“அயோத்தியில் ராமர் பிறந்த இடம் யாருக்கு சொந்தம்? உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடக்கம்” இது இன்றைய (5.12.2017) தமிழ் தி இந்து நாளேட்டின் 10 -ம் பக்கத்தில் வந்துள்ள செய்தியின் தலைப்பு. விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளைதான் தொடங்கப்போகிறது. ஆனால் “அது ராமர் பிறந்த இடம்தான்” என்று இன்றைக்கே தீர்ப்பளித்து விட்டது தமிழ் இந்து.
“பாபர் மசூதியை சங்க பரிவாரத்திடம் ஒப்படைப்பதுதான் நீதியானது” என்பது தமிழ் தி இந்து நாளேட்டின் கருத்தாக இருந்தால், அதனை தலையங்கத்தில் எழுதுவதுதான் “பத்ரிகா தர்மம்”. NEWS -க்கும் VIEWS -க்கும் இடையிலான வேறுபாடு பற்றி இந்து ஆசிரியர் குழுவுக்கு நாம் வகுப்பெடுக்கத் தேவையில்லை.
இதே செய்திக்கு இன்று தினமணி கொடுத்திருக்கும் தலைப்பு இது – “அயோத்தி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று முதல் இறுதி விசாரணை”
செக்யூலர் “இந்து”வின் தற்போதைய நிலையைப் புரிந்து கொள்ள தினமணி தலைப்பு ஒரு உரைகல்.
நமக்குத் தெரிந்தவரை, பாபர் மசூதி இடிப்பை எதிர்ப்பதுதான் இந்துவின் தலையங்க நிலைப்பாடாக இருந்து வந்துள்ளது. தற்போது “சங்க பரிவாருக்கு ஜே” என்று “எடிட்டோரியல் பாலிசி” மாற்றப்பட்டிருப்பதாக தெரிகிறது.
தன்னுடைய தனிப்பட்ட ஆதாயத்துக்காக, சொந்த தன்மானத்தையோ சொந்த சொத்துகளையோ அடுத்தவனுக்கு உரிமையாக்குவதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அந்த உரிமை இந்து ஆசிரியர் குழுவுக்கும் உண்டு. அடுத்தவன் உடைமையை பிடுங்கிக் கொடுக்கும் தொழிலுக்குப் பெயர் நிச்சயமாக ஊடகவியல் அல்ல.
“டிசம்பர் 5 ஆம் தேதியன்று விசாரணை தொடங்குகிறது” என்ற இதே செய்தி ஆகஸ்டு 12 -ம் தேதியன்றும் தமிழ் இந்துவில் வெளியாகியிருக்கிறது. அப்போது அதன் தலைப்பு கீழ்க்கண்டவாறு இருந்தது.
ஆங்கில இந்து நாளேட்டின் ஆசிரியராக இருந்தபோது, சு.சாமியின் இத்தகைய அறிக்கைகளை வெளியிட மறுத்த காரணத்தினால் ஏற்பட்ட முறுகல் நிலைகளைப் பற்றி சித்தார்த் வரதராஜன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இன்று சு.சாமி வகையறாக்களே தமிழ் இந்துவின் DEFACTO ஆசிரியர் குழுவாகி விட்டார்கள் போலும்!
தெற்கில் சூரியன் – வடக்கில் பார்ப்பனியம். சாமர்த்தியம்தான்.
இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த செய்திக்கு இந்து நாளேடு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். இப்படி ஒருசெய்தி வெளியானதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதச்சார்பின்மையிலும் ஜனநாயகத்திலும் ஊடக அறத்திலும் நம்பிக்கை கொண்ட அனைவரும் தமிழ் தி இந்துவுக்கு தங்களது கண்டனத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று கோருகிறோம்.
இது தமிழ் இந்து தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல. இன்று இதனை கண்டிக்கத் தவறினால் இந்த நோய் பரவும். மற்ற ஊடகங்களும் கூச்சமின்றி மதவெறியப் பரப்பத் தொடங்குவார்கள். பிறகு ஏதாவது சொல்லி அதற்கு சப்பை கட்டுவார்கள்.
காவி இருள் தமிழகத்தின் மீது கவியத் தொடங்கியிருக்கிறது. எச்சரிக்கை! எச்சரிக்கை!
இன்றைய கருத்துக் கணிப்பு:
பாபர் மசூதி இடத்தை ராமர் பிறந்த இடமாக கருதும் தமிழ் தி இந்துவின் கருத்து ….
கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு, ரசிய சோசலிசப் புரட்சியின் 100-ம் ஆண்டு சிறப்புக் கூட்டத்தில், பெங்களூர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட கட்டுரை வடிவம்!
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் தொழிற்புரட்சி ஏற்பட்டு ஐரோப்பா கண்டத்தில் ஆலைகள், சுரங்கங்கள், நெசவாலைகள் என எந்திரமயமாக்கப்பட்ட தொழில்கள் தொடங்கப்பட்டன.
இதன் காரணமாக சமூகம் முதலாளித்துவ வர்க்கம், உழைப்பாளி வர்க்கம் என இரண்டு வர்க்கங்களாக பிரிக்கப்பட்டது. தொழிலாளி வர்க்கம் அதிக வேலை நேரம், குறைந்த கூலி என எந்தவித சலுகையுமில்லாத வாழ்க்கை வாழ்ந்தது. முதலாளித்துவ வர்க்கமோ, தொழிலாளிகளைச் சுரண்டி கொழுத்த இலாபத்தில் செழித்திருந்தது.
மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, 1848-ம் ஆண்டு வெளிவந்த பின்னர் 1850 முதல் 1871 வரை உலகெங்கும் மிகப்பெரிய போராட்டங்களும் புரட்சிகளும், போர்கள் நடந்தன. இதில் 1851 சீனப்புரட்சி, தாய்ப்பின் விவசாயிகளின் எழுச்சி, 1857வது வருடம் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர், 1871 ஆம் ஆண்டு அல்ஜீரியாவின் எழுச்சி போராட்டம் ஆகியன குறிப்பிடத்தக்கவை.
இந்த காலகட்டத்தில் தான் பல தொழில்கள் தொடங்கப்பட்டு முதலாளிகள் கொள்ளை லாபம் ஈட்டினர். ஆனால் தொழிலாளர்களோ தன்னுடைய பணி பாதுகாப்பு, சட்டப் பாதுகாப்பு ஆகியவற்றிற்காக போராடிக் கொண்டிருந்தனர். இந்த வகையிலே 1886 சிகாகோ வீதியிலே எட்டு மணி நேர வேலைக்காக 12,000 தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சிகாகோ நகரில் மெக்கார்மிக்ஸ் என்ற தொழிற்சாலையில் 2,500 தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து, ஹேமார்க்கெட் ஸ்கொயர் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அங்கு ஆல்பர்ட் ஸ்பைக், ஆல்பர்ட் பர்சன்ஸ், சாமுயல் பெல்ட்மேன் ஆகியோர் உரையாற்றுகையில் போலீஸ்காரர்களால் மூண்ட கலவரத்தில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. 4 தொழிலாளர்கள் பலியானார்கள், 4 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு 1887-ம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டனர்.
இம்மாதிரியான தியாகத்தின் வாயிலாகத்தான் தொழிலாளர்களுக்கு 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு என்ற உரிமை கிடைத்தது. 1886-க்கு பிறகு 1905 முதல் 1917 வரை ரஷ்யாவில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. 1917 நவம்பரில் ஆலைகள், விவசாய நிலங்கள் என அனைத்தும் உழைப்பவருக்கே சொந்தம் என்று தோழர் லெனின் தலைமையில் புரட்சி வெடித்தது.
அந்த நவம்பர் புரட்சிக்குப்பின், ரஷ்யாவில் முதலாளித்துவம் அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. பண்ணை நிலங்கள் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. படையாட்கள், சமாதானம் குறித்து பேசினார்கள். இது வரலாறு.
1917-க்கு பிறகு பல நாடுகளில் தொழிலாளர்கள் இயக்கம் கண்டு போராடினர். அதன் காரணமாக சிலி, கியூபா, அல்பேனியா என பல்வேறு நாடுகளில் இராணுவ சர்வாதிகாரிகள் ஒழிக்கப்பட்டு அங்கு குடியாட்சிகள் அமர்த்தப்பட்டன. அதே நேரத்தில் ஹங்கேரி, போலந்து, வியட்னாம், வட கொரியா போன்ற பல நாடுகளில் சோசியலிஸ்ட் அரசுகள் உருவாகின. இதன் காரணமாக 1929 முதல் 1933 வரை முதலாளித்துவம் மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டது.
அதன் விளைவாகத்தான் ஜான் மெனாட் கீன்ஸ் கோட்பாடு வந்தது. ரூஸ்வெல்ட் தலைமையில் முதலாளித்துவ நாடுகளான பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்றவை தனது கோர முகத்தை மாற்றிக்கொண்டு, முதலாளித்துவ அரசுகள் அதன் மக்களுக்கு சட்ட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, குடியிருப்பு என அனைத்து சலுகைகளையும் அளிக்கும் என்று உறுதியளித்தார்கள்.
அக்காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் போன்ற காலனிய நாடுகளிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அதன் விளைவாக 1926-ல் இந்தியாவில் தொழிற்சங்க சட்டம் வருகிறது. சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமை, போராடும் உரிமை என மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனுடைய மாபெரும் தியாகத்தினால் பாசிசம் வீழ்த்தப்பட்டது. உலகம் முழுவதும் சோசலிசத்தின் தாக்கம் உண்டாகிறது. இந்த பின்னணியில் தான் இந்தியாவில், 44 தொழிலாளர் சட்டங்கள் வருகின்றன. சட்டப் பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, குடியுரிமை, பணிப் பாதுகாப்பு, LTC, ESI, PF, தொழிற்தகராறு சட்டங்கள், தொழிலாளர் நல அமைச்சகம், தொழிலாளர் துறை என அனைத்தும் ஏற்படுத்தப்பட்டன. அன்று தொழிலாளிக்கு, ESI, BASIC PAY, PF, பஞ்சப்படி, குடியிருப்பு என அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் மத்திய அர்சின் தொழிற்சாலைகளிலும், தனியார் வங்கி, இன்ஸ்யூரன்ஸ் போன்றவற்றிலும் கூட அனைத்து தொழிலாளர்களும் நிரந்தர தொழிலாளர்கள். ஆனால், இந்த நிலைமை 1980 வரைதான் நீடித்தது.
1980-ல் சுமார் 20% தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட்ட தொழிலாளர்கள். 80% தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருந்தனர். இந்த நிலைமை 1990-ல் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் புகுத்தப்பட்ட பிறகு, 90% பாதுகாப்பற்ற தொழிலாளர்களாக மாறியது. தற்போது 97% தொழிலாளர்கள் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர்.
1971-ல் ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள் (CONTRACT REGULATION AND ABOLITION ACT) ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர தொழிலாளியாக ஆக்கக்கூடிய சட்டம் அது. 1976-ல் மத்திய அரசின் அரசாணை ஒன்று வருகிறது. அந்த அரசாணையின் படி துப்புரவு, கேண்டீன், கார்டனிங், செக்கியூரிட்டி ஆகிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கூறியது அந்த அரசாணை.
இந்த சட்டத்தை முன்மாதிரியாக வைத்து நடந்த வழக்கில்தான் பல ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரமாக்கப்பட்டனர். 1997-ல் நடந்த ஏர் இந்தியா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பில் ஒப்பந்த தொழிலாளர்கள் 240 நாட்கள் வேலை செய்தால் அவர்களை நிரந்தர தொழிலாளர்களாக மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. சுமார் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்களாயினர்.
வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னர், 2002-ல் மந்திரிகள் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் துப்புரவு, கேண்டீன், கார்டனிங், டிரைவிங் முதலிய தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தரம் ஆக்க தேவையில்லை என்று தீர்மானம் போட்டார்கள். 2001-ல் செயில் (STEEL AUTHORITY OF INDIA) வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்கள் இருக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது.
இத்தகைய நடவடிக்கையின் மூலம் இந்த நாட்டின் 100 கோடி கைகளும், கால்களும் இலவசம் என்று அறிவித்து விட்டார்கள். ஆகையால் தான் மோடி நாடு நாடாகச் சென்று எங்கள் நாட்டில் உள்ளதில் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று கூவி கூவி அழைக்கிறார். வந்தால் அவர்களுக்கு இந்த கைகளும் கால்களும் இலவசம், உறவுகள் குடும்பம் ஏதுமற்ற ஒரு எந்திரத்தைப்போல இவர்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மாருதி தொழிற்சாலையில் 80% ஒப்பந்த தொழிலாளர்கள். ஹுண்டாய் கம்பெனியில் 82% ஒப்பந்த தொழிலாளர்கள். அரசு அலுவலகங்களிலும் பெரும்பான்மை ஒப்பந்தத் தொழிலாளர்கள். ஒப்பந்த தொழிலாளிக்கு ஊதியம் ரூ.7000 அல்லது ரூ.8000-ம் தான்.
மத்திய அரசும், மாநில அரசும், நீதிமன்றங்களும், தொழிலாளர் துறையும், காவல்துறையும் தொழிலாளர்களை கைகழுவி விட்டார்கள். நிறுவனங்கள் அனைத்தும் தொழிலாளர்களை நியமிப்பதில் HIRE AND FIRE (நினைத்தால் பணியில் அமர்த்து துறத்து) விதிமுறையையே கையாள்கின்றன.
பெங்களூரில் துப்பரவு தொழிலாளர்கள் துடைப்பம் கேட்டார்கள் என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். சாக்கடை அள்ளும் தொழிலாளர்கள் செருப்பு கேட்டார்கள் என்பதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். சங்கம் வைத்தால், சங்கத்தில் பெயர் பதிவிட்டுள்ள அனைவரும் வீட்டிற்கு போகவேண்டியதுதான்.
இந்த மாதிரியான நிலைமையில்தான், இந்தியாவில் 50 கோடி தொழிலாளர்கள் இருக்கின்றனர். கர்நாடகாவில் 3 கோடியே 22 லட்சம் தொழிலாளர்கள், தமிழ்நாட்டில் ஏறக்குறைய 4 கோடி தொழிலாளர்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும், பாதுகாப்பற்ற தொழிலாளர்களாகவும், குறைந்த பட்ச ஊதியம் இல்லாத தொழிலாளர்களாகவும் உள்ளனர்.
ஜெர்மனியில் குறைந்த பட்சக் கூலி ஒரு மணி நேரத்திற்கு 32 டாலர். அதேபோல், ஜப்பானில் 24 டாலர், அமெரிக்காவில் 17 டாலர், தைவானில் 8 டாலர், சீனாவில் 3 டாலர். உலகத்திலேயே குறைந்த கூலி இந்தியாவில்தான். இந்தியாவிலேயே குறைந்த கூலி மோடியின் குஜராத். இந்தியாவில் வெல்டர், டர்னர், ஃபிட்டர், டிரைவர், எலக்ட்ரிசியன், பிளம்பர், குக், கார்டனர், வீட்டு வேலை செய்வோர் ஆகியோருக்கு ஒரு மணி நேரத்துக்கான கூலி ஒரு டாலரில் கால் பங்கு கூட இல்லை.
மாதம் 8000 ரூபாய்க்குள் ஒரு தொழிலாளி அவருடைய குடும்பம், வீட்டு வாடகை, உடுத்த துணி, குழந்தைகளுக்கான கல்வி, நல்லது கெட்டது, நோய் வாய்ப்பட்டால் மருத்துவமனை என அனைத்துச் செலவுகளையும் செய்ய வேண்டும். இவையெல்லாம் வெறும் ரூ.8000-த்தில் சாத்தியமாகாது என்று ஒரு சாதாரண தொழிலாளிக்கு கூட தெரியும். ஆனால் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், எடப்பாடி, சித்தாராமையா, மோடி நிர்ணயித்த கூலி வெறும் 8000 ரூபாய்.
அப்படியென்றால், இந்த நூறு கோடி கைகள், நூறு கோடி கால்கள் நியாயம் கேட்டு எங்கே போவார்கள்? எங்கு போவது? யாரை கேட்பது? இந்த தொழிலாளர்கள் சட்டசபையிலே சென்று முறையிட்டால் நடக்குமா?. 70 ஆண்டு கால வரலாறு சட்டசபையிலே எதுவும் நடக்காது.
பாராளுமன்றத்தில் தொழிலாளியின் நலனை ஒட்டி பேசுவதற்கு ஒரு எம்.பி கூட கிடையாது. பிறகு நீதிமன்றத்திற்கு போகலாம். அங்கு சென்றால் உச்ச நீதிமன்றம் நீதி தரமுடியாது என்கிறது. அதுதான் கடந்த 2001-ம் ஆண்டில் செயில் (STEEL AUTHOURITY OF INDIA) வழக்கில் நடந்தது.
கடந்த 2006-ம் ஆண்டு உமாபாரதி வழக்கு, 2012-ம் ஆண்டு வர்த்தக வழக்கு, ஆகியவற்றில் உச்ச நீதிமன்றம் அவர்களை நிரந்தரத் தொழிலாளியாக்க முடியாது என்றது. இப்படி எந்த அடிப்படை உரிமையும் கிடையாது என்று உச்சநீதிமன்றம் தனது 50 கோடி தொழிலாளர்களைக் கைகழுவி விட்டது. இனி தொழிலாளி போவதற்கு எந்த இடமுண்டு? போலீசு நிலையம், தொழிலாளர் துறை போன்ற மற்ற துறைகளுக்கு போகலாம், ஆனால் சங்கம் வைத்து போராடினால் போலீசோ லத்தியை தூக்கிகொண்டு வருகிறார்கள். நிறுவன முதலாளி காலை நக்கி பிழைக்கிறது போலீசு.
மாருதியில் என்ன நடந்தது? திரும்பக்கூட முடியாத அளவு பிழிந்தெடுக்கப்படும் வேலைப் பளு; தேநீர் இடைவேளை 15நிமிடம் தான்; கேண்டீன் வரை சென்று வரவே 10 நிமிடங்கள் கடந்துவிடும்; டீ குடிக்கவும், சிறுநீர் கழிக்கவும் 5 நிமிடம், தேநீர் கப்புடன் சிறுநீர் கழிக்கும் பல தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஊதியமோ, ரூ.7000-ம்தான்.
இவ்வளவு நெருக்கடியிலும் அவர்கள் கேட்ட ஊதிய உயர்வை சகித்துக்கொள்ள முடியாமல் குண்டர்களை ஏவி விட்டது மாருதி நிறுவனம். அந்த குண்டர்களுக்கு ஆதரவாக காவல் துறையும், பாரா மிலிட்டரி படைகளும் வந்தன. தொழிலாளிகளை அடித்து துவைத்தார்கள். குண்டர்களால் நடத்தப்பட்ட கலவரத்திற்காக 500 தொழிலாளிகள் மீது வழக்கு, 110 தொழிலாளிகள் நிரந்தரமாக 3 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டனர்.
டெல்லி நீதிமன்றம், இவர்களுக்கு பிணை வழங்கினால் ஜப்பான் மூலதனம் வராது என்று கூறி பிணை வழங்க மறுத்தது. உச்ச நீதிமன்றமும் அதையே கூறியது. ஆகவே தொழிலாளர்களுக்கு நீதிமன்றங்களில் தீர்வு இல்லை.
மூடியின் தரப்பட்டியலில் இந்தியா முன்னேறிய பெருமை மோடியைச் சேரும் என பாஜக பெருமை பீற்றுகிறது. ஆனால் அர்ஜீன் சென்குப்தா கமிட்டி, 77% இந்தியர்கள் அதாவது 84 கோடி இந்தியர்கள் தினமும் 20 ரூபாய்க்கும் குறைவாக சம்பாதித்து வாழ்கிறார்கள் எனக் கூறுகிறது. இந்தப் பெருமையும் மோடியையே சேரும்.
1929 முதல் 1933 வரை முதலாளித்துவம் நெருக்கடியில் சிக்கிய போது ஜெர்மானிய முதலாளிகள் ஹிட்லரை தேர்ந்தெடுத்தார்கள். தொழிலாளர்கள் போராடினால் அவர் இரும்புக்கரம் கொண்டு அடக்குவார் என்பதால்தான் தேர்ந்தெடுத்தார்கள். அதுபோல், இந்திய பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய முதலாளிகள், மோடியை தேர்ந்தெடுத்துள்ளனர். அன்றைய ஹிட்லரின் 2014 முகம்தான் மோடி. ஹிட்லர் வீழ்த்தப்பட்டார், மோடியும் வீழ்த்தப்படுவார்.
தொழிலாளர்கள் போராடிப் பெற்ற 44 சட்டங்கள், கூலி பாதுகாப்பு, வேலை பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு, PF, 8,10,12 – Components of Wages, இதற்கான சட்டங்கள் அனைத்தையும் மூடிவிட்டு இன்று 4 தொழிலாளர் விதிகளை (Labour code) கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் தொழிலாளர் துறையில், தனக்கு வேண்டியவர்களை, ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் முதலாளிகளை அமரச் செய்யப் போகின்றனர்.
இவர்கள்தான் தொழிலாளர்களுக்காக பேசப்போகிறார்கள். செங்கொடி வைத்துக்கொண்டோ இல்லை பிற சங்கங்களோ போய் நின்று இனி பேசமுடியாது. இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை, அநேகமாக மோடி அடுத்த முறை வெற்றி பெற்றால் தொழிலாளர்களுக்கான சட்டங்கள் எல்லாம் ஊத்தி மூடப்பட்டு, இந்த சட்டம் நிறைவேற்றப்படலாம். இன்றைய தொழிலாளர்களின் நிலைமையாக 18,19ஆம் நூற்றாண்டிலே இருந்த அதே நிலைமைதான் நீடிக்கிறது.
ரவுன்டவுண் பாதிரி என்ற முதலாளி எழுதுகிறான், ”தொழிலாளிக்கு வயிறு நிறைய உணவளிக்கக்கூடாது” என்று, ”நாளைக்கு என்ன நிலைமை என்ற பயத்திலே அவர்கள் இருக்கவேண்டும்” என்கிறான் அவன். இது 18, 19-ஆம் நூற்றாண்டின் நிலைமை.
