Sunday, July 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 677

காங், பாஜகவிற்கு பகவான்கள் படியளப்பது ஏன் ?

18

2004-க்கும் 2012-க்கும் இடையில் அரசியல் கட்சிகளின் நிதி ஆதாரங்களில் 75% பெயர் தெரியாதவர்களிடமிருந்து அதாவது கணக்கில் இல்லாததாக பெறப்பட்டதாகவும், 25% பெயர் பதிவு செய்யப்பட்டு பெறப்பட்டது என்றும் அதில் 87% கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டது குறித்த செய்தியை நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். அந்த 8 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டபூர்வமான வழிகளில் மட்டும் ரூபாய் 378.8 கோடியை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளன.

காங்கிரஸ், பாஜக
காங்கிரஸ், பாஜக – கார்ப்பரேட் கட்சிகள்

2012, 2013-ம் ஆண்டுகளில் வெளியிட்ட அறிக்கைகளைத் தொடர்ந்து, கட்சிவாரியாக, துறை வாரியாக, நிறுவன வாரியாக நன்கொடை விபரங்களை தொகுத்து ஜனநாயக சீர்திருத்ததிற்கான அமைப்பு மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகிய அமைப்புகள் கடந்த ஜனவரி 8-ம் தேதி வெளியிட்டுள்ளன.

கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்து பணம் பெறுவதில் பாஜக முதல் இடத்தில் உள்ளது. அது சுமார் 1,334 நிறுவனங்களிடமிருந்து ரூ 192.47 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 418 நிறுவனங்களிடமிருது ரூ 172.25 கோடி நன்கொடையாக பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

நிறுவனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் பாஜகவுக்கு காங்கிரசை விட மூன்று மடங்கு அதிகமான கார்ப்பரேட் நிறுவனங்கள் படி அளந்திருக்கின்றன. ஆனாலும், காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்கும் நிறுவனங்கள் பெருந்தொகையாக அக்கட்சிக்கு வெட்டியிருக்கின்றன.

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் இவ்வளவு பணம் செலவு செய்ய் வேண்டும். இந்த பணத்தை இவ்வளவு எளிதாக கொடுக்கிறார்களே இது யாருடைய பணம்?  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு “ஜனநாயகத்தின்” மேல் ஏன் இந்த தீராக் காதல்? அதிலும் டிரஸ்டுகளை ஏற்படுத்தி மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ள வைப்பதில் வேதாந்தாவுக்க்கு, டாடாவுக்கு, பிர்லாவுக்கு ஏன் இவ்வளவு அக்கறை?

செலவு குறைப்பு (Cost cutting) என்ற பெயரில் எங்கெல்லாம் தம் லாபத்தை பெருக்கலாம் என்று இண்டு இடுக்குகளை கூட விட்டு வைக்காமல் துழாவும் முதலாளிகள் இவ்வளவு தொகையை கொடுக்கிறார்கள் என்றால் இதனால் முதலாளிகள் அடையும் பயன் என்ன?

குமார மங்கலம் பிர்லா
குமார மங்கலம் பிர்லா

அதிகமாக நன்கொடை வழங்கிய நிறுவனங்களில் ஆதித்யா பிர்லாவின் பொது தேர்தல் டிரஸ்ட் (General Electoral Trust) காங்கிரசு மற்றும் பாஜகவுக்கு முறையே ரூ 36.41 கோடி மற்றும் ரூ 26.57 கோடி வாரி இறைத்து முதல் இடத்தில் உள்ளது.  நிலக்கரி வயல் ஒதுக்கீட்டு ஊழலில் குமார மங்கலம் பிர்லாவின் பெயர் சிக்கிய போது, பிரதமர் அலுவலகத்தின் சார்பில் அவரது நிறுவனத்துக்கு நிலக்கரி ஒதுக்கியதை நியாயப்படுத்தியதும், ‘அவர் மீதான சிபிஐ வழக்கு அரசியல் பழிவாங்கல்’ என்று பாஜக வாதாடியதும் தற்செயலானதல்ல என்பதை இப்போதாவது புரிந்து கொள்ளலாம்.

டொரென்ட் பவர் லிமிட்டெட் நிறுவனம காங்கிரசுக்கு ரூ 11.85 கோடியும், பாஜகவுக்கு ரூ 13 கோடியும் கொடுத்துள்ளது என்ற செய்தியும் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்நிறுவனம் 1990-களின் பிற்பகுதியில் குஜராத் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த சூரத் மற்றும் அகமதாபாத் மின்வினியோக நிறுவனங்களை சகாய விலைக்கு வாங்கிப் போட்டு 2012-13 நிதி ஆண்டில் மட்டும் ரூ 8,269 கோடி மொத்த வருவாய் சம்பாதித்து அதில் ரூ 622 கோடி லாபம் பார்த்திருக்கிறது. அடுத்த கட்டமாக தனது நடவடிக்கைகளை மகாராஷ்டிரா மாநிலத்துக்கும் விரிவுபடுத்தி வருகிறது. இப்படி மக்கள் சொத்தை தமக்கு வாரி வழங்கிய பாஜக, காங்கிரஸ் கும்பலுக்கு தான் குவிக்கும் லாபத்தில் ஒரு சிறுபகுதியை கிள்ளிக் கொடுத்து, எதிர்கால கொள்ளையடிப்புகளையும் உத்தரவாதப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்நிறுவனம். ஆட்சிக்கு காங்கிரஸ் வந்தாலும், பாஜக வந்தாலும் டொரென்ட் பவருக்கு ஏறுமுகமாகத்தான் இருக்கும்.

மோடிக்கு நெருக்கமாக அறியப்படும் அதானி குழுமம் கூட இரு தரப்பையும் சமன் செய்து காங்கிரசுக்கு ரூ 1.50 கோடியும், பாஜகவுக்கு ரூ 3 கோடியும் கொடுத்துள்ளது.

ஏர்டெல் பிராண்டை சொந்தமாக வைத்திருக்கும் பாரதி நிறுவனத்தின் பாரதி தேர்தல் டிரஸ்ட் காங்கிரசுக்கு ரூ 11 கோடியும், பாஜகக்கு ரூ 6 கோடியும் கொடுத்துள்ளது. இந்தியா முழுவதும் செல்பேசி சேவைகள், அவற்றுக்குத் தேவையான அலைக்கற்றை ஒதுக்கீடுகள், இலங்கையில் தொழில் செய்ய சுமுகமான அரசியல் இது போன்ற அனைத்து தேவைகளுக்கும் ஏர்டெல் பாரதிக்கு தொண்டு செய்யும் காங்கிரஸ், பாஜகவுக்கு அந்நிறுவனம் மனமகிழ்ந்து கொடுக்கும் பாக்கெட் மணிதான் இது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

நாடெங்கும் சுரங்க வேட்டை ஆடும் நிறுவனங்களும் தமக்கு சேவை புரியும் அரசியல் கட்சிகளை சரியான முறையில் கவனித்துக் கொண்டிருக்கின்றன. டாடா நிறுவனத்தின் தேர்தல் டிரஸ்ட் காங்கிரசுக்கு ரூ 9.96 கோடியும் பி.ஜே.பிக்கு ரூ 6.82 கோடியும் கொடுத்துள்ளது. வேதாந்தாவின் Public & Political Awareness Trust பாஜகவுக்கு ரூ 90 கோடி கொடுத்துள்ளது. சிவகாசியின் அரசன் குரூப் நிறுவனம் பாஜகவுக்கு ரொக்கமாக ரூ 25 லட்சம் கொடுத்துள்ளது.

இந்தியாவின் ஜனநாயகத்தை ஆட்டுவிக்க பாவம் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் எவ்வளவு பாடுபடுகிறார்கள் என்பதை இணைப்பில் பார்க்கலாம்.

தேர்தல் மோசடி
மக்களின் சொத்தை முதலாளிகள் சட்டபூர்வமாக கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் இந்த பாராளுமன்ற ஜனநாயக முறை.

உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் ரூ 99.71 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளன. வீடியோகான் நிறுவனம் காங்கிரசுக்கு ரூ 2.25 கோடியும், பாஜகக்கு ரூ 6.25 கோடியும்; பூஞ்ச் நிறுவனம் காங் ரூ 1.40 கோடியும்,  பாஜகக்கு ரூ 4.60 கோடியும், ஐ.டி.சி ரூ. 4 கோடி காங்கிரசுக்கும், ரூ 4.38 கோடி பாஜகக்கும், எல்&டி ரூ 3.25 கோடி காங்கிரசுக்கும், ரூ 3.60 கோடி பாஜகவுக்கும் இன்னும் எஸ்ஸார், ஜின்டால் நிறுவனங்கள் பல கோடி கொடுத்துள்ளார்கள்.

கல்வித்துறை முதலாளிகள் மூலம் காங்கிரசுக்கு ரூ 1.92 கோடியும் பாஜகவுக்கு ரூ 1.69 கோடியும் நன்கொடையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தனியார் மருத்துவமனைகள் மாணவர்களிடமும் நோயாளிகளிடமும் அடிக்கும் கட்டணக் கொள்ளையில் ஒரு சிறு பகுதியாக ரூ 21 லட்சம் நன்கொடை கொடுத்துள்ளன.

ரியல் எஸ்டேட் மற்றும் உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் காங்கிரசை விட பாஜகவுக்கு  அதிகமாகவும், வர்த்தக கழகங்கள் மற்றும் சுரங்க தொழில் நிறுவனங்கள காங்கிரசுக்கு அதிகமாகவும் நிதி அளித்துள்ளன. அளவில் கூடுதல் குறைகள இருந்தாலும் எல்லா நிறுவனங்களும் பாரபட்சம் பார்க்காமல் அனைத்து கட்சிகளுக்கு நிதி அளிப்பவைகளாகவே உள்ளன.

மேற்குறிப்பட்டவை அனைத்தும் அரசியல் கட்சிகளின் 25% பரிவர்த்தனைகள் மட்டுமே. 75% நிதிவரவுகள் எங்கிருந்து வந்தன என்று குறிப்பிடாமலேயே பெறப்பட்டுள்ளன.

இந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காடுகளும் மலைகளும் ஆறுகளும் என இயற்கை வளங்கள் அள்ளிக்கொடுக்கப்படுகின்றன. வேதாந்தாவும், டாடாவும், எஸ்ஸாரும் ஸ்டெர்லைட்டும் நியம்கிரி முதல்  தூத்துக்குடி வரை நாசப்படுத்த அனுமதிக்கப்படுகிறது. காங்கிரசாக இருந்தாலும் சரி, பாஜகவாக இருந்தாலும் சரி ஆட்சியில் இருக்கும் போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் நிலம், மலிவாக மின்சாரம், தேவையான அளவில் தண்ணீர், வரி விலக்கு, வரி விடுப்பு, குறைந்த வட்டிக்கு வங்கிக் கடன் இவற்றையெல்லாம் ஏற்பாடு செய்து கொடுக்கின்றன.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்கள் செல்லுபடியாகாது என மைய அரசு அறிவிக்கிறது. அரசு-தனியார் கூட்டுத் திட்டங்களில் நிலம் போன்ற இயற்கை வளங்களும், சாலைகள், விமான நிலையங்கள் போன்ற அடிக்கட்டுமான வசதிகளும் சட்டபூர்வமான முறையில் தனியாரின் கொள்ளைக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், அரசு-தனியார் கூட்டுத் திட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்தல், தனியார் பெருந்தொழில் நிறுவனங்களுக்குப் பல்வேறு சலுகைகள் என தனியார் முதலாளிகள் சுருட்டிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கிறது அரசு.

இப்படி மக்களின் சொத்தை முதலாளிகள் சட்டபூர்வமாக கொள்ளையடிக்க ஏற்பாடு செய்து கொடுப்பதுதான் இந்த பாராளுமன்ற ஜனநாயக முறை. பொதுமக்களின் சொத்தை சூறையாடும் இந்த முதலாளிகளின் கொள்ளை பணத்தின் சிறு பகுதி ஓட்டுக்கட்சிகளுக்கு போய், அதன் பலத்தில் அவர்கள் தேர்தலில் வெல்கிறார்க்ள் அல்லது தோற்கிறார்கள். மக்கள் ஒரு கட்சியின் மீது நம்பிக்கை இழக்கும் போது அடுத்த கட்சியை இதே முதலாளிகள் முன்னிறுத்துகிறார்கள்.

இங்கிருக்கும் அரசியல் கட்சிகள், பாராளுமன்றம், சட்டம், நீதிமன்றம், சிறை, காவல்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களும், இந்த கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்களும் வேறு வேறு அல்ல. இந்த இரு (ஜீவ)ஆத்மாக்களும் சந்தை என்னும் ஒரே பரமாத்மாவுக்குள் அடங்கியதுதான். இந்த ஜீவாத்மாக்கள் ஈருடல் ஓர் உயிர் போன்றவை. இவை ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இந்த ஊடாடல்தான் கார்ப்பரேட்களுக்கு ‘வளர்ச்சியை’ கொடுக்கிறது. மக்களுக்கு துனபத்தை கொடுக்கிறது. இந்த ஊடாடலுக்கு பிறந்தவைகள் தான் லஞ்சம், ஊழல், கார்ப்பரேட் கொள்ளை எல்லாம். இந்த பரமாத்மா (முதலாளித்துவ அமைப்பு) இருக்கும் வரை இவர்களின் ஊடாடல் நடந்துகொண்டு தான் இருக்கும் இந்த ஊடாடல் நடக்கும் வரை லஞ்சம், ஊழல் பிறந்து கொண்டு தான் இருக்கும்.

பூவுலகில் இந்த ஆத்மா/பரமாத்மாக்களுக்கு இடமில்லை என இவர்களுக்கு சிவலோக பதவி கொடுத்து முக்தி அடைய வைக்க வேண்டியது நமது கடமை.

– ரவி

மேலும் படிக்க

ஆம் ஆத்மி வாயில் சுட்ட வடை

4

”நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்போம், குடும்பம் ஒன்றுக்கு தலா 700 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்குவோம்”. இவை ஆம் ஆத்மி கட்சி தில்லி சட்டமன்றத் தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதிகளில் முக்கியமானவை. ஏனெனில், ஆம் ஆத்மி வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளிலேயே இவையிரண்டும் தான் மக்களின் கவனத்தை பெருவாரியாக அவர்கள் பக்கம் திருப்பின.

ஆம் ஆத்மி கட்சி
வாயால் வடை சுடும் ஆம் ஆத்மி கட்சி

இதில் குறிப்பாக மின்சாரம் குறித்த வாக்குறுதியை மக்கள் கண்ணை மூடிக் கொண்டு நம்பினர். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக மின் கட்டணம் செலுத்தாமல் துண்டிக்கப் பட்டிருந்த மின் இணைப்புகளை தன் தொண்டர்கள் மற்றும் பத்திரிகை புகைபடக்காரர்கள் சகிதம் சென்ற கேஜ்ரிவால் அவற்றை மீண்டும் இணைப்பது போல் புகைப்படம் எடுத்து அச்சு மற்றும் மின் ஊடகங்களில் புழுதியைக் கிளப்பியிருந்தார். தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஆதரவு கோரல்களும் அக்கப்போர்களும் முடிந்து பதவிப் பிரமாணம் எடுத்ததும் கேஜ்ரிவால் இவ்வாறான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

”ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து மின் கட்டணங்கள் 50 சதவிகிதம் குறைக்கப்படும். 400 யூனிட்டுகளுக்குக் கீழ் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும். அதற்கு மேல் பயன்படுத்துவோர் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும்” என்றும் “மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டவர்களின் 10 மாத நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்படும்” என்றும் அறிவித்தார்.

இந்த அறிவிப்பைப் படித்து கொண்டாட்டத்தில் திளைத்த தில்லி வாழ் பெருங்குடி மக்கள், தேர்தல் வாக்குறுதி வழங்கப்பட்ட போது இதன் முதல் வாக்கியம் மட்டுமே அழுத்தம் கொடுத்து சொல்லப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது என்பதை மறந்தே போனார்கள்.

அது ஒரு பக்கம் இருக்க, தற்போது அறிவிப்பின் சூடு குறைவதற்கு முன்பாகவே ”நிலுவைத் தொகையைத் தள்ளுபடி செய்யும் முடிவு பரிசீலனையில் தான் இருக்கிறது” என்று சுதியைக் குறைத்துக் கொண்டுள்ளார், கேஜ்ரிவால். மேலும் மின் கட்டணக் குறைப்பு தொடர்பான அவரது அறிவிப்பின் முந்தைய பகுதியின் சாத்தியப்பாடுகள் குறித்தும் வேறு விதமான செய்திகள் வரத் துவங்கியுள்ளன. அதற்கு முன் சில அடிப்படை விவரங்களைப் பார்த்து விடுவோம்.

டெல்லி மின் நுகர்வு அதிகம்
டெல்லியில் மின் நுகர்வு அதிகம்

2000–01 ஆண்டில் 1,259 யூனிட்டுகளாக இருந்த தில்லியின் தனிநபர் மின் நுகர்வு 2007 – 08 ஆண்டில் 1,615 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. தில்லியின் புறநகர்ப் பகுதியில் சராசரியாக ஒரு குடும்பத்தில் 5.30 உறுப்பினர்களும் மாநகரப் பகுதியில் சராசரியாக ஒரு குடும்பத்தில் 4.51 உறுப்பினர்களும் உள்ளனர். (புள்ளி விவரங்களுக்கான இணைப்பு கட்டுரையின் இறுதியில்).

ஒரு குடும்பத்தில் குறைந்தபட்சம் நான்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், 2008-ம் ஆண்டுக் கணக்குப் படியே சராசரியாக ஒரு குடும்பத்திற்கான மாத மின் நுகர்வு 538 யூனிட்டுகள். இந்திய மாநிலங்களிலேயே தில்லியில் தான் மின் நுகர்வு அதிகம். இந்தக் கணக்கீடும் ஐந்தாண்டுகளுக்கு முந்தைய நுகர்வு அளவை அடிப்படையாக கொண்டது என்பதையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வோம். மின்னணு சாதனங்களின் உபயோகம் அதிகரித்து வரும் நிலையில், தற்போதைய நுகர்வு நிச்சயமாக இதை விட அதிகமாகவே இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

மின் கட்டண அடுக்குகளுக்குள் வரும் சராசரி இணைப்புகளின் விவரங்கள் கீழே

Slabs % of households
0-200 Units

40%

201-400 units

27%

Above 400 units

33%

குறிப்பு : இது 2005 – 2006 காலகட்டத்திற்கான புள்ளிவிவரம்

அதாவது, சுமார் 67 சதவீத வீடுகளுக்கான மின் கட்டணத்தில் 50 சதவீத அளவுக்கு குறைக்கப் படவுள்ளது.

“மின்கட்டணம் அதிகரித்திருப்பதற்கு ஊழல், மாஃபியாக்கள், நிர்வாகத் திறமையின்மை தான் காரணம்” என்றும் “இவற்றைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மின் கட்டணத்தைக் குறைக்கப் போவதாகவும்” அறிவித்துள்ளது ஆம் ஆத்மி. “இதை எவ்வாறு சாதிக்கப் போகிறீர்கள்?” என்று செய்தியாளர்கள் கேட்ட போது, “மின் வினியோக நிறுவனங்களை மத்திய கணக்குத் தணிக்கை அலுவலரைக் கொண்டு தணிக்கை செய்யப் போகிறோம்” என்றும், “அவர்களின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து ‘ஊழலை’ கண்டு பிடித்து சரி செய்யப் போகிறோம்” என்றும் “அதன் மூலம் மின் கட்டணங்களை இதற்குக் கீழும் கூட குறைத்து விட முடியும்” என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் இந்த வியாக்கியானங்களைச் சொல்வதற்கு முன்பாகவே மின் விநியோக நிறுவனங்கள் தங்கள் அதிர்ச்சி வைத்தியத்தை துவங்கி விட்டன.

ஷீலா தீட்சித்
டெல்லி வித்யுத் வாரியத்தை தனியார் மயமாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அப்போதைய டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித்.

தில்லியின் பல்வேறு பகுதிகளில் – குறிப்பாக மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கடுமையான மின்வெட்டு டிசம்பர் இறுதியிலிருந்து துவங்கியிருக்கிறது. பல்வேறு பகுதிகளில் சுமார் 8 மணி நேரம் வரை மின் வெட்டு நிலவி வருகிறது.

தில்லியின் மின் விநியோகம் அனில் அம்பானிக்குச் சொந்தமான பி.இ.சி.எஸ் யமுனா, பி.இ.சி.எஸ் ராஜ்தானி ஆகிய இரண்டு நிறுவனங்கள் மூலமும் டாடா பவர் நிறுனத்தின் மூலமும் நடைபெறுகிறது. 2002-ம் ஆண்டிலிருந்து மின் கட்டணங்கள் 70 சதவீதம் அதிகரித்திருக்கும் அதே வேளையில், மின் உற்பத்தியாளரிடமிருந்து மின்சாரத்தை வாங்கி வினியோகிக்கும் செலவு 300 சதவீதம் உயர்ந்திருப்பதாக இந்நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.

தில்லி மின் துறைச் செயலாளர் புனித் கோயலுக்கு கடந்த 6-ம் தேதியன்று  அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் ரிலையன்ஸ் நிறுவனம், “கட்டணக் குறைப்பு தொடர்பாக ஊடகங்களில் வரும் செய்திகளால் தங்களுக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் தயங்குகின்றன” என்றும், “ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையில் இருக்கும் தமது நிறுவனங்கள் வங்கிக் கடன்களை நம்பியே செயல்பட்டு வரும் நிலையில் இது போன்ற அறிவிப்புகள் தில்லியில் மின் வெட்டை அதிகரித்து விடும்” என்று நேரடியாகவும், “தில்லி அரசு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்று ஒன்று இருப்பதை மறந்து விடக்கூடாது” என்று மறைமுகமாகவும் மிரட்டியுள்ளது.

“மின்கட்டண உயர்வு ஏன் ஏற்பட்டது, மின் உற்பத்தி ஏன் குறைந்தது” என்பதற்கு கேஜ்ரிவால் சொல்லும் காரணங்கள் ஊழல், நிர்வாக திறமையின்மை மற்றும் மாஃபியாக்கள். இதில் மாஃபியாக்கள் யார், எங்கிருந்து நுழைந்தார்கள் என்பதை அவர் சொல்லாத நிலையில் நம்மாலும் ஊகிக்க முடியவில்லை. மற்ற இரண்டு காரணங்களும் அதற்காக வைக்கப்படும் தீர்வுகளும் பூமியின் மேல் ஆகாயத்தின் கீழ் உள்ள  சகல பிரச்சினைகளுக்கும் ஆம் ஆத்மியினர் சொல்லும் சர்வரோக நிவாரணிகள் தான.

உண்மையில் மின் கட்டண உயர்வு எதனால் ஏற்படுகிறது? அதற்குக் காரணங்கள் என்ன?

மின்சாரம் தனியார் மயம்
மூன்று புதிய தனியார் கார்ப்பரேட் இடைத்தரகர்களை புகுத்துவது தான் தனியார்மய கொள்கையின் நோக்கம்.

மின் கட்டணங்களை உயர்த்துவதோ குறைப்பதோ தொடர்பான அதிகாரங்கள், மாநில அரசின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டு பல ஆண்டுகளாகின்றன. மின் கட்டணங்கள் நிர்ணய அதிகாரம், உற்பத்தி உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியவை அரசாங்கத்தின் கரங்களிலிருந்து பறிக்கப்பட்டு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஒழுங்குமுறை ஆணையம் என்பது உலக வங்கியின் உத்தரவுக்கேற்ப ஏற்படுத்தப்பட்டது. இதற்கான சட்டம் 1998-ம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டு விட்டது. மின்சாரம் மட்டுமின்றி அரசால் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு சேவைகள் இது போல் துறைவாரியான ஒழுங்குமுறை ஆணையங்கள் ஏற்படுத்தப்பட்டு அவற்றின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன. அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகள் என்பவற்றின் அடிப்படை மக்கள் நலன் என்பதாக அல்லாமல், பண ரீதியிலான மதிப்பின் அடிப்படையில் வர்த்தக ரீதியாக அமைய வேண்டும் என்பதும், இந்த சேவைத் துறைகள் படிப்படியாக தனியார்மயமாக்கப் பட வேண்டும் என்பதுமே இவை போன்ற ஆணையங்களின் நோக்கம்.

மின்சாரத் துறையைப் பொறுத்தவரை தனியார்மய நடவடிக்கைகளை மேலும் உந்தித்தள்ள 2003- பாஜக ஆட்சிக் காலத்தில் மத்திய மின்சாரச் சட்டம் இயற்றப்பட்டது.  இதன்படி, மின் உற்பத்தி, கம்பிகள் மூலம் கொண்டு செல்லுதல், நுகர்வோருக்கு விநியோகித்தல் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்வது திறமையின்மைக்கும் ஏகபோகத்துக்கும் வழிவகுப்பதால், வாரியங்களை மூன்றாக உடைக்கக் கூறியதோடு,  மின்சாரம் வணிக ரீதியில் விற்கப்படவேண்டும் என்றும், மின்சாரம்  உற்பத்தி செய்ய அரசாங்க உரிமம் தேவையில்லை என்றும், தனியார் முதலாளிகள் மின்னுற்பத்தி செய்வதுடன் மின்சாரச் சந்தையில் ஊக வணிக சூதாட்டமும் நடத்தலாம் என்றும் அனுமதித்தனர்.

மின்வாரியங்கள் சொந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யுமாறும், விநியோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியதோடு. தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்கின்ற  மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் ஆணையத்திடமே தரப்பட்டது. கட்டண உயர்வுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை நாடவியலாதென்றும், இதற்கென உருவாக்கப்படும் ‘மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையம்’தான் தீர்ப்பளிக்க முடியும் என்றும் இச்சட்டம் கூறியது

அரவிந்த் கேஜ்ரிவால்
கேஜ்ரிவால் அறிவித்துள்ள மின்கட்டணக் குறைப்பு என்பதன் பொருள் தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு அரசே மானியங்களைக் கொடுப்பது என்பது தான்.

இவ்வாறு மின் கட்டணக் கொள்ளை என்பது சட்டபூர்வமானதாக மாற்றப்பட்டுள்ளதன் பின்னணியில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் தில்லி அரசை மிரட்டும் திமிரை பெற்றுள்ளது. “மத்திய கணக்குத் தணிக்கை அலுவலத்தை வைத்து மின் வினியோக நிறுவனங்களை (Discoms) ஆய்வு செய்யும் நடவடிக்கையும் அதன் அடிப்படையில் அவர்களின் கொள்ளையை நிறுத்த முடியும் என்கிற கேஜ்ரிவாலின் வாக்குறுதியுமே நடைமுறையில் சாத்தியமற்றது” என்கிறார்கள் அத்துறையைச் சேர்ந்த முதலாளித்துவ வல்லுனர்கள்.

ஏனெனில், மின் வினியோக நிறுவனங்கள் தனியாருக்குச் சொந்தமானவை என்பதாலும், அவற்றுக்கும் அரசுக்கும் லாப பங்கீடு ஒப்பந்தங்கள் ஏதுமில்லை என்பதாலும், அவைகளின் நிர்வாக விஷயங்களில் அரசு தலையீடு இருக்க கூடாது என்று ஒப்பந்தம் இருக்கும் நிலையிலும், இது போன்ற நிறுவனங்களில் கணக்குத் தணிக்கை அலுவலகம் செய்யும் ஆய்வு சட்டரீதியாகவே நடவடிக்கை எடுப்பதற்கான பரிந்துரைகளை கொண்டிருக்க முடியாது என்கிறார்கள். மத்திய கணக்குத் தணிக்கை அலுவலர் கோரும் ஆவணங்களை தனியார் மின் விநியோக நிறுவனங்கள் ஆய்வுக்காக கொடுக்க வேண்டும் என்று சட்டரீதியான எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. அவர்களாக மனமுவந்து எந்த ஆவணத்தைக் கொடுக்கிறார்களோ அதை மட்டுமே வைத்து ஆய்வு செய்ய முடியும் எனும் நிலையில் இந்த் ஆய்வு என்பதே கேலிக்கூத்தாகிறது; எனில், இதனடிப்படையில் எதிர்காலத்தில் செய்யப்படவுள்ள கட்டனக் குறைப்பின் லட்சணம் எவ்வாறு இருக்கும்?

