Wednesday, August 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 651

ரோல்ப் ஹாரிஸ் – குழந்தைகளை சிதைத்த டிவி பிரபலம்

0

ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்து தொலைக்காட்சிகளில் பிரபலமான நிகழ்ச்சி தொகுப்பாளரான ஆஸ்திரேலியாவில் பிறந்த ரோல்ப் ஹாரிஸ் (வயது 84) க்கு லண்டன் நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள், ஒன்பது மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தனது பிரபலத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி சிறுமிகளையும், இளம்பெண்களையும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியிருப்பதாக இவர் மீது 12 குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களில் சிலர் பின்னாட்களில் பிரபலங்களாக மாறியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பன்னிரண்டு குற்றங்களில் ஆறில் பாதிக்கப்பட்டவர்கள் அவரது மகளின் சிநேகிதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோல்ஃப் ஹாரிஸ்
ரோல்ஃப் ஹாரிஸ்

டிட்கெரிடோ என்ற ஆஸ்திரேலிய பழங்குடியின குழல் வாத்தியத்தை பயன்படுத்தி இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ள ஹாரிஸ் லண்டனில் குறிப்பாக குழந்தைகள் நிகழ்ச்சி, விலங்கு மருத்துவம் பற்றிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் வழங்கி வந்தவர். 60-70 களில் ரோல்ப்-இன் கார்ட்டூன் கிளப், விலங்கு மருத்துவமனை போன்ற தொடர்கள் பார்வையாளர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது. இசையில் மட்டுமின்றி ஓவியத்திலும் மிகவும் திறமை படைத்தவர் ஹாரிஸ். அதனால் கடந்த 2005-ல் தனது வைரவிழா பிறந்தநாளின் போது இங்கிலாந்து ராணி எலிசபெத் தனது உருவத்தை வரைவதற்கு இவரையே தேர்ந்தெடுத்து வரைய வைத்தார்.

இவரைப் போலவே தற்போது காலமாகி விட்ட பிபிசி சேனல் புகழ் ஜிம்மி சவில்-ம் சிறார்களை வன்புணர்வு செய்த்தாக குற்றச்சாட்டுகள் 2012 மத்தியில் கிளம்பியது. முன்னர் அத்தகைய புகார்கள் எழுந்தபோது அவர் உயிரோடிருந்த காரணத்தாலும், தனது புகழினாலும் அவற்றை காணாமல் அடித்தார். தற்போது அதுபற்றிய ஆவணப்படங்களே வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹாரிசின் வழக்கறிஞர் ஏற்கெனவே போதுமான காலம் அவர் சிறையில் இருந்து விட்டதாகவும், தேவையான அளவுக்கு அவரது புகழுக்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாகவும், எனவே தண்டனையை ரத்து செய்யும்படியும் கூறினர். நீதிபதிகளும் தனது புகழை பயன்படுத்தி சிறுமிகளையும், பெண்களையும் ஹாரிஸ் வல்லுறவுக்குள்ளாக்கவில்லை என்று தீர்ப்பில் கூறியிருந்தனர்.

வழக்கின்போது, தான் 18 வயதுக்கு குறைந்த பெண்களிடம் பாலியல் உறவு கொள்ளவில்லை என்று வாதிட்டார் ஹாரிஸ். 1997-ல் இதுபோல ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டு அதனை காதல் மற்றும் பரஸ்பர நட்பின் அடிப்படையில் நடந்த ஒன்றாக கூறி அப்பெண்ணின் தந்தைக்கு கடிதம் எழுதியிருந்தார் ஹாரிஸ். அதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 1968-ல் தென்னாப்பிரிக்காவில் தன்னிடம் ஆட்டோகிராப் கேட்ட எட்டு வயது சிறுமியிடம் பாலியல் வல்லுறவை நிகழ்த்தியிருக்கிறார் இவர். 1978-ல் ஐடிவியின் ஸ்டார் கேம்ஸ் நிகழ்ச்சிக்காக கேம்பிரிட்ஜ் வந்த அவர் அங்கு ஒரு 14 வயது சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளார். விசாரணை கடந்த ஜனவரி துவங்கி நடந்து வந்த்து. ஜூலை 4-ம் தேதி தீர்ப்பு வெளியானது.

ரோல்ஃப் ஹாரிஸ்
நீதிமன்றத்துக்கு வரும் ரோல்ஃப் ஹாரிஸ்

இதுதவிர வெனசா பெல்ட்ஸ் என்ற ரேடியோ பிரபலத்திடம் பொது நிகழ்ச்சியில் தவறாக நடந்திருக்கிறார் இவர். இது அவரது மனைவியின் கண் முன்னால் பிக் பிரேக்ஃபாஸ்ட் நிகழ்ச்சியில் 1996-ல் நடந்துள்ளது. தற்போது தீர்ப்பு வெளியான பிறகு ஸ்காட்லாண்டு யார்டிடம் இதனை ஒத்துக்கொண்டுள்ள வெனசாவுக்கு தற்போது வயது 52. இதுபற்றி வெனசா ட்விட்டரில் குறிப்பிட்ட உடனேயே அவர் புகழ் விரும்பி, மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், பாலியல்ரீதியாக கொச்சைப்படுத்தியும்  மூன்றாந்தர வசனங்களுடனும் ட்விட்டர்கள் நிரம்பின.

இதனை ஏன் அப்போதே சொல்லவில்லை என்று கேட்டதற்கு, அப்போது எனது திருமணத்தை முறித்துக்கொள்ள நான் விரும்பவில்லை, அதனால்தான் போலீசுக்குப் போகவில்லை என்று வெனசா தெரிவித்திருக்கிறார். ஆக இங்கிலாந்திலும் இந்தியாவைப் போலவே பாலியல் வன்முறை நிகழ்வில் பாதிக்கப்பட்ட பெண்தான் சமூகத்தை பொறுத்தவரை குற்றவாளி என்பதுதான் எதார்த்தம். இந்த இடம்தான் ரோல்ப் ஹாரிஸ் போன்ற அயோக்கியர்கள் ஒளிந்துகொள்ள கிடைத்த இடமாக போய் விடுகிறது.

இதுபோக லிண்டா நோலன் என்ற ஆஸ்திரேலிய பாடகிதான் இவர் ஆப்ரிக்காவில் வைத்து வல்லுறவுக்குள்ளாகிய பெண்  (8 வயது குழந்தை) என்றும் தெரிய வந்துள்ளது. தற்போது மூன்று குழந்தைகளுக்கு தாயான 55 வயது நிரம்பிய அவர் இத்தண்டனை ரோல்ப் ஹாரிசுக்கு போதாது என்று தெரிவித்துள்ளார். இதனையே அரசு தரப்பு வழக்கறிஞரும் கூறியிருக்கிறார். எனினும் ஹாரிசிடமிருந்து நீதிபதிகள் வழக்கிற்கான செலவை மாத்திரமே வசூலிக்க உத்திரவிட்டனர். நட்ட ஈட்டுத்தொகை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

பாதிக்கப்பட்டவர்களில் மிகவும் இளைய பெண்ணான எட்டு வயது சிறுமியின் அறிக்கை ஒன்று தீர்ப்புக்கு பிறகு வாசிக்கப்பட்டது. உலகம் முழுதும் இப்படி பொறுக்கிகளால் சீரழிக்கப்படும் குழந்தைகளுக்கு பாதுகாப்பளிக்கும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும் எனத் தான் விரும்புவதாக அதில் அந்த பெண் கூறியிருந்தார். ஹாரிஸ் நிகழ்த்திய பாலியல் வல்லுறவினால் எனது எட்டு வயதிலேயே அந்த வயதுக்குரிய குழந்தைத்தனத்தை இழந்து விட்டேன் என்கிறாள் ஒரு பெண். அந்த நாள்தான் என் வாழ்வின் அழுக்கும், துயரமும் நிறைந்த நாள் என்று ஒரு பெண்ணும், அன்றுதான் நான் முழுதுமாக நொறுங்கிப் போனேன் என்று இன்னொரு பாதிக்கப்பட்ட பெண்ணும் கூறியிருக்கின்றனர். அன்று முதல் என்னால் தூங்கவே முடியவில்லை, அவரால் எப்படி தினசரி வாடிக்கையாக வாழவும் இரவில் தூங்கவும் முடிகிறது என்று தெரியவில்லை என்கிறாள் இன்னொரு பெண்.

ரோல்ஃப் ஹாரிஸ்ஆஸ்திரேலிய நாடக குழுவை சேர்ந்த ஒரு பெண் 1986-ல் அவளுக்கு பதினைந்து வயது நடந்தபோது இங்கிலாந்துக்கு வந்திருந்தார். அப்போது ஹாரிஸ் அவரை பலமுறை வல்லுறவுக்குள்ளாக்கினார். நிரந்தர பய உணர்வை அது தோற்றுவித்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இன்னொரு பெண் அவர் தன்னை பாலியல் உறவுக்கான பொம்மையாக பாவித்து விட்டதை கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். தற்போது இன்னும் பல அவரது பாலியல் குற்றங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அவர் ஒரு புகழ்பெற்ற மனிதர், ஒரு பெண் குழந்தைக்கு தகப்பன், மேலும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை நடத்துபவர், எனவேதான் அவரை நாம் நம்புகிறோம். ஆனால் இவரே குழந்தைகளிடம் இப்படி நடந்து கொண்டால் பிறகு என்ன செய்வது என்று ஐடிவி செய்தியின்போதான கேள்விபதில் ஒன்றுக்கு பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். உண்மைதான். சினிமா, டிவி, ஆன்மீகம், அரசியல் என பிரபலமாக இருப்பதால் தமது பிரபலம் மற்றும் அதிகாரத்தை அல்லது அதிகார தொடர்புகளை பயன்படுத்தி அனைத்து குற்றங்களையும் மறைத்துக் கொள்ளலாம் என்றுதான் இத்தகையவர்கள் எண்ணுகின்றனர். இதற்கான வாய்ப்பையும் நிலவும் சமூக அரசியல் பொருளாதார கலாச்சார சூழல் ஏற்படுத்தி விடுகிறது.

தற்போது கூட குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சில சம்பவங்கள் வெளிநாட்டில் நடந்திருப்பதால் அவை தனது விசாரணை வரம்புக்கு வெளியில் இருப்பதாக சொல்லி லண்டன் நீதிமன்றம் தட்டிக்கழித்து விட்டது. குழந்தைகளை ஒரு நாட்டில் பாலியல் வன்முறை செய்து விட்டு இன்னொரு நாட்டில் அடைக்கலம் புகலாம் என்று மனித குலத்துக்கே ‘நாகரீகம்’ கற்றுக் கொடுத்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நீதிமன்றமே சொல்லி விட்டது.

குற்றம் சுமத்தியவர்களில் ஒருவரான ஆஸ்திரேலிய பெண்மணி புகழுக்காகவும், பரபரப்பு செய்திக்காகவும் 30 ஆயிரம் டாலர் பணத்துக்காக ஹாரிஸ் மீது குற்றம் சுமத்தியதாகவும் இணையத்தில் கோட்டு சூட்டு கனவான்கள் நியாயப்படுத்துகிறார்கள். எல்லாவற்றையும் விட ரோல்ஃப் ஹாரிசின் மனைவியும், மகளும் தற்போது வரை அவருக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். இந்த அடிமைத்தனத்தை என்ன வார்த்தைகளால் விவரிப்பது? நம்ம ஊர் கண்ணகியெல்லாம் எந்த மூலைக்கு.

இங்கே திரையுல பிரபலங்களால் வல்லுறவுக்குள்ளாகும் துணை நடிகைகளின் புகாரை காவல்துறை பெற்றுக் கொள்ளவே முன்வராது. மனிதப் புனிதர் ஆசாராம் பாபு மீது புகார் கொடுக்க பாதிக்கப்பட்ட சிறுமி முன்வந்தபோது அவளது பெற்றோரே முதலில் நம்பவில்லை. பிறகு புகார் சென்ற பிறகு அவளுக்கு மனநிலை சரியில்லை என்று ஆசாராம் பாபு தரப்பு கதை கட்டியது. சூரியநெல்லிப் பெண் இன்னமும் குரியனிடமிருந்து நீதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாள். பிரபலங்களை எதிர்த்துப் போராட முன்வந்தால் அது பாலியல் வன்முறையாக இருந்தாலும் சரி, பொருளாதார, அரசியல் வன்முறையாக இருந்தாலும் சரி அதனை எதிர்கொள்ளவும், சமூக புறக்கணிப்பினை எதிர்கொள்ளவும் திராணி இருக்க வேண்டும். அதுவும் அடிமைப்படுத்தப்பட்ட பெண் பாதிக்கப்படுபவராக இருப்பின் இன்னமும் உறுதி தேவைப்படுகிறது என்பதைத்தான் ஹாரிசின் வழக்கும் பழைய சாவில்லேவின் வழக்குகளும் காட்டுகின்றன.

ஒருக்கால் அந்த உறுதி பாதிக்கப்பட்ட பெண்களிடம் இல்லை என்றால் அவர்களை அப்படி பலவீனமாக்கியது நாம்தான் இல்லையா?

அமித் ஷா – மோடி ஜனநாயகம் வழங்கும் கிரிமினல் தலைமை

2

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக மோடியின் நெருங்கிய கூட்டாளி அமித் ஷா (வயது 50) நேற்று தில்லியில் நடைபெற்ற அக்கட்சியின் ஆட்சிமன்றக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது ஏற்கனவே ஊடகங்களில் கசியவிடப்பட்ட செய்திதான். ஆர்.எஸ்.எஸ் ஆதீனத்தின் தலைவர் தனது வாரிசை தேர்ந்தெடுப்பது போன்று மோடி தனக்கு பிறகு கட்சியில் நம்பர் 2 வாக அமித் ஷாவை அறிவித்திருக்கிறார். ஒரு கட்சியின் தலைவர் யார் எனும் ஆவல் இத்தகைய ஆளும் வர்க்க கட்சிகளுக்கு பொருந்தாது என்றாலும், சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக நடைமுறைகளை காவிக் கூட்டம் எப்படி நாறடிக்கிறது என்பதை மூக்கை பொத்திக் கொண்டு பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.

அமித் ஷா
மோடியுடன் அமித்ஷாவும் சேர்ந்தே வருவார்.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களில் 30% பேர் கிரிமினல் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்ற தகவல்கள் வெளியான போது, ஓராண்டுக்குள் அவர்கள் அனைவர் மீதும் நடைபெறும் விசாரணையை முடுக்கி விட்டு குற்றவாளிகளை இனம் கண்டு தண்டித்து நாட்டை கிரிமினல்களிடமிருந்து காப்பாற்றுவேன் என்று உறுதி மொழி அளித்திருந்தார் பிரதமர் மோடி. இவர் மீதே வழக்குகளும், குற்றச்சாட்டும் உண்டு எனும் விபரத்தை அமல்படுத்தினால் இந்த உபதேசம் பல்லிளிக்கும், போகட்டும், மற்றவர் மீதும் இந்த உபதேசம் எப்படி வினையாற்றும்?

பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அமித் ஷா மீது குஜராத்தில் சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி ஆகியவர்களைக் கொன்ற போலி மோதல் வழக்குகள் இன்னும் நிலுவையில்தான் உள்ளன. 2010-ல் குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது இதற்காக பதவி விலகிய அமித் ஷா உடனடியாக மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சபர்மதி சிறையிலும் இருந்திருக்கிறார். நிபந்தனை பிணையில் வெளிவந்த இவர் இரண்டு ஆண்டுகள் குஜராத் மாநிலத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்ல இதற்கு பிறகும் ஷாவின் குற்றப் பட்டியல்கள் விரிவு பெறுவது நிற்கவில்லை.

2012-ல்  உத்திர பிரதேச மாநில பாஜக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஷா அங்கு ஜாட் சாதி வெறி மற்றும் இசுலாமிய வெறுப்பு நிறைந்த அவரது பேச்சுக்களுக்காக கடந்த தேர்தலில் பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கு தடை செய்யப்பட்டிருந்தார். தேர்தல் ஆணையத்திடம் அவர் மன்னிப்பு கேட்ட பிறகு அத்தடை நீக்கிக் கொள்ளப்பட்டது. காப் பஞ்சாயத்துகள், முசா்பர் நகர் கலவரம் போன்றவற்றில் இந்துமதவெறியை கிளப்பிவிட்ட ஷா அதையே மூலதனமாக வைத்து, நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் உபியில் 72 இடங்கள் வரை கைப்பற்றுவதற்கும் பாஜகவிற்கு உதவினார். அது போல பீகாரில் ராம் விலாஸ் பாஸ்வானை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கொண்டு வந்த சேர்த்ததில் அரசியல் புரோக்கர் அமர்சிங்கையும் விஞ்சி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அமித் ஷா
அமித் ஷா

1964-ல் ஒரு பிளாஸ்டிக் வியாபாரியின் மகனாக பிறந்த அமித் ஷா 1982-ல் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக்காக பணியாற்றிக் கொண்டிருந்த நரேந்திர மோடியை சந்திக்கிறார். அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இணைத்துக் கொள்கிறார். 1986-ல் மோடி ஆர்.எஸ்.எஸ்சிலிருந்து பா.ஜ.கவுக்கு அனுப்பப்பட்ட போது அமித் ஷாவும் பாஜகவில் இணைகிறார். 1997 முதல் நான்கு முறை சர்கேஜ் தொகுதியில் இருந்து குஜராத் சட்டமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார். 2012-ல் நாரண்புராவில் இருந்து தேர்வாகிறார். மோடி அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட முக்கியமான 12 துறைகளுக்கான அமைச்சராகவும் இருந்து வந்தார்.

அமித் ஷா உண்மையிலேயே மக்கள் மத்தியில் இறங்கி சாதுரியமாக இந்துத்துவா கருத்துக்களை எளிமையாக பேசி வெறிபிடிக்க வைத்து, குறிப்பான இலக்குடன் அமைப்பாக்குவதில் திறமைசாலி. அதே நேரத்தில் மோடி என்ற இமேஜை உருவாக்கி அதனை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்துவதில் கைதேர்ந்த பெருச்சாளி என்பதும் கவனிக்கதக்கது. மோடியும், அமித் ஷாவும் இந்துத்துவா மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரட்டை மாடுகள் என்றுதான் சொல்ல வேண்டும். ராமர் கோவில் என்ற செக்கினை சுற்றி வந்த பழைய மாடுகளைப் போலன்றி புதிய கார்ப்பரேட் ரேசுக்கான காளைகள் இவர்கள்.

குஜராத்தில் கட்சியினரால் சாஹேப் என மரியாதையாக விளிக்கப்படும் அமித் ஷா தற்போது தேசிய அளவில் இனி பரப் பிரம்மம் என்று கூட அழைக்கப்படலாம். பதவி விலகும் அக்கட்சியின் தேசியத் தலைவரும், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சருமான ராஜநாத் சிங் குறிப்பிட்டபடி ஷாவிடம் ‘கற்பனை வளம் மிக்க சிந்தனைகளும், கட்சியை அமைப்பு ரீதியாக வழிநடத்தும் உத்தியும்’ நிரம்பவே உள்ளன. இதனைக் கொண்டுதான் போலி என்கவுண்டர், ஆள் கடத்தல், மோடிக்காக இளம்பெண்ணை வேவுபார்த்தல், போலியான எம்.எம்.எஸ் களை செல்பேசிகளின் வழியாக பரவ விட்டு ஒரு கலவரத்தை நடத்துதல் என்பதெல்லாம் சாத்தியமானது. 2002 குஜராத் கலவரத்திலும் மோடிக்கு இப்படி ஒரு கலவரம் நடத்தி ஆட்சியில் உறுதியாக ஊன்றி நிற்க ரூட் போட்டுக் கொடுத்தவர் இந்த கற்பனை வளம் மிக்க அமித் ஷா தான்.

அமித் ஷா உளவு
மோடி சார்பில் இளம்பெண்ணை வேவு பார்த்த அமித்ஷா

விரைவில் மகாராஷ்டிரம், ஜம்மு காஷ்மீர், ஹரியானா, ஜார்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதற்கு வியூகம் வகுத்து ராஜயசபையில் பெரும்பான்மை பெற வேண்டும், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் மோடியை ஆளவிட வேண்டும், தென்னிந்தியாவிலும் பாஜக பலம்பெறவேண்டும் என்று பல்வேறு லட்சியங்களோடுதான் அமித் ஷா வை தேசிய தலைவராக பா.ஜ.க.வும் மோடியும் தெரிவு செய்திருக்கிறார்கள். எனவே இம்மாநிலங்களில் விரைவில் கலவரங்களை எதிர்பார்க்கலாம். அல்லது மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிகளில் இந்துத்துவா சக்திகள் ஈடுபடலாம். அல்லது தேசிய அளவில் ராமர் கோவில், பொது சிவில் சட்டம், ஜம்மு காசுமீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் 370 வது சட்டப்பிரிவை நீக்குதல் போன்ற விசயங்களை கிளறி விடலாம்.

மோடி பிராண்டு அலையால் நாடாளுமன்றத்தில் கிரிமினல்களின் நடவடிக்கை இல்லாமல் போகாது என்பது மட்டுமல்ல அவர்கள்தான் ஆட்சியில் முக்கிய இடத்தில் அமருவார்கள் என்பது தெரிகிறது.

அமித் ஷா புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் மோடி டிவிட்டரில் சாதாரண செயல் வீர்ராக ஆரம்பித்து அயராத உழைப்பு மற்றும் உறுதியால் அரசியல் வாழ்வில் அமித் ஷா முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், இனி அவரது தலைமையில் கீழ் பாஜகவின் செல்வாக்கு மிகுதியாவதுடன் கட்சியும் வலுப்பெறும் என்று சொல்லியிருக்கிறார். இந்த வலுப்படுத்துதலில் எத்தனை எளியோர் சாகப் போகிறார்கள், எத்தனை சதித்திட்டங்கள் அரங்கேறப்போகின்றன என்பதையெல்லாம் யூகித்து பார்க்க மட்டும் செய்வோமா இல்லை தடுத்து நிறுத்தப் போகிறோமா?

–    கௌதமன்
கார்ட்டூன்கள்  இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை

புதுதில்லியின் பேய் மாளிகைகள்

1

தில்லி மாநில முன்னாள் முதல்வர் திருமதி ஷீலா தீட்சித் தற்போது கேரள மாநில ஆளுநராக இருக்கிறார். காங்கிரசு கட்சியை சேர்ந்த இவரை எளிமையானவர், கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர் என்றெல்லாம் ஆரம்பத்தில் புகழ்ந்து தள்ளினார்கள். இடையில் இந்த புகழ் லட்சணம் காமெல்வெல்த் கட்டுமான ஊழலிலேயே சிரிப்பாய் சிரித்தது. சாலைகள் அமைத்தது, அதிக விலை கொடுத்து தெருவிளக்குகளை வாங்கியது என அடுத்தடுத்து அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

ஷீலா தீட்சித்
ஷீலா தீட்சித்

இப்படி ஒருபுறம் இருக்க இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம், 2008-ன் சிறந்த மாநில முதலமைச்சராக இவரைத்தான் தெரிவு செய்தது. சிறந்த அரசியல்வாதிக்கான என்.டி.டி.வி விருதை 2009-ல் பெற்றார். காமன்வெல்த் ஊழலில் கல்மாடியும், டெல்லியை ஆண்ட காங்கிரசு அரசும் புழுத்து நாறிய 2010-ம் ஆண்டில்தான் இந்தோ-இரான் நட்புறவு கழகத்தின் விருதும், 2013-ல் முதலாளிகள் அமைப்பான அசோசெம்-இன் கடந்த பத்தாண்டுகளில் பொதுவாழ்வில் ஈடுபட்ட பெண்களில் தலைசிறந்தவர் என்பதற்கான விருதும் ஷீலா தீட்சித்திற்கு கிடைத்திருந்தன.

1998 முதல் 2013 வரை தில்லி முதல்வராக பொறுப்பு வகித்த ஷீலா தீட்சித்தின் மொத்த சொத்து மதிப்பு கடைசி ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பது அவரது வேட்பு மனு மூலம் தெரிகிறது. இதற்கிடையில் சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஷீலா தீட்சித் தில்லி முதல்வராக இருந்தபோது குடியிருந்த அரசு மாளிகை குறித்த விவரங்களை அரசிடம் கோரியிருந்தார்.

அதற்கு பதிலளித்த மத்திய பொதுப்பணித் துறை, அவரது பழைய இருப்பிடமான 3, மோதிலால் நேரு மார்க் பங்களா நான்கு அறைகளை கொண்டது எனவும், அதில் 31 குளிர்பதன எந்திரங்களும் (ஏ.சி), 15 நீர் குளிர்ப்பிகளும் (டெஸர்ட் கூலர்), 25 சுடுநீர் கருவிகளும் (ஹீட்டர்), 16 காற்று சுத்திகரிப்பான்களும் (ஏர் ப்யூரிபையர்), 12 சுடுநீர் மின்கலன்களும் (கெய்சர்) இருந்த்தாகவும், இதற்காக மட்டும் அரசு தரப்பில் ரூ 16.81 லட்சம் செலவிடப்பட்டதாகவும் கூறியிருக்கின்றனர். தற்போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இந்த பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவைக்கு அதிகமாக இருந்தவற்றை கழற்றி சில அரசு அலுவலகங்களில் பொருத்தியிருப்பதாக அரசு அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

இந்த பங்களா 3.5 ஏக்கரில் விரிந்துள்ளது. 1920-ல் கட்டப்பட்டது. தற்போது இதனை சீரமைக்க மாத்திரம் ரூ 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கடும் மின்சார தட்டுப்பாடு தில்லியில் நிலவும் நிலையில் இத்தனை செலவில் இதெல்லாம் ஒரு முதல்வருக்கு அத்தியாவசியமான ஒன்றா? என்ற கேள்வி பல தரப்பில் இருந்தும் எழுந்துள்ளது. இதனை பரிசீலிக்கையில் சமூக பொருளாதார நிலைமையில் இரண்டாக பிளவுபட்டிருக்கும் தில்லியை ஒரு பறவைப் பார்வையிலாவது பார்ப்பது அவசியம்.

ஜனாதிபதி மாளிகை
ஜனாதிபதி மாளிகையின் உள்ளே

1920-களில் துவங்கி 17 ஆண்டுகளில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகையில் 340 அறைகள் உள்ளன. இரண்டு லட்சம் சதுர அடியில் 70 கோடி செங்கற்கள், 30 கோடி மார்பிள்களோடு கட்டப்பட்டுள்ள இந்த மாளிகை உயரமான இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இப்பகுதியில் 1911-ல் 4 ஆயிரம் ஏக்கர் நிலம் கையப்படுத்தப்பட்டது. 300 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன. கட்டி முடிக்க அப்போதே 9 லட்சம் பவுண்டுகள் (அப்போதைய மதிப்பில் ரூ 2 கோடி) செலவானது. இதற்கருகில்தான் பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், மத்திய அரசு அலுவலகங்கள் எல்லாம் அமைந்துள்ளன. ராஷ்டிரபதி பவனில்தான் முன்னர் வைசிராய்கள் இருந்தார்கள். இங்கு இரண்டு பூங்காக்களும் இருக்கின்றன.

7, ரேஸ் கோர்ஸ் சாலை என்பது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம், 12 ஏக்கரில் விரிந்து பரந்து இருக்கும் இதற்குள் ஐந்து பங்களாக்கள் உள்ளன. ராஜீவ் காலம் முதல் இதுதான் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பகுதியாகும். தற்போது மோடி 5-ம் எண்ணுள்ள பங்களாவில் வசிக்கிறார். 7 ஐ அலுவலகமாக பயன்படுத்தி வருகிறார். மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருக்கும் இப்பகுதியில் உள்ள முதல் எண் ஹெலிபேடு (ஹெலிகாப்டர் தளம்) ஆகும். சப்தார்ஜங்க் விமான நிலையத்திற்கு 7-ம் எண் வீட்டிலிருந்து நேரடியாக போய் வர 1.5 கிமீ தூரத்திற்கு ஒரு தனிப்பட்ட சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2010-ல் துவங்கப்பட்டு இம்மாத இறுதியில் முடிவடையும் என்று தெரிகிறது.  இதில் உள்ள ஐந்து பங்களாக்களும் 1980-ல் கட்டப்பட்டவை.