இன்று உலகம் முழுவதிலும் இந்த நிலைமைகள் மாற்றப்பட்டுவிட்டன, ஜெர்மன், அமெரிக்க முதலாளிகள் சொந்த நாட்டில் தொழில் தொடங்குவதில்லை. குறைவான கூலிக்காக இந்தியா போன்ற நாடுகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
ரஷ்ய தொழிலாளி, முதலாளி வர்க்கத்தை தூக்கியெறிந்த பின்புதான் சுரண்டலிலிருந்து விடுபட்டான். இந்திய தொழிலாளிக்கு சுரண்டலில் இருந்து விடுபட வேறு எதாவது வழி உண்டா என்றால் கிடையாது. 50 கோடி தொழிலாளர்களும் ஒன்று திரண்டு இந்த முதலாளித்துவ அரசுக்கு எதிராக குரல் கொடுத்தால் தான் இதிலிருந்து விடுதலை பெற முடியும்.
இந்த முதலாளித்துவ அமைப்பு முறை, அரசு எந்திரம், அதிகார வர்க்கம் அனைத்தும் முடங்கி போய்விட்டது, செயலிழந்து போய்விட்டது, இந்த அமைப்பிலே தொழிலாளர்களுக்கான விடுதலை கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்றாண்டுகால மோடியரசின் ஆட்சியில் தொழிலாளர்களின் உரிமை பறிக்கப்பட்டிருக்கின்றதே ஒழிய எந்த உரிமையும் பெறப்படவில்லை. மக்கள் நல அரசு என்ற தகுதியை மாநில, மத்திய அரசுகள், நீதிமன்றங்கள் என அனைத்தும் இழந்துவிட்டன. இவர்கள் யாரும் தொழிலாளியின் பக்கமில்லை.
ஆகவே தீர்வு என்னவெனில், ரஷ்யப்புரட்சி போன்றதொரு புரட்சியே! சிகாகோ தொழிலாளர்களின் வழிதான் நமது வழி! சங்கமாக திரள்! போராடு! வெற்றி பெறு!
”உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் உங்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமைச் சங்கிலியைத் தவிர, ஆனால் அடைவதற்கோர் பொன்னுலகம் காத்திருக்கிறது” என்றார் மார்க்ஸ்.
முதலாளித்துவவாதிகள் இந்த அமைப்புக்கு மாற்று என்ற ஒன்று இல்லை என்கிறார்கள். நாம் கூறுகிறோம் “சோசலிசமே மாற்று, அதுவே மக்களுக்கானது” என்று !
தொழிலாளர்கள் போராட்டங்களினால் மட்டுமே வெற்றி பெற முடியும்! சோசலிசமே வெல்லும், கம்யூனிசமே வெல்லும்!
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் – 14வது ஆண்டுவிழா கருத்தரங்கம் !
அன்பார்ந்த நண்பர்களே! அன்றாட தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிக்கைச் செய்திகளில் இரண்டு விசயங்கள் பெரும்பாலும் பேசப்படாது. ஒன்று, மோடி-அமித் சா குற்றங்கள்; இரண்டு, நீதித்துறையின் தவறுகள்/குற்றங்கள். இதற்கு உதாரணங்களாக “தி காரவன்” மற்றும் “தி வயர்” இதழ்களில் வந்த செய்திகள் நம்மை அதிரச் செய்கின்றன.
இந்தியாவில் மோடிக்கு அடுத்த அதிகாரம் மிக்க நபர் அமித் சா. அவர் மீது இரண்டு போலி என்கவுண்டர் வழக்குகள் பதியப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். இக்கொலைகள் மோடியின் மதிப்பை உயர்த்துவதற்காக நடத்தப்பட்டதாகச் செல்லப்பட்டது. இதில் சொராபுதீன் என்பவர் கொல்லப்பட்ட வழக்கை விசாரித்து வந்தவர்தான் மும்பை நீதிபதி பிரிஜ்கோபால் லோயா. இவர் திடீரென டிசம்பர்1, 2014 அதிகாலையில் மாரடைப்பால் இறந்ததாகச் சொன்னார்கள். அன்று அது சிறு செய்தி கூட இல்லை. தற்போது அவரது மரணம், கொலைதான் என்பதற்கான மிக வலுவான சந்தேகங்களை நீதிபதி லோயா குடும்பத்தினர் எழுப்பியுள்ளனர்.
இறந்த நீதிபதி தலையில் காயம், சட்டையில் இரத்தக் கறை இருந்தது; பிரேத அறிக்கையில் இறப்பு நேரம் 06.15 என உள்ளது; ஆனால் காலை 5 மணிக்கே இறப்பு குறித்த தகவல் குடும்பத்துக்கு வந்தது. தகவல் சொன்னவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்து ஈஸ்வர் பகேதி. இந்த பகேதி போஸ்ட் மார்ட்டம் அறை வரை வந்து உடலை சீக்கிரம் வாங்கச் சொன்னார். நீதிபதியின் போனும் அவரிடமே இருந்தது. அதில் அழைப்பு, குறுஞ்செய்தி விவரங்கள் அழிக்கப்பட்டிருந்தன. இந்த ஆர்.எஸ்.எஸ் நபர் யார் என்று லோயா குடும்பத்தினருக்குத் தெரியாது! இயற்கை மரணம் என்றால் போஸ்ட் மார்ட்டம் ஏன் நடந்தது? குடும்பத்தினரிடம் ஏன் அனுமதி பெறவில்லை? என அடுக்கடுக்காய் கேள்விகள் எழுப்புகின்றனர்.
அமித் சாவை வழக்கிலிருந்து விடுவிக்க 100 கோடி பேரம் பேசிய அன்றைய மகாராஷ்டிரா மாநில தலைமை நீதிபதி மொகித் சா, அமித் சாவுக்கு சாதகமாக தீர்ப்புக் கொடுத்தால் அது பெரிய செய்தி ஆகாது, தீர்ப்பு அன்று ஓர் குண்டு வெடிப்பு நடக்கும், மக்கள் அதைத்தான் பேசுவார்கள் என்று லோயாவிடம் வற்புறுத்தியுள்ளார். லோயா அதற்கு உடன்படவில்லை டிச.15-ல் அமித்சாவை ஆஜர் ஆகச் சொன்ன நீதிபதி லோயா, டிச.1-ல் இறக்கிறார். அடுத்த 30 நாட்களில், 10,000 பக்க குற்றப்பத்திரிக்கையிலிருந்து அமித்சா விடுவிக்கப்படுகிறார். சிபிஐ மேல்முறையீடு செய்யவில்லை. தனது தந்தை இறப்பு குறித்து விசாரணை கோரிய லோயாவின் மகன் மனுவும் கண்டுகொள்ளப்படவில்லை. இன்று வரை இக்குற்றச்சாட்டிற்கு யாரும் பதில் அளிக்கவில்லை.
அடுத்து மருத்துவக் கல்லூரி ஊழல் கதை. லக்னோவில் உள்ள அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட பிரசாத் கல்வி அறக்கட்டளையின் மருத்துவக் கல்லூரியில் 2016-2017 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை உச்சநீதிமன்றத்தில் பெற்றுத் தருவதாகவும், அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் பேசுவதாகவும் சொல்லி பணம் பெற்ற ஹவாலா டீலர் மற்றும் முன்னாள் ஒரிசா உயர்நீதிமன்ற நீதிபதி குதுா-சி ஆகியோர் சிபிஐ-ஆல் கைது செய்யப்பட்டார்கள். இரண்டு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மருத்துவக் கவுன்சில் வழக்குகளை அப்போது விசாரித்து வந்தவர்கள் தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபது தீபக் மிஸ்ராவும், கான்வல்கரும். இப்பின்னணியில் வழக்கறிஞர் பிரசாந்த் பூசன் மற்றும் காமினி ஜெய்ஸ்வால் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தனர்.
நவம்பர்,9,2017-ல் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வு, உச்சநீதிமன்றத்தின் மூத்த 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கப் பரிந்துரைத்தது. உடனே, நவம்பர் 10 அன்று, உச்சநீதிமன்றத்தின் மூத்த 4 நீதிபதிகள் தவிர்த்து, வேறு நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வை உடனே கூட்டிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்கறிஞர் பிரசாந்த் பூசனைப் பேசவிடவில்லை. கட்சிப் பொதுக்குழுவில் தலைமையை எதிர்க்கும் நபர்களை கட்சிக்காரர்களை வைத்து மிரட்டி வெளியேற்றுவது போல, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தையும் சேர்த்துக் கொண்டு பிரசாந்த் பூசனை வெளியே அனுப்பி விட்டு நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வு உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பின்பு காமினி ஜெய்ஸ்வால் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் அனைவரும் எழுப்பும் கேள்வி “எவரொருவரும் அவரது வழக்கிற்கு அவரே நீதிபதியாக இருக்க முடியாது” என்ற சட்ட நிலையை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே மீறலாமா?
இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பியுள்ள ஊடகங்கள், மூத்த வழக்கறிஞர்கள் ராஜீ ராமச்சந்திரன், துஷ்யந்த் தவே, மோகன் பராசரன் உள்ளிட்ட பலர், ’தலைமை நீதிபதிக்கு சக மூத்த நீதிபதிகள் மீது நம்பிக்கை இல்லை எனில், உச்சநீதிமன்றம் எப்போதும் எதிர்கொள்ளாத அபாயகரமான உள்நெருக்கடி இது’ என்கிறார்கள். இதை எங்கே போய் முறையிடுவது?
இதே உச்சநீதிமன்றம் பேரறிவாளன் வழக்கில் எப்படி நடந்து கொள்கிறது? ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி தியாகராஜன் இப்போது சொல்கிறார் ’கொலைக்குப் பயன்பட்ட பெல்ட் வெடிகுண்டில் இருந்த பேட்டரி எதற்காக வாங்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது எனப் பேரறிவாளன் சொன்னார். அதை வாக்குமூலத்தில் நான் எழுதவில்லை’. தடா சட்டத்தின் கீழான இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் பேரறிவாளன் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தீர்ப்புச் சொன்ன நீதிபதி கே.டி. தாமஸ் அவர்கள் சி.பி.ஐ. சில கேள்விகளுக்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை, பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என கடிதம் எழுதுகிறார். ராஜீவ் கொலைச் சதியின் விரிவான விசாரணை 17 ஆண்டுகளாக எம்.டி.எம்.ஏ என்ற சிபிஐ குழுவால் விசாரிக்கப்பட்டு வருகிறது. இத்தனை ஓட்டைகள் இருந்தும் தமிழக அரசு பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க முடிவு எடுத்த பின்பும் உச்சநீதிமன்றம் விடுவிக்க மறுக்கிறது.
இதேபோல நேரடி வன்முறை ஏதும் இன்றி, மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்தார் என்று மட்டும் சொல்லி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளார், 90% உடல் ஊனமுற்ற, சக்கர நாற்காலியில் மட்டுமே செல்ல முடிந்த பேராசிரியர் சாய்பாபா. சிறையிலிருந்து அக்,17,2017-ல் அவரது மனைவிக்கு எழுதிய கடிதம் நமக்குக் கண்ணிரை வரவழைக்கிறது.
“அன்புள்ள வசந்தா, நவம்பர் மாதம் தொடங்கவிருக்கும் குளிர்காலத்தில், நான் இங்கு பிழைப்பது சாத்தியமற்றது. இறுதி மூச்சு விடும் மிருகத்தை போல நான் இங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறேன். திரு.காட்லிங் அவர்களிடம் எனது பிணை மனுவை நவம்பர் முதல் வாரம் அல்லது அக்டோபர் இறுதி வாரத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கவும். உங்கள் அனைவரிடமும் பிச்சைக்காரனைப் போலவும், கைவிடப்பட்டவனைப் போலவும் பல முறை கெஞ்சுவதால், மிகவும் மனச்சோர்வுற்று இருக்கிறேன். தொண்ணூறு விழுக்காடு செயல்படாத உடலையும், பல்வேறு உடல் உபாதைகளையும் கொண்ட மாற்றுத்திறனாளி மனிதன், சிறைக்குள் இருந்துகொண்டு, இயங்கும் ஒரே கையுடன் என்ன செய்வான் என்பது யாருக்கும் புரிவதில்லை.”
இந்த மனிதரைத்தான் ’உடல் ஊனமுற்றால் என்ன? மூளை வேலை செய்கிறதே’ என்று வக்கிரமான முறையில் தீர்ப்பெழுதினார் கட்ஜ்ரோலி மாவட்ட நீதிமன்ற நீதிபதி. இன்றுவரை சாய்பாபாவுக்கு பிணை மறுக்கப்படுகிறது.
மக்களின் கடைசி நம்பிக்கை என்று சொல்லப்பட்ட நீதித்துறை, இப்படி நபர்களைப் பொறுத்து, அதிகாரத்தைப் பொறுத்து தனது நியதிகளை தானே மீறிவருகிறது. அரசின் பல்வேறு அநீதிகளுக்குத் துணைபோகிறது.
அதேசமயம் இந்த அநீதிகளை எதிர்க்கும் பலர் கைது, சிறை, கொலை எனப் பலவகையிலும் அரசு அதிகாரத்தால் முடக்கப்படுகிறார்கள். குஜராத் படுகொலைகளை அம்பலப்படுத்திய தீஸ்தா சேதல்வாத், பார்ப்பனியத்தை எதிர்த்த கல்புர்கி, கவுரி லங்கேஷ், மோடியை விமர்சித்த என்டிடிவி, திரிபுரா ரைபிள் படை ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் சுதீப் தத்தா எனத் தேசிய அள்விலும், தமிழகத்திலோ வழக்கறிஞர் முருகன், மாணவி வளர்மதி, கார்ட்டுனிஸ்ட் பாலா, பேராசிரியர் ஜெயராமன், வழக்கறிஞர் செம்மணி என அடக்குமுறைப் பட்டியல் நீள்கிறது.
மொத்த அரசமைப்பும் அநீதிகளுக்கு ஆதரவாக மாறிப்போயுள்ள சூழலில், அரச வன்முறை, சாதி, மத ஒடுக்குமுறை, வாழ்வுரிமை பறிப்பு என பலமுனைத் தாக்குதலில் பாதிக்கப்படும் மக்கள் எங்கு செல்வது? மாற்று என்ன?
அறிவிக்கப்படாத அவசரநிலை போன்ற இச்சூழலில்தான் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கொண்ட, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டிய தேவை உள்ளது.
நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா மரணத்தின் பின்னணி என்ன ? பாகம் 2
சோராபுதீன் போலி மோதல் கொலை தொடர்பான வழக்கு 2012 -ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. 2014 -ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியை அடுத்து மோடி பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். சோராபுதீன் போலி மோதல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த அமித்ஷா 2014 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
இடைப்பட்ட இந்த இரண்டு ஆண்டுகளில் நடந்ததென்ன?
மும்பை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி ஜே.டி உத்பத் தான் முதலில் இந்த வழக்கை விசாரிக்கத் துவங்குகிறார். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி வழக்கை ஒரே நீதிபதி ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பது இங்கே கவனத்திற்குரியது. வழக்கு விசாரணையின் துவக்கத்தில் இருந்தே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் அமித்ஷா. நீதிபதி உத்பத் விசாரணையின் பல கட்டங்களில் ஆஜராக உத்தரவிட்ட பின்னரும் அமித்ஷா டிமிக்கி கொடுத்து வந்தார். இந்நிலையில் 2014 -ம் ஆண்டு ஜூன் 6 -ம் தேதி நடந்த விசாரணையின் போது அமித்ஷாவின் வழக்கறிஞர்களிடம் கண்டிப்பு காட்டிய நீதிபதி உத்பத், 20 -ம் தேதி நடக்கவுள்ள விசாரணையின் போது அமித்ஷா கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில் 20 -ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த போதும் அமித்ஷா ஆஜராகவில்லை; மேற்கொண்டு விசாரிக்காமல், 26 -ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி, அப்போது கட்டாயம் அமித்ஷா ஆஜராகியே தீர வேண்டுமென உத்தரவிட்டார். 26 -ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், 25 -ம் தேதியே உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலையும் மீறி நீதிபதி உத்பத் பூனா நீதிமன்றத்துக்கு மாற்றல் செய்யப்படுகிறார். எந்தவித முகாந்திரமோ, காரணமோ சொல்லாமல் தனது சொந்த வழிகாட்டுதலே மீறப்பட்டிருப்பது குறித்து உச்சநீதிமன்றம் வாயை மூடிக் கொண்டிருந்தது என்பதும், அந்த சமயத்தில் மோடி அதிகாரத்திற்கு வந்து விட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நீதிபதி உத்பத் மாற்றலான பிறகு லோயா நியமிக்கப்படுகிறார். வழக்கை நீதிபதி லோயா விசாரிக்கத் துவங்கிய ஆரம்பத்தில் நீதிமன்றத்துக்கு ஆஜராக வேண்டுமென அமித்ஷாவை வற்புறுத்தாமல் கொஞ்சம் நீக்குப் போக்காக நடந்து கொண்டார். அதாவது, வழக்கு விசாரணைகளின் போது அமித்ஷா வெளியூரில் இருந்தால் ஆஜராகத் தேவையில்லை எனவும், சாட்சி விசாரணைகளுக்கு பின் நேரடி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமெனவும் லோயா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அக்டோபர் 31 -ம் தேதி வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மும்பை வந்திருந்தார் அமித்ஷா. மும்பையில் இருந்து கொண்டே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த அமித்ஷாவை அன்றைக்கு கண்டித்தார் நீதிபதி லோயா.
அமித்ஷாவின் மேல் சி.பி.ஐ. தாக்கல் செய்திருந்த 10,000 பக்கத்திற்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையை முழுவதும் படித்து வழக்கை முழுவதுமாக விசாரிப்பதில் ஆர்வம் காட்டினார் லோயா. ஆனால், அமித்ஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அவரை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து விசாரணையின் ஒவ்வொரு அமர்வின் போதும் வழக்கை விசாரிப்பதற்கு முன் அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்கும் மனுவை முதலில் விசாரிக்க வேண்டுமென நீதிபதி லோயாவிடம் வற்புறுத்தி வந்தனர்.
இதற்கிடையே வழக்கின் தீர்ப்பை “சாதகமாக” வழங்க வேண்டுமென நீதிபதி லோயாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான மிரட்டல்கள் வந்துள்ளன. தனக்கு வரும் மிரட்டல்கள் பற்றியும் அதன் பின்னே இருப்பவர்களின் அதிகார பலம் பற்றியும் நன்கு அறிந்திருந்த லோயா, அவற்றைக் குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த வழக்கோடு நீதிபதி வேலைக்கு முழுக்குப் போட்டு விட்டு ஊருக்கு வந்து நிம்மதியாக விவசாயத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
பேரம் பேசிய நீதிபதி மோஹித் ஷா
2014 -ம் ஆண்டு ஜூன் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்கு இடையில் தன்னைத் தொடர்பு கொண்ட மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மோகித்ஷா, அமித்ஷாவுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்க 100 கோடி ரூபாய் பேரம் பேசியதாக நீதிபதி லோயா தனது சகோதரி அனுராதா பியானியிடம் கூறியுள்ளார். நள்ளிரவுகளில் நீதிபதி லோயாவை சிவில் உடையில் வெளியிடங்களுக்கு வரச் சொல்லி சந்தித்த தலைமை நீதிபதி மோகித்ஷா, சோராபுதீன் போலி மோதல் கொலை வழக்கின் தீர்ப்பை அமித்ஷாவுக்கு சாதகமாக எழுதும்படி அழுத்தம் கொடுத்து வந்தார் என நீதிபதி லோயாவின் சகோதரி குறிப்பிடுகிறார்.
தனது மகனுக்கு லஞ்சமாக பணம் மட்டுமின்றி மும்பையில் ஒரு வீட்டையும் கொடுக்க அமித்ஷா தரப்பினர் தயாராக இருந்தார்கள் என நீதிபதி லோயாவின் தந்தை குறிப்பிடுகிறார். மேலும் அமித்ஷாவுக்கு சாதகமான தீர்ப்பை டிசம்பர் 30 -ம் தேதி அறிவிக்க வேண்டுமெனவும், ஊடகங்கள் மற்றும் மக்களின் கவனம் இந்த வழக்கின் மேல் இல்லாத வகையில் அன்றைய தினம் வேறு ஒரு முக்கிய நிகழ்வு நடக்கும் எனவும் அமித்ஷா தரப்பினர் சொல்லி வந்திருக்கின்றனர். நீதிபதி லோயாவின் மரணத்திற்குப் பின் 2014 -ம் ஆண்டு டிசம்பர் 15 -ம் தேதி எம்.பி கோசாவி எனும் நீதிபதி பொறுப்பேற்கிறார். புதிய நீதிபதி பொறுப்பேற்ற பதினைந்தே நாளில் (அதே டிசம்பர் 30 -ம் தேதி) அமித்ஷாவை வழக்கில் இருந்து விடுவிக்கிறார்.
அதே டிசம்பர் 30 -ம் தேதி தான் கிரிக்கெட் வீரர் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பை வெளியிடுகிறார். அன்றைய தொலைக்காட்சி விவாதங்களில் தோனியின் கிரிக்கெட் சாதனைகள், அவரது அறிவிப்பின் பின் உள்ள அரசியல் குறித்தெல்லாம் கிரிக்கெட் வல்லுநர்கள் அலசித் துவைத்துக் காயப் போட்டனர்; இந்த ஆரவாரங்கள் தொலைக்காட்சித் திரையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த போது கீழே ஒருவரிச் செய்தியாக அமித்ஷா விடுதலை கடந்து போனது.
***
அமித்ஷாவைத் தொடர்ந்து வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஒவ்வொருவராக விடுதலை செய்யப்பட்டனர். ராஜஸ்தான் மாநில உள்துறை அமைச்சர் குலாப்சந்த் கட்டாரியா, பி.சி பாண்டே, கூடுதல் டி.ஜி.பி ஜோஹ்ரி, அதிகாரிகள் அபய் சுதாசாமா, ராஜ்குமார் பாண்டியன் அமீன் போன்றோரும் யாஷ்பால் சுதாசாமா, அஜய் பட்டேல் போன்ற கூட்டுறவு வங்கி அதிகாரிகள் என வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஒவ்வொருவரும் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட அனைவருக்குமே பதவி உயர்வுகள் தேடி வந்தன. இன்னொருபுறம் வழக்கை நேர்மையாக விசாரித்து குற்றவாளிகளை அடையாளம் காட்டிய ஐ.பி.எஸ் அதிகாரி ரஜ்னீஷ் ராய் 2007 -ல் இருந்து தொடர்ந்து பணியிடமாற்றங்களை எதிர்கொண்டு வருகிறார்.
