Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 755

கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா?

33

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 14

 ”இராமநாதபுரம் கீழக்கரையில் தொடங்கி பம்பாய் தாவுத் இப்ராஹிம் வரை, கடத்தல் போன்ற சட்ட விரோதத் தொழில்களில் முசுலீம்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்.”

இந்து முன்னணியின் மேடைகளிலும், ஆர்.எஸ்.எஸ்.-இன் ஷாகாக்களிலும் அடிக்கடி வலியுறுத்தப்படும் ஒரு அவதூறு.

மேலோட்டமாகப் பார்த்தால் ‘ஆமாம் உண்மைதானே’ என்று தோன்றும். திரைப்பட உலகமும், செய்தி நிறுவனங்களும் முசுலீம்களைக் கடத்தல்காரர்களாகப் பல ஆண்டுகளாகச் சித்தரித்ததன் விளைவே மேற்கண்ட கருத்து. விவாதத்திற்கும் அப்பாற்பட்ட உண்மை போல இது உருவெடுத்திருக்கிறது. உண்மையில் கடத்தல் தொழிலுக்கு உகந்த மதம் என்று எதுவும் இல்லை. கடத்தல் தொழிலில் எல்லா மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். அவர்களின் மதமே சட்ட விரோதமாகக் கொள்ளை லாபம் சம்பாதிப்பதுதான்.

பம்பாயின் வரதராஜ முதலியார், அமர்நாயக், அருண்காவ்லி, சிவசேனாவின் குண்டர்படைத் தொழிற்சங்கம், தாவூத் இப்ராகிமிடம் வேலை பார்க்கும் இந்துத் தளபதிகள் போன்ற தாதாக்களெல்லாம் யார்? சென்னையில் ஏழுமலை, சிவா, வீரமணி, பாக்சர் வடிவேலு, எர்ணாவூர் நாராயணன், ஆதி ராஜாராம், மதுசூதனன், ஜெயா – சசி கும்பலின் தலைமையில் தமிழகத்தை மொட்டையடித்த வட்டாரத் தளபதிகள் அவர்களெல்லாம் யார்? அந்நியச் செலவாணி மோசடியில் ஈடுபட்டமைக்காக ஜெயா – சசி கும்பலைச் சேர்ந்த தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் ‘இந்துக்கள்’ என்பதால்தான் கடத்தல், சட்ட விரோத தொழில்களில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்று கூறலாமா?

கடத்தல் மற்றும்  அந்நியச் செலாவணி மோசடியைத் தண்டனைக்குரிய கிரிமினல் குற்றமாகக் கருதிய ஃபெரா (FERA) சட்டத்தை ரத்து செய்து, அதை சிவில் குற்றமாக மாற்றி ஃபெமா (FEMA) என்ற புதிய சட்டத்தைப் பிறப்பித்திருப்பதே தற்போதைய பா.ஜ.க. அரசுதான். எனவே கடத்தல் பேர்வழிகளெல்லாம் இந்துக்கள்தான் என்பதற்கு இதையே நிரூபணமாக எடுத்துக் கொள்ளலாமா? ஆனால், ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது, முசுலீம்கள் மட்டுமே கடத்தல் செய்து, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமாகிறார்களாம்.

உண்மையில் கடத்தல் என்றால் என்ன? சுங்கவரி, இறக்குமதித் தீர்வைப் பட்டியலில் உள்ள பொருட்களை சட்ட விரோதமாகக் கடத்தி வந்து விற்று இலாபம் சம்பாதிப்பது. ஆனால், இன்றைய உலகமயமாக்கமும், புதிய பொருளாதாரக் கொள்கையும் இத்தகைய மரபுவழிக் கடத்தலைத் தேவையற்றதாக்கி விட்டது. தங்கமும், டாலரும் தடையின்றி வர அனுமதிக்கப்படுகின்றன. முக்கியமாக அரசே கடத்தல் தொழிலுக்கு உரிமம் கொடுத்து வருகிறது. ஓ.ஜி.எல் (Open Goverment License) என்ற உரிமம் பெற்று எந்தப் பொருளையும் இறக்குமதி செய்யலாம். தற்போதைய பா.ஜ.க. அரசும், முந்தைய அரசுகளும் செய்ததும், செய்வதும் இத்தகைய கடத்தல்தான்.

பர்மா பஜாரில் லுங்கியும் சென்ட் பாட்டிலும் விற்கும் முசுலீமைக் காட்டி ”பார் முசுலீம்தான் கடத்தல்காரன்” என்கிறது இந்து முன்னணி. லுங்கி கிடக்கட்டும்; பனியன் ஜட்டி முதல் பல் குத்தும் குச்சி வரை, ஊறுகாய் மட்டை முதல் துடைப்பக்கட்டை வரை சுமார் 750 பொருட்களை வெளிநாடுகளிலிருந்து ‘கடத்தலாம்’ என்று இப்போது சட்டமே போட்டிருக்கிறது பா.ஜ.க. அரசு. கடத்தல்  அனுமதிக்கப்பட்ட 750 சரக்குகளில் ”ஹிந்துக்களின் புனிதமான குங்குமமும்” அடக்கம். பர்மா பஜார் முசுலீம்களை ஒழிக்கத்தான் பா.ஜ.க அரசு நாட்டையே பர்மா பஜார் ஆக்கிவிட்டது போலும்!