1920-களில் கட்டப்பட்ட ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், சவுத், நார்த் பிளாக்குகளில் அமைந்துள்ள அரசு தலைமைச் செயலகங்கள் இவற்றையெல்லாம் நிர்மாணித்தவர் எட்வின் லூத்தியன்ஸ். அதனால் இந்த பகுதிக்கே லூத்தியன்ஸ் பங்களா மண்டலம் என்று பெயர். 2800 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்திருக்கும் இம்மண்டலம்தான் உலகிலேயே ரியல் எஸ்டேட் துறை மதிப்பில் மிக உயர்ந்த விலையுள்ள நிலங்களை பெற்றுள்ள பகுதி.

தற்போது இங்கே சந்தை மதிப்பு சதுர அடி ரூ 6.25 லட்சம் என உயர்ந்துள்ளது. பெரும்பகுதி அரசு பங்களா என்ற அளவில் இப்பகுதியில் மாத்திரம் ஆயிரம் பங்களாக்கள் உள்ளன. தனியாரை பொறுத்தவரை ராஜன் மிட்டல் இப்பகுதியில் கடந்த ஆண்டு வாங்கிய பங்களாவின் மதிப்பு ரூ 156 கோடி. இந்தியா புல்ஸ்-இன் இணை நிறுவனர் ராஜீவ் ரத்தன் வாங்கிய ஒரு கிரவுண்டு நிலத்தின் மதிப்பு ரூ 220 கோடி. இப்பகுதியில்தான் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களது பங்களாக்கள் உள்ளன. கமல்நாத், மன்மோகன் போன்றவர்களும் இப்பகுதியில்தான் வசிக்கின்றனர்.

பங்களாஇதை விடவும் விலை உயர்ந்த இடங்கள் உள்ள பகுதி சாணக்கியபுரிக்கு அருகில் உள்ள புதிய மோதி பாக் பகுதி. ஒரு சதுர அடி நிலத்தின் விலை குறைந்தபட்சம் ரூ 10 லட்சம். 2007-ல் திட்டமிடப்பட்டு 2012-ல் முடிக்கப்பட்ட இந்த நகரியத்தில் 492 வீடுகள் உள்ளன. இணையமைச்சர்கள், துறைசார்ந்த செயலர்கள், நீதிபதிகள் என இருக்கும் இப்பகுதியில் சிசிடிவி வசதியுடன் கூடிய மூன்றடுக்கு பாதுகாப்பு உண்டு. 116 தனி பங்களாக்களும், 376 பெரிய அடுக்கக வீடுகளும் இதில் உள்ளன.

அவரவர் வாங்கும் ஊதியங்களின் தகுதிக்கேற்ப இது மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் வகை பங்களாக்கள் 14 உள்ளன. ஒவ்வொன்றும் தலா 809.79 சதுர மீட்டரில் (சுமார் 8,700 சதுரஅடி) கட்டப்பட்டுள்ள இவற்றில் முன்புறம் நீண்ட புல்வெளியும், இரண்டு கார் நிறுத்துமிடமும், நான்கு வேலைக்காரர்களுக்கான தங்குமிடங்களும் இருக்கின்றன. ஏறக்குறைய ரூ 100 கோடி மதிப்புடைய இப்பங்களாவிற்கு அரசு செலுத்தும் வாடகை மாத்திரம் மாதமொன்றுக்கு பல இலட்சங்களைத் தாண்டுகிறது. இதில் இருப்பவர்களின் அடிப்படை சம்பள விகிதம் ரூ 90 ஆயிரத்திற்கும் மேல் என்கிறார்கள்.

இரண்டாவது வகையில் பத்து பிளாக்குகளாக 376 அடுக்கக குடியிருப்புகள் உள்ளன. ஒவ்வொன்றும் 543 சதுர மீட்டர் (சுமார் 5,800 சதுர அடி) பரப்பளவுடையது. இதில் சிறப்பு மற்றும் கூடுதல் செயலர்கள் குடியிருப்பார்கள். மூன்று ஊழியர்கள் குடியிருப்பும், இரு கார் நிறுத்துமிடங்களும், புல்வெளிகளும் கொண்ட இந்த குடியிருப்பொன்றின் சந்தை மதிப்பு ரூ.60 கோடி வரை. அடுத்த மூன்றாம் வகையில் உள்ள 320 சதுர மீட்டர் (சுமார் 3,400 சதுர அடி) பரப்புடைய அபார்ட்மெண்டில் மூன்று அறைகளும், ஒரு விருந்தினர் அறையும், இரண்டு வீட்டுப் பணியாளர்களுக்கான குடியிருப்பும், ஒரு வாகன நிறுத்திடமும் இருக்கும். இக்குடியிருப்பின் சந்தை மதிப்பு ஏறக்குறைய ரூ 15 கோடி வரை இருக்கும். இவையனைத்திற்குமான வாடகையை உயரதிகாரிகளுக்காக அரசுதான் செலுத்தி வருகிறது.

பங்களாத்திய தில்லி பகுதியை சேர்ந்த லோதி எஸ்டேட், சரோஜினி நகர், லஷ்மிபாய் நகர், கரோல்பாக் பகுதிகளில் ஓரளவு நடுத்தர வர்க்க மக்கள் வசிக்க முடியும். கிழக்கு தில்லி பகுதியில் குறிப்பாக மயூர் விகார் போன்ற பகுதிகளில் சாதாரண மக்கள் அதிகமாகவும், நெருக்கியடித்துக் கொண்டும் வாழ்கின்றனர். பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சாதிகளும், சிறுபான்மையின மக்களும்தான் அதிகமாக இப்பகுதியில் குடியிருக்கின்றனர். தெற்கு மற்றும் வடக்கு தில்லியெல்லாம் சாமான்ய மக்களால் நுழையவே முடியாத அளவுக்கு செல்வச் சீமான்களால் நிரம்பி வழிகிறது.

இதுதவிர தோட்ட வீடுகள் என்ற பெயரில் ஏராளமான பண்ணை வீடுகள் தில்லியின் சுற்றுப்புறங்களில் உள்ளன. சிவ்லிங் மந்திருக்கு அருகில் உள்ள அப்படி ஒரு பண்ணை வீட்டின் மாத வாடகை மாத்திரம் ரூ 4 லட்சம். இத்தாலிய மார்பிள் பதித்த வீடு 5,000 சதுர அடியில் இருக்கும். நீச்சல் குளம், செயற்கை நீர்வீழ்ச்சி, இரண்டு பயிற்சியளிக்கப்பட்ட உயர்தர நாய்கள், டால்பி முறையிலான வீட்டு திரையரங்கம், புல்வெளி என இந்தப் பட்டியல் நீள்கிறது. 24 மணி நேரமும் உயர் அழுத்த மின்சார உத்திரவாதமும் தரப்பட்டுள்ளது.

2013 நவம்பரில் பண்ணை வீடுகளின் குறைந்தபட்ச பரப்பளவை 2.5 ஏக்கருக்கு பதிலாக 1 ஏக்கராக குறைத்துக் கொள்ள டெல்லி வளர்ச்சி ஆணையம் உத்திரவிட்டதனால் 2,700 உரிமையாளர்கள் புதிய பண்ணை வீடுகளை துவங்கினர். சட்டர்பூர் பகுதியில் 90-களில் ஏக்கர் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் என இருந்த மதிப்பு இப்போது ரூ 25 கோடியை தொட்டுள்ளது. பெரும்பாலும் பணக்கார சீமான்களும், உயர்நடுத்தர பிரிவினரும்தான் இத்தகைய பண்ணை வீடுகளை சொந்தமாகப் பெற்றுள்ளனர். இங்கு மட்டும் 50 ஆயிரம் ஹெக்டேர் விளைச்சல் நிலம் பண்ணை வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. இங்குதான் வார இறுதி நாட்களில் அரசு அதிகாரிகள், முதலாளிகள், தூதர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் கலந்துகொள்ளும் மது விருந்துகள் நடைபெறுகின்றன.

தெற்கு, மத்திய தில்லி மற்றும் துவாரகா பகுதியில் உள்ள பண்ணை வீடுகளை முதல் தர பண்ணை வீடுகளாக தில்லி மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பரப்பில் கட்டிடம் கட்டியதற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது தவிர அவை இடிக்கப்படவெல்லாம் இல்லை. இதையே சாமானிய மக்களுக்கு அரசு பொருத்திப் பார்ப்பதில்லை. இடித்து தரைமட்டமாக்கிய பிறகுதான் விசாரணையே நடக்கும். இப்பகுதியில் ரூ.5 கோடி ஏக்கர் பரப்பு கொண்ட பண்ணை வீடு எனக் கிடைக்கும். இதில் ஓரளவு வெளிநாடு வாழ் இந்தியர்களும் முதலீடு செய்கின்றனர்.

வீடற்றவர்கள்டெல்லியில் ஜுகீ ஜோப்டி என்று அழைக்கப்படும் குடிசைகள் கோணிப்பைகள் மற்றும் தார் டின்களால் கட்டப்பட்டு அங்குதான் பெரும்பான்மை மக்கள் குடியிருக்கின்றனர். இதுபோக கணிசமான மக்கள் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தொழிற்சாலைகளுக்கு அருகில் வெட்டவெளியில் வசிப்பதும் நடந்து வருகிறது. 2011 சென்சஸ் படி டில்லியில் மட்டும் 1.68 கோடி பேர் குடிசையில் வாழ்கின்றனர். மொத்தமாக எண்பது லட்சம் குடும்பங்கள் வரை தில்லியில் வீடற்றவர்கள் என்கிறது இன்னொரு புள்ளிவிபரம். வீடற்ற இவர்கள் பெரும்பாலும் நடைபாதையோரங்களிலும் பூங்காக்களிலும் இரவில் தங்கிக் கொள்கின்றனர். தினசரி ரூ 30 கொடுத்து போர்வையை வாடகைக்கு எடுத்துக் கொள்கின்றனர். இவர்களின் தினசரி வருமானம் என்பதே ரூ 100 முதல் 200 வரைதான். பெரும்பாலும் 17 வயது முதல் உத்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்திலிருந்து வேலை தேடி வரும் இளைஞர்கள்தான் அவர்கள். இதுதான் பெரும்பான்மை மக்கள் வாழும் டெல்லி. அதாவது ஒரு கிலோ உருளைக்கிழங்கும், ஐந்து வாழைப்பழங்களும் வாங்கி தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச கலோரி உணவை தினசரி பெற இயலாத தில்லி.

தில்லியில் ஜே-ஜே காலனிகள் என்றழைக்கபடும் இந்த காலனிகளில் இருந்துதான் வீட்டு வேலைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் குறைவான ஊதியத்தில் வேலை செய்ய மேட்டுக்குடியினர் வாழும் தில்லிக்கு ஆட்கள் கிடைக்கிறார்கள். தில்லியின் நவம்பர் மாதக் கடுங்குளிரை, மைனசில் செல்லும் குளிரை அதற்குரிய ஆடைகளோ, காலணிகளோ இல்லாத காரணத்தால் தாங்க முடியாத அம்மக்கள் கூட்டம் கூட்டமாக தீ மூட்டி அதனை சுற்றி அமர்ந்திருப்பர்.

அதையும் மீறி குளிரை தாங்க முடியாதவர்கள் தமது கால்களை தீயின் நாக்குகளுக்கு குறுக்காக தொடர்ந்து ஆட்டுவதை நீங்கள் தில்லியின் நடைபாதையோரங்களில் அவ்வப்போது பார்க்க இயலும். நாதிர்ஷா படையெடுத்த போது கூட தில்லியில் ஏழைகள் இவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்களா என்று தெரியவில்லை. இந்த ஊரில்தான் 25 சுடுநீர் கருவிகளும், 16 சுடுநீர் கலன்களும் உடைய வீட்டில் ஷீலா தீட்சித் குடியிருந்திருக்கிறார்.

தண்ணீர் வழங்கல்நாட்டின் எழுத்தறிவு வீதத்தில் 86% என முன்னணியில் இருக்கும் தில்லியில் குடிசைப்பகுதியில் வாழ்பவர்களில் 70 சதவீதம் பேர் எழுத்தறிவற்றவர்கள். இதுதான் வல்லரசு இந்தியாவின் தலைநகர லட்சணம். இவர்களது சராசரி மாத வருமானம் பெரும்பாலும் ரூ 6000 ஐ தாண்டுவதில்லை. தில்லியின் வடகிழக்கு பகுதியில் ஏறக்குறைய சதுர கிமீக்கு 37,000 பேர் வரை நெருக்கமாக வசிக்கின்றனர். ஆனால் மேன்மக்கள் வசிக்கும் டெல்லி பகுதியில் இது சதுர கிமீக்கு 3,820 என உள்ளதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

மேன்மக்கள் வசிக்கும் புதிய மோதி பாக் பகுதியில் தலா குடும்பம் ஒன்றுக்கு தினசரி 605 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. லூத்தியான்ஸ் தில்லி பகுதியில் இந்த அளவு 1,000 லிட்டர் வரை இருக்கிறது.

ஜே-ஜே காலனிகள் அரசால் சட்டப்படி அங்கீகாரம் பெறாத காரணத்தால் அதற்கு குழாய்கள் மூலமாக தண்ணீர் கொண்டு செல்லும் வேலைகள் துவங்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்றில் ஒருவருக்கு தண்ணீர் முறைப்படி கிடைப்பதில்லை. மாறாக மாதமொன்றுக்கு ரூ 400-800 வரை வசூலித்துக் கொண்டு அரசு போட்டுத் தந்த ஃபோர்வெல் பைப்புகளில் தண்ணீரை எடுக்க அனுமதிக்கிறார்கள் தண்ணீர் மாபியாக்கள். இதுதான் காலனிகளின் நிலைமை. இதில் பண்ணை வீடுகளில் அடிக்கடி நல்ல நீர் மாற்றப்படும் நீச்சல் குளங்களையெல்லாம் இந்த மக்கள் நேரில் கூடபார்த்திருக்க மாட்டார்கள்.

தில்லியில் கடுமையான மின்தட்டுப்பாடும் நிலவுகிறது. அவ்வப்போது அங்குள்ள பெரிய ஷாப்பிங் மால்களில் இரவு பத்து மணிக்கு மேல் மின்சப்ளை இருக்காது என அரசு அறிவித்தாலும் ஜெனரேட்டர்கள் மூலம் அங்கே இருட்டு வந்து விடாது. உயர்நடுத்தர மற்றும் அதிகார வர்க்க மனிதர்கள் வசிக்கும் தில்லியின் மத்திய மற்றும் தென்பகுதிகளில் மின்சாரத்திற்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது. ஏசி, ஹீட்டர், ஹெய்சர் என அறைக்கு ஒன்றுக்கு இரண்டாக பொருத்திதான் வாழ்கிறார்கள்.

இந்திரப் பிரஸ்தமாக இருந்து பின்னர் மொகலாயர் காலம், ஆங்கிலேயர் ஆட்சி வரை தில்லி ஆள்வோரின் தலைமை பீடமாக இருந்து வருவதால் இங்கே சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்திகள் மற்றும் அவர்களின் பரிவாரத்தினர் இப்படித்தான் அன்று முதல் ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர். இடையில் காலனியாக்க காலத்தில் ஆங்கிலேயர் அதை நவீன தில்லியாக மாற்றினர். ஆனால் ஆடம்பரமும், கேளிக்கையும், மர்ம பேரங்களும் மாறவில்லை. 47-க்குப் பிறகு இந்தியாவின் ஆளும் வர்க்க தலைமை பீடமாக தில்லி உறுதிபடுத்தப்பட்டது.

இப்படித்தான் காந்தியின் கதர் கட்சியில் எளிமைக்கு பேர் போன ஷீலா தீட்சித் ஒரு நட்சத்திர விடுதியை தோற்கடிக்கும் ஆடம்பரத்துடன் வாழ்ந்து வந்தார். இது அவரது சொந்த செலவில் அல்ல. மக்கள் வரிப்பணத்தில் சட்டப்படி அரசு ஒதுக்கிய செலவினத்திலிருந்தே ஷீலா தீட்சித் உள்ளிட்டோரின் மாளிகைகள் அலங்காரப்படுத்துகின்றன.

எனினும் இந்த மேட்டுக்குடி தில்லிக்கு கடுமுழைப்பு பரிசாரர்கள் தேவைப்படுகின்றனர். இத்தனை பெரிய மாளிகைகளை பராமரிப்பதற்கு உழைப்பாளிகள் வேண்டுமல்லவா? பீகார், உ.பி, வட கிழக்கு என எல்லா ஏழை மாநிலங்களில் இருந்தும் உழைக்கும் மக்கள் வந்து குவிகிறார்கள். புது தில்லி எனும் மாபெரும் எந்திரத்தின் பற்சக்கரங்கள் அவர்களை கடித்து கரும்பு சக்கை போல துப்புவதற்கு தயாராக இருக்கின்றன.

இதே மேட்டுக்குடி தில்லிதான் முழு இந்தியாவையும் ஆள்வதையும், ஆட்டிப் படைப்பதையும் செய்கிறது. அதனால் இந்த மேட்டுக்குடி தில்லி எனும் பேய் மாளிகைகள் அங்குள்ள உழைக்கும் மக்களுக்கு மட்டுல்ல ஒட்டு மொத்த இந்திய மக்களையும் எப்போதும் அச்சுறுத்துகின்றன. மக்கள் இந்த அச்சத்தை வெல்லும் வரை அங்கே மாளிகைகளில் இருந்து குடித்து கும்மாளமிடும் சிரிப்பொலி கேட்டுக்கொண்டுதான் இருக்கும்.

–    கௌதமன்.

மேலும் படிக்க

மோடி – முதலாளிகளின் தலைவன் தொழிலாளிகளின் பகைவன்

7

தி இந்து தலையங்கம்தோ இருப்பது, “தி இந்து” தமிழ் நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கக் கட்டுரை. இராஜஸ்தான் மாநில வசுந்தராராஜே அரசு தொழிலாளர் களுக்கு எதிராக கொடுத்திருக்கும் பரிந்துரை இந்தியா முழுவதற்கும் கொண்டுவரப்பட இருக்கிறது. சங்கம் வைக்கும் உரிமை, பணி நிரந்தர உரிமை என எல்லா உரிமைகளும் பறிக்கப்பட இருக்கிறது. நாமெல்லோரும் ஒப்பந்தத் தொழிலாளர்களாக வீதியில் வீழ்த்தப்பட இருக்கிறோம்.

தொழிலாளர் உரிமைகளைப் பறிப்பது என்பது, தேர்தலுக்கு முன்னதாகவே தீர்மானிக்கப்பட்டது. சென்ற காங்கிரசு அரசு மேற்கண்ட தாக்குதலை தொழிலாளர்கள் மத்தியில் திணிக்க முற்பட்ட போது தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக பின்வாங்கியது. தற்போது கார்ப்பரேட் முதலாளிகள் பயங்கரவாதி மோடி மூலம் இந்த திட்டங்களை அமுல்படுத்தத் துடிக்கின்றனர். தொழிலாளர் எதிர்ப்பை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்கு மோடிதான் சரியான நபர் என்று அவரை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.

கார்ப்பரேட்டுகளின் அடியாள் மோடி!

மோடி கார்ப்பரேட்டுகளின் அடியாள் என்பதற்கு பல சம்பவங்களை தேர்தலுக்கு முன்னால் வெளியிட்டுள்ளோம். முக்கியமாக மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளின் பட்டியலையும் அவர்கள் சொன்ன வாழ்த்துச் செய்திகளையும் பல ஆங்கிலப் பத்திரிகைகள் பட்டியல் போட்டு வெளியிட்டன. இந்தியன் எக்ஸ்பிரஸ் (மே 27, 2014 பக்கம் 13) வெளியிட்ட செய்தியின் சுருக்கத்தை இங்கே தருகிறோம்.

இந்திய முதலாளித்துவ நட்சத்திர திரள் மோடியை வாழ்த்தியது என்று குறிப்பிடும் அந்தச் செய்தியில் இவ்விழாவில் கலந்து கொண்ட கார்ப்பரேட் முதலாளிகள் சிலரது பெயரையும் அவர்களது வாழ்த்துச் செய்தியையும் குறிப்பிட்டுள்ளது. சி.ஐ.ஐ.யின் தலைவர் சந்திரஜித் பேனர்ஜி, ஃபிக்கியின் தலைவர் சித்தார்த் பிர்லா, மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்தின் சி.எம்.டி. ஆனந்து மகேந்திரா, ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீத்தா, இரு மகன்கள் மற்றும் அவரது தாயார் கோகிலாபென் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் அசோக் இந்துஜா, எஸ்ஸார் நிறுவனத்தின் தலைவர் ஷஷி ரூய் மற்றும் சி.இ.ஓ. பிரசாந்த் ரூய், மிட்டல் சகோதரர்கள் சுனில், ராஜன், ராகேஷ், டி.எல்.எஃப் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சிங், ஹீரோ மோட்டாரின் எம்.டி. பவன் முஞ்சல், சுஸ்லான் குழுமத்தின் தலைவர் டுல்சீ டான்டி மற்றும் வீடியோகான் குழுமத்தின் தலைவர் ராஜ்குமார் தூத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல், அதன் சி.இ.ஓ., ஏர் ஏசியா இந்தியாவின் மிட்டு சான்டில்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களன்றி யெஸ் பேங்க் தலைவர் ரானா கபூர், நாஸ்காம் நிறுவனத்தின் தலைவர் ஆர்.சந்திரசேகர் ஜீ என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர், எஸ்ஸல் குழுமத்தின் சுபாஸ் சந்திரா கலந்து கொண்டனர். ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்தின் சி.எம்.டி. சஜ்ஜன் ஜிண்டால் கலந்து கொண்டார்.

உப்பிலிருந்து சாஃப்ட்வேர் (ஸால்ட் டூ சாஃப்ட்வேர்) வரை எல்லாவற்றிலும் கால்பதித்துள்ள டாடா குழுமத்தின் ரத்தன் டாடா, அவரது வாரிசுகள், சைரஸ் மிஸ்திரி ஆகியோர் வெளிநாட்டில் இருந்ததால் வர இயலவில்லை என்று சொல்லி வாழ்த்து தெரிவித்துள்ளனர். யூ.பி. குழுமத்தின் தலைவர் விஜய் மல்லையா, எச்.டி.எஃப்.சி. தலைவர் தீபக் பரேக் ஆகியோரும் வெளிநாட்டில் இருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து வாழ்த்து கூறியுள்ளனர். ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் குமாரமங்கலம் பிர்லாவும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வளவு கார்ப்பரேட் முதலாளிகளும் கலந்து கொள்கிறார்கள் என்றால் மோடி அரசின் மீது அவர்களின் எதிர்ப்பார்ப்பு எப்படிப்பட்டது என புரிந்து கொள்ளுங்கள்!

மோடி ஆட்சியின் கார்ப்பரேட் சேவை!

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி

ஆட்சிக்கு வந்த மோடி நாளொரு தாக்குதலை உழைக்கும் மக்கள் மீது தொடுத்து வருகிறார். குறிப்பாக,

  • அதானி குழுமம் குஜராத்தில் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனம் அமைத்துள்ளது. இதில் 8,800 மெகாவாட் மின்சாரத்தை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். பதவியேற்பு விழாவிற்கு பாகிஸ்தான் பிரதமரை அவசர அவசரமாக அழைத்து, இதற்கான ஒப்பந்தத்திற்கு ஏற்பாடு செய்ய மோடி பாகிஸ்தான் பிரதமரை நிர்பந்தித்தார்.
  • இரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் 100 சதவீதம் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க திறந்து விட்டார். அதில் ஒரு பகுதியாக இரயில் கட்டணங்களை மிகப்பெரும் அளவிற்கு உயர்த்தியுள்ளார். அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளை தனியார்மயமாக்க உத்தரவிட்டுள்ளார்.
  • 88,000 கோடி ரூபாய்க்கு கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக கார்ப்பரேட்டுகளுடன் போடப்பட்டுள்ள, நிலுவையில் உள்ள ஒப்பந்தங்களை ஒரு வாரத்திற்குள் நிறைவேற்றி தனது விசுவாசத்தைக் காட்டியுள்ளார்.
  • பாதுகாப்புத் துறையில் 100% நேரடி அன்னிய மூலதனத்தை திறந்துவிட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்துள்ளார்.
  • டீசல் விலையை உயர்த்தி ஒட்டுமொத்த விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ளார். சமையல் எரிவாயுவை 60% விலை உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளார்.
  • கார்ப்பரேட் முதலாளிகள் பல ஆயிரக் கணக்கில் நிலங்களை குவிக்கும் வகையில் சட்டத்திருத்ததை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
  • கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காங்கிரசு அரசு வழங்கிய வரிச்சலுகையைவிட பல மடங்கு அதிகமான சலுகைகளை வாரி வழங்கி வருகிறார்.
  • காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களிலும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பான விவகாரத்திலும் தமிழகத்தின் உரிமைக்கு எதிராக காங்கிரசு, தெலுங்கு தேசம் அரசுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியெழுப்புவோம்!

முகேஷ் அம்பானி, கவுதம் அதானி
முகேஷ் அம்பானி, கவுதம் அதானி

மோடி அரசின் இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு வரலாறு உள்ளது. 1992-ல் காங்கிரசு அரசு கொண்டுவந்த தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கைதான் இதன் தொடக்கம். அதற்கு பின்னர் வந்த வாஜ்பாயி அரசு, பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்கென்றெ தனி அமைச்சகம் உருவாக்கியது. 1420-க்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய இருந்த தடையை நீக்கி சிறுதொழில், குறுந்தொழில்களை ஒழித்துக் கட்டியது. தற்போதைய மோடி அரசு என்பது பார்ப்பன பாசிசத்தின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் முதலாளித்துவ சர்வாதிகாரம்.

தற்போது மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு தாக்குதல்களை பாராளுமன்றத்தைக் கூட்டி விவாதிக்காமலேயே கார்ப்பரேட் முதலாளிகளுடன் பேசி அமுல்படுத்துகிறார். பெயரளவிற்கான பாராளுமன்ற மரபையும் தூக்கியெந்துவிட்டு பச்சையாக பாசிசத்தை அமுல்படுத்தி வருகிறார். இதற்கு எல்லா ஓட்டுக் கட்சிகளும் துணையாக நிற்கின்றனர். கொள்கை என்று இவர்களுக்குள் எந்த வேறுபாடும் இல்லை.

தொழிலாளர் உரிமைகளையும் உழைக்கும் மக்கள் மீது வரலாறு காணாத பாசிசத் தாக்குதலை மோடி அரசு ஒருபுறம் தொடுத்துக் கொண்டிருக்கும் போது, சங்கப்பரிவாரத்தின் பிற அமைப்புகளான சிவசேனா, பஜரங்கதள் போன்ற அமைப்புகள், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் சுரண்டலுக்கு காரணம் வடமாநிலத் தொழிலாளர்களும் அண்டை மாநிலத் தொழிலாளர்களும் தான் என்று பிரச்சனையை திசைத்திருப்பு கின்றனர். இனவெறி, மொழிவெறியைத் தூண்டிவிட்டு தொழிலாளர் வர்க்கத்தையும் உழைக்கும் மக்களையும் பிளவுப்படுத்துகின்றனர். இந்த அமைப்புகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டும்.

ஆகையால், நமக்கான ஜனநாயகத்தை நாம்தான் படைத்துக்கொள்ள வேண்டும். தேர்ந்தெடுத்தவரை திருப்பி அழைக்கும் அதிகாரம், ஆலைகளை நிர்வகிக்கும் அதிகாரம், தொழிற்பேட்டையை நிர்வகிக்கும் அதிகாரம், ஊழல் அதிகாரிகளை, அரசியல்வாதிகளை தண்டிக்கும் அதிகாரம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளை நாமே செய்து கொள்ளும் அதிகாரம் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட கமிட்டிகளுக்கு இருக்கும் வகையிலான மாற்று அதிகார அமைப்புகளை நிறுவ வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் இதனை உடனடியாக செய்வதன் மூலம் கார்ப்பரேட் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியும். உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியும்.

வீதியில் இறங்கி போராடுவதே இன்று நம்முன் உள்ள தீர்வு!

