கடந்த மார்ச் 19ஆம் தேதியன்று மத்திய அரசின் திட்டக் கமிசன் புதிய வறுமைக்கோடு குறித்த மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. உணவிற்கான உரிமை குறித்த வழக்கொன்றில் உச்சநீதிமன்றம், வறுமைக்கோட்டை வரையறுக்குமாறு மத்திய அரசைக் கேட்டிருந்தது. மாதமொன்றுக்கு நகர்ப்புறங்களில் ரூ. 4824/க்கும், கிராமப்புறங்களில் ரூ.3905/க்கும் குறைவான வருமானம் கொண்ட 5 பேர் அடங்கிய குடும்பங்களெல்லாம் வறுமைக்கோட்டுக்குள் வருவனவாகும் என்று இது தொடர்பாகத் திட்ட கமிசன் தாக்கல் செய்த உறுதியளிப்பு மனு குறிப்பிட்டுள்ளது. அதாவது, ஒரு மனிதன் நாளொன்றுக்கு நகரத்தில் ரூ.32/க்கும், கிராமப்புறத்தில் ரூ.26/க்கும் அதிகமாக சம்பாதித்தால், அவன் வறுமைக்கோட்டுக்கு மேலானவன் என்கிறது, திட்டக்கமிசன்.
“முந்தைய வெள்ளிக்கிழமை மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு, பிறகு இரு நாட்கள் உணவில்லாமல், பற்றி எரியும் வயிறுடன் பள்ளிக்கு வரும் சோர்வடைந்த குழந்தைகளுக்கு எப்படி பாடம் நடத்துவது” என்கிறார்கள் மும்பை மற்றும் தானாவின் புறநகர்ப் பகுதிகளின் பள்ளி ஆசிரியர்கள். திங்கட்கிழமை தரப்படும் மதிய உணவை இரு மடங்காக்கித் தரவேண்டும் என்கிறார்கள், அப்பகுதிகளின் தாய்மார்கள். இப்படி ஏழைகளும் பசித்த வயிறுகளும் நிறைந்த நாட்டில், நாளொன்றுக்கு ரூ.32/க்கு மேல் சம்பாதிக்கும் ஒருவரை ஏழை அல்ல என்று திட்ட கமிசன் சொல்வது கொடூரமான வக்கிரம்.
திட்ட கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா, “2004 ஆம் ஆண்டில் மக்கள் தொகையில் 37.2 சதவீதம் பேர் வறுமையில் இருந்தார்கள். 200910 இல் இது 30 சதவீதமாகக் குறைந்துவிட்டது. முந்தைய காலத்தைவிட கடந்த ஐந்தாண்டு காலத்தில் 7.3 சதவீத அளவுக்கு இரட்டிப்பு வேகத்தில் வறுமை குறைந்து வருகிறது” எனக்கூறியிருக்கிறார்.
மேட்டுக்குடி உலகில் வாழும் உலகவங்கியின் வளர்ப்புப் பிராணியான அலுவாலியாவுக்கு மக்களைப் பற்றியோ, வறுமையைப் பற்றியோ, பசியைப் பற்றியோ என்ன தெரியும்? அலுவாலியா போன்ற மேட்டுக்குடி வர்க்கத்தைப் பொறுத்தவரை மக்கள் என்பவர்கள் அவர்களது புளித்த ஏப்பக் கூட்டம்தான். சாமானியர்களை அவர்கள் மக்களாகவே என்றுமே மதிப்பதில்லை. புழு, பூச்சிகளைப் போலத்தான் பார்க்கிறார்கள். அத்தகைய திமிரும் வக்கிரமும் நிறைந்த கண்ணோட்டம்தான் அலுவாலியா கும்பலின் வறுமை பற்றிய மதிப்பீட்டிலும் வெளிப்படுகிறது.
இன்றைய விலைவாசியில் இந்த ரூ.32/க்குள் ஒரு மனிதன் உயிர்வாழத்தான் முடியுமா? தனது குடும்பத்தைக் காப்பாற்றத்தான் முடியுமா? ஒருக்காலும் சாத்தியமே இல்லாத இந்த வரையறையைக் காட்டி வறுமை குறைந்துவிட்டது என்று புளுகுவதை ஏற்கத்தான் முடியுமா?
இதே காங்கிரசு கூட்டணி அரசின் தேசிய மாதிரிக் கணக்கீடு துறை ரூ.20/க்கும் கீழாகத் தினசரி வருவாய் பெறுவோர் எண்ணிக்கை மட்டும் மொத்த மக்கள் தொகையில் 45 சதவீதமாகும் என்று புள்ளிவிவரப் பட்டியலிடுகிறது. அமைப்பு சாரா நிறுவனங்களுக்கான தேசிய கமிசனோ 77 % பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகக் கூறுகிறது. என்.சி.சக்சேனா தலைமையில் அரசு நியமித்த வறுமைக் கோட்டுக்கான நிபுணர் குழுவோ இதனை 50 சதவீதம் என்று சொல்கிறது. ஆனாலும், “வறுமை பற்றிய மதிப்பீட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டில் ஏற்றத்தாழ்வுகள் பெருகியிருந்த போதிலும், வறுமை குறைந்து விட்டது” என்று அடித்துச் சொல்கிறார் அலுவாலியா.
வறுமைக்கோடு குறித்த இந்த அளவுகோல் சரியானதா, ரூ.32/க்குள் ஒருவர் வாழ இயலுமா என்று ஊடகங்கள் காரசாரமான விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்த அற்பத் தொகைக்குள் ஒரு இந்தியக் குடிமகன் வாழ முடியுமா என்பதல்ல, எதற்காக இந்தப் புதிய வரையறை என்பதுதான் மையமான கேள்வி.
ஏழைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டி நலத் திட்டங்களை ஒழிப்பதுதான், அரசின் திட்டமாக உள்ளது. குறிப்பாக, உணவு மானியத்தை படிப்படியாக ஒழித்துக் கட்டுவது, இறுதியில் ரேசன் முறையை தனியாருக்கும், உணவுக் கொள்முதலை பன்னாட்டு உள்நாட்டு தரகு முதலாளிகளிடமும் ஒப்படைப்பது எனும் உலக வங்கி செயல்திட்டத்தின் ஒருபகுதிதான் இப்புதிய வறுமைக்கோடு வரையறை. மானியங்களை வெட்ட வேண்டுமானால் வறுமை குறைந்துள்ளதாகவும் வறியவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் புள்ளிவிவர ஆதாரம் காட்ட வேண்டியிருக்கிறது. அதற்கேற்ப புள்ளிவிவரப் புளுகுகளையும் தகிடுதத்தங்களையும் அலுவாலியா கும்பல் செய்து கொண்டிருக்கிறது.
உலகமயம்,தனியார்மயம்,தாராளமயம் கொண்டுவரப்பட்ட 1990களிலிருந்தே ஆட்சியாளர்கள் இதனைத்தான் படிப்படியாக செயல்படுத்தி வருகின்றனர். 199394இல் மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்தபோது, ஒரு மனிதன் உண்ணும் உணவின் கலோரி மதிப்பின்படி வறுமைக்கோட்டைக் கணக்கிடும் முறையைக் கொண்டுவந்து, 198788 இல் 25.5% ஆக இருந்த வறுமை 199394 இல் 19% ஆகக் குறைந்ததாகச் சொன்னார்கள். 2000க்குப் பின் பல வண்ணங்களில் ரேசன் அட்டைகளைப் பிரித்து இதனைச் செயல்படுத்தினர். இந்த கலோரி கணக்கீடே அப்பட்டமான மோசடி வரையறையாகும். கணினிமயமான மேலை நாடுகளில் அலுவலகத்தில் இலகுவான வேலை செய்யத் தனிமனிதனுக்குத் தேவையான சக்தியின் மதிப்பை எடுத்துக்கொண்டு, அதனை அப்படியே இந்தியாவில் பொருத்தி, நகர்ப்புற ஏழைக்கு 2100 கிலோ கலோரி என்றும் கிராமப்புற ஏழைகளுக்கு 2400 கிலோ கலோரி என்றும் வரையறுத்து, வறுமையை ‘வெளியேற்றி’னார்கள்.
பின்னர், கலோரி மதிப்பீட்டு முறை சரியில்லை என்று கூறி டெண்டுல்கர் கமிட்டியை நிறுவி, சுகாதாரம், கல்வி, உட்கொள்ளும் உணவின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஏழ்மையைக் கணக்கிடுவதாகக் கூறினர். முடிவாக நாளொன்றுக்கு ரூ. 32/ என வறுமையை வரையறுக்க, 30 ஆயிரம் குடும்பங்களில் சர்வே எடுக்கப்பட்டதாம். 300 கேள்விகள் கேட்கப்பட்டனவாம். வாட்டும் வறுமையை விட 300 கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஏழைகள் களைத்திருப்பார்கள் எனப் பத்திரிகையாளர் சாய்நாத் இக்கேலிக்கூத்தை வேதனையுடன் குறிப்பிடுகிறார். கடுமையான எதிர்ப்புகள் வந்ததால், டெண்டுல்கர் குழுவின் அறிக்கையை ஒதுக்கிவிட்டு இப்போது புதிய அளவுகோலின்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளோரைக் கணக்கிட புதிய ஆய்வுக் குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர்.
ஈராக் மீதான படையெடுப்பை முன்கூட்டியே முடிவு செய்த ஜார்ஜ் புஷ், அதற்கு முன் பேரழிவு ஆயுதங்களைத் தேடுவதாகச் சொன்னார். தூக்கிலேற்றுவது என்பதை முன்னரே முடிவு செய்துவிட்டுத்தான் சதாம் உசேன் மீதான விசாரணையைத் தொடங்கியது, அமெரிக்கா. அதேபோல மானியங்களைச் சுருக்கி ஏழைகளை ஒழிப்பது என்பதை முடிவு செய்துவிட்டு, அதற்கு முகாந்திரம் தேடிக் கொள்வதற்காகவே வக்கிரமான முறையில் வறுமைக்கோட்டை வரைகிறது, மன்மோகன் சிங் மாண்டேக்சிங் அலுவாலியா கும்பல்.
பருத்தி மற்றும் செய்தித்தாள் மூலம் தங்க குவிப்பு – பி.சாய்நாத்
ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்னர் மான்சான்டோ விதைகள் இந்தியாவுக்கு வந்தபோதே உலகமயமாக்கல்-ஏகாதிபத்தியங்களை எதிர்க்கும் புரட்சிகர அமைப்புகள், இந்த விதைகள் நமது நிலங்களை மலடாக்கிவிடும், எல்லா தானிய வகைகளிலும் மறுசுழற்சி விவசாய முறை முற்றிலும் அழிவதுடன், ஒவ்வொரு முறை விதைகள் தேவைப்படும் போதும் நாம் பிறரிடம் கையேந்த வேண்டியிருக்கும் என்கிற அபாயத்தை விரிவாக எடுத்து சொல்லின. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களில் இவை குறித்து பல கட்டுரைகள் வந்தன. ஆனாலும் இவற்றையெல்லாம் மீறி ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளின் ஆதரவுடன், பன்னாட்டு நிறுவனமான மஹிகோ மான்சான்டோ பயோடெக் இந்தியா என்ற பெயரில் உருவான பன்னாட்டு நிறுவனம் பி.டி.பருத்தி விதைகளை இந்திய விவசாயிகளின் தலையில் கட்டியது. அதற்கு எந்த அளவுக்கு ஊடகங்கள் பொய் விளம்பரங்கள் செய்து ஏமாற்றியது என்பதை விரிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத்.
“இந்த 2 கிராமங்களிலிருந்து ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை”
செய்தியா – விளம்பரமா – டைம்ஸ் ஆப் இந்தியா மோசடி
மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக இந்தியா முழுவதும் சர்ச்சை பொங்கி எழுந்து கொண்டிருக்கிற நேரத்தில், ஒரு செய்தித்தாள் அதையே தொழில்நுட்ப வெற்றி என ஆதாரப்பூர்வமான புகைப்படங்களுடன் கட்டுரை எழுதியிருந்தது. இங்கு தற்கொலைகள் என்பதே இல்லை. மக்கள் விவசாயத்தால் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றனர். வழக்கமாகப் பயிரிடப்படும் பருத்தியிலிருந்து மரபணு மாற்றப்பட்ட பி.டி.பருத்தி விதை முறைக்கு மாறியதால் இந்த இரண்டு (பாம்பிரஜா, அன்டார்காவூன்) கிராமங்களில் கடந்த மூன்று – நான்கு ஆண்டுகளாக சமூக, பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது”
இதை உறுதிப்படுத்தி நம்பிக்கையூட்டும் விதத்தில் அதே செய்தித்தாளில், அதே செய்திக்கட்டுரை வரிக்கு வரி மாறாமல் (டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக 28, 2011) வெளியிடப்பட்டது. அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வேறுவிதமான கதைகளைச் சொல்லக் காத்திருக்கிறார்கள் என்பது பற்றி எந்தக் கவலையுமின்றி மேற்படி செய்தி வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் பாம்பிரஜா வந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம், “எங்கள் கிராமத்தில் 14 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” எனப் போராடும் விவசாயிகள் கூட்டம் தெரிவித்த போது வந்தவர்கள் அதிர்ந்து போயினர். “இங்கு மரபணு மாற்ற (பி,டி) விதைகள் வந்தபின் தான் பெரும்பான்மையான தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன” என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். தி இந்து நாளிதழ் தரப்பில் சரிபார்த்ததில் 2003 முதல் 2009 வரை 9 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. இப்பிரச்சினை தொடர்பான ஆர்வலர் குழுக்கள் அதன் பின் இன்னும் 5 தற்கொலைகள் நடந்துள்ளன என்கின்றனர். எல்லாமே 2002 க்கு பின்னர், அதாவது டைம்ஸ் ஆப் இந்தியா விவசாயிகள் பி.டி. விதை விவசாயத்திற்கு மாறிவிட்டனர் எனத் தெரிவித்த பிறகு இவை நடைபெற்றுள்ளன.
விவசாயத்தில் மறுமலர்ச்சியா?
அதிர்ச்சியில் உறைந்து கவனித்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், கோபத்துடன் விவசாயிகள் ‘அய்யா, இங்கு பல விளைநிலங்கள் தரிசாகி விட்டன, பலர் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர், நஷ்டம் சற்று குறைவாக இருக்கட்டுமே என பலர் மாற்றுப்பயிராக சோயா பீன்ஸ் விதைத்துள்ளனர்’ என்று தெரிவித்தனர்.
மஹிகோ மான்சான்டோ மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தியை காரணம் காட்டி இந்த கிராமங்களிலிருந்து நில உரிமையாளராக இருந்த விவசாயிகள் உட்பட பலர் புலம் பெயர்ந்து சென்று விட்டனர். நாங்கள் பாம்பிரஜா கிராமத்திற்கு கடந்த செப்டம்பரில் சென்றிருந்த போது சுரேஷ் ராம்தாஸ் பாண்ட்ரே என்பவர் “விவசாயம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதால் பலர் வெளியேறி விட்டனர்” எனத் தனது கணிப்பை தெரிவித்தார். அரசாங்கம் ஆகஸ்ட் 2011 இல் நாடாளுமன்றத்தில் இந்திய உயிர் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (பிஆர்ஏஐ) அறிமுகப்படுத்திய மசோதா தோல்வியடைந்தவுடன், பிணம் உயிர்பெற்று எழுவது போல பி.டி. விவசாய முறையைப் பாராட்டி, புகழந்து பேசும் 2008 ஆம் ஆண்டின் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி பிரசுரமானது. மசோதாவை பட்டியலிடுவதில் ஏற்பட்ட தோல்வி என்பது விவசாய-உயிரியியல் தொழிலின் எதிர்கால லாபத்தைப் பாதிக்கும் அம்சமாகும். அதன் காரணமாக விரைவில் மீண்டும் அதைக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான தரகுப் பணி துவங்கியது. “பி.டி.பருத்தி மூலம் தங்கம் அறுவடை” என்கிற தலைப்பிட்டு ஆகஸ்டு 2008 இல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் முழுப்பக்க செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அடுத்த நாளிலிருந்து டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் சில செய்தித்தாள்களில் மஹிகோ-மான்சான்டோ பயோடெக் (இந்தியா) லிட் நிறுவனத்திலிருந்து தொடர்ச்சியாக விளம்பரம் வரத் துவங்கியது. இந்த விளம்பரங்கள் ஆகஸ்டு 29, 30, 31, செப் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பிரசுரமானது. அதற்கான மசோதா இறுதியாக மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் இரண்டிலும் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டிருந்த போதிலும் அறிமுகப்படுத்தவோ, நிறைவேற்றப்படவோ இல்லை. நாடாளுமன்றம் பி.டி. பருத்தியை தவிர்த்த வேறு பிரச்சினைகளில் சிக்குண்டதால், செய்தித்தாளை வைத்து சிலருக்கு தங்க அறுவடை நடந்தது.
இத்தகைய தொடர் விளம்பரங்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் முடிவை மாற்றவில்லை என்பதுடன், மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட உணவுப் பயிர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது. பல்வேறு கட்சிகளிலிருந்து வந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் விதர்பா மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான துன்பம், விவசாய தற்கொலைகள் போன்ற தகவல்களால் அதிர்ச்சியடைந்து அந்தப் பகுதிகளைப் பார்வையிட முடிவு செய்தனர்.
அறிவார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாபுதேப் ஆச்சார்யா தலைமையிலான குழுவின் தெளிவான இலக்கு என்பது மஹிகோ-மான்சான்டோவின் அதிசய மாதிரி கிராமம் என்று சொல்லப்பட்ட பாம்பிரஜா என்பதாக இருந்தது. மற்றொன்று மாரேகான்-சோனாபுர்டி ஆகும். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கிராமத்திலும் தங்கத்தைப் பார்க்கவில்லை. விவசாயப் புரட்சி – அதிசயம் என்று சொல்லப்பட்டது தகர்ந்து, மேலும் அரசின் தோல்வியாக போனதாலேயே துன்பம் நேரிட்டது.
இந்தியாவில் பி.டி.பருத்தி அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகள் நிறைவான 2012 இல் மீண்டும் இந்தப் பிரச்சினை (டைம்ஸ் ஆப் இந்தியாவில் சொல்லியிருப்பது போல்) பொறி பறக்கும் விவாதப் பொருளாகியது. கடந்த ஆண்டு ஆக 28 செய்தித்தாளில் தோன்றிய “பி.டி.பருத்தி மூலம் தங்கம் அறுவடை” என்பது “ஒரு நுகர்வோர் தொடர்பிற்கான முன்முயற்சி” எனத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் விளம்பரத்திற்காகப் பணம் கொடுத்து செய்தியாக்கப்பட்டது எனலாம். எனினும் அந்தச் செய்தியில் உள்ள விபரங்கள் எல்லாம் டைம்ஸ் ஆப் இந்தியாவின் தொழில்முறை செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களால் தயாரிக்கப்பட்டதே. இன்னும் குறிப்பாக விளம்பரமாக மாறிய அந்தக் கதை ஏற்கெனவே வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் டைம்ஸ் ஆப் இந்தியா நாக்பூர் பதிப்பில் 31 ஆக 2008 இல் வெளியான ஒன்றாகும். பிரசுரமானதே மீண்டும் பிரசுரமானது கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது. ஆக 28, 2011 இல் வெளியான செய்தியிலேயே அது சரிபார்க்கப்படாத செய்தியின் மறுபதிப்பு என்பது லேசாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. இருப்பினும் 2008 இல் வெளியான செய்தியில் விளம்பரம் எனச் சொல்லப்படவில்லை. ஆனால் இருமுறை பிரசுரமானதிலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த ஒரு விசயம் யாதெனில், யாவாட்மால் கிராமத்தைப் பார்வையிடுவதற்கான பயண ஏற்பாடுகள் மஹிகோ-மான்சான்டோ பயோடெக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது என்பதாகும். அந்த நிறுவனம் ‘2008 இல் வெளியானது டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தித் தொகுப்பாகும்’ என்றது. 2008 இல் வெளியான செய்தித் தொகுப்பு என்பது ஆசிரியர் குழும அதிகார வரம்பிற்குட்பட்டு செய்தியாளர்கள் குறிப்பிட்ட கிராமங்களில் சென்று சேகரித்த அறிக்கைகள் ஆகும். நாங்கள் செய்தியாளர்கள் அங்கு சென்று வருவதற்கான பயண ஏற்பாடுகளை மட்டும் செய்தோம் என்கிறார், கடந்த வாரம் தி இந்து நாளிதழிடம் பேசிய மஹிகோ-மான்சான்டோ நிறுவன செய்தித் தொடர்பாளர். 2011 செய்தி என்பது, வணிக நோக்கத்தில் 2008 இல் வெளியான செய்தியையே திருத்தங்கள் மேற்கொள்ளாமல் வெளியிட்டதே ஆகும்.
2008 முழுப்பக்கச் செய்தி நாக்பூர் பதிப்பில் வெளியானது. 2011 இல் “சந்தைப்படுத்தும் சிறப்பிதழாக” வெளியான செய்தி அந்தச் செய்தித்தாளின் பல மாவட்ட வெளியீடுகளில் (அதன் இணைய தளத்தில் சிறப்புச் செய்திப் பகுதியில் சொடுக்கினால் பார்வையிடலாம்) வெளியானது. ஆனால் நாக்பூர் பதிப்பில் மட்டும் வெளியாகவில்லை. நாக்பூர் பதிப்பில் வெளியாகியிருந்தால் கண்டிப்பாக அது பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கும்.
மருத்ராவ் தோகே என்ற இந்த விவசாயி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது மனைவியின் தாலியை (மங்களசூத்ரா) அடகு வைப்பதற்காக கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி – படம் நன்றி thehindu.com
ஒரே முழுப்பக்கச் செய்தி மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பிரசுரமாகியுள்ளது. முதல் முறை செய்தியாக, 2 வது முறை விளம்பரமாக. முதல் முறை வெளியானது அந்தச் செய்தி ஊடகத்தில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களால் வெளியிடப்பட்டது. 2 வது முறை புதையுண்ட பிணத்தைத் தோண்டியெடுத்து, பிரேதப் பரிசோதனை செய்வது போல் அதன் விளம்பரப் பிரிவால் வெளியிடப்பட்டது. முதல் முறை செய்தி சேகரிப்பிற்கான பயணம் மஹிகோ-மான்சான்டோ நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 2 வது முறை மஹிகோ-மான்சான்டோ நிறுவனத்தின் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது. முதல் முறை வெளியானது அவலம். 2 வது முறை வெளியானது கேலிக்கூத்து.
மஹிகோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாங்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகத் தெரிவிக்கிறார். நாங்கள் 2 வது முறை வெளியிடச் சொல்லும் போது தெளிவாக “இது அக் 31, 2008 நாக்பூர் பதிப்பில் வெளியான செய்தியின் மறுபதிப்பு” என மூலச் செய்தி மற்றும் தேதிக்கான பகுதியில் குறிப்பிட வலியுறுத்தினோம் என்கிறார். ஆனால் அவரின் மின்னஞ்சல் வழியாக எழுதிய பதிலில் அந்த விளம்பரப்படுத்தும் செய்தி வெளியான சூழ்நிலைமை பற்றி எழுப்பிய தி இந்து வின் கேள்விக்கு பதில் தெரிவிக்கப்படவில்லை. விவசாயத்தில் பருத்தி விதைகள் மற்றும் தாவர உயிர்தொழில்நுட்பத்தின் பங்கு பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2011 இல் குறுகிய கால தகவல் தொடர்பு முன்முயற்சியாக இது செய்யப்பட்டது என அவர் சொல்கிறார். ஆனால் இந்திய உயிர்தொழில்நுட்ப ஒழுங்கு முறை ஆணையத்தின் மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நேரத்தில் இதை வெளியிட்டதன் நோக்கம் என்ன என்ற தி இந்துவின் கேள்விக்கு விடையளிக்கப்படவில்லை.