இதுவன்றி ஏற்றுமதி – இறக்குமதி மோசடி, வருமானவரி ஏய்ப்பு, அந்நியச் செலாவணி மோசடி, கழிவு, தரகு, ஊழல் என்று பல்லாயிரங்கோடிக் கணக்கில் சுருட்டுவது பார்ப்பன – பனியா தரகு முதலாளிகள்தான். தன்னுடைய கணக்குப்படி ஒரு ஆண்டில் சுருட்டப்படும் மோசடிப் பணம் குறைந்தது ஒரு லட்சம் கோடியிருக்கும் என்று சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குநர் மாதவன் கூறியிருக்கிறார்.

மேலும் இந்தியாவின் பிரபல ஊழல் வழக்குகளான போஃபர்ஸ், சர்க்கரை, நிலக்கரி, தொலைபேசி, ஜெயின் டைரி, ஹவாலா, இந்தியன் வங்கி, பங்குச் சந்தை, ஜெயா – சசி ஊழல், தெகல்ஹா இராணுவ ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல் போன்ற அனைத்து வழக்குகளிலும் கோடிகளைக் கொள்ளையடித்தவர்கள் யார்? முசுலீம்களா? இல்லை; ஒருவர் கூட இல்லை. மாறாக பார்ப்பன – பனியா கும்பல்தான் கொள்ளையடிக்கும் கூட்டமாக இருந்து நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சி வருகிறது.

எனவே இத்தகைய மோசடிகளைத் தடுப்பதோ, தடை செய்வதோ இந்து மத வெறியர்களின் நோக்கமல்ல. மாறாக இந்த சட்ட விரோத – சமூக விரோத கும்பல்கள் அனைத்தும் தனக்கு மட்டும் விசுவாசிகளாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பம். ”கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், குண்டர் படை நடத்துபவர்கள், விபச்சாரத் தொழில் செய்பவர்கள் – அனைவரும் மராத்திய இந்துக்களாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று அவர்களின் நோக்கத்தை பால் தாக்கரே பச்சையாக வெளியிடுகிறார். இது இந்து தர்மத்துக்கு விரோதமானதல்ல என்பதையே கீழ்க்கண்ட கீதையின் சுலோகமும் மெய்ப்பிக்கின்றது.

”எவனொருவன் மிகக் கெட்ட குணங்களை உடையவனாக இருந்தாலும், மற்றொரு தெய்வத்தையன்றி என்னையே வழிபடுவானேயானால் அவன் நல்லவன் என்றே அறிய வேண்டும்.”

– தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

வாடகைதாரர் விவரம் சேகரிக்கும் போலீசுக்கு முதல் கட்ட ஆப்பு – HRPC வழக்கில் தீர்ப்பு !!

53

வாடகைதாரர்களின் தகவல்களை காவல் துறையினருக்கு  தர மறுக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

சென்னை மாநகரத்தில் நடைபெற்ற வங்கிக் கொள்ளைகளையும் அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய “என்கவுன்ட்டர்“ நாடகத்தில் வெளிமாநிலத்தவர்களை கொலைசெய்ததையும் முகாந்திரமாக வைத்து சென்னைக் காவல் துறை ஆணையாளர்  கடந்த 03.03.2012 அன்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் சென்னை மாநகரத்தில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் சமூக விரோதிகள் குடியிருப்பதாகவும் அவர்களால் சமூக பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை தடுக்கும் தேவையைக் கருதி அனைத்து வீட்டு உரிமையாளர்களும் தங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் காவல் துறை கொடுக்கும் விண்ணப்பத்தில் வாடகை தாரர்கள் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டும் எனவும் அவ்வாறு அளிக்காத பட்சத்தில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 188ன் கீழ்  (இப்பிரிவின் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்க முடியும்) குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உத்தரவிட்டிருந்தார்.

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் மக்களின் தகவல்களை தரவாக்கும் பணியினை மேற்கொண்டு அதன் மூலமாக பற்றிப் பரவும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் நீண்டகால அரசின் தேவையை நிவர்த்தி செய்யவே இவ்வுத்தரவு உண்மையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை ஆணையாளரின் மேற்கூறிய உத்திரவினை பல்வேறு இடங்களில் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து காவல் துறையினர் விவரங்களைச் சேகரிக்கத் துவங்கியுள்ளனர். சமீபத்தில் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த தென் சென்னை உதவி ஆணையாளர், தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட சுமார் 22,000 வீட்டு உரிமையாளர்கள் வாடகைதரார்களின் தகவல்களை அளித்துள்ளதாகக் கூறியுள்ளார். காவல் துறை தயாரித்துள்ள விண்ணப்பத்தில் வாடகைதாரரின் புகைப்படம், அவரது நிரந்தர முகவரி, அவர் ஏற்கனவே வாடகைக்கு குடியிருந்த முகவரி, செல் பேசி எண், வேலை செய்யும் இடம் மற்றும் அதன் முகவரி மற்றும் தன்னுடன் தங்கியிருப்பவர்களின் விவரம் மற்றும் அவர்களுடனான உறவு ஆகியவற்றை நிரப்பி அனைவருடைய புகைப்பட அடையாள அட்டையின் நகல்களை இணைத்து வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் கையொப்பம் இடவேண்டும்.