மோடியின் இந்த பயங்கரவாதத் தாக்குதல் மொத்தமும் உழைக்கும் மக்கள் மீதும், குறிப்பாக தொழிலாளர்களாகிய நம்மீதுதான் தொடுக்கப்படுகிறது. இதனை நாம் உணர்ந்து வீதியில் இறங்கி மோடி அரசுக்கு எதிராக போராட முன்வரவேண்டும். மோடியுடன் சேர்ந்து கொண்டு கார்ப்பரேட் முதலாளிகளே இன்று ஆட்சி புரிகின்றனர். பெயரளவிற்கு இருந்த ஜனநாயகமும் பறிக்கப்பட்டுவிட்டது. இனி, உண்மையான ஜனநாயத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டியமைப்பதற்காக போராடுவது ஒன்றே தீர்வு! அந்தவகையில் போராடும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைவீர்!

தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் கார்ப்பரேட்டுகளின் அடியாள்,
பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்ட் மோடி அரசின் பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

உண்மையான ஜனநாயகத்திற்கான மாற்று அதிகார அமைப்புகளைக் கட்டி எழுப்புவோம்!

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு – 97880 11784

மாஃபியாவுக்கு கடன் கொடுக்கும் போப்பாண்டவர் வங்கி !

7

டந்த மாதம்  இத்தாலியின் தெற்குப் பிராந்தியமான கலாப்ரியா (Calabria) மாகாணத்திற்கு பயணம் சென்றார், போப்’பாண்டவர்’ ப்ரான்சிஸ். போப் என்றால் பயணமும் உபதேசமும் வழக்கம்தானே என்கிறீர்களா? இல்லை இந்த பயணத்தில் அவர் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் அனைத்தையம் எழுப்புகிறார்.

போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ்

அதாவது, கிரிமினல் கும்பல்களை சகித்துக் கொள்ள முடியாதென்றும், சாத்தானின் பாதையைத் தெரிவு செய்து விட்ட கிரிமினல்கள் கத்தோலிக்க கிறிஸ்தவத்திலிருந்து மதவிலக்கம் செய்யப்படுவார்கள் என்பதையும் தெரிவித்துள்ளார்.  போப்பின் கண்டனம் கலாப்ரியா பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தி வரும் ரேங்கத்தா (Ndrangheta) என்கிற மாஃபியா கும்பலை குறிவைத்தே சொல்லப்பட்டதால் போப்பின் உயிருக்கே கூட ஆபத்து நேர்ந்து விடலாம் என்று மேற்கத்திய ஊடகங்கள் பரபரக்கின்றன.

ஆனால் இந்த பரபரப்பிற்கு பின்னால் ஒரு உண்மை மறைக்கப்படுகிறது. ஏனெனில் பல நூற்றாண்டுகளாக சாத்தோனோடு ஒரே பந்தியில் உண்டு களித்து ’ஒண்ணு மண்ணாக’ புழங்கி வந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பீடத்திலிருந்து இப்படி ஒரு அறிவிப்பை வரலாறு அறிந்தவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஊழல் முறைகேடுகள், நிதி முறைகேடுகள், பாலியல் முறைகேடுகள், பாசிசத்தோடு படுத்துறங்கியது, கொலை பாதகங்கள் என்று சகலமும் சேர்ந்த சாக்கடைகளின் சங்கமம் தான் கத்தோலிக்க திருச்சபை.

ரோம சாம்ராஜ்ஜியத்தால் ஒடுக்கப்பட்ட அடிமைகளின் விடுதலைக் குரலாக முகிழ்ந்தெழுந்த நாசரேயனாகிய இயேசுவின் மரணத்திற்கு ஓரிரு நூற்றாண்டுகளுக்குப் பின் அவரது அடியார்கள் செய்த முக்கியமான காரியம் அதே ரோம சாம்ராஜ்ஜியத்தின்  ஒடுக்குமுறை கருவியாக கிறிஸ்தவத்தை மாற்றியது தான். எளிய மக்களுக்காக இயேசு மரித்ததன் அடையாளமாக விளங்கிய சிலுவை, கான்ஸ்டாண்டினின் தலைமையிலான ரோம பேரரச இராணுவத்தின் அதிகாரப்பூர்வமான இலட்சினையாக மாறுவதற்குத் தேவைப் பட்டது வெறும் முன்னூறு ஆண்டுகள் மட்டும் தான்.

அன்று முதல், கடந்த ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக கிறித்தவம் ஒரு மத நிறுவனம் எனும் முறையில் மனித குலத்திற்கு எதிராக செய்த செயல்களை வரிசையாகப் பட்டியலிட்டால் அதன் நீளம் பூமியிலிருந்து பரமண்டலத்தையும் கடந்து செல்லும். கிறித்தவ ஆசியுடன் மேற்குல அரசுகளால் வேட்டையாடப்பட்ட (witch hunt) வேறு நம்பிக்கை கொண்ட மக்கள் கூட்டமும், கொய்த்தெறியப்பட்ட அறிவுத் துறையினர் மற்றும்  அறிவியல் அறிஞர்களின் தலைகளையும் எண்ணி மாளாது. இத்தனை நூற்றாண்டுகளாக கத்தோலிக்க மதத்தின் தலைமைப் பீடத்தை வரிசையாக அலங்கரித்து வந்த போப்பாண்டவர்களின் அந்தப்புர அசிங்கங்களையும், கள்ளத் தொடர்பு கொலைகளின் பட்டியலையும், அரசியல் சதி ஆலோசனைகளையும் இந்தக் கட்டுரையில் வரிசையாக குறிப்பிட்டால் புதிய ஏற்பாட்டை விட அது பெரிதாக இருக்கும். வினவின் சர்வரும் எகிறிவிடும்.

கார்டினல்கள்
கார்டினல்கள்

எனில், இப்போதைய போப்பாண்டவருக்கு எங்கேயிருந்து இந்த வன்முறைக்கு எதிரான திடீர் ஞானோதயம் வந்தது?

அதைப் பார்க்கும் முன் வாத்திகன் வங்கி சில ஆண்டுகளுக்கு முன் எதிர்கொண்ட சிக்கல் ஒன்றைப் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. ’வாத்திகன் வங்கி’  என்று சொல்லப்பட்டாலும் அதன் உத்தியோகப் பூர்வமான பெயர் – “மத நடவடிக்கைகளுக்கான நிறுவனம்” (The institue for the works of the religion). அதிகாரப்பூர்வமான ஆவணங்களின் படி சுமார் 600 கோடி யூரோ (சுமார் ரூ 48,000 கோடி) நிதிக்  கையிருப்பை கொண்டிருக்கும் இந்த வங்கி,  2010-ம் ஆண்டு கணக்கின் படி சுமார் 5.5 கோடி யூரோ (சுமார் ரூ 440 கோடி) போப்புக்கு லாபமாக ஈட்டிக் கொடுத்துள்ளது. மத நடவடிக்கைகளிலேயா இவ்வளவு இலாபம் என்று அதிசயிப்பவர்கள், உள்ளூர் டிஜிஎஸ் தினகரன் கம்பெனி, மோகன் லசாரஸ் கம்பெனிகளை அறிந்திருந்தால் அதிசயிக்க மாட்டீர்கள். பிசினெஸ் என்று பார்த்தால், தேவ கிருபை என்பது பார்ப்பனியத்தின் லட்சுமி கடாட்சத்தையே ஊதிவிடும் வல்லமை கொண்டது.

தேவனது உபதேசங்களை பரப்பும் வங்கி என்பதால் வாத்திகன் வங்கிக்கு எந்த தணிக்கையும் இல்லை. குறிப்பாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் இவ்வங்கியின் கையிருப்பில் இருக்கும் தங்கத்தின் அளவும் அதன் ரியல் எஸ்டேட் முதலீடுகளின் அளவும் இது வரையில் தணிகை செய்யப்படவே இல்லை. உலகிலேயே எந்த தணிக்கை ஒழுங்குமுறைக்கும் உட்படுத்தப்படாத ஒரே வங்கியாக வாத்திகன் வங்கி மட்டும் தான் உள்ளது. வங்கியின் நடவடிக்கைகளை ஓரளவுக்கு நன்கு அறிந்திருப்பவர்கள் மற்றும் வாத்திகனோடு கொடுக்கல் வாங்கலில் முரண்பட்டவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் பார்த்தால், வாத்திகன் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலத்தின் அளவானது சில குட்டி நாடுகளின் பரப்பளவை விட அதிகமானதாக உள்ளது. ரிஷி மூலம் மட்டுமல்ல, ஃபாதர் மூலமும் இப்படி ஏகப்பட்ட வில்லங்கம் உடையதுதான்.

உலகளவில் நிறுவனமயப்பட்ட மதம் எனும் வகையில் கிறித்தவம் ஒரு பிரம்மாண்டமான இயந்திரமாய் இருக்கிறது. கத்தோலிக்கர்கள், மெத்தடிஸ்டுகள், லுத்தரன்கள், புராட்டஸ்டண்ட் மற்றும் பெந்தெகொஸ்தே சபையினர் என்று சகல கிறித்தவ நிறுவனங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் இவர்களின் வருடாந்திர பட்ஜெட் சுமார் ரூ 7.5 லட்சம் கோடி. சுமார் 40 லட்சம் முழுநேர ஊழியர்களையும், 13,000 நூலகங்களையும், 22,000 பத்திரிகைகளையும், சுமார் 1,800 தொலைக்காட்சி சேனல்களையும், 1,500 பல்கலைக்கழங்களையும், 930 ஆராய்ச்சி நிறுவனங்களையும் இவர்கள் நடத்துகிறார்கள். பிரதி வருடம் சுமார் 400 கோடி துண்டுப் பிரசுரங்களும் நூல்களையும் வெளியிடுகிறார்கள்.

வாத்திகன் வங்கி
வாத்திகன் வங்கி

இதில் ஆகப் பெரும்பான்மையான நிறுவனங்கள் கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படுபவை – அவற்றின் நிதி விவகாரங்களை நேரடியாக கட்டுப்படுத்துவது வாத்திகன் வங்கி தான். வாத்திகன் வங்கி தனது செயல்பாடுகள் குறித்த விவரங்களை எந்த சர்வதேச நிதிக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை. வாத்திகன் வங்கியை நேரடியாக கட்டுப்படுத்தும் அதிகாரம் ஒரே ஒருவருக்கு மட்டும் தான் உண்டு – அவர் கத்தோலிக்க திருச்சபையின் உச்சபட்ச அதிகாரங்களைக் கொண்ட போப்பாண்டவர் மட்டும் தான்.

இப்பேர்பட்ட மகாத்மியங்கள் கொண்ட வாத்திகன் வங்கியின் மேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கருப்புப் பண சுழற்சியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஐரோப்பா மற்றும் உலகமெங்கும் இயங்கும் கிரிமினல் கும்பல்களுக்கும் நிழலுலக மாபியா கும்பல்களுக்கும் பல்லாண்டுகளாக கள்ளப் பணப் பரிவர்த்தனை மையமாக வாத்திகன் வங்கி திகழ்ந்து வந்தது அம்பலமானது.  நிழல் உலகத் தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பண சுழற்சிக்கு எதிரான அமைப்பு (Financial action Task force on Money laundering) வாத்திகன் வங்கியைக் கருப்புப் பட்டியலில் வைத்தது. பிசினெஸ் என்று வந்து விட்டால் பாதிரியார்கள் பாவம் புண்ணியம் பார்ப்பதில்லை போலும். இதைத்தான் வந்த காசை மட்டும் எண்ணு, திருடுன காசான்னு யோசிக்காதே என்று பகவான் கீதையில் அருளியிருக்கிறார்.

வாத்திகன் அரசாங்கத்தின் இரகசியமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஜியான்லுகி நுஸ்ஸி என்பவர் “பதினாறாம் பெனடிக்டின் இரகசிய ஆவணங்கள்” எனும் தலைப்பில் விரிவான நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். வாத்திகனின் பல்வேறு நிதி முறைகேடுகளை விரிவாக அந்நூல் பதிவு செய்திருந்தது. உடனே விசாரணையில் இறங்கியது வாத்திகன் போலீசு – ஆமாம், கடவுளின் நாட்டில் கூட போலீசு இருக்கத்தான் செய்கிறது. விசாரணையில் இறங்கிய போலீசு குற்றம் இழைத்தவர்களை கைது செய்திருக்கும் என்று நீங்கள் எதிர்பார்த்தால்..  பரிசுத்தராகிய ஆண்டவர் உங்கள் கோயிந்துதனத்தை மன்னிப்பாராக.

ஜியான்லுகி நுஸ்ஸிக்கு உள் விவகாரங்களை விற்று விட்டார் என்று குற்றம் சுமத்தி போப் பெனடிக்டின் அந்தரங்க சமையல்காரர் பவுலோ காப்ரிலி என்பவரைக் கைது செய்தது வாத்திகன் போலீசு. திருடனை விட்டு சாட்சியை பிடித்த வாத்திகன் போலீசின் தேவகாரியத்தை மேற்குலகம் மொத்தமும் காறித்துப்பியபின் தனது பெருந்தன்மையைக் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் பெனடிக்டுக்கு ஏற்பட்டது. பவுலோ காப்ரிலி ‘மன்னித்து’ விடுதலை செய்யப்பட்டார். இதற்கிடையே நடந்த விசாரணைகளில் “திருச்சபையில் சாத்தானின் வேலைகளும் ஊழல் முறைகேடுகளும் மலிந்து” போய் விட்டதால் தான் மனம் கேளாமல் உண்மைகளை வெளிக் கொணரும் பொருட்டு ஆவணங்களை கடத்த தாம் உதவியதாக பவுலோ தெரிவித்திருந்தார். ’உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும்’ சொல்லும் யோக்கியதை போப்பை விட அவரது சமையல்காரருக்கே இருந்திருக்கிறது.

வாத்திகன் வங்கி முறைகேடுகள்இவை ஒரு பக்கம் இருக்க, நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான வாத்திகன் வங்கியை கருப்புப் பட்டியலில் இருந்து மீட்க போப் தலைமையிலான வாத்திகன் அரசு இன்னொரு பக்கம் தலையால் தண்ணி குடித்துக் கொண்டிருந்தது. வெளியான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்றை போப் அமைத்தார். 2013-ம் வருடம் பிப்ரவரி மாதம் இவ்விசாரணைக் கமிட்டியின் அறிக்கை போப் பெனடிக்டிடம் ஒப்படைக்கப்பட்டது.

அந்த விசாரணை அறிக்கையின் விவரங்கள் இது வரை உலகுக்கு அறிவிக்கப்படவில்லை. பெனடிக்ட் அதை அப்படியே மூடி மறைத்து விட்டார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சில அம்சங்கள் பற்றி லத்தீன் அமெரிக்க கத்தோலிக்க திருச்சபை விவகாரங்களுக்கான இலாகாவைச் சேர்ந்த மூத்த கார்டினல்களுடன் போப் தொலைபேசியில் பேசிய விவரங்கள் பின்னர் ஊடகங்களில் கசிந்தது (ஆதாரம் எகனாமிஸ்ட் மற்றும்  கார்டியன் கட்டுரைகள் கீழே இணைப்பில்). அதில், போப்புக்கு அடுத்த கட்ட அதிகாரம் கொண்ட கார்டினல்கள் மட்டத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் அடங்கிய கூட்டணி ஒன்று செயல்பட்டு வந்ததாகவும், இவர்கள் நிதி முறைகேடுகளிலும் கூட்டு வைத்திருந்தார்கள் என்றும் சொல்லப்பட்டது. மோசடியில் கூட்டு என்பதற்கும் ஓரினச் சேர்க்கை என்பதற்கும் என்ன தொடர்பு?

விசாரணை அறிக்கை சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதற்கு அடுத்த மாதமே பெனடிக்ட், போப் பதவியிலிருந்தும் விலகிவிட்டார். குற்ற உணர்வு மேலிட்டிருக்குமோ என்றெல்லாம் நாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை – சாக்கடைக்கு பன்னீர் தெளித்து பவுடர் பூசி ‘புனிதத்தை’ ஒப்பேற்றிக் காட்டும் திறன் தன்னிடம் போதியளவுக்கு இல்லை என்பதை உணர்ந்திருப்பார், அல்லது அவருக்கு உள்வட்டத்தில் இருந்த கார்டினல்கள் உணர்த்தியிருப்பார்கள். அது எவ்வாறாக இருந்தாலும்,  மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்கள் போப்பின் திடீர் பதவி நீக்கத்தின் பின் இருந்த ஓரினச் சேர்க்கை பாலியல் கூட்டணி பற்றிய கவர்ச்சி அம்சங்களை மாத்திரம் சில காலத்துக்கு கிசுகிசுத்து விட்டு அடங்கி விட்டன.

ஆனால், வாத்திகன் வங்கி கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்ததற்கு சொல்லப்பட்ட காரணங்களில் கருப்புப் பண சுழற்சி, மாஃபியா கும்பல் தொடர்பு பற்றி மெல்ல மெல்ல மேற்குலக ஊடகங்களே மறந்து விட்டன. இந்நிலையில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சற்று முன்பாக – அதாவது பிப்ரவரி 2013 இறுதி நாட்களில் இருந்து மார்ச் 2013 9-ம் தேதி வரை – ஐரோப்பிய ஒன்றிய நிதித் துறை அதிகாரிகளுக்கும் வாத்திகன் நிதி இலாகாவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் இடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தது.

வாத்திகன் வங்கிதனது நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாக வாத்திகன் வங்கி மாற்றிக் கொள்வதற்கு 2012 டிசம்பர் 31-ம் தேதி தான் இறுதி நாள் என ஏற்கனவே நாள் குறிக்கப்பட்டிருந்தது. என்றாலும், தனது வங்கியில் கை வைப்பதும் கத்தோலிக்க மதத்தின் ’புனித’ தன்மைக்கே சவால் விடுவதும் ஒன்று தான் என்று சாதித்து வந்த வாத்திகன் வங்கி, அந்தக் கெடுவை மீறிய பின்னும் பழைய பாணியிலேயே செயல்பட்டு வந்தது. இந்நிலையில் போப் நியமித்த விசாரணைக் கமிட்டியின் அறிக்கை வெளியானதும், போப் பதவி விலகலும் நடந்தேறியது. இந்தப் பின்னணியில் தான் ஐரோப்பிய ஒன்றிய நிதி அதிகாரிகளின் கை பேச்சுவார்த்தைகளில் மேலோங்குகிறது.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய ஒன்றியம் வாழ்வா சாவா போராட்டத்தில் சிக்கியிருக்கிறது. இந்நிலையில் வாத்திகன் வங்கி போன்ற ஓட்டை வாளிகளை ’நம்பி’ ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டுமானால் ஆட்ட விதிகளை தானே நிர்ணயிப்பேன் என்கிறது ஐரோப்பிய ஒன்றியம். அதே நேரம் மேற்குலகின் முதலாளித்துவம், காலனியாக்கம், பாசிசம், ஏகாதிபத்தியம் அனைத்திற்கும் ஆன்மீக ஸ்பான்சராக திருச்சபையே பங்காற்றியிருப்பதையும் மேற்படி கனவான்கள் மறந்திருக்கமாட்டார்கள். இனியும் அந்த பங்கு தேவை என்போடுதான் இந்த பங்கு சண்டையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பல நூற்றாண்டு கால கத்தோலிக்க சட்டாம்பிள்ளைத் தனத்துக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் தான்  பதவிக்கு வருகிறார் போப் பிரான்சிஸ்.

மார்ச் 2013-ல் பதவிக்கு வந்த போப் பிரான்சிஸ், ஓரினச் சேர்க்கைக் கூட்டணி ஒன்று உயர்மட்ட கார்டினல்களிடையே இருப்பதை ஒப்புக் கொண்டார். மேலும், சாத்தியமான சந்தர்ப்பங்களில் எல்லாம் தொடர்ச்சியாக மாஃபியா கும்பல்களுக்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார். அதன் தொடர்ச்சி தான் தற்போது ரேங்கத்தா மாஃபியா கும்பலுக்கு எதிரான அவரது லேட்டஸ்ட் ‘பொங்கல்’.

ஆக, துரத்தப்படும் பல்லி வாலைக் கத்தரித்து விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்தும் அதே உத்தியை போப் பிரான்சிஸ், மாஃபியாக்கள் விசயத்தில் கையில் எடுத்துள்ளார். குறைந்தபட்சம் மாஃபியாக்களுக்கும் திருச்சபைக்கும் இடையே முறுகலான நிலை இருப்பது போன்ற ஒரு தோற்றத்தையாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நெருக்கடியில் இருந்து தான் இது போன்ற தத்துவ முத்துக்களை உதிர்க்கிறார். அப்படி உண்மையிலேயே மாஃபியாக்களை எதிர்க்க வேண்டும் என்கிற நோக்கம் இருந்திருந்தால், முதல் வேலையாக நிதி முறைகேடுகள் பற்றியும் அதில் மாஃபியா கும்பல்களுக்கு இருந்த தொடர்பு பற்றியும் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை அல்லவா வெளியிட்டிருக்க வேண்டும்!

ஆகவே தேவ விசுவாசிகளே, இந்த யோக்கியதாம்ச முகத்திற்கு பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் கள்ளத்தனத்தை கண்டு கொள்ளக் கடவீர். ஆமென்!

பாவிகளான உங்கள் பாவங்களுக்கு மன்னிப்பு வழங்கும் இந்த பாதிரிக் கம்பெனிகளின் தலைமையே இப்படி மாபாவம் செய்திருக்கிறது என்றால் நாம் வழங்க வேண்டியது மன்னிப்பா, தண்டனையா?

–    தமிழரசன்

மேலும் படிக்க

அரசு வங்கிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் வல்லூறுகள்!

0

டந்த பத்தாண்டு கால காங்கிரசு ஆட்சியில் அலைக்கற்றை, நிலக்கரி, இரும்பு, பாக்சைட், கச்சா எண்ணெய் வயல்கள் உள்ளிட்ட நாட்டின் பொதுச் சொத்துக்களை ஒன்றன் பின் ஒன்றாக விழுங்கிய இந்தியத் தரகு முதலாளிகளும் அந்நிய ஏகபோக முதலாளிகளும் அப்பகற்கொள்ளையின் தொடர்ச்சியாக பொதுத்துறை வங்கிகள் நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பதாகக் கூறி, அவற்றை வளைத்துவிடச் சதித்தனமாக முயலுகிறார்கள். இதற்கான பரிந்துரைகளைக் கொண்ட பி.ஜே.நாயக் கமிட்டியின் அறிக்கை மோடி அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.

விவசாயி தற்கொலை
கந்துவட்டிக் கடனிலிருந்து மீள வழியின்றி தற்கொலை செய்து கொண்ட ஆந்திராவைச் சேர்ந்த 26 வயது விவசாயி கொண்டம் சீனிவாஸ் (கோப்புப் படம்)

பொதுத்துறை வங்கிகள் நிதி நெருக்கடி அபாயத்தில் சிக்கும் நிலையில் இருப்பதற்கு மற்றைய காரணங்களை விட வாராக் கடன்கள்தான் முதன்மையானதாகும். அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் மே மாதம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2008 மார்ச்-இல் 39,000 கோடி ரூபாயாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் 2013-ம் ஆண்டு இறுதியில் 5,50,000 கோடி ரூபாயாக அச்சமூட்டக்கூடிய வகையில் அதிகரித்திருப்பதாக”க் குறிப்பிட்டுள்ளது. 2008-13 க்கு இடையிலான 5 ஆண்டுகளில் அரசுடைமை வங்கிகளின் இலாபத்திலிருந்து 1.41 இலட்சம் கோடி ரூபாய் வாராக்கடனுக்காக ஒதுக்கப்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் ஊழியர் சங்கம் கூறுகிறது.

“பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் தற்பொழுதுள்ள நிலையைவிட இன்னும் ஒரு மடங்கு அதிகரிக்குமானால், அது வங்கிகளின் தற்போதைய மூலதனத்தில் நாற்பது சதவீதத்தைக் கபளீகரம் செய்துவிடும்” என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையொன்று கூறுகிறது. வாராக் கடன்கள்தான் பொதுத்துறை வங்கிகளின் முதல் வில்லன் என்ற உண்மை அம்பலமாகியிருக்கும் வேளையில் வெளிவந்துள்ள பி.ஜே.நாயக் கமிட்டி அறிக்கையோ இந்த வாராக் கடன்களை வசூலித்து வங்கிகளின் நிதி நிலைமையைச் சீராக்கும் ஆலோசனைகள் எதையும் முன்வைக்கவில்லை. மாறாக, “பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலைமை கவலைக்கிடமாக இருப்பதற்கு நிர்வாகத் திறமையின்மையும் அரசின் தலையீடும்தான் காரணமென்று” கண்டுபிடித்து, இதற்குத் தீர்வாகத் தனியார்மயத்தைப் பரிந்துரைத்திருக்கிறது.

“வங்கிகளைத் தேசியமயமாக்கும் சட்டம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சட்டம் ஆகிய இரண்டையும் அறவே நீக்கி, பொதுத்துறை வங்கிகள் அனைத்தையும் கம்பெனிகள் சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். மைய அரசு பொதுத்துறை வங்கிகளில் உள்ள தனது பங்கு மூலதனத்தை 50 சதவீதமாகக் குறைத்துக் கொள்வதோடு, வங்கி முதலீட்டு கம்பெனி என்ற புதிய நிறுவனத்தைத் தொடங்கி அதனிடம் இப்பங்கு மூலதனத்தையும் வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டும். எதிர்காலத்தில் இவ்வங்கி முதலீட்டு கம்பெனி தனது பங்கு மூலதனத்தை 50 சதவீதத்திற்கும் கீழாகக் குறைத்துக் கொள்வதோடு, வங்கிகளை நிர்வகிக்கும் பொறுப்பு முழுவதையும் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகக் குழுவிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இவ்வங்கி நிர்வாகக் குழுவிற்கான நிபுணர்கள்/அதிகாரிகளை நியமிப்பதிலும், அவர்களுக்குச் சம்பளம் மற்றும் போனஸ் வழங்குவதிலும் எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்கக் கூடாது. மேலும், மைய ஊழல் கண்காணிப்புத் துறை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவற்றின் வரம்பிலிருந்தும் வங்கிகளின் நிர்வாகக் குழுக்களை விடுவிக்க வேண்டும்” எனப் பரிந்துரைத்திருக்கிறது நாயக் கமிட்டி.

விஜய் மல்லையா
பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 7,500 கோடி ரூபாய் கடன் பெற்று ஏப்பம் விட்டுள்ள கிரிமினல் பேர்வழி கிங்ஃபிஷர் சாராய ஆலை அதிபர் விஜய் மல்லையா. (கோப்புப் படம்)

பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் இந்த அளவிற்கு ஊதிப்போயிருப்பதற்கு நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள்தான் காரணமென்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் விவகாரத்தை விசாரித்துவரும் சி.பி.ஐ., “இந்த மொத்த வாராக் கடனில் பெரும் பகுதி ஒரு முப்பது நிறுவனங்களிடம் தேங்கியிருக்கிறது” என கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவித்தது. அரசியல் செல்வாக்குமிக்க விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனம் உள்ளிட்ட 406 நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன் நிலுவை 70,300 கோடி ரூபாயாகும் என அம்பலப்படுத்தியிருக்கிறது, அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம். அதாவது கடனைக் கட்டாமல் வங்கிகளைத் திவாலாக்கும் கயவர்கள் கார்ப்பரேட் முதலாளிகளேயன்றி, கஞ்சிக்கில்லாத விவசாயிகளோ, சிறு தொழில் முனைவோரோ அல்ல என்ற உண்மை இன்னொரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

வங்கிகள் முறைப்படுத்தும் சட்டம் 1969-ன்படி குறிப்பிட்ட கால இடைவெளியில் பொதுத்துறை வங்கிகள் தமது தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை ரிசர்வ் வங்கிக்கு அளிக்கவில்லை என்றும், இது கடனைக் கட்டாமல் ஏமாற்றும் கார்ப்பரேட் கிரிமினல்களைக் காப்பாற்றுவதற்காக, பொதுத்துறை வங்கி மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூட்டு சேர்ந்து நடத்தியிருக்கும் சதி என்றும் குற்றம் சாட்டி, வாராக்கடன்கள் என்று கூறப்படுபவை அனைத்தின் மீதும் சி.பி.ஐ. விசாரணை கோரி மும்பை உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார் கேதன் திரோட்கர் என்ற பத்திரிகையாளர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விவரம் பெற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும் இது.

