Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 627

போயஸ் ரஜினியும் போயஸ் ராணியும் ஊழலில் ஓரணி !

9

ண்டை வீட்டுக்காரரின் துன்பங்களில் பங்கு கொள்வது தமிழ் மரபு மட்டுமல்ல, உலக மரபும் கூட. ஆனால் பக்கத்து வீட்டுக்காரியின் குற்றத்தை ஆதரிப்பது எந்த மரபு?

நூற்றுக்கணக்கான பக்கங்களில் சொத்து குவிப்பு வழக்கின் குற்றங்களை பார்த்து பார்த்து விளக்கியிருக்கிறார் நீதிபதி குன்ஹா. ஆனால் நெருப்பு தடைகளை தாண்டி பொதுவாழ்வில் நீந்துவதாக அரதப் பழதான வார்த்தைகளில் ஆர்ப்பரிக்கிறார் ஜெயாவுக்கு அறிக்கை எழுதித் தரும் “கோஸ்ட்” எழுத்தாளர். குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போது வாழ்க்கைக்கும் மட்டுமல்ல, வார்த்தைகளுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.

அதே குற்றவாளியை பல்வேறு தகுதிகளோடு கூட அண்டை வீட்டுக்காரர் எனும் உரிமையிலும் ஆதரிக்கும் போது அந்த வார்த்தை எள்ளி நகையாடப்படுகிறது. இது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் ரஜினிக்கு வேறு வழியில்லை. காரணம் ”என் வழி தனி வழி” என்று பஞ்ச் டயலாக்கில் பழக்கினாலும் அவர் வழியும் அதே வழிதான்.

“அம்மா” கைது குறித்து அதிமுக அடிமைகள் போட்டு வரும் புரட்டாசி விரத கூத்துக்களை உண்மை என்று நம்பி சிரிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. அதெல்லாம் வெளியே, உள்ளே அவர்கள்தான் பேரானந்தத்தில் திளைக்கிறார்கள். இது தினத்தந்தியை தினம் படிக்கும் பழக்கமுடையவர்கள் எளிதில் கண்டுபிடிக்க கூடியதே. மாறாக தினமணி, தி இந்து என்று அறிஞர் செய்தி தாள்களை மோந்து பார்ப்பவர் மட்டுமல்ல, மூழ்கித் திளைப்போரும் கண்டு பிடிக்க முடியாது. அப்படி யாரேனும் நம்மைப் போன்று கண்டு சொன்னாலும் காண்டு என்று சிண்டு முடிப்பவராக சினமடைகிறார்கள் இந்த படித்த அடிமைகள்.

அதிமுகவில் இருப்போரை இரண்டாக வகை பிரிக்கலாம். அம்மாவால் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், எடுப்பதற்காக காத்திருப்பவர்கள். இரண்டிலும் அம்மாவும், நடவடிக்கையும் இணைந்தே இருப்பதால் பீதியில் கழியும் அதிமுக அடிமைகளின் உள்ளக்கிடக்கையும் கூட இரண்டாகத்தான் இருக்கிறது. ஒன்று அம்மா தூக்கும் வரை சொத்துக்களை சுருட்டுவது, தூக்கினால் சுருட்டியதை பத்திரமாக பாதுகாக்க சர்வ கட்சி ஆசியுடன் தொழிலை தொடர்வது. இந்த இரண்டிற்கிடையில்தான் அதிமுக எனும் ‘பேரியக்கம்’ தோற்றத்தில் குத்தாட்டமும், கருவில் தள்ளாட்டமும் ஆடி வருகிறது.

அந்தப் படிக்கு அம்மா உள்ளே போனதில் அடிமைகளின் உள்ளே பேரானந்தமும், வெளியே கண்ணீர் வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனாலேயே அம்மா கொள்ளையை ஊர் ஊராக வெளுத்து வாங்கினாலும் எமது தோழர்களை சீண்டுவதற்கு போலிசு தயாராக இருக்குமளவுக்கு போயஸு அடிமைகள் தயாரில்லை.

இந்த இரட்டை நாடகத்தின் திரைக்கதையாகத்தான் அம்மாவை ஆதரிக்கும் ஆசாமிகளின் பேச்சு, மூச்சு, கிச்சு, கீச்சு அனைத்தும் அடிமைகளால் உரிமையுடன் கேட்டு வாங்கி பீற்றப்படுகிறது. அந்த ஆசாமிகளும் அதை மறுக்கும் கொள்கை நிலையில் இல்லை. அதாவது போயஸ் தோட்டத்து வழியில்தான் அவர்களது தொழில், வாழ்க்கை, சொத்து அனைத்தும் வந்து குந்தியிருக்கிறது என்ற படியால் அறிக்கையை நறுக்காக அனுப்புவதே அவர்களது கவலை.

தமிழ் சினிமா உண்ணா விரதத்தில் ரூம் போட்டு யோசித்த கவிஞர்களின் வாசகங்களை இறக்கி அது தமிழகமெங்கும் விநியோகிக்கப்பட்டதிலிருந்து என்ன தெரிகிறது? அம்மாவின் ஆற்றலை விண்டு சொல்ல வெள்ளித் திரை கலைஞர்களை விட்டால் விவரமானவர் யாருமில்லை. தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா என்று போட்டாலும் போட்டார்கள், ஊரெங்கும் தெய்வத்தின் புகழ் பாடும் பக்தி மணம் நாடு கடந்து நிலாவிற்கும் பயணிக்கிறதாம்.

உலகை படைத்தான் கடவுள் என்பது போய் உலகமே கடவுளின் துயரத்தில் பங்கேற்பதாக படைப்பு தத்துவத்தையே மாற்றிவிட்டார்கள். ஆகையால் இந்த உலகில் கடவுளை காலி செய்யும் பணியை கடவுளின் ஏஜெண்டுகளே பொறுப்பேற்றுச் செய்வார்கள் என்ற பொன் மொழி மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

JAYA withRAJNI
படம் – நன்றி: The Hindu

சென்னையின் மேட்டுக்குடியினர் வசிக்கும் போயஸ் தோட்டத்தில் ரஜினியும், ஜெயாவும் வசிப்பது  தற்செயலான ஒன்றல்ல. ஒருவர் பிளாக் மணியிலும், இன்னொருவர் பிளாக் டிக்கெட்டிலும் தோட்டத்தின் மதிப்பை எகிறச் செய்தவர்கள். என்றாலும் யார் வெயிட்டு என்ற போட்டி ஒரு காலத்தில் இருவரிடையேயும் இருந்தது. படங்களில் பெண்களை மட்டம் தட்டிப் பேசும் ரஜினி ஒரு நாள் பகலில் ஜெயாவின் கார் பவனியால் நடுரோட்டில் காரில் காத்திருந்த போது அந்த மட்டம் தட்டி, பீரு கொண்டு எழுந்தது. அதுவே ஆர் எம் வீரப்பன் எனும் உதிர்ந்த ரோமத்தின் பட விழாவில் பொங்கி பின்னர் ஊசிய சாம்பாரான கதையையெல்லாம் எழுதி எழுதி எங்களுக்கே சலிப்பாக இருக்கிறது.

ஆனால் ரஜினியை உசுப்பி விட்ட ஊடகங்கள், பார்ப்பனிய சித்தாந்தவாதிகளுக்கு மட்டும் இந்த சலிப்பு வரவேயில்லை. குறுக்கு வழியில் குபேரன் ஆக காத்திருப்பவனும், பேய் மாளிகையை வசந்த மாளிகையாக காட்டி தரகு பெறும் தரகனும் எந்தக் காலத்தில் சலித்திருக்கிறார்கள்?

தற்போதும் ரஜினியோடு அமித் ஷா பேசினார், அடுத்த முதல்வர் அவர்தான், மோடி திட்டம் என்றெல்லாம் எடுத்து விடுவதில் அவர்கள் சளைக்கவே இல்லை. எப்படியாவது தமிழகத்தில் ஒரு ஆளாவது என்று கங்கணம் பூண்ட பாஜகவும், சூப்பர் ஸ்டார் தயவிலாவது விரல் சூப்பும் பரிதாபத்தில் இருந்து மீள்வதற்கு ததிங்கிணத்தோம் போடுகிறது. இதில் சுருதி பேதியாகி இரைச்சல் தாங்க முடியாததாக இருந்தாலும் அதை சங்கீதம் என்று சத்தியம் அடிக்க இங்கே தொடை தட்டும் சுப்புடுக்கள் இல்லாமல் இல்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் எனும் சொர்க்க வாசல் தகுதியை அடைந்த ரஜினிக்கு இந்த சூழ்நிலையே ஒரு படத்தின் ஓபனிங்காக மார்க்கெட் செய்வதற்கு வசதியாக இருக்கிறது. பல பத்து கோடிகளை ஒரு படத்தில் எடுக்க வேண்டும் என்பதால் பல பத்து உளறல்களை மாபெரும் தத்துவ ஞான விளக்கமாக முன் வைக்கும் அவசியமும் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. “தலைவா”  படத்தில் ஓடு தலைவா ஓடு என்று இளைய தளபதி தலை கால் தெறிக்க ஓடியது, விசுவரூபத்தில் உலக நாயகம் தேம்பித் தேம்பி அழுதது எல்லாம் பாட்சாவுக்கு நல்ல பாடமாக இருந்திருக்கும், ஐயமில்லை.

லிங்கா படம் வெளியாகி எழுச்சியுடன் வசூல் செய்தால்தான் மகள்கள் அடுத்த பொம்மை படத்தை எடுத்து நம் தலையில் கட்டுவதிலிருந்து, அநேக நுட்பங்கள் தடையின்றி சாத்தியமாகும். மேலும் தமிழ் சினிமாவில் அம்பானி போன்று மூலதனத்திலும், வருமானத்திலும் ரஜினி ஒரு ரிலையன்ஸ் பிராண்டாக இருக்கிறார். இந்த ஃபிராண்டை அவ்வப்போது தூசு தட்டி ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு இருக்கிறது. அதில் ரஜினியே ஒரு முதலாளி. ஆக சொந்தமாவும் தட்ட வேண்டும், சகபாடிகளுக்காகவும் தட்ட வேண்டும். தட்டினால்தான் திறக்கப்படும்.

ஆனால் ஊரறிய, நீதிமன்றம் நிலை நாட்டிய ஒரு குற்றவாளி பிணை கேட்டு கதறி வெளியே வந்து வீடு திரும்புவதையெல்லாம் வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன?

இது ரஜினி விரும்பிச் செய்த ஒன்றல்ல, கேட்டதால் அனுப்பிய நிர்ப்பந்தம் என்று பரிதாபப்படுவதற்கும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள். ரஜினியைப் போன்றே பாஜக அமைச்சர் மேனகா காந்தியும் கூட வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார். மூச்சுக்கு முன்னூறு தடவை காந்தியை நான் ஸ்டாப் வாந்தியாக நீதி பேசும் பெருமக்களைக் கொண்ட நாடிது. ஆக காந்திஜி போல ஜெயாஜி என்ன சுதந்திர போராட்டத்திற்கா சென்று வீடு திரும்பியிருக்கிறார்?

யார்தான் ஊழல் செய்யவில்லை என்று ஜெயாவை ஆதரிக்கும் பொதுப்புத்தி நிலவும் நாடிது. அதன்படி ஜெயாவை ஆதரிக்கும் ரஜினியை வீக் எண்டில் அரசியல் பேசும் அறிஞர்கள் மட்டும் கைவிடுவார்களா என்ன? மட்டுமல்ல, ஜெயா எனும் அப்பட்டமான ஊழல் குற்றவாளியை ஆதரித்தே ஆக வேண்டுமென்று ரஜினிக்கு நேர்ந்திருக்கும் விதி என்ன? மடியின் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும்? அந்த கனம், லிங்கா, சிவாஜி உள்ளிட்ட கருப்பு பண முதலீட்டின் கனமில்லையா? இல்லை முதல் பத்து நாட்களில் தியேட்டர் அதிபர்களே டிக்கெட்டை ஆயிரம், ரெண்டாயிரத்திற்கு விற்கிறார்களே அந்த பணமில்லையா?

ரஜினியை ஊழல் செய்து சொத்து சேர்க்கவில்லை, நல்லவர், வல்லவர், பொய் கூறமாட்டார், ஆன்மீக அன்பர் என்று துக்ளக் சோ முதல் விகடன், குமுதம், தினமலர் உள்ளிட்டு இன்று இந்துமதவெறியர் வரை இமேஜ் புரவலராக காவடி தூக்குகிறார்களே அவற்றின் யோக்கியதை என்ன? நாட்டு மக்களுக்கு லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று உபதேசித்து விட்டு, லஞ்ச ராணியை நெஞ்சம் தூக்கி வரவேற்று வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன?

நாட்டு மக்களுக்கு நல்லொழுக்கத்தை காட்டி விட்டு, அரண்மனை ராணிகளை ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களாக காட்டுவது எவ்வளவு அயோக்கியத்தனம்?

பிக்பாக்கெட் திருடனுக்கு ஒரு நீதி, கொடநாடு முழுங்கிக்கு ஒரு நீதியா? ஒருக்கால் இதே ரஜினி மட்டும் ஜெயாவுக்கு மாற்றாக அன்று  வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நூறு ஜெயாக்கள் ஒன்று சேர்ந்து ஆண்ட நிலைமைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கும். அந்த தள்ளாட்டம் இன்று டாஸ்மாக்கில் தள்ளாடும் தமிழகத்தை விட பல மடங்கு அதிகமாயிருக்கும்.

“ரஜினி ஒரு கழிசடை நாயகன்” என்று 96-ல் மக்கள் கலை இலக்கியக் கழகமும், அதன் தோழமை அமைப்புகளும் போட்ட சிறு நூலில் இந்த உண்மை அன்றே சொல்லப்பட்டிருக்கிறது. இன்று ரஜினியே அதை மறுக்க முடியாது!

தனியார் மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு நீதிமன்ற நல்லாசி !

2

ட்டாய நன்கொடை வசூலித்தது மற்றும் மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக தில்லுமுல்லுகள் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எதிராக சி.பி.ஐ. தொடர்ந்த நான்கு வழக்குகளையும் ஒன்றன்பின் ஒன்றாக ஊத்தி மூடிவிட்டது, சென்னை உயர்நீதிமன்றம். தனியார் மருத்துவக் கல்லூரிகளைப் புதுப் பணக்கார மாஃபியா கும்பல்கள்தான் நடத்திவருகின்றன என்ற நிலையில், இத்தீர்ப்பு அக்கும்பலின் அட்டூழியங்கள், முறைகேடுகள் அனைத்தையும் ஏறத்தாழ சட்டப்பூர்வமாக்கிவிட்டது.

கேத்தன் தேசாய்
கோடிகோடியாய் இலஞ்சம் பெற்றுக் கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரத்தை வாரி வழங்கிய இந்திய மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேத்தன் தேசாய் (கோப்புப் படம்)

கடந்த 2009-ம் ஆண்டில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டாய நன்கொடை வசூலிக்கப்படுவது தொடர்பாக “டைம்ஸ் நௌ” தொலைக்காட்சியும் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” ஆங்கில நாளேடும் இணைந்து நடத்திய இரகசிய புலனாய்வு நடவடிக்கையில், சென்னை போரூரிலுள்ள சீறீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பதிவாளர் சுப்பிரமணியன், தம்மிடம் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்காக அணுகிய மாணவர் ஒருவரிடம் கட்டாய நன்கொடை ரூ 40 இலட்சம் கேட்டதும்; சென்னை குரோம்பேட்டையிலுள்ள சீறீ பாலாஜி மருத்துவக் கல்லூரியின் நிர்வாக அதிகாரியான ஜான்சன் ரூ 20 இலட்சம் கேட்டதும் வீடியோ ஆதாரத்துடன் அம்பலமாகின.

மருத்துவக் கல்லூரிகள் சட்டவிரோதமான முறையில் கட்டாய நன்கொடை வாங்கிக்கொண்டு சீட்டை விற்கின்றன; பகற்கொள்ளையடிக்கின்றன என்ற உலகறிந்த உண்மைக்கு மேலும் ஒரு ஆதாரம் இது. குற்றச்சாட்டில் சிக்கிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது கட்டாய நன்கொடைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை; அவ்வாறு செய்யவில்லை. மாறாக, வழக்கை சி.பி.ஐ. வசம் தள்ளிவிட்டது.

ரேட்டு பேசி சீட்டை விற்ற கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யாத அதேசமயம், தனியார் மருத்துவக் கல்லூரியின் இணைப் பதிவாளர் மீது, அரசு ஊழியருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சட்டப்பிரிவான ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கைப் பதிவு செய்தது, சி.பி.ஐ.

தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கண்காணித்து அவற்றை முறைப்படுத்த வேண்டிய இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு தலைவராக இருந்த கேத்தன் தேசாய், சம்பவம் நடந்த சமயத்தில் குற்றச்சாட்டில் சிக்கிய ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் இயக்குநர்களுள் ஒருவராகவும் இருந்தார். கேத்தன் தேசாய்க்கு தெரியாமல் அக்கல்லூரி கட்டாய நன்கொடை வசூலில் ஈடுபட்டிருக்க முடியாது. இதன்படி, எம்.சி.ஐ.யின் தலைவராக இருந்துகொண்டே, கட்டாய நன்கொடை வசூலிப்பதற்கு உடந்தையாகச் செயல்பட்டதற்காக கேத்தன் தேசாயையும் இவ்வழக்கில் இணைத்திருக்க வேண்டும். சி.பி.ஐ. அவ்வாறு செய்யவில்லை.

வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பொருத்தமற்ற குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டே பதியப்படவில்லை என்பதையும் நீதிபதி அருணா ஜெகதீசன் சொந்த மூளையைப் பயன்படுத்திக் கேள்விக்குள்ளாக்கியிருக்க வேண்டும். மாறாக, சி.பி.ஐ. ஏற்படுத்தித் தந்த இந்த ஓட்டையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, “தனியார் மருத்துவக் கல்லூரியின் இணைப் பதிவாளர் என்பவர் பொது ஊழியர் அல்ல; எனவே, அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது செல்லாது” என்றும், “மாணவர் சேர்க்கைக்காகத்தான் அவர் 40 இலட்சம் பேரம் பேசினார் என்பதற்கும் போதுமான ஆதாரம் இல்லை” என்றும் கூறி வழக்கை ஊத்தி மூடினார், அவர்.

மற்ற வழக்குகள், மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்காக முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பானவை. இந்திய மருத்துவ கவுன்சிலின் அப்போதைய தலைவர் கேத்தன் தேசாய் கோடிகளில் பணத்தை வாங்கிக்கொண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தைப் புதுப்பித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பொறுப்பில் அவர் இருந்த காலகட்டத்தில் அவரால் அனுமதியளிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் எம்.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவு மறு ஆய்வை மேற்கொண்டது. தமிழகத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, சீறீபாலாஜி கல்வி அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரியில் உள்ள சிறீ இலட்சுமியம்மாள் கல்வி அறக்கட்டளை நடத்தும் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வின் பொழுது முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததோடு, தினக்கூலித் தொழிலாளர்களை நோயாளிகளைப் போல நடிக்க வைத்தும், வெளியிலிருந்து மருத்துவர்களை அழைத்து வந்து அவர்களுக்குப் போலியாக அடையாள அட்டை வழங்கிப் பேராசிரியர்களாக நடிக்க வைத்தும் அங்கீகாரத்தை பெற்றிருப்பது அம்பலமானது.

எம்.சி.ஐ. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக அக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்து புதிய மாணவர் சேர்க்கையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். எம்.சி.ஐ.யின் கடமை அது என்ற போதிலும், மோசடியில் ஈடுபட்ட அம்மூன்று கல்லூரியின் நிர்வாகிகளுக்கு எதிராக இந்திய மருத்துவ கவுன்சிலோ, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகமோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

அருணா ஜெகதீசன்
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் முறைகேடுகளையும் நன்கொடை கொள்ளையையும் கிரிமினல் குற்றமாகக் கருத முடியாது எனத் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன்.

மாறாக, வழக்கை சி.பி.ஐ.யின் தலையில் கட்டிவிட்டு கைகழுவிச் சென்றது. சி.பி.ஐ. தன் பங்குக்கு இவ்வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு தோதாக, போலியாக கொண்டுவந்து நிறுத்தப்பட்ட மருத்துவர்களின் பெயர்களைக்கூடப் பதிவு செய்யாமலும்; எம்.சி.ஐ.யின் நேரடி ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்ட குறிப்பான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களை வழக்கில் இணைக்காமலும் பல ஓட்டைகளுடன் வழக்கைப் பதிவு செய்தது. வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், முக்கியக் குற்றவாளியான எம்.சி.ஐ.யின் முன்னாள் தலைவர் கேத்தன் தேசாயின் பெயர் குற்றப்பத்திரிக்கையிலிருந்தும் முதல் தகவல் அறிக்கையிலிருந்தும் சதித்தனமான முறையில் நீக்கப்பட்டன.

சி.பி.ஐ. இவ்வாறு மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்குச் சாதகமாக நடந்து கொண்டதென்றால், சென்னை உயர் நீதிமன்றமோ தன் பங்குக்கு, “எம்.சி.ஐ.யின் ஆய்வில் போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்தது; தினக்கூலித் தொழிலாளர்களை நோயாளிகளாகவும், உள்ளூர் மருத்துவர்களைப் பேராசிரியர்களாகவும் நடிக்க வைத்ததெல்லாம் தவறுகள்தானே தவிர, கிரிமினல் சட்டத்தின் கீழ் தண்டிக்கும் அளவிற்கு குற்றமில்லை” என்றும் “விதிமீறல்களில் ஈடுபடும் மருத்துவக்கல்லூரிகள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யவோ, இத்தவறுகளை விசாரணை செய்யவோ சி.பி.ஐ.க்கு அதிகாரம் இல்லை” என்றும் சொல்லி கேசை மூடியது.

இதனைவிடவும் இழிவான முறையில் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்க முடியும் என்பதை உணர்த்தியிருக்கிறது, சமீபத்தில் வெளிவந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பு. போதுமான அடிப்படை வசதிகள் இல்லாத காரணங்களினால் மாதா மருத்துவக் கல்லூரி, முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட நான்கு மருத்துவக் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மறுத்திருந்தது எம்.சி.ஐ. இவற்றுக்கெதிராக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடுத்த வழக்கில் கடந்த வாரத்தில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், “அடிப்படை வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட காரணங்களுக்காக எம்.சி.ஐ.யின் விதியைக் காட்டி மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மறுப்பது தவறு. நாட்டுக்கு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். முந்தைய ஆய்வில் எம்.சி.ஐ. சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்துவிட்டதாகக் கூறும் மருத்துவக் கல்லூரிகளில் மறு ஆய்வை உடனே நடத்தி, இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்கு அனுமதியை வழங்குமாறு” எம்.சி.ஐ.க்கு உத்திரவிட்டிருக்கிறது.

எனவே, இதன்மூலம் பெறப்படும் நீதி என்னவெனில், கல்லூரியின் தாளாளரே சிறப்பு சேர்க்கை முகாமிற்கு ஏற்பாடு செய்து கல்லூரி வளாகத்திலேயே கோடிக்கணக்கில் நன்கொடை வசூலிக்கலாம். எம்.சி.ஐ. கல்லூரியை ஆய்வு செய்ய வரும் பொழுது வெள்ளுடையில் கால்டாக்சி டிரைவர்களைக் கூட நிறுத்தி வைத்து இவர்தான் மருத்துவப் பேராசிரியர் என்று புளுகலாம். கீற்றுக் கொட்டகையைப் போட்டுக்கொண்டு, சமையல் கத்திகளை கையில் வைத்துக்கொண்டு மருத்துவக் கல்லூரிதான் நடத்துகிறோம் என்று அவர்கள் கொடுக்கும் வாக்குறுதியை மட்டுமே ஏற்றுக்கொண்டு அங்கீகாரத்தை எம்.சி.ஐ. புதுப்பிக்கலாம். உயர் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்புகளின் அடிப்படியில் இவை எவையும் இனி சட்டவிரோதம் கிடையாது. ஏனெனில் நமக்கு ‘மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்’!