மொத்தத்தில் கேஜ்ரிவால் அறிவித்துள்ள மின்கட்டணக் குறைப்பு என்பதன் பொருள் தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்கு அரசே மானியங்களைக் கொடுப்பது என்பது தான். அதாவது, மக்களின் வரிப்பணத்தை மக்கள் நலன் எனும் பெயரில் தனியார் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுப்பதாகும். ஏற்கனவே 1,200 கோடி ரூபாய்கள் பற்றாக்குறையில் இருக்கும் தில்லி அரசு, இந்த செலவுகளை சேவை வரி, விற்பனை வரி, மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்ட மறைமுக வரிகள் இன்றி எதிர்கொள்ளவியலாது. ஆக, மக்கள் நேரடியாக மின் கட்டணம் செலுத்துவதற்கு பதில் மறைமுகமாக செலுத்த வைப்பது தான் இந்த மின் கட்டணக் குறைப்பு நடவடிக்கையின் உண்மையான பொருள்.

தில்லி மின்வாரியத்தை (Delhi Vidyut Board) லாப வெறிகொண்ட தனியார்களிடம் ஒப்படைக்கும் வேலை 2002 மார்ச் 31-ம் தேதி நடந்தேறியது. அதே ஆண்டு ஜூன் மாதம், தில்லி மின்வாரியம் ஆறு சிறு நிறுவனங்களாக உடைக்கப்பட்டது. அதன் பங்குகளும் 18,000 ஊழியர்களும், மின் உற்பத்தி மற்றும் விநியோக கட்டுமானங்களும், அலுவலக கட்டிடங்கள் மற்றும் அவற்றிலிருந்து உபகரணங்கள் முதலாக அப்படியே மொத்தமாக கூறுகட்டி தனியார் நிறுவனங்களிடம் சல்லிசான விலைக்கு ஒப்படைக்கப்பட்டன. தில்லியின் மத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளுக்கான உரிமத்தை ஏலத்தில் எடுத்த ரிலையன்ஸ் நிறுவனம், ஊழியர்கள், கட்டிடங்கள், பல ஆண்டுகளாக அரசால் போடப்பட்ட கம்பி வழித் தடங்கள், ட்ரான்ஸ்பார்ம்கள், இதர உட்கட்டுமான வசதிகள் ஆகிவையோடு லாபம் சம்பாதிக்கும் உரிமையையும் சேர்த்து 291 கோடி ரூபாய்க்கு வாங்கியது. வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளுக்கான உரிமையை டாடா நிறுவனம் 187 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

இந்த ஏற்பாடுகளின் படி, மின் உற்பத்தி நிறுவனங்கள், கம்பி வழி கடத்தும் நிறுவனத்திற்கு (Transco)  உற்பத்திச் செலவோடு லாபத்தையும் சேர்த்தே விற்க வேண்டும். கம்பி வழி கடத்தும் நிறுவனம் தனது கொள்முதல் விலையோடு லாபத்தையும் சேர்த்து விநியோக நிறுவனத்திடம் (Discom) விற்க வேண்டும். விநியோக நிறுவனங்கள் தமது கொள்முதல் விலையோடு லாபத்தையும் சேர்த்து நுகர்வோருக்கு விற்க வேண்டும். மின்சாரம் உற்பத்தியாகி நுகர்வோரை வந்தடையும் இடைவெளியில் இவ்வாறு மூன்று புதிய தனியார் கார்ப்பரேட் இடைத்தரகர்களை புகுத்துவது தான் தனியார்மய கொள்கையின் அடிப்படையில் முந்தைய ஷீலா தீட்சித் அரசு போட்ட அந்த ஒப்பந்தத்தின் நோக்கம். மின் கொள்முதல் விலை 2002 காலகட்டத்திலிருந்து இன்று வரை 300 சதவீதம் உயர்ந்திருப்பதாக விநியோக நிறுவனங்கள் நீலிக்கண்ணீரின் பின் உள்ள உண்மைகள் இவை.

மேலும், மின்சார உற்பத்தியிலிருந்து மத்திய அரசு மெல்ல மெல்ல விலகி அதையும் தனியாரிடமே ஒப்படைத்து வருகிறது. மின்சாரத் துறைக்கான நிதி, மாநில அரசுகளின் திட்ட ஒதுக்கீட்டில் 31.55 விழுக்காட்டிலிருந்து (1990 – 91) பத்தே ஆண்டுகளில் 15.25 விழுக்காடாக (2001 – 02) வீழ்ச்சி அடைந்தது. அரசு மின்வாரியங்கள், தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தை அநியாய விலைக்கு வாங்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டன. இன்னொரு புறம் நிலக்கரி வயல்களைப் பெருவாரியாக தனியார்களுக்கு அள்ளிக் கொடுத்ததன் மூலம், ஏற்கனவே இயங்கி வந்த அரசு மின் உற்பத்தி நிறுவனங்களும் கச்சாப் பொருட்கள் வாங்க தனியார் கார்ப்பரேட்டுகளிடம் அதிக விலை கொடுக்க வேண்டி வந்தது. இவையனைத்தும் சேர்ந்து இலாபமீட்டி வந்த மின் வாரியங்கள் நட்டத்தில் விழத் தொடங்கின. இதையே காரணம் காட்டி மின் வாரியங்களை தனியாருக்கு விற்கும் வேலையைத் துரிதமாக்கினர்.

கட்டணக் குறைப்பு பற்றி வாயால் வடை சுடும் கேஜ்ரிவால், அதன் உண்மையான காரணத்தைப் பற்றி வாய் திறக்க மறுக்கிறார். குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டுமெனில், விலை உயர்வுக்கு நேரடிக் காரணமான தனியார்மய நடவடிக்கைகளை தூக்கியெறிய வேண்டும். அதற்கான திட்டமோ உளப்பூர்வமான விருப்பமோ இன்றி வெறும் வார்த்தை ஜாலங்களின் மூலம் அந்தச் சுமையை மக்களின் தலைமேலேயே சுமத்துகிறார். தனியார் மயத்தை எதிர்க்காமல் மின் கட்டணக் குறைப்பு என்பது எக்காலத்திலும் சாத்தியமில்லை. அவ்வகையில் ஆம் ஆத்மி கட்சியும் தனியார் மயத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரிக்கின்றது.

இதை மறைப்பதற்காகத்தான் அவர்கள் ஊழல், ஊழல் எதிர்ப்பு, கணக்கு ஆய்வு என்று அடித்து விடுகிறார்கள். ஊழலே கூட தனியார் மயத்தின் விளைவாக முதலாளிகள் வளர்த்து விட்ட நோய் என்பதை இவர்கள் ஏற்பதில்லை, பேசுவதில்லை. ஆம் ஆத்மி வாயால் வடை சுட்ட கதையை இன்னும் நீங்கள் நம்பப் போகிறீர்களா?

–    தமிழரசன்.

மேலும் படிக்க

உ.வ.க. பாலி மாநாடு : ரேசன் கடையின் சாவி இனி அமெரிக்காவின் கையில்!

3

னியார்மயம்-தாராளமயம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே, “இனி ரேஷன் கடைகளில் என்னென்ன உணவுப் பொருட்களை, என்ன விலையில் வழங்க வேண்டும் என்பதைக்கூட அமெரிக்கா தீர்மானிக்கும் காலம் வந்துவிடும்” என நாம் எச்சரித்து வந்தது, இன்று ஏறத்தாழ நடைமுறை உண்மையாகிவிட்டது. இந்தோனேஷியாவிலுள்ள பாலியில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் நடந்து முடிந்த உலக வர்த்தகக் கழகத்தின் 9-வது அமைச்சர்கள் மாநாட்டில், ஏழை நாடுகள் தமது விவசாயத்திற்கும், ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களுக்கும் எவ்வளவு மானியம் வழங்க வேண்டும் என்பது குறித்தும், ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் குறித்தும் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இம்முடிவுகள் இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளுக்குப் புதிதாக எதையும் தராத அதேசமயம், இருப்பதையும் தட்டிப்பறித்துக் கொள்ளும் ஓரவஞ்சனை கொண்டதாக அமைந்துள்ளன.

மங்களூரு ஆர்ப்பாட்டம்
இந்திய விவசாயிகளுக்குத் தரப்படும் மானியத்தைக் குறைக்கச் சொல்லி உத்தரவிடும் உலக வர்த்தகக் கழகத்தின் பாலி மாநாட்டைக் கண்டித்து கர்நாடகா மாநிலம் மங்களூரில் பல்வேறு விவசாய சங்கங்கள் மங்களூரு துறைமுகம் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டம்.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக ஏகாதிபத்திய அரசுகள், உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்களின் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடந்து கொள்வது இந்திய அரசுக்குப் புதிய விசயமல்ல. எனினும், இந்தச் சரணாகதி அரசியலில் புதிய சாதனையை பாலி மாநாட்டில் நிகழ்த்தியிருக்கிறது, இந்திய அரசு. இந்திய விவசாயிகளுக்கு எவ்வளவு மானியம் தர வேண்டும், அவர்களிடமிருந்து எந்தெந்த உணவுப் பொருட்களை எந்தளவிற்குக் கொள்முதல் செய்ய வேண்டும்; எந்தெந்த உணவுப் பொருட்களை ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்க முடியும்; அவற்றை என்ன விலையில் விற்க வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானிக்கும் உரிமையை, இவற்றை மேற்பார்வையிடும் உரிமையை உலக வர்த்தகக் கழகத்திடம் ஒப்படைத்துக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறது, இந்திய அரசு.

மன்மோகன் சிங் அரசு கையெழுத்துப் போட்ட இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்திய அணுஉலைகளைக் கண்காணிக்கும் உரிமையை சர்வதேச அணுசக்தி முகாமையிடம் தாரை வார்த்தது என்றால், பாலி மாநாட்டுத் தீர்மானங்கள் இந்தியாவிலுள்ள ரேஷன் கடைகளைக் கண்காணிக்கும் உரிமையை உலக வர்த்தகக் கழகத்திடம் தூக்கிக் கொடுத்திருக்கிறது.

விவசாயத்திற்கு மானியம் வழங்குவது குறித்து உலக வர்த்தகக் கழகத்தில் இரண்டுவிதமான சமனற்ற விதிகள் உள்ளன. “ஏழை நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் தமது ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியின் மதிப்பில் 10 சதவீத அளவிற்கே விவசாய மானியமாக வழங்கவேண்டும். இந்த மானியமும் 1985-86 ஆண்டைய விவசாய உற்பத்தியின் மதிப்பைத் தாண்டக்கூடாது” என நிபந்தனை விதித்துள்ள உலக வர்த்தகக் கழகம், “ஏகாதிபத்திய நாடுகள் விவசாயத்திற்கு வழங்கி வரும் நேரடி மற்றும் மறைமுக மானியங்களில், நேரடி மானியத்தில் மட்டும் 20 சதவீத அளவிற்குக் குறைத்துக் கொள்ள வேண்டும்” எனக் கூறுகிறது.

ஆனந்த் சர்மா
பாலி வர்த்தக மாநாட்டில் உரையாற்றும் இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா.

1995-இல் உலக வர்த்தகக் கழகம் தொடங்கப்பட்ட சமயத்தில் அமெரிக்க அரசு விவசாயத்திற்கு வழங்கிய மானியம் ஏறத்தாழ 6,100 கோடி அமெரிக்க டாலர்கள். ஐரோப்பிய யூனியன் நாடுகள் அளித்துவந்த விவசாய மானியம் ஏறத்தாழ 9,000 கோடி யூரோ. அச்சமயத்தில் உலக வர்த்தகக் கழகத்தைச் சேர்ந்த பல்வேறு ஏழை நாடுகள் விவசாயத்திற்கு ஒரு பைசாகூட நேரடி மானியம் வழங்கவில்லை என்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உ.வ.க.வின் விதிகள் அடிப்படையிலேயே நியாயமற்றவை எனப் புரிந்து கொள்ள முடியும்.

2001-ஆம் ஆண்டு நடந்த தோஹா மாநாட்டில் விவசாய மானியம் தொடர்பான விதிகளை ஏழை நாடுகள் உடனடியாக அமலுக்குக் கொண்டுவர வேண்டும்; விவசாயம் சாராத பொருட்களுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தில் காணப்படும் அதிகமான சுங்க வரி, காப்புத் தடைகள் உள்ளிட்டவற்றை நீக்க வேண்டும் என அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் கோரின. மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் இந்த அபாயகரமான கோரிக்கைக்கு தோஹா வளர்ச்சி நிரல் எனப் பெயரும் சூட்டப்பட்டது.

விவசாய மானியத்தைக் குறைக்கச் சொல்லி ஏழை நாடுகளை நிர்பந்தித்துவந்த அமெரிக்க அரசோ தான் வழங்கும் மானியத்தில் ஒரு தம்பிடிகூடக் குறைக்கவில்லை. அமெரிக்க அரசு 2010-ஆம் ஆண்டில் விவசாயத்திற்கு வழங்கிய மானியம், 1995-ஆம் ஆண்டை ஒப்பிடும்பொழுது இருமடங்காக, 13,000 கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரித்திருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் வழங்கும் விவசாய மானியம் 2002-இல் 7,500 கோடி யூரோ, 2006-இல் 9,000 கோடி யூரோ, 2009-இல் 7,900 கோடி யூரோ – என ஏறுவதும் இறங்குவதுமாக நீடித்து வருகிறது. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த பத்தாண்டுகளில் விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை என்பதோடு, அந்நாடுகள் நேரடி மானியத்தை மறைமுக மானியப் பட்டியலுக்குக் கொண்டு சென்று தப்பித்துக் கொள்ளும் தந்திரத்திலும் ஈடுபட்டன.

ரேஷன் கடைவிவசாய மானியத்தைக் குறைப்பது தொடர்பான பிரச்சினை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இழுபறியாக இருந்துவரும் நிலையில், இது குறித்து பாலி மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் உ.வ.க.வில் நிலவும் சமமற்ற, அநீதியான விதிகளை முடிவுக்குக் கொண்டு வரவில்லை. மாறாக, ஏழை நாடுகளுக்குக் கிடைத்ததெல்லாம் ஒரு நான்கு ஆண்டு கால அவகாசம் மட்டும்தான். அதுவரை (2017 முடிய) இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் தற்பொழுது வழங்கிவரும் மானியங்களையும் உணவுப் பொருள் கொள்முதலையும் தொடர முடியும். இந்தக் கால அவகாசம்கூட ஏழை நாடுகளுக்கு இனமாகக் கிடைத்து விடவில்லை. ஏற்றுமதி வர்த்தகத்திற்குத் தடையாக உள்ள அதிகமான சுங்க வரி, காப்பு வரிகள் உள்ளிட்ட தடைகளை நீக்குவதற்கு ஒப்புக்கொண்ட பிறகுதான் கிடைத்தது.

இம்மாநாடு தொடங்குவதற்கு முன்பாக உணவுப் பொருள் கொள்முதல் தங்களின் இறையாண்மை பொருந்திய நடவடிக்கை, கால அவகாசம் கொடுக்கும் தந்திரங்களையெல்லாம் ஏற்றுக் கொள்ளமாட்டோம் என வீராப்புப் பேசிய இந்திய அரசு, இறுதியில் இந்திய மக்களை மட்டுமல்ல, தன்னை நம்பியிருந்த பிற ஏழை நாடுகளையும் கைவிட்டுவிட்டு அமெரிக்காவிடம் சரணடைந்திருக்கிறது. விவசாய மானியத்தையும் உணவுப் பொருட்களுக்குத் தரப்படும் மானியத்தையும் ஒன்றாக இணைக்கக் கூடாது. மானியத்தின் மதிப்பைத் தற்பொழுதுள்ள விலைவாசி மற்றும் உற்பத்திச் செலவைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும். ஏழை நாடுகளின் உணவுப் பொருள் கொள்முதலில் உ.வ.க. தலையீடு செய்யக் கூடாது என்ற கோரிக்கைகளுக்காக இந்தியா போராடும் என எதிர்பார்த்திருந்த ஏழை நாடுகளின் நெற்றியில் பட்டை நாமத்தைச் சாத்திவிட்டது, இந்திய அரசு.

  • caption-006-ration-shop-1தற்பொழுது எந்தெந்த உணவுப் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அரசால் அறிவிக்கப்படுகிறதோ, அவற்றைத் தாண்டி வேறு உணவுப் பொருட்களுக்கு ஆதார விலைகளை அறிவிக்கக் கூடாது. தற்பொழுதுள்ள நிலையிலிருந்து ஆதார விலையை அதிகரிக்கக்கூடாது.
  • உணவுப் பொருள் கொள்முதலைத் தற்பொழுதுள்ள அளவிலிருந்து அதிகரிக்கக்கூடாது; ரேஷன் அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தாண்டக்கூடாது. உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பொருட்களைத் தாண்டி, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் போன்றவற்றை ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிக்கக் கூடாது.
  • இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் அனைத்தும் பொது விநியோகத்திற்காகக் கொள்முதல் செய்து வைத்திருக்கும் உணவுப் பொருட்களின் இருப்புக் கணக்கை உ.வ.க. மேற்பார்வையிட அளிக்க வேண்டும்.

– இவையெல்லாம் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் அனுமதித்துள்ள கால அவகாசத்தோடு இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள். சமையல் எரிவாயுவுக்கும் மண்ணெண்ணெக்கும் வழங்கிவரும் மானியத்தைச் சிறுகச்சிறுக வெட்டிவரும் இந்திய அரசிற்கு; மானியத்தைப் பணமாக வழங்கும் “உங்கள் பணம் உங்கள் கையில்” திட்டத்தின் மூலம் சந்தை விலைக்கு உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளுவதை நோக்கி ஏழை மக்களை நெட்டித் தள்ளிவரும் இந்திய அரசிற்கு உ.வ.க. விதித்துள்ள நிபந்தனைகள் கசப்பாக இருக்கப் போவதில்லைதான். ஆனால், இந்நிபந்தனைகள் உணவுப் பாதுகாப்பு, உணவுப் பொருள் கொள்முதல் குறித்து நாடாளுமன்றத்திற்குள்ள இறையாண்மைமிக்க அதிகாரத்தைப் பறித்து, உலக வர்த்தகக் கழகத்திடம் ஒப்படைக்கின்றன என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

ஒருபுறம் மானிய வெட்டு, இன்னொருபுறம் ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்திலுள்ள தடைகளை நீக்குவது என்பது இந்திய விவசாயிகளை மட்டுமல்ல, சிறு உற்பத்தியாளர்கள் மீதும் இறங்கியிருக்கும் இடியாகும். பன்னாட்டு விவசாயக் கழகங்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாய விளைபொருட்களை இந்தியாவில் கொட்டுவதற்கு இந்த ஒப்பந்தம் கதவைத் திறந்துவிட்டிருப்பதாக எச்சரிக்கிறார், சமூக ஆர்வலர் சுமன் சகா. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைத் தடையின்றி இறக்குமதி செய்வது இந்தியப் பாரம்பரிய விவசாயத்தின் மீது வைக்கப்படும் கொள்ளிக்கட்டையாகும்.

இத்துணை பெரிய அபாயத்தில் நாடு சிக்க வைக்கப்பட்டிருக்கும் பொழுது, இந்தியத் தரகு முதலாளித்துவக் கும்பலோ இந்த ஒப்பந்தத்தை ஆரவாரத்தோடு வரவேற்றுள்ளது. அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் உள்ளிட்ட பசிபிக் கடலையொட்டிய நாடுகளுக்குத் தமது உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள தடைகள் இந்த ஒப்பந்தத்தால் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கைதான் தரகு முதலாளித்துவக் கும்பலின் குதூகலத்திற்குக் காரணம். இந்தக் கும்பலின் ஆதாயத்திற்காக விவசாயிகள், ஏழை மக்களின் நலன் பாலி மாநாட்டில் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது.

உணவுப் பொருளுக்கும் விவசாயத்திற்கும் எவ்வளவு மானியம் வழங்க வேண்டும், எப்படி வழங்க வேண்டும் என்பதெல்லாம் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆனால், இந்திய அரசோ இது குறித்து எந்தவொரு விவரத்தையும் சாதாரண பொதுமக்கள் தெரிந்துகொள்ளும்படி வெளியிடாமல்; இதனால் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகளிடமோ, ஏழை மக்களிடமோ, விவசாய சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகளிடமோ எந்தவொரு கலந்தாலோசனையும் நடத்தாமல்; கையெழுத்திடுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் விவாதிப்பதைக்கூடப் புறக்கணித்துவிட்டு, அமெரிக்காவும் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளும் நீட்டிய அடிமைச் சாசனத்தில் கையெழுத்திட்டுத் திரும்பியிருக்கிறது. கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையை, அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய அக்கறையே இல்லாத நிபுணர்கள் என்ற அயோக்கியர்கள் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு தீர்மானிக்கிறார்கள் என்பது மக்களை எந்தளவிற்கு இந்த ஆளுங்கும்பல் கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

இந்தத் திமிரையும், நமது நாட்டு உரிமைகளை அமெரிக்காவிடம் ஒப்புக் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கும் இந்த வெட்ககேட்டையும், துரோகத்தனத்தையும் எதிர்த்து எந்தவொரு எதிர்க்கட்சியும் போராட முன்வரவில்லை. இந்தியாவின் அரைகுறை இறையாண்மை பாலியில் உருவப்பட்டதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகள், அமெரிக்க போலீசாரால் இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி அவமானப்படுத்தபட்டதற்கு எதிராக “சவுண்டு” விடுவதில் ஆளுங்கட்சியோடு கைகோர்த்துக் கொண்டுள்ளன. பாலி மாநாட்டு முடிவுகள் குறித்து நாடாளுமன்றத்துக்குள் கேள்வி எழுப்பித் தனது கடமையை முடித்துக்கொண்ட சி.பி.எம்., தேவயானி வழக்கில் வலதுசாரி பா.ஜ.க.விற்குப் போட்டியாக ரோட்டில் இறங்கிப் போராடுகிறது. மன்மோகன் சிங் அரசு பாலி மாநாட்டு முடிவுகளில் கையெழுத்துப் போட்டு துரோகமிழைத்திருக்கிறது என்றால், சி.பி.எம். உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரச்சினையை மடைமாற்றுவதன் மூலம் துரோகமிழைத்துள்ளன.

– திப்பு
____________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

____________________________________

கோயம்பேடும் குற்ற உணர்ச்சியும்

9

நின்று பெய்யும் மழை போல் எந்த அவசரமும் இன்றி நிதானமாக இறங்கிக் கொண்டிருந்தது மார்கழி மாதப் பனி. சென்னை நகரம் குளிருக்கு இதமாக போர்வைகளுக்குள் ஒடுங்கிக் கொண்ட நாள் ஒன்றின் நள்ளிரவில் கோயம்பேடு காய்கனிச் சந்தை அமாவாசை இரவின் தேன் கூட்டைப் போல் சுறுசுறுப்போடு இயங்கிக் கொண்டிருந்தது. புதிய செல்களின் பிறப்பும் பழையதன் இறப்புமாக வாழ்தலைத் தொடரும் உடலைப் போல் அங்கே ஒரு கூட்டம் நினைவைக் கொல்லும் கடுமையான உழைப்போடு நகர்ந்தவாறே இருக்க, வேறு சிலர் கடைகளின் திண்ணையோரங்களில் பிளந்தவாயோடு மல்லாந்திருந்தனர். உழைப்பும் ஓய்வும் பிரித்தறியவொண்ணாத படிக்கு ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து கலந்திருந்தது.

நள்ளிரவில் டீக்கடை
நள்ளிரவில் ஒரு கப் டீ

“சார், அவங்கெல்லாம் இங்கேயே வேலை பாக்குறவங்க தான். இங்கே கீரை மொத்த சந்தை பதினோரு மணியிலேர்ந்து துவங்கி ரெண்டு மணிக்குள்ளே சில்லறைக் கடைகளுக்கு அனுப்பறதோட முடியும். அப்புறம் காய்ச் சந்தை தொடங்கும். அதே நேரத்திலே பூ சந்தையும் தொடங்கும். கடேசியா பழச் சந்தை. இவங்கள்ல சிலர் காய்ச் சந்தைல கூலி வேலை பார்க்கிறவங்க, சிலர் பழச் சந்தைல வேலை பார்க்கிறவங்க.. அவங்க வேலை நேரம் வார்ற வரைல இங்கெயே தான் தூங்கிக்கினு இருப்பாங்க” – ராஜேந்திரன். வயது நாற்பது இருக்கலாம். ரத்தச் சிவப்பாக மின்னிய கண்களில் ஆர்வம் தொனிக்கப் பேசினார். கீரைச் சந்தையின் அருகே தேனீர்க் கடை நடத்தி வருகிறார்.

”இங்கெயேவா…? வீடு, குடும்பம், பொண்டாட்டி, புள்ளைங்க….”

”அதெல்லாம் ஊர்ல இருக்கும் சார். குடும்பத்த வச்சி பொழைக்கிற மாதிரியா சார் மெட்ராசு இருக்கு?” எமது ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியப்பட்டார்.

“உங்களுக்கு எப்படிண்ணா போகுது?”

”இது நம்ப கடை தான். நானும் அண்ணனும் பாத்துக்கறோம். காலைல அவரு இருப்பாரு.. நைட்டு நான் பாத்துக்கறேன்”

”நீங்க எங்கே வீடு பிடிச்சிருக்கீங்க?”

“வீடா… தோ, அந்தாண்ட உருண்டு கெடக்கானே அவன் தான் என் அண்ணன்” வெள்ளேந்தியான சிரிப்போடு தொடர்ந்தார் “நமக்கு விழுப்புரம் சார். கல்யாணமாகி ஒரு பய்யன் ஒரு பொண்ணு. பய்யன் நாலாப்பு படிக்கிறான் பொண்ணு ரெண்டாப்பு படிக்கிது… மூணு மாசத்துக்கு ஒரு தபா ஊருக்குப் போவேன்.. அப்டியே போகுது சார்”

“ஒரு நாளைக்கி எவ்ளோ வியாபாரம் நடக்கும்?”

நள்ளிரவில் ஒரு கப் டீ
வேலைக்கு இடையில் ஒரு இளைப்பாறல்

”அது சொல்ல முடியாது சார்.. ஒரு நா ஓடும், ஒரு நா ஓடாது. எப்டி பாத்தாலும் செலவெல்லாம் போக கைல ஒரு ஐநூறு ரூபா நிக்கும்.. மூணு பேரு வேலை செய்யிறாங்க.. அவங்களுக்கு கூலி கொடுத்தது போக நம்ப கைல ஓராளு கூலிக்காசு மிஞ்சினா போதுமே சார்” பேசிக் கொண்டிருந்தவர் எதிரே பம்பு ஸ்டவ் மேல் கொதித்துக் கொண்டிருந்த ஈய குண்டானைப் பார்த்தவாறே அவசரமாக ஓடினார்..

“டேய் டேய்.. த்தா அடுப்புல கொதிக்க வுட்டுனு எங்கட … போயிட்டே.. தா பாரு அடி புடிச்சி குண்டா ஓட்ட வுழுந்திடிச்சி..”.  ”ஊர்ல இருந்து போனு வந்திச்சிண்ணா” என்று முணுமுணுத்தவாறே இவரை நேரடியாக பார்க்காமல் குண்டானை இறங்கி வைத்தவர் ஒரு இளைஞர். குண்டானில் வெந்து கொண்டிருந்தவற்றை வேறு பாத்திரத்தில் ஊற்றி விட்டு உள்ளே பார்த்தார். கீழ்ப் பகுதி தீர்ந்து போய் நக அளவு பொத்தல் போட்டிருந்தது..

“போச்சி சார், இதுக்கு நூத்தம்பது ரூவா போயிடும்” திரும்பி நம்மிடம் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு அந்த இளைஞரிடம் கோபத்தைக் குறைத்துக் கொண்டு கொஞ்சம் தன்மையாக பேசத் துவங்கினார்..”தா பாரு, இத்தோட நாலாவது குண்டானு இப்டியே தீஞ்சி போயிருக்கு… நா இன்னா சொல்றேன்னா……” நாங்கள் நகர்ந்தோம். வசவும் பேச்சும் சந்தோஷமும் துக்கமும்.. இன்னும் சகல மனித உணர்ச்சிகளையும் உழைப்பும் பிழைப்பும் ஒரு பெரும் போர்வையாக போர்த்துக் கொண்டு கிடக்கிறது அங்கே.

அது பொங்கலுக்கு முந்தைய நாள் இரவு. வினவின் செய்தியாளர் குழுவாக நாங்கள் கோயம்பேடு சந்தையின் எதிர்புறமாக கூடினோம். வார்த்தைகளிலும், புகைப்படங்களிலும் பதிவு செய்ய சில குழுக்களாக பிரிந்து கொண்டோம். கோயம்பேடு காய்கனிச் சந்தையின் இயக்கத்தையும் அவ்வியக்கத்தின் அங்கங்களையும் அறிந்து வருவதுதான் நோக்கம்.

பொங்கலுக்கு வந்திறங்கும் மஞ்சள்
பொங்கலுக்கு வந்திறங்கும் மஞ்சள்

பொங்கல் என்பதால் புது மஞ்சள் கிழங்குப் பொதிகள் லாரி லாரியாக வந்து இறங்கிய வண்ணம் இருந்தது. கிழங்கு மூடைகளை இறக்குவது, நகர்த்துவதும், தரம் பிரிப்பதும், ஏலம் கேட்பதும் என அந்த இடமே போர்க்களமாக காட்சியளித்தது. குட்டியானை, எய்ச்சர் டெம்போ, 407, டாடா மற்றும் அசோக் லேலண்டு லாரிகள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பல நூறு டன் மஞ்சள் வரிசை கட்டி நின்றது. நூற்றுக்கணக்கான சுமை தூக்கும் தொழிலாளிகள் தேனைக் குடித்துத் தீர்த்து கூட்டைக் கலைத்துக் களையும் தேனீக்களைப் போல் லாரிகளில் இருந்து மூடைகளை இறக்கி எடுத்துச் சென்றனர். மஞ்சள் பொதிகள் காலத்தை விட வேகமாக கறைந்து மறைந்து கொண்டேயிருந்தன.

அங்கே வாகனப் போக்குவரத்தையோ மனிதப் போக்குவரத்தையோ ஒழுங்கு படுத்தவென்று தனியே எவரும் இல்லை – அப்படி ஒரு தேவையும் இருக்கவில்லை. தரையில் சிதறிக் கிடக்கும் கறிகாய்களால் வழுக்கி விழுவதைத் தவிர்க்க காலணி அணியாத கால்களோடு மூடைகளைச் சுமந்து ஓடும் அம்மனிதர்களின் உடல் மொழியில் ஒரு ஒழுங்கு இருந்தது. ஈரச் சணல் மூடைகளைச் சுமந்து சுமந்து முதுகுத் தோலே கருத்துக் காய்த்த அவர்கள் மூடைகளைத் தூக்கிக் கொண்டு தரை பார்க்க குனிந்தவாறே ஒடும் போது எதிர்வரும் எவரையும் நிமிர்ந்து பார்ப்பதில்லை. எனினும், மோதிக் கொள்வதில்லை. மூடைகளையும் தவற விடுவதில்லை. விவரிக்கவியலாத தன்னுணர்வினாலும் உழைப்பாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட நேர்த்தி அங்கே தானாகவே அமைந்திருந்தது.

சுமையில் வளைந்த முதுகு
காய் சுமக்கும் மனித உடல்

“ஏய்… ஏய்..” என்பது தான் சுமை தூக்கும் தொழிலாளிகளின் வேலை நேரத்திய பேசு மொழி. ”நான் முதுகு தாங்காத சுமையோடு வருகிறேன், வழியை மறிக்காமல் கொஞ்சம் ஒதுங்கி நில்லேன்” என்பதை அந்த சுருக்கமான “ஏய்” எச்சரிக்கையாகவும், பணிவாகவும், வசவாகவும், நம் மீதான அக்கறையோடும் தெரிவித்தது. அந்த மொழியும் அவர்களுக்குள் தேவையிருக்கவில்லை, அந்த உலகத்துக்குள் ஊடுருவியிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கும் ’புறஜாதியாராகிய’ கமிஷன் ஏஜெண்டு முதலாளிகள் மற்றும் புதிய ட்ரைவர்களுக்காகவுமே தேவைப்பட்டது. எச்சரிக்கையை உதாசீனப்படுத்தத் துணியும் நாசூக்கு உலகின் கனவான்கள் தங்கள் பிறப்பு சந்தேகத்துக்கு உள்ளாக்கப்படுவதைக் கேட்டு ஜீரணிக்கப் பழகிக் கொள்ள வேண்டியது தான்.

வளைந்த கொக்கியை இடையில் சொறுகியவாறே அடுத்த லாரியை எதிர்நோக்கி நிற்கும் தொழிலாளர்கள் சிலரை கண்டோம். கூடவே அந்த உலகத்தின் ஓரத்தில் அப்போது தான் விழித்தெழுந்து உணர்ச்சிகளற்ற கண்களோடு தங்களைச் சுற்றி நிகழ்ந்து கொண்டிருந்த போர்க்களத்தை வெறித்துக் கொண்டே சோம்பல் முறித்த வேறு சிலரிடம் சென்றோம்.

“எம் பேரு ஏகாம்பரம் சார். நமக்கு ஊரு திருச்சி பக்கம்..” கண்ணோரப் பீழையைத் துடைத்துக் கொண்டு கைலியின் இடை மடிப்பில் சுருட்டி வைத்திருந்த பீடியைத் துளாவி எடுத்துப் பற்ற வைத்தார். ஐம்பது வயதுக்கு மேல் இருக்கலாம். மெலிந்து வற்றியிருந்தார்.

”இன்னைக்கு நீங்க வேலைக்குப் போகலியாண்ணே?”

இறக்கி விடப்பா
இறக்குவதும் ஏற்றுவதும் சந்தையின் வாடிக்கை

”இவுக பூராவும் சங்கத்துல இருக்கறவுக. வேலை எப்பயும் இருக்கும். நமக்கு யார்னா யாவாரி வந்து உள்ளேர்ந்து வெளியே லோடு தூக்கிப் போக கூப்டா தான் சார்”

”ஏன், நீங்களும் சங்கத்துல சேரலை?”

”நானெல்லாம் ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி இங்க வந்து பத்து நாளோ மாசமோ வேலை பார்த்துட்டு ஊருக்கே போயிடுவேன்பா?” எதிரிலிருக்கும் எங்கள் முகத்தைப் பாராமல் வேறெங்கோ வெறித்தவாறே பதிலிருத்தார்.

”ஏன், இங்கே உங்களுக்கு அவ்வளவு வேலை கிடைக்கிறது இல்லையாண்ணே?”

“இல்லபா… ஊர்ல நமக்கு விவசாயம் இருக்குபா” கவுரவக் குறைவான எதையோ சொல்வது போல் அவரது குரல் கம்மியது. நாங்கள் மேற்கொண்டு கேள்விகள் எதையும் கேட்காமல் அவர் முகத்தைப் பார்த்தோம். பீடியை இழுத்துக் கொண்டு தொடர்ந்தார்..

”திருச்சிப் பக்கம் ஊரு.. ரெண்டு பொட்ட புள்ளைங்க, ஒரு மகன். கண்ணாலம் இன்னும் ஆகலை. ரெண்டு ஏக்கரா நெலம் இருக்கு. இப்ப நெல்லு போட்டுருக்கோம். அறுவைக்கு தயாரா இருக்காம்.. இன்னைக்கு நைட்டு பஸ் ஏறிடுவேன். நடுவைக்கு, அறுவைக்கு, மருந்து காட்ட அப்பப்ப ஊருக்குப் போயிருவேன். இடையில பத்து நாளோ ஒரு மாசமோ இங்க வந்து எதுனா வேலை பார்ப்பேன். ஏதோ செலவுக்கு ஆகுமில்லே?”

”நீங்க இங்கே வந்துட்டா வயலை யார் கவனிப்பாங்க?”

“வீட்ல சம்சாரம் இருக்கா.. அவ பார்த்துக்குவா. எதுனா அம்பளையாளு செய்ய வேண்டிய வேலைன்னா மட்டும் நான் போயிட்டு வந்துருவேன்”

“பிள்ளைங்க?”

கோயம்பேடு சந்தை
உழைப்பாளிகள் இயக்கும் கோயம்பேடு சந்தை

“பொண்ணுங்க ரெண்டும் மூத்தது. வீட்ல தான் இருக்காங்க. பய்யன் கடைசி. படிக்கிறான்.. நல்லா படிப்பான் தம்பி. எங்கனா வேலைய பிடிச்சிக் குடுத்துடனும். இதெல்லாம் நம்மளோடு போகட்டும். என்னா நான் சொல்றது சரி தானே?” பேசியவாறே அவர் எழுந்தார். அதிகாலை 2 மணிக்கு அவரது உலகம் இயக்கத்தைத் துவங்கியிருந்தது. தவிர்க்க முடியாத காலைக் கடமைகளில் இருந்து துவங்க வேண்டும்.

“கக்கூசு எங்கண்ணே இருக்கு?”

“வா, அங்கே தான் போறேன்”

கக்கூசு எனப்பட்டது அருகிலிருந்த இடுக்கு ஒன்றினுள் ஒளிந்து கொண்டிருந்தது. முகப்பில் நீல நிற ப்ளாஸ்டிக் ட்ரம் ஒன்று போடப்பட்டு அதில் தண்ணீர் நிறைக்கப்பட்டிருந்தது. சிறிய ப்ளாஸ்டிக் கோப்பைகளில் தண்ணீர் சேந்திக் கொண்டு உள்ளே செல்ல வேண்டும். ஏகாம்பரம் அருகிலிருந்த வாளி ஒன்றில் தண்ணிர் நிரப்பிக் கொண்டார்.

”ஏய்.. இந்தா நில்லுபா; இன்னாபா நென்சிகினுகீறே.. இத்தினி தண்ணிய நீ ஒண்டி தூக்கினு போனா மத்தவங்களுக்கு வோணாமா? சொல்லினே கீறேன்.. நில்லுபான்னா” கக்கூசு வாயிலுக்கு எதிரே அமர்ந்திருந்த வயதான அம்மா ஓங்கிக் குரல் கொடுத்தார்.

”நாள் குளிக்கப் போறேன்” பதில் எதுவும் எதிர்பார்க்காமல் ஏகாம்பரம் வாளியோடு உள்ளே நுழைந்தார்… சின்ன வாளி தான். மிஞ்சிப் போனால் ஐந்து லிட்டர் தண்ணீர் கொள்ளும். அவருக்கும் வற்றிச் சிறுத்த உடல் தான் என்றாலும் அதில் எப்படிக் குளிப்பார் என்பதை எம்மால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தலைப்பிரட்டை கூட நீஞ்சத் திணறும் அளவு அது.

உழைப்பே வாழ்வாக
உழைப்பே வாழ்க்கை

கக்கூசு எனப்பட்ட அந்த அமைப்பினுள் மூன்று கழிவறைகள் இருந்தன. மூன்றுக்கும் சேர்த்து ஒன்றே முக்கால் கதவுகள் இருந்தன. அவையும் கீல்கள் முறிந்து சார்த்தி வைக்கப்பட்டிருந்தன. உள்ளே பீங்கான் கோப்பையின் வெண்மை தெரியாதபடிக்கு மக்கிய அரக்கு நிற படிமம் போர்த்தியிருந்தது. அது நீரூற்றாது தேங்கிய மலம் அல்ல. பல்லாண்டுகளாக பினாயில் காணாது உறைந்து போன மஞ்சள் பிசுக்கு. சுவரெங்கும் வெற்றிலைக் கறையேறியிருந்தது. எனினும், பேருந்து நிலைய கழிவறைகளில் காணக்கிடைக்கும் பின்னவீனத்துவ ஓவியங்களும் இலக்கியங்களும் இல்லை.

கழிவறைகளின் பக்கவாட்டில் சிறு நீர்க்கழிப்பதற்காக நான்கு கோப்பைகள் நிறுவப்பட்டிருந்தன. அதில் இரண்டு உடைந்து போயிருக்க மூன்றாவது பாலித்தீன் கவர்களாலும் உடைந்த சீப்புகளாலும் தேய்ந்த சோப்புகளும் வேறு சில்லறைப் பொருட்களாலும் நிரம்பியிருந்தது. அதன் பயன்பாட்டைக் குலைக்க விரும்பாமல் நான்காவதை அணுகினோம். அந்தக் கோப்பை மேலும் கீழும் பைப்புகளின் பிடிமானமின்றி அந்தரத்தில் நின்றது. அதிசயம் தான். கடைசியில் வெடிக்க காத்திருந்த சிறுநீர்ப் பையை சமாதானம் செய்ய கழிவறையே கைகொடுத்தது.

கழிவறைகளுக்கு எதிர்புறம் அரையடிக்கு தரை உயர்த்தப்பட்ட அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. மூன்று தண்ணீர் குழாய்களில் இரண்டின் மண்டையில் திருகும் காதுகள் இல்லை. அவற்றின் குரல்வளையை மரத்துண்டாலும் மட்கிய துணியாலும் அடைத்திருந்தனர். நடுவில் இருந்த குழாயிடம் இவையெல்லாம் இருந்தும் புண்ணியமில்லை. ஏகாம்பரம், இடையில் சாயம் போன காசித்துண்டு ஒன்றை இறுக்கிக் கட்டியவாறு தனது சொரசொரப்பான உள்ளங்கையால் தோலைத் தேய்த்துக் கொண்டிருந்தார். அவர் வாளியில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் மீதமிருந்தது. வெளியேறினோம்.

”சார், சரியா சில்றை அஞ்சு ரூவா குடு சார்” அந்த அம்மாள் கடுகடுப்போடு இருந்தார். ஐந்து ரூபாய் நாணயம் ஒன்றைக் கொடுத்து விட்டு நாங்கள் அவருக்கு அருகிலிருந்த கல்லில் அமர்ந்தோம்.

“உங்களுக்கு எந்த ஊரும்மா?” வினோதமாக பார்த்தார்.

எல்லோருக்கும் இங்கு வாழ்வுண்டு
எல்லோருக்கும் இங்கு வாழ்வுண்டு

“இன்னாத்துக்கு கேக்கிறே… யாரு நீனு?” அவரது பார்வையில் சந்தேகம் இருந்தது. அந்தக் கேள்வியை அந்த இரவில் அந்த இடத்தில் மட்டும் தான் எதிர் கொண்டோம்.

”இல்லம்மா நாங்க பத்திரிகையில இருந்து வாறோம். இந்த சந்தையைப் பத்தி ஒரு ரிப்போர்ட் எடுக்க வந்திருக்கோம்”

”இங்கெ தண்ணீ இல்லேன்னு எயுதுபா. சாயந்தரம் நாலு மணிக்குள்ளே தண்ணீ தீந்து பூடுதுபா”

”இங்கே கார்ப்பரேசன்லேர்ந்தா தண்ணி வருது?”

“காப்புரேசனா..? அதெல்லாம் இல்லபா. தோ மோட்டாரு போட்டு ஏத்துவோம். கீழயே இல்லன்னா இன்னா பன்றது?”

”நீங்களா காண்டிராக்டு எடுத்திருக்கீங்க?”

“நானு வேலைக்கி இருக்கம்பா. இந்த மார்கெட்டுல மொத்தம் எளுவதுக்கு மேல கக்கூசு கீது. அத்தினியும் ஒரே ஆளு தாம்பா காண்டிராக்டு எடுத்துகுறான்”

“மாசத்துக்கு எவ்வளவு சம்பளம் தர்றாங்க?”

“ஆயிரத்து எறநூறு ரூவா தறாங்க” என்றவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். ஒரு கக்கூசில் குறைந்தபட்சமாக நாளொன்றுக்கு 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் கூட வசூலாகிறது என்றார். இவருக்கு அறுபத்தைந்து வயதாகிறது; கணவர் இறந்து விட்டார்; மதுரவாயலில் இருந்து வருகிறார். தினமும் அதிகாலை மூன்று மணிக்கு சேர் ஆட்டோவில் வருபவர் இரவு பதினோரு மணிக்குத் திரும்புகிறார். போக்குவரத்துக்காக மட்டும் தினசரி முப்பது ரூபாய் செலவகிறதென்றார். ஒரே மகனுக்கும் திருமணமாகி விட்டதாம்; அவனுக்கும் தனியார் நிறுவன வேலை – கஷ்ட ஜீவனம்.

“ஆயிரத்தி இருநூறு ரூபாயிலே தொள்ளாயிரம் ரூபாய் போக்குவரத்துக்கே செலவு செய்துட்டீங்கன்னா எதுவுமே மிஞ்சாதேம்மா?”

“இன்னா பன்றதுபா.. சுகரு பிரசரு… வேற இன்னா வேலை செய்ய முடியும் சொல்லு? ஏதோ இதுவாச்சியும் கிடைச்சா வூட்ல ஒரு ஆதரவா இருக்குமே. இங்கே குந்தினு இருந்தா அதுவாச்சியும் கிடைக்கும். வூட்ல சும்மா குந்திகினு இருந்தா என்னா கிடைக்கும் சொல்லு?”

காத்திருக்கும் கீரைக் கட்டுகள்
காத்திருக்கும் கீரைக் கட்டுகள்

நாங்கள் திரும்பினோம். சந்தை மேலும் பரபரப்பாகியிருந்தது. மொத்த சந்தையும் ஒரே உடலாக ஒரே ஆன்மாவாக எழுந்து நின்றது. அந்த உடலில் பல்வேறு பாகங்களுக்கு பாயும் ரத்த நாளங்களாக சுமை தூக்கும் தொழிலாளிகள் அங்கும் இங்குமாய் சுமைகளோடு ஓடிக் கொண்டிருந்தனர். நாங்கள் அயர்ந்து நிற்கும் நேரமெல்லாம் எங்கிருந்தோ கேட்ட “ஏய்” நினைவுகளுக்கு உயிரூட்டியது. சங்கத்தில் சேர்ந்திருக்கும் சுமைதூக்கும் தொழிலாளிகளுக்கு ஒரு மூடைக்கு ஒரு ரூபாய் கூலி. எனவே அதிக மூடைகளுக்கு அதிக கூலி. வயதில் இளைய தொழிலாளிகள் சிலர் ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு மூடைகளைச் சுமந்து கொண்டு ஓடினர்.

இந்தப் பரபரப்புகளுக்கு இடையே எண்பது வயது மதிக்கத் தக்க முதியவர் இரண்டு பிளாஸ்டிக் கித்தான்களில் கறிகாய்களை நிறைத்துக் கொண்டு சந்தையின் பக்கவாட்டு வாயிலோரம் அமர்ந்திருந்தார். நாங்கள் அவரிடம் சென்றோம்.

“என் பேரு கனசபை தம்பி. இந்த கறிகாயெல்லாத்தையும் மகாபலிபுரம் கொண்டு போயி விக்கனும். என்னோட சம்சாரம் வாழக்கா வாங்க உள்ளே போயிருக்கா.. நமக்கு முடியல்லே. புள்ளைங்க யாரும் இல்ல. முதியோர் துட்டுக்கு எழுதுப் போட்டும் கிடைக்கலே. தினமும் ரவைக்கு இங்கே வந்துடுவோம். இங்கியே தூங்கிட்டு இந்த நேரத்துக்கு கறிகா வாங்கிட்டு பஸ்சுல ஏத்திகிட்டு போவோம். ஒரு நாளைக்குத் தொள்ளாயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்வோம். பஸ்காரன் லக்கேஜுக்கு 20 ரூபாயும் மாமூலா 40 ரூபாயும் வாங்கிக்கிறான். எல்லா கறிகாயும் மிஞ்சாம வித்தா அம்பதோ நூறோ மிஞ்சும்..”

உழைப்புக்கு ஓய்வில்லை
உழைப்புக்கு ஓய்வில்லை

தினசரி சுமார் ஒருலட்சம் பேர்களுக்கும் மேல் வந்து செல்லும் இந்த சந்தை இவரைப் போல் எண்ணற்றவர்களை ஒரு தாயைப் போல் அரவணைத்துக் காக்கிறது. தன்னை நாடி வருபவர்களின் உழைப்பை மதித்து போஷிக்கிறது. இவரைப் போல் ஆதரவற்ற முதியவர்கள் பலர் இங்கே மிஞ்சும் கறிகாய்களை குறைந்த விலைக்கு வாங்கிச் சென்று தெருத்தெருவாக கூடைகளில் சுமந்து கூவிக்கூவி விற்றுப் பிழைக்கிறார்கள். மீண்டும் இரவில் இங்கேயே ஒதுங்கிக் கொள்கிறார்கள். சிலர் காயம் பட்ட பழங்களையும் காய்கறிகளையும் குறைந்த விலைக்கு வாங்கி கூறு கட்டி விற்கிறார்கள். இவ்வாறு வாங்கி விற்கும் அளவுக்குக் கூட பொருளாதாரம் இல்லாதவர்களையும் இந்தச் சந்தை கைவிடுவதில்லை.

ஆண்டாளம்மாள் அப்படி ஒருவர் தான். ஆண்டாளம்மாவுக்கு 89 வயது. கணவரோ, பிள்ளைகளோ ஆதரவளிக்கக் கூடியவர்களோ இல்லாதவர். கறிகாய்கள் வாங்கி விற்க குறைந்த பட்சமாகவாவது தேவைப்படும் சில நூறு ரூபாய்கள் கூட ’மூலதனம்’ இல்லை. அலைந்து திரிந்து கூடை சுமக்கத் தெம்பும் இல்லை. கேட்கும் திறன் ஏறத்தாழ போய் விட்டது, பார்க்கும் திறனும் நழுவிச் சென்று கொண்டேயிருக்கிறது. கேள்விக்குறியாய் வளைந்த முதுகு. உடுத்தியிருக்கும் சாயம் போன கிழிந்த சேலையைத் தவிற ஒரு ‘சரவணா ஸ்டேர்ஸ்’ பிளாஸ்டிக் கவரில் இன்னொரு சேலை வைத்திருக்கிறார். மேலும் ஒரு பெரிய ப்ளாஸ்டிக் கித்தானை வைத்திருக்கிறார். அவரிடம் சொத்து என்று பார்த்தால் இவ்வளவு தான்.

உழைப்புக்கு நாங்கள் சலிக்கவில்லை
உழைப்புக்கு நாங்கள் சலிக்கவில்லை

ஆண்டாளம்மாளின் நாள் தினமும் அதிகாலை இரண்டு மணிக்குத் துவங்குகிறது. தனது கித்தானைத் தூக்கிக் கொண்டு தள்ளாடியவாறே நடந்து செல்கிறார். லாரிகளில் இருந்து கறிகாய் மூடைகள் இறக்கும் இடங்களிலும், மூடைகள் அடுக்கி வைத்திருக்கும் இடங்களிலும், தூக்கிச் செல்லும் வழி நெடுகவும் சிதறிக்கிடக்கும் கறிகாய்களை அந்த கித்தானில் சேகரித்து வருகிறார். சந்தையின் ஒரு நுழைவாயிலருகே ஆண்டாளம்மாளின் ‘கடை’ இருக்கிறது. கறிகாய்களைக் கீழே கொட்டி அதைத் தனது இன்னொரு பழைய சேலையால் துடைத்து சுத்தம் செய்து அதே கித்தானை தரையில் விரித்து அதன் மேல் அழகாக அடுக்குகிறார். அவர் வியாபாரத்தை துவங்கும் போது அதிகாலை நான்கு மணியாகி விடுகிறது.  அவற்றை விற்றுத் தீர்த்து ஐம்பதோ நூறோ சேர்த்துக் கொண்டு அடுத்த நாளுக்காகவும் சாவுக்காகவும் காத்திருக்கத் துவங்குகிறார்.

ஆண்டாளம்மாள் தனது வாழ்க்கை குறித்து விவரிக்கும் போது அதில் துயரத்தின் சுவடு கொஞ்சம் கூட தென்படவில்லை. அது ஒரு தகவல் என்கிற மதிப்போடே தான் விவரித்துச் செல்கிறார். இப்படி சிதறிய கறிகாய்களைப் பொறுக்கி விற்பவர்கள் மாத்திரம் சுமார் நூறு பேர்கள் வரை அங்கே பிழைக்கிறார்கள். இவர்கள் தவிர காவலர்கள். பழச் சந்தையில் ஐந்து பத்துக் கடைகள் சேர்ந்து இரவுக் காவலர் ஒருவரை நியமித்துக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் தான் மொய்தீன் காட்வா.

”சார், என்ன பத்திரிகையா? வாங்க சார் நான் சொல்றேன்.. திருநெல்வேலிக்குப் பக்கம் நாங்குனேரி தான் நம்ம பூர்வீகம். எங்க அப்பாரு காலத்திலேயே இங்க வந்துட்டோம். அப்பா காட்வா பாய் மண்ணடில இரும்பு யாவாரம் பாத்தாரு. அந்தக் காலத்திலேயே லச்சாதிபதி சார் அவரு” காட்வா பாய் சிரித்துக் கொண்டே துவங்கினார்.

பொங்கலுக்கு செங்கரும்பு
பொங்கலுக்கு செங்கரும்பு

காட்வா பாயின் சகோதரர்கள் பங்கு பிரிப்பதில் ஏமாற்றி இவரை ஓட்டாண்டியாகத் துரத்தி விட்டுள்ளனர். தற்போது எழுபது வயதாகும் காட்வா பாய், இதற்கு முன்பு வடபழனியில் ஒரு மளிகைக் கடையில் வேலை பார்த்துள்ளார். ‘அஞ்சி கிலோ பார்சலோ, பத்து கிலோ பார்சலோ.. நல்லா பொட்டலம் போடுவேன் சார்’ என்கிறார். இங்கே வாங்கும் ஏழாயிரம் சம்பளத்தில் நாலாயிரத்தை வாடகைக்குக் கொடுத்து விட்டு மற்ற செலவுகளைச் சமாளிக்க தினமும் வேலை முடிந்து செல்லும் போது நூறு அல்லது இருநூறு ரூபாய்க்கு கீரை வாங்கிச் செல்கிறார். அதில் நாற்பதோ அம்பதோ நிற்கிறது.

”இன்ஷா அல்லாஹ் எனக்கு ஒரு குறையும் இல்லே சார். முன்னே எல்லாம் அஞ்சு வேளையும் தொழுவேன் அந்த புண்ணியத்துல ரெண்டு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் முடிச்சு குடுத்துட்டேன். இனி என்ன நானும் என் சம்சாரமும் தானே… காலம் அப்படியே போயிடும்” காட்வா பாயின் சிரிப்பில் அத்தனை அழகு. மேல் வரிசையில் இரண்டு பற்களும் கீழ் வரிசையில் ஒரு பல்லும் பெயர்ந்திருந்தது. அது இன்னும் அழகைக் கூட்டியது.

“நைட்டு வேலையை வச்சிக்கிட்டு எப்படி உங்களால தொழ முடியுது?”

“அதெல்லாம் முன்னே சார்… இப்ப எங்க தொழுதுகிட்டு.. பிழைப்புக்கே சரியா இருக்கே?” அதே சிரிப்பு.

நாங்கள் திரும்பினோம். கீரைச் சந்தை தான் எங்களது சந்திப்புப் புள்ளி; அது பழச்சந்தைக்கு நேர் எதிர் திசையில் இருந்தது. மனிதக் கடலுக்குள் நீண்ட தொலைவு நடக்க வேண்டியிருக்கும். மணி ஐந்தைக் கடந்திருந்தது, சந்தையின் இயக்கம் உக்கிரமாகியிருந்தது. மனிதத் தலைகளும், குரல்களும் கணிசமாக கூடியிருந்தது. ”ஏய்” என்கிற சங்கீதம் உச்சமடைந்திருந்தது.

’மார்னிங் வாக் போய்ட்டு அப்டியே சீப்பா எதுனா கிடைச்சா பர்சேஸ் பண்ணிட்டு வரலாமே’ என்கிற திட்டத்தோடு வந்திருந்த நாகரீக மனீதர்கள் சிலர் தென்பட்டனர். ரெபோக் ஷூ, பூமா ட்ராக் மற்றும் டீ அணிந்து குறுந்தாடியும் ரிம்லெஸ் கிளாசும் அணிந்திருந்த ஒரு வெள்ளை மனிதர் ஆண்டாளம்மாளின் கடை முன் தனது பெருந் தொப்பை அழுந்தக் குனிந்திருந்தார்.

“நோ நோ… இதுக்கு டெவெண்டி ரூபீஸா? பத்து ரூபா தருவேன்.. இஷ்டமிருந்தா குடு இல்லேன்னா விடு”

ஆண்டாளம்மாளுக்கு இந்த பேரமெல்லாம் காதில் கேட்டிருக்காது என்று எமக்குத் தெரியும்; எனினும் அவள் திருப்தியாக கறிகாய்களை அள்ளிக் கொண்டிருந்தாள். இன்றைக்கு அவள் ஐம்பது ரூபாய்கள் தேற்றி விடுவாள்.

நாங்கள் சந்திக்கும் இடம் நோக்கி நடையைப் போட்டோம்.

கோயம்பேடு பயணத்தை முடித்துவிட்டு தோழர்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு தோழர் சொன்னார்: “இந்த வாழ்க்கையை பாத்தப்புறம்தான் நம்மளோட வாழ்க்கை எவ்வளவு பாதுகாப்பானதுங்கிறத தெரிஞ்சுகிட்டேன். இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து இப்போதைக்கு விடுதலை இல்ல”.

–    வினவு செய்தியாளர் குழு

மண்டேலாவின் மறுபக்கம் !

10

ருப்பினப் போராளியாகச் சித்தரிக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா, கடந்த டிசம்பர் 5-ஆம் நாளன்று மறைந்துவிட்டார். நிறவெறிக்கு எதிராகவும் கருப்பின மக்களின் விடுதலைக்காகவும் அறவழியில் போராடி, சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டிய பெரும் தலைவர்” என்றும், கருப்பின மக்களின் உணர்வுபூர்வமான தலைவர்” என்றும் ஏகாதிபத்தியவாதிகள் முதல் சாமானிய மக்கள் வரை அனைவராலும் அவர் போற்றப்படுகிறார்.

நெல்சன் மண்டேலா
நெல்சன் மண்டேலா : போராளியா? ஏகாதிபத்திய விசுவாசியா?

நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்ட கருப்பினத் தலைவர் என்பதை வைத்து அவரது தியாகத்தைப் பலரும் போற்றுகின்றனர். எனில், எல்லோராலும் உன்னதமான மனிதராகப் போற்றப்படும் மண்டேலாவை எவ்வாறு மதிப்பிடுவது? மண்டேலா விடுதலையான சமயத்திலும் அதன் பின்னரும் வரலாறு எதைக் கோரியது, அதற்கு அவர் என்ன பங்காற்றினார், அதில் அவர் சாதித்தது என்ன என்பதை வைத்து அவரை மதிப்பிடுவதே சரியானதாக இருக்கும். மாறாக, ஒருவரது கடந்தகால சேவையையும் தியாகத்தையும் மட்டுமே வைத்து மதிப்பிடுவதென்பது சரியான அணுகுமுறையாக இருக்காது.

1980-களின் இறுதியில் நிறவெறிக் கொடுமைக்கு எதிரான கருப்பின மக்களின் வீரஞ்செறிந்த போராட்டத்தால் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசு உலக அளவில் அம்பலப்பட்டதோடு, சோவியத் ஒன்றியமும் அதன் ஆதரவு நாடுகளும் அணிசேரா நாடுகளும் தென்னாப்பிரிக்காவைத் தனிமைப்படுத்திப் பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தன. இந்நிலையில், தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தையும் மண்டேலா அங்கம் வகித்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசையும் ஆதரித்து வந்த சோவியத் ஒன்றியம் 1990-களின் தொடக்கத்தில் வீழ்ச்சியடைந்து, அங்கே முதலாளித்துவம் நிலைநாட்டப்பட்டது.

சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்குப் பின்னர், உலக மேலாதிக்கப் போட்டியில் முன்னிலைக்கு வந்த அமெரிக்க வல்லரசு, சோவியத் பாணி ஜனநாயகத்துக்கு மாற்றாக தனது பிராண்டு ‘ஜனநாயகத்தை’ முன்னிறுத்தி, தனது மேலாதிக்கத் திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் வேகமாகக் காய்களை நகர்த்தியது. அதன்படியே, தென்னாப்பிரிக்க நிறவெறி பாசிச போத்தாவின் ஆட்சியை அகற்றி விட்டு, ‘ஜனநாயகம் – மனித உரிமை’ என்ற முற்போக்கு முகமூடியணிந்த டி கிளார்க் ஆட்சியை அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் ஏற்படுத்தினர். கிரிஸ் கனி போன்ற கம்யூனிசத் தலைவர்களைப் படுகொலை செய்தும், சோவியத் சார்பிலிருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசை கம்யூனிஸ்டுகளிடமிருந்து பிரித்தும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசுடன் மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகள் சமரச உடன்பாட்டுக்கு வந்தனர். ஏகாதிபத்திய உலகிலும்கூட சமத்துவமும் ஜனநாயகமும் சாத்தியம்தான் என்ற மாயையை உருவாக்கும் திட்டத்துடன் காய்களை நகர்த்தினர். அதற்கான அடையாளமாக மண்டேலாவை முன்தள்ளினர்.

மரிக்கானா படுகொலை
கூலி உயர்வுக்காகப் போராடியதால், கருப்பினத்தவரின் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட கருப்பினச் சுரங்கத் தொழிலாளர்கள். (கோப்புப்படம்).

1990 பிப்ரவரியில் மண்டேலாவை விடுதலை செய்தும், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு மற்றும் அதன் கூட்டணி அமைப்புகள் மீதான தடையை நீக்கியும் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் அழைத்தார், அன்றைய தென்னாப்பிரிக்க நிறவெறி அரசின் அதிபரான டி கிளார்க். அதன்படி, ஆயுதப் போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக ஒப்புக்கொண்டு நிறவெறி அரசுடன் சமரச ஒப்பந்தம் போட்டார் மண்டேலா. அதைப் பயன்படுத்திக் கொண்டு அங்கே ஒரு தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ அடிவருடி அரசை நிறுவிக் கொள்ள முயன்ற மேலை ஏகாதிபத்தியங்கள் அதில் வெற்றியும் பெற்றன.

1947-இல் இந்தியாவில் நடந்ததைப் போன்றே, முந்தைய நிறவெறி அரசால் கட்டியமைக்கப்பட்ட அரசு எந்திரமும், ஆட்சியும் அப்படியே ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் கரங்களுக்கு மாற்றப்பட்டது. நம்நாட்டில் தீண்டாமைக் கொடுமை சட்டரீதியாக ஒழிக்கப்பட்டதைப் போலவே, தென்னாப்பிரிக்காவிலும் நிறவெறிக் கொடுமை சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதேசமயம்,தென்னாப்பிரிக்காவின் தங்க – வைரச் சுரங்கம் முதல் இதர கனிம வளச் சுரங்கங்களும், வங்கி, வர்த்தகம் முதலான அனைத்தும் வெள்ளை முதலாளிகளின் இரும்புப் பிடியிலேயே இருந்தன.

சிறையிலிருந்து விடுதலையான மண்டேலா, “வெள்ளையின ஆதிக்கம், கருப்பின ஆதிக்கம் – எனும் இரண்டுவகை ஆதிக்கத்தையும் எதிர்ப்போம்! கருப்பர்களுக்கும் வெள்ளையர்களுக்குமான தென்னாப்பிரிக்காவைக் கட்டியமைப்போம்!” என்ற கொள்கையை அறிவித்தார். தென்னாப்பிரிக்காவில் யார் ஆதிக்கம் செய்தார்கள், செய்கிறார்கள் என்பதையே மூடிமறைத்து, கருப்பின மக்களின் அரசியல் உரிமையை மறுத்து, வெள்ளையினச் சிறுபான்மையைத் தாஜா செய்யும் வகையில் இம்மோசடிக் கொள்கையை அவர் பிரகடனப்படுத்தினார். அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுடன் அவர் பூரிப்புடன் கைகோர்த்துக் கொண்டார். இல்லையானால், அவர் தென்னாப்பிரிக்க அதிபராகியிருக்கவே முடியாது. இந்த ஏகாதிபத்திய விசுவாசத்திற்காகவே அவருக்கும் அன்றைய தென்னாப்பிரிக்க அதிபர் டி கிளார்க்குக்கும் ஏகாதிபத்திய உலகம் நோபல் பரிசைப் பகிர்ந்தளித்தது. திட்டமிட்டே அவர் மீதான வழிபாடு ஏகாதிபத்தியவாதிகளால் உருவாக்கப்பட்டது.

1994 முதல் 1999 வரை அதிபராக இருந்த மண்டேலா, வெள்ளையின பெருமுதலாளிகளின் ஆலைகளையும் வங்கிகளையும் நட்ட ஈடின்றிப் பறிமுதல் செய்து நாட்டுடைமையாக்குவதைத் தனது நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. நிறவெறி ஆட்சிக் காலத்தில் தங்கள் நிலங்களை இழந்திருந்த கருப்பின மக்கள், மண்டேலா ஆட்சிக்காலத்தில் கூட அவற்றை மீட்கவும் முடியவில்லை. “நிலமும் கனிம வளமும் இந்நாட்டின் கருப்பின மக்களுக்கே சொந்தம்” என்ற முழக்கத்தோடு, ஜிம்பாப்வே நாட்டின் அதிபரான ராபர்ட் முகாபே மேற்கொண்ட மேலோட்டமான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளைக்கூட மண்டேலா தனது ஆட்சிக் காலத்தில் செய்யவில்லை.

மண்டேலா ஆட்சியின் மகிமை
மண்டேலா ஆட்சியின் மகிமை

நிறவெறிக் கொடுமையால் கருப்பின மக்கள் கொடூர சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் ஆளான தென்னாப்பிரிக்காவில், ‘வெள்ளை நிறவெறிக் கொடுங்கோலர்களுடன் இனி சமாதானத்துடன் அமைதியாக வாழ்வோம்’ என்பதே மண்டேலாவின் மோசடிக் கொள்கையாக இருந்தது. அவரது ஆட்சியில், நிறவெறி பாசிசக் கொடுங்கோலர்களுக்குத் தண்டனை ஏதும் கிடையாது என்பதை முன்நிபந்தனையாகக் கொண்ட “உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான விசாரணை மன்றம்” அமைக்கப்பட்டது. இதனால், போத்தா போன்ற நிறவெறி அரசு பயங்கரவாதிகள் முதல் படுகொலைகளை அரங்கேற்றிய வெள்ளையின நிறவெறிக் காட்டுமிராண்டிகள் வரை ஒருவர் கூட விசாரிக்கப்படவில்லை; தண்டிக்கப்படவுமில்லை.

“கருப்புச் சிங்கம்” என்று சித்தரிக்கப்பட்ட மண்டேலா, தனியார்மய – தாராளமயமாக்கலை விசுவாசத்துடன் செயல்படுத்தி, அவரது ஆட்சிக் காலத்திலேயே சாயம் வெளுத்துப் போனார். பொதுப் போக்குவரத்து, மின்சாரம் முதலான அரசுத்துறைகளைக்கூட அவர் தனியார்மயமாக்கினார். உலக வங்கித் திட்டப்படி தண்ணீரைக்கூட அவர் தனியாருக்குத் தாரை வார்த்து, கருப்பின மக்களின் தலையில் கொள்ளி வைத்தார். அவரது ஆட்சியில், முன்பணம் கட்டி மீட்டர் பொருத்தினால்தான் தண்ணீர் தரப்படும் என்று “சூயஸ்” முதலான பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் பகற்கொள்ளையில் இறங்கியதால், பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லாமல் காலரா பரவி கொத்துக்கொத்தாக மக்கள் மாண்டு போயினர்.

தனியார் முதலாளித்துவக் கொள்ளையர்களால் ஆப்பிரிக்க மக்கள் சூறையாடப்பட்டனர். தனியார்மயத்தால் அரசாங்கமே ஊழல்மயமாகிப் போனது; வேலையின்மை தீவிரமானது. குறிப்பாக, சுரங்கத் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் வேலையிழந்தனர். மறுபுறம், மண்டேலா புகுத்திய தனியார்மய – தாராளமயக் கொள்கையால் ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்து பொறுக்கித் தின்னும் புதியவகை கருப்பின தரகு முதலாளிகள் உருவாகி வளர்ந்தனர். ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் கோடீசுவரத் தலைவர்களாகவும், ஏகாதிபத்தியக் கைக்கூலிகளுமான தற்போதைய தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா, துணை அதிபர் சிரில் ராமபோசா முதலானோரே இதற்குச் சாட்சியமாக உள்ளனர்.

பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் கொள்ளை விலையிலான மருந்துகளை வாங்க முடியாமல் எய்ட்ஸ் நோயால் தென்னாப்பிரிக்கா பரிதவித்தபோது, இந்தியா போன்ற நாடுகள் மலிவு விலையில் மருந்து கொடுக்க முன்வந்த நிலையில், அதை ஏகாதிபத்தியவாதிகள் “காட்” ஒப்பந்தத்தின் அறிவுசார் சொத்துரிமை விதிகளைக் காட்டித் தடுத்தபோது கூட, மனிதாபிமானமற்ற இக்கொள்ளையர்களை மண்டேலா எதிர்க்கவில்லை. எண்ணெய் வளத்தைக் கொள்ளையிட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் நாசமாக்கியதோடு, அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்ட பன்னாட்டு ஏகபோக “ஷெல்” எண்ணெய் நிறுவனத்துக்கு எதிராகப் போராடிய பிரபல கருப்பின மனித உரிமைப் போராளியும் கவிஞருமான கென் சரோ விவாவை நைஜீரிய சர்வாதிகார அரசு 1995-இல் தூக்கிலிட்டுக் கொன்றபோது, அதற்கெதிராகக் கண்டனம் தெரிவிக்கக்கூட மண்டேலா முன்வரவில்லை. கடந்த 2012-ஆம் ஆண்டில் மரிக்கானா சுரங்கத்தில் கூலியுயர்வுக்காகப் போராடிய கருப்பின மக்கள், ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு அரசின் போலீசுப் படைகளால் கோரமாகச் சுட்டுக் கொல்லப்பட்ட போது கூட, அவர் வாய் திறக்கவில்லை.

தென்னாப்பிரிக்காவில், நிறவெறி ஆதிக்கத்தின் ஊடாகத்தான் வர்க்க ஆதிக்கம் செலுத்தப்பட்டது. வர்க்க ஒடுக்குமுறையின் ஊடாகத்தான் நிறவெறி ஆதிக்கமும் சாதிய ஆதிக்கமும் இயங்குகிறது. இருப்பினும், வர்க்க அரசியலால் நிறவெறிக் கொடுமைக்குத் தீர்வு காண முடியாது என்று கூறிக் கொண்டு, நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தை அடையாள அரசியலாக்கி, வர்க்கப் போராட்ட அரசியலை எதிர்க்கும் திருப்பணியை ஏகாதிபத்தியவாதிகளும் தன்னார்வக் குழுக்களும் மேற்கொண்டபோது, அதற்கான அடையாளமாக மண்டேலா தூக்கி நிறுத்தப்பட்டார். வர்க்க ஒடுக்குமுறையைத் தீவிரமாக்கியதுதான் அவரது பங்களிப்பாகிப் போனதோடு, இத்தகைய அடையாள அரசியலின் படுதோல்விக்கு மண்டேலாவே முன்னுதாரணமாகி நிற்கிறார்.

அவரது விடுதலைக்காகப் போராடிய உலகெங்குமுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், அமெரிக்காவின் ஆப்கான், இராக் மீதான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு எதிராகவும் போராடினர். ஐந்தாண்டு காலம் அதிபராகப் பதவியில் நீடித்த மண்டேலா, அடுத்து வந்த தேர்தலில் போட்டியிடாமல் பொது வாழ்விலிருந்தும் ஒதுங்கிக் கொண்ட காலத்தில்தான் அமெரிக்காவின் இம்மேலாதிக்க ஆக்கிரமிப்புப் போர்கள் நடந்தன. ஆனால், மண்டேலா ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்காமல், ஏகாதிபத்தியவாதிகளின் பக்கம் நின்றதோடு, இக்கொடிய ஆக்கிரமிப்புப் போர்களின்போது செயலற்ற வெறும் பார்வையாளராகவே இருந்தார்.

1960-களில் காங்கோவில் பெல்ஜிய காலனியாதிக்கத்தை எதிர்த்து பாட்ரீஸ் லுமும்பாவும், கென்யாவில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்த்து ஜோமோ கென்யட்டாவும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் வெற்றியை ஈட்டிய வரலாறு அவரது கண்ணெதிரே இருந்தது. அவர் சிறையிலிருந்த காலத்திலும், விடுதலையான காலத்திலும் கினியா பிசாவ், அங்கோலா, மொசாம்பிக் முதலான நாடுகளில் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நின்று, ஆயுதப் போராட்டப் பாதையில் முன்னேறி, அதில் குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிய சாதகமான நிலைமையும் இருந்தது. ஒரு தலைவர் என்ற முறையில், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான பொறுப்பும் கடமையும் இருந்தபோதிலும், அவர் உணர்வுப் பூர்வமாக அறிந்தே அவற்றைத் தவிர்த்தார்.

அவர் ஏகாதிபத்திய சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளாமல் அதற்குப் பலியாகி விட்டார் என்றும் கூற முடியாது. தெரிந்தேதான் அவர் ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளை விசுவாசத்துடன் ஆதரித்தார். இதனால்தான், ஸ்டீவ் பிகோ போன்ற கருப்பினப் போராளிகள் கொல்லப்பட்டும் சிறையிடப்பட்டும் மாண்டுள்ள போதிலும், மண்டேலாவை மட்டுமே ஏகாதிபத்திய உலகம் போற்றிப் புகழ் பாடுகிறது. அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட இந்தியாவின் காந்தியைப் போல, இன்று அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியவாதிகளுக்கு அகிம்சாமூர்த்தியாக மண்டேலா விளங்குகிறார். எவ்வாறு பாசிச எம்.ஜி.ஆரை வள்ளலாகவும் மனித நேயராகவும் சித்தரிக்கின்றனரோ, அவ்வாறே எல்லோருக்கும் நல்லவராகவும், வர்க்க அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைதி வழியிலான போராளியாகவும் அவர் சித்தரிக்கப்படுகிறார்.

சுருக்கமாகச் சொன்னால், தமது ஆதிக்க நோக்கங்களுக்காக ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்திக் கொண்டதற்கு மேல், மண்டேலாவின் நீண்டகால சிறைவாசமும் தியாகமும் வேறொன்றையும் சாதிக்கவில்லை. ஏகாதிபத்தியங்களால் நிறுவனமயமாக்கப்பட்டு அதற்கு தன்னைத்தானே ஒப்புக்கொடுத்ததற்கு மேல் மண்டேலா எதையும் சாதிக்கவுமில்லை. கசப்பானதாக இருந்தாலும் இதுதான் உண்மை!

– பாலன்
_________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

_________________________________

அன்பார்ந்த மாணவர்களே விடுதலைப் போரில் பங்கெடுங்கள் !

6

மீண்டுமொரு விடுதலைப் போரை முன்னெடுப்போம்!
நாடு மீண்டும் அடிமையாவதை முறியடிப்போம்!
துரோகிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுப்போம்!

ன்பார்ந்த மாணவ நண்பரே,

உங்கள் படிப்புக்கு நடுவே குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். மிக மிக அவசரமான, அவசியமான விசயத்தைப் பேச வேண்டியுள்ளதால் ஒரு 5 நிமிடம் ஒதுக்கி இந்த பிரசுரத்தைப் படிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தன் உயிரைக் கருவாக்கி, ரத்தத்தைப் பாலாக்கி நமக்கு உயிரும், உருவமும் கொடுத்த தாயின் முக்கியத்துவம் பற்றி நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், பெற்ற தாயை விட மேலாக நமது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து, கருவறை முதல் கல்லறை வரை நமக்கு ஆதாரமாக தாங்கிப் பிடிக்கும் தாய்த்திருநாடு, நமக்கு எந்தளவு அவசியமென தெரியுமா?

தாய்த்திருநாட்டின் காற்று, நீர், மண், கனிமங்கள் ஆகியவை நாம் மனிதர்களாக வாழ்வதற்கு அவசியமானவை. இந்த பூவுலகில் நாம் தலை நிமிர்ந்து கவுரவமான மனிதர்களாக வாழ ஓரிடத்தைக் கொடுத்தது நம் தாய்த்திருநாடு தானே. இது இல்லாமல் போனால் நமது நிலை என்ன? தாயற்றவன், அனாதை; நாடற்றவன், அகதி.

உலகத்தில் நடப்பவைகளை சற்று உற்றுப் பாருங்கள். முள்கம்பி முகாமில் சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஈழ மக்கள் அவதிப்படுகிறார்கள். நாட்டை இழந்து அடிமைகளாக, சொந்த நாட்டில் இராக் மக்கள் வதைக்கப்படுகிறார்கள். உலக நாடுகளின் வளங்களை கைப்பற்றி அவற்றை தன் அடிமை நாடுகளாக்கும் அமெரிக்காவின் உலக மேலாதிக்க வெறிதான் இவற்றுக்கெல்லாம் காரணம். ஈழ மக்களைப் போல், ஈராக் மக்களைப் போல் நாமும் படிப்படியாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட வேண்டுமா? நம் நாடு ஏகாதிபத்தியங்களுக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்ற அதிர்வு உங்கள் மனதில் சிறிதளவாவது ஏற்படுமானால் தொடர்ந்து படியுங்கள்.

நம் நாட்டின் இயற்கை வளங்கள் அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் முதலாளிகளாலும் அவர்களின் கூட்டாளிகளான அம்பானி, அதானி, டாடா, போன்ற உள்நாட்டு தரகு முதலாளிகளாலும் வரைமுறையின்றி சூறையாடப்படுகின்றன. இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது மட்டுமல்ல, நமது வரிப்பணம் பன்னாட்டு கம்பெனிகளுக்கு மானியம், வரிச்சலுகையாக ஆண்டுக்கு 5 லட்சம் கோடிக்கு மேல் வாரி இறைக்கப்படுகிறது. ஆனால், இந்நாட்டின் குடிமக்களாகிய நமக்கு செய்யவேண்டிய சேவைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு கஜானா காலி என்று கையை விரிக்கிறது இந்திய அரசு. மக்களுக்குச் செய்யும் செலவைக் குறைக்க வேண்டும் என்று கட்டளை போடுகிறது உலகவங்கி, மறுப்பே இன்றி கல்விக்கும், விவசாயத்திற்கும், சிறு தொழிலுக்கும், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டருக்குமான மானியங்களையும், சலுகைகளையும் வெட்டிச் சுருக்குகிறது; நமது உழைப்பை உறிஞ்சி எடுத்து அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு படையல் வைக்கிறது ஊதாரி அரசு.

கல்வி தனியார்மயம்
நமது இலவசக் கல்வி உரிமை பறிபோகிறதே அதற்கு யார் காரணம்?

நமது இலவசக் கல்வி உரிமை பறிபோகிறதே அதற்கு யார் காரணம்? கல்வியில் தனியார்மயத்தை புகுத்தி கல்வி ஒரு சேவை என்பதற்கு பதிலாக விற்பனை பண்டமாக்கிய இந்த அரசுதான். ஏழை மாணவர்கள் படிக்கும் அரசுக் கல்வி நிறுவனங்கள் திட்டமிட்டே சீர்குலைப்படுகின்றன. கொள்ளைக் கூடாரமான தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல்போல பெருகுகின்றன. இந்த அரசின் துணையோடு சாராய ரவுடி ஜேப்பியார், மோசடி மன்னன் எஸ்.ஆர்.எம் பச்சைமுத்து, வேல்டெக் ரங்கராஜன், வி,ஐ.டி விஸ்வநாதன் போன்ற கல்விக்கொள்ளையர்கள் புதிய ரக குட்டித் தரகுமுதலாளிகளாக வளர்ந்துள்ளார்கள். போதாக்குறைக்கு, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்வித்துறையில் அனுமதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் எதிர்காலத் தலைவர்களான நம்மை தற்குறியாக்க ஒட்டுமொத்த கல்வித்துறையுமே ஏகாதிபத்தியங்களின் சூறையாடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

கல்வித்துறை மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளங்களும் பன்னாட்டுக் கம்பெனிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இயற்கைச் செல்வங்களில் ஒன்றான, நிலக்கரி பற்றி உங்களுக்கு ஓரளவு தெரிந்திருக்கும். இரும்பை உருக்கவும், மின்சாரம் தயாரிக்கவும் இது அவசியம். இரும்பும், மின்சாரமுமின்றி தொழில்துறை இயங்க முடியாது. இவ்வளவு முக்கியத்துவமுள்ள நிலக்கரி நம் நாட்டில் அதிகளவில் உள்ளது. மண்ணுக்கு அடியில் லட்சக்கணக்கான ஆண்டுகளாக உருவான இந்த இயற்கையின் கொடையை இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு நாம் பயன்படுத்த முடியுமென ஒரு காலத்தில் விஞ்ஞானிகள் சொல்லி வந்தனர்.

நிலக்கரி ஊழல்
நம் நாட்டின் நிலக்கரி வளம் இன்னும் 40 ஆண்டுகளில் முழுமையாக காலியாகி விடுமாம்.

ஆனால், தற்போதைய உண்மை நிலை என்ன தெரியுமா? நம் நாட்டின் நிலக்கரி வளம் இன்னும் 40 ஆண்டுகளில் முழுமையாக காலியாகி விடுமாம். பன்னாட்டு கம்பெனிகளும், அவற்றின் உள்நாட்டு கூட்டாளிகளான தரகு முதலாளிகளும் இந்த தாது வளத்தை வரைமுறையின்றி வெட்டியெடுத்து ஏற்றுமதி செய்து அழித்து வருகின்றனர். சமீபத்தில் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட்டதில் ரூ 2 லட்சம் கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஈரக்குலையை அறுத்தெறியும் இந்த தேச துரோக்கத்திற்கு இந்திய அரசுதான் பாதை போட்டுக் கொடுத்துள்ளது.

தமிழ் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்ட தாது மணல் கொள்ளையை பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருப்பீர்கள். சாதாரண லஞ்ச ஊழல் பிரச்சனையைப் போல சித்தரிக்கப்படும் இந்த விசயம், உண்மையில் தேச துரோகம். தாது மணல் என்பது சாதாரண மணல் கிடையாது. லட்சக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையால் சேகரிக்கப்பட்டுள்ள அரிய செல்வம். உலகிலுள்ள 460 மில்லியன் டன் தாது மணலில் 278 மில்லியன் டன் நமது நாட்டு கடற்கரைகளில் கிடைக்கிறது. இதிலும் பெரும் பகுதி தமிழ் நாட்டில்தான் உள்ளது. இதிலுள்ள கர்னெட் தனிமத்தைக் கொண்டு சாதாரண அழகு சாதன பொருட்கள் முதல் அணுசக்தி கப்பல் வரை செய்யலாம். இந்த இயற்கையின் கொடை வைகுண்டராஜன் என்ற தரகன் மூலம் ஏகாதிபத்தியங்களுக்கு விருந்தாக்கப்படுகிறது. அரசின் சட்டங்களும், காக்கிச் சட்டை ரவுடிகளும் இக்கொள்ளைக்கு பாதுகாப்பு கொடுக்கின்றன. இது போதாதென்று வைகுண்டராஜன் ஒரு அடியாள்படையே வைத்திருக்கிறான். இந்த அயோக்கியனுக்குத் தான் சிறந்த ஏற்றுமதியாளன் என்ற விருதை வழங்குகிறது மானங்கெட்ட அரசு.

தாது மணல் கொள்ளை
இயற்கையின் கொடை வைகுண்டராஜன் என்ற தரகன் மூலம் ஏகாதிபத்தியங்களுக்கு விருந்தாக்கப்படுகிறது.

வெறும் 1500 கோடி ரூபாய்களை மட்டும் கொண்டு வந்து தொழில் தொடங்கிய நோக்கியா, சுமார் 40,000 கோடிகளை லாபமாக அள்ளிச் சென்றுள்ளது. இந்த லாபம், நமது தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி எடுத்ததுதான். இதைக் கேட்கும் போது நமது ரத்தம் கொதிக்கிறதல்லவா?. ஆனால் ஆட்சியாளர்களோ, இதைத்தான் வல்லரசு, வளர்ச்சி, சிறந்த ஆட்சி நிர்வாகம் என்று ஊதிப்பெருக்குகிறார்கள்; நம்மையும் ஏற்றுக்கொள்ளச் சொல்கிறார்கள். பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் வறுமையில் வாடும் போது, பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளான ஒரு சிறு கும்பல் இந்நாட்டைக் கூறுபோட்டு கொள்ளையடித்து செல்வங்களை குவித்துக் கொள்வதை வளர்ச்சி என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?. கார்ப்பரேட் முதலாளிகளுக்காக கதவை எப்போதும் திறந்து வைத்து குஜராத்தை வேட்டைக்காடாக மாற்றியிருப்பதை; இக்கொடுமையை எதிர்த்துப் போராட முடியாத அளவுக்கு பாசிச சட்டங்கள் மூலம் மக்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு வருவதை மோடியின் சிறந்த ஆட்சி நிர்வாகம் என்று வர்ணிக்க முடியுமா? கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால் நம் நாட்டில் புகுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் இதைத்தான் சாதித்துள்ளன.

நோக்கியா தொழிலாளர் போராட்டம்
வெறும் 1500 கோடி ரூபாய்களை மட்டும் கொண்டு வந்து தொழில் தொடங்கிய நோக்கியா, சுமார் 40,000 கோடிகளை லாபமாக அள்ளிச் சென்றுள்ளது.

இப்படி நாட்டின் ஆணி வேரையே பிடுங்கி எறியும் இந்த சுரண்டலை அனுமதிக்க முடியுமா? முடியாது என்று இக்கொள்ளையால் நேரடியாக பாதிக்கப்பட்டு தங்களின் வாழ்வாதாரங்களை இழக்கும் உழைக்கும் மக்கள் இதற்கெதிராக வட்டார அளவில் வீரம் செறிந்த போராட்டங்களை நாடு முழுவதும் நடத்துகின்றனர். மேற்கு வங்கத்தில் பன்னாட்டு கார் கம்பெனிக்கு விவசாய விளைநிலங்கள் தாரை வார்க்கப்படுவதற்கு எதிராக அரசின் துப்பாக்கி குண்டுகளை எதிர் கொண்டு போராடிய நந்திகிராம் விவசாயிகள் முதல் தமிழகத்தில் தாது மணல் கொள்ளைக்கெதிராக போராடி வரும் தூத்துக்குடி மீனவர்கள் வரை இதற்கு சிறந்த உதாரணங்கள்.

ஆனால், இக்கொள்ளைக்கெதிராக போராடும் விவசாயிகளையும், தொழிலாளிகளையும், மீனவர்களையும், பழங்குடி மக்களையும் அடக்கி ஒடுக்குகிறது இந்த அரசு. அவர்கள் மீது போலீசையும், ராணுவத்தையும் ஏவி வதைக்கிறது. மக்களை கொன்று குவிக்கிறது. சட்டீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க பழங்குடி மக்கள் நடத்தும் போராட்டத்தை நசுக்க, மத்திய, மாநில அரசுகள் காட்டு வேட்டை என்ற பெயரில் ஒரு உள்நாட்டு யுத்தத்தையே நடத்தி வருகிறது. இந்த அரசின் வேலையே மக்கள் மீது அடக்குமுறை செலுத்தி அமெரிக்கா போன்ற வல்லரசுகள் நம் நாட்டின் வளங்களை கைப்பற்றிக் கொள்ள அடியாள் வேலை செய்வதுதான்.

சற்று கூர்மையாக பார்த்தால் இந்திய அரசின் சதிகள் புரியும். காட்சிகள்தான் மாறியுள்ளனவே யொழிய அடிமைத்தனம் மாறவில்லையென தெரியும். அன்று கவர்னர் ஜெனரல், இன்று பிரதமர். அன்று வெள்ளைத்தோல், இன்று கறுப்புத்தோல். ஆள்பவர்களின் நிறம் மாறியுள்ளது. ஆனால், அடிமைத்தனம் மாறவில்லை.

பகத்சிங்
மாணவர்கள், இளைஞர்கள் உணர்வைத் தட்டியெழுப்பி போராடினானே ஒரு இளைஞன், பகத் சிங். அவரைப் போல போராட வேண்டும்.

அன்று, நம் நாட்டைப் பிடிக்க வெள்ளைக்காரனுக்கு துப்பாக்கியும், தோட்டாவும், போரும் தேவைப்பட்டது. இன்று அமெரிக்கா போன்ற வல்லரசுகளுக்கு பேனா, மை, ஒப்பந்தமே போதுமானது. அமெரிக்காவின் கந்துவட்டி கம்பெனிகளான உலக வங்கி .ஐ.எம்.எஃப் மற்றும் அதன் அடியாளான உலக வர்த்தகக் கழகமும் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு காட்( GATT) காட்ஸ் (GATS) ஆகிய ஒப்பந்தங்கள் மூலம் நம் தாய்த்திரு நாட்டை மீண்டும் அடிமையாக்கி, அதாவது மறுகாலனியாக்கி வருகிறது இந்திய அரசு. நம் நாட்டின் பொருளாதாரமே இவர்களுக்காகத் தான் கட்டி அமைக்கப்படுகிறதே யொழிய நமக்காக அல்ல. நாட்டின் அரசியலும், பொருளாதாரமும், பண்பாடும் அமெரிக்க எஜமானுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில் தனக்கு விசுவாசமான, சிறந்த அடியாள்படையாக இந்தியாவை வைத்துக்கொள்ள 123 எனப்படும் இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் ராணுவ ஒப்பந்தங்களை போட்டு நாட்டின் அரைகுறை இறையாண்மையையும் பறித்து வருகிறது.

மாணவ நண்பரே, கண்ணுக்குத் தெரியாமல் ஒப்பந்தங்கள் மூலம் நிறைவேற்றப்படும் இந்த புதிய அடிமைத்தனத்தைதான் மறுகாலனியாக்கம் என்கிறோம். இது நேரடி காலனியாக்கத்தை விட கொடூரமானது. சற்று சிந்தித்து பாருங்கள். கோடிக் கணக்கான ஆண்டுகளாக இயற்கை உருவாக்கி வைத்த நமது வளங்கள் வெட்டுக்கிளி கூட்டம் போன்ற பன்னாட்டு கம்பெனிகளால் அழிக்கப்படுகின்றன. நமது உழைப்பு, நமக்கும் நாட்டுக்கும் பயன்படாதபடி ஏகாதிபத்தியங்களால் உறிஞ்சி எடுக்கப்படுகின்றன. நமக்காகவும், நமது நாட்டுக்காகவும் நாம் செலுத்தும் வரிப் பணம் முழுவதும் ஏகாதிபத்தியங்களுக்கு தாரை வார்க்கப்படுகிறது. நாட்டின் வளங்களையும், உழைப்பையும், வரிப்பணத்தையும் ஒட்டச் சுரண்டுவதன் மூலம் நம் நாடு எதிர் காலத்தில் எல்லா வளங்களையும் இழந்து மனிதர்கள் வாழ லாயக்கற்ற பாலை வனமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் பெற்றெடுத்த கட்சியான காங்கிரசு மட்டுமல்ல, எல்லா ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளும் மறுபேச்சின்றி தனியார்மயம்- தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளன. ஏகாதிபத்தியங்களிடம் இந்த நாட்டை அடகு வைக்கும் எட்டப்பர்கள்தான் ஓட்டுக்கட்சியினர் என்பது இப்போது புரிகிறதா? இவர்கள் நம்மை ஆள்வது சரியா? கார்ப்பரேட் முதலாளிகள் யாரை நோக்கி கை நீட்டுகிறார்களோ, அவர்களே எம்.எல்.ஏ க்கள், எம்.பி க்களாக அமர்ந்திருக்கும் சட்டமன்றத்தாலும், பாராளுமன்றத்தாலும் நமது பிரச்சனைகளை தீர்க்கத்தான் முடியுமா? நிச்சயமாக முடியாது. இதற்கு வெளியில் இளைஞர்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து மீண்டுமொரு தேசவிடுதலைப் போராட்டத்தைக் கட்டியமைக்க வேண்டும்.

வெள்ளையரிடமிருந்து நாட்டை விடுவிக்க 80 ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர்கள், இளைஞர்கள் உணர்வைத் தட்டியெழுப்பி போராடினானே ஒரு இளைஞன், பகத் சிங். அவரைப் போல போராட வேண்டும். அவரைப் போலவே, நாட்டு விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாணவர்களைப் போல போராட வேண்டும். அந்த வீரர்களின் மரபை வரித்துக் கொண்டு, நாட்டை மறுகாலனியாக்கத்திலிருந்து விடுவிக்கவே மாணவராகிய உங்களை அறைகூவி அழைக்கிறோம்.

சீனா - மே 4 இயக்கம்
அடிமைச் சாசனத்தினை கேள்விபட்ட மாணவர் வர்க்கம் எரிமலையென குமுறியெழுந்தது

அன்பார்ந்த மாணவ நண்பரே, மாணவர்களின் வீரம் மகத்தானது. இது உலக வரலாற்றில் நிரூபிக்கப்பட்ட உண்மை. இன்று நம் நாட்டை ஒப்பந்தங்கள் மூலம் அடிமைப்படுத்த ஏகாதிபத்தியங்கள் முயற்சிப்பதைப் போலவே, சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் சீன நாட்டை அடிமைப்படுத்த முயன்றன. 1919 –ல் நாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைப்படுத்தும் ஒப்பந்தமொன்றில் சீன அரசு கையொப்பமிட்டது. இந்த அடிமைச் சாசனத்தினை கேள்விப்பட்ட மாணவர் வர்க்கம் எரிமலையென குமுறியெழுந்தது. நாட்டையே அடமானம் வைத்த அரசின் அலுவலகங்கள் 1919 மே 4-ம் நாள் அன்று மாணவர்களால் தாக்கப்பட்டன. தேசத் துரோக அமைச்சர்கள், அதிகாரிகள் அடித்து துவைக்கப்பட்டனர். குறிப்பாக, அடிமைச் சாசனத்தில் கையொப்பமிட்ட அமைச்சரின் வீட்டை மாணவர்கள் தாக்கினர். நாட்டை அடிமைப்படுத்தும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட அந்த தேசத் துரோகியின் கை உடைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சீன மாணவர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான மாணவர்கள் நாட்டுக்காக தங்களின் சுகங்களை தூக்கியெறிந்து தேச விடுதலைப் போரை தொடங்கி வைத்தனர். பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை நாட்டு விடுதலை என்ற லட்சியத்திற்கு முழுமையாக அர்ப்பணித்தனர். விவசாயிகளையும், தொழிலாளர்களையும் தட்டியெழுப்பி விடுதலை போரை நடத்தி முடித்தனர். 1949 –ம் ஆண்டு ஏகாதிபத்தியங்களையும், அவற்றுக்கு தரகு வேலை பார்த்த தரகு முதலாளிகளையும் அவர்களை பாதுகாத்து நின்ற தேச துரோக அரசையும் முறியடித்து, சீன நாட்டை விடுவித்தனர். உலகிற்கே வழிகாட்டிகளாக மாறினர்.

நம் நாடு மீண்டும் அடிமைப்படுத்தப்படும் அதாவது, மறுகாலனியாக்கப்படும் சூழலில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? கல்வி, வேலைக்கான உரிமையின்றி, தலை நிமிர்ந்து வாழும் உரிமையின்றி அடிமைகளாக அடங்கி, ஒடுங்கி மடியப் போகிறீர்களா? அல்லது சீன மாணவர்களைப் போல அடிமைத்தனத்தை தூக்கியெறிய நாட்டுப்பற்றுடன் போராடப் போகிறீர்களா? கோழைகளாக நடுங்கி சாகப் போகிறீர்களா? அல்லது நாட்டுப் பற்றாளர்களாக போராடி மக்கள் மனதில் வாழப் போகிறீர்களா?

நாடிழந்து அடிமையாக வாழ்வது அவமானம். விடுதலைக்கு போராடுவதே தன்மானம். சீன மாணவர்களைப் போல நாமும் விடுதலை போராட்டத்தின் கரு மையமாக மாறுவோம். மக்களை தட்டி எழுப்புவோம். மீண்டுமொரு விடுதலைப் போரை தொடங்கி வைப்போம். காட், காட்ஸ் ஆகிய அடிமைச் சாசனங்களைக் கிழித்தெறிவோம். மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம். அந்நியனிடமிருந்து,அவர்கள் கூட்டாளிகளிடமிருந்து, இவர்களின் கைக்கூலிகளிடமிருந்து நாட்டை விடுவித்து உலகிற்கே விடிவெள்ளியாக மாறுவோம்.

இது தாய்திருநாட்டின் விடுதலைக்கான அறைகூவல்; விடுதலைக்கான சாவி. இது உங்களின் உணர்வைத் தூண்டியிருந்தால், உடனடியாக கீழ்க்காணும் முகவரியை அல்லது தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். காத்திருக்கிறோம். உங்களோடு சேர்ந்து நாட்டின் அடிமைத்தனத்தை உடைத்தெறிய! மறுகாலனியாக்கத்தை முறியடிக்க.

இவண்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.
944511 2675

துணைவேந்தரை பதவி நீக்கக் கோரி HRPC ஆர்ப்பாட்டம்

1

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணைனைப் பதவி நீக்கம் செய்யக்கோரியும்
துணை வேந்தரின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்தும்

ஆர்ப்பாட்டம்

னித உரிமைப்பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக்கிளை சார்பாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனை பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தியும், அவர்மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்திடவும், பழிவாங்கப்பட்டுள்ள ஆய்வுமாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்களை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி பணியமர்த்த வலியுறுத்தியும், 21.01.2014 காலை 10.00 மணியளவில் மதுரை உயர்நீதிமன்றம் முன்பாக தோழர் வாஞ்சிநாதன், மாவட்ட துணைச்செயலாளர். ம.உ.பா.மையம், அவர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

துவக்க உரையாற்றிய மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர். திருநாவுக்கரசு, “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜனநாயகம் உள்ளதா என்பதே கேள்விக்குறியாகிவிட்டது. ஊழல் மலிந்துவிட்டது, துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் லஞ்சத்தின் உறைவிடமாகிவி்ட்டார். கேள்விகேட்பவர்கள் பழிவாங்கப்படுகிறார்கள். இதை எதிர்த்து மாணவர்களும் பேராசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அவர்களோடு மக்களும் கிளர்ச்சியாக எழுந்து நின்று போராடும் போதுதான் இந்த அநீதிகளுக்குத் தீர்வு கி்ட்டும். மக்களைத் திரட்டும் அந்தப்பணியை மனிதஉரிமைப் பாதுகாப்பு மையம் செய்ய வேண்டும்” எனக்கேட்டுக்கொண்டார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்புக்குழுவின் அமைப்பாளர். ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர்.சீனிவாசன் தனது உரையில், “மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் பதவிக்காலம், பல்கலைக்கழக வரலாற்றில் ஒரு இருண்ட காலம். நியாயத்தை பேசியதற்காக பழிவாங்கப்பட்டவர்கள் ஏழுபோ். பிரச்சனைகள் தேங்கிக்கிடக்கின்றன. பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தைகளின் மூலம் எளிதில் தீர்வு காணமுடியும். ஆனால் அதற்கு அவர் தயாராக இல்லை. ஏனெனில் பிரச்சனைகளின் மூலகாரணமே அவர்தான். தான்தோன்றித்தனமாக அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகிறது.

துணைவேந்தர் என்பவர் நோ்மையாகவும், தகுதியுடையவராகவும் இருக்க வேண்டும். ஆனால் எந்தத் தகுதியும் இல்லாத ஒருவர் பதவியி்ல் இருப்பது அநியாயம், நீதிமன்றத்தின் முன்னால் போராடிக்கொண்டிருக்கிறோம் ஆனால் நீதிதேவனின் கண்கள் திறக்குமா எனத் தெரியவில்லை” என்று பேசினார்.மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் கல்யாணி மதிவாணனி்ன் தலைமையில் நடத்தப்பட்டுவரும் முறைகேடுகள், அட்டூழியங்கள் உள்ளிட்டவை குறித்து ஆரம்பம் முதலான அனைத்து விவரங்களையும் தெளிவாக எடுத்தரைத்தார்.

வழக்கறிஞர் வின்சென்ட் தனது உரையில், “பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருக்கான தகுதிகளை புறக்கணித்துவிட்டு அரசியல் சார்பாக என்றைக்கு முடிவு எடுக்கப்பட்டதோ, அன்றே பல்கலைக்கழகம் அழிவை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக இன்று அது ஊழலில் திளைக்கிறது. முன்பு பெரியாரின் கருத்துக்களை எடுத்துச்சென்ற ஒரு பல்கலைக்கழகம் இன்று புதிய பார்ப்பனியத்தின் உறைவிடமாக மாறிவிட்டது” என்று பேசினார். ஜெ. அரசின் பார்ப்பானிய ஆதரவு, திராவிட கட்சிகளின் கள்ளமௌனம் உள்ளிட்டவைகளையும் தோலுறித்துக்காட்டினார்.

ம.உ.பா.மையத்தின் துணைத்தலைவர். வழக்கறிஞர் பா.நடராஜன் தன்னுடைய கண்டன உரையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தேங்கிக்கிடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும், தமிழக அரசுக்கும், நீதித்துறைக்கும் உள்ள பங்கினை விளக்கினார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராஜ் தனது உரையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரின் நியமனத்தினை செல்லாது என அறிவிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டு, 1 ½ ஆண்டுகள் ஆகியும் (துணைவேந்தர் பதவிக்காலமே 3 ஆண்டுகள் மட்டுமே) நீதிவழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்துவரும் நீதித்துறையின் போக்கினை விளக்கி, நீதித்துறையிலும் சீர்திருத்தம் வேண்டி போராட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.

சமநீதி வழக்கறிஞர் சங்க பொறுப்பாளர் கனகவேல் பேசும் போது, “50 ஆண்டுகால பல்கலைக்கழக வரலாற்றில் 16 துணைவேந்தர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால் இதுபோன்று ஈழத்தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியவர்கள், மானியம் கேட்டவர்கள், எஸ்.சி / எஸ்.டி க்கான காலிபணியிடங்களை நிரப்பச்சொன்னவர்கள் உள்ளிட்ட ஆராய்ச்சி மாணவர்களையும், பேராசிரியர்களை தன்சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக, ஒரு துணைவேந்தர் பழிவாங்குவது இதுவே முதல்முறை” என்று குறிப்பிட்டார்.

ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டத் துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும் போது, “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பிரச்சனையானது ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் துணைவேந்தர் ஆகியோருக்கு இடையே நடக்கும் பிரச்சனை என்று குறுகிய வட்டத்தில் நின்று கருதிவிடமுடியாது. ஏனெனில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமானது, மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் இருந்து வரக்கூடிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கான ஒரே பல்கலைக்கழகமாக இருந்து வருகின்றது. அதனால் இது அனைத்து மக்களுக்குமான பிரச்சனை என்பதை மக்கள் உணரவேண்டும். இதற்காக மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மாணவர்களையும், முற்போக்கு சக்திகளையும் இணைத்துக்கொண்டு தமிழகம் தழுவிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்லும்” என அறிவித்தார்.

செயற்குழு உறுப்பினர் ஜெயப்பாண்டி நன்றி தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள், ம.உ.பா.மைய உறுப்பினர்கள் தோழமை அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை.

DR. சந்தோஷ் நகர்: புமாஇமு போராட்டத்திற்கு பணிந்தது மாநகராட்சி !

0

பு.மா.இ.மு தலைமையிலான மக்கள் போராட்டத்திற்கு மகத்தான வெற்றி!
மாநகராட்சி அதிகாரிகள் பணிந்தனர்! DR. சந்தோஷ் நகரில் அடிப்படை வசதிகளை செய்தனர்!

சென்னையில் அனைவராலும் பிரபலமாக அறியப்பட்ட இடங்களில் ஒன்றுதான் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருந்த ஹோட்டல் தாசப்பிரகாஷ். அதற்கு எதிர்புறங்களில் சில நட்சத்திர ஹோட்டல்களும், அடுக்குமாடி குடியிருப்புகளும், பணக்காரர்களின் பங்களாக்களும் இருப்பதை எவரும் பார்த்திருப்பர். இந்த மாட மாளிகைகளுக்கு இடையே இந்த அரசால் தீண்டத்தகாத ’சேரி’யாக புறக்கணிக்கபடும் DR. சந்தோஷ் நகர்ப் பகுதியை உங்களுக்குத் தெரியுமா? இது உழைக்கும் மக்கள் வாழும் பகுதி. இப்பகுதி மக்கள் பல் கொத்தனார், சித்தாள், பெரியாள், கம்பி கட்டுவது, பெயிண்ட் அடிப்பது என கட்டிட வேலை, ரயில்வே பார்சல் லோடு ஏற்றும், இறக்கும் வேலை, ஆட்டோ ஓட்டுனர்கள், வீட்டு வேலை என அன்றாடம் காய்ச்சிகளாகத்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாழும் இப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் மாநகராட்சியால் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்தது.

அருகில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அபு பேலஸ் நட்சத்திர ஓட்டலுக்கும், அதனருகிலுள்ள பணக்காரன் வீட்டு பங்களாக்களுக்கும் எப்போதும் ’கார்ப்பரேசன் வாட்டர்’ சப்ளை செய்யப்படுகிறது. சந்தோஷ் நகர் மக்களுக்கு குடிநீரை பயன்படுத்தத் தெரியவில்லை என்று கூறி கார்ப்பரேசன் வாட்டர் சப்ளையை குறைத்து அடுக்குமாடிகளுக்கு திருப்பிவிட திட்டமிடுகிறார்கள். ’அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுப்பொறுக்க மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடத்தியவர்களுக்கு, அப்பகுதியே குப்பைக் காடாய் சுகாதாரமற்று நாறிக் கிடப்பது தெரியாதது போல் நாடகமாடுகிறார்கள்.

’அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுப்பொறுக்க மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்

பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குள் செல்லும் பிரதான சாலை, குடியிருப்புக்குள் உள்ள சாலைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. மழைக்காலங்களில் ஆற்றை நீந்தி கடப்பதுபோல் இந்த ஊருக்குள் செல்வது சவாலானது. குண்டும் குழியுமாகிப் போன சாலைகளில் பிள்ளைகள் அவ்வப்போது விழுவதும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுவதும் இப்பகுதியில் சகஜமான ஒன்றாகவே மாறிப்போயுள்ளது.

உழைக்கும் மக்களை துரத்திக் கொண்டிருக்கும் இந்த ’சிங்காரச் சென்னை’ யை விட்டுச் செல்ல முடியாமல் எழும்பூர் மேம்பாலம் அருகில் குடிசை வீடுகளில் நரக வேதனையோடு குடியிருக்கிறார்கள் மக்கள். அவர்களுக்கு போதிய இடவசதியும், சுகாதாரமும் இல்லையென்பது மட்டும் அவர்கள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கவில்லை, அருகில் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் மண்டிக் கிடக்கும் முள் புதர்களில் இருந்து அவ்வப்போது வரும் பாம்பு போன்ற விசக்கிருமிகள் உடலில் மிச்சம் கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் உயிருக்கும் உலை வைத்துவிடுமோ என்ற அச்சத்திலேயே உயிர் வாழ்ந்து வந்தனர்.

சாதாரண உழைக்கும் மக்களான இவர்கள் தங்கள் வீட்டு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றால் வேறு வழியே இல்லை, எழும்பூரில் உள்ள பெரிய திருமண மண்டபங்களில் 15 ஆயிரத்திற்கும் மேல் வாடகை கொடுத்துதான் ஆக வேண்டும். இவ்வளவு தொகை கொடுக்க முடியாதவர்கள் கூட இட நெருக்கடியால் தங்கள் தெருக்களில் நடத்த முடியாமல், கந்து வட்டிக்காவது பணம் வாங்கி நடத்த வேண்டும் என கடன் நெருக்கடிக்கு ஆளாவது இப்பகுதியில் தவிர்க்க முடியாதது.

சிறிய பகுதி என்றாலும் இங்கு மாணவர்களும், இளைஞர்களும் நிறைந்துள்ளனர். ஆனால் அவர்களுக்குறிய கவுரவத்தோடு, மகிழ்ச்சியோடு, உடல் ஆரோக்கியத்தோடு இருக்க முடிவதில்லையே. விளையாட்டிலும், உடற் பயிற்சியிலும் ஆர்வமுள்ள இப்பகுதி மாணவர்களும், இளைஞர்களும் இதனை அனுபவிக்க வேண்டுமென்றால் உயிரை பணையம் வைக்க வேண்டும். ரயில்வே பாதையைக் கடந்து எழும்பூருக்குச் சென்றால்தான் உடற்பயிற்சியும், விளையாட்டும். இந்த அச்சம் காரணமாகவே பலர் செல்வதில்லை. ஆனால், இந்த இளைஞர்களின் உடலையும், சிந்தனையை சீரழிக்கும் அரசின் டாஸ்மாக் சாராயக் கடைக்கோ பஞ்சமில்லை. ஊரைச் சுற்றி சாராயக் கடை. போதாக்குறைக்கு இரவு நேரங்களில் ஊருக்குள்ளேயே ஆறாய் ஓடுகிறது சாராயம்.

எமக்குத் தெரிந்த இந்த விசயங்களெல்லாம் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், கவுன்சிலருக்கும் தெரியாததா என்ன?. நன்றாகத் தெரியும். சென்னையை சிங்காரிப்பது என்ற பெயரில் பணக்காரர்களும், அரசு உயர் அதிகாரிகளும், அமைச்சர்களும் வாக்கிங் போகும் பூங்காக்களுக்குக் கூட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து பராமரிக்கும் மாநகராட்சிக்கு, உழைக்கும் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதை ஒருவர் சொல்ல வேண்டுமா என்ன?

திட்டமிட்டே உழைக்கும் மக்கள் வாழும் பகுதியை புறக்கணிக்கிறார்கள். பல்வேறு சொத்தைக் காரணங்களைச் சொல்லி உழைக்கும் மக்கள் பகுதிகளை காலி செய்கிறார்கள், இந்நாட்டின் உண்மையான குடிமக்களான உழைக்கும் மக்களை குப்பையைப் போல புறநகர்ப் பகுதிகளில் அள்ளிவீசுகிறார்கள். அப்படி உருவானதுதான் செம்மஞ்சேரியும், துரைப்பாக்கமும் என்பது நமக்குத் தெரியாததில்லை. இப்பகுதியையும் அதுபோல் செய்ய முயன்றார்கள். புமாஇமு தலைமையில் மக்கள் போராடி முறியடித்தனர்.

சாலை பராமரிப்பு

அண்ணாநகர் அப்பார்ட்மெண்டுகளுக்காகவும், அபு பேலஸ் நட்சத்திர ஹோட்டல்களுக்காகவும், கார்ப்பரேட் கம்பெனிகளுக்காகவும், அதன் கைக்கூலிகளான அரசு உயர் அதிகாரிகளுக்காகவும்தான் இந்த சிங்காரச் சென்னையாம். ஒரு காலத்தில் தமிழகத்தின் கிராமங்களில் கவுரவமான வாழ்க்கை வாழ்ந்த விவசாயிகள். விவசாயம் போண்டியானதன் விளைவாக வாழ்க்கையை இழந்து பிழைக்க வழிதேடி இந்த நகரத்தை நோக்கி 30, 40 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களை இன்று சந்தோஷ் நகர் போன்ற பகுதிகளில் தீண்டத்தகாத சேரி மக்களாக இந்த அரசு நரகத்தில் தள்ளி வருகிறது. இதை அனுமதிக்க முடியுமா? முடியாது என்று புமாஇமு இப்பகுதி மக்களைத் திரட்டி போராட்டத்தை தொடங்கியது.

கார்ப்பரேட் முதலாளிகளைப் போல் இல்லாமல், காலம் முழுவதும் ரத்தமும், வியர்வையும் சிந்தி உழைத்து, இந்த அரசு போடும் வரிகளை நோக்கியா முதலாளிகளைப் போல் ஏய்க்காமல் முறையாகக் கொடுத்து, இந்த நாட்டையே இயங்க வைக்கும் உழைக்கும் மக்களுக்கு கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிநீர், சாலை வசதி, சமூக நலக்கூடம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது இந்த அரசின் கடமை. அதைக் கேட்பது உழைக்கும் மக்களாகிய நமது உரிமை என்று சந்தோஷ் நகர்ப்பகுதி மக்களை தட்டி எழுப்பி கடந்த ஓராண்டுகளாக எமது பு.மா.இ.மு பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தது.

குடிநீர்க் குழாய்

மாநகராட்சி அதிகாரிகளையும், வார்டு கவுன்சிலரையும் மக்கள் போராட்டத்தால் நிர்பந்தித்தோம். இறுதியில் மக்களின் தொடர் போராட்டம் வென்றது. தெருவுக்கு ஒரு குப்பைக் கூடை, குண்டும் குழியுமான இடங்களில் தார்சாலை, குடிநீர் வீணாகாமல் இருக்க குழாய்களுக்கு வால்வு, முள்புதர்களை அகற்றி சிமெண்டு தரை, வாகன வேகைத்தடை, பிரதான சாலையில் இருபுறத்திலும் பிளாட்பாரம், உடற் பயிற்சிக் கூடம், சமூக நலக் கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்நோக்குக் கட்டிடத்திற்கு அனுமதி என அடிப்படை வசதிகள் நடைபெற்று வருகின்றன.

பெற்ற உரிமைகளைப் பாதுகாப்பதும், மீட்டெடுக்க வேண்டிய நமது உரிமைகளுக்காக போராடுவதும் நமது கடமை என்பதை கடந்த ஜனவரி 12-ந்தேதி சந்தோஷ் நகர் மக்கள் மத்தியில் பேரணி – கூட்டம் மூலம் பிரச்சாரம் செய்தது புமாஇமு.

பேரணி – கூட்டம்

புமாஇமு அப்பகுதிக்கிளை செயலர் தோழர் அசோக் தலைமையில் நடந்த இப்பேரணி – கூட்டத்தில் பு.மா.இ.மு, பெவிமு தோழர்களோடு உழைக்கும் மக்களும், இளைஞர்களும், பெண்களும் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டனர். போராட்ட வெற்றி கொடுத்த உற்சாகத்தில் இருந்த அவர்கள் புமாஇமுவின் முழக்கத்தை தங்கள் சொந்த முழக்கமாக வரித்துக்கொண்டனர்.

உழைக்கும் மக்கள், இளைஞர்கள், மாணவர்களின் உரிமைக்கான போராட்டக் களத்தில் உறுதியோடு நிற்கிறது புமாஇமு. உங்கள் பகுதியிலும் உரிமைப் போராட்டத்தைத் தொடங்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்…. கரம் சேருங்கள்!

இவண்,

புமாஇமு,சென்னை.
9445112675

நூல் அறிமுகம் : பசுவின் புனிதம்

158
பசுவின் புனிதம்
பசுவின் புனிதம்

“பசுவதை தடை சட்டம் வேண்டும்.”

“பசு புனிதமானது அதன் கறியை உண்ணுவதை தடை செய்ய வேண்டும்.”

“பசுவதை என்பது இசுலாமியர்களின் ஆட்சியினால் ஹிந்துகளுக்கு வந்த சோதனை.”

“பசு ஹிந்துக்களின் கடவுள். பசுவின் மூத்திரம் அனைத்து நோய்களையும் தீர்க்கும் சக்தி படைத்த சர்வ ரோக நிவாரணி.”

மேற்சொன்ன கூற்றுகளை இந்துமதவெறி கும்பல் நரிப் பிள்ளை போல் சொல்லி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக பாஜக ஆட்சிக்கு வரும் மாநிலங்களில் முதல் வேலையாக பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்படுவதை நாம் கவனிக்கலாம்.

இந்த கும்பலின் இந்த “பசுவின் புனிதம்” என்ற கூற்று ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள இசுலாமியர்கள், கிறிஸ்துவர்கள், தலித் மக்களை குறி வைத்து தாக்குகிறது. இந்தியா முழுவதும் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் ஆயிரகணக்கான குழந்தைகள் இறந்து கொண்டிருக்கும் நிலையில், அதிக புரத சத்துள்ள மாட்டுக் கறி போன்ற உணவுகள் அவர்களின் உயிரை காக்க உதவும். ஆனால் இந்த இந்துத்துவ கும்பல் சிறுபான்மை மக்களை ஒடுக்கவும், பெரும்பான்மை இந்து மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பவும் “பசுவின் புனிதம்” எனும் இந்த தந்திரப் பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.

“பசு புனிதமானது”

“கோமாதா பால் கொடுக்கிறது”

“பசுவின் கோமியம் பாவங்களை தீர்க்கவும், தோஷங்களை போக்கவும், பல நோய்களை தீர்க்கவும் உதவுகிறது”

“இந்துக்களின் புனித பசுக்களை கொல்வது பாவத்திற்குரிய செயல்”

என்கிறார்கள் இந்துமத வெறியர்கள்.

பசுவின் மாமிசம் உண்ணும் பழக்கம் இந்துக்களுக்கு இருந்ததா இல்லையா?

அதை இசுலாமியர்கள் தான் இந்தியாவில் அறிமுகப் படுத்தினார்களா?

பார்ப்பனர்கள் மாட்டுக் கறியை உண்ட வரலாறு என்ன?

Myth of the Holy Cowஇந்தக் கேள்விகளுக்கு விடை தரும் விதமாக வரலாற்று ஆய்வாளரான டி.என்.ஜா மிக முக்கியமான புத்தகம் ஒன்றை தந்துள்ளார். மேட்ரிக்ஸ் புக்ஸ் நிறுவனத்தின் பதிப்பில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ள “The Myth of Holy Cow” எனும் புத்தகத்தை பாரதி புத்தகாலயம் “பசுவின் புனிதம்” என்ற தலைப்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது.

வேதங்கள் மற்றும் இதர பார்ப்பன வரலாறு நூல்கள், இலக்கியங்கள், பவுத்த, சமண சமய நூல்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு பண்டைய கால இந்தியாவில் மாட்டுக் கறி உண்ணுவதும், பசுவை பலியிடுவதும், குறிப்பாக பசுவின் மாமிசத்தை உண்ணுவதும், இந்து, பவுத்த, சமண சமய மக்களிடம் மிக இயல்பாக இருந்த ஒரு நிகழ்வு என்பதை பல ஆய்வுகள மூலம் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். முழு முடிவுகளும், ஆதாரங்களும், வேதம் மற்றும் பிற இந்து சமய நூல்களில் இருந்தே மேற்கோள் காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மதவாதிகள் இந்த புத்தகத்தை வெளிவரவிடாமல் செய்ய பல முயற்சிகளை மேற்கொண்டனர். முதலில் இதை பதிப்பிக்க ஒப்புக் கொண்ட டெல்லியை சேர்ந்த புத்தக பதிப்பகம், மதவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து ஒதுங்கியது. பின்னர் இதை மேட்ரிக்ஸ் நிறுவனம் பதிப்பிக்க முன் வந்தது. ஆனால் 2001 ஆகஸ்டில் வந்த இந்த புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதி மன்றத்தில் தடை உத்தரவு வாங்கி விட்டார்கள் மதவாதிகள். அதனால் லண்டனில் இருக்கும் வெர்சோ பதிப்பகத்தாரின் மூலம் உலகம் முழுவதும் இந்த புத்த்கம் முதலில் வெளியிடப்பட்டது. இந்து மதவெறியர் ஒருவர் டி.என். ஜாவுக்கு மரண தண்டனை அறிவித்து ‘பத்வா’ கொடுத்து விட்டார்.

வேத காலத்தில் மக்கள் பசுவை முக்கிய உணவாக உண்டு வந்தது மட்டுமில்லாமல், மதிப்பிற்குரிய உணவாகவும் கருதி வந்தனர். யாகங்களில் பசுவை பலி இடுவதும், பசுவின் கறியை கொண்டு சமைத்த உணவை பிரசாதமாக உண்டதையும் வேதங்களும், பிற பார்ப்பனிய நூல்களும் பதிவு செய்துள்ளன. அவை தொடர்பான ஆதாரங்கள் மிகவும் விரிவாக புத்தகத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளன.

the-myth-of-the-holy-cowவேத கால மருத்துவ நூல்களில் பசுவின் இறைச்சியும், நெய்யும், காரமும் கலந்து சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டால் குழந்தைகளுக்கு நல்லது என்றும் பல நோய்களுக்கு மருந்தாகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை சுஸ்ருதர் எழுதிய மருத்துவ நூல்களில் காணலாம். வேத காலத்திலேயே மருத்துவத்தை உலகிற்கு சொன்னவர் என்று சுஸ்ருதரை குறித்து பெருமை அடித்துக் கொள்ளும் இந்துத்வா கும்பல் அவரின் நூல்களை படிக்கவில்லை என்பது தான் உண்மை என்று இதிலிருந்து தெரிகிறது.

பொதுவாகவே “பசுவின் புனிதம்” புத்தகத்தில், பல ஆதாரங்கள் வேதத்திலும், இந்து மத நூல்களில் இருந்து மேற்கோள் காட்டப்படும்போது. இப்படி ஆதாரங்கள் இருக்க இந்து மதத்தை பற்றி பல பொய்களை இந்துத்துவா கும்பல் பெருமையாகவும், வெளிப்படையாகவும் சொல்லி வருவதை என்னவென்று சொல்வது? பொதுவில் மதவெறியர்கள அனைவரும் தமது மதப் புனிதத்தை இப்படித்தான் பொய்களாலும், புனைவுகளாலும், மற்ற பிரிவினர் மீதான கசப்புணர்விலும் கட்டியமைக்கின்றனர். அதில் இந்துமதவெறிப் பாசிஸ்ட்டுகள் முன் வரிசையில் இருக்கின்றனர்.

வளர்ந்து வரும் இந்துத்துவ சக்திகளின் பொய்களை அம்பலப்படுத்த அவர்கள் முன்வைக்கும் நூல்களில் இருந்தும், வரலாற்றில் இருந்தும் உண்மைகளை ஆய்வு செய்து தொகுத்து அம்பலப்படுத்த வேண்டியது அறிவுத் துறையினர், ஆய்வாளர்களின் கடமை. அதை மக்களுக்காக செய்பவர்களே உண்மையான அறிவுஜீவிகள். அந்த வகையில் டி.என். ஜா மிக அரும்பணியை செய்திருக்கிறார்.

டி.என். ஜாவின் “பசுவின் புனிதம்” எனும் நூல் வேத காலம் முதல் மக்கள் பசுவின் மாமிசத்தை உண்டு வந்ததை மட்டும் ஆதாரத்துடன் நம் முன் அம்பலப்படுத்தவில்லை, இந்து மதவாதிகள் எப்படிப்பட்ட பொய்களை வாய் கூசாமல் சொல்லுகிறார்கள், இந்து-இந்தியா என்று வெற்று கோஷங்கள் போடும் கூட்டம் எப்படி இந்தியாவின் உண்மையான மக்களின் வாழ்க்கையும் வரலாற்றையும் மறைத்து விட்டு தங்கள் பொய்களை திணிக்கிறது-திரிக்கிறது, என்றும் அம்பலப்படுத்தியுள்ளார். அவருக்கும் நம் நன்றிகள்.

பசுவின் புனிதம்
ஆசிரியர் : டி.என்.ஜா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்

கிடைக்குமிடம்: பாரதி புத்தகாலயம் கடைகள் போக கீழைக்காற்றிலும் கிடைக்கும்.

கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா தெரு. எல்லீஸ் சாலை. சென்னை – 600002
புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண் : 369, 370

புத்தகக் காட்சியா ? கோயில் கடையா ?

22

றிவுப் பசியை போக்கிக் கொள்ள சென்னை புத்தகக் காட்சிக்கு ஒரு எட்டு வைக்கலாம் என்று, ஆரம்பத்திலேயே நம்மை வழிமறிக்கும் ஸ்நாக்ஸ் கடைகளைத் தாண்டி, உள்ளே நுழைந்தேன்.

பிட்சாக் கடை
புத்தகக் கண்காட்சியில் ஸ்நாக்ஸ் கடைகள் (கோப்புப் படம்).

“ஏம்ப்பா! புத்தகக்காட்சி பொறுப்பாளர்களே, படிப்பு வாசனையைத் தேடி நுழையும் போதே நுழைவாயிலில் பாப்கார்ன் வாசனையை தூக்கலாக்கிக் காட்டி சுண்டி இழுப்பதை நிறுத்தக் கூடாதா? வரும் போதே தடுக்கி விழுந்தால் சாட் அயிட்டங்களில் விழும்படி என்னய்யா அப்படி ஒரு ஏற்பாடு?! போகட்டும், படிக்கும் பழக்கம் அருகி வரும் காலத்தில் இத்தனை புத்தகக் கடைகளை ஓரிடத்தில் வரிசை வைத்துக் காட்டும் உங்கள் முயற்சியை பாராட்டலாம்” என்ற எண்ணத்தோடு பார்வையிட்டேன்.

சுயமுன்னேற்றம், பொழுதுபோக்கு, இலக்கியக் கோஷ்டிகளின் மத்தாப்புக்கள், நுகர்வு உலகின் அழிபசி தெரியாமல் இன்னும் பிள்ளையை நல்லவனாக வளர்க்க நன்னெறிக்கதைப் புத்தகங்களோடு ”இந்த வருசம் வியாபாரம் சரியில்ல!” என்று நொந்து நூலாகிக் கிடக்கும் விற்பனையாளர்கள் என பல வண்ணக் கருத்துக்களின் கடைகளைப் பார்த்து வருகையில், இடையிடையே பெரும்பாலும் பக்தி புத்தகங்களைத் தாண்டி நடைபாதை கோயில் மாதிரியே சில கடைகள் மெல்லிய இசையுடன் ”கிருஷ்ண கிருஷ்ணா, ஓம்… ஓம்….” என்று ஊளை ரீங்காரத்தைக் காட்டி ஆள்பிடித்தன.

புத்தகக்கண்காட்சி என்ற வரம்புக்குள் மதவாதிகள் தங்கள் பிரச்சாரத்தை புத்தகங்களாக பார்வைக்கு வைப்பதைக் கூட சகித்துக்கொள்ளலாம், பல பார்ப்பன பண்டாரக் கடைகளில் அவர்களின் ‘நூல்’ விடும் முயற்சியே முறுக்கிக் கொண்டு தெரிகிறது.

ஆன்மீகக் கடைகள்
புத்தகக் கண்காட்சியில் ஆன்மீகக் கடைகள் (கோப்புப் படம்)

”இஸ்கான்” கடையில் கிருஷ்ண ஆலாபனையுடன் ஊதுவத்தி, தசாங்கம், அத்தர், ஜவ்வாது, நறுமணப் பொருட்கள் என புத்தகங்கள் வரிசையில் இடம் பிடித்திருந்தன. பகவத்கீதையை தூக்கி நிறுத்தவும், பார்ப்பன நாற்றத்தைப் பரப்பவும் புத்தகக்காட்சி சாக்கில் அவாளின் பிரசாதக் கடைகள், “வேத மந்தீர்” என்றொரு கடை, கிலோ கணக்கில் ராசிக்கற்கள், ஸ்படிக கும்பங்கள், கல் மணி மாலைகள் வேதாந்தம், மத அனுஷ்டானம் என்ற விளம்பரங்கள் இதற்குப்பெயரும் புத்தகக் கடையாம்! இன்னொரு வரிசையில் “ராமகிருஷ்ண மடம்” சங்கராச்சாரி, ஆதிசங்கரர் மினி கட் அவுட்டுகள், டாலர்கள் (அமெரிக்க டாலர் இல்லீங்க? அது அங்க! இங்க அவாள் குரு – க்களின் படம் போட்ட டாலர்!) விவேகானந்தர் படங்கள், ஒலி / ஒளி நாடாக்கள், கூடவே புத்தகங்கள் துளசி நீர்த்தம் மட்டும்தான் பாக்கி!

தன் பங்குக்கு “ஈஷா மையம்” லிங்கம், படங்கள், மாலைகள், சத்குருவின் படங்கள், கேசட்டுகள் என வாயைக் கொடுத்தால் ‘குண்டலினியில்’ தூக்கிப்போட குண்டுகட்டான ஆட்களுடன், “ஸ்ரீ வித்யதீர்த்தா பவுன்டேசன்” பெயரில் 80 – ஜி வரிவிலக்கோடு உண்டி வசூலுக்கு நோட்டீஸ் விநியோகம் வேறு, சூடம், ஊதி வத்திக்கு மசியாதவனை கட்டிப்போட “இன்ஃபினி” என்ற பெயரில் கார்ப்பரேட் குருவின் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய டி.வி. காட்சியுடன் ஒரு கடை. நாலு தடியர்கள், கடை நிறைய பரப்பப்பட்டிருக்கும் குருவின் ஒரே ஒரு புத்தகத்தைக் காட்டி போகிற வருபவர்களைக் முதலில் கொக்கிப் போடுகிறார்கள், பின் டி.வி.யைக் காட்டி அதில் ஆவியாய் அலையும் குருவின் உரையில் முக்கி எடுத்து, முகவரியைப் பிடுங்க… முடிவற்ற காரிய வாதத்தில் உயர் நடுத்தரவர்க்கத்தை முக்தி அளிக்கும் திசைக்கு பத்தி விடுகிறது “இன்ஃபினி” கார்ப்பரேட் ‘கறிக் கடை!

ஆன்மீகக் கடைகள்
புத்தகக் கண்காட்சியில் கோயில் கடைகள் (கோப்புப் படம்)

இத்தனைக் கேடிகளும் இருக்குமிடத்தில் நித்யானந்தா இல்லாமல் விளங்குமா? நித்யபீடமும் புத்தகக்காட்சியில் உத்திராட்சங்களுடன் வருபவர்களைத் தடுக்கி விடுகிறது. ஒரு உத்திராட்சத்துடன் நித்யானந்தா டாலரைக் கோர்த்து வருபவர்களுக்கு அதை இனாமாகக் கட்டிவிட சிஷ்யகேடிகள்! மினி நித்தி கட் அவுட்டுகள் சந்தன மாலைகள், சிரிப்பாய் சிரித்த நித்தியின் சிரிப்பு படங்கள்… என ஆங்காங்கே புத்தகக் காட்சியில் சாமியார் மடங்கள் பத்தாது என அவ்வப்போது கண்காட்சி அரங்குகளில் திடீர் பிரசன்னமாகி விபூதி வழங்கும் சாமியார்களையும் நேரடியாக கடையில் கொண்டு வந்து அடுக்கி வைத்திருக்கின்றன சில காவிகள்!

பார்ப்பன பந்தாவுக்கு ஈடுகொடுக்க முடியாமல், பாவம் சன்மார்க்கம், ஓங்காரம் என்று சில சைவப் பண்டாரக் கடைகளில் விபூதி மணக்கும் கோலத்தில் சில சாமிகள் ‘தேமே’ என தாடியை தடவிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது. இசுலாமிய, கிறித்தவ நிறுவனங்கள் புத்தக வடிவம் தாண்டி வேறு ஜிகினாக்கள் காட்டாமல் அடக்கி வாசிக்கும் போது, பார்ப்பன இந்துமத பண்டாரங்கள் புத்தகக் காட்சிக்கு சம்பந்தமே இல்லாமல் விபூதி, பூஜை பொருட்கள் என தலை விரித்தாடுவதைப் பார்க்கையில், இது புத்தகக் காட்சியா, இல்லை நடைபாதை கோயில்களா? என சந்தேகம் வராமல் இல்லை!

“பபாசி” சங்கத்தில் புத்தகக் கடைகளில் ஆடியோ கேசட்டுகள் கூட வைத்து விற்கக் கூடாது என கறாராக விதி வகுத்திருப்பதாகச் சொல்கிறார்கள், அங்கங்கே தகடுகளும், ஆடியோ/வீடியோ ஒளி பரப்புகளையும் பார்க்கையில் “பபாசியும்” பாப்பார பாசியாக இருப்பது அவமானம்!

‘விதியை’ நொந்து கொண்டு வெளியே வந்தால்… வெளியே உள்ள சொற்பொழிவு அரங்கில் ஒரு சாம்பிராணி தீவிரமாக புகைந்து கொண்டிருந்து, “ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் விவேகானந்தரை கொண்டு சேர்க்க வேண்டும்” என்ற அந்த ஆர்.எஸ்.எஸ். பிராண்ட் சாம்பிராணி யார் என்று எட்டிப் பார்த்தால் தமிழருவி மணியன்! வெளங்கிடும்?!

– சுடர்விழி

ஆக்கிரமிப்பு !

8

து ஒரு மாலை நேரம். கோடம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு பயணிகள் கடந்து செல்லும் பாதையோரம்; வினைதீர்த்த விநாயகர் கோயிலின் முகப்பில், முதுமையின் களைப்பில் கீரைக்கட்டுகளையும் காய்கறிகளையும் பூக்களையும் கேரிபேக்கில் கட்டி வைத்துக் கொண்டு வாடிக்கையாளருக்காகக் காத்திருந்தனர், அந்தப் பெண் வியாபாரிகள்.

அப்போது, கோடம்பாக்கம் இரயில் நிலையத்தின் பின்பக்க வழியாக ஆர்.பி.எஃப் போலீசுகாரர் ஒருவர் பதுங்கியபடியே வந்து சேர்ந்தார். இரயில் நிலையத்திலிருந்து தப்பி வந்து விட்ட தீவிரவாதியையோ அல்லது திருடனையோ மடக்கிப் பிடிக்கத்தான் இப்படி பின்பக்க வழியாகப் பதுங்கி வருகிறாரோ? என்ற பரபரப்பு அவரை கண்ட அனைவரிடத்திலும் தொற்றிக் கொண்டது.

“இரயில்வேக்குச் சொந்தமான இடத்தில், பயணிகளின் போக்குவரத்துக்கு இடையூறாக, நடைபாதையை ஆக்கிரமித்து, சட்டவிரோதமாக வியாபாரம் செய்தக் குற்றத்திற்காக”, நடைபாதை வியாபாரிகளின் உடமைகளை ‘பறிமுதல்’ செய்த ஆர்.பி.எஃப். போலீசு, வயதான அந்த நடைபாதைப் பெண் வியாபாரிகளையும் விரட்டியடித்தது.

தன் மகன் மற்றும் பேரன் வயதேயான அந்தப் போலீசுகாரனைக் கையெடுத்துக் கும்பிட்டனர், அப்பெண் வியாபாரிகள்.  “அய்யா இந்த ஒரு தடவ வுடுய்யா… இனி கடை போடலை…” எனக் காலில் விழாதக் குறையாக கெஞ்சினர்.

முதுமையால் வலுவிழந்து தளர்ந்து போன நிலையில், தனது உடம்பையே அசைத்து அசைத்துத்தான் நகர்த்த முடிந்த அந்த மூதாட்டியால், தலைச்சுமையாய் மூங்கில் கூடையை சுமந்து கொண்டு தப்பிச் செல்ல வழியேது?

அன்றாடம் அஞ்சுக்கும் பத்துக்கும் வியாபாரம் பண்ணும் அந்த நடைபாதை வியாபாரிகளுக்கு இரவு தங்குமிடமும் அதே நடைபாதைதான் என்பதைக் காண முடிந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

அவர்களுள் ஒரு பெண் வியாபாரி, நூறு ரூபாய்த் தாளை நாலாய் மடக்கி நாசூக்காக ஆர்.பி.எஃப். கைகளில் திணிக்கப் பார்த்தார். “இதெல்லாம் என்கிட்ட நடக்காது… பொருளை வண்டியில் ஏத்து” என எகிறினார் அந்த போலீசுக்காரர்.

“எதையும் எங்கிட்ட பேசாதே… ஸ்டேசனுக்கு வா… கோர்ட் ல பைன் கட்டிட்டு… உன் பொருள வாங்கிட்டு போ… பொருள் எல்லாத்தையும் மூட்டையில போடு…”

அப்பெண் வியாபாரிகளின் கோணிப்பையைப் பிடுங்கி ‘கைப்பற்றிய’ப் பொருட்களை அதில் போட்டுத் திணித்தது ஆர்.பி.எஃப். போலீசு.

“நாலு பேரு பொருளையும் ஒன்னா கட்ட முடியுங்களா? பூ, கீரையெல்லாம் ஒன்னா போட்டு கட்டிட்டா வீணாப்போயிடும். திரும்ப விற்க முடியாது. பொருள் இங்கேயே இருக்கட்டும். நாங்க வேணா கூட வர்றோம். ஃபைன் போடுங்க. கட்டிடறோம்….”என்றனர், அப்பெண் வியாபாரிகள்.

அப்பெண் வியாபாரிகளின் புலம்பலை காதில் வாங்கிக்கொள்ளத் தயாரில்லாத ஆர்.பி.எஃப் போலீசு, “கோணிப்பையை தூக்கிட்டு என்கூட வா” என அதட்டியது.

“மனசாட்சி இல்லாம சொல்றீங்களே..? என்னால எப்படிப்பா தூக்க முடியும்?” என்றார், வயதான அந்தப் பெண் வியாபாரி.

“அப்போ… என்னைய தூக்க சொல்றியா?” பதிலுக்கு எகிறினான், அந்தப் போலீசுக் காரன்.

“அதுக்குத்தான் சொல்றேன்… பொருள இங்கேயே கட்டி வச்சிடு… நான் ஸ்டேசன் வந்துட்டு போனதுக்கு அப்புறம் என்கிட்ட திருப்பிக்கொடு… தூக்கி இறக்குனா பொருளு வீணாப் போயிடும்பா..” மீண்டும் கெஞ்சலோடு கோரிக்கை விடுத்துப் பார்த்தார்கள், நடைபாதை வியாபாரிகள்.

எதற்கும் அசருவதாயில்லை… அந்த ‘கடமை தவறாத’ ஆர்.பி.எஃப். போலீசுக்காரர்கள். வலுக்கட்டாயமாகப் பறித்து, ஆட்டோவை அழைத்து ‘கைப்பற்றிய’ப் பொருட்களை அள்ளிச் சென்றனர்.

***

துவரை அனைத்தையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களிடம், ஆர்.பி.எஃப். போலீசின் நடவடிக்கை சரியா? தப்பா? என்ற விவாதம் குசுகுசுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

“என்னண்ணே… பிரச்சினை” என்ற கேள்விக்கு, “ஆர்.பி.எஃப். இடத்துல கடை போட்டா… சும்மா இருப்பாங்களா?..” என நம்மிடமே எதிர்கேள்வி கேட்டார், ‘தென்னக ரயில்வேயின் அனுமதி பெற்ற ஆட்டோ நிறுத்தத்’தைச் சார்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநர்.

“பப்ளிக் போயிட்டு வர்றதுக்கு இடைஞ்சலா இருக்குன்னு… கண்டவனெல்லாம் போன் போட்றானுங்க தம்பி.. அதான் இப்படி பண்றாங்க… இல்லைன்னா பாவம் பொழச்சி போகட்டும்னு கண்டுக்காமத்தான் இருப்பாங்க…” என ஆர்.பி.எஃப். போலீசின் ‘அழுத்தத்திற்கு’ அர்த்தம் சொன்னார் ஒருவர்.

“அவங்க ஒரு ஓரமாத்தானே வியாபாரம் பண்றாங்க..? இதனால.. ஸ்டேசனுக்கு வந்துட்டு போறவங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லியே? அங்கப் பாருங்க நல்லா தாராளமா இடம் இருக்கத்தானே செய்யுது?” என்ற கேள்விக்கு “நாம என்ன பண்ண முடியும்? அவங்க டூட்டி அது. அவுங்க மேலதிகாரிங்க அவுங்களைத்தானே கேள்வி கேட்பாங்க”என்றார் இன்னொருவர்.

***

கோடம்பாக்கம் இரயில்நிலையத்தில் மட்டுமல்ல; கடற்கரை தொடங்கி செங்கல்பட்டு வரையிலும் அனைத்து இரயில் நிலையங்களிலும் இந்த நடைபாதை வியாபாரிகள் நிறைந்திருக்கிறார்கள். நடந்து போவதற்கு இடையூறாக கடைவிரித்திருக்கின்றனரே என்று இவர்களைக் கண்டு நீங்கள் முகஞ்சுழிக்கவும் செய்திருக்கக் கூடும்.

இங்கே, எது ஆக்கிரமிப்பு? எது இடையூறு? சென்னையின் குறுகிய சந்துகளில் மட்டுமல்ல; பிரதான வீதிகளில் கூட பாதி ரோட்டை மறித்து நிறுத்தப்பட்டிருக்கின்றனவே சொகுசு கார்கள். அவை ஆக்கிரமிப்பில்லையா? சென்னையில் வீடு கட்டும் எந்த யோக்கியனாவது அடுத்தவனுக்கு இடையூறின்றி தமது கட்டுமானப் பொருட்களை கொட்டி வைத்திருக்கிறானா? கேள்வி கேட்பாரின்றி நடு ரோட்டில்தானே கொட்டப்படுகின்றன. சென்னை-தி.நகர் ரெங்கநாதன் தெரு கண்டிராத ஆக்கிரமிப்பா? நத்தை ஊர்வதைப்போல, ஒருவரோடு ஒருவர் இடித்துக்கொண்டுதான் ரெங்கநாதன் தெருவையே கடக்க முடிகிறது நம்மால். இரண்டு மாடிக்கு அனுமதியை வாங்கிவிட்டு எட்டு மாடி கட்டினால், அது ‘பிரம்மாண்டம்’. பேரிடர் காலங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள் கூட நுழைய முடியாத படிக்கு தீப்பெட்டிகளைப் போல அடுக்கப்பட்டிருக்கும் ரெங்கநாதன் தெருவே அநியாயமான ஆக்கிரமிப்பு.

மேட்டுக்குடி பணத்திமிரில் ஆளுக்கொரு காரை வாங்கிவிட்டு அதை நடுத்தெருவில் நிறுத்துவதை நாம் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? அவன் வீட்டு கட்டுமானப் பொருளையெல்லாம் நடுரோட்டில் கொட்டி வைப்பதை நாம் ஏன் அனுசரித்துப் போக வேண்டும்? ‘செல்வரத்தினங்கள்’ கோடிகளில் செல்வங்களை குவிக்க நாம் ஏன் ரெங்கநாதன் தெருவின் ஆக்கிரமிப்பை அனுமதிக்க வேண்டும்? சாமானியனைப் பற்றிய அக்கறையற்ற மேட்டுக்குடி பணத்திமிரும் பச்சையான சுயநலனும்தானே இங்கே மண்டியிருக்கிறது.

தி.நகர் ரெங்கநாதன் தெருவின் ஆக்கிரமிப்பு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

நடைபாதை வியாபாரிகளைக் கண்டு ஆக்கிரமிப்பு, இடையூறு என்று நெஞ்செரிச்சல் படும் மேட்டுக்குடி – நடுத்தர வர்க்க குடிமக்கள் இவற்றையெல்லாம் வகையாய் மறந்து விடுவதேன்?

***

விவசாயம் இழந்து, சிறு தொழில் நொடிந்து, வாழ வழியின்றி நகருக்குள் விசிறியெறியப்படும் அந்த உழைக்கும் வர்க்கப் பிரிவினர்தான் கந்துவட்டிக்கு கடனை வாங்கி, தன் சொந்தக்காலில் ஏதேனும் தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கையில் நடைபாதை வியாபாரிகளாக மாறியிருக்கின்றனர். இவர்களை நாம் ஆதரிக்காமல், வேறு யார் ஆதரிப்பது?

கடைத்தெருவுக்குப் போய் காய்கறி வாங்கி வருவதைக்கூட கவுரவக் குரைச்சலாக கருதும் ‘ஆண்’மகன்களுக்கு, நடைபாதையில் கடைவிரித்து அமர்வதற்கு அசாத்தியமான மன உறுதி தேவை என்பதை எப்படி விளங்கிக் கொள்ளப் போகிறது.

தமக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தராத இந்த அரசுக்கெதிராகக் கிளர்ந்தெழாமல், வக்கற்ற அரசின் மீது காறி உமிழ்ந்து விட்டு தன் கையை நம்பி நடைபாதை வியாபாரிகளாய் மாறிப் போனவர்களைக் கண்டு அரசும் அதிகார வர்க்கமும் பெருமிதம் கொள்ளத்தான் காரணங்கள் பல இருக்கின்றன.

கோடிகளை குவித்துவிட வேண்டுமென்ற வெறியோடுதான், இவர்கள் தெருக்கோடியில் கடை விரித்திருக்கின்றனரா என்ன? இந்த நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பில் பொதுநலன் அடங்கியிருப்பதை நீங்கள் மறுக்கத்தான் முடியுமா?

அதிகாலை எழுந்து பிள்ளைகளுக்கும் கணவன்மார்களுக்கும் சமைத்து வைத்துவிட்டு… அடித்துப் பிடித்து இரயிலைப் பிடித்து… நீர்ச்சொட்டும் தலைமுடியை அவிழ்த்துவிட்டு… காலை சிற்றுண்டியை தொடர்வண்டி ஓட்டத்தோடே முடித்து… தனக்கான நிலையம் வந்ததும் மீண்டும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு சுழலும் தாய்மார்கள்தானே இந்த நடைபாதை வியாபாரிகளின் அன்றாட வாடிக்கையாளர்கள்.

பொதுவாக காய்கறிகளை கிள்ளிப் பார்த்தும் கீரைக்கட்டுகளை பலமுறைத் திருப்பிப் பார்த்தும் நிதானமாக அண்ணாச்சி கடைகளில் வாங்கும் தாய்மார்கள்; இந்த நடைபாதை வியாபாரிகள் முடி போட்டு வைத்திருக்கும் காய்கறிகளை கண்ணை மூடிக் கொண்டு வாங்கிச் செல்கின்றனரே! இதற்கான காரணம், அடுத்த இரயிலைப் பிடித்துவிட வேண்டுமென்ற அவசரம் மட்டுமல்ல; அன்றாடம் கடந்து செல்லும் அந்த நடைபாதை வியாபாரிகளின் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையினாலும்தான்.

அன்றாடம் அலுவல் முடித்து அரக்கபறக்க வீட்டுக்கு ஓடும் தாய்மார்களுக்கு ரிலையன்ஸ் பிரஷ் கியூவில் நின்று கார்டை தேய்க்க சாத்தியமில்லை என்பது மட்டுமில்லை; பத்து ரூபாய் தாளை நீட்டினால் பாலிதீன் பையில் தயாராயிருக்கும் தரமான காய்கறிகள் கிடைக்கிறது என்பதுதான்.

என்றேனும், வாய்ப்புக் கிடைத்தால் ஒரு நிமிடம் நின்று பாருங்கள்! நடைபாதை வியாபாரிகளையும், அவர்களின் வாடிக்கையாளர்களையும் வேடிக்கை பாருங்கள்! கொஞ்சம் துணிவிருந்தால் நடைபாதை வியாபாரிகளின் ‘ஆக்கிரமிப்பை’ப் பற்றி அத்தாய்மார்களிடம் பேசிப் பாருங்கள்!

கழுவி ஊற்றி விடுவார்கள் என்று கவலைப்படுகிறீர்களா? சரிதான், வேறென்ன செய்ய வேண்டுமென்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

– இளங்கதிர்

“கவர்ன்மெண்ட் பிராமணன்” – நூல் அறிமுகம்

3

கவர்ன்மெண்ட் பிராமணன்

ல்லாமே இயல்பாக இருப்பதாய் பாசாங்கு செய்கின்ற பேர்வழிகளின் சாதீய மானோபாவத்தை வாழ்க்கையின் இண்டு இடுக்குகளிலிருந்து இழுத்து வந்து அம்பலப்படுத்துகிறது “கவர்மெண்ட் பிராமணன்”. “இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை” என்று யாரும் தப்பிவிட முடியாதபடிக்கு ‘மேல்சாதி’ உணர்வின் சகலவிதமான திரைச்சீலைகளையும் எடுத்துப்போட்டு “இது உன்னுடையது தானா பார்! நீயே சரி பார்த்துக்கொள்” என்று வாசகனை அனுபவத்துக்குள்ளாக்குகிறது நூல். எந்தப் பகுதியை படிக்கும் போதும் மெய்மறக்கச் செய்யாமல் வாசகனையும் வாழ்க்கைப் பரப்பிற்கு இழுத்து வந்து உணர்வினை தட்டிவிடுவதே இந்நூலின் சிறப்பு.

கவர்ன்மெண்ட் பிராமணன்“அன்று ஒரு வீர சைவரின் வீட்டில் யாரோ இறந்துவிட்டார்கள்… நாங்கள் வந்ததை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகே அவர்களும் பாடையை தூக்க ஆரம்பிப்பார்கள். பிணத்தின் மேல் இறைக்கப்படும் சில்லறைக் காசுகள் கீழே விழும்போது எடுத்துக் கொள்வது தலித்துகள் வேலை. தலித்துகள் இல்லா விட்டால் அவர்கள் இறைக்கும் சில்லறைக் காசுகளுக்கு என்ன மரியாதை இருக்கிறது?” (நூல் பக்கம்: 14,15).

சாதித்திமிரை ஏதோ புதிய விசயம் போல பார்க்க முற்படும் வாசகர்களின் கற்பனை உலகத்திற்கு வேட்டு வைத்து நிஜ உலகத்துக்கு நெட்டித் தள்ளுகின்றன, அரவிந்த மாளகத்தியின் அனுபவங்கள். நூல் முன்வைக்கும் விசயத்திலிருந்து நழுவி விடாதபடிக்கு பாவண்ணனின் மொழியாக்க நடை நூலுக்கு சரியான பிடிமானம்.

பள்ளிக் கூடத்திலிருந்து பல்கலைக்கழகம் வரை – மாட்டுக்கு சினை போடும் இடத்திலிருந்து மந்த்ராலயம் வரை தீண்டாமையின் நுட்பங்களை நீங்கள் கண்டதுண்டா? “சினைக்கு போன எருமையும் ஓடிவந்த காளையும்” “கவர்மெண்ட் பிராமணனின் ராகவேந்திர பக்தி” ஆகிய தலைப்புகளில் அதை நீங்கள் காணலாம். ‘மேல் சாதி’ என்ற போர்வைக்குள் நடக்கும் கீழ்த்தரமான வேலைகளை சந்திக்கு இழுக்கின்றது “மஞ்சல் நீர் என்னும் ஈஸ்மென் கலர் படம்”. தமிழ்நாட்டிலும் கூட ஊர்த் திருவிழா என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட பெண்களை சடங்கு, விளையாட்டு சாக்கில் பாலியல் வக்கிரத்தில் தள்ளி ரசிக்கும் கலாச்சாரத்தின் மீது காரித்துப்பும் பகுதி இது.

“பூணூல், சிவங்கலிங்க நூலின் பெருமை” எனும் பகுதியில் ‘மேல் சாதியின்’ இரட்டை வேடத்தை எடுத்து விடுகிறார்; இவர்கள் சும்மா தோப்புக்கு போகிற சாக்கில் தண்ணீர் நிரம்பிய செம்பை கையில் ஏந்திக் கொண்டு மலைப்பக்கம் செல்வார்கள். பார்க்கிறவர்களுக்கு என்னமோ மலம் கழிக்க போகிறான் என்ற எண்ணம் தான் தோன்றும். ஆனால் இவர்கள் செல்வது சாராயம் காய்ச்சும் இடத்திற்கு….” (பக்கம் 61) குடிக்கிறது நாட்டு சரக்கு, எதுக்குடா சாதி முறுக்கு? என்று நம்மையும் கேட்கத் தூண்டும்.

“என் முன்னாள் காதலி”, “எதிர் காலத்தோடு விளையாடும் பெண்கள்” பகுதிகள் விரிவான அளவில் அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றன. தாழ்த்தப்பட்டவர்களை காதலிப்பதாய் நெருங்கும் பிற சாதிக்காரர்களின் கையாலாகாத்தனத்தையும், காதலும் ஒரு அடக்குமுறையாக தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிக்கப்படுவதையும் விளக்கும் பகுதிகள் இவை. “மார்க்சியமும் எச்சில் தட்டும்” போலி கம்யூனிஸ்டுகளின் இரண்டகத்தை, நுட்பமாகச் சாதி பார்க்கும் அவர்களின் சாமர்த்தியத்தை அம்பலப்படுத்துகிறது.

இந்த நூலின் “படிக்கத் தொடங்கும் முன்பு வாசகர்களோடு, இன்னும்பல பகுதிகள் வாழ்க்கையின் புரியாத பகுதிகளை புரிய வைக்கிறது.” என்ற முதல் பகுதி முக்கியமானது. அரவிந்த மாளகத்தி தன்னுடைய தற்போதைய அனுபவத்தை ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார், “மாளியோடு (அதாவது மாளகத்தியோடு) கூடப்படித்த நண்பர்களே இப்போது அவனிடமிருந்து விலகி நின்று என்னங்க என்று விளிக்கிறார்கள்…. அதற்குக் காரணம் அவன் பெரிய மனிதன் என்று அவர்கள் நினைப்பதுதான்.” (பக்கம். 7)

தான் தனிமைப்படுவதாக உணரும் அரவிந்த மாளகத்தி ஓரிடத்தில் தன்னைப்பற்றிய சுய விமர்சனமாக இப்படிச் சொல்கிறார், “ஒரு தலித்துக்கு இருக்கக் கூடிய எல்லா அம்சங்களும் கூட என்னிடம் உண்டு, அதே சமயத்தில் ஒரு சாதாரண மனிதனிடம் இருக்கக் கூடய எல்லா அம்சங்களும் கூட என்னிடம் உண்டு.” (பக்கம். 7) இந்தச் சாதாரண மனிதன் என்பவன் ஒரு தொழிலாளியா? விவசாயியா? அரசு ஊழியனா? அறிவு ஜீவியா? அவர் என்னவாக இருக்கிறார்? இதில் அவர் எந்த வர்க்கத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறார், எந்த வர்க்கத்தின் அரசியலுக்காக தன்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறார் என்பதைப் பொறுத்தே, அவர் தனது தலித் அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கும் முறையும், முன்னோக்கும் முறையும் அமைகிறது.

ஜெகனாபாத் (தலித்) படுகொலையைப் பார்க்கும் அடிப்படை வர்க்கத்தை சேர்ந்த தலித் ஆயுதந்தாங்கி களத்தில் நிற்பதையும், முப்படைகளையும் முதுகிற்கு பின்னால் வைத்துக் கொண்டு ‘தலித்’ ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் ஆளும் வர்க்கத்து நாற்காலியிலிருந்து வெறுமனே அறிக்கை விடுவதையும் புரிந்து கொண்டாலே போதும்! இந்த வர்க்க இருப்பைச் சரிபார்த்துக் கொள்ளும் அனுபவத்திலிருந்து எந்த ஒரு எழுத்தாளனும் தப்பித்துச் செல்வதெனபது தனிமைப்படுவதிலேயே போய் முடியும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் நாம் பகிர்ந்து கொள்ளவும் “வாழ்க்கை என்பதைத் திறந்த புத்தகமாக்கி” உதவி செய்கிறார் அரவிந்த மாளகத்தி.
______________________________
புதிய கலாச்சாரம்மே 1999
______________________________

கவர்ன்மெண்ட் பிராமணன் – அரவிந்த் மாளகத்தி
தமிழில் பாவண்ணன்.

விடியல் பதிப்பகம்
விலை- ரூ 70
பக்கம்-136

கிடைக்குமிடம்
கீழைக்காற்று வெளியீட்டகம்
10, அவுலியா தெரு. எல்லீஸ் சாலை. சென்னை – 600002
புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்றின் கடை எண் : 369, 370

மதுரை காமராசர் பல்கலைக் கழக துணைவேந்தர் கல்யாணியின் காட்டு தர்பார் !

2

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் உயர்கல்விக் கூடமா ?  கல்யாணியின் குடும்பச் சொத்தா ?

துரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன.

பல்கலைக்கழக மானியக்குழுவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையும் நிர்ணயித்துள்ள தகுதி கல்யாணி மதிவாணனிடம் இல்லை. பொய்யான தகவல்களைக் (Bi0-Data) கொடுத்து ஏமாற்றி அவர் துணைவேந்தர் பதவிக்கு வந்துள்ளார் என்பது போராட்டக்காரர்களின் முதன்மையான குற்றச்சாட்டு.

hrpc-mku-poster

குற்றச்சாட்டு உண்மையா ?

ஒரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்பதற்கான அடிப்படை தகுதி அவர் குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும். ஆனால் கல்யாணி மதிவாணன் சென்னை எத்திராஜ் கல்லூரியில் இணைப் பேராசிரியராகத்தான் பணியாற்றியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி அவர் இணைப் பேராசிரியராகத்தான் பணியாற்றியுள்ளார் என்பதோடு அவருடைய ஊதிய விகிதப்பட்டியலும் பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர் மீது மதுரை காமராசர் பல்கலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர் கே.வி.ஜெயராஜ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ரிட் மனு (W.P.11350/2012) தாக்கல் செய்துள்ளார். கல்யாணி மதிவாணன் தனது பதில் மனுவில் அதனை மறுத்து தான் தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதுவல்லாமல் அவர் மீது மேலும் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மதுரை வக்பு வாரியக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட ஐ.இஸ்மாயில் மற்றும் சிங்கப்பூரைச் சார்ந்த பேராசிரியர் சந்திரன் பாபு ஆகியோரும் வழக்குத் தொடுத்துள்ளனர். இந்த வழக்குகள் எல்லாம் ஒருங்கே இணைக்கப்பட்டு வரும் 23.1.2014 அன்று நீதிபதிகள் சுதாகர், வேலுமணி கூட்டு அமர்வில் விசாரணைக்கு வருகிறது. கல்யாணி மதிவாணன் தனது தகுதியை நிரூபிக்க முடியாது, நியமனத்தை நியாயப்படுத்தவும் முடியாது, பல்கலைக் கழக மானியக் குழுவையும் அரசையும் ஏமாற்றியதை மூடி மறைக்கவும் முடியாது. எனவே அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது உறுதி என்று எதிர்த்துப் போராடும் தரப்பினர் உறுதியாக நம்புகின்றனர்.

இவை தவிர எஸ்.சி, எஸ்.டி. அலுவலர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, பல்கலை வாகன ஓட்டுனர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததோடு முறைகேடும் நடைபெற்றுள்ளது என்று வழக்குத் தொடுத்துள்ளார். அதுபோலவே அலுவலக எழுத்தர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ததிலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றொரு வழக்கும் நிலுவையில் உள்ளது. 30.12.2013 அன்று ஐந்து பேராசிரியர் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தடை வாங்கினார் அன்றுதான் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இப்படி சட்டத்தின் முன்பு குற்றம் சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் தன் கொட்டத்தை மட்டும் அடக்கிக் கொள்ளாமல் குதித்துக் கூத்தாடுகிறார்.

50 நாட்களாகத் தொடர் போராட்டம்

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஆய்வு மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து கல்யாணி மதிவாணனின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராகப் போராடி வருகின்றனர். போராட்டம் வலுவடைந்து பரவத் தொடங்கியவுடன் பீதியடைந்து பல்கலையை காலவரையற்று மூட உத்தரவிட்டார்.

முதன்முதலாக மதுரை காமராசர் பல்கலையில் ஒரு பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதை ஆரம்பத்தில் அனைவரும் வரவேற்றனர். ஆனால் நாளடைவில் மூக்கு வெளுத்து பஞ்சகல்யாணி உருவம் தெரியத் தொடங்கியதால் போராட்டங்களும் கூடவே வெடித்தன. 2012-ம் ஆண்டு ஜுலையில் இவர் திரைப்படத் துறை தொடர்பான சில வகுப்புகளைத் தொடங்குவது என்று அதிரடியாக முடிவெடுத்து பெண்கள் விடுதியைத் தடாலடியாகக் காலி செய்தார். ஆனால் முதல் ஆண்டில் 3 பேரும் 2-ம் ஆண்டில் 10 பேரும் மட்டுமே அந்த வகுப்பில் சேர்ந்துள்ளனர். அதற்கு பல்கலைக் கழக மானியக் குழுவிடம் அனுமதியும் பெறவில்லை (இந்த யோசனையை நடிகரும் சட்டமன்ற உறுப்பினரும் ச.ம.க கட்சித் தலைவருமான மாமேதை சரத்குமார் வழங்கியதாகக் கேள்வி) அதைத் தொடர்ந்து விடுதிக் கட்டணத்தை தன் இஷ்டம் போல் உயர்த்தினார். உணவு விடுதியை தனியாருக்குத் தாரை வார்த்தார். இதனால் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராடினர். மாவட்ட ஆட்சியர் தலையீட்டின் பேரில் அப்போதைக்குப் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது.

அடுத்த பிரச்னை, பல்கலைக் கழக மானியக் குழுவின் துணைத் தலைவர் இங்கு வந்திருந்த போது ஆய்வு மாணவர்களுக்கு 8 மாதங்களாக உதவித் தொகை வழங்கப்படவில்லை என்பதைத் தெரிவிக்க முயன்ற மாணவர் பிரதிநிதிகள் பாண்டியராஜன், அருண் ஆகியோர் பலாத்காரமாகத் தடுக்கப்பட்டனர். பல்கலைக் கழகத்தின் கௌரவத்தைக் குறைப்பதாக துணைவேந்தர் குற்றம் சாட்டினார். இதற்காக அமைதியான முறையில் போராடியவர்கள் மீது பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டார். மாணவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளைச் சொல்ல வந்தபோது அவர்களிடம் தரக்குறைவாகப் பேசி மிரட்டியதோடு, தான் நாவலர் நெடுஞ்செழியனின் மருமகள் மட்டுமல்ல, புரட்சித்தலைவி அம்மாவின் ஆசியோடு பதவி பெற்றவர் என்று கொக்கரித்துள்ளார்.

மாணவர்களின் கோரிக்கைகளுக்காக ஜனநாயகப் போராட்டங்களில் ஈடுபட்ட ஆய்வு மாணவர்கள் பாண்டியராஜன் மற்றும் அருண் ஆகியோரை டிஸ்மிஸ் செய்தார். ஆய்வு மாணவர்களை வெளியேற்றுவதற்குத் துணைவேந்தருக்கு அதிகாரம் இருக்கிறதா என்று பேராசிரியர்களும் செய்தியாளர்களும் கேள்வி எழுப்பிய போது வெளியேற்றவில்லை ஆய்வை ரத்து செய்துள்ளோம் என்றும் அதற்குப் பிறகு ஆய்வு வழிகாட்டியை (Guide) மற்றியுள்ளோம் என்றும் முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார்.

மதுரை காமராசர் பல்கலையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற பி.ஜே ஈஸ்வரி பண்டாரநாயகா என்ற பெண் மாற்றுத் திறனாளி. அவர் தனது முனைவர் மேல்நிலை ஆய்வினைத் தொடர கோத்தாரி பெல்லோஷிப் மற்றும் யூஜிசி சிறப்பு அனுமதி வழங்கியது. கல்யாணி மதிவாணன் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பின்பு தான் இது நடந்தது. ஆனால் ஈஸ்வரி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே இருந்து வருகிறார். அது பல்கலை விதிகளுக்கு முரணானது என்று கூறி அவர் ஒரு பெண், மாற்றுத் திறனாளி என்று கூடப் பாராமல் நள்ளிரவில் விடுதியை விட்டு பலவந்தமாக வெளியேற்றியுள்ளார்.

காரணம், அவருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருப்பவர் பேரா. முனைவர் எஸ். கிருஷ்ண சாமி. அவர் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் (TANFUFA) மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளார். மரபணு பொறியியல் துறையின் தலைவர். இவர் தமிழ்நாட்டிலுள்ள அரசு பல்கலைக் கழகங்களில் நியமிக்கப்பட்டுள்ள சில துணை வேந்தர்கள் தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கல்யாணி மதிவாணனையும் பாதிப்பதாக இருந்ததால் அவர் உடனடியாக பதவி இறக்கம் செய்யப்பட்டு அவர் பணியில் சேர்ந்த போது இருந்த பெறுப்பிற்குத் தாழ்த்தப்பட்டுள்ளார். இதற்கான தீர்மானம் சிண்டிகேட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை நடைமுறைப்படுத்தப் படவில்லை. ஆனால் மாணவர்கள் பாணடியராஜன், அருண், ஈஸ்வரி பண்டார நாயகா ஆகியோர் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்படி தன்னுடைய அதிகாரத்தையோ முறைகேடுகளையோ கேள்வி கேட்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் உடனடியாகப் பழிவாங்கப்பட்டனர். அதே போது தனது அதிகார துஷ்பிரயோகத்திற்கும் ஊழல் முறைகேடுகளுக்கும் துணைபோகிறவர்களுக்குப் பணமும் பதவியும் சலுகைகளும் தானே வந்து சேருகிறது.

ஊழல் முறைகேடுகள்

பல்கலையில் ஓட்டுனர் காலி பணியிடங்களில் 10 பேர் பல்கலை விதிமுறைகளுக்கு (இடஒதுக்கீடு) மாறாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 9 பேர் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்களிடம் தலா 10 முதல் 13 லட்சம் வரை கையூட்டுப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

தொலைநிலைக் கல்வித்துறையில் அதிகாரபூர்வமான கிளைகள் தொடங்குவதில் குறிப்பாக கேரள மாநிலத்தில் பலகோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகவும் தெரிய வருகிறது. அலுவலகப் பணியாளார்கள் தேர்வில் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப் படாததால் நியமனம் செய்யக் கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு உள்ளபோதும் வழக்கை துச்சமாக்கி எழுத்தர் பணிக்கு 176 பேர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். அவர்களிடமிருந்து பலகோடி ரூபாய் கையூட்டாகப் பெறப்பட்டு நியமனத்திற்கு மட்டுமே காத்திருப்பதாகத் தெரியவருகிறது.

மூவர்கும்பல்

கல்யாணி மதிவாணனின் அனைத்து அடாவடி நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக நிற்பது பல்கலைக்கழக டீன் ராஜியக்கொடி மற்றும் ஓய்வுபெற்ற பண்டகசாலை மேலாளர், SVK செல்வராஜ் (இவர் ஊரறிந்த திமுககாரர், மு.க. அழகிரியின் பினாமி) பல்வேறு ஊழல் முறைகேடுகளுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர். கல்யாணி மதிவாணன் இவர் மீதிருந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்து பணி ஓய்வு மற்றும் பணப் பலன்களைக் கொடுத்து தனக்குக் கைத்தடியாக வைத்துக் கொண்டுள்ளார். மூன்றாவது நபர் ஓய்வு பெற்ற ஆங்கிலத்துறை பேராசிரியர் பரமேஸ்வரி. இவர்கள் மூவரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள். சென்ற வாரம் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்திய போது இவர்கள் முயற்சியில் திடீர் மாற்று சங்கங்கள் (கைக்கூலி) உருவாக்கப்பட்டு மாணவர்கள் மிரட்டி வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்களுடன் காவல் துறையும் இணைந்து மாணவர்களைக் கைது செய்து மாலையில் விடுவித்துள்ளது.

கல்யாணி மதிவாணனுக்குப் பல்கலையில் பணிபுரிகிற அனைவரும் தனது ஆணைக்குக் கட்டுப்பட்ட கொத்தடிமைகள் என்று எண்ணம். அவரை எதிர்க்கிறவர்கள் யாராக இருந்தாலும் உடனடியான பழிவாங்கப்படுவார்கள். சிண்டிகேட், செனட் என்பதெல்லாம் இவருடைய கைப்பாவைகளாக மாற்றப்பட்டுள்ளன. ஜனநாயகம் என்பது துளிகூட இங்கு இல்லை என்பதே உண்மை.

துணைவேந்தரின் மகன் ஜீவன் என்பவர் ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர். அவர் வெளிநாடு செல்லும் போதெல்லாம் அம்மாவும் உடன்செல்வார். அவருக்குத் துணையாகச் செல்வதற்கு ஓர் உதவியாளர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த உதவியாளர் வேறு யாருமல்ல அவரது மகளேதான்.

தன்னுடைய உறவினர்களுக்கு பல்கலை விதிகளுக்கு முரணாக புதிய பதவிகளை உருவாக்கி ரூ 20,000 – 25,000 சம்பளத்தில் வேலை கொடுத்துள்ளார். மேலும் பல்கலைச் சிற்றுண்டிச்சாலையை இவரது உறவினருக்குக் கொடுத்துள்ளார். அதில் நாளொன்றுக்கு ரூ 20,000 வருமானம் வருகிறதாகச் சொல்கிறார்கள். பேராசிரியர்களுக்கான வீட்டுமனைகள் இவரது உறவினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பல்கலை வளாகத்திலுள்ள முதிர்ந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன. இரண்டரை டன் எடை உள்ள, பல கோடி மதிப்புள்ள இரண்டு சந்தன மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அது பற்றிய கணக்கு எதுவும் இதுவரை தரப்படவில்லை. மரங்கள் வெட்டப்பட்டதால் சுற்றுச் சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி ஊழல் முறைகேடுகளின் கதையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

தன்னை எதிர்க்கிறவர்களைப் பழிவாங்க அவரகள் மீது பாலியல் வன்கொடுமை புகார் தரவும் தயங்கமாட்டார் இந்தத் துணைவேந்தர். பல்லூடகக் கல்வி ஆய்வுமையத்தில் (EMMRC) பணிபுரிந்த சோபனாபாய் என்பவார் பல ஆண்டுகளுக்கு முன்பு அந்தத் துறையை அம்போவென்று விட்டுவிட்டு ஓடிப்போனார். தற்போது திடீரென்று வந்துள்ளார். அவருக்கு அந்தத் துறையின் இயக்குனர் பொறுப்பு தரப்பட்டுள்ளது. அவரது கணவர் பல்கலைக் கழக மானியக் குழுவில் பணிபுரிவதால் அவருக்குப் பதவிதர வேண்டி துணைவேந்தர் ஒரு பாலியல் வன்கொடுமை அநாமதேயப் புகாரை சோபானாவிடம் பெற்றுக் கொண்டு அப்பதவிக்கு விண்ணப்பித்த முனைவர் ரவிக்குமாரை தற்காலிகப் பணி நீக்கம் செய்துள்ளார்.

மதுரை காமராசர் பல்கலைக் கல்லூரியில் தற்காலிக உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய ராமச்சந்திரன் இங்கே நடந்த ஈழ விடுதலை ஆதரவுப் போராட்டத்தில் கலந்து கொண்டார் என்ற காரணத்துக்காகவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இயற்பியல் பேராசிரியர் வாசு பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பாளராக இருப்பதால் அவரும் பழிவாங்கப்பட்டுள்ளார். பலர் பணி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இப்படி கல்யாணி மதிவாணனின் காட்டு தர்பாருக்கு பலியாகியிருப்பவர்கள் அநேகம் பேர். தங்களது உரிமைகளுக்காக, உயர்கல்வி நிறுவனத்தின் தரம் காக்க, ஜனநாயக வழிமுறைகளில் போராட்டம் நடத்தும் போராளிகளை சாதிரீதியாகவும், அடியாட்கள் வைத்தும், காவல் துறையைக் கொண்டு மிரட்டியும் போராட்டத்தைச் சீர்குலைக்கும் முயற்சி நடந்து வருகிறது.

அதே வேளையில் மாணவர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ஆசிரியர் கூட்டமைப்பு, அகில இந்திய கூட்டமைப்பு, ம.கா.பல்கலை பாதுகாப்புக் குழு மற்றும் இந்திய மாணவர் சங்கம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்ணணி, அகில இந்திய மாணவர் கழகம், மதுரை அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் விடாப்பிடியாகப் போராட்டத்தை தொடரும் முடிவில் உள்ளனர்.

காலவரையற்று மூடப்பட்டுள்ள பல்கலையை உடனடியாகத் திறக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் பல்வேறு தரப்பிலிருந்து துணைவேந்தருக்கு வந்துள்ளது. பல்கலை மானியக்குழு, மனிதவள மேம்பாட்டுத் துறை, பல்கலை வேந்தர் தமிழக ஆளுநர், முதலமைச்சர் தனிப்பிரிவு, உயர்கல்வித் துறைச் செயலர், உள்துறைச் செயலர் என்று பல்வேறு தரப்பினருக்கும் புகார்கள் தரப்பட்டுள்ளன.

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க

  • துணைவேந்தர் பதவிக்கு கல்யாணி மதிவாணன் தகுதியற்றவர்.
  • அவர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
  • அவர் மீது சாட்டப்பட்டுள்ள ஊழல் முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும்.
  • அவருக்கு பக்கபலமாக நின்று ஆதிக்க சாதி அடிப்படையில் பல்கலைக் கழகத்தைப் பிளவுபடுத்தி மிரட்டி வரும் மூவர் கும்பல் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • பழிவாங்கப்பட்டவர்கள் உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி பணியமர்த்தப் படவேண்டும்.
  • எல்லாவற்றுக்கும் மேலாக
  • பல்கலை மானியக்குழு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மாணவர் சங்கங்கள் அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

என்ற கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டத்தை வலுப்படுத்துவதன் மூலமே உயர்கல்வித்துறையில் விடிவு ஏற்படுவதற்கான முன்னோடியாக ம.கா.பல்கலைக்கழகம் திகழ முடியும்.

முற்போக்கு சிந்தனையும் நேர்மைத் திறமும் கொண்ட மு.வ, தெ.பொ.மீ போன்ற அறிஞர்கள் வீற்றிருந்த பதவியில் கல்யாணி மதிவாணன் போன்ற குறைகுடங்களுக்கு இடமில்லை என்பதை போராட்டத்தின் வாயிலாக மட்டுமே சாதித்துக் காட்டமுடியும். மாணவர் சமூகம் கல்வி வியாபாரம் ஆக்கப்படுவதை எதிர்த்துப் போராட முன்வர வேண்டும்.

போராட்டங்கள்

போஸ்டர்கள், பத்திரிகை செய்தி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
மதுரைக்கிளை

கரும்பு விவசாயிக்குத் தூக்கு ! சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு பரிசு!!

1

றுபது வயதான வித்தல் அராபவி, கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த கரும்பு விவசாயி. ஐந்து ஏக்கர் குத்தகை நிலத்தில் கரும்பு பயிரிட்டு, 120 டன் கரும்பை நிரானி சர்க்கரை ஆலை என்ற தனியார் ஆலைக்கு விற்றார். சென்ற ஆண்டு விற்ற கரும்புக்கு ஆலை முதலாளி இதுவரை பணம் தராத காரணத்தால், குத்தகைப் பணம் கொடுக்க முடியவில்லை. சோற்றுக்கும் வழியில்லை. ஆலை முதலாளிகளின் கையாளாகச் செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிக்கொண்டிருந்த அவர், உணர்ச்சி வேகத்தில் முதலமைச்சரை ‘கெட்ட வார்த்தைகளால்’ ஏசத்தொடங்கினார். உடனே அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்கிச் சமாதானப் படுத்தினார்கள் சக விவசாயிகள். ஆத்திரத்தில் குமுறியபடியே அமர்ந்திருந்த அந்த விவசாயி, கையில் கொண்டு வந்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

வித்தல் அராபவி
120 டன் கரும்புக்குப் பணம் தராமல் நிரானி சர்க்கரை ஆலை ஏய்த்து வந்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷமருந்திய விவசாயி வித்தல் அராபவி (வட்டத்துக்குள்) மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் இறந்து போனார்.

உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த சத்பால் சிங் என்ற கரும்பு விவசாயிக்கு குலாரியா சர்க்கரை ஆலை என்ற தனியார் ஆலை, சென்ற ஆண்டு விற்ற கரும்புக்கு இதுவரை பணம் தரவில்லை. வங்கிகளுக்கும் கந்து வட்டிக்காரர்களுக்கும் 2.5 இலட்சம் கடனைத் திருப்பிக் கட்ட முடியாத காரணத்தால் தூக்கிலிட்டுக் கொண்டார் அந்த விவசாயி. ஆத்திரம் கொண்ட விவசாயிகள் அந்தக் கரும்பு ஆலையின் மீது தாக்குதல் நடத்தினர்.

நவம்பர் மாதம் நடைபெற்ற இத்தகைய தற்கொலைகள் கரும்பு விவசாயிகளின் துயரத்தைக் கூறுவதற்கான சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. 2012-ஆம் ஆண்டு நாடு முழுவதும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு இதுவரை தனியார் சர்க்கரை ஆலை முதலாளிகள் கொடுக்காமல் வைத்திருக்கும் நிலுவை 12,700 கோடி ரூபாய். கரும்பு என்பது நெல், கோதுமை போன்ற தானியங்களைப் போலன்றி, ஒரு ஆண்டுப் பயிர். கந்து வட்டிக்குக் கடன் வாங்கி முதலீடு செய்து, ஓராண்டு முழுவதும் உழைத்து உருவாக்கிய கரும்பை வாங்கி உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொண்டு, பணத்தை மட்டும் கொடுக்க மறுக்கும் ஆலை முதலாளிகளை மத்திய, மாநில அரசுகள் எதுவும் செய்யவில்லை.

பாக்கி வைத்தது மட்டுமல்ல, இந்த ஆண்டு கரும்புக்கு மத்திய, மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள விலை தங்களுக்குக் கட்டுபடியாகாதென்றும் டன்னுக்கு 2250 ரூபாய்க்கு மேல் தரமுடியாதென்றும் கூறி உ.பி., மகாராட்டிரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் கதவடைப்பு செய்தன. விளைந்து நிற்கும் கரும்பை வெட்டத் தாமதமானால், ஒவ்வொரு நாளும் கரும்பின் எடையும் சர்க்கரையின் அளவும் குறையுமென்பதால் விவசாயிகள் தங்களிடம் பணிந்துதான் ஆகவேண்டும் என்பது முதலாளிகளின் கணக்கு. இப்படி விவசாயிகளின் கழுத்தில் கத்தியை வைத்து ‘பிளாக்மெயில்’ செய்யும் முதலாளிகளுக்கு 7200 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடன் அளித்து தாஜா செய்திருக்கிறது மத்திய அரசு.

போலீஸ் தாக்குதல்
கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தக் கோரி மகாராஷ்டிரா மாநிலம் – சங்கிலி பகுதி விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயியை மிருகத்தனமாகத் தாக்கும் போலீசு.

வாங்கிய கரும்புக்கு கொள்முதல் தொகையைக் கொடுக்க வேண்டியது முதலாளிகளின் பொறுப்பு. இல்லையென்றால், அரசு அவர்களது சொத்துகளை ஜப்தி செய்து விவசாயிகளின் கடனை அடைத்திருக்க வேண்டும். அல்லது விவசாயிகளுக்குரிய தொகையை அரசு கொடுத்துவிட்டு, முதலாளிகளிடம் அதனை வசூலிக்கத் திட்டமிட்டிருக்க வேண்டும். மாறாக, பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் மக்களின் சேமிப்பை முதலாளிகளுக்கு வாரிக் கொடுத்து, அதற்குரிய 12 சதவீத வட்டியை மக்கள் வரிப்பணத்திலிருந்து கட்டுவதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது அரசு. ஐந்து ஆண்டுகளுக்குள் முதலாளிகள் கடனைத் திருப்பித் தரவேண்டும் என்றும், முதல் இரண்டாண்டுகள் கொடுக்கா விட்டால் பரவாயில்லை என்றும் சலுகை வேறு.

இது மட்டுமின்றி, பெட்ரோல் பயன்பாட்டில் எத்தனால் அளவை 5% லிருந்து 10% வீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற கரும்பாலை முதலாளிகளின் நீண்டநாள் கோரிக்கையையும் தற்போது அரசு நிறைவேற்றிக் கொடுத்துள்ளது. புவி வெப்பமடைதலைக் காரணங்காட்டி நாட்டின் உணவு மற்றும் நன்னீர் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் உயிர்ம எரிபொருள் பயன்பாட்டையும், கரும்பு விவசாயிகளைக் காப்பாற்றுவது என்ற பெயரில் அரசு திணித்து விட்டது. ஒரு ஏக்கர் கரும்பு விளைச்சலுக்கு 1.8 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதால், பெட்ரோல் பயன்பாட்டில் எத்தனால் அளவை அதிகரித்தன் மூலம் தண்ணீரை எரிபொருளாக்கும் ஏகாதிபத்திய சதியையையும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறது அரசு.

“கொள்முதல் பாக்கி வரவில்லை, கரும்புக்கு நியாய விலை கிடைக்கவில்லை” என்று போராடும் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும் இந்த மத்திய-மாநில அரசுகள்தான், கரும்பு விவசாயிகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் ஒரு “பலநோக்கு சதித் திட்டத்தை” நிறைவேற்றியுள்ளன.

தாங்கள் நட்டத்தில் மூழ்கிக் கொண்டிருப்பதாக சர்க்கரை ஆலை முதலாளிகள் கூறுவது உண்மையா? கரும்பில் உள்ள சர்க்கரைச் சத்தின் அளவை மட்டும் கணக்கிட்டுத்தான் கரும்பின் விலையை அரசு நிர்ணயம் செய்கிறது. ஆனால், ஒரு டன் கரும்பிலிருந்து 100 கிலோ சர்க்கரை, 150 யூனிட் மின்சாரம், 35 லிட்டர் எரிசாராயம் மற்றும் மொலாசஸ், எத்தனால் உள்ளிட்ட பல உப பொருட்களை உற்பத்தி செய்வதுடன், கடைசியாக எஞ்சியிருக்கும் கரும்புச்சக்கை காகிதத் தயாரிப்புக்கும் விற்கப்படுகிறது. ஒருடன் கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின் மதிப்பு சுமார் 30,000 ரூபாய் என்கிறார் பெங்களூரு விவசாய அறிவியல் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் டி.என்.பிரகாஷ்.

ரயில் மறியல் போராட்டம்
கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தக் கோரி மகாராஷ்டிரா மாநிலம் – சங்கிலி பகுதி விவசாயிகள் நடத்திய ரயில் மறியல் போராட்டம்.

ஒரு டன் கரும்புக்கு 3000 ரூபாய் வேண்டும் என்பதுதான் விவசாயிகளுடைய கோரிக்கை. இந்தத் தொகையில் 15% மட்டுமே விவசாயிக்கு மிஞ்சும் என்பதையும் எல்லா ஆய்வாளர்களும் மறுப்பின்றி ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆனால், டன்னுக்கு 30,000 ரூபாய் ஈட்டும் முதலாளிகள், விவசாயிக்கு 2250 ரூபாய்க்கு மேல் தரமுடியாது என்கிறார்கள். மத்திய அரசு நிர்ணயித்திருக்கும் ஆதார விலையோ 2100 ரூபாய்தான். இதற்கு மேல், முதலாளிகளின் சார்பாக மாநில அரசுகள் மக்கள் வரிப்பணத்திலிருந்து டன்னுக்கு 400, 500 என்று விவசாயிகளுக்கு “போட்டு”க் கொடுக்கின்றன. “டன்னுக்கு 2500 ரூபாய் கொடு! இல்லையேல் ராஜினாமா செய்!” என்று 2011-இல் கருணாநிதியை மிரட்டிய ஜெயலலிதா, உரவிலை 2,3 மடங்கு உயர்ந்துவிட்ட சூழலில் டன்னுக்கு 450 ரூபாயும் வண்டிக்கூலி 100 ரூபாயும் சேர்த்துக் கொடுத்ததையே சாதனையாகப் பீற்றுகிறார்.

ஒரு டன் கரும்பிலிருந்து முதலாளிகள் ஈட்டும் வருவாய் என்ன என்பது அரசுக்குத் தெரியும். ஒரு டன் கரும்பிலிருந்து முதலாளிகள் அடையும் வருவாயைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் கரும்பிற்கான ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையைத் திட்டமிட்டே புறக்கணிக்கும் அரசு, சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு ஏற்றுமதிக்கான மானியம் வழங்குகிறது. வாங்குகின்ற கரும்பின் மீது விதிக்கப்படும் 5% வரியை கர்நாடக அரசு ரத்து செய்திருக்கிறது. வட்டியில்லாக் கடன் வழங்குகிறது. உற்பத்தி செய்யும் சர்க்கரையில் 10 விழுக்காட்டை லெவி சர்க்கரையாக (ரேசன் விநியோகத்துக்காக) அரசுக்குத் தருவதை ஈடு செய்வதற்காக ஆலை முதலாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தொகையை 2600 கோடியிலிருந்து 5200 கோடி ரூபாயாக அரசு உயர்த்தியிருக்கிறது.

இத்தனைக்குப் பிறகும் முதலாளிகள் திருப்தியடைவதில்லை. டன்னுக்கு 2000 ரூபாய் கொடுத்து விட்டு, 2400 ரூபாய் பெற்றுக் கொண்டதாகக் கையெழுத்து வாங்கிக் கொள்வதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் கர்நாடக விவசாயிகள். ஒப்புக்கொள்ள மறுத்தால், கட்டிங் ஆர்டர் கொடுக்காமல் கரும்பைக் காயவிடுகிறார்கள். எடை மேடையில் 15% வரைக் குறைத்து தில்லுமுல்லு செய்கிறார்கள் என்பதெல்லாம் விவசாயிகள் கூறும் குற்றச்சாட்டுகள்.

தஞ்சை ஆர்ப்பாட்டம்
கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தவும் நிலுவையை உடனே வழங்கவும் கோரி தஞ்சையில் கரும்பு விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

நட்டம் என்று சொல்லி விவசாயிகளுக்குக் கொள்முதல் பாக்கியைத் தராமல் தற்கொலைக்குத் தள்ளும் ஆலைகளின் ஆண்டுக்கணக்கு இலாபத்தைக் காட்டுகிறது. பங்கு விலைகள் உயர்கின்றன. ஆலை முதலாளிகளின் சொத்தும் பெருகிய வண்ணம் இருக்கிறது.

ஆனால், சர்வதேச சந்தையில் சர்க்கரை விலை வீழ்ச்சியடைந்து விட்டதாகவும், உள்நாட்டுச் சந்தையைப் பாதுகாக்க சர்க்கரை இறக்குமதியைத் தடைசெய்ய வேண்டும் என்றும் கூறுகிறார்கள் சர்க்கரை முதலாளிகள். இங்கே உற்பத்தியாகும் சர்க்கரையில் பெரும்பகுதி உள்நாட்டில்தான் நுகரப்படுகிறது என்பதால் இது பொய். மேலும், வெளிநாட்டிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்பவர்கள் கோக், பெப்சி, காட்பரீஸ் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள். இறக்குமதிகள் மீது தடை விதிக்கக் கூடாதென்று காட் ஒப்பந்தம் கூறுவதால், இறக்குமதியின் மீது அரசு சிறிய அளவு வரி விதிக்கலாமேயன்றி, அதனைத் தடுக்கும் அதிகாரம் அரசுக்கு இல்லை.

எனவே, முதலாளிகள் தங்களுடைய இலாபவிகிதத்தை அதிகரிக்க கீழ்க்கண்டவாறு கோரிக்கை வைக்கிறார்கள். உள்நாட்டில் ரேசன் கடையில் சர்க்கரை விநியோகிப்பதற்காக ஆலைகளிடம் லெவி சர்க்கரை கொள்முதல் செய்வது ‘உள்நாட்டு சுதந்திரச் சந்தையில்’ தலையிடும் நடவடிக்கை என்பதால், அதனை அரசு நிறுத்த வேண்டும். காட் ஒப்பந்தம் உருவாக்கியிருக்கும் ‘சர்வதேச சுதந்திரச் சந்தையில்’ சர்க்கரை விலை அதிகமாக இருக்கும்போது தடையின்றி ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும். குறைவாக இருக்கும்போது மானியம் கொடுத்து தங்களைக் காப்பாற்ற வேண்டும்” – இதுதான் சர்க்கரை முதலாளிகளின் கோரிக்கை.

“ரொட்டியின் இருபுறமும் வெண்ணெயைத் தடவச் சொல்லும் பேர்வழிகள்” என்று பேராசைக்காரர்களைக் கேலி செய்யும் ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. சர்க்கரை ஆலை முதலாளிகளோ தங்கள் ரொட்டியை வெண்ணையில் முக்கி எடுக்கச் சோல்கிறார்கள். அப்படி முக்கி எடுப்பதற்கான பரிந்துரைகளால் நிரம்பி வழிவதுதான், சர்க்கரை தொழில் தொடர்பான ரங்கராஜன் கமிட்டி அறிக்கை.

இப்படி ஒரு அப்பட்டமான பகற்கொள்ளை சர்வகட்சி ஆதரவுடன் தொடர்வதற்குத் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் மட்டுமின்றி வேறொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. மகாராட்டிரா, உ.பி., கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த சர்க்கரை ஆலை முதலாளிகள் பலரும் சர்வகட்சி அரசியல் பிரமுகர்களாக இருப்பதுதான். சரத் பவார், நிதின் கட்கரி, அஜித் சிங் போன்றோரிலிருந்து முன்னாள் அரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் வரை அனைவரும் இந்த சர்க்கரை மாஃபியாவின் அங்கத்தினர்கள். இவர்கள் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தலைவர்களாக இருந்து, அவற்றைத் திட்டமிட்டே நட்டத்தில் ஆழ்த்தி, பின்னர் அவற்றைத் தனியார்மயமாக்கித் தாங்களே விழுங்கிக் கொண்டவர்கள். சரத்பவாருக்குச் சொந்தமான 10 ஆலைகளில் 7 ஆலைகள் நட்டக்கணக்குக் காட்டி கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவை.

இந்தியாவில் உள்ள 600-க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகளில் பெரும்பாலானவை சுமார் 50 முதலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. மகாராஷ்டிரா, உ.பி., போன்ற மாநிலங்களில் ஒவ்வொரு சர்க்கரை ஆலையும் தனது பிரதிதியாக ஒரு எம்.எல்.ஏ. வை வைத்திருக்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்குத்தான் சர்வகட்சி அரசாங்கங்களும் சேவை செய்கின்றன என்ற போதிலும், சர்க்கரை ஆலை முதலாளிகளைப் பொருத்தவரை, அவர்கள் காங்கிரசு, பா.ஜ.க., தேசியவாத காங்கிரசு, சிவசேனா உள்ளிட்ட எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். இக்கட்சிகளைச் சேர்ந்த இந்த மாஃபியாவின் கையில்தான் மத்திய-மாநில அரசாங்கங்களே இருக்கின்றன.

தனியார்மயம் – தாராளமயம் என்றழைக்கப்படும் மறுகாலனியாக்க கொள்கைகள் விவசாயிகளின் ரத்தத்தை எப்படி உறிஞ்சுகின்றன என்பதற்கும், இந்தக் கொள்கையின் மூலம் ஓட்டுப்பொறுக்கிகள் நேரடியாகவே எப்படி ஆதாயமடைகின்றனர் என்பதற்கும் கரும்பு விவசாயிகளின் துயரம் நேரடிச் சான்று. ஓட்டுச்சீட்டு அரசியல் மூலம் தங்களுக்குரிய நியாயத்தை விவசாயிகள் ஒருபோதும் பெற முடியாது என்பதற்கும் இது இன்னொரு சிறந்த நிரூபணம்.

– கதிர்
__________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

__________________________________

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!

19

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனது “வாக்குமூலம்” பொய் என்று அந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்த மையப் புலனாய்வுத் துறையின்(சி.பி.ஐ.) ஓய்வு பெற்ற எஸ்.பி. தியாகராசன், “உயிர்வலி” என்ற ஆவணப் படத்திலும் பின்னர் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.

பேரறிவாளன்
போலீசு மற்றும் நீதிமன்ற மோசடிகளால் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டுள்ள பேரறிவாளன்.

“சிவராசனுக்கு பாட்டரிகள் வாங்கித் தந்தேன். ஆனால் அந்த பாட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று எனக்குத் தெரியாது” என பேரறிவாளன் தனது வாக்குமூலத்தில் கூறியதாகவும், அதை அப்படியே பதிவு செய்தால், வழக்கிற்குப் பாதகமாகப் போவிடும் என்பதால், “எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று தெரியாது” என்ற பகுதியை நீக்கி விட்டு, பாட்டரி வாங்கித் தந்தேன்” என்பதை மட்டும் பதிவு செய்ததாகவும் அவர் கூறுகிறார். தனது இந்த “அறங்கொன்ற” செயல், பேரறிவாளனின் உயிரைப் பறிக்கப் போகிறது என்பதால், மனச்சான்றின் உறுத்தலால் தற்போது உண்மையை வெளியிடுவதாகவும் சொல்லியிருக்கிறார் தியாகராசன்.

கிரிமினல்களுக்கும் ஊரைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கும் வயதான காலத்தில் சொல்லி வைத்தாற்போல மனச்சான்று விழித்துக் கொள்வதும், அவர்கள் வள்ளல்களாகவும், ஆன்மீகவாதிகளாகவும் புதுப்பிறவி எடுத்து, சமூக கௌரவத்தையும் மன ஆறுதலையும் தேடிக்கொள்வதும் புதிய விடயங்கள் அல்ல. கொடூரமாகச் சித்திரவதை செய்வதும், பொய்வழக்கிற்குத் தேவைப்படும் வாக்குமூலங்களை வரவழைப்பதும் போலீசார் வழக்கமாகச் செய்கின்ற வேலைதான் என்பதை தியாகராசனும் ஒப்புக்கொள்கிறார். ஆனால், தனது நடவடிக்கை காரணமாக நீதிப்பிழை ஏற்பட்டு, ஒரு உயிர் அநியாயமாகப் போகப்போகிறது என்பதால் உண்மையை வெளியிடுவதாகவும் கூறியிருக்கிறார்.

தியாகராசன் வெளியிட்டிருக்கும் இந்த உண்மை சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் கார்த்திகேயனை இம்மியளவும் அசைக்கவில்லை. “கென்னடி கொலை வழக்கு பற்றிக்கூட புதிய தகவல்கள் வெளிவருகின்றன. அதற்காக அவ்வழக்கை மீண்டும் விசாரிக்க முடியுமா?” என்று அவர் சீறுகிறார். முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமனும் “நாங்கள் அவ்வாறுதான் செய்தோம்; தற்போது அதற்கென்ன?” என்கிற தோரணையில் திமிராகப் பேசியிருக்கிறார். இவர்கள் இருவரும் சமீபத்தில்தான் “ஞானஸ்நானம் பெற்று” மரணதண்டனை எதிர்ப்பாளர்களாக மாறியவர்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பொய் வழக்குப் போடுவதும், குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து வாக்குமுலம் வாங்குவதும், பொய் சாட்சிகளைத் தயார் செவதும், அதன் அடிப்படையில் அப்பாவிகளைச் சிறைக்கு அனுப்புவதும் போலீசாரின் அன்றாட நடவடிக்கைகள் என்பது ஊரறிந்த உண்மை. போலீசாரிடம் கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலங்களை “கட்டாயப்படுத்திப் பெறப்பட்டவை” என்று கூறி நிராகரிக்கும் உரிமை குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உண்டு.

இந்த உரிமையையே ரத்து செய்த “தடா” சட்டத்தின் கீழ்தான் ராஜீவ் கொலை வழக்கு விசாரிக்கப்பட்டது. அதனால்தான் தியாகராசன் எழுதிக் கொண்டதெல்லாம் பேரறிவாளனின் வாக்குமூலமாகச் சட்டரீதியாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னாளில் “தடா” சட்டமே அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இருப்பினும், செல்லத்தகாத அந்த சட்டத்தின் கீழ்தான் வழக்கு விசாரணை நடந்து, அதில் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்ப்பும் வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, “ராஜீவ் கொலை என்பது ஒரு பயங்கரவாத நடவடிக்கை அல்ல” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறிய பின்னரும், பயங்கரவாதத் தடைச் சட்டமான “தடா”வின் கீழ் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், வழங்கப்பட்டிருக்கும் தண்டனைகள் சட்டரீதியில் செல்லத்தக்கதாகவே கருதப்படுகின்றன. தற்போதைய தியாகராசனின் “பரபரப்பு” பேட்டியைக் காட்டிலும் இவையெல்லாம் முக்கியத்துவம் வாந்தவை.

சி.பி.ஐ. எஸ்.பி. தியாகராசன்
பேரறிவாளனின் வாக்குமூலத்தை உள்நோக்கத்தோடு வெட்டிச் சுருக்கியதை ஒப்புக் கொண்டுள்ள ஓய்வு பெற்ற சி.பி.ஐ. எஸ்.பி. தியாகராசன்.

மேலும், பேட்டியளித்திருக்கும் தியாகராசன் தனது கூற்றைப் பிரமாண வாக்குமூலமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதாவது, தான் இழைத்த அநீதிக்குக் கழுவாயாக பேரறிவாளனைச் சட்டரீதியாகக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை; அதேபோல, பொய் வாக்குமூலம் தயாரித்த தனது குற்றத்துக்குரிய தண்டனையை அனுபவிக்க அவர் தயாராக இருப்பதாகவும் தெரியவில்லை. இருப்பினும் அவரது இந்தக் கூற்று, ராஜீவ் கொலை வழக்கில் நடத்தப்பட்ட புலன் விசாரணை நாடகத்தை அம்பலப்படுத்துவது என்ற அளவில் பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

தியாகராசன் போன்றோருக்கு காலம் கடந்தாவது உண்மையை வெளியிடும் தைரியத்தை வழங்கியிருப்பது அவரது குற்றவுணர்ச்சி மட்டுமல்ல; மூவர் தூக்கிற்கு எதிராகத் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டமும், தமிழகத்தில் பரவலாக உருவாகியிருக்கும் பொதுக்கருத்தும்தான் உண்மையைப் பேசுவதற்கான புறத்தூண்டுதலை அவருக்குத் தந்திருக்கின்றன. அத்தகையதொரு புறச்சூழல் உருவாக்கப்படாமல், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசின் பாக். எதிர்ப்பு தேசியவெறி அரசியல் அரங்கில் கோலோச்சியதன் காரணமாகத்தான் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கின் உண்மைகள் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டுவிட்டன.

பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டது ஒருவேளை மரண தண்டனையாக இல்லாமலிருந்தால், தியாகராசனின் மனச்சான்று விழித்திருக்காது. இதனை அவரது கூற்றிலிருந்தே புரிந்து கொள்ளலாம். அது ஆயுள் தண்டனையாக இருந்தாலும் அநீதி அநீதிதான்.

நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள், அவ்வாறு தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுடன் இப்பிரச்சினை முடிந்து விடுவதில்லை. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் என்ற பெயரில், அரசு அதிகாரத்தையும் சமூக அங்கீகாரத்தையும் கேடாகப் பயன்படுத்தி, பொய் வழக்குகள், பொய் சாட்சிகள், போலி மோதல் கொலைகள் – என்று எல்லா கிரிமினல் வேலைகளையும் அரங்கேற்றும் போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் மற்றும் ஓட்டுப் பொறுக்கிகளையும் தண்டிப்பதை நோக்கி நமது போராட்டங்கள் முன்னேற வேண்டும்.

– கதிர்
_____________________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

_____________________________________________