வாராக்கடன்கள் தொடர்பாக, சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தாலும், சம்பந்தப்பட்ட வங்கிகளின் உயர் அதிகாரிகளை விசாரிப்பதற்கான அனுமதியை அரசு சி.பி.ஐ.க்கு வழங்குவதில்லை. உயிரி எரிபொருள் தயாரிப்பு நிறுவனம் என்ற பெயரில் மோடி அரசிடமிருந்து 300 கோடி ஏக்கரைப் பெற்றிருக்கும் பயோதார் இண்டஸ்ட்ஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் அரசுடைமை வங்கிகளிடம் 1100 கோடி ரூபாயை வாராக்கடனாக ஏமாற்றியுள்ளது. 2011-ல் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்கில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் உயர் அதிகாரியை விசாரிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல, 2700 கோடி ரூபாய் ஏமாற்றிய மாகுவா மீடியா என்ற தொலைக்காட்சி சானல் மீதான வழக்கில், கடன் கொடுத்த பஞ்சாப் நேசனல் வங்கி அதிகாரிகளை விசாரிப்பதற்கு சி.பி.ஐ.க்கு அரசு இன்ன மும் அனுமதி வழங்கவில்லை. இவை சில எடுத்துக் காட்டுகள் மட்டுமே.

இப்படிபட்ட நிலையில் மைய ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புகளிலிருந்து பொதுத்துறை வங்கிகளை விடுவிக்க வேண்டும் என நாயக் கமிட்டி பரிந்துரைத்திருப்பதன் பொருள், பொதுமக்களின் சேமிப்பை ஏப்பம் விடும் கிரிமினல் குற்றத்தை வங்கி நிர்வாகிகளும் முதலாளித்துவக் கும்பலும் கூட்டுச் சேர்ந்து கொண்டு நடத்துவதற்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அது மக்களுக்குத் தெரியவும் கூடாது என்பதுதான்.

போடி நகர ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
கல்விக் கடனைக் கட்ட முடியாத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களின் புகைப்படங்களை ஃபிளக்ஸ் பேனரில் போட்டு அவமானப்படுத்திய போடி நகர ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நிர்வாகத்தின் திமிர்த்தனம் (கோப்புப் படம்)

நாயக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது போல, திறமை வாயந்த பொருளாதார நிபுணர்களை வங்கிகளின் இயக்குநர்களாக நியமித்து, அவர்களுக்குக் கைநிறைய சம்பளமும் போனசும் கொடுத்து, அவர்கள் சர்வ சுதந்திரமாக இயங்குவதற்கு உரிமைகளும் கொடுத்திருந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில், இத்தகைய நிபுணர்கள்தான் வீட்டுமனை சூதாட்டம் நடத்தி 2008-ல் பல வங்கிகளைத் திவாலாக்கினார்கள். இந்திய பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படாத காரணத்தினாலும், குறிப்பிட்ட அளவிற்கு அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததனாலும்தான் திவாலாகாமல் தப்பின. பத்தாண்டுகளுக்கு முன்பு இந்தியாவைச் சேர்ந்த குளோபல் டிரஸ்டு வங்கி என்ற தனியார் வங்கி திவாலானபோது, அரசு அவ்வங்கியை ஓரியண்டல் வர்த்தக வங்கி என்ற பொதுத்துறை வங்கியோடு இணைத்ததன் மூலம்தான் மக்களின் சேமிப்பைக் காப்பாற்றியது.

உண்மை இவ்வாறிருக்க, வல்லுறவு செய்த கிரிமினலுக்கே பெண்ணைத் திருமணம் செய்து வைக்குமாறு தீர்ப்பளிக்கிறார் நாயக். இந்த பி.ஜே. நாயக் யார் தெரியுமா? இவர் ஆக்ஸிஸ் வங்கியின் முன்னாள் தலைவர்; சப் பிரைம் மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களில் ஒன்றான மார்கன் ஸ்டான்லியின் முன்னாள் தலைமை அதிகாரி.

அரசுடைமை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது என்பது மறுகாலனியாக்க கொள்கையின் ஒரு அங்கம். குறிப்பாக, கடந்த நான்காண்டுகளாக நிலவி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்ள சில்லறை வர்த்தகம், இராணுவ உற்பத்தி, தொழிலாளர் ஓவூதிய நிதியம், ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட நிதித்துறையின் அனைத்து அரங்குகளையும் தனியாருக்குத் திறந்துவிட வேண்டும் என ஏகாதிபத்தியங்கள் கொடுத்து வரும் நிர்ப்பந்தம்தான் நாயக் கமிட்டியின் பின்புலம்.

****

னியார்மயத்திற்கு முன்பும், 1990-களிலும் இந்திய வங்கிகள் வழங்கிய கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 சதவீதமாக இருந்தது, 2000-12 காலக்கட்டத்தில் 51.4 சதவீதமாக வீங்கியது எனக் குறிப்பிடுகிறார், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பொருளாதார பேராசிரியர் சி.பி. சந்திரசேகர். அதாவது அரசுடைமை வங்கிகளின் கடனை வைத்துத்தான் இந்தியப் பொருளாதாரம் எட்டு சதவீத வளர்ச்சியை எட்டிப்பிடித்தது.

குறிப்பாக, அரசு தன்னிடம் மூலதனம் இல்லை என்ற பொய்க்காரணத்தை சொல்லி, 2000-ஆண்டுக்குப் பிறகு விமான நிலையங்கள், விமானச் சேவைகள், தொலைத்தொடர்பு, கனிமச் சுரங்கங்கள், மின்சார உற்பத்தி, சாலைகள் உள்ளிட்ட அடிக்கட்டுமானத் துறையைத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் திறந்துவிட்டது. சலுகை கொடுத்தால்தான் முதலாளிகள் மூலதனம் போடுவார்கள் என்று சொல்லி நிலம், நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் அவர்களுக்கு அடிமாட்டு விலைக்கு அள்ளித் தந்தது. ஆனால் எந்த முதலாளியும் தன் கைமுதலைப் போடவில்லை. இந்த காலகட்டத்தில்தான் நீண்ட காலத்திட்டங்களுக்கு கடன் கொடுப்பதில்லை என்ற அரசுடைமை வங்கிகளின் கொள்கையை அரசு சதித்தனமாக மாற்றியமைத்தது. தன்னிடம் மூலதனமில்லை என்று கூறிய அரசு, தன் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் சேமிப்புப் பணத்தை அரசு வங்கிகளி லிருந்து எடுத்து அடிக்கட்டுமானத் தொழில்களில் முதலீடு செய்த தரகு முதலாளிகளுக்குக் கடனாக வாரிக்கொடுத்தது.

இந்திய வங்கிகள் தொழில்துறைக்கு வழங்கிய மொத்தக் கடனில் 35 சதவீதம் அடிக்கட்டுமான துறைக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த 35 சதவீத அடிக்கட்டுமானத் துறை கடனில் ஏறத்தாழ 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மின்சாரத் துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாகவும் ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்திய வங்கிகளின் மொத்த வாராக் கடனில் 53 சதவீதக் கடன்கள் அடிக்கட்டுமானத் துறை, இரும்பு உருக்காலை, விமானச் சேவை, சுரங்கத் தொழில், ஜவுளித் தொழில் ஆகிய ஐந்து துறைகளுக்கு வழங்கப்பட்டவையாகும் எனக் குறிப்பிடுகிறது, இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை. இதிலும் குறிப்பாக 36 தனியார் அனல் மின்சார உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட 2,09,000 கோடி ரூபாய் கடன் வசூலிக்க இயலாத சிக்கலில் இருப்பதாக கிரெடிட் சுயிஸ் என்ற பன்னாட்டு தர மதிப்பீட்டு நிறுவனம் தெரிவிக்கிறது.

கடன்காரர்கள்
பொதுத்துறை வங்கிகளிலிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை கடனாகப் பெற்று உலகக் கோடீஸ்வரர்களாக வளர்ந்துள்ள இந்தியத் தரகு முதலாளிகள் (இடமிருந்து) அனில் அம்பானி, கௌதம் அதானி, மற்றும் எஸ்ஸார் குழுமத் தலைவர் பிரசாந்த் ரூயா.

இந்த வாராக் கடன்கள் ஒருபுறமிருக்க, கடனைக் கட்டாமல் ஏய்த்துவரும் தரகு முதலாளிகள் வாங்கிய கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்து, கடன் தொகையிலும் ஒரு பகுதியை தள்ளுபடி செய்து, திருப்பிக் கட்டுவதற்கான தவணை முறைகளை நீட்டிப்புச் செய்து தரும் அயோக்கியத்தனத்தை, கடன் மறு சீரமைப்பு என்று அழைக்கின்றன வங்கி நிர்வாகங்கள். இவ்வாறு மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் (restrctured loans) பட்டியலை எடுத்துக்கொண்டால், அது இன்னொரு கொள்ளையாக விரிகிறது. இந்த மோசடிக்கு நாடெங்கும் தெரிந்த உதாரணமாக விளங்குகிறது விஜய மல்லையாவின் கிங் ஃபிஷர் நிறுவனம்.

அரசியல் செல்வாக்குமிக்க மிகப்பெரும் தரகு முதலாளியான விஜய் மல்லையா நடத்திவந்த கிங் ஃபிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனத்திற்குப் பொதுத்துறை வங்கிகள் 7,500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்திருந்தன. இந்நிறுவனம் சற்று தள்ளாடத் தொடங்கியவுடனேயே, கடன் கொடுத்திருந்த வங்கிகள் கிங் ஃபிஷர் உடனடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டிய 1,600 கோடி ரூபாயைப் பணமாகப் பெற்றுக் கொள்ளாமல், அந்நிறுவனத்தின் பங்குகளாகப் பெற்றுக் கொண்டன. அதுவும் அப்பங்குகளின் சந்தை விலையைவிட 62 சதவீதம் அதிகமாக விலை வைத்து, ஒரு பங்கை 60 ரூபாய்க்குப் பெற்றுக் கொண்டன. இதுவன்றி, அந்நிறுவனத்தின் மிச்சமிருக்கும் கடனும் சீரமைக்கப்பட்டது.

கடந்த ஐந்தாண்டுகளில் இப்படிப் பல்வேறு தகிடுதத்தங்களின் மூலம் வாராக் கடன் பட்டியலுக்குள் கொண்டு வராமல் தந்திரமாக மறுசீரமைக்கப்பட்ட கடன் தொகை ஐந்து இலட்சம் கோடி ரூபாயாகும் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறது, சி.பி.ஐ. 2009-12 ஆம் ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய கடன்களில் 47.9 சதவீதக் கடன்கள் மறுசீரமைக்கப்பட்டிருப்பதாகவும் இதில் அடிக்கட்டுமானத் துறைக்கு வழங்கப்பட்டு மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் பங்கு மட்டுமே 17.4 சதவீதம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

07-c-2

தரகு முதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் செய்துவரும் சேவை இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. அவர்கள் வாங்கிக் குவித்து வைத்துள்ள வெளிநாட்டுக் கடன்களுக்கும் – ஏறத்தாழ 6,28,800 கோடி ரூபாய் – பொதுத்துறை வங்கிகள் உத்தரவாதம் அளித்து சாட்சி கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளன. அவர்கள் அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்தாதபொழுது, அதை அடைக்க வேண்டிய பொறுப்பு முழுவதும் இந்திய அரசு வங்கிகள் மீது சுமத்தப்படும்.

தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிலிருந்து பெற்ற கடன்கள், அவ்வங்கிகள் மறுசீரமைத்துள்ள கடன்கள், அவ்வங்கிகளின் வாராக் கடன்கள், அவ்வங்கிகள் உத்தரவாதமளித்துள்ள வெளிநாட்டுக் கடன்கள் – இவைதான் டாடா, அம்பானி உள்ளிட்டு பல இந்தியத் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பை எகிறச் செய்து, அவர்களை உலகக் கோடீசுவரர்களின் பட்டியலில் இடம்பெறச் செய்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகள் தொழிற்துறைக்கு வழங்கிய மொத்தக் கடனில் ஏறத்தாழ 13 சதவீதக் கடன்கள் அதானி, எஸ்ஸார், அனில் திருபா அம்பானி குழுமம், வேதாந்தா, லான்கோ உள்ளிட்ட ஒரு பத்து நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகிறது கிரெடிட் சுயிஸ். அதாவது, பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பை, வாராக்கடன் என்ற பெயரில் விழுங்கி, தங்கள் சொத்து மதிப்பை உயர்த்திக் கொண்டிருக்கும் இந்தத் தரகு முதலாளிகள் கும்பல், வாராக்கடனால் வங்கிகள் நொடித்துவிட்டதால், அவற்றைத் தனியார்மயமாக்கி தங்களிடம் ஒப்படைக்குமாறு கோருகிறார்கள்.

அவ்வாறு தனியார்மயமாக்கப்பட்டலோ அல்லது அரசுடைமை வங்கிகளில் தரகுமுதலாளிகளின் பங்கை அதிகரித்தாலோ, அதன் பின்னர் விவசாயிகள், சிறுதொழில் முனைவோர், மாணவர்கள் உள்ளிட்ட சாதாரண மக்கள் யாரும் வங்கிகளில் கடன் பெறுவதை எண்ணிப் பார்க்கவும் முடியாது. மக்களின் சேமிப்புகள் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளுக்கு மட்டுமே பயன்படும். இதுதான் நாயக் கமிட்டி பரிந்துரையின் நோக்கம். வங்கிகளைத் தனியார்மயமாக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது மோடி அரசு. திருடர்கள் கையில் சாவியை ஒப்படைப்பதை நாம் அனுமதிக்கப் போகிறோமா என்பதே கேள்வி.

– செல்வம்

***

கடனுக்குப் பதிலாக காகிதத்தை வரவு வைக்கும் கிரிமினல் திட்டம்!

ங்கி இயக்குநர்களுடன் இணைந்து கார்ப்பரேட் முதலாளிகள் நடத்தி வரும் இந்தக் கொள்ளையை மறைப்பதற்கும், வங்கியின் வரவு – செலவு அறிக்கையில், வாராக்கடனை இருட்டடிப்பு செய்வதற்கும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் புதிய தந்திரத்தின் பெயர், சொத்து மறுகட்டுமானம். சமீபத்தில் இவ்வாறு 15 சொத்து மறுகட்டுமான கம்பெனிகள் இந்தியாவில் உருவாகியிருக்கின்றன. இவற்றைக் கடன் வசூல் செய்யும் அடியாள் கம்பெனிகள் என்று அழைப்பது பொருத்தம். அரசுடைமை வங்கிகளுக்கு வரவேண்டிய வாராக்கடன் 100 கோடி ரூபாய் என்று வைத்துக்கொண்டால், பேரம் பேசி அதனை 50 கோடிக்கு இந்த நிறுவனங்கள் வாங்குகின்றன. பணத்திற்குப் பதிலாக 50 கோடிக்கு காகிதப் பத்திரத்தைத் தருகின்றன. இந்தப் பத்திரம் கைக்கு வந்தவுடனேயே, இதனை வரவுக் கணக்கில் காட்டுவதன் மூலம், தங்களது வரவு – செலவு அறிக்கையில் வாராக்கடன் தொகையைக் குறைத்துக் காட்டுகின்றன வங்கிகள்.

மேற்படி கடன் வசூல் கம்பெனிகள் 5 முதல் 8 ஆண்டுகளுக்குள் கடனாளியிடமிருந்து பணத்தை வசூலிக்கும் பட்சத்தில் செலவு போக மீதித் தொகையை, வசூல் கம்பெனியும் வங்கியும் தாங்கள் போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி பிரித்துக் கொள்வர். வசூல் ஆகாத பட்சத்தில் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வாராக்கடனாக அது வங்கியின் தலையில்தான் விடியும். வராத பணத்தை வரவு வைத்து கணக்கு காட்டும் இந்த மோசடி முறையை தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம், வாராக்கடன் தொகையை வங்கிகள் குறைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி. 2013-14 இல் மட்டும் அரசுடைமை வங்கிகள், இந்த முறையைப் பின்பற்றி 50,000 கோடி வாராக்கடனை விற்று, காகிதப் பத்திரத்தை வரவு வைத்திருக்கின்றன. இப்படி வாராக்கடன்களை அரசுடைமை வங்கிகளிடமிருந்து வாங்கியிருக்கும் அடியாள் கம்பெனிகளில் முக்கியமானது ரிலையன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

***

வங்கிக் கொள்ளையை ஊழியர் சங்கங்கள் வேடிக்கைப் பார்ப்பதேன்?

வாராக்கடன் வைத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகள் யார் என்பதை வங்கி ஊழியர் சங்கம் வெளியிட்ட பின்னர்தான் இது குறித்து பரவலாக பொதுமக்களுக்குத் தெரிய வந்திருக்கிறது என்பது உண்மையே. ஆனால் பட்டியலை வெளியிடுவதற்கு மேல் இத்தனை ஆண்டுக்காலமாக இப்பிரச்சினைக்காக வங்கி ஊழியர் சங்கங்கள் செய்தது என்ன?

ஐந்து லட்சம் கோடிக்கு மேல் வாராக்கடன் என்ற பெயரில் மோசடி நடந்திருப்பதாக சி.பி.ஐ. கூறுவதற்கு முன் வங்கி ஊழியர் சங்கங்கள் இதனை கூறியிருக்க முடியாதா? கடன் வாங்கி விட்டு மோசடி செய்யும் கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களை வங்கி நிர்வாகம் உடனே கையகப்படுத்த வேண்டும் என்று கோரி ஊழியர் சங்கங்கள் ஏன் போராடுவதில்லை? அரசுடைமை வங்கிகளில் ஊழியர்கள் சார்பில் இயக்குநர்களாக (workman director) இருப்பவர்களுக்குத் தெரியாமல் கடன் தள்ளுபடிகளும், மறு சீரமைப்புகளும் நடந்திருக்குமா?

பொதுமக்களின் சேமிப்பு கொள்ளையடிக்கப் படுவதை எதிர்த்து வேலைநிறுத்தம் நடத்துவது வங்கி ஊழியர் சங்கங்களின் கடமையில்லையா? தற்போது ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஊழியர் சங்கம் கோரும் ஊதிய உயர்வைக் கொடுக்க மறுப்பதற்கு அரசு கூறும் முக்கியமான காரணம், வங்கிகளின் வாராக்கடன் (npa). மறுசீரமைப்பு, (restrcturing) சொத்து மறுகட்டுமானம் (asset reconstruction) என்ற கணக்குப் பித்தலாட்டங்கள் மூலம் வாராக்கடனைக் குறைத்துக் காட்டினால்தான் ஊதிய உயர்வு தரமுடியும் என்று ஊழியர் சங்கங்களிடம் வங்கி நிர்வாகம் கூறும். ஊழியர் சங்கங்கள் இதனை எதிர்த்துப் போராடுமா, அல்லது ஊதிய உயர்வுக் கோரிக்கைக்காக இந்த மோசடிக்கு உடன்பட்டுப் போகுமா?
______________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________

கால்பந்து சங்கமா, காசு புரட்டும் பன்னாட்டு நிறுவனமா?

0

கால்பந்து சங்கமா, காசு புரட்டும் பன்னாட்டு நிறுவனமா?

(2006 உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை ஒட்டி, புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த கட்டுரை)

FIFA (Federation de international football associations) என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனம் ஸ்விட்சர்லாந்தில் இலாப நோக்கமற்ற அமைப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எந்த சுவிட்சர்லாந்து? அதிகார வர்க்கமும், முதலாளிகளும் லஞ்சப்பணம், கள்ளப்பணம், கறுப்புப்பணம் இன்னபிற ஊழல் பணத்தை இரகசியமாக சேமிப்பதற்கு நம்பிக்கையான வங்கிகளைக் கொண்ட அந்த சுவிட்சர்லாந்து.

ஃபிஃபா

உலகக்கோப்பை மற்றும் இன்னபிற சர்வதேச போட்டிகளை நடத்தும் ஃபிஃபா ஒரு வெறும் விளையாட்டுச் சங்கம் மட்டுமல்ல, பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் பெரும் வர்த்தக நிறுவனமும் ஆகும். அதில் மோசடி செய்த பணத்தை காப்பாற்றுவதற்கென்றே சுவிட்சர்லாந்தில் பதிவு செய்திருக்கிறார்கள். மேலும் இந்தப் பதிவினால் ஃபிஃபா வெறும் 4.5% வர்த்தக வரி செலுத்தினாலே போதும். ஃபிஃபாவின் தலைவராக இருக்கும் ஸ்லெப்பிளெட்டர் இவரும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்தான். கடந்த எட்டாண்டுகளாக தலைமைப் பதவியில் இருக்கும் இவர் ஃபிஃபாவை மாபெரும் பணம் சுரக்கும் ஊற்றாக மாற்றியிருக்கிறார். 1930-ம் ஆண்டு முதல் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகளை நடத்தி வருகிறது.

1906-ம் ஆண்டு ஃபிஃபாவின் வருமானம் வெறும் 20,550 ரூபாய் மட்டுமே. ஒவ்வொரு உலகக் கோப்பையின் போதும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் மைதானம் முதலான கட்டுமானச் செலவுகளைப் பார்த்துக் கொள்கின்றன. பன்னாட்டு – உள்நாட்டு நிறுவனங்கள் ஸ்பான்சர் தொகையாக பல்லாயிரம் கோடிகளைத் தருகின்றன. இது போக போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கான உரிமத் தொகையாக பல்லாயிரம் கோடி ரூபாய் வருகின்றது.

இப்படி ஒவ்வொரு ஆண்டும் எவ்வித முதலீடோ, செலவோ இன்றி ஃபிஃபா கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றது. 2002-ம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஃபிஃபாவின் நிகர இலாபம் 1,300 கோடி ரூபாயாகும்.

2006-ல் செலவு போக 4,290 கோடி ரூபாய் வருவாய் வருமென மதிப்பிடப்பட்டிருக்கின்றது. இத்தொகையில் ஏழை நாடுகளின் சிறு நகரங்களில் பத்து இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் உருவாக்குவதாக இருந்தால் 42,900 நகரங்களில் எளிய முறையில் மைதானத்தைக் கட்டமுடியும்.

ஆனால் ஃபிஃபாவோ கால்பந்தை வளர்ப்பதற்குப் பதில் காசை அள்ளுவதிலும் மோசடி செய்வதிலும் குறியாக இருக்கிறது. அப்படி சமீபத்தில் ஒரு ஊழல் விவகாரம் அம்பலமாயிருக்கிறது. ஐ.சி.எல். எனப்படும் ஃபிஃபாவின் பினாமி நிறுவனம் ஸ்விட்சர்லாந்தில் இருக்கிறது. இதற்கு ஃபிஃபாவின் கால்பந்துப் போட்டிகளினால் வரும் வர்த்தக நடவடிக்கைகளைக் கவனிப்பதற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. கட்டணச் செலவாக 1,500 கோடி ரூபாயும் தரப்பட்டது. இறுதியில் ஐ.சி.எல் திவால் என அறிவிக்கப்பட அத்தனை ரூபாயும் சுருட்டப்பட்டது. இதில் ஃபிஃபாவின் அதிகார வர்க்கம் மோசடி செய்துள்ளதை பி.பி.சி. தொலைக்காட்சியின் பனோரமா நிகழ்ச்சி சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது. ஃபிஃபாவின் தலைவரோ இதை ஒரு அறிக்கையில் பொய்யென மறுத்து விட்டு தன் வேலையைச் செவ்வனே செய்து வருகிறார்.

கோல் போடாமலேயே வென்றது அடிடாஸ்

ர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனத்தைத் தனது விளம்பரக் கம்பெனியாகவே மாற்றி விட்டது அடிடாஸ் என்கிறார்கள். ஷூ மற்றும் விளையாட்டு உடை உபகரணங்களைத் தயாரிக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம்தான் அடிடாஸ். இந்நிறுவனம் இந்தப் போட்டிக்கென்றே ஜோஸ்+10 என்ற விளம்பரத்தைத் தயாரித்திருக்கிறது.

இதில் மாநகரச் சேரியின் தெருவொன்றில் ஜோஸூம் அவனது நண்பர்களும் கால்பந்து விளையாடுகிறார்கள். தத்தமது அணிக்கு உலகின் பிரபலமான கால்பந்து வீரர்களை அழைக்கிறார்கள். வீரர்களும் வந்து ஆடுகிறார்கள். ஜோஸின் தாயார் “விளையாடியது போதும் வீட்டுக்கு வா” என்று அவனை சத்தம் போடுகிறாள். “முடியாதது ஒன்றுமில்லை” என்ற தத்துவ விளக்கத்துடன் முடியும் இந்த விளம்பரம் இந்தி உட்பட பத்து உலகமொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது.

விளம்பர கால்பந்து

அர்ஜென்டினா, ஜெர்மனி உட்பட முக்கியமான ஆறு அணிகளின் உடை, உபகரணங்களையும் அடிடாஸ் ஸ்பான்சர் செய்திருக்கிறது. இதே போன்று நைக் நிறுவனம் 8 அணிகளுக்கும், பூமா நிறுவனம் 12 அணிகளுக்கும் உபயம் அளித்திருக்கின்றன. இதில் கேலிக் கூத்து என்னவென்றால் போட்டி நடுவர்களின் உடையைக்கூட அடிடாஸ்தான் அளித்திருக்கிறது.

ஆக உலகப்போட்டி ஓடுவது இந்தச் செருப்புக் கம்பெனிகளின் கைங்கர்யம் என்றாகி விட்டது. மேலும் அடிடாஸ் நிறுவனம் இந்தப் போட்டியை வைத்து ஒரு கோடி கால்பந்துகள், 10 இலட்சம் ஜோடி பிரிடேட்டர் ஷூக்கள், 5 இலட்சம் ஜெர்மன் அணிச்சட்டைகள் விற்பதற்கு இலக்கு தீர்மானித்திருக்கிறது. அவ்வகையில் சென்ற ஆண்டை விட 37% நிகர லாபம் அதிகரிக்குமாம். மொத்தத்தில் அடிடாஸின் கால்பந்து தொடர்பான விற்பனை இவ்வாண்டு மட்டும் 6,600 கோடியைத் தொடும். இதே தொகையில் ஏழை நாடுகளின் பள்ளிக்கூடங்களுக்கு தலா 10,000 ரூபாய் மதிப்பிலான குறைந்தபட்ச விளையாட்டு உபகரணங்கள் அளிப்பதாக வைத்துக் கொண்டால் சுமார் 66 இலட்சம் பள்ளிக்கூடங்களுக்கு வழங்கலாம்.

கால்பந்து: நவீன கிளாடியேட்டருக்கு பல்லாயிரம் கோடி கேளிக்கைச் செலவு

ண்டைய ரோமாபுரி ஆட்சியில் மக்களை கேளிக்கையில் மூழ்க வைக்க கிளாடியேட்டர் எனப்படும் அடிமைகளை சாகும் வரை சண்டையிட வைப்பார்கள். வருடம் முழுவதும் நடக்கும் இந்தப் போட்டிகளுக்காக நகரின் மத்தியில் பிரம்மாண்டமான மைதானத்தை பெருஞ்செலவு செய்து கட்டுவார்கள். தற்போது கால்பந்து போட்டிகளும் ஏறக்குறைய அப்படி மாற்றப்பட்டு விட்டன.

உலகக் கோப்பை

2002-ல் ஜப்பானும் கொரியாவும் சேர்ந்து நடத்திய உலகக் கோப்பை மொத்த ஆட்டங்களையும் பார்த்த மக்களின் கூட்டுக் கணக்கு 3,000 கோடியாகும். இந்தப் போட்டிக்காக இரு நாடுகளும் மைதானங்கள் கட்டுவதற்காக மட்டும் 35,000 கோடி ரூபாயைச் செலவழித்தன. இதே தொகையை ஒரு இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் குடிசைமாற்று வாரிய வீட்டைக் கட்டுவதாக இருந்தால் 35 இலட்சம் வீடுகளைக் கட்டலாம். அதாவது ஒன்றரை கோடி மக்களுக்கு வீடு கிடைக்கும். அல்லது சென்னை மாநகரைப் போன்று மூன்று மாநகரங்களைக் கட்டலாம்.

இவ்வாண்டு உலகக் கோப்பையை நடத்தும் ஜெர்மனி இதற்காக செலவழித்த தொகை 10,000 கோடி ரூபாயாகும். இதே தொகையில் ஐந்து வகுப்பறை கொண்ட ஒரு ஆரம்பப் பள்ளியை ஐந்து இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதாக இருந்தால் சுமார் இரண்டு இலட்சம் பள்ளிகளைக் கட்டலாம்.

இப்படி மைதானம் கட்டுவதற்காக பல்லாயிரம் கோடி செலவழிப்பதால் இந்தப் போட்டிகளை நடத்தும் நாடுகளுக்கு என்ன பயன் என்று கேட்கலாம். கட்டுமானத் தொழில், ஓட்டல், உணவக விடுதிகள், சுற்றுலா, விபச்சாரம், சிறுவர்த்தகம் என்று பல வழிகளில் இந்நாடுகளுக்கு வருமானம் வருகிறது.

ஜெர்மனியில் நடக்கும் போட்டியைக் காண மட்டும் சுமார் 30 இலட்சம் இரசிகர்கள் வந்து போவார்கள் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்கள் போட்டி நடக்கும் ஒரு மாதத்திற்கு தினசரி 3,000 ரூபாய் செலவழித்தால் ஜெர்மனியின் இலாபம் என்னவென்று தெரியவரும்.

– இளநம்பி
புதிய கலாச்சாரம், ஜூலை – 2006

படங்கள் : நன்றி http://www.cartoonmovement.com

கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி சுற்று்ச் சுவர் இடிப்பு

0

விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி சுற்றுச் சுவரை தனி ஒரு நபரின் தூண்டுதலால் காவல்துறையில் 2 நபர்களும் கோர்ட் அமீனா மற்றும் கிராம மணியகார் உட்பட அனைவரும் 27-6-2014 வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிக்கு வந்து இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கியுள்ளார்கள்.

மாணவர்களிடம் இருந்து இது தொடர்பாக தோழர்களுக்கு செய்தி கிடைத்தது. உடனே கல்லூரிக்கு சென்று மாணவர்களிடத்தில் பேசினோம். “கல்லூரி மதில் சுவரை இடித்ததை கண்டித்து நாம் உடனே போராட வேண்டும்; நாளை காலை வந்து நாம் கேட்டை இழுத்து மூடிவிட வேண்டும்;  சாலை மறியல் செய்வோம் எல்லா அதிகாரிகளும் வருவார்கள் அவர்களிடம் பேசிக் கொள்வோம்” என்று மாணவர்கள் கூறினார்கள்.

கல்லூரிக்கு தொடர்பு கொண்டு பேசிய போது, “முறைப்படி எந்த தகவலும் இல்லாமல் இயந்திரத்தை கொண்டு வந்து போலீசு காவலுடன் இடித்தார்கள். காலை நேரம் என்பதால் அவர்கள் இஷ்டம் போல் தேவையான அளவிற்கு இடித்து விட்டார்கள். கேட்பதற்கு ஆள் இல்லாமல் போய் விட்டது” என்று கூறினார்கள்.

ஏற்கனவே இக்கல்லூரியில் “அரசு கல்லூரியில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆள் சேர்ப்பதை எதிர்த்து நடந்த போராட்டத்தை” அடுத்து  பேராசிரியர்கள் அனைவரிடத்திலும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அடுத்த நாள் காலையில் கேட்டை சாத்தி மாணவர்களிடம் விளக்கி பேசி போராட்டத்தை தொடங்கினோம்.

போராட்டம் இதுபோராட்டம்
கல்லூரியை பாதுகாக்கும்
மாணவர்களின் போராட்டம்

நடவடிக்கையெடு நடவடிக்கையெடு
கல்லூரிக்கு தகவல் இல்லாமல்
காம்பவுண்ட் சுவரை இடித்தவர் மீது
நடவடிக்கையெடு நடவடிக்கையெடு

பாதுகாப்போம் பாதுகாப்போம்
எங்கள் கல்லூரியை பாதுகாப்போம்!

கல்வி கொள்ளை அடிப்பவர்கள்
காம்பவுண்ட் சுவரை இடிப்பது என்றால்
காவல் துறையும் நீதித்துறையும்
யாருக்காக யாருக்காக

அரசு கல்லூரி என்பதால்
ஆளுக்கு ஆள் சுவரை இடிப்பதை
விடமாட்டோம் விடமாட்டோம்
மாணவர்கள் நாங்கள் விடமாட்டோம்!

முழக்கங்களை போட்டுக் கொண்டே உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையை மறிக்க சென்ற போது காவல் துறையினர் தடுத்தார்கள்.

“நீங்க படிக்கிற பசங்க ரோட்டில் வந்து எல்லாம் போராட கூடாது. கல்லூரிக்கு வாங்க” என்று சமாதானம் செய்ய முயற்சி செய்தார் காவல் துறை அதிகாரி. முன்னணியாக இருந்த மாணவர்கள் அழைத்து, “பிரின்ஸ்பாலிடம் போய் பேசலாம்” என்று திசை திருப்பினார்.

மாணவர்கள் காவல் துறையிடம் தோழர்களை பேச சொன்னார்கள். “காலையில் போலீசு துணையுடன் கல்லூரிக்கு வந்து சுவரை இடித்தார்கள். அது மட்டுமில்லாமல் கல்லூரிக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை. காம்பவுண்ட் சுவரை மீண்டும் கட்டும் வரையில் நாங்கள் விட மாட்டோம்” என்று கூறியவுடன் “முதலில் கல்லூரிக்குள் வாருங்கள் பேசி முடிவெடுப்போம்” என்று மாணவர்களை திசைதிருப்ப முயற்சித்தது காவல் துறை.

மாணவர்களுடைய போராட்டத்திற்கு பிறகு வந்து சேர்ந்த காவல் துறை சுவரை சட்டப்படி தான் இடித்தார்கள் என்று நியாயப்படுத்தினார்கள். கல்லூரி முதல்வரிடம் 2008-ல் வெளியான தீர்ப்பின் நகலை காட்டி கோர்ட் ஆர்டர் இருப்பதாகவும்,  “உங்களுக்கும் இதை அனுப்பியுள்ளார்கள் என்று நாங்கள் நினைத்திருந்தோம்” என்றும் அண்டபுளுகை கூறினார்கள்.

அவர்கள் கொடுத்த தீர்ப்பு நகல் 2008-ல் வெளியானது. அதை எதிர்த்து கல்லூரி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டி தாசில்தாரை வரவழைக்கும்படி கோரினோம்.

தாசில்தார் கல்லூரிக்கு வந்தார். அவரிடம் இடிக்கப்பட்ட சுவரை காண்பித்து காலை 7.00 மணிக்கு அதிகாரிகள் , காவல்துறை, நீதித் துறையை சார்ந்தவர்கள் முன்னிலையில் இடிக்கப்பட்டது என்று கூறி அரசு கல்லூரியை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே இப்படி நடப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியவுடன், “இது தொடர்பாக எங்களுக்கும் எந்த ஆர்டரும் வரவில்லை. சட்டவிரோதமாக சுவரை இடித்தது கிரிமினல் குற்றம். இடித்தவர்கள் மீது நடவடிக்கை கண்டிப்பாக எடுப்பேன்” என்று தாசில்தார் மாணவர்களிடத்தில் உறுதியளித்தார்.

கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் காவல்துறை நடந்து கொண்டதை விளக்கி பேசினார்கள். “2008 ஆணையை காட்டி கோர்ட் உத்தரவு படி தான் இடித்தோம் என்று போலீசு பேசியது தவறு. யார் யார் வந்தார்கள் என்று புகார் கொடுங்கள், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுப்போம்” என்று தாசில்தார் பேசினார்.

சுவரை கட்டும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் கூறினார்கள்.

அரசு சொத்தை ஒழிப்பதற்கு அரசாங்கமும், அதிகாரிகளும் துடிக்கும் போது, மாணவர்கள் நமக்கென்ன என்று இருக்காமல் தாம் பயிலும் கல்லூரி கட்டிடத்தை காப்பாற்ற போராடியிருக்கிறார்கள் என்பதை புமாஇமு வாழ்த்தி வரவேற்கிறது. போராட்டத்திற்கும் தொடர்ந்து துணை நிற்போம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம்

ஜீவராஜை கொன்ற அய்யம்மாள் ஒரு ஜிகாதி – ஹிந்து முன்னணி பகீர் தகவல்!

22

ப்ரியத்துக்குரிய பாரதீயர்களே,

“இந்த நாடு ஹிந்து நாடு ஹிந்து மக்கள் சொந்த நாடு
சந்த்ர சூர்யர் உள்ள வரை ஹிந்து நாடிது, எங்கள் நாடிது”

– என்பது தர்மம் காக்க சாத்சாத் அந்த ஸ்ரீ ராமனின் இன்னொரு அவதாரமாக இந்தக் கலியுகத்தில் அவதரித்துள்ள நமது ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் ஷாகா கீதங்களில் ஒன்று. ஆனால்,  இன்றைக்கு நிலைமை அவ்வாறு தான் உள்ளதா? ”பாரில் எல்லா தேஷங்களில் எங்கள் தேஷம் உயர் தேஷம்” என்று அனுதினமும் பாரத மாதாவின் புகழ் பாடி அவளைப் பரம பவித்ர நிலைக்கு உயர்த்த செயல்பட்டு வரும் ஹிந்து செயல் வீரர்களின் நிலையோ, உண்மையில் படு மோசமாகவே இருக்கிறது.

ஜீவராஜ் - அய்யம்மாள்
இந்து இயக்க தீரர் ஸ்ரீமான் ஜீவராஜ், ஜிகாதி அய்யம்மாள்

தமிழ்நாட்டில் ஹிந்து இயக்கங்களில் செயல்பட்டு வரும் தன்னலமில்லா செயல்வீரர்கள் பலர், தேஷ விரோதிகளால் கொலை செய்யப்படும் சம்பவங்கள் சமீப நாட்களாகவே அதிகரித்த அளவில் நடந்து வருவது உங்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும். ஹிந்துக்களின் ஹ்ருதயக் குரலான பரமபூஜனிய செல்வி ஜயலலிதா அவர்களால் இந்த மாநிலம் ஆளப்பட்ட போதிலும் பன்னெடுங்காலமாக அசுரர்களான  திராவிட திம்மிகளின் சித்தாந்த செல்வாக்குக்கு ஹிந்துக்களே ஆட்பட்டிருப்பது நீங்கள் அறிந்ததே.

இதன் காரணமாகவோ என்னவோ ஆடிட்டர் ரமேஷில் தொடங்கி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன் கோயிலில் கொல்லப்பட்ட ஜீவராஜா வரையிலான சம்பவங்களில், கொலைகாரர்களான ஆப்கானிய தாலிபான்களையும் பாகிஸ்தான் ஜிகாதிகளையும் கைது செய்வதில் காவல் துறை சுணக்கம் காட்டி வருகிறது.

சமீப வருடங்களில் நடந்த கொலைகளில் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை நீங்களே பாருங்கள் –

1) நாகை பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் புகழேந்தி கொலை வழக்கில் குற்றவாளி முனீஸ்வரன் சரண் அடைந்தார்.

2) வேலூர் பா.ஜ.க மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளான உதயா, சந்திரன், ராஜா, தரணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

3) பரமக்குடி நகராட்சி முன்னாள் பா.ஜ.க கவுன்சிலர் முருகன் கொலை வழக்கில் ராஜபாண்டி, மனோகரன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர்.

4) ராமேஸ்வரம் ஒன்றிய இந்து முன்னணி செயலாளர் குட்டநம்பு கொலை வழக்கில், ராமச்சந்திரன், சண்முகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

5) கடைசியாக சங்கரன் கோயில் இந்து முன்னணி நகர செயலாளர் ஜீவராஜா கொலையில் அவரது முதல் மனைவி அய்யம்மாள் கைது.

கொலையாளிகளின் பெயர்களைப் பார்த்தாலே தெரியவில்லையா, அனைவரும் ஹிந்துக்கள்! மேற்படி ஸம்பவங்களில் பாகிஸ்தான் ஜிகாதிகள் ஒருவரைக்கூட காவல்துறையால் ஏன் இனம் கண்டு கைது செய்ய முடியவில்லை? எங்களிடம் கேட்டிருந்தால் நாங்களே பிடித்துக் கொடுத்திருப்போமே! அட அதுகூட வேண்டாம், கைது செய்யப்பட்டவர்களுக்கும் ஜிகாதிகளுக்கும் இடையிலான கள்ளத்தொடர்பையாவது நிரூபித்திருக்கலாமே… இந்த விஷயத்தில் முன்னுதாரணமாக செயல்பட்ட ஸ்ரீமான் மோடிஜி அவர்கள் தலைமையில் செயல்பட்ட குஜராத் காவல்துறையிடமிருந்து தமிழக காவல்துறை பயிற்சி பெற வேண்டும். பரம பூஜனிய ஜயலலிதா அவர்கள் இதனை கவுரவக் குறைச்சலாக கருதாமல் அப்படி ஒரு ட்ரையினிங்கிற்கு குஜராத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தற்போது சங்கரன் கோயிலில் கொல்லப்பட்ட ஹிந்து முன்னணி செயல்வீரர் ஸ்ரீமான் ஜீவராஜா கொலையில் அவரது மூத்த மனைவி அய்யம்மாளை காவல் துறை கைது செய்துள்ளது. இந்தப் பெயரும் ஹிந்துப் பெயராகவே இருப்பது, ஹிந்துக்களின் ஹிருதயங்களை ஆணியால் கீறுவது போல் இருக்கிறது.

காவல் துறை தான் செய்த துடுக்குத்தனமான செயல்களுக்கு சொல்லும் காரணங்களை நாம் காணும் முன், இது தொடர்பாக ஹிந்து முன்னணி மாநில தலைவர், வீரத் துறவி மானனீய ஸ்ரீ ராம கோபாலன்ஜி விடுத்துள்ள அறிக்கையில் (தினமணி – ஜூலை 5, 2014) இருந்து சில வரிகளை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

”நமது அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட படுகொலையின் மீது வாய் மூடி மௌனியாக நின்றால்,மக்கள் கோபவேசமாக மாறிவிடுவார்கள், நம்பிக்கை இழந்துவிடுவார்கள்! எனவே, தமிழக அரசும், காவல்துறையும் உடன் நடவடிக்கை எடுத்து கொலைகாரர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமானவர்களை உடனே கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்திரவிட வேண்டும் என ஹிந்து முன்னணி கேட்டுக் கொள்கிறது”

என்று பரம பூஜனிய ஜயலலிதா அவர்களை அன்போடும் உரிமையோடும் எச்சரித்துள்ள நமது வீரத்துறவியார்,

”சமுதாய சேவையில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றிய ஜீவராஜ் மறைவிற்கு ஹிந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது”

மானனீய ஸ்ரீ ராம கோபால்ஜி
மானனீய ஸ்ரீ ராம கோபால்ஜி

மானனீய ஸ்ரீ ராம கோபால்ஜியே சொல்லிவிட்டபடியால் அவரது ஆத்மா நற்கதி அடையத்தான் போகிறது. ஆனால் திராவிட திம்மிகளின் செல்வாக்கின் கீழ் வேலை செய்து பழுதுபட்டுப் போன காவல்துறையோ ஸ்ரீமான் ஜிவராஜின் மேல் கடந்த காலத்தில் இரு முறை குண்டர் சட்டத்தை பாய்ச்சிய தகவல்களை வேண்டுமென்றே இப்போது பத்திரிகைகளுக்கு கசிய விட்டுள்ளது. ஹிந்து இயக்கங்களின் பெயரை கெடுப்பதற்காகவே இத்தகைய சூழ்ச்சிகளில் ஈடுபடும் புல்லுருவிகள் காவல்துறையில் இருப்பதை முதல்வரின் கவனத்துக்கு கொண்டுவருகிறோம்.

மானனீய ஸ்ரீ ராம கோபால்ஜீ ‘சந்தேகத்துக்கு இடமானவர்களை உடனே கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை செய்யவும்” காவல் துறைக்கு சூசகமாக வலியுறுத்தி இருக்கிறார். சங்கரன் கோவிலில் கொலை நடந்தவுடனே காவல்துறை என்ன செய்திருக்க வேண்டும்? உடனே மேலப்பாளையத்திற்கு சென்று நாலைந்து ஜிகாதிகளைப் பிடித்திருக்க வேண்டுமா இல்லையா? குறைந்த பட்சம் ஆம்பூர், வாணியம்பாடி, கோவை கோட்டை மேடு போன்ற ஜிகாதிகளின் மறைவிடங்களை சுற்றி வளைத்து முற்றுகை இட்டிருக்க வேண்டாமா?

காவல்துறை திம்மிகளோ ஸ்ரீமான் ஜீவராஜின் மனைவி அய்யம்மாளை கைது செய்திருக்கிறார்கள். இந்து இயக்க தீரர் ஸ்ரீமான் ஜீவராஜ், முதல் மனைவி அய்யம்மாள் இருக்கும் போதே ஷர்மிளா தேவி என்கிற பெண்ணை சேர்த்துக் கொண்டதாகவும் தினமும் குடித்து விட்டு வந்து தன்னை அடிப்பதோடு தன் கண் முன்னாலேயே ஷர்மிளா தேவியோடு உறவு கொண்டு தன்னை சித்திரவதை செய்ததாகவும், அதனால்தான் அரிவாள்மனையால் கழுத்தை அறுத்து தானே கொன்றதாகவும் அய்யம்மாள் விசாரணையில் தெரிவித்திருக்கிறாள்.

இதெல்லாம் வெறும் சால்ஜாப்புகள் அன்றி வேறென்ன? இதற்கும் ஜிகாதிகளை கைது செய்யாமல் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்? உமையொரு பாகத்தான் சிவனே கங்காதேவியை உச்சிக் கொண்டையில் வைத்து ஆதரவு அளித்துள்ளாரே. அதற்காக சிவபெருமானின் தலையை உமாதேவியார் அரிவாள் மனையில் வைத்தா அறுத்துவிட்டார்? கோயில் பிரகாரங்களில் பகிரங்கமாக சம்போகத்தில் ஈடுபடும் சிற்பங்களை செதுக்கி, நமது தர்மம் எது என்பதை முன்னோர்கள் கல்வெட்டு போல நிலையாட்டியிருக்கும் நிலையில், தன் ஒருத்தி முன்னிலையில் சம்போகத்தில் ஈடுபட்டதற்காக, ஜீவராஜ் மீது அய்யம்மாள் ஆத்திரப்பட்டதாக கூறுவதை தர்மசாத்திரங்களை அறிந்த ஹிந்துக்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

இல்லை ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்தீரிகளை கல்யாணம் செய்வது நமது தர்மத்தில் இல்லையா? பலதார திருமண முறையை தடை செய்து அம்பேத்கர் சட்டம் எழுதும் போது அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர்கள் நம்முடைய ஹிந்து மஹாசாபாக்காரர்கள் அல்லவா? “ஹிந்து தர்மத்துக்கு விரோதமான ஒரு சட்டத்தை எழுதி விட்டு அதற்கு ஹிந்து சட்டம் என்று பெயர் வைக்காதீர்கள். வேறு ஏதாவது பெயர் வைத்துக் கொள்ளுங்கள்” என்று மானனீய முன்ஷிஜி அன்றைக்கே அம்பேத்கரை எதிர்த்து குரல் கொடுத்ததை யாராவது மறுக்க முடியுமா?

காந்தர்வ விவாக முறை முதல், அரிதாரம் போட்டு கள்ள உறவு கொள்வது வரையிலான பலவும்  ஹிந்து சம்பிரதாயத்தில் இருப்பதற்கு புராணங்கள் சாட்சியில்லையா? புராணமெல்லாம் வரலாறில் சேராதென்று எவனாவது வெள்ளைக்காரன் சொன்னால் அதை அப்படியே ஒத்துக் கொள்ள முடியுமா? மனைவியாகப்பட்டவள் கணவனுக்கு தொண்டூழியம் செய்ய வேண்டியது தான் நமது தர்மம். அப்படி செய்யாத பட்சத்தில் அவளை விரட்டி விடுவதற்கும் கூட ஒரு கணவனுக்கு உரிமை இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் பரமபூஜனீய ஸ்ரீ மோகன் ஜி பாகவத் கடந்த ஆண்டே தெள்ளத் தெளிவாக சொல்லி எது ஹிந்து தர்மம் என்பதை உணர்த்தியிருக்கிறாரே.

கொலை செய்யப்படும் அளவுக்கு ஜீவராஜ் என்ன தப்பு பண்ணி விட்டார்? அந்த அய்யம்மாளுக்கு துர்புத்தி சொல்லிக் கொடுத்து தூண்டிவிட்டது யார் என்ற கோணத்தில் வழக்கை விசாரிக்க காவல்துறை மறுப்பது ஏன்? ஜிகாதிகள் இவ்வாறு தூண்டி விட்டிருக்கவே எல்லா சாத்யதையும் உள்ளது. “ஹம் பாஞ்ச் ஹமாரே பச்சீஸ்” என்று (நாம் ஐவர் நமக்கு 25 பேர்) ஜிகாதிகள் பெருகுவது பற்றி பிரதமர் மானனிய மோடிஜி அவர்களே  எச்சரித்திருக்கிறார்களே! ஹிந்துக்களை மட்டும் ஒரு தார மணத்தில் கட்டிப்போட்டு காலப்போக்கில் ஹிந்துக்களை சிறுபான்மையினர் ஆக்கும் சதி தானே இது! இதெல்லாம் போலீசுக்கும் உளவுத்துறைக்கும் புரியாமல் போனது ஏன்?

இதெல்லாம் எதைக் காட்டுகிறது என்றால், அய்யம்மாள் ஏதோ ஒரு வகையில் ஆபிரகாமிய மதங்களால் சொல்லப்படும் ஐரோப்பிய மையவாத ஒழுக்க கோட்பாடுகளால் கெட்டுப் போயிருக்கிறார். அல்லது ஹிந்து பாரம்பரியத்திலிருந்து அவர் விலகி இருப்பதை அறிந்த ஜிகாதி இயக்கங்கள் ஓசைப்படாமல் அவரை மதம் மாற்றியிருக்கும் வாய்ப்புகளும் உண்டு. இப்படி அரிவாள் மனையை எடுத்து தலையைக் கொய்ததில் இருந்தே இவர் ஜிகாதிகளோடு தொடர்புடையவர் என்பது தெரியவில்லையா? சொந்த பார்யாளை வைத்தே ஹிந்து செயல் வீரரான ஸ்ரீமான் ஜீவராஜை கொன்று விட்டார்கள் படுபாவிகள்.

ஹிருதயம் துடிக்கிறதல்லவா? எங்களுக்கும் தான். பழைய வழக்குகளில் கூட கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களும் ரியல் எஸ்டேட் தகராறுகளும் தான் ஹிந்து செயல்வீரர்கள் பலரின் கொலைகளுக்கு காரணம் என்கிறது காவல் துறை. கட்டப் பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் என்பதெல்லாம் நம்முடைய பாரம்பரியத்தை கொச்சைப்படுத்த வெள்ளைக்காரன் சூட்டிய பெயர்கள். ஜீவராஜ் பண்ணியது ரியல் எஸ்டேட் என்றால், பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடந்ததும் ரியல் எஸ்டேட் பிரச்சினையா? அதில் தலையிட்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பண்ணியது கட்டப் பஞ்சாயத்தா? ஹிந்துக்களுக்கு சொந்தமான வீட்டை முசல்மான்கள் வாங்க அனுமதிக்காதீர்கள் என்று ஸ்ரீமான் தொகாடியாஜி ஸமீபத்தில் பேசினாரே, அது ஹிந்து சம்ரக்ஷண நடவடிக்கையா, ரியல் எஸ்டேட் விவகாரமா? அல்லது ஸ்ரீமான் மோடிஜி அம்பானிக்கும் அதானிக்கும் டாடாவுக்கும் சர்வமான்யம் வழங்கியிருப்பதும் ரியல் எஸ்டேட் விவகாரம்தானா?  தான் ஒரு கர்மயோகி என்று மோடிஜி அடிக்கடி சொல்கிறாரே, அது தமிழக காவல்துறைக்கு கொஞ்சமாவது புரிந்திருக்கிறதா?

இதெல்லாம் ஹிந்து தருமப்படி சமூகத்தின் மேன்மைக்காக செய்யப்படும் நிஷ்காம்ய கர்மங்கள் (தனிப்பட்ட பற்று இல்லாமல் செய்யப்படும் காரியங்கள்) என்று கீதையிலே பகவான் கூறியிருப்பது ஹிந்துக்களுக்கும் கூட மறந்துவிட்டதே! இப்படி ஒரு கர்ம யோகியை அவருடைய சொந்த பார்யாளே அரிவாள்மனையில் வைத்து அறுத்துப் போட்டபின்னரும் ஹிந்து சமூஹத்துக்கு சொரணை வரவில்லையே!

வென்டி டோனிகர் போன்றோருக்கும், இந்திய அறிவுத்துறையினருக்கும், ஸ்ரீமான் நம்பூதிரிபாடைத் தவிர்த்த பிற மார்க்சியர்களுக்கும், என்.ஜி.ஓக்களுக்கும் பின்னால் இருக்கும் மிகப்பெரிய கிறிஸ்தவ திருச்சபை வலைப்பின்னலானது, பலதார மணம் உள்ளிட்ட நமது பாரம்பரியப் பண்பாடு குறித்து அவமானம் கொள்ளும் மனோபாவத்தை ஹிந்துக்கள் மனதில்  திட்டமிட்டே உருவாக்கியிருப்பது பற்றியும், இந்த அறிவுத்துறை பயங்கரவாதத்திற்கு சீனாவிலிருந்து பணம் வருவது பற்றியுமான ரஹஸ்யத்தை  ஸ்ரீமான் ஜெயமோகன் அவர்கள் தனது சொந்தக் காதால் கேட்டு சொந்தக் கையினால் எழுதியுமிருக்கிறார். அதையே ஈராயிரம் பக்க வியாஸமாக ஸ்ரீமான் அரவிந்தன் நீலகண்டன் எழுத, அதனை ஸ்ரீமான் பத்ரி வெளியிட இருக்கிறார்.

காவல் துறைக்கு நாங்கள் வைக்கும் வேண்டுகோள் இது தான். காவல் துறை என்றால் அதன் வேலை பாகிஸ்தான் ஜிகாதிகளைப் பிடிப்பது தான் என்பது ஸ்ரீமான் விஜயகாந்த், ஸ்ரீமான் அர்ஜூன், ஸ்ரீமான் மணிரத்தினம் படங்களில் கூட தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. நீங்கள் ஹிந்து தர்மத்தைக் காக்க ஒன்று ஜிகாதிகளை கைது செய்யுங்கள், அது முடியாவிட்டால் இந்துப் பெயர்களோடு கைதாகும் நபர்கள் ஜிகாதிகள் தான் என்பதையாவது தயவு செய்து நிரூபியுங்கள்.

தி.மு.க அ.தி.மு.க போன்ற கட்சிகளில் இருந்து கொண்டு ரியல் எஸ்டேட், கள்ளக்காதல் மற்றும் கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு, கேட்பாரின்றிப் போட்டுத்தள்ளப்படும் ஹிந்து சகோதர்களே, உங்கள் மரணத்துக்காக என்றைக்காவது கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறாரா? சி.பி.ஐ விசாரணை கோரியிருக்கிறாரா? உங்கள் யாருக்காவது படம் திறக்கப்பட்டதுண்டா? பத்து லட்சம் நிவாரணம் கொடு, வாரிசுக்கு வேலை கொடு என்று கோரிக்கையாவது எழுப்பியிருக்கிறாரா?

