Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 730

துரத்தும் வாழ்க்கை – சிதறும் கனவுகள்!

5

சென்னையைச் சேர்ந்த 29 வயதே நிரம்பிய ஜெயக்குமார் தற்கொலை செய்து கொள்வார் என்பதை அதற்கு ஒரு நாள் முன்பு அவரது நெருங்கிய நட்பு வட்டத்திலும், உறவினர்களிடமும் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டார்கள்.  பொறியியல் பட்டம் பெற்ற ஜெயக்குமார் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்று திரும்பி சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது மேல்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்தியா திரும்பிய ஜெயக்குமார், இங்கே சில தற்காலிக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அமெரிக்க கலாச்சாரம் தனக்கு ஒத்துவரவில்லையென்றும், அந்தச் சூழலை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லையென்றும், எனவே மீண்டும் அங்கே சென்று படிப்பைத் தொடரும் எண்ணம் இல்லையென்றும் ஜெயக்குமார் சொல்லியிருந்தார். அவர் படித்த மேற்கு வெர்ஜினியா பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் வெர்ஜினியா பகுதி இனவெறிக்கும், நிறவெறிக்கும் பெயர் போனது. இந்நிலையில் அமெரிக்கப் படிப்பை அந்தஸ்தின் அடையாளமாகக் கருதிய பெற்றோர்,  ஜெயக்குமாரை மீண்டும் அமெரிக்கா செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், தனது தாயின் சேலையைக் கொண்டு மின்விசிறியில் தூக்குமாட்டி உயிர் விட்டிருக்கிறார்.

தற்கொலை-1இது போன்ற செய்திகள் சமீபகாலமாய் பத்திரிகைகளில் மீண்டும் மீண்டும் தலைகாட்டியபடியே இருக்கிறது. இவற்றில் இடம், பெயர், காலம் போன்றவற்றை மட்டும் மாற்றி விட்டுப் பார்த்தால் காரணங்களின் சாராம்சம் அதிசயக்கத்தக்க விதத்தில் ஒற்றுமையைக் கொண்டிருக்கிறது. ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை என்பதில் ஆரம்பித்து ஐந்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை வரை பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருக்கும் தற்கொலைகளின் காரணங்களும், அடிப்படைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.

சந்தையில் குவியும் கண்ணைக் கவரும் நுகர்பொருட்கள் அணிவகுக்கும் அதே நேரத்தில், பொருளாதார வாழ்க்கை மேலும் நொறுங்கி வீழ்ந்து வரும் போக்குகள் ஒரு பக்கமும், வேலைச் சந்தையில் அதிகரித்து வரும் போட்டியின் காரணமாக சம்பளம் குறைந்து வருவது மறு பக்கமுமாக சேர்ந்து மாணவர்களைத் தங்கள் பொருளாதாய வாழ்க்கையின் கடும் சவால்களை எதிர்கொண்டு வென்றேயாக வேண்டிய ஒரு கட்டாயத்துக்குள் தள்ளி விடுகிறது. பந்தயத்தில் ஓடும் தமது குதிரையும், பிற பந்தயக் குதிரைகளிலிருந்து எந்த வகையிலும் ‘தரம்’ குன்றிப் போய் விடலாகாது என்பதில் பெற்றோரும் உறுதியாக இருக்கின்றனர். குதிரைகளுக்கே கூட கொள்ளுப்பயிறு தின்னக் கொடுக்கலாம்;  மெல்லத் தின்கிறதே என்று வயிற்றைக் கிழித்து திணிக்க முயன்றால் என்னவாகும்?

சமீபத்தில் நண்பர் ஒருவரைச் சந்தித்த போது, எட்டாம் வகுப்பு படிக்கும் தனது மகனை ஐ.ஐ.டியில் சேர்ப்பதற்காக இப்போதே டியூஷன் வகுப்புகளுக்கு அனுப்பி வருவதாகப் பெருமையுடன் கூறினார். உயர் படிப்புக்கு மூளையைத் தயார் செய்யும் அதே நேரம், பிற்காலத்தில் மேட்டுக்குடி குலக்கொழுந்துகளுக்கு தனது வாரிசு எந்த வகையிலேனும் தகுதியில் குறைந்துவிடக் கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார். அந்தச் சின்னப் பையனின் ஓய்வு நேரத்தை பட்டியலிட்டு, எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும், எதைக் கற்றுக்கொள்ள வேண்டும், எதை விளையாட வேண்டும், எப்படி விளையாட வேண்டும், யாரோடு விளையாட வேண்டும் என்று சகலத்துக்கும் கறாரான வேலைத் திட்டம் போட்டு வைத்திருக்கிறார்.

நீச்சல், சதுரங்கம், கர்நாடக சங்கீதம், கிரிக்கெட் கோச்சிங், கராத்தே, சிலம்பம், யோகா, அபாக்கஸ் என்று நீண்ட அந்தப் பட்டியலில் இருந்த பெயர்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பார்த்தேன். பதினைந்து என்று வந்தது. அந்தச் சிறுவனின் வயது அதில் ஒரு எண் குறைவு – பதினான்கு தான். நான் அவனை அருகில் அழைத்து உட்கார வைத்தேன். பதினான்கு வயதுக்கேயுரிய எந்தவிதத் துருதுருப்பும் இன்றி ஒரு ஜோம்பியைப் போல் இருந்தான். நிலைகுத்திய பார்வையோடு எங்கோ வெறிப்பதும், கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்களை முணுமுணுப்பதுமாக இருந்த அவனைப் பெருமிதத்துடன் நோக்கிய அவன் தந்தை என்னிடம் இவ்வாறு சொன்னார் – “சார், அவன் ஒரு ஜீக் (Geek – அறிவுஜீவி) மாதிரி தான் எங்க கிட்டயே பேசுறான்”

இப்படி நடமாடும் கலைக்களைஞ்சியமாக மாறியாக வேண்டிய கட்டாயமும், அப்படியும் தட்டுத்தடுமாறி மாறிய பின் நடக்கும் போட்டியில் தோற்றால் இழந்து போய் விடக்கூடிய வாழ்க்கை, கண்களுக்கு முன்னே ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.  கண் சிமிட்டும் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கும் வேகத்துக்கு இணையாக ஓட வேண்டிய நிர்ப்பந்தமும், அந்த வாழ்க்கையை துய்க்கத் துடிக்கும் அடங்காத ஆசையும், அந்த ஆசை உண்டாக்கும் ஏக்கமும், ஏக்கம் நிறைவேறாமல் வரும் ஏமாற்றமும், ஏமாற்றம் உண்டாக்கும் விரக்தியும் இளையோர் உலகில் செல்வாக்கு செலுத்துகிறது.

இது ஜெயக்குமாரைப் போன்ற மாணவர்களுக்கு மட்டுமா நேர்கின்றது..?

***

தற்கொலை-2ற்ப பிரச்சினைகளுக்காகத் தற்கொலைகள் மற்றும் சில்லறைச் சண்டைகளுக்காகக் கொலைகள் என்பது பெருநகரங்களோடு மட்டும் முடிந்து விடவில்லை. சிறிய தொழில் நகரங்களிலும் தற்கொலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் கூடியுள்ளது. கடந்த 2009 ஜனவரி மாதம் தொடங்கி  2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மட்டுமே திருப்பூரில் நடந்த தற்கொலைகளின் எண்ணிக்கை 980. கடந்த 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை மட்டுமே 264 தற்கொலைகள் பதிவாகியுள்ளது. திருப்பூரில் மட்டும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 30 தற்கொலை முயற்சிகள் நடப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த இறப்புகளில்  61 சதவீதம் ஆண்கள், 33 சதவீதம் பெண்கள் மற்றும் 6 சதவீதம் சிறுவர், சிறுமியர். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதியின் மூலம் மட்டும் சுமார் 12 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டும் தொழில் நகரமான திருப்பூர் தற்போது பனியன் நகரம், டாலர் சிட்டி என்று மட்டும் அறியப்படுவதில்லை – அது தற்கொலை நகரமாகவும் அறியப்படுகிறது.

திருப்பூர் நகர செய்தித்தாள்களைப் புரட்டினால், பக்கத்துக்குப் பக்கம் தற்கொலைகளைச் சந்திக்காமல் கடந்து போக முடியாது. “கள்ளக் காதலை உறவினர்கள் கேலி பேசியதால் தனது மூன்று மகள்களுக்கும் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தாய்”. “கணவன் நகையை அடகு வைத்துக் குடித்ததால், மனமுடைந்த இளம் மனைவி தூக்கில் தொங்கினார்”. “கல்விக்கடன் கிடைக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாணவர் தற்கொலை” “கந்துவட்டிக்காரர்கள் தொந்திரவு தாங்காமல் குடும்பத்தோடு தற்கொலை”  “வேலை கிடைக்காததால் தற்கொலை…”

மேலே தினசரிகளில் தலைப்புச் செய்திகளாய் வந்தவற்றில் சிலவற்றை மட்டும் பார்த்தோம். திருப்பூரின் தற்கொலைகளுக்குக் காரணங்களாய் செய்தித்தாள்கள் சொல்பவையனைத்தும் சாமானிய மக்கள் வாழ்வில் எதார்த்தமாய் எதிர்கொள்ளும் அன்றாடச் சிக்கல்கள் தான். கல்விக்கடன் தாமதப்படுவது அல்லது கிடைக்காமல் போவது, பள்ளியில் ஆசிரியர்கள்  கண்டிப்பது, வேலை கிடைக்கத் தாமதமாவது அல்லது கிடைக்காமல் போவது, கடன்காரன் வீட்டு வாசலின் முன் நின்று ஏசுவது என்று நீளும் தற்கொலைக்கான காரணங்கள் ஏதும் புதிதில்லை – கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய காரணங்கள் தாம்.

எனில், இப்போது மட்டும் ஏன் இவை தற்கொலைகளாய் முடிகின்றன?

இருபது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பள்ளி மாணவர்களாய் இருந்த போது இப்போதிருப்பதை விட கண்டிப்பு அதிகமாய்த்தான் இருந்தது. மாணவர்களை அடிப்பதற்கென்றே சில ஆசிரியர்கள் விசேசமான புளியம் விளார்களை வைத்திருப்பார்கள். எங்கள் தமிழாசிரியர் பிரம்படிக்கு ‘பிரம்பாம்பழம்’ என்றே பெயர் வைத்திருப்பார். ஒழுக்கத்துக்கும், கட்டுப்பாட்டுக்கும் உட்படாத அல்லது படிக்காமல் குறும்புத்தனம் காட்டித் திரியும் மாணவர்கள் எவரும் பிரம்பாம்பழத்தை ருசிக்காமல் தப்பிக்க முடியாது. எமது பெற்றோர் பள்ளியில் எங்களை விடும்போதே தெளிவாய்ச் சொல்லி விடுவார்கள் ‘படிக்கிறானோ இல்லையோ, ஒழுக்கமா நடந்துக்க வையுங்க சார்… கண்ணு ரெண்டையும் விட்டுப்பிட்டு தொலிய உரிச்சிடுங்க’. ஆனால், அப்போது மாணவர்கள் யாரும் கண்டிப்புக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டதில்லை.

அதே போல், வேலை தேடுவதிலாகட்டும், கடன்களை எதிர்கொண்டு சமாளிப்பதாகட்டும், குடும்ப விவகாரங்களாகட்டும் இந்தளவுக்கு அதிகரித்த எண்ணிக்கையில் தற்கொலைகளாய் முடிந்ததில்லை. இப்போது மட்டும் ஏன் என்கிற கேள்விக்கு விடை திருப்பூரின் வாழ்க்கையைப் புரிந்து கொள்வதில் கிடைக்கலாம். திருப்பூர் அதையொத்த சிறிய தொழில்நகரங்களின் வாழ்க்கைச் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள ஒரு துலக்கமான வகைமாதிரியாய் விளங்குகின்றது.

70களில் சிறியளவில் உள்நாட்டுச் சந்தைக்கு மட்டுமே உள்ளாடைகள் தயாரித்து வந்த திருப்பூரின் இன்றைய வளர்ச்சியோ அபரிமிதமானது. இன்று திருப்பூரில் தயாராகும் ஆயத்த ஆடைகள் உலக ஆயத்த ஆடைச் சந்தையின் ஒரு முக்கிய அங்கம். திருப்பூர் முதலாளிகள் மாறிவரும் சந்தையின் தேவைகளுக்கு ஈடுகொடுத்து போட்டியில் தாக்குப்பிடிப்பதற்காக தமது தயாரிப்புகளில் மட்டும் புதிய வகைகளைப் புகுத்தவில்லை – உற்பத்தி முறைகளிலும், கருவிகளிலும், தொழிலாளர்களிடம் வேலை வாங்குவதிலும் புதியபுதிய முறைகளைப் புகுத்தியுள்ளனர்.

தென்மாவட்டங்களில் இருந்து பதின்ம வயதுச் சிறுமிகளை ஏஜெண்டுகள் மூலம் பிடித்து வந்து, கம்பெனிக்கு அருகிலேயே ‘ஹாஸ்டல்’ எனப்படும் சிறைச்சாலைக்குள் அடைத்துவைத்து, நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேரம் வேலை வாங்கிக் கொள்கிறார்கள். இப்படி சில ஆண்டுகள் வேலை செய்த பின், திருமணச் செலவுக்கு முப்பதாயிரத்திலிருந்து ஐம்பதாயிரம் வரை ரொக்கமும், தாலியில் கோர்த்துக் கொள்ள குந்துமணி தங்கமும் ‘கூலி’யாகத் தரப்படுவதற்கு திருப்பூர் முதலாளிகள் வைத்திருக்கும் பெயர் – சுமங்கலித் திட்டம்.

உ.பி, ராஜஸ்தான், பீகார், ஒரிசா, ஜார்கண்ட் போன்ற வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்களை ஏஜெண்டுகள் மூலம் பிடித்து வந்து, ‘கேம்ப்’ எனப்படும் தகரக் கொட்டடியில் அடைத்துப் போட்டு, நாளொன்றுக்கு சுமார் 12 மணி நேரம் வேலை வாங்கிக் கொண்டு, அதிகபட்ச வாரக் கூலியாக 1700 ரூபாய்கள் கொடுப்பதற்குப் பெயர் – கேம்ப் கூலித் திட்டம்.

இவர்கள் யாரும் பணி நிரந்தரம் பெற்றவர்கள் அல்ல.  பல ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணி புரிந்திருந்தாலும் இவர்கள் எப்போதும் பயிற்சியாளர்கள் தான். ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் உண்டாகும் ஃபைன் டஸ்ட் எனப்படும் குறுந்துகள்களை சுவாசிப்பதன் மூலம் இந்தத் தொழிலாளர்கள் பலருக்கும் ஆஸ்துமா, டி.பி போன்ற நுரையீரல் கோளாறுகளும், சாயப்பட்டறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சோரியாசிஸ் போன்ற தோல் வியாதிகளும் சர்வசாதாரணமாக ஏற்படும். ஆனால் மருந்துக்குக் கூட பாதுகாப்பு உபகரணங்களோ, தடுப்பு முறைகளோ இங்கு பயன்படுத்தப் படுவதில்லை. மருத்துவக் காப்பீடு என்கிற சொல்லையே இந்தத் தொழிலாளர்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

திருப்பூரின் நான்கு லட்சம் தொழிலாளர்களில் சுமார் பத்து சதவீதத்துக்கும் குறைவானவர்கள் தான் நிரந்தத் தொழிலாளிகள். பெரும்பான்மையான ஒப்பந்தத் தொழிலாளிகள் மற்றும் ‘பயிற்சிக்’ காலத்தில் உள்ள தொழிலாளிகளுக்கு தொழிற்சங்க பாதுகாப்பு என எதுவும் இல்லை. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் தொழிற்சங்க நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தபோது தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு இருந்தது; தொழிலாளர்கள் உரிமை பறிக்கப்படும்போது குரல் கொடுக்க தொழிற்சங்க அமைப்புகள் வலுவாக இருந்தன. இன்றோ தொழிலாளர்கள் தனித்து விடப்பட்டுள்ளனர்.  பணியிடப் பிரச்சினைகளில் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரோ அதே போல் தான் சமூகத்திலும் அவர்கள் தனிமைப்பட்டுள்ளனர்.

திடீரென்று வேலை அதிகரிப்பது, திடீரென்று குறைவது, எதிர்பாராமல் வேலை பறிபோவது என்கிற இந்த நச்சுச் சுழற்சியில் தவிர்க்கவியலாமல் கந்துவட்டிக் கும்பல்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். வறுமையும், வேலையின்மையும், கடன் சுமையும் ஒரு பக்கத்திலிருந்து நெட்டித் தள்ளுகிறதென்றால், நிலையற்ற வேலை இன்னொரு முனையிலிருந்து கழுத்தை இறுக்குகிறது. ஓரு ஈசலின் பிறப்பையும், இறப்பையும் ஒத்த வேகத்தில் திருப்பூரின் தொழிலாளர் வாழ்க்கை அலைபாய்கின்றது. ஆர்டர்கள் குவியும் நாட்களில், சிறுநீர் கழிக்கவும் கூட நேரம் தரப்படாமல் கசக்கிப் பிழியப்படும் அவர்கள்; ஆர்டர்கள் குறையும் நாட்களில் ஈவிறக்கமின்றி தூக்கி வீசப்படுகிறார்கள். ஏஜெண்டின் அழைப்புக்கு  ஏங்கிக் கிடக்கும் காதுகளில் கந்து வட்டிக்காரனின் பைக் உருமல் அமிலமாய்ப் பாய்கிறது.

திருப்பூரின் அராஜகமான பணிச்சூழல் உளவியல் ரீதியில் உண்டாக்கும் அழுத்தமும், நெருக்கடியும் தொழிலாளர்களின் பண்புகளில் அராஜகமான சிந்தனைப் போக்கை உண்டாக்கி விட்டிருக்கிறது. பாதுகாப்பற்ற பரபரப்பில் சிக்குண்டு போன  மனம் சில்லறைச் சிக்கல்களுக்குக் கூட நின்று நிதானமாய் யோசித்து ஒரு முடிவெடுக்கத் தடுமாறுகிறது – முழம் கயிற்றை நம்பிச் சரணடைகிறது. சட்டென்று துவங்கி சட்டென்று முடியும் வேலைகளைப் போல் வாழ்க்கையும் சில நொடிக் கனவு போல் முடிந்து போகிறது. கடந்து போகும் பிணத்தின் முகத்தைப் பார்க்கக் கூட நேரமின்றி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

***

தற்கொலை-3பெரு நகரங்களிலும், சிறு நகரங்களிலும் மட்டும் மக்களின் வாழ்க்கை சமூகத்தினின்றும் துண்டிக்கப்பட்டு, தனித்து விடப்படவில்லை. இந்தியப் புவிப்பரப்பின் பெரும்பங்கை ஆக்கிரமித்துக் கொண்டு குறுக்கும் நெடுக்குமாக விரிந்து கிடக்கும் கிராமங்களின் நிலையும் மெல்ல மெல்ல மாறி வருகிறது. இந்தியாவெங்கும் தற்கொலை செய்து மாண்டு போகும் இலட்சக்கணக்கான விவசாயிகளின் இறந்த உடல்கள் எழுப்பும் கேள்விகள், பதில்களைத் தேடி நம்மைத் துரத்துகின்றன.

விவசாயத்தின் பிரச்சினை ஓரிரு பத்தாண்டுகளில் தோன்றியதல்ல எனும்போது தற்கொலைகள் சமீபத்திய வருடங்களில் அதிகரித்துச் செல்லக் காரணம் தான் என்ன?

2009-ம் ஆண்டு மட்டுமே இந்தியாவில் 17,368 விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டு போயுள்ளனர். 1995 – 2011 கால அளவில் மட்டும் சுமார் 2,53,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாய விளைபொருட்கள் இறக்குமதியாவது, விளைச்சலுக்கு விலை கிடைக்காதது,  உரம், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட விவசாய இடுபொருட்களின் விண்ணை முட்டும் விலையேற்றம் போன்ற பல்வேறு காரணிகள் விவசாயிகளுக்கு கடன் வாங்கும் நிர்ப்பந்தத்தை உண்டாக்குகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் விவசாயக் கடன்களைப் புறக்கணிக்கும் நிலையில், தவிர்க்கவியலாமல் அவர்கள் உள்ளூர் கந்து வட்டிக் கும்பலின் பிடியிலோ, குறுங்கடன் தரும் கார்ப்பரேட் கந்து வட்டிக் கும்பலிடமோ மாட்டிக் கொள்கிறார்கள்.

ஆந்திராவின் அடிலாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அல்லெம் சட்டென்னாவுக்கு இரண்டு ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. சென்ற பருவத்தில் பருத்திக்கு நல்ல விலை கிடைத்ததைப் பார்த்து இந்த முறையும் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், மேலும் 3 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து பருத்தி விதைத்துள்ளார். இதற்காக 1,80,000 ரூபாயை உள்ளூர் கந்து வட்டிக்காரர் ஒருவரிடம் கடன் வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் திடீரென்று பருத்தியின் விலை சரிந்து, குவிண்டாலுக்கு 3,500 ரூபாய் வரை குறைந்துள்ளது. சட்டென்னாவுக்கோ எதிர்பார்த்த மகசூலும் கிடைக்கவில்லை. மொத்த நிலத்திலிருந்தும் முதல் பருத்தியெடுப்பில் வெறும் ஒரு குவிண்டால் பருத்தி தான் கிடைத்திருக்கிறது. கந்துவட்டிக்காரனுக்கு அஞ்சிய சட்டென்னா பூச்சி மருந்தைக் குடித்து உயிரை விட்டுள்ளார்.

இறந்து போன சட்டென்னாவுக்கு இன்னும் வாழ்க்கையென்றால் என்னவென்றே தெரியாத ஏழு வயதேயான மகன் இருக்கிறான். இளம் மனைவி இருக்கிறார். தான் இறந்து விட்டால் இவர்களின் நிலை நிர்க்கதியாகும் என்பது சட்டென்னாவுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்; அது போலவே அவருக்கு இன்னொன்றும் சர்வ நிச்சயமாகத் தெரியும் – அது கந்து வட்டிக்காரர்கள் கடனை வசூலிக்கு எந்தெந்த எல்லைகளுக்கெல்லாம் செல்வார்கள் என்பது.

25/02/2012 தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் குறுங்கடன் வங்கிகள் கடனை வசூலிக்க பின்பற்றும் வழிமுறைகளையும், அதனால் ஆந்திராவில் அதிகரித்துள்ள தற்கொலைச் சாவுகளையும் பற்றி விரிவான செய்தியொன்று வெளியாகியுள்ளது. கடன் வாங்கியவரின் வீட்டிலுள்ள தட்டுமுட்டுச் சாமான்களை அடாவடியாகப் பறித்துச் செல்வது, வீட்டின் முன் நின்று ஏசுவது மட்டுமல்ல, கடனை வசூலிக்கு வந்த குண்டர் படை வீட்டிலிருக்கும் பெண்களை விபச்சாரத்துக்கு அனுப்பியாவது கடனைக் கட்ட வேண்டியதுதானே  என்று கூட விவசாயிகளை அவமானப்படுத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.

எண்பதுகளிலும், அதற்கு முன்பும் விவசாயிகள் ஓரளவு  அமைப்பு ரீதியாக அணி திரண்டிருந்தனர். அன்று வலுவாக இருந்த விவசாயச் சங்கங்கள் இன்று வலுவிழந்து போயுள்ளதுடன், அரசியல் ரீதியிலும் தீர்மானகரமான ஒரு சக்தியாக இல்லை. அன்று விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக வாதாட, போராட அமைப்புகள் இருந்தது. விவசாயிகள் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாகவோ, பிரச்சினைகளைத் தானே தனித்து நின்று எதிர்கொண்டாக வேண்டுமென்றோ நெருக்குதலுக்குள்ளாக வில்லை. இன்றைக்கு விவசாயக் கூலித் தொழிலாளர்களும், சிறிய விவசாயிகளும் நகரங்களுக்கு அத்துக்கூலிகளாய்ச் சென்று விட்ட நிலையில், எஞ்சியவர்கள் அமைப்பு பலமற்று தணித்து விடப்பட்டுள்ளனர்.

சமூகத்தின் இயக்கம் அமைப்பு ரீதியாகப் பிணைக்கப்பட்டிருந்த போது இருந்த பாதுகாப்பு இன்று தனிநபர்களாய்ச் சிதறி விட்ட பின் அகன்றுள்ளது. அரசு தனது அடக்குமுறைகளை இன்னும் கூர்மையாக்கி மேலும் மேலும் பாசிசமயமாகி வரும் சூழலும், எவருக்கும் பதிலளிக்கக் கடமைப்பட்டவர்களில்லை எனும் மமதையில் நாட்டின் எல்லைகளைப் பன்னாட்டு மூலதனத்துக்கு அகலத் திறந்து விட்டிருக்கும் சூழலும், இதனால் மாறி வரும் பொருளாதாரச் சூழலும், அதைத் தொடர்ந்து சமூகத்தில் கூர்மையடைந்து வரும் ஏற்றத்தாழ்வுகளும், அதிகரித்து வரும் நுகர்பொருள் மோகமும், அதை அடைய மக்கள் செய்து கொள்ளும் சமரசங்களும், இவற்றால் விளையும் பிரச்சினைகளும் மக்களின் முன் கைகோர்த்து நிற்கும் போது மக்கள் அதைத் தன்னந்தனியே எதிர்கொள்ளும் நிலையில் நிற்கிறார்கள்.

நவீன கால கோலியாத்து கையில் ஏ.கே 47 வைத்திருக்கிறான் – அவனை எதிர்கொள்ளும் டேவிட்டோ இன்று தன்னந்தனியே அதே பழைய கவன்கல்லோடு நிற்கிறான். விதர்பாவில் குண்டடிபட்டுச் சாயும் டேவிட்டுகளின் ரத்தம் திருப்பூர் தெருக்களில் சிதறுகிறது. தூக்கில் தொங்கிய ஜெயக்குமாரின் உறைந்த கண்கள் சமூகத்தை வெறித்துப் பார்க்கிறது.

__________________________________

– தமிழரசன்

_______________________________________

நாட்டையே திவாலாக்கும் கல்வி!

11

ஜூன் மாதம் வந்துவிட்டால் இந்தியா முழுவதும் மேற்படிப்பு ஜுரம் தொடங்கி விடுகின்றது. உடனடியாக பணம் சம்பாதிக்கும் படிப்பு, சமுக அந்தஸ்துக்கான படிப்பு என விதவிதமான படிப்புகளில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துவிட வேண்டும் எனப் பெற்றோர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தன் பிள்ளை படித்து முடித்து ஒரு நல்ல வேலைக்குப் போய் விட்டால் தன் கவலைகள் தீர்ந்துவிடும். அதனால் கடன் வாங்கியாவது படிக்க வைக்க வேண்டுமென பெற்றோர்கள் கருதுகின்றனர்.

உயர் மத்தியதர வர்க்கம் மற்றும் மத்தியதர வர்க்கப் பெற்றோர்களிடம் முன்பெல்லாம் கோலோச்சிய படிப்பு மருத்துவம் அல்லது பொறியியல் தான். இப்பொழுதோ அது மெல்ல விரிந்து ஃபேஷன் டெக்னாலஜி, ஹோட்டல் மேனஜ்மென்ட், எம்பிஏ, விசுவல் கம்யூனிகேசன், ஃபோட்டொகிராபி எனப் பெருகி விட்டது. இந்தப் படிப்புகளில் ஏதேனும் ஒன்றைப் படித்து விட்டால், பன்னாட்டு, தனியார் பெரு நிறுவனங்களில் நல்ல வேலை, ஐந்திலக்கச் சம்பளம், சொந்த வீடு, கார் என வாழ்க்கையில் உடனே செட்டில் ஆகி விடலாம். இந்த மாயைகளை முதலீடாகக் கொண்டு இன்று பல தனியார் கல்லூரிகள் புற்றீசல் போலப் பெருகி விட்டன.

பல லட்சம் ரூபாய் கடன் வாங்கிப் படிக்கும் இந்தப் படிப்புகளால் உண்மையில் இளைஞர்களின் வாழ்க்கை வளம் பெருகிறதா? ஏன் இந்தியாவில் இன்னும் வேலை இல்லாதோரின் சதவிகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளது? இந்தப் படிப்புகளினால் இந்தியா முன்னேறுகிறதா?

மேற்படிப்பு – தொழிற்கல்வி

இப்போது இருக்கும் கல்வி முறைக்கான வித்து பிரிட்டிஷ் காலானியாக நாம் இருந்தபோதே தொடங்குகிறது. காலனிய கால இந்தியாவில் மூலப்பொருட்களை மாத்திரம் கொண்டுசெல்ல வேண்டியிருந்ததால் தொழிற்சாலைகளுக்குத் தேவையான பொறியாளர்கள், வல்லுநர்களின் தேவை குறைவாக இருக்கவே முதலில் நிர்வாகப் பணிக்கான எழுத்தர்களை உருவாக்கவே முக்கியத்துவம் தரப்பட்டது. அடுத்து ராணுவம், போக்குவரத்து மற்றும் ரயில்வே போன்ற துறைகளுக்காக முக்கிய நகரங்களில் மாத்திரம் தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

தொழிற் கல்வி

1947 க்குப் பிறகு நாட்டின் கட்டுமானம், தொழிற்சாலை, எந்திரம், மோட்டார் வாகனங்கள் போன்ற துறைகள் வளர வளர அது சார்ந்த படிப்புகளின் தேவை அதிகமாகியது. தேர்ந்த தொழிநுட்ப வல்லுனர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம் என ஐஐடிகளை 1957ல் உருவாகியது. மெல்ல மாநில அரசுகள் சேர்ந்துகொண்டன, குறைந்த கட்டணம் மட்டும் வாங்கி மக்கள் வரிப்பணத்தை கொண்டியங்கும் தொழில்நுட்ப கல்லுரிகளை அரசு உருவாக்கியது.1950 களில் 10க்கும் குறைவான தொழில்நுட்ப கல்லுரிகளில் இருந்து 500 க்கும் குறைவான பொறியாளர்கள் வெளிவந்தனர்.

1990 ல் உலகமயமாக்கல்- தனியார்மயமாக்கல்- தாராளமயமாக்கல் காலகட்டத்தில் இந்தியாவில் அந்நிய முதலீடு வரத்துவங்கியது. அவுட் சோர்சிங் எனும் ஒருமுறை உலகில் அறிமுகமாகியது. தங்கள் நாட்டில் அதிக சம்பளம் கொடுத்து செய்ய வேண்டிய வேலைகளை எந்த நாட்டில்  குறைந்த சம்பளத்திற்கு செய்கிறார்களோ அங்கே வேலைகள் குவியத் தொடங்கின. இதில் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் அந்நிய முதலீடு பெருகியது.

மறுபுறம் கல்வியும் தனியார்மயமாக்கப்பட்டு, பல தனியார் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல தொடங்கப்பட்டன. 70 ஆயிரம் வேலைகள் கார்ப்பரேட் நிறுவனங்களில் இருந்தால், அதைக்காட்டியே பல நூறு பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கும் கல்லூரிகள் முளைத்தன. 1990 க்கு முன் 400க்கும் குறைவான கல்லூரிகளில் இருந்து 20 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவந்த நிலை போய், 2011ல் 1800 கல்லூரிகளில் இருந்து 7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 400 கல்லூரிகளிலிருந்து ஓராண்டுக்கு 2 லட்சம் பேர் வரை வெளிவருகிறார்கள்.

7.5 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஒரு ஆண்டுக்கு வெளிவந்து என்ன செய்கிறார்கள்? ஏன் இத்தனை பேர்? அவ்வளவு பேருக்கும் வேலை கிடைக்குமா?

ஒருவர் பொறியியல் பட்டம் பெற 4 ஆண்டு படிப்பதற்கு 3 லட்சம் முதல் 6 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரசு கல்லூரிகளில் 1.5 லட்சத்திற்கும் குறைவாக வசூலிக்கப்படுகிறது.

பெரும்பாலும் ஏழை மற்றும் நடுத்தரவர்க்க குடும்பத்தில் கடன் வாங்கி தான் இந்தப் படிப்புகளுக்கு அனுப்புகிறார்கள். பிள்ளை படித்து முடித்து விட்டால் தங்கள் கவலைகள் போய்விடும், கடனும் அடைக்கப்பட்டு விடும் என்பது அவர்கள் நம்பிக்கை.

ஐஐடியில் படிப்பவர்களுக்கு படிக்கும்போதே வேலையும் கிடைத்து விடும். இது சில தனியார் பொறியியல் கல்லூரிகளில்தான் சாத்தியம். அனைத்து பொறியியல் கல்லுரிகளுமே தங்கள் மாணவர்கள் 90 சதவீதம் வரை வேலையில் இருப்பதாகப் புளுகுகிறார்கள்.

2008 உலகப் பொருளாதார நெருக்கடி வருவதற்கு முன் தனியார் கார்ப்பரேட்டுகள் ஓரளவு வேலை கொடுத்தன. ஆனால் அதன்பிறகு அதுவும் குறைந்து விட்டது. அப்புறம் ஏன் இத்தனை கல்லூரிகள்? இத்தனை மாணவர்கள்?

என்ஜினியரிங் சூதாட்டம்

அதிக கட்டணம் வாங்கியும் மாணவர்களுக்கு தரமான ஆசிரியர்கள், ஆய்வுக் கூடம், நூலகம், உணவு, தங்கும் வசதி எதுவும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் சரியாக இருப்பதில்லை. அனைத்து ரவுடிகளும், ஓட்டுப்பொறுக்கிகளும் கல்வி வள்ளலாக இருப்பதால் அதிகாரிகளை சரிக்கட்ட அவர்களுக்கு வழியும் அத்துப்படி தான்.

மாணவர்களும் கல்விக்கடன் வாங்கிப் படிப்பதால் போராட்டம் அது இதுவென்று போய்விடக் கூடாது என நான்காண்டுகளைக் கெட்ட கனவாக கருதி அடிபணிகின்றனர். படித்து முடித்தவுடன் வேலை, வாழ்க்கையில் செட்டிலாவது என்ற கனவுகள் வேறு அவர்களைத் துரத்துகிறது.

ஐஐடி, ஐஐஎம் இல் மக்கள் பணம் கோடிக்கணக்கில் செலவாகிறது. ஆனால் இங்கு படித்த பலரும் வெளிநாட்டு வேலைக்கு சென்று, குடியுரிமையும் பெற்று விடுகின்றனர். கோடிக்கணக்கான மக்கள் வரிப் பணத்தில் ஐஐடியில் படிக்கும் மாணவன் அமெரிக்க நிறுவனமான ஃபேஸ்புக்கிலோ, கூகிளிலோ பல லட்சம் மாதச் சம்பளமாகப் பெற்று அமெரிக்க சென்று விடுகிறான். அவன் படித்த படிப்பால் நாட்டுக்கு ஒரு பயனும் இல்லை.

மறுபுறம் சொந்த முதலீட்டில் படிக்கும் மாணவனுக்கு, படித்து முடித்தபின் தான் தன்னைப் போலவே பல லட்சம் பேர் அந்த ஒரு சில வேலைக்காகப் போட்டியிடுவது தெரியவரும்.

வேலை இல்லை

படித்து முடித்து, வேலை தேடும் போது தான் வேலை இல்லை என்ற உண்மை புரியவரும். வாங்கிய கடன் வட்டியுடன் குட்டி போட்டுக் கொண்டிருக்கும். வேலையில்லாத் ஒவ்வொரு நாளும் அதை நினைத்தாலே நெஞ்சு பதறும். ஒரு வேளை தனக்குத்தான் வேலைக்கான தரம் இல்லையோ என சந்தேகப்பட்டு அதனை உயர்த்த சில பயிற்சி நிறுவனங்களில் சேருவார்கள். ஆண்மைக் குறைவு சித்த மருத்துவர்களுக்கு இணையாக சும்மா பார்க்க வரும் பட்டாதாரிகளையும், உங்க இங்கிலீஷே சரியில்ல, நீங்க இருக்கிறதே வீண் என்ற அளவுக்கு முதலில் குழப்புவார்கள். சில ஆயிரம் தாருங்கள், நாங்க பயிற்சி தர்றோம், இதெல்லாம் கிடைக்கப் போற சம்பளத்துல 10% தான பாஸு என்று கூறி குழப்பி ஒருவழியாக உங்களுக்கு பயிற்சி தருவார்கள். பல ஆயிரம் செலவழித்த பிறகுதான் வேலை கிடைக்காத நிலைமை தெரிய வந்தாலும், பயிற்சியளிப்பவனிடம் அதைக் கேட்க முடியாது. வாக்குறுதியிலயே அவன் பயிற்சிதானே தருவேன் என்றான், வேலையைப் பற்றி பேசவில்லையே. ஐடி துறையில் ஒரே மாதத்தில் விண்டோஸ், லினக்ஸ், ஆரக்கிள் கற்றுத்தருவதாகக் கூறி 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கறந்து விடுகிறார்கள். மொத்தத்தில் பணம்தான் பட்டதாரிகளுக்கு விரயமாகிறது.

வேலை இல்லை ஏன்?

2000 ல் Y2K  பிரச்ச்னையைத் தீர்க்க நிறைய கணிப்பொறிப் பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள், சொல்லப் போனால் நிறைய பட்டதாரிகள் தேவைப்பட்டார்கள். அந்தக் காலகட்டதில் கணிப்பொறி என்றில்லாமல் எந்திரவியல் முதல் சாதாரண அறிவியல் பட்டதாரிகள் வரை கணிப்பொறி நிறுவனப் பணிகளுக்குச் சென்றனர்.

ஆனால் Y2K பிரச்சினை முடிந்தவுடன் அனைவருக்கும் வேலை போனது. இதுபோன்ற தற்காலிகத் தேவைகள் பூதாகரப்படுத்தப்பட்டு தனியார் கல்லூரிகள் பல திறக்கபட்டன. குறிப்பாக 80களின் இறுதியில் கல்வியில் தனியார் மையம் தாரளமாக புகுந்தது. அரசியிலில் கடைவிரிக்க வாய்ப்பில்லாதவர்கள் ஒதுங்கி கல்வி வள்ளல்களாக அவதாரம் எடுத்தார்கள்.

இருக்கும் 80 ஆயிரம் வேலைகளைக் காட்டி பல லட்சம் இடங்களுக்கான ஒப்புதலை வாங்கி விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் இருக்கும் அதே 70 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையிலான பணியிடங்களுக்கு 7.5 லட்சம் பேர் போட்டி இடுகிறார்கள்.

அடிமை வேலை

இந்த ஒரு லட்சம் வேலைக்கு 7.5 லட்சம் பேர் என்பதால் தனியார் நிறுவனங்கள் சம்பளத்தை குறைக்கவும் பேரம் பேசவும் முடிகிறது. வாங்கிய கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பட்டதாரி சம்பளத்தை உயர்த்திக் கேட்டால் உள்ளதும் போய், வேலையில்லாமல் வெளியே இருப்பவர்களுக்கு வாய்ப்பாகி விடும்.

சாதரண பட்டதாரியே போதும்

இந்தியாவில் செய்யப்படும் பல அவுட்சோர்சிங் பணிகள் சேவைத்துறை சார்ந்தவை. இதற்கு சாதாரண பட்டாதாரிகளே போதும், பொறியியல் பட்டதாரியை வேலைக்கு எடுத்தால் நிறைய சம்பளம் தர வேண்டியிருக்குமே எனப் புலம்புகின்றன நிறுவனங்கள்.

முன்னர் ஆயிரக்கணக்கில் பொறியியல் பட்டதாரிகளை அள்ளிய டிசிஎஸ், சி டி எஸ், எல் அண்ட் டி, டிவிஎஸ் நிறுவனங்கள் இப்போது பெரும்பாலும் பொறியியல் அல்லாத பட்டதாரிகளையும், பட்டயப்படிப்பு படித்தவர்களையும் மட்டுமே வேலைக்கு எடுக்கிறது. செய்யப்படும் வேலைகளுக்கு இவர்களே போதுமானதாக இருப்பதால் தரமில்லை என்ற வாதமே சொத்தை என்பது நிரூபணமாகிறது.

பொருளாதார நெருக்கடி தொடரும் இக்காலத்தில் எல்லா நிறுவனங்களும் ஆட்குறைப்பை நோக்கிச் செல்கின்றது. ஆண்டுக்கு ஆயிரம் பேராக முன்னர் வேலைக்கு எடுத்தவர்களை இன்று 100 ஆக குறைத்து விட்டதால், சாதாரண பட்டதாரிகளுக்கும் வேலை இல்லை.

அமெரிக்காவில் அதிக சம்பளம் என இந்தியாவிற்கு கடைவிரித்தனர். இப்போது சீனா மற்றும் பிலிப்பைன்சில் குறைவான சம்பளம் என்பதற்காக எல்லா முதலாளிகளும் அங்கே கிளம்பி விட்டனர். இந்தியர்களுக்குத்தான் ஆங்கிலம் நன்றாக எழுத, பேச வருகிறது என்ற வாதம் அதை சீன, பிலிப்பைன்சு மக்கள் கற்க துவங்கியவுடன் அடிபடத் துவங்கி விட்டது.

வேலையே இல்லை எனும் போது அந்த உண்மையை மறைத்து உங்களுக்கு திறமையில்லை; திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள், உங்களிடம் தரமில்லை; தரத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், சுய முன்னேற்ற வகுப்புகள், கூட்டம், அதைச் சார்ந்த புத்தகம், டிவிடி என பகல் கொள்ளை அடிக்கும் கூட்டம் ஒன்று உருவாகி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.

வேலை இல்லை, தாங்கள் ஏமாற்றப்படுகிறோம் என்ற உண்மை தெரிந்தால் யாரும் முதலீடு போட்டு படிக்க வர மாட்டார்கள், அவர்களுக்கும் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளம் குறையும், பட்டதாரிகளுக்கான தேவை அதிகரிக்கும். அதனால் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும். தனியார் கல்லூரி முதலாளிகளது கல்லா பாதிக்கப்படும். இதனால் கல்வி தனியார்மயமாதல் கேள்விக்குள்ளாக்கப்படும். வேலை, 5 இலக்க சம்பளம் இது தனியார் கல்லூரிகளுக்கு மட்டுமல்ல, தனியார் பள்ளிகளுக்குமான முதலீடு. தன் பிள்ளை மருத்துவர், பொறியாளர் ஆக வேண்டும் என்று தான் தரம் என்ற பெயரில் தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அங்கு படிக்கும எல்லோருக்கும் அப்படிப்பில் இடம் கிடைக்காது என்ற எளிய உண்மை பெற்றோர்களுக்கு உரைக்கும்போது கல்வி தனியார்மயத்திற்கெதிரான போராட்டம் வலுப்படும்.

குப்பை படிப்புகள்

மத்தியதர வர்க்கம், உயர் மத்தியதர வர்க்கத்திடம் விதவிதமான ஆடைகளை வடிவமைக்கும் ஃபேஷன் டெக்னாலஜி, நட்சத்திர ஹோட்டல்களில் உணவைத் தயாரித்து அதை அலங்கரிக்கும் கேட்டரிங் டெக்னாலஜி, விளம்பரம், சினிமா, டி.வி.யில் நுழைய உதவும் விஷுவல் கம்யூனிகேசன் என இவையனைத்தும் பல லட்சம் செலவழித்து கற்றுக்கொள்ளப்படும் கல்விகள். முதலில் இந்தக் கல்வியினால் என்ன பயன்?

நம் நாட்டில் 40 கோடி மக்கள் அன்றாடம் ஒரு வேளை சாப்பிடுவதே வாய்ப்பில்லாமலிருக்க, நம் நாட்டிற்கு தேவையான படிப்பு இத்தனை பேருக்கு குறைந்த செலவில் எப்படித் தரமான உணவைத் தயாரிக்க வேண்டும் என்பதாக இருக்க வேண்டும். மாறாக செய்த தயிர்ச்சாதத்தில் வண்ண வண்ணமாக வட்ட வட்டமாக தக்காளி, கரிவேப்பிலை போட்டு அதை அழகு படுத்தும் படிப்பல்ல. இதை விடக் கொடுமை அதை அழகாக புகைப்படம் எடுக்க “உணவு புகைப்படக்கலை” (FOOD PHOTOGRAPHY) என ஒரு படிப்பு.

இந்திய வளங்களையும், வனங்களையும் தனியார் முதலாளிகள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுக்க பழங்குடியினர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம் மாணவனோ வனத்தையும், வன விலங்குகளையும் அழகாகப் படம்பிடிக்க “காட்டு வாழ்க்கை பற்றிய புகைப்படக்கலை” (­WILD LIFE PHOTOGRAPHY) படிக்க பல லட்சம் செலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாட்டில் பல கோடி மக்களுக்கு புதுத்துணி என்பதே கனவு எனும் போது நாட்டு மக்களுக்கு தேவையான அளவு துணியை மிகவும் குறைந்த செலவில், சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் தருவதைப் பற்றிய படிப்பு தான் நேர்மையான படிப்பாக இருக்கும். ஆனால், நன்றாக இருக்கும் துணியை விதவிதமாகக் கிழித்துப் போடச் சொல்ல ஒரு படிப்பு; அதன் பேர் ஃபேஷன் டெக்னாலஜி யாம். படிக்க கட்டணம் சில லட்சம் ரூபாய் களாம்.

இந்த குப்பைப் படிப்புகள் எதுவும் இந்திய மக்களுக்கான தற்போதைய தேவை இல்லை. ஆனால் பெரு நிறுவனங்கள், முதலாளிகள், பணக்காரர்கள் அவர்களின் ஆபாச செலவுகளுக்கும், ஆட்டம் பாட்டத்திற்கும் தேவை. அவர்கள் தேவைக்காக மாணவர்கள் சொந்தப் பணத்தைப் போட்டுப் படிப்பது மேலும் ஆபாசமாக உள்ளது.

கல்வியில் தனியார்மயத்தின் சாதனைக் கற்கள் இவைதான். இறுதியில் மக்கள் கைக்காசைப்போட்டு செலவழித்து திவாலானதுதான் மிச்சம். இந்திய மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற அடிப்படைத் தேவையில் இங்கே கல்வி இல்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான கல்வி மட்டுமே இங்கே உருவாக்கப்பட்டுள்ளது. விளைவு இரட்டை இலக்கத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் வளர்கிறது. தாங்கள் மட்டும் முன்னேறி விடலாம் என்று மனப்பால் குடிக்கும் நடுத்தர வர்க்க பெற்றோர்கள் சிந்திக்கட்டும்!

____________________________________________________________

– ஆதவன்
______________________________________________________

விமானப் பணிப்பெண் கீதிகாவின் தற்கொலை…

2
கீதிகா ஷர்மா - கோபால் கண்டா
கீதிகா ஷர்மா – கோபால் கண்டா

ரியானாவைச் சேர்ந்த கீதிகா ஷர்மா என்ற 23 வயதான இளம் பெண் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தில்லியில் வடமேற்கு பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். அவர் விட்டுச் சென்ற தற்கொலை கடிதங்களில், ‘தன்னுடைய மரணத்திற்கு முக்கியத் தூண்டல் ஹரியானா மாநில அமைச்சராக இருந்த கோபால் கோயல் கண்டா மற்றும் அவரின் வேலையாள் அருணா சத்தா ஆகியோர் தொடர்ந்து கொடுத்த சித்திரவதைதான்’ என்பதை பதிவு செய்திருந்தார்.

அருண் சத்தா உடனடியாக கைது செய்யப்பட்டாலும், கண்டா தலைமறைவாகி விட்டார். அவரது முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட பிறகு  செப்டம்பர் 10ம் தேதி போலீசிடம் சரணடைந்தார்.

47 வயதாகும் கோபால் கண்டா செருப்புக்கடை முதலாளி, ரியல் எஸ்டேட் புரோக்கர், தொழிலதிபர், கார் டீலர், தாரா பாபா பக்தர், விமான நிறுவன முதலாளி என்று வளர்ந்து அரசியல்வாதியாக உருவெடுத்தவன். 1998ல் முதலமைச்சரான ஓம் பிரகாஷ் சவுதாலாவின் கைத்தடியாக இருந்து அவரது ஆட்சி முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டான். 10 நீதிமன்ற வழக்குகளை எதிர் கொண்டிருந்த கண்டா 2009 சட்டசபை தேர்தலில் சிர்சா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  காங்கிரஸ் முதலமைச்சர் பூபிந்தர் சிங்  ஹூடா அரசு அமைக்க ஆதரவு அளித்து அதற்கு பரிசாக அமைச்சர் ஆக்கப்பட்டான்.

கீதிகா சர்மா வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வேகமுடைய நடுத்தர வர்க்கப் பெண். கோபால் கண்டா 2007ம் ஆண்டில் ஆரம்பித்த எம்.டி.எல்.ஆர் விமான சேவை நிறுவனத்தில் அப்போது 18 வயதான கீதிகா ஷர்மா விமான பணிப்பெண்ணாக சேர்ந்தார். அதிகாரம், ஆணவம், பெண்களை ஆளும் வெறி பிடித்திருந்த கோபால் கண்டா தன் மகள் வயதான கீதிகாவை தன் வசப்படுத்த ஆரம்பத்திலிருந்தே வேலை செய்திருக்கிறார்.

கீதிகாவுக்கு பல சலுகைகள் கொடுத்து, கீதிகாவின் மேல் படிப்புக்கு பண உதவி செய்வது, வெளி நாட்டு பயணங்களுக்கு அழைத்துப் போவது, புதுப்புது பெயரில் பதவிகளை அளிப்பது என்று வெளிப்படையான நாடகங்களை நடத்தியிருக்கிறார். தனது பணி முன்னேற்றத்திற்காகவும், தனது பொருளாதார நலன்களுக்காகவும் கீதிகா அவற்றை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

எம்டிஎல்ஆர் நிறுவனம் நொடித்துப் போய் 2009 ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. இதனால் எமிரேட்சுக்கு போக வேண்டியிருந்த கீதிகாவை தன்னுடைய வேறு நிறுவனமான எம்டிஎல்ஆர் குழுமத்தில் ஒருங்கிணைப்பாளர்  என பதவி உயர்வு கொடுத்து பக்கத்திலேயே வைத்திருக்க முயற்சித்திருக்கிறார் கண்டா. எமிரேட்ஸ் வாய்ப்பின் மூலமாக கண்டாவை விட்டு ஒதுங்கிவிடலாம் என்று நினைத்திருந்த கீதிகாவுக்கு இது கடிவாளம் போட்டதுபோலாகிவிட்டது. இருப்பினும்  ஒருவழியாக தப்பித்து வேலையை ராஜினாமா செய்து விட்டு எமிரேட்ஸ் விமான நிறுவனத்தில் வேலை செய்ய துபாய்க்கு போய் விட்டிருக்கிறார் கீதிகா.

அவரை எப்படியாவது மீண்டும் தன் பிடியில் சிக்கவைக்க வேண்டும் என்ற நோக்கில் போலி ஆவணங்களின் அடிப்படையில் அவர் வேலைக்கு சேர்ந்தார் என்றும் படிப்பிற்காக வாங்கியக் கடனை திருப்பி தராதவர் என்றும் கீதிகாவின் மேல் குற்றம் சாட்டி எமிரேட்ஸ் விமான நிறுவனத்திற்கு மின்னஞ்சல்கள் அனுப்பியிருக்கிறார் கண்டா. இந்த மிரட்டல் நடவடிக்கைகளில் அவரது உதவியாளர் அருண் சத்தா உறுதுணையாக  இருந்திருக்கிறார்.

அவரும், அவரது ஆட்களும் துபாயிலுள்ள எமிரேட்ஸ் நிறுவனத்துக்குப் போய் கீதிகாவுக்கு தொந்தரவு கொடுத்துள்ளனர். இவற்றால் கீதிகாவுக்கு வேலை பறிபோக, அவரை இந்தியாவில் மீண்டும் தன் நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்துக்கொண்டிருக்கிறார் கண்டா.  இது போன்ற தொடர் பாலியல் தொல்லையால் வேலைக்கு வருவதை நிறுத்திக் கொண்ட கீதிகாவை துன்புறுத்தும் நோக்குடன் அவர் வாங்குவதற்காக பதிவு செய்து வைத்து இருந்த வீட்டையும் கிடைக்காமல் செய்துள்ளார் கண்டா.

இப்படி தொல்லைக்கு மேல் தொல்லையை பொறுக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் கீதிகா தன் உயிரை மாய்த்துக்கொண்டார். உயிருடன் வாழ்ந்து கொண்டே கண்டாவை எதிர்ப்பது சாத்தியமற்று போன நிலையில் இறப்பதன் மூலம் கண்டாவிற்கு பதில் சொல்வது என்ற கையறு நிலையில் தான் தனக்குத் தானே முடிவு கட்டிக்கொண்டு உள்ளாள் அந்தப் பெண்.

ஒரு மகன், இரண்டு மகள்கள் என்று பொறுப்பான குடும்ப மனிதனாக நடந்து கொள்ள வேண்டிய இந்த மிருகம் தன்னுடைய 46 வயதிலும் மைனரைப்போல வலம் வந்தது மட்டுமில்லாமல் ‘கீதிகா மேல் இருந்த தீராத காதலால், அவரை தன் பக்கத்திலே வைத்துகொள்ளும் நோக்குடன்தான் இவ்வாறன வழிமுறைகளை பின்பற்றினேன்’ என்பதை போலீசிடம் வாக்குமுலமாக கொடுத்து உள்ளார் கண்டா.

இளம் வயதில், எந்த அனுபவமும் இல்லாத கீதிகாவிற்கு சீனியர் பணிப்பெண் பதவி, பெரிய கார், உயர்ந்த சம்பளம் தர கண்டா ஒன்றும் வள்ளலும் இல்லை நல்லவனும் இல்லை. இருப்பினும் அவர் வழங்கிய சலுகைகளும் அவற்றுக்கு அடிப்படையான அவருடைய அரசியல் அதிகாரமும் கீதிகாவையும் அவர் குடும்பத்தையும் செயலிழக்க செய்து உள்ளது.  கண்டாவின் நோக்கத்தை அறிந்த பின்னரும், அவர்து தொடர்புகள் மூலம் பொருளாதார வாய்ப்புகளை பெறலாம் என்று  அவர் பிடியில் சிக்கியது கீதிகா தனக்கு செய்துகொண்ட மாபெரும் தவறு.

தங்கள் மேல் அதிகாரிகளுக்கு வளைந்து கொடுத்து, முகஸ்துதி செய்வதன் மூலம் பொருளாதார சலுகைகள், பதவி உயர்வு, அதிகார பின்னணி இவற்றை பெற்று விட முயற்சிப்பவர்கள் ஒவ்வொருவரும் இது போன்ற அபாயமான விளையாட்டில்தான் இறங்கியிருக்கிறார்கள்.

சலுகைகளை பெறுவதற்காக செய்யப்படும் சில சமரசங்களும், அடிமைத் தனமும் நாள்பட நாள்பட மேலும் மேலும் இழிவான நிலையை எட்டுகிறது. ஒரு வகையான குற்ற உணர்வை தோற்றுவித்து, மனதளவில் சோர்வடையச் செய்கிறது. ஒரு நாள் ஒதுங்க நினைக்கும் போதுதான் அது வரை  பயன்படுத்திய நபரின் உண்மையான முகம் தெரியவருகிறது.

கட்டுப்படுத்தி வந்த யாரும் கட்டுக்களை அவிழ்த்து விட சம்மதம் தருவது கடினம். அதுவும் அரசியல் அதிகாரம் இருக்கும் நபர் என்றால் கேட்கவா வேண்டும்! சட்டம், அரசு, போலீஸ் என்று எல்லாவற்றையும், கை நுனியில் வைத்து இருக்கும் நபர்களிடம் அதிகார அத்துமீறலுக்கு என்ன பஞ்சம்.

பாலியல் தொடர்பான இத்தகைய உறவு பெண்களுக்கு ஒரு சிறையை போன்றது, அதில் அவர்களின் இழப்பு மிகவும் அதிகம், சமூகரீதியாக, மனரீதியாக, உடல்ரீதியாக பல அவலங்களுக்கும், தொல்லைகளுக்கும் ஆளாவதோடு, பெரிய பின்விளைவு இல்லாமல் அதிலிருந்து வெளி வருவதும் சாத்தியமில்லாமல் போகிறது. அந்த நிலை தான் கீதிகாவுக்கு ஏற்பட்டிருந்திருக்கிறது.

நடந்து முடிந்த இக்கொலைக்கு அதிகார வர்க்கங்களை காக்கும் அரசு எந்திரம் தரும் தீர்ப்பு என்பது நியாயமாக இருப்பதற்கு சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. பெண்கள் மேல் பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக, சமூகரீதியாக சுரண்டும் கனவான்களுக்கு என்றுமே சட்டமும், அரசும் சாதகமாக இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.

பா.ஜ.க. உறுப்பினர் ராஜ் கிஷோர் கேசரி தனக்கு செய்த பாலியல் கொடுமைகளை எதிர்த்து போராடிய ரூபம் பதக், அதற்கான நீதி கிடைக்காமல் போய், ராஜ் கிஷோர் மீண்டும் அதிகாரப் பதவியைக் கைப்பற்றும் சூழல் உருவான போது, தனது ஆத்திரம் தீர அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததை இங்கு நினைவு கூறலாம் அந்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்திருக்கின்றனர் ரூபம் பதக்கும் அவரின் குடும்பமும்.

விமானப்படை அதிகாரியான அஞ்சலி குப்தாவின் தற்கொலையும் இந்த தன்மையுடையது தான். பாலியல் கொடுமைகளையும், பெண் என்ற காரணத்தால் நடந்த அடக்குமுறைகளையும் எதிர்த்து போராடிய அஞ்சலி குப்தாவிற்கு இறுதியில் கிடைத்தது பணி நீக்கமும், அவச்சொல்லும். தொடர்ந்து போராடி தோய்ந்து போன அவர் இறுதியில் தேடியது மரணத்தை தான்.

நீளும் இந்தப் பட்டியலில் இப்போது கீதிகாவும் இணைந்துள்ளார். அதிகார வர்க்கங்களை எதிர்த்து போராடுவது அர்த்தம் அற்றது என்ற நினைப்பில் தன் வாழ்க்கைக்கு முற்று புள்ளி வைத்துகொண்டு உள்ளார்.

படிக்க

டி.வி. சீரியல்கள் எப்படித் தயாராகின்றன?

19
டிவி-சீரியல்

டி.வி சீரியல்கள்: எண்ணி மாளாத பன்றிக் குட்டிகள்!

டிவி-சீரியல்தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை. சீரியல் நேரம் நெருங்க நெருங்க கைவேலையை முடிப்பதில் பதட்டம் காட்டும் பெண்களைப் பார்க்கும்போது, அவர்களை கட்டிங்குக்காக தவிக்கும் குடிமகனுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. குடிகாரன் குடல் வெந்து சாவோம் என்று தெரிந்தேதான் குடிக்கிறான். சீரியல் அடிமைகளுக்கோ, தங்கள் சிந்தனை காவு கொடுக்கப்படுவது குறித்துத் தெரிவதில்லை. அந்த வகையில் இவர்கள் பலியாடுகளை ஒத்தவர்கள். இந்த நெடுந்தொடர்களில் வருகின்ற கதைகளும் அவை தோற்றுவிக்கும் கருத்துகளும் தனியொரு ஆய்வுக்குரியவை.

ஆனால் இத்தொடர்களின் கதைகள் எவ்வாறு தயாராகின்றன என்பதை இதனுடன் கட்டிப் போடப்பட்டுள்ள ரசிகர்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஒரு வளர்ப்பு நாயை விடக் கேவலமான முறையில் தாங்கள் ஆட்டிப் படைக்கப்படுவதைத் தெரிந்து கொள்வது, இந்த அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள உதவும்.

***

மிழகத்தில் தற்போது 49 தொலைக்காட்சி சேனல்கள் இருக்கின்றன. பொழுதுபோக்கு, செய்திகள், நகைச்சுவை, பாடல்கள், சினிமா, குழந்தைகள், மதம், விளையாட்டு… என இந்த 49ஐப் பலவாறாகப் பிரிக்கலாம். அடுத்த மூன்று – நான்கு மாதங்களில் மேலும் 13 சேனல்கள் வரவிருக்கின்றன.

இவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் ’டேம்’ (TAM) எனப்படும் தொலைக்காட்சி பார்வையாளர் அளவீடு (Television Audience Measurement)  சொல்லும் கணக்கைச் சார்ந்தே இயங்குகின்றன; நிகழ்ச்சிகளைத் தயாரிக்கின்றன. விளம்பர வருவாய்க்கு மட்டுமல்ல, நிகழ்ச்சித் தயாரிப்புக்கும் ’டேம்’ அளிக்கும் விவரங்கள் முக்கியமானவை. போட்டி ஊடகங்கள் என்ன நிகழ்ச்சியை, எந்த நேரத்தில் ஒளிபரப்புகின்றன, அவற்றுக்கு கிடைக்கும் விளம்பர வருவாய் எவ்வளவு, எத்தனை பார்வையாளர்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தார்கள், ஏன் அதே நேரத்தில் ஒளிபரப்பான வேறொரு நிகழ்ச்சியை புறக்கணித்தார்கள்… என்பதையெல்லாம் சக நிறுவனங்கள் அறிந்து கொள்ள இந்த ’டேம்’ விவரங்கள் அவசியம்.

எனவேதான் வாரம்தோறும் வெளியாகும் ’டேம்’ கணக்கின் விவரங்களை அனைத்து காட்சி ஊடகங்களும் கண்கொத்திப் பாம்பாகக் கவனித்து அலசுகின்றன. இதன் பிரதிபலிப்பை தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் பார்க்கலாம். முன்னணி சேனலாக இருக்கும் சன் டிவியில், வார நாட்களில் நாளொன்றுக்கு 18 தொடர்கள் ஒளிப்பரப்பாகின்றன. அதாவது 24 மணி நேரங்கள் கொண்ட ஒரு நாளில் 9 மணி நேரங்களை இந்தக் கதைத் தொடர்களே ஆக்கிரமிக்கின்றன. காலை 10 மணி முதல் மதியம் 2.30 மணி வரையிலும், பிறகு மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் அரை மணி நேரத்துக்கு ஒரு தொடர் வீதம் ஒளிபரப்பாகின்றன.

ஆனால் விஜய், ஜெயா, ராஜ், ஜி தமிழ்… போன்ற மற்ற சேனல்களில் சராசரியாக நாளொன்றுக்கு 9 நெடுந்தொடர்களே ஒளிபரப்பாகின்றன. காரணம், ’டேம்’ கணக்கின்படி இந்தக் காட்சி ஊடகங்களுக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவு. எனவே விளம்பர வருமானம் சன் டிவி அளவுக்கு இவற்றுக்கு வருவதில்லை.

சன் டிவியில் எப்படிக் கதைத் தொடர்கள் தயாராகின்றன? பகலில் ஒரு தொடரை ஒளிபரப்புவதற்கு அரை மணி நேரத்துக்கு ரூபாய் 7 முதல் 9 லட்சம் வரையில் சன் டிவி வசூலிக்கிறது என்கிறார்கள் சீரியல் தயாரிப்பாளர்கள். ‘பிரைம் டைம்’ என்று சொல்லப்படும் இரவு 7.30 முதல் 9.30 வரையிலான நேரத்தில் சீரியல் ஒளிபரப்பாக வேண்டுமென்றால், அரை மணி நேரத்துக்கு கட்டணம் 12 முதல் 14 லட்சம் ரூபாய். இரவு 10 மணிக்கு மேல் என்றால், கட்டணம் ரூபாய் 6 முதல் 8 லட்சம் வரை. இந்தத் தொகை திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களுக்கு மட்டும்தான். சனி, ஞாயிறு ரேட் வேறு.

இப்படி திருவல்லிக்கேணி மேன்ஷன் அறையை வாடகைக்கு எடுப்பது போல் வாரத்தின் ஐந்து நாட்களுக்கு அரை அரை மணி நேரமாக ஒரு சீரியல் தயாரிப்பாளர் வாடகைக்கு எடுக்கிறார். அரை மணி நேரத்தில் 18 நிமிடங்கள் தொடருக்கு ஒதுக்கி விட்டு, மீதமுள்ள 12 நிமிடங்களை விளம்பரதாரர்களுக்கு விற்பார். அதுவும் பத்துப் பத்து விநாடிகளாக. இப்படி விற்றுக் கிடைக்கும்  பணத்தில் தான் அவர் அரை மணி நேரத்துக்கான வாடகையை சன் டிவிக்கு தர வேண்டும். தனது தொடரில் பணிபுரியும் நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்கு சம்பளம் தர வேண்டும். லாபமும் பார்க்க வேண்டும்.

’டேம்’ தரும் வாராந்திர புள்ளிவிபரம் எக்குத்தப்பாக அமைந்து விட்டால், அடுத்து வரும் வாரங்களுக்கு விளம்பரங்கள் கிடைக்காது. கெஞ்சிக் கூத்தாடினால், சந்தை நிலவரத்தை விடக் குறைவான தொகைக்கு பேரம் பேசுவார்கள். அதற்கு ஒப்புக் கொண்டால் முதலுக்கே மோசமாகும். இன்னொரு பக்கம், பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைந்தால் முதலில் சன் டிவி கண்டிக்கும். அடுத்த வாரம் அழுத்தம் திருத்தமாகக் கட்டளையிடும். மூன்றாவது வாரம், பாதியிலேயே தொடரை நிறுத்தி விடும். சில மாதங்களுக்கு முன்பு இரவு 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பான ’ஆண் பாவம்’ தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டது. இத்தனைக்கும் அந்தத் தொடரை தயாரித்தது ஆர்.எம்.வீரப்பனின் சத்யஜோதி பிலிம்ஸ்.

மற்ற தொலைக்காட்சிகள் பின்பற்றும் வழிமுறை வேறு. அவர்கள் குறிப்பிட்ட தயாரிப்பாளரை அழைத்து ஒரு தொடர் அல்லது நிகழ்ச்சியைத் தயாரிக்கச் சொல்வார்கள். அதற்கான தொகையைத் தீர்மானித்து கொடுத்து விடுவார்கள். தயாரிப்பாளர் அந்தத் தொகைக்குள் தொடரோ, நிகழ்ச்சியோ தயாரித்துக் கொடுத்துவிட்டு, அந்த தொகைக்குள்ளேயே லாபத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும். விளம்பர வருவாய் முழுவதையும் தொலைக்காட்சி நிறுவனம் எடுத்துக்கொள்ளும்.

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்த வழிமுறை கம்பி மேல் நடப்பது போல் தான். அதனால் தான் இரவு 9 மணிக்கு மேல் சன் டிவி தவிர மற்றவர்கள் சீரியலுக்குப் பதிலாக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றனர். ஒரே காரணம் செலவு குறைவு என்பது தான். அல்லது சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக,  இந்தி மற்றும் தெலுங்கில் ஏற்கெனவே ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற தொடர்களை ‘ஆடித் தள்ளுபடியில்’ வாங்கி தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட ஆரம்பித்திருக்கின்றன. ’சிந்து பைரவி’, ’சின்ன மருமகள்’, ’மறுமணம்’ போன்ற தொடர்கள் இப்படி இந்தியில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டவைதான்.

முன்னர் ஷகிலாவின் மலையாளப் படங்களுக்கு தமிழ்ப் பெயர் வைத்து ரிலீஸ் செய்ததற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இல்லை. இந்த நெடுந்தொடர்களும் மொழி, பண்பாட்டு வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவையே.

ஒவ்வொரு நெடுந்தொடரின் முடிவிலும் அந்த மாபெரும் படைப்பை உருவாக்குவதில் பங்காற்றிய இயக்குநர் தொடங்கி காபி வாங்கிக் கொண்டுவரும் பையன் வரையிலான அனைவரது பெயர்களும் போடப்பட்டாலும், ஒரு தொடருக்கான கதையையும் காட்சிகளையும் கதாசிரியரோ இயக்குநரோ முடிவு செய்வதில்லை. சம்பந்தப்பட்ட தொலைக்காட்சியின் நிர்வாகிகளும், விளம்பர நிறுவனங்களும் சொல்லும் வகையிலேயே அவை உருவாகின்றன. இந்தக் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடு, இந்த நபருக்கு விபத்தை உண்டாக்கு, திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு இவர் கைதாக வேண்டும், மருத்துவமனை – காவல் நிலையங்களில் சில காட்சிகள் நகர வேண்டும்… என்றெல்லாம் விளம்பரக் கம்பெனிகளும், தொலைக்காட்சி நிர்வாகமும் கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கும். இதற்கேற்பவே காட்சிகளைக் கோர்க்க வேண்டும்.

அது மட்டுமல்ல, நட்சத்திரங்களை உருவாக்குபவர்களும் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி மற்றும் விளம்பர நிறுவனங்கள் தான். இவர்கள் மனது வைத்தால் யாரை வேண்டுமானாலும் முக்கியக் கதாபாத்திரமாக்கி பிரபலப்படுத்துவார்கள். முறைத்துக் கொண்டால் சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளை அழித்து விடுவார்கள்.

அரை மணி நேரத்தில் 18 நிமிடம் தான் தொடர். நடுவில் மூன்று விளம்பர இடைவேளைகள். எனவே ஒவ்வொரு 6 நிமிடத்துக்கும் ஒரு திருப்பம் கொடுக்க வேண்டும். மறுநாள் தொடருக்காக ஏங்கும் விதத்தில், முந்தைய நாளின் இறுதிக் காட்சி அதிர்ச்சி நிரம்பியதாக அமைய வேண்டும். இதை அத்தொடரின் படத்தொகுப்பாளர் (எடிட்டர்) கவனித்துக் கொள்வார். காட்சியை முன் பின்னாக மாற்றிப் போட்டு, அன்றைய தினத்தின் இறுதிக் காட்சியை அவர் முடிவு செய்து விடுவார். இதற்காக இயக்குநர் அல்லது ’திரைக்கதை’ எழுதுபவரின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது அவசியமில்லை. ஒரு கதாபாத்திரத்தைக் கொன்று விடுமாறு தொலைக்காட்சி நிர்வாகம் உத்தரவிட்டால் கொன்று விட்டு, மிச்சமிருப்பவர்களை வைத்து இயக்குநர் கதையை நகர்த்திச் செல்ல வேண்டும்.

இந்தக் கதைத் தொடர்கள் அனைத்திலும் ஒரு பொதுத்தன்மையைப் பார்க்க முடியும். பெண்கள் தான் முக்கியமான பார்வையாளர்கள் என்பதால், பெண் கதாபாத்திரம் தான் மையம். கண்டிப்பாக அவள் ஆளும் வர்க்கப் பண்பாட்டின் வரையறுப்புப்படி ’நல்லவளாக’ இருக்க வேண்டும். அவளுக்கு ஒரு குடும்பம். அது பிறந்த வீடாக அல்லது புகுந்த வீடாக இருக்கலாம். இதைத் தீர்மானிக்க கதாசிரியருக்கு ’சுதந்திரம்’ உண்டு. ’அநாதை’ என்று அமைத்தால் ஏன் அநாதை ஆனாள், அவளது அப்பா – அம்மா யார்… என காரணங்களை அடுக்க வேண்டும். மொத்தத்தில், மையக் கதையில் ஒரு நல்லவள்(ன்), ஒரு கெட்டவள்(ன்), ஒரு அப்பாவி நிச்சயம் இருக்க வேண்டும்.

இந்த மையக் கதைகள் ஒரு வீடு அல்லது அலுவலகம் அல்லது கோயில் ஆகிய மூன்று இடங்களிலேயே பொதுவாக நகரும். அப்போதுதான் தயாரிப்புச் செலவு குறையும். பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேசன், கடை வீதி போன்ற இடங்களுக்கு கதைக்களம் மாறினாலும், செலவு ’கட்டுபடி’ ஆகாது. எனவே நல்லதோ கெட்டதோ எதுவானாலும் இந்த மூன்று இடங்களில் முடிந்தாக வேண்டும்.

மையக் கதையின் மிக முக்கியமான தகுதி என்னவென்றால், அது எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இழுக்கத்தக்கதாகவும், முடிவே இல்லாமல் கிளைக் கதைகளை பின்னும் வாய்ப்புள்ளதாகவும் இருக்க வேண்டும். முடிப்பதைப் பொறுத்தவரை அது எப்போதுமே இயக்குநர் கையில் இல்லை. அதை விளம்பரக் கம்பெனி அல்லது தொலைக்காட்சி நிர்வாகம் முடிவு செய்யும்.

கூட்டுக் குடும்பம் என்பதே சமூகத்தில் இன்று காலாவதியாகிவிட்ட போதும், சீரியலைப் பொறுத்தவரை அது பயனுள்ளதாகவே இருக்கிறது. பத்துப் பதினைந்து பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தில் ஏழெட்டு பேருக்கு கதையில் வேலையே இல்லையென்றாலும், பின்னால் புதிய பிரச்சினைகளை உருவாக்கி கதையை இழுப்பதற்கு அவர்கள் பயன்படுவார்கள்.

துணைக் கதாபாத்திரங்களும் நல்லவன்(ள்), கெட்டவன்(ள்), அப்பாவி என்ற மூன்று பிரிவுக்குள் மட்டுமே அடங்க வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு காட்சியிலும் எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அவற்றுக்கு இடையில் ’மோதலை’க் கொண்டு வர முடியும். கதையும் ’சுவாரஸ்யமாக’ நகரும்.

நாயகிக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயல்கிறார்கள்… எனக் கதையைத் தொடங்கினால், தரகர் பொய் சொல்கிறாரா அல்லது ’எதிரி’ தவறான மணமகனை பரிந்துரைக்கிறாரா எனச் சில நாட்களுக்கு காட்சிகளை நகர்த்தலாம். பிறகு திருமணம் ஆகுமா, ஆகாதா என்ற ’எதிர்பார்ப்பை’ வைத்து பல நாட்களைக் கடத்தலாம். திருமண மண்டபத்தில் தாலி காணாமல் போவதில் ஆரம்பித்து சீர் அல்லது வரதட்சணையில் பற்றாக்குறை ஏற்படுவது வரை பிரச்சினையை 10 அல்லது 15 நாட்களுக்கு நீட்டிக்கலாம். திருமணமான பிறகு கணவனுடன் சேருவாளா அல்லது புகுந்த வீட்டில் யாராவது சேர விடாமல் தடுப்பார்களா என்ற கேள்வியை போடலாம். அது தொடர்பான காட்சிகளை நுழைக்கலாம். பிறகு கர்ப்பம். கர்ப்பப் பையில் பிரச்சினை அல்லது குழந்தையைப் பெற்றெடுப்பதில் சிக்கல் அல்லது அபார்ஷன் செய்ய யாரேனும் முயற்சி. அப்புறம் குழந்தை பிறப்பு அல்லது பிறந்த குழந்தை திருடப்படுதல். திருடப்பட்ட குழந்தை இன்னொரு இடத்தில் வளர்தல், அக்குழந்தைக்காகத் தாய் தவித்தல். குழந்தை வளர்ப்பு, நோய்வாய்ப்படுதல், தவறான தடுப்பூசியால் பாதிப்பு. பள்ளிக்கு குழந்தை செல்லும் போது கடத்தப்படுதல், பிச்சை எடுக்க வைத்தல்; வளரும் குழந்தை சிறுமியாக இருந்தால் பூப்பெய்துதல், காதலில் சிக்குதல்; சிறுவனாக இருந்தால் போதை போன்ற தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாதல்…

இப்படியாக 40 நாட்களுக்கு ஒரு கதை வீதம் மையக் கதையை நகர்த்திக் கொண்டே செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட கால இடைவெளியில் தலா யாரேனும் ஒருவர் மருத்துவமனையில் உயிருக்குப் போராட வேண்டும். அவர்களைக் காப்பாற்ற நாயகி தீ மிதிக்க வேண்டும் அல்லது மண் சோறு சாப்பிட வேண்டும். இந்தப் ’பகுதி’ முடிந்ததுமே காவல் நிலையம் வர வேண்டும். திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு நாயகி அல்லது நாயகன் கைதாக வேண்டும். சிறையில் அவர்களைக் கொல்ல ஏற்பாடு நடக்க வேண்டும்…

இதற்காக பல பழைய – புதிய திரைப்படங்கள் அல்லது பாக்கெட் நாவல்களின் கதையை, காட்சிகளை ’சுடலாம்’; சுட வேண்டும். விளம்பர நிறுவனங்களே இதைப் பரிந்துரைக்கவும் செய்கின்றன. ஒவ்வொரு வசன கர்த்தாவும் தனக்கென்று சில உதவியாளர்களை வைத்துக் கொண்டு இப்படித்தான் ஒரே நேரத்தில் மூன்று அல்லது நான்கு தொடர்களுக்கு பணியாற்றுகின்றனர். டிவி அல்லது டிவிடியில் ஒரு படம் ஓடிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தபடி உதவியாளர்கள் ஆட்டுப் புழுக்கையைப் போல் வசனம் எழுதித் தள்ளுவார்கள்.

இப்படியான சூத்திரங்களுடன் தான் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 40 நெடுந்தொடர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கான நேரம் என்பது காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தான். சன் டிவி என்றால் அத்தொடரின் இயக்குநர் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒன்றரை எபிசோட் படம் பிடிக்க வேண்டும். அதாவது 18 + 9 நிமிடங்கள். மற்ற தொலைக்காட்சிகள் என்றால், ஒரு நாளைக்கு அந்த இயக்குநர் இரண்டு முதல் மூன்று எபிசோடுக்கான காட்சிகளைச் ‘சுருட்ட’ வேண்டும். அதனால் தான் நடப்பது அல்லது மாடிப்படிகளில் இறங்குவது அல்லது ஆட்டோவில் பயணம் செய்வதை அதிக நேரம் காண்பிக்கிறார்கள்.

நாயகன் அல்லது நாயகி சாதாரண நடுத்தர வர்க்கமாக இருந்தாலும், அவர்களுடைய வீடு பெரிய பங்களா போலவோ அல்லது ஒரே நேரத்தில் பத்துப் பதினைந்து பேர் புழங்கக் கூடிய அளவுக்கு தாராளமாகவோ இருக்கும். “என்னது ஆக்சிடெண்டா?” என்று ஒரு வசனத்துக்கான முகபாவத்தை ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியாகக் காட்ட வேண்டும். அதற்குத் தோதாக இடைவெளி விட்டு ஆளுக்கொரு பக்கம் நிற்க வேண்டுமானால் வீடு பெரியதாக இருந்தால்தானே முடியும். அது மட்டுமல்ல, வீட்டுக்குள்ளே மாடிப்படி இருப்பதும் அவசியம்.

இதுவன்றி அவ்வப்போது கதாபாத்திரங்கள் கடுமையான அதிர்ச்சிக்கோ, ஆத்திரத்துக்கோ ஆளாக வேண்டும். அதிர்ச்சி என்றால் வசனமே பேச முடியாமல் வாயடைத்துப் போகும் அளவுக்கு கடுமையான அதிர்ச்சியாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுடைய முகத்தை மட்டும் காட்டி, பயங்கரமான பின்னணி இசை போட்டு நேரத்தை இழுக்க முடியும்.

ஒரு நெடுந்தொடரில் 20 நடிகர்கள் இருந்தால், அந்த 20 மூஞ்சிகளின் கோபம், அதிர்ச்சி, சோகம், திகைப்பு போன்றவற்றை குளோசப்பிலும் பல கோணங்களிலும் முன்னரே எடுத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும் இடங்களில் எல்லாம் ஜோக்கர் கார்டு போல செருகிக் கொள்ள முடியும். இப்படியெல்லாம் ‘அரும்பாடு பட்டுத்தான்’ ஒரு தொடரின் இயக்குநர் 18 நிமிடக் காட்சி என்கிற ஒரு நாள் இலக்கை தினந்தோறும் எட்டுகிறார்.

பொதுவாக குறிப்பிட்ட சில நட்சத்திரங்களேதான் அதிகமான தொடர்களில் நடிக்கிறார்கள். எனவே ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தொடர்களின் படப்பிடிப்பில் அவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருக்கும். எனவே அவர்களுடைய கால்ஷீட்டுக்கு ஏற்ப கதையைக் கொண்டு செல்வதற்கு, கிளைக் கதைகளும், துணைக் கதாபாத்திரங்களும் அவசியமாகிறார்கள்.

குறிப்பிட்ட நடிகர் அல்லது நடிகை குறிப்பிட்ட நாளில் வர முடியாமல் போகலாம். அதற்காக படப்பிடிப்பைத் தள்ளி வைக்க முடியாது. எனவே திரைக்கதை மற்றும் வசனம் எழுதுபவர்கள், இருக்கும் நட்சத்திரங்களுக்கு ஏற்ப காட்சிகளை எழுதி, அதை எப்படியாவது மையக் கதையுடன் இணைத்து விடுவார்கள்; அல்லது ஒரு கிளைக்கதையை சட்டென்று தொடங்கி விடுவார்கள். இதற்கு விளம்பர நிறுவனங்கள் அல்லது குறிப்பிட்ட தொலைக்காட்சிகளின் நிர்வாகிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது மட்டும்தான் பிரச்சினை. “என்ன ஒரே டிரையா இருக்கு… அந்த கேரக்டரை கொன்னுடு… இல்லைனா அவனை கோமாவுல படுக்க வை…” என அவர்கள் கட்டளையிடுவார்கள். மறு பேச்சில்லாமல் அதை கடைபிடிக்க வேண்டும்.

இப்படி உருவாக்கப்படும் நெடுந்தொடர்களைத்தான் அன்றாடம் பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். எதைக் காட்டக் கூடாது என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். வாழ்க்கையின் உண்மையான வேதனைகள், ஏமாற்றங்கள், பிரச்சினைகள் போன்றவற்றுக்காக அல்லாமல் செயற்கையான உணர்ச்சிகளின் சுரண்டலுக்கே மக்கள் ஆட்படுத்தப் படுகிறார்கள். உதாரணமாக தொழிற்சாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்படும் ஒரு தொழிலாளியின் பிரச்சினை, ஒட்டுமொத்தத் தொழிலாளர் சமூகம் எதிர்கொள்ளும் சிக்கலாகக் காட்டப்படுவதில்லை. தனி மனித வேதனையாக கதைத் தொடர்கள் வழியாக அவனது மனைவிக்கு வழங்கப்படுகிறது.

புற உலகின் முரண்பாடுகளை மறைத்து, நவக் கிரகங்களுக்குள் தன் எதிர்காலத்தைத் தேடுவது போல, சில நிர்ணயிக்கப்பட்ட சூத்திரங்களுக்குள் நிஜ வாழ்க்கையைப் புரிந்துகொள்ள மக்கள் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். மாமியார், மருமகள், பக்கத்து வீட்டுக்காரன், சக ஊழியன் என்று இத்தகைய தொடர்கள் உருவாக்கிக் காட்டும் பாத்திரங்களுக்குள் இவர்களுடைய பார்வையே சுருங்கி விடுகிறது.

வாழ்க்கை நிலைமையால் மக்கள் வேறுபட்டாலும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஒரே மாதிரியான தேவைகள், பிரச்சினைகள் இருப்பது போல் காட்சி ஊடகங்கள் கதைத் தொடர்கள் வழியாக ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றன. கதை மாந்தர்களின் பிரச்னைகளுக்காக உருகுவது மட்டுமின்றி, அவர்களுடைய கண்ணோட்டத்தில் பார்வையாளர்கள் உலகைப் பார்க்கவும் தொடங்குகிறார்கள்.

அந்த இடத்திலிருந்து சீரியல், தொலைக்காட்சிப் பெட்டியை விட்டு இறங்கி வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது.

__________________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
____________________________________________________

“இந்த பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது……!”

6

தனியார்மய-தாராளமய எதிர்ப்பு: தீர்வுக்கான திசை எது ?

ஊழல்-எதிர்ப்பு
தரகு முதலாளி டாடாவுடன் மே.வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா (கோப்புப் படம்). தனியார்மயத்தை எதிர்ப்பதாகக் கூறிவரும் சி.பி.எம்., சிங்கூர் பிரச்சினையில் டாடாவின் அடியாளாகச் செயல்பட்டது

ளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட ‘தூய்மையாளர்’ எனும்  ஒளிவட்டத்தின் பின்புலத்தில் மஞ்சக் குளித்துக் கொண்டிருந்த  மன்மோகன் சிங், நிலக்கரி ஊழல் என்று அழைக்கப்படும்  பகற்கொள்ளையில், ஆதாரங்களுடன் சிக்கி கடந்த இரு மாதங்களாகத்  திணறிக் கொண்டிருந்தார். நிலக்கரிக் கொள்ளை, டெல்லி விமான  நிலையக் கொள்ளை, டாடா-அம்பானி மின்நிலையங்கள் அடித்த  கொள்ளைகள், மகாராட்டிரத்தில் நீர்ப்பாசனக் கொள்ளை, அதற்குமுன்  காமன்வெல்த், ஆதர்ஷ், லவாசா கொள்ளைகள் என்று கார்ப்பரேட்  கொள்ளைக்கு துணை நின்ற காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்  அன்றாடம் அம்பலமாகிக் கொண்டிருந்தது. மன்மோகன் சிங்கின்  பரிசுத்தவான் வேடம் கிழிந்து கந்தலாகிக் கொண்டிருந்தது.

இன்னொருபுறம் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு  அனுமதி, ஓய்வூதியம், காப்பீடு போன்ற துறைகளைத் திறந்து விடுதல்  என்பன போன்ற தாராளமய நடவடிக்கைகளை துணிச்சலாக  அமல்படுத்தாமல், தடுமாறும் மன்மோகனின் பலவீனத்தை  அமெரிக்காவின் டைம் வார இதழ் விமரிசித்திருந்தது. இந்தியாவின் தர  மதிப்பீட்டைக் குறைத்து, தாராளமய நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் மிரட்டியது. ரூபாயின்  மதிப்பு வீழ்ந்து கொண்டிருந்தது. கடைசியாக ஒபாமாவின் எச்சரிக்கையும்  வந்து விட்டது.

இந்த இக்கட்டை ஒரு தேர்ந்த கிரிமினலுக்கே உரிய சாதுரியத்துடன்,  சங்கிலியைத் திருட்டுக் கொடுத்த பெண் சத்தம் போடாமலிருக்க சங்கை  அறுக்கும் திருடனைப் போல சமாளித்திருக்கிறது மன்மோகன் அரசு. டீசல்  விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் குறைப்பு, சில்லறை வணிகத்தில்  அந்நிய மூலதனம், ஆயுள் காப்பீடு, ஓய்வூதிய நிதியில் சூதாட அனுமதி,  பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்பது என ஒரே  நேரத்தில் மக்கள் மீது வீசப்பட்ட கொத்து குண்டுகள் தோற்றுவித்த  அதிர்ச்சி, ஊழல் விவகாரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது.

‘வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது அந்நிய மூலதனமாக  இருக்கட்டும்‘(“If we have to go down, we will go down fighting: PM on FDI”, Money control.com,14 sep, 2012)என்று பொருளாதார  விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டத்தில் ‘வீர வசனம்‘  பேசியிருக்கிறார் மன்மோகன். இதே வீரத்தை இதற்கு முன்பும் ஒருமுறை  காட்டியிருக்கிறார்.  வலது-இடது கம்யூனிஸ்டுகள் ஆதரவை திரும்ப  பெறுகிறார்களா, கவலையில்லை. இந்திய – அமெரிக்க அணு சக்தி  ஒப்பந்தத்தை நிறைவேற்றியே தீருவோம்” என்று 2008 – இல் மன்மோகன்  முழங்கினார்.

பலவீனமான பிரதமர் என்று பாரதிய ஜனதாவால் அவ்வப்போது கேலி  செயப்பட்டவரும், விபத்தில் பிரதமரானவர் (Accidental Prime Minister) என்று தன்னைத்தானே  கூறிக்கொண்டவருமான மன்மோகன் சிங், எட்டுத் திக்கிலிருந்தும் ஊழல்  குற்றச்சாட்டுகளால் தாக்கப்படும் இன்றைய ஒரு சூழ்நிலையில்  வெல்லப்படமுடியாத பலசாலியாகி விட்டார்.

பாரதிய ஜனதா உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் ஊழல்  குற்றச்சாட்டுகளிலும் உட்கட்சி மோதல்களிலும் சிக்கியிருப்பதுதான்,  மன்மோகன் அரசின் பலம் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இது ஒரு  எளிமைப்படுத்தப்பட்ட மேம்போக்கான கருத்து. மன்மோகன் அரசும், அதன்  எதிரிகளாகத் தம்மைச் சித்தரிக்கும் கட்சிகளும் ஒரே கொள்கையில்  ‘சிக்கி‘யிருப்பதுதான், தனிப்பெரும்பான்மை இல்லாத சூழலிலும், காங்கிரசு  அரசை இத்தனை வலிமையானதாக ஆக்கியிருக்கிறது. வேறு  வார்த்தைகளில் கூறுவதாயின்,  மன்மோகன் சிங் அரசு அமல்படுத்தும்  புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு மாற்றுக் கொள்கையை  எதிர்க்கட்சிகளால் முன்வைக்க முடியாத காரணத்தினால்தான்,  மன்மோகன் சிங் பலசாலி ஆகிவிட்டார்.

வெறித்தனமான இந்தப் புதிய தாராளவாத தாக்குதலுக்கு எதிராக உடனே  போராட்டம் துவங்கும் என்பது அரசுக்குத் தெரியும். அது உடனே  முடிந்துவிடும் என்பதும் தெரியும். டீசல், எரிவாயு உள்ளிட்ட அனைத்து  மானிய வெட்டுகளையும் ஒரேயடியாக அறிவித்து விட்டால், ஒரே பந்த்  உடன் முடிந்து விடும் என்பது அரசின் எதிர்பார்ப்பு. அனைத்தும்  அவ்வண்ணமே நடந்து முடிந்தன.

அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் தி.மு.க. கடையடைப்பில் பங்கேற்றது.  வால் மார்ட் நுழைவை எதிர்ப்பதாக கூறும் புரட்சித் தலைவியோ,  கடையடைப்பை முறியடிக்க போலீசை ஏவினார். தற்போது அந்நிய முதலீட்டுக்கு எதிராக நெருப்பைக் கக்கும் மமதாவின் 2009-ஆம் ஆண்டு தேர்தல்  அறிக்கையோ, சில்லறை வணிகத்தில் அந்நிய மூலதனத்தை  வரவேற்பதாக கூறுகிறது. கேட்டதற்கு, அது ‘அச்சுப்பிழை‘ என்று  பதிலளித்து விட்டார் மமதா.

ஊழல்-எதிர்ப்பு
சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்ப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நடத்திய ”பாரத் பந்த்” போராட்டத்தில் கலந்து கொண்ட சி.பி.ஐ., சி.பி.எம்., பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களின் கதம்பக் கூட்டணி.

இந்தப் பதிலை ஒரு கவிதை என்றுதான் சோல்லவேண்டும்.  ஆட்சியிலிருக்கும்போது தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை  அமல்படுத்துவதும், தோல்வியைத் தழுவி எதிர்க்கட்சியான பின்னர்  அதனை எதிர்ப்பது போலப் பம்மாத்து செய்வதும் கடந்த 20 ஆண்டுகளாக  இந்திய ஓட்டுக் கட்சிகள் நடத்தி வரும் நாடகம். மக்களின் வாக்குகள்  மூலம் பெறப்பட்ட இறையாண்மைமிக்க அதிகாரத்தை, பன்னாட்டு  நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப்  பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்த அரசமைப்பை, ‘ஜனநாயகம்‘ என்று  குறிப்பிடப்படுவதும் ஒரு வகை அச்சுப்பிழைதானே!

பாரதிய ஜனதா முதல் போலி கம்யூனிஸ்டுகள் வரையிலான எல்லா  கட்சிகளுமே, தமது தேர்தல் அரசியல் ஆதாயத்துக்காகவும், தத்தம் வாக்கு  வங்கிகளை திருப்திப்படுத்துவதற்காகவும் தனியார்மய-தாராளமய எதிர்ப்பு பேசி வருகிறார்கள். சிறு வணிகர்களைத்  தம் சமூக அடித்தளமாகக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா, வால்மார்ட்டை  எதிர்ப்பதாகச் சவடால் அடிக்கிறது. பொதுத்துறை தொழிற்சங்க  சந்தாக்களால் உயிர் தரித்திருக்கும் வலது, இடது போலிகள்,  ‘பொதுத்துறை தனியார் மயத்தை முறியடிப்போம்‘ என்று தொண்டை  நரம்பு புடைக்க பொளந்து கட்டுகிறார்கள்.

தனியார்மய-தாராளமய நடவடிக்கைகளின் விளைவாகப் பாதிக்கப்பட்ட  மக்கள் யாரேனும் போராடினால், உடனே அங்கெல்லாம் ஓட்டுக் கட்சிகள்  பிரசன்னமாகி விடுகிறார்கள். தமது கைத்தடிகள் புடைசூழ புயலைப் போல  வந்திறங்கி, ‘தனியார் மயம் தாராளமயம் உலகமயம், அந்நிய ஆதிக்கம்,  அமெரிக்க ஆதிக்கம், மத்திய அரசு, மாநில அரசு உள்ளிட்ட  அனைத்தையும் எதிர்ப்பதாக’ப் புழுதி கிளப்பி விட்டு, அடுத்த மேடையைத்  தேடிப் புறப்படுகிறார்கள்.

கொட்டகை போட்டு கூட்டம் கூடியிருந்தால், அந்த மேடையில் ஏறி  ஆதரவு தெரிவிக்க வரவேண்டும் என்பது, எழவு வீட்டிற்கு கேதம் கேட்கச்  செல்வது போன்ற ஒரு சம்பிரதாயமாகவே ஆகிவிட்டது. தலைவர்  ஆதரிக்கும் பிரச்சினை பற்றி சம்பந்தப்பட்ட கட்சியின் தொண்டனுக்கு  எதுவும் தெரிந்திருக்காது என்பது மட்டுமல்ல; இத் தலைவர்களின் வீர  உரைகள் எதுவும், அவர்களது அடுத்த தேர்தல் கூட்டணிகளையும்  தீர்மானிக்காது என்பதுதான் முக்கியம்.

டீசல் விலை ஏற்றத்தையோ எரிவாயு சிலிண்டர் குறைப்பையோ  நாளைக்கு ஆட்சிக்கு வர இருக்கும் எந்தக் கட்சியும் திரும்பப்  பெறப்போவதில்லை. இருந்தாலும் இந்த விலையேற்றம்  தோற்றுவித்திருக்கும் கோபத்தை, தங்களிடமிருந்து எந்தக் கட்சி  திறமையாக ஜேப்படி செயவிருக்கிறது என்பதை, மக்களே மிகுந்த  ஆர்வத்துடன் கவனிக்கும் வகையில் ‘அரசியல்‘ நடத்தப்படுகிறது. தேர்தல்  அரசியல் என்பது ஒரு விளையாட்டு போலவும், அந்த விளையாட்டில்  கூட்டணி அமைப்பதும், மக்களின் வாக்குகளை ஏமாற்றிப் பெறுவதும் ஒரு  சாமர்த்தியம் போலவும் கருதி அங்கீகரிப்பதற்கும், சிலாகிப்பதற்கும் மக்கள்  பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தனியார்மயம்-தாராளமயம் என்பது எல்லா ஓட்டுக்கட்சிகளும் ஆதரிக்கும்  கொள்கை மட்டுமல்ல; அது அவர்களுடைய சொந்த தொழிலின்  அடித்தளம். பவார், கட்கரி, மாறன், வதேரா முதல் தளி ராமச்சந்திரன்  வரையிலான சர்வகட்சி மேல்மட்டத்திற்கும், காண்டிராக்டு, ஏஜென்சி,  ரியல் எஸ்டேட் தொழில்களில் வளையவரும் கீழ்மட்டத்திற்கும் அதுதான்  அமுதசுரபி. பி.ஆர்.பி. வெட்டி விற்ற ஒவ்வொரு சதுரமீட்டர்   கிரானைட்டிலும், அம்பானிக்குத் தரப்பட்ட ஒவ்வொரு சதுர கி.மீ. நிலக்கரி  வயலிலும், ஏட்டு முதல் ஐ.ஜி. வரை, தலையாரி முதல் கலெக்டர் வரை,  முன்சீப் முதல் உயர்நீதிமன்ற நீதிபதி வரை, வட்டச்செயலர் முதல்  அமைச்சர் வரை ஆயிரக்கணக்கான திருடர்களின் பெயர்கள் கண்ணுக்குத்  தெரியாத வண்ணம் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இவர்கள்தான் இந்தக்  கொள்கைகளைத் தாங்கி நிற்கும் அமைப்பு. இவர்களை வைத்தே  இக்கொள்கையை முறியடித்து விட முடியும் என்று பேசுபவர்கள்  கிறுக்கர்கள் அல்லது கேட்பவனைக் கிறுக்கனாக்குபவர்கள்.

ஊழல்-எதிர்ப்புதனியார்மயம் – தாராளமயம் என்பது உலக முதலாளித்துவம் தனது  நெருக்கடியைத் தீர்த்துக் கொள்வதற்கும், தனது கொள்ளையை  விரிவுபடுத்திக் கொள்வதற்கும் வகுத்திருக்கும் கொள்கை. இந்தக்  கொள்கைக்கு ஏற்றவாறு இந்தியாவின் அரசமைப்பும் சட்டங்களும்  மாற்றியமைக்கப் படுவதைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  இந்த அரசமைப்பின் மூலம், கட்சிகள், நீதிமன்றம், சட்டங்கள் மூலம் –  அந்தக் கொள்கைகளை மாற்றியமைப்பதோ, தடுப்பதோ நடக்காத காரியம்.

இந்த அமைப்புக்கு வெளியே நின்று இதனை எதிர்த்துப் போராடி  வீழ்த்துகின்ற மக்கள்திரள் போராட்டங்களின் மூலம், ஒரு புதிய  ஜனநாயக அமைப்பைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இதற்குத் தீர்வு  காண முடியும். இதெல்லாம் உடனே ஆகக்கூடிய காரியமில்லை என்றும்,  காரியசாத்தியமான தீர்வைத் தேடவேண்டும் என்றும் கூறுபவர்கள்  இருக்கிறார்கள்.

இலக்கு இமயம் என்றால், பயணம் வடக்கு நோக்கித்தான் இருக்க  வேண்டும். போச் சேர நாளாகும் என்பதால், பரங்கிமலையை இமயமாகச்  சித்தரிப்பதும், பரங்கிமலை செல்வதே காரியசாத்தியமானது என்று  பேசுவதும் பித்தலாட்டம். போகாத ஊருக்கு வழி சொல்வது என்பதும்  இதுதான்.

தன்னார்வக் குழுக்களும், அறிவுத்துறையினரும், போலி  கம்யூனிஸ்டுகளும் அவரவர்க்கு உரிய மொழியில் இதைத்தான்  கூறிக்கொண்டிருக்கிறார்கள். கம்யூனிசமல்லாத, முதலாளித்துவமும்  அல்லாத, இரண்டைக் காட்டிலும் மேலான, நீதியான ஒரு மாற்று  இருப்பதைப் போலவும், கையில் சிக்காமல் நழுவிக்கொண்டிருக்கும் அந்த  ‘மாற்றை‘ பிடிப்பதற்குத் தாங்கள் முயற்சித்துக் கொண்டிருப்பதாகவும்  பம்மாத்து செகிறார்கள்.பம்மாத்துகளால் எதார்த்தத்தை எதிர்கொள்வதற்கு  மேற்கொள்ளப்படும் முயற்சி, கோமாளித்தனத்தில் முடிவது  தவிர்க்கவியலாதது.

அச்சம் காரணமாகவோ, ஆதாயம் காரணமாகவோ இவர்கள் தமக்குத்தாமே  வகுத்துக் கொண்டிருக்கும் எல்லைக் கோட்டினைக் காட்டி, இந்தப்  பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது; நானும் வரமாட்டேன். ஜனநாயக  நாட்டில பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்” என்று எதிரியை  எச்சரிக்கிறார்கள்.

சிரிக்கிறீர்களா?

அந்த பார்டரை இவர்கள் மக்களின் மூளையிலும் அழுந்த இழுத்து,  தாண்டக்கூடாது என்று மிரட்டி வைத்திருக்கிறார்கள். இது  நகைச்சுவையில்லையே!

_____________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
_____________________________________________

புது வீடு வாங்க மனைவியை கொன்ற சௌத்ரி!

18
சித்தார்த் - ருச்சி
சித்தார்த் - ருச்சி
சித்தார்த் - ருச்சி
சித்தார்த் – ருச்சி

28 வயதான தன் மனைவி ருச்சி சௌத்ரியை அவளுடைய பெற்றோர் மற்றும் அவள் பெற்ற குழந்தை கண்முன்னே கத்தியால் குத்தி கொன்று இருக்கிறான் 32 வயதான சித்தார்த் சௌத்ரி. இது நடந்தது ஐ.டி துறையின் தலைநகரமான பெங்களூரில்.

தில்லியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் ஐ.டி துறையில் வேலை செய்பவர்கள், கணிசமாக சம்பாதிப்பவர்கள். இருவரும் காதலித்து திருமணம் செய்து 4 ஆண்டுகள் ஆகின்றன. சித்தார்த் சில ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி வேலை பார்த்து இருக்கிறான். இறுதியில் இருவரும் பெங்களூரில் செட்டில் ஆகி உள்ளனர். சித்தார்த் அக்செஞ்சர் நிறுவனத்திலும் ருச்சி போட்டான் இன்போடெக் என்ற நிறுவனத்திலும் வேலை பார்த்திருக்கின்றனர்.

திருமணம் ஆன சில மாதங்களுக்குள்ளாகவே கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறுகள் ஆரம்பித்திருக்கின்றன. காதல் வற்றிப் போய் விட்ட திருமண வாழ்க்கையில் கடந்த ஒரு ஆண்டாக சித்தார்த்துடனான உறவுகளை ருச்சி மறுக்க ஆரம்பித்திருக்கிறாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு சித்தார்த் மட்டும் டெல்லி குர்கானுக்கு வேலை மாற்றி போய் விட்டிருக்கிறான். பெங்களூரில் அவர்கள் குழந்தையுடன் வசித்த ருச்சியுடன் அவளது பெற்றோரும் தங்கியிருக்கின்றனர்.

கணவனும் மனைவியும் பிரிந்து இருந்தாலும், செல்போன் மூலம் சண்டை தொடர்ந்திருக்கிறது. சென்ற வாரம் தில்லியில் புதிதாக வீடு வாங்க விரும்பிய சித்தார்த், அதற்காக கடன் எடுத்து தருமாறு தொலைபேசி மூலம் ருச்சியை வற்புறுத்தியிருக்கிறான். ருச்சி அதை மறுத்திருக்கிறாள். இது தொடர்பாக ஞாயிற்றுக் கிழமை இரவு இரண்டு பேரும் தொலைபேசியில் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்ததாக ருச்சியின் பெற்றோர் சொல்கின்றனர்.

கோபம் முற்றிய சித்தார்த் திங்கள் கிழமை டெல்லியில் இருந்து விமானத்தில் பயணித்து பெங்களூர் வீடு வந்து சேர்ந்து இருக்கிறான். ருச்சியை வலுக்கட்டாயமாக சண்டை இழுத்து, தடுக்க முற்பட்ட அவள் பெற்றோரையும், குழந்தையும் தள்ளிவிட்டு, கத்தியினால் ஆத்திரம் தீரும்வரை குத்தியிருக்கிறான்.

ருச்சி அந்த இடத்திலேயே உயிரிழந்திருக்கிறாள். தன் கை மணிக்கட்டுகளை அறுத்துக் கொண்ட சித்தார்த் தன் மனைவியின் உயிரற்ற உடலுக்கு அருகில் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போது போலீசார் அவரை கைது செய்திருக்கின்றனர். குர்கானிலேயே கூர்மையான கத்தியை அவன் வாங்கியதாகவும் அதனால் இது திட்டமிடப்பட்ட படுகொலை என்றும் போலீசார் சொல்கின்றனர்.

இப்படி ஒரு கொலையை ஐ.டி துறையில் பணியாற்றும், படித்த இளைஞன் செய்து உள்ளது ஆச்சரியமாக இருக்கலாம்.

ஐடி துறையில் வேலை செய்பவர்களுக்கு பெருமளவு சம்பளம் கிடைப்பதால்  நினைத்த பொருட்களை வாங்க முடிகிறது. ஆடம்பர வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிகிறது. ‘எது தேவையானது, எது தேவை அற்றது’ என்று பார்க்கும் கண்ணோட்டம் முற்றிலும் அகன்று ‘எனக்கு வேண்டும்’ என்ற விருப்பம் மட்டும் ஆதிக்கம் செலுத்துகிறது.

நினைத்ததை நினைத்த நொடியில் வாங்கமுடியும் என்ற எண்ணமே ஒரு வகை வெறியாக மாறுகிறது. ‘தமது விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் உடனேயே கிடைத்து விட வேண்டும்’ என்ற கருத்தும் ‘அதற்குத் தடையாக நிற்கும் யாரும் தனக்கு எதிரி’ என்ற எண்ணமும் வேரூன்றுகிறது.

ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் ஆகி விடுகிறது. பொறுப்புகள் அதிகமாகின்றன. ‘சொந்த வீடு வாங்கியாச்சா? யாரு பில்டர்?’ என்ற கேள்விக்கு சொல்லும் பதிலில் தமது ஸ்டேட்டஸை வரையறுத்துக் கொள்ள வேண்டிய அழுத்தம் ஏற்படுகிறது. ‘கார் இருக்கா? என்ன மாடல்?’ என்று அடுத்தடுத்த படிநிலைகளுக்கான ஓட்டம் ஆரம்பிக்கிறது.

சொந்த வீடு, அதுவும் உயர் நடுத்தர வர்க்க தரத்திலான வீடு, சொந்த கார், அதுவும் தனிச்சிறப்பான கார் என்று வாங்காமல் இருந்தால் உழைத்து முன்னேற வழி தெரியாதவன், பொறுப்புகளை சுமக்கும் தன்மை அற்றவன் என்ற இமேஜ் உருவாகி விடும். எப்படியும் கடன்பட்டாவது ஒரு கார், ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்ற வெறித்தனமான ஆசை ஊன்றப்படுகிறது.

‘எப்படியாவது வீடு வாங்கிவிட வேண்டும்’ என்று நினைத்து ருச்சியை கடன் வாங்கித் தர சித்தார்த் கேட்டிருக்கிறான். அதுவும் சண்டை போட்டு பிரிந்திருக்கும் நிலையிலும் மனைவி என்பவள் தனது சொத்து என்ற நோக்கில் அவளிடம் பணம் கேட்டிருக்கிறான். அதை ருச்சி மறுத்தது, அவனது ஏமாற்றங்களின் மீது கடைசித் துரும்பாக பழி வாங்கும் எண்ணத்தை விதைத்திருக்கிறது.

காதலித்து நடந்த திருமணம் இப்படி முடிந்துவிட்டதே என்று யோசிப்பவர்க்கு, ஐடி காதல் என்பது மனம், கொள்கை பொருத்தத்தின் அடிப்படையில் அரிதாகவே அமைகிறது என்பது நிதர்சனம். ஒவ்வொருவரின் சம்பாத்தியம், சேர்த்து வைத்துள்ள பொருட்கள், பரம்பரைச் சொத்து இவற்றின் அடிப்படையில் திருமண உறவுகள் முடிவெடுக்கப்படுகின்றன.

சண்டை என்று வந்தாலும், அதை விலக்கி தீர்த்துக் கொள்வதும், யாரிடம் தவறு நடந்துள்ளது என்பதை பேசி சரி செய்வதும், மன்னிப்பை மனதார கேட்பதும் ஆகிய நடைமுறைகள் பல கணவன் மனைவியரிடையே இருப்பதில்லை. பேருக்காக, ஊருக்காக, காத்திருக்கும் சினிமா டிக்கெட், போக வேண்டிய மால்கள், சேர்ந்து வாங்க வேண்டிய பொருட்களுக்காக, சுற்ற வேண்டிய ஊருக்காக, அன்றைய சண்டையை அப்படியே ஒதுக்கி, பிரச்சனைகளை புதைத்து விட்டு அடுத்த நுகர்வை நோக்கி போகிறார்கள். தீர்க்கப்படாத இந்த கோபங்கள் நாள்பட நாள்பட பகைமை வலுவாக வளர்கிறது.

இரு தரப்புமே பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும் போது ‘எதற்காக விட்டுக் கொடுப்பது’ என்ற அடிப்படையில் முறுக்கிக் கொள்கின்றனர். இரு தரப்பு பெற்றோர்களும் மகனுக்கும் மகளுக்கும் தூபம் போட்டு தமது நலன்களை வலியுறுத்துவதும் நடக்கிறது.

என்னதான் பெண் ஐ.டி துறையில் ஆணுக்கு இணையாக பணம் சம்பாதித்தாலும் அவளுக்கு சுதந்திரம் என்பது வேலைக்குபோய் சம்பாதிப்பதோடு முடிந்து விடுகிறது. மனைவியின் ஏடிஎம் கார்டையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கணவர்களும் உண்டு.

சம்பாதிக்கும் பெண்ணின் சம்பாத்தியத்திற்கு கணவன் ஒரு பக்கம் உரிமை கொண்டாடினால், மற்றொரு புறம் அவளைப் பெற்று வளர்த்து, படிக்க வைத்து, சம்பாதிக்க அனுப்பிய பெற்றோர் இன்று அந்த லட்சக்கணக்கான பணமும் எவனோ ஒருத்தன் கைக்கு போகிறதே என்று அங்கலாய்ப்பதும் நடக்கிறது. ஐ.டி வேலைக்கு போகும் பெணின் பெற்றோர்கள், ஏ.டி.எம். கார்டு அவள் கணவரிடம் இருப்பதை விரும்புவதும் இல்லை அதற்காக மகளை இடித்துரைக்காமல் விடுவதும் இல்லை.

கணவன், மனைவி ஷிப்ட் முறையில் வேலைக்குப் போகும் சூழலில் வீட்டில் அவர்கள் பெற்றோர்களை கொண்டு வந்து வைத்துக் கொள்வதன் மூலம் குழந்தைகளை வளர்ப்பதும் பெருகியுள்ளது. தங்கள் பிள்ளைகள் சம்பாத்தியத்தில் பிள்ளைகளுடன் வார இறுதி சுற்றுலாக்கள், கடைத்தெரு உலாக்கள் போவதற்கும் அவர்கள் தயங்குவது இல்லை.

கணவன் மனைவிக்கிடையே சண்டை வரும் போது பெற்றோர்கள் தலையீட்டால் வெறுப்பு பலமடங்கு பெருகுகிறது.

இன்னோரு கோணத்தில் நிறுவனத்தில் தனது வேலையை காப்பாற்றிக் கொண்டு முன்னேறிச் செல்வதற்கு மேலாளரிடம் அடிமைகளாக குழையும் நபர்கள், வெளியுலகில் மற்றவர்கள் தங்களுக்கு அடிமையாக இருக்க வேண்டுமென வேண்டுகின்றனர். ஹோட்டலில் தோசை நடுவில் பிய்ந்திருந்தால் பரிமாறுபவரிடம் கோபப்படுவது, கார் பார்க் செய்ய இடமில்லா விட்டால் செக்யூரிட்டியை கோபிப்பது போன்றவை உதாரணங்கள். வீட்டில் மனைவியிடமும் அடிமை போன்ற பணிவை எதிர்பார்க்கிறார்கள்.

இந்தச் சூழல்களின் வெளிப்பாடுதான் திட்டம் தீட்டி, கத்தி வாங்கி வந்து தன் மனைவியை 11 முறை குத்தி கொலை செய்த சித்தார்த்தின் மனோபாவம். உறவுகளின் முக்கியத்துவத்தை உணராமல் ஒரு விலங்கைப் போல தன் குழந்தையின் கண்முன்னே, அதன் தாயை கொல்லும் அளவுக்கு கொடுமை வாய்ந்தவனாக உருவாக்கி இருக்கிறது அவனுடைய சமூகச் சூழல்.

படிக்க:

பால் அல்ல மாடே கலப்படம்தான்!

16
பர்கூர் மாடு
பர்கூர் மாடு
காங்கேயம் காளை
காங்கேயம் காளை

ற்றை ஏர் கூட இல்லாதவன் வாழ வக்கற்றவன்’ என்ற பழமொழிக்கு ஏற்ப தான் விவசாயிகள் மந்தை மந்தையாக  பாரம்பரிய மாடுகளை வைத்திருந்தனர். என்றைக்கு அதிக பால் மோகம் வந்ததோ… அன்றைக்கே உள்ளூர் மாடுகள் அழிப்பும், வெளிநாட்டுக் கலப்பின மாடுகள் இறக்குமதியும் பெருகி விட்டது. ஏர் ஓடிய நிலங்களில் எல்லாம் இப்போது டிராக்டர்களின் ஆட்சி நடக்கிறது. ஏரில் பூட்டப்பட்ட மாடுகள் எல்லாம்,…  அடிமாடுகளாகி விட்டன. இப்போது எங்கு பார்த்தாலும்  பெருகிக் கிடப்பது… பாலுக்காகவே  வளர்க்கப்படும் வெளிநாட்டுக் கலப்பின மாடுகள் தான்.

கால்நடைகளைப் போற்றிப் பாதுகாத்த…  நிலக்கிழார்கள் தொடங்கி, அரை ஏக்கர் விவசாயி வரை… தான் எத்தனை ஜதை ஏர்களுக்கு சொந்தக்காரன் என்று சொல்லிக்கொள்வதிலே தான் பெருமைப்பட்டனர். அதற்காகவே, மாடுகளை பட்டிப்பட்டியாக தொழுவத்தில் அடைத்து வளர்த்தனர். அந்த மாடுகள், நிலத்திற்கு தேவையான எருவைக் கொடுத்து, உழவும் செய்தது.  1936-ம் ஆண்டு வேளாண் துறையின் கீழ் இயங்கிய கால்நடைத் துறையில் துணை இயக்குநராக வேலை பார்த்த ’கேப்டன் லிட்டில் உட்’ என்பவர், தான் எழுதிய ‘தென்னிந்திய கால்நடைகள்’ என்ற புத்தகத்தில் ‘தமிழர்கள் காளங் கன்றுகள் பிறந்தால் பால் முழுவதையும் கன்றுகளைக் குடிக்க விட்டும், பசுங் கன்றுகள் பிறந்தால் கவனிப்பாரற்றும் வளர்த்தனர். டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் அறுவடை முடிந்ததும், வயல்களில் முழுவதும் மண்டிக் கிடக்கும் புற்களையும், உயரமான நெல் தாளையும்  மேய்வதற்கு முதலில்… காளங்கன்று ஈன்ற பசுவை தான் அனுமதித்தனர்.’ என்று சொல்லி இருக்கிறார்.

அதை மெய்ப்பிக்கும் வகையில் தான் நம்முடைய முன்னோர்கள் தரமான காளை மாடுகளை உருவாக்கினர்.  நிறம், கொம்பு அமைப்பு, கால் குளம்பு அமைப்பு, சுழி போன்றவற்றைப் பார்த்து சிறந்த குணாதிசயம் இருக்கும் காளங் கன்றுகளைதான் பொலி காளைகளாகத் தேர்வு செய்து கோவில் மாடுகளாகத் திரிய விட்டனர். பொலி காளையை பொதுத் சொத்தாகப் போற்றி பாதுகாத்தனர். இந்தக் காளைகள் யார் நிலத்தில் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் மேய்ந்து கொள்ளலாம். சேதங்கள் அனைத்தும், சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு  பொறுத்துக் கொள்ளப்பட்டது. அதன் விளைவாக ஊர் முழுவதும் பருவத்திற்கு வரும் மாடுகளை மோப்பம் பிடித்து… கூடி, மனிதனின் உதவிகள் இன்றி ஊர் முழுவதும் தரமான காளைகள் உற்பத்தியாகின. அவை அதிகமான இழுவைத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, குறியீட்டு ஒலிகளை எளிதில் புரிந்துகொள்ளும் சக்தி கொண்டவையாக இருந்தன. காளைகளில்… நோஞ்சான்கள், கொம்பு வளைந்தவை, அடர்த்தி குறைந்த வால் உள்ளவை, ஓடுகாலித்தனம் உள்ளவை, திருட்டுத்தனம்  போன்ற குணாதிசயம் உள்ள  காளைகளை இனப்பெருக்கம் செய்ய விடாமல் காயடித்து ’ஆண்மை நீக்கம்’ செய்து… உயிர்ம நேயத்துடன் வண்டி இழுவைக்கவும், உழவுக்கும்  பயன்படுத்தினர். இதன் மூலம் பகுதிக்கு ஏற்ற தரமான காளை மாடுகள் உருவாகின.  உதாரணமாக காங்கேயம் மற்றும் உம்பளாச்சேரி மாடுகளைப் பற்றிச் சொல்லலாம்.

காங்கேயம் ரக மாடுகளுக்கு நோய், நொடிகள் எளிதில் தாக்காது. தீவனப் பற்றாக்குறை இருக்கும் நேரங்களில் பனை ஓலை, கொழுக்கட்டைப் புல் என்று கிடைத்ததை உண்டு, உழவு, இழுவை வேலைகளை  சோர்வடையாமல் செய்யக்கூடிய ஒரு ரகம். காங்கேயம் பசு இரண்டு லிட்டருக்குக் குறையாமல் பால் கொடுக்கும்.

உம்பளாச்சேரி காளை டெல்டா பகுதியில் இருக்கக் கூடிய தொடைகால் சேற்றில் கூட தொடர்ச்சியாக 8 மணி நேரம் சோர்வில்லாமல்  வேலை செய்ய வல்லது. இந்த மாட்டின் கால் குளம்பு, குதிரைக் குளம்பு போல இருக்கும் . காலை  தரையில் வைத்து இழுக்காமல் தூக்கி  வைத்து நடக்கும். ஒவ்வொரு பசு மாடும் சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனக் கூடியது. இந்த ரக மாடும் தினமும் ரெண்டரை லிட்டருக்கு குறையாமல் பால் கொடுக்கக் கூடியது தான். இன்னும் பர்கூர் மலை மாடு, புலிக்குளம், மணப்பாறை, கண்ணாபுரம் என்று மாட்டினங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவு பெருமைகளோடு, காலம் காலமாக போற்றி வளர்த்த மாடுகள் அனைத்தையும் ‘வெண்மைப் புரட்சிக்கு’ பலி கொடுக்க ஆரம்பித்ததன் விளைவு தான்… கால் காணி ( 33 சென்ட்) நிலத்திற்கு கூட  டிராக்டர் இல்லாத விவசாயம் சாத்தியமில்லாத நிலை.

பர்கூர் மாடு
பர்கூர் மாடு

இந்த வெண்மைப் புரட்சி (வெங்காயம்) வந்த பிறகு… நம் நாட்டில் சுற்றித் திரிந்த தரமான காளைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக காயடித்து ஆண்மை நீக்கம் செய்யப்படுவதும்; ஊர் முழுவதும் சுற்றித் திரிந்து   பசுக்களில் திருட்டுத் தனமாக சினை ஊசி செலுத்தும்  செயல்களும் அரங்கேற ஆரம்பித்துள்ளன. இன்றைக்குக் காணுமிடமெல்லாம் கலப்பின மாடுகள் ராஜ்ஜியமாக  மாறிப் போனது. இந்தக் கலப்பின மாட்டை உற்பத்திச் செய்வதில் தான் அரசு மிகுந்த கவனமாக இருந்ததே ஒழிய…  உள்ளூர் மாட்டினங்களைப் பாதுக்காக்கவில்லை. கலப்பினப் பசுக்களால் பால் வளம் பெருகியது… காளைகள் குறைந்தன. கூடவே பலவிதமான நோய்களும் வரத் துவங்கின.

இன்றைக்கு காளைகள் உழுத நிலத்தில் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் டிராக்டர்களது  உழவு தான் நடக்கின்றன.  காளைகள் மண்ணை செழிக்க வைக்க உரமிட்டது. ஆனால் டிராக்டர் டீசலைக் குடித்துவிட்டு புகையை விட்டது. கூடவே, ஆயிலையும் பீச்சியடிக்கிறது. மாடு சிறுநீர் கழித்தால் உரம்; டிராக்டரில் இருந்து வெளியேற்றப்படும் ஒரு லிட்டர் ஆயில் தண்ணீரில் கலந்தால்… 1.58 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் நாசம்.கூடவே, நிலத்தில் கலந்தால் மண் மலடாகும்.

ஒரு கலப்பின மாட்டை உருவாக்குவதற்காக சுமார் 50 ஆயிரம் ரூபாய்கள் வீதம், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செலவு செய்கின்றன மத்திய மற்றும் மாநில அரசுகள். அப்படி உற்பத்தி செய்யப்படும் மாடுகளில்  பலவிதமான வியாதிகள்… சினை பிடிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு… இன்றைக்கு அனைத்து மாடுகளும்  கேரளாவுக்கு அடி மாட்டுக்கு ஏற்றப்படுகிறது.

ஒரு உயிரினத்தில் 67 சதவீத அளவு தான் கலப்பு செய்யலாம் என்ற சட்டம் இருக்கும் போது,  மாடுகளில் மட்டும் இது வரையில் 90 சதவீதம் கலப்பின மாடுகள் உருவாக்கி இருக்கிறனர். கலப்பின மாடுகள் பெருக்கத்தால்… ரகத்திற்கு பெயர் தெரியாத நாட்டு மாடுகளை ND (none described) என்ற பெயர் வைத்து, கலப்பு செய்து விட்டனர். இதனால் இன்றைக்கு பல இனங்கள் இல்லாமல் போய் விட்டது. தற்பொழுது வரை, இந்தியா முழுவதும் 30 வகை மாட்டினங்கள் மட்டும்தான் வகைப்படுத்தப் பட்டிக்கிறது. வகைப்படுத்தப் படாமல் சுமார் 30 இனங்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் காங்கேயம், உம்பளாச்சேரி ரக மாடுகளைத் தவிர… திருவண்ணாமலை, பர்கூர், புலிக்குளம், மணப்பாறை, கிடை மாடுகள் என்று பலவகையான இனங்கள் இதுவரை வரையறை செய்யப்படாமலே இருக்கின்றன.

1972 மற்றும் 1982-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் ‘வெண்மைப் புரட்சியின்’ விளைவால் 1.25 லட்சம் காளை மாடுகள் குறைந்துள்ளதாகவும், 1976 மற்றும் 1982-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் மட்டும் ’பர்கூர்’ இனக் காளைகள் 49 சதவீதமும், ’காங்கேயம்’ இனக் காளைகள் 18 சதவீதமும் அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் கால்நடைக் கணக்கெடுப்புப் புள்ளிவிபரம்  சொல்கிறது.

பொதுவாக பிறக்கும் கன்றின் எடையில் 10 சதவீதம் தான் தாய்ப்பால் சுரப்பு இருக்கும். அதன்படி 20 கிலோ எடை கொண்ட பசுங் கன்றின் எடையில் 1/10 பால் என்று 2 லிட்டர்கள் பால் தான் சுரக்கும். இந்தப் பால் குறைவாக சுரக்கிறது என்பது தான் அவர்களின் வாதம். அதற்காகத்தான் செயற்கை முறையில் குளிர் நாடுகளில் இருந்து உறை விந்துகளை இறக்குமதி செய்து செயற்கை முறையில் கருவூட்டலை அதிகப்படுத்தினார்கள். கன்று ஈன்ற 60 நாள் இடைவெளியில் பருவத்திற்கு வந்தவுடன் பசுவுக்கு கருவூட்டல் செய்யப்பட்டு, வருடம் முழுவதும் உள்ள  365 நாட்களில் பெரும்பாலான நாட்களும் இயந்திரத்தைப் போன்று பாலைக் கறப்பதிலேயே குறியாக இருந்தனர்.  பால் உற்பத்தியும் பெருகியது. பாலுக்கு பசு மாடு மட்டும் போதும், காளை தேவையில்லை என்று காளை அழிப்பு நடத்த நடத்த… வியாதிகளும் அதிகமாகியது.

குளிர் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் ‘பாலுணர்வு மந்தமாகவே’ இருக்கும். அவற்றால் நம் நாட்டு மாடுகளைப் போல எளிதில் சினை பிடிக்க முடியாது. முதலில் கலப்பு செய்யப்பட்ட போது, 50 சதவீதம் நாட்டு மாடாக இருந்ததால்… சினை பிடிப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இரண்டாவது முறை, மூன்றாவது முறைக்குச் செல்ல செல்ல… சினை பிடிப்பது குறைந்து விட்டது.  இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர். மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது… மாட்டின் ‘ஜீனில்’ மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர்கள் பாலைக் கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர்கள் பால் கறவை செய்கின்றனர். பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில் கலந்து வெளியேறுகிறது. அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல்  பெரியவர்கள் வரை புதிதாக  பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.

‘குழந்தைகளின் இரைப்பை நீர் கார நிலையில் இருக்கும். ஜீரணிக்கக் கூடிய ‘ரெனின்’ சுரப்பி இருக்கிறது. வளர்ந்த மனிதர்களில் இரைப்பை அமில நிலையில் இருக்கும் ’ரெனின்’சுரப்பு இருக்காது. பால் இயற்கைக்கு மாறாக வேறு வழியில்தான்  செறிக்கப்படுகிறது. தவழும் வரை தான் தாய்ப்பால். உலகத்தில் 4300 பாலுட்டிகள் இருக்கிறது. அவற்றில் மனித இனத்திற்கு மட்டும் தான் பால் சுரப்பதில் சிக்கல் இருக்கிறது.

15, 16 வயதில் பருவமடைந்த பெண் மக்கள் தற்போது விபரம் தெரியாத 10, 11 வயதிலே பருவமடைந்து விடுகிறனர். சிறு வயதில் ஆரம்பமாகும் மாத விலக்கு…  நடுத்தர வயதிலே நின்று விடுகிறது. மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, ‘சிசேரியன்’  முறையில் குழந்தை பிறக்கிறது. தாய்மார்களுக்கு  குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு மேல்… தாய்ப் பால் சுரப்பு இல்லாமல் போய் விடுகிறது. ஆண்களுக்கு   பால் தன்மை அதிகமாக தூண்டி விடுகிறது.  இவ்வாறு ஒழுங்கற்ற  ஹார்மோன்  சுரப்பால் ஏழில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உருவாகி  இருக்கிறது.” என்கிறார் மருத்துவர் காசி.பிச்சை.

பால்… குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது. ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,ஏ2 என்று இரண்டு வகை இருக்கிறது. பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது,   நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ் ( திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின் மட்டும் இருக்கின்றன.  ஏ1  கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்… அது குடலில் செறிக்கப்படும் போது BCM7 (beta-caso-morpine-7) ஆக மாற்றமடைந்து, நீரிழிவு,நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல்(ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக்  கண்டுபிடித்துள்ளார்கள். ”ஏ2 கேசின் உள்ள பாலைக் குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது” என்கிறார்  பேராசிரியர்  பாப் எலியாட்.

ஏ1, ஏ2 பாலைப் பற்றி… 1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s   medicine at  aucklanad  university) சேர்ந்த பேராசிரியர் ‘பாப் எலியாட், ‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கண்டிப்பாக இன்சுலின் போட்டே ஆக வேண்டும்.’ என்றார். அந்நோய் ஏன் ஏற்படுகிறது என்று நியூசிலாந்தில் ’சமோன்’ மலைவாழ் இன மக்களிடையேயும்,  அவர்களின் சொந்த ஊரில் இருப்பவர்களிடமும் ஆராய்ச்சி செய்த போது, நியூசிலாந்தில் இருக்கும்  குழந்தைகள் பாலை அதிகமாகக் குடிப்பதாகவும், அந்த பாலில் ஏ1 அதிகமாக இருப்பதாகவும், அதே சொந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்கள்  ஏ2  பாலைக் குடிப்பதாகவும் கண்டு பிடித்தார்.    பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகள், நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகள் கேசின் ஏ2 இருக்கும் பாலை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வருவதில்லை என்று கண்டுபிடித்துள்ளார். தற்பொழுது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ2 பாலுக்கு தனியாக கார்ப்பரேஷன் ஆரம்பித்து பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். கென்யா மாட்டின் பாலில் 100 சதவீதம் ஏ2 இருக்கிறது. மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும் மாடுகளில்  50:50 ஏ1,ஏ2 வாகவும் இருக்கிறது. அமெரிக்காவில் 50 சதவீதமாக இருக்கும் ஏ1 பாலைக் கொடுக்கும் மாடுகளை ஏ2 பாலை கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் நாமும், அரசும் கலப்பின மாடுகளை உருவாக்குவதிலே குறியாக இருக்கிறோம்.   கலப்பின  மாடுகளைத்தான் விவசாயிகள் தலையில் கட்டுவதற்கு  அரசு துடிக்கிறது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய கால்நடைத்துறை அமைச்சர் சின்னய்யா, தமிழ்நாட்டில் எல்லா மாடுகளும் ‘அம்மா… அம்மா…’ என்று கத்துவதாகச் சொல்லி இருக்கிறார். இந்த கால்நடைத்துறை மு(ம)ந்திரி கலப்பின கால்நடைகள் கத்துவதை கேட்டிருக்க மாட்டார் போலும்.  தற்பொழுது எந்த கலப்பின மாடும் ‘அம்மா’ என்று கூட கத்த திராணி இல்லாமல்… ‘ம்ம்ம்ம்ம்ம்ம்மா..ஆஆஆஆ’ என்று விநோதமாகத்தான் கத்துகிறது.  தமிழக முதல்வர் அம்மையார் கோவில் கோவிலாக போய் நந்தியை வழிப்படுகிறாரே… காளைகளை அழித்து விட்டு ஏன் நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும். ‘தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருக்கும் நந்தியை எடுத்துவிட்டு, சிவனுக்கு டிராக்டரை பிரதிஷ்டையாக நிறுத்த வேண்டியது தானே!

காளை மாடுகளின் அழிவு என்பது ஒரு கலாச்சாரத்தின் அழிவு தான். மாடு சுமந்த ஏர்க் கலப்பைகளின் மரணம் தான். கால்நடைகளை மட்டும் இழக்கவில்லை. நம்முடைய பாரம்பரியம்…  அனுபவத்தில் முதிர்ந்த சான்றோர்களின்  அறிவையும்  உதாசீனப்படுத்தி விட்டோம். இனியாவது மண்ணுக்கு ஏற்ற மரபுக்கு ஏற்ற… பாரம்பரிய கால்நடை இனத்தைப் பாதுகாக்க வேண்டும்.

வெண்மைப் புரட்சி என்ற பெயரில் ஏகாதிபத்திய சூழ்ச்சியால் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்து விட்டன. விவசாயிகள் பசுமைப் புரட்சியால் மலடாகிப் போன நிலத்தை உழுவதற்கு காளைகள் இல்லாமல் போகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை ஆரம்பித்த இருபது ஆண்டுகளில் விதை உள்ளிட்ட இடுபொருட்களுக்கு பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்பார்க்கிறோம் என்றால் உழவு செய்ய காளைகளையும் இறக்குமதி செய்ய நேரிடலாம்.

_____________________________________________________

கொசாக்கியன்
_____________________________________________________

வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை!

22
வன்னி-அரசு
வன்னி-அரசு

வ 7- நாய்க்கன் கொட்டாய் சாதிவெறித் தாக்குதல் பற்றி அறிந்தவுடனேயே மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்கள் அங்கு சென்றனர். பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.. நாய்க்கன்கொட்டாய் பகுதியில் விவிமு இல்லையென்பதால், பென்னாகரம் பகுதி விவிமு தோழர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாத்தியமான நிவாரண உதவிகளையும் செய்திருக்கின்றனர். அவர்கள் திரட்டி அனுப்பி வைத்த செய்தி மற்றும் புகைப்படங்களை நவம்பர் 10 அன்று வினவு தளத்தில் வெளியிட்டிருந்தோம்.

தற்போது நவம்பர் 16 ஆம் தேதியன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர், வன்னி அரசு. “பாமகவின் சாதிவெறியும் புரட்சிகரக் குழுக்களின் பிழைப்பு வாதமும்” என்ற தலைப்பில் கீற்று தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்,

“பா.ம.க. வன்னியர்கள் மட்டுமல்லாமல், திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மகஇக என கட்சி பேதம் இல்லாமல் ஒட்டுமொத்த வன்னியர்களும் இத்தாக்குதலில் கலந்துகொண்டு முதலில் சாதி, அப்புறம்தான் கட்சி என்பதை நிலைநிறுத்தியுள்ளனர்” என்று இந்த சாதிவெறித் தாக்குதலில் மகஇக வையும் வேண்டுமென்றே சேர்த்து அவதூறு செய்திருக்கிறார் வன்னி அரசு.

அறிவு நாணயம் என்ற சொல்லை அவர் குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பாரேயானால், தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டும் மகஇக காரர்கள் யார் என்பதை சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையை பெருமகிழ்ச்சியோடு பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால் வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும்.

“நக்சல்பாரிகளுக்குப் பயந்து எங்ககிட்ட எந்த வம்புதும்பும் இல்லாம இருந்தாங்க. அந்தக்கட்சி காலப்போக்கில இல்லாமல் போனதும், இளவரசன் கல்யாணத்தை சாக்கா வெச்சு இப்படிப் பண்ணிட்டாங்க” – இது தருமபுரி தாக்குதல் பற்றி ஆனந்த விகடன் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் தாக்குதலுக்கு ஆளான அண்ணாநகரைச் சேர்ந்த வசந்தா என்ற பெண் கூறியிருக்கும் உண்மை. “நக்சல்பாரி இயக்கம் ஒடுக்கப்பட்டதனால்தான் சாதிய அமைப்புகள் தலையெடுத்திருக்கின்றன” என்று இச்சம்பவத்தை ஒட்டி பல பத்திரிகைகளும் எழுதியிருக்கின்றன.  இந்த உண்மைதான் வன்னி அரசுவை சுடுகிறது. அதனால்தான் அவர் பொய்களையும் அவதூறுகளையும் கடை விரிக்கிறார்..

இது தாழ்த்தப்பட்ட மக்கள் வாழப்பொறுக்காத காரணத்தால் வன்னிய சாதிவெறியர்கள் நடத்திய தாக்குதல் என்று வினவு கட்டுரையில் எழுதியிருந்தோம். வன்னி அரசு இந்த தாக்குதலுக்கு முற்றிலும் வேறு காரணத்தை கண்டுபிடித்திருக்கிறார். சேரிமக்கள் புரட்சிகரக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகத்தான் இந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார்களாம்.

நத்தம் காலனி மக்களுடன் நக்சல்பாரி இயக்க தோழர்கள் ஐக்கியப்பட்டிருந்ததும் அவர்கள் ஆதரவைப் பெற்றிருந்ததும் உண்மைதான். அண்ணா நகர் வசந்தாவின் கூற்றுப்படி பார்த்தால், “அதற்கு இதுதான் தண்டனை” என்ற வசனம் அன்றைக்கு தாக்குதல் நடத்திய வன்னிய சாதிவெறியர்கள் பேசவேண்டியது. அதே வசனத்தை வன்னி அரசு ஏன் பேசவேண்டும்?

ஏனென்றால், “நக்சல்பாரி கட்சியில் சேராதீர்கள்” என்று வன்னி அரசுகள் தொடர்ந்து கதறினாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் அதை காதில் வாங்குவதில்லை. நக்சல்பாரிகள்தான் உழைக்கும் மக்களின் நண்பர்கள், உண்மையான சாதி எதிர்ப்பாளர்கள் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பதால் அவர்கள் புரட்சியாளர்களை நம்புகிறார்கள். நக்சல்பாரி இயக்கத்தில் திரள்கிறார்கள். பிறப்பால் தலித்தாகவே இருந்தாலும், பிழைப்புவாதிகளை நிராகரிக்கிறார்கள். இந்த வயிற்றெரிச்சலும், கம்யூனிச எதிர்ப்பு வெறியும்தான் வன்னி அரசுவை இப்படிப் பேசவைக்கிறது. மகஇக வுக்கு எதிராகப் புளுக வைக்கிறது.

வாய்க்கு வந்தபடி பேசுவதற்கும், “என்னயத் தடுக்காதீங்க” என்று சவுண்டு விடுவதற்கும், “உஸ்” என்று அடக்கினால் மறுகணமே மான வெக்கம் பாக்காமல் காலில் விழுவதற்கும் தயாராக இருக்கும் நபர்கள்தானே ஓட்டுக் கட்சிகளில் கைத்தடிகளாக வளர முடியும்?

“சாதிவெறியோடு தமது சமுதாயத்தைத் திருடர்களாக, கொள்ளையர்களாக மாற்றிய மகத்தான சாதனையைச் செய்துவரும் மருத்துவர் ராமதாஸ் இனிமேல் தமிழ்ச் சமூகம் என்றோ தமிழ்த் தேசியம் என்றோ பேச அருகதை உண்டா?” என்று அந்தக் கட்டுரையில் பயங்கரமாக சவுண்டு விடுகிறார், வன்னி அரசு. இது நவம்பர் 16 ஆம் தேதி.

அடுத்து வெளிவருகிறது தலைவர் திருமாவின் அறிக்கை.

“தருமபுரி அருகே நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களுக்கு பா.ம.க-வும் வன்னியர் சங்கமும் காரணம் இல்லை என்று பா.ம.க நிறுவனர் இராமாதாசு அவர்கள் வெளிப்படையாக அறவித்துள்ளதை நல்லெண்ணம் மற்றும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் சமூக பொறுப்புணர்வோடு வரவேற்க கடமைப்பட்டிருக்கிறது”. ..

“மறுபடியும் மறுபடியும் குற்றம் சாட்டுவது விடுதலைச் சிறுத்தைகளின் நோக்கமல்ல. ஒருதாய்; மக்கள் மாநாடுகள், சமூக நல்லிணக்க மாநாடுகள,; புரட்சியாளர் அம்பேத்கர் சிலைகள் ;திறப்பு, மற்றும் பா.ம.க-வில் தலித்துகளுக்கு அதிகாரம் வாய்ந்த கட்சி பொறுப்புகள் அளித்தல் போன்ற பாராட்டுதலுக்குரிய பல்வேறு களப்பணிகளை நடைமுறையில் செய்துகாட்டியிருக்கிற பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில்தான் இதனை விடுதலைச் சிறுத்தைகள் உரிமையோடு சுட்டிக்காட்டுகிறது”.

“கடந்த 16.11.2012 அன்று செய்தியாளர்களை சந்தித்தபோது விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க நிறுவனருக்கு வெளிப்படையான வேண்டுகோள் விடுத்தது. அதாவது மொழி, இனம் ஆகியவற்றின் நலன்களுக்காக, தமிழீழ விடுதலைக்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக, கடந்த காலங்களில் பா.ம.கவும் விடுதலைச் சிறுத்தைகளும் தொலைநோக்குப் பார்வையோடு கைகோர்த்து களமாடியதைபோல, தற்போதைய நெருக்கடியான இச்சூழலில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் மீண்டும் பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் கைகோர்ப்போம் வாருங்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறைகூவல் விடுத்துள்ளது.”… (நவ, 18, பெரியார்தளம்)

இவையெல்லாம் அந்த அறிக்கையில் காணப்படும் வாசகங்களில் சில.

வன்னி அரசுவால் வசை பாடப்படும் மகஇக, மருத்துவர் ராமதாசுக்கு குடிதாங்கி, இடிதாங்கி போன்ற பட்டங்களை வழங்கவில்லை. மாறாக, அம்பேத்கர் பெரியார் மார்க்ஸ் படங்களைப் போட்டு அவர் கம்பெனியை தொடங்கிய நாள் முதலாகவே அம்பலப்படுத்தி வருகிறது.

ஆனால், இன்று நத்தம் காலனியை எரித்து சாம்பலாக்கிய பிறகும், தலித் இளைஞர்கள் ஆதிக்க சாதி பெண்களை காதல் வலையில் வீழ்த்தி கைவிடுவதாக குற்றம் சாட்டி, எல்லா சாதிவெறியர்களுக்கும் ராமதாசு கொம்புசீவி விட்ட பின்னரும், “பாட்டாளி மக்கள் கட்சி என்பது அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் கொள்கைகளை உள்வாங்கி செயல்படும் இயக்கம் என்று நம்புவதாக” அந்த அறிக்கையில் தோழமையோடு திருமா கூறியிருக்கிறார்.

“இன்னுமாடா ஊர்ல நம்மள நம்புறாய்ங்க?” ன்னு பெரியய்யா காடுவெட்டியிடம் கேட்டிருப்பாரோ?

இப்படியாக, வன்னி அரசுவின் 16 ஆம் தேதி கட்டுரைத் தலைப்பில் குற்றவாளிகளாக காட்டப்பட்டிருந்த பாமக சாதிவெறியர்கள், 18 ஆம் தேதி நிரபராதிகள் என்று  விடுவிக்கப்பட்டு விட்டார்கள். இனி வன்னி அரசுவின் கட்டுரையில் மிச்சமிருக்கும் குற்றவாளிகள் நக்சல்பாரி புரட்சியாளர்கள்தான். “வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் பாட்டாளி சொந்தங்களை விடுதலை செய்! நக்சல்பாரி புரட்சியாளர்களை கைது செய்!” என்று வன்னி அரசு சவுண்டு விட்டால், நல்லெண்ணத்துடன் கை கோர்ப்பதற்கு மருத்துவர் ஐயா உடனே முன்வந்து விடுவார்.

இதையே கொஞ்சம் ஜாடையாக சொல்லியிருக்கிறார் வன்னி அரசு. “இன்று நாயக்கன்கொட்டாய் முகப்பில் தோழர்கள் அப்புவும் பாலனும் மட்டுமே உடைபடாமல் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களுக்குச் சிலை வைத்த மக்களோ வீடின்றி வாசலின்றித் தவிக்கின்றனர்”  என்று தனது கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருவேளை வால்டர் தேவாரம் இதைப் படிக்க நேர்ந்தால், புல்லரித்திருப்பார். “இப்படி ஒரு கைத்தடி 80 களில் நமக்கு வாய்க்கவில்லையே” என்று வருந்தி, இடிப்பதற்கு 2 கடப்பாரைகளையும் பாதுகாப்புக்கு பத்து போலீசாரையும் அனுப்பி வைத்திருப்பார்.

பிராபகர் கைரே: 500 கோடி ரூபாய்த் திருடன்!

2
பிரபாகர் கைரே
பிரபாகர் கைரே

தினோறாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த நாக்பூரின் பிரபாகர் கைரே தற்போது ரூ.500 கோடிக்கு அதிபதி. அவரிடம் ஏமாந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சம். ஸ்டாக் குரு இந்தியா என்ற பெயரில் டெல்லியில் இவர்கள் துவங்கிய கம்பெனியில் ரூ.10 ஆயிரம் முதல் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் நீங்கள் போட்ட முதலில் 20 சதவீதம் திரும்ப வரும். 7 வது மாதத்தில் முழுத் தொகையையும் தந்து விடுவார்கள். இதனால் கவரப்பட்ட நடுத்தர வர்க்க சாதாரண மக்கள் பலரும் இவரது நிறுவனத்தில் முதலீடு செய்தனர். போதுமான பணம் திரண்டவுடன் கம்பி நீட்டிய இத்தம்பதியினரை டெல்லி காவல்துறையின் நிதி மோசடியை விசாரிக்கும் குழு மராட்டிய மாநிலம் ரத்னகிரி பகுதியில் கைது செய்துள்ளது. ரூ.63 கோடி ரூபாய் வரையிலான பணம், சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன•

பாடிகாட், செல்ஃபோன், விலை உயர்ந்த கார்கள், நுனி நாக்கு ஆங்கிலம் என வலம் வந்த பிரபாகர் கைரே நாக்பூரை சேர்ந்தவர். படிப்பை பாதியில் விட்ட இவர் நண்பருடன் சேர்ந்து கட்டுமானத் தொழிலில் இறங்குகிறார். அங்கு மோசடியில் ஈடுபடவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படுகிறார். 2004 இல் நாக்பூரை விட்டு இதற்காக வெளியேறிய அவர் அதன் பிறகு அங்கே திரும்பிப் போகவேயில்லை. புனே சென்று அங்கு கால் சென்டரில் ஓராண்டு பணியாற்றி விட்டு பெங்களூரு வருகிறார். அங்கு ஒரு நிதி நிறுவனத்தில் வேலைக்கு சேருகிறார். மைசூரிலிருந்து வந்து அங்கே வேலை பார்த்த ரக்சா அர்ஸை திருமணம் செய்து கொள்கிறார்.

இத்தம்பதியினர் லக்னோவுக்கு ரோகித் கத்ரி, கஞ்சன் கத்ரி என்ற பெயரில் குடிபெயர்கின்றனர். 2006 இல் அகமதாபாத்துக்கு டாக்டர் ராஜ் சவேரி, ப்ரியா சவேரி என்ற பெயரில் செல்லும் அவர்கள் பின்னர் புவனேஸ்வர், ராய்ப்பூர் என இடம் மாற்றிக் கொண்டே இருந்தனர். இப்படி மாறும் ஊர்களில் எல்லாம் எதாவது ஒரு மோசடியை நடத்திக் கொண்டே சென்றனர். இதில் போலிப் பெயரில் வாங்கப்பட்ட கிரடிட் கார்டுகளும் அடக்கம். கிரடிட் கார்டில் இருக்கும் பணத்திற்கு பொருளை வாங்கிய பிறகு அந்த ஊரைக் காலி செய்து விடுவர்.

இடையில் 2009 இல் டெஹ்ராடூனுக்கு வந்த இவர்கள் அங்கு பிசியோதெராபி கல்லூரி ஒன்றையும் நிறுவினர். டாக்டர் ராகேஷ் குமார் மகேஷ்வரி மற்றும் பிராச்சி மகேஷ்வரி என்ற பெயரிலிருந்த அவர்களே மாணவர்களுக்கு பயிற்சியும் அளித்தனர். ஏராளமாக பீஸ் வாங்கியதோடு மட்டுமின்றி டெலிபோன் பில், ப்ளஸ் டூ மார்க் சீட் எல்லாம் கொடுக்க சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தினார் பிரபாகர் கைரே. அதில் ஒரு மாணவரான லோகேஷ்வர் தேவின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி பாஸ்போர்ட் ஒன்றையும் பெற்றுள்ளார். அம்மாணவரது பெயரால்தான் ஸ்டாக் குரு இந்தியா கம்பெனியினை பதிவுசெய்து நடத்தியிருக்கிறார்.

லோகேஷ்வர் தேவ் மற்றும் ப்ரியங்கா சரஸ்வத் தேவ் என்ற பெயரில் டெல்லி மோதி நகரில் டிசம்பர் 2009 இல் அலுவலகத்தை துவங்குகிறார்கள். முதலில் செய்தித் தாள்களில் பங்கு வர்த்தகம் பற்றிய ஆலோசனை தருவதாக விளம்பரம் செய்ய ஆரம்பித்த இவர்கள் படிப்படியாக ஸ்டாக் குரு இந்தியாவின் ஸ்கீமை அறிவித்து மக்களை மொட்டையடித்து விட்டார்கள்.

இவர்களை கைது செய்த போது 15 ஆடம்பர கார்கள் கைப்பற்றப்பட்டன• டெல்லி, கோவா, ராஜஸ்தான், மொராதாபாத், நாக்பூர், ரத்னகிரி ஆகிய இடங்களிலுள்ள சொத்துக்கள் மற்றும் வங்கி அக்கவுண்டுகளை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். சுமார் 7 நிதி நிறுவனங்களை நடத்தி வந்துள்ள இவர்கள் மீது 25 வழக்குகள் நாடு முழுதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் தங்களது கல்வித் தகுதி மற்றும் படித்த நிறுவனங்களைப் பற்றி பக்காவாக உயர்த்தி சொல்லி வாடிக்கையாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

நாட்டின் 20 வங்கிகளில் 94 அக்கவுண்டுகளை துவங்கியுள்ள இருவரும் அதற்காக ஒரே புகைப்படத்தையே தந்து விட்டு, விபரங்களை மாத்திரம் மாற்றி பதிவுசெய்துள்ளனர். தற்போது இவர்கள் கைது செய்யப்பட்ட பிறகும் இவர்களுக்கு உடந்தையாக ஏதேனும் வங்கி அலுவலர்கள் இருந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. முன்னர் சென்னையில் கால் டாக்சி வாங்கி விட்டால் மாதம் பதினைந்தாயிரம் வருமானம் என்ற பெயரில் ஒரு மோசடி நடந்தது. மாதச் சம்பள காரர்களைக் குறிவைத்து நடந்த இந்த மோசடி போலவே இந்தியா முழுக்க ஏழு மாதத்தில் இரட்டிப்பு பணம் என்பதற்காக நடுத்தர சாதாரண மக்கள் ஏமாந்துள்ளனர். இந்த ஆவலை சரியாக பயன்படுத்தி உள்ளார் பிரபாகர் கைரே.

மாத வருமானத்தின் சேமிப்பை இப்படி அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு தனியார் மோசடி நிறுவனங்களில் இழப்பது நாடெங்கும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஈமு கோழியாக இருப்பது வடக்கே டபுள் வட்டி என்பதாக மாறியிருக்கிறது. இத்தகைய மோசடி பேர்வழிகள் வங்கி, போலீஸ், ஏனைய அதிகார வர்க்கத்தின் ஆசியுடனே தமது திருட்டுத் தொழிலை நடத்துகின்றனர். சினிமா நட்சத்திரங்களின் விளம்பரங்களை வைத்தும் மக்களை ஏமாற்றுவது நடக்கிறது. இப்படியாக இந்த மோசடித் தொழில் வலைப்பின்னலில் பலரும் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே பரபரப்பான பத்திரிகை செய்தியினைத் தாண்டி இக்குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பதோடு பறிகொடுத்த பணமும் மக்களுக்கு திரும்பக் கிடைப்பதில்லை.

என்ன பிடுங்குகின்றன போலீசும் உளவுத்துறையும்?

30

போலீஸ்-உளவுத்துறை

சென்னை சீயோன் பள்ளிப் பேருந்திலிருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி சுருதி கொல்லப்பட்ட கொடுமைக்கு எதிராக உழைக்கும் மக்கள் குமுறி எழுந்ததும், துறைசார்ந்த அதிகாரிகளும் போலீசும் உளவுத்துறையும் நீதித்துறையும் அவசரமாக நடவடிக்கைகளை எடுப்பதாகக் காட்டின. விருதுநகர் முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த கோர விபத்தில் 39 தொழிலாளர்கள் பலியாகிப் போன கொடூரத்தைத் தொடர்ந்து, இந்த ஆலையின் முதலாளியைக் கைது  செய்து, முறைகேடுகளை விசாரிப்பதாக அதிகாரிகளும் போலீசும் பரபரப்பூட்டினர். இப்படி எங்காவது கொலைகள் விபத்துகள், மோசடிகள் நடந்தால்தான், மக்களுக்குப் பெருத்த பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான், அங்கே அதிகார வர்க்கமும், போலீசும் முதற்கட்ட விசாரணையைத் தொடங்குகின்றன.

ஆனால், சிவில் நிர்வாகம் மற்றும் போலீசுத்துறையின் கடமையே இத்தகைய முறைகேடுகளையும் மோசடிகளையும் கொள்ளையையும் கண்டறிந்து தடுப்பதுதான். சிவில் நிர்வாகத்தில் கண்காணிப்புத் துறையும், போலீசில் உளவுத்துறையும் இந்த நோக்கத்துக்காகவே உருவாக்கப் பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கடமையை அறவே தட்டிக்கழித்துவிட்டு கண்ணுக்குத் தெரியும்படியான பாதிப்புகள் ஏற்பட்ட பின்னர்தான், மோசடிகள்-முறைகேடுகள் அம்பலமான பின்னர்தான், தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டவனைப் போல  அதிகார வர்க்கமும் போலீசும் நடவடிக்கைகள் எடுப்பதாகப் பரபரப்பூட்டுகின்றன.

போலீஸ்-உளவுத்துறை
கோடிகோடியாய் மோசடி: பணத்தைப் பறிகொடுத்தவர்கள் சுசி ஈமு கோழிப்பண்ணை நிறுவனத்தை முற்றுகையிட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதாக நாடகமாடும் போலீசு

ஈரோடு மாவட்டத்தில் ஈமு பண்ணையாளர்கள் சிறுவீத முதலீட்டாளர்களை மோசடி செது ஏறத்தாழ ரூ.300 கோடி அளவுக்கு சுருட்டும்வரை காத்திருந்து விட்டு, இப்போது ஏதோ அதிரடியாக நடவடிக்கை எடுப்பதைப் போல காட்டுகிறது தமிழக போலீசு. ஈமு கோழிப்பண்ணைத் திட்டம் என்பதே மோசடியானது என்று போலீசின் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்குத் தெரியாதா? போர்டு போட்டுக் கொண்டு பட்டப்பகலில் பகிரங்கமாக இக்கொள்ளை நடந்துவந்த போதிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான சிவில் நிர்வாகமும் போலீசும் உளவுத்துறையும் கண்டு கொள்ளாதது ஏன்? யாரும் புகார் கொடுக்காத போதிலும், சில்லறை வியாபாரிகள் தெருவில் கடை போடுவதை சரியாகக் கணக்கு வைத்துக் கொண்டு மாமூல் வசூலிக்கும் போலீசு, மோசடிப் பண்ணைகள் குறித்து புகார்கள் வராததால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல் போனதாகக் கதையளக்கிறது.

திருப்பூர், அவிநாசி சாலையில், பாசி போரெக்ஸ் டிரேடிங்” எனும் நிதி நிறுவனம், முதலீடுகளுக்கு கூடுதல் போனசும் வட்டியும் தருவதாக ஏமாற்றி ஆயிரம் கோடிக்கு மேல் வாரிச் சுருட்டியுள்ளது. தோற்றத்திலேயே மோசடி என்று அறிந்திருந்த போதிலும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இத்தனை காலமும் ஆதாயமடைந்து விட்டு, இப்போது இந்நிறுவனத்துக்கு போலீசார் சீல் வைத்து திடீரென சூரத்தனம் காட்டுகின்றர். இம்மோசடி நிதிநிறுவன இயக்குநர்களில் ஒருவரான கமலவள்ளியைக் கடத்தியதோடு, இதர இயக்குனர்களை மிரட்டி 3 கோடி ரூபா வரை பணம் பறித்த கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத்குமார், டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ், சண்முகையா ஆகிய போலீசு அதிகாரிகள் கைதாகினர். ஆனாலும், இக்குற்றவாளிகளைத் தண்டிக்காமல் வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது போலீசு. முன்பு பயந்து நடுங்கிக் கொண்டிருந்த இந்நிறுவனத்தின்  இயக்குநர்கள் இப்போது போலீசு அதிகாரிகளிடம் சிரித்துப் பேசிக் குலாவுவதாகப் பார்ப்பன தினமலரே கிசுகிசு செதியாக எழுதுகிறது. இந்நிதி நிறுவனத்தின் மோசடிக்கு எதிராக போலீசு தனது சூரத்தனத்தைக் காட்டிக் கொண்டிருக்கும்போதே, சென்னை-கொளத்தூரில் அப்ரோ நிறுவனத்தின் இயக்குனராக அறிவித்துக் கொண்ட யேசுதாஸ் என்பவன் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் தருவதாக கோடிக்கணக்கில் நடத்திய மோசடி அம்பலமானது.

எல்லாவற்றுக்கும் மேலாக, மலைகளையே விழுங்கிய கிரானைட் கொள்ளை நீண்டகாலமாக நடந்துவந்துள்ள போதிலும், அக்கொள்ளையர்களின் சம்பளப் பட்டியலில் இருந்துவந்த போலீசும் சிவில் நிர்வாகமும் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. கிரானைட் கொள்ளை பற்றி முந்தைய மாவட்ட ஆட்சியர் சகாயம்தான் வெளிப்படுத்தினார். அவருக்கு முன் பணியாற்றிய ஆட்சியர்களும் அதிகாரிகளும் என்னதான் செய்து கொண்டிருந்தார்கள்? போலீசும் உளவுத்துறையும் சிவில் நிர்வாகமும் இத்தனை காலமும் எதைப் புடுங்கிக் கொண்டிருந்தது? தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வருவாத்துறை அதிகாரிகள் முதல் கிராம அதிகாரி வரை அனைவருமே ரியல் எஸ்டேட் மாஃபியாக்களின் அல்லக்கைகளாகவே இருப்பது அம்பலமாகியுள்ள போதிலும், உளவுத்துறை இன்னமும் எதை நோண்டிக் கொண்டிருக்கிறது?

போலீஸ்-உளவுத்துறை
முறைகேடுகளைத் தடுக்காமல் ஆதாயமடைந்த போலீசு மற்றும் சிவில் நிர்வாகத்தின் அலட்சியம்: 39 பேரை பலிகொண்டு பலரைப் படுகாயப்படுத்திய முதலிப்பட்டி பட்டாசு ஆலை விபத்தின் கோரம்

விருதுநகர் – முதலிப்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த கோரவிபத்தில் 39 பேர் பலியாகிப் போனார்களே,  வெடிபொருள் கட்டுப்பாடு அதிகாரிகள், வருவாதுறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், போலீசு, தீயணைப்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த ஆலையின் முறைகேடுகளுக்கு எதிராக இத்தனை காலமும் என்னதான் செது கொண்டிருந்தார்கள்? தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணம் வரன்முறைப்படுத்தப்பட்ட பின்னரும், அதை ஏற்க மறுத்து பகற்கொள்ளை நடத்தும் தனியார் பள்ளி முதலாளிகளைக் கைது செது தண்டிக்காமல் சிவில் நிர்வாகமும் போலீசும் உளவுத்துறையும் எதைக் கிழித்துக் கொண்டிருக்கிறது? கடந்த ஆட்சியில் ஆற்றுப் படுகைகளில் நடந்து வந்த மணற்கொள்ளை இப்போது குளம், ஏரி, கண்மாய் – என விரிவடைந்துவிட்ட போதிலும் மணற்கொள்ளை மாஃபியாக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிவில் நிர்வாகமும் போலீசும் என்னதான் செய்கிறது?

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடனேயே, நிர்வாகத்திலும் போலீசுத் துறையிலும் அரசியல் தலையீடு இருக்காது; அத்துறைகள் சுதந்திரமாகச் செயல்படும்” என்று பார்ப்பன பத்திரிகைகள் பிரமையூட்டின. ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார் என்றவுடனேயே போலீசுத் துறை தானாகவே மும்முரத்துடன் செயல்படத் தொடங்கிவிட்டது” என்று புளுகினார் துக்ளக் சோ. ஆனால், பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவின் ஆட்சியைத் தமது சோந்த ஆட்சியாகவே கருதிக்கொண்டு கேள்விமுறையின்றிக் கொட்டமடிக்கிறது போலீசு.

தனது கடமைகளை – குற்றங்கள், மோசடிகள், சமூக விரோதச் செயல்கள், முறைகேடுகளைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கைக் காப்பது – எனத் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள அன்றாடப் பணிகளைக்கூடச் செயாமல் அலட்சியம் காட்டுவதோடு, அப்பாவி மக்கள் மீது தமிழக போலீசு பாய்ந்து குதறிக் கொண்டிருக்கிறது. கண்ணெதிரே நடக்கும் பகற்கொள்ளையைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, கொள்ளையர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஆதாயமடைவது, கொள்ளையும் மோசடியும் அம்பலப்படும்போது, ஏதோ இப்போதுதான் தெரியவந்ததாகக் காட்டிக்கொண்டு அதில் சூரத்தனம் காட்டுவது, பின்னர் வழக்குகளை நீர்த்துப் போகச் செவது, பிற மாநிலங்களுக்குக் குற்றவாளியைத் தேடிச் செல்வதாகக் கணக்குக் காட்டி இன்பச் சுற்றுலா சென்று வருவது, மறுபுறம் சாதாரண சிறு குற்றங்களை பூதாகரமானதாக்கி, அதில் குற்றவாளிகளைப் பிடித்து விட்டதாக  ஊடகங்களில் விளம்பரப்படுத்திக் கொள்வது என்பதாகவே அதன் செயல்பாடுகள் உள்ளன.

தமிழகப் போலீசின் உளவுத்துறையானது எதிர்க்கட்சியினரை உளவுபார்த்து, அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் வேலையையும், ஆளுங்கட்சியின் அமைச்சர்களையும் பிரமுகர்களையும் உளவுபார்த்து மேலிடத்துக்குத் தகவல் சோல்வதையும்தான் முக்கியமாகச் செய்து கொண்டிருக்கிறது. இதுதான் அதற்கு ஒதுக்கப்பட்ட வேலையா? ஜெயா – சசியின் ஊடல்-கூடல் நாடகங்களில் போலீசு உளவுத்துறை கேடாகப் பயன்படுத்தப்பட்டதோடு, சசிகலா உறவினர்களிடமிருந்து இலஞ்ச -ஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் குவிக்கப்பட்ட சொத்துகள்-செல்வங்களைக் கைப்பற்றுவதற்காகவும், அவர்களுடன் கட்சிக்காரர்கள்  கொண்டுள்ள இரகசிய உறவுகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் பயன்படுத்தப்பட்டது.

இந்த நாடகத்தில், நடராஜன்(சசிகலா) மீது புகார் கொடுக்கப்பட்டதாகக் கூறி, பின்னர் அப்புகார்கள் திரும்பப் பெறப்பட்டன. புகார் கொடுத்தவர்கள் யார்? அந்தப் புகார் உண்மையானதா, இல்லையா என்று போலீசு முதல்நிலை விசாரணைகூட நடத்தவில்லை. ராவணன், திவாகரன், மிடாஸ் மோகன், நடராஜன் என்று பல புள்ளிகளின் மீது பாந்த வழக்குகள், சசிகலா மறுவீடு நுழைந்ததும் அப்படியே படுத்துக் கொண்டு விட்டன. எதற்காக இந்த வழக்குகள் பதியப்பட்டன, ஏன் இப்போது மந்தகதியில் உள்ளன என்பதெல்லாம் ஜெயலலிதாவுக்கும் உளவுத்துறைக்குமே வெளிச்சம்.

ஆளும் பாசிச ஜெயா கும்பலின் விசுவாச ஏவல்நாயாக இருப்பதோடு, கண்ணெதிரே கொள்ளையும் மோசடிகளும் நடந்த போதிலும் கண்டுகொள்ளாத போலீசும் உளவுத்துறையும், தாங்கள் துடிப்பாக செயல்படுவதாகக் காட்டிக் கொள்வதற்காக அவ்வப்போது பயங்கரவாதப் பீதியூட்டி ஒடுக்கும் வேலையை மட்டும் முறையாகச் செதுவருகிறது.

போலீஸ்-உளவுத்துறை
துடிப்பாகச் செயல்படுவதாக காட்டிக்கொள்ள போலீசு கிளப்பிய பயங்கரவாதப் பீதி : சென்னை-குன்றத்தூரில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளாகச் சித்தரித்துக் கைது செய்யப்பட்ட மக்கள் குடியரசுக் கட்சியினர்

இணையத்தைத் திறந்தால் குன்னூர் இராணுவக் கல்லூரி மற்றும் அணு மின் நிலையங்களின் படங்கள்  எளிதாகக் கிடைக்கும் நிலையில், அவற்றைப் புகைப்படம் எடுத்து பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு இந்திய இராணுவ இரகசியங்களைக் கடத்த முயன்றதாகக்கூறி, வெங்காய வியாபாரியான தமீம் அன்சாரி என்ற இளைஞரை, கடந்த செப்டம்பர் 16 அன்று திருச்சி விமான நிலையத்தில் கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர். முஸ்லிம்கள் நாட்டுப்பற்றில்லாதவர்கள், பாகிஸ்தானின் கைக்கூலிகள், தீவிரவாதிகள் என்றெல்லாம் மக்களின் பொதுப்புத்தியில் திணிக்கப்பட்டிருப்பதால், ஒரே நாளில் தமீம் அன்சாரியைத் தீவிரவாதியாக்கி விட்டது தமிழக போலீசு.

கடந்த அக்டோபர் மாதத்தில், வழக்குரைஞர்களும் கல்வியாளர்களும் மாணவர்களும் கொண்ட உண்மையறியும் குழுவினர் 11 பேர்  கூடங்குளத்துக்குச் சென்றபோது, மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டி போலீசு கைது செய்ததோடு, அவர்களைத் தீவிரவாதிகளாகவும் சதிகாரர்களாகவும் அவதூறு செய்தது. இதேபோல, கடந்த மாதத்தில் சென்னை புறநகர்ப் பகுதியான குன்றத்தூரிலுள்ள ஒரு பள்ளியில் கூடி விவாதித்துக் கொண்டிருந்த மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 13 பேர் கியூ பிரிவு போலீசாரால் கைது செயப்பட்டனர். முன்பு மாவோயிஸ்டு கட்சியில் இருந்த அவர்கள், அதிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பே விலகிவிட்டதாக வெளிப்படையாக அறிவித்துள்ள போதிலும், அவர்களைப் பயங்கரவாதிகளாக போலீசும் ஊடகங்களும் அவதூறு செய்தன.

தமிழகத்தில் மின்வெட்டால் அவதிப்படும் உழைக்கும் மக்கள், மின்சாரம் கேட்டுப் போராடினால், மின்துறை அதிகாரிகள் வருவதில்லை, போலீசு வருகிறது. போராட்டத்தைச் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாகக் காட்டி,  தடியடி நடத்தி மக்களை விரட்டுகிறது. இதேபோல குடிநீர், துப்புரவு, கல்வி வியாபாரிகளின் பகற்கொள்ளை, மணற்கொள்ளை முதலானவற்றுக்கு எதிராக மக்கள் போராடினால், துறைசார்ந்த அதிகாரிகள் வருவதில்லை. போலீசுதான் வருகிறது.

சீயோன் பள்ளிப் பேருந்திலிருந்த ஓட்டையில் விழுந்து சிறுமி சுருதி கொல்லப்பட்டதைப் போல எங்காவது கொலைகள் விழுந்தால்தான் சிவில் நிர்வாகமும் போலீசும் நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக் கொள்கின்றனவே தவிர, மற்ற நேரங்களில் அவை வேறு எதையோ புடுங்கும் வேலைகளில் மூழ்கிக் கிடக்கின்றன. இதை மக்களுக்கு உணர்த்தவோ, போராடவோ ஓட்டுக்கட்சிகளும் தயாரில்லை. இதனால் மாஃபியாக்களும் கொள்ளையர்களும் கொட்டமடிப்பதும், அதிகாரவர்க்கமும் போலீசும் உளவுத்துறையும் இக்கொள்ளையர்களின் கூட்டாளிகளாகி விசுவாச சேவை செய்வதும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. இதுதான் பீற்றிக் கொள்ளப்படும் ஜெயலலிதா ஆட்சியின் நிர்வாகத் திறன்! தமிழக மக்களின் வெறுப்புக்கும் கோபத்துக்கும் ஆளாகியுள்ள இத்தகைய கேடுகெட்ட ஆட்சியை போலீசைக் கொண்டுதான் காத்துக் கொள்ள முடியும் என்பதால், தமிழக போலீசுக்கு தீனிக்கு மேல் தீனி போட்டு பங்களா நாய் போல வளர்த்து வருகிறது பாசிச ஜெயா கும்பல்.

________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
______________________________________________________

மண்ணை கவ்விய பிரஸ்பார்ம் முதலாளி!

7

புரட்சிகர தொழிற்சங்கமான ’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ தமிழக தொழிலாளர்கள் மத்தியில் மிக வேகமாக வளர்ந்து வரும் நக்சல்பாரி தொழிற்சங்கமாகும். தொழிலாளர்களின் இந்த சங்கத்தை கண்டு முதலாளி வர்க்கம் நடுங்கிச் சாகிறது. எனவே தான் டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற கார்ப்பரேட் பத்திரிக்கைகளின் மூலம் அவதூறு செய்திகளை வெளியிட்டு தொழிலாளர்களை பீதியூட்டுகிறது. ஆனாலும் தொழிலாளிகளை அணி திரட்டுவதிலும், முதலாளிகளுக்கு பாடம் புகட்டுவதிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது பு.ஜ.தொ.மு. அத்தகைய வெற்றிச் செய்தி ஒன்று இங்கே தரப்படுகிறது.

பிரஸ்பார்ம் முதலாளி

press-form-industriesசென்னை அம்பத்தூரில் இயங்கி வருகிறது ஃபிரஸ்பார்ம் நிறுவனம். இந்நிறுவனம் சிறியளவிலான ஹைட்ராலிக் இயந்திரங்களை (Hydraulic machines) தயாரிக்கிறது. இவற்றை இந்தியாவிற்கு உள்ளேயும் சப்ளை செய்கிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது வெறுமனே இயந்திரங்களை மட்டும் ஏற்றுமதி செய்யாமல் அவற்றை பொருத்தி அமைப்பதற்காக (installation) தொழில்நுட்ப அறிவும், அனுபவமும் கொண்ட தொழிலாளர்களையும் பாஸ்போர்ட் விசா எடுத்துக் கொடுத்து அனுப்பி வைக்கிறது. சட்டப்படி இவ்வாறு செய்வது தவறு. ஒரு தொழிலாளியை ஆலைக்குள் மட்டும் தான் வேலை வாங்க வேண்டும். இயந்திரங்களை நிறுவுவது போன்ற பணிகளுக்காகவே இருக்கும் பொறியாளர்களை தான் இது போன்ற வேலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் பொறியாளர்களை அனுப்பினால் கூடுதல் செலவாகும் என்பதால் ஆயிரம், இர‌ண்டாயிரத்தோடு செலவை முடிக்க தொழிலாளிகளை அனுப்பி வைக்கிறது நிர்வாகம். தொழிலாளிகளும் கூடுதல் வருமானத்திற்காக இந்த வேலையை மறுக்காமல் செய்கிறார்கள்.

இந்நிறுவனத்திலுள்ள மொத்த தொழிலாளிகளின் எண்ணிக்கை நூறு. இவர்களில் வெறும் முப்பத்தி எட்டு பேர் மட்டும் தான் நிரந்தரத் தொழிலாளிகள். இத்தொழிலாளர்களுக்கு நிறுவனம் வழங்கும் அதிகபட்ச மாத ஊதியமே எட்டாயிரம் ரூபாய் தான். ஆண்டுக்கு இருபது கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் இந்நிறுவனம் தொழிலாளிகளின் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்திக் கொண்டு அவர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சம்பாதிக்கும் நிறுவனம் மாத சம்பளமாக ஒரு தொழிலாளிக்கு தருவது வெறும் எட்டாயிரம் ரூபாய் ! நிரந்தரத் தொழிலாளிக்கே எட்டாயிரம் ரூபாய் தான் என்றால் தற்காலிகத் தொழிலாளிகளுக்கு என்ன கிடைக்கும் ? அதற்கும் கீழே எவ்வளவு இருக்கும் ?

புரட்சிகர தொழிற்சங்கத்தின் தேவை

தமது நியாயமான சம்பள உயர்வு கோரிக்கைகளை நிர்வாகத்திடம் முன்வைத்து அவை கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தான் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அனைவரும் சங்கமாக இணைய வேண்டியதன் அவசியத்தை உணர்கிறார்கள் தொழிலாளிகள். உடனே பு.ஜ.தொ.மு வை தொடர்புகொண்ட தொழிலாளர்கள் தங்களுடைய பிரச்சினைகளை கூறி தங்களுக்கு சங்கம் அமைக்க உதவுமாறு கோருகிறார்கள். உடனடியாக அதற்கான வேலைகள்  துவங்கி முப்பத்தி எட்டு நிரந்தரத் தொழிலாளர்களுடன் ஃபிரஸ்பார்ம் தொழிலாளர்களின் சங்கம் 2008-ம் ஆண்டு துவங்கப்பட்டது.

தொழிலாளர்களின் சங்கத்தை நிர்வாகம் ஏற்கவில்லை, அங்கீகரிக்கவில்லை என்பதுடன் ஆரம்பம் முதலே சங்கத்தை உடைக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது. தொழிலாளர்களின் முதல் கோரிக்கை ஊதிய உயர்வு. ஆயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு கேட்டனர். இந்நிறுவனத்தின் முதலாளி சற்று வித்தியாசமானவர். சினிமாவில் வரும் முதலாளிகளை போல என்று கூட சொல்லலாம். ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளிகளிடம் முதலாளி கூறினார். “இப்போ தான் பத்து கோடி ரூபாய்க்கு ஒரு சின்ன குடிசை வாங்கியிருக்கேன் அதனால் சம்பளத்தை எல்லாம் இப்ப உயர்த்த முடியாது” (ஃபிரஸ்பார்ம் முதலாளி கூறிய அதே வார்த்தையை அப்படியே குறிப்பிடுகிறோம்)

சங்கம் அமைப்பது தொழிலாளர்களின் உரிமை, அதை அங்கீகரிப்பது தான் ஜனநாயகம். ஆனால் முதலாளிகள் ஜனநாயகவாதிகளா ? முதலாளித்துவ சர்வாதிகாரம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இது போன்ற நிறுவனங்களில் சங்கம் கட்ட முயற்சித்த தொழிலாளர்களை சந்தித்து பேசிப் பார்க்கலாம்.

தொழிலாளர் உதவி ஆணையரின் சமரசம்

பு.ஜ.தொ.மு சங்கத்தையும் அதன் நிர்வாகிகளையும் எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட துடித்தது நிர்வாகம். சங்கத்திற்கும் நிர்வாகத்திற்குமிடையிலான முரண்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வந்த  நிலையில் மேற்கொண்டு இப்பிரச்சினையை நிர்வாகத்தோடு பேசி தீர்க்க முடியாது என்கிற நிலையில் சங்கம் ‘தொழிலாளர் உதவி ஆணையர் – சமரசம் 2’ என்கிற அதிகாரியை (ACL – Assistant commissioner of labour – consultation 2)  அணுகி தொழிற்தாவா எழுப்புகின்றனர்.

தொ.உ.ஆ.ச 2 என்கிற இந்த அதிகாரியின் வேலை என்ன என்றால் நிர்வாகத்திற்கும் சங்கத்திற்கும், அதாவது தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை பேசி தீர்த்து வைப்பது தான் இவருடைய வேலை. இவருடைய பெயர் சமரச அதிகாரி.  அந்த வகையில் இவர் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்களை சமரசம் செய்பவர்.

தொழிற்தாவா எழுப்பிய பிறகு முதல் முறை பேச்சு வார்த்தைக்கு வரும் நிர்வாகத் தரப்பு அடுத்த ஒன்பது முறைக்கு வராது.  சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், பேச்சுவார்த்தையின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் முதலாளிகளின் தரப்பு தொடர்ச்சியாக பதினைந்து இருபது முறை கூட பேச்சுவார்த்தைக்கு வராமல் இழுத்தடித்திருக்கிறார்கள்.  ஆனால் தொழிலாளர்கள் அன்று பேச்சுவார்த்தை இருக்கிறது என்பதால் விடுமுறை எடுத்துக்கொண்டு தொ.உ.ஆணையர் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்.

முதலாளி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வராமல் இருக்கலாம் அதனால் அவனுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் ஒரு தொழிலாளிக்கு ஓர் ஆண்டுக்கு வெறும் எட்டு நாட்கள் மட்டுமே இலவச விடுமுறை நாட்களாக கிடைக்கின்றன. இதை அறிந்துள்ள முதலாளி வேண்டுமென்றே தான் தொழிலாளியை இவ்வாறு இழுத்தடிக்கிறான். தன்னை எதிர்த்து நிற்கும் தொழிலாளியை வெறுத்து ஓட வைக்கவே, சோர்வுற்று அவநம்பிக்கைக்குள் விழ வைப்பதற்காகவே முதலாளி இவ்வாறு செய்கிறான்.

ஆண்டு விடுமுறை நாட்களான எட்டு நாள் விடுமுறை முடிந்த பிறகு தொழிலாளி அடுத்ததாக தன்னுடைய அன்றாட கூலியை விட்டுக்கொடுத்து தான் முதலாளியோடு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும். அப்போதும் கூட அவர்கள் தரப்பில் சொன்னபடி வந்துவிடுவார்கள் என்றெல்லாம் உத்திரவாதமாக சொல்ல முடியாது. தொழிலாளியை இவ்வாறெல்லாம் இழுத்தடிப்பதன் மூலம் அவருடைய உறுதியை குலைத்து சோர்வடைய வைப்பதன் மூலமும் மற்றொரு பக்கம் சோரம் போகக்கூடியவர்களை விலைபேசி பணிய வைப்பதன் மூலமும் தன்னை எதிர்த்து போராடுவதையும், தொழிற்சங்கம் கட்டுவதையும் முறியத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் முதலாளிகள். ஆனால் பு.ஜ.தொ.மு விடம் இந்த வேலைகள் எல்லாம் செல்லுபடியாகவில்லை. அவர்களை பேச்சுவார்த்தைக்கு இழுத்தார்கள் தொழிலாளிகள். பேச்சு வார்த்தையின் இறுதியில் என்னால் பத்து பைசா கூட தர முடியாது  என்று கூறிவிட்டது நிர்வாகம். தொழிலாளிகளும் அதை ஏற்க மறுத்து விடாப்பிடியாக நின்றனர்.

உள்விசாரணை

அடுத்தக்கட்ட தாக்குதலாக சங்க நிர்வாகிகளான சசிக்குமார், பாபு, உதயக்குமார் உள்ளிட்ட ஐந்து தொழிலாளிகள் மீதும் சில பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களுக்கு  குற்ற அறிக்கை  (Charge sheet)  அனுப்பி உள் விசாரணைக்கு அழைக்கிறது நிர்வாகம். அமைதியாக இருந்த மற்ற தொழிலாளிகளை போராட தூண்டியதாகவும், அப்பாவி தொழிலாளிகளை கூட சங்க நிர்வாகிகள் தான் நிர்வாகத்திற்கெதிராக உணர்வூட்டி கலகம் செய்யவும், வன்முறையை தூண்டவும் காரணமாக இருந்தார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. இதற்காக தான் இந்த உள்விசாரணை.

இந்த விசாரணைக்கு ஒரு வயதான வழக்குரைஞர் தலைமை தாங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் எவ்வளவு ஜனநாயகப்பூர்வமாக செய்திருந்தது என்கிற கேலிக்கூத்தை கேட்டால் தான் விசாரணை எப்படி நடந்தது என்பதை அறிந்து கொள்ளாமலே அதன் லட்சணத்தை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.  நடு நிலையாக விசாரிக்க வேண்டிய விசாரணை அதிகாரி என்பவர் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்! நிர்வாகத்தால் விலைபேசப்பட்டு தனக்காக மட்டுமே வாயை திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தவர்.  எனினும் விசாரணையின் போது அவர் ஒரு முறை இரு முறை அல்ல பல முறை தொழிலாளிகளின் முன்பாகவே அம்பலப்பட்டுப் போனார்.

பாட்டாளி வர்க்க போராளி

நிர்வாகத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சசிக்குமார் தான் மிகப்பெரிய சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். தொழிலாளிகளை விசாரிக்க வந்த அதிகாரியை  பு.ஜ.தொ.மு தொழிலாளிகள், குறிப்பாக தோழர் சசிக்குமார் தான் திறமையான முறையில் குறுக்கு விசாரணை செய்து இந்த விசாரணை அமைப்பே மோசடியானது என்பதையும், அதற்கு விசாரணை அதிகாரியாக இருக்கும் கில்பர்ட் என்கிற இவர் நிர்வாகத்திற்கு ஆதாரவானவர் என்பதையும் உள்விசாரணையிலேயே அம்பலமாக்கினார்.

விசாரணை அதிகாரியையே அம்பலமாக்கிய பிறகும் அந்த விசாரணை அமைப்பிற்குள் நடக்கும் விசாரணை மிக மோசமானதாக தான் இருக்கும், அது தங்களை குறி வைத்து தாக்குவதாகவும், பழிவாங்குவதாகவும் தான் இருக்கும் என்பதை அறிந்த தொழிலாளிகள் உடனடியாக தங்களை பாதுகாக்கப்பட்ட தொழிலாளியாக அறிவிக்கக்கோரி தொ.உ.ஆணையரை அனுகினர்.

தொழிற்தகராறு சட்டம் 1947 தொழிலாளிகளின் பாதுகாப்பிற்கு ஒரு சிறிய வாய்ப்பை அளிக்கிறது. அந்த சட்டத்தின் பிரிவு 33ன் கீழ் சங்கம் துவங்கினால் பாதிக்கப்படுவோம், நிர்வாகத்தால் தண்டிக்கப்படுவோம், பழி தீர்க்கப்படுவோம் என்று தொழிலாளிகள் அஞ்சினால், ஆலைக்குள் அத்தகைய நிலைமை இருந்தால் தங்களை உடனடியாக பாதுகாக்கப்பட்ட தொழிலாளிகளாக (protected Workman) அறிவிக்க வேண்டும் என்று தொ.உ.ஆணையரிடம் (ACL) முறையிடலாம்.  அவர் அதை ஏற்றுக்கொண்டு இரு தரப்பிடமும் கருத்துகேட்டு சோதித்தறிந்து அத்தகைய நிலைமை இருந்தால் அந்த ஆலையின் தொழிலாளர்களை பாதுகாக்கப்பட்ட தொழிலாளிகளாக அறிவிப்பார்.

அந்த வகையில் சங்கத்தின் ஐந்து நிர்வாகிகளையும் பாதுகாக்கப்பட்ட தொழிலாளிகளாக அறிவிக்கக்கோரி தொ.உ.ஆணையரிடம் பு.ஜ.தொ.மு முறையிட்டது. அவரும் அவ்வாறே அறிவித்துவிட்டார். ஆக இப்போது இரண்டு வழக்குகள் நடக்கிறன ஒன்று சம்பள உயர்வுக்கான தொழிற்தாவா, இரண்டு பாதுகாக்கப்பட்ட தொழிலாளிகளாக அறிவிக்கப்பட்ட தொழிற்தாவா. இதற்கிடையில் நிர்வாகத்தின் உள்விசாரணையும் நடந்துகொண்டிருக்கிறது.

அதிரடியான வேலை நீக்கம்

நிர்வாகம் நடத்தும் உள்விசாரணையில் ஒரு தொழிலாளி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் (!) அவர் மீது எத்தகைய நடவடிக்கையையும் நிர்வாகம் எடுக்க முடியும், வேலையிலிருந்து கூட நீக்கலாம். அதற்கு சட்ட்த்தில் இடம் உள்ளது. ஆனால் அந்த தொழிலாளி பாதுகாக்கப்பட்ட தொழிலாளியாக அறிவிக்கப்பட்டிருந்தால் அவர் மீது எந்த நடவடிக்கையை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு முன்பாக அவர் இத்தகைய குற்றத்தை செய்திருக்கிறார், அதற்காக நாங்கள் அவரிடம் உள்விசாரணை நடத்தினோம் எங்களுடைய உள்விசாரணையில் அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர் மீது நாங்கள் இத்தகைய நடவடிக்கையை எடுக்கப் போகிறோம் அதற்கு உங்களுடைய அனுமதி வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தொ.உ.ஆணையரிடம் நிர்வாகம் முறையாக முன் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் எவ்வித முன் அனுமதியுமின்றி ஐந்து நிர்வாகிகளையும் 2008-ம் டிசம்பரில் நிரந்தரமாக வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டது நிர்வாகம்.

வேலை நீக்கம் தொழிலாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் உருவாக்கியது. இந்த நிலைமையை நிர்வாகம் சரியாக பயன்படுத்திக்கொண்டது. நிர்வாகம் தன்னுடைய கலைப்பு வேலையில் வெற்றி கண்டது. சங்கத்தை உடைக்க ஆரம்பம் முதலே முயற்சித்து வந்த நிர்வாகத்தின் சூழ்ச்சி இங்கே வென்றது. தொழிலாளிகள் மத்தியில் வேலை நீக்கம் வேலை நீக்கம் என்கிற பீதியையூட்டி பயமுறுத்தியது. அத்துடன் முதலாளி பெரிய கோடீஸ்வரன் கூலிக்கு வேலை செய்யும் நாம் அவனோடு போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்கிற அவநம்பிக்கையும் தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக தலைதூக்கியது. நிர்வாகத்தின் இழுத்தடிப்புகளாலும், உருட்டல் மிரட்டல்களாலும் போராட்டத்தில் வெற்றி தோல்வியை காணும் முன்பே தொழிலாளிகள் விரக்தியடைந்திருந்தனர். அனைவரும் சங்கத்தை விட்டு விலகத் துவங்கினர். அதில் சங்க நிர்வாகிகளும் அடக்கம். தலைமையிலிருந்த நிர்வாகிகளில் சசிக்குமாரை தவிர மற்ற நான்கு பேரும் நிர்வாகத்திடம் வெறும் ஐம்பதாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு சோரம் போய்விட்டனர். ஆனால் அந்த நிலையிலும் தோழர் சசிக்குமார் தன்னந்தனி ஆளாக உறுதி குலையாமல் நின்றார்.

வேலையிலிருந்து நீக்கப்பட்டதை அறிவிக்கும் கடிதம் சங்கத் தலைவர் சசிக்குமாருக்கு வந்தது. அதற்கு அவர் கீழ்கண்டவாறு பதில் கடிதம் எழுதினார். 1947 தொழிற்தகராறு சட்டத்தின் பிரிவு 33ன் படி பாதுகாக்கப்பட்ட தொழிலாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தொ.உ.ஆணையரிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி நீங்கள் அவ்வாறு நடந்துகொள்ளாததால் இந்த வேலை நீக்க அறிவிப்பு சட்டப்படி செல்லாதது என்று எழுதினார். உடனே சுதாரித்துக்கொண்ட நிர்வாகம் பின்னேற்பு அனுமதி வாங்க முயற்சித்து தொ.உ.ஆணையரை அனுகியது.

நிர்வாகத்தின் நடவடிக்கை தவறானது, சட்டவிரோதமானது என்பதால் பு.ஜ.தொ.மு அதை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்திற்கு செல்ல முயன்ற போது நான் பின்னேற்பு அனுமதிக்காக காத்திருக்கும் போது நீங்கள் அதற்கு மேல் உள்ள அமைப்பான கோர்ட்டுக்கு போக முடியாது என்று தடுத்து நிறுத்தியது. பிறகு தொ.உ.ஆணையரிடம் பின்னேற்பு அனுமதிக்கு மனு அளித்துவிட்டு அதை அத்தோடு விட்டுவிட்டார்கள். வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தான் இந்த பின்னேற்பு மனுவை போட்டனர். அடுத்த ஆறுமாதங்களுக்கு தான் போட்ட பின்னேற்பு அனுமதி மனு என்ன ஆனது ஏதானது என்று தெரிந்துகொள்ளக்கூட நிர்வாகம் தொ.உ.ஆணையரை நாடவில்லை.

பின்னேற்பு அனுமதி தள்ளுபடி

நிர்வாகம் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் அதை அனுமதிக்காமல் நிராகரிக்கவேண்டும் என்று கூறியது பு.ஜ.தொ.மு.  தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது சட்டவிரோதமானது, அந்நடவடிக்கையையும் தொ.உ.ஆணையரின் முன் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கையாகும். அடுத்ததாக தனது தவறான நடவடிக்கைக்கு பின்னேற்பு அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிர்வாகம் அந்த அனுமதி கோரும் மனுவை அளித்து ஆறு மாதங்களாகிறது தனது சொந்த மனுவுக்காக ஆஜராகி அனுமதி கூட கோரவில்லை. எனவே இவர்களுடைய நடவடிக்கைகள் தொழிலாளர்களை இழுக்கடித்து அலைக்கழிக்கும் தீய நோக்கம் கொண்ட்தாக இருக்கிறது என்று கருதுகிறோம் எனவே நிர்வாகத்தின் இந்த மனுவை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று பு.ஜ.தொ.மு தனது வாதத்தை முன்வைத்தது. தொ.உ.ஆணையர் உமாதேவி அதை ஏற்று நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்தார்.

தொழிலாளர் நீதிமன்றத்தில்

அடுத்ததாக வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்திற்குள் நுழைகிறது.  நிர்வாகத்தை பு.ஜ.தொ.மு தான் நீதிமன்றத்திற்குள் இழுத்துச்செல்கிறது. நிர்வாகம் இழுத்தடித்ததால் தொ.உ.ஆணையரிடம் நடந்த சமரச முயற்சியிலேயே ஓராண்டு கடந்துவிட்டது. தொ.நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது 2009-ம் ஆண்டு ஆகிவிட்டது. பாதுகாக்கப்பட்ட தொழிலாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களை வேலை நீக்கம் செய்தது தவறு என்று பு.ஜ.தொ.மு தனது வாதத்தை முன்வைத்தது. நிர்வாகம் அதற்கு பதில் மனு போடாமல் ஓராண்டாக இழுத்தடித்து பிறகு 2010-ல் தொ.உ.ஆணையர் எங்களுடைய பின்னேற்பு மனுவைப் பற்றி எங்களிடம் கேட்காமலே உத்தரவிட்டுவிட்டார் எனவே மீண்டும் தொ.உ.ஆனையரிடம் பின்னேற்பு மனுவிற்கு அனுமதி வாங்கி வர எங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஒரு அனுமதி கோரும் மனுவை போட்டார்கள். இதை அனுமதிக்கக்கூடாது என்று மறுத்தது பு.ஜ.தொ.மு. ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்..

நிர்வாகம் பின்னேற்பிற்காக சென்றிருந்த போது பழைய தொ.உ.ஆணையர் மாறி புதியவர் பதவிக்கு வந்திருக்கிறார். அவர் நிர்வாகத்தின் தரப்பில் நியாயம் இருந்தாலும் இங்கிருந்து நீதிமன்றத்திற்கு சென்ற ஒரு வழக்கில், முந்தைய தொ.உ.ஆணையர் தள்ளுபடி செய்த ஒரு வழக்கில் மறு தீர்ப்பளிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். அதில் மூன்று மாதங்களை இழுக்கடித்து அதன் பிறகும் தொ.நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை.

மனுவை ஏற்காமலே காறித்துப்பிய உயர்நீதிமன்றம்

அதன் பிறகு 2011 ஜனவரியில் பு.ஜ.தொ.மு வின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்துவிட்டு பிறகு வாய்தா வாய்தா என்று ஒரு ஏழெட்டு மாதங்கள் இழுக்கடித்துவிட்டு திடீரென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த ரிட்டில் நிர்வாகம் வைத்த வாதம். எமது தரப்பை தொ.உ.ஆணையர் நியாயமானது என்றும் ஆனால் தான் புதிதாக பதவிக்கு வந்ததால் தீர்ப்பளிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொ.உ.ஆணையரே எமது தரப்பு நியாயமானது என்று கூறியுள்ளதால் உயர்நீதிமன்றமும் எமது தரப்பை ஏற்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரினர்.

தலைமை நீதிபதி இக்பால் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கு ஏற்கப்பட்டு வரிசைப்படுத்தப்படும் இடத்திலேயே இந்த மனு நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது அத்துடன் நிர்வாகத்திற்கு ஒரு உத்தரவும் போடப்படுகிறது.

சசிக்குமார் வேலை நீக்கம் செய்யப்பட்ட 2008-ம் ஆண்டிலிருந்து இன்று வரை அவரை வேலையிலிருந்ததாக எடுத்துக்கொண்டு முழுமையான பின் சம்பளத்தையும், அனைத்து சலுகைகளையும் அவருக்கு வழங்க வேண்டும். அத்துடன் தொழிலாளர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நிர்வாகம் எத்தனை ஆண்டுகள் நடத்துகிறதோ அத்தனை ஆண்டுகளுக்கு தொழிலாளி சசிக்குமாருக்கு ஒவ்வொரு மாதமும் அவர் வேலையில் இருப்பதாக எடுத்துக் கொண்டு ஊதியம் அளிக்க வேண்டும். மேற்கொண்டு இந்த வழக்கை தொ. நீதிமன்றத்தில் நடத்திக்கொள்ளலாம் என்கிற உத்தரவுடன் நிர்வாகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இத்தீர்ப்பின்படி தோழர் சசிக்குமாருக்கு மொத்தமாக 1,39,400 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும் இந்த தீர்ப்பின் மூலம் வழக்கை இழுக்கடித்து தொழிலாளியை சோர்வுக்குள்ளாக்கும் நிர்வாகத்தின் இழுத்தடிப்பு வேலைகளுக்கும் ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டது. மேற்கொண்டு வழக்கு தொ. நீதிமன்றத்தில் நடக்கவிருக்கிறது.

இந்த வெற்றிச் செய்தியை தொழிலாளிகளாலும், தோல்வியை முதலாளியாலும் நம்ப முடியவில்லை. போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கிக்கொண்ட தொழிலாளிகள்  தற்போது கிடைத்துள்ள வெற்றிக்காக மகிழ்ச்சியடைகிறார்கள். தங்களுடைய செயலை எண்ணி குற்றவுணர்வும் கொள்கிறார்கள்.

தீர்ப்பு வந்த பிறகு ஆலையின் வாயிலருகே சென்ற தோழர் சசிக்குமார் தனது சக தொழிலாளிகளை சந்தித்து பேசினார். தொழிலாளிகள் சசிக்குமாரின் கைகளை பிடித்துக் கொண்டு தமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். அவர்களிடம் சசிக்குமார் கூறினார் நானும் இந்த ஆலையில் உங்களோடு ஒருவனாக வேலை செய்தேன் நாம் அனைவரும் சேர்ந்து தான் சங்கத்தை கட்டினோம். அந்த சங்கத்தில் நான் உங்களுக்கெல்லாம் தலைவனாக இருந்தேன். முதலாளிக்கு எதிரான போராட்டம் என்று வந்த போது நீங்கள் எல்லாம் அச்சத்தின் காரணமாக விலகிவிட்டீர்கள் நானோ இறுதி வரை உறுதியாக நின்றேன் இப்போது வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த வெற்றிக்கு என்னுடைய உறுதி மட்டும் காரணம் அல்ல எனக்கு வழிகாட்டிய ’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’யின் தோழர்கள் தான் காரணம். இனிவரும் காலத்திலும் நீங்கள் போராட வேண்டியிருக்கும் அப்போது இது போல பின்வாங்கிவிடாதீர்கள் தோழர்களே என்றார்.

சசிக்குமார் ஆலைக்கு வந்ததும் வழக்கில் வெற்றி பெற்ற செய்தியும் தொழிலாளிகள் மத்தியில் தீயாக பரவியது. நாம் தப்பு செய்துவிட்டோம், ஏமாந்துவிட்டோம், பயந்துபோய்விட்டோம் எனவே தான் தோற்றுவிட்டோம் நாம் மறுபடியும் சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற உணர்வும் உத்வேகமும் தற்போது ஃபிரஸ்பார்ம் தொழிலாளிகளிடம் நிரம்பி வழிகிறது.

சட்டம், நீதிமன்றம் போன்றவையே தொழிலாளிகளுக்கும், நாட்டிற்கும் விடுதலையையோ, நிவாரணத்தையோ வழங்கி விடாது. அது தொழிலாளர்களின் அரசியல் போராட்டத்திலேயே சாத்தியம். எனினும் இருக்கும் குறைந்த பட்ச சட்ட வாய்ப்புகளை முடிந்த அளவு பயன்படுத்திக் கொண்டு தொழிலாளிகளை அணிதிரட்டும் வேலையையும், அரசியல் படுத்தும் வேலையையும் செய்ய வேண்டும். இந்த தீர்ப்பை அப்படித்தான் பு.ஜ.தொ.மு கருதுகிறது.

சங்கம் கட்டினால் நீக்கம் என்று ஆட்டம் போட்ட இந்த முதலாளிக்கு தற்போது நீதிமன்றத்தின் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. ஃபிரஸ்பார்ம் தொழிலாளர் சங்கத்தின் சிவப்புக்கொடி அந்த ஆலையின் வாயிலில் நடப்படும் நாள் விரைவில் வரும். தொழிலாளிகளை ஒடுக்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் முதலாளிகளின் திமிரை ஒடுக்கும் நாளும் கூடவே வரும்.

___________________________________________

– வினவு செய்தியாளர்.
________________________________

துப்பாக்கி: துருப்பிடித்த மசாலா! கொழுப்பெடுத்த துவேசம்!!

29

“விஜய் படத்திற்கு விமரிசனமா” – அதிர்ச்சியுடன் கேட்டார் ஒரு தோழர். உண்மைதான். ஒரு ஸ்டூடியோ குத்துப்பாட்டு, ஃபாரின் மரங்களை சுற்றும் இரண்டு டூயட், ஐந்து ரம்பக் காமடி, காட்சிக்கொரு டமால்-டுமீல் பஞ்ச் டயலாக் என்று புளித்துப் போன பஞ்சாமிர்த ஃபார்முலாவில், கதை கானல் நீராக இருப்பதால் விமரிசனங்களுக்கு பெரிய தேவை இருப்பதில்லை. மக்களும் ஆட்டம், பாட்டம் என்று விறுவிறுப்புக்காக இத்தகைய படங்களை பார்த்து மறப்பதால் இது ஒரு பெரிய பிரச்சினையும் அல்ல.

நமக்கு பிரச்சினையில்லை என்றாலும் விஜய் படங்களின் தொடர் தோல்வி அவருடைய கம்பெனி இமேஜுக்கு பிரச்சினை இல்லையா? “நண்பன்” படத்திலிருந்து விஜய் வேறுவழியின்றி வித்தியாசமாக அதாவது அடங்கி ஒடுங்கி நடிக்க தள்ளப்பட்டாராம். “ஏழாம் அறிவி”ல் தமிழனது தொல்பெருமையை ரீல் பொங்க அவிழ்த்து விட்டாலும் வசூலில் கொஞ்சம் சொதப்பியதால் ஏ.ஆர். முருகதாஸுக்கும் ஒரு வெற்றி தேவைப்பட்டிருக்கிறது. சினிமா அழைப்பிதழையே உசிலம்பட்டி முதல் அமெரிக்கா வரை வாய் பிளக்குமளவுக்கு ‘புதுமையிலும், பிரம்மாண்டத்திலும்’ மலிவாக பொளந்து கொட்டும் கலைப்புலி தாணுவுக்கும் ஒரு வசூல் வெற்றி அவசியமிருந்தது. இப்படியாக மூவரும் தங்களது தொழில் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்காக பிரச்சினைக்குரிய இந்தப்படத்தை எடுத்து வெளியிட்டிருக்கின்றனர்.

***

லையின் அளவுக்கேற்பத்தான் தொப்பியைத் தேடுவார்கள். ஆனால் தமிழ் சினிமாவிலோ தொப்பியைச் செய்து விட்டு அதற்கேற்ப தலையை வெட்டுவார்கள். வசூலில் முன்னணி வகிக்கும் இயக்குநர்கள் நிச்சயமாக இந்த ரகம்தான். அப்படித்தான் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸும் ஒரு மசாலா கதையை உருவாக்கிவிட்டு அந்த ஃபார்முலாவிற்கேற்ப வாழ்க்கை, வரலாறு கதை, உணர்ச்சிகள் அத்தனையும் வெட்டி எறிந்திருக்கிறார்.

“ரமணா”வில் துவங்கி “துப்பாக்கி” வரை முருகதாஸின் படங்கள் அனைத்தும் தாங்க முடியாத அளவுக்கு தமிழ் மசாலா, அண்ணா ஹசாரே அட்வைஸ் கலந்த த்ரில்லர் வகைப் படங்களாக இருக்கும். இதையெல்லாம் விறுவிறுப்பு என்று கொண்டாடுமளவுக்கு தமிழ் பதிவுலகமும் மொக்கை ரசனையில் கொடிகட்டிப் பறக்கிறது. இந்தப்படத்தையே எடுத்துக் கொண்டால் இதை சினிமா என்ற முறையில் பார்ப்பதற்கு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதென பலரும் ரசித்து எழுதியிருக்கின்றனர். அப்படி என்ன ஈர்ப்பு இந்த படத்தில்?

குமுதம், விகடன்களில் ஒரு பக்க கதைகளை படித்திருக்கிறீர்களா? ஏதாவது ஒரு க(சொத்)தைக் களனில் ஓரிரு பாத்திரங்கள், ஒரு முரண்பாடு என்று ஆரம்பித்து படிப்பவர் ஊகிக்கும் தீர்வு போல வந்து பின்னர் அதற்கு நேரெதிராக முடிப்பது இவற்றின் கலை ரகசியம். இதையே ஏ.ஆர் முருகதாஸ் ஒவ்வொரு காட்சிக்கும் வைத்து தாளிக்கிறார். ஆரம்ப காட்சிகளில் ஓரிரு முறை ஈர்ப்பாக இருக்கும் இந்த தாளிப்பு பின்னர் தாளமுடியாத வதையாக இருக்கும். ஏனெனில் ஒவ்வொரு காட்சி வரும் போதும் தேர்ந்த ரசிகர்கள் அந்த முரண்பாடு அல்லது ட்விஸ்ட் எழவை ஊகிப்பார்கள். அல்லது இந்த முரண்பாடு என்ன குப்பையாகவோ இருந்து விட்டு போகட்டும் என்று விட்டு விடுவார்கள். கலையை ரசிப்பது இப்படியாக கணக்கு போட்டுப் பார்க்கும் மொக்கைப் புதிராக மாறுகிறது.

இராணுவத்தில் இருந்து விடுமுறையைக் கழிக்க மும்பைக்கு வரும் விஜய் தொடர் குண்டு வெடிக்க முனையும் இசுலாமிய ஜிகாதி தீவிரவாதிகளை அழித்து அவர்களது தலைமை வில்லனை துப்பறிந்து ஒழிப்பதுதான் கதை. இடையில் காஜல் அகர்வாலை காதலிப்பார். ஒட்டுமொத்தமாக இந்தக்கதையை ஒன்றாம் கிளாஸ் படிக்கும் குழந்தை கூட படம் துவங்கிய ஐந்து, பத்து நிமிடத்தில் ஊகித்து விடும். ஆனால் அப்படி ஊகித்தாலும் பலவீனமாக இருக்கும் ரசனையில் நம்பிக்கை வைத்து கதையை கொஞ்சம் இழுஇழுவென எதிர்பாராத கோணத்தில் இழுத்து மேலோட்டமான ஈர்ப்பை ஒவ்வொரு காட்சிக்கும் கொண்டு வந்து சினிமாவை குதறிக் கொண்டு செல்கிறார்கள்.

விறுவிறுப்பு கூட்டுவதற்கு வேகமான கதையும் இன்றைய ட்ரெண்ட் என்று மொக்கை சினிமா ஆய்வாளர்கள் கூட ஆய்வு செய்வது வழக்கம். இந்த வேகத்திற்கு சூர்யா நடித்து ஹரி இயக்கிய சிங்கம் ஒரு பதம். சென்னையில் இருந்து வில்லன் தூத்துக்க்குடி வந்து ஹீரோவிடம் பஞ்ச் டயலாக் பேசி ஆரம்பச் சுற்றில் தோற்றுப் போகும் விசயத்தை எடிட்டிங்கின் உதவியாலும், சர் சர் என பறக்கும் பின்னணி இசையாலும் ஓரிரு நிமிடத்தில் சொல்லி விடுவார்கள். எந்த ஒரு கதையும் அதன் உள்ளடக்கமும் அதற்கு பொருத்தமான வடிவத்தைக் தெரிவு செய்து அமைதி அடைகிறது. மாறாக வேகம் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் முனைப்பு கொண்டதால் சிங்கம் படம் நம்மைப் பொறுத்தவரை வாய்விட்டு சிரிப்பதற்குரிய அஜிங்கமான காமடிப் படம் மட்டுமே. கிராபிக்சில் சிங்கம், அதிவேக எடிட்டிங், அதற்கு உறுதுணையாக வெட்டு இசை,  ஒரு கையடியில் ஒரு டன் எடை என்று அதில் சிரிப்பதற்கு ஏராளமிருக்கின்றது.

இத்தகைய ரசனை வீழ்ச்சிதான் ஏ.ஆர் முருகதாஸ் போன்ற படைப்பாளிகளுக்கு பலம். இதில் சுலபமாக ஒரு மொக்கையை தயார் செய்து விடுவது அவர்களைப் பொறுத்த வரை சுலபமானது. மூன்று மணி நேரப் படத்தை முப்பது குறும் பிரிவுகளாக பிரித்து விட்டு அவை ஒவ்வொன்றையும் குமுதம் ஒரு பக்க கதை பாணியில் அமைப்பது இதுதான் முருகதாஸின் (பல இயக்குநர்களின்) சூட்சுமம்.

அதிலும் அந்த குறும்பிரிவுகளில் காதல், காமடி, பாடல் போன்ற வைத்தே ஆக வேண்டிய சமாச்சாரங்களை தவிர்க்க முடியாது என்பதால் பாதியை இவைகள் தின்று தீர்க்க மீதிப் பாதியில்தான் ‘கதை’. இவ்வளவு தொந்தரவுகளையும் தாங்கிக் கொண்டு ஒரு படத்தில் கதை வைப்பது சிரமம் என்பதை விட அந்த தொந்தரவையும் தாங்கிக் கொண்டு கதையை கண்டுபிடித்து பொழிப்புரை போட்டு ரசிக்கிறார்கள் என்றால் தமிழனது பரந்த மனத்தோடு போட்டி போட யாருமில்லை என்பது நிச்சயம்.

“துப்பாக்கியின்” விறுவிறுப்பில் மனம் சிக்குண்ட பதிவர்கள் என்ன மாதிரி காட்சிகளில் தம்மை அடகு வைத்திருப்பார்கள்? ரயில் நிற்கும் பின்னணியில் ராணுவ உடையுடன் விஜயின் அறிமுக ஆட்டம், அதே உடையுடன் ராகுகாலம், அஷ்டமிக்குள் பெண் பார்க்க ரயில் நிலையத்திலிருந்தே செல்லுதல், அடக்க ஒடுக்கமாக நடக்கும் காஜல் தனக்கு மேட்சாக மாட்டார் என்று விஜய் வீடு திரும்பி சொல்லும் போதே அதற்கு நேர் எதிராக அங்கே காஜல் நடந்து கொள்ளுதல், அதிலும் குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொள்ளுதல் (முக்கியமாக காஜலின் குத்துச்சண்டையை மெய்மறந்து பார்ப்பவர்கள்தான் இந்தியாவிற்கு ஒலிம்பிக்கில் பதக்கம் இல்லையென அழுகிறார்கள் என்பது ஒரு சோக காமடி),

பிக்பாக்கெட் பேருந்தில் தற்செயலாய் வில்லனைக் கண்டுபிடித்தல், பிக்பாக்கெட் கண்டுபிடிக்கப்படும் அதே நேரத்தில் வெடிகுண்டு வில்லன் தப்பி ஓடுதல், மருத்துவமனையிலிருந்து வில்லன் தப்பிச் செல்வதை ஊரே பேசிக் கொண்டு இருக்கும் போது அடுத்த காட்சியில் அவன் விஜயின் வீட்டில் இருத்தல், சத்யனிடம் இந்தக் கதையை கூறிக்கொண்டிருக்கும் போதே காஜல் வந்ததால் சஸ்பென்சில் வைத்தல், காஜலுக்கு முத்தம் கொடுக்கும் நேரத்தில் வில்லனைக் கண்டுபிடிக்கும் கிரியேட்டிவிட்டி வேலை செய்து முத்தத்தை ரத்து செய்து பறந்து போதல், இரண்டுமணி நேரத்திற்கு மட்டும் மயக்க மருந்து போட்டு வில்லனை தப்பி போக வைப்பது, அதற்குள் கல்யாண விருந்துக்குச் சென்று ராணுவ வீரர்களை ஆப்பரேஷனுக்கு தயார் செய்வது….

இப்படிச் சின்ன சின்ன திருப்பங்கள், எதிர்பாராத நிகழ்வுகள் என்று ஊசிப்போன ஒரு எளிய கணக்குப்புதிர் போன்ற காட்சிகளைத்தான் பதிவர்கள் விறுவிறுப்பான திரைக்கதை என்று கொண்டாடுகிறார்கள். எனில் இவர்களெல்லாம் உண்மை வாழ்க்கையிலும், திரைப்பட அனுபவத்திலும் அப்படி ஒரு ஒரிஜினல் விறுவிறுப்பை கண்டவர்கள் இல்லை என்று தெரிகிறது. இறுதியில் குமுதத்தின் ஒரு பக்க கதை ஃபார்முலாதான் நமது சினிமா பதிவர்களது ரசனை அளவு கோல் என்றால் தமிழ் மக்களிடம் வசூலிக்கவும் விறுவிறுப்பை அளிக்கவும் ஒரிஜினல் துப்பாக்கி தேவையில்லை, வெறும் தீபாவளி பொம்மைத் துப்பாக்கியே போதும்.

அடுத்து நமது சினிமா பதிவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொல் லாஜிக் மீறல். இதையும் எளிய கணக்கு புதிருக்குண்டான விதிகள் போலத்தான் கருதுகிறார்கள். பாத்திரங்கள், வேலை விவரங்கள், காட்சிகளின் தொடர்பு போன்றவற்றில் உள்ள தொழில்நுட்ப ரீதியான சமாச்சாரங்கள் முரண்படாமல் அல்லது மீறாமல் இருந்தால் லாஜிக் ஷேமகரமாக இருக்கிறது என்பது இவர்களது புரிதல்.

சான்றாக படத்தில் இராணுவக் கேப்டனான விஜய் மேலதிகாரிகளது அனுமதி இன்றி வில்லன்களை கொல்வதும், அதற்கு சக வீரர்களை பயன்படுத்திக் கொள்வதும் ஏன்? – இப்படித்தான் இவர்கள் லாஜிக்கை ஆராய்கிறார்கள். உண்மையில் ஒரு திரைக்கதையில் இதெல்லாம் மீறப்படுவது பெரிய பிரச்சினை இல்லை. உண்மையிலும் இராணுவத்தினர் பல இடங்களில் அப்பாவி மக்களை அனுமதியின்றி, உத்தரவின்றி கொல்வதும் ஏராளமாய் நடப்பது என்கிற விதத்திலும் இது லாஜிக் மீறல் இல்லை. ஆனால் ஒரு திரைக்கதை எதார்த்த வாழ்வின் உண்மைகளோடும், அறவியல் மதிப்பீடுகளிலிருந்தும் வழுவாமல் இருப்பதுமே முக்கியமாகிறது. இந்த ‘லாஜிக்’ மீறாமல் இருப்பதுதான் நமது கவனிப்பிற்கு உரியது.

இது நமது மொக்கை திலகங்களுக்கு எப்போதும் உறைக்காது, தெரியாது, புரியாது. இந்தியா ராணுவம் ஈழத்திலும், காஷ்மீரிலும், வடகிழக்கிலும் கொன்ற கணக்கு ஏராளமிருக்கையில் அதன் ஆக்கிரமிப்பு, மக்கள் விரோத மனோபாவமே எதார்த்தம் எனும் போது படத்தில் ஊனமுற்ற முன்னாள் ராணுவ வீரர்களைக் காட்டி கருணைப்படுமாறு கெஞ்சுகிறார்கள். “ஆயிரம் மக்களை கொல்பவன் தன்னுடைய உயிரை விடுவதற்கு கவலைப்படாத போது, மக்களைக் காப்பாற்றுபவனும் தனது உயிரை துறப்பதற்கு தயங்கக் கூடாது” என்று விஜய் இரண்டு, மூன்று முறை பேசுகிறார்.

டான்ஸ் ஆடி குஷால் பேபியாக அறியப்பட்ட விஜய் இதைப் பேசும் கொடுமை ஒருபுறம் இருந்தாலும் இதுதான் உண்மையான ‘லாஜிக்’ மீறல்! ஆக்கிரமிப்பு நாடுகள், இராணுவத்திற்கு எதிராக அரசியல், விடுதலை, பொருளாதார, வாழ்க்கை காரணங்களால் மட்டுமே ஒரு போராளி தன்னுடைய உயிரைத் துறக்கும் தற்கொலைப் போராளியாக மாற முடியும். ஆனால் இத்தகைய போராட்டங்களிலிருந்து முகிழ்விக்கும் தற்கொலைப் போராளிகள் எவரும் ஆக்கிரமிப்பு இராணுவம், நாட்டிலிருந்து தோன்றவே முடியாது.

தன்னுடைய பாதுகாப்பான வாழ்வு போக அடுத்தவனுடைய வாழ்வையும் அபகரிக்க வேண்டுமென்ற சிந்தனை உள்ள ஆக்கிரமிப்பாளன் வாழ்க்கையின் இன்பத்தை துய்ப்பதற்குத்தான் துணிவானே அன்றி உயிரை விட அல்ல. வேண்டுமானால் அமெரிக்க அரசாங்கமோ இல்லை ஆர்.எஸ்.எஸ் இயக்கமோ நாட்டிற்காக தற்கொலை தியாகிகள் வேண்டுமென்று அறைகூவல் விட்டுப் பார்க்கட்டும். தயிர் சாதத்திற்கு வழியில்லாத அம்பி கூட அதற்கு துணிய மாட்டான் என்பது உறுதி.

ஜிகாதி பயங்கரவாதிகளிடமிருந்து மும்பை மக்களை பாதுகாக்கும் கடமையை ஏற்றுக் கொண்ட விஜய் இடையிடையில் அதற்கு லீவ் கொடுத்து விட்டு காஜல் அகர்வாலின் பின்னால் சுற்றுகிறார். இப்பேர்ப்பட்ட நபர்தான் நாட்டிற்காக தனது உயிரை கொன்று விடுமாறு சக வீரர்களிடம் உதார் விடுகிறார். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் காஜல் அகர்வாலை சுற்றாமல் ஆரம்பத்திலேயே கண்ணும் கருத்துமாக பணியாற்றிருக்கலாம் அல்லவா?

சரி, விஜய் தனது உயிரை எடுக்குமாறு கூறும் போது ரசிகர்கள் சிரிப்பார்களா, இல்லை தேசபக்தியில் புல்லரித்து பொங்குவார்களா? ஒரு பாத்திரம் அதனுடைய கதையமைதியில் வழுவாமல், முரண்படாமல் இருக்குமாறு இருப்பது அடிப்படை விசயம். இது கூட நமது படைப்பாளிகளுக்குத் தெரியவில்லை என்பது சிரிப்பதற்குரிய உண்மை.

பெரிய பட்ஜெட் படங்களுக்கு வில்லன்கள் என்றால் நமது படைப்பாளிகள் இயல்பிலையே இசுலாமிய தீவிரவாதிகள் என்று செட்டிலாகிவிடுகிறார்கள். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பா.ராகவனது “நிலமெல்லாம் ரத்தம்” நூலையோ இதை ஒட்டி வந்த “கிழக்கி”ன் ஏனைய மத்திய கிழக்கு உடான்சுகளையோ படித்திருப்பார் போலும். அதில் வரும் ஸ்லீப்பர் செல், அதனுடைய விளக்கம், எல்லாம் தனது மொக்கை த்ரில்லருக்கு பொருந்தி வரும் என்பதால் அப்படியே அதை மும்பைக்கு நாடு கடத்தி விட்டார்.

மத்திய கிழக்கில் இசுரேலுக்கு எதிராக தோன்றிய இசுலாமிய அமைப்புகளின் நடைமுறை, ஸ்தாபன முறை அனைத்தும் வலுவான, சதிகார எதிரிக்கு எதிராக போராடும் மக்களிடம் தோன்றிய எதிர் போராட்ட வன்முறை. அதை அந்த சூழலில் இருந்து துண்டித்து விட்டு ஒரு மலிவான வில்லனாக வேறு ஒரு நாட்டில் காண்பிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ஹமாஸ், அல்கைதா ஏனைய அமைப்புகளின் டெக்னிக்கல் டீடெய்ல் மட்டும் பா.ராகவன் தொட்டு, முருகதாஸு வரையிலும் ஈர்க்கப்படும் அவஸ்தையை இங்கே இனியும் விளக்க வேண்டியதில்லை.

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு என்பது இந்துமதவெறியின் எதிர்வினை. ஒரு வேளை இங்கே இந்துமதவெறியோ, அத்வானி, மோடி, தாக்கரேக்களோ தண்டிக்கப்படும் நிலையிருந்தால் இத்தகைய குண்டு வெடிப்புகளுக்கு தேவைப்படும் சமூக அடிப்படை இருந்திருக்காது. இதை வினவின் பல கட்டுரைகளில் விரிவாக விளக்கியிருக்கிறோம். இதன் அரிச்சுவடி கூடத் தெரியாமல் ஒரு வில்லன் எஃபெக்டுக்காக ஜிகாதி, இசுலாம், நமாஸ், முகமூடி, கழுத்தறுப்பது போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட முசுலீம் வெறுப்பு இந்தியாவின் சினிமா வாழ்க்கையில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் இசுலாமிய மக்கள் எவ்வளவு பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

முருகதாஸ் ஒருவிதமான அண்ணா ஹசாரே டைப்பில்தான் அனைத்து விசயங்களையும் பார்க்கிறார். அதன் அபத்தத்தை ஏழாம் அறிவிலேயே பார்த்தோம். அந்த குப்பை மசாலவை ஏதோ தமிழனது வீரம், ஈழவிடுதலை என்று ஜாக்கி வைத்து தூக்கிய தமிழ் தேசிய இனவாதிகளையும் கண்டிருக்கிறோம். அதனால்தான் மற்றுமொரு தமிழ்தேசியவாதியான கலைப்புலி தாணு தனது பெரிய பட்ஜெட் படத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான வன்மத்தை கக்குவதற்கு கைக்காசை போட்டு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இவர்தான் ஈழத்தில் அமைதிப்படையின் கொலையை அவரது படமான “கண்டு கொண்டேன் கண்டு கொண்டேனி”ல் மறைத்து அமைதிப்படையை வரவேற்கமாட்டேன் என்று சொன்ன கருணாநிதியை குற்றம் சாட்டுவதற்கு பயன்படுத்தியவர்.

ஆக தமிழ் உணர்வு என்றால் அது இந்துத்வ உணர்வின் பங்காளிதானோவென ஐயம் வருகிறது. அதனால்தான் பால்தாக்கரே உயிரோடு இருந்து நடத்திய இனவெறி போராட்டங்களுக்கும் தமிழ்தேசிய வாதிகள் பலர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

அரசியல், வரலாறு, சமூகம், கலை அனைத்தையும் மிக மிக மேலோட்டமான பார்வை மற்றும் ஆதிக்கம் செலுத்தும் கண்ணோட்டத்தோடு புரிந்து வைத்திருக்கும் படைப்பாளிகளிடமிருந்து இத்தகைய விபரீதங்கள் வரும் என்பதற்கு “துப்பாக்கி” எனும் மசாலாவே சாட்சி. இதன் மூத்த சகோதரனாக அமெரிக்க அரசின் ஆசிபெற்ற “விசுவரூபம்” அடுத்து வரப்போகிறது. மீதி விமரிசனங்களை அதில் தொடருவோம்.

குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?

52
மோடி-4

முன்னுரை: அடுத்த மாதம் நடைபெற இருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மோடியே வெற்றி பெறுவார் என்று பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்புக்கள் கூறுகின்றன. 2007 தேர்தலின் போதும் இது நடந்திருக்கிறது. 2000த்திற்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த கலவரத்தின் நாயகன் மீண்டும் வெற்றி பெறக் காரணம் என்ன? இந்த வெற்றிக்கும் பாசித்திற்கும் என்ன தொடர்பு? 2008 இல் வெளியிடப்பட்ட இந்தக் கட்டுரை காலம் கடந்தும் குஜராத்தை புரிந்து கொள்ள உதவுகிறது. படித்துப் பாருங்கள்!

வினவு

மோடி-4

”இந்த முகமூடி எனக்கும் மக்களுக்கும் இடையே வலிமையான பிணைப்பை ஏற்படுத்தியது. நான் தாக்கப்பட்ட போதெல்லாம், என் வலியை மக்கள் உணர்ந்தார்கள்.”

(மோடியின் பேட்டி, டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், டிசம்பர்-25, 2007)

‘அண்ணனே, தளபதியே, அம்மா, அய்யா’ என்று தலைவனாகிய ஆண்டவனைத் தொண்டர்கள் தொழுது வழிபடும் ‘துவைத’ நிலையிலிருந்து. ‘அகம் பிரம்மாஸ்மி’ என்ற ‘அத்வைத’ நிலைக்கு, ‘நானே மக்களாக இருக்கிறேன்’ என்ற தூய பாசிச நிலைக்கு, இந்திய ஜனநாயகத்தை உயர்த்தியிருக்கிறார் மோடி.

தனது முகமூடிகளை இலட்சக்கணக்கில் சீனத்திலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை குஜராத் முழுவதும் விநியோகித்திருந்தார் மோடி. தலைவனை ‘முக’மாகவும், மக்களை வெறும் ‘பிரதிபிம்ப’மாகவும் மாற்றி விட்ட இந்த ‘அத்வைத’ நாடகத்தில், அரசியல் எதிரிகள் மோடியை விமர்சித்த போது, முகமூடிகள் வலியால் துடித்ததில் வியப்பில்லை.

முன்பு, வாஜ்பாயி எனும் ‘மிதவாத மூகமுடி’யை அணிந்து கொண்டு பாசிசம் ஆட்சி நடத்திய போது, அந்த முகமூடியின் மிதவாத ஒப்பனையைப் பாதுகாக்கும் பொறுப்பை, மதச்சார்பற்ற கட்சிகள் ஏற்றிருந்தன். அது பாசிசத்தின் முன்னுரை. இன்று ஒரு கொலைகாரனின் முகத்தைத் தனது முகமூடியாக அணிந்து கொண்டு, ஆனந்தக் கூத்தாடும் குஜராத் நமக்கு வழங்குவது பாசிசத்துக்கான பொழிப்புரை.

முஸ்லிம் இளைஞனை மணந்த இந்துப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து, சிசுவை எடுத்து எரித்துக் கொன்றதையும், அண்டை வீட்டு முஸ்லிம் பெண்களை பாலியல் வல்லுறவால் சிதைத்து, பின்னர் அவர்களைக் கசக்கிக் கொன்று போட்டதையும், குழந்தைகளைத் தீயில் வறுத்ததையும் பெருமை பொங்க அசைபோடும் கொலைகாரர்களை தெகல்கா படம் பிடித்துக் காட்டியபோது, ”இவர்கள் என்ன வகை மிருகங்கள்?” என்று அதிர்ச்சியில் உறைந்து போனார்கள் பல வாசகர்கள். எந்த மண்ணில் அந்தப் பாசிசப் பிராணிகள் முளைத்து, தழைத்து வளர்ந்தனவோ அந்த குஜராத் மண், இந்த முகமூடிக் கூத்தின் மூலம் தன்னுடைய முகத்தை அடையாளம் காட்டியிருக்கிறது.

நீதி, கருணை அல்லது மனிதத் தன்மையின் சாயலையேனும் தமக்குள் காப்பாற்றி வைத்திருக்கும் ஒருவொருவரும், தெகல்கா இதழின் செய்தியைப் படித்த பின்னர் ‘எப்படியாவது மோடி தோற்றுவிட மாட்டானா!’ என்று தவித்தனர். தேர்தலுக்கு முந்தைய பல கருத்துக் கணிப்புகள், மோடியின் வெற்றியைத்தான் ஊகித்தன என்ற போதிலும், மோடி தோற்க வேண்டும் என்று ஏங்கினர். ஒருவேளை வெற்றியே பெற்றுவிட்டாலும், மோடியின் ஒரு முடியைக் கூடக் காங்கிரசு பிடுங்கப் போவதில்லை, என்பது தீர்க்கமாகத் தெரிந்திருந்தும், தெகல்கா கிளறிவிட்ட மனப்புண்ணின் ஆறுதலுக்காகவாவது, ‘மோடி தோற்க வேண்டும்’ என்று பலர் விரும்பினர்.

இனப்படுகொலையின் பிணவாடையை முகர்ந்தபடியேதான், குஜராத்தின் பெரும்பான்மை இந்துக்கள் 2002-ல் மோடிக்கு வாக்களித்தனர் என்ற போதிலும், ”அது கோத்ரா சம்பவம் தோற்றுவித்த தற்காலிகக் கிறுக்குத்தனமாக இருக்கக் கூடும்” என்று தமக்குத் தாமே சமாதானம் கூறிக்கொண்ட பலர், 5 ஆண்டுகள் கடந்து விட்டதால் குஜராத்தின் இந்து மனோபாவத்திற்கு புத்தி தெளிந்துவிடும் என்றும், அதன் அடிமனதிலிருந்து ‘அறவுணர்ச்சி’ மேலெழும்பி 2002-இன் அநீதிக்குப் பரிகாரம் வழங்கும் என்றும் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர்.

தெகல்காவின் பேட்டிகள், இந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தின. இமை தாழாமல், சொல் தடுமாறாமல் தாங்கள் இழைத்த பஞ்சமா பாதகங்களை ‘திரைக்கதை’ போல வருணித்தார்கள் ‘குஜராத்தின் எழுச்சியுற்ற இந்துக்கள்’. ‘மாமிசம் தின்னும் ‘தமோ’ குணம் நிரம்பிய கீழ்சாதி அடியாட்படையின்’ வாயிலிருந்து மட்டுமல்ல, ‘சாக பட்சிணிகளும், இயல்பிலேயே ‘சத்வ’ குணம் நிரம்பியவர்களுமான’ பார்ப்பன – பனியா உயர்சாதி இந்துக்களின் வாயிலிருந்தும் ‘ரத்தக் கவிச்சு’ வீசியது. இருப்பினும், குஜராத்தின் உயர்சாதி இந்துக்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளவிலை. பெரும்பான்மை இந்து மனம், அதனைக் கண்டு அவமானத்தால் குறுகி, வெட்கித் தலைகுனியவில்லை. ‘வருந்துகிறோம்’ என்று மனதிற்குள் கூட முணுமுணுக்கவில்லை. முகம் என்ன செய்ததோ, அதையே முகமூடிகளும் பிரதிபலித்தன.

மோடி-3”2002 சம்பவங்களுக்காக வருந்துகிறேன் என்று நீங்கள் ஒரு வார்த்தை கூறினால் அது காயம்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கமல்லவா?” என்று ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் நரேந்திர மோடியிடம் கேட்டார் கரண் தாப்பர் என்ற பத்திரிகையாளர். மறுகணமே அந்தத் தொலைக்காட்சிப் பேட்டியிலிருந்து வெளியேறினார் மோடி. தெகல்கா பேட்டிகளோ, குஜராத் தொலைக்காட்சிகளிலிருந்தே வெளியேற்றப் பட்டன. பிரதிபலிப்பு தோற்றவிக்கும் ‘இடவல மாற்றம்’ என்பது, இதுதான் போலும்!

குஜராத் தேர்தல் முடிவு, காந்திய மத நல்லிணக்கவாதிகளையே கூட அதிர்ச்சியுறச் செய்துள்ளது. ”குஜராத்தை ‘இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ என்று இனிமேலும் அழைக்க முடியாது; அது தொழிற்சாலையாகி விட்டது” என்கிறார் ஒரு பத்திரிகையாளர். ”குஜராத் ஒரு மாநிலமல்ல, அது ஒரு சித்தாந்தம்” என்று எச்சரிக்கிறார் குல்தீப் நய்யார். ”இனி இந்தியாவே குஜராத் தான்” என்று இரண்டு விரலைக் காட்டிக் கொக்கரிக்கின்றன மோடியின் முகமூடிகள்.

அத்வானியின் கூற்றுப்படி, இது பாரதிய ஜனதாவுக்கு ஒரு திருப்புமுனை. இது ‘ஆம்பளை ஜெயா’வின் வெற்றி என்பதால், ஜெயலலிதாவைப் பொருத்தவரை இது அவரது சொந்த வெற்றி. ஆளும் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் (anti – incumbency) மக்களின் மனோபாவத்தை மீறி மோடி வென்றிருப்பதால், இந்த வெற்றிக்கு இந்துத்துவத்தைத் தவிர வேறு என்ன காரணம்? என்பதே மற்ற ஓட்டுக்கட்சிகளின் அக்கறைக்கு உரிய விசயமாக இருக்கிறது.

சங்க பரிவார அமைப்புகளும், லூவா படேல் சாதியைச் சேர்ந்த கேசுபாய் படேல், கோர்தன் ஜடாபயா போன்ற பா.ஜ.க தலைவர்களும், தொகாடியா போன்ற வி.எச்.பி தலைவர்களும், மோடியை எதிர்த்த போதிலும், போட்டி வேட்பாளர்களை நிறுத்தியும், காங்கிரசை மறைமுகமாக ஆதரித்த போதிலும், மோடி வென்றது எப்படி? மாயாவதியின் கட்சி வாக்குகளைப் பிரிக்காமல் இருந்திருந்தால், காங்கிரசு கூடுதல் தொகுதிகளில் வென்றிருக்கக் கூடுமா? மோடிக்கு மாற்றாக முதல்வர் பதவிக்கு காங்கிரசு சார்பில் யாரையும் முன் நிறுத்தவில்லை என்பதுதான், தோல்விக்கு அடிப்படையா? ஆதிக்க சாதியான படேல் சாதியினர் பா.ஜ.க வை எதிர்த்ததால், மற்றெல்லா சாதியினரும் பா.ஜ.க-வின் பக்கம் சாய்ந்து விட்டனரா? அல்லது உள்கட்சிப் பூசலால் பிளவுபட்டிருந்த இந்து ஓட்டு வங்கியை, தெகல்கா விவகாரம் தோற்றுவித்த இந்து உணர்வு, ஒன்றுபடுத்திவிட்டதா?…. என தும்பிக்கை, காது, வால் என்று பிரித்து ‘யானை’யைத் தடவுகின்றன, தேர்தல் முடிவு குறித்த ஊடகங்களின் ஆய்வுகள்.

குஜராத் இனப்படுகொலை குறித்த பெரும்பான்மை இந்துக்களின் மனப்போக்கு என்ன? மோடியின் மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்கள் குறித்த குஜராத் மக்களின் கண்ணோட்டம் என்ன? அவை இந்தத் தேர்தல் முடிவுகளின் மீது செலுத்திய தாக்கம் என்ன? – என்ற கேள்விகளையே இந்த ஆய்வுகள் எதுவும் எழுப்பவில்லை. மாறாக, கேந்திரமான இவ்விரு பிரச்சினைகளையும், நமது பார்வையிலிருந்தே தந்திரமாக அகற்றி விடுகின்றன.

இந்தத் தேர்தல் முடிவல்ல, நமது பிரச்சினை. ஒருவேளை இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தால், அந்த வெற்றி, காந்திய மத நல்லிணக்க வாதிகளின் மனப்புண்ணுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்திருக்குமேயன்றி, நிச்சயமாக அது இந்துத்துவத்தின் தோல்வியாக இருந்திருக்காது. ‘குஜராத் – இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ என்ற நிலைமையை மாற்றுவதற்கான ஒரு துவக்கப் புள்ளியாகக் கூட இருந்திருக்காது.

***

குஜராத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, மோடி விடுத்த ஒரு சவால் மிகவும் முக்கியமானது. ”என்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் எல்லாக் குறுந்தகடுகளையும், ஒரு நடுநிலையாளர் குழுவிடம் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். அதில் மதவெறியைத் தூண்டக்கூடிய ஏதாவது ஒரு பேச்சைக் காட்டுங்கள். நான் தோல்வியை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்” (டைம்ஸ் ஆஃப் இந்தியா, டிசம்பர் 25, 2007)

பாசிஸ்டுகளின் வழக்கமான ‘வாய்ச்சவடால்’ என்று இதனை ஒதுக்கிவிட முடியாது. இந்து, இந்துத்துவம், முஸ்லிம் என்ற சொற்களைத் தனது பிரச்சாரத்தில், மோடி அநேகமாக உச்சரிக்கவே இல்லை. அவற்றை உச்சரிக்காமலேயே, அவை தோற்றுவிக்கும் விளைவுகளை மோடியால் அறுவடை செய்ய முடிந்திருக்கிறது. காங்கிரசும், இந்தச் சொற்களைப் பயன்படுத்தவில்லை என்பதுதான், குரூரமான நகைச்சுவை. (இந்து பயங்கரவாதிகள் என்று ஒரே ஒருமுறை ‘திக்விஜய் சிங்’ பேசியதைத் தவிர).

‘இந்துத்துவத்தின் சோதனைச்சாலை’ என்று அறியப்படும் ஒரு மாநிலத்தில், கிராமம் முதல் நகரம் வரை, இந்து பாசிச அமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மாநிலத்தில், இந்துத்துவத்துக்கு எதிராகப் பேசும் அமைப்புகள், திரைப்படங்கள், பத்திரிகைகள், கலைஞர்கள் யாராக இருந்தாலும், தாக்கித் துரத்தப்படுவார்கள் என்பது நிலைநாட்டப்பட்டிருக்கும் மாநிலத்தில், 2500 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, பல்லாயிரம் பேர் வீடு வாசலை இழந்து, கடந்த 5 ஆண்டுகளாக அகதி முகாம்களில் வாழ வேண்டியிருக்கும் ஒரு மாநிலத்தில், ‘இந்து பாசிசம்’ என்ற சொல்லையே பயன்படுத்தாமல், அதன் கொடூரத் தன்மையை அம்பலப்படுத்தாமல், மோடிக்குப் பெரும்பான்மையாக வாக்களித்திருக்கும் மக்களைத் தன் பக்கம் ஈர்ப்பதில், காங்கிரஸ் எவ்வாறு வெற்றி பெற்றிருக்க முடியும்?

இந்துத்துவத்தை எதிர்ப்பது இருக்கட்டும், காந்திய மத நல்லிணக்கத்தைப் பேசினால்கூட குஜராத் இந்துக்களின் வாக்குகளை இழந்து விடுவோமென்று, காங்கிரசு அஞ்சியது. மோடி முகாமிலிருந்து வெளியேறிய அதிருப்தியாளர்களும், 2002 இனப்படுகொலையின் குற்றவாளிகளுமான கோர்தன் ஜடாபயா, கேசுபாய் படேல், பிரவின் தொகாடியா போன்றோரை அரவணைத்துக் கொள்வதன் மூலம், படேல் சாதி வாக்குகளையும், மோடி எதிர்ப்பு இந்து வாக்குகளையும் அள்ளிவிடலாம் என்று கணக்கிட்டது. இது முஸ்லிம் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்த போதிலும், காங்கிரசை விட்டால் இப்போதைக்கு வேறு நாதி இல்லை என்ற முஸ்லிம் மக்களின் பரிதாபமான நிலைமையை, காங்கிரசு மிகவும் வக்கிரமாகப் பயன்படுத்திக் கொண்டது.

இது குஜராத் சூழ்நிலையைக் கணக்கில் கொண்டு காங்கிரசு வகுத்த தேர்தல் தந்திரம் மட்டுமல்ல. காங்கிரசே ஒருமிதவாத இந்துத்துவக் கட்சிதான். அயோத்தி பிரச்சினைக்கு அடிக்கொள்ளியாக இருந்த ராஜீவ்காந்தி முதல், இன்று சேதுக் கால்வாய் விவகாரத்தில் பாரதிய ஜனதாவிடம் சரண்டைந்த சோனியா காந்தி வரை இதற்குச் சான்றுகள் பல உண்டு. 2002 இனப்படுகொலையின் குற்றவாளிகளைச் சட்டப்பூர்வமாகத் தண்டிப்பதற்கு, ஒரு துரும்பைக் கூட காங்கிரசு எடுத்துப் போட்டதில்லை என்பது மட்டுமல்ல, கடந்த 5 ஆண்டுகளில் இந்த வழக்குகளை முடக்குவதிலும், மைய அரசு மோடிக்கு துணை நின்றிருக்கிறது என்பதே உண்மை.

எனவே பெயரைத் கூடக் குறிப்பிடாமல், ‘மரண வியாபாரி’ என்று தனது தேர்தல் பிரச்சாரத்தில் சோனியா குறிப்பிட்டாரே, அது மட்டும்தான் மோடியின் மீது காங்கிரசு தொடுத்த ‘அதிபயங்கரத் தாக்குதல்’! இதற்கு மோடி கொடுத்த பதிலடிதான், மோடிக்கும் முகமூடிகளுக்குமிடையிலான உறவை நமக்கு விளக்குகிறது.

”5 கோடி குஜராத் மக்களை ‘மரணவியாபாரிகள்’ என்கிறார் சோனியா. அது உண்மையா?” – ”இல்லை… இல்லை…”

”சோரபுதீன் ஷேக்கை என்ன செய்ய வேண்டும்?” – கொல்ல வேண்டும்… கொல்ல வேண்டும்”

”குஜராத்தில் நடக்கக் கூடாத சம்பவங்களெல்லாம் நடந்ததாகச் சொல்கிறார்களே, அது உண்மையா?” – ”இல்லை… இல்லை…”

மோடி-1மேற்கூறியவையெல்லாம், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மோடி எழுப்பிய கேள்விகள். அவற்றுக்கு, கூட்டம் ஆரவாரமாக அளித்த பதில்கள். இது போன்றவையெல்லாம் எல்லாக் கூட்டங்களிலும் கட்சித் தொண்டர்கள் போடும் கூச்சல்தானே! என்று கருதிக் குறைத்து மதிப்பிட முடியாது. கூட்டம் அளித்த பதில் என்பது, குஜராத் இந்து உயர்சாதியினரிடம் உறுதியாக நிலவும் பொதுக்கருத்து. குஜராத் இந்து சமூகத்தின் பொது மனோபாவம்.

தன் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலை, 5 கோடி குஜராத் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக திசை திருப்புவதில், மோடி எப்படி வெற்றி பெற முடிந்தது? பார்ப்பன எதிர்ப்பு, சுயமரியாதை, சாதிமறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கமாகக் கொண்டு ‘தமிழன்’ என்ற சொல்லைப் பெரியார் பயன்படுத்தினாரென்றால், அதன் நேர் எதிரான பொருளில் ‘குஜராத்தி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறான் மோடி.

2002 தேர்தலின் போதே ‘இந்து’ என்ற சொல்லை, ‘குஜராத்தி’ என்ற சொல்லைக் கொண்டு தந்திரமாக மாற்றீடு செய்துவிட்டான் மோடி. 2002 இனப்படுகொலையைத் தொடர்ந்து, உலகமே இந்து பாசிஸ்டுகளைக் காறி உமிழ்ந்தபோது, தனது தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி வைத்த பெயர் ‘குஜராத் கவுரவ யாத்திரை’. ”கர்வ் சே கஹோ ஹம் ஹிந்து ஹை” என்ற ஆர்.எஸ்.எஸ்.-ஸின் முழக்கம், ‘குஜராத்தி கர்வமாக மாற்றப்பட்டுவிட்டது. முஸ்லிம்கள் அந்நியர்கள்’ என்ற உட்கிடையான பொருளைக் கொண்ட இந்த குஜராத்தி இனவாதம், இந்து பாசிச மனோபாவத்தைத் தன் இதயமாகக் கொண்டிருக்கிறது.

”சோரபுதீன் ஷேக் என்ற கிரிமினலை என்ன செய்யவேண்டும்?” என்று கூட்டத்தைப் பார்த்து மோடி எழுப்பிய கேள்வி

”முஸ்லிம் = கிரிமினல், முஸ்லிம் = பயங்கரவாதி” என்ற கருத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டது.

”கொல்ல வேண்டும்” என்ற கூட்டத்தின் கூச்சல், 2002 இனப்படுகொலைக்கு ‘சங்கேத மொழி’யில் கூட்டம் வழங்கிய அங்கீகாரம்.

அரசாங்கம், போலீசு, நீதிபதிகள் மட்டுமல்ல, ”மொத்த இந்து சமுதாயமே எங்கள் பின்னால் இருந்தது.” என்று தெகல்கா நிருபரிடம், இந்து பாசிஸ்டு கிரிமினல்கள் அளித்த வாக்கு மூலத்தின் பொருள், இதுதான்.

2002 இனப்படுகொலைக்காக குஜராத்தின் இந்துப் பொதுக்கருத்து, கடுகளவும் வருந்தவில்லை, என்றே குஜராத்தின் எல்லா சமூகவியலாளர்களும், குறிப்படுகிறார்கள். ‘கோத்ரா சம்பவம்’ முஸ்லிம்கள் நடத்திய திட்டமிட்ட தாக்குதல், என்று நம்பியதால் உருவான பொதுக்கருத்து அல்ல. ”நாங்கள் ஒன்றும், நடந்ததை நியாயப்படுத்தவில்லை. இருந்தாலும் ஏன் அதையே திரும்பத் திரும்பப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்? முஸ்லிம்கள் மட்டும்தான் இந்த சமூகத்தில் பாதிக்கப் பட்டிருக்கிறார்களா? டெல்லி சீக்கியர் படுகொலையின் குற்றவாளிகளைத் தண்டித்து விட்டார்களா?” என்று அடுக்கடுக்காக எதிர் கேள்வி கேட்டு, இறுதியில் படுகொலையை நியாயப்படுத்துவதில் வந்து முடிக்கிறார்கள், இந்த நடுத்தர வர்க்கத்தினர். இவர்களில் ‘மிகவும் நல்லவர்கள்’ என்று கூறப்படுபவர்கள் கூட ”2002-ஐ மறந்து விடுங்கள்” என்று அறிவுரை கூறுகிறார்கள். ‘மறப்பதா? வேண்டாமா? என்பதை பாதிக்கப்பட்ட மக்கள்தான் முடிவு செய்ய முடியும்’ என்ற எளிய நியாயம் கூட உரைக்காத அளவிற்கு, இந்துப் பெரும்பான்மையினர் மத்தியில் அங்கே ‘சகஜநிலை’ திரும்பியிருக்கிறது.

மறக்க மறுத்தால்? மீண்டும் சகஜநிலை குலையும். தெகல்கா-வின் அம்பலப்படுத்தல்கள் வெளியானவுடனே, மீண்டும் ஒரு தாக்குதல் தொடங்கிவிடுமோ? என்று அகதி முகாம்களில் இருந்த முஸ்லிம்கள் அடைந்த அச்சம் இதற்குச் சான்று கூறுகிறது.

இத்தகைய சகஜ நிலையையும் அமைதியையும் நிலைநாட்டியிருப்பதே, இப்போது மோடியின் சாதனையாகி விட்டது.

”பாதுகாப்பு இல்லாமல், வளர்ச்சி எப்படி இருக்க முடியும்?” என்று கேட்கிறார் மோடி. யாரிடமிருந்து பாதுகாப்பு? என்ற கேள்வியை குஜராத் எழுப்பவில்லை. 2500 பேரைக் கொன்று போட்ட பிறகும், சிறு சலசலப்போ மும்பையில் நடந்ததைப் போன்ற பயங்கரவாத எதிர்த்தாக்குதலோ இல்லாமல், குஜராத் இந்து சமூகத்தை, குறிப்பாக அதன் முதலாளிகளையும், வணிகர்களையும் பாதுகாத்திருக்கிறார் அல்லவா, அந்தப் பாதுகாப்பைத்தான் கூறுகிறார் மோடி!

மோடி-6மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்களால், நாடே நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும், பயங்கரவாதமும் தீவிரவாதமும் தான் இந்த வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும், மன்மோகன் சிங் வழங்குகின்ற சித்திரம், பன்னாட்டு முதலாளிகள் நலனையும், இந்தியத் தரகுமுதலாளிகளின் நலனையுமே பிரதிபலிக்கிறது. மோடியும் அதையேதான் கூறுகிறாரெனினும், குஜராத்தின் குறிப்பான பின்புலத்தில், ‘ஆளும் வர்க்கத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பிலிருந்து, இந்துக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பிரிக்கவொண்ணாததாகி விடுகிறது.’ அதாவது, ‘எது ஆளும் வர்க்கத்தின் நலனோ? அதுதான் இந்துக்களின் நலன் என்ற கருத்து அதன் வர்க்க ரீதியான அர்த்தத்திலும், குஜராத் மக்களின் மனதில் பதியவைக்கப் பட்டிருக்கிறது.

”விமான நிலையத்துக்கே கார்களே அனுப்பிவைத்து, தொழிலதிபர்களை மகாராஜாக்களைப் போல வரவேற்கும் ஒரே முதல்வர், மோடி மட்டும்தான்” என்று கூறி, மோடியின் வெற்றியைக் கொண்டாடினார் ஒரு இந்தியப் பெருமுதலாளி. ”குஜராத் சாதித்திருப்பதையும், சாதிக்கவிருப்பதையும் எஞ்சியுள்ள இந்தியா, ஒருக்காலத்திலும் இனி சாதிக்க முடியாது” என்று கூறி மோடியின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள், வெளிநாட்டில் குடியேறிய குஜராத்திகள்.

இவர்களின் இந்தக் கொண்டாட்டத்துக்கு அர்த்தமிலாமல் இல்லை. போராட்டங்களோ எதிர்ப்புகளோ இல்லாமல், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவியிருக்கும் மாநிலம் குஜராத். சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தை 2006-இல் மைய அரசு கொண்டுவருவதற்கு முன்னர், 2004-லேயே குஜராத்தில் அச்சட்டத்தைக் கொண்டு, வந்தவர் மோடி. ‘அடானி குழுமம்’ என்ற தரகு முதலாளிக்கு, சதுர கெஜம் 50 பைசா விலையில் (சதுர அடி 5 காசு) 33,000 ஏக்கர் நிலத்தை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்காக விற்றிருக்கிறார் மோடி. அதை சதுர கெஜம் 1200 ரூபாய்க்கு விற்று, இந்த நிலவிற்பனை மூலம் மட்டுமே 20,000 கோடி ரூபாயை இலாபம் ஈட்டியிருக்கிறது அடானி குழுமம். சி.பொ. மண்டலத்தால், வாழ்க்கை இழந்த கூலி விவசாயிகளுக்கோ அங்கே எவ்வித நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. இந்திய மக்கள் தொகையில் 5% உள்ள குஜராத், இந்திய பங்குச்சந்தையின் 30 சதவீதத்தைக் கையில் வைத்திருக்கிறது. அதே குஜராத் கல்வியிலும், ஆரம்ப மருத்துவத்திலும் பின்தங்கியிருக்கிறது.

சராசரி தனிநபர் வர்மானத்தில், குஜராத்திற்கு இந்தியாவிலேயே 4-வது இடம். மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலோ 15-வது மாநிலமாக இருக்கிறது குஜராத். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 47% பேர் ஊட்டச்சத்துக் குறைவினால் எடைகுறைந்து, சூம்பிக் கிடக்கின்றனர். தொழில் மயமாக்கப்பட்ட மாநிலங்களில், முதல் 3 இடங்களிலேயே குஜராத் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தத் தொழில் மயமாக்கத்தினால் வெளியேற்றப்படும் பழங்குடிகளும் தலித் மக்களும், எவ்வித நிவாரணமும் இல்லாமல் கிராம்பபுறங்களிலிருந்து வெளியேற்றப்படுக் கொண்டிருக்கிறார்கள். ‘சூப்பர் ஹைவே’க்கள் எனப்படும் சாலைகள் குஜராத்தில் இருக்கின்றன; ஆனால், அந்தச் சாலைகளுக்குச் சுங்க வரி செலுத்த பணமில்லாமல், சாலையோரமாக ஒட்டகத்தில் பயணம் போகிறார்கள், மக்கள்.

மறுகாலனியாக்க வளர்ச்சித் திட்டங்களால் தீவிரமடைந்திருக்கும் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள், சுரண்டப்படும் மக்களிடம் கலக உணர்வைத் ‘தானே’ தோற்றுவித்து விடுவதில்லை. தேர்தல் ஆதாயத்துக்காகக் கூட, காங்கிரஸ் கட்சி இந்த வர்க்க முரண்பாடுகளை அம்பலப்படுத்துவதில்லை. ஆளும் வர்க்க நலனைப் பேணுவதில் அந்த அளவுக்கு ஒன்றியிருக்கும் பாரதிய ஜனதா – காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மட்டுமே, அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்துவதால், மக்கள் அரசியல் கண்ணோட்டமும் ஆளும் வர்க்கம் விதிக்கும் வரம்புகளைத் தாண்டுவதில்லை. வர்க்க ஒடுக்குமுறைக்கும் இந்துத்துவ ஒடுக்குமுறைக்கும் இடையிலான உறவுக்கு குஜராத்தில் தெளிவாக அடையாளம் காணத்தக்க பல வேர்கள் உள்ளன.

தொழிற்சங்க இயக்கத்தை முளையிகேயே கருக்கி, முதலாளிகளைத் தம் அறங்காவலர்களாகப் பார்ப்பதற்கு உழைக்கும் மக்களைப் பழக்கிய காந்தியம், வர்க்க ஆதிக்கத்துடன் சாதி ஆதிக்கத்தையும் மறைமுகமாக உறுதிப்படுத்தியது. 1980-களில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இந்தியாவிலேயே முதன் முதலாகப் போராட்டம் நடத்திய மாநிலம் குஜராத் என்பதும், அந்தப் போராட்டத்தின் முன்னணித் தலைவர்களில் மோடியும் ஒருவர் என்பதும் அந்த மாநிலத்தில் நிலவும் ‘சாதி ஆதிக்க’ மனோபாவத்தைப் புரிந்து கொள்ள உதவும் வரலாற்றுச் சான்றுகள். மலம் அள்ள மறுத்த குற்றத்துக்காக, 80-களில் தலித்மக்கள் மீது, கட்டுப்பாடாக சமூகப் புறக்கணிப்பு நடத்திய மாநலமும் குஜராத் தான். ‘மலம் அள்ளுவதைக் கூட, ஒரு தியானமாகச் செய்யமுடியும்’ என்று மோடி பேச முடிவற்கான காரணம் இங்கே இருக்கிறது.

அன்று இட ஒதுக்கீட்டு எதிர்ப்பின் தாக்குதல் இலக்காக தலித்துகள். இன்று குஜராத் கவுரவத்தின் தாக்குதல் இலக்காக முஸ்லிம்கள். இதில் தலித்துகளும் பழங்குடி மக்களும் இந்துத்துவத்தின் காலாட்படையாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் புதிய முன்னேற்றம்.

மறுகாலனியாக்க வளர்ச்சியை ‘உடலாக’வும், இந்துத்துவத்தை அதன் ‘ஆன்மா’வாகவும் ஒருங்கிணைக்க முடிந்ததில்தான், மோடியின் வெற்றி அடங்கியிருக்கிறது. சந்தைக் கடுங்கோட்பாட்டு வாதமும், மதக் கடுங் கோட்பாட்டு வாதமும் இணையும் புள்ளி இது. தனியார்மய ஆதரவு, தொழில் வளர்ச்சி, பங்குச் சந்தை, சிறுவணிகம் என்று தமது வர்க்க நலனைப் பார்க்கவோ ஏங்கவோ பழகியிருக்கும் குஜராத் சமூகத்தைப் பொருத்தவரை, ‘மதச்சார்பின்மை’ என்பது அதிகபட்சம் ஒரு அறக் கோட்படாக மட்டுமே இருக்க இயலும்.

ஆனால், மதச்சார்பின்மை என்பது வெறும் அறம் சார்ந்த விழுமியம் அல்ல. அது ஒரு அரசியல் கோட்பாடு. ஜனநாயகத்துக்கான போராட்டங்களின் மூலம் மட்டும்தான், மதச்சார்பின்மையைத் தனது பண்பாடாக ஒரு சமூகம் கிரகித்துக் கொள்ள இயலும். ஆளும் வர்க்க அரசியலிலும், அரசியலற்ற வணிக மனோபாவத்திலும் ஊறப்போடப்பட்ட ஒரு சமூகம், பாசிசத்தைத் தலை வணங்கி ஏற்றுக் கொள்வது தவிர்க்க இயலாதது.

தாராளவாதக் கொள்கை அளிக்கும் நவீன தொழில் வளர்ச்சியும், கல்வியும், பண்பாடும், தாராளவாத(liberal) விழுமியங்களை உருவாக்கி விடுவதில்லை. மாறாக, பழைமைவாதத்தையும். சுயநலத்தையும், ஆணவத்தையும், பாசிசத்தையும் மட்டுமே அவை வளர்க்கின்றன என்பதற்கு குஜராத்தும், குஜராத்தின் பாசிசத்தை டாலர் ஊற்றி வளர்க்கும் வெளிநாட்டில் குடியேறிய இந்தியர்களும், சான்றாக இருக்கிறார்கள்.

மோடி-5மோடியின் முகமூடிப் பிரச்சாரத்தைப் பார்த்து விட்டு, இது, ‘இந்துத்துவா’ அல்ல ‘மோடித்துவா’ என்கிறார்கள், சில பத்திரிகையாளர்கள். பாசிசம் தனியொரு கொள்கையாக இருப்பதில்லை. இட்லர், முசோலினி, அத்வானி, மோடி போன்ற பாசிஸ்டுகளின் வழியாகத்தான் அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மோடி முகமூடி வருவதற்கு முன்னால், மோடி ஆணுறை வந்துவிட்டது. அரசு விநியோகிக்கும் ஆணுறைகளில் கூடத் தன்னுடைய படத்தை அச்சிட்டிருக்கிறார் மோடி. கேட்பதற்கே அருவருப்பாகத்தான் இருக்கிறது, எனினும் ஆணுறைகளில் அச்சிடத்தக்க ஆண்மகனாக, குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை, மோடியைக் கருதியிருக்கிறது என்பது, அதைக் காட்டிலும் அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

தெகல்கா நிருபரிடம், ‘பாபு பஜரங்கி’ என்ற இந்துத்துவக் கொலைகாரன் வியந்து கூறிய சொற்களை இங்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ”மார்த் ஆத்மி ஹை!” –ஆம்பிள்ளைச் சிங்கம்யா! இந்தச் சொல்லின் வழியே தெறிக்கும் பன்முகம் கொண்ட பொருள், ‘குஜராத்தின் இந்துப் பெரும்பான்மை மோடியைத் தெரிவு செய்தது ஏன்?’ என்பதை விளக்குகிறது.

***

ந்த முகமூடியால், மோடிக்கும், குஜராத்தின் இந்துப் பெரும்பான்மைக்கும் இடையே ஏற்படுத்தியிருந்த ‘வலிமையான பிணைப்பின்’ பொருளும் விளங்குகிறது.

_________________________________________

புதிய கலாச்சாரம், ஜனவரி 2008

__________________________________________

பரிசுத்த ஆவிகளும் பாவிகளின் ஆவிகளும்!

10
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!
திருச்சி கிறித்தவக் கல்லறையில் தீண்டாமைச் சுவர்!

பாவத்தின் சம்பளம் மரணம். மரணத்தைச் சம்பளமாகப் பெற்ற பாவிகளையே மேல்சாதிப் பாவிகள், கீழ்சாதிப் பாவிகள் என இரண்டு ரகமாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள் திருச்சி நகரில்.

திருச்சி – வேர்ஹவுஸ் சுரங்கப்பாதை அருகேயுள்ள கிறித்துவ மயானத்தின் குறுக்கே 600 அடி நீளச் சுவர் ஒன்று சீன நெடுஞ்சுவர் போல நின்று கொண்டிருக்கிறது. சுவரின் தெற்கே ரோமன் கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் கல்லறை; வடக்கே உத்தரிய மாதா கோயில் மயானம் என்றழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோருக்கான கல்லறை.

அந்தச் சுவரை இடிக்கவொட்டாமல் அதற்கு முட்டுக் கொடுத்து நின்று கொண்டிருக்கிறது ஒரு சங்கம். அதன் பெயர் ரோமன் கத்தோலிக்க மேற்குல கிறித்துவ கல்லறைச் சங்கம்.

கல்லறைச் சங்கம் என்பதால் செத்துப் போனவர்களின் ஆவிகள்தான் கமிட்டி உறுப்பினர்களோ என்று எண்ண வேண்டாம். ரத்தமும் சதையுமாக (அப்பமும் ஒயினுமாக) உயிரோடிருக்கும் ‘பாவிகள்’தான் உறுப்பினர்கள். சரியாகச் சொன்னால் வெள்ளாளக் கிறிஸ்தவப் பாவிகள்; இன்னும் குறிப்பாகச் சொன்னால் ”தாழ்த்தப்பட்டோர் வீடுகளில் மட்டுமே இனி சாப்பிடுவேன்” என்று சபதம் செய்திருக்கும் மூப்பனார் அவர்களைத் தலைவராகக் கொண்ட த.மா.கா. எம்.பி. அடைக்கலராஜை உறுப்பினராகக் கொண்டிருக்கும் சங்கம் அது.

உயிரோடிருப்பவர்கள் தங்கள் சொந்த நன்மைக்காக சங்கம் வைத்து நடத்துவதே பெரும்பாடாக உள்ள இந்தக் காலத்தில், பிணங்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு சங்கம் வைத்து நடத்துகிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் நிச்சயமாக ஒரு லட்சியவெறி இருக்க வேண்டும். அந்த வெறி சாதிவெறி; அந்த லட்சியம் தீண்டாமை. அதுவும் நகர்ப்புறத்தில் தனி மயானத்தைச் சுவர் எழுப்பி நிலைநிறுத்துவது என்றால் அது வரம்பு கடந்த சாதித்திமிர்.

சாதித்திமிர் அடையாளமான இந்தச் சுவரை இடித்துத் தள்ளுவோமென திருச்சி நகர புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியும், மக்கள் கலை இலக்கியக் கழகமும் – அறிவித்துள்ளன. எனினும், இந்தச் சுவர் ஏற்கெனவே இடித்துத் தள்ளப்பட்டு மீண்டும் ‘உயிர்த்தெழுந்த’ சுவர்தான்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற அந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தொடுக்கப்பட்ட சிவில், கிரிமினல் வழக்குகள் சாதி – மதம் – சொத்துடைமை – சட்டம் இவற்றுக்கிடையிலான உள் உறவுகள் குறித்த ஒரு புரிதலை நமக்கு அளிக்கின்றன.

**

”14.3.76 அன்று காலை சுமார் 7 மணியளவில் பாதிரியார் சைமன், பாதிரியார் ஜான் பீட்டர் ஆகியோர் தலைமையில் ராஜமாணிக்கம், சந்தியாகு, டேவிட், பால்ராஜ் மற்றும் 17 பேர் கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் கல்லறைக்கும், அரிசன கிறித்தவர்கள் கல்லறைக்கும் இடையே இருந்த மேற்குல கிறித்துவர்களுக்குச் சொந்தமான சுவரை இடிக்கும் நோக்கத்துடன் சட்ட விரோதமாகக் கூடினர்.”

”கையில் பயங்கரமான ஆயுதங்களை வைத்திருந்த சுமார் 200 முதல் 300 பேர் அடங்கிய அந்தக் கும்பல் சுவரை இடித்துத் தள்ளியது. பிறகு அந்தக் கும்பல் மேற்குல கிறித்தவர்கள் மயானத்திற்குள் அத்துமீறி நுழைந்தது. பாதிரியார் சைமனும், ஜான் பீட்டரும் சில நிமிடங்கள் உரையாற்றினர். பின்னர் அந்தக் கூட்டம் கலைந்து சென்றது.”

கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் சங்கம் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ”சுவர் இடிப்புப் போராட்டம்” பற்றி மேற்கண்டவாறு கூறுகிறது.

மேற்குல கிறித்தவர் சங்கம் குற்றவியல் நீதிமன்றதில் வைத்த வாதம் கீழ்வருமாறு:

”எங்களது மயானம் ஒரு தனியார் மயானம். கத்தோலிக்க மேற்குல கிறித்தவர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே அங்கே புதைக்க முடியும். எமது சங்கத்தின் உறுப்பினர்கள் எல்லாம் உயர்சாதி இந்துக்களாக இருந்து பின்னர் கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள்.

தாழ்த்தப்பட்டவர்களாக இருந்து கிறித்தவ மதத்திற்கு மாறிவர்களுடைய கல்லறை அருகாமையில் உள்ளது. இரண்டுக்கும் இடையிலான சுவர் பன்னெடுங்காலமாக உள்ளது. இந்தச் சுவர் மேற்குல கிறித்தவர் சங்கத்துக்கு சொந்தமானது. எங்களுக்குச் சொந்தமான சுவரை அவர்கள் இடித்து அத்துமீறி நுழைந்தது கிரிமினல் குற்றமாகும்.”

இந்த வழக்கை விசாரித்த முதல் வகுப்பு நீதிமன்ற நடுவர், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு: 148, 447, 427 ஆகியவற்றின் கீழ் ‘குற்றவாளி’களுக்குத் தலா ரூ. 50 அபராதமும், மூன்று வாரம் கடுங்காவல் தண்டனையும் விதித்துத் தீர்ப்புக் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் இந்தத் தீர்ப்புக்கு எதிராக செசன்சு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். ”இடித்துத் தள்ளப்பட்ட சுவர் எங்களுக்குச் (தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு) சொந்தமானது. கிறித்தவ மக்களிடையேயான சமத்துவம் என்ற கருத்துக்கு எதிரானதாக இந்தக் குறுக்குச் சுவர் இருந்ததால் அதை இடித்துத் தள்ளினோம்” என்று வாதிட்டனர்.

மேற்குல கிறித்தவ மயானத்திற்கான நிலம் வாங்கப்பட்டதற்கான கிரயப் பத்திரத்தின் நகலையும் அவர்கள் (13.3.1879 தேதியிட்டது) தாக்கல் செய்தனர். அந்தப் பத்திரத்தில் மேற்படி காலி மனையின் வடக்கு எல்லை ”பரயன் கல்லறை சுவர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணத்தை செசன்சு நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டது. சுவர் மேற்குலத்தினருக்குத்தான் சொந்தம் என்பதற்கோ, சுவரை அவர்கள் தான் மராமத்து செய்து பராமரித்து வந்தார்கள் என்பதற்கோ உரிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்.

ஆனால் இடிக்கப்பட்ட சுவர் மீண்டும் எழுப்பப்படாமல் இல்லை. மேற்குல கிறித்தவ மயானமும் புறம்போக்குதான் என்ற அடிப்படையில் மீண்டும் அங்கே சுவர் எதுவும் எழுப்பக் கூடாது என 1978-இல் மாவட்ட ஆட்சியர் ஒரு உத்தரவு பிறப்பித்தார். ஆனால் அந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் இடைக்காலத் தடை பெற்று மீண்டும் சுவரை எழுப்பி விட்டனர் மேல்சாதி வெறியர்கள்.

மேற்குல கிறித்தவக் கல்லறை நிலம் தனியார் நிலமா, அரசு புறம்போக்கா? மாவட்ட ஆட்சியர் அதனை அரசுப் புறம்போக்கு என்று கூறுவதால் அரசுக்கெதிராக மேற்குல கிறித்தவர்கள் வழக்கு தொடுத்திருக்க வேண்டும்.

இங்கேதான் அவர்களது நரித்தனம் வேலை செய்கிறது. அரசுக்கெதிராக வழக்கு தொடுத்து தோற்று விட்டால் நிலம் பறி போவது மட்டுமல்ல, சுவரும் இருக்காது, சுவரைக் காவல் காக்க கல்லறைச் சங்கமும் இருக்காது.

எனவே அரசுக்கெதிராக வழக்குத் தொடுப்பதற்குப் பதிலாக தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கெதிராக சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

”வழக்கிடைச் சொத்து (மேற்குலக் கல்லறை நிலம்) சாதி கிறித்தவர்களுக்குச் சொந்தமானது…. எதிர்வாதிகளோ அரிசன கிறித்தவர்களின் பிரதிநிதிகள். அவர்களுடைய மயானம் புறம்போக்கு ஆகும். இரண்டுக்குமிடையில் உள்ளே காம்பவுண்டு சுவர் உள்ளது. தேவையில்லாத சாதி உணர்வுகள் ஏற்பட்டு மேற்படி எல்லைக் கோட்டை இடித்தனர். வாதிகளின் (மேற்குலத்தினரின்) சொத்தில் அரிசன கிறித்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்தால் அமைதி குலையும். தேவையற்ற குழப்பங்கள் உண்டாகும். எனவே அந்நியர்கள் (அரிசன கிறித்தவர்கள்) எமது நிலத்தை ஆக்கிரமிக்காமலிருக்க நிரந்தர உறுத்துக் கட்டளை (Permanent injunction) பிறப்பிக்க வேண்டும்” என மாவட்ட சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றியும் பெற்று விட்டனர்.

அரசு தரப்பில் ஆஜரான வருவாய்த்துறை அதிகாரிகள், 1924-ம் ஆண்டு வருவாய்த்துறை ஆவணங்களின் படி இது அரசு புறம்போக்குதான் என்றும், ஆனால் இது மேற்குல சங்கத்தின் மேற்பார்வையில் இருந்து வருவதும், நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மயானமாக உபயோகப்படுத்தப்பட்டு வருவதும் உண்மை என்று கூறியுள்ளனர். அது மட்டுமல்ல, இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கான விசாரணை நடந்தது என்றும், ஆனால் அது தொடர்பான கோப்புகளைக் காணவில்லை என்றும் அவர்கள் கைவிரித்து விட்டனர்.

புறம்போக்கு என நிரூபிக்க அரசு சாட்சிகள் உரிய ஆதாரம் ஏதும் தராததால் நிலம் மேற்குல கிறித்தவ சங்கத்திற்கே சொந்தம் என திருச்சி மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. “அந்நியர்கள் யாரும் தங்கள் மயானத்திற்குள் நுழையக் கூடாது என்றுதான் மேற்குல கிறித்தவர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு கூறுவது தீண்டாமைக் குற்றம் ஆகாது. மேலும், பாரம்பரியமாக தாழ்த்தப்பட்டோர் யாரும் அங்கே பிணத்தைப் புதைப்பதில்லை; மேற்குல கிறித்தவ சங்கத்தில் அவர்கள் உறுப்பினராகவும் இல்லை. எனவே தங்கள் சங்க உறுப்பினர்கள் மட்டுமே மயானத்தைப் பயன்படுத்தலாமென மேற்குலக் கிறித்தவர்கள் கூறுவது தீண்டாமைக் குற்றம் ஆகாது; அது அவர்களுடைய மரபுரிமை ஆகும்” – என்றும் சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

இவ்வாறாக தீண்டாமைக்கெதிரான ஒரு போராட்டத்தை சட்டம் கேலிக்கூத்தாக்கி விட்டது.

தீண்டாமை பாராட்டுவது கிரிமினல் குற்றம்; அதே நேரத்தில் சொத்துரிமை அடிப்படை உரிமை. இதுதான் நம் அரசியல் சட்டம். ”தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளே நுழையக் கூடாது” என்று எழுதி வைத்தால் அது தீண்டாமைக் குற்றம். ”அந்நியர்கள் அத்துமீறி பிரவேசிக்கக் கூடாது” என்று கூறுவது உரிமை. யார் அந்நியன் என்பதை சொத்துக்கு உரியவன்தான் முடிவு செய்ய வேண்டும். ”அந்நியர்கள்” தாழ்த்தப்பட்டவர்களாக இருக்க நேர்ந்தால் அதற்காக அதனை தீண்டாமைக் குற்றம் என்று சொல்லிவிட முடியாது. சொத்துரிமை சாதியைப் பாதுகாப்பது இப்படித்தான்.

கிறித்தவ மதக் கோட்பாடுகளின் படி சாதி என்பது கிடையாது. ஆனால் இந்த மயானப் பிரச்சினையில் ”அது தனியார் சொத்து; அதில் மதம் எப்படித் தலையிட முடியும்” என்கிறது ரோமன் கத்தோலிக்க மத நிறுவனம். அரசு நிலமாக இருந்தால் ”நடவடிக்கை எடு” என்று அரசைக் கோரப் போகிறோம். அங்கே மதத்துக்கு வேலையில்லை. ஆனால் இடம் தனியாருக்கு – கிறித்தவருக்கு – சொந்தமாக இருக்கும் போது பிஷப் அல்லவா நடவடிக்கை எடுக்க வேண்டும்? ஆனால் இடித்த சுவரை மீண்டும் கட்ட பணம் கொடுக்கிறார் பிஷப். பிஷப்புக்கு பைபிள் புனிதம்தான்; ஆனால் தனிச்சொத்து அதைவிடப் புனிதமாயிற்றே!

திருச்சி மயானப் பிரச்சினையில் மட்டுமல்ல, தீண்டாமைக்கெதிரான போராட்டம் ஒவ்வொன்றிலும் சொத்துரிமை குறுக்கிடுகிறது. கிராமப்புற கோயில் நுழைவுப் போராட்டங்களின் போது தீண்டாமையைச் சட்டப்படி நியாயப்படுத்த முடியாத ஆதிக்க சாதியினர் ”இது நாங்க பணம் போட்டு கட்டின கோயில். எங்களுக்கு விருப்பம் உள்ள ஆட்களைத்தான் உள்ளே விடுவோம். உங்களுக்கு தனிக்கோயில் கட்டிக்கிங்க” என்று சொத்துரிமையைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள்.

ஒரு புரட்சியின் மூலம் உடைமை உறவுகளில் மாற்றம் கொண்டு வராமல் சாதி – தீண்டாமையை ஒழிக்க முடியாது என்ற உண்மையைத்தான் இவை அனைத்தும் நிரூபிக்கின்றன.

புரட்சி செய்வது கம்யூனிஸ்டுகளின் வேலை; சாதி – தீண்டாமையை ஒழிப்பது எங்கள் வேலை – என்று புரட்சிக்கும் சாதி ஒழிப்புக்குமிடையில் கனமான சுவரொன்றை சில அறிஞர்களும், தலித் தலைவர்களும் எழுப்பியிருக்கிறார்கள். பல காரணங்களால் இது அவர்களுக்கு வசதியாக இருக்கலாம்.

ஆனால் இந்தச் சுவரை இடிக்காமல் கல்லறைக் காம்பவுண்டு சுவர்களை நிரந்தரமாக இடித்துத் தள்ளவியலாது.

______________________________________________________

புதிய கலாச்சாரம், மார்ச் 1998

______________________________________________________

ஜேப்பியாருக்கு ஆப்பு!

10

மிழகம் அறிந்த சாராய வியாபாரியாக இருந்த ஜேப்பியார் இன்று தமிழகத்தின் முன்னணி கல்வி தந்தையாக இருக்கிறார். ஜே.பி.ஆருக்கு மொத்தம் ஏழு பொறியியல் கல்லூரிகளும், ஒரு தொழில்நுட்பக் கல்லூரியும், ஒரு பல் மருத்துவக்கல்லூரியும், ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது. தனது  கல்வி வியாபாரத்தை மேலும் மேலும் விரிவுபடுத்தி வரும் ஜேப்பியார் சென்ற ஆண்டு தன்னுடைய பெயரில் ஒரு புதிய கல்லூரியை திறந்துள்ளார்.

சுங்குவார்சத்திரத்திற்கு அருகில் சுமார் ஆயிரம் ஏக்கர் நிலத்தை வளைத்துப்போட்டு அங்கே தான் இந்த புதிய கல்லூரியை துவங்கியுள்ளார். அருகிலேயே ஒரு ஸ்டீல் பிளான்டையும், வாட்டர் பிளான்டையும் நிறுவியுள்ளார். அத்துடன் தீம் பார்க் ஒன்றையும் கட்டி வருகிறார். இது தவிர சொந்த ஊரான முட்டத்தில் ஒரு சிறிய துறைமுகத்தையும் கட்டி வருகிறார்.

மேற்கூறிய புதிய கல்லூரியில்தான் பணிரெண்டு தொழிலாளர்கள் இறந்து போயுள்ளனர். கல்லூரியின் உள்அரங்கை கட்டிக்கொண்டிருக்கும் போது கட்டிடம் இடிந்து விழுந்து தொழிலாளர்கள் விபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அது விபத்து அல்ல. கொலை. கல்விக் வியாபாரியான ஜேப்பியாரின் லாபவெறிக்காக அந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

கல்லூரியின் உள் அரங்கிற்கான கட்டுமான வேலைகளை செய்தது வெளி நிறுவனங்கள் அல்ல. ஜேப்பியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் தான் அந்த வேலைகளை செய்தது. வேகமாக கட்டினால் கூட மூன்று மாதங்கள் பிடிக்கக்கூடிய இந்த வேலையை மூன்றே வாரங்களில் கட்டி முடிக்க வேண்டும் என்று ஜேப்பியார் கொடுத்த டார்ச்சரால் வேலைகள் மின்னல் வேகத்தில் நடந்தன. கட்டிடங்கள் இடிந்துவிழ காரணம் இது தான். ஈரத்துடன் கொட்டப்பட்ட சிமெண்ட் கலவை இறுகி காய்ந்து உறுதியடையும் முன்பே அதன் மீது அடுத்தக்கட்ட வேலைகளை துவங்கியதால் காய்ந்தும் காயாமலும் இருந்த கட்டிடச் சுவர்களும், தூண்களும் சரிந்து விழுந்தன. பன்னிரெண்டு தொழிலாளர்கள் இறந்து போனார்கள். இது விபத்தா கொலையா?

கல்வி சாம்ராஜ்யத்தையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் இத்தகைய ரவுடி ஜேப்பியாருக்கு எதிரான போராட்டத்தில் தான் பு.ஜ.தொ.மு வெற்றி பெற்றிருக்கிறது. சட்டப் போராட்டத்தில் பு.ஜ.தொ.மு வின் இரண்டாவது கதை இது.

சத்யபாமா பண்ணையார்க் கழகம் !

’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’யின் தற்போதைய மாநில அமைப்புச் செயலாளரும்,  சத்யபாமா கல்லூரி பு.ஜ.தொ.மு ஓட்டுநர்கள் மற்றும் டெக்னிசியன்கள் சங்கத்தின் செயலாளருமான தோழர் வெற்றிவேல் செழியன் 2005-ம் ஆண்டு சத்யபாமா பல்கலைக் கழகத்தில் பேருந்து ஓட்டுனராக பணிபுரிந்தார்.

சத்யபாமாவில் பணிபுரியும் துப்புறவுத் தொழிலாளி முதல் லேப் டெக்னீசியன்கள் வரை அனைவரும் ஜேப்பியார் அய்யாவை பார்த்தால் வணக்கம் வைக்க வேண்டும். யார் மீதாவது அய்யாவுக்கு கோபம் வந்துவிட்டால் கையை நீட்டி கன்னத்தில் நாலு அறைவிடுவார், அதையும் வாங்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் கேவலமான கெட்ட வார்த்தைகளையும் கொட்டுவார், அதையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். பண்ணையார் வீசியெறியும் காலனா அரையனா பிச்சைக் காசை போல அய்யா போடுவது தான் சம்பள உயர்வு.

கேன்டீனில் மதிய உணவு உண்டு. ஆனால் தொழிலாளர்களுக்கு என்று தனியாக இல்லை. மற்றவர்கள் உண்பது போக என்ன மிச்சமோ அவை தான் தொழிலாளர்களுக்கான மதிய உணவு. நிர்வாகத்தை எதிர்த்துப் பேசுபவர்களை அல்ல முணுமுணுப்பவர்களை கூட இருட்டறையில் வைத்து குமுற சிறப்பான முறையில் ஊட்டி வளர்க்கப்பட்ட தொழில்முறை குண்டர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்னையார் கம்பெனி தான் நாகரீகமான முறையில் பல்கலைக்கழகம் என்றழைக்கப்படுகிறது.

இத்தகைய மோசமான வேலை நிலைமையின் கீழ் அடிமைகளாக வேலை செய்த தொழிலாளர்கள் இவற்றுக்கெதிராக குமுறிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தான் வெற்றிவேல்செழியனுக்கு பு.ஜ.தொ.மு சங்கம் அறிமுகமாகிறது. அவர் தனது சக தொழிலாளிகளுக்கு சங்கத்தை அறிமுகம் செய்கிறார்.

அதிரடியான வேலை நீக்கம் !

2005-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எந்தவித முன்னறிவிப்புமின்றி வெற்றிவேல்செழியன் வேலையிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். வேலை நீக்கத்திற்கு நிர்வாகம் கூறிய காரணம் ஒழுங்கீனமாக இருக்கிறார் என்பது. ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. ஓட்டுனர்களிடையே சங்கம் துவங்க முயற்சித்தார் என்பது தான் உண்மையான காரணம். ஒரு தொழிலாளியை இவ்வாறு முன்னறிவிப்பின்றி வேலைநீக்கம் செய்தால் தொழிற்தகராறு சட்டம் 1947 பிரிவு 2 ஏ வின் கீழ் தொ.உ.ஆணையரிடம் (ACL) முறையிடலாம்.

அதன்படி தொ.உ.ஆணையரிடம் தொழிற்தாவா எழுப்பப்பட்டது. பு.ஜ.தொ.மு தனது வாதத்தில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்கள் இவைதான்.

வெற்றிவேல் செழியன் எந்த முன் அறிவிப்புமின்றி அதிரடியாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார், ஒரு தொழிலாளி எவ்வளவு பெரிய தவறு செய்திருந்தாலும் அவரிடம் முறையாக விளக்கம் கேட்டிருக்க வேண்டும், குற்றத்தை நிரூபிக்க உள்விசாரணை நடத்தியிருக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை பாதுகாத்துக்கொள்ள அனைத்து வாய்ப்புகளையும் தந்திருக்க வேண்டும்;

இவ்வாறெல்லாம் நடந்து கொண்ட பிறகு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதை தொழிலாளியிடமும் முறையாக அறிவித்து அதன் பிறகு தான் வேலை நீக்கம் செய்ய வேண்டும். இது தான் சட்டப்படியான நடைமுறை. ஆனால் சத்யபாமா நிர்வாகம் இவ்வாறெல்லாம் நடந்து கொள்ளவில்லை மாறாக வெறும் வாய்மொழி உத்தரவின் மூலம் அதிரடியாக வேலையிலிருந்து நீக்கியிருக்கிறது. இது சட்டவிரோதமான நடவடிக்கை. எனவே இந்த வேலைநீக்க நடவடிக்கையை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தொழிலாளர் உதவி ஆணையரின் நடுநிலைமை !

வழக்கு விசாரணை 2006-ம் ஆண்டு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. பு.ஜ.தொ.மு வின் வாதத்திற்கு பதிலளிக்கிறேன் என்று நிர்வாகம் அடிமுட்டாள்த்தனமான ஒரு வேலையை செய்தது. தொ.உ.ஆணையரை அணுகி ஒரு கடிதத்தை கொடுத்தது. அக்கடிதத்தில் வெற்றிவேல் செழியன் சங்கம் ஆரம்பிக்க முயற்சி செய்தார் எனவே தான் வேலையிலிருந்து நீக்கினோம் என்கிற உண்மையான காரணத்தை கூறியிருந்தனர். உடனே பதறிப்போன தொ.உ.ஆணையர் இப்படி எல்லாம் கடிதம் கொடுத்தீர்கள் என்றால் நீங்கள் தான் மாட்டிக்கொள்வீர்கள் என்று கூறி அந்த கடிதத்தை பத்திரமாக நிர்வாகத்தின் கைகளிலேயே திணித்தார்.

பு.ஜ.தொ.மு மனுதாரர். நிர்வாகம் எதிர்மனுதாரர். எதிர்மனுதாரர் ஒரு கடிதத்தை கொடுத்தால் அதை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். அதே போல மனுதாரர் அளிக்கும் அனைத்து கடிதங்களையும் எதிர் மனுதாரருக்கு வழங்க வேண்டும். இது தொ.உ.ஆணையரின் வேலை. ஆனால் தொ.உ.ஆணையர் அந்த கடிதத்தை பு.ஜ.தொ.மு விற்கு கொடுக்காமல் மறைத்து விட்டார். கேட்டதற்கு அவ்வாறு எந்த கடிதமும் கொடுக்கவே இல்லை என்று மறுத்து விட்டார். அந்த கடிதம் மட்டும் அன்றே கிடைத்திருந்தால் ஜேப்பியாரை அன்றைக்கே மண்ணைக் கவ்வவைத்திருக்கும் பு.ஜ.தொ.மு. முதலாளிகள் தொழிலாளிகளோடு மோதும் போதெல்லாம் முட்டாள்தனங்களையே அதிகமாக செய்கிறார்கள் என்பதால் இது போன்ற முட்டாள்தனங்களுக்கு பஞ்சமிருக்காது.

இவ்வாறு கடிதம் கொடுத்தால் பிரச்சினை என்றதும் சில நாட்களில் வேறு ஒரு கடிதத்தை கொடுத்தனர். அதில் ஒரு புதிய காரணத்தை கூறினார்கள். அதாவது வெற்றிவேல்செழியனை நாங்களாக வேலை நீக்கம் செய்யவில்லை அவராகவே தான் சொல்லாமல் கொள்ளாமல் வேலையைவிட்டு நின்று விட்டார் என்றார்கள். தன்னிச்சையாக வேலையிலிருந்து நின்றால் நாங்கள் ஏன் இங்கே வருகிறோம், வழக்கு போடுகிறோம் ? மேலும் நீங்கள் முதலில் கூறிய காரணம் (ஒழுங்கின்மை) வேறு, இப்போது கூறுகின்ற காரணம் வேறு. இதில் எது உண்மை ? எதுவும் உண்மை அல்ல. நிர்வாகம் சொல்வது பொய். தொழிலாளியை நிர்வாகம் தான் வேலை நீக்கம் செய்திருக்கிறது அவராக வேலையிலிருந்து நிற்கவில்லை என்றது பு.ஜ.தொ.மு.

தொ.உ.ஆணையரிடம் நடந்த சமரச பேச்சுவார்த்தையிலேயே ஓராண்டு ஓடிவிட்டது. ஆனால் சமரசம் ஏற்படவில்லை. எனவே தொ.உ.ஆணையர் சமரச முறிவு அறிக்கை தயாரித்து இருவருக்கும் நகல் வழங்கி வழக்கை தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டார்.

தொழிலாளர் நீதிமன்றத்தில்.

தொ.நீதிமன்றத்தில் வழக்கு 2007-ம் ஆண்டு துவக்கத்தில் விசாரணைக்கு வருகிறது. விசாரணைக்கு வந்த நாளிலிருந்து சரியாக ஓர் ஆண்டு வரை நிர்வாகம் நேரில் வரவே இல்லை. எதிர் மனுதாரர் என்கிற வகையில் பதில் மனுவை போடுவதற்காக கூட வரவில்லை. இழுத்தடிக்கும் நோக்கத்துடன் காலம் கடத்தினார்கள். இவ்வாறு இழுத்தடிப்பது மட்டும் தான் முதலாளிகளுக்கு தெரிந்த ஒரே ராஜதந்திரம். அனைத்து முதலாளிகளும் இவ்வாறு தான் செய்கிறார்கள். விசாரணைக்கு வராமல் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிப்பதன் மூலம் தொழிலாளியை வறுமையில் உழல விட்டு வழக்கை வாபஸ் வாங்கிக்கொண்டு ஓட வைப்பதற்கான வேலை தான் இது.

ஓராண்டாக வராத ஜேப்பியார் கம்பெனி 2008 ஜூன் மாதத்தில் தனது பதில் மனுவை தாக்கல் செய்தது. அப்போதும் மனு போட்டதோடு சரி அடுத்தக்கட்ட விசாரணைக்கெல்லாம் வரவே இல்லை. அதன் பிறகு 2010-ம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளாக விசாரணைக்கு வரவில்லை. அப்போது வழக்கு விசாரணைக்கு வந்து ஐந்து ஆண்டுகளாகியிருந்தது !

ஜேப்பியார் எவ்வளவு பெரிய ஆள். ஐந்து ஆண்டுகளாக இப்படியே ஓடிப்பிடித்து ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு பெரிய பிஸ்தா !

சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு புதிய முயற்சி செய்தார்கள். நாங்கள் ஏற்கெனவே ஒரு மனு அளித்திருக்கிறோம் அதில் சில விசயங்களை கூறாமல் விட்டுவிட்டோம், அவற்றையும் இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் எனவே ஒரு கூடுதல் மனுவை போடுகிறோம் என்று கூடுதல் மனு போட்டார்கள்.

எங்களுடைய முந்தைய மனுவில் அவர் வேலையிலிருந்து தானாகவே நின்றுவிட்டதாக கூறியிருந்தோம் இப்போது கூடுதலாக இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறோம். அவருடைய வேலையில் எங்களுக்கு திருப்தி இல்லை. பேருந்தை ஓட்டும் போது விபத்தை ஏற்படுத்தும் வேகத்தில் (rash driving)  ஓட்டுகிறார், வண்டி ஓட்டிக்கொண்டிருக்கும் போதே (அதாவது மாணவர்களையும் ஆசிரியர்களையும் அழைத்து வரும் போது மற்றும் அழைத்து போகும் போது) சாலை ஓரங்களில் வண்டியை நிறுத்திவிட்டு போண்டா, பஜ்ஜி சாப்பிடுகிறார்.

இவ்வாறெல்லாம் நடந்துகொண்டதால் எங்களுக்கு அவருடைய வேலையில் திருப்தி இல்லை. மேலும் பல்கலைக்கழக கேன்டீனுக்காக நாங்கள் நடத்திய காய்கறி குடோனிலிருந்து காய்கறிகளையும் திருடியிருக்கிறார். எனவே இந்த அனைத்து காரணங்களாலும் இவரை வேலையிலிருந்து நீக்கினோம் என்று கூடுதல் மனுவில் கூறினார்கள்.

முட்டாள் முதலாளிகள் !

பு.ஜ.தொ.மு தனது வாதத்தில் நிர்வாகத்தின் வாதத்தை பொய் என்று மறுத்து வாதிட்டது. தொ.உ.ஆணையரிடம் கூறிய பதிலுறையில் இங்கே கூறிய காரணத்தை கூறவில்லை. அதன் பிறகு தொ.நீதிமன்றத்திலும் கூறவில்லை. அத்துடன் இரண்டாண்டுகளாக வழக்கு விசாரணைக்கே ஆஜராகாமல் இழுத்தடித்துவிட்டு திடீரென்று ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்து இவை தான் வேலை நீக்கத்திற்கு உண்மையான காரணங்கள் என்று கூறுவது பொய் என்று கூறியது.

இதை மறுத்த நிர்வாகம், இல்லை இதற்கு முன்பே இந்த காரணங்களை கூறியிருக்கிறோம் அதை தொ.உ.ஆணையரும் பதிவு செய்திருக்கிறார் என்று வாதிட்டது. 2006-ல் தொ.உ.ஆணையரிடம் நடந்த சமரச பேச்சு வார்த்தையின் போது இந்த குற்றச்சாட்டுகளை கூறியதாகவும். அந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த போது சமரச அதிகாரி கொடுத்த சமரச முறிவு அறிக்கையில் இந்த காரணங்களை பதிவு செய்துள்ளார் என்றும் கூறி அதற்கு சான்றாக ஓரு கடிதத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அந்த கடிதத்தில் வெற்றிவேல் காய்கறி திருடியது உட்பட நிர்வாகம் கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டு தொ.உ.ஆணையரின் கையெழுத்திடப்பட்டிருந்தது.

ஆனால் தொ.உ.ஆணையர் பு.ஜ.தொ.மு வுக்கும் ஒரு பிரதியை கொடுத்திருப்பார் என்பதை இந்த முட்டாள்கள் மறந்துவிட்டார்கள். பு.ஜ.தொ.மு விடம் கொடுக்கப்பட்ட மற்றொரு பிரதியில் அவ்வாறு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆக என்ன நடந்திருக்கிறது ? ஒன்பது கல்லூரிகளை நடத்தும் இந்த முட்டாள்கள் தொ.உ.ஆணையரின் பெயரில் போலி ஆவணம் தயாரித்து அதில் தமக்கு விருப்பமான குற்றச்சாட்டுகளை எல்லாம் ஏற்றியிருக்கிறார்கள் !

மனுதாரர், எதிர் மனுதாரர் ஆகியோரின் மனுக்கள், கடிதங்கள், ஆணையரின் உத்தரவுகள் அனைத்தும் இரண்டு தரப்புக்கும் வழங்கப்படும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் போலி ஆவணம் தயாரித்து வசமாக மாட்டிக் கொண்டார்கள். ஏற்கெனவே ஒரு முறை இதே போன்ற ஒரு முட்டாள்தனத்தை செய்யவிருந்து தொழிலாளர்களுக்கு ’உதவி’ செய்ய வேண்டிய ஆணையர் முதலாளிக்கு உதவியதால் அந்த கடிதம் பு.ஜ.தொ.மு வின் கைகளுக்கு கிடைக்காமல் போனது. அப்படியிருந்தும்  கூட இவர்களுக்கு அறிவு வரவில்லை. மீண்டும் அதே தவறை செய்து மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த கடிதம் போர்ஜரி என்பதை அம்பலமாக்க பு.ஜ.தொ.மு மேலும் சில வாதங்களை வைத்தது. இந்த கடிதம் உண்மையானது என்றால் ஏன் முதல் மனுவிலேயே குறிப்பிடவில்லை ? மேலும், தொ.உ.ஆணையர் சமரச முறிவு அறிக்கை கொடுத்தது 2007-ல் இப்போது 2011 கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த கடிதத்தை தாக்கல் செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ? இதற்கு நிர்வாகத்தால் பதில் கூற முடியவில்லை. கடிதம் போலி என்பது அம்பலமானதால் அந்த முயற்சியை விட்டுவிட்டு அடுத்ததற்கு தாவினர்.

பொய் மேல் பொய்! புகார் மேல் புகார் !!

பழைய குற்றச்சாட்டுகளை எல்லாம் விட்டுவிட்டு இப்போது வேறு ஒரு புதிய குற்றச்சாட்டை தூக்கிக்கொண்டு வந்தது நிர்வாகம். இவருடைய கட்டுப்பாடில்லாத ட்ரைவிங்கால் ஒரு பெண் பேராசிரியையின் கருவே கலைந்துவிட்டது. மாணவர்களும் அந்த பெண் பேராசிரியையும் இவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள் என்றது. அந்த மாணவர்கள் மற்றும் பெண் பேராசிரியையின் பெயரோடு அவர்களிடமிருந்து புகார் கடிதம் வாங்க வாருங்கள் என்று கூறியது பு.ஜ.தொ.மு. வாங்கித் தருகிறோம் என்று கூறியவர்களிடமிருந்து அதற்கு பிறகு எந்த பதிலும் இல்லை.

பு.ஜ.தொ.மு வின் வாதங்கள் அசைக்க முடியாத உறுதியுடன் இருந்ததால் அதற்குமேல் நிர்வாகத் தரப்பை அனுமதிக்காமல் நீதிமன்றம் குறுக்கிட்டு தொழிலாளியை விசாரணையின்றி ஏன் வேலையிலிருந்து நீக்கினீர்கள் என்று கேட்டது. அதற்கு இல்லை இல்லை அவருக்கு முறையாக விசாரணைக்கான கடிதம் அனுப்பப்பட்டது அவர் தான் வரவில்லை என்றனர். எப்படி அனுப்பினீர்கள் என்று கேட்டால். விரைவு தபால் மூலம் என்றார்கள். சரி அவ்வாறு அனுப்பியதற்கான இரசீதை ஒப்படையுங்கள் என்றால் இல்லை என்கிறார்கள். பொய் பொய் பொய் அனைத்திலும் பொய்.

முதலில் அவரே வேலையைவிட்டு நின்றுவிட்டதாக கூறினார்கள், பிறகு வேலையில் திருப்தி இல்லாததால் நாங்கள் தான் நீக்கினோம் என்றார்கள். பிறகு ரேஸ் டிரைவிங், போன்டா பஜ்ஜி தின்றார், காய்கறி திருடினார் என்றார்கள். அதற்கு போர்ஜரி வேலை செய்து ஒரு கடிதம் தயாரித்து மாட்டிக் கொண்டார்கள். அதன் பிறகு, விசாரணைக்கு அழைத்தோம் அவர் தான் வரவில்லை அதற்கான கடிதத்தை விரைவு தபாலில் அனுப்பி வைத்தோம் என்றார்கள். இப்போது பேராசிரியையும், மாணவர்களும் புகார் கொடுத்ததாக கூறுகிறார்கள். நீதிமன்றத்தில் ஜேப்பியார் தரப்பு இவ்வாறு மாறி மாறி பேசிக்கொண்டிருந்தது எல்லாம் பச்சைப்புளுகுகள் என்பது அனைவருக்குமே அப்பட்டமாகத் தெரிந்தது.

2011-ம் ஆண்டுடன் இரு தரப்பு வாதங்களும் மேற்கண்ட புளுகுகளுடன் முற்று பெற்றது. இனிமேல் நீதிமன்றம் தான் தீர்ப்பளிக்க வேண்டும். இந்நிலையில் நீதிபதி மாற்றலாகி போய்விட்டார். இதன் காரணமாக அடுத்த சில மாதங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. மீண்டும் 2012-ம் ஆண்டில் புதிய நீதிபதி வருகிறார். அவர் விசாரணையை மீண்டும் முதலிலிருந்து துவங்கி விரிவாக விசாரிக்கிறார். இவருடைய தலைமையின் கீழ் நான்கு மாதங்களாக நடந்த விசாரணையில் பு.ஜ.தொ.மு மீண்டும் முதலிலிருந்து தனது வாதங்களை வைத்தது அதில் வெற்றிவேல் தரப்பின் நியாயங்களை ஆணித்தரமாக நிரூபித்தது. ஜேப்பியார் தரப்பும் தனது பழைய பொய்ளை ஆரம்பம் முதல் அப்படியே வாசித்தது.

தீர்ப்பு – ஜேப்பியாருக்கு ஆப்பு !

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி கீழ்கண்டவாறு தீர்ப்பளித்தார். வெற்றிவேல்செழியனை நிர்வாகம் வேலைநீக்கம் செய்தது சட்டவிரோதமானது. விளக்கம் விசாரணை என்று எதுவும் இல்லாமல் வேலையிலிருந்து நீக்கியிருப்பது செல்லத்தக்கதல்ல. எனவே வேலையிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அவருக்கு முழுமையான பின் சம்பளத்தை வழங்க வேண்டும். சம்பளம் மட்டுமின்றி போனஸ் சீருடை உள்ளிட்டு என்னென்ன சலுகைகள் உள்ளதோ அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும். அத்துடன் வேலையிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த தீர்ப்புகெதிராக மேல்முறையீடு செய்வதாக இருந்தாலும் இவற்றை வழங்கியாக வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

சில எலும்புத்துண்டுகளும் ஒரு சவாலும் !

தோழர் வெற்றிவேல்செழியனை போல டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் பலர். முதலில் அவர்களுக்காகவும் தான் வழக்கு நடந்தது. ஆனால் ஏழு ஆண்டுகள் நடந்த இந்த சட்டப் போராட்டத்தில் அனைவருமே நிர்வாகத்திடம் விலை போய்விட்டனர். ஜேப்பியார் விட்டெறிந்த சில ஆயிரங்களுக்காகவும், லட்சங்களுக்காகவும் துரோகமிழைத்து சரணடைந்துவிட்டனர். ஆனால் வெற்றிவேல் செழியன் எதற்கும் மசியவில்லை. அவரிடமும் தான் பேரம் பேசினார்கள். சொல்லுங்க வெற்றி உங்களுக்கு என்ன வேணும் ? என்ன வேணுமோ அதை வாங்கிக்கிட்டு கேசை வாபஸ் வாங்கிக்கங்க. ஒரு லட்சமா இரண்டு லட்சமா எவ்வளவு வேண்டும் என்று கேட்டது நிர்வாகம். பேரம் பேசியிருந்தால் நான்கு ஐந்து லட்சங்களை கூட வாங்கியிருக்க முடியும்.

ஆனால் அவர் நிர்வாகத்திடம் சவால் விட்டார். யாருக்கு வேணும் உன்னுடைய எச்சில் காசு ? என்னை வேலையிலிருந்து நீக்கிய போது என்ன காரணம் என்று கேட்ட போது என்ன சொன்னீங்க ? அதையெல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை, எங்களுக்கு தேவை இல்லைங்கிறதால நீக்கிவிட்டோம்னு சொன்னீங்க. இல்ல சார் என்ன காரணம்னு சொன்னீங்கன்னா வசதியா இருக்கும் என்ற போது ? என்ன கேசு போடப்போறீய உன்னால் என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்க போ என்று சவால் விட்டீர்கள் இல்லையா நான் இப்ப உங்களுக்கு சவால் விடுகிறேன் நான் என்ன புடுங்குறேங்கிறத கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்க, சத்யபாமா பஸ்சை மறுபடியும் நான் ஓட்டுவேன். இதே பல்கலைக்கழகத்தில் மறுபடியும் ஒரு நாளாவது நான் வேலை செய்வேன் என்று நிர்வாகத்திடம் சவால் விட்டு காறித் துப்பிவிட்டு வந்தார்.

தற்போது அந்த சவாலில் வென்றிருக்கிறார் வெற்றிவேல் செழியன். கூடவே இருந்த பல தொழிலாளிகளும் சோரம் போய்விட்ட நிலையில், லட்சங்களில் தருகிறேன் என்று ஆசை காட்டிய போதும், ஆண்டுக்கணக்கில் இழுத்தடித்த போதும் வெற்றிவேல் மனம் தளரவில்லை. உறுதி குலைந்து போய்விடவில்லை. மாறாக மேலும் மேலும் உறுதியடைந்தார். தற்போது அவருக்கு முழுமையான சம்பளமும், வேலையும் வழங்கப்பட்டிருக்கிறது ஆனால் அவரோ இந்த இடைப்பட்ட ஏழு ஆண்டுகளில் ஒரு பாட்டாளி வர்க்க போராளியாக வளர்ந்து ’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ யின் முன்னணி ஊழியராகிவிட்டார்.

சத்யபாமா உள்ளிட்ட ஜேப்பியார் குழுமங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மத்தியில் இந்த போராட்டச் செய்தி மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பு.ஜ.தொ.மு மீதான மதிப்பும் நம்பிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. எத்தகைய கோட்டையையும் நக்சல்பாரி புரட்சியாளர்கள் அசைத்துக்காட்டுவார்கள். மீண்டும் பல வெற்றிவேல் செழியன்கள் ஜேப்பியாரின் கல்லூரிகளிலிருந்து உருவாகி வருவார்கள் அவர்களும் அங்கே சங்கம் கட்டுவார்கள். அது தொழிலாளர்களின் சங்கமாக மட்டுமல்ல மாணவர்களின் சங்கமாகவும் இருக்கும் அப்போது அனைத்து கிளைகளிலும் செங்கொடிகள் பறக்கும். அப்போது கல்லூரி ஜேப்பியாரின் கைகளில் இருக்காது தொழிலாளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

_____________________________________

– வினவு செய்தியாளர்.

_____________________________________