காவல் துறை மேற்கூறிய உத்திரவினை சில மனித  உரிமை ஆர்வலர்களும், வழக்குரைஞர்களும் எதிர்த்து குரல் எழுப்பியிருந்தாலும், இதற்கெதிரான வலுவான எதிர்ப்புக் குரல்கள் எழுப்பப்படாத காரணத்தால் காவல் துறையினர் இதனை தீவிரமான அமல்படுத்த முனைந்தனர்.  மேலும் இதே போன்று கல்வி நிறுவனங்கள் மூலமாக மாணவர்களின் தகவல்களைத் தரவு செய்யவும், வெளிமாநில தொழிலாளர்களின் தகவல்களைத் தரவு செய்யவும் காவல் துறையினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கூறிய காவல் துறை ஆணையாளரின் உத்திரவினை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சென்னைக் கிளை, எமது செயலாளர் வழக்குரைஞர் மில்ட்டன் பெயரில் பொது நல வழக்கு ஒன்றினைச்  சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. நேற்று அவ்வழக்கானது சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி ஆயத்தின் முன்பு விசாரணைக்கு வந்தது. அதே போன்று அண்ணா நகரைச் சேர்ந்த மருத்துவர் சிறிதர் என்பரும் பொது நல வழக்கு தொடுத்திருந்தார்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக ஆஜரான வழக்குரைஞர் புருஷோத்தமன் அவர்கள் காவல் துறை ஆணையாளரின் உத்திரவானது பொது மக்களின் தகவல்களை சட்ட அங்கீகாரம் இல்லாமல் காவல் துறை பெற்று பராமரிக்க இயலாது என்கிற நிலையில், பொது அமைதிக்காக உடனடி ஆபத்துக்களைத் தடுப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 144ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினை, காவல் துறை ஆணையாளர் சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளார் எனவும், இவ்வாரான நடவடிக்கை வாடகைதாரர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பறிப்பதாகவும் அவர்களின் தனிமைச் சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்குவதாகவும், உடைமையாளர் மற்றும் உடைமையற்றோரைப் பாகுபடுத்தும் நிலையை உருவாக்குவதாகவும், வாடகைதாரர்களையும், வெளிமாநிலத்தவரையம் கிரிமினல்களாக சித்தரிப்பதாகவும், வீட்டு உரிமையாளர்களை வாடகைதார்களைப் பற்றிய இன்ஃபார்மர்களாக மாற்றும் கயமைத்தனமான நடவடிக்கை இது என்றும் வாதிட்டார்.

மேலும் மே 1-ம் தேதிக்குள் வாடகைதாரர்களின் தகவல்களைத் தராமல் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது ஏற்க இயலாத ஒன்று எனவும் வலியுறுத்தினார். மருத்துவர் சிறிதருக்கு ஆஜரான வழக்குரைஞர் சத்தியசந்திரன் அவர்கள், வீட்டு உரிமையாளர்கள் மற்றும் வாடகைதாரர்கள் இடையில் இவ்வுத்திரவு மூலம் பகைமைபாராட்டும் உணர்வை தூண்டும் அரசே தூண்டியுள்ளது என்று வாதிட்டார். அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞர் மும்பை, பெங்களுர் போன்ற மாநகரங்களில் இதே போன்று அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து தாங்களும் சென்னை மாநகரத்தில் அமல்படுத்தியுள்ளதாகவும்  கூறினார்.

இறுதியில் தலைமை நீதிபதி ஆயம் தகவல்களைத் தராமல் இருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு மட்டும் இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. வழக்கானது அரசின் பதில் மனுவிற்காக இரு வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அரசு வழக்குரைஞர் கூறியது போலவே புது தில்லி, மும்பை மற்றும் பெங்களுர் போன்ற பெருநகரங்களில் அம்மாநகர காவல் துறையினர் தீவிரவாத அச்சுறுத்தலைக் காரணம் காட்டி இதே மாதிரியான உத்திரவைகளை பிறப்பித்து மக்களின் தகவல்களைத் திரட்ட முனைந்து வருகின்றனர். அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்;; இங்கோ கொள்ளையர் அச்சுறுத்தல்;; இவ்வாறான அச்சுறுத்தல் பீதிகளை மிகைப்படுத்தி, அரசு பயங்கரவாதமானது அனைத்து மக்கள் தகவல்களையும் தரவுபடுத்தும் பணியினை எளிமையாகச் செய்துவிடலாம் என்று முனைந்து வருகின்றது. இதற்காக அரசியலமைப்பு சட்ட உரிமைகள், ஜனநாயக உரிமைகள் ஆகியவற்றையெல்லாம் பறித்து, ஒட்டுமொத்த சமூகத்தையும் தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர எத்தனிக்கிறது.