அமித்ஷாவை விடுதலை செய்த சி.பி.ஐ. நீதிமன்றம், அவர் மேல் தொடுக்கப்பட்ட வழக்கு “அரசியல் உள்நோக்கம் கொண்டது” என தனது தீர்ப்பில் குறிப்பிட்டது. பொதுவாக புலனாய்வு அமைப்புகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படும் போது அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வது வழக்கம்; அமித்ஷா விவகாரத்தில் இந்த வழக்கம் பின்பற்றப்படவில்லை.
சோராபுதீன் ஷேக்கை மக்கள் அப்படியே மறந்து போனார்கள். போலி மோதல் கொலைகள் சூடாக விவாதிக்கப்பட்டு வந்த சூழலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் இவ்வாறாகப் பேசினார் மோடி:
“காங்கிரசுக்காரர்கள் மோடி சட்டவிரோத என்கவுண்டர் கொலைகளைச் செய்வதாகச் சொல்கிறார்கள். அவர்கள் மோடி தான் சோராபுதீனைக் கொன்றதாகச் சொல்கிறார்கள். காங்கிரசு நண்பர்களே, உங்கள் கையில் மத்திய அரசு அதிகாரம் உள்ளது. உங்களுக்குத் துணிவிருந்தால் மோடியை தூக்கு மேடைக்கு அனுப்பிப் பாருங்களேன்” இவ்வாறாகச் சவால் விட்டவர், கூட்டத்தினரை நோக்கி “சோராபுதீன் ஷேக்கை என்ன செய்யலாம்?” எனக் கேட்டார்.
அதற்கு அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதாவினர் “அவனைக் கொல்லுங்கள், அவனைக் கொல்லுங்கள்” என பதிலளித்தனர்.
***
நீதிபதி லோயாவின் சந்தேகத்துக்குரிய மரணம் அம்பலமானதைத் தொடர்ந்து தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்கள் அனைத்தும் ஓர் ஆழ்ந்த தியான நிலைக்குச் சென்று விட்டன. அமித்ஷாவைப் பற்றிய செய்தியை வெளியிடும் அளவுக்கு இந்த ஊடகங்களின் முதுகெலும்பு உறுதியாக இருக்கும் என எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான்; எனினும், பொதுவாக பீற்றிக் கொள்ளப்படும் நீதித்துறை மாண்பின் கோவணத்தை லோயாவின் குடும்பத்தார் உருவி எறிந்திருப்பதைப் பற்றிக் கூட யாரும் பேசவில்லை. வயர், ஸ்க்ரோல் போன்ற ஓரிரு இணையப் பத்திரிகைகளே இவ்விவகாரம் தொடர்பாக தொடர்ந்து எழுதி வருகின்றன.
செய்தி வெளியாகி ஏழு நாட்களுக்குப் பின் கேரவனில் வெளியான கட்டுரையில் உள்ள தரவுகள் உறுதியில்லை என்பதைத் தமது சொந்த விசாரணைகளின் மூலம் உறுதி செய்துள்ளதாக எழுதியுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை. உண்மையில் கேரவன் கட்டுரை எழுப்பும் சிக்கலான கேள்விகளை மிக கவனமாக தவிர்த்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், அந்தக் கட்டுரை எழுப்பும் இரண்டாம்பட்சமான கேள்விகளை மட்டும் தெரிவு செய்து அதற்கு பதிலளித்துள்ளது. அப்படி அளிக்கப்பட்டுள்ள விளக்கங்களும் தம்மளவில் முரண்பாடுகள் கொண்டவையாகவே உள்ளன.
முதலில் நீதிபதி லோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதென்பதையும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதையும் உடன் தங்கியிருந்த நீதிபதிகளிடம் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் சொல்கிறது. ஆனால், நீதிபதி லோயா முதலில் திருமணத்திற்குச் செல்லும் உத்தேசத்தில் இல்லை என்பதையும் சில உயர்நீதிமன்ற நீதிபதிகளின் வற்புறுத்தலுக்குப் பின்னரே திருமணத்திற்குச் சென்றார் என்பதும் கேரவன் கட்டுரையிலேயே உள்ளது. மேலும், நீதிபதியின் மரணம் சந்தேகத்துக்குரியது என்றால், உடனிருந்தவர்களின் உதவியின்றி அதை நிறைவேற்றியிருக்க முடியாது.
ரஜ்னீஷ் ராய்
அடுத்து மாரடைப்பு ஏற்பட்ட உடன் கேரவனில் சொல்லப்பட்டதைப் போல் லோயாவை ஆட்டோவில் அழைத்துச் செல்லவில்லை எனவும், உள்ளூர் நீதிபதி விஜய்குமார் பார்டேவின் காரில் அழைத்துச் சென்றதாகவும் எக்ஸ்பிரஸ் கட்டுரை தெரிவிக்கிறது. எந்த வாகனத்தில் அழைத்துச் சென்றார்கள் என்பதல்ல – அப்படி மாரடைப்பு ஏற்பட்ட உடன் குடும்பத்தாருக்கு ஏன் தெரிவிக்கவில்லை. மேலும் நீதிபதி அதிகாலை 4:45 -க்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் 6:15 -க்கு இறந்துள்ளார் – ஆனால், அதிகாலை 5:00 மணிக்கே நீதிபதி இறந்து விட்டதாக அவரது குடும்பத்திற்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது.
அடுத்து, நீதிபதிக்கு ஈ.சி.ஜி எடுத்ததாக எக்ஸ்பிரஸ் பத்திரிகை குறிப்பிடுகிறது. ஆனால், அந்த ஈ.சி.ஜி -யில் நேரமும், பெயரும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது பற்றி பலரும் சுட்டிக்காட்டிய பின், தமது பத்திரிகை சார்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் பேசியதாகவும் அவர்கள் “டெக்னிக்கல் பிரச்சினை” காரணமாக தவறான நேரமும் பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கலாம் எனச் சொன்னதாகவும் தனது கட்டுரையில் பிற்சேர்க்கையாக குறிப்பிட்டுள்ளது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
அடுத்து, பிரேதப் பரிசோதனை அறிக்கையில் மரணம் சந்தேகத்துக்குரியதல்ல என குறிப்பிட்டுள்ளது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைச் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இயற்கையான மரணத்திற்கு பிரேதப் பரிசோதனை அவசியம் என தீர்மானித்தது யார் என்பதைப் பற்றி ஏதும் சொல்லவில்லை. மேலும் பிரேதப்பரிசோதனையின் போது வெளியேறிய ரத்தம் நீதிபதியின் உடையில் பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் குறிப்பிட்டுள்ளனர் – ஆனால், பிரேதப் பரிசோதனை முடிந்த பின் மருத்துவமனை கவுன் அல்லது வெள்ளைத் துணியால் சுற்றி உடலைக் கொடுக்கும் வழக்கமான நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்பதைப் பற்றி எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஏதும் சொல்லவில்லை.
அடுத்து பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கையெழுத்திட்டது நீதிபதி லோயாவின் ஒன்றுவிட்ட சகோதரனின் மருமகன் பிரஷாந்த் ரத்தி என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கண்டறிந்துள்ளது. ஆனால், கேரவனின் விசாரணையின் போது நீதிபதியின் தந்தை தனக்கு நேரடிச் சொந்தம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் தன்னுடைய மாமா தன்னை அழைத்து தனது ஒன்றுவிட்ட சகோதரன் இறந்து விட்டதாகச் சொல்லி மற்ற நடைமுறைகளை கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும் பிரஷாந்த் ரத்தி குறிப்பிட்டுள்ளார். இதை ஏன் இத்தனை நாட்களாக நீதிபதி லோயா குடும்பத்தாரிடம் சொல்லவில்லை என்பது பற்றியோ, அப்படி பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கையெழுத்திட நீதிபதி குடும்பத்தாரிடம் தொலைபேசியிலாவது அனுமதி பெறப்பட்டதா என்பதைக் குறித்தும் பிரஷாந்த் ரத்தி ஏதும் சொல்லவில்லை.
லோயாவின் மர்ம மரணம் குறித்த கேரவனின் கட்டுரைகளுக்கு வழக்கமான பா.ஜ.க சொம்புகளான ரிபப்ளிக், டைம்ஸ் நௌ போன்றவர்களை நாடாமல் வழக்கமாக ஓரளவு நடுநிலையோடு செயல்படும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையை நாடியுள்ளனர் என்பதை அப்பத்திரிகையில் வெளியான மறுப்புக் கட்டுரையில் உள்ள ஏராளமான ஓட்டைகளே தெரிவிக்கின்றன. மேலும், பதிலளிப்பதற்கு வசதியான கேள்விகளை மட்டுமே தெரிவு செய்து பதிலளித்துள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆர்.எஸ்.எஸ் ஊழியர் ஈஸ்வர் பஹேட்டியின் அதீத அக்கறை பற்றியோ, நீதிபதியின் செல்பேசியை மூன்று நாட்கள் கழித்து இவரே கொண்டு வந்து கொடுத்தது பற்றியோ ஏதும் சொல்லவில்லை.
***
பச்சை ரத்தப் படுகொலைகளை எந்த மன உறுத்தலும் இன்றிச் செய்யும் கிரிமினல் கும்பல் ஒன்றின் கையில் மொத்த அதிகாரமும் குவிந்துள்ளது. தங்கள் உடலில் காவி ரத்தம் பாயும் ஒரு சில ‘இந்துக்கள்’ “சாகப் போவது துலுக்கனும் கிறித்தவனும் தானே” என இறுமாந்து இருக்கின்றனர். துள்சிராம் பிரஜாபதியும் நீதிபதி லோயாவும் இந்துக்கள் தான். சொல்லப் போனால் சோராபுதீன் ஷேக் மற்றும் கௌசர்பி ஆகியோரின் உயிர்கள் ஓரிரு நாள் சித்திரவதைக்குப் பின் பறிக்கப்பட்டுவிட்டன.
ஆனால், துள்சிராம் பிரஜாபதி பல மாதங்களாக நெருங்கி வரும் மரணத்தைக் கண்டு அஞ்சியவாறே சிறைக் கொட்டடியில் தவித்து பின் உயிரை விட்டுள்ளான். நீதிபதி லோயா பல மாதங்கள் உளவியல் சித்திரவதைகளை அனுபவித்த பின் “இயற்கை மரணம்” அடைய வைக்கப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழலில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தாண்டியுள்ளது; அவர்களில் பெரும்பாலானோர் “இந்துக்கள்” என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
காங்கிரசு உள்ளிட்ட கட்சிகள் ஊழல்வாதிகள் என்றால் பாரதிய ஜனதாவோ மதவெறியும், கொலை வெறியும், ஊழல் வெறியும் இணைந்த வீரிய ஒட்டுரகமாக உள்ளது. இரத்த தாகத்தோடு அலையும் இந்த பாசிச மிருகத்தை உடனடியாக அழித்தொழிப்பதே உண்மையான தேசபக்தர்களின் முன் உள்ள அவசரக் கடமை.
– சாக்கியன்
இந்த கட்டுரையின் முந்தைய பாகத்திற்கு செல்ல கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :
தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்துல போராட்டம் நடத்துற செவிலியர்கள பாத்துட்டு வரலாம்ன்னு போயிருந்தேன். காம்பவுண்டுக்கு வெளியவே முட்டு முட்டா போலீசு குவிஞ்சுருந்தாங்க. உள்ள யாரையும் விடல. மீடியாக்காரவங்களே கேமராவ வச்சுகிட்டு ரோட்டுக்கு எதிர்லதான் நின்னாங்க. நிலமைய பாத்தா இவங்கள தாண்டி வளாகத்துக்குள்ள நுழையிறது சவால்தான். டீ குடிக்க வந்த செவிலியர் கூட்டத்தோட கூட்டமா ஒரு வழியா உள்ள வந்து சேந்தேன்.
மக்கள்கிட்ட இப்படி குப்பைய சேத்து வைக்காதிங்க, தண்ணிய மூடி வைங்க, காய்ச்சி குடிங்க, குழந்தைக்கி கைய கழுவிட்டு சாப்பாடு குடுங்க, அழுக்கில்லாத உள்ளாடைகள போடுங்க இப்படி சொல்லும் போது அவங்க செவிலியரா மட்டும் இருக்க மாட்டாங்க. நம்ம வீட்டாளுங்களாவே தோணும். ஆனா டி.எம்.எஸ். வளாகத்துல செவிலியருங்க இருந்த நிலை சொல்லி மாளாது!
அவங்க குந்திருந்த எடம் பூரா கட்டம் கட்ட பயன்படுத்துற சரளக்கல்லு. அதுல துணி, பேப்பரு, துப்பட்டாவெ விரிச்சுப்போட்டு கொத்தடிமை கணக்கா குந்திருந்தாங்க. அவங்க இருந்த எடத்த சுத்தி மூணு நாளா அள்ளப்படாத சாப்பாட்டு குப்பைங்க. ஒரே நாத்தம். இது கூட பரவாயில்ல, டாய்லெட்டு நிலைமையோ இன்னும் மோசம்.
தேனி மாவட்டத்த சேந்த ஒரு பெண் செவிலியர், “நூறு பேரு இருந்தாலே அதுல நாலு பேருக்காவது பீரியட்ஸ் இருக்கும். ரெண்டாயிரம் பேருக்கும் மேல இருக்கோம், என்ன செய்ய முடியும் சொல்லுங்க? ஒரு பொம்பள தண்ணி இல்லாமெ நாப்கீன் மாத்தாமெ பீரியட்ஸ் டயத்துல எப்படி இருக்க முடியும்? மூணு நாளா இந்த கொடுமைய அனுபவிக்கிற பொம்பளைங்களுக்கு போராட்டமும் வேண்டாம் வேலையும் வேண்டான்னு ஓடத்தான் தோனும்.”
பெண் செவிலியருங்க சீருடையில சரியா கீழ உக்கார முடியாம செரமபட்டது தெரிஞ்சுது. வெளிய ரோட்டோர டீ கடையில சொல்லி லெக்கீன்ஸ் வியாபாரிய வரவச்சு காசிருந்தவங்க வெள்ளக் கலர்ல வாங்கி போட்டுகிட்டாங்க. சுத்தி வளச்சு போலீசு நிக்குது. இருக்குற எந்த கட்டடத்துலயும் உள்ள போக அனுமதி கெடையாது. குழந்தைக்கி பால் குடுக்குற தாய்மாரெல்லாம் போராட்டத்துல இருக்காங்க. எங்குன ஒதுங்க முடியும்?
இந்த இலட்சணத்துல ஒரு அரசு அதிகாரி பேசும் போது சொல்றாங்க “நீங்க எல்லாம் எங்க பிள்ளைங்க மாதிரி. இந்த வயசுல எங்க எல்லாருக்கும் பிள்ளைங்க இருக்கு. நீங்க மூணு நாளா இங்க பனியிலயும் குளிருலயும் இருக்குறத பாக்கும் போது தாங்க முடியல.” அந்த அம்மா பேசின பத்து நிமிசத்துல இந்த டயலாக்க மூணு தடவ சொல்லுது.
எந்த தாயும் கைக்கொழந்தைய வச்சுகிட்டு அத்தன குளிருல வெட்ட வெளியில கெடக்குறத பாத்துட்டு இருக்க மாட்டா. அந்தம்மா தாம்பிள்ளைங்களா நெனச்சதுன்னே எடுத்துக்குவோம். தனிச்சு போராட்டத்துக்கு ஒரு முடிவு சொல்ல முடியாதுன்னே வச்சுக்குவோம். ஆனா டி.எம்.எஸ். அதிகாரிங்கற முறையில குடிக்க தண்ணியும், சுகாதாரமான டாய்லெட்டும் தந்துருக்கலாம். அந்தம்மா என்னவோ “உங்களால் நான் உங்களுக்காகவே நான்” அப்புடிங்குற ரேஞ்சுலேயே பேசுச்சு.
இத கேட்ட கன்னியாகுமரி மாவட்டத்த சேந்த ஒரு பெண் செவிலியர் சொன்னாங்க “இந்தம்மா சொந்தம் கொண்டாடலன்னு நாங்க அழல. இந்த தொழில நாங்க புனிதமா நெனச்சு செய்றொம். நோயாளிங்கள சுத்தபத்தமா இருக்க வச்சு அருவெறுப்பு பாக்காமெ ராத்திரி பகலா உழைக்கிறோம். ஆனா பாருங்க எங்கள சுத்தியே நோய் பரப்பும் வசதி அனைத்தையும் செஞ்சு கொடுத்துருக்கு அரசு. நாங்க என்னங்க பெருசா கேட்டுட்டோம். நேரங்காலம் பாக்காமெ வேலை செய்றோம் எங்களுக்கு பிச்ச போடாதிங்க சமமா நடத்துன்னு சொல்றோம்.”
அதிகாரிங்க பேசிட்டு போன பிறகு அங்கே ஒரே சலசலப்பு. அதிகாரிங்க ஒத்திகை பாத்துட்டு வந்து அரங்கேத்துன நாடகம் சரியில்லன்னு திருப்பி அனுப்பிட்டாங்க செவிலியருங்க. எரிச்சலோட திரும்பி போனாங்க போலீசுங்க. பேச்சுவார்த்தையில திருப்பம் வருமான்னு மேடை பக்கத்தையே பாத்திருந்த செவிலியருங்க திரும்பவும் பேச ஆரம்பிச்சாங்க.
“ஒங்களுக்கே தெரியும் அம்மா செத்ததும் பதவிக்காக என்ன தர்மயுத்தமெல்லாம் செஞ்சாங்கன்னு. நாங்க மட்டும் கடைசி வரைக்கும் ஒப்பந்த பணியாளரா இருக்கனும்ன்னு சொல்றது ஞாயமாங்க. வருசத்துக்கு 200 பேரு பணி நெரந்தரம் பன்னுவோம்னு விஜயபாஸ்கரு சொல்றாரு. அவரு கணக்குப்படி பாத்தா நானு இந்த கையில வேலைக்கான ஆட்ரையும் இந்த கையில ரிட்டேயர்மெட்டுக்கான ஆர்டரையும் வாங்கிட்டு வீட்டுக்குதான் போகணும்.”
“இவளாவது ஆர்டரை வாங்கி பாக்குறதுக்கு உயிரோட இருப்பா. என் வயசுக்கு நான் பரலோகம் போயிருவேன். எனக்கு 42 ரெண்டு வயசாகுது. தனியாரு மருத்துவமனையில வேலை பாத்தப்ப நல்ல சம்பளம் வாங்கினேன். தனியாரு எப்ப வேணுன்னாலும் வீட்டுக்கு அனுப்பிடுவான் அரசு வேலையின்னா ஒரு நிம்மதி இருக்குமேன்னு சேந்தேங்க. தூத்துக்குடி பகுதிய சேந்தவ நானு. என்ன தூக்கி திருவாரூல போட்டானுங்க. மாத்திகிட்டு போக ரெண்டரை லட்சம் குடுத்தேன்”-னு தன்னோட மன ஆதங்கத்த ஆத்தரத்தோட சொன்னாங்க திருவாரூர் பகுதிய சேந்த செவிலியர் ஒருவர்.
“எனக்கு 25 வயசாகுது. பேங்குல எஜுகேசன் லோனு வாங்கிதான் படிச்சேன். சொந்த ஊரு திருநெல்வேலி. வேலை பாக்குறது திருப்பூரு. இன்னும் கல்யாணம் ஆகல. திருநெல்வேலிக்கே மாத்திக்கலாம்ன்னா 2 லட்ச ரூபா லஞ்சம் கேக்குறாங்க சுகாதாரத் துறை ஆளுங்க. இன்னும் படிப்புக்கு வாங்குன லோன கட்ட முடியல. 7,700 சம்பளத்த வச்சு வாடக குடுத்து சாப்பிட்டு வீட்டுக்கு பணம் அனுப்பனும், பஸ்சு காசுக்கு பயந்து ஊருக்கு போறது கூட தள்ளி போட்டுருவேன். இப்ப சொல்லுங்க நாங்க என்ன செய்யட்டும்”னு இது விருதுநகர் பகுதி செவிலியரோட கேள்வி.
“நானு திருப்பூர் மாவட்டத்துல வேலை செய்றேன். ஒரு செவிலியரு 8 உள் நோயாளிகள பாத்து பராமரிக்கணுமுன்னு விதி சொல்லுது. ஆனா நாங்க ஒரு நாளைக்கி 70, 80 நோயாளிங்கள கவனிக்கிறோம். அதுவும் ஆண்கள் வார்டு அதுல 30 பேரு ஆப்ரேசன் செஞ்சவங்க. டாக்டரோட பல வேலைகள நாங்க பாக்கணும். டாய்லெட் கழுவலன்னா கூட எங்களதான் கேப்பாங்க. ஒரு நிமிசத்துல பதினஞ்சு வேலையப் பத்தி மூளை சிந்திக்கனும். இவ்வள வேலை செய்றதுக்கு நியாயமான சம்பளம் குடுன்னுதான் கேக்குறோம்.”
அதே பகுதியில வேலை செய்ற ஆண் செவிலியர் சொல்லும் போது, “எங்க அப்பா ஒரு துப்புறவு தொழிலாளிங்க. லோன் வாங்கித்தான் படிச்சேன். முப்பத்தேழு வயசாகுது. 7,700 சம்பளத்த வச்சு கல்யாணம் பண்ணி எப்படி குடும்பம் நடத்துறதுன்னு பயந்தே தள்ளி போட்டிருக்கிறேன். பகல் இரவுன்னு மாறி மாறி டூட்டி போடுவாங்க. பகுதி நேரமா வேற வேலைக்கும் போக முடியாது. சுகாதார அமைச்சர் சொல்றாரு மத்த மாநிலத்த விட தமிழ்நாடுதான் ஒப்பந்த தொழிலாளர வருங்காலத்துல நிரந்தர தொழிலாளரா நியமிக்க முன்வந்துருக்கும் மாநிலமுன்னு. இந்தாளு சொல்ற கணக்குப்படி பாத்தா வருங்காலங்கறது எங்களுக்கு இறந்த காலமா மாறிடுமுன்னு நாங்க சொல்றோம்.”
