Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 89

பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து:
பாசிசத்தை அரசியலமைப்பிற்கு உட்படுத்துங்கள்! – சந்திரசூட்

திக்கற்றவர்களுக்கு தெய்வம்தான் துணை’ என்பதுபோல, ‘நீதிமன்றங்கள்தான் பாதிக்கப்பட்ட மக்களின் கடைசி புகலிடம்’ என்று பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பிற்குப் பிறகும் சிலரால் கருதப்படுகிறது. ஆளும் அரசாங்கங்கள், அதிகாரவர்க்கம், போலீசு என அரசமைப்பின் பல்வேறு அங்கங்களும் தாங்கள் வரையறுத்துக் கொண்ட கொள்கைகளுக்கே கூட உட்படாமல், தோற்று திவாலாகி எதிர்நிலை சக்திகளாக மாறிப்போய் பெரும்பான்மை மக்களிடம் நம்பிக்கையிழந்த நிலையில், “நீதிமன்றத்திற்குச் சென்றால் நியாயம் கிடைக்கும்” என்ற ஒரு மாயையை ஆளும்வர்க்க சிந்தாந்தவாதிகள் மக்கள்மீது திணித்து வருகிறார்கள்.

ஆனால், பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியில் பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகள், பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு முதல் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு வரை, ‘நீதிமன்றங்கள் கடைசி புகலிடம்’ என்ற அந்த மாயையும் மறைந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திரசூட் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் பாசிசக் கொடுங்கோலோட்சியிலிருந்து இளைப்பாறுதல் தேடுபவர்களுக்கு ‘நம்பிக்கை நட்சத்திர’மாகக் காட்டப்பட்டார். பல்வேறு வழக்குகளில், அவர் ஒன்றிய மோடி அரசை நோக்கி எழுப்பிய கேள்விகள், அளித்த தீர்ப்புகள் ஜனநாயக சக்திகளால் பாராட்டப்பட்டன.

எனினும் நீதிபதி சந்திரசூட்டை நம்பிக்கை நட்சத்திரமாகக் கருதிக் கொண்டிருந்த யாரேனும் காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கம் தொடர்பான விசாரணையில் நேற்று (28.08.2023) அவர் கூறிய கருத்துக்களைக் கவனித்திருந்தால் நிச்சயம் வெறுப்படைந்திருப்பார்கள். அமர்வுக்கு தலைமைவகிப்பது துஷார் மேத்தாவா, சந்திரசூட்டா என்ற குழப்பமும் நிச்சயம் ஏற்பட்டிருக்கும்.

ஏனெனில், காஷ்மீர் சிறப்புச் சட்டம் நீக்கம் பற்றிய விசாரணையின் தொடக்கக் கட்டத்திலேயே, அது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்பது போன்ற கருத்துக்களை சந்திரசூட் வெளிப்படுத்துகிறார். ஒன்றிய அரசை நோக்கி அவர் எழுப்பிய மையமான கேள்வி, “சிறப்புச் சட்ட நீக்கம் தொடர்பான விவகாரம் அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு உட்பட்டுதானே நடந்துள்ளது?” என்பதுதான்.


படிக்க: காஷ்மீர் சிறப்பு உரிமை ரத்து – இரண்டு ஆண்டு நிறைவு : துளிர்விடுகிறது விடுதலை முழக்கம் !


நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வருவதால், எப்படியாவது காஷ்மீர் மக்களின் தன்னுரிமையை உத்தரவாதப்படுத்தும் 370 மற்றும் 35A சட்டப்பிரிவுகளை மீட்டுக் கொண்டுவந்துவிட முடியும் என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் பலரை, இந்தக் கேள்வி நிச்சயம் திடுக்கிடச் செய்திருக்கும்.

இச்சட்டங்கள் நீக்கப்பட்டதே “ஒரு பாசிச நடவடிக்கை” என்பதுதான் காஷ்மீரின் தன்னுரிமையை ஆதரிக்கின்ற ஜனநாயக சக்திகளின் கருத்து. கொரோனா பெருந்தொற்றின் போது தடாலடியாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கைப் போல, இது வழிமுறை தொடர்பான பிரச்சினையல்ல. ஆனால், சந்திரசூட்டோ ‘சட்டத்திற்கு உட்பட்டு நடந்துள்ளதா?’ என்று கேட்கிறார். அது எப்படிச் சரியாக இருக்கும். இதுதான் நாம் ஆராய வேண்டிய இடம்.

அதுமட்டுமல்ல, காஷ்மீர் பூர்வ குடிகளுக்கு தனிச்சிறப்பான உரிமைகளை வழங்கிவந்த 35A சட்டப் பிரிவை, “அரசியலைமைப்புச் சட்டம் அனைத்து குடிமக்களுக்கும் வழங்கக் கூடிய அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது” என்று கருத்து தெரிவித்துள்ளார் சந்திரசூட்.


படிக்க: காஷ்மீரில் தொடரும் ஒடுக்குமுறைகளும், அமித்ஷாவின் பொய்யுரைகளும் !


35A சட்டப்பிரிவு, காஷ்மீர் பூர்வகுடிகளுக்கு மாநிலத்தின் வேலைவாய்ப்புகளில் சிறப்பு இடஒதுக்கீடு வழங்குகிறது; மேலும் காஷ்மீரின் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை காஷ்மீரிகள் அல்லாதவர்களுக்கு விற்கக் கூடாது என்கிறது. காஷ்மீரின் விவசாய நிலங்களை விவசாயமல்லாத தொழிலுக்காக காஷ்மீரிகளே கூட வாங்க முடியாது. பொதுவாக அந்நியர்களுக்கு மட்டும் தடை என்பது பச்சைப் பொய். இந்த உரிமையானது இந்தியாவுக்கு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படாத காலத்திலேயே, காஷ்மீரில் மன்னராட்சிக்கு எதிராக அந்த தேசிய இன உழைக்கும் மக்கள் போராடியதால் பெறப்பட்டதாகும்.

ஆனால், காஷ்மீர் மக்களின் தன்னுரிமையை பாதுகாக்கக் கூடிய இதுபோன்ற சட்டப்பிரிவுகள், அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் மூலதன வேட்டைக்கு தடையாக இருக்கிறது என்பதுதான் பா.ஜ.க. கும்பலுக்கு இருந்த உறுத்தல். அதனால்தான், “ஐயோ இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உள்ள, இச்சட்டங்களை ஒழிக்க வேண்டும்”, “சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும்” என்று கூப்பாடு போட்டார்கள்.

இந்த நோக்கத்தில், அச்சட்டத்தை விமர்சிக்கவில்லை என்றாலும், ‘மேதகு’ சந்திரசூட்டும் அச்சட்டம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உடன்படுகிறார்.

சந்திரசூட்டின் இந்த கருத்துக்குப் பின், “ஆமாம்… இச்சட்டம் ரத்துசெய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் பல்வேறு ‘வளர்ச்சி’த் திட்டங்களை ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கிறது” என்று சுருதி சேர்க்கிறார், ஒன்றிய அரசு தரப்பு வழக்கறிஞரான துஷார் மேத்தா.

அடுத்தது, “காஷ்மீரின் சட்டமன்றத்தைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்துவதற்கு முன்பு, குடியரசுத் தலைவரை வைத்து சம்மந்தபட்ட சட்டமன்றப் பிரநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டீர்களா, அப்படிச் செய்யவில்லை எனில் அது சட்டப் பிரிவு 3க்கு எதிரானது” என்கிறார் சந்திரசூட்.

அதற்கு “இல்லை அந்த அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது”, “அது ஒரு சிறப்பு நடவடிக்கை” என்று நியாயவாதம் பேசுகிறார், துஷார் மேத்தா.

ஆக மொத்தத்தில், இந்த வழக்கு எப்படி முடித்துவைக்கப்பட இருக்கிறது என்பது, இப்போதே தெரிந்துவிட்டது. நமக்கு எழும் கேள்வி ஒன்றுதான், சந்திரசூட் ஏன் இந்த விசயத்தில் ஒன்றிய அரசுக்கு சாதகமாகச் செயல்படுகிறார்?

மக்களின் உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளாக இருக்கட்டும், பாசிசத் திட்டங்களாக இருக்கட்டும் – அதை ‘சட்டம் அனுமதிக்கும் வழிகளில் செய்யுங்கள்’, ‘சட்டத்தை மீறி எதையும் செய்ய வேண்டாம்’ என்பதில்தான் சந்திரசூட் நிற்கிறார்.

காஷ்மீர் மக்களின் தன்னுரிமையை பறிப்பது, காஷ்மீர் மக்களுக்கும் அம்மக்களின் தன்னுரிமைக் கோரிக்கையை ஆதரிக்கக் கூடிய பிற தேசிய இன உழைக்கும் மக்களுக்கும்தான் பிரச்சினை. அரசியலமைப்புச் சட்டம், இதுகுறித்தெல்லாம் கவலைப்படுதில்லை என்பதைதான், சந்திரசூட் தனது கருத்துக்களின் மூலம் வெளிப்படுத்துகிறார். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலுக்கு எதிராக, “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்” என்ற முழக்கமும் சந்திரசூட்டைப் போலத்தான் என்பது சொல்லாமலே விளங்கும்.

தனது இயல்பிலேயே சர்வாதிகாரமான போலி ஜனநாயகத்தை மீண்டும் அதன் பழைய நிலைக்குக் கொண்டுவருவதை விரும்பாமல், அனைத்து தேசிய இனங்களின் தன்னுரிமையை அங்கீகரிக்கக் கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவதே தீர்வு!


வாசு

தலித்துகள் – சிறுபான்மையினர் மீது பெருகிவரும் தாக்குதல்கள்: தீர்வு என்ன?

வ்வொரு நாளும் தலித்துகள், மத – இனச் சிறுபான்மையினர், பெண்கள் மீதான தாக்குதல்கள் காவி பாசிசக் கும்பலின் ஆசியுடன் பெருகிக் கொண்டே வருகின்றன. இதன் அண்மையச் சான்றுதான், மணிப்பூர் குக்கி பழங்குடிகள் மீதான தொடர் தாக்குதலும், குக்கி பழங்குடிப் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கூட்டுப் பாலியல் வன்முறையும்.

இது தொடர்பான காணொளி கடந்த சில தினங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் வெளியாகி நாட்டையே அதிர வைத்தது. அந்தக் காணொளியில், கிட்டத்தட்ட எழுநூறு மேய்தி இனவெறி கொண்ட ஆண்கள், இரண்டு குக்கி இனப் பெண்களை, ஆடைகள் களையப்பட்ட நிலையில் அவர்களின் அந்தரங்க உறுப்புகளை சீண்டித் துன்புறுத்திக் கொண்டே இழுத்து வருகின்றனர். வயல்வெளிகளில் வைத்து அப்பெண்களை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதோடு, இதைத் தடுக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தையையும் சகோதரனையும் சுட்டுக் கொலை செய்து விட்டனர் இனவெறியர்கள். மே நான்காம் நாள் நடந்த இந்தக் கொடூரத்தை நாடு அறிந்துகொள்ள சுமார் இரண்டு மாதங்களுக்கும் மேலாகியிருக்கிறது. காரணம், மணிப்பூரை ஆளும் பா.ஜ.க அரசு இணையத்தைத் தடை செய்து வைத்திருந்தது.

மணிப்பூர் மட்டுமின்றி நாடெங்கும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பதும், அவற்றில் சில சமூக ஊடகங்களில் வெளியாவதும், வெளியான சில நாட்களுக்கு நமது கோபத்தை வெளிப்படுத்துவதும், பிறகு அடுத்தச் சம்பவம் – அதற்குக் கண்டனம் தெரிவிப்பது என்றவாறு நாட்கள் நகர்வதுமாக ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிசக் கும்பல் நாட்டின் நிலைமையையே மாற்றி வருகிறது.

இதற்கு உதாரணமாக பின்வரும் சில சம்பவங்களைக் குறிப்பிட முடியும்.

  • ஜூலை 22 ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தின் சத்தர்ப்பூர் மாவட்டம், பிகௌரா எனும் கிராமத்தில், வடிகால் கட்டும் பணியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த அஹிர்வார் என்பவர் ஈடுபட்டிருந்தார். பணியிடத்திற்கு அருகில் குளித்துக் கொண்டிருந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ராம்கிரிபால் படேல் என்பவனை கிரீஸ் கைகளோடு அஹிர்வார் தொட்டுவிட்டார் என்பதற்காக, அஹிர்வாரின் தலையிலும் முகத்திலும் மனிதக் கழிவைக் கொட்டியுள்ளான் சாதிவெறியன் ராம்கிரிபால்.இப்பிரச்சினை குறித்து பஞ்சாயத்தில் புகார் அளித்துள்ளார் அஹிர்வார். ஆனால், ஆதிக்கச் சாதிவெறியன் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காத பஞ்சாயத்து, பாதிப்புக்குள்ளாகி புகார் தெரிவித்த அஹிர்வாருக்கு 600 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது.
  • ஜூலை 5 ஆம் தேதி, இதே மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரவேஷ் சுக்லா என்பவன் வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு, திமிரோடு பழங்குடியின இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்தான். அப்பாவியான அந்த இளைஞர் அவமானத்தில் கூனிக்குறுகி போய் உட்கார்ந்திருந்தார். இந்த நிகழ்வு நாடெங்கும் கோபாவேசத்தைத் தூண்டியது. அந்த பா.ஜ.க.காரனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன.மக்களின் கோபத்தைத் தணிக்க மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், பாதிக்கப்பட்ட இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு அவரது காலைக் கழுவியதாக ஒரு காணொளி வெளியிடப்பட்டது. ஆனால் பா.ஜ.க. முதல்வர் சவுகான், இதில் ஆள்மாற்றாட்டம் செய்து வேறொரு நபரின் கால்களைக் கழுவியது அம்பலமாகி நாடே காறி உமிழ்ந்தது.இந்நிகழ்வு நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தில், காரில் கடத்தப்பட்ட முஸ்லிம் ஒருவரை சரமாரியாக தாக்கிய இந்து மதவெறியர்கள், அவரை நிர்பந்தம் செய்து தங்களின் காலை நக்க வைத்துள்ளனர்.
  • ஜூலை 8 ஆம் தேதி, ராஜஸ்தானில் டீ அருந்த கடைக்குச் சென்ற முஸ்லிம் இளைஞர் ஒருவரை சூழ்ந்து கொண்ட இந்துமதவெறி குண்டர்கள், “ஜெய் ஸ்ரீராம்” என சொல்லச் சொல்லி ஆபாசமாகத் திட்டியுள்ளனர். அன்று தப்பித்து வந்த முஸ்லிம் இளைஞர் மீண்டும் அந்தக் கடைக்குச் சென்றபோது அதே கும்பலிடம் சிக்கிக்கொண்டார். முஸ்லிம் இளைஞரைச் சூழ்ந்த இந்துமதவெறிக் குண்டர்கள் கம்பி, கட்டை உள்ளிட்டவற்றைக் கொண்டு தாக்கியதில் அவரின் மண்டை உடைந்தது. மோசமான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
  • இதேபோல் சில நாட்களுக்கு முன்பு, உத்தரப்பிரதேசத்தில் திருட்டு வழக்கில் இந்துமதவெறிக் கும்பலால் போலீசிடம் ஒப்படைக்கப்பட்ட தன் மகன், எந்த குற்றத்திலும் ஈடுபடவில்லை, ஏன் அவனைப் பிடித்துக் கொடுத்தீர்கள் என தட்டிக்கேட்ட வயதான முஸ்லிம் ஒருவரை சூழ்ந்து, அவரை மரத்தில் கட்டிவைத்து “ஜெய் ஸ்ரீராம்” என முழங்கச் சொல்லி தாக்கி சித்திரவதை செய்தது இந்து மதவெறிக் கும்பல். வலி தாங்கமுடியாமல் அவர் படும் வேதனைகளைக் கண்டு வாய்விட்டுச் சிரித்தது அக்கும்பல்.
  • ஜூன் 1 ஆம் தேதி, மஹாராஷ்டிரத்தில் திருமண ஊர்வலம் ஒன்றில் ஆதிக்க சாதிவெறி இளைஞர்கள் கத்தி, கோடாரி, வாள்களை ஏந்தி களிவெறியாட்டமிட்டனர். ஊர்வலம் அந்தக் கிராமத்தின் பிரதான வீதியொன்றை அடைந்தபோது, அங்கு தனது தாய்க்கு உணவு வாங்க வந்த 25 வயதான தலித் இளைஞர் அக்ஷய் பலராவ், தன் சகோதரருடன் அங்கிருந்த மளிகைக்கடை ஒன்றுக்குள் சென்றார். கடைக்குள் அக்ஷய் நுழைந்தது ஊர்வலத்தில் இருந்த ஆதிக்கச்சாதி வெறியர்களின் கண்களில் பட, அந்த சகோதரர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. கத்தியால் பலமுறை குத்தப்பட்டதால் நிலைகுலைந்து கீழே விழுந்த அக்ஷய் அப்போதே இறந்துவிட்டார். ஆனால் அதன் பின்னும் வெறி தணியாத அக்கும்பல் உயிரற்ற அக்ஷயின் குரல்வளையைக் கால்களால் மிதித்து ஆபாசமாகக் கூச்சலிட்டது.அம்பேத்கர் பிறந்த நாளினை நினைவு கூர்ந்து, கிராமத்தின் பிரதான வீதியில் ஊர்வலத்தை நடத்த அக்ஷய் திட்டமிட்டதே, இந்த ஆதிக்கசாதியினரின் வெறிச் செயலுக்குக் காரணம்.

படிக்க: ஆதிக்கசாதி வெறியர்களின் கொட்டத்தை அடக்குவோம்!


மேற்சொன்ன இந்த நிகழ்வுகள் எல்லாம் ஊடகங்களில் வெளியானவை மட்டுமே. ஆனால், தலித்துகளுக்கும், மத – இனச் சிறுபான்மையின மக்களுக்கும் இந்நிலை அன்றாட வாழ்க்கையாக இருக்கிறது. எப்படியாவது இந்த சாதி – மதவெறி பிடித்த கும்பல்களின் கண்களில் படாமல் அன்றைய நாளைக் கடத்திவிட வேண்டும் என்பதே வாழ்க்கையா? இவர்களின் பகல்கள் கூட எத்துணை அச்சுறுத்தக் கூடியதாக இருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.

இதுபோன்று பயங்கரமான சம்பவங்கள் நாள்தோறும் ஏராளமாக நடந்து கொண்டேதான் இருக்கின்றன. இவற்றில் வெளியுலகின் கவனத்தில் வரக்கூடிய சில விஷயங்களுக்கு மட்டுமே சமூக வலைதளங்களில் குரல் கொடுக்கப்பட்டு வருகிறது. அதைவிடப் பெரியதொரு சம்பவம் வெளியே தெரிய வரும்போது முன்பிருந்த விஷயம் மறக்கடிக்கப்பட்டு புதிய சம்பவம் பேசுபொருளாக மாறுகிறது.

இதுபோன்று ஒவ்வொரு நாளும் நாம் என்ன பேச வேண்டும் என்பதையும், ஒடுக்கப்பட்ட – சிறுபான்மை மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதையும் தீர்மானிப்பதே பாசிசக் கும்பலின் நிகழ்ச்சி நிரலாக இருந்து வருகிறது. ஆசிஃபா என்ற குழந்தை ஒரு வாரத்திற்கும் மேலாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டபோது நாடே கொதித்தெழுந்தது. ஆனால், அதன்பிறகும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறையவில்லை; மாறாக, ஹத்ராஸ், உன்னாவ், மணிப்பூர் என அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இப்போது நாடெங்கும் சாதி – மதவெறியர்களால் நிகழ்த்தப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், தலித்துகள், முஸ்லிம்கள், இதர சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல. காவி பாசிஸ்டுகள் அமைக்க விரும்பும் இந்துராஷ்டிரத்தில் அன்றாடம் நிகழப்போகும் சம்பவங்களின் முன்னோட்டம்தான்.

பாசிசக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது?

பா.ஜ.க.வின் பாசிசப் போக்கை எதிர்ப்பதற்காக ஒன்றிணைந்து நிற்பதாகக் கூறும் எதிர்க்கட்சிகள் இவற்றிற்கெல்லாம் ஆற்றும் எதிர்வினை என்ன? “மோடி ஏன் மணிப்பூருக்கு வரவில்லை”, “மணிப்பூர் குறித்து ஏன் இன்னும் பேசவில்லை?” என்று கேள்வியெழுப்பிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறு கேள்வி எழுப்புவதில் தவறில்லை, ஆனால் மோடி வாயைத் திறந்துவிட்டால் இதற்கெல்லாம் முடிவு வந்துவிடும் என்று நாம் கருதமுடியுமா? இந்தக் கொலைவெறித் தாக்குதல்களின் ஆணிவேரே மோடியை முன்னிறுத்தும் பாசிசக் கும்பல்தான் என்பது இவர்களுக்கெல்லாம் தெரியாதா?

அதிகாரவர்க்கத்தின் துணை இல்லாமல்தான் இவை நடக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறார்களா? மணிப்பூரில் இரண்டு பழங்குடிப் பெண்களையும் மேய்தி இனவெறி கும்பலிடம் ஒப்படைத்ததே மணிப்பூர் போலீசுதானே? நீதிமன்றம், போலீசு, இராணுவம், அதிகார அமைப்புகள் என்று அரசுக் கட்டமைப்பு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அடியாட்கள் ஊடுருவி இருக்கின்றனரே, இவர்களை என்ன செய்வது? இதை மாற்றுவதற்கு எதிர்க்கட்சிகளிடம் என்ன மாற்றுத் திட்டம் இருக்கிறது?

இவற்றிற்கெல்லாம் தீர்வாக எதிர்க்கட்சிகள் முன்வைப்பது ஒரே விசயம்தான். அது, 2024-தேர்தலில் பி.ஜே.பி.யை, மோடியை வீழ்த்திவிட்டால் இதற்கெல்லாம் விடிவு வந்துவிடும் என்பதுதான். ஆளும்வர்க்கக் கட்சிகள் வெறும் பி.ஜே.பி எதிர்ப்பு என்ற நிலையிலிருந்து இவ்வாறு பேசுவது அவர்களது வரம்பு. ஆனால் பாசிச எதிர்ப்பாளர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இதை அப்படியே உழைக்கும் மக்களுக்கும் கடத்துவதுதான் ஆபத்தானது. இதற்குக் காரணம், அவர்களது அரசியல் பாமரத்தனமல்ல, தமது சந்தர்ப்பவாதத்தை, சரணாகதிப் பாதையை அவர்கள் மூடிமறைத்துக் கொள்கிறார்கள். காவி பாசிசத்தை, கார்ப்பரேட் சுரண்டலை முறியடிக்க இவர்களிடம் எந்த மாற்றுத் திட்டமும் இல்லை. அவற்றை முன்வைக்கும் விருப்பமும் இல்லை.


படிக்க: ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி


பாசிசக் கும்பல் உழைக்கும் மக்கள்மீது மேற்கொண்டுவரும் அத்தனை அநீதிகளையும், அதற்கெதிரான மக்களின் கோபாவேசத்தையும் பாசிச எதிர்ப்பு என்ற பெயரால் ஆளும்வர்க்கக் கட்சிகளின் ஓட்டுவங்கியாக மாற்றுவதே அவர்களது திருப்பணி!

காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராகத் தனித்தனியான தீர்வுகள் இல்லை. இந்தக் கட்டமைப்பு முழுவதுமே தலித்துகளுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிராகத்தான் செயல்படுகிறது. இதனை தூக்கியெறிந்துவிட்டு சாதிவெறி, மதவெறி, இனவெறியை முன்வைத்துச் செயல்படுகின்ற அமைப்புகளை தடைசெய்யும் வகையிலான ஜனநாயகக் கட்டமைப்புக்காக – பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவது மட்டுமே தீர்வு! இந்த மாற்றை உரக்க ஒலிப்பதும், மக்களை திரட்டுவதுமே புரட்சிகர சக்திகளின் தலையாய பணி.


வெண்பா

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

அக்கலாம்பட்டி: சுடுகாடு இல்லாமல் ஒடுக்கப்படும் அருந்ததிய மக்கள்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட கிராமப்பகுதி அக்கலாம்பட்டி. இப்பகுதியில் ஆதிக்கசாதியினரான கவுண்டர்களும், பட்டியலின அருந்ததியர் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். கவுண்டர்களைப் பொறுத்தவரை நிலவுடமையாளர்களாக, குறிப்பாக பெரும்பாலும் 10 ஏக்கருக்கு மேல் நிலம் கொண்ட விவசாயிகளாக இருக்கின்றனர். அருந்ததியர் சமூக மக்களோ இவர்களைச் சார்ந்து விவசாயக் கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் பண்ணையடிமைகளாக வேலை பார்த்து வந்த நிலைமாறி அன்றாட விவசாயக் கூலிக்கும், நாமகிரிப்பேட்டையில் உள்ள ஜவ்வரிசி மில்களுக்கும் சென்று வேலை பார்த்து வருகின்றனர்.

நிலவிற்கு சந்திரயான் விண்கலம் அனுப்பியதாக பெருமை பீற்றிக் கொண்டிருக்கும் இந்நாட்டில்தான் அக்கலாம்பட்டி தாழ்த்தப்பட்ட அருந்ததிய மக்களுக்கு பிணத்தைப் புதைப்பதற்கு சுடுகாடு இல்லை. ஆதிக்க சாதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் மயானப் பகுதியை ஆக்கிரமித்து அதை சட்டவிரோதமாக விவசாய நிலமாகப் பயன்படுத்தி வருகிறார். இதனால் ரோட்டின் ஓரம் ஒதுக்குப்புறமாக பத்துக்குப் பத்து இடத்தில்தான் இறந்தவர்களைப் புதைக்கின்ற அவலநிலை பல பத்தாண்டுகளாக தொடர்கிறது.

அதாவது, கவுண்டர் சாதியைச் சார்ந்த சரவணன் என்பவரின் நிலத்திற்கு அருகில் அரசு புறம்போக்கு நிலம் 17 சென்ட் உள்ளது. இந்நிலத்தைத்தான் சரவணன் ஆக்கிரமித்து அதில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலம்தான் அருந்ததிய மக்களின் மயானத்திற்குரிய பகுதியாகும். 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்த இடத்தில் அரசு மயானம் அமைக்க முயற்சி எடுத்தபோது அதை ஆதிக்க சாதி கவுண்டர்களும், அவர்களுக்கு துணையாக அதிமுக கட்சியைச் சார்ந்தவர்களும் சேர்ந்து மயானம் அமைப்பதை தடுத்து நிறுத்தியுள்ளனர். அதே சமயத்தில் இந்த புறம்போக்கு நிலப்பகுதியில் அருந்ததிய மக்கள் இறந்தவரின் பிணத்தை அடக்கம் செய்ய முயற்சித்த போது அதை தடுத்து நிறுத்தியுள்ளார் சரவணனின் தந்தை கருப்பண்ணன். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்களையே குற்றவாளியாக்கி அவர்களிடம் தண்டத்தொகை (குத்தம்) பெற்றுள்ளனர் ஆதிக்க சாதியினர்.


படிக்க: மதுரை: திருமோகூர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதல் | நேரடி ரிப்போர்ட்


இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கவுண்டர் சாதியினர் மொத்தமாக ஒன்று சேர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மயானம் கிடைக்க விடமாட்டோம் என்று சவால் விட்டுள்ளனர். அப்பகுதி கவுண்டர் சாதியினர் பெரும்பாலும் அதிமுக-வில் பொறுப்புகளில் இருந்துள்ளதால் அதிமுக ஆட்சி முழுவதும் கவுண்டர் சாதியினருக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளனர். இதனால் தாழ்த்தப்பட்ட அருந்ததிய மக்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மறியல் உள்ளிட்டு பல போராட்டங்களை பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்கள் நடத்தி வந்துள்ளனர்.  போராட்டத்தின் நிர்ப்பந்தம் காரணமாக சமூக நலத்துறையில் இருந்து அதிகாரிகள் வந்து பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து ஆதிக்கசாதி நபரான சரவணனின் நிலத்தில் இருந்து புறம்போக்கு நிலம் 17 சென்ட் அல்லாமல் மேலும் 33 சென்ட்-ஐ எடுத்துக் கொள்ள அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சரவணனின் தந்தை வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அருந்ததிய மக்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு சென்றுள்ளார் சரவணன். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சர்வையர் இந்த புறம்போக்கு நிலத்தை அளக்க வந்தபோது தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதாகக் கூறி சர்வையரை திருப்பி அனுப்பியுள்ளார் சரவணன்.

இந்த தீர்ப்பு தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட்டாட்சியர் அனுப்பிய குறிப்பாணையில் ஆக்கிரமிக்கப்பட்ட மயானப்பகுதிக்கான சர்வே எண் 102/1F1 என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தீர்ப்பில் சர்வே எண் 113/4 என வேறொன்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குளறுபடி உள்ளதை தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

இன்னொரு பக்கம் 1991-இல் மயானத்துக்கு ஒதுக்கப்பட வேண்டிய நிலத்துக்கு சதுர முட்டு (அரசின் உத்தரவின் பேரில் நிலத்தை அளந்து குறிப்பிட்ட நிலப்பகுதியை சுற்றிலும் கற்களை நட்டு வைத்து விடுவது) அடித்த பின்பும், அதையும் மீறி சட்டவிரோதமாக அந்நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளார் சரவணன். அதற்கு பின்பு வந்த ராசிபுரம் தாசில்தார்கள் பலரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


படிக்க: நெல்லையில் தொடரும் சாதிய படுகொலைகள்!


குறிப்பாக சமூக நலத்துறையைச் சார்ந்த வருவாய் அலுவலரான பாலசுப்பிரமணி (இவர் ஓய்வு பெற்றுவிட்டார்) என்பவர்தான் ஆதிக்கசாதியினருக்கு மிகவும் சாதகமாக இருந்து வேலை செய்தார் என்றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் போதே ஊருக்கு அருகில் இருக்கும் ஏரியில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் 85 சென்ட்-இல் இருந்து மயானத்துக்கு இடம் ஒதுக்க கோரியுள்ளனர் பாதிக்கப்பட்ட மக்கள். இதையும் கவுண்டர் சாதியைச் சார்ந்த 3 குடும்பத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள காரணத்தால் அங்கேயும் மயானத்துக்கான இடத்தை எடுக்க முடியாமல் போயுள்ளது. இதிலும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் ஆதிக்கசாதியினருக்கு சாதகமாகவே செயல்பட்டுள்ளனர்.

சமூக நலத்துறை, கலெக்டர் அலுவலகம், முன்சீப், இம்மாவட்டத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை திமுக எம்பி இராஜேஷ்குமார் என அனைவரிடமும் மனு கொடுத்து போராட்டங்களை முன்னெடுத்த பிறகும் கூட மயான உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டுள்ளது.

சுடுகாடு மட்டுமல்ல, மக்கள் குடியிருப்பதற்கான இடத்தையும் பெறுவதற்கு இப்பகுதி ஆதிக்கசாதியினர் தடையாக இருந்து வந்துள்ளனர். அருந்ததிய மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் வீடுகள் கட்டிக் கொள்வதற்காக அரசால் புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தை ஆதிக்கசாதியைச் சேர்ந்த நபர் தனது நிலம் என்று ஏமாற்றி அருந்ததிய மக்களிடமே அதிகாரிகளின் துணையோடு ஏமாற்றி விற்றுள்ளார். அதிகாரிகள் ஆதிக்கசாதியினருக்கு சாதகமாக நடந்து கொண்டு செயல்பட்டதே தங்களுக்கான உரிமை கிடைக்கப் பெறாததற்கு முதன்மைக் காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.

சுடுகாடு மட்டுமல்ல, அக்கலாம்பட்டி பகுதி  அருந்ததிய மக்களுக்கு வீட்டுமனை, குடிநீர் என எந்த அடிப்படை வசதியையும் முறையாக செய்து கொடுக்காமல் அரசு புறக்கணித்து வரும் அவலம் நீடிக்கிறது.

எந்த ஒரு பிரச்சினையிலும் எக்காலத்திலும் அதிகார வர்க்கம் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக துணை நின்றதில்லை என்பதே வரலாறு. இடைவிடாத போராட்டங்களின் மூலமாகத்தான் தங்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளைக் கூட தாழ்த்தப்பட்ட மக்களால் பெற முடிகிறது. குறிப்பாக கொங்கு மண்டலப் பகுதியில் வாழும் அருந்ததிய மக்களின் நிலை மிக மோசமானதாகவே இருக்கிறது.

பார்ப்பனிய சாதி ஏற்றத்தாழ்வைப் பாதுகாக்கும் அதிகார வர்க்கத்திடமிருந்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளும், சுயமரியாதையும் எப்படிக் கிடைக்கும்?

எக்காலத்திலும் தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறி விடக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களுக்கான உரிமையை ஆதிக்கசாதியினரும், அதிகாரிகளும் மறுத்து வருகின்றனர். ஆனாலும் தங்களின் உரிமையைப் பெறும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும் உறுதியாகக் கூறுகின்றனர் அக்கலாம்பட்டி கிராம அருந்ததிய மக்கள். அவர்களுக்கு துணை நிற்க வேண்டியது ஜனநாயகத்தை விரும்புவோர் அனைவரின் கடமையாகும்.


வினவு செய்தியாளர்

பொது சிவில் சட்டம், அறிவிப்பு: இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமா? புஸ்வானமா?

ன்றிய சட்ட ஆணையம் இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் என அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் என்று கடந்த ஜூன் 14 அன்று அறிவித்தது. இந்த அறிவிப்பை காவிக் கும்பல் மற்றும் அவர்களின் சில அடிமைகளைத் தவிர பல்வேறு கட்சியினரும், இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 27-ல் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடந்த பொதுக்கூட்டத்தில், “ஒரு குடும்பத்தில் ஒரு உறுப்பினருக்கு ஒரு சட்டம், இன்னொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டம் என்று இருவேறு விதிமுறைகளின் கீழ் இருந்தால் அந்த குடும்பம் முறையாகச் செயல்பட முடியுமா? அதேபோல, ஒரு நாடு எப்படி வெவ்வேறுவிதமான சட்டங்களின் கீழ் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்ல முடியும்? நாட்டு மக்கள் அனைவரும் சமம் என அரசியல் சாசனம் கூறுவதால், நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம். ஆனால் பொது சிவில் சட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தவறான கருத்துக்களைப் பரப்பி, மக்களைத் தூண்டிவிடுகின்றனர்” என்று பேசினார் பிரதமர் மோடி.

மோடியின் இந்தப் பேச்சுக்கும் பொது சிவில் சட்டத்திற்கும் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, சீக்கியர்கள், பழங்குடிகள், கிறித்தவர்கள் மற்றும் இந்துக்களின் பல்வேறு பிரிவினரும்கூட பொது சிவில் சட்டத்தை எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக, பா.ஜ.க.வின் சில கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் கூட எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மேகாலயா முதல்வரும், பா.ஜ.க கூட்டணியில் அங்கம்வகிக்கும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா, “வடகிழக்கு ஒரு தனித்துவமான கலாச்சாரம் மற்றும் சமூக அமைப்பைக் கொண்டது. நாங்கள் அப்படியே இருக்க விரும்புகிறோம். உதாரணமாக நாங்கள் தாய்வழிச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதுவே எங்களுக்கான பலமாகவும் கலாச்சாரமாகவும் இருந்து வருகிறது. தற்போது அதனை மாற்ற முடியாது. பன்முகத் தன்மையே நமது கலாச்சாரம்; அதுவே நமது பலம். தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் இந்தியச் சிந்தனைக்கு எதிரானது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.


படிக்க: பொது சிவில் சட்டம் : பாசிஸ்டுகளின் அடுத்தக்கட்ட அரசியல் ஆயுதம் !


மேகாலயா மட்டுமின்றி, மிசோரம் மற்றும் நாகாலாந்தும் கூட இச்சட்டத்தை எதிர்க்கின்றன. நாகாலாந்தில், ஆளும் பா.ஜ.க கூட்டணியில் உள்ள தேசிய ஜனநாயக முன்னேற்றக் கட்சித் தலைவரான சிங்வாங் கோன்யாக், “நாங்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக் கொள்ளமாட்டோம். நாகாலாந்தைப் பொறுத்தவரை, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 371 (அ)-வால் நாங்கள் பாதுகாக்கப்படுகிறோம். ஒருவேளை, நாடாளுமன்றத்தில் நிறைவேறினாலும், நாகாலாந்து சட்டமன்றத்தில் அமலாக அனுமதிக்கமாட்டோம்” என்று இந்தியா டுடே பத்திரிகைக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

ஏனெனில், ஒன்றிய அரசு அமல்படுத்தும் எந்தச் சட்டங்களும் நாகாலாந்து, மிசோரம் போன்ற மாநிலச் சட்டமன்றங்களில் விவாதிக்கப்பட்ட பிறகே அமலாகும். ஏற்கனவே பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நாகாலாந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொது சிவில் சட்டத்திலிருந்து கிறித்தவர்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் விலக்களிக்க வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நெய்பியூ ரியோ, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறார். கிறித்தவர்களுக்கும், சில பகுதி பழங்குடியினருக்கும் பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்களிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தன்னிடம் உறுதியளித்திருப்பதாக தெரிவித்துள்ளார் நாகாலாந்து அமைச்சர் கே.ஜி.கென்யே.

பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்ற கட்சிகளை, “வாக்கு பசிக்காக இஸ்லாமியர்களை எதிர்க்கட்சிகள் தூண்டிவிடுகின்றன” என்று இழிவுபடுத்துகிறார் மோடி. ஆனால், உண்மை என்ன? நாடு முழுவதற்கும், அனைத்து தரப்பினருக்கும் பொது சிவில் சட்டம் என்று பேசினாலும், கிறித்தவர்கள், பழங்குடிகள், சீக்கியர்கள் அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பஞ்சாபில் எதிர்ப்பை சந்திக்க நேரும் என்பதற்காகவே இந்த பிரிவு மக்களுக்கு பொது சிவில் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க முடிவு செய்திருக்கிறது மோடி-அமித்ஷா கும்பல். இந்த முடிவானது, அவர்கள் கொண்டுவரத் துடிக்கிற “பொது” சிவில் சட்டத்தின் சொல்லிக் கொள்ளப்படும் நியாயவாதத்தையே கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது.


படிக்க: பொது இந்துச் சட்டமே இல்லை பிறகு எதற்கு பொது சிவில் சட்டம் ?


பொது சிவில் சட்டத்தை நாடு முழுக்க அமல்படுத்த முடியாது என்று அம்பலமாகியுள்ள இந்த உண்மையைத்தான், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பல்பீர் சிங் சௌகான் தலைமையிலான 21-வது சட்ட ஆணையம் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தது. கடந்த 2018-ஆம் ஆண்டில், குடும்பச் சட்டங்கள் சீர்திருத்தம் என்ற பெயரில் பொது சிவில் சட்டம் குறித்து கருத்துக் கேட்டது, அன்றைய சட்ட ஆணையம். அது குறித்த, ஆலோசனைகளைக் கட்டுரையாகவும் வெளியிட்டிருந்தது.

அதில், “இந்தக் காலகட்டத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியாது அல்லது விரும்பத்தக்கதும் அல்ல. மேலும் வேறுபாடுகள் இருப்பது பாகுபாட்டைக் குறிப்பதல்ல, ஆனால் அது ஒரு வலுவான ஜனநாயகத்தைக் குறிக்கிறது. கலாச்சார ரீதியாக வேறுபட்ட மக்களின் வேறுபாடுகளை பொதுவான சட்டத்தின் மூலம் அங்கீகரிப்பது என்பதை பெரும்பாலான நாடுகள் முன்னெடுக்கின்றன, இது பலவீனமான மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினருக்கு அநீதியாக இருக்கும்” என்று தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தது.

ஒரு இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி!

நாடு முழுவதிலும் எழுந்து வரும் எதிர்ப்புகள், கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்புகள் காரணமாக, காஷ்மீரின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கியது போலவோ அல்லது குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது போலவோ, பொது சிவில் சட்டத்தை தடாலடியாக நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது காவி பாசிசக் கும்பல்.

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது பாசிசக் கும்பல் தான் நிகழ்ச்சிநிரலில் வைத்திருக்கும் திட்டம்தான் என்றாலும், பா.ஜ.க. கும்பல் தோல்விமுகம் அடைந்திருக்கும் இன்றைய அரசியல் சூழலில் பெரும்பான்மை மக்களிடம் ஆதரவு இல்லாத நிலையிலும் இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி ஒன்றுக்காகவே பொது சிவில் சட்டத்தை இப்போது விவாதப் பொருளுக்கு கொண்டுவந்திருக்கிறது பாசிசக் கும்பல்.

அதனால்தான், பொது சிவில் சட்டம் என்று தாங்கள் என்ன கொண்டுவரப் போகிறோம் என்பதை வெளிப்படையாக வரைவறிக்கையாக மக்கள் முன் வைக்காமலேயே சட்ட ஆணையத்தை தனது கைப்பாவையாக்கிக் கொண்டு பொத்தாம் பொதுவாக கருத்து கேட்கிறது பா.ஜ.க. அரசு. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 44 மற்றும் ஷா பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த வழிகாட்டுதல்களை எடுத்துக்காட்டி, “இஸ்லாமியப் பெண்களுக்கு சமத்துவம் வேண்டும்”, “நீதி வேண்டும்”, அதற்காகத்தான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறது இக்கும்பல்.

“நான்கு பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிற சிலர் இந்தியாவில் இருக்கிறார்கள். அது அவர்களின் எண்ணம். ஆனால் நான் சொல்கிறேன், இனி அவர்கள் நான்கு திருமணம் செய்துகொள்ள முடியாது. அந்த நாள் முடியப்போகிறது. அத்தகைய நாள் வெகுதொலைவில் இல்லை. இந்தியாவில் பொது சிவில் சட்டம் வரப்போகிறது. இந்தியாவை உண்மையான மதச்சார்பற்ற நாடாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க காவி பாசிஸ்டுகளின் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம் பொதுவில் நாடுதழுவிய அளவில் எதிர்க்கப்பட்டாலும், காவிக் கும்பல் செல்வாக்காக உள்ள உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற பசு வளைய மாநிலங்களில் இந்த இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரம் வாக்கு வங்கியை உத்திரவாதப்படுத்தும். இக்காரணத்திற்காகவே தற்போது இதை விவாதப் பொருளாக்கியுள்ளது காவிக் கும்பல்.

ஆக மொத்தத்தில், இந்துராஷ்டிர நிகழ்ச்சிநிரலில் இருக்கும், ஒரே நாடு, ஒரே கலாச்சாரத்தைத் திணிக்கும் பொது சிவில் சட்டமானது தற்போது இந்துத்துவத்தின் பிரம்மாஸ்திரமாக நம் முன் பாய்ந்து அச்சுறுத்தவில்லை. அது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக கையிலெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமிய எதிர்ப்புப் பூச்சாண்டி, வெற்று புஸ்வானம்!


அப்பு

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

கார்ப்பரேட்டுகளுக்காக இணைந்த திமுக – ஆர்.என்.ரவி | தோழர் மருது

நில ஒருங்கிணைப்பு சட்டத்திற்கு ஆர்.என்.ரவி ஒப்புதல் | ஈஷா அறக்கட்டளை – சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

முசாஃபர்நகர் முஸ்லீம் மாணவர் மீதான தாக்குதல்: பாசிசம் வேரூன்றியிருப்பதன் சமிக்ஞை

0

த்தரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் நகரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள குப்பாபூர் (Kubbapur) கிராமத்தில் நேஹா பப்ளிக் பள்ளி (Neha Public School) அமைந்துள்ளது. இப்பள்ளியில் இந்து மற்றும் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நேற்று (ஆகஸ்ட் 25) இப்பள்ளியைச் சேர்ந்த 7 வயது முஸ்லீம் மாணவர் ஒருவரை கன்னத்தில் அறையுமாறு ஆசிரியர் திரிப்தா தியாகி (Tripta Tyagi) மாணவர்களுக்கு உத்தரவிட்ட கொடூரமான காணொளி ஒன்று வெளியானது. அது காண்போர் அனைவரின் நெஞ்சையும் பதைபதைக்க வைத்தது. ஆகஸ்ட் 24 அன்று இந்த சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் கூறியதிலிருந்து அறிய முடிகிறது.

40 விநாடிகள் ஓடும் அந்த காணொளியில், அழுதுகொண்டு நிற்கும் அந்த மாணவரை மற்ற மாணவர்கள் பலர் அரைகின்றனர். ஒருகட்டத்தில் அம்மாணவரைக் கடுமையாக அடிக்காததற்காக ஆசிரியர் அடித்துவிட்டுச் சென்ற மாணவர் ஒருவரைத் திட்டுகிறார்.


படிக்க: முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்


”அனைத்து முஸ்லீம் மாணவர்களும் வெளியேற வேண்டும் என்று நான் ஏற்கெனவே கூறியுள்ளேன்” என்று ஆசிரியர் திரிப்தா தியாகி கூறுவதை அந்தக் காணொளியில் கேட்க முடிகிறது.

”நீங்கள் சொல்வது சரிதான்; கல்வியே பாழடைகிறது” என்று ஒரு ஆண் குரல் பின்னணியில் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவர் அந்த ஆசிரியரின் நடவடிக்கைக்கு உடந்தையாக இருப்பதைக் காண முடிகிறது.

இதுகுறித்து அவரது தாய் ரூபினா கூறுகையில், “நேற்று எனது மகன் அழுது கொண்டே வீட்டுக்கு வந்தான். நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வீட்டுப்பாடம் முடிக்காததற்காக ஆசிரியர் அவனைத் தண்டித்திருக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அந்தக் காணொளியைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தோம். குழந்தைகளை இப்படியா நடத்துவார்கள்?” என்றார்.

அவரது தந்தை முகமது இர்ஷாத் ”என் மகன் பாடங்களை மனப்பாடம் செய்யவில்லை என்று கூறி ஆசிரியர் தனது செயல்களை நியாயப்படுத்துகிறார். என் மகன் படிப்பில் கெட்டிக்காரன். டியூஷன் கூடச் செல்கிறான். ஆசிரியர் ஏன் அவரை இப்படி நடத்தினார் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆசிரியர் வெறுப்பு நிறைந்தவராக இருக்கிறார்” என்று கூறினார்.

நாட்டில் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்பின் விளைவாகத் தான் தனது மகன் மோசமாக நடத்தப்பட்டதாக இர்ஷாத் கூறினார். இர்ஷாத்தின் கூற்று முற்றிலும் சரியானது என்பதை இக்காணொளியில் உள்ள ஆசிரியரின் கருத்துகள் நமக்கு உணர்த்துகின்றன.

சில நாட்களுக்கு முன்பு, இர்ஷாத்தின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவரையும் இதேபோல் இந்த ஆசிரியர் நடத்தியுள்ளார் என்பதைத் தற்போது அறிந்துகொள்ள முடிகிறது. இவ்வாசிரியரைக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று தற்போது அனைவரும் கோரிவருகின்றனர்.


படிக்க: முசாஃபர் நகர் கலவர குற்றவாளிகள் அனைவரும் விடுதலை !


மாணவரின் தந்தை இர்ஷாத், ”இனி ஒருபோதும் தனது மாணவர்களை மோசமாக நடத்தப் போவதில்லை என்று அந்த ஆசிரியர் கூறியுள்ளார். ஆனால் இத்தகைய சூழலில் எனது மகன் கல்வி கற்று வளர்வதை நான் விரும்பவில்லை. அவனை நாங்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்போகிறோம்” என்று கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மக்கள்தொகையில் 20 சதவிகிதத்தினர் முஸ்லீம்கள். காவி பயங்கரவாதம் தலைவிரித்தாடும் அம்மாநிலத்தில் மாணவரிடையே மத நல்லிணக்கத்தைப் போதிப்பதே ஒரு ஆசிரியரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். ஆனால் இந்த ஆசிரியரோ மதவெறியை உமிழக் கற்றுக்கொடுக்கிறார்.

இந்துத்துவ சித்தாந்தத்திற்கு ஆட்பட்ட ஒருவரால் முஸ்லீம் மாணவர்களை எப்படி சமமாக நடத்த முடியும். அவர் மாணவர்களுக்கு எதைக் கற்றுக்கொடுப்பார்? முஸ்லீம்களை கும்பல் படுகொலை செய்வதைத்தான் கற்றுக்கொடுப்பார்.

சமூகத்தில் பகைமையையும் வெறுப்பையும் இயல்பாகக் கருதும் ஒரு தலைமுறை வளர்ந்து வருகிறது. நாம் பாசிசமயமாகி வரும் ஒரு சமூகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம் என்பதை இந்தக் காணொளி நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

பாசிசத்தை நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்க விட்டால், இந்த ஆசிரியரைப் போல இன்னும் பலர் தோன்றுவார்கள். பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சிறுபான்மை முஸ்லீம் மக்களைத் தொடர்ந்து எதிர்மறை வெளிச்சத்தில் வைத்திருப்பதன் மூலம் மத முனைவாக்கத்தை கூர்மைப்படுத்த முயல்கிறது; தனக்கான அடித்தளத்தை பெரிதாக்கிக்கொள்ளப் பார்க்கிறது. இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலை சமூகத்தில் இருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்.


பொம்மி

ஆளுநர் ரவி ஒரு குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன்

ஆளுநர் ரவி ஒரு குற்றவாளி! | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சந்திராயன் 3 ஏவப்பட்டதற்கு பின் இருக்கும் அரசியல் என்ன? | தோழர் சிவா

சந்திராயன் 3 ஏவப்பட்டதற்கு பின் இருக்கும் அரசியல் என்ன? | தோழர் சிவா

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

வனம், கனிமப் பாதுகாப்பு சட்டத் திருத்தங்கள்: கார்ப்பரேட் கொள்ளையின் முகமூடி!

ங்களது காடுகள், வாழ்வாதாரம் பறிக்கப்படும் நிலைமைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் மணிப்பூர் குக்கி பழங்குடிகள். அம்மக்கள் மீது காவி பாசிசக் கும்பல் ஆசியுடன் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரி வருகிறார்கள். மோடி அரசு இது குறித்து விவாதிக்க மறுத்து நாடாளுமன்றத்தை முடக்கி வந்த அதே நேரத்தில்தான், மணிப்பூர் பழங்குடிகளின் அச்சத்தை உண்மையாக்கும் வகையில், காடுகளை அழித்து பழங்குடிகளை விரட்டும் “வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா – 2023” என்ற நாசகர சட்டத் திருத்தத்தை ஜூலை 26 அன்று மக்களவையில் நிறைவேற்றியிருக்கிறது. வனம், பழங்குடிகள் மற்றும் கனிம வளங்கள் தொடர்பாக கடந்த ஓராண்டில் மோடி அரசு செய்திருக்கும் மூன்றாவது சட்டத் திருத்தம் இது.

வழக்கம் போல குறுக்கு வழி!

கடந்த மார்ச் மாதம் வனப் பாதுகாப்பு சட்டம் 1980-ல் சில திருத்தங்களை மேற்கொண்டு வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2023-ஐ மக்களவையில் தாக்கல் செய்தது, மோடி அரசு. எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக மசோதாவை நிறைவேற்ற முடியாமல், பரிசீலித்து கருத்துகளைக் கூறுவதற்காக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களை, அந்தந்தத் துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் பரிசீலித்து கருத்துகளைக் கூறுவதுதான், சட்டப்பூர்வமான வழிமுறை. அதன்படி, இந்த மசோதா அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் வனம் சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கே அனுப்பப்பட்டிருக்க வேண்டும்; அந்தக் குழுதான் மக்களிடம் கருத்துகளைக் கேட்டு மசோதா மீதான பரிந்துரைகளை வழங்க வேண்டும்.

இந்த நிலைக்குழுவுக்கு காங்கிரஸ் கட்சியை சார்ந்த ஜெய்ராம் ரமேஷ் தலைவராக இருப்பதால், மசோதாவை சட்ட விதிகளுக்குப் புறம்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு அனுப்பியுள்ளது ஒன்றிய அரசு. நாடாளுமன்றக் கூட்டுக்குழுவானது பா.ஜ.க.வைச் சார்ந்த ராஜேந்திர அகர்வால் தலைமையில் பா.ஜ.க எம்.பிக்களை பெரும்பான்மை உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. அக்குழுவோ, பிற அரசியல் கட்சிகள், அமைப்புகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் ஆகியோர் மசோதா மீது தெரிவித்த கருத்துகளையும் எதிர்ப்புகளையும் முற்றிலும் நிராகரித்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பரிந்துரை செய்தது.

ஜூலை 26 அன்று, இம்மசோதா மக்களவையில் பெயரளவிலான சொற்ப நேர விவாதத்திற்குப் பின் குரல் வாக்கெடுப்பு மூலம் தடாலடியாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நடப்பிலிருக்கும் சட்ட முறைகளை மீறி இவ்வளவு அயோக்கியத்தனமாக நிறைவேற்ற வேண்டிய தேவை என்ன? இச்சட்டத்திருத்தத்தில் மோடி அரசு இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன்?

வனப் பாதுகாப்பல்ல, வன அழிப்பு!

2030 ஆம் ஆண்டிற்குள் தற்போது இருப்பதை விட கூடுதலாக 2.5 முதல் 3 பில்லியன் டன்கள் அளவுக்கு கார்பன் உமிழ்வைக் கட்டுப்படுத்தும் இலக்கை நிறைவேற்றவும், நாட்டின் நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்காக காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் சட்டத்தின் எல்லைகளை விரிவுபடுத்தி திருத்தங்களை மேற்கொள்வதாக இத்திருத்தத்தின் முன்னுரையில் கூறுகிறது மோடி அரசு.

அதாவது கேழ்வரகில் நெய் வடிகிறதாம், நம்புபவர்கள் வழித்துக் கொள்ளலாமாம்!

மோடி அரசின் இந்தக் கூற்று எந்த அளவுக்கு மோசடியானது என்பதை, வனப் பாதுகாப்பு சட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள திருத்தங்களே அம்பலப்படுத்துகின்றன. வனத்தைப் பாதுகாக்கப் புறப்பட்டுள்ள மோடி அரசு, வன அழிப்பையே நோக்கமாகக் கொண்டிருப்பதை சில குறிப்பிட்ட திருத்தங்களையும் அவற்றின் விளைவுகளையும் தொகுத்துப் பார்ப்பதன் மூலம் அறிய முடியும்.


படிக்க: காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!


1980 அக்டோபர் 25 அல்லது அதற்குப் பிறகு வனம் – காடு என்று அரசாங்கப் பதிவேடுகளில் பதிவு செய்யப்பட்ட நிலங்களுக்கு மட்டுமே இச்சட்டம் பொருந்தும். இதன் மூலம் இன்னும் வனம் – காடு என அறிவிக்கப்பட வேண்டிய ஏராளமான நிலப்பகுதிகள் அனைத்தும் பிற பயன்பாடுகளுக்குக் கையகப்படுத்திக் கொள்ள முடியும். அங்கு வசிக்கும் மக்களை பழங்குடியினர் இல்லை என்று பட்டியலில் இருந்தும் நீக்கவும் முடியும்.

1996 டிசம்பர் 12-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக ஒரு நிலப்பகுதி (வனம்-காடு) வனம் சாராத நோக்கத்துடன் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்தால், அது அப்படியே தொடரும். இதன் மூலம், ஏற்கெனவே காடுகளைக் குத்தகைக்கு எடுத்துள்ள நிறுவனங்கள், கார்ப்பரேட்டுகள் தமது கொள்ளையைத் தொடர முடியும். அவை மீண்டும் காடு – வனம் என்ற வரம்புக்குள் வராமலேயே போய்விடும்.

1980 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாதுகாக்கப்பட்ட காடுகளுக்குள் (வனத்திற்குள்) உள்ள தோட்டங்கள் மற்றும் காடுகளாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களில் உள்ள தோட்டங்கள் மட்டுமே இச்சட்டத்தின் விதிகளின்படி உள்ளடக்கப்படும்; மற்ற அனைத்து தோட்டங்களும் இனி காடுகளாக இருக்காது; அவற்றை வேறு எந்த நோக்கத்திற்காகவும் திருப்பிவிடப்படலாம்; அவை காடுகள் அல்லாத நடவடிக்கைகளுக்குத் திருப்பிவிடப்படலாம் அல்லது நிலத்தின் மீது உரிமையுள்ள எந்தவொரு நிறுவனத்தாலும் ஈடுசெய்யப்பட்ட காடு வளர்ப்பிற்காக (Compensatory afforestation) வழங்கப்படலாம். இதன் மூலம் வேறொரு இடத்தில் மரம் வளர்ப்பதாகக் கணக்கு காட்டி வனத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நிறுவனங்கள் அனுமதிக்கப்படும்.

அதாவது, இன்னும் பல இலட்சம் ஏக்கர் வனப்பகுதிகளை, காடுகளை வனம் என்ற வரையறைக்குள் கொண்டு வராத நிலையில், அவை ஏற்கெனவே இருக்கும் நிலையில் – அதாவது வனம் அல்லாத பகுதி என்ற வகையிலேயே – பயன்படுத்திக் கொள்ள சட்டப்பூர்வ அனுமதி கொடுத்திருக்கிறது மோடி அரசு.

மேலும், “தேசிய முக்கியத்துவம்”, “பாதுகாப்பு” என்ற பெயரில் எல்லைப் பகுதிகளில் 100 கி.மீ தூரத்துக்குள் உள்ள வனப் பகுதிகளுக்கு விதிவிலக்கு அளிப்பதன் மூலம் இமயத்தின் அடிவாரம் மற்றும் வடகிழக்கில் ஏராளமான வனப் பகுதிகளை இராணுவப் பயன்பாடு என்ற பெயரில் கைப்பற்றி, கார்ப்பரேட் சூறையாடலுக்கு திறந்துவிடும் சூழலை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக வடகிழக்கில், உள்ளூர் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏராளமான வனப்பகுதிகள் இதில் அடங்கும். இத்தகைய கேடான நோக்கத்தை எதிர்த்துத்தான் மணிப்பூர் குக்கி பழங்குடிகள் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சட்டத் திருத்தம் மூலம் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்து இமாச்சல் உள்ளிட்டு பல்வேறு எல்லைப்பகுதி மாநில அரசுகளும், மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகள் விரும்பும் சாகர்மாலா, பாரத்மாலா பரியோஜனா போன்ற கட்டுமானத் திட்டங்களையும், நிலக்கரி, தங்கம் உள்ளிட்ட ஏராளமான கனிமவளங்களை வெட்டியெடுக்கும் சுரங்க அகழ்வு போன்ற பேரழிவுத் திட்டங்களையும் “தேச முக்கியத்துவம்” வாய்ந்த திட்டங்கள் எனக் கூறி அமல்படுத்துவதே மோடி அரசின் நோக்கம்.


படிக்க: அமேசான் காடுகளை காக்க களமிறங்கிய பழங்குடிகள் !


இத்தகைய மக்கள் விரோத கார்ப்பரேட் திட்டங்களை செயல்படுத்துவதற்கு காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்கள் தடையாக இருப்பார்கள் என்று முன் அனுமானித்து, வன உரிமைச் சட்டம் 2006, பஞ்சாயத்து ராஜ் ஆகிய சட்டங்கள் பழங்குடி மக்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை இச்சட்டத் திருத்தம் மூலம் பறித்துள்ளது மோடி அரசு.

வன உரிமைச் சட்டம், பஞ்சாயத்து ராஜ் ஆகிய சட்டங்கள் நடைமுறையில் இருக்கும்போதே, கடந்த மூன்றாண்டுகளில் சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலத்திலுள்ள பழங்குடி கிராமங்கள் மீது, நான்கு முறை ஆளில்லா ட்ரோன்கள் மூலம் குண்டுகளை வீசித் தாக்கியிருக்கிறது மோடி அரசு. இனி, இத்தகைய சட்டவிரோதத் தாக்குதலை சட்டப்பூர்வமாக நடத்த முடியும். அதாவது, சட்டத் திருத்தத்திற்கு முன் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி நிறைவேற்றிக் கொண்ட மோடி அரசு, தற்போது தனது பாசிச நடவடிக்கைகளை சட்டத்தின் பெயராலேயே முன்னெடுக்க முடியும்.

சட்டத்திருத்தங்கள்: கார்ப்பரேட் சேவகத்தின் தொடர்கதை!

இந்தியாவின் காடுகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் நிலக்கரி, தங்கம் உள்ளிட்ட கனிமங்களையும் இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் ஆகியவற்றையும் கார்ப்பரேட் கும்பல்கள் கொள்ளையடிப்பதற்கு ஒன்றிய அரசு துணை நிற்பதும், பழங்குடி மக்களை விரட்டுவதும் 2004 – 2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே நடந்தவைதான். அவற்றை இன்னும் தீவிரமாக்கும் நோக்கிலேயே மோடியை பிரதமராகக் கொண்டு வந்தனர் கார்ப்பரேட் முதலாளிகள். அவரது தீவிரக் கார்ப்பரேட் சேவையின் ஓர் அங்கமே இந்தச் சட்டத் திருத்தம்.

2014-இல் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே நிலம் கையகப்படுத்தும் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வர முயற்சி செய்து தோல்வியடைந்தது மோடி அரசு. ஆனாலும், விடாப்பிடியாக அதை இரண்டு முறை அவசரச் சட்டமாக நடைமுறைப்படுத்தியது. அதற்கு அனுமதியளித்தவர் காங்கிரசால் நியமிக்கப்பட்ட அன்றைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி.

அதன் பிறகு, காடுகளைக் களவாடிக் கொள்வதற்கும், பழங்குடிகளை விரட்டவும் மோடி அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இதற்கேற்ப தொடர்ச்சியாக சட்டத் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் வன விலங்கு (பாதுகாப்பு) திருத்த மசோதா 2022, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2023, வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2023 ஆகியவற்றை நிறைவேற்றியிருக்கிறது.

இவையனைத்துக்கும் பின்னால் பெரும் கனிம – சுரங்கக் கார்ப்பரேட்டுகளின் நலன்களே ஒளிந்திருக்கின்றன என்பதை அண்மை நிகழ்வுகள் பலவும் உறுதிசெய்து வருகின்றன. கடந்த பிப்ரவரியில், ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் அளவிலான லித்தியம் இருப்பும், அதன் பிறகு, இந்தியாவின் தேவையில் 80 சதவிகிதத்தை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கு லித்தியம் இருப்பை ராஜஸ்தானில் கண்டறிந்துள்ளதாகவும் மோடி அரசு அறிவித்தது.

இது மட்டுமின்றி, மத்திய நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, சுரங்க அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால் தயாரிக்கப்பட்ட “இந்தியாவுக்கான அரியவகைத் தனிமங்கள்” குறித்த நாட்டின் முதல் அறிக்கையை கடந்த ஜூன் 28 அன்று வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், இந்தியாவில் 30 அரியவகைத் தனிமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க, கடந்த சில ஆண்டுகளாக உலகின் எந்தெந்த நாடுகளில் அரியவகைத் தனிமங்கள் புதைந்திருக்கின்றன என்பதைக் கண்டறிய தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது அமெரிக்க ஏகாதிபத்தியம். எதிர்காலத்தில் இத்தனிமங்களின் அவசியத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் நன்கு உணர்ந்து இருப்பதே அதற்குக் காரணமாகும். பிப்ரவரி மாதத்தில் வெளியான அமெரிக்க அரசாங்க அறிக்கை ஒன்று “உலகம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை நாடிச் செல்லும் போது, அடுத்த பல பத்தாண்டுகளில் மின்சார வாகன மின்கலன்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் மற்றும் கிராஃபைட் தனிமங்களுக்கான தேவை, தற்போது தேவையான அளவை விட 4,000 சதவிகிதம் அதிகரிக்கும்” எனக் கூறுகிறது.

இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் அமெரிக்காவிற்கு மோடி சென்றபோது, அந்நாட்டின் தலைமையில் ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற 12 நாடுகளைக் கொண்ட கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மையில் (Minerals Security Partnership) இந்தியாவையும் இணைத்துள்ளார். அரியவகைத் தனிமங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவே இக்கூட்டாண்மை உருவாக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு தரவுகளின் படி, அரியவகைத் தனிமங்களின் உலகளாவிய உற்பத்தியில் 60 சதவிகிதத்தைக் கைப்பற்றி வைத்திருந்தது சீனா. அரியவகைத் தனிமங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான சீன – அமெரிக்க ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான போட்டாபோட்டியின் வெளிப்பாடே, கனிமப் பாதுகாப்புக் கூட்டாண்மை. இக்கூட்டாண்மையில் இந்தியாவை இணைத்துள்ளதன் மூலம் அமெரிக்காவுக்கான தனது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் மோடி.

சுரங்கத்துறையிலும் அதானிமயம்!

இந்தியாவில் லித்தியம் கண்டறியப்பட்ட பிறகு, மின்சார வாகன உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் இந்தியா வந்ததும், மோடி அமெரிக்கா சென்றபோது மஸ்க்கை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. “இந்தியாவின் எதிர்காலம் குறித்து நம்ப முடியாத உற்சாகத்துடன் இருப்பதாகவும்” “டெஸ்லா விரைவில் இந்தியாவிற்கு வரும்” என்றும் மஸ்க் கூறியிருப்பதன் பின்னணியில் லித்தியம்தான் இருக்கிறது.

அரியவகைத் தனிமங்களைச் சூறையாட அமெரிக்க கார்ப்பரேட் முதலாளியான எலான் மஸ்க்கிற்கு சிவப்புக் கம்பளம் விரிப்பதோடு மட்டும் மோடியின் சேவை முடிந்து விடவில்லை. அவரது நெருங்கிய நண்பரான அதானிக்கும் இதில் பங்கு வைக்க முயன்று வருகிறார்.

இந்தியாவில் சூரிய மின் தகடுகள் மூலம் ஏறக்குறைய ஆறு ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்குக் கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ஒரே மிகப்பெரிய நிறுவனம் அதானி குழுமம்தான். சூரிய மின் தகடுகளை உற்பத்தி செய்வதற்கு ஆர்சனிக், காலியம், ஜெர்மானியம், இண்டியம், டெல்லூரியம் ஆகிய அரியவகைத் தனிமங்கள் இன்றியமையாதவை ஆகும்.

ஏற்கெனவே, இந்தியாவில் அதிகப்படியான நிலக்கரிச் சுரங்கங்களைக் கையகப்படுத்தியிருப்பது அதானி குழுமம்தான். மோடி அரசு தொடர்ச்சியாக பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் உள்ள நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாகவும் அடிமாட்டு விலைக்குத் தாரை வார்த்து வருவதும் அதானி நிறுவனத்திற்குதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அரியவகைத் தனிமங்களை வெட்டியெடுக்கும் ஒப்பந்தமும் அதானி நிறுவனத்திற்கு வழங்கவே மோடி அரசு விரும்பும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அண்மையில், லித்தியம் உள்ளிட்ட ஆறு அரியவகைத் தனிமங்களை வெட்டி எடுப்பதற்கான சுரங்க நடவடிக்கைகளில் ஈடுபட, தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கும் வகையில் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957-ல் திருத்தங்களை மேற்கொள்ள ஒன்றிய அமைச்சரவை அவசரகதியில் ஒப்புதல் வழங்கியுள்ளதில் அதானியின் நலன் இல்லை என மறுக்க முடியாது. எனவே எலான் மஸ்க்கும், அதானியும் கூட்டுசேர்ந்து அரியவகைத் தனிமங்களைச் சூறையாடும் நிலை உருவாகலாம்.

2070 ஆம் ஆண்டுக்குள் “பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு”’ என்ற இலக்கை அடைய இந்தியா உறுதி கொண்டிருப்பதால், வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்படுவதாக மசோதாவின் முன்னுரையில் தெரிவித்துள்ளது மோடி அரசு. லித்தியம் உள்ளிட்ட அரியவகைத் தனிமங்களைச் சுரண்டியே பசுமை எரிசக்தியை உருவாக்க முடியும் என்றும், அத்தகைய வளர்ச்சிக்காக காடுகளை அழிப்பதில் தவறில்லை என்றும் கூட நாளைக்கு மோடி விளக்கமளிக்கலாம்.

மோடி அரசு மக்களுக்கு விரோதமானது; கார்ப்பரேட்டுகளுக்கே சேவை செய்கிறது; அதற்காக மக்கள் மீது பாசிச அடக்குமுறையை ஏவிவிடுகிறது என்று சொல்லும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இத்தகைய கார்ப்பரேட் ஆதரவு சட்டத் திருத்தங்களுக்கு மாற்றாக எதை முன்வைக்கப் போகிறார்கள்?  இதுவரை நடந்துள்ள சட்டத் திருத்தங்களை நீக்குவது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? மோடி சொல்லும் வளர்ச்சி கார்ப்பரேட் மோசடி என்றால், எதிர்க்கட்சிகள் எத்தகைய வளர்ச்சிக்கான வாக்குறுதியைக் கொடுக்கப் போகிறார்கள்? 2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாசிஸ்ட் மோடி வெல்லக்கூடாது என்பவர்கள் மீண்டும் 2014 ஆம் ஆண்டின் கார்ப்பரேட் சேவைக்குத் திரும்பிச் செல்வார்களா அல்லது மக்களுக்கான சேவையை முன்னெடுப்பார்களா? நிச்சயம் மக்களுக்குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.


அமீர்

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

ஏன் சந்திராயன் 3 தேச பெருமிதமாக காட்டப்படுகிறது? | தோழர் ரவி

ஏன் சந்திராயன் 3 தேச பெருமிதமாக காட்டப்படுகிறது? | தோழர் ரவி

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காவிகளின் மதவெறி பிரச்சாரத்தின் விளைவு: அனைத்து துறைகளிலும் காவிக் குண்டர்கள்!

த்தரப் பிரதேசம் முசாஃபர்நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியர் திரிப்தா தியாகி என்பவர் முஸ்லீம் மாணவர் ஒருவரை, அதே வகுப்பில் படிக்கும் சக மாணவர்களை வரிசையாக வரவழைத்து, தாக்க சொல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆசிரியர், “ஏன் மெதுவாக அடிக்கிறாய்? வேகமாக அடி”என்று கூறுவதும் அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது.

அந்த முஸ்லீம் மாணவர் கணக்கு வாய்ப்பாட்டை ஒழுங்காக சொல்லாததே, ஆசிரியர் இந்த கொடூர தாக்குதலை தொடுக்க சொன்னதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், “இஸ்லாமிய மாணவர்களின் தாய்மார்கள் அவர்களின் குழந்தைகளின் படிப்பில் கவனம் கொடுக்கமாட்டார்கள்” என இஸ்லாமியர்கள் மீதான தனது மத வெறுப்பை அந்த ஆசிரியர் மாணவர்களிடம் கக்கியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த பள்ளியில் தனது பிள்ளைக்கு பாதுகாப்பில்லை என அஞ்சிய முஸ்லீம் மாணவனின் தந்தை, இனி பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் தாக்குதலுக்குள்ளான மாணவனுக்கும், ஆசிரியரின் தூண்டுதலால் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் என்ன மாதிரியான மனநிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும் என்று பார்க்க வேண்டும்.

தாக்கப்பட்ட மாணவனுக்கு இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்தினால், இத்தனை நாட்களாக ஒரே வகுப்பில் படித்து வந்த தனது நண்பர்களே தன்னை தாக்குகிறார்களே என்ற அச்ச உணர்வும், அடித்த மாணவர்களுக்கு இனி இஸ்லாமியர்களை கண்டாலே தாக்க வேண்டும் என்ற மத வெறுப்புணர்வும் ஒருசேர ஏற்பட்டிருக்கும்.

இந்த மனநிலையைத்தான்  நாடுமுழுவதும் காவி பயங்கரவாதிகள் ஏற்படுத்த முயற்சித்து வருகிறார்கள். சமீபத்தில் மும்பை இரயிலில் பயணித்த மூன்று அப்பாவிகள் முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் சேத்தின் குமார் சௌத்ரி என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

அதேபோல், கடந்த வாரம் மும்பை பந்தரா இரயில் நிலையத்தில் இந்து பெண் தோழியுடன் பேசிக்கொண்டிருந்தவர் முஸ்லீம் என்ற ஒரே காரணத்தால் இந்துத்துவ குண்டர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்.

தனது மதவெறி பிரச்சாரத்தாலும், கலவரங்களாலும் இஸ்லாமியர்களை இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தை  காவிக்கும்பல் நிறைவேற்றி வருகிறது என்பதைத்தான் இந்த சம்பவங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அதற்கு ஆசிரியர் திரிப்தா தியாகி போன்று காவிகளால் மதவெறி உணர்வூட்டப்பட்ட பலநூறு காவிக் குண்டர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதே நம்மை அச்சுறுத்தும் எதார்த்தமாக உள்ளது.

சிறுபான்மையினர்களுக்கு எதிரான இந்த ஆர்.எஸ்.எஸ்–பா.ஜ.க இந்துத்துவ கும்பலை அனைத்து துறைகளில் இருந்தும் விரட்டியடிக்கவேண்டும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வை தடை செய் என்று முழக்கவேண்டும்!

புதிய ஜனநாயகம்
26.08.2023

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல்!

25.08.2023

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023-க்கு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல்!

கார்ப்பரேட் திட்டங்களை எதிர்க்காமல் பாசிச எதிர்ப்பு போராட்டம்
இலக்கை அடையாது!

பத்திரிகை செய்தி

மிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி  நாளில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மசோதாக்களில் ஒன்றான  தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023 (Tamil Nadu Land Consolidation (for special projects) Act 2023)-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு கையெழுத்திடாத  ரவி, இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு (சிறப்புத் திட்டங்களுக்கான) சட்டம் 2023-ஆனது கார்ப்பரேட்டுகள் தமிழ்நாட்டின் நீர் வளத்தையும் நிலவளத்தையும் கொள்ளையடிப்பதற்கான சட்டமாகும்.

பொதுப் பணித் துறை, நீர்ப்பாசனத் துறை, கால்நடைத் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம், மருத்துவத் துறை எனப் பல துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை  தேவை என்று அரசு கருதினால்  ஒருங்கிணைத்து கையகப்படுத்திக்கொள்வதற்கு அரசுக்கு இந்தப் புதிய சட்டம் அதிகாரம் அளிக்கிறது. பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்பு விதிகள் உள்ளிட்ட பல்வேறு தடைகளை சுக்குநூறாக உடைத்தெறிந்து கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் திட்டமே இது.

இந்தச் சட்டத்துக்கு   எதிராக பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக குரல் கொடுத்த போதும்,  அதை கொஞ்சமும் காதில் வாங்காமல் கார்ப்பரேட் நலனே முக்கியம் என்று தமிழ்நாடு அரசு,  இச்சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறது.


படிக்க: நீட் ரத்திற்கு அனுமதி தரமாட்டேன் என்று தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்யும் ஆளுநர் ரவியே வெளியேறு!


கார்ப்பரேட் ஆதரவு திட்டங்கள் என்றால் திமுக அரசும் ஆளுநரும் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றார்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.

இனி இந்த சட்டத்தின் மூலம் பரந்தூர் விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத மற்றும்  கார்ப்பரேட் திட்டங்கள் இனி தமிழ்நாட்டில் தங்கு தடை இன்றி  நடைபெறும். மக்கள் விரோத, இயற்கை விரோத இந்தச் சட்டத்தை தமிழ்நாடு அரசு  உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

பாசிச பாஜக விரும்பக்கூடிய எல்லா கார்ப்பரேட் திட்டங்களையும் திமுக அரசு படிப்படியாக நிறைவேற்றிவிட்டு தான் பாஜகவுக்கு மாற்று என்று சொல்வது நகைக்கத்தக்கதாகும்.

பா.ஜ.க –  ஆர். எஸ் .எஸ்  செயல்பாடுகளை எதிர்ப்பது மட்டுமல்ல பாசிச எதிர்ப்பு ; ஆர்எஸ்எஸ் – பாஜக; அம்பானி – அதானி பாசிசத்தை முறியடிப்பதே உண்மையான பாசிச எதிர்ப்பு.   வேண்டாம் பிஜேபி  ! வேண்டும் ஜனநாயகம் என்றால் பாசிச பாஜகவின் காவி கார்ப்பரேட் திட்டங்கள் வேண்டாம் என்பதே ஆகும். அதற்கான போராட்டங்களை தமிழ்நாடு முன்னெடுப்பதே பாசிச பாஜகவை ஒழிப்பதற்கு சரியான வழியாகும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு –  புதுவை.
9962366321

உணவுப் பொருட்களின் விலை உயர்வு: வெடிக்கக் காத்திருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் புகைச்சல்

ஜூன் மாதத்தில் 3 சதவிகிதமாக இருந்த நாட்டின் பணவீக்க விகிதம் ஜூலை 13-ஆம் தேதியில் 4.8 சதவிகிதமாக அதிகரித்தது. ஜூலை 19-ஆம் தேதியன்று 5.2 சதவிகிதமாக உயர்ந்தது. தக்காளி, பருப்பு வகைகள், தானியங்களின் விலை உயர்வு காரணமாக இந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளது.

நுகர்வோர் விலைக் குறியீடு பணவீக்கம் இந்த ஆண்டு மே மாதத்தில் 4.25 சதவிகிதமாக இருந்தது. இது ஜூனில் 4.81 ஆக உயர்ந்துள்ளது. இதைப்போலவே மொத்த பணவீக்கம் மே மாதத்தில் 3.48 சதவிகிதத்தில் இருந்து ஜூனில் 4.12 சதவிகிதமாக உயர்ந்தது.

2014-இல் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், மொத்த உள்நாட்டு உற்பத்தி, பணவீக்கம் தொடர்பான மதிப்பீடுகளை மாற்றியமைத்த வகையில் இந்த பணவீக்கம் என்றால், உண்மையில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்பது மிக மோசமானதாகும்.

ஜூனில் தக்காளியின் விலை 300 மடங்கு அதிகரித்தது. கடந்த சில மாதங்களில் மட்டும் அரிசியின் விலை சராசரியாக 10 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. சாதாரண ஏழை மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் 40 ரூபாய் அரிசி வகைகள் அனைத்தும் ரூ.10-12 வரை விலை உயர்ந்துள்ளன. சில்லறை வர்த்தகத்தில் இவற்றின் விலை மேலும் அதிகமாக உள்ளது.

சமையல் எண்ணெயின் விலை உயர்வு என்பது மிக அதிகமானதாகும். நமது நாட்டின் சமையல் எண்ணெய் தேவையின் பெரும்பகுதி, 60 சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்குமதி மூலமே ஈடு செய்யப்படுகிறது.

கடலை எண்ணெய், நல்லெண்ணெய், ஆளி விதை எண்ணெய், தேங்காய் எண்ணெய், பருத்தி விதை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவை உள்நாட்டிலேயே உற்பத்தியானாலும் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. ஒவ்வொரு பகுதியில் இருக்கும் வேறுபாடுகள் காரணமாகவும் வணிக முறைகள் காரணமாகவும் இந்த விலை பகுதிக்குப் பகுதி மாறுபடுகிறது. கடலை எண்ணெய் மொத்த விற்பனையில் ரூ.162 இருந்தாலும் நடைமுறையில் அது ரூ.250 வரை விற்கப்படுகிறது. இதைப் போலவே மற்ற சமையல் எண்ணெய்களும் கடுமையாக விலை உயர்ந்துள்ளன. பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் கோல்டு வின்னர் சூரிய காந்தி எண்ணெய் ரூ.140, நடுத்தரக் குடும்பங்கள் பயன்படுத்தும் இதயம் நல்லெண்ணெய் லிட்டர் ரூ.500, தேங்காய் எண்ணெய் ரூ.300 வரை விற்கப்படுகின்றன. மிகவும் மலிவான எண்ணெய் என்று கருதப்பட்ட பாமாயில் ரூ.90 வரை விற்கப்படுகிறது.


படிக்க: விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!


இதைப்போலவே பருப்பு வகைகளின் எண்ணிக்கையும் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன. சில மாதங்களுக்கு முன்புவரை கிலோ ரூ.95 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்ட துவரம் பருப்பு தற்போது ரூ.130-150 வரை விற்கப்படுகிறது. இதைபோலவே உளுத்தம் பருப்பு ரூ.130 ஆக விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்த நிலைமை நீடித்தால் துவரம் பருப்பு ரூ.200 வரை விலை உயர்வதற்கான அபாயம் உள்ளது.

இந்த விலையேற்றம் அக்டோபர் மாதம்வரை நீடிக்கும் என்று வணிகர்கள் தெரிவிக்கின்றனர். இத்துடன், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, அன்றாடம் உயர்ந்து வரும் சமையல் எரிவாயு உருளை விலை போன்றவையும் மக்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த விலையேற்றங்கள் அனைத்து வகையிலும் உழைக்கும் மக்களை பட்டினிச்சாவுகளுக்குத் தள்ளி வருகிறது.

செயற்கைப் பேரிடர்

போதிய அளவில் மழை பெய்யாமை, வெப்ப அலை வீச்சு அல்லது மிகையான புயல், பெரு மழை, வெள்ளம் போன்றவை விவசாயத்தை பெரிதும் பாதித்துள்ளன; இத்துடன் ரஷ்ய-உக்ரைன் போரும் விலையேற்றத்திற்கு காரணம் என்றெல்லாம் ஆளும் பா.ஜ.க. கும்பல் தொடர்ந்து பேசிவருகிறது. மேலும் உணவுப் பொருட்களை வியாபாரிகள் பதுக்கி வைத்திருக்கின்றனர் என்றும் சிறுவியாபாரிகளைக் குற்றஞ்சாட்டி வருகிறது.

ஆனால், இயற்கைச் சீற்றங்களால் விவசாய உற்பத்தி பாதிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட உணவுப் பொருள்கள் பற்றாக்குறை மட்டுமே தற்போதைய விலையேற்றத்திற்கு காரணமல்ல. மாறாக, பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயத்தையும் சிறுதொழில்கள், சிறுவணிகம் போன்றவற்றையும் மேம்படுத்துவது என்ற பெயரில், அத்தொழில்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு திறந்துவிட்டதுதான் இந்த பெரும் நெருக்கடிக்குக் காரணமாகும்.

அறுவடைக் காலங்களான ஜனவரி-மே வரை உணவு தானியங்களின் விலையைக் குறைத்து விவசாயிகளிடம் குறைந்த விலையில் தானியங்களைக் கொள்ளையடிப்பதும், அதன் பின்னர் ஜூன் முதல் அக்டோபர் வரையில் அதிக விலைவைத்து விற்பதும் காலங்காலமாக கமிசன் மண்டிகளும் தரகு முதலாளிகளும் கூட்டு வைத்து நடத்தி வந்த கொள்ளையாகும்.

உள்ளூர் மற்றும் வட்டார அளவில் நடந்து வந்த இந்த வர்த்தகக் கொள்ளைக்கு இருந்த கட்டுப்பாடுகளை நீக்கி, கார்ப்பரேட்டுகளைப் புகுத்தி, ஆன்லைன் வர்த்தகத்திற்கு திறந்துவிடப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் உணவு தானியங்களைப் படுவேகமாக கொள்முதல் செய்யவும் அவற்றை அவர்கள் ஆதிக்கம் செலுத்தும் சந்தையின் மூலம் விலையுயர்த்திக் கொள்ளையடிக்கவும் அனுமதிக்கப்பட்டன.

ஆகையால், இந்த விலையேற்றம் என்பது கார்ப்பரேட் கொள்ளையின் விளைவாகும். அதிலும் குறிப்பாக, 2014-இல் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து, மோடி-அமித்ஷா-நிர்மலா கும்பல் தீவிரமாகக் கடைப்பிடித்துவரும் மறுகாலனியாக்கக் கொள்கையின் அடிப்படையிலான ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை என்ற பொருளாதார பயங்கரவாதக் கொள்கைகள்தான் உணவுப் பொருள்களின் விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமாகும். உணவுப் பொருட்களின் விலையுயர்வு மட்டுமின்றி, இக்கொள்கைகள் இன்று நாட்டின் பொருளாதாரத்தை மிகப்பெரும் பேரழிவை நோக்கி இட்டுச் சென்றுகொண்டிருக்கின்றன.

கார்ப்பரேட் அடிமை பா.ஜ.க. அரசு

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்புவரை, உணவுப் பொருட்களின் விலையேற்றத்தை அரசால் தலையிட்டுத் தடுக்க முடியும். ஆனால், தனியார்மயம் கொண்டுவரப்பட்ட பின்னர், அரசு சந்தையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்ற உலக வங்கியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. 2014 வரையில் மன்மோகன் ஆட்சியில் கூட சில கட்டுப்பாடுகளை அரசினால் விதிக்க முடிந்தது. ஆனால், மோடியின் புதிய இந்தியாவிலோ பெயரளவிலான கட்டுப்பாடுகளை கூட விதிக்காமல் வேடிக்கைப் பார்க்கும் நிலைக்கு மொத்த நாடும் தள்ளப்பட்டுள்ளது.

ஆகையால், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடாது என்ற பா.ஜ.க. அரசின் கொள்கைதான் இந்த நெருக்கடி தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமாகும். ஒருவேளை, இந்த விலையேற்றத்தால் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கு பாதிப்பு என்றால் மட்டுமே மோடி அரசு சந்தையில் தலையிடும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியான செய்தி ஒன்றில், கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலையேற்றத்தைச் சமாளிக்க இந்திய உணவுக் கழகம் 25 லட்சம் டன் கோதுமையை ஆன்லைன் ஏலத்தின் மூலம் விற்பனை செய்தது. இதில் 3 லட்சம் டன் மட்டுமே அரசுக்கு ஒதுக்கப்பட்டது. இது ஏழை மக்களுக்கு அதிகபட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு 29.50 ரூபாய்க்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ஜூன் 18-ஆம் தேதி, இந்திய உணவுக் கழகத்தில் இருக்கும் உணவு தானியங்களை மாநில அரசுகள் ஏலம் எடுப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் எதிர்ப்பைக் காட்டியபோதும், இந்திய உணவுக் கழகத்தில் இருக்கும் தானியங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் விற்பனை செய்ய முடியும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது, மோடி அரசு. தற்போது இந்திய உணவுக் கழகத்தில் 7.25 கோடி டன் உணவுதானியங்கள் கையிருப்பில் உள்ளன. இவற்றை மாநில அரசுகளுக்கு சந்தை விலையில் கொடுத்தால் கூட பெருமளவு மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியும். பற்றாக்குறையை ஈடுசெய்து விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கத் தயாராக இல்லை. இப்போது மட்டுமல்ல, பெருந்தொற்று காலத்தில் கூட இந்திய உணவுக் கழகத்தில் இருப்பில் இருந்த தானியங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்ததே அன்றி, மாநில அரசுகளுக்கோ, மக்களுக்கோ கொடுக்க முன்வரவில்லை.

ஊற்றி மூடப்பட்டுவரும் பொதுவிநியோக முறை

பொதுவிநியோக முறை என்பது நாட்டு மக்களுக்காக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முதன்மையான நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதன்கீழ் மேற்கொள்ளப்படும் உணவுப் பொருட்களுக்கான மானியம் என்பது ஒன்றிய அரசின் முதல் ஐந்து செலவினங்களில் ஒன்றாகும். இத்திட்டமானது விவசாயிகளிடம் இருந்து குறைந்தபட்ச ஆதார விலையில் தானியங்களைக் கொள்முதல் செய்வது, அவற்றை பொதுமக்களுக்கு மலிவான விலையில் விற்பனை செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். விவசாயிகளுக்கான மானியங்கள், பயிர்க்கடன்கள், இந்திய உணவுக் கழகம், ரேசன் கடைகள் உள்ளிட்டவை இந்த பொதுவிநியோக முறையின் கீழ் வருபவையாகும்.

தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகள் நடைமுறைக்கு வரத் தொடங்கிய பின்னர், பொதுவிநியோக முறைக்கு ஒதுக்கப்படும் மானியங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வந்தன. உண்மையில், தனியார்மயத்தின் விளைவாக விவசாயத்தை விட்டு விவசாயிகள் விரட்டப்பட்டு வருவது, மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவற்றுடன் ஒப்பிடும்போது, உணவுப் பொருட்களுக்கான மானியங்களை அதிகரிக்க வேண்டும். ஆனால், ஒன்றிய அரசோ உணவுப் பொருட்களுக்கான மானியங்களை ஒப்பீட்டளவில் குறைத்து வந்தது.


படிக்க: அடுத்தடுத்த விலையேற்றங்கள்: இன்று தக்காளி! நாளை?


இந்நிலையில், 2014-இல் மோடி-நிர்மலா சீதாராமன் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது, பொதுவிநியோகத்திட்டத்தை ஒழிப்பது என்பது ஒரு புதிய பாய்ச்சலுக்குச் சென்றது. நாடு தழுவிய அளவில் ஐந்தாண்டு திட்டங்களைப் போட்டு பொருளாதாரத்தை முன்னேற்றும் முறை கைவிடப்பட்டது; அதற்கான கொள்கை வகுக்கும் திட்டக் கமிசனும் கலைக்கப்பட்டது. அதன் இடத்தில் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்தும் “நிதி ஆயோக்” என்ற பொருளாதார பயங்கரவாத அமைப்பு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர், உணவு தானிய கொள்முதல் மற்றும் விநியோகத்தில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் படுவேகமாக மாற்றப்பட்டன. இந்திய உணவுக் கழகத்தில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் உடைக்கப்பட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொள்ளையடிக்க திறந்துவிடப்பட்டது. ரேசன் கடைகளை (பொதுவிநியோக முறையை) ஒழித்துக்கட்டும் நடவடிக்கைகள் தொடங்கின. இதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு மானியங்களை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தை அமல்படுத்துவதற்காகவே குடும்ப அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டன; ஸ்மார்ட் கார்டுகள் கொண்டுவரப்பட்டன.

2004 ஆம் ஆண்டில், வாஜ்பாய் ஆட்சி காலம் நிறைவடையும்போது, பொதுவிநியோக முறையில் நிறைய தானியங்கள் வீணாக்கப்படுகின்றன (47 சதவிகித தானியம் விரையமாகிறது) என்று கார்ப்பரேட் ஊடகங்களாலும் அரசினாலும் விமர்சிக்கப்பட்டது. இதற்கு காரணம் “திறமையின்மை” மற்றும் “திருட்டு” என்று கூறி உணவுப் பொருளில் அரசுக் கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்றனர் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள். இதன் அடிப்படையில்தான், மோடி அரசு ரேசன் கார்டுடன் ஆதாரை இணைத்தது.

ஆனால், “திருட்டு” மற்றும் “திறமையின்மை” என்ற பிரச்சினை தீர்க்கப்பட்டதா என்று கேள்வி கேட்பதற்கு இன்று ஆள் இல்லை. சில்லறை உணவுப் பொருள் விற்பனையில் கார்ப்பரேட் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டுவிட்ட நிலையில், அரசுக் கொள்முதலின் பெரும்பகுதி கார்ப்பரேட்டுகளிடம் செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆதார் அங்கீகரிப்புப் பிழைகள், ஸ்மார்ட் கார்டு அங்கீகரிப்புப் பிழைகள் காரணமாக பல ஆயிரம் குடும்பங்களுக்கான உணவுப் பொருட்கள் நிறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுகின்றன. இதற்கெல்லாம், பா.ஜ.க. அரசு எந்தவகையிலும் பொறுப்பெடுத்துக் கொள்ளவில்லை.

இதுமட்டுமல்ல, இந்திய உணவுக் கழகம் அரிசி மற்றும் கோதுமையை மட்டுமே கொள்முதல் செய்யும் வகையில் சுருக்கப்பட்டதால், பொதுவிநியோக முறையும் அரிசி-கோதுமை வழங்குவது என்ற அளவில் சுருங்கிவிட்டது.

நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் புரதச் சத்து குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாட்டில் இருக்கும் போது, இந்த நடவடிக்கைகளானது மக்களை நிரந்தர ஊட்டச்சத்து குறைபாடு நிலைக்குத் தள்ளியுள்ளது. இதுமட்டுமின்றி, பன்முகப்பட்ட வறியநிலை என்பது கிராமப்புறங்களில் 32.75 சதவிகிதமாகவும் நகரங்களில் 8.8 சதவிகிதமாகவும் இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை தெரிவிக்கிறது.

000

2022-23 நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை என்று கணக்குக் காட்டப்பட்டவை எல்லாம், பொதுவிநியோக முறையை வலுப்படுத்தும், உணவுப் பொருட்களுக்கு மானியங்களை வழங்கும் நோக்கத்திலானவை அல்ல. மாறாக, கால்நடை வளர்ப்பு, பால் மற்றும் மீன் வளம் ஆகியவற்றில் ரூ.20 இலட்சம் கோடி கடன் வழங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது; இவை அனைத்தும் இத்துறைகளிலுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களை மேம்படுத்தும் விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு தொடர்பான கடன்களாகும்.

ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எனப்படும் நூறுநாள் வேலைத்திட்டத்திற்கு சென்ற ஆண்டு ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் இருந்து 32 சதவிகிதத்தைக் குறைத்துள்ளது ஒன்றிய அரசு. நூறுநாள் வேலைத் திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் ஒதுக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஒன்றிய அரசு புறந்தள்ளிவிட்டது. மேலும், பிரதம மந்திரியின் மதிய உணவு திட்டத்திற்கான நிதியை சென்ற ஆண்டைவிட 9.37 சதவிகிதம் குறைத்துள்ளது. மொத்த உணவு மானியம் 2022-23-இல் முந்தைய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட ரூ.2,06,831.09 கோடியிலிருந்து ரூ.1,97,350 கோடியாக குறைக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில், பொதுவிநியோகத் திட்டம், மானியங்கள் அனைத்தும் அதன் அந்திமக்காலத்தை அடைந்துவிட்டன. ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும்பகுதி கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற மக்களையும் நகர்ப்புற ஏழை உழைக்கும் மக்களையும் ஓட்டாண்டிகளாக்கி, அவர்களை நிராதரவாக கைவிடும் திட்டமும் நாட்டை மிகப்பெரும் பஞ்சம் பட்டினியில் தள்ளிவிடும் சதித்திட்டத்தையும் பா.ஜ.க. அசுர வேகமாக அரங்கேற்றி வருகிறது.

மக்களின் மாநிலங்களின் உயிரைக் குடிக்கும் ஜி.எஸ்.டி.

ஒரே நாடு, ஒரே வரி என்ற அடிப்படையில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி., அது அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே சிறுதொழில், குறுந்தொழில் நிறுவனங்கள், சில்லறை வர்த்தகர்கள், சிறுவணிகர்களை பெரிதும் அழித்துள்ளது. இந்திய சிறு மற்றும் குறுந்தொழில்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.யின் சர்வாதிகார பாணியிலான கட்டாயமாக்கப்பட்ட முறைப்படுத்துதல் மற்றும் திட்டமிடப்படாத பெருந்தொற்று ஊரடங்கு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

2022-23 நிதியாண்டில் மட்டும் சுமார் 10,655 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு (2021-22 இல் 6,222, 2020-21 இல் 175, 2019-20 இல் 400) அதிகரித்த எண்ணிக்கையாகும். இந்த ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு மே மாதத் தொடக்கத்தில், ஏப்ரல் மாதத்தின் மாதாந்திர ஜி.எஸ்.டி. வரி வசூல் அளவு தொடர்பான அறிக்கை ஒன்றை ஒன்றிய அரசு வெளியிட்டது. முந்தைய ஆண்டு ஏப்ரல் மாத வரி வருவாயுடன் ஒப்பிடும்போது இப்போது 12 சதவிகிதம் (19 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளதாகவும் சென்ற மாத வரிவருவாயுடன் ஒப்பிடும்போது 17.5 சதவிகிதம் (ரூ.27 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதை “எளிமையான அரசாங்கம், திறமையான நிர்வாகத்”தின் விளைவு என அலங்கார வார்த்தை ஜாலங்களுடன் அறிக்கையில் விளக்கியிருந்தது.

ஜி.எஸ்.டி. வரியை அறிமுகப்படுத்தியபோது, மறைமுக வரிக்கான மாற்றாக இது இருக்கும் என்று ஜி.எஸ்.டி. ஆதரவாளர்கள் பலரும் ஆரவாரமாக ஆதரவு தெரிவித்தனர். ஆனால், சாதாரணமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளில் வரிவருவாயில் குறிப்பிட்ட சதவிகித உயர்வு இருக்கும் என்பதுடன் இந்த ஜி.எஸ்.டி. வரி உயர்வை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

மேலும், ஒரு அம்சத்தை ஒதுக்கித் தள்ளிவிடக் கூடாது. ஜி.எஸ்.டி.யில் இருந்து பெறப்படும் வரவுகளில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் மாநிலங்களுக்கு ஈடு செய்யும் நடைமுறை முடிவுக்கு வந்து ஜூன் மாதத்துடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதனுடன் ஒப்பிட்டு, ஜி.எஸ்.டி.யின் இப்புதிய ஆட்சியின் கீழ் வரிகளின் வருவாயில் 14 சதவிகித வளர்ச்சியைப் பார்க்க வேண்டும்.

ஜி.எஸ்.டி. வரிவிகிதங்களை தீர்மானிக்கும் ஜி.எஸ்.டி. கவுன்சில் ஒன்றிய அரசால் ஆதிக்கம் செலுத்தப்படும் நிலையில், எந்தவொரு மாநில அரசும் அதில் தலையிட்டு தங்களுக்கு இணக்கமான வரிவிகிதங்களைக் கொண்டுவரமுடியாது. இந்த முறையால் மாநில அரசுகள் கிட்டதட்ட ஒன்றிய அரசின் பிணைக் கைதிகளாக இருக்கின்றன. அதாவது, ஜி.எஸ்.டி. வரிவருவாய் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி. சர்வாதிகாரம் தொடங்கிய 2018-19 முழு நிதியாண்டில் இருந்து இந்த 2022-23 முழு நிதியாண்டு மட்டுமே தடையில்லாமல் வரி வருவாய் உயர்ந்து வந்த ஆண்டாகும். இடையில் இரண்டு நிதியாண்டு காலங்களில்தான் கொரோனா பெருந்தொற்றினால் சந்தைகள் நிலை குலைந்து போயின. உற்பத்தி மற்றும் விநியோகம் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த காலங்களில் வரிவருவாய் நிலையான உயர்வை அடையவில்லை.

வரி உயர்த்தப்படுவதானது தனித்த ஒரு நிகழ்வாக சுருங்கிவிடுவதில்லை. வரி அதிகரிப்பு என்பது பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாகி, பணவீக்கத்தை அதிகரிக்கிறது. இதுதான் முதலாளித்துவ சந்தை விதியாகும்.

எரிபொருள் விலை உயர்வின் கோரமுகம்

ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவரப்படாத இரண்டு துறைகள் எனில் அவை பெட்ரோல்-டீசல்-சமையல் எரிவாயு உருளை மற்றும் மதுபானங்கள் ஆகிய இரண்டு துறைகள்தான்.

இதில் அதானி, அம்பானி ஆகியோர் பெட்ரோல், டீசல், எரிவாயுகளில் முதலீடு செய்து கொள்ளையடிப்பதற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலையுயர்வை கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்காமல் வேடிக்கைப் பார்க்கிறது மோடி அரசு.

2016 ஆம் ஆண்டில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.62, இன்று சுமார் ரூ.97. இதைப்போலவே, டீசல் விலை ரூ.55, இன்று அதன் விலை சுமார் ரூ.90. ஏறக்குறைய இந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 40 சதவிகிதம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதைப்போலவே, 2015 பிப்ரவரி 1-ஆம் தேதி நிலவரப்படி மானியம் இல்லாத சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.600. இன்று அதன் விலை ரூ.1,118.50.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த காலத்தில், ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்த பாஹல் திட்டம் (PAHAL Scheme – நேரடி பயன்பெரும் திட்டம்) இரண்டு முறை திருத்தப்பட்டது. இதன் நோக்கமே, சமையல் எரிவாயுக்கான மானியத்தை வெட்டுவதுதான். இதன் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டில் இருந்து சமையல் எரிவாயு உருளைக்கான மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மட்டும் ரூ.200 மானியம் வழங்கப்படுவதாகவும் பெட்ரோலியத் துறை செயலர் பங்கஜ் ஜெயின் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் இந்த விலையுயர்வு தொடர்ந்து அதிகரித்துவரும் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கான காரணிகளில் முக்கியமானதாகும்.

மோடியின் புதிய இந்தியா

பெண்களுக்கு இலவசப் பேருந்து சேவை என்று தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டாலும் இது நாட்டின் பொதுவான நிலைமை அல்ல. கர்நாடக மாநிலத்தில், கர்நாடகப் பெண்களுக்கு மட்டுமே இலவசப் பேருந்து பயணச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர மக்களின் வாழ்வாதாரங்கள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், அன்றாட செலவினங்கள் அதிகரித்துள்ளன. மதுரை, சென்னை, திருச்சி, கோவை, ஒசூர் போன்ற பெருநகரங்களில் வாழும் சாதாரண மக்கள் ஒரு நாளைக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை பேருந்துக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்தக் கட்டணம் ஒரு அத்தியாவசிய கட்டணமாக உள்ளது.

குறிப்பாக, கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பல சிறு தொழில்கள் அழிந்துபோயின. போக்குவரத்தைச் சீர்படுத்துவது, சுகாதாரத்தைப் பேணுவது என்ற பெயரில் சாலையோரக் கடைகள், தெருக் கடைகள் அனைத்தும் அன்றாடம் நெருக்கடியை சந்திக்கின்றன.

இத்துடன், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் ஏழை உழைக்கும் மக்கள் நகரத்தின் மையப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். வேலைவாய்ப்புக்காக பெருநகரங்களைச் சார்ந்து வாழும் மக்கள் அன்றாடப் பயணம் செய்வதற்கு நிர்பந்திக்கப் படுகின்றனர். தொடர்ச்சியாக வீட்டு வாடகைக் கட்டணங்கள் உயர்த்தப்படுவது, குடிநீர், மின்சாரம் போன்றவற்றிற்கு அதிக செலவழிக்க வேண்டியிருப்பது போன்றவையெல்லாம் நகரவாழ்க்கையை பெரும் சிரமத்திற்குத் தள்ளியுள்ளது.

2014-இல் மோடி ஆட்சிக்கு வந்து வாக்களித்த எந்தத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தவில்லை. ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ரூபாய் போடப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளும் ஏமாற்று நடவடிக்கைகள் என ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களிலேயே தெரிந்துவிட்டது.

ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நெருக்கடியில் இருந்த சிறுதொழில்கள் பல அழிந்துவிட்டன. இச்சூழலில் 2018 இறுதியில் வாகன உற்பத்தித் துறையில் தொடங்கிய பின்னடைவானது மொத்தப் பொருளாதாரத்தையும் நெருக்கடிக்குள்ளாக்கியது. 2019-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த மோடி-நிர்மலா கும்பல், கார்ப்பரேட்டுகளுக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியது. 2020 கொரோனா  பெருந்தொற்றை ஒட்டி ஊரடங்கு காலத்தில், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகள் வழக்கப்பட்டன. இத்துடன், பணப்பரிவர்த்தனைகளை குறைத்து ஆன்லைன் வர்த்தகத்திற்கு மக்களைக் கொண்டுவருவதற்கு இந்தப் பெருந்தொற்று நெருக்கடி பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

இன்னொருபுறம், பா.ஜ.க.வின் இந்த ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் பட்டிதொட்டி எங்கும் ஆன்லைன் விற்பனையின் ஆதிக்கம் வளர்ந்துள்ளது. சிறிய கிராமங்களில்கூட டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் என்ற வகையில் விற்பனைக் கடைகள் உருவாகிவிட்டன. நாட்டின் பல்வேறு நகரங்கள், சிற்றூர்களிலும் சங்கிலித் தொடர் டீ கடைகளான “டீ டைம்”, “கருப்பட்டி காபி” போன்ற கார்ப்பரேட் கடைகள் ஆக்கிரமித்துள்ளன. நுகர்வு கலாச்சாரத்தின் வெளிப்பாடாக கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆண்கள் அழகு நிலையம், பெண்கள் அழகு நிலையங்கள் ஆக்கிரமித்து வருகின்றன. சமூகத்தின் உயர் நடுத்தர வர்க்கம், மேல்தட்டு வர்க்கத்தினருக்கு உரிய பொருளாதாரங்கள் மட்டுமே முன் தள்ளப்படுகின்றன.

குறிப்பாக, டிஜிட்டல் வடிவிலான கல்வி, ஆன்லைன் கல்வி பலமடங்கு அதிகரித்துள்ளது. முதல் வகுப்பில் இருந்தே ஆன்லைன் கல்வி முறை கொண்டுவரப்பட்டுள்ளதால் செல்போன் விற்பனையும் டிஜிட்டலுக்காக மக்கள் செலவிடும் அளவும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் தொழில்நுட்ப கார்ப்பரேட் நிறுவனங்கள் மிகப்பெரும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளன. பைஜூஸ் என்பது இப்படி உருவாகி மக்களின் சொத்தை சூறையாடிய ஒரு கார்ப்பரேட் ஸ்டார்ட் அப் நிறுவனம்தான்.

ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்ட மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்றவை எல்லாம் இன்று குப்புறக் கவிழ்ந்து கிடக்கின்றன. பல நாடுகளுக்கு ஓடி ஓடி அந்நிய மூலதனத்தை ஈர்த்த மோடியால், இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த முடியவில்லை. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்து மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

மோடி ஆட்சிக்கு வரும் போது, 2013-இல் அதானியின் மூலதனம் 26 கோடி டாலராக இருந்தது. இது 2022-ஆம் ஆண்டில் 1,123 கோடி டாலராக 43.2 மடங்கு அதிகரித்தது. அதாவது, 4320 சதவிகிதம் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதைப்போலவே, அம்பானி 2014-இல் 180 கோடி டாலருடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 41வது இடத்தில் இருந்தார். 2019-இல் 540 கோடி டாலருடன் இவரை 9வது இடத்திற்கு உயர்த்தினார் மோடி. 2023-இல் இவர் 820 கோடி டாலருடன் இந்தியாவில் முதல் பணக்காரராக இருக்கிறார்.

மோடி குறிப்பிடும் புதிய இந்தியா என்பது இதுதான். 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வது என்று குறிப்பிட்டு வந்ததன் பொருளும் இதுதான். தற்போது கார்ப்பரேட் கும்பல் 2034-இல் 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வேண்டும் என்று முழங்கிவருகின்றன. மோடியின் இந்த புதிய இந்தியா, ஏழைகளுக்கும் அடிப்படை உழைக்கும் மக்களுக்கும் சுடுகாடாகவே அமையும்.

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் இந்துராஷ்டிரம் என்பது அம்பானி, அதானி, வேதாந்தா, மிட்டல் வகையிலான கார்ப்பரேட் முதலாளிகளுக்கான பாசிசமாகும். இது மதச் சிறுபான்மை மக்கள், தலித்துகளுக்கு மட்டுமல்ல, விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர் உள்ளிட்ட பெரும்பான்மை மக்களுக்கும் எதிரான பாசிசமாகும்.

உழைக்கும் மக்களை ஒட்டச் சுரண்டி, அவர்களில் பெரும்பகுதியினரை அழித்து உருவாக்கும் புதிய இந்தியாதான், இந்துராஷ்டிர இந்தியாவாகும். ஆகையால், ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வின் இந்துராஷ்டிரத்திற்கு எதிரான போராட்டம் என்பது அதன் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான போராட்டமாகவும் அமைய வேண்டும்.


தங்கம்

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2023 மாத இதழ்
புதிய ஜனநாயகம் முகநூல்

விருது வேண்டுமா! ‘சொரணையில்லை‘ என்று எழுதிக் கொடு!!

விருது வேண்டுமா!
சொரணையில்லைஎன்று எழுதிக் கொடு!!

இந்து ராஸ்டிர நிகழ்ச்சி நிரலுக்குத் துணைபோகும் நாடாளுமன்ற நிலைக்குழு!

சுற்றுலா, போக்குவரத்து மற்றும் கலாச்சாரத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு’ கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு இலக்கிய மற்றும் கலாச்சார அமைப்புகள் சார்பில் வழங்கப்படும்  விருதுகளுக்கான நடைமுறைகள் குறித்து சில பரிந்துரைகளை மாநிலங்களவைக்கு அளித்துள்ளது.

அதில் சாகித்ய அகாடமி விருது போன்ற விருதுகளுக்கு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைப் பரிந்துரைக்கும்போது, “அரசியல் காரணங்களுக்காக அந்த விருதுகளைத் திருப்பி அளிக்கப்போவதில்லை” என்ற வாக்குறுதிகளை பெற வேண்டும் என்றும் அதை மீறி விருதுகளைத் திருப்பி அளித்தால், வேறு எந்த விருதுகளுக்கும் அந்த கலைஞரையோ, எழுத்தாளரையோ பரிசீலிக்கக்கூடாது என்றும் பரிந்துரைத்துள்ளது.

இந்தியாவில் உள்ள கலை, கலாச்சார அகாடமிகள் அரசியல் சார்பற்றவையாம்; அதனால் சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை பெறும் போது அரசியல் காரணங்களுக்காக விருதைத் திருப்பி அளிக்கப்போவதில்லை என ஒரு வாக்குறுதியைப் பெற வேண்டுமென இந்தக் குழு கூறுகிறது.

“ஒரு கலைஞருக்குக் கிடைக்கும் உயர்ந்தபட்ச அங்கீகாரமாக சாகித்ய அகாடமி போன்ற விருதுகளை அரசியல் காரணத்திற்காக திருப்பித் தருவது  நாட்டிற்கே அவமானமாக இருக்கிறது” என்றும் புலம்பியுள்ளது நாடாளுமன்ற நிலை குழு.


படிக்க: ரஜினிக்கு பால்கே விருது !! தேர்தலுக்கான மோடி ஸ்டண்ட் || கருத்துப்படம்


தமிழ் எழுத்தாளர்கள் பலரும் கடுமையாக கண்டித்துள்ள நிலையில், 2020-ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருதை வென்ற எழுத்தாளர் இமயம், “இது போன்ற நிபந்தனைகள் எழுத்தாளர்களை அவமானப்படுத்துபவை; ஒரு எழுத்தாளன் எழுத்துக்காக வாழ்ந்த வாழ்க்கையையும் சமூகத்தின் மேலிருக்கும் அக்கறையையும் அவமானப்படுத்தும் நிபந்தனை இது; எழுத்தை அங்கீகரித்து விருதைக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை; விருதை ஏற்பது, ஏற்காதது, திருப்பி அளிப்பது ஆகியவை எழுத்தாளனின் முடிவு” என்று கண்டித்துள்ளார்.

பாஜகவின் இந்துராஷ்டிர  அடக்குமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் இந்தியாவில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் சாகித்ய அகாடமி போன்ற விருதுகளைப்  பெற்ற பலர்  இந்த காட்டுமிராண்டிகளால் தாங்கள் கௌரவிக்கப் பட்டத்தையே அவமானமாக கருதுகின்றனர்.

தனது வாழ்வின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் இத்தகைய விருதுகளைத் தூக்கி வீசத் துணிகின்ற கலைஞர்கள் எழுத்தாளர்களால் சங்கிகளுக்கு ஏற்படும் அவமானத்தை ‘தேசத்திற்கு ஏற்பட்ட அவமதிப்பாக’ சித்தரிகிறது நாடாளுமன்ற நிலைக்குழு. அதனால் அரசியல் அற்ற கலைஞர்களுக்குத் தான் இத்தகைய விருதுகளை பரிந்துரைக்க வேண்டும் என்கிறது.

நிலவுகின்ற அரசியல் சமூக   காரணிகளிலிருந்து துண்டித்துக்கொண்டு தனியே ஒரு கலைஞன் உருவாக முடியுமா? மக்களின் வாழ் நிலையிலிருந்தும் மக்கள் படும் அவலங்களிலிருந்தும் தன்னை துண்டித்து கொண்ட கலைஞன் படைப்பது கலையாகவோ இலக்கியமாகவோ இருக்குமா?

மக்களைப் பற்றி துளியும் அக்கறையற்ற, பத்ரி சேஷாத்ரி, ஜெயமோகன், மாலன் போன்ற  சனாதனவாதிகளாலும் இளையராஜா, குஷ்பூ போன்ற பாசிச அடிவருடிகளாலும் தான் அப்படி இருக்க முடியும்; அவர்களைப் போன்ற சங்கிகளுக்கு விருதுகளைக் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்துவது தான் இதன் பொருள்.

2015-ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கல்புர்கி, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பன்சாரே, தபோல்கர் ஆகியோர் சங் பரிவார் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவங்கள் தொடர்பாக சாகித்ய அகாதமி எவ்விதக் கருத்தையும் தெரிவிக்காத நிலையில், கருத்து சுதந்திரத்திற்கு எதிரான இதுபோன்ற தாக்குதல்களைக் கண்டித்து 39 க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவித்தனர்.


படிக்க: பத்ம விருதுகள் : ‘திறமையான’ மோடிஜி-க்கு வழங்குவதுதானே சரி !


2019-ஆம் ஆண்டு CAA-NPR-NRC யை எதிர்த்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து, புதுச்சேரி பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் 4 மாணவர்கள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அளிக்கும் தங்கப்பதக்கத்தையும் பட்டங்களையும் பெற மாட்டோம் எனப்  புறக்கணித்தனர். மேலும் இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும்வரை எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

சமீபத்தில்  மல்யுத்த வீரர், வீராங்கனைகள், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், பாலியல் குற்றவாளியுமான பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்க கோரிய தொடர் போராட்டத்தில், ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில்  இந்தியாவுக்காக தாங்கள்  வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக அறிவித்தனர்.

இப்படி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலுக்கு எதிராக அறிவுத் துறையினரும், கலைஞர்களும், வீரர் வீராங்கனைகளும், மாணவர்களும் தங்களது உயரிய விருதுகளையே துச்சமாக தூக்கி எறிந்து போராடுவது சர்வதேச அளவில் சங்கிகளுக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்துகிறது.

இப்படியெல்லாம் தான் அம்பலப்படுவதை எப்படியாவது தடுக்க வேண்டிய கட்டாயத்தில் பாசிச பாஜக அரசு உள்ளது. ஆகவே விருதுகளைத் திருப்பித் தருவது, ‘தேசத்தை அவமதிக்கும் செயல்’ என்று நாடாளுமன்ற நிலைக் குழுவின் மூலம் தேசவெறிக் கூச்சலிடுகிறது.

“விருதைத் திருப்பி அளிக்க மாட்டேன்” என வாக்குறுதி அளிப்பவருக்கு மட்டுமே விருது வழங்குவதென்ற கொள்கை முடிவுகளை எடுக்க கலாச்சார அமைப்புகளை நிர்பந்திக்கிறது.

இனி பாசிச அடிவருடிகளுக்கானதாக சாகித்ய அகாடமி உள்ளிட்ட விருதுகள் இதன்மூலம் மாற்றப்பட இருக்கிறது.

இந்த பாசிசக் கும்பல்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டு, அவர்களின் ரத்தக்கறை படிந்த கைகளிலிருந்து விருது வாங்கினால் உணர்ச்சிகள் அற்ற செத்த பிணத்திற்கு சமமாவோம். “கலையும் இலக்கியமும் மக்களுக்கானதே” என்று உயிர்த்துடிப்புடன் இயங்குவது தான்  கலைஞர்கள் எழுத்தாளர்களின் தலையாயக் கடமையாக இருக்க வேண்டும்.


பாரி

ஆர்.எஸ்.எஸ் சொம்பு பாரிசாலன்| தோழர் மருது

ஆர்.எஸ்.எஸ் சொம்பு பாரிசாலன்| தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!