Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 595

பெஸ்ட் பம்ப்ஸ் ஸ்ரீபிரியா வீட்டில் தொழிலாளர் குடும்பம் முற்றுகை

0

கோவை ஐயர் கம்பெனியின் யோக்கியதையை சமீபத்தில்தான் அம்பலப்படுத்தியிருந்தோம்.

வீட்டினுள் நுழைந்து போராட்டம் நடத்திய பின்பு, “நாளை கண்டிப்பாக தொழிலாளர் நலத் துறை அலுவலகம் வருகிறேன். போராட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்” எனக் கூறிய ஸ்ரீப்ரியா மறுநாள் வழக்கம் போல தனது இரட்டை நாக்கு வேலையை நிரூபணம் செய்வது போல வரவில்லை. மறுபடியும் வாய்தா போட்டு அந்த வாய்தாவுக்கும் வராமல் அவமதிப்பு செய்கிறார். இப்படி சட்ட விரோத நடவடிக்கைகளில் மிக இயல்பாக நடந்து வருகிறார்.

வேலாண்டிபாளையம் முழுவதும் பெஸ்ட் கம்பெனியின் பெயர் இருக்கும் இடங்களில் பிரச்சாரம் செய்து ஸ்ரீப்ரியாவின் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் அசராமல் இருக்கிறார். ஆனாலும், “நாங்கள் விடப்போவதில்லை” என முடிவெடுத்து 06-05-2015 அன்று காலை 10:30 மணிக்கு ஸ்ரீப்ரியாவின் வீட்டின் முன்பு முற்றுகைப் போராட்டம் என முடிவெடுத்து சென்று குடும்பமாக அமர்ந்தார்கள், தொழிலாளர்கள்.

பெஸ்ட் கம்பெனி முற்றுகை போராட்டம்
ஸ்ரீப்ரியாவின் வீட்டின் முன்பு முற்றுகைப் போராட்டம்

வீட்டினுள் இருந்த ஸ்ரீப்ரியா வெளியே வரவில்லை. ஆனால், அடுத்த ஐந்து நிமிடங்களில் சாய்பாபா காலனி காவல்துறை அங்கு ஆஜராகி விட்டது; தொழிலாளர்களை வீடியோ எடுக்க அமர்த்தப்பட்டிருக்கும் கைக்கூலி வீடியோகிராபரும் வந்துவிட்டான்.

பெஸ்ட் கம்பெனி முற்றுகைப் போராட்டம்
உள்ளே வெளியே விளையாடிய போலீஸ்.

தனது தந்தை முதல் தான் வரை அனுபவிக்கும் சுகபோகத்திலிருந்து உண்டு கொண்டிருக்கும் சோறு வரை உழைத்து உருவாக்கிக் கொடுத்த தொழிலாளிகளிடம், தான் குடும்பத்தோடு குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கையில் சாலையில் குடும்பத்தோடு அமர்ந்திருக்கும் தொழிலாளிகளிடம், தனது வீட்டிலிருந்து 100 அடி தூரத்தில் அமர்ந்திருக்கும் தொழிலாளிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த 3 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் காவல் துறையை கூப்பிடும் அளவு தெனாவெட்டில் இருக்கிறார் ஸ்ரீப்ரியா.

பெஸ்ட் கம்பெனி முற்றுகைப் போராட்டம்
சாயம் போன சீருடைகளுடன் தவணை முறையில் வாகனங்களுக்கு கடன் கட்டிக் கொண்டு எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க கடன் வாங்கிக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் போராட்டம்.

ஸ்ரீப்ரியாவின் தகப்பனார் காலஞ்சென்ற கௌரி சங்கர் 10×10 ரூமில் சின்ன அலுவலகத்துடன் இந்த கம்பெனியை துவக்கியது முதல், 30 வருடங்களாக உழைத்து உழைத்து இத்துணை யூனிட்டுகளை உருவாக்கி கொடுத்தவர்கள் நாங்கள். நாங்கள் இன்னமும் சாயம் போன சீருடைகளுடன் தவணை முறையில் வாகனங்களுக்கு கடன் கட்டிக் கொண்டு எங்கள் குழந்தைகளை படிக்க வைக்க கடன் வாங்கிக் கொண்டிருக்கும் பொழுதும் இவ்வளவு பொறுமையாக போராடிக் கொண்டிருக்கிறோமே..! எங்கள் மனிதாபிமானத்தை இங்கு காணலாம்.

ஆனால், இப்படி சுரண்டிக் கொழுத்த உங்கள் தகப்பனாரும், அவரது வழித்தோன்றிய நீங்களும் நேரடியாக வெளியே வராமல் குறைந்த பட்சம் எங்களை நேரடியாக எதிர் கொள்ள தைரியம் இல்லாத கோழையாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.

காவல் துறை வழக்கம் போல தமது “நாங்கள் சட்ட ஒழுங்கை நிலை நாட்டுவதற்காகவே பிறப்பெடுத்தவர்கள்” என்ற நிலையை எடுத்தது. குடும்பத்தோடு கைதாகவும் தயாராக இருக்கிறோம் என்பதை அறிந்தவுடன் பின்வாங்கி பேச்சு வார்த்தை என்ற நயவஞ்சக நாடகத்துக்கு தயாரானது. பின்னர் ஒரு அரை மணி நேரம் உள்ளே வெளியே விளையாடி பின்னர்,

பெஸ்ட் கம்பெனி முற்றுகைப் போராட்டம்
பின்னர் மழை பெய்ய துவங்கியது தொழிலாளிகள் கொட்டும் மழையிலும் தமது முற்றுகையை தொடர்ந்தனர்.

போலீஸ் : “மேடம் நாளைக்கு கண்டிப்பா லேபர் கோர்ட்ல ஃபைல் பண்றேன்னு சொல்லிருக்காங்க…?”

நமது தோழர் : “சார், இந்த வசனங்களைத்தான் ஏற்கெனவே அவங்க பல முறை சொன்னாங்க.”

போலீஸ் : “இல்லைங்க, இந்த முறை கண்டிப்பாக செய்றேன்னு சொல்றாங்க. அப்டி அவங்க செய்யலைனா நீங்க மேற்கொண்டு என்ன செய்யணுமோ செய்யுங்க”

நமது தோழர் : “சரிங்க சார்., நாங்க இப்ப அவங்க கூட பேச முடியாத அளவுக்கு தொலைவில இருக்கோம் பாருங்க., அதனால அவங்களால பேச முடியாது. அவங்க நாளைக்கே பேசட்டும். அது வரை நாங்க குடும்பத்தோடு இங்கயே இருக்கோம்.”

தொழிலாளிகளின் மனைவிமார்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத காவல் துறை ஒன்றும் பேசாமல் அமைதியாக நின்று விட்டனர்.

அடுத்து என்ன பேசுவது, எப்படி ஸ்ரீப்ரியாவின் செயலை நியாயப்படுத்துவது என காவல் துறையும் சற்று குழம்பியது. பின்னர், “சரி நீங்க போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் பண்ணுங்க” எனக் கூறிவிட்டு ஓரமாக சென்று விட்டனர்.

அதன் பின்னர், தந்தி டி‌வி மற்றும் லோட்டஸ் போன்ற தொலைக்காட்சிகளில் இருந்து பேட்டி எடுக்க வர, பெஸ்ட் கம்பெனி கைக்கூலி போட்டோ கிராபர் பத்திரிகையாளர் களையும் சேர்த்து வீடியோ எடுக்க அவர்கள் கடுப்பாகி அந்த நபரை தடுக்க முயன்றனர்.

பெஸ்ட் கம்பெனி போராட்டம்
“கமிஷனர் ஆர்டர் இருக்கு. அது இருக்கு இது இருக்கு” என சவடால்

அவன், “கமிஷனர் ஆர்டர் இருக்கு. அது இருக்கு இது இருக்கு” என சவடால் விட்டு, பின்னர் அடங்கி மன்னிப்பு கேட்டு விட்டு அந்த பதிவுகளை அழித்து விட்டு சென்று அமைதியாக அமர்ந்து விட்டான்.

பின்னர் மழை பெய்ய துவங்கியது தொழிலாளிகள் கொட்டும் மழையிலும் தமது முற்றுகையை தொடர்ந்தனர்.

போராட்டம் தொடரும்…!

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

பூந்தமல்லி இனி சிவப்பு மல்லி – கிளர்ச்சியூட்டிய மே நாள்

2

“மே நாள் என்பது கொண்டாட்ட நாளல்ல; மாறாக தொழிலாளி வர்க்கம் தன் அரசியல் அதிகாரத்தை நிறுவ வேண்டிய நாள்” என்று அறிவித்து பூந்தமல்லியில் புதிய ஜனநாயக் தொழிலாளி முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மே நாள் பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

மே நாள் சென்னை
சென்னையைச் சுற்றி இருக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சக்கைகளான தொழிலாளிகளான கொத்தடிமைகளின் கூடாரமாக விளங்கும் பூந்தமல்லியில் மக்கள் அதிகாரத்துக்கான அறைகூவல்.

சென்னையின் நுழைவாயில் பூந்தமல்லி என்பது அந்தக் காலம். இன்று சென்னையைச் சுற்றி இருக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சக்கைகளான தொழிலாளிகளான கொத்தடிமைகளின் கூடாரம். ஆம், எவ்வித உரிமையுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பூந்தமல்லியில் அடைந்து கிடக்கிறார்கள்.

தங்களை தொழிலாளியாகக் கூட உணர முடியாத அளவுக்கு எந்திரமாக, நிலையற்றவர்களாக மாற்றப்பட்டு இருக்கிறார்கள். 1000 பேர் வேலை செய்யக்கூடிய ஒரு நிறுவனத்தில் 33 பேர்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். நிரந்தரம் செய்து விட்டால் அவர்கள் “மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப்”. எப்படியிருந்தாலும் சட்டப்படி சங்கம் வைக்க முடியாது.

மே நாள் சென்னை
பாட்டாளி வர்க்க மார்க்சிய லெனினிய அரசியலே, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுதம் என்பதை தொழிலாளிக்கு மட்டுமல்ல, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உணர்த்துவதற்காக அணிதிரண்ட முன்னணிப்படை.

கான்ட்ராக்ட்  தொழிலாளர்களின் பணி எப்போது நிரந்தரம் ஆகும் என்பது யாருக்குமே தெரியாது. யாரும் ஒரு கம்பெனியில் நிரந்தரமாக வேலை செய்வதில்லை. எப்போது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்யப்படலாம். எதுவும் நிரந்தரமில்லை, உயிர் உட்பட.

ஒரு தொழிலாளியின் அனுபவத்தைக் கேளுங்கள். தொழிலாளி வர்க்கத்தின் இன்றைய நிலைமை எளிதாகப் புரியும்.

“வெல்டிங் அடிக்கும் போது நெருப்பு பொறி பறந்து வரும். அது சட்டைக்குள் போய்
அப்படியே ஜட்டிக்குள் போகும். அப்போது அதை தடுக்கவும் முடியாது. குறித்த நேரத்துக்குள் இத்தனை பீஸ் வெல்டிங் செய்யணுமே. மாசத்துக்கு ரெண்டு ஜட்டி , பனியன் வாங்கணும். என்னதான் கேட்டாலும், ‘பாதுகாப்பு கவசம் கொடுக்க முடியாது வேண்டுமென்றால் மாசம் ஒரு டீ சர்ட் எடுத்து தரேன்’னு  நிர்வாகம் சொல்லுது. எங்களை வாட்டி வதைக்குறதை நினைக்கும் போது அந்த முதலாளி மண்டையிலதான் வெல்டிங் வைக்கணும்னு தோணும்”

இப்படி லே ஆஃப், அடக்குமுறை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தொழிலாளி வர்க்கத்தை திரட்டி அதன் வலிமையை  வைத்து பிச்சை எடுப்பதைத்தான் மற்ற சங்கங்கள் செய்து வருகின்றன.

மே நாள் - சென்னை
நிலைகுலைந்து, இற்றுப்போய் எதிர் நிலை சக்தியாக மாறிவிட்ட, அரசுக்கு இதோ வீறு கொண்டு எழுகிறது பாட்டாளி வர்க்கம்.

“ஹூண்டாயை நான் கொண்டு வந்தேன், நோக்கியாவுக்கு நான் ரூட் போட்டேன்” என்று  மார்தட்டும்  ஜெயாவும் கருணாநிதியும் மே நாளுக்கு  வாழ்த்து சொல்லியே   தொழிலாளி வர்க்க்த்தை அடிமைப்படுத்திக்கொண்டு இருக்க, போலிகளோ தொழிலாளர்களை ஆளும் வர்க்கத்திடம் அடகு வைத்து மே நாளை சடங்காக மாற்றி இருக்க, வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாய் குமுறிக்கிடக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கி, பாட்டாளி வர்க்க மார்க்சிய லெனினிய அரசியலே, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுதம் என்பதை தொழிலாளிக்கு மட்டுமல்ல, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உணர்த்தி
நிலைகுலைந்து,  இற்றுப்போய் எதிர் நிலை சக்தியாக மாறிவிட்ட, அரசுக்கு இதோ வீறு கொண்டு எழுகிறது பாட்டாளி வர்க்கம் என்பதை அறிவிக்கும் விதமாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் பூந்தமல்லியில் மாபெரும் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன.

பூவிருந்தவல்லிக்கு செல்லும் வழியில் மே நாளை  சினிமா பாட்டு போட்டு, போர்டுக்கு பூசை போட்டு சி.ஐ.டி.யு கொண்டாடிக் கொண்டிருந்தது. இன்னொரு இடத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ போர்டு திறந்து மிட்டாய் கொடுத்துக் கொண்டிருந்தார்.

தூரத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது செங்கொடி, 150 ஆண்டுகளுக்கு முன்னால் குமுறிக்கிடந்த தொழிலாளி வர்க்கத்துக்கு நம்பிக்கை ஒளி  வீசிய அதே கொடி பூவிருந்தவல்லியில் பறை சாற்றிய  செய்தி “மே1 கொண்டாட்ட நாள் அல்ல; போராட்ட நாள்“.

வாழ்க்கையில் துளியும் பாதுகாப்பே இல்லாத தொழிலாளிக்கு செங்கொடிதான் பாதுகாப்பு என்பதை உணர்த்தும் விதமாக காலை 9 மணி முதலே சாரை சாரையாக 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் செங்கொடியின் பின்னே அணிவகுத்து நின்றனர்.

உழைக்கும் கைகள்
வாழ்க்கையில் துளியும் பாதுகாப்பே இல்லாத தொழிலாளிக்கு செங்கொடிதான் பாதுகாப்பு.

அவர்கள் மட்டுமல்ல, செங்கொடி ஏந்திய தொழிலாளி வர்க்கமே  உழைக்கும் மக்களின் விடுதலையை சாதிக்கும் என்பதை அறிவிக்கும் விதமாக மாணவர்களும் மாணவிகளும் பெண்களுமாக பதாகைகளும் செங்கொடிகளுமாக  களத்தில் நின்றார்கள்.

பதாகைகளும், செங்கொடிகளும்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

30-க்கு 4 அடி அளவில் “ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்” என்ற பதாகை ஆளும் வர்க்கத்தின் மீதான போருக்கான கட்டியம் கூறும் விதமாக இருந்தது.

மே நாள் சென்னை பேரணி, ஆர்ப்பாட்டம்
ஆளும் வர்க்கத்தின் மீதான போருக்கான கட்டியம்.

சரியாக 10 மணிக்கு, பெண்கள் குழந்தைகள் முன்னே நிற்க, மாணவர்கள், நம்பிக்கையின் ஊற்றுக்களாக, திரும்பிய பக்கமெல்லாம் இளந்தொழிலாளர்கள் விண்ணதிர முழங்கினார்கள் தங்கள் முழக்கங்களை,

வாழிய வாழிய வாழியவே
மே நாள் வாழியவே

வீரவணக்கம் ! வீரவணக்கம் !
வர்க்கப் போரில் உயிர் நீத்த
பாட்டாளி வர்க்கப் போராளிகளே
மேதினத் தியாகிகளே
உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்!

பெண்களின், குழந்தைகளின் படை தொழிலாளி வர்க்கத்தின் அணியாக

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

வீரவணக்கம் ! வீரவணக்கம் !
அப்பு, பாலன், சீராளன்,
பச்சையப்பன் பாதையிலே
இன்னுயிர் ஈந்த தியாகிகளே
நக்சல்பாரி தோழர்களே
உங்களுக்கு எங்கள் வீரவணக்கம் !

தகர்த்தெறிவோம் ! தகர்த்தெறிவோம் !
ஆளும் தகுதியை இழந்துவிட்ட
எதிர்நிலை சக்தியாய் மாறிவிட்ட
அரசமைப்பை தகர்த்தெறிவோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தீர்வு இல்லை… தீர்வு இல்லை…
உழைக்கும் மக்கள் அனைவருக்கும்
போலிஜன நாயக அரசமைப்பில்
தீர்வு இல்லை…தீர்வு இல்லை…
கட்டியமைப்போம் ! கட்டியமைப்போம்
மக்கள் அதிகாரக் கமிட்டிகளை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம் !

காங்கிரசு – பி.ஜே.பி
தி.மு.க – அ.தி.மு.க
மாத்தி மாத்தி ஓட்டு போட்டும்
மக்கள் துயரம் தீரவில்லை
எதனாலே எதனாலே
தானே வகுத்த சட்டத்தை
தானே செய்ய முடியாமல்
நெருக்கடியில் நிக்குது
அரசு எந்திரம் அதனாலே !

பாட்டாளி வர்க்கத்தின் கலைப்படை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அணிதிரள்வோம் ! அணிதிரள்வோம் !
நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வோம் !
புதிய ஜன நாயகப் புரட்சிக்கு
அணிதிரள்வோம் !  அணிதிரள்வோம் !

“1886-ல் இந்த மேநாளில்தான், தொழிலாளி வர்க்கம் தனதுகோரிக்கைகளான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் போராடி பெற்ற நாள்.

129 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனாலும் இன்றும் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கை அதேதான். அந்தளவிற்கு முதலாளித்துவ சுரண்டல் நீடித்துக் கொண்டு இருக்கிறது. தொழிலாளிகளின் வாழ்க்கை ஒரு சதவீதம் கூட முன்னேறவில்லை. மோடி-பி.ஜே.பி கும்பல் பதவியேற்றவுடன் தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்துவது என கட்டற்ற அடக்குமுறையை ஏவிவருகிறது. அதிகாரவர்க்கம், நீதிமன்றம், போலீசு, இராணுவம் என்ற இந்த அரசுக் கட்டமைப்பு முழுவதும் நம்மை ஆளும் தகுதியை இழந்துவிட்டது. இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்தி மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டிய வரலாற்றுக்கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால், தொழிலாளி வர்க்கமோ பிரிந்து கிடக்கிறது. இந்த அரசியல் கடமையை நிறைவேற்ற தொழிலாளிகள் அனைவரும் ஒரு வர்க்கமாய் அணிதிரள வேண்டும்” என்று தொழிலாளர் வர்க்கத்தை அறைகூவி பேரணியைத் தொடங்கிவைத்தார், பேரணியின் தலைவர் பு.ஜ.தொ.மு திருவள்ளூர் மாவட்டசெயலாளர் தோழர் செல்வக்குமார்.

புறப்பட்டது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செங்கொடிகள் பட்டொளி வீசிப்பறக்க, செம்பதாகைகள் உயர, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழுத்தோழர்கள் கள நடனமாட, போர்ப்பறை முழங்க , தொடங்கியது பேரணி. பெண்கள், குழந்தைகள், ம.க.இ.க, பு.மா.இ.மு, பெ.வி.மு தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து முழங்கினார்கள். கொத்தடிமைகளாய் குமுறிக்கிடக்கும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, சிறப்பு நிகழ்ச்சியில் எந்தப் படம் எந்த டிவியில் போடுவார்கள் என்று அடிமைகளாக இருந்த தொழிலாளர்களின்,  மக்களின் உணர்வைத் தட்டியெழுப்பின முழக்கங்கள்.  சிறையில் இருந்த விடுவிக்கப்பட்ட பறவைகளாக அவர்கள் பேரணியின் இருபுறமும் அணிவகுத்து நின்றார்கள்.

may-day-chennai-labour-03பூந்தமல்லி கல்லறைப் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி குடியிருப்புகள் வழியாக சென்றது. மே தின சிறப்பு நிகழ்ச்சியைப் பார்க்க தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்திருந்த மக்கள், தம் வீட்டு வாயில்களிலும், மாடிகளிலும் நின்று பேரணியைக் கண்டனர். தோழர்களுக்கு தண்ணீர் கொடுத்து மண்டையைப் பிளந்த உச்சி வெயிலை தணித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள்.

தொழிலாளர்களின் குடியிருப்புக்களின் வழியே சாரை சாரையாக ஊர்ந்து சென்றது பேரணி, அது சென்ற இடமெல்லாம் இந்த ஆளும் அருகதையற்ற அரசமைப்பை தூக்கியெறி ! மக்கள் அதிகாரத்தை கட்டியமை! என்பதை பறை சாற்றியது. ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கை ஒளிக்கீற்றாக மிளிர்ந்தது.

குடியிருப்புகளின் வழியே சாரை, சாரையாக

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இதுவரை தண்ணியடித்துவிட்டு, கூலிக்கு ஆள் பிடித்து பேரணி நடத்தியவர்களையே பார்த்து சலித்துப் போன மக்கள்  முறையாக, உணர்வுப் பூர்வமான இந்தப் பேரணிக்கு வழிவிட்டு நின்றார்கள் துண்டறிக்கைகளை முன்வந்து வாங்கினார்கள். சரியாக 12 மணிக்கு அத்தனைபேரும் ஆர்ப்பாட்ட மேடைக்கருகில் அணிவகுத்து நின்றனர்.

ஆளும்அருகதையற்றஅரசுக்கட்டமைப்பைவீழ்த்துவோம்!மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்” என்ற தலைப்பிலான ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இந்தஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் சிவா தலைமை தாங்கினார். சென்னை ம.க.இ.க தோழர்களின் புரட்சிகர கலை நிகழ்ச்சி  தொடங்கியது. திரண்டிருந்த தோழர்களிடையே வெயிலைத்தணிக்கும்  புல்லாங்குழல் இசையை குளிர்க்காற்றாய் தொடங்கி
முதலாளித்துவத்தின் பார்வையை பறிக்கும் அனல் காற்றாக்கினார்
பார்வையற்றத் தோழர் மனோகர்.

தொழிலாளி வர்க்கத்தின் மீது துப்பாக்கிச் சூடு! அரசு-முதலாளி வர்க்கத்தோடு புயலாய் மோது”என்ற பாடல்  எப்படிப்பட்ட போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்று கட்டியம் கூறியது.

மே நாளிலே சூளுரைப்போமே ! போராடி உரிமைகளை மீட்டெடுப்போமே ” என்ற பாடல் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் , பாலை என ஐவகை நிலங்களையும் ஒரே நிலமாய் வீரத்தின் விளை நிலமாக, அரசுக் கட்டமைப்பின் புதை நிலமாக மாற்றக் கோரியது.

மே நாள் சென்னை
“அரசுத் துறை ஒவ்வொன்றும் மக்கள்- தொழிலாளர் பிரச்சனைகளை தீர்க்க வக்கற்றுப்போய் மக்களுக்கு எதிராக மாறியுள்ளன”

 

தோழர் சிவா தனது தலைமை உரையில், “அரசு துறைகள் ஒவ்வொன்றும் மக்கள்- தொழிலாளர் பிரச்சனைகளை தீர்க்க வக்கற்றுப்போய் மக்களுக்கு எதிராக இருப்பதை” அம்பலப்படுத்தி பேசினார்.

may-day-chennai-demo-07தகிக்கும் வெயிலில், தொழிலாளிகள் எரிமலையாய் வெடிக்க வேண்டிய அவசியத்தைக் கூறி தனது உரையைத் தொடங்க்கினார், பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார். “இந்த அரசு மக்களுக்கு எதிராக மாறி இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் தொழிலாளர் நலத்துறை.

ஒரு தொழிலாளி, “வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள்” என்று முறையிட்டால், “எவ்வளவு பணம் வேண்டும்” என்று கேட்கும் திருப்பெரும்புதூர் தொழிலாளர் உதவி ஆணையர் தர்மசீலன் யோக்கியதையை சுட்டிக்காட்டினார்.

“8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு என்பது தான் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கை. இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ன? பேண்ட் பாக்கெட்டில் பிஸ்கட் உடன் வந்தால் வேலையை விட்டு வருகிறோம் என்று அர்த்தம். பிஸ்கட் இல்லையென்றால் வேலைக்குப் போகிறோம் என்று அர்த்தம். ஏனெனில் தொழிலாளிகளின் தூக்கம், ஓய்வு என அனைத்தும் கம்பெனி பேருந்தில் தான். அப்புறம் எப்படி தன் வாழ்க்கையைப் பற்றி தொழிலாளி சிந்திக்க முடியும்?

மும்பை, புனே போன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ரவுடிகள்தான் கம்பெனியை நடத்துகிறார்கள். சங்கம் என்று வாயைத் திறந்தால் அடித்து உதைக்கிறார்கள். ரவுடிகளிடம் அடிவாங்குவதா தொழிலாளி வர்க்கம்? இதுதான் இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் நிலை.

திருப்பி அடிக்காமல் விடிவு இல்லை. இந்த அரசு தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிராக மாறி இருக்கிறது. கர்நாடக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட கிரிமினல் ஜெயலலிதா இரண்டு வாரத்திற்குள் பிணையில் வருகிறார். ஆனால், சங்கம் வைத்ததற்காக, மாருதி தொழிற்சாலை தொழிலாளர்கள் இரண்டு வருடங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது.

அதனால்தான் சொல்கிறோம், இந்தஅரசுக் கட்டமைப்பு நம்மை ஆளத்தகுதியிழந்துவிட்டது, எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது என்று. மாற்று அதிகாரம் நிறுவ வேண்டும் , தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று. இது மே தின ஆர்ப்பாட்டம் அல்ல. தொழிலாளி வர்க்கத்தின்அரசியல்போராட்டம்.

தன்னுடைய வர்க்க கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுவதல்ல தொழிலாளி வர்க்கம். தன்னைப் போல் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காகப் போராடி தொழிலாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதுதான் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக்கடமை என்ற பாட்டாளிவர்க்க ஆசான்களின் கூற்றை மெய்யாக்க, அப்படிப்பட்ட அதிகாரத்திற்காக போராடுவதும், மக்கள் அதிகாரத்தை நிறுவுவதும் தான் நமது கடமை. அதற்கு தொழிலாளி வர்க்கம் தயாராக வேண்டும், போராட வேண்டும்” என்று அறை கூவல் விடுத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

1886-ல் தொடங்கிய பேரணிக்கும் இன்றைய மே தினத்திற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அன்றைய நாளைப்போலவே, ஏன் அதை விட இன்னமும் மோசமாக உறிஞ்சப்படுகிறது தொழிலாளி வர்க்கம். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றாமல் தீர்வு இல்லை என்ற முழக்கம் முன்னெப்போதையும் விட ஆழமாய் தொழிலாளர்களின் சுவாசத்தில் நிரம்பிக் கிடக்கின்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மே நாள் - சென்னை
ஆம், முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

அன்றைய மே நாள் தொழிலாளரின் போராட்டம் உலகத் தொழிலாளர்களுக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்தது என்றால் புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணியின் இந்த ஆர்ப்பாட்டம், நிலவும் அரசுக் கட்டமைப்புக்கே கல்லறை கட்டி,  மக்கள் அதிகாரத்தை நிறுவுவது புரட்சிகர அமைப்புக்களால் மட்டும் சாத்தியம் என்பதை மெய்ப்பிக்கும்.

மார்க்சியம்-கம்யூனிசம் எல்லாம் காலாவதியாகி விட்டது என்று கத்துகிறது முதலாளி வர்க்கம். ஆனால் நடைமுறையில், முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம், கம்யூனிசம் தான் என்பதை நிரூபித்து வருகிறது அதன் முதலாளித்துவ சுரண்டல்.

ஆம், முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை

நேபாளம் : எழவு வீட்டில் சீரியல் எடுக்கும் இந்திய ஊடகங்கள் !

2
இந்தியாவிலிருந்து கொஞ்சம் பொருட்களையும் நிறைய பத்திரிகையாளர்களையும் சுமந்து செல்லும் ஹெலிகாப்டர்கள்!
இந்தியாவிலிருந்து கொஞ்சம் பொருட்களையும் நிறைய பத்திரிகையாளர்களையும் சுமந்து செல்லும் ஹெலிகாப்டர்கள்!