பொதுவாகவே, பொது நல வழக்கு என்பது ஒரு வகையில் அரசின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை சமூகத்தில் விவாதத்திற்கு கொண்டு வரும் ஓர் நடவடிக்கையாகவே இருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் ஜனநாயகமற்ற அரசின் பாசிச செயல்பாடுகளை மக்கள் போராட்டங்களின் மூலம்தான் முறியடிக்க இயலும். அதற்கு இவ்வுத்திரவு மக்களிடம் விவாதத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்று கருதுகிறோம்.

மக்கள் போராட்டத்திற்காக எமது பிரச்சாரத்தையும் துவக்கவுள்ளோம்.

எங்களோடு அணி சேருங்கள்!

மக்கள் உரிமைகளைப் பறிக்கும் அரசின் கொடுங்கோன்மையை தடுத்திடுவோம்!

__________________________________________________________________

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தமிழ்நாடு

சென்னைக் கிளை.
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சிறுபான்மையினர் கமிசனைக் கலைக்கக் கோரும் ‘மனித உரிமை’ப் பற்றாளர்கள்!

15

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 13

”சிறுபான்மையினரைப் பற்றி மட்டும் கவலைப்படும் ஒரு சார்பாக சிறுபான்மையினர் கமிசனைக் கலைத்து விட்டு, அனைத்து மக்களும் தங்களது குறைகளுக்குத் தீர்வு காணும் மனித உரிமைக் கமிசன் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் எவருக்கு எந்தக் குறையிருந்தாலும் அது களையப்பட ஒரு அமைப்பும் உருவாகும்.”

– ”இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?”இந்து முன்னணி வெளியீடு, பக் -29.

பெரும்பான்மை இந்துக்களுக்குக் கிடைக்காத மாபெரும் உரிமைகள் சிறுபான்மையினர் கமிசனுக்கு உள்ளது என்ற தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிதான் இந்தக் கோரிக்கை. தேசிய சிறுபான்மையினர் கமிசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கமிசன், தேசிய மகளிர் கமிசன் போன்றவை பார்ப்பனியத்தின் சமூகக் கொடுமைகளை எதிர்த்த மக்கள் போராட்டத்தினால் உருவானவை. இவை அந்தந்தப் பிரிவு மக்களின் குறிப்பான பிரச்சினைகள், பாதிப்புகளை அரசிற்கும், வெளி உலகிற்கும் ‘தெரிவிக்க’ மட்டுமே அதிகாரம் படைத்தவை. மற்றபடி இவற்றுக்கு வேறெந்த அதிகாரமும் கிடையாது.

இந்தக் கமிசன்கள் விசாரிக்கச் செல்லும் பிரச்சினைகளில், சாதி, மத, இன, ஆணாதிக்கத்தின் உறைவிடமான இந்து மதவெறியர்களே எதிர்த்தரப்பாக இருக்கின்றனர். எனவேதான் இந்தச் ‘சிறுபான்மை’ கமிசன்களைக் கலைத்துவிட்டு, மனித உரிமைக் கமிசனை ஏற்படுத்துமாறு கேட்கிறார்கள். அவர்கள் கேட்காமலேயே இப்போதே ‘மனித உரிமைக் கமிசன்’ ஒன்று செயல்படுகிறது.

கோவையில் காவலர் செல்வராசு கொலையைச் சாக்கிட்டு முசுலீம்களை எதிர்த்து நடந்த கலவரத்தை விசாரிக்க ‘மனித உரிமைக் கமிசன்’ வந்தது. வந்தவர்கள் உள்ளூர் போலீசு உருவாக்கிய அறிக்கையைக் கேட்டு வாங்கி, ‘இதுதான் தாங்கள் விசாரித்துக் கண்டறிந்தது’ என வெளியிட்டார்கள். அதற்குப் பிறகு வந்த சிறுபான்மையினர் கமிசன் இந்த ‘மனித உரிமை’ மோசடியை அம்பலப்படுத்தியது.

இப்படித் தங்கள் கலவரங்கள், கொலைகள் மற்றும் ஆதிக்கத்தை எவ்வித இடையூறுமின்றி தொடர்வதற்கே மனித உரிமை பற்றிப் பேசுகிறது ஆர்.எஸ்.எஸ். – இந்து முன்னணிக் கும்பல்.

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்!

70

ளி வெள்ளத்தில் மூழ்கி இருக்கிறது அரங்கம். அடுத்த பாடலை பாட வருகிறார், போட்டியாளர். பின்னணியில் இசை ஒலிக்க, பாடத் துவங்குகிறார்.