– இளங்கதிர்
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

இந்தியக் குழந்தைகளை கொல்லும் தனியார்மயக் கிருமி !

1

வறுமை… பட்டினி… காசநோய்…இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயம்!

நோயிலும் அது தொடர்பான சிகிச்சையிலும் வர்க்க வேறுபாடு காட்டப்படுகிறது எனக் கூறினால், நீங்கள் அதிர்ச்சியடையலாம். ஆனால், அதுதான் உண்மை. சர்க்கரை நோய், இதய நோய் போன்ற தொற்று வகையில்லாத நோய்களின் மீதும், அதனின் சிகிச்சை மீதும் குவிக்கப்படும் கவனம், ஏழை மக்களை எளிதாகத் தாக்கும் தொற்று நோய்கள் மீது குவிக்கப்படுவதில்லை. இந்தியாவில் சர்க்கரை நோய் வெகுவாகப் பரவி வருகிறது என்ற செய்தியை அறிந்திருக்கும் பலரும் காசநோயின் தலைநகரம் எனக் குறிப்பிடும் அளவிற்கு உலகிலேயே அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதைக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இதிலும் இந்நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்றொரு புள்ளிவிவரத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது லான்செட் என்ற மருத்துவ இதழ்.

காசநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன்
காசநோயால் பாதிக்கப்பட்டு உருக்குலைந்து போயுள்ள ஒரு ஏழைச் சிறுவன்.

“உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளதைக் காட்டிலும் உலக அளவில் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும்; காசநோய் அதிக அளவில் காணப்படும் 22 நாடுகளில் இந்தியாதான் உச்சத்தில் இருப்பதாகவும், உலக அளவில் காசநோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுள் 27 சதவீதக் குழந்தைகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களென்றும்” அம்மருத்துவ இதழ் புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது. பொது சுகாதார தளத்தில் பணியாற்றி வரும் மனித உரிமை அமைப்புகள், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 74,000 தொடங்கி 1,30,000 வரையிலான குழந்தைகள் காசநோய்க்குப் பலியாவதாக”க் குறிப்பிடுகின்றன.

சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் சுகாதாரக் கேடுகள், ஊட்டச் சத்தின்மை, புகை பிடிப்பது போன்ற தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் உள்ளிட்டவை இந்நோய் பரவுவதற்கு அடிப்படை காரணங்களாக இருந்தாலும், ஏதுமறியா குழந்தைகளைப் பொருத்தவரை அவர்கள் இந்நோய்க்குப் பலியாவதற்கு முதன்மையான காரணமாக இருப்பது ஊட்டச் சத்துக் குறைபாடுதான். இதனைக் கொஞ்சம் பச்சையாகச் சொன்னால், அரைப் பட்டினியாக அல்லது வெறும் சோற்றை மட்டுமே உண்டு வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட குழந்தைகள்தான் இந்நோய்க்குப் பலியாவதில் முதலாவது இடத்தில் உள்ளனர். விதவிதமான காய்கறிகள், இறக்குமதி செயப்பட்ட பழவகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள், பானங்கள் என ஒருபுறம் இந்தியச் சந்தை நிரம்பிவழியும்போது, இன்னொருபுறம் காட்டுக்கிழங்குகளையும் வேர்களையும் மட்டுமே உண்டு பசியாறும் பழங்குடியின மக்களைப் பற்றிய செய்திகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தியக் குழந்தைகளுள் சரிபாதிக் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி நோஞ்சான்களாக, சவலைப்பிள்ளைகளாக இருப்பது இந்த உயிர்க்கொல்லி நோய் பல்கிப் பரவுவதற்கான நிரந்தர வாய்ப்பை வழங்கி வருகிறது.

ஏறத்தாழ இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் இருந்த காசநோய், கடந்த சில ஆண்டுகளில் மிகவும் தீவிரமாகவும், மருந்துகளுக்குக்கூடக் கட்டுப்படாத வீரியமிக்கதாகவும் மாறி அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த பெரியவர்களையும் குழந்தைகளையும் தாக்கி வருவதை வெறும் மருந்து-மருத்துவம் சார்ந்த விசயமாக மட்டும் சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இந்தியப் பொருளாதாரம் உலகமயமான இந்த இருபது ஆண்டுகளில்தான் காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்திருக்கிறது என்பது தற்செயலானதல்ல. பொருளாதாரம், குறிப்பாக வேலைவாய்ப்புகள் நகரமயமாகியிருப்பது, நகரங்களுக்கு வேலை தேடிவரும் அடித்தட்டு மக்கள் அடிப்படை வசதிகள் ஏதுமற்ற நகர்ப்புற சேரிகளில் வாழ வேண்டியிருப்பது, உணவுப் பொருட்களின் விலையேற்றம், பொது சுகாதாரமும் மருத்துவமும் வேகவேகமாகத் தனியார்மயமாகிவருவது போன்றவற்றை ஒதுக்கிவைத்துவிட்டு காசநோய் பாதிப்புகளை மதிப்பிட்டுவிட முடியாது.

வீட்டு வாடகை, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்ட பிற அத்தியாவசிய செலவுகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் நம் கையில் இல்லாத நிலையில், வருமானத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் இடையே ஏற்பட்டு வரும் பள்ளத்தைச் சரிக்கட்ட உணவுக்கான செலவைக் குறைத்துக் கொள்வதுதான் உழைக்கும் மக்கள் முன் உடனடி தீர்வாக அமைகிறது. உணவு பழக்கவழக்கத்தில் திணிக்கப்பட்ட மாற்றமும் எளிய மக்களின் உணவாக இருந்துவந்த சத்துக்கள் நிறைந்த சிறுதானிய வகைகளை அவர்களிடம் இருந்து தட்டிப்பறித்துவிட்டது. இந்த நிலைமைகள் அடித்தட்டு மக்களின் குழந்தைகளிடம் ஊட்டச்சத்து குறைபாடை நிரந்தரமாக்கி, அவர்களை காசநோய், போலியோ போன்ற கொடிய நோய்கள் எளிதாகத் தாக்குவதற்கான பலியாடுகளாக மாற்றிவிட்டது.

காசநோய் பாதித்த குழந்தை
காசநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாதக் குழந்தை

குழந்தைகளைத் தாக்கும் காசநோயைக் கட்டுப்படுத்த பி.சி.ஜி. தடுப்பூசி மற்றும் புதுப்பிக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், நேரடிக் கண்காணிப்பு சிகிச்சை முறை (டாட்ஸ்) ஆகியவை செயல்படுத்தப்பட்டாலும், அவை சமூகத்தின் மேல்தட்டை நோக்கி இந்நோய்கள் பரவிவிடக் கூடாது என்ற வர்க்க கண்ணோட்ட அடிப்படையில் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. அதனால்தான் இத்திட்டங்களால் இந்நோயை முழுமையாக ஒழித்துக் கட்டுவதில் வெற்றியை ஈட்ட முடியவில்லை. அதேசமயம், இந்தத் திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி குறைக்கப்படும்பொழுது நிலைமை மேலும் சிக்கலாகிவிடுகிறது. குறிப்பாக, கடந்த ஆண்டு அரசு மருத்துவமனைகள் மூலம் காசநோய்க்கான மருந்து வழங்குவதில் செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, நோயாளிகள் வெளிச்சந்தையில் மருந்தை வாங்கிக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டனர். இந்நிலைமைகள் யாவும் காசநோய் கிருமியை ஒழிப்பதற்கு தனியார்மயம் என்ற சந்தைப் பொருளாதார கிருமியை ஒழித்துக்கட்டுவதை முன்நிபந்தனையாக நம் முன் நிறுத்துகின்றன.

– அழகு
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

நீதிபதி குன்ஹாவை ஆதரித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

4
  • ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவிற்குச் சிறை!
  • நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை வரவேற்போம்!
  • ஊழலில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்யப் போராடுவோம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம்!

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளியாக பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக அதிமுக கட்சியினர் திட்டமிட்டு அனுதாப அலையினை உருவாக்க சட்டவிரோதமான முறையில் ‘போராட்டங்களை’ தூண்டிவிடும் நிலையில் அதனை அம்பலப்படுத்தும் வகையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் சென்னை கிளையின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் 15 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது!

ஆர்ப்பாட்டம் சுவரொட்டி

“ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவிற்கு சிறை!
நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை வரவேற்போம்!”

என்ற முழக்கத்தினை முன்வைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்களின் அறைகளுக்கு நேரடியாக சென்று துண்டுபிரசுரங்கள் விநியோகித்து மனித உரிமைப் பாதுகாப்பு மைய வழக்குரைஞர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

பெரும்பாலான வழக்குரைஞர்கள் அதிமுக கட்சியினரின் சட்டவிரோத நடவடிக்கைகளின் மீது வெறுப்பு கொண்டிருந்தாலும், நேரடியாக பேச இயலாத தங்களின் இயலாமையை ஆதங்கமாக வெளிப்படுத்தினார்கள். பிரசுரங்களை பெற்றுக்கொண்ட அதிமுக கட்சி சார்ந்த வழக்குரைஞர்கள் பலரும் மவுனமாகவே இருந்து, தங்களுக்கும் தமது கட்சியினர் செய்வது நியாமல்ல என்பதை வெளிப்படுத்தினார்கள். ஒருவர் மட்டும் பிரசுரத்தை கசக்கி எறிந்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார். பல வழக்குரைஞர்கள் எச்சரிக்கையாக இருங்கள், அதிமுக கட்சியினரால் உங்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்படலாம் என தங்களின் பயத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

நீதிமன்ற வளாகங்களில் கடந்து செல்கிறவர்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது! மக்கள் ஆர்வமாக படித்தனர்.

[துண்டறிக்கையை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

திட்டமிட்ட நாளன்று அக்டோபர் 15 அன்று மதியம் 1.30 அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதிமுக கட்சியினர் ஏதாவது தகராறு செய்வார்கள் என்ற அச்சம் காரணமாக பொதுவான வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள தயங்கியும், கடந்த காலத்தில் கருணாநிதிக்கு கருப்புக்கொடி காட்டிய பொழுது திமுக குண்டர்களால் தாக்குதலுக்கு உள்ளானது போன்று, தற்பொழுதும் அதிமுக குண்டர்களால் தாக்கப்படுவோமோ என்ற அச்சத்துடன் பெரும்பாலான வழக்குரைஞர்களும், பொதுமக்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் அச்சங்கலந்த ஆர்ப்பாட்டத்துடன் ஆர்ப்பாட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தனர்.

  • ஜெயலலிதா போன்ற குற்றவாளிகளுக்கு
  • அனுதாபம் கொள்ளும் அடிமைத்தனத்தை உதறித்தள்ளுவோம்!
  • ஊழலில் சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய போராடுவோம்!!

என்பதை முன்வைத்து எழுச்சிகரமான முழக்கங்களுடன், மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக்கிளை இணைச்செயலாளர் தோழர் பார்த்தசாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஆர்ப்பாட்ட முழக்கங்கள் :

ஆதரிப்போம்! ஆதரிப்போம்!!
சொத்துக்குவிப்பு வழக்கினில்
கர்நாடக தனிநீதிமன்ற தீர்ப்பினை வரவேற்போம்!

உதறித்தள்ளுவோம்! உதறித்தள்ளுவோம்!!
அடிப்படையே இல்லாமல்
அனுதாபம் கொள்ளும் சிந்தனையை
உதறித்தள்ளுவோம்! உதறித்தள்ளுவோம்!!

பதினெட்டு ஆண்டாய் இழுத்தடித்த
சொத்துக்குவிப்பு வழக்கினில்
குற்றவாளிக்கு ஆதரவாக
அனுதாபம் கொள்வது அடிமைத்தனம்
ஊழலுக்கு எதிராக
போராடுவதே தன்மானம்!!

சமூகத்தை அழிக்கின்ற
மனித மாண்மை சிதைக்கின்ற
ஒழுக்கக்கேட்டின் தோற்றுவாய்
ஊழலுக்கு எதிராக உறுதியோடு போராடுவோம்!

அரசியல் ஆதாயத்திற்கு
நீதிமன்ற தீர்ப்புக்கெதிராய்
வன்முறையை தூண்டிவிட்ட
அதிமுக கட்சியினர் செய்த
பொதுச்சொத்துக்கள் சேதத்திற்கு
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
தமிழக அரசே!
நடவடிக்கை எடு!!

சொத்துக் குவிப்பு வழக்கினில்
நீதிமன்ற தண்டனையை
காவிரிப் பிரச்சனையுடன்
கோர்த்துவிட்டு அரசியல் செய்யும்
இனவெறியை தூண்டிவிடும்
கேவலமான பொய்ப்பிரச்சாரத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!!

தினந்தோறும் மக்கள் பணத்தை
கொள்ளையடிக்கும் திருடர்களான
ஆம்னி பஸ் முதலாளிகளும்
தனியார் கல்வி நிறுவனங்களின்
கொள்ளைக்கார முதலைகளும்
நீதிமன்ற தீர்ப்புக்கெதிராய்
போராடும் யோக்கியர்கள்!

நீதிமன்ற தீர்ப்புக்கெதிராய்
மக்களை போராட தூண்டும்
அதிமுக நிர்வாகிகளில்
கவுன்சிலர் பதவியைக்கூட
உதறித்தள்ள எவருமில்லை!
அரசு பஸ்ஸை கொளுத்தியவர்கள்
அவர்களின் காரை கொளுத்தவில்லை.

ஊழலுக்கு எதிரான
வரலாற்றுச் சிறப்புமிக்க
நீதிபதி குன்ஹாவின்
தீர்ப்பினை வரவேற்போம்
ஊழல் அரசியல்வாதிகள்
எந்தக்கட்சியில் இருந்தாலும்
தண்டனை பெற போராடுவோம்!

வழக்குரைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றன.

சரியான நேரத்தில், சரியான முறையில் ஜெயலலிதா, அதிமுகவினரை அம்பலப்படுத்தியுள்ளீர்கள் என்றும் எதிர்க்கட்சிகளாக உள்ள அரசியல் கட்சியினர் கூட போராட தயங்கும் நிலையில் துணிச்சலாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளீர்கள் என்று தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்கள். அநீதிகளுக்கு எதிராக போராடவேண்டும் என்ற நம்பிக்கையை வழக்குரைஞர்கள் மத்தியில் வளர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் இருந்ததாக கருத்து தெரிவித்தனர்.

தோழமையுடன்,

எஸ் ஜிம் ராஜ் மில்டன்செயலாளர், சென்னைக் கிளை
மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு,
50, ஆர்மீனியன் தெரு, பாரீஸ், சென்னை – 600 001
தொலைபேசி : 98428 12062
மின்னஞ்சல் :  chennai.hrpc@gmail.com
பேஸ்புக் : https://www.facebook.com/hrpc.chennai

இதுதாண்டா அம்மா போலீசு !

1
சந்திரா
வக்கிரமான சித்திரவதைகளால் நடைப்பிணமாக்கப்பட்ட சந்திரா

ரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்த நிர்பயா பாலியல் வல்லுறவு சம்பவத்தையொட்டி நடுத்தர வர்க்கத்தினரும் முதலாளித்துவ அறிவுத்துறையினரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் எனக் குரல் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில், “இந்தியப் பெண்களின் முதன்மையான, அபாயகரமான எதிரி இந்த அரசமைப்புதான்; குறிப்பாக, சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும் காக்கிச்சட்டை கிரிமினல்கள்தான்” என்பதை விளக்கி சிறப்புக் கட்டுரையொன்றை புதிய ஜனநாயகம் இதழில் வெளியிட்டிருந்தோம். அம்மா ஆட்சியில் தமிழக போலீசும்; போலீசு யார், ரவுடி யார் எனப் பிரித்துப் பார்க்க முடியாதபடி ஆட்சி நடந்துவரும் புதுச்சேரியில் அம்மாநில போலீசும் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு சம்பவங்கள் நமது கூற்றை நிரூபிக்கும் இன்னொரு சான்றாக அமைந்துள்ளன.

உடுமலைப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் சமையல் உதவியாளராகப் பணிபுரிந்து வந்த சந்திராவை, அவர் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிப்பதற்கு கடந்த ஆகஸ்டு 14 அன்று உடுமலைப்பேட்டை போலீசார் அழைத்துச் சென்றனர். விசாரணை என்ற போர்வையில் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி அவரை போலீசார் அச்சுறுத்தினர். சந்திரா அதற்குப் பணிய மறுக்கவே, அவர் மீது பாலியல் வல்லுறவு உள்ளிட்ட கொடூரமான சித்திரவதைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஏவியது, போலீசு.

முதலில் அவரது நகக்கண்கள் அனைத்தும் ஊசிகளால் துளைக்கப்பட்டன. அதற்குப் பிறகும் போலீசார் சொன்னபடி சந்திரா வாக்குமூலம் அளிக்க மறுக்கவே, சந்திரா நடுத்தர வயதை எட்டிய ஒரு தாய் என்றுகூட பாராமல், அவர் மீது பாலியல் வக்கிரம் நிறைந்த வன்முறை ஏவிவிடப்பட்டது. அவர் முழுமையாக நிர்வாணப்படுத்தப்பட்டு, தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு, பி.வி.சி. பைப்பால் தாக்கப்பட்டுள்ளார். அக்காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்குப் பிறகும்கூட சந்திராவிடமிருந்து போலீசாரால் ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற முடியவில்லை. அதன்பின் அவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதோடு, அவரது பிறப்புறுப்பில் லத்தியைச் சொருகி சித்திரவதை செய்தது போலீசு. அவரது பிறப்புறுப்பிலிருந்து உதிரப் போக்கு ஏற்பட்டு அவர் மயங்கிச் சரியும் நிலை வரை இந்த சித்திரவதை நடந்திருக்கிறது. ஒரு நாள் இரண்டு நாட்கள் அல்ல, தொடர்ந்து ஐந்து நாட்கள் சந்திராவைச் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்து, சித்திரவதை செய்து, செய்யாத கொலையைச் செய்ததாக சந்திராவிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் போலீசார் பெற்றுள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூரில் வசித்துவரும் சந்திராவின் மகள் ராஜகுமாரி சிறைச்சாலையில் உடலெங்கும் காயங்களோடு தனது தாயைப் பார்த்த பிறகுதான் உடுமலைப்பேட்டை போலீசார் பாலியல் வக்கிரத்தோடு நடத்தியிருக்கும் இக்காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் வெளியுலகுக்குத் தெரிந்தது. இச்சித்திரவதை குறித்து நீதிமன்ற விசாரணை கோரி ராஜகுமாரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், உடுமலை போலீசாரால் சந்திரா பாலியல் ரீதியாகச் சித்திரவதை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட சந்திராவிற்குத் தமிழக அரசு இரண்டு இலட்ச ரூபாய் நட்ட ஈடு தர வேண்டும் என்றும், இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்திராவின் மகள் ராஜகுமாரி
சந்திராவின் மகள் ராஜகுமாரி

தமிழகத்தில் நடந்திருப்பது வக்கிரமும் காட்டுமிராண்டித்தனமும் நிறைந்தது என்றால், புதுச்சேரியில் நடந்துள்ள சம்பவம் வெட்கக்கேடானது. பள்ளிக்கூடத்தில் பயிலும் ஏழைச் சிறுமிகள் சிலரைப் பாலியல் தொழிலில் தள்ளிவிட்ட வழக்கில் 2 ஆய்வாளர்கள், 8 போலீசாருக்குத் தொடர்பிருப்பது அம்பலமாகி, அவர்கள் அனைவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரைக் குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட சிறுமிகள் கடந்த மே மாதமே நேரடியாகத் தெரிவித்த பிறகும்கூட சம்பந்தப்பட்ட பாலியல் தரகுக் கும்பல் மீதும் போலீசார் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அக்கும்பல் மீது நடவடிக்கை எடுக்க முயன்ற டி.ஜி.பி.காமராஜ், திடீரெனப் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். பாலியல் தரகர்கள்-போலீசு-ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் என்ற இந்த முக்கூட்டணிக்கு எதிராக மகளிர் அமைப்புகள் ஆளுநர் மாளிகை முற்றுகை உள்ளிட்டுப் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான், பாலியல் தரகர்கள் கைது செய்யப்பட்டனர்; அவர்களுக்கு உடந்தையாக இருந்த போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த இரண்டு வழக்குகளிலும் சட்டம் தானாகவே தன் கடமையை ஆற்றிவிடவில்லை. சந்திரா மீதான தாக்குதல் வழக்கில் போலீசுக்கு எதிராக ராஜகுமாரி நடத்திய சட்டப் போராட்டமும், புதுவையில் மகளிர் அமைப்புகள் நடத்திய தெருப்போராட்டங்களும் இல்லையென்றால், இவ்வழக்குகள் அரசின் இருட்டறைகளில் புதையுண்டு போயிருக்கும். சந்திரா வழக்கில் சம்பந்தப்பட்ட போலீசாரைக் காப்பாற்ற அத்துறை உயர் அதிகாரிகளே முன்நின்றனர். “குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க இரண்டு தட்டு தட்டுவது சகஜமானதுதான்” என இச்சித்திரவதையைப் பத்திரிகையாளர்களிடம் நியாயப்படுத்தினார், டி.ஜி.பி. அஜய்குமார் சிங். “சந்திராவை உடுமலைபேட்டை போலீசார் கைது செய்யவில்லை. சந்திராவே குற்றத்தை ஒப்புக்கொண்டு கிராம நிர்வாக அதிகாரியிடம் சரணடைந்த பிறகுதான் போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் உடலில் இருந்த காயங்கள் அனைத்தும் குடித்துவிட்டுப் போதையில் கீழே விழுந்ததால் ஏற்பட்டவை என்பதை அவரே ஒப்புதல் வாக்குமூலமாக அளித்திருக்கிறார்” என போலீசு துறை நீதிமன்றத்திடம் அறிக்கை அளித்தது.

இந்த அறிக்கை ஒருபுறம் போலீசின் முட்டாள்தனத்தைப் பறைசாற்றுகிறதென்றால், இன்னொருபுறம் தமது குற்றத்தை மறைக்க எந்த எல்லைக்கும் செல்லும் அதனின் கிரிமினல் புத்தியை எடுத்துக் காட்டுகிறது. போலீசு நடத்திய சித்திரவதை வதையால் சந்திராவின் பிறப்புறுப்பிலிருந்து உதிரம் கொட்டத் தொடங்கியவுடன், “உண்மையிலேயே நீ உழைச்சு சம்பாரிச்சு இருந்தா இப்படி ரத்தம் கொட்டுமா?” என இரக்கமின்றியும் வக்கிரமாகவும் நக்கலடித்துள்ளனர். நகக்கண்களெல்லாம் வீங்கிப் போய், உதிரப் போக்கினால் நடக்கவே முடியாத நிலையில்தான் சந்திரா கோவை மாவட்ட இரண்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். அந்நீதிமானோ அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உத்தரவிடுவதற்குப் பதிலாக, சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டுத் தனது கடமையை ஆற்றியுள்ளார்.