ப்ரல் 25-ம் தேதி நேபாளத்தைத் தாக்கிய பூகம்பம் 7,500-க்கும் மேற்பட்ட மக்களை பலி வாங்கி 15,000-க்கும் அதிகமான மக்களைக் காயப்படுத்தியுள்ளது. 7.8 ரிக்டர் அளவில் நேபாளத்தின் இமயத்தின் அடிவாரத்திலுள்ள கோர்க்கா மாவட்டத்தின் பார்பக் பகுதியைத் தாக்கிய பூகம்பம் மொத்த நாட்டையும் குலுக்கிப் போட்டது. இதன் அதிர்வுகள் இந்தியத் துணைக் கண்டமெங்கும் எதிரொலித்தது.

கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் இடிபாடுகளிடையே இருந்து மீட்கப்படும் பிணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மீட்பு நடவடிக்கைகளில் உடனடியாக தலையிட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்றென்பது ஆச்சரியமான விசயமல்ல.

மூன்று புறங்களில் இந்தியாவாலும் வடக்கே இமயத்தாலும் (சீனா) சூழப்பட்ட நேபாளத்தின் புவியியல் அமைப்பும் அதன் காரணமான வரலாறு மற்றும் அரசியல்  ரீதியான பிணைப்பும் இந்தியாவின் தலையீட்டை அவசியமானதாக்குகிறது.

வறிய நாடான நேபாளத்திற்கு பூகம்பம் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் மிகவும் பாரதூரமானது. அதிர்ச்சியிலிருந்து மீளாத நேபாள மக்கள், வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு இடிபாடுகளிடையேயிருந்து மீட்டெடுக்கப்படும் துண்டிக்கப்பட்ட கைகளிலும் கால்களிலும் தமது உற்றார், உறவினரின் அடையாளங்கள் ஏதும் உள்ளதாவென நெஞ்சம் பதைக்க தேடிக் கொண்டேயிருக்கிறார்கள்.

உருக்குலைந்து போன நாட்டின் வாழ்வை மீட்கும் வழியை அவர்கள் இன்னமும் கண்டடையவில்லை. கூர்க்காக்களின் நெஞ்சுரம் குறித்து அறியப்பட்ட எண்ணற்ற செவிவழிக் கதைகளை மெய்ப்பிக்கும் விதமாக தங்கள் சொந்த நாட்டு அரசும் அந்நிய தேசங்களும் நெருங்க முடியாத இடங்களில் கையில் எந்த உபகரணங்களும் இன்றி நேபாளிகள் களமிறங்கியுள்ளதாக செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

மீளமுடியாத சோகத்தினிடையேயும் உதவி செய்வதான போர்வையில் இந்தியா செய்திருக்கும் தலையீட்டை நேபாளிகள் இரசிக்கவில்லை. அதிலும் குறிப்பாக மீட்புப் படையினரின் எண்ணிக்கைக்கு சற்றும் குறையாத எண்ணிக்கையில் களமாடி வரும் இந்திய ஊடகங்களை தீராத வெறுப்போடு நேபாளிகள் காறி உமிழ்கிறார்கள் என்று செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.

# gohomeindiamedia என்ற ஹேஷ்டேக் தான் கடந்த 3ம் தேதி ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் முதன்மையான பேசு பொருளானது.

உதாரணத்திற்கு சில ட்விட்டுகள் மட்டும்…

நேபாள அரசோடு இந்திய அரசையும் சேர்த்து எதிர்க்கும் நேபாள மக்கள்!
நேபாள அரசோடு இந்திய அரசையும் சேர்த்து எதிர்க்கும் நேபாள மக்கள்!

”மதிப்புக்குறிய பிணந்தின்னிக் கழுகுகளே, இறந்த உடல்களின் எலும்புகள் வரை சுத்தமாக பொறுக்கி விட்டீர்கள்….. இப்போது நீங்கள் வீட்டுக்குப் போகலாமே” #gohomeindiamedia

”திருவாளர் மோடி அவர்களே.. பெருமைக்குரிய எங்களது தாராகரா ஸ்தூபி வீழ்ந்து விட்டது.. ஆனால், எங்கள் இறையாண்மை இன்னும் வீழவில்லை. #gohomeindiamedia”

“திருவாளர் மோடி அவர்களே, உங்கள் ஊடகங்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளுங்கள். இவர்களே எங்களுக்கு மிக மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறார்கள் #gohomeindiamedia”

இன்னும் பல்லாயிரக்கணக்கான ட்விட்டுகள் நேபாளிகளிடமிருந்து மட்டுமல்ல இந்திய ஊடகங்களின் செயல்பாடுகளால் அவமானப்பட்ட இந்தியர்களிடமிருந்தும் குவிந்த வண்ணமுள்ளது.

பூகம்பத்தில் சிக்கி மீட்கப்பட்ட இந்தியர்களில் ஒருவரான நிமிஷ் சிரீவஸ்தவா கூறுவதைக் கவனியுங்கள். “பாதிப்புக்குள்ளான நேபாள மக்களை கும்பலாக நிறுத்தி அவர்களை “மோடி, மோடி” என்று கோஷமிடச் செய்து இந்திய ஊடகவியலாளர்கள் அந்தக் காட்சிகளை படம் பிடித்துக் கொண்டார்கள்” என்கிறார் அவர். “மீட்கப்பட்ட ஒவ்வொரிடமும் மோடியின் இரக்க குணம் பற்றி கேட்டு அவற்றைப் பதிவு செய்து கொண்டதாக”வும் தெரிவித்துள்ளார். அதே சமயம், “மீட்புப் படை தாமதமாக வந்ததாக சிலர் தெரிவித்த கருத்துக்களை கவனமாக கத்தரித்து விட்டார்கள்” என்றும் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார்.

சி.என்.என் செய்தித் தளத்தில் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட சுனிதா ஷாகியா என்ற நேபாளத்தைப் பூர்வீகமாக கொண்ட பத்திரிகையாளர், இந்திய ஊடகவியலாளர்கள் தொலைக்காட்சி சீரியல்களைப் போன்ற ‘கதைகளை’ வெறியுடன் தேடியலைந்ததை சாடியிருக்கிறார்.

பிரேக்கிங் நியூசுக்காக வெறிபிடித்து அலையும் இந்திய ஊடகங்கள்!
பிரேக்கிங் நியூசுக்காக வெறிபிடித்து அலையும் இந்திய ஊடகங்கள்!

24/7 ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் இந்திய ஊடக வெளியில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கிய பின் கடந்த 15 ஆண்டுகளில் ’செய்தியின்’ தன்மை பெருமளவிற்கு மாற்றமடைந்துள்ளதை நாம் அறிவோம். பாரபட்சமின்றி நடப்பு நிகழ்வுகளை செய்திகளாக வெளியிடுவது, நிகழும் செய்திகளைக் குறித்த நடுநிலையான அலசல், அரசியல், பொருளாதாரம் மற்றும் துறைசார் வல்லுநர்களைக் கொண்டு செய்யப்படும் விரிவான ஆய்வுகள் என்பவையெல்லாம் பழைய வரலாறுகள் ஆகிவிட்டன.

செய்தித் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை செய்திகள் ஒவ்வொன்றும் ’கதைகள்’. மக்களின், தேசத்தின் வாழ்வை பாதிக்கும் செய்திகள் வெறும் கதைகளாகச் சுருங்கிய பின்னர், நடக்கும் இரத்தமும் சதையுமான அந்த நிகழ்வுகளில் இருந்து தாம் சொல்லப் போகும் கோணம் எது, அந்தக் கோணத்தை விவரிக்கும் விதம் என்ன,  கதையின் நாயகன் யார், வில்லன் யார், பின்னணி இசைக் கோர்வை எப்படி இருக்க வேண்டும் என்பதே பிரதான முக்கியத்துவம் வாய்ந்த விசயங்களாகின.

இவ்வாறாக இந்தியாவின் செய்தித் தொலைக்காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை எந்த ஒரு உண்மை நிகழ்வும் மசாலா தடவப்பட்ட பதார்த்தம் தான். இதில் ’பதார்த்தத்தை’ உப்பு காரம் தூக்கலாக சுடச்சுட யார் பரிமாறுகிறார்களோ அவர்களுக்கே TRP என்ற வெற்றிக் கோப்பை சன்மானமாக கிடைக்கும்.

இந்தக் கதைகள் வெவ்வேறானதாக இருந்தாலும், இவற்றுக்கு ஒரு இணைப்பு தேவைப்படுகிறது. ஆங்கிலத்தில் Storyline என்பார்கள். ஒரு அணுவுலை வெடிப்பாக இருக்கலாம், அல்லது ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்குள்ளான சம்பவமாக இருக்கலாம், அல்லது ஏதேனும் ஒரு கொலை சம்பவமாக இருக்கலாம், அல்லது விவசாயிகள் கூட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வாக இருக்கலாம்..

சம்பவங்கள் எதுவானாலும், ஊடகங்கள் கதைகளாக சொல்லும் போது அவற்றினூடாக ஒரு கதைவரிசையை (storyline) முன்வைக்கின்றன. இப்படி பல கதைவரிசைகள் உள்ளன, நிகழ்வு எதுவோ அதற்கு பொருத்தமான கதை வரிசைக்குள் ’செய்தியை’ சொருகி தேசியவாத மசாலா தடவி இந்துத்துவ பொதுப்புத்தி என்கிற எண்ணெயில் பொரித்து சூடாகவும் சுவையாகவும் ப்ரைம் டைமில் தமது நடுத்தரவர்க்க வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதே சமகாலத்திய ஊடக அறம்.

nepal 2
நிவாரணப்பணிகளில் இந்தியா முன்னணியில் இருப்பதற்காக ஒவ்வொரு நிவாரண பொட்டலத்திலும் உங்கள் போட்டோவை போட்டிருக்கிறீர்களே, வெட்கமாக இல்லையா மிஸ்டர் மோடி?

சமீபகாலத்திய கதைவரிசைகள் பலவற்றில் மோடி நாயகன், ராகுல் காந்தி காமெடி வில்லன். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பழைய ஊழல்களைப் பற்றிய கதைவரிசைகளில் ஆ.இராசா வில்லன். பொதுவாக காஷ்மீரிகள், இசுலாமியர்கள், திராவிட கருத்தியல் கொண்டவர்கள், பழைய சமூகநீதி பாரம்பரியத்தில் வந்தவர்கள் எல்லாம் நிரந்தர வில்லன்கள். பார்ப்பன இந்து வெறியை உள்ளடக்கமாக கொண்ட இந்திய தேசிய வெறி (Jingoistic Nationalism) தான் எப்போதும் நிரந்தர நாயகன்.

இந்திய அச்சு ஊடகங்கள் தமது இளைய பங்காளிகளான காட்சி ஊடகங்களின் நகல் பிரதி என்பதால் அவற்றைக் குறித்து தனியே சொல்லத் தேவையில்லை.

அமெச்சூர் மல்யுத்த போட்டி பின்னர் தொழில்முறை மல்யுத்த போட்டியாக வளர்ந்து தொலைக்காட்சிகளில் Pay-per-view நிகழ்ச்சியாக இடம்பெற்று கல்லாகட்டத் துவங்கிய  தொண்ணூறுகளில் பிரபலமாக இருந்த WWF பார்த்தவர்கள் நிலைமையை இத்துடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம்.

இந்திய செய்தித் தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி வெறியை தட்டிக் கேட்க நமக்கு சொரணை இல்லை என்றாலும் அதை நேபாளிகள் சுமக்க வேண்டிய அவசியமில்லை அல்லவா? அதனால் தான் காறி உமிழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நேபாளத்தின் வாழ்வை புரட்டிப் போட்ட பூகம்பம் இந்திய ஊடகங்களுக்கு டி.ஆர்.பி புதையலாக காட்சியளித்துள்ளது. திகிலூட்டும் பின்னணி இசையோடு மலிவான உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாக ‘கண்ணீர்’ கதைகளைத் தேடியலைந்துள்ளனர் இந்திய ஊடகவியலாளர்கள். பூகம்பத்தில் பாதிக்கப்பட்டு பெற்ற பிள்ளையை பறிகொடுத்த தாய் ஒருவரிடம் சென்று “இப்போது எப்படி உணர்கிறீர்கள்?” என்று மைக்கை நீட்டியுள்ளார் ஒரு செய்தியாளர். மற்ற செய்திச் சேனல்களுக்குக் கிடைக்காத கதைகளை கண்டு பிடித்து டி.ஆர்.பியை அள்ளும் வெறியில் மீட்பு நடவடிக்கைகளுக்கே இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

நேபாள டெலிகிராப் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்றின் படி, மீட்பு நடவடிக்கைகளுக்காக சென்றுள்ள இந்தியாவின் உலங்கு வானூர்திகள் ஒவ்வொன்றிலும் செய்தியாளர்களையே இடத்தை அடைத்துக் கொண்டு சென்றுள்ளனர். விளைவாக, குறைவான கட்டுமான வசதிகளைக் கொண்டிருக்கும் நேபாள இராணுவத்தை விட சொற்ப எண்ணிக்கையிலேயே இந்திய இராணுவம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளது.

தினமும் நான்கு முறை இந்தியாவிலிருந்து நேபாளத்திற்குப் பறக்கும் ’மீட்பு’ விமானம் இங்கிருந்து நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களை சுமந்து சென்றுவாறே உள்ளது. இந்திய பத்திரிகையாளர்கள் நேபாளத்தின் குறுக்கும் நெடுக்குமாக அலைபாய்ந்து தங்கள் தேசத்தின் பெரியண்ணன் தோரணையை, உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நேபாளிகள் முன் பீற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து நேபாளிகள் மட்டும் தான் ஆத்திரப்பட வேண்டுமா?

அரசியல் , பொருளாதார மற்றும் கலாச்சார ரீதியில் இந்திய ஆளும் வர்க்கம் இந்தத் துணைக்கண்டத்தைச் சேர்ந்த பிற நாடுகளின் மேல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அடாவடித்தனங்களுக்கு ஒரு பின்னணியும் உள்ளது.

சர்வதேச ஏகாதிபத்திய பொருளாதார கட்டுமானத்தோடு பிணைக்கப்பட்டுள்ளது இந்தியா. இதனால், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டலுக்காக இந்த தேசத்தின் எல்லைகள் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த அடிமைத்தனமும், அது தரும் எலும்புத் துண்டும்தான் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஆன்மாவாக விளங்குகிறது.

அதுதான் பல்லாயிரம் பேரின் உயிரைக் குடித்த போபாலின் துயரத்திற்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியை பாதுகாப்பாக நாட்டை விட்டு வெளியேற அனுமதித்ததிலும், அணுவுலைகள் வெடித்து அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மேற்கத்திய நாடுகளைப் பொறுப்பாக்க மாட்டோம் என்று அறிவித்ததிலும் இன்னும் எண்ணற்ற சந்தர்பங்களிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

nepal 5தனக்கு மேலே சில எஜமானர்கள், தனக்குக் கீழே சில அடிமைகள் என்று படிநிலை கலாச்சாரத்திற்கு ஈராயிரம் ஆண்டுகளாக பழக்கப்பட்டுப் போன இந்திய ஆட்சியாளர்கள் துணைக்கண்டத்தைச் சேர்ந்த பிற சிறிய நாடுகளை தனது அடிமைகளாக இயற்கையாகவே கருதிக் கொள்கின்றனர். இந்த நாடுகளுக்கென்று சொந்த இறையாண்மை, சொந்த அரசியல், கலாச்சாரம், பண்பாடு போன்றவை இருக்கின்றன என்கிற எதார்த்த உண்மையை கெண்டைக்கால் மயிரளவுக்கும் மதிப்பதில்லை.

பாலிவுட் குப்பைகளைக் கொட்டி கலாச்சார ரீதியில் அந்நாடுகளை மாசுபடுத்துவது, இந்திய தரகு முதலாளிகளுக்கு அந்நாடுகளின் சந்தையைக் கைப்பற்றிக் கொடுப்பது, இந்திய இராணுவ நலனுக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்துவது என்பது போன்ற விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் இந்தியாவின் நிரந்தர வெளியுறவுக் கொள்கை. ஒரு வகையில் பாகிஸ்தானை இந்தியாவின் தொண்டையில் சிக்கிய முள் என்றும் சொல்லலாம்.

அந்த வகையில் இந்த துணைக்கண்ட பிராந்தியத்தில் ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிந்த வட்டார ரவுடியாக தன்னை நிலைநாட்டும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து முன்னெடுத்துக்  கொண்டே இருக்கிறது. மாலத்தீவுகள், வங்க தேசம், இலங்கை, நேபாளம் போன்ற குட்டி நாடுகளை போர்தந்திர ரீதியிலான நோக்கங்களுக்கு உட்பட்டு தனது பிடியில் வைத்துக் கொள்வதற்கு கிடைக்கும் எந்த வாய்ப்பையும் இந்திய ஆளும் வர்க்கம் தவற விடுவதே இல்லை.

அது ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறியர்களின் போராகட்டும், நேபாள நிலநடுக்கமாகட்டும் – ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்த நாடுகளின் குறிப்பான விவகாரங்களில் தலையிடுவதன் நோக்கமே தனது நிரந்தர நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே.

இந்தியாவின் பெரியண்ணன் மனோபாவத்தை சம்பந்தப்பட்ட நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் தெரிந்தே அனுமதிக்கின்றன. மன்னராட்சியை எதிர்த்துக் கிளர்ந்த நேபாள புரட்சியின் போது தனது அடிவருடியான மன்னரின் சார்பில் தலையிட்ட போதே நேபாளிகளின் ஆத்திரத்திற்கு இந்தியா ஆளானது.

புவியியல் ரீதியில் தனக்கிருக்கும் சாதகமான நிலையைப் பயன்படுத்தி நேபாளம் பொருளாதார ரீதியில் சுயேச்சையாக வளர்வதைத் இந்தியா தொடர்ந்து தடுத்து வந்துள்ளது. சீனத்தோடு நேபாளத்திற்கு இருக்கும் பொருளாதார உறவை மட்டுமின்றி, கிட்டத்தட்ட நேபாளத்தின் அயலுறவு மற்றும் இராணுவ செயல்பாடுகள் அனைத்தும் தில்லியில் வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன.

நீண்ட காலமாக பொருளாதார வளர்ச்சியின்றி, வேலையின்மையாலும் வறுமையாலும் சகல திசைகளிலிருந்து தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் நேபாள மக்கள் தங்களது துன்ப துயரங்களுக்கு நேபாள ஆளும் வர்க்கம் எந்தளவுக்குக் காரணமோ அதே அளவுக்கு இந்தியாவும் காரணம் என்பதைத் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கையில் கேமரா, மறு கையில் நிவாரணம், இதுதான் இந்திய இராணுவம்!
ஒரு கையில் கேமரா, மறு கையில் நிவாரணம், இதுதான் இந்திய இராணுவம்!

ஒவ்வொரு தேர்தலிலும் மக்களின் வாக்குகளைக் கவர நினைக்கும் நேபாளின் எதிர்க்கட்சிகளுக்கு இந்திய எதிர் நிலைப்பாடு ஒன்றே உத்திரவாதமான ஓட்டுப் பொறுக்கும் சாதனமாக இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு முறையும், தேர்தலில் வென்ற பின் சொல்லி வைத்தாற்போல இந்திய அடிவருடித் தனத்தில் மூழ்கி நேபாளிகளுக்கு துரோகமிழைப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன அக்கட்சிகள்.

ஆக, #Gohomeindiamedia என்பது இப்போதைய ’ட்ரெண்டாக’ இருந்தாலும், அது இந்தக் குறிப்பான சந்தர்பத்தில் வெளிப்பட்டுள்ளதன் காரணம் இது தான். இந்திய ஊடகங்களின் சமீபத்திய கதைவரிசையின் நாயகனான மோடியின் பிம்பத்தை நேபாளிகளின் முன் தூக்கிப் பிடித்த செயலானது அவர்கள் பல்லாண்டுகளாக அனுபவித்து வரும் துன்பங்களின் குறியீடாக மாறியுள்ளது.

மோடி ஒரு இந்துத்துவ பாசிஸ்ட் என்கிற புரிதல் நேபாளிகளுக்கு இல்லாலிருக்கலாம். ஆனால் இந்தியப் பெரியண்ணனின் தேசிய மேலாதிக்கம் என்கிற சிறுமையை இந்தியப் பத்திரிகையாளர்கள் தங்கள் தலையின் மீது சுமத்துகிறார்கள் என்கிற எளிமையான உண்மையைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மேலே பணிந்து கீழே மீசை முறுக்கும் இந்திய தேசிய பெருமிதத்தின்  உச்சகட்டப் பீறிடல் மோடி என்பதையும் இந்தியப் பத்திரிகையாளர்களின் அருவெறுக்கத்தக்க பீற்றல்கள் அந்த அசிங்கம் பிடித்த பீறிடலின் குறியீடு என்றே நேபாளிகள் #Gohomeindiamedia என்று காறித் துப்பியிருக்கிறார்கள்.

நேபாளம் சின்ன நாடாக இருக்கலாம்; நேபாளிகள் எளியவர்களாக இருக்கலாம் – ஆனால், மேலாதிக்கத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சொரணையுள்ளவர்கள் என்பதை இந்த உலகத்திற்கு அறியத்தந்துள்ளனர்.

நாம் பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் சொரணை?

– தமிழரசன்

 

பவர் ஸ்டார் மோடி பாரிசில் வாங்கிய மூட்டை பூச்சி மிஷின்

81

மொரிசியஸ் போயாச்சு, பாரிஸ் போக வேண்டாமா என்று ஐரோப்பாவுக்கு விளம்பரச் சுற்றுலா சென்று வந்த பவர் ஸ்டார் மோடி, பல்லாயிம் கோடி ரூபாய் செலவில் 36 நவீன மூட்டைப் பூச்சி நசுக்கும் எந்திரங்களை வாங்க முடிவு செய்தார். இதற்காக பிரான்ஸ் அரசாங்கத்தோடு கையெழுத்திட்டுள்ளார். தஸ்ஸால்ட் நிறுவனம் இந்தியாவின் தலையில் கட்டவுள்ள 36 ரஃபேல் போர் விமானங்கள் தாம் அந்த ‘நவீன’ மூட்டைப் பூச்சி எந்திரங்கள்.

“ரஃபேல் போர் விமானங்களில் மைலேஜ் கம்மி என்பதால் அதை வாங்கக் கூடாது” என இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் கொதித்துள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. இந்தியா தனது இராணுவத்துக்கு தீனி போட பில்லியன் கணக்கான டாலர்களை அழுது வருவதால், அதில் அமெரிக்க மற்றும் இசுரேலின் பங்கிற்காக அந்நாடுகளின் ‘தூதர்’ சுப்பிரமணியன் சுவாமி கொதிப்பது வெறும் பங்காளிச் சண்டைதான்.

மோடி - பிரான்ஸ் அதிபர்
பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் ரஃபேல் விமானங்களை வாங்க கையொப்பமிட்ட தேச துரோகி மோடியின் சிரிப்பு.

இன்னொருபுறம் ‘பறக்கத் தயார்” நிலையில் உள்ள போர் விமானங்களை பிரதமர் கோரியிருப்பதால், அவரது “மேக் இன் இந்தியா” கொள்கைக்கு முரணாக உள்ளதே என்று சில ஆங்கில நாளேடுகள் கவலையை வெளிப்படுத்தியிருக்கின்றன. ஆனால், மேக் இன் இந்தியா என்பதே பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு மோடி போடும் கறி விருந்து தான் என்பதை மூடப்பட்ட நோக்கியா ஆலையும் நாடெங்கும் பரவிக் கிடக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களும் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்றன.

மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களும், சில இராணுவ போர்தந்திர ஆய்வு பத்திரிகைகளும், “அதிக செலவு வைக்கும் ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு பதில், குறைந்த செலவில் அதிக செயல் திறனோடு இயங்கும் சுகோய் 35 வகைப்பட்ட விமானங்களை வாங்கியிருக்கலாம்” என்று எழுதுகின்றன. ஒருவேளை சுகோய் ரக விமானங்ளை வாங்கா விட்டாலும் ரஃபேல் விமானங்களை வாங்காமல் இருத்தல் நலம்.

இரட்டை என்ஜின்களைக் கொண்ட ரஃபேல் விமானங்கள் பல சந்தர்ப்பங்களில் கூட்டுப் பயிற்சிகளின் போது விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இதன் என்ஜின்கள் திடீரென்று செயலிழந்து விடக்கூடிய தன்மை கொண்டதாக இராணுவத் துறை ஆய்வுப் பத்திரிகைகள் எழுதுகின்றன. இராணுவ விமானக் கண்காட்சிகளிலும் ரஃபேல் விமானங்கள் மிக மோசமான முறையில் தோல்வி கண்டுள்ளன. செயல் திறன் குறைவு என்பதோடு இதன் வகையில் உள்ள பிற போர் விமானங்களை ஒப்பிடும் போது அதிக விலை கொண்டதாகவும் ரஃபேல் விமானங்கள் உள்ளன.

உலகிலேயே பிரம்மாண்டமான தின்னி மடக் கூட்டமான இந்திய இராணுவத்திற்கு செய்யும் செலவும், ஓட்டை வாளியில் நீர் அள்ள முயற்சிப்பதும் ஒன்று தான் என்பது ஒருபுறமிருக்க, அப்படிச் செய்யப்படும் செலவு என்பது மக்கள் பணம் என்பதே நமது கவலைக்குரியது. மக்களுடைய வரிப்பணத்தை மக்கள் நலத் திட்டங்களுக்குச் செலவு செய்வதை கடுமையாக எதிர்க்கும் முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள், பவர் ஸ்டார் மோடி, பை நிறைய காசைக் கொடுத்து கை நிறைய கழுதை விட்டைகளை அள்ளி வந்திருப்பதை அங்கீகரிக்கிறார்கள்.

சுப்பிரமணிய சாமி எதிர்ப்பு
ரஃபேலை எதிர்த்து, அமெரிக்க மற்றும் இசுரேலின் பங்கிற்காக அந்நாடுகளின் ‘தூதர்’ சுப்பிரமணியன் சுவாமியின் கொதிப்பு

ரஃபேல் விமானம் செயல் திறனற்றது என்கிற தொழில்நுட்ப பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, விமான பேரம் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் இரத்த வெள்ளத்தின் மேல் நடந்திருக்கிறது.

1983-ம் ஆண்டு பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் கூட்டாக இணைந்து ஐரோப்பாவின் எதிர்கால போர் விமானம் ஒன்றைத் தயாரிக்க முன்வந்தன. என்பதுகளின் இறுதியில் கூட்டு விமானத் தயாரிப்பிலிருந்து பிரான்ஸ் விலகி பின் சொந்த முறையில் தஸ்ஸால்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்ததுதான் ரஃபேல் விமானங்கள். மற்ற கூட்டு நாடுகள் இணைந்து “யூரோ பைட்டர்” என்ற போர் விமானத்தை தயாரித்து வருகின்றன.

இவ்விரு விமானங்களும் பனிப் போரால் உலக நாடுகளிடையே தீவிரமடைந்திருந்த முறுகல் நிலையையே தமக்கான சந்தைகளாக குறிவைத்திருந்தன. 1990-களின் துவக்கத்தில் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் போர் விமானங்களுக்கான சந்தைத் தேவை திடீரென்று குறுகிப் போனது. பனிப்போரின் முடிவுக்குப் பின் வந்த இரண்டு பத்தாண்டுகளில் சர்வதேச இராணுவ தளவாட சந்தையை அமெரிக்கா, இரசியா பிரதானமாகவும் இசுரேல் குறிப்பிட்ட அளவும் கட்டுப்படுத்தின.

பனிப்போருக்குப் பின் நடந்த முதலாம் வளைகுடா அமெரிக்க ஆக்கிரமிப்பு யுத்தமும், பின்னர் ஈராக், ஆப்கான் ஆக்கிரமிப்பு போர்களும் அமெரிக்காவின் நவீன ஆயுதங்களுக்கான பரிசோதனைக் கூடங்களாக விளங்கின. இந்த நிலையில் சரியான ‘பரிசோதனைக்’ கூடங்கள் கிடைக்காமல் அல்லாடி வந்த ஐரோப்பிய நாடுகளுக்கு லிபியாவும், சிரியாவும் நல்வாய்ப்பை வழங்கின.

ஈராக், ஆப்கான் போரில் போட்ட காசை முழுமையாக எடுக்க அமெரிக்கா சிரமப்பட்டு வந்த நிலையில், லிபிய படையெடுப்பு மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை ஒடுக்குவது என்ற பெயரில் சிரியா மற்றும் ஈராக்கில் தான் செய்த தலையீட்டிற்கான செலவுகளை மற்ற நேட்டோ நாடுகளின் தலையில் சுமத்தியது.