”ஆராரிரோ..நானிங்கு பாட தாயே நீ கண்ணுறங்கு…”
அரங்கிலிருப்பவர்கள் முதல் நடுவர்கள் வரை அவரவர் அன்னையின் தியாகத்தை எண்ணி உருகியபடி இருக்கின்றனர். பாடலின் நடுவில், நடுவர்களில் ஒருவர் இடைமறிக்கிறார்.

“ஒரு நிமிசம், இதை யாருக்கு டெடிகேட் பண்றீங்க, சந்தோஷ்?”

”அம்மாவுக்கு, சார்” – போட்டியாளர்

“உன் அம்மா எங்க?” – விட்டால் அழுது விடுவது போன்ற உருக்கமான குரலில் நடுவர்.

”அம்மா வரலை, அம்மாவுக்கு உடம்பு முடியாததால, வந்து உட்கார முடியாது. .அதனால வரலை.” – போட்டியாளர்.

“அப்டியா? நிஜம்மா?” – போலித்தனமான இரக்க வார்த்தைகளில் நடுவர்.

”ஆமா, நிஜமாத்தான் சார்” – பாடலை பாதியில் நிறுத்தச் சொன்ன கலக்கத்துடன் பதிலளிக்கிறார் போட்டியாளர்

“இங்கே பாருங்க, ஒரு சர்ப்ரைஸ் உங்களுக்கு” என்று நடுவர்  சொன்னதும், அரங்கமே திரையில் பார்க்கிறது. அங்கு, வாசலுக்கு வெளியே ஸ்ட்ரெச்சரிலிருந்து ஒரு அம்மாவை இறக்குகிறார்கள். அவரால் நடக்க முடியவில்லை. அப்படியும் விடாமல், கைத்தாங்கலாக அழைத்து வருகிறார்கள். காமிரா போட்டியாளரிடம் திரும்புகிறது. அவரோ, இதைக் காணச் சகியாமல் திரும்பிக் கொள்கிறார். அழுகிறார். உருகுகிறார். அரங்கமே எழுந்து நிற்கிறது. இதற்கேற்ப, ஒரு சோகப் பின்னணி இசை வாசிக்கப்படுகின்றது. பலரும் கைக்கொடுத்து தூக்கிவிட, அந்த அம்மா சிரமப்பட்டு படியேறுகிறார். இதைக் காண்பவர்கள், இன்னும் நெகிழ்ந்து விடுகிறார்கள். வாய் பொத்தி, ”அய்யோ” என்று பதறுகிறார்கள். கண்களைத் துடைத்துக் கொள்கிறார்கள்.

மேடையில் அவர் நாற்காலியில் அமர்ந்ததும் கரவொலி. இதோடு அந்த போட்டியாளரை விட்டு விடவில்லை. ”சரி, சந்தோஷ், ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க என்ன ஃபீல் பண்ணீங்க, இப்போ என்ன ஃபீல் பண்றீங்க? எப்படியாவது வார்த்தையில அதை கொண்டு வாங்க?” என்று அந்த போட்டியாளரை விடாமல் தோண்டித் துருவி செண்டிமெண்டைப் பிழிந்து எடுக்கிறார்கள்.

நடுவர்கள் கண்களை துடைத்துக் கொள்கிறார்கள். அரங்கத்திலிருப்பவர்கள், இந்தக் காட்சியை காணத் திராணியற்றவர்களாய் தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு தலைகுனிந்து அமர்ந்திருக்கிறார்கள். அப்படியும் போட்டியாளரை நிகழ்ச்சி நடத்துபவர் விடவில்லை. விக்கித்துப் போய் இருப்பவரிடமிருந்து உணர்ச்சியை வார்த்தைகளாகக் கறந்துவிடத் துடிக்கிறார். “எங்க அம்மாவால நடந்து வர முடியாது, வந்தாலும் நாள் முழுக்க நாற்காலியில உட்கார்ந்து இருக்க முடியாது” என்று போட்டியாளர் சந்தோஷ் தடுமாறுகிறார்.

போட்டியாளரின் தாயையும், நிகழ்ச்சி நடத்துபவர் விடவில்லை. அவரும் தடுமாற்றமான குரலில் பதிலளிக்கிறார். தனக்கு இந்த ஏற்பாடு முன்பே தெரிந்திருந்தாலும், ஆச்சரியமாக இருக்கட்டுமே என்பதற்காக மகனிடம் இது குறித்துச் சொல்லவில்லை என்கிறார். இதற்கும் அரங்கம் கண்கலங்குகிறது. நெகிழ்ந்து கரவொலி எழுப்புகிறது. சிறிது நேரத்தில் விட்ட இடத்திலிருந்து திரும்ப பாடல் தொடங்குகிறது.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !

ர்டெல் சூப்பர் சிங்கர் – தமிழகத்தின் பிரமாண்டமான குரல் தேடல் மற்றும்  தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்ற இந்த நிகழ்ச்சி தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் பிரசித்தம்.