ஆனால் ஜீவராஜ் என்ற ஹிந்து சகோதரனின் தலையை அரிவாள் மனையில் வைத்து அறுக்கத் தொடங்கியவுடனேயே, ராமகோபாலன்ஜி துடித்தார். ஜிகாதிகளுக்கு எதிராக குரல் கொடுத்தார். இதை எண்ணிப்பாருங்கள். உடனடியாக முடிவெடுத்து சீக்கிரமாக ஹிந்து இயக்கங்களில் சேருங்கள்.

இப்படிக்கு

என்றும் தேசிய, தெய்வீக பணியில்
கிருஷ்ண ஷர்மா, மயிலாப்பூர், மதராஸ்.

– தமிழரசன்

சுரங்க முதலாளிகளின் கூலிப்படையாக மோடி அரசு !

2

என்.ஜி.ஓ.க்கள் பற்றிய உளவுத்துறை அறிக்கை:
சுரங்க முதலாளிகளின் கூலிப்படையாக மோடி அரசு !

ம்பானி, அதானி, டாடா, பிர்லா போன்ற தரகு முதலாளிகளின் தயவில் பதவியைப் பிடித்திருக்கும் மோடி அரசு, கொலைக்கு முன்பணம் வாங்கிய கூலிப்படைக்கே உரிய மூர்க்கத்தனத்துடன் செயலில் இறங்கியிருக்கிறது. மக்கள் போராட்டங்களின் காரணமாக மன்மோகன் சிங் அரசால் அமல்படுத்தவியலாத தனியார்மய- தாராளமய பகற்கொள்ளை நடவடிக்கைகளை நாற்காலியில் அமர்ந்த மறுகணமே துவக்கி விட்டார் மோடி.

உளவுத்துறையிடமிருந்து (Intelligence Bureau) பிரதமருக்கு மிகவும் இரகசியமாக அனுப்பப்பட்டதாக கூறப்படும் 21 பக்க அறிக்கையொன்று ஜூன் 12-ம் தேதியன்று திட்டமிட்டே ஊடகங்களுக்கு கசிய விடப்பட்டிருக்கிறது. அணு மின்நிலையத் திட்டங்கள், யுரேனியம் சுரங்கங்கள், அனல் மின்நிலையத் திட்டங்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள், போஸ்கோ, வேதாந்தா முதலிய நிறுவனங்களின் சுரங்கத் திட்டங்கள் போன்ற பல வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராகத் திட்டமிட்டே தூண்டி விடப்படும் போராட்டங்களினால், 2011-13-க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 முதல் 3 சதவீதம் (அதாவது சுமார் 3 இலட்சம் கோடி ரூபாய்) இழப்பு ஏற்பட்டிருப்பதாக உளவுத்துறையின் அந்த அறிக்கை கூறுகிறது.

இத்தகைய நடவடிக்கையில் அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து, நார்வே, சுவீடன் போன்ற நாடுகளிலிருந்து நிதி பெறும் என்.ஜி.ஓ.க்கள் முக்கியப் பாத்திரம் வகிப்பதாகக் கூறும் அந்த அறிக்கை, கிரீன் பீஸ், ஆக்சன் எய்டு, அம்னஸ்டி இன்டர்நேசனல், என்.ஏ.பி.எம்., நவதான்யா, பி.யூ.சி.எல். போன்ற அமைப்புகளையும் பிரபுல் பித்வாய், அசின் வினைக், வந்தனா சிவா, மேதா பட்கர் போன்ற நபர்களையும் தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.

அணுஉலை எதிர்ப்பு போராட்டங்கள்
மகாராஷ்டிராவின் ஜெய்தாபூர் பகுதியில் அமையவுள்ள அணுஉலைத் திட்டத்தை எதிர்த்து அப்பகுதிவாழ் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்ட ஊர்வலம் (இடது) ; கூடங்குளம் அணுஉலையை மூடக்கோரி இடிந்தகரையில் ஈராண்டுகளாக நடந்துவரும் போராட்டம் (கோப்புப் படங்கள்).

“இரகசியம்” என்று கூறத்தக்க எதுவும் இந்த அறிக்கையில் இல்லை. மேற்கூறிய அனைவரும் அணுசக்தி எதிர்ப்பு, மரபணு மாற்றுப் பயிர் எதிர்ப்பு, நர்மதா அணைக்கட்டு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ஏற்கெனவே பிரபலமானவர்கள். 23-ம் புலிகேசியின் உளவுத்துறையைப் போல மோடியின் உளவுத்துறை இவர்களைத் திடீரென்று “கண்டுபிடிப்பதற்கான” பின்னணி என்ன என்பதைத்தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

உளவுத்துறையின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதற்கு அடுத்த நாளே, சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயரத்தை 122 மீட்டரிலிருந்து 138 மீட்டராக உயர்த்தும் முடிவை அறிவித்தது மோடி அரசு. ஏற்கெனவே அணையில் மூழ்கிப்போன கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இதுவரை மறுவாழ்வு அளிக்கப்படவில்லை. குஜராத் விவசாயிகளின் பெயரால் நியாயப்படுத்தப்பட்ட இந்த அணைக்கட்டின் நீரை, அவர்கள் பயன்படுத்திக் கொள்வதற்கான கால்வாகளில் கால் பகுதியைக் கூட மோடி அரசு அங்கே வெட்டவில்லை. இந்நிலையில் குஜராத் தரகு முதலாளிகளின் தொழிற்சாலைத் தேவைகளுக்காக அணையின் உயரத்தை மேலும் கூட்டுகிறார் மோடி. இதனால் அகதிகளாக்கப்பட இருப்பவர்கள் மத்தியப் பிரதேசத்தின் நூற்றுக் கணக்கான கிராமங்களைச் சேர்ந்த இரண்டரை இலட்சம் பழங்குடி மக்கள்.

இந்த முடிவு உடனே எதிர்ப்பை தோற்றுவிக்கும் என்பதால், அத்தகைய போராட்டங்களைத் தலையெடுக்கவிடாமல் தடுப்பதற்காகவும், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் என்.ஜி.ஓ.க்களை முன்கூட்டியே அச்சுறுத்திப் பணிய வைப்பதற்காகவும்தான் இந்த உளவுத்துறையின் “ரகசியம்” திட்டமிட்டே முந்தைய நாளில் வெளியிடப்பட்டிருக்கிறது.

மரபணு மாற்றப்பட்ட உணவு எதிர்ப்பு
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் புகுத்தப்படுவதை எதிர்த்தும், அமெரிக்க ஏகபோக நிறுவனமான மான்சாண்டோவை இந்தியாவிலிருந்து வெளியேற்றக் கோரியும் “கிரீன் பீஸ்” நிறுவனத்தின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

உளவுத்துறை அறிக்கையின் இரண்டாவது முக்கிய இலக்கு சுற்றுச் சூழல் சார்ந்த என்.ஜி.ஓ.க்கள். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறைமுகமான முந்த்ரா துறைமுகம் அதானிக்குச் சோந்தமானது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியென அறிவிக்கப்பட்ட அலையாற்றிக் காடுகளை அழித்து அமைக்கப்பட்டிருக்கிறது இந்த துறைமுகம். அதானி கட்டவிழ்த்து விட்டிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவு மற்றும் மீனவர்களின் வாழ்வாதார அழிப்பு ஆகியவை குறித்து சி.எஸ்.இ.என்ற என்.ஜி.ஓ.வின் (கோகோ கோலாவில் பூச்சி மருந்து இருப்பதை அம்பலப்படுத்திய அமைப்பு) நிறுவனரான சுனிதா நாராயண் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அதானி நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம் விதித்தது காங்கிரசு அரசு. (ஜெயந்தி நடராசனுக்கு எதிரான மோடியின் கோபத்துக்கு இது முக்கியமான காரணம்).

அடுத்து கிரீன் பீஸ் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் என்.ஜி.ஓ., மார்ச் 2014 -ல் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி நிறுவனம் முந்த்ரா துறைமுகக் கட்டுமானத்தில் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து சாதித்துக் கொண்ட முறைகேடுகள், சட்டவிரோதக் கட்டுமானங்கள், அரசு நில ஆக்கிரமிப்பு, வரி ஏய்ப்பு, இந்நிறுவனத்துக்கு எதிரான வழக்குகள், நீதிமன்றத்தின் கண்டனங்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலம் லோகராவில் அதானிக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி வயல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருப்பதையும், ம.பி.யில் சிந்த்வாரா என்ற இடத்தில் அதானி அமைக்கும் அனல் மின் நிலையத்திற்குப் பாசன நீரைத் திருப்பி விடுவதற்கு எதிராக விவசாயிகளும் பழங்குடி மக்களும் போராடிக் கொண்டிருக்கும்போதே, அதானி நிறுவனம் சட்டவிரோதமாகக் கால்வாய் வெட்டியிருப்பதையும் கிரீன்பீஸ் அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஒரிசாவில் அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் செய்த இறக்குமதி வரி ஏய்ப்புக்காக உச்ச நீதிமன்றம் 175 கோடி டாலரை அரசுக்குக் கட்டச் சொல்லியிருப்பதையும், பெல்லாரி இரும்பு வயல்களிலிருந்து திருட்டுத்தனமாக கனிமத்தை அதானி நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளதையும், 2500 கோடி டாலர் நிலக்கரி இறக்குமதி செய்ததில், வரி ஏய்ப்பு செய்திருப்பதையும், கருப்பை வெள்ளையாக்கும் மோசடி பரிவர்த்தனையில் அதானி ஈடுபட்டதால், சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் துறைமுகம் அமைக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருப்பதையும் கிரீன்பீஸ் தனது அறிக்கையில் அம்பலப்படுத்தியிருக்கிறது.

மோடி, மிகவும் அவசரமாகவும் ஆத்திரமாகவும் இந்த என்.ஜி.ஓ.க்களுக்கு எதிராக உளவுத்துறையை ஏவியிருப்பதன் பின்புலம் இதுதான்.

நர்மதா பாதுகாப்பு இயக்கம்
மகேஷ்வர் அணைக்கட்டுத் திட்டத்தால் வெளியேற்றப்பட்டவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்கக் கோரி, நர்மதா பாதுகாப்பு இயக்கம் புதுடெல்லியில் நடத்திய காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் (கோப்புப்படம்).

அடுத்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை எதிர்க்கின்ற வந்தனா சிவா உள்ளிட்ட என்.ஜி.ஓ.க்களுக்கு எதிராக உளவுத்துறை அறிக்கை கூறும் கருத்துக்கள், மோடியின் அரசு ஒரு அமெரிக்க கைக்கூலி அரசே என்பதை அப்பட்டமாக நிரூபிக்கின்றன.

மன்மோகன் ஆட்சியின்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி.கத்தரிக்கு மக்கள் மத்தியில் எழுந்த பரவலான எதிர்ப்பின் காரணமாக, அது தொடர்பாக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழு, அதன் வணிக ரீதியான விற்பனையை நிறுத்தி வைத்ததுடன், அது தொடர்பாக ஒரு விசாரணைக்கும் உத்தரவிட்டது. ஆனால், தற்போதைய உளவுத்துறை அறிக்கையோ மான்சான்டோ மற்றும் யு.எஸ். எடு நிறுவனங்களின் ஆஸ்தான ஆவாளரான டாக்டர் ரொனால்டு ஹெர்ரிங்கின் கூற்றை மேற்கோள் காட்டி, “பி.டி. கத்தரி பாதுகாப்பானது” என்று வாதிடுவதுடன், என்.ஜி.ஓ.க்கள் எம்.பி.க்களை தவறாக வழிநடத்தி விட்டதாகக் குற்றம் சாட்டுகிறது. பி.டி.கத்தரியைத் தடை செய்த மேற்படி நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினர்களில் 12 பேர் தேசிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் இதில் மிகப்பெரிய நகைச்சுவை.

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக,”பி.யு.சி.எல்., குஜராத் சர்வோதய மண்டல், மதச்சார்பற்ற ஜனநாயகத்துக்கான இயக்கம் போன்ற அமைப்புகள் குஜராத் மாடல் வளர்ச்சியை கேள்விக்குள்ளாக்குகின்றன” என்று குற்றம் சாட்டுவதன் மூலம் இந்த அறிக்கையே மோடியின் அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கான ஏற்பாடுதான் என்பதை அம்பலப்படுத்திக் கொள்கிறது உளவுத்துறை.

ஒருபுறம் ஏகாதிபத்திய எடுபிடியாக இருந்து கொண்டே, இன்னொரு புறம் வெளிநாட்டு நிதி பெறும் தன்னார்வக் குழுக்கள் பற்றிக் கூச்சல் எழுப்பும் இந்த நாடகம் நமக்குப் புதிதல்ல.

இந்தியாவில் உள்ள அந்நிய நிதி பெறும் அமைப்புகளிலேயே மிகவும் பெரியது ஆர்.எஸ்.எஸ்.தான். 1988-ல் வேத பிரகாஷ் என்ற உலக வங்கி அதிகாரியால் அமெரிக்காவில் துவக்கப்பட்ட இந்தியா டெவலப்மென்ட் ரிலீஃப் ஃபண்டு என்ற பினாமி அமைப்பு, கோடிக்கணக்கான டாலர்களைத் திரட்டி ஆர்.எஸ்.எஸ்-ன் மதவெறி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியிருப்பது 2002-லேயே அம்பலமானது.

காங்கிரசும் பாரதிய ஜனதாவும் சட்டவிரோதமாக அந்நிய நிதியைப் பெற்றிருக்கின்றன என்று குற்றம் சாட்டி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு வழக்கில், பிரிட்டிஷ் பன்னாட்டு நிறுவனமான ஸ்டெரிலைட்டிமிருந்து இரு கட்சிகளும் சட்டவிரோதமான முறையில் பணம் பெற்றிருப்பதை நீதிமன்றத் தீர்ப்பு சென்ற மார்ச் மாதம் உறுதி செய்திருக்கிறது.

மறுகாலனியாக்கத்தின் கீழ் இக்கட்சிகள் மட்டுமின்றி, மத்திய-மாநில அரசுகளும், உள்ளூராட்சிகளும் கூட அந்நிய நிதி நிறுவனங்களால்தான் கட்டுப்படுத்தி இயக்கப்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். இதனை எல்லா ஓட்டுக் கட்சித்தலைவர்களும் வெட்கமின்றி ஒப்புக்கொண்டுமிருக்கின்றனர். இருந்தபோதிலும், மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்துவதற்கு சில என்.ஜி.ஓ.க்களின் செயல்பாடுகள் வரம்பு மீறி இடையூறு ஏற்படுத்தும்போது, அந்நிய நிதி என்ற இந்தக் கூச்சல் எழுப்பப் படுகிறது.

03-c-1

கூடங்குளம் அணு உலை மற்றும் பி.டி.கத்தரிக்கு எதிர்ப்பு ஆகிய பிரச்சினைகளில் ஏற்கெனவே மன்மோகன்சிங் இதைத்தான் செய்தார். பொதுநலனுக்கு குந்தகம் விளைவிப்பவை என்று கூறி 4000 என்.ஜி.ஓ.க்கள் வெளிநாட்டிலிருந்து நிதி பெறுவதற்கான அனுமதியை 2013-ல் ரத்து செய்தார். மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் என்.ஜி.ஓ.க்கள் மீது மன்மோகன் சிங் ஆத்திரம் கொண்டிருந்த போதிலும், மனித முகம் கொண்ட மறுகாலனியாக்கத்தை” அமல்படுத்த உதவும் பொருட்டு, சோனியாவின் தேசிய ஆலோசனைக் கவுன்சிலில் என்.ஜி.ஓ.க்கள் அங்கம் வகிக்கவே செய்தனர்.

ஆனால், மோடியின் என்.ஜி.ஓ. எதிர்ப்பு வேறு வகையைச் சேர்ந்தது. என்.ஜி.ஓ.க்களில் பலர் இந்து மதவெறியை எதிர்ப்பதுடன், குஜராத் இனப்படுகொலையைத் தொடர்ச்சியாக அம்பலப்படுத்துபவர்களாகவும் இருப்பதால், “இந்து எதிரிகள்” என்ற கோணத்திலும் மோடி அவர்கள் மீது ஆத்திரம் கொண்டிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த விஜில் என்ற ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட “என்.ஜி.ஓக்கள் – களப்பணியாளர்கள் மற்றும் அந்நிய நிதி: ஒரு தேசவிரோதத் தொழில்” என்ற நூலிலிருந்து “அந்நிய” என்ற சொல்லுக்கான விளக்கத்தை நாம் தெரிந்து கொள்ளலாம். “கிறித்தவர்கள், முஸ்லீம்கள், காஷ்மீர், வடகிழக்கிந்திய தேசிய இன போராட்டங்கள், மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், என்.ஜி.ஓ.க்கள், காங்கிரசு” ஆகிய அனைவரையுமே இந்து விரோதிகளாகவும், அந்நியக் கைக்கூலி’’களாகவும் சித்தரிக்கிறது அந்நூல். 2006-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு விழாவில் என்.ஜி.ஓ.க்களைப் பற்றி மோடி பேசிய வரிகள், அச்சு பிசகாமல் அப்படியே தற்போதைய உளவுத்துறை அறிக்கையில் இடம் பெற்றிருக்கின்றன.

மேதா பட்கர், பிரபுல் பித்வாய்
“இம்சை அரசன்” மோடியின் உளவுத்துறையால் இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானவர்களாக்க் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள அணுஉலை திட்ட எதிர்ப்பாளரும் சமூக அரசியல் விமர்சகருமான பிரபுல் பித்வாய் (இடது) மற்றும் நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் மேதா பட்கர்.

மோடி முன்வைக்கும் வளர்ச்சிப் பாதை, சீனாவைப் போல இந்தியாவையும் ஒரு வல்லரசாக்கி விடும் என்று மேற்குலகம் அஞ்சுவதாகவும், அதனால்தான் சுரங்கங்கள், அணைக்கட்டுகள், அணு மின் நிலையங்கள் போன்ற வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பதற்கு என்.ஜி.ஓ.க்கள் மூலம் முட்டுக்கட்டை போடுவதாகவும் ஆர்.எஸ்.எஸ் சார்பு அறிவுத்துறையினர் பிரச்சாரம் செகின்றனர். தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தமது கொள்ளைக்கான திட்டங்களாக முன்வைத்தவற்றைத்தான் மன்மோகன் சிங்கும் மோடியும் தமது சோந்த திட்டம் போல முன்வைக்கின்றனர்.

மத்திய இந்தியாவில் தொடங்கி நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் எதிர்ப்பின் காரணமாக இவற்றை அமல்படுத்த முடியாததால், இந்த எதிர்ப்பை நசுக்குவதற்கும், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் என்.ஜி.ஓ.க்களை மிரட்டுவதற்கும்தான் இந்த இரகசிய அறிக்கைகள்.

அந்நிய நிதி பெறும் என்.ஜி.ஓ.க்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். கும்பலும் மோடி அரசும் என்னதான் சவடால் அடித்தாலும் அவர்களைத் தடை செய்யவோ முற்றிலுமாக அகற்றவோ முடியாது. ஏனென்றால், அவர்கள் மோடியின் எசமானர்களான ஏகாதிபத்தியங்களின் வளர்ப்புப் பிள்ளைகள்.

வெவ்வேறு நோக்கங்களுக்காக வேறுபட்ட கோணங்களில் என்.ஜி.ஓ.க்களை ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்துகின்றன.

மறுகாலனியாக்கக் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஏகாதிபத்திய எதிர்ப்பு-கம்யூனிச அரசியல் இல்லாத சுற்றுச்சூழல் பிரச்சினையாகவோ, பழங்குடி மக்கள் பிரச்சினையாகவோ அல்லது மனித உரிமைப் பிரச்சினையாகவோ மாற்றுவது, அடையாள அரசியலின் வரம்புக்குள் நிறுத்துவது என்பது “போராளி” என்.ஜி.ஓ.க்களின் வேலைத்திட்டம். இவர்கள் மீதுதான் இப்போது மோடி அரசு பாய்கிறது.

இவர்களன்றி, நேரடியாக அரசு அதிகாரத்தில் பங்கேற்கும் என்.ஜி.ஓ.க்கள் உள்ளனர். மக்களின் நம்பிக்கையை இழந்து விட்ட அதிகார வர்க்க அமைப்பின் மூலம் மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்த முடியாது என்பதால், அதிகாரப் பரவலாக்கல், வேர்மட்ட ஜனநாயகம், பயனீட்டாளர் பங்கு பெறுதல் என்ற பெயர்களில் தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்தும் முகவர்களாகவும், நலத்திட்டங்களை செயல்படுத்தும் அரசின் பங்குதாரர்களாகவும் அரசு அதிகாரத்தின் அங்கமாகவே என்.ஜி.ஓ.க்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இது உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்களின் உத்தரவு. என்.ஜி.ஓ.க்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேலாக இந்திய அரசே நிதி உதவி செகிறது.

சில நேரங்களில் அதிகார உறுப்புகளாகவும், சில நேரங்களில் போராட்ட அமைப்புகளாகவும் செய்யல்படும் என்.ஜி.ஓக்கள் மீது மோடி அரசு தற்போது காட்டும் ஆத்திரத்தின் உண்மையான இலக்கு போராடுகின்ற மக்களாவர்.

நிலக்கரி, இரும்பு, பாக்சைட் சுரங்கங்களையும், காடுகளையும், கடற்கரையையும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உடைமையாக்கித் தருகின்ற கூலிப்படையான மோடியின் அரசு, மன்மோகன் சிங் கடந்த 5 ஆண்டுகளில் திணிக்க முடியாத தனியார்மயக் கொள்கைகளை நூறே நாட்களில் திணிக்க முயற்சிக்கிறது.

இம்முயற்சிக்கு எதிராக எழும் மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்குப் படைகளை ஏவுவதற்கு முன்னர், இப்போராட்டங்களை அனைத்தையும் அந்நிய சதி என்று முத்திரை குத்திக் கொச்சைப்படுத்தும் முயற்சியே தற்போதைய உளவுத்துறை அறிக்கை. அந்த வகையில் புறத்தோற்றத்தில் இது என்.ஜி.ஓ.க்களுக்கு எதிரான நடவடிக்கை போலச் சித்தரிக்கப்பட்டாலும், மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதே இதன் உண்மையான குறியிலக்கு என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

– அஜித்.
______________________________
புதிய  ஜனநாயகம் – ஜூலை 2014
______________________________

புதிய ஜனநாயகம் – ஜூலை 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் ஜூலை 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. இந்தித் திணிப்பு: மீண்டும் வாலாட்டும் பார்ப்பனத் திமிர்! (தலையங்கம்)

2. லவுட் ஸ்பீக்கர் மோடி, காவி கல்லுளிமங்கன் ஆனார்!

3. சுற்றுச் சூழல் பாதுகாப்பு: மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலிகிடா!

4. என்.ஜி.ஓ.க்கள் பற்றிய உளவுத்துறை அறிக்கை: சுரங்க முதலாளிகளின் கூலிப்படையாக மோடி அரசு!

5. காவி கிரிமினல்களின் புதுத்திமிர்.

6. கொலைகாரர்களுக்குப் பாதுகாப்பு! நீதிக்காகப் போராடினால் பொய்வழக்கு!!

7. கத்ரா, பாக்னா பாலியல் வன்கொடுமைகள்: சமூக நீதி அரசியல் சமூக அநீதியானது!

8. அரசு வங்கிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் வல்லூறுகள்!

9. உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுப் போர் ஏன்?

10. ஆம் ஆத்மி: பிறப்பு இரகசியம் – பகுதி -2

11. சென்னை கட்டிடச் சரிவுப் படுகொலை: குற்றவாளிகள் யார்?

புதிய ஜனநாயகம் ஜூலை 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

காசு கொட்டி அழுதது சங்கர வித்யாலயா காவு வாங்கவா ?

1

திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யாலய கேந்திரா மெட்ரிக் பள்ளியில் மாணவி வைஷ்ணவி மர்ம மரணம் ! நீதி கேட்க சென்றவர்கள் மீது போலீசு தடியடி !

”திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி தற்கொலை…

திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தவர் வைஷ்ணவி. நேற்று பள்ளிக்கு சென்ற வைஷ்ணவி வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் மாணவியின் அம்மாவும் உறவினர்களும் பள்ளி ஆசிரியர்களும் அலுவலர்களும் பள்ளியில் தேடினார்கள். அப்போது அம்மா என்ற அலறலோடு மாடியிலிருந்து குதித்த வைஷ்ணவி, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அந்த உயிரிழந்தாள். மாணவியின் கையில் ”சாரி மம்மீ, சாரி டாடி” என்று எழுதப்பட்டிருந்தது.”

இப்படி ஒரு செய்தியை நாம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து இருப்போம். அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது தடியடி நடத்தியதை கூட கடனுக்காக சில ஊடகங்கள் கூறின. மொத்தமாக அது தற்கொலைதான் என்று அரசு, போலீசு, ஊடகங்கள் என அனைத்தும் ஒற்றுமையாக சாதித்தன.

எட்டாம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து ஏன் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை அரசோ, பள்ளியோ, ஊடகங்களோ சொல்லவில்லை. இதைப் பற்றி பேசாமல் தற்கொலை என்று சொல்வது எதையோ மறைப்பது என்பது வெள்ளிடை மலை. ஒரு தனியார் பள்ளி என்று அப்பள்ளியின் பெயரை போடாதது பத்திரிக்கை தர்மம் என்றால் போஸ்ட்மார்டம் செய்யாமலே இது தற்கொலைதான் என்று அறிவிப்பதும் கூட பத்திரிக்கை தர்மமாக இருக்கலாம். ஒரு சோகக்கதையைப் போல இச்சம்பவத்தை வடித்த பத்திரிக்கைகள், இதற்கு அக்குழந்தையையே காரணமாக்கின.

உண்மைதான்.

“கந்து வட்டிக்கு வாங்கி புள்ளைய தனியார் பள்ளியில சேர்க்காதீங்க, அது பொணாமாகத்தான் திரும்பி வரும்” என்று பேருந்து, ரயில்கள், தெருக்களில் முழங்கிவரும் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் தோழர்களை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவர்கள் கூறிய வார்த்தைக்கு இம்மியளவும் மாறாமல் நடந்த கல்வி தனியார்மயத்தின் கொலைக்களத்தில் மறக்கடிக்கப்பட்ட கதைதான் வைஷ்ணவியுடையது.

ஆம், ‘நாம்தான் படிக்கவில்லை, நாம் என்ன கஷ்டப்பட்டாலும் சரி, நம் பிள்ளையயாவது படிக்கவைக்க வேண்டும்’ என்று கனவு கண்ட லட்சக்கணக்கான அப்பாக்களைப்போலவே ஒரு அப்பாதான், திருவொற்றியூர், பர்மா நகரில் வசிக்கும் வைஷ்ணவியின் தந்தை உதயகுமார். கார் டிரைவராக வேலை பார்த்தாலும் கருவேப்பிலைக்கொழுந்து போல பெற்றெடுத்த ஒரு பெண்ணையும் ஒரு பையனையும் சுற்றிலும் உள்ள அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதால் தனியார் பள்ளிகளில் சேர்த்தார். பெண்ணை திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியிலும் பையனை டான் பாஸ்கோவிலும் சேர்த்தார். கல்விக்கட்டணம் மிகவும் அதிகம் தான், என்ன செய்வது ? பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பல்லைக்கடித்துக் கொண்டு இருக்க வேண்டும் என்று அமைதியாக இருந்தார்.

சென்ற வாரம் கூட வைஷ்ணவி படிக்கும் பள்ளியில் இருந்து உதயகுமாரை வரச்சொன்னார்கள். பீஸ் கட்டுவதற்கான கெடு முடிந்து இரண்டு நாட்கள் ஆகியதாக தகவல் தெரிவித்தார்கள். “அய்யய்யோ பிள்ளையோட வாழ்க்கை பாழாப்போயிடுமே” என்று கந்து வட்டிக்கு 20,000 ரூபாய் வாங்கி தனியார் பள்ளியில் கொட்டினார், தன் பிள்ளையை இன்னும் ஒரு வாரத்தில் சடலமாக மூட்டையில் வந்து கொட்டுவார்கள் என்று தெரியாமலே.

எப்போதும் பள்ளி 3.30 மணிக்கே முடிந்துவிடும், 4 அல்லது 4.30 மணிக்குள் வைஷ்ணவி வீட்டிற்கு வந்து விடுவாள். 27 ஜூன் அன்று மாலை 5 மணி ஆகியும் அவள் வரவில்லை என்பதால், வைஷ்ணவியின் உறவினர்கள் பள்ளியில் சென்று விசாரித்துள்ளனர். அப்போது வாட்ச்மேன், அவர்களிடம் ”உள்ளே யாரும் இல்லை அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். உங்கள் மகள் எங்கே போனாள்? என்பது எங்களுக்கு தெரியாது, மறுபடி வீட்டிற்கு போய் பாருங்கள்” என்று சொல்லி அனுப்பி உள்ளார்.

அதன் பின் மறுபடி வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். இரவு 7 மணி ஆனதும் பயந்து போன உறவினர்கள் மறுபடியும் சென்று பள்ளியில் விசாரித்துள்ளனர். பள்ளியின் காவலர் மீண்டும் பழையபடியே பேச, வந்த உறவினர்கள் கோபத்தில் சத்தமிட வேறு வழியின்றி “உள்ளே பி.டி ஆசிரியர் இருப்பார். அவர்கிட்ட கேட்டுப் பாருங்க” என்று அவர் வழிவிட்டார். பதைபதைப்போடு அவரிடம் முறையிட்டார்கள், அவரோ உள்ளே யாரும் இல்லை என்று மாணவியின் உறவினர்களை அனுப்புவதிலேயே குறியாக இருந்தார்.

வேறு வழியின்றி திரும்பிய அவர்களின் கண்ணில் பள்ளிக்கட்டிடத்தில் யாரோ காலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருப்பது போல் இருந்தது. நம்ம பொண்ணா இருக்குமோ? என்ற பயத்தில் ”அம்மா வைஷ்ணவி ” என்று உறவினர்கள் அழைத்துபடியே அருகில் செல்வதற்குள் அலறல் சத்தம் போட்டபடி அப்பெண் கீழே விழ, அருகில் போய் பார்த்த போது மாணவி வைஷ்ணவி தோளில் பையினை மாட்டிக்கொண்டிருந்தபடியே கீழே விழுந்து துடித்துக் கொண்டிருந்தாள், காலில் ஷூவும் சாக்ஸும் இல்லை.

குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வைஷ்ணவியோடு மேலே யாராவது இருந்தார்களா என்று கவனிக்காமல் தூக்கிச் சென்றார்கள், மருத்துவமனைக்கு. செல்லும் வழியிலேயே வைஷ்ணவியின் உயிர் பிரிந்தது. மேற்கொண்டு பள்ளியில் இருந்து யாரும் வைஷ்ணவியின் பெற்றோரை சந்தித்து பேசவும் இல்லை. இந்த மவுனமே மாணவியின் இறப்புக்கும் பள்ளிக்கும் உள்ள தொடர்பைக் கூற அந்த மாணவியின் வீட்டருகே உள்ள சாலையில் உறவினர்கள், அருகில் உள்ள மக்களுடன் சேர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர். தனியார் பள்ளியின் ‘செல்வாக்கை’ பயன்படுத்தி உள்ளூர் அரசியல்வாதிகள் மூலமாக அப்போராட்டம் நிறுத்தப்பட்டு இருக்கின்றது.

வைஷ்ணவியின் மரணத்துக்கு காரணமான தனியார் பள்ளியின் மீதான கோபம் போராடிக் கொண்டிருந்த மக்களிடம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது. பிரச்சினையை கேள்விப்பட்டுப் போன புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், தமிழகம் முழுவதும் நடக்கும் கல்வி தனியார்மயத்தின் பலிகளை விளக்கி “இனியும் இப்படி அழுது கொண்டிருந்தால் எந்த பயனும்கிடைக்காது, பிள்ளையின் இறப்பிற்கும் நியாயமும் கிடைக்காது. பள்ளி நிர்வாகம் நேரில் வரும் வரை பிணத்தை எடுக்காமல், பள்ளிக்கு சென்று முற்றுகையிடுவோம்” என்றார்கள்.

உள்ளூர் அரசியல்கட்சியை சேர்ந்த சிலரோ, “போராட்டம் எதுவும் வேண்டாம், டி.வி யில் பேட்டி கொடுப்பதன் மூலமே இந்த விசயத்தை பரவலாக்கலாம்” என்று பேச,

அழுது கொண்டிருந்த மாணவியின் அம்மா “அவர்களிடம் பேட்டி கொடுத்தால் மட்டும் என் பிள்ளை திரும்பி வந்து விடுமா? உங்களால் என் பிள்ளையை திருப்பி கொடுக்க முடியுமா? இறந்தது என் பிள்ளை, அதற்கு நியாயம் கிடைக்கணும். பத்திரிக்கையில என் மகள், என் கண் முன் தான் விழுந்து இறந்தாள் போட்டிருக்குது, எப்படி அவர்கள் எழுதுவார்கள், என் பிள்ளையின் மரணம் நிச்சயம் தற்கொலையாக இருக்காது, யாரோ தள்ளி விட்டு தான் இருக்கணும், என்ன நடந்தது என்று யாரும் சொல்ல மாட்றாங்க, தனியா அந்த பிள்ளை ஏன் மொட்டை மாடிக்கு போகணும், அப்படி போகணும் என்று நினைத்தாலும் வழி குறுகலாகத்தான் இருக்கும். அதில் பையை மாட்டிக் கொண்டு போய் இருக்க முடியாது. அப்படி ஒரு வேளை தற்கொலையாகவே இருந்தாலும், பெற்றோர்கள் பிள்ளையை காணவில்லை என்று சொல்லும் போது, ஒழுங்காக எந்த பதிலும் சொல்ல வில்லை. நாங்க காசு கொட்டி அழுதது, பிள்ளையை அவர்கள் காவு வாங்குவதற்கா? நம்பி தானே பிள்ளையை அனுப்பினேன். இப்போது பிணமாக அனுப்பி இருக்காங்க, எனக்கு இதற்கு நியாயம் கிடைத்தாக வேண்டும்” என்றபடி அந்தத்தாயும் அவரின் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட கிளம்பினார்கள்.

நாம் வருவதற்கு முன்பே தனியார் பள்ளியைக் காக்க போலீசு காவலுக்கு நிறுத்தப்பட்டு இருந்தது. போலீசு மக்களை தடுத்து நிறுத்த முயன்ற போதும் யாரும் கலைந்து செல்லவில்லை. நேரம் செல்லச்செல்ல மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்து ஏறத்தாழ முந்நூறைத் தொட, இன்ஸ்பெக்டர் வந்து பள்ளிக்கு ஆதரவாக பேச்சு வார்த்தை நடத்தினார்.

”பள்ளியின் தாளாளர் இங்கு வந்தாக வேண்டும். அப்போது தான் நாங்கள் கலைந்து செல்வோம்” என மக்கள் கூறத்தொடங்க, ”எங்களுக்கு கொஞ்ச நேரம் அவகாசம் கொடுங்கள் இப்போது வந்து விடுவார்கள்” என்று கூறிய போலீசு சிறிது நேரத்தில் , பள்ளியின் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த ஐந்து பேர்களை மட்டும் உள்ளே அனுப்பியது.

உள்ளே பேச்சு வார்த்தையின் போது, பள்ளி முதல்வரின் தந்தை “ஒழுக்கமான பொண்ணா இருந்தா தற்கொலை பண்ணியிருக்காது, வீட்டுல ஒழுக்கமா வளர்க்காம இங்க வந்து பேசுற”? என்று எகிற, பள்ளி முதல்வர்  ”இது தவறு தான் எதிர்பாராத விதமாக நடந்து விட்டது, மன்னித்து விடுங்கள் காலில் வேண்டுமானாலும் விழுகிறேன், வெளியே பெரிய விசயமாக கொண்டு செல்லாதீர்கள் , காரணமான ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்” என்று இருவரும் நாடகமாட, எவ்வித முடிவும் இல்லாமல் மக்கள் வெளியேறினார்கள்.

நிர்வாகத்தின் சார்பில், பி.டி ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், மற்றும் வாட்ச்மேன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தனர். மக்கள் இதை ஏற்காமல் “நடவடிக்கை மட்டும் போதாது, அவர்களையும் பள்ளி நிர்வாகியையும் கைது செய்ய வேண்டும்” என்று கூச்சலிட, அதை ஏற்பது போல கூறி சிலரை சஸ்பெண்ட் செய்வதை மட்டும் எழுதிக்கொடுத்தது பள்ளி நிர்வாகம்.

அதை ஏற்க மறுத்த மக்கள் மீது போலீசு தடியடி நடத்தி தன் விசுவாசத்தைக் காட்டியது. சிதறி ஓடிய 50 பேரை குறிவைத்துத் தாக்கி, தான் தனியார் பள்ளி முதலாளிகளின் விசுவாசமிக்க நாய் என்பதை மீண்டும் நிரூபித்தது. அரசு ஊரை ஏமாற்ற அமைத்த ஆர்டிஓ விசாரணையோ தனியார்பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காமல் விசாரணை நடத்திவிட்டு சென்றது.

வைஷ்ணவியின் அப்பா உதயகுமார் நம்மிடம் “ஆர்டிஓ அறிக்கை வர ஒரு வாரம் ஆகுமாம். இனி எது செய்தாலும் பயன் இல்லை, நாளை என் பிள்ளைக்கு நடந்தது வேறு எந்த பிள்ளைக்கும் நடக்கக் கூடாது. இருக்குற இன்னொரு புள்ளையையும் தனியார் பள்ளிக்கு நான் காவு கொடுக்க மாட்டேன். உடனே டிசியை வாங்கிட்டு, அவனை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க போறேன். அவனோட உயிர்தான் முக்கியம்.”என்றார்.

பள்ளிக் கட்டணம் கட்டவில்லை என்றால் ஒரு தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மேல் நடத்தும் உளவியல் சித்திரவதை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். படிக்கும் வயதில் படிப்பதற்கான செலவே கழுத்தை நெரிக்கும் காரணமாக இருந்தால் வைஷ்ணவி ஒரு கணத்தில் ஏன் உடைந்து போக கூடாது? அல்லது வேறு காரணங்களா? அப்படி இருந்தாலும் பள்ளி பெயரைக் காப்பாற்ற இவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள். வைஷ்ணவியின் பெற்றோர் கதறிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கதறலை நெரிப்பதற்கு அரசும், போலிசும், சங்கர வித்யாலயாவும் பெரு முயற்சி செய்கின்றன.

கல்வி தனியார்மயத்தை ஒழிக்கப் போராடாமல் இனியும் நாம் அமைதியாக இருந்தால் கல்வி தனியார்மயத்தின் புதைகுழியில் நம்பிள்ளைகளை பலிகொடுப்பதில்தான் முடியும் என்பதைத்தவிர வைஷ்ணவியின் மரணம் வேறெதைக் கூறுகிறது?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல் –
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை . தொடர்புக்கு : 9445112675

உங்க வீட்டில் நாங்களும் எங்க விடுதியில் நீங்களும் தங்கலாமா ?

4

தரம் குறைந்த உணவு, சுகாதாரமற்ற குடிநீர்

திருச்சி அரசு அம்பேத்கர் விடுதி மாவணர்களின் உள்ளிருப்புப் போராட்டம் !

திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள டாக்டர் அரசு அம்பேத்கர் கல்லூரி மாணவர்கள் விடுதியில் பல்வேறு கல்லூரிகளைச் சே்ாந்த மாணவர்கள் 250 பேர் தங்கி படித்து வருகின்றனர். கழிவறை வசதி கேட்டும், நல்ல சோறு, நல்ல தண்ணீர் வசதி கேட்டும் விடுதியின் அவலநிலைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து கடந்த ஏழு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

டாக்டர் அம்பேத்கர் மாணவர் விடுதிகடந்த டிசம்பர் மாதம் (2013), “சுகாதாரத்தைப் பற்றி வாய்கிழிய வகுப்பெடுக்கும் மாவட்ட ஆட்சியரே! கழிவறையை கட்டி கொடு, இல்லையேல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து விடு!” என புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் விடுதி மாணவர்கள் இணைந்து நகரமெங்கும் சுவரொட்டி ஒட்டினோம்.

அதன் பிறகு, நிர்வாகம் புதிய கழிவறை கட்டிக் கொடுத்தது. பராமரிப்பின்றி கிடந்த கழிவறைகளை சீர்செய்தது. விடுதியில் உள்ள முட்புதர்களை வெட்டியதும், தண்ணீர் குழாய்களை போட்டு தருவதும் என கண்துடைப்பு நாடகமாக பெயரளவுக்கு சில பராமரிப்பு வசதிகளை செய்து கொடுத்தனர்.

அப்போது, ‘போர்டு மாணவர்களின் சாப்பாட்டை கெஸ்ட்டாக தங்கி இருக்கும் மாணவர்கள் வாங்கிக் கொள்வதும், கழிவறையை பயன்படுத்தியதும்தான் பிரச்சனை, அவர்கள் தான் போராடுகிறார்கள்’ என்று கெஸ்ட் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றியது. மாணவர்கள் நலனில் அக்கறை காட்டியது போல அதிகாரிகள் நடித்தனர்.

குள்ளநரி சாயம் வெளுத்து போனது போல, மாவட்ட அதிகாரிகளின் யோக்கியதை அம்பலமாக தொடங்கியது.

02-07-2014 அன்று காலை குடிநீர் பிடிக்கச் சென்ற மாணவர்கள் குடிநீர் சகதி கலந்த செம்மண் நிறத்தில் வருவதை கண்டனர். மேலும், கல்லூரி துவங்கி ஏழு நாட்கள் ஆகியும் தரம் குறைந்த உணவு சமைத்து மாணவர்களுக்கு வழங்குவது, கழிவறையை திறந்து விடாமல் பூட்டி வைத்திருப்பது என மாவட்ட நிர்வாகம் மாணவர்களை வஞ்சிக்க ஆரம்பித்தது. அதிகாரிகள் தன் வீட்டில் குளிரூட்டப்பட்ட மேற்கத்திய பாணி கழிவறையில் மலம் கழிக்கின்றனர். ஆனால் இங்கு விடுதி மாணவர்கள் திறந்த வெளியில், முட்புதர்களில் மலம் கழிக்கின்றனர்.

தொடர்ந்து இது போன்ற இன்னல்களை பொறுக்க முடியாத மாணவர்கள் பு.மா.இ.மு வுடன் தொடர்பு கொண்டு, விடுதி மாணவர்களும், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி தோழர்களும் அன்று காலையே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலில் வந்த அப்பகுதி காவல் ஆய்வாளர் முருகவேல், ஏதோ மாணவர்களுக்கு நல்லது செய்வது போல, சகதி கலந்த குடிநீரை விடுதி அட்டண்டரிடம் கொடுத்து, “இந்த நீரை நீ குடிய்யா? பாக்கலாம்”, என்று கூறி, பிறகு அந்த நீரை அவர் குடித்து காட்டினார். பிறகு அட்டண்டர் குடித்தார். தனது சொந்த செலவில் குடிநீர் வரவழைப்பதாக கூறி போராட்டத்தை முடிக்கக் கூறினார்.

“ஒரு நாள் கொடுப்பீங்க சார், வருடம் முழுவதும் கொடுப்பீங்களா?” என்று மாணவர்கள் கேட்டனர். “எங்கள் விடுதி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும், நல்ல தண்ணீர் வர வேண்டும்” என பேசிய மாணவர்கள் “அதிகாரியை வரச்சொல்லுங்கள்” என்று அந்த காவல் ஆய்வாளருக்கு பதிலடி கொடுத்தனர்.

அதன்பின் வந்த கோட்டாட்சியர் பஷிர் அலி, வழக்கம் போல் பிரச்சனையை கேட்டு மாணவர்களின் கோபத்தை தணிக்கும் வகையில் பேசினார். உடனே மாணவர்கள், “சார் செய்து தரேன்னு சும்மா சொல்லாதீங்க சார்…, ஏன் இத்தனை நாளா எதுவும் செய்யலைனு பதில் சொல்லுங்க..” என கேள்வி கேட்டு அவரை சூழ்ந்து கொண்டனர்.

பின்னர் புதிய பொறுப்பு என அறிவித்த ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் சொர்ணா பியுலா அங்கு வந்து, “10 அல்லது 15 நாட்களில் சரிசெய்வோம்” என திமிராக பேசினார்.

உடனே மாணவர்கள் பதிலடியாக, “அப்ப அதுவரைக்கும் உங்க வீட்டையும், கக்கூசையும் திறந்து விடுங்க… நாங்க அங்க தங்கியிருக்கோம்! நீங்க இங்க எங்க விடுதில தங்கி பாருங்க, அப்ப தெரியும் எங்க கஷ்டம் என்னனு…” என ஆதங்கத்தோடு பேச வாயை மூடினார் தாசில்தார்.

உடனே சுத்தமான தண்ணீர், நல்ல உணவு, நூலகவசதி, பத்திரிக்கை, மின்விசிறி போன்றவை ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தபின் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

அன்று மாலை வந்த உதவி கலெக்டர் முருகையா, ‘அமைப்பில் இணைந்து போராடினால் படிப்புக்கு பிரச்சனை’ என மாணவர்களை மிரட்டினார்.

பிறகு நாம் தலையிட்டபோது ‘மாணவர் அமைப்பிற்கு விடுதியில் என்ன வேலை’ என பு.மா.இ.மு தோழர்களை பார்த்து பணிந்து கேட்டார்.

“UGC விதிமுறைப்படி கல்லூரியிலும், விடுதியிலும் மாணவர்கள் கோரிக்கைகாக மாணவர்கள் சங்கமாக, அமைப்பாக சேர்ந்து செயல்படலாம் என உரிமை உள்ளது. அதனால் விடுதியில் அல்லது கல்லூரிகளில் எதாவது பிரச்சனை என்றால் மாணவர்கள் எங்களிடம் (பு.மா.இ.மு) தான் சொல்கிறார்கள். எந்த அதிகாரியிடமும் சொல்வதில்லை. மாணவர் உரிமைக்காக போராடுவது எங்கள் உரிமை. அதை மறுப்பது சட்டப்படியும், நீதிப்படியும் தவறு, மறுத்தால் பணிந்து போக மாட்டோம்” என்று கூறினோம்.  “மாணவர்களை சங்கமாகசேரக் கூடாது என்று மிரட்டினால் – UGC சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் அதிகாரிகள் உங்கள் யோக்கியதையை அம்பலப்படுத்தி போஸ்டர் போட்டு மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்” என்று கூறிய போது வாயை மூடிக் கொண்டு ஓடிவிட்டார் உதவி கலெக்டர் முருகையா.

மாணவர்கள் அமைப்பாக இருந்து போராடினால் மட்டுமே வெற்றி என்று கூறியதை விடுதி மாணவர்கள் ஆதரித்தனர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி

உருக்குலைந்த இராக்கில் உள்நாட்டுப் போர் ஏன்?

207
ஐ.எஸ்.ஐ.எஸ் அணிவகுப்பு
அதிநவீன ஆயுதங்களுடன் இராக்கிய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதப் படையினரின் அணிவகுப்பு.

டந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் ஆக்கிரமிப்புப் போரினால் நாசமாக்கப்பட்டுள்ள இராக், உள்நாட்டுப் போரினால் குருதிச் சேற்றில் புதைந்து கொண்டிருக்கிறது.

இராக்கின் வடமேற்குப் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். எனும் புதியதொரு இஸ்லாமிய பயங்கரவாத இயக்கம் வேகமாக வளர்ந்துள்ளதோடு, இப்பயங்கரவாதிகள் இராக்கின் பொம்மை அரசுக்கு எதிராக நடத்திவரும் போர்த்தாக்குதல்களை, அடுத்து சிரியாவின் வடபகுதியிலுள்ள அலெப்போ நகரிலிருந்து இராக்கில் உள்ள தியாலா மாகாணம் வரையிலான பகுதிகளைத் தனிநாடாக்கி, ஷாரியத் சட்டப்படியான இஸ்லாமிய அரசை (கிலாஃபத்) உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். அபுபக்கர் அல் பக்தாதி என்பவர் தலைமையிலான இந்த சன்னி மார்க்க ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர், இராக்கிலுள்ள ஷியா மார்க்கத்தினர் மீதும் அவர்களது மசூதிகள் மீதும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தி வருவதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இராக்கிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

ஷியா, சன்னி எனும் இஸ்லாமிய மதப்பிரிவினரும் குர்திஷ் இனத்தவர்களும் இதர மத, இனச் சிறுபான்மைப் பழங்குடிப் பிரிவினரும் கொண்ட நாடுதான் இராக். இராக்கில் சதாம் ஆட்சி அமெரிக்காவால் தூக்கியெறியப்பட்ட பின்னர், இராக்கின் தெற்கே பஸ்ராவில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அமெரிக்காவுக்கு எதிராக ஆயுதமேந்திய தாக்குதல்களை நடத்தி வந்தனர். மறுபுறம், இராக்கின் வடமேற்குப் பகுதியில் இராக்கிய அல்கய்தா என்ற ஒரு சன்னி மார்க்க ஆயுதக்குழு அமெரிக்காவுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்திவந்தது. இதன் தலைவர்களுள் ஒருவரான அல் பாக்தாதி பின்னர் அமெரிக்காவின் விசுவாசக் கைக்கூலியாக மாறினார். இராக்கின் அண்டை நாடான சிரியாவின் ஆசாத் அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு அல் பாக்தாதியின் கூலிப்படையை ஆதரித்து வளர்த்த அமெரிக்கா, இவர்களை விடுதலைப் போராளிகளாகச் சித்தரித்து ஜோர்டானில் ராணுவப் பயிற்சி அளித்தது. இக்கூலிப்படைக்கு சவூதி அரேபியா, கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து தாராளமாக நிதியும், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஆயுதங்களும் வாரிவழங்கப்பட்டன.

அப்போது சிரியாவில் இயங்கியவந்த இன்னுமொரு இஸ்லாமிய அடிப்படைவாத அல் நுஸ்ரா என்ற அமெரிக்கக் கூலிப்படையுடன் இணைந்து அல் பாக்தாதி தலைமையில் உருவானதுதான் இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ். ) அல்லது இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்டு லெவண்ட் (ஐ.எஸ்.ஐ.எல்.) எனப்படும் இயக்கமாகும். சிரியாவில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர இந்தக் கூலிப்படையை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்ட போதிலும், அந்தக் குழுவோ வாய்ப்பைச் சாதகமாக்கிக் கொண்டு வங்கிக் கொள்ளைகளிலும், ஆயுதப் பறிப்பிலும் ஈடுபட்டுப் புதியதொரு பயங்கரவாத இயக்கமாக வளர்ந்துவிட்டது. இராக் மீதான இத்தீவிரவாதிகளின் தாக்குதல் குறித்து கவலை கொண்டுள்ளதாகக் கூறும் அமெரிக்காவின் ஒபாமா அரசுதான், நேற்றுவரை இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினரை சிரியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான சுதந்திரத்துக்கான போராளிகள் என்று சித்தரித்தது. இப்போது அவர்கள் பயங்கரவாதிகளாகவும், இராக்கின் ஜனநாயக அரசைச் சீர்குலைப்பவர்களாகவும் சித்தரிக்கப்படுகின்றனர்.

இராக் அகதிகள்
ஐ.எஸ்.ஐ.எஸ் படையினரின் போர்த்தாக்குதலாலும் அமெரிக்க பொம்மை அரசின் எதிர்த்தாக்குதலாலும் உயிருக்கு அஞ்சி அகதிகளாகத் தப்பியோடும் இராக்கிய மக்களின் அவலம்.

ஏதோ சில இஸ்லாமிய பயங்கரவாதிகளால்தான் இராக்கின் அமைதிக்கும் ஜனநாயகத்துக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதைப் போல அமெரிக்காவும் மேற்கத்திய ஊடகங்களும் சித்தரிப்பதே அயோக்கியத்தனமானது. உண்மையில் ஏகாதிபத்தியவாதிகளால்தான் இராக் மட்டுமின்றி மேற்காசியா பிராந்தியமே பேரழிவுக்கு ஆளாகி நிற்கிறது. சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பிறகு, அமெரிக்கா நடத்திவரும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான போர்தானேயன்றி, அமெரிக்கா கூறுவதுபோல அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவது அதன் நோக்கமல்ல. தனது மேலாதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் எண்ணெய் வளமிக்க மேற்காசியப் பிராந்தியம் இருக்க வேண்டும்; அதேசமயம் அப்பிராந்தியத்தில் தனது மறுகாலனிய நடவடிக்கைகளுக்கு எதிராக எழும் எதிர்ப்புகளை மடைமாற்றிவிடும் நோக்கில் மத, இனப் பிரிவுகளுக்கிடையே முறுகல் நிலையும் பதற்றநிலையும் நீடிக்க வேண்டும் என்பதே தொடர்ந்து அமெரிக்காவின் அணுகுமுறையாக உள்ளது.

உலக மேலாதிக்கத்துக்காக கெடுபிடிப் போர்களில் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் தீவிரமாக ஈடுபட்டுவந்த காலத்தில், மத்திய ஆசிய நாடுகளின் மதவாதப் பிற்போக்குக் கும்பல்களுடன் அமெரிக்கா கூடிக் குலாவி தனது செல்வாக்கின்கீழ் அந்நாடுகளைக் கொண்டுவந்தது. அன்று இரான் மன்னன் ஷா-வுடைய ஆட்சியை அமெரிக்கா ஆதரித்தது. ஷா ஆட்சியையும் அமெரிக்காவையும் எதிர்த்துப் போராடிய கொமேனி தலைமையில் இஸ்லாமிய மதவாதிகள் ஆட்சியைப் பிடித்ததும், இரானைத் தாக்க அதன் அண்டை நாடான இராக்கின் அதிபர் சதாம் உசேனைத் தூண்டி விட்டு, விசவாயு உள்ளிட்ட ஆயுதங்களைச் சதாமுக்கு வழங்கியது, அமெரிக்கா. எட்டு ஆண்டுகள் நடைபெற்ற இரான் – இராக் போரில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இரு நாடுகளும் பேரழிவுக்குள் தள்ளப்பட்டன.

இதே காலகட்டத்தில் ஆப்கானை அன்றைய சோவியத் வல்லரசு ஆக்கிரமித்ததும், ரசியாவை வெளியேற்றுவதற்கு சன்னி வகாபி அடிப்படைவாதக் குழுக்களை அமெரிக்கா உருவாக்கியது. இதற்குப் பயிற்சியளிப்பதற்காகவே பாகிஸ்தானில் ஏராளமான மதரசாக்களை உருவாக்க சவூதி அரேபிய மன்னராட்சியும் அமெரிக்காவும் இணைந்து நிதியுதவி செய்தன. ஆப்கானின் பழங்குடி யுத்தப்பிரபுக்களுக்கும் முஜாகிதீன்களுக்கும் அமெரிக்கா ஆயுத உதவி செய்தது. இதற்கு உதவியாக பாகிஸ்தான் மாற்றப்பட்டு, அமெரிக்காவின் ஆணைக்கேற்ப இப்பணிகளை பாகிஸ்தானின் உளவுப்படை ஒருங்கிணைத்தது.

ஷியா முஸ்லீம்கள்
சன்னி மார்க்க ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அமெரிக்க பொம்மை அரசுப் படைகளுக்கு ஆதரவாகவும் இராணுவச் சீருடையுடன் அணிதிரண்டுள்ள ஷியா முஸ்லிம்கள்.

சோவியத் வல்லரசு தனது படைகளை விலக்கிக் கொண்டு ஆப்கானிலிருந்து வெளியேறியதும், அமெரிக்காவின் ஆதரவுடன் தாலிபான்களின் ஆட்சி அங்கு நிலைநாட்டப்பட்டது. இருப்பினும், தாலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் தத்தமது நலன்களையொட்டி முரண்பாடுகள் எழுந்து அவை பிளவுபட்டன. வளைகுடாப் போரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களும் இஸ்லாமிய மக்களை ஆத்திரம் கொள்ள வைத்தன. இந்தப் பின்னணியில்தான் அமெரிக்காவின் ஆதரவுடன் தொடங்கப்பட்ட பின்லேடனின் அல்கய்தா இயக்கம் வளரத் தொடங்கி தாலிபான்களும் அல்கய்தாவுடன் சேரத் தொடங்கினர். அமெரிக்காவுடன் அது முரண்படத்தொடங்கியதும் அல்கய்தா இயக்கம் ஆப்கான் மட்டுமின்றி, உலகையே அச்சுறுத்தும் மிகக் கொடிய பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்டது. போர்த்தாக்குதல்களால் ஆப்கான் சிதைக்கப்பட்டு அமெரிக்காவின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டது.