கூடியிருந்த செவிலியருங்க ஒரு பன்னை மூணு துண்டாக்கி மூணு பேரா மதிய சாப்பாடா சாப்பிட்டவங்க, எனக்கும் ஒரு துண்ட கொடுத்தாங்க. அப்பதான் வெறுங்கைய வீசிகிட்டு இந்த பிள்ளைங்கள பாக்க வந்தோமேன்னு எனக்கு உறச்சது.
வெளிய வந்த போது போலீசு நிறுத்தினாங்க. நான் என்னமோ போராட்டத்தை தூண்டி விட்டது போல ஓரங்கட்டி நிக்க வச்சாங்க. எதுக்கு கலர் டிரஸ் போட்ருக்க, ஐடிய காமி, யார பாக்க வந்தியோ அவங்கள போன் பன்னி இங்க வரச்சொல்லு இப்படி அடுக்கிகிட்டே போனாங்க.
“என்னோட அக்கா பொண்ணுக்கு சாப்பாடும் அவசர செலவுக்கு காசும் குடுக்க வந்தேன். குடுத்துட்டேன், வெளிய போறேன். உள்ள வரும்போதுதான் எல்லாத்தையும் செக்பண்ணித்தான் விட்டாங்க. நான் பள்ளிகூடத்துக்கு பிள்ளைய அழைக்க போகனும், நேரமாயிருச்சு, இப்ப நீங்க வேற நிறுத்தி வச்சா என்ன செய்ய?” என்று போலீசிடம் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
இப்ப போராட்டம் நீதிமன்றத்தால நிறுத்தப்பட்டாலும் அந்த செவிலியருங்க அடுத்த முறை ஜட்ஜ் ஐயாவுக்கு கட்டுப்படாம வெற்றி கிடைக்குற வரை போராடுவாங்க! ஏன்னா ஒவ்வொரு போராட்டமும் நிறைய விசயங்கள கத்துக் கொடுக்குது!
சிபிஐ நீதிமன்ற நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா கடந்த 2014 -ம் ஆண்டு டிசம்பர் 1 -ம் தேதி திருமணம் ஒன்றிற்காக நாக்பூர் சென்றிருந்த சமயத்தில் திடீரென அகால மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு மாரடைப்பே காரணமென அப்போது சொல்லப்பட்டது.
நீதிபதி பிரிஜ்கோபால் ஹர்கிஷன் லோயா
எனினும், நீதிபதியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரது மரணம் இயற்கையானது அல்ல என்று அப்போதே தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருட காலமாக நீதிபதி லோயாவின் உறவினர்களிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களிடமும் நீதிபதியின் மரணம் குறித்து தகவல் திரட்டிய பத்திரிகையாளர் நிரஞ்சன் டாக்லே, தான் கண்டறிந்தவைகளை கேரவன் இணையப் பத்திரிகையில் எழுதியுள்ளார்.
நீதிபதி லோயாவின் மரணம் உண்மையில் சந்தேகத்துக்குரியது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. தேசிய ஊடகங்கள் இது குறித்து கள்ளமௌனம் சாதித்தாலும் சமூக வலைத்தளங்களில் இது பற்றி விவாதிக்கப்படுகின்றது. முதுகெலும்பைச் சில்லிட வைக்கும் இந்த விவகாரத்தின் பின்னணியைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், குஜராத்தில் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த சில சம்பவங்களில் இருந்து துவங்க வேண்டியது அவசியம்.
***
கொடூர கொலையாளிகளின் கதை இது. தினத் தந்தியின் எட்டாம் பக்கத்தில் தலைகாட்டும் “கள்ளக் காதல்” கொலை கதையை அறிந்திருப்போம். நக்கீரனிலோ ஜூனியர் விகடனிலோ தலைகாட்டும் கொலைகார ரவுடிகளை அறிந்திருப்போம். ஆனால், இங்கு நாம் பார்க்க இருப்பது வேறு வகையான கொலையாளிகள். அரசியல் பதவிகளுக்காகவும், கேள்விக்கிடமற்ற அதிகாரத்திற்காகவும் தங்களது கொலைகளுக்கு “தத்துவார்த்த” அடிப்படை ஒன்றை உருவாக்கிக் கொண்டதோடு, பெருந்திரளான மக்களை உளவியல் ரீதியில் கொலைவெறியர்களாக உருமாற்றும் வித்தை தெரிந்தவர்கள் இவர்கள் – இந்துத்துவ பாசிஸ்டுகள்.
அவன் ஒரு ரவுடி கும்பலைச் சேர்ந்தவன். அரசியல்வாதிகளின் சார்பாக தொழிலதிபர்களை, குறிப்பாக கிரானைட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை மிரட்டி பணம் பறிப்பது அந்த கும்பலின் வேலை. ஒரு சந்தர்ப்பத்தில் அவனுக்கும் அவனை இயக்கிய அரசியல்வாதிக்கும் இடையே முரண்பாடு எழுகிறது – பங்கு பிரித்துக் கொள்வதில் இந்த முரண்பாடு தோன்றியிருக்க வேண்டும் என பின்னர் இதை விசாரித்த சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை சொல்கிறது. சம்பந்தப்பட்ட அரசியல்வாதி இந்த ரவுடியை ஒழித்துக் கட்ட தீர்மானிக்கிறார்.
வெறுமனே கொன்று போட்டால் அதில் ஆதாயம் ஏதுமில்லை. அதே நேரம் மாநில அரசின் அதிகாரத்தில் இவரது கட்சி இருந்தாலும் கூட, ரவுடியின் மேல் “கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல்” போன்ற குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதிலும் சிக்கல் – அப்படி முறையான நடவடிக்கை எடுத்தால், அவன் உண்மைகளை வெளியிட்டு அரசியல்வாதியின் தொடர்பை அம்பலப்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளது.
ரவுடியைக் கொல்வது – அதிலிருந்து அரசியல் ஆதாயம் அடைவது, என ஒரே கல்லில் இரண்டு காய்களை வீழ்த்தத் திட்டமிடுகிறார் அரசியல்வாதி. தனக்கு நெருக்கமான போலீசு அதிகாரிகளைக் கொண்டு போலி மோதல் ஒன்றை அரங்கேற்றும் அரசியல்வாதி, அதில் ரவுடியைப் போட்டுத் தள்ளுகிறார். போலீசைக் கொண்டு, கொல்லப்பட்ட ரவுடி பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு தொடர்புடையவன் என்றும், அவனால் மாநில முதல்வரின் உயிருக்கே ஆபத்து இருந்ததாகவும் கதைகள் எழுதப்படுகின்றன.
கதை இன்னும் முடியவில்லை. கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து கொண்டு மேலே தொடர்வோம். கதையின் களம் குஜராத். சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் பெயர் அமித்ஷா, இன்றைய பாரதிய ஜனதா தேசியத் தலைவர்; அன்றைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர். அந்த ரவுடி, சோராபுதீன் ஷேக்.
***
“முதல்வரைக் கொல்ல லஷ்கர்-ஏ-தொய்பா (அல்லது ஜெய்ஷ், அல்லது ஐ.எஸ்.ஐ) அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் திட்டம் போலீசாருக்குக் கிடைத்தது. தகவலோடு ரோந்து சென்று கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ________ நிறுத்தினார்கள். அவர் வண்டியை நிறுத்தாமல் போலீசாரின் மேல் துப்பாக்கி பிரயோகம் நடத்தினார். தங்கள் பாதுகாப்புக்காக போலீசார் திருப்பிச் சுட்டதில் பயங்கரத் தீவிரவாதி ___________ இறந்து விட்டார்”
மேற்படி கதையில் கோடிட்ட இடத்தை ஏதாவது ஒரு முசுலீமின் பெயரைக் கொண்டு நிரப்பிக் கொள்ளலாம். 2003 -ல் இருந்து 2006 வரையிலான காலகட்டத்தில் இதே போன்ற கிழிந்து கந்தலான கதைகளைச் சொல்லி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையாக குஜராத் அரசே அறிவித்த போலி மோதல் கொலைகள் 21.
இந்த 21 பேரில் சோராபுதீன் ஷேக்கோ, அவரோடு கொல்லப்பட்ட அவரது மனைவி கௌசரோ இவர்களோடு கொல்லப்பட்ட துள்சிராம் பிரஜாபதியோ இல்லை.
சோராபுதீன் ஷேக் – கௌசர்பி
2005 -ம் ஆண்டு நவம்பர் 22 -ம் தேதி ஹைதராபாத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலிக்கு தனது மனைவி கௌசர்பி மற்றும் நண்பர் துள்சிராம் பிரஜாபதியோடு பேருந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தார் சோராபுதீன். குஜராத் மாநில ஐ.பி.எஸ் அதிகாரி ராஜ்குமார் பாண்டியா தலைமையிலான போலீசு குழு ஒன்று பேருந்தை மறித்து அதில் பயணித்துக் கொண்டிருந்த இம்மூவரையும் கைது செய்து அழைத்துச் செல்கிறது. சட்டரீதியான நடைமுறைகள் ஏதும் பின்பற்றப்படாத இந்த “கைது” நடவடிக்கையை கடத்தல் என்று சொல்வதே சரியானது.
நவம்பர் 26 -ம் தேதி தனது கணவரிடமிருந்து பிரிக்கப்படும் கௌசர்பி, தனியே ஒரு பண்ணை வீட்டில் அடைத்து வைக்கப்படுகிறார். பின்னர் துள்சிராம் பிரஜாபதி ராஜஸ்தான் போலீசாரிடம் ஒப்படைக்கப்படுகிறார். அதே நாள் சோராபுதீன் ஷேக் சுட்டுக் கொல்லப்படுகிறார்.
அடுத்த சில நாட்கள் பயங்கரமான தீவிரவாதியைக் கொன்ற குஜராத் காவல்துறையின் வீரதீரச் செயல் குறித்து தேசிய ஊடகங்களில் பாராட்டுப் பத்திரங்கள் வெளியாகத் துவங்கின. பின்னர் (25.8.2010 -ல்) இது பற்றி விசாரித்த சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்த வாக்குமூலத்தின்படி அர்ஹாம் எனும் பண்ணை வீட்டில் கௌசர்பி அடைத்து வைக்கப்பட்டார்.
அவருக்கு சௌபே எனும் சூபிரெண்டு பாதுகாப்பாக நியமிக்கப்பட்டார். 26 -ம் தேதியில் இருந்து 28 -ம் தேதி வரை சௌபே, கௌசர்பியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கினார். பின்னர் 29 -ம் தேதி மதியம் (சோராபுதீன் கொல்லப்பட்ட அதே நாளில்) கௌசர்பியை ஷாஹிபாகில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு சென்றார் சௌபே. அங்கே டி.ஜி வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோர் கௌசர்பியுடன் சோராபுதீன் கொல்லப்பட்டார் என்பதைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வாயைத் திறந்தால் கௌசர்பியும் கொல்லப்படுவார் என மிரட்டியுள்ளனர். கணவன் கொல்லப்பட்டதைக் கேட்டு அந்த பெண் அழுது புரண்டுள்ளார். கௌசர்பியை வெளியே விட்டால் தங்களைக் காட்டிக் கொடுத்துவிடுவார் என போலீசார் அஞ்சியுள்ளனர். டாக்டரும், ஐபிஎஸ் அதிகாரியுமான நரேந்திர அமீன் (துணைக் கண்காணிப்பாளர்) வரவழைக்கப்பட்டு கௌசர்பியின் உடலில் மயக்க ஊசி போட்டுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த கௌசர்பி கொல்லப்பட்டு அவரது உடல் உருத்தெரியாமல் எரிக்கப்பட்டுள்ளது. இன்று வரை கௌசர்பியின் உடல் கிடைக்கவே இல்லை.
இதற்கிடையே ராஜஸ்தான் போலீசின் பிடியில் இருந்த பிரஜாபதிக்கு சோராபுதீன் மற்றும் கௌசர்பியின் நிலை தெரியவருகிறது. தனது உயிருக்கும் உத்திரவாதமில்லை என அவர் பதறியுள்ளார். தேசிய மனித உரிமைக் கமிசனுக்கு கடிதம் மேல் கடிதமாக எழுதித் தன்னைக் காப்பாற்றுமாறு இறைஞ்சியுள்ளார். தன்னை விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என எதிர்பார்த்து தனது உறவினர்களிடம் தன்னை அழைத்துச் செல்லும் ரயிலில் யாராவது பயணிக்குமாறு கேட்டுள்ளார்.
டி.ஜி வன்சாரா
எனினும், 2006 -ம் ஆண்டு டிசம்பர் 26 -ம் தேதி விசாரணைக்காக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு அழைத்து வரும் போது அவரைக் கொன்று விட திட்டம் தீட்டுகின்றனர் குஜராத் போலீசார். விசாரணை முடிந்து டிசம்பர் 28 -ம் தேதி உதய்பூருக்குக் கிளம்பிய பிரஜாபதியை கடத்தும் டி.ஜி வன்சாரா தலைமையிலான குஜராத் போலீசார், அதே நாளில் குஜராத்-ராஜஸ்தான் எல்லையருகே வைத்து சுட்டுக் கொல்கின்றனர். தப்பிச் செல்லும் போது பிரஜாபதி தாக்கியதாகவும், தற்காப்புக்காக திருப்பிச் சுட்டதில் அவர் இறந்து விட்டார் எனவும் ஒரு கதையைத் தயாரிக்கின்றனர் குஜராத் போலீசார்.
பிரஜாபதி கொல்லப்பட்ட சமயம் மிக முக்கியமானது. சோராபுதீன் – கௌசர்பி கொலைகளுக்கான சிபிஐ விசாரணை அப்போது தீவிரமடைந்திருந்தது. சிபிஐ அதிகாரி வி.எல் சோலங்கி, சோராபுதீன் – கௌசர்பி கடத்தலை நேரில் கண்ட சாட்சியான பிரஜாபதியை விசாரிக்க அனுமதி பெற்றிருந்தார். பிரஜாபதி கொல்லப்பட்டதற்கு மறுநாள் அவரைச் சந்திக்கும் திட்டத்தோடு இருந்தார் சோலங்கி.
அன்றைக்கு குஜராத் போலீசு அதிகாரி ஜி.சி ராய்கர் என்பவர் அளித்த வாக்குமூலம் மிக முக்கியமானது. குஜராத் மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷா, போலீசு டைரக்டர் ஜெனரலை அழைத்து பிரஜாபதி விசயத்தை உடனே முடிக்க வேண்டும் என சொன்னதாகவும், சோலங்கியை சரிக்கட்ட உங்களுக்கெல்லாம் துப்பில்லையா என ஆத்திரத்தோடு ஏசியதாக தனது வாக்குமூலத்தில் ராய்கர் குறிப்பிடுகிறார்.
பின்னர் 2007 -ம் ஆண்டு மார்ச் மாதம் இவ்வழக்கின் விசாரணை டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரஜ்னீஷ் ராய் என்பவரிடம் ஒப்படைக்கப்படுகிறது. ரஜ்னீஷ் ராய் கொலைக் குற்றங்களில் நேரடியாக சம்பந்தப்பட்ட ராஜ்குமார் பாண்டியனின் நெருங்கிய நண்பர். மேலும், டி.ஜி வன்சாரா போன்ற பெரிய அதிகாரிகளிடம் அடக்க ஒடுக்கமாக நடந்து கொண்டு வழக்கை மொத்தமாக ஊத்தி மூட துணை நிற்பார் எனும் நம்பிக்கையில் தான் வழக்கை விசாரிக்கும் பொறுப்பு ரஜ்னீஷ் ராயிடம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும், ரஜ்னீஷ் ராய் நியாயமாகச் செயல்பட்டார்; முக்கியமாக, அவ்வாறு செயல்பட்டதற்காக அவர் கொல்லப்படவில்லை. இதற்கு அப்போது மத்தியில் காங்கிரசு அரசு இருந்தது என்பதும் கூட ஒரு காரணமாக இருந்திருக்க கூடும். தனது விசாரணை அறிக்கையில் சோராபுதீன், கௌசர்பி, பிரஜாபதி ஆகியோரின் கொலைகளுக்கு அன்றைய குஜராத் மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அவருக்கு நெருக்கமான போலீசு அதிகாரிகளுமே காரணம் என்பதைத் தெளிவாக நிறுவினார்.
பின்னர் 2010 ஜனவரி மாதம் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதே ஆண்டு ஏப்ரல் மாதம், குஜராத் போலீசு அதிகாரி அபய் சுதாசாமா, அமித்ஷா மற்றும் ராஜஸ்தான் உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்தவருமான குலாப்சந்த் கட்டாரியா ஆகியோர், சோராபுதீனுடன் சேர்ந்து தொழிலதிபர்களைக் கடத்திய குற்றங்களிலும் மற்றும் பணயத் தொகை வசூலிப்பதிலும் கூட்டாளிகளாகச் செயல்பட்டனர் என்று சிபிஐ குற்றம் சாட்டியது.
இதற்கு ஆதாரமாக இம்மூவருக்குள் நடந்த 331 தொலைபேசி உரையாடல்களை சிபிஐ முன்வைத்தது. கடத்தல்களில் அமித்ஷாவின் கூட்டாளியாக செயல்பட்ட சோராபுதீன் கட்டுப்படுத்த முடியாதவராக மாறியதாலேயே அவரைக் கொல்லும் முடிவை அமித்ஷா எடுத்ததாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை ஒரே நீதிபதி இறுதிவரை விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டுமென உத்தரவிட்டதன் பேரில், வழக்கு விசாரணை சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையே 2014 பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றது.
***
கடந்த 2014 -ம் ஆண்டு நவம்பர் 30 -ம் தேதி இரவு 11:00 மணி அளவில் தனது மனைவியைத் தொலைபேசியில் அழைத்த நீதிபதி லோயா, சுமார் 40 நிமிடங்கள் பேசியுள்ளார். அது தான் தனது நெருங்கிய உறவினர்களோடான அவரது கடைசி பேச்சு. அப்போது அவர் நீதிபதி ஒருவரின் இல்லத் திருமணத்திற்காக நாக்பூர் சென்றிருந்தார். சொல்லப் போனால் முதலில் அந்த திருமணத்திற்கு செல்ல வேண்டாம் என்றே அவர் முடிவு செய்திருந்தார். எனினும், மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளனர்.
மறுநாள், அதிகாலை லோயாவின் உறவினர்களுக்கு அவர் இறந்து விட்ட தகவல் சொல்லப்பட்டுள்ளது. லோயாவின் மனைவி மும்பையிலும், சகோதரி லாத்தூரிலும், சகோதரியின் மகள்கள் தூலே, ஜல்காவ்ன் மற்றும் அவுரங்காபாத் நகரங்களிலும் இருந்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைத்து தகவல் சொல்லப்பட்டுள்ளது. தன்னை நீதிபதி பார்டே என அறிமுகப்படுத்திக் கொண்ட தொலைபேசிக் குரல் ஒன்று நீதிபதி லோயாவின் மரணம் குறித்த தகவலை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளது.
பிரேதப் பரிசோதனை முடிந்த லோயாவின் உடலை லாத்தூர் நகரில் இருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவரது பூர்வீகமான கேட்காவ்ன் எனும் இடத்துக்கு அனுப்பப்பட்டதாக குடும்பத்தாருக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளது. வழக்கமாக கேட்காவ்னில் தங்கும் லோயாவின் தந்தை, அன்றைய தினம் தனது மகள் வசிக்கும் லாத்தூரில் இருந்துள்ளார். தன்னை ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என அறிமுகம் செய்து கொள்ளும் ஈஸ்வர் பஹேட்டி என்பவர் நீதிபதி லோயாவின் தந்தையை நேரில் சந்தித்து தான் லோயாவின் உடலை கேட்காவ்னுக்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
லாத்தூரில் வசித்து வரும் லோயாவின் சகோதரிகளில் ஒருவரான சரிதா மந்தனேவுக்கு டிசம்பர் 1 -ம் தேதி அதிகாலை ஐந்து மணிக்கு தொலைபேசியில் தகவல் சொல்லப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மருமகனை அழைத்துக் கொண்டு நாக்பூர் செல்ல உத்தேசித்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவமனையில் வைத்தே சரிதாவைச் சந்திக்கும் ஈஸ்வர் பஹேட்டி, உடல் கேட்காவ்னுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தகவல் அளித்துள்ளார்.
டிசம்பர் 1 -ம் தேதி இரவு 11:30 மணிக்கு நீதிபதி லோயாவின் உடல் கேட்காவ்னில் கூடியிருந்த குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகின்றது. உடலைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முதலில், பிரேதப்பரிசோதனை நடத்தப்பட்ட உடலின் மேல் பொதுவாக மருத்துவமனையின் கவுனையோ அல்லது வெள்ளைத் துணியைக் கொண்டோ சுற்றியிருப்பார்கள். ஆனால், லோயாவின் உடலில் அவரது உடையே போடப்பட்டிருந்தது. மேலும், கழுத்தருகேயும் தலையின் பின்புறத்திலும் உடைகளிலும் இரத்தக்கறை படிந்திருப்பதை உறவினர்கள் பார்த்துள்ளனர்.
அடுத்து, நாக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட பிரேதப் பரிசோதனையில், ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவர் கையெழுத்திட்டு உடலை வாங்கியிருக்கிறார். அப்படி ஒரு சொந்தமே தங்களுக்கு நாக்பூரில் இல்லை என்கிறார்கள் அவரது உறவினர்கள். மேலும், நீதிபதி லோயாவின் செல்போனை மூன்று நான்கு நாட்கள் கழித்து ஈஸ்வர் பஹேட்டி அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ளார். அப்படி கொடுக்கப்பட்ட செல்பேசியில் இருந்த எஸ்.எம்.எஸ் உள்ளிட்ட தரவுகள் அனைத்தும் மொத்தமாக அழிக்கப்பட்டிருந்துள்ளது.
நீதிபதி லோயாவின் மரணத்தைத் தொடர்ந்த நிகழ்வுகள் ஏராளமான கேள்விகளை எழுப்புகின்றன.
மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் லோயாவை ஆட்டோ ரிக்சா ஒன்றில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக உடனிருந்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பத்திரிகையாளர் நிரஞ்சன் டாக்லே அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்த போது அவர் தங்கியிருந்த அரசு விடுதியின் இருபுறமும் சில கிலோமீட்டர்களுக்கு ஆட்டோ ஸ்டேண்ட் ஏதும் இல்லை. அவசர காலத்தில் ஆம்புலன்சை அழைக்காமல் ஏன் ஆட்டோவைத் தேடி அலைய வேண்டும்?
