Thursday, May 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 748

கொலைக்களமாகுமா கூடங்குளம்? நேரடி ரிப்போர்ட்!

31

koodankulam-கூடங்குளம்கூடங்குளத்தை ஒரு கொலைக்களமாக மாற்றுவதற்குத் தயார் நிலையில் நின்று கொண்டிருக்கிறது போலீசு. போராட்டக்குழுவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட 11 பேர் நேற்றே கைது செய்யப்பட்டு, போலீசு வேனிலேயே நாள் முழுவதும் வைக்கப்பட்டிருந்தனர். 2011ஆம் ஆண்டு இறுதியில் சிவசுப்பிரமணியன் மீது போடப்பட்ட ராஜத்துரோகம், சதி உள்ளிட்ட பொய்வழக்குகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். ராஜத்துரோகம், சதியில் ஈடுபட்ட அவரையும் உதயகுமார் போன்றோரையும்தான் முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் சந்தித்து உரையாடினார் என்பது நினைவிருக்கலாம். கைது செய்யப்பட்ட 11 பேரும் கடலூர் சிறைக்கு அனுப்பப் பட்டிருக்கின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கையை எதிர்த்து கூட்டப்புளி கிராமத்தில் கைது செய்யப்பட்ட 184 பேர் நேற்று நள்ளிரவு நெல்லை ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களை இரவோடு இரவாக சிறைக்கு அனுப்பும் முயற்சியை வழக்குரைஞர்கள் முறியடித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 45 பேர் பெண்கள். மாணவர்களும் அடக்கம். சிறை வைக்கப்படுவதை எதிர்த்து பெண்கள் போராடினர். இவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

இடிந்தகரையில் உதயகுமார் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அங்கே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கான போலீசார் அங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். மரியாதையாக வந்து சரணடைந்து விடுமாறு போலீசு எஸ்.பி தன்னை மிரட்டுவதாக மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்களிடம் உதயகுமார் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். கைது ஆவதற்குத் தான் தயாரென்றும், ஆனால் மக்கள் அதனை விரும்பவில்லை என்பதால், மக்களின் விருப்பத்தையே தான் நிறைவேற்ற இயலும் என்றும் அவர் போலீசுக்கு பதிலளித்திருக்கிறார்.

அங்கே கூடியிருக்கும் மக்களை மிரட்டும் வகையில் சுமார் 60, 70 ஆயுத போலீசு வாகனங்கள் அதிரடியாக வருவதும் பின்னர் பின்வாங்குவதுமாக ஒரு உளவியல் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன. நரித்தனமாக உதயகுமாரைக் கைது செய்து கூட்டத்தைக் கலைப்பது அல்லது ரத்தக் களறி நடத்தியாவது இன்றிரவு இதனை செய்து முடிப்பது என்ற திட்டத்தில் போலீசு இருப்பதாகவே தெரிகிறது.

இடிந்தகரை செல்லும் சாலை வழிகள் எல்லாம் போலீசால் அடைக்கப்பட்டு விட்டன. 144 தடையாணை பிறப்பிக்கப் பட்டிருக்கிறது. கடல் வழியாக வந்து இடிந்தகரைக்குள் நுழையும் மீனவர்களைக் கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும் ஏற்ப டார்னியர் விமானங்கள் கடலின்மீது வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

நேற்று மதியம் முதலே கைது செய்யப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் வள்ளியூர், நெல்லை நீதிமன்றங்களில் செயல்பட்டு வருகிறார்கள். இடிந்த கரைக்கு செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென்று போராடிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் 15 பேர் நெல்லை டி.ஐ.ஜி யை சந்தித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இடிந்தகரை செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்க கூடாது என்று அனுமதி மறுக்கவோ, இடிந்தகரைக்கு செல்லக்கூடாது என்று வழக்குரைஞர்களை தடுக்கவோ போலீசுக்கு சட்டப்படி அதிகாரமில்லை. இப்போது அங்கே நடந்து கொண்டிருப்பது துப்பாக்கியின் ஆட்சி. மத்திய அரசும், ஊடகங்களும், திமுக, காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகளும் தனக்குத் துணை நிற்கும் தைரியத்தில் ஒரு பேயாட்டத்தை நடத்துவதற்கு தயாராகி வருகிறது பாசிச ஜெயா அரசு. நலத்திட்டம் என்ற பெயரில் தான் வீசிய 500 கோடி ரூபாய் லஞ்சப்பணத்துக்கு பல்லிளித்து அடிபணியாமல் போராட்டம் தொடரும் என்று மக்கள் அறிவித்து உறுதியாக நிற்பதால், கூடங்குளம் அணு உலைக்கு முன்னதாக, அம்மாவின் தாயுள்ளம் வெடிக்கத் தயாராக காத்து இருக்கிறது.

இந்த அடக்குமுறைகளும், கைதுகளும் ஏற்படுத்தும் தற்காலிகப் பின்னடைவுகளை வென்று முன் செல்வோம். ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் போராடும் மக்களுக்குத் துணை நிற்பார்கள். “கூடங்குளம் அணு உலையை மூடு, அடக்குமுறையை நிறுத்து, பொய்வழக்கில் கைது செய்தவர்களை விடுதலை செய்” என்ற முழக்கங்களின் கீழ் இவ்வமைப்புகளின் சார்பில் தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

மின்வெட்டைக் காட்டி கூடங்குளத்துக்கு தமிழக மக்களிடம் ஆதரவு தேடும் சதியை திரைகிழிக்கும் வகையில் தமிழகமெங்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டு விட்டது. கூடங்குளத்தின் மக்களை அடக்குமுறையால் சிதறடித்து விட்டால், அப்போராட்டம் அடங்கிவிடாது. தமிழகமெங்கும் அதனைக் கொண்டு செல்வோம். அம்மக்களின் போராட்டத்தைத் தமிழக மக்களின் போராட்டமாக மாற்றியமைப்போம்.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நெல்லை – கூடங்குளம்…பேரணி, ஆர்ப்பாட்டம் – படங்கள்!

4

“கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!”  – புரட்சிகர அமைப்புகள் நெல்லை மற்றும் கூடங்குளத்தில் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி.

“மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” என்ற முழக்கத்தின் கீழ் ம.க.இ.க; வி.வி.மு; பு.மாஇ.மு; பு.ஜ.தொ.மு; பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கத்தையும், பிப்ரவரி 11 அன்று நெல்லையிலும் கூடங்குளத்திலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற எழுச்சிமிகு பேரணிகளையும் நடத்தியிருக்கின்றனர்.

கடந்த செப்டம்பர் மாதம் முதற்கொண்டே கூடங்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த மீனவர்களும் பிறபகுதி மக்களும் அணுஉலைக்கு எதிராகத் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்தகரையில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதுடன், கூடங்குளம் அணு உலையை இயக்குவதற்கு அவ்வப்போது மத்திய அரசு மேற்கொண்டு வரும் சதித்தனமான முயற்சிகளையும் விழிப்புடனிருந்து முறியடித்து வருகின்றனர். எனினும், ஊடகங்கள் மற்றும் அப்துல் கலாம் போன்ற ‘அறிவாளிகளின்’ துணையுடன் அணு மின் நிலையத்துக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் தீவிரமான பொய்ப்பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதுடன், அணு உலையை எதிர்ப்பவர்கள் நாட்டின் முன்னேற்றத்துக்கு முட்டுக் கட்டை போட்டு, இந்தியா வல்லரசாவதைத் தடுக்கிறார்கள் என்ற கருத்தையும் மன்மோகன் அரசு உருவாக்கியிருக்கிறது. இந்தப் பிரச்சாரம் தமிழக மக்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கும் தாக்கத்தை முறியடிக்காமல், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் பொதுக்கருத்தை உருவாக்க முடியாது என்பதைக் கணக்கில் கொண்டு இப்புரட்சிகர அமைப்புகள் தமது பிரச்சாரத்தை விரிவான அளவில் கொண்டு சென்றனர்.

இலட்சக்கணக்கான துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், சுவரெழுத்துகள், தெருமுனைக்கூட்டங்கள், அரங்குக் கூட்டங்கள், கலைநிகழ்ச்சிகள் போன்ற வடிவங்களில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வியக்கத்தினை ஒட்டிக் கொண்டுவரப்பட்ட சிறு வெளியீடு 50,000 பிரதிகள் விற்பனை செய்யப்பட்டது.

கிழக்கு கடற்கரையில் கூடங்குளத்துக்கு வடக்கிலும் தெற்கிலும் உள்ள மீனவக் கிராமங்கள், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட நகரங்கள், அந்த வட்டாரத்தைச் சேர்ந்த கல்லூரிகள் போன்ற பல்வேறு தரப்பு மக்கள் மத்தியிலும் மூன்று மாவட்டங்களில் பிரசாரம் கொண்டு செல்லப்பட்டது. கரையோர மக்கள் பிரச்சாரத்துக்கு சென்ற தோழர்களையும், கலைக்குழுவினரையும் நெகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர். உடன் வந்தனர். இடிந்தகரைப் போராட்டப் பந்தலில் ம.க.இ.க. கலைக்குழுவினரின் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றதனால், அடுத்தடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து நடத்தப்பட்டது.

அணு உலை ஆதரவு கருத்து கொண்ட சிறு நகரங்களிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பல இடங்களில் காங்கிரசு, பாரதிய ஜனதா காலிகளுடனான கைகலப்பின் ஊடாகவே பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது. படித்த நடுத்தர வர்க்கத்தினரிடையே கூட ஆளும் வர்க்கத்தின் அணு உலை ஆதரவுக் கருத்துகளே ஆதிக்கம் செலுத்தின. எனினும்  அவற்றுக்கு எதிராக வாதிட்டுப் புரியவைக்க முடிகிறது. குறிப்பாக,  கல்லூரி மாணவர்கள் இது குறித்த உண்மைகளைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினர்.மின்வெட்டுக்கு கூடங்குளம்தான் தீர்வு என்ற பொய்ப்பிரச்சாரத்துக்கு பலியான பலர், பேருந்துகளிலும் ரயில்களிலும் பிரச்சாரம் செய்த போது அணு உலைக்கு ஆதரவு தெரிவித்து சண்டைக்கு வந்த போதும், அவர்களது கேள்விகளை பொறுமையாக எதிர்கொண்டு பதிலளித்தார்கள் தோழர்கள்.

பிப்ரவரி 11 அன்று காலை நெல்லை ஜவகர் திடல் செங்கொடி ஏந்திய தோழர்களால் நிரம்பி வழிந்தது. பு.ஜ.தொ.மு. மாநிலத்தலைவர் தோழர் முகுந்தன் தலைமை தாங்கி முழக்கங்களை எழுப்பினார். தொடர்ந்து பேசிய பேரா. தொ.பரமசிவம், “இப்பகுதியை இன்னொரு நந்திக்கிராமம் ஆக்காமல் காங்கிரசு அரசு ஓயப்போவதில்லை என்று கூறியதுடன், கூடங்குளம் பிரச்சினையில் இரட்டை வேடமிடும் மார்க்சிஸ்டுகளையும் அம்பலப்படுத்தினார். அணு உலை வேண்டுமா, வேண்டாமா என்ற கேள்வியை மின்சாரம் வேண்டுமா, வேண்டாமா என்று திசை திருப்பிய ப.சிதம்பரத்தை அம்பலப்படுத்தினார் ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு.  இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாகத்தான்  மன்மோகன் அரசுக்கு அணுவெறி பிடித்திருக்கிறது என்பதையும், அது ஒரு அமெரிக்க அடிமை ஒப்பந்தம் என்பதையும் அம்பலப்படுத்தியதுடன், கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து ஆய்வதற்காக மாநில அரசு அமைத்திருக்கும் குழுவையும், அதன் உறுப்பினர்களையும் அம்பலப்படுத்தினார், ம.க.இ.க. செயலர் மருதையன்.

போராட்டத்தில் அணிதிரளுமாறு அனைவரையும் அறைகூவும் பாடலை ம.க.இ.க. மையக்கலைக்குழு இசைக்க பெருந்திரளாகப் பேரணி நகரத் தொடங்கியது.  அணு உலைக்கும் அமெரிக்க ஆதிக்கத்துக்கும் காவடி எடுக்கின்ற காங்கிரசு, பா.ஜ.க. அடிமைகளை அம்பலப்படுத்தும் காட்சி விளக்கத்தினை நிகழ்த்தியவாறு பு.மா.இ.மு. தோழர்கள் முன்சென்றனர். காட்சி விளக்கத்தையும், பேரணியின் முழக்கங்களையும் கருத்தூன்றிக் கவனித்தனர் மக்கள்.

நெல்லையிலிருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் உள்ள கூடங்குளத்துக்கு செல்வதற்கு பேருந்து வசதியில்லை என்பதுடன், போலீசு மிரட்டல் காரணமாக வாடகை வாகனங்கள் வர மறுத்தன. எனவே, பேரணியின் ஒரு பகுதியினர் மட்டுமே வாகனங்களில் கூடங்குளம் செல்ல முடிந்தது.

மாலையில் கூடங்குளம் சென்று இறங்கிய தோழர்களை வரவேற்கக் காத்திருந்தது ஒரு பெரும் மக்கள் திரள். தங்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த தோழர்களை வரவேற்குமுகமாக சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு நின்றனர்.

கைக்குழந்தைகளுடன் பேரணிக்கு வந்திருந்த பெண் தோழர்களின் கையிலிருந்து குழந்தைகளை வாங்கிக் கொண்டனர் பெண்கள். மற்றவர்கள் கொடிகளை, முழக்க அட்டைகளை உரிமையுடன் பெற்று ஏந்தினர். பேரணி நகரத் தொடங்கியது. தோழர்களும் மக்களுமாக இரண்டறக் கலந்து விட்ட அந்தப் பெரும் மக்கள் திரள் போகும் பாதையெங்கும் இரு மருங்கிலும் இருந்த வீடுகளிலிருந்து பெண்களும் சிறுவர்களும் இளைஞர்களும் சாரி சாரியாக இறங்கி வந்து பேரணியில் ஒன்று கலந்தனர். அணு உலைக்கு எதிராக ஆவேசத்துடன்  முழக்கமெழுப்பினர்.

இப்பேரணிக்கு ஆதரவு தெரிவித்து மதியத்திற்கு மேல் கடையடைப்பு செய்யப்பட்டிருந்தது. சுமார் 5000 க்கும் அதிகமான மக்கள் நகரின் மையப்பகுதியில் இருந்த தேவாலயத்திற்கு முன்னே திரண்டு நிற்க, போராட்டக் குழுவின் சார்பில், மனோ.தங்கராசு தோழர்களை வரவேற்று உரையாற்றினர். பேரணியில் ஆயிரக்கணக்கான கூடங்குளம் மக்களும் கலந்து கொள்வதைச் சாத்தியமாக்கும் பொருட்டு மறியல் போராட்டத்தை மாற்றியமைக்குமாறு தாங்கள் கோரியதை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவித்து போராட்டக் குழுவின் சார்பில் பேசினார் வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன். தொடர்ந்து கலைக்குழுவினர் நடத்திய நாடகத்தில் ‘நாறவாயன் நாராயணசாமி’ பெரும் வரவேற்பைப் பெற்றார். ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய போராட்டங்களைப் பற்றியும், இப்போராட்டத்தின் அரசியல் முக்கியத்துவத்தையும் சுருக்கமாக விளக்கிப் பேசினார், தோழர் காளியப்பன். போலீசுக்கோ வழக்குகளுக்கோ அஞ்சவேண்டாம் என்றும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் துணை நிற்பார்கள் என்றும் உறுதி கூறினர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன். பெருந்திரளான பெண்கள் பங்கேற்கும் எந்தப் போராட்டமும் தோற்றதில்லை என்று, ஓட்டுக் கட்சிகளைப் புறந்தள்ளி எழுந்திருக்கும் இந்தப் போராட்டம்,  ஒரு புதிய துவக்கம் என்றும் பாராட்டினார் வழக்குரைஞர் ராஜு.

வந்திருந்த தோழர்கள் அனைவரையும் வீட்டுக்கு வந்த நெருங்கிய சொந்தங்களாகக் கருதி உணவளித்து உபசரித்தார்கள் கூடங்குளம் மக்கள். கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே தேவாலயத்தின் மணி, வழமையான நேரத்தில் ஒலி எழுப்பத் தொடங்கியவுடன், யாரோ ஒருவர் விரைந்து  சென்று அதனை நிறுத்தினார். இந்தப் போராட்டத்தை நிறுத்த முடியாது என்பதற்கு வேறு சான்று தேவையா என்ன?

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய-மாநில அரசுகளின் சதி!

34

கூடங்குளம்அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக நடத்தி வரும் போராட்டங்களுக்கு அந்நிய நாடுகளில் இருந்து நிதி திரட்டிக் கொடுத்து, அவற்றின் மூளையாக இருந்து, திட்டங்கள் தீட்டிக் கொடுத்து, தானும் பங்கேற்றவர் என்று ஒரு பொய்ப் புகார் சுமத்தி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கணினிப் பொறியாளர் சோன்டெக் ரைனர் ஹெர்மன் என்பவரை கடந்த மாத இறுதியில் நாகர்கோவிலில் பிடித்து இரவோடு இரவாக, இரகசியமாக சொந்த நாட்டுக்கு நாடு கடத்தி விட்டனர், உளவுப் பிரிவு போலீசார்.

மத்திய உளவுப் பிரிவு போலீசார் (ஐ.பி.) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரைனரைப் பிடித்து நாடு கடத்தும்படி ஐ.பி, தமிழக போலீசு இயக்குநர் ராமானுஜத்திற்கு பரிந்துரைத்தது, தமிழக ‘கியூ’ பிரிவு போலீசார் அவ்வாறு செய்தனர்; ரைனரிடம் ஐ.பி. அதிகாரிகள் பலகட்ட விசாரணை நடத்தி, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டத்துக்கு நிதி திரட்டியதும் போராட்டக் குழுவினருடன் பேசியதும் வழிகாட்டியதும், போராட்டத்தில் அவர் பங்கேற்றதும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கே அவர் சென்றதும் ரைனரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதிசெய்யப்பட்டது என்று போலீசு மூலம் செய்தி கிடைத்ததாக எல்லா நாளேடுகளும் எழுதியுள்ளன.

கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாக பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் அவர்களின் “சமக்சா” நாராயணசாமி கூறிவரும் புகாருக்கு ஆதாரங்களைத் “தேடித் தரும்படி” மத்திய உளவுத்துறை சி.பி.ஐ.க்கு உத்திரவிடப்பட்டிருக்கிறது; அதிகாரபூர்வமற்ற ஆதாரமற்ற இந்த விசாரணை எவ்வாறு அமைய வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. விளக்கம் கேட்டிருக்கிறது. சி.பி.ஐ.யின் விசாரணை விளையத்துக்குள்  கண்காணிப்பு வட்டத்துக்குள் நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மூன்று அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் வந்துள்ளன; அவற்றில் இரண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை முடக்கப்பட்டுள்ளன.

ஜெர்மனி சுற்றுலாப் பயணியை நாடு கடத்துவது, மத்திய அரசின் சி.பி.ஐ., ஐ.பி. மற்றும் மாநில அரசின் கியூ பிரிவு உளவுத்துறையினரின் விசாரணை  கண்காணிப்பு, நடவடிக்கைகள் எதுவும் வெளிப்படையாகவும், அதிகாரபூர்வமாகவும் சட்டப்படியும் செய்யப்படவில்லை. இத்தாக்குதல்கள் எல்லாம் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடி வரும் இடிந்தகரை மக்களையும் தலைமையையும் மிரட்டிப் பணியவைக்கவும், முடக்கி வைக்கவும் மேற்கொள்ளப்படும் சதிசூழ்ச்சி தாம் என்பது நாடும் மக்களும் அறிந்த வெளிப்படையான உண்மை. பிடிபட்ட ஜெர்மானியர், விசாரணை கண்காணிப்பு வளையத்துக்குள் வந்த அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மீது தக்க ஆதாரங்கள் இருப்பின் நேரடியான, வெளிப்படையான அதிகாரபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதுதானே! அதற்குமாறாக சதித்தனமான, நள்ளிரவு, திரைமறைவு, குறுமதி நடவடிக்கைகள் ஒருபுறமும், அவதூறுக் கூச்சல் மறுபுறமும் ஏன்?

அரசும் ஆளும் வர்க்கங்களும் இத்தகைய தந்திரங்களில்  சதித்தனங்களில், அவதூறுப் பிரச்சாரங்களில் ஈடுபடுவதும் ஒன்றும் புதிதில்லை. மக்கள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு நேர்மையாக முகங்கொள்வதற்கு பதில், ஒன்று அந்நிய சதி, சமூக விரோத, தேசவிரோதச் செயல் அல்லது பயங்கரவாத, தீவிரவாதச் செயல் என்று முத்திரை குத்தி அரசு எந்திரத்தை ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்துவது என்பது வாடிக்கையானதுதான். உள்நாட்டு விவகாரங்களில் அந்நியத் தலையீடும் நிதியுதவியும் இருப்பதாலேயே மக்கள் போராட்டங்கள் எல்லாம் தவறாகி விடும் என்றால் வங்கதேசம் முதல் சமீபத்திய இலங்கை-ஈழம், மாலத்தீவு விவகாரங்களில் இந்திய அரசின் தலையீடு ஏற்கக்கூடியனவா?

கூடங்குளம் போராட்டத்துக்கு எதிரான மத்திய அரசின்  சூழ்ச்சிகள், தந்திரங்கள், அடக்குமுறைகள் எல்லாவற்றிலும் ஜெயலலிதா அரசுக்கும் பங்கு இருக்கிறது. கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் போட்டு, ‘கியூ’ பிரிவு போலீசை ஏவி, திரைமறைவு நடவடிக்கைகள் மேற்கொள்வது முதல் கடைசியாக பரமக்குடி பாணியில் கொலைவெறி தாக்குதல் தொடுப்பதற்கு வசதியாக ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் போலீசை அனுப்பி தயாரிப்புகள் செய்கிறது.

ஆனால், புலிகள் பிரபாகரனைப் போல ஜெயலலிதா உதவியுடன் மத்திய அரசை எதிர்த்துப் போராடி வெற்றி பெற முடியுமென்று உதயக்குமார் நம்பச் சொல்கிறார். முள்ளிவாய்க்காலுக்கு நேர்ந்த முடிவு இடிந்தக்கரையிலும் ஏற்படக் கூடாது என்பதுதான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் அக்கறை, எச்சரிக்கை!

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012 (தலையங்கம்)

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!

18

குஜராத்-படுகொலைகுஜராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்து மதவெறிப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கடந்த பிப்ரவரி 27, 2012 அன்று அப்படுகொலை நிகழ்வில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு உரிய நீதி வழங்கக் கோரி பல்வேறு முசுலீம் அமைப்புகளும், ஜனநாயக  மனித உரிமை இயக்கங்களும் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.  அதே பத்தாண்டுகளுக்கு முன்பு கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் தீக்கிரையாகி, 59 பேர் இறந்துபோன வழக்கில் 11 முசுலீம்களுக்குத் தூக்கு தண்டனையும், 20 முசுலீம்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருக்கும்பொழுது,  இந்து மதவெறிப் படுகொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

நீதிமன்றத்தை எட்டியிருக்கும் இப்படுகொலை வழக்குகளுள் பத்துபதினைந்து வழக்குகளில் மட்டும்தான் விசாரணை முடிவடையும் தருவாயில் இருப்பதாகக் கூறப்படுகிறது.  இப்படுகொலை வழக்குகள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்து மதவெறிக் குண்டர்கள் பலரும் சிறைக்குப் போன வேகத்தி லேயே பிணையில் வெளியே வந்துவிட்டனர்.  உள்ளூர் அளவில் இப்படுகொலைகளைத் தலைமையேற்று நடத்திய பாபு பஜ்ரங்கி, ஜெய்தீப் படேல், மாயா கோத்நானி உள்ளிட்ட பலரும் பிணையில் வெளியே வந்து சுதந்திரமாகச் சுற்றித் திரிவதோடு, படுகொலை வழக்குகள் தொடர்பான சாட்சியங்களைப் மிரட்டிப் பணிய வைக்கும் வேலைகளையும் பகிரங்கமாகச் செய்து வருகின்றனர்.  இவை அனைத்திற்கும் மேலாக,  இந்து மதவெறி பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி நரேந்திர மோடிக்கு எதிராக, தொடுத்த வழக்கில், மோடி மீது குற்றச்சாட்டு பதியப்படுமா என்பதைக்கூட இன்றுவரை நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

இப்படுகொலையை நடத்திய இந்து மதவெறிக் கும்பலே கடந்த பத்தாண்டுகளாக குஜராத்தை ஆண்டு வருவதும்; குஜராத் போலீசு, நீதித்துறை உள்ளிட்ட அம்மாநில அரசு நிர்வாக இயந்திரம் முழுவதும் காவிமயமாக்கப்பட்டிருப்பதும், மோடியின் கைக்கூலிகளால் நிரப்பப்பட்டிருப்பதும்; இன்னொருபுறம் இப்படுகொலை தொடர்பான சில வழக்குகளில் தலையிட்டு விசாரணை நடத்தி வரும் குஜராத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு போன்ற அமைப்புகள் பல்வேறு சமயங்களில் இந்து மதவெறிக் கும்பலுக்கு ஆதரவாக, அனுசரணையாக நடந்துகொண்டு வருவதும் முசுலீம்களுக்கு நீதி மறுக்கப்படுவதற்குக் காரணங்களாக உள்ளன.  சதித் திட்டம் தீட்டிக் கொடுத்த மோடி தொடங்கி தெருவில் இறங்கி இப்படுகொலையை நடத்திய மோடியின் கடைசி அடியாள் வரை  இவர்கள் அனைவருக்கும் எதிராக ஏராளமான சாட்சியங்கள், ஆதாரங்கள் இருந்தாலும், போலீசு, சிறப்புப் புலனாய்வுக் குழு, நீதித்துறை என்ற இந்தக் கூட்டணி சட்டத்தின் ஓட்டைகள், வரம்புகளைக் காட்டியும், இந்து மனோநிலையிலிருந்தும் அக்கொலைகாரர்களைத் தண்டனையிலிருந்து தப்பவைத்து விடுகிறது.  இந்த அநீதி கடந்த பத்தாண்டுகளாக நடந்து வருவதைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

குஜராத் போலீசு:     

குஜராத்-படுகொலைநரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பதவியேற்றவுடனேயே, அம்மாநில போலீசு துறையை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவிமயமாக்கும் திருப்பணியைச் செய்யத் தொடங்கினார்.  அம்மாநில அரசில் இருந்துவரும் 65 ஐ.பி.எஸ். பதவிகளுள் 64 பதவிகளை ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளும் அதிகாரிகளைக் கொண்டு நிரப்பினார்.

இந்து மதவெறிப் படுகொலை தாண்டவமாடியபொழுது,போலீசார் மோடியின் உத்தரவுப்படி, “இந்துக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதை’’த் தடுக்காததோடு, பல இடங்களில் இந்து மதவெறி குண்டர்களுக்குத் தேவையான ஆயுதங்களையும் கொடுத்தனர்.  விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கி, ரமேஷ் தாவே, அனில் படேல் ஆகியோர் இந்த உண்மைகளை வாக்குமூலமாக தெகல்கா இதழின் நிருபர் ஆஷிஷ் கேதானிடம் ஆரவாரத்தோடு கூறியுள்ளனர்.

இப்படுகொலையில் போலீசுக்கும் நேரடியாகத் தொடர்பிருப்பதால், 2,107 வழக்குகள் போலீசு நிலையத்திலேயே மங்களம் பாடி புதைக்கப்பட்டன.  இப்படி விசாரணையின்றி மூடப்பட்ட வழக்குகளில் 1,594 வழக்குகளை மீண்டும் நடத்தக் கோரி உச்ச நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், குஜராத் போலீசு வெறும் 117 வழக்குகளில் மட்டும் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஜாகியா ஜாஃப்ரி மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கில் இப்படுகொலை தொடர்பாக 38 ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளையும் குற்றவாளிகளாகச் சேர்க்க வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.  அகமதாபாத் நகரிலுள்ள நரோடா பாட்டியா, நரோடா காவ்ன் பகுதிகளில் நடந்த படுகொலைகளுக்கு எம்.கே.டாண்டன், பி.பி. கோந்தியா என்ற இரு போலீசு உயர் அதிகாரிகள் உடந்தையாக இருந்ததை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, அக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினாலும், அவர்கள் இருவர் மீதும் கிரிமினல் வழக்குத் தொடரப் பரிந்துரைக்காமல், துறைரீதியான நடவடிக்கை எடுத்தால் போதும் எனக் கூறிவிட்டது.

மதவெறிப் படுகொலையின்பொழுது, இந்து மதவெறிக் குண்டர்களோடு கைகோர்த்துக் கொண்ட போலீசாருக்குப் பிற்பாடு பதவி உயர்வு அளிக்கப்பட்டது;  கொலைகாரக் கும்ப லைக் கைது செய்யத் துணிந்த அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.  இதனை விசாரித்த சிறப்புப் புலனாய்வுக் குழு, “இது வழக்கமான நிர்வாக நடைமுறைதான்; இதில் மோடி அரசிற்கு எந்த உள்நோக்கமும் கிடையாது” எனக் கூறியது.

நானாவதி  ஷா கமிசன்: 

இக்கமிசனின் நீதிபதிகளுள் ஒருவரான ஷாவை, “எங்க ஆளு” என்றும், மற்றொரு நீதிபதியான நானாவதியை, “பணத்துக்காகத்தான் அவர் கமிசனில் சேர்ந்திருக்கிறார்” என்றும் குறிப்பிட்டு, குஜராத்தின் முன்னாள் அட்வகேட் ஜெனரல் அர்விந்த் பாண்டியா தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதானிடம் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.  அக்கமிசனின் விசாரணை முறையும், அதன் உண்மை சொரூபத்தைக் கடந்த பத்தாண்டுகளில் பலமுறை காட்டிக் கொடுத்திருக்கிறது.

நீதிபதி நானாவதி, தான் கமிசனில் சேர்ந்தவுடனேயே, “கலவரங்களைக் கட்டுப்படுத்த போலீசு எடுத்த நடவடிக்கைகளில் எந்தக் குற்றங்குறையும் காணமுடியவில்லை” எனப் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்தார்.  “சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் எரிக்கப்பட்டது மிகப் பெரிய சதிச்செயல்” என மோடிக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கும் கமிசன், மதவெறிப் படுகொலைகள் பற்றிய விசாரணையை இழுத்தடிக்கும் வேலையைத்தான் கடந்த பத்தாண்டுகளாகச் செய்துவருகிறது.  குறிப்பாக, படுகொலை நடந்து கொண்டிருந்த சமயத்தில், அந்த இடங்களில் இருந்த சங்கப் பரிவார அமைப்புகளின் தலைவர்களுக்கும் போலீசுஅதிகாரிகளுக்கும் இடையே நடந்த உரையாடல்கள் அடங்கிய ஒலித்தகடை, கமிசன் இன்றுவரை ஆய்வு செய்யவே மறுத்து வருகிறது.

நீதிபதி ஷா மார்ச், 2008இல் இறந்த பிறகு, அவர் இடத்திற்கு அக்சய் மேத்தா என்ற நீதிபதியை மோடி அரசு நியமித்தது.  நீதிபதி அக்சய் மேத்தா நரோடா பாட்டியா மற்றும் நரோடா காவ்ன் என்ற இரு இடங்களில் நடந்த படுகொலைகளைத் தலைமை தாங்கி நடத்திய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கியைப் பிணையில் வெளியே அனுப்பி வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழமை நீதித்துறை:

குஜராத் மாநில விசுவ இந்து பரிசத் பொதுச் செயலர் திலீப் திரிவேதி, விசுவ இந்து பரிசத்தின் சபர்கந்தா மாவட்டத் தலைவரான பாரத் பட், பாஞ்ச்மஹால் மாவட்ட விசுவ இந்து பரிசத்தின் தலைவர் பியுஷ் காந்தி என இவர்களைப் போன்ற சங்கப் பரிவார ஆட்கள்தான் மதவெறிப் படுகொலை வழக்குகள் அனைத்திலும் அரசு வழக்குரைஞர்களாக நியமிக்கப்பட்டனர்.  மேலும், மதவெறிப் படுகொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர்களை, அரசு வழக்குரைஞர்களாக நியமித்த கேலிக்கூத்தும் நடந்திருக்கிறது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்து மதவெறிக் குண்டர்களுக்கு விரைவாகப் பிணை கிடைக்க ஏற்பாடு செய்வது; சாட்சிகளை மிரட்டுவது, கலைப்பது அல்லது சாட்சிகளிடம் பேரம் நடத்தி வழக்கையே நீர்த்துப் போகச் செய்வது போன்ற சட்டவிரோத வேலைகளைத்தான் இந்தக் கும்பல் அரசு வழக்குரைஞர் என்ற போர்வையில் செய்து வருகிறது.  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் இந்தச் சட்டவிரோதச் செயல்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதோடு, அந்நீதிமன்றங்கள் மோடியின் இன்னொரு மூளையாகத்தான் செயல்பட்டு வருகின்றன.  கீழமை நீதிமன்ற நீதிபதிகள் குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருவதை பெஸ்ட் பேக்கரி வழக்கு நாடெங்கும் அம்பலப்படுத்தியது.

நானாவதி  ஷா கமிசனின் சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்ட அரவிந்த் பாண்டியா, “ஒவ்வொரு நீதிபதியும் தொலைவில் இருந்துகொண்டே எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள் … ஏனென்றால், அவர்கள் அனைவரும் அடிப்படையில் இந்துக்கள்” என நீதிபதிகளின் இந்து மனோபாவத்தை வெளிப்படையாகவே புட்டு வைத்தார்.

உச்ச நீதிமன்றம் மற்றும் சிறப்புப் புலனாய்வுக் குழு:

குஜராத்-படுகொலை-1
பெட்டிச் செய்தி -1

நரேந்திர மோடியைக் குற்றவாளியாகச் சேர்க்கக் கோரி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கு, பெஸ்ட் பேக்கரி வழக்கில் மறுவிசாரணை நடத்தக் கோரிய வழக்கு ஆகியவற்றில் குஜராத் உயர் நீதிமன்றம் மோடிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வழங்கியது.  குஜராத் அரசு இயந்திரம் எந்த அளவிற்கு காவிமயமாகி இருக்கிறது என்பதற்கான சான்றுகளாகத்தான் உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்புகளைப் பார்க்க முடியும்.

குஜராத்தில் நடந்த மதவெறிப் படுகொலை தொடர்பான 9 முக்கிய வழக்குகளைத் தனது கண்காணிப்பின் கீழ் விசாரிப்பதற்குச் சிறப்புப் புலனாய்வுக் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தாலும், இவ்வழக்குகளின் முடிவுகள் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதியை வழங்கும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது.  நீதிபதிகள் வழக்கு விசாரணையின்பொழுது அடிக்கும் சவடால்களும் இறுதியில் அவர்கள் எழுதும் தீர்ப்புகளும் நேருக்கு மாறாக இருப்பதைப் பல வழக்குகளில் காணமுடியும்.

குஜராத்-படுகொலை-2
பெட்டிச் செய்தி - 2

அந்த 9 வழக்குகளுள் ஒன்றான சர்தார்புரா வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருந்தாலும், சதிக் குற்றச்சாட்டின் கீழ் அவர்களுள் ஒருவர்கூடத் தண்டிக்கப்படவில்லை. சபர்மதி விரைவுவண்டியின் இரு பெட்டிகள் தீக்கிரையான வழக்கில் 11 முசுலீம்களுக்குத் தூக்கு தண்டனையும், 20 முசுலீம்களுக்கு ஆயுள் தண்டனையும் அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பில்,  சிறப்பு நீதிமன்றம், குஜராத் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய நான்கும் ஜாடிக்கேத்த மூடியாய்ச் செயல்பட்டுள்ளன.

‘‘முசுலீம்கள் அனைவரும் அடிப்படைவாதிகள்” என இந்து மதவெறி விஷத்தைக் கக்கிவரும் நோயல் பார்மர் என்ற ஐ.பி.எஸ். அதிகாரியைத்தான் சிறப்புப் புலனாய்வுக் குழு இவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக முதலில் நியமித்தது.  மனித உரிமை அமைப்புகளும், குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களும் பார்மரின் நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிறகு, பார்மரின் வலது கையான ரமேஷ் படேல் என்பவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.  பிறகெப்படி இவ்வழக்கு விசாரணை நடுநிலையாக நடந்திருக்க முடியும்?  இந்த இரண்டு நியமனங்களையும் உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபொழுது அமைத்த பானர்ஜி கமிசன், “சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் தீக்கிரையானது சதிச் செயல் அல்ல’’எனத் தீர்ப்பளித்தது.  இந்த அறிக்கையைத் தடை செய்ததோடு, அதனைச் சட்ட விரோதமானது என்றும் கூறி 2005  இல் தீர்ப்பளித்தது குஜராத் உயர் நீதிமன்றம்.  அத்தீர்ப்பைத் தடைசெய்ய முடியாது என 2006  இல் தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம்.  சிறப்பு நீதிமன்றம் சபர்மதி விரைவுவண்டியின் பெட்டிகள் தீக்கிரையானதைப் பயங்கரவாதிகளின் சதிச்செயல் எனத் தீர்ப்பளித்து, முசுலீம்களுக்கு தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கியிருப்பதை உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

நரேந்திர மோடி உள்ளிட்டு 63 பேருக்கு எதிராக ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில், மோடியை விடுவிக்கும் உள்நோக்கத்துடன்தான் தனது விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு நடத்திவந்தது. “விசாரணைக்கும் அதன் இறுதியில் வந்தடைந்த முடிவுகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை” என இந்த உள்நோக்கம் பற்றி பட்டும் படாமல் கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், நீதிமன்ற நண்பனாக ராஜூ ராமச்சந்திரன் என்ற வழக்குரைஞரை நியமித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கைககளை ஆய்வு செய்து, தனியாக அறிக்கை தருமாறு உத்தரவிட்டது.  எனினும், மோடி மீது குற்றச்சாட்டினைப் பதிவு செய்ய வேண்டிய தருணத்தில், அந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள, சட்டத்தின் வரம்பினைக் காட்டி, இது பற்றி முடிவெடுப்பதை அகமதாபாத் பெருநகர நீதிமன்றத்திடம் தள்ளிவிட்டது, உச்ச நீதிமன்றம்.  மேலும், மோடிக்கு எதிரான ஜாகியா ஜாஃப்ரியின் வழக்கை இனி கண்காணிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தது.

ஜாகியா ஜாஃப்ரி இந்த வழக்கில், மோடி மீது 32 குறிப்பான குற்றச்சாட்டுக்களை ஆதாரத்தோடு கூறியிருந்தார்.  இந்த 32 குற்றச்சாட்டுகளுள், சபர்மதி விரைவு வண்டியின் இரண்டு பெட்டிகள் தீக்கிரையான அன்றிரவு நரேந்திர மோடி தனது அதிகாரபூர்வ இல்லத்தில் நடத்திய அதிகாரிகள் கூட்டத்தில், “இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள் என  உத்தரவிட்டார்” என்ற குற்றச்சாட்டு மிக முக்கியமானதாகும்.  ஜாகியா ஜாஃப்ரி, தனது இக்குற்றச்சாட்டுக்குச் சாட்சியமாக, படுகொலை நடந்தபொழுது குஜராத் மாநில அரசின் உளவுத் துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட்டைக் குறிப்பிட்டிருந்தார்.  மோடி நடத்திய இக்கூட்டத்தை, “மிகப் பெரிய சதியின் தொடக்கம்” எனக் குறிப்பிட்டு வரும் சஞ்சீவ் பட்,  சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முன் ஆஜராகி, தான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதற்கான ஆதாரங்களைத் தந்து, இக்குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினார்.

குஜராத்-படுகொலைசிறப்புப் புலனாய்வுக் குழு தற்பொழுது அகமதாபாத் பெருநகர நீதிமன்றத்திடம் அளித்துள்ள அறிக்கையில் சஞ்சீவ் பட் அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகக் கூறுவதை நம்ப முடியாது எனக் கூறியிருக்கிறது.  இந்த அறிக்கை அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் ஊடகங்கள் வாயிலாக கசிந்து வெளிவந்துவிட்டன.

மோடி நடத்திய அந்தக் கூட்டத்தில் சஞ்சீவ் பட் உள்ளிட்டு எட்டு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.  அந்தக் கூட்டத்தில் பட் கலந்துகொண்டது பற்றிய கேள்விக்கு மற்ற ஏழு அதிகாரிகளுள் மூன்று பேர் நினைவில்லை எனப் பதில் அளித்துள்ளனர்; மூன்று பேர் “வரும், ஆனா வராது” என்ற பாணியில் தெளிவில்லாத பதிலை அளித்துள்ளனர்.  ஒரேயொரு அதிகாரி மட்டும்தான் பட் கலந்து கொள்ளவில்லை எனப் பதில் அளித்தார்.  இந்த ஏழு அதிகாரிகளுள் மூன்று பேர் மோடிக்கு மிகவும் நெருக்கமாக இருந்ததால், அவர்கள் தமது பதவி ஓய்விற்குப் பின்பு மோடியின் தயவால் பசையான பதவியில் அமர்ந்துள்ளனர்.  ஒருபுறம் இந்த ஏழு அதிகாரிகளையும் நம்பமுடியாத சாட்சியங்கள் எனக் குறிப்பிடும் சிறப்புப் புலனாய்வுக் குழு, இன்னொருபுறம் சஞ்சீவ் பட் விவகாரத்தில் இந்த நம்ப முடியாத ஏழு அதிகாரிகளின் சாட்சியங்களைக் கொண்டு, சஞ்சீவ் பட் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என முரண்பாடான முடிவை அறிவித்திருக்கிறது; சஞ்சீவ் பட் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதை நிரூபிக்கும் வேறு சாட்சியங்களை விசாரிக்கவும் மறுத்துவிட்டது.(பார்க்க பெட்டிச் செய்தி)

 

குஜராத்-படுகொலைஜாகியா ஜாஃப்ரி மோடிக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் நீதிமன்ற நண்பனாக நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ராஜூ ராமச்சந்திரன் அளித்திருக்கும் அறிக்கை, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையிலிருந்து ஓரளவிற்கு வேறுபட்டிருக்கிற உண்மையும் ஊடகங்கள் வாயிலாகக் கசிந்து வெளிவந்துவிட்டது.  குறிப்பாக, அவரது அறிக்கை மோடி நடத்திய கூட்டத்தில் பட் கலந்து கொண்டிருக்கக்கூடும் என்பதற்குப் பல்வேறு சந்தர்ப்ப சாட்சியங்களை முன்வைத்துள்ளது. மேலும், சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நீதிமன்றத்தின் முன் வைத்து, அவரை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

‘‘நரேந்திர மோடிக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரமோ, விசாரிக்கத்தக்க சாட்சியமோ இல்லை; இப்படுகொலை தொடர்பாகச் சில சில்லறைத் தவறுகள் நடந்திருக்கலாமேயொழிய, மோடிக்குக் கிரிமினல் உள்நோக்கம் எதுவுமில்லை; அந்தத் தவறுகளும்கூட மோடி மீது குற்றஞ்சுமத்தி வழக்குத் தொடுக்கும் அளவிற்கு வலுவானவையல்ல” எனக் கூறி, மோடியின் மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவரை விடுவித்துவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.

குஜராத்தில் கடந்த பத்தாண்டுகளாக முசுலீம்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவதற்குப் பல சான்றுகள் உள்ளன.  இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்குவது ஒருபுறமிருக்கட்டும்; அவர்களுக்கு உரிய நட்ட ஈடுகூட வழங்காமல் வக்கிரமாக நடந்துவருகிறது, மோடி அரசு.  இப்படிபட்ட நிலையில், மோடிக்கு இந்த இனப்படுகொலை தொடர்பாக எந்தவிதமான கிரிமினல் உள்நோக்கமும் கிடையாது என்ற முடிவை அறிவிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு துணிகிறதென்றால், இதிலிருந்தே இந்தக் குழு காவிச் சிந்தனையில் ஊறிப் போன நயவஞ்சகக் கும்பல் என்பதை நாம் புரிந்துகொண்டுவிடலாம்.  இந்த அறிக்கை மோடியைப் பிரதமராக்கிவிடத் துடித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனக் கும்பலின் வக்கிரத்தை விசிறிவிடத்தான் பயன்படுகிறது.

அதே சமயம், ஊடகங்களால் பெருத்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கப்பட்ட ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கையோ, இம்மதவெறி படுகொலை தொடர்பான சதித் திட்டத்தில் மோடிக்கு உள்ள பங்கு குறித்துப் பேசாமல், இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்களிடையே பகைமையைத் தூண்டிவிடுதல், சட்டத்தை மதிக்காது அரசு ஊழியர் நடத்தல் போன்ற இரண்டாம்பட்சமான குற்றச்சாட்டுகளைத்தான் மோடி மீது சுமத்தியிருக்கிறது.  அகமதாபாத் பெருநகர நீதிமன்றம் ஒருவேளை சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்துவிட்டு, ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கையை விசாரணைக்கு எடுத்துக் கொண்டால், இவ்வழக்கு விசாரணையின் முடிவில், ஒருவேளை நரேந்திர மோடிக்கு  மூன்று ஆண்டுவரை சிறை தண்டனை கிடைக்கக்கூடும்.

குஜராத்-படுகொலைஇட்லர் நடத்திய யூத இனப்படுகொலைக்கு இணையான, ராசபக்சே நடத்திய ஈழத்தமிழர் படுகொலைக்கு இணையான குற்றங்களைச் செய்திருக்கும் மோடியின் மீது, குஜராத்தில் பல போலி மோதல் கொலைகளை நடத்தியிருக்கும் மோடியின் மீது வெறும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை அளிக்கக்கூடிய குற்றச்சாட்டுகளைத்தான் பதிவு செய்ய முடியும் என்றால், இதைவிடக் கேலிக்கூத்தும் கையாலாகத்தனமும் வேறெதுவும் இருக்க முடியாது.

மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு என நீட்டி முழங்கும் எந்தவொரு ஓட்டுக்கட்சியும் இந்த வெட்கக்கேட்டைக் கண்டிக்க முன்வரவில்லை.  இது மட்டுமல்ல; காங்கிரசு, போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகளில் ஒன்றுகூட,  கடந்த பத்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கு ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை.  மோடி தன்னைத் தற்காத்துக் கொள்ள முன்வைக்கும் இந்து மதவெறியும் குஜராத் பெருமையும் கலந்த அரசியலை எதிர்கொள்ளத் திராணியற்று, இந்த ஓட்டுக்கட்சிகள் ஒடுங்கிக் கிடந்தனர் என்பதே உண்மை.  “மோடியைக் கொல்ல முசுலீம் தீவிரவாதிகள் குஜராத்திற்கு வருவதாக” உளவுத் தகவல்களை அனுப்பி, மோடியின்இந்து மதவெறி அரசியலுக்குத் தீனிபோடும் வேலையைத்தான் காங்கிரசு செய்து வந்தது.  தீஸ்தா செதல்வாத், ஹர்ஷ் மந்தேர், மல்லிகா ஷெராவத் போன்றவர்கள்தான் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு ஆதரவாக, மோடியை எதிர்த்துக் களத்தில் நிற்கிறார்கள்.

துக்ளக் சோ போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள் போலி மோதல் கொலைகள் மூலம்தான் முசுலீம் தீவிரவாதத்தை ஒழித்துக் கட்ட முடியுமே தவிர, சட்டம்  நீதிமன்றம் மூலம் இதனைச் சாதிக்க முடியாது என வெளிப்படையாகவே கூறிவருகின்றனர்.  அரசியல் செல்வாக்குமிக்க இந்து மதவெறி பயங்கரவாதிகளான மோடி, அத்வானி, பால் தாக்கரே போன்றவர்களைச் சட்டப்படி தண்டிக்க முடியாது எனும்பொழுது, சோவின் வாதத்தை இக்கும்பலுக்கு நாம் ஏன் பொருத்தக்கூடாது?

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

சிறுகதை: அபின்

59

ஏனங்குடிக்குப் புதிதாக மருத்துவனாக வந்தபோது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து சாலையை வேடிக்கை பார்ப்பது எனக்கு வழக்கம்.

மாட்டின் வாலை முறுக்கிவிட்டு அதன் பின்னே நடப்பவர்கள்; வெள்ளை வெளேரென்ற ஆட்டுக் குட்டியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு நடப்பவர்கள்; தெருவில் யாரையாவது பார்த்து விட்டால் தலையைக் குனிந்து செல்லம் இளம் பெண்கள்; என்னைப் பார்த்தால் நிறுத்தி வணக்கம் செலுத்திவிட்டுப் போகும் பால்காரர்கள்; புது டாக்டர் எப்படி இருக்கிறார் என ஆவலுடன் என் வீட்டை நோட்டமிடுபவர்கள்….

அப்போதுதான் முதல் முறையாக அப்பாசைக் கவனித்தேன். காற்றில் மிதப்பது போல மெதுவாக மண்ணெண்ணெய் வண்டியை மிதித்துக் கொண்டு செல்வார். அவரது வலது காலை அழுக்கான சேலைத் துணியால் சுற்றியிருந்தார்.

அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் நான் இருந்த போது அதே கட்டுடன் அப்பாஸ் ஒரு நாள் என்னைச் சந்தித்தார்.

”கால்ல என்னங்க?” என்றேன்.

”கால்ல புண்ணுங்க சார்” என்றவாறே தரையில் உட்கார்ந்து மெல்ல தனது துணிக்கட்டை அவிழ்க்க ஆரம்பித்தார்.

இரண்டங்குல அளவிற்குப் பெரிய புண் நடு உள்ளங்காலில் இருந்தது. ஆழமான அந்தப் புண்ணின் உள்பகுதி கறுத்து இருந்தது. டார்ச் விளக்குடன் நான் குனிந்தபோது புண்ணிலிருந்து ஒரு வித நாற்றம் பரவியதை உணர முடிந்தது. இத்தனைப் பெரிய புண்ணுடன் எப்படி இவர் மண்ணெண்ணெய் வண்டியை மிதிக்கிறார் என வருத்தமாக இருந்தது.

”புண்ல வலி இல்லீங்களா?” என்றேன்.

”அதெல்லாம் ஒண்ணுமில்லேங்க” என்றவாறு தனது இருகைகளாலும் புண்ணை அழுத்தி எனக்குக் காட்டினார்.

”அப்பாஸ் அண்ணனுக்கு நாலஞ்சு வருஷமா சக்கரை வியாதி இருக்கு சார். அதான் புண்ணு ஆற மாட்டேங்குது. நாங்களும் என்னன்னவோ மருந்து கொடுத்துப் பார்த்துட்டோம்” என்றார் மருத்துவனை ஊழியர் ராதாகிருஷ்ணன்.

அப்பாஸ் அண்ணன் என்று அவர் அப்பாசை மரியாதையாக விளித்தது எனக்கு வியப்பாக இருந்தது. வியப்பிற்கு விளக்கம் உடனே கிடைத்தது.

”சார் உங்களுக்கு ஏதுனா மண்ணெண்ணை வேணுமின்னா அண்ணங்கிட்ட சொல்லுங்க, வீட்ல வந்து கொடுக்கச் சொல்லறேன்” என்றார்.

அதற்குள் அப்பாஸ் ”இந்தப் புண் ஆறுமா சார்?” என்றார்; அவரது பார்வையில் நம்பிக்கையின்மை தென்பட்டது.

”ஆற வைக்கலாங்க. ஆனா தினம் நீங்க இன்சுலின் ஊசி போட்டுக்கணும்; அப்புறம் நீங்க மண்ணெண்ணெய் வண்டி மிதிக்கக் கூடாது. உங்க தொழிலை கொஞ்சம் மாத்திக்கணும். அப்போதுதான் சீக்கிரம் ஆறும்,” என்றேன்.

”ஊசி இங்கேயே போட்டுக்கலாமா?”

”இல்லீங்க இதமாதிரி கிராமப்புறத்து ஆஸ்பத்திரிக்கெல்லாம் இன்சுலின் தரமாட்டாங்க. நீங்கதான் வாங்கிட்டு வரணும்” என்றேன்.

தலையாட்டிய அப்பாஸ் அண்ணனை ஊழியர் அன்புடன் இழுத்துச் சென்றார். அன்று அப்பாசிடம் வாங்கும் மண்ணெண்ணெய்க்கு அவர் காசு கொடுப்பாரா என்பது சந்தேகம்தான்….

______________________________

எனினும் சில நாட்கள் தொடர்ந்து கட்டு கட்டி வந்ததில் புண் ஆறுவதைப் பார்க்க அப்பாசிற்கு என் மேல் நம்பிக்கை ஏற்பட்டிருக்க வேண்டும். எப்படியோ ஒரு நாள் இன்சுலின் ஊசியுடன் வந்தார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. எப்படியாயினும் ஒரு ஏழைத் தொழிலாளியின் நோய் குணமானால் சரி என்பது போல் ”இன்சுலின் நீங்களே வாங்கிட்டீங்களா பரவாயில்லை. ஆனா ஊசி 40 ரூபாய்க்கு மேல் இருக்குமே.”

”ஆமாங்க ஆனா புண்ணு இப்போ ஆறி வருதுங்க. நீங்க சொன்ன மாதிரி ஊசி போட்டுக்கிட்டா சீக்கிரமே நல்லாயிடுமில்ல.”

அப்பாஸ் ஊசி போட்டுக் கொண்டு கட்டும் அறைக்கு நகர்ந்ததும் ராதாகிருஷ்ணன் என் அருகில் வந்து கிசுகிசுப்பாக ”சார் வடக்குத் தெரு போயிருக்கீங்கல்ல. மூக்கா வீடுன்னு சொல்வாங்கள்ள,” என்றார். நான் புரியாது விழித்தேன்.

”சார் அந்த தெருவுல வீட்டு முன் பக்கம், காம்பௌண்டு சுவரு எல்லாத்திலேயும் கறுப்பு கலர்ல டைல்ஸ் பதிச்சிருப்பாங்கல்ல சார்.”

”ரெண்டு பேருக்கும் ஒரே அம்மா. ரெண்டு அப்பா சார்” என்றார்.

இதைக் கேள்விப்பட்டதும் எனக்கு கஷ்டமாக இருந்தது. ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள். ஒருவர் தனது வீட்டின் சுற்றுச் சுவர்களைக் கூட ராஜஸ்தானத்து டைல்ஸ்களால் அழகுபடுத்துகிறார். இன்னொருவர் ஆறாத புண்ணுடன் கூட வண்டியோட்டிப் பிழைக்கிறார். ஏன் இப்படி?

எல்லோரும் ஒரே தட்டில் உணவு உண்ணும் சகோதரத்துவம் எங்கே போனது? நான் சந்தேகத்தை எழுப்பிய உடன் ராதா ”அதெல்லாம் சும்மா சார்! சும்மானாச்சுக்கும் கல்யாணம்னா எல்லாம் அப்படி செய்வாங்க. அவ்வளவுதான்; ஏனங்குடியில் எவ்வளவு முசுலீம்கள் ஏழைகளா இருக்காங்க. எல்லாம் சொல்லுவாங்க சார். ஆனா நம்பள மாதிரிதான்” என்று என்னையும் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

­­­­­­­­­­­­­­­_________________________________

ஓரிரு மாதங்கள் கழித்து அப்பாஸ் தன் மனைவியோடு மருத்துவமனைக்கு வந்திருந்தர். ”ரொம்ப நன்றிங்க சார். புண்ணு இப்போ நல்லா ஆறிடுச்சு சார்,” அப்பாஸின் கண்களில் ஈரம். ”நீங்க எந்தம்பி மாதிரி, ஆறு மாசமாக இந்த புண்ணை வச்சிகிட்டு வண்டி ஓட்றதுக்கு சிரமப்பட்டார். நீங்க நல்லா இருக்கணும்” என்றார் அப்பாசின் மனைவி.

தொடர்ந்து அப்பாசின் மனைவி ”இன்சுலின் ஊசி போதுமா? இல்ல இன்னும் போடணுங்களா?” என்றார்.

அவருக்கு மாத்திரையில ரத்தத்தில் சர்க்கரை குறையறது இல்ல,அதனால ஊசிய தொடர்ந்து போடுறதுதான் நல்லது” என்றேன்.

”ரொம்ப கஷ்டமாக இருக்கது தம்பி; ஊசி ரொம்ப வெலையாவுது; நீங்கதான் எப்படியாவது அரசாங்கத்துல சொல்லி ஊசி வாங்கி போட்டுவுடுங்க” என்றவாறு கையெடுத்துக் கும்பிட்டார்.

நான் அரசாங்கத்தின் பிரதிநிதி அல்ல; கையாலாகாத ஒரு அரசாங்க ஊழியன் என அவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

__________________________________

அன்று இரவு ஜான் முகமதுவைப் பார்க்க அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. ஜான் முகமது என்னைப் பொறுத்தவரையில் ஒரு அற்புதமான மனிதர். சற்றும் களங்கமில்லாத சிரிப்பு அவர் தாடிக்குப் பின்னிருந்து வந்து கொண்டேயிருக்கும். என்னை மதிப்பவர். என்மேல் பிரியம் உள்ளவர். ஐந்து வேளை தொழுகை செய்யும் அவர் நாத்திகனான என்னுடன் கை கோர்த்துக் கொள்வார். என் தந்தையின் வயதையொத்த ஒருவருடன் சமமாக கைகோர்த்துப் பேசுவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.

அவர் வீட்டின் எதிரிலிருக்கும் சந்தில் அப்பாஸ் திரும்புவதை தற்செயலாக கவனித்தேன்.

”என்ன மண்ணெண்ணெய்க்கார அப்பாஸ் இங்க போறாரு” என்றேன் அவரிடம்.

”உங்களுக்குத் தெரியாதா, அப்பாஸ் வீடு அங்கதான் இருக்கு” என்றார் ஜான் முகமது.

அந்த இருளில் சந்திற்கு அப்பால் இருந்த அப்பாசின் வீடு எனக்குப் புலப்படவில்லை.

”அப்பாசின் அண்ணன் வீடு வடக்குத் தெருவில இருக்குன்னாங்களே?” என்றேன்.

”ஆமா பாகப் பிரிவினையிலே அவங்க கொஞ்சம் மோசடி செஞ்சுட்டாங்க.”

”நீங்க இருந்துமா இப்பிடி செஞ்சுட்டாங்க” என்றேனே.

”இல்ல, நான் ஏனங்குடி ஜமாத்துல்ல. அது கரைப்பாக்கம் ஆதலையூர் ஜமாத்” என்றார் ஜான் முகமது.

”எல்லோரும் சகோதரர்ன்னு சொல்றீங்க ஆனா ஜமாத்துக்கு ஜமாத் இப்படி வேறுபாடா?”

புன்னகையுடன் “என்ன செய்யிறது, காலம் மாறிப் போச்சு. தப்புப் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்காங்க. நாங்கூட அவன் அண்ணன்கிட்ட சொல்லிப் பார்த்தேன். கேக்கலை, சரி நம்ம வீட்டுக்கு எதிரில இருக்கிற சந்துல அந்த பழைய வீடு சும்மா கெடந்துச்சு. அதான் இங்க கொண்டு வச்சுருக்கேன்” என்றார். அவரின் பணிவு என்னை நெகிழ வைத்தது.

”அப்பாசுக்கு தினம் இன்சுலின் போடணும், பாவம் ஊசி வாங்க காசு இல்ல போலிருக்கு. நீங்க உங்க ஜமாத்துல சொல்லி கொஞ்சம் ஊசி வாங்கி கொடுக்க முடியுமா?” என்றேன்.

”ஜமாத் என்னங்க, ஜமாத் இதுக்கு, நானே வாங்கி தர்றேன்” என்றார். சொன்னபடியே ஊசியும் வாங்கிக் கொடுத்தனுப்பினார். பலமுறை ஏழை முஸ்லீம் நோயாளிகளுக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போதெல்லாம் அவரை நாடியிருக்கிறேன். மனம் கோணாமல் அவரும் உதவியிருக்கிறார். ஆனால் எத்தனைக் காலம்தான் அடுத்தவர் தயவில் வாழ முடியும்? அப்பாஸ் ஊசி போட வருவது மெல்ல மெல்ல நின்று போயிற்று.

அதிகமான வேலைப் பளுவின் காரணமாகவும், மனிதர்களை அறைக்குள் மட்டுமே சந்திக்கும் வாழ்க்கை முறையின் காரணமாகவும் நானும் அப்பாசை மறந்து போனேன்.

____________________________________

ஓரிரு வருடங்கள் கழிந்திருக்கலாம். ஒரு நாள் மருத்தவமனையின் வெளி நோயாளிகள் பிரிவில் இருந்தபோது வாசலில் திடீரென ஒரே கூட்டம். கூச்சல். மருத்துவமனை ஊழியர்கள் கட, கடவென வாசல் பக்கம் ஓடினார்கள். கூட்டத்தை விலக்கியவாறு ஒரு சிலர் ‘வழியவிடுங்க’ என்றவாறு ஒரு பெண்ணை இரத்தம் ஒழுக தூக்கி வந்தனர். நிறம் மங்கிய அப்பெண்ணின் துப்பட்டா முழுவதும் ரத்தம் நிறைந்திருந்தது. அருகில் வந்ததும் தெரிந்தது அந்தப் பெண் அப்பாசின் மனைவி என்று.

மருத்துவமனை வராண்டாவில் படுக்கச் செய்து ”என்னவாயிற்று” எனக் கேட்டேன். ”நம்ம ரெண்டாம் நம்பர் பஸ்ல அடிபட்டுட்டாங்க சார்” என்றார் ஒருவர். புடவையை சற்று விலக்கி கால்களைப் பார்த்தேன். வலது கால் முழுக்க சிதைந்து போயிருந்தது. கூட்டத்திலிருந்து பலர் ‘உச்’ கொட்டினார்கள். ஏதும் செய்ய இயலாத நிலையில் அவரை உடனடியாக நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். மருத்துவமனை வளாகத்தில் இருந்து கூட்டம் கலைந்து கூச்சல் ஓய்ந்து அமைதி நிலவியது.

”எப்படி ஆச்சுங்க ஆக்சிடெண்ட்?” என்றேன் ராதாவிடம். அதற்குள் கடைத்தெருவிற்குப் போய் நிறைய தகவல்கள் சேகரித்து வந்திருந்தார்.

”அப்பாசுக்கு ரொம்ப முடியாம போய் நாகப்பட்டணம் கவர்மெண்ட் ஆஸ்பத்திரில சேத்துட்டாங்களாம். இது அவருக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு போயிருக்கு. ஏறுறதுக்குள்ளே பஸ்ஸை எடுத்துட்டானாம் அந்த டிரைவர். ரொம்ப மோசம் சார். எப்பவுமே ஓவர் ஸ்பீடு. பஸ்ஸ எடுத்த வேகத்துக்கு இந்தம்மா கீழே விழுந்து கால் பின் சக்கரத்துல மாட்டிக்கிச்சு.” நேரில் பார்த்தவர் போல் இதைச் சொன்னார்.

”அப்பாசுக்கு என்னவாம்” என்றேன் மெதுவாக.

”ரொம்ப மோசமா இருக்காராம் சார். அன்னிக்கு ஒரு நாள் நானே பார்த்தேன். மூஞ்சி, கை, காலெல்லாம் வீங்கி கிடந்தது. பிழைக்க மாட்டார் சார். கஷ்டம்! ஆனா பாவம் சார் ரெண்டும் சின்ன சின்ன பிள்ளைங்க. அதுங்களை காப்பாத்த வேண்டியது இந்த அம்மாதான் அதுக்குள்ள இவங்களுக்கு இப்படி ஆயிருச்சே” என்றார்.

சமூகத்தின் அவலம் ஒரு சிலருக்கு வெறும் செய்தியாகவே உள்ளது. இந்தச் சமூகத்தின் மீது மக்களை கோபம் கொள்ளாமலிருக்கச் செய்வது எது என யோசிக்கச் சொன்னது. யோசிக்க யோசிக்க தலைவலி அதிகமாக மருத்துவமனையிலிருந்து வீட்டிற்குச் சென்றேன்.

என் மனைவி எனது முகவாட்டத்தைப் பார்த்தும் முகம் மாறினாள். மருத்துவமனையில் நடைபெறும் சோகங்களை அங்கேயே மறந்துவிட வேண்டும் என்பது அவளது கட்சி. வாழ்க்கையில் வசதியான வீட்டில் பிறந்து செல்லப் பெண்ணாக வளர்ந்து வாழ்பவளுக்கு வாழ்வின் துன்பங்களும் துயரங்களும் தெரிந்திருக்க நியாயமில்லையோ? வருத்தத்திலேயே படுத்து உறங்கிப் போனேன்.

________________________________

பத்துப் பதினைந்து நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் உட்கார்ந்து ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். ஐப்பசி மாதமாக இருக்க வேண்டும். இப்போதெல்லாம் தமிழ் மாதங்கள் எங்கே தெரிகிறது. ஆனால் வெளியே மழை மட்டும் ஐப்பசி மாதத்தை நினைவில் வைத்துக்கொண்டு கொட்டு, கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. மழையைப் பார்த்தபோது எனக்கும், நோயாளிகளுக்கும் இடையில் திரை விரித்தது போல இருந்தது. எனக்கு இது போன்றவையே ஓய்வு நாட்கள். அப்போது அந்த மழையிலும் குடை பிடித்துக் கொண்டு ஒருவர் வருவது தெரிந்தது. ஜான் முகமதுவின் வீட்டு வாசலில் அடிக்கடி பார்த்த முகமாக தெரிந்தது. ”என்ன விஷயம்?” என்றேன். அவசரமாக வரச்சொல்லி ஜான்முகமதுதான் சொல்லி அனுப்பியிருந்தார்.

வாசலில் ஆட்டுக் குட்டிகளுடன் உட்கார்ந்து மழையை ரசித்துக் கொண்டிருந்தார் ஜான் முகமது. என்னைக் கண்டதும் பரபரப்பானார். ”என்னது நடந்தே வந்துட்டீங்க. செல்லியிருந்தா நான் ஆட்டோ அனுப்பியிருப்பேன்ல” என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

காப்பி கொடுத்தவாறே ”நம்ம அப்பாசிற்கு ரொம்ப சீரியசா இருக்கு. நீங்க கொஞ்சம் வந்து பாக்க முடியுமா? அதுக்குத்தான் கூப்பிட்டு அனுப்பிச்சேன்” என்றார்.

”ஏன்? என்னவாச்சு? அவரோட பெண்டாட்டி கூட பஸ்ஸில அடிபட்டாங்களே? அவங்க எப்படி இருக்காங்க?”

”அப்பாசுக்கு உடம்பு முடியாம இருந்து நாகப்பட்டினம் ஆஸ்பத்திரில சேத்து இருந்துச்சு. இடையே இந்த அம்மா வேற பஸ்ஸில அடிப்பட்டு அங்கேயே சேர்த்துருந்தாங்க. பாக்கிறதுக்கு ஆளில்ல, பணமும் இல்ல. அதனால ரெண்டு பேரையும் இங்கு கொண்டு வந்துட்டாங்க. பிள்ளைங்க ரெண்டு பேரும் சின்ன பசங்க அதுலயும் பெரிய பொண்ணு வயசுக்கு வந்துருச்சி.  அதுதான் ஆத்தாவுக்கும் அப்பனுக்கும் கஞ்சிவைச்சு கொடுக்குது; இடையில ஒரு வாரமா பெய்யிற மழையில அவங்க குடியிருக்கிற வீடு பாதி இடிஞ்சி விழுந்துடுச்சி; ரொம்ப பாவமா இருக்கு சார்.”

அப்பாசின் வாழ்க்கையில் நடை பெற்ற சம்பவங்களைக் கோர்வையாக நினைவுபடுத்திப் பார்க்கும் போது எனக்கு வாழ்க்கை மீதே வெறுப்பு உண்டாயிற்று. மெல்ல எழுந்து ஒரே குடையின் கீழ் இருவரும் அப்பாசின் வீட்டை நோக்கி நடக்கலானோம்.

இப்போதுதான் அப்பாசின் வீட்டை முதன் முதலாகப் பார்க்கிறேன். வீட்டினுள் நுழைந்து பார்ப்பதற்கு கதவுகளும், ஜன்னல்களும், தேவைற்றது என்பது போல முன் சுவர் இடிந்து பார்வைக்கு வழிவிட்டிருந்தது. கிழிந்து கையால் தைக்கப்பட்டிருந்த ஒரு சாக்கின் உதவியால் வீடு இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த மறைவுக்குப் பின்னாலிருந்து அப்பாசின் வயதுக்கு வந்த பெண்ணின் முகம் எட்டிப் பார்த்தது.

எந்த பிரக்ஞையும் இல்லாமல் குப்பை போன்று அப்பாஸ் படுத்திருந்தார்; படுக்க வைக்கப்பட்டிருந்தார். முகம் வெள்ளை வெளேரேன வெளிறிவிட்டிருந்தது. கை, கால்கள் முகம் முழுவதும் அளவுக்கு அதிகமாக வீங்கியிருந்தது. அப்பாசின் அருகில் அமர்ந்து ”அப்பாஸ்! அப்பாஸ்!” என தட்டி எழுப்ப முயற்சி செய்தேன்.

மிகவும் பிரயத்தப்பட்டு கண்களைத் திறக்க முயற்சி செய்தார். கண்களின் இமைகள் மிகவும் வீங்கியிருந்தன. அப்பாஸ் கண்களைத் திறக்கச் சிரம்ப்பட்டார். கடைசியில் பிறை போன்று மெல்லிய கீற்றாக கண்களைத் திறந்தவர் என்னை அடையாளம் கண்டு கொண்டது போலத் தோன்றிற்று. நான் நாடித்துடிப்பைப் பார்க்க கை வைத்தேன். நாடியினைத் தொட்டு அறிய முடியாத அளவிற்கு கை வீங்கி இருந்தது. நான் மெல்ல எழுந்தேன்.

”டயபடிக் நெப்ரோபசி வந்து ரீனல் பெய்லியர் ஆயிடுச்ச. சிறுநீரகம் முழுவதும் வலுவிழந்து பழுதடைந்துவிட்டது. என்னைவிட மரணம் அவருக்கு நெருக்கமாக உள்ளது. இனி ஏதும் செய்வதற்கில்லை” ஜான்முகமதுவிடம் தனியே தெரிவித்தேன்.

”சரி போகலாம் வாங்க” என்றார் அவர். அப்பாசிடம் சொல்லிக் கொள்வதற்காக அவரை மீண்டும் எழுப்பினேன். இந்த முறை சற்று உடனேயே கண்களைத் திறந்தார்.

”அப்பாஸ் நான் போயிட்டு வர்றேன்; கவலைப்படாதீங்க நல்லாயிடும்” என்று பொய் சொல்லி வைத்தேன்.

சட்டென்று அப்பாஸ் முகத்தில் ஒரு புன்சிரிப்பு பரவியது. ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லக் கூடியது அந்தச் சிரிப்பு. மெல்ல வாயைத் திறந்து அரபியிலோ, உருதிலோ ஏதோ கூறினார். வார்த்தைகள் தெளிவாக வந்து விழுந்தன. அதுதான் அப்பாஸ் உச்சரித்த கடைசி வார்த்தைகளாக இருக்கும். எனக்கு அப்பாஸ் என்ன சொன்னார் என அறிய ஆவலாக இருந்தது.

ஜான் முகமதுவின் வீட்டிற்குத் திரும்பியதுமே அப்பாஸ் கூறியது என்ன என அவரிடம் கேட்டேன்.

”இன்னா லில்லாஹி லஇன்னா இலைஹி ராஜிஹன்; தவக்கல்லத்து அலல்லாஹ்; அல்ஹம்மது இபில்லாஹ்!” என்றார்.

அப்படியென்றால்?”

”நாம் அல்லாவுக்கே உரியவர்கள். அவனிடமே திரும்பிச் செல்ல இருக்கிறோம். இப்போதும் அந்த அல்லாவின் மீது நம்பிக்கை கொண்டேன். எல்லாப் புகழும் அல்லாவுக்கே” என்பதாகக் கூறினார். எனக்கு அவரிடம் விடைபெற மனமில்லை.

மெல்ல எழுந்து தெருவில் நடக்கலானேன. அவருக்கும் என் மனதின் கேள்விகள் புரிந்திருக்க வேண்டும். மௌனமாக ஆட்டுக் குட்டிகளுடன் அமர்ந்து விட்டார். எனக்குள் மீண்டும் மீண்டும் அதே கேள்விகள்.

இத்தனைக் கஷ்டத்திலும் அப்பாசுக்கு ஏன் கோபம் வரவில்லை?

வசதியான மகனுடன் சேர்ந்து கொண்டு பெற்ற தாய் மறந்த போதும், வளமற்ற சகோதரன் வண்டியிழுத்துப் பிழைத்தபோதும் வருத்தமுறாத சகோதரனை நினைத்த போதும், வாழ வழியற்று விரட்டும் சமூகத்தினை நினைத்த போதும், இறுதி நேரத்தில்கூட ஆறுதல்தராத உறவுகளை நினைத்த போதும், அடிமேல் அடிஅடித்த விதியின் மீதும், அல்லாவின் மீதும், அவர் கூறிய சகோதரத்துவத்தின் மீதும், அதைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் தன் மதத்தின் மீதும் ஏன் கோபம் வரவில்லை. எப்படி அவருக்கு இந்த நிலையிலும் அல்லாவுக்கு நன்றி சொல்ல முடிந்தது?

யோசித்தவாறு ஏனங்குடியின் நடுத்தெருப் பள்ளி வாசலைக் கடந்த போது அந்த மழையிலும் பகல் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.

இது நஞ்சல்லவா? இந்த நஞ்சு அபின் அல்லவா? இது கிறங்க வைக்கும், மயங்க வைக்கும், ஏங்க வைக்கும் நஞ்சல்லவா?

இதைச் சொன்ன கம்யூனிசத் தத்துவத்தையா தோற்றுப் போனதாகக் கூறுகிறார்கள்? உண்மை எப்படித் தோற்கும்?

மழையின் இரைச்சல் கூடியது. பாங்கோசை அதில் நனைந்து அடங்கியது.

____________________________________________________

–   மருத்துவர். சிவசுப்பிரமணிய ஜெயசேகர்புதிய கலாச்சாரம், டிசம்பர் 1999.

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

என்கவுண்டர்: துப்பாக்கி குற்றத்தை உருவாக்குவதுமில்லை – ஒழிப்பதுமில்லை!

13

இயக்குநர் பெர்னாண்டோ மெய்ரலஸ் இயக்கத்தில் 2002-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், ‘சிட்டி ஆஃப் காட்‘(CITY OF GOD). பிரேசில் நாட்டின் ரியோடி ஜெனிரா நகரத்தில் அரசால் உருவாக்கப்பட்ட எந்த அடிப்படை வசதிகளுமற்ற சேரிதான் சிட்டி ஆஃப் காட். அங்கே 1960 முதல் 1980கள் வரை இளங்குற்றவாளிகள் தோன்றுவதையும், பின்பு அவர்கள் நகரத்தை கட்டுப்படுத்தக்கூடிய தாதாக்களாக மாறுவதையும், இறுதியில் ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்டு சாவதையும் படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

தாதாக்களை மையமாகக் கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும் அவை மையமான நாயகன்-வில்லனை மட்டும் சுற்றிக் கொண்டு ஃபார்முலா சினிமா மரபை விட்டு விலகாமல் மசாலாப் படங்களாக நீர்த்துப் போகும். ஆனால் கடவுளின் நகரத்தில் முழுக்க முழுக்க அந்த சேரியின் மாந்தர்கள் விதவிதமான பாத்திரங்களாக வருகிறார்கள். கடவுளின் நகரத்தில் ஏழைச் சிறுவர்கள் எவ்வளவு இயல்பாக வன்முறையின் பக்கம் நகருகிறார்கள் என்பதை உயிரோட்டத்துடன் சித்தரித்திருப்பார் இயக்குநர்.

கடவுளின் நகரத்தில் படம் ஆரம்பம் முதல் இறுதிக்காட்சி வரை பலர் கொல்லப்படுகிறார்கள். மரணம் அங்கே நிரந்தரமாக குடியேறி ஓய்வின்றி வேலை செய்வது போலவும் சொல்லலாம். சமூகத்தில் ஒரு மரணம் தோற்றுவிக்கும் அதிர்ச்சி, துக்கம், துயரம், ஆற்றாமை போன்ற நாகரீக உலகின் உணர்ச்சிகள் அங்கே பெரிய அளவில் இல்லை. அந்த வகையில் கடவுளின் நகரத்தைச் சேர்ந்த சேரிச் சிறுவர்களிடம் மரணபயம் இல்லை.

இப்போது சென்னை என்கவுண்டருக்கு வருவோம். இரு வங்கிக் கொள்ளைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 5 இளைஞர்கள் போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது ஒரு திட்டமிட்ட போலி மோதல் கொலை என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த இளைஞர்கள்தான் வங்கிகளை கொள்ளையடித்தார்கள் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் மற்ற மாநிலங்களிலும் இவர்கள் கொள்ளையடித்தார்கள் என்று பல வழக்குகளை வேறு சேர்த்து வருகிறார்கள். புலனாய்வு செய்ய முடியாத வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பிணங்களைப் போல உதவும் நண்பன் இல்லை.

சென்னை-என்கவுண்டர்
என்கவுண்டர் செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள்

பத்திரிகைகள் கொல்லப்பட்ட இளைஞர்களைப் பற்றி பல தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இவற்றில் உண்மை எது பொய்யெது என்று யாருக்கும் தெரியாது. எனினும் ஒரு வாதத்திற்க்காக இவையனைத்தும் உண்மையென கொள்வோம். கொல்லப்பட்ட இளைஞர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ்நாட்டில் பணிபுரியும் அனைத்து வட மாநில தொழிலாளிகளும் போலிசிடம் அடையாளங்களை பதிய வேண்டும் என்பதில் ஆரம்பித்து, தற்போது சென்னையில் வாடகைக்கு குடிவைத்திருப்போரின் புகைப்படங்களையும் அவர்களைப் பற்றிய விவரங்களையும் வீட்டு உரிமையாளர்கள் போலீசுக்குத் தரவேண்டும் என்றும், தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது மாநகர காவல்துறை. நடக்கின்ற எந்தவொரு குற்றத்தையும் தனது அதிகாரத்தையும் மக்கள் மீதான கண்காணிப்பையும் கூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறது அரசு. அரசு பாசிச மயமாகி வருவதைறியாத மக்களோ, இந்த போலி மோதல் கொலையை வீரசாகசம் போலக் கொண்டாடுகிறார்கள்.

பல நூறு கோடி வங்கிப்பணத்தை உட்கார்ந்த இடத்திலிருந்தே கொள்ளையடிக்கும் கிங் பிஷர் முதலாளி விஜய் மல்லையாவை என்கவுன்டரில் கொல்லவேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை. ஆனால் வங்கியில் சில இலட்சங்களை கொள்ளையடித்த அந்த இளைஞர்கள் மக்கள் பார்வையில் கொல்லப்பட வேண்டியவர்கள் என்று பதிந்திருப்பதற்கு என்ன காரணம்? செயின் பறிப்பு, பீரோ புல்லிங், வழிப்பறி, வீடேறித் திருடுவது போன்ற பெட்டிகேஸ் திருடர்கள்தான் மக்களின் அன்றாட வாழ்வில் நேரடியாக வழிமறிக்கிறார்கள்.

பெருகி வரும் நகரங்களும், விரிந்து வரும் பொருளாதார ஏற்றத் தாழ்வும், குறுக்கு வழியில் பணத்தை அள்ளத் தூண்டும் மறுகாலனியாக்க பண்பாட்டு சூழலும்  இத்தகைய குற்றங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கின்றது. எனவே, நாட்டை கொள்ளையிடும் திருடர்களை விட வீட்டைக் கொள்ளையிடும் குற்றவாளிகள் குறித்துத்தான் மக்கள் அதிகம் கவலை கொள்கிறார்கள்.

தான் ஆட்சிக்கு வந்ததும் திருடர்களெல்லாம் பயந்து கொண்டு ஆந்திராவுக்கு ஓடி விட்டதாக கொக்கரித்த ஜெயாவின் பெருமைகளை இத்தகைய குற்றச் செயல்கள் பெருங்கேலி செய்கின்றன. அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் திருடர்களெல்லாம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியல்லவா பாய்கிறார்கள்! சரிந்து விட்ட இமேஜை தூக்கி நிறுத்துவதும், குற்றத் தடுப்பு என்ற பெயரில் போலீசு ஆட்சிக்கு அங்கீகாரம் பெறுவதும், குற்றவாளிகளுக்கும் மரண பயத்தை ஏற்படுத்தலாம் என்ற அசட்டு நம்பிக்கையும் இந்தப் போலி மோதலுக்குக் காரணமாகத் தெரிகிறது.

அதன்படியே நடுத்தர வர்க்கம் இந்த என்கவுண்டரை போற்றிப் பாடுகிறது. வழக்கு, ஆனால் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடும் பீகார் கிரிமினல்களுக்கு இந்தப் போலி மோதல் மரணபயத்தை ஏற்படுத்துமென்று யாரேனும் உறுதி அளிக்க முடியுமா?

சென்னை-என்கவுண்டர்இந்தியாவின் வறிய மாநிலங்களில் பீகாருக்கு முதலிடம். எட்டரை கோடி மக்களில் 58%பேர் 25 வயதுக்கும் குறைவானவர்கள். இதன் பொருள் பீகாரில் இளைமைத் துடிப்பு அதிகம் என்பதல்ல, சராசரி ஆயுள் குறைவு என்பதுதான். இந்தியாவின் ஆண்டு தனிநபர் வருமான சராசரி ரூ.60,000 என்றால் பீகாரில் அது 18,000. வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவர்களின் இந்திய சராசரி 22.15% என்றால் பீகாரில் 30.6%. இந்தியாவின் நகரமயமாக்கம் 27.8%, பீகாரில் வெறும் 10.5% மட்டுமே. நகர்ப்புறத்து வறுமை இந்தியாவில் 27.78% என்றால் அது பீகாரில் 32.91%ஆக இருக்கிறது.

இந்த புள்ளி விவரங்களைத் தாண்டி நிலவுடைமை கொடுங்கோன்மை அதிகமுள்ள மாநிலமும் பீகார்தான். சாதி ஆதிக்கம், தலித் மக்கள் மீதான வன்கொடுமை, விவசாயத் தொழிலாளர்கள் பண்ணையடிமையாக வாழ்வது, பெண்கள் முன்னேற்றமின்மை, ரன்பீர் சேனா போன்ற ஆதிக்க சாதி ரவுடிப்படைகள், துப்பாக்கிகள் சரளமாகப் புழங்கும் சூழல் அனைத்தும் பீகாரில் நிலவுகின்றது. அங்கே ஒரு ஓட்டுக்கட்சியின் உள்ளூர் தளபதி கூட துப்பாக்கிகள் தூக்கிய அடியாட்களுடன்தான் வலம் வருகிறார்.

இப்படி வன்முறையும், ஏழ்மையும் நிரம்பி வழியும் இந்த மாநிலத்திலிருந்துதான் ஏழைகள் இந்தியாவெங்கும் பிழைப்பதற்கு செல்கின்றனர். அவ்வண்ணம் தமிழகத்திற்கும் வந்த வண்ணம் இருக்கின்றனர். தமிழகத்தின் ஆலைகளிலும் கட்டிடத்தொழிலிலும் கடுமுழைப்பு வேலைகளை பீகார் தொழிலாளிகள்தான் செய்கின்றனர். உழைப்பதற்கு அவர்கள் அஞ்சுவதில்லை. அவர்கள் அஞ்சுவது வாழ்வதற்கு குறைந்தபட்ச வாய்ப்புகளைக் கூட வழங்காத பீகார் மாநிலத்தின் யதார்த்தத்திடம்தான்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு பீகாரில் அதிகம் என்பதாலும், பண்ணைக் கொடுங்கோன்மை – வன்முறைக் கலாச்சாரம் சகஜம் என்பதாலும் அங்கே திருட்டு, கொள்ளை, ஆள் கடத்தல் முதலான குற்றச் செயல்களெல்லாம் அன்றாட வாழ்வின் அங்கமாகவே ஆகிவிட்டன. கிரிமினல் கும்பல்களிடம் சேருவதும் ஒரு வேலை வாய்ப்பாக இருக்கிறது. சென்னையில் கொல்லப்பட்ட நபர்களின் தலைவர் மட்டும் தொழில்முறை கொள்ளையனாக, ஆடம்பரமாக ஊரில் வாழ்வதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மற்றவர்கள் அனைவரும் மிகவும் சாதாரணமானவர்கள். அவர்களில் கூலி வேலை பார்த்து பிழைத்தவர்களே அதிகம். மேலும் அதில் ஓரிருவர் என்ன ஏது என்று தெரியாமலேயே இந்த கொள்ளையர்களுக்கு இடம் கொடுத்து ஆதரவளித்திருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

தமிழக கிரிமினல்களிடம் துப்பாக்கி என்பது இன்னமும் அபூர்வமான பொருளாகத்தான் இருக்கிறது. பீகாரில் அது எளிதில் கிடைக்கிறது. துப்பாக்கி குற்றத்தையும் உருவாக்குவதில்லை, குற்றவாளிகளையும் உருவாக்குவதில்லை. குற்றவாளிகளையும் புலம்பெயர்ந்து வரும் தொழிலாளிகளையும் தோற்றுவிக்கும் சமூகப் பின்னணிதான் நம் கவனத்துக்கு உரியது. அதனை தமிழக காவல்துறையால் என்கவுன்டர் செய்து ஒழிக்கமுடியாது.

ஆதிக்க கும்பல்களின் வன்முறைகளால் கொலைகள் சகஜமாகிப்போன அந்த மாநிலத்தின் மக்களுக்கு மரணம் குறித்தும் பெரிய அதிர்ச்சி இருக்கப் போவதில்லை. பீகாரிலிருந்து வரும் மக்கள் குறைந்த கூலிக்கும், கடுமுழைப்புக்கும் அஞ்சுபவர்களல்ல. அங்கிருந்து வரும் குற்றவாளிகளுக்கும் ஒப்பீட்டளவில் மரணபயம் குறைவாகவே இருக்கும். மரணத்தை அண்மையில் கண்டு பழகிய வாழ்க்கையை இத்தகைய என்கவுண்டர்களா மிரட்டிப் பணியவைக்கும்?

__________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012
_____________________________________

 வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அமெரிக்காகாரன் சத்தியமா நான் ஒன்னுமே பண்ணல! – நித்தியானந்தா

13

நித்தியானந்தா

மக்கா,

நாட்டுக்குள்ள பல சங்கதிக சூடா நடக்கது தெரியுமுல்லா! இன்னைக்குத்தாம்லே பிரணாப் முகர்ஜி நம்ம நாட்டோட பட்ஜட்ட தாக்கல் செய்யுதாறு! அதுல எத்தன மக்க தாலிய அறுக்கப் போறாரோ தெரியல. முந்தா நேத்து ரயில்வே பட்ஜெட்டுல சாதாரண மக்கமாரு டிக்கெட்டை எக்குத் தப்பா ஏத்திவிட்டுறுக்காகடே. அதுல அது கட்சி மந்திரிய மாத்தணும்னு ஆத்தா மம்தா பானர்ஜி அம்சமா காமடி பண்ணிக்கிட்டு இருக்கத பாத்தேயில்லா!

சங்கரன் கோவில்ல பிரச்சாரம் முடிஞ்சாலும் 32 மந்திரிமாரு அவனவனுக்கு வாக்கப்பட்ட வட்டத்துல வாக்கு குறைஞ்சா அம்மா பிரிச்சு மேஞ்சுருமேனு பஸ் ஸ்டாண்டு பாய் கடை பிரியாணியை தின்னு செரிக்காம கிடக்கானுகல்லா! இதுல நாங்களும் பஜாருல்ல கடை வச்சுருக்கம்லான்னு தி.மு.க தாத்தா, ம.தி.மு.க மாமா, தே.மு.தி.க சித்தப்புன்னு அல்லா தலைவருமாரும் அங்கனேயே சுத்தி சுத்தி வந்தாகல்லா!

இதெல்லாம் வுட்டுட்டு நித்தி மாமாவைப் பத்தி எழுதணுமான்னு அண்ணாச்சின்னு வினவுக்காரவுக கேட்டாக. இருந்தாலும் பயபுள்ள ஓவரா பிலிம் காட்டுதான், அவன சும்மா வுடலாமான்னு நாந்தேன் எடுத்துச் சொன்னேன்.

இலங்கைக்காரன் முள்ளி வாய்க்கால்ல கொன்னதுக்கு அவனே விசாரித்து அவனே நடவடிக்கை எடுக்கணும்னு அமெரிக்காரன் செனிவாவுல தீர்மானம் கொண்டு வரப்போறான்னு ஊர் பூறா பேச்சாக் கிடக்கு. கொலைய வேடிக்கை பாத்தவன் கொலைகாரனையே நீதிபதின்னு நியமிச்சுட்டு குய்யோ முய்யோன்னு சவுண்டு வுடுதான். இதுதாம்லே அமெரிக்காகாரனோட நீதி! இந்த லட்சணத்துல மைனர் சாமி நித்தியானந்தா அமெரிக்காரனோட ஆதாரம், கீதாரம்னு அறிவாளி பத்திரிகை ஹிந்துவுல ஏதோ பினாத்தியிருக்கான்னு கொஞ்சம் எட்டிப் பாத்தேன். அந்தக் கதயை கேளுலே!

2010-ல அந்த வூடியோவை அல்லா மச்சிங்களும் எத்தன தபா பாத்திருப்பான். அக்கா ரஞ்சிதாவோட மச்சி நித்தி அடிச்ச லூட்டிய பாத்து திருப்பதி வெங்கட்டோட பிரம்ம தரிசனம் மேறி கன்னத்துல போடாத குறையா அட்சிக்கிட்டவன் எத்தன பேரு! இப்புடி ஊரு பூறா, நாடு தாண்டி நாறுன நாஸ்திய இப்போ ஒண்ணுமே இல்லேங்குறான் இவன்!

அதாவது இந்த வூடியோ ஒரிஜினல் இல்லயாம். அல்லாம் மார்பிங் செஞ்சு ரீலீஸ் பண்ணிக்கிறான்னு அட்ச்சு வுடுறான். அத்த உலகப் புகழ்பெற்ற சில அமெரிக்க நிபுணருங்கோ பல நாள் ஆய்வு செஞ்சு, பீறாஞ்சு அல்லாம் கப்சா வீடியோன்னு கிளியரன்ஸ் கொடுத்துட்டானாம். இவுனுங்கோ லேசுப்பட்ட ஆளுங்க இல்லியாம். அமெரிக்காவுல எப்.பி.ஐயோட பல சிக்கலான வாய்தா கேசுங்களையெல்லாம் இவுனுங்கதான் பீறாஞ்சு விடை கொட்த்தானுங்களாம்.

இந்தியாவுல எந்த கோர்ட்டுல வந்துன்னாலும் சாமி சத்தியமா அந்த வூடியோ மேட்டரெல்லாம் மார்பிங்கின்னு சொல்லுறத்துக்கு பயலுவ ரெடியாம்.

ஏலேய் நித்தி, அமெரிக்காகாரனுகிட்ட ஒன்னரையனா காச விட்டெற்ஞ்சா டாக்டர் பட்டம் கொடுப்பான், ரெண்டு ரூபாய காட்டுனா ஊரப் பொளந்த கபோதின்னு விருது கொடுப்பான், எங்கூர்ல எண்ணெய் இருக்குன்னு சொன்னா படையெடுத்து கூட வருவான்.  இராக்குல பேரழிவு அயுதம் இருக்குன்னு சொன்னதோடு, அதுக்கு சி.ஐ.ஏவோட பலமான ஆதாரம் இருக்குன்னு சொல்லி ஊர ஏமாத்தி கடசீல என்னாச்சு? அங்கன பேரழிவும் இல்லை, ஆயுதமும் இல்ல, இவன்தான் அங்கன போய் ஆயுதத்த போட்டு பேரழிவ கொண்டு வந்தான்னு ஒலகமே காறித்துப்பிச்சு. இதுதாம்டே அமெரிக்காகாரனோட இன்டலிஜென்ஸ் தரம். இதப்போய் உலகத்தரம்னு சொன்னா எவம்டே நம்புவான்?

சாருவுக்கு காச விட்டெறிஞ்சு பி.ஆர்.வோ வேலைய பாக்கச் சொன்ன மைனர் சாமி அமெரிக்காகாரனுக்கு சில கோடிய வுட்டெறிஞ்சு கிளீயரன்ஸ் சர்டிபிக்கேட் வாங்கியிருக்கான். காவி உடை உடுத்துன கபோதி கலர் டீ சர்ட் போட்டு உலகத்த தாலியறுக்கும் யுனிவர்சல் ரவுடிகிட்ட விருது வாங்குணா, அத நம்புறதுக்கு நாம என்ன ஆக்கங் கெட்ட மூதியா? வுட்டா ஒபாமாவே இந்தியா வந்து நித்தி மாமாவுக்காக வக்கிலா வேசம் கட்டப் போறாரான்னு அவுத்து வுடுவான் போலிருக்கே.

தமிழ்நாட்டுல மாமி ஆட்சி நடுக்குதுன்னு ஐயருங்கோ மட்டும் துள்ளல இந்த மைனர் மாமாவும்தான் ஹை ஜம்பு கணக்கா துள்ளுறான். இவனோட ஜல்சாவ வெளியே கொண்டாந்த லெனின் கருப்பன், மேட்டரை வுட வேண்டாம்னா பணம் கொடுன்னு பேரம் பேசுனானாம். இவன் ஒத்துக்கலியாம். அதான் அவன் மார்பிங் வூடியோவை ரீலிஸ் செஞ்சான்னு இப்புடி நல்ல புள்ளையாட்டாம் அளக்கறான் இந்த அக்கீஸ்டு. இந்த பிரஸ் மீட்டிங்குல ரஞ்சிதா அக்காவும் “ஆமாம் அல்லாரும் மிரட்டுனாங்கன்னு” பால் வடியும் பச்ச புள்ளயாட்டம் கோரஸ் பாடுது.

இவுனுங்க அந்தப்புற மேட்டரோ இல்லை ஆசிரமத்து கஜனா மேட்டரோ அல்லாத்துலயும் உள்குத்து உண்டுன்னு தெரியாதா இன்னா? ஆனா இவுனக உள்குத்து பொலிட்டிக்சுல அந்த மேட்டரு வந்ததும், அதுல உள்ள ஒரிஜினாலிட்டி உண்மைங்குறதும் அல்லாருக்கும் தெரிஞ்சதுதான். அத்தப்போய் இந்த மாமா இப்போ நைசா பொய்யுன்னு அவுத்து வுடுதான்னா அல்லாம் கன்னடத்து ஐயங்கராம்மா ஆட்சியோட டானிக்குதான வேல செய்யுது?

தூங்குறவன்தான் ஹிந்து பேப்பர படிப்பான்னு டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு வெளம்பரத்தை வுட்ட வுடனே லபோ லபோன்னு அட்சிக்கிட்ட ஹிந்துக்காரன் அதுக்கு போட்டியா டைம்ஸ் ஆஃப் இந்தியாவ மேயுறவனெல்லாம் மேனா மினுக்கி பீட்டருங்கோ, ஹிந்து பத்திரிகைய படிக்கிறவுனெல்லாம் அறிவாளிங்கிற மேறி ஒரு வெளம்பரத்தை போட்டிக்கின்னு வெளியிட்டான்.

ஆனா, பாத்துக்கிடுங்க, காறித்துப்ப வேண்டிய நித்தியானந்தவோட அக்மார்க் பொய்யை ஐஞ்சு காலம் செய்தியா போட்டிருக்கான்னா இதுல யாரு அறிவாளி, யாரு முட்டாள்னு புரியுதாடா போக்கத்த மூதிகளா?

__________________________________________________

– காளமேகம் அண்ணாச்சி

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

வீடியோ கேம்: கணினித் திரையில் ஒரு ரவுடியிசப் பள்ளி!

10

நீங்கள் சாலையில் இரு சக்கர வாகனம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். அடர்த்தியான  போக்குவரத்து நெரிசல். திடீரென உங்கள் முன்னே சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டி நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகிறார். கீழே சரிந்து சிதறி விழுகிறார். மண்டை பிளந்து ரத்தம் தெறிக்கிறது. உங்களால் அந்தக் காட்சியைப் பார்க்காதது போல கடந்து செல்ல முடியுமா? அல்லது யாரோ அறிமுகமற்ற நபராயினும் கண்ணெதிரே ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவர் சரிந்து விழுவதை நாம் கண்டு ரசிக்க முடியுமா? ஒரு வேளை இதெல்லாம் ரத்தமும் சதையுமான மனிதர்களாயில்லாமல் ஒரு மெய்நிகர் காட்சியாய் இருக்கும் பட்சத்தில் நாமே தலையிட்டுக் கூடுதல் ரத்தம் சிந்த வைத்து அதை ரசிக்க முடியுமா? முடியாது என்று நீங்கள் சொல்வீர்கள். எனினும் இந்தக் கேள்விகளுக்கு எந்தத் தயக்கமுமின்றி ’முடியும்’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

சமீபத்தில் நண்பரொருவரின் இல்லத்துக்குச் சென்றிருந்த போது அவரது பத்து வயது மகன் தீவிரமாகக் கணினித் திரையில் ஆழ்ந்திருந்தான். அறிமுகப் பேச்சுக்களின் இடையே மெதுவாகத் திரும்பி என்னதான் செய்கிறான் என்று கவனித்த போது அந்தத் திரை முழுக்க இரத்தம் தெறித்து வழிந்து கொண்டிருந்தது. அவனோ உற்சாக மிகுதியில் விநோதமான சப்தங்களையெழுப்பிக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். பதறிப்போய் அருகில் சென்று பார்த்தால் அது ஒரு வீடியோ கேம். திரையில் துப்பாக்கியேந்திய வீடியோ கேம் பாத்திரம் ஒன்றைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவன், எதிரிகளைச் சராமாரியாக சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை துப்பாக்கி வெடிக்கும் போதும் திரையின் வலது மேற்கோடியில் அவன் பெற்றிருந்த புள்ளிகள் உயர்ந்து கொண்டே போனது.

அவன் தன்னிலை மறந்து ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் கால மாற்றத்தின் அடிப்படையில் சமூகமும் தன்னிலையைக் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

 

வீடியோ கேம்வீன வீடியோ கேம் விளையாட்டுக்கள் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைக் காட்டிலும் பண்பு ரீதியில் வெகுவாக மாற்றமடைந்திருக்கின்றன. அப்போதெல்லாம் டேஞ்சரெஸ் டேவ் என்கிற இரு பரிமாண விளையாட்டு மிகவும் பிரசித்தம். அது ஒரு வகையான பரமபதம் போன்றது தான். டேவ் என்கிற பாத்திரத்தை பல்வேறு அபாயங்களைத் தாண்டி அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் செல்ல  வேண்டும். எத்தனை கட்டங்கள் கடந்து போகிறோமோ அத்தனை புள்ளிகள். மிக எளிமையான கரு.

ஆனால், இன்றைய நவீன வீடியோ கேம் விளையாட்டுக்கள் முப்பரிமாணத் தெளிவுடனும், நறுக்கென்ற கதைக் கருக்களுடனும், அதிரடிப் பின்னணி இசையுடனும் வெளியாகி விளையாடப்படுகின்றன. ’கிளிங் கிளாங்’ சப்தங்களோடும் இரு வண்ணக் காட்சியமைப்புகளிலும் வீடியோ கேம்கள் வந்தது போய், போர் என்றால் உண்மையான  போர்க்களத்தின் அனுபவத்தை அளிக்கும் முப்பரிமாணக் காட்சியமைப்பும், கொலை என்றால் டி.டீ.எஸ் துல்லியத்தில் ஒலிக்கும் தத்ரூபமான மரண ஓலமும் திரையின் முன்னே விளையாட்டை இயக்கிக் கொண்டிருக்கும் பாத்திரத்தை அந்தக் களத்தினுள் ஆழமாய் உள்ளிழுத்துச் செல்கின்றது.

தற்போது இந்தியச் சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தமாயிருப்பது ஜி.டி.ஏ (Grand Theft Auto) என்கிற வீடியோ கேம். க்ளாவ்டி என்பவன் தனது காதலி கேட்டலினாவுடன் கூட்டுச் சேர்ந்து ஒரு வங்கியைக் கொள்ளையடிக்கிறான். தப்பிக்கும் போது வழியில் கேட்டலினா க்ளாவ்டியைச் சுட்டு விடுகிறாள். காயங்களுடன் உயிர்பிழைக்கும் க்ளாவ்டியை போலீசு கைது செய்து சிறையிலடைக்கிறது. அங்கிருந்து தப்பும் அவன் உள்ளூர் அளவில் கூலிக்குக் கொலை செய்யும் வேலையைச் செய்து வருகிறான்.

வீடியோ கேம்அந்த சமயத்தில் அந்தப் பகுதி தாதாவின் மனைவி மரியாவோடு அவனுக்குக் கள்ளக்காதல் உண்டாகிறது. க்ளாவ்டி உயிரோடிருப்பதை அறியும் கேட்டலினா, அவனைத் தேடி வரச் செய்து கொலை செய்வதற்காக மரியாவைக் கடத்துகிறாள். முடிவில் தனது முன்னாள் காதலியை ஒரு துப்பாக்கிச் சண்டையின் இறுதியில் கொன்று விட்டு கள்ளக்காதலியைக் காப்பாற்றுகிறான் க்ளாவ்டி. இது தான் இந்த விளையாட்டின் கதைக் கரு. இதில் க்ளாவ்டி தான் கதையின் (விளையாட்டின்) நாயகன். இந்த ’விளையாட்டை’ விளையாடும் சிறுவர்கள் ஏற்றுக் கொண்டு இயக்கப் போகும் பாத்திரம் தான் க்ளாவ்டி.

இவ்விளையாட்டை ஆடும் சிறுவன் க்ளாவ்டிக்காக கொல்ல வேண்டும், அவனுக்காக கொள்ளையடிக்க வேண்டும், கள்ளக்காதலில் ஈடுபட வேண்டும். இந்தச் செயல்களெல்லாம் வெறும் பாவனை தான். பௌதீகமாய் இந்தக் காரியங்கள் நடந்தேறப் போவதில்லை தான். ஆனால், அதன் உணர்ச்சிகள் உண்மையில்லையா? அவ்வுணர்ச்சிகள் உடலில், மனதில் உண்டாக்கப் போகும் வினையும், அவற்றுக்கான எதிர்வினையும் என்னவென்பதை யார் அறிவார்?

திரையில் தோன்றும் க்ளாவ்டியின் ஒவ்வொரு அசைவையும், நடவடிக்கையையும் திரைக்கு முன்னே அமர்ந்திருப்பவர் கட்டுப்படுத்த வேண்டும். இவ்விளையாட்டை ’விளையாடுபவர்’ மேற்படி சமூக விரோதச் செயல்களை எந்தளவுக்குத் திறம்பட செய்கிறாரோ அந்தளவுக்குப் புள்ளிகள் கூடும். வெற்றி கிட்டும். அதற்காக எதுவும் செய்யலாம். கொலை கூடச் செய்யலாம் – அதில் எத்தனை ரத்தம் சிந்துகிறதோ அத்தனைக்கும் புள்ளிகள்.

 

வீடியோ கேம்கர்ப்புற மற்றும் சிறுநகரங்களைச் சேர்ந்த நடுத்தர வர்க்கத்துச் சிறுவர்களின் ஓய்வு நேரங்களில் அவர்களைத் தீராமல் அரித்துத் தின்னும் தனிமையைக் கணினித் திரையில் சிதறும் ரத்தத் துளிகள் இவ்வாறாக ஆக்கிரமிக்கின்றன. நீண்ட நெடிய நேரத்திற்கு அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது, திடீரென்று சுரக்கும் அட்ரீனலின் சுரப்பி ரத்தத்தில் கலப்பதால் உண்டாகும் மனக் கிளர்ச்சியும், சோர்வும் ஒரு சேர தாக்குவது போன்றவற்றை சமன் படுத்த அவர்கள் நாடுவது நொறுக்குத் தீனிகளை.

சட்டென்று கொழுப்பாக மாறி உடனே ரத்தத்தில் கலந்து விடத் தயாராக இருக்கும் மென்பானங்களும், நொறுக்குத் தீனிகளும் வாய் வழியே குடலை நிரப்புகிறதென்றால் அதற்குச் சற்றும் குறையாத வேகத்தில் மலின உணர்ச்சிகளைத் தூண்டும் விளையாட்டின் காட்சிகள் கண் வழியே நுழைந்து மூளையை நிரப்புகின்றது. கொழுப்பு மண்டிய சதைப் பிண்டங்களான உடல்களோடும், மலினமான உணர்ச்சிகள் மண்டிய குப்பை, கூளமான மண்டையோடும் சமூகத்தினுள் வெறும் தக்கை மனிதர்களாக – லும்பன்களாக – பிரவேசிக்கும் நடுத்தர வர்க்கச் சிறுவர்களின் எண்ணிக்கை வெகு வேகமாய்க் கூடிக் கொண்டே வருகின்றது.

வீட்டில் கணினி வைத்திருப்பதே அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகின்றது. அதன்படி தமது குழந்தைகள் தெருவில் விளையாடி அழுக்குப் படிந்து வருவதைக் காட்டிலும், வரவேற்பறையில் அமர்ந்தவாறே ஆபத்தின்றி கணினியில் நேரம் செலவிடுவதை நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் பிரச்சினையற்றதாகக் கருதுகிறார்கள்.

வீடியோ கேம்குடும்பத்தில் இருவருமே வேலைக்குச் சென்றாக வேண்டிய பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பெற்றோர், அலுவலக அக்கப்போர்களுக்கிடையே முட்டி மோதி வேலையை முடித்துத் திரும்பி வந்ததுமே சீரியல், சினிமா என்று சின்னத்திரையின் முன் முடங்கிக் கிடக்கிறார்கள்.  குழந்தைகளோடு நேரம் செலவிடுவதோ, அவர்கள் என்ன செய்கிறார்கள் எப்படி வளர்கிறார்கள் என்பதைக் கண்காணிப்பதோ இல்லை. தங்களுக்குத் தொல்லையின்றி என்னவாவது செய்து விட்டுப் போகிறார்கள் என்கிற கண்காணிப்பற்ற சூழலில் தனித்து விடப்படும் குழந்தைகள் தனித்த தீவுகளாகிறார்கள். அவர்களின் தனிமையை ஆக்கிரமிக்கின்றன வீடியோ கேம் விளையாட்டுகள்.

ஓரளவு நேரம் இருக்கும் பெற்றோரும் கூட, மற்ற பிள்ளைகள் தமது பிள்ளைகளிடம் அவர்களின் வீடியோ கேம் சாகசங்களை விவரிக்கும் போது இவர்கள் ஏங்கிப் போவார்களென்கிற காரணத்துக்காகச் சொந்தமாகக் கணிணியையும், வீடியோ கேம் கருவிகளையும் வாங்கித் தருகிறார்கள். சொந்தமாக வாங்கித் தர வாய்ப்பில்லாத குடும்பத்தைச் சேர்ந்த சிறார்களோ இணைய மையங்களை மொய்க்கிறார்கள். சிறு நகரங்கள் வரைக்கும் வீடியோ கேம் விளையாட்டுக்கள் பரவியுள்ளன. குழந்தைகளோடு நேரம் செலவழித்து அவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பை கைகழுவி விடுவதற்கான ஒரு சமாதானமாக, அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுப்பதை உயர்வானதாக நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் கருதிக் கொள்கிறார்கள்.

 

வீடியோ கேம்விளையாட்டுக்கள் என்பது ஒரு குழு மனப்பான்மையையும், அதன் நீட்சியாக சமூகப் பொறுப்பையும் உண்டாக்குவது என்பதை விடுத்து, வீடியோ கேம்கள் சமூகத்தினின்றும், எதார்த்தமான உலகினின்றும் இவர்களைத் துண்டிக்கின்றது. மெய்யுலக விளையாட்டுகளுக்குத் தேவைப்படும் பயிற்சி, முன்முயற்சி, முனைப்பு, தயாரிப்பு, வியர்வை, உழைப்பு எவையும் இந்த மெய்நிகர் உலகின் விளையாட்டுக்களுக்குத் தேவையில்லை. மைதானங்களில் விளையாடப்படும் விளையாட்டுகளில் கிடைக்கும் மோதல்களில் தொடங்கிய நட்புகள் மெய்நிகர் உலகின் விளையாட்டுகளில் கிடைப்பதில்லை. பத்துக்குப் பத்து அறையே உலகமாய், அதிலும் ரத்தமும் சதையுமான மனிதர்களின்றி பொம்மைக் கதாபாத்திரங்களோடும், அதன் போலி உணர்ச்சிகளோடும் உறவாடும் நடுத்தரவர்க்கச் சிறுவர்கள் தமக்குள் வளர்த்துக் கொள்ளும் பண்புகளும் அவ்வாறே இருக்கின்றன.

போக்குவரத்து நெரிசல்களில் பச்சை விளக்குக்குக் காத்திருக்கும் பொறுமையின்றி தனது பல்சரின் இஞ்சினை உறும விடும் மீசை முளைக்காத விடலையின் படபடப்பையும், குடுகுடுப்பையும் அவன் ஆளில்லாத தனிமையில் கணினித் திரையில் தோன்றும் விளையாட்டுப் பாத்திரங்களிடமிருந்து கற்றுக் கொள்கிறான். நீட் பார் ஸ்பீட் (NFS) என்பது ஒரு பைக் ரேஸ் வீடியோ கேம். காதுகளில் அடைசலாய்ப் பொருத்தப்பட்ட ஒலி பெருக்கியின் துல்லியமும், கணினியோடு பொருத்தப்பட்ட ஸ்டியரிங்கின் இலாவகமும் கணினித் திரையில் தோன்றும் போது அது ஆளரவமில்லாத சாலையில் மின்னலாய்ப் பறக்கும் இன்பத்தை வழங்க வல்லது. கணினியை அணைத்து விட்டு வெளியே இறங்கினால் கூட்டமும், நெரிசலுமான சாலை.

எதார்த்த உலகைச் சந்திக்கும் மாய உலக உணர்ச்சிகளின் தடுமாற்றம் அங்கே பைக்கின் பொறுமையற்ற உறுமல்களாய் வெளிப்படுகின்றது. வீடியோ கேம் விளையாட்டுக்களில் தாம் ஏற்றுக் கொள்ளும் பாத்திரங்களின் சார்பாக கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை என்று எதையும் செய்து வெற்றியைப் பெறுவதில் கிளர்ச்சியடைகிறார்கள். இவைகளெல்லாம் வெறும் பாவனைகள் தானென்றாலும் அந்த உணர்ச்சிகள் அபாயகரமானவை. திரையின் பின்னே நகரும் விளையாட்டுப் பாத்திரம் உணர்ச்சியற்றது தான் – ஆனால், அதன் உணர்ச்சி திரைக்கு முன்னே அமர்ந்துள்ளது. ஒரு நாளின் சில மணி நேரங்கள் மட்டும் உள்ளே புகும் இந்த உணர்ச்சிகள், மற்ற நேரங்களில் அவன் கைக்கொள்ளும் அறம் இன்னதென்று தீர்மானிக்கின்றது.

ரத்தம் சிந்துவதைக் கண்டு கிளர்ச்சியடையப் பழக்குவதன் எதார்த்த விளைவுகள் கூர்காவ்னைச் சேர்ந்த ஆசாத் சிங் யாதவாய் வெளிப்படுகிறது. உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த யாதவ், பள்ளியில் நடந்த ஒரு சில்லறைத் தகராறுக்காகத் தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்துச் சென்று உடன் படித்த அபிஷேக் தியாகியைச் சுட்டுக் கொல்கிறான்.

ஏனெனில் பிரச்சினைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும். என்ன பிரச்சினைக்கு எப்படிப்பட்ட தீர்வு என்பது அந்தக் கண நேரத்தில் தீர்மானிக்கப்படும். தீர்மானிக்கப்பட்டவுடன் தீர்ப்பு எழுதப்படும். அதாவது கணினித் திரையில் அசைந்தோடும் பாத்திரங்களும், அவர்கள் நிற்கும் களங்களும், அந்தக் கதையின் கருவும் எதையும் தீர்மானிக்க வாய்ப்புகள் அளிப்பதில்லை. அவையனைத்தும் முன் தீர்மானிக்கப்பட்ட மென்பொருள் நிரல்கள்.

இவ்விளையாட்டுகளின் விதிமுறைகள் சிக்கலானவை அல்ல – இருப்பினும் அவற்றை பழக்கத்தின் மூலமாக மட்டுமின்றி வேறு வகைகளில் மீறுவது எப்படி, உடைப்பது எப்படி என்பதை விளக்கும் சீட் ஷீட்டுகள் (Cheat Sheets) இணையத்தில் தாராளமாய்க் கிடைக்கின்றன. இவற்றைப் புழக்கத்தில் விடுவதும் இந்த விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனங்கள் தான். வெல்லும் வழிமுறைகள் புரியாமல் யாரும் விளையாட்டைப் புறக்கணித்து விடக் கூடாது என்பதில் இந்நிறுவனங்கள் கவனமாய் இருக்கின்றன.

 

வீடியோ கேம்வீடியோ கேம் விளையாட்டு என்றதும் இது ஏதோ விளையாட்டுச் சமாச்சாரம் என்று அற்பமாக நினைத்து விடக் கூடாது. உலகளாவிய வீடியோ கேம் சந்தையின் தோராய மதிப்பு 60 பில்லியன் டாலர்கள் (3 லட்சம் கோடிகள்). மைக்ரோசாஃப்ட், சோனி, நின்டேட்டா  போன்ற பகாசூர கம்பெனிகள் இந்தப் போட்டியில் முன்னணியில் நிற்கின்றன. இந்த ஆண்டு கேம்பஸ் தேர்வில் சென்னை ஐ.ஐ.டியில் படிக்கும் மூன்று மாணவர்களுக்குத் தலா 70 லட்சம் ஆண்டு ஊதியம் கொடுத்துப் பணிக்கு அமர்த்தியுள்ளது பாக்கெட் ஜெம் என்கிற வீடியோ கேம் தொடர்பான அமெரிக்க நிறுவனம். மக்களின் வரிப்பணத்தைக் கோடிக்கணக்கில் உறிஞ்சி தயாராகும் ஐ.ஐ.டி மாணவர்களையே இலட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து வளைத்துக் கொள்ள இவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதிலிருந்தே இத்தொழிலில் புழங்கும் பணத்தின் பிரம்மாண்டத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

வீடியோ கேம் விளையாட்டுக்களை தொடர்ந்து விளையாடும் சிறுவன் முதலில் சாதாரண வன்முறைக்குக் கிளர்ச்சியடைகிறான். ஆனால், நான்கு சுவர்களுக்குள் அடைக்கப்பட்ட ஒரு உலகத்தின் ஒரே மாதிரியான தொடர்ச்சியான இயக்கத்தின் அலுப்பூட்டல்களுக்குத் தீனியாக இதிலும் மாறுபட்ட அம்சங்களும் அதிகக் கிளர்ச்சியும் தேவைப்படுகிறது. சந்தையின் இந்த விதிகளே, இதில் ஈடுபட்டுள்ள போட்டி நிறுவனங்கள் தயாரிக்கும் விளையாட்டுக்களில் இருக்கும் வன்முறையின் அளவைத் தீர்மானிக்கின்றன.

வன்முறை, மேலும் வன்முறை, மேலும் மேலும் வன்முறை என்று சிறுவர்களுக்குக் கிளர்ச்சியூட்டும் அம்சங்களைச் சேர்த்துக் கொள்வதில் இவர்களுக்குள் கடுமையான போட்டி நிலவுகின்றது. அதிக ரத்தம் வழியும் விளையாட்டு எதுவோ அதற்கே சந்தையில் அதிக மதிப்பு.

வெறும் கொலை, கொள்ளையில் கிடைக்கும் இன்பமும் புளித்துப் போக, தற்போது சந்தைக்கு வந்துள்ள நவீன விளையாட்டுக்களின் கதைக் கருவாக கள்ளக்காதலும், கற்பழிப்பும் சேர்ந்துள்ளது.  அமெரிக்க வீடியோ கேம் சந்தையைப் பொறுத்தவரையில், கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா நடத்திய ’தீவிரவாதத்துக்கு எதிரான போர்கள்’ தான் பெரும்பான்மையான விளையாட்டுக்களின் கதைக் கரு. அமெரிக்கப் படை வீரனின் பாத்திரத்தை ஏற்கும் அமெரிக்கச் சிறுவன், வீரனின் சார்பாக ஈராக்கின் குழந்தைகளைக் குறி பார்ப்பதையும் வெற்றிப் புள்ளிகளுக்காகச் செய்தாக வேண்டும். ஈராக்கின் நிர்க்கதியான குழந்தையும், ஆப்கானின் சிதறிய உடலங்களும் சராசரி அமெரிக்கனின் உள்ளத்தில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தாமலிருப்பதன் பின்னுள்ள பல்வேறு காரணிகளில் வீடியோ கேம்களும் ஒன்று.

வீடியோ கேம்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சந்தையில் பரபரப்பாக இருந்து ஏஜ் ஆப் எம்பயர் (Age of Empire) விளையாட்டு இப்போது அதன் மதிப்பை இழந்துள்ளது. ஒரு நகரத்தைக் கோட்டை கொத்தளங்களுடன் உருவாக்கி, போர் வீரர்களை உருவாக்கிப் பயிற்றுவித்து, படையைக் கட்டி, பக்கத்து நாட்டின் மேல் போர் தொடுத்து வெல்வது என்கிற நீண்ட அலுப்பூட்டும் கதைக்கருவைக் கொண்டிருந்த இவ்விளையாட்டை ஆடி முடிக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகலாம். அதிலும் கூட, எதார்த்த உலகின் சவால்கள், உழைப்பு, முயற்சி என்கிற எதுவுமின்றி உயிரற்ற உணர்ச்சியே பிரதானமாயிருந்தது. அதனால் தான் தற்போது சந்தைக்கு வந்திருக்கும் விறுவிறுப்பான நவீன விளையாட்டுக்களோடு தாக்குப் பிடிக்க முடியாமல் அது தோற்றுப் போனது.

உணர்ச்சி எதுவாயிருந்தாலும் அதன் ஆயுள் குறைவாய் இருக்க வேண்டுமென்பதை தற்போது வந்திருக்கும் வீடியோ கேம் விளையாட்டுக்கள் நிலைநாட்டியுள்ளது. குறுகிய நேர அளவில், காதல், காமம், கொலை வெறி, வன்முறை ஆகிய உணர்ச்சிக் கலவைக்குள் சிறுவர்களை பிடித்துத் தள்ளுவதில் எது வெல்கிறதோ அதுவே சந்தையைக் கைப்பற்றுகிறது. அந்த வகையில் நீடித்து இருக்க வேண்டிய அன்பு, பாசம், இரக்கம் போன்ற அற உணர்ச்சிகளையெல்லாம் இந்த வன்முறை உணர்ச்சிகள் அமிழ்த்திக் கொல்கின்றன.

எதார்த்தத்தில், விளையாடும் நேரம் என்பது பொழுது போக்கும் நேரம் மட்டுமன்று. அது நமது நாளின் வெட்டியாய்க் கழியும் நேரப்பகுதியுமன்று. மைதானத்தில் வியர்வை சிந்தி விளையாடப்படும் விளையாட்டுக்கள் பங்கேற்பாளர்களிடம் ஒரு குறைந்தபட்ச உழைப்பையாவது கோருகிறது. உடல் நலனை மேம்படுத்துவதில் விளையாட்டுகளுக்கு இருக்கும் பங்குபாத்திரம் தொட்டறியத்தக்க ஒரு பலனை அளிப்பது உண்மைதானென்றாலும் அதன் மெய்யான பலன்கள் அதனையும் கடந்தவை. குழு உணர்வையும், அதன் நீட்சியான சமூக உணர்வையும் மெய்யுலக விளையாட்டுக்கள் அளிக்கின்றன.

வகுப்பறையில் மூளைக்குள் தொடர்ந்து கொட்டப்படும் புத்தகத்தின் உயிரற்ற பக்கங்களின் எழுத்துக்கள் உண்டாக்கும் சோர்வை நீக்கி, உடலுக்குப் புத்துணர்ச்சியளிப்பதோடு கூட்டுத்துவத்தை வளர்த்து, சமூக உறவையும் பட்டை தீட்டுகிறது. கூட்டியக்கம் தான் வெற்றிக்கான முதல் படி என்பது மைதான விளையாட்டுக்களின் அடிப்படையான பாலபாடம்.

 

வீடியோ கேம்வீடியோ கேம்ஸின் தனித்தன்மையே அதனால் உண்டாகும் தனிமையும், வெறுமையும் தான். எதை நீக்க அதில் ஈடுபடுகிறார்களோ அதுவே அதன் பலனாகவும் உள்ளது. அதன் கூடவே இலவச இணைப்பாக வன்முறையையும், தனிநபர்வாதத்தையும் ஊட்டி வளர்க்கின்றது. தனித்த களத்தில் வெற்றியை உறுதி செய்யும் போலி உணர்ச்சிகள் எதார்த்தத்தைக் காணும் நேரத்தில் தடுமாறுகின்றது. இலக்கின்றிப் பாய்கின்றது.

நண்பரின் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென்று மின்சாரம் தடைபட்டது. கணினியில் விளையாடிக் கொண்டிருந்த அவர் பையனுக்கு விளையாட்டு தடைபட்டதால் ஆத்திரம் வந்து – ‘ஷிட்‘ என்று கூச்சலிட்ட அவன் கோபத்தோடு மேசையில் ஓங்கிக் குத்தினான். அந்த கோபத்தின் சமூகப் பரிமாணங்கள் எத்தகையது என்பதை யோசித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

 

வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். குண்டும் குழியுமான சாலையில் வேகமாக தனது பல்சர் பைக்கை ஓட்டிச் செல்ல முயன்ற ஒரு விடலைப் பையன் பின் சக்கரம் வழுக்கக் கீழே சரிந்தான். தடுமாறி எழுந்தவன், ஆத்திரத்தோடு கீழே கிடக்கும் வண்டியை எட்டி உதைத்து ஏதோ கெட்ட வார்த்தையை உதிர்த்துக் கொண்டிருந்தான். நோக்கமற்ற கோபம். ஆனால் வசதிகளை எந்தவிதப் போராட்டமுமின்றி அடையத் துடிக்கும் தனிநபர் இன்பவாதக் கோபம்.

இந்தக் கோபம் நுகர்வுச் சந்தையை உப்ப வைக்கும். இந்தக் கோபம் சமூக உறவிலிருந்து ஒரு மனிதனைத் துண்டிக்கும். இந்தக் கோபம் பொருள் ஈட்ட வேண்டியதில் உள்ள அற விழுமியங்களை அழித்து விடும். இந்தக் கோபம் வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்த்துப் போராடும் குணத்தை இல்லாததாக்கி விடும். இத்தகைய மனிதர்கள்தான் உலகமயமாக்கம் உருவாக்கும் எந்திர பொம்மைகள். ஆனால் உயிருள்ள பொம்மைகள்.

இளமைப் பருவத்தில் ஒரு குழந்தையின் வளர்ச்சி சமூகத்தோடு இருக்கும் வரை ஆரோக்கியமாக இருக்கும். வீடியோ கேம் உள்ளிட்ட நுகர்வு வாழ்க்கை அதைத் துண்டிப்பதால் அந்தக் குழந்தைகள் வன்முறை குணம் கொண்டவர்களாக மாறுகிறார்கள். அக்கறையுள்ள பெற்றோர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

_________________________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

_________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?

8

இரான்கடந்த பிப்ரவரி 13ஆம் தேதியன்று டெல்லியில் பிரதமர் இல்லத்துக்கு அருகேயுள்ள இஸ்ரேல் நாட்டுத் தூதரகத்தின் கார் வெடித்து தீப்பிடித்ததில், தூதரகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் உள்ளிட்டு 4 பேர் காயமடைந்தனர்.  டீசலால் இயக்கப்படும் காரின் வாயு அழுத்த சிலிண்டர் வெடித்ததால் தீவிபத்து நேர்ந்ததாகவே ஒரு மணி நேரத்துக்குப் பிறகு போலீசார் ஊடகங்களிடம் கூறினர்.

போலீசார் புலனாய்வு செய்து வருவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் போதே, இது பயங்கரவாதிகளின் தாக்குதல் என்றும், இக்குண்டு வெடிப்புக்கு இரானும் ஹிஸ்புல்லா பயங்கரவாத இயக்கமும்தான் காரணம் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அறிவித்ததோடு, இதற்குப் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். அமெரிக்காவும், பிரிட்டனும் இத்தகைய பயங்கரவாதங்களை இரான் தூண்டிவிட்டு ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டின. மறுபுறம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் குற்றச்சாட்டை மறுத்து, இக்குண்டுவெடிப்புக்கு தாங்கள் காரணம் இல்லை என்று இரான் அறிவித்துள்ளது.

காந்தத்துடன் கூடிய ஸ்டிக்கர் மூலம் காரில் வெடிகுண்டை ஒட்டவைத்து, பின்னர் தொலைக் கட்டுப்பாட்டு கருவி (ரிமோட்) மூலம் வெடிக்கவைக்கும் நவீன குண்டுவெடிப்புகளின் மூலம் கடந்த இரண்டாண்டுகளில் இரானின் 5 அணு விஞ்ஞானிகள்  கொல்லப்பட்டுள்ளனர். மொசாத் எனும் இஸ்ரேலிய பயங்கரவாத உளவு அமைப்புதான் இப்படுகொலைகளைச் செய்திருக்க வாய்ப்புள்ளது என்று சந்தேகிக்கப்பட்டது. தற்போது டெல்லியில் இஸ்ரேலியத் தூதரகக் கார் அதே பாணியில் குண்டு வைக்கப்பட்டு வெடித்துள்ளதால், இது இஸ்ரேலின் கைவரிசைதான் என்று கருதுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. இருப்பினும், இது  இரானால் தூண்டிவிடப்பட்டுள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்கிறது இஸ்ரேல். தங்கள் நாட்டிலும் உலகின் பிற நாடுகளில் இஸ்ரேலியர்களைக் குறிவைத்து இத்தகைய கார் குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.

அடுத்த நாளில், இஸ்ரேலிய தூதரக காரைப் பின் தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் ஒரு இளைஞர் வந்ததாகவும், காரில் ஸ்டிக்கர் குண்டை ஒட்டி அதனை வெடிக்க வைத்ததாகவும் இந்திய உளவுத்துறையினர் கூறுகின்றனர். இரு நாட்களுக்குப் பின்னர், ஒரு சிவப்பு நிற மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்டு தெருவில் கிடந்ததாக ஆதாரம் காட்டினர். இந்திய உள்துறைச் செயலாளரோ, இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் எந்த நாட்டையும் தொடர்புபடுத்த எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை என்கிறார். பிரதமரின் இல்லத்துக்கு 500 மீட்டர் அருகே பலத்த பாதுகாப்பு உள்ள பகுதியில் குண்டு வெடிப்பு நடந்திருப்பதே பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தும் நிலையில், விசாரணை முடிவடையாத நிலையில் கார் வெடிப்பில் காயமடைந்த தூதரகப் பெண் அதிகாரி சிகிச்சைக்குப் பின்னர் அவசரமாகத் தனது நாட்டுக்குச் சென்றுவிட்டார். இவ்வாறு தூதரக அதிகாரியை அவசரமாகத் திரும்பப் பெற்றுள்ள செயலானது, இஸ்ரேல் தனது குற்றத்தை மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத், பயங்கரவாதப் படுகொலைகளுக்குப் பேர்போன கொலைகார அமைப்பாகும். பாலஸ்தீன மக்களும் போராளிகளும் இலக்கு வைத்து அப்படையினரால் கொல்லப்பட்டுள்ளதற்கு நீண்ட வரலாறே உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் அமெரிக்காவுக்கான சௌதி அரேபியாவின் தூதரான அப்தல் அல்ஜூபேர் என்பவரைக்  கொல்ல சதி செய்ததாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது எவ்வித ஆதாரமுமின்றிக் குற்றம் சாட்டின. ஐ.நா.மன்றமும் இக்கொடுஞ்செயலைக் கண்டித்து தீர்மானம் இயற்றியது. ஆனால் இது அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொசாத் ஆகியவற்றின் கைவரிசைதான் என்று பின்னர் அம்பலப்பட்டது. அமெரிக்காவின் ஏற்பாட்டில் இஸ்ரேலே டெல்லியில் நடந்துள்ள குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கலாம் என்தற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாக இருப்பதையே இவையனைத்தும் காட்டுகின்றன.

மேற்காசியாவில் இரானின் அரசியல் பொருளாதார ஆற்றலைச் சீர்குலைக்க கடந்த நான்காண்டுகளாகப் பல்வேறு சதிகளை வெளிப்படையாகவே அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் செய்து வருகின்றன. கடந்த 2010ஆம் ஆண்டில் அந்நாட்டின் 40க்கும் மேற்பட்ட பொருளாதாரவர்த்தக நிறுவனங்கள் மீதும் முக்கிய வங்கிகள் மீதும் ஐ.நா. மன்றத்தின் மூலம் அமெரிக்கா பொருளாதாரத்  தடைகளை விதித்தது. இரானின் கச்சா எண்ணெய்த் தொழிலில் எந்த நாடும் முதலீடு செய்யக் கூடாது, அணு ஆராய்ச்சிக்குத் தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு செல்வதாகச் சந்தேகித்தால் இரானியக் கப்பல்களை நடுக்கடலிலேயே சோதனையிடவும் தனக்கு அதிகாரமுண்டு என்று பல்வேறுவிதமான மேலாதிக்க நடவடிக்கைகளை இரான் மீது அமெரிக்கா ஏவிவிட்டுள்ளது.

அணுகுண்டு தயாரிப்பதா, வேண்டாமா என்று தீர்மானிக்கும் இரானின் சுயாதிபத்திய உரிமையை அமெரிக்கா மறுக்கிறது. அமெரிக்காவுக்கு விசுவாசமாக, சர்வதேச அணுசக்தி முகமையில் இரானுக்கு எதிராக இந்தியா  வாக்களித்தது.  இரான்  பாகிஸ்தான்  இந்தியா இடையே குழாய் வழியாக இயற்கை எரிவாயுவைக் கொண்டுவரும் ஒப்பந்தத்தையும் இந்தியா கிடப்பில் போட்டுவிட்டது.  இரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான நிலுவையை ஆசியன் கணக்குத் தீர்வு ஒன்றியம் மூலம் பட்டுவாடா செய்துவந்த இந்திய ரிசர்வ் வங்கி, அமெரிக்காவின் கட்டளைக்கு ஏற்ப அந்த கணக்குத் தீர்வு ஒன்றியத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டது.

இரான்இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் இரான் 12 சதவீதப் பங்கு வகிக்கிறது. கடந்த டிசம்பர் இறுதியில் இரானின் மத்திய வங்கியுடன் எந்த நிதி நிறுவனம் உறவு கொண்டாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தடைவிதித்தார். இதனால், இந்தியா தனது எண்ணெய் நிலுவையை இரானுக்குப் பட்டுவாடா செய்ய முடியாமல் சிக்கலாகியுள்ளது.

கடந்த பிப்ரவரியில் இரானும் இந்தியாவும் எண்ணெய்க்கான நிலுவையை எப்படிப் பட்டுவாடா செய்து கொள்வது என்பது பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தின. இந்தியா தனது எண்ணெய்க்கான நிலுவையில் 45 சதவீதத் தொகையை ரூபாயாக யூகோ வங்கியில் செலுத்துவது, அந்த வங்கி இரண்டு இரானிய தனியார் வங்கிக்குத் தொகையைத் திருப்புவது என்று தற்காலிகமாக முடிவு செய்யப்பட்டது. எஞ்சிய நிலுவையை விரைவில் எப்படி பட்டுவாடா செய்வது என்பது பற்றி பேசுவதென முடிவாகியது. இத்தகைய சூழலில்தான் டெல்லியில் இஸ்ரேலியத் தூதகரக் கார் வெடித்துள்ளது.

துருக்கி, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் முக்கிய நாடுகளாக உள்ளன. இரானின் நீண்டகால நட்பு நாடான இந்தியாவில் பயங்கரவாதச் சதியை அரங்கேற்றுவதன் மூலம், இரானை உலக அரங்கிலும் இந்தியாவிலும் தனிமைப்படுத்தலாம் என்பதாலேயே இந்தியாவில் இஸ்ரேலிய கார் வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இரானுடனான உறவை இந்தியா முற்றாகத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் நோக்கத்துக்கு ஏற்பவே இக்குண்டுவெடிப்பும் பயங்கரவாதப் பீதியும் கிளப்பப்பட்டுள்ளது. இரானிலிருந்து எரிவாயு கொண்டுவரும் திட்டத்தை கைவிட்டது, அணுசக்தி முகமையில் இரானுக்கு எதிராக வாக்களித்தது ஆகியவற்றில் தொடங்கி, இன்று பொருளாதாரத் தடை, குண்டு வெடிப்பு ஆகிய அனைத்திலும் நீண்டகால நட்பு நாடான இரானுக்கு துரோகம் செய்து, தனது நலனுக்காக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது, இந்திய ஆளும் வர்க்கம்.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

159

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!சிக்ஸ் பேக்ஸ் மற்போர் வீரனின் கட்டுடலுக்கு ஊத்தை உடம்பு இம்சை அரசன் 23ஆம் புலிகேசியின் தலையைப் பொருத்தி ஓவியம் வரைந்து வைத்துக் கொள்வதாக ஒரு காட்சி அத்திரைப்படத்தில் வருகிறது.

அதைப் போல உல்லாச, ஊதாரி, சொகுசு வாழ்க்கையில் மூழ்கிக் கிடக்கும் இம்சை அரசி 24ஆம் புலிகேசியான செல்வி ஜெயலலிதாவை சிறந்த அறிவாளி, துணிச்சல்காரி, நிர்வாகத் திறமைசாலி என்ற பொய்யான சித்திரம் வரையப்படுகிறது.

ஆனால், இவரது ஆட்சியில் மின் பற்றாக்குறையில் தமிழகமே இருளில் மூழ்கிக் கிடக்கின்றது. தொழிலகங்களின் இயந்திரங்கள் துருப்பிடிக்கின்றன; அலுவலகங்களில் ஒட்டடைகள் படிகின்றன; கோப்புகள் தூசு மண்டிப் போயுள்ளன; சாலைகள் குண்டும் குழியுமாக சிதிலமடைந்து போயுள்ளன; சாலைகளில் சாக்கடைகள் ஆறாக ஓடுகின்றன; குப்பைக் கூளங்கள் மலைகளாகக் குவிகின்றன.

போலீசு அதிகாரிகள் சசிகலா கும்பல் பதுக்கிய சொத்துக்களை மீட்பதிலும், எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பொய் வழக்குகள் புனைவதிலும், அம்மா பரிவாரங்களுக்குப் பாதுகாப்பு என்ற பெயரில் அணிவகுத்து நிற்பதிலும் குவிக்கப்பட்டிருக்கின்றன. அதனால் கொலை, கொள்ளை, வழிப்பறிப்புகள் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொழில்முறை குற்றக்கும்பல்களுக்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றன. இந்த வகைக் குற்றங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குப் பதில் போலீசு நிலையக் கொட்டடிக் கொலைகளும், போலி மோதல்களும் (என்கவுண்டர்) அரங்கேற்றப்பட்டு பீதி உருவாக்கப்படுகின்றது. ஒருவேளை இதுதான் நிர்வாக திறமைசாலி என்பதைக் குறிக்கிறதோ!

ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை குறித்து மூத்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் அரியானா மாநில முன்னாள் தலைமைச் செயலாளருமான எம்.ஜி.தேவசாகாயம் (இவர் தி.மு.க.காரர் அல்ல) கூறுகிறார், “தமிழகத்தின் கடந்த 6 மாத ஆட்சி நிர்வாகச் சீரழிவு தவிர வேறொன்றுமில்லை. ஒரு தனிநபர் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கிறார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் முதுகெலும்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலைமை இல்லை. இது இப்படியே போனால் தமிழகம் அதல பாதாளத்திற்குப் போகும்”. இந்தக் கணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயா ஆட்சியில் நிர்வாகச் சீர்கேடு மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

நிர்வாகப் பொறுப்பில் எந்தவொரு அமைச்சரும் அதிகாரியும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் கூட நீடிக்க முடியாது; கோப்புகளையும், பொறுப்புகளையும், தம்முடன் பணிபுரியும் அதிகாரிகளும் ஊழியர்களும்ம் புரிந்து கொள்வதற்கு முன்பாகவே அமைச்சர்களையும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் பந்தாடுவதுதான் ஜெயலலிதாவின் இன்னொரு நிர்வாகத்திறமை! முதலமைச்சர் பதவிக்குத் தகுதியானவர் தானா என்று மதிப்பீடு செய்யாமலேயே ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுத்ததைப் போலவே  தகுதி, திறமைகளை மதிப்பீடு செய்து அமைச்சர்களையும் அதிகாரிகளையும் ஜெயலலிதா நியமிக்கவில்லை.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!வேறு எந்த அடிப்படையில் பொறுப்புகளைத் தருகிறார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம். கடந்த அமைச்சரவை மாற்றத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்பு செங்கோட்டையனை போயசு தோட்டத்துக்கு அழைத்த ஜெயலலிதா, “அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப் போறேன். இதுநாள் வரைக்கும் நான் உங்களுக்கு எதுவும் செய்ய முடியலை. என் சூழ்நிலை உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். கேளுங்க… உங்களுக்கு எந்த இலாக்கா வேணும்” என்று கேட்டார். “நீங்க நல்லா இருந்தா போதும்மா… நீங்க எது கொடுத்தாலும் சரிங்கம்மா” என்றார், செங்கோட்டையன். “இப்போதைக்கு வருவாய்த்துறை உங்ககிட்ட இருக்கட்டும். இன்னும் சில நாட்களில் வேறு சில துறைகளும் உங்களுக்கு வரும் சரியா” என்று கேட்ட ஜெயாவிடம் குனிந்தபடியே தலையாட்டினார் செங்கோட்டையன்.

அமைச்சர் சிவபதியை முன்பு நீக்கியதற்கும் மீண்டும் சேர்த்ததற்கும் ஜெயலலிதா காரணம் சொல்கிறார்: “ஒரு விழாவுல ராவணன் வந்தபோது, அதைக் கவனிக்காம அவர் செல்போன்ல பேசிட்டு இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக, எங்கிட்ட தவறான தகவல்களைச் சொல்லி அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கி இருக்காங்க. எனக்கு இப்போதுதான் அது தெரிய வந்தது. தப்பு செய்யாத யாரும் தண்டனை அனுபவிக்கக் கூடாது இல்லையா?” என்று சொன்ன ஜெயலலிதா, சிவபதியை மீண்டும் அமைச்சராக்கினார்.

எந்த தகுதி அடிப்படையில் அமைச்சர்கள் சேர்க்கப்படுகிறார்கள், நீக்கப்படுகிறார்கள் பாருங்கள்! ஜெயாவின் விசுவாசிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக வருவாய் துறை உட்பட முக்கியத்துறைகளின் அமைச்சராக்கப்படுகிறார்; முன்னாள் பங்காளி (ராவணன்)யை “மதிக்கவில்லை” என்பதற்காக ஒரு அமைச்சர் பதவி நீக்கப்படுகிறார். (யார் நீக்கியது? ஜெயாவுக்கு என்று சொந்த மூளை இல்லையா? யாராவது கோள் மூட்டினால் நம்பிவிடுவாரா? தவறுக்குரிய பொறுப்பு இல்லையா?) பின்னர் சேர்த்துக் கொள்ளப்படுகிறார். ஆக, தகுதி, மதிப்பீடு அடிப்படையில் பொறுப்புகள் ஒதுக்கப்படுவதும் நீக்கப்படுவதும் இல்லை. விசுவாசம், அடிமைத்தனம், திமிர்த்தனமே அடிப்படை.

கொலை, கொள்ளை, வழிப்பறியில் நாட்டிலேயே முதன்மை இடத்தை நோக்கி தமிழகம் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், இவைகளைச் செய்யும் குற்றவாளிகள் தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஆந்திராவுக்கு ஓடிப்போய் விட்டார்கள் என்று ஜெயா புளுகினார். கொடூரமான துப்பாக்கிச் சூடு நடத்தி தலித் மக்களைச் கொன்ற சம்பவத்தை சாதித் தகராறு என்று சித்தரித்தார். இப்படியெல்லாம் பச்சையாகப் புளுகும் ஜெயா உண்மையில் துணிச்சல்காரர்தான்!

அப்புறம் மரியம் பிச்சை, பரஞ்ஜோதி விவகாரம்; மூன்று பெண்டாட்டிக்காரர் மரியம் பிச்சை ஜெயாவுக்குத் தன் விசுவாசத்தைக் காட்ட, மின்னல் வேகத்தில் காரை ஓட்டச் செய்து, விபத்து ஏற்படுத்தி, மாண்டு போனார். அவருக்கு மாற்றாக பெண் மருத்துவரிடம் மோசடித் திருமணம், சொத்துப் பறிப்பு செய்த கிரிமினல் பேர்வழி பரஞ்ஜோதியை இடைத்தேர்தலில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து, அறநிலையத்துறை அமைச்சரும் ஆக்கி, இரண்டே மாதத்தில் அதே வழக்கில் சிக்கியதால் பதவி நீக்கமும் செய்யப்படுகிறார். விவகாரத்துக்குரியவர் என்று தெரிந்தே நியமனம், நீக்கம் என்று செயல்படும் ஜெயலலிதா தனக்குத் தெரியாமல் நடந்து விட்டதென்று எத்தனை தடவைதான் மழுப்புவார்? ஏதாவது போதையில் மூழ்கிக் கிடப்பவருக்கு எதுவும் தெரியாமல், எதுவும் செய்யலாம் என்றவாறுதானே அரசு நடக்கிறது.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!அடுத்து, ஜெயலலிதா துணிச்சல்மிக்கவர் என்ற கருத்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து, நிலைநாட்டப்பட்டிருக்கிறது. தான் எதைச் செய்தாலும் அதிரடியாகவும் அடாவடியாகவும், திமிர்த்தனமாக செய்வது; எதைச் சொன்னாலும் அண்டபுளுகு ஆகாசப்புளுகாக சொல்வது; மக்கள் எதிர்க்க மாட்டார்கள், ஏமாந்து போவார்கள் எதிர்க்கட்சிகளுக்கும் கேள்வி கேட்கும் திராணியில்லை என்ற எண்ணத்தில் விளைவதுதான் ஜெயலலிதாவின் துணிச்சல்.

கோவில் பிரசாதத்தில் நஞ்சு வைத்தும், லாரியை மோதவிட்டும் தன்னைக் கொல்ல முயன்றதாகப் புளுகியது; சட்டப்பேரவையில் தன்னை மானபங்கப்படுத்தினார்கள், ஆளுநர் சென்னாரெட்டியே தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்று புளுகியது; பணத்துக்காகத்தான் காவல்நிலையக் கற்பழிப்புப் புகார்கள் செய்வதாக பழிபோட்டது; தன் ஆட்சியில் சட்டம்ஒழுங்கு கெட்டு விட்டதாகக் காட்டுவதற்கு தி.மு.க.வினரே திருட்டு, கொள்ளை வழிப்பறியில் ஈடுபடுகின்றனர் என்றும் ராஜீவ் காந்தியையும் கொன்றனர் என்றும் குற்றஞ்சாட்டியது; வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாச்சாரம் தீவிரவாதம், பிரிவினைவாதம் பெருகிவிட்டதாகக் கூறி போலீசாருடன் போலி மோதல்கள், கொட்டடிக் கொலைகளை நியாயப்படுத்தியது; லட்சக்கணக்கான அரசு ஊழியரை வீடு புகுந்து தாக்கியதோடு ஒரே கையெழுத்தில் பணிநீக்கம் செய்தது  இப்படி ஜெயலலிதாவின் துணிச்சலுக்கான பழங்கதைகளைக் கூட விட்டு விடுவோம்.

1.76 இலட்சம் கோடி ரூபாய் ஊழலை தி.மு.க. செய்து விட்டதாக (அப்படி ஒரு குற்றச்சாட்டை ஜெயாவும் அவரது பங்காளிகளும் தவிர யாருமே கூறவில்லை) ஒரு பொய்ப் பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்ததும் கடந்த பத்து மாதங்களில் ஜெயலலிதா சொன்னவையும் செய்தவையுமே அவரது துணிச்சல் எத்தகையவை என்பதற்கு சான்றாக உள்ளன. தேர்தல்களில் வெற்றி பெற்றவுடன் , இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவேன்; தமிழர்கள் தெருக்களில் பாதுகாப்பாக நடமாடலாம்; சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் என் ஆட்சியின் முதற்பணி; ஒரு சில மாதங்களில் மின்பற்றாக்குறை அடியோடு முடிவுக்கு வரும், மின்வெட்டே இருக்காது என்று அறிவித்தார் ஜெயலலிதா.

ஒரு அரசியல் கட்சியின் தலைவி, தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில் திட்டங்களை அறிவிப்பதும், வாக்குறுதிகள் வழங்குவதும் தவறில்லை. ஆனால், இப்படியெல்லாம் சொல்லிவிட்டு தனது அரசு எந்திரத்தை  அதிகாரிகளையும் போலீசையும்  முதன்மையாக எந்தெந்த வேலைகளில் அவர் ஏவி விடுகிறார்? சமச்சீர் கல்வியும், பாடப்புத்தகங்களும் கேட்டுப் போராடும் மாணவர்கள் மீது தடியடி நடத்துவது; நீண்டநாள் ஆகியும் திறக்காமல் இருக்கும் தனிச்சிறப்பான வசதி கொண்ட மருத்துவமனையைத் திறக்கக் கோரும் மாணவர்இளைஞர் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்துவது; மின்வெட்டுக்கு எதிராகவும், புயல் நிவாரணமும் கோரிப் போராடும் மக்கள் மீது தடியடி நடத்துவது; பழங்குடிப் பெண்களைக் கடத்திக் கொண்டு போய் பாலியல் வன்முறை செய்வது; குற்றவாளிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களைச் சித்திரவதை செய்து கொட்டடிக் கொலைகள் புரிவது; அமைதியாகப் போராடும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் திட்டமிட்டு போலீசைக் குவித்து, சுட்டுக் கொல்வது; வழக்கறிஞர்களைத் தாக்குவது; இரகசியப் படுகொலைகள் செய்வது; தனது பங்காளி சசிகலாவையும் அவரது உறவினர்களையும், எதிர்க்கட்சியினர் மற்றும் தம் கட்சியினரையும் உளவுவேலை செய்து கண்காணித்து வழக்குகள் சோடித்து சிறையிலடைப்பது.

இவை மட்டுமல்ல; ஜெயா ஆட்சியில் போலீசு  உளவுத் துறையின் வேலையைப் பாருங்கள். அமைச்சர் செங்கோட்டையனுக்கும் அவரது உதவியாளர் ஆறுமுகத்தின் மனைவிக்கும் தவறான உறவு இருப்பதாக செங்கோட்டையன் மகன் ‘அம்மா’விடம் கோள் மூட்டுகிறார் அல்லது முறையிடுகிறார். உடனடியாக உளவுத் துறையை அனுப்பி அம்மா விசாரிக்கிறார். ஆறுமுகத்தின் மனைவியை மிரட்டுகிறார். ஆறுமுகம் கைது செய்யப்படுகிறார்.

ஜெயாவின் நிர்வாகத் திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!ஜெயா ஆட்சியில் அமைச்சர்களின் வேலையைப் பாருங்கள். சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து முதல்வர் ஜெயலலிதா விடுபட வேண்டி காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் தமிழக அமைச்சர்கள் பன்னீர் செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் சிறப்பு வழிபாடுகள் நடத்துகின்றனர். கூடவே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்கிறார்கள். அம்மாவுக்காக ”வர்ணாபிஷேகம் நடத்துகிறார்கள். கோவில்சார்பிலே அமைச்சர்களுக்கு ரோஜா மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. கோவிலுக்கு கோபுரம் கட்டி கொடுக்குமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது. அதையும் அமைச்சர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சி என்றால் இவைதான் வாடிக்கை என்று பல ஆண்டுகளாகத் தொடரும் அதிரடி, அடாவடி, திமிர்த்தனம் தான் அவரது துணிச்சலா? அதேபோல உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றத் தீர்ப்புகளால் திரும்பத் திரும்ப கன்னத்தில் கரிபூசப்பட்டும், சட்டத்துக்கு புறம்பான முடிவுகள் எடுக்கிறார் ஜெயலலிதா. இவைதான் ஜெயலலிதாவின் அறிவுத்திறமைக்கு சான்றுகளா? இல்லை, தன்மீது தொடுக்கப்பட்ட 42 லஞ்ச ஊழல்அதிகார முறைகேடு வழக்குகளைச் சமாளித்து, கடந்த பதினைந்து ஆண்டுகளாக, நீதித்துறைக்கு தண்ணி காட்டுகிறாரே, இதுதான் அவரது அரசியல் சட்ட ஞானத்துக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

______________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

சிரிக்க முடியாத வாழ்க்கை!

12

சிரிப்பு

இன்றைக்காவது எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வேலைக்குக் கிளம்ப வேண்டும் என்ற உமாவின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. கணவனின் பார்வையில் நொடிக்கு நொடி கடுகடுப்பு ஏறிக்கொண்டிருந்தது. எதுவும் வாய் கொடுக்காமல் இருப்பதே நல்லது என்று முகத்தைப் பார்க்காமல் அவள் டிபன்பாக்சை மூடிக்கொண்டிருந்தாள்.

“”ஏய்! கூப்டா திரும்ப மாட்டியா? நீதான் பெருசா வேல செஞ்சு கிழிக்கிற மாதிரி, நீ பாட்டுக்கு இருக்க? ” ஏதும் சண்டை வளர்ப்பதென்றால் இப்படி ஒரு முகாந்திரத்தில் அவன் ஆரம்பிக்கும் வழக்கத்தை அவள் அறிந்திருப்பதினால் சுருக்கமாக “”சொல்லுங்க, கவனிக்கல”  என்று அவன் கூப்பிடாவிட்டாலும் தன்மேல் பழியைப் போட்டுக் கொண்டு காது கொடுத்தாள்.

அவன் தொணத்திக் கொண்டே வந்தான்,   ”எப்படிக் கவனிப்ப? பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்க்கறேல்ல! தோ பார், வேலைக்குப் போனமா வந்தமானு இருக்கணும்! தேவையில்லாத பேச்சுகள்லாம் அங்க இடம் இருக்கக் கூடாது, புரியுதா”

”இப்ப என்ன தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கேன்?”

”ஏய்! சொன்னா சரின்னுட்டு போவாம எதுத்து எதுத்துப் பேசுற?”

”என்ன விவரம்னு கேட்டா அது ஒரு தப்பா?”

”ஏய்! ரொம்பத்தான் சம்பாதிக்கிற திமிர்ல பேசிக்கிட்டே போற! வீட்டுக்காரன் சொன்னா அடக்கமா பேசக் கத்துக்க.. பதிலுக்குப் பதில் எகிர்ற!”

”தோ பாரு, நீ என்னவோ மனசுல வெச்சுக்கிட்டு பேசுற…  எனக்கு இந்த மூடிமறைச்செல்லாம் பேசத் தெரியாது, நான்  ஒழுங்கா வேலைக்கு போயிட்டுதான் வாரேன், என்ன தப்பு நடந்து போச்சுண்ணு வெளிப்படையா சொல்லு?”

பொங்கி வந்த கோபத்திலும் நிதானம் தவறாமல் அவள் வெளிப்படையாகப் பேசினாள்.  இந்தப் பேச்சுக்கே பொறுப்பாக பதில் சொல்வதற்குப் பதில் மீண்டும் தாண்டிக் குதித்தான் அவன்.

”ஆமாண்டி நீ வேலைக்குப் போற எடத்துல கண்டவங்கிட்டயும் பேசுற… சிரிச்சு சிரிச்சு வழியுற… சும்மா நீ கத்திப் பேசி சமாளிக்க முடியாது.” ”

அடச்சே! இவ்வளவு நாளா சந்தேகத்தோடதான் என்னோட குடும்பம் நடத்துனியா?… என்னையே சந்தேகப்படுறியே… சூப்பர் மார்க்கெட்ல சேல்ஸ் கேர்ளா வேல பாத்தா கண்டவங்கிட்டயும் பேசித்தான் ஆகணும். இது கூட உனக்குத் தெரியாதா? உன் மனசுல இவ்வளவு கெட்ட எண்ணத்த வெச்சுகிட்டுதான் எரிஞ்சு எரிஞ்சு விழறியா… வேண்டாம் இனிமே நா வேலைக்கே போகல, நீயே சம்பாதிச்சுக் கொடு! வெறும் வயித்தோட ஓடி ஓடிப்போய் சம்பாதிச்சுக் கொடுத்து, கடைசில நீயே என்னக் கேவலமா நெனைக்கறியே.”

”என்ன பிளாக்மெயில் பண்றியா? நீ எப்படி இருந்தாலும் நான் கேக்கக் கூடாதா? வேலைக்குப் போவாட்டி கெட.. அதுக்காக உன் இஷ்டத்துக்கு இருக்க முடியாது.. என்னமோ நீ சம்பாதிச்சுதான் குடும்பம் நெறயர மாதிரி என்னையே மெரட்டுறியா… என்ன இப்ப சந்தேகப்பட்டு அடிச்சா தொரத்திட்டாங்க… மொதல்ல வாய அடக்கு… புருஷன்னா நாலு வார்த்த கேக்கதான் செய்வான்.  சும்மா இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ஆமா!”

போகிற போக்கில் எந்தப் பொறுப்பும் இல்லாமல் தான் பேசிய வார்த்தைகளைப் பற்றி எந்த விவாதமும் இல்லாமல், முக்கியமாக சந்தேகத்துக்குக் காரணமான வேலைக்கு இனிப் போக வே-ண்டாம் என்று திடமாக எந்த முடிவையும் அறிவிக்காமல், தலைக்கேறிய தனது கோபத்தைத் தணித்துக் கொண்டவன் போல இயல்பாக அவன் நகர்ந்து போனான்.

”சீ, இதுவும் ஒரு வாழ்க்கையா,, என்று தனக்குத்தானே வெறுத்துக் கொண்டவள் என்ன செய்வது என்று யோசித்து மறுகணம் பிள்ளைகள் படிப்பு, குடும்பத்தின் சூழ்நிலை அனைத்தும் மனதில் நிழலாட தன் விருப்பத்திற்கு எதிராக வழக்கம்போல வேலைக்குக் கிளம்ப வேண்டியதாயிற்று..  காலையில் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்ப எதிரொலித்து மனதில் வலி மிகுந்தது.. அவ்வப்போது ஈரம் கசிந்த விழிகளை யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு தனக்குரிய சேல்ஸ் செக்சனில் மரம் போல் நின்றாள்.. தொலைவிலிருந்து அவளை கவனித்த சூப்பர்வைசர் நெருங்கி வந்தான்.

”என்ன உமா, காலையிலிருந்து நானும் பாக்கறேன், வர்ற கஸ்டமர சிரிச்ச மூஞ்சியோட அட்டண்ட் பண்ணாம நீ பாட்டுக்கும் ஏனோ தானோன்னு நிக்கற! வர்ற ஆளுங்ககிட்ட ஸ்மைலிங் ஃபேஸோட புரோடக்ட எடுத்துக் காட்டி கான்வாஸ் பண்ணதான உன்ன இங்க போட்டுருக்கோம் . நீ பாட்டும் உம்முன்னு ஓரமா நின்னா எதுக்கும்மா சம்பளம் குடுத்து உன்ன இங்க நிக்க வெச்சுருக்கு… நானும் உன்ன ரொம்ப நாளா கவனிச்சுக்கிட்டுதான் வர்றேன்… வர்றவங்கள பாத்து முதல்ல ஸ்மைல் பண்ணவே மாட்டங்கற.. தானா போயி இண்டரஸ்டா பேசவும் மாட்டங்கற.. இதல்லாம் தெரிஞ்சுதானம்மா வேலைக்கு வந்த! இஷ்டம் இல்லன்னா சொல்லிடும்மா, வேற ஆளா இல்ல… சும்மா கம்பெனிய கவுத்து உட்றாத…”

”இல்ல சார் சில கஸ்டமர் பேசினா டிஸ்டர்பா நினைக்கிறாங்க.. அதான்  ஒதுங்கி நின்னேன்..”
”ஏம்மா ஒதுங்கி நிக்கவா சம்பளம் தர்றோம்.. நீ மேல போயி விழ வேணாம்மா.. பக்கத்துல போயி பக்குவமா பேசு.. அவங்களா சொல்லட்டும், அப்புறம் தள்ளிக்க.. முதல்ல புரோடக்ட எடுத்து டீடெய்ல் சொல்லும்மா..”

”சார்! இன்னிக்கு இருக்கிறது வெஜிடபுள் செக்சன் சார்.. இதுல என்ன சார் கேன்வாஸ் பண்றது?”

”எங்கிட்ட இவ்வளவு பேசுறல்ல? வர்றவங்க கிட்ட வாழப்பூ பத்தி பேசு! தோ அந்த பாவக்காவ காட்டி சுகருக்கு நல்லதுன்னு சொல்லு… கேரட்ட எடுத்துக் காட்டி கண்ணுக்கு நல்லதுன்னு சொல்லேன். சொல்லவா மேட்டர் இல்ல.. வெண்டைக்கா தின்னா மூளைக்கு நல்லதுன்னு சொல்லி சரக்க காலி  பண்ணு.”  சூப்பர்வைசர் பேசப்பேச எரிச்சலையும் மீறி உமாவுக்கு மெல்லிய சிரிப்பு வந்தது.

”பாத்தியா! இப்ப சிரிக்கிற பாரு, இதே மாதிரிதான் .. சிரிச்சாதாம்மா சேல்ஸ் கேர்ளு.. இப்படி சிரிச்சுப் பேசி கலகலப்பா கஸ்டமர கவர் பண்ணுவியா! அத வுட்டுட்டு, எதயோ பறிகொடுத்த மாதிரியே நிக்குறியே.. இனிமேலாவது டிசிப்ளினா வேலய பாரும்மா.. இல்லன்னா வேலய வுட்டு தூக்க வேண்டியதுதான்.. வேற வழியே இல்ல..”

சொல்லிவிட்டு வேகமாக சூப்பர்வைசர் அடுத்த செக்சனுக்கு நகர்ந்தான்.  அடுத்த கஸ்டமர் நெருங்கி வர,  சிரிப்பதற்கு சிரமப்பட்டு அவள் முயற்சியெடுத்தாள். ப்ரெஷ்ஷாக காய்கறிகளைக் காட்ட ஒளியூட்டும் விளக்கின் வெளிச்சம் அவள் முகத்திலும் பட்டது.

__________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மார்ச் 8 அனைத்து மகளிர் தின அரங்குக் கூட்டம் – செய்தி!

9

உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி ரத்தம் சிந்திய நாளான மார்ச் 8 அன்று திருச்சியில் காலை பெண்ணுரிமைப் போராளி தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கும், அம்பேத்காரின் உருவசிலைக்கும் மாலை அணிவித்து கூடியிருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதன் தொடர் நிகழ்வாக மாலை உறையூர்  பகுதியில் அமைந்துள்ள “கைத்தறி நெசவாளர்  திருமண மண்டபத்தில்” அரங்குக் கூட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கியது.

தலைமையுரையாக பெண்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் தோழர் இந்துமதி பேசும் போது, “பெண்களுக்கு சமூக அக்கறை அதிகரித்து வருகிறது. ஆனால் ஆண்கள் அதை தடைசெய்வதும், வரம்புக்குட்பட்ட உரிமைகளை மட்டும் கொடுப்பதும் உள்ளது. பெண்களுடைய திறமைகள் போர்க்குணங்கள் அதிகரிக்கும் இச்சூழலில் பெண்கள் தம்முடைய குடும்பம் என்ற வட்டத்தை தாண்டி சமூகத்திற்காக உழைக்க முன் வரவேண்டியது அவசியம் இன்று பெண்களுக்கு ஆண்கள் எதிரியல்ல, மாறாக ஆண்-பெண் சேர்ந்து செய்யக் கூடிய ஒரு புரட்சியின் மூலமே பெண் விடுதலை சாத்தியம் மற்றும் மார்ச்-08 வெறும் கோரிக்கை நாளல்ல, அது போராட்ட நாள், சர்வதேச பெண்களின் முழுமையான விடுதலைக்கு போராட பெண்கள் அணி திரள வேண்டும்” என்றார்.

பெண்கள் சட்டத்தின் முன் சமமானவர்களா? என்ற தலைப்பில் வழக்கறிஞர் மீனாட்சி பேசும்போது, “பாமர பெண்களாக இருந்தாலும் படித்த பெண்களாக இருந்தாலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருக்கின்றது. சமீபத்தில் பழங்குடி பெண்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டது. அதேபோல் ராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிந்த “அஞ்சலி குப்தா” என்ற பெண்ணும் பாலியம் வன்முறையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டார். இதற்கு காரணமான குற்றவாளிகள் மீது எந்தவிதமான கடுமையான தண்டனையும் விதிக்கப்படவில்லை.அதேபோல சொத்துரிமையிலும், ஆண்களுக்கு சாதகமாகவே சட்டங்கள் உள்ளன. “குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்” என்பதும், பெண்களுக்கு எதிரானதாகவே உள்ளது. பெண்கள் அமைப்பாக சேர்ந்து போராடும் போதே பெண் விடுதலை சாத்தியமே தவிர சட்டத்தின் மூலம் தீர்வு கிடையாது என உரையாற்றினார்.

மறுகாலனியாக்கச் சூழலில் பெண்கள் மீதான அடக்குமுறையும் அவர்களது விடுதலையும் என்ற தலைப்பில் தோழர் துரை சண்முகம் பேசும்போது:

“மறுகாலனியம் இன்று ஒட்டு மொத்த மக்களையும் வேட்டையாடும் சூழலில் பெண்களின் நிலை என்பது மிக கொடுமையாக உள்ளது. உழைப்பு சுரண்டலின் உதாரணம் சென்னை நோக்கியா கம்பெனியில் வேலை செய்த அம்பிகா என்ற பெண் யந்திரத்தில் வேலை பார்க்கும் போது கழுத்து அறுபட்ட நிலையிலும் உற்பத்தியை நிறுத்தக் கூடாது என நோக்கியா நிர்வாகம் அராஜகம் செய்துள்ளது. இன்று பல நிறுவனங்கள் பெண்களை அழகுப் பதுமைகளாகவே பார்க்கிறது. முதலாளித்துவம் பெண்களின் உழைப்பை சுரண்டுவதாகவே உள்ளது. பெண்கள் அமைப்பாக சேரவேண்டிய அவசியம் குறித்தும் அந்த உணர்வை ஊட்டுவது பெண்கள் விடுதலை முன்னணியின் கடமையாகவும் உள்ளது” என பேசினார்.

பெண்கள் விடுதலை முன்னணியினரின் அறிமுக ஆட்டத்துடன், பெண் தோழரின் சிலம்பாட்டம் நடத்தப்பட்டது. பெ.வி.மு.வின் “நவீன அடிமைகள்” நாடகம் நடத்திக் காட்டப்பட்டது. ம.க.இ.க. மையக் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சியும் சிறுவர் கலைக்குழுவின் கழியல் ஆட்டம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. முல்லைப் பெரியாறு அணை, பற்றிய சிறு நாடகமும் நடத்தப்பட்டது.

இறுதியில் நன்றியுரை, சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவுற்றது. நிகழ்ச்சியில் சுமார் 700பேர் கலந்து கொண்டனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________________________________________

செய்தி : பெண்கள் விடுதலை முன்னணி ,திருச்சி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்

42

தமிழக-மின்வெட்டு-ஜெயலலிதா-கார்டூன்

கடுமையான மின்வெட்டுக்குக் காரணம் என்ன? தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின்வெட்டுக்கே ஆற்காடு வீராசாமியின் பெயரைச் சூட்டி,  ஒரு அமைச்சரின் நிர்வாகத் திறமையின்மை, ஊழல்தான் மின்வெட்டுக்குக் காரணம் என்பதுபோல பிரச்சினையைச் சுருக்கி சித்தரித்தன ஊடகங்கள். மின்வெட்டு காரணமாக மக்களிடம் ஏற்பட்ட அதிருப்தியைப் பயன்படுத்திக் கொண்ட ஜெயலலிதா, “ஆட்சிக்கு வந்தால் ஆறே மாதத்தில் மின் பற்றாக்குறையைப் போக்குவேன்” என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தார்.

சென்ற ஆண்டு டிசம்பரில் எப்.ஐ.சி.சி.ஐ. என்ற இந்தியத் தரகு முதலாளிகள் சங்கத்தின் கூட்டத்தில் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், “2012 இல் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது” என பிரகடனம் செய்தார். 2012ஆம் ஆண்டோ, எட்டு மணி நேர மின்வெட்டுடன் தொடங்கியிருக்கிறது. “2014இல் தமிழகம் மின் உபரி மாநிலமாக இருக்கும்” என்று இப்போது குறி சொல்லியிருக்கிறார் அமைச்சர்.

திட்டமிட்டபடி அனல் மின் நிலையங்கள் உற்பத்தியை தொடங்காதது, இருக்கின்ற மின்நிலையங்களில் பழுது காரணமாக உற்பத்தி குறைந்திருப்பது, மத்திய மின் தொகுப்பிலிருந்து கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காதது என்று தற்போதைய மின்பற்றாக்குறைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

2006இல் தமிழகத்தின் மின் தேவை 8500 மெகா வாட். 2012இல் 12,000 மெகாவாட். பெருகியிருக்கும் இந்த மின் தேவையை ஈடு செய்யும் விதத்தில் தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மின் உற்பத்தி பெருக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டுகிறது அ.தி.மு.க. கடந்த பத்து ஆண்டுகளில் அ.தி.மு.க; தி.மு.க. இரு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் அரசின் சார்பில் புதிதாக மின் நிலையம் எதுவும் அமைக்கப்படவில்லை என்பதே உண்மை.

இருப்பினும் மின்வெட்டு தீவிரமடைய அடைய, மக்களின் கோபம் இந்தக் கட்சிகளை நோக்கித் திரும்பாமல்,  அணு உலைக்கு எதிராகப் போராடும் கூடங்குளம், இடிந்தகரை மக்களை நோக்கித் திட்டமிட்டே திருப்பப் படுகிறது. தினமலர், காங்கிரசு அமைச்சர் நாராயணசாமி, ப.சிதம்பரம், பாரதிய ஜனதாக் கட்சி, கருணாநிதி, போலி கம்யூனிஸ்டுகள் ஆகிய அனைவரும் ஒரே குரலில் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தை நடத்துகிறார்கள்.

குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதைதான். கடுமையானதொரு மின்பற்றாக்குறையில் நம்மைத் தள்ளிய குற்றவாளிகள் இவர்கள்தான். அணு மின்சாரம்தான் இதற்குத் தீர்வு என்று அடுத்த படுகுழியையும் இவர்கள் நமக்குத் தயார் செய்கிறார்கள்.

“மின்வெட்டை அகற்று! கூடங்குளத்தைத் திற!” என்று கோரும் சிறு தொழில் அதிபர்கள், வியாபாரிகள், விவசாயிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், தம்மையறியாமல் உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கிறார்கள்.  மின்வெட்டுக்கு எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாத, கூடங்குளம்  இடிந்தகரை மக்களைக் குற்றவாளிகளாக்குகிறார்கள்.

இப்படி ஒருபுறம் மக்களின் கோபம் குறி தவறிப் போக, இன்னொரு புறம், பிப். 16 அன்று தமிழகத்தின் பிரபல நாளேடுகளில் வெளிவந்த ஒரு விளம்பரம் மின்வெட்டு பிரச்சினையின் முக்கியமானதொரு பரிமாணத்தை நமக்கு காட்டியது.

“தமிழகத்தில் மின்பற்றாக்குறையின் அளவு 30%. இந்தப் பற்றாக்குறையை அனைவரும் சமமாகப் பகிர்ந்து கொள்வதற்குப் பதிலாக, இலட்சக்கணக்கான சிறு தொழில்களுக்கும், மேற்கு மற்றும் தென் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் 65% மின்வெட்டு விதிக்கப்படுகிறது. அதே நேரத்தில், சென்னையிலுள்ள பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் போன்றவற்றிற்கு மின்வெட்டே இல்லை. மேற்கூறிய நிறுவனங்கள் தமக்குத் தேவையான மின்சாரத்தை நேரடியாகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்தோ, தேசியத் தொகுப்பிலிருந்தோ வாங்கிக் கொள்ள ஏதுவாக கம்பித் தடங்களைப் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அவற்றைக் காட்டிலும் தமிழக மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலை குறைவு என்பதால், தமது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த மின்சாரத்தை ஒட்ட உறிஞ்சுகிறார்கள்.  மின்சாரம் என்பது தமிழக மக்களின் பொதுச்சொத்து என்பதை உணர்ந்து, தாங்கள் அனுபவித்து வரும் இச்சலுகையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தானாக முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும்”

என்று தமிழகத்தின் ஜவுளி, இஞ்சினியரிங் ஆலைகள், பவுண்டரிகள் மற்றும் சிறுதொழில் முனைவோரின் சங்கங்கள் அந்த விளம்பரத்தில் கோரியிருந்தனர். இதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் செவி சாய்க்கவில்லை. அரசாங்கமும் இந்த அநீதிக்கு பதிலளிக்கவில்லை.

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்எனினும் இந்த விளம்பரம், தமிழக மின்வெட்டின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும், அதில் பளிச்சென்று தெரியும் மறுகாலனியாக்க கொள்கையையும் அம்பலப் படுத்துகிறது. நோக்கியா, ஹூண்டாய், போர்டு, ரெனால்ட், நிஸ்ஸான், டைம்லர், அப்போலோ டையர்ஸ், செயின்ட் கோபெய்ன், நோக்கியா, சீமன்ஸ், மோசர் பேர் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், வாசல் முதல் கழிவறை வரை குளிரூட்டப்பட்ட ஆடம்பர மால்கள், ஐ.டி. நிறுவனங்களுக்காக உள்நாட்டுத் தொழில்கள் காவு கொடுக்கப்படுவதை எடுத்துக் காட்டுகிறது.

இனி தமிழகத்தின் மின் உற்பத்தி, விநியோகம் தொடர்பான சில அடிப்படையான புள்ளி விவரங்களைப் பார்ப்போம். 2010-11ஆம் ஆண்டில் தமிழகம் பயன்படுத்திய மொத்த மின்சாரம் 7499 கோடி யூனிட்டுகள். இதில் மாநில அரசுக்கு சொந்தமான மின்நிலையங்களில் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் 2578.40 கோடி யூனிட்டுகள். மீதமுள்ள 4920.60 கோடி யூனிட்டுகளை மத்திய மின் தொகுப்பிலிருந்தும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்தும் தமிழக அரசு வாங்கியிருக்கிறது.

மொத்த மின்சாரத்தில்  18.5% கம்பித்தட இழப்பு மற்றும் திருட்டுக்குப் போய் விடுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும் வாரியத்துக்கு ஏற்படும் இழப்பு மட்டும் ரூ.2000 கோடி.

மாநில அரசு உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு 0.21 காசுகள் (நீர்மின்சக்தி). அதிக பட்சம் யூனிட்டு ரூ.2.14 காசுகள்(அனல்மின்சக்தி). தமிழகத்திலுள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தமிழக அரசு விலைக்கு வாங்கும் மின்சாரத்தின் விலை குறைந்த பட்சம் யூனிட்டுக்கு ரூ.3.96. அதிகபட்சம் ரூ.17.00.

201112 கணக்கீட்டின்படி மின்வாரியம் உற்பத்தி செய்கின்ற மற்றும் வாங்குகின்ற மொத்த மின்சாரத்தின் சராசரி அடக்க விலை  யூனிட் ஒன்றுக்கு ரூ.5.31. விற்பனை செய்கின்ற மின்சாரத்தின் சராசரி விலை யூனிட் ஒன்றுக்கு 3.81. இந்த வகையில் தற்போது யூனிட் ஒன்றுக்கு ஏற்படும் இழப்பு ரூ.1.50. இதனை ஈடு செய்வதற்குத்தான் மின் கட்டண உயர்வு என்று ஜெயா அரசு கூறுகிறது.

தமிழகத்தின் மின்சாரம் வீடுகள் 27%, விவசாயம் 20.93%, வணிக நிறுவனங்கள் 10.43%, தொழிற்சாலைகள் 34.92% என்றவாறு நுகரப்படுகிறது. வீடுகளுக்கு ரூ.1.85 முதல் ரூ.2.90 வரை; வணிக நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு ரூ.5.05 முதல் ரூ.6.00 வரை; தொழில் துறைக்கு ரூ.3.30 முதல் ரூ.4.05 வரை  என்ற விகிதத்தில் கட்டணம் விதிக்கப்படுகிறது. இதில் வீடுகளுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு குறைந்த பட்சம் ரூ.2.00 இல் தொடங்கி அதிகபட்சம் ரூ.5.75 என்று உயர்த்தவிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

மேற்கூறிய விவரங்களிலிருந்து பெறப்படும் உண்மை என்ன? மாநில அரசானது, மின் உற்பத்தி நிலையங்களைத் தானே நிறுவாமல், தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரத்தை வாங்குவதால்தான் மின்சாரத்தின் விலை பன்மடங்கு அதிகரிக்கிறது. தமிழக மின்வாரியத்தின் 9% மின்சாரத் தேவையை நிறைவு செய்து விட்டு, வாரியத்தின் வருவாயில் 35 சதவீதத்தை தனியார் முதலாளிகள் விழுங்கிவிடுகின்றனர் (இந்தியா டுடே, பிப்,29, 2012).

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்மின் கட்டண உயர்வுக்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், ‘தனியார் முதலாளிகளிடமிருந்து மின்சாரம் வாங்குவது ஏன்?’ என்று மக்கள் கேட்டதற்கு, “அவ்வாறு வாங்கவில்லையென்றால், 18 மணி நேர மின்வெட்டை அமல்படுத்த வேண்டியிருக்கும்” என்று பதிலளித்திருக்கிறார் தமிழக மின்வாரியத்தின் நிதிப்பிரிவு இயக்குநர் ராஜகோபால் (தினமலர், ஜன30, 2012). தமிழக மின்வாரியத்தின் தற்போதைய கடன் 56,000 கோடி ரூபாய் என்றும் இவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த 56,000 கோடி கடன் வந்தது எப்படி? விவசாயத்துக்கான இலவச மின்சாரம்தான் இதற்கு காரணம் என்று பலரும் இதற்கு பதிலளிக்கக் கூடும். அது உண்மைதானா என்பதை விவரங்களிலிருந்து பின்னர் பார்ப்போம். விவசாயத்துக்கு ஆற்றுத் தண்ணீரை விவசாயிகளுக்கு இலவசமாகத் தரக்கூடாது என்று கூறுவதும், இலவச மின்சாரம் கூடாது என்று கூறுவதும் ஒன்றே.  நீர்ப்பாசனம் என்பது விவசாயத்துக்கான அடிப்படைக் கட்டுமான வசதியாகும். இதனை செய்து தருவது அரசின் கடமை. கால்வாய் அல்லது ஏரிப்பாசன வசதிகளை அரசு செய்து தரத் தவறியதால், தனது சொந்தச் செலவில், கிணறு/பம்புசெட் போட்டுக் கொள்ளும் விவசாயிக்கு மின்சாரத்தை வழங்குவது அரசின் கடமை. அது இலவசமல்ல, சலுகையுமல்ல.

ஆறு வழிச்சாலைகள், சலுகை கட்டணத்தில் சரக்கு ரயில்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சாரம்தண்ணீர் உள்ளிட்ட வசதிகள், குறைந்த வட்டியில் வங்கிக் கடன்கள், பிட்டர்டர்னர் முதல் பொறியியல், மேலாண்மைத் துறைகள் வரையிலான அனைத்திலும் தகுதியான நபர்களை உருவாக்கி முதலாளிகளுக்கு வழங்கும் கல்லூரிகள், ஏற்றுமதி மானியங்கள், இறக்குமதி வரிச்சலுகைகள்  என மக்களின் வரிப்பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிக் கொட்டுகின்ற அரசு, இவற்றையெல்லாம் முதலாளிகளுக்கான ‘இலவசம்’ என்று அழைப்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

யூனிட் 17 ரூபாய் வரை விலை கொடுத்து வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்தை, ரூ.3.30 விலையில் கார்ப்பரேட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் தமிழக அரசு, இதனை மானியம் என்று கூறுவதில்லை. அதனால் ஏற்படும் இழப்பையும் கணக்கிட்டுக் கூறுவதில்லை. இதைத்தான் மின்வெட்டுக்காக சிறு தொழிலதிபர்கள் கொடுத்துள்ள விளம்பரம் அம்பலப்படுத்துகிறது.

அதேபோல, கம்பித்தட இழப்பு என்று கூறப்படும் சுமார் 18.5 சதவீதத்தில் பெரும்பகுதி  ஆலை முதலாளிகள் செய்யும் மின்சாரத் திருட்டாகும். துணை மின்நிலையங்களிலிருந்தே நேரடியாகவே மின்சாரம் திருடப்பட்டாலும், அந்த மின்சாரமும் ‘இழப்பு’ என்று காந்திக் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகிறது. இவை ஒருபுறமிருக்க, “தகவல் தொழில் நுட்பத்தின் துணையுடன் இயங்கும் தொழில்களுக்கான (ITES) மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 5 ரூபாயிலிருந்து ரூ.3.50 ஆக குறைக்க வேண்டும்” என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறது தமிழ்நாடு மின்வாரியம். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மின்சாரத்தின் விலை என்ன என்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ள யாருமறியாத இரகசியம். இவை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பற்றிய விவரங்கள்.

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்இனி வாங்கப்படும் மின்சாரத்துக்கு வருவோம். மின் வாரியம் அளிக்கும் விவரங்களின்படியே, அரசாங்க மின்சாரத்தின் விலையை விட தனியார் மின்சாரத்தின் கொள்முதல் விலை பன்மடங்கு அதிகமாக இருப்பதுதான் மின் வாரியத்தின் நட்டத்துக்கு காரணம். இன்டிபென்டென்ட் பவர் புரொடியூசர்ஸ் (சுயேச்சையான மின் உற்பத்தியாளர்கள்) என்று அழைக்கப்படும் தனியார் முதலாளிகளிடம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து கொண்டும், மெர்ச்சென்ட் பவர் கார்ப்பரேசன் (வணிக மின் உற்பத்திக் கழகங்கள்) என்று அழைக்கப்படுவோரிடம் சந்தை விலையிலும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்கிறது அரசு. மின்சாரத்தின் வெளிச்சந்தை விலை சென்ற ஆண்டில் மட்டும் குறைந்த பட்சம் யூனிட் ரூ.1.10 இல் தொடங்கி ரூ.12.00 வரை ஏறி இறங்கியுள்ளது. இதில் எப்போதுமே குறைந்த பட்ச விலையைக் கூறுவது அரசு மின் நிலையங்களாகவும், அதிக பட்ச விலையைக் கோருவது தனியார் முதலாளிகளுமாகவே இருக்கின்றனர்.

இன்று மின் வெட்டை சமாளிப்பதற்காக யூனிட் ரூ.4.50 விலையில் குஜராத்திலிருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு வாங்கி வருகிறது. இதில் 235 மெகாவாட் மட்டுமே வந்து சேர்வதாகவும் 265 மெகாவாட் மின்தட இழப்பில் போய்விடுவதாகவும் கூறுகிறார் அமைச்சர் நத்தம் விசுவநாதன். இதனால், வாங்குகின்ற மின்சாரத்தின் உண்மையான விலை யூனிட்டுக்கு 10 ரூபாய் ஆகிவிடுகிறது. இதே மின்சாரத்தை தமிழகத்தின் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அரசு வாங்க முடியும். தமிழகத்தின் காற்றாலை மின் உற்பத்தித் திறன் மட்டும் 6007 மெகாவாட். தனியார் அனல் மின் நிலைய உற்பத்தித் திறன் 1180 மெகாவாட். “சென்ற ஆண்டு யூனிட் 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை கொடுத்து 1500 மெகாவாட் மின்சாரத்தை தனியாரிடம் வாங்கினோம். 10,000 கோடி ரூபாய் அவர்களுக்கு பாக்கி வைத்திருப்பதால், இந்த ஆண்டு எதுவும் செய்வதற்கில்லை” என்று கூறுகிறார் ஒரு மின்வாரிய அதிகாரி. (டைம்ஸ் ஆப் இந்தியா, பிப்.23, 2012)

இதுநாள் வரை  யூனிட் 5 ரூபாய்க்கு தங்களிடம் மின்சாரத்தை வாங்கிவந்த மின்வாரியம், இப்போது ரூ.3.50 கேட்பதாகவும், இதன் காரணமாக 800 மெகாவாட் அனல்மின் உற்பத்தியை முடக்கவேண்டியிருக்கும் என்றும் சென்ற ஆண்டு மே மாதம் தமிழக அரசிடம் தெரிவித்திருக்கிறது தனியார் மின் உற்பத்தியாளர் சங்கம். (டைம்ஸ் ஆப் இந்தியா, மே 30, 2011) “மின்சாரத்தின் விலையைக் கூட்டி விற்பதன் மூலம் மின் வாரியத்தை நட்டத்தில் தள்ளுகின்ற தமிழ்நாட்டிலுள்ள 5 தனியார் அனல் மின் நிலையங்களை உடனே அரசுடைமை ஆக்கு” என்று தீர்மானமே இயற்றி தி.மு.க. அரசுக்கு அனுப்பியிருக்கிறது தமிழ்நாடு மின்வாரியப் பொறியாளர் சங்கம் (தி இந்து, 19.5.2008).

தனியார் மின் நிலையங்களை அரசுடைமை ஆக்குவது இருக்கட்டும், முதலில் கூரை ஏறிக் கோழி பிடித்தார்களா என்று பார்ப்போம். 20052010 காலகட்டத்தில் மின் தேவை 3977 மெகாவாட் அதிகரித்தது என்றும், ஆனால் வெறும் 290 மெகாவாட் அளவிற்கு மட்டுமே புதிதாக உற்பத்தி செய்யப்பட்டதென்றும் 200910 க்கான கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை கூறுகிறது. இது ஒன் றைத் தவிர 20012010 காலகட்டத்தில், (அதாவது அ.திமு.க; தி.மு.க. இரு ஆட்சிகளிலும்) புதிதாக ஒரு மெகாவாட் கூட உற்பத்தித்திறன் கூட அதிகரிக்கப்படவில்லை.

இந்தப் பத்தாண்டுகளில் ஜெயாவும் கருணாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு தமிழகத்தில் கொண்டு வந்து இறக்கியிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள், சென்னையிலும் மற்ற பெரு நகரங்களிலும் பெருகியிருக்கும் ஆடம்பர மால்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், நடுத்தர வர்க்கத்தினரிடையே பெருகியிருக்கும் விதவிதமான மின் உபகரணங்கள், ஏ.சி.மிசின்கள் ஆகிய இவற்றுக்கான மின்சாரத்தை யார் கொடுப்பது? இதற்காகவேனும் மாநில அரசு தனது சொந்த அனல் மின்நிலையங்களைத் தொடங்கவேண்டும் என்று அ.தி.மு.க; தி.மு.க அரசுகளுக்குப் புரியாததற்குக் காரணம் அறியாமையா, நிர்வாகத் திறமையின்மையா?

மின்வெட்டு : இருளில் மறைந்துள்ள உண்மைகள்இரண்டுமல்ல. புதிதாக அரசுப் பள்ளிகளோ கல்லூரிகளோ திறக்காமல், மெட்ரிக் பள்ளிகள், சுயநிதிக் கல்லூரிகளின் கொள்ளைக்கு கல்வியைத் திறந்து விட்டிருப்பதற்கு எது காரணமோ, அதுதான் அரசு தனது சொந்த முதலீட்டில் மின்நிலையங்களைத் தொடங்காததற்கும் காரணம். “மருத்துவம், கல்வி ஆகியவற்றைப் போலவே, மின்சாரமும் ஒரு விற்பனைச் சரக்கு. பொதுநல நோக்கிலோ அல்லது சமூக நோக்கிலோ அரசாங்கம் மக்களுக்கு மின்சாரத்தை குறைந்த விலையில் வழங்குவது கூடாது. அதன் விலை சர்வதேச சந்தை விலையோடு ஒத்திருக்கவேண்டும். அப்போதுதான் பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய மின் துறையில் முதலீடு செய்ய இயலும்” என்ற உலக வங்கியின் ஆணைப்படி 2003 இல் பாரதிய ஜனதா அரசு  புதிய மின் சட்டத்தை இயற்றியது.

அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட 1948 மின்சாரச் சட்டம், மின்சாரம் என்பதை விவசாயம், தொழில், மற்றும் வீட்டு உபயோகங்களுக்கான அத்தியாவசியத் தேவையாகவும், லாப நோக்கமின்றி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய சேவையாகவும் வரையறுத்தது. இதன் காரணமாகத்தான் பல மாநிலங்களின் குக்கிராமங்கள் வரை மின்கம்பிகள் சென்றன. 2003 சட்டமோ மின்சாரத்தை லாபமீட்டும் சரக்காகவும், மின் விநியோகத்தை வணிக நடவடிக்கையாகவும் வரையறுத்தது. மாநில மின் வாரியங்கள் மின் உற்பத்தி, மின் கடத்துதல், மின் விநியோகம் என்று மூன்று நிறுவனங்களாக உடைக்கப்பட்டன. மின் உற்பத்தி தனியார் மயமாக்கப்பட்டது.

இன்று அனைத்திந்திய அளவில் தனியார் மின் நிலையங்களின் உற்பத்தி 48,000 மெகாவாட். நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் இது 23% ஆகும். அடுத்த சில ஆண்டுகளில் தனியார் உற்பத்தி மேலும் 30,000 மெகாவாட் அதிகரிக்க இருக்கிறது. அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளை அனுமதிக்க இருக்கிறது மன்மோகன் அரசு. தமிழ்நாட்டில் மட்டும் 18,140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 10 வணிக மின் உற்பத்திக் கழகங்களுக்கு (அனல் மின்சாரம்) தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது.

நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் கார்ப்பரேட் முதலாளிகளின் பங்கு மென்மேலும் அதிகரிப்பதையே இவை காட்டுகின்றன. இது அதிகரிக்க அதிகரிக்க மின்சாரத்தின் விலையை நிர்ணயம் செய்யும் அதிகாரம் அரசின் கையிலிருந்து அவர்கள் கைக்கு முழுவதுமாக மாறிவிடும். ‘மேட்டூர் நீர்மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு 20 காசு’ என்று தமிழக மின்வாரியம் கூறினாலும், ‘கூடங்குளம் அணுமின்சாரம் அஞ்சே காசுகள்’ என்று அப்துல் கலாம் கூவினாலும், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு நாம் செலுத்த வேண்டிய கட்டணம் எவ்வளவு என்பதைத் தீர்மானிப்பவர்கள் கார்ப்பரேட் முதலாளிகளாகத்தான் இருப்பார்கள். மருத்துவம், கல்வி முதலான துறைகளில் மக்களின் இரத்தத்தைப் பிழிந்து காசாக்கத் தெரிந்த முதலாளிகள், கரெண்டு பில்லுக்கான காசை நம் எலும்பைப் பிழிந்தேனும் எடுத்துவிடுவார்கள்.

மின்சாரம் தனியார்மயம் என்பது உழைக்கும் வர்க்கத்தின் மீதும், உள்நாட்டு சிறு தொழில்கள் மற்றும் விவசாயத்தின் மீதும் நிரந்தரமான மின்வெட்டைத் திணித்துவிடும். இன்றைய மின்வெட்டுக்கு முக்கியக் காரணம், மின்சாரம் வாங்குவதற்கு தமிழக மின்வாரியத்திடம் பணமில்லை என்பதே; மின்சாரப் பற்றாக்குறை என்பது இரண்டாவது காரணம்தான்.  மின்சாரத்தின் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் நாளை பன்னாட்டு முதலாளிகள், தரகு முதலாளிகளின் கைகளுக்கு முற்றிலுமாக மாறிவிடும்போது, அவர்கள் சொல்லும் சர்வதேச சந்தை விலைக்கு மின்சாரத்தை வாங்க நம்மிடம் பணமிருக்காது. எனவே மின்வெட்டு நம்மீது திணிக்கப்படும். அந்த மின்வெட்டிலிருந்து நம்மைக் காப்பாற்ற எந்த அணு சக்தியாலும் முடியாது. அதற்கு மக்கள் சக்தி தேவைப்படும். இன்று கூடங்குளத்தைக் கூடாதென்று நிறுத்தி வருகிறதே, அதே மக்கள் சக்திதான்!

______________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012
___________________________________________

டேய், யாராவது பக்கத்துல உட்காருங்கடா!

6

நகரப் பேருந்து நிலையம். டவுன் பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் வெகுநேரம் சோர்வளித்தது. சுற்றியுள்ள காட்சிகளில் கண்கள் நேரம் மறந்தன. சிவந்து உப்பிய பஜ்ஜியை தினத்தந்தி பேப்பரில் ஒரு அப்பு அப்பி பிழிந்து எடுத்தவர், ஏதோ மவுத் ஆர்கன் வாசிப்பது போல அதை விதவிதமாக வாயில் வைத்து ஊதி ஊதிக் கடித்துத் தீர்த்தார். தின்று முடித்தவுடன் அந்தப் பெரியவர் கை நிறைந்து காணப்பட்ட எண்ணைய்ப் பசையை முழங்காலுக்குக் கீழே முழுவதும் தடவிக் கொண்டார். ஆயில் மசாஜ் போல கால் விரல்களின் இடுக்கு வரை எண்ணெய்க் கைகளை தேய்த்தார்.

பக்கத்தில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த எனது வியப்பைப் புரிந்து கொண்டவர் போல, ”தம்பி! என்ன பாக்குறீங்க, இந்த எண்ணைய இப்படி ஒரு தடவு தடவுனாத்தான் இந்த பஸ்ஸ்டாண்டு கொசுக் கடிக்கு நமக்கு பாதுகாப்பு! இந்த எண்ணெ வாசத்துக்கு கொசு நம்ம பக்கமே தல வெச்சுப் படுக்காது பாருங்க.. ஹி..ஹி..”  .

அவர் சிரிப்பும், அனுபவ அறிவும் எனக்குப் புதுமையாகப் பட்டது. இன்னொரு பக்கம் தட்டு முறுக்கை தஞ்சாவூர் கோபுரம் போல அடுக்கி வைத்திருந்த பெட்டிக் கடைக்காரரின் செய் நேர்த்தி என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. தேவைக்கு வெளியூர் போய் வரும் ஒரு பெரிய கிராமத்துக் குடும்பம் சில்வர் வாளி, ஒயர் பேக்குகளை நடுவில் வைத்து சுற்றிலும் பாதுகாப்பு அரணாக அமர்ந்திருந்தார்கள்.

ஓரிரு குட்டிப்பையன்கள் அவர்களைச் சுற்றி வருவதும், திடீரென அவர்கள் கழுத்தைக் கட்டிக் கொண்டு சிரிப்பதுமாகப் பொழுதைக் கழித்தனர். பெண்டு பிள்ளைகளுக்குத் துணையாக நிற்கும் ஆண்களின் முகத்தில் பஸ் வந்தால் ஒரே ஓட்டமாக ஓடிப்போய் சீட்டப் பிடிக்கணும் என்ற முடிவு குறிப்பாகத் தெரிந்தது.

”நேரத்துக்குள்ள பஸ்ஸு வந்து தொலைச்சா இராச்சோற வீட்டுல போயி திங்கலாம்.” என்று அதிலொருவர் தனது பொருளாதார நிலைமைக்கேற்ப பேசிக் கொண்டிருந்தார். பிளாஸ்டிக் ஊதல் விற்கும் சிறுவன் வேண்டுமென்றே குழந்தைகளைப் பார்த்து ”பீப்பி..” என ஊத ”… டே போடா! நீ வேற புள்ளைங்கள கௌப்பி விட்றாத! ஆளுக்கு ஒண்ணு கேட்டுத் தொலைக்குங்க. போடா அந்தப் பக்கம்” என்று நகர்த்தி விட்டனர். பெரிய பொதிகள் முதுகுத் தண்டை வளைக்க, பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளும் திடீரென பேருந்து நிலையமெங்கும் செடி, கொடிகளாய் முளைத்தனர்.

”டே, ராசப்பா… டேய்..” வளைந்து குலுங்கிய டவுண் பஸ்ஸின் படியில் தொற்றிக் கொண்டு நுழைவாயிலிலேயே ஏறிக் கொண்டவன் செம்மண் புழுதியைக் கிழித்துக் கொண்டு கத்தினான். ”டேய் சீக்கிரம் வா.. சீட்டு போயிடும் ஆமா..” கத்திக் கொண்டே  படிக்கட்டிலிருந்து உள்ளே தலையைக் கொடுத்து முண்டினான். போக்கு காட்டி ஒரு வழியாக பஸ்ஸை நிறுத்திய டிரைவர் படிக்கட்டின் வழி இறங்க முடியாமல், டிரைவர் சீட்டின் வழியாகக் குதித்தார். ”இறங்க வுடுதுங்களா பாரு, சனியனுங்க.. பொம்பளய போட்டு இந்த இடி இடிக்கிறானுவ.. ” கண்ட கண்ட வார்த்தையில் திட்டியபடி பாட்டி ஒன்று கமறி உமிழ்ந்தபடியே இறங்கினார்.

”ஆசயப் பாரு, உன்ன இடிக்கதான் ஏர்றாங்களாக்கும், சீக்கிரம் எறங்கு.” ”எறங்குறண்டா மவனுங்களா..” என்று காலம் புரியாமல் கத்திக் கொண்டே போனார் பாட்டி. பிதுங்கி நுழைந்து சீட்டைப் பிடித்த வேகத்தில் சிலர் சட்டைப் பட்டன்கள் காணாமல் தேட ஆரம்பித்தனர். பள்ளிப் பிள்ளைகளின் நிலைமையோ பரிதாபமாக இருந்தது. அவர்கள் படிக்கட்டில் காலை வைத்தால் போதும். மூட்டையோடு அப்படியே அலாக்காக அவர்களைத் தூக்கி உள்ளே நுழைத்தது கூட்டம். சீட்டுப் பிடித்த பின்பும் சண்டை சச்சரவும், சத்தமும் நீடித்தது.

தாராளமாக நிற்கும் நிலையிலும் பேருந்தில் ஒரு இருக்கையில் மட்டும் ஒருவருக்குப் பக்கத்தில் யாரும் அமராமல் வந்த வேகத்தில் உட்கார்ந்திருப்பவரை நோட்டம் பார்த்தவாறு நகர்ந்து போயினர். தொலைவிலிருந்து அந்த ஆளைப் பார்த்தால் மிடுக்கான டீசர்ட், பேண்டுடன் தடித்த உருவமாய்த் தெரிந்தார். தோரணையைப் பார்த்தால் குடிகாரனாகவோ, அருவருப்பூட்டும் தோல் வியாதிக்காரராகவோ தெரியவில்லை. சற்று நெருங்க அவர் போட்டிருந்த செண்ட் வாசனை கமகமத்தது. இருப்பினும் வேகமாக சீட் இருப்பதாய் நினைத்து வரும் யாரும் அவர் பக்கத்தில்  அமராமல் இடம் பெயர்ந்தனர்.

பிச்சைக்காரர் போல தோரணை உள்ள ஒருவர் வேகமாக வந்து இருக்கையைப் பார்க்க ”உட்காருய்யா, யாருமில்ல” என்று வாட்டசாட்டம் சொல்லிப் பார்க்க… ”தோ முன்னாடி” என்று நழுவிச் சென்றார். நின்று கொண்டிருந்த பலரும் காலியான இருக்கையில் தன் பக்கத்தில் உட்காராத நிலைமை வாட்டசாட்டமானவரை தனிமைப்படுத்தியதுடன், ஒரு கேவலத்தையும் ஏற்படுத்தியது. சுற்றும் முற்றும் அவசரமாக நோட்டமிட்டவர் சாதாரணமாக அழைத்தாலும் யாரும் வராத  சூழ்நிலையில் ஒரு பள்ளிச் சிறுவனை வெடுக்கென பிடித்து இழுத்து, ”டேய், இங்க உட்கார்றா..”  என்று அதட்டல் குரலில் அமர வைத்தார்.

அவனோ இருப்புக் கொள்ளாதவன் போல இடப்பக்கமாக நெளித்து உட்கார்ந்து கொண்டு, தன்னை பார்க்காத நேரம் அந்த ஆசாமியை முழுவதும் உற்றுப் பார்த்து விட்டு வெடுக்கெனத் திரும்பிக் கொண்டான். திடுமென எழுந்தவனைத் திரும்பவும் அந்த ஆள்.. ”உட்கார்றா..” என்று விரட்ட… ”ஏங்க! எறங்கனுங்க!” என்று ஓடினான்.

ஒட்டுமொத்தமாக யாருக்கும் பிடிக்காமல் போன அந்த ஆள் யார்தான்  என்று அவரது முகத்தை உற்றுப் பார்த்தேன். மப்டி போலீஸ் என்பது தெளிவாகப் பட்டது.

_____________________________________________

புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வங்கிக் கொள்ளையன் மல்லையாவுக்கு என்கவுண்டர் எப்போது?

18
என்கவுண்டர்
ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்டவர்கள்

சென்னையில் வங்கிக் கொள்ளையர்கள் போலி மோதலில் போலீசாரால் கொல்லப்பட்டது நமக்குத் தெரியும். வங்கிகளிலிருந்து லட்சக்கணக்கில் மொத்தமாக கொள்ளையடித்தவர்களுக்கு உடனடி தண்டனை வழங்கி போலீசார் தமது ‘நீதிபரிபாலனத்தை’ நிலைநாட்டியுள்ளனர். தமிழக போலீசின் இந்த ‘அருஞ்சாதனை’ நிகழ்ந்த காலத்தில்தான் நாமும் இங்கு வாழ்ந்தோம் என்பதே ‘பெருமைக்குரிய’ விசயம். ஆனால், சென்னை போலீசின் கடமை இத்துடன் முடிவடையவில்லை. இன்னுமொரு வங்கிக் கொள்ளையனின் ‘கணக்கை’ முடிக்க வேண்டிய பெரும்பொறுப்பு தற்போது அவர்கள் முன் காத்திருக்கிறது. அது வேறு யாருமல்ல, கில்மா காலேண்டர் புகழ் சாராய மல்லையாதான் அந்தக் கொள்ளையன்.

கிங் பிஷர் ஏர்லைன்ஸ் என்ற பெயரில் விமானப் பயணச் சேவை வழங்கி வரும் இந்த கொள்ளைக்காரன் வங்கிகளில் சேமிக்கப்பட்டுள்ள மக்களின் பணத்திலிருந்து இது வரை ஆட்டையப்போட்டுள்ள தொகை 7000 கோடிகளுக்கும் மேல். இது தவிர கிங்பிஷர் ஊழியர்களின் ஓய்வூதியப் பணம் 44 லட்சம், வருமான வரி 422 கோடிகளையும் கொள்ளையடித்துள்ளான் இந்த கேடி பக்கிரி. கிங் பிஷர் ஊழியர்களின் வருமான வரி 42 கோடிகளையும் அரசுக்கு கட்டாமல் ஏப்பம் விட்டுள்ளான் இந்தக் கிரிமினல். 2011 இறுதியில் பணமில்லாமல் தொங்கிச் சரிந்தது கிங் பிஷர் நிறுவனம். உடனே கோடிக்கணக்கில் கொட்டி கைதூக்கி விட்டன இந்திய வங்கிகள். இந்த வகையில் SBI மட்டும் 1457 கோடி கடனாகவும், 180 கோடிகள் கிங் பிஷர்

வங்கிக்-கொள்ளையன்-மல்லையா
கொள்ளைக்காரன் மல்லையா - என்கவுன்டர் வெயிட்டிங் லிஸ்ட்?

பங்குகளை(5.67% share – இதன் இன்றைய மதிப்பு வெறும் 76 கோடிகள்) துட்டு கொடுத்து வாங்கியதன் மூலமும் கொட்டியது (மொத்தம் 1650 கோடிகள்). இதே போல தனியார் வங்கியான ஐசிஐசிஐ 430 கோடிகள் கடனாகவும், 5.3% பங்குகளை துட்டு கொடுத்து வாங்கியும் உள்ளது.

குதிரை குப்புறத் தள்ளியதோடல்லாமல் குழியும் பறித்த கதையாக, மொத்தத்தில் 19 வங்கிகள் மக்களின் சேமிப்பிலிருந்து பல்லாயிரம் கோடிகளை கடனாக கொடுத்துள்ளதுடன் அல்லாமல், நஷ்டத்தில் ஓடும் இந்நிறுவனத்தின் 23% பங்குகளையும் வாங்கியுள்ளன. 23% பங்குகளை வைத்துள்ள இவ்வங்கிகளின் கூட்டமைப்பு கிங்பிஷரின் செயல்பாடுகளை முறைப்படுத்தி அதனை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற முயற்சி செய்தனரா என்றால் இல்லை. காரணம் இந்நிறுவனம் ஒரு மூழ்கும் கப்பல் என்று தெரிந்தேதான் மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் கொட்டியுள்ளனர். செப்டம்பர் 2011னில் கனடா நாட்டு நிறுவனமான வெரிடாஸ் கிங்பிஷரின் யோக்யதையை அம்பலப்படுத்தி அது ஒரு ‘420’ நிறுவனம் என்று அறிவித்துள்ளது. இதோ இப்போது பிப்ரவரி 2012ல் மீண்டும் ஒருமுறை கடன் கொடுங்கள் அய்யா என்று கொள்ளையடிக்க கிளம்பியுள்ளான் மல்லையா. இப்படியாப்பட்ட நிறுவனத்துக்கு வங்கிகள் மீண்டும் கடன் கொடுத்து கை தூக்கிவிடுவதில் ஆட்சேபனை இல்லை என்று சர்டிபிகேட் கொடுக்கிறது ரிசர்வ் வங்கி.

இன்றைக்கு 19 வங்கிகள் கிங் பிஷரில் கொட்டிய கோடிக்கணக்கான பணம் கணக்குப் புத்தகத்தில் மட்டும் இருக்கும் பணமாக மாறிவிட்டது(non performing asset). நிலைமை இப்படியிருக்கு இப்போது இன்னொரு முறை கிங்பிஷருக்கு 1500 கோடிகளை கொடுத்துள்ளது SBI. ஊர் பணத்தை எடுத்து உலையில் போடுவது போல, கவனிக்கவும்  நண்பர்களே,  SBIன் பிம்பிலிக்கிபியாப்பியான முதலீடுகளில் பெரும்பகுதி முதலீடு கிங் பிஷரில் இடப்பட்டதுதான்.

மல்லையாவின்-வங்கிக்-கொள்ளை
மல்லையாவின் வங்கிக் கொள்ளை பட்டியல்

ஆஹ, நஸ்டம் என்னவோ கடன் கொடுத்த வங்கிகளுக்கும், குப்பைக்கூடைக்குக் கூட தகுதியில்லாத பங்குகளை கோடிக்கணக்கில் வாங்கிய பங்குதாரர்களுக்கும், கிங் பிஷர் ஊழியர்களுக்கும்தான், நம்ம சாராய மல்லையாவின் சொத்து மதிப்போ 22850 கோடிகளில் கும்மென்றுதான் உள்ளது. இந்த நாதாரிக்கு கடன் கொடுப்பதே ஒரு கிரிமினல் குற்றம் இதில் இவனது சொத்துக்களை அடமானமாக வைத்து கடன் கொடுப்பது என்றால் அப்படி ஒரு கடன் தேவையில்லை என்று சொல்கிறான் மல்லையா.

கிங்பிஷர் மட்டுமல்ல, மல்லையாவின் பிற குடி-கூத்து நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து வங்கிகளுக்கு மொட்டையடித்துள்ள கடன் தொகை 14000 கோடிகள். டாடா, அம்பானி, மித்தல் போன்ற இப்படியாப்பட்ட மலைமுழுங்கித் திருடர்கள்தான் நாட்டின் பெருமைமிகு குடிமகன்களாக வலம் வருகிறார்கள்.

பீகார்-கொள்ளையன்
டாடா, அம்பானி, மல்லையாவுக்கு எப்போது?

பீஹாரில் ஒரு திருடரை(மல்லையாவுக்கே மரியாதை கொடுக்கும்  போது….) போலீசுக்காரன் தனது மோட்டார் சைக்கிளில் கட்டி இழுத்துச் சென்று தண்டனை கொடுத்தான். நாட்டு மக்களின் சேமிப்பையும், நாட்டின் வளங்களையும் கொள்ளையடித்து அந்தப் பணத்தில் 20 அடுக்கு மாட மாளிகைகள், ஹெலிகாப்டர்கள், உல்லாச விடுதிகள், கடலில் மிதக்கும் சொர்க்கம் போன்ற கப்பல்கள், கில்மா கூத்துகள் என உல்லாசமாக கோட்டமடிக்கும் மல்லையா, டாடா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கு இந்த தண்டனைகளை யார் கொடுப்பது?

இன்று காலை இந்து பத்திரிகையில் முதல் பக்கத்தில் ஒரு செய்தியறிக்கை சொல்கிறது, ஆந்திர விவசாயிகள் பலர் கடன் வழங்கிய நிறுவனங்கள் தமக்கு செய்த அவமானங்கள் பொறுக்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று. 1.5 லட்சம் கடன் வாங்கிய குற்றத்திற்காக ஒரு தாய் வயிற்றுப் போக்கு வந்த தனது குழந்தையை மருத்துவரிடம் காட்ட அனுமதி மறுக்கப்பட்டாள். ஒரு லட்சம் கடனை திருப்பிச் செலுத்து இல்லையென்றால் உன் பிள்ளைகளை விபச்சாரத்திற்கு அனுப்பு என்று மிரட்டப்பட்டதை எதிர்க்க வழியின்றி தற்கொலை செய்து கொண்டாள் இன்னொரு தாய்.

இவர்களின் தற்கொலைகள் நாட்டு மக்களுக்கு சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான், ‘எங்களுக்கு மானம் ரோசம் இருக்கு நாண்டு கொண்டோம். டாடா அம்பானி மல்லையா உள்ளிட்டவர்களின் முதலாளித்துவ கொள்ளைகளையும், எங்களது தற்கொலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு மான ரோசம் இருக்கா? இருந்தால் ‘தற்’கொலைகளின் சூத்திரங்களை தலைகீழாக மாற்றுங்கள்’ என்பதுதான். மாற்றுவீர்களா?

______________________________________________________________________<

முதற்பதிப்பு- அசுரன்
(நன்றி தி இந்து மற்றும் நம் கூகிள் உறவினர்கள் எல்லாம்….)

______________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

________________________________________________________________

________________________________________________________________

________________________________________________________________

________________________________________________________________