அம்மா போலீஸ்

இந்தச் சம்பவத்தைப் பரபரப்பு செய்தியாக வெளியிட்ட பத்திரிகைகள் சந்திரா போலீசாரால் பாலியல் பலாத்காரப் படுத்தப்பட்டதை திட்டமிட்டே மறைத்துவிட்டன. பாதிக்கப்பட்டிருப்பவர் ஒரு பெண் என்று தெரிந்த பின்னும் போலீசு துறையைக் கையில் வைத்திருக்கும் ‘அம்மா’, விசாரணை நடத்துவோம் என்ற காகித அறிக்கையைக்கூட வெளியிடவில்லை. உயர்நீதி மன்ற உத்தரவுக்குப் பிறகும் சம்பந்தப்பட்ட காக்கிச்சட்டை கிரிமினல்களைப் பணியிடை நீக்கம் செவதற்கும் அவரது அரசு முன்வரவில்லை. “காசு பறிக்கும் நோக்கத்தில்தான் போலீசார் மீது பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன” என போலீசாரின் குற்றங்களை நியாயப்படுத்திய ஜெயாவிடமிருந்து கருணையையும் நியாயத்தையும் எதிர்பார்க்க முடியுமா?

சட்டத்தைக் கடுமையாக்கினால் ஒரு சில நேரங்களில் சாதாரண குற்றவாளிகள் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு. ஆனால், அதிகாரத்தைத் தமது கையில் வைத்துள்ள காக்கிச்சட்டை கிரிமினல்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. பெண்களுக்கு எதிராக போலீசும் இராணுவமும் நடத்தியிருக்கும் சித்திரவதைகளில், பாலியல் வன்முறைகளில் எத்தனை பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரத்தை எடுத்து வைத்துப் பார்த்தால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கும் மேலாக, கடுமையான சூழல்களில் பணியாற்றிவரும் போலீசு, இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்களின் தார்மீக பலம் குலைந்துபோகும் என வாதாடி வரும் துக்ளக் சோ போன்ற பாசிஸ்டுகளை ஆதரிப்பவர்கள், சந்திராவின் இடத்தில் தமது மனைவியையும், விபச்சாரத்தினுள் தள்ளப்பட்ட அந்த ஏழைச் சிறுமிகளின் இடத்தில் தமது மகளையும் வைத்துப் பார்த்தால்தான் போலீசின் யோக்கியதையைப் புரிந்துகொள்ள முடியும்.

– அழகு
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________

கௌரவம்

2

sadண்மையை உரக்கச் சொல்லி நேர்மையா இருக்கிறதுதான் மனிதனுக்கு கௌரவம். ஆனால் இந்த வார்த்தையின் அர்த்தத்தை அவரவர் வசதிக்கு, சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மாதிரி வளைச்சு நெளிச்சு போலி கௌரவமா உருமாறி ‘கௌரவம்’ இன்னைக்கி சித்தரவதைய அனுபவிக்குது.

இந்த போலி கௌரவம் நகரங்கள விட கிராமங்கள்ல இன்னமும் உயிர் நீக்கும் விசயமா இருக்கு. உள்ள இருக்குறது என்னண்ணு தெரியாம கலர் பேப்பரால அலங்கரிச்சும், கமுக்கமா கவர்லையும் மூடி மறைச்சு நகரங்கள்ள நடக்குற விழாக்கள்ள கௌரவம் நாசூக்கா நடபோடுது. ஆனா கிராமங்கள்ள தாம்பூலம் தட்டுவரிசையா சீர்வரிசை செய்முறையின்னு பந்தல் நிறைய பந்தா காட்டுது.

அடுத்த வேள சோத்துக்கு என்ன செய்றது என்ற நெலம இருந்தாலும் சட்டுன்னு ஒரு மணி நேரத்துல 1000 ரூபாய்க்கு மொய் செய்வாங்க. நாலு பேருக்கு முன்னால நாமும் கௌரவத்த காப்பாத்திட்டோம்ங்கற பெருமிதத்தோட ஈரத்துணிய வயித்துல கட்டிகிட்டு குப்புறப்படுத்துகிட்டு அழுவாங்க. இப்படி போலி கௌரவத்த காப்பாத்துனம்முனு வாழ்க்கைய தொலைச்சவங்க பலபேரு.

பல நாளா வீட்டுக்கு குண்டானோ, சட்டியோ அவசியமா தேவைப்பட்டுருக்கும். வீட்டு நெலமையும், கையில உள்ள பணத்தையும் மனசுல வச்சுகிட்டு இந்தா, அந்தான்னு தட்டி கழிச்சு, வாங்க மாட்டாங்க. ஆனா அஞ்சு வட்டிக்கி வாங்கியாவது சபையில செய்ய வேண்டியத செஞ்சு கௌரவத்த காப்பாத்திட்டதா மார்தட்டுவாங்க.

இந்த வறட்டு கௌரவத்த காப்பாத்த பெரும்பாலான குடும்பத்துல பல சிரமங்கள கடந்து வந்த ஏதாவது ஒரு கதை இருக்கும். எனக்குத் தெரிஞ்ச சில பேரோட வாழ்க்கையில இந்த ‘கௌரவம்’ போட்ட ஆட்டத்ததான் இங்க சொல்ல விரும்புறேன்.

ஒரு பொண்ணு தன் அனுபவத்த இப்படி சொன்னா.

“எங்க வீட்டுல ஒரு சோடி காளமாடு நின்னுச்சு. ரெண்டும் வெள்ள வெள்ளேருன்னு இருக்கும். ஒரு மாட்டுக்கு கொஞ்சம் கொம்பு வளச்சுகிட்டு இருக்கும். இன்னெரு மாட்டுக்கு நெத்தியில சின்னதா இந்தியா வரைபடம் போல கருப்பு கலர் கொஞ்சம் இருந்ததால பாக்க அழகா இருக்கும். எங்க வீட்டுக்கு உழவு ஓட்டுனது போக அந்த மாட்ட வச்சு எங்கப்பா கூலிக்கும் ஏரு ஓட்ட போவாரு. நான் பள்ளிக்கூடம் விட்டு வந்த உடனே கொஞ்சம் வைக்கெ (வைக்கோல்) அள்ளி போட்டேன்னா அப்புடியே என் கைய நக்கும். குளத்துல எறக்கி மாட்டுமேல சவாரி செஞ்சேன்னா மறு கரைக்கி அலேக்கா கொண்டு போயி விட்டுடும். எங்க வீட்டுல உள்ள பசுமாடு கன்னுக்குட்டி போட்டு வளந்ததுதான் வளச்ச கொம்பு உள்ள இந்த காள மாடு. சின்னதுலேருந்து வளத்ததால எம் மேல ரோம்ப பாசமா இருக்கும். கடைசி வரைக்கும் இல்லாம பாதியிலேயே வீட்ட விட்டு போயிருச்சு.”

“எங்க குடும்பத்துல நாந்தான் மூத்த பொண்ணு. நான் வயசுக்கு வந்ததுக்கு சடங்கு செய்ய முடியாதுன்னுட்டாரு, எங்க மாமா. ஒரே ஊருக்குள்ள மாமா இருந்தும் நம்ம பொண்ணுக்கு சடங்கு செய்ய மாட்டேன்னு சொல்லி அசிங்கப் படுத்திட்டாங்களேன்னு எங்க அம்மா அழுது பொலம்பிச்சு. அன்னைய நெலமைக்கி எங்க கையில சல்லி காசு கெடையாது.”

“சடங்குக்கு செய்ய மாமா வந்தா என்னென்ன முறை செய்வாங்களோ அதெல்லாம் எம்பிள்ளைக்கி ஒன்னு விடாம நானே செஞ்சு அவங்கள தலை குனிய வைக்கணுன்னு சொல்லி, நின்னது நிக்க அந்த ரெண்டு காளமாட்டையும் வெல பேசி வித்துட்டு சடங்கு செஞ்சாங்க எங்கம்மா. அந்த மாடு இருந்துருந்தா நாங்க பட்ட கஸ்டத்துக்கு கைதாங்கி உதவியிருக்கும். அது போனதால நாங்கதான் தலகுனிஞ்சு நின்னோம்.”.

சடங்கு தந்த சந்தோசத்த விட மாடு விட்டு பிரிஞ்ச சங்கடமும், அதனால பட்ட கஸ்டமும் ரொம்ப அதிகம். பொழப்புக்கு அடிப்படையா இருக்குற மாட்ட வித்து சடங்கு செஞ்சு கௌரவத்த காப்பாத்தி என்னத்த சாதிச்சோங்கற விரக்திதான் அந்த பொண்ணு பேச்சுல இருந்தது.

Wedding in Delhi டிவியில தொடங்கி ஏசி வரையும், பாதி மண்டபம் நெறம்ப பண்டபாத்திரம் வாங்கி வச்சு வாசல்ல காரும் நிறுத்தி வச்சு தகுதிக்கி மீறி ஆடம்பரமா தம் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாங்க ஒரு குடும்பத்துல. கல்யாணம் முடிச்ச ரெண்டாவது மாசம் வாங்குன பொருளுக்கெல்லாம் தவணைப் பணம் கட்டலன்னு கடங்காரன் வீடு தேடி வந்து மானத்த வாங்க ஆரம்பிச்சான். பின்னாடி வர்றத முன்னாடி யோசிக்காம கடன வாங்கிட்டு எப்புடி அடைக்கிறதுன்னு புரியாம கல்யாண பொண்ணுக்கு போட்ட நகைய கமுக்கமா சம்மந்தி வீட்டுக்கு தெரியாம வாங்கி கடன அடைச்சாரு அப்பாக்காரரு. நாலாவது மாசம் புருசன் பிரச்சினைன்னு பொண்ணு வீட்டுக்கு வந்துட்டா. வருசம் ஆறாச்சு இன்னும் இங்கேயேதான் இருக்கா அந்த பொண்ணு.

இந்த அளவு எதுக்கு கஸ்டப்பட்டு கடன வாங்கி ஆடம்பரமா நல்லது கெட்டது செய்யணும். நம்ம அளவுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்ய வேண்டியதுதானே எதுக்கு இந்த வீணாப்போன பந்தா தேவையான்னு அவரு பங்களாளி ஒருத்தர்ட கேட்டதுக்கு

“சாதி, மதம், பாக்காம வருசவம்மெ (செய்முறை) இல்லாம, இந்த ஊருக்குள்ளையும் ஒரு சில கல்யாணம் நடந்துருக்கு. அவங்கல்லாம் கடன் தொல்ல இல்லாம பாக்க சந்தோசமா இருக்காங்க. ஆனா ஊருக்குள்ள நடக்குற மந்த நல்லது கெட்டதுக்கு அந்த குடும்பத்த முக்கியமா கலந்துக்கணுங்கற அக்கறையோட யாரும் கூப்புட்றது கெடையாது.

ஆனா நாம அப்படி செஞ்சா ஊரு என்ன சொல்லும் ‘வக்கத்தப்பய கட்டிக்குடுக்க முடியலன்னா கழுத்த நெரிச்சு கொன்னுட்டு போயிருக்கலாம். யாரு, என்னான்னு தெரியாம தகுதி தராதரம் இல்லாம பொண்ண குடுத்துட்டான்’னு அசிங்கப்படுத்திட்டு போயிருவாங்க. நாலு பேருக்கு முன்ன நாமும் தலநிமுந்து நிக்கணுன்னா ஊரோட ஒத்துத்தானே வாழ வேண்டியிருக்கு.”ன்னு சொன்னாரு.

இந்த வறட்டு கௌரவம், செய்முறை சீர்வரிசையின்னு பணம் சம்மந்தபட்ட ஒன்னா மட்டும் முடிஞ்சுப்போறதில்ல. அதுக்கு ஒருபடி மேலே போயி கௌரவத்துக்காக மனசாட்சியை இரும்பாக்கிக்குது.

சாதிமாறி கலப்பு திருமணம் செஞ்சுகிட்ட ஒரு பொண்ண சேத்துக்காத பெத்தவங்க மனசுக்குள்ள மகளையும் வெளியில கௌரவத்தையும் 25 வருசமா சொமந்துகிட்டு இருந்தாங்க. பிள்ளபாசம் தாங்க முடியாம ஊர்க்காரங்க, சொந்தக்காரங்களுக்கு தெரியாம சில முறை திருட்டுத்தனமா மகள பாத்துட்டு வந்தாங்கலே தவிர ஊரறிய ஏத்துக்கல. ஒருநாள் அனாதையா வெளியூருல செத்துக்கெடந்தாரு அப்பா. சொந்தபந்தங்களுக்கு பயந்துகிட்டு எம்பொண்ணுக்கு சொல்லணும்னு வலியுறுத்த முடியாம, தன் ஆதங்கத்த பலபேரு ஒப்பாரிக்கு நடுவுல சத்தத்தோட சத்தமா வெளிய தெரியாம சொல்லியழுதது அந்தம்மா. வறட்டு கௌரவத்தால பிள்ளையில்லா பொணமா போனாரு அந்த அப்பா.

இவங்க பெத்த பிள்ளைய ஏத்துக்கிட்டா கௌரவம் போயிருன்னு நெனச்சாங்க, அதவிட ஒரு படி மேலே போயி கௌரவத்துக்காக மனுசத்தன்மையே இல்லாம கொலை செஞ்ச குடும்பங்களும் இருக்கு.

ஒரு போலீசு அதிகாரியோட பொண்ணு தாழ்த்தப்பட்ட பையன காதலிச்சு கல்யாணம் பண்ணி வாழ்ந்துகிட்டு இருந்தது. அந்த பொண்ண நயவஞ்சகமா வீட்டுக்கு கூட்டிட்டு வந்து (எந்த முறையில கொன்னாங்கன்னு தெரியாது) கொன்னுட்டாங்க. 50 கிலோமீட்டர் தூரத்துக்கு அந்தண்ட நடந்த இந்த அவலத்த ஏதோ வீர செயலா நெனச்சு பொண்ணோட பொணத்த சொந்த கிராமத்துக்கு தூக்கிட்டு வந்து கௌரவத்த நெல நிறுத்தினான் சட்ட ஒழுங்க பாதுகாக்குற வேலையில இருக்கும் போலீசு அதிகாரி. உணர்வுகள மனசரிஞ்சு ஏத்துக்காம இந்த போலி கௌரவம் மனுசங்கள எந்த எல்லைக்கும் கொண்டு போயிருது.

அறியாத வயசுலேயே கட்டிக்குடுத்து இருவது வயசுக்கெல்லாம் வாழ்க்கையை எழந்துட்டு வந்த ஒரு பொண்ணு தன்ன புரிஞ்ச ஒருத்தர் கூட பழக ஆரம்பிச்சது. இது வீட்டுக்கு தெரிஞ்சு அந்த பொண்ணோட அம்மா கருவாட்டுல வெசத்த கலந்து வறுத்து வச்சுட்டு, “நானும் ஓவ்வயச கடந்து வந்தவதான், இனிமே ஒன்னால ஒழுக்கமா இருக்க முடியாது. கவுரவத்த காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல. கருவாட்டுல வெசம் கலந்து வச்சுருக்கேன் சத்தம் போடாம திண்ணுட்டு, குதுருக்குள்ள எறங்கி உக்காந்துக்க உயிர் போறப்ப கத்துற சத்தம் வெளிய கேக்கும்”. என்றாராம்.

பெத்த பிள்ளைய விட கௌரவம்தான் எனக்கு பெரிசு. ஆனாலும் துடிதுடிச்சு உயிர் போறத கண்கொண்டு பாக்குற கல்நெஞ்சக்காரி நானில்ல என் செரமத்த புரிஞ்சுகிட்டு நீயே சமத்தா நடந்துக்கங்கற தொனியில இருக்கு இந்தம்மா செஞ்ச காரியம்.

மனுசனுக்கு கௌரவங்கறது மத்தவங்கள வாழவச்சு பாக்குறதுலதான் இருக்கு. ஆடு, மாடு கோழி, குஞ்சுன்னு வாய் பேசாத உயிரோட உணர்வ புரிஞ்சு நடந்துக்குற மனுசன் சாதி வெறியில பெத்த பிள்ளைய கொன்னுட்டு மிருகத்த விட கேவலமா நடந்துக்குறாங்க.

இன்னைய நெலமைக்கி உலகத்துல எந்த பொருளெல்லாம் மார்கெட்டுக்கு வந்துருக்கோ அதெல்லாம் வச்சுருந்தாதான் கௌரவம்னு கருதுராங்க. அதுக்காக ஒரு பக்கம் மனுசன் மாடா உழைக்கிறான். இன்னொரு பக்கம் செய்ய கூடாத செயல்களையும் செஞ்சு மனுசுத்தன்மையையே இழக்குறான். இது பணம் சம்பந்தபட்டதா மட்டும் இல்லாம சாதி சடங்கு சம்பர்தாயம்னு நீண்டுகிட்டுப் போயி ஒரு கட்டத்துல மனுசன மனுசனே கொன்னு தீக்குறான்.

கௌரவமா வாழ்றது மனுசனுக்கு அழகு. ஆனா வறட்டு கௌரவத்துக்காக வாழ்றது மனுசனுக்கு இழிவு. இருக்குற நிம்மதிய கெடுத்துட்டு இல்லாத ஒன்னுக்காக வறட்டு கௌரவத்த ஜென்ம சனியனா கட்டிக்கிட்டு தூக்கி சுமக்குற எத்தனையோ பேரு வாழ்க்கைய நரகமா வாழ்ந்துட்டு இருக்காக.

இந்த வறட்டு கௌரவம் உள்ளத உள்ளபடி ஏத்துக்க வைக்காது. நாமளே அறியாம பண்ணின தவற, தவறுன்னு தெரிஞ்சாலும் ஒத்துக்க வைக்காது. பொதிசுமக்கும் கழுதையா வறட்டு கௌரவத்தை வாழ்நாள் பூறா சுமக்கவைக்கும். மொத்தத்துல மனுசன மனுசனா வாழ விடாது.

– சரசம்மா

மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?

3
கோவை கலைவாணி
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்த இடத்தின் கோலம்; (உள்படம்) உயிரிழந்த கலைவாணி.

சென்னையிலுள்ள ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வரும் 30-க்கும் மேற்பட்ட சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு ஒரே சமயத்தில் ஹெச்.சி.வி (ஹெபடைட்டிஸ் சி வைரஸ்) என்ற கொடிய, உயிருக்கே உலைவைக்கக்கூடிய மஞ்சள்காமாலையை விளைவிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. டயாலிசிஸ் கருவியையும், அச்சிகிச்சை நடைபெறும் அறையையும் நோய் தொற்று ஏற்படாதவண்ணம் பாதுகாப்பாக வைக்காததாலேயே அந்த முப்பது பேரையும் மஞ்சள்காமாலையை விளைவிக்கக்கூடிய கிருமி எளிதாகத் தாக்கியிருக்கிறது. மாதத்திற்கு இருமுறையோ அதற்கு மேலோ டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொண்டால்தான் உயிர் பிழைத்திருக்க முடியும் என்ற நிலையில் வாழ்ந்துவரும் இவர்களை, தமது அலட்சியத்தால் மரணத்தில் வாசலில் கொண்டுபோய்த் தள்ளியிருக்கிறது ஸ்டான்லி மருத்துவமனை நிர்வாகம்.

இதனைவிடக் கொடிய சம்பவம் கோவையில் நடந்திருக்கிறது. கோவை மாநகர சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட கலைவாணி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்து போனார். அம்முகாமில் அறுவை சிகிச்சைக்கு உரிய மேசைகளை ஏற்பாடு செய்யாமல், மருத்துவமனையில் நோயாளிகள் அமரும் பெஞ்சுகளை ஒன்றின் மீது ஒன்றாகச் சாய்த்துக் கட்டி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இப்படி அலட்சியமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாலேயே கலைவாணிக்கு வலிப்பு ஏற்பட்டு சுயநினைவையும் இழந்து, நினைவு திரும்பாமலேயே பரிதாபமாக இறந்து போனார்.

ஸ்டேன்லி மருத்துவமனை
வைர்ஸ் சி தொற்றால் பாதிக்கப்பட்ட சிறுநீரகம் செயல் இழந்த நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்ணீரோடு முறையிடுகின்றனர்.

நோயாளிக்கு வலிப்பு நோய் இருந்ததை மறைத்ததால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறி மாநகராட்சியும் மருத்துவர்களும் தப்பிக்க முயன்றதை எதிர்த்து கலைவாணியின் உறவினர்கள் போராட வேண்டி இருந்தது. ஆம் ஆத்மி கட்சியினர் ஹெச்.சி.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அணிதிரட்டி போராடிய பிறகுதான் இது குறித்து விசாரணை நடத்தவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டான்லி மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கவும் மருத்துவமனை நிர்வாகம் ஒத்துக் கொண்டது.

ஒருவேளை இந்த அகால மரணமும் அலட்சியம் நிறைந்த சிகிச்சையும் தனியார் மருத்துவமனைகளில் நடந்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள் அந்நிர்வாகத்தை எதிர்த்து சுண்டுவிரலைக்கூட நீட்டியிருக்க முடியாது. அது மட்டுமல்ல, பணத்தைக் கட்டிய பிறகுதான் கல்யாணியின் பிணத்தைத் தூக்கவிட்டிருப்பார்கள்.

அரசு மருத்துவமனைகளில் மருந்தில்லை, படுக்கை வசதியில்லை, சுத்தம் இல்லை, சுகாதாரமாக இல்லை என ஓராயிரம் குறைபாடுகள் இருப்பது உண்மைதான். ஆனாலும், பிணத்துக்கே வைத்தியம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள் அளவிற்கு அரசு மருத்துவமனைகள் கொள்ளைக்கூடாரமாக மாறிவிடவில்லை. அது மட்டுமின்றி, அரசு மருத்துவமனைகளில் காணப்படும் இத்துணை ‘இல்லை’களுக்கும் மூலகாரணம் மருத்துவ சேவை தனியார்மயமாகி வருவதுதான். இத்தனியார்மயத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை கிடைப்பதை நாம் உத்தரவாதம் செய்ய முடியும்.
__________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
__________________________________

மோடியின் நூறுநாள் ஆட்சி: சவடால்களே சாதனையாக…!

1

“புதிதாகப் பதவியேற்கும் ஒவ்வொரு அரசுக்கும், அதனை விமர்சனம் செய்வதற்கு நூறு நாள் அவகாசம் கொடுப்பார்கள். ஆனால், தனது அரசுக்கு அப்படிபட்ட தேனிலவுக் காலம் தரப்படவில்லை” என்றவாறு புலம்பி வந்தார், பிரதமர் நரேந்திர மோடி. இந்நிலையில் அவர் பதவியேற்று நூறு நாட்கள் கழித்து நடந்த உ.பி., இராசஸ்தான், குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. சந்தித்துள்ள பின்னடைவு, மோடியின் புலம்பலுக்கு மட்டுமல்ல, அவரது வெட்டி ஜம்பத்திற்கும் பதிலடி கொடுப்பதாக அமைந்துவிட்டது.

மோடி பூடான்
பூடான் தலைநகர் திம்புவில் நரேந்திர மோடியை வழியனுப்பக் காத்திருந்த மக்கள், “சீக்கிரம் இடத்தைக் காலிபண்ணுங்க அய்யா” என்கிறார்களோ?

“இச்சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் மோடி அரசாங்கத்தின் மீதான தீர்ப்பு அல்ல” என பா.ஜ.க. வலிந்து நின்று தன்னிலை விளக்கம் அளித்தாலும், உண்மை அவ்வாறு இல்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க., சிவசேனா கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு தொடர்பாக இழுபறி நடந்துவரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற மேலவை உறுப்பினர் ராம்தாஸ் கதம், “பா.ஜ.க. தலைவர்கள் தேர்தல் முடிவுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்; உண்மை நிலவரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தன்னகங்காரம் கொண்ட பா.ஜ.க. தலைவர்களின் மண்டையில் உறைக்கும்படி பேசியிருக்கிறார். அவரது பேச்சு இத்தேர்தல் முடிவுகள் மோடியின் இமேஜில் ஓட்டை போட்டுவிட்டதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.