மாரடைப்பு ஏற்பட்டவுடன் குடும்பத்தாருக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை? அவர் மருத்துவமனையில் அபாய கட்டத்தில் இருந்த போதும் கூட தகவல் சொல்லப்படாதது ஏன்? பொதுவாக சந்தேகத்துக்குரிய மரணங்களின் போது தான் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் – லோயாவின் மரணம் இயற்கையானதாக, மாரடைப்பினால் ஏற்பட்டதாக இருந்தால் ஏன் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது?
பிரேதப் பரிசோதனை அறிக்கையின் படி அதிகாலை 4:00 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு 6:15 -க்கு மரணம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், குடும்பத்தாருக்கு ஐந்து மணிக்கே இறந்து விட்டதாக தகவல் சொல்லப்பட்டது எப்படி? பத்திரிகையாளர் நிரஞ்சன் டாக்லே, பிரேதப்பரிசோதனை நடந்த அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் பேசிய போது அவர்கள், நள்ளிரவே நீதிபதி இறந்து விட்டாரென தன்னிடம் குறிப்பிட்டதாக எழுதியிருக்கிறார். உண்மையில் லோயா இறந்த நேரம் தான் என்ன?
இந்தக் கதையில் தலைகாட்டும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் ஈஸ்வர் பஹேட்டிக்கு நீதிபதியின் குடும்ப நண்பர் அல்ல; அப்படியிருக்க அவருக்கு ஏன் இத்தனை அக்கறை? தனது மருமகன் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு அதிகாலை சென்ற நீதிபதியின் சகோதரியை மருத்துவமனையிலேயே வைத்து சந்தித்திருக்கிறார் பஹேட்டி. அவர் அங்கே தான் செல்கிறார் என்பது இவருக்கு எப்படித் தெரியும். இறந்தவர்களிடமிருந்து எடுக்கப்படும் பொருட்கள் பிரேதப்பரிசோதனை முடிந்த பின் அவரது உடலுடன் சேர்த்து கொடுக்கப்பட்டு விடும் – அல்லது போலீசார் கையளிப்பார்கள். ஆனால், மூன்று நாட்கள் கழித்து ஈஸ்வர் பஹேட்டி தான் செல்பேசியை கொடுத்துள்ளார்.
அடுத்து மரணத்துக்குக் காரணம் Coronary artery insufficiency என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவரும், நீதிபதியின் சகோதரிகளில் ஒருவருமான பியானி, அறிக்கையில் மரணத்திற்கு காரணமாக குறிப்பிடப்படும் சிக்கல் பொதுவாக இரத்த அழுத்தம், இரத்த கொழுப்பு, அதிக உடற்பருமன், நீரிழிவு போன்ற பிரச்சினைகள் இருக்கிறவர்களுக்கே வரும் என்றும், தனது சகோதரனுக்கு அம்மாதிரியான உடற்கோளாறுகள் ஏதும் இல்லை என்றும் தெரிவிக்கிறார். மேலும், தனது சகோதரனுக்கு புகை, குடி போன்ற எந்த பழக்கங்களும் இல்லை என்றும், பல வருடங்களாக தொடர்ந்து தினசரி இரண்டு மணி நேரமாவது டேபிள் டென்னிஸ் விளையாடும் பழக்கமுள்ளவர் என்றும் குறிப்பிடுகிறார்.
லோயாவின் மரணத்திற்கு பின் எழும் கேள்விகளின் பட்டியல் மிக நீண்டது. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில், நாம் அவரது மரணத்துக்கு முன் நடந்த சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
“அவர்கள் எங்களிட மிருந்து மரங்களைப் பறித்துக் கொண்டார்கள்; மீன்களை அள்ளிக்கொண்டார்கள் நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள், பூமி எல்லைகளையே சுரண்டி எடுத்துவிட்டார்கள். பழங்குடி விவசாயிகளின் மண் உரிமை பறிக்கப்பட்ட போது அவர்கள் நெஞ்சிலிருந்து வெடித்த வேதனை இது. சந்தால் பழங்குடிகளுக்கோ இதே போன்ற வேதனை ஆழமானது. நெடுங்காலம் வெட்டிய இடத்திலேயே வெட்டி ரணம் பாய்ந்த வேதனை. 1855-இல் இந்த வேதனைகளுககெல்லாம் அவர்கள் ஓர் விடிவைக் கண்டார்கள், அதுவே சோட்டா நாக்பூர் பிராந்தியமே கிடுகிடுத்த சந்தால் எழுச்சி ஆயுத எழுச்சி
***
சோட்டா நாக்பூர் பிராந்தியமே கிடுகிடுத்த சந்தால் எழுச்சி ஆயுத எழுச்சி
இந்தியாவில் இரண்டாவது மிகப் பெரிய பழங்குடி இனம் பீகார் சந்தால் இனம், எல்லாப் பழங்குடிகளையும் போலவே அவர்கள் தங்கள் பாரம்பரிய வீடு போல காட்டை மதித்தார்கள். அதுவே அவர்களின் பிறந்த வீடு; அவர்களின் தொட்டில்; தாய்மடி; அடர்ந்த காடுகளில் எதிரொலிக்கும் எந்தச் சிறு ஒலியும் அவர்களுக்குத் தெரியும், பறவை, செடி, கொடி, விலங்கு, பூச்சிகள் அனைத்தும் தெரியும், காடும் அவர்களை நேசித்து அவர்களுக்கு எல்லாம் கொடுத்தது, தாய் போல – தாலாட்டியது, சீராட்டியது;
சந்தால் கிராமங்களில் உள்ள விளை நிலங்களை எந்த ஒரு தனிநபரும் தனிச் சொத்தாகப் பார்த்ததில்லை; எல்லாருக்கும் பொதுவானது அந்தச் சொத்து. பங்கீடு, மறுபங்கீடு எல்லாம் சந்தால் கிராமப் பஞ்சாயத்துதான் செய்யும். இந்த மரபுகளை அத்துமீறி மிதித்து நசுக்கி அவமதித்து உடைத்துப் போட்டது கிழக்கிந்தியக் கம்பெனி. ஒரே ஒரு சட்டம் போட்டு ஜமீன்தாரி முறையை கிராமங்களில் திணித்தது. இதன்படி மாவட்டங்கள், தாலுக்காக்கள், கிராமங்கள், பழங்குடி வாழும் பகுதிகள் எல்லாவற்றையும் தனியார் சொத்துக்களாக ஜமீன்தார்களுக்கு மாற்றிக் கொடுத்தது.
வரி வசூலிப்பதிலிருந்து தொடங்கி எல்லா அதிகாரங்களும் பிரிட்டிசாரால் ஜமீன்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பிரிட்டிசார் வருவதற்கு முன்னால் வரிகள் தானியமாகச் செலுத்தப்பட்டன, இப்போது பணம் திணிக்கப்பட்டது; பணத்தின் தேவையை ஒட்டி நில விற்பனை, அடகு, நிலம் கை மாறுதல், இருப்பு போன்றவை வழக்கத்தில் புகுத்தப்பட்டன. வியாபாரியும், வட்டிக் கடைக்காரனும் கடன் கொடுத்தார்கள். இதுவரை சந்தால்கள் சந்தித்தேயிராத சட்ட விசயங்களும், அதிகார வர்க்கமும் பேய்களாக வந்து நின்று அச்சுறுத்தின. பயிரிடும் விவசாயிக்கும் ஜமீனுக்குமிடையே ஒரு நூறு இடைத்தரகர்கள் உருவானார்கள்.
இதுவரை தனது சொந்த ரத்த பாசங்களோடு மட்டுமே வாழ்ந்த சந்தால்களின் மத்தியில் அந்நியர்கள் ஊடுருவினார்கள்; அவர்களை எதிரிகள் என்றார்கள் சந்தால்கள்.
மொத்தத்தில் பழங்குடிகளின் தாய்ப்பூமியை அவர்களிடமிருந்து பிரித்துவிட்டார்கள். அண்டவந்த ஜமீன்கள் நிலங்களைப்பிடுங்கிக் கொண்டு சந்தால்களைக் காட்டுக்குள் விரட்டினார்கள். சந்தால்கள் புதிய இடங்களில் காட்டை எரித்து விளைநிலங்களை உருவாக்கினார்கள். மீண்டும் ஜமீன்கள் கம்பெனிப் படையின் துணையோடு வந்து அந்த இடத்தையும் பறித்துக் கொண்டார்கள். பலமுறை விரட்டப்பட்ட சந்தால்கள் ஏறக்குறைய கங்கையின் கரைக்கே வந்து விட்டார்கள்.
”சந்தால்கள் சாதுவானவர்கள்; ஒரு பகுதியிலிருந்து விரட்டினால் இன்னொரு இடத்துக்குப் போய் வாழ்ந்து கொள்வார்கள்” என்று ஜமீன்கள் எடை போட்டதை உடைத்தெறியத் தொடங்கிய போதுதான் உண்மையான சந்தால்களை அவர்கள் சந்தித்தார்கள்.
***
காடும் அவர்களை நேசித்து அவர்களுக்கு எல்லாம் கொடுத்தது, தாய் போல – தாலாட்டியது, சீராட்டியது;
பழங்குடிக்குச் சம்பந்தமேயில்லாத ஆட்கள் ஜமீனின் எடுபிடிகளாக ‘வரியைக் கொடு’ என்ற கட்டளையோடு வந்தார்கள், வரியைக் கட்ட காசு இல்லை என்று கைவிரித்தபோது வலுவந்தமாகச் சந்தால்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன; ஜமீன்களின் கட்டில்களுக்குப் பழங்குடிப் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டார்கள், கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டார்கள். இணங்க மறுத்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்கள். படிப்பறிவற்ற சந்தால்களிடமிருந்து 50 முதல் 500 மடங்கு வரை அநியாயக் கந்துவட்டி கறந்தார்கள். சந்தைகளில் போலி எடைகளை வைத்து ஏமாற்றிக் கொள்முதல் நடத்தினார்கள்; ஏழை சந்தால் நிலங்களுக்குள்ளே அத்து மீறி மாடு, குதிரை, யானைகளை இறக்கிப் பயிர்களை அழித்தார்கள்; மோசடிக் கடன் பத்திரங்களில் கைநாட்டு வாங்கி சந்தால் குடும்பங்களைப் பரம்பரைக் கொத்தடிமையாக்கினார்கள். இவை ஜமீனின் ஆதிக்க அடையாளங்கள்.
சவுக்கார்கள் – இவர்களுக்கும் உழைப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; இவர்களது பிழைப்பும் மண்ணை நம்பியில்லை. பணமே அவர்களின் கடவுள், ஆடே இல்லாமல் ஆடு வியாபாரம், மாடே இல்லாமல் மாட்டு வியாபாரம் செய்து விடுவார்கள். பயிர், கால்நடை, சந்தால் குடும்பங்களையே கூட வட்டிப் பணத்துக்கு ஈடுகட்டுவர்கள், வட்டிப் பணமே அவர்களின் கடவுள், வெற்றுத் தாளை முன்னால் வைத்துக் கொண்டு மணிக்கணக்காகக் கணக்குப் போட்டு வட்டியை விரித்துப் பெரிதாக்குவார்கள். இவர்கள் அனைவரும மொய்ரா, பனியா, போஜ்பூரி, பட்டியா, வங்காளி வியாபாரக் குடும்பங்கள் வந்தேறிகள்; இவர்கள் ஏராளமான எண்ணைய் வித்துக்கள், கடுகு ஆகியவற்றை மோசடிக் கொள்முதலில் பறித்து இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யும் தரகர்களாக மாறினார்கள். இவை சந்தால்களை ஏய்த்த சவுக்கார்களின் சுரண்டல் அடையாளங்கள்.
அரசாங்கம் – ஜமீன், சவுக்கார் இருவரையும் பாதுகாக்கும் கம்பெனித் துரைமார்களையும், அதிகாரிகளையும்தான் சந்தால்கள் அரசாங்கமாகப் பார்த்தார்கள். துரைகளின் பங்களாக்களை, அவர்களை ஏற்றிச் செல்லும் ரயில்களை வெறுத்தார்கள். எழுச்சியின்போது ரயில் நிலையங்கள் தாக்கப்பட்டன; அரசாங்க அலுவலகங்கள், துரைமாரின் பங்களாக்கள், சிறைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ரயில் ரோடு நாகரிகம் அல்ல, சுரண்டலின் சின்னம் சந்தால்களுக்கு. ரயில் ரோடு கொண்டு வந்த துரைமார்கள் சந்தால் பெண்களைக் கற்பழித்ததை, வரமறுத்தவர்களைக் கொன்றதை, வேலைகளுக்காகச் சிறுவர்களைக் கடத்திச் சென்றதை அவர்கள் மறக்கவில்லை.
ஜமீன், சவுக்கார், சர்க்கார் – இந்த மூன்று பேரின் கூட்டினை எதிரி, அந்நியர் என்று சந்தால்கள் அறிவித்தார்கள். அவர்களின் அடக்குமுறை, ஒடுக்குமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க எழுச்சிப் பிரகடனம் செய்தார்கள்.
சிறுசிறு எதிர்ப்புக்களாகத் தொடங்கி எழுச்சியாகப் பரிமாணம் கொண்டது சந்தால் பழங்குடிப் போராட்டம். ஒவ்வொரு எதிர்ப்பின் போது சந்தால்கள் கைது செய்யப்பட்டார்கள்; அவர்களின் கைகள் முதுகில் பிணைத்துக் கயிற்றால் கட்டப்பட்டன; சந்தால்களின் பார்வையில் கயிறுகள் அடக்குமுறைக் கருவிகள், ஒரு சாதாரண எளிய உழைப்பாளி சந்தால் கோச்சோ ஜமீன் தரோகாவுக்குச் சவால் விட்டான்; கோச்சோ சொன்னான்: ”எத்தனை ஆயிரம் அடி கயிறு உனக்குக் கிடைத்துவிடும், பார்த்து விடலாம்; அமைதியான எல்லாச் சந்தால்களையும் கட்டிப் போட்டு இழுத்துச் சென்று ஆங்கிலேயரிடம் ஒப்படைத்து விடுவாயா, பார்த்து விடுவோம்.”
சவால்கள் இல்லாமல் உழைக்கும் விவசாயிகளின் போராட்ட வரலாறுகள் இல்லை. ’எங்கள் நியாயத்தைக் கேட்கிறோம்’ என்ற உழைப்பவர் உரத்துக் கூறுவார்கள். ’என்ன அநியாயம், இப்படியும் நடக்குமா?’ என்று ஆண்டைகள் தாண்டிக் குதிப்பார்கள் அதுதான் வாடிக்கை.
”எதுக்குடா இங்க வந்தீங்க?”
“எங்களுக்குச்சேர வேண்டியதைக் கேக்க.”
”அது என்னடா சேர வேண்டியது, கொள்ளையடிக்க வந்திருக்கோமுன்னு சொல்லடா நாயே…”
“அப்புடி நீ நெனச்சா அப்புடியே வெச்சுக்குவோம்.”
– இது 1905-ஆம் ஆண்டில் ரசிய விவசாயிகள் எழுச்சியில் ஒரு நிகழ்ச்சி.
”வரியக் கொடுடா என்றா கேட்கிறான்? அவனை வெட்டி வீசுங்கள்! எல்லா கிராமங்களிலும், நகரங்களிலும் நியாயத்துக்காகக் கலகம் செய்யுங்கள் ஆயுதங்களை கர்ரூ நதியில் ரத்தம் போகக் கழுவி எடுங்கள்!”
– இது சோட்டா நாக்பூர் ‘கோல்’ பழங்குடிகளின் வீரச் சூளுரை.
சந்தால் கோச்சோவின் சவால் வெற்றுச் சவால் அல்ல. அவர்கள் போராட்ட வரலாற்றின் பக்கங்களே சாட்சி.
***
1855-இன் மைய நாட்கள், சந்தால் பகுதி ராஜ்மகால் குன்றுகள் ரத்தத்தால் சிவந்து கொண்டிருந்தன. சந்தால் ஆயுதப் போராட்டம் முன்னேறிக் கொண்டிருந்தது.
அது ஒரு மண் குடிசை உள்ளே 45 சந்தால் வீரர்கள் மறைந்திருந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் ஆங்கிலச் சிப்பாய்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியான துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கினார்கள்; ஒவ்வொரு தாக்குதலுக்கும் பதில் சென்றது. அம்புகள் சீறிப் பாய்ந்தன. அனேகமாக குடிசை சல்லடைக் கண்களாகத் துளைக்கப் பட்டுவிட்டது – இனியும் ஒட்டிக் கொண்டு ஊசலாடும் ஒரே ஒரு கதவைத் தவிர வேறு தடுப்புக்கள் இல்லை. எதிரி வீரர்கள் கதவைத் தள்ளிவிட்டு உள்ளே நுழைந்தனர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி – சுற்றிலும் சக போராளிகள் மார்பிலும் தோளிலும் உடலின் பல இடங்களிலும் குண்டு பாய்ந்து செத்துக்கிடக்க ஒரே ஒரு முதியவர் மட்டுமே உயிரோடு நின்றிருந்தார். ”சரணடைந்து விடு, பிழைத்துக் கொள்வாய்” என்று ஒரு ஆங்கிலேயச் சிப்பாய் அவரைப் பார்த்துக் கத்தினான். அடுத்த கணம் ஓர் அசைவு – ஒரே எட்டில் முதிய வீரர் அந்தச் சிப்பாய் மீது பாய்ந்தார், கையிலிருந்த சண்டைக் கோடரியால் ஒரே வெட்டில் வீழ்த்தினார். அடுத்த நொடியில் அவரும் சாய்ந்தார். அந்த முதிய வீரர் உடம்பு முழுவதும் ஏற்கெனவே ஏராளமான குண்டுகள் பாய்ந்து ரத்தம் கொப்பளித்து வழிந்து கொண்டிருந்தது. அந்நியப் படை அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றது.
முட்டாள்கள், கோழைகள் என்று சந்தால்களைத் தூற்றிய ஆங்கிலேயக் கம்பெனிப் படைகளும் சரி, ஜமீன் – சவுக்கார்களும் சரி எழுச்சியின் போது கிலி பிடித்து நடுங்கினார்கள்.
சுற்றிலும் சக போராளிகள் மார்பிலும் தோளிலும் உடலின் பல இடங்களிலும் குண்டு பாய்ந்து செத்துக்கிடக்க ஒரே ஒரு முதியவர் மட்டுமே உயிரோடு நின்றிருந்தார்
சந்தால்கள் சமவெளி மக்களில் பல்வேறு தாழ்ந்த சாதிப் பிரிவினரை போராட்டத்தின் நட்புச் சக்திகளாக வென்றெடுத்ததைப் பார்த்துப் பதறினார்கள்.
பெண்கள் கூட சந்தால்களுக்காக உளவு வேலை பார்த்ததையும், தங்கள் உளவுகளை முறியடித்ததையும் கண்டு பீதி அடைந்தார்கள்.
பழங்குடிக் கலையின் கருவிகளான முழவுகளும், குழலும் போராட்ட காலத்தில் செய்தி அறிவிப்புக்கருவிகளாகவும், வீர எழுச்சி இசையாகவும் மாறியதைக் கண்டு வெருண்ட ஆங்கிலேயே எடுபிடி போலீசும், ராணுவமும் கைதுகளின் போது முழவுகளையும், குழலையும் கூடப் பறித்தார்கள்; செய்தி வாசிக்கும் வழிகளை அடைத்து விட்டதாகக் கருதிப் பெருமூச்சு விட்டார்கள். ஆனால் விரைவிலேயே புதிய முழவுகள், புதிய குழல்கள் களத்திற்கு விரைந்ததைக் கண்டு தூக்கம் இழந்தார்கள்.
களத்தில் பல முறை ஆங்கிலேயப் படைகள் சிதறி ஓடின. தன்னை ஒத்த 25 அதிகாரிகளை இழந்துவிட்டுத் திக்குமுக்காடிய மேஜர் பர்ரோஸ் படையை விட்டுவிட்டுத் தலை தெறிக்கத் தப்பி ஓடினான். அவன் அறிக்கையில் எழுதினான்; ”கலகக்காரர்கள் உறுதியாக நின்று போர் செய்தார்கள். கைகளால் அம்பு எறிந்தார்கள்; கால்களாலும் வில் நாண் இழுத்து அம்பு எறிந்தார்கள், கைக் கோடரிகளாலும் கூடச் சண்டை போட்டார்கள்.”
“ராஜ்மகால் குன்றுகள் சிவந்தன” என்று எழுதுவது இலக்கிய வருணனை அல்ல. ஆக்கிரமிப்பாளரை விரட்டிய போரில் அப்பிராந்தியத்தில் ரத்த ஆறு தான் ஓடியது, பல ஆயிரம் ரத்த சாட்சிகளின் வரலாறுகள் மக்களிடையே கதைகளாக, பாடல்களாக உலவுகின்றன.
எழுச்சிக்குத் தலைமை தாங்கிய சீது, கானு என்ற தியாக வீரர்கள் இன்றும் உடன் இருப்பதுபோல் பசுமையான நினைவுகளை சந்தால்கள் பல தலைமுறைகளாகக் காப்பாற்றி வருகின்றனர்.
***
சீது கானு
சீது, கானு மற்றும் பிற தலைவர்கள் சந்தால் மக்களோடு கலந்து ஐக்கியமாகிப் போராடியவர்கள். இலையால் செய்யப்பட்ட தொன்னையில் மஞ்சளும், எண்ணெய்யும் எடுத்துக் கொண்டு அவர்கள் பல கிராமங்களுக்குச் சென்றார்கள். அது ஒரு பொது நிகழ்வுக்கான அழைப்பு போல. கூட்டாக மீன் பிடிக்க வேட்டை ஆட இவ்வாறு செய்தி சொல்வார்கள். இப்போது போராட்டத்துக்கும் அதையே ரகசியத் செய்தி அறிவிப்பாக மாற்றிக் கொண்டார்கள். அதேபோல சால்மரக் கிளைகள் கூட்டத்துக்கான அறிவிப்பாக அனுப்பப்பட்டது. இதைக் கொண்டு வருவோரிடம் “எங்கே கூட்டம்?” என்று கேட்டு அறிந்து கொள்வார்கள்.
சந்தால் எழுச்சி ஆலோசனைக் கூட்டத்துக்கே 7000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அடுத்த கூட்டத்தில் 10,000 பேர் கூடி விவாதித்து எழுச்சி பற்றி முடிவு செய்தார்கள் எழுச்சியைக் குறிப்பிட வேட்டை, மீன் பிடித்தல் என்ற சங்கேதச் சொற்களை சந்தால்கள் பயன்படுத்தினார்கள். இதில் அனைத்து சந்தால்களும் கலந்து கொண்டார்கள். வயது வித்தியாசம் கிடையாது; சண்டைக்குப் பயன் படமாட்டார்கள் எனக் கருதப்படும் நோயாளிகள் தவிர மற்றவர்கள் அனைவரும் ஆயுதம் ஏந்தினார்கள்.
தலைவர் என்பவர் வீரரில் ஒருவர். கற்பனைக் கதாநாயகர்களாக, சூப்பர் ஹீரோக்களாகத் திரைப்படங்களில் காட்டுகிறார்களே அவர்களைப் போல் அல்ல. சந்தால் தலைவரும் போரிடுவார் சாதாரண மக்களும் போரிடுவார்கள். கூடுதலாக அவர் தலைமை தாங்கி வழிநடத்துவது சிறப்பம்சமாகும். இதனால்தான் சீது, கானு புகழ் இன்றளவும் நின்று நிலைக்கிறது.
***
கலகக்காரர்கள் உறுதியாக நின்று போர் செய்தார்கள். கைகளால் அம்பு எறிந்தார்கள்; கால்களாலும் வில் நாண் இழுத்து அம்பு எறிந்தார்கள், கைக் கோடரிகளாலும் கூடச் சண்டை போட்டார்கள்
எதிரிகள் சந்தால்களின் அம்புகளுக்கு மட்டுமல்ல, அவர்கள் உருவாக்கி நடைமுறைப்படுத்திய மக்கள் மன்றத்திற்கும் அஞ்சினார்கள். எதிரிகளை அண்டிப் பிழைத்த கூலி எழுத்தாளர்கள் ”ரத்த வெறி பிடித்த இந்தக் காட்டு மிராண்டிகளுக்கு எதிராகப் பயங்கரத்தைக் கட்ட விழ்க்காமல் இந்த எழுச்சியை நாம் அடக்க முடியாது” என்று அரசைத் தூண்டி எழுதினார்கள்.
14 இடங்களில் ஒரே நேரத்தில் கலகம் வெடித்த போது ஒரிரு இடங்களில் ஓரிரு கொலைகள் மட்டுமே நடந்தன. கொலை அவர்களின் நோக்கம் அல்ல. அவ்வாறிருந்தால் பல ஆயிரக்கணக்கான பண்ணைகளின் தலைகள் வெட்டப்பட்டிருக்கும். ஆனால், மக்கள் மன்றத்தில் விவாதித்து முடிவெடுத்த வழக்குகளில் கொடூரமான வட்டிக்காரனுக்கும், பண்ணைக்கும் கடுமையான தண்டனை வழங்கவும் தவறவில்லை.
வட்டிக்கடை முதலாளிகளுக்கு மகாஜன்கள் என்று பெயர். எழுச்சியின் போது ஒரு மகாஜன் விசாரணையில் சிக்கினான். பழங்குடிகள் அவன் கையில் தாம்பட்ட கொடுமைகளை விவரித்தார்கள். அநியாயமாக இழந்த நிலங்கள், கண் போல் வளர்த்த மாடுகள், ஆடுகள், உயிராக நேசித்து வளர்த்து அவனுக்குக் கொத்தடிமையாக அனுப்பட்ட தன் மகன் – இப்படி கொடூரங்களை வரிசைப் படுத்தினார்கள். பலர் பாழாக்கப் பட்ட தம் வாழ்க்கையை சாட்சியமாக பலர் முன்னே திறந்து வைத்தார்கள். இறுதியில் அவனுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. அவ்வளவு கொடூரனை ஆடு வெட்டுவது போல வெட்டித் தீர்க்க யாருக்கும் இஷ்டமில்லை; எத்தனை சந்தால் குடும்பங்கள் எவ்வளவு வருடங்கள் எவ்வளவு வேதனைகள்?
அந்த மகாஜன் மன்றத்தின் நடுவே நிறுத்தப்பட்டான்.
– பாதங்கள்: அவை சந்தால் மண்ணை மிதித்துத்துவைத்து அழித்தவை; முதலில் அவை வெட்டப்பட்டன.
நான்கணாவைத் திரும்ப வாங்கி விட்டோம் என்று சொன்னார்கள் சந்தால்கள்.
ஓங்கிய வாளுக்கு அடுத்த குறி கால்கள், அவை சந்தால்களை இஷ்டப்படி எட்டி உதைத்தவை;
பெண்களை மானபங்கப்படுத்தி உதைத்தவை.
எட்டணா சேர்ந்து விட்டது இப்போது.
உடல்: சுரண்டலின் அருவெறுப்பான அடையாளம், இருதுண்டாக வெட்டப்பட்டது.
பணிரெண்டனா வசூலாகி முடிந்தது.
தலை: வட்டி மூலதனத்தின் பீடம் – ஒரே வெட்டில் கிள்ளி எறியப்பட்டது.
கோரமாக அலறிக் கொண்டிருந்த அதன் கண்கள் அணைந்தன.
கடைசியில் பதினாறு அணாக்களும் முழுசாக வசூலிக்கப்பட்டு விட்டன.
சந்தால் போராளிகள் மகிழ்ச்சியில் குதித்து ஆடினார்கள் ஆக்கிரமிப்பாளரில் ஒருவன் அழிக்கப்பட்டது அவர்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்து தான். விசாரணையையோ, மன்றங்களையோ எல்லா பழங்குடிக் கிராமங்களும் வரவேற்றன; ஆனால் ஆங்கிலேயரின் அடிவருடிகளும், ஜமீன்களும் எதிர்த்தார்கள்.
”இந்த விரல்களால்தானே வட்டிக் காசை வாரிக் கொண்டாய்? கொள்ளைப் பணத்தை அள்ளிக் கொண்டாய்? பசியால் துடித்த ஏழைகளின் வாயிலிருந்து சோற்றைப் பறித்தது உன் கைகள் தானே?” – இப்படி வட்டிக்கடை தீனதயாள் ராயின் தலை வெட்டப் பட்டு, ஊர்ச்சந்தையில் ஈட்டி முனையில் செருகப்பட்டது. பழங்குடிகள், சந்தால் அல்லாத ஏழைகள் இதை வரவேற்றார்கள்.
எதிரிகள் ஆங்கிலேயருக்குத் தகவல் அனுப்பி எதிர்த் தாக்குதல் தொடுக்க அவசரமாக முயற்சி எடுத்தார்கள்; பகல்பூர் ஜமீன்கள், உள்ளூர் அவுரிப் பயிர் முதலாளிகள், முர்ஷிதாலாத் பகுதி நவாப் நசீம், ஐரோப்பிய அவுரி முதலாளிகள் ஆகியோர் அரசுக்கு பணம் உட்பட எல்லா உதவிகளும் தாராளமாகக் கொடுத்தார்கள்.
எதிர்த் தாக்குதல் கொலை வெறியோடு நடத்தப்பட்டது. சந்தால் கிராமங்கள் பல முழுக்க அழிக்கப்பட்டன. பயிர்கள், வீடுகள், பெண்கள், குழந்தைகள் என்று கண்ணில் பட்டதையெல்லாம் ஆங்கிலேய வெறிநாய்கள் குதறின. சந்தால் மக்களை கொலைக்காரர்கள், கொள்ளையர்கள் என்று பழி தூற்றியவர்களே பல ஆயிரம் கொலையினைச் செய்தார்கள்.
அதுபோதாதென்று சந்தால்களின் எல்லாக் கிராமங்களின் மீதும் ’தண்டத் தொகை’ விதிக்கப்பட வேண்டும் என்றும் எல்லா சந்தால்களுமே தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஆங்கிலேயரின் ஊதுகுழலான ஏடு எழுதியது. அந்த ஏட்டின் பெயர் வேடிக்கையானது ”இந்தியாவின் நண்பர்கள்”.
***
அன்று சீதுவும் கானுவும் மற்ற தலைவர்களும் ஆங்கிலேய கம்பெனி வெறிநாய்களால் தூக்கிலிடப்பட்டார்கள். சந்தால்கள் அந்த மாபெரும் வீரர்களைக் காடுகளில் கூவி அழைத்தார்கள். காடுகளுக்குள்ளே பாய்ந்து சென்ற அந்தக் குரல்கள் சீது, கானுவைத் தேடிச் சென்றன! இன்று அதே பரம்பரையில் வரும் நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் இதோ பதில் குரல் கொடுக்கிறார்கள்.
அன்று இருபத்தைந்தாயிரம் சந்தால் வீரர்கள் கொடுத்த இன்னுயிர்கள் இன்றும் புரட்சிக் கனல் மணக்கும் பூக்களாக போராட்டத் தடமெங்கும் மணம் வீசி எழுச்சி ஊட்டிக் கொண்டு தான் இருக்கின்றன!
போயஸ் தோட்டத்தில் புரட்சித் தலைவியின் வளர்ப்பில் துள்ளி விளையாடிய விவேக் ஜெயராமன்!
“முருங்கைக்காயின் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை மட்டும் ’அம்மா’எனக்கு வழித்துத் தருவார்” – இது கடந்த 21.11.2017, செவ்வாய்க்கிழமை தேதியிட்ட ஆங்கில The Hindu-வில் வெளிவந்துள்ள ஒரு சிறப்புக் (Exclusive) கட்டுரையில் இடம்பெற்றுள்ள ‘வைர’ வரி!
வழித்து தந்தது சாதா அம்மாவாக இருந்திருந்தால் இது ஒரு மேட்டரே இல்லை. மாறாக முருங்கை சதையை வழித்து தந்தவர் ‘மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா’. வழித்த சதையை தின்ற வாய், விவேக் ஜெயராமனுடையது.
அம்மா, முருங்கைகாயை மட்டுமா வழித்துத் தந்தார்? ஜெயா டிவியோடு ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தையும் அல்லவா விவேக்கிற்கு வழித்துத் தந்திருக்கிறார்! மட்டுமல்ல… சசிகலா குடும்பத்துக்காக தமிழ்நாட்டின் சரிபாதியை வழித்துக் கொடுத்தவர் ஜெயலலிதா. திருப்பதியில் மொட்டை போடும் தமிழ் மக்களின் தமிழகத்தையே ஒரு இருபது ஆண்டுகளில் மொட்டையடித்த பாரம்பரியம் இந்த ஜெயா சசிகால கும்பலினுடையது!
ஆனால் The Hindu பேட்டி, விவேக் ஜெயராமனை ஆர்வத் துடிப்புள்ள ஒரு இளம் தொழிலதிபராக நமக்கு அறிமுகப்படுத்துகிறது. சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனான விவேக், தனது ஒண்ணரை வயதில் இருந்து போயஸ் தோட்டத்திலேயே வளர்ந்தவர். தற்போது ஜாஸ் சினிமாஸ் மற்றும் ஜெயா டி.வி. நிறுவனங்களின் சி.இ.ஓ.வாக இருக்கிறார்.
கடந்த வாரம் வரிமான வரித்துறை நடத்திய மெகா ரெய்டில் விவேக்கின் வீடு, அலுவலகங்கள் அனைத்தும் அடக்கம். ரெய்டை தொடர்ந்து, இந்த மன்னார்குடி குடும்பம் நடத்தியிருக்கும் சூறையாடல் குறித்து மக்கள் காறித் துப்பிக் கொண்டிருக்கும் நிலையில்தான், விவேக் குறித்து ஓர் இனிமையான சித்திரத்தை நம் முன்னே வைக்கிறது தி இந்து பேட்டி.
“நான் போயஸ் தோட்டத்திலேயே வளர்ந்தேன். போயஸ் மாடியில் நின்றபடி பட்டம் விடுவது எனக்குப் பிடிக்கும். என்னை அதற்கு அனுமதிக்க மாட்டார்கள் எனினும், நான் தெரியாமல் பட்டம் விடுவேன். அதை சின்னத்தை (சசிகலா) பார்த்து விட்டால், கையில் குச்சியுடன் மொட்டை மாடியில் தட்டியபடியே என்னை நோக்கி வருவார். அந்த சத்தமே எனக்கு நடுக்கத்தை வரவழைக்கும்” – எப்படி ஒரு கண்டிப்பு மிகுந்த குடும்பச் சூழலில் விவேக் வளர்க்கப்பட்டார் என்பது நமக்கு சொல்லப்படுகிறது. ஆனானப்பட்ட சிபிஐ கட்சியின் நல்லக்கண்ணுவிற்கே ஒரு தேர்தலில் சீட் இல்லை என்று கதவடைத்த சொர்க்க வாசல் கொண்ட போயஸ் தோட்ட வேதா இல்லத்தில்தான் சீமந்த புத்திரன் விவேக் பட்டம் விட்டிருக்கிறார்.
அ.தி.மு.கவிற்காக அடிவயிற்றிலிருந்து குரலையும், வார்த்தைகளையும் எழுப்பி ஆவேச நடனம் புரியும் சி.ஆர்.சரஸ்வதி போன்ற செய்தித் தொடர்பு அடிமைகளே பார்த்திருக்காத அந்த மொட்டை மாடி, ‘அம்மா’ காலத்தில் ‘அம்மா’வையும், பரப்பன அக்ரகாரத்திற்கு முன்னால் ‘சின்னம்மா’வின் தரிசனத்தையும் தாங்கி நின்ற அந்த பால்கனி, கீழே நின்று கொண்டு பிரியாணி ஏப்பத்தோடு தரிசிக்கும் அதிமுக தொண்டர்களின் மகரவிளக்கு காட்சியான அந்த மாடியில்தான் இந்த விவேக பட்டம் விட்டிருக்கிறார். இப்பேற்பட்ட மொட்டை மாடியின் மகத்துவம் நம்மைப் போன்ற சாதா தமிழர்களின் நனவிலி மனதில் உறைந்திருக்க, விவேக்கின் விளையாட்டு பருவத்தின் மூலம் அந்த மகத்தான மாடியில் பட்டம் விடும் பட்டத்து இளவரசனை தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆகும் ஹீரோ போல சித்திரிக்கிறார் தி இந்து கட்டுரையாளர்.
“என்னை சின்ன அத்தை அடிக்கமாட்டார். ஆனால் கையில் குச்சியுடன் என் அருகில் இருக்கும் பொருட்களை தட்டியபடியே அடிப்பதைப் போல் வருவார். உடனே பெரிய அத்தை (ஜெயலலிதா), ‘சசி… அடிக்காதே’ என சத்தம் போடுவார். நான் அழுவதை பெரிய அத்தையால் தாங்கவே முடியாது” – ஆனந்தம் தவழும் ஒரு வீட்டின் சூழல் நமக்கு விவரிக்கப்படுகிறது. இயக்குநர் விக்கிரமன் இதை ஒரு காட்சியாக்கினால் உலகமே அந்த கணங்களில் பாசிட்டீவ் எனர்ஜியின் ஆனந்தத்தில் துள்ளுவது உறுதி!
விவேக் உறுதியான மூன்று பெண்களால் வளர்க்கப்பட்டாராம். இதை சொல்வது விவேக் இல்லை. தி இந்து கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கர் அப்படி எழுதுகிறார். ஒருவர் விவேக்கின் அம்மா இளவரசி. இன்னொருவர் ‘சின்ன அத்தை’ சசிகலா. மற்றொருவர், ‘பெரிய அத்தை’ ஜெயலலிதா. ஆனால் ‘சின்னத்தையும், பெரியத்தையும் சாதா அத்தைகள் இல்லையே!
“எனக்கு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும். என் பிறந்த நாளுக்கு பெரிய அத்தை ஒரு கிப்ட் கொடுத்தார். பிரித்துப் பார்த்தால் உள்ளே பெரிய ‘பாணா காத்தாடி’. முதல்முறையாக மொட்டை மாடியில் இருந்து அந்த பட்டத்தை விடுவதற்கு எனக்கு அனுமதி தந்தார்கள். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. நான் பாதுகாப்பாக பட்டம் விடுவதை கண்காணிக்க நான்கு போலீஸ்காரர்களையும் உடன் அனுப்பி வைத்தார்கள் – வளர்ப்பு மகன் கல்யாணத்தில் சாம்பார் வாளி தூக்கிய நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழக காவல்துறை, பொடியன் விவேக்கின் பட்டம் விடும் பணியை கண்காணிக்க தனிப்படை அமைத்திருந்த ரகசியத்தை பகிர்ந்து கொள்கிறார், கட்டுரையாளர்.
தீரன் அதிகாரம் ஒன்றில் தமிழக காவல்துறையின் ஊதிப்பெருக்கப்பட்ட ஹீரோயிசத்தின் யோக்கியதை என்ன என்று ஆய்வு செய்வோருக்கு இந்தக் காட்சி ஒரு வரலாறு. ஸ்காட்லாந்து யார்டோடு போட்டி போடும் தமிழக போலீசு இங்கே ஒரு பையனின் பட்டம் விடும் விளையாட்டிற்கு பந்தோபஸ்து கடமை ஆற்றியிருக்கிறது.
டைம்ஸ் நவ் தொடங்கி எக்கனாமிக்ஸ் டைம்ஸ் வரையிலும் ரவுண்ட் கட்டிய பத்திரிகையாளர் சந்தியா ரவிசங்கர், ‘இப்படி போலீஸ்காரனை பந்து பொறுக்கி போட விட்டது நியாயமா?’ என்று கேட்கவில்லை. மாறாக, he recalls with a laugh – அவர் சிரிப்புடன் நினைவு கூர்கிறார்.. – என ஒரு இனிய “பசுமை நிறைந்த நினைவுகளே” பாடலை பாடுகிறார். பாருங்கள் ஆங்கிலம் தெரிந்திருப்பதால் அடிமைத்தனம் எவ்வளவு கவித்துமாக வருகிறது என்று!
“ஆஸ்திரேலியாவில் பி.பி.ஏ. சேர்ந்தேன். சின்ன அத்தை என் கையில் 5000 ஆஸ்திரேலியா டாலர் செலவுக்காகக் கொடுத்தாங்க. மூணே நாள்ல எல்லாம் செலவாகிடுச்சு. சின்னத்தைக்கு போன் பண்ணி பணம் வேணும்னு கேட்டேன். அனுப்பவே இல்லை. அப்புறம் சிங்கப்பூர்ல இருந்த என் அக்காவுக்குப் போன் பண்ணி பணம் கேட்டேன். என் அக்கா கணவர் நேரா ஆஸ்திரேலியாவுக்கு கிளம்பி வந்து இன்னொரு 5000 டாலரை கையில் கொடுத்துட்டு, ‘இனிமே குடும்பத்துலேர்ந்து பணத்தை எதிர்பார்க்காதே’ன்னு சொல்லிட்டுப் போனார்.’’ – என்று சொல்லிவிட்டு நேர்காணலில் ஒரு சஸ்பென்ஸ் வைக்கிறார், விவேக்.
ஐயாயிரம் டாலரை கொடுக்க சிங்கப்பூர்லேர்ந்து பிளைட் பிடிச்சு வந்த அதிர்ச்சியை விட, ‘அய்யய்யோ.. அதுக்குப் பிறகு விவேக் செலவுக்கு என்ன செய்திருப்பார்?’ என நம்மிடம் பதைபதைப்பை கூட்டுகிறார் சந்தியா ரவிசங்கர்.
“விவேக், ஆஸ்திரேலியாவில் உள்ள பொருட்களை ஏற்றி இறக்கும் ஒரு நிறுவனத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்தார். பிறகு ஒரு பீட்ஸா டெலிவரி பையனாக பணியாற்றினார். பிறகு பூனேவில் எம்.பி.ஏ. படித்தார்; ஐ.டி.சி-யில் வேலைக்கு சேர்ந்து கல்கத்தாவில் கடை, கடையாக சிகரெட் பாக்கெட் விற்றார்’ என்றெல்லாம் தி இந்து நேர்காணலில் விவரிக்கப்படுகிறது. இதில் கட்டுரையாளர் இரண்டு நீதிகளை உணர்த்துகிறார். 1. விவேக், செல்வச் செழிப்பில் திளைத்த ஊதாரி அல்ல. தானே சம்பாதித்து தானே படித்த தானைத் தலைவன். 2. எவ்வளவுதான் பணம் இருந்தாலும், ஒரு புள்ளையை எப்படி டிசிப்ளினோட வளர்க்கிறார்கள் பாருங்கள்!
இப்படி கட்டுரை முழுக்க நிறைய பன்ஞ்ச் டயலாக்குகள் ரஜினிக்கே சவால் விடுகின்றன. அதில் கடைசி பீஸ், செம மாஸ்!
“2014 வரை என்னை யாருக்கும் தெரியாது. அப்போதுதான் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் நான்கு பேரும் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நான் என் மேனேஜரிடம் லீவ் கேட்டேன். காரணம் கேட்டார். வேறு வழியின்றி நான் யார் என்று சொல்ல வேண்டியதாயிற்று. முதல்முறையாக அவரது கண்களில் பயத்தைக் கண்டேன்.’’ என்கிறார் விவேக்.
– அது பயம் இல்லை. மரண பீதி. உண்மையாவே அந்த ஊழியரை நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஆனானப்பட்ட மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுவின் குடும்பத்தைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதியை கைது செய்ய வேண்டும் என்று புரட்சித் தலைவி நடத்திய சேஸிங் நாட்களில் கஸ்தூரி அய்யங்கார் குடும்பம் எப்படி தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது என்பது ஊருக்கே தெரியும். எனில் விவேக்கை வேலை வாங்கிய அந்த மேனேஜர் பயப்படாமல் என்ன செய்வார்?
“அதுவரையிலும் என்னை எல்லா ஊழியர்களை போலதான் நடத்துவார். காபி எடுத்து வரச் சொல்வார். ஏதேனும் ஒன்றுக்கு ஒப்புதல் தர மணிக்கணக்கில் காக்க வைப்பார். ஏனோ எனக்கு அதில் திருப்தி இருந்தது. நான் லீவ் முடிந்து மீண்டும் வேலையில் சேர்ந்தபோது எல்லோரும் என்னிடம் மிகையான மரியாதையுடன் நடந்துகொண்டார்கள். பயந்து ஒதுங்கினார்கள்”
– புகழையும், பணத்தையும், கௌரவத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு விவேக் எப்படி ஒரு துறவியைப் போல வாழ்ந்தார் என்பதை ஒரு திரைக்கதையின் நேர்த்தியுடன் விவரிக்கிறார் கட்டுரையாளர்.