ஆனால் நடைபெற்றது அதைவிட அதீதமானது. டைம்ஸ் செய்தியுடன் வெளியிடப்பட்டிருந்த விவசாய அதிசயம் குறித்த புகைப்படங்கள் அந்த பி.டி.பருத்தி விதைக்கப்பட்ட பாம்பிரஜா மற்றும் அன்டார்காவுன் கிராமங்களில் எடுக்கப்படவில்லை. அதில் தோன்றுபவர்கள் பாம்பிரஜா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், அந்தப் படங்கள் பாம்பிரஜாவில் எடுக்கப்பட்டதல்ல என்கிறார் அந்தக் கிராமத்தை சேர்ந்த பாபன்ராவ் காபந்தே.
போலித் தோற்ற அதிசயம்
டைம்ஸ் ஆப் இந்தியா கதையில் சிறப்பான கல்வியறிவு பெற்றிருந்த விவசாயியாகக் குறிப்பிடப்படும் நந்து ரவுத் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழக முகவரும் ஆவார். அவருடைய வருவாய் பி.டி.பருத்தி விதை காரணமாக எதிர்பாரா விதத்திற்கு உயர்ந்ததாகச் சொல்லப்பட்டது. “நான் கடந்த ஆண்டு ரூ. 2 லட்சம் சம்பாதித்தேன்” கடந்த செப்டம்பரில் அவர் என்னிடம் இவ்வாறு தெரிவித்தார். “ஏறக்குறைய ரூ. 1.6 லட்சம் நான் விற்ற எல்ஐசி பாலிசிகளால் கிடைத்தது” என்றார். அதாவது சுருக்கமாகச் சொன்னால் அவர் விவசாயத்தில் சம்பாதித்ததைப் போல் நான்கு பங்கு ஆயுள் காப்பீடு முகவர் பணியில் சம்பாதித்துள்ளார். அவரின் 4 பேர்கள் அடங்கிய குடும்பத்திடம் 7 1/2 ஏக்கர் நிலம் இருந்தது.
ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா விவரித்த கதையில் “பூச்சிக் கொல்லி மருந்து உபயோகிக்காமல் இருந்ததன் வழியாக அந்த விவசாயி ஒரு ஏக்கருக்கு ரூ. 20,000 வரை அதிகமாக சேமித்ததாக (அழுத்தம் கட்டுரையாளரால் சேர்க்கப்பட்டது) விவரிக்கிறது”. அவர் 4 ஏக்கரில் பருத்தி பயிர் செய்திருந்ததால் அவரது சேமிப்பு “பூச்சி மருந்தில்” ரூ. 80,000 என்கிறது கணக்கு. ஆனால் பாம்பிரஜாவிலுள்ள விவசாயிகள் மிகுந்த கோபத்துடன், ஏக்கருக்கு ரூ. 20,000 அல்லது அதற்கு மேல் சம்பாதித்த யாரேனும் ஒருவரை இங்கே சுட்டிக் காண்பியுங்கள் பார்ப்போம் என்கின்றனர். கிராம வாரியாக ஆய்வு மேற்கொண்ட போது திரு. ரவுத் ஒப்பமிட்டுக் கொடுத்த புள்ளி விபரம் (தி இந்துவின் வசமுள்ளது) அவரின் வருவாய் குறித்து வேறு வித்தியாசமான கதையை தெரிவிக்கிறது.
படம் நன்றி thehindu.com
மத்திய அரசின் விவசாய அமைச்சர் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் ‘பி.டி. அதிசயம்’ என்பதற்குப் பதிலாக அதன் மீது ஏளனத்தை உமிழ்கின்றனர் பாம்பிரஜா மற்றும் மாரேகவுன் விவசாயிகள். இந்திய நாடாளுமன்றத்தில் 2011 டிசம்பர் 19 அன்று அமைச்சர் சரத்பவார், விதர்பாவில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 1.2 குவிண்டால் பஞ்சு கிடைக்கிறது என்றார். அதிர்ச்சியுறும் வகையில் அது மிகக்குறைந்த அளவே. அதை இரண்டு பங்காகக் கணக்கிட்டால் கூட குறைவுதான். விவசாயிகள் சுத்தம் செய்யப்படாத நிலையில்தான் பருத்தியை விற்கின்றனர். நூறு கிலோ அறுவடை என்றால் அதில் 35 கிலோ பஞ்சும் 65 கிலோ பருத்தி விதையும் கிடைக்கும். (அதிலும் கூட இழையாடும் போது மேலும் 2 கிலோ இழப்பு ஏற்படும்). மேலும் திரு. பவார் தெரிவிக்கும் விபரத்தின்படி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு 3.5 குவிண்டால் விதையுடன் கூடிய பஞ்சா? அல்லது வெறும் 1.4 குவிண்டால்தானா?. திரு. பவார் மேலும் தெரிவிக்கையில் விவசாயிகள் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 4200 வீதத்தில் அதிகமான விலையையே பெறுகின்றனர் என்கிறார். அவருக்கு ஏற்புடையதல்ல என்ற போதிலும், விவசாயம் செய்ய ஆகும் செலவினத்திற்கு அருகாமையில் அவர் சொல்லும் தொகை இருப்பதால்தான் அங்கு மோசமான சூழல் வளர்ந்துள்ளதாகக் கருதுகிறேன். திரு. பவார் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் சரியென்றால் நந்து ரவுத்தின் மொத்த வருவாய் ஒரு ஏக்கருக்கு ரூ. 5900 ஐத் தாண்டியிருக்க வேண்டும். ஆனால் 1 1/2 பாக்கெட் விதை மட்டும் ரூ. 1400 என்பதைக் கழித்துப் பார்த்தால், ஏறக்குறைய அவருக்கு மீதம் ஏதுவுமேயில்லை. ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா அந்த விவசாயியின் வருவாய் ஏக்கருக்கு ரூ. 20000 க்கு மேல் என்கிறது.
மேற்சொன்ன செய்தியில் உள்ள மிகைப்படுத்தலைப் பற்றி கேட்டபோது மஹிகோ-மான்சான்டோ நிறுவன செய்தி தொடர்பாளர்- “எங்கள் நிறுவனத்தின் ஊழியர் சொன்னதாக பத்திரிகையில் செய்தியாக வந்ததை நாங்கள் வழிமொழிகிறோம்” என்றார். முழுப்பக்க விளம்பரமாக மாறிய அந்தச் செய்தியில் அவர் குறிப்பிட்ட ஒரு சிறு பத்தியில் எங்குமே ஏக்கருக்கு ரூ. 20000 க்கு மேல் என்றோ, வேறு தொகை குறிப்பிட்டோ புள்ளி விபரம் ஏதுமில்லை. வெறும் “பி.டி.பருத்தியால் விவசாயிக்கு வருவாய் உயர்வு” என்றும், பல ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களில் அந்த பருத்தி பயிரிடப்பட்டுள்ளதைப் பற்றி மட்டுமே பேசும் விதத்தில் அது இருந்தது. ஆனால் ஏக்கருக்கு எவ்வளவு மகசூல் என்பது பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. மேலும் அந்த இரு கிராமங்களிலும் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற வகையில் எதுவும் அவர் குறிப்பிடும் செய்திக் குறிப்பில் இல்லை. எனவே மான்சான்டோ நிறுவனம் மிகக் கவனமாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கும் செய்திகளை உறுதிப்படுத்தாமல் நழுவியதோடு, அவர்களின் சந்தைப்படுத்தும் முக்கியக் குறிப்புகளில் மட்டுமே கவனமாக இருந்துள்ளனர்.
இந்தச் செய்தியைப் பற்றி மஹிகோ-மான்சான்டோ உயிர்தொழில்நுட்ப இந்தியா நிறுவனச் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், “செய்தியாளர்கள் மேற்கண்ட கிராம விவசாயிகளிடம் நேரடியாக பேட்டிகள் எடுத்து, அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து, விவசாயிகள் குறிப்பிட்டு சொன்னவற்றையே செய்தியாக்கியுள்ளனர்” என்றார்.
‘விளம்பரமாக மாறிய கதை’ மீண்டும் தோன்றிய போதும் நந்து ரவுத், போல்கார்டு II விதையின் மூலம் ஏக்கருக்கு 20 குவிண்டால் மகசூல் பெற்றுள்ளார் என்கிறது. அதாவது விவசாய அமைச்சர் தெரிவிக்கும் 1.4 குவிண்டால் என்பதைப் போல் 14 பங்கு அதிகம். அதாவது பருத்திக்கு 2 முதல் 3 முறை நீா்ப்பாய்ச்சுவது தேவைப்படும் நிலையில், மழை குறைந்த மாவட்டமான விதர்பாவில் மகசூல் குறைந்து விட்டது என வருத்தப்படுகிறார் திரு. பவார். ஆனால் அதே சமயம், தேசியவாத காங்கிரசு – காங்கிரசு கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் ஏறக்குறைய பெரும்பாலான மழைக் குறைவுப் பகுதிகளில் தண்ணீர் மிகவும் தேவைப்படும் இந்த பி.டி.பருத்தி விதையை ஊக்குவித்தது எவ்வாறு என்ற கேள்வி எழும் போது திரு பவார் அமைதி காக்கின்றார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக மழை குறைந்த பகுதிக்கு பொருந்தி வராத இந்த பி.டி. விதைகளை மகாராஷ்டிரா அரசு விதைக் கழகம் அதன் மாநில விவசாய ஆணையர் மூலமாக விநியோகித்தது. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி பார்த்தால், நந்து ரவுத் பணத்தில் உருளுகின்றார். அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் அந்த விவசாயி தண்ணீருக்குள் விழுந்த போதிலும், மூழ்காமல் மிதக்கிறார்.
2011 இல் ஒரே வாரத்தில் சரமாரியாக வெளியான மஹிகோ-மான்சான்டோ பயோடெக் விளம்பரங்கள் வேறு தீயை பற்ற வைத்தது. இந்திய விவசாயிகள் மிகுந்த பணப்பலன்கள் பெறுகிறார்கள் என்ற வகையில் தோன்றிய ஒரு விளம்பரத்தின் (டெல்லியிலிருந்து வெளியாகும் வேறு ஒரு செய்தித்தாளிலும் வந்திருந்தது) மீது இந்திய விளம்பரத் தரக்கட்டுப்பாட்டுக் குழுமத்தின் முன்வைக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, இந்திய விளம்பர தரக்கட்டுப்பாட்டுக் குழுமம் “புகாருக்குள்ளான விளம்பரத்தில் வைக்கப்பட்ட வாதம் மெய்ப்பிக்கப்படவில்லை” என்ற முடிவிற்கே வந்தது. மான்சான்டோ நிறுவனச் செய்தி தொடர்பாளர், விளம்பர தரக்கட்டுப்பாட்டு குழுமம் முன் வைக்கப்பட்ட குறிப்புகளை தொடர்ந்து விளம்பரம் திருத்தியமைக்கப்பட்டு விட்டது என்றார். மஹிகோ-மான்சான்டோ நிறுவனம் விளம்பரத்தை திருத்தியமைத்ததை விளம்பர தரக்கட்டுப்பாட்டு குழுமம் ஒப்புக்கொண்டது.
மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பின் நாங்கள் மீண்டும் திரு. நந்துவை சந்தித்த போது, “இன்று என்னைக் கேட்டால், நீர்வளம் குறைந்த இந்த கிராமங்களில் மரபணு மாற்ற (பி.டி) விதைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்பேன், நிலைமை தற்போது மிக மோசம்” என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் அவர் (நந்து) ஏன் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லையென்றால், தாம் மிகவும் தாமதமாக வந்ததாகத் தெரிவித்தார்.
“நாங்கள் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை ஒதுக்கி விட்டோம், இனி எங்கள் எவருக்கும் அவர்கள் தேவையில்லை” டைம்ஸ் ஆப் இந்தியா விளம்பரமாக மாறிய செய்தியில் மாங்கூ சவான் என்ற விவசாயி இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது பி.டி. விதையினால் அன்டார்காவுன் கிராமத்தில் ஏற்பட்ட செழிப்பினால் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. பாம்பிரஜாவில் உள்ள 365 விவசாய வீடுகள் மற்றும் அன்டார்காவுனில் உள்ள ஏறக்குறைய 150 வீடுகளில் ‘விதர்பா ஜன் அந்தோலன் சமிதி’ (விஜாஸ்) மேற்கொண்ட ஆய்வுக் கணக்கெடுப்பில் ஏறக்குறைய வங்கிக் கணக்குள்ள அனைத்து விவசாயிகளும் கடன் கட்ட முடியாமல் போவதாகவும், ஏறக்குறைய 60 சதவீத விவசாயிகள் கந்து வட்டிக்கு கடன் கொடுக்கும் தனியாரிடம் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் தெரிகின்றது என்கிறார் விஜாஸ்-ன் தலைவர் கிஷோர் திவாரி.
மகாராஷ்டிரா அரசு நிலைக்குழு (பாராளுமன்ற) உறுப்பினர்களை மாதிரி கிராமம் என்று சொல்லப்பட்ட பாம்பிரஜா கிராமத்திற்குள் வர விடாமல் திசைதிருப்ப மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் குழுவின் தலைமை உறுப்பினர் பாசுதேப் ஆச்சார்யா மற்றும் அவரின் சக உறுப்பினர்கள் குறிப்பிட்ட கிராமத்தை பார்வையிட வேண்டும் என்ற தமது நிலையில் உறுதியாக இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பனர்கள் வருகையால் ஊக்கம் பெற்ற மக்கள் அந்த இரு கிராமங்களிலும் தங்கள் எண்ணங்களை வார்த்தைகளாக இதயத்திலிருந்து வெளிப்படையாக தெரிவித்தனர். தேசிய குற்றப்பதிவு ஆணையப் பதிவுகள் தெரிவிக்கின்றபடி, மகாராஷ்டிராவின் பதிவுகளில் மிக மோசமாக 1995 இல் இருந்து 2010 வரை 50000 விவசாய தற்கொலைகள் நடைபெற்றுள்ளது. அதிலும் அந்த மாநிலத்தில் விதர்பா மாவட்டம் அத்தகைய இறப்புகளில் முன்னிலை வகிக்கிறது. இன்னமும் மிகப்பெரிய, அரசின் கொள்கை சார்ந்த பிரச்சினைகள் விவசாய நெருக்கடிக்கு இட்டுச் செல்கின்றன என்கின்றனர் இங்குள்ள விவசாயிகள்.
பி.டி.பருத்தியின் வரவால் விவசாய தற்கொலை பிரச்சினை குறைந்தது என எந்த விவசாயியும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் அவர்கள் அதிசயம், செலவு குறைப்பு, சேமிப்பு என்பனவற்றில் உள்ள போலித் தோற்றங்களை கருத்துக்களாக வெளிப்படுத்தினர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் மேற்கொள்ள செய்தியானது. ஆனால் பணம் கொடுத்து போடப்பட்ட செய்தி பற்றியோ, சந்தைப்படுத்தும் வியாபார தந்திரம் என்பது பற்றியோ எந்தப் பேச்சும் இதுவரை இல்லை.
“மின்சாரம் தனியார்மயமானதே தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம்!”
தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்பிரச்சார இயக்கம்.
பேருந்துக் கட்டண உயர்வு, பால்விலை உயர்வு என அடுத்தடுத்து மக்கள் மீது தாக்குதலைத் தொடுத்துவிட்டு, போதாக்குறைக்கு தற்பொழுது மின்கட்டண உயர்வு என்ற இடியையும் மக்கள் மீது இறக்கியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு.
இந்த மின்கட்டண உயர்வென்பது, டாடா, அம்பானி, அடானி, அப்போலோ போன்ற கார்ப்பரேட் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்துக்கு என்ன விலை கேட்கிறார்களோ, அதனை மக்களிடமிருந்து வசூலித்துக் கொடுப்பதற்கான ஏற்பாடே என்பதை விளக்கியும், “மின்சாரம் தனியார்மயமானதே, தமிழகம் இருள்மயமானதற்குக் காரணம். மின்வெட்டில்லா தமிழகம் வேண்டும்; ஆபத்தான அணுஉலை வேண்டாம்” என்ற முழக்கத்தினை முன்வைத்தும், ம.க.இ.க; வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தொடர் பிரச்சார இயக்கங்களை நடத்தி வருகின்றன.
சென்னையில், 04.04.2012 அன்று ம.க.இ.க; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. மற்றும் ம.உ.பா.மையம் ஆகிய அமைப்புகளின் சார்பில் சைதை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பிரதான சாலையை மறித்தும், ஜெவின் கொடும்பாவியை எரித்தும் தோழர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
திருச்சியில், 10.04.2012 அன்று, ம.க.இ.க; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகள் சேர்ந்து மேலசிந்தாமணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ஆர்ப்பாட்டத்தில், மக்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் மறுகாலனியத் தாக்குதலை அம்பலப்படுத்தி முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.
திருச்சி துவாக்குடியில், 17.04.2012 அன்று பு.ஜ.தொ.மு. (தமிழ்நாடு) சார்பில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாத புதிய ஜனநாயகம் இதழில் மின்சாரம் தனியார்மயமாக்கம் குறித்து வெளியான கட்டுரைகளை விளக்கி அறைக்கூட்டமொன்றை நடத்தினர்.
ஓசூரில் 09.04.2012 அன்று பு.ஜ.தொ.மு. அமைப்பின் சார்பாக, தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான தர்கா பேருந்து நிறுத்தம் அருகே திரளான தொழிலாளர்களது பங்கேற்புடன் தெருமுனைக்கூட்டத்தை நடத்தினர்.
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் 15.04.2012 அன்று கோத்தகிரியில் பொதுக்கூட்டம் மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தையும் இப்பகுதியெங்கும் நடத்திய தோழர்களது பிரச்சாரத்தையும் பகுதிவாழ் உழைக்கும் மக்கள் வரவேற்று ஆதரவளித்தனர்.
கரூரில், 09.04.2012 அன்று பு.மா.இ.மு.வின் சார்பில் உழவர் சந்தை அருகில், ம.க.இ.க. மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறுதொழில், பட்டறை, விசைத்தறிகள் நிறைந்த இப்பகுதியில், மின்சாரம் தனியார்மயமானதே மின்வெட்டிற்கான காரணம் என்பதை விளக்கி, இத்தனியார்மயத்தை ஒழித்துகட்ட நாம் ஓரணிசேர வேண்டுமென்று இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக சிறப்புரையாற்றிய தோழர்கள் அறைகூவல் விடுத்தனர்.
கடலூரில், 14.04.2012 அன்று பு.மா.இ.மு.வின் சார்பில் டவுன் ஹாலில் கருத்தரங்கம் நடைபெற்றது. பு.ஜ.தொ.மு. வின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் சுப.தங்கராசு. சிறப்புரையாற்றினார்,
தருமபுரியில், 13.04.2012 அன்று வி.வி.மு. சார்பில் இராஜகோபால் பூங்கா அருகில் பொதுக்கூட்டம் மற்றும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. போலீசின் ஒருமாத கால இழுத்தடிப்பால் நீதிமன்ற முறையீட்டுக்குப் பின்னரே இப்பொதுக்கூட்ட அனுமதியைப் பெற முடிந்தது. மின்வெட்டு, மின்சாரம் தனியார்மயமாக்கத்தின் விளைவுகளை பு.மா.இ.மு.வின் மாநில அமைப்பாளர் தோழர் த.கணேசன் அவர்களும்; முல்லைப்பெரியாறு அணையை மீட்க நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பு.ஜ.தொ.மு.வைச் சேர்ந்த தோழர் நாகராசு அவர்களும் சிறப்புரையாற்றினர்.
இந்த ஊர்கள் தவிர, இப்புரட்சிகர அமைப்புகள் செயல்படும் பகுதிகள் அனைத்திலும் பல்வேறு வடிவங்களில் பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு, மறுகாலனியாக்கத் தாக்குதலுக்கு எதிராகப் போராட மக்களை அணிதிரட்டி வருகின்றன
என்னதான் பன்றிக்கு பவுடர் போட்டு சிங்காரித்து வளர்த்தாலும் அது நரகலைக் கண்டால் நாலு கால் பாய்ச்சலில் பாயத் தானே செய்யும்? இந்த ஆவலாதிப் பாய்ச்சலைத் தான் சமீபமாகாலமாக ஐ.பி.எல் மெகா சீரியலில் மக்கள் கண்டுகளித்து வருகிறார்கள். எந்த வடிவம் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் என்று ஐ.பி.எல் முதலாளிகளும் முதலாளித்துவ ஊடகங்களும் ஓதி வந்ததோ அதே வடிவம் தனது சிங்காரங்களைக் கலைத்தெறிந்து விட்டு அம்மணக்கட்டையாக நிற்பது தான் இதன் சிறப்பு.
கடந்த பதினான்காம் தேதி இந்தியா டி.வி என்கிற தனியார் தொலைக்காட்சி நடத்திய இரகசிய விசாரணையை பகிரங்கமாக வெளியிடுகிறது. இரகசிய கேமராவில் பதிவான காட்சிகளில் நான்கு ஐ.பி.எல் வீரர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு மோசமாக விளையாட முன்வந்தது (ஸ்பாட் பிக்சிங்) அம்பலமானது. எந்தக் கூச்சமும் இன்றி, நோ பால் போட இன்ன ரேட், வைடு பால் போட் இன்ன ரேட் என்று சாவகாசமாக இந்த வீரர்கள் பேரம் பேசியதை நாடே பார்த்தது. விசாரணையை நடத்திய இந்தியா டி.வி, பிரச்சினை இது போன்ற ஒரு சில கருப்பு ஆடுகள் தான் என்பது போலவும், பிற சீனியர் வீரர்கள் காசு வாங்காத யோக்கியர்கள் என்றும் சொல்லி நெருப்பின் மேல் வைக்கோலைப் பரப்பி அமுக்கப் பார்த்தாலும் புகை இன்னும் அடங்கிய பாடில்லை.
இந்த ஐ.பி.எல் சீசனில் மட்டும் சுமார் 5000 கோடி ரூபாய்கள் அளவுக்கு சூதாட்டம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி சூதாட்டத்தில் புழங்கும் பணத்தின் அளவு தான் இந்திய அளவில் தரகு முதலாளிகளின் நாவில் எச்சிலூற வைத்துள்ளது. போட்டியில் ஒரு அணி தோற்கலாம்; ஆனால், அதன் உரிமையாளருக்குத் தோல்வியே கிடையாது என்பது தான் ஐ.பி.எல்லின் ஆதார விதி. இதனால் தான் தனது விமானக் கம்பெனி நட்டத்தில் மூழ்கிக் கிடப்பதாக வங்கிகளின் வாசலில் தட்டேந்தி நிற்கும் சாராய மல்லையா, ஆயிரக்கணக்கான கோடிகளை ஐ.பி.எல்லில் கொட்டுவதற்கும் வீரர்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கும் தயங்குவதில்லை.
இந்த ஸ்பாட் பிக்சிங் மேட்டரை ஆங்கில ஊடகங்கள் மென்று முழுங்குவதற்குள் அடுத்த பிடி அவலை அள்ளி அவர்கள் வாயில் திணிக்கிறார் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான். கடந்த பதினாறாம் தேதி தனது அணி ஆடிய மேட்ச் ஒன்றைக் காண மும்பை வான்ஹடே மைதானத்துக்கு தனது பிள்ளைகளோடு வந்த ஷாருக்கான், மேட்சின் முடிவில் தனது அணி வென்றதை அடுத்து கொஞ்சம் சோம பானத்தை உள்ளே விடுகிறார். பண போதையோடும் புகழ் போதையோடும் அதிகார போதையோடும் சாராய போதையும் சேர்ந்தது கிறுக்குப் பிடித்த குரங்கு கள்ளைக் குடித்த கதையானது. மேட்ச் முடிந்த பின் மைதானத்துக்குள் தனது நண்பர்களோடு சென்று கொண்டாடலாம் என்று உள்ளே நுழைய முற்பட்டவரை மைதானத்தின் காவலர் வழிமறிக்கிறார்.
அமெரிக்க காவலர்கள் வழிமறித்துத் தடுத்தால் பம்மிப் பதுங்கும் இந்த சூரப்புலி, வான்ஹடே மைதானத்தின் நோஞ்சான் காவலரிடம் பாய்ந்து பிடுங்குகிறது. கேமாராக்களின் வெளிச்சத்தில் அந்தக் காவலரிடம் மல்லுக்கு நிற்கும் அந்தக் காட்சிகளை நீங்கள் அவசியம் காண வேண்டும். பண பலம், அதிகார பலம் போதாதற்கு மும்பை தாதா உலகத்தோடு தொடர்பு என்று ஷாருக்கானுக்கு இருக்கும் அத்தனை பின்புலத்துக்கும் அஞ்சாமல் அந்த காவலர் துணிச்சலாக விசில் அடித்து வாசலைக் காட்டுகிறார். அமெரிக்காவில் பணிந்து குழைந்து ‘வீரம்’ காட்டிய பாலிவுட்டின் பாதுஷாவுக்கு பாடம் நடத்தி வழியனுப்பியுள்ளார் அந்தக் காவலர்.
மேற்படி குழாயடிச் சண்டை ஊடகங்களில் நாறிக் கொண்டிருந்தாலும் கொஞ்சமும் கூச்சமின்றி தனது செயலை நியாயப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான். இந்த சம்பவம் பரவலான கவனத்தைப் பெற்றதையடுத்து ஷாரூக் மேல் நடவடிக்கை எடுத்திருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், அடுத்து ஐந்தாண்டுகளுக்கு அவர் மும்பை வான்ஹடே மைதனத்துக்குள் நுழைய தடைவிதித்துள்ளது. குடித்து விட்டு பச்சையாக ரவுடித் தனத்தில் ஈடுபட்ட ஷாருக்கான் ஐ.பி.எல் அணியை நடத்தும் உரிமையை திரும்பப் பெறத் துப்பில்லாமல் ஐந்தாண்டுத் தடையென்று மயிலறகால் தடவிக் கொடுத்துள்ளனர்.
அமெரிக்க காவலர்கள் வழிமறித்துத் தடுத்தால் பம்மிப் பதுங்கும் இந்த சூரப்புலி, வான்ஹடே மைதானத்தின் நோஞ்சான் காவலரிடம் பாய்ந்து பிடுங்குகிறது
ஷாருக் விவகாரம் அடங்கும் முன் அடுத்தடுத்த அசிங்கங்கள் ஒவ்வொன்றாக மேலெழுந்து வந்து கொண்டே இருக்கின்றன. 18ம் தேதி லூக் போமெர்ஸ்பாக் என்கிற ஆஸ்திரேலிய ஐ.பி.எல் ‘வீரர்’ சித்தார்த் மல்லையா (சாராய மல்லையா மகன்) நடத்திய குடிவெறிப் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்த அமெரிக்கப் பெண் சோகல் ஹமீதை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரம் வெடித்தது. அடுத்து இரண்டே நாளில், மும்பை ஜூஹூ பீச் அருகே ஒரு ஹோட்டலில் நடந்த ரேவ் பார்ட்டி எனப்படும் போதை மருந்துப் பார்ட்டியை ரெய்டு செய்த போலீசார், இரண்டு ஐ.பி.எல் ‘வீரர்களை’ கைது செய்துள்ளது. மேலும் பார்ட்டி நடந்த இடத்திலிருந்து கெண்ணாபீஸ், கொக்கெய்ன் போன்ற அதி வீரியமுள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
லூக் அமெரிக்கப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ள சாராய மல்லையாவின் ஸ்ரேஷ்ட்ட புத்திரன் சித்தார்த் மல்லையா, பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தை சரியில்லையென்றும், சம்பவம் நடந்த நாளில் அந்தப் பெண் தன்னிடம் ஓவராக இழைந்ததாகவும் டிவிட்டரில் எழுதியிருக்கிறார். பாலியல் கொடூரர்கள் வழக்கமாக தங்கள் செயலுக்கு நியாயம் கற்பிக்க கடைபிடிக்கும் அதே உத்தியைத் தான் சித்தார்த்தும் கையாண்டிருக்கிறார். ஒரு வாதத்திற்கு அதை ‘உண்மை’ என்றே வைத்துக் கொண்டாலும் விருப்பமில்லாத பெண்ணை கட்டாயப்படுத்து உரிமை உனக்கு எங்கே இருந்து வந்தது என்று கேட்கத் துப்பில்லாத ஊடகங்கள், அவரிடம் போய் ‘எதாவது விளக்குங்களேன்’ என்று வழிந்திருக்கின்றன. ஊடகங்களின் உண்மையான யோக்கியதையை நன்கு அறிந்து வைத்திருக்கும் சித்தார்த் மல்லையா, மூஞ்சியில் காறி உமிழ்வதைப் போல் நறுக்கென்று காரின் கதவை அடைத்து விட்டுச் சென்றுள்ளார்.
அளவற்ற பணம், புகழ் போதை, அதிகாரத் திமிர் மற்றும் மேட்டுக்குடி கொழுப்பு என்கிற கலவையான ராஜபோதையில் உருண்டு புரண்டு திளைக்கும் தரகு முதலாளிகளும் அவர்கள் வீட்டுச் செல்லக் குட்டிகளும் உண்மையில் தங்கள் சொந்த வாழ்வில் பின்பற்றும் அறம் என்னவென்பதை இந்த ஐ.பி.எல் அசிங்கங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. சித்தார்த் மல்லையாவுக்கு சற்றும் சளைக்காத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதலாளி இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் வாரிசு கடந்த சில வாரங்களுக்கு முன் தான் மும்பையில் இரவு நேரம் கெட்ட நேரத்தில் சரக்கு சப்ளை செய்யவில்லை என்று ஒரு ஹோட்டலில் தகராறு செய்து, தட்டிக் கேட்க வந்த போலீசாரையும் தாக்கியதாக செய்திகள் வெளியானது.
ஐ.பி.எல் என்பதே விளையாட்டு என்கிற அந்தஸ்த்தை இழந்து வெறும் முதலாளிகளின் மூணு சீட்டு என்பதாக சுருங்கிப் போய் விட்ட நிலையில், அதன் தர்க்கப்பூர்வமான விளைவுகள் மட்டும் வேறெப்படி இருக்கும்? ஊரில் கிராமத்தில் சந்து பொந்துகளில் குத்தவைத்து மூணு சீட்டு ஆடும் லும்பன்கள் வாயில் சுவர்முட்டியும், நாட்டுச் சாராயமும் வழிகிறதென்றால், ஐ.பி.எல் வீரர்கள் கொகெய்னை உறிஞ்சுகிறார்கள். என்ன இருந்தாலும் சர்வதேசத் தரமல்லவா?
மனமகிழ் மன்ற சீட்டாட்டக் கிளப்பின் புகை மண்டிய மூடிய அறைக்கும் திறந்தவெளி ஐ.பி.எல் மைதானத்துக்கும் ஐந்து வித்தியாசங்களைத் தோற்றத்தில் கண்டு பிடிக்க முடிந்தாலும் சாராம்சத்தில் ஒன்று தான். மேலே விவரிக்கப்பட்ட சம்பவங்களனைத்தும் இரண்டு நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து நடந்தவைகள். இது இத்தோடு ஓயப்போவதில்லை – ஐ.பி.எல் இருக்கும் வரை இது போன்ற கேலிக் கூத்துகள் தொடர்ந்து நடக்கத் தான் போகிறது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான டிராமாக்களை அரங்கேற்றுவதற்கு இந்தப் போட்டிகளை நடத்துபவர்களின் பணக் கொழுப்பும் அதிகாரத் திமிரையும் தாண்டி வேறு தேவைகளும் காரணங்களும் இருக்கின்றன.
கடந்த ஆண்டு தொலைக்காட்சி நேயர்கள் ரேட்டிங்கை விட இந்தாண்டு ஐ.பி.எல் போட்டிகள் துவக்கத்திலேயே 18.7% சரிந்திருந்த்து. 9 அணிகள் விளையாடும் இந்த சீசனில், லீக் ஆட்டங்களையும் இறுதியாட்டத்தையும் சேர்த்து மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 76. என்னதான் பாரின் சரக்கு என்றாலும், ஓவராகப் போனால் வாந்தியில் தானே முடிந்தாக வேண்டும்? சலிப்புற்ற தொலைக்காட்சி பார்வையாளர்களை இழுத்துப் பிடிக்க வழக்கமான கிரிக்கெட் போதையைத் தாண்டி வேறு கிளுகிளுப்புகளும் தேவைப் படுகிறது. விறுவிறுப்பு – மேலும் விறுவிறுப்பு – மேலும் மேலும் விறுவிறுப்பு என்கிற இந்த நச்சுச் சுழற்சியில் அவர்கள் விரும்பியே தான் மாட்டிக் கொண்டுள்ளனர்.
வெறும் மாமியார் மருமகள் சண்டை என்றால் எத்தனை வருடங்கள் தான் பார்ப்பார்கள்; ஒரு கள்ளக் காதல், ஒரு கொலை என்று இருந்தால் தானே ஆட்டம் களை கட்டும்? அந்த கிளுகிளு ஊறுகாய்கள் தான் இது போன்ற பொறுக்கித்தனங்களை ஊடகங்கள் மேலும் மேலும் சுவை சொட்டச் சொட்ட நமக்கு வழங்குவது.
ஊடங்கள் ஐ.பி.எல்லில் நடக்கும் கூத்துகளை கடைவிரிப்பது அதை ஒழித்துக் கட்டுவதற்காக இல்லை. தங்களுக்கு கோடிக்கணக்கில் விளம்பரங்கள் மூலம் படியளக்கும் பொன் முட்டையிடும் வாத்தை அத்தனை சீக்கிரம் கொன்று விட முதலாளித்துவ ஊடகங்களும் முட்டாள்கள் அல்ல. தொய்வாகப் போய்க் கொண்டிருந்த திரைக்கதையின் நடுவே ஒரு கற்பழிப்புக் காட்சியை வைப்பதன் மூலம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு இழுத்து வரும் அதே பழைய கோடம்பாக்கத்து உத்தி இது. அதனால் தான், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடக்கும் அத்தனையையும் கண்டும் காணாததும் போல் கடந்து செல்கிறது.
ஆப்ரிக்க சப்சஹாரா பாலைவனங்களில் வாழும் குழந்தைகளை விட அதிகளவில் சத்துக்குறைவால் வாடும் நோஞ்சான் குழந்தைகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில், நாலில் ஒருவர் மூன்று வேளை சோறில்லாமல் பட்டினியில் வாடும் வறியவர்களைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் இப்படிப் பட்ட ஆடம்பரக் கூத்துகளை எந்த வெட்கமும் இன்றி நடத்த வேண்டுமென்றால் அதற்கு ஹிட்லரின் இதயமும், அம்பானியின் மூளையும், மன்மோகனின் ஆன்மாவும், மல்லையாவின் உடலையும் கொண்டு பிறந்த ஒரு கலவையான விஷஜந்துவால் தான் முடியும்.
ஐ.பி.எல்லின் வண்ணமயமான காட்சிகளைக் கண்டு மகிழும் ரசிகர்கள் அவர்களை வைத்து நடத்தப்படும் இந்த நாடகத்தை எப்போது உணரப் போகிறார்கள்? முழுமையான மேட்டுக்குடி கேளிக்கையாள மாறி விட்ட இந்த ஆட்டத்தில் இன்னும் கொலை மட்டும்தான் நடக்கவில்லை. அது நடந்தாலும் ஆச்சரியமில்லை.!
நிலைக் கண்ணாடியில் முகம் பார்த்து மணிக்கணக்கில் இன்பம் காணுவது விடலைப்பருவத்தின் உளவியில். சற்று வயதானதும் இது நமக்கே தெரியாமல் மாறிவிடுகிறது. ஆனால் பாசிஸ்டுகள் மட்டும் எத்தனை வயதானாலும் தங்களது முகத்தை கட்டவுட்டிலோ, ஹோர்டிங்கிலோ, ஊடகங்களிலோ எப்போதும் பார்த்து மகிழ்வார்கள். இதில் உலக அளவில் சாதனை படைத்தவர் ஜெயலலிதா.
90களின் ஆரம்பத்தில் இவர் ஆட்சியைப் படித்ததும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஓவியர்கள் காட்டிலும் மழை! அம்மா வீட்டை விட்டு இறங்கினாலும், கோட்டைக்கு வந்தாலும், கோவிலுக்கு சென்றாலும், மழைக்கு ஒதுங்கினாலும் எங்கெங்கு காணினும் கட்டவுட்தான். மேள தாள வரவேற்பு, பழங்கள்-காய்கறிகள் வரவேற்பு வளைவுகள், சிவப்பு கார்ப்பட் வரவேற்பு என்று அ.தி.மு.க அடிமைகள் புதுசு புதுசாக வெளுத்து வாங்கினார்கள். இதன் நீட்சியாகத்தான் காலில் விழுவதிலும் சாதனை படைத்தார்கள்.
இத்தகைய மரபின் சொந்தக்காரி இன்றும் அடங்கி விடவில்லை. கடந்த மே 16 ( 16.5.12) அன்று ஜெயாவின் ஓராண்டு ஆட்சி நிறைவை ஒட்டி ” நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை” என்று ஒரு விளம்பர படையெடுப்பு இந்தியா முழுவதும் நடைபெற்றது. டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ், எகனாமிக் டைம்ஸ், ஏசியன் ஏஜ், இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து பிசினெஸ் லைன், மின்ட், பிசினெஸ் ஸ்டாண்டர்டு, தி ஸ்டேட்ஸ்மென், தி டெலிகிராப் மற்றும் தி ஹிந்து, அனைத்து தமிழ் பத்திரிகைகள் என சகல ஊடகங்களிலும் ஆறு பக்க விளம்பரம் பேய்மழை போல வெளிவந்தது. இதில் பல ஆங்கிலத் தினசரிகளுக்கு தமிழ்நாட்டில் பதிப்பே கிடையாது.
இதன் ஒட்டு மொத்த செலவு தோராயமாக 25 கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். ஒரு நிறுவனம் ஒரே நாளில் விளம்பரத்திற்க்காக அதிக பட்சம் செலவழித்திருப்பதில் இதுதான் சாதனை என்கிறார்கள். இதற்கு முன்னர் வோடோஃபோன் நிறுவனம் தனது சாம்ராஜ்ஜியத்தை துவக்கிய தினத்தன்று அதிக பட்சம் பத்து கோடி ரூபாயை ஒரே நாளில் செலவழித்ததுதான் ரிக்கார்டாம். அந்த வகையில் இது ஒரு ரிக்கார்டு பிரேக்! அம்மாவின் ஆட்சி மட்டுமல்ல விளம்பரமும் சாதனைதான் என்று ஒரு விளம்பரம் கொடுத்து விட்டால் போயிற்று! இந்த விளம்பர யுத்தம் ஒரு நாளோடு முடிந்துவிடவில்லை. அதன் பிறகும் எல்லா தினசரிகளிலும் ஒரு பக்க விளம்பரங்கள் இதுவரை வந்தபடிதான் இருக்கின்றன. இதன் கணக்கு தனி! எப்படியும் பல கோடிகள் இரைக்கப்பட்டிருக்கும்.
தங்கம், ஆடு-மாடு, லேப்டாப், சைக்கிள், காப்பீடு, அரிசி என்று அம்மாவின் கருணை உள்ளத்தால் நடத்தப்படும் பொருட்களின் சாதனைகளை விளம்பரங்கள் பேசின. ஆனால் இந்த திட்டங்களினால் ஆதாயம் அடையும் மக்கள் எவரும் இத்தகைய ஆங்கில விளம்பரங்களை பார்க்கப் போவதில்லை. தமிழிலும் கூட இத்தகைய அரசு விளம்பரங்களை யாரும் படிக்கப் போவதில்லை. ஆனாலும் ஆங்கிலம் படித்த இந்திய நடுத்தர மற்றும் மேட்டுக்குடி வர்க்கத்திடம் தனது இமேஜ் செல்வாக்கோடு இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கருதுகிறார். இனம் இனத்தோடுதான் சேருமென்றாலும் ஆங்கில தினசரிகளில் வரும் அரசு விளம்பரங்களைக் கூட யாரும் சீண்டுவதில்லை என்று விளம்பர நிறுவன ஆட்கள் கூறுகின்றனர்.
ஒருவேளை ஜெயலலிதா தன்னைப்பற்றி ஊடகங்களில் பெரிய அளவில் அடிபட வேண்டுமென்று நினைத்தால் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்காலமென்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் தமிழக நிருபர்கள் போல பயந்து பணிந்து நடக்கும் கூட்டங்களையே அம்மா அடிக்கடி நடத்துவதில்லை. இந்திய நிருபர்கள் என்றால் அவர்கள் பில்கேட்ஸ் முன்னாடிதான் பணிவோடு பேசுவார்களே அன்றி லல்லு, முலாயம் என்றால் குதறி விடுவார்கள். அந்த அளவு அமெரிக்க அடிமைகள் என்றாலும் கான்வென்டு கல்வி புகழ் ஜெயலலிதா ஆங்கிலம் நன்கு பேசினாலும் ஓரிரு நிருபர்கள் எடக்கு மடக்காக கேட்டு விட்டால் என்ன செய்வது? இதற்காக அவர்கள் ஓ. பன்னீர் செல்வத்த்திடமா பயிற்சி எடுக்க அனுப்ப முடியும்?
கரண் தபாருடனான விவாத நிகழ்ச்சியில் மோடி, ஜெயாஎனும் இரண்டு பாசிஸ்ட்டுகள் மட்டும் வெளிநடப்பு செய்ததையும், கோபத்தில் பொங்கியதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். தற்போது அப்பாதையில் மம்தா பானர்ஜியும் சிஎன்என் ஐபிஎன்னின் நிகழ்ச்சி ஒன்றில் வெளிநடப்பு செய்திருக்கிறார். கேள்வி கேட்ட மாணவியையும் மாவோயிஸ்டு என்று முத்திரை குத்தியிருக்கிறார். மம்தாவுக்கே இவ்வளவு அகந்தை இருக்குமென்றால் அது ஜெயாவிடம் எத்தனை மடங்கு அதிகமிருக்கும்? அந்த வகையில் ஜெயா இப்படி இந்திய அளவு செய்தியாளர் கூட்டத்தை நடத்தி செய்தில் அடிபடுவது எல்லாம் சாத்தியமில்லை. பாசிசக் கடவுள்கள் எவரும் அடிமைகள் அல்லாத கூட்டத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. தங்கள் நிழலைக்கூட கண்டு அஞ்சும் இவர்கள் எந்த வகையிலும் வரும் மயிலிறகு எதிர்ப்பைக் கூட விரும்புவதில்லை.
2014 இல் நடைபெற வேண்டிய பாராளுமன்றத் தேர்தல்களில் ஒரு குயின் மேக்கராக இருந்து முடிந்தால் பிரதமர் பதவியையும் அடைய வேண்டும் என்ற இலட்சிய தாகத்தில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு குட்டியூண்டு தமிழ்நாடு எல்லாம் போதாது. இடையில் சொத்து குவிப்பு வழக்கு வேறு முடியாத கெட்ட கனவாய் நீண்டு கொண்டே போகிறது. இருந்தும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு சங்மாவை ஆதரிக்க வேண்டுமென்று அவர் ஒரு அதிரடியை துவங்கியிருக்கிறார். ஆகவேதான் இப்படியாவது ஒரு விளம்பர யுத்தத்தை நடத்தி தனது இமேஜை வென்றெடுக்க அவர் நினைத்திருக்கலாம்.
எனினும் தொடர்ந்து தனது முகத்தை காண்பித்தால் பயந்து கொண்டாவது மக்கள் தன்னை ஆதரிப்பார்கள், தமிழ் நாளேடுகள் போன்று ஆங்கில நாளேடுகளும் பணிவார்கள் என்று அவர் கருதக்கூடும். இப்படித்தான் பாசிஸ்டுகளான இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியின் பிறந்த, இறந்த தினத்தென்று இந்திய அரசு தோராயமாக 30 கோடி ரூபாயை விளம்பரத்திற்கென்று செலவழிக்கிறதாம். அப்படிப் பார்த்தால் இதுதான் ரிக்கார்டு.
ஆக மொத்தம் பாசிஸ்டுகளின் இமேஜ் கூட இப்படி மக்களின் வரிப்பணத்தில்தான் வம்படியாக கட்டியமைக்கப்படுகிறது. ஆனாலும் பாசிஸ்டுகள் தங்கள் முகத்தை வெளியில் காண்பித்தால் ஆபத்து என்று ஒரு காலம் வரும். அது வரை மக்கள் இத்தகைய பிடாரிகளின் முகத்தை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமோ?
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், விளாம்பட்டியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தனலட்சுமி, சர்வலட்சுமி, விஜயலட்சுமி ஆகிய 3 காகித ஆலைகளின் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளுக்காகவும், கடந்த 7 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கூலி உயர்வுக்காகவும் 10.4.12 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் இணை ஆணையர் அழைத்தும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முதலாளி மறுத்து விட்டார். மாறாக எந்த முடிவும் எடுக்க அதிகாரமற்ற ஆலையின் நிர்வாகிகளைப் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்துள்ளார். முதலாளியின் கைபேசி எண்ணைக் கேட்ட இணை ஆணையருக்குத் அதனைத் தர மறுத்து விட்டனர் நிர்வாகத் தரப்பினர்.
முன்னர் நடந்த பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் மது அருந்தி விட்டு வந்து தங்களை மிரட்டியதாகப் பொய்ப்புகார் கூறி, அதனால் தற்போது பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என்று தட்டிக்கழிக்கிறது முதலாளி தரப்பு. தொழிற்சங்கங்கள் மூலம் அறிவிப்பு செய்து அனுமதி பெற்று நடத்துகின்ற வேலை நிறுத்தத்தை சட்ட விரோதமானது என்றும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார் முதலாளி.
முப்பது ஆண்டுகளாக வேலை செய்து வரும் அனுபவம் வாய்ந்த தொழிலாளர்களுக்கே சம்பளம் ரூ.7500 க்குள்தான். 150 க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்த கூலி மாத்திரம்தான்; எந்தச் சலுகையும் கிடையாது. தலா 500 பேர் வரை வேலை செய்யும் இந்த ஆலைகளில் தொழிலாளர்களுக்கு உணவக வசதி கூட கிடையாது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கூலி உயர்வு தரப்பட வேண்டும் என்ற தற்போதைய ஒப்பந்தத்தை மதிக்காமல், கடந்த 7 ஆண்டுகளாக சம்பள உயர்வு தராமல் இழுத்தடித்து வரும் முதலாளி தரப்பு, அதற்குக் காரணம் ஆலை மேம்பட்ட தொழில் நுட்பத்தால் மாத்திரமே இயங்குவதாகவும், தொழிலாளர் உழைப்பால் அல்ல என்றும் கூறி வருகின்றது. ஆரம்பத்தில் ஒரு ஆலை என்பதிலிருந்து இன்றைக்கு 7 ஆலைகளாக மாறியுள்ளதற்கு தொழிலாளர்களது உழைப்பு காரணமல்ல என்று கூசாமல் பேசுகிறார் அம்முதலாளி.
அண்மையில் நெல்லை மாவட்டத்தில் தொடங்கியுள்ள புதிய ஆலைக்கு இங்கிருந்து போன தொழிலாளர்களுக்கு ரூ 15 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. கேட்டால் அது வேறு, இது வேறு என்று சொல்கிறார்கள். கிராமப்புற விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களைக் குறைந்த சம்பளத்துக்கு அமர்த்தி, அவர்களது உழைப்பை ஒட்டச் சுரண்டி, பல கோடிகளைக் குவித்துள்ளார் இம்முதலாளி. மாறாக இன்று தொழிலாளர்களெல்லாம் குடும்பமாகி, எல்லாப் பொருட்களும் ஒன்றுக்கு பத்து மடங்கு விலை உயர்ந்து நிற்கும் விஷச் சூழலில் வாழக் கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுவரை இப்பகுதியில் உள்ள 3 ஆலைகளின் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியதே இல்லை. ஆனால் இம்முறை அனைத்துத் தொழிலாளர்களும், சங்கங்களும் ஒருமித்து ஒற்றுமையாகப் போராடுகிறார்கள் என்றால், அதற்கு காரணம் எல்லா தொழிலாளர்களும் ஒரே மாதிரியான வாழ்க்கை நெருக்கடியைச் சந்திப்பது தான். ‘மூத்த தொழிலாளர்களுக்கு ரூ 5 ஆயிரம் சம்பள உயர்வு, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம், முன் தேதியிட்டு ஊதிய உயர்வு’ ஆகிய முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடும் தொழிலாளர்களுக்கு பேச்சுவார்த்தையின் போது ‘ஊதிய உயர்வில் ரூ. 1000 க்கு மேல் சல்லிக்காசு கூட தர முடியாது’ என்று நிர்வாகம் சண்டித்தனம் செய்து வருகின்றது.
தொழிலாளர்களது அழைப்பின் பேரில் 26.4.12 அன்று ஆலை வாயிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையச் செயலாளர் தோழர் லயனல் அந்தோணிராஜ் கலந்து கொண்டு உரையாற்றினார். நூற்றுக்கணக்கில் திரளாகத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தொழிலாளர்களின் போராட்டத்துக்கு எல்லா வகையிலும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஒத்துழைப்பு நல்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. தொடர்ச்சியான இப்போராட்டம் தொழிலாளர்களிடையே வர்க்க ஒற்றுமையையும், புதிய நம்பிக்கையை தோற்றுவித்துள்ளது.
தனியார் துப்பறியும் நிறுவனங்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் இருக்கும் மேட்டுக்குடியினர் தமது வாரிசுகளின் மண உறவு, கள்ள உறவு குறித்த உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்கு இவர்களைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் அதற்கும் மேலே போய் ’ஒரு மனிதன் என்ன பொருள் வாங்குகிறான்’ என்று கண்டுபிடிப்பதற்குக் கூட ஆள் வைத்து அறிந்து கொள்கிறார்கள். அதாவது எல்லா பேரங்காடிகளையும் நடத்தும் நிறுவனங்களுக்கு இத்தகைய புலனாய்வுப் புலிகள்தான் முக்கியமானவர்கள்.
அமெரிக்காவில் இருக்கும் டார்கெட் எனும் சங்கிலித்தொடர் பல்பொருள் அங்காடியில் நுழையும் அந்த மனிதர் கடையின் மேலாளரைப் பார்த்து ”என் மகள் இப்பொழுது ஹைஸ்கூல் தான் படிக்கிறாள். அவளுக்கு ஏன் கர்ப்பமுற்றோர்களுக்கு உதவும் பொருட்கள் மீதான சலுகைக் கூப்பன்களை அஞ்சலில் அனுப்பியுள்ளீர்கள்?” என்று கோபமாகக் கேட்கிறார். மேலாளர் ”ஏதாவது தவறு நடந்திருக்கலாம்” என மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இரண்டு நாள் கழித்து அதே நபர் மீண்டும் கடைக்குள் வருகிறார். கடையின் மேலாளரிடம் சென்று தன் மகள் உண்மையில் கர்ப்பமுற்றிருப்பதாகவும், ஒரு வழியாக அவள் காதலன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும் கூறி, அவளுக்குச் சில பொருட்களை வாங்க வந்திருக்கிறேன் என்கிறார். மீண்டும் அவர் வீட்டிற்கு டார்கெட்டிலிருந்து கூப்பன்கள் வரத் துவங்குகின்றது.
மேலே நீங்கள் படித்தது ஒரு உண்மைச் செய்தி. மகள் கர்ப்பமுற்றாள் என்பது அப்பனுக்கும் தெரியாது, ஆண்டவனுக்கும் தெரியாது எனும் போது ஒரு கடைக்காரனுக்கு மட்டும் தெரிந்தது எப்படி? இது வெறும் மாயவித்தை அல்லது எதேச்சையானது என்றால் அடிக்க வந்து விடுவார்கள் டார்கெட் நிறுவன மார்கெட்டிங் பிரிவினர். இப்படித் தங்கள் வாடிக்கையாளர்கள் வீட்டில் யாராவது கர்ப்பமாக இருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க பல இலட்சம் ரூபாய்களை மாதச் சம்பளமாகக் கொடுத்து தேர்ந்த புள்ளியியல் நிபுணர்களையும், உளவியல் மருத்துவர்களையும் புலனாய்வுப் பணிக்கு அமர்த்தியிருக்கிறது டார்கெட்.
கர்ப்பமானவர்களை ஏன் பல்பொருள் அங்காடி மார்கெட்டிங் பிரிவு கண்டுபிடிக்க வேண்டும்? ஒருவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று எப்படிக் கண்டுபிடிப்பார்கள்? இதைப் புரிந்து கொள்ள நாம் இன்னொரு நபரைச் சந்திக்க வேண்டும். அவர் ரிச்சர்டு.
ரிச்சர்டு ஒரு சாதாரண அரசு ஊழியர். ஆனால் சேமிப்பைப் பெரிதும் விரும்புபவர். தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்க மாட்டார். கடன் அட்டையைக் கச்சிதமாகப் பயன்படுத்துவார். தனக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதால் போதுமான அளவு சேமிப்பில் பணம் வைத்திருந்தார். அந்த நாளும் வந்தது; அவர் மனைவி கருவுற்றார். சில நாட்கள் கழித்து டார்கெட் அங்காடியில் இருந்து கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பொருட்கள் மீதான சலுகைக் கூப்பன்கள் அவருக்கு அஞ்சலில் வந்தன. சரி சலுகையில்தானே என்று கவரப்பட்டு கருவில் இருக்கும் குழந்தைக்காகவும், தன் மனைவியின் உடல் நலத்திற்காகவும் சில பொருட்களை வாங்கினார்.
சில நாட்கள் கழித்து பிற உபயோகிக்கும் பொருட்கள் மீதும் சலுகைக் கூப்பன்கள் வர ஆரம்பித்தன. முதலில் 50% கழிவு என வந்த கூப்பன்கள் மெல்ல 30, 20, 15 சதவீதம் எனக் குறையத் தொடங்கின. இதை ரிச்சர்டு கவனித்தாலும், விலை குறைகிறது இலாபம் தானே என்று பார்த்தார். இன்னொரு பக்கம் அவர் மனைவி பல பொருட்கள் உபயோகமற்றிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். ரிச்சர்டு காதில் எதனையும் வாங்கவில்லை. தாம் எவ்வளவு புத்திசாலித்தனமாக மலிவு விலையில் பொருட்களை வாங்குகிறோம் என்பதில் அவர் அசாத்திய மேதை போல நினைத்திருந்தார்.
மெல்ல ரிச்சர்டு அந்தக் கடையில் உறுப்பினர் ஆனார். அவர் அந்தக் கடையில் எது வாங்கினாலும் 5 சதவிகிதக் கழிவு என்றனர். ரிச்சர்டு அலுவலகம் விட்டும் வரும் வழியில் அந்தக் கடைக்குச் சென்று ஏதாவது வாங்க ஆரம்பித்தார். அலுவலக நெருக்கடி, மன உளைச்சல், வீட்டில் சண்டை, நேரம் கடத்த வேண்டும் என்றாலும் அவர் டார்கெட்டில் நுழைந்து கடையைச் சுற்றி வர ஆரம்பித்தார். அது அவர் மனதை ஆசுவாசப்படுத்தியது. டார்கெட் உள்ளே நுழைந்தாலே ஒரு டாலருக்காவது ஏதாவது வாங்கி விடுவார். கடன் அட்டையில் கடன் அதிகமாகி விட்டது. இப்பொழுது ரிச்சர்டு மனதளவில் அந்தக் கடைக்கு ஒரு அடிமையாகி விட்டார்.
அத்தியாவசியத்திற்கும், தேவைக்கும் வாங்கியது போய் கடைக்குள் நுழைந்து ஏதாவது வாங்கியே ஆக வேண்டுமென்ற அப்ளூயன்சா (Affluenza – நுகர்வுக் கலாச்சார மன நோய்) நோய்க்கு ஆளானார். இது ஏதோ ஒரு ரிச்சர்டுக்கு உள்ள நோய் என்று நினைத்து விடாதீர்கள். முழு அமெரிக்காவுக்கும் உள்ள நோய். இந்தியாவிலும் நடுத்தர வர்க்கத்திடம் பரவி வரும் நோயும் இதுவே.
இந்த நோயை ’தேர்ந்த விஞ்ஞானம்’ என்கிறார்கள் டார்கெட் நிறுவனத்தினர். ஆனால் நாமோ இதைப் ’பகற்கொள்ளை, பொறுக்கித்தனம்’ என்கிறோம்.
தனியார் பலர் நுழைந்தால் ஏற்படும் அவர்களுக்குள்ளான போட்டியினால் பொருட்கள் விலை குறையும் என்பது முதலாளித்துவ ஆதரவாளர்களின் வாதம். ஆனால் முதலாளித்துவமோ விலையைக் குறைத்து விற்று நட்டத்தை (குறைவான இலாபத்தை) ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அதனால், அதே விலைக்கு அனைத்தையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்ற மனநிலையை வாடிக்கையாளர்களின் மத்தியில் உருவாக்குவது தான் அந்நிறுவனங்கள் இலாபத்தைக் குறையாமல் பெறுவதற்கான ஒரே வழி. குடிப்பழக்கம், புகைப் பழக்கம் மாதிரி வாங்கும் பழக்கம் என்பதை மக்களிடம் உருவாக்க வேண்டும். இதைத்தான் டார்கெட் உள்பட பல நிறுவனங்கள் செய்கின்றன.
உலக அளவில் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் கணித வல்லுநர்களையும், புள்ளியியல் நிபுனர்களையும் புலனாய்வுப் பணியில் அமர்த்தியிருப்பதன் இரகசியம் இதுதான். இவர்களின் வேலை, வாடிக்கையாளரை வேவு பார்த்து அவர்கள் என்ன வாங்குகிறார்கள், அவர்களை எப்படி வாங்க வைக்கலாம் என்று ஆய்வு செய்து, கடையில் எதையாவது வாங்கியே தீர வேண்டும் என்பதை வாடிக்கையாளர்களுக்கு ஒரு பழக்கமாகவே மாற்ற வேண்டும்.
புதிதாக முளைத்திருக்கும் இந்தத் துறை, வாடிக்கையாளரின் கடன் அட்டை, வங்கிக் கணக்கு, செல்பேசி எண், முகவரி இவற்றை வைத்து தொடர்ந்து என்ன வாங்குகிறார்கள் என்று வேவு பார்க்கும். அவர்கள் பணத்தை உபயோகித்தால் நிறுவனமே முன் வந்து அவர்களுக்கு உறுப்பினர் அட்டை கொடுக்கும். அதை உபயோகித்தால் தள்ளுபடி கிடைக்கும் என்பார்கள். ஆனால் உண்மையில் வாடிக்கையாளர்களை வேவு பார்க்கத்தான் உறுப்பினர் அட்டையைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கினால், அதைச் சார்ந்த பிற பொருட்களின் மேல் தள்ளுபடி என போலி கூப்பன்கள் மூலம் உண்மை விலைக்கு தேவையற்ற பொருட்களை வாங்க வைக்க முயற்சிப்பார்கள்.
இன்னொரு பக்கம் அவர்களின் முக்கிய கண்டுபிடிப்பு, குழந்தை பிறக்கப் போகும் வீட்டில் வாங்கும் பழக்கம் அதிகரிக்கும் என்பது. அதனால் மருத்துவமனை முதல் குழந்தைகள் பிறப்பு தகவல் மையம் வரை உள்ள தகவல்களைச் சேகரித்து, அந்தப் பெற்றொர்களுக்குப் போலியான தள்ளுபடி கூப்பன்களை அனுப்பி அவர்களை பொருட்கள் வாங்க வைப்பார்கள்.
குழந்தை பிறக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும், பெண்கள் வாங்கும் பொருட்களை ஆராய்ந்தாலே கர்ப்பிணிகள் குறிபிட்ட பொருட்களை வாங்குவார்கள் என்று தெரியும். ஒரு பெண் குறிப்பிட்ட ஒரு மாதத்தில் கிருமி நாசினி சோப், பஞ்சு, சில லோஷன்களை வாங்குகிறார்; அவரே 2 மாதம் கழித்து கிருமி நாசினி, இரும்புச் சத்து மாத்திரைகளை வாங்கினால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று கணிக்கிறார்கள். கணிப்பு 90 சதவிகிதம் சரியாகவே இருக்கின்றது. அவ்வளவுதான், அவர்களைக் கண்காணித்து, தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்து, மெல்ல வாங்கும் பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுவார்கள்.
தேவைக்குப் பொருட்கள் என்பதை ஒழித்து, நோக்கமற்று வாங்குவதையே பழக்கமாக உருவாக்க அந்த நிறுவனம் மனநல நிபுணர்களை வேலைக்கமர்த்தவும் தயங்கவில்லை. இன்னொரு புறம் விலைவாசி ஏறி விட்டிருக்கும் இந்த நாட்களில் தள்ளுபடி கூப்பனை உபயோகிக்க வேண்டும் என்று எந்த மனமும் சொல்லும். கட்டுப்படியாகாத விலை என்பதன் மறுபக்கம்தான் இந்தத் தள்ளுபடி மயக்கத்தைத் தோற்றுவிக்கும் கூப்பன்கள். ஆக விலை உயர்வினால் மட்டும் மக்கள் அவதிப்படவில்லை. விலை குறைவு போல தோற்றமளிக்கும் இந்த தள்ளுபடி போதையாலும் துன்பப்படுகிறார்கள்.
உங்களைத் திட்டமிட்டு அடிமையாக்குவது, அதைக் கலாச்சாரமாகத் திணிப்பது இன்றைய தனியார்மயத்தின் அடிப்படை விதி. நீங்கள் வாங்கியே ஆக வேண்டும். பணத்தை சேமிப்பதை விட அதைச் செலவழிக்க வேண்டும். மக்களைச் செலவழிக்கும் எந்திரங்களாக மாற்றி ரத்தத்தை உறிஞ்சுவதுதான் முதலாளிகளின் இன்றைய நிலை.
அமெரிக்க அரசு யார் தீவிரவாதிகள் என்பதற்காக மக்களை உளவு பார்க்கின்றது. அமெரிக்க முதலாளிகள் யார் கையில் பணம் இருக்கிறது என்று உளவு பார்க்கிறார்கள்.
‘‘தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை நிலைநாட்டுவது, பாதுகாப்பது ஆகியவை குறித்து மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாடைக் கூட்டப் போவதாக” மைய அரசு டாம்பீகமாக அறிவித்த இரண்டாவது நாளே, அதனின் முகத்தில் சாணியை அடித்தாற்போன்றதொரு தீர்ப்பை பீகார் மாநில உயர் நீதிமன்றம் அளித்திருக்கிறது. பீகாரிலுள்ள பதனி டோலா கிராமத்தில் 16 ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் முசுலீம் மதத்தைச் சேர்ந்த 21 பேரை, ரன்வீர் சேனா என்ற ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் குண்டர் படை படுகொலை செய்த வழக்கில், கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 23 குற்றவாளிகளையும் விடுதலை செய்து அளித்த தீர்ப்புதான் அது.
பதனி டோலாவில் நடந்த படுகொலை தமிழகத்தில் கீழ்வெண்மணியில் நடந்த படுகொலைக்கு இணையானது. அப்பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்படும் கூலியை முப்பது ரூபாயாக உயர்த்திக் கொடுக்க வேண்டும் எனக் கோரி, சி.பி.ஐ. (எம்.எல்.) லிபரேஷன் என்ற கட்சியின் தலைமையில் அணிதிரண்டு போராடி வந்தனர். கூலி விவசாயிகள் சங்கமாக அணிதிரண்டு தமது ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பதையும் கூலிஉயர்வு கேட்பதையும் பொறுத்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிகளான ராஜ்புத் மற்றும் பூமிகார் சாதிகளைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், தாழ்த்தப்பட்ட கூலிவிவசாயிகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க நடத்திய படுகொலைதான் பதனி டோலா படுகொலை.
ரன்வீர் சேனா ஜூலை 21, 1996 அன்று நடத்திய அத்தாக்குதலின்பொழுது, நய்முதீன் என்பவரின் மூன்று மாதப் பெண் குழந்தை மேலே தூக்கியெறியப்பட்டு, கொடுவாளால் பந்தாடப்பட்டுக் கொல்லப்பட்டது. இப்பச்சிளங்குழந்தையின் மரணம் ஒன்றே அப்படுகொலை எந்தளவிற்கு காட்டுமிராண்டித்தனமான முறையில் நடத்தப்பட்டது என்பதை எடுத்துக்காட்டும். ஏறத்தாழ மூன்று மணி நேரம் நடத்தப்பட்ட அத்தாக்குதலில் இறந்துபோன 21 பேரில், 20 பேர் பெண்களும், சிறுவர்களும், குழந்தைகளும்தான்.
இப்படுகொலை நாடெங்கும் அம்பலமாகி, பலத்த கண்டனங்களையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியதால், படுகொலை நடந்த மறுநாளே பாதிக்கப்பட்டோரிடமிருந்து வாக்குமூலம் பெற்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம், அப்பொழுது ஆட்சியிலிருந்த லல்லு அர”க்கு ஏற்பட்டது. ஆனாலும், கீழமை நீதிமன்றத்தில் இவ்வழக்கின் தீர்ப்பு பதினான்கு ஆண்டுகள் கழித்துதான் வந்தது. இவ்வழக்கில் 63 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தாலும், கீழமை நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருந்தபொழுதே, நான்கு பேர் இறந்து போனார்கள்; ஐந்து பேர் பாட்னா உயர் நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்; ஒருவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மீதிப் பேரில், 30 பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்த கீழமை நீதிமன்றம், 3 பேருக்குத் தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து மே, 2010 இல் தீர்ப்பளித்தது. பாட்னா உயர் நீதிமன்றம் தற்பொழுது இத்தீர்ப்பை தள்ளுபடி செய்து, 23 குற்றவாளிகளையும் நிரபராதிகள் என அறிவித்து விடுதலை செய்துவிட்டது.
படுகொலைக்கு காரணமான ரன்வீர் சேனா, ஆதிக்க சாதியின் கொலைப்படை
பாட்னா உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த நவ்நீதி பிரசாத் சிங், அஷ்வாணி குமார் சிங் என்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மன்றம் வழங்கிய இத்தீர்ப்பில் அதிகாரவர்க்கத்திற்கேயுரிய குதர்க்கப் புத்தியும், ஆதிக்க சாதி மனோபாவமும் பின்னிப்பிணைந்து வெளிப்பட்டுள்ளது. இவ்வழக்கில் படுகொலையிலிருந்து தப்பிப் பிழைத்தோர்தான் முக்கிய சாட்சியங்கள். சாதி மற்றும் வர்க்கப் படிநிலையில் அடிமட்டத்தைச் சேர்ந்த அவர்களது சாட்சியங்களை நம்ப முடியாது என ஒதுக்கித் தள்ளியதோடு, அவர்களைப் பொய்யர்கள், கட்டுக்கதை சொல்பவர்கள், நம்பத்தகாதவர்கள் என ஆதிக்க சாதிக் கொழுப்பெடுத்து அவமதித்துள்ளனர், நீதிபதிகள்.
‘‘ரன்வீர் சேனா பதனி டோலாவில் வசிக்கும் அனைவரையும் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்ததாகக் கூறும்பொழுது, அவர்கள் தங்களை மட்டும் எப்படி உயிரோடு தப்பவிட்டிருப்பார்கள்? நீங்கள் புதர்களுக்கு அருகே மறைந்துகொண்டு சம்பவத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தபொழுதே, ரன்வீன் சேனா தங்களைத் தேடி வந்து கொன்று போட்டிருக்காதா?” எனக் குதர்க்கமாகக் கேள்விகளை எழுப்பி, சம்பவத்தைப் பார்த்த நேரடி சாட்சியங்களைப் பொய் சாட்சியங்கள் என ஒதுக்கித் தள்ளியுள்ளனர், நீதிபதிகள்.
இந்த ஏழைகளின் சாட்சியங்களுக்கு உள்நோக்கம் கற்பித்து ஒதுக்கித் தள்ளிய நீதிபதிகள், ஆதிக்க சாதியைச் சேர்ந்த 23 குற்றவாளிகளையும் அப்பாவிகள் எனத் தமது தீர்ப்பில் குறிப்பிட்டு உருகியுள்ளனர். மேலும், இக்குற்றவாளிகளுள் மூன்று பேர் சம்பவம் நடந்தபொழுது சிறுவர்களாக இருந்தனர் என்றும், அவர்கள் தேவையில்லாமல் தண்டனை அனுபவித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டு, தீர்ப்பிலேயே வருத்தம் தெரிவித்துள்ளனர் நீதிபதிகள். மனுகூட இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதக் கூச்சப்பட்டிருப்பான். ஆதிக்க சாதி பாசத்தால் இத்தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது என்பது பச்சையாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே, போலீசு நடத்திய புலன் விசாரணையில் உள்ள ஓட்டைகளையும் பட்டியலிட்டு, குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளனர், நீதிபதிகள்.
பாட்னா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக நிதிஷ்குமார் அரசு அறிவித்த மறுநிமிடமே, அவரது அமைச்சரவையைச் சேர்ந்த கிரிராஜ் சிங், “பதனி டோலாவை இதோடு கிள்ளி எறிந்துவிட வேண்டும்; இப்பிரச்சினையை மேலும் மேலும் விவாதத்திற்கு உள்ளாக்குவது, நிலைமையை மோசமடையச் செய்யும்” என எச்சரித்தார். இந்த எச்சரிக்கையை நிதிஷ்குமாரின் நல்லாட்சியில் ஒட்டிக்கொண்டுள்ள ஆதிக்க சாதிவெறி பிடித்த ஏதோவொரு அமைச்சரின் குரலாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது.
ரன்வீர் சேனாவிற்கும் ஓட்டுக்கட்சிகளுக்கும் இடையேயுள்ள தொடர்பை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அமிர் தாஸ் விசாரணை கமிசனை, நிதிஷ்குமார், தான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடனேயே கலைத்து உத்தரவிட்டார். இத்தீர்ப்பு வெளிவருவதற்கு ஏறத்தாழ ஒரு வருடம் முன்பாக, ரன்வீர் சேனாவின் தலைவனும் பதனி டோலா படுகொலையைத் தலைமை தாங்கி நடத்தியவனுமான பிரம்மேஷ்வர் சிங்கிற்குப் பிணை வழங்குவது தொடர்பான வழக்கில், பிணையை மறுத்து வாதாடாமல், அவனை மேளதாளத்தோடு வழியனுப்பி வைத்தது, நிதிஷ்குமார் அரசு.
அவரது அரசு பெயரளவிற்கான நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளைக்கூட எடுக்க மறுத்து, ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களுக்குச் சாதகமாகவே நடந்து வருகிறது. ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களுக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடையேயான நிலப்பிரச்சினையொன்றில், அமாவ்ஸி என்ற பகுதியில் நடந்த அடிதடி கொலை வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்ட 14 தாழ்த்தப்பட்டோரில் 10 பேருக்குத் தூக்கு தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. பாட்னா உயர் நீதிமன்றம் பதனி டோலா வழக்கில் ஆதிக்க சாதிவெறியர்களுக்கு விடுதலை வழங்கிய அதேநேரத்தில் நிலத்திற்காகப் போராடிய தாழ்த்தப்பட்டோருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு சாதிவெறியின் அடிப்படையில் வழங்கப்படவில்லை, சட்டப்படியே அளிக்கப்பட்டுள்ளது எனக் காட்டிக் கொள்வதற்காகவே, அத்தாழ்த்தப்பட்டோர் அனைவரும் மாவோயிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனச் சாட்சியங்கள் சோடிக்கப்பட்டன.
இந்தப் பின்னணியிலிருந்து பார்த்தோமானால், பாட்னா உயர் நீதிமன்றத் தீர்ப்பு, ஆதிக்க சாதி மனோபாவம் கொண்ட ஏதோ இரண்டு நீதிபதிகளின் உள்ளக்கிடக்கையல்ல என்பதையும் நிதிஷ்குமாரின் நல்லாட்சி என்பது ஆதிக்க சாதிக் கும்பலின் விசுவாச ஆட்சி என்பதையும் புரிந்துகொள்ளலாம். அவரது ஆட்சியைப் புகழ்ந்து தள்ளிவரும் தேசியப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும்கூட இத்தீர்ப்பு குறித்து அடக்கியே வாசிக்கின்றன. ஜெஸிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதைக் கண்டித்து வானத்துக்கும் பூமிக்குமாக சாமியாடிய ஊடகங்களின் மனசாட்சி, இந்தப் பிரச்சினையில் ஊமையாக இருப்பதேன் என்ற கேள்வியை எழுப்பிப் பாருங்கள், அவைகளின் ஆதிக்க சாதிவெறிப் பாசமும் அம்பலப்பட்டுப் போகும்.
சீனப் புரட்சியின் பின்னணியில் ஒரு பிற்போக்கான குடும்பத்தை சேர்ந்த டாவொசிங் எனும் பெண் புரட்சியில் பங்கெடுக்கும் உணர்வுப்பூர்வமான புதினத்தை ‘இளமையின் கீதம்’ என்ற பெயரில் யாங் மோ எழுதினார். இப்புதினத்தைப் பற்றி ஏற்கெனவே புதிய கலச்சாரத்தில் ஒரு அறிமுகக் கட்டுரை வந்திருக்கிறது. இப்புதினம் சீனாவில் திரைப்படமாகஎடுக்கபட்டிருக்கிறது. அந்தத் திரைப்படத்தின் பகிர்வே இப்பதிவு. இந்தப் படத்திற்கு யாங்மோ கச்சிதமான திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். புதினத்தின் மையக்கருத்தை சிதைக்காமல் டாவொசிங்கின் பாத்திரத்தை திரையில் உயிருடன் உலவ விட்டிருக்கிறார்கள். வடிவம் உள்ளடக்கம் என அனைத்திலும் சிறப்பானதொரு திரைப்படம்.
கதை:
மிகப் பிற்போக்கான சீனக் குடும்பத்தை சேர்ந்தவர் டாவொசிங் எனும் பெண். அவள் அம்மா சீன கோமிங்டாங் கட்சியில் போலிசாக பணிபுரியும் ஒருவருக்கு அவளை மணமுடிக்க முயற்சி செய்கிறார். அந்தத் திருமணத்தில் இருந்து தப்பிக்கும் டாவோசிங் தன் உறவினரைத் தேடி வேறு ஊருக்கு வருகிறாள். உறவினர் அந்த ஊரை விட்டே சென்று விட்ட நேரத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறாள். அவளை அந்த ஊரைச் சேர்ந்த யுயுவாங் காப்பாற்றுகிறான். அவன் ஒரு பல்கலைக்கழக மாணவன்.
யுயுவாங்கிற்கும், டாவொசிங்கிற்கும் காதல் மலர்கிறது. யுவாங் படிப்பதற்கு நகரம் செல்ல டாவொசிங் அந்த ஊரிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறாள்.
அந்த காலகட்டத்தில் ஜப்பான் சீனா மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கிறது. அடிமையாக வாழ விருப்பமில்லாத டாவோ ‘சீனா எதிர்த்துப் போரிட வேண்டும், ஜப்பானை வீழ்த்த வேண்டும்’ என்று நினைக்கிறாள். அதைத் தன் மாணவர்களுக்கு பாடமாகவும் நடத்துகிறாள். ஆனால் ‘அரசியலை எல்லாம் மாணவர்களுக்கும் சொல்லிக் கொடுக்கக் கூடாது’ என்று தலைமையாசிரியரிடமிருந்து கணடனம் வர கோபமாக வேலையை விட்டு விட்டு, நகரத்தை நோக்கி செல்கிறாள். வழியில் சீன கம்யூனிஸ்ட் தோழர்கள் ‘ஜப்பானை எதிர்த்துப் போரிட வேண்டும். நாட்டிற்கு புரட்சி வேண்டும்’ என்று முழக்கமிடுவதைக் கண்டு மகிழ்கிறாள். நகரத்திற்கு செல்லும் டாவோ யுயுவாங்கைச் சந்தித்து அவனுடன் ஒன்றாக வாழ்கிறாள்.
ஒரு நாள் இரவு புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது நண்பர்கள் மத்தியில் சீன நாட்டின் அடிமைத்தனத்தைப் பற்றி கொந்தளிப்பான பேச்சு வருகின்றது. அந்த நேரத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான தோழர் லுஷூவை டாவொசிங் சந்திக்கிறாள். லுஷூ மாவோ, சூடே தலைமையிலான சிவப்பு ராணுவம் வீரத்துடன் சண்டையிட்டு ஜப்பானை வீழ்த்தி வருவதாகவும், விரைவில் அமெரிக்க அடிவருடி சாங்கேஷேக்கை விரட்டிவிட்டு சீனா ஒரு புரட்சிகரப் பாதையில் நடைபோடும் என்றும் கூறுகிறார். இதைக் கேட்டு டாவொசிங் மகிழ்ச்சி கொள்கிறாள். தானும் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர வேண்டும் என விருப்பம் தெரிவிக்கிறாள். லுஷூ அவளை மார்க்ஸியம் பயிலச் சொல்கிறார்.
மார்க்ஸியத்தை படிக்க ஆரம்பிக்கிறாள் டாவோ. மார்ச் எட்டாம் தேதி நடக்கும் மகளிர் தினக் கூட்டத்தின் போது போலிசு கலகம் விளைவித்து கம்யூனிஸ்டுகளைக் கைது செய்ய முயல்கிறது. கைதிலிருந்து முக்கிய கம்யூனிஸ்டுகள் தப்பித்தாலும். டயூ மாட்டிக் கொள்கிறான். மாட்டியவன் போலிசின் ஆட்காட்டியாகி விடுகிறான்.
லுஷு தலைமறைவாக இருக்கும் போது டாவொவை சந்தித்து ஒரு பொட்டலத்தைக் கொடுக்கிறார். அதை மறைத்து வைக்குமாறும், ஒரு வேளை மூன்று வாரங்களில் தான் வரவில்லை என்றாள் அதை எரித்து விடுமாறும் சொல்லுகிறார்.
டாவொசிங்கின் இந்த கம்யூனிச நட்பு யுயுவாங்கிற்கு பிடிக்கவில்லை. ஆனால் டாவொசிங் ‘வீட்டில் சுயநலமாய் வாழ்வதை விட நாட்டிற்காகப் போராட வேண்டும்’ என்கிறாள். கருத்து வேறுபாடு முற்றி இருவரும் பிரிகிறார்கள். மறுபுறம் லூஷு கைது செய்யப்படுகிறார்.
சிறையில் லுஷு சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படுகிறார். மறுபுறம் அனைத்து தோழர்களும் தலைமறைவாகி விட, என்ன செய்வதென்று தெரியாத அவள் தோழர் லுஷூ கொடுத்த பொட்டலத்தைப் பிரிக்கிறாள். அதில் சிவப்பு வண்ணத்தில் எழுதிய முழக்கங்கள் இருக்கின்றன. இரவோடு இரவாக வீதி வீதியாகப் போய் அதை ஒட்டிவிட்டு வருகிறாள். அந்த நகரம் முழுவதும் பரபரப்படைகிறது. போலிசார் உஷார்ப்படுத்தப் படுகிறார்கள். விளைவு டாவோ போலிசு கண்காணிப்பில் வருகிறாள். அவள் யாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று முதலில் வீட்டைவிட்டு வந்தாளோ அவரே அவளைக் கண்காணிக்கும் போலிசு படையின் தலைவர்.
அங்கிருந்து தந்திரமாகத் தப்பி வேறு ஒரு கிராமத்திற்கு போய் அங்கே ஆசிரியராக அமர்கிறாள். அங்கு பழைய தோழர்களைச் சந்திக்கிறாள். அந்த கிராமத்தில் நடக்கும் கூலி விவசாயிகளின் போராட்டத்தில் பங்கெடுத்து அதனை வெற்றிகரமாக முன்னெடுத்து நடத்துகிறார்கள்.
அங்கிருந்து பெய்ஜிங் போகிறாள். ஆனால் பெய்ஜிங்கில் போலிசாரால் கைது செய்யப்படுகிறாள். சிறையில் முன்னர் சந்தித்த தோழர் சிங் எனும் பெண்மணியை மீண்டும் சந்திக்கிறாள். இருவரும் ஒரே சிறையில் அவதிப்படுகிறார்கள். கொடுமைகள், சித்திரவதைகள் எதற்கும் சிங் அஞ்சாததைக் கண்டு ஆச்சரியமடைகிறாள். அப்பொழுது சிங் ஒரு கம்யூனிஸ்ட் தோழரின் கதையைச் சொல்கிறாள். அந்தத் தோழர் கைது செய்யப்பட்டு சிறைக்கு வருகிறார். ஆனால் சிறையில் வழக்கம் போல் காலை எழுந்து உடற்பயிற்சி செய்கிறார்; மற்றவர்களுக்கு கம்யூனிசம் கற்றுக் கொடுக்கிறார்; காவலர்களுடன் நட்பாகப் பழகுகிறார்; மகிழ்ச்சியாக சிறை வேலைகளைச் செய்கிறார்.
அவருக்குத் தூக்குத்தண்டனை உறுதியாகிறது; ஆனால் அவர் வாழ்க்கையில் ஒரு சிறு மாற்றமுமில்லை. அதே உற்சாகத்துடன் தினமும் சிறையில் கழிக்கிறார். தண்டனை நாள் அன்று அனைவருக்கும் கைகுலுக்கி விடைபெற்று மைதானத்திற்குள் நுழையும் விளையாட்டு வீரனைப் போல மகிழ்ச்சியாகச் செல்கிறார்.
அவர் தோழர் சிங்கின் கணவர். அவரைப் பார்த்து வியப்படைந்த அனைத்துத் தோழர்களுக்கு சொல்லுவது ஒன்றேதான், ‘நான் மற்றவர்கள் மாதிரி வாழ்க்கையை வெட்டியாக வாழவில்லை, ஒரு கம்யூனிஸ்டாக அனைவருக்கும் பயனுள்ள வாழ்க்கையை நான் வாழ்கிறேன். சிறை, சமவெளி எங்கும் கம்யூனிஸ்டின் வாழ்க்கை மக்களுடன் உறவாடுவது தான்; அதை நான் செய்கிறேன், எனக்கு மரணத்தைப் பற்றி பயமில்லை’ என்கிறார். அந்தத் தோழரின் கதையை கேட்டு டாவோ உற்சாகம் அடைகிறாள். தன் சிறைப் பொழுதுகளையும் உபயோகமாகக் கழிக்கிறாள்.
மீண்டும் பீஜிங் வருகிறாள். அங்கு சிவப்பு ராணுவமும், சீன கொமிண்டாங் அரசும் ஒருங்கிணைந்து முன்னனி ராணுவப்படையை ஜப்பானுக்கு எதிராக கட்டுகிறது. இறுதியில் இவ்வளவு போராட்டங்களுக்கு பின், சீன கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினராகிறாள். வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாள் அதுதான் என்பதைப் புரிந்து கொள்கிறாள் டவோசிங்.
டாவொசிங் கட்சி உறுப்பினர் உறுதிமொழியேற்க, சர்வதேசிய கீதம் முழங்குகிறது. டாவோசிங் போராட்டங்களில் பங்கெடுக்கும் காட்சியுடன் படம் முடிவடைகிறது.
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் புறநகர் ரயில் நிலையம் ஒன்றில் வீட்டு வேலைக்கு போவதற்கு பெண்கள் காத்திருக்கிறார்கள்
மீட்கப்பட்ட வீட்டு உதவியாளர்களுக்கு செவிலியராக வேலை செய்த தனது ஒன்பது ஆண்டு கால அனுபவத்தில் மோசமானவற்றை எல்லாம் பார்த்து விட்டதாக கே மாரியம்மா நினைத்திருந்தார். 2010 இல் அவரும் உடன் பணி புரிபவர்களும் மேற்கு தில்லியில் இருக்கும் வீடு ஒன்றிலிருந்து சங்கீதா என்ற 17 வயது பெண்ணை மீட்பதற்கு போன போது அவர் தனது நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. சங்கீதா உடல் முழுவதும் கடிக்கப்பட்ட காயங்களுடன் காணப்பட்டார். “நாங்கள் கடும் அதிர்ச்சியடைந்தோம். நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு விலங்கையா அல்லது மனிதப் பிறவியையா என்று சந்தேகமாக இருந்தது” என்று நினைவு கூர்கிறார் மாரியம்மா. மாரியம்மா, வீட்டு உதவியாளர்களின் உரிமைகளுக்காகப் போராடும் நிர்மலா நிகேதன் என்ற குழுவில் வேலை செய்கிறார்.
முதலில் சங்கீதாவின் எஜமானர்கள், அவள் தன்னைத்தானே கடித்துக் கொண்டதாகச் சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் கழுத்தில் எப்படி காயங்கள் ஏற்பட்டன என்பதற்கு விளக்கம் இல்லை. அதன் பிறகு அவர்கள் கதையை மாற்றிக் கொண்டு – வீட்டு எஜமானி மனநிலை சரியில்லாதவர் என்று சொன்னார்கள். “ஆனால் நாங்கள் அதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் ஏன் தனது குழந்தைகளைக் கடிக்காமல் வீட்டு உதவியாளரை மட்டும் கடிக்க வேண்டும்’ என்று மாரியம்மா வாதிட்டார். பின்னர் பிரச்சினை நீதிமன்றத்துக்கு வெளியில் தீர்த்துக் கொள்ளப்பட்டது. அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு 50,000 ரூபாய் கொடுக்கப்பட்டது, அவர் அஸ்ஸாமில் இருக்கும் தனது வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தான் பார்த்த மோசமான கொடூரங்களைப் பற்றிப் பேசுவதற்கு மாரியம்மா தயாராக இருக்கலாம். ஆனால் தில்லியின் வீட்டு வேலை செய்பவர்கள் மன்றத்தின் தன்னார்வலர்களுக்கு அது அவ்வளவு எளிதாக இல்லை. அவர்களின் அனுபவம், சென்ற ஆண்டு பிப்ரவரியில் எஜமானி தனது காலணியின் கூர்மையான அடிப்பகுதியை முதுகில் உதைத்ததை எதிர் கொண்ட வீணாவாக இருக்கலாம், அல்லது வேலைக்கு வைத்திருந்த நர்சினால் மார்பில் சூடு போடப்பட்ட ஜார்கண்டை சேர்ந்த 15 வயது சோபனாவாக இருக்கலாம் அல்லது ஒரு அரசு அதிகாரியின் வீட்டிலிருந்து மீட்கப்பட்ட அந்தரங்க உறுப்புகள் பல முறை உருளைக் கட்டையால் தாக்கப்பட்டிருந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சிறுமி ஹசீனாவாக இருக்கலாம்.
“இந்தியாவில் 9 கோடி வீட்டு வேலை செய்பவர்கள் இருப்பதாக அதிகாரபூர்வமாக மதிப்பிடப்பட்டுள்ளது. புது தில்லியில் இருக்கும் சுமார் 2,300 ஏஜன்சிகளில் 269 மட்டுமே பதிவு செய்யப்பட்டவை”
இப்போது நாட்டின் தலைநகரில் நிலைமை மோசமாக இருப்பதாகத் தோன்றுகிறது. (சென்ற மாதம் விடுமுறைக்கு சென்ற தம்பதியர் அவர்களது வீட்டில் வேலை செய்யும் 13 வயது ஜார்கண்ட் சிறுமியை மிகவும் சொற்பமான உணவுப் பொருட்களுடன் வீட்டில் பூட்டி வைத்து விட்டுப் போன செய்தி வெளியானது). ஆனால், உண்மையில் நாடு முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் (பட்டியலைப் பார்க்கவும்) வீட்டு உதவியாளர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துக் கொண்டே போகிறது.
உடல்ரீதியாக வன்முறைக்குள்ளானவர்கள்
1. 2004 கல்கத்தாவின் கோல்பார்க் ஹோம்சில் உதவியாளராக வேலை செய்த 14 வயது சிறுமி தூக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் இருந்தும் போலிசு அதைத் தற்கொலை வழக்காகப் பதிவு செய்தது.
2. ஜூன் 2009 நடிகர் ஷைனி அஹூஜா அவனது வீட்டு உதவியாளரைப் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். ஏப்ரல் 2011 இல் பிணை வழங்கப்பட்டது.
3. ஆகஸ்ட் 2009 நடிகர் ஊர்வசி தனோர்கரிடம் வேலை செய்யும் 10 வயது சிறுவன் கைகளில் தீக்காயங்களுடனும், உடல் முழுவதும் கீறல்களுடனும் மீட்கப்பட்டார்.
4. செப்டம்பர் 2011 ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூலில் 12 வயது சிறுமி எஜமானரின் வீட்டில் எரிந்து கருகிய நிலையில் கண்டுபிடிக்கப் பட்டாள். பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன.
5. டிசம்பர் 2011, 15000 ரூபாய் கடனைத் திருப்பித் தராத தனது வீட்டு உதவியாளரை எரித்ததாக உறுதி செய்யப்பட்டு சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
6. மார்ச் 2012, ஒரு இந்திய வீட்டு உதவியாளர் நியூயார்க் நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு பெற்றார். அவரது முன்னாள் எஜமானர்கள் நீனா மல்ஹோத்ரா என்ற ஒரு ஐ.எப்.எஸ் அதிகாரியும் அவரது கணவரும் கொடுமைப்படுத்தியதாகவும், அடிமை போல நடத்தியதாகவும் குற்றஞ்சாட்டிய அவருக்கு 1.5 மில்லியன் டாலர் நிவாரணம் வழங்கப்பட்டது.
7. மார்ச் 2012 தில்லியின் துவாரகாவிலிருந்து 13 வயது சிறுமி மீட்கப்பட்டாள். அவரது எஜமானர்கள் மருத்துவர்கள் சஞ்சய், சுனிதா வர்மா தம்பதியினர் தாய்லாந்துக்கு விடுமுறைக்குப் போகும்போது அவளை வீட்டில் பூட்டி வைத்து விட்டுப் போனார்கள். அவள் உடல் முழுவதும் கிள்ளியது உள்ளிட்ட காயங்களுடன் காணப்பட்டாள். அவள் இரண்டு சப்பாத்தியும், உப்பும் கொண்ட உணவில் உயிர் பிழைத்திருந்திருக்கிறாள்.
8. ஏப்ரல் 2012 பீகாரைச் சேர்ந்த பதின்ம வயது வீட்டுத் தொழிலாளரை எஜமானர்களின் மகன்கள் நதீமாலும் பர்தீனாலும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பாலியல் வன்முறைக்குட்படுத்தியதாகவும், உடல்ரீதியாக துன்புறுத்தியதாகவும் தகவல் வெளி வந்தது. அந்தச் சிறுமியின் கைகளில் சூட்டுக் காயங்கள் இருந்தன. பர்தீன் கைது செய்யப்பட்டான்.
இந்த அப்பட்டமான கொடூரம் எங்கிருந்து உருவானது? நகரங்களில் வசிக்கும் பணக்காரர்களின் வீடுகளில் வேலை செய்வதற்கு சந்தையில் தொழிலாளர்கள் நிறையக் கிடைப்பதும், அவர்கள் சுரண்டப்படுவதற்கு எதிரான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் இருப்பதும்தான் காரணமா? மோசமான, கிட்டத்தட்ட இல்லவே இல்லாத குற்ற நிரூபண விகிதம், பணம் இருந்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டி விடலாம் என்ற நிலைமை இவைதான் நகரத்தில் வசிப்பவர்கள் மத்தியில் இந்தக் கொடூர குணத்தை வளர்த்திருக்கிறதா? (இரண்டாவதாகச் சொன்னதுதான் சரி என்று தோன்றுகிறது. முன்பு குறிப்பிட்ட மருத்துவ தம்பதியினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கும் போதே அவர்கள் பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள 75,000 ரூபாய் கொடுப்பதாகப் பகிரங்கமாக அறிவித்தனர்).
புதிய பணக்காரர்கள் ஆகியிருக்கும், ஏழைகளை மனிதர்களாகவே மதிக்காத நடுத்தர வர்க்கத்திற்கு இது சிறப்பாகப் பொருந்துகிறது. உண்மையில் “ஒருவரை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் ஏதோ சமூக சேவை செய்வதாகப் பலர் நினைக்கிறார்கள். ஏழைகளுக்கு உணவு அளிப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள். இத்தகையவர்கள் மத்தியில் நிறைய தார்மீக ஆவேசமும், கோபமும் இருக்கிறது” என்று பல பெண்களை மீட்பதற்கு உதவி செய்த சமூக ஆர்வலர் ரிஷி காந்த் சொல்கிறார். “’ஏன் அவர்களை அழைத்துக் கொண்டு போகிறீர்கள்.. குறைந்த பட்சம் இங்கு அவர்களுக்கு சாப்பாடு போடுகிறோம்’ என்று சில வீடுகளில் எஜமானர்கள் எங்களிடம் கேட்கிறார்கள்…..” “இந்தக் குழந்தைகளுக்கு மாதம் 1,000 ரூபாய் சம்பளம் வழங்கி, பழைய உடைகளையும், மீந்து போன உணவையும் கொடுப்பதை பெரிய உதவி செய்வதாக நினைத்துக் கொள்கிறார்கள்” என்கிறார் இன்னொரு ஆர்வலர் ராகேஷ் செங்கர்.
நமிதா ஹல்தார். நமிதா வேலை செய்யும் பத்துப் பன்னிரெண்டு வீடுகளில் எந்த வீட்டிலும் கழிவறையைப் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை என்பது இந்தியாவின் வளரும் நடுத்தர வர்க்கத்தைப் பற்றி என்ன சொல்கிறது? இருந்தும் அவர் தன்னை அதிர்ஷ்டக்காரராகவே கருதிக்கொள்ள வேண்டும். இன்னும் பலருக்கு அவமதிப்புகள் உடல் ரீதியான கொடுமைகள் வரை நீள்கின்றன.
சமீபத்தில் வெளியான நிகழ்வுகளையும், அது பற்றிய கொதிப்புகளையும் (குறைந்தபட்சம் ஊடகங்களில்) தொடர்ந்து இந்த உறவை நவீன எஜமானருக்கும் அடிமைக்குமான உறவாகப் பலர் சித்தரிக்கிறார்கள். இது மிகச் சிறிய பரிமாற்றங்களில் கூட பிரதிபலிக்கின்றது. உதாரணமாக கொல்கத்தாவின் நமீதா ஹல்தார் பல வீடுகளில் வேலை பார்த்தாலும் ஒரு வீட்டில் கூட கழிவறையைப் பயன்படுத்த அவருக்கு அனுமதி இல்லை. “அவர்களை மனிதர்களாக நடத்துவதற்கு நமக்குத் தோன்றாததற்குக் காரணம் நமது ஆழ் மனதில் அவர்களை மனிதர்களை விடத் தாழ்ந்தவர்களாகப் பார்க்கிறோம் என்பதுதான். பணம் கொடுப்பதாலேயே கடைசி பைசா வரை தமது பணத்தின் மதிப்பைக் கறந்து விட வேண்டும் என்று வேலைக்கு வைப்பவர்கள் நினைக்கிறார்கள்” என்று கொல்கத்தாவைச் சேர்ந்த பரிசித்தி அமைப்பின் காகுலி தேப் சொல்கிறார்.
நாடு முழுவதிலும் இருக்கும் 9 கோடி வீட்டு உதவியாளர்களில் பெரும்பகுதியினர் வறிய பகுதிகளான ஜார்கண்ட், மேற்கு வங்கம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களிருந்து வருகின்றனர். நகர்ப்புற வீடுகளைத் தூய்மையாக வைத்திருக்கவும், நகர வாசிகளின் அவசர வாழ்க்கையை வசதியாக்கவும் இந்தத் தொழிலாளர்களில் பலர் பெரு நகரங்களுக்குக் கடத்திச் செல்லப்படுகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் மட்டும் 2010 ஆம் ஆண்டும் 2011 ஆ ம் ஆண்டும் 8,000 சிறுமிகள் தொலைந்து போனதாகப் பதிவாகியிருக்கின்றது. வேறு புகல் இல்லாத பழங்குடிப் பகுதியைச் சேர்ந்த சிறுமிகளுக்குத்தான் தேவை அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார் சஞ்சய் கே. மிஷ்ரா. அவர் மீட்கப்பட்ட வீட்டு உதவியாளர்களுக்கு மறு வாழ்வு அளிக்கும் பணியைச் செய்து வருகிறார். “அவர்கள் எளிமையானவர்களாகவும், அப்பாவிகளாகவும் இருக்கிறார்கள். குறிப்பாக எந்த ஆதரவும் இல்லாதவர்கள். அதனால் நடக்கும் கொடுமைகள் பெரும்பாலும் பதிவாகாமலேயே போய் விடுகின்றன”. சிறுமிகளை ஏஜென்சிகள் எங்கு கொண்டு செல்கின்றன என்ற விபரம் பெற்றோர்களுக்குத் தெரிவதில்லை. அவர்கள் படிப்பறிவு இல்லாதவர்களாக இருப்பதால் எல்லா வகையான சுரண்டலுக்கும் ஆளாகிறார்கள்.
இந்தப் பெரிய சந்தையில் தெளிவற்ற அடையாளத்துடன் கொழுக்கும் பல ‘ஆள் சேர்ப்பு ஏஜென்சிகள்’ செயல்படுகின்றன (தில்லியில் மட்டும் சுமார் 2,300). எஜமானர்கள் வேலைக்கு ஆள் தேட இந்த ஏஜென்சிகளுக்கு பணம் கொடுப்பதோடு, பெரும்பாலும் மாதச் சம்பளத்தையும் தொழிலாளருக்குக் கொடுக்காமல் ஏஜென்சியிடம் கொடுக்கின்றனர்.
குழந்தைத் தொழிலாளரைப் பயன்படுத்துவதைப் பற்றிய உறுத்தல் இருந்தாலும் பலர் இன்றும் அதை கண்டு கொள்ளாமல் இருக்க விரும்புகிறார்கள். கொல்கத்தாவில் கரியாகாத் பகுதியில் ஒரு சிறு நிறுவனத்தை நடத்தும் முகுல் தாஸ் “வீட்டு வேலை செய்யும் சிறுமிகள்” கூடுதல் பணிவுடன் இருக்கிறார்கள் என்கிறார். அவரது வீட்டில் கடைசியாக வேலை செய்த 8 வயது ஷெபாலி கழுவுவது, பெருக்குவது, சமைப்பது என்று எல்லா வேலைகளையும் செய்து விட்டு, தரையில் படுத்து உறங்கி விடுவாள். அது நிச்சயமாக லாபகரமான ஒப்பந்தம்தான். சென்ற ஆண்டு தில்லியின் நடுத்தர வர்க்க வீடுகளிலிருந்து 116 ‘தொழிலாளர்கள்’ மீட்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் மட்டுமே 18 வயதுக்கு அதிகமானவர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடத்தப்பட்ட சர்வேயில் 5-14 வயதுடைய சிறுமிகள் கிட்டத்தட்ட 60,000 பேர் வீட்டுத் தொழிலாளர்களாக இருப்பது தெரிய வந்தது.
18 வயதே ஆகும் சாந்தினி. அமிர்தசரஸில் எஜமானரின் மாமனாரால் திரும்பத் திரும்ப பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டாள். அவளுக்கு உதவி செய்வதாக அழைத்துப் போன ஒரு ஆளால் தில்லியில் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். அவள் செய்த பல ஆண்டு வேலைக்கு ஒரு பைசா கூட சம்பளமாக கொடுக்கப்படவில்லை
இந்தியா முழுவதிலும் 1.26 கோடி சிறுவர்கள் வீட்டு உதவியாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்களில் 86% சிறுமிகள், 25% பேர் குழந்தை தொழிலாளர் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள 14 வயதை விட குறைவானவர்கள்.
‘குறைந்த பட்சம் இந்த குழந்தைகளுக்கு உணவும் உடையும் கிடைக்கிறது. விபச்சார விடுதியில் போய்ச் சேராமல் போனது அவர்கள் அதிர்ஷ்டம்’ என்ற வழக்கமான நியாயப்படுத்தல் நடுத்தர வர்க்கத்தினரிடையே இருக்கின்றது. ஆனால், அவர்கள் எஜமானர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இப்போது 18 வயதாகும் சாந்தினி அமிர்தசரஸில் எஜமானரின் மாமனாரால் திரும்ப திரும்ப பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டாள். அவளுக்கு உதவி செய்வதாக அழைத்துப் போன ஆளால் தில்லியில் மீண்டும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள். தனது துன்பங்களை நினைவு கூரும் அவள், தனது வீட்டுக்கு உதவி கேட்டு அழைக்கக் கூட முடியவில்லை என்கிறாள். “அவர்கள் வெளியில் போகும் வீட்டுத் தொலைபேசியை பூட்டி விட்டுதான் போவார்கள். என்னைச் செருப்பால் அடிப்பார்கள். நான் செய்த அத்தனை வேலைகளுக்கும் ஒரு பைசா கூட சம்பளமாக கிடைக்கவில்லை” என்கிறாள் அவள். அவளது பிரச்சனையைப் பற்றி விபரம் சேகரிக்க வந்த தில்லி பத்திரிகையாளர் மாதுரி சிங் இப்போது அவளை வேலைக்கு வைத்திருக்கிறார். நடுத்தர வர்க்கத்தினர் இந்தச் சிறுமிகளைச் சுரண்டுவதற்கு காரணம் அவர்களுக்கு குரல் கொடுக்க யாரும் இல்லாமல் இருப்பதே ஆகும் என்று அவர் கருதுகிறார். “அதிகார மட்டங்களில் தங்களது சொல்தான் எடுபடும் என்று எஜமானர்களுக்குத் தெரியும். இந்தத் தொழிலாளர்களின் பேச்சு எடுபடாது.”
கொடுமை என்னவென்றால் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் கூட வீட்டு உதவியாளர்களைத் துன்புறுத்துவதில் சளைத்தவர்கள் இல்லை. தேசிய வீட்டுத் தொழிலாளர்கள் இயக்கத்தின் ஆந்திரப் பிரிவு தலைவர் அத்தகைய ஒரு நிகழ்வைக் குறிப்பிடுகிறார். ஹைதரபாத்தில் உள்ள ஓய்வு பெற்ற டிஐஜியின் வீட்டில் இரண்டு குழந்தைகள் கொடுமைப்படுத்தப்பட்டனர். 14 வயதும் 15 வயதுமான அந்தச் சிறுமிகள் ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் பேரக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள அமர்த்தப்பட்டிருந்தார்கள். ஒருமுறை அந்தக் குழந்தை நீச்சல் குளத்துக்கு அருகில் போய் விட்டதைத் தொடர்ந்து, தண்டிக்கும் விதமாக அந்தச் சிறுமிகளைக் கழுத்தளவு தண்ணீரீல் இரவு முழுவதும் நீச்சல் குளத்தில் நிற்க வைத்தார் டிஐஜி. “அந்தக் குழந்தைகள் வீட்டிலிருந்து தப்பித்து போன போது, அந்தச் சிறுமிகள் நகைகளைத் திருடி விட்டதாக அவர் போலி வழக்கு பதிவு செய்தார். விசாரணையின் போது அந்தச் சிறுமிகள் சித்திரவதை செய்யப்பட்டது தெரிய வந்தது.”
ராஞ்சிக்கு அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த மணிரூபா என்ற சிறுமி தில்லியில் பல கொடுமைகளை அனுபவித்தாள். பின்னர் ஒரு தன்னார்வக் குழுவால் மீட்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டாள்
வீட்டுத் தொழிலாளர் சந்தையின் மிகப்பெரிய பிரச்சினை ஏஜென்சிகள் தொழிலாளர்கள் குறித்த விபரங்களைப் பதிவு செய்யாமல் இருப்பது. அதன் மூலம் சுரண்டல் எளிதாகி விடுகின்றது. “ஒவ்வொரு ஏஜென்சியும் தான் சேர்த்து விடும் வீட்டு உதவியாளர்கள் பற்றிய முழு விபரங்களையும் பதிவு செய்திருக்க வேண்டும். வாங்கி வீட்டில் வைத்துக் கொள்வதற்கு, அவள் ஒரு ஆட்டுக் குட்டியோ அல்லது அலங்கார பொருளோ அல்ல. நீங்கள் அப்படி ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டால் அது ஏதாவது ஒரு இடத்தில் ஏன் பதிவு செய்யப்படக் கூடாது” என்று கேட்கிறார் அமைப்பு சாரா துறைகளின் தொழிலாளர்களுக்கான தேசிய போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பட்நாகர்.
வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டம் 2008 லேயே தயாராக இருந்தாலும் அது இன்னமும் தேசிய பெண்கள் ஆணையத்தில் (NCW) தேங்கிக் கிடக்கிறது. “அது சட்டமாக மாறுவதற்கு இன்னும் நீண்ட காலம் ஆகும். அதிகார மையங்களில் இருக்கும் பலர் வீட்டு உதவியாளர்களை நம்பி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை” என்கிறார் தில்லி குழந்தைகள் நல வாழ்வு குழுவின் முன்னாள் தலைவர் பாரதி ஷர்மா.
இது போலவே, மாநிலங்களிலும் சட்டங்கள் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு வீட்டுத் தொழிலாளர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிளாரா, 2007 இல் திமுக அமைச்சரிடம் குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு 30 ரூபாய் நிர்ணயிக்கும்படி வலியுறுத்தியதாகச் சொல்கிறார். ஆனால் முடிவு தள்ளிப் போடப்பட்டு விட்டது. “சென்ற ஆண்டு தொடக்கத்தில், தேர்தல்கள் வரும் நேரத்தில் வேலைக்கு வைப்பவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருக்க முடிவு தள்ளிப்போடப்பட்டதாக அமைச்சர் என்னிடம் சொன்னார்”. மார்ச்சில் தொழிலாளர் துறைச் செயலரைச் சந்தித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் “விசயம் பரிசீலனையில் இருப்பதாக” சொல்லப்பட்டது. சட்டம் இயற்றுவதற்கு அதற்கே உரிய காலம் பிடிக்கலாம், ஆனால், சுதந்திர இந்தியாவில் நடுத்தர வர்க்க வீடுகளில் சமத்துவமின்மையும், அடக்குமுறையும் நிலவுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கக் கூடாது.
(தனிநபர் நலன்களை பாதுகாக்க பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன)
பார்ப்பனிய இந்து மதத்தைப் பொறுத்த வரை நல்ல சாமியார், போலி சாமியார் என்ற வேறுபாடுகள் இல்லை. பார்ப்பனியத்தின் அநீதியான சமூக அமைப்பு – சடங்குகளை எதிர்த்து வந்ததால்தான் புத்த, சமண, சாருவாகன, சித்தர்களை பார்ப்பனிய எதிர் மரபு என்று போற்றுகிறோம். அவர்களெல்லாம் பார்ப்பனியத்தை அவரவர் கால வரம்புகளோடு எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டவர்கள் மன்னர்களின் ஆயுத பலத்தால் ஒழிக்கப்பட்டார்கள். அவர்களது இலக்கியங்களும் அழிக்கப்பட்டன. அந்தக் கேள்விகளின் இருப்பு பார்ப்பனியத்தால் கரைக்கப்பட்ட பிறகு உலகோடு ஒட்ட ஒழுகலே இங்கு விதியாகிப் போனது. இன்றைக்கு நாம் காணும் சாமியார்களும், அதற்கு முந்தைய வரலாற்றில் உள்ள சாமியார்களும் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வான வருண சாதி அமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள். சே குவேரா போன்று ‘இந்துக்களால்’ இமேஜ் கவர்ச்சியுடன் போற்றப்படும் விவேகானந்தரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.
இந்தப் பின்னணியில் பார்ப்பனியம் முன்வைக்கும் துறவறம் என்பது இத்தகைய சமூக அநீதியை ஏற்று வாழும் மக்கள் வியந்தோதுவதற்காக முன்வைக்கப்பட்ட ‘தியாகம்’ போன்றது. ஆனால் சிற்றின்பங்களை துறப்பதால் மட்டும்தான் அந்த தியாகம் தனது மேலாண்மையைக் கோருகிறது. சமூக துன்பங்களை மதம், சடங்கு, மரபு என்று ஏற்று வாழும் மக்கள்தான் உண்மையில் தியாகம் செய்பவர்கள். அந்த தியாகத்தை விதியென கற்பித்து சிவனே என்று வாழ்வதைத்தான் பார்ப்பனியத் துறவிகள் பேசி வந்தனர். மீறுபவர்களை அரசு உதவியுடன் தண்டித்தும் வந்தனர்.
சங்கர மடத்தையோ, சைவ ஆதீனங்களையோ இத்தகைய பின்னணியில் பொருத்திப் பார்த்தால் அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்து கொள்ளலாம். துறவிகள் மக்கள் நலனுக்காக தமது இன்பங்களை துறக்கவில்லை. மக்களை ஆதிக்கம் செய்யும் பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிறுவும் பொருட்டே குடும்ப வாழ்க்கையைத் துறந்தார்கள். மன்னர்களுக்கும் பார்ப்பனியத்தின் இதர ஆளும் வர்க்கங்களுக்கும் தேவைப்படும் சித்தாந்த தலைமையை துறவிகள் அளித்ததனர். பதிலுக்கு அவர்களுக்கு தரப்படும் மரியாதை மன்னர்களின் ஆயுத வலிமை கொண்டு தீர்மானிக்கப்பட்டது. ஒரு வேளை அத்தகைய ஆயுத வலிமை தேவையில்லாத நிலை என்றால் அதைக்கூட பார்ப்பனியத்தின் சமூக அமைப்புதான் தோற்றுவித்திருந்தது.
சாமியார்களைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது, சந்தேகப்படக் கூடாது, கேலி செய்யக்கூடாது போன்றவையெல்லாம் இயல்பான சட்டதிட்டங்களாக உருவாகி அமையப் பெற்றன. பார்ப்பனிய சமூக அமைப்பை கேள்வி கேட்க முடியாது என்பதும், பார்ப்பனியத்தின் துறவிகளை கேள்வி கேட்கக் கூடாது என்பதும் வேறு வேறு அல்ல. எனவேதான் மடங்கள் நிறுவனங்களாக நிலை பெற்ற பிறகுதான் மடத்தலைவர்கள் கெட்டுப் போனார்கள் என்ற வாதம் தவறு என்கிறோம். அவையெல்லாம் துணை விளைவுகள் மட்டுமே. மடங்களின் தார்மீக பலம் பார்ப்பனிய சமூகத்தின் பலத்தில் குடி கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே மடத்தலைவர்களின் புனிதமும், அரச மனோபாவமும், கேளிக்கை நாட்டமும் வருகின்றனது. ஒன்று இல்லை என்பதால் மற்றது மகத்தானது அல்ல.
பணமும் பொருளும்தான் பரம்பொருள், இது புரியாம நீ பாட்டுக்கு ஜீப்புல ஏறுனா எப்படி?
சிற்றின்ப நாட்டம் இல்லாமல் வாழ்ந்த செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி, ரமணர் போன்றவர்களை நடப்பு கார்ப்பரேட் சாமியார்களுக்கு மாற்றாக சிலர் கூறுகின்றார்கள். இத்தகைய ‘ஒழுக்க’ சாமியார்களெல்லாம் பார்ப்பனியத்தின் அநீதியான சமூக ஒழுக்கத்தை பின்பற்றுவதைத்தான் தங்களது துறவறத்தின் ஆன்மாவாகக் கொண்டிருந்தார்கள். ஆன்மாவிலேயே இத்தகைய அழுக்கு இருக்கும் போது அவர்களது ஆண்குறிகள் அடங்கியிருந்தால் என்ன, ஆடினால்தான் என்ன? அதனால்தான் நித்தியானந்தாவும், ஜெயேந்திரனும் சரி, சந்திரசேகர சங்கராச்சாரி, ரமணரும் சரி இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்கிறோம்.
சமூகத்தை முற்று முழுதாகத் துறந்து வாழ்தல் ‘கடவுளு’க்கும் கூட சாத்தியமில்லை. துறவிகளின் ஆடம்பர மடங்களுக்குப் பின்னால் உழைக்கும் மக்களின் சமாதியாகிப்போன வாழ்வே அஸ்திவாரம். ஜெயமோகனது குருவான நித்ய சைதன்ய யதிகூட ஊட்டியில் முக்கியமான இடத்தில் ஒரு வசதியான குருகுலத்தை கட்டியிருக்கிறார். அவர் ஏன் நாங்குநேரி பாலைவனத்தில் கட்டவில்லை, காஸ்ட்லியான சுற்றுலா மண்ணில் ஏன் கட்டினார், காசு ஏது, மடத்தின் புரவலர்கள் யார், அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அங்கே இருப்பது துறவறமா இல்லை சுரண்டல் அறமா என்பதை உள்ளுணர்வு இன்றியே தெளியலாம்.
சமூகத்தில் இருக்கும் அநீதிகளை மாய்ப்பதற்க்காக தனது வாழ்க்கை இன்பங்களை துறப்பதோடு அதை தான் மட்டும் செய்ய முடியாது, ஒரு மக்கள் கூட்டத்தால் மட்டுமே செய்ய முடியுமென ஒருவன் முனைந்தால் அவனை துறவி என்று அழைக்கலாம். அல்லது போராளிகள் என்றும் அழைக்காலம். பார்ப்பனியத்தின் வரலாற்றில் இந்தப்போராளிகள் இருந்த இடம் தெரியாமல் ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த ஒழிப்பின் மரபைத்தான் ஆதீனமாகவும், மடங்களாகவும் நாம் பார்க்கிறோம். இதற்கும் மேல் ஒத்துக்கொள்ள தயங்குபவர்கள் உண்மையான துறவிகளைப் பார்க்க வேண்டுமென்றால் பழனி படிக்கட்டில் பிச்சை எடுக்கும் சாமியார்களை போற்றுங்கள், பிரச்சினை இல்லை.
எனவே இத்தகைய பின்னணியில் புரிந்து கொள்வதால்தான் நாம் நித்தியானந்தா ஆதீனமாகக் கூடாது என்ற பிழையான கோரிக்கையை வைக்கவில்லை. அப்படி வைத்தால் நல்ல ஆதீனம், நல்ல சாமியார் என்ற முறையில் பார்ப்பனியத்தின் அநீதிக்கு துணை போன தவறினைச் செய்தவர் ஆவோம்.
சாரமாக இந்தப்பிரச்சினையில் நாம் வைக்கும் மையமான கோரிக்கை என்ன? ஆதீனங்கள், மடங்களது சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். மரபு என்ற பெயரில் இருக்கும் பார்ப்பனிய அடிமைத்தனங்கள் ஒழிக்கப்பட வேண்டும். மதம் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். துறவிகள், சாமியார்கள் என ஆக விரும்பும் எவரும் பழனி படிக்கட்டில் அமர்ந்து மட்டுமே பிச்சை எடுக்க வேண்டும்.
இத்தகைய கோரிக்கைகள் நிறைவேறப் போராடும் சூழ்நிலைக்கு நித்தியானந்தா ஆதீனமாவது உரம் சேர்க்கும். பிடிபட்ட பொறுக்கிக்கும் பிடிபடாத பொறுக்கிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையை நாம் பார்ப்பனியத்திற்கு பாடை கட்டும் நோக்கத்திற்கு பயன்படுத்துவோம். தோற்கடிக்கப்பட்ட பார்ப்பனிய எதிர் மரபின் இறுதி வெற்றியை நிலைநாட்டுவோம்.
நித்தியானந்தாவிற்கு அச்சுறுத்தும் தொண்டை முள்ளாக பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமாக எழுந்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. தாராளமய சிந்தனை கொண்ட ‘முற்போக்காளர்கள்’ பலரும் இதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும். நித்தியானந்தாவின் துறவறமும், பாலியல் வேட்கையும் அவரது தனிப்பட்ட விசயம், அவரது படுக்கை அறையை எட்டிப்பார்ப்பது அநாகரீகம் என்கிறார்கள் அந்த ‘முற்போக்காளர்கள்’. ஒருவேளை அது தவறு என்றாலும் அதை கேட்க்க அருகதை உள்ளவர்கள் அவரது பக்தர்கள்தானே அன்றி மற்றவர்கள் அல்ல என்றும் கூறுகிறார்கள். இதை நித்தியானந்தாவும் பலமுறை விளக்கமாகக் கூறியிருக்கிறார்.
லிபரல் சிந்தனையும் பார்ப்பனிய ஆன்மீகமும் இப்படி ஒத்துப் போவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இந்த வாதத்தை குற்றவாளிகள் பலரும் அவ்வப்போது எழுப்புவது வாடிக்கையானதுதான். பேருந்தில் பிக்பாக்கட் அடிக்கும் ஒருவன் கூட தன்னை அடிப்பதற்கு பணத்தை இழந்தவனுக்குத்தான் உரிமை உண்டெனக் கூறுவான். சட்டமும் கூட பாதிக்கப்பட்டவன் புகார் அளித்தால்தான் வழக்கையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். அப்பட்டமான பாலியல் வன்முறை நடந்தாலும் கூட பாதிக்கப்பட்டவள் புகார் தர தயாரில்லை எனும் போது குற்றம் இழைத்தவரை சட்டப்படியே தண்டிக்க முடியாது.
இதை வைத்து குற்றவாளிகள் யோக்கியமானவர்கள் என்று ஆகிவிட முடியுமா? பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக புகார் தெரிவிப்பதன் மூலம் தனது சமூக பாதுகாப்பை இழந்து விடுவார்கள் என்ற யதார்த்தமே அவர்களது சரணாகதி அணுகுமுறையை தீர்மானிக்கிறது. இது குறிப்பிட்ட சமூகத்தின் குற்றமே அன்றி பாதிக்கப்பட்டவரின் கோழைத்தனம் அல்ல.
பொதுவில் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வக்கிரங்களை நாள்பட நாள்பட சமூகம் ஒரு பாரதூரமான அநீதியாக பார்ப்பதில்லை. இதைத்தான் இதெல்லாம் ஒரு விசயமா என்று அருணகிரி கேட்கிறார். கூடவே ஒரு படுக்கையறைக்குள் நடக்கும் விசயத்தை வைத்தெல்லாம் ஒருவனை தண்டிக்க முடியாது என்றும் இந்த சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள்.
நல்லது, விவசாயியின் வயலுக்குள்ளேயும், ஏழையின் குடிசைக்குள்ளேயும் அரசும், முதலாளிகளும் அநீதியாக தலையிடுகின்றனர். மின்வெட்டை ஏற்க வேண்டுமென உத்தரவு போடுகின்றனர். சமையலறைக்குள் புகுந்து விலைவாசி ஏற்றத்தை ஏற்றே ஆகவேண்டும் என கட்டளையிடுகின்றனர். மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்தே வேலை செய்ய வேண்டும் என்று அலைய விடுகின்றனர்.
இவையெல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது ஆகாதா? கேட்டால் நாட்டின் நலனுக்காக தலையிடலாம் என்பார்கள். உண்மையில் இந்த நலன் முதலாளிகளின் நலனுக்காகத்தான் தலையீடு செய்கிறது. எனில் மக்களின் நலனுக்காக ஒரு முதலாளி, சாமியாரின் படுக்கையறைக்குள் ஏன் தலையிடக்கூடாது? முகேஷ் அம்பானி கட்டியிருக்கும் ஆன்டிலியா மாளிகையை பணக் காரர்களின் வக்கிரம் என்று சொல்வது அவரது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது ஆகிவிடுமா? ரஜினியின் வருமானம் பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டின் மூலம் வருகிறது என்று சொல்வது அவரது தனிப்பட்ட தொழிலில் தலையிடுவது ஆகுமா?
ஆம். நித்தியானந்தாவின் மாளிகை மடமும், வசதிகளும், ஏவல் வேலைகளுக்கு காத்திருக்கும் சேவிகைகளும் மக்கள் பணத்தை ஏமாற்றி பெறப்பட்ட ஒன்று. இதை பக்தன் மட்டும்தான் கேட்க முடியுமென்றால் இந்த உலகில் எல்லா அநீதிகளையும் யாரும் எதிர்த்து கேட்க முடியாது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை ஈராக் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், ஆதிக்க சாதியின் திமிரை தலித் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், கோவிலில் தமிழ் நுழைவதற்கு பக்தன்தான் போராட வேண்டும், பாலியல் வன்முறையை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்தான் போராட வேண்டும் என்று பேசினால் அந்த தாராளமய சிந்தனையாளர்கள் ஒத்துக் கொள்வார்களா?
நித்தி : வாங்கடா வாங்க ஆதினம் வண்டிக்கு பின்னால – சாரு : வட போச்சே 🙁
நித்தி விளிம்பு நிலை கலகக்காராரா?
இவர்களோடு ஒத்துப் போகும் பின்நவீனத்துவ அறிவாளிகளும் கூட நித்தியானந்தாவின் கலகத்தை வரவேற்று வாழ்த்துப்பா பாட வாய்ப்பிருக்கிறது.
தற்போது மதுரை ஆதீனத்தில் திருநங்கைகள் முக்கிய பொறுப்பில் வைக்கப்படுவார்கள் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை அவர்கள் வரவேற்கவே செய்வார்கள். மேலும் தான் ஆண்மை, பெண்மை கடந்தவர் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை திருநங்கை போல இருப்பவர் ஆதீனமாக முடியாது என்று அர்ஜூன் சம்பத் கோஷ்டி தெரிவித்திருக்கிறது. இதுவும் திருநங்கைகளை இழிவுபடுத்தும் ஒன்றுதான். இவற்றை வைத்தெல்லாம் நித்தியானந்தாவை நாம் பெண்ணுரிமை போராளியாகவோ, ‘விளிம்பு நிலை’ கலகக் காரனாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. கொண்டால் சங்கர மட, மதுரை ஆதீன அந்தப்புறங்களில் பெண்கள் வந்திருப்பதால் மடத் தலைவர்களை பெண்ணுரிமைப் போராளிகளாவும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.
பின்னாளில் தனது பாலியல் அத்து மீறல்கள் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டால் தான் மன ரீதியாக திருநங்கை மாதிரியானவர் என்று தப்பித்துக் கொள்ளலாமென நித்தி யோசித்திருக்கலாம். சட்டத்திற்கு இந்த மொழி என்றால் சமூகத்திற்கு அப்படி சொல்ல முடியாது. அதனால்தான் தான் ஒரு அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரே போடாக போட்டுவிட்டார் நித்தி.
மாமூல் வாங்கியே வயிற்றையும், பாங்க பாலன்சையும் வளர்க்கும் ஒரு ரவுடி ஊரின் கோவிலுக்கு கொடை என்றதும் வாரி வழங்குவதில்லையா? மக்களும் அவனது தயாளா குணத்தை போற்றுவதில்லையா? அது போலவே தனது பொறுக்கித்தனத்தை மறைப்பதற்கும் மடை மாற்றுவதற்கும் நித்தி இந்த கலகக்கார வேடத்தை கையிலெடுக்கிறார். இதிலெல்லாம் பின் நவீனத்துவ அறிவாளிகள் விழுந்து விடுவார்கள் என்றால் அவர்களை ஆண்டவன் தெரிதாவால் கூட காப்பாற்ற முடியாது.
சங்கர மடத்திலோ, மதுரை ஆதீனத்திலோ பெண்கள் பெண்ணுரிமையின் பாற்பட்டு வரவில்லை. அந்தப்புறத்து நாயகிகளாகத்தான் மறைமுகமாக கொண்டு வரப்படுகிறார்கள். ஆதலால் இது நாம் பெருமைப்படத்தக்க ஒன்றல்ல. சபரிமலையில் பெண்கள் வழிபடவேண்டும், கருவறைக்குள் பெண்கள் பூஜை செய்ய உரிமை வேண்டும், ஆதீன, மடங்களின் தலைவர்களாகவும் பெண்கள் வருவதற்கு உரிமை வேண்டும் என்று கோரினால்தான் அது பெண்ணுரிமையின் பாற்பட்டது.
‘கற்பை’ப் போற்றும் இந்துமதம்தான் தேவதாசிகளையும் கொண்டு வந்திருக்கிறது. ‘தாய்மையை’க் கொண்டாடும் இந்து மதம்தான் தாய்மார்களை உடன்கட்டை ஏற்றிக் கொன்றது. ஆறுகளுக்கு பெண்களது பெயரை வைத்ததாகப் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனியம்தான் விதவைப் பட்டத்தையும் திணித்தது. ‘குழந்தைகள் தெய்வங்கள்’ என்று பார்த்த பார்ப்பனியம்தான் பால்ய விவாகத்தையும் பேணி வளர்த்தது. எனவே பார்ப்பனியத்தின் ஒழுக்கமும், ஒழுக்கமின்மையும் என்பது ஒரு அடக்குமுறையின் மறுபாதி நாணயம்.
இதற்கு மேலும் நித்தியானந்தாவின் தனிப்பட்ட உரிமைகள் குறித்து கவலைப்படுவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது. என்றாலும் இதை வைத்து நித்தியானந்தா ஆதீனமாவதற்கு உரிமை இல்லை என்று நாம் கூறவில்லை. உரிமை உண்டு என்று ‘ஆதரிக்கவே’ செய்கிறோம்.
அதற்கு போலி சாமியார், நல்ல சாமியார் என்ற பொருட்பிழை கொண்ட வழக்கை பரிசீலிக்க வேண்டும்.
ஆதினம் அருணகிரியே நித்தியின் நீண்ட முடிதான் அவரது டிரேட் மார்க் என்று அங்கீகரித்து விட்ட புடியால் முடி பிரச்சினையை ஏன் எழுப்புகிறீர்கள் என்று கேட்கிறார் நித்தியானந்தா. இந்து மதத்திற்கு எத்தனையோ சோதனைகள் இருக்கும் போது மயிரெல்லாம் ஒரு பிரச்சினையா என்று அவர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. இவைதான் சைவ ஆதீன மகா சன்னிதானங்கள் கண்டு பிடித்த மரபு மீறல். எனில் எது மரபு? எவை மரபு மீறல்?
பெருசு உயிரோடு இருக்கும்போது தனது காதலியுடன் ஓடிப்போன ஜெயேந்திரன் போகும் போது தண்டத்தை கொண்டு செல்லவில்லை. அதை விட்ட உடனேயே அவரது சங்கர மட பதவி ரத்தாகிவிட்டது என்பதெல்லாம் பார்ப்பனியத்தின் கீர்த்தி கருதி மாற்றப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்த ஜெயேந்திரர் மீண்டும் மட பட்டத்தை பெற்றார். இப்படி ஆயிரத்தெட்டு விதி மீறல்களெல்லாம் அவரவர் தேவை கருதி எல்லா ஆதினங்களிலும் நடந்திருக்கின்ற உண்மைகள்.
கோவில் கருவறைகளை எடுத்துக் கொள்வோம். மற்ற சாதியினர் புரோகிதராக வரலாமெனும் போது மட்டுமே இது ஆகம விதிக்கு எதிரானது என்று பார்ப்பனர்கள் ஊளையிடுவது வழக்கம். ஆனால் கோவில் கருவறைக்குள், மின்சாரம், டியூப்லைட்டு, சோடியம் விளக்கு, ஏர் கூலர்கள், டைல்ஸுகள் எல்லாம் இன்று நுழைந்திருக்கின்றன. இவையெல்லாம் உள்ளே வரலாம் என்று எந்த ஆகமத்தில் கூறப்பட்டிருக்கின்றன? இல்லை ‘1500’ ஆண்டு மரபு உள்ள மதுரை ஆதினம் கல்மடமாக இருந்து இன்று ஏ.சி மடமாக மாறியிருக்கிறதே இதற்கென்ன பொருள்? ஆகவே ஆகம விதி, மரபு என்பதெல்லாம் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு மாறிக்கொள்ளும், வேறு விளக்கங்களும் தரப்படும். எனில் அந்த சலுகை நித்தியானந்தாவிற்கு மட்டும் கிடையாதா?
சங்கராச்சாரியும், ஆதீனங்களும் காரிலும், விமானங்களிலும், இரயிலிலும் செல்வதெல்லாம் எந்த மரபில் வருகின்றன? இவையெல்லாம் காலத்துகேற்ற மாற்றங்கள் எனில் பக்தர்களின் மனம் கவர்ந்த நித்தியின் முடி மட்டும் வெட்டப்பட்டு மொட்டையடிக்க வேண்டுமா? ஆகவே நித்தியானந்தாவை மரபு கருதி ஏற்கக் கூடாது என்பதில் அவர்களே சீரியசாக கருதும் எவையுமில்லை. ஏனென்றால் இந்த மரபு விதிமுறைகளின் மையமாக இருப்பது ஒரு ஆதினத்தின் வாரிசை நியமிக்கும் உரிமை உயிரோடு இருக்கும் ஆதினத்திற்குத்தான் உண்டு என்பதே. இதை மறுக்க முடியாது. மறுத்தால் இதுதான் ஆகப்பெரிய மரபு மீறல்.
மரபின் மையம் சொத்துடைமையில்தான்! தீர்வு அரசுடமையில்தான்!
எனவே ஆதினங்களை ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்வு செய்ய வேண்டுமென்று கூறினால்தான் இந்தப் பிரச்சினையில் மற்றவர் தர்க்க ரீதியாக தட்டிக் கேட்பதற்கு வழியுண்டு. அது சாத்தியமில்லை என்றால் வேறு எவையும் சாத்தியத்திற்குள் வந்துவிடாது. மற்ற ஆதினங்கள் இது குறித்து நீதிமன்றத்திற்கு போவதும் சிரமம். போனாலும் அப்படி சட்டென்று முடிகிற விசயமல்ல. ஏனெனில் இந்தக் குழாயடிச் சண்டைக்கு நீதிமன்றம் சென்றால் அப்படி ஒரு புதிய மரபு ஏற்படுத்தப்படுமென்றால் எந்த ஆதினங்களும் நிம்மதியாகத் தூங்க முடியாது. அதனால்தான் அவர்களில் சிலர் இது குறித்து அறநிலையத்துறைக்கும், புரட்சித் தலைவியின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக பேசுகின்றனர்.
இங்கு வாசகர்கள் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு அறநிலையத்துறையின் கீழ் இந்து கோவில்களை வைத்திருப்பது தவறு, அவற்றை மீண்டும் ‘இந்துக்கள்’ அதாவது ஆதிக்க சாதி அறங்காவலர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்று கூப்பாடு போட்டவர்கள் இப்போது மட்டும் அரசு தலையீடு செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். ஒரு சிலர் மதுரை ஆதீனத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமென்றும் கேட்கிறார்கள். மக்கள் பிரதிநிதியாக இருக்கும் மதச்சார்பற்ற அரசு இன்றி ‘1500’ ஆண்டுகள் வரலாறு கொண்ட ஆதீனம் கூட காப்பாற்றப்பட முடியாது எனில் அந்த நீதி கோவில்களுக்கு மட்டும் இல்லையா? ஏன் இந்த இரட்டை வேடப் பேச்சு?
மசூதிகளும், சர்ச்சுகளும் அந்தந்த சிறுபான்மையினர் கையில் இருக்கும் போது கோவில்கள் மட்டும் இந்துக்கள் வசமில்லையா என்று நியாயம் பேசிய இந்து மதவெறியர்கள் இப்படி தடாலென்று சரணாகதி அடைகிறார்கள் என்பதை நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முரண்பாட்டின் மையம் என்ன? ஆதினங்களோ, கோவில்களோ தனியார் சொத்துக்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே என்ன முறைகேடுகள் நடந்தாலும் வெளியார் தலையிட முடியாது. முறைகேடுகளை தட்டி கேட்க வேண்டுமென்றால் அவை மக்கள் சொத்தாகவோ இல்லை அரசு மேற்பார்வையிலோ இருக்க வேண்டும்.
ஆகவே இந்துமதவெறியர்களின் முன் இருவழிகள்தான் இருக்கின்றன. தனியாரென்றால் தில்லு முல்லுகளை சகித்துக் கொள்ள வேண்டும். தட்டிக் கேட்க வேண்டுமென்றால் அரசுதான் அவற்றை ஏற்று நடத்த வேண்டும். என்ன பதில் தருவார்கள்? இங்கும் கூட மதுரை ஆதீனத்தின் எதிர் கோஷ்டி மடத்தின் உள்ளே நுழைந்து கூட எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. தற்போது மதுரை ஆதீனம் நித்தியானந்தாவிற்கு பாத்தியப்பட்ட சொத்தாக மாறிவிட்டபடியால் அவர்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை. மீறி நுழைந்தால் போலீசு கைது செய்யும்.
ஏற்கனவே கூறியபடி ஆதினங்கள் என்பவை தனி ஒருவருக்கு சொந்தமாக இருக்கம் பட்சத்தில் புதிய ஆதீனங்களின் நியமனம் குறித்து ஒருவர் அதிருப்தி மட்டுமே தெரிவிக்கலாமே ஒழிய தடுத்து நிறுத்த முடியாது. இதை தற்போதைய மதுரை ஆதினமான அருணகிரி பல முறை நேரடியாகவும், மறைமுகமாவும், மிரட்டலோடும் தெரிவித்திருக்கிறார். இதை எதிர் கொள்ள அவர்கள் செய்த ஏற்பாடு என்ன?
அருணகிரி அவர்கள் சுய நினைவில் இல்லை, நித்தியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார் என்று பேசியதோடு நீதிமன்றத்திலும் வழக்கு போட்டார்கள். அதாவது ஒரு முதலாளி சுய நினைவோடு உயில் எழுதவில்லை என்றால் செல்லுபடியாகாது என்று தமிழ் சினிமாவில் கேட்டிருப்போமே? ஆனாலும் தான் குத்துக் கல்லாகத்தான் இருக்கிறேன் என்று ஆதினம் போட்ட உத்தரவை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டது. இதிலும் ஒரு தத்துவப் பிரச்சினை உண்டு.
ஓஷோ போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் சரி, கங்கை மகாமத்திற்கு வரும் நாகா சாமியார்களும் சரி போதை வஸ்துகளோடுதான் பரப்பிரம்மத்தோடு ஒன்றுகின்றனர். அவை கஞ்சா, அபின் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை. ரோல்ஸ்ராய்ஸ் காராகவோ, பிரதமர் துவங்கி பாமரர் வரை காலில் விழுவதாகவோ கூட இருக்கலாம். மதுரை ஆதீனமும் தனக்கு நீண்ட காலம் இளைப்பு பிரச்சினை இருந்ததாகவும் தற்போது நித்தி அதை குணப்படுத்தி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
நித்தியானந்தா வசிய சக்தி உள்ளவரென்று அவரது எதிர்ப்பாளர்கள் கூட கூறுகிறார்கள். பொருள்களை பயன்படுத்தத் தெரிந்த எவரும் வசிய ஆற்றலை தாராளமாகப் பெறலாம். இங்கே கூட நித்தி ஸ்டராய்டு மருந்துகளை பெரிய ஆதீனத்திற்கு கொடுத்திருக்கலாம். வயதான அருணகிரி இன்றோ நாளையோ மண்டைப்போடும் தருணத்தில் இருப்பதால் இதனால் ஒன்றும் குடி மூழ்கிவிடாது. குவார்ட்டரில் பெப்பர் கலந்து அடித்தால் தொண்டைக் கட்டு சரியாகிவிடும் என்று விவேக் ஒரு படத்தில் சொல்வாரில்லையா, நிஜத்திலும் இத்தகைய மருந்துகளை கார்ப்பரேட் சாமியார்கள் பயன்படுத்தினால் யார் கண்டு பிடிக்க முடியும்?
எங்க்கிட்டயும் செருப்பிருக்கு நாங்களும் வீசுவோம் - எதிர் கோஷ்டி மீது செருப்பு வீசிய நித்தி ஆதரவு கோஷ்டி
ஆனாலும் மதுரை ஆதீனம் நித்தியின் கார்ப்பரேட் பாணி ஆன்மீகத்தில்தான் மனதைப் பறி கொடுத்திருக்கிறார். அதற்கு விலையாக ஐந்து கோடி ரூபாய்களையும் வாங்கியிருக்கிறார். முற்றும் துறந்த ஆதீனத்திற்கு இந்த பணம் எப்படிப் பயன்படும் என்று கேட்பது அறீவீனம். ஊருக்கு மூன்று, நான்கு குடும்பங்கள் இருக்கையில் அவருடைய மாதாந்திர பட்ஜெட் என்பது நிச்சம் பெரிய தொகைதான். ஆகவே இந்த ஆதீன வாரிசு நிகழ்வு என்பது பக்காவான பிசினெஸ்ஸாகவும் இருக்கிறது. ஏராளமான சொத்துக்களை வைத்திருக்கும் ஆதீனங்கள் இயற்கையாகவே பிசினெஸ் ஆட்களாக இருந்தாக வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நியதி. இதைப் புரிந்து கொண்டால் மதுரை ஆதீனத்திற்கும் நித்தியானந்தாவிற்கு ஏற்பட்ட வணிக நடவடிக்கையை குறை சொல்ல முடியாது.
இறுதியாக நித்தியை எதிர்ப்பவர்கள் அவரது பாலியல் முறைகேட்டினை மட்டும் வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள். ஆனால் நித்தியின் படுக்கையறையில் எட்டிப்ப பார்த்து முடிவு செய்வது அநாகரீகம் என்கிறார்கள் சில தனி மனித உரிமையாளர்கள். எது தனியுரிமை? எது தனியுரிமை மீறல்?
சங்கர மடத்தின் பார்ப்புக்கு ஒரு நீதி! மனு தர்மத்தின் நியதி!
பார்ப்பனியத்தின் தலைமை பீடமாக திகழ்ந்த சங்கர மடத்தை அவாள்களும் சரி, அவாள்களின் அரசியல் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸூம் சரி என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தற்போது நித்தியானந்தா ஆதீனமாக மலர்ந்திருக்கும் நிலையில் யாரும் ஜெயேந்திரன் விவகாரத்தை எழுப்பி விடக்கூடாது என்பதில் தினமணி வைத்தி மாமா மிகவும் கவலைப்ப்படுவது அதற்கோர் சான்று. அதாவது ஜெயேந்திரன் மடாதிபதியாக இருக்கும் போதுதான் குற்றம் சாட்டப்பட்டாராம். அது நீதிமன்றத்தால் நிரூபணமாகாத நிலையில் அவர் பதவி விலக தேவையில்லையாம். ஆனால் நித்தியானந்தா பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் புதிதாக மடத்தின் தலைவராக வருவது சரியில்லை என்று புலம்புகிறது தினமணி. எனில் அவர் நித்தியானந்தா தியான பீடத்தின் தலையாக வலம் வருவதில் வைத்திக்கு உடன்பாடுதான். புதிய பதவிதான் பிரச்சினையாம்.
நெஞ்சு நிமிர்த்தி ” நீதான் குற்றவாளி” என்று சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைதான், “நித்தியானந்தா ஆதினத்திற்கு பொருத்தமானவர் அல்ல, மரபுகள் தேவைப்படாத சித்த மரபைச் சேர்ந்தவர்”, என்றெல்லாம் செத்துப்போகும் பாயிண்டுகளை வைத்து பேசுகிறார் வைத்தி மாமா. என்னதான் கவனமாக இருந்தாலும் மல்லாக்க படுத்து துப்பும் போது எச்சில் கீழேதானே விழவேண்டும்?
நித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்!
நோ, நோ! திஸ் நான்சென்ஸ் இஸ் நாட் ஒரிஜினல் ஆன்மீகம் என்கிறார் ஜெயமோகன்
கொலையே செய்தாலும் ஒரு பார்ப்பனருக்கு மரண தண்டனை இல்லை எனும் மனு தர்ம விதி ஜெயேந்திரன் விசயத்திலும் அப்பட்டமாக பின்பற்றப்படுகிறது. பார்ப்பனரல்லாத சாமியார்களின் லீலைகளை கண்டிக்கும் எவரும் சங்கர மடத்திற்கு மட்டும் அனிச்சை செயலாய் விலக்கு கொடுத்து விடுகிறார்கள். நித்தியானந்தாவின் படுக்கையறை ஆட்டம் நாறிய போது தனது இந்து பக்தர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக ஆன்மீகம் – போலி ஆன்மீகம் தொடரை ஜெயமோகன் எழுதியிருந்தார்.
ஆனால் செத்துப் போன சீனியர் சங்கராச்சாரியின் சாதித் திமிர், மொழித் திமிர், ஆணாதிக்க திமிர் எல்லாவற்றையும் கடந்து அவர் ஒரு கலாச்சாரக் காவலர் என்று கொண்டாடும் ஜெயமோகன் அந்தக் காவலர் நியமித்த ஜெயேந்திரனது குற்றங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இவர் வேறு, அவர் வேறு என்று ஒற்றை வரியில் கடந்து செல்ல முடியாது. பெருசின் உள்ளொளிதானே சிறுசின் ஞானத்தை கண்டுபிடித்து அரியணையில் ஏற்றியிருக்கிறது. பெருசு உயிரோடு இருக்கும் போது மட்டும் சிறிசு நல்லாத்தான் இருந்தார் என்ற வாதமெல்லாம் பூமாரம் போல திருப்பித் தாக்கும்.
நமது கேள்வி எளிமையானது. அதிகார, அரசியல் தரகு மையமாக மாறியதால் மட்டும் ஜெயேந்திரன் தவறு செய்து விடவில்லை. இந்த வாதத்தை நீட்டித்தால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருமுன்னர் ஆர்.எஸ்.எஸ் கூட ஒழுக்கமாகத்தான் இருந்தது என்றும் சொல்லலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அரசியல் அதிகாரத்தை சுவைப்பதற்காக நெடுங்காலம் போராடிய இந்துமதவெறியர்கள் குறிப்பிட்ட காலத்தில் அதை பறித்தெடுக்கிறார்கள்.
ஒழுக்கத்தை வெறுமனே பாலியல் சார்ந்த தனிப்பட்ட ஒழுக்கமாக மட்டும் குறுக்குவதால் சமூகம் சார்ந்த பேரொழுக்கங்கள் மறைந்து கொள்கின்றன. கூடவே தனது ஆதிக்க பாசிசக் கொள்கையை நியாயப்படுத்தவும் செய்கின்றன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தை மதத்தால் சாதியால் மொழியால் ஒடுக்கும் கும்பல் பெண்ணாசை துறப்பு அல்லது தொடுப்பின் மூலம் தனது சமூக ஒழுக்கக் கேட்டை ஒழுக்கமாக சித்தரிக்கிறது.
ஜெயமோகன் போன்றோர் விழும் இடம் துல்லியமாக இதுதான். அந்த வகையில் பெரிய சங்கராச்சாரி மற்றும் ஆட்சிக்கு முந்தைய ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தன்னளவிலேயே உழைக்கும் மக்களுக்கு எதிரான பார்ப்பன பாசிசத்தை கொள்கையாகவும், மதமாகவும், சடங்காகவும் கொண்டிருந்ததார்கள். இந்த ஒடுக்குமுறை அரசியலை விடவா ஜெயேந்திரனது பாலியல் ஒழுக்கம் கீழானது? இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிறோம். ஒன்றின் வெளிப்பாடு மற்றதை இல்லை என்றோ உயர்ந்தது என்றோ ஆக்கிவிடாது. ஆயினும் இந்த எளிய உண்மையை ஜெயமோகன்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
மக்களுக்கான ஜனநாயகத்தை மறுப்பதால்தான் ஞானிகள், மடங்கள், அற்பவாத இலக்கியவாதிகளின் இருப்பு கருத்தாலும், நடைமுறையாலும் தனது வம்படியான மேல் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. அப்படித்தான் இவர்களது அகங்காரமே நீதிமன்றமாகவும், தன்னிலையே கேள்விக்கு அப்பாற்பட்டும், கருத்தே எதிர்க்கப்படக்கூடாததாகவும் தொழிற்படுகின்றன. அதனால் சமூகத்தின் பரந்துபட்ட செயல் துடிப்பில் வைத்து இவர்கள் எப்போதும் தங்களை விமரிசனம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆகவேதான் இத்தகைய ஞானிகளை நாம் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டுமே அன்றி நம்மை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பாமரத்தனம் என்று ஜெயமோகன் நீண்ட காலமாக ஓதுகிறார். பார்ப்பனியத் திமிரின் இலக்கிய சாட்சியாக அவர் நீடித்திருப்பதன் தத்துவம் இதுதான்.
சைவ ஆதீனங்கள் – பார்ப்பனியத்தின் பங்காளிகள்!
ஆக நித்தியானந்தாவை மட்டம் தட்டும் போக்கில் ஜெயேந்திரனை கண்டு கொள்ளாமல் விடுவதில் பார்ப்பனிய ஆதிக்கமும், அடிமைத்தனமும் நிச்சயமாக இருக்கிறது என்கிறோம். இதனால் சைவ ஆதீனங்கள் அனைத்தும் பார்ப்பனியத்தை எதிர்க்கிறது என்பதல்ல. சொல்லப் போனால் இவர்களும் பார்ப்பனியத்தின் பிரச்சார பீரங்கிகிகள்தான். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்கும் பார்ப்பன சிவாச்சாரியர்களுக்கு சைவ ஆதீனங்கள்தான் தோள் கொடுத்தார்கள். கருவறையில் தமிழ் மொழி கூடாது என்பதையும் இவர்கள்தான் முன்னின்று பேசினார்கள். அந்த வகையில் இவர்களது பார்ப்பனிய கிரைம் ரிகார்டு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. இவர்களது கோவில்களில் கூட பார்ப்பனர்கள்தான் புரோகிதர்களாக உள்ளனர்.
பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு மாற்றாக வந்த சமண புத்த மதங்களை இரத்தத்தால் அழித்த வரலாற்றில் ஆதீனங்களுக்கும் இடமுண்டு. சமண துறவிகளை கழுவிலேற்றிக் கொன்ற திருஞான சம்பந்தர்தான் மதுரை ஆதீனத்தின் ஸ்தாபகராம். எனில் கொலைகார சம்பந்தரை விட குஷால் பேர்வழி நித்தியானந்தா எவ்வளவோ மேலில்லையா? அல்லது அந்த கொலைக்கும் இந்த மன்மதக் கலைக்கும் தொடர்பில்லையா? பெண்ணாசையை விட ஒரு முழு சமூகத்தையே ஆட்டிப்படைக்கும் ஆசை பேராசை இல்லையா?
ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு தேவைப்படும் உதவிகளையும் இந்த ஆதினங்கள் கண்ணும் கருத்துமாக செய்துதான் வருகின்றனர். குன்னக்குடி போன்ற ஒரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பார்ப்பன ஆதிக்கத்தின் தளகர்த்தர்களாகத்தான் அனைத்து ஆதீனங்களும் இருக்கின்றனர். இங்கும் கூட சைவ வேளாளர் சாதிகளைச் சேர்ந்தோர் மட்டும்தான் தம்பிரான்களாகவும், ஆதீனமாகவும் வர முடியும். தற்போது நித்தியானந்தா விவகாரத்தில் மரபு என்ற பெயரில் இதைத்தான் எழுப்புகிறார்கள்.
சைவப் பிள்ளைதான் ஆதீனமென்றால், மற்றவர்கள் வேசி மக்களா?
அதாவது சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ செட்டியார் சாதிகளைச் சேர்ந்தோர்தான் ஆதினமாக வரமுடியுமாம். நித்தியானந்தா ஆற்காடு முதலியார் என்பதால் தகுதியில்லை என்கிறார்கள். அர்ஜூன் சம்பத் கும்பலோடு இணைந்திருக்கும் நெல்லைக் கண்ணன் போன்றோர் இதை ஒரு பெரிய நல்லொழுக்க விசயமாக திரும்பத் திரும்ப ஓதுகின்றனர். ஆனாலும் நித்தியானந்தா தொண்டை மண்டல முதலியார்தான், தகுதியுள்ளவர்தான் என்று எக்சிஸ்டிங் மதுரை ஆதினம் ஓதியபடியே வாதாடுகிறார்.
சங்கர மடத்திற்கு பார்ப்பனர்கள், சைவ ஆதீனங்களுக்கு சைவ வேளாளர்கள் என்பதெல்லாம் மரபோ மண்ணாங்கட்டியாகவோ இருக்கட்டும். இவையெல்லாம் மற்ற ‘இந்து’க்களை இழிவு படுத்துகிறது என்று எவருக்குமே தோன்றவில்லை ஏன்? பூணூல் பார்ப்பானும், விபூதி சைவப் பிள்ளையும்தான் ‘இந்து’க்களுக்கு மத குருக்களாக வர முடியும் என்றால் அங்கே மானமுள்ள ‘இந்து’வுக்கு என்ன வேலை? இந்து முன்னணியின் பார்ப்பனிய ஆதிக்கத்திற்காக பிரிந்து சென்றதாக கூறிக் கொள்ளும் இந்து மக்கள் கட்சி தற்போது அந்த ஆதிக்கத்தை சைவப் பிள்ளைக்கு மாற்றித் தரத் துடிப்பது ஏன்?
சக்கலியரும் சங்கராச்சாரியாகலாம், பறையரும் ஆதீனமாகலாம் என்று கேட்க வேண்டிய காலத்தில் மரபின் பெயரால் உழைக்கும் மக்களை இவர்கள் ஆதிக்கம் செய்யவே துடிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று. நித்தியானந்தாவும் இந்த மரபை மீற விரும்பவில்லை. தானும் சைவ வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்தான் என்று உறவினர்களை நிறுத்தியே கேட்கிறார். ஒரு வேளை அவர் சைவ வேளாளர் பிரிவுக்குள் வரவில்லை என்றாலும் மற்ற ஆதினங்கள் என்ன செய்ய முடியும்? சாதி குறித்த நிரூபிக்குமாறு ஒரு சிவில் வழக்கு போட்டால் அது கீழிருந்து சுப்ரீம் கோர்ட்டு போய் பைசல் ஆவதற்குள் நித்தியானந்தாவின் பேரனே ஆதீனமாகலாம். அல்லது நித்தியும் அவரது உறவினர்களும் சைவ வேளாளர்தான் என்று ஒரு சான்றிதழை பெறமுடியாதா என்ன?
இத்தகைய குற்றச்சாட்டுகளையெல்லாம் நித்தியானந்தா விரும்பவே செய்கிறார். பாலியல் தவிர்த்த மற்ற விவகாரங்களை பெரிது படுத்தப்படுமானால் அது அவருக்கு உதவியாகத்தான் இருக்குமென்பது தெரியும். நித்தியானந்தா மதுரை ஆதீனமாக நிலை பெற்று கார்ப்பரேட் நிறுவன உத்தியால் பிரபலமாக்கி விட்டார் என்றால் ஏனைய வவ்வால் புகழ் ஆதீனங்கள் கீர்த்தியை இழந்து விடுமென்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. இதை நித்தியானந்தாவே குறிப்பிடுவது சுவாரசியமான ஒன்று. இவர்களது குழாயடிச் சண்டைக்கு இப்படியும் ஒரு கோணமிருக்கிறது.
இந்நிலையில்தான் நித்தியை எதிர்க்கும் ஆதீனங்களும், அர்ஜூன் சம்பத் கும்பலும் மயிறுப் பிரச்சினையை மரபுப் பிரச்சினையாக மாற்றி சண்டமாருதம் செய்கிறார்கள். உண்மையில் இந்த மரபின் அடிப்படை என்ன?
நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்?
மதுரை ஆதீனம் அருணகிரி தனது வாரிசை நியமித்தார் என்றதும் மற்ற ஆதீனங்களால் அதை முற்று முழுதாக அதாவது வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. மதுரை ஆதீனம் மரபை மாற்றிவிட்டார் என்று பலவீனமான அதுவும் காறி உமிழத்தக்க பார்ப்பனிய சடங்குகளில்தான் அவர்களது விமரிசனம் மையம் கொண்டிருக்கிறது. நித்தியானந்தா சைவப்பிள்ளை இல்லை, தீட்சை பெறவில்லை, திருமேனியில் 16 இடங்களில் திருநீறு பூசவில்லை, மொட்டையடிக்கவில்லை, தனியாக மடம் வைத்திருக்கிறார், என்று இறுதியில்தான் பாலியல் குற்றச்சாட்டு உடையவர் என்கிறார்கள்.
எதற்கு இப்படி வெட்டியாக அற்ப விசயங்களை மரபு என்ற பெயரில் பட்டியிலிட வேண்டும்? நித்தியானந்தா ஒரு பொறுக்கி என்று மட்டும் சொல்லி ஏன் எதிர்க்க முடியவில்லை? சைவ ஒழுக்கத்தை தீர்மானிக்கும் விசயமாக முடி ஏன் இருக்கிறது? இதற்கு மாட்சிமை தாங்கிய ஆதினங்கள் யாரும் வாயைத் திறக்க முடியாது. நித்தியானந்தாவே அதற்கு பதிலளித்திருக்கிறார். அதாவது தனது படுக்கையறையை 24 மணிநேர கேமரா கண்காணிப்பிற்குள் வைத்திருக்க முடியுமென்றும் மற்ற ஆதீனங்கள் தயாரா என்று அவர் சவால் விட்டிருக்கிறார். ஒருவேளை தனது படுக்கையறை ஊரறிந்து விட்டபடியால் அதில் புதிதான மர்மங்கள் இல்லை என்றும் அவர் நினைத்திருக்கக் கூடும்.
இதற்கு ஏதோ வயதான ஒரு ஆதீனம் மட்டும் சவாலை ஏற்றிருக்கிறார். மற்றவர்கள் கமுக்கமாக அமைதி காக்கிறார்கள். இப்படி நித்தியானந்தா ஏதோ ஏட்டிக்குப் போட்டியாக மட்டும் கேட்டிருக்கிறார் என்பதல்ல. அவர் அனைத்து ஆதீனங்களுக்கும் மிகப் பணிவாகவே தனது விளக்கத்தை கேட்குமாறு கோரியிருந்தார். அவர்களோ அருணகிரியை மட்டும் சந்திப்பதாகவும், நித்தியானந்தாவை சந்திக்க முடியாதெனவும் மறுத்து விட்டார்கள். தான் யோக்கியனில்லை என்று அவர்கள் கூக்குரலிட்டபடியால் இவரும் “நீங்கள் மட்டும் யோக்கியர்களா?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார். இந்த பூமாரங் சண்டையின் வேர் என்னவென்று புரிகிறதா?
“ஆட்டத்தை இருவரும் ஆடுகிறோம், என்னை மட்டும் தனிமைப்படுத்த நினைக்காதீர்கள்” என்பதே நித்தியின் விமரிசனம். ஒரு வேளை நித்தியானந்தா இதைக் கிளப்பவில்லை என்றாலும் பிரச்சினை இதுதான், யார் யோக்கியர்கள், எது அளவு கோல்?
தற்போது ஆதினமாக இருக்கும் அருணகிரியையே எடுத்துக் கொள்ளுங்களேன். முரசொலியில் நிருபராக பணியாற்றி பின்னர் சொத்துக்கு ஆசைப்பட்டு விபத்து போல ஆதீனமாகிறார். இவர் ஆடாத மன்மத ஆட்டமா, திருவிளையாடல்களா? மதுரை ஆதீனத்தில் சமையலறை முதல் பொக்கிஷ அறை முதல் வளைய வந்த செல்வி, சுதா, வைஷ்ணவி போன்றோர் நித்தியானந்தாவோடு ஏற்பட்ட அதிகாரச் சண்டை காரணமாக மாறி மாறி இந்த உண்மைகளை புட்டு வைக்கிறார்கள். அதுவும் வைஷ்ணவி வாழும் கச்சனம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஆதீனத்திடம், ” ஊருக்கு மூணு வைப்பாட்டிகளை வைச்சிருக்கியா?” என்று அதே கிராமத்திலேயே சண்டை போட்டிருக்கிறார். சுதா என்ற அந்த இளம்பெண் ‘மகா சன்னிதானத்தை’ மாமா என்றுதான் கூப்பிடுவாராம்.
தி.மு.க ஆதரவு, ஈழ ஆதரவு, என்று அரசியல் ஆதரவோடும், இமேஜோடும் தனது அந்தப்புரத்து நாயகிகளை அனுபவித்தபடிதான் அருணகிரி ஆட்டம் போட்டிருக்கிறார். இப்போது வயதாகிவிட்டாலும் தனது திருப்பணியை கட்டிளங்காளையான நித்தி இளமை முறுக்குடன் தொடருவார் என்று அவர் விரும்புகிறார். அந்த வகையில் அருணகிரி தனது வாரிசை சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
அதிலும், நித்தி மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் கூறுகையில், “இந்தக் காலத்தில் யார் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுக்கள் இல்லை” என்று தீர்ப்போடு விடுதலையையும் வழங்கியிருக்கிறார். யார்தான் ஊழல் செய்யவில்லை, யார்தான் யோக்கியன், யார்தான் ஆசைப்படவில்லை என்று நாடு முழுக்கவே இத்தகைய பொன்மொழிகள் வலுவான யதார்த்தத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதால் அருணகிரியின் பேச்சு பொறுக்கித்தனத்தை ஒத்துக் கொள்ளும் நேர்மையான பேச்சு.
ஆர்.எஸ்.எஸ் கும்பலும், அர்ஜூன் சம்பத் கும்பலும் ஏன் அடக்கி வாசிக்கிறார்கள் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நித்தியானந்தாவை அவர்கள் எதிர்ப்பது போல மலர்ச்சண்டை போடுவதற்கு காரணம் அவர் ஆதாரத்தோடு பிடிபட்டுவிட்டார். அருணகிரி அப்படி பிடிபடவில்லை. பிடிபடாதாவரை இந்து தர்மம் யோக்கியமானது. ஆகவே இதை பெரிதாக்க பெரிதாக்க அவர்களுக்குத்தான் சிக்கல். மற்ற ஆதீனங்களின் ஜல்சா ஆட்டங்களை நித்தியானந்தா வெளிப்படுத்த ஆரம்பித்தால் இந்துமதவெறியர்கள் ஒட்டு மொத்தமாக தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அப்படி செய்யுமளவுக்கு அவர்கள் ஒன்றும் மான, ரோசம் கொண்டவர்கள் அல்ல என்பது வேறு விசயம். இவை புதிய பிரச்சினையும் அல்ல. வரலாறு நெடுகிலும் அவர்கள் அறிந்த ஒன்றுதான்.
மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்
அதே நேரம் முடியோடும், ரஞ்சிதாவோடும் சுற்றும் நித்தியானந்தா மதுரை ஆதீனமாவதற்கு தகுதியற்றவர் என்று சங்கர் சாரி ஜெயேந்திரனும் வெட்கமின்றி புகார் படித்திருக்கிறார்.
சங்கராச்சாரியின் யோக்கியதையை இறந்து போன எழுத்தாளர் அனுராதா ரமணன்உலகறியச் செய்திருப்பதை நினைவுபடுத்திக் கொள்வோம். சங்கர் சாரியின் ஆசை அயோக்கியத்தனத்திறத்கு மறுத்தவர் இவரென்றால் ஒத்துப்போனவர்களின் பட்டியலோ மிகப்பெரியது. அவற்றில் நடிகைகள் முதல் நாட்டியத் தாரகைகள் முதல் பலருண்டு. அவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்பது அப்போதும் கூட மேல் கீழ் தராசை விடாத ஜெயேந்திரனின் ஆச்சார ஒழுக்கத்தை காட்டுகிறது. எனினும் ஒரு களவாணி மற்றொரு களவாணியை களவாணி என்று நல்லவன் போல் திட்டுவதை திட்டப்படும் களவாணிகள் சகித்துக் கொள்வதில்லை. தற்போது ரஞ்சிதா அதற்க்காக ஜெயேந்திரன் மீது வழக்கு போட்டிருக்கிறார். ரத்து செய்ய சங்கர மட மேனேஜர் தூது போவதாக செய்திகள் வந்திருக்கின்றன.
நித்தியானந்தாவை முழு வில்லனாக மாற்றுவதன் மூலம் தனது வில்லத்தனம் மறக்கப்படலாம் என்ற மலிவான உத்தியே ஜெயேந்திரனது அணுகுமுறையில் வெளிப்படுகிறது. ஆனாலும் இந்தப் போட்டியில் விட்டுக் கொடுக்குமளவு நித்தியானந்தா ஒன்றும் விரல் சூப்பும் குழந்தையல்ல. சொல்லப் போனால் நித்தியை மறுக்கும் சாமியார்களை ஒண்டிக்கு ஒண்டி வருவாயா என்று அவர் விடும் சவால்களை ஆதீன உலகம் இதுவரை கண்டிருக்கவில்லை.
சங்கரசாச்சாரியின் மீது வழக்கு, தருமபுரம் ஆதீனம் முன்னால் ஆர்ப்பாட்டம், மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு, ஊடகங்களுக்கு சுடச்சுடப் பதில் என்று அவரது வேகத்திற்கு மற்றவர்கள் ஈடு கொடுக்க முடியாததன் காரணம் அவர்களுக்கு வயதாகிவிட்டது என்பதல்ல, எதிர்ப்பதற்கு போதுமான ஒழுக்க சரக்கில்லை என்பதே.
திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும் பாலுறவு கொள்ள முடியாத சூழ்நிலை என்பது உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை சர்வசாதாரணம். ஆனால் இதையே பிரமச்சரியம் என்றும் உலகிலேயே கடினமான தவமென்றும், தியாகமென்றும் பார்ப்பனிய சித்தாந்தவாதிகள் வரலாறு நெடுகிலும் அச்சுறுத்தியே வந்திருக்கின்றனர். அப்போது தொழில்நுட்பம் வளரவில்லை, எதிர்த்துக் கேட்கும் ஜனநாயமில்லை என்பதால் அந்த ஆச்சார வேடம் பல காலம் ஓடியது. இப்போது சூழ்நிலை திரைச்சீலைகளை தூக்கி விடுகிறது.
ஆர்.எஸ்.எஸ் இன் புதிய முழக்கம்: செக்ஸ் மாதா கி ஜெய்!
சங்கரராமன் கொலைவழக்கில் கைதானவர்தான் காஞ்சி பெரியவாள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளின் தியாகத்தில் மைய இடம் வகிக்கும் பிரமச்சரியம் அறிவியில் ரீதியாக சாத்தியமற்றது என்பதைத் தாண்டி, அதிகாரத்தை ருசிக்கும் மேட்டுக்குடியினர் எவரும் சைவப்புலிகளாக இருக்க முடியாது என்பதால் அந்தப்புரக் கிசுகிசுக்கள் ஆதாரத்துடன் வெளிவருகின்றன. வாஜ்பாயி, இல.கணேசன்களது ஆண்மைகள் குமுதத்தின் கிசுகிசு கதைகளிலேயே வெளிவந்திருக்கின்றன. சி.டியுடன் பிடிபட்ட சஞ்சய் ஜோஷி எனும் பிரச்சாரக் மற்றும் பா.ஜ.கவின் தலைவர் தற்போது மீண்டும் பொறுப்பிற்கு வந்திருக்கிறார். பெங்களூருவிலும், அகமதாபாத்திலும் சட்டசபையிலேயே பிட்டுப்படம் பார்த்த பெருமையும் பா.ஜ.க உறுப்பினர்களுடையதுதான்.
கூடுதல் போனசாக மத்தியப் பிரதேசத்தில் துருவ் நாராயண் சிங் எனும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் தனது பங்கிற்கு செக்ஸ் மாதாகி ஜெய் என்று புனிதப் பணியில் சேர்ந்திருக்கிறார். ஷெக்சா மசூத் எனும் பெண் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொல்வதற்கு ஏற்பாடு செய்தவர் சஹிதா பர்வேஸ் எனும் மேட்டுக்குடி இசுலாமியப் பெண். இந்த இரண்டு பெண்களும் துருவின் காதலிகள். இது போக சட்டப்பூர்வமாக துருவுக்கு ஒரு மனைவியும், சாட்சியமாக குழந்தைகளும் உண்டு. இவரும் ஆர்.எஸ்.எஸ் ஆல் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்துதான்.
கிழட்டு என்.டி.திவாரி, ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர்கள், அபிஷேக் மனு சிங்வி போன்ற காங்கிரசுகாரர்கள்தான் பா.ஜ.கவின் செக்ஸ் திருப்பணிக்கு தோள்கொடுத்து ஆறுதல் தருகிறார்கள். ஆனால் இந்து மதவெறியர்களுக்கு இதெல்லாம் கூட பிரச்சினை இல்லை. சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி மாட்டியதும்தான் ஆடிப் போனார்கள். அன்றைக்கு பார்ப்பன இந்துத்வ உலகமே ஜெயேந்திரனை காப்பாற்றத் துடித்தது. டெல்லியில் வாஜ்பாயி உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஜெயேந்திரனது பாலியல் கூத்துக்களை அம்பலப்படுத்தியதால்தான் சங்கரராமன் கொல்லப்பட்டார். சங்கர் சாரியின் கூலிப்படை கோவிலில் வைத்தே கொன்றது. தேவநாதனது கருவறை செக்ஸ் சி.டி தோற்றுவித்த அதிர்வலைகள் கூட வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கொடூரத்திற்கு ஏற்படவில்லை. தேவநாதன் கூட பக்தர்களின் நம்பிக்கையைத்தான் இழிவு படுத்தினார். ஜெயேந்திரனோ பக்தர்கள் தன்னை கேள்வி கேட்கக் கூடாது என்பதற்க்காக கொலையே செய்தார். இன்றைக்கு நித்தியானந்தை “கையப் பிடிச்சு இழுத்தியா” என்று சவுண்டு விடும் அர்ஜூன் சம்பத் கும்பல் கூட அன்று பார்ப்பன பீடத்தின் முன் வீழ்ந்து கிடந்தது.
ஜெயேந்திரனைக் காப்பாற்ற தினமணி நேரடியாகவும், ஜெயமோகன் மறைமுகமாகவும் பாடுபடுகின்றனர். அந்தக் கதை அடுத்த பதிவில்…..
– தொடரும்
_____________________________________________________