இத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வைவிட, மோடியின் துதிபாடி வரும் ஊடகங்களைத்தான் வெகுவாகக் கலங்கடித்துவிட்டன. “மக்கள் எதை எதிர்பார்த்து வாக்களித்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து மோடியின் சகாக்கள் செயல்பட வேண்டும்” என புத்திமதி வழங்கியிருக்கிறது, தமிழ் இந்து நாளிதழ். “இது பெரிய தோல்வி அல்ல என்று பா.ஜ.க.வினர் பேசுவது, தோல்வியைவிடப் பெரும் பிரச்சினை” என இடித்துரைக்கிறது துக்ளக் இதழ். கடந்த நூறு நாட்களில் மோடியின் ஒவ்வொரு வெற்றுச் சவடாலையும் அறிவார்ந்த கருத்தாகவும், பாசிச கோமாளித்தனங்களைச் செயலூக்கமிக்க நடவடிக்கைகளாகவும் சித்தரித்துப் பொழிப்புரை எழுதிய ஊடகங்களிடம் இதற்கு அப்பால் நாணயமான பரிசீலனையை எதிர்பார்க்க முடியாது.

“தான் பதவிக்கு வந்த மறுநிமிடமே விலைவாசியைக் கட்டுப்படுத்தி விடுவேன்; ஊழலை ஒழித்துக்கட்டி விடுவேன்; கருப்புப் பணத்தை மீட்டுவிடுவேன்; மக்களுக்கு நல்ல காலத்தைக் கொண்டுவந்துவிடுவேன்” எனத் தனது தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும் சவடால் அடித்தவர் மோடி. ஆனால், எந்தவொரு ஊடகமும் அவரது நூறு நாள் ஆட்சியைக் குறைந்தபட்சம் இந்த நான்கு அம்சங்களைக் கொண்டுகூட மதிப்பிட்டு எழுதவில்லை. இவற்றின் அடிப்படையில் மோடியின் ஆட்சியை மதிப்பிடுபவர்களை, கேள்வி எழுப்புவர்களை, “அவசரக் குடுக்கைகள்” என்றும், “மோடியின் வெற்றியை ஜீரணிக்க முடியாதவர்கள்” என்றும் அவதூறு செய்கிறது, துக்ளக் இதழ் (01.10.2014). ஒருவரது ஆட்சியை மதிப்பிட நூறு நாட்கள் குறைவானது என நடுநிலையாளர்களைப் போலப் பேசும் இவ்வூடகங்கள், இதே நூறு நாட்களில் நடந்த மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள், குறிப்பாக அவரது ஜப்பான் பயணம், அவரது சுதந்திர தின உரை, அவரது ஆசிரியர் தின உரை, அவர் அறிவித்துள்ள ஜன் தன் திட்டம், பாகிஸ்தானுடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்தது, திட்ட கமிசனைக் கலைத்தது என்பவற்றைக் காட்டியே அவரது அரசிற்கு ஒளிவட்டம் கட்டி வருகின்றன.

மோடி ஜப்பானில்
ஜப்பானில் டி.சி.எஸ். நிறுவனத்தைத் தொடங்கி வைக்கும் விழாவில் ஜப்பானின் பாரம்பரிய மேள வாத்தியமான டாய்கோவைத் தட்டி வித்தை காட்டும் மோடி : “என்னமா நடிக்கிறான்யா”!

அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் பிரதமருக்கு, அரசுத் தலைவருக்கு உள்நாட்டு மக்கள் சாலையோரத்தில் நிற்க வைக்கப்பட்டு, வரவேற்பு அளிப்பது சர்வசாதாரணமாக நடக்கக்கூடிய ஒன்றுதான். இதற்கும் அ.தி.மு.க. அமைச்சர்களை வரவேற்க பள்ளிக்கூட மாணவர்கள் கால்கடுக்க நிற்க வைக்கப்படுவதற்கும் பெருத்த வேறுபாடு கிடையாது. ஆனால், மோடி விசயத்திலோ இது உலக அதிசயமாகக் காட்டப்படுகிறது. “ஆயிரக்கணக்கான நேபாள மக்கள் சாலையின் இருபுறங்களிலும் நின்று ஒரு தலைவரை வரவேற்றார்கள் என்றால், எந்த அளவுக்கு மோடியின் நேபாளப் பயணம் அவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது” எனப் புல்லரித்துப் போய் எழுதுகிறது, தினமணி.

வெளிநாடு செல்லும் தலைவர்கள் அந்நாட்டின் பாரம்பரிய ஆடைகளை அணிந்துகொண்டு போஸ் கொடுப்பது, நடனம் ஆடுவதெல்லாம் பார்த்துப்பார்த்துப் புளித்துப் போன ஒன்றுதான். ஆனால், தினகரன் நாளிதழ் இந்த ஊசிப் போன விசயத்தை, “பள்ளிக் குழந்தைகளோடு குழந்தையாக, ஆசிரியராக, மேள வாத்தியக்காரரோடு வாத்தியக்காரராக… என்று சென்ற இடமெல்லாம் மோடி ஜப்பானிய மக்களோடு ஒருவராக மாறிவிட்டார்” என மாய்ந்துபோய் எழுதியிருக்கிறது.

மோடி, பூடான் நாடாளுமன்றத்தில் தப்பும் தவறுமாக ஆற்றிய உரையை, அபாரமானதென்று ஒரு அதிகாரி பாராட்டியவுடனேயே, அப்பாராட்டைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிடுமாறு உத்தரவிட்டிருக்கிறார், அவர் (இந்தியா டுடே, செப்.17). இந்தளவிற்கு சுயதம்பட்டமும் விளம்பர மோகமும் கொண்ட பிரதமரை இந்தியா சந்தித்தது இல்லை. ஊடகங்களோ இந்த விசயத்தில் மோடியின் பி.ஆர்.ஓ. போலவே செயல்படுகின்றன. அவரது சுதந்திர தின உரையை இந்திய சமூகத்தையே புரட்டிப் போடக்கூடிய புரட்சிகரமான சிந்தனையாக ஊடகங்கள் கொண்டாடித் தீர்த்திருப்பதை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

மோடி - ஜன் தன் யோஜனா
ஜன் தன் திட்டத்தைத் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு வங்கிக் கடன் அட்டைகளை வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி.

பள்ளிகளில் கக்கூசு கட்டுவது தொடங்கி திட்ட கமிசனைக் கலைப்பது வரையில்; இந்தியாவை உலகின் தொழிற்துறை கேந்திரமாக உருவாக்குவது தொடங்கி ஏழை இந்தியர்களுக்கு வங்கிக் கணக்கு திறப்பது வரையில்; பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடங்கி பெற்றோர்கள் ஆண் குழந்தைகளைக் கட்டுப்பாட்டோடு வளர்க்க வேண்டிய அவசியம் வரையில் – சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பேசப்பட்ட அனைத்தும் மோடியின் ஆழ்மனதிலிருந்து வெளிவந்தவை எனப் புகழ்ந்துள்ள ஊடகங்கள், மற்ற பிரதமர்களைப் போல மோடி எழுதி வைத்துக் கொண்டு படிக்கவில்லை எனச் சுட்டிக் காட்டியுள்ளன. நடிகர்கள் யாரும் கையில் பேப்பரை வைத்துக்கொண்டு டயலாக் பேசுவதில்லைதானே!

சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்ட கையோடு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள ஜன் தன் திட்டத்தை ரொம்ப ரொம்பப் புதிய, புதுமையான திட்டம் போல மோடியும் ஊடகங்களும் காட்டுகின்றன. பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். நமது காலத்தின் அசகாயப் புளுகன் மோடியும், அவரது கைத்தடிகளான ஊடகங்களும் இந்தப் பழமொழியை அறிந்திருக்கவில்லை போலும். ஏனென்றால், மோடியின் இந்தத் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட “நிதிசார் உள்ளடக்கத்திற்கான தேசியக் குறிக்கோள்” என்ற திட்டத்தின் அப்பட்டமான நகலாகும்.

இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளை ரிசர்வ் வங்கி 2005-ம் ஆண்டில் தொடங்கியது. 2008-ல் இக்குறிக்கோள் தொடர்பாக அமைக்கப்பட்ட ரங்கராஜன் கமிட்டி, அடித்தட்டு மக்கள் எளிதான வகையில் வங்கிக் கணக்கு தொடங்குவது தொடர்பாக நான்கு அம்ச திட்டத்தை அறிவித்தது. அதில் வங்கிக் கணக்கு தொடங்கும் அடித்தட்டு மக்களுக்கு வங்கிகள் மூலம் குறுங்கடன்கள் வழங்கவும், காப்பீடு வழங்குவதற்குமான பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன. இத்திட்டம் 2012-ல் சுவாபிமான் என்ற பெயரில் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை சந்தை பொருளாதாரத்திற்கு ஏற்றபடி சீர்திருத்துவதற்காக அமைக்கப்பட்ட நாச்சிகேத் மோர் கமிட்டி தனது அறிக்கையை கடந்த ஜனவரி 2014-ல் ரிசர்வ் வங்கியிடம் அளித்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் அந்த சுவாபிமான் திட்டம்தான் ஜன் தன் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு, இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது.

சவடால் மோடிபொருளாதார வளர்ச்சியின் பலன்களைப் பெற முடியாமல் அடித்தட்டு மக்களை விலக்கிவைக்கும் நிதி தீண்டாமையை ஒழிக்கும் நோக்கில்தான் ஜன் தன் திட்டத்தை (மக்கள் வளம்) அறிமுகப்படுத்தியிருப்பதாகத் தம்பட்டம் அடித்துவருகிறார், மோடி. ஆனால், இத்திட்டம் அரிசிக்கும், மண்ணெண்ணெக்கும், சமையல் எரிவாயுவுக்கும் வழங்கப்படும் மானியத்தை நுகர்வோருக்கு நேரடியாகப் பணமாக வழங்க வேண்டும் என்ற உலகவங்கியின் கட்டளையை நிறைவேற்றும் நோக்கத்தைக் கொண்டது. மானியத்தைப் பணமாக வழங்குவதற்கு ரேசன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பமும் வங்கிக் கணக்கு வைத்திருப்பது அவசியமாகும். இன்று வங்கிக் கணக்கு, நாளை நேரடி மானிய பட்டுவாடா, அதன் பிறகு மானியக் குறைப்பு, ஒழிப்பு என்பதுதான் ஆளுங்கும்பலின் நோக்கம். மன்மோகன் சிங் அரசு, உங்கள் பணம் உங்கள் கையில் என்ற கவர்ச்சிகரமான பெயரில் இதனை நடைமுறைப்படுத்த முயன்றது. அதைத்தான் நிதி தீண்டாமை ஒழிப்பு என்ற பெயர் மாற்றி ரிலீஸ் செய்திருக்கிறார், மோடி.

திட்ட கமிசனை ஒழிப்பது என்ற மோடியின் அறிவிப்பும்கூட அவரது சொந்த சரக்கல்ல. அது பன்னாட்டு ஏகபோக முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் விருப்பம். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் தொடங்கப்பட்டதென்றால், முடிவை மோடி அறிவித்திருக்கிறார். திட்ட கமிசனை நேரு உருவாக்கினார் என்பதைத் தாண்டி அதன் மேல் காங்கிரசுக்கு எந்தவிதமான மதிப்பும் இருந்தது கிடையாது. நேருவின் பேரனும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி திட்ட கமிசனை கோமாளிகளின் கூடாரம் என்று நையாண்டி செய்ததும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உலக வங்கியின் கையாள் மாண்டேக் சிங் அலுவாலியா திட்ட கமிசனின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதுமே இதற்கு சான்று. தனியார்மய-தாராளமயக் கட்டத்தில் திட்ட கமிசனின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வதற்காக அஜய் சிபர் தலைமையில் சுதந்திர மதிப்பீட்டு அலுவலகத்தையும்; திட்ட கமிசனைச் சீர்திருத்தும் பரிந்துரைகளை உருவாக்குவதற்காகத் திட்ட கமிசனின் முன்னாள் உறுப்பினராக அருண் மைரா என்பவர் தலைமையில் கமிட்டி ஒன்றையும் அமைத்திருந்தது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

காங்கிரசு ஆட்சியில் நியமிக்கப்பட்ட அஜய் சிபர், “திட்ட கமிசனைக் கலைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு மோடி அரசிடம் அறிக்கை அளித்திருக்கிறார். மேலும், மோடி பிரதமராகப் பதவியேற்ற சமயத்தில் திட்ட கமிசனைக் கலைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, ஐ.நா. மன்றம் மோடி அரசுக்கு அறிவிக்கையொன்றை அளித்திருந்தது. இந்தப் பின்னணியெல்லாம் மறைக்கப்பட்டு, மோடி தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் திட்ட கமிசனைக் கலைக்கும் புரட்சிகரமான முடிவை எடுத்தது போல பில்ட்-அப் கொடுக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே, தொழிற்சாலைகளால் மாசுபடுத்தப்பட்ட நகரங்களுள் கிட்டத்தட்ட முதலிடத்தை வகிப்பது குஜராத்திலுள்ள வாபி தொழிற்பேட்டையாகும். இனியும் தாங்காது என்ற நிலையில்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் அத்தொழிற்பேட்டையில் புதிதாகத் தொழிற்சாலைகளை அமைப்பதைத் தடை செய்து உத்தரவு பிறப்பித்தது, சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம். மோடி பிரதமராகப் பதவியேற்றவுடனேயே முதல் காரியமாக இத்தடையுத்தரவைத் திரும்பப் பெறச் செய்தார்.

அருண் மைரா
திட்ட கமிசனை சீர்திருத்துவதற்கான பரிந்துரைகளை வரையறுப்பதற்கு மன்மோகன் சிங் அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் திட்ட கமிசன் உறுப்பினர் அருண் மைரா.

சுற்றுப்புறச் சூழல் என்பதைக் காட்டி எந்தவொரு பெருந்தொழில் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை விழுந்துவிடக் கூடாது என்பதற்காகவே காடுகளை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை மாற்றியமைத்திருக்கிறது, மோடி அரசு. வன விலங்கு சரணாலயங்களிலிருந்து பத்து கிலோமீட்டருக்கு அப்பால்தான் தொழிற்சாலைகள் அமைய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வண்ணம், அந்த வரம்பை ஐந்து கிலோமீட்டர் எனச் சட்டப்படியே மாற்றிவிட்டது, மோடி அரசு. இப்படிச் சுற்றுப்புறச் சூழலைப் பலியிட்டாவது பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க வேண்டும் என்ற வெறிகொண்டு அலையும் மோடி, தனது சுதந்திர தின உரையில் சுற்றுப்புறச் சூழலில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் தொழில்களை நடத்துமாறு அறைகூவல் விடுத்திருப்பது கடைந்தெடுக்கப்பட்ட பித்தலாட்டத்தனம்.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபொழுது, தனக்கு நெருக்கமாக இருந்த ஒரு பெண்ணின் நடவடிக்கைகளை உளவுத் துறையை ஏவிக் கண்காணிக்கும் கீழ்த்தரமான வேலையைச் செய்துவந்தார். இதற்கு குஜராத்தின் உள்துறை அமைச்சகமே கேடாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த உளவு வேலை அம்பலமாகி நாறியவுடன், அப்பெண்ணின் தந்தைதான் தனது மகளைக் கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டதாக மோசடியான ஆதாரங்கள் உருவாக்கப்பட்டன. இப்படிபட்ட கடந்த காலத்தைக் கொண்டிருக்கும் மோடி, பெண்கள் மீதான வன்முறைகளைத் தடுக்கப் பெற்றோர்கள் தங்களது ஆண் மகன்களையும் கண்காணிக்க வேண்டும் எனக் கூசாமல் அறிவுரை சொல்கிறார்.

உ.பி.யில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, லவ்-ஜிகாத் என்ற இந்து மதவெறி பூதத்தை மீண்டும் ஜாடிக்குள்ளிலிருந்து வெளியே எடுத்துவிட்டது, ஆர்.எஸ்.எஸ். கும்பல். பொய்யும் புனைசுருட்டும் நிறைந்த இந்த மதவெறி பிரச்சாரத்திற்கு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரான ஆதித்யநாத் தலைமை தாங்கினார். இதையெல்லாம் கண்டும் காணாது நடந்துகொண்ட மோடி, சாதி-மத மோதல்களுக்குப் பத்தாண்டு காலம் தடை போட வேண்டும் என யோக்கிய சிகாமணி போல ஊருக்குப் உபதேசிக்கிறார்.

கார்ப்பரேட் முதலாளித்துவ வர்க்கத்தின் விருப்பத்திற்கிணங்க புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் மோடி, விவசாயிகளின் துயரங்கள் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கிறார். இப்படிப்பட்ட மோசடிகளையும் உள்முரண்பாடுகளையும் கொண்டதுதான் மோடியின் சுதந்திர தின உரை. அவரது ஆழ்மனது சூதும் கபடத்தனமும் நிறைந்தது என்பதற்கு இந்த சுதந்திர தின உரை இன்னொரு சான்று.

விலைவாசி உயர்வு, ஊழல், கருப்புப் பணம், தொழில் நசிவு, வேலையில்லாத் திண்டாட்டம் என்பதையெல்லாம் காட்டித்தான் காங்கிரசு ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியாக முத்திரை குத்தியது, பா.ஜ.க. இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மோடியிடம் என்ன பொருளாதாரத் திட்டம், கொள்கை இருக்கிறது? எந்த மேடையிலாவது மாற்றுக்களைப் பற்றி பேசியிருக்கிறாரா அவர்? இப்பிரச்சினைகளுக்கெல்லாம் மூல காரணமான தனியார்மயம்-தாராளமயத்தை இன்னும் தீவிரமாகவும், தடையின்றியும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் நல்ல நாட்களை உருவாக்கிவிடலாம் என நம்பச் சொல்கிறார்.

அஜய் சிப்பர்
திட்ட கமிசனின் பொருத்தப்பாடு பற்றி ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட சுதந்திர மதிப்பீட்டு அலுவலகத்தின் தலைவர் அஜய் சிப்பர்

கொள்கையில் மட்டுமல்ல, நடைமுறையிலும் மோடி அரசை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மறுஅவதாரம் என்றுதான் சொல்ல முடியும். ரயில் கட்டண உயர்வு தொடங்கி காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டுக்கான வரம்பை அதிகரித்தது வரையில், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடங்கி ஆதார் அட்டை திட்டம் வரையில்; ஈழம் மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை தொடங்கி தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயைக் குறைத்தது வரையில் – முந்தைய காங்கிரசு கூட்டணி அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும்தான் மோடி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அப்படியென்றால் முந்தைய காங்கிரசு கேடிகளுக்கும் மோடிக்கும் வேறுபாடே இல்லை எனக் கூறிவிட முடியுமா என்ற கேள்வி எழலாம்.

பன்னாட்டு ஏகபோக முதலாளிகளுக்கும், இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் விரைந்து சேவை செய்வது என்ற நோக்கில் அதிகாரம் முழுவதையும் பிரதமர் அலுவலகத்தில் குவித்துக் கொண்டிருப்பது; எட்டு சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகருவதற்காக அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுக்களையும் திட்ட கமிசனையும் அடுத்தடுத்து கலைத்தது, ஜப்பான் முதலீடுகளை விரைந்து அனுமதிக்க தனிச் சாளரம் திறப்பது, மூலதனத்தின் கட்டுப்பாடற்ற கொள்ளைக்காகச் சுற்றுப்புறச் சூழல் சட்டங்களையும் தொழிலாளர் நலச் சட்டங்களையும் திருத்த முனைந்திருப்பது என்றவாறு வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், இந்த வேறுபாடுகள் விலைவாசி உயர்வாலும் விவசாய நசிவாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் புழுங்கிக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான நல்ல காலத்தையும் கொண்டுவந்துவிடாது.

– குப்பன்
__________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
__________________________________

அம்மா மட்டுமா ஊழல்… ஊடக மாமாக்களின் கட்டுரை காவியங்கள்

20

சொத்துக்குவிப்பு வழக்கில் – தண்டனைக் கைதியாக ஜெயலலிதா அறிவிக்கப்பட்ட அடுத்த கணத்தில் ஒரு அ.தி.மு.க.காரர் “என்னமோ, விசயம் தெரியாம அம்மா மேல கைய வச்சிட்டானுங்க, என்னன்ன கதி ஆவப் போவுது, பாருங்க, இன்னமதான் கதையே இருக்கு!” என்றார் சஸ்பென்சாக.

அம்மா போஸ்டர்
“என்னமோ, விசயம் தெரியாம அம்மா மேல கைய வச்சிட்டானுங்க, என்னன்ன கதி ஆவப் போவுது, பாருங்க, இன்னமதான் கதையே இருக்கு!”

அது கட்சி வட்டத்தைத் தாண்டி தினமணி வைத்தி, தினத்தந்தி பாண்டே, தமிழ் இந்து சமஸ், சிற்பி பாலசுப்ரமணியன் என கதிகலக்கும் என கனவிலும் நினைக்கவில்லை! தெய்வமாயிற்றே! சந்து முனீஸ்வரன் சமஸ் முதல் ஜகஜ்ஜால கில்லாடி வைத்தி, பாதாள பைரவர் சிற்பி வரை அகிலாண்டேஸ்வரி, அகிலமே வியக்கும் ஊழல்புரீஸ்வரிக்குள் அடக்கம் என்பதை அம்மாவின் கைது காட்டிவிட்டது.

“தெய்வத்துக்கே தண்டனையா?” என்று போஸ்டர் அடித்து பொங்கிய ரத்தத்தின் ரத்தங்களும், “இடும்பைக்கு இடும்பை படுப்பர்!” என்ற வள்ளுவர் குறளை மாமிக்கு ஒட்டியாணமாக்கிய வைத்தியும், “அன்று நகைத்தாளடா – என் மாமனே அவளை என் ஆளாக்கினாய்” என்ற பாரதியின் பாஞ்சாலி சபதத்தை அம்மாவுக்கு பதவுரையாக்கிய சிற்பியும் ஒரே சாம்பிராணியின் இரு மணங்கள்.

“டேய்! அம்மாவ வெளியுல விடுங்கடா!” என்று சுற்றும் உருட்டுக்கட்டைகளின் உணர்ச்சிகளுக்கும், “மெகா! கூட்டணி அமைத்தாலும் அம்மாவை வெல்ல முடியாது!” என்று கொக்கரிக்கும் அறிவாளிக் கட்டைகளுக்கும் ஒரே புத்திதான்! என்னே சக்தி! அம்மாவை யார் நினைத்தாலும் கட்டைதான்!

திரைத்துறை ஆதரவு
“மெகா! கூட்டணி அமைத்தாலும் அம்மாவை வெல்ல முடியாது!” என்று கொக்கரிக்கும் அறிவாளிக் கட்டைகளுக்கும் ஒரே புத்திதான்

தூணில் இருந்தாலும், துரும்பில் இருந்தாலும், சிறையில் இருந்தாலும் தெய்வம் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருப்பதால் தன்னை எந்த அளவுக்கு வருத்திக் காட்டுகிறோமோ, அந்த அளவு தன் வருங்காலத்துக்கு நல்லது! என்பதை ஊழலின் பக்தர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்! பேருந்து எரிப்பு, கடைகள் உடைப்பு, தீக்குளிப்பு சீன்கள், தீச்சட்டி, தீமிதி, அலகு குத்தல், மண்சோறு என எவ்வளவு சுதி ஏற்றினாலும் தெய்வத்துக்காக ஒரு டெங்கு கொசு கூட சாகாத போது வேறு என்னதான் செய்வது? கூலிக்கு ஒப்பாரியும் கட்டுப்படி ஆகாததால், தமிழகத்தையே மொட்டை அடித்த தாய்க்கு, தன்னால் ஆன காணிக்கையாக தலைக்கு ஒரு மொட்டை போட்டு பெயிலுக்கு மயிர்நீத்த கவரிமான்களாக கட்சிக்காரர்கள் உலா வருகிறார்கள்!