முதலில் இந்த நிகழ்ச்சி மற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் போல் அல்லாமல், உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோ வகையைச் சார்ந்தது. அதாவது, பணத்துக்காக நடிக்கும் நடிகர்களை கொண்டதல்ல. நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களைக் கொண்டு, அவர்களின் உணர்ச்சிகளை, வாழ்க்கையை மையமாகக் கொண்டு பணத்துக்காகவும், படோடபமான பரிசுகளுக்காகவும் முக்கியமா டி ஆர் பி ரேட்டிங்குக்காக நடத்தப்படுபவை. முன்னரே திட்டமிட்டு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளைப் பார்த்து சலித்த ரசிகர்களுக்கு உண்மையான விறுவிறுப்பு, ஆவல், த்ரில் முதலான உணர்ச்சிகளை ஊட்டி கல்லா கட்டுவதுதான் இந்த ரியாலிட்டி ஷோக்களின் நோக்கம்.

இவ்வகை நிகழ்ச்சிகள் ஆரம்பத்தில் 1970களில் அமெரிக்காவில் பிரபலமாக இருந்தது. அமெரிக்காவில் ஓபரா வின் ஃப்ரே என்ற பெண்மணியின் இவ்வகை நிகழ்ச்சி மிகவும் புகழ்பெற்றது. எல்ல வணிக ஊடகங்களும் அமெரிக்க மாதிரியை வைத்து வளர்ந்தது போல தற்போது இந்த நிகழ்ச்சிகள் இந்தியாவுக்கும் இறக்குமதியாகி இருக்கின்றன.

கோன் பனேகா குரோர்பதி, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, காபி வித் அனு, சச் கா சாம்னா, மானாட மயிலாட, சரிகமபதநி என்று இதில் அநேக ரகங்களுண்டு.  இந்த ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் விளையாட்டு, காமெடி, பிரபலங்களை வைத்து, திறமைக்கான தேடல் என்றும் பல வகைகள் உண்டு.  ஏ எக்ஸ் போன்ற சேனல்களில் இது போன்ற ரியாலிட்டி ஷோக்களே தனிச்சிறப்பாக நடக்கின்றன. அதில் போட்டி நிகழ்ச்சிக்காக அருவெறுப்பான உணவுகளை உண்பது, சாதாரணமாக அன்றாட வாழ்க்கையில் செய்யாதவற்றை காமிரா முன்பு செய்வது, சமயங்களில் உயிரைக் காவு கொள்ளக்கூடிய சாகசங்கள், முன்பின் தெரியாதவர்களுடன் சில நாட்களை ஒரே வீட்டில் கழிப்பது  முதலியன.

வகைவகையாக நிகழ்ச்சிகள் இருந்தாலும் அவற்றின் நோக்கம் ஒன்றுதான் – காண்பவரின் உணர்ச்சிகளைக் கொண்டு விளம்பரங்களின் மூலம் காசு பார்ப்பது. அதாவது ரியாலிட்டி என்று சொல்லிக் கொண்டாலும் அதில் இயல்பு தன்மை என்பது பேச்சுக்குக் கூட இருக்காது. எல்லாம் ஒரு செயற்கைத்தனம் கலந்து இருக்கும். அதே நேரம் உண்மையில் நடப்பது போல தொகுத்து வழங்குவார்கள்.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !ரியாலிட்டி நிகழ்ச்சிகள், பார்ப்பவரை அடுத்தது என்ன என்பதை இதயத்துடிப்பை எகிறவைத்து, எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி ஈர்த்துப் பிடிக்கின்றன.  எவ்வளவுக்கெவ்வளவு மக்களை ஈர்த்துப் பார்க்க வைக்கின்றன என்பதைப் பொறுத்து அந்த நிகழ்ச்சியின் டி ஆர் பி ரேட்டிங் எகிறும். அதைப் பொறுத்து பணமும் கொழிக்கும். இதைக் கண்டுக்கொண்ட, டிவி நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை காமதேனுவாக பார்க்கின்றனர். பொழுதுபோக்கு அம்சத்துக்காக நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்டது போக,  நிஜத்தைப் போலவே காண்பிக்க வேண்டும், பார்ப்பவர்களின் உணர்ச்சிகளை கட்டிப்போட வேண்டும் என்ற உந்துதலில் நிகழ்ச்சிகளை செயற்கையாக இட்டுக்கட்டி நடத்துகின்றன. அதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன, தொலைக்காட்சி நிறுவனங்கள். ஆட்டை இழுத்து வந்து, வளர்த்து, பூஜை செய்து வெட்டுவது போலத்தான், ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டிருந்த காட்சி.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒவ்வொரு எபிசோடும் உணர்ச்சிகளின் சுரண்டல் என்றால் வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுப்பதும் மற்றொரு வகைச் சுரண்டல்தான். யார் அதிக வாக்குகளை செல்போன் குறுஞ்செய்திகள் மூலம் பெறுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அனுப்பப்படும் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் காசு. விளம்பரங்கள் மட்டுமல்லாமல் மக்களின் குறுஞ்செய்திகளிலும்  காசு வேட்டைதான், விஜய் டீவிக்கு. இப்படிக் கொள்ளையடிப்பதற்காக, மக்களின் கவனத்தைப் பெறுவதற்கு அவர்களுக்குத் தெரியாமலே வக்கிரமான ரசனைக்குக் கொண்டு சென்று செண்டிமெண்டால் தாக்குவார்கள். இதில் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுடன், மேல்தட்டு நடுத்தர வர்க்கப் பெற்றோர்களும் அடக்கம்.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் சிறுவர்களுக்கான பாடல் போட்டியில் பல சுற்றுகளுண்டு. ஒவ்வொரு சுற்றிலும் சிலரைக் கழித்துக்கட்டி கொண்டே வந்து, இறுதியில் மூன்று பேரை நிறுத்துவார்கள். அதுவும் கூட இயல்பானதாக இல்லாமல்,  நிகழ்ச்சியின் காரசாரத்தைக் கூட்ட வேண்டி நடத்தப்பட்ட நாடகமாகவே இருக்கும். மேலும், இந்தச் சுற்றுகளில் தோல்வியடைந்தவர்கள், இறுதியாக  வைல்ட் கார்ட் சுற்றில் போட்டியிடலாம். அதன்பிறகு, செல்போன்கள் மூலம் வாக்கெடுப்பு, இணையம் மூலம் வாக்கெடுப்பு என்று அவர்களைத் தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளன. ஆனால், தேர்வு முறைகள் என்று சொல்லப்பட்டாலும், எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பது விஜய் டிவிக்கே வெளிச்சம். கடந்த முறை சாய் சரண் என்பவரை வெற்றியாளராக தேர்ந்தெடுத்தார்கள். அந்த சாய் சரண் தொடர்ந்து மூன்று முறை சூப்பர் சிங்கரில்  விடாமல் கலந்துக் கொண்டார்.