ரஃபேல் விமானங்கள்
செயல் திறன் குறைவு என்பதோடு இதன் வகையில் உள்ள பிற போர் விமானங்களை ஒப்பிடும் போது அதிக விலை கொண்டதாகவும் ரஃபேல் விமானங்கள் உள்ளன.

அதாவது, போர்ச் செலவுகளை நேட்டோ நாடுகள் பகிர்ந்து கொண்ட அதே வேளையில்  ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளை போர் தந்திர ரீதியில் கட்டுப்படுத்துவது மற்றும் போரினால் சீரழிக்கப்பட்ட அந்நாடுகளின் மறுகட்டுமான பணிகளில் கொள்ளையடிப்பதை அமெரிக்கா தனது பங்காக பிரித்து எடுத்துக் கொண்டது. இந்த ஏற்பாட்டில் இராணுவ ரீதியில் எதிர்த்து நிற்கும் திராணியற்ற இந்நாடுகளின் மேல் தங்களது ஆயுதங்களை பரிசோதித்துக் கொள்ளும் பொன்னான வாய்ப்பு பிரான்சுக்கும், பிரிட்டனுக்கும் கிடைத்தது.

லிபியாவின் வான்பரப்பில் சீறிப்பாய்ந்த “டைஃபூன்” மற்றும் “ரஃபேல்” விமானங்கள் எந்தத் தடையுமின்றி தமது ‘திறமையை’ பறைசாற்றிக் கொண்டன. இதில் ஏற்கனவே லிபியா, பிரான்சிடம் வாங்கி வைத்திருந்த மிராஜ் வகை போர் விமானங்களை அழித்தொழித்து தனது சாதனையை ரஃபேல் விமானங்கள் நிலைநாட்டியது ஒரு முரண்நகை.

விற்பனைக்குத் தயாராகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நாட்டாலும் சீந்தப்படாமல் மூலையில் கிடந்த ரஃபேல் விமானங்கள் லிபிய ஆக்கிரமிப்புப் போருக்குப் பின் தான் உலகின் கவனத்திற்கு வந்தது. திருப்பித் தாக்கும் வலுவற்ற நாடு ஒன்றின் மேல் தனது வலிமையைப் பறைசாற்றிக் கொண்ட பெருமையோடு பல்வேறு நாடுகளின் இராணுவத்தை அணுகியது பிரான்ஸ்.

எனினும், பிரேசில், கனடா, அல்ஜீரியா, கிரீஸ், மொராக்கோ, ஓமன், நெதர்லாந்து, நார்வே, சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் ரஃபேல் விமானங்களின் செயல் திறன் குறைவை காரணம் காட்டி அவற்றை கொள்முதல் செய்ய மறுத்தன. வாடிக்கையாளர்கள் இன்றி தவித்து வந்த நிலையில் தஸ்ஸாட் நிறுவனத்தில் தனக்கிருந்த பங்குகளை ஏர்பஸ் நிறுவனம் விற்க முடிவு செய்தது நெருக்கடியை மேலும் கூட்டியது.

ஏறக்குறைய கடையை மூடும் நிலைக்குச் சென்று விட்ட தஸ்ஸாட் நிறுவனத்தை மோடி தான் காப்பாற்றி இருக்கிறார். உத்தராஞ்சல் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட 15,000 குஜராத்தியர்களை என்பது இன்னோவா கார்களின் மூலம் இரண்டே நாளில் காப்பாறியதற்குப் பின் மோடி செய்திருக்கும் பிரமாண்டமான சாகசம் இது தான். ஆனால், இந்த முறை சாகசத்தின் விலையை மக்கள் அழ வேண்டியிருக்கிறது.

எல்லாவற்றிலும் முதலாவதாக வரும் மோடி இந்த விசயத்தைப் பொருத்தவரை இரண்டாவதாகத்தான் வருகிறார். எகிப்து இந்தியாவை ஏற்கனவே முந்தி விட்டது. ஆளே இல்லாத டீக்கடையில் தன்னந்தனியாக நின்று தவித்துக் கொண்டிருந்த பிரான்சிடமிருந்து எகிப்து 5.9 பில்லியன் டாலர் மதிப்பில் 24 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்ய பிரான்சுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது.

வண்ணப்புரட்சிக்குப் பின் மேற்கத்திய நாடுகளின் பொம்மைகளைக் கொண்டு ஆளப்படும் எகிப்து பிரான்சின் பொம்மை விமானத்தை வாங்கியதைப் புரிந்து கொள்ள முடிகிறது; ஆனால், ஆர்.எஸ்.எஸின் சுதேசித் தயாரிப்பான 56 இன்சு மார்பு கொண்ட சுதேசி வீரரான மோடி பிரான்சு தயாரித்துள்ள மூட்டைப்பூச்சியைக் கொல்லும் நவீன இயந்திரத்தை ஏன் வாங்க வேண்டும்?

பவர் ஸ்டார் மோடி
பவர் ஸ்டார் மோடி, பை நிறைய காசைக் கொடுத்து கை நிறைய கழுதை விட்டைகளை அள்ளி வந்திருக்கிறார்.

இந்தியா கொள்முதல் செய்யவுள்ள 36 விமானங்களுக்கான விலை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளிவரவில்லை. என்றாலும், பிரேசிலைச் சேர்ந்த இராணுவ ஆய்வுப் பத்திரிகைகள் இந்த வணிகத்தின் மதிப்பை 1200 கோடி  டாலர்களாக (சுமார் ரூ 72,000 கோடி) இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளன.

ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வளவாக இருந்தாலும் அது ஏழை இந்தியர்கள் செலுத்திய வரிப்பணம். இந்திய மக்களை கசக்கிப் பிழிந்து திரட்டிய நிதியைக் கொண்டு பல்லாயிரம் லிபியர்களையும் சிரிய மக்களையும் கொன்று குவித்து தனது திறனைப் பரிசோதித்துக் காட்டிய போர்க்கருவியை வாங்கியுள்ளார் மோடி.

தமது போர்தந்திர நோக்கங்களைக் கடந்து பொருளாதார காரணங்களும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களைச் செலுத்தும் மிக முக்கியமான காரணி. அந்த வகையில், தமது இராணுவத் தளவாடங்களை சந்தைப்படுத்துவதற்கு முன் அவை எதார்த்த நிலைமைகளில் சோதித்தறியப்பட்டவை (Tested and prooven under practical conditions)  என்று வாடிக்கையாளர்களுக்கு நிரூபிக்கும் வாய்ப்பாகவும் போர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

எனவே, இந்தியாவின் இராணுவக் கொள்முதலை வீண் பொருளாதாரச் சுமை என்பதைத் தாண்டி தார்மீக அறத்தின் பாற்பட்டும் நாம் எதிர்த்தாக வேண்டும்.

– தமிழரசன்.

இது தொடர்பான செய்திகள்

சி.ஆர்.ஐ சட்ட விரோத கதவடைப்பு – உறுதியாக தொடரும் போராட்டம்

0

சின்னவேடம்பட்டி சி‌.ஆர்‌.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு செய்து 35-வது நாளை எட்டிவிட்டது. ஆனாலும் தொழிலாளர்கள் போராட்டம் வர்க்கக் கோபத்துடன், எழுச்சியுடன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. சி‌.ஆர்‌.ஐ கம்பெனியைச் சுற்றியுள்ள 20 ஊர்களில் வீடு வீடாக பிரச்சாரம் தினமும் தொய்வில்லாமல் நடக்கிறது. கம்பெனி கேட் முன்பு தினசரி சமையல் செய்து தொழிலாளர்கள் தங்களது சலிப்படையாத, அஞ்சாத நடவடிக்கைகள் மூலம் கோவையில் புரட்சிகர நடவடிக்கைகளின் மையப் புள்ளியாக தங்களை மாற்றிக் கொண்டுள்ளனர். செங்கொடி வரலாறு திரும்பவும் நிகழ்த்தப்படுகிறது.

சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு எதிர்ப்புப் போராட்டம்
தொழிலாளர்கள் போராட்டம் வர்க்கக் கோபத்துடன், எழுச்சியுடன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

சி‌.ஆர்‌.ஐ முதலாளியை பணிய வைக்க முடியாது என்று சந்தேகம் எழுப்பியவர்கள் இப்போது சற்றே மாற்றி பேசுகிறார்கள்.

கோவை நகரம் முழுவதும் பேசப்படும் அளவுக்கு போராட்டம் வீச்சாக நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள், நூற்றுக் கணக்கான சுவரொட்டிகள், தொழிலாளர்கள் அணிந்து கொண்டு செல்லும் முழக்கங்கள் பொறித்த மேலங்கிகள் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சி‌.ஆர்‌.ஐ முதலாளி சௌந்திரராஜனின் வீட்டுக்கே சென்று பாட்டாளி வர்க்கத்தின் வீரப்புதல்வர்கள் துண்டுப்பிரசுரம் கொடுத்து அலற வைத்துள்ளனர். சி‌.ஆர்‌.ஐ முதலாளி மார்ச் 26-ம் தேதி முதல் இரண்டு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் வைத்து நடமாடிக் கொண்டுள்ளார்.

சின்னவேடம்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்க, சரவணம்பட்டி காவல் துறை எழுத்து பூர்வமாக மறுத்தது. பின்னர், மீண்டும் சரவணம்பட்டி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டோம். அதனையும் மறுத்து எழுத்து பூர்வமாகக் கொடுத்தார்கள். மீண்டும், “மே தினத்தை நடத்தி முடித்து மே 5-ம் தேதி சரவணம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். கொடுக்காவிட்டால் தடையை மீறுவோம்” என அறிவித்தோம். கடைசியில், 2-ம் தேதி இரவு 10 மணிக்கு சரவணம்பட்டி எல்லைக்குள் வேறு ஓர் இடத்தில் அனுமதி தருவதாக வாய்மொழி தகவல் கொடுத்தார்கள்.

சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
“மே தினத்தை நடத்தி முடித்து மே 5-ம் தேதி சரவணம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். கொடுக்காவிட்டால் தடையை மீறுவோம்”

ஒரே நாளில் பிரசுரம், சுவரொட்டி அடித்து, பரவலாக ஒட்டி பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். சத்திய மங்கலம் ரோட்டில் பல்லாயிரம் மக்கள் பார்வையிட, மழை கொட்ட, பாட்டாளி வர்க்கத்தின் கம்பீரத்துடன் ஆர்ப்பாட்டம் அரங்கேறியது. அங்கே வந்த காவல் துறையின் குரூரமான ஆத்திரமூட்டல்களுக்கு நடுவே, அவர்களை சமாளித்து ஆர்ப்பாட்டத்தை துவங்கினோம்.

முருகன் மில் கிளைத் தலைவர் தோழர் ரங்கசாமி யின் தாமிரக் குரலில் துவங்கிய முழக்கம் சத்தி ரோட்டின் இரு முனைகளிலும் எதிரொலித்தது.

தோழர் ரங்கசாமி
தோழர் ரங்கசாமி

சி‌.ஆர்‌.ஐ கிளைத் தலைவர் மூர்த்தி கூட்டத்திற்கு தலைமை தாங்கி தாங்கினார்.

தோழர் மூர்த்தி
தோழர் மூர்த்தி

மாவட்டத் தலைவரும், சி‌.ஆர்‌.ஐ கிளைச் செயலருமான தோழர் குமாரவேல் தனது உரையில் 1980-லிருந்து 90-கள் வரையிலான சி‌.ஆர்‌.ஐ பம்ப்ஸ்-ன் வரலாற்றையும், அது தொழிலாளர்கள் உழைப்பின் மூலம் பெற்ற பிரம்மாண்ட வளர்ச்சியையும் விவரித்தார்.

தோழர் குமாரவேல்
தோழர் குமாரவேல்

“முதலில் சைக்கிளிலும், பழைய ஸ்கூட்டரிலும் ராஜேந்திரா இண்டஸ்ட்ரீஸ் க்கு வந்து கொண்டிருந்த முதலாளி சௌந்திர ராஜன் முதல் இதர டைரக்டர்களான வேலுமணி ராஜேந்திரன், கதிர்வேல் போன்றோர் எப்படி ஆரம்ப காலம் முதலே தொழிலாளிகளை சுரண்டிக் கொழுக்கத் துவங்கினர்” என்பதையும், பின்னர், ராஜேந்திரா இண்டஸ்ட்ரீஸ் சி‌.ஆர்‌.ஐ பம்ப்ஸாக பரிணாம வளர்ச்சியடைந்தையும் அந்த வளர்ச்சியின் பின்னுள்ள கொத்தடிமைக் கூடாரத்தையும் விலாவாரியாக கூறினார்.

அதே சமயம், “கம்பெனி கூட்டங்களில் முதலாளிகள் எப்படி சி‌.ஆர்‌.ஐ குடும்பம், சி‌.ஆர்‌.ஐ குடும்பம் என குரு பட பாணியில் சொல்லி சொல்லியே ஏய்த்தனர்” என்பதையும் கூறினார்.

தோழர் விளவை ராமசாமி
“கதவடைப்பு மூலம் நம் குடும்பங்கள் நசுக்கப்பட்டால், நம் குழந்தைகளின் எதிர்காலம் இல்லாமல் செய்தால், அவன் என்ன செய்கிறானோ அதனை அப்படியே அவனுக்கு ஏற்படுத்த வேண்டும்.”

அடுத்து, மாநிலத் துணைத் தலைவர் விளவை இராமசாமி சி‌.ஆர்‌.ஐ முதலாளிக்கு சவால் விட்டுப் பேசினார். “சி‌.ஆர்‌.ஐ முதலாளி முட்டாள்தனமாக கதவடைப்பு செய்துள்ளார். தொழிலாளர்களை பற்றி தவறான மதிப்பீட்டில் கதவடைப்பு செய்துள்ளார்.

  • கதவடைப்பு என்பது குண்டு வெடிப்புக்கு இணையானது.
  • 100 தொழிலாளர்கள் குடும்பங்களை அழிக்கும் செயல்தான் கதவடைப்பு.
  • கதவடைப்பு என்பது பெண்களிடம் செய்யும் செயின் பறிப்புக்கு இணையான திருட்டு ஆகும்.
  • கதவடைப்பு என்பது தொழிலாளிக்கு எதிராக முதலாளி செய்யும் யுத்தம்.
  • கதவடைப்பு என்பது தொழிலாளர்கள் குடும்பங்களை பட்டினி போடுவது, கதவடைப்பு என்பது வயிற்றில் அடிப்பது ஆகும்.

தனி ஒரு முதலாளிக்கு எதிராக நாம் நடத்தும் போராட்டம் நாளை நாட்டில் உள்ள அனைத்து முதலாளிகளுக்கு எதிராகவும் நடத்த வேண்டும். அதற்கான பயிற்சியை இங்குதான் நாம் பெறுகிறோம்.

முதலாளியின் கொடுமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது காவல்துறை பதறுகிறது. தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் சூழ்ச்சி செய்கிறான். எனவே, தொடர்ந்து மக்களிடம் போய்க் கொண்டே இருக்க வேண்டும். இதுவே நமது வெற்றிக்கு அடிப்படை.

கோவை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு
“முதலாளியின் கொடுமைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது காவல்துறை பதறுகிறது. “

கதவடைப்பு மூலம் நம் குடும்பங்கள் நசுக்கப்பட்டால், நம் குழந்தைகளின் எதிர்காலம் இல்லாமல் செய்தால், அவன் என்ன செய்கிறானோ அதனை அப்படியே அவனுக்கு ஏற்படுத்த வேண்டும்.

சௌந்திர ராஜன் தனது மகளுக்கு ஆயிரம் பவுன் நகை போட்டு ஜூன் மாதம் திருமணம் செய்யப் போகிறார். ஆயிரம் பவுன் யாருடையது? நம் ரத்தம், நம் உழைப்பு. எனவே, இதனை அனுமதிக்க முடியாது.

கோவை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு
“சௌந்திர ராஜன் தனது மகளுக்கு ஆயிரம் பவுன் நகை போட்டு ஜூன் மாதம் திருமணம் செய்யப் போகிறார். ஆயிரம் பவுன் யாருடையது?”

ஜனநாயக முறையில் கதவடைப்புக்கு எதிராக மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் தொழிலாளர் துறை, தொழிற்சாலைகள் ஆய்வாளர், தமிழக முதலமைச்சர் என எல்லோருக்கும் சட்டப்படி மனு கொடுத்தாகி விட்டது. அவர்கள் அனைவரும் மௌனமாக உள்ளனர். ஆனால், நாம் மௌனமாக இருக்கக் கூடாது. முதலாளி மகள் திருமணத்தை எப்படி நடத்துவார் என ஒரு கை பார்ப்போம்.

நம் போராட்டம் எம்‌.எல்‌.ஏ ஆவதற்கோ எம்‌.பி ஆவதற்கோ இல்லை. இந்த மண்ணை விடுவிக்க நடத்துகிறோம். மார்க்சிய லெனினிய மாசேதுங் சிந்தனையால் வழி நடத்தப்படுகிறோம். எனவே இறுதி வரை போராடுகிறோம். சமரசமில்லாமல் போராடுவோம்.

இது போன்ற போர்க்குணமிக்க போராட்டங்களை கோவையில் இதுவரை யாரும் நடத்தவில்லை. நாம் தான் புதுப் பாதை அமைக்கிறோம்.

கோவை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு
இது போன்ற போர்க்குணமிக்க போராட்டங்களை கோவையில் இதுவரை யாரும் நடத்தவில்லை. நாம் தான் புதுப் பாதை அமைக்கிறோம்.

இத்துணை வருடமாக கம்யூனிஸ்டு கட்சி வைத்திருக்கும் போலிகள் யோக்கியதை என்னவென கூற ஒரு சம்பவத்தை கூறலாம். சி‌.ஆர்‌.ஐ யின் சரவணம்பட்டி யூனிட்டில் ஒரு முறை முதலாளி “கூர மேல சோத்தப் போட்டா ஆயிரம் காக்க” என தொழிலாளர்களை இழிவு படுத்தி பேச ரோசத்தால் உந்தப்பட்ட தொழிலாளிகள் எரிகிற கொள்ளிக்கு பயந்து ஊது குழலிடம் உதவி கேட்டாற் போல் சி‌.ஐ‌.டி‌.யு.-விடம் தஞ்சமடைய, அவர்கள் இவர்களை வைத்து முதலாளியிடம் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு கலைந்து விட்டனர்.

என்ன பேச்சு வார்த்தை என்பது மதவெறியை எதிர்த்த வாறே சிவப்பு சிக்னல் போல பொட்டு வைக்கும் காரத் தம்பதியினரிடமும், சாதியை விமர்சித்த அதே வாயில் என் பெயர் யெச்சூரி எனக் கூறிக் கொள்ளும் பொச கெட்ட பொதுச் செயலர் சீதா ராமனின் வாரிசுகளிடமும் தான் கேட்க வேண்டும்.

விளைவு சங்கம் கலைக்கப்பட்டது. தொழிலாளிகள் மீண்டும் அந்த இருள் சூழ் நரகத்துக்குள்ளே. இது மட்டுமன்றி சின்னவேடம்பட்டி சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர்கள் பகுதியில் பிரச்சாரம் செல்லும் போதெல்லாம் சுத்தி அரிவாளையும், சிவப்பு வண்ணத்தையும் பார்த்து விட்டு விலகிப் போவோரிடமும் நக்கலுடன் பார்ப்பவரிடமும் தன்னிலை விளக்கம் கொடுத்து கொடுத்து பேச வேண்டிய நிலையை உருவாக்கி வைத்திருக்கிறது.

தொழிலாளிகளில் சிலரே, “தோழர் இந்த சுத்தி அரிவாள போடாம விட்டா மக்கள் இன்னும் அதிகமா நிதி தருவாங்க போலிருக்கு ஒவ்வொரு இடத்திலும் சொல்ல வேண்டியதா இருக்கு…. “நாங்க சி‌பி‌ஐ சி‌பி‌எம் இல்லைங்க. அவங்க போலி கம்யூனிஸ்டு. நாங்க உண்மையான கம்யூனிஸ்டுகள். நக்சல்பாரியின் வழித்தோன்றல்கள்னு சொல்லி சொல்லியே பேச வேண்டியதா இருக்கு தோழர்…” எனக் கூறுகிறார்கள்.

கோவை சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கதவடைப்பு
“நிலம் கையகப்படுத்தும் மசோதா, சாலைப் பாதுகாப்பு மசோதா என சகலமானவற்றிற்கும் போராடுவோம். இதில் வெற்றி உறுதி.”

கோயமுத்தூர் ஜெயிலின் கொள்ளளவே 2,000 பேர்தான். அங்கு ஏற்கெனவே பல்வேறு சமூகக் குற்றங்களில் தண்டனை பெற்றவர்கள் 1,500 பேர் வரை உள்ளனர். சி‌.ஆர்‌.ஐ அனைத்துக் கிளைத் தொழிலாளர்களும், கோவையின் இதர பாட்டாளிகளுமாய் 2,000 பேர் இணைந்து நின்று “கதவடைப்பை நீக்கு இல்லையேல் எங்களை சிறையில் அடை” என முழங்கினால் கதவடைப்பின் முதுகெலும்பு முறிக்கப்படும். இதன் மூலம் நமது அனைத்து அடிமைத்தனத்தையும் முறியடிக்க வேண்டும். எனவே அதற்கான பாதையில் நாம் அனைவரும் அணி திரள வேண்டும”

என அறைகூவல் விடுத்து தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக, சி‌.ஆர்‌.ஐ யின் கிளைத் துணைத் தலைவர் இராமசாமி, வர்க்கக் கோபத்துடனும் ஆற்றாமையுடனும் பேசியது அனைவரையும் நெகிழச் செய்தது. “நீ செய்தது நியாயமா…? என் குழந்தைகள் மனைவி எதிர்காலம் தெரியாமல் திணறிக் கொண்டிருக்க நீ சொகுசு பங்களாவில் உல்லாசமாக உலா வருகிறாயே…? உனக்கு மனசாட்சி இருந்தா ஏற்றுக்குவியா…? இத்தனை வருஷமா வேல செஞ்ச எங்கள வெளியே நிக்க வெச்சுட்டியே, நாங்க எங்க போவோம்..? போக மாட்டோம், கதவடைப்பு நீங்கும் வரையில் போராடியே தீருவோம்” என தனது வலி மிகுந்த உணர்ச்சிகளை எடுத்து வைத்தார்.

அத்தோடு கண்டன ஆர்ப்பாட்டக் கூட்டம் நிறைவுற்றது. போராட்டம் தொடர்கிறது.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

கோவில்பட்டி : கரிசல் மண்ணை சிவப்பாக்கிய மே நாள் பேரணி

0

மே நாள் சூளுரை :
ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்!
மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

கோவில்பட்டியில் மதுரை, உசிலை, தேனி, சிவகங்கை, ராஜபாளையம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய தென் பகுதிகளைச் சார்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய தோழமை அமைப்புகள் சேர்ந்து மே 1-ல் பேரணி, பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடானது.

may-day-kovilpatti-posterஇதற்காக DSP அனுமதிக்கு சென்றபோது அனுமதி மறுத்த்தால் ASP யிடம் தோழர்கள் முறையிட்டனர்.

“பொதுக்கூட்டம் வேண்டுமானால் நட்த்திக்கொள்ளுங்கள்” என்றார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் ராமச்சந்திரன், “சார் நீங்கள் அனுமதி கொடுத்தால் வரும் தோழர்களை விட அனுமதி மறுத்தால் கண்டிப்பாக நிறைய பேர் வருவார்கள். பேரணியை கண்டிப்பாக நடத்துவார்கள். அப்புறம் கைது கோர்ட் என நீண்டு செல்லும். வேண்டுமானால் நீங்கள் எஸ்.பி, இன்ஸ்பெக்டரிடம் எங்கள் அமைப்பை பற்றி கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்” என்றார்.

எஸ்.பி,  “ஆமாங்கய்யா, அந்த அமைப்பினர் செய்யணும்னு சொல்லிட்டா கண்டிப்பா செய்வார்கள்” என உறுதிப்படுத்தினார்.

வேறு வழியின்றி ASP யும் பேரணி, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி, “கொஞ்சம் மரியாதை நிமித்தமாக DSP-யையும் பார்த்து சொல்லி விடுங்கள்” என்றார்.

பேரணி பொதுக்கூட்டம் உறுதியாகி நாம் தீர்மானித்த இடங்கள் மட்டும் மாற்றப்பட்டன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மே 1 மாலை 5 மணி அளவில் எட்டயபுரம் மெயின் ரோட்டில் உள்ள சத்யபாமா திருமண மண்டபம் அருகில் இருந்து வி.வி.மு உசிலை வட்டச்செயலாளர் தோழர் குருசாமி பேரணிக்கு தலைமை தாங்கி “இனி மக்கள் தமது பிரச்சனைகளுக்காக மனுக் கொடுத்தோ, கோரிக்கை வைத்தோ கேட்டு உரிமையை பெறமுடியாது. இந்த அரசமைப்பு அழுகி நாறிவிட்டது. இதை அடித்து நொறுக்கி வீழ்த்தாமல் உழைக்கும் மக்களுக்கு விடுதலை இல்லை” என முழங்கி பேரணியை கொடி அசைத்து துவக்கினார்.

முழக்கங்கள் அரசை கிழித்து துவைப்பதாய் இருந்தது.

பொறுக்கி எல்லாம் போலீசு!
கன்னம் வைப்பவன் கலெக்டரு!
நியாயம் கெட்டவன் நீதிபதி!

போன்ற முழக்கங்கள் அருகிலிருந்த காவலர்களை என்னவோ செய்ததை உணர முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாலை 6.45 மணிக்கு பேரணி கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பொதுக்கூட்ட மேடையை வந்தடைந்தது. பேரணியில் நடந்து வந்த களைப்பை எல்லாம் போக்கும் வகையில் பொதுக்கூட்ட மேடையில் தோழர்கள் முழக்கங்களை படு கம்பீரமாய் எழுப்பினர்.

பொதுக்கூட்டத்திற்கு கோவில்பட்டி பு.ஜ.தொ.முஅமைப்பாளர் தோழர் ஆதி தலைமை தாங்கினார். “போலீசும் ராணுவமும் பாலியல் வன்முறையில் முதலிடத்தில் உள்ளது. மக்களுக்கு எதிரான சக்திகளாய் மாறியுள்ளது” என்பதை விளக்கி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கோவில்பட்டி பு.மா.இ.மு தோழர் மணி தனது உரையில், “மே 1 என்றால் இன்றைய இளைஞர்களுக்கு தெரியவில்லை” என்பதை விளக்கிவிட்டு இளைய தலைமுறை பொறுப்போடு செயல்பட வேண்டிய அவசியத்தை விளக்கினார்.

தேனி மாவட்ட வி.வி.மு செயலாளர் தோழர் மோகன் தனது சிறப்புரையில்…

மே நாள் கோவில்பட்டி பொதுக்கூட்டம்
“மதுரை மாவட்ட்த்தில் உயிர்நீத்த மற்றும் நமது பகுதிகளுக்கு அருகில் எல்லாம் உயிர்த்தியாகம் செய்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூறுவோம்”

“மே 1 தொழிலாளர்தினம் என்பது ஏதோ வாழ்த்து சொல்வதற்கான விசயம் அல்ல. சிகாகோ நகரத்தில் தொழிலாளர்கள் தமது உரிமையை நிலை நாட்ட உயிரையும் கொடுத்த வீரம் செறிந்த வரலாறு. அன்று உயிர் நீத்த அத்தியாகிகளின் மெளனமே இன்று மிக்க வலிமையாய் மாறி உள்ளது. அது போல, மதுரை மாவட்ட்த்தில் உயிர்நீத்த மற்றும் நமது பகுதிகளுக்கு அருகில் எல்லாம் உயிர்த்தியாகம் செய்த அனைத்து தியாகிகளையும் நினைவு கூறுவோம். இந்நாளில் சபதம் ஏற்போம். கடமையாற்றுவோம். அநீதிகளுக்கு முடிவு கட்டுவோம்” என தியாகிகளை நினைவு கூர்ந்து பேசினார்.

ம.உ.பா.மைய மதுரை மாவட்ட துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தனது உரையில்

மே நாள் கோவில்பட்டி பொதுக்கூட்டம்
“மக்கள் முதல்வர் களவாணி ஜெயா என்றால் பன்னீர்செல்வம் ஆடுமாடு பன்னிகளுக்கு முதல்வரா?”

“மக்கள் முதல்வர் களவாணி ஜெயா என்றால் பன்னீர்செல்வம் ஆடுமாடு பன்னிகளுக்கு முதல்வரா? 100 கோடி பேர் காலையில் எழுந்தவுடன் பிரச்சனைக்கு, நெருக்கடிக்கு ஆளாகி இன்று வாழ்க்கையை எப்படி ஓட்டப்போகிறோம் என தவிக்கும் லட்சணத்தில், ஓட்டுப்பொறுக்கி அரசியல் தலைவர்கள் மே நாள் வாழ்த்து கூறுகிறார்கள். நாங்கள் வாழ்த்து கூறமாட்டோம், இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு சொல்கிறோம்” என ஆரம்பித்து, அரசின் நிர்வாகம், கல்வித்துறை, உயர்கல்வித்துறை, மருத்துவத்துறை, நீதித்துறை மற்றும் பத்திரிகைத்துறை அனைத்தும் எப்படி சீரழிந்து சின்னாபின்னமாகி போயுள்ளது. “அவன் வகுத்த சட்ட்த்தை அவனே மதிக்காதபோது நாம் என்னா மயித்துக்கு மதிக்கணும்” என்று பிரித்தெடுத்தார்.

ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் புதிய கலாச்சாரத்தின் “மாட்டுக்கறி: பார்ப்பன மதவெறி” இதழ் வெளியீடு பற்றி விளக்கி பேசினார்.

இறுதியில், ம.க.இ.க வின் மைய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நெல்லை மாவட்ட்த்தில் ஒரு குடும்பம் வறுமையின் காரணமாக இனிப்பில் விசம் கலந்து தின்னும் பொழுது தந்தை மகளிடம் கேட்கிறார் : “இதில் என்ன கலந்து உள்ளது என்று தெரியுமா?” என.

பெரிய மகளோ, “தெரியுமப்பா விசம் உள்ளது” என்று சொல்லி குடும்பமே தற்கொலை செய்து கொண்ட நமது நாட்டின் அவலத்தை உணர்ச்சிப் பிழம்பாய் விவரித்து பாடினார்கள் கலைக்குழு தோழர்கள். “நான் உலகம்” பாடலுக்கான உச்சரிப்பு, நடனம் கலையின் உச்சத்தை எட்டியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புரட்சிகர கலைநிகழ்ச்சியில் கட்டுண்ட மக்களுடன் கூட்டம் கடைசி வரை அசராமல் கட்டுக்கோப்பாய் சிறப்பாய் நடந்தது.

பு.ஜ செய்தியாளர்கள்
கோவில்பட்டி

இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்

26

டந்த மே 2-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழங்கிய ’அம்பேத்கர் சுடர் ‘ விருதைப் பெற்றுக்கொண்டு எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய ஏற்புரையின் தமிழாக்கம். இந்த உரையை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம் செய்தவர் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன். விழாவில் விநியோகிக்கப்பட்ட இந்த உரையை ஜோஷூவா ஐசக் ஆசாத் பேஸ்புக் பதிவாக வெளியிட்டிருந்தார். அதை இங்கே வெளியிடுகிறோம். அனைவருக்கும் எமது நன்றி.

– வினவு

ன்பிற்குரிய திருமாவளவன் அவர்களே! விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்களே!, நண்பர்களே! வணக்கம்!

அருந்ததி ராய்
இவ்வாறு என்னை கௌரவப்படுத்தியதற்கு நன்றி. (படம் : நன்றி thehindu.com)

அம்பேத்கர் விருது கொடுத்து என்னை கௌரவித்ததற்கு மிகுந்த நன்றி. குறிப்பாக பாசிசத்துக்கு எதிராக அரசியல் கூட்டணிகளைத் திரட்ட வேண்டிய அவசியமும் அவசரமும் உள்ள இந்த காலகட்டத்தில் இந்த விருதை எனக்கு வழங்குவதற்காகப் பாராட்டுகிறேன்.

வெட்கமே இல்லாமல் இந்தியாவை இந்து தேசம் என்று வாதாடிக்கொண்டிருப்பவர்கள் இன்று இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். அந்த குறிக்கோளை எட்டுவதற்காக சக்கரங்கள் சுழன்று கொண்டேயிருக்கின்றன – பொதுவெளியிலும் தனிப்பட்ட முறையிலும். பல்கலைக்கழக, பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் மாற்றப்படுகின்றன; வரலாறு மாற்றி எழுதப்படுகிறது (அது எழுதப்பட வேண்டும். ஆனால், இப்படி அல்ல), கற்றல் வழிமுறைகள் முழுமையாக மாற்றியமைக்கப்படுகின்றன; இந்துத்துவ குருமார்கள் நீதித்துறையிலும், காவல்துறையிலும், உளவுத்துறையிலும், ராணுவத்திலும் கூட அமர்த்தப்படுகிறார்கள்.

மோடி இந்திய வரலாறு
விநாயகருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி, மகாபாரதத்தில் விண்வெளி நுட்பம் மற்றும் சம்புகர்கள் – மோடி வழங்கும் பாரதத்தின் கடந்தகாலம்.

விஸ்வ இந்து பரிஷத்தும், பஜ்ரங் தளமும் நாடெங்கிலும் நடத்திக்கொண்டிருக்கும் இந்த வித்தியாசமான கர் வாப்ஸி (வீடு திரும்புதல்) பற்றித்தான் நான் உங்களுடன் இன்று பேச விரும்புகிறேன். முன்பெல்லாம் அது சுத்தி (தூய்மை) இயக்கம் என்றே அழைக்கப்பட்டது. அதாவது, அசுத்தமானவர்களை தூய்மைப்படுத்தி அவர்களை மீண்டும் இந்த மதத்திற்கு திரும்பி அழைத்து வரும் செயல்பாடு. 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது அது. அதற்கும் மதத்திற்கும் உண்மையில் எந்தத் தொடர்பும் இல்லை. அது முழுக்க முழுக்க மக்கள் தொகை சம்பந்தப்பட்டது. இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்கான முயற்சி அது. இன்று அதை வாக்கு வங்கி என்று நாம் அழைக்கிறோம்.

ஆனால், இந்து சமுதாயம் என்ற ஒன்று இருந்ததே இல்லை. அது சமீபத்தில் உருவான கருத்துரு. “இந்து சமூகம் என்பதே ஒரு புனைவுதான் என்று உணர்வதுதான் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். சிந்து சமவெளியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்களைத் தங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக முகமதியர்கள் கொடுத்த பெயர் அது” என்று பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.

நூறு வருடங்களுக்கும் முன்பு சாம்ராஜ்யங்கள் தேசங்களாக மாறிய போதும் மன்னர்களுக்குப் பதிலாக பிரதிநித்துவ அரசியல் உருவான போதும்தான் இந்த வாக்கு வங்கிகளை ஏற்படுத்தும் வழக்கம் உண்டானது. பிரதிநித்துவ அரசியல், எண்ணிக்கையைப் பற்றிய ஒரு புதிய கவலையை உருவாக்கியது. தாம்தான் பெரும்பான்மை என்பதை நிறுவ ஆதிக்க சாதிகள் மிகவும் பிரயத்தனப்பட்டன. இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் அதன் பிறகுதான் அவ்வாறு செய்யத் தொடங்கினார்கள். அது வரை சாதியே அவர்களது அடையாளமாக இருந்தது. மக்கள் தொகை பற்றிய கவலை உருவாகும் வரை, லட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள், சாதியின் கொடுங்கரங்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ள இஸ்லாத்துக்கும், கிறிஸ்துவத்துக்கும், சீக்கிய மதத்திற்கும், பௌத்தத்திற்கும் மாறியது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

ஆனால், மக்கள்தொகை பற்றிய கவலை உண்டானவுடன், அவர்கள் யாருடைய தொடுதலை தவிர்த்தார்களோ, யாருடையஉணவை ஏற்றுக்கொள்ள மறுப்பார்களோ, யாருடைய வீடுகளுக்குச் செல்ல மாட்டார்களோ அந்த நாலரை கோடி ‘தீண்டத்தகாதவர்களும்’ இந்துக்கள்தான் என்று முடிவு செய்துவிட்டார்கள். ஒரு பெரிய பிரச்சாரம் தொடங்கியது – சாதிஅமைப்புக்கு எதிராக அல்ல; அதன் சொத்து உரிமை பற்றி அல்ல; ஆனால், தீண்டாமைக்கு எதிராக தொடங்கியது. தீண்டத்தகாதவர்களை இந்து மதத்திற்குள் வைத்துக்கொள்வதுதான் அதன் நோக்கம்.

பிறகு, ஆரிய சமாஜ் ’தூய்மை’ இயக்கத்தைத் தொடங்கியது. அதைத்தான் தற்போதைய அரசு மிகப்பெரிய அளவில் மறு அறிமுகம் செய்ய திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.

சவர்ண பிரச்னை இதுதான்: பெரிய வீட்டுக்குள் அழைத்து வந்த பிறகு அவர்களை எப்படி தனிமைப்படுத்தி வைப்பது? வேலைக்காரர்களுக்கான குடியிருப்பிலா? இந்து பெரும்பான்மையை உருவாக்கும் அதே நேரம் சாதித் தூய்மையை எப்படி பாதுகாப்பது? சாதி அமைப்பை தூக்கிப்பிடித்துக் கொண்டே தீண்டாமை பற்றி இவர்கள் வடிக்கும் முதலைக்கண்ணீரின் நோக்கத்தை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்
பாபாசாகேப் அம்பேத்கர் இவற்றையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே கண்டுணர்ந்து கோபத்தோடும், வெறுப்போடும், அறிவு வலிமையோடும் நிராகரித்தார்.

நவீன அரசியல்வாதிகளில் மிகச் சிறந்தவர் என்று நான் நம்பும் பாபாசாகேப் அம்பேத்கர் இவற்றையெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே கண்டுணர்ந்து கோபத்தோடும், வெறுப்போடும், அறிவு வலிமையோடும் நிராகரித்தார். இது எல்லாம் அவருடைய எழுத்தில் இருக்கின்றன.

ஆனால், இன்று, பா.ஜ.க தலைவர்கள் வெட்கமே இல்லாமல் பாபாசாகேப் அம்பேத்கரின் படங்களையும் சிலைகளையும் தினமும் திறந்து கொண்டிருக்கிறார்கள். அவர் மீதான அன்பை வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையான ஆர்கனைசர் அவரை தனது முகப்பு அட்டையில் பிரசுரித்திருக்கிறது. அவரைத் தொழுவதாக ஏமாற்றும் அதே நேரம் பாபாசாகேபின் அரசியலை அடித்துக் கூழாக்கி அவரை இந்துவின் சின்னமாக கட்டமைக்கிறார்கள். கடும் பயத்தில் கிறிஸ்துவர்கள் வாழும் கந்தமால், பஸ்தர் போன்ற இடங்களில் கிறிஸ்துவ சமூகம் மீது அவர்கள் நடத்தும் கொலைவெறித் தாக்குதல்கள், தேவாலயங்களை எரிப்பது, கன்னியாஸ்திரிகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவது எல்லாம் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறச் சொல்லி அம்பேத்கர் சொன்னதை செய்த தலித்துகள் மீதான தாக்குதலே.

இன்று கொடுமை என்னவென்றால், தலித் கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் ’கர் வாப்சி’ நிகழ்வில் பங்கு கொள்ள அவர்கள் தரும் ஊக்கம், எதற்காக அம்பேத்கர் பாடுபட்டாரோ அந்த இட ஒதுக்கீடுதான். மதம் மாறியதால் இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியற்றவர்களாகிவிட்ட அவர்களை அந்த ஆசை வார்த்தையைச் சொல்லியே மீண்டும் இந்து மதத்திற்குள் அழைத்து வர முனைகிறார்கள். அம்பேத்கரின் சிந்தனைகளைத் திரித்து அவருக்கு எதிராக, அவர் நம்பியவற்றுக்கு எதிராக ஒரு கத்தியாக இன்று பயன்படுத்தப் பார்க்கிறார்கள். அவரது மக்களின் வறுமையும் பாதுகாப்பற்ற நிலையும் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியா ஒரு வல்லரசு என்று நமது தலைவர்கள் சொல்கிறார்கள். இந்த வல்லரசில்தான் 80 கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான பணத்தைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தப் பணத்தில் ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழ முடியுமா? நிறைய பேர் ஆப்ரிக்கா வறுமையான கண்டம் என்றும் இந்தியா பணக்கார நாடென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆப்ரிக்காவிலுள்ள ஏழை நாடுகளின் ஒட்டுமொத்த ஏழை மக்களை கணக்கிட்டால்கூட அதை விட அதிகமான ஏழை மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

ஊட்டச்சத்து குறைபாடு
உலகின் மிக அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் வாழ்வது நமது நாட்டில்தான்.

உலகின் மிக அதிகமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் வாழ்வது நமது நாட்டில்தான். அதே நேரம், விரல்விட்டு எண்ணக்கூடிய சில கோடீஸ்வர தொழிலதிபர்கள் லட்சக்கணக்கான ஏழைகளிடம் இருக்கும் பணத்தை விட அதிக சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். உலகின் மிக அவமானகரமான, சமநிலையேயில்லாத ஒரு சமுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மற்ற நாடுகளைப் போல அல்லாமல் நமது நாட்டில் இந்த வேறுபாடு, இந்து சமூகத்தின் புனிதமான அனுமதியோடு நிறுவனப்படுத்தப்பட்டிருக்கிறது.

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான பணத்தில் வாழும் 80 கோடி பெரும்பான்மை மக்கள், அணைகள், சுரங்கங்கள், சிறப்பு மண்டலங்கள் போன்ற மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களால் தங்கள் வாழ்நிலங்களிலிருந்து துரத்தப்பட்ட லட்சக்கணக்கான பெரும்பான்மை மக்கள், ஊட்டச்சத்து குறைவுள்ள குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், வீடற்ற மக்கள், நகரங்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்கள், சிறைகளில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் எல்லோரும் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் இப்போது இஸ்லாமியர்கள். வன்முறை நிறைந்த நமது நாட்டில் கலவரங்களில் கொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்களே.

தேசிய குற்ற ஆவண மைய விவரங்களின் படி, ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் தலித் அல்லாத ஒருவர், ஒரு தலித் மீது வன்முறையை செலுத்துகிறார். ஒவ்வொரு வாரமும் 4 தலித் பெண்கள் பிற சாதியினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள். 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள்.

தில்லியின் கூட்டு பாலியல் வல்லுறவு கொலை சம்பவம் நிகழ்ந்த 2012-ல் மட்டும் 1,574 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். (தலித்துக்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கங்களிலும் மற்ற குற்றங்களிலும் வெறும் 10 சதவீதம் மட்டுமே ரிப்போர்ட் செய்யப்படுகின்றன). 651 தலித்துகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அது பாலியல் குற்றம் மற்றும் கொலைகளின் எண்ணிக்கை மட்டுமே. நிர்வாணப்படுத்தி தெருக்களில் இழுத்துச் செல்வது, மலத்தைத் திணிப்பது, நிலத்தைஅபகரிப்பது, சமூக புறக்கணிப்பு, குடிநீர் தராமல் இருப்பது எல்லாம் இந்த எண்ணிக்கையில் அடங்காதவை.

இந்து மதம் கொடூரங்களின் கூடாரம்
“தீண்டாதவர்களைப் பொறுத்தவரையில் இந்து மதம் கொடூரங்களின் கூடாரம்.”

பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது போல: “தீண்டாதவர்களைப் பொறுத்தவரையில் இந்து மதம் கொடூரங்களின் கூடாரம்.”ஆனால் வன்முறை என்பது குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல்களோடு நின்றுவிடுவதில்லை. அது இந்திய தேசம் என்கிற கற்பிதத்தில் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 7 -ம் தேதியன்று ஆந்திர மாநிலத்தின் சிறப்பு காவல்படை 20 பேரை ரத்த வெறியோடு கொன்றது; யாரும் கைது செய்யப்படவில்லை. ஹாஷிம்புராவில் 42 இஸ்லாமியர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் காவல்துறையினர் விடுதலை செய்யப்பட்டது போல, கீழ்வெண்மணி போல, பிற தலித் படுகொலை வழக்குகள் போல அனேகமாக இந்தப் படுகொலைகளைச் செய்த சிறப்புக் காவல்படையினர் மீதும் எந்த நடவடிக்கையும் இருக்காது. அதே நாளில் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு வாரங்கல்லிலிருந்து ஹைதரபாத்துக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து இஸ்லாமிய கைதிகளை சுட்டுக் கொன்றது காவல்துறை. பிறகு கொல்லப்பட்ட மக்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது!!

இந்தியா இறையாண்மை கொண்ட அரசாக மாறி கடந்திருக்கும் 67 வருடங்களில், உள்நாட்டில் அரசியல் பிரச்னைகளைக் கையாள இந்திய ராணுவம் அனுப்பபடாத வருடம் என்று ஒன்று கூட இல்லை. காஷ்மீர், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், ஹைதராபாத், கோவா, தெலுங்கானா, அசாம், பஞ்சாப், மேற்கு வங்கம் என்று பல மாநிலங்களுக்கும் ராணுவத்தினர் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இப்போது ஆதிவாசி மக்கள் வாழும் மத்திய இந்தியாவிற்கு நிலத்தை சுரங்க நிறுவனங்களுக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கும் கையளிக்க ராணுவம் அங்கு செல்ல தயாராக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், லட்சக்கணக்கானவர்கள் துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தேசத்தின் எதிரிகள் யார்? யோசித்துப் பாருங்கள். அவர்கள் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், ஆதிவாசிகள், சீக்கியர்கள் மற்றும் தலித்துகள். எப்போதும் தனது சிறுபான்மையினரோடு அவர்ணர்களோடு போர் புரிந்துகொண்டிருக்கும் ஒரு சவர்ண இந்து தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால், இந்தியா சிறுபான்மையினரின் தேசம் – இந்த மேட்டுக்குடி சிறுபான்மை (பார்ப்பனரும் பனியாக்களும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே) எப்படி தங்களது சலுகைகளையும் அதிகாரத்தையும் நிலை நிறுத்திக்கொள்ள முடிகிறது? காலனிய ஆட்சியாளர்களைப்போல மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரைத் திருப்பிவிடுவதன் மூலம்தான். காஷ்மீரில் சண்டையிட நாகாக்களை அனுப்புவதன் மூலம், காஷ்மீரிகளை சட்டிஸ்கருக்கு அனுப்புவதன் மூலம், தமிழர்களை அசாமுக்கு அனுப்புவதன் மூலம், இடைநிலைச் சாதியினரை தலித்துகளுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம், தலித்துகளை இஸ்லாமியர்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம்.

1960-களிலும் 70-களிலும் உங்கள் கட்சியின் முன்னோடியான ’தலித் பாந்தர்கள்’ மற்றும் நக்சலைட்டுகள் போன்ற எதிர்ப்பியக்கங்கள் நீதி பற்றி, புரட்சி பற்றி பேசினார்கள். அவர்கள் நில சீர்திருத்தங்களைக் கோரினார்கள். உழுபவருக்கே நிலம் என்பது அவர்களது கோஷமாயிருந்தது. இன்று நீதி என்னும் சிந்தனை நமது மனங்களிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது அதற்கு பதில் மிக குறுகிய கருத்தாக்கமான மனித உரிமை வந்தமர்ந்திருக்கிறது. கொஞ்ச நஞ்ச நிலச் சீர்திருத்தங்களும் இப்போது திரும்பப் பெறப்படுகின்றன. மாவோயிஸ்டுகள் போல அதி தீவிர புரட்சிக் குழுக்கள் கூட மக்களிடம், பெரும்பாலும் ஆதிவாசிகளிடம், இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலமும் தனியார் நிறுவனங்களுக்கு போய்விட கூடாது என்றே காடுகளில் போராட வேண்டியிருக்கிறது. இன்று தலித் மக்களில் 70 சதவீதம் பேர் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். பஞ்சாப், பீஹார், ஹரியானா, கேரளா போன்ற மாநிலங்களில் இது 90 சதவீகிதமாக இருக்கிறது. நிலமற்ற லட்சக்கணக்கான இந்த மக்கள் இன்று நாட்டில் நடக்கும் முற்போக்கான தீவிர விவாதங்களில்கூட பங்கேற்க முடிவதில்லை.

இன்று நமது நாட்டை தம் வசமாக்கியிருக்கும் நிறுவனங்கள் யாருக்குச் சொந்தமானவை? நிலம் மட்டுமல்லாமல் காடுகள், மலைகள், ஆறுகள், நீர், மின்சார ஆற்றல் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாகியிருக்கிறது. கோடீஸ்வர தொழிலதிபர்களான – முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனம்), லக்‌ஷ்மி மிட்டல் (ஆர்சிலார் மிட்டல்) திலீப் சங்கவி (சன் பார்மசூடிக்கல் குழுமம்), ரூயா சகோதரர்கள் (ரூயா குழுமம்) கே.எம். பிர்லா (ஆதித்யா பிர்லா குழுமம்), சாவித்ரி தேவி ஜிண்டால் (ஜிண்டால் குழுமம்), கௌதம் அதானி (அதானி குழுமம்), சுனில் மிட்டல் (பாரதி ஏர்டெல்) ஆகியோர்தான் துறைமுகங்களை, சுரங்கங்களை, எண்ணெய் வயல்களை, எரிவாயு வயல்களை, கப்பல் நிறுவனங்களை, மருத்துவ நிறுவனங்களை, தொலைபேசி நிறுவனங்களை, பெட்ரொகெமிக்கல் ஆலைகளை, அலுமினிய ஆலைகளை, செல்பேசி நிறுவனங்களை, தொலைக்காட்சிகளை, காய்கறிக் கடைகளை, பள்ளிக்கூடங்களை, சினிமா கம்பெனிகளை, ஸ்டெம் செல் முறைகளை, மின்சார அமைப்புகளை, சிறப்பு பொருளாதார நிறுவனங்களை சொந்தமாக வைத்து நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று பார்ப்பனர்களாகவோ அல்லது பனியாக்களாகவோ இருக்கிறார்கள்.

21-ம் நூற்றாண்டின் மூலதனம்
சொத்து, அறிவு, சலுகைகள் எல்லாம் வாரிசுரிமை அடிப்படையில்தான்.

இன்று உலகெங்கிலும் பரபரப்பாக பேசப்படும் புத்தகமான Capital in the 21st Century என்கிற தனது புதிய புத்தகத்தில் ஃபிரெஞ்ச்எழுத்தாளரும் பேராசிரியருமான தாமஸ் பிகெட்டி அமெரிக்காவில் ’தங்க முலாம் யுகம் ’ என அழைக்கப்பட்ட 19 -ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இருந்ததையொத்த பொருளாதார சமநிலையின்மை இப்போதும் உலகில் உருவாகி வருவதை சுட்டிக்காட்டியிருக்கிறார். வங்கிகளும் நிறுவனங்களும் கோலோச்சும் இந்த காலகட்டத்தில் கூட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் சமமற்ற தன்மையை உருவாக்கும் எந்திரமாக இருப்பது குடும்பச் சொத்துக்களும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு (வாரிசுகளுக்கு) அவை கை மாறுவதும் என்பதை வலுவான ஆதாரங்களோடு நிறுவியிருக்கிறார் பிகெட்டி. இதன்படி பார்த்தால் சொத்து, அறிவு, சலுகைகள் எல்லாம் வாரிசுரிமை அடிப்படையில்தான் என்கிற கோட்பாட்டைப் புனிதப்படுத்தியிருக்கும் இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய்.

மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும் சிறுபான்மையினரான பார்ப்பனர்களும் பனியாக்களும் எப்படி தங்களது சலுகைகளை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள் என்கிற கேள்விக்கு மீண்டும் வருவோம். முரட்டு அதிகாரம் என்பது ஒரு விஷயம்.

பெரும்பாலான பனியா குடும்ப நிறுவனங்கள்தான் இன்று பல ஊடக நிறுவனங்களுக்கு சொந்தக்காரர்களாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றன. எது செய்தி, எது செய்தியில்லை என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். ஊடகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒரு தேசத்தின் சிந்தனையைக் கட்டுப்படுத்தி உருவாக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள்.

இந்திய ஊடகங்கள்
பெரும்பாலான ஊடகங்கள் பார்ப்பனர்கள், பனியாக்கள் அல்லது பிற செல்வாக்கான சாதிகளிலிருந்தே செய்தியாளர்களை பணிக்கு அமர்த்துவதாக தரவுகள் சொல்கின்றன.

நான்கு மிக முக்கியமான ஆங்கில நாளிதழ்களில் மூன்றை நடத்துவது வைசியர்கள். நான்காவது பார்ப்பன குடும்ப நிறுவனம்.

  • டைம்ஸ் ஆஃப் இந்தியா, டைம்ஸ் நௌ போன்ற ஊடகங்களை நடத்தும் நிறுவனமான பெனட் கோல்மேன் நிறுவனம் ஒரு ஜெயின் குடும்பத்தால் (பனியா) நடத்தப்படுகிறது.
  • இந்துஸ்தான் டைம்ஸை நடத்துவது பார்டியா (மார்வாரி பனியாக்கள்).
  • இந்தியன் எக்ஸ்பிரசை நடத்துவதும் மார்வாரி பனியாக்களான கோயங்கா.
  • தி இந்துவை நடத்துவது பார்ப்பன குடும்ப நிறுவனம்.
  • இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகும் ’தைனிக் ஜாக்ரன்’ இந்தி நாளிதழை நடத்துவது (கிட்டத்தட்ட 5.5 கோடி சர்க்குலேஷன்) கான்பூர் பனியாக்களான குப்தாக்கள்.
  • 1.75 கோடி சர்குலேஷன் கொண்ட தைனிக் பாஸ்கர் என்கிற செல்வாக்கான ஊடகத்தை நடத்துவதும் அகர்வால்கள் என்கிற பனியாக்கள்தான்.
  • 27 முக்கியமான தேசிய மற்றும் பிராந்திய தொலைகாட்சிகளில் அதிகாரம் செலுத்துமளவுக்கு பங்குகளை வைத்துக்கொண்டிருக்கிறது முகேஷ் அம்பானி என்கிற குஜ்ராத்தி பனியா நடத்தும் ரிலையன்ஸ் நிர்வாகம்.
  • இந்தியாவின் மிக பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ’ஜீ’ தொலைக்காட்சியை நடத்துவதும் சுபாஷ் சந்திரா என்கிற பனியா.

பெரும்பாலான ஊடகங்கள் பார்ப்பனர்கள், பனியாக்கள் அல்லது பிற செல்வாக்கான சாதிகளிலிருந்தே செய்தியாளர்களை பணிக்கு அமர்த்துவதாக தரவுகள் சொல்கின்றன. வெகுஜன ஊடகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய செய்தியாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். தலித்துகளும் ஆதிவாசிகளும் அந்த எல்லைக்குள்ளேயே இல்லை.

இட ஒதுக்கீட்டின் கொள்கையை வேண்டுமென்றே திசைதிருப்பி, நீதித்துறை, அதிகார வர்க்கம், அறிவுத்துறை எல்லாவற்றிலும் இந்த நிலைமையை ஏற்படுத்திவிட்டார்கள். தலித்துகள் மிக அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இடம், அரசாங்க நகராட்சிகள்தாம். பெருக்குபவர்களில் 90 சதவீதம் பேர், வால்மீகி சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த மிகப்பெரிய வல்லரசில்தான், இன்னமும் பதின்மூன்று லட்சம் பெண்கள் தங்களது தலைகளின் மீது மலக் கூடைகளை சுமந்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

ஜனநாயகமும் நவீன தாராள பொருளாதாரச் சந்தையும் சாதியை நவீனமயப்படுத்தியிருப்பதோடு அல்லாமல் அதன் பிடியை மேலும் இறுக்கியிருக்கிறது. இருந்தாலும் இந்தியாவின் மிகச்சிறந்த அறிவுஜீவிகள், வரலாற்றாசிரியர்கள், வளர்ச்சிபற்றி ஆராயும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவர்களுடைய எழுத்துகளிலும் ஆய்வுகளிலும் ஒன்று சாதியை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள் அல்லது குறைந்த அளவில் எழுதுகிறார்கள். இது பார்க்காமல் தவிர்ப்பது என்கிற பெரிய திட்டம். திரைச்சீலைகளை விலக்கி இந்த பெரிய ஜனநாயகத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உலகிற்கு காட்ட வேண்டியது நம் கடமை.

அடியில் தேங்கியிருக்கும் சாதி அமைப்பின் இரும்புப்பிடி குறித்து எப்போதாவது வெகுஜன ஊடகங்களும் அறிவுலகத்தினரும் உரக்கப் பேசுகிறார்கள் என்றால் அதுவும் மிக வித்தியாசமான வகையில் என்றால் அது தேர்தல்காலகட்டத்தில்தான். அப்போதுதான் எல்லா அரசியல் கட்சிகளும் அதன் சவர்ண தலைவர்களும் தலித் மற்றும் இடைச்சாதிகளின் வாக்குகளுக்கு போட்டியிடுகிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் சாதி பிரச்னை மீண்டும் அறிவுலக முட்டாள்தனங்களுக்கு அடியில் போய் தேங்கிக்கொள்கிறது. அம்பேத்கர் சாதியை எதிர்த்ததால் இயல்பாகவே அவர் இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானவர் என்று மிக சீரியசாக ஒரு வெகுஜன ஊடகவியலாளர் வாதிட்டு நான் கேட்டிருக்கிறேன்.

பொருளாதார ஊழல்கள் குறித்து பேசுவதும் அவற்றை பிரச்னையாக்குவதும் இப்போதெல்லாம் மிக நாகரீகமான ஒரு விஷயம். ஆனால் இந்தப் பிரச்சனை குறித்து பெரும் கவலை கொள்ளும் பலர் அறிவுலக நேர்மையின்மை பற்றி கவலை கொள்வதில்லை. இந்த நாட்டில் பலர் தொடர்ந்து கடைப்பிடிக்கும் நினைத்துப் பார்க்க முடியாத தார்மீக ஊழல் பற்றி கவலைப்படுவதில்லை. நீதி, அடையாளம், சமூகம் பற்றி புத்தகங்களும் ஆய்வுகளும் எழுதும் மிகச்சிறந்த அறிவுஜீவிகளும் வரலாற்றாசிரியர்களும், மிகக் குரூரமான, ஒடுக்குமுறையை ஏவும் சமூகப் படிநிலையான சாதி என்கிற கேள்வியை முழுவதும் புறக்கணிக்கிறார்கள்.

வரலாற்றில் மிக மோசமான விந்தைகளில் ஒன்று என்னவென்றால் இந்த அறிவுலக நேர்மையின்மைதான். சாதி அமைப்பில் நம்பிக்கை கொண்ட, தொழிலாளர்களிடம், பெண்களிடம், ஆப்ரிக்க கறுப்பினத்தவரிடம் தொடர்ந்து மோசமாக நடந்து கொண்ட மோகன்தாஸ் காந்தியை உலகின் மிக உயர்ந்த மகானாகவும், ஏழைகளின் நண்பனாகவும், ஆப்ரிக்க அமெரிக்கர்களின் நாயகனாகவும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோர் ஏற்றுக்கொண்ட தலைவராகவும் நமது தேசத்தின் தந்தையாகவும் மாற்றியிருக்கிறது.

இப்படிப்பட்ட பொய்களின் மீது நமது நாட்டின் அடித்தளம் எழுப்பப்படுவதை நாம் அனுமதிக்கமுடியாது. பாபாசாகேப் அம்பேத்கருக்கு மட்டுமே அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போதும் காந்தியை எதிர்க்கும் துணிவும் அறிவுத் திண்மையும் இருந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயப் பாடமாக்கப்பட்டிருக்க வேண்டிய அம்பேத்கர்-காந்தி விவாதம் மிகத் திறமையாக மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. இப்போது தாராள அறிவுஜீவிகளும் வரலாற்றியலாளர்களும் அவர்கள் ஒருசேர பயணித்தவர்கள் என்றும், இடையிடையே நட்புரீதியான முரண்கள் இருந்தன என்றும் முன்னிறுத்த முனைகிறார்கள். இது முழுக்க முழுக்கப் பொய். அம்பேத்கரின் மரபு இப்படி பொய்மைப்படுத்தப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டியது நமது அவசர கடமையாகும்.

பாபாசாகேப் அம்பேத்கர்
பாபாசாகேப் அம்பேத்கருக்கு மட்டுமே அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போதும் காந்தியை எதிர்க்கும் துணிவும் அறிவுத் திண்மையும் இருந்தது.

எனது உரையை முடிக்கும் முன்பு நான் சொல்ல விரும்புவதெல்லாம், சாதிக்கு எதிரான இந்த போராட்டத்தை நாம் தொடர வேண்டுமெனில் பார்ப்பனீயத்துக்கும், முதலாளித்துவத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் உள்ள தொடர்பை நாம் தொடர்ச்சியாகவும் அனுபவபூர்வமாகவும் நிறுவ வேண்டும். உலகெங்கிலும் அரசியல் கூட்டணிகளை உருவாக்க வேண்டும்.

வேறு எப்படி தென்னாப்பிரிக்காவில் நிற வெறுப்பு (பெயரளவிலாவது) முடிவுக்கு கொண்டு வரப்பட்டது? பாகுபாட்டின் மிக மோசமான வடிவத்தைப் பின்பற்றி வரும் இந்த சமூகத்தை முழுமையான வெறுப்புணர்வோடு உலகம் பார்க்க வேண்டும். இன்று இந்தியாவுக்கு வெளியே வாழும் பலருக்கு சாதி என்றால் என்னவென்று தெரியாது. அவர்களைப் பொறுத்தவரையில் அது இந்து மதத்தோடு, நாகரீகமான சைவ உணவுப் பழக்கத்தோடு, யோகாவோடு எல்லாவற்றுக்கும் மேலாக காந்தியிசத்தோடு புனிதமான தொடர்புடையது. சாதியை அழிக்கும் பணிக்கு நாம் ஒவ்வொருவரும் நமது திறமையையும் ஆற்றலையும் முழுமையாக அளிக்க வேண்டும்.

நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் அரசியல் ரீதியான ஒற்றுமையைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் சாதிய வேறுபாடுகளை வலுப்படுத்திவிடாமல் எப்படி சாதியை எதிர்த்துப் போராடுவது என்பதுதான். இது மிகவும் சிக்கலான போராட்டம். தனிமைப்படுவதை ஊக்குவிக்கும், ஒற்றுமைக்கான சாத்தியங்களை உருக்குலைக்கும் சாதி எதிர்ப்புப் போராட்டத்தின் நோக்கத்தையே முறியடிக்கும் அதி தீவிர தோரணைகொண்ட நபர்களை நாம் பார்க்கலாம். இந்த போராட்டத்தில் உங்கள் நண்பர்கள் யார் உங்கள் எதிரிகள் யார் என்று கண்டடைவது மிக மிகக் கடினமான ஒரு விஷயம் என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதைச் செய்ய வேண்டும். அதுதான் பாபாசாகேப் அம்பேத்கரின் மிகப்பெரிய ஆற்றல்களில் ஒன்று.

நாம் ஒரு இணைப்புச் சங்கிலியை உருவாக்கியாக வேண்டும். நிலங்களிலிருந்து, தொழிற்சாலைகளிலிருந்து, குடிசைப்பகுதிகளிலிருந்து, சிறு நகரங்களிலிருந்து, பள்ளி, பல்கலைக்கழகங்களிலிருந்து, பாடசாலைகளிலிருந்து, இலக்கியத்திலிருந்து சினிமாவிலிருந்து எழும் உடைக்கவியலாத சங்கிலியை நாம் உருவாக்க வேண்டும். விழிப்புணர்வு, புரிந்துணர்வு சோர்வடையாத செயல்பாடு என்னும் சங்கிலி அது.

அருந்ததி ராய்
படம் : நன்றி thehindu.com

இவ்வாறு என்னை கௌரவப்படுத்தியதற்கு மீண்டும் எனது நன்றி.

இது தொடர்பான செய்திகள்

ஆரவல்லியை கூறுபோட்டு விற்கும் பா.ஜ.க !

0

ரியானா அரசு தனது மாநிலத்திற்கு உட்பட்ட, தில்லியை ஒட்டியுள்ள ஆரவல்லி மலைப் பகுதியைக் காடு அல்லவென்று வரையறுத்து அறிவித்துள்ளது. தற்போது உள்ள இந்திய வனச் சட்டங்களின் அடிப்படையில் இந்தப் பகுதிகளில் வன மேம்பாட்டுப் பணிகளைத் தவிர வேறு ‘வளர்ச்சிப் பணிகள்’ எதையும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா அரசின் முடிவானது, ‘வளர்ச்சி நாயகர்களான’ ரியல் எஸ்டேட் கும்பல் காட்டுக்குள் இறங்க வகை செய்துள்ளது.

குஜராத்தின் மேற்குப் பகுதியில் தொடங்கி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்கள் வழியே தில்லியின் குர்காவ்ன் வரை நீளும் ஆரவல்லி மலைத் தொடர் இந்தியாவின் மிகப் பழமையான மலைத் தொடர்களில் முதன்மையானதாகும். 150 கோடி ஆண்டுகள் பழைமையான இம்மலைத் தொடர், 5 கோடி ஆண்டுகள் வயதான இமைய மலைத் தொடர்களோடு ஒப்பிட்டால் இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

சிலிக்கான் உள்ளிட்ட அரியவகைத் தனிமங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள ஆரவல்லி மலைத் தொடர் பல்வேறு பறவை இனங்களின் இல்லமாகவும் திகழ்கிறது. ராஜஸ்தானிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் மணற் புயலைத் தடுப்பதோடு தில்லியை பாலைவனமாகாமல் காத்து மக்கள் வசிக்கத் தகுதியுள்ள பகுதியாக வைத்திருக்கும் ஆரவல்லி மலைத் தொடர் தான் தில்லியின் நிலத்தடி நீருக்கான முக்கியமான ஆதாரம்.

ஆரவல்லி மலைச் சிகரங்கள் பல ஆண்டுகளாக சட்டவிரோத கனிமவளக் கொள்ளையால் மொட்டையடிக்கப்பட்டு வந்த நிலையில் 2002 அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து தற்காலிகமாக காப்பாற்றப்பட்டது. எனினும், உச்ச நீதிமன்ற உத்தரவும் காகிதத்தில் தான் இருந்ததே ஒழிய, எதார்த்தத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆசியோடு கொள்ளை தொடர்ந்தது.

ஆரவல்லி மலைக் காடுகளை சூறையாடியிருக்கும் சட்டவிரோத சுரங்கத் தொழில் (படங்கள் நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்நிலையில், உத்திரபிரதேசத்தின் நோய்டா மற்றும் ஹரியானாவின் குர்காவ்ன் பகுதிகள் தலைநகரோடு இணைக்கப்பட்ட பின் இந்தப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் கும்பல்களின் ஆதிக்கம் தலைதூக்கத் துவங்கியது. மலைப்பாங்கான பகுதிகளில் பண்ணை வீடுகள் அமைப்பது, நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் அமைப்பது மற்றும் கேளிக்கை விளையாட்டு மையங்களை  உருவாக்குவது பெரும் லாபம் கொழிக்கும் தொழில் என்பதால் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கண்களை ஆரவல்லி மலைத் தொடர் உறுத்திக் கொண்டேயிருந்தது.

இந்நிலையில் ஹரியானாவில் கடந்தாண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வென்று மனோகர் லால் கட்டர் முதல்வராகப் பொறுப்பேற்றார். இயற்கை வளங்களை கூறு கட்டி விற்பதிலும் காடுகளைக் கொன்றொழிப்பதிலும் தேர்ந்த அனுபவம் கொண்ட பாரதிய ஜனதாவுக்கு இந்த விசயத்தில் வேறு யாரும் பாடம் எடுக்க வேண்டிய தேவை எழவில்லை.

ஏற்கனவே இந்திய வனச் சட்டங்களைத் திருத்தும் முயற்சியில் மோடி தலைமையிலான மத்திய அரசு உள்ளது குறிப்பிடத்தக்கது. வனங்கள் என்பதற்கான வரையறை தங்களுடைய ஆக்கிரமிப்புக்கு இடைஞ்சலாக உள்ளதென தரகு முதலாளிகள் கருதுவதால் காடுகளுக்கான வரையறையையே திருத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு. ஏற்கனவே உள்ள சட்டத்தின் அடிப்படையில் காடுகளை மதிப்பிடுவதற்கு 6 அளவுகோல்களை சுற்றுச்சூழல் அமைச்சகம் பயன்படுத்துகிறது.

காட்டின் தன்மை, அதன் உயிரியல் வளம், வன விலங்குகள், காட்டின் அடர்த்தி, நிலத்தின் தன்மை, அதன் நீர்வள மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்தான், வனப்பகுதியில் சுரங்கத்தொழிலை அனுமதிப்பது அல்லது மறுப்பது என்பதை அரசு செய்து வருகிறது. இந்த 6 அளவுகோல்களிலிருந்து காட்டின் அடர்த்தி மற்றும் அதன் உயிரியல் வளம் என்ற இரு அளவுகோல்களையும் நீக்கி விட்டு, மீதமுள்ள நான்கு அளவுகோல்கள் அடிப்படையில் வனப்பகுதியை வரையறுப்பதற்கான விதிகளை உருவாக்கும் முயற்சியில் உள்ளது மோடி அரசு.

அதே போல காடு என்று வரையறை செய்யப்பட்ட பகுதிகளில் செயல்படுத்த உள்ள திட்டங்களுக்கு மலைவாழ் மக்களின் ஒப்புதல் தேவையில்லை என்றும் வன உரிமைச் சட்டத்தைத் திருத்த முயற்சிகள் நடக்கிறது. இது தொடர்பாக பிரகாஷ் ஜாவடேகர் தலைமையிலான சுற்றுச்சூழல் அமைச்சகத்தோடு பழங்குடி நல அமைச்சகம் முரண்பட்டுள்ளது என்ற செய்தி முதலாளித்துவ ஊடகங்களிலேயே வெளியாகியுள்ளது.

வன உரிமைச் சட்டம் திருத்தம்
காடு என்று வரையறை செய்யப்பட்ட பகுதிகளில் செயல்படுத்த உள்ள திட்டங்களுக்கு மலைவாழ் மக்களின் ஒப்புதல் தேவையில்லை என்றும் வன உரிமைச் சட்டத்தைத் திருத்த முயற்சிகள் நடக்கிறது

ஆர்.எஸ்.எஸ் காவாலிகளின் இரட்டை நாக்கு பற்றி தனியே விவரிக்கத் தேவையில்லை. பாரதம், சுதேசி என்று சொன்ன அதே வாயால் அந்நிய முதலீட்டையும் பன்னாட்டுச் சுரண்டலையும் வரவேற்றுப் பேசுமளவிற்கு அதற்கு கூச்ச நாச்சம் கிடையாது. ரிஷிகள் தவமிருந்த புனித வனங்கள் என்று ஆர்.எஸ்.எஸ் ஷாகாவில் பாடி பயிற்சி பெற்ற மோடி தான் தனது சொந்த மாநிலத்திலேயே வனங்களை அதானி குழுமத்திற்கு விருந்து வைத்துள்ளார்.

2008-09 காலகட்டத்தில் குஜராத்தின் கட்ச் பகுதியில் காடுகளைத் தவறாக வரையறுத்ததன் மூலம்  அதானி குழுமம் முறைகேடான வழியில் 58.64 கோடி ரூபாய் சுருட்ட வகை செய்து கொடுத்துள்ளார் மோடி என்கிறது சி.ஏ.ஜியின் அறிக்கை ஒன்று. கடந்த மார்ச் 31-ம் தேதி குஜராத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேற்படி சி.ஏ.ஜி அறிக்கையின் காகிதங்கள் அங்கிருந்து நேராக முதல்வரின் கழிப்பறைக்கு நடந்து செல்லுமா பறந்து செல்லுமா என்பதையெல்லாம் நாம் விளக்க வேண்டியதில்லை.

மோடியின் வளர்ச்சிப் பாதையை அடியொற்றி ஹரியானாவில் பதவிக்கு வந்துள்ள மகனோகர் லால், தனது தலைவரின் வளர்ச்சிப் பாதையில் தற்போது பீடு நடைபோடுகிறார்.

வளர்ச்சி – தொழில் வளர்ச்சி  என்று இவர்கள் சொல்வதெல்லாம் ஒட்டுமொத்தமாக முட்டுச் சந்துக்குள் மாட்டிக் கொண்டுள்ளது. 2008-ல் ஆரம்பித்த பொருளாதார பெருமந்தத்தின் தாக்கம் இன்னமும் விலகவில்லை. உற்பத்தித் துறை வளர்ந்து, பொருளுற்பத்தி பெருகி, அதை மக்கள் நுகர்ந்து – இந்த சுழற்சியின் மூலம் மூலதனம் பெருகுவது என்ற வழமையான வழிகள் அடைபட்டுள்ள நிலையில் முதலாளிகள் தப்பிக்க ஒரே மார்க்கமாக இயற்கை வளங்களே திகழ்கின்றன.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இயற்கை வளங்களை எந்தளவுக்கு சுரண்ட முடியுமோ அந்தளவுக்கு ஒட்டச் சுரண்டிக் கொழுப்பது ஒன்றே தங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற தீர்மானத்திற்கு மூலதனத்தின் அதிபதிகள் வந்து சில ஆண்டுகள் ஆகின்றன. இதன் விளைவைத் தான் நாம் கார்மாங்குடியிலும், தென் தமிழக கரையோரங்களிலும், மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட் மலைகளிலும், நியாம்கிரியிலும் காண்கிறோம். இங்கெல்லாம் என்ன நடக்கிறதோ அதே தான் ஆரவல்லி மலைத் தொடருக்கும் நடக்கிறது.

ஆரவல்லி மலைத்தொடர்
கார்மாங்குடியிலும், தென் தமிழக கரையோரங்களிலும், மதுரையைச் சுற்றியுள்ள கிரானைட் மலைகளிலும், நியாம்கிரியிலும் என்ன நடக்கிறதோ அதே தான் ஆரவல்லி மலைத் தொடருக்கும் நடக்கிறது.

தனது பொருளாதார கட்டமைப்பு நெருக்கடியில் இருந்து தப்ப இயற்கை வளங்களின் மேல் பாய்ந்து குதறுகிறது மூலதனம். ஓட்டுக்கட்சிகளும், அரசு நிர்வாக எந்திரமும் மூலதனத்தின் காலாட்படையாக சீரழிந்து கிடக்கிறார்கள். இவர்களை களத்தில் முறியடிப்பது ஒன்று தான் பொருளாதார மற்றும் பாரம்பரிய மதிப்பு மிக்க நமது இயற்கைச் செல்வங்களைக் காப்பாற்றுவதற்கு உள்ள ஒரே வழி.

– தமிழரசன்

இது தொடர்பான செய்திகள்

தடையை மீறி திருச்சி, தருமபுரி, புதுச்சேரியில் மே நாள் பேரணி

0

ஞ்சை, திருச்சி, கரூர், திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து திருச்சியில் மே தின பேரணி- ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம்
ஆளும் அருகதையற்ற அரசு கட்டமைப்பை வீழ்த்துவோம். மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

ஆளும் அருகதையற்ற அரசு கட்டமைப்பை வீழ்த்துவோம். மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!” என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

10 நாட்களுக்கு முன்பே காவல்துறையிடம் அனுமதி கோரியிருத்தோம். உரிய நேரத்தில் பதில் சொல்லாமல் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தனர். அனுமதி மறுப்புக்கு போலீசு கூறிய காரணம் தான் வேடிக்கையானது. “ஊர்வல பாதையில் மிகுதியான தொழிலாளர்கள் இருப்பதால் அனுமதி வழங்க இயலாது” என்று குறிப்பிட்டு இருந்ததைக் கண்டு அழுவதா?, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

இருப்பினும், உயர் அதிகாரிகளை சந்தித்து அனுமதி பெற முயற்சித்தோம். இதற்கு பொறுப்பான துணை ஆணையர், “திருச்சி மாநகரில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. இது குறித்து எவ்வித விவாதம் நடத்தவும் நான் தயாராக இல்லை” என திமிராக பதிலளித்தார்.

எனவே, தடையை மீறி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்து திட்டமிட்டவாறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

கடைசி நேரத்தில், “ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி தருகிறோம்” என காவல் துறை பேரம் பேசியது.

“பேரணி, ஊர்வலம் நடத்துவதற்கு குறைவாக எதையும் ஏற்க மாட்டோம்! தடைமீறி நடத்துவோம்!” என உறுதியாக தெரிவித்த பிறகு மே தினத்தன்று பகல் 3.30 மணிக்கு அவசர அவசரமாக நம்மிடம் விண்ணப்பம் வாங்கிக் கொண்டு அனுமதி தந்தனர்.

மே நாள்  பேரணி, ஆர்ப்பாட்டம்
“பேரணி, ஊர்வலம் நடத்துவதற்கு குறைவாக எதையும் ஏற்க மாட்டோம்! தடைமீறி நடத்துவோம்!”

பேரணி 4.30 மணிக்கு மரக்கடை எம்.ஜி.ஆர் சிலை அருகிலிருந்து எழுச்சியுடன் துவங்கியது. பெண்கள் விடுதலை முன்னணியின் திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் நிர்மலா உரையாற்றி துவங்கி வைத்தார். பேரணி முன்னதாக சிறுவர் சிறுமியர், பெண் தோழர்கள் கலந்து கொண்ட சிலம்பாட்டம் நடத்தியது பார்ப்பவர்களின் புருவத்தை உயர்த்தியது. அதைத் தொடர்ந்து தோழர்களின் பறை இசை விண்ணதிர செய்தது.

சிலம்பம், பறையிசை, பாடல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழமை அமைப்புகளின் பெரிய அளவிலான கொடிகளை செஞ்சட்டை அணிந்து தோழர்கள் ஏந்தியும், அரிவாள், சுத்தியல் சின்னத்தையும் ஏந்தி நடைபோட்ட காட்சி அனைவரையும் பரவசப்படுத்தியது. மேலும் மே தின தியாகிகளின் 8 படங்கள் அடங்கிய பதாகைகள் பிடித்து வரப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஊர்வலத்தில், “அரசு கட்டமைப்பின் உறுப்புகளான சட்டமன்றம், பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை, தேர்தல் முறை இவை சீரழிந்து நிலைகுலைந்து மக்களுக்கு எதிரான சக்திகளாக மாறிவிட்டன” என்பதையும்”, “மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மக்களே தங்களின் அதிகார அமைப்புகளை நிறுவுவது ஒன்றே வழி” என்பதையும் விளக்கும் வகையில் முழக்கங்கள் எழுப்பட்டன. போலீசு, நீதித்துறையையும் அம்பலப்படுத்தி எழுப்பட்ட முழக்கங்கள் அனைவரையும் ஈர்த்தன.

பேரணி தொடங்கும் போது நம் தோழர்கள் போல சிகப்புச் சீருடை அணிந்து கொண்டு உளவு பிரிவு காவலர் கூட்டத்திற்க்குள் நுழைந்து பேரணியில் கலந்து கொண்டவர்களை மிக அருகில் வந்து வீடியோ எடுத்து கொண்டிருந்தார். இதை கவனித்த தோழர்கள் அவர் அருகில் சென்று விசாரித்ததில் முதலில் தயங்கிய அவர் பிறகு தான் உளவு பிரிவை சேர்ந்தவர் என்பதை ஒத்துக்கொண்டார்.

சிவப்பு சட்டை போட்ட உளவுத்துறை போலீசின் கேவலமான செயல்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உடனே, பேரணியில் கலந்து கொண்ட தோழர்களிடம் சத்தமாக “இவர் நமது தோழர் அல்ல, உளவுப் பிரிவை சேர்ந்தவர் என்ன ஒரு கேவலமான செயல் பாருங்கள். இது தான் காவல் துறையின் யோக்கியதை” என்று அம்பலப்படுத்தி அந்த காவலரையும் எச்சரித்து அனுப்பினார்கள்.

ஊர்வலம் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், ஒழங்குடனும் நடைபெற்றது. சாலை இருமருங்கிலும், நுற்றுக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். மாலை 6.30 மணிக்கு சத்திரம் (திருச்சி) பேருந்து நிலையம் அருகே சிந்தாமணி அண்ணாசிலை அருகில் பேரணி நிறைவுற்று ஆர்ப்பாட்டம் துவங்கியது.

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.முவின் இணைப்பு சங்கமான பாய்லர் பிளான்ட் ஒர்க்கஸ் யூனியன் சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் சுந்தர்ராஜ் தலைமை ஏற்று நடத்தினார்.

“130 ஆண்டுகளுக்கு முன் சிக்காகோ நகரத்தில் உயிர்தியாகம் செய்த மே தின தியாகிகளின் வரலாறு தொடங்கி ஏராளமான போராட்டங்களால் வென்றேடுக்கப்பட்ட உரிமைகள் இன்று பறிபோய்க் கொண்டிருக்கின்றன” என சுட்டிக்காட்டி, “இந்த சுரண்டல் சமூக அமைப்பை ஒழித்து கட்ட தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

அடுத்து பு.மா.இ.மு திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஆசாத், “கல்வி, மருத்துவத்தில் அரசு தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழித்து தனியார் கொள்ளைக்கு துணைபோகும், இந்த அரசமைப்பை வீழ்த்த வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

அவரைத் தொடர்ந்து வி.வி.மு பட்டுக்கோட்டை வட்ட செயலர் தோழர் மாரிமுத்து, மோடி அரசு கொண்டு வந்துள்ள நிலம் கையப்படுத்தல் சட்டத்திருத்தத்தின் மக்கள் விரோத நோக்கத்தை பேசினார்.

ம.க.இ.க திருச்சி மாவட்ட செயலர் தோழர் ஜீவா இந்த அரசு கட்டமைப்பு முழுவதும் மக்கள் விரோதமாக மாறியிருப்பதையும், அதை அடித்து நொறுக்கி மக்கள் அதிகாரத்தை நிறுவவேண்டிய அவசியத்தை பேசினார்.

இறுதியாக சிறப்புரை ஆற்றிய ம.க.இ.க மாநில இணை பொதுச்செயலர் தோழர் காளியப்பன் பிழைப்பு வாத ஓட்டுப் பொறுக்கிகள் மே தினத்தின் போராட்ட குணத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் இனிப்பு வழங்கி கொண்டாடுவதை அம்பலப்படுத்தினர். ஆளும் நியாய உரிமையை இழந்து மக்கள் விரோதமாக மாறியிருக்கும் இந்த அரசு கட்டமைப்பின் தோல்வி, சீர்குலைவு. இவற்றை ஆளும்வர்க்கத்தின் அறிவுத்துறையினரே ஒத்துக் கொள்வதை பல்வேறு உதரணங்களுடன் விளக்கி இந்த அரசு கட்டமைப்பை தகர்த்தெறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதோடு, மக்கள் சொந்த அதிகார அமைப்புகளை நிறுவுவதே அனைத்து மக்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு என்று கூறினார்.

மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம்
மக்கள் சொந்த அதிகார அமைப்புகளை நிறுவுவதே அனைத்து மக்கள் பிரச்சனைக்கு ஒரே தீர்வு.

ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே புரட்சிர பாடல்கள் இசைக்கப்பட்டன. இறுதியாக,  கரூர் மாவட்ட பு.மா.இ.மு மாவட்ட செயலர் தோழர் பாக்கியராஜ் நன்றியுரையாற்றினார்.

புரட்சிகர அமைப்புகளின் இந்த பேரணி , ஆர்ப்பாட்டம் திருச்சி பகுதி உழைக்கும் மக்களிடையே விரிவாக பிரச்சாரத்தை கொண்டு செல்ல ஏதுவாக இருந்தது.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி கிளை

2. திருச்சி பு.ஜ.தொ.மு

மே தினத்தில் காலை 8 மணிக்கு திருச்சி குட்செட் பகுதியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான சுமைப்பணி தொழிலாளர்கள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பாக கொடியேற்று விழா நடைபெற்றது. அதற்கு அச்சங்கத்தின் தோழர் முத்துகருப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தோழர் இராஜரெத்தினம் வாழ்த்துரை வழங்கினார். இச்சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் ராஜா அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அவர் பேசுகையில், இரயில்வே துறை தனியார்மய மாக்கப்படுத்துவதை கண்டித்தும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலை இழப்பு ஏற்படுவதை விளக்கி, “ஆளும் அருகதையற்ற இந்த அரசு கட்டமைப்பை வீழ்த்துவோம் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்” எனக் கூறினார். இந்நிகழ்வில் புதிதாக சங்கத்தில் இணைந்த தோழர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பாக ஒத்தம்மாள் ஆட்டோ ஸ்டாண்டு மற்றும் NSP ரோடு ஆட்டோ ஸ்டாண்டுகளில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுகளுக்கு தோழர் மணலிதாஸ், தோழர் கோபி தலைமை தாங்கினார்கள்.

ஆ.ஓ.பா.ச தலைவர் தோழர் செல்வராஜ் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வு ஆ.ஓ.பா.ச தோழர்களுக்கும் புதிதாக வந்திருந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.

3. தருமபுரி

மே நாளில் சூளுரைப்போம், ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம், மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்

dharmapuri-may-day-rally-demo-06மக்களின் உரிமைகளை மீட்டெடுத்த உன்னத திருநாளான மே நாளை, ஓட்டுப் பொறுக்கி கட்சியான அ.தி.மு.க குத்தாட்டம் போட்டு, தொழிலாளர்களின் சிந்தனையை சீரழித்து ஓட்டு பொறுக்குவதற்கான விழாவாக மாற்றியது.  சி.பி.ஐ, சி.பி.எம் கூட மே நாளை சடங்குத்தனமாகவே பார்க்கின்றனர்.

ஆனால், மே தினம் உணர்த்தும் உண்மைகளை வெளிக் கொண்டு வந்தது புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மே தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் சுவரெழுத்து எழுதினர். பெரிய போலீசு படையே வந்தது.

“அனுமதி வாங்கி விட்டீர்களா” என்றது, போலீசு.

“வாங்கியாச்சு” என்றார்கள் தோழர்கள்.

“இருந்தாலும் நீங்க எழுதக் கூடாது” என்று லேசாக மிரட்டிப் பார்த்தனர்.

அசராத தோழர்கள் பணியை நிறுத்தாமல் தொடர்ந்தனர். இது வேலைக்கு ஆகாது என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர். எங்கு சுவரெழுத்து எழுதினாலும், முழக்கங்களை ஃபோட்டோ எடுத்தது உளவுத்துறை.

இதனைத் தொடர்ந்து கடைவீதி, பேருந்து என மக்கள் கூடும் இடங்களில் பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது.

மே தினத்தன்று மதியம் 2.45 மணிக்கு தோழர் பரசுராமன் தலைமையில் பேரணி துவங்கியது. தருமபுரி சந்தைப்பேட்டையிலிருந்து சிவப்பு கொடிகளும், பறை ஒலியும், விண்ணை அதிர வைத்த முழக்கங்களுடன் நக்சல்பாரிகள் இந்த நாட்டின் விடிவெள்ளிகள் என்பதை நிரூபிக்கும் வகையில் கம்பீரமாக தொடங்கி, செங்கொடிபுரத்தில் நிறைவுற்றது, பேரணி.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டத்திற்கு வி.வி.மு வட்டாரச் செயலாளர் தோழர் கோபிநாத் தலைமை தாங்கினார்.  பு.மா.இ.மு  மாவட்ட அமைப்பாளர் தோழர் ராஜா, வி.வி.மு தோழர் முத்துக்குமார் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

“மே தினத்தின் ஓட்டுக்கட்சிகள் குத்தாட்டம் ஆடினால் செருப்பால் அடிக்க வேண்டும். மே தினம் நமக்கு நமது உரிமையை மீட்டெடுக்க உணர்த்தும் தினம். இந்த அரசமைப்பு ஆளும் தகுதியை இழந்து விட்டது. நீதிமன்றம் கிரிமினல் மன்றமாக உள்ளது. போலீசுகாரர்கள்தான் கற்பழிப்பு, திருட்டு, செம்மரக் கடத்தலில் காசு பார்ப்பது என்று இருக்கின்றனர். மருத்துவம், கல்வி, சுகாதாரம், வேலை என மக்களுக்கு எதுவும் செய்ய துப்பில்லாத அரசை நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும். நம்மை ஆளுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. நக்சல்பாரிகள் தலைமையில் மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டும்” என்று அறைகூவி பேசினார் தோழர் முத்துக்குமார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக, தோழர் சிவா நன்றியுரை நிகழ்த்தினார்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

 4. புதுச்சேரி

விழுப்புரம், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் மே நாள் அன்று புதுச்சேரி சுதேசி மில் அருகில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

 

சின்டெல் ஆட்குறைப்பு, டி.சி.எஸ் போனஸ் மோசடி

19
கட்டாய ஆட்குறைப்பு
வேலைநீக்கப்படும் ஊழியர்களை ஈவு இரக்கமின்றி அடுத்த 15 நிமிடத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேற ஆணையிடுகிறது நிர்வாகம் (படம் : நன்றி cartoonstock.com)

டி.சி.எஸ் ஆட்குறைப்புப் பிரச்சனைகளுக்குப் பிறகு இனி வேலை நீக்கம் இருக்காது என பல ஐ.டி ஊழியர்கள் நினைத்துக் கொண்டிருக்க, நிறுவனங்களோ ரகசியமாக ஆட்குறைப்பு செய்து வருகின்றன.

டி.சி.எஸ், ஐ.பி.எம்.-ன் வரிசையில் தற்போது அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிறுவனமான சின்டெல் ஆட்குறைப்பு செய்துவருகிறது. உலகெங்கிலும் மொத்தம் 24,000 ஊழியர்களுடன் செயல்பட்டுவரும் இந்நிறுவனம் இந்தியாவில் மட்டும் 3,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் நடைமுறையில் இருப்பதாக அதன் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

லாப வெறியைத் தவிர ஆட்குறைப்புக்கு வேறு காரணங்கள் எதுவும் இல்லை என்பதை ஆண்டுதோறும் உயர்ந்து வரும் சின்டெல் நிறுவனத்தின் லாப விகிதம் தெரிவிக்கிறது. 2014 நிதி ஆண்டில் நிறுவனத்தின் லாபம் மட்டும் $24.97 கோடியாக (சுமார் ரூ 1500 கோடி) உயர்ந்துள்ளது. இது கடந்த நிதி ஆண்டைவிட $3 கோடி (சுமார் ரூ 185 கோடி) அதிகம்.

கட்டாய பதவிவிலகல்
காலையில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள், தாம் எப்போது எச்.ஆர் அறைக்க்கு அழைப்படுவோம் என்ற அச்ச உணர்வுடனே தான் வருகிறார்கள்.

இவ்வாறு ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சி ஆண்டுக்காண்டு கொழுக்கும் இந்நிறுவனம் காரணம் ஏதுமின்றி ஊழியர்களை வேலையிலிருந்து துரத்தியடிக்கிறது. எச்.ஆர் அறைக்கு அழைக்கப்படும் ஊழியர்களிடம் கட்டாயப் பணிவிலகல் கடிதத்தில் கையொப்பம் வாங்கப்படுகிறது. தங்களது உரிமைகளைப் பற்றி அறிந்திராத ஊழியர்களோ நீட்டிய இடத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். கேள்வி கேட்கத் துணியும் சிலரிடமும் ஊழியர்களிடம் “விடுப்பு எடுத்தீர்கள்” என்பது போன்ற உப்புச்சப்பில்லாத காரணத்தை கூறி திமிர்தனமாக பதிலளிக்கிறார்கள் எச்.ஆர்.-கள். இதைப்பற்றி பின்னர் விரிவாக எழுதுகிறோம்.

எதிர்த்துக் கேள்விகேட்க துணியும் சிலரை மிரட்டுகிறார்கள் எச்.ஆர்கள். கேள்விகேட்பதை குற்றச்செயலாகச் சித்தரிக்கிறார்கள்.

இச்செய்தியை அறிந்ததும் சின்டெல் ஊழியர்களிடம் பேச சிறுசேரி சின்டெல் அலுவலகத்திற்கு சென்றோம். நம்மிடம் பேசிய பலரும் வேலைநீக்கம் பற்றிய தங்கள் பயத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள். எத்தனை பேர் வேலைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து பலரும் மாறுபட்ட எண்ணிக்கையை தெரிவித்தார்கள். ஆயினும் 1,000 முதல் 3,000 வரை ஊழியர்கள் நீக்கப்படவிருக்கிறார்கள் என்பது ஊழியர்களின் கணிப்பாக இருக்கிறது.

ஆட்குறைப்பு எந்திரம்
எத்தனை பேர் வேலைநீக்கம் செய்யப்படுகிறார்கள் என்பது குறித்து பலரும் மாறுபட்ட எண்ணிக்கையை தெரிவித்தார்கள்.

“என் பிரண்டு சார். காலையில நல்லா பேசிட்டுதான் இருந்தோம். ஆனா, அவன் மதியம் சாப்பிட வரல. போன் பண்ணிப் பார்த்தேன் சுச் ஆஃப் ஆகியிருந்தது. அப்புறம் தான் தெரிஞ்சது அவன வேலைய விட்டு அனுப்பிட்டாங்கன்னு.” என்று தனது அனுபவத்தைக் கூறினார் ஓர் ஊழியர். இரவு பகல் பாராமல் வேலைநேரத்தையும் தாண்டி உழைத்த ஊழியர்களுக்கு நிர்வாகம் கொடுக்கும் நேரம் 15 நிமிடம். அதற்குள் இடத்தைக் காலிசெய்ய வேண்டும்.

வேலைநீக்கப்படும் ஊழியர்களை ஈவு இரக்கமின்றி அடுத்த 15 நிமிடத்தில் அலுவலகத்தைவிட்டு வெளியேற ஆணையிடுகிறது நிர்வாகம். இதை உத்திரவாதப்படுத்த செக்யூரிட்டி ஒருவரும் ஊழியர்களுடன் அனுப்பி வைக்கப்படுகிறார். குற்றவாளியைப்போல அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் சின்டெல் ஊழியர்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த இந்த கொடூரமான வேலைநீக்க முறை ‘வளர்ச்சி நாயக’னின் ஆட்சியில் இப்போது நம் கண்முன்னே நிகழ்கிறது.

காலையில் அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள், தாம் எப்போது எச்.ஆர் அறைக்க்கு அழைப்படுவோம் என்ற அச்ச உணர்வுடனே தான் வருகிறார்கள்.

சின்டெல் ஆட்குறைப்பு
அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமே கேள்விப்பட்டிருந்த இந்த கொடூரமான வேலைநீக்க முறை ‘வளர்ச்சி நாயக’னின் ஆட்சியில் இப்போது நம் கண்முன்னே நிகழ்கிறது.

இதை தொடர்ந்து, “கட்டாயப் பணிவிலகல் கடிதத்தில் கையெழுத்திடவேண்டாம்” என்றும், “பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவில் அணிதிரண்டு வேலைநீக்கத்தை முறியடிக்க முடியும்” என்று நம்பிக்கையூட்டியும் பு.ஜ.தொ.மு- ஐ.டி ஊழியர் பிரிவின் சார்பாக ஐ.டி காரிடாரில் ஏப்ரல் 28 முதல் சுவரொட்டி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. பல சின்டெல் ஊழியர்கள் நமது சுவரொட்டியை புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பில் பரவலாக பகிர்ந்தார்கள். டி.சி.எஸ் அனுபவத்திலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, வேலைநீக்கம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளிவராமல் பார்த்துக்கொண்டிருந்த சின்டெல் நிர்வாகத்திற்கு நமது சுவரொட்டிகளும், வாட்ஸ் ஆப் செய்திகளும் திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல் இருந்துள்ளன.

இதைத் தொடர்ந்து நமது சுவரொட்டிகளை கிழிப்பதற்கென ‘தனிப்படை’ அமைத்து சுவர்களைச் சுரண்டிக்கொண்டிருக்கிறது சின்டெல் நிர்வாகம்.

“எம்ப்ளாய்ஸ் தம் அடிக்குற இடத்தில நீங்க போஸ்டர் ஒட்டிருந்தீங்கல்ல. அங்க வந்த எச்.ஆருங்க இதை பாத்துட்டு செக்யூரிட்டியை வெச்சி கிழிச்சிட்டாங்க” என்று நமக்குத் தகவல் தந்தனர் ஊழியர்கள்.

இதே சுவரொட்டியை டி.சி.எஸ் சென்னை-1 (துரைப்பாக்கம்) அலுவலகத்திலும் ஒட்டியிருந்தோம். காலையில் செக்யூரிட்டிகள் புடைசூழ நுழைவாயிலுக்கே வந்த டி.சி.எஸ் நிர்வாகி ஒருவர் போஸ்டரை புகைப்படம் எடுத்துக்கொண்டு செக்யூரிட்டிகளை கொண்டு கிழித்ததாக நமது சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

ஊழியர்களை ஒடுக்குவதில் ஐ.டி நிறுவனங்கள் தங்களுக்குள் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். ஐ.டி நிறுவனங்கள் தங்களுக்கென்று நாஸ்காம் என்ற பெயரில் சங்கம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் டி.சி.எஸ், ‘அனைவருக்கும் மெகா போனஸ்’ என்ற பெயரில் ஊழியர்களிடம் செய்த பித்தலாட்டத்தை பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அம்பலப்படுத்தி சுவரொட்டி ஒட்டியிருந்தது.

டி.சி.எஸ் மெகா போனஸ் மோசடி
டி.சி.எஸ், ‘அனைவருக்கும் மெகா போனஸ்’ என்ற பெயரில் ஊழியர்களிடம் செய்த பித்தலாட்டத்தை பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அம்பலம்.

எதுவாயிருப்பினும் ஐ.டி ஊழியர்கள் தங்களது உரிமைகளை தெரிந்துகொள்வதும், அதற்காக சங்கமாகத் திரள்வதும் தங்களது சுரண்டலுக்கும், கேள்வி கேட்பாரற்ற தமது அதிகாரத்திற்கும் ஆபத்து என்பதாலேயே ஒரு போஸ்டரைக் கூட ஐ.டி நிறுவனங்களினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. செக்யூரிட்டிகளுடன் நிர்வாகிகளும் களத்திற்கு நேரடியாக வந்து போஸ்டர் கிழிக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து கிழித்த இடத்தில் அதற்கு மறுநாள் சுவரொட்டி ஒட்டப்பட்டதோடு மட்டுமில்லாமல் பு.ஜ.தொ.மு பற்றிய சிறிய ‘அறிமுகத்தை’யும் செக்யூரிட்டிகள் வாயிலாக நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளோம்.

டி.சி.எஸ் வேலைநீக்கத்துடன் அனைத்தும் முடிந்துவிட்டது, இனி தங்களுக்கு பிரச்சனையில்லை என்று பலர் தங்களுக்கு தாங்களே கூறிக்கொண்ட சமாதானம் இனியும் செல்லுபடியாகாது என்பதை சின்டெல் வேலைநீக்கம் உணர்த்துகிறது. கார்ப்பரேட்டுகளின் லாப வெறி என்றுமே அடங்கப்போவதில்லை. மேலும் மேலும் அடிமைத்தனத்துடன் பல மணிநேரம் உழைப்பதன் மூலம் வேலையைத் தக்கவைத்துக்கொள்ளலாம் என்று நினைப்பது முட்டாள் தனம். அடிமைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் கார்ப்பரேட்டுகள் இல்லை.

தொழிற்சங்கத்தில் இணைந்து வேலை உரிமைக்காகப் போராடுவதுதான் அறிவுப்பூர்வமான, சாத்தியமுள்ள ஒரே தீர்வு. ஐ.டி ஊழியர்கள் இனியும் தாமதிப்பது தற்கொலைக்கு சமம். டி.சி.எஸ் ஆட்குறைப்பைத் தொடர்ந்து ஐ.டி ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவில் தங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :

தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com
பேஸ்புக் : https://www.facebook.com/NDLFITEmployeesWing

பத்திரிகை செய்தி (ஆங்கிலத்தில்)

Illegal layoff by Syntel – 3000 employees sacked

After the layoff of thousands of employees by TCS last year, several IT companies have been resorting secret retrenchment of employees.At present, US based Syntel is laying off employees. Syntel has planned and enforcing layoff of 3,000 employees. This has been going on for the past one month, and 1000s have already lost their jobs. But, this news is not released to any media outlet by the company. Company management is not even allowing our union posters about this issue in public places. They send their security personnel to tear off our posters.

Syntel does not even give the minimum 30 days notice period before termination. Employees are ordered to leave the office within 15 minutes. An employees is called into HR office and forced to sign their resignation letter. Unaware of their rights, the employees meekly sign and leave their employment. When an employee tried to question this practice, HR personnel responded coldly, saying “You took too many leave”. As far as the company is concerned even questioning them is a criminal offence.

Syntel is doing this entirely for their profit motive. A perusal of their financial statements reveal that the company’s revenues in 2004 increased by 11% compared to the previous year to reach $911.5 million. Net profits soared to $249 million from $219.9 million for the year ago period. Employees who made this growth possible are being sent off now.

NDLF – IT Employees Wing strongly condemns Syntel’s illegal and unethical layoff and its treatment of their employees like common criminals.

We call upon IT employees to refuse to sign resignation letters under compulsion and join hands with NDLF – IT Employees Wing to fight this corporate terror.

Corporate companies are showered with public funds in terms of cheap priced land and tax waivers when they start business in SIPCOT or SEZ. But they refuse to follow Indian labour laws. IT companies go further and argue that labour welfare laws do not apply to them.

Madras High Court issued an order to the Tamil Nadu government to take a policy decision on our petition demanding implementation of Industrial Disputes Act in IT sector. We demand that Tamil Nadu government should take immediate action this and bring IT companies under ID Act.

S. Karpagavinayagam,
Organizer,
New Democratic Labour Front – IT Employees Wing
Telephone
: 90031 98576
Email : combatlayoff@gmail.com
FB : https://www.facebook.com/NDLFITEmployeesWing

தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்

1

Teesta-Setalvadஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின் 3-ம் பகுதி.

மதவெறியருக்கெதிரான நீண்ட போராட்டத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

மதவாதத்துக்கு எதிரான எங்கள் போராட்டத்தை 1985-86 வாக்கிலேயே தொடங்கி விட்டோம். அந்த நேரத்தில்தான், பாபர் மசூதியின் கதவுகள் திறந்து விடப்பட்டிருந்தன; ஷா பானு வழக்கு தொடர்பான அடிப்படைவாத பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. இரண்டுமே சரிசமமான வெறித்தனம் கொண்டவை.

நான் அப்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வேலை செய்து வந்தேன். ஜாவித், சாய்நாத், குமார் கேட்கர் உள்ளிட்ட நாங்கள் சிலர் சேர்ந்து மதவாதத்துக்கு எதிரான பத்திரிகையாளர்கள் என்ற அமைப்பை தொடங்கினோம்.

பால் தாக்கரே
“முஸ்லீம்களை தாக்குவதற்கு இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்” – பால் தாக்கரே

தாக்கரே போன்றவர்கள், “முஸ்லீம்களை தாக்குவதற்கு இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்” என்றும், “காஷ்மீர் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட வேண்டும்” என்றும் பேசிய வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மராத்தி நாளிதழ்களில் பேனர் தலைப்பு செய்திகளாக வெளியாகின. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலிருந்து 110 பத்திரிகையாளர்களின் கையொப்பங்களை சேகரித்து, “இத்தகைய ஊடக துஷ்பிரயோகங்களை தடுக்க வேண்டும்; ஊடகங்கள் வெறுப்பு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படக் கூடாது; முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுங்கள்” என்று மாநில அரசிடம் மனு கொடுத்தோம்.

அதைத் தொடர்ந்து, அத்வானியின் ரத யாத்திரை, 1992-93 மும்பை வன்முறைகள் நடந்தன. அது கொடூரமானதாக இருந்தது. மொத்த நகரமும் இரண்டாக பிளவுபட்டதோடு தெருக்களில் மரணம் கோர தாண்டவமாடியது. இசுலாமிய சமூகத்தைப் பற்றி மிக நச்சுத்தனமான கருத்துக்கள் பேசப்பட்டன.

அப்போது ஜாவித் சண்டே அப்சர்வரிலும், நான் பிசினஸ் இந்தியாவிலும் வேலை செய்து கொண்டிருந்தோம்.

மும்பை கலவரங்கள் தொடர்பாக நான் பிசினஸ் இந்தியாவின் இரண்டு இதழ்களுக்காக அட்டைப் படக்கட்டுரைகளை தயாரித்தேன். காணாமல் போனவர்கள், குடும்பங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதில் உள்ள பிரச்சனைகள் பற்றி தொடர்ந்து எழுத விரும்பினேன். ஆனால், வெகுஜன ஊடகங்கள் ஒரு பிரச்சனையை இறுதி வரை முழுமையாக பின்தொடர விரும்புவதில்லை. பரபரப்புக்காக ஓரிரு பெரிய கட்டுரைகள் வெளியிடுவதை ஏற்றுக் கொள்வார்கள். அதற்கு மேல் போனால் அனுமதிக்க மாட்டார்கள்.

மத வன்முறைக்கான சூழல் உருவாவதை கவனிப்பது, வன்முறைக்கான முன் தயாரிப்புகளையும், வன்முறையின் விளைவுகளையும் பற்றி எழுதுவது என்று செயல்பட விரும்பினோம், நாங்கள். அதனால்தான், வேலையை விட்டு விலகி, “கம்யூனலிசம் காம்பட்” இதழை தொடங்கினோம்.

2002 குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிக்கப்பட்ட பெண்கள் எப்படி இருக்கிறார்கள்?

நரோடா பாட்டியாவைச் சேர்ந்த பெண்கள் தினக் கூலி வேலை செயபவர்கள்; குல்பர்க் சொசைட்டியில் பாதிக்கப்பட்டவர்கள் போல நடுத்தர வர்க்கத்தினர் இல்லை; சர்தார்புரா போன்ற இடங்களில் செய்ததை போல அவர்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர முடியாது. அவர்கள் திரும்பி அதே பகுதிக்குத்தான் போக வேண்டும்; மாயா கோத்னானி இப்போது பிணையில் வெளிவந்துள்ள அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.

2002 கலவரத்திற்கு பிறகு அகதி முகாமில் இருக்கும் முசுலீம் மக்களின் குழந்தைகள்!
2002 கலவரத்திற்கு பிறகு அகதி முகாமில் இருக்கும் முசுலீம் மக்களின் குழந்தைகள்!

அவர்கள் தினமும் காலையில் வேலைக்குப் போகும் போது கிண்டல் செய்து அச்சுறுத்தப்படுகின்றனர். எப்போதெல்லாம் விஷயம் கைமீறி போகிறதோ, அப்போது அவர்களுடன் போலீஸ் நிலையத்துக்குச் சென்று புகார் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வதுதான் எங்களால் முடிந்த சிறிய உதவி. ஆனால், அவர்கள்தான் அந்த தினசரி சித்திரவதையை அனுபவிக்கின்றனர்.

உச்சநீதிமன்றம் குஜராத் படுகொலை வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து, நீதிபதி ஜோஸ்னா யக்னிக்கை நீதிபதியாக நியமித்து, விசாரணையை கண்காணித்து வந்தது. நரோடாபாட்டியாவில் பாதிக்கப்பட்டு பிழைத்திருப்பவர்களிடம் பேசினால் அந்த நீதிபதி பற்றி மனமுருகி பேசுவார்கள். ஏனென்றால், வழக்கு விசாரணையின் போது எதிர் தரப்பு வக்கீல் அவர்களை துன்புறுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை.

நீதிமன்ற விசாரணைகளில் தலித் பெண்கள், தலித் உழைப்பாளிகள் சாட்சிக் கூண்டில் நிற்கும் போது இந்த அமைப்பு அவர்களை துன்புறுத்துகிறது. நீதிமன்ற சூழலே அவர்களுக்கு பகையானதாக உள்ளது. ஆனால், ஜோஸ்னா யக்னிக், ஒரு கேள்விகூட வரம்பு மீறுவதை அனுமதிக்கவில்லை. பெண்கள் சாட்சி சொல்ல தைரியம் பெற்றனர்; தமது தாய்களுக்கு, தமது மகள்களுக்கு நடந்த பாலியல் வன்முறைகளை குறித்துக் கூட பேசினர். நீதிமன்றம் அளித்த தைரியத்தில்தான் அவர்களால் பேச முடிந்தது.

மோடியை விடுவிக்கும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு ஜாகியா ஜாஃப்ரி எப்படி உணர்கிறார்?

2003-ல் குற்றப் பதிவு செய்ய ஜாகியா ஜாஃப்ரிக்கு நாங்கள் உதவிய போது, உளவுத்துறை அறிக்கைகளிலிருந்து ஆதாரங்களையும், மறு முறையீட்டுக் கட்டத்தின் போது போது சிறப்பு புலனாய்வு குழுவின் ஆவணங்களையும் திரட்டினோம். மோடி மீது வழக்கு தொடருவதற்கு போதுமான ஆதாரங்கள் அவற்றில் இருந்தன.

அதிகாரபூர்வ பதிவுகளின் படி கோத்ராவின் ஆட்சியர், அப்போது உள்துறை அமைச்சக பொறுப்பை வைத்திருந்த மோடிக்கு கோத்ரா நிகழ்வைப் பற்றி தகவல் தெரிவித்திருக்கிறார். அவர் உடனடியாக விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஜெய்தீப் படேலை அழைக்கிறார். (காவல் துறை ஆலோசனை கூட்டத்தை கூட்டவில்லை). அது தொடர்பான தொலைபேசி அழைப்பு பதிவுகள் உள்ளன. பின்னர் ஜெய்தீப் படேல் கோத்ராவுக்கு செல்கிறார். சுகாதாரத் துறை அமைச்சர் அசோக் பட்-ம் கோத்ராவுக்கு போகிறார்.

கொல்லப்பட்ட சடலங்களின் பிரேத பரிசோதனை இந்துத்துவா கும்பலின் முன் திறந்த வெளியில் நடத்தப்படுகிறது. குழந்தைகள், பெண்கள் உடல்கள், சிதைக்கப்பட்ட சடலங்களை பயன்படுத்தி உணர்ச்சிகளை தூண்டிவிட்டனர். பிரேத பரிசோதனை திறந்தவெளியில் செய்யப்படுகிறது என்று மோடிக்கும் தெரியும்.

பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. உடல்களை அகமதாபாதுக்கு எடுத்துச் செல்லும்படி உத்தரவிடப்படுகிறது.

இவை அனைத்தும் வழக்கு தொடுப்பதற்கு போதுமான ஆதாரங்கள். இது தொடர்பான வழக்கு இப்போது குஜராத் உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதை விசாரிக்க எந்த நீதிபதிக்கு தைரியம் உள்ளது என்று தெரியவில்லை.

நேற்று நீங்கள் காவல்துறை உயரதிகாரி ஸ்ரீகுமார் பற்றி பேசினீர்கள். சஞ்சீவ் பட் அளித்த வாக்குமூலத்தின் முக்கியத்துவம் என்ன?

சஞ்சீவ் பட் மகத்தான தைரியத்தைக் காட்டியுள்ளார். முதலமைச்சர் வீட்டில் பிப்ரவரி 27 மாலை நடந்த கூட்டம் தொடர்பான விஷயத்தில் அவருடையது முக்கியமான சாட்சியமாக இருக்கும்.

ஸ்ரீகுமார், ராகுல் சர்மா 2002 முதலே ஒரு நிலைப்பாடு எடுத்து நானாவதி கமிஷன் முன்பு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். ஆனால் சஞ்சீவ் பட் 2002-ல் பேசவில்லை.

சஞ்சீவ் பட்
சஞ்சீவ் பட்

2009-ம் ஆண்டு சிறப்பு விசாரணை குழு விசாரணை நடந்த போது, பிப்ரவரி 27 அன்று முதலமைச்சர் வீட்டில் நடந்த கூட்டம் பற்றி ஹரேன் பாண்டியா தீர்ப்பாயத்திடம் கூறியிருந்ததை முன்னிட்டு உளவுத்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களை சிறப்பு விசாரணைக் குழுவின் மல்ஹோத்ரா பதிவு செய்யும் போது நவம்பர் 2009-ல்தான் முதல் முறையாக சஞ்சீவ் பட் தனது வாக்குமூலத்தை கொடுத்தார்.

அது வரை பேசாததற்கான அவரது விளக்கம் என்னவென்றால், “கேள்வி கேட்கப்படும்போது மட்டும்தான் ஒரு காவல்துறை அதிகாரி பேச வேண்டும்” என்பது. அதை குறை சொல்ல முடியாதுதான். ஸ்ரீகுமார், ராகுல் சர்மா போன்றவர்கள் அதை ஒரு தார்மீக பிரச்சினையாக, அரசியல் சட்ட பிரச்சனையாக பார்த்தனர். சஞ்சீவ் பட்டைப் பொறுத்த வரை தேவைப்படும்போது அவர் அதைச் செய்தார்.

குஜராத் இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பற்றிய மதிப்பீடுகள் வேறுபடுவதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

எங்கள் கணக்குப்படி காணாமல் போனவர்களையும் சேர்த்தால் 1900-2000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நாங்கள் குற்றப்பத்திரிகை வாரியான எண்ணிக்கையை தொகுத்திருக்கிறோம்; ஒரு மாதத்துக்குள் அவற்றை வெளியிடுவோம்.

இந்த ஆதாரபூர்வமான தகவலை, நாடாளுமன்றத்தின் முன்னும் வைக்க விரும்புகிறோம். இது தொடர்பான வரலாற்றை நேர் செய்ய வேண்டும்.

– தொடரும்

கோவையில் மே நாள் : எங்களது வரலாற்றுக் கடமை என்ன ?

0

கோவையில் மே தின பேரணி, ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்டவுடன் வழக்கம் போல் நாம் கேட்ட இடத்தில் அனுமதி தராமல், இழுத்தடித்து வேறு இடத்தில் கொடுத்தார்கள். அதுவும், ‘4 மணிக்கு பேரணியை துவங்கி 6 மணிக்குள் முடிக்க வேண்டும்’ எனும் நிபந்தனையுடன். அதையே நம்மிடம் எழுதியும் வாங்கிக் கொண்டு ஏதோ போனால் போகிறது என்று கொடுத்தார்கள்.

ஆனால், உழைப்பாளர் தினமான மே நாளுக்கு தொடர்பற்ற அ.தி.மு.க காரர்களுக்கு மட்டும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் பேரணிக்கு காவல் துறை அனுமதி கொடுத்தது. அனுமதி கொடுப்பது என்ன, அவர்களே எடுத்துக் கொண்டார்கள்.

கோவை மே நாள் பேரணி
பேரணி செங்கொடிகளுடனும், ஆசான்கள் படங்களுடனும், முழக்கப் பதாகைகளுடன் கோவையில் மே நாள்!

மே நாளன்று மாலை 4 மணிக்கு டாடாபாத் பவர் ஹவுஸ் முன்பு மாவட்டச் செயலர் தோழர் திலீப் தலைமையில் பேரணி துவங்கியது.

கோவையின் பாட்டாளி வர்க்கம் அணிவகுக்க அவர்களோடு நாமக்கல், பள்ளிபாளையம், ஈரோடு மற்றும் நீலமலைத் தோழர்களும் இணைந்தார்கள். பேரணி செங்கொடிகளுடனும், ஆசான்கள் படங்களுடனும், முழக்கப் பதாகை – கம்பீரமான முழக்கங்களுடன் கோவையின் மரபை நிலை நாட்டியது.

காவல்துறை வழக்கம் போல எதிர் நிலை எடுத்து நாகரீகம் இல்லாமல், “வேகமாக நடங்கள்” என அதிகாரத்துடன் எரிச்சல் ஊட்டிக் கொண்டே இருந்தார்கள். பேரணியின் உணர்ச்சியுடன் ஒன்றாமல் இவர்களை சமாளிப்பதே பெரும்பாடாக இருந்தது.

புரட்சிகர பாடல்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

நாங்கள் யார்..! எங்கள் வரலாற்றுக் கனவு என்ன..? கடமை என்ன..? எத்துணை உன்னதமான இலட்சியம் கொண்டவர்கள் நாங்கள்; ஒரு வரலாற்றுப் புரட்சியை நடத்தி முடிக்க வேண்டிய தீர்மானத்தின் மீது அழுந்திக் கொண்டிருக்கும் பெரும்பாறையை சிற்றுளி கொண்டு உடைத்து உடைத்து புத்தம் புது அழகுகளை படைத்தவாறு பாய்ந்து கொண்டிருக்கும் பேராற்றின் ஒரு துளியாக தன்னை, பொருத்தி அதன் ஒரு நகர்வை அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்கும் போது அந்த உணர்வின் ஊற்றாக முழக்கமிட்டுக் கொண்டிருக்கையில், கேவலம் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு வந்தனம் சொல்லும் நீ என்னை தடுக்கிறாயா..?

உனக்கு பொறுப்போ பொது நலனோ எதுவும் இல்லை. நீ சீரழிவின் சின்னமாக இருக்கிறாய். எமக்கான பொறுப்புக்கள் என்ன…! எமக்கான பணிகள் இன்னும் எவ்வளவு இருக்கிறது. எமக்கான கடமையில் நாங்கள் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் எவ்வளவு. இத்துணையையும் ஒரு சேர யோசித்தவாறு சிந்தனையில் கொந்தளிப்புகளுடன் நடந்து கொண்டிருந்த தோழர்களின் கோபம் முழக்கமாய் இன்னும் அதிக ஓசையுடன் ஒலித்தது.

பேரணி புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியில் பேரணி சிவானந்தா காலனியை அடைந்தது. அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பு.ஜ.தொ.மு மாவட்ட பொருளாளர் தோழர் பூவண்ணன் தலைமை தாங்கினார்.

கோவை மே நாள் பேரணி
தோழர் பூவண்ணன்

அவர் தனது உரையில் கோவையில் பு.ஜ.தொ.மு நடத்திய போராட்டங்களை நினைவு கூர்ந்தார். எஸ்‌.ஆர்‌.ஐ கிளைத் தோழர்கள் புரட்சிகர பாடல்களை பாடினர்.

கோவை மே நாள் பேரணி
மே நாள் முழக்கங்கள்
கோவை மே நாள் ஆர்ப்பாட்டம்
“மோடி அரசின் காட்டாட்சியில் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.”

தோழர் நாமக்கல் சத்யா தமது உரையில், மோடி அரசு பதவியேற்றதிலிருந்து செய்து வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளை பட்டியலிட்டார். ஆருயிர் நண்பன் அதானிக்கு 6,500 ரூபாய் கோடி கடன் கொடுத்தது, கேஸ் மானியத்தை வெட்டியது என மக்களது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் நடவடிக்கைகளில் மோடி அரசு ஈடுபடுவதை தோலுரித்து காட்டினார்.

தோழர் ஈரோடு புஷ்பராஜ் தமது உரையில், இந்த அரசு எப்படி உழைக்கும் மக்களுக்கு எதிராகவும் முதலாளிகளுக்கு சாதகமாகவும் இருக்கிறதென்பதை விளக்கிப் பேசினார்.

தோழர் நீலமலை பாலன் கோவையின் விசேசமான எக்ஸ்ட்ரா பாசிசத்தை சாடியவாறு தன் பேச்சை துவங்கி, ஆந்திராவில் தமிழர்கள் படுகொலையையும் அரசின் பித்தலாட்டத்தையும் அம்பலப்படுத்திப் பேசினார்.

கோவை மே நாள் ஆர்ப்பாட்டம்
கோவையின் விசேசமான எக்ஸ்ட்ரா பாசிசத்தை சாடிய தோழர் பாலன்

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவண்ணன் தனது சிறப்புரையில் கோவை காவல் துறையை எள்ளி நகையாடினார். காவல் துறை, பொறுக்கிகளுக்கும் ரவுடிகளுக்கும் சல்யூட் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை, “மானமிழந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்ற துண்டு பீடிகளுக்கும் சல்யூட் அடித்தீர்களே…!” என காவல் துறையின் அவமானகரமான அத்தியாயங்களை அம்பலப்படுத்தினார்.

போலீஸ் அவமானம்
மானமிழந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி போன்ற துண்டு பீடிகளுக்கும் சல்யூட் அடித்தீர்களே…!

இறுதியாக பேசிய பு..தொ.மு மாநிலத் துணைத் தலைவர் விளவை இராமசாமி, காவல் துறையின் திமிருக்கு பதில் சொல்லும் வகையில் உரையாற்றினார்.

“கோவையின் பாட்டாளி வர்க்கம் நாங்கள். நாங்கள் சபதமேற்கும் நாள் இது. எதிரிகளின் குலை நடுங்க வைத்து உரிமை மீட்ட நாள் இது. இந்த நாளைக் கொண்டாட எங்களுக்கு வரம்பு இட நீ யார்..? ஆலைகள் எங்களது, சாலைகள் எங்களது, கோவையின் அனைத்துமே எங்களால் நடக்குது. தொழிலாளி வர்க்கத்தை பேரணி நடத்த விடாமல் அதிகாரம் செய்கிறாயே…? நீ அணியும் காக்கிச் சட்டை, தொப்பியிலிருந்து உன் பூட்ஸ் வரை உருவாக்குவது தொழிலாளி. கோவையை இயக்குவது தொழிலாளி. இந்த சிவானந்தா காலனியில் கட்டிடங்களை எழுப்புவது தொழிலாளி.

கோவை மே நாள் ஆர்ப்பாட்டம்
“நீ அணியும் காக்கி சட்டை தொப்பியிலிருந்து உன் பூட்ஸ் வரை உருவாக்குவது தொழிலாளி. கோவையை இயக்குவது தொழிலாளி”

மொத்தத்தில், இந்த மண்ணில் தேங்கி நாறும் கழிவு நீர் போலன்றி நுரைத்து ஓடும் புது நீர் போல உற்சாகமாக இந்த மாநகரத்தை இயக்கும் எங்களுக்கு நீ அனுமதி தர மறுக்கிறாயா..? எங்களை என்ன அங்க பிரதட்சணம் பண்ணிக் கொண்டு பால் குடம் எடுத்துக் கொண்டு மொட்டையடிக்கும் கும்பல் என்று நினைத்தாயா…..? இது கூலிக்கு வந்த கூட்டமல்ல. கொள்கைக்காக வந்த கூட்டம். பிரியாணி தராமல், பிராந்தி வாங்கித் தராமல், போக்குவரத்துக்கு பணம் தராமல் தன்னார்வமாக திரண்டவர்கள். 6 மணிக்கு மேல் பேசினால் என்ன குத்தம் வந்து விடும்?

கோவையில் ஒரு மத்திய சிறையையும் 15 ஸ்டேசனையும் வைத்துக் கொண்டு எங்களை மிரட்ட முயலாதீர்கள்” என வர்க்கக் கோபத்துடன் சீறினார்.

கோவை மே நாள் ஆர்ப்பாட்டம்
“எட்டு மணி நேரம் வேலை மட்டுமல்ல, போனஸ் சம்பளம் மட்டுமல்ல, அரசு வேண்டும், அதிகாரம் வேண்டும்”

“மே நாள் என்பது இன்று ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்ரிக்கா என உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது. 1886 மே-1 எட்டு மணி நேர வேலைக்காக சிகாகோ தொழிலாளர்கள் எந்த உணர்ச்சியில் இருந்தார்கள் அதே உணர்வில் நாங்கள் 2015-லும் இருக்கிறோம். எட்டு மணி நேரம் வேலை மட்டுமல்ல, போனஸ் சம்பளம் மட்டுமல்ல, அரசு வேண்டும், அதிகாரம் வேண்டும் என போராட்டத்தை விரிவு படுத்துவதே உண்மையான மே தின உணர்ச்சி ஆகும்.

  • ரசியப் பாட்டாளி வர்க்கம் 1917-ல் புரட்சி நடத்தி மே தினத் தியாகிகளுக்கு உண்மையான வாரிசுகள் என நிரூபித்தார்கள்.
  • 1949-ல் சீனப் பாட்டாளி வர்க்கம் செஞ்சீனம் அமைத்து மே தினத் தியாகிகளை மேலும் சிறப்பித்தார்கள்.
  • பாசிசத்தை இரண்டாம் உலகப் போரில் வீழ்த்தி சோவியத் செஞ்சேனை மே தினத்தின் பெருமையை மேலும் மேலும் மேதினிக்கு தெரிவித்தார்கள்.
  • இந்தியப் பாட்டாளிகளும் தெலுங்கானாவில் 3,000 கிராமங்களில் செங்கொடி அரசமைத்து மே தினத் தியாகிகளுக்கு உண்மையான அஞ்சலி தெரிவித்தார்கள்.
  • 1967 நக்சல்பாரியில் அதன் அடுத்த பரிமாணத்தை இந்தியப் பாட்டாளி வர்க்கம் உலகத்துக்கு தெரிவித்தது. ஆனால், போலிக் கம்யூனிஸ்டுகள் இந்தியப் பாட்டாளி வர்க்கத்தை காட்டிக் கொடுத்தார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

போலிகள் இது போல கட்சி நடத்தி இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு புரட்சி வராமல் இருக்க பணியாற்றிக் கொண்டு இருப்பார்கள். மே தினத் தியாகிகளின் வாரிசுகள் நாம் தான் “புரட்சி நடத்துவோம். புதிய ஜனநாயகம் படைப்போம்” எனும் அரசியல் நம்மை வழி நடத்துவதால்தான் சி‌.ஆ,ர்‌ஐ கதவடைப்புக்கு எதிராக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக கோவையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரே சங்கமாக நாம் உள்ளோம். வரலாறு நம்மீது சுமத்தியுள்ள வர்க்கக்கடமையை நிறைவேற்றி புதிய ஜனநாயக அரசு அமைப்போம்” எனக் கூறி முடித்தார்.

தோழர் குமாரவேல் நன்றியுரை
தோழர் குமாரவேல் நன்றியுரை

இறுதியாக மாவட்டத் தலைவர் குமாரவேல் நன்றியுரை கூறினார்.ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக பாட்டாளி வர்க்கத்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள் – Dr அரவிந்தன் சிவக்குமார்

4

hippocratic-oath‘நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்குவது, மருத்துவமனை சொத்துக்களை சேதப்படுத்துவது ஆகியவற்றுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை’, ‘மிகச்சிறந்த சிகிச்சை வழங்கியபிறகும் நோயாளிகள் உயிரிழந்தால் அதற்கு மருத்துவர்களும், மருத்துவமனைகளும் பொறுப்பு இல்லை’, ‘மருத்துவமனைகளும், மருத்துவ சிகிச்சை பகுதிகளும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட வேண்டும்’ ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மே 2-ம் தேதி தனியார் மருத்துவமனைகளை மூடப் போவதாக இந்திய மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளை அறிவித்திருக்கிறது.

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை நடத்திய கண் புரை அறுவை சிகிச்சை முகாமில் 66 முதியவர்களின் கண்பார்வை பறிபோனது தொடர்பாக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் எட்டாண்டுகளாக போராடிய வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை ஒட்டி தனியார் மருத்துவமனைகள் இந்த நடவடிக்கையை அறிவித்திருக்கின்றன. தமது லாபவேட்டை நடவடிக்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை சட்டரீதியாக முடக்குவது இதன் நோக்கம்.

ஜோசப் கண் மருத்துவமனை தீர்ப்பு
திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை நடத்திய கண் புரை அறுவை சிகிச்சை முகாமில் 66 முதியவர்களின் கண்பார்வை பறிபோனது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை ஒட்டி தனியார் மருத்துவமனைகள் இந்த நடவடிக்கையை அறிவித்திருக்கின்றன. (கோப்புப் படம்)

இது குறித்து சென்னையைச் சேர்ந்த உளவியல் மருத்துவர் டாக்டர் அரவிந்தன் சிவகுமார் பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துக்களை தொகுத்து தமிழில் மொழிபெயர்த்து தருகிறோம்.

கூட்டு கண் அறுவை சிகிச்சைகள் மக்கள் வாழ்வில் கொண்டு வந்த இருள் மருத்துவ சேவையை விற்பனை சரக்காக்கியதன் விளைவு

ஜோசப் கண் மருத்துவமனை நடத்திய அறுவை சிகிச்சையில் 66 பேர் கண்பார்வை பறிபோனது தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெளியான தீர்ப்பு பல விவாதங்களை எழுப்பியிருக்கிறது.

7 ஆண்டு இருளுக்குப் பிறகு அந்த 70 வயது முதியவர்கள் தீர்ப்பு பெற்றுள்ளார்கள். நீதிபதி 1923-ம் ஆண்டு பணியாளர்கள் நிவாரணச் சட்டத்தின் அடிப்படையில் அவர்களுக்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. சட்ட நிபுணர்கள்தான் விளக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டார்கள்.

ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு
“இனிமேல் ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யக் கூடாது”

ஒரு கண் மருத்துவர், “இந்த வழக்கில் மருத்துவர்கள் மீது பொய்யாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது. சிறைக்கு போக விரும்பாத மருத்துவர்கள், இனிமேல் ஏழைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை செய்யக் கூடாது” என்று தனது கோபத்தைக் கொட்டியிருக்கிறார். அந்த மருத்துவரின் கோபம் பேஸ்புக்கில் பரவலாக பகிரப்பட்டது.

தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் இத்தகைய முகாம்கள் மருத்துவ சேவை விற்பனைச் சரக்காவதை காட்டுகின்றன. முகாம் மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், கருவிகளை கிருமிநீக்கம் செய்வதிலும், நோயாளிகளை அறுவை சிகிச்சைக்கு தயாரிப்பதிலும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பிலும் அலட்சியம் இருக்கும்.

  • ஜோசப் வழக்கில் சராசரியாக 7-வது நாள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்ணில் நோய் தொற்று (Endophthalmitis) ஏற்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவமனை பராமரிப்பு என்னவானது?
  • முகாமில் அறுவை சிகிச்சைகள் நடத்தப்படும் முறை குறித்து ஏன் எந்த கண் மருத்துவரும் தனது குரலை எழுப்பவில்லை?
  • மனித உயிர்களும் உறுப்புகளும் இலக்குகளாகவும், புள்ளிவிபரங்களாகவும், பொருளாதார எண்ணிக்கையாகவும் சுருக்கப்படும், மருத்துவச் சேவையை விற்பனைச் சரக்காக்கும் போக்கு குறித்து ஏன் யாரும் குரல் எழுப்புவதில்லை?
  • சகிக்க முடியாத சூழலில் உட்கார்ந்து நோயாளியின் கண்ணை பரிசோதிக்கும் கண் மருத்துவர் அது குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?
ஜோசப் கண் மருத்துவமனை வழக்கு
7 ஆண்டு இருளுக்குப் பிறகு அந்த 70 வயது முதியவர்கள் தீர்ப்பு பெற்றுள்ளார்கள்.

11-வது ஐந்தாண்டு திட்டத்தில் மருத்துவ சேவையை தனியார்மயமாக்கும் இந்திய அரசின் நேரடி நடவடிக்கையாக தனியார்-பொதுத்துறை கூட்டு என்ற வடிவத்தில் தேசிய ஊரக சுகாதார இயக்கம் முதல் பல தொண்டு நிறுவனங்கள் நடத்தும் மாவட்ட பார்வைக் குறைபாடு கட்டுப்பாடு திட்டம் (DBCP), தேசிய மனநல திட்டம் (NMHP) முதலியன தொடங்கப்பட்டன.

இத்தகைய திட்டங்களை நடத்தும் எந்த ஒரு அமைப்புக்கும் (தொண்டு நிறுவனம்) 3 ஆண்டுகளில் 25 லட்சம் ரூபாய்க்கு அதிகமான பணப்புழக்கம் இருக்க வேண்டும் என்பதுதான் முன் நிபந்தனை.

அரசு மருத்துவமனையா - மரண வாசலாமாவட்ட பார்வைக் குறைபாடு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், தொண்டு நிறுவனங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் ஈடுபடுத்தப்பட்டு, கிராமம் கிராமமாக பரிசோதனை நடத்தப்பட்டு, மக்கள் கொண்டு வரப்பட்டு, அறுக்கப்பட்டு, பொருத்தப்பட்டு அனுப்பப்படுகின்றனர். பரிசோதனை செய்வது முதல் அறுவை சிகிச்சை செய்வது, கண்விழிகளை எடுப்பது வரை இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. மனித உயிர்களை பலி கொடுக்கும்படியான நடவடிக்கைகளுக்கு தனது அற உணர்வுகளை உதிர்த்துக் கொண்டு மருத்துவர் ஏன் வேலை செய்ய வேண்டும்?

இந்த அறுவை சிகிச்சைகள் இலவசம் இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவற்றை ஏற்பாடு செய்து நடத்தும் தொண்டு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் அரசு மானியம் வழங்கப்படுகிறது. ரூ 60 லட்சம் முதல் ரூ 1 கோடி வரையில் இந்திய அரசு நிதி ஒதுக்குகிறது.

ஒவ்வொரு கண்புரை அறுவை சிகிச்சைக்கும் தொண்டு நிறுவனத்துக்கு ரூ 750 வழங்கப்படுகிறது, அதிலிருந்து ரூ 100 மருத்துவருக்கு கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு கண் மருத்துவர் 30 நோயாளிகளுக்கு மேல் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது. ஆனால், கண்கள் விற்பனைச் சரக்காக மாறி, அவற்றுக்கு ஒரு விலை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒரு மருத்துவர் ஒரு நாளைக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

பீகார் சிறப்பு முகாம்
பீகார் மாநிலத்தின் நேபாள எல்லையை ஒட்டியுள்ள கிராமத்தில் 2003-ல் நடந்த கருத்தடை சிறப்பு முகாமின் கோரக் காட்சி (கோப்புப் படம்).

பெரும் எண்ணிக்கையில் அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் முகாம்களில் இலக்குகள் துரத்தப்படுகின்றன, அங்கு எண்ணிக்கைதான் நோக்கம், உயிர்கள் விற்பனை சரக்காக்கப்படுகின்றன. மருத்துவர்கள் ஏன் அத்தகைய நடைமுறைக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. சிகிச்சை நடத்தப்படும் முறை, அது நடத்தப்படும் இடம், இவற்றைப் பற்றி அவர்கள் ஏன் கேள்வி எழுப்பவில்லை? ஒரு மருத்துவரைச் சுற்றி இலக்குகள், புள்ளிவிபரங்கள், லாபம் பற்றி கவலைப்படும் வணிக ஆட்கள் நிரம்பியிருக்கின்றனர். பல விஷயங்கள் சமரசம் செய்யப்பட்டு, புதைக்கப்பட்டு, மூடப்பட்டு விடுகின்றன..

2008-ல் திருச்சி ஜோசப் மருத்துவமனை, 2008-ல் மத்திய பிரதேசம் மண்டாலாவில் யோகிராஜ் மருத்துவமனை, 2010-ல் மத்திய பிரதேசம் இந்தூரில், 2011-ல் சத்தீஸ்கரில், 2014-ல் பஞ்சாப் அம்ருத்சரில் என்று ஒவ்வொரு கூட்டு அறுவை சிகிச்சை விபரீதங்களும் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை இருளடையச் செய்தன.

தொண்டு நிறுவன எந்திரத்தின் லாபத்துக்கான இந்த மாபெரும் சக்கரத்தில் முக்கியமான பற்களாக செயல்படும் மருத்துவர்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருக்கிறது.

பல்வேறு சிறப்புத் துறைகளில் கண் சிகிச்சைத் துறைதான் அதிகமாக கார்ப்பரேட் மயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த கண் மருத்துவரும் தனியார் மருத்துவமனைகளில் எந்திரங்களுக்கு இரை போட்டு, இலக்குகளை எட்டும் நோக்கில் வேலை செய்வதைப் பற்றி பேசுவதேயில்லை.

மருத்துவம் தனியார்மயம்
தனியார் மருத்துவமனைகளில் எந்திரங்களுக்கு இரை போட்டு, இலக்குகளை எட்டும் நோக்கில் வேலை.

நமக்கு இலக்குகள் வைக்கப்படுகின்றன. இலக்குகளை அடையும்படி மேல் அதிகாரிகள் உத்தரவிடுகின்றனர்.

  • மனநல மருத்துவமனையில் முறையான அங்கீகாரம் இல்லாம் நோயாளிகளை (MHA) அனுமதிக்கும்படி சொல்லப்படுகிறோம்.
  • முறையான கிருமி அகற்றும் முறைகள் பின்பற்றப்படாத சூழலில் அறுவை சிகிச்சைகள் செய்ய சொல்லப்படுகிறோம்.
  • மருந்துகள் இல்லாத நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைக்கப்படுகிறோம்.
  • நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்து தொண்டு நிறுவனங்கள் நிதியில் நடக்கும் தனியார் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கிறோம்

நாம் உத்தரவுகளுக்கு கண்மூடித்தனமாக கீழ்ப்படிகிறோம்.

ஒரு மருத்துவருக்கு கடமையும், பொறுப்பும் இருக்கிறது. தனக்கு மேலே இருக்கும் அரசு அதிகாரியோ, அல்லது தான் வேலை செய்யும் தொண்டு நிறுவனமோ இடும் உத்தரவுகளை கண்ணை மூடிக் கொண்டு அவர் பின்பற்ற முடியாது.

ஒரு மருத்துவர் தனது உயர் அதிகாரியின் உத்தரவை கண்மூடித்தனமாக பின்பற்றி மருத்துவ அறங்கள் ஆதரிக்கப்படாத, ஊக்குவிக்கப்படாத சூழலில் பணி புரிய முடியுமா? அதன் மூலம், ஒரு மருத்துவராக இருப்பதன் அடிப்படை சாராம்சத்தை அவர் தியாகம் செய்யவில்லையா? அவர் சிகிச்சை அளிக்கும் உயிர்களின் வாழ்வையும், உரிமைகளையும் பாதுகாக்க அவருக்கு உள்ள தார்மீக கடமையை அவர் புறக்கணிக்கவில்லையா?

மருத்துவ அறம்
சிகிச்சை அளிக்கும் உயிர்களின் வாழ்வையும், உரிமைகளையும் பாதுகாக்கும் தார்மீக கடமை.

“நான் தீங்கு செய்ய நினைக்கவில்லை, எனது நோக்கம் சிகிச்சை அளித்து குணப்படுத்துவதுதான்” என்று ஒரு மருத்துவர் சொல்லலாம். ஆனால், “சிகிச்சை என்ற பெயரில் உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன, நோயாளியின் பாதுகாப்பு மீறப்படுகிறது, அந்த இடமும் அவர் செய்யும் சிகிச்சையும் நோயாளியின் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிப்பது” என்று அந்த மருத்துவருக்கு தெரிந்திருக்கிறது.

“actus reus non facit reum nisi mens sit rea” – “மனத்தில் குற்ற நோக்கம் இல்லா விட்டால் செயலில் குற்றம் இல்லை” என்று இங்கு நாம் சொல்ல முடியுமா? இந்த விஷயத்தில் மனம் குற்றமிழைக்கவில்லையா?

A Few Good Men திரைப்படத்தின் இறுதிக் காட்சியில், Code Red நடவடிக்கையை தான்தான் கட்டளையிட்டதாக பெருமளவு பெருமிதத்துடனும் ஆணவத்துடனும் ஒத்துக் கொள்வார், கர்னலாக நடிக்கும் ஜேக் நிக்கல்சன். கர்னலின் உத்தரவுகளை நிறைவேற்றி Code Red-ஐ அமல்படுத்திய இரண்டு படைவீரர்களும் தண்டிக்கப்படுவார்கள். ராணுவ நீதி விசாரணை நடத்தி, அவர்களது சீருடை பறிக்கப்படும். ஒரு படைவீரர் இன்னொருவரிடம், “உத்தரவுக்குத்தானே அடிபணிந்தோம், நாம் ஏன் தண்டிக்கப்படுகிறோம்” என்று அழுது கொண்டே கேட்பார். மற்றவர், “பலவீனமானவர்கள், அதிகாரம் இல்லாதவர்களுக்காக நாம் நின்றிருக்க வேண்டும்” என்று பதில் சொல்வார்.

மருத்துவர்களுக்கான ஒரிஜினல் ஹிப்போக்ரடிக் உறுதிமொழி
மருத்துவர்களுக்கான ஒரிஜினல் ஹிப்போக்ரடிக் உறுதிமொழி

தீங்கு செய்யாதே என்பதை இன்றைய புதிய தாராளவாத கொள்கை காலகட்டத்தில், கண்மூடித்தனமாக உத்தரவுகளை பின்பற்றாதே என்று விளக்கிக் கூறலாம். பார்க்காதவர்களாக, கேட்காதவர்களாக, பேசாதவர்களாக, எந்தக் கருவிகளும், வசதிகளும், மருந்துகளும் இல்லாத இடங்களில், லாபமீட்டும் கார்ப்பரேட்டுகள் அல்லது தொண்டு நிறுவனங்கள் லாப வெறியில் மருத்துவ அறங்களை அறுத்துப் போடும் இடங்களில் பணி புரியாதீர்கள்.

அரசு மருத்துவமனை
மக்களுக்கு விடை வேண்டும். அவர்களிடம் விடை இல்லாத கேள்விகள் இருக்கின்றன. (கோப்புப் படம்)

மக்களுக்கு விடை வேண்டும். அவர்களிடம் விடை இல்லாத கேள்விகள் இருக்கின்றன. அவர்களது சொந்த பந்தங்களின் இறப்புக்கான உண்மையான காரணம், மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் போவது, கைக்காசை செலவழிக்க வேண்டிய நிலைமை, மருத்துவ காப்பீட்டு திட்டங்கள், புதிய மருந்து கொள்கை, அவர்களது உரிமைகள். வாழ்வதற்கான அவர்களது உரிமை, உடல்நலத்துக்கான அவர்களது உரிமை தொடர்பான கேள்விகள் இருக்கின்றன.

மக்களை தினமும் எதிர்கொள்ளும் மருத்துவர்களுக்கு, உண்மை தெரியும். ஆனால், தெளிவான ஒரு மவுனம் நிலவுகிறது, காதடைக்க வைக்கச் செய்யும் மவுனம். மக்களையும், அவர்களது உரிமைகளையும் கொன்று கொண்டிருக்கும் மவுனம்.

எந்த எல்லை வரை நாம் சமரசம் செய்து கொள்வோம். எவ்வளவு நாள் நாம் அமைதியாக இருப்போம்? குடி உரிமைகளுக்காக, சமூக நீதிக்காக, கல்வித்துறையில் இட ஒதுக்கீட்டுக்காக போராடிய மக்கள், மருத்துவக் கல்வி கட்டண மானியத்துக்கு வரிப்பணம் செலுத்தி, நம்மை மருத்துவர்கள் ஆக்கிய மக்களுக்கு இதுதான் நமது கைம்மாறா? சிந்தியுங்கள் மருத்துவர்களே, உணர்ச்சிவசப்படுவது நமது அறிவை மறைக்கிறது. சிந்தியுங்கள்.

உலக மருத்துவர்கள் சங்கம் (WMA) முன்வைத்த தார்மீக கோட்பாடுகளுக்கு இந்திய மருத்துவ சங்கம் (IMA) கட்டுப்பட்டது. அதன் தமிழ்நாடு கிளை பொறுப்பில் இருப்பவர்கள் எந்த விதமான தார்மீக கோட்பாடுகளும், அறங்களும் இல்லால் பேசுகிறார்கள். ஐ.எம்.ஏ தமிழ்நாடு கிளையின் உண்மை முகம் அம்பலமாகியிருக்கிறது. – மக்களுக்கு எதிரான, தலித்துகளுக்கு எதிரான, நோயாளிகளுக்கு எதிரான முகம். அதன் சாதிய நிலைப்பாடு அம்பலமாகியிருக்கிறது.

நாம் போராடுவோம் மருத்துவர்களே, ஆனால் மக்களுக்கு எதிராக அல்ல, மக்களுடன் சேர்ந்து போராடுவோம். மே 2 அன்று ஐ.எம்.ஏ-ன் சாதீய நிலைப்பாட்டுக்கு எதிராக, நோயாளிகளுக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு எதிராக, போராடுவோம். அவர்களது நோக்கம் அலட்சியமான, கார்ப்பரேட் மயமான, பணம் உறிஞ்சும் மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதுகாப்பதே.

கருப்புப் பட்டை அணிந்து மக்களுடன், மக்கள் உரிமைகளை பாதுகாக்க போராடுவோம். நோயாளிகள், உறவினர்களை வர்க்கம், சாதி அடிப்படையில் பாகுபடுத்துவதை கண்டிப்போம்.

  • நாம் ஒன்றிணைவோம்.
  • இந்திய மருத்துவ சங்கம் (IMA), தமிழ்நாடு கண்மருத்துவர்கள் சங்கம் (TNOA) நிலைப்பாட்டை எதிர்ப்போம்.
  • மருத்துவர்கள் மக்களுக்கும், சமூகத்துக்கும் பொறுப்பானவர்கள்.
மருத்துவ அறம்
மருத்துவர்கள் மக்களுக்காக நிற்க வேண்டும்; மக்களின் குரலாக திகழ வேண்டும். (கோப்புப் படம்)

புதிய தாராளவாத கொள்கைக்கான இந்த காலகட்டத்தில் ஊமைகளாகவும், செவிடர்களாகவும், குருடர்களாகவும் இருப்பது ஒரு தீவிரமான, கொடூரமான குற்றம். நாம் ஒன்றிணைவோம்.

மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து, தொடர்ந்து தனியார்மயப்படுத்தப்பட்டு வரும் மருத்துவத் துறையின் பல்வேறு கொள்கைகளையும் திட்டங்களையும் எதிர்த்து குரல் எழுப்ப முன் வர வேண்டும். நடைமுறை சாத்தியமற்ற இலக்குகளை வைத்து மருத்துவ அறங்கள் புறக்கணிக்கப்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். மருத்துவர்கள் மக்களுக்காக நிற்க வேண்டும்; மக்களின் குரலாக திகழ வேண்டும். லாப வேட்டைக்கான அந்த மாபெரும் சக்கரம், அதன் பற்களான மருத்துவர்களின் குரலை நசுக்கும் போது அதை எதிர்த்து பேசி தமது அறங்களை காத்துக் கொள்ள வேண்டும்.

மக்களுக்கான, நோயாளிகளின் உரிமைக்கான, மருத்துவ அறங்களை கடைப்பிடிப்பதற்கான சங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.

மருத்துவ அறங்கள் மருத்துவப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். உடல்நலத்தை தீர்மானிக்கும் சமூகக் காரணிகள் என்ற கண்ணோட்டம், மருத்துவக் கொள்கைகள் மீது உலகவங்கி கட்டவிழ்த்திருக்கும் கட்டமைப்பு வன்முறை பற்றி மருத்துவ பாடத்திட்டத்தில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். கொச்சையான உயிரியல் எளிமைப்படுத்தும் கண்ணோட்டத்தையும், உள்நாட்டு மருத்துவ முறைகள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலையும் புறக்கணிக்க வேண்டும்.

மக்களின் குரல் ஆவணப்படுத்தப்பட்டு, பதில் சொல்லப்பட வேண்டும். தேவைப்பட்டால் ஒரு சட்டப் பிரிவு அமைக்கப்பட வேண்டும்.

மருத்துவர்கள் பொறுப்புள்ள நபர்கள், சமூகம் அவர்களுக்கு நிறைய சலுகைகளை கொடுத்துள்ளது. அவர்கள் சமூகத்துக்கு பொறுப்பானவர்கள், அவர்களுக்கு சிறப்பு சட்ட பாதுகாப்பும், சலுகையும் தேவையா?

25 ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிராத, மருத்துவ ஊழியர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் எதிரான வன்முறை குறித்து சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் அறிவியல்பூர்வமாக ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனைகளுக்கு எதிரான வன்முறை, மக்கள் மீது மருத்துவ அமைப்பு செலுத்தும் வன்முறைக்கான எதிர் வன்முறைதான். வன்முறை, எதிர்வன்முறையை தோற்றுவிக்கிறது. சீனாவில் மருத்துவ ஊழியர்களுக்கு எதிரான வன்முறை பற்றிய சமீபத்திய லான்செட் கட்டுரை நமக்கெல்லாம் ஒரு பாடம்.

புதிய தாராளவாத கொள்கைகள் அவிழ்த்து விட்டிருக்கும் வன்முறையிலிருந்து நோயாளிகள் பாதுகாக்கப்பட வேண்டும். திட்டமிட்ட வன்முறை, இலக்கு நிர்ணயித்த திட்டங்கள், இவற்றிலிருந்தும், தமது பகட்டில் தாமே மயங்கியிருக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் அவிழ்த்து விட்டிருக்கும் தாக்குதலிலிருந்து பாதுகாப்போம்.

பட்ட மேற்படிப்பு, உறைவிட பயிற்சி மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போன்ற உறவினர்களின் சீற்றத்தை எதிர் கொள்ளும் முனையில் இருப்பவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் உணர்ச்சி குமுறல்களுக்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். மருத்துவமனை கட்டமைப்பில் குறைபாடுகள், போதாமைகள் அல்லது அரசு கொள்கைகள் அல்லது ஆரம்ப கட்டத்தில் அடையாளம் காணும் (வருமுன் தடுக்கும்) முறைகளின் தோல்வி, தேவைப்படும் தலையீடு இவை குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மருத்துவர்களே நாம் ஒன்றுபடுவோம், நமக்கு மத்தியில் இருக்கும் எதிரி தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.

மக்களோடு ஒன்றுபட்டு, மக்கள் மருத்துவத்தை கட்டியமைப்போம். அனைவருக்கும் மருத்துவ வசதி என்ற கனவை நனவாக்குவோம்.

DR.ARAVINDAN SIVAKUMAR, PSYCHIATRIST CHENNAI.
(டாக்டர் அரவிந்தன் சிவகுமார், மனநல மருத்துவர், சென்னை)

மே நாள் : உழைப்பின் அழகு – படங்கள் !

4
சாலை மட்டுமா தேய்கிறது?
மே நாள்: உழைப்போரின் போராட்ட நாள்!
மே நாள்: உழைப்போரின் போராட்ட நாள்!
சாலை மட்டுமா தேய்கிறது?
சாலை மட்டுமா தேய்கிறது?
செல்பேசி வெறும் டெக்னாலஜியின் அற்புதமல்ல!
செல்பேசி வெறும் டெக்னாலஜியின் அற்புதமல்ல!
உழைப்பு மட்டுமே பயமறியாது!
உழைப்பு மட்டுமே பயமறியாது!
வானை முட்டும் வளர்ச்சியின் அடிப்படை யார்?
வானை முட்டும் வளர்ச்சியின் அடிப்படை யார்?
வளையல் கரமல்ல, வளைக்கும் கரம்!
வளையல் கரமல்ல, வளைக்கும் கரம்!
எந்திரத்தின் திறமை அதை ஆட்டுவிக்கும் கரத்திற்கு சொந்தமானது!
எந்திரத்தின் திறமை அதை ஆட்டுவிக்கும் கரத்திற்கு சொந்தமானது!
19-ம் நூற்றாண்டின் காட்சி மாறினாலும் போராடும் களம் மாறவில்லை!
19-ம் நூற்றாண்டின் காட்சி மாறினாலும் போராடும் களம் மாறவில்லை!
வங்கதேசத்தின் பெருமை மதமல்ல!
வங்கதேசத்தின் பெருமை மதமல்ல!
கருத்துப்போனது பிரச்சினையல்ல, முதலாளித்துவத்தை கருவறுக்காததுதான் பிரச்சினை!
கருத்துப்போனது பிரச்சினையல்ல, முதலாளித்துவத்தை கருவறுக்காததுதான் பிரச்சினை!
பொம்மைகளை மட்டுமல்ல, போராடும் உணர்ச்சியையும் தயாரிக்கிறோம்!
பொம்மைகளை மட்டுமல்ல, போராடும் உணர்ச்சியையும் தயாரிக்கிறோம்!
உழைப்போரின் மே தினம் உழைக்காதோருக்கு பிடிக்காது!
உழைப்போரின் மே தினம் உழைக்காதோருக்கு பிடிக்காது!
இந்த உலகம் அசைவது இவர்களால்தான்!
இந்த உலகம் அசைவது இவர்களால்தான்!
சுரங்கத் தொழிலின் மூலதனம் தொழிலாளிகளின் மரணம்!
சுரங்கத் தொழிலின் மூலதனம் தொழிலாளிகளின் மரணம்!
கணினியோடு வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை!
கணினியோடு வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை!
இந்த இந்தியர்களைப் பற்றி கவலைப்படுவது யார்?
இந்த இந்தியர்களைப் பற்றி கவலைப்படுவது யார்?
தொழிலாளியின்றி அமையாது இவ்வுலகு!
தொழிலாளியின்றி அமையாது இவ்வுலகு!
லம்பார்கினி காரை வாங்குவது மட்டும்தான் பணக்காரர்கள்!
லம்பார்கினி காரை வாங்குவது மட்டும்தான் பணக்காரர்கள்!
காலந்தோறும் ஒலிக்கும் அழியாத முழக்கம்!
காலந்தோறும் ஒலிக்கும் அழியாத முழக்கம்!
பிரம்மாண்டங்களை படைக்கும் நிஜ சாகசக்காரர்கள்!
பிரம்மாண்டங்களை படைக்கும் நிஜ சாகசக்காரர்கள்!
உழைப்பின் அழகு!
உழைப்பின் அழகு!
ஏகாதிபத்தியம் அஞ்சும் வர்க்கம் இதுதான்!
ஏகாதிபத்தியம் அஞ்சும் வர்க்கம் இதுதான்!

vinavu may day 2015 (2)

பொதுப் போக்குவரத்தை தனியார் மயமாக்க மோடி அரசு சதி

51

மோடி அரசின் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா 2015: நாட்டின் பொதுப் போக்குவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரை வார்க்கும் சதித்திட்டம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

கார்ப்பரேட் கம்பெனிகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் எடுபிடியான மோடி அரசு, சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா (2015)-ஐ பாராளுமன்றத்தில் நிறைவேற்ற இருக்கிறது. பொதுப்போக்குவரத்தில் இருக்கும் அரசின் கட்டுப்பாட்டை முழுவதையும் நீக்கி, மாற்றி கார்ப்பரேட் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்கு விடுவதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். மக்கள் குறைந்த பட்சம் சாலையில் நடமாடுவதற்கான உரிமையையும் போக்குவரத்து உரிமையையும் பறிக்கும் இந்த சட்டத்தைப் பற்றி நாம் அறிந்து கொள்வதும் இந்த மசோதாவை முறியடிக்க உடனடியாக வீதியில் இறங்கி போராடுவதும் அவசர அவசியக் கடமையாக உள்ளது.

ஓட்டுனர்களை ஒழித்துக் கட்டும் சட்டம் :

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்
தற்போது வைத்துள்ள ஓட்டுனர் உரிமங்களை எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் காலாவதியாகிவிடும்.

இந்த சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா,  கட்டுப்பாடுகள் என்ற பெயரில் ஓட்டுனர்களின் உரிமைகளைப் பறித்து, அவர்களை ஒழித்துக் கட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சொல்லலாம்.

  • கார், லாரி, மினிடோர், டெம்போ, டாக்ஸி போன்ற வாகனங்களின் ஓட்டுனர்கள் மட்டுமல்ல, இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் வரை எல்லோரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும்.
  • புதிதாக ஓட்டுனர் உரிமம் பெற இருப்பவர்களுக்கு 9 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும். அதன் பின்னர் 3 மாதங்கள் சோதனை காலம். அதன் பிறகுதான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.
  • சாலை விதிகளை மீறினால், அதற்கான தண்டனைகள் கடுமையானவை. எடுத்துக்காட்டாக:
  1. ஒருமுறை சாலைவிதியை மீறியதாக குற்றஞ்சாட்டப் பட்டவர் தனது சொந்த செலவில் இரண்டு தமிழ் செய்தித் தாள்கள், ஒரு ஆங்கில செய்தித்தாளில், “நான் தவறு செய்தவன்” என்று சொந்த செலவில் விளம்பரம் செய்ய வேண்டும்.
  2. சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தினால், அந்த ஓட்டுனர் ரூ 50,000 அபராதம் கட்ட வேண்டும். ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.
  3. இவைமட்டுமல்ல, சாதாரண தவறுகளுக்கு கூட தண்டனைத் தொகை தற்போதைய தொகையைவிட 10 முதல் 50 மடங்கு அதிகம்.
  • தற்போது வைத்துள்ள ஓட்டுனர் உரிமங்களை எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்குள் காலாவதியாகிவிடும்.
  • ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை இனி அரசு நடத்தாது. இதனை கண்காணிப்பதையும் ஆர்.டி.ஓ. செய்ய மாட்டார். அதாவது ஆர்.டி.ஓ. அலுவலகமே இனி இருக்காது. எப்படி?
  • இச்சட்டப்படி, ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி என்பது சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் இருக்க வேண்டும். அங்கு மருத்துவ சோதனைகள், பணிமனை (ஒர்க் சாப்) போன்றவை இருக்க வேண்டும். பயிற்சியும் அங்கேதான் தரவேண்டும். இவ்வளவு பெரிய அளவில் யார் நடத்துவது என சிந்திக்கிறீர்களா. ஆமாம், தற்போது இருக்கும் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளிகளை மூடிவிட வேண்டியதுதான். ஏனென்றால், வாகன தயாரிப்பு நிறுவனங்களே (கார்ப்பரேட் கம்பெனிகள்) இந்த ஓட்டுனர் பயிற்சியை அளிக்கும்.
  • ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி மட்டுமல்ல ஓட்டுனர் உரிமத்தையும் அவர்கள் தான் வழங்குவார்கள்.

திருடன் கையில் சாவி!

போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்
வாகனங்கள் ஓடும் தகுதியுடைனவாக இருக்கின்றதா என சோதித்து (எப்.சி. – Fitness Certificate)-ஐ கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள்

வாகனங்கள் ஓடும் தகுதியுடைனவாக இருக்கின்றதா என சோதிப்பது (எப்.சி. – Fitness Certificate) தற்போது ஆர்.டி.ஓ. அலுலகங்கள் மூலம் நடத்தப்படுகிறது. இனி இதுவும் ஒழிக்கப்படும். அதனை கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள். தனிநபர் பயன்பாட்டுக்கான வாகனகங்ளுக்கு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி. பார்ப்பது என்ற தற்போதைய நடைமுறையை மாற்றி 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, வாகனங்களுக்கான பதிவையும் (Registration) இனி கார்ப்பரேட் கம்பெனிகள் தான் வழங்குவார்கள். இந்தக் கட்டுப்பாடுகள் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களுக்கும் பொருந்தும். இந்த இரண்டு கட்டுப்பாடுகள் மூலம் ஒரு வண்டியை தகுதியற்ற வண்டி என்று சொல்லி புதிய வண்டிகளை வாங்க நிர்ப்பந்திக்க முடியும்.

உதிரி பாகங்கள் விற்பனையிலும் கார்ப்பரேட் ஆதிக்கம்!

ஓடும் நிலையில் உள்ள வண்டிகள் என்பதற்கான வரையறையும் மாற்றப்பட்டுள்ளது. அதாவது, ஒருவர், தான் வைத்துள்ள வண்டிகள் ஓடும் நிலையில் இருக்க வேண்டும் என்றால் ஒரிஜினல் உதிரி பாகங்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று இந்த சட்டம் சொல்கிறது. இதன் மூலம், ஒரு கம்பெனி தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்ட முடியும். மேலும், உதிரி பாகங்கள் விற்கும் கடைகளையும் ஒழித்துக் கட்ட முடியும்.

போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தம்
கோடிக்கணக்கான தொழிலாளர்கள் – லட்சக்கணக்கான சிறு முதலாளிகள் பங்கு பெரும் வாகனங்கள் பழுது நீக்கும் தொழிலை (சர்வீஸ் ஒர்க்) முற்றிலும் ஒழித்துக் கட்டுவது இதன் நோக்கம்.

வாகனங்களில் பழுது நீக்கும் வேலையான (சர்வீஸ் ஒர்க்) என்பது தனியொரு தொழில் அல்ல. பெயின்டிங், வெல்டிங், ரப்பிங், பாலிசிங், கிரீசிங் என்று நூற்றுக்கணக்கான வேலைகளை உள்ளடக்கியது. முக்கியமாக பழைய பாகங்களை புதுப்பித்து பயன்படுத்துவது என்பது மிகப்பெரும் அளவில் நடக்கிறது. இவற்றையெல்லாம் உள்ளடக்கிய சர்வீஸ் தொழிலை தற்போது வாகன உரிமையாளர்கள் என்ற வகையில் நமது விருப்பப்படி உள்ளூர் பட்டறைகளில், சாலை ஓரக் கடைகளில் செய்து வருகிறோம். இந்தச் சட்டப்படி இனி உள்ளூர் கடைகளில் சர்வீஸ் செய்யக் கூடாது. மாறாக, சர்வீஸ் சென்டர்கள் என்று ஒவ்வொரு வாகன தயாரிப்பு – விற்பனை நிலையங்கள் வைத்திருக்கும் இடத்தில் தான் செய்ய வேண்டும்.

மொத்தத்தில், நாட்டில் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் – லட்சக்கணக்கான சிறு முதலாளிகள் பங்கு பெரும் வாகனங்கள் பழுது நீக்கும் தொழிலை (சர்வீஸ் ஒர்க்) முற்றிலும் ஒழித்துக் கட்டுவதுதான் இதன் நோக்கமாக உள்ளது.

ஆணையங்களின் வழியே கார்ப்பரேட்டுகளில் அதிகாரம்!!

தற்போது அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நாடு முழுவதும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேருந்துகள் நாள் தோறும் மக்களை சுமந்து செல்கின்றன. இனி இந்த வண்டிகளின் பர்மிட் காலம் முடிந்தவுடன் அந்த பேருந்துகளுக்கு மறு பர்மிட் வழங்கப்படாது. அதாவது, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இனி இயங்காது. அவை முற்றிலும் ஒழிக்கப்படும்.

இந்த பர்மிட்களை இனி அரசின் மூலம் வழங்குவதும் நிறுத்தப்படும். இதற்கென தனியாக ஒரு ஆணையம் தேசிய அளவில் அமைக்கப்பட இருக்கிறது. அந்த ஆணையத்தின் பெயர், நேசனல் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி (National Transport Authority). இந்த ஆணையம் எல்லா வழித்தடங் களையும் ஏலத்தில் விடும். இந்த ஏலத்தில் பன்னாட்டுக் கம்பெனிகளும் பங்கேற்கலாம்.

அந்த வகையில், நம்மூர் அரசு பேருந்து, தனியார் பேருந்துகளை ஒழித்துக் கட்டி பன்னாட்டுக் கம்பெனிகளின் பேருந்துகள் மட்டும்தான் ஓடப்போகின்றன. இது மட்டுமல்ல, அதிக விலைக்கு ஏலம் எடுக்கும் கம்பெனிக்குதான் ரூட் பர்மிட் வழங்கப்படும். அந்தக் கம்பெனி அந்த வழித்தடத்தில் செல்வதற்கான பேருந்து கட்டணத்தை தாமே தீர்மானித்துக் கொள்ளும்!

அதனால், இலாபம் தரும் வழித்தடங்களில் (ரூட்களில்) மட்டும்தான் பேருந்துகளை இனி பார்க்கமுடியும். கிராமங்களுக்கான பேருந்துகள் ஒழிக்கப்படும்!

கார்ப்பரேட்டுகளின் சர்வாதிகாரம் – சட்டபூர்வ பாசிசம்!

விவசாயத்திற்கு அடுத்தப்படியாக அதிகப்படியான மக்களால் மேற்கொள்ளப்படும் தொழில்களில் ஒன்றான ஆட்டோ மொபைல் தொழில், போக்குவரத்துத் தொழில் அதனை சார்ந்த சிறு, குறு முதலாளிகள், கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஒழிக்கப்பட இருக்கிறது. மற்றொருபுறம், மக்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நடமாடும் உரிமைகளும் பறிக்கப்பட்டு வருகிறது. இது இந்த துறையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் எல்லா துறைகளிலும் நீக்கமற நிறைந்துள்ளது.

நில அபகரிப்புச் சட்டம், தொழிலாளர் துறை திருத்தச் சட்டம், சிறு–குறுந்தொழில்களை ஒழிக்கும் பல சட்டங்கள், இரயில்வே தனியார்மயம், பொதுத்துறைகள் தனியார்மயம், கனிம வளங்களை கார்ப்பரேட் கம்பெனிகள் கொள்ளையடிக்க இருந்த தடைகள் எல்லாம் நீக்கம், பி.எப். தனியார்மயம், இன்சூரன்ஸ் முழுவதும் தனியார்மயமாக்கம், வங்கிகள் தனியார்மயம் என்று ஒட்டுமொத்த நாடே கார்ப்பரேட் கம்பெனிகளின் பேயாட்சிக்கான களமாக மாற்றப்பட்டு வருகிறது. பெயரளவிலான ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, பாசிசத்தை சட்டபூர்வமாக அரங்கேற்றுகிறது மோடி அரசு.

தேச வளர்ச்சி என்று கூறி மக்கள் மீதான பல்வேறு ஒடுக்குமுறைகளை தட்டிக்கேட்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் பறிக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, ஊழல், பண ஆதாயம், பொது நலம், இலாப நோக்கம், வறுமை, பேரழிவு, சுற்றுச்சூழல் சீர்க்கேடு, ஏழைகள், பணி நிரந்தரம், மருத்துவ உதவி, சிறு தொழில்கள், தேச முன்னேற்றம், அச்சுறுத்தல், நாட்டுப் பற்று, சட்ட மீறல், தேச வளர்ச்சிக்கு எதிரான குற்றம் என எல்லாவற்றிற்கான வரையறைகளையும் மாற்றி இந்தியாவை ஒரு திறந்தவெளி சிறைச்சலையாக மாற்றி வருகிறது மோடி அரசு. அதன் ஒரு பகுதிதான் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா 2015.

இதற்கு காரணம் என்ன?

ஜனநாயகம் என்ற பெயரில் இதுகாறும் கடைப்பிடித்து வந்த ஏட்டளவிலான உரிமைகளை ஏன் ஒழிக்கிறார்கள்?

இந்த நாட்டின் கார்ப்பரேட் முதலாளிகள் தேச முன்னேற்றத்தை கொண்டுவருவோம் என்று 1947 முதல் கூறி வந்தனர். ஆனால், இவர்கள் மேற்கொண்ட எந்த சீர்த்திருத்தங்களும் தேசத்தை முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லவில்லை. மாறாக, மீள முடியாத கடும் நெருக்கடிக்கு கொண்டு சென்றுள்ளது.

1992–ல் கொண்டுவரப்பட்ட தனியார்மயம் – தாராளமயக் கொள்கைகளை அமுல்படுத்தியதன் விளைவாக, இன்று நாடே திவாலாகும் நிலையை எட்டிவிட்டது. நாட்டில் அநீதிகள் பெருகி, ஏற்கனவே சொல்லப்பட்ட கடமைகள், உரிமைகள், நியாயங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிட்டன. மொத்தத்தில், இந்த நாட்டை ஆளும் வர்க்கங்கள், மக்களுக்கு வாழ்வளித்து காக்க இலாயக்கற்றதாகிவிட்டன. இந்த அரசும் அதன் கட்டுமான உறுப்புகளும் செயலிழந்துவிட்டன.

மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

தடி எடுத்தவன் தண்டல்காரன் என்ற வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களில் சர்வாதிகாரம் நேரடியாக ஆதிக்கம் புரிய வேகமாக வந்து கொண்டிருக்கிறது. போலி ஜனநாயகக் கட்டமைப்புகள் இடிந்து நொறுங்கி விழுந்து கொண்டிருக்கின்றன.

மக்களுக்கு உதவாத செயலிழந்துபோன இந்த சட்டம், நீதியை நம்பிக்கொண்டிருப்பதைக் கைவிட்டு உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை நிறுவிக் கொள்வது ஒன்றே தீர்வு.

எங்கள் ஊரில் மணல் கொள்ளை அடிக்கக் கூடாது, எங்கள் ஊரில் சிப்காட்டுக்கு நிலம் எடுக்கக் கூடாது, எங்கள் ஊரில் மீத்தேன் எடுக்கக் கூடாது, காட்டு யானைகள் எங்கள் ஊருக்குள் வரக்கூடாது என்று நாடெங்கும் மக்கள் போர்க்கோலம் பூண்டு முன்னேறி வருகிறார்கள். எந்த ஓட்டுக் கட்சியையும் நம்புவதற்கு இனியும் மக்கள் தயாராக இல்லை.

பாலியல் குற்றவாளிகளை வீதியிலேயே தண்டிக்கும் முன்னுதாரணமிக்க போராட்டங்கள் ஆங்காங்கே தொடங்கிவிட்டன. பல்வேறு இடங்களில் எமது தோழமை அமைப்புகளின் தலைமையில் மக்கள் போராடி வருகின்றனர். இந்த திசையில் மக்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவோம்! சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை முறியடிப்போம்!

உழைக்கும் மக்களே!

  • இச்சட்டப்படி ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி நடத்துவது, ஓட்டுனர் உரிமம் வழங்குவது,, வாகனங்களுக்கு எப்.சி. பார்ப்பது, வாகனங்களுக்கான சர்வீஸ் – உதிரி பாகங்கள் விற்பனை – இன்சூரன்ஸ் போன்ற அனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கே!
  • அரசு மற்றும் தனியார் பேருந்துகளை ஒழித்துக்கட்டி எல்லா வழித்தடங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளிடம் ஒப்படைக்கப்படும்!
  • போக்குவரத்துக் கட்டணத்தை அவைதான் தீர்மானிக்கும்!
  • ஆட்டோ, டெம்போ, லாரி, பேருந்து ஓட்டுனர்கள், உதிரி பாகங்கள் விற்கும் கடைகள், ஒர்க் சாப்கள், சிறு வாகன உரிமையாளர்கள் என பல கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தைப் பிடுங்குவதுதான் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதா!
  • கார்ப்பரேட் கம்பெனிகளின் பேயாட்சிக்கு வழிவகுக்கும் சாலை பாதுகாப்புச் சட்ட மசோதாவை முறியடிப்போம்!
  • ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்!
  • மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

30-04-2015 அன்று நாடெங்கும் போக்குவரத்து துறை சார்ந்த தொழிலாளர்கள் நடத்த இருக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிப் பெறச் செய்வோம்!

modi-makes-transport-corporate-property-poster

[நோட்டீசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784

ஆட்டோ, லாரி, பேருந்து படங்கள் – இணையத்திலிருந்து