அம்மா லேப்டாப், அம்மா சைக்கிள், அம்மா உணவகம் என கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் தலையில் ‘அம்மா சிந்தனை’யை இறக்கிவிடும் வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் அ.தி.மு.க. அல்லக்கைகள் மட்டுமல்ல, அதையும் தாண்டிய அறிவாளிகளும் நம்மிடம் பரப்பும் மர்மக்காய்ச்சல் “யார்தான் யோக்கியன்? யார்தான் ஊழல் செய்யல?”

அரசியலைப் பகுத்தறிய வாய்ப்பில்லாத மக்கள், அரசியலின் வர்க்கத்தன்மையை பரிசீலிக்க வழியின்றி அன்றாட வாழ்க்கையில் நெருக்கப்படும் மக்களின் இரக்க உணர்ச்சியையும் சுரண்டிக்கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் அ.தி.மு.க. திருடர்களைவிட கொடியவர்கள் தங்களை கட்சிசார்பற்றவர்களாகவும், வர்க்கச் சார்பற்றவர்களாகவும் காட்டிக்கொள்ளும் ஊடக, பத்திரிகை உலக பிழைப்புவாதிகள்.

வைத்தி - ஜெயா
திருடர்களைவிட கொடியவர்கள் தங்களை கட்சிசார்பற்றவர்களாகவும், வர்க்கச் சார்பற்றவர்களாகவும் காட்டிக்கொள்ளும் ஊடக, பத்திரிகை உலக பிழைப்புவாதிகள்.

“மக்களின் இரக்க உணர்ச்சியை சுரண்டுவதைவிட கேவலமான சுரண்டல் வேறில்லை!” என்று கார்ல்மார்க்ஸ் குறிப்பிட்டது போல, இந்தக் கேவலமான கேடிகளுக்கு கவுரமான பெயர் பத்திரிகையாளர்கள், சமூக விமர்சகர்கள், அறிஞர்கள் என்றால் கூட்டத்தில் செயின் திருடனுக்கே கோபம் வரத்தான் செய்யும்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் அமலானபிறகு, அதனால் பயன்பெற்ற வர்க்கங்கள் “அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா!” என ஊழலில் சமத்துவம் பேச ஆரம்பித்துவிட்டது. கருணாநிதி குடும்பம் யோக்கியமா? 2ஜி என்ன? என இன்னொரு ஊழலை முன்னிறுத்தி மடக்குப்பிடி போடுவதன் மூலம் இவர்கள் சொல்லவரும் கருத்து என்ன? எதார்த்தத்தில் விஸ்வரூப வாகிணி ஜெயலலிதாவின் கொள்ளை அடிப்படையும் சகஜமாக எடுத்துவிட்டு போங்க! என்பதுதான் இவர்களின் ஊழல் சரக்கும்! இந்தக் கருத்து ஊழலை மக்கள் மீதும் திணிப்பதில் அ.தி.மு.க. காரனை விட அயோக்கியனாக களமிறங்கி வேலை செய்கிறார்கள் ஊடகப்பிறவிகள்.

“எங்க அம்மா மட்டுந்தான் குற்றம் செஞ்சாங்களா? திட்டமிட்ட சதி!” என்று டீக்கடையில் பேசும் அ.தி.மு.க. பங்காளியின் குரல்தான், அங்கங்கே தொலைக்காட்சியில் உட்கார்ந்து கொண்டு விவாதிக்கும் அறிவுலக விற்பன்னர்களின் குரல்களிலும் எதிரொலிக்கிறது.

நீதிபதியை அர்ச்சிக்கும் போஸ்டர்
“எங்க அம்மா மட்டுந்தான் குற்றம் செஞ்சாங்களா? திட்டமிட்ட சதி!” என்று டீக்கடையில் பேசும் அ.தி.மு.க. பங்காளியின் குரல்தான், அங்கங்கே தொலைக்காட்சியில் உட்கார்ந்து கொண்டு விவாதிக்கும் அறிவுலக விற்பன்னர்களின் குரல்களிலும் எதிரொலிக்கிறது.

“கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா என்று அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அம்பானி, டாடா, அதிகாரிகள், கலெக்டர், தாசில்தார்கள், கார்ப்பரேட் முதலாளிகள் போன்ற ஊழல் கூட்டாளிகளையும் கைது செய்! சிறையில் அடை! சொத்துக்களை பறிமுதல் செய்!” என்ற நியாயமான தர்க்கமுடிவிற்கு வரவேண்டியவர்கள், எந்த சமூகப் பிரச்சனைகளையும் விவாதம் என்ற பெயரில் நீர்த்துப்போகச்செய்வது, அதன் அடிப்படையான விசயத்தை தொடாமலேயே திட்டமிட்டு திசை விலக்குவது என்ற நவரசங்களிலும் ஓட்டுப்பொறுக்கும் அரசியல்வாதிகளைவிட அபாயகரமானவர்கள் இந்தவகை ஊடக ஆதாயக் கும்பல்கள். கூலிக்கு ஒப்பாரி வைக்கும் கும்பலைவிட கொடியவர்கள் கூலிக்கு நிகழ்ச்சி நடத்தும் ஊடக வாடகை ஜென்மங்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கு என்று சொன்னால் கூட தெய்வகுத்தமாகி விடும் என்று ‘சொத்துவழக்கு’ என்ற சொல்லாட்சியால் வாளைச் சுழற்றும் ‘ஆயுத எழுத்து’ தினத்தந்தி பாண்டேவை, தினமணி வைத்தியின் எழுத்தாயுதம் எப்படி விஞ்சுகிறது பாருங்கள், “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை அவர் மீது பரவலாக அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, பெருமளவு கோபத்தையோ, வெறுப்பையோ ஏற்படுத்திவிடவில்லை என்பதுதான் யதார்த்த நிலைமை… ( 29.9.2014, தினமணி தலையங்கம்)”, ‘கொள்ளை ஆசை’ என்பது இதுதான் போலும்!

ஊரறிந்த ஊழலை குப்புற விழுந்து கும்பிடும் இந்த ‘ஜெயாசனத்திற்குப்’ பேர் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையாம்! எப்போதும் இழவு விழந்த மாதிரியே முகத்தை வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கஷ்டம் வைத்தி மாமாவுக்கு இல்லை, நாலு வார்த்தையை சுழட்டிவிட்டே நல்லபெயர் வாங்கும் தந்திரம் அவாளுக்கே உசிதம்!

ஜெயலலிதாவுக்கு சாமரம்
ஊரறிந்த ஊழலை குப்புற விழுந்து கும்பிடும் இந்த ‘ஜெயாசனத்திற்குப்’ பேர் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையாம்!

அப்துல்கலாமைப் போல அடிக்கடி பள்ளி கூடத்து பிள்ளைகளிடம் போய் அறம் ஒழுக்கம், என்று அலப்பறை கொடுக்கும் பத்திரிகா தர்மத்தின் பதியின் குரலை மேலும் கேளுங்கள்

“ஜெயலலிதாவுக்கு எப்போதும் ஒரு ராசியுண்டு, மிகப்பெரிய வெற்றிக்குப்பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்துமுறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை”.

ஜெயாவின் பரம்பரை ஜோசியரை விஞ்சிவிட்டது வைத்தியின் அருள் வாக்கு! சிந்தனைக்கான வாழ்க்கை மறுக்கப்பட்டிருக்கும் ஒரு அ.தி.மு.க. கூலியின் மண்சோறு வேண்டுதலுக்கும் கீழே இருக்கிறது நடுநிலை வேடமிடும் பத்திரிகையாளனின் பிழைப்பு! தெரிந்தே ஊழலுக்கு தீபதூபம் காட்டும் இந்த முதுகெலும்பு அற்ற வர்க்கம்தான் அரசியலை சாக்கடை என்றும், “ஐயம் நாட் இண்ட்ரஸ்டட் இன் பொலிட்டிக்ஸ்” என்றும் வசனம் பேசுவதும், வாய்ப்புக்கு காத்திருக்கும் ஊழலின் இன்னொரு வகைமாதிரிதான்.

ட்சி அரசியல் எல்லாம் ஊழல், பக்கச்சார்புடையது, நடுநிலை சிந்தனையாளர்கள், நடுவாந்திர ஜனநாயகவாதிகள் என்று பாவனை காட்டும் சமூக விமர்சகர்களையும் ஜெயாவின் ஊழல் வழக்கும், தண்டனையும் சேர்த்தே அம்பலமாக்குகிறது. தமிழ் இந்துவில் கட்டுரை எழுதும் சமஸ், ஜெயாவின் தீர்ப்பை ஒட்டி “எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?” என்று தெய்வத்திடம் வேறு மாதிரி வருத்திக்காட்டுகிறார்.

கையும் களவுமாக பிடிபட்ட திருடனை பரணில் உட்கார வைத்துவிட்டு, திரண்டு வந்த மக்களிடம் நீங்கள் யோக்கியமா? என திகைக்கவைக்கும் தத்துவ விசாரணையில் நாஞ்சில் சம்பத்தையே அணுக்கத் தொண்டராக்கிவிட்டார் சமஸ்! தனது கட்டுரையில், ஊழலை ஒரு சமூகப் பிரச்சனையாக நீட்டி முழக்கி மக்களின் மனசாட்சியை உலுக்கும் சமஸ், கடைசிவரை கண்ணுக்கு முன்னே எழுந்தருளியிருக்கும் ஊழல்தெய்வம் ஜெயலலிதாவின் பொது அமைதிக்கு பங்கம் வராமல், பொதுமக்கள்தான் இந்த நிலைக்கு காரணம் என்று அறச்சீற்றத்தை அம்மாவுக்கு அடக்கமாக இறக்கி வைப்பதில் இந்துவின் எடைக்கு எடை சமஸ் கச்சிதமாக பொருந்துகிறார்.

இந்து ராம் - ஜெயா
அறச்சீற்றத்தை அம்மாவுக்கு அடக்கமாக இறக்கி வைப்பதில் இந்துவின் எடைக்கு எடை சமஸ் கச்சிதமாக பொருந்துகிறார்.

கட்சி அரசியல், பக்கச்சார்புக்கெல்லாம் அப்பாற்பட்ட அறிவாளிகளாக காட்டிக்கொள்ளும் வகையினரை ஒத்த சமஸ் இவைகளோடு தனது வர்க்கச் சார்பையும் காட்டிக்கொண்டதற்கு நாம் கட்டாயம் நன்றி சொல்லத்தான் வேண்டும். நடப்பில் ஜெயாவின் ஊழல் தண்டனையை ஒட்டி கட்டுரை எழுத வந்தவர், முத்தாய்ப்பாக, இந்த கடையடைப்பு, கலவரச் சூழலில் அதிக கட்டணம் கேட்ட ஆட்டோக்காரர், பால் கவரை கூடுதல் விலைக்கு விற்ற கடைக்காரர் இவர்களை குறிப்பாக அடையாளப்படுத்தி இப்படி இருக்கும் நாட்டில், இதற்கான அடிப்படைகளாய் விளங்கும் மக்களுக்கு என்ன தண்டனை? என்று உழைக்கும் மக்கள்தான் முக்கிய குற்றவாளிகள் போல் தீர்ப்பை எழுதுகிறார் ஆளும்வர்க்க சேஷ்ட குமாரன்!

இவருக்குத் தெரியாதா? ஊழலின் ஊற்றுக் கண்கள், அதை உருவாக்கும் ஆளும் வர்க்க, அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், கார்ப்பரேட் முதலாளிகள் என்பது. இவர்கள் அடிபணியும் இந்த மொத்த முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பே ஊழலில் புழுத்து நாறும்போது, மக்களையும் ஊழல்படுத்தி வழிக்கு கொண்டுவரும் இந்த அரசுக் கட்டமைப்பில், கடைக்கோடியில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தை சமப்படுத்துவதன் மூலம், “அம்மா மட்டுமா ஊழல்” என்ற அ.தி.மு.க. கழிசடைகளின் சித்தாந்த வார்ப்புதான், பக்கா வர்க்கச்சார்புள்ள சமஸ்சும் என்பதை புரியவைத்த தெய்வத்தின் பராக்கிரமமே பராக்கிரமம்!

மஸ் போன்ற சமர்த்தான சமூக விமர்சன கர்த்தாக்களின் கதியே இப்படி எனில், சகல வழிகளிலும் நுண்மாண் நுண்புலத்தோடு ஆராய்ந்து பிழைக்கத்தெரிந்த அறிஞர்களின் வல்லமையை நம்மால் அளக்கவே முடியாது, இந்தக் கூட்டத்தில் அடக்கவே முடியாமல் ஜெயாவின் கைதுக்காக தினமணியின் நடுபக்கத்தில் அங்கப்பிரதட்சனம் செய்த அறிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்.

அண்ணன் சாதாரண ஆள் இல்லை! கொங்கு மண்ணின் தங்கத் தமிழறிஞர், வானம்பாடி இயக்கத்தின் முன் தேதியிட்ட முற்போக்காளர்! கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம், சிறு தொழிலாளர்கள் போராட்டம், விசைத்தறி தொழிலாளர் போராட்டம் எதிலுமே பொத்துக்கொண்டு வராத அறிஞரின் ‘சிந்தனை அலைகள்’ ஜெயலலிதாவின் கைது ‘சிந்தனை அலைகளை’ எழுப்பியுள்ளதாக சீற்றம் கொள்கிறார்.

குற்றமும் தண்டனையும்” என்ற தஸ்தோவ்ஸ்கியின் நாவல் தலைப்பையே அம்மாவின் கைது பற்றிய தனது கட்டுரைக்குச் (1.10.2014, தினமணி) சூட்டுகிறார் எனில் அறிஞரின் சர்வதேச அறிவின் ஆழ, அகலத்தை ஆராய்ந்து நம்மால் மீளவும் முடியுமோ? “கர்நாடக நீதி மன்றத்தின் தீர்ப்பு, நடுநிலையாளர்களையும், சிந்தனையாளர்களையும் மிகுந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது என்பது தெளிவு” என்று நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறார் சிற்பி.

சோவுடன் ஜெயா
“கர்நாடக நீதி மன்றத்தின் தீர்ப்பு, நடுநிலையாளர்களையும், சிந்தனையாளர்களையும் மிகுந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது என்பது தெளிவு”

குவார்ட்டரை ஏத்திக்கொண்டு ரோட்டுக்கடையை எத்தி உதைக்கும் அ.தி.மு.க. போதைகளே மக்களை அதிர்ச்சிக்கும், சிந்தனைக்கும் உள்ளாக்கும் போது, மெத்தப்படித்த சிற்பியால் படிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க முடியாதா என்ன? அதுசரி இந்த நடுநிலையாளர்கள், சிந்தனையாளர்களை எங்கே போய் தேடுவது டாஸ்மாக் கடையிலா? தேவையில்லை நாங்களே நடமாடும் சரக்குதான் என்பதுதான் சிற்பியின் அற்புதம்!

எந்தவிதமான முறைமைகளும் நீதிநெறி வழி முறைகளையும் பின்பற்றாமல் சொத்துக்களை குவித்த ஜெயலலிதாவிற்கு “வெறும் சட்டங்களின் இரக்கமற்ற சிட்டகங்களைத் தாண்டி கருணையும் இயற்கை நீதியும் கலந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும்…” என்றும் மனுதர்ம நீதியை சுட்டிக்காட்டி ‘வருண வேறுபாடுகளுக்கு ஏற்ப நியாயங்களும் வகுப்பிட்டிருந்தன’ என்று அளந்துகொட்டி ஆகவே வரலாற்று வழியில் பார்ப்பனரை தண்டிக்கக் கூடாது, தண்டனையும் கருணையாக இருக்கவேண்டும் என்பதுதான் இந்த கருப்புப் பார்ப்பனரின் கடைந்தெடுத்த கருத்துப் பொழிவு!

மக்களுக்காகப் போராடுபவர்களை பொய் வழக்கில் கைது செய்வது, முதல் முறையாகவே குண்டர் சட்டத்தை பிரயோகிப்பது, விசாரணைக் கைதியாகவே சிறைக் கொட்டடியில் அடைப்பது என்பதை அமல்படுத்தும் அம்மாவின் ஆட்சிக்கு எதிராக எந்த அற உணர்ச்சியும் தோலில் உறைக்காத அறிஞருக்கு, கேள்வி கேட்க ஒரு நாளாவது மனிதனாக மாறாத மா-சிந்தனையாளருக்கு ஊழல் வழக்கில் சட்ட, விசாரணை, நீதி பரிபாலன அடிப்படையில் தண்டிக்கப்பட்டிருக்கும் அம்மாவுக்காக மட்டும் அற உணர்வு வருகிறது எனில் இது வர்க்கப் பாசமா? வாழ்நலன் யோக்கியதையா? இல்லை வருங்கால வைப்பு நீதியா? என்பதெல்லாம் பட்டிமன்றக் கேள்விகள்.

தமிழைப் பேசிப் பிழைத்த இடங்களில் எல்லாம் “அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதும்” என்ற சிலப்பதிகார வசனங்களைப் பேசி கைதட்டல்கள் வாங்குவது, ஒரு ஊழல் கொள்ளைக் கூட்டத்துக்காக பாஞ்சாலிசபதம் போடுவது, என்று படம் காட்டுவதில், இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆரையே விஞ்சிவிட்டார் இந்த நாடோடி மன்னன்!

ஊழல் செய்தது உண்டா? இல்லையா? என்ற எதார்த்தக் கேள்விக்கு முன் ஜெயலலிதாவின் கட் அவுட்டை நிற்க வைக்க முடியாது என்று தெரிந்து கொண்ட இந்த அறிஞர், முதலில் அதற்கு பதில் சொல்லாமல், “தேர்தல்களத்தில் அடுக்கடுக்காக அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்றதால், காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனையிலும், ஈழத்தமிழர் பிரச்சனையிலும் தமிழகத்தில் போராளித் தன்மை மிக்கத் தலைவராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டதால், ராஜபக்சேவும் குதூகலிக்கும் வண்ணம் கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது என்று ஜெயலலிதாவின் சீலைத்துணியில் முளைகட்டிய தானியமாக முளைத்து வெளிக்கிளம்புகிறார்.

jaya-god-page

“அறுபத்தாறு கோடி ரூபாய் அளவுக்கு மீறிச் சம்பாதித்தார்கள், என்று குற்றம் சாட்டி, நூறு கோடிரூபாய் அபராதம், நான்கு ஆண்டு சிறை, ஆறாண்டு தேர்தல் தடை என்ற கொடூரமான தீர்ப்பை – ஒரு அரசியல் தலைவரின் எதிர்கால அழித்தொழிப்பை நல்ல உள்ளங்கள் நிச்சயமாக ஏற்காது” என்று தமிழகத்தையே தழு தழுக்க வைக்கிறார் அறிஞர்.

அம்மா குவார்டருக்கு சைடிஸ்சாக ஒரு ஊறுகாய் மட்டையை தட்டி விடுவது போல கடைசியாக “ஊழல் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும், ஆனால் தண்டனை டிராஸ்கியின் படுகொலை போல அரசியல் பழிவாங்கலாக தாழ்ந்து போகலாகாது” என்று ஒரு மட்டரகமான பிட்டு வேறு! போகிற போக்கில் தனது முட்டாள்தனத்தின் மேதமையைக் காட்ட ‘டிராஸ்கி படுகொலை’ என்று அவதூறை அள்ளி வீசி அம்மாவின் உண்மை விசுவாசியாக சர்வதேச போர்ஜரி வேலை வேறு!

ஊரறிந்த கொள்ளைக்கும்பலுக்கு உரையாசிரியான பிறகு சிற்பிக்கு செதுக்கத் தெரியாமலா போய்விடும்! பாசிச தாய்க்கு பல்லக்கு தூக்கும் பட்டத்துக் கூலிக்கு சோசலிச அரசை போகிற போக்கில் புரணி பேசுவதை விட பேசாமல் அம்மா ஒப்பாரிக்கு ஆள்பிடிக்க போகலாம்!

ஒரு வட்டச் செயலாளராக இல்லாமயே என்னமா பிட்டப் போடுறான்யா, என்று அதிர்ச்சியடையும் அ.தி.மு.க. தொண்டனை விஞ்சத் துடிக்கும் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களே நீங்கள் அம்மாவை இழந்து தவிக்கும் தவிப்பு எங்களுக்கும் புரிகிறது. எதற்கு இத்தனை விதமாக எழுதிப்புலம்பல், இலக்கிய தம்கட்டல்கள்… ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் கேனும், ஒரு வத்திப்பட்டியும் உங்களுக்கு கிடைக்கவில்லையா என்ன! யார் தடுத்தார்கள்?

சிற்பி மட்டுமா? இன்னும் பல சிந்தனையாளர்களும் நம்மைத் துரத்துகிறார்கள்… மக்களே, சுற்றிப் பாருங்கள், அம்மா மட்டுமா ஊழல்?… இதோ வரிசையில் அறிஞர்கள்!

– துரை.சண்முகம்

தஞ்சையை மிரட்டும் செம்மண் கடத்தல் மாஃபியாக்கள் !

2

கிரானைட், தாதுமணல் வரிசையில் சேருகிறது செம்மண் !
தஞ்சையை மிரட்டும் செம்மண் கடத்தல் மாஃபியாக்கள்!

சோழ மண்டலத்தில் (தஞ்சை) வளர்ந்து வரும் “குட்டி வைகுண்டராஜன்” சிங்.துரை பற்றி சமீபத்தில் தி இந்து தமிழ் (அக் 6) நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. செம்மண் கொள்ளை பற்றிய செய்தி என்பதால் நேரில் சென்று பார்வையிட முடிவு செய்து கிளம்பினோம்.

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லம் பேருந்து நிலையத்திற்கும் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கும் இடையே நேர் பின்புறம் சுமார் 20 கி.மீ சுற்றளவில் எங்கு பார்த்தாலும் செம்மண் பிரதேசமாக காட்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தையும் உள்ளடக்கியுள்ள பல்வேறு கிராமங்கள் கடந்த 10 ஆண்டுகளாக செம்மண் கடத்தல் மாஃபியாக்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. வல்லம், திருக்கானூர்பட்டி, அற்புதாபுரம், மஞ்சப்பேட்டை, ஆனைநகர், சென்னம்பட்டி , நாட்டாணி, வல்லம் புதூர், தச்சன்குறிச்சி , கல்லுப்பட்டி , முன்னையம் பட்டி , குருவாடிப்பட்டி , செல்லப்பன்பேட்டை , செங்கிப்பட்டி , ஆச்சம்பேட்டை, மலையப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் அவற்றில் சில. மழையற்று வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும் நிலத்தடி நீரைக் கொண்டு அற்புதமாக புன்செய் பயிர்களை விளைவிக்கும் பாரம்பரிய விவசாய அனுபவத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

தஞ்சையிலிருந்து கந்தர்வகோட்டை செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இருபுறமும் நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ள பசுமையான காட்சிகள் ரியல் எஸ்டேட் பிளாட் – கொடிக்கம்பங்களால் ஆங்காங்கே சிறை வைக்கப்பட்டிருந்தன.

ரியல் எஸ்டேட் சிறை

அரைமணி நேர பயணத்தில் அற்புதாபுரம் வந்தவுடன் வலதுபுறமாக “ராயல் குவாரி” என்ற பெயர் பலகை மேரி அன்னை படத்துடன் எங்களை வரவேற்றதால் உள்ளே நுழைந்தோம்.

ராயல் குவாரிக்கு செல்லும் வழி

சுமார் 500 மீட்டர் சென்றவுடன் இடது புறமாக மிகப் பெரிய செம்மண்குவாரி ஒன்று தென்பட்டது. சுமார் 30 அடி ஆழத்துக்கு மேல் ஒட்ட சுரண்டப்பட்ட அந்த செம்மண் குவாரியை பார்த்ததும் பகீர் என்றிருந்தது. மேலிருந்து கீழ் , கீழிருந்து மேல் என குவாரியின் உள்ளே இறங்கி பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் விசாரித்த போது, இது “செல்வம் குவாரி” என்றனர். “அடுத்தடுத்து போய் பாருங்க இதைவிட பெரிசெல்லாம் இருக்கு” என்றதால் ஆர்வமிகுதியால் அங்கிருந்து வேகமாக கிளம்பினோம். அங்கே சென்ற போது இருபுறமும் ஏக்கர்கணக்கில் பரந்து விரிந்து கிடந்த குவாரிகள் ஆளரவமற்று எங்களை அச்சுறுத்தின. இதற்கு முன் நாங்கள் பார்த்த “செல்வம் குவாரி” தான் இருப்பதிலேயே மிகவும் சிறியது என்பது அதற்கு உறைத்தது. அங்கிருந்து கிளம்பி சற்று தூரம் சென்றபோது “சிங் குவாரி செல்லும் வழி” என்ற பெயர் பலகை எங்களுக்கு வழிகாட்டியது.

வல்லத்தை சேர்ந்த சிங்காரம் என்பவரின் மகன் சிங்.துரை 1980-களின் இறுதியில் ஒரே ஒரு ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் மண் வெட்டத் துவங்கி இன்று “சோழமண்டலத்தின் குட்டி வைகுண்டராஜன்” எனுமளவுக்கு ‘உழைப்பால் உயர்ந்தது’ எப்படி சாத்தியமானது என்பதை அங்கிருந்த குவாரிகள் குறிப்பால் உணர்த்தின. தினசரி இரவு பகலாக வெட்டி எடுக்கப்படும் செம்மண், டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதால் கிராமப்புற சாலைகள் மூச்சுத்திணறி, நொறுங்கி சிதறிக் கிடந்தன. 1.27 ஹெக்டேர் (சுமார் 3.5 ஏக்கர் மட்டும் ) நிலத்தில் ( 2013 -15 வரை ) வெறும் 3 மீட்டர் ஆழம் வரை மட்டுமே அனுமதியளிக்கப் பட்டிருக்கும் நிலையில் பல பத்து ஏக்கரில் சுண்ணாம்பு பாறை வரைக்கும் சுரண்டிக் கொண்டிருந்தன சிங் துரைக்கு சொந்தமான ஜே.சி.பி. எந்திரங்கள்.

சிங் குவாரி

இவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகாலமாக இந்த தொழிலில் தனி காட்டு தர்பாரை நடத்தி வருகிறார் சிங்.துரை. வெட்டி எடுக்கப்பட்டதையும், வெட்டிக் கொண்டிருந்ததையும் புகைப்படம் எடுத்த போது அதன் முழு பரிமாணத்தையும் புகைப்படத்தில் அல்ல, வீடியோவில் தான் காட்ட முடியும் என்பதை உணர்ந்தோம். 360o சுற்றளவுக்கும் சுரண்டப்படுவதை படம் பிடிக்க முடியாமல் எங்களோடு சேர்ந்து கேமராவும் திணறியது.

நாங்கள் புகைப்படம் எடுப்பதை கவனித்த சில ஜே.சி.பி.ஆபரேட்டர்கள் உடனே செல்போனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு யாருக்கோ தகவல் சொல்ல ஆரம்பித்தனர். நிலைமையைப் புரிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களுடன் அவசரம் அவசரமாக புறப்பட்ட ¾ மணி நேர பயணத்தில் குவாரிகளை விட்டு வெளியே வந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். இவ்வளவு நாட்களாக இப்படியொரு பகற்கொள்ளை இங்கே நடப்பது குறித்து தெரியாமல் இருந்திருப்பதை நினைத்த போது வெட்கமாகத் தான் இருந்தது .

நாளிதழ்களில் செய்தி வந்ததை அடுத்து 7 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அதிரடி ஆய்வு – கலெக்டர் உத்தரவு என்று செய்தி வந்திருந்தாலும் ஒரு கண்துடைப்பிற்காகக் கூட அவர்கள் செம்மண் கொள்ளையை நிறுத்தி வைக்க தயாராக இல்லை என்பது புரிந்தது. தினசரி சுமார் 200 டிப்பர் லாரிகளில் செம்மண் கொண்டு செல்லப்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

ரெய்டுக்குப் போன அதிகாரிகளில் குறிப்பாக கோட்டாட்சியர் எஸ் தேவதாஸ் போஸ் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சம்பத் ஆகியோர் சிங் துரைக்கு மிகவும் விசுவாசமானவர்களாம். சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களிலிருந்து எந்தவொரு கோப்பு நகர்ந்தாலும் சிங் துரைக்கு தகவல் பறக்குமாம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ புகார்கள் அளிக்கப்பட்டும் எந்த மாவட்ட ஆட்சியரும் இந்த சட்டவிரோத செம்மண் மாஃபியாக்களின் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு அதிகார வர்க்க குற்றவாளிகளின் துணையும் ஆசியும் இத்தொழிலில் கொடி கட்டி பறந்துள்ளது என்பதற்கு இது ஒன்றே சாட்சியாகும். செம்மண் கடத்தல் பற்றி நாளிதழ்களில் சந்தி சிரித்த பிறகு 3 லாரிகள் பிடிபட்டு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்துள்ளனர் அரசு அதிகாரிகள். தினசரி 200 லாரிகள் செம்மண் அள்ளிச் செல்லும் போது 3 லாரிகளை மட்டுமே பிடிக்க முடிந்திருக்கிறது என்றால் அதிகாரிகள் வீசிய வலையில் எவ்வளவு பெரிய ஓட்டை இருந்துள்ளது என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

சுமார் 30 க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருவதால் ஆங்காங்கே இருந்த கிராமப்புற விவசாயிகளிடம் அது குறித்து கேட்டபோது, “எங்கள் வயலுக்கு அருகிலேயே 100 அடி, 200 அடி ஆழம் வெட்டி விடுவதால் நிலத்தடி நீர் வறண்டு விடுகிறது. வயலுக்கு பாய்ச்சும் நீரும் வற்றிப்போய் விவசாயமே செய்ய முடியாமல் ஆகிவிட்டது. நிலத்தை உழும் போது எந்த நேரமும் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் சிலர் தாங்களாகவே நிலத்தை விற்று விடுகின்றனர், விற்காதவர்களிடம் குவாரிகாரர்களே மிரட்டி வாங்கிய சம்பவங்களும்” உண்டு என்றனர் திருக்கானூர்பட்டிகாரர்கள். இந்த தொழில் லாபகரமாக இருப்பதால் சிங் குவாரிக்கு போட்டியாக பலரும் இதில் புதிதாக இறங்கியுள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“இங்கிருந்து 10 கி.மீ சென்றால் நல்லா உயரமான மேட்டுப்பகுதிகள் உள்ளன. ஆளரவம் இல்லாத அங்கெல்லாம் ரியல் எஸ்டேட் பிளாட் போட்டிருக்காங்க. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் அங்கே பிளாட் வாங்க யாரும் வரமாட்டங்கனு அவங்களுக்கு தெரியும். புதுசா தோண்டப் போகிற குவாரிகளுக்கு விற்றால் நல்ல விலை போகும் என்பதால் மலபார் சிட்டி, மங்களம் போன்ற ரியல் எஸ்டேட் காரங்க நிலங்களை வளைத்துப் போட்டிருப்பதாகக் கூறினார்” கல்லுப்பட்டி விவசாயி ஒருவர்.

தஞ்சையைப் பொறுத்தவரை PWD காண்டிராக்ட், நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் , கோயில் – குளம் தூர் வாருதல் என சிங் துரையின் சாம்ராஜ்யம் தான் கொடிகட்டிப் பறக்கிறது. ஆம் உண்மையிலேயே சிங் துரை கும்பல் “எர்த் மூவர்ஸ்” (பூமியை புரட்டுபவர்கள்) என்பது புரிந்தது. இந்த செம்மண் கடத்தல் மாஃபியாக்களுக்கு எதிராக தஞ்சை – புதுகை தழுவிய அளவில் சுவரொட்டிகள் ஒட்டி எதிர்ப்பு இயக்கம் நடத்தி வருகின்றனர் மக்கள் கலை இலக்கியக் கழகம் – விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள்.

சுவரொட்டி பிரச்சாரம்

செம்மண் கொள்ளை குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தஞ்சை மாவட்ட வழக்கறிஞர் சதிஷ்குமாரிடம் கேட்டபோது “கடந்த 10 ஆண்டுகளில் கடத்தப்பட்ட செம்மண்ணின் அளவுக்கு முறையாக பர்மிட் போட்டிருந்தால் அரசுக்கு ரூ 1500 கோடி வருமானம் வந்திருக்கும் என்பது ஒருபுறம் இருக்க முறைகேடாக வெட்டப்பட்ட மண்ணின் மொத்த மதிப்புடன் உண்மையாக கணக்கிட்டால் இதில் மிகப்பெரிய அளவில் கனிமவளச் சூறையாடல் நடந்திருக்கிறது. இச்சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு உள்ளுர் அரசு அதிகாரிகள் துவங்கி மாவட்ட நிர்வாகம் வரை ஒத்துழைத்துள்ளதால் தான் கடத்தல் தொழில் தங்குதடையின்றி நடக்கிறது. தற்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்களே ஆய்வு செய்வது என்பது வேடிக்கையாக உள்ளது. இது குறித்து விரைவில் நாங்கள் உண்மை கண்டறியும் குழு அமைக்கவுள்ளோம். தவறிழைத்தவர்களை தண்டிக்காமல் விடமாட்டோம்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணை பொதுச் செயலர் தோழர் காளியப்பன் இது குறித்து பேசுகையில், ”மீத்தேன் திட்டம் , ONGC குழாய் பதிப்பு ஆகியவற்றுக்கெதிராக விவசாயிகள் போராடி வரும் சூழலில் இந்த செம்மண் கடத்தல் மாஃபியாக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதும், நிலத்தைடி நீரை இல்லாமல் செய்வதும் பேரழிவை ஏற்படுத்தும். சாலை கட்டுமானப் பணிகளுக்காக செம்மண் – கிராவல் தேவை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால் தனிப்பட்ட முதலாளிகள் கனிமவளங்களை சூறையாடிச் செல்வதை வேடிக்கை பார்க்க முடியாது. அரசு விசாரணைக்கமிட்டி போடுவது எல்லாம் கண்துடைப்பு என்பது வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளை விவகாரத்திலேயே அம்பலப்பட்டு நிற்கிறது. எனவே, சிங் துரை கும்பல் மட்டுமில்லாமல் பிற செம்மண் கடத்தல் மாஃபியா கும்பல்களின் சொத்துக்களையும் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்ய வேண்டும். கனிம வளக் கொள்ளையர்களை விரட்டியடிக்க கிராமந்தோறும் போராட்டக் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என்று கோரி நாங்கள் போராடி வருகிறோம். இந்த எதிர்ப்பியக்கத்தை விரிந்த அளவில் முன்னெடுக்க வேண்டியுள்ளதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்’’ என்றார்.

தனியார்மய – தாராளமயக் கொள்கைளால் புதுப்பணக்கார கும்பல்களும், அரசு அதிகாரிகளும் ஒருபுறம் கொழுத்துக் கொண்டிருக்க விவசாயிகளும் உழைப்பாளி மக்களும் இவ்வாறு தான் ஓட்டாண்டியாகி அத்துக் கூலிகளாக்கப்படுகின்றனர்.

மேற்கில் சூரியன் அஸ்தமிக்க முயன்று கொண்டிருந்த போது செம்மண் குவாரிகளை ஒட்டியுள்ள குப்பை மேடுகளில் மயில்கள் குப்பைகளை கிளறிக்கொண்டு இருந்தன. பாவம் மயில்களைக் கூட மறுகாலனியாக்கம் விட்டுவைக்கவில்லை.

தகவல்
பு.ஜ செய்தியாளர்
திருச்சி.

கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு

8

சாதி மறுப்பு திருமணத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு மாநாடு” என்ற தலைப்பில் சாதி மறுப்பு மக்கள் கூட்டியக்கத்தின் சார்பாக திருச்சி ரோசன் மஹாலில் கடந்த 5.10.2014 அன்று மாநாடு நடைபெற்றது. 68 இயக்கங்கள், 66 பேச்சாளர்கள் பங்கேற்ற 6 அமர்வுகளில் 150 பார்வையாளர்கள் (இறுதிவரை) கலந்து கொள்ள கூட்டம் நடைபெற்றது.

வன்னிய சாதி வெறியை மூலதனமாக வைத்து பாமக ராமதாசு பல்வேறு ஆதிக்க சாதி அமைப்புகளுடன் தலித் மக்களுக்கு எதிராக செயல்படுவதை தமிழகம் பார்த்துள்ளது. இதற்கு மாற்றாக ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து மேற்கண்ட தலைப்பில் மாநாடு நடத்த முன்வந்திருப்பது மகிழ்ச்சிக்குரியது. வரவேற்கதக்கது. இந்த ஆர்வத்துடன் மாநாட்டில் கலந்து கொள்ள பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக சென்றோம். பெண்கள் விடுதலைக்கும், சாதி மறுப்பு விசயத்திலும் புதிய அனுபவங்கள், கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் பங்கேற்றோம். தோழர்களை வரவேற்று நமது அமைப்பு புத்தக ஸ்டால் போட அனுமதியும், இடமும் ஒதுக்கி தந்தனர்.

conference-notice

கூட்டத்தில் பேசிய பேச்சாளர்கள், சாதிக் கொடுமை பற்றியும், அது இந்த சமூகத்தில் பரவியுள்ள நோய் எனவும் இதனை ஒழிக்க வேண்டும் என்றும் இதனைத் தாங்கி பிடிக்கும் இந்துமதம் உள்ளிட்ட பிற மதங்கள் அனைத்துமே பெண் உரிமைக்கு எதிரானது என்றும் எடுத்துரைத்தனர்.

சாதி மறுப்பு திருமணத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர். பெரியார், அம்பேத்கர் உழைப்பு, தியாகம், அவர்கள் ஆற்றிய பணிகள் பற்றியும் நினைவு கூர்ந்தனர். காதல் திருமணத்தை ஊக்கப்படுத்த வேண்டும், திவ்யா- இளவரசன் காதலை உயர்த்திப் பிடிக்க வேண்டும், பெற்றோர்கள் காதலை அங்கீகரிக்க வேண்டும் எனவும் தமது உரையில் வேண்டுகோள் விடுத்தனர்.

மாநாடு முழுக்க ஆசையும், விருப்பமும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே அமைந்தது. சாதி மறுப்பு திருமணத்தை மையமாக பேச வேண்டுமெனில் இந்த காலம் எப்படிப்பட்டது, இதற்கு தடையாக இருப்பது யார்? அதை வீழ்த்துவது எப்படி இவை பற்றி தெளிவு ஏற்படுத்தப்படவில்லை!

பாமக ராமதாசு பகிரங்கமாக ஆதிக்க சாதியினருடன் இணைந்து சாதிவெறியை மூட்டிவருகிறார். காதல் திருமணம் செய்வது தவறு என்றும், தலித் இளைஞர்கள் ஜீன்ஸ், டீ-சர்ட்போட்டுச் சென்று பெண்களை வசப்படுத்துகின்றனர் என இழிவுபடுத்தியும் பகிரங்கமாக பேசுகிறார்.. இதற்கு ஆதரவாக ஒரு கூட்டணியை ஏற்படுத்தி வருகிறார்..

ஆனால் சாதி மறுப்பை ஆதரித்து நடந்த இந்த கூட்டத்தில் ராமதாசு போன்றவர்களை அம்பலப்படுத்தியோ, அவரின் கூட்டணியை கலைப்பது பற்றியோ , அவர் கேள்விக்கு பதில் அளிக்கவோ, அவரை முறியடிக்க வேண்டிய தேவை பற்றியோ பேசப்படவில்லை. ஆதிக்க சாதி வெறியை தமிழகத்தில் பரப்பிவிடும் குறிப்பான கட்சிகளை, தலைவர்களை அம்பலப்படுத்தாமல் பொதுவில் பேசுவதால் என்ன பலன்?

திவ்யா, இளவரசன் காதல் திருமணம் செய்து கொண்டதற்கு எதிராக 2 ஊர்களையே கொளுத்தும் இந்த காட்டுமிராண்டி கும்பலை எதிர்கொள்ளாமல் சாதிமறுப்பு காதல் திருமணம் சாத்தியமா? என்பதை பற்றியெல்லாம் மாநாட்டில் கவலைப்பட்டதாக தெரியவில்லை. மாநாட்டின் நோக்கத்தை உணர்ந்து கொண்டு தலைவர்கள், தொண்டர்கள் செயல்பட்டதாகவும் தெரியவில்லை.

“பெண் உரிமை பற்றி பேசும் மாநாட்டில் விரல்விட்டு எண்ணும் அளவில் பெண்கள் இருக்க என்ன காரணம். இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் நாம் அனைவரும் ஏன் நமது வீட்டுப் பெண்களை அழைத்து வரவில்லை. ஏன் என்றால் ஆணாதிக்க சிந்தனையோடு தான் நாம் இருக்கிறோம்” என ஆதங்கப்பட்டார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அங்கயற்கண்ணி.

“மாநாட்டில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அமைப்பினரும் 10 நபர்களை அழைத்து வந்திருந்தால் இம்மாநாட்டு அரங்கம் நிறைந்திருக்கும். நாம் ஏன் இதனை செய்யவில்லை” என வினா எழுப்பினார் தமிழ் தேச நடுவம் ஒருங்கிணைப்பாளர் பொழிலன்.

“தோழர் என்ற சொல்லை மறந்து விடுகிறோம். தோழமை என்பதே செத்துவிட்டது” என்றார் ரத்தினம்.

பேச்சாளர்களின் இந்த குமுறலுக்கு என்ன பதில், எப்படி சரிசெய்வது என விடை இல்லை.

அவரவர் தமது ஆதங்கத்தை கொட்டிவிட்டு செல்லும் களமாகவே மாநாடு அமைந்தது. இதில் பார்வையாளர்கள் எதை எடுத்துக் கொள்வது, எப்படி சாதி மறுப்பு என்ற உயர்ந்த நோக்கத்தை நிறைவேற்றுவது, இதில் ஏற்படும் இடையூறுகள் சிக்கல்களை எப்படி தீர்ப்பது? என்பதெற்கெல்லாம் விடை இல்லை.

ஒவ்வொரு பேச்சாளரும் தமது உரை முடிந்ததும் தமது அணிகளுடன் மாநாட்டை விட்டு வெளியேறுவது என்பது நீடித்த வண்ணமாகவே இருந்தது. தமது கருத்தை மற்ற தலைவர்கள் ஏற்கிறார்களா? மறுக்கிறார்களா? அல்லது மற்ற தலைவர்கள் என்ன பேசுகின்றனர் என்பதை கவனிக்கக் கூட மனமில்லாமல் மண்டபத்தை விட்டு வெளியேறும் இந்த தன்மை எப்படி மாநாட்டை சிறப்பிக்க வைக்கும். இந்த அணுகுமுறை அணிகளை எப்படி வளர்க்க உதவும். ஒவ்வொருவரும் மற்றவருடன் ஒட்டுவதில்லை. ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்பது இல்லை. சாதி மறுப்பு என்ற ஒற்றை மேற்கோளை ஏற்றுக் கொண்டால் போதுமா? அதனை நடைமுறைப்படுத்த வேண்டாமா? வழியில் உள்ள ஆயிரம் தடைக்கற்களை தகர்க்க வேண்டாமா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கவில்லை.

இந்த சமூக அமைப்புக்குள்ளேயே மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதே இந்த கூட்டமைப்பினரின் விருப்பமாக உள்ளது. சட்டம் கடுமையாக்க பட வேண்டும், புதிய சட்டங்கள் தேவை, என்ற வகையில் தான் மாநாட்டின் பேச்சும், தீர்மானமும் அமைந்துள்ளது.

சாதிக் கட்சிகளை வளர்ப்பதும், ஊக்குவிப்பதும் இந்த ஓட்டுக்கட்சி அரசியல்தான். இவர்கள் சாதியை எப்படி ஒழிப்பார்கள். தேர்தலின் போது சாதி ரீதியான வேட்பாளர்களை நிறுத்துவது சாதி சங்கங்களுடன் கூட்டணி சேர்வது என்பது வழக்கமானவை ஆகும். இந்த ஆளும்வர்க்க கட்சிகளை, அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடி முறியடிக்காமல் இவர்களுடன் இணைந்தே எப்படி சாதியை ஒழிக்க முடியும்?

சாதி ஒழிப்பில் உண்மையில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர்கள் நமது நண்பர்கள் யார்? எதிரி யார்? என்பதை சரியாக மதிப்பிடுவதும் அவசியமானதாகும். நண்பர்கள் என ஏற்றுக் கொண்டோரின் கரத்தை இறுக பற்றுவதும் எதிரி என அடையாளம் கண்டு கொண்டவர்களை இறுதிவரை எதிர்த்து உறுதியாக போராடுவதும் தேவையான ஒன்றாகும்.

தோழமை அமைப்பினரின் தவறு, குறைபாடுகளை துணிந்து எடுத்துரைப்பதும், அனுபவங்கள், படிப்பினைகளை தொகுப்பதும் நோக்கத்தை நிறைவேற்ற பயன்படும். உண்மையான, முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படும் போதுதான் சாதியை அழிக்க முடியும்.

எங்களது பெண்கள் விடுதலை முன்னணியில் உள்ள பலரும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.

சாதி மறுப்பு திருமணத்திற்கு பிறகும் மக்கள் மத்தியில் சாதி மறுப்பாளர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.

எங்களது பிள்ளைகளை சாதி மறுப்பாளர்கள் என்பதே பள்ளியில் பதிவு செய்து சேர்த்து வருகிறோம்.

சாதி வெறியர்களின் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.

தர்மபுரியில் திவ்யா-இளவரசன் காதல் திருமணத்திற்கு எதிராக பா.ம.க ராமதாசு, காடுவெட்டி குரு உள்ளிட்ட சாதிவெறியர்களுக்கு எதிராக எங்களது தோழமை அமைப்பினரான மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகியோருடன் இணைந்து போராடியுள்ளோம். இந்த அனுபவத்தில் இருந்தும் எதிரிகளை வீழ்த்தி, சாதி வெறியை ஒழிக்க வேண்டும் என்ற அக்கறையினாலேதான் நாங்கள் மாநாட்டை பற்றிய எமது கருத்தை தெரிவித்துள்ளோம்.

மொத்தத்தில் 68 அமைப்புகள் 66 பேச்சாளர்கள் இணைந்து நடத்திய இந்த மாநாடு

கூடி பொழியும் மேகங்களின் கூட்டமாக இருக்கும் என எதிர்பார்த்தோர்க்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கூடிக்கரையும் காகங்களின் கூட்டமாகவே இம்மாநாட்டை பார்க்க முடிந்தது என்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறோம்.

தோழமையுடன்.,
பெண்கள் விடுதலை முன்னணி.,
திருச்சி.

பாஜக ஆசியுடன் இந்தியனைக் கொல்ல வரும் பில்கேட்ஸ் !

3

கேட்ஸ் பவுண்டேசன்: மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!

ணினி உலகின் முடிசூடா மன்னர், உலகின் மிகப் பெரும் பணக்காரர் என அறியப்பட்ட பில்கேட்ஸ்தான் இன்று உலகின் மிகப் பெரிய தர்மகர்த்தா. அமெரிக்காவிலுள்ள சியாட்டல் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு அவர் நடத்திவரும் அறக்கட்டளை நிறுவனமான “பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை” அளவிலும் செயல்பாட்டிலும் தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கு இணையானது. இந்திய அரசின் போலியோ ஒழிப்புத் திட்டம் உள்பட பல்வேறு சுகாதாரத் திட்டங்களின் மூளையாக இருப்பது கேட்ஸ் அறக்கட்டளைதான். கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்த அவர், மைய அரசுடன் இணைந்து பச்சிளங் குழந்தைகள் உயிரிழப்பைத் தடுப்பதற்கான திட்டத்தைத் தனது அறக்கட்டளையின் சார்பாகத் தொடங்கி வைத்தார்.

பில் கேட்ஸ், மெலிந்தா கேட்ஸ், ஹர்ஷவர்தன்
பச்சிளங்குழந்தைகளின் உடல்நலக் கவனிப்பு தொடர்பான திட்டம் மற்றும் வழிகாட்டும் கொள்கைகளை மைய அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுடன் (நடுவில்) இணைந்து வெளியிடும் பில்கேட்ஸ் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளையின் தலைவர் பில் கேட்ஸ் (வலது) மற்றும் அவரது மனைவி மெலிந்தா கேட்ஸ்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு பற்றிக் கதைக்கப்படும் இத்தருணத்தில் பில்கேட்ஸின் வருகையை இந்தியாவைச் சேர்ந்த தரகு முதலாளிகளும் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, விப்ரோ அதிபர் அசிம் பிரேம்ஜி ஏற்பாடு செய்திருந்ததொரு கூட்டத்திற்கு பில் கேட்ஸ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். இக்கூட்டத்தில் டாடா குழுமத்தின் சைரஸ் மிஸ்திரி, ஜி.எம்.ஆர் அதிபர் ஜி.எம்.ராவ், இன்போசிஸ் நந்தன் நீலகேனி மற்றும் கோபாலகிருஷ்ணன், ஜிண்டால் குழுமத்தின் நவீன் ஜிண்டால், ஏர்டெல்லின் சுனில் மிட்டல், பயோகான் கிரண் மஜூம்தார் ஷா உள்ளிட்ட இந்தியாவின் தரகு முதலாளிகள் கலந்துகொண்டு, அறக்கட்டளைகளை வெற்றிகரமாக நடத்துவது குறித்து பில் கேட்ஸுடன் விவாதித்தனர்.

கணினித் துறையில் ஏகபோக முதலாளியான பில் கேட்ஸ், தனது தாயார் சாகும் தருவாயில், “யாருக்கு மிக அதிகமாகக் கொடுக்கப்பட்டதோ அவர்களிடமிருந்து மிக அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது” எனக் கூறியதால், எஞ்சியுள்ள தனது வாழ்க்கை முழுவதிலும், தனது அறிவையும், திறமையையும் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தும் நோக்கில்தான் அறக்கட்டளைகளைத் தொடங்கி நடத்துவதாகக் கூறியிருக்கிறார்.

தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதையே நீக்க வேண்டும் என வாதாடி வரும் இந்தக் கனவான்கள் அனைவரும் சமூக பொறுப்பு பற்றி பேசுவதும் அதற்காக தமது இலாபத்தின் ஒரு பகுதியை ஒதுக்குவதும் ஒன்றுக்கொன்று முரண்பாடானதல்ல. இரண்டிலுமே அவர்களின் நலன் ஒளிந்திருப்பது மட்டுமல்ல, அறக்கட்டளைகள், குறிப்பாக பில் கேட்ஸின் அறக்கட்டளை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல, போட்ட முதலுக்கு ஏற்ற பலன் இருக்க வேண்டும் என்றவாறு இலாப நோக்குடன் இயங்கி வருகிறது என்பதே உண்மை.

டேவிட் ராக்ஃபெல்லர்
அமெரிக்க நவீன அறக்கட்டளை முதலாளி டேவிட் ராக்ஃபெல்லர்

இதற்கு உதராணமாக 2008-ல் ஏற்பட்ட உலக முதலாளித்துவ நெருக்கடி நிலையைக் குறிப்பிடலாம். அந்நெருக்கடியால் ஏற்பட்ட சமூகக் கொந்தளிப்புகளை ஒருங்கிணைந்த முறையில் சமாளிப்பது எப்படி என விவாதிக்க பில் கேட்ஸ், வாரன் பஃபெட், டேவிட் ராக்பெல்லர் உள்ளிட்ட உலகின் மிகப்பெரும் ஏகபோக முதலாளிகள் நியூயார்க் நகரில் ஒன்று கூடினர். தம்மை “நல்லவர்களின் சங்கம்” என்று அழைத்துக் கொண்ட இம்முதலாளிகள், ஏழை நாடுகளின் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்திக்கான காரணங்களைக் கண்டறிந்து, அவற்றை களைவதற்கான திட்டங்கள் பற்றி விவாதித்து, அந்நாடுகளில் காணப்படும் “மக்கள் தொகை பெருக்கம்”, “தொற்று நோய்கள்” போன்ற பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றை முதலில் தீர்க்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். அந்த நாட்டு அரசுகள் முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள்/பிரச்சினைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, தமக்கு விருப்பமான அல்லது தாம் முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களில் மட்டுமே அறக்கட்டளைகள் செயல்படுவது என்றும், இதற்கேற்ப ஏழை நாட்டு அரசுகளின் கொள்கை மற்றும் சமூகங்களை மாற்ற வேண்டும் என முடிவு செய்தனர்.

வாரன் பஃபெட்
அமெரிக்க நவீன அறக்கட்டளை முதலாளி வாரன் பஃபெட்

ஏகபோக நிறுவனங்கள் அறக்கட்டளைகளை உருவாக்குவதும், அவை ஏழை நாடுகளில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சமூகத் தளங்களில் செயல்படுவதும் புதிய விசயமல்ல. 19-ம் நூற்றாண்டின் இறுதியிலேயே ஏகாதிபத்தியங்கள் தங்களது காலனிகளில் உள்ள தொழிலாளர்களின் உழைப்புத் திறனை அதிகரிக்கவும், வெள்ளை மேற்பார்வையாளர்கள், இராணுவச் சிப்பாகளை நோய் தொற்றிலிருந்து காக்கவும் அறக்கட்டளைகளைத் தொடங்கிவிட்டன. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் கம்யூனிச அலையை வீழ்த்தும் நோக்கத்தோடு அறக்கட்டளைகள் செயல்பட்டு வந்தன. ஏகாதிபத்திய அரசுகளும், பன்னாட்டு நிறுவனங்களும் தமது மேலாதிக்கத்தை ஏழை நாடுகளில் நிறுவிக்கொள்வதற்குப் பயன்படுத்திய பல உத்திகளில் ஒன்றாக பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல், மனிதவள மேம்பாடு ஆகிய தளங்களில் அறக்கட்டளைகளைச் செயல்பட வைத்தன. வியட்நாமில் அமெரிக்க இராணுவத்தால் அணுக முடியாத பகுதிகளில் கூட மலேரியா ஒழிப்பு என்ற பெயரில் அறக்கட்டளைகளால் நெருங்க முடிந்தது. பிலிப்பைன்ஸில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த “ஹக் போராளிகளை” ஒடுக்க அறக்கட்டளைகள் பெரிதும் உதவின.

தற்பொழுது, அதாவது உலகமய காலக் கட்டத்தில் இந்த அறக்கட்டளைகள், தொழிற்துறைகளைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகங்களைப் போன்ற அமைப்பு வடிவத்துடனும், இலாப நோக்கத்துடனும் இயங்குவது மட்டுமின்றி, உலகில் நிலவும் பிரச்சனைகளைத் தங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்றும் அரசுகளாலோ, அல்லது மக்கள் நலனை முன்னிறுத்திப் போராடும் வேறு பிற அமைப்புகளாலோ இப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்றும் வாதிடுவதோடு, அதனைக் கொள்கை பிரகடனம் போன்று அறிவித்துள்ளன. மக்கள் நலன் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விலக்கிவிட்டு, அந்த இடத்தில் இந்த அறக்கட்டளைகள் வந்தமர்ந்து கொள்கின்றன. இதன் மூலம் ஏழை நாடுகளின் அரசுகளை ஏகாதிபத்திய நிறுவனங்களின் விருப்பத்தை, நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றிக் கொடுக்கும் கருவியாக மாற்றியமைக்கின்றன. இதற்கு ஐ.நா., உலகவங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மற்றும் ஏழை நாடுகளின் அரசாங்கங்களில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கு ஆகிய அனைத்தையும் பயன்படுத்திக் கொள்கின்றன.

பில் கேட்ஸ், அசீம் பிரேம்ஜி
உலகமய காலக் கட்டத்தில் அறக்கட்டளைகளை இலாபம் தரும் கார்ப்பரேட் நிறுவனம் போல நடத்துவது எப்படி என்பதை பில் கேட்ஸிடம் கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டும் இந்தியத் தரகு முதலாளியும் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை தலைவருமான அசிம் பிரேம்ஜி (வலது).

கேட்ஸ் அறக்கட்டளையால் திட்டமிடப்பட்டு, இந்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போலியோ ஒழிப்புத் திட்டம் இதற்கொரு நல்ல உதாரணமாகும். தனது பிற சுகாதாரத் திட்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கேட்ஸ் அறக்கட்டளையின் திட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்த இந்திய அரசு, தனது மொத்த அரசு இயந்திரத்தையும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகப் பயன்படுத்தி வருகிறது.

சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகான உலகமய காலக்கட்டத்தில், ஏழை நாடுகளில் செயல்படுத்தப்படும் பொது சுகாதாரத் திட்டங்களை சர்வதேச நிறுவனங்களின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ஏகாதிபத்தியங்களின் நோக்கமாகும். பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் இன்று உலகெங்கும் பரவிவரும் நிலையில், அதனைக் காட்டித் தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றன. இந்த உலகமயமான நோய்களைக் காட்டியோ அல்லது ஆந்த்ராக்ஸ் பீதி போன்றவற்றை கிளப்பிவிட்டோ ஏழை நாடுகளின் மருத்துவ ஆராய்ச்சி, பொது சுகாதாரத் திட்டங்களில் தலையீடு செய்வதற்கான முகாந்திரத்தை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிக் கொள்வதோடு, இப்படி தலையீடு செய்வது தங்களது உரிமை என்றும் வாதிடுகின்றன. “ஜனநாயகம்”, “மனித உரிமை” என்ற போர்வையில் மேற்குலக ஏகாதிபத்தியங்கள் லிபியா, சிரியா போன்ற நாடுகளில் தலையிட்டு அவற்றை ஆக்கிரமிப்பது போல, அறக்கட்டளைகள் சுகாதாரம், மக்கள் நலன் என்ற பெயரில் ஏழை நாடுகளுக்குள் ஊடுருவி அவற்றைத் தங்களது பிடிக்குள் கொண்டுவருகின்றன. ஏழை நாடுகளின் ஆளுங்கும்பல் தமது வர்க்க நலனை முன்னிறுத்தி ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போர்களை ஆதரித்து நிற்பது போலவே, அறக்கட்டளைகளின் தலையீடுகளுக்கும் ஆதரவு அளிக்கின்றன.

***

பில் கேட்ஸ் நைஜீரியாவில்
நைஜீரியாவில் கேட்ஸ் அறக்கட்டளையின் சார்பாக, போலியோ ஒழிப்புத் திட்டம் தொடங்கப்பட்டிருப்பதை அறிவிக்கும் பதாகையுடன் பில் கேட்ஸ் (கோப்புப் படம்)

ழை நாடுகளின் பொது சுகாதாரத் திட்டங்களில் தலையீடு செய்து, அவற்றை ஏகாதிபத்திய அரசுகள் மற்றும் ஏகபோக மருந்து நிறுவனங்களின் நலனுக்கு ஏற்ப மாற்றியமைப்பதில் இன்று பில்கேட்ஸின் “பில்-மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை”தான், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு, ராக்பெல்லர் உள்ளிட்ட மற்ற அறக்கட்டளைகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஏகபோகமாக வளர்ந்து நிற்கிறது. 3600 கோடி அமெரிக்க டாலர் மூலதனத்தைக் கொண்டுள்ள கேட்ஸ் அறக்கட்டளைதான் இன்றைக்கு உலக அளவில் இயங்கிவரும் முதலாளித்துவ அறக்கட்டளைகளிலேயே மிகவும் பெரியது; ஐ.நா.வின் உலக சுகாதார மையத்தின் நன்கொடையாளர்களில் மூன்றாவது மிகப்பெரிய கொடையாளராக கேட்ஸ் அறக்கட்டளை உள்ளது. இதன் மூலம் உலக சுகாதார கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. 2009-ம் ஆண்டில் மட்டும் சர்வதேச அளவில் பல்வேறு சுகாதார திட்டங்களுக்கு கேட்ஸ் அறக்கட்டளை ஒதுக்கிய நிதி 180 கோடி அமெரிக்க டாலர் என்பதிலிருந்து, அதன் வீச்சு மற்றும் செல்வாக்கைப் புரிந்துகொள்ளலாம்.

அமெரிக்காவில் பொதுப்பள்ளிகளைத் தனியார்மயமாக்குவதையும் ஆசிரியர் சங்கங்களின் முதுகெலும்பை உடைப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கேட்ஸ் அறக்கட்டளை, ஏழை நாடுகளில் “தொற்றுநோய்கள்”, “விவசாயக் கொள்கை”, “மக்கள்தொகைக் கட்டுப்பாடு” ஆகிய தளங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

பில்கேட்ஸ் அறக்கட்டளையின் செல்வாக்கிற்கு அதன் கையில் இருக்கும் மூலதனமும், நிதி ஒதுக்கீடும் மட்டும் காரணமில்லை. அதுவொரு ஆக்டோபஸ் போல, ஐ.நா., உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள், ஏழை நாடுகளின் அரசுகள், பன்னாட்டு நிறுவனங்கள், அரசுசாரா நிறுவனங்கள் என விரிந்த வலைப்பின்னலை அமைத்துக் கொண்டு வேலை செய்து வருவதன் மூலம், அது தனது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் ஏழை நாடுகள் அனைத்திலும் நிறுவிக் கொண்டுள்ளது. குறிப்பாக, பில் கேட்ஸ் அறக்கட்டளை 2012-ம் ஆண்டு அறிவித்த புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களுக்கான திட்டம், யு.எஸ்.எய்டு, உலக வங்கி ஆகியவற்றுடன் பிரேசில், வங்காளதேசம், ஐக்கிய அரேபிய அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் அரசாங்கங்களையும், மெர்க், கிளாக்சோ ஸ்மித் கிளைன், ஃபைசர் உள்ளிட்ட 13 பன்னாட்டு மருந்து நிறுவனங்களையும் கூட்டாளிகளாகக் கொண்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

கேட்ஸ் அறக்கட்டளைதரம் குறைந்த தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை மலிவான விளம்பர உத்திகளின் மூலம் கணினித் துறையில் ஏகபோகமாக மாற்றிவிட்டதைப் போல, தனது அறக்கட்டளையையும் வளர்த்து வருகிறார், பில்கேட்ஸ். “நாங்கள் ஐ.நா.-விற்கு மாற்று அல்ல. ஆனால், சிலர் எங்களை அதற்கு நிகரான நிறுவனமாக பார்க்கின்றனர்” என பில் கேட்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் ரேக்ஸ் சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் அளவிற்கு அதனின் செல்வாக்கும் ஆதிக்கமும் சர்வதேச அளவில் பரந்து விரிந்ததாக உள்ளது. இதனால் இந்த அறக்கட்டளை எவ்வாறு செயல்படுகிறது, யாருடைய நலனை, எப்படி பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள அதன் உலகளாவிய தடுப்பூசித் திட்டங்களைக் கூர்ந்து நோக்குவது அவசியமாகிறது.

பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரதான பங்குதாரர் மட்டுமல்ல; “பிக் பார்மா” என்றழைக்கப்படும் பன்னாட்டு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களான மெர்க், ஃபைசர், கிளாக்சோ ஸ்மித் கிளைன் ஆகியவற்றில் பில் கேட்ஸ் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளார்.

மேற்கத்திய ஏகபோக மருந்து நிறுவனங்களின் இலாப சதவீதம் சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், அது குறித்து ஆய்வு செய்த மெக்கன்சி நிறுவனம், “மேற்கத்திய நாடுகளில் அமலில் உள்ள தரக் கட்டுப்பாடு சட்டங்கள் புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கும் அதனைச் சந்தைப்படுத்துவதற்குமான செலவுகளை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக”க் கூறி, “இந்தச் செலவைக் குறைப்பதற்கு வேறு புதுமையான வழிகளை மருந்து கம்பெனிகள் கண்டுபிடிக்க வேண்டும்” என ஆலோசனை வழங்கியது.

இதனடிப்படையில் புதிய மருந்துகளை ஐரோப்பா மற்றும் அமெரிக்க குடிமகன்களுக்குக் கொடுத்து பரிசோதித்துப் பார்ப்பதைவிட, ஏழை நாடுகளைச் சேர்ந்த ஏழைகளின் உடம்பில் செலுத்திப் பரிசோதித்துப் பார்ப்பதை இலாபகரமானதாகவும், மேற்கத்திய தரக் கட்டுப்பாட்டு சட்டங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியாகவும் ஏகபோக மருந்து கம்பெனிகள் கண்டு கொண்டன.

இதற்கு அப்பால், “நம்மை எப்போதும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் மக்களைச் சாந்தப்படுத்துவதற்கு ஆயுதங்களை விட மருந்தே சாதகமானது” என்பதை அமெரிக்க ஏகபோக முதலாளியான ராக்பெல்லர் பல பத்தாண்டுகளுக்கு முன்பே தமது சோந்த அனுபவத்தில் கண்டுணர்ந்து, அதனை தனது அறக்கட்டளையின் செயல்திட்டமாக நடைமுறைப்படுத்தியும் வந்திருந்தார்.

gates-foundation-2கேட்ஸ் அறக்கட்டளை பொது சுகாதார தளத்தில் இயங்குவதைத் தனது முக்கிய இலக்காகக் கொண்டிருப்பதை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும். இந்த அடிப்படையில் தனது அறக்கட்டளையின் மூலமாக சுகாதாரத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதோடு மட்டும் கேட்ஸ் ஒதுங்கிக் கொள்ளவில்லை. ஏழை நாடுகளின் அரசு நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பயன்படுத்திக் கொண்டு புதிய மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்காக பி.டி.பி. (Product Development Projects)) என்ற பெயரில் மருந்துப் பொருள் அபிவிருத்திக்கான திட்டங்களையும், (இந்தத் திட்டம் பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாகச் செயல்படுத்தப்படும் பி.பி.பி. திட்டம் போன்றது) ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்தி மருந்துகளைப் பரிசோதனை செய்யும் அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறது. மேலும், ஏழை நாடுகளின் அரசுகளின் சுகாதார கொள்கைகளைத் தமக்குச் சாதகமாக உருவாக்குவதற்கு அல்லது மாற்றுவதற்கு ஏற்ப, அதிகார வரக்கத்தின் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய அளவிற்குப் பலமிக்க அரசுசாரா நிறுவனங்களையும் களத்தில் இறக்கியிருக்கிறார். பில் கேட்ஸின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ஒரு படையெடுப்புக்கு நிகரானது எனச் சொல்லத் தேவையில்லை.

2000-ம் ஆண்டுகளின் மத்தியில் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் புதிய மருந்துகளுக்கான சோதனைகளை பில்கேட்ஸ் அறக்கட்டளை நடத்த ஆரம்பித்தது. 2010-ம் ஆண்டு கிளாக்சோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தின் மலேரியா தடுப்பூசியை 7 ஆப்பிரிக்க நாடுகளில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் மீது சோதித்தது. இந்தச் சோதனையின் விளைவாக 151 குழந்தைகள் இறந்ததுடன், 1,048 குழந்தைகள் முடக்குவாதம், வலிப்பு நோய் போன்ற கடுமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டன. எனினும், இவ்வுண்மைகளை மறைத்து மருந்துப் பரிசோதனை பெரும் வெற்றி பெற்றதாகப் பிரச்சாரம் செய்து, உலகம் முழுவதும் அம்மருந்தை விநியோகம் செய்யும் உரிமத்தை கிளாக்சோ ஸ்மித் கிளைன் நிறுவனத்திற்கு வாங்கித்தந்தது.

அதே போன்று ஆப்பிரிக்க நாடான சாட்-இல், குழந்தைகளின் மூளையையும் தண்டுவடத்தையும் பாதிக்கும் “மெனின்ஜெட்டிஸ்” (Meningitis) என்ற நோய்க்கு எதிரான தடுப்பூசியை அறிமுகம் செய்து, அதனைச் சந்தைப்படுத்துவதற்காக ‘மென் ஆஃப்ரி வாக்’ (MenAfriVac) என்ற இயக்கத்தையும் எடுத்தது, கேட்ஸ் அறக்கட்டளை. இத்தடுப்பூசி செலுத்தப்பட்டுப் பரிசோதிக்கப்பட்ட 500 குழந்தைகளில் 50 குழந்தைகள் முடக்குவாதத்தில் வீழ்ந்தனர்.

gates-foundation-immunizationகேட்ஸ் அறக்கட்டளை, ஏழை நாட்டு மக்களைப் புதிய மருந்துகளைப் பரிசோதித்துப் பார்க்கும் சோதனைச்சாலை எலிகளாக மட்டும் பயன்படுத்தவில்லை. மேற்கத்திய நாடுகளில் கடும் பக்கவிளைவுகளின் காரணமாக போணியாகாமல் தேங்கிக் கிடக்கும் மருந்துகளைக் கொண்டுவந்து கொட்டும் சந்தையாவும் ஏழை நாடுகளைப் பயன்படுத்தி வருகிறது. கடும் பக்கவிளைவுகளின் காரணமாக நார்பிளாண்ட் என்ற கருத்தடை சாதனத்திற்கு (contraceptive) எதிராக அமெரிக்காவில் 36,000 வழக்குகள் தொடரப்பட்டதையடுத்து, நார்பிளாண்ட் அமெரிக்கச் சந்தையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது. இக்கருத்தடை சாதனத்தின் பெயரை ஜேடல் என மாற்றி, ஆப்பிரிக்காவில் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தின் உதவியுடன் கேட்ஸ் அறக்கட்டளை சந்தைப்படுத்தி வருகிறது. “ஆப்பிரிக்க ஆண்கள் கருத்தடை சாதனங்கள் குறித்து அக்கறைப்படாததால், ஆப்பிரிக்க நாட்டுப் பெண்கள் தங்களுக்கு இந்த மருந்து நிச்சயம் தேவை என விரும்பிக்கேட்பதாக”க் கூறி பில் கேட்ஸின் மனைவி மெலின்டா கேட்ஸ் இந்த விற்பனையை நியாயப்படுத்தியிருக்கிறார். நார்பிளாண்டைப் போன்றே கடும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் ஃபைசர் நிறுவனத்தின் டிப்போ புரோவேரா மருந்தையும், மெர்க் நிறுவனத்தின் இம்ப்ளானோன் மருந்தையும் கேட்ஸ் அறக்கட்டளை தெற்காசிய, ஆப்பிரிக்க பெண்களிடையே விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

gates-foundation-3கருப்பை புற்றுநோயிலிருந்து பெண்களைக் காக்கக்கூடிய தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்த அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம், கர்டாஸில் எனப் பெயரிடப்பட்ட அம்மருந்தை 2006-ல் அமெரிக்காவில் விற்பனைக் கொண்டு வந்தது. இம்மருந்தின் பக்கவிளைவுகள் அடுத்த மூன்றே ஆண்டுகளில் தெரியவந்த பிறகு, வருடத்திற்கு 150 கோடி அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துக் கொடுத்த அம்மருந்தின் விற்பனை தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த மருந்தை யுனிசெப், உலக சுகாதார நிறுவனம், தடுப்பூசி மற்றும் மருந்துகளுக்கான சர்வதேச கூட்டணி ஆகியவற்றுடன் இணைந்து இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது, கேட்ஸ் அறக்கட்டளை.

