Tuesday, June 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 482

பகுதி 2 : வானதி சீனிவாசன் ஊழலுக்கு ஆர்.எஸ்.எஸ் பாதுகாப்பு !

20

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 2

தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் சொத்து மதிப்பைக் காட்ட வேண்டும் என்ற விதிமுறை வந்ததால் அரசியல்வாதிகள் யாரும் அதிர்ச்சியடையவில்லை. அவர்களுடைய சொத்துக்கள் எல்லாம் பினாமி பெயரில் பாதுகாப்பாக இருப்பதால் பத்திரத்தில் அவர்கள் காட்டும் மதிப்பு என்பது வெறும் பாக்கெட் மணிக்கு நிகரானது. தனது கட்சிக்காரர் கடையில் வாங்கிய மின்விசிறிக்கு கூட தவணை கட்ட முடியாத நிலையில் இருந்த வானதி சீனிவாசன், பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருப்பது போக எவ்வளவு வைத்திருப்பார்? அது பா.ஜ.க காரர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

வானதி சீனிவாசன் இந்த ஆண்டு மார்ச், 2017 -ல் கோவையில் கணவர் சீனிவாசன் பெயரில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். கடைசியாக அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இந்த வீடு சேராது. கோவை, ராஜேந்திர பிரசாத் சாலை, பிளாட் எண் 304 -ல் அடுக்ககத்திலுள்ள அந்த வீட்டின் மதிப்பாக பத்திரப் பதிவில் காட்டப்பட்ட தொகை ரூ. 56 இலட்சம். அதன் சந்தை மதிப்பு நிச்சயம் சில மடங்கு அதிகம் இருக்கும். இந்த சாலை இருக்கும் பகுதியில் அடுக்கக வீடுகளின் விலை சந்தை விலைப்படி சதுர அடி ரூ 5,500 முதல் 8,000 வரை இருக்கிறது.

( வானதி சீனிவாசன் தனது கணவர் சீனிவாசன் பெயரில் வாங்கியுள்ள கோவை வீட்டின் பத்திரம். பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்தவும் )

மேலும், வானதி தனது 2016 -ம் ஆண்டின் பிரமாணப் பத்திரத்தில் குறிபிட்டுள்ள சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (OMR) ஐவி டெரஸ் (IVY Terrace), அடுக்கக வீட்டின் மதிப்பு ரூ. 60 இலட்சம். இந்த வீட்டின் உரிமையாளராக வானதியும், அவரது கணவரும் இருக்கிறார்கள். மின்விசிறி காலத்திற்கு பிறகு அவரது வருமானம் சென்னை, கோவை என வீடுகள் வாங்குமளவு எப்படி உயர்ந்தது? கூடுதலாக சென்னையின் அதி பணக்காரர்கள் வாழும் ராஜா அண்ணாமலைபுரத்திலும் அவருக்கு ஒரு வீடு இருக்கிறது. பிரமாணப் பத்திரத்தின்படியே அதன் மதிப்பு மூன்று கோடி ரூபாய். உண்மை மதிப்பு எவ்வளவு, இந்த வீட்டை வாங்குவதற்கு பணம் எங்கிருந்து வந்தது?

பந்தல் கோவிந்தன் என்ற தமிழ்மாநில காங்கிரசைச் சேர்ந்தவர் 2000 -ம் ஆண்டு ஒரு கடத்தலில் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்படுகிறார். அப்போது உத்தமர் வாஜ்பாயின் அரசு நடந்து கொண்டிருந்தது.

“அவரை வழக்கில் இருந்து நிரபராபதியாக மாற்றியவர் திருமதி.வானதியின் கணவர் சு.சினிவாசன் என்ற அன்றைய மத்தியரசின் போதை பொருள் தடுப்புத்துறை வழக்கறிஞர். அதற்கு சன்மானமாக திருமதி.வானதி சினிவாசனின் Zylog கம்பெனி புகழ் உடன்பிறப்பான திரு.சிவக்குமார் கந்தசாமி பெயருக்கு வீடு கைமாறுகிறது. அந்த வீடு 2014 -ல் திருமதி.வானதி சினிவாசன் பெயருக்கு செட்டில்மென்ட் பத்திரம் ஆகிறது. ஆவண முகவரி-
R/O 19-1/10, Pattammal Street, Raja Annamalai Puram, Chennai 600028
இதை அன்று சொன்ன திரு.Y.S.கண்ணன் அவர்களுக்கு அடி, உதை வழங்கப்பட்டது.
ஆனாலும் உறுதியாக அன்று முதல் இன்று வரை வசந்த சேனையை வட்டமிடும் கழுகு என நிலை தடுமாறாமல் அவர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.” – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

***

தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறாத போதே ஒருவரால் ஊழலில் ஈடுபட்டு இவ்வளவு குறுகிய காலத்தில் சொத்து மதிப்பை உயர்த்திக் கொள்ள முடியுமா? இதற்கும் சைலாக் பற்றிய குற்றச்சாட்டுக்கும் வானதி சீனிவாசன் என்ன கூறுகிறார்?:

நடுவில் இருப்பவர் ராமானுஜம் சேஷரத்னம்.

”Zylog என்னும் நிறுவனத்தை நிறுவியவர்கள் திரு.சுதர்ஷணம் மற்றும் திரு.ராம் சேஷரத்தினம் ஆகியோர். இவர்கள் இருவரும் RSS ஸ்வயம்சேவகர்கள் ஆவர். இவர்கள் எங்களுக்கு 30 வருடங்களுக்கும் மேலாக குடும்ப நண்பர்கள் என்கின்ற காரணத்தால் எனது கணவர் திரு.சீனிவாசன் இவர்களின் நிறுவனத்திற்கு ஆரம்ப காலத்தில் சட்டம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வந்தார். இதற்கான இந்த நிறுவனம் 2007 -ஆம் ஆண்டு பொதுத்துறை நிறுவனமாக (Public Limited Company) மாறிய போது 5 மதிப்புள்ள 20,000 share-கள் எனது கணவர் திரு.சீனிவாசனுக்கு அளித்தது. இதன் அன்றைய மதிப்பு 1,00,000(ரூ.ஒரு இலட்சம்) ஆகும். இந்த 20,000 பங்குகளும் தற்போது வரை அவரின் பெயரிலேயே இருக்கிறது, இதனை எனது தேர்தல் Affidavit -இலும் கூட சமர்பித்துள்ளேன், அதற்கான ஆதாரம் புகைப்படம் மூலம் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது. (இந்த Affidavit நகலை யார் வேண்டுமானாலும் இணையத்தில் எளிதாக பெறலாம்).

எனது சகோதரர் சில காலம் இந்த Zylog நிறுவனத்தில் மென்பொருள் சேவை தொடர்பான பணி மட்டுமே செய்து வந்தார். எனது சகோதருக்கு மேற்படி நிர்வாகத்தில், குறிப்பாக நிதி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் எவ்வித பங்கும் இல்லை. இந்நிறுவனம் தற்போது சில சிக்கல்களை சந்தித்து வழக்குகளிலும் சிக்கி அதனை சந்தித்து வருகிறது, CBI புலனாய்வு விசாரணை உட்பட.

எனது கணவருக்கு இங்கு 20,000 பங்குகள் இருப்பதை தவிற எனக்கும் இந்த நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. என் பெயரில் இப்போதும், எப்போதும் ஒரு பங்கு கூட இந்நிறுவனத்தில் இருந்தது இல்லை . என் மீது அவதூறு எழுதுபவர்கள் தங்கள் வசம் இருக்கும் ஆதாரங்களை CBI வசம் ஒப்படைக்கட்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசில் எந்த ஊழல் குற்றம் நிரூபிக்க பட்டாலும் உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதை விடுத்து முகநூலில் உண்மைக்கு புறம்பான விஷயங்களை தினமும் எழுதுவது காழ்ப்புணர்ச்சியின் காரணமாக எழுதப்படுவது ஆகுமே தவிற உண்மை ஆகாது.

இதுதான் வானதி சீனிவாசனின் விளக்கம்.

வானதி சீனிவாசனின் தன்னிலை விளக்கத்திலேயே இந்த ஊழலில் தான் மட்டும் தனியாக இல்லை என்றும், ஆனானப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தொடர்பு இருப்பதையும் கொளுத்தி போடுகிறார். சைலாக் நிறுவனர்கள் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம் சேவர்கள் என்று இங்கே கூறப்பட வேண்டிய அவசியம் என்ன? ஆர்.எஸ்.எஸ் புனிதமான இயக்கம் என்ற பக்தியுணர்வு இருந்தால் வானதி இந்த விவரத்தை மறைத்திருக்க வேண்டும், வலிந்து கூற வேண்டியதில்லை. சரி பிறகு எதற்கு கூறுகிறார்? சைலாக் நிறுவனர்கள் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என்பதால் இந்த ஊழல் வழக்கு மேலிடத்திற்கு சென்றாலும் தான் காப்பற்றப்படலாம் என அவர் உறுதியாக நம்புகிறார். ஒருக்கால் அந்நிறுவனர்கள் வெறுமனே முதலாளிகளாக இருந்தால் வானதியின் போட்டி கோஷ்டியே அவரை சிறையில் தள்ளியிருக்கும்.

வானதியின் சகோதரர் சிவக்குமார்

அடுத்து சைலாக் நிறுவனர்கள் குடும்ப நண்பர்கள் என்றும் வானதி குறிப்பிடுகிறார். அப்படி என்றால் ஆர்.எஸ்.எஸ் தொடர்புக்கு என்ன பொருள்? வானதியும் சைலாக் நிறுவனர்களும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க பிரமுகர்கள் என்பதாலேயே இந்த நட்பும் ஊழலும் சாத்தியமாயிருக்கிறதே அன்றி வெறும் குடும்ப நட்பு அல்ல.

வானதி ஒரு பிரபலமான தமிழக பா.ஜ.க தலைவர், அவர் கணவர் மத்திய அரசு வழக்குறைஞர். ஆகவே இவர்களை கவனித்தால் “அதாவது அந்த 20,000 பங்குகள்” தமது ஊழலை, மோசடிகளை மறைக்க முடியும் என்று சைலாக் நிறுவனத்தின் ஸ்வயம் சேவகர்கள் யோசித்திருக்கிறார்கள். இல்லையேல் சட்ட ஆலோசகர், இயக்குனர் பதவிகள் ஏன் வானதி-அன்-கோவிற்கு வழங்கப்படவேண்டும்?

வானதி சீனிவாசன் தனது தம்பி சைலாக் நிறுவனத்தில் தொழில்நுட்ப வேலையில் மட்டும் இருந்தார் என்று கூறுவது அப்பட்டமான பொய். அவர் சைலாக் நிறுவனத்தின் ஐரோப்பிய கிளையில் இயக்குநராகவும், இங்கே தாய்க் கம்பெனியில் இயக்குநராகவும் இருந்திருக்கிறார். ஒரு கம்பெனியின் இயக்குநர் என்பதற்கு பொருள் அவர் தொழில் நுட்ப வேலை மட்டும் செய்பவரா என்ன?

மேலும், சைலாக் ஐரோப்பிய கிளையின் இயக்குனராக 2012 முதல் இருந்த சிவக்குமார் 19 டிசம்பர் 2016 அன்று விலகுகிறார். சைலாக்கில் இருந்து விலகியதிலிருந்து சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு 30 ஜனவரி 2017 அன்று யூனியன் வங்கி அளிக்கும் புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்கிறது. வழக்கு வருவதை முன்னுணர்ந்து சிவக்குமார் விலகினாரா அல்லது அவர் விலகுவதற்கு கால அவகாசமளித்த பின் புகாரும், வழக்கும் பதியப்பட்டதா?

மேலும், வானதி தனக்காக துவங்கிய vanathi.bjp.in என்ற தளம், அவரது தம்பி சிவக்குமாரின் சைலாக் நிறுவன அமெரிக்க முகவரியைக் கொண்டு துவங்கப்பட்டது. சைலாக்கின் மீதான அரசு விசாரணை துவங்கிய பின் இப்போது வானதியின் தளம் அழிக்கப்பட்டுள்ளது.

சைலாக் நிறுவனத்தின் ஐரோப்பிய முகவரி.

சைலாக்கின் 20,000 பங்குகள் தனது கணவரின் சட்ட ஆலோசனை சேவைகளுக்கு அந்நிறுவனம் வழங்கியது என்கிறார். வானதியின் கூற்றுப்படி அவரது கணவரின் சட்ட ஆலோசனைகளுக்காக பங்குகளை கொடுத்ததாகவே வைத்துக் கொள்வோம். அதன் இன்றைய மதிப்பு ரூ.5 என்பதும் சரியே. ஆனால் அன்று அவை கொடுக்கப்பட்ட காலத்தில் பங்கின் முகமதிப்பு ரூ. 10, சந்தை மதிப்பு ரூ.350, இவற்றில் எந்த அளவீட்டைக் கொண்டு மதிப்பிட்டிருப்பார்கள், மதிப்பிட வேண்டும்?

ஒரு பங்கின் விலையை ரூ. 350 என்று மதிப்பிட்டால், ரூ.70 இலட்சம் மதிப்புள்ள பங்குகளை தனது சேவைகளுக்கு கூலியாகப் பெற்றிருக்கிறார் என்றாகிறது. எனில் சீனிவாசன் அவர்களின் பினாமியாக இருக்க வேண்டும் அல்லது அவர்களின் பல முறைகேடுகளுக்கு உடந்தையாக இருந்திருக்க வேண்டும். மேலும், செபியின் விதிமுறைகளின் படி விருப்பம் போல் பங்குகளை தூக்கிக் கொடுத்து விட முடியாது.

ஒரு பங்கின் விலையை ரூ. 10 என்று மதிப்பிட்டால், அது பங்குச் சந்தையில் மற்ற முதலீட்டாளர்களை ஏமாற்றுவதாகும். இதுவும் விதிமுறை மீறல்.

இதைப் போன்று முறைகேடுகளுக்காகத் தான் செபி சைலாக் நிறுவனத்தை தடை செய்திருந்தது. ஆக, சைலாக்கின் பங்குச் சந்தை மற்றும் வங்கி முறைகேடுகளில் வானதி மற்றும் அவரது கணவருக்கு தொடர்பிருக்கிறது. முக்கியமாக தற்போது இந்த நிறுவனம் சில சிக்கல்கள், சிபிஐ விசாரணையை சந்தித்து வருகிறது என்று பொருளாதார மோசடிகளை நாகரீகமாக கூறுகிறார். தன் மீது சுமத்தப்பட்டது குற்றச்சாட்டு எனில் அந்நிறுவனம் செய்திருக்கும் முறைகேடுகள் என்ன என்று விரிவாக சொல்ல வேண்டுமல்லவா? அதை விடுத்து சிக்கல் என்று நைசாக நழுவுவது என்ன நாகரீகம்? செஞ்சோற்றுக் கடனா, திருடனுக்கு தேள் கொட்டியதால் வரும் பிதற்றலா?

இனி, வானதியின் விளக்கத்தைப் பற்றி திருச்செந்தூர் பா.ஜ.க பிரமுகர்ர பாலசுப்பிரமணிய ஆதித்யன் வெவ்வேறு பதிவுகளில் சொல்வதைப் பார்ப்போம்.

“2007 -ம் ஆண்டு ரூ.5/- முக மதிப்பில் 20,000 Zylog பங்குகளை கணவர் சு.சீனிவாசன் வாங்கியதாக சொன்ன வானதி அக்கா 2011 வருட சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தேர்தல் அபிடவிட்டில் அதை ஏன் குறிப்பிடவில்லை?”

“1. முதலில் SEBI -யில் செய்யப்பட்ட பதிவின் படி Zylog கம்பெனி ஷேர்கள் 10 ரூபாய் முக மதிப்பு கொண்டவை. 10 ரூபாய் பங்கை 5 ரூபாய் மதிப்பு என கூறியதில் வானதியின் முதல் பொய் வழக்கம் போல் துவங்குகிறது.

2. பொதுச் சந்தையில் பங்கு வர்த்தகத்திற்கு வரும் நிறுவனம் தங்களுக்கு ஆலோசனை வழங்கும் நபருக்கெல்லாம் தான் தோன்றித்தனமாக 20000 ஷேர்களை கூலியாக தர முடியாது. SEBI மற்றும் கம்பெனி சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே தரமுடியும். ஆக எப்படி வானதியின் கணவருக்கு Zylog கம்பெனி கூலியாக 20,000 க்ஷேர்களை தந்தார்கள்?? அவ்வாறு ஒதுக்கியதில் சட்ட முரண்கள் உள்ளதா என்பதை வானதி விளக்க வேண்டும்.

3. 2007 வருடம் ஜுலை 20 -ம் தேதி இந்த பங்குகளை விற்க Public Issue பதிவை துவக்கப்பட்டது. அது ஜுலை 25-ம் தேதி வரை நடந்தது. 10 பங்கின் விலை 330 முதல் 350 என Price band நிர்ணயிக்கப்பட்டது. இந்த பங்கு வெளியீடு சுமார் 5 மடங்கு பங்கு மூலதனத்தை பெற்றது. ஆதலால் ஒரு பங்கின் விலை Higher price band என முடிவு செய்யப்பட்டு 350 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விண்ணப்பித்தோருக்கு வழங்கப்பட்டது. அப்படி என்றால் வானதியின் கணவருக்கு 20,000 பங்குகளை 70 லட்சம் ரூபாய்க்கே ஒதுக்கி இருக்க முடியும். தனது கணவர் செய்த சேவைக்கு 70 லட்சம் மதிப்புள்ள பங்குகளை தர Zylog நிறுவனத்திற்கு கம்பெனிகள் சட்டப்படி உரிமை இல்லை என்பதால் 70 லட்சம் கொடுத்தே பங்குகள் வாங்கப்பட்டன என்பது உறுதியாகிறது.

4. ஒரு Public limited company தங்களது மனதிற்கு தோன்றியது போல பங்குகளை, அதுவும் 70 லட்சம் வரை மதிப்புள்ள பங்குகளை இலவசமாக, சேவையை பாராட்டி அளித்தார்கள் என கூறுவது வானதி அவர்கள் அவிழ்த்து விட்ட பொய் மூட்டைகள் என்பது உறுதியாகிறது.

5. அந்த பங்குகள் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் முறையாக பங்கு சந்தைகளில் விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. அப்போது அதன் விலை 525 ரூபாயில் துவங்கி, 557 ரூபாய் வரை செல்கிறது. ஒருவேளை அது அவ்வாறு வழங்கப்பட்டு இருந்தால் முதலீடு செய்தவர்களை மோசடி செய்த ஷேர்களை இலவசமாகவோ கூலியாகவோ தந்தவர்கள் மீதும், பெற்றவர்கள் மீதும் வழக்காக யாரும் பதியலாம் என்பதையும் அறிவீர்கள்தானே!?.

6. ஆக Zylog நிறுவனத்தால் இலவசமாக வழங்க முடியாது என்றால், அதை பணம் கொடுத்து மட்டுமே வாங்க முடியும். அப்படியென்றால் 70 லட்சங்கள் கொடுத்து வாங்க வேண்டும். வானதியின் கணவரின் அந்த வருடத்திய Financial year வருமான வரி கணக்கில் அந்த ஆண்டுகளில் காட்டிய தொகைக்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா என்பதையும் ஆராய வேண்டிய கடமை உள்ளது.

7. ஒருவேளை இப்படி வந்த வருமானத்தை கணக்கில் காட்டாமல் மத்திய அரசின் வருமான வரித்துறையை மோசடி செய்திருந்தால் ASG சு.சீனிவாசன் அவர்களின் இச்செயல் சட்டவிரோதமானதுதானே என சாமான்ய மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். கணக்கில் வாராத சொத்தை வைத்திருந்த வழக்கில் இத்தகைய குற்றம் செய்த குற்றவாளிகளை நியாயப்படி கைது செய்யலாமே?.” – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

இனி சைலாக்கின் நிறுவனர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று வானதி சொன்னதைப் பார்ப்போம்.

பிரகாஷ் குமரகுரு மற்றும் இராஜமாணிக்கம் வீரா ஆகிய பாஜக வைச் சேர்ந்த தம்பிகளும், அக்கா வானதிக்கு ஆதரவாக போட்ட ஃபேஸ்புக் பதிவில் சைலாக்கின் நிறுவனர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தானென்பதை உறுதிப் படுத்தியுள்ளார்கள்:

zylog நிறுவனத்தை பொறுத்த வரை அதன் நிறுவனர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள். திரு. சுதர்ஷன் ஜி மற்றும் திரு .ராம் ஜி இவர்களின் கூட்டு உழைப்பாலும், முயற்சியாலும் சிறு துளியாக இருந்து பெரு வெள்ளமாக மாறி, இன்று சிதிலமாகி வெளியாரின் கைப்பிடியில் சிக்கி சீரழிந்து, வழக்கு வல்லடியில் மாட்டி அவப்பெயரோடு இருக்கிறது. – பிரகாஷ் குமரகுரு

யார் அந்த வெளியார்? வானதி குடும்பமா? சிறு துளி வெள்ளம் எப்படி பெரு வெள்ளமாகியது? அந்தப் பெருவெள்ளம் எப்படி சிதலமாகியது? ஆர்.எஸ்.எஸ்-ல் சேர்ந்தால் இப்படி மூன்று கண்டங்களிலும் சொகுசாக தொழில் துவங்கி வெள்ளமென பணம் சேர்ப்பதற்கு ஏற்பாடு செய்கிறார்கள? இல்லை ஆர்.எஸ்.எஸ் என்று சொன்னால் ஊழல் இல்லை என்றாகி விடுமா?

வானதி சீனிவாசன் தமிழக பி.ஜே.பி-யில் முக்கிய தலைவர். அவருடைய கணவர், துணை சொலிசிட்டர் ஜெனரல். சீனிவாசன் சைலாக் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராக இருந்துள்ளதுடன், அதன் 20,000 பங்குகளையும் வைத்துள்ளார். வானதியின் தம்பி சிவக்குமார் சைலாக்கில் இயக்குனராக இருக்கிறார். சைலாக்கின் நிறுவனர்கள் இருவருமே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள். மத்தியில் யாருடைய ஆட்சி நடக்கிறது என்பதை சொல்லவும் வேண்டுமா?

வானதி சீனிவாசன் குடும்பத்துடன் – கோடிஸ்வரர்களின் எளிமை!

Mygov.in இணையத்திற்கு வரும் தகவல்களை பகுப்பாய்வு செய்வது மற்றும் பராமரிப்பதற்காக மத்திய அரசு கோரிய ஒப்பந்தத்திற்கு சைலாக் தவிர ஐ.பி.எம் (IBM), ஹெச்.பி (HP) உள்ளிட்டு நான்கு நிறுவனங்கள் போட்டியிட்டன. சர்வதேச நிறுவனங்களையே தோற்கடித்து மத்திய அரசின் ஒப்பந்தம் சைலாக்கிற்கு எப்படி கொடுக்கப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள துப்பறியும் மூளை தேவையில்லை.

இந்த ஒப்பந்தத்தைப் பெற்ற போது சைலாக் ரிசர்வ் வங்கியால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தது, செபியால் தடைசெய்யப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த அதிகாரபூர்வ கடன் தீர்ப்பாளரின் (Official Liquidator) கீழ் இயங்கிவந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், Mygov.in இணையதளத்திற்கு அனுப்பப்படும் தகவல்கள் மற்றும் புகார்களை சைலாக் நிறுவனம் கையாண்டு மேலாண்மை செய்துவந்துள்ளது. அதாவது எந்தெந்த தகவல் அல்லது புகார்களை எந்தெந்த அதிகாரிகளுக்கு அனுப்புவது, எந்த தகவல்களை பிரதமர் மோடிக்கு அனுப்புவது, எவற்றை நிராகரித்து குப்பையில் போடுவது என்ற வேலையைச் செய்து வந்துள்ளது. சைலாக் மோசடி நிறுவனம் என்று தெரிந்தே அது தேர்ந்தெடுத்துத் தரும் தகவல்களைக் கொண்டு தான் மோடி செயலாற்றியிருக்கிறார் என்றால் அவரது நிர்வாகத் திறமையை பார்த்துக் கொள்ளுங்கள்.

மோடிக்கு அனுப்பப்பட்ட சில அமைச்சர்கள் மீதான புகாரை சைலாக் இடைமறித்து மாற்றியது, மோடியின் பார்வைக்கே செல்லவிடாமல் அழித்தது. இதை பற்றிய தகவல் மோடிக்கு தெரிந்தவுடன் mygov.in தளத்தையே சைலாக் முடக்கியது. இதையடுத்து சைலாக்கின் மீது மத்திய அரசின் விசாரணை நடந்து வருகிறது என்று சொல்கிறார் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

ஆர்.எஸ்.எஸ்-ன் தொடர்பை வைத்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயலும் வானதியை பாலசுப்ரமணிய ஆதித்யனும், சங்கர நாராயணனும் கண்டிக்கிறார்கள். இருவரும் இன்னமும் ஆர்.எஸ்.எஸ், மோடி மற்றும் அமித் ஷா மீது பெரு மதிப்பு வைத்திருக்கிறார்கள்.

“இந்த நேரத்தில் முகநூல் குற்றசாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நினைத்துக்கொண்டு வானதி தனது பக்கத்தில் நாம் உயிரென மதிக்கும் சங்கத்தை (RSS) வம்பிற்கு இழுப்பது கடும் கண்டனத்திற்குறியது. CBI குற்றச்சாட்டிலோ, பத்திரிகை செய்திகளிலோ சங்கம் பற்றி எந்த குறிப்பும் இல்லை….நம் உயிரிலும், உணர்விலும் இரண்டற கலந்த சங்கத்தை களங்கப்படுத்த முயலக்கூடாது.” – என்கிறார் சங்கர நாராயணன்.

அமித்ஷாவை சந்திக்கும் பாலசுப்ரமணிய ஆதித்யன் – அதானியின் ஆசியுடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.கவிடம் என்ன நீதி கிடைக்கும்?

“Zylog என்னும் நிறுவனத்தை நிறுவியவர்கள் திரு.சுதர்ஷனம் மற்றும் திரு.ராம் சேஷரத்தினம் ஆகியோர். இவர்கள் இருவரும் RSS ஸ்வயம்சேவகர்கள் ஆவர் என திருமதி.வானதி சீனிவாசன் அறிக்கை கொடுத்து இருந்தார். நானும் RSS பயிற்சி முடித்து உள்ளேன். நான் யாருக்கோ பணம் தரவில்லை என்றால் RSS ஸ்வயம் சேவகர் பாலு பணம் தரவில்லை என்பார்களா?. என் பெயரை சொல்லி பணம் தரவில்லை என்பார்களா?. சுயமாக உனது வேலையை நீயே செய்ய வேண்டும் என அனைவருக்கும் சொல்லி தரும் உன்னத பணியே RSS அமைப்பின் வேலை. அதைதான் RSS சங்கம் நமக்கு சொல்லித் தந்தது. சொல்லித் தருகிறது. உங்கள் சந்தர்ப்பவாதத்துக்கும், கடனுக்கும் RSS அல்ல”. – என்கிறார் பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

கவனிக்க, பாலசுப்பிரமணிய ஆதித்யன், சங்கரநாராயணன் இருவருமே சைலாக்கின் நிறுவனர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று எங்குமே மறுக்கவில்லை. ஏன் சங்கத்தை இழுக்கிறாய் என்கிறார்கள்.

சுதர்ஸன் வெங்கட்ராமன் மற்றும் ராமானுஜம் ஷேஷரத்தினம் ஆகியோருக்கு கிடையிலான நட்பில் சங்கம் இருக்கிறது. இவர்களுக்கும் அக்கா வானதி குடும்பத்துக்கும் இருக்கும் நட்பில் சங்கம் இருக்கிறது. வங்கிக் கடன் வாங்கியதில் சங்கத்தின் செல்வாக்கு கட்டாயம் இருந்திருக்கும்.

பா.ஜ.க -வின் பின்னாலும் சங்கம் இருக்கிறது, பா.ஜ.க மத்தியில் ஆள்கிறது. இந்திய அரசின் mygov.in தள ஒப்பந்தம் சைலாக் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதிலும் சங்கம் இருக்கிறது. ஆக, முறைகேட்டில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் சங்கத்தை இழுக்காதே என்றால் எப்படி? இல்லை ஆர்.எஸ்.எஸ்தான் உடனே ஊழல் செய்த ஸ்வயம் சேகவர்களை நீக்கிவிட்டதா? பா.ஜ.கவும் வானதியை நீக்கியிருக்கிறதா? இல்லையே?

சங்கம் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும், நல்ல பழக்கவழக்கங்களை மட்டுமே கற்றுக் கொடுக்கும். ஆர்.எஸ்.எஸ் ஒழுக்கத்தையும் சத்தியத்தையும் ஹிந்து பண்பாட்டையும் போதிக்கும் உன்னத நிறுவனம் என்கிறார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.

“வானதியின் சகோதரர் சிவக்குமார் பற்றிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. சுதர்சன் மற்றும் ராமானுஜத்தால் துவங்கப்பட்ட நிறுவனம் அவர்களின் கையையே விட்டு போனதில் ஒரு துரோக வரலாறு இருக்கிறது என்ற உண்மை நம்மை திகைக்க வைக்கிறது.

வானதியின் தம்பியான சிவக்குமார் ஒரு சாதாரண கூலிக்கு ஜைலாக் நிறுவனத்தில் சேர்ந்த நபர். வானதி மற்றும் சீனிவாசன் ஆகியோருக்கு சுதர்சனுடன் இருந்து உறவால் அதிவேகமாக ஜைலாக் நிறுவனத்தின் பதவிகளில் உயர்ந்தார். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. நிறுவனத்தில் வேலைக்கு சேர்ப்பவர்கள் எல்லாரும் சிவக்குமார் சொல்லியதால் சேர்க்கப்பட்டவர்கள் என்ற நிலை வந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட சிவக்குமார் தங்கியது, சாப்பிட்டது முழுக்க, முழுக்க சுதர்சனின் அமெரிக்க பங்களா வீட்டில்தான். ஜைலாக்கின் ஐரோப்பிய சேவைகளின் தலைமை பொறுப்பு சிவக்குமாருக்கு வழங்கப்படுகிறது. அனைத்து அதிகாரங்களும் சிவக்குமார் கையில் என்ற நிலைமையும் உருவாகிறது.