தனது முன்னாள் காலனிய நாடுகள் அல்லது சோவியத் ஆதரவு நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்புகளை அரங்கேற்றுவதற்கும், தனது மேலாதிக்கத்தின் கீழ் வராத இதர நாடுகளில் ஆட்சி மாற்றங்களை நடத்துவதற்கும் ஜனநாயகம், மனித உரிமை, தேசியஇன விடுதலை என்ற பெயரில் தலையிட்ட அமெரிக்கா, சோவியத் ஒன்றியத்தைப் பல நாடுகளாகத் துண்டாடித் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டது. பின்னர் கிழக்கு ஐரோப்பாவில் பால்கன் நாடுகள் துண்டாடப்பட்டன. மேற்காசியாவில் இராக் மீது காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்புப் போரை அமெரிக்கா நடத்தியது. இந்தியாவில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் மத ரீதியாகப் பிளவுபடுத்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தனது காலனியாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டதைப் போலவே, இராக்கில் இஸ்லாமியர்களின் ஷியா மற்றும் சன்னிப் பிரிவுகளுக்கிடையிலான மோதலைத் தனது தேவைக்கேற்ப அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டு தனது மறுகாலனியாதிக்கத்தை நிலைநாட்டியது. தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக அடுத்தடுத்து சிரியா, லிபியா என்று காய்களை நகர்த்தியது.

தனது நோக்கங்களுக்குச் சேவைசெய்யும் வகையிலான ஷியா பிரிவு முஸ்லிம்கள் தலைமையிலான ஒருபொம்மை அரசை இராக்கில் உருவாக்கி ‘ஜனநாயக’த்தையும் ‘அமைதி’யையும் சாதித்துவிட்டதாகக் கூறிக் கொண்டாலும், அமெரிக்காவால் அதனை உறுதியாக நிலைநாட்டிக் கொள்ள முடியவில்லை. அந்த பொம்மை அரசு பலவீனமானதாகவும், ஷியா பிரிவு முஸ்லிம்களின் ஆதிக்கத்தைக் கொண்டதாகவும் இருந்ததால், சன்னி பிரிவு இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் வளர்ந்து எதிர்த்தாக்குதல் தொடுக்கக் கிளம்பிவிட்டன. இதேபோல சிரியாவிலும் லிபியாவிலும் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களைக் கொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்கா முன்வைத்த இராணுவ தந்திரத்தின் விளைவாக, இன்று பல்வேறு இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் அந்நாட்டு மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து விட்டன.

ஆப்கானில் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்ட பின்னர், அங்கு ‘அமைதி’யை நிலைநாட்ட கர்சாய் தலைமையிலான ஒரு பொம்மை அரசை அமெரிக்கா உருவாக்கியது. ஆனாலும் தாலிபான்களை ஒடுக்க முடியாத நிலையில், ‘அமைதி’யை நிலைநாட்டுவது என்ற பெயரில் இப்போது ‘நல்ல’, தாலிபான்களுடன் பேச்சுவார்த்தையை நடத்துகிறது. அதேபோல இராக்கிலுள்ள தனது பொம்மை அரசைப் பாதுகாக்க முடியாத நிலையில், இராக் மற்றும் சிரியாவில் புதியதொரு கூலிப்படையை உருவாக்கி அதன் மூலம் இராக்கின் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை முடக்கிவிட முயற்சிக்கிறது. இதன் மூலம் இப்பிராந்தியத்தில் உள்நாட்டுப் போர்களையும் பயங்கரவாதத் தாக்குதல்களையும் நிரந்தரமாக்குகிறது.

அமெரிக்க மக்கள் ஆர்ப்பாட்டம்
“நாடு சீர்குலைக்கப்பட்டு 10 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ள ஈராக் மீது போர் தொடுக்காதே!” எனும் முழக்கத்துடன் அமெரிக்க அதிபர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடத்தும் அமெரிக்க மக்கள்.

இராக் உள்நாட்டுப் போரின் பின்புலம் இதுதான். இராக்கிலும் சிரியாவிலும் வளைகுடா நாடுகளிலும் நடக்கும் போர்களுக்கும் ரத்தக்களறிகளுக்கும் காரணமான பிரதான குற்றவாளி அமெரிக்க ஏகாதிபத்தியம்தான். இந்த வரலாற்று உண்மையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ஐ.எஸ்.ஐ.எஸ். இடமிருந்து அமெரிக்காதான் இராக்கை காப்பாற்ற வேண்டும் என்பது போன்ற பொதுக்கருத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்த் திட்டத்தை ஆதரிக்கும் இந்தியா, அமெரிக்கா உருவாக்கியுள்ள இராக்கிய அரசுக்கு உதவுவதாகவும் மறுநிர்மாணப் பணிகளில் ஈடுபடுவதாகவும் கூறிக்கொண்டு அமெரிக்காவுக்கு மறைமுகமாக கைக்கூலி வேலை செய்கிறது. கட்டிடப் பணியாளர்கள் முதல் செவிலியர்கள் வரையிலானவர்களை இராக்கிற்கு அனுப்பி வைக்கிறது. தற்போது உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்டுவிட்ட செவிலியர்கள் உள்ளிட்டோரை மீட்பதற்குப் போர்க்கப்பலை அனுப்பி, தனது புஜபலத்தைக் காட்டும் நாடகத்தை நடத்திவருகிறது, மோடி அரசு. இப்படித்தான் ஆப்கானில் அமெரிக்க பொம்மையாட்சியின் கீழ் கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் தாலிபான்களால் கொல்லப்பட்டபோதும், தனது குற்றத்தை மறைத்துக் கொண்டு இந்திய அரசு நீலிக்கண்ணீர் வடித்தது. இந்திய அரசு மறைமுகமாகச் செய்யும் இந்த அமெரிக்க தொண்டூழியத்தைத்தான் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்களுக்கு எதிராக இசுலாமிய சர்வதேசியம் என்ற கற்பனையான தீர்வை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முன்வைக்கின்றனர். இஸ்லாத்தின் மூலம் அரபு நாடுகளிடையே சகோதரத்துவத்தை நிலைநாட்ட முடியவில்லை. ஷியா மற்றும் சன்னி பிரிவுகளுக்கிடையிலான மோதல்கள் மென்மேலும் அதிகரிக்கின்றனவேயன்றி, குறையவில்லை. அகண்ட இஸ்லாமை நிறுவ முயற்சித்தாலும் அதன் மூலம் காலனியாதிக்கத்தையோ, மேலாதிக்கத்தையோ வீழ்த்த ஒருக்காலும் சாத்தியமில்லை.

வர்க்க உணர்வும் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக அரசியலும்தான் மக்களை ஒன்றிணைக்குமே தவிர, மதத்தின் மூலமாக மக்களை ஒருக்காலும் ஒன்றிணைக்கவோ, ஏகாதிபத்தியங்களின் காலனியாதிக்கத்தை வீழ்த்தவோ முடியாது; மதவெறி பயங்கரவாதத்தை முறியடிக்கவும் முடியாது. இந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தியபடியே, அமெரிக்க மேலாதிக்கம் – இஸ்லாமிய பயங்கரவாதம் எனும் இரட்டை நுகத்தடியில் சிக்கிய இராக் மீண்டும் பேரழிவுக்குள் அமிழ்த்தப்படுகிறது.

– பாலன்
_________________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2014
_________________________________

விளையாட்டுக்கு கால் பந்து – வியாபாரத்துக்கு முழுப் பந்து

4

உலகக் கோப்பைக் கால்பந்து 2006: விளையாட்டுக்கு கால் பந்து – வியாபாரத்துக்கு முழுப் பந்து

(2006 உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியை ஒட்டி, புதிய கலாச்சாராத்தில் வெளிவந்த கட்டுரை)

“2006-ம் ஆண்டு ஜூன் மாதம் ஜெர்மனியில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன?” என்று ஒரு வினாடி வினா நிகழ்ச்சியில் கேள்வி கேட்பதாக வைத்துக் கொண்டால் உங்கள் பதில் என்ன? உலகக் கோப்பைக் கால்பந்து என பளிச்சென்று பதிலளித்து விடலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது நடைமுறையில் சாத்தியமில்லை.

ஃபிஃபா சொத்து
உலகக் கோப்பைக் கால்பந்து என்ற சொற்றொடர் கூட ஃபிஃபாவுக்கு சொந்தம்.

காரணம் அந்த சொற்றொடர் கூட ஃபிஃபா என்றழைக்கப்படும் சர்வதேச கால்பந்து சங்கங்களின் சம்மேளனத்தால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதை அந்த சங்கத்தின் அதிகாரபூர்வ ஸ்பான்சர்கள் தவிர வேறு எவரும் பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்திய 420 நிறுவனங்கள் மீது ஃபிஃபா உலகெங்கும் வழக்கு தொடுத்திருக்கிறது. ஜெர்மனியில் மட்டும் கால்பந்து தொடர்பான தங்களது காப்புரிமைகளை காப்பாற்றுவதற்கு சட்டவல்லுநர்கள் அடங்கிய 250 பேர் கொண்ட சந்தைப் படை நிர்வாகிகளை ஃபிஃபா சுற்றவிட்டிருக்கிறது.

இரசிகர்கள் கால்பந்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும்போது ஃபிஃபாவும், பன்னாட்டு நிறுவனங்களும் போட்டியை வைத்து காசாக்குவதை நடைமுறைப்படுத்தி வருகின்றன. கால்பந்து என்ற நாணயத்தின் இரு பக்கங்களும் இப்படித்தான் இருக்கின்றன.

முக்கனிகளில் சுவையான முதல் கனி மா போல விளையாட்டுகளில் அழகானது கால்பந்து. பதினொரு பேர் கொண்ட அணியினர் பந்தைக் காத்து, கடத்தி, உதைத்து, கட்டுப்படுத்தி, சீற வைத்து, கால்களால் கோலமிட்டு கண நேர வித்தையில் கோல் போடும் அந்த விளையாட்டு நிச்சயம் அழகானதுதான். இந்த அழகின் வலிமையை நிகழ்த்திக் காட்டிய பல்வேறு அணிகளையும், பீலே முதல் மரடோனா, மெஸ்ஸி வரையிலான வீர்ர்களையும் மறக்க முடியாதுதான்.

இது ஒலிம்பிக்கிற்கு இணையாக உலகமக்கள் பார்க்க விரும்பும் தனித்துவமிக்க விளையாட்டு. கால்பந்தின் மொழியில் இணையும் சர்வதேச உணர்வு, பல்வண்ண ஆடைகளை அணிந்திருக்கும் வீரர்களை குழந்தைகள் அழைத்து வருகிறார்கள். விதவிதமான இராகங்களில் தேசியகீதம், அந்த நேரத்தில் குறும்புக்கார வீரர்கள் சிலர் கண்ணடிக்கிறார்கள். சவுதி அணிவீரர்கள் கோல் போட்டதும் அல்லாவைத் தொழுகிறார்கள். கானா வீரர்கள் சிலுவை போடுகிறார்கள். ஐவரி கோஸ்ட் வீர்ர்கள் ஆப்பிரிக்கப் பழங்குடி நடனம் ஆடுகிறார்கள். பிரேசில் இரசிகர்கள் சம்பா நடனம் ஆடுகிறார்கள்.

உலகக் கோப்பை கால்பந்து
கால்பந்து மேஜிக்

பல்தேசியக் கொடிகளின் வர்ணங்கள் பூசப்பட்ட அழகான முகங்கள், தத்தமது அணிகளின் சட்டைகளை அணிந்தவாறு நடனமாடும் இரசிகர்கள், பீலே பாணி உதை, மரடோனா கையால் போட்ட கடவுளின் கோல், மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பையின் போது இரசிகர்கள் முதன் முதலாக உருவாக்கிய கடல் அலையின் ஆர்ப்பரிப்பு, முந்தைய போட்டியொன்றில் முதல் நுழைவிலேயே காலிறுதி வரை சென்ற காமரூன் அணியின் சாதனை, சென்ற உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்ற தென் கொரிய அணி, இவ்வாண்டு போட்டியின் காலிறுதியில் பெனால்டி உதையில் தோற்ற அர்ஜென்டினா அணி வீரர்களின் கதறல், வெற்றி பெற்ற ஜெர்மன் அணி பயிற்சியாளர் கிளிம்ஸ்மென்னின் உற்சாகம், கால்பந்தை நேசிக்கும் கேரளத்தில் அர்ஜென்டினா அணியின் வண்ணத்தை தமது படகில் பூசி அழகு பார்க்கும் மீனவர்கள், இந்தியாவில் கால்பந்து உயிர்த்திருக்கும் மேற்கு வங்கத்தில் உலகக் கோப்பைப் போட்டிகளை கூட்டமாக அமர்ந்து பார்க்கும் தொழிலாளிகள்.

கால்பந்தின் நினைவுகளில் தோய்ந்து எழும் படிமங்கள் கவித்துவமானவை. இந்தக் கவித்துவம் போட்டியை நேரடி ஒளிபரப்பில் அதிக மக்கள் பார்க்கிறார்கள் என்பதிலிருந்து எழவில்லை. உலகமக்களில் பெரும்பான்மையினர் இன்னமும் கால்பந்தைக் காதலிக்கிறார்கள் என்பதே அதன் தோற்றுவாய்.

1954-ம் ஆண்டு உலகக் கோப்பையை ஜெர்மனி வெல்லும்போது தொலைக்காட்சி இல்லை. இன்று வரையிலும் உலகின் தலைசிறந்த மாஜிக் அணி என்று போற்றப்படும் 1958-ம் ஆண்டின் பிரேசில் அணியில் பீலே, தீதி, கார்ரின்ச்சா முதலான வீரர்களின் ஆட்டத்தை வானொலியில் மட்டுமே கேட்க முடிந்தது. அந்தப் புகழ்மிக்க ஆட்டத்தின் துடிப்பை ஸ்பானிய வருணனையாளர்கள் உரையில் கொண்டு வந்தார்கள்.

1970-ல் மெக்சிகோவில் நடந்த உலகக் கோப்பையின் போதுதான் தொலைக்காட்சி வந்தது. பொருளாதாரத்தில் பிரிந்திருந்த முதல் உலகமும் மூன்றாம் உலகமும் கால்பந்தில் சேருவதற்கான வாய்ப்பை 80-களில் உலகமயமும், செய்தி–விளையாட்டு ஊடகங்களும் உருவாக்கின. ஆனால் இந்த வாய்ப்பு கால்பந்து என்ற விளையாட்டை வளர்ப்பதற்கு அல்ல, அதைச் சந்தையில் விலைபேசும் பண்டமாக மாற்றுவதற்கே பயன்பட்டது.

இன்று உலகக் கோப்பை என்பது திறமையும் துடிப்பும் கொண்ட தென் அமெரிக்க – ஆப்பிரிக்க இளம் வீரர்களை ஐரோப்பாவின் தனியார் கிளப்பைச் சார்ந்த தரகர்கள் அடையாளம் காணும் மாட்டுச் சந்தையாக மாறிவிட்டது. இரசிகர்கள் தேசப்பற்றுடன் கூச்சலிடும்போது வீர்ர்கள் தங்கள் திறனை அடையாளப்படுத்துவதில்தான் அக்கறை காட்டுகிறார்கள்.

வணிகமயமான கால்பந்து
வணிகமயமான கால்பந்து

கால்பந்தில் ஒரு அணியின் வலிமையான துடிப்பான ஒற்றுமையில்தான் ஒருவர் கோல் போட முடியும். அதனால் கோல் போட்டதின் பெருமை பல வீரர்களின் ஒருங்கிணைந்த ஆட்டத்தின்பால் சேரும். இன்றோ கோல் போடுபவர் மட்டுமே நட்சத்திர வீரர் என்று தொலைக்காட்சியும், ஸ்பான்சர் நிறுவனங்களும் இலக்கணத்தை மாற்றிவிட்டன. அதனால் பல வீரர்கள் தாங்கள் மட்டுமே கோல் போடவேண்டும் என்று நினைப்பதால் பலவாய்ப்புகள் வீணடிக்கப்பட்டு அந்த அணிகள் சுயநலத்தின் விளைவைச் சந்திக்கின்றன. இப்படி ஒவ்வொரு வீரரும் நட்சத்திர வீரராக மாறுவதில்தான் கவனம் செலுத்துகிறார்.

தன் நாட்டுக்காக ஆடுவதில் அவர் பெருமைப்படுவதில்லை. மாறாக தன் நாட்டுக்காக ஆடுவதற்கான வாய்ப்பை வைத்து ஐரோப்பாவின் புகழ் பெற்ற மான்செஸ்டர் யுனைடெட், செல்சியா, லிவர்பூல், ரியல் மாட்ரிட், பார்சிலோனா, ஏ.சி.மிலன் முதலான பணக்கார கால்பந்து கிளப்புகளில் விளையாடி கோடிசுவரனாக மாறவேண்டும். அப்படி நட்சத்திர வீரராக நிலைபெற்ற பிறகு பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பர தூதராக கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்பதே இந்த வீரர்களின் இலட்சியம்.

விளையாட்டில் கால்பந்து மட்டுமே சர்வதேசப் பிரபலத்தைக் கொண்டிருப்பதால் பன்னாட்டு நிறுவனங்களும் இந்த நட்சத்திரங்களை உருவாக்கி விற்பதில் முனைப்பாக இருக்கின்றன. இன்று கால்பந்தைக் கட்டுப்படுத்துவது இந்த தனியார் கிளப்புகளும் பன்னாட்டு நிறுவனங்களும்தான்.

இங்கிலாந்து அணியின் தலைவர் டேவிட் பெக்காமின் சொத்து மதிப்பு மட்டும் 600 கோடி. ரியல் மாட்ரிட் கிளப்புக்காக ஆடும் பிரான்சின் ஜிடேனின் வார ஊதியம் 75,000 பவுண்டுகள், பிரேசிலின் ரொனால்டோவின் வாரஊதியம் 60,000 பவுண்டுகள். நல்ல மாடுகளைப் புகழ்பெற்ற மாட்டுச் சந்தைகளில் தேடிப் பிடித்து வாங்குவதைப் போல, பல ஐரோப்பிய கிளப்புகள் தென்னமெரிக்காவிலும் ஆப்பிரிக்காவிலும் பல ‘மாட்டுத் தரகர்களை’ வைத்திருக்கின்றன.

கால்பந்து
மூன்றாம் உலகம் மாடுகளை ஏற்றுமதி செய்கிறது. முதல் உலகம் மஞ்சுவிரட்டி சம்பாதிக்கிறது.

இந்த இரு கண்டங்களைச் சேர்ந்த 5,000 வீரர்கள் தற்போது ஐரோப்பிய கிளப்புகளுக்காக விளையாடி வருகிறார்கள். மூன்றாம் உலகம் மாடுகளை ஏற்றுமதி செய்கிறது. முதல் உலகம் மஞ்சுவிரட்டி சம்பாதிக்கிறது. ஐரோப்பாவில் தேசிய உணர்வைவிட கிளப் உணர்வு அதிகம். அதனாலேயே ஃபிஃபா உலகக் கிளப் கோப்பைக் கால்பந்து போட்டிகளையும் நடத்துகிறது.

ஆரம்பத்தில் இந்தக் கிளப்புகள் விளையாட்டு ஆர்வத்திற்காக துவங்கப்பட்டு தற்போது ஆண்டுக்கு பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் பன்னாட்டு நிறுவனங்களாக மாறிவிட்டன. இவற்றின் பங்குகள் பங்குச் சந்தையில் விற்கப்படுகின்றன. நட்சத்திர வீரர்களின் விற்பனைக்கேற்ப பங்கு விலை உயரும். பலதொழில்துறை, ஊடக முதலாளிகளும் அரசியல்வாதிகளும் இந்தக் கிளப்புகளை நடத்தி வருகின்றனர்.

தற்போது பல உலகநாடுகளில் உள்ள கால்பந்தை நேசிக்கும் ஏழ்மையான கிளப்புகள் அனைத்தும் ஒழிக்கப்பட்டு விட்டன. லத்தீன் அமெரிக்க ஏழைமக்கள் வாழும் சேரிகளிலிருந்து மட்டும்தான் வீரர்கள் கிடைக்கிறார்கள் என்ற அளவில் அவர்களுக்கு ஏழ்மை தேவைப்படுகிறது.

நட்சத்திர வீரர்கள், கிளப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் இவர்களுக்கிடையே கால்பந்தின் ஆதாயத்தை பங்கிட்டுத் தரும் வேலையினை ஃபிஃபா ஒரு அரசு போல செய்து வருகிறது. பழைய மிட்டாமிராசுகள் காளைகளையும், குதிரைகளையும் வளர்த்து பெருமை காண்பிப்பார்கள். நவீன முதலாளிகளோ கால்பந்து அணியினை பெருமைக்காகவும் வருவாய்க்காகவும் வளர்க்கிறார்கள்.

கால்பந்தில் வர்த்தகம் விளையாட ஆரம்பித்த சில வருடங்களிலேயே ஊழலும் விளைய ஆரம்பித்து விட்டது. நட்சத்திர வீரர்களை வாங்கி விற்பதில் ஊழல், போட்டியின் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்து மோசடி செய்தல் என்று ஐரோப்பிய கால்பந்து கிளப்புகளின் ஊழல் புராணம் மேற்குலகின் ஊடகமே தாங்க முடியாத அளவில் நாறி வருகிறது. இதில் விளையாட்டு எங்கே இருக்கிறது? கால்பந்தில் வணிகமயமாக்கம் நடந்தேறிய பிறகு விளையாட்டு தொலைந்து போனது குறித்து மேற்குகலகின் அறிவுஜீவிகள் வருத்தப்படுகிறார்கள். கடிவாளம் கை மாறிய பிறகு குதிரை குறித்து நொந்து என்ன பயன்?

ஒரு கிளப்புக்கு ஒரு நட்சத்திர வீரர் எப்போது வருவார், எவ்வளவு காலம் இருப்பார் என்பது அந்த கிளப்பின் பயிற்சியாளருக்குக்கூடத் தெரியாது. இப்படி பல நாடுகளைச் சேர்ந்த, பலமொழி, பண்பாட்டு பின்புலமுள்ள வீரர்களை ஒரு அணியாக்கிப் பயிற்சியளித்து விளையாட வைப்பது ஒரு சர்க்கஸ் கம்பெனி நடத்துவது போல இருக்கிறது என்று சலித்துக் கொள்கிறார் ஒரு பயிற்சியாளர்.

கால்பந்தை சீரழித்த நிறுவனங்கள்
கால்பந்தை சீரழித்த வணிக நிறுவனங்கள்

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கால்பந்து ஒரு சர்க்கஸ் போல இருப்பதே போதுமானது. இரசிகர்கள் முன்னால், நட்சத்திர வீரர்கள் தோன்ற வேண்டும். ஏதோ ஒன்றிரண்டு கோல்கள் போட வேண்டும். இப்படி விளையாட்டில் மட்டுமல்ல இரசனையிலும் தரம் மிகவும் கீழே இறங்கிவிட்டது.

தற்போதைய உலகக் கோப்பைக்காக ஜெர்மனி வந்துள்ள இரசிகர்கள் விளையாட்டு பார்க்க மட்டுமல்ல, மாபெரும் கேளிக்கைக்காகவும் வந்துள்ளனர். இவர்களுக்காக கிழக்கு ஐரோப்பாவிலிருந்து 40,000 விலைமாதர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். முன்னர் சோவியத் யூனியனிலிருந்தும் ஏனைய கிழக்கு ஐரோப்பிய சோசலிச நாடுகளிலிருந்தும் தரமான விளையாட்டு அணிகள் வந்தன. தற்போதைய உலகக் கோப்பைக்காக ரசியாவிடமிருந்து கூட அணி வரவில்லை. ஆனால் விலைமாதர்கள், தடையின்றி வருகின்றனர். சோசலிசத்தை வென்ற முதலாளித்துவம் உலகிற்கு அளித்திருக்கும் கொடை இதுதான்! இப்படி ரசிகர்கள் பீரைக் குடித்து, செக்சில் மூழ்கி, கால்பந்தையும் இரசிக்கிறார்கள்.

இப்படிக் கால்பந்தை சீரழித்த பன்னாட்டு நிறுவனங்களின் தெரியாத முகம் ஒன்றும் உள்ளது. உலகக் கால்பந்தின் 60% பாகிஸ்தான் நாட்டில் சியால்கோட் எனும் இடத்தில் தயாராகிறது. சுமார் 2,000 பட்டறைகளில் சுமார் 40,000 கொத்தடிமைத் தொழிலாளிகள் அற்பக் கூலிக்காக கால்பந்துகளை தைத்து வருகின்றனர். அடிடாஸ், நைக், பூமா போன்ற பிரபலமான விளையாட்டு கம்பெனிகள் அனைத்தும் இங்கேதான் கால்பந்துகளைத் தயாரிக்கின்றன. நாளொன்றுக்கு சுமார் 50 ரூபாய் மட்டும் கூலி கொடுத்து கொடூரமாகச் சுரண்டிதான் இந்த நிறுவனங்கள் கோடிகோடியாய்க் கொள்ளையடிக்கின்றன.

கால்பந்து குறித்த சோகக்கதையில் இந்திய சோகத்தை மட்டும் சுருக்கமாகப் பார்ப்போம். இந்தியா உலகக் கால்பந்து நாடுகளின் தரவரிசையில் 117-வது இடத்தில் சோம்பேறித்தனமாக அமர்ந்திருக்கிறது. ‘வாழைப்பழக் குடியரசு’ என்று கேலி செய்யப்படும் மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து டிரினிடாட் மற்றும் டுபாக்கோ என்ற பத்து இலட்சம் மக்கள் தொகை கொண்ட நாடு கூட உலகக் கோப்பைக்காக தனது அணியை அனுப்பியிருக்கிறது. ஆனால் 100 கோடி மக்கள் தொகையில் ஒரு 11 பேரைக்கூட தயார் செய்ய முடியவில்லை.

இதுவும் விளையாட்டு குறித்த பிரச்சினையல்ல, இந்தியாவில் ஜனநாயகம் என்ன தரத்தில் இருக்கிறதோ விளையாட்டும் அந்த தரத்தில்தான் இருக்கும். ஆனால் வர்த்தகத் தரம் அந்த அளவுக்கு மோசமில்லை. இ.எஸ்.பி.என் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் உலகக் கோப்பைப் போட்டிகளை இந்தியாவில் ஒளிபரப்ப சுமார் 55 கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்களைப் பிடித்திருக்கிறதாம். சென்றமுறை டென் ஸ்போர்ட்ஸ் பத்து கோடிக்குத்தான் வர்த்தகம் செய்தது எனும் போது இது ஐந்து மடங்கு வளர்ச்சி!

இப்போது சொல்லுங்கள். ‘கால்பந்து குறித்த கவித்துவமான நினைவுகளில் எது எஞ்சி நிற்கிறது? இன்றைய உலகமயச் சூழலில் கால்பந்து என்ற விளையாட்டு பன்னாட்டு நிறுவனங்களால் தோற்கடிக்கப்பட்டு விட்டது. இதில் ஒரு உண்மையான இரசிகர் என்ற முறையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

நாமும் விளையாட வேண்டும். விளையாட்டு மைதானத்தில் அல்ல. அரசியல் களத்தில். சர்வதேச பாட்டாளி வர்க்க அணியில் சேர்ந்து உலக முதலாளித்துவத்தை எதிர்த்து ஆடும் ஆட்டத்தின் இறுதியில் நாம் கால்பந்தை மட்டுமல்ல, ஏனைய விளையாட்டுக்களையும் மீட்க முடியும். மனித குலம் தன்னை நெறிப்படுத்திக் கொள்ள கண்டெடுத்து வளர்த்த விளையாட்டுணர்வுக்குப் பொருத்தமான பொற்காலம் அப்போது, அப்போது மட்டுமே நிலவ முடியும்.

– இளநம்பி
புதிய கலாச்சாரம், ஜூலை – 2006