ஒருமுறை ஸ்ரீகாந்த் என்ற சிறுவன் இறுதிச்சுற்றுக்கு வந்து விட்டான். அடுத்ததாக, பொது மக்களின் வாக்கு மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். அவனுக்கு வாக்கு சேகரிக்க சென்னை நகரெங்கும் ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அவனுடைய எஸ் எம் எஸ் எண், எந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும், எந்த நேரத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பன போன்ற விவரங்களுடன். ஒரு செல்போனுக்கு எத்தனை வாக்கு வேண்டுமானாலும் அளிக்கலாமாம். அதில் , அந்த சிறுவன், 10 வயது கூட நிரம்பியிராத அந்த சிறுவன் கூழை கும்பிடு போட்டுக்கொண்டு, ”என்னை வாக்களித்து ஜெயிக்க வைத்து, ஜூனியர் 2 டைட்டிலை வின் பண்ணிக் கொடுங்க, ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சிகள் எந்த அளவுக்கு பெற்றோரின் மனநிலையை, குழந்தைகளின் மனநிலையைச் சீரழித்து வைத்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டு இது.

இது தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல் என்று  சொல்லிக் கொண்டாலும் பெரும்பாலான தமிழக மக்கள் இன்னும் இதன் உள்ளே வரவில்லை. அவர்களெல்லாம் ஆரம்ப கட்டத்திலேயே கழித்துக் கட்டப்படுகிறார்கள். பெரும்பான்மை மக்கள் இங்கும் மேடைக்கே வர முடியாது. அப்படியே உள்ளே வரும் ஒன்றிரண்டு பேரும், காமெடிக்காக அல்லது ஒரு உப்புக்கு சப்பாணியாகப் பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளே வருவது அதிகமும் பார்ப்பன – ஆதிக்க சாதிக் குழந்தைகள்தான். அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் பார்ப்பன மாமிகளும், மாமாக்களும்தான். இந்தப் போட்டிகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கு உள்ளும் பொதிந்திருக்கும் திறமைகளை மிளிர வைப்பதல்ல. யாரால், குழந்தைகளுக்காக செலவழிக்க முடியுமோ, அவர்களது நடை, உடை , பாவனைகளுக்காக  மெனக்கெட முடியுமோ அவர்களது குழந்தைகள்தான் உள்ளே வருகிறார்கள். போட்டியாளர்களாகிறார்கள்.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !
சந்தோஷ்: நோயுற்ற இவரது தாயை வைத்து விஜய் டி.வி.யின் ஆபாச சென்டிமென்ட்!

பிறக்கும் போதே குழந்தை என்ன பொறியியல் படிப்பு முடிக்க வேண்டும், எத்தனை இலட்சம் சம்பளத்தில் பணியாற்ற வேண்டும், என்ன ஆய கலைகள் கற்க வேண்டும் என்பதை ஒரு பந்தயக் குதிரையை வளர்ப்பது போல ’தீனி’ போட்டு வளர்க்கிறார்கள், நடுத்தர வர்க்க பெற்றோர்கள். அதுவும் அவர்கள் பார்ப்பனர்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே கர்நாடக சங்கீதமும், பரதமும், கணினிக் கல்வியும் கண்டிப்பாக இருக்கும். ஊடக, கலை, சினிமாத்துறைகளில் வாய்ப்பு கிடைத்தால் ஜாக்பாட்தான் என்பது நிதர்சனமாயிருப்பதால் இந்த மாயை பெருக்கெடுத்து ஒடுகின்றது. ஆயினும் ஆயிரத்தில் ஒருவர்தான் இந்தப் போட்டியில் வெற்றி பெற முடியுமென்றாலும் பெற்றோர்கள் அயர்ந்து விடுவதில்லை.

ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெறும் குழந்தைகளுக்கு 25 லட்சத்தில் வீடு, கார் என்று பரிசுகள் வழங்கப்படுகின்றன. தங்கள் குழந்தைகள் முதலிடத்துக்கு வந்து வீட்டைப் பரிசாகத் தட்டிச் செல்ல வேண்டுமென்று ஒவ்வொரு பெற்றோரும் துடியாய்த் துடிக்கிறார்கள். அதற்காக எந்த அளவுக்கும் மெனக்கெடத் துணிகிறார்கள். லாட்டரி சீட்டு வாங்கினால் லட்சாதிபதி என்று கனவு கண்டு ஒவ்வொரு நாளும் லாட்டரி சீட்டு வாங்கி பாமரர்கள் ஏமாறுகிறார்கள், இல்லையா? அது போல, தங்கள் குழந்தையை ரேஸ் குதிரைகளாக நினைக்கும் பெற்றோரின் இந்த  மனநிலையை விஜய் டிவி நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. விஜய் டிவி ப்ளெக்ஸ் பேனர்கள் வைக்கிறது என்றால் பெற்றோர்கள் பிட் நோட்டீஸ் அடித்து விநியோகிக்கிறார்கள்.

அந்தச் சிறுவனைப் பார்த்தால் பத்து வயதுதான் இருக்கும். மாலையில் ஐந்து மணி வாக்கில் தனது தந்தையுடன் அந்த ஸ்டூடியோ வாசலில் நின்றுக் கொண்டிருக்கிறான். ஜிகினாக்களுடன் பளபளக்கும் உடை அணிந்திருக்கிறான். முகத்தில் மேக்கப். இருந்தும், முகம் சோர்ந்திருக்கிறது. மதியம் அவன் சாப்பிட்டிருக்கவில்லை. பசிக்கிறதென்றும், ஜூரம் வருவது போலிருக்கிறது என்றும் தந்தையிடம் முணுமுணுக்கிறான். ஆனால், அவனது தந்தையோ பதைப்பதைப்புடன் இருக்கிறார். ஏனெனில், இந்த ஆண்டை விட்டால், தனது மகன் அதற்கான வயது வரம்பைத் தாண்டி விடுவான் என்கிறார்.

சூப்பர் சிங்கர் பாடல் போட்டிக்கான சுற்றுதான், அது.  அதில் அவன் ஜெயித்துவிட்டால், அடுத்த சுற்றில் பாடத் தயாராக வேண்டும். திரும்ப இதே போல ஏழு அல்லது எட்டு மணி நேரங்கள். அந்தச் சுற்றில் நடுவர்களுக்கு முன்பு தோன்றுவதற்கேற்ப  உடை அணிந்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை, அவன் இந்த போட்டியில் ஜெயித்து விட்டால் அவனது வாழ்க்கையே முற்றிலுமாக மாறிவிடும் என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, இதன் மூலம் சினிமாவில் பாட சான்ஸ் கிடைக்கும் என்று பரப்பப்பட்டு வருகிறது.

அதற்கேற்றாற் போல்,  நடுவராக வரும் ஏதாவது ஒரு இசையமைப்பாளரும் ஆசை காட்டுகிறார். ஆனால், அப்படி சினிமாவில் பாடும் வாய்ப்பு பெற்றவர்கள் மிகவும் சொற்பமே. இன்று தனித்த குரலிசை என்று ஒன்று திரையிசையில் இல்லாமல் போய்விட்ட பின்னரும் இத்தகைய ஆசைகளை அந்தப் பெற்றோர்கள் விடுவதாக இல்லை.

குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் தோல்வியடைந்தால் தாய்மார்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், ”நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.

ஏனெனில், அது தற்போது பரிசை நோக்கிய ஓட்டமாக மாறி விட்டது. கலந்து கொள்ளும் தங்கள் குழந்தைகள் வெற்றி பெற்றே ஆக வேண்டுமென்று அனைவரும் நினைக்கிறார்கள். எப்படியாவது பரிசுப்பொருளைக் கைப்பற்ற எண்ணுகிறார்கள். பணத்துக்காக எதை வேண்டுமானாலும் விற்கத் தயாராக இருப்பவர்கள் தங்கள் குழந்தையை விற்கத் தயாராகிவிடுகிறார்கள். அதற்காக, விஜய் டிவியிடம் முற்றுமுழுவதுமாகச் சரணடைந்து விடுகிறