காரணங்களில் ஒன்று மருத்துவச் செலவு என்று நிறுவியிருக்கிறார். அதாவது, நோயினால் சாவு என்ற நிலை மாறி, நோய்க்குச் செய்த செலவால் சாவு என்ற நிலையைத்தான் மருத்துவத் துறையில் புகுத்தப்பட்டுள்ள தனியார்மயம் ஏற்படுத்தியிருக்கிறது.
அரசு மருத்துவமனைகளின் அவலநிலை

தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளின் சேவையும் தரமும் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையைக் காட்டி நியாயப்படுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளின் இந்தச் சீரழிவு நாளுக்குநாள் அதிகரித்து, அதனை நம்பியிருக்கும் ஏழை மக்களின் துன்பத்தை அதிகரிக்கிறது.
- பெரும்பாலான மருத்துவமனைகளில் புதிய நோய்களுக்கு வழிகோலும் வகையில் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. உயிருக்கே ஊறுவிளைவிக்கும் மருத்துவக் கழிவுகளும் இதில் அடங்கும்.
- மருத்துவமனைகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுவதில்லை. கழிப்பறைகளின் நிலைமையைச் சொல்லவே தேவையில்லை.
- பெரும்பாலும் அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்டு குடிநீர் வியாபாரம் பெருத்துப் போயிருக்கிறது.
பெரும்பாலான அரசு மருத்துவமனைகளின் வாசல் பகுதிகளில் உணவுப் பண்டங்கள், குளிர் பானங்கள், பழரசங்கள் திறந்த நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஈ மொய்க்கும் அந்த உணவை நோயாளிகளும் அவர்களைப் பார்க்க வருபவர்களும் வாங்கி உண்பதால் புதுப்புது நோய்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
- சவக்கிடங்குகளில் சடலங்களைப் பாதுகாக்க போதிய குளிர்சாதன பெட்டிகள் இல்லை. இதனால் அதிக சடலங்கள் வரும் நேரங்களில் அவற்றை மூட்டையாகக் கட்டி ஓரமாகப் போட்டு விடுகின்றனர். மேலும், பிணவறைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் தேங்கி நின்று, துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேட்டைப் பரப்பி வருகிறது.
நோயாளிகளின் பராமரிப்பு
- நோயாளிகளுக்கான வழிகாட்டு மையமின்றி, அவர்கள் அலைய வைக்கப்படுகின்றனர். நோயாளிகளுக்கு நோயின் தன்மையும் விளக்கப்படுவதில்லை.
- வீல்சேர் மற்றும் ஸ்ட்ரெச்சர்கள் ஆகியவை போதிய அளவில் இல்லை. மின்தூக்கிகள் பெரும்பாலும் செயல்படுவதில்லை. இதனால் வயதானவர்கள், நடக்கமுடியாத நோயாளிகளை, அவர்களது உறவினர்கள் தோளில் சுமந்தோ, தூக்கியோ செல்ல வேண்டியிருக்கிறது.
- எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரங்கள் அடிக்கடி பழுது ஏற்பட்டு, பெரும்பாலான நேரங்களில் மூடியே வைக்கப்படுகின்றன.
- சோதனை முடிவுகள் உடனடியாக வழங்கப்படுவதில்லை. இதனால் சிகிச்சை துவங்க தாமதமாகி, நோய் பாதிப்பு கடுமையாகிறது.
- போதிய அளவில் படுக்கை வசதி இல்லாததால், பல்வேறு சமயங்களில் நோயாளிகள் துண்டை விரித்துத் தரையில் படுக்க வேண்டியிருக்கிறது.
- நாய், எலி, பாம்பு, கொசு மற்றும் பல்வேறு வகையான பூச்சிகளின் புகலிடமாக மருத்துவமனைகள் விளங்குகின்றன.
- ஸ்ட்ரெச்சர், வீல்சேர் தள்ளுபவர் துவங்கி, மருத்துவமனையின் அத்துணை பிரிவு ஊழியர்களிடமும் ரூ 50 முதல் ரூ 500 வரை இலஞ்சமாக நோயாளிகளின் உறவினர்கள் அழ வேண்டியிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு சில ஆயிரம் ரூபாய்கள் வரை பறிக்கப்படுகிறது.
- புறநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க காலை 8 மணிக்கு வர வேண்டிய மருத்துவர்களுள் பலர் 11 மணிக்கு வந்து 12 மணிக்குக் கிளம்பி, தங்களது கிளினிக்குக்குப் போய்விடுகின்றனர்.
- மருந்து வழங்கும் பிரிவில் சாதாரண நோய்களுக்கு வழங்கும் மருந்துகள் மட்டுமே தாராளமாகக் கிடைக்கிறது. ஆனால், இதய நோய், தோல் நோய் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சைக்கான மாத்திரைகள் கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
- முக்கிய மருந்துகள் மட்டுமல்லாது, கையுறை வரை வாங்கிவர வெளி மருந்துக்கடைகளுக்கு டாக்டர்கள் சீட்டு எழுதித் தந்து அனுப்புகின்றனர். வார்டுகளுக்கு வந்து டாக்டர்கள், நோயாளிகளைச் சந்தித்து மருந்துகள் ஆர்டர் எடுத்துச் செல்லும் புரோக்கர்கள் அதிகரித்துள்ளனர்.
- மருத்துவமனைக்குள் போலீசு நிலையம் இருந்தும் குழந்தைகள் கடத்தப்படுவதும், வார்டுகளில் பொருட்களும் பணமும் திருடப்படுவதும் நடந்து வருகின்றன.
தாய்மையை வர்த்தகமயமாக்கிய தனியார்மயம்

“பெண் என்ன பிள்ளை பெறும் இயந்திரமா?” எனக் கேட்டார் பெரியார். “ஆம்” என்கிறார்கள் நவீன மருத்துவர்கள்.
குழந்தையின்மை ஒரு தனிநபரின் பிரச்சினையல்ல. இன்னும் சரியாகச் சொன்னால் அது பிரச்சினையே அல்ல. அதை ஒரு பிரச்சினையாகப் பார்ப்பது பெண்களுக்கு எதிரான சமூக அமைப்பே.
சமூகத்தின் இந்தச் சாபக்கேட்டை தமக்கான வர்த்தகமாக மாற்றிக் கொண்டார்கள் மருத்துவர்கள். குழந்தையின்மை என்பதை பெரிய அவமானகரமான பிரச்சினையாக இன்னும் பெரிதுபடுத்தியதில் மலட்டுத்தன்மையைப் போக்கும் மகப்பேறு மருத்துவத்திற்கு மிக முக்கிய இடமுண்டு.
குழந்தை ‘பாக்கியம்’ இல்லாதவர்களுக்கு குழந்தை பெற்றுத் தருவதற்காக, இந்தியாவில் வாடகைத் தாய்மார்கள் உருவாகி வருகிறார்கள். அவர்கள் பத்து மாதம் சுமந்து பெற்றுத் தந்தால் கணிசமான பணம் தரப்படுகிறது.
ஆம், தாய்மை ஒரு தொழிலாக மாற்றப்பட்டிருக்கிறது. வாடகைத் தாய்மார்களுக்கு சொற்பமான பணத்தைத் தூக்கிப் போட்டுவிட்டு, பெரும் பணத்தை இடைத்தரகர்களாகச் செயல்படும் மருத்துவர்கள் சுருட்டிக் கொள்கிறார்கள்.
அதேசமயம், மிக வறுமையான குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு குழந்தையில்லை என்றால், அதற்குத் தீர்வு காண்பதற்கு மகப்பேறு மருத்துவத்தில் தீர்வு இல்லை. காரணம், அந்த ஏழைப் பெண்ணிடம் பணம் இல்லை என்பதுதான்.
“கிட்னி, லிவர், ஹார்ட்..” – ரெண்டு வாங்குனா ஒண்ணு ஃப்ரீ
வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு நம்மூர் எளிய மக்களின் சிறுநீரகங்களையும் இதர உடல் உறுப்புகளையும் அறுத்து விற்பதற்கு இங்கு சில மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளும் தயங்குவதில்லை. இந்திய அளவில் கிட்னி வியாபாரம் மருத்துவச் சுற்றுலாவுடன் இணைந்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். பல விவசாயிகளின், நெசவாளர்களின் கிட்னி காணாமல் போனது இப்படித்தான்.

இந்தியாவின் மருத்துவத் தலைநகராக சென்னை கருதப்படுகிறது. இந்தப் ‘பெருமை’யை சென்னை பெற்றதற்கான முக்கிய காரணம், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைதான். சென்னை வில்லிவாக்கத்துக்கு மருத்துவத் துறை சூட்டியிருக்கும் பெயர் “கிட்னிவாக்கம்”. அந்தளவிற்கு அங்கு கிட்னி வியாபாரம் அரசிற்குத் தெரிந்தே நடந்தது. 2004-ம் ஆண்டு சுனாமி சென்னை மீனவர்களின் வாழ்க்கையைக் குலைத்துப் போட, வறுமையைச் சமாளிக்க மீனவப் பெண்கள் பலர் தங்கள் கிட்னிகளை விற்றார்கள். அப்போதைய கமிஷனர், “29 மீனவப் பெண்களிடம் கிட்னி திருட்டு நடந்துள்ளது. சென்னையில் ஐந்து மருத்துவமனைகளும், மதுரையில் மூன்று மருத்துவமனைகளும் இதில் ஈடுபட்டுள்ளன என்று எங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றார். இத்திருட்டையொட்டி 13 மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டாலும், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அனைவரும் தப்பித்துக் கொண்டனர். இப்போது கிட்னி திருடர்கள் சென்னை கடற்கரையில் இருந்து தங்களின் முகாமை நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரிக்கு மாற்றியிருக்கிறார்கள்.
மருத்துவர்கள் – மருந்து கம்பெனிகளின் சட்டவிரோதக் கூட்டு
மருத்துவர்கள் நோயாளிகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது மருந்துகளின் பொதுப்பெயரில் அல்லாமல், வியாபாரப் பெயரில் பரிந்துரை செய்கின்றனர். நோயாளிகளுக்கு எந்த மருந்தை எதற்காகச் சாப்பிடச் சொல்கிறார்கள் என்றோ, எந்த மருந்தில் என்னென்ன கூட்டுப் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்றோ, அது அவசியமா என்றுகூடத் தெரியாது. இந்த நிலையில் தன்னுடைய நோய்க்கு விலை குறைவான மருந்தே போதுமானது என்றாலும்கூட, மருத்துவர் பரிந்துரை செய்த விலையுயர்ந்த மருந்துதான் தன்னுடைய உடலுக்கு ஏற்றது, மற்றதை வாங்கிச் சாப்பிட்டால் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்றும் நோயாளி அஞ்சுகிறார்.
உதாரணமாக, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மாத்திரைகள், ஒரு நிறுவனத்தால் 10 மாத்திரைகள் கொண்ட அட்டை வெறும் 25 ரூபாய்க்கும் இன்னொரு நிறுவனத்தால் ரூ 385-க்கும் விற்கப்படுகின்றன. நீரழிவைக் கட்டுப்படுத்த 10 மாத்திரைகள் ரூ 133 என்ற விலையில் முன்னணி மருந்து நிறுவனத்தால் விற்கப்படுகிறது. அதே மாத்திரை மற்றொரு நிறுவனத்தால் வெறும் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நோயாளிகளுள் பெரும்பாலோர் ஏழைகள்தான். மருத்துவத்துக்கே தங்களுடைய வருவாயில் அல்லது சேமிப்பில் அதிகபட்சம் செலவிடுகிறார்கள். மக்களுடைய நல்வாழ்வில் அக்கறை செலுத்த வேண்டிய எந்த அரசும் இந்த விலை வித்தியாசத்தைக் கண்டும் காணாமல் இருக்க முடியாது. ஆனால், மருந்து உற்பத்தி நிறுவனங்களோ போதுமான இலாபம் என்பதில் திருப்தி கொள்ளாமல், கொள்ளை லாபம் என்ற இலக்கில் ஏழை நோயாளிகளைச் சுரண்டுகின்றன. தனியார் நிறுவனங்களுக்குக் கட்டற்ற சந்தையை அமைத்துக் கொடுத்ததன் விளைவுதான் இது.
மருந்துகளின் விலை உயர்வுக்கு அப்பால், போலி மருந்துகளும், தடை செய்யப்பட்ட மருந்துகளும் இந்தியாவில் தாராளமான புழக்கத்தில் உள்ளன. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் இலாபத்தை முன்னிட்டு போலி மருந்துகளின் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மேம்போக்கான நடவடிக்கைகளை எடுக்கத் துணியும் அரசும் அதிகார வர்க்கமும், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தடை செய்யப்பட்ட மருந்துகளை இந்தியாவில் விற்பனை செய்வதற்குச் சட்டபூர்வ அனுமதி அளிக்கின்றன.
மருத்துவத் துறையின் இன்னொரு அருவெறுக்கத்தக்க கோர முகம், அதில் புரையோடிப் போயிருக்கும் ஊழல். உலகெங்கும் ஆண்டுக்கு 7.2 இலட்சம் கோடி டாலர் சுகாதாரத் துறைக்காகச் செலவிடப்படுவதாகக் கூறுகிறது, உலக சுகாதார நிறுவனம். இதில் 10 முதல் 25 சதவீதம் வரை ஊழலில் கரைந்துவிடுகிறது என்பது வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையல்ல. ஒரு சாமானியக் குடும்பம் தன் சகல சந்தோஷங்களையும் இழக்க இன்றைக்கெல்லாம் அந்த வீட்டுக்கு ஒரு நோயாளி போதும். அதுவும் புற்று நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள் என்றால், உடலும் மனமும் துடிதுடிக்க அந்தக் குடும்பமே துயரத்தைச் சுமக்க வேண்டும். தமது பல நாள் உழைப்பின் மொத்த பலன்களையும் மருத்துவமனையின் மேஜையில் கொண்டுவந்து கொடுத்து, பரிதவித்து நிற்கும் இப்படிபட்ட துயரர்களிடம் நடத்தப்படும் ஊழல், கட்டணக் கொள்ளையைவிடக் கொடூரமானது.
இலவச மருத்துவ சேவை: சலுகை அல்ல, உரிமை
சீனா அடிப்படையான மருத்துவ நலத்தில் பாராட்டத்தக்க தன்னிறைவைப் பெறக் காரணமாக இருந்தது அந்நாட்டு அரசின் விருப்புறுதி மட்டுமே அல்ல. அவர்கள் மேற்கொண்ட வழிமுறையும் முக்கிய காரணமாகும். அந்நாட்டில் மருத்துவம் தொடர்பாக “ரூல் 57” என்றொரு சட்டவழிமுறை ஏற்படுத்தப்பட்டது. இதன்படி,
1. ஆங்கில மருத்துவம் பயின்ற ஒவ்வொருவரும் கட்டாயமாக உள்நாட்டு மருத்துவமான அக்குபஞ்சர் உள்ளிட்ட ஆறு அங்கங்களை உள்ளடக்கிய பாரம்பரிய சீன மருத்துவத்தைப் பயின்றால் மட்டுமே மருத்துவப் பதிவு வழங்கப்படும்.
2. வெளிநாட்டிலிருந்து ஆங்கில மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளபோது, அது உள்நாட்டு மருந்துகளைவிட சிகிச்சையளவில் உயர்வானதென நிரூபித்தால் மட்டுமே உரிமம் கிடைக்கும்.
3. கிராமப்புறங்களிலும் தொழிலமைப்புகளிலும் சுமார் ஒன்றரை இலட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு வெறுங்கால் மருத்துவர்கள் என அங்கீகரிக்கப்பட்டு, பகுதி நேரமாக மருத்துவப் பணியாற்றப் பணிக்கப்பட்டனர்.
வெறுங்கால் மருத்துவர்கள் தொடர் புத்தாக்கப் பயிற்சிகளின் ஊடாக தங்களை ஊரக மருத்துவ நலப் பயிற்சியாளர்களாக வளர்த்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டனர். இப்படி படிப்படியாகத் தன்னை வளர்த்துக் கொண்ட வெறுங்கால் மருத்துவர்களில் ஒருவர்தான் தற்போதைய சீனாவின் மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சூ சென். மருத்துவத்தை சமூகமயமாக்கும் நோக்கத்தோடு 1978-ல் நடந்த சர்வதேச நாடுகளின் கூட்டமொன்றில் உருவாக்கப்பட்ட அல்மா ஆடா தீர்மானத்திற்கு அடிப்படையாக இருந்தது சீனாவின் வெறுங்கால் மருத்துவ முறைதான்.
இந்தியாவில் தற்பொழுது நடைமுறையிலுள்ள கார்ப்பரேட் மருந்து கம்பெனிகள், தனியார் மருத்துவமனைகள் நலன் சார்ந்த சுகாதாரக் கொள்கைக்குப் பதிலாக மக்கள் நலனை முன்னிறுத்தும் வெறுங்கால் மருத்துவர்கள் போன்ற கொள்கை வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்பொழுதுதான் அனைவருக்குமான அடிப்படை மருத்துவ மற்றும் சுகாதார நலனை உறுதிப்படுத்த முடியும்.
முற்றும்
– கே.எஸ்.
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________
கோவையில் லெனின் பிறந்த நாள் – கம்யூனிஸ்டின் தகுதி எது ?
அன்பார்ந்த தோழர்களே !.

விளாடிமிர் இலியீச் உல்யானவ் 1870 ஏப்ரல் 22ஆம் தேதி ரசியாவில் வால்கா நதிக் கரையிலுள்ள ஸிம்பீர்ஸ்க் என்னும் நகரில் பிறந்தார். தன்னுடைய 54 ஆண்டு கால வாழ்வில் உழைப்பாளி மக்களை அணிதிரட்டி போராடி உலகில் முதன் முதலாக தொழிலாளிகள் அரசு ஏற்படுத்தினார்.
தோழர் லெனினை பற்றி தோழர் ஸ்டாலின் கூறுகிறார்.
“தோழர்களே கம்யூனிஸ்டுகளாகிய நாம் தனி வார்ப்பிலானவர்கள். நாம் தனி வகை மூலப்பொருள்களால் ஆக்கப்பட்டவர்கள். நாம் மகத்தான் பாட்டாளி வர்க்க போர்த் தந்திர நிபுணரின் படையை தோழர் லெனினுடைய படையைச் சேர்ந்தவர்கள். இந்தச் சேனையில் வீரர்களாயிருப்பதைத் தவிர, மேலதிகமான உயர்வான கவுரவம் வேறெதுவும் இல்லை. தோழர் லெனினை நிறுவனராகவும் தலைவராகவும் கொண்ட கட்சியின் உறுப்பினர் என்பதை விட, மேலதிகமான உயர்வான பட்டம் வேறேதுவும் இல்லை. இத்தகைய கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பது எல்லோருக்கும் வாய்க்கின்ற ஒன்றல்ல. இத்தகைய கட்சியின் உறுப்பினராக இருப்பதால் ஏற்படும் எல்லா நெருக்கடிகளையும் தாங்கி போராட்ட புயல்களை எதிர்கொள்ள இயலுவது எல்லோராலும் முடியக் கூடிய ஒன்றல்ல. தொழிலாளர் வர்க்கத்தின் புதல்வர்கள்தான் வாழ்க்கையில் இல்லாமையை எதிர்கொண்டும், போராட்டத்திற்கு அஞ்சாத புதல்வர்கள்தான், நம்பவொண்ணா வறுமையிலும் வீரஞ்செறிந்த முயற்சிகளை மேற்கொள்ளும் புதல்வர்கள்தான் எல்லோரையும் முந்திக் கொண்டு இத்தகைய கட்சியில் உறுப்பினராக வேண்டும். இதனால்தான், லெனினிய வாதிகளின் கட்சி, பொதுவுடைமையாளர்களின் கட்சி, தொழிலாளி வர்க்கத்தின் கட்சி என்று அழைக்கப்படுகிறது.”
நாள் தோறும் 16 மணி நேரம் கடும் உழைப்பில் கம்பெனிகளில் வேலை செய்த தொழிலாளர்கள் லெனின் கட்சியில் கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராகி ரசியாவை மாற்றிக் காட்டினார்கள். உலக முதலாளிகளை நடுநடுங்க வைத்தார்கள்.
மத வெறியர்களை எதிர்க்க முடியாது, பன்னாட்டு முதலாளிகளை எதிர்க்க முடியாது, தொழிலாளிகளை புரட்சிக்கு அணி திரட்ட முடியாது என்று இன்றும் நமது நாட்டில் பல பேர் ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்களை பார்த்து தோழர் லெனின் கூறுகிறார்.
“முடியாது என்று சொல்லாதே
செய்ய மாட்டேன் என்று சொல்”
என இடித்துரைத்தார்.
தேர்தலில் தொழிலாளர்கள் ஒவ்வொரு முறை ஓட்டுப் போடும் போதும் ஒவ்வொரு உரிமையாக பறி போய்க் கொண்டிருக்கிறது. ஓட்டுப் போடுவதன் மூலம் ஓட்டே போடாத முதலாளிகளுக்கு திமிர் அதிகம் ஏறுகிறது.
சின்னவேடம்பட்டி சி.ஆர்.ஐ முதலாளி அரசிடம் அனுமதி வாங்காமல் கம்பெனியை கதவடைப்பு செய்கிறார். நீதி மன்றத்தில் தடை உத்தரவு இருக்கும் போதே லாக் அவுட் செய்கிறார் எங்கிருந்து இந்த துணிச்சல் வந்தது? சி.ஆர்.ஐ தொழிலாளர்கள் பிளவுபட்டு இருப்பதால்தான் இந்நிலை வந்தது. சோழா பம்ப்ஸ், ரேன்சர் உள்ளிட்ட CRI யின் ஆறு யூனிட் தொழிலாளிகளும் ஒன்றுபட்டால் முதலாளியின் ஆணவம் அடங்கி விடும்.

இந்த நாடு நம்முடையது, கம்பெனிகள் நம்முடையது எனும் உணர்வுடன் நாம் செயல்பட்டால் முதலாளித்துவத்தின் மூச்சடங்கும். நம் போராட்டத்தின் கால வரையறை என்ன? மூடிய கதவை முதலாளியாக திறக்கும் வரை நம் போராட்டம் தொடர வேண்டும். பெஸ்ட் கம்பெனி தொழிலாளர்களும் சி.ஆர்.ஐ தொழிலாளர்களும் இதனை நெஞ்சில் வரித்துக் கொண்டு போராடி வெற்றி பெற வேண்டும்.
தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்து தொழிலாளர் உரிமைகளை தக்க வைக்க வேண்டுமானால், புதிய உரிமைகளைப் பெற வேண்டுமானால் தோழர் லெனின் காட்டிய வழியில் புதிய ஜனநாயக அரசு அமைப்பதே தீர்வு. இந்த போலி ஜனநாயகத் தேர்தல் முறையால் இப்போது மட்டுமல்ல எப்போதுமே தொழிலாளர்கள் எந்த உரிமையையும் பெற முடியாது.
முதலாளியோ, வியாபாரியோ, அல்லது நிலப்பிரபுவோ தொழிலாளர்களுக்கு வேலைகளை வழங்கி விட்டார்கள் என்று கூறுவது சரியல்ல. மாறாக உழைப்பாளிதான் தனது உழைப்பின் மூலம் இந்த உலகை இயக்குகிறான். முதலாளி உள்ளிட்ட இந்த மொத்த உலகிற்கும் சோறு போடுகிறான். தனது உழைப்பின் பெரும் பகுதியை இனாமாக மற்றவர்களுக்கு வழங்குகிறான் என தோழர் லெனின் சுரண்டல் பேர்வழிகளை திரை கிழித்து தொழிலாளர்களுக்கு ஊக்கமூட்டினார்.

தோழர் லெனின் பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்; ஆசான். அவர் தலைமையில் ரசிய கம்யூனிஸ்டு கட்சி, உழைப்பாளி மக்களை அணி திரட்டியது. இயந்திரங்களை இயக்கி உழைப்பது மட்டும் நம் வேலையல்ல; தொழிற் சங்கமாக மட்டும் திரண்டு போராடுவதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது. அதற்கு மேலேயும் போக வேண்டும். கூலி அடிமைத் தனத்தையே ஒழிக்க வேண்டும். நாட்டை ஆளவும் வேண்டும். உழைப்பவர்களுக்கான அரசியல் அதிகாரத்தை படைக்க வேண்டும். இந்தப் பாதையில் நாம் நடை போட வேண்டும். போராட வேண்டும். தானேயான தொழிலாளி வர்க்கத்தை தனக்கான வர்க்கமாக மாற்ற வேண்டும். இத்தகைய வரலாற்றுக் கடமையை தோழர் லெனின் காட்டிய வழியில் ரசியத் தொழிலாளர்கள் நிறைவேற்றியதால் சோசலிச அரசு அமைந்தது
அதன் சாதனைகள்:
- ஆரம்ப பாட சாலை முதல் பல்கலைக் கழகம் வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. தொழிலாளர்கள் விவசாயிகளுக்கும் வாரத்தில் ஒரு நாள் தொழிற்கல்வி அளிக்கப்பட்டது.
- சோவியத் நாட்டில் வீடு இல்லாத மனிதனே கிடையாது எனும் நிலையை உருவாக்கியது.
- சாதாரண காய்ச்சல் முதல் அறுவை சிகிச்சை வரையில் அனைவருக்கும் இலவச மருத்துவ வசதி.
- வேலைக்கு செல்லும் பெற்றோரின் பிள்ளைகளுக்கான இலவச பராமரிப்பு நிலையங்கள்.
- மிகக் குறைந்த கட்டணத்தில் பொதுப் போக்கு வரத்து வசதி. ஒரு ரூபாயில் ஒரு நகரத்தையே சுற்றி வரலாம்.
- ஆலைத் தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை. அரசு செலவில் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் சுற்றுலா பயணம்.
- ஊழியர்களின் சம்பளத்திற்கு வருமான வரி கிடையாது. வேறெந்த மறைமுகமான வரிகளும் கிடையாது.

இன்னும் இது போல ஆயிரக்கணக்கான சிறப்புகளை லெனின் தலைமையில் ரசியப் பாட்டாளிகள் நிகழ்த்தினர். இதனை நமது நாட்டிலும் அமுல்படுத்த வேண்டுமானால் லெனினிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எனவே தான் தோழர் ஆசான் லெனின் பிறந்த நாளை நமது சங்கம் கொண்டாடுகிறது. இதனை ஏற்க மறுப்பவர்கள் நிச்சயம் சமூக விரோதிகளாகத்தான் இருப்பார்கள்.
தொழிலாளர்கள் அனைவரும் சங்கம் அமைத்து போனஸ், சம்பள உயர்வு என பூச்சிகளைப் போல பேசிக் கொண்டு இருந்தால் போதாது. அரசு வேண்டும்; அதிகாரம் வேண்டும் என முழங்க வேண்டும். அதற்காக அணி திரள வேண்டும். நாம் நாட்டில் நிலவுகின்ற அரசியல் சமூக அமைப்பு முறை முழுவதற்கும் தொழிலாளர் நலன்களுக்கும் இடையே இணக்கம் காண முடியாத பகைமையை, தொழிற்சங்கங்கள் எடுத்துக் காட்ட வேண்டும். மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடிமைத் தனத்தை ஒழிக்க போராடுவதே முதன்மையான பணி என்பதை தொழிற்சங்கங்கள் விளக்க வேண்டும்.
மூலதனத்திற்கு உழைப்பு அடிமைப்படுத்தப்பட்டுள்ளதை சட்ட மன்றமும் பாராளுமன்றமும் ஏற்கிறது. ஆனால் நமது பாதையோ உழைப்பை ஆள்பவனே உலகை ஆள வேண்டும் என்பதே, எனவே தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். புரட்சிக்கு அணிதிரள வேண்டும்.

தொழிற்சங்கங்கள் கூலி உயர்வுக்கான போராட்டங்களோடு சொத்துடைமையற்றவர்கள் தங்களை முதலாளிக்கு விற்றுக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகின்ற இச்சமுதாய அமைப்பு முறையை ஒழிப்பதற்கு போராடுவதையே முழுமையான பணியாகக் கொள்ள வேண்டும்.
“தொழிலாளர்கள் தாங்கள் பெறும் சம்பளம் அல்லது கூலி உயர்வாகவோ குறைவாகவோ இருப்பதில் எந்த இழிவும் இல்லை. தன் உழைப்பில் உண்டான செல்வம் முழுவதையும் பெறுவதற்கு பதிலாக தான் சொந்த உற்பத்தி பொருளின் கூலி எனப்படும் பகுதியை மட்டும் பெறுவதோடு தொழிலாளி வர்க்கம் திருப்திப்பட வேண்டி இருப்பதுதான் மாபெரும் இழிவு”
என்கிறார் தோழர் லெனின்
நூறு ரூபாய் கூலி உயர்வுக்கு மேல் இருநூறு ரூபாய் கூலி உயர்வு கோருவது சாதாரண வர்க்க போராட்டம். உயர்ந்த வர்க்க போராட்டம் என்பது தொழிலாளர்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்பதுதான்.
தொழிலாளர்கள் தங்கள் நலனுக்காக மட்டுமல்லாமல் பிற ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் நலன்களுக்காகவும் அவர்களுக்கு தலைமை தாங்கி நடத்தும் போராட்டம் தான் அரசியல் போராட்டம். இப்படியானதொரு உன்னதமான பாதையில் தோழர் ஆசான் லெனின் பாதையில் போராடும் சங்கமான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து போராடுவோம் ! ஒட்டு மொத்த இயற்கைக்கும் மனித குலத்துக்கும் விரோதியான முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !
லெனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
நிகழ்ச்சி நிரல்
நாள் : 22.04.2015 மாலை 5 மணி
இடம் : சிஆர்ஐ கம்பெனி நுழைவாயில் (சின்னவேடம்பட்டி)
தலைமை : தோழர் மூர்த்தி சிஆர்ஐ கிளைத் தலைவர்
முன்னிலை : தோழர் திலீப் மாவட்டச் செயலர் பு.ஜ.தொ.மு
தோழர் குமாரவேல் மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு
உரை வீச்சு : தோழர் நித்தியானந்தன் பெரோலிங்க்ஸ் கிளைச் செயலர்
தோழர் கோபிநாத் அமைப்புச் செயலர்
தோழர் கோபால் பங்கஜா மில் கிளைச் செயலர்
தோழர் மோகன் ராஜ் கம்போடியா மில் கிளைச் செயலர்
தோழர் ரங்கசாமி முருகன் மில் கிளைத் தலைவர்
தோழர் பூவண்ணன் மாவட்ட பொருளாளர் பு.ஜ.தொ.மு
எழுச்சியுரை : தோழர் விளவை இராமசாமி மாநிலத் துணைத் தலைவர் , பு.ஜ.தொ.மு
நன்றியுரை : தோழர் இராஜன் எஸ்.ஆர்.ஐ கிளைச் செயலர்
[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை
அர்ச்சகர் வழக்கு – பார்ப்பன அறநிலையத்துறை சதி
சூத்திரன், பஞ்சமன் தொட்டால் சாமிக்குத் தீட்டா?
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை முறியடிக்க ஆலயத் தீண்டாமையை நிலைநாட்ட உச்ச நீதிமன்ற வழக்கில் சதி செய்யும்
பார்ப்பன அறநிலையத்துறையைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம்
21.4.2015 மதியம் 1.30 மணி சென்னை உயர்நீதிமன்ற வாயிலில்
அன்பார்ந்த தமிழ் மக்களே,
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு 1972-க்குப் பின் தற்போது மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

“கருவறைத் தீண்டாமையை ஒழிக்காமல் ஈனச்சாதியாய், சூத்திரர்களாய் வாழ்வதை விட கிளர்ச்சி செய்து சிறை செல்வது மேல் அல்லவா?” என நம்மீது சுமத்தப்பட்ட சாதி இழிவை அகற்றப் போராடுமாறு, தனது 95 வயதில் தமிழக மக்களை நோக்கிக் அறைகூவினார் பெரியார்.
இன்றோ, “நீங்கள் ஈனச்சாதிதான். பார்ப்பனரல்லாத பிற சாதியினர் சாமி சிலையைத் தொட்டால், கோயில் தீட்டாகிவிடும்; கடவுள் வெளியேறி விடுவார்” என்று கருவறைத் தீண்டாமையைத் தொடர்ந்து பாதுகாக்க உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள் பார்ப்பன அர்ச்சகர்கள்.
“அப்படி நடந்தால் நான் கோவிலுக்குப் போவதையே நிறுத்தி விடுவேன்” என்று உச்ச நீதிமன்றத்தில் ஆத்திரமாகப் வாதிடுகிறார் மூத்த வழக்குரைஞர் எனப்படும் பராசரன்.
“சூத்திரன் என்று அழைத்தால் ஆத்திரம் கொண்டு அடி” என்று சுயமரியாதையுடன் முழங்கிய தமிழகமோ, இன்று சொரணையே இல்லாமல் சுருண்டு கிடக்கிறது. இந்த அவலநிலை நோக்கி உங்கள் கவனத்தை ஈர்க்க விழைகிறோம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006–ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அறநிலையத்துறை நிறுவிய அர்ச்சகர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி முடித்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பணி நியமனத்தை, அவர்கள் பார்ப்பனரில்லை என்ற ஒரே காரணத்துக்காக தடுத்து வைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அர்ச்சக மாணவர்கள் சார்பில் இந்த வழக்கை 2009 முதல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்தி வருகிறது.
அர்ச்சகர் நியமனத்தில் பரம்பரை நியமனத்தை ஒழிக்கும் சட்டம் செல்லும் என்று 1972-லேயே 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்து விட்டது. இருந்த போதிலும் இன்று வரையில் பார்ப்பன அர்ச்சகர்கள் வாரிசு அடிப்படையில்தான் அறநிலையத்துறையால் நியமனம் செய்யப்படுகிறார்கள். வாரிசுரிமை ஒழிக்கப்பட்டாலும், ஆகமவிதிகளின் படி அர்ச்சகராகும் தகுதி பிறப்பால் பார்ப்பனருக்கு மட்டும்தான் உண்டு என்பதுதான் நீதிமன்றத்தில் அவாள் முன்வைத்து வரும் வாதம். இது பார்ப்பனரல்லாத பிற சாதியினரை தீண்டத்தகாதவர்களாக்கும் தீண்டாமைக் குற்றம் என்பது நமது வாதம்.
இனி, உச்ச நீதிமன்றத்தில் நடப்பதென்ன என்ற விசயத்துக்கு வருவோம்.
ஜெயலலிதாவைப் போல வாய்தா வாங்கியே இந்த வழக்கை ஒழித்துவிட வேண்டும் என்பதுதான் பார்ப்பன அர்ச்சகர்களின் திட்டம். அதனை முறியடித்து பல முறை இந்த வழக்கை இறுதி விசாரணை நிலைக்கு கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு முறையும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அவர்கள் வழக்கை இழுத்தடித்திருக்கிறார்கள். இதன் காரணமாக டில்லிக்கு அலைந்து அலைந்து போக்குவரத்து செலவும் வழக்குரைஞர் கட்டணமுமாக இதுவரை பல இலட்சங்கள் செலவாகி விட்டன. இறுதியாக 8 ஆண்டுகளுக்குப் பின் வழக்கு இப்போது விசாரணைக்கு வந்திருக்கிறது.
பார்ப்பனரல்லாதவர்கள் அர்ச்சகராகக் கூடாது என்பதில் ஜெயலலிதா தெளிவாக இருக்கிறார். சாலைப்பணியாளர்களின் பணி நியமனத்தை ரத்து செய்ததைப் போல, வெளிப்படையாக செய்தால், தனது பார்ப்பனப் பாசம் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினால், தந்திரமாகச் செய்கிறார். அறநிலையத்துறைக்கு எதிராக நடக்கும் இந்த வழக்கை நடத்த, இந்து அறநிலையத்துறை சார்பில் யாரும் உச்ச நீதிமன்றத்துக்கு வரவில்லை. தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் பி.பி.ராவ் என்ற மூத்த வழக்குரைஞர் தனது சொந்த ஆர்வத்தில் மட்டுமே வாதிடுகிறார். அவருக்கு தமிழக அரசின் வழக்குரைஞர் ஒத்துழைக்கவில்லை
உச்ச நீதிமன்றத்தின் யோக்கியதையைப் பற்றியோ சொல்லத்தேவையில்லை. தலைமை நீதிபதி தத்து, ஜெயலலிதாவுக்கு அதிரடியாகப் பிணை வழங்கியவர். மேல் முறையீட்டை மூன்றே மாதத்தில் முடிக்க உத்தரவிட்டவர். இவையெல்லாம் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்கள், சட்ட விரோத நடவடிக்கைகள் என்று குற்றம் சாட்டி ஆயிரம் வழக்குரைஞர்கள் கையொப்பமிட்டு குடியரசுத் தலைவரிடம் மனுக்கொடுத்தோம். இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் கர்நாடக தலைமை நீதிபதி வகேலாவுக்கு மாற்றல் உத்தரவு பிறப்பித்திருக்கிறார் தத்து.
தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட மூவரும், 20 ஆண்டுகளைச் சிறையில் கழித்திருந்த போதிலும் அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு சென்ற ஆண்டு ஆட்சேபம் தெரிவித்தது. இதன் விளைவாக நாடு முழுவதும் 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சுமார் 1500 கைதிகள் விடுதலையாக முடியாமல், சிறையில் வாடுகிறார்கள். ஓராண்டு காலமாக இதற்கு ஒரு சிறப்பு அமர்வை நியமிக்க முடியாத தலைமை நீதிபதி தத்து, பவானி சிங் வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து, பதிவாளர் அலுவலகத்துக்கு நடந்தே சென்று, ஜெயாவுக்காக ஒரே நாளில் சிறப்பு அமர்வை நியமித்து, வண்டு முருகனையே விஞ்சப் பார்க்கிறார்.
அம்மா வழக்கிலும், அர்ச்சகர் வழக்கிலும், சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கிலும் பார்ப்பானுக்கு ஒரு நீதி, சூத்திரனுக்கு ஒரு நீதிதான் – உங்களால் என்ன செய்ய முடியும் என்று நமக்குச் சவால் விடுகிறது உச்சுக் குடுமிமன்றம். நம் சட்டைப்பையில் கைவிட்டு திருடினாலும், நீதிபதிக்கு மட்டும் சட்டப்பாதுகாப்பு உண்டு. மக்களை மிரட்டுவதற்கு நீதிமன்ற அவமதிப்பு என்ற அதிகாரம் வேறு. இவற்றுக்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டாமா? ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்ற இந்த மனுதர்ம வருணாசிரமக் கொடுமையை ஒழிக்க நீதிமன்றத்தில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும் நாம் போராட வேண்டும்.
அர்ச்சக மாணவர்களின் வழக்கை நடத்துவதற்கு நாங்கள் எடுத்து வரும் முயற்சிக்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்ந்த அமைப்புகள் துணை நிற்கின்றன. சென்னையைச் சேர்ந்த திரு கிருபானந்தசாமி அவர்களும் இதில் எங்களுடன் தோளோடு தோள் நின்று போராடி வருகிறார். ஆயிரம் வழக்குரைஞர்களிடம் கையெழுத்து, தத்துவுக்கு எதிராக குடியரசுத்தலைவரிடம் மனு, டில்லியில் பத்திரிகையாளர் சந்திப்பு, அர்ச்சகர் வழக்கு என்பன போன்ற பணிகளில் கடந்த சில வாரங்களாக எமது வழக்குரைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழுணர்வும், சுயமரியாதை உணர்வும் கொண்ட தனிப்பட்ட சில மனிதர்களும், ஐந்தும் பத்துமாக நன்கொடை அளித்த இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் அளித்த காசிலும், கடனிலும்தான் இந்த வழக்கை இதுவரை தள்ளிக் கொண்டு வந்திருக்கிறோம்.
எனவே,
- இயன்றவர்கள் அனைவரும் வழக்கு நிதி தாருங்கள்.
- “இயலாது” என்று இருந்து விடாமல் பார்ப்பனியக் கொடுங்கோன்மைக்கு எதிராகப் பரப்புரை செய்யுங்கள்.
- இந்தத் துண்டறிக்கை கூறும் செய்தியை மக்களிடையே பரப்புங்கள்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
பெண்கள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு: மில்ட்டன், வழக்குரைஞர் கைபேசி: 90946 66320
சர்வதேச செம்மரக் கடத்தல் தொழில்
ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சேசாச்சலம் வனப்பகுதியில் போலிசால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட தொழிலாளர்களைப் பற்றியும், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் அவர்களது கிராமங்களின் வாழ்நிலை பற்றியும் நேரடி செய்தியறிக்கையாக எழுதியிருந்தோம். இந்தக் கட்டுரையில் சர்வதேச செம்மரக் கடத்தலின் பரிமாணங்கள் குறித்து பார்க்கலாம்.

கூலிக்கு மரம் வெட்ட அழைத்துச் செல்லப்படும் மலை கிராம தொழிலாளர்கள், அவர்களை போலி மோதலில் கொலை செய்யும், கைது செய்யும் ஆந்திர போலீஸ் இவர்களைத் தாண்டி நூற்றுக் கணக்கான கரங்கள் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன.
செம்மர ஏற்றுமதி 1998-ம் ஆண்டு முதல் இந்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது. அருகிவரும் தாவர, விலங்கு பொருட்களின் சர்வதேச வர்த்தகத்துக்கான ஒப்பந்தத்தின் (CITES – Convention on International Trade in Endangered Species) உறுப்பு நாடுகளும் செம்மர வர்த்தகத்தை தடை செய்திருக்கின்றன. ஆனால், ‘சுதந்திரச் சந்தை’யும், முதலாளித்துவ முதலீடும் அளிக்கும் உந்துவிசை அந்த தடைப் பட்டியல்களை உடைத்து உள்ளூர் ரவுடிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் முதல் சர்வதேச கடத்தல்காரர்கள் வரை இயக்குகிறது.
சர்வதேச சந்தையில் செம்மரம் 3 தரத்தில் விற்கப்படுகிறது. முதல் தர மரம் இந்தியாவில் டன்னுக்கு ரூ 10 லட்சம் வரையிலும், வெளிநாட்டில் டன்னுக்கு ரூ 1 கோடி வரையிலும் விலை போகிறது.
- சென்ற ஆண்டு திருப்பத்தூர் அருகில் உள்ள வனத்துறை விற்பனை நிலையத்தில் C தரத்திலான செம்மரம் டன் ரூ 7.64 லட்சத்துக்கு விற்கப்பட்டிருக்கிறது. அதற்கு, கடத்தல் சந்தையில் ஒரு டன்னுக்கு ரூ 15 லட்சத்துக்கு குறையாத விலை கிடைக்கிறது என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.
- உயர்தர செம்மரக் கட்டையை டன்னுக்கு ரூ 1.5 கோடி மதிப்பில் ஏலம் விட்டிருக்கிறது ஆந்திர அரசு.

ஆந்திராவின் சித்தூர், கடப்பா, நெல்லூர் மாவட்டங்களின் சேசாச்சலம் வனப்பகுதிகளில் சுமார் 5,500 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 1.4 கோடி செம்மரங்கள் வளர்கின்றன என்று ஆந்திர அரசு மதிப்பிட்டுள்ளது. ஆந்திரக் காடுகளிலிருந்து சீனாவின் அல்லது மேற்கு ஆசியாவின் மேட்டுக்குடியினரின் பயன்பாட்டுக்கான இசைக் கருவிகள், மருந்து பொருட்கள் மற்றும் அறைக்கலன்கள் வரை நீளும் இந்த நீண்ட சங்கிலியின் சில கண்ணிகளைத் தேடி இணையத்திலும், சென்னையின் தெருக்களிலும் நடத்தப்பட்ட தேடல்களிலிருந்து சில விவரங்களை தருகிறோம்.
இந்தியாவில் வெட்டப்படும் செம்மரத்தில் மூன்றில் இரண்டு பங்குதான் ஏற்றுமதியாகிறது.
நம் ஊரில் முன்பு மரப்பாச்சி பொம்மை செய்வதற்கு செம்மரத்தை பயன்படுத்தியிருக்கின்றனர். இது போக கலைப்பொருட்கள் செய்யவும் பயன்படுத்தியிருக்கின்றனர். இப்போது, சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழக அரசின் பூம்புகார் கலைப்பொருட்கள் காட்சியகத்தில், செம்மரத்தில் செய்த ஒரு மரப்பாச்சியின் விலை ரூ 6,500. அதே அளவிலான விநாயகர் சிலையின் விலை ரூ 9,500. பெரிய விநாயகர் சிலை ரூ 20,000.

“இதெல்லாம் 5 வருசத்துக்கு முன்ன வந்தது சார். மைசூர்ல எங்க ஃபேக்டரில செஞ்சு வரும். இப்பல்லாம் வர்றது. இல்ல. இது அதிகமா விக்கிறதும் இல்ல. வெளிநாட்டுக் காரங்களுக்கு டிசைன் டிசைனா இருந்தாத்தான் வாங்குவாங்க. ஒரே மாதிரி டிசைனா இருந்தா வாங்க மாட்டாங்க” என்றார் விற்பனை ஊழியரான பெண்.
பூம்புகாரைத் தவிர்த்த அண்ணா சாலையில் உள்ள மற்ற அனைத்து தனியார் கடைகளிலும், “செம்மரம் என்ற ஒன்றை கண்ணாலேயே பார்த்ததில்லை” என்று சாதித்தனர். கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளாத குறையாக கடையிலிருந்து அனுப்பி வைத்தனர். அது எவ்வளவு மோசடியானது என்பதை பின்னர் பார்ப்போம்.

the old curiosity shop என்ற கடையில் இருந்த லத்தீப் என்பவர், ஆந்திராவில் மரம் வெட்டும் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டித்தார். ஆனால், பண வேட்டைக்கான தொழிலில் இது தவிர்க்க முடியாதது என்றார்.
“வேறென்ன எதிர்பார்க்கிறீங்க. ஒரு மர வகையை வெட்டி பொருள் செஞ்சா, சீக்கிரம் அந்த மர இனமே அழிஞ்சுதான் போகும். உதாரணமா, அகர் பத்தியை எடுத்துக்கோங்க. அந்தமான் காடுகள்ல அகர்-னு ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தோட கட்டையை கொழுத்தினா நல்லா வாசம் வரும். அதை மன்னர்களுக்கு பயன்படுத்தினாங்க. அதையே பெரிய அளவில சந்தைப்படுத்த ஆரம்பிச்சதும், சீக்கிரமே மரத்தை எல்லாம் வெட்டி காலி பண்ணிட்டாங்க. இப்ப மூங்கில் குச்சியில, ஏதோ பசையைத் தடவி அகர்பத்தின்னு விக்கிறாங்க
இந்த கலைப்பொருட்கள பாருங்க, சந்தன மரம், கருங்காலி மரம், ரோஸ்வுட் எல்லாம் இருக்கு. இன்னும் கொஞ்ச நாள்ல இதுல எதுவும் மிஞ்சாது. இதைப் போல (ஒரு பொம்மையை காட்டுகிறார்) பிளாஸ்டிக்ல செஞ்சு பெயின்ட் அடிச்சுதான் கலைப்பொருட்களே கிடைக்கும். ஒண்ணும் செய்ய முடியாது”
கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் மலைகளும், தென் மாவட்ட கடற்கரைகளில் தாதுமணலும் கொள்ளை போவதைப் போல, இந்திய மாபியாக்கள் சர்வதேச சந்தையில் கொள்ளை விலைக்கு விற்று பணம் ஈட்டுவதற்காக ஆந்திராவிலிருந்து செம்மரக் கடத்தலும் அதிகமாகியிருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் வருவாய்த்துறை கண்காணிப்பு இயக்குனரகத்தின் சென்னைக் கிளை, சென்னை துறைமுகத்திலிருந்தும் சென்னையைச் சுற்றியிருக்கும் பொன்னேரி, ரெட் ஹில்ஸ், வண்ணாரப்பேட்டை, யானை கவுனி போன்ற இடங்களிலிருந்து ரூ 415 கோடி மதிப்பிலான 155 டன் செம்மரக் கட்டைகளை கைப்பற்றியிருக்கிறது. “பிடிபடாமல் கடத்திச் செல்லப்பட்ட கட்டைகளின் அளவு இதை விட பல மடங்கு இருக்கும்” என்கின்றனர் வருவாய்த் துறை அதிகாரிகள். ஆந்திர காடுகளில் வெட்டி கடத்தப்பட்டு வரும் செம்மரக் கட்டைகள், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு மரக் கிடங்குகளில் வைக்கப்பட்டு சென்னை துறைமுகம் வழியாக கடத்தப்படுகின்றன.
“பைக்ல, கார்ல வச்சு கொண்டு வந்திருவாங்க சார். எல்லாத்தையும் ரெட் ஹில்ஸ் பக்கத்திலதான் சேர்த்து வைப்பாங்க. வாங்கி கைமாத்துவதுதான் எங்க வேல. 200 ரூபாய், 300 ரூபாய் கிலோவுக்கு வாங்கி, தரத்தை பொறுத்து 1000 ரூபாய் கிலோ வரைக்கும் வித்துடுவோம். எங்க கடைக்கு எல்லாம் சரக்கு வராது.
சென்னையிலேயே 200-300 பேரு இந்த வியாபாரத்தில இருக்காங்க. எங்க கிட்ட வாங்குறவங்க என்ன கொண்டு போறாங்கன்னு தெரியாது. ஆனா, நாங்க மாசத்துக்கு 1 டன் வரைக்கும் வாங்கி விக்கிறோம்.
கோயில் கலசத்தில இந்தக் கட்டைய வைப்பாங்கன்னு சொல்றாங்க. மாதவிடாய் பிரச்சனைங்க, ஆண்மை குறைவு இதுக்கெல்லாம் பயன்படுமாம். இந்தக் கட்டையில செஞ்ச பொருள் பல வருசத்துக்கு கெடாம இருக்கும்”.
இதைச் சொன்னவர் வடசென்னையில் மரத் தொழில் செய்யும் ஒரு வியாபாரி.
சமீபத்தில், சென்னைக்கு அருகில் கார்களில் கடத்தப்படும் செம்மரக் கட்டைகள் பல முறை கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஏப்ரல் முதல் வாரத்தில் போளூரைச் சேர்ந்த செல்வம் மற்றும் ஜமுனாமத்தூரைச் சேர்ந்த ராமராஜன் ஆகியோர் காரில் 746 கிலோ எடையுள்ள 23 செம்மரக் கட்டைகளுடன் சோளிங்கர் அருகில் வந்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சென்ற ஒரு மாதத்தில், காட்பாடி உருகில் 2 வண்டிகளிலும், ரத்னகிரி அருகில் உள்ள ஆரப்பாக்கத்தில் 1 வண்டியும் செம்மரங்களுடன் விபத்தில் சிக்கி கைவிடப்பட்டு காணப்பட்டன. ஒவ்வொரு காரிலிருந்தும் 17 முதல் 18 செம்மரக் கட்டைகளை போலீஸ் கைப்பற்றியிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் சுமார் 1,000 டன் செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்படுகின்றன. “இப்போது பல்வேறு மாநில அரசுகளின் கைவசம் சுமார் 11,800 டன் செம்மரக் கட்டைகள் உள்ளன” என்கிறார் திருப்பதி மண்டல வனத்துறை அலுவலர் ஜி. ஸ்ரீனிவாசலு. ஆந்திர அரசின் கைவசம் 2002 முதல் கைப்பற்றப்பட்ட சுமார் 8,500 டன் (மதிப்பு சுமார் ரூ 3,000 கோடி) செம்மரக் கட்டைகள் உள்ளன. இது போக மகாராஷ்டிரா, குஜராத் அரசுகளும் கணிசமான அளவு கட்டைகளை கைவசம் வைத்திருக்கின்றன.
தற்போது ஆந்திர போலிசின் என்கவுண்டர் கொடூரத்தால் மாநில அரசுகள் வைத்திருக்கும் செம்மரக் கட்டைகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துவிடும். அவற்றை விற்றால் மாநில அரசுகளும் கூட பெரும் பணத்தை திரட்ட முடியும்.

சென்னை துறைமுகத்தில் வேலை செய்யும் ஒரு ஊழியரை தொடர்பு கொண்டோம். “சார், துறைமுகத்துக்கு என்ன வருது, என்ன வெளிய போகுதுன்னு தொழிலாளிக்கு தெரிய சான்சே இல்ல சார். 1990-ல 25,000 தொழிலாளிங்க இருந்தாங்க, இப்போ 6,000 பேர்தான் இருக்காங்க. பலருக்கு விருப்ப ஓய்வு, புதிதாக ஆள் எடுப்பது இல்லைன்னு எல்லாத்தையும் தனியார் கையில ஒப்படைச்சிட்டாங்க.
எல்லாமே கன்டெய்னர்ல அடைச்சி, சீல் வச்சி வரும். கன்டெய்னரை கிரேன் கொக்கியில் மாட்டி விடுவது மட்டும்தான் வேலை. அதைக் கூட துறைமுகத் தொழிலாளி செய்றதில்ல. தனியார் கம்பெனி ஆள் வெச்சி செஞ்சிக்கிறாங்க. கன்டெய்னருக்குள்ள செம்மரக் கட்டை என்ன, குடுவை குடுவையா மனுச உறுப்பை அனுப்பினாங்கன்னா கூட யாருக்கும் தெரியாது.” என்றார் அவர். 2001 முதல் சென்னை துறைமுகத்தின் கன்டெய்னர் (சரக்கு கலன்) முனையத்தை டி.பி வேர்ல்ட் என்ற பன்னாட்டு தனியார் நிறுவனம்தான் இயக்கி வருகிறது.

சரக்கு கலன் முனையத்தில் சுங்க அதிகாரிகள் அல்லது, ஏற்றுமதியாளரின் கிடங்கிலேயே கலால்துறை அதிகாரிகள் சீல் (முத்திரை) வைத்து விடுகிறார்கள். அவர்களது ஒத்துழைப்புடனோ அல்லது துறைமுகத்துக்கு கொண்டு வரும் வழியில் முத்திரையை உடைக்காமலேயே சரக்கு கலத்தின் ஹிஞ்சுகளை கழற்றி பொருளை மாற்றி விடுகின்றனர்.
சென்னை, தூத்துக்குடி துறைமுகங்கள் தவிர சித்தூரிலிருந்து தொலைவில் இருக்கும் மேற்கு கடற்கரையின் மும்பை துறைமுகம் வழியாகவும், கிழக்கு கடற்கரையின் விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாகவும் கூட செம்மரக் கட்டைகள் கடத்தப்படுகின்றன.
சென்ற ஆண்டில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பிடிபட்ட 3 ஏற்றுமதி பொதிகளைப் பற்றி பார்க்கலாம். இவற்றைத் தவிர பிடிபடாமல் 100 கணக்கான பொதிகள் போயிருக்கும் என்கிறது இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள டெக்கான் குரோனிக்கிள் நாளிதழ்.
பிடிபட்ட 3 பொதிகளில் இரண்டு ஒரிசாவின் ரூர்கேலா, கட்டாக் நகரங்களிலிருந்து வந்ததாக காட்டப்பட்டிருக்கின்றன. இன்னொன்று சென்னையிலிருந்து வந்திருக்கிறது.
மே 2013-ல் வருவாய்த்துறை அதிகாரிகள், மலேசியாவுக்கு போகும் கப்பலில் ஏற்றப்படவிருந்த 16 டன் செம்மரக் கட்டைகளை (மதிப்பு ரூ 5 கோடிக்கும் மேல்) கைப்பற்றினர். 28 டன் கொள்ளளவு கொண்ட அந்த கலத்தில் 16 டன் சுடுகலன் சிமென்டை (refractory cement) மலேசியாவுக்கு அனுப்புவதாக ரூர்கேலாவைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஆவணங்களை கொடுத்திருந்தது. அந்த சரக்கு கலம், ஏற்றுமதி நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தில் கலால் துறை அதிகாரிகளால் முத்திரை வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கிடைத்த உளவு தகவலின் அடிப்படையில் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் திறந்து பார்த்த போது கலத்தில் 16 டன் எடையுள்ள 400 செம்மரக் கட்டைகள் இருந்திருக்கின்றன. மலேசியா அல்லது துபாய்க்கு அனுப்பப்படும் இந்த செம்மரக் கட்டைகள் அங்கிருந்து சீனாவை சென்றடைகின்றன.
இன்னொரு முறை, கிரானைட் கற்களை ஹாங்காங்குக்கு அனுப்புவதாக ஆவணப்படுத்தப்பட்டிருந்த கப்பல் கலத்திலிருந்து செம்மரக் கட்டைகள் கைப்பற்றப்பட்டன.

செம்மரம் மானாவாரியாக வளரும் ஆந்திர காடுகளுக்கும், செம்மரக் கட்டைகள் பல லட்சம் ரூபாய் மதிப்பில் விற்கப்படும் சீன சந்தைக்கும் இடையே பாதை கடலில் மட்டுமின்றி நிலத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. அசாமின் கர்பி அங்லோங் மாவட்டம் வழியாக நடந்த கடத்தலைப் பற்றிய ஒரு கதையை கேட்போம்.
ஆந்திர பிரதேசத்தின் வனத்துறை அதிகாரிகள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களோடு, நன்றாக பொதியப்பட்டு லாரி நிறைய செம்மரக் கட்டை சுமைகள் அசாமை சென்றடைகின்றன. அவற்றுக்கான போலி ஆவணங்களையும் கைவசம் வைத்திருக்கின்றனர். வடகிழக்கு இந்தியாவின் கடைசி எல்லைப் புற நகரமான மோரே வழியாக மியன்மாருக்குள் அனுப்பப்பட்டு அந்நாட்டின் கச்சின் பள்ளத்தாக்கு வழியாக சீனாவுக்குள் கடத்தப்படுகின்றன, செம்மரக் கட்டைகள்.
2009-ம் ஆண்டு செம்மரக் கட்டைகள் அடங்கிய ஒரு லாரி அசாம் போலீசால் கைப்பற்றப்பபட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. 16 டன் செம்மரக் கட்டைகளும், அவற்றை ஏற்றிச் சென்ற லாரியும், வனத்துறை மண்டல அதிகாரியால் ‘யாரும் சொந்தம் கொண்டாடாத சொத்து’ என்று அறிவிக்கப்படுகிறது. அதாவது, யார் மீதும் கிரிமினல் வழக்கு போடப்படவில்லை.

மண்டல வனத்துறை அதிகாரி இந்த 16 டன் செம்மரக் கட்டைகளை விற்று விடுவது என்று முடிவு செய்கிறார். அரசின் அதிகார பூர்வ விலையின் படி அதற்கு ரூ 4.5 லட்சம் என்று விலை நிர்ணயித்து, இது தொடர்பான போலி டெண்டர் ஆவணங்களையும் தயாரிக்கிறது அந்த அதிகார வர்க்க கும்பல். இந்த செம்மரக் கட்டைகள் மியன்மாருக்கு பாதுகாப்பாக அனுப்ப வசதியாக, 4 லாரி சுமை தேக்கு மரக் கட்டைகளையும் சேர்த்து விற்க முடிவு செய்கின்றனர்.
4 லாரி தேக்குமரம், 1 லாரி செம்மரம் இவற்றை ரூ 7.5 லட்சத்துக்கு சங்கீதா தெரன்பீ என்ற மாணவிக்கு விற்பதற்கு, கர்பி ஆங்லோங் சுயாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுகிறது வனத்துறை. சங்கீதா, வனத்துறையில் பணிபுரியும் ரேகா பரூவா என்ற அதிகாரியின் மூத்த மகள். மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள தனது வங்கிக் கணக்கிலிருந்து சங்கீதா ரூ 7.5 லட்சம் தொகையை செலுத்தியிருக்கிறார். மார்ச் 2009-ல் இந்த 16 டன் செம்மரக் கட்டைகளை மோரே வரை அனுப்புவதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டு அங்கிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

2009-ல் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு அசாமில் இதே அளவிலான பல செம்மர பொதிகள் அசாம் போலீசாலும், வனத்துறையாலும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. எல்லைப் புற நகரான மோரேவிலும் சில கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
ஆந்திர காடுகளில் வெட்டப்படும் இந்த மரங்கள், எந்தத் தடையும் இல்லாமல் ஆந்திரா, ஒரிசா, மேற்குவங்கம், அசாம் வழியா மியன்மாருக்கு கடத்தப்பட்டு தென் சீனாவை அடைய முடிகிறது என்றால் இந்த சங்கிலித் தொடரில் இடம் பெறும் அதிகாரிகள், பண முதலைகள், உள்ளூர் ரவுடிகளின் தொடர்பு பலத்தை புரிந்து கொள்ளலாம்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் 6 டன் செம்மரக் கட்டைகளை கடத்த முயற்சித்ததாக தான் ஷூய் (51), தோய் யுயான் (45), சர் ஷாய் (25), மற்றும் வெய் சீலியாங் (27) ஆகிய 4 சீனர்கள் கர்நாடகாவின் ஹோஸ்கோட் தொழில்துறை பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம், விஜயவாடாவின் நியூ ஆட்டோ நகரில் உள்ள ஒரு கிடங்களிலிருந்து ரூ 100 கோடி மதிப்பிலான 30 டன் செம்மரக் கட்டைகளை பிடித்திருக்கின்றனர். சேசாச்சலம் காடுகளிலிருந்து நெல்லூர் வழியாக இவை விஜயவாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன.
கடல் வழியாக, தரை வழியாக மட்டுமின்றி வான் வழியாகவும் செம்மரக் கட்டைகள் பறக்கின்றன.
“2013-ம் ஆண்டில் 55 சீனர்கள் தமது கைப் பெட்டியில் செம்மரக் கட்டைகளை கடத்தி செல்வதை பிடித்திருக்கிறோம்” என்கிறார் டெல்லி விமான நிலையத்தின் மூத்த அதிகாரி. 2013-ல் டெல்லி விமான நிலையத்தில் பிடிக்கப்பட்ட மொத்தம் 71 கடத்தல் முயற்சிகளில் 18 டன் மரம் பிடிபட்டிருக்கிறது.
செம்மரக் கடத்தலை ஏழைத் தொழிலாளிகள் படுகொலையாக மட்டும் பார்க்க முடியாது. வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளையிலிருந்து, பி.ஆர் பழனிச்சாமியின் கிரானைட் கொள்ளை, ரெட்டி சகோதரர்களின் இரும்புத் தாது கொள்ளை, வேதாந்தா அலுமினிய தாதுவை கைப்பற்றும் முயற்சி என்று நாட்டுக்கும் மக்களுக்கும் விரோதமான செயல்கள் தொடர்ந்து நடக்கின்றன. ஆண்டு தோறும், பல லட்சம் கோடி மதிப்பிலான செல்வங்கள் கொள்ளை போகின்றன.
தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் மய, தாராள மய, உலக மய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகவே இந்த இயற்கை வளக் கொள்ளைகள் நடந்து வருகின்றன. இவற்றைத் தடுக்க முடியாததோடு தாமும் கூட்டாக கொள்ளையில் ஈடுபடுபவையாக அரசும், அரசியல்வாதிகளும் சீரழிந்து போயிருக்கின்றனர்.
செம்மரம் என்பது ஏதோ சில மலைவாழ் மக்களால் வெட்டி எடுக்கப்பட்டு விற்கப்படும் குடிசைத் தொழில் அல்ல. சர்வதேச வலைப்பின்னலோடும், அரசு, முதலாளிகளின் கூட்டோடும் நடத்தப்படும் ஒரு திருட்டு வணிகம்.
உலக அளவில் மேட்டுக்குடி சந்தையைக் கைப்பற்றும் வண்ணம் இத்தகைய ‘அரிய’ வகை பொருட்கள் பற்றிய கதைகள் வருடத்திற்கொரு முறை ஓதப்படுகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் செம்மரம் இப்படி ஒரு உயர்நிலை நுகர்வை அடைந்துள்ளது.
தென் கிழக்காசிய நாடுகளிலும், சீனாவிலும் இவற்றிற்கு சந்தை இருந்தாலும், இதன் நிர்வாக வேலைப் பிரிவினைகள் சித்தூரிலிருந்தே ஆரம்பிக்கிறது. மரம் வெட்டும் அனுபவமுள்ள தொழிலாளிகள், அவர்களை அழைத்து வரும் தரகர்கள், போக்குவரத்து, கிட்டங்கி, ஏற்றுமதி, அதிகார வர்க்கம், போலீசு, இவற்றின் பல நிலைகளில் உதவி செய்யும் அரசியல்வாதிகள், உள்ளூர் பிரமுகர்கள் என்று இதன் வலைப்பின்னல் பெரியது. அரியவகை மரம் என்பதை வைத்து உருவாக்கப்படும் செம்மரங்களின் மதிப்பும் வர்த்தகமும் மிகப்பெரிய பணத்தை புரட்டுகிறது.
ஆகவே இந்த தொழிலால் ஆதாயம் அடையும் சக்திகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் தொழிலாளிகள் மட்டும் குறிவைத்து கொல்லப்படுவது என்பது நிச்சயம் திருடர்களுக்கிடையே நடக்கும் பங்குச் சண்டைதான். செம்மர கடத்தலால் ஆதாயம் அடைந்தவர்கள் பகிரங்கமாக உலா வர, வெட்டியவர்கள் மட்டும் சிறைகளில் வாழ்கின்றனர். சிலர் கொல்லவும் படுகின்றனர்.
ஆளும் வர்க்கம் முழுவதுமே இந்தக் கூட்டணியில் உள்ளது. இந்தக் கூட்டணியை முறியடிக்காமல் செம்மரங்களை பாதுகாக்க முடியாது.
– வினவு செய்தியாளர்கள்.
இது தொடர்பான செய்திகள்
- Andhra’s U-turn: Lift ban on red sander trees felling
- Smuggling of Red Sanders to China Under Scrutiny
- Chinese Timber Mafia Gets a New Red Sanders Route
- Vellore, a major red sanders smuggling transit
- Red sanders smuggling had links to Vijayawada
- Red sanders wood smuggling bid foiled, four Chinese held
கார்ப்பரேட் ‘சமூக’ப் பாதுகாப்புத் திட்டங்கள்
பட்ஜெட் உரையில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என்று பெயர் சூட்டப்பட்ட திட்டங்களை விவரிப்பதற்கு நிதியமைச்சர் கணிசமான நேரம் எடுத்துக் கொண்டார். இதனுடன் ஒப்பிடும்போது, கார்ப்பரேட் வரியை 30% இலிருந்து 25% ஆக குறைப்பது பற்றிய அறிவிப்புக்கு அவர் ஒதுக்கியது சில நொடிகள் மட்டுமே. அதேபோல சுங்கவரிக் குறைப்பு குறித்த அறிவிப்புக்கும் சில நொடிகள் மட்டுமே. ஆனால், இவற்றால் அரசுக்கு ஏற்படப்போகும் இழப்போ, சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் என்று கூறப்படும் திட்டங்களுக்கு அவர் செலவிடவிருக்கும் தொகையைப் போலப் பன்மடங்கு அதிகம்.
இந்த பட்ஜெட் உரை முழுவதுமே கார்ப்பரேட் முதலாளித்துவத்தை வலுப்படுத்துவதைப் பற்றித்தான் பேசுகிறது. இதன் ஊடாக சமூகப் பாதுகாப்பு பற்றிய தனது முன்மொழிதல்களை நிதியமைச்சர் நெய்திருக்கிறார். அவர் அறிவித்திருக்கும் திட்டங்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.
முதலாவதாக, அனைத்து மக்களுக்குமான ஆயுள் காப்பீடு. பிரதான் மந்திரி சுரக்ஷா பீமயோஜனா என்ற இந்த திட்டம், விபத்தினால் மரணம் அடைபவர்களுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம். ஆண்டுக்கு 12 ரூபாய் பிரிமியம் செலுத்தவேண்டும். காப்பீட்டுத் தொகை 2 இலட்சம். இந்த காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் மக்களது எண்ணிக்கை கோடிக்கணக்கில் இருக்கும் என்பதுதான் காப்பீட்டு நிறுவனங்களுக்கு இதில் உள்ள கவர்ச்சி. அப்படி நிச்சயமாக ஒரு ஆதாயம் இருப்பதனால்தான் இந்த காப்பீட்டுத் திட்டத்தை தனியார் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்தியிருக்கிறார் நிதியமைச்சர்.
அடுத்த திட்டம், இயற்கை மரணம் அல்லது விபத்தினால் மரணம் ஆகியவற்றுக்கான காப்பீடு. இது 18 வயது முதல் 50 வயது வரை உள்ளோர்க்கு மட்டும்தான். இதன் முதிர்வுத்தொகை 2 லட்சம் ரூபாய். ஆண்டுக்கு கட்ட வேண்டிய பிரிமியம் 330 ரூபாய்.
இரண்டு காப்பீட்டுத் திட்டங்களிலுமே பிரிமியம் தொகையை மக்கள்தான் (சந்தாதாரர்கள்தான்) கட்டவேண்டும். இப்படி சமூகம் (அதாவது அரசு) ஐந்து காசு கூட வழங்காத இந்தத் திட்டங்களுக்குப் பெயர் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களாம்! இப்படியான காப்பீட்டுத் திட்டத்தை எந்த காப்பீட்டு நிறுவனமும் அறிவிக்க முடியும்.
இரண்டாவது சமூக நலத் திட்டத்தின் பெயர் அடல் பென்சன் யோஜனா என்ற புதிய ஓய்வூதியத் திட்டம். ஆண்டுக்கு எவ்வளவு பிரிமியம் செலுத்துவீர்கள், எத்தனை ஆண்டுகளுக்கு செலுத்து வீர்கள் என்பதன் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட ஒரு தொகையை ஓய்வூதியமாக வழங்கும் திட்டம் இது.
அரசைப் பொருத்தவரை, நீங்கள் கட்ட விரும்பும் ஒரு ஆண்டுக்கான பிரிமியம் தொகையில் பாதியை அல்லது அதிகபட்சம் ஆயிரம் ரூபாயைத் தனது பங்களிப்பாக முதல் 5 ஆண்டுகளுக்கு மட்டும் செலுத்தும். அதற்குப் பின் அவரவர் பாடு. டிசம்பர் 31, 2015-க்குள் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் அரசாங்கம் இந்தத் தொகையைச் செலுத்தும் என்பது இன்னொரு கூடுதல் நிபந்தனை.
இந்த திட்டத்தை அமல்படுத்தவிருக்கும் நிறுவனம் எது என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது அரசாங்கத் திட்டமாகவும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் திட்டமாகவும் இருப்பதால், மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் இதில் முதலீடு செய்து முன்னேற்றம் காண்பார்கள். அவ்வளவே.
ஓய்வூதியம் என்பதே இல்லாத, முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள ஏழைகள்தான் இந்தத் திட்டத்தின் இலக்கு. 2012-ம் ஆண்டு கணக்கின்படி இத்தகைய தொழிலாளர்களின் எண்ணிக்கை 33 கோடி. ஆனால், மத்திய அரசின் தேசிய சமூக உதவித்திட்டத்தின் கீழ் (National Social Assistance Programme) சமூக ஓய்வூதியம் பெறுகின்ற பரம ஏழைகள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். 2006 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்ட அடிப்படையில் இவர்களில் சிலருக்கு மாதம் 200 ரூபாய் தரப்படுகிறது. இந்த பரம ஏழைகள் 80 வயதைத் தாண்டி வாழ முடிந்தால், அவர்கள் மாதம் 500 ரூபாய் பெறமுடியும்.
வறுமைக்கோடு என்பதற்கு அரசு நிர்ணயித்திருக்கும் அளவுகோலின்படியே இந்த பரம ஏழை மக்களுக்கு மாதம் ரூ.1000 தரப்பட வேண்டும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் பணிப்பிரிவைச் சேர்ந்த (Task Force) சிறுபான்மை உறுப்பினர்கள் கோரினார்கள். இதனை நிராகரித்த அமைச்சகம், வேண்டுமானால் பணவீக்கத்துக்காக நூறு ரூபாய் சேர்த்துப் போட்டு, 300 ஆக உயர்த்திக் கொடுக்கலாம் என சிபாரிசு செய்தது. பணமில்லை என்று கூறி இந்த 300 ரூபாயைக் கூடத் தர முடியாது என்று கைவிரித்து விட்டது அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.
மேற்கூறிய தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழான தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், குடும்ப உதவித் திட்டம், பேறுகால உதவித் திட்டம் ஆகியவையெல்லாம், மக்களுடைய உரிமை என்று முறைசாராத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டம் (2008) கூறுகிறது. மேற்கூறிய திட்டங்களுக்கான உதவித்தொகையைப் பணவீக்கத்துக்கு ஏற்ப உயர்த்திக் கொடுக்க வேண்டும். ஆனால், நிதியமைச்சரோ, இந்த சமூகப் பாதுகாப்புச் சட்டம் பற்றியே பட்ஜெட்டில் மூச்சு விடவில்லை.
அடுத்து வருவது, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி (Employee Provident Fund) மற்றும் ஊழியர்களுக்கான அரசு காப்பீட்டுக் கழகம் (Employee State Insurance Corporation) ஆகியவற்றை மெல்ல ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சி. இ.எஸ்.ஐ. மற்றும் இ.பி.எஃப். ஆகியவற்றுக்கு புதிய மாற்றுகளை வழங்குவது என்ற பெயரில், சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்ட மேற்சோன்ன திட்டங்களால் பயன் பெறும் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியே இழுத்து, முதலீட்டுச் சந்தை மற்றும் தனியார் காப்பீட்டுச் சந்தையில் தள்ளி, அவற்றின் விரிவாக்கத்துக்கு வழிசெய்கிறது நிதியமைச்சரின் சமூக நலத் திட்ட அறிவிப்பு.
இ.எஸ்.ஐ. வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதற்குப் பதிலாக மருத்துவக் காப்பீட்டுக்கு (Health Insurance) மாறிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பின் நோக்கம், மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனிகளுடைய சந்தையை விரிவுபடுத்துவதும், மருத்துவத்தை முற்று முழுதாக விற்பனைப் பண்டமாக்குவதும்தான்.
ஊழியர் ஓய்வூதியத் திட்டத்திலேயே தொடர்வதா, அல்லது புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறிக்கொள்வதா என்று முடிவு செய்யும் வாய்ப்பை தொழிலாளர்களுக்கு வழங்குவது என்ற பெயரில், அவர்களை புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு இழுத்து, அதன் மூலம் அந்தப் பணத்தை மூலதனச் சந்தைக்கு கொண்டு செல்வது என்பதுதான் இதன் நோக்கம். எனவேதான், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேருவோருக்கு வரிச்சலுகையும் வழங்குகிறார் நிதியமைச்சர்.
அதுமட்டுமல்ல, சமூகப் பாதுகாப்பு பற்றிப் பேசும் நிதியமைச்சர், வருங்கால வைப்பு நிதிக்காக பணப்பிடித்தம் செய்ய வேண்டுமா, வேண்டாமா என ஊழியர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று ஒரு அபாயகரமான யோசனையையும் முன்வைத்திருக்கிறார். இது தொழிலாளர்களுக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச சமூகப் பாதுகாப்பையும் ஒழித்துக்கட்டவே பயன்படும். அரசாங்க உத்திரவாதமுள்ள ஓய்வூதியம் என்பதற்குப் பதிலாக, பங்குச் சந்தையில் அதனை முதலீடு செய்தால், கூடுதல் ஆதாயம் கிடைக்கும் என்று ஆசை காட்டி, தொழிலாளிகளையும் நடுத்தர வர்க்கத்தினரையும் படுகுழியில் இழுத்து விடுவதுதான் இதன் நோக்கம்.
40 தொழிலாளர்களுக்குக் குறைவானவர்கள் பணி புரியும் இடங்களைத் தொழிலாளர் துறை ஆய்வாளர்கள் சோதனை செய்யக்கூடாது என்பன போன்ற புதிய விதிகள் மூலம் தொழிலாளர் சட்டங்கள் தளர்த்தப்பட்டு வருகின்ற இன்றைய சூழலுடன் நிதியமைச்சரின் மேற்கூறிய அறிவிப்புகளை இணைத்துப் பார்க்க வேண்டும். “மேக் இன் இந்தியா” திட்டம் வெற்றி பெற வேண்டுமானால், தொழில் துறையில் எவ்வித அரசாங்கத் தலையீடும் கூடாது, வேலையில்லாதவர்களுக்கு அரசாங்கம் சமூகப் பாதுகாப்பு வழங்கக் கூடாது என்று அரசு எண்ணுவது தெளிவாகத் தெரிகிறது.
மூன்றாவதாக, நிதியமைச்சர் அறிவித்திருப்பவை, வருமானவரி செலுத்தும் இந்தியர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள். இதிலும் பட்டியல் நீண்டதாக இருக்கிறதே தவிர, சரக்கு ஏதும் இல்லை. 80 வயதுக்கு மேற்பட்ட வெகு மூத்த குடிமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகையை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய வருமான வரி விலக்கு பெறத்தக்க மருத்துவச் செலவின் அளவு ரூ 60,000 த்திலிருந்து 80,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயனடையப் போகிறவர்கள் எத்தனை பேர்? இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் 3.6 கோடிப் பேர். இவர்களில் 80 வயதுக்கு மேற்பட்டோர் வெறும் 4.9 இலட்சம் பேர்தான். இவர்களிலும் மேற்கூறிய சலுகைகளைப் பெறும் அளவுக்கு வருமானம் அதிகமுள்ளவர்கள் வெகு குறைவு. ஆகவே, இது பணக்காரச் சிறுபான்மைக்கு வழங்கப்பட்டிருக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்பதே உண்மை.
இது மட்டுமல்ல, வருங்கால வைப்பு நிதியில் (இ.பி.எஃப்., ஜி.பி.எஃப்.,) யாராலும் பாத்தியதை கோரப்படாமல் கிடக்கும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சொந்தமான 9000 கோடி ரூபாயை எடுத்து, மூத்த குடிமக்கள் நல நிதி ஒன்றை ஏற்படுத்தப் போவதாகவும் நிதியமைச்சர் கூறியிருக்கிறார். இது பற்றிய உள் விவரங்களை அவர் வெளியிடாத காரணத்தினால், இது எந்த சமூகத்துக்கு பாதுகாப்பு அளிக்கப் போகிறது என்பதை இப்போது சொல்ல முடியவில்லை.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், 2008-ல் இயற்றப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்டதாகையால், அதனைக் கோருவதற்கு சட்ட ரீதியான உரிமை மக்களுக்கு இருந்தது. தற்போது நிதியமைச்சர் அறிவித்திருக்கும் திட்டங்களுக்கு அத்தகைய சட்டரீதியான உத்திரவாதம் ஏதும் கிடையாது என்பதால், அரசு நினைத்தால் மறு கணமே இத்திட்டங்களைக் கைவிட்டு விட முடியும்.
சாந்தகுமார் கமிட்டியின் பரிந்துரைகளின்படி (இந்திய உணவுக் கழகத்தை மூடுவது, அரசுக் கொள்முதலைக் குறைத்து தனியார் கொள்முதலை ஊக்குவிப்பது, நியாயவிலைக் கடைகளை மூடுவது) உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன் பெறக்கூடிய ஏழைக் குடும்பத்தினரின் எண்ணிக்கையை 67% இலிருந்து கணிசமாகக் குறைப்பதே இந்த அரசின் திட்டம். ஆனால், பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அது பற்றி வாய் திறக்கவில்லை. டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தங்களது கருத்தை உரக்கச் சொல்லியிருப்பதே நிதியமைச்சரின் தற்போதைய மவுனத்துக்குக் காரணமாக இருக்கக் கூடும். ஆனால், உணவுப் பாதுகாப்புக்காக ஒரு போராட்டம் நடத்துவதைத் தவிர்க்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.
அடிப்படையான சமூகப் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடுகளைப் பொருத்தமட்டில், ஏற்கெனவே வழங்கப்பட்டிருப்பவற்றை எல்லாம் ரத்து செய்யும் திசையில் செல்வது என்பதுதான் மத்திய அரசு கூறும் செய்தி. சமூகப் பாதுகாப்பு என்ற பெயரில் ஒப்புக்கு ஏதேனும் கொடுத்தாலும், அது நிச்சயம் சந்தை அடிப்படையிலான தீர்வுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.
அத்தகைய சமூக நலத் திட்டங்கள் எனப்படுபவை அனைத்தும், கார்ப்பரேட் நிறுவனங்களால் தலைமை தாங்கப்பட்டு, அரசால் பாதுகாப்பு வழங்கப்படும் ஆட்கொல்லி முதலாளித்துவத்துக்கு மேலும் ஊக்கம் கொடுப்பவையாகவே அமையும்.
(எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி மார்ச்-21 இதழில் பேரா. கே.பி.கண்ணன் எழுதிய கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம்.)
______________________________
புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2015
______________________________
மக்களை காவு வாங்கும் கடலூர் SIMA சாயப்பட்டறை
- திருப்பூரில் விரட்டப்பட்ட “சைமா”வால் கடலூர் நகருக்கே கேடு!
- அனுமதிக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல, “சைமா”வே திரும்பி ஓடு!
கடலூர் அருகே 1985-ல் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக 518 ஏக்கர் நிலமும், 2-ம் கட்டமாக 500 ஏக்கர் நிலமும் கையகப்படுத்தப்பட்டு, தொழிற்சாலைகளுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு வழங்கப்பட்டன.
நிலவளமும், நீர்வளமும் கொண்ட இப்பகுதியில், பிரதானமாக ரசாயனத் தொழிற்சாலைகளுக்கு என மத்திய அரசு அறிவித்ததால், பல்வேறு அழிவுகளையும் நாசங்களயும் உருவாக்கும் ரசாயனத் தொழிற்சாலைகள்தான் தொடங்கப்பட்டுள்ளன. வழக்கமாக எல்லா இடங்களிலும் நடப்பதைப் போல, ‘வேலைவாய்ப்பு கிடைக்கும், தொழில் வளர்ச்சி பெருகும்’ என்று ஆசை காட்டப்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

“பணிந்தவர்களுக்கு பணக்கட்டு! பணியாதவர்களுக்கு உருட்டுக்கட்டை!” என்ற பார்முலாவுடன் தற்போது கார்ப்பரேட்களுக்கு தாரைவார்க்க கொண்டுவரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு முன்னோடியாக இப்பகுதி நிலங்கள் விவசாயிகள், மற்றும் மீனவர்களிடமிருந்து பறிக்கப்படடன.
சிப்காட் தொழிற்பேட்டையில் ரூ 200 கோடி மூலதனத்துக்கு மேல் முதலீடு செய்து இருக்கும் பயோனீர், சாசன், டாக்ரோஸ், லாயிட்ஸ், டேன்பேப் போன்ற 5 பெரிய ரசாயன ஆலைகளும், கெம்பிளாஸ்ட், சன்மார் போன்ற யூனியன் கார்பைடுக்கு நிகரான ஆபத்தை விளைவிக்கும் பி.வி.சி தயாரிக்கும் ஆலையும், நாகார்ஜுனா போன்ற எண்ணெய் துரப்பண தொழிற்சாலைகள் உள்பட 34 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. 6 தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு வருகின்றன. ரூ 200 கோடி மூலதனத்தில், 60 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட ஜே.கே. ஃபார்மா, 60 ஏக்கர் பரப்பளவில் ரூ 120 கோடி மூலதனத்தில் தொடங்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஸ்டார்ச் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட 18 தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.

இப்படிப்பட்ட ஆலைகள் துவங்கப்பட்டதால் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ செழிப்பாக நடந்துகொண்டிருந்த விவசாயம் அழிந்து கொண்டிருக்கிறது. உதாரணமாக 1980-களுக்கு முன்பு 30 அடியில் கிடைத்த நிலத்தடி நீர் தற்போது 800 அடிக்கு மேல் போய்விட்டது. அவ்வாறு உள்ள நீரிலும், “80% குரோமியம், காட்மியம், தோரியம், சல்பேட், ஈயம் போன்ற கொடிய நச்சு வேதிப்பொருள் கலந்துவிட்டன” என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தங்களது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிறக்கும் குழந்தைகள், பெண்கள், முதியவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு, குடற்புண், நுரையீரல் பாதிப்பு, கருச்சிதைவு, தோல் நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மனவளர்ச்சி குறைவு, குறைப்பிரசவம் போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. புற்றுநோய் உருவாகும் சூழல் பிற இடங்களைக் காட்டிலும் 2,000 மடங்கு அதிகம் இருப்பதாக, தேசிய சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்து உள்ளது.
மேற்கண்ட ஆலைகளில் ரசாயன வாயு கசிவு ஏற்பட்டும், பாய்லர் வெடித்தும், கழிவு நீர் குழாய்கள் வெடித்தும், அவ்வப்போது தொழிலாளர்கள் இறப்பதும் சர்வ சாதாரண நிகழ்வாகிவிட்டது. இந்த ஆலைக் கழிவுகளால் காற்று, நீர், நிலம் என அனைத்தும் நஞ்சாகிவிட்ட நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் வந்துள்ளது திருப்பூரில் மக்களால் போராடி விரட்டியடிக்கப்பட்ட சைமா (SIMA – SOUTH INDIAN MILLS ASSOCIATION) எனும் பின்னலாடை மற்றும் சாயப்பட்டறை நிறுவனங்களின் சங்கம்.

இதற்கு முன்பு இந்த வட்டாரத்தில் உள்ள கிராமங்கள் எங்கும் முந்திரி, நிலக்கடலை, நெல், கேழ்வரகு, எள், தர்பூசணி, தோட்டப்பயறு வகைகள் என்று முப்போகம் மட்டுமல்ல எந்நேரமும் மகசூல் தரும் பூமியாகும். எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று சமுக்காளம் போல் விரிந்து கிடக்கும் இயற்கைச் சூழல் காண்போரின் மனதை கவர்ந்திழுக்கும் வகையில் இருந்தது. சிப்காட் தொழிற்பேட்டை நிலங்கள் அரசால் கையகப்படுத்தும் முன் முந்திரி, மணிலா, சவுக்கு உள்ளிட்ட பயிர்கள் வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால் இன்றோ சைமா என்ற பின்னலாடை சாயப்பட்டறை நிறுவனத்தாரின் அடிக்கட்டுமான வேலைகளால் பாலைவனமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலையை நிறுவ தேர்ந்தெடுத்துள்ள முப்போகம் விளைந்த 317 ஏக்கர் நிலத்தை சுற்றியுள்ள பெரியப்பட்டு, மடவாப்பள்ளம், வாண்டியான்பள்ளம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், சாமியார்பேட்டை சின்னாண்டிகுழி, பெரியாண்டிகுழி, கரிக்குப்பம், குமரபேட்டை, கோபாலபுரம், அன்னப்பன்பேட்டை, தச்சம்பாளையம் உள்ளிட்ட 16 கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 2013 ஆண்டு முதல் சைமாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், முற்றுகை, மனுகொடுக்கும் போராட்டம், 10,000 அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் என்று இடைவிடாமல் போராடி வருகிறார்கள்.

சைமா (ஜவுளி பூங்கா) சாயப்பட்டறை பிரிவு தொடங்க சுமார் 400 ஏக்கர் நிலம் கையகப்படுத்த்ப்பட்டு ரூ 600 கோடி செலவில் அடிக்கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றன. இவ்விடத்தில் லாயல் டெக்ஸ்டெல் மில், வி.டி.எம் லிமிடெட், ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட், ஸ்ரீ சரவணா ஸ்பின்னிங் மில், பண்ணாரியம்மன் குருப்ஸ், பி.கே.எஸ் டெக்ஸ்டைல் மில் உள்ளிட்ட நிறுவனங்கள் இவ்வளாகத்தில் அமைய உள்ளன.
மத்திய ஜவுளிதுறையின் கீழ் இயக்கப்படும் இந்த நிறுவனங்களுக்கு ஜவுளித்துறையும் ஒரு பங்குதாரர் என்ற வாய்ப்பை பயன்படுத்தி இந்த ஆலைகளை நிறுவுவதற்கு இலவசமாக நிலம், கட்டிடம், சாலைப் போக்குவரத்து, தண்ணீர் என அனைத்து அடிக்கட்டுமான வசதிகளையும் செய்துகொடுத்து முதலாளிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மானியமாக அரசே வாரியிறைக்கிறது.

இந்த ஆலைகள் துவங்கப்பட்ட பிறகு நாள் ஒன்றுக்கு 1.09 கோடி லிட்டர் தண்ணீர் பூமியிலிருந்து ஆழ்குழாய்கள் மூலம் உறிஞ்சப்படும். இதனால் சுற்றுவட்டாரங்களில் தற்போதே 800 அடிக்கு சென்றுவிட்ட போர்வெல் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதல பாதாளத்திற்கு சென்றுவிடும். தண்ணீர் இன்றி விவசாயம் அழியும் அபாயம் காத்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல் ஆலையின் சாயக்கழிவுகளும் பூமியின் உள்ளே இறக்கப்படும், கடலிலும் கலக்கப்படும். இதனால் கடல் நீரும், நிலத்தடி நீரும் ஒன்றாகக் கலந்து தாவரங்கள், கால்நடைகள், மீன்கள், அதைச் சார்ந்த உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாறிவிடும்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுசூழல் ஆணையம், பொதுப்பணித்துறை, வனத்துறை, போக்குவரத்துதுறை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட எல்லா துறை அதிகார வர்க்க கிரிமினல்களின் ஒப்புதலோடு முதலாளிகள் இந்த கொடூர வெறியாட்டத்தை நடத்துகிறார்கள். இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் அரசுக்கு தெரியாததல்ல, தெரிந்தேதான் நடைபெறுகிறது. திட்டமிட்டு மக்கள் மீது ஒரு போரை நடத்துகிறது இந்த அரசு. கத்தியில்லை துப்பாக்கியில்லை, அணுகுண்டு இல்லை வெடிகுண்டில்லை. இது கார்ப்பரேட் முதலாளிகளின் படுகொலை. எந்த காரணம் என்று அறியாமல், என்ன நோய் என்று கூடத் தெரியாமல் செத்து மடியப்போகிறது நம்முடைய தலைமுறை. இதை இப்படியே அனுமதிக்கப்போகிறோமா? அல்லது எதிர்த்து போராடி இம் மண்ணையும் மக்களையும் காப்பாற்றப் போகிறோமா? இதுதான் இன்று நம் கண்முன்னே உள்ள கேள்வி.

மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தோழர்கள் 15 கிராமங்களின் முன்னணியாளர் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தினார்கள். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி துண்டறிக்கை, சுவரொட்ட, முழக்கங்கள் தயாரித்து தாங்களே மக்கள் நிதி வசூல் செய்து அதன்மூலம் இரவுபகல் பாராமல் ஊர் ஊராக மக்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு வரச்சொல்லி அழைப்பு கொடுத்து போராட்டத்திற்கு தயார்படுத்தினார்கள்.
பத்து நாட்களுக்கு முன்பாகவே ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கடிதம் கொடுத்தும் கடைசிவரை அனுமதி அளிக்க வேண்டிய காவல்துறை, முதல் நாள் இரவு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து கழுத்தை அறுத்தது. முன்னணியாளர்களை இழுத்தடித்து அவர்களை சோர்வடையச்செய்து, தனது கங்காணிகள் மூலம் உள்ளூர் கிராமங்களில் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருக்க தடுத்து நிறுத்துவது, மிரட்டுவது போன்ற அத்தனை சதி வலைகளையும் அறுத்தெறிந்து விட்டு, பெரியப்பட்டு கடைத்தெருவில் 18-04-2015 காலை 10 மணிக்கு நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை அரங்க நிகழ்ச்சியாக மாற்ற வைத்தார்கள்.

டூவீலர், ஆட்டோ, கார், வேன் என திரளாக மக்கள் மண்டபத்தில் கூடினார்கள். குறிப்பாக பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டார்கள். போராட்டட்தை ஒடுக்குவதாகவே செயல்பட்ட காவல்துறையின் முகத்தில் மக்கள் கரியை பூசினார்கள்.
இக்கூட்டத்தில் முதலில் பேசிய கான்சாகிப் வாய்கால் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் சக்காப்பு பேசியபோது

“இந்த மண்ணையும் உன்னையும் பாதுகாக்கணும்னா சாதிக்கு அப்பால், மதத்துக்கு அப்பால், அரசியலுக்கு அப்பால் ஒன்று திரண்டு போராடினால்தான் சாதிக்கமுடியும்” என்று மக்களுக்கு உணர்வூட்டும் வகையில் பேசினார்.
அடுத்து பேசிய காயல்பட்டு புருஷோத்தமன்

“நாம இந்த மண்ணோடயும் கடலோடயும் நீர் நிலத்தோடயும் வாழ்ந்துடோம். சாயப்பட்டறை கம்பனிய வச்சி நம்மள பிரிக்க பாக்குறாங்க, சாதியும் சாராயமும் நம்மள வாழ வைக்காது, ஒன்னா சேந்து போராடுனாதான் நமக்கு வாழ்வு” என்று முடித்தார்.
காயல்பட்டு தாஸ் என்ற இளைஞர் பேசும்போது

“உலகத்துக்கே பெரிய குப்பை இந்தியா, இந்தியாவுக்கு பெரிய குப்பை தமிழ் நாடு, தமிழ்நாட்டுக்கு பெரியகுப்பை கடலூர். நிலத்தடி நீரையும் உறியுரான். கழிவு நீரை கடல்லையும் கொட்டுரான். தண்ணி நல்லா இருந்தாதான் நிலத்துல விளையுற உணவும் கடல்ல விளையுற பாசியும், அத தின்ற மீனும், மீனத்தின்ற மனுசனும் நல்லா இருக்க முடியும். இது ஒரு சங்கிலித் தொடர் மாதிரி வாழ்க்கையோட சம்பந்தப்பட்டது. இதல்லாம் நம்ம ஊர்கடல் விஷமாச்சு, அதனால பல பெண்களுக்கு கருச்சிதைவு போன்ற கொடிய பாதிப்புகள் ஏற்படுது.
கிழக்க கெரண்ட்டு கம்பனி (IL&FS – INFRASTRCTURE LEASING AND FINANCIAL SERVICE), வடக்க (NOCL-NAGARJUNA OIL CORPARATION LTD), மேற்க்க (NLC-NEIVELY LIGNITE CORPARATION LTD), நடுவுல SIMA-SOUTH INDIAN MILLS ASSOCIATION) பின்னலாடை, சாயப்பட்டறை எல்லாத்துக்கும் தண்ணி வேணும். இல்லனா ஆலை இயங்காது . எல்லா கம்பனியும் எல்லா பொருளையும் தயார் பண்ண முடியுமா? எவனாவது ஒரே ஒரு நெல்லு தயார் பண்ண முடியுமா?” என முதலாளிகளின் முகத்தில் அறைந்தது போல் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அய்யம்பேட்டை இளங்கோவன் பேசியபோது

“நான் ஒரு மீனவ கிராமத்தை சேர்ந்தவன். எங்க ஊர்ல NOCL கம்பனி வந்தபோது ராத்திரி 12 மணிக்கு என் வீட்டு கதவ தட்டி 2 பொட்டி நிறைய பணத்த வச்சி வெல பேசினான். அப்போது நான் அமைதியாக இருந்தேன். இந்தா பணத்தை வாங்கிக்கன்னு சொன்னாங்க. 2 மாடி வீடுகட்டி சந்தோஷமா இருன்னு சொன்னாங்க. அப்ப என் மனைவி தலையிட்டு ‘இந்த பணத்தை வாங்கிட்டு 300 குடும்பத்த சாகடிக்க போறீங்களா? நான் இப்பவே தூக்கு மாட்டி செத்துடுறேன்’ என்று எச்சரித்தார். அன்றிலிருந்து இன்று வரை எ ந்த கம்பனிகாரனுக்கும் அடிபணிய மாட்டேன், எதிர்த்து நின்று போராடுவேன், எப்போதும் போராட்டத்திற்கு வர தயாராக இருப்பேன்” என உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.
அடுத்து சின்னாண்டிகுழி புருஷோத்தமன் பேசியபோது “கட்சிக்காரனவுல நம்பாதிங்க, அதிகாரிகல நம்பாதிங்க, என்ன கூப்படல உன்ன கூப்படல-னு பேதம் பாக்கக் கூடாது. இது யார் வூட்டு காரியமும் இல்ல, நம்ம தலைமுறைக்கான போராட்டம். ஊருசனம் ஒன்னா சேந்தாதான் சாதிக்கமுடியும்” என்று பேசினார்.

உள்ளூர் வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் பேசும்போது“உலகத்தில் எல்லா நாடுகளையும் விட அதிக வளம்கொண்டது இந்தியா. இந்த வளங்களை விக்கிறத்துக்கு ஊர் ஊரா போயி நாட்ட வித்துகிட்டு இருக்காரு மோடி. உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியானு சொல்றாங்க ஆனா இந்த மண்ணையும் விக்கறதுக்குதானா நம்ம தலைவர்கள் கட்டபொம்மன், பகத்சிங் போராடினார்கள்” என்று வேதனையுடன் பேசினார்.

அடுத்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் சிதம்பரம் செந்தில், கடலூர் செந்தில்குமார் ஆகியோர் பேசுகையில், “இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து பற்றி கவலைபட தேவையில்லை. ஏனென்றால் போலீசும், நீதித்துறையும், கலெக்டர், ஆர்.டி.ஓ வும் கம்பனிகாரனுக்குதான் என்று அவர்களே சொல்லிவிட்டார்கள். அதை நாம் மதிக்க தேவையில்லை உங்களுக்கு எங்கள் அமைப்பு நீதி மன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் போராட தயாராக இருக்கிறோம்” என்று கூறி வெள்ளாற்று மணல் கொள்ளைக்கு எதிரான போராட்ட அனுபவத்தை கூறி முடித்தார்கள்.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் ராமலிங்கம் பேசும்போது

”இந்தியாவின் மையப்பகுதி போபாலில் 1984 டிசம்பர்-2 நள்ளிரவில் யூனியன் கார்பைடு நச்சுவாயு வெளியேறியதால் முக்கால்மணி நேரத்தில் 3828 பேர் இறந்தார்கள், 50,000 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களின் ஆடு, மாடு, நாய் ஆங்காங்கே செத்து கிடந்தன, மும்பையிலிருந்து போபாலுக்கு வந்த ரயில் பெட்டியிலிருந்த மக்கள் மூச்சு திணறி இறந்தார்கள், அதேபோல கடலூர் மீண்டும் ஒரு போபாலாக மாறும் ஆபத்தான நிலையை எதிர்கொண்டு இருக்கிறது. இந்தப் பகுதியில் கம்பனி வ ந்தால் வேலைகிடைக்கும் என்று ஆசைகாட்டி மக்களை போராட்ட உணர்வை மழுங்கடிக்கச்செய்கிறார்கள். அன்று முதல் இன்று வரை அரசும் அதிகார வர்க்கமும் அரசியல் கட்சிகளும் நமக்காக வாதாடியதோ,போராடியதோ இல்லை. எனவே இந்த அரசு எங்களுக்கு தேவையில்லை என்றும் மக்களே அமைப்பாகி அரசாக மாறுவோம்” என்று பேசி முடித்தார்.
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியை சார்ந்த தோழர் பாலசுப்ரமணியன் பேசும் போது

“கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விரட்டியடிக்கப்பட்ட சைமா இன்று கடலூர் சிப்காட்க்கு வந்துள்ளது. இதன் கட்டுமானப் பணி துவங்கும் போதே அரசியல் சார்பற்றும் சாதி பிரிவினையற்றும் ஒன்று சேர்ந்து விரட்டியடிக்கவேண்டும். அன்று வெள்ளைக் காரனை விரட்டியடிக்க கட்டபொம்மன் போராடினான். அப்போதே காட்டிக் கொடுக்க பல எட்டப்பர்கள் இருந்தார்கள் இப்போதும் காட்டிகொடுக்க பல எட்டப்பர்கள் இருப்பார்கள் அதனால் கவலைப்பட தேவையில்லை.
இந்த அரசின் அத்தனை துறைகளும் மக்களுக்கானது அல்ல “உடம்புல ஒரு இடத்துல சீழ் வச்சா மருந்து மாத்திரை ஊசிப்போட்டு சரிபன்னிடலாம் ஆனா முழு உடம்பும் சீழ் வச்சா என்ன பண்ண முடியும். அப்படித்தான் இந்த அரசாங்கம் செயலிழந்து போச்சு. எல்லாம் முதலாளிகளுக்காகத்தான் இருக்கு. அதனால எல்ல ஊரிலும் மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கத்தை கட்டி மக்கள் அதிகாரத்தை கையில் எடுப்பதுதான் எஞ்சி இருக்கும் ஒரே வழி.” என்று பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
செய்திகள்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு: 9791776709
ஆந்திர படுகொலைகள் – அரசுக்கும், கட்சிகளுக்கும் PRPC கேள்விகள்
20 தமிழகத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்ற ஆந்திர அரசை கண்டித்து 15.04.2015 அன்று திருவண்ணாமலை மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கி பேசிய மக்கள் உரிமை பாதுகாப்பு மைய திருவண்ணாமலை மாவட்ட அமைப்பாளர் தோழர் சரவணன் “ஆந்திர துப்பாக்கி சூட்டை கண்டித்து மாநிலம் முழுக்க எங்களது அமைப்பும் புரட்சிகர அமைப்புகளும் போராடிவரும் நிலைமையில் மாபெரும் எதிர்க்கட்சிகள் என்று சொல்லக்கூடிய தி.மு.க,தே.மு.தி.க, பா.ம.க, வி.சி, காங்கிரஸ், பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட அனைவரும் வெறும் அறிக்கை விடுவதோடும், நிவாரணம் வழங்குவதோடும் நிறுத்திக்கொண்டனர். ஓ.பி யோ சந்திர பாபுவுக்கு கடிதம் எழுதிக்கொண்டே இருக்கிறார். கடிதம் எழுதுவதில் கலைஞரையே மிஞ்சிவிட்டார். ஆக, இதுதான் கட்சிகளின் நிலைப்பாடு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்தபோது அ.தி.மு.க தொண்டர்கள் பேருந்தை எரித்தும், கடைகளை உடைத்தும் பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர்கள் இப்போது எங்கே போய்விட்டார்கள்? ஊழல் அம்மாவுக்காக ஊரையே கொளுத்திய நீங்கள் அப்பாவி தமிழர்களை கொல்லும்போது ஏன் அமைதியா இருக்கீங்க?
பா.ம.க.வைச் சேர்ந்த ராமதாஸ் பிணத்தில் கூட சாதி பார்த்து, சாதிக்காக மட்டும் பேசுறார். ராமதாசை கைது செய்த போது பஸ்சை கொளுத்திய நீங்கள் உங்களது வீரத்தை இப்போது காட்ட வேண்டியது தானே?
சாதாரண தரைக்கடை வியாபாரி தள்ளு வண்டி வியாபாரியிடம் உழைக்கும் மக்களிடமும் உங்களது சட்டத்தையும், வீரத்தையும் காட்டும் அரசாங்கம், போலீசு, ‘பல லட்சம் கோடி கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்த முடியாது’ என்று பகிரங்கமாக அறிவிக்கும் கிங் பிஷர் முதலாளி விஜய் மல்லய்யாவை கைது செய்ய திராணி இருக்கிறதா? காடுகள், மலைகள், ஆறுகள் என இயற்கை வளங்கள் தனியார்மய கொள்கையால்தான் சுரண்டப்படுகின்றன அதற்கு இந்த போலீசு, இராணுவம், நீதிமன்றம் உள்ளிட்ட அணைத்து அரச கட்டமைப்பும் துணை நிற்கிறது. இதை முறியடிக்க தனித் தனியாக போராடாமல் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், மற்றும் புரட்சிகர அமைப்புகளோடு இணைந்து போராடுவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்” என்று உரையாற்றினார்.

விழுப்புரம் மாவட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இணைச் செயலாளர் தோழர். இரஞ்சித் “இது அரசின் பச்சைப் படுகொலை என்பது மட்டும் அல்ல. இது அரச பயங்கரவாதம். மக்களுக்கு அடிப்படை வசதிகள் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தராத இந்த அரசு, தொழிலாளர்களை மனிதாபிமானமற்ற முறையில் சுட்டுக் கொன்று விட்டு லட்சம் லட்சம் என்று நிவாரண தொகையும், கணவனை இழந்த மனைவிக்கு வேலைவாய்ப்பு என்றும் கூறி இந்த அநியாயங்களை மூடி மறைக்கிறது.
மக்களின் அடிப்படை வசதிகளை கூட பூர்த்தி செய்திடாத அரசை பயங்கரவாத அரசு என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? மேலும், நாடு முழுவதும் இயற்கை வளங்களை தனியார் முதலாளிகளின் லாபவெறிக்காக தூக்கி கொடுத்துவிட்டு அதைத் தவறு என தட்டிகேட்கும் மக்களை போலிசை ஏவி விட்டு அடிக்கிறது இந்த அரசு.
இப்படுகொலையை கண்டித்து எமது அமைப்புகள் தமிழகம் முழுக்க போராடிவருவதை தடுத்து நிறுத்த எங்களை சிறைவைத்தது போலீசு. இந்த அட்டூழியங்களை எல்லாம் தட்டி கேட்க வேண்டும் என்றால் மக்கள் அதிகாரத்திற்கான கமிட்டிகளை அமைத்து போராடுவதன் மூலம்தான் தீர்வுகாண முடியும்” என்று உரையாற்றினார்.
வழக்கறிஞர் அஸ்ரப் பாஷா “இது திட்டமிட்ட படுகொலை தான் என்பது உறுதியாகிவிட்டது. இரு மாநிலங்களுக்குள் இவ்வளவு பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில் மத்திய அமைச்சர்களோ, மோடியோ இதுவரை இந்த பிரச்சனையைப் பற்றி பேசவில்லை. மோடியோ வெளிநாடு பயணம் என்று சொல்லி ஊர் சுற்றுவதில் மன்மோகன் சிங்கையே மிஞ்சிவிட்டார். உழைக்கும் ஏழை எளிய மக்கள் உண்ணும் மாட்டுக்கறியை தடை செய்ய மாடு வெட்ட தடை சட்டம் போடும் அரசு 20 தொழிலாளர்களை சுட்டு கூறு போட்டிருக்கான், இதற்கு ஏன் தடை சட்டம் போடவில்லை? தி.க.வின் தாலி அறுக்கும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிவசேனா, ஆர்.எஸ்.எஸ் காலிகளே இங்கு 20 இந்து பெண்களின் தாலி அறுந்து போச்சே, இப்ப எங்கடா போனீங்க?” என்று பேசினார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர் தோழர் கண்ணன் “சந்திர பாபு நாயுடுவின் நேரடி தலைமையில் இந்தப் படுகொலை நடந்துள்ளது. இது திட்டமிட்ட படுகொலைதான். இதற்குக் காரணமான ஆந்திர மாநில டி.ஐ.ஜி காந்தாராவ் உள்ளிட்ட போலிசு கும்பலை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும், எங்களது அமைப்பின் சார்பாக துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்கையில் அங்கு மரம் வெட்டியதற்கான தடயங்கள் ஏதுமில்லை. அதுபோல மரம் வெட்டும்போது போலிசு துப்பாக்கியோடு வரும்போது தப்பியோடத்தான் நினைப்பார்களே ஒழிய எதிர்த்து தாக்கமாட்டார்கள். அப்படி ஓடும்போது முதுகில் தான் சுட்டிருக்க முடியும். மாறாக மார்பிலும், வயிற்றிலும், நெஞ்சிலும் சுடப்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இது திட்டமிட்ட படுகொலைதான் என்று தெரிகிறது.
சென்ற வருடம் சென்னையில் பதினோரு மாடி கட்டிடம் விழுந்து ஆந்திர தொழிலாளி இறந்து போனபோது சந்திர பாபு நாயுடு எல்லை தாண்டி தனி விமானம் மூலம் வந்து பார்த்துவிட்டு போனார்; பின்பு நிவாரணம் கொடுத்தார். ஆனால் இப்படி ஒரு படுகொலை நடந்துள்ளபோதும் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நமது மக்களை வந்து பார்க்க நேரமில்லாமல் இருக்கிறார். மக்களை பாதுகாக்க வேண்டிய இந்த அரசு, போலீசு, ராணுவம், நீதி மன்றம் என அனைத்தும் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இனிமேலும் இந்த அரசை நம்பி ஏமாறாமல் வீதிக்கு வீதி மக்கள் அதிகாரத்துக்கான மையங்களை கட்டியமைத்து போராடுவதன் மூலம் தான் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும்” என்று பேசினார்.

இறுதியாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சுந்தர் நன்றி கூறினார்.
பேருந்து பிரச்சாரத்தில் மக்கள் நம்மை பார்த்து நீங்கள் மட்டும்தான் உண்மையான குற்றவாளி யார் என்றும் அவர்களை எப்படி தண்டிப்பது என்றும் சொல்றீங்க என்று பாராட்டினர். அனைவருமே மனமுவந்து நிதி கொடுத்து ஆதரவு தெரிவித்தனர்.
[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]
ஆர்ப்பாட்ட முழக்கம்
கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம் !
தமிழக தொழிலாளர்கள் 20 பேரை
நாயைப்போல சுட்டுக்கொன்ற….
ஆந்திர அரசின் பயங்கர வாதத்தை
வன்மையாக கண்டிக்கின்றோம்
படுகொலை! படுகொலை !
சமூக நீதி வேஷம் போட்ட
சந்திர பாபு நாயுடுவின்
பச்சையான படுகொலை…
டிஸ்மிஸ் செய் ! டிஸ்மிஸ் செய் !
சொந்த அரசியல் காரணங்களுக்காக
ராமச்சந்திர ரெட்டிக்கு நெருக்கடி தர…
20 கூலி தொழிலாளர்களை
கொன்று வீசிய நாயுடு அரசை
டிஸ்மிஸ் செய் ! டிஸ்மிஸ் செய் !
கைது செய்! சிறையிலடை !
ஆந்திர மாநில டி.ஐ.ஜி
காந்தாராவ் உள்ளிட்ட
போலீசு அதிகாரிகளை
கைது செய்! சிறையிலடை !
தில் இருக்கா! தில் இருக்கா !
கூலித் தொழிலாளிகளை
சுட்டுக்கொன்ற ஆந்திர அரசே
செம்மரக் கடத்தல் கொல்லையன்கள்
ராமசந்திர ரெட்டி
கிஷோர் குமார் ரெட்டி உள்ளிட்ட
ஆந்திர தமிழக மாபியாக்களை
சுட்டுக்கொல்ல தில் இருக்கா !
தாலி பற்றி பேசியதற்கு
குண்டு வீசி வெறியாட்டம் போட்ட
ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி காலிகளே
20 இந்து தாலியை அறுத்துட்டான்
எங்கடா ஓடி ஒளிஞ்சிங்க
எவன் மசுர புடுங்குறீங்க…
நிராகரிப்போம் ! நிராகரிப்போம் !
ஆந்திர அரசின் படுகொலையை
தெலுங்கு இனவெறி என்று சுருக்கி
மக்களை கொன்று வரும் …
நெருங்கி வரும் அரச பயங்கரவாதத்தை
மூடி மறைக்கின்ற…
தமிழ் தேசிய கள்ளர்களை
நிராகரிப்போம் ! நிராகரிப்போம் !
இயற்கை வளத்தை சூறையாட
நாட்டையே கொள்ளையடிக்க
சாதி மத இனம் கடந்து
ஓட்டுப் பொறுக்கிகள் ஓரணி !
உழைக்கும் மக்களே நமக்கெதற்கு
ஒன்றுக்கும் பயன்படாத
சாதி மத லாவணி……
ஒன்று படுவோம்! ஒன்று படுவோம் !
உழைக்கும் வர்க்கமாய் ஒன்று படுவோம்….
முறியடிப்போம்! முறியடிப்போம் !
நாளுக்கு நாள் பெருகிவரும்
அரசின் பயங்கர வாதத்தை
முறியடிப்போம் ! முறியடிப்போம் !
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம் !
இயற்கை வளங்களை பாதுகாக்க
வீதிக்கு வீதி ஊருக்கு ஊர்…
மக்கள் அதிகார மன்றங்களை
வீரஞ்செறிந்த போராட்டங்களை
கட்டியமைப்போம் ! கட்டியமைப்போம் !
வெல்லட்டும் ! வெல்லட்டும் !
ஆந்திர அரசின்
பச்சை படுகொலைக்கு எதிரான
தமிழக மக்களின் போராட்டம்
வெல்லட்டும் ! வெல்லட்டும் !
தகவல் :
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை மாவட்ட கிளை