இப்போதுதான் இந்த துரோக வரலாற்றின் உச்சம் துவங்குகிறது. ஜைலாக் நிறுவனத்திற்கு வர வேண்டிய 20 மில்லியன் யூரோவை ஒரு நிறுவனம் ஜைலாக்கிற்கு அனுப்புகிறது. சுதர்சனும், ராமானுஜமும் ஒருவரை ஒருவர் கவிழ்க்க அதிகார போட்டியில் இருந்த இருண்ட காலம் இது.

சைலாக் சுதர்சன் வெங்கட்டராமன்.

20 மில்லியன் என்பது சுமார் 140 கோடிகள். 2007-ல் ஜைலாக் பொது பங்குகளை வழங்கிய போது வெளியில் விடப்பட்டது 36 லட்சம் பங்குகள் மட்டுமே. 10 ரூபாய் மதிப்பில் அவற்றால் 3.6 கோடிகளை மட்டுமே கொண்டு வந்து இருக்க முடியும். ஆனால் முக மதிப்பு 10ரூபாய், விற்கப்படும் விலை 350 ரூபாய் என இருந்ததால் அதன் மொத்த விற்பனை 126 கோடிகளை தொட்டது. நான் கூறும் இந்த 20 மில்லியன், அதாவது 140 – 145 கோடிகள் கம்பெனி வருமானம் வரும் காலத்தில் ஜைலாக்கின் 350 ரூபாய்க்கு வழங்கப்பட்டு இருந்த பங்குகளின் மதிப்பு 15 ரூபாய்க்கும் குறைவாக பங்கு சந்தையில் விற்றுக் கொண்டு இருந்து (இது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகிறது). ஆக ஜைலாக்கின் பங்குகளின் மதிப்பை குறைத்து, மக்களிடம் இருந்து பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி விட திட்டமிட்டு சுதர்சன், தனது ஐரோப்பிய அலுவலகத்திற்கு வந்த பணத்தை தனது சொந்த வங்கிக் கணக்கிற்கு அனுப்புமாறு சிவக்குமாரிடம் பணிக்கிறார். ஏற்கெனவே மற்றொரு முக்கிய பங்குதாரரும், கம்பெனியின் மேனேஜிங் டைரக்டருமான ராமானுஜத்துடன் தனக்கு இருக்கும் பிரச்சனையை இதை வைத்து அனைத்து பங்குகளையும் வாங்கி விட்டு, ராமானுஜத்தை கம்பெனியை விட்டு விரட்ட சுதர்சன் திட்டமிடுகிறார். தனது வீட்டில் தங்கி, தான் போட்ட சோற்றை தின்று,தான் கொடுத்த ஐரோப்பிய தலைமை பதவியை வைத்துக் கொண்டு இருக்கும் சிவக்குமார் தனக்கு துரோகம் செய்ய வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையில் சுதர்சன் இவ்வாறு உத்தரவிட, அங்கு வேறு துரோகமும், சதித் திட்டமும் அரங்கேறி வந்தது.

வானதி தம்பி சிவக்குமார் திருட்டுத்தனமாக ராமானுஜத்துடன் கை கோர்த்தார். பணம் ராமானுஜத்தின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு சிவக்குமாரால் அனுப்பப்படுகிறது. விளைவு, சத்தமில்லாமல் ஜைலாக்கின் பங்குகள் ஒரு மாதத்திற்குள் ராமானுஜம் மற்றும் சிவக்குமாரின் ஆட்களால் வாங்கப்படுகின்றன. எல்லாம் தன் கையில் என சுகபோகங்களுடன் சுதர்சன் வாழ்ந்து வந்த வசந்த காலம் இது.

இரண்டு மாதங்கள் கழித்து தனது மெயிலுக்கு வந்த ஐரோப்பா வங்கியின் கணக்கில் பணம் ராமானுஜத்திற்கு சென்றதை கண்டு அதிர்ந்தார் சுதர்சன். அதே நேரத்தில் கம்பெனியின் பங்குதாரர்களின் கூட்டத்தில் வைத்து சுதர்சன் சேர்மன் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார்.

பிறகு இந்த நிறுவனம் எப்படி கார்த்திக் சிதம்பரத்தின் பினாமிகளின் கைக்கு சென்றது என்ற கதைகள் விரைவில் காண்போமா!….” – பாலசுப்பிரமணிய ஆதித்யன்.

வானதியின் தம்பி சிவக்குமார் செய்தது நம்பிக்கை துரோகம் எனில் அதில் ஸ்வயம் சேவகர் ராம்-ஜீக்கு பங்கில்லையா? ஸ்வயம் சேவகர் சுதர்ஸன் ஜீ, சக ஜீ ராமானுஜத்திற்கு செய்ய நினைத்தது வஞ்சகமில்லையா? ஸ்வயம் சேவகர்கள் சுதர்ஸன் ஜீயும், ராம்-ஜீயும் வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றியது, பங்குச்சந்தை முதலீட்டாளர்களை ஏமாற்றியது மோசடியில்லையா?

இந்திய சுதந்திரப் போராட்டத்தையே காட்டிக்கொடுத்த துரோக வரலாற்றைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் -சுடன் துரோகமும் வஞ்சகமும் ஒட்டிப்பிறந்தவை. அதனால் ஜீக்கு ஜீ சரியாப் போச்சு ஜீ என்கிறார்கள் போலும்.

மற்ற கட்சிகளில் இருந்து வேறுபட்டது என்று சொல்லிக்கொள்ளும் பா.ஜ.க மட்டுமின்றி ஹிந்து ஒற்றுமைக்காக வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ்-சின் உறுப்பினர்களும் துட்டு விசயத்தில் கத்தி, துப்பாக்கி தவிர எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை மேற்கண்ட செய்தி உணர்த்துகிறது. பணமும் அதிகாரமும் கை கோர்க்கும் போது அங்கே யார் பெரியவன் அதாவது யாருக்கு இலாபம் அதிகம் வேண்டும் என்ற சண்டை வந்தே தீரும்.

இதில் சைலாக்கின் நிறுவனர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இருந்து வந்து, அரசு – கட்சி தொடர்புள்ள வானதி & கோ-வை நாடி உடன்படிக்கை செய்து, பிறகு வானதி & கோ-வில் உள்ள வானதி தம்பி நிறுவனர்களின் ஒருவரோடு திருட்டுத்தனமாக தொடர்பு வைத்து முழுக்காசையும் ஆட்டையைப் போடுகிறார். முதலில் அனைவரும் சேர்ந்து வங்கிக் கடன் – பங்குச் சந்தை முறைகேடுகளைச் செய்கிறார்கள். பிறகு தங்களுக்குள்ளேயே அபகரித்துக் கொள்ளும் போக்கில் அடித்துக் கொள்கிறார்கள். பிறகு அரசு விசாரணை வருகிறது. அவர்களுக்கிடையே உள்ள சண்டைகளினால் விவரங்கள் பொதுவெளிக்கு வந்து நாறுகின்றன!

( பாஜக -வின் உள்குத்துக்களால் ஒருவரை ஒருவர் அம்பலப்படுத்திக் கொள்ளும் முகநூல் பதிவுகள் – பெரிதாகப் பார்க்க படங்களின் மேல் அழுத்தவும் )

“என்னை கூலிப்படையை ஏவி விட்டு தாக்கியது போல உங்களையும் தாக்கி விடப் போகிறார்கள். எச்சரிக்கை ஜி.”Kannan Subramaniam (Y.S.கண்ணன்)

G R Suresh Kumar அட ராமா……என்ன தான் நடக்குது தமிழக பா.ஜ.க வில்….. கேள்விப் படும் ஒவ்வொரு தகவலும் உள்ளத்தை உலுக்குகிறதே….அதுவும் தகவல் உரிமைச் சட்டத்தில் மத்திய அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் என்பதால் வலுவான ஆதாரங்களாகவே படுகிறது….. யாரையும் நம்ப முடியவில்லை….. காங்கிரஸ்காரனை ஊழல் பேர்வழி என்று கேவலமாக பேசி வந்த நாம் இனி எங்கு போய் முகத்தை வைத்து கொள்வது ? நம்மை இனி காங்கிரஸ்காரன் காறித் துப்புவானே …. என்ன கண்றாவி இது…

Shanmuga Sundaram இவர் மாத்திரம் இல்லை. திரு. இல. கணேசன் போன்ற பலரும் இதைபோல்தான் செயல்படுகிறார்கள். பதவிக்கு வருவதே பணம் சம்பாதிக்கதான் என்பது BJP யிலும் நடைமுறை ஆகிவிட்டது.

Krishnan இது உண்மையாகவே இருந்துவிட்டு போகட்டும். இதை பற்றிய செய்தியும் பல நண்பர்கள் சில நாட்களுக்கு முன்பு கூட பதிந்தனர். அதை மறந்தும் போயிருப்பர். அதற்காக யார் தும்மினாலும் அது பாஜக -வினால் தான் நிகழ்ந்தது என்று கூறி கேவல திராவிட, தமிழ் அரசியல் செய்யும் கேடுகெட்ட மனிதர்கள் இருக்கும் தமிழகத்தில் வளராத பாஜகவை…இப்படி பேசி இன்னமும் பொசுக்க தெவையில்லை என்பதே எனது கருத்து.

Krishnan மேலும் இதை பற்றி பேசுவதற்கு எதிர்கட்சிகள், நடுநிலைகள் என பலர் இருக்கின்றனர். இதில் நீங்கள் பேசுவது அந்த பொன்னார் வானதி பதிவில் உமிழ்ந்த பின்னூட்டங்களை மனதில் வைத்தே பதிக்கின்றீர்கள் என்பதும் உங்களை உட்பட அனைவருக்கும் தெரிந்ததே. வழக்கம் போல் பதியும் உங்கள் பாணியில் பதிவுகளை தொடருங்கள். அதுவே அழகு! இங்கு பாஜக வளர்ந்த பிறகு நாம் அதை கொத்தி பிரித்தெடுத்து மேய்ந்துவிடலாம். புல் கூட வளர முயற்சி செய்யும் இந்த தமிழக பாஜக என்ற கட்டாந்தரையில் அமிலத்தை ஊற்ற வேண்டாம்.

அப்புறம் இதே போன்ற குற்றச்சாட்டுகள் ஹெச் ராஜா அவர்கள் தலைவர் ஆகலாம் என்ற ஊகங்கள் எழுந்த போது அவர் சகோதரரோ, நண்பரோ சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தவறான நடவடிக்கைகளுக்கு அவர் தார்மீக பொறுப்பேற்க வேண்டும் என்று மொட்டை பெட்டிஷன் போடும் கும்பல்கள் களமாடின. இதே போல இன்னொரு மாநில செயலாளர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தற்போதைய மாநில தலைவர் டாக்டரின் மைத்துனர் தாது மணல் கொள்ளையன் வைகுண்ட ராஜநுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதி மன்றத்தில் செயல்பட்டு 32 வழக்குகளில் விடுதலை பெற்று தர உதவினார் என்று செய்தி வந்த போதும் அவரின் பதவி விலகல், விளக்கம் கோரப்பட்டது, ஆனால் பொது செயலாளர் விஷயத்தில் எந்த விளக்கமும் கேட்கபடாமல் தொடர் அவதூறுகள் மட்டுமே முன் வைக்கப்பட்டு அவரை காவு வாங்க ஒரு கும்பல் துடிக்கிறது. – Prakash Kumaraguru

– தொடரும்

– வினவு புலனாய்வுக் குழு

முந்தைய பாகத்திற்குச் செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும்

தமிழக பா.ஜ.க-வின் ஊழல்கள் : பகுதி 1 – வானதி சீனிவாசன்

ஆதாரங்கள் :

_____________

பா.ஜ.க-வின் ஊழலை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் இந்த புலனாய்வுக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத் தரவும். நன்றி

கருத்துக் கணிப்பு : அதிமுக இணைப்பில் முதல் அயோக்கியர் யார் ?

1

அதிமுக இணைப்பு – பேரம் படிந்தது !

கேலிப்படம்: வேலன்

அ.தி.மு.க : மூழ்கும் கப்பல் – போதை நடனம் !

மாவாசை தினத்தன்று இரண்டு அமாவாசைகள் கை கோர்த்திருக்கிறார்கள்.

ஜெயா போய்ச் சேர்ந்ததும் வந்த வெங்கையா நாயுடு துவக்கிய “ஆபரேசன் அபாலிஷ் அ.தி.மு.க” இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது.

ஜெயா டிவியைத் தவிர மற்ற தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெற்றிகரமாக ஓடிய இந்த திரைப்படத்தில்தான் எத்தனை கவித்துவக் காட்சிகள், திருப்பங்கள்?

ஜெயாவின் உடலை எடுத்துச் செல்லும் போது சாலைகளில் விளக்குகள் அணைக்கப்பட்டன – இது மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டிகளையும் நினைவுபடுத்தும் த்ரில்லர். ராஜாஜி மண்டபத்தின் படிக்கட்டில் காவலாளியாக வெங்கைய்யா அமர்ந்தார் – இது நம்பியாரை நினைவுபடுத்தும் பிளாக்மெயில் சென்டிமெண்ட். கண்ணீர் விடாமல் உணர்ச்சியற்ற முகத்துடன் ஓபிஎஸ் பதவியேற்பு, பிறகு மோடி – அமித்ஷாவின் இயக்கத்தில் ரெய்டு, மிரட்டல், பேரம், ஒப்பந்தம் வகைப்பட்ட பிக்பாஸ் அதிரடிக் காட்சிகள்.

கூவத்தூர் களியாட்டங்கள் – வானகரம் எபிசோடில் அம்மா காஸ்ட்யூமில் சின்னம்மா பொதுச்செயலாளராவது, பிறகு அம்மா சமாதியில் பாவாடை சாமியார் ஓபிஎஸ்-இன் தியானம், உச்சநீதிமன்றத்தின் குமாரசாமி ரிடர்ன்ஸ் தீர்ப்பு, சமாதியில் சசிகலாவின் மங்கம்மா சபதம், பிறகு டிடிவி தினகரன் துணைப் பொதுச்செயலாளர்……….

பழைய அமாவாசையின் இடத்தில் புதிய அமாவாசை எடப்பாடி பட்டாபிசேகம், பிறகு ஆர்.கே.நகர் இடைவேளை, தேர்தல் கமிஷனின் பிக்பாஸ் எலிமினேசன், இறுதியில் திகாரில் தினகரன்

மன்னை மாஃபியாவுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியின் தொன்னை மாபியா நடத்திய ஆட்டம் இது.

சமீபத்திய காட்சி, 19 எம்.எல்.ஏக்கள் தமது ஆதரவை வாபஸ் பெறுவதாக கவர்னரிடம் கொடுத்திருக்கும் கடிதம்.

இதுதான் கடைசியோ கடைசி கிளைமாக்ஸ் காட்சியா? விடை யாருக்குத் தெரியும்?

ஆனால் விடை தெரிந்து கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது.

இதுவரை நடைபெற்றுள்ள இந்த ஆட்டத்தில் உங்கள் கருத்துப்படி கடைந்தெடுத்த முதல் நம்பர் அயோக்கிய சிகாமணி யார்?

  • டிடிவி. தினகரன்
  • எடப்பாடி பழனிச்சாமி
  • பன்னீர்செல்வம்
  • ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி

இணையுங்கள்:

_____________

இந்தக் கேலிப்படம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பள்ளிக்கரனை ராம்நகர் டாஸ்மாக் – பெண்கள் முற்றுகை – வீடியோ

0

சென்னை வேளச்சேரிக்கு அருகில் உள்ளது மயிலை பாலாஜி நகர் மற்றும் ராம் நகர். இங்கே 2,500 குடும்பங்ககளில் 10,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஏற்கனவே இருந்த டாஸ்மாக் கடையினால் பெண்கள் பலர் விதைவைகளாகவும், இளைஞர்கள், குடிப்பழக்கத்திற்கும், சீரழிவுக்கும் ஆளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் சிக்னல் இல்லாத காரணத்தால் குடித்துவிட்டு சாலையை கடக்கும் போதும், வண்டி ஓட்டும்போதும் பல விபத்துக்களும், உயிர் சேதமும் நடைந்தேறியுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்த கடையை உச்ச நீதிமன்ற உத்திரவின்படி தேசிய நெடுஞ்சாலையில் இருந்ததால் அரசே அகற்றிவிட்டது. ஆனால் தற்போது குடியிருப்பு பகுதியில் ஓட்டல் பெயரில் டாஸ்மாக் கடையை நடத்தி வந்தார்கள். பிறகு மக்கள் அதனை கண்டு பிடித்து அகற்ற வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

குடும்பத்தை நடத்த பெண்கள் வீட்டு வேலைக்கு போய் தான் குழந்தைகளை படிக்க வைப்பது, குடும்பதை நடத்துவது என்று இருந்தது. ஆனால் தற்போது குடியிருப்பு பக்கத்திலேயே இருப்பதால், 8 வகுப்பு படிக்கும் மாணவர்கள் உட்பட அனைவரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

பக்கத்தில் இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் தான் பெண்கள் வீட்டு வேலை செய்கின்றனர். மதிய நேரத்திலும், இரவு நேரத்திலும் பெண்கள் வெளியில் செல்வதற்கு அஞ்சுகின்றனர். இதனால் பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்வதையே நிறுத்திவிட்டனர். இதனால் இந்த டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டுமென்று, நம்மிடம் ஊர் மக்கள் கோரினர்.

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக பகுதி மக்களிடம் கையெழுத்து வாங்கி மனு கொடுத்ததோடு உடனே கடையை மூடு என்ற முழக்கத்துடன் 100 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அப்போது டாஸ்மாக் கடைக்கு அருகில் ஒட்டிய போது பாரின் உரிமையாளர் நம்மிடம் மற்ற கட்சிகாரர்களிடம் பேசி விட்டோம். உங்கள் தலைவர் யார் அவரை பார்த்து பேச வேண்டும். அவருடைய தொடர்பு எண்ணை கொடுங்கள் என்று கேட்டார்.

முடியாது என்றோம். அவரோ “நாங்கள் இந்த கடைக்காக 20 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து உள்ளோம். நாங்களும் குடும்பம் குழந்தைகள் என்று உள்ளவர்கள் தான்” என்றார். குடும்பம் உள்ளவர்கள் தான் பல ஆயிரம் குடும்பங்களை கெடுத்து அதில் வரும் வருமானம் வைத்து குடும்பதை நடத்துகிறீர்களா? என்ற உடன் சரிம்மா அதை விடுங்கள். எங்கள் நெம்பரையாவது வாங்கி கொள்ளுங்கள், உங்களுக்கு என்ன தேவையோ அதை சொல்லுங்கள் நாங்கள் செய்து கொடுக்கின்றோம் என்றனர். எங்களுக்கு தேவை, வாழ்க்கையை சீரழிக்கும் இந்த டாஸ்மாக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விட்டு வந்தோம்.

டாஸ்மாக் கடையை எடுக்க சொல்லி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதை பார்த்த பள்ளிக்கரணை காவல்துறை அதிகாரிகள் உடனே தொடர்பு கொண்டு எதுவாக இருந்தாலும் சொல்லிவிட்டு செய்யுங்கள். அப்போதுதான் பாதுகாப்பு கொடுக்க முடியும் என்றார்கள். மேலும் பகுதியில் உள்ள தோழர் வீட்டிற்கே ஒரு போலீசை அனுப்பி நம்மிடம் பேச வைத்தார்கள். நாமும் மக்கள் முடிவின் படி கண்டிப்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று கூறி அனுப்பி வைத்தோம்.

மறுநாள் காலை நாம் ஒட்டிய சுவரொட்டிகள் அனைத்தையும் காவல்துறையும் டாஸ்மாக் பார் உரிமையாளர்களும், ஆட்களை வைத்து கிழித்திருந்தனர். அதை அறிந்த பகுதி மக்கள் நம்மிடம் கூறி ஆதங்கப்பட்டார்கள். இதனிடையே டாஸ்மாக் கடையை ஒட்டிய பிளாட்டின் உரிமையாளர் வேளைசேரி செல்வம் (காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்) என்பவர் நம்முடைய செயல்பாடுகளை பார்த்து நம்முடன் தொடர்பு கொண்டு, அவரின் சார்பாக வழக்கு போட்டுள்ளதையும் கூறினார். அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதை சொன்ன போது பத்திரிக்கையாளர்களுக்கு சொல்லி விடுகிறேன் என்றார். அவருடைய வழக்கறிஞர் நண்பர்களையும் அழைத்து வருவதாக சொன்னார்.

டாஸ்மாக் கடையை முற்றுகையிட செல்லும் பெண்கள்

அன்று மாலை சுமார் 60 பெண்களை வைத்து ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. அப்போது அங்கு வந்த காவல் துறை ஏன் அனுமதில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு மக்களின் அனுமதியில்லாமல் கடையை வைப்பீர்கள் ஆனால் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாதா? என்று மக்கள் கேட்டார்கள். பிறகு கடையை உடனே மூடுங்கள் என்று சொன்னதற்கு எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சொல்லி முடிப்பதற்குள்ளேயே அப்படி என்றால் நீங்கள் ஏன் வந்தீர்கள் அதிகாரம் உள்ளவர்களை கூப்பிடுங்கள் என்றார்கள். பிறகு அனைவரும் கடையை மூடும்வரை இங்கேயே உட்காருவோம் என்று கூறி சாலையில் உட்கார்ந்தார்கள். நாமும் மக்களின் உணர்வுகளை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் உரிய அதிகாரிகள் வரும் வரை முழக்கம் போடுவது பிறகு மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடினோம்.

பிறகு சோழிங்கநல்லூர் தாசில்தார் வந்து மக்களிடம் என்ன விசயம் என்று விசாரித்துவிட்டு கடையை மூட எனக்கு அதிகாரம் இல்லை என்று கூறியவுடன் மக்கள் எல்லோரும் பிறகு நீங்கள் ஏன் வந்தீர்கள் என்று கோபத்துடன் கேட்டார்கள். ஒரு பள்ளி மாணவி என்னுடைய அப்பா எங்களுக்காக குடிக்காமல் இருந்தார். ஆனால் கடை பக்கத்திலிலேயே வந்துவிட்டதால் சம்பாதிக்கும் பணத்தை முழுவதையும் டாஸ்மாக் கடையிலேயே செலவழித்துவிட்டார். இன்று முழுவதும் நானும் என்னுடைய தம்பியும் பட்டினியாகதான் இருக்கிறோம். எங்களுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள் என்ற போது அவரால் எந்த பதிலையும் சொல்ல முடியாமல் நின்றார்.

அரசுக்கு வருமானம் வேண்டும் என்றால் உங்கள் வீட்டுக்கு அருகில் வைத்து கொள்ள வேண்டியது தானே ஏன் எங்கள் ஊரில் வைத்து எங்கள் தாலியை அறுக்கிறீர்கள் என்றும், உங்களுக்கு பெண் குழந்தைகள் இருக்கிறார்களா? என்ற பல கேள்விகள் மக்களிடம் இருந்து வந்ததை எதிர்கொள்ள முடியாமல் தவித்தார்.

டாஸ்மாக் கடையை மூடும்வரை இங்கிருந்து நகர மாட்டோம் – போராடும் பெண்கள்

பிறகு 10 நாட்களில் கடையை மூட முயற்சி செய்கிறேன் என்றார்.எப்படி நம்புவது என்று கேட்டதற்கு நாளை இதற்கான கடிதத்தை என்னுடைய அலுவலகத்தில் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்றார். பிறகு மக்களிடம் என்ன செய்வது என்று கேட்டதற்கு இப்போது இவர் சொல்வதை நம்புவோம், ஆனால் கண்டிப்பாக 10 நாளில் மூடவில்லை என்றால் கடையை நொறுக்கி மூடும் வரை ஓயமாட்டோம் என்று உறுதி எடுத்து கொண்டு கலைந்தார்கள்.

மறுநாள் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றபோது, தமிழ்நாடு வாணிபக் கழக மாவட்ட மேலாளருக்கு கடையை எடுக்க பரிந்துரை செய்து அனுப்பிய கடிதத்தை நமக்கும் ஒரு நகல் கொடுத்தார்

10 நாட்களுக்கு பிறகும் கடையை மூடவில்லை, பிறகு திருமழிசையில் உள்ள மாவட்ட மேலாளரிடம் அலுவலகம் சென்று மனுக்கொடுக்கப்பட்டது. அங்கு சென்றவுடன் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள் என்று கேட்டனர்.பள்ளிக்கரணை என்றவுடன் ராம் நகர் கடை தானே என்று கூறி சிரிந்தனர். பிறகு கலால் துறை அதிகாரி இதனை எடுப்பதற்கானஅதிகாரம் எனக்கு இல்லை என்றும், மாவட்ட கலெக்டருக்கு மனுக் கொடுங்கள் என்று கூறினார். அதற்கு மக்கள் இதற்கு மேல் யாரிடமும் மனுக்கொடுக்க முடியாது. நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு வந்தனர்.

பின்பு மக்களிடமே கருத்து கேட்கப்பட்டது. அவர்கள், நீங்கள் சொல்வது போல் இந்த ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் நம்பி எந்த பயனுமில்லை. அனைத்து துறைகளுக்கும் சென்று மனுக்கொடுத்தாகி விட்டது இனி நாமே முடிவு செய்வோம் என்று கூறி மேலும் 10 நாட்கள் அவகாசத்தில் 20-ந் தேதி பகுதி மக்கள் 100 -க்கும் மேற்பட்டோர் திரண்டு டாஸ்மாக் கடையை முற்றுகையிட சென்ற போது முன்கூட்டியே அங்கு வந்த காவல்துறையினர் மக்களிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தனர். ஆனால் மக்கள் உங்கள் பேச்சை கேட்க நாங்கள் வரவில்லை. வழியை விடுங்கள் கடையை நாங்களே மூடிக் கொள்கிறோம் என்றனர்.

பிறகு கடைக்கு குடிக்க வந்தவர்களை நீங்களே விரட்டுகிறீர்களா? அல்லது நாங்கள் விரட்டட்டுமா? என்றார்கள். மடிப்பாக்கம் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் மக்களிடம் நான் இப்போது புதிதாக வந்துள்ளேன். கண்டிப்பாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றுவேன் என்றதற்கு, உங்களை எல்லாம் நம்ம முடியாது வழி விடுங்கள் என்று முன்னேறினார்கள். நான் மேல் அதிகாரியை வரவழைக்கிறேன் அவரிடம் பேசுங்கள் என்று மடிப்பாக்கம் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், சோழிங்கநல்லூர் தாசில்தார் ஜெயப்பிரகாஷ் ஆகியோரை வரவழைத்து மக்களுடன் பேசி வைத்தார்.

சோழிங்கநல்லூர் தாசில்தார் ஜெயப்பிரகாசை பார்த்தவுடன் சார் உங்க கையெழுத்துக்குதான் மரியாதையே இல்லையே நீங்க ஏன் சார் வீணா வரீங்க என்றவுடன் அவர் முகத்தை தொங்க போட்டுக் கொண்டு உதவி கமிஷனரின் பின்னால் நின்றவர் ஆர்ப்பாட்டம் முடியும் வரை மக்களை பார்க்காமலேயே குனிந்தபடி நின்றார்.

உதவி கமிஷனர் என்ன பிரச்சனை எல்லோரும் கலைந்து போங்க என்றார் அதிகார தோரணையுடன்.. என்ன சார், என்ன பிரச்சனை என்று கேட்காமலேயே கலைந்து போங்கன்னு சொன்னா எப்படி. திருட்டுதனமா கடையை நடத்துவீங்க, கேட்கவந்த கலைஞ்சு போங்கன்னு மிரட்டுவீங்களா?

முழக்கமிடும் கல்லூரி மாணவி பிரியா

பிரியா என்ற கல்லூரி மாணவி, எங்கள் வீட்டில் அம்மா தான் வீட்டு வேலைக்கு போய் என்னை படிக்க வைக்கிறார். ஆனால் தற்போது டாஸ்மாக் கடை இருப்பதால் குடித்துவிட்டு நிர்வாணமாக விழுந்து கிடக்கின்றனர். இரவு நேரத்தில் என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் வேலைகளுக்கு வருவதில்லை, சம்பளமும் இல்லை எங்களை யார் படிக்க வைப்பார்கள், இது எங்கள் குடும்பத்திற்கு மட்டுமில்லை, எங்களை போல பல குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இன்னொருவர், பக்கத்தில் இருக்கும் பள்ளியில் தான் எங்கள் பிள்ளைகள் படிக்கிறார்கள், பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கு அச்சமாக உள்ளது. இது போன்ற பல கேள்விகளை கேட்டு திணறடித்தனர்.

இனிமேல் கெஞ்சி பயனில்லை, டாஸ்மாக் நீங்கள் மூடவில்லை நாங்கள் முடிவெடுத்துக் கொள்கிறோம் என்று கூறிய உடனே உதவி கமிஷனர் கோவிந்தராஜ் இரண்டு நாட்களுக்கு மட்டும் அனுமதி கொடுங்கள் இந்த டாஸ்மாக் கடை எடுப்பது பற்றி நாளை ஆலோசனை நடத்துகிறோம். புதன் கிழமை மூடிவிடுகிறோம் என்று கூறினார்.அதற்கு மக்கள் 2 நாட்களில் கடையை மூடவில்லையென்றால் கடையை உடைக்க நாங்கள் தயங்க மாட்டோம் என்று மக்கள் கூறிவிட்டு கலைந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை.

_____________

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் மக்கள் கருத்தை பிரச்சாரம் செய்யும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

எங்கே அரசியல் சட்டத்தின் ஆட்சி ? – மதுரை PRPC கருத்தரங்கம்

1

எங்கே அரசியல் சட்டத்தின் ஆட்சி ? கருத்தரங்கம்

நாள் : 26.08, 2017 – சனிக்கிழமை
மாலை : 5 மணி
இடம் : இராம-சுப்பு அரங்கம் மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் எதிரில், பி.டி.ஆர். ஸ்வீட்ஸ் பின்புறம், மதுரை.