முதலாளித்துவ விமர்சகர்கள்கூட பில் கேட்ஸ் உள்ளிட்டு ஏகபோக முதலாளிகள் நடத்தும் அறக்கட்டளைகளை, அவற்றின் இலாபவெறி மற்றும் வர்க்கச் சார்பு ஆகியவற்றின் காரணமாக “அறக்கட்டளை முதலாளித்துவம்” (Philanthro Capitalism) என அழைக்கிறார்கள். ஆனால், மோடி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அபாயகரமான மருந்துகளை இந்திய உள்ளிட்ட ஏழை நாடுகளில் விற்பனை செய்யும் ஏஜெண்டாகச் செயல்பட்டுவரும் கேட்ஸ் அறக்கட்டளையை, “நோய்களுக்கும், மரணத்திற்கும் எதிரான போராட்டத்தில் அரசிற்குக் கிடைத்த மிக முக்கியமான கூட்டாளியாக”க் குறிப்பிட்டுப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இத்தகைய புகழ்ச்சிக்குப் பின்னே கர்டாஸில் மருந்தின் பக்கவிளைவுகளால் ஆந்திராவின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏழு சிறுமிகள் இறந்துபோனார்கள் என்ற உண்மை திட்டமிட்டே மறைக்கப்படுகிறது. இந்தச் சாவுகள் கேட்ஸ் அறக்கட்டளை நடத்திய படுகொலைகள். இது போன்று, மருத்துவ உதவி என்ற போர்வையில் இந்திய மக்களைச் சோதனைச்சாலை எலிகளாகப் பயன்படுத்திவரும் கேட்ஸ் அறக்கட்டளையின் சட்டவிரோத, சமூக விரோத, மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்களை வருமிதழில் காண்போம்.

(தொடரும்)
__________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
__________________________________

உசிலம்பட்டி கள்ளர்சாதி வெறியர்களால் விமலாதேவி கொலை !

14

உசிலை வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணியின் அறிக்கை

சாதிவெறியில் தர்மபுரி வன்னியர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை உசிலம்பட்டி கள்ளர் சாதிக்காரர்கள் என நிரூபித்துள்ளது விமலாதேவி கொலை. தர்மபுரி திவ்யாவை விட 100 மடங்கு தன் காதலுக்காக போராடியதால்தான் கொலை செய்யப்பட்டுள்ளார் விமலாதேவி.

விமலாதேவி
கொலை செய்யப்பட்ட விமலாதேவி (படம் : நன்றி தினகரன்)

விபரத்தை நேரில் விசாரிப்பதற்காக விமலாதேவியின் காதலன் திலீப்குமாரின் ஊரான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்காவில் உள்ள போலிபட்டி என்ற கிராமத்திற்கு சென்றோம். முற்றிலும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள் வாழும் கிராமம். ஆரம்பத்தில் பேசத் தயங்கினார்கள். நாம் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் நம்மால் அவர்களுக்கு ஆபத்து இல்லை என்பதையும் உணர்ந்த பின்தான் மனம் விட்டுப் பேசினார்கள்.

இந்த ஊரைச் சுற்றிலும் உள்ள சுமார் 100 கிராமங்களிலும் கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பதால் தர்மபுரி போன்று ஒரு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்று விரும்புகிறார்கள் என்பதுதான் அவர்களின் தயக்கத்துக்கான காரணம் என்று உணர முடிந்தது.

கொலை செய்யப்பட்ட விமலாதேவியின் பெற்றோர் சின்னச்சாமி என்ற வீரணன் – தேனம்மாள். சின்னச்சாமி என்ற வீரணன் பூதிப்புரத்தில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய செங்கல் சூளையில் லாரி டிரைவராகவும், மற்றும் தன் சொந்த வேலைகளை செய்வதற்கும் திலீப்குமாரை பணிக்கு அமர்த்தியுள்ளார். அதனால் சின்னச்சாமியின் வீட்டிற்கு திலீப்குமார் அடிக்கடி வந்து போக வேண்டிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் சின்னச்சாமியின் மகள் விமலாதேவிக்கும் திலீப்குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டு சேர்ந்து வாழ முடிவு செய்து இருவரும் கடந்த ஜூலை 20-ம் தேதியன்று ரகசியமாக கேரளாவுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் விமலாதேவியின் தந்தை சின்னச்சாமி திலீப்குமார் என் மகளை கடத்தி சென்று விட்டார் என்று போலீசில் புகார் செய்திருக்கிறார். உடனே 25-ம் தேதி போலீஸ் திலீப்குமாரின் இருப்பிடத்தை அறிந்து அவர்கள் இருவரையும் உசிலை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்துள்ளார்கள். உசிலம்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் ஆதரவோடு விமலாதேவியின் கழுத்தில் உள்ள தாலியைக் கழற்ற பாரதிய பார்வர்ட் பிளாக் தலைவர் முருகன்ஜீ முயற்சி செய்துள்ளார். அதற்கு விமலாதேவி, “உன் மகள் காதலித்து ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாளே, முதலில் அவள் தாலியை கழற்றி விட்டு வா, அப்புறம் நான் தாலியை கழற்றுகிறேன்” என்று முகத்தில் காரி உமிழாத குறையாகப் பேசி அனுப்பியுள்ளார்.

அதன்பிறகு உசிலை சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்ட் பிளாக் தலைவருமான கதிரவினிடம் வைத்து பேசி தாலியைக் கழற்ற முயற்சி செய்தபோது விமலாதேவி சட்டமன்ற உறுப்பினர் கதிரவனைப் பார்த்து, “உன்னுடைய எம்.எல்.ஏ வேலை இது இல்லை. என் விசயத்தில் தலையிட வேண்டாம், உன் வேலையை பார்த்து விட்டுப் போ” என்று விரட்டியுள்ளார்.

அடுத்து 20-க்கும் மேற்பட்ட கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் படை சென்று விமலாதேவியிடம், “உன் காதலன் திலீப்குமாரே நீ வேண்டாம், உன்னை மறந்து விடுகிறேன் என்று சொல்கிறான். நீ மட்டும் ஏன் தாலியை கழற்ற மறுக்கிறாய்” என்று கேட்டதற்கு அந்த வழக்கறிஞர் படையிடம், “நீங்க 500 பேர் சேர்ந்து போய் ஒருத்தரை மிரட்டினால் மறுத்துதான் பேசுவார், அவர் மறுத்தார் என்பதற்காக நான் மறுக்க முடியாது” என்று விமலா கூறியதால் பருப்பு வேகாமல் திரும்பி விட்டனர் வழக்கறிஞர்கள்.

இப்படி மிரட்டல் தந்திரம் பலிக்காமல் போனதால், சம்பவத்திற்கு மூன்று நாளுக்கு முன் விமலாதேவியின் தந்தை சின்னச்சாமி தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி விசம் குடித்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அந்த நிலையில் தந்தையின் முகத்தை பார்த்தாவது மனசு மாறும் என்று நினைத்து விமலாதேவியை அழைத்துச் செல்ல காவல்துறை துணை கண்காணிப்பாளர் அனுமதித்துள்ளார். தந்தையின் பரிதாப நிலையைப் பார்த்து விமலாதேவி அழுது கவலைப்பட்டுள்ளார்.

அன்று இரவு விமலாதேவியை நீதிபதியிடம் கூட்டிச் செல்ல விடாமல் அந்தப் பகுதி சாதிக் கட்சித் தலைவர்கள் உள்பட, சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞர்கள் என்று 500-க்கும் மேற்பட்டவர்கள் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டுள்ளனர்.

நீதிபதியும் காலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினால் போதும் என்று கூறியதால் மறுநாள் காலையில்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி கேள்விக்கு, “என்னை யாரும் கடத்தவில்லை, நான் விரும்பித்தான் திலீப்குமாருடன் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தேன்.” என்று கூறியிருக்கிறார் விமலாதேவி. இப்போது யாருடன் செல்ல விருப்பம் என்று கேட்ட போது திலீப்குமாருடன் செல்வதற்கு சூழ்நிலை இல்லாமல் இருந்ததாலும், நிலைமை கருதியும் என் பாட்டியுடன் செல்ல விருப்பம் என்று விமலாதேவி கூறியதால் அவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

பின்பு செப்டம்பர் மாதம் விமலாதேவியை வருசநாட்டைச் சேர்ந்த சதீஸ்குமார் என்பவருக்கு அக்டோபர் 30-ம் தேதி திருமணம் செய்துவைக்க பேசி நிச்சயம் செய்கிறார்கள். இதற்கிடையில் விமலாதேவியின் மனதை மாற்றுவதற்காக இவர்களின் உறவினர் வீட்டுக்கு நிச்சயம் செய்யப்பட்ட சதீஸ்குமாருடன் அனுப்பி வைக்கிறார்கள் பெற்றோர்.

போகும் வழியில் விமலாதேவி நண்பருக்குப் பேசுவது போல் சதீஸ்குமாரிடம் செல்போனை வாங்கி வத்தலக்குண்டு பஸ் நிலையம் வரும்படி திலீப்குமாரிடம் பேசியுள்ளார். திலீப்குமாரும் வத்தலக் குண்டு பஸ் நிலையம் வந்து விட்டார். உடனே திலீப்குமாரை சதீஸ்குமார் அடித்துள்ளார். அதற்கு பதிலாக விமலாதேவியும் திலீப்குமாரும் சேர்ந்து சதீஸ்குமாரை அடித்து கலகம் செய்துள்ளனர்.

இந்நிலையில் அருகில் இருந்த காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆனந்தி இவர்களை கைது செய்து விமலாதேவியின் பெற்றோரை வரவழைத்து அவர்களோடு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார். காவல்துறை சார்பு ஆய்வாளர் ஆனந்தி கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், விமலாதேவி நான் திலீப்குமாருடன்தான் செல்வேன் எனறு கூறியுள்ளார். அதற்கு அவர்கள் விமலாதேவி அணிந்திருந்த நகைகளை கழற்றி வாங்கிக் கொண்டு ஒரு விடுதலைப் பத்திரமும் எழுதி வாங்கிய பின் அனுப்பியுள்ளனர்.

விமலாதேவி தான் அணிந்திருந்த மூக்குத்தியைக் கூட கழற்றிக் கொடுத்து விட்டு உங்க சொத்து எதுவும் எனக்கு வேண்டாம், ஆள விட்டால் போதும் என்று கூறிவிட்டு திலீப்குமாருடன் பேருந்து நிலையம் வந்தபோது மறுபடியும் விமலா தேவியின் பெற்றோர் திலீப்குமாருடன் தகராறு செய்துள்ளனர். மீண்டும், அவர்களை கைது செய்த சார்பு ஆய்வாளர் ஆனந்தி விமலாதேவியை தனியார் விடுதிக்கு அனுப்பி வைத்துவிட்டு திலீப்குமாரை விரட்டி விடுகிறார். மறுநாள் மீண்டு திலீப்குமார் சார்பு ஆய்வாளர் ஆனந்தியிடம் சென்று விமலாதேவியை என்னுடன் அனுப்பி வையுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அனுப்ப மறுத்த உதவி ஆய்வாளர் விமலாதேவியை சின்னச்சாமியிடம் ஒப்படைத்துள்ளார்.

26.09.2014-ல் விமலாதேவி வீட்டுக்கு வந்ததிலிருந்து திலீப்குமாருடன்தான் சேர்ந்து வாழ்வேன் என்று தொடர்ந்து உறுதியாக நின்று போராடியதால் 1.10.2014-ம் தேதி இரவு சுமார் 9 மணிக்கு கொலை செய்திருக்க வேண்டும் என்ற தகவல் கூறுகிறார்கள். இரவோடு இரவாக எரித்து விட்டு தூக்கு போட்டு இறந்து விட்டதாக காலையில் உறவினர்களுக்கு தகவல் தருகிறார்கள் பெற்றோர். சின்னச்சாமியின் வீடு பூதிப்புரம் ஊருக்குள் இல்லாமல் தனியாக தோட்டத்து வீடாக இருந்ததால் நடந்த சம்பவம் யாருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.

விபரம் அறிந்த திலீப்குமார் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தருகிறார். விமலாதேவியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என்று வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். சமூக நெருக்கடிக்குப் பின் தற்கொலைக்கு தூண்டுதல் என்று பெற்றோரையும் உறவினரையும் சேர்த்து வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

விமலாதேவியை கொலை செய்து சிறு எலும்பு மிஞ்சாமல் எரித்து சாம்பலாக்கிய சுடுகாடு

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தமிழகத்தில் நடக்கும் எந்த ஒரு சாதி கலவரத்திற்கும் ஆதிக்கசாதி தலைவர்களும் காவல்துறையும் எப்படி உதவியாக இருக்கிறார்களோ, அதேபோல் இந்த கொலைக்கும் உடந்தையாக இருந்துள்ளார்கள். இதுபோன்ற சாதிவெறி கொலைகள் நடப்பதை தடுக்க உண்மையில் நாம் செய்ய வேண்டியது, கொலைக்கு நேரடியாக உடந்தையாக இருந்த உறவினர்களை மட்டுமல்லாமல் துணைநின்றவர்கள் மீதும் வழக்கு பதிய வேண்டும்.

அதன்படி ஆரம்பத்திலிருந்து இவர்களை பிரிப்பதற்கு உடந்தையாக இருந்த உசிலம்பட்டி துணை கண்காணிப்பாளர், வத்தலக்குண்டு உதவி ஆய்வாளர், உசிலைபகுதி கள்ளர் சாதி தலைவர்கள், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் ஆகியோரின் மீதும் கொலை வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும்.

ஆதிக்கசாதி வெறியை குழிதோண்டி புதைத்தால்தான் அந்த புதை மேட்டிலிருந்து சாதிமறுப்பு திருமணம் அதிகரித்து ஆரோக்கியமான புதிய சமூகத் துளிர்விடும்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
உசிலை வட்டம்.

மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையம் அனுப்பிய அறிக்கை

உசிலம்பட்டி அருகே பெண் கவுரவக்கொலை ! மூடி மறைக்க ஆதிக்க சாதியினர் – போலீசு – அரசு அதிகாரிகள் கூட்டு சதி !

மனித உரிமை பாதுகாப்புமையம் உசிலை உட்கிளையைச் சேர்ந்த தோழர்கள் இது தொடர்பாக அந்த ஊருக்கு உண்மையறிந்து வரச் சென்றனர். விமலாதேவி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் வீட்டில் இல்லை. ஊர்மக்களிடம் இதுபற்றி விசாரித்த போது ஒருவரும் முறையாகப் பதில் சொல்லவில்லை. ஆனால் அந்தப் பெண்ணும் பையனும் செய்தது தவறு என்று சொல்லியிருக்கின்றனர். மேலும் விசாரித்த போது கடந்த 2 ஆண்டுகளாக விமலாதேவியும், திலீப்குமாரும் நெருங்கிப் பழகிவந்தது அவருடைய குடும்பத்தாருக்குத் தெரிந்தே உள்ளது. ஆனால் அவர்கள் அதை பெரிது படுத்தவில்லை என்று சொல்கிறார்கள். ஊர்க்காரர்கள் இழித்துப் பழித்துப் பேசியதைத் தாங்காமல் தான் வீரணன் விசம் குடித்துள்ளார். அதன் பிறகுதான் இது வெளியே தெரிந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டப் பொறுப்பில் உள்ள செல்லக்கண்ணு மற்றும் தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ. ஆகியோர் வீரணனுக்கு உறவினர்கள். இவர்கள் இந்தப் பிரச்னையில் வீரணனுக்கு ஆதரவாக இருந்து வருகின்றனர். பி.வி.கதிரவன் ஆதிக்க சாதி அடிப்படையில் ஓட்டு வாங்கி ‘அம்மா’வின் ஆசியில் எம்.எல்.ஏ. ஆனவர். சி.பி.எம். செல்லக்கண்ணு இது போன்ற பிரச்னைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்து காவல்துறைக்குத் தரகுவேலை செய்வதையே தொழிலாகக் கொண்டுள்ளவர் என்று பலரும் தெரிவிக்கின்றனர்.

ஆக இந்தக் கவுரவக் கொலை தருமபுரிமாவட்டம் நத்தம் காலனி இளவரசன் – திவ்யா காதல் பிரச்னையில் வன்னிய ஆதிக்க சாதிவெறியர்கள் எப்படி திவ்யாவின் தந்தை நாகராஜின் சாவுக்கும், இளவரசனின் சாவுக்கும், மூன்று கிராமங்களின் பலகோடி சொத்துக்கள் கொள்ளைக்கும் அழிவுக்கும் காரணமாக இருந்தார்களோ அதுபோலவே இதுவும் நடந்துள்ளது. உசிலம்பட்டி பகுதியில் இது ஒரு மோசமான தொடக்கமாக உணரப்படுகிறது. இது எபோலா போல பரவ வாய்ப்புள்ளது. எனவே இந்தக் கொலையை வெளியே தெரியவிடாமல் அமுக்கிவிடுவதற்கு மாவட்ட காவல் துறை கடும் முயற்சி எடுத்து வருகிறது. கொலையைத் தற்கொலையாக மாற்றிவிடத் துடிக்கிறது. அதற்கு ஆதிக்க சாதியினரின் ஆதரவையும் தாழ்த்தப்பட்ட மக்களின் மீது மிரட்டலையும் கடைப்பிடித்து வருகிறது.

விமலாதேவி கொலை செய்யப்பட்டதற்கான ஆதரங்கள்:

  • தற்கொலை என்றால் ஏன் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்கவில்லை?
  • சுடுகாட்டில் மயான சீட்டு இல்லாமல் பிணம் வெட்டியானால் எப்படி எரிக்கட்டது?
  • 8 பேர் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விமலாதேவியின் அப்பா, சித்தப்பா, அம்மா, சித்தி இரண்டாம் திருமணத்திற்கு தயாராக இருந்த சதீஷ்குமார் அவரது அப்பா குருசாமி வெட்டியான் ஆகியோர் அடங்குவார்கள். இவர்கள் எல்லோரும் (வெட்டியான் தவிர) வீட்டில் இருக்கும் போது விமலாதேவி எப்படி தற்கொலை (தூக்கு) செய்துகெள்வார்? அவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார் என்பதே உண்மை.

ஆனால் செல்லக்கண்ணு, பி.வி.கதிரவன் எம்.எல்.ஏ., ஆதிக்க சாதி கனவான்கள் மற்றும் காவல்துறையின் ஆசியோடு இது மறைக்கப்பட்டுள்ளது. பூதிப்புரத்தில் உள்ள சாதிக்காரர்கள் செத்த பெண்மீது பழி போடுகின்றனர். கொலையை நியாயப்படுத்துகின்றனர். சாதிமாறி காதலிப்பதை மன்னிக்க முடியாத குற்றமாகக் கருதுகின்றனர்.

கொல்லப்பட்ட விமலாதேவியின் கணவர் திலீப்குமார் இப்போது எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள சி.பி.எம். அலுவலகத்தில் சி.பி.எம். கட்சியினரின் பாதுகாப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால் தீண்டாமை ஒழிப்பு முன்னணி (சாதி ஒழிப்பு அல்ல) மற்றும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யக்கோரி சுவரொட்டி ஒட்டியுள்ளனர். ஜனநாயக மாதர் சங்கத்தில் உசிலை வட்டப் பொறுப்பில் இருப்பவர் செல்லக்கண்ணுவின் மனைவி முத்துராணி.

“வறட்டு கவுரவத்துக்காக ஒரு கொலை நடந்துள்ளது. தப்பவிடதே. தமிழக அரசே! நடவடிக்கை எடு.” என்று கோரி வி.சி.கட்சியினர் சுவரொட்டி இயக்கம் நடத்தியுள்ளனர். திருமாவளவன் படத்தைப்போட்டு விசிகட்சியினர் ஒட்டிய அனைத்து சுவரொட்டிகளையும் காவல்துறையும், பார்வர்டுபிளாக் கட்சியைச் சேர்ந்த சில வக்கீல்களும் தேடித் தேடிச் சென்று ஒன்றுவிடாமல் கிழித்துவிட்டனர். அதோடு மட்டுமல்லாமல் தலித்துகளை கெட்ட வார்த்தைகளால் நடுரோட்டில் அர்ச்சித்தனர். மேலும் உசிலை நகரில் உள்ள மாட்டிறைச்சிக் கடையில் போய் முன்னாள் ஊராட்சித் தலைவர் தகராறு செய்துள்ளார். விசி கட்சியைச் சேர்ந்த தென்னரசு என்பவரைத் தொலைபேசியில் அழைத்து மிகக் கேவலமாகத் திட்டி கொலை மிரட்டல் விட்டுள்ளனர்.

ஆனால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒட்டிய சுவரொட்டிகள் ஒன்று கூட கிழிக்கப்படவில்லை. சாதிக்கு சாதி சகித்துப் போய்க்கொள்ளும் நடைமுறை உள்ளதாகச் சொல்லிக் கொள்கின்றனர். இது என்ன உள்குத்தோ தெரியவில்லை.

இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி கும்பல் தமிழக அரசியலில் காய் நகர்த்துகிறது. சமூக நீதி, இட ஒதுக்கீடு, பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு பிழைப்பு நடத்தும் கட்சிகள் தான் இந்த மதவெறியர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கின்றனர்.

எமது தோழர்கள் விசாரித்ததில் தெரிந்த ஒரு விவரம் கடும் அதிர்ச்சியைத் தருகிறது. விமலா தேவியின் அப்பா வீரணன் காவல்துறை விசாரணையின் போது “என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கொலைக் கேசு போட்டுக்கோங்க. ஆனால் என் மகளைக் கொன்னதாத் தான் கேசு இருக்கணும் – அவன் (திலீப்குமார்) பொண்டாட்டின்னு இருக்கக் கூடாது.” என்று சொன்னாராம்.

விமலாதேவியும் – திலீப்குமாரும் கேரளாவில் பதிவுத்திருமணம் செய்து கொண்டதற்கான அத்தாட்சி இருக்கிறது. அவர்கள் திருமணம் ரத்து செய்யப் படவுமில்லை. ஆனால் இதைத் தெரிந்தே வேறு ஒருவன் கட்டிக் கொள்ள சம்மதிக்கிறான் என்றால் சாதி வெறிபிடித்த இந்த சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது. இதை வீழ்த்த நாம் போராடவேண்டாமா?

தகவல்
மனித உரிமை பாதுகாப்புமையம்
உசிலம்பட்டி உட்கிளை மதுரை மாவட்டம்.

news1

பத்திரிகை செய்திகள்

ஆசிரியர் பயிற்சி முடித்த இளம்பெண் தூக்கிட்டு சாவு
ஆசிரியர் பயிற்சி முடித்த இளம்பெண் தூக்கிட்டு சாவு : பெற்றோர் உட்பட 8 பேர் கைது

மேக் இன் இந்தியா – கேலிச்சித்திரம்

0

மேக் இன் இந்தியாபடம் : ஓவியர் முகிலன்