தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு குரல் தூக்குக் கொட்டடியிலிருந்தே கேட்கிறது. மரண தண்டனை கூடாது என்று பொதுவாகக் குரல் கொடுப்பதோடு நில்லாமல் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் தன் தலைக்கு மேலேயே தொங்கிக் கொண்டிருக்கும் தூக்குத் தண்டனையை எதிர்த்தும் ஆணித்தரமாக வாதிடுகிறார் பேரறிவாளன்.

நாட்டின் உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டதாலேயே ஒரு தீர்ப்பு இறுதியும் அறுதியுமான உண்மையாகி விடாது. குறிப்பாக, ‘தடா’ வழக்குகள் குறித்து இதை இன்னுங்கூட அழுத்தமாகச் சொல்லலாம். தடா சட்டத்தில் நீதியைத் தளைப்படுத்தும் கூறுகளில் ஒன்று, குற்றஞ் சாட்டப்பட்டவர் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கான வாய்ப்புகளை குறுக்கி விடுவதாகும். மற்றொன்று, உயர் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் வாய்ப்பை மறுத்து முறையீட்டுப் படிகளில் ஒன்றை உருவி விடுவதாகும். இந்தக் குறையை போக்குமுகத்தான் என்று எண்ணும்படி பேரறிவாளன் நாட்டில் உள்ள நல்லோர்க்கு எல்லாம் செய்துள்ள மேல்முறையீடாகவே இம்மடலைக் கருதலாம்.

தூக்கு மரத்தின் நிழலில் நின்றபோதும் பதற்றப்படாமல் அழுத்தந்திருத்தமாகத் தன் வாதங்களை அவர் முன்வைப்பது படிப்பவர் கருத்தைக் கவரும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்தே அகச் சான்றுகளை அடுக்கடுக்காக எடுத்துக்காட்டி அவர் வாதிடுவதைப் படிக்கும் போது இன்னுமொரு மேல்முறையீட்டுக்கு வாய்ப்பிருக்குமானால் பேரறிவாளன் குற்றமற்றவராக வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்ற எண்ணமே மேலிடுகிறது.

தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையால் தன் பெற்றோர் அடைந்துள்ள துன்பத்தை அவர் எடுத்துக்காட்டுவது நமது நெஞ்சைத் தொடுகிறது. நாம் சொல்கிறோம். அவர்களோடு நாங்களுமிருக்கிறோம்! பேரறிவாளனின் முறையீட்டைக் கேட்டும், பிறரைக் கேட்கச் செய்தும், அவரை ஒப்புரவு நாடும் நல்லிளைஞனாக மீட்டு வந்து விடுதலை வானில் சிறகடிக்கக் காண்பதற்கு இயன்றதனைத்தும் செய்வோம்! (நூலின் முன்னுரையிலிருந்து)

நான், அ.ஞா. பேரறிவாளன், ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு மரண தண்டனைச் சிறைவாசியாக அடைக்கப்பட்டுக் கிடப்பவன். எனது கருணை மனு மேதகு குடியரசுத் தலைவர் அவர்களின் மேலான பரிசீலனையில் இருப்பதால் உயிர்வாழ அனுமதிக்கப்பட்டுள்ளவன். 19 வயதுச் சிறுவனாக அடைக்கப்பட்ட நான், 34 வயது நிரம்பிவிட்ட நிலையில் கடந்த 14.5 ஆண்டுகளைத் தனிமைச் சிறையின் மன இறுக்கத்திலும், துன்பப் பொருமல்களிலும் காலம் கரைப்பவன். வயதின் முதிர்ச்சியும் உயிர்க்காப்புப் போரின் அயர்ச்சியும் தந்துவிட்ட மாறாத தழும்புகள் சுமந்து திரியும் பெற்றோரின் ஒரே புதல்வன் நான்.

… இம்முறையீட்டு மடலுக்கான இரண்டாவது மிக முக்கியக் காரணம், எமது வழக்கின் முன்னாள் தலைமைப் புலனாய்வு அதிகாரியும், பல்நோக்குக் கண்காணிப்புக் குழுவின் (MMDA) அதிகாரியாகவும் அங்கம் வகித்து இவ்வாண்டின் (2005) மார்ச் திங்களில் ஓய்வு பெற்றவரான திரு. இரகோத்தமன் அவர்கள் இக்கொலை தொடர்பாக, ‘குறுந்தகடு’ (CD) ஒன்றை வெளியிட்டு, அது தொடர்பாக ஏடுகளுக்கு வழங்கிய பேட்டியே.

10.8.2005 தேதியிட்ட ‘குமுதம்’ வார இதழின் பேட்டியின் இறுதியில் திரு. இரகோத்தமன் சொல்கிறார் (இணைப்பு – 4)

கொலை நடந்து இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் இதுவரை விடை இல்லை என்கிறார், இரகோத்தமன். அவை: ஸ்ரீபெரும்புதூரிலிருந்து கொலைக்குப்பிறகு சிவராசனும் சுபாவும் ஆட்டோவில் தப்புகிறார்கள். அவர்களுடன் மூன்றாவது நபர் ஒருவரும் பயணிக்கிறார். அவர் யார் என்பது இன்று வரை தெரியவில்லை. மனித வெடிகுண்டு தனு பயன்படுத்திய வெடிகுண்டு பெல்டைத் தயாரித்துக் கொடுத்தது யார் என்பதும் தெரியவில்லை. உங்களில் யாருக்காவது தெரியுமா?

இரகோத்தமன்.

31.7.2005 தேதியிட்ட ‘ஜூனியர் விகடன்’ வாரமிரு முறை இதழின் பேட்டியில் இறுதிக் கேள்வியும் அவரின் பதிலும், (இணைப்பு-5) :

ராஜீவ் கொலை வழக்கில் கண்டுபிடிக்க முடியாத விஷயம் ஏதாவது உண்டா ?

ஒரே ஒரு விஷயம் இருக்கிறது.. தனு தனது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டு பெல்டைச் செய்து கொடுத்த நபர் யார்… என்கிற விஷயம்தான்!

ஆம். இதுவரை வெளிவராத, கண்டுபிடிக்கவே முடியாமல் உள்ள, பல்நோக்கு கண்காணிப்புக் குழு (MDMA) விசாரணைக்கான கருப்பொருளாக உள்ள இந்த வெடிகுண்டு பற்றிய ரகசியத்தோடுதான், எனது வாழ்வும் கல்வியும் பொய்யாகப் பிணைக்கப்பட்டு என்னைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தியிருக்கிறது.

எந்த வெடிகுண்டு பற்றி இதுவரை கண்டு பிடிக்கவே முடியவில்லை என்று முதன்மைப் புலனாய்வு அதிகாரி இன்று சொல்கிறாரோ, அந்த வெடிகுண்டைச் செய்ததே நான்தான் என்பதாக என்மீது பொய்யான பிரச்சாரத்தை இதே மத்தியப் புலனாய்வுத் துறையினர்தான் 1991 ஆம் ஆண்டு நான் கைது செய்யப்பட்ட போது ஏடுகள் வாயிலாகப் பரப்பினர். (நூலிலிருந்து பக். 16-18)

இக்கொலைச் சதியில் வேறு எவரையும் ஈடுபடுத்தியதாக எந்த ஆதாரமோ குற்றச்சாட்டோ என்மீது கிடையாது. இக்கொலைச் சதியில் மேற்பார்வைப் பணி மேற்கொண்டதாகவோ, என்மீது எவ்வித குற்றச்சாட்டும் கிடையாது. என் மீதான குற்றச்சாட்டெல்லாம், சிவராசன் கேட்ட பொருட்களை நான் அவருக்கு வாங்கிக் கொடுத்தேன் என்பது மட்டுமே. இந்நிலையில் எவ்வாறு என்னை நீதியரசர் தாமஸ் இரண்டாவது பிரிவில் இணைத்துத் தூக்குத் தண்டனை வழங்கினார்?

… நான் கேட்க விரும்புவது இதைத்தான்! சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி செல்லை வாங்கிக் கொடுத்தேன் என்பதற்காக எனக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தாகி விட்டது. நாளை, வெடிகுண்டு செய்தவனுக்கு நீதிமன்றம் என்ன தண்டனை கொடுக்கப் போகிறது?

இது குறித்தான விசாரணை பல்நோக்கு கண்காணிப்புக் குழுவின் (MDMA) பரிசீலனையில் உள்ளதையும், அந்த விசாரணையின் முடிவு எனது வழக்கை மிகவும் பாதிப்பதாக அமையும் என்பதையும் குறிப்பட விரும்புகிறேன்.

மேற்சொன்ன எனது தரப்பு நியாயங்களையெல்லாம் முழுக்க முழுக்க நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டே முன்வைத்திருக்கிறேன். (நூலிலிருந்து பக்.43-44)

படிக்க:
சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை ! மாணவர் போராட்டம் !
உ.பி : பிரியாணியை வைத்து பிரச்சினை கிளப்பிய பிரியாணி அண்டா திருடர்கள் !

உலகின் சரிபாதிக்கு மேலான 113 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டாகி விட்டது என்பதாலோ, ‘கடவுள் தந்த உயிரைப் பறிக்கும் உரிமை மனிதனுக்கு இல்லை, உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது’ என்று மனிதநேயத்தின் உச்சத்தில் நின்று காந்தியடிகள் சொன்னவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என்பதாலோ, நான் எனது தண்டனை மாற்றத்தைக் கோரவில்லை.

மரண தண்டனையின் கொடுங்கரங்கள் எனது வாழ்வைச் சின்னாபின்னாப்படுத்தியிருப்பினும், எனது குடும்பத்தார் வாழ்வைத் துன்பக் கடலில் ஆழ்த்தியிருப்பினும், மனித நேயத்தின் அடிப்படையில் இம்மரண தண்டனையை மாற்றியமைக்கக் கோரவில்லை .

காரணம், எனது கடந்த கால வாழ்க்கை மனித அறத்திற்கும், ஒழுக்கநெறிக்கும் உட்பட்டதாய் இருப்பினும், மனிதனை மனிதன் மதித்து வாழ வேண்டும் என்பதற்காகத் தனது வாழ்நாளெல்லாம் போராடி மடிந்த மனிதநேயர் தந்தை பெரியார் கொள்கை வழி வாழ்பவன் என்றாலும், உலகப் பொதுமறை தந்த வள்ளுவனை வழிகாட்டியாய் ஏற்று நடப்பவனாய் இருப்பினும், இன்றைய எனது சூழலில் மனிதநேயம் குறித்து நான் பேசுவது உள்நோக்கத்தோடு பார்க்கப்படும் என்பதால் தவிர்க்கிறேன்.

பிறகு நான் ஏன் தண்டனைக் குறைப்பைக் கோருகிறேன் எனில், ”எனக்கு நன்றாகத் தெரியும் – தலைச்சேரியில் இளம் வழக்குரைஞராக விசாரணை வழக்குகளில் பணி செய்து கொண்டிருந்த போது பார்த்துள்ளேன். குற்றமற்றவர்கள், நூற்றுக்கு நூறு நிரபராதிகள் தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள். அவர்களுக்காக இப்போதும் என் இதயத்தில் குருதி வழிகிறது.” என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் வி. ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் 25.6.1998 இல் திருவனந்தபுரத்தில் ‘மரணதண்டனை’க் கெதிரான மாநாட்டில் பேசியவற்றுக்கு உதாரணமாக எனது வாழ்வு அமைந்து விட்டதே என்ற வேதனையோடு என் வழக்கை வைத்துள்ளேன்.

மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்ட பின் நிரபராதி எனத் தெரியவந்த உலகின் எத்தனையோ நீதியியல் தவறுகளை நாம் கண்டுவருகிறோம். தமிழகத்தில் பாண்டியம்மாள் கொலை வழக்கை எவரும் மறந்திருக்க முடியாது. கொலை செய்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த கணவன் கூண்டில் நிற்க, கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட பாண்டியம்மாள் நீதிமன்றத்தில் தோன்றிய காட்சியை நாடு இன்னும் மறந்து விடவில்லை.

முடிவாக என் வழக்கின் சாரத்தை தருகிறேன்.
1. வழக்கு ‘தடா’ சட்டப்படி நடந்தது.
2. சாதாரண சட்டங்கள் வழங்கிய அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன.
3. இறுதியில் இவ்வழக்கிற்கு ‘தடா’ பொருந்தாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
4. அதன் பின்னரும், ‘தடா’ வாக்குமூலம் எனும் காவல்துறை அதிகாரி பதிவு செய்த ஆவணத்தின் அடிப்படையிலேயே தண்டனை.
5. அந்த வாக்குமூலத்திலும்கூட சதிச் செயல் எனக்குத் தெரியும் என்பதற்கோ சிவராசன், தனு, சுபா ஆகியோரில் எவரேனும் கூறினர் என்பதற்கோ எவ்வித ஆதாரமும் இல்லை .

இவற்றுக்கெல்லாம் மேலாக ‘தடா’ எனும் கொடூரச் சட்டத்தால் நீதிமன்ற முறையீட்டு வாய்ப்பு ஒன்று (High Court Appeal) பறிக்கப்பட்டது. மேலும் ஒரு சட்ட வாய்ப்பு எனக்கு கிட்டியிருக்குமானால் நான் விடுதலை பெற்றிருப்பேன். (நூலிலிருந்து பக்.46-47)

நூல் : தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்
ஆசிரியர் : அ.ஞா. பேரறிவாளன்

வெளியீடு : மோ. ஸ்டாலின் நினைவு நூலகம்,
87, கீழை அலங்கம், தஞ்சாவூர் – 613 001.
தொலைபேசி எண் : 94438 65698

பக்கங்கள்: 48
விலை: ரூ 10.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க