*******
இந்தக் கட்டுரையை எக்ஸ்க்ளூசிவ் என்கிறது தி இந்து. ஆனால், அதே நாளில் இதே விவேக் ஜெயராமனின் இன்னொரு எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எக்கனாமிக்ஸ் டைம்ஸில் வெளியானது. இந்த சிறிய பேட்டியை எழுதியிருந்தவர் பிரேம்சங்கர். இந்த பிரேம்சங்கரும், தி இந்து கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கரும் கணவன் மனைவி. ஒண்ணா கெளம்பிப்போயி ஒரு காபியை குடிச்சு அரட்டையடிச்சுட்டு, இந்தம்மா எழுதினது தி இந்து எக்ஸ்க்ளூசிவாம். அவரு எழுதினது எக்கனாமிக்ஸ் டைம்ஸில் எக்ஸ்க்ளூசிவாம்.
********
என்ன கேவலம் இது? எதற்காக இந்தப் பேட்டி? இதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா என்ற ஜனநாயகத்துக்கு சற்றும் பொருத்தமற்ற ஒரு சர்வாதிகாரியின் துணையுடன் சசிகலாவின் உறவினர் வலைப்பின்னல் கடந்த 17 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மாபெரும் பொருளாதார சூறையாடலை நிகழ்த்தி வருகிறது. இவர்களால் சுரண்டப்படாத ஆறுகள், மலைகள், இயற்கை வளங்கள் எதுவும் பாக்கியில்லை. அனைத்து அரசுத் துறைகளும் மொட்டையடிக்கப்பட்டிருக்கின்றன. அரசியல் ரவுடித்தனத்தை; பொறுக்கித்தனத்தை நிறுவனமயபப்டுத்தியிருக்கிறார்கள். அடிமைத்தனத்தை ஓர் இயல்புபோல மாற்றி வைத்திருக்கிறார்கள். மிடாஸ் என்ற பெயரில் எரிசாராயம் காய்ச்சி ஒட்டுமொத்த மாநிலத்தையும் கொன்றொழிக்கும் கொலைகாரர் கூட்டம் இது. விவேக் என்ற 29 வயது இளம் தொழிலதிபருக்கும், இந்த பணத்துக்கும் சம்பந்தமே இல்லையா?
ஆனால் கட்டுரையாளர் சந்தியா ரவிசங்கருக்கோ, இதை முக்கியத்துவடன் வெளியிட்டுள்ள தி இந்துவுக்கோ இதுவெல்லாம் ஒரு பொருட்டில்லை. மாறாக, அவர்கள் விவேக்கை சில்லறைத்தனம் இல்லாத; ஒரு நாகரிகமான கண்ணியமான நபராக முன்வைக்கிறார்கள். விவேக் ஜெயா டி.வி.யில் பொறுப்பேற்றவுடன் தி.மு.க. செய்திகளும் அதில் இடம் பெறுகிறதாம். ஜெயா டி.வி.யில் துரைமுருகன் பேட்டி வந்ததாம். இது அவருடைய நாகரிகமான அணுகுமுறைக்கு உதாரணமாம்.
இந்த சந்தியா ரவிசங்கர் தான் வைகுண்டராஜனின் மணல் மாஃபியா குறித்து thewire.in தளத்தில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். அது பரவலாக பேசப்பட்டது. இப்போது வைகுண்டராஜனின் மகன் சுப்ரமணியன் தான் நியூஸ் 7 தொலைக்காட்சியின் நிர்வாகியாக இருக்கிறார். அவரை ‘இளம் தொழிலதிபராக’ சித்தரித்து எழுதுவாரா? வைகுண்டராஜன் சட்டவிதிகளை மீறி இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளை அடிக்கிறார் என்றால், சசிகலா குடும்பத்தினர் என்ன உழைத்து பொருளீட்டும் உத்தமர்களா? அந்த ஒட்டுமொத்த கொள்ளை சாம்ராஜ்ஜியத்தின் தளபதியாக இருக்கிறார் விவேக் ஜெயராமன். ஆனால் அவரை ஓர் உத்தமனை போல சித்தரிக்கிறார்கள் இவர்கள்.
இந்த சந்தியா ரவிசங்கர் மக்களின் வில்லன்களான வரலாற்று மாந்தர்களை கஷ்டப்பட்டு அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி நேர்காணல் செய்தால் எப்படி இருக்கும்?
மோனோலிசா ஓவியத்தின் பொருளை ஆழமுடன் விளக்குகிறார் அடால்ப் ஹிட்லர்
2002 குஜராத்தில் புறாக்களுக்காக மாடம் கட்டினார் ஒரு முன்னாள் டீக்கடை இளைஞர்!
பிலிப்பைன்ஸ் ஓட்டல் பையனின் கேர்ல் பிரண்டுக்காக ஆடை வடிவமைத்த விஜய் மல்லையா!
நித்தியானந்தாவின் நித்திரைக் கனவில் உதயமான நான் ஸ்டாப் அன்னதான ஓட்டல்!
அசீமானந்தா கண்டுபிடித்த அரிய ஆசனங்கள்!
இப்படியெல்லாம் சில பல நேர்காணல்கள் எடுக்கப்பட்டு தி இந்துவில் அவை சிறப்புக் கட்டுரைகளாக வராது என்பதற்கு எந்த உத்திரவாதத்தையும் நாங்கள் தர இயலாது!
“அரசியல் அராஜகங்களுக்கு அக்கிரமங்களுக்கு முடிவு கட்டு !” என்ற தலைப்பில் விருத்தாசலம் வானொலித்திடலில் 28.11.2017 அன்று மாலை நடைபெற இருந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட போலீசு தடை!
நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்று பொதுக்கூட்டம் வேறு தேதியில் நடத்தப்படும்.
இந்த மாதம் முழுவதும் நான்கு முறை பெதுக்கூட்டம் நடத்த விருத்தாசலம் காவல் ஆய்வாளர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என மனு அனுப்பினோம். நான்கு முறையும் தெரு முனை பிரச்சாரம் உட்பட அனைத்திற்கும் முதல் நாள் இரவு அனுமதி மறுத்து கடிதம் வழங்குகிறது போலீசு.
ம.க.இ.க கோவன் வருகிறார் என கியூ பிரிவு போலீசார் சொல்கிறார்கள் எனவே அனுமதி தர முடியாது என மாவட்ட காவல் துறை வெளிப்படையாகவே மறுக்கிறது. சேத்தியாதோப்பு மணல் குவாரிக்கு எதிராக மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடுவது காவல் துறைக்கு தொல்லையாக கருதுகிறது.
கருத்துரிமை நசுக்கப்படுகிறது. நடப்பது போலீசு ஆட்சி என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கபட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் 27.11.2017 அன்று பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி நடைபெற இருந்தது அதற்கும் முதல்நாள் இரவு 11.30 மணியளவில் அனுமதி மறுத்து கடிதம் வழங்கியுள்ளனர்.
நான் வைத்ததுதான் சட்டம் எந்த கோர்டுக்கு போனாலும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற ஆணவத்தில் போலீசார் கூலிப்படையாக செயல்படுகிறார்கள். அதிகரித்து வரும் மக்கள் போராட்டம் போலீசுக்கு சரியான பாடம் புகட்டும். அதில் மக்கள் அதிகாரம் முன்னே நிற்கும்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், விருத்தாச்சலம். 97912 86994.
“உணவு மறுக்கப்படுகிறது ! பெண் செவிலியர்கள் இயற்கை உபாதைக்கு தடை ! போராட்டத்திற்கு வந்த செவிலியர்கள் பாதியில் சிறை பிடிப்பு ! பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போடுவோம் என மிரட்டல் !” என எதற்கும் அஞ்சாமல் உறுதியுடன் போராடி வருகிறார்கள் MRB ஒப்பந்த செவிலியர்கள்.
கடந்த 2015 -ம் ஆண்டு மருத்துவ பணியாளர்கள் தேர்வு மூலம் 11ஆயிரம் செவிலியர்களை பணிக்கு எடுத்தது தமிழக அரசு. இவர்களுக்கு பணி வழங்கும் போதே ஒப்பந்தத்தின் அடிப்படையில் எடுப்பதாகவும், இரண்டு ஆண்டுகள் கழித்து நிரந்தர (காலமுறை ஊதிய முறைக்கு) பணிக்கு மாற்றுவதாகவும் கூறியது அரசு. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்களை ஏமாற்றி வருகிறது அரசு.
MRB தேர்வு முறை வருவதற்கு முன்பு, அரசு கல்லூரியில் படித்த மாணவர்களை நேரடியாக வேலைக்கு எடுத்தார்கள். அதற்கு தேர்வு எதுவும் கிடையாது. அரசாணை 230 -ன் படி ஒப்பந்தம் செய்து எடுப்பார்கள். சுகாதாரத்துறையில் ஏற்படும் ஆள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய “எமெர்ஜென்சிக்காக” எடுப்பார்கள். பிறகு 10 1A விதிகளின் படி அவர்களை நிரந்தர பணியாளராக அமர்த்தப்படுவர். இதுதான் 2013 -க்கு முன்பு வரை இருந்த நடைமுறை. இந்த தேர்வு முறை வந்த பிறகு அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.
தற்போது அரசும் இந்த 230 அரசாணையைத் தான் பிரதானப்படுத்துகிறது. இதுவே ஒரு மோசடி தான். ஆனால் போராடும் செவிளியர்களோ, G.O 191 1st February 1962 Public Services (A) அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் (Time to Scale) என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பதை பிரதானப்படுத்துகிறார்கள்.
இந்த கோரிக்கைக்காக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து சுமார் 4,000 பேர் தங்கள் சொந்த செலவில் சென்னையில் கூடியிருக்கிறார்கள். சென்னை டி.எம்.எஸ் வளாகம் முழுவதும் வெள்ளை நிறப்பூக்களால் நிறைந்திருக்கிறது. “போராட்டம் நடக்க இருப்பதால் எங்கள் அலுவலகத்துக்கு பாதுகாப்பு கொடுங்கள்” என்று போலீசிடம் கூறியுள்ளது டி.எம்.எஸ். நிர்வாகம். அதனால், போராட்டத்திற்கு வந்த பாதி செவிலியர்களை வழியிலேயே கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது போலிசு. 100 -க்கும் மேற்பட்ட போலிசு, போராடும் செவிலியர்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தி வருகிறது.
மழை பெய்த போது போராட்டத்தில் பிசு பிசுப்பு ஏற்பட்டு விடும் என்று போலிசு நினைத்திருக்கலாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவிலியர்கள் அனைவரும் குடையுடன் வந்ததால் அவ்வளாகம் முழுவதும் வண்ணமயமாகியதை கண்டு காக்கிச் சட்டை அதிர்ச்சியடைந்திருக்கும்.
வயது முதிர்ந்தோர், கர்ப்பிணி செவிலியர்கள் என அனைவரும் கையில் குழைந்தையுடன் போராட்ட களத்தில் குதித்துள்ளார்கள். “நாங்கள் புதியதாக எதையும் கேட்கவில்லை. இருக்கின்ற சட்டத்தை அமல்படுத்து என்கிறோம். ஆனால் அதனை செய்வதற்கு ஏன் தயங்குகிறார்கள்?” என்று கேள்வி எழுப்புகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்.
ஏற்கனவே விதி 191 மற்றும், சம வேலைக்கு சம ஊதியம் என்பதை வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு போட்டு ஒன்றரை வருடம் ஆகிறது. இதுவரை எடுத்துக் கொள்ளப்படவில்லை. கேட்டால் அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யவில்லை. நாங்கள் என்ன செய்வது என்று கேட்கிறார்கள் நீதிபதிகள். ஒவ்வொரு முறையும் வாய்தா வாங்குறது அரசு…. இரண்டுமே எங்களை ஏமாற்றுகிறது என போராட்டத்தின் முன்னணியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த டி.எம்.எஸ். வளாகத்தில் இதற்கு முன்பு மருத்துவர்கள் 13 நாட்களாக போராடினார்கள். எந்த போலீசும் வரவில்லை. நாங்கள் எங்கள் உரிமைக்காக அமைதி முறையில் போராடுகிறோம். ஆனால் போலீசை வைத்து மிரட்டுகிறார்கள். பேச்சு வார்த்தைக்கு போலீசு மூலம் கூப்பிடுகிறது நிர்வாகம். இதற்கும் போலீசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறகு எதற்கு போலீசு?
நோயாளிகள், மக்கள் இவர்கள் கூடவே வாழ்ந்து வந்திருக்கிறோம். ஆனால் எங்களை தீவிரவாதிகளைப் போல் அச்சுறுத்துகிறார்கள். “நீங்க உடனடியாக கலைந்து போகவில்லை என்றால் பணி செய்ய விடாமல் தடுப்பதாக வழக்கு போட்டு விடுவோம்”என்று மிரட்டுகிறது போலீசு. இந்த வளாகத்தில் 13 அலுவலகம் உள்ளது. எந்த அலுவலகத்தின் பணிகளையும் நாங்கள் முடக்கவில்லை. எங்கள் கோரிக்கைக்காக நாங்கள் அமைதியான முறையில் கூடியிருக்கிறோம். பிறகு ஏன் போலீசு மிரட்டுகிறது என்பது புரியவில்லை. என்கிறார்கள் போராடும் செவிலியர் முன்னணியாளர்கள்.
இவ்வளவு பேர் நாங்க கூடியிருக்கிறோம். இதைக் கலைக்க எவ்வளவோ முயற்சி செய்கிறார்கள். “சாப்பாடு வாங்க கூட போக முடியாத அளவுக்கு போலீசு மிரட்டுகிறது…. பெண்கள் கழிவறைக்கு செல்ல கூட இடமில்லை. அலுவலகத்து உள்ளே செல்லவும் அனுமதியில்லை….. பத்திரிக்கையாளர்களை கூட உள்ளே அனுமதிக்காமல் எங்களை ஒடுக்கப் பார்க்கிறார்கள்.. நாங்கள் என்ன தீவிரவாதியா?” என்று கொந்தளிக்கிறார்கள் செவிலியர்கள்.
குழுவாக இருந்த செவிலியர்களில் இருபத்தைந்து வயது பெண் செவிலியர் ஒருவர், “என் சொந்த ஊர் ராமேஸ்வரம். நான் கிருஷ்ணகிரியில இருக்ககும் ஆரம்ப சுகாதார நிலையத்துல வேலை செய்றேன். எங்களுக்கு கொடுக்கும் 7500 ரூபாய் சம்பளத்தில் வாடகையே 3000 கட்டி விடுகிறேன். மீதி பணத்தில் நான் என்ன செய்ய முடியும்… மூணு வேள சாப்பாடு ஒழுங்கா சாப்பிட முடியல. என்னோட தேவைக்கு கூட வேலை செய்றவங்க கிட்ட கடன் கேட்க முடியல…. இன்றைய விலைவாசியில் வாழ முடியாமா? எவ்ளோ கஷ்டங்களை தான் நாங்க சுமக்கிறது….” என்று கேட்கிறார்.
அதுபோக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் செவிலியர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது…. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அருகிலேயே டாஸ்மாக் கடை அதிகம் உள்ளது. அதன் தொல்லைகளை தினந்தோறும் சந்திக்கிறோம். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத இடத்தில் பணியாற்றுகிறோம். மருத்துவர்கள் இல்லை. ஆய்வக பணியாளர் இல்லை, மருந்தாளுனர் இல்லை. இவர்கள் வேலையையும் நாங்கள் சேர்த்தே கவனிக்கிறோம்.
“எந்த நோயாளிய கேட்டாலும்….. காலைல இருந்து இந்த ஒரு பொண்ணு தான் ஓடிகிட்டே இருக்குன்னு” சொல்லுவாங்க. அவ்வளவு பணிசுமை சார்.
நோயாளிகளுக்கு முறையான மருத்துவம் செய்ய முடியவில்லை என்பதே எங்களுக்கு மன வேதனையளிக்கிறது. 16 மணி நேரம் சில சமயங்களில் 24 மணி நேரம் கூட உழைக்கின்றோம். “மக்களுக்காக உழைப்பதில் எங்களுக்கு பெருமை தான். ஆனால் எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை இந்த அரசாங்கம் உணரவில்லை” என்ற சோகத்துடன் வரும் அந்த வார்த்தைகளில் இருந்து செவிலியர்களின் துயரங்களை நாம் புரிந்து கொள்ள முடியும்.
அரசின் மற்ற துறையில் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால விடுமுறை உண்டு. ஆனால் எங்களுக்கு அதுகூட இல்லை…. நாங்கள் விடுமுறை எடுப்பதாக இருந்தால் சம்பளம் இல்லா விடுமுறை தான்… இது தான் எங்களின் வாழ்க்கை….. ஆனால் இதனை நாங்கள் எடுத்துக் கூறினால் “செவிலியர்களுக்கு சேவை தான் முக்கியம்” என்கிறார்கள். எங்கள் உழைப்பைச் சுரண்டுகிறது இந்த அரசு என்று ஒருசேர குரலில் கூறுகிறார்கள் போராடும் செவிலியர்கள்.
“இந்த போராட்டத்தில் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்றால் எந்த முகத்த வைத்துக் கொண்டு பணிக்கு போவது” என அழுது கொண்டே கேட்கிறார் 45 வயனதான பெண் செவிலியர். நீங்க ஏன் கலங்குறிங்க… நாம வெற்றி பெறாம இங்கிருந்து போகப்போறதில்லை என்று தேற்றுகிறார்கள் சக செவிலியர்கள்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள அனைவரும் இளங்கலை, முதுகலை என்று செவிலியர் படிப்பில் உயர் படிப்பை முடித்தவர்கள் தான்.. எங்கள் தகுதிக்கு இந்த அரசு கொடுக்கும் மரியாதை இது தானா? என்று கோபத்துடன் கேட்கிறார் முதுகலை செவலியர் படிப்பு முடித்துள்ள ஒரு பெண் செவிலியர்.
இந்த நியாமான கோபமே இவர்களை போராட்டத்திற்கு அழைத்து வந்துள்ளது. இனி இந்த அரசை நம்பினால் பலனில்லை. போராட்டத்தின் மூலம் தான் தீர்வு காண முடியும் என்பதை அவர்கள் உணர்ந்து விட்டார்கள்.. அதனால் தான் போராட்டத்திற்கு முதல் நாளே “டெர்மினேட்” செய்து விடுவோம் என்று அச்சுறுத்தியும் அதனை கண்டு கொள்ளாமல் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
“நீ கொடுக்கும் சம்பளத்திற்கு அடிமையாக வேலை செய்வதை விட, டெர்மினேட் செய்வதை நாங்கள் பெருமையாக ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் முடிவு தெரியாமல் இங்கிருந்து கலையப் போவதில்லை”என்று அதிகார வர்கத்தின் முகத்தில் அறைந்தாற்போல் கூறுகிறார்கள் அந்த செவிலியர்கள்.
செவிலியர்களின் போராட்டத்தை கண்டு அஞ்சி நடுங்கிய அதிகார வர்க்கம் கெஞ்சி கூத்தாடி அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் 30 பேரை உள்ளே அழைத்து சென்று சுமார் இரண்டரை மணி நேரம் நடத்திய பேச்சு வார்த்தை இறுதியாக தோல்வியில் முடிந்தது.
“உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களை இன்னும் நிரந்தரம் செய்யாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கொள்கிறோம்… சம்பளம் வேண்டுமானால் கொஞ்சம் ஏற்றி தருகிறோம். மற்றபடி உங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அதற்கு சுகாதாரத்துறை செயலர், அமைச்சர், நிதித்துறை செயலர் இவர்கள் முன்னிலையில் தான் தீர்மானிக்க முடியும். எங்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் கொடுங்கள்… அதன் பிறகு முடிவை அறிவிக்கிறோம்”என்று கூறியிருக்கிறார்கள் அதிகாரிகள். அதனை ஏற்காமல் வெளியில் வந்துவிட்டனர் செவிலியர்கள்.
பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த செவிலியர்களுக்கு “பேச்சு வார்த்தை தோல்வி” என்ற செய்தி சிறிது அதிர்ச்சியை ஏற்படுத்தியது உண்மை தான்.
ஆனால் பேச்சு வார்த்தைக்கு சென்ற செவிலியர்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று அறிவித்தவுடன் அனைத்து செவிலியர்களும் கைதட்டி வரவேற்றனர். அதுமட்டுமல்லாமல் “உங்களுக்குத் தான் அதிகாரம் இல்லையே அப்புறம் எதுக்கு பேச்சு வார்த்தைக்கு கூப்பிடனும்” என்ற கேள்வி அதிகார வர்க்கத்தை நோக்கி எழுந்தது.
இதனை சற்றும் எதிரபரத அதிகாரிகள், இன்னும் அதிகமான போலீசை குவித்து உளவியல் ரீதியாக அச்சுறுத்த முயன்றது. போலீசு உயர் அதிகாரிகளை கொண்டு அட்வைசு மழை பொழிந்தது. கீழிருந்த செவிலியர்கள்… “நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியும்….. எங்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி செய்யாதே…” என்ற கலகக் குரல் எழுந்தது.
கடைசி வாய்ப்பாக போராட்டத்தின் பிரதிநியான புஷ்பலதாவை மிரட்டி போராட்டத்தை கலை இல்லை என்றால் உன் மீது வழக்கு பதிவு செய்வேன் என்று மிரட்டியதால் பயந்த புஷ்பலதா, தற்போது அதிகாரிகள் கேட்கும் கால அவகாசத்தை நாம் தரலாம். எனவே போராட்டத்தை முடித்து கொள்வோம் என்றார்.
ஆத்திரமடைந்த செவிலியர்கள்… “இன்னுமா இவர்களை நாம் நம்ப வேண்டும். வாழ்க்கையையே இழந்து விட்டோம். இனி வழக்கு நம்மை என்ன செய்து விடப்போகிறது. உங்கள் மீது வழக்கு போட்டால் நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள். நாங்கள் எங்கள் உரிமைக்காக போராட வந்துள்ளோம்… நீங்கள் சொல்லி வரவில்லை. எங்கள் சொந்த முயற்சியில் வந்துள்ளோம்…. நூறு வழக்கு போட்டாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கின்றோம்” என்று செவிலியர்கள் உறுதியுடன் கூறவே…… திணறினார் புஷ்பலதா.
மற்றொருவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நாம் எப்படி வெற்றி பெற்றோம்.. தொடர்ந்து அங்கேயே இருந்ததால் தான் முடிந்தது. அது போன்று நாம் போராடுவோம். என்று இறுதியாக எடுத்த முடிவின் அடிப்படையில் இரவு போராட்டத்தை தொடர அதற்கான ஏற்பாடுகளை மும்முரமாக செய்ய ஆரம்பித்தனர். தங்கள் அலைபேசிகளை கொண்டு போராட்டம் நாளையும் தொடரும் என்று அனைவருக்கும் தகவல் கொடுக்க ஆரம்பித்தனர்.
அதிகார வர்க்கமோ தூக்கத்தை தொலைத்து விழி பிதுங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது.! நேற்றை விட சுமார் 1,800 செவிலியர்கள் அதிகமாக களத்தில் இறங்கியுள்ளனர்.
அவர்களது போராட்டம் வெல்ல நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்!
நடிகர் சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலைக்கு காரணமான கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியன் தலைமறைவாகி விட்டார். தலை மறைவானாலும் அவரது காசு செல்வாக்கு அங்கிங்கெனாதபடி சகல இடங்களிலும், ஆட்களிடத்திலும் பகிரங்கமாக வெளியே வருகிறது. சீனு ராமசாமி, வெற்றி மாறன், கலைப்புலி தாணு துவங்கி பலரும் அன்புச் செழியனுக்கு பாராட்டுப் பத்திரம் படிக்கின்றனர்.
முத்தாய்ப்பாக நாம் தமிழர் சீமான் களத்திற்கு வந்து விட்டார். “மலையாளிகள், மார்வாடிகள் கொடுத்தால் ஃபைனான்ஸ், தமிழன் கொடுத்தால் கந்து வட்டியா…?” என்று அவர் சாடியுள்ளார். “முத்தூட் ஃபைனான்ஸ் என்று போடுகிறீர்களே, முத்தூட் கந்து வட்டி என்றா போடுகிறீர்கள்” என்று கொதிக்கிறார்.
வட்டிக்கு கடன் வாங்காமல் வாழ்க்கை இல்லை எனும் சீமான் ஏழைகளுக்கு மட்டுமல்ல திரைத்துறைக்கும் இந்த கடன் முறை இல்லாமல் வாழ்வு இல்லை என்று சீறுகிறார்.
2011 தேர்தில் அ.தி.மு.க எனும் கொள்ளைக் கூட்டத்தை ஆதரித்து பேசுவதற்கு காசு இல்லாமல் அவரது ‘தம்பி’ ஒருவரிடம் வட்டிக்கு ஐந்து இலட்சம் கடன் வாங்கித்தான் பிரச்சாரம் செய்தாராம். அதே போல அன்பு செழியன் போன்றவர்கள் பணம் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டால் திரைப்படமே எடுக்க முடியாத நிலைதான் உருவாகும் என்கிறார்.
வெளிப்படையான ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எவையும் அரசு நிர்ணயத்திருக்கின்ற வட்டியைத் தாண்டி வசூலிக்க முடியாது. அப்படி தாண்டினால் அதுதான் கந்து வட்டி என்பது கூட அறிஞர் சீமானுக்கு தெரியவில்லை. சட்டப்பூர்வமாக கடன் கொடுக்கும் வங்கிகள் மக்களிடம் அடித்து வசூலிப்பதை நாம் எதிர்த்துப் போராடுவதைப் போல அன்புச் செழியன் போன்ற மாஃபியாக்களையும் எதிர்த்துப் போராட வேண்டும்.
சீமானோ முன்னதைச் சொல்லி நியாயம் பேசுவது போல அன்புச்செழியனை விடுதலை செய்கிறார். சீமானின் இந்த நிலை குறித்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக இயக்குநர் அமீர் கூறுகிறார்.
ஆனால் தாதுமணல் மாஃபியா வைகுண்டராசனோ, இல்லை மன்னார்குடி மாஃபியா சசிகலா நடராசனோ அனைவரும் சீமானின் மதிப்பிற்குரிய தமிழர்களாக, புரவலர்களாக இருக்கும் போது அன்புச் செழியனும் ஒரு நல்ல தமிழராகத்தானே சீமானுக்கு இருந்தாக வேண்டும்?
இன்றைய கருத்துக் கணிப்பு :
சீமான், கந்து வட்டி மாஃபியா அன்புச் செழியனை ஆதரிப்பது ஏன்?
அன்புச் செழியன் ஒரு தமிழர்
அன்புச் செழியனிடம் ஏதேனும் ஆதாயம் அடைந்திருக்கலாம்
ஒரு குறிப்பிட்ட சூழலை முன்கூட்டியே அனுமானிப்பதும் அதன் அடிப்படையிலான திட்டமிடலும் இன்றைய உலகத்தில் அதிசயிக்கத்தக்க புதிய விசயங்கள் அல்ல. இயற்கைப் பேரிடர்களை முன்னறிந்து அந்த சூழலில் எம்மாதிரியான பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்குவார்கள் என்பதைக் கணித்து அதற்குத் தகுந்த பொருட்களை இருப்பு வைத்துக் கொள்வதும், அவற்றின் விலைகளைக் கூட்டி வைப்பதும் சில பத்தாண்டுகளுக்கு முன்பே வால்மார்ட் கண்டுபிடித்த வியாபார ‘நடைமுறை’ தான்.
அதே போல் சமூக செயல்பாட்டாளர்களை முன்னெச்சரிக்கையாகக் கைது செய்வதும் வழக்கமான போலீசு நடைமுறை தான். நவம்பர் 2009 -ல் அமெரிக்காவின் தேசிய நீதி மையமும், நீதி உதவிக்கான பணியகமும் இணைந்து, “வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் முன்னறிப் புலனாய்வுக்குப் பயன்படுத்துவது தொடர்பாக” மூன்று நாள் மாநாடு ஒன்றை நடத்தின. எதிர்காலத்தில் போலீசின் பணியானது “என்ன நடந்தது என்பதை ஆராய்வதைத் தாண்டி, என்ன நடக்கவிருக்கிறது என்பதைக் கண்காணிப்பதும், கட்டுப்படுத்துவமாக இருக்கும்” என்று இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.
இந்த அணுகுமுறையும் போலீசுக்குப் புதியதல்ல – இதில் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வு இணைந்திருப்பதும், அதனடிப்படையில் காவல், கண்காணிப்பு அமல்படுத்தப்பட இருப்பதுமே புதிய விசயங்கள். மேற்படி மாநாடு நடப்பதற்கு முன் 2007 -ம் ஆண்டு புஷ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த சமயத்தில் அமெரிக்க பாதுகாப்புச் சட்டம் (Protect America Act) நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின் அடிப்படையில் அமெரிக்காவின் தேசியப் புலனாய்வு முகமையால் (NSA) துவங்கப்பட்ட பிரிசம் (PRISM) என்கிற இரகசிய திட்டத்தின் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து மின் தரவுகளைச் சேகரிக்கும் பணியை அமெரிக்க அரசு துவங்கியது.
ஒலிக் கோப்புகள், தொலைபேசி அழைப்புகள், மின் அஞ்சல்கள், மின் கோப்புகள், இணையத்தேடுதல் விவரங்கள், முகநூல் மற்றும் டிவிட்டர் பதிவுகள், கைபேசியில் உள்ள பழைய பதிவுகள், இணைப்பு விவரங்கள் என பகுப்பாய்வு செய்யத்தக்க ஒவ்வொரு மின் தரவும் வெரிசான், கூகுள் போன்ற நிறுவனங்களிடமிருந்து அமெரிக்க அரசால் சேகரிக்கப்பட்டு ஊடா மாகானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மீப்பெரும் மின் தரவுக் கிடங்கிற்கு (Big Data lake) அனுப்பப்பட்டன.
மக்களின் ஒப்புதலின்றி அவர்கள் உற்பத்தி செய்த விவரங்களைக் களவாடிய அமெரிக்க உளவு நிறுவனம், அவற்றைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மொத்த சமூகத்தையும் கண்காணிக்கத் துவங்கியது. கூகுள், ஃபேஸ்புக், லிங்க்ட்- இன், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்களிடமிருந்தும், வெரிசான் போன்ற தகவல் தொடர்பு நிறுவனங்களிடமிருந்தும் பெறப்பட்ட விவரங்களை மொத்தமாகச் சேமித்து தனித் தனி விவரங்களுக்கு இடையிலான இணைப்புகளை ஆராயும் பணி “பிரிசம்” திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
உதாரணமாக, முகநூலில் அரசுக்கு எதிராகப் பதிவிடும் நபர் அமேசானில் எந்தமாதிரியான நூல்களை வாங்குகிறார் என்பதையும் யூடியூபில் எந்த வீடியோக்களைப் பார்வையிடுகிறார் என்பதையும், அவரது கணினியில் எந்த பத்திரிக்கைகளைப் படிக்கிறார் என்பதையும் இணைத்துப் பார்த்தால் அவருடைய சிந்தனைப் போக்கு குறித்த ஒரு மதிப்பீட்டுக்கு வரமுடியும். இதனோடு அவர் செல்பேசியில் யார் யாருடன் பேசுகிறார், அவர்கள் ஒவ்வொருவரும் இதே போன்ற சிந்தனைப் போக்குகள் கொண்டவரா என்பதை அவர்களுடைய விவரங்களையும் அலசிப் புரிந்து கொள்ள முடியும். தொகுப்பாக, குறிப்பிட்ட சிந்தனைப் போக்கு உள்ளவர் எத்தனை பேர் உள்ளனர், இவர்களுக்கிடையே இணைப்பு உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும். இந்தப் புலனாய்வு விவரங்களைக் கொண்டு அரசுக்கு எதிரான சிந்தனைப் போக்கு உள்ளவர்களைத் தனியே பிரித்தெடுத்துக் கண்காணிப்பது சாத்தியமாகிறது.
கிடைத்த விவரங்களைச் சலித்தெடுத்து மக்களை வகைபிரிப்பதற்கு இது வகை செய்கின்றது. ஆபத்தில்லாதவர், நுகர்பொருள் மோகம் கொண்டவர், பாலியல் பலவீனம் கொண்டவர், அரசுக்கு எதிரான சிந்தனைப் போக்குள்ளவர், சுதந்திரமான லிபரல் சிந்தனை கொண்டவர், வலதுசாரி சிந்தனை கொண்டவர் என மொத்த சமூகத்தையும் மீப்பெரும் மின் தரவுப் பகுப்பாய்வின் மூலம் – பிரிசம் திட்டத்தின் மூலம் – தரநிர்ணயம் செய்தது அமெரிக்க அரசு. தனது சொந்த மக்களையே அமெரிக்க அரசு கள்ளத்தனமாக உளவு பார்த்து வந்ததையும், அதற்காகவே உருவாக்கப்பட்ட இந்த பிரிசம் திட்டத்தையும் 2012-ம் ஆண்டு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார் எட்வர்ட் ஸ்னோடன்.
கைபேசிகள், கணினிகள், மருத்துவ உபகரணங்கள், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகள் என உலகம் முழுவதும் சுமார் 4.4 ட்ரில்லியன் மின் தரவு உற்பத்தி மூலங்களில் இருந்து 70.4 ட்ரில்லியன் குறுக்கு இணைப்புகள் உள்ளதாக பிரிசம் திட்டத்தின் வரைபடம் ஒன்று சுட்டிக்காட்டுகின்றது. பிரிசம் தவிர உலகம் முழுவதுக்குமான மின் தரவுப் பரிமாற்றத்தைக் கண்காணிக்கவும், மின் தரவுகளை சேகரிக்கவுமான திட்டங்களை அமெரிக்கா வகுத்து செயல்பட்டு வருவதாகவும் இதன் மூலம் 2013 -ம் ஆண்டு வாக்கிலேயே சுமார் 97 பில்லியன் உளவுத் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனம் சேகரித்துள்ளதாகவும் கார்டியன் பத்திரிகை தெரிவிக்கிறது.
சேமிக்கப்பட்டுள்ள மின் தரவுகளைக் கொண்டு ஒரு நிகழ்வை முன்னறிவது துல்லியமானதா? அல்லது சரியானதா?
மனிதனின் சமூக வலைத்தள செயல்பாடுகள், அவன் பேசும் கருத்துக்கள், விரும்பும் வீடியோக்கள், பகிரும் புகைப்படங்கள், பங்கெடுக்கும் விவாதங்களைக் கொண்டு அவனது ஆளுமையில் விஞ்சி நிற்கும் கூறு என்னவென்பதை ஏறத்தாழ கணிக்க முடியும். ஆனால், அந்த ஆளுமை ஒரு குறிப்பிட்ட தருணத்தில் மேல் கையெடுத்து ஒரு சம்பவத்தை நிகழ்த்துமா இல்லையா என்பதை அது மட்டுமே தீர்மானிப்பதில்லை – அந்த மனிதனின் சமூகச் சூழலும் இன்னபிற காரணிகளும் சேர்ந்தே தான் தீர்மானிக்கின்றன.
உதாரணமாக, தினசரி ஐந்தாறு மணி நேரங்கள் பாலியல் சம்பந்தமான ஆபாச வீடியோக்களைப் பார்ப்பவர் நிச்சயமாக பாலியல் வல்லுறவுக் குற்றமிழைப்பார் என்று கூறமுடியுமா? அந்த நபரை நம்பி வீட்டில் வயதான பெற்றோர்களோ, கான்சரில் பாதிக்கப்பட்ட மனைவியோ, ஊனமுற்ற குழந்தைகளோ இருக்கலாம் அல்லது, குற்றச்செயலில் ஈடுபடுவதற்கான துணிவு அவருக்கு இல்லாமலிருக்கலாம்.
மேலும், ஒரு நபர் பாலியல் வக்கிரச் செயலில் ஈடுபட ஒரு பொருத்தமான தருணம் அமையாமலே கூட போய் விடலாம். அல்லது அப்படி ஒரு தருணம் அமைந்தாலும் அவரது வக்கிரத்துக்கு இலக்காக கூடிய பெண்ணின் தோற்றம்; சம்பந்தப்பட்ட நபரின் தாயைப் போல அமைந்து அவரைத் தடுமாறச் செய்யலாம்.
ஜெயேந்திர சரஸ்வதியையும், சிம்புவையும் செயற்கை நுண்ணறிக் கணினியின் முன் நிறுத்தினால் முந்தையவரை மகாத்மாவாகவும், பிந்தையவரை காமக் கொடூரனாகவும் அது தீர்ப்பளிக்க கூடும். ஆனால், ஜெயேந்திரன் தான் எழுத்தாளர் அனுராதா ரமணனை பாலியல் துன்புறுத்தல் செய்தார்; சங்கரராமனைக் கொன்று பின் நீதியை விலைக்கு வாங்கினார். சிம்புவோ பீப் பாடலைத் தாண்டியதாகத் தெரியவில்லை.
கொலை, பாலியல் வன்முறை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களாகட்டும், ஆளும் வர்க்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒருவர் ஈடுபடுவதாகட்டும் – ஒருவர் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவாரா இல்லையா என்பதை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தில் அவரது செயல்பாடுகளில் இருந்து பெறப்பட்ட மின் தரவுகளின் பகுப்பாய்வுகளின் மூலம் மட்டுமே கணித்து விடமுடியாது.
தொழில்நுட்பங்களின் மூலம் மக்களை மேலிருந்து கண்காணிப்பதும் கட்டுப்படுத்துவதும் தன்னளவிலேயே ஏராளமான குறைகளைக் கொண்டிருக்கிறது. எனினும், ஆளும் வர்க்கம் அதைத் தான் விரும்புகின்றது. மந்தையில் உள்ள ஆடுகளுக்கு சூடு வைத்து அடையாளமிடுவது போல் மக்களின் மேல் அடையாளக் குறியிட்டு வகை பிரித்து வைக்கும் இந்நடவடிக்கையின் எதிர்கால சாத்தியங்கள் எவ்வாறானதாக இருக்கும்? இதை உலகின் இன்னொரு கோடியில் உள்ள சீன அரசாங்கம் மேற்கொண்ட முன்னோட்டத் திட்டம் (Pilot Project) ஒன்றின் மூலம் நாம் புரிந்து கொள்ள முடியும்.
***
“இன்னும் மூன்றாண்டுகளில் எமது அரசாங்கம் நம்பகமானவர்களை சொர்கத்தின் கீழ் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கும்; அதே நேரம் நம்பகமற்றவர்களை ஒரு அடி கூட எடுத்து வைக்க அனுமதிக்க மாட்டோம்” என்கிறார் சீனாவின் மூத்த அதிகாரி ஒருவர். மின் தரவுகளை அடிப்படையாக கொண்டு குடிமக்களுக்கு நன்மதிப்புப் புள்ளிகள் (Rating) வழங்கும் திட்டம் ஒன்று சீனாவில் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க முதலாளித்துவ அரசின் நிர்வாக எந்திரம் நீண்ட அனுபவம் கொண்டது என்பதால் அதன் கண்காணிப்பும் கட்டுப்படுத்தலும் நுட்பமான முறைகளில் இருக்கின்றது –எதேச்சாதிகார சீனாவிலோ மிகவும் வக்கிரமான முறையில் மேலிருந்து திணிக்கப்பட்டுள்ளது.
மேற்குலகத் தயாரிப்புகளான ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள சீன அரசாங்கம், தமது நாட்டுக்குள் சொந்தமுறையில் தயாரித்து வளர்த்தெடுக்கப்பட்ட சமூகவலைத்தளங்களையே ஊக்குவிக்கின்றது. பெரும்பாலான சீனர்கள் வெய்போ, வீசேட், ரென்ரென், டௌபன் போன்ற சமூகவலைத்தளங்களையே பயன்படுத்துகின்றனர். இது போன்ற தளங்களின் மூலம் சீன அரசாங்கம் மின் தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வுக்கு உட்படுத்துகின்றது.
ஜியாங்ஜூ மாகாணத்தில் உள்ள சூய்னிங் கவுண்டியில் முன்னோட்ட திட்டமாக (Pilot project) சமூக நன்மதிப்புப் புள்ளிகள் (Social Credit Rating) அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பிராந்தியத்தில் வசிக்கும் மக்கள் செலவழிக்கும் விதம், ஓய்வு நேரத்தை எவ்வாறு செலவிடுகிறார்கள் என்கிற விவரம், பொது இடங்களில் அவர்களது செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும், சமூக வலைத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மின் தரவுகள், வங்கிப் பரிவர்த்தனைகள் என பல்வேறு தகவல் மூலங்களில் பெறப்பட்ட தரவுகளையும் பகுப்பாய்வு செய்து சுமார் 1,200 அம்சங்களில் மதிப்பிட்டு அவர்களுக்கான நன்மதிப்புப் புள்ளிகள் தீர்மானிக்கப்படுகின்றது.
எடுத்துக்காட்டாக, சூய்னிங் கவுண்டியில் வாழும் குடிமகன் ஒருவருக்கு 1,000 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட நபர் போக்குவரத்து விதிகளை மீறியதற்கு அபராதம் விதிக்கப்படுவதோடு அவரது 1,000 புள்ளிகளில் இருந்து 20 புள்ளிகள் கழித்துக் கொள்ளப்படும். இணையத்தில் ஒருவரை விமர்சித்தால் 100 புள்ளிகள் கழித்துக் கொள்ளப்படும், அதே போல் குடிப்பழக்கம் இருப்பவர்கள் சில புள்ளிகளை அதற்காக இழக்க வேண்டியிருக்கும். எஞ்சிய புள்ளிகளின் அடிப்படையில் குடிமக்கள் A முதல் D வரை தரநிர்ணயம் செய்யப்படுவார்கள். D என நிர்ணயிக்கப்பட்டவர் அரசின் உதவியையோ, அரசு வேலைகளையோ பெற முடியாது. அவர்கள் சுதந்திரமாக உலவுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.
ஏராளமான ஓட்டைகளுடன் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை சம்பாதித்தது – சீன ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரே கூட இத்திட்டத்தை விமர்சிக்கத் துவங்கினர். சாலையோரம் சிறுநீர் கழிக்கும் ஒருவர், லஞ்சம் கொடுக்க கூடாது எனும் சிந்தனை கொண்டவராக இருக்கலாம். அதே போல், குடிப்பழக்கம் கொண்ட ஒருவர் மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவராக இருக்கலாம். ஒரு மனிதனின் மொத்த ஆளுமையின் ஒரு சிறு பகுதி தவறானதாக இருப்பதை வைத்தே அவர் மீதான மதிப்பீட்டைச் செய்ய முடியாது என்கிற அடிப்படை புரிதலின்றி சீன அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம் பெரும் தோல்வியைத் தழுவியது.
சோதனை முறையில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டம், மக்களிடையே எதிர்ப்புகள் எழுந்ததை ஒட்டி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாலும், மின் தரவுகளைச் சேகரிப்பதும் அதைப் பகுப்பாய்வு செய்வதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. சூய்னிங் கவுண்டியில் கிடைத்த அனுபவங்களைப் படிப்பினையாக எடுத்துக் கொண்டு 2020 -ம் ஆண்டு மேலும் சில திருத்தங்களுடன் நாடெங்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளாதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மின் தரவுப் பகுப்பாய்வும் செயற்கை நுண்ணறித் திறனும் கைகோர்க்கும் போது ஒவ்வொரு தனிநபரின் எதிர்கால நடவடிக்கை எவ்வாறானதாக இருக்கும் என்று கண்காணிப்பதற்கான வாய்ப்பை அது ஆளும் வர்க்கங்களுக்கு வழங்குகிறது. எனினும் சமூகத்தை மேலிருந்து நெட்டித் தள்ளுவது சமூகத்தின் எதார்த்த நிலைமைக்கு பொருத்தமற்றது என்பதும் மக்களின் உணர்வுக்கு எதிரானது என்பதும் ஆளும் வர்க்கம் அறியாததல்ல. இருந்த போதிலும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் என்ற குச்சி தனது கரங்களில் இருப்பதால், மக்களை சுய புத்தியற்ற வாத்துக் கூட்டமாக மேய்த்து விட முடியும் என்று முதலாளித்துவம் கருதுகிறது.
(தொடரும்)
– சாக்கியன், வினவு
–புதிய கலாச்சாரம், ஜூலை 2017
இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :
அச்சு நூல் தேவைப்படுவோர் மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60, தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும்.