  • தலைமை : வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்
    மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
  • வரவேற்புரை : பேராசிரியர் .சீனிவாசன்
    தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை

கருத்துரை :

  • வழக்கறிஞர் திரு. ஆனந்த முனிராஜ்
    செயலாளர், திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம்,
  • மூத்த வழக்கறிஞர் திரு. எம். அஜ்மல்கான்
    மதுரை உயர்நீதிமன்றம
  • திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
    சட்டமன்ற உறுப்பினர், செயலாளர், தகவல் தொழில்நுட்பப் பிரிவு, திராவிட முன்னேற்றக் கழகம்.

ன்பார்ந்த நண்பர்களே!

டந்த ஆகஸ்ட்-15, 70-ஆவது சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் “புதிய இந்தியாவை” மோடி அறிவித்துக் கொண்டிருந்தபோது, ஜந்தர் மந்தரில் போராடிவரும் தமிழக விவசாயிகள் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். “தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்படும்” என்று சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் பழனிச்சாமி முழங்கிக்கொண்டிருந்தபோது, நெடுவாசல் மக்கள் கருப்புக் கொடியுடன் போராடிக் கொண்டிருந்தனர்.

அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி அனைத்தும் அரசியல் சட்டத்தின் காவலர்கள் என அறியப்படுவோரால் கடந்த 70 ஆண்டுகளாக சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகளான வாழ்வுரிமையும், கருத்துரிமையும் பாசிச ஆட்சியாளர்களால் நசுக்கப்படுகிறது. பசுப் பாதுகாப்பு, லவ் ஜிகாத் எதிர்ப்பு என்ற பெயரில் சிறுபான்மையினர், தலித் மக்கள், விவசாயிகள் அச்சுறுத்திக் கொலை செய்யப்படுகிறார்கள்.

தமிழகத்தின் காவிரி டெல்டாவோ; ஹைட்ரோகார்பன், பெட்ரோ-கெமிக்கல் மண்டலம் என சூறையாடப்படுகிறது. இந்த அநீதிகளை எதிர்ப்போர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது; தேச துரோக முத்திரை குத்தப்படுகிறது.

தமது வாழ்வுரிமைக்காக மக்கள் நடத்தும் நெடுவாசல், கதிராமங்கலம், காவிரி மேலாண்மை வாரியம், டாஸ்மாக் உள்ளிட்ட மிக சாதாரணமான அமைதி வழியிலான அனைத்துப் போராட்டங்களையும் வன்மையாக ஒடுக்குகிறது தமிழக அரசு.முகநூலில் எழுதுபவர்கள், கல்லூரிகளில் துண்டறிக்கை விநியோகிப்பவர்கள், கைது செய்யப்படுகிறார்கள். கதிராமங்கலத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 65 பேர், காவல்துறை மிரட்டலால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ள உரிமை சார்ந்த விழிப்புணர்வுப் போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் விரும்பவில்லை. இதன் தொடர்ச்சிதான் மே 17 திருமுருகன், மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டக் கைதுகள், கதிராமங்கலம் போராளிகளின் நீண்ட நாள் சிறைவாசம், வழக்கறிஞர் முருகன், கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்ய பாரதி மீதான பொய் வழக்கு எல்லாம்.

வெள்ளையர் காலத்தில் அரசை எதிர்த்தவர்கள், பெங்கால் ஒழுங்குமுறைச் சட்டம் 1818, இந்திய பாதுகாப்புச் சட்டம் 1939 மற்றும் ரவுலட் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர். குறிப்பாக போர்க்காலத்தில் மட்டுமே இத்தடுப்புக் காவல் சட்டங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இன்று

வெள்ளையர் ஆட்சியை விடக் கொடுமையான முறையில் தடுப்புக் காவல் சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.கடந்த 2015 -ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1,268 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 90% பேர் கைது தவறென விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உலகின் பல நாடுகளில் போர்க்காலத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் தடுப்புக் காவல் சட்டங்கள்.இந்தியாவில் அரசியல் காரணங்களுக்காக எல்லாக் காலத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. இது மாபெரும் மனித உரிமை மீறல் குற்றமாகும். தடுப்புக் காவலில் தவறாகக் கைது செய்யப்பட்டவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடும் வழங்கப்படுவதில்லை. இதற்கான சட்டமே இந்தியாவில் இல்லை.

மாணவி வளர்மதி

சமீபத்தில் தெலுங்கானாவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட விதை உற்பத்தியாளர் மீதான வழக்கை (வி.சாந்தா எதிர் தெலுங்கானா அரசு) ரத்து செய்த உச்சநீதிமன்றம் “மற்ற சட்டங்களில் வழக்குப் போட வாய்ப்புள்ள போது, குண்டர் சட்டத்தை பயன்படுத்தக் கூடாது; குடிமகனின் வாழ்வு, சுதந்திரத்தைப் பாதிக்கும் தடுப்புக் காவல் உத்தரவானது, அரசியல் சட்ட சரத்துக்கள் 14,19,21:22-ஐ மீறக்கூடாது.என்ன நோக்கத்திற்கு சட்டம் இயற்றப்பட்டு, அதிகாரம் வழங்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்கே சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும்; ஒரு குடிமகனின் தனிமனித சுதந்திரம் மிகவும் முக்கியமானது; இதில் அதிகார துஷ்பிரயோகம் கூடாது” என்று தீர்ப்பளித்துள்ளது.

இத்தீர்ப்பின்படி கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தொடர்ச்சியாகச் செய்பவர்கள் மற்றும் சாதி, மதக் கலவரங்களைத் தூண்டி, பொது ஒழுங்கு – அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் கிரிமினல்கள் மீது மட்டும்தான் குண்டர் சட்டம் போட முடியும்.

மாறாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “போராடுபவர்கள், போராட்டத்தைத் தூண்டுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்” என சட்டசபையிலேயே அறிவிக்கிறார். இந்திய அரசியல் சட்டம் சரத்து 19-ன் படி போராடுவதும், போராட்டம் செய்யக் கோருவதும் அடிப்படை உரிமை. தமிழகத்தில் செயல்படும் அனைத்து அமைப்புகள், கட்சியினர் மீதும் போராடியதற்காக வழக்குகள் உள்ளன. அனைவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்கலாமா?

போராட்டத்திற்கு குண்டர் சட்டம் என்றால் தி.மு.க ஆட்சியின் போது அதிமுக -வினர் போராடவில்லையா? ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க போராடவில்லையா? ஜெயலலிதா தண்டனைக்குள்ளான போது அதிமுகவினர் செய்த அட்டுழியங்களை விடவா வளர்மதியும், திருமுருகனும் செய்து விட்டார்கள்? சேகர்ரெட்டி, ராம்மோகன்ராவ், விஜயபாஸ்கர், குட்கா ஊழல் டிஜிபி ராஜேந்திரன் ஆகிய சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் அடைக்காதது ஏன்? கோரக்பூரில் 107 ஏழைக் குழந்தைகளைக் கொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை?

குண்டர் சட்டத்தை, அரசியல் ரீதியாகப் போராடுபவர்களுக்கு எதிராக, மாற்றுக் கருத்துக்களை நசுக்க விரிவுபடுத்துவது, மிகவும் அபாயகரமானது. இது அரசுக் கட்டமைப்பு பாசிசமாவதை உணர்த்துகிறது.

பணமதிப்பிழப்பு, மாட்டுக்கறித்தடை, ஜிஎஸ்டி, இயற்கை வளங்கள் கொள்ளை என நாடே சூறையாடப்படுகிறது. வதை முகாம் போல மாற்றப்பட்டுள்ளது. நாஜிக் கட்சியின் ஹிட்லர் ஆட்சி போல, ஆர்.எஸ்.எஸ்-ன் மோடி ஆட்சி நடக்கிறது. மோடியைப் போல ஹிட்லரும் “புதிய ஜெர்மனி” தான் பேசினார். தேர்தல் மூலமே ஆட்சிக்கு வந்தார். ஹிட்லரின் ஜெர்மனியிலும் சட்டப்படிதான் யூதர்கள் கொல்லப்பட்டனர். ஹிட்லருக்கும், பாராளுமன்றம், அரசு, நீதிமன்றம், பத்திரிக்கைகள் துணை நின்றன. இன்று மோடியின் புதிய இந்தியாவின் நிலையும் இதுதான். கார்பரேட் சர்வாதிகாரம் – வருணாஸ்ரம சர்வாதிகாரம், அரசியல் – சமூக ரீதியாக நிறுவப்படத் தான் இத்தனை “மோடி மஸ்தான் வேலைகளும்” “வளர்ச்சி வித்தைகளும்”.

இந்த அநீதிகளுக்கு எதிராக தங்கள் சொந்தப் புரிதலில் இருந்து விவசாயிகள், தொழிலாளிகள், சிறு வணிகர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைவரும் போராடுகிறார்கள். ஆனால் சமூகத்தின் கருத்துக்களை வடிவமைக்கும் வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட நடுத்தரவர்க்கம் செய்யப்போவது என்ன? குறைந்தபட்சம் போராடும் மக்கள் மீதான அரசின் ஒடுக்குமுறையை எதிர்க்க வேண்டாமா?

இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் மிக இக்கட்டான காலகட்டம் இது. மக்கள் உரிமை, மனித உரிமை, சமத்துவ சமூகத்தை நேசிக்கும் அனைவரும் ஓரணியில் நின்று செயலாற்ற வேண்டிய தருணம் இது. ஒன்றிணைவோம், கருத்துரிமை, ஜனநாயகத்திற்காக உரக்கக் குரல் எழுப்புவோம்! சிறு பொறிதான் பெருங் காட்டுத்தீயை உருவாக்கும்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்மதுரை
தொடர்புக்கு : ம. லயனல் அந்தோணிராஜ், 94434 – 71003,

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஐ.எஸ்.ஐ.எஸ் கொடுமைகளுக்கிடையே முத்தம் மறையவில்லை – படக் கட்டுரை !

1

ராக்கின் கணிசமான பகுதியை 2014 -ம் ஆண்டின் தொடக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் கைப்பற்றியது. அதன் பிறகு 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள், வன்முறை மற்றும் துயரங்களின் கதைகளை சுமந்து கொண்டு தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். புலம் பெயர்ந்த மக்களைக் காட்டிய அளவிற்கு வன்முறை மற்றும் இழப்பை நினைத்து அதிர்ச்சியில் அவர்கள் வாழ்வதையும் முகாமின் கடினமான வாழ்க்கையையும், எதிர்காலத்தைப் பற்றிய பயமும் கொண்ட அவர்களது இருண்ட தருணங்களையும் ஊடகங்கள் பேசுவதில்லை.

புலம் பெயர்ந்த குழந்தைகளுக்கு நொறுங்கிய கட்டிடங்களே விளையாட்டு அரங்குகள். சேற்று நீரோடைகளே நீச்சல் குளங்கள். கூடாரங்களே பட்டம் பறக்கும் அரங்குகளாகின்றன. நினைத்து பார்க்கவே முடியாத தங்களின் சோகங்களை எதிர்கொள்ளவும் துயரத்தின் பிடியில் இருந்து தப்பவும் தனிசிறப்பான ஆற்றலை குழந்தைகள் பெற்றிருக்கின்றனர்.அவர்களின் உண்மைக் கதையை வெளிப்படுத்துவது இன்றியமையாததாக இருப்பினும் அது கதையின் ஒருப்பகுதி மட்டுமே. நாடகத்தின் தருணங்களுக்கு இடையிடையே வேலைகள், விரக்தி, மகிழ்ச்சி, விளையாட்டுக்கள் என ஒரு கலவையாக அவர்களது அன்றையப் பொழுது புலர்ந்து முடிகிறது. அவற்றில் சில காட்சிகள்….

மேற்கு மோசூல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட மூன்றாவது நாளில் ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து தப்பி மனிதர்களற்ற நிலத்தை கடக்கையில் குழந்தை ஒன்று வெள்ளைக் கொடியைக் காட்டுகிறது. நகரை மீட்க நடக்கும் சண்டையில் நூறாயிரக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.

மோசூலில் நடக்கும் சண்டையிலிருந்து தப்பி நகரத்தின் கிழக்கே ஹமாம்-அல்-அலில் வரவேற்பு பகுதிக்கு வந்த பின்னர் குழந்தைகள் தழுவிக் கொள்கின்றனர். மோசூல் விளிம்பிலிருந்து தப்பியவர்கள் பேருந்துகள் மூலம் ஹமாம்-அல்-அலிலுக்கு இடம்பெயர்ந்தனர்.

அரசு ஆதரவுப்படைகளுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் -க்கும் இடையில் மொசூலில் நடக்கும் சண்டையில் இடம்பெயர்ந்த ஈராக்கிய குழந்தைகள் ஹமாம்-அல்-அலில் இருக்கும் இரு உள்நாட்டு அகதிகள் (IDP) முகாம்களுக்கிடையில் குளமொன்றில் வெப்பத்தைத் தணிக்கின்றனர்.

IDP-யைச் சேர்ந்த சிறுவர்களும் உள்ளூர் சிறுவர்களும் சாருஜா பொலாக் கிராமத்திலுள்ள நீரோட்டமொன்றில் விளையாடுகையில் சிரித்து மகிழ்கின்றனர். அங்கு உள்ளூர் மக்கள் பல இடம்பெயர்ந்த குடும்பங்களை வரவேற்றுள்ளனர்.

முன்பு கோழிப்பண்ணையாக இருந்த ஒருக் கட்டிடத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் -சினால் இடம்பெயர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்போது தங்கியிருக்கிறார்கள். அங்கே சிறுமியொருத்தி இன்னொரு சிறுமிக்கு கன்னத்தில் முத்தமிடுகிறாள்.

நினிவே சமவெளியைச் சுற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டு எல்லையிலிருந்து மோசூல் தாக்குதலுக்கு வழிவகுத்த மாதங்களில் குடும்பங்கள் இடம்பெயரத் தொடங்கின. இங்கே சமீபத்தில் டிபாகாவில் கட்டப்பட்ட முகாமில் இரண்டு சிறுமிகள் தவ்வாட்டம் (Skipping ropes) ஆடுகின்றனர்.

கிழக்கு மொசூலில் இருக்கும் ஹாசன்ஷாம் (Hassansham) IDP முகாமொன்றில் ஆக்ஸ்பாம் (Oxfam) பராமரிப்பு மையத்தில் பூவிற்கு வண்ணம் தீட்டுகிறார் தொஹா சமீர். மோசூலுக்கு கிழக்கே உள்ள ஹாய்-ஜாஹாரைச் சேர்ந்த அவருக்கு வயது ஏழு.

தியாலா (Diyala) மாநிலத்தில் கைவிடப்பட்ட பண்ணைக் கட்டிடம் ஒன்றில் வசிக்கின்ற இடம்பெயர்ந்த குழந்தைகள் அந்தி சாயும் நேரத்தில் ஆற்றுக்கருகே விளையாடுகின்றனர். IDP முகாம்களுக்கு பக்கமாக இடம்பெயர்ந்த ஈராக்கியர்கள் பலர் நண்பர்களோடும், குடும்பத்தினரோடும் வாடகை வீடுகளிலோ அல்லது கைவிடப்பட்ட கட்டிடங்களிலோ வாழ்கின்றனர்.

மோசூலில் தனது வீட்டிலிருந்துத் தப்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு அம்மா தன் சிறுக்குழந்தையுடன் விளையாடுகிறார். முன்பின் அறிமுகமில்லாதவர்கள் தங்களது வீட்டை அந்த குடும்பத்திற்கு கொடுத்திருந்தனர்.

அரசுப்படைகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் இடையே மோசூலில் நடக்கும் சண்டையினால் இடம்பெயர்ந்த சிறுமி ஒருத்தி ஈராக்கில் உள்ள ஹசிர் IDP முகாமில் பட்டமொன்றைப் பறக்க விடுகிறாள்.

தற்போது கிர்குக் மாநிலத்தில் வாழும் 39 வயதான வாபா தேர்வாஷ் (Wafaa Derwesh) பாதி கட்டி முடிக்கப்பட்ட வீட்டில் அவரது குடும்பத்துடன் உணவை பகிர்ந்து கொள்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் அந்த குடும்பம் பல முறை இடப்பெயர்ச்சிக்கு ஆளானது.

புகாலி (Bugali) கிராமத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் -சினால் இடம்பெயர்ந்த குழந்தைகள் மிதிவண்டி ஒட்டி விளையாடுகிறார்கள். அங்கே இடம்பெயர்ந்த பல IDP குடும்பங்கள் பழைய விவசாய கட்டிடங்களில் தங்குவதற்கு உள்ளூர் நில உரிமையாளர்கள் இடம் கொடுத்தனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் -சினால் இடம் பெயர்ந்த இரு குழந்தைகள் சாருஜா போலக்(Sharuja Polaq) கிராமத்தில் இருக்கும் தங்களது புதிய வீட்டில் ஒரு ஜோடிப் பழைய கண்ணாடிகளை வைத்து விளையாடுகினறனர். அங்கே பல IDP குடும்பங்கள் உள்ளூர் மக்களால் வரவேற்கப்பட்டனர்.

கசான் மஹ்தி, தன்னுடைய மகளின் கன்னத்தில் முத்தமிடுகிறார். ஐ.எஸ்.ஐ.எஸ் -னால் இடம் பெயர்ந்த பிறகு தன்னுடைய குடும்பத்திற்காக திவ்யலா மாநிலத்தில் தான் கட்டிய புதிய வீட்டில் அவரது குடும்பத்தினர் ஓய்வெடுக்கின்றனர்.

மோசூல் மக்களுக்கான பல பெரிய IDP முகாம்கள் இருக்கும் ஹமாம்-அல்-அலில் -ன் சேற்றுப்பாதை ஒன்றில் தனது தமக்கையின் கையைப் பற்றிக்கொண்டு நடக்கிறாள் ஐ.எஸ்.ஐ.எஸ் -சினால் இடம் பெயர்ந்த சிறுமி ஒருத்தி.

நன்றி : அல்ஜசீரா

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கோரக்பூர் – குழந்தைகளைக் கொன்ற கொலைகார அரசு !

0

கோரக்பூரில் 100 -க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகொலை ! தொடரும் மோடி அரசின் பயங்கரவாதம் !

  • மருத்துவம் தனியார்மயமானதே இதற்குக் காரணம் !
  • தோற்றுப்போன இந்த அரசுக் கட்டமைப்பில் ஊழல்மயத்தை ஒழிக்க முடியாது !
  • குடிமக்களைப் பாதுகாக்க மக்கள் அதிகாரமே தீர்வு !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்,
தொடர்புக்கு – 91768 01656

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவசாயக் கடன் தள்ளுபடி – மருமகள் உடைத்தால் பொன்குடம் !!

0

காராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களில் விவசாயிகள் நடத்திய போராட்டங்களையடுத்து, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா மாநில அரசுகள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தன. இப்போராட்டங்களுக்கு முன்பே தெலுங்கானாவும் ஆந்திராவும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்திருந்தன.

வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதையடுத்து, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றிருந்த கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தது, தமிழக அரசு. உத்திரப் பிரதேச பா.ஜ.க. அரசு, தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் விவசாயக் கடன்களை ரத்து செய்யும் அறிவிப்பை வெளியிட்டது.

விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை கேட்டு விவசாயிகள் நடத்திய போராட்டங்களும், அதனைத் தொடர்ந்து வெளியான கடன் தள்ளுபடி அறிவிப்புகளும் நமது மதிப்பிற்குரிய முதலாளித்துவ அறிவுஜீவிகளைப் பெரும் கவலையில் ஆழ்த்திவிட்டது. நாடே குடிமூழ்கிவிட்டதைப் போல, அவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் விவசாயிகளுக்கு எதிரான வெறுப்பைக் கக்கினார்கள்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) கூட்டத்தில் பேசிய பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, ”விவசாயக் கடன் தள்ளுபடி கடனைத் திரும்பச் செலுத்தும் ஒழுங்குமுறையைச் சிதைத்துவிடும்; ஒருமுறை கடன் தள்ளுபடியைப் பெறும் விவசாயிகள் அடுத்த தேர்தலில் மீண்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனக் காத்திருப்பார்கள்” என அபாண்டமான முறையில் பழிபோட்டுக் கண்டித்தார்.

கோதுமை, பருப்பு விலைகள் சரிந்து நட்டமடைந்ததால், கடன் தள்ளுபடி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மகாராஷ்டிர மாநில விவசாயிகள்

”விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, நிதிச்சரிவை ஏற்படுத்தி, பொருளாதாரத்தைச் சீர்குலைத்து விடும். விவசாயக் கடன் தள்ளுபடி நேர்மையாகக் கடனைத் திருப்பிச் செலுத்துவோரையும் ஒழுங்கற்ற தன்மையை நோக்கி அழைத்துச் செல்லும். இது தீங்கான செயல். இந்த செயல் வரி செலுத்துவோர்களின் பணத்தைத் தனியாருக்குக் கொடுப்பதற்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் சாமியாடினார். இதன் வழியாக விவசாயிகளை மற்ற வர்க்கங்களுக்கு எதிராக நிறுத்தினார்.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த மத்திய விவசாயத்துறை இணை அமைச்சர் பரசோத்தம ருபலா, ”விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் விசயத்தில், அது கடன் கொடுத்தல் மற்றும் திரும்பச் செலுத்துதலில் உள்ள ஒழுங்குமுறையை எதிர்மறையில் பாதிக்கும் என ரிசர்வ் வங்கி கருதுவதாக”ப் பட்டும் படாமல் கூறிவிட்டு, ”தற்போதைக்குக் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை” என்று கறார் காட்டினார்.

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியோ, ”மாநில அரசுகள் விவசாயக் கடன் தள்ளுபடிக்கான நிதியை மத்திய அரசிடம் எதிர்பார்க்க வேண்டாம்” என்று அறிவித்து, மாநில அரசுகளைத் திடுக்கிட வைத்தார்.

விவசாயக் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகள் பெற்றிருக்கும் அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்வது போலவும், இக்கடன் தள்ளுபடியால் அனைத்து விவசாயிகளும் பயனடைவது போலவும் பொதுவெளியில் சித்தரிக்கப்படுகிறது. இந்தச் சித்தரிப்பு பித்தலாட்டத்தனமானது, மோசடியானது.

டிராக்டர் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதால், போலீசாரால் அடித்து அவமானப்படுத்தப்படும் விவசாயி பாலன். (கோப்புப் படம்)

முதலாவதாக, இந்தியாவிலுள்ள குறு, சிறு, நடுத்தர விவசாயிகள் அனைவருக்கும் பொதுத்துறை வங்கிகளிலோ, கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களிலோ பயிர்க்கடன்கள் கிடைத்துவிடுவதில்லை. மைய அரசு புள்ளியல் துறை வெளியிட்டுள்ள ”அகில இந்தியக் கடன் முதலீட்டுக் கணக்கெடுப்பு 2012” என்ற அறிக்கையில்,  ”இந்திய விவசாயிகளில் 48 சதவீதம் பேருக்கு அரசு வங்கிகளில் கடன் கிடைப்பதில்லை” என்ற உண்மை வெளிவந்திருக்கிறது.

இந்த அறிக்கை சொல்லாதுவிட்ட இன்னொரு உண்மை என்னவென்றால், அந்த 48 சதவீத விவசாயிகள் அனைவரும் பயிர்க்கடனுக்குக் கந்து வட்டிக்காரர்களை அல்லது தனியார் நிதி நிறுவனங்களைத்தான் நம்பியிருக்கின்றனர். மேலும், நகைக் கடன், உரம், பூச்சி மருந்து வியாபாரிகளிடம் கடன், தனியார் கொள்முதல் ஏஜெண்டுகளிடம் கடன் எனப் பல வகைகளில் கடன் வாங்கித்தான் இவர்கள் விவசாயம் செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, அரசு அறிவிக்கும் கடன் தள்ளுபடி சலுகைகளால் இந்த 48 சதவீத விவசாயிகளுக்கு எந்தவொரு பயனும் கிடைக்கப் போவதில்லை. இது மட்டுமின்றி, தனியாரிடம் கடன் வாங்கும் இந்த 48 சதவீத விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு பலன்களும் கிடைப்பதில்லை.

இரண்டாவதாக, தமிழக அரசு அறிவித்திருக்கும் கடன் தள்ளுபடியின்படி, தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பெற்றிருக்கும் பயிர்க் கடன்கள் மட்டும்தான் தள்ளுபடி செய்யப்படும். தமிழக விவசாயிகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியிருக்கும் பயிர்க்கடன்கள் தள்ளுபடியாகாது. மேலும், சாகுபடிக்காகத் தமிழக விவசாயிகள் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் பெற்றிருக்கும் நகைக் கடன் உள்ளிட்டவையும் தள்ளுபடியாகாது.

இதுவொருபுறமிருக்க, 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவுக் கடன் தள்ளுபடி இல்லை என்றும் தமிழக அரசு நிபந்தனை விதித்திருக்கிறது. இந்த நிபந்தனை பெரும்பான்மையான நடுத்தர விவசாயிகளை, ஐந்து ஏக்கருக்கு மேல் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்துவரும் குத்தகை விவசாயிகளைக் கழித்துக்கட்டி விடுகிறது. இந்த நிபந்தனையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அனைத்து விவசாயிகளுக்கும் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டுமென உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து, இடைக்காலத் தடையைப் பெற்றுவிட்டது, தமிழக அரசு.

தமிழக அரசைப் போன்று ஒவ்வொரு மாநில அரசும் கடன் தள்ளுபடிக்கென விதவிதமான நிபந்தனைகளை விதித்து, விவசாயிகளை வடிகட்டியிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் அப்பால், உ.பி. மாநில அரசு அறிவித்திருக்கும் 36,000 கோடி ரூபாய் பெறுமான கடன் தள்ளுபடி இன்னும் காகித அறிவிப்பைத் தாண்டி நடைமுறைக்கே வரவில்லை. அக்கடன் தள்ளுபடி அறிவிப்பில் ஏகப்பட்ட உள்குத்துக்கள் இருப்பதை வயர் டாட். இன் என்ற இணையதளம் அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆக, இந்திய விவசாயிகளுள் மிகப் பெரும்பாலோர் தமது சொந்தப் பணத்தைப் போட்டு அல்லது தமது எதிர்காலத்தையே அடகுவைத்துத்தான் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால், இதற்கு நேர்மாறாகத் தனியார் முதலாளிகள் யாரும் தமது சொந்தக் கைக்காசைப் போட்டு எந்தவொரு காலத்திலும் தொழில் தொடங்கியதில்லை. வங்கிக் கடன், பங்குச் சந்தை மூலம் பொதுமக்களிடமிருந்து பணத்தைத் திரட்டுவது மற்றும் அரசு அறிவிக்கும் வரிச் சலுகைகள், மானியங்கள்  இவை அனைத்தையும் பெற்றுத்தான் தொழில் தொடங்குகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களோடு ஒப்பிடும்போது, அரசின் வழியாக சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் பெறும் மானியங்கள் உள்ளிட்ட பொருளாதாரச் சலுகைகள் மிகவும் அற்பமானது.

பொதுத்துறை வங்கிகளிலிருந்து பெற்ற 9,000 கோடி ரூபாய் கடனை ஏப்பம் விட்டுவிட்டு, அரசின் ஒத்துழைப்போடு இலண்டனுக்கு ஓடிவிட்ட விஜய் மல்லையா.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்துக் கந்து வட்டிக்காரன் கணக்காகப் பேசும் பொருளாதார நிபுணர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் திருப்பித் தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் வாராக் கடன் பற்றிப் பேசும் போது மட்டும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பாவ மன்னிப்பு வழங்கும் இரட்சகர்களாக மாறிவிடுகின்றனர்.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களைக் கடன் பிரச்சனையிலிருந்து மீட்டெடுப்பது அரசின் கடமை எனக் கூறும் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், ”முதலாளிகளின் கடன்களை நாம் தள்ளுபடி செய்துதான் தீர வேண்டும், ஏனென்றால், முதலாளித்துவம் இப்படித்தான் வேலை செய்கிறது. தவறு செய்வது மனித இயல்பு, அதனை நாம் ஓரளவிற்காவது மன்னிக்க வேண்டும்.” என வக்காலத்து வாங்கியிருக்கிறார்.

2015 மார்ச் இறுதியில் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் ரூ.2.67 லட்சம் கோடியாக இருந்தது. இது 201516ல் ரூ.5.02 லட்சம் கோடியாக உயர்ந்தது. 201617ம் நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, ரூ.6.07 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இத்துடன் தனியார் வங்கிகளின் வாராக் கடன்களையும் சேர்த்தால் இந்தத் தொகை 7.4 லட்சம் கோடி ருபாய் ஆகும்.

இந்த வாராக் கடன் நிலுவையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே விவசாயிகளிடமிருந்து வரவேண்டியிருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களும், தரகு முதலாளிகளும் இதில் 73 சதவீதத்தை விழுங்கி ஏப்பம் விட்டுள்ளனர். உண்மை இவ்வாறிருக்க, விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி அளித்தால், இந்தியப் பொருளாதாரமே சீர்குலைந்து விடும் எனப் பூச்சாண்டி காட்டிவருகிறது, அதிகார வர்க்கம்.

2012 – 13 நிதியாண்டில் ரூ.27,231 கோடி ரூபாய், 201314ல் ரூ.34,409 கோடி ரூபாய், 201415ல் ரூ.52,542 கோடி ரூபாய் என 2012  – 2015 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன் மதிப்பு 1,14,000 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

கடந்த பத்தாண்டுகளில் முந்தைய காங்கிரசு கூட்டணி அரசும், பல்வேறு மாநில அரசுகளும் சேர்ந்து அளித்திருக்கும் விவசாயக் கடன் தள்ளுபடியின் மதிப்பு ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய்தான். அதேசமயம், அப்பத்தாண்டுகளில் கையளவேயான கார்ப்பரேட் முதலாளிகளுக்குக் கமுக்கமாக அளிக்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடிகளின் மதிப்பு பத்து இலட்சம் கோடி ரூபாயைத் தொடுகிறது. இதுவும் போதாதென்று, மேலும் 4 லட்சம் கோடி ருபாய் வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்கள்  தள்ளுபடி செய்யப்பட வேண்டுமென ”இந்தியா ரேட்டிங்ஸ்” (CRISIL) என்ற கடன் மதிப்பீட்டு நிறுவனம் நிர்ப்பந்தம் கொடுத்து வருகிறது.

விவசாயிகள் வங்கிக் கடனைப் பெற்று, சாகுபடி செய்து நட்டமடைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக, மானத்திற்குப் பயந்து இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதே, சமூகத்தின் மனசாட்சியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திவிட்டிருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் முதலாளி வர்க்கமோ வங்கிகளில் பெற்ற கடன்களை வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்து, வங்கிகளைத் திட்டமிட்டு ஏமாற்றியிருப்பது விஜய் மல்லையாவின் இலண்டன் விஜயம் அம்பலப்படுத்திவிட்டது. விஜய் மல்லையா இலண்டனுக்குத் தப்பித்துப் போனதில் தனது கூட்டுக் களவாணித்தனம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டதன் காரணமாகவே, கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களை வசூலிக்கப் புதிய திவால் சட்டம் மற்றும் வாராக் கடன் வசூலிப்பது குறித்த அவசரச் சட்டங்களை இயற்றி உதார் காட்டிவருகிறது, மோடி அரசு.

புதிய திவால் சட்டம் வாராக் கடன் வசூலிப்பதை வங்கிகள் கையிலிருந்து பிடுங்கித் ”தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்” என்ற பெயரில் உருவாக்கப்படும் நிறுவனத்திடம் ஒப்படைக்க அறிவுறுத்துகிறது. இந்தப் புதிய நிறுவனத்தில் அரசு அதிகாரிகளுக்கு பதில் துறைசார் வல்லுநர்கள் நியமிக்கப்படுவார்கள். அதாவது வங்கி அதிகாரிகளுக்கு பதில் துறைசார் வல்லுநர்கள் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் கையில் கடனை வசூலிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

இச்சட்டத்தின் கீழ் கடன் வைத்திருக்கும் நிறுவனங்கள் மீது திவால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்போது,  அந்நிறுவனங்களின் மேல் வாராக் கடன் குறித்து ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படும்.  கடன் வாங்கிய நிறுவனத்துக்கு முதலில் ஆறு மாதம், பின்னர் மூன்று மாதம் என ஒன்பது மாதம் அவகாசம் வழங்கப்படும். இந்தக் காலகட்டத்தில் அந்த நிறுவனம் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது. இந்த ஒன்பது மாதங்களில் துறைசார் வல்லுநர் குழுவும் நிறுவனங்களும் பேச்சுவார்த்தை நடத்தி எவ்வளவு கடனை வசூலிக்க முடியும் என முடிவு செய்வர். ஒன்பது மாதங்களுக்குப் பிறகும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லையென்றால் நிறுவனத்தின் சொத்துக்கள் ஏலம் விடப்படும். அதாவது, மயிலே மயிலே இறகு போடு என்பதைத்தான் இப்படிச் சுற்றிவளைத்து அச்சட்டம் பேசுகிறது.

பேச்சுவார்த்தையின் முடிவில், கார்ப்பரேட் நிறுவனங்கள் வாராக் கடனில் ஒரு பகுதியைத் திருப்பித் தர ஒப்புக்கொண்டால், மீதமுள்ள கடன் தொகை ரத்து செய்யப்படும். இத்தள்ளுபடியை அதிகார வர்க்கமும் பொருளாதார நிபுணர்களும் ஹேர்கட்டிங் என்று அழைக்கின்றனர். இந்த நிதியாண்டில் மட்டும் 2 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு ”ஹேர்கட்டிங்” செய்யப்படவிருப்பதாக ”இந்தியா ரேட்டிங்ஸ்” கூறுகிறது.

இச்சட்டங்கள் ஒருபுறமிருக்க, பேட் பேங்க் (ஆச்ஞீ ஆச்ணடு), அதாவது, வாராக் கடன் வங்கி என்ற பெயரில் புது வங்கியொன்றைத் தொடங்குவதற்கும் மோடி அரசு தீவிரமாக முயன்று வருகிறது. பொதுத்துறை வங்கிகளில் நிலுவையிலுள்ள வாராக் கடன்களை இந்த பேட் பேங்கிற்கு மாற்றிவிட்டு,  பொதுத்துறை வங்கிகள் வாராக் கடன் நோயிலிருந்து மீண்டுவிட்டதாகக் காட்டும் மோசடி நடவடிக்கை இது.

விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் போது அது பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு, விவாதப் பொருளாக மாற்றப்படுகிறது. அக்கடன் தள்ளுபடி ஓட்டு வங்கி அரசியல் எனக் குற்றஞ்சுமத்தப்படுகிறது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடியோ அரசியல் கலப்பில்லாத அவசியமான பொருளாதார நடவடிக்கைகளாகச் சித்தரிக்கப்படுகிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வைத்திருக்கும் வாராக் கடன்களுக்குச் சந்தையில் நிலவும் தேக்கத்தைச் சுட்டிக்காட்டும் பொருளாதார நிபுணர்கள், சந்தையின் சூதாட்டத்தால் விவசாயிகள் போண்டியாகி, வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்துப் போய் நிற்பதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். சந்தையின் நெளிவுசுளிவுகளை விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டுமென உபதேசிக்கிறார்கள்.

விவசாயிகள் வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் தவிக்கும் போது, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் புகைப்படத்துடன் பேனர் வைக்கிறார்கள். ஆடு மாடு முதற்கொண்டு வீட்டின் கதவு வரை அனைத்தையும் ஜப்தி செய்கிறார்கள். தஞ்சை விவசாயி பாலனை போலீசை வைத்து அடித்து இழுத்துச் செல்லும் வங்கி அதிகாரிகள், விஜய் மல்லையாவைத் தப்பிக்க வைக்கின்றனர்.

வங்கிக் கடனைத் திட்டமிட்டுத் திரும்பச் செலுத்த மறுக்கும் கார்ப்பரேட் முதலைகளின் பெயர்களைக் கூட வெளியிட மறுக்கிறார்கள். ”வாராக் கடன் வைத்துள்ள முதலாளித்துவ நிறுவனங்களின் பெயர்கள் வெளியிட்டால், முதலீட்டாளர்கள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்து நாட்டின் முதலீட்டுச் சூழலைப் பாழாக்கிவிடும்” என்று கூறி, பொதுப் பணத்தைச் சுருட்டிக் கொண்ட கார்ப்பரேட் கொள்ளையர்களைப் பாதுகாக்கின்றனர்.

ஒரு கண்ணில் வெண்ணெயையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் தடவிவிட்டு, அரசும் சட்டமும் எல்லோருக்கும் பொதுவானது, பாரபட்சமற்றது என நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

-அழகு

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

உணவுப் பொருள் இறக்குமதி : ஆதாயமடைவது யார் ?

0

விவசாய விளைபொருள் உற்பத்தியில் தன்னிறைவு ஆற்றல் கொண்ட நாடு எனக் கூறப்படும் நிலையிலிருந்து, உணவுப் பொருட்களைப் பெருமளவு இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா தாழ்ந்துவிடும் என்கிற அச்சம் எழுந்து வருகிறது. கடந்த 2014 தொடங்கி தற்போது வரை இந்தியாவின் தானிய இறக்குமதியின் அளவு 110 மடங்கு அதிகரித்திருப்பதுதான் இந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

படிப்படியாக அதிகரித்துவரும் உணவுப் பொருள் இறக்குமதிக்கு நமது நாட்டு சிறு, நடுத்தர விவசாயிகள்தான் முதல் பலி. ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமை,  இந்தியாவில் விளையும் கோதுமையைவிடக் குறைவான விலைக்குக் கிடைக்கும்பொழுது, அது நேரடியாக விவசாயிகளைப் பாதிக்கும் என்கிற சாதாரண பொருளாதார அறிவின் மூலமாகவே இந்த அபாயத்தை யாரும் விளங்கிக் கொள்ள முடியும்.

2014 – 15 -ல் கோதுமை, சோளம் மற்றும் அரிசி வகைகள் 134 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால், 2016 – 17 -ல் இந்த உணவுப் பொருட்களின் இறக்குமதியின் மதிப்பு 9,009 கோடி ரூபாயாக உயர்ந்தது. 2014 – 15 -ல் 5,414 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்ட பழவகைகள், 2016 -17 -ல் 5,897 கோடி ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களைக் காட்டிலும் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது எனச் சொல்லப்படும் அதே சமயத்தில்தான், விவசாயப் விளைபொருட்களின் இறக்குமதியும் முன்னெப்போதையும் விட அதிகரித்து வருகிறது.

உலகிலேயே கோதுமையை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. எனினும், 2014 மற்றும் 2015 -ஆம் ஆண்டுகளில் வட இந்தியாவில் பருவமழை பொய்த்து கோதுமை உற்பத்தியும் குறைந்தது. ஆனாலும், உள்ளூர் தேவையை நிறைவு செய்ய முடியாத வகையில் கோதுமை உற்பத்தி குறைந்துவிடவில்லை.

எனினும், மோடி அரசு நொண்டிக் குதிரைக் குச் சறுக்கியதுதான் சாக்கு என்ற கதையாக, விளைச்சல் குறைந்து போனதைக் காரணமாகக் காட்டி, கோதுமைக்கான இறக்குமதி வரி விதிப்பை 25% -இல் இருந்து 10% -க்குத் தளர்த்தி, கோதுமை இறக்குமதிக்கு தாராள அனுமதி வழங்கியது. இந்த 10 சதவீத  இறக்குமதித் தீர்வையும் பின்னர் கைவிடப்பட்டு, தீர்வையே இல்லாமல் கோதுமை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்த தாராள அனுமதியின் காரணமாக இந்தியச் சந்தையை அந்நிய கோதுமை ஆக்கிரமித்தது. அந்நிய கோதுமை உள்ளூர்ச் சந்தைகளில் கிடைக்கும் கோதுமையைவிட விலை குறைவாக இருந்ததால், பெரும் தொழிற்சாலைகளும், மண்டி வியாபாரிகளும் இறக்குமதியான கோதுமையை மட்டுமே வாங்கினர். இது இரண்டு விதங்களில் இந்திய விவசாயிகளைப் பாதித்தது. ஒருபுறம் உற்பத்திக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள், இன்னொருபுறம் விளைந்த கோதுமையை விலை குறைவான அந்நிய கோதுமையோடு போட்டியிட்டுச் சந்தையில் விற்க முடியாமல், வந்த விலைக்கு விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

2016 -ல் பருவ மழை எதிர்பார்த்தபடி பெய்ததோடு, கோதுமை விளைச்சலும் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்து, 96.6 மில்லியன் டன்னை எட்டியது. இப்படி விளைச்சல் அதிகமான சூழ்நிலையிலும் இறக்குமதியை ரத்து செய்ய மறுத்ததோடு,  இறக்குமதிக்கான தீர்வையையும் அதிகரிக்க மறுத்தது மைய அரசு. குறிப்பாக, உள்நாட்டில் கோதுமை விளைச்சல் அதிகமாக இருந்த 2016 – 17 ஆண்டில் மட்டும், ஆஸ்திரேலியா, உக்ரைன் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து இறக்குமதியான கோதுமை இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்து, 5.74 மில்லியன் டன்னை எட்டியது.

கோதுமை உற்பத்தி அதிகரித்த அதேசமயத்தில், மைய அரசோ அதற்கு நேர் எதிராக இந்திய உணவுக் கழகம் கோதுமை கொள்முதல் செய்யும் அளவை அதிரடியாகக் குறைத்தது. 2015 – 16 -ல் 28 மில்லியன் டன் கோதுமையைக் கொள்முதல் செய்த இந்திய உணவுக் கழகம், 2016 – 17 -ல் ஐந்து மில்லியன் டன் குறைவாக 23 மில்லியன் டன் கோதுமையை மட்டுமே கொள்முதல் செய்தது.

விளைச்சல் அதிகரித்து, அரசு கொள்முதல் குறைந்து போன சூழ்நிலையில், விவசாயிகளுக்கு விளைந்த கோதுமையை வெளிச்சந்தையில் விற்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. வெளிச்சந்தையிலோ வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலிவான கோதுமையோடு போட்டியிட நேர்ந்தது.

இதன் காரணமாக வெளிச்சந்தையில் கோதுமையின் விலை, மைய அரசு நிர்ணயித்த ஆதார விலைக்கும் (ரூ.1,625) குறைவாக, 225 ரூபாய் நட்டத்தில், ரூ.1,400 -க்கு விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். வட மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டம் வெடித்த பின்னணி இதுதான். விவசாயிகள் போராட்டம் வெடித்த பிறகும், மோடி அரசு கோதுமை இறக்குமதியை ரத்து செய்யவில்லை. மாறாக, இறக்குமதித் தீர்வையை 0%லிருந்து 10%ஆக மட்டும் அதிகரித்து, விவசாயிகளின் நண்பனைப் போலக் காட்டிக் கொண்டது.

”இவ்வாறு தடையில்லா இறக்குமதியைத் தொடர்வது விவசாயிகளை விவசாயத்திலிருந்து துரத்தியடிப்பதற்கு ஒப்பாகும்” எனச் சாடுகிறார் பஞ்சாப் மாநில பாரதிய கிசான் அமைப்பின் தலைவர் அஜ்மீர் சிங்.

கோதுமை மட்டுமல்ல, கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியாவில் சர்க்கரையின் உற்பத்தி உள்நாட்டுத்  தேவையைக் காட்டிலும்  அதிகமாக உள்ளது.  எனினும், 2014 – 15 -ஆம் ஆண்டில் 0.77 மில்லியன் டன் சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 2015 – 16 -ஆம் ஆண்டில் உள்நாட்டு சர்க்கரையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய பாக்கியைத் தராமல் இழுத்தடிப்பதற்கு இந்த விலை வீழ்ச்சியைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன. இதன் காரணமாக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை 22,000 கோடி ரூபாயாக அதிகரித்தது.

எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பைப் பொருத்தமட்டில் உள்நாட்டுத் தேவையை ஈடு செய்யும் வண்ணம் அவற்றின் உற்பத்தி இல்லாததால், இறக்குமதியைச் சார்ந்துதான் இந்தியா இருந்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது என்ற பெயரில் விளைநிலங்களை அழிக்கத் துணியும் ஆளும் கும்பல், எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்க அக்கறை கொள்ளும் என யாரும் நம்பமுடியுமா?

ஆளுங்கும்பலின் இந்த அலட்சியம் காரணமாக, தற்பொழுதும் உள்நாட்டு சமையல் எண்ணெய்த் தேவையில் 70 சதவீதம் இறக்குமதியையே நமது நாடு நம்பியிருக்கிறது.  எண்ணெய் வித்துக்களின் இறக்குமதி அதிகரித்துக் கொண்டு போவதால், உள்நாட்டில் எண்ணெய் வித்துக்களின் விளைச்சல் 10%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது.

2015 – 16 -ஆம் ஆண்டில் நிலக்கடலை, சோயாபீன்ஸ் ஆகிய எண்ணெய் வித்துக்களின் விளைச்சல் ஓரளவு அதிகமாக இருந்தபோதும்,  அறுவடைக்கு முன்பாக அவற்றின் இறக்குமதி தீர்வையை 5% சதவீதமாகக் குறைத்தது அரசு. இதன் காரணமாக, உள்நாட்டில் விளைந்த எண்ணெய் வித்துக்களுக்குச் சந்தையில் ஆதார விலைகூடக் கிடைக்காமல் விவசாயிகள் பெருத்த நட்டமடைந்தனர்.

2008 – 09 -ஆம் ஆண்டுகளில் வெறும் 29,000 கோடி ரூபாயாக இருந்த உணவுப் பொருள் இறக்குமதியின் மதிப்பு, 2015 – 16 -ஆம் ஆண்டுகளில் 1.4 இலட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. உணவுப் பொருள் இறக்குமதியை அரசின் சுதந்திரமான பொருளாதாரக் கொள்கை போல முதலாளித்துவ அறிவுஜீவிகள் சித்திரிக்கின்றனர். ஆனால், இச்சித்தரிப்பு ஒரு மோசடி.

உண்மையில், உணவுப் பொருள் இறக்குமதி குறித்த உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகளை நிறைவேற்றும் அடியாளாகத்தான் மோடி அரசு நடந்து வருகிறது. மேலும், மொசாம்பிக் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் ஒப்பந்த விவசாயம் மூலம் விவசாய விளைபொருள் உற்பத்தியில் இறங்கியிருக்கும் இந்திய தரகு முதலாளித்துவ  நிறுவனங்களின் இறக்குமதி வர்த்தகத்தின் பொருட்டும்  உள்நாட்டு விவசாயிகளின் நலனைப் பலிகொடுக்கிறது, மோடி அரசு.

-அன்பு

( இக்கட்டுரை டவுன் டு எர்த் என்ற ஆங்கில இதழில் ரூ.14,02,68,00,00,000 என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரையைத் தழுவி எழுதப்பட்டது. )

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்

27

ஸ்ரேல் தலைநகரம் டெல் அவிவ் நகரில் மனித இனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார் ரான் காவ்ரியேலி. அவர் போர்னோகிராஃபி (pornography) எனப்படும் ஆபாசப் படங்களை பார்க்கும் வழக்கம் உடையவர். ஒருநாள் அப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். ஆபாசப்படங்கள் பார்ப்பதால் ஏற்பட்ட பிரச்சினைகளை அனுபவமாகக் கூறுகிறார்.

ஆபாசப் படங்களைப் பார்ப்பது எனக்கு இரண்டு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.

  1. என்னுடைய சொந்த உணர்ச்சிகளைச் சாகடித்து பாலியல் மீதான புரிதலை பெண்களுக்கெதிரான ஒரு வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக் குணமாக மாற்றுகிறது.
  2. நான் ஆபாசப் படத்தைப் பார்ப்பது அதற்கான சந்தைத் தேவையை அதிகரித்து விபச்சாரத்தைத் திரைப்படமாக்கிக் காசு பார்ப்பவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்துகிறது.

காதல், திருமணம், உடலுறவு குறித்த என் சொந்த உணர்ச்சியில் இது போன்ற எண்ணங்கள் வந்ததே இல்லை. ஆனால் “போர்னோ”-வைப் பார்த்த பிறகு என்னுடைய கண்ணோட்டத்தையே அது மாற்றிவிட்டது. விபச்சாரத்தைப் பொருத்தவரை அது யாருடைய கனவுலக வாழ்க்கையும் கிடையாது. துன்ப துயரங்களினாலோ அல்லது வறுமையினாலோ அல்லது பெற்றோரிடமிருந்து கடத்தப்படுவதாலோ விபச்சாரம் ஒரு பெண்ணின் மேல் திணிக்கப்படுகிறது.

வறுமையினாலோ அல்லது பெற்றோரிடமிருந்து கடத்தப்படுவதாலோ விபச்சாரம் ஒரு பெண்ணின் மேல் திணிக்கப்படுகிறது.

ஆபாசப்படத்தில் பெண்ணுக்கெதிரான உச்சகட்ட ஆணாதிக்கம் வெளிப்படுவதைக் காணலாம். ஆபாசப் படத்தில் நீங்கள் பார்ப்பது பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறையே. ஆபாசப் படம் எடுக்கப்படுவதைக் கவனித்தால் பெண் எப்படி ஒரு அருவறுக்கத்தக்க அடிமையாகப் பயன்படுத்தப்படுகிறாள் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

தோன்றிய சில நிமிடங்களிலேயே ஆணுறுப்பு பெண்ணின் மலத் துவாரத்திலோ, பிறப்புறுப்பிலோ அல்லது வாயிலோ திணிக்கப்படுகிறது. அப்படித் திணிக்கப்படும்போது பெண் தன்னுடைய சிகை அலங்காரத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பெண்ணிற்கு போடப்படும் அனைத்து சிகையலங்காரங்களும் ஒரு முதலீடு; அது பார்ப்பவரைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தவேண்டும். ஆபாசப் படத்தைப் பொருத்தவரையில் பெண் உட்பட எல்லாமே முதலீடு தான்.

நீங்கள் ஒன்றைக் கவனித்தீர்களா? 90 சதவீத ஆபாசப் படங்களில் ஆணும், பெண்ணும் தங்கள் கைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதேயில்லை. அதாவது எல்லாமே செயற்கையான, இயற்கைக்கு முரணான வகையிலேயே காட்சிப்படுத்தப்படுகிறது. அதிக பட்சமாக ஆணுறுப்பும், பெண்ணுறுப்புமே காட்டப்படுகிறது.

இதில் அதிகம் கேலிக்குள்ளாக்கப்படுவது பெண் தான். சகித்துக் கொள்ள முடியாத கெட்ட வார்த்தைகளில் பெண்ணுறுப்பை வர்ணிப்பது, பெண்களை கட்டாயப்படுத்தி இயற்கைக்கு முரணான வழிகளில் அமரவோ, படுக்கவோ வைத்து உறவில் ஈடுபடுவது, புட்டத்தில் அடிப்பது, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணைப் புணருவது, இப்படி எல்லா விதத்திலும் பெண் கேவலப்படுத்தப்படுகிறாள்.

ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்கு முன்னர் பெண்ணைப் பற்றிய அதாவது ஒரு பெண்ணைக் காதலிப்பது குறித்து என்னுடைய சிந்தனை எப்படியிருந்தது? “நான் காதலிக்கும் பெண்ணிடம் என் காதலை எப்படி சொல்லப்போகிறேன்; அதற்கு அவள் என்ன பதிலளிப்பாள்; அவளை எங்கே சந்திக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும்; இப்படித்தான் என்னுடைய எண்ண ஓட்டம் இருந்தது. ஒரு வேளை என் காதல் அவளால் அங்கீகரிக்கப்பட்டால் அது எப்படி படிப்படியாக முன்னேறி திருமண பந்தத்தில் போய் நிற்க வேண்டும்” என்பது குறித்துத் தான் அதிகம் சிந்தித்திருக்கிறேன்.

ஆனால் ஆபாசப்படங்களைப் பார்த்த பின்னர் அது என்னை வெகுவாக ஆட்கொண்டு விட்டது. அது என்னுடைய சிந்திக்கும் திறனையே அழித்து விட்டது. பெண்ணியம், காதல், காமம் குறித்த என்னுடைய கற்பனையே அழிந்து விட்டது. நான் ஒரு மனிதன் என்பதை ஏற்றுக்கொள்வதே அத்துணை சிரமமாக இருந்தது. இளைய தலைமுறையினர் மட்டுமல்ல ஒவ்வொரு ஆணும் ஆபாசப் படங்களைப் பார்ப்தன் மூலம் ஒரு பெண் துன்பப்படுத்தப்படுவதற்குக் காரணமாக அமைகின்றோம்.

ஆபாசம் நம்மை அடிமையாக்குகிறது; இல்லை அடிமைப்படுத்துகிறது;  அடிமைப்படுத்துவதென்பதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஆபாசப்படம் ஒரு இளைஞனுக்கோ இல்லை அல்லது பொதுவாக ஆண்களுக்கோ என்ன கற்றுத்தருகிறதென்று பார்த்தால் “நீ ஒரு ஆண்மகன்; காமத்தில் உன்னுடைய ஆண்குறியின் மதிப்பு அளவில்லாதது; ஏனென்றால் அது நீளமானது; நீ யாரிடம் உறவு கொள்கிறாய் என்பது பெரிதல்ல; மேலும் நீ புணரக்கூடிய பெண் அழகானவள், நிறைய படித்தவள், சூழ்நிலையை அழகாகக் கையாளத் தெரிந்தவள் என்பதெல்லாம் மதிப்பிற்குரியவையே அல்ல. மாறாக நீளமான உன்னுடைய ஆண்குறிக்குத் தான் அத்தனை புகழும் உரித்தாகும்”. இதைத் தான் ஆபாசம் நமக்குக் கற்றுத் தருகிறது.

இன்று சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகள் எண்ணி மாளாத வகையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்குக் காரணம் என்ன? இளைஞர்களைப் பொருத்தவரை காமம் என்பது பேசு பொருள் என்ற நிலையிலிருந்து மாறி காட்சிப் பொருளாகி விட்டது. இணையம், அலைபேசி, மடிக்கணினி இப்படி எதைத் தொட்டாலும் ஆபாசப்படங்கள் கிடைப்பது எளிதாகிவிட்டது. ஆனால் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கும் ஆபாச வீடியோக்கள் பகிரப்படுகின்றன.

மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ, விளம்பரங்களிலோ அல்லது திரைப்படங்களிலோ கதாநாயகிக்குத் தரப்படும் சிகையலங்காரம், காதலனிடம் காதல் வயப்படும் தருணங்கள், உடை, நடை இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு இளம் பெண் தனக்குள் என்ன நினைப்பாள்; “நான் ஒரு ஆணால் காதலிக்கப்பட வேண்டுமென்றால், முதன் முதலில் அவனுடைய காம இச்சைகளை நிறைவேற்றத் தகுதியாக உள்ளேனா” என்பதுதான். அன்பு, பாசம், நேசம், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகத் தான் தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு அநீதி என்று நாம் புரிந்துகொள்ளும் வரையில் இதைக் கைவிட முடியாது. மேற்குலக நாடுகளைப் பொருத்தவரை பெண்கள் பல்வேறு வகையில் நிராகரிக்கப்படுகின்றனர். பள்ளிப்பருவத்திலிருந்தே எண்ணற்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளின் காரணமாகப் பள்ளிப்படிப்பை விட்டே விலகுகின்றனர் அல்லது வேறு பள்ளிகளுக்கு மாறிச் செல்கின்றனர். ஆபாச உலகிற்குள் திணிக்கப்படும்போது சமூக உறவுகளிலிருந்து தனிமைப்படுத்தப் படுகின்றனர். ஒரு கட்டத்தில் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.

ஆபாசம் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் ஊற்றுக்கண் என்றே சொல்வேன்; குழந்தைக் கடத்தல்களின் பிரதான நோக்கமே இதுதான். அது மேற்குலகமாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி இல்லை ஆசியாவாக இருந்தாலும் சரி. பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் தள்ளுவதற்கென்று ஒரு பெரிய கும்பலே செயல்பட்டு வருகிறது.

ஒரு நாட்டில் சராசரியாக குடிமக்களின் வயது 75 என்றால் ஆபாசப் பட உலகில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு 50 வயது வரை வாழ்வதே மிக மிக அரிது. இதற்கு நான்கு பிரதான காரணங்கள் முன்னிலை வகிக்கின்றன.

  1. மது/போதைப் பொருள் உபயோகம்
  2. பால்ய வினை நோய்கள் ( STD – Sexually Transmitted Disease )
  3. விபச்சாரத் தரகர்கள் மற்றும் ஆண் நண்பர்களால் கொல்லப்படுதல்
  4. தற்கொலை

மேற்சொன்ன நான்கு காரணிகள் ஆபாசப் படத்தொழிலில் ஈடுபடும் பெண்களின் உயிரைப் பறிக்கக் காரணமாகின்றன.

நீங்கள் ஒரு உணவகத்தில் உணவருந்தச் செல்லும் போது ஒரு இரண்டு நபர்களுக்கு எதிரில் அமர வேண்டிய கட்டாயம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம்; அதில் ஒருவர் ஆண், அவர் ஆபாசப் படத்தில் நடிப்பவர், இன்னொருவர் பெண், அவரும் ஆபாசப் படத் தொழிலில் நடிப்பவர் என்றால் நீங்கள் அந்த ஆணுக்குப் பக்கத்தில் தான் அமர விரும்புவீர்கள்; ஏனென்றால் சமூகக் கண்ணோட்டத்தில் அந்தப் பெண் ஒரு விபச்சாரி; ஆனால் அதே தொழிலில் ஈடுபடும் அந்த ஆணுக்கு சமூகத்தில் எந்த கெட்ட பெயரும் இல்லை. இன்னொரு புறம் அவர்கள் நடிக்கும் அந்த ஆபாசப் படத்தை நாம் விரும்பிப் பார்த்தாலும், அந்தப் பெண்ணோடு அமர்ந்துண்ண நேரிட்டால் வெளி உலகத்தில் நம்முடைய சமூக மதிப்பு குறைந்து விடுமே என்பதே நம்முடைய பிரதான கவலையாக இருக்கும்.

உங்கள் நண்பர்கள் யாரும் ஆபாசப் படம் பார்ப்பவராக இருந்தால் அவர்களிடம் பேசுங்கள்; அமைதியாக இருக்க இது ஒன்றும் மனதை ஒரு நிலைப்படுத்தும் முயற்சியல்ல; மாறாக ஆபாசப் பட உலகம் சீரழிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையுடன் நேரடித் தொடர்புடையது.

***

லகிலேயே அதிக வருமானம் ஈட்டக்கூடிய தொழில் ஆபாசப்படங்கள் எடுக்கும் தொழில் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், விளையாட்டு ஹாலிவுட் என வருமானம் கொட்டும் எந்த ஒரு துறையையும் தன் சுண்டு விரலால் நெட்டித் தள்ளும் வலிமை படைத்த ஒரு தொழில் என்றால் அது ஆபாசப் படங்கள் தயாரிக்கும் தொழில் தான்.

இந்தத் தொழில் மூலம் வருடத்திற்கு ஏறக்குறைய 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குப் பணம் கொழிக்கிறது. ஆனால் ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் ஒரு வருடத்திற்குக் கிடைக்கும் வருமானம் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே.  ஆபாசப் படங்களைப் பொருத்தவரையில் ஒரு வருடத்திற்குக் குறைந்தபட்சம் 13,000 படங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன.

உலகத்திலேயே ஆபாசப் படங்கள் தயாரிப்பதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது; இரண்டாமிடத்தில் ஜெர்மனி உள்ளது. கனடா நாட்டில் தான் உலகிலேயே மிகப் பெரிய ஆபாசப் படங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 3 கோடி புதிய பார்வையாளர்கள் ஆபாசத்தளங்களுக்குச் செல்கின்றனர்.

200 நிறுவனங்கள் அமெரிக்க அரசின் உரிமம் பெற்று இந்தத் தொழிலில் பிரதானமாக ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு 39 நிமிடத்திற்கும் ஒரு ஆபாசப் படம் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது. இணையதளம் வாயிலாக ஒவ்வொரு விநாடிக்கும் ஏறக்குறைய 53,000 பேர் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர். உலகளவிலும் இந்திய அளவிலும் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே போகிறது.

ஆரம்பத்தில் துவக்க நிலையில் இருக்கும் ஆபாசப்பட ஆவல் நாட்பட நாட்பட புதிது என்ன என்று இறுதியில் குழந்தைகளை நோக்கி போகிறது. பல நாடுகளில் சட்டரீதியாக தடை இருந்தாலும் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாசப்படங்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இணையதளம் வாயிலாகப் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் மட்டும் வருடத்திற்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்டுகின்றன.

ஃபோர்னாகிராஃபி என்பது பாலுறவு குறித்த ஒரு கலையோ இல்லை இலக்கியமோ அல்ல. அது இயல்பான காமத்தை மனித நிலையில் இருக்கும் செக்ஸ் உணர்ச்சியை வெறியாக மாற்றி பல்வேறு வக்கிரங்களோடு மனதை ரணப்படுத்தும் ஒரு போதை! மற்ற போதைகளை விட வலிமையான போதை!

ஷெல்லி லூபென்

18 வயதில் விபச்சாரத்திற்குள் மாட்டிக்கொண்டு, 24-ம் வயதில் ஆபாசப் பட உலகில் திணிக்கப்பட்டு இப்போது ஆபாசப் படங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வரும் ஷெல்லி லூபென் கூறும் கதையை கேட்கும் போது உங்களுக்கு அதன் இருண்ட பக்கம் தெரியவரும்.

  • தொடரும்

_____________

இத்தகைய கட்டுரைகள் மூலம் மக்களின் விழிப்புணர்ச்சிக்கு போராடும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஓவியாதான் பத்ரி சேஷாத்ரி ! காயத்ரிதான் ஹெச். ராஜா !

12

பிக்பாஸ் இரசிக்கப்படுவது ஏன்? இறுதி பாகம்

பிக்பாஸ் போட்டியாளர்களை அரசியல் – சமூகம் – ஆளுமை சார்ந்து மக்கள் பரிசீலிப்பது சரியா?

நீயா நானா நிகழ்ச்சி மூலம் சாலமான் பாப்பையாக்களின் ஏட்டிக்குப் போட்டி பட்டிமன்றங்களை மேலும் மலிவாக்கி மக்களை பயிற்றுவித்திருக்கிறது விஜய் டி.வி. அதையே பிக்பாஸ் போட்டியிலும் மக்கள் செய்கிறார்கள். பிக்பாஸ் வீட்டில் எந்த அளவு அரசியல் சமூக கருத்துக்கள் அரட்டையில் வருகிறதோ அந்த அளவுக்கு சமூக  வலைத்தளங்களில் அனல் பறக்கும். மெரினா, தலித், எச்ச, ஆணாதிக்கம் என நாளுக்கு ஒன்றாய் தமிழ் இணையம் பேசுகிறது.

இதற்காகவே அத்தகைய காட்சி நறுக்குகளை பொருத்தமான இடத்தில் எடிட் செய்து காட்டுகிறார்கள். இதுபோக போட்டியாளர்களுக்கு முதலிலேயே கவுன்சிலிங் கொடுத்து ‘விளையாட்டை ஆடுவது’ குறித்தும் விளக்கியிருப்பார்கள். மேலும், என்னதான் நட்சத்திர வசதி வீட்டில் இந்த சினிமா மாந்தர்களை வைத்தாலும் கூண்டில் சுற்றி வரும் நரிகள் போல வாய்ப்பிற்காக காத்திருந்து பிறாண்டி எடுத்து விடுகிறார்கள். பிறகு மக்கள் அதற்கு பொழிப்புரை போடுகிறார்கள்.

பிக்பாஸில் கலந்து கொண்டோரின் வர்க்கம் – அரசியல் – சமூகப் பார்வையில் பெரிய வேறுபாடு இல்லை. ஓவியாவும் – காயத்ரியும் கூட ஒரே வகையினத்தில்தான் வருகிறார்கள் என்றால் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். அதற்கு அந்நபர்களின் தனித்தன்மையோடு கூடிய வகையினத்தை மக்களின் மதிப்பீடுகளோடு பார்க்கலாம்.

இவர்களில் பலர் நிலவுடமை அடிமைத்தனத்தையும், முதலாளித்துவ தனிநபர் விட்டேத்தித்தனத்தையும் கொண்டவர்கள். அவர்களிடம் அரசியல் ரீதியாக விசாரணை நடத்தினால் கூட மேற்கண்ட சாயல்களோடு வலதுசாரியாக விடைத்து நிற்பார்கள்.

சினேகன் – இந்த உலகில் தன்னைவிட நல்லவனாக வாழ்வது யாருமில்லை என்பதால் மற்றவர்களை அவ்வப்போது பாவிகளாக கருதி அரவணைப்போடு புத்திமதி சொல்லுபவர். அனைத்தும் அறிந்தவர் என்பதால் தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் தாயுமானவர் என்று ஓங்கி பொய்யுரைப்பார். அன்னார் அவர்கள் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து தமிழ் கற்றவர். “தனது பிறந்த நாளில்தான் தமிழ் பெருமை அடைகிறது” என்று பேசிய வைரமுத்துவுக்கு பொருத்தமான சீடர்.

பரணி – பெற்றோர், பாலாஜி சக்திவேல், சசிகுமாருக்கு அடுத்த படியாக கமலின் காலில் விழுந்ததை பெருமையாக பேசுமளவு அப்பாவி. ஆகவே அடிமை. இவரது தனித்தன்மையை சினிமா குருகுலத்தின் முனிபுங்கவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

கஞ்சா கருப்பு – சினிமா மடத்தின் மூத்தோர்களுக்காக தெருச்சண்டைக்கு போகும் தென்மதுரை வழக்கு பேசும் அடிமை. ஆகவே ஆண்டானாய் எளியோரை இகழுவார். இகழ்வதை கடமை என்று ஆணித்தரமாக நம்புவதால் இவர் அப்பாவியா, காரியவாதியா என்று பிரித்தறிய முடியாதபடிக்கு விசித்தரமானவர். ஆகவே செல்வம் வைத்திருப்போரின் எடுப்பார் கைப்பிள்ளை!

ஆர்த்தி – நடிகையாக நிலைபெறுவதற்கு முன்னால் ஐ.ஏ.எஸ் கனவைக் கொண்டிருந்த சீமாட்டி. ஆகவே அற்ப விசயத்திலும் அதிகாரம் கொடிபறக்கும். ஆதரித்தால் மக்கள் கடவுள். எதிர்த்தால் கால் துரும்பு! இறுதியில் ஆர்த்தியின் தர்பாரில் பிச்சை எடுப்போரே நல்லவர்.

காயத்ரி – சொன்னதைக் கேட்காத குரங்கை வெறுப்பேற்றியே வேலை செய்ய நினைப்பவர். மறுக்கும் குரங்குகளை குதறலோடு ஒதுக்குவார். அப்படித்தான் டான்ஸ் மாஸ்டராக இன்டஸ்ட்ரியில் குப்பை கொட்ட முடியும் என்பவர். குழந்தை மனது கொண்ட தன்னை கோபாக்காரியாக மாற்றாதீர்கள் என்பதை நெற்றியிலேயே எழுதி வைத்திருப்பவர். தன்னைத் திருத்தும் அதிகாரம் தனக்கே இல்லை என ஆழ்ந்த தூக்கத்திலும் ஆணித்தரமாக எடுத்து வைப்பவர்.

ஜூலி – சினிமா மடத்தில் மிக நல்ல அடிமையாக சேவித்தால் மட்டுமே வாய்ப்பு கிடைக்கும் என்பதை ஏற்று காட்சிக்கேற்ற நடனம், அழுகை, பாசம் அனைத்தையும் அள்ளி வீசுபவர்.

சக்தி – சினிமா மடத்தில் பரம்பரை பாத்தியதை உள்ளவரின் செருக்கு கொண்டவர். ஆள் பார்த்து பேசுவார் – அதட்டுவார். என் காலை மிதிக்கும் நீ ஏன் “எக்ஸ்கியூஸ் மீ” கேட்காமல் வெறுப்பேற்றுகிறாய் என்பதை முதலில் நாகரீகமாகவும் மறுத்தால் அதட்டியும் கேட்பவர்.

கணேஷ் – நுனிநாக்கு ஆங்கிலத்தோடும் உடல் மொழியில் மரியாதையோடும் உடற்பயிற்சி – தியானத்துடனும் இந்த உலகிலேயே மிக அதிக ஒழுங்கும் நாகரீகமும் கொண்ட கனவானாய் வாழ முடியும் என்று நம்புபவர். நல்லது கெட்டதுகளுக்கு போகாமல் கூலாக இருந்தாலே போதும், என எச்சரிக்கையுடன் வாழ்பவர்.

ஆரவ் – ஜாலியும், பிரபலமும் விரும்பினாலும் அதற்கு செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து சற்று குழம்பினாலும், மற்றவர்களின் பலம் பலவீனத்தை எடை போட்டுப் பார்த்து, தன்னைப் பாதுகாத்துக் கொள்பவர். ஃபர்ஸ்ட் பெஞ்ச் மாணவர் அளவுக்கு ஒரு காரியவாதி.

நமீதா – சினிமா மடத்தில் தன்னைப் போன்ற பரம்பரை பணக்காரர்களை மதிக்கக் கூடக் கற்றுக்கொள்ளாதவர்களுடன் வாழவேண்டியிருக்கும் துன்பத்தை தாங்கிக் கொண்டு அவர்களுக்கு சுத்தம் குறித்து சொல்லிக் கொடுப்பதை பெருந்தன்மையாக கருதுபவர். ஆகவே அவர் வைத்த சட்டத்தை மீறுவோரைப் பார்க்கும் போது எங்கே இருக்க வேண்டிய நான் இங்கேயா என்று சலிப்போ எரிச்சலோ கொள்பவர்.

ரைசா – நான் நானாக இருப்பதை நாசுக்காக சொன்னால் தனக்கு ஒரு இடம் சினிமா மடத்தில் கிடைக்கும் என்று முயற்சிப்பவர். தனது முகமும் அதே நாசுக்கை கொண்டிருக்க வேண்டுமென்று 24 மணிநேரமும் மேக்கப்பும் கண்ணாடியுமாக வேலை செய்பவர். பிக்பாஸின் ஆட்ட விதிகளை அறிந்து கொண்டு அதற்கேற்ற முறையில் விளையாட முற்படும் மல்டிபிளக்ஸ் வர்க்கத்தின் லேட்டஸ்ட் வகை மாதிரி.

வையாபுரி – வாழ்ந்து கெட்ட குடும்பத்தலைவரின் ஆசைகள் – துன்பங்களோடு சராசரியானவர். இந்த பிக்பாஸ் வாழ்க்கை தனக்கு கொடுக்க இருக்கும் செல்வத்தை மனதில் கொண்டு அவ்வப்போது வீட்டு வாழ்க்கை குறித்து புலம்பலோடு நாட்களை ஓட்டுபவர்.

ஓவியா – நான் நானாக இருப்பதை நடனத்தோடும், குளிர்ந்த மொழியோடும் சொன்னால் ஒத்துக் கொள்வார்கள் என்று நம்புபவர் – நடிப்பவர். அதையே முழுநேர வேலையாக கொண்டிருப்பதால் மற்ற வீட்டு வேலைகளை செய்ய முடியாது என்பதை பணிவுடன் எடுத்துச் சொல்பவர். மறுப்போரை சிரித்து மாற்ற நினைப்பவர். முக்கியமாக இவற்றை பொய் பேசாமல் – புறணி பேசாமல் சாதிக்க முடியும் என்ற சாமர்த்தியத்தைக் கொண்டிருப்பவர்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்த வகை மாதிரிகளில் பொய் பேசமாட்டார், புறணி பேசுவார், வேலை பார்ப்பார், தன்வேலையை மட்டும் பார்ப்பார் என்ற சில்லறை சமாச்சாரங்களைத் தவிர வேறு என்ன வேறுபாடு இருக்கிறது?

இவர்கள் அனைவரும் அதிகாரத்தில் மூத்தோரை அண்டிப் பிழைப்பதும், இளைத்தோரை ‘வச்சு செய்வதும்’ தவிர வேறு என்ன விதத்தில் வருவார்கள்? இந்த வெட்டி ஆய்வை வெட்டிவிட்டு நேரடியாக விசயத்திற்கு வருவோம்!

ஓவியாவை ஏன் மக்கள் ஆதரிக்க வேண்டும்? காயத்ரியை ஏன் வெறுக்க வேண்டும்?

ருவரது சித்தாந்தமும் ஒன்றேதான். நிலவுடமைப் பண்பாட்டின் வடிவத்தோடு முதலாளித்துவ தனிநபர் சித்தாந்ததை காயத்ரி கொண்டிருக்கிறார் என்றால், முதலாளித்துவ தனிநபர் சிந்தாத்தத்தின் வடிவோடு முதாளித்துவ உலகின் கேளிக்கை வாழ்வை ஓவியா கொண்டிருக்கிறார்.

இவ்விருவரையும் ஒரு ஒப்பீட்டோடு பரிசீலித்தால் இன்னும் விளங்கும். ஓவியாவை கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரியுடனும், காயத்ரியை பாஜக-வின் எச்.ராஜாவோடும் ஒப்பிடலாம். ராஜாவின் வார்த்தைகளைக் கேட்டாலே நீங்கள் கொலை வெறி அடைவீர்கள். பத்ரியின் விளக்கத்தைப் பார்த்தால் அதை ஏற்க முடியாவிட்டாலும் அவரது ‘நாகரீகமான’ அணுகுமுறையால் படித்தவர் சொன்னால் சரியாக இருக்குமோ என்று தயங்குவீர்கள்.

பத்ரி சேஷாத்ரி – எச். ராஜா

ஓவியா தன் கருத்தை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்கிறார். அதே நேரம் அதை ஏற்காதவர்களை அவர் இகழ்வதில்லை, எரிச்சலூட்டுவதில்லை. காயத்ரியின் கருத்துக்கள் ஏற்கப்படாதபோது எச் ராஜா போல நாடுகடத்த வேண்டும் என்று பேசுகிறார். ஒன்று பா.ஜ.க-வின் கார்ப்பரேட் முகமென்றால் மற்றொன்று பா.ஜ.கவின் பார்ப்பனிய முகம்.

’நாளை என்ன நடக்கும் என தெரியாது. அதனால் இப்போது இந்த கணத்தை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். Live this moment. Enjoy the life’. – இது ஓவியாக்களின் மனநிலை. லைவ் திஸ் மொமண்ட் என்ற தனிநபர்வாதத்தின் மயக்க மருந்து, இப்போது ஓவியாவின் மூலமாக மறு உலா வருகிறது. வசனம் பழசுதான். ஆனால், முன்னெப்போதையும்விட வேலை, ஊதியம், பணிச்சுமை, பொருளாதார தள்ளாட்டம், இவை உருவாக்கும் தனிவாழ்வின் சிக்கல்கள்… என வாழ்வின் நெருக்கடிகள் நாலா பக்கமும் சூழ்ந்திருக்கும் நிலையில் இந்த வசனம் மேலும் பொருத்தமுள்ளதாக மாறியுள்ளது. ஓர் இளைப்பாறும் தருணத்துக்காக ஏங்கும் மனம் Live this moment என்ற வசனத்தைப் பற்றிக் கொள்கிறது.

ஆனால் இந்தக் கணத்தில் மட்டும் கூட வாழ முடியாத அளவுக்கு நெருக்கடிகள் கணம் தோறும் சூழ்கின்றன. இதற்கு தன் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவதுதான் உண்மையிலேயே சுரணையுள்ள மனிதனின் இயல்பான தன்னுணர்வாக இருக்க முடியும். மாறாக சூழலின் பயங்கரத்தில் இருந்து துண்டித்துக்கொண்டு குளிரூட்டப்பட்ட மதுவிடுதியிலோ அல்லது மழை பெய்யும் அந்தி நேரத்தின் மெல்லிசையிலோ அந்த கணத்தை வாழ்ந்து தீர்ப்பது என்பது அருவெறுப்பானது.

பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சீரியல் டைப் சண்டைகளின் போது ஓவியா பொய் பேசவில்லை, அவரை தனிமைப்படுத்துகிறார்கள் என்பதெல்லாம் அவரை நேசிக்க மக்களுக்கு போதுமானது என்றால், அவ்வளவு பலவீனமானவர்களா நாம்? சில்லறைப் பிரச்சினைகளுக்கு பொய் பேசாத ஓவியா சமூகத்தின் இதர பிரச்சினைகள் குறித்து கேட்டால் என்ன சொல்வார்?

இப்போது இந்த கணத்தை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். Live this moment. Enjoy the life’. – இது ஓவியாக்களின் மனநிலை.

இன்று “லிபரல்கள்” எனப்படுவோர் பொதுப்புத்தியை வடிவமைப்பதில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகிறார்கள். இவர்கள் சாதிவெறி-மதவெறி-ஆணாதிக்கம் ஆகியவற்றை குறிப்பிட்ட அளவு எதிர்ப்பவர்களாகவும் இருப்பார்கள். பா.ஜ.க -விலும் கூட இத்தகைய குரல் கொடுக்கும் சித்தாந்தவாதிகள் இருக்கிறார்கள். கட்சி சார்பற்ற இடதுசாரி என்று தங்களைக் கூறிக்கொள்வோர் இன்னொரு வகையினம்.

இவர்களின் சமூகப் பார்வையை குறுக்கு விசாரணை செய்தால் அது ’நானேதான்’ என இறுதியில் முடியும். கட்சிகள், இயக்கங்களை விட தனிநபர்களே மேலானவர்கள் என்ற இவர்களது கண்ணோட்டம், நிலவுகின்ற சமூக அமைப்புதான் ஜனநாயகமானது என்று கூச்சமின்றி பேசும்.

ஜூலி வெளியேற்றப்படும் போது கமல் என்ன சொன்னார்? மெரினா போராட்டத்தில் கூட முழக்கங்களை கண்ணியமாக நாகரீகமாக போட வேண்டும் என்று புத்திமதி சொன்னார். குஜராத் 2002 இனப்படுகொலையில் மோடியின் பங்கை கண்ணியமாக கண்டிப்பது எப்படி கமல் அவர்களே? கமல் விரும்பும் ஒரு போராட்டம் கூட விக்ரமன் சினிமா உணர்ச்சி போல அல்லது அவரது அன்பே சிவம் போல 100% அன்பில் திளைக்க வேண்டுமாம். இங்கே குழந்தைகள் சாவது இயற்கைதான் என்று திமிராக பேசும் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எப்படி கண்ணியமாகப் பேசுவது?

மோடியின் ரத்தக்கறை பங்கு ஜூலிக்கும் தெரியாது. மெரினா எழுச்சியில் வந்த இலட்சக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர். பொதுவாக மாடு, விவசாயம், அரசு அலட்சியம் தாண்டி ஜூலியின் அரசியலில் வேறு இல்லை. அவரை வீர தமிழச்சியாக அழைத்தது தவறு. துண்டுப் பிரசுரம் கொடுத்ததால் குண்டர்  சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்ட வளர்மதியும், பிக்பாஸ் வீட்டுச் சிறையில் நடிக்க முயலும் ஜூலியும் ஒன்றல்ல. ஜூலியின் மெரினா பிரபலத்தை விஜய் டி.வி கேவலமாக பயன்படுத்தியது. அந்தக் கேவலத்தின் அடிப்படை மக்களின் பலவீனத்தில் உள்ளது.

துண்டுப் பிரசுரம் கொடுத்ததால் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்ட வளர்மதியும், பிக்பாஸ் வீட்டுச் சிறையில் நடிக்க முயலும் ஜூலியும் ஒன்றல்ல.

அய்யாக்கண்ணு கூட கமல் விரும்பும் “கண்ணியமான” முறையில்தான் டெல்லியில் போராடுகிறார். தொழிலாளிகளை ஒடுக்க வேண்டும் என்று பகிரங்கமாக ஏசும் விஷால் போன்ற ஜென்மங்கள் டெல்லி சென்று அவரை ஆதரிக்கின்றன.

“பாட்டிற்காக சிறை செல்லத் தயாராக இருந்த நான் மாட்டிற்காக சிறை செல்ல மாட்டேனா” என்று எதுகை மோனை எஃபெக்டில் பேசுகிறார் சிம்பு. மக்கள் கரவொலி எழுப்புகிறார்கள். பெண்களை இழிவுபடுத்தி பாட்டெழுதுவதும் ஜனநாயக உரிமை, ஜல்லிக்கட்டுக்காக போராடுவதும் ஜனநாயக உரிமை என்பதுதான் மேட்டுக்குடி குலக்கொழுந்துகளின் அரசியல்!

தமிழகத்தில் பெண்கள் டாஸ்மாக்கிற்கு எதிராக போராடினால் இத்தகைய தனிநபர் தாராளவாதிகள் குடிப்பது எமது தனியுரிமை என்று பேசுவார்கள். இந்த இடத்தில் ஓவியா( பத்ரி) குடியுரிமையை ஆதரித்தும் காயத்ரி (எச்.ராஜா) எதிர்த்தும் பேசக்கூடும்.

பெண்களின் போராட்ட உணர்வை மதித்தாலும், குடிப்பது குடிமக்களின் அடிப்படை உரிமை என்று ஓவியா அணி நாகரீகமாக பேசும். மல்லையா முதல் மற்ற பாஜக மாநிலங்கள் வரை குடியை தொழிலாக மேற்கொண்டு வருமானம் பார்க்கும் காயத்ரி அணி இங்கே பொதுப்புத்திக்காக குடி எதிர்ப்பு பேசும்.

இன்றைய அமைப்பு முறையை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று தாராளவாதிகளின் தீவிரவாத அணி கோருகிறது என்றால் அதை கொஞ்சம் மாற்றி ஏற்கலாமே என மிதவாத அணி கோருகிறது. மற்றபடி அடிப்படையில் இரண்டுமே சமூக மாற்றத்திற்கு எதிரானதுதான்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் சில்லறை அற்பத்தனங்களை மக்கள் தமது சமூக நடப்புக்களோடு சேர்த்து பார்க்கிறார்கள். காயத்ரி திமிர் பிடித்த பாப்பாத்தி, நமிதா திமிர் பிடித்த மேட்டுக்குடி, பரணி சாதாரண மக்கள் பிரிவு என்றெல்லாம் பார்த்து ஆதரவு – எதிர்ப்பு நிலை எடுக்கிறார்கள். ஆனால் நாயக – வில்லி பாத்திரங்களில் இருப்போர் தமது தனிப்பட்ட நடத்தைகளையே காட்டி கூட்டத்தை கவரவோ வெறுப்பேற்றவோ செய்கிறார்கள். இந்த பலவீனம் இருக்கும் வரை மோடியோ, ஜெயலலிதாவோ விஜய் டி. –வி வழங்கும் பிக்பாஸின் இன்டர் நேஷனல் ஃபார்மெட்டை வைத்து நம்மை எளிதில் ஏமாற்ற முடியும். தேர்தலில் வெற்றி பெறவும் முடியும்.

உணர்ச்சிகளில் முக்குளித்து உணர்வுகளில் தோற்றுக் கொண்டிருக்கிறோம். அற்பத்தனங்களை அலசி ஆராய்ந்து அரசியலை தவிர்த்துக் கொண்டிருக்கிறோம். பொழுதுபோக்கின் பேரில் தனிநபர் அராஜகத்தை கற்றுக் கொண்டு வருகிறோம். பிக்பாஸ் நிகழ்ச்சியை கேலிசெய்யும் பல தனிநபர்களிடம் கூட இத்தகைய வியாதி இருக்கவே செய்கிறது.

இன்றைக்கு சமூகவலைத்தளங்களில் தனிநபராக முற்போக்கு – கம்யூனிசம் – தலித் – பெண்ணியம் பேசும் பலரிடமும் இந்த தனிநபர் “அராஜகவியாதி” தொற்றுநோயாக பரவிக் கொண்டிருக்கிறது. நான்கு புத்தகங்கள் போட்டுவிட்டு இதுவரை இடதுசாரி கட்சிகள் என்ன புடுங்கிக் கொண்டிருந்தன என்று திமிராக சீறுவார்கள். இரண்டு ஆவணப்படங்களை எடுத்து விட்டு கேமராதான் உலகில் புரட்சியைக் கொண்டு வரும் என அகங்காரமாய் அறிவிப்பார்கள். பாதுகாப்பான வாழ்வை உத்திரவாதப்படுத்திக் கொண்டு, தேர்தல் புறக்கணிப்பால் என்ன சாதித்தீர்கள் என மார்க்சிய லெனினிய அமைப்புக்களை அதிகாரத்துடன் கேட்பார்கள்.

இன்றைக்கு சமூகவலைத்தளங்களில் தனிநபராக முற்போக்கு – கம்யூனிசம் – தலித் – பெண்ணியம் பேசும் பலரிடமும் இந்த தனிநபர் “அராஜகவியாதி” தொற்றுநோயாக பரவிக் கொண்டிருக்கிறது.

வீட்டு வேலைகளுக்கு எந்திரங்களையும் பணியாளர்களையும் போட்டுவிட்டு பெண் விடுதலைக்காக ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுவார்கள். பொதுவெளியில் சாதிவெறியை கண்டிக்க தைரியமற்றவர்கள் கபாலி ரஜினியை தலித் போராளியாக காட்டுவதற்கு நான்கு மாதம் எழுதுவார்கள்! சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்பதை இலட்சியமாக வைத்து விட்டு, ஈழத்திற்காகவும் சில சொட்டு கண்ணீரையும் வடிப்பார்கள்.

இது போக ரத்ததானம், நாய்க்குட்டி கருணை, அப்துல் கலாம் கவிதை, இயற்கை விவசாயம், பேலியோ டயட், ஆன்மீகம், மனிதாபிமானம், உலக சினிமா, உன்னத இலக்கியம் என எல்லா விதங்களிலும் மணிக்கணக்கில் பேசுவார்கள் – ஆலோசனை செய்வார்கள்.

ஆனால் இவற்றையெல்லாம் இணைக்கும் அரசியல் – சமூக வெளியில்தான் அடிப்படை மாற்றம் நடக்க வேண்டும். இதைப்பற்றிக் கேட்டால், எந்தக் கட்சி யோக்கியம் என்று ஒரு வரியில் முடித்து விட்டு போய்விடுவார்கள். இந்த தனிநபர் தாராளவாதிகளின் தாக்குதலுக்குப் பணிந்து வலது இடது கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கங்கள், தமிழ் அமைப்புக்கள், உள்ளிட்ட பலரும்  தங்களை ‘நாகரீக’மாக மாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

இதை ‘ஓவியாமயமாக்கம்’ என்றும் கூறலாம். ஆங்கிலப் பத்திரிகைகளில் பலரும், தமிழ் ஊடகங்களில் சிலரும் இத்தகைய ‘நாகரீக’ப்படுத்தும் பணியினை சிரமேற்கொண்டு செய்து வருகிறார்கள்.

கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், தாழ்த்தப்பட்ட மக்களை சித்தாந்தத்திலும் – செயலிலும் ஒடுக்கும் பாரதிய ஜனதாவோடு இணைகிறது. ராம்விலாஸ் பஸ்வான் மோடியின் நிழலில் இளைப்பாறுகிறார். தீபாவளிக்கும் திருவண்ணாமலை தீபத்திற்கும் சிறப்பிதழ் போடுகிறது சி.பி.எம்மின் தீக்கதிர் நாளிதழ். முரசொலி விழாவில் ரஜினியை மேடையேற்றி அழகு பார்க்கிறது தி.மு.க.

சுரண்டல் லாட்டரி பில்லியனர் மார்ட்டினின் மகன் தமிழர் விடியல் கட்சி நடத்துகிறார். மோடிக்கு பாராட்டு தெரிவிக்கிறார் விடுதலை சிறுத்தைகளின் ரவிக்குமார். ஜக்கி வாசுதேவின் யோகாவைப் பாராட்டுகிறார் தலைவர் திருமாவளவன். பெண்களை போற்றுகிறது என குமுதத்திற்கு பாராட்டு தெரிவிக்கிறார் லீனா மணிமேகலை.

லீனா மணிமேகலை

இறுதியில் அனைவரும் இந்த நாகரீகத்தையும், கண்ணியத்தையும், தனிநபர் சித்தாந்தத்தையும் ஏற்றுக் கொண்டு ஓவியாக்களாகவோ அல்லது தம் சொந்த இயல்பு காரணமாக காயத்ரிக்களாகவோ மாறிவிடுகிறார்கள்.

சமூகக்களத்தில் போராட முன்வராத வரையில், பிக்பாஸ் எனும் மாயச்சிறையில்தான் நீங்கள் காலம் தள்ள வேண்டும். அங்கேயே ஆயுள் தண்டனையோ மரணதண்டனையோ பெற்று வாழ்வை முடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

ஆதார் வழக்கில் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையில் வராதென வாதிடுகிறது மத்திய அரசு. அந்தரங்கத்தின் பெயரில் குடிமக்கள் தமது நடவடிக்கைகளை மறைப்பது கள்ளத்தனம் என்கிறார் அரசு வழக்கறிஞர். அந்தரங்க உரிமையை பாதுகாப்பது திருட்டுத்தனமல்ல, அது கண்ணியத்திற்குரியது என்று  வாதாடினார் எதிர்தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நமது கண்ணோட்டத்தை கறைப்படுத்தி கண்ணியமே தேவை இல்லை என்கிறது. இழக்கப் போகிறோமா, இயங்கப் போகிறோமா?

(முற்றும்)

இதன் முந்தைய பாகத்திற்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் :

_____________

இந்தப் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சோறுடைத்த சோழநாடு அரைப்பட்டினியில் தவிக்கிறது !

0
”ரேஷன் அரிசியும், நூறு நாள் வேலையும் இல்லேன்னா, தூக்கு போட்டு சாக வேண்டியது தான்” எனத் தங்களின் வாழ்க்கை அவலத்தை எடுத்துச் சொன்ன காடந்தேத்தி கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயப் பெண்கள்.

ந்த ஆண்டும் குறுவை சாகுபடியை இழந்து நிற்கிறது, தமிழகம். வடகிழக்குப் பருவமழை பெய்யுமா, பெய்யாதா, சம்பா சாகுபடியாவது நடக்குமா, நடக்காதா எனத் தவித்துப்போய் நிற்கிறார்கள் விவசாயிகள்.

தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக குறுவையும், கடந்த ஆண்டு சம்பா அறுவடையும் இல்லாது போன நிலையில், ரேஷன் அரிசியும் பள்ளிக்கூட சத்துணவும்தான் கூலி, ஏழை விவசாயக் குடும்பங்களின் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறது. இந்த இரண்டும் இல்லாமல் போயிருந்தால், தமிழகத்தின் நெற்களஞ்சியம் பட்டினிச் சாவிற்குத் தப்பியிருக்காது.

தலைஞாயிறு ஆற்றுப்பாலம் அருகே வேலைக்காகக் காத்திருக்கும் கூலி, ஏழை விவசாயிகள்

இது வாசகர்களை அதிர்ச்சியடைய வைப்பதற்காக மிகைப்படுத்திக் கூறப்பட்ட அனுமானம் அல்ல. உண்மை இதனைவிட அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் பரிதாபகரமானதாகவும் இருக்கிறது.

கீழத்தஞ்சை பகுதியில், தலைஞாயிறு ஒன்றியத்திலுள்ள உம்பளச்சேரி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினம், தாழ்த்தப்பட்ட கூலி விவசாயி. வறட்சியையும் சாகுபடி பொய்த்துப்போன துயரத்தையும் அப்பகுதி மக்கள் எப்படி எதிர்கொண்டு வருகிறார்கள் என்பது குறித்துத் தெரிந்துகொள்ள அவரிடம் உரையாடிக் கொண்டிருந்தபொழுது, அவர் சொன்னார், ”காலையில நீராகாரம் சாப்பிட்டதுதான் சார், இனி ராத்திரி சோறு வடிச்சு, பிள்ளைங்க சாப்பிட்ட பிறகு இருப்பதைச் சாப்பிடணும்.”

இதனை எவ்வித மிகை உணர்ச்சியுமின்றி, மிக இயல்பாக என்னிடம் சொன்ன அந்த ரத்தினத்தின் வயது 71. பட்டினியைத் தாங்கக்கூடிய வயதா அது?

அதே ஊரைச் சேர்ந்த பொன்னுரங்கத்தின் கதை, ரத்தினத்தின் நிலையே மேல் என எண்ண வைத்துவிடுகிறது. பொன்னுரங்கத்திற்குப் புருஷனும் கிடையாது, பிள்ளைகளும் கிடையாது. ஆதரவற்ற அனாதை அவர். எட்டி நடக்க முடியாதபடி அவரது கால்கள் துவண்டு போய்விட்டன. அதனால் எந்தவொரு வேலைக்கும் அவரால் போகமுடியாது. ஊர்க்காரர்கள் கொடுக்கும் சோறு தண்ணியில்தான் அவரது வாழ்க்கை ஓடுகிறது.

71 வயதில் தினந்த்தோறும் அரைப்பட்டினியோடு போராடும் உம்பளச்சேரியைச் சேர்ந்த கூலி விவசாயி ரத்தினம்

கஞ்சி கிடைக்காத சமயங்களில் வெத்தலை பாக்குதான் அவரது உணவு. காலை நேரத்திலேயே வேப்ப மரத்தடியில் போய் உட்கார்ந்துகொள்கிறார். மரத்திலிருந்து விழும் வேப்பங்கொட்டைகளை ஒன்று ஒன்றாகப் பொறுக்கி எடுத்து, அதனைக் கடையில் கொடுத்துப் பண்டமாற்று முறையில் வெத்தலை பாக்கு வாங்கி வைத்துக் கொள்கிறார்.

இந்த மூதாட்டிக்கு முதியோர் ஓய்வூதியத் தொகையைக் கொடுக்க மறுத்துவருகிறது, அதிகார வர்க்கம். ரேஷன் கார்டு, ஆதார் அட்டை என எல்லாம் இருந்தும் அதிகார வர்க்கம் கேட்ட ரெண்டாயிரம் ரூபாய் இலஞ்சத்தை அவரால் கொடுக்க முடியவில்லை என்பதுதான் ஓய்வூதியம் மறுக்கப்பட்டிருப்பதற்குக் காரணம். ஊருக்குள் புதிதாக யாரைப் பார்த்தாலும், ”ஓ.ஏ.பி.யை எப்படியாவது வாங்கிக் கொடுங்க சாமி” எனக் கையெடுத்துக் கும்பிடுகிறார், அவர்.

ஓ.ஏ.பி.க்கு அனுமதி கொடுக்க மேல்சாதியைச் சேர்ந்தவர்களுக்கு 2,500 ரூபாயும், தாழ்த்தப்பட்டோர் என்றால் இரண்டாயிரம் ரூபாயும் இலஞ்சம் வாங்குகிறார்கள் எனக் கூறினார்கள், உம்பளச்சேரி மக்கள். இது அ.தி.முக. பிராண்டு சமூக நீதி!

உழைப்பதற்கு உடம்பில் வலு இருக்கும் சம்சாரிகளின் நிலையும், இன்று உணவுக்குத் திண்டாடும் நிலையில்தான் இருக்கிறது. தலைஞாயிறுக்கு அருகிலுள்ள காடந்தேத்தி என்ற கிராமத்தில் நூறுநாள் திட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த பெண்களைச் சந்தித்து, குடும்பம் நடத்துவதிலுள்ள சிரமங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபொழுது, சுசீலா என்ற நடுத்தர வயதைக் கடந்த பெண், ”எங்களப் பார்க்கணும்னு வந்திருக்கிற நீங்க, ரெண்டு சாப்பாடு பொட்டலமும் வாங்கியாந்திருக்கலாம்” எனச் சாதாரணமாகச் சொன்னார். பசி வந்தால் பத்தும் பறந்திடும் என்பார்களே, அந்த நிலை!

சுசீலாவின் கணவர் கணபதிக்குச் சரிவர கண் தெரியாது. வயலுக்கு ஜிப்சம் அடித்துக் கொண்டிருந்தபோது, அந்த இரசாயனம் கண்ணில்பட்டு பார்வை ஏறத்தாழ பறிபோய்விட்டது. அவரின் மூன்று ஆண் பிள்ளைகளுக்கும் நிரந்தர வேலை கிடையாது. மின் வாரியத்தில் தினக்கூலியாக உள்ள ஒரு மகனின் வேலையை நிரந்தரமாக்க ஒரு இலட்ச ரூபாய் இலஞ்சம் கேட்கிறார்கள். ”கஞ்சிக்குத் தொட்டுக்கறதுக்கே வக்கத்துப் போய் நிற்கும் நான், இலட்ச ரூபாய்க்கு எங்கே போவேன்?” என குமுறினார் சுசீலா.

***

காவிரியின் கடைமடைப் பகுதி நாகப்பட்டினம் மாவட்டம். அம்மாவட்டத்தின் கடைகோடியில் அமைந்திருக்கிறது தலைஞாயிறு ஒன்றியம். தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் நிறைந்த பகுதி அது. தமிழக வறட்சி குறித்து ஆய்வு செய்ய வந்த மைய அரசின் குழு பார்வையிட்டுச் சென்று போன ஊர் தலைஞாயிறு. பாசனத்திற்கு மட்டுமல்ல, குடிநீருக்கே திண்டாடும் அளவிற்கு வறட்சி பாதித்திருக்கும் பகுதி தலைஞாயிறு ஒன்றியம்.

தலைஞாயிறு கடைவீதியையொட்டி அமைந்துள்ள ஆத்துப் பாலத்தில் காலை எட்டு மணிக்கெல்லாம் ஒரு ஐம்பது, அறுபது பேர் வேலைக்காகத் திரண்டு விடுகிறார்கள். அவர்களுள் ஆகப் பெரும்பாலோர் நிலமில்லாத கூலி விவசாயிகள். இத்துணை பேருக்கும் வேலை கிடைப்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றபோதும், அவர்கள் அங்கே காலையிலேயே கூடுவதற்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் தாண்டி வேறு காரணங்களும் உள்ளன.

”ரேஷன் அரிசியும், நூறு நாள் வேலையும் இல்லேன்னா, தூக்கு போட்டு சாக வேண்டியது தான்” எனத் தங்களின் வாழ்க்கை அவலத்தை எடுத்துச் சொன்ன காடந்தேத்தி கிராமத்தைச் சேர்ந்த கூலி விவசாயப் பெண்கள்.

”வீட்டுல இருந்தா, இன்னக்கி சோத்துக்கு என்ன பண்ணுவது, சில்லறை செலவுக்கு என்ன பண்ணுவது என்ற கவலையே பெரிதாகிவிடும். இங்க வந்தா, வேலை கிடைக்குதோ இல்லையோ, நாலு பேரிடம் சிரித்துப் பேசிவிட்டுக் கவலையை மறந்துவிட்டுப் போகலாம்” என்றார் ஒருவர்.

”வேலைக்கு யாரும் கூப்படலைன்னாலும், நாங்க பதினொரு, பன்னிரெண்டு மணி வரை இருந்துவிட்டுப் போவோம். காலை சாப்பாட கட் பண்றதுக்கு நாங்க கண்டு பிடிச்ச வழி இது” என்றார் மற்றொருவர்.

இக்கூலி விவசாயிகளுக்கு எந்தவொரு நிவாரணமும் தமிழக அரசால் அறிவிக்கப்படவில்லை. நூறு நாள் வேலையை 150 நாளாக உயர்த்தித் தருவோம் என்ற அரசின் அறிவிப்பும் காகிதத் திட்டமாகவே நின்றுவிட்டது. தங்கள் கையை ஊன்றிக் கரணம் போட வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

”விவசாயியெல்லாம் இப்ப கொத்தனார், சித்தாளாகிட்டான்” என்றார் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.சம்பந்தம். கொத்து வேலையும், ரோட்டில் ஜல்லி கொட்டும் வேலையும்தான் இப்பொழுது ஏழை, கூலி விவசாயிகளுக்கு அரை வயிறு கஞ்சியை ஊற்றுகின்றன. இந்த வேலைகளை விட்டால், இறால் குட்டை வேலை, நூறு நாள் வேலை, ராட்டு (இறால் மீன்கள்) தடவி விற்கும் வேலைகளுக்குச் செல்கிறார்கள்.

இந்த வேலைகளும் மாதம் முப்பது நாளும் கிடைப்பதில்லை. ”மணலுக்குத் தட்டுப்பாடு இருப்பதால், கொத்து வேலை மாதத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள்தான் கிடைக்கும்” என்கிறார் கூலி விவசாயி கண்ணன். வேலை தெரிந்திருந்தால் கும்பகோணம் பக்கம் செங்கல் அறுக்கவும், வேதாரண்யம் உப்பளங்களுக்கும் செல்ல முடியும். விவசாய வேலைகளுக்குச் செல்ல வேண்டுமென்றால், போர் தண்ணீர் கிடைக்கும் திருவாரூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டும்.

தலைஞாயிறைச் சேர்ந்த லேபர் காண்டிராக்டரான ராஜனே இப்பொழுது வேலை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார். நான் அவரைச் சந்தித்த அன்று, அவருக்கு வேலையும் கிடைக்கவில்லை. வீட்டில் சோறு பொங்க அரிசியும் இல்லை.

ஓய்வெடுக்க வேண்டிய முதிய வயதில் முதுகெலும்பு ஒடிந்து போன மகன், மருமகள், நான்கு பேரக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைச் சுமக்கும் கூலி விவசாயி வேலு

”வேலைக்குப் போன இடத்துல ”‘மண்வெட்டியோட வா” -ன்னாங்க, அதனால் இன்னிக்கு வேலைக்கு போக முடியல. மண்வெட்டி செய்ய புடிய கொடுத்தாம்ன, ஆசாரிங்க கொழுவ கோர்த்துக் கொடுப்பாங்க, அதற்கு முன்னூறு ரூபாயைத் தயார் செய்யணும்‘ என்றார் கூலி விவசாயி வேலு.

”மண்வெட்டிக்கு டாடா கொத்து வாங்கணும்னா ஐநூறு ரூபாய் ஆகும். பழைய கொத்துன்னா முன்னூறு ரூபாய். இருக்குறத தட்டிட்டுப் போட முன்னெல்லாம் முப்பது ரூபாய் கேட்பாங்க. இப்ப நூற்றைம்பது ரூபாய். எங்கே போறதுன்னுதான் தெரியல” என்றார் காடந்தேத்தியைச் சேர்ந்த கணபதி.

வேலு, கணபதியின் கதைகள் எனக்கு உலகப் புகழ் பெற்ற இத்தாலியத் திரைப்படமான ”பைசைக்கிள் தீவ்ஸ்” கதையை நினைவூட்டின. (இரண்டாம் உலகப் போர் முடிந்த பின், ஐரோப்பாவில் நிலவிய வேலையில்லா திண்டாட்டத்தைப் பற்றிப் பேசிய அத்திரைப்படத்தின் கதாநாயகன், சுவரொட்டி ஒட்டும் வேலையில் சேருவதற்கு சைக்கிள் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பான்.)

தலைஞாயிறு பேரூராட்சி என்பதால், அந்த ஊரில் நூறு நாள் வேலைத் திட்டத்தைச் செயல்படுத்த சட்டத்தில் இடமில்லையாம். இதனால் தலைஞாயிறைச் சேர்ந்த ஏழை, கூலி விவசாயிகளுக்கு நூறு நாள் வேலையும் கிடைப்பதில்லை. அதேசமயம், தலைஞாயிறு ஒன்றியத்திற்குள் வரும் காடந்தேத்தி, உம்பளச்சேரி உள்ளிட்ட ஊராட்சிகளில் நூறு நாள் வேலை தரப்படுகிறது.

”முன்னாடியெல்லாம் விவசாயம் கையைவிட்டா, முள்ளு பொறுக்கியும் எரு போட்டும் விற்போம். அதெல்லாம் இப்ப இல்லை. இப்ப நூறு நாள் வேலையை மட்டும்தான் நம்பியிருக்கிறோம்” என்கிறார்கள் காடந்தேத்தியைச் சேர்ந்த கூலி விவசாயப் பெண்கள். அத்திட்டத்தில் வேலை கிடைத்தாலும் முறையாகக் கூலி கிடைப்பதில்லை என்பது இன்னொரு பிரச்சினை.

பயிர்க் காப்பீட்டுத் தொகையாக வெறும் 500 ரூபாய் மட்டுமே கிடைக்கப் பெற்ற் உம்பளச்சேரியைச் சேர்ந்த சிறுவிவசாயி அமாவாசை

”காடந்தேத்தியில் ஐந்து வாரமாக நூறு நாள் வேலை நடைபெறுவதாகவும், ஆனால், இன்னும் ஒரு நாள் கூலியைக்கூட கையில் வாங்கவில்லை” என்றும் கூறினார் ஆரோசனை. உம்பளச்சேரியில் ஐந்து நாட்கள் மட்டும்தான் நூறு நாள் திட்டம் நடந்திருக்கிறது. அதற்கும் கூலி வழங்கப்படவில்லை.

நூறு நாள் வேலைக்குக் கூலி கொடுக்க நிதியில்லை எனக் கையை விரிக்கும் எடப்பாடி அரசு, எம்.எல்.ஏ.க்களின் சம்பளத்தை லம்ப்பாக 50,000 ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டிருக்கும் அநியாயத்தையும் அப்பெண்கள் அறிந்து வைத்துள்ளார்கள். ”அவனுங்களையெல்லாம் குழியில போட்டு புதைக்கணும்” எனக் குமுறினார், காடந்தேத்தியைச் சேர்ந்த சுசீலா.

”ஏ.சி.யில உட்கார்ந்துகிட்டு லட்ச ரூபாய் சம்பளம் கேட்டா, மண்ணு சுமக்குறவனுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கணும்?” என்றும் கேள்வி எழுப்பினார், அவர். நூறு நாள் வேலைக்கு கூலியாக நானூறு ரூபாய் தர வேண்டும் என விவசாய சங்கங்கள் கோரி வருகின்றன. ஆனால், அரசாங்கம் நிர்ணயித்திருப்பது 205 ரூபாய்தான். அதுகூட எங்களுக்கு முழுசா கிடைப்பதில்லை என்கிறார்கள் அக்கூலிப் பெண்கள்.

***

வேலைக்கும் உத்தரவாதம் இல்லை, கிடைக்கும் கூலியும் குடும்பத்தை ஓட்டும் அளவிற்கு இல்லை என்ற நிலையில் அன்றாடப் பாடே பெரும் போராட்டமாக இருக்கிறது. கொத்து வேலைக்குப் போகும் கண்ணன், தனது குடும்பத்திற்கு மாதமொன்றுக்குக் குறைந்தது மூவாயிரம் ரூபாய் தேவை. ஆனால், கொத்து வேலையில் அந்தளவிற்குக்கூட வருமானம் கிடைப்பதில்லை. கிடைக்கும் கூலியில்தான் சாப்பிட்டுக்கணும். அடுத்த நாள் வேலைக்குப் போக பஸ் காசும் எடுத்து வெச்சுக்கணும். வேலை கிடைச்சு, வேலைக்குப் போக காசு இல்லைன்னா, சுருட்டிக்கிட்டு கிடக்க வேண்டியதுதான் என்கிறார்.

அங்காடியில் போடப்படும் இலவச அரிசிதான் விவசாயத்தை மட்டுமே நம்பிவாழும் குடும்பங்களின் உயிரைப் பிடித்து வைத்திருப்பதோடு, அவர்கள் பஞ்சம் பிழைக்க ஊரை விட்டு அகதிகளாக வெளியேறாமல் தடுத்து வைத்திருக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழே வரும் குடும்பங்களுக்கு 35 கிலோ அரிசியும், மற்றவர்களுக்கு 20 கிலோ அரிசியும், துவரம் பருப்பு அரை கிலோவும் ரேஷனில் கிடைத்துவிடுகிறது. பாமாயிலுக்கு உத்தரவாதம் கிடையாது. ”நாலு அல்லது ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு இந்த அரிசி போதாதே” என நான் குறுக்கிட்டபோது, ”அங்காடியிலேயே ஒரு கிலோ ரேசன் அரிசியை 12 ரூபாய்க்குக் கொடுப்பாங்க” என்றார் உம்பளச்சேரியைச் சேர்ந்த செல்வி.

”ஒரு நாள் குழம்பு வைக்கிறோம், ஒரு நாள் ரசம் வைக்கிறோம், ஒரு நாள் வெறும் துவையல்தான். நூறு நாள் காசை நம்பி, மளிகைக் கடையில் கடன், காய்கறிக் கடையில் கடன். இப்படித்தான் இந்த வருடம் சாப்பாடு பிரச்சினை ஓடுது. ஆனா என்ன, அங்காடியில பாதிக்குப் பாதி பச்சரிசிதான் போடுறாங்க. கூலி வேலைக்குப் போறவனுக்குப் பச்சரிசி சோறு பசி தாங்குறதும் இல்ல, கை, கால் குடைச்சலையும் கொண்டுவருது” என்றார் ஆரோசனை.

புள்ளைங்க படிப்புக்கும் சாப்பாடுக்கும் பிரச்சினை வந்திடக் கூடாது எனப் பெண்கள் தவித்துப்போய் நிற்கிறார்கள். குழந்தைகளின் மதிய சாப்பாடை சத்துணவு தீர்த்து வைக்கிறது. சத்துணவு பிடிக்கவில்லை, சாப்பாடு கட்டிக்கொடு எனக் குழந்தைகள் அடம்பிடித்தாலும், அதைத் தவிர இப்பொழுது வேறு வழியில்லை என்கிறார், உம்பளச்சேரியைச் சேர்ந்த சின்னபொண்ணு.

ரோட்டுக்கடைகளில் பத்து ரூபாய்க்கு விற்க்கப்படும் சிக்கன் பக்கோடாதான் கூலி விவசாயிகளுக்கு இப்போது கறி விருந்து. ஒரு பொட்டலத்தைக் குடும்பத்தில் உள்ள எல்லோரும் பங்குபோட்டுக் கொள்ள வேண்டும்.

அதேசமயம் நோட்டு, புத்தகம் வேணும் எனப் புள்ளங்க வந்து கேட்கும்போது பிரச்சினை வந்துவிடுகிறது. நோட்டு வாங்க காசைப் புரட்டுவதற்கு இரண்டு நாள் ஆகும்னு புள்ளங்களிடம் சொன்னா, வாத்தியார் அடிப்பார், ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு நின்னுடுதுங்க என்கிறார்கள் காடந்தேத்தியைச் சேர்ந்த பெண்கள்.

பள்ளிக்கூடப் பசங்க பிரச்சினையைவிட, காலேஜுக்குப் போகும் வயதில் பிள்ளைகள் உள்ள வீடுகளில் காலேஜ் பீஸ் கட்டுவதில் தொடங்கி பஸ்ஸுக்குக் காசு புரட்டிக் கொடுப்பது வரையில் தினந்தோறும் பிரச்சினைகள். உம்பளச்சேரியைச் சேர்ந்த ரத்தினத்தின் இரண்டாவது மகன் தனியார் ஐ.டி.ஐ.யில் படிப்பை முடித்துவிட்டாலும், கட்டண பாக்கியிருப்பதால் இன்னும் சர்டிபிகேட்டை வாங்க முடியவில்லை. அவரது மூன்றாவது மகன் மன்னார்குடியிலுள்ள அரசு கல்லூரியில் படிக்கிறான். பஸ்ஸுக்குக் காசில்லைன்னா, அன்னிக்குக் கல்லூரிக்கு மட்டம்தான்.

”எம் புள்ள ஒருத்தன் திருச்சியில தனியார் இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறான். பீஸெல்லாம் இல்ல, ஃப்ரீதான்னு சொல்லி சேர்க்கச் சொன்னாங்க. இப்ப எக்ஸாம் பீஸ் ஐயாயிரம் கொடுன்னு கேட்குறாங்க. புள்ளய படிக்க வைக்கவா, திருப்பிக் கூட்டிட்டு வந்துறவான்னு தவிக்கிறேன்” என்கிறார், உம்பளச்சேரியைச் சேர்ந்த செல்வி.

தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கும் தனது மகளுக்காகக் கல்விக் கடன் கேட்டு வங்கிக்குச் சென்ற தலைஞாயிறைச் சேர்ந்த முரசொலியிடம், ”75 சதவீத மார்க் எடுத்தவர்களுக்குத்தான் கல்விக் கடன் கொடுப்போம்” எனக் கூறித் திருப்பி அனுப்பிவிட்டார்கள் வங்கி அதிகாரிகள். வெளியாட்களிடம் கடன் வாங்குவதைத் தவிர முரசொலிக்கு இப்பொழுது வேறு வழியில்லை.

படிப்பை விவசாயத்திலிருந்து தப்பியோடுவதற்கான வழியாகவே விவசாயிகள் பார்க்கிறார்கள். அதனால் கடன்பட்டாவது தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்துவிடத் துணிகிறார்கள். உம்பளச்சேரியைச் சேர்ந்த காமராஜ், தனது மகனை எம்.பி.ஏ. வரை படிக்க வைப்பதற்காக மூன்று இலட்ச ரூபாய் கடன்பட்டதாகக் கூறுகிறார்.

படிச்சாலும் சரி, படிக்காவிட்டாலும் சரி; ஆகப் பெரும்பான்மையான இளைஞர்கள் விவசாயத்தை நம்பவில்லை. திருப்பூர், கோயம்புத்தூர், சென்னைக்கு வேலை தேடி புலம் பெயர்ந்துவிடுகிறார்கள். ஆந்திராவில் ஹிட்டாச்சி வண்டிகளை ஓட்டுவதற்கும், கேரளாவுக்குக் கல்லுடைக்கவும் பகுதி இளைஞர்கள் சென்றுவிடுவதாகக் கூறுகிறார், உள்ளூர் எல்.ஐ.சி. ஏஜெண்ட் ஏகாம்பரநாதன். வெளியூருக்குச் செல்ல முடியாத இளைஞர்கள் பக்கத்து நகரங்களுக்கு டிரைவராகப் போய்விடுகிறார்கள். படித்த இளம் பெண்கள் உள்ளூரிலேயே கடைகளில் 130 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்கிறார்கள்.

தலைஞாயிறு, காடந்தேத்தி, உம்பளச்சேரி ஆகிய ஊர்களைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் உயிரோடு இருக்கிறார்கள் என்று கூறலாமே தவிர, அவர்கள் வாழ்கிறார்கள் என்பதற்குப் பொருள் கிடையாது. கல்வி, மருத்துவம், கல்யாணம், கருமாதி என வாழ்வில் வரும் சுக, துக்கங்கள் அனைத்திற்கும் அவர்கள் இப்பொழுது தனியார் கடனை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். தனியார் குறுநிதி நிறுவனங்கள், கந்துவட்டிக் கும்பல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் அனைத்தும் அவர்களுக்குக் கடன் வழங்குவதில் மிகத் தாராளமாகவே நடந்து கொள்கின்றன.

வறட்சியைக் கண்டு நாம் அஞ்சுகிறோம். தனியார் கந்துவட்டிக் கும்பலோ, வறட்சியைப் புதிய முதலீட்டுக்கும் இலாபத்திற்குமான வாய்ப்பாகப் பார்க்கிறார்கள்.

***

வறட்சி, சாகுபடி பொய்த்துப் போனதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைச் சந்திப்பதில் தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளுக்கும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த சிறு விவசாயிகளுக்கும் பெருத்த வேறுபாடில்லை. இதனை உம்பளச்சேரியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளே எடுத்துச் சொல்கிறார்கள். உதாரணமாக, தலைஞாயிறு ஒன்றியத்தில் நிலவும் குடிதண்ணீர் பிரச்சினையை எடுத்துக்கொண்டால், அது சாதி வேறுபாடின்றிப் பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கிறது.

உம்பளச்சேரிக்கு, அவ்வூருக்கு அருகிலுள்ள கரியாப்பட்டினத்திலிருந்து எட்டு நாளைக்கு ஒருமுறைதான் டிராக்டர் மூலம் தண்ணீர் சப்ளையாகிறது. அன்றாடப் புழக்கத்திற்குத் தேவைப்படும் தண்ணீரை அவ்வூரைச் சேர்ந்த அனைவரும் ஒரு கிலோ மீட்டரோ, இரண்டு கிலோ மீட்டரோ சென்று, அடி பம்புகளில் காத்திருந்து எடுத்துவர வேண்டும்.

டெல்டா விவசாயமே அழிவை நோக்கித் தள்ளப்படிருக்கும் சூழலில் தலைஞாயிறு ஒன்றியப் பகுதி வழியாகக் கடலை நோக்கிச் செல்லும் வ்ண்ணாறு வடிநிலப் பகுதி – அரிச்சந்திரா நதியில் கட்டப்படும் தடுப்பணை. இத்தடுப்பணை மழை நீரைச் சேமிக்கவா, இறால் பண்ணை குட்டைகளுக்கா எனக் கேள்வி எழுப்புகிறார்கள், உள்ளூர் மக்கள்.

காடந்தேத்தி கிராம மக்கள் குளிப்பதற்குப் பக்கத்திலுள்ள மணக்குடியிலுள்ள குளத்திற்குச் செல்ல வேண்டும். குடிதண்ணீர் எடுப்பதற்கு கிராமத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள தலைஞாயிறு மெயின் ரோட்டுக்குச் செல்ல வேண்டும். அதிகாலையில் இரண்டு மணிக்கோ, மூணு மணிக்கோ எழுந்து, சைக்கிளில் குடத்தைக் கட்டிக்கொண்டு போய், ரெண்டு ரெண்டு குடமாகத் தண்ணீர் எடுத்துவருவதற்குள் விடிந்துவிடும் என்கிறார்கள், அவ்வூர்ப் பெண்கள்.

தலைஞாயிறில் இரண்டு நாளைக்கு ஒருமுறை தெருக் குழாய்களில் குடிதண்ணீர் வரும். ஆனால், அன்று நடக்கும் குடுமிப்பிடி சண்டையைத் தீர்த்துக் கொள்ள போலீசு ஸ்டேஷன் வரை போக வேண்டியிருக்கிறது என்கிறார்கள்.

தலைஞாயிறு ஒன்றியப் பகுதியிலுள்ள பெரும்பாலான கிராமங்கள் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத்தான் குடிநீருக்கு நம்பியுள்ளன. இந்தக் கொள்ளிடம் கரையை ஒட்டியிருக்கும் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 45 கிராமங்களில்தான் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலம் அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது, தமிழக அரசு. இதனால் இப்பகுதி மக்கள் எதிர்காலத்தில் இன்றிருப்பதைவிட மோசமான குடிநீர்த் தட்டுப்பாடைச் சந்திக்கும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும்.

தலைஞாயிறு பகுதியில் வறட்சி பாதித்த இந்த ஆண்டுக்கான (2016) காப்பீடு இதுவரை வழங்கப்படவில்லை. வெள்ளம் பாதித்த கடந்த ஆண்டுக்கான (2015) காப்பீடு மட்டும்தான் வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும்கூட விவசாயிகள் அடைந்த நட்டத்தில் கால்பகுதியைக்கூட ஈடு கட்டவில்லை. உம்பளச்சேரியைச் சேர்ந்த செல்விக்கும் அமாவாசைக்கும் கிடைத்த காப்பீடு தொகை வெறும் 600 ரூபாய்தான். இதைக்கொண்டு ஒரு ஏக்கர் நிலத்தை உழவு ஓட்டுவதற்கு ஆகும் செலவைக்கூட ஈடு செய்ய முடியாது.

இதுவாவது பரவாயில்லை, தலைஞாயிறு ஒன்றியத்திலுள்ள களத்தூர் பிர்காவைச் சேர்ந்த விவசாயிகளுக்குக் காப்பீடு தொகையே கிடையாது எனக் கைவிரித்துவிட்டார்கள் என்கிறார், எஸ்.சம்பந்தம்.

தலைஞாயிறைச் சேர்ந்த ரவிசேகர், ”லாப்டி” மூலம் கிடைத்த ஒரு ஏக்கர் நிலத்தில் (300 குழி) பயிர் செய்து வருகிறார். ஆனால், அவருக்கு 200 குழிக்குக் கணக்கிட்டுதான் வறட்சி நிவாரணம் தந்திருக்கிறார்கள். மீதி 100 குழிக்கான நிவாரணத்தை அதிகாரிகள் அமுக்கிவிட்டார்கள் என்கிறார், அவர்.

குமார் ஒரு ஏக்கர் கோவில் நிலத்தை எடுத்துக் குத்தகை செய்து வருகிறார். இவருக்கு வறட்சி நிவாரணமும் கிடைக்கவில்லை, காப்பீடும் கிடைக்கவில்லை. வறட்சி நிவாரணம், காப்பீடு தொகையை வழங்குவதில் நடந்துள்ள குளறுபடிகளையும் பாரபட்சமான அணுகுமுறையையும் எதிர்த்து ஏன் போராடவில்லை எனக் கேட்டதற்கு, ”எங்களுக்கு இருக்கும் வறுமைக்குக் கிடைத்ததே போதும் என்ற நிலையில் இருக்கிறோம்” எனப் பதில் அளித்தார்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகள்.

***

வேலையில்லை, குடிநீர் இல்லை, அரைப்பட்டினியில் தள்ளப்பட்டிருக்கும் குடும்பங்கள் என்ற நிலையிலும்கூட தலைஞாயிறு பகுதி அமைதியாகத்தான் இருந்து வருகிறது. நிவாரணம் கோரி சம்பிரதாயமான முறையில் போராட்டங்கள் நடத்தியதைத் தாண்டி, விவசாய சங்கங்கள் வேறெந்த தொந்தரவையும் அரசிற்கும் அதிகார வர்க்கத்திற்கும் தந்துவிடவில்லை.

வறுமையைவிட, விவசாயிகள் தமது போராட்டக் குணத்தை இழந்து நிற்பதுதான் நம்மைப் பெரிதும் அச்சுறுத்துகிறது. விவசாயிகள் போராடத் துணிய மாட்டார்கள் என்ற கொழுப்பில்தான் எடப்பாடி அரசு தமிழகத்தில் பரவலாக வறட்சி காணப்படவில்லை என உச்சநீதி மன்றத்தில் துணிந்து பொய் சொல்கிறது. வேலையில்லாமல் தவிக்கும் கூலி விவசாயிகளுக்குச் சிறு நிவாரண உதவியைக்கூட அறிவிக்க மறுக்கிறது.

இந்த அமைதி எப்போது குலையும் என்று யோசனை செய்துகொண்டே பேருந்து நிலையத்திற்கு வந்தேன். பேருந்து ஏறும் முன் சாப்பிட்டுவிடலாம் என முடிவு செய்து, அருகில் இருந்த ஓட்டலுக்குள் நுழைந்து சப்பாத்தி கேட்டேன். சப்பாத்தியில் கைவைக்கும் சமயத்தில் ”காலையில் நீராகாரம் சாப்பிட்டதுதான் சார்” எனச் சொன்ன அந்த முதியவரின் நினைவும் வந்துபோனது. சப்பாத்தி தொண்டைக் குழிக்குள் இறங்க மறுத்தது.

 -செல்வம்

புதிய ஜனநாயகம், ஆகஸ்டு 2017

_____________

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?

0
கடல் சீறம் காரண்மாக நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் மணல் திட்டுக்களில் ஏற்பட்டுள்ள அரிப்பு ( கோப்புப் படம் - நன்றி தினகரன் )

மிழகத்தின் நெற்களஞ்சியம் என்று கருதப்படும் காவிரி டெல்டா (வடிநிலம்) பிராந்தியமே சுருங்கத் தொடங்கிவிட்டது. விளைநிலங்கள் மென்மேலும் தரிசு நிலங்களாகச் சீரழிந்து கொண்டிருக்கின்றன.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜன் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வினை மேற்கோள் காட்டி, தி இந்து ஆங்கில நாளேட்டில் (ஜுலை 15, 2017) பத்திரிகையாளர் வித்யா வெங்கட் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

தஞ்சை விவசாயிகள் பஞ்சத்தில் வாடுகிறார்கள் என்பது ஒருபுறமிருக்க, ஒரு மிகப்பெரும் சூழலியல் பேரழிவின் விளிம்பில் தமிழகம் நின்று கொண்டிருப்பதை இந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

காவிரி டெல்டாவில் நிகழ்ந்து வரும் சூழலியல் சீர்கேடு குறித்து ஆய்வு செய்த ஓய்வு பெற்ற பேராசிரியர் ஜனகராஜ்

நெடுவாசல், கதிராமங்கலம் மக்கள் போராடிக் கொண்டிருக்கும்போதே, கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் பிராந்தியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எண்ணெய் எரிவாயு எடுப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற பிரச்சாரத்தைப் பொய்ப்பிக்கும் இக்கட்டுரையின் சில பகுதிகளைச் சுருக்கிக் கொடுத்திருக்கிறோம்.

2014 முதல் 2016 -ஆம் ஆண்டு வரை பேரா.ஜனகராஜனால் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, 1970 -களில் தொடங்கி சுமார் நாற்பதாண்டு நிலைமைகளை ஆய்வு செய்திருக்கிறது. இந்திய வானவியல் ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) நேசனல் ரிமோட் சென்சிங் சென்டரிடமிருந்து பெறப்பட்ட 1971 -ஆம் ஆண்டிற்குரிய நிலவியல் வரைபடத்தை, மே 2014 -ல் பெறப்பட்ட புவியியல் தகவல் அமைப்பின் படத்துடன் ஆய்வாளர் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.

இந்த ஆய்வில், விவசாயமல்லாத தொழில்களுக்கு விளைநிலங்களைப் பயன்படுத்துவது என்பன போன்ற நடவடிக்கைகளாலும், பருவநிலை மாற்றங்களாலும், டெல்டாவின் நிலப்பயன்பாட்டிலும் நிலத்தின் மீதான தாவரப்போர்வையிலும் கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவதானித்திருக்கிறார்.

”பயிரிடும் பரப்பு பெரிதும் வீழ்ச்சியடைந்திருப்பதும், 1971 -க்கும் 2014 -க்கும் இடைப்பட்ட காலத்தில் தரிசு நிலத்தின் அளவு 13 மடங்கு அதிகரித்திருப்பதும் கவலையளிக்கும் விசயங்களாகும். பாசனத்துக்குத் தண்ணீர் இல்லாத காரணத்தினால் நிலம் தரிசாகப் போடப்பட்டதும், மற்ற பருவநிலை மாற்றங்களுமே இதற்குக் காரணம்” என்கிறார் பேரா. ஜனகராஜன்.

மூழ்கும் அபாயம்

இந்த ஆய்வு சுட்டிக்காட்டும் இன்னொரு நிகழ்வு சதுப்புநிலக் காடுகளின் அதிகரிப்பு ஆகும். கடல் நீர் உள்ளே வருவதன் காரணமாக சதுப்புநிலக் காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளது. 1971 -ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது சதுப்புநிலக் காடுகளின் பரப்பு 14 மடங்கு அதிகரித்திருப்பதைத் தரவுகள் காட்டுகின்றன.

”சதுப்புநிலக் காடுகள் அதிகரிப்பது பற்றி நாம் மகிழ்ச்சி அடைவதற்கு ஏதுமில்லை. மென்மேலும் அதிகமான விளைநிலத்தை கடல் ஆக்கிரமித்து வருகிறது என்பதும், விளைநிலம் உவர் நிலமாக மாறி வருகிறது என்பதும்தான் இதன் பொருள் ” என்கிறார் ஜனகராஜன். தமிழக நிலப்பரப்பின் தாழ்நிலப் பகுதிகளில் 72% டெல்டா பகுதி கடற்கரையில்தான் உள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாகக் கடல் மட்டம் உயர்ந்து வருவதன் விளைவாக டெல்டா பகுதி கடலில் மூழ்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது.

கடல் சீறம் காரண்மாக நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடியில் மணல் திட்டுக்களில் ஏற்பட்டுள்ள அரிப்பு ( கோப்புப் படம் – நன்றி தினகரன் )

”டெல்டா பகுதியின் கணிசமான நிலப்பரப்பு, கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டர் உயரத்தில்தான் இருக்கிறது” என்று சுஜாதா பைரவன் மற்றும் சிலரின் ஆய்வுகள் கூறுவதை எடுத்துக் காட்டுகிறார் ஜனகராஜன்.  காவிரியின் நதியோட்டத்தில் தொடர்ச்சியாகப் படிகின்ற வண்டல் மண்தான் தஞ்சை வடிநிலப்பகுதியை கடல் மட்டத்துக்கு மேலே உயர்த்தி வைத்திருக்கிறது என்றும், தற்போது வண்டல் மண் வரத்து குறைந்துவிட்டதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.

ஆற்றில் மேல் பகுதியில் வரிசையாகக் கட்டப்படும் அணைகள் தான் வண்டல் மண் வரத்து குறைந்து போவதற்குக் காரணம். கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் காவிரி டெல்டாவிற்குள் வண்டல் மண் வரத்து 80% குறைந்திருக்கிறது என்றும் கூறுகிறார் ஜனகராஜன். 1934 -இல் மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அதன் கொள்ளளவு 2708.8 மில்லியன் கன மீட்டர்கள்; 2015 -இல் இது 1889 மில்லியன் கன மீட்டராகக் குறைந்து விட்டது.

இவையனைத்தின் காரணமாக டெல்டாவின் பயிரிடும் நிலப்பரப்பு 1971 -இல் இருந்ததைக் காட்டிலும் 27% குறைந்திருக்கிறது. கடல்நீர் உள்ளே புகுவதன் காரணமாகக் கடற்கரையோரங்களில் இறால் குட்டைகள் கணிசமான அளவில் அதிகரித்து வருவதும் விவசாயத்திற்குக் கேடானதாகவே இருக்கிறது.

இன்னொரு அபாயம் மண்ணின் தன்மையாகும்.  டெல்டா பிராந்தியம் களிமண் பூமி. இதில் 52% விரிசல் விடும் களிமண்ணாகும். தொடர்ச்சியாக நீர்வரத்து இல்லையென்றால் இந்த மண் மிகவும் பலவீனமாகிவிடும் என்று தனது ஆய்வில் குறிப்பிடுகிறார் ஜனகராஜன்.

எச்சரிக்கிறது கோதாவரி டெல்டா !

”கிருஷ்ணாகோதாவரி டெல்டாவில் கடல் மட்டம் உயர்கிறதா, நிலம் தாழ்கிறதா?” என்று தலைப்பிட்டு, ஜூலை 23, 2017 அன்று வித்யா வெங்கட், பி.வி.எஸ். பாஸ்கர் ஆகியோர் இந்து நாளேட்டில் வெளியிட்டுள்ள கட்டுரை, கோதாவரி டெல்டாவில் இன்று என்ன நடக்கிறதோ, அது தான் நாளை தஞ்சையில் நடக்கவிருக்கிறது என்ற அபாயத்தை உறுதி செய்கிறது.

கிருஷ்ணாகோதாவரி டெல்டா வரைபடம்

கிருஷ்ணாகோதாவரி டெல்டாவின் விளைநிலங்கள் உவர்த்தன்மை பெற்றுவருவதாகவும், இது விவசாயத்தைப் பாதித்திருக்கிறது என்றும் ஆந்திர பல்கலைக்கழக்கத்தின் ஓய்வு பெற்ற நிலவியல் பேராசிரியரும், அப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாகப் பல கள ஆய்வுகளை மேற்கொண்டவருமான பேரா.கிருஷ்ணாராவ் கூறியிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் இந்த டெல்டா பகுதி 1.5 அடி முதல் 5.4 அடி அளவுக்குக் கீழிறங்கியுள்ளது என்றும் அதன் விளைவாக கடல்நீர் உள்ளே புகுந்து வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.

”கோதாவரியில் உள்ள கன்னாவரம் மதகு, 1986 பெரு வெள்ளத்தின் போது 23.6 அடி உயரத்துக்கு தண்ணீர் வந்தபோதுதான் நீரில் முழுகியது, 2013 -ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது அது 18.2 அடி நீரிலேயே மூழ்கிவிட்டது. நிலப்பரப்பு 5.4 அடி கீழிறங்கி விட்டது என்பதை இது நிரூபிக்கிறது” என்கிறார் கிருஷ்ணாராவ்.

டெல்டா கீழிறங்குவதற்குக் காரணம் இங்கே இயற்கை எரிவாயு எடுப்பதுதான் என்று குற்றம் சாட்டுகிறார் கிருஷ்ணா ராவ். இவர் உறுப்பினராக இருக்கும், கிருஷ்ணாகோதாவரி டெல்டா பாதுகாப்பு அமைப்பின் சார்பில், ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட எரிவாயு நிறுவனங்களுக்கு எதிராக ஐதராபாத் உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து, இந்த இழப்புக்களுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியிருக்கின்றனர்.

”பூமியின் அடியாழத்திலிருந்து ஹைட்ரோ கார்பன்களை எடுக்கும்போது பாறைகள் மீது பெருமளவு அழுத்தம் செலுத்தி வந்த வாயுக்கள் அகற்றப்பட்டு விடுவதால்தான் அவற்றுக்கிடையிலான சமநிலை குலைந்திருக்கிறது” என்பது பேராசிரியர் கிருஷ்ணாராவ் முன்வைக்கும் குற்றச்சாட்டு.

”நாங்கள் எரிவாயு எடுப்பதால்தான் நிலவியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதற்குப் போதிய அறிவியல் பூர்வமான தரவுகள் இல்லை” என்று சாதிக்கும் ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள், இவ்வழக்கில் உயர்நீதி மன்ற ஆணைப்படி, டெல்டா ஆய்வுக் கழகம் நடத்தியுள்ள ஆய்வுகளின் அறிக்கைகளை மட்டும் காட்ட மறுக்கிறார்கள் என்று கூறுகிறது தி இந்து நாளேடு.

”அந்த அறிக்கையின் முடிவுகளை நாங்கள் பார்த்தோம். டெல்டா நிலவியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிலம் தாழ்ந்துள்ள பகுதிகள் இறால் குட்டைகளால் சூழப்பட்டுள்ளன அல்லது எரிவாயுக் கிணறுகளுக்கு அருகாமையில் உள்ளன” என்று கூறுகிறார்கள் இந்தச் செய்தியாளர்கள்.

தமிழகத்துக்கு சோறிட்ட தஞ்சை உழவர் சமூகத்தையும், தஞ்சை மண்ணையும் கடல் கொள்ள அனுமதிக்கப்போகிறோமா?

 -அஜித்.

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017

_____________

இந்த சூழலியல் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா ?

1

பிக்பாஸ் இரசிக்கப்படுவது ஏன்? பாகம் 2

“பிக்பாஸ் வீட்டிலிருந்தால் ஓவியாவுக்கு விதவிதமா சமைத்துப் போட்டு அசத்தியிருப்பேன், மிஸ் பண்ணிட்டேனே” என்று வருந்தினார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. அந்த நேரம் ஓவியாவுக்கு பெரும் வரவேற்பு இருக்கவில்லை. பிக்பாஸ் குடும்பத்தினர் வெளியேற்றும் பட்டியலில் ஓவியாவை முன்னிறுத்திய நாட்களில், அவர் பெற்ற மக்கள் ஆதரவு குறித்து சாரு நிவேதிதா நிச்சயம் கொண்டாடியிருப்பார்.

எழுத்தாளர் சாரு நிவேதிதா

பிறகு சாருவும் ஓவியா – பிக்பாஸ் குறித்து நிறைய எழுதி விட்டார். ஒருவேளை தான்தான் ஓவியா குறித்த ரசனையை மக்களுக்கு கற்றுக் கொடுத்ததாகக் கூட அவர் நினைத்திருக்ககலாம். மோடியை அவர் ஆதரித்த போது சாருவின் ரசிகர் வட்டமே ஏற்கவில்லை போன்ற பிரச்சினை பிக்பாஸில் இல்லை. இது எல்லா வகையிலும் பாதுகாப்பானதோடு, பலவகைகளில் அவருக்கு ஆதாயங்களையும் தரும்.

சாருவின் சீடரான அராத்துவின் புத்தக வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பங்கேற்று, கமலஹாசனைப் பற்றி ஒரு விசயத்தைக் கூறினார். தமிழ் சினிமா புதுமைகள் பல கமலிடமிருந்தே துவங்கினாலும் கீழே மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கேட்க முடியாத உயரத்தில் கமல் இருப்பதாக வருத்தப்பட்டார் ஜெயமோகன். “பாபநாசம்” படத்திலிருந்து அவருக்கு கமல் நெருக்கமாகி பல ‘டிஸ்கஸன்கள்’ முடிந்திருந்தாலும் ஜெயமோகனால் கூட கமலின் “நானேதான்” பேச்சுக்குள் புகுந்து கருத்தை தெரிவிப்பது மிகுந்த சிரமம் என்றார்.

ஜெயமோகனும் கூட கழிப்பறை, தூக்கம் தவிர வருடம் முழுவதும் பேசக்கூடியவர்தான். அப்பேற்பட்டவர் கூட கமலின் சன்னிதானத்தில் பாட முடியவில்லை.

கமல் என்றில்லை தமிழ் சினிமாவில் ஒரு படம் வெற்றி பெற்றாலே அந்த இயக்குநரின் அலுவலகத்தில் உள்ள பெரிய படுக்கையறையில் விரிக்கப்பட்டிருக்கும் உரையாடல் மெத்தையின் தலைமூலையில் அவரும், படுக்கையின் பக்கவாட்டில் ஐந்து – பத்து உதவி இயக்குநர்களும் அமர்ந்திருப்பார்கள். அவ்வப்போது சிற்றுண்டி எடுத்து வரும் பணியாளர்களின் பாத அதிர்வு தவிர அங்கே வேறு மனிதச் சப்தம் இருக்காது. அதாவது இயக்குநர் மட்டும் நான்ஸ்டாப்பாக “நானேதான்” என பேசிக் கொண்டிருப்பார்.

சினிமாவில் கலையை கட்டுப்படுத்துவது மூலதனம் என்பதால், சினிமா-மாந்தர்களை சர்வாதிகாரம் கட்டுப்படுத்தும். நாட்டாமைத்தனத்தில் நாட்களைக் கழிப்பவர்கள் முந்தைய அடிமை – இன்றைய ஆண்டான் எனும் இரட்டைப் பிறவிகளைத் தாண்டி வேறு பாத்திரத்தை ஏற்பதில்லை. காயத்ரியை வெறுப்பவர்களுக்கு இது புரிந்திருக்கலாம்.

அப்பேற்பட்ட கமலை பிக்பாசின் நெறியாளராக இறக்கியிருக்கிறார்கள். அவரது பெரு ஊதியம், சபாஷ் நாயுடு, விஸ்வரூபம் 2 திரைப்படங்களை நல்ல விலைக்கு விஜய் டிவியே வாங்கும் ஒப்பந்தம் போக இமேஜும் முக்கியம். ஆரம்ப நாட்களில் அவரது கெட்டப் சோபிக்கவில்லை என்று ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள்.

முதல் எலிமினேசன் (நீக்கம்) நபரை அறிவிக்கும் நேரத்தில் (காதில் இருக்கும் கருவி மூலம்) “உடனே யாரெனச் சொல்லாதீர்கள் என்கிறார்கள்” என கமல் நகைப்புடன் சமாளித்தார். நீயா நானா-வில் கோபிநாத்தை இயக்குநர் ஆன்டனி இயக்குவது போல கமலையும் யாரோ ஒருவர் இயக்குகிறார். கௌரவமாகக் கூறுவதென்றால் யாரோ ஆலோசனை கூறுகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் பங்கேற்பு இல்லாமல் வெற்றியடையாது என்பது ஓர் அடிப்படை நிபந்தனை. ஆகவே ஆரம்பத்தில் கமல் தானே பேசும் மூடில் இருந்தாலும் பின்பு கைதட்டலுக்காக பேச வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறார் அல்லது ஓதக் கேட்டு ஏற்றிருப்பார்.

பரணி வெளியேற்றப்பட்ட நாளில் அவர் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் பரணி சிக்சராக அடிக்க அடிக்க மக்கள் கைதட்டல் அலைஅலையாகக் கிளம்ப சில நேரம் டியூப்லைட் போல தாமதமாகவே கைதட்டினார் கமல். பிறகு அவரது கிச்சன் கேபினட் வகுப்பெடுத்திருக்கும். பிந்தைய வாரங்களில் அவர் பொதுப்புத்தியை கைப்பற்றும் நோக்கில் முயன்றார். தான் மக்களின் பிரதிநிதி என்றும், ஓவியாவை ஆதரிப்பதும், காயத்ரியை எதிர்ப்பதுமான பாணியில் காட்டிக் கொண்டார்.

இதன் போக்கில் இருட்டறையில் காண்பிக்கப்படும் “ஆடியன்ஸ்” ஒத்திகையை சரி செய்து கொண்டார்களோ என்னவோ, எப்போது கைதட்டல் வேண்டுமோ அப்போது கமல் மக்களைக் கண்ணால் பார்ப்பார், அமைதி இடைவெளி விடுவார், கையாலேயே தட்டச் சொல்வார். பிறகு டியூப்லைட் சரியான நேரத்தில் எரிய ஆரம்பித்தது.

சென்ற வாரம் காயத்ரிக்கு பெருவாரியான மக்கள் வாக்களித்து வெளியேற்றும் நேரத்தில் வியாழக்கிழமை அன்று பிக்பாஸ் காயத்ரியை காப்பாற்றியதாக பலர் பொங்கினர். அந்த பொங்கல் தனக்கும் உண்டு எனக் கமலும் இலை-காய் மறையாக பேசி அதை பிக்பாசிடமே கேட்டார்.

விசித்தரமானது என்று நாம் உச்சரிப்பதை விஜித்திரமானது என்று யார் உச்சரிப்பார்கள்? அந்த ‘ஜி’-யை உச்சரிக்கும் பிக்பாஸ் ஜி, காயத்ரியை காப்பாற்றிய கதையைச் சொன்னார். “பிக்பாசின் விதிகள் விஜித்தரமானது, இது இன்டர்நேஷனல் ஃபார்மெட்டில் ஆடப்படும் விளையாட்டு, பார்வையாளர்களுக்கு பல விதிகள் தெரியாது, வீட்டில் இருப்போரால் வெளியேற்றப்படும் நபரை மக்கள் காப்பாற்றுவது போல, மக்கள் வாக்களித்து வெளியேற்றும் நபர் வேறு விதிகளால் காப்பாற்றப்படலாம் – திருப்பி அழைக்கப்படலாம் என்றார்.”

சரிங்க ஆபிசர், அது என்ன இன்டர்நேஷனல் ஃபார்மெட்?

கிரிக்கெட்டில் எல்.பி.டபிள்யூ, கால்பந்தில் ஆஃப்சைடு, கூடைப்பந்தில் ஐந்து ஃபவுல் போலவா அந்த விதிகள்? ஒரு வெங்காயமும் கிடையாது. பிக்பாஸ் வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் கம்பெனி விளம்பரங்கள். ஊர்க் கோவில்களில் கூட டியூப்லைட்டில்தான் எழுதியிருப்பார்கள். இங்கோ லைட்டு வெளிச்சத்தின் நிழலே விளம்பரமாக இருப்பது போல எங்கு பார்த்தாலும் ஆச்சி, ஆயுஸ், விவோ என்று ஒரே கூச்சல்.

ஐந்து நாட்களில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களின் கதையை பார்க்கும் மக்கள் வார விடுமுறை நாட்களில் ஒரு நபரின் வெளியேற்றுப் படலத்தையும், வெளியேறுபவரோடு கமல் உரையாடுவதையும் பார்க்கிறார்கள். இதில் எல்லா நாட்களிலும் விறுவிறுப்பு, சண்டை-சச்சரவு இருந்தாக வேண்டும். அப்படி இல்லாமல் வீடு அமைதியாக இருந்தால், டாஸ்க் என்ற பெயரில் பிக்பாசே கொளுத்திப் போடுவார். இந்த விறு விறுப்பின்றி நிகழ்ச்சியின் விளம்பரங்களும் சூடுபிடிக்காது. வேறு ஆட்களை கொண்டு வருவது, வெளியேறியர்களை மீண்டும் இறக்குவது என்று என்ன வேண்டுமானலும் செய்யலாம் என்பதே பிக்பாஸ் சொல்லும் அந்த “இன்டர்நேஷனல் ஃபார்மெட்”!

இப்படி விதிகளோ, வரம்புகளோ நடுவருக்கு அதாவது பிக்பாசுக்கு இல்லை என்பதை விதியாக வைத்திருக்கும் இந்நிகழ்வை, விளையாட்டு – கேம் என்று சொல்வது அபத்தம். ‘’ஜெயலலிதா இயற்கையாக மரித்தார் என்பதே என் கருத்து; ஆனாலும் மக்களின் கேள்விகளுக்கு விடை வேண்டும் என்றே விசாரணைக் கமிஷன் கோரினேன்’’ என்று ஓபிஎஸ் பேசினார் அல்லவா? அதையே இங்கு கமல் கொஞ்சம் நாடகத் தன்மையுடன் மக்களுக்காக பேசுவதாக நடிக்கிறார்.

நெதர்லாந்தில் பிக்பிரதராக இருந்து இந்தியாவில் பிக்பாசாக குதித்திருக்கும் இந்நிகழ்வின் கருவே போட்டிக்கு வருவோரிடம் நடக்கும் சண்டை, பொறாமை, சச்சரவு, கோள் மூட்டுதல், புறம் பேசுதல், வயிற்றெரிச்சல் போன்ற அற்பத்தனங்களை வைத்து சன் டிவியின் மாமியார் – மருகமகள் சீரியல் போல பரபரப்பேற்றுவதுதான். இதுதான் பிக்பாஸ் டீம் – விஜய் டிவி – கமல் – பிக்பாஸ் மற்றும் போட்டியில் இருக்கும் நடிகர்களின் இலக்கு. இதில் முதல் இருவருக்கு விளம்பரம், பின்னிருவருக்கு ஊதியம். இந்த யதார்த்த வகை நாடகத்தின் உணர்ச்சி அலையில் தத்தளிக்கும் ஏமாளிகளாய் மக்கள்.

நன்கு கவனித்துப் பாருங்கள். பிக்பாஸ் வீட்டில் நூறு கேமராக்களும், அவற்றின் படப்பதிவை அதாவது 100 X 24 மணிநேர பதிவுகளை ஒரு மணிநேரத்தில் எடிட் செய்தும் காட்டப்படும். பிறகு வார இறுதியில் கமல் வரும் போது, அந்த சண்டைகளின் தொடர்ச்சியாக மக்கள் யாரை வெளியேற்ற வேண்டும் என்று வாக்களித்து சமூக வலைத்தளங்களில் லா பாயிண்டுகளை அடுக்கி பேசுகிறார்களோ… அதில் பெரும்பான்மைக் கருத்தை பிரதிபலிப்பது போல பேசுவார் – விவாதிப்பார் – கேட்பார். ஆக போட்டியாளர்களின் கோணம், பிக் பாஸின் விதிகள், மக்களின் கருத்து, கமல் அதை பிரதிபலிப்பது என இந்த தொடரில் விறுவிறுப்பு ஏற்றுகிறார்கள். ஒருக்கால் பிக்பாஸை விளையாட்டு என்றால் அதன் விதிகள் இப்படித்தான் போங்காட்டமாக இருக்கின்றன.

அடுத்து பிக்பாஸ் தொடரை வைத்து மக்கள் பேசும் நீதி நியாயங்களை பார்ப்போம்.

பிக்பாஸ் வார நாட்களிலும், கமல் வார இறுதியிலும் வேலை செய்கிறார்கள். மக்களோ 24 X 7 என வாரம் முழுமையும் வேலை பார்க்கின்றனர். அதன்படி இவர்கள் தினசரி ஒன்றரை மணிநேரம் பார்க்கும் பிக்பாஸ் தொடரை வைத்து அந்த வீட்டில் இருக்கும் 101-ஆவது கேமராவாக மாறுகின்றனர். இதுதான் என்டமோல்ஷைன் – விஜய் டிவி-யின் வெற்றி.

அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதிலும் நமக்கு எப்போதும் ஆர்வம் அதிகம்.

அடுத்தவரின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதிலும் நமக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். அதிலும் அது இரகசிய காமரா என்றால் இரட்டை மகிழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தவர் அந்தரங்கம்+இரகசிய கேமரா ஒரு காம்போ என்பதால் பார்வையாளர்களுக்கு ஒரு கிளுகிளுப்பு. போர்னோ வகை படங்களில், தொழில்முறை போர்னோ நடிகர்கள் நடிக்கும் படங்களைக் காட்டிலும், திருட்டு கேமரா வைத்து படம் பிடிக்கப்படும் தனிநபர்களின் படுக்கையறைக் காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவமும், அதிக பார்வையாளர்களும் கிடைக்கிறார்கள். ஏனெனில் தொழில்முறை போர்னோ படங்கள் பார்வையாளனுக்கு அந்தரங்கமான உணர்வைத் தருவது இல்லை.

மாறாக இரகசிய கேமரா படங்களில், ஏதோ அவனே மறைந்திருந்து அதைப் பார்ப்பதைப் போன்ற உணர்வை அவன் பெறுகிறான். இதே அளவுகோலை பிக்பாஸுக்கும் பொருத்தலாம். இது, கூடவே உட்கார்ந்து விளக்குப் பிடித்துக்கொண்டிருக்கும் திருப்தியை நமக்கு வழங்குகிறது. அதனால்தான் காயத்ரி பேசும் கெட்டவார்த்தையின் மீது கெட்டகோபம் கொள்கிறீர்கள். ஓவியாவின் காதல் தோல்வி உங்களை மனத்தளர்ச்சி கொள்ள வைக்கிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பது அந்த 10 பேர் மட்டுமல்ல… நீங்களும்தான்.

அரபு நாடுகளில் குற்றம் இழைத்தவர்களை நடு வீதியில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்கிறார்கள். அதை ஊரே சேர்ந்து வேடிக்கைப் பார்க்கிறது. இந்த தண்டனையில் பார்வையாளர்களின் பாத்திரம் என்ன? கைகளால் அல்லது மனதால் அவர்களும் இரண்டு கல்லை எறிகிறார்கள். ஒரு பார்வையாளராக பிக்பாஸ் வீட்டில் நாமும் ஒரு உறுப்பினராக மாறிவிடுகிறோம்.

முதலில் இது வீடா? மூன்று வேளையும் தின்றுவிட்டு புறணி பேசிக்கொண்டு வீட்டிலேயே உடகார்ந்திருப்பதற்குப் பெயர் வீடா? எந்த வீட்டில் இப்படி இருக்கிறார்கள்? ஒரு மேட்டுக்குடி வீட்டில் கூட இப்படி இருக்கமாட்டார்கள். முதலில் இதை வீடு என அழைப்பதே அயோக்கியத்தனமானது.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நபர்களின் வர்க்க சேர்க்கையும், ஆளுமை பின்னணியும் கூட யாரும் இயக்காமலேயே முரண்படும்.

பலரும் நினைப்பது போல இந்த நிகழ்வை ஏதோ முன்கதை – திரைக்கதை எழுதி நடத்த முடியாது – அது தேவையும் இல்லை. ஆனால் இந்த யதார்த்தக் கதையின் பாதையையும், பல்டிகளையும் ஒரு திறமையான இயக்குநர் முன்கூட்டியே வடிவமைக்க முடியும். அதைத்தான் வார நாட்களில் பிக்பாஸ் ஜியும், வார இறுதியில் கமல்ஜியும் செய்கிறார்கள்.

இதை போட்டியாக எடுத்துக் கொள்ளுங்கள். அதே நேரம் வாழ்க்கைக்கு தேவையான சில படிப்பினைகளையும் இதில் கற்கலாம் என்று பிக்பாஸ் தொடரை பொழுதுபோக்கு + வாழ்வியல் பாடம் என்று கமல் அடிக்கடி சூளுரைப்பதன் பின்னணியும் இதன் தீர்மானிக்கப்பட்ட பாதையை சமநிலையோடு ஏற்கச் செய்வதற்கே!

பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நபர்களின் வர்க்க சேர்க்கையும், ஆளுமை பின்னணியும் கூட யாரும் இயக்காமலேயே முரண்படும். சினிமா பின்புலத்திலிருந்து மார்க்கெட் இழந்தவர்களை எடுக்கும்போது அந்த முரண்பாடு வீரியமாகவும் இருக்கும். மற்றவர்கள் இயல்பாக சண்டை போட்டால் இவர்கள் அதை காவியச் சண்டையாக்கும் முன் அனுபவமுள்ளவர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக சினிமா மாந்தர்களிடையே வேர்விட்டிருக்கும் அடிமைத்தனம் கலந்த தனிநபர்வாதம் ஒன்றே ஒரு பெரும் போரை தோற்றுவிக்கும் சக்தி வாய்ந்தது.

சினிமா நடிகர்கள் என்பதால் மேக்கப், கவர்ச்சி, டயலாக், நடனம், நாடகம், நகைச்சுவை என மக்களுக்கும், சண்டை போக அழுகை, அமைதி, குமுறல், கோபம், சிரிப்பு, வருத்தம், கேலி என எல்லா உணர்ச்சிகளிலும் முக்குளிக்கலாம். எல்லா ‘ஜெனர்’களிலும் ரசிக்கலாம்.

முத்தாய்ப்பாய் வெளியேற்ற விரும்பும் நபர்களுக்கு மக்கள் வாக்களிக்கிறார்கள். இந்நிகழ்வை நான்கு கோடிப்பேர் பார்க்கிறார்கள், ஒரு கோடியே முப்பது இலட்சம் பேர் வாக்களிக்கிறார்கள் என்று கமலஹாசன் முதல் வாரத்தில் அறிவித்தார். சமூகவலைத்தளங்களிலோ ஒவ்வொருவரும் ஆளுக்கு ஐம்பது – நூறு ஓட்டுப் போடுவதை பெருமையாக அறிவிக்கிறார்கள். ஐந்து லட்சம் பேர் போட்டாலே அதைக் கோடியாக காட்ட முடியும். அதே நேரம் இந்நிகழ்வை அதிகம் பேர் பார்க்கிறார்கள், வாக்களிக்காதவர்கள் கூட ஓவியா – காயத்ரி என்று சார்பு எடுப்பதை நாம் மறுக்கவில்லை.

காயாத்ரி காப்பாற்றப்பட்டதும் இனி ஓட்டே போட மாட்டேன் என பலரும் தேர்தல் புறக்கணிப்பு பேசுகிறார்கள். தமிழ் பிக்பாஸ் இவ்வளவு பிரபலமானதற்கு ஒரே காரணம் காயத்ரிதான். காயத்ரி இல்லாமல் மக்களின் பங்கேற்பு இந்த அளவுக்கு இருக்க முடியாது. ஆரம்பத்தில் காயத்ரி பேசிய “ஜல்லிக்கட்டு போராட்டம்”, ஜூலியை அழவைத்தது, பிறகு ஓவியாவை தனிமைப்படுத்தியது, தற்போது ரைசாவிற்கு டார்கெட் வைத்திருப்பது, இடையில் சேரி பிகேவியர், எச்சைங்க, மயிர் என ஐம்பது நாட்களையும் தனது தோளில் சுமந்து சென்றிருக்கிறார் இந்த அம்மணி!

எனவே காயத்ரி எனும் “வில்லன்” பிக்பாஸ் நிறுவனம் – கமலுக்கு மட்டுமல்ல, ஓவியா ஆர்மி துவங்குமளவு ஒன்றிய ரசிகர்களுக்கும் மிக மிக அவசியம். ஒருவேளை காயத்ரி ஆரம்ப வாரத்திலேயே சென்றிருந்தால் மக்கள் ஈடுபாடு இல்லாமல் ஷோ டல்லடித்திருக்கும். காயத்திரியை காப்பாற்றியதாக பிக்பாஸ் மேல் கோபம் கொள்வதற்கு பதில் நன்றி சொல்வதே ஓவியா ரசிகர்களின் முதல் கடமை.

பிக்பாஸ் போட்டியாளர்களை அரசியல் – சமூகம் – ஆளுமை சார்ந்து மக்கள் பரிசீலிப்பது சரியா?

(தொடரும்)

இதன் முந்தைய இறுதி பாகங்களுக்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும் :

_____________

இந்தப் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சிறப்புக் கட்டுரை : குத்தகை விவசாயிகளாகும் கார்ப்பரேட்டுகள் !

2
நவீன குத்தகை விவசாயிகளாக அவதாரமெடுத்துள்ள தரகு முதலாலிகள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சுனில் மித்தல்

2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோடி அரசு ”மாதிரி விவசாய நிலக் குத்தகைச் சட்டம்” ஒன்றை வெளியிட்டது. அனைத்து மாநிலங்களும் இந்த மாதிரிச்சட்டத்தின் அடிப்படையில் தமது குத்தகைச் சட்டங்களை திருத்த வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

  • விவசாயத்தில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது;
  • சமத்துவத்தை கொண்டு வருவது;
  • விவசாயிகளுக்குக் கிடைக்கும் வேலைவாய்ப்புகளைப் பன்முகப்படுத்துவது;
  • கிராமப்புற பொருளாதாரத்தை விரைவாக மாற்றியமைப்பது.

ஆகியவையே இந்தப் புதிய சட்டத்தின் நோக்கங்கள் என்று பூசி மொழுகப்பட்ட மொழியில் சொல்கிறது நிதி ஆயோக். இந்தச் சட்டத்தினால் ஏற்படப் போகும் விளைவுகள் என்னென்ன, அரசின் உண்மையான நோக்கம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளும், நிலமற்ற விவசாயிகளும் நிறைந்த இந்திய விவசாயத்தை முற்றுமுழுதாகப் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளித்துவ கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் ஒப்படைத்து விட்டு, விவசாயிகள் குறித்த தனது பொறுப்புகள், கடமைகளிலிருந்து அரசு முழுமுற்றாக விலகிக்கொள்வதும், இதன் வாயிலாக விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளில் பெரும்பகுதியினரை விவசாயத்திலிருந்து வெளியேற்றுவதும் தான் அரசின் நோக்கம்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசு வகுத்திருக்கும் பல திட்டங்களில் ஒன்றுதான் மோடி அரசின் விவசாய நில குத்தகைச் சட்டம். இந்தப் புதிய குத்தகைச் சட்டத்தின்படி, ”குத்தகை விவசாயிகள்” யார் தெரியுமா? கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள். குத்தகைக்குத் தமது நிலத்தைக் கொடுக்கவிருப்பவர்கள் சிறு குறு விவசாயிகள்.

குத்தகை விவசாயி எனப்படுபவன் யார்?

பெரு நிலக்கிழார்கள், மடங்கள், ஆதீனங்கள் மற்றும் நகர்ப்புறத்தில் குடியேறிவிட்ட நிலவுடைமையாளர்கள் ஆகியோரது நிலங்களில் பாடுபட்டு, விளைச்சலில் கணிசமான பகுதியை நில உடைமையாளர்களுக்கு அளந்து விட்டு, வறுமையில் வாடுகின்ற விவசாயியைத்தான் குத்தகை விவசாயி என்று நாம் அறிந்திருக்கிறோம்.

இத்தகைய ஏழை குத்தகை விவசாயிகளைச் சுரண்டி வந்த பண்ணையார்களையும், மடங்களையும், கோயில் தர்மகர்த்தாக்களையும் எதிர்த்த விவசாயிகளின் போராட்டத்தின் விளைவாகத்தான் குத்தகை குறைப்பு, குத்தகைதாரர் பாதுகாப்பு உள்ளிட்ட பல சட்டங்கள் இயற்றப்பட்டன.

1960 -களிலும், 1970 -களிலும் அனைத்து மாநிலங்களும் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு விடுவது தொடர்பாகச் சட்டங்களை இயற்றின. அவை பல்வேறு ஐந்தாண்டு திட்டங்களின் பரிந்துரையின்படி திருத்தி அமைக்கப்பட்டன.

நில உச்ச வரம்பு சட்டங்கள் மூலமும் குத்தகைதாரர் பாதுகாப்புச் சட்டங்கள் மூலமும் பெரிய நிலவுடைமையாளர்களின் உபரி நிலங்களை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் பகிர்ந்து கொடுப்பது என்ற பெயரில் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டன.

இந்த சீர்திருத்த சட்டங்கள் அனைத்தும் கண்துடைப்பு நடவடிக்கைகள்தான் என்ற போதிலும், இந்த கண்துடைப்பு நடவடிக்கைகளையும் கூட அரசும் ஆளும் வர்க்கமும் தானாகச் செய்து விடவில்லை. வெள்ளையன் ஆட்சிக்காலத்தில் தொடங்கி, பின்னர் தெலுங்கானா, நக்சல்பரி என்று தொடர்ச்சியாக எழுந்த விவசாயிகள் போராட்டம் எழுப்பிய ”உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கம்தான், இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளும் வர்க்கத்தைத் தள்ளியது.

நிலச் சீர்திருத்த சட்டங்கள் இயற்றப்பட்டாலும், நடைமுறையில் பண்ணையார்களும், நிலக்கிழார்களும் சட்டங்களை ஏய்த்து, பினாமி பெயர்களில் நிலங்களைத் தக்க வைத்துக் கொண்டார்கள்; குத்தகைக்கு விடுவதையே சட்டத்துக்கு வெளியில் கொண்டு போய், வாய்வழி ஒப்பந்தங்களாக மாற்றிக் கொண்டார்கள்.

எனவே, ஆளும் வர்க்கத்தின் பல்வேறு வாக்குறுதிகளையும் மீறி இந்திய விவசாயம் ஏழை விவசாயிகளையும் கூலித் தொழிலாளர்களையும் கடுமையாகச் சுரண்டுவதாகவே நீடிக்கிறது. குத்தகைதாரர் சட்டங்களையும் மீறி ஏழை விவசாயிகளின் தேவையையும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்தையும் ஒட்டி வாய்வழி குத்தகை முறை பெருமளவு நிலவுகிறது. இந்தியாவின் சுமார் 30% சாகுபடிப் பரப்புக்கு மேல் இத்தகைய வாய்வழிக் குத்தகையாளர்களாக ஏழை விவசாயிகள் இருக்கிறார்கள்.

2012 – 13 கணக்கெடுப்புபடி 5 ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் (சொந்த நிலம் அல்லது குத்தகை நிலம்) சாகுபடி செய்யும் குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 7.8 கோடி. மொத்த நிலவுடைமைகளில் 69.4% -ஐக் கொண்டிருக்கும் இந்த குடும்பங்கள் மொத்த விவசாய உற்பத்தி மதிப்பில் 59%ஐ உற்பத்தி செய்கிறார்கள். ஆனால், இந்தக் குடும்பங்கள் விவசாயத்தில் ஈட்டும் வருமானம் அவர்களது நுகர்வு தேவையை விடக் குறைவாகவே உள்ளது. அதாவது, விவசாயத்தில் 100 ரூபாய் செலவழித்தால் ரூ 80 தான் வருமானமாகக் கிடைக்கிறது.

விவசாயிகள் சந்திக்கும் நெருக்கடிக்கு என்ன காரணம்?

விவசாயிகளின் இன்றைய கடும் நெருக்கடிக்குக் காரணம் விவசாயத்தை கார்ப்பரேட் இலாப வேட்டைக்கு இரையாக்கும் அரசின் விவசாயிகள் விரோத கொள்கைகளே ஆகும்.

  • பாசன வசதி பராமரிப்பைப் புறக்கணிக்கப்பது;
  • விதை, உரம், பூச்சிக் கொல்லி என்று உள்ளீட்டுப் பொருட்கள் வினியோகத்தில் அரசின் பங்களிப்பு விலக்கப்பட்டு, அனைத்தும் கார்ப்பரேட்மயமாக்கப்படுவது;
  • அரசு, விளைபொருட்களுக்குக் கட்டுப்படியாகும் விலை நிர்ணயிக்க மறுப்பது, கொள்முதல் செய்ய மறுப்பது;
  • கல்வி, மருத்துவம், உணவு வினியோகம் என அனைத்திலும் விவசாயிகளின் செலவுகளை வணிகமயமாக்கி அதிகரித்திருப்பது;
  • விவசாயிகளைக் கடனில் மூழ்கடித்துத் தற்கொலைக்கும், அழிவுக்கும் தள்ளி விட்டிருப்பது
விழுப்புரம் மாவட்டம், வீ.சாத்தனூர் பகுதியில் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து அபகரிக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை மீட்க நடைபெற்ற போராட்டம்

மேற்கூறிய கொள்கைகள் மூலம் விவசாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாயம் செய்தால் நட்டம்தான் என்பது கல்லின் மேல் எழுத்தாக மாறி விட்ட சூழலில், விவசாயம் செய்யவும் முடியாமல், நிலத்தை விடவும் மனமில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.

இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, விவசாயிகளைத் தங்களது காண்டிராக்ட் அடிமைகளாக மாற்றுவதற்கும், குத்தகை என்ற பெயரில் அவர்களுடைய நிலங்களை அபகரித்துக் கொள்வதற்கும் முயற்சிக்கின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள். இந்த நிலத்திருட்டு முயற்சியை, விவசாயிகளைக் காப்பாற்றும் முயற்சியாகக் காட்டுகிறது புதிய குத்தகைச் சட்டம்.

புதிய சட்டம் என்ன சொல்கிறது?

இப்போதைய விவசாயிகளின் நெருக்கடிக்குக் காரணம் விவசாய உற்பத்தித் திறன் குறைவாக இருப்பதே என்று சாதிக்கும் மோடி அரசு, விவசாயிகளை அதிலிருந்து விடுவித்து முன்னேற்றுவதற்காகக் கொண்டு வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு கார்ப்பரேட் ஆதிக்கத்தை இன்னும் புதிய பரிமாணங்களில் விரிவுபடுத்துகிறது.

  1. விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களைத் தமது சொற்ப நிலவுடைமைகளை கார்ப்பரேட்டுகளிடம் அல்லது பணக்கார சாகுபடியாளர்களிடம் ஒப்படைத்து விட்டு, வேறு வேலைகளுக்குப் போகும்படி ஆலோசனை சொல்கிறது மோடி அரசு.
  2. இன்னொரு புறம் பெரிய நிலவுடைமையாளர்களை நிலத்தைக் குத்தகைக்கு விட்டு விட்டு விவசாயத்துக்கு வெளியில் தொழில்முனைவில் ஈடும்படி வலியுறுத்துகிறது.
  3. ஒரு குத்தகைதாரர் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்யும் நிலத்துக்கு உச்சவரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை.
  4. குத்தகைக்கு எடுப்பவர் யார் என்பதிலும் எந்த வரம்பும் இல்லை. எனவே, இந்தச் சட்டம் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் குத்தகை சந்தையில் விவசாய நிலத்தைக் கைப்பற்றுவதற்கு வழிவகுப்பதாகவே இயற்றப்பட்டுள்ளது.
நவீன குத்தகை விவசாயிகளாக அவதாரமெடுத்துள்ள தரகு முதலாலிகள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சுனில் மித்தல்

இந்தச் சட்டத்தின்படி,

  1. நிலவுடைமையாளரும் குத்தகைதாரரும் பரஸ்பரம் குத்தகை ஷரத்துகளை முடிவு செய்து கொள்ளலாம். இதில் அரசு எந்த வகையிலும் தலையிடாது. ஒரு பணக்கார நிலவுடைமையாளரும் சிறு விவசாயியும் அல்லது ஒரு சிறு நிலவுடைமையாளரும் கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட பெரிய சாகுபடியாளரும் அரசின் தலையீடோ, சட்டப்பாதுகாப்போ இல்லாமல் ஒப்பந்தம் போடும் போது, அது நிச்சயமாக வலியவர்களான கார்ப்பரேட்டுக்குச் சாதகமாகவே இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
  1. இந்த மாதிரிச் சட்டத்தின்படி குத்தகைக்கு எடுக்கும் நிலத்தில் பயிர்த் தொழிலோடு, தோட்டப் பயிர்கள், கால்நடை வளர்ப்பு  பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, இறைச்சி விலங்கு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, விவசாயக் காடுகள், விளைபொருள் பதப்படுத்தல் மற்றும் தொடர்புடைய பிற நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுகின்றன. எனவே, சிறிது காலம் குத்தகைக்கு விட்டு வருமானம் பார்க்கலாம் என்று நிலத்தை விட்டுக் கொடுக்கும் சிறு விவசாயி, குத்தகை காலம் முடிந்த பிறகு நிலத்தை திரும்ப பெற்றாலும், அது பயிரிடுவதற்கு இலாயக்கில்லாததாக மாறியிருக்கும்.
  1. ஏற்றுக் கொள்ளப்பட்ட குத்தகை காலத்துக்குப் பிறகு நிலம் தானாகவே உரிமையாளருக்கு திரும்பிப் போவதை உறுதி செய்வதாகச் சட்டம் சொன்னாலும் பல நூறு ஏக்கர் நிலத்தை நூறு விவசாயிகளிடம் குத்தகைக்கு எடுத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனம், அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பத்து பேருடைய குத்த கையைப் புதுப்பித்துக் கொண்டாலே, மற்ற தொண்ணூறு பேரை பணிய வைத்து விட முடியும். குத்தகை ஒப்பந்தத்தை எந்த வெளி ஒப்புதலும் இல்லாமல் இருதரப்பும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் நீட்டித்துக் கொள்ளலாம் என்பது கார்ப்பரேட் முதலாளிகளின் அடாவடித்தனத்துக்கு வழங்கப்பட்டுள்ள லைசன்சு.
  2. குத்தகை காலம் முடிந்த பிறகு குத்தகைதாரர் (அதாவது கார்ப்பரேட் நிறுவனம்) நிலமேம்பாட்டுக்கு முதலீடு செய்த மதிப்பில் எஞ்சியதை திரும்பப் பெறும் உரிமையை (கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு) இந்த சட்டம் வழங்குகிறது. இதன் மூலம் நிலம் திரும்ப வேண்டுமென்றால், மேம்பாட்டுக்கு நான் செலவு செய்த தொகையை எடுத்து வை என்று கார்ப்பரேட் நிறுவனம் விவசாயியை மிரட்டும்.
  3. நிலத்தின் மண்வளம் பாதிப்படைந்தால் குத்தகையை ரத்து செய்யலாம் என்ற ஷரத்து இந்தச் சட்டத்தில் இருந்தாலும், மண் வளம் பாதிப்படைந்ததா இல்லையா என்பதை யார் தீர்மானிப்பார்கள் என்று சொல்லவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக ஒரு விவசாயி இதனை நிலைநாட்டவும் முடியாது.

ஏற்கனவே நுழைந்திருக்கும் கார்ப்பரேட்டுகள்

ஏற்கனவே பல்வேறு மாநில அரசுகள் கார்ப்பரேட் விவசாயத்துக்கு வழிவகுக்கும் சட்டத் திருத்தங்களைச் செய்திருக்கின்றன. அனைத்து பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களும், ஒடிசா மாநிலமும், காங்கிரசின் கர்நாடகா அரசும் இவ்வாறு சட்டங்களைத் திருத்தியிருக்கின்றன.

பஞ்சாபில் பெப்சி நிறுவனத்திற்காக உருளைக்கிழங்கு ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளோடு அந்நிறுவன அதிகாரி.

மத்தியப் பிரதேசமும், உத்தரப் பிரதேசமும், ஜார்கண்டும் விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விடுவதை அனுமதிக்கும்படிச் சட்டத்தைத் திருத்தியிருக்கின்றன. ஒடிசா, பீகார், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களும் அத்தகைய திருத்தங்களைச் செய்து வருகின்றன. இமாச்சல் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களில் ஏழை தலித், நலிந்த குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

  • ஆந்திர அரசு 4 இலட்சம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது. இன்னும் 7 இலட்சம் ஏக்கர் நிலத்தைத் தனது நில வங்கிக்கு கையகப்படுத்தத்  திட்டமிட்டுள்ளது.
  • 2.5 லட்சம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியுள்ள தெலுங்கானா அரசு இன்னும் பல லட்சம் ஏக்கர் நிலத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டுள்ளது.
  • கர்நாடகாவில் அரசு நிலத்தில் பயிரிடும் 43 லட்சம் உழவர்கள் வெளியேற்றப்படும் வகையில் கொள்கை மாற்றியமைக்கப்படுகிறது.

விவசாய மற்றும் உணவுத் தொழிலில் பெரும் முதலாளிகளின் முதலீடு மற்றும் பங்கேற்புக்கு ஏற்ப ஒப்பந்த விவசாயத்தின் விரிவாக்கம் மற்றும் சிறு விவசாயிகளின் வெளியேற்றம் நடந்தேறும். மேலும், ஒப்பந்த விவசாயத்தின் விளைவாக ஓரினப்பயிர், மண் வளம் இழப்பு, பாசன வசதிகள் சூறையாடப்படுதல் மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஆகியவைகள் நடந்தேறும்.

  • குஜராத், ஒப்பந்த விவசாயத்திற்கு எனச் சிறப்பு சட்டத்தைக் கொண்டுள்ளது. இங்கு 2006 -ம் ஆண்டு இறுதியில் 40 லட்சம் ஏக்கர் ஒப்பந்த விவசாயத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
  • பஞ்சாபில் 2007 – 08 -ம் ஆண்டில் சுமார் 2 லட்சம் ஏக்கர் ஒப்பந்த விவசாயத்தில் உள்ளது. இது 2009 – 10 -ல் 2.75 லட்சம் ஏக்கராக விரிவுபடுத்த திட்டமிடப்பட்டது. 1.92 லட்சம் ஏக்கரில் மட்டுமே விரிவுபடுத்தப்பட்டது.

இந்தப் பின்னணியில் ஒப்பந்த விவசாயத்தை விரிவுபடுத்த பஞ்சாப் அரசு ஒப்பந்த விவசாயம் 2013 சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் அரசே முன்னின்று ஒப்பந்த விவசாயத்தை நடத்திக் கொடுக்கிறது.

  • பருத்தி விவசாயத்தில் 50% உற்பத்தி ஒப்பந்த விவசாயத்தின் அடிப்படையிலே நடக்கிறது.
  • கர்நாடகா மாநிலத்தில் ஒட்டு மொத்த உருளைக்கிழங்கு விவசாயத்தில் 15 சதவீதத்தை பெப்சி மற்றும் கோக்கோ கோலா நிறுவனங்கள், ஒப்பந்த விவசாயத்தின் மூலம் கட்டுப்படுத்துகின்றன.

மேற்குறிப்பிட்ட வழிகளில் சட்டரீதியிலோ அல்லது புறம்பாகவோ முதலாளிகள், பல்வேறு தினுசுகளாக நிலம் கைப்பற்றும் வேலையை செய்கின்றனர்.

  • டாடா நிறுவனம் சுமார் 60,000 ஏக்கர் நிலத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
  • குஜராத் மற்றும் பஞ்சாப்பில் முகேஷ் அம்பானி குழுமம் 7500, அனில் அம்பானி குழுமம் 3500 ஏக்கரும் கொண்டுள்ளது.
  • ஏர்டெல் நிறுவனம் பஞ்சாப் மாநில அரசிடமிருந்து 300 ஏக்கரும், சிறு விவசாயிகளிடம் இருந்து 4,000 ஏக்கர் நிலத்தையும் குத்தகை எடுத்துள்ளது. குத்தகைக்கு விட்ட விவசாயிகள் அவர்கள் நிலத்தில் (ரூ 80) தினக்கூலிக்கு வேலை செய்கிறார்கள்.
  • கிட்டத்தட்ட இதே பாணியில் சட்லஜ் அக்ரிகல்சர், நிஜேர் அக்ரோ, விமல் குழுமம் போன்ற நிறுவனங்கள் விவசாயிகளிடமிருந்து நூற்றுகணக்கான ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துப் பெரும் பண்ணைகளாக மாற்றி வருகிறது.
  • அயன் எக்சேஞ்ஜ் இந்தியா நிறுவனம் பங்குதாரர்களின் பெயரில் தமிழகத்தில் 650 ஏக்கரும், மகாராட்டிரத்தில் 750 ஏக்கரும், கோவாவில் 150 ஏக்கரும் வாங்கியுள்ளது.
  • தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இமாமி (emami) நிறுவனம் 100 -க்கும் மேற்பட்ட பினாமி பெயர்களில் சுமார் 7,000 ஏக்கர் வாங்கியுள்ளது. இதில் 2,000 ஏக்கர் காட்டாமணக்கு மற்றும் பருப்பு வகை பயிர்கள் பயிரிட்டுள்ளது.
  •  பி.ஏ.சி.எல் (PACL) என்ற இன்சூரன்ஸ் நிறுவனம் 1 இலட்சம் ஏக்கர் நிலம் (பாகிஸ்தான் எல்லையை ஒட்டி மட்டும் 400 சதுர கி.மீ  பரப்பளவு நிலத்தை கொண்டுள்ளது) வரை கையகப்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தின் போது ஆங்கிலேய சாகுபடியாளர்கள் இந்திய விவசாயிகளை கட்டாயப்படுத்தியும் கடனுக்கு அடிமையாக்கியும் ஐரோப்பிய சந்தையின் தேவைக்கேற்ப அவுரி சாகுபடி செய்ய வற்புறுத்தினார்கள். அதை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்தது அவுரி விவசாயிகள் போராட்டம்.

இன்று விளைபொருளுக்கு விலை கிடைக்காமல், கடனுக்கு அடிமையாகித் தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளிடமிருந்து, அவர்களுடைய கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, குத்தகை என்ற பெயரில் நிலத்தைப் பறித்துக் கொள்வதற்கு இந்தப் புதிய சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசு.

-சூரியன்

புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2017
_____________

விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடவரும் கார்ப்பரேட் விவசாயம் பற்றிய இக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கருத்துக் கணிப்பு : லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டது ஏன் ?

3

கோடிக்கணக்கில் வருவாயைக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த் “சிஸ்டம் சரியில்லை” என்று அரசியல் சூழல் குறித்து குறைபட்டுக் கொண்டார். தேவைப்பட்டால் சிஸ்டத்தை மாற்ற போருக்கு வருவேன் என்றார். பிறகு காலா, எந்திரன் 2.0 படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். நல்ல விளம்பரமும் கிடைத்தது.

அன்னாரின் துணைவியார் “பாபா” படம் வெளிவரும் போதே பாபா டாலர் எனும் செயினைக் கூட ரசிகர்களுக்கு விற்க முயன்ற முதலாளி. டாலரை விட கல்வித் தொழிலில் நிறைய வருமானம் வருமென்பதால் இரண்டு பள்ளிகளை நடத்தி வருகிறார். துறவறத்தின் குறியீடான “ஆஸ்ரம்” தான் அம்மையாரின் பள்ளியின் பெயரும் கூட. அதனால் மற்ற பள்ளிகளை விட பணத்தை அதிகம் இங்கே துறக்க வேண்டும்.

கிண்டியில் இருக்கும் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஏற்கனவே ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் பல மாத சம்பள பாக்கி வேலை நிறுத்தம், போராட்டம் என்று நடந்திருக்கின்றன. அந்த செய்திகளை ஊடக பலத்தால் அமுக்கிவிட்டு இன்றும் பள்ளி நடக்கின்றது.

இந்நிலையில் கிண்டி பள்ளிக்கூடம் இருக்கும் கட்டிட உரிமையாளரை ஏமாற்றிய கதை தற்போது வெளியேவந்திருக்கிறது. அம்மையார் 2009 -ம் ஆண்டு முதல் பள்ளிக் கட்டிடத்திற்கு வாடகையே கொடுக்கவில்லையாம்.

இது தொடர்பாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஸ்வரலு பள்ளிக்கூடத்தை பூட்டிவிட்டார். வரவேண்டிய வாடகை பாக்கி ரூபாய், பத்து கோடியாம். நீதிமன்றத்தில் வழக்கு போட்ட போது அம்மையார் 2 கோடி தருவதாக ஒப்புக் கொண்டு அதையும் தராமல் இழுத்தடித்தனராம். ஆகவே பூட்டு போட்டார் உரிமையாளர்.

இது ஒரு சுரண்டல், காரணமில்லாமல் வாடகையை ஏற்றியதே பிரச்சினை என்று கூறுகிறது அம்மையார் தரப்பு. கை, கால்களை ஆட்டாமலேயே நடனம், சண்டை, நடிப்பின் மூலம் படத்துக்கு படம் கோடிகளை கூட்டிக் கொண்டே போகும் சூப்பர்ஸ்டாரின் குடும்பம், பள்ளிவாடகையை கூட்டக் கூடாது என்று நியாயம் பேசுகிறது.

இனி கருத்துக் கணிப்பு!

லதா ரஜினியின் ஆஸ்ரம் பள்ளி மூடப்பட்டதற்கு காரணம்?

  • கட்டிட உரிமையாளரின் சுரண்டல்
  • லதா ரஜினிகாந்தின் மோசடி
  • ஆஸ்ரம் பள்ளியில் வருமானமில்லை
  • பாஜக உதவிக்கு வரமுடியாத சூழல்
  • ரஜினியிடம் செலவுக்கு காசில்லை


_____________

இந்தக் கருத்துக்கணிப்பு உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல்
    வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி