Thursday, August 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 762

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்!! அனைவரும் வருக!

29

ஆபத்தான அணு உலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்!!

 

பொதுக்கூட்டம்

பிப்ரவரி 25, மாலை 6 மணி

எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட், சென்னை.

தலைமை

தோழர் அ. முகுந்தன், தலைவர், பு.ஜா.தொ.மு, தமிழ்நாடு

சிறப்புரை

தோழர் மருதையன், பொதுச்செயலாளர், ம.க.இ.க தமிழ்நாடு

தோழர் ராஜூ, வழக்குரைஞர், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்,தமிழ்நாடு

புரட்சிகர கலைநிகழ்ச்சி, ம.க.இ.க மையக் கலைகுழு

பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் வருக

தொடர்புக்கு

முகுந்தன் – 944448 34519
வினவு – 97100 82506

கூடங்குளம் அணு உலையை மூடு பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்

கூடங்குளம் அணு உலையை மூடு பிப்.25 சென்னையில் பொதுக்கூட்டம்

அழைப்பிதழை பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

இந்த அழைப்பிதழ் PDF பெற இங்கு அழுத்தவும்

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,
பெண்கள் விடுதலை முன்னணி.

கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!

74

’மாணவர்களே மாணவர்களைப் படிக்க வைக்கும்’ புதிய மறுமலர்ச்சித் திட்டம் ஒன்றை தொடங்கி வைத்திருக்கிறார் இயக்குநரும், நடிகருமான சசிக்குமார். கும்பகோணம் அருகே உள்ள அன்னை கல்லூரியில் மாணவர்களிடம் உண்டியல் ஏந்தி வசூல் செய்தார் சசி. மொத்தம் ஒரு லட்ச ரூபாய் சேர்ந்ததாம். இதை 40 ஏழை மாணவர்களின் கல்விக்காக பயன்படுத்தப் போவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘‘படிக்க பணமில்லை என்ற நிலை என்னை கலங்க வைக்கிறது. அதனால்தான் கல்விக்காக உங்களிடம் கையேந்தி வந்துள்ளேன்’’ என மனம் உருகி மாணவர்களிடம் பேசியிருக்கிறார் சசிக்குமார்.

இதில் சசிக்குமாரின் நோக்கத்தில் நேர்மை இருக்கலாம், படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு உதவுவதை உண்மையான அக்கறையோடே செய்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் சசிகுமார் விளம்பரத்துடன் புரிந்துகொண்டிருக்கும் கல்வி பற்றியப் பார்வை மிக அபாயகரமானது மட்டுமல்ல, அதுதான் சமூகத்தின் ஆகப் பெரும்பான்மையினரின் நோக்கும் கூட. ‘அவர் வெளியத் தெரியாம பல ஏழைப் பிள்ளைங்களைப் படிக்க வெச்சுகிட்டிருக்காரு’ என சிலரைப் பற்றி சொல்வதுண்டு. மேலோட்டமாகப் பார்க்கும்போது ‘ஏழைப்பசங்க படிக்க கஷ்டப்படுறாங்க. இவர் ஹெல்ப் பண்றாரு.. இதுல என்ன தப்பு இருக்கு?’ என்பதாகவே தோன்றும். ஆனால் அது அப்படி அல்ல.

சமூக நீதியை அழித்து சமமின்மையை ஒரு அறமாக முன் வைக்கும் சமகால கல்விக்கொள்ளைக்கு முட்டுக்கொடுக்கும் செயல் இது. உரிமையாய் பெற வேண்டிய கல்வியை பிச்சையாய் மாற்றும் அயோக்கியதனம். பணம் இருந்தால்தான் படிக்க முடியும் என்ற கேடுகெட்ட நிலைமையை ஒழித்துக்கட்டுவதற்குப் பதிலாக ‘இந்தாப் பணம்.. படிச்சுக்கோ’ என கல்வி நிறுவன முதலாளிகளுக்கு ஆள் பிடித்துத் தரும் செயல். சசிக்குமார் தெரிந்தோ, தெரியாமலோ அந்த தரகு வேலையைதான் பார்த்திருக்கிறார்.

கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!இந்த தரகர் வேலையை சில வருடங்களுக்கு முன்பிருந்தே மிகுந்த பெருமையுடன் செய்து வருகிறார் நடிகர் சூர்யா. தனது ’அகரம் பவுண்டேஷன்’ மூலமாக ஒவ்வொரு வருடமும் சில மாணவர்களுக்கு ’இலவச கல்வி’ தரும் அவர், அதை வைத்து தனது ‘நல்லவன்’ இமேஜ்-ன் கிராஃபை நன்றாகவே மேலே ஏற்றியிருக்கிறார். (அகரம் மூலம் கல்விக்கு செலவழிக்கும் தொகையை விட அதற்கான விளம்பரத்திற்கு செலவிடும் பணம் அதிகமாக இருக்கும் போலிருக்கிறது). இங்கும் ’இலவசக் கல்வி’ என்பதன் பொருள், இலவசம் அல்ல. மாறாக, சம்பந்தப்பட்ட மாணவர்களின் கல்வி கட்டணம், நன்கொடை உள்ளிட்ட அனைத்தையும் அகரம் பவுண்டேஷன் செலுத்திவிடும். இதற்குப் பெயர் இலவசக்கல்வி அல்ல. இங்கு அகரம், ஒரு புரவலராக செயல்படுகிறது.

அரண்மனை உப்பரிகையில் இருந்து மன்னர்கள் அள்ளி வீசும் சில்லறை காசுகளால் ஏழைகளின் வயிறு ஒருபோதும் நிறைவதில்லை. மேலும், மன்னர்கள் காசை அள்ளிவீசுவதன் நோக்கம் ஏழைகளின் பசியைப் போக்குவதும் அல்ல. அது அவர்களது அந்தஸ்தின் ஸ்திரத்தன்மையை உலகுக்கும், தனக்குமேக் கூட காட்டிக்கொள்வதற்கான ஏற்பாடு.  இந்த நடிகர்களின் கூத்தும் அந்தக் கதைதான். ஆனால் இதில் நடிகர்களுக்கு சில கூடுதல் அனுகூலங்கள் உண்டு.

’வருமான வரி விலக்கு, கறுப்பை வெள்ளையாக்கும் வாய்ப்பு’ இதெல்லாம் கூட இரண்டாம் பட்சமே. முக்கியமானது இந்த ‘வள்ளல்’ தன்மையால் இவர்களுக்கு வந்து சேரும் இமேஜ். போட்டி மிகுந்த திரைப்படத் துறையின் வியாபாரத்திற்கு இந்த இமேஜ் ஒருவித தனித்தன்மையைக் கொடுக்கிறது. அதன்பிறகு ‘நீயா நானா?’ போன்ற கைப்புள்ள ஸ்டைலில் தமிழகத்தில் ‘அறிவை’க் கொல்லும் அக்கப்போர் நிகழ்ச்சியின் விருந்தினர் நாற்காலியை அலங்கரிக்கலாம். ஊடக செய்திகளில் அடிக்கடி இடம்பிடிக்கலாம்.

இப்படி சில மாணவர்களுக்கு பணம் கட்டிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடுமா? ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் மாணவர்கள் அவர்கள் விரும்பும் படிப்புக்கான பணத்தைக் கட்டி படிக்க முடியாமல் அல்லாடுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ‘உண்டியல்’ ஏந்தி பணம் வசூல் செய்து தந்துவிட முடியுமா? எத்தனை தலைமுறைக்கு, எத்தனை ஆயிரம் மாணவர்களுக்கு அப்படி செய்ய முடியும்? பிரச்னையைத் தீர்ப்பதற்கு சரியான, ஜனநாயகப்பூர்வமான வழி என்ன?

மொத்தமாக கல்வி என்பது அரசின் வசம் மட்டுமே இருக்க வேண்டும். இந்த நாட்டின் குடிமகன்கள் அனைவருக்கும் கல்வி இலவசமாக தரப்பட வேண்டும். ‘இலவச கல்வி’ என்பது நமது பிறப்புரிமை. ஒவ்வொரொ நாடும், அரசும் தன் குடிமக்களுக்கு அளிக்க வேண்டிய உரிமை. மாறாக நடைமுறையில் கல்வி காசாக்கப்பட்டு, மிக்ஸியும், கிரைண்டரும், (தேர்தல் சமயத்தில்) குவாட்டருமே இலவசமாக வழங்கப்படுகின்றது. ’இலவச கல்வி’ என்பது இறுதி எல்லை என்றபோதிலும் நடைமுறையில் உடனடி தீர்வுக்கான சாத்தியங்கள் என்ன? 1. தனியார் கல்வி நிறுவனங்களின் அநியாய கல்விக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவது. 2. அரசுப் பள்ளிகளை தரமாக நடத்தப் போராடுவது. இவை இரண்டும் நடைமுறை சாத்தியமானதே.

இயக்குநர் சசிக்குமார், நடிகர் சூர்யா ஆகியோர் இந்த அநீதியான கல்விக்கொள்ளைக் குறித்து வெளிப்படையாகப் பேசினால் அவர்களின் நட்சத்திர இமேஜ் காரணமாக அது கூடுதலாக கவனம் பெறுமே?! ஆனால் அவர்கள் எப்போதும் பேசமாட்டார்கள். பேசாததால்தான் அவர்கள் நட்சத்திரங்களாகவும் இருக்கின்றனர். அதனால்தான் உண்மையில் மங்கிய இந்த நட்சத்திரங்கள் சினிமா லைட்டிங்கால் பிராகசிக்கும் போலி நட்சத்திரங்களாக ஊரை மயக்குகின்றன.

கல்விப் பிச்சை வள்ளல்கள்: சூர்யாவுக்கு போட்டியாக சசிகுமார்!கல்வி என்பது இன்று என்னவாக இருக்கிறது? பணம் இருந்தால் மட்டுமே தரமான பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க வைக்க முடியும். ‘தரமான பள்ளி’ என்ற சொல்லை உச்சரிக்கும்போதே நம் மனங்களில் தனியார் பள்ளிகளின் சித்திரம்தான் தோன்றுகிறது. அரசுப் பள்ளிகளில் தரம் இல்லை. தனியார் பள்ளிகளில் சேர்க்கும் அளவுக்கு கையில் காசு இல்லை. என்ன செய்வது? படிக்கும் வயதில் பிள்ளைகள் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் தனது மொத்த வாழ்நாளையும் பிள்ளைகளின் படிப்புக்காக மட்டுமே அர்ப்பணிக்கிறது. தங்கள் வாழ்க்கையை அடகு வைத்தால்தான் பிள்ளைகளை படிக்க வைக்க முடியும் என்பது கண்கூடான யதார்த்தம். இந்த நிலைமை உண்மை என்கிற அதே சமயம் இது நியாயம் இல்லை என்பதும் நமக்குத் தெரியும். ஆனாலும் எல்லோரும் தனது அடுத்தத் தலைமுறையையேனும் மேலும் ஒரு படி அதிக வசதியுள்ள வண்டியில் ஏற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய சிரமங்களை ஏற்றுக்கொள்கின்றனர். இதனால்தான் எல்.கே.ஜி.க்கு 40 ஆயிரம் என்ஜினீயரிங்குக்கு 20 லட்சம் என கணக்கு வழக்கின்றி அள்ளிக் கொட்டுகின்றனர்.

’வேற என்ன சார் பண்றது? பிள்ளைங்களுக்கு நல்ல வாழ்க்கையா அமைச்சுத் தரணும்ல.. நாம காசு, பணம்தான் சேர்த்து வைக்கலை. நல்லப் படிப்பைக் கொடுத்துட்டா அதுங்க பொழைச்சுக்கும்ல…’ என்பது பொதுவான பெற்றோர் எதிர்வினை. இச்சொற்களில் இருக்கும் ’பாசம், அக்கறை’ என்பனவற்றை வடிகட்டிவிட்டுப் பார்த்தால் ‘சுயநலம்’ என்ற சொல் கிடைக்கக்கூடும். தனது சக்திக்கு மீறி அதிக முதலீடு போட்டு பிள்ளைகளைப் படிக்க வைக்கும் நடுத்தர வர்க்கம் அதற்கான நியாயமான Return-ஐ எதிர்பார்க்கிறது. சமூகப் பிரச்னை, மாணவர் சங்கம், பொதுநலம், அரசியல், போராட்டம், பொதுப் பிரச்னை, கலை, இலக்கியம் என ‘காசுக்கு உதவாத’ அனைத்தையும் மாணவர்கள் செய்யும்போது பெற்றோர் மனது பதற்றமடைகிறது. ஏனெனில் இன்றைய பெற்றோர்கள் வெறும் பெற்றோர்கள் மட்டுமல்ல. அவர்கள் முதலீட்டாளர்களும் கூட. இந்த சொற்பிரயோகத்தில் கொஞ்சம் கடின தொனி இருக்கலாம். ஆனால் உண்மை அதுதானே?! ஊரைச்சுற்றி கொடுநோய் சூழ்ந்திருக்கும்போது தான் மட்டும் பாதுகாப்பாய் கரையேறிவிடலாம் என்பது சுயநலம் மிகுந்த மூட நம்பிக்கை.

ஒரு சூறையாடலைப் போல தனியார் கல்வி நிறுவனங்களின் கல்விக்கொள்ளை நம்மை சூழ்ந்திருக்கிறது. முனியாண்டி விலாஸ் கணக்காக ஊருக்கு ஊர் தனியார் பொறியியல் கல்லூரிகள் முளைத்துகிடக்கின்றன. ஒவ்வொரு கல்லூரியின் நில மதிப்பு, கட்டட மதிப்பு எல்லாவற்றையும் தோராயமாக கணக்கிட்டாலே கோடிகளில் வரும். எங்கிருந்து வந்தது அந்தப் பணம்? நடுத்தர வர்க்கம் தனது ரத்தம் சுண்ட உழைத்துக் கொடுத்த பணம். ஏழைப் பெற்றோர்கள் கூலி வேலை செய்து கொடுத்தப் பணம். திருப்பூரில் பனியன் ஃபேக்டரியிலும், வளைகுடா நாடுகளின் தொழிற்சாலைகளிலும் உதிரம் வற்ற உழைத்த காசு. ஒவ்வொரு பொறியியல் கல்லூரியின் செங்கல்லிலும் பெற்றோர்களின் கண்ணீர் கலந்திருக்கிறது. அதே நேரம் லஞ்சத்தில் பெருத்த அதிகார வர்க்க பெருச்சாளிகளும், பங்குச் சந்தை சூதாட்டத்தில் ‘சம்பாதித்த’ பணக்காரர்களும் தகுதியே இல்லாத தமது வாரிசுகளுக்கு பல இலட்சங்களை தூக்கி எறிந்து கல்வியை விலைக்கு வாங்குகிறார்கள். இப்படித்தான் நமது கல்வி முதலாளிகள் கல்லா கட்டுகின்றனர்.

கல்விப் பிச்சை வள்ளல்கள்: நடிகர் சூர்யாவுக்கு போட்டியாக இயக்குநர் சசிகுமார்!
நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை

ஒரு தொழில் செய்பவன், அதற்கான நியாயமான லாபத்தை எதிர்பார்ப்பதும், பெறுவதும் சரியானதே. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் எந்த நியாயமுமின்றி லாபவெறி எடுத்து அலைகின்றன. ஒரு Vampire-ஐ போல அவர்களின் மனம், பணம் தேடி அலைகிறது. இந்த மனநிலை நிறுவனங்களோடு நிற்கவில்லை. மக்களின் மனங்களுக்கும் இந்த ‘லாபவெறி’ மடை மாற்றப்பட்டிருக்கிறது.

அதனால்தான் பெரும்பாலான பெற்றோர்களுக்கு ‘கல்விக்கொள்ளை’ என்பது அநியாய லாபமாக தோன்றவில்லை. ‘முதல் போடுறவன் லாபம் பார்க்கத்தானே செய்வான்..’ என்பதே பெரும்பான்மை மக்களின் கருத்து. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அநியாய லாபத்தின் மொத்த குறியீடாக சினிமா இருக்கிறது. இதில் சசிக்குமாரும், சூர்யாவும் ‘கல்வி வள்ளல்களாக’ அருள் பாலிக்கின்றனர்.

சசிக்குமாரின் ‘மாணவர் மறுமலர்ச்சித் திட்டம்’ குறித்த பத்திரிகை செய்திக் குறிப்பில் சில வி.ஐ.பி.களும் கருத்து சொல்லியிருக்கின்றனர். இயக்குநர் மணிவண்ணன், நடிகர் விதார்த், சில அரசு அதிகாரிகள் தவிர, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், ‘தாமரை’ ஆசிரியருமான சி.மகேந்திரனின் கருத்தும் அதில் உண்டு. அவர், ” வசதி இல்லை என்பதற்காக இனி எந்த ஒரு மாணவனின் கல்வியும் பாதிக்கப்பட  கூடாது . அதற்கான முதல் முயற்சி இயக்குனர் சசிகுமாரும், கும்பகோணம் அன்னை கல்விக் குழுமமும் தொடங்கி இருக்கிறது. அத்தனை கல்லூரி மாணவர்களுக்கும் கைக்கொடுக்க வேண்டும். 100 சதவீத கல்வியறிவு பெற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுக்க இந்த திட்டம் நிச்சயம் உதவும்.’’ என்று சொல்லியிருக்கிறார். நடிகர் விதார்த்தின் கருத்துடன் ஒத்துப் போகும் அளவுக்கு ‘முன்னேறியிருகிறது’  இந்திய கம்யுனிஸ்ட் கட்சி.

ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவரே இந்த கல்விப் பிச்சை மேனியாவில் மனதைப் பறிகொடுத்திருக்கும் போது புயலுக்கு கரை ஒதுங்குவது போல இமேஜுக்குகாக ‘சமூகப் பணிகளில்’ இறங்கும் இயக்குநர் சசிகுமார் போன்றோர் அடித்து செல்லப்படுவது ஆச்சரியமல்லவே!

– வளவன்.

பிள்ளை வளர்ப்பு: ஒரு குடும்ப வன்முறை!

9

“பனிரெண்டு வயது சிறுவன் அப்பாவைக் கன்னத்தில் அறைந்து காயம்” என்ற செய்தியை உங்களால் விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியுமா? அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார் எங்கள் பகுதியிலிருக்கும் அந்த அப்பா. அவர் மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியர். அவரது மனைவியும் ஒரு அரசு ஊழியர்.

இப்படிப்பட்ட பின்னணியில் இருப்பவர்கள் ஒரே செல்ல மகனை சாதாரண லெவலுக்கு வளர்க்க விரும்புவார்களா? பையனுக்கு காலையில் கராத்தே வகுப்பு, பிறகு கான்வென்ட் பள்ளிக்கூடம். மாலை ஸ்பெசல் டியூசன், பிறகு கம்யூட்டர் கிளாஸ் இப்படி 24 மணிநேரமும் பையனை கடிகார முன்னாய் நகர்த்திக் கொண்டிருப்பவர் அந்த அரசு ஊழியர். ஒரு நாள் மாலை நேரம் பையன் தெருவில் இறங்கி விளையாடப் போய்விட்டான்.

பையனைத் தேடிப்பார்த்த தந்தைக்கு தலைக்கேறியது கோபம். “வீட்லதான் விளையாட கம்யூட்டர் கேம்ஸ் வாங்கித் தந்துருக்கேன்ல. டியூசன் போய்விட்டு வந்து அதுல விளையாடறது. காச கொட்டி சேர்த்துவிட்டா கம்யூட்டர் கிளாஸ் போகாம, கண்ட கண்ட பசங்களோட சேர்ந்துகிட்டு தட்டான் புடிக்கவா போற? போடா கிளாசுக்கு” என்று அவர் கைய ஓங்கி அதட்டியதுதான் தாமதம் இறுகிய முகத்துடன் வீடு திரும்பிய பையன் ஓங்கி ஒரு அறைவிட்டான் அப்பாவை. அதுவும் வாசல்படியிலேயே பதிலுக்கு விளாசித் தள்ளிவிட்டாலும் அந்த அதிர்ச்சியிலிர்ந்து அவரால் இன்னும் மீள முடியவில்லை. இது சேருவார் தோஷமா இல்லை செய்வினையா என்று குழம்பித் தவித்தார்.

ஆம்! உண்மையில் இது செய்வினைதான் அதாவது ”உன்னைப்பார் உலகத்தை பார்க்காதே.போட்டி போட்டு முன்னேறு” என்று முதலாளித்துவ வாழ்க்கை முறையின் ஒரு வித செய்வினைதான் என்பதை கொஞ்சம் குழந்தைகள் வளர்ப்பு சமாச்சாரத்தின் உள்ளேபோய் பார்த்தால் ஒத்துக்கொள்ளத் தோன்றும்.

பிள்ளை-வளர்ப்புஉலகத்தை நெருங்கி, நெருங்கி – அது என்ன? இது என்ன? ஏன் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு மாதிரி இருக்கின்றன, இயங்குகின்றன என்று – அறியத்துடிக்கும் ஆர்வம் ததும்பும் பிள்ளைப் பருவத்திற்கும், ஒண்ணாந் தேதி சம்பளத்தையும் ஒவ்வொரு நுகர்பொருளும் வாங்குவதற்குவொரு என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் மட்டும் மனதில் வைத்துக் கொண்டு  “அந்த உலகத்தை அறியத் துடிக்கும்” அரசு ஊழியர்க்கும் உள்ள இயல்பான முரண்பாட்டின் விளைவே மேற்சொன்ன சம்பவம்.

கொம்பு சீவுவனையே குத்திப்பதம் பார்த்துவிடும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காளையைப்போல போட்டி உலகின் கட்டுக் காளையைப்போல போட்டி உலகின் அவஸ்தை தாங்காமல் குழந்தை வடிவத்தில் இருக்கும் மனிதன். முதலாளிய வாழ்க்கை முறையின் செய்வினைக்குப் பதிலை அப்பாவின் முகத்தில் திருப்பித்தரும் அதியமும் சில நேரங்களில் நடக்கத் தான் செய்யும்.

ஒரு ஈடுக்கு எத்தனைக் குஞ்சு பொறிக்கும், அதற்கு என்ன தீவனத்தை போடலாம் என்ற முதலாளியின் கணக்கைப்போல போட்டி மயமான இந்த உலகில் தமது பிள்ளைகள் போணியாக வேண்டுமென்றால் கம்யூட்டர், கேம்ஸ், கராத்தே, வாய்ப்பாட்டு, கருவி இசை என்று எல்லாத் துறைகளிலும் ஒண்ணாம் நம்பரா இருந்தால்தான் ஒரு வசதியான வாழ்க்கையை வாழ முடியும் என்பது உயர் நடுத்தர வர்க்கத்தின் கருத்து.

இப்படி குழந்தைகளுக்கு வகை வகையான தீவனம் போட வசதி இல்லாவிட்டாலும் அவரவர் நிலைமைக்கு ஏற்றவாறு பிள்ளைகளை அடைகாக்க முயற்ச்சிக்கும் பண்பாடு கோழி செல்லைப் போல பெற்றோர்களின் மனதில் அரித்துக் கொண்டிருக்கிறது.

கோழி வியாபாரிக்காவது ஒரு ஈடுபொய்த்து விட்டாலும் அடுத்த ஈடுவரைக்கும் காத்திருக்கும் பொறுமையு நிதானமும் இருக்கிறது. இப்படி குறி வைத்து வளர்க்கும் பெற்றோர்களுக்கோ தன்னுடைய குஞ்சுகள் ஒரே ஈடில் கோழிகளாக சிறகடிக்க வேண்டும் என்ற அவசரமும் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றால் பிள்ளைகள் மேல் ஆத்திரமும் வருகிறது.

ஆனால் குழந்தைகள் உலகமோ இதற்கு நேர்மாறானது. இந்த உலகத்தை உற்று பார்த்தால் நமக்கு என்ன கிடைக்கும் என்ற தேவையிலிருந்து அவர்கள் பார்வை தொடங்கவில்லை. இந்த உலகில் என்ன இருக்கிறது என்ற தேடலிலிருந்து அவர்கள் பார்க்கத் தொடங்குகின்றார்கள்.

முடியவில்லாத மலைத் தொடர்கள், ஓய்வில்லாத அலைகளின் ஓட்டகம், இலைகளின் பின்னணியை ஆராயத் தொடங்குகிறது அவர்கள் மனம். மேகத்திற்குள் மறைந்த  நிலவு வெளிவரும் சோற்றையும் தட்டிவிட்டுவிட்டு நிலவை ஆராய்கிறது பிள்ளைமனம். இப்படி இயற்கையை மட்டுமல்ல மனிதர்களால் தயாரிக்கப்பட்ட பொருள்கள், அவற்றின் இயக்கம். சிலர் கையில் அவைகள் இருப்பதும், பலரிடம் இல்லாததும், கட்டிடங்கள் பக்கத்திலேயே குடிசைகள் இருப்பதும் ஏன்,ஏன் என்ற கேள்விகள் பிள்ளைப்பருவத்தின் ஆர்வத்தை அள்ளி வருகின்றன.

தனித்தனியாக காணக் கிடக்கும் இந்த காட்சிகள் குறித்த புரிதலை ஒருங்கிணைந்த முறையில் பெறுவதுதான் குழந்தைகளின் முதல் தேவை. ஆனால் அனைத்தையும் அழித்து தான்மட்டும் வாழத்துடிக்கும் முதலாளித்துவமோ பல சிறு தொழில்களை அழித்தால்தான் பெரிய பன்னாட்டுக் கம்பெனி வாழ முடியும் என்ற தனது பொருளாதார கொள்கையையே, குடும்பத்தின் இலக்கணமாகக் கொண்டுவந்து “ உன்னைப்பார் உலகைப் பார்க்காதே” “போட்டி போட்டு முன்னேறு! சகமனிதர்கள் மீதான போட்டியில் வெற்றி பெறு. அதுவே உனது வாழ்க்கை லட்சியம். கனவு” என குட்டி இளவரசர்களுக்கு முடிசூட்டி விடுகிறது.

உயிர்களின் தோற்றத்தையும், பரிணாமத்தையும் இடையறாது ஆராய்ந்து உழைப்பைச் செலுத்தி டார்வின் பரிணாமக் கொள்கை, தனிமனித முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சி அல்ல.

ஆனால் (முதலாளித்துவம்) சுயநலமனம் கொண்ட குடும்பங்களோ குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று கண்டுபிடித்துவிட்டால் குடும்பம் நடத்த முடியுமா? எங்களுக்கு டார்வினைப் போல ஆராய்ச்சி மனம் படைத்த ஒரு மனிதன் தேவையில்லை. கோடீஸ்வரன் முத்திரையைச் சரியாகப் பயன்படுத்தி கட்டங்கட்டமாகத் தாவி வெற்றி பெறும் ஒரு குரங்கு போதும் என்கின்றனர். அதாவது சமுதாயத்தை ஒண்ணாம் நம்பராக்கும் அறிவு தேவையில்லை. இந்த சமுதாயத்தில் நான் ஒண்ணாம் நம்பராகும் வழியைச் சொல் என்கிறது நடுத்தர வர்க்கம்.

குழந்தைகளின் ஆர்வத்தைத் தட்டி எழுப்புவது, அவர்கள் மனம் விரும்பிய விளையாட்டை பழக அனுமதிப்பது, முக்கியமாக சமுதாய உறுப்பினர்களான சக மனிதர்களுடன் கூடி இயங்க விடுவது என்ற கருத்தெல்லாம் இல்லாமல், 2500 மைல்களுக்கு அப்பால் குறி வைத்து ஏவக்கூடிய ஒரு ஏவுகனையைப் போல பெற்றோர்கள் அந்தஸ்தான வாழ்க்கைதரக் கூடிய ஒரு கனவுப் பிரதேசத்துக்கு பிள்ளைகளை ஏவிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நடக்கிறது.

இதனால்தான் பிள்ளைகள் கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு ஆகியவற்றை நோக்கில் பயன்படுத்தும்போது “இது உருப்படறதுக்கு வழியா!” என்று அலறித் துடிக்கிறார்கள். இது குழந்தைகளிடமிருந்து குழந்தைத்தனத்தைப் பறித்தெடுக்கும் பலாத்தார நடவடிக்கையாக மேலோட்டமாகப் பார்த்தால் தெரியும். கொஞ்சம் உள்ளே நுழைந்து பார்த்தால் குழந்தைகளாய் இருக்கும் மனிதர்களிடம் முதலாளித்துவத்திற்கு தேவையான வளர்ப்பும், சுரண்டலும் ஆரம்பமாகி விட்டது என்ற அபாயம் புரியும்.

”சரக்கு உற்பத்தியின் போட்டா போட்டியில் கல்வி,பண்பாடு, மனிதர்களையும் கூட முதலாளித்துவம் ஒரு சரக்காக மாற்றி விடுகிறது” என்று கார்ல் மார்க்ஸ் இந்த அபாயத்தைக் கோடிட்டுக் காண்பித்தார். இரண்டு வழிகளில் இந்த அபாயத்தை முதலாளித்துவம் அரங்கேற்றி வருகிறது. ஒன்று சாதாரண உழைக்கும் மக்களின் கைகளிலிருந்து கைத்தொழில் சிறு தொழில்களைப் பிடுங்கி எறித்துவிட்டு அவர்கள் வீட்டுப் பிள்ளைகளின் பிள்ளைப் பருவக் கனவுகளை அழித்து அவர்களையும் தனது சுரண்டலுக்கு குழந்தைப் பணியாளர்களாய் மாற்றிவிடுகிறது.

ஒரு நாளைக்கு பதினான்கு மணி நேரம் உணவு விடுதிகளில் மேசை துடைக்கும் சிறுவனின் உள்ளத்திலிருந்து அவனுக்கு விருப்பமான படைப்புணர்ச்சியை பிள்ளைப் பருவத்திலேயே துடைத்தெறிந்து விடுகிறது முதலாளித்துத்துவச் சமுதாயம் இன்னொருபுறம் மேட்டிக்குடி, நடுத்தர வர்க்க குழந்தைகளிடம் இந்தா பிடி சாப்ட்வேர், மேல்படி ஜாவா, ஈகாம் இப்பொழுதே, நல்ல எதிர் காலத்துக்கான திறமையை வளர்த்துக் கொள் என்று அவர்களுடைய பிள்ளைப் பருவத்தையும் தங்கள் சுரண்டலுக்கான அச்சாரமாக மாற்றிக் கொள்கிறது. இதை கோட்பாடாகக் கேட்பதற்கு மிகையாகத் தோன்றலாம். குடும்பங்களின் நடைமுறையைக் கவனித்தால் பெற்றோர்கள் தமது

பிள்ளைகளை ஒரு நல்ல ‘பொசிசனுக்கு’க் கொண்டுவர அவர்களை வளரும் சரக்காக வளர்த்தெடுக்கும் முறைகளைக் கவனித்தால் இந்த உண்மை புரியும்.

பிள்ளைகளிடம் குழந்தைத்தனம் பறிக்கப்படுகிறது. கல்விச் சுமை ஏற்றப்படுகிறது, குழந்தை  உழைப்பு தடுக்கப்பட வேண்டும் என்று கண்டிக்கும் அறிவாளிகள் கூட இவற்றுக்குக் காரணமான முதலாளித்துவச் சுரண்டல் சமூக அமைப்பைத் தூக்கியெறியந்தாலொழிய இந்தப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்ற உண்மையை ஊருக்குச் சொல்வதில்லை. குழந்தைப் பருவத்தின் தேடல்களைத் தொலைத்துவிட்டு குழந்தையும் சேர்ந்து உழைத்தால் தான் குடும்பத்தில் சோறாக்க முடியும் என்ற சமூக நிலைமையைப் பாதுகாக்கும் அரசை எதிர்த்துப் போராடாமல் ஒரு வேளைச் சோற்றுக்கு வயிற்றுப் பிள்ளையையும் தூக்கிக் கொண்டு தீச்குச்சி அடுக்கப் போகும் பெண்களிடம் போய் உங்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள் குழந்தைகளை குழந்தைகளாய் வாழ விடுங்கள் என்று அறிவொளி இயக்கம் நடத்துகிறார்கள் இந்த அறிவாளிகள்.

மாற்றாக மக்கள் சீனத்திலும், சோசலிச சோவியத் ரசியாவிலும் தனியுடைமைச் சுரண்டலை ஒழித்துக் கட்டியதன் மூலம் பிள்ளைகளுடைய கல்வி வளர்ப்பு அனைத்தையும் அரசின் கடமையென உறுதி செய்யப்பட்டதுடன் பிள்ளைகளின் தனிப்பட்ட திறமைகள் இந்தச் சமுதாயத்தையே முன்னேற்றிக் காட்டின. சகமனிதர்களைத் தோற்கடித்து அவனை அழித்தாவது தான் முன்னேற வேண்டும் என்ற முதலாளித்துவ வளர்ப்பு முறையினால் தனது இச்சைக்கு எதிராக இருக்கும் பெற்றோரைக் கூடத் தீர்த்துவிடும் குழந்தைகளை முதலாளித்துவம் உருவாக்குகிறது.

ஆனால் நாட்டு மக்களின் நலனுக்காக இட்லரை எதிர்த்த போரில் ரசியச் சிறுவர்கள் தன்னிகரில்லாமல் உதவிய ‘த இவான்’ நாவலில் பார்க்க முடிகிறது. இப்படி சமூக நோக்கில் குழந்தை வளர்க்கப்பட  வேண்டும் என்று சொன்னால் “எங்கள் பிள்ளைகளை எங்கள் விருப்பப்படி வளர்க்கும் உரிமைகூட எங்களுக்குக் கிடையாதா? என்று அறிக்கையில் பெற்றோர்களைப் பார்த்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இப்படிப் பேசுகிறது.

“குழந்தைகள் அவர்களுடைய பெற்றோரால் சுரண்டப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்றா எங்கள் மீது குற்றம் சாட்டுகிறீர்கள்? நாங்கள் இந்தக் குற்றத்தைப் புரிகிறவர்கள்தான். ஒப்புக்கொள்கிறோம்…. உங்களுடைய கல்வி இருக்கிறதே, அதுமட்டும் என்னவாம்? அதுவும் சமூக முறையிலான கல்விதானே?….. கல்வியில் சமுதாயம் தலையிடுதல் என்பது கம்யூனிஸ்டுகளுடைய கண்டுபிடிப்பு அல்ல; இந்தத் தலையீட்டின் இயல்பினை மாற்றவும், ஆளும் வர்க்கத்தினுடைய செல்வாக்கிலிருந்து கல்வியை விடுவிக்கவுமே கம்யூனிஸ்டுகள் முயலுகிறார்கள்…”

“குடும்பம், கல்வி என்றும், பெற்றோருகும் குழந்தைக்குமுள்ள புனித உறவு என்றும் பேசப்படும் முதலாளித்துவப் பகட்டுப் பேச்சுகள் மேலும் மேலும் அருவெறுக்கத் தக்கனவாகி வருகின்றன. ஏனெனில் நவீனத் தொழில்துறையின் செயலால் பாட்டாளிகளிடையே குடும்பப் பந்தங்கள் மேலும் மேலும் துண்டிக்கப்பட்டு, பாட்டாளிகளது குழந்தைகள் சாதாரண வாணிபச் சரக்குகளாகவும் உழைப்புக் கருவிகளாகவும் மாற்றப்படுகிறார்கள்.”

இப்பொழுது இந்தக் கட்டுரைகயின் துவக்கத்தில் சொன்ன சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். தனது குழந்தைப் பருவத்தைச் சுரண்டுவதைச் சகித்துக் கொள்ள முடியாமல் ஆளாக்கிய அப்பாவின் கன்னத்திலேயே அறைந்து விட்டான் அந்தச் சிறுவன். சமுதாயத்தையே இந்த சுரண்டல் நிலைமைக்கு ஆளாக்கிய அப்பனான முதலாளித்துவத்தின் கன்னத்தில் நீங்கள் அறையப் போவது எப்போது?

-துரை. சண்முகம், புதிய கலாச்சாரம் மே,2001

டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்!

2

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த அனைத்துலக நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, ஏகாதிபத்திய வல்லரசுகளின் நோக்கங்களுக்கு ஏற்ப ஒத்தூதிவிட்டு, வெற்று ஆரவாரத்துடன் முடிந்துள்ளது.

அதிகரித்துவரும் புவியின் வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றினால் விளையும் இயற்கைச் சேதங்களைத் தடுக்க வளி மண்டத்தில் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். இதற்காக உலக நாடுகள் 1992ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா.மன்றத்தின் சுற்றுச்சூழல் மாநாட்டில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. அதன் பிறகு,  ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரில்  நடந்த மாநாட்டுக்குப் பின்னர், இந்த ஒப்பந்தம் கியோட்டோ ஒப்பந்தம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.

வெள்ளம், வறட்சி, அதிவேகப் புயல், கடுங்குளிர், நோய்கள் அதிகரித்தல்  எனப் பல கேடுகளும் மனிதகுலப் பேரழிவுகளும் பெருகுவதற்குப் புவி வெப்பமடைதலே முதன்மைக் காரணமாகும். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய வல்லரசுகளே பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தை அதிகரித்துப் புவி வெப்பமடைதலைத் தீவிரமாக்கும் முதன்மைக் குற்றவாளிகள்.

மனித குலத்தைப் பேரழிவில் தள்ளும் ஏகாதிபத்தியங்களின் நோக்கத்துக்கு ஏற்ப நடந்த பருவநிலை மாற்றம் குறித்த டர்பன் மாநாடு.
மனித குலத்தைப் பேரழிவில் தள்ளும் ஏகாதிபத்தியங்களின் நோக்கத்துக்கு ஏற்ப நடந்த பருவநிலை மாற்றம் குறித்த டர்பன் மாநாடு.

2012ஆம் ஆண்டுக்குள் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைத் தொழில் வளர்ச்சியடைந்த மேலை நாடுகள் குறிப்பிட்ட அளவுக்குக் குறைக்க வேண்டும்; 2012க்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்குக் குறைக்க உலக நாடுகள் முன்வர வேண்டும்  என கியோட்டோ ஒப்பந்தத்தின் மூலம்   பெயரளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கியோட்டோ ஒப்பந்தம் முடிவடைய இருக்கும் பின்னணியில்,  இதற்கான அடுத்தகட்ட நகர்வை முன்வைக்கும் நோக்கில் டர்பன் மாநாடு கடந்த ஆண்டில் நவம்பர் 28 முதல் டிசம்பர் 11ஆம் தேதிவரை 13 நாட்கள் நடந்தது. இம்மாநாட்டில் இறுதியாக்கப்பட்ட “மேம்பட்ட செயல்பாடுகளுக்கான டர்பன் மேடை” என்று அழைக்கப்படும்  ஒப்பந்தம், கியோட்டோ மாநாட்டின் பெயரளவிலான கட்டுப்பாடுகளுக்கும்  சமாதி கட்டியுள்ளது.

கியோட்டோ ஒப்பந்தத்தில்  ஏகாதிபத்தியங்கள் வெளியேற்றும் பசுமைக்குடில் வாயுப் பெருக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தும் விதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.  அவற்றை நடைமுறைப்படுத்த ஏகாதிபத்தியங்கள் முன்வரவில்லை என்றாலும், இந்த விதிகள் ஏட்டளவிலாவது இருந்து வந்தன. தற்போதைய ஒப்பந்தத்தில் அதுவும் கைவிடப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியடைந்த அமெரிக்காவும், பின்தங்கிய நிலையிலுள்ள ஆப்பிரிக்க கண்டத்தின் ஏழை நாடும் ஒன்றுதான் என்றும், 194 உறுப்பு நாடுகளும் பசுமைவாயு வெளியேற்றம் பற்றிய கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் என்றும் தற்போதைய ஒப்பந்தம் அனைத்து நாடுகளையும் பொதுமைப்படுத்த முயற்சிக்கிறது. இதனால்தான், கியோட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த அமெரிக்கா, டர்பன் மாநாட்டு முடிவுகளை வரவேற்றுள்ளது.

ஏழை நாடுகளும் வளரும் நாடுகளும் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று காரணம் காட்டி, ஏகாதிபத்திய நாடுகள் நாங்களும் கட்டுப்படுத்த மாட்டோம் என்று நியாயவாதம் பேசவும்,  மொத்தத்தில் எவ்வித வரைமுறையின்றி பசுமைக்குடில் வாயுவை வெளியேற்றிவிட்டு, புவி வெப்பமடைதலுக்கு  நாங்கள் மட்டும் பொறுப்பல்ல என்று ஏழை நாடுகளையும் குற்றவாளியாக்கிப் பழியைப்போடும்  ஏகாதிபத்தியங்களின் திட்டத்திற்கு ஏற்பவே இந்த மாநாடு  நடந்துள்ளது. இதற்காக எல்லா ஏழை நாடுகளையும் ஒருங்கிணைத்து விவாதிக்கச் சொல்லி  இம்முடிவை ஏற்க வைக்கும் தரகனாக ஐ.நா.மன்றம் செயல்பட்டுள்ளது.

அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய வல்லரசுகள், அவற்றின் கூட்டாளியாகவும் வட்டார மேலாதிக்க வல்லரசாகவும் உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகள், தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஏழை நாடுகள்  எனப் பொதுவில் உலக நாடுகள் மூன்று வகையாக உள்ளன. இந்தியா, சீனா, பிரேசில், தென்கொரியா முதலான நாடுகள் ஒப்பீட்டு ரீதியில் ஏழை நாடுகளை விடத் தொழில் வளர்ச்சி பெற்றுள்ள நாடுகள். ஏகாதிபத்திய நாடுகளைப் போலவே இந்நாடுகளிலும் பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் அதிகரித்து வருகிறது.

ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காகவும் நுகர்வுக்காகவும் இத்தகைய நாடுகளில் ‘தொழில் வளர்ச்சி’ என்ற பெயரில்  ஏற்றுமதி அடிப்படையிலான தொழில்கள் தொடங்கப்படுகின்றன. ஏகாதிபத்திய நாடுகளோ சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் முதலாளித்துவ இலாபவெறி கொண்ட உற்பத்தியைக் கொண்டவை. அதே பாதையைப் பின்பற்றும் இந்நாடுகள், இதனை ‘வளர்ச்சிக்கான பாதை’ என்கின்றன. ‘வளர்ச்சி’ என்ற பெயரில் இயற்கையை நாசமாக்கிப் பேரழிவுகளை விளைவித்து வரும் முதலாளித்துவ உற்பத்தி முறையை இந்தியா போன்ற வளரும் நாடுகள் எதிர்ப்பதுமில்லை. ஏகாதிபத்தியங்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க உருப்படியாக எந்த முயற்சியும் எடுப்பதுமில்லை.

இந்தியா போன்ற ஒப்பீட்டு ரீதியில் தொழில் வளர்ச்சியடைந்துள்ள நாடுகளின் ஆளும் வர்க்கமான தரகுப் பெருமுதலாளிகள் ஏகாதிபத்தியங்களுடன் கூட்டுச் சேர்ந்து ஆதாயமடைவதோடு, விரிவடையவும் முயற்சிக்கின்றனர். மறுபுறம், பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடுதலாகச் செலவிட வேண்டும் என்பதால், அவற்றைச் செயல்படுத்த மறுக்கின்றனர். தரகுப் பெருமுதலாளிகளின் வர்க்க நலன்தான் இந்திய அரசின் நலனாக உள்ளது. இதற்கேற்ப மற்ற ஏழை நாடுகளைத் தம் பின்னே திரட்டிக் கொண்டும் தம் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதை இந்தியா எதிர்க்கிறது. இதற்காகவே வெற்று ஏகாதிபத்திய எதிர்ப்புச் சவடாலடிக்கிறது.

“எங்கள் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைப் பணயம் வைக்கச் சொல்கிறீர்களா? எங்களைப் பிணைக்கைதியாக்காதீர்கள்” என்று டர்பன் மாநாட்டில்  இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராசன் ஆவேசமாகப் பேசியதாக ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இப்படியெல்லாம் சவடால் அடித்த அவர், ஏழை நாடுகளுக்கும் பணக்கார நாடுகளுக்குமிடையிலான வேறுபாட்டை மறைத்துச் சுற்றுச்சூழல் தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் சமமானதே என்றார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் திட்டத்தை ஏற்க மறுப்பது போல முறுக்கிக் கொண்ட அவர்,  பின்னர் எப்படியாவது மாநாட்டை வெற்றிபெறச் செய்ய சமரசம் காண்பது என்ற பெயரில், ஏகாதிபத்தியங்கள் முன்வைத்த துரோகத் திட்டத்தை இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்கேற்ப ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஏழை நாடுகள் அல்லது ஒப்பீட்டு ரீதியில் தொழில் வளர்ச்சி அடைந்துள்ள நாடுகள் முதலானவற்றில் முதலீடு செய்து ஆலைகளைத் தொடங்கி அவற்றுக்குச் சொந்தம் கொண்டாடும் ஏகாதிபத்தியங்கள், அந்த ஆலைகள் வெளியேற்றும் நச்சுக் கழிவுகளுக்குப் பொறுப்பேற்பதில்லை. இதற்கு ஆலை அமைந்துள்ள நாடும் மக்களும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றன. இந்த அநீதியை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, ஏகாதிபத்தியங்களின் கூட்டுக் களவாணிகளாக உள்ள இந்தியா, சீனா, பிரேசில் முதலான  நாடுகள் ஒருபுறம் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகச் சவடால் அடித்துக்கொண்டும், மறுபுறம் ஏகாதிபத்தியங்களின் திட்டங்களுக்கு ஏற்பச்  சமரசமாகச் சென்று துரோகமிழைத்தும் வருகின்றன. இந்த உண்மையை டர்பன் மாநாடு மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

சுற்றுச்சூழலும் உயிரியல் சூழலும் நஞ்சாவதற்கு  இலாபவெறியும் போர்வெறியும் கொண்ட  ஏகாதிபத்திய உற்பத்திமுறை எனும் பேரழிவுப்பாதையே முதன்மைக் காரணம். சுற்றுச்சூழலை நஞ்சாக்கிவரும் முதன்மைக் குற்றவாளிகளான ஏகாதிபத்தியங்களை மட்டுமின்றி, அவற்றின் கூட்டுக் களவாணிகளாக உள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளின் துரோகத்தையும் அம்பலப்படுத்தி முறியடிக்க, அனைத்துலக மக்களும் அணிதிரண்டு போராடுவதே இன்றைய முக்கிய கடமையாகியுள்ளது. ஏகாதிபத்திய உற்பத்திமுறைக்கு எதிரான, மக்கள் நலனையும் சுயசார்பையும் அடிப்படையாகக் கொண்ட தேசிய உற்பத்திமுறையை நிறுவி வளர்க்காத வரை, ஏழை நாடுகள் மீது ஏகாதிபத்தியங்கள் போடும் பழியையும், சுற்றுச்சூழல் பாதிப்பின் கோரமான விளைவுகளையும் தடுத்து நிறுத்தவே முடியாது.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

கடையநல்லூரில் இஸ்லாமிய மதவாதிகளின் வெறியாட்டம்!

150

கடந்த 27/01/2012 வெள்ளிக் கிழமை மதியம் கடையநல்லூர் கடைவீதியில் (மெயின் பஜார்) இருக்கும் மஸ்ஜிதுன் முபாரக் பள்ளிவாசலின் ஜும்மா பேருரையில் ஓர் அறிவிப்பு வெளியிடப்படுகிறது. ”மக்கட்டி துராப்ஷா என்பவர் வைத்திருக்கும் கறிக்கோழி கடையில் யாரும் கோழி வாங்கி சமைக்க வேண்டாம். அவர் இஸ்லாத்துக்கு விரோதமானவர் என்பதால் அவரிடம் கோழி வாங்கி உண்பது ஹராமாகும்( இஸ்லாமிய முறைப்படி விலக்கப்பட்ட உணவு)” என்று போகிறது அந்த அறிவிப்பு. அறிவித்தவர் மஸ்ஜிதுன் முபாரக் கமிட்டியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சைபுல்லா ஹாஜா என்பவர்.

இப்படி ஓர் அறிவிப்பை வெளியிடுவதற்கான காரணமாக கூறப்படுவது என்ன? “இறையில்லா இஸ்லாம்” எனும் தளத்தில் தஜ்ஜால் என்பவர் எழுதி வெளியிட்ட “லூத் என்றொரு லூஸ்” என்ற கட்டுரையை தோழர் துராப்ஷா தன்னுடைய முகநூல் (ஃபேஸ்புக்) சமூக தளத்தில் இணைப்பு கொடுத்திருந்தார், அவ்வளவு தான். இதற்குத்தான் மேற்படி நடவடிக்கை. முகநூல் போன்ற சமூக தளங்களில் யாராரெல்லாம், என்னென்ன விதமான விசயங்களையெல்லாம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இணையம் பாவிக்கும் யாரும் அறிந்தது தான். ஃபேஸ்புக் நட்பு வட்டத்தின் மூலம் தனக்கு பிடித்த, பிடிக்காத, ஒத்த கருத்துள்ள, எதிர் கருத்துள்ள அனைவரது இணைப்புகளையும் ஒருவர் வைத்திருக்கலாம். அது அவரது தனிப்பட்ட விருப்பம், உரிமை சார்ந்தது.

ஆக, மேம்போக்காக பார்க்கும் போதே இந்த நடவடிக்கைக்கு கூறப்படும் காரணம் உண்மையானதோ, சரியானதோ அல்ல என்பது யாருக்கும் எளிதாக விளங்கும்.

எனில், அற்பமான இந்த பிரச்சனை ஜும்மாவில் பொது அறிவிப்பு கொடுத்து தடை செய்யும் அளவுக்கு போனது ஏன்? அதை அறியவேண்டுமானால் ஆழங்களில் புதைந்திருக்கும் வேர்கள் தோண்டி எடுக்கப்பட்டாக வேண்டும்.

முதலில் அறிமுகப் படலம். தோழர் துராப்ஷா கடையநல்லூர் சிபிஐ (வலது கம்யூனிஸ்ட் கட்சி) யில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர். கடவுள் நம்பிக்கையற்றவராக, மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவராக இருந்தாலும் சமுதாயத்தினருக்கு உதவிகள் செய்வதிலும், துணை நிற்பதிலும் துடிப்பாக செயல்படுபவர். சிபிஐ-யில் இருக்கும் போதுகூட கட்சியின் நடவடிக்கைகளை எதிர்த்து நிர்வாகக் குழுவில் நேர்மையாக விமர்சனங்களை வைத்துக் கொண்டிருந்தார். முடிவில் சிபிஐயிலிருந்து வெளியேறி தற்போது புரட்சிகர இடதுசாரி இயக்கத்தில் செயல்பட்டு வருகிறார். தன்னுடைய சகோதரி தேர்தலில் நின்றபோதும் கூட உறவினர்களையெல்லாம் எதிர்த்து “ஓட்டுப்போடாதே புரட்சி செய்” என்று பிரச்சாரம் செய்தவர்.

சைபுல்லா ஹாஜா கடையநல்லூர் மக்கள் மத்தியில் பல காலமாக மத அறிஞராக மதிக்கப்பட்டவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் நிர்வாக மட்டத்தில் மேலாண்மைக் குழுவில் செயலாற்றியவர். என்றாலும் அவர்மீது தனிப்பட்ட சில விமர்சனங்களும் இசுலாமிய மக்களிடம் இருக்கின்றன. தன் குடும்ப திருமணத்தில் இஸ்லாமிய நெறிமுறைகளை பேணவில்லை என்று தவ்ஹீத் ஜமாத் வட்டாரத்திலேயே சலசலப்பு எழுந்ததுண்டு. இது குறித்து ஆன்லைன் பிஜேவில் இவரை நிறையவே தாளித்திருக்கிறார்கள். ஆமினா என்ற பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பில் இருந்து, மதுரையில் ஒரு தங்கும் விடுதியில் அந்தப் பெண்ணுடன் தங்கியிருந்ததாக சில ஆண்டுகளுக்கு முன் கடையநல்லூரில் பரபரப்புடன் பேசப்பட்டது.

முபாரக் பள்ளியுடன் தொடர்புடைய நிலத்தை ஜமாத்தின் பெயரிலோ, பொது அறக்கட்டளையின் பெயரிலோ பதிவு செய்யாமல் தனி ஒருவரின் பெயரில் பதிவு செய்ததாக கடந்த ஆண்டு இவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திலிருந்து விலக்கப்பட்டுவிட, தற்போது கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் (மஸ்ஜிதுன் முபாரக் கமிட்டி) என்ற பெயரில் தனியாக செயல்பட்டு வருகிறார்.

தோழர் துராப்ஷாவுக்கும் மேற்கண்ட சைபுல்லா ஹாஜாவுக்கும் இடையே முன்பிருந்தே சிற்சில பிரச்சனைகள் இருந்ததாக தெரிய வருகிறது. முபாரக் பள்ளிக்கு அருகில் இருக்கும் நகராட்சிக்கு சொந்தமான பாழடைந்த கிணற்று நிலத்தில் சிபிஐ பாராளுமன்ற நிதியில் இருந்து பொது நூலகத்திற்கு சொந்த கட்டிடம் எழுப்பும் முயற்சியில் முபாரக் பள்ளிக்கு எதிராக செயல்பட்டது. தொழுகை நேரம் தவிர ஏனைய நேரங்களிலும் (இரவு நேரங்களில் கூட) அன்றாட மதரசா நிகழ்சிகளையும் ஒலிபெருகியை சப்தமாக வைத்து மக்களுக்கு தொல்லை கொடுப்பது இது போன்ற சின்னச் சின்ன பிரச்சனைகளில் மறைமுகமாக பிணக்கு ஏற்பட்டிருந்தாலும் நேரடியாக தலையிடும்படியான சூழலும் நேர்ந்தது.

தோழர் புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளத் தொடங்கிய பிறகு, சைபுல்லா ஹாஜாவின் முபாரக் பள்ளி கமிட்டியின் கீழ் மஸ்ஜிதுல் முபாரக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ சங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் இந்த சங்கத்தின் ஆட்டோக்கள் கடைவீதியில் முபாரக் பள்ளிக்கு அருகில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருக்கும். முதலில் நிறுத்தப்பட்ட ஆட்டோவுக்கு முதல் சவாரி எனும் அடிப்படையில் செயல்பட்டாலும், குறிப்பிட்ட சிலரை மட்டும் ஆட்டோவை முதலில் நிறுத்தவிடாமல் தடுப்பது, சவாரி அவர்களுக்கு கிடைக்காத வண்ணம் தில்லுமுல்லுகளைச் செய்வது என்று நடந்திருக்கின்றனர்.

குறிப்பிட்ட அந்த ஓட்டுனர்கள் இந்த பிரச்சினையை சைபுல்லா ஹாஜாவிடம் கொண்டு சென்ற பின்பும், தனக்கு வேண்டியவர்கள் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முடிவில் இதனால் பாதிக்கப்பட்ட ஆறு ஆட்டோ ஓட்டுனர்கள், ”நாங்கள் சங்கத்திலிருந்து விலகிக் கொள்கிறோம், உறுப்பினர் சேர்ப்பு கட்டணமாக நாங்கள் செலுத்திய பணத்தை திரும்பத் தாருங்கள்” என்று கேட்டபோது சைபுல்லா ஹாஜா, ”பணத்தையும் திரும்பத்தர முடியாது, நீங்கள் தனியாகவும் செயல்படக் கூடாது. மீறி செயல்பட்டால் கடையநல்லூரில் எந்த இடத்திலும் தொழில் செய்ய முடியாமல் செய்து விடுவேன்.” என்று மிரட்டியதாக தெரிகிறது.

இதனையடுத்து அந்த ஆறு ஆட்டோ ஓட்டுனர்களும் தோழர் துராப்ஷாவை அணுகி தங்களுக்கு உதவமுடியுமா எனக் கேட்டுள்ளனர். துராப்ஷாவும் வேறு தோழர்களின் உதவியுடன் அவர்களுக்கு சங்கம் என்றால் என்ன?, உரிமைகளுக்காக போராடுவது, அதனூடான அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று செயல்பட்டிருக்கிறார்.

இது மட்டுமன்றி, வேறொரு அரசியலும் இதில் தொழிற்பட்டிருக்கிறது. முபாரக் பள்ளியில் அறிவிப்பு வெளியிடுவதற்கு முந்திய வாரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கான பள்ளியில், இணையத்தில் சில ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேறொரு தோழருக்கு எதிராக, ”இஸ்லாத்தை விமர்சித்து தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார், அவரை ஊரை விட்டு விலக்கிவைக்க வேண்டும்” என்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். இதை செவியுற்ற முபாரக் பள்ளியும் அவர்களுக்கு முன்னதாக நாம் நடவடிக்கை எடுத்து காட்ட வேண்டும் எனும் போட்டி மனப்பான்மையுடனேயே தோழர் துராப்சாவுக்கு எதிரான அறிவிப்பை அவசரமாக வெளியிட்டிருக்கிறார்கள். அதாவது இசுலாத்தை யார் காப்பாற்றுவது என்பதில் தவ்ஹீத் ஜமாத் குழுவினருக்கும், முபாரக் பள்ளிக்கும் பெரும் போட்டி நிலவியிருக்கிறது.

இவர்களின் இந்த போட்டி மனப்பான்மைக்கு, ஹஜ்ஜுப் பெருநாளை வெவ்வேறு குழுக்களின் சார்பில் மூன்று தனித்தனி நாட்களில் மூன்று பெருநாளாக கொண்டாடியது, நோன்புப் பெருநாளில் தொழுகை நடத்துவதற்கு ஒரு திடலுக்கு மூன்று குழுக்களும் போட்டி நடத்தி காவல்நிலையம் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தது என்று கடையநல்லூரிலிருந்தே எடுத்துக்காட்டுகளை கூற முடியும். இது தான் தோழர் துராப்ஷாவுக்கு எதிரான வெள்ளிக்கிழமை அறிவிப்புக்கு அடிப்படையான காரணம். இதைத்தான் இஸ்லாம், ஹராம், ஹலால் என்று திசை திருப்பி மக்களை வெறியேற்றி விட்டிருக்கிறார்கள்.

இவ்வாறான பின்னணிப் பிரச்சனைகளெல்லாம் இல்லாமல் இஸ்லத்திற்கு எதிராக கட்டுரை எழுதியது மட்டும் தான் பிரச்சனை என்றால் என்ன செய்திருக்கப்பட வேண்டும்? சம்மந்தப்பட்டவரை அழைத்து விசாரித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் வெள்ளிக் கிழமை அறிவிப்புக்கு முன்பும் பின்பும் தோழரிடம் யாரும் இது குறித்து விசாரிக்கவோ, விளக்கம் கேட்கவோ இல்லை. தனக்கும் குறிப்பிட்ட அந்த தளத்திற்கும், குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கும் தொடர்பு ஒன்றுமில்லை என்றும், முடிந்தால் அதை நிரூபித்துக் காட்டுங்கள், அதன்பிற்கு நீங்கள் வழங்கும் எந்த தீர்ப்புக்கும் கட்டுப்பட தயாராக இருக்கிறேன் எனும் தோழரின் கூற்று யார் காதிலும் ஏறவில்லை. மாறாக அவர்களின் செயல்கள் அப்பட்டமாக மேற்கூறப்பட்ட பின்னணிகள் தான் இந்த நடவடிக்கைகளுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்பதை உணர்த்துகின்றன.

வெள்ளிக்கிழமை அறிவிப்பை வெளியிடும் போது அவர் அதை எப்படி கூறினார்? அந்தக் கட்டுரையை நீங்கள் படித்தால் உணர்ச்சிவசப்பட்டு அவரையும் அந்தக் கடையையும் அடித்து நொறுக்கி விடுவீர்கள் அவ்வளவு கேவலமாக அது எழுதப்பட்டிருக்கிறது. அப்படி நீங்கள் செய்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் அவர் கடையை புறக்கணியுங்கள் என்கிறேன் என்று கூறியிருக்கிறார். மட்டுமல்லாது குறிப்பிட்ட அந்தக் கட்டுரையை படியெடுத்து அதன் கீழே நபிமார்களை இவ்வளவு கேவலமாக எழுதியிருக்கும் இவனை என்ன செய்யலாம் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்று எழுதி அதை வீடு வீடாக எடுத்துச் சென்று வினியோகித்திருக்கிறார்கள்.

உண்மையில் தோழர் துராப்ஷவுக்கும் அந்தக் கட்டுரைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஆனால் அவர் எழுதியது போன்ற தோற்றத்தை இவர்கள் உருவாக்க விரும்பினார்கள். இது ஒரு விமர்சன கட்டுரையை வெளியிட்டதற்கான எதிர்வினை என்றில்லாமல், திட்டமிட்டு தோழர் மீது மக்களிடம் வெறுப்பை உண்டாக்க வேண்டும், அவருக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும், மக்கள் உணர்ச்சிவசப்பட்டு செய்வது போன்ற தோற்றத்தில் அவர் மீது தாக்குதலை தொடுக்க வேண்டும் எனும் எண்ணத்திலேயே இவைகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகிறது.

வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியான பின்னர் அந்த அறிவிப்பு பெரிய அளவில் மக்களை  ஈர்க்கவில்லை. சனிக்கிழமை தோழரின் கடையில் ஒப்பீட்டளவில் வியாபாரம் குறைந்திருந்தது என்றாலும் ஞாயிற்றுக்கிழமை அந்த பாதிப்பு மீண்டுவரத் தொடங்கியது. காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை நடக்கும் வியாபாரமே நாளின் மொத்த வியாபரத்தையும் தீர்மானிக்கும் எனும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பழையபடி வியாபாரம் மீளத் தொடங்கியிருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு.

என்ன தான் ஹலால் பிரச்சனையை தூண்டினாலும் தோழரின் கடையில் கறி வாங்கும் அனைவருக்குமே தெரியும், அங்கு ஹலாலான முறையில் தான் கோழி அறுத்து விற்பனை செய்யப்படுகிறது என்பது. தோழரே முன்னின்று நேரடியாக அறுத்து விற்பனை செய்வதில்லை. நிறுத்துக் கொடுப்பது அதற்கான பணத்தை வாங்குவதை மட்டும் தான் தோழர் செய்துவந்தார். கோழி அறுப்பதற்கும் வெட்டி துண்டுகளாக்குவதற்கும் இஸ்லாமியர் ஒருவரையே வேலைக்கு அமர்த்தியிருந்தார். எனவே அது இஸ்லாமிய முறைப்படி ஹலாலானது தான் என்பது அனைவருக்கும் தெரியும். மட்டுமல்லாது வாங்குவதை தவிர்த்தவர்களும் கூட ’எதற்கு வம்பு’ எனும் ஜாக்கிரதை உணர்ச்சியில் தவிர்த்திருப்பார்கள் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

அந்தக் கடையைத் தவிர பொருளாதார வசதிகளோ வேறு ஆதாரங்களோ இல்லாத தோழர், பள்ளிவாசலில் அறிவித்தவுடன் வாழ்வாதாரத்திற்கே தடை வந்துவிட்டதே என்று கலங்கி தம்மிடம் ஓடிவந்து மன்னிப்புக் கேட்டு பணிந்துவிடுவார் என்று எதிர்பார்த்திருந்தார்கள் போலும். அவ்வாறல்லாமல் நிலமை சகஜமாவதை கவனித்த அவர்கள், ஞாயிற்றுக் கிழமை 9 மணிக்கு மேல் கடைக்கு முன் திரளத் தொடங்கினார்கள். ”எங்கள் நபியை கேவலப்படுத்திய உன்னை கடையை நடத்த விடமாட்டோம், கடையை மூடு” என்று கூச்சலிடத் தொடங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் கூடத் தொடங்கியது.

தயாராக கொண்டு வந்திருந்த (கட்டுரை அடங்கிய) பிரசுரத்தையும் கூட்டத்தில் வினியோகித்தனர். அந்தக் கூட்டத்திலேயே ஒருவன் ”வெளியிலிருந்து என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் கடைக்குள் நுழைந்து எதையாவது செய்தால் அது நமக்கு எதிராக திரும்பிவிடும்” என்று கூறியிருக்கிறான். இதிலிருந்து அவர்கள் முன் யோசனையுடன் திட்டமிட்டு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.

கூச்சல் குழப்பம் அதிகரிக்கவே வேறு வழியின்றி தோழர் கடையை அடைத்து விட்டு தொலைபேசியில் தோழர்களை அழைத்து ஆலோசனை கேட்கிறார். இதற்குள் அவர்களாகவே காவல்துறைக்கு மதத்தை கேவலப்படுத்தி எழுதிய ஒருவரின் கடைக்கு முன்னே மக்கள் திரண்டு கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தகவல் தெரிவிக்க போலீஸ் வந்தது. தோழரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர், தோழரும் தன்னுடய தரப்பு நியாயங்களை எடுத்துவைத்தார். கடைசியில் புதன் வரை கடையை மூடி வைப்பது என்றும் வியாழனிலிருந்து வழக்கம் போல் கடையை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன்பிறகும் அமைதியடையாத சைபுல்லா ஹாஜா குழு, ஞாயிறு மதியத்திற்குப் பிறகு, தோழர் வசிக்கும் வட்டார ஜமாத்திற்கும், மக்கட்டி குடும்பத்தார்களுக்கும் (வட்டார ஜமாத் என்பது வசிக்கும் தெருவை உள்ளடக்கிய அமைப்பு, குடும்பத்தார்கள் என்பது குறிப்பிட்ட குடும்பப் பெயரைக் கொண்டிருக்கும் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பு) அந்தக் கட்டுரையை அனுப்பி இப்படிப்பட்டவர் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியது. இதனைத் தொடர்ந்து கூடிய வட்டார ஜமாத் நாங்கள் முடிவு செய்வதை விட உலமாக்கள் சபைக்கு இதை அனுப்பி வைக்கிறோம். அவர்கள் கூறும் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார்கள்.

குடும்பத்தார்களோ முபாரக் பள்ளி கமிட்டிக்குச் சென்று நிபந்தனையற்று மன்னிப்பு கூறு இல்லாவிட்டால் குடும்பத்திலிருந்து நீக்கிவைப்போம் என்று தோழரை நிர்ப்பந்தம் செய்து மிரட்டுகிறார்கள். இத்தனைக்கும் முபாரக் பள்ளி கமிட்டியிலிருந்து இதுவரை என்ன பிரச்சனை என்றோ, விளக்கம் என்ன என்றோ தோழரிடம் யாரும் விசாரணை செய்யவே இல்லை. தோழரோ தன்மீது எந்த தவறும் இல்லை என்றும், தான் அந்த கட்டுரையை எழுதவில்லை, அந்த தளத்தை நடத்துவதும் நானல்ல என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அது யாருடைய செவியையும் எட்டவில்லை.

ஆம், பிரச்சனையை அணுகுபவர்களுக்கு அல்லவா, என்ன நடந்தது, எங்கு தவறு என்பன போன்றவையெல்லாம் தேவையாக இருக்கும். இங்கு நடப்பது தோழரை முடக்கி தண்டித்தாக வேண்டும் எனும் முயற்சியல்லவா? அதனால் தான் தங்கள் பலத்தை பயன்படுத்தி, நேர்மையை புறந்தள்ளி தங்களின் திட்டமிட்ட இலக்கை அடைய முயல்கிறார்கள். இவர்கள் தான் இஸ்லாம் நீதியையும் நேர்மையையும் பேணுகிறது என்று மதத்தை போதிக்கும் அறிஞர்களாம், வெட்கக்கேடு.

இதன் பிறகுதான் நிகழ்ச்சிகள் வேகம் பெறத் தொடங்கியிருக்கின்றன. மறுநாள் திங்கட்கிழமை மக்கட்டி குடும்பத்தார்கள் கூட்டம் தொடங்கியது, தோழரை அழைத்து விசாரித்திருக்கிறார்கள். விசாரித்திருக்கிறார்கள் என்பதை விட, ”நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும், இல்லாத பட்சத்தில் குடும்பத்திலிருந்து நீக்கி வைப்போம், எந்த விதத்திலும் எங்களுடைய உதவி உங்களுக்கு கிடைக்காது” என்று மிரட்டியிருக்கிறார்கள் என்பதே சரி.

மட்டுமல்லாது உலமாக்கள் சபை என்ன தீர்ப்பு கூறப்போகிறது என்பதையும் முன்னதாகவே கூறியிருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் தவறு நடந்திருக்கிறதா என்பதை ஆராய்வதல்ல, எந்த விதத்திலாவது மன்னிப்பு கேட்கவைத்து, பிரச்சனையை மூடிவிடுவது என்பதாகவே இருக்கிறது. முடிவில் தொடர்ந்த அவர்களின் வற்புறுத்தல்களின் காரணமாக எந்த தவறும் செய்யத நிலையிலும் தோழர் மன்னிப்பு கேட்பதற்கு சம்மதிக்கிறார்.

மறுநாள் செவ்வாய்க்கிழமை, மெல்ல மெல்ல விசயம் தெரிந்து பலரும் தோழரை தொலைபேசியில் விசாரித்திருக்கிறார்கள். ஊடகவியலாளர் கவின்மலருக்கும் விசயம் தெரிந்து, ஜூனியர் விகடனுக்கும், நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் கடையநல்லூரும் சூடேறிக் கொண்டிருந்தது.

மதிய நேர லுஹர் தொழுகைக்குப் பின்னர் தான் கூட்டம் நடக்கவிருக்கிறது என்றாலும் அதற்கு முன்பிருந்தே இளைஞர்கள் பெருமளவில் குழுமத் தொடங்குவார்கள் என்பதால், தொழுகை நேரத்திற்கும் முன்னதாகவே பள்ளிவாசலுக்குள் சென்று உள்ளேயே இருங்கள் வெளியில் வரவேண்டாம் என்று தோழருக்கு அறிவுரை தரப்பட்டது. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு ”நாங்கள் அழைத்த பின்னரே வரவேண்டும்” என்று கூறினார்கள். மன்னிப்பு கேட்பதற்காகத்தான் வருகிறார் என்றாலும் பாதுகாப்புக்காக காவல் துறையை அணுகுவதற்கு அனுமதி கேட்டபோது, “காவல் துறையை அணுகினால், நாங்கள் விலகி விடுகிறோம், நீயே தனியாக சந்தித்துக் கொள்” என்று குடும்பத்தார்கள் மிரட்டியிருக்கிறார்கள்.

என்ன செய்வதெனத் தெரியாத நிலையிலேயே கூட்டத்திற்கு சென்றிருக்கிறார் தோழர். விசாரணை இல்லை. விளக்கம் கூற அனுமதி இல்லை. மன்னிப்பு மட்டுமே கேட்க வேண்டும் வேறு எதையும் பேசக்கூடாது என்று மிரட்டி அழைத்துச் சென்றாலும், பள்ளிவாசலில் நுழைந்ததுமே, அங்கிருந்த மதவெறியேறிய காட்டுமிராண்டிக் கும்பல் தோழரை தாக்கத் தொடங்கியிருக்கிறது. உறவினர்கள் கடுமையான முயற்சிக்குப் பிறகு தோழரை தனியறையில் தள்ளி அடைத்து தாக்குதல்களை தடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே தயாராக கொண்டுவரப்பட்ட தீர்ப்பில் தோழரிடம் கையெழுத்து வாங்கி, “இவர் காஃபிர் என அறிவிக்கப்படுகிறார், தாய், மனைவி குழந்தைகள் உட்பட இவரோடு யார் தொடர்பு கொண்டாலும் அவர்களும் காஃபிர்களாக கருதப்படுவார்கள்” என்று அறிவித்து விட்டார்கள். இதன்பிறகு காவல்துறை தோழரை பாதுகாப்பாக வெளியேற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது. காவலர்களின் கண் முன்பே காவல்துறை வாகனத்தில் வைத்தும்கூட தாக்கியிருக்கிறார்கள் அந்த மதவெறி பிடித்த மிருகங்கள். “காவல்துறை எங்களை எதுவும் செய்ய முடியாது. என்றிருந்தாலும் உன்னுடைய சாவு எங்கள் கையில் தான்” என்றெல்லாம் அந்த கும்பல் வெறிக் கூச்சலிட்டது.

இதனிடையே ஒருவரை காஃபிர் என ஃபத்வா கொடுக்கும் அதிகாரம் மண்டல அரசு காஜிக்கு மட்டுமே உண்டு. ஆனால் தோழருக்கு கொடுக்கப்பட்ட ஃபத்வா அரசு காஜியினால் கொடுக்கப்படவில்லை. அவருடைய அனுமதியின்றி இவர்களாகவே ஃபத்வா கொடுத்துவிட்டு பின்னர் அரசு காஜியிடம் கையெழுத்துக்காக சென்றிருக்கிறார்கள். அவர் கையெழுத்திடுவதற்கு முதலில் மறுத்திருக்கிறார், இதில் பிரச்சனை ஒன்றுமில்லை, அவர் மன்னிப்பு கடிதம் கொடுத்து இஸ்லாத்தில் சேர்ந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் என்று சமாதானம் செய்து கையெழுத்து கேட்டிருக்கிறார்கள். முதலில் மன்னிப்பு கடிதம் வாங்கி வாருங்கள் பின்னர் பார்க்கலாம் என்று அரசு காஜி கூற, எப்படியோ கடிதம் வாங்கி ஃபத்வாவில் கையெழுத்து பெற்றிருக்கிறார்கள்.

இது ரவுடிக் கும்பலின் அட்டகாசம் என்பதிலோ, மதவெறிபிடித்த காட்டுமிராண்டிக் கும்பலின் வெறியாட்டம் என்பதிலோ நேர்மையுடன் பரிசீலிக்கும் யாருக்கும் ஐயம் இருக்கமுடியாது. ஆனால் இதில் இஸ்லாமியர்களின் பார்வை, நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகளை இழிவுபடுத்தியவரை நாங்கள் தாக்குவதில் என்ன தவறு இருந்துவிட முடியும்? என்பதாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கூட்டமும் இப்படித்தான் இந்து மதத்தை, இந்துக்கடவுளரை புண்படுத்தி விட்டார்கள் என்று கூறி வருவதோடு எம்.எப்.ஹூசைன் உட்பட பலரை தாக்கியிருக்கிறது. நாட்டை விட்டே விரட்டியுமிருக்கிறது. மதவாதிகள் அனைவருமே விமர்சனங்களுக்கு பதிலளிக்க முடியாத நிலையில் கையில் எடுக்கும் ஆயுதம் எங்கள் மனது புண்படுகிறது என்பது தான்.

இஸ்லாத்தின் ஆரம்பமே பிற மத நம்பிக்கைகளை விமர்சிப்பதிலிருந்து தான் தொடங்கியிருக்கிறது. காபாவில் வைக்கப்பட்டிருந்த முன்னூறுக்கும் அதிகமான சிலைகளை அடித்து நொறுக்கித்தான் இஸ்லாத்தின் புனிதம் நிறுவப்பட்டிருக்கிறது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். இன்றும் கூட பைபிள் இறை வேதமல்ல, மனிதர்கள் அதை திருத்திவிட்டார்கள் என்று நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்கள், மேடைகளில் பரப்புரை செய்கிறார்கள், விவாதம் நடத்துகிறார்கள். இதனால் எங்கள் மனது புண்படுகிறது என்று கிறித்தவர்கள் இவர்கள் மீது தாக்குதல் தொடுத்தால், அதை சரி என்பார்களா? ஆக இது பலம் இருக்கிறது என்பதால் வெளிப்படும் திமிர்த்தனம் தானேயன்றி வேறொன்றுமில்லை.

பொதுவெளியில் இருக்கும் எதையும் விமர்சனம் செய்வதற்கு எவருக்கும் உரிமையுண்டு. செய்யப்படும் விமர்சனத்தில் தவறு இருப்பதாக கருதினால் சுட்டிக் காட்டுவதையோ, விசாரிப்பதையோ யாரும் தவறென கூற முடியாது. ஆனால் எங்கள் நம்பிக்கையை எதிர்த்து எழுதினால் நாங்கள் குண்டாந்தடியை எடுப்போம் என்பது பச்சையான ரவுடித்தனம். இதை மதத்தின் பெயரால் நியாயப்படுத்த நினைக்கும் எவருக்கும் மனிதனாக நீடிப்பதற்கான தகுதி இல்லை.

தோழர் துராப்ஷா குறிப்பிட்ட கட்டுரையை எழதவில்லை, அவரது ஃபேஸ்புக் ஐடிக்கு வந்திருக்கிறது என்பதற்காக மட்டும் தாக்கப்படவில்லை. அவர் தன்னை ஒரு பொதுவுடமையாளராக அறிவித்துக் கொண்டு வாழ்வது இவர்களுக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை இசுலாமிய மதவாதிகள் ஆட்சியிலிருந்தால் அவர் கடைய நல்லூரில் கல்லால் அடித்தே கொல்லப்பட்டிருப்பார். அந்த வகையில் இசுலாத்தின் ஆட்சியை நேற்றும்-இன்றும்-நாளையும் கொண்டு வராமல் இருப்பதன் மூலம் பல கோடி இசுலாமிய மக்கள் கொல்லப்படாமல் இருப்பதற்காக நாம் ‘அல்லா’விற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

இசுலாத்தில் இருந்து கொண்டு எல்லா பாவச்செயல்களையும் ஆதிக்கம், அதிகாரம் காரணமாக செய்யும் எவரையும் இவர்கள் சீண்டக்கூட மாட்டார்கள். ஆனால் உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன், நேர்மையுடன் பாடுபடுவேன், அதற்காக பொதுவுடமைக் கொள்கையை ஏற்கிறேன் என்று ஒருவர் அறிவித்தால் இவர்கள் கொலைவெறி அடைகிறார்கள்.

அந்த வகையில் உழைக்கும் இசுலாமிய மக்களின் எதிரிகள் எவரையும் இவர்கள் தமது சுண்டு விரலைக்கூட நீட்டி எதிர்த்ததில்லை. லாட்டரிச் சீட்டு புகழ் ஹாருணா, ஈராக்கையும், ஈரானையும் பிணக்காடாக்குவேன் என்று எக்காளமிடும் அமெரிக்காவின் பாதந்தாங்கிகளான சவுதி அரசு ஷேக்குகளா, இவர்களெல்லாம் இசுலாத்தின் பாதுகாவலர்கள் என்று போற்றுவார்கள். ஆனால் ஒரு ஏழையின் கண்ணீரைத் துடைப்பேன் என்று போராடும் ஒரு கம்யூனிஸ்ட்டை அவன் பிறப்பால் இசுலாமியராக இருக்கும் ஒரே காரணத்தால் ஒழிக்க முனைவார்கள்.

இசுலாமிய நண்பர்கள் உள்ளிட்டு அனைவரும் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலை வெளிப்படையாக கண்டிப்பதோடு தத்தமது நட்பு வட்டாரத்தில் இதை தெரிவித்து தோழர் துராப்ஷாவுக்கு நடந்திருக்கும் அநீதிக்கெதிராக பொதுக் கருத்தை உருவாக்க வேண்டும். இத்தகைய மத பிற்போக்குத்தனங்களிலிருந்து நமது மக்களை விடுவிப்பதற்கு உங்களது வெளிப்படையான ஆதரவு அவசியம் என்பதை இங்கே உரிமையுடன் கோருகிறோம்.

– வினவு செய்தியாளர்.

அப்துல் கலாம் வாயிலிருந்து ஆறாயிரம் மெகாவாட்

36

12.2.2012 அன்று சென்னை லயோலா கல்லூரியில் அணுசக்திக்கு எதிரான பெண்கள் போராட்டக்குழு சார்பில் நடைபெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்ட கவிதை.

___________________________

வன் கொடுப்பதை குடிக்க வேண்டும்,
அவன் தருவதை படிக்க வேண்டும்,
நம் தினச்சாவு கூட – இனி
அணுச்சாவாகவே அமைய வேண்டும்
எனும் அமெரிக்க திமிரின்
ஆதிக்க குறியீடே,
கூடங்குளம் அணு உலை !

போராடும் தமிழகத்தின்
ஒரு பகுதியாக இக்கவியரங்கம்…
அனைவர்க்கும் வணக்கங்கள்.

***

டிந்தகரை உணர்ச்சிகள்
ஒரு கவிதைக்குள் அடங்குமா ?
தெக்கத்தி உப்புக்காற்றில்
புதைந்திருக்கும் போர்க்குணங்கள்
திக்கற்ற அறிவாளிகளின்
தோலில் வந்து உரைக்குமா ?

கொலைவெறிக்கு இரையான காதுகள்
அணுவெறிக்கும் இசையுமென்ற
ஆளும் வர்க்க ஏளனத்தை,
கலைத்தெறியும் பெரும் பணிக்கு
கலைப்பணிகள் துணை சேர்ப்போம் !

போராடும் மக்களின்
உணர்ச்சிகர உண்மைகளை – நாடெங்கும்
வேரோடச் செய்வதற்கு வேண்டும்
நிறைந்த கவிதைகளும்,
நிறைய களப்பணியும்.

க்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம்..
புன்னையும் புலி நகக்கொன்றையும்
தென்னையும், வழிகாட்டும் பனையும்
பால்வடி மாரோடு எங்கள் அன்னையும்,

உன்னையும் என்னையும் காக்க
உண்ணா நிலையிருக்கும் உண்மையும்,

ப.சிதம்பரம், நாராயணசாமி, கலாமின்
பாசம் படிந்த உதடுகளில்
வழுக்கி விழுந்தவர்கள் உணரும்படி,
பக்கத்து மனிதரிடம்
தெக்கத்தி கதை சொல்வோம் !

கரத்து பிட்சா காடுகளில்
நாகரீக மேய்ச்சலிருப்போரே,
உங்களுக்கும் சேர்த்து தான்
இடிந்தகரை பட்டினிப்போரில்
காய்ந்து கிடக்கிறது
ஒரு தாயின் கருவறை.

நான் வேறு சாதியென்று
நழுவ முடியாது நீ !
பன்னாட்டு கம்பெனிகளின்
அணுக்கழிவுகள்
திண்ணியத்து மலமாய்
திணிக்கப்படுகிறது உனது வாயில் !

கெடுநிலை மத்தியில்
நடுநிலை இல்லை !
இரண்டிலொன்று –
இடிந்தகரை பக்கம் வந்தால்
நீ மனிதனாகலாம்,
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பக்கம் போனால்
காங்கிரசு மிருகமாகலாம் !

பொய்கள் ரதமேறி
புறப்பட்டுவிட்டன,
உண்மைகள் ஊரடங்கி கிடப்பதுவோ ?

இனி.. கவிதைகள்
அரங்கினில் மட்டும் போதாது,
காங்கிரசு பி.ஜே.பி
சிரம்களில் செலுத்தப்பட வேண்டும் !

றிந்து கொள்வோம் !
அபாயம்
அணு உலை மட்டுமல்ல,
அதனை கொண்டுவரும் அரசியல்…
ஆதரிக்கும் கட்சிகள்…

காங்கிரசும் – பா.ஜ.கவும்
ஏகாதிபத்திய இதழ் வழியும் எச்சில்கள் !
கைராட்டையாலேயே
நூல் விட்டவர் காந்தி,
நாட்டை காட்டிக்கொடுக்க
கண்ணாலேயே
நூல் விடுபவர்
மன்மோகன்சிங் !

நேரு, குழந்தைகளுக்குத்தான் மாமா,
மன்மோகனோ
இந்த குவலயத்திற்கே மாமா !
அமெரிக்க அடிமைத்தனத்தில்
அத்வானியும், மோடியும்
பன்னாட்டு கம்பெனி வேள்விக்கு
வில் பிடிக்கும் ராமா !

கனிமொழி ஆபத்தை
காப்பதே பெரும்பாடு !
அணு உலை பாதிப்பில்
அழியட்டும் தமிழ்நாடு
இது கருணாநிதி தமிழனின் நிலைப்பாடு !

ரொம்பவும் நோண்டிக்கேட்டால் நோ கமெண்ட்ஸ் !

அறிவிக்கப்படாத மின்வெட்டால்
அணு உலைக்கு ஆதரவாய்
பொதுக்கருத்தை உருவாக்க
ஜெயலலிதா ஏற்பாடு !
அன்னிய மூலதனத்தில்
கனக்குது அம்மாவின் மடிசாரு !

எழுந்து நீ போராடு !
இல்லையேல் சுடுகாடு !
கோக்கடித்தாலும் விடாது
அமெரிக்கா சாகடிக்கும்,
நீ.. ஆதரித்தாலும்
அணு உலை உன்னையும் கொல்லும் !

ஈழத்தமிழனுக்கு.. முள்ளிவாய்க்கால் !
இந்தியத்தமிழனுக்கு.. கூடங்குளம் !
மேலாதிக்க அடையாளங்கள் வேறு,
நோக்கம் ஒன்று.

த்துக்கொள்ளாத ஈராக்குக்கு
குண்டுவீச்சு !
ஒத்துக்கொண்ட இந்தியாவுக்கு
கதிர் வீச்சு !
உதவாது வெறும் வாய்ப்பேச்சு..

மவுனம் காத்தால் –

தலைமுறைகளின் சினைமுட்டையில்
அணுக்கரு வளரும்
தாயின் மார்பிலும் அணுக்கதிர் சுரக்கும்
அதையும் குடிக்க எத்தனித்து
உதடுகள் பிளந்த குழந்தை அலறும்
பிதுங்கிய விழிகளில் ப்ளூட்டோனியம் வழியும்.
தன்னிறம் மாறும்

புல்லினம் பார்த்து
தாழப் பறக்கும் பறவைகள்
இறக்கைகள் அடித்து குழறும்.
நிலத்தடி நீரும்… நெல்மணி குணமும்
தென்கடல் உப்பும்… தென்றல் காற்றும்
கடைசியில் நஞ்சாய் போய் முடியும்.

சம்மதித்தால் –

அப்துல் கலாம்
கனவு கண்ட இந்தியா
உன்னில் புற்று நோயாய் வளரும்
மன்மோகன்சிங்
நாட்டை முன்னேற்றும் திசையில்
தைராய்டு தசைப் பிண்டம் அசையும்.

அனுமதித்தால் –

அணு உலையும் அணு சார்ந்த படுகொலையும்
நெய்தல் திணையின்
முதல் பொருளாய் மாறிவிடும்.
அய்வகை நிலமும்
அணுக்கழிவின் பிணமுகமாய் ஆகிவிடும்.

இவ்வளவுக்கும் பிறகு –
நம் இழவெடுத்த மின்சாரம்
பன்னாட்டு கம்பெனிகளுக்கு,
இந்தியனாய் இருந்ததற்கு
அணுமின் மயானம் தமிழகத்திற்கு !

செர்நோபில், புகுஷிமா அணுக்கசிவில்
சிதைந்தொழிந்த முகங்களில்
பிழைத்திருக்கும் உண்மைகளை பார்த்து
உலகமே தெளிவுபெறும் வேளையில்
புதுச்சேரியில் போட்ட சரக்கு
தில்லிக்கு போயும் தெளியவில்லை நாராயணசாமிக்கு !

”அணு உலை.. யாரையும்… ஒன்னுமே செய்யாதாம் !
காசை கொட்டிய வேலை வீணாகிவிடுமாம் !”

கட்டிய அணு உலை வீணாகக் கூடாதென்றால்
கொட்டி மூடுங்கள் அதில் காங்கிரசு கழிவுகளை.

பார்ப்பன மனு உலைக்கும் காவல்
பன்னாட்டு அணு உலைக்கும் காவல்
தோரியமும் ஆரியமும் கலந்த

வீரியக் கலவை அப்துல் கலாமும்
‘அணுவுக்கு அஞ்சினால் கனவு நடக்குமா ?’
வாருங்கள் கனவு காணுவோம்
‘முதலில் கண்ணை மூடுவோம்’ என்கிறார்.

பொய்யிலிருந்து
மின்சாரம் தயாரிக்கும்
புதுவழி ஒன்றிருந்தால்
நாராயணசாமி வாயிலிருந்தே
நாலாயிரம் மெகாவாட்டும்
அப்துகலாம் வாயிலிருந்து
ஆராயிரம் மெகாவாட்டும்
தமிழகத்திற்கு கிடைக்கும்.

அன்றாடம் இவர்கள்

அவிழ்க்கும் பொய்கள்
அணுவுக்கே அடுக்காது…
அணுக்கழிவே சகிக்காது.

ளர்ச்சி என்பதற்காய்
புற்று நோயை ஏற்க முடியுமா ?
அறிவியல் சுகம் அடைவதற்காய்

மின்சாரத்தை முத்தமிட முடியுமா ?

பாதுகாப்பான முல்லைப் பெரியாறை
பாதுகாப்பற்றதென்றும்
பாதிப்பான அணு உலையை பாதுகாப்பென்றும்
திரிக்கும் தேசிய பொய்யர்கள்
திசையெங்கும்… ஜாக்கிரதை !
அணு உலைகளை விடவும் ஆபத்தானவை
இந்த அயோக்கியர்களின் வாய்கள்.

த்தாம் பசலிகளாம் நாம்
ப.சிதம்பரம் கேட்கிறார்.
“உங்களுக்கு மின்சாரம் வேண்டுமா ?
வேண்டாமா ?
மாண்புமிகு மத்திய அமைச்சரே
கொஞ்சம் பொறுங்கள்,
எங்கள் மாட்டிடம் கேட்டுவந்து
மறுபடியும் பதில் சொல்கிறேன்…

புல்லினமும், பூ வனமும்
கல்லினமும், கடலினமும்
எம் தமிழின் மெல்லினமும்
இடையினமும், வல்லினமும்

உழைக்கும் மக்களின் சொல்லினமும்,
தொடுவானம் தொடங்கி
கடலாழம் வரைக்கும்
பல்லுயிரினமும் சேர்ந்ததெங்கள் நாடு !

நீங்கள் நாட்டை முன்னேற்ற
நாங்கள் காட்டை இழந்தோம்..

நீங்கள் தொழிலை முன்னேற்ற

எங்கள் வயலை இழந்தோம்..
எங்கள் காற்றை இழந்துவிட்டு
உங்களிடம் ஏ.சி வாங்கவேண்டும்..

எங்கள் ஆற்றை அள்ளிக் கொடுத்துவிட்டு
உங்களிடம் ‘கின்லே’ ’பெப்சி’ வாங்கவேண்டும்..
எங்கள் கடலை இழந்துவிட்டு உங்களிடம்
உப்பு வாங்கவேண்டும்..
எங்கள் மகரந்தங்களை இழந்துவிட்டு
மானியத்தில் உங்களிடம்
சாம்பல் வாங்கவேண்டும்..

முதலாளித்துவ லாபவெறிக்கு
மொத்த இயற்கையையும்
இழந்த பிறகு தான்,
நாங்கள், செத்துப்போனதே
எங்களுக்கு தெரிய வந்தது !

மழை முடிந்தபின்
இலை சொட்டும் ஓசைகளைக் கேட்கவியலாமல்,
மரங்களை இழந்த எங்களை
நகரத்துக் கொசுக்கள்
காதோரம் வந்து கண்டபடி ஏசுகிறது !

குடியிருப்பின்
இறுக்கம் தாளாமல்
குடும்பத்தையே திட்டித்தீர்த்து
தீண்டப்பயந்து
வெறுத்து வெளியேறுகிறது தேள் !

வந்தமர மலரின்றி
வெறுமையில்,
தேடிக்களைத்த வண்ணத்துப்பூச்சி
எங்கள் இயலாமை பார்வை மீது
கண்டனம் பொழிகிறது வண்ணங்களை !

நம்பி ஒப்படைத்த,
ஊருணி, குளங்கள்,
ஆறு, ஏரியைக்
காப்பாற்ற வக்கில்லாத என்மேல்,
காக்கை எச்சமிடுகிறது !

தருவேன் என்ற நம்பிக்கையில்
வாசலில் வந்து மாடு கத்துகிறது,
ஒரு வாய்
தண்ணி தர இயலாமல்
கூனி குறுகுகிறேன் நான் !

வாழையும்… தாழையும்
உப்பும் மீனும், கடலும் கலனும்
செருந்தி மரத்தில் பொருந்தி வாழும்
பூச்சியும்.. எறும்பும்
கேட்கும் கேள்விகளுக்கு

என்னிடம் பதிலில்லை !

மாடு மடி நனைய.. நீரில்லை,
தும்பி குடிக்க தேனில்லை,
வண்டு படுக்க வளமான மண்ணில்லை,
கொண்டு வாராணாம் அணு உலை !
இயற்கையையே கொளுத்தி
எவனுக்கு வெளிச்சம் !

மின்சாரம்,
வேண்டுமா ? வேண்டாமா ?
எனக்கேட்ட அமைச்சர் அவர்களே,
உங்கள் அணுத்திமிர் பார்த்து
அஃறினைகளும் கேட்கின்றன,
“நீங்கள் சொல்லுங்கள் –
உங்களுக்கு இந்தியா வேண்டுமா ?
வேண்டாமா ?

– துரை.சண்முகம்

உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!

5

2007ஆம் ஆண்டில் சப்பிரைம் அடமானக் கடன் நெருக்கடியாக முதலில் அமெரிக்காவில் தொடங்கிய நெருக்கடி, பின்னர் உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகத் தாக்கிய பெரும் பின்னடைவாக வளர்ந்தது. பின்னர் இதுவே உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியாகப் பரிணமித்து, முதலாளித்துவ கட்டமைப்புக்கே ஏற்பட்ட நெருக்கடியாகத் தீவிரமடைந்துள்ளது.

2011, ஆகஸ்ட் 7ஆம் தேதியிட்ட “கார்டியன்” இதழில், அவ்விதழின் பொருளாதார ஆசிரியரான லேரி எலியட் எழுதிய கட்டுரை, கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து ஐந்து கட்டங்களில் இந்நெருக்கடி முற்றி வந்துள்ளதைப் பற்றிய சித்திரத்தைத் தொகுப்பாக வழங்குகிறது. இக்கட்டுரையின் மொழியாக்கம், நெருக்கடியின் பரிமாணத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும்.

2007ஆம் ஆண்டின் சப் பிரைம் அடமானக் கடன் குமிழி (திருப்பிக் கட்ட உத்தரவாதமில்லாத கடன்கள் மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான ஊகபேர சூதாட்டம்) வெடித்ததிலிருந்து இப்போது அமெரிக்காவின் கடன் அந்தஸ்தை கீழிறக்கியுள்ளது வரையிலான நெருக்கடிகள் இத்துடன் முடியப் போவதில்லை.

2007, ஆகஸ்டு 9;  2008, செப்டம்பர் 15;  2009, ஏப்ரல் 2;  2010, மே 9;  2011, ஆகஸ்ட் 5  அமெரிக்காவின் சப் பிரைம் அடமானக் கடன் குமிழி வெடித்ததிலிருந்து தற்போதைய வீழ்ச்சி வரை, மிகவும் கடுமையான நெருக்கடிகளாக ஐந்து கட்டங்களில் இந்நெருக்கடி முற்றி உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகத்  தாக்கியுள்ளது. முதலாளித்துவத்தின் பெருமந்தக் காலத்திற்குப் பிறகு, உலகப் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்கிய  நிலைமையை மேற்கூறிய நாட்களில் நாம் பார்க்க முடியும்.

நிதி நெருக்கடி
நியூ யார்க் பங்கு வணிகர் (படம் – கார்டியன்)

2007, ஆகஸ்டு 9-இல் தொடங்கிய முதற்கட்டம், வங்கித்துறை நெருக்கடியில் தொடங்கியது. பிஎன்பி பரிபாஸ் என்ற பிரான்சு நாட்டு வங்கி, தன்னுடைய  இருப்பில் பணம் இல்லாததால், அமெரிக்காவின் அடகுக் கடன் துறையில் செயல்படும் 3 பிரபல வேலியிடப்பட்ட நிதியங்களில் தனது செயல்பாடுகளை முடக்கி வைப்பதாக  அறிவித்தது. பல இலட்சம் கோடி டாலர் மதிப்புள்ளவை என்று கருதப்பட்ட ஏராளமான பந்தய ஒப்பந்தங்களின் மதிப்பு, தாங்கள் எண்ணிக் கொண்டிருந்ததைக் காட்டிலும் மிகவும் குறைவானதே என்ற உண்மை பல வங்கித்துறையினருக்கு இந்தத் தருணத்தில்தான்  தெரிய வந்தது.

எனினும், இதனால் ஏற்பட்ட பேரிழப்பு எவ்வளவு என்றோ, எந்தெந்த வங்கிகளுடைய பணம் இத்தகைய குப்பைப் பத்திரங்களில் சிக்கியிருக்கிறது என்றோ யாராலும் கணிக்க இயலவில்லை. இதன் காரணமாக, வங்கிகளுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை ஒரே நாளில் தகர்ந்தது. வங்கிகள் தமக்கிடையிலான வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டன.

நிதி நெருக்கடி மேலும் முற்றி வெடிப்பதற்கு ஓராண்டு காலம் பிடித்தது. 2008, செப்டம்பர்  15 அன்று முதலீட்டு வங்கியான லேமேன் பிரதர்ஸைத் திவாலாகிப் போவதற்கு அமெரிக்க அரசு அனுமதித்த அன்று அது வெடித்தது. எந்தவொரு வங்கியும் கடுமையான நெருக்கடியில் சிக்கிக் கொண்டால், உடனே அரசாங்கங்கள் அவற்றின் இழப்புகளை ஈடுசெய்து கைதூக்கி விடும் (பெயில் அவுட்) என்று ஒரு நம்பிக்கை பொதுவில் நிலவி வந்தது. திவாலாகும் நிலையில் இருந்த அமெரிக்காவின் மிகப் பெரிய முதலீட்டு வங்கியான பியர் ஸ்டீர்ன்ஸ்ஐ  இன்னொரு தனியார் வங்கி வாங்கிக் கொள்வதற்கான ஏற்பாட்டை, அமெரிக்காவின் மத்திய அரசு வங்கியான பெடரல் ரிசர்வ் செய்தது. இதேபோல, சப்பிரைம் கடன் அடமான நெருக்கடியில் சிக்கிய நார்த்தன் ராக் வங்கியை பிரிட்டிஷ் அரசு நாட்டுடமையாக்கியது.

உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!வங்கிகள் எனப்படுபவை “மூழ்கவே முடியாத அளவுக்கு மிகப் பெரியவை” என்ற நம்பிக்கையும் லேமன் பிரதர்ஸ் திவாலானவுடனேயே பொய்யாகி விட்டது. சீட்டுக்கட்டுச் சரிவது போல உலக நிதி அமைப்பே தடதடவெனச் சரிந்து விடக்கூடிய அபாயத்தின் காரணமாக, மேற்கத்திய அரசாங்கங்கள் கோடிக்கணக்கான டாலரைக் கொட்டி, தங்களது நாட்டின் வங்கிகள் நொறுங்கி விழுவதைத் தடுத்தன. உயிர் போகும் தருணத்தில் வங்கிகள் கைதூக்கி விடப்பட்டு விட்டன. என்றபோதிலும், அதற்குள்ளாகவே உலகப் பொருளாதாரம் சரியத் தொடங்கிவிட்டது.

நுகர்வோரின் நம்பிக்கையும் வர்த்தக உலகின் நம்பிக்கையும் சரிந்து கொண்டிருந்த அதேநேரத்தில், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வங்கிக் கடன்கள் நின்று போயின. பரவ இருக்கும் நிதி நெருக்கடியைக் கணக்கில் கொண்டு மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்க முடியவில்லை; ஏனென்றால், இந்த நெருக்கடிகள் வருவதற்கு முன்னர்தான், எண்ணெய் விலை உயர்வின் காரணமாகப் பணவீக்கம் பரவாமல் தடுக்கும் பொருட்டு, மத்திய வங்கிகள் அனைத்தும் வட்டி விகிதங்களை உயர்த்தியிருந்தன.

வளர்ச்சியடைந்த நாடுகளும் வளரும் நாடுகளும் கூட்டுச் சேர்ந்து புதிதாக உருவாக்கியுள்ள ஜி20 என்ற அமைப்பு, இந்தப் பொருளாதாரப் பின்னடைவு பெருவீழ்ச்சியாக மாறுவதைத் தடுக்கும் பொருட்டு, 2008 – 09 ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. வட்டி விகிதங்கள் தரைமட்டத்துக்குக் குறைக்கப்பட்டன. அரசின் செலவுகள் அதிகரிக்கப்பட்டு, சிறிதும் பெரிதுமான ஊக்கப் பொதிகள் அறிவிக்கப்பட்டன. நோட்டு அடித்துப் புழக்கத்தில்விடாமல், இணையத்தின் மூலம் மின்னணுப் பணத்தின் புழக்கம் கூட்டப்பட்டது.

2009  ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் நாளன்று  இலண்டனில் நடந்த ஜி20 அமைப்பின் மாநாட்டில், 5 இலட்சம் கோடி டாலர் அளவுக்கு அரசுச் செலவின அதிகரிப்பு மற்றும் வரிக்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதென்றும், அனைத்துலக நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) மற்றும் பிற அனைத்துலக நிதி அமைப்புகளுக்கும் 110 ஆயிரம் கோடி டாலர் கொடுத்து, வேலைவாய்ப்பையும் வளர்ச்சியையும் பெருக்குவதென்றும், வங்கிகளைச் சீர்திருத்துவதென்றும்  இந்த நாடுகளின் தலைவர்கள் உறுதியேற்றனர். இந்தத் திசையில் ஒரு அடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே, சர்வதேச ஒத்துழைப்பு சீர்குலையத் தொடங்கியது. நாடுகள் தத்தம் சொந்தத் திட்டத்தை அமல்படுத்தத் தொடங்கி விட்டன.

2010, மே 9 ஆம் நாள் அன்று உலகத்தின் கவனமும் கவலையும் தனியார் துறையிலிருந்து அரசுத் துறையை நோக்கித் திரும்பின. சர்வதேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் கிரீஸ் நாட்டுக்கு நிதியுதவி செய்யப் போவதாக அறிவித்தன. வங்கிகள் திவாலாகாமல் தடுப்பது என்பதிலிருந்து, அரசாங்கங்கள் திவாலாகாமல் தடுப்பது என்பதாகப் பிரச்சினை மாறியது. வரி வருவாய் குறைவு மற்றும் மக்கள் நலத் திட்டச் செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் மட்டுமின்றி, 2008-09 குளிர்காலத்தில் அறிவிக்கப்பட்ட நிதித்துறை சலுகைகள் காரணமாகவும் பொருளாதாரப் பின்னடைவுக் காலத்திலான கிரீஸ் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறை ஊதிப் பெருத்தது.

தனது நிதி நெருக்கடியை மூடி மறைத்ததன் காரணமாகவும், வரி வசூல் செய்ய முடியாத சிக்கல்களாலும் கிரீஸ் நாட்டு அரசு விசேடமான பிரச்சினைகளை எதிர்கொண்டது. மற்ற நாடுகளோ தங்கள் நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்வதைக் கண்டு பீதியடைந்தன. சிக்கன சீரமைப்பு என்பது புதிய முழக்கமாகியது. இது பிரிட்டன், ஐரோப்பிய வட்டார நாடுகளை மட்டுமின்றி, வெகு நீண்டகாலமாக பட்ஜெட் பற்றாக்குறை என்பதையே தனது கொள்கையாகக் கொண்டிருந்த அமெரிக்காவின் கொள்கை முடிவுகள் மீதும் இந்தச் சிக்கன சீரமைப்புக் கொள்கை தாக்கம் செலுத்தத் தொடங்கியது.

உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!தனியார் (முதலாளித்துவத்தின்) கடன் நெருக்கடி ஒரு நாட்டின் கடன் நெருக்கடியாக உருமாறும் நிகழ்ச்சிப் போக்கு கடந்த 2011, ஆகஸ்ட் 5  வெள்ளிக்கிழமையன்று முழுமையடைந்தது. வார இறுதி நாளன்று, வால் ஸ்டிரீட்டின் வர்த்தக நிறுவனங்கள் கடையை மூடும் வரைக் காத்திருந்த ஸ்டாண்டர்டு அண்டு புவர் என்ற தர மதிப்பீட்டு நிறுவனம், அமெரிக்காவின் கடனைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றலை, “ஏஏஏ” என்ற மிக உயர் தரத்தில் இனிமேலும் வைக்க இயலாது என்று அறிவித்தது.

இந்த அறிவப்பு வெளிவந்த தருணம் மிக மோசமானது. 2008இன் இறுதிக் காலத்துக்குப் பின், கடந்த வாரம்தான் பங்குச் சந்தை மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது என்பது மட்டும் இதற்குக் காரணமல்ல. மென்மேலும் மந்தத்தில் வீழ்ந்து வரும் உலகப் பொருளாதாரத்தையும், அதன் ஓர் அங்கமான ஐரோப்பாவில் கட்டமைப்பு நெருக்கடியையும் எதிர்கொண்டிருக்கிறார்கள் கொள்கை வகுப்பாளர்கள். முட்டாள்தனத்தில் அவர்களுக்கிடையில் காணப்படும் ஒற்றுமைதான், அவர்களுக்கிடையில் காணப்படும் கருத்தொற்றுமை. சிக்கன சீரமைப்பு என்ற அவர்களது கொள்கை,  நிலைமையை மேம்படுத்தப் போவதில்லை, மோசமாக்கப் போகிறது. 2007ஆம் ஆண்டு வெடித்த பொருளாதார நெருக்கடிக்குக் காரணமான பிரச்சினையையே அவர்கள் இன்னும் தீர்த்தபாடில்லை. சீனா, ஜெர்மனி போன்ற கடன் அளிக்கும் நாடுகளுக்கும் அமெரிக்கா போன்ற மிகப் பெரிய கடனாளி நாடுகளுக்குமிடையிலான ஏற்றத்தாழ்வு என்ற அந்தப் பிரச்சினைக்கு இதுவரை அவர்களால் எந்தத் தீர்வும் காண முடியவில்லை.

இத்தகைய சூழலில், வரவிருக்கும் நிலைமைகள் குறித்துத் தடாலடியாக நம்பிக்கையூட்டும் விதத்தில் பேச முடியாது. சந்தைகள் பெரிதும் ஆட்டம் கண்டவாறுதான் இருக்கும். அமெரிக்காவின் கடனைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றல் குறைந்து விட்டதாக ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் மதிப்பிட்டிருப்பதால், அமெரிக்கக் கடன் பத்திரங்கள் அளிக்கும் வருவாய் உயராது. ஜப்பானும் “ஏஏஏ” தரத்தை நீண்ட காலத்துக்கு முன்பே இழந்து விட்டது. அதன் மொத்த தேசியக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 200 சதவீத அளவையும் தாண்டிவிட்டது. அதன் கடன் பத்திரங்களின் மதிப்பு இன்னமும் அதளபாதாள நிலையில்தான் உள்ளது. காரணம், ஜப்பானியப் பொருளாதாரம் வளர்வதற்கான சாத்தியங்கள் மங்கலாகவே உள்ளன.

அமெரிக்காவின் நிலைமையும் அதுதான்.  இப்போதைக்கு உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்று கருதப்படும் அதன் கடன் பத்திரங்கள் அளிக்கும் வருவாயும் குறைவாகத்தான் இருக்கும். ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனத்தின் அறிவிப்பு வெளிவந்தவுடன், அமெரிக்காவுக்கு பெய்ஜிங் (சீனா) விட்ட டோஸ் சாதாரணமானதல்ல.

சீனாவின் 10 சதவீத ஆண்டு வளர்ச்சி என்பதன் பொருள், அமெரிக்காவை சீனா முந்தப் போகும் தருணம் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது என்பதுதான். சீனா விஞ்சும் என்பதையும், இந்த நிலைமையானது இரு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான போட்டியாகத் தொடர்ந்து நீடிக்கும் என்பதையும் காட்டுகிறது. தங்களது பொருளாதாரத்தை எப்படி  நிர்வகிக்க வேண்டும் என்று  மேற்குலக முதலாளி வர்க்கத்துக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு கீழை உலகத்தின் கம்யூனிஸ்டுகளுக்கு தைரியம் வந்துவிட்டது.  நிதிச் சந்தைகள் இந்த வாரத்தை எப்படி வேண்டுமானாலும் மதிப்பிடட்டும்.  2011, ஆகஸ்ட் 5  ஆம் தேதி என்பது,  அமெரிக்கா தனது மேலாதிக்கத்தை இழந்த நாள் என்றே இனி நினைவில் கொள்ளப்படும்.

அதிபர் ஒபாமாவுக்கு இவையனைத்தும் பயங்கரமான செய்திகள். பொருளாதார மீட்சியை அவரால் சாதிக்க முடியவில்லை. அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளிலும், கடனுக்காக ஜப்தி செய்யப்பட்ட வீடுகளிலும் அமெரிக்கா மூழ்கிக் கொண்டிருக்கிறது. இன்றுள்ளதைப் போல வேலையின்மை மிக அதிகமாயிருக்கும் ஒரு சூழலில் ரூஸ்வெல்ட்டுக்குப் பிறகு வேறு எந்த அதிபரும் தேர்தலில் வெற்றி பெற்றதில்லை. வரிச் சலுகைகள் முடியப் போகின்றன. அடுத்துவரும் மாதங்களில் நிதிக் கொள்கை மேலும் கடுமையாகப் போகிறது. பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதற்கு நோட்டு அடிப்பது என்ற மொண்ணையான ஆயுதம் ஒன்றுதான் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வசம் உள்ளது. அதற்கு முன் சந்தைகள் கொஞ்சம் இளகவேண்டும். அதற்குச் சில மாதங்கள் ஆகும். அதன் பின்னர்தான், இந்த மொண்ணையான ஆயுதத்தைக்கூடப் பயன்படுத்த முடியும்.

இதற்கும் மேல் வேறொன்று இருக்கிறது. கடனைத் திருப்பிக் கொடுக்கும் நம்பகத்தன்மை குறைந்து போன அமெரிக்கா என்கின்ற தேசிய அவமானத்துக்குத் தலைமை தாங்கிய அதிபராக ஒபாமா நினைவு கூரப்படுவார். அவர் ஜிம்மி கார்ட்டரைப் போலத் தோன்றுகிறார், ரூஸ்வெல்ட்டைப் போல அல்ல.

இந்த நிலைமைகளைக் கண்டு ஐரோப்பியர்கள் முறுவலிக்க முடியாது. ஏனென்றால், நாம் பார்த்துக் கொண்டிருப்பது அமெரிக்காவின் வீழ்ச்சியை மட்டுமல்ல; ஒட்டு மொத்த மேற்குலகின் வீழ்ச்சியைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். சென்ற வாரத்தின் பெரும் சரிவைத் தொடர்ந்து, ஜி7 நாடுகளுக்கிடையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி,  பிரான்சு, கனடா, ஜப்பான்  பேச்சுவார்த்தை தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால், இவர்களுக்கிடையிலான கூட்டத்தால் பயனிருந்திருக்கலாம். சந்தையின் மீது செல்வாக்கு செலுத்தி அமைதிப்படுத்தும் ஆற்றல் இன்று இவர்களுக்கு இல்லை. இன்று சீனாவைத் தவிர்த்து விட்டு, இந்த ஜி7 நாடுகள் மட்டும் கூடிப் பேசுவது என்பது, 1930களின் சர்வாதிகாரத்தை அமெரிக்காவைத் தவிர்த்த பிற “லீக் ஆஃப் நேஷன்ஸ்” நாடுகள் மட்டும் சேர்ந்து முறியடித்திருக்கும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது.

உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011): தீராத தலைவலி!இந்தக் கதைக்கு சுபமான முடிவு ஏதுமில்லை. குமிழிப் பொருளாதார காலத்தில் மட்டுமீறி வாங்கிக் குவித்த கடனைத் தனிநபர்கள் முதல் வங்கிகள் வரை அனைவரும் திருப்பி அடைத்தல்,  அதிகபட்ச வேலையில்லாத் திண்டாட்டம், நீண்ட காலத்திற்கு மிகவும் பலவீனமான பொருளாதார வளர்ச்சி மிக அதிகபட்சமாக நேர்மறையில் நடக்கக் கூடியது இவ்வளவுதான். எதிர்மறையில் அதிகபட்சமாக நடக்கக் கூடியது என்ன? அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டும் பின்னோக்கிச் செல்ல, உலகப் பொருளாதாரமும் மீண்டும் தேக்கத்தில் விழும். ஐரோப்பிய ஒன்றியமே பிய்ந்து சிதைந்து போகும். இரண்டாவதாகக் கூறப்பட்ட இருண்ட சூழல் எற்படுவதற்கான சாத்தியமே அதிகம். சென்ற வாரத்தைக் காட்டிலும் இன்று அந்த சாத்தியம் அதிகரித்திருக்கிறது.

ஏன்? ஏனென்றால் தேசங்களுக்கிடையே ஒத்துழைப்பு இல்லை. சிக்கனத்துக்கான திட்டங்கள்தான் உள்ளன. வளர்ச்சிக்குத் திட்டமில்லை. கடன் வாங்கிப் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளைத் தூண்ட முடிந்த நாடுகள்கூட, கடன் வாங்கத் தயங்குகின்றன. யூரோ என்ற ஒற்றை நாணயம் குலைந்து விடாமல் தடுக்க வேண்டுமானால், ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான ஐக்கியத்தை விரைவுபடுத்த வேண்டும். இதற்குத் தேவையான அரசியல் உறுதி ஐரோப்பிய ஒன்றியத்திடம் இல்லை.

பண்டங்களின் விலைகள் குறைந்து வருகின்றன. ஆனால், அது ஒன்று மட்டும்தான் நல்ல செய்தி. மற்றபடி 9, ஆகஸ்டு, 2007 அன்று தொடங்கிய நெருக்கடி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதில் பாதி தூரத்தைக்கூட நாம் இன்னும் கடக்கவில்லை. அந்த நெருக்கடி அபாயகரமான புதிய இடைக்கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012
ஆங்கில மூலம் – Global financial crisis: five key stages 2007-2011

சொல்லாத சோகம் – யாரும் வெல்லாத வீரம் ! பாடல் !!

36

தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.

=========

பாபர், தன் மகன் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற உயிலில் சொல்கிறார். ‘அருமை மகனே, வகை வகையான மதங்களை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். நீ உனது மனதை குறுகிய மத உணர்வுகள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தக் கூடாது. பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.’ இது பாபர் தன் கைப்பட எழுதிய உயில். அர்ஜூனனுக்கு கண்ணன் செய்த கீதோபதேசம் போல புராணக் கட்டுக்கதை அல்ல. எனினும் அந்த பாபர்தான் கோயிலை இடித்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

இவர்கள் பழைய வரலாற்றை மட்டுமா திரித்தார்கள்! வெள்ளையனுக்கு எதிராக வீரப் போர் புரிந்து இறந்த முஸ்லீம் போராளிகளின் தியாகத்தையும் மறைக்கிறார்கள், திரிக்கிறார்கள். போர்த்துக்கீசியரை கடற்போரில் வென்ற கேரளத்தின் குஞ்ஞாலி மரைக்காயரையும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கு தலைமை தாங்கிய மன்னன் பகதூர்ஷாவையும் எத்தனை பேருக்குத் தெரியும்? வெள்ளையர்கள் நடுநடுங்க வீரப் போர் புரிந்த பைசலாபாத் மௌல்வி அகமதுஷாவை வெள்ளையரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு சதி செய்து கொன்றவன் அன்றைய அயோத்தியின் இந்து மன்னன் ஜகன்னாத ராஜா, என்று யாருக்குத் தெரியும்?

முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்ட வேலூர் கோட்டைக் கலகத்திற்கு தலைமை தாங்கிய முஸ்லீம் தளபதிகள் சவுக்காலும் புளியம் விளாறுகளாலும் அடித்தே கொல்லப்பட்டது யாருக்குத் தெரியும்? பகத்சிங்கைப் போலவே தூக்கு மேடை ஏறிய அவன் தோழன் அஷ்வகுல்லாகானை யாருக்குத் தெரியும்?

தெரியக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதனால்தான் புராணப் புளுகுகளை உண்மை போல சித்தரிக்கும் தொலைக்காட்சியில் திப்புசுல்தானின் வரலாற்றை கற்பனைக் கதை என்று குறிப்பிடுகிறார்கள். இருட்டடிப்பு மட்டுமா, அந்தத் தியாகிகளை துரோகிகள் என்றும் தூற்றுகிறார்கள்.

அவர்களுடைய வாரிசுகளும் இந்த மண்ணின் மைந்தர்களுமான முஸ்லீம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்கிறார்கள். எத்தனை பெரிய துரோகம், உங்கள் இதயம் வலிக்கவில்லையா, கண்கள் பனிக்கவில்லையா இந்த அநீதியைக் கண்டு?



சொல்லாத சோகம் – யாரும்  வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – இது கண்ணீரின் கீதம்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும் வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…
அயோத்தி என்பது தியாகம் – அதன் சின்னம் அசரத் பேகம்
கோரஸ் : அதன் சின்னம் அசரத் பேகம்

அசரத் மஹல் அயோத்தியின் ராணி. முதல் சுதந்திரப் போரில் ஆங்கிலேயரை எதிர்த்து வீரப் போர் நடத்தி தோல்வியுற்றாள் ஹசரத் மஹல். அவளுக்கு அடைக்கலம் அளிக்கக் கூட எந்த இந்து மன்னனும் முன்வரவில்லை. தன் 10 வயது மகனோடு இமயத்தின் அடிவாரக் காடுகளில் அநாதையாக திரிந்து இறந்தாள் அந்தத் தாய்.

அயோத்தி என்பது தியாகம் – அதன் சின்னம் அசரத் பேகம்
கோரஸ் : அதன் சின்னம் அசரத் பேகம்

ஆளரவம் இல்லா காட்டில்…அநா..தையாக மரணம்
கோரஸ் : அநா..தையாக மரணம்

அந்தப் பெண் ஈன்ற மண்ணே… இன்று அய்யோ அவமானம்…
கோரஸ் : அந்தப் பெண் ஈன்ற மண்ணே… இன்று அய்யோ அவமானம்…

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

திப்பு சுல்தானின் வீரம் – கட்டபொம்மனையும் மீறும்
கோரஸ் : கட்டபொம்மனையும் மீறும்

திப்பு சுல்தான், இந்திய மன்னர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வெள்ளையனை விரட்ட வேண்டும் என்பது அவன் கனவு. ஆனால், திப்பு தோற்கடிக்கப்பட்டான். அவனை முதுகில் குத்தியவர்களில் முதன்மையானவர்கள் மராத்திய பேஷ்வா மன்னர்கள். வேறு யாருமல்ல, அவர்கள்தான் ஆர்எஸ்எஸ்சின் மூதாதையர்களான சித்பவன பார்ப்பனர்கள்.

திப்பு சுல்தானின் வீரம் – கட்டபொம்மனையும் மீறும்
கோரஸ் : கட்டபொம்மனையும் மீறும்

இந்து மன்னர்களின் துரோகம் – எட்டப்பன் வகையில் சேரும்…
கோரஸ் : எட்டப்பன் வகையில் சேரும்…

தன் படையோடு தானும் சாவை எதிர்கொண்ட தீரம்…
கோரஸ் : தன் படையோடு தானும் சாவை எதிர்கொண்ட தீரம்..

என்றும்…உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்..

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

மாப்பிளா போராட்டம் – மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
கோரஸ் : மண்ணை உழவன் கையில் சேர்க்கும்

உழுபவனுக்கு நிலம். மாப்பிளா முஸ்லீம் விவசாயிகளின் முழக்கம். அது தாழ்த்தப்பட்ட மக்களும் முஸ்லீம் விவசாயிகளும் இணைந்து நடத்திய போராட்டம். சொந்த மண்ணின் மக்களை ஒடுக்க வெள்ளையனின் காலை நக்கினார்கள் நம்பூதிரிகள். கிராமம் கிராமமாக கொலை செய்யப்பட்ட போதும் 50 ஆண்டு காலம் அந்த போராட்டம் ஓயவில்லை.

மாப்பிளா போராட்டம் – மண்ணை உழவன் கையில் சேர்க்கும்
கோரஸ் : மண்ணை உழவன் கையில் சேர்க்கும்

நம்பூதிரி வெள்ளையர் ஆட்டம் – அவன் சாதித் திமிரை ஓட்டும்
கோரஸ்: அவன் சாதித்திமிரை ஓட்டும்

அரை நூற்றாண்டு காலம் அடி பணியாத கோபம்
கோரஸ் : அரை நூற்றாண்டு காலம் அடி பணியாத கோபம்

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும் வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

முதல் சுதந்திரப் போராட்டம் – தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
கோரஸ் : தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்

வேலூர் கோட்டை. அங்கே சிறை வைக்கப்பட்டிருந்த திப்புவின் முஸ்லீம் தளபதிகளும் ஆங்கிலப் படையின் தமிழ் சிப்பாய்களும் கோட்டையைக் கைப்பற்றினார்கள். கிளர்ச்சியை நசுக்கினான் வெள்ளையன். பீரங்கி வாயில் வைத்து அவர்களை பிளந்து அகழியில் வீசினான். விடுதலைப் போரின் உறவாய் அந்த மண்ணில் உறைந்து விட்ட இரத்தத்தில் மதம் எங்கே?

முதல் சுதந்திரப் போராட்டம் – தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்
கோரஸ் : தமிழ்மண்ணில்தான் வெள்ளோட்டம்

வெள்ளை கசையால் சிதைந்த தேகம் – வேலூர் கோட்டை அகழியை மூடும்
கோரஸ் : வேலூர் கோட்டை அகழியை மூடும்

அந்த முஸ்லீம் மக்கள் தியாகம்…விடுதலைப் புயலின் கருவாய் மாறும்…
கோரஸ் : அந்த முஸ்லீம் மக்கள் தியாகம்…விடுதலைப் புயலின் கருவாய் மாறும்…

என்றும்… உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்…வாழும்

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

எட்டப்பன்மாரின் துரோகம் – இந்து என்பதனாலா மாறும்
கோரஸ் : இந்து என்பதனாலா மாறும்

பேஷ்வா அரச பரம்பரையும் இன்னும் பல எட்டப்பன்களும் நினைத்திருப்பார்களா, இந்து என்ற ஒரே காரணத்தால் நாம் போற்றப்படுவோம் என்று. அல்லது களத்தில் உயிர்நீத்தானே திப்பு சுல்தான், அவன் நினைத்திருப்பானா, முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் நாம் தூற்றப்படுவோம் என்று. இசைப்பார் இல்லை என்பதால் அந்த ராகம் இல்லாமலா போய் விடும்.

எட்டப்பன்மாரின் துரோகம் – இந்து என்பதனாலா மாறும்
கோரஸ் : இந்து என்பதனாலா மாறும்

திப்பு சுல்தானின் தியாகம்… – ஏன் முஸ்லீம் என்ற பேதம்
கோரஸ் : ஏன் முஸ்லீம் என்ற பேதம்

இது பாடாத வீரம் யாரும் தேடாத ராகம் –
கோரஸ் : இது பாடாத வீரம்  யாரும் தேடாத ராகம்

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்… வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

என்றும் உன்னோடும் என்னோடும் மண்ணோடும் வாழும்… வாழும்…

கோரஸ் : சொல்லாத சோகம் – வெல்லாத வீரம்
நெஞ்சோடு மோதும் – கண்ணீரின் கீதம்…

__________________________________________

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் காவி இருள் ஒலிக்குறுந்தகடில் இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கிறது. ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367

 

இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு!

17

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரை முடித்த கையோடு, இரானைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டன, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள். அமெரிக்கா, ஆப்கான் மற்றும் இராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்த சமயத்திலேயே, “இரான், சிரியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளையும் ரவுடி அரசுகள்” எனப் பழித்துப் பேசி வந்தார், அந்நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். குறிப்பாக, இரானின் இசுலாமியக் குடியரசைக் கவிழ்த்துவிட்டு, அங்கு தனது அடிவருடிகளின் ஆட்சியைத் திணிக்க, அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளாக வெளிப்படையாகவே முயன்று வருகிறது.

இரானில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தப் பொருளாதாரத் தடையுத்தரவுகள், எதிர்த்தரப்பினரைத் தூண்டிவிடுதல், இரகசியக் குழுக்களைக் கட்டி அந்நாட்டினுள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துதல் எனப் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் அமெரிக்கா, இப்பொழுது அந்நாட்டின் மீது ஓர் அதிரடித் தாக்குதலை நடத்தும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளைக் குவித்து வருகிறது.  இராக்கிலிருந்து தனது கடைசித் துருப்புகளையும் விலக்கிக் கொண்டுவிட்டதாக அறிவித்துள்ள ஒபாமா, அத்துருப்புகளை இரானை அச்சுறுத்தும் நோக்கத்தோடு குவைத்தில் இறக்கிவிட்டுள்ளார். இரானில் இராணுவத் தலையீடு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, அந்நாடு அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகவும் அது தொடர்பாகப் புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளன, மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள்.

இரான் இரகசியமாக அணுகுண்டைத் தயாரித்து வருகிறது என்ற தமது புளித்துப்போன குற்றச்சாட்டை நிரூபிக்கவும், இரானை ஓர் பயங்கரவாத நாடென முத்திரை குத்தவும் முயலும் அமெரிக்க ஏகாதிபத்திய கூட்டணி, அதற்காக மிகவும் கேவலமான, கீழ்த்தரமான வேலைகளையும் செய்து வருகிறது. அமெரிக்காவின் இந்த அடாவடித்தனங்களுக்கும் அயோக்கியத்தனங்களுக்கும் வழமை போல சர்வதேச அணுசக்தி முகமையும், ஐ.நா. மன்றமும் அடியாளாகச் செயல்பட்டு வருகின்றன.

இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !சர்வதேச அணுசக்தி முகமை, “இரான் 2003-ஆம் ஆண்டுக்கு முன்பாக அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக நடத்தி வந்த பரிசோதனைகளை இன்னமும் கைவிடாது தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதாக’’க் குறிப்பிட்டு கடந்த நவம்பர் மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டதோடு, அதற்காக இரானைக் கண்டித்துத் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட ஆக்கப் பணிகளுக்காகத்தான் அணுசக்தி பரிசோதனையில் ஈடுபட்டு வருவதாக இரான் கூறுவதை ஏற்றுக் கொள்ளாத சர்வதேச அணுசக்தி முகமை, இரான் அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரிக்க முயன்று வருகிறது என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக எந்தவொரு புதிய சான்றையும் தனது அறிக்கையிலோ தீர்மானத்திலோ சுட்டிக் காட்டவில்லை. மாறாக, இது பற்றிய ஆதாரங்கள் பின்னர் தரப்படும் என்று பொத்தாம் பொதுவாகத்தான் குறிப்பிட்டுள்ளது.

உண்மையில் சர்வதேச அணுசக்தி முகமையின் இந்தப் புளுகுணி அறிக்கையும் கூட, அதனின் சொந்தசரக்கு கிடையாது. இரானின் அணுசக்திப் பரிசோதனைகள் குறித்து மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளின் உளவு நிறுவனங்கள் அளித்த விவரங்கள் அடங்கிய ஒரு கணினிக் கோப்பை அடிப்படையாகக் கொண்டுதான் சர்வதேச அணுசக்தி முகமை தனது அறிக்கையைத் தயாரித்துள்ள உண்மையும் இப்பொழுது அம்பலத்திற்கு வந்துவிட்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் முன்னாள் இயக்குநரும், அமெரிக்காவின் அணுஆயுதத் துறையோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவருமான ராபர்ட் கெல்லி, இந்த மோசடியை ஸெய்மோர் ஹெர்ஷ் என்ற பத்திரிக்கையாளரிடம் அம்பலப்படுத்தி பேட்டியளித்திருக்கிறார்.    இதுவொருபுறமிருக்க, சர்வதேச அணுசக்தி முகமை ‘தயாரித்த’ அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படும் முன்பே, அது ‘கடத்தி’ச் செல்லப்பட்டு, மேற்குலகப் பத்திரிக்கைகளிலும், தொலைக்காட்சிகளிலும் “பிரேகிங் நியூஸாக” வெளியிடப்பட்டது.

இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !இப்படி அறிக்கையைத் தயாரித்ததிலும், அது வெளியானதிலும் நடந்த பல உள்ளடி வேலைகளும் சதிகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்த போதிலும், அமெரிக்க ஆளும் கும்பலும், மேற்குலக ஊடகங்களும் அது பற்றியெல்லாம் கூச்சப்படவில்லை. குறிப்பாக, இந்த ஆண்டின் இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருப்பதால், அமெரிக்காவில் இரானுக்கு எதிரான போர்வெறிக் கூச்சல் நாலாந்திர பாணியில் காதுகூசும் அளவிற்கு நடந்து வருகிறது.

‘‘இரானுடன் ஏற்றுமதி  இறக்குமதி வர்த்தகத்தில் ஈடுபடும் எந்தவொரு நாடும் அமெரிக்க டாலரைச் செலாவணியாகப் பயன்படுத்தக்கூடாது; யூரோவைச் செலாவணியாகப் பயன்படுத்தினால், பொருளாதாரத் தடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள பொருட்களை இரானில் இருந்து இறக்குமதி செய்வதற்குப் யூரோவைப் பயன்படுத்தவில்லை என்று இறக்குமதி செய்யும் நாடுகளின் மத்திய வங்கிகள் சான்றளிக்க வேண்டும்” என மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் இரானின் எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளை ஏற்கெனவே போட்டுள்ளன. தற்பொழுது, அமெரிக்க அதிபர் ஒபாமா சர்வதேச அணுசக்தி முகமையின் அறிக்கையைக் காட்டி, “இரானின் மத்திய வங்கியுடன் தொடர்பு வைத்திருக்கும் எந்தவொரு நாடும் அமெரிக்காவின் வங்கிகள், நிதி நிறுவனங்களோடு வணிகத் தொடர்புகளை வைத்துக் கொள்ள முடியாது” என்ற புதிய பொருளாதாரத் தடையுத்தரவை விதித்திருக்கிறார்.

அமெரிக்காவின் இப்புதிய பொருளாதார தடையுத்தரவு, தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போன்றதாகும். இரானிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் நாடுகள் அனைத்தும் இரானின் மத்திய வங்கியோடு தொடர்பு வைத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது.  இந்த நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதன் மூலம், இரானின் உயிர்நாடியான எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்தை முற்றிலுமாக முடக்கிவிட நரித்தனமாக முயலுகிறது, அமெரிக்கா.

இந்தியா, சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளும்;  இத்தாலி, ஸ்பெயின், கிரீஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய யூனியன் நாடுகளும்தான் இரானுடன் கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுள் முக்கியமானவை. ஐரோப்பிய யூனியன் எதிர்வரும் ஜூலை 1 முதல் இரானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை முற்றிலுமாகத் தடை செய்யப் போவதாக அறிவித்து, அமெரிக்காவின் மனதைக் குளிரவைத்துவிட்டது. ஜப்பானும் தென் கொரியாவும் அமெரிக்காவின் விருப்பப்படி தங்களின் கச்சா எண்ணெய் இறக்குமதியை இரானிலிருந்து சவூதி அரேபியாவிற்கு மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டன.

அமெரிக்கா தனது புதிய பொருளாதார தடையுத்தரவை அமல்படுத்துவதற்கு ஆறு மாத கால அவகாசம் அளித்திருக்கிறது. இந்தியா, இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு, இரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைக் குறைக்கப் போ்வதில்லை என வீறாப்பாக அறிவித்திருக்கிறது. சீனாவோ அமெரிக்காவின் பொருளாதார தடையுத்தரவை வாயளவில் கண்டித்தாலும், மறுபுறம் இந்த நெருக்கடியைப் பயன்படுத்திக்கொண்டு, தான் இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு அதிகக் கட்டணச் சலுகை தர வேண்டும் எனப் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது திணித்துள்ள இப்பொருளாதார தடையுத்தரவு, அந்நாட்டின் மீது ஓர் ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிடுவதற்கு ஒப்பானது. அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கி வைத்துள்ள இம்மறைமுகமான போரை எதிர்கொள்வது என்ற அடிப்படையில், தனது நாட்டின் கடற்பரப்புக்குட்பட்ட ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய் போக்குவரத்தைத் தடைசெய்வதன் மூலம் அமெரிக்காவிற்குப் பதிலடி கொடுப்போம் என இரான் அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இரான் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் தலையாட்டி ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகளுக்கு, இரானின் இந்தத் தடையை எதிர்ப்பதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. மேலும்,  தன்னைவிட மிகப் பெரும் இராணுவ வலிமையும், அணு ஆயுத பலமும் மிக்க அமெரிக்காவின் அச்சுறுத்தலை  இப்படிபட்ட அதிரடி நடவடிக்கைகளின் மூலம்தான் இரான் போன்ற ஏழை நாடுகள் எதிர்கொள்ள முடியும்.

இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !மேற்காசிய நாடுகளில் இருந்து கடல் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் நான்கில் மூன்று பங்கு எண்ணெய் ஹொர்முஸ் கால்வாய் வழியாகத்தான் செல்கிறது. ஹொர்முஸ் கால்வாயில் கச்சா எண்ணெய்ப் போக்குவரத்துக்கு ஏற்படும் சிறு இடையூறுகூட, உலக நாடுகள் எங்கும் பாரதூரமான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள்கூட அலறத் தொடங்கியுள்ளனர்.  இரான் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையுத்தரவுகளை விலக்கிக் கொள்வது மட்டும்தான் இப்பிரச்சினைக்கு ஒரே, எளிமையான தீர்வு. ஆனால், அமெரிக்காவோ, இரானை ஆத்திரமூட்டும் நோக்கத்தோடு, பாரசீக வளைகுடாப் பகுதியில் தனது அணு ஆயுதம் தாங்கிய போர்க் கப்பலையும் துருப்புகளையும் கொண்டுவந்து இறக்கி, இந்த நெருக்கடியைத் தீவிரப்படுத்தி வருகிறது.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இரானின் எதிர்த்தரப்பைத் தூண்டிவிட்டு, இரானின் இசுலாமியக் குடியரசுக்கு எதிராக ஒரு வண்ணப் புரட்சியை நடத்த முயன்று தோற்றுப் போன அமெரிக்க ஏகாதிபத்தியம், தற்பொழுது இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த போரையும், பயங்கரவாதத் தாக்குதல்களையும்தான் நம்பியிருக்கிறது. அமெரிக்கா பாரசீக வளைகுடாவில் தனது துருப்புகளை இறக்கிய அதேவேளையில், இரானைச் சேர்ந்த இளம் அணு விஞ்ஞானியான முஸ்தபா அகமதி ரோஷன் தனது காரில் பயணம் செய்துகொண்டிருந்தபொழுது, அவரது காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து இறந்துபோனார். 20 சதவீத அளவிற்கு யுரேனியத்தைச் செறிவூட்டும் முயற்சியில் தான் வெற்றி அடைந்துவிட்டதாக இரான் அறிவித்த இரண்டாவது நாளே இப்படுகொலை நடந்துள்ளது.

இரானைச் சேர்ந்த அணுவிஞ்ஞானிகள் இப்படிக் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரோஷன் உள்ளிட்டு ஆறு அணுவிஞ்ஞானிகள் பயங்கரவாதத் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டுள்ளனர். பொருளாதார தடையுத்தரவுகள் மூலம் முடக்கவியலாத இரானின் அணுசக்தி பரிசோதனைகளை, அந்நாட்டின் அணு விஞ்ஞானிகளைக் கொல்வதன் மூலம் சாதிக்கப் பார்க்கிறது, அமெரிக்கா.

இப்படுகொலைகள் ஒருபுறமிருக்க, இரானின் அணுசக்தி பரிசோதனைக் கூடங்கள், இராணுவ  ஏவுகணைத் தளங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானமொன்றை இரான் இராணுவம் சுட்டு வீழ்த்தியது. அந்த விமானம் தவறுதலாக இரானின் வான்பரப்புக்குள் சென்றுவிட்டதாகக் கூறி, உண்மையை மூடிமறைக்க முயன்று தோற்றுப் போனது அமெரிக்கா. இரானின் மீது நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னே இசுரேலின் உளவு நிறுவனமான மொசாத் இருப்பதை லீ ஃபிகாரோ என்ற பிரெஞ்சு நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது.

இப்படி இரான் மீது கடந்த சில ஆண்டுகளாகவே பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்க  இசுரேல் கூட்டணியைத்தான், பயங்கரவாத நாடுகளாக அறிவித்துத் தண்டிக்க வேண்டும்.  ஆனால், அமெரிக்கவோ சர்வதேச அரங்கில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு, அமெரிக்காவிற்கான சவூதி அரேபியத் தூதரைக் கொல்ல இரான் முயன்றதாகவும், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் இரானுக்கும் தொடர்பிருப்பதாகவும் கட்டுக்கதைகளைப் பரப்பி, இரானைப் பயங்கரவாத நாடென முத்திரை குத்திவிடக் கீழ்த்தரமாக முயன்று வருகிறது.

இரான் : அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக் குஞ்சு !அணு ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்றால், யுரேனியத்தை 90 சதவீத அளவிற்கு செறிவூட்டும் தொழில்நுட்பத் திறனைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், இரானோ மருத்துவச் சிகிச்சைக்குப் பயன்படும் வகையில் யுரேனியத்தை 20 சதவீதம் அளவிற்கே செறிவூட்டும் திறனைப் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்த கதையாக, ஏராளமான அணுஆயுதங்களைத் தயாரித்து வைத்திருக்கும் இசுரேலைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, இன்னும் அணு ஆயுத ஆற்றலைப் பெறாத இரானை அமெரிக்காவும் அதனின் கூட்டாளிகளும் தண்டிக்கத் துடிப்பது அநீதியானது. தம்மிடம் குவிந்து கிடக்கும் அணு ஆயுதங்களை அழிக்கவோ, கைவிடவோ விரும்பாத அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு ஆகிய ஏகாதிபத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளான இசுரேலும், இந்தியாவும், “இரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க முயலக் கூடாது என உபதேசிப்பதும், அதற்காக அதனைத் தண்டிக்க முயலுவதும்” கேலிக்கூத்தானது மட்டுமல்ல, அடிப்படையிலேயே நியாயமற்றது.

இராக் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுக்கும் முன்பாக, அந்நாட்டைப் பலவீனப்படுத்தும் சதித் திட்டத்தோடு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதைப் போலவே, இரான் மீதும் அடுக்கடுக்காகப் பல பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் திணித்துவருகிறது, அமெரிக்கா. சதாம் உசேன் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தயாரித்துக் குவித்து வைத்திருப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் நடத்தப்பட்டதைப் போலவே, இரான் இன்னும் ஓராண்டிற்குள் அணு ஆயுதங்களைத் தயாரித்துவிடும் திறனைப் பெற்றுவிடும் என்ற பிரச்சாரம் நடத்தப்படுகிறது. இப்பீதியூட்டும் புளுகுணிப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி, இரானைத் தனிமைப்படுத்தித் தாக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே, இரானின் அணுசக்தி பரிசோதனை முயற்சிகள் தொடர்பாக நடைபெற்று வந்த சர்வதேச பேச்சுவார்த்தையைச் சீர்குலைத்தது, அமெரிக்கா.  இவையனைத்தும் 1970களில் தான் இழந்த சொர்க்கத்தை எப்படியாவது மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்ற வெறியோடு சாத்தானின் பேரரசு அலைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

காதலைத் தீர்மானிப்பது அப்பியரன்சா, அப்ரோச்சா, அரிவாளா?

41

இன்று காதலர் தினம். ஊடகங்களின் உதவியால் ஊதிப்பெருக்கப்படும் இந்த தினத்தில் காதல் குறித்த இந்திய யதார்த்தம் கிஞ்சித்தும் இருப்பதில்லை. நம் சமூகத்தில் தோன்றும் காதல் எத்தகைய வில்லன்களையெல்லாம் எதிர்த்து போராட வேண்டியிருக்கிறது? குறிப்பாக சாதிவெறி கோலேச்சும் சமூகத்தில் காதல் வெற்றி பெறுவதற்கு வாழ்வா, சாவா என்று போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது. ஊடகங்களின் ஜிகினா காதலையும், யதார்த்தம் சுட்டெரிக்கும் உண்மைக் காதலையும் இந்தக் கட்டுரை அலசுகிறது. காதலர் தினத்திற்காக மீள் பதிவு.

விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் காதலுக்குத் தேவை தோற்றமா, அணுகுமுறையா (அப்பியரன்சா, அப்ரோச்சா) என்ற தலைப்பில் காதலர்கள், காதலித்து மணந்தவர்கள், காதலிக்கக் காத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் எல்லோரும் மனம் திறந்து ஒரு மாதிரியாக விவாதித்தார்கள்.

காதலின் ஆன்மாவை மறுத்து அலங்காரங்களை மட்டும் விவாதிக்கும் விஜய் டி.வி.
காதலின் ஆன்மாவை மறுத்து அலங்காரங்களை மட்டும் விவாதிக்கும் விஜய் டி.வி.

தோற்றத்தில் என்ன பிடிக்கும், பிடிக்காது வகையறாக்களை பட்டியலிட்டவர்கள் அழகு, தலைமுடி, சீரான பல், நடுத்தர உயரம், உடை நிறம், உடல் வண்ணம், உடை வகைகள், முதலானவற்றை அலசினார்கள். அடுத்து அணுகுமுறையைப் பட்டியலிட்டவர்கள் அசடு வழியாமை, எதிர் பாலை ஆதிக்கம் செய்யாமை, எதிர் பாலை உரிமை எடுத்துக் கொள்வது-கொள்ளாமை, என என்னவோ பேசினார்கள். பெண் சுதந்திரம் குறித்து தனது விருப்பப்படி உடை அணிவது, பேருந்தில் செல்வது, நண்பர்களிடம் பேசுவது, கேட்டதை வாங்கிக் கொடுப்பது, தன்னை அன்புடன் கவனிப்பது, இன்ன பிறவற்றை அடுக்கினார்கள். இப்படி ஒரு மணிநேரத்தில் காதலை அலசிவிட்டு காதலைப் பெண்களிடம் எப்படித் தெரிவிப்பது என்று பார்வையாளர்களை வைத்தே நடித்துக் காட்டினார்கள். மொத்தத்தில் காதலும், பெண்ணுரிமையும் ஒரு மணிநேரமாகப் படாதபாடு பட்டது என்றால் மிகையல்ல.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு இளைஞர் காதலிப்பது இவ்வளவு சுலபமா என்று ஆச்சரியப்பட்டு உடனே ஒரு பெண்ணைத் தெரிவு செய்து கணக்கு பண்ணுவதற்குத் திட்டமிடும் சாத்தியமும் உண்டு. இந்த ஜிகினாக் காதலைத்தான் பத்திரிகைகளும், காதலர் தினக் கொண்டாட்டங்களும் வருடா வருடம் போதித்து வருகின்றன. இந்திய நடைமுறையில் இந்த சரிகை வேலைப்பாடுகள் எவையும் செல்லுபடியாவதில்லை. உண்மையில் காதலிக்க வேண்டுமென்றால் பல தடைக்கற்களைக் கடக்கவேண்டும். காதலின் உயிராதாரமான இந்தப் பிரச்சினைகளின் பால் சினிமாவும், ஊடகங்களும் கவலை கொள்வதில்லை. காதல் டூயட்டுக்காக வெளிநாடு செல்லும் இயக்குநர்கள் எவரும் இந்த மண்ணின் உண்மைக் காதலை அதன் வலியை அறிந்து கொள்வதில்லை.

சாதி மதம் மாறி, ஜாதகம் பார்க்காமல், பெற்றோர்-உற்றோரை எதிர்த்துக்கொண்டு, மணம் செய்வது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. இதில் சமரசம் செய்து கொண்டு பெற்றொர் வழி திருமணம் செய்தவர்களே இங்கு அதிகம். அவர்களுக்கெல்லாம் காதல் விருப்பமற்றது என்பதல்ல, காதல் நடைமுறையில் சாத்தியமல்ல என்ற சமூக நிர்ப்பந்தமே காரணம். காதலிப்பவர்களும் கூட இந்த தடைக்கற்களைத் தாண்டுவதை விட சமரசம் செய்து கொண்டு குறுக்கு வழியைத் தேடுகிறார்கள். சாதி, மதம் மாறாமல் காதலிப்பது, தனது சாதியின் தரத்தினையொத்த சாதியில் காதலிப்பது, கீழ் சாதியைத் தவிர்ப்பது, தனது வர்க்க நிலைக்கேற்ப காதலிப்பது, காதலித்தாலும் ஜாதகப் பொருத்தம் பார்ப்பது, பெற்றோருக்காக வரதட்சணை கேட்டு காதலியை நிர்ப்பந்திப்பது, தாய் தந்தை விருப்பத்திற்காகக் காதலியை வேலையை விடச் செய்து வீட்டு விலங்காக நடத்துவது, பிறக்கும் குழந்தைகளை தந்தையின் சாதி அடையாளத்துடன் வளர்ப்பது, இருவரில் யார் மேல்சாதியோ அவர்களது சாதியப் பண்பாட்டைக் கடைபிடிப்பது….. இங்கே காதல் எங்கே இருக்கிறது?

இவ்வளவு பிற்போக்கு அழுக்குகளை அகற்றாமல், இதைப் பற்றி பேசாமல் காதலுக்கு தேவை தோற்றமா, அணுகுமுறையா என்று விவாதிப்பது அயோக்கியத்தனமில்லையா? தான் விரும்பிய உடைகளை அணிவதுதான் பெண்ணுக்கு சுதந்திரம் என்று பிதற்றுவது அக்கிரமில்லையா? இந்தியாவில் காதலுக்குத் தேவைப்படுவது போராட்டமும், கலகமும்தான். இந்த உண்மையை ரத்து செய்யும் ஊடகங்கள் காதலை மின்மினிப் பூச்சி போல உணர்த்துகின்றன. இருண்டு கிடக்கும் சமூக இருட்டை இச்சிறிய ஒளி அகற்றுவதில்லை.

காதலிப்பது ஜாலிக்காக, கல்யாணம் செய்வது பெற்றோருக்காக!
காதலிப்பது ஜாலிக்காக, கல்யாணம் செய்வது செட்டிலாக!

மேம்போக்கான காதல் நடவடிக்கைகள் பெருநகரங்களில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். இதிலும் ஜாலிக்காகக் காதல், செட்டிலாவதற்கு பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் என்பதே வழக்கமாக நடக்கிறது. ஆனால் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் காதல் என்பது இன்னமும் அபாயகரமாகவே உள்ளது. டெக்கான் குரோனிக்கிள் செய்தித் தாளில் 10.9.08 அன்று வந்த ஒரு துயரக்காதல் சம்பவம் இதைக் கண்ணீருடன் தெரிவிக்கிறது.

தஞ்சை மாவட்டம் அரித்துவார் மங்கலத்ததைச் சேர்ந்த சிவாஜி எனும் 32 வயது தலித் இளைஞரும், அம்மாபேட்டைக்கு அருகில் வாழும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 29 வயது லட்சுமியும் காதலிக்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தின் அரசியல், சமூக வாழ்க்கையில் கோலேச்சும் கள்ளர் சாதி அவ்வட்டாரத்தில் பிரபலமான ஆதிக்க சாதியாகும். ஒரு கள்ளர் சாதிப் பெண்ணை அதுவும் ஒரு தலித் இளைஞன் திருமணம் செய்வது என்பது அங்கே நிலநடுக்கத்திற்கு ஒப்பானது. விசயம் வெளியே தெரிந்தால் தஞ்சையே சாதி வெறியால் கொந்தளித்துக் குமுறும். இச்சூழ்நிலையில் இக்காதலர்கள் எவ்வளவு சிரமங்களோடும், அச்சத்தோடும், இரகசியமாகவும் காதலித்திருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

காதலிப்பதற்கே இவ்வளவு சாகசம் தேவைப்படும் போது திருமணம் என்பதை அங்கே கற்பனை கூடச் செய்யமுடியாது.

இந்நிலையில் காதலர்கள் வேறுவழியின்றி தமது பெற்றோர், உறவினர் அறியாமல் திண்டுக்கல்லில் இருக்கும் ஒரு மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு அங்கேயே வாழ்கின்றனர். சிவாஜி ஆட்டோ ஓட்டுநராக பிழைப்பு நடத்தி இல்லறத்தை நடத்துகிறார். தஞ்சைக்கும், திண்டுக்கல்லுக்கும் தூரம் சற்றே அதிகமென்பதால் கள்ளர் சாதி வெறியின் கொடுக்குகள் தம்மைத் தீண்டாது என்றே அந்த அப்பாவிக் காதலர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் வன்மத்திலும், வெறியிலும் மையம் கொண்டிருக்கும் இச்சாதி வெறிக்கு இந்த தூரமெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல.

லட்சுமியின் சகோதரர்கள் சுப்பிரமணியன், சிவக்குமார், மீனாட்சி சுந்தரம், மூவரும் காதலர்கள் திண்டுக்கல்லுக்கு புலம் பெயர்ந்ததைக் கண்டுபிடித்து சில ரவுடிகளுடன் ஒரு டாடா சுமோவில் செல்கிறார்கள். செப்டம்பர் 7 ஆம் தேதி இருப்பிடத்தை தெரிந்து கொண்டு சிவாஜியை அடித்து வண்டியில் ஏற்றுகிறார்கள். அதைத் தடுக்க முயற்சித்த லட்சுமி அடிபட்டவாறு செய்வதறியாமல் கதறுகிறார். எப்படியாவது தனது காதல் கணவனைக் காப்பாற்றவேண்டுமென போலீசில் புகார் கொடுக்கிறார். அடுத்த நாளே ஆனைமலைப் பகுதியில் சித்ரவதையுடன் கொலை செய்யப்பட்ட சிவாஜியின் உடலைப் போலீசார் கண்டுபிடிக்கிறார்கள். கோபத்தில் வந்த சகோதரர்கள் சிறிது அடித்துவிட்டு தனது கணவனை விட்டுவிடுவார்கள் என்று நினைத்தேன் இப்போது என்ன செய்வேன் என்று மனமுடைந்து கதறுகிறார் லட்சுமி.

உடன் பிறந்த தங்கை தாலியறுத்தாலும் பரவாயில்லை, ஒரு தலித் ஒரு கள்ளர் பெண்ணை தொடக்கூடாது என்று பித்தம் தலைக்கேறிய இந்த சாதிவெறிக் கொடூரத்தை அரங்கேற்றியவர்கள் யாரும் வயதானவர்கள் அல்ல. செல்பேசியும், இருசக்கர வாகனங்களும் இன்னபிற நவநாகரீகங்களைப் பயன்படுத்தியும், விஜய் டி.வியைப் பார்ப்பவர்களாவும் உள்ள இளைஞர்கள்தான். தமது தங்கைக்கு அவளது கணவனது பிணத்தையே திருமணப் பரிசாக வழங்கியிருக்கிறார்கள், அந்தப் பாசமிகு அண்ணன்மார்கள். தஞ்சையில் இனி ஒரு கள்ளர் பெண்ணை ஒரு தலித் கை வைக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பதற்கு இது ஒரு பாடம் என்று தஞ்சை வாழ் கள்ளர் குலக் கூட்டங்கள் வீரக்கதையாக பெருமை பேசும். கல்லூரிக்கு செல்லும் கள்ளர் மாணவிகளும் இந்தக்கதை மட்டுமல்ல இதற்கு முன்னால் நடந்த பல கதைகளையும் மனதில் கொண்டு காதலைக் கற்பனையில் கூட அரங்கேற்றாத மனநிலையை வளர்த்துக்கொள்வார்கள். காதலின் முன்னுதாரணங்களை இலக்கியத்தின் வழியாக ஷாஜகான் – மும்தாஜ், அனார்கலி – சலீம், ரோமியோ – ஜூலியட் போன்ற காதலர்களை வைத்து யாரும் சிந்திக்க முடியாது. இங்கே கொலை செய்யப்பட்ட காதலர்களின் கதைதான் காதலின் யதார்த்த இலக்கியமாகக் கட்டியம் கூறுகின்றன.

காதலர்களை எரிப்பது காலம் காலமாக நடக்கும் ஒரு இந்தியச் சடங்கு!
காதலர்களை எரிப்பது காலம் காலமாக நடக்கும் ஒரு இந்தியச் சடங்கு!

இது இந்தியக் காதலின் உண்மை முகம். கலப்பு மணம் செய்த காதலர்கள் கட்டி வைத்து எரிப்பது இங்கு நெடுநாள் இருக்கும் ஒரு சடங்கு. சில ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தாசலம் அருகே ஒரு கிராமத்தில் ஒரு தலித் இளைஞனும், ஒரு வன்னியப் பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இதையறிந்து ஆத்திரமடைந்த மணமகள் தரப்பு இருவரையும் பிடித்து ஊர்கூடி ஆதரிக்க எரித்துக் கொன்றார்கள். ஒரு காதல் ஜோடி எரிந்து சாவதை ஊரின் வன்னியர்கள் திரண்டு வந்து வாழ்த்தும் போது அந்த சாதி வெறியின் வன்மத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பல சமூக ஆர்வலர்களின் முயற்சிக்குப் பிறகு இப்போதுதான் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. வழக்கு முடிவடையவில்லை என்பதால் குற்றவாளிகள் சுதந்திரமாக உலா வருவதோடு எப்படியும் விடுதலை ஆவோம் என்று திமிராகவும் பேசிவருகிறார்கள். ஊரே இந்த எரிப்பில் பங்கெடுத்திருக்கும்போது சட்டம் மட்டும் என்ன செய்யும்?

சட்டமும், போலீசும், மொத்தத்தில் இந்த சமூக அமைப்பும் காதலர்களுக்கு எதிராகத்தான் அணிவகுக்கிறது. சாதி மாறி காதலிப்பதில் அதுவும் ஒரு தலித்தாக இருந்துவிட்டால் தண்டனை நிச்சயம் என்பதுதான் யதார்த்தம். ஆதிக்க சாதியின் பெண்ண ஒரு தலித் தொடுவதை சாதியின் புனிதம் கெட்டுப்போவதாக சாதிவெறி இயல்பாக சிந்திக்கிறது. இத்தகைய அடக்குமுறைகளுக்குள்ளே வாழும் ஒரு பெண்ணுக்கு காதலிக்கும் சுதந்திரம் எங்கே இருக்கிறது?

காதலில் மட்டுமல்லா கடவுளிலும் இதே சாதிவெறி அடங்காமல் நர்த்தனமாடுகிறது. சேலம் கந்தம் பட்டி கிராமத்தில் இருக்கும் திரௌபதி அம்மன் கோவிலில் வழிபடுவதற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி இல்லை. வன்னியர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தக் கோவிலில் வழிபடும் உரிமைக்காக தலித் மக்கள் நெடுங்காலமாக போராடி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக உயர்நீதிமன்றம் வழிபடும் உரிமையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டதும் இம்மாதம் 8ஆம் தேதி போலீசார் பாதுகாப்புடன் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலில் நுழைந்து அம்மனை வழிபட்டனர். இதை எதிர்த்த வன்னியர் தரப்பின் 200 குடும்பங்கள் மதுரை உத்தப்பரம் பிள்ளைமார்கள் செய்தது போல ஊரைக் காலி செய்து விட்டு அருகாமை மலையில் தங்கி போராட்டம் செய்கிறார்கள். அதிலும் சில வன்னிய சாதி வெறியர்கள் கோவில் இருந்தால்தானே கும்பிட வருவாய், கோவிலையே இடித்துவிடுகிறோம் என்று பேசி வருகிறார்கள். கோவிலின் புனிதம் கூட சாதிவெறிக்கு தப்பவில்லை.

காதலித்தால் எரிப்பார்கள்: கும்பிட்டால் கோவிலையே இடிப்பார்கள். இப்போது சொல்லுங்கள் எது காதல்? காதலுக்குத் தேவைப்படுவது என்ன?

பள்ளி மாணவர்களிடம் கொலைவெறி ஏன்? ஓர் ஆய்வு !

45

ஜெர்மனியில் திம் கிரெட்ஷ்மெர் என்ற 17 வயது மாணவன் தனது முன்னாள் பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்து பதினைந்து பேரைக் கொன்றுவிட்டு பின்னர் போலீசுடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு தன்னையும் சுட்டுக் கொண்டு இறந்திருக்கிறான். விடலைப் பருவத்து பள்ளி மாணவர்கள் இத்தகைய வன்முறையில் ஈடுபட்டு சக மாணவர்களை சுட்டுக் கொல்லும் சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி நடப்பதைக் கேள்விப் பட்டிருப்போம். அமெரிக்கா அளவுக்கு இந்தியாவில் துப்பாக்கிகள் இன்னமும் மலிவாகிவிடவில்லை என்றாலும் தனிநபரை முன்னிறுத்தும் அமெரிக்க பாணி வாழ்க்கைமுறை இங்கேயும் வளர்ந்து வருகிறது.

அப்படி மாறிய மாணவர்கள் சிலர் துப்பாக்கியுடன் செய்த வன்முறைகளை இந்தக் கட்டுரை ஆய்வு செய்கிறது. இன்றைய கல்வி, மொழி,  வாழ்க்கை, நுகர்வு பொருட்கள் அத்தனையும் மாணவர்களிடன் பொறுமையற்ற மனநிலையை உருவாக்குவதோடு, சமூக உணர்வை குன்றச் செய்வதையும் பார்க்கிறோம். ஆடம்பர வாழ்க்கை குறித்த நாட்டம், எப்படியும் முன்னேற வேண்டுமென்ற வெறி, சமூக மதிப்பீடுகளை மாற்றச் செய்யும் சுற்றுச்சூழல், எல்லாம் சேர்ந்து விடலைப்பருவத்தினரை சமூகத்திற்கு எதிரான பதட்டமுடைய தனிநபர்களாக மாற்றுகின்றது.

இந்தக் கட்டுரை நோயை மட்டும் ஆராயவில்லை. இந்த நோய்க்கு என்ன மருந்து அத்தியாவசியம் என்பதையும் எடுத்துச் சொல்கிறது. விடலைப் பருவத்தினரை எந்த அளவு சமூகமனிதர்களாக மாற்றுகிறோமோ அந்த அளவு அவர்களது வன்முறையை தணித்து நல்ல குடிமக்களாக உருவாக்க முடியும்.

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்

சம்பவம் 1. தெற்கு தில்லி, அரியானா எல்லையில் இருக்கும் குர்கான் நகரம். அங்கு யூரோ சர்வதேசப் பள்ளியில் அவினாஷ், வினய் இருவரும் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அதே வகுப்பில் படிக்கும் அபிஷேக் தியாகியுடன் தகராறு வருகிறது. அவினாஷின் அப்பா ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். வீட்டில் துப்பாக்கி வைத்திருக்கிறார். தொலைக்காட்சிப் பெட்டி அருகில் தயார் நிலையிலிருந்த துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அவினாஷ், வினய் இருவரும் அபிஷேக்கைச் சுட்டுக் கொல்கிறார்கள்.

சம்பவம் 2. பெங்களூர் நகரம். ஆங்கில வழி வகுப்பில் படிக்கும் அந்த மாணவனது வீடு, பள்ளிக்கு அருகில்தான் இருக்கிறது. வீட்டு மொட்டை மாடியில் ஏர் கன்னால் சுட்டுப் பழகுவது, இம்மாணவனது பொழுதுபோக்கு. அப்பா பொறியியலாளர். அம்மா மருத்துவர். இம்மாணவனை கன்னட வழி வகுப்பில் படிக்கும் இரு மாணவர்கள் கேலி செய்தார்களாம். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மாணவன், வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பள்ளி முடிந்து வரும் அந்த இரு மாணவர்களையும் துப்பாக்கியால் சுடுகிறான். இருவரும் சாகவில்லை என்றாலும், காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

சம்பவம் 3. உத்திரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம் மெத்னாரா கிராமத்தைச் சேர்ந்த அதர் சிங் +2 படிக்கும் மாணவன். உடன் படிக்கும் விபன் எனும் மாணவனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறான். “தங்கையை கேலி செய்யாதே எனப் பலமுறை எச்சரித்தும் கேட்காததால் விபனைச் சுட்டுக் கொன்றேன் ” என அதர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் 4. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு நகரம். அங்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ரஞ்சித் +2 படிக்கிறான். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட ரஞ்சித், புது மட்டை வாங்குவதற்கு பெற்றோர்களை நச்சரித்துப் பணம் வாங்குகிறான். லோகநாயகி என்ற வயதான பெண்மணி நடத்தும் விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்துக்கு செல்லும் ரஞ்சித், அங்கு பல மட்டைகளைப் பார்த்தும் திருப்தியடையவில்லை. தனது நேரத்தை வீணடிப்பதாக அவனிடம் லோகநாயகி நொந்து கொள்கிறார். இதை ஒரு பெரிய அவமானமாக எடுத்துக்கொண்ட ரஞ்சித், அந்தப் பெண்மணியைப் பழிவாங்க நினைக்கிறான். அவனது தாத்தா கந்தசாமி, தி.மு.க.வில் இரு முறை சட்டமன்றப் பதவிக்குப் போட்டியிட்டவர். வீட்டில் ஒரு வெளிநாட்டு கைத்துப்பாக்கியை வைத்திருக்கிறார். அதை எடுத்துக் கொண்ட ரஞ்சித், இருநாட்கள் கழித்து லோகநாயகி அம்மாளைச் சுட்டுப் படுகாயப்படுத்துகிறான். அந்தப் பெண்மணி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

இந்நான்கு சம்பவங்களும், கடந்த சில மாதங்களில் நடந்து பத்திரிக்கைகளில் பதிவானவை. மாணவர் மத்தியில் நடக்கும் இது போன்ற துப்பாக்கிச்சூடு நிகழ்வுகளுக்கு புகழ்பெற்ற நாடு அமெரிக்காதான். கடந்த பிப்ரவரி மாதத்தில் இல்லினாய் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவன் ஒருவன் சுட்டு, 5 மாணவர்கள் இறந்திருக்கின்றனர். இந்த அமெரிக்கப் பாணி வன்முறை இந்தியாவிலும் வந்து விட்டதா என்று சிலர் அதிர்ச்சியடையலாம். வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அத்தனையும் அமெரிக்கமயமாகி வரும் போது, வன்முறை மட்டும் விதிவிலக்கா என்ன? அமெரிக்கா அளவுக்கு இங்கே துப்பாக்கிகள் மலிவாகப் பரவவில்லையே தவிர, வன்முறை அதன் தன்மையளவில் மாணவர்களிடையே சமீப காலமாகப் பரவித் தான் வருகிறது.

இது சமூக அநீதிக்கு எதிராகக் கலகம் செய்யும் மாணவப் பருவத்திற்கேயுரிய போராட்ட வன்முறையல்ல; ஆடம்பரத்திற்காகவும், அற்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவும் துப்பாக்கி எடுக்கும் தனிநபர் வன்முறை. மேற்கண்ட சம்பவங்களில் வன்முறையின் கருவி துப்பாக்கியாக இருப்பதினாலேயே போலீசும், பத்திரிக்கைகளும் விசேடமாகப் பார்க்கின்றன. உண்மையில் துப்பாக்கியல்ல பிரச்சினை. விடலைப் பருவத்தின் வன்முறை மனோபாவம்தான் பிரச்சினை.

2006 டிசம்பர் மாதத்தில், சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் 13 வயதே நிரம்பிய அரவிந்த் என்ற சிறுவன் அவனது தெரு நண்பர்களாலேயே கொல்லப்படுகிறான். புத்தாண்டு கொண்டாட்டத்திற்குப் பணமில்லாததால், அரவிந்தை  பணையக் கைதியாகக் கடத்தி, அவனுடைய அப்பாவிடமிருந்து தேவைப்பட்ட பணத்தைக் கறந்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். திட்டம் குளறுபடியாகி, அம்மாணவன் கோரமாகக் கொல்லப்படுகிறான். இதே காலத்தில் ஆடம்பர, கேளிக்கை வாழ்விற்காகப் பணம் திரட்ட நினைத்த மூன்று ஏழை மாணவர்கள், ஒரு நகைக் கடையைக் கொள்ளையடிக்க முயன்றபோது பிடிபட்டார்கள்.

இப்படிப் பரபரப்பிற்காகப் பத்திரிகைகளில் வெளிச்சமிடப்படும் சம்பவங்கள் பல இருந்தாலும், இவை எங்கோ ஒரு வீட்டில் நடப்பதாகவும், நம் வீட்டில் பிரச்சினையில்லை என்று பல பெற்றோர்கள் சுயதிருப்தி கொள்ளலாம்.  வன்முறையின் கடும் தருணங்கள் இங்குதான் வெடிக்கவேண்டுமென்று திட்டமிட்டுக் கொள்வதில்லை. அவை எங்கும் எப்போதும் நடக்கலாம். அதற்குத் தோதாக விடலைப் பருவ மாணவ வாழ்க்கை தயாராகி வருகிறது. அதில் நம் வீட்டுப் பையனும் இருக்கிறான் என்பதைப்  பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை.

ஓரிரு தலைமுறைகளுக்கு முன்பு இருந்ததை விட, மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கை வெகுவாக மாறிவிட்டது. முன்பு ஆடம்பரமாகக் கருதப்பட்டவை, இன்று அத்தியாவசியமானவையாக மாறிவிட்டன. எல்லா வேலைகளுக்கும் நவீனக் கருவிகள்; அது போக வேலையாட்கள், குளிர்பதனக் கருவி, கார், இருசக்கர வாகனங்கள், செல்பேசிகள், பீட்ஸா, பர்கர் என்று மாறிவிட்ட உணவுப் பழக்கம், குடும்ப உறுப்பினராக மாறிவிட்ட தொலைக்காட்சி, வார இறுதியில் எல்லையில்லா கேளிக்கைகள் …

இலட்சக்கணக்கான விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளிவரும் புதிய பொருளாதாரக் கொள்கைதான், நடுத்தர வர்க்கத்தை இப்படியொரு ‘மகிழ்ச்சியான வாழ்க்கைக்குள்’ பிடித்துத் தள்ளியிருக்கிறது. மற்றவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட வாழ்க்கையை, நவீன வசதிகளாக  மாற்றித் தந்திருக்கும் உலகமயமாக்கம் உருவாக்கியிருக்கும் இந்த வாழ்க்கையின் தன்மைதான் என்ன? எல்லா வகை உடலுழைப்பையும், சமூக உறவுகளையும் ரத்து செய்துவிட்டு, கேளிக்கை, நுகர்வு ஒன்றையே இலக்காகக் கொண்டு ஓடும் இந்த வாழ்க்கை, சிறார்களின் உலகை என்னவாக மாற்றியிருக்கிறது?

வன்முறை கற்றுத்தரும் கார்ட்டூன் தொடர்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்குழந்தைகளுக்கு விருப்பமான கார்ட்டூன் சேனல்கள் இன்று தமிழிலேயே வந்து விட்டன. பள்ளிக் கல்விக்கு ஆங்கிலமும், பொழுது போக்குவதற்கு மட்டும் தமிழ் என்பது ஒரு முரண்பாடாகத் தோன்றலாம். குழந்தைகள் மனதை தாய்மொழியில்தான் கொள்ளை கொள்ள முடியும் என்பது அந்தச் சேனல்களைச் சந்தைப்படுத்தும் முதலாளிகளுக்குத் தெரியும்; சுட்டி டி.வி.யையும், தமிழ் ஜெட்டிக்ஸையும் சிறார்கள் நீண்ட நேரம் வெறித்துப் பார்க்கிறார்கள். அப்படிப் பார்ப்பதற்காகவே விரும்பிக் காத்திருக்கிறார்கள். அதற்காகவே வீட்டுப் பாடத்தை விரைந்து முடிக்கிறார்கள். அவர்களது கற்பனை உலகை கார்ட்டூன்களும், யதார்த்த உலகை கார்ட்டூன்களுக்கு இடையில் வரும் விளம்பரங்களும் கட்டியமைக்கின்றன. ஆசை தோற்றுவிக்கும் ஏக்கத்திற்கும், அது நிறைவேற தடையாக இருக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான இந்த மாய உலகின் முரண்பாட்டில்தான் இளம்பருவத்து மாணவர்கள் உலவுகிறார்கள்.

பவர் ரேன்ஜர்ஸ் அவர்கள் விரும்பிப் பார்க்கும் ஒரு தொடர். கிராபிக்ஸ் உதவியோடு வண்ணச் சிதறலாகத் தெறிக்கும் இத்தொடரில் அடிப்பது, வெட்டுவது, சுடுவது, வெடிப்பது எல்லாம் நொடிக்கொரு தடவை நடக்கிறது. நமக்கு ஓரிரு நிமிடங்களில் சலித்துப் போகும் இத்தொடர், அவர்களுக்குச் சலிப்பதில்லை. கிராஃபிக்ஸ் இல்லாமல், நிஜத்தில் மாமிச மலைகள் மோதும் டபிள்யூ.டபிள்யூ. எஃப் மல்யுத்தச்  சண்டைகளும் ஜெட்டிக்சில் காண்பிக்கப்படுகின்றன. வகை தொகையில்லாமல் மனிதர்கள் அடித்துக் கொள்ளும் இந்த வன்முறைக் காட்சிகளைத் தொடர்ந்து பார்ப்பதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

சக மனிதன் அடிபட்டாலோ, இரத்தம் சிந்தினாலோ, இறந்து போனாலோ அதிர்ச்சியடைவது மனித இயல்பு. சிறார்களின் உலகில், இந்த உள்ளார்ந்த மனித மதிப்பீடுகள் நமத்துப் போகின்றன. வன்முறை குறித்த இரக்கமோ, பயமோ இல்லாதது மட்டுமல்ல, அவர்களே அதைச் செயல்படுத்துபவர்களாகவும் மெல்ல மெல்ல மாறுகிறார்கள். அற்பப் பிரச்சினைகளாக இருந்தால் கூட, அதை வன்முறை மூலம் தீர்த்துக்கொண்டு இறுதி வெற்றி அடையவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். விளைவறியாத இளங்கன்றுகளாக இருப்பதால், இத்தகைய வன்முறை அவர்களது ஆளுமையின் அங்கமாகிறது.

விலங்குகளையும் இயற்கையையும் நேரில் கண்டு கற்கவேண்டிய வயதில், மிக்கி மவுசின் பொருளற்ற வேடிக்கைகளில் காலந்தள்ளுகிறார்கள் சிறார்கள். அதிலும் விலங்குகளை மையமாக வைத்து எடுக்கப்படும் கார்ட்டூன் தொடர்கள், இப்போது அருகி வருகின்றன. சண்டைக் காட்சிகளை மையமாக வைத்து எடுக்கப்படும் அதிதீவிர வீரர்களின் தொடர்களே இன்று பெருகி வருகின்றன. இவற்றின் வன்முறைக்கு ஒத்திசைவான விதத்தில் இடையில் வரும் விளம்பரங்களும் குழந்தைகளைப் போட்டுத் தாக்குகின்றன. பெரியவர்களுக்கு வேண்டுமானால் விளம்பரங்கள் மீது சலிப்பு வரலாம். சிறியவர்களுக்கு அவைதான் பாலபாடம்.

விளம்பர உலகில் வெதும்பும் சிறார்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்சில விநாடிகள் மட்டுமே வரும் விளம்பரங்களின் செய்தி, நாள் முழுக்க சிறுவர்களை இயக்குகின்றது. அவர்களது அறிவுத்திறனின் அடிப்படையே விளம்பரங்கள்தான். வேகமான படத்தொகுப்புக்களில் விரைந்து செல்லும் விளம்பரத்தின் சிறு செய்தி கூட, சிறுவர்களின் மனதில் தைப்பதற்குத் தவறுவதில்லை. விளம்பரங்கள் செதுக்கித்தரும் ‘மகிழ்ச்சியான குடும்பம்’ உண்மையில் ஒரு கற்பனைதான் என்றாலும், அந்த மகிழ்ச்சியான வாழ்க்கைக்காகச் சிறுவர்கள் ஏங்குகிறார்கள். இயற்கையின் இயக்கத்தையும், சமூகத்தின் போராட்டத்தையும் அறிய வேண்டிய இளம் பருவம், இத்தகைய செயற்கையான, சுயநலம் மிகுந்த, ஆடம்பரமான கற்பனை உலகத்தில் வெம்பி வாடுகிறது. பஞ்சில் பழுத்த மனம், தான் காணும் தொலைக்காட்சி வாழ்க்கை கிடைக்காத போது வன்முறையின் பக்கம் எளிதாக நகருகிறது.

சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருள் எது, எது வாங்கினால் எது இலவசம், எதற்குத் தள்ளுபடி, எந்தக் கடையில் என்ன கிடைக்கும் முதலான நுகர்வுக் கலாச்சார பொது அறிவில், குழந்தைகள் பெரியவர்களை விஞ்சி நிற்கிறார்கள். அவ்வகையில் முதலாளிகளின் விளம்பரங்களுக்கு பிரச்சார பீரங்கிகளாக சிறுவர்களே விளங்குகிறார்கள். ஒரு குடும்பத்தில் ஒரு புதிய பொருளை வாங்க வேண்டுமென்ற போராட்டம், அநேகமாக சிறியவர்களிடமிருந்துதான் துவங்குகிறது.

வானவேடிக்கை போல விளம்பரங்களை வாரி இறைக்கும் இன்றைய முதலாளித்துவத்தின் அடிப்படைகளில் ஒன்றான நுகர்வுக் கலாச்சாரம், தன்னளவிலேயே ஒரு வன்முறையைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு புதிய செல்பேசி, கார், தொலைக்காட்சி முதலானவை அறிமுகமாகும் போதும் அவற்றின் பழைய மாடல்களை வைத்திருப்பவர்களிடம், ஒரு பதட்டம் பற்றிக் கொண்டு விடுகிறது. புதியதை வாங்கும் வரை, மனம் அமைதியடைவதில்லை. பங்குச் சந்தை குறியீட்டெண் போல, ஒவ்வொரு புதிய விளம்பரமும் இந்த மெல்லிய வன்முறையின் அளவைக் கூட்டுகிறது. இதில் சிக்கியிருக்கும் பெரியவர்களின் கதியே இதுவென்றால், சிறியவர்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

விளம்பரங்களின் வழியாக மனதில் பதியும் புதிய பொருளை வாங்க வேண்டுமென்று சிறார்கள் அடம் பிடிக்கிறார்கள்; சண்டை போடுகிறார்கள். வகுப்புத் தோழர்களிடம் அற்பவிசயங்களுக்காக எழும் பொறுமையின்மைக்கான அரிச்சுவடி, இதிலிருந்து ஆரம்பிக்கிறது. அவ்வகையில் சகிப்புத் தன்மையற்ற மனநிலையை நுகர்வுக் கலாச்சாரம் கற்றுத் தருகிறது. நச்சரிப்பு தாங்காத பெற்றோர்களும், கேட்டதை வாங்கித் தருகிறார்கள். பிடிவாதம் பிடித்தால் நினைத்ததை வாங்கிக் கொள்ளலாம் என்பதைக் குழந்தைகள் தமது சொந்த அனுபவத்தில் அறிந்து கொள்கிறார்கள். இந்தப் பிடிவாதம்தான் வன்முறையின் துவக்கப்புள்ளி என்பதைப் பெற்றோர்கள் உணர்வதில்லை.

“இந்த உலகத்தில் பெரும்பான்மை மக்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதுதான் நமக்கும்” என்று போதித்து வளர்ப்பதுதான், குழந்தைகளை  ஒரு சமூக மனிதனாக வளர்ப்பதற்குரிய “சரியான அணுகுமுறை. மாறாக “இந்த உலகில் நீ மட்டும்தான் முக்கியம், உன் மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி”, என்று குழந்தைகளைச் சீராட்டிப் பாராட்டி வளர்க்கிறார்கள் பெற்றோர்கள். இப்படிச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் சிறுவர்களிடம்தான் பொறுமையின்மையும், கோபமும், பிரிக்க முடியாதபடி ஒட்டிக்கொள்கின்றது. இந்த எதிர்மறைப் பண்புகளின் விளைவு குறித்து இவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதால் இவர்கள் யாருக்கும் அடங்குவதில்லை.

ஆனால் இவர்களின் பல தவறுகள் பெற்றோரால் மன்னிக்கப்படுகின்றன. நிகழ்காலத்தில் கண்டிக்கப்படாத தவறுகள், எதிர்காலத் தவறுகளுக்கான ஊக்கசக்தியாக மாறிவிடுகின்றன. துப்பாக்கியால் சக மாணவனைச் சுடுவதென்பது, நிச்சயம் அவர்களது முதல் தவறாக இருந்திருக்க முடியாது. துப்பாக்கி வெடிப்பதற்கு முன்பே வன்முறையின் வெவ்வேறு வடிவங்கள் அவர்களிடம் வெடித்திருக்க வேண்டும். அந்தப் பட்டியலில் இன்னொன்று என்று, அந்த மாணவர்கள் துப்பாக்கிச் சூட்டைப் பற்றி அலட்சியமாகக் கருதியிருக்க வேண்டும். அல்லது,  அப்பொதெல்லாம் தங்களைக் காப்பாற்றியிருக்கும் பெற்றோர்கள் இப்போதும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களை இந்த எல்லைக்கு கொண்டு வந்திருக்கக்கூடும்.

செல்பேசி,  இணையத்தில் சீரழியும் மாணவர்கள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்சென்ற தலைமுறைப் பெற்றோர்கள் அளவிற்குக் கூட, இந்தத் தலைமுறைப் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்டிப்போடும், ஒழுக்கத்தோடும் வளர்ப்பதில்லை. அவர்கள் கேட்டதை வாங்கிக் கொடுத்தால் பிரச்சினை முடிந்து விடும் என்று கருதுகிறார்கள். உண்மையில் அப்போதுதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது. நடுத்தர வர்க்கத்தின் முந்தைய தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கல்லூரி சென்றால்தான் அதிகபட்சமாக சைக்கிளோ, கைக்கடிகாரமோ கிடைத்தது. இன்றோ பள்ளியிறுதியாண்டுகளிலேயே இருசக்கர வாகனம் மாணவர்களின் கனவாகி விட்டது. முக்கியமாக செல்பேசி வைத்திருப்பது, மாணவ நாகரீகத்தின் அளவு கோலாகப் பரவி வருகிறது.

ஆளும்வர்க்கத்தின் கலாச்சாரத் தாக்குதலுக்கு முக்கியமான படைக்கலனாக இருக்கும் செல்பேசி, மாணவ சமுதாயத்தை சீர்குலைப்பதற்கு கச்சிதமான கையடக்கக் கருவியாகும். ஒரு புதிய செல்பேசியிலிருக்கும் தொழில்நுட்ப சாத்தியங்கள், பெரியவர்களுக்குக் கூடத் தெரிவதில்லை. சிறியவர்களே அதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள். செல்பேசி நிறுவனங்களும், மாணவர்களுக்கென்றே சிறப்புத் திட்டங்களை அவ்வப்போது அறிவிக்கின்றன. அதில் தவறாமல் இலவசக் குறுஞ்செய்திகள் அனுப்பும் வசதி நூற்றுக்கணக்கில் இருக்கும். நாட்டு நடப்பு குறித்து செய்தித்தாள்களின் பக்கம் தலையெடுத்தும் பார்க்காத மாணவர்கள், குறுஞ்செய்தி அரட்டைகளில் மூழ்குகின்றனர். கடி ஜோக்ஸ், காதலர் தினம் என்று ஆரம்பித்து, இறுதியில் பாலுறவு விரசங்களில் மூழ்குகின்றனர்.

சென்ற ஆண்டு, டெல்லியில் தன் வகுப்பு மாணவியுடன் உறவு கொண்டு, அதை காமரா செல்பேசியில் படம்பிடித்து தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டான், ஒரு மாணவன். இத்தகைய வக்கிரக் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகுவேகமாகப் பரவி வருகிறது. பார்க்கும் பெண்களை ஆபாசக் கோணத்தில் படம்பிடிப்பதும், பரப்புவதும் ஒரு பொழுது போக்காக நிலை பெற்று விட்டது.  இத்தகைய படங்களை கட்டணம் வாங்கிக் கொண்டு பதிவுசெய்து தருவதற்கென்றே பல இணையத்தள தரகர்கள் இருக்கின்றனர். மேலும் இன்று இணையத்தள மையங்கள் அனைத்தும் மாணவர்களை நம்பியே நடத்தப் படுகின்றன. இணையத்தில் உலாவுவதற்கு வீட்டில் கணினி இருக்க வேண்டிய அவசியமில்லை. பத்து ரூபாயில், பலான விசயங்களை டன் கணக்கில் மேய்ந்து விடலாம். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடற்று, இந்த நச்சுப் பண்பாடு கைக்கெட்டிய தூரத்தில் மாணவர்களுக்குக் கிடைக்கிறது, என்பதுதான் முக்கியமானது.

விடலைப் பருவத்தில், பாலியல் உறுப்புகள் முதிர்ச்சி அடையும் வயதில், செக்ஸ் என்பது ஒரு புகைமூட்டம் போல மர்மமாய்க் கவிந்திருக்கும் சூழல் இன்று இல்லை. பாலியல் உணர்வில் கட்டுப்பெட்டித்தனம் கொண்டிருந்த இந்திய மனநிலையின் மடையை, இணையத்தின் வெள்ளம் உடைத்திருக்கிறது. திருமணத்துக்கு முந்தைய உறவு மாணவர்களிடம் வேகமாக வளர்ந்து வருவதாக, பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டிகின்றன. இதற்குத் தீர்வாக, மாணவர்களுக்குப் பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்கவேண்டும் என்று பல கல்வியலாளர்கள் முன்வைக்கின்றனர்.

எய்ட்ஸைக் கட்டுப்படுத்துவதற்கு ஆணுறை போடுங்கள் என்பது போலத்தான் இதுவும். இதனால் பாலியல் கல்வி வேண்டாம் என்பதல்ல. ஆனால் பிரச்சினைக்கு அது தீர்வல்ல. சொல்லப் போனால் மாணவப்பருவத்தில்தான் கட்டுப்பாடுகள் மிக அவசியம். அறியாக் குழந்தை கண்டதையும் வாயில் போடும்போது, சிறிது அடித்துத் திருத்துவதில் என்ன தவறு இருக்கிறது?

வளரும் பருவத்தை வலிமையாக்கும் கட்டுப்பாடு!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்அப்படி ஒரு கட்டுப்பாட்டை, அதாவது கல்லூரி வளாகத்தில் செல்பேசியைப் பயன்படுத்தக்கூடாது என்று அண்ணா பல்கலைக் கழகத்தில் அறிமுகப்படுத்திய போது, பத்திரிக்கைகளும், முற்போக்கு முகாமும் ஆவேசத்துடன் அதனைக் கண்டித்தன. இது சுதந்திரத்துக்கும், தனிநபர் உரிமைக்கும், ஜனநாயக நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று  வாதிட்டார்கள். அமெரிக்க மாணவர்களிடையே வன்முறையை நிறுத்துவதற்கு துப்பாக்கி வியாபாரத்தைத் தடை செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தபோது,  ஜனநாயக உரிமையின் பெயரால்தான் அது அங்கே நிராகரிக்கப்பட்டது.

இந்த வாதங்களில் ஒரு வெங்காய ‘உரிமை’யும் உண்மையில் இல்லையென்பது ஒருபுறமிருக்க, இந்த உலகமே கட்டுப்பாட்டில்தானே இயங்கி வருகிறது? ஒரு தொழிலாளிக்கு சீருடை அணிய வேண்டும், குறித்த நேரத்திற்கு வேலைக்கு வரவேண்டும், குறிப்பிட்ட இடைவெளி நேரத்தில்தான் மதிய உணவு அருந்த வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இல்லையா? பல அலுவலகங்களிலும் செல்பேசியில் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு வைத்திருக்கிறார்களே, இதனால் என்ன குடி முழுகிப் போய்விட்டது? விதியின் பெயராலும், நடைமுறை ரீதியிலும் உழைக்கும் வர்க்கத்தின் மீது ஆயிரம் கட்டுப்பாடுகள் வைத்திருக்கும் முதலாளித்துவம், சமூகத்தில் சீரழிவுக் கலாச்சாரத்தைப் பரப்புவதற்கு மட்டும் தனக்கு சுதந்திரத்தைக் கோருகிறது.

வீட்டிலும், பள்ளியிலும் கட்டுப்பாடு இல்லாத மாணவர்கள்தான், வன்முறை எண்ணம் கொண்டவர்களாகத் தலையெடுக்கின்றனர். விடலைப்பருவ உளவியலின் காரணமாகப் பெற்றோருடனும், சூழலோடும் முரண்படுகிறார்கள். மாணவர்களின் உடல் மாற்றத்திற்கேற்ப நடக்கும் இந்த உளவியல் வெளிப்பாடுகளை, மேற்கண்ட நச்சுக்கலாச்சாரம் ஊதிப் பெருக்குகிறது. இதனால் தனிமைப்படும் மாணவர்களைத்தான் வன்முறை எண்ணம் தின்று சீரணிக்கிறது. மாணவர்களை உடலுழைப்பிலும், விளையாட்டிலும் ஈடுபடுத்துவதுதான் இந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்குரிய வழி. ஆனால் அந்தச் சூழல் நமது கல்வி முறையிலோ, பண்பாட்டிலோ இல்லை.

வளரும் சிறுவருக்கு உடலுழைப்பு அவசியம்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இளம் மாணவர்களின் வயதினையொத்த சிறார்கள், நாடெங்கிலும் இலட்சக்கணக்கில் உதிரித் தொழில்களில் ஈடுபடுகின்றனர். குழந்தைத் தொழிலாளர் உழைப்பைத் தடை செய்ய வேண்டும் என இவர்களது வாழ்க்கை குறித்து கவலைப்படுவது தொண்டு நிறுவனங்களின் நாகரீகப் பணியாக இருக்கிறது. படிக்கவேண்டிய வயதில் இவர்களை இவ்வேலைகளுக்கு அனுப்பியது பெற்றோர்களின் குற்றமெனத் தொண்டு நிறுவனங்கள் சாதிக்கின்றன. உண்மையில் பணமில்லாதவனுக்கு எதுவுமில்லை என இந்தச் சமூக அமைப்பை மாற்றியஅரசும், ஆளும் வர்க்கங்களும்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

இது ஒருபுறமிருக்க, இக்குழந்தைகள் விடலைப் பருவச் சேட்டைகளையோ, வன்முறைகளையோ செய்வதில்லை. தேநீர்க்கடைகளில் குவளை கழுவும் சிறுவனோ, ஓட்டலில் மேசை துடைக்கும் சிறுவனோ இத்தகைய வன்முறை வெறிக்குப் பலியாவதில்லை. சமூகத்துடன் யதார்த்தமான உறவில் இருக்கும் இச்சிறுவர்கள், பண்பையும் முதிர்ச்சியையும்தான் பழகிக் கொள்கின்றனர்.  வயதுக்கு மீறிய அதீத உழைப்புதான், இவர்களைப் பின்னாளில் உதிரிக் குணம் கொண்டவர்களாக மாற்றி விடுகிறது. அப்போதும்கூட இவர்கள், சமூகத்தின் மீது வன்முறை செலுத்தும் மேட்டுக்குடிப் பொறுக்கிகளைப் போல மாறுவதில்லை.

ஆம். மாணவர்களை குறிப்பிட்ட அளவில் உடலுழைப்பில் ஈடுபடுத்துவதன் மூலமே, அவர்களது பருவப் பிரச்சினைகளைக் கடந்து ஒரு சமூக மனிதனாக வளர்க்க முடியும். கோடை விடுமுறையில் சிறுவர்களை சிறு பட்டறைகளுக்கோ, இருசக்கர வாகன பழுது நீக்கும் கடைக்கோ,  கட்டிட வேலைக்கோ, விவசாய வேலைக்கோ அனுப்பினால், பட்டை தீட்டப்பட்ட வைரக்கற்களாகப் புடம் போடப்பட்டு வருவார்கள். உடலுழைப்புடன் கூடிய சுயமதிப்புடன் சமூகத்தைப் பற்றி அறிந்து கொள்வார்கள். கட்டுப்பாட்டுடன் பணியாற்றுவதன் மூலமே இச்சமூகத்தின் அங்கத்தினன் என்ற தகுதியைப் பெறமுடியும் என்பதைத் தங்களது சொந்த அனுபவத்திலிருந்து புரிந்து கொள்வார்கள்.

ஆனால் நடுத்தர வர்க்கமோ தங்களது செல்வங்களை டென்னிசுக்கும், கணினிப் பயிற்சிக்கும், பாட்டு வகுப்பிற்கும் அனுப்பி நம்பர் 1 ஆக்குவதற்கு மட்டுமே மனப்பால் குடிக்கிறது. இது மாணவர்களுக்கு தனிநபர் வாதத்தையும், சுயநலத்தையும், காரியவாதத்தையும் கற்றுத் தருகின்றதே ஒழிய, நல்ல குடிமகனாக்குவதில்லை. மேலும் கடுமையான போட்டிகள் நிறைந்த இக்காலட்டத்தில், தோல்வி குழந்தைகள் மனதை ரணமாக்குகிறது. விஜய் டி.வி.யின் பாட்டுப் போட்டியில் தோல்வியுற்றதால் வெளியேற்றப்பட்ட குழந்தைகள் அழுவதைப் படம்பிடித்துக் காண்பிப்பதை இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.

வளரும் குழந்தைகளுக்கு கலைத்திறமைகளை கற்றுத்தருவதை விட, அவர்களை மக்களின் பால் பற்று கொண்ட நன்மக்களாக மாற்றுவதே அத்தியாவசியமானது. உண்மையில் அவர்களது வன்முறை எண்ணத்தை மடைமாற்றும் சூட்சுமம், இதில்தான் அடங்கியிருக்கிறது. ஆனால் நடுத்தர வர்க்கக் குழந்தைகளுக்கு, உடலுழைப்பு அறவே கிடையாது. எல்லா வேலைகளுக்கும் இயந்திரங்கள் இருக்கின்றன. இது போக வேலையாட்கள்! பெற்றோர்கள் பணியாட்களை மிரட்டுவது போல பிள்ளைகளும் செய்கிறார்கள். குறைந்த பட்சம் தன்னைப் பராமரித்துக் கொள்வதைக் கூட இக்குழந்தைகள் செய்வதில்லை. பெற்றோரும் விரும்புவதில்லை. தான் சாப்பிட்ட தட்டைக் கழுவுவதற்கோ, உடுத்தும் உடையைத் துவைப்பதற்கோ பழகிக் கொள்ளாத ஒரு சிறுவன்தான், இந்த உலகம் தனக்காகப் பணிசெய்ய படைக்கப்பட்டிருப்பதாக எண்ணுகிறான். இந்த அணுகுமுறையில் நெருடல் வரும்போது, தவிர்க்கவியலாமல் வன்முறையின் பக்கம் நகர்கின்றான்.

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்

அருகும் விளையாட்டு அரிக்கும் வீடியோ விளையாட்டு!

உடலுழைப்புக்கு அடுத்த படியாக குழந்தைகளுக்குத் தேவைப்படுவது, வியர்க்க விறுவிறுக்க விளையாடப்படும் விளையாட்டு. மனம் விரும்பிச் செய்யப்படும் இவ்வுழைப்பில்தான் அவர்கள் வளருவதற்கேற்ற வலிமை உடலுக்கும், உள்ளத்திற்கும் கிடைக்கிறது. குழுரீதியான உணர்வு பெறுவதற்கும், சண்டையுடன் கூடிய நட்பு அரும்புவதற்கும், வெற்றி தோல்விகளையெல்லாம் சகஜமாக எடுத்துக் கொள்வதற்கும், பாடங்கள் கற்பதற்கேற்ற உற்சாகத்தைப் பெறுவதற்கும், விளையாட்டு அவசியமாகிறது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் துருத்தி நிற்கும் நகரங்களில், மைதானங்கள் காணக் கிடைப்பதில்லை. பல்லாயிரம் ரூபாய்களைக் கட்டணங்களாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளிலும், விளையாட்டுத் திடல்கள் போதுமானதாக இல்லை. மாணவர்களும் இந்திய அணி ஆடும் சமயங்களில் மட்டும் கிரிக்கெட் ஆடுவதைத் தவிர, விளையாட்டில் விருப்பத்துடன் ஈடுபடுவதில்லை.

இந்த இடத்தை மாணவர்களால் பரவலாக விளையாடப்படும் வீடியோ விளையாட்டு எடுத்துக் கொள்கிறது. இணையத் தள மையங்களில் பாலுறவு விசயங்களுக்கு அடுத்தபடியாக மாணவர்கள் விரும்புவது இந்த எந்திர விளையாட்டைத்தான். வியர்வைத் துளிகளுக்கு வேலை கொடுக்காமல், மூளையை அரிக்கும் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளையாடும்போது மாணவர்கள் அதற்கு அடிமையாகிறார்கள்.

இந்தப் போதையிலிருந்து மீள்வது சிரமம் என்பதோடு, இது ஏற்படுத்தும் உளவியல் கோளாறுகள் அதிகம். கற்பனையான உலகில் கற்பனையான வெற்றிக்காக மணிக்கணக்கில் ஆடும் மாணவர்கள், அதீத உணர்ச்சிக்கு ஆட்படுகிறார்கள். இந்த உணர்ச்சிச் சமநிலைச் சீர்குலைவு வன்முறைக்குப் பொருத்தமான சமன்பாட்டைக் கொண்டிருக்கிறது.

விளையாடி முடித்ததும் ஏற்படும் சோர்வு நிஜ உலகோடு கொண்டுள்ள உறவைச் சோர்வுக்குள்ளாக்குகிறது. இந்தச் சோர்விலிருந்து வாழ்வின் பிற அம்சங்கள் மீது அளவு கடந்த சோம்பல் உருப்பெறும். கணிப்பொறி விளையாட்டின் மீது ஒன்றி பரவசம் அதிகரிப்பதற்கேற்ப மனித உறவுகளின் மீது நெருடல் அதிகரிக்கிறது. பிரச்சினை வரும்போது அமைதியுடன் எதிர்கொள்ள வேண்டிய மூளையின் தன்மை, நேரெதிராக மாற்றப்படுகிறது. வீடியோ விளையாட்டின் வேகம் விரிவடைதற்கேற்ப, நிஜவாழ்வின் பிரச்சினைகளை பரிசீலிக்கும் பொறுமை சுருங்குகிறது.

விதவிதமான உணவு வகை எல்லைமீறும் உணர்ச்சிகள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இப்படி உடலுழைப்பிலும், விளையாட்டிலும் அன்னியப்பட்டுள்ள மாணவர்கள் விரும்பும் மற்றுமொரு விசயம் நவீன உணவு வகைகள். பீட்ஸா, பர்கர், விதவிதமான சாக்லேட், பிஸ்கட், ஐஸ்கிரீம் வகைகள், பெட்டிக் கடைதொட்டு சரம்சரமாகப் பல வண்ணங்களில் தொங்கும் நொறுக்குத்தீனி பாக்கட்டுகள், உணவகங்களில் கிடைக்கும் பலநாட்டுத் துரித உணவு வகைகள்…. இவையெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்கள் போல, குழந்தைகள் மனதில் ஆழப்பதிந்து விட்டன.

குடும்பத்துடன் வெளியில் செல்லும்போது சிறார்கள் அடம்பிடித்துச் சண்டையிடுவது இவ்வுணவு வகைகளுக்காகத்தான். வீட்டுச்சமையல் என்பதே இப்படி டப்பா வகை உணவுப் பிரிவுக்கு வேகமாக மாறி வருகிறது. இது பற்றி பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், மருத்துவர்களும் கவலைப்படாமல் இல்லை. ஆனால் அந்தக் கவலை, குழந்தைகள் குண்டாவது குறித்த பிரச்சினையாக மட்டுமே நின்று விடுகிறது.

உண்மையில் இந்த ‘குண்டு’ பிரச்சினை இரண்டாம் பட்சமானதுதான். நவீன உணவு வகைகளில் சர்க்கரையும், உப்பும், கொழுப்பும் மிக அதிகம். ஒரு சிறுவனது உடலில் இம்மூன்றும் திடீரென்று அதிகரிக்கும் போது அது மூளையின் செயல்பாட்டைப் பாதிக்கிறது. இப்படி தொடர்ந்து தின்று தீர்க்கும் சிறுவர்கள், அவற்றைச் செலவழிக்கும் உடலுழைப்பு ஏதும் இல்லாததால் எளிதில் உணர்ச்சி வசப்படுவர்களாக மாறுகிறார்கள். எல்லா வகை உணர்ச்சிகளும் எல்லை மீறும்போது, அதன் இறுதி நிலை வன்முறையில் தான் முடியும். இதுபோக உடல் பருமனாவதால் சோம்பேறிகளாகவும், மந்தகதிக் குழந்தைகளாகவும் நாட்களைத் தள்ளுகிறார்கள். ஏற்öகனவே அவர்களது வாழ்க்கைச் சூழல் இப்படித்தான் உள்ளது எனும்போது, டப்பா வகை உணவுகள் அந்தச் சூழலை வீரியமாக்குகின்றன. பெற்றோர்களே இந்த நவீன உணவு வகைகளுக்கு அடிமையாகும் போது, குழந்தைகளைக் கடைத்தேற்றுவதற்கு வழியேதுமில்லை.

அரசு பள்ளி நன்மைகள் தனியார் பள்ளி தீமைகள்!

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்இந்த நொறுக்குத் தீனிகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், சத்துணவிற்காகவே குழந்தைகள் கோடிக்கணக்கில் அரசுப் பள்ளிகளுக்கு வருவதும் இந்நாட்டில்தான். இன்று அரசுப் பள்ளிகள் முற்றிலும் ஏழைகளுக்கு மட்டுமானவையாக மாறி விட்டன. நகரங்களைப் பொறுத்தவரை, சென்ற தலைமுறைப் பெற்றோர்களில் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளிஅரசுக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அப்போது தனியார் பள்ளிகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே இருந்தன.

ஏழையும், பணக்காரனும், குறிப்பிட்ட அளவில் சாதிய வேறுபாடுகள் இல்லாமலும், சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் அரசுப் பள்ளிகளில் சங்கமித்தனர். கிராமப்புறங்களிலிருந்து வரும் மாணவர்களின் வழியாக கிராம வாழ்க்கையைப் பற்றியும், விவசாயத்தின் நிலை குறித்தும் தெரிந்து வைத்திருந்தனர். தனது வர்க்கம் தவிர, ஏனைய வர்க்கங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை அறியக்கூடிய வாய்ப்பை அன்றைய அரசுப் பள்ளிகள் வழங்கின. அதனால்தான் இன்றைய மாணவர்களை விட, சென்றதலைமுறை மாணவர்கள் பொது அறிவிலும், வாழ்க்கை குறித்த யதார்த்தமான கண்ணோட்டத்திலும் மேம்பட்டு விளங்குகின்றனர்.  திராவிட இயக்கமும், இடதுசாரி இயக்கமும் இந்தப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில்தான் தமது அடிப்படையைக் கட்டியமைத்தன.

இன்று வர்க்க முரண்பாடு துல்லியமாகப் பிரிந்து விட்டது. காசு உள்ளவனுக்கு தனியார் பள்ளி மற்றும் சுயநிதிக் கல்லூரி; இல்லாதவனுக்கு அரசுப்பள்ளி. தனியார் மயம் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வேட்டைக்காடாக மாற்றிவருகிறது என்ற அநீதிக்கு, குறைவில்லாத பங்கை தனியார் பள்ளிகளும் செய்து வருகின்றன. மேற்கண்ட துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்ட மாணவர்கள் பலரும், இத்தகைய தனியார் பள்ளிகளில் படிப்பவர்கள்தான். அரசுப் பள்ளிகள் என்னென்ன நன்மைகளைச் செய்கிறதோ, அவற்றின் நேரெதிர் தீமைகளைத் தனியார் பள்ளிகளும் சுயநிதிக் கல்லூரிகளும் செய்து வருகின்றன. இங்கு மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கங்களைச் சேர்ந்தோரே படிக்க வருகின்றனர். உழைக்கும் வர்க்கங்களைச் சேர்ந்தவர்களும் கடன் வாங்கியாவது இப்பள்ளிகளுக்கு வந்தாலும், இவர்கள் இங்கே சிறுபான்மையினர்தான். ஆகவே இப்பள்ளிகள் சமூகத்தைப் பிரதிபலிப்பதில்லை. வண்ணமயமான வாழ்க்கையின் வகைகள் இங்கே பரிமாறப்படுவதில்லை. நடுத்தர வர்க்கத்தின் காரியவாத வாழ்க்கை மட்டுமே இங்கு பேசுபொருளாக இருக்கிறது.

சமீபத்தில் சந்தைக்கு வந்த செல்பேசிகள், வாகனங்கள், டி.வி.க்கள், கணினிகள் எவை என்பதுதான் இங்கே மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் கல்வி! எதிர்காலத்தில் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ, அமெரிக்கா முதலான இலட்சியங்களை அடையவேண்டும் என்பதை இப்பள்ளிகள் ஊட்டி வளர்க்கின்றன. அவ்வகையில் சுயநலமும், பிழைப்பு வாதமும் மாணவர்களின் நற்பண்புகளாக ஏற்றப் படுகின்றன.

இதனால் போட்டி, பொறாமை, இரக்கமின்மை, முதலிய சொத்துக்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் அவனது இலட்சியத்தை அடைவதற்குத் தேவைப்படுகின்றன. எல்லா மாணவர்களும் இக்காரியவாதப் போட்டியில் வெல்லமுடியாது என்பதால் சோர்வும், விரக்தியும், தனிமைப்படுவதும் நடக்கிறது. சில சமயங்களில் அது சமூகத்தின் மீதான கோபமாகவும் வெடிக்கிறது. தன்னிலும் ஆடம்பர வாழ்வைப் பார்த்து ஏங்குவதும், அதை அடைய குறுக்கு வழிகளை நாடுவதும் இயல்பான விசயங்களாக ஏற்கப்படுகின்றன.

முன்னர் கண்ட செல்பேசிஇணையக் கலாச்சாரம், திருமணத்திற்கு முந்தைய உறவு, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பீர் கலாச்சாரம், வீடியோ விளையாட்டு முதலியவற்றிலும், தனியார் பள்ளி மாணவர்களே முன்னிலை வகிக்கின்றனர். பள்ளி திறக்கும் பருவத்தில் எல்லாத் தனியார் பள்ளிகளும் தங்களது தேர்ச்சி விகிதத்தை விளம்பரமாக வெளியிட்டு பெற்றோர்களை ஈர்க்கின்றன.

அந்த விளம்பரங்களில் கூறப்படாத செய்தி என்னவென்றால், வன்முறை விகிதத்திலும் இப்பள்ளிகள்தான் முதலிடம் வகிக்கின்றன என்பதுதான். சுருங்கக்கூறின் அரசுப் பள்ளிகள் ஒரு மாணவனை நல்ல குடிமகனாக மாற்றும் போது, தனியார் பள்ளிகளோ ஒரு மாணவனை சமூகத்திற்கு விரோதமான தனிநபராய் வளர்க்கின்றன. கல்வியில் தனியார்மயம் நுழைந்ததற்கு, நாம் பெற்றுள்ள சாபக்கேடு இதுதான்.

நடுத்தர வர்க்கத்தின் தனியார் பள்ளி மோகத்திற்கு இணையான மற்றொரு மோகம், ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்விக்கும் மாணவர் வன்முறைக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் நினைக்கலாம். முதலில் கண்ட துப்பாக்கி வன்முறை மாணவர்களெல்லாம், ஆங்கில வழிக் கல்வியில் படிப்பவர்கள்தான். இதை வைத்து மட்டுமே, ஆங்கில மோகம் வன்முறையை வளர்க்கிறது என்று சொல்லவில்லை. சிறார்களின் கல்வியறிவுக்காக பயன்படுத்தப்படும் ஆங்கிலம், அவர்களுடைய வாழ்க்கையை ரத்து செய்கிறது. ஐ.டி துறையின் எழுச்சிக்குப் பிறகு வேலைவாய்ப்பிற்காக ஆங்கிலம் மட்டுமே உதவும் என்ற சூழ்நிலையில், தமிழ் வழிக் கல்வியின் மீது பலருக்கு நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். ஒரு மொழி என்ற அளவில் ஆங்கிலத்தை தேர்ச்சியுடன் கற்றுக்கொள்வதும், அதை ஒரு பயிற்று மொழியாகவே பயன்படுத்துவதும் ஒன்றல்ல.

அன்னியப்படுத்தும் ஆங்கில மோகம்

ஆசிரியரை-கொன்ற-பள்ளி-மாணவர்1947க்குப் பின்னர் உயர் கல்விக்காகப் படித்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள், தமிழ் வழிக் கல்வி கற்றவர்கள் என்பதோடு ஆங்கிலத்திலும் புலமை வாய்ந்தவர்களாக இருப்பதையும் காண்கிறோம். இவர்களது பெற்றோர்கள் எவரும் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்த்தவர்கள் அல்லர். இருப்பினும் வறியவாழ்க்கையோடு, பலமைல் தூரம் நடந்துச் சென்று, கல்விக்காகக் கடும் உழைப்பு செலுத்தி, போராடிக் கற்றார்கள். அந்தக் கால ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கல்விப் பணி செய்தார்கள்.

அதற்குப் பிந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள், வசதியான வாழ்க்கையுடன் பள்ளிக்குச் சென்றாலும், அவர்களுக்கு ஆங்கிலம் மட்டுமல்ல தமிழும் தெரியாமல் இருப்பதைக் காண்கிறோம். இது போக, இன்றைய மாணவர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் பொழுது போக்குகளும் ஏராளம். மேலும் அன்று உயர்கல்வி முடித்தால் ஏதோ ஒரு அரசுப் பணி கிடைக்கும் என்ற நிலைமையும் இன்று இல்லை. இந்தப் பிரச்சினையை ஆங்கிலவழிக் கல்வி தீர்த்து விடாது என்பதையே இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேலும் ஆங்கிலவழிக் கல்வி ஒரு மாணவனை யதார்த்தமான சமூக வாழ்க்கையிலிருந்து அன்னியப்படுத்துவதோடு, அவனது அறிவுத்திறன் வளர்ச்சிக்கும் குந்தகம் விளைவிக்கிறது. குழந்தைப் பருவத்திலிருந்து வளரும் சிறார்கள் தாயுடனும், தமிழுடனும் சேர்ந்தே உலகை அறியத் துவங்குகிறார்கள். பெற்றோர், சுற்றம், உற்றம், நட்பு, தெரு, பெட்டிக்கடைக்காரர், மளிகைக் கடைக்காரர், வணிகர்கள், ஆட்டோக்காரர், பேருந்து ஓட்டுநர் என தமிழால் சூழப்பட்ட உலகில்தான், சிறார்களின் வாழ்க்கைக் கல்வி துளிர் விடத் துவங்குகிறது. இந்தச் சூழலை ஆங்கில வழிக் கல்வி செயற்கையாக துண்டிப்பதோடு, அந்த உறவு மேற்கொண்டு வளர விடாமலும் செய்கிறது.

இதனால் ஆங்கில வழிக் கல்வியின் உலகம் பள்ளி வகுப்பறையுடன் சுருங்கி விடுகிறது. அதனால்தான் ஆங்கில வகுப்பில் படிக்கும் மாணவர்கள் பொதுவில் தனிமை விரும்பிகளாகவும், சிறுசிறு பிரச்சினைகளைக்கூட தீர்ப்பதற்கு இலாயக்கில்லாதவர்களாகவும், சமகாலப் பொதுஅறிவில் பின்தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள். பொது வாழ்க்கைக்கு ஆங்கிலம் விதித்திருக்கும் இத்தடைகள்தான், அவர்களை பொறுமையிழந்தவர்களாகவும், வன்முறை சுபாவம் கொண்டவர்களாகவும் மெல்ல மெல்ல மாற்றுகிறது. தமிழை விட ஆங்கிலம்தான் நுகர்வுக் கலாச்சாரத்தின் எல்லா வகைகளுக்கும் பொருத்தமாக இருப்பதால், எரியும் கொள்ளியில் எண்ணெயை ஊற்றி தீப்பிடிக்க வைக்கிறது.

தேம்ஸ் நதிக்கரையையும், வாஷிங்டன் அதிபர்களையும், அமெரிக்க மல்யுத்த வீரர்களையும், வால்ட் டிஸ்னியின் முயலையும் அறிந்து வைத்திருக்கும் ஆங்கில மாணவன், தாமிரபரணி நதி பற்றியோ, காவிரியின் கீழத்தஞ்சை விவசாயப் பிரச்சினை பற்றியோ, காஞ்சிபுரத்தின் பட்டுத்தறி பற்றியோ, ஏன் கபடி விளையாட்டைக்கூட தெரியாதவனாக இருக்கிறான். இப்படி தமிழக வாழ்க்கையிலிருந்து தூக்கியெறியப்பட்டு, தனக்குத் தொடர்பற்ற மேற்கத்திய விசயங்களுக்கு அறிமுகமாகும் மாணவன்தான் இந்த மண், மக்கள், வாழ்க்கை குறித்து வெறுப்போடும், நம்பிக்கையில்லாமலும் வாழப் பணிக்கப்படுகிறான்.

விவசாயப் பிண்ணனியிலிருந்து வரும் ஒரு மாணவனுக்கு, நூற்றுக்கணக்கான தாவர வகைகளும், கிராம வாழ்க்கை மூலம் விவசாய அனுபவமும் தமிழ் வழியாகத்தான் தெரிந்திருக்கும். இம்மாணவன் ஆங்கிலத்தின் மூலம் தாவரவியலைக் கற்பதால் என்ன நடக்கும்?  அவன் சேகரித்து வைத்திருந்த அறிவுக்குப் பயனில்லாமல் போவதோடு,  ஆயிரக்கணக்கான ஆண்டு விவசாய அறிவைத் தாங்கி வரும் தமிழக விவசாயிகளுடன் பேசுவதற்குக் கூட வழியில்லாமலும் போகிறது. இந்த அவலம் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.

இதனால்தான் ஆங்கில வழிக் கல்வி அறிவுத் திறனை மட்டுப்படுத்துவதோடு, சமூகத் தொடர்பையும் இல்லாமல் செய்து விடுகிறது என்கிறோம். ஆங்கிலவழிக் கல்வியினால் வேலை கிடைத்துவிடும் என்ற மூடநம்பிக்கையின் விளைவாக, சிறார்களை தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அனைவரும், உண்மையில் தமது வாரிசுகளை வாழ்க்கையை எதிர்கொள்ளத் திராணியற்றவர்களாக மாற்றுகிறார்கள். இது போக இன்றைய பாடத்திட்டமும் மேலும் மேலும் தொழில்முறைத் தேர்ச்சியை நோக்கி மாற்றப்படுவதால் அதில் பொது அறிவும், சமூகக் கண்ணோட்டமும் அருகி வருகிறது.

இந்த நோய்களோடு வட இந்தியாவில் இருக்கும் மாணவர்களுக்கு சாதிவர்க்கத் திமிரும் சேர்ந்து கொள்கிறது. தமிழகத்தில் இவை இல்லாமலில்லை என்றாலும், இந்தி பேசும் மாநிலங்களில் இவை அதிகம். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக மேல் சாதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, இங்கு நினைவு படுத்திக் கொள்வோம்.

வட இந்தியாவில் அநேக பிரபலங்கள் துப்பாக்கியோடும் பாதுகாவலர்களோடும்தான் உலா வருகிறார்கள். அப்பனே கிரிமினலாக இருக்கும் போது, மகன் அப்படி இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஜெசிகா லாலைக் கொன்ற மனுசர்மாதான் வடக்கின் மேட்டுக்குடி மாணவர்களுக்கு வகை மாதிரி. ஏழைகள் மற்றும் தலித்துகள் மீது வன்மம் கொண்டவர்களாகத்தான், வட இந்திய மாணவர்கள் வளர்க்கப் படுகிறார்கள். கூடவே இந்துமதவெறிப் பாசிசத்தின் செல்வாக்கும் இவர்களிடத்தில் அதிகம்.

இந்தக் கட்டுரையின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். பொதுவில் இன்றைய மாணவத் தலைமுறையினர் இளமைக்குரிய துடிப்புடனோ, உற்சாகத்துடனோ, கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடனோ இல்லை. முக்கியமாக, அவர்களது மனவலிமை மேலும் மேலும் குறைந்து வருகிறது. பள்ளி இறுதி ஆண்டு மதிப்பெண்கள் வந்தவுடனேயே, தேர்ச்சி பெறாத மாணவர்களிடத்தில் தற்கொலை செய்து கொள்ளும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருவதையும் பார்க்கிறோம். வீட்டு நிலைமைக்குப் பொறுப்பேற்கும் சென்ற தலைமுறையின் பண்பு கூட, இத்தலைமுறை மாணவர்களிடத்தில் இல்லை. காலச்சூழலில் அடித்துச் செல்லப்படும் இன்றைய நிலையில், நாம் என்ன செய்ய முடியும் என்று சிலர் விரக்தி அடையலாம். அப்படி இல்லை.

இக்கட்டுரை மாணவரைச் சீர்குலைக்கும் விசயங்களைப் பரிசீலிப்பதோடு நின்று விடவில்லை. நேர்மறையில் ஒரு மாணவனை எப்படி வளர்க்க வேண்டும் என்ற தீர்வுகளையும் உங்களுக்கு எடுத்துச் சொல்கிறது. அதைப் புரிந்து கொள்வதோடு, நடைமுறைப்படுத்துவதற்கும் முயற்சி செய்யுங்கள். இல்லையேல் அற்பப் பிரச்சினைகளுக்காக ஆத்திரங்கொண்டு வெடிப்பதற்குத் துப்பாக்கிதான் வேண்டுமென்பதில்லை, கிடைக்கும் எதுவும் பயன்படும். அதுவும் கண்காணாத ஒரு வீட்டில்தான் நடக்கவேண்டும் என்பதில்லை, அந்த வீடு உங்களுடையதாகவும் இருக்கலாம்.

-புதிய கலாச்சாரம், மார்ச்’08

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

4

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்!

  1. “மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” – தமிழகம் தழுவிய புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம்-ஆர்ப்பாட்டம்
  2. 2-ஜி அலைக்கற்றை ஊழல் தீர்ப்பு: நுனி இது, அடி எது?
  3. காமராஜ் மெட்ரிக் பள்ளியின் கட்டணக் கொள்ளையைத் தூள்தூளாக்கிய பெற்றோர்களின் போராட்டம்!
  4. ஜெயா-சசி-சோ: அதிகாரச் சூதாட்டம்!
  5. குளோபல் ஃபார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை – பொறுக்கித்தனம்! ஒத்தூதும் தமிழக அரசு!!
  6. கூடங்குளம்: இந்து முன்னணியின் காலித்தனம்
  7. மாமி-மாட்டுக்கறி-நக்கீரன்: பார்ப்பனக் கும்பலின் தீண்டாமை வெறி!
  8. இந்துஸ்தான் யுனிலீவரின் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் போர்!
  9. தேய்ந்துபோன செருப்பும் முதலாளித்துவ சமூக நீதியும்
  10. கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பார்ப்பன – ‘மேல்’சாதிக் கும்பல்
  11. இரான்: அமெரிக்கக் கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சு!
  12. டர்பன் மாநாடு: ஆடுகள் மீது பழிபோடும் ஓநாய்கள்
  13. உலகளாவிய நிதி நெருக்கடியின் ஐந்து கட்டங்கள் (2007-2011) தீராத தலைவலி!
  14. ஆலயத் தீண்டாமைக்கு எதிராகச் சிவனடியார்களின் போராட்டம்!
    ஒடுங்கியது பார்ப்பன சிவச்சாரியார்களின் கொட்டம்!!
  15. உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களைப் பழிவாங்கும் கமாஸ் வெக்ட்ரா!
  16. தானே புயல் பேரழிவு: தேவை, அற்ப நிவாரணமல்ல; மறுவாழ்வு!

புதிய ஜனநாயகம் பிப்ரவரி 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

சிறுகதை : தேர்தல்

1

இது சீனப் புரட்சியின் அறுபத்தி மூன்றாம் ஆண்டு. புரட்சிக்குப் பின்னால் மக்கள் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற அரசமைப்பின் கீழ் நடைபெற்ற  தேர்தலை விளக்குகிறது இந்தக் கதை. ”கம்யூனிஸ்டு நாடு என்றால் தேர்தலே கிடையாது, கட்சியின் சர்வாதிகாரம்தான்” என்றும், நமது நாடுதான் ஜனநாயக நாடென்றும் முதலாளித்துவப் பத்திரிகைகள் தொடர்ந்து பொய்ப்பிரச்சாரம் செய்கின்றன.

இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையை நாம் புதிதாக அம்பலப்படுத்தத் தேவையில்லை. கேடிகள், கிரிமினல்கள், திருடர்களைத் தவிர வேறு யாரும் வேட்பாளராக நிற்க முடியாது என்பதை மக்களே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள். சீனத்திலோ, மக்களுக்குத் தொண்டாற்றி, மக்களின் மதிப்பையும் அங்கீகாரத்தையும் பெறாத யாரும் வேட்பாளராகக் கூடப் போட்டியிட முடியாது என்பதையும், வேட்பாளரின் குறைநிறைகள் மக்கள் மத்தியில் அலசி ஆராயப்படும் என்பதையும் இச்சிறுகதை தெளிவுபடுத்துகிறது.

அனைத்துக்கும் மேலாக, பெண் விடுதலை, பெண்களின் குடும்ப, சமூக, அரசியல் அடிமைத்தனங்களை எதிர்த்த போராட்டம் உழைக்கும் மக்கள் மத்தியில் எப்படி நடத்தப்பட்டிருக்கிறது என்பதை அலங்காரங்கள் இன்றி மிகச் சாதாரணமாக விவரிக்கிறது இக்கதை.

இந்தியாவைப் போலவே மிகவும் பின்தங்கியிருந்த சீனத்தில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன் தேர்தலின் நின்ற ஒரு பெண் வேட்பாளரின் அனுபவம் இது. இங்கே பெண்களுக்கான ஒதுக்கீடு மூலம் பஞ்சாயத்துத் தலைவியான பெண்கள் ‘அவர்’ மூலம்தான் ஆட்சி நடத்தமுடிகிறது- என்ற வெட்கக்கேடும் இந்தக் கதையைப் படிக்கும் போது நினைவுக்கு வரத்தான் செய்கிறது.

__________________________________________

தேர்தல்துவே சீனத்தின் முதல் தேர்தல், நாடு முழுக்க தேர்தல். யாரைத் தேர்ந்தெடுப்பது? – அதற்காகத்தான் இன்றைய கிராமக் கூட்டம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதிகள் எவ்வளவு என்று தீர்மானித்திருந்தார்கள். அவர்களைப் பிராந்தியத்திலிருந்து தேர்ந்தெடுத்து மக்கள் பேராயத்துக்கு (மக்கள் காங்கிரஸ்) அனுப்ப வேண்டும்.

சியாங் பிராந்தியத்திலிருந்து மூன்று பேர். ஏற்கனவே மூன்று வேட்பாளர்கள் நிற்கவைக்க முடிவு செய்யப்பட்டுவிட்டது. முதல் நபர், குவின் ஷீ ஜூ- இவர் கிராமத்தின் கம்யூனிஸ்டு கட்சிச் செயலாளராக கடந்த ஆறு வருசமாக இருந்து வருகிறார்; இரண்டாமவர், வாங் ஷூன்டே – பழைய பாரம்பரிய மருத்துவர், வட்டாரத்திலேயே மாதிரி மருத்துவ ஊழியர் என்று பெயரடுத்தவர்; மூன்றாமவர், குவின் ஜியா குய் – இளைஞர். இருபதே வயது. பரஸ்பர உதவிக்குழுவின் தலைவர். ஆனால் பெண்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிற்க வைக்க முடிவு செய்திருக்கிறார்கள் – வேறு யாருமல்ல; குவின் ஜியா குய்யின் மனைவி, ஜாங்குயா ஃபெங்.

யின் சியாங் ஜென் எழுந்து நின்று பேசினாள். எல்லோரையும் வசீகரிக்கும் இனிய, தெளிவான குரல். ”எதற்காக நான்காவது வேட்பாளர்? பரஸ்பர உதவிக் குழுவின் தலைவரான குவின் ஜியாகுய் அவரது மனைவியின் உதவி இல்லாமல் இவ்வளவு சாதனைகளைச் செய்திருக்க முடியுமா? இரண்டு வருடத்துக்கு முன்னால் முதன் முதலில் அதனை அமைத்தபோது எங்களுக்கு விவசாய வேலை ரொம்பவும் புதிது. ஒவ்வொரு வீடாகச் சென்று இப்படிப்பட்ட குழு கிராமத்துக்கே அவசியம் என்று எங்கள் பெற்றோரிடமும், மாமி – மாமனிடமும் எடுத்துச் சொல்லி விளங்க வைத்தது யார்?”

”எல்லா கஷ்டமான வேலைகளையும் முதலில் எடுத்துச் செய்து முன்மாதிரியாக நின்று எங்கள் முதுகு வலியைக் கூட மறக்கச் செய்தது யார்? எவ்வளவு வேலை செய்தோம், அதற்கு எவ்வளவு கூலி என்று அளக்க முனைந்தபோது, சம உழைப்புக்குச் சம கூலி என்று வாதாடியது யார்? அது ஆணா, பெண்ணா என்று பிரித்துப் பார்க்கக் கூடாது என்று உறுப்பினர் கூட்டத்திலேயே பிரச்சனையை வைத்தது யார்? நண்பர்களே, அவள் செய்கிற வேலைகளிலேயே மூழ்கி விடுகிறாள்; யாரிடமும் பீற்றிக் கொள்வதில்லை. ஆனால் அவள் ஓர் ஊழியர் என்பது மட்டுமே கிராமத்தாருக்குத் தெரியும். அவள் என்ன வேலைகளைச் செய்தாள் என்று யாருக்குமே முழுமையாகத் தெரியாது.”

லி குய்ஹூவா என்ற இளம்பெண் அடுத்ததாகப் பேசுவதற்கு அனுமதி கேட்டாள். ”ஒரு மாதத்துக்கு முன்னால் வட்டார மாதிரி தொழிலாளர் மாநாட்டுக்குப் பார்வையாளராகச் சென்றேன். அங்கே குவின் ஜியா குய்யின் அறிக்கையைக் கேட்டேன். அவர் பேசும்போது ”கள வேலைகளுக்குச் செல்வதற்காகப் பெண்களை அழைத்து ஏற்க வைத்தேன்,” என்றார். குழுவின் எல்லாச் சாதனைக்கும் தானே பொறுப்பு என்று பேசினார். சியாங்கில் ஒருமுறை மாநாட்டில் ஒருமுறை, ஆக இரண்டு முறையும்அவர் பேசியபேச்சு பச்சையான சுயதம்பட்டம். இங்கு திரும்பிவந்த பிறகு பெண்கள் கழகத் தலைவரோடு இது பற்றிப் பேசினேன். அவர் மூலம் கிராமத் தலைவர்கள் குவின் ஜியா குய்யிடம் இதுபற்றி விமரிசித்ததாகக் கேள்விப்பட்டடேன்.”

லி தொடரந்தாள்: ”அப்போது, தான் தவறு செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டார். ஆனால் வட்டாரக் கூட்டத்தில் மறுபடி தன்னைப் பற்றி மட்டுமே விளம்பரம் செய்து கொண்டார். இன்றைக்கு இதுபற்றி இரண்டில் ஒன்று பார்த்துவிட வேண்டும். குயாஃபெங் என்ன உதவிகள் செய்தாள், அவள் பங்கு என்ன என்பது பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.”

ஜியா குய்யை ஒருமுறை பார்த்துவிட்டு பின்னலைப் பின்புறம் ஒதுக்கிக் கொண்டே அமர்ந்தாள் லி. சட்டென கூட்டம் அமைதியானது. எல்லோருடைய கண்களும் ஜியா குய்யை மொய்த்தன.

அவன் இதோ இப்போதுகூட எழுந்திருந்து தன் மனைவிக்கும் பங்குண்டு என்று சொல்லிவிட்டுத் தன் குறையாடுகளை ஒப்புக் கொண்டால் கூடப்போதும் என்பது போல அவர்கள் பார்த்தனர். அப்படியிருந்தால் வெற்றி அவன் பக்கம்தான். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை.

பதவிகளை அனுபவித்து அனுபவித்துப் பழகிவிட்டான் ஜியா. கிராமத்தார் தன்னை ஆதரிப்பார்கள்; கை தட்டி ஆதரித்துத் தேர்ந்தெடுத்துவிடுவார்கள் என்று அவன் எண்ணியிருந்தான். தேர்தலுக்காகவே புதிதாக நீலமேல் கோட்டு கூட அணிந்து வந்திருந்தான்.

இப்போது அவனுக்கு உடம்பெல்லாம் கசகசத்தது; ஓரக்கண்ணால் மனைவியைப் பார்த்தான் – தனக்கு ஆதரவாக ஏதாவது சொல்ல மாட்டாளா? ”சகோதர சகோதர்களே! ஜியா குய்யை காரணமில்லாமல் பழி சொல்லாதீர்கள்….. நான் முன்னேறியிருக்கிறேன் என்றால் அதற்கு அவரது உதவியே முழுக்க முழுக்கக் காரணம்,” – இப்படி ஏதாவது பேசமாட்டாளா?

ஆனால் அவளோ வாயே திறக்கவில்லை; தலையைத் தொங்கப் போட்டிருந்தாள்; தலைமுடி அவள் கண்களைத் திரையிட்டிருந்தது. இதுபோல ஒரு கூட்டத்தில் அவள் எப்போதும் எழுந்து நின்று பேசியது கூட இல்லை.

”சகோதர சகோதரிகளே!” குயின் ஜியா குய் வெறுமனே முனகினான். வாய் உலர்ந்தது. குரல் தழுதழுத்தது. ”லி குய் ஹூவா இப்போது சொன்னது உண்மையல்ல….”

லி உடனே எழுந்து அதை மறுத்தாள். ”நீங்கள் ஒரு நல்ல பரஸ்பர உதவிக்குழு தலைவர் என்பதை முழுக்க ஒப்புக் கொள்கிறேன்; நமது கிராமத்தில் உற்பத்தியை முன்னே தள்ளியதில் உங்களுக்குப் பங்கு உண்டு, நான் மறுக்கவில்லை. உங்களை ஒரு வேட்பாளராகக் கூட அங்கீகரிக்கிறேன். ஆனால் இன்றைய கூட்டம் மிக முக்கியமானது. குயாவ் ஃபெங்கின் நல்ல அம்சங்களை நான் சொல்லியே தீரவேண்டும். அப்படி என்றால் உங்களது குறைகளைச் சொல்லாமல் இருக்க முடியாது. நான் உண்மையைத்தான் சொல்கிறேன்.”

அமைதி சூழ்ந்திருந்தது. பின் வரிசையில் அமர்ந்திருந்த ஒருசில முதியவர்கள் மட்டும் ரகசியக் குரலில் பேசிக் கொண்டனர். ”இதப்போய் இந்தப் பொட்டச்சிங்க பெரிசாக்கறாங்களே. ஜியா குய்யுக்கு இதனால எவ்வளவு பெரிய அவமானம்? எத வேணுமானாலும் இவளுக சொல்லட்டும். அவங்க ரெண்டுபேரும் புருசன் – பெண்சாதி தானே? யாரைத் தேர்ந்தெடுத்தாலும் ரெண்டும் ஒன்னுதானே?”

அன்றைய தேர்தலுக்கான கூட்டத் தலைவர் குயாவ் ஃபெங்கின், வேட்பு முன் மொழிதலை ஓட்டுக்கு விட்டார். எல்லோரும் அந்த வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதற்காகக் கை உயர்த்தி ஆமோதித்தனர்.

தன் மனைவி பற்றி கிராமத்தார் இவ்வளவு ஒசத்தியாகப்  பேசிக்கொள்கிறார்களே என்று குயின் ஜியா குய் யோசித்தான். அவனுக்கு ஆச்சரியமாயிருந்தது; பிறகு கோபமும் கசப்புமாக மாறியது. அவனது குழுவிலிருந்த பெண்கள் மீது வெறுப்பு வந்தது. ”நீங்கள் சற்று முன்னேறியது உண்மையே. ஆனால் நீங்கள் முன்னேறுவதற்கே என் தலைமையல்லவா காரணம்? என் மீதே விமர்சனம் வைக்கிறீர்கள்? உங்களுக்கு நாகரீகம் தெரியவில்லையே.” –அவன் மனத்தில் இப்படி எண்ணங்கள் ஓடின. உடனே அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறி விட நினைத்தான்.

கட்சிச் செயலர் பேசுவதைக் கேட்க்க கூட குவினுக்கு மனமில்லை. வாங் ஹூன்டேவைப் பேசச் சொல்லி கிராமத்தார் சிலர் கோரினார்கள். தலைவர் குவினைக் கூப்பிட்டார். எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. இரண்டாம் முறை அவர் அழைத்த போதுதான் கிறக்கத்திலிருந்து வெளியே வந்தான் குவின்.

மேடைநோக்கி நடந்தான். இப்போதுகூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. எனது மனைவி குய்யா ஃபெங்கைத் தேர்ந்தெடுங்கள் என்று ஒருசொல் கேட்டால்போதும், அவனைப் பற்றி எல்லோருமே ஒரு உயர்வான கருத்துக்கு வந்து விடுவார்கள். எப்படியாவது தன் கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே அவன் நினைத்தான் – முஸ்தீபுடன் அவன் பேச்சு ஆரம்பித்தது.

”சகோதர, சகோதரிகளே, என்னுடைய பரஸ்பர உதவிக்குழுதான் இந்தக் கிராமத்திலேயே முதலில் துவக்கப்பட்டதாகும்….” மறுபடி பழைய கதை. இரண்டு வருஷம் முன்னால், போன வருஷம், இப்போதைய நிலை என்று அவன் வரிசையாக நீட்டி வளைத்துப் பேசினான்.

”அடேய், எதுக்குடா பழைய கதை” என்று கிராமத்தார் பொறுமை இழந்தார்கள்.

”உன்னோட வேலைகள் பற்றி உன் போதனையை அவிழ்க்காதே, எங்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது” என்றார் மற்றொருவர்.

ஒரு வழியாக குவின் முடித்துக் கொண்டான். கைதட்டல் பலமாக மழைபோல் கொட்டியது. அது அவனுக்காக அல்ல. அடுத்து பேச அழைக்கப்பட்ட குய்யா ஃபெங்குக்காக.

குவின், மனைவியைப் பார்த்தான். அவள் தலை சட்டென்று நிமிர்ந்தது; அவளது தோள்கள் உயர்ந்தன; அவளது கன்னங்கள் ஒளி சிந்தின; பெரிய கறுப்புக் கண்கள் சுடர்விட்டன; எல்லோரையும் விட சற்று உயரமாகக் கூட தெரிந்தாள். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவள் தெளிவாக நிதானமாகப் பேசினாள்.

”சகோதர, சகோதரிகளே! நாம் செய்துள்ள வேலைகளைத் திரும்பிப் பார்க்கும் போது எனக்கே கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது. முதலாவதாக, இந்த வருச அறுவடையின் போது குழு உறுப்பினர்களை ஒன்று திரட்டி சிறுவர் பள்ளி ஒன்றைத் துவங்கிவிட வேண்டும் என்று நான் எண்ணியிருந்தேன்; அப்படித் துவங்கியிருந்தால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அங்கே விட்டுவிட்டு கள வேலைகளுக்குப் போக வசதியாக இருந்திருக்கும். அது திட்டம். ஆனால் அந்த நேரம் எனக்கு உடம்பு சுகமில்லை. நான் அந்த வேலையை முடிக்கவில்லை. பிரச்சினைகள் வரும்போது அவற்றை எதிர்த்துப் போராடி காரியத்தை சாதிக்கும் மன உறுதி என்னிடம் போதிய அளவு இல்லை. இது என்னுடைய தவறு. அடுத்ததாக, பரஸ்பர உதவிக் குழுவை நிறுவி மூன்றாண்டுகள் ஆகியும் இன்னமும் இது ஓர் கூட்டுறவுச் சங்கமாக வளரவில்லை. அதற்குத் தகுந்த முயற்சியை நான் மேற்கொள்ளவில்லை… நான் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இல்லையென்றாலும் இந்த இருவி ஷயங்களுக்காக நான் உழைக்கப் போகிறேன்.”

கூட்டம் அவளது நேர்மையைப் பாராட்டியது; கைதட்டி அங்கீகரித்து ஆரவாரம் செய்தது.

லி குய் ஹுவா ஓடிப்போய் அவளை அணைத்துக் கொண்டாள். ”நடந்ததை எண்ணிப் புலம்பாமல் வரப்போகிற காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று குய்யா ஃபெங் பார்க்கிறாள். இப்படித்தானே வேட்பாளர் இருக்க வேண்டும்?” அவள் கூட்டத்தைப் பார்த்துச் சொன்னாள்.

திடீரென குய்யாவின் மாமியார் எழுந்து நின்றாள். ”இதென்னய்யா கொடுமை! நம்மூருக்கு மூணு பிரதிநிதிகள்தான் அனுப்ப முடியும். நீங்க நாலு பேரை வேட்பாளரா நிப்பாட்றீங்க. கட்சி செயலாளருக்கு எல்லாரும் ஓட்டு போட்டுப்புடுவாங்க; டாக்டரய்யாவுக்கு யாராவது ஓட்டுப் போடாம இருப்பாங்களா, அவருக்கும் போட்டுப்புடுவாங்க. கடைசில எம்மவனுக்கும் மருமவளுக்கும்தான் போட்டியா?” என்று வெளிப்படையாக அரற்றத் தொடங்கினாள்.

மாமியார்க்காரியின் பிரச்சினை என்ன என்று எல்லோருக்குமே தெளிவாகத் தெரிந்தது. மருமகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் மகன் நிலைகுலைந்து போவான். ஏற்கெனவே கூட்டத் தலைவர் கூட்டம் முடிந்ததை அறிவித்துவிட்டார். மாலையில் தேர்தல் நடக்கும். மாமியாரின் பிரச்சினையைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

இது தேர்தல். பாரபட்சம் காட்ட முடியாது. யார் நல்லவர் என்றாலும் அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் ஆண் என்ன, பெண் என்ன? மகனா, மருமகளா என்பதற்கெல்லாம் வேலை?

****

குவின் ஜியா குய் நேரே வீடு சென்றான். ஒரு வார்த்தையும் சொல்லாமல் படுக்கையில் பொத்தென்று விழுந்தான்.

அவனது தாய்க்குச் சமையலில் உதவி செய்தவாறு குய்யா ஃபெங் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தாள். குவினுக்கு அது பொறுக்கவில்லை.

“ஏ இங்கே வா” அவன் கத்தினான்.

அவள் உள்ளே வந்தாள். அவள் கைகளில் மாவு, முகத்தில் சிரிப்பு.

”கூட்டத்தில் என்னவெல்லாம் பேசினே? பெரிய இவன்னு நெனப்போ?”

”ஏன், அப்படி என்ன தப்பாப் பேசினேன்?” குய்யா அதிர்ச்சி அடைந்தாள்.

”எதற்காக அப்படிப் பேசினாய்? நம் குழு மூன்று வருசத்தில் கூட்டுறவுச்

சங்கமா வளரல்லேன்னு பேசினியே. எதற்காக அப்படிச் சொன்னே?”

”சே, நீ எப்படிப்பட்ட ஆளுன்னு தெரிஞ்சி போச்சு” குய்யா பொங்கிவிட்டான். அவள் நேர்மையானவள், சூதுவாது தெரியாதவள். குவின் அப்படிக் கேட்டது அவளுடைய ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது.

அப்படியே தொடுத்துத் தொடுத்து சண்டை வளர்ந்தது. இரண்டு பேரும் சாப்பிடவில்லை.

மாமியார்க்காரியும் திணறினாள். மருமகள் மீது தப்புச் சொல்ல முடியாது; மகனைத் திட்டவும் முடியாது. கையைப் பிசைந்தாள்; பெருமூச்சு விட்டாள்; முனகினாள். கொதிக்கும் மனதை யாரிடமாவது கொட்டி ஆற்ற வேண்டும் போல அவளுக்குத் தோன்றியது. அதன் விளைவு என்ன ஆகும் என்று அவள் யோசிக்கவில்லை.

வெளியே சென்றாள். பெண்கள் கழகத் தலைவர் முதலில் அகப்பட்டார். ”தலைவரே, முதல்லேயே தலைப்பாடா அடிச்சுகிட்டேன். ரெண்டு பேரையும் நிக்க வெக்காதீங்கன்னு, கல்யாணம் கட்டினதுலேருந்து இப்படி அவுங்க அடிச்சுகிட்டு நின்னதில்லே. அவங்க ரெண்டு பேரும் சாப்பிடக்கூட இல்லே….”

அடுத்து லி குய் ஹீவா, அதற்கடுத்து மருமகளை வேட்பாளராக முன்மொழிந்த ‘யின்’ என்ற பெண்…. எல்லோரிடமும் வீட்டில் நடந்த சண்டையை வரிவிடாமல் கொட்டித்தீர்த்தாள்.

‘யின்’ பக்கத்து வீடுதான். சண்டையின் உச்சத்தில் அவன் கத்தியதெல்லாம் அவளுக்கும் காதில் விழுந்தது. கேட்டு உள்ளுக்குள்ளே கொதித்துக் கொண்டிருந்தாள்.

செய்தி கேள்விப்பட்டு அநேகமாக கிராமத்தில் பெண்களும் ஆண்களுமாய்ப் பலர் கூடிவிட்டனர். ”இவ்வளவு மோசமானவனா குவின்?” எல்லோர் மனதிலும் அந்தக் கேள்வி எழுந்தது.

*****

மாலை நேரம் வந்தது, தேர்தல் நடந்தது. முடிவு எல்லோருக்குமே அதிர்ச்சி தந்தது. குவினுக்கு மூன்றே ஓட்டுக்கள. மற்ற எல்லோரும் குய்யா ஃபெங்குக்கு ஓட்டுப் போட்டிருந்தார்கள்.

குவினால் தாங்க முடியவில்லை. கூட்டம் முடிவதற்கு முன்னே அவன் கிளம்பிவிட்டான். அவன் தாய் அவனைத் துரத்திக்கொண்டு ஓடினாள் – அழுது புலம்பிக் கொண்டே.

பெண்கள் கழகத் தலைவரும், அடுத்த வீட்டுக்காரியும் வந்து பார்த்தபோது அவன் படுக்கையில் படுத்துத் தலையணையால் முகத்தை மூடியிருந்தான்.

அவர்கள் சமாதானமாய்ப் பேசிப் பார்த்தார்கள். அவன் பதில் பேசவில்லை, கிராமத்திலிருந்தே தன்னைத் தள்ளிவைத்து விட்டதைப் போல அவன் நினைத்துக் கொண்டான். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ஏதும் கேட்காததால் அவன் அம்மாவும் படுத்துவிட்டாள். நீண்ட நேரம் அவளது முணுமுணுப்பு மட்டும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

குய்யா ஃபெங் எல்லோரையும் திருப்பியனுப்பினாள்; தானே பேசுவதென்று முடிவு செய்தாள். குவினின் முகத்தை மூடியிருந்த தலையணையை அகற்றினாள். அவன் கண்களில் நீர் திரண்டு வழிந்தது. அவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். ”ச்சீ… உன் மேல எனக்கொண்ணும் கோபம் இல்ல. ஆனா நீ கொஞ்சம் யோசிச்சுப் பாக்கணும்” நெஞ்சை நீவிவிடுவது போல இதமாகச் சொன்னாள்.

”ம்… யோசிச்சுப் பாக்கறேன்” சொல்லும்போதே அவன் குரல் அடைத்தது; கண்களில் நீர் திரண்டது.

****

மூலம்: சீனச் சிறுகதைத் தொகுப்பு ”ஐம்பதாம் ஆண்டுகளின் சீனக் கதைகள்” (1984)

புதிய கலாச்சாரம், அக்டோபர் 1999.

கூடங்குளம் அணு உலையை மூடு! தூத்துக்குடி ஆர்ப்பாட்டம் – சிறப்புரைகள் !

41

கூடங்குளம்-மறியல்பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறிக்கான, மனித குலத்திற்கு எதிரான கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற முழக்கத்தின் அடிப்படையில் கடந்த இரு  மாதங்களாக மனித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள,  போராட்ட ஆதரவு வழக்கறிஞர் குழுக்கள் அமைத்தல், சட்ட ரீதியான உதவிகள் எனப் போராட்ட ஆதரவுப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் கடந்த  21-01- 2012 அன்று திருநெல்வேலியிலும், அதனைத் தொடர்ந்து  01-2-2012 அன்று காலை 10.30 மணிக்கு  தூத்துக்குடி இராஜாஜி பூங்கா அருகில் மனித உரிமை பாதுகாப்பு மையம் தூத்துக்குடி கிளை சார்பில் மிகவும் எழுச்சிகரமான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தின் துவக்கத்தில் 31-01-2012 அன்று நெல்லையில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினரை இந்து முன்னணி -பி.ஜே.பி, காங்கிரஸ் கும்பல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், அணு உலையை உடனே மூட வலியுறுத்தியும், மக்கள் விரோத , தேசத் துரோக அமெரிக்க – இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரியும் மின்சாரத்திற்காக அணு உலை என்ற மோசடியை அம்பலப்படுத்தியும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் ஜெர்மன், பிரான்ஸ், இத்தாலி, உள்ளிட்ட நாடுகள் அணு உலைகளை மூடி வரும் நிலையில், பன்னாட்டு முதலாளிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி மக்கள் பணத்தை தூக்கிக் கொடுத்து 36 அணு உலைகளை, கமிசன் பெற்றுக் கொண்டு மன்மோகன் சிங் காங்கிரஸ் அரசு இந்தியா முழுவதும் அமைக்கவுள்ளதைக் கண்டித்தும், போராடும் மக்களின் மீது போடப்பட்ட 156 பொய் வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியும், காற்றாலை, கடலலை, சூரிய ஒளி என்ற மாற்று மின் தயாரிப்பு முறைகள் அமுல்படுத்தக் கோரியும், தொடர்ந்து கூடங்குளம் போராட்டடம் தொடர்பாக அணு சக்திக் கழகத்திடம் கையூட்டு பெற்றுக்கொண்டு பொய்ச்செய்திகள், அதாவது அவதூறுகளை வெளியிட்டு வரும் தினமலருக்கு எச்சரிக்கை விடுத்தும் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

பெரும் எண்ணிக்கையில் போலீசார், அதிரடிப்படையைக் குவித்து ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பங்கேற்பை தடுக்க முயற்சித்த தூத்துக்குடி நகரக் காவல்துறையை மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் எச்சரித்து அடக்கினர்.

தலைமை உரை ஆற்றிய மனித உரிமை பாதுகாப்பு மையம் தூத்துக்குடி மாவட்ட இணைச்செயலர் வழக்கறிஞர் அரிராகவன், கூடங்குளம் அணு உலை கட்டப்பட்டது, பன்னாட்டு முதலாலிகளின் இலாபம், இந்திய முதலாளிகளின் அணு குண்டு வல்லரசுக் கனவிற்காகத்தானே தவிர மின்சாரத்திற்காக அல்ல என்பதையம் இன்று உற்பத்தி ஆகும் மின்சாரத்தில் பெரும்பகுதி முதலாளிகள், பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்குச் செல்லும் நிலையில் அணு உலை மின்சாரம் வந்தாலும் பெரும்பான்மை மக்களுக்கு, விவசாயிகள், தொழிலாளிகளுக்கு கிடைக்காது என்பதையும் சுட்டிக்காட்டி புள்ளிவிவரங்களோடு உரை நிகழ்த்தினார்.

“ஓமியோபதி மருத்துவர் ஊசி போட்டால் போலி மருத்துவர் என்று போலீசு கைது செய்கிறது. ராக்கெட் என்ஜினியர் அப்துல்கலாம் அணு உலை பாதுகாப்பானது அறிக்கை விடுகிறார் அவரை போலி அணு விஞ்ஞானி என்று ஏன் கைது செய்யக்கூடாது? சுனாமி பாது காப்புக்காக அரை கிலோமீட்டர் தள்ளி குடியிருப்புகளை அமைக்க வேண்டும் என கடலோர சட்டம் சொல்லுது.அணு உலை மட்டும் அருகிலேயே கட்டியிருக்கிறான். யார் கேக்கிறது?.என பேசினார்.

அதன்பின் அனைவரும் இந்து முன்னனி, ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. காங்கிரஸ் ரவுடிகளை கண்டித்தும், அம்பலப்படுத்தியும் போராட்டத்தில்   தமிழகத்தின் அனைத்து மக்களும் இணைய வேண்டியதன் அவசியத்தையம், போராடும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தியம் உரை நிகழ்த்தினர்.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் திரு.மனோதங்கராஜ், வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் கடந்த 1987 லிருந்து நடைபெற்று வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் போராட்ட வரலாறையும், பேச்சிப்பாறை நீரை கூடங்குளம் அணு உலைக்கு எடுக்கக் கூடாதெனக் கோரி கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நூற்றுக்கணக்கான போராட்டங்கள் நடத்தியுள்ளதையும் விளக்கிப் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் இறுதியில் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய விடுதலை போராளிகள் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கு அதே காரணங்களுக்காக இன்றும்போடப்படுகிறது. காங்கிரசு, பி.ஜே.பி, தி.முக, அ.தி.முக. ஆட்சி மாறலாம், ஆனால் ஒரு போதும் மக்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதில்லை. விளை நிலங்களை துப்பாக்கி முனையில் விவாசாயிகளிடமிருந்து பறித்து பன்னாட்டு கம்பெனிக்கு வழங்குகிறது  மத்திய மாநில அரசுகள். மக்கள் நலனை பற்றி சிறிதும் கவலைப்படாமல் கல்வி, மருத்துவம், குடிநீர் என அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள்.இது மக்கள் நல அரசு இல்லை.கூடங்குளம் மக்கள் தென்பகுதியில் பன்னாட்டு முதலாளியின் காலை இறுகப் பிடித்து விட்டார்கள்.அதன் கை உடம்பு தலை என ஏனைய பிரிவுமக்களான விவசாயிகள், தொழிலாளர்கள்,  மாணவர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் போராடி பிடித்து அழுத்தி கீழே சாய்த்து விட முடியும், என பேசினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் தோழர் காளியப்பன் பேசும்போது, அணுகுண்டை விட,  அணு உலை ஆபத்தானது.  அணு குண்டு வெடித்தால் தான் அழிவு ஏற்படும் அணு உலை வெடிக்காமலே ஆபத்து ஏற்படும். அப்துல்கலாம் எப்படி அணு விஞ்ஞானி என்று மக்களால் நம்பவைக்கப்பட்டாரோ அதுபோல திரும்ப திரும்ப பொய்ப் பிரச்சாரம் செய்து அணுஉலை பாதுகாப்பானது என நம்பவைக்கிறார்கள்.  அணு உலையை ஏற்றுமதி செய்து கோடி கோடியாக கொள்ளை லாபம் சம்பாதிக்ககும் அமெரிக்கா பிரான்ஸ், ரஷ்யா கடந்த 30  ஆண்டுகளில் புதியதாக அணு உலையை துவங்கவில்லையே ஏன்? யுரேனிய கையிருப்பில் உலகில் நான்கில் ஒரு பகுதியை வைத்துள்ள ஆஸ்திரேலியா ஒரு அணு உலையை கூட அமைக்கவில்லை. ஆனால் இந்தியாவில் கூடங்குளத்தில் மட்டும் அல்ல ஜெகதாப்பூரில் 10000 மெகாவாட்டில் உலகில் மிகப்பெரிய அணுஉலையை கட்ட முயற்ச்சிக்கிறார்கள்.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்கூடங்குளம் அணுஉலையை திறப்பதில் மத்திய அரசு இனி என்ன வகையான அணுகுமுறையை மேற்கொள்ளும் என்பதற்கு முன்னோட்டமாக நெல்லை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அணுஉலைக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் மீது  இந்துமுன்னணி ரவுடிகள் தாக்குதல் நடத்தி நாம் நாளை எப்படி போராட வேண்டும் என்பதை எதிரிகள் எச்சரித்து சென்றிருக்கிறார்கள்.  ‘ஜனநாயகம்’ என்பதற்கு உரிமைகள் என்ற பொருள் அல்ல. பெரும்பான்மையான மக்கள் மீது சுரண்டல் வர்க்கமாகிய சிறுபான்மையினர் கையாளும் வன்முறையை ஒழுங்குபடுத்துவதற்கு  பெயர் தான் ஜனநாயகம். மக்களின் கோரிக்கையை பரிசிலிப்பதற்கு பதிலாக போராடும் மக்களை போலீஸ் சட்டபூர்வமாகவே ஒடுக்குகிறது.

ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தில் பென்னிகுயிக் என்ற பொறியாளர் ஐந்து மாவட்ட மக்களின் பஞ்சத்தை போக்க முல்லை பெரியாறு அணையை கட்டினார். மழை வெள்ளத்தில் அணை அடித்து செல்லப்பட்ட போது மகனை பறிகொடுத்த தாய் போல் பென்னிகுயிக் வாய்விட்டு கதறி அழுதாராம். ஆனால் தன் சொந்த நாட்டு மக்கள் பட்டினியால் சாகும்போது வீணாகும் உணவு தானியத்தை கொடு என உச்சநீதி மன்றம் பேசியபோது   எதற்குமே வாய் திறக்காத மன்மோகன்சிங் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாதென பேசியதுடன் இலவசமாக கொடுக்க முடியாதென மறுத்தார்.

மக்கள் வரிப்பணத்தில் 50 %  ஏறத்தாழ 4 லட்சம் கோடி ரூபாயை முதலாளிகளின் தொழிலை காப்பாற்ற மான்யமாக வாரி கொடுத்து வக்காலத்தும் வாங்குகிறார் மன்மோகன்சிங். சொந்த நாட்டு மக்களை பலியிடும் நயவஞ்சகன், துரோகி, அயோக்கியன், கல்நெஞ்சக்காரன்,  நம்பர் 1 கிரிமினல்தான் மன்மோகன்சிங். மின்சாரம் தயாரிக்கவா அணுஉலையை கொண்டுவந்தார்கள்?

1980 களில் வல்லரசு கனவிற்காக அணுசக்தி நீர்முழ்கி கப்பலை ரஷ்யாவிடம் வாங்க ஒப்பந்தம் போட்டபோது அணுஉலையை வாங்கினால்தான் கப்பல் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொண்டு வந்ததுதான் கூடங்குளம் அணுஉலை. இந்த தேசத்து மக்களை காவு கொடுத்து போடப்பட்ட ஒப்பந்தம்.

அணுஉலை பாதுகாப்பானது என அப்துல்கலாம் சொல்லலாம், மன்மோகன்சிங் சொல்லலாம்,  நாராயணசாமி சொல்லலாம், யார் நம்புவது?   நகராட்சி கழிப்பிடம் சுத்தமாக வைத்திருக்க துப்பில்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர் கொடுக்க வக்கற்ற அரசாங்கம் அணு உலை கழிவை பல ஆயிரம் ஆண்டுகள் பத்திரமாக பாதுகாப்பானாம்?. வெள்ளை காக்கா வானத்தில் மல்லாந்து பறக்கிறது என்று நம்புகிறவர்கள் இதை நம்பலாம்.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றி ஜார்ஜ்புஷ் கூறுவது மன்மோகன்சிங் சாதனைகளில் மகுடம் வைத்தார்போல் உள்ளது என புகழ்ந்துள்ளார். உலகில் படுத்துப்போன அணுஉலை வியாபாரத்தை தூக்கி நிறுத்த 8 லட்சம் கோடிக்கு வியாபாரம் செய்ய மன்மோகன்சிங் போன்ற தேசத் துரோகிகள்தான் உகந்த நபர். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதித்து கோடிக்ணக்கான வியாபாரிகளின் வாழ்க்கையை சூறையாடுகிறார்கள். பெட்டிகடை வைக்க எதற்கு அன்னிய மூலதனம்?

கூடங்குளம் அணுஉலை மூடினால் 14 ஆயிரம் கோடி பற்றி கவலைப்பட வேண்டியது மக்கள்தான் அதைப்பற்றி உங்களுக்கென்ன? பிரதமரின் நேரடி பொறுப்பில் உள்ள இஸ்ரோவில் 2 லட்சம் கோடி எஸ்பேண்டு ஊழல் 175000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்1 இலட்சத்து 70 ஆயிரம் கோடி, சில இலட்சம் கோடி கருப்பு பணம் இன்னும் எண்ணற்ற ஊழல்கள் செய்யும் காங்கிரஸ் கட்சிதான் உரிமைக்காக போராடும் மக்களை கொச்சைப்படுத்துகிறது. இடிந்தகரை மக்கள் போராட்டம் அவர்களது போராட்டம் மட்டுமல்ல. மத்திய அரசின் மறுகாலனியாக்க கொள்கையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள் என  அனைத்து மக்களுக்குமானது. மறுகாலனியாக்கத்திற்கு எதிரான இந்த போராட்டம் தேச விடுதலைக்கான போராட்டம், அனைவரும் இணைந்து போராட வேண்டும். என அறைகூவல் விடுத்தார்.

அணு சக்தி்க்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.உதயகுமார் பேசும் போது நாங்கள் இடிந்த கரையில் அணுஉலைக்கு எதிராக போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நேரிலே  வந்து ஆதரவு தருவதுடன் ஆலோசனைகளும் தந்து பங்களிப்பு செய்கின்ற மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிர்களுக்கு நன்றி கூறுகிறேன். கூடங்குளம் அணுஉலையை நாங்கள் ஏன் மூட சொல்கிறோம் “அமெரிக்கா காசு கொடுக்கிறது”  அன்னிய சக்திகள் தூண்டிவிடுகிறது கூடங்குளம் அணுஉலையை மூடிவிடு கோடி கோடியாகபணம் தருவார்கள் என அறுவறுப்பாக பொய் பேசி வருவது யார் என்று உங்களுக்கு தெரியும். இந்த திட்டம் இந்த மண்ணில் செயல் படுத்தினால் 8 கோடி தமிழர்களின் எதிர்காலம் அழிந்துபோகும். எம்.எல்.ஏ, எம்.பி ஆக வேண்டும் என்பதற்காக போராடவில்லை நாங்கள், இந்த மண்ணின் மைந்தர்கள். அணுஉலை பாதுகாப்பானது என அப்துல்கலாம் நாராயணசாமி மன்மோகன்சிங் பேசுகிறார்கள். சுனாமி நிலநடுக்கம் வராது என்கிறார்கள். சுனாமியும் நிலநடுக்கமும் சொல்லிவிட்டு வருமா?

ஜப்பானியர்களுக்கு தெரியாத எந்த தொழில் நுட்பம் நம்மிடம் இருக்கிறது? கூடங்குளம் பகுதியில் நிலநடுக்கம் வந்திருக்கிறது. சுனாமியும் வந்திருக்கிறது. அந்த பகுதியில் பூமிக்கடியில் எரிமலை குழம்பு இருக்கிறது. அதற்கான கற்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் பூமிக்கடியில் வெற்றிடம் இருக்கிறது. அதனால்தான் மழைநீர் கிணற்றுக்குள் போவது போல ஓடுகிறது. அந்த பகுதியில் பாறைகள் கடினமானவை அல்ல. அலை போன்று வண்டல் மண் குவியல் உள்ளது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு சுனாமி ஏற்படும் அபாயம் உள்ளது என கற்றறிந்த விஞ்ஞானிகள் சொல்கிறார்களே இதற்கு அணுசக்தி துறையினரிடம் பதில் இல்லையே.

கூடங்குளம் அணு உலையை மூடு கார்டூன் போஸ்டர் பேனர்அணு உலையில் விபத்து வேண்டாம், தீவிரவாத தாக்குதல் வேண்டாம் நிலநடுக்கம் வேண்டாம் சுனாமி வேண்டாம், அவர்கள் சொல்வதுபோல் இயங்குவதாக வைத்துக்கொள்வோம். அணுஉலை புகைப்போக்கின் வழியாக அயோடின் சீசியம் சார்ட்டியம் என நஞ்சுத்துகள்கள் காற்றிலே பரவும். அந்த நச்சுக்காற்று 40 முதல் 60 வருடங்கள் காற்று வீசும் திசையெல்லாம் பரவும். அதை சுவாசிக்கும் நமது குழந்தைகள  பற்றி எண்ணி பாருங்கள். நம்மைபோல வாழ்வாங்கு வாழ வேண்டாமா. கூடங்குளம் அணுஉலையில் நாள் ஒன்றுக்கு கதிர்வீச்சு கழிவு, நச்சுநீர் எவ்வளவு வெளியாகும். இதில் காற்றில் எவ்வளவு கலக்கும், கடல் நீரில் எவ்வளவு கலக்கும் என கேட்டோம். பாதுகாப்பானது என்ற பதிலைத் தவிர எதுவும் அவர்கள் சொல்லவில்லை.

பிரதமரை சந்தித்தப்போது அணுசக்தி தலைவர் எஸ்.கே.ஜெயினிடம் கேட்டோம் சிறிதளவுதான் வரும் அதை உருட்டி உங்கள் வீட்டு வரவேற்பரையில் வைத்துக்கொள்ளலாம் என்றார்.  உலகத்தில் எந்த நாட்டிலும் கண்டுபிடிக்காத தொழில் நுட்பம் இது. பிறகு கூடங்குளம் அணுஉலை இயக்குநர் காசிநாத் பாலாஜியிடம் கழிவு எவ்வளவு வரும் என கேட்டோம். கொஞ்சமாக வரும் என்றார். விஞ்ஞானிகள் போலவா பேசுகிறார்கள். பிறகு மறுச்சுழற்சி  செய்கிறோம் கழிவு வராது என்றார்கள். அணுஉலையை விட மறுசுழற்ச்சி உலை  ஆபத்தானதே என நாம் கேள்வி எழுப்பியவுடன் சுதாரித்து இல்லை என்றார். அப்துல்கலாம் 25 சதவீதம் கழிவு வரும் என்றார்.  எதிலே 25 சதவீதம் என சொல்ல மறுக்கிறார்கள் இவர்கள் உண்மையை சொன்னதாக சரித்திரம் இல்லை. இப்படி நாம் கேள்வி கேட்டதால் இந்திய இறையாண்மைக்கு எதிராக தேச துரோக குற்றம் சாட்டப்பட்டுள்ளோம்.

கூடங்குளம் அணுஉலையை குளிர்வித்து தண்ணீரை 24 மணிநேரமும் வாரத்தின் 7 நாட்களும் வருடத்தில் 365 நாட்களும் 40 ஆண்டுகள்  12 டிகிரிக்கும் அதிகமாக சூடான நீரை  கடலுக்குள் கலப்பார்களாம் அதனால் எந்த பாதிப்பும் வராது என்கிறார்கள். பகுத்தறிவுள்ளவர்களே சிந்தித்துப் பாருங்கள் கடல்வளம் என்ன ஆகும் மக்களின் மீன் உணவு என்னவாகும் யோசித்துப்பாருங்கள். மன்மோகன்சிங் 46 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள் என்று பேசுகிறார். சத்தில்லாத குழந்தை நன்றாக கல்வி கற்குமா முழு வளர்ச்சி அடையமா. தமிழகத்தில் கல்பாக்கம் கூடங்குளம் மேற்கு வங்கம் மகாராஷ்டிரா குஜராத் ஆந்திரா என இந்திய கடல் பகுதி முழுமைக்கும் அணுஉலையை அமைக்க இருக்கிறார். கூடங்குளம் அணுஉலையில் உள்ள பரத்வாஜ் அணுஉலைகழிவுகளை 10000 ஆண்டுகள் புதைத்து  பாதுகாப்பாக வைத்திருப்போம் என்கிறார். நமது தாத்தா பாட்டி பாட்டன்களை எங்கே புதைத்தோம் என தெரியாது. பரத்வாஜ் 10000 ஆண்டுகள் பக்கத்திலே உட்கார்ந்திருப்பாரா?

அணு கழிவின் கதிர்வீச்சு வீரியம் 48 ஆயிரம் ஆண்டுகள் இருக்கும். அரைஆயுள் முடிய 24 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். மின்சாரம் நமக்கு தேவை ஆனால் கண்ணை விற்று சித்திரம் வாங்க முடியமா? மொத்த மின் உற்பத்தியில் இன்று அணு மின்சாரம் 2.5 சதவீதம் மட்டுமே. நாடு  முழுவதும் புதிதாக அணுஉலைகள் அனைத்தும் இயங்கினால் கூட 7 சதவீதம் மட்டுமே பூர்த்தி அடையும். தண்ணீயில் சூரிய ஒளி போன்ற மாற்று முறையில் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் . கூடங்குளம் அணுஉலையில் 20 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என குற்றம் சாட்டுகிறோம். ஊழல் செய்த காண்ட்ராக்டர்களும் பலன் அடைந்தவர்களும் அணுஉலைக்கு ஆதரவாக போராடுகிறார்கள். அணு சக்தி கழகம் அணுஉலை தொடர்பான கணக்கை காட்டட்டும் போராட்ட செலவை நாங்கள் காட்டுகிறாம். பன்னாட்டு கம்பெனிகளுக்கு நம்மையெல்லாம் விற்றுவிட்டு ஓடப் பார்க்கிறார்கள். அணு சக்தி கழகத்தின் சட்டையை பிடித்து பதில் சொல் என நடுத் தெருவில் நிறுத்தி இருக்கிறோம். இந்தியாவில் இது தான் முதல்முறை. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும், குஜராத்திலே ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்ட போதும், 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும் அமைதிகாத்த அப்துல்கலாம் இன்று யாழ் பாணத்திற்கு போய் பேச என்ன அருகதையிருக்கிறது?

இந்திய ரஷ்யாவுடன் 2008 ல் போடப்பட்ட அணுஉலை ஒப்பந்தப்படி விபத்து ஏற்பட்டால் ரஷ்யா இழப்பீடு கொடுக்க வேண்டாம். உலகத் தரம் வாய்ந்தது  உத்திரவாதமானது என்பவர்கள் ஏன் ஓட வேண்டும்? இந்திய மக்களின் பிரதமர் மன்மோகன்சிங் எவ்வளவு அதிக இழப்பீடு வாங்கித் தர முடியும் என முயற்சிக்காமல் எந்த இழப்பீடும் தர வேண்டாம் என ரஷ்யாவுடன் ரகசிய ஒப்பந்தம் போடுகிறார். இதுபற்றி இந்து பத்திரிக்கையில் சித்தார்த்த வரதராஜன் என்பவர் ஒப்பந்த நகலை கைப்பற்றி விட்டோம் என  கட்டுரை எழுதினார். இழப்பீடு பெறுவது குறித்த ஒப்பந்த நகலை நமக்கு தர மறுக்கிறார்கள். ரஷ்யாவுக்கு கொடுக்கிறார்கள்.

போபால் விஷவாயு வழக்கில் கொலை குற்றவாளி ஆண்டர்சனை இழப்பீடு தண்டனை இல்லாமல் தனி விமானத்தில் காங்கிரஸ் அரசாங்கம் அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்த்து. காங்கிரஸ்சிக்கு கமிசன் ரஷ்யாவுக்கு லாபம் நமக்கு வாயில மண் இதை எதிர்த்து நாம் கேள்வி கேட்கிறோம். விவசாயிகள் மீனவர்கள் தொழிலாளர்களுக்கு கேள்வி கேட்க தெரியாது. ஏமாற்றி விடலாம் என நினைக்கிறார்கள். அணுசக்தி கழகம் தோன்றிய நாள் முதல் 65 ஆண்டுகாலமாக இரண்டரை சதவீத மின் உற்பத்திக்காக மக்களின் வரிபணத்தை ரத்தமாக உறிஞ்சிக் குடிக்கிறது.

பிரதமர் மன்மோகன்சிங்  வெள்ளைக்காரனின் அடிவருடியாக  அமெரிக்க அடிமையாக சிந்திக்காமல் இந்த நாட்டு மக்களின் பிரதிநிதியாக பேச வேண்டும்.  புகுஷிமாவில் அணுஉலை விபத்து நடந்தவுடன்  லட்சம் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு ஜப்பான் அரசு குடியமர்த்தியது. கூடங்குளத்தில் 30 கி.மீ. ருக்குள் 12 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். இந்திய அரசாங்கம் நகராட்சி கழிப்பிடத்தை பாதுகாப்பாக பராமரிக்க வக்கற்ற அரசாங்கம் என்ன செய்யும். என பேசினார்.

ஆர்பாட்டத்தில் மக்கள் கலை இயக்கக் கழகத்தின் மைய கலைக்குழு சிறப்பான நாடகமும், கலை நிகழ்ச்சியும் நடத்தியது மக்களைப் பெரிதும் கவர்ந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு நின்று ஆர்ப்பாட்டத்தை கேட்டு ஆதரித்தனர்.

–    மனித உரிமைப் பாதுகாப்பு மையம்.

கூடங்குளம் அணு உலையை மூடு! பிப்.11 நெல்லையில் மறியல்!! அணிதிரள்வோம் !!!

26

கூடங்குளம்-மறியல்மக்களின் உயிருக்கும் நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலை வைக்கும் கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் தமிழகத்தில் தீவிர பிரச்சார இயக்கத்தினை மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில் தோழர்கள் பலர் விடுமுறை எடுத்துக் கொண்டு தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டப் பகுதிகளில் மக்களிடையே தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். பாடல்கள், கலை நிகழ்ச்சிகள், துண்டுப் பிரசுரம், வெளியீடு, தெருமுனைக்கூட்டங்கள் ஆகிய வடிவங்கள் மூலம் கருத்துக்கள் மக்களை சென்றடைகின்றன.

சென்ற இடங்களிலெல்லாம் 99% மக்கள் எமது தோழர்களை ஆதரித்திருக்கின்றனர். பல கிராமங்களில் தங்க இடமும், உணவும் கொடுத்து தோழர்களை பராமரிக்கின்றனர். தெருமுனைக் கூட்டங்கள் நடக்கும் இடங்களில் கணிசமான நிதியுதவியும் அளிக்கின்றனர்.

அதே நேரம் மின்வெட்டு பாதிப்பு, மின்சாரத் தேவை என்ற அரசு மற்றும் ஓட்டுக் கட்சிகளின் ஓயாத பிரச்சாரத்தால் மக்களில் பலர் குருட்டாம் போக்கில் அணு உலையை ஆதரிக்கின்றனர். இது நகர்ப்புறங்களில் வெளிப்படுகிறது. தோழர்கள் இதற்கு பொருத்தமக பதில் அளித்துப் பேசும் போது ஏற்கின்றனர். காங்கிரசு, பா.ஜ.க மற்றும் போலிசார் எமது பிரச்சாரத்திற்கு சில தடைகளையும் ஏற்படுத்தியிருக்கின்றனர். இவற்றையெல்லாம் முறியடித்துத்தான் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த பிரச்சார இயக்கத்தின் மைய நிகழ்வாக வரும் பிப்ரவரி 11-ம் தேதி சனிக்கிழமை அன்று நெல்லையில் இருந்து பேரணியாகச் சென்று கூடங்குளம் அணு உலையை முற்றுகையிடுவது என்ற போராட்டம் நடக்க இருக்கிறது.

பேரணி துவங்கும் இடம்: பாளையங்கோட்டை மார்க்கெட் ஜவகர் திடல், திருநெல்வேலி.

நாள்: 11.02.2012 சனிக்கிழமை.

நேரம்: காலை 10.30

மறியல் அழைப்பிதழ் PDF வடிவில் பெற இங்கே அழுத்தவும்

இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் குறிப்பாக தென்மாவட்டங்களில் இருக்கும் வாசகர்கள், பதிவர்கள் தமது நண்பர்கள், குடும்பத்தினருடன் கலந்து கொள்ளுமாறு கோருகிறோம்.

கூடங்களும் அணு உலையை மூடக்கோரி ம.க.இ.க அமைப்புக்கள் சார்பாக வெளியிடப்பட்டிருக்கும் சிறு வெளியீடு பல ஆயிரம் பிரதிகளாக தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சார இயக்கத்தில் கலந்து கொள்ளுமாறு உங்களையும் அழைக்கிறோம். அவர்களுக்கு அரசு, ஊடகங்கள், ஓட்டுக் கட்சிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து கூடங்குளம் அணு உலையை திறக்க முயற்சிக்கும் போது நாம் மக்களை நம்பி அதை தடுக்க வேண்டியிருக்கிறது. அந்த வரலாற்றுக் கடமையாற்ற உங்களையும் உரிமையுடன் அழைக்கிறோம்.

இந்த மைய இயக்கத்தின் முழக்கங்கள்:

இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும்
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!

அணுஉலை = பல்நோய் உற்பத்திக் கூடம் + பேரழிவு ஆயுதக் கிடங்கு!

பதவிக்கும் பட்டத்திற்கும் பல்லிளித்து பொய்யும் புரட்டும் பேசி
பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
பாமர மக்களின் உயிரைக் காவு கொடுக்கும்
அணு விஞ்ஞானிகளின் உண்மை உருவத்தைத் தோலுரிப்போம்!

அணு மின்சாரத்தை விட மலிவான, ஆபத்தில்லாத,
சுற்றுச்சூழலை நாசமாக்காத காற்றாலை, கடலலை,
சூரிய ஒளி மின்நிலையங்களை அமைக்கப் போராடுவோம்!

42% கிராமங்களுக்கு மின்னிணைப்பே இல்லை!
சிறு- குறுந்தொழில்கள், விவசாயத்துக்கோ என்றைக்கும் மின்வெட்டு!
நாட்டின் மின் உற்பத்தியை விழுங்குவது
டாடா, அம்பானிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளே!
அணு மின்சாரம் அவனுக்கு, புற்றுநோய் சாவு எங்களுக்கா?

அணு உலைகளால் அறவே ஆபத்து இல்லையென்றால்
அப்புறம் எதற்கு அணுஉலை விபத்து காப்பீட்டுச் சட்டம்?

தங்கள் நாடுகளில் அணு உலைகளை மூடும்
ஏகாதிபத்திய முதலாளிகளிடம்
எட்டு இலட்சம் கோடிக்கு அணு உலை வாங்க
ஒப்பந்தம் போட்டிருக்கிறது இந்திய அரசு – இதுதான் தேசத்துரோகம்!

பன்னாட்டு முதலாளிகளின் இலாபவெறிக்கு
இந்திய மக்களை பலியிடாதே!

‘வளர்ச்சி – வேலைவாய்ப்பு – வல்லரசு’ என்று ஆசை காட்டி
தேசத்துரோக, மக்கள் விரோத சதியில் ஈடுபட்டிருக்கும்
காங்கிரசு, பா.ஜ.க. உள்ளிட்ட ஓட்டுப்பொறுக்கிகளைப் புறக்கணிப்போம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்-
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

தொடர்புக்கு:

அ.முகுந்தன் – 94448 34519 ,  வினவு – 97100 82506

மக்கள் கலை இலக்கியக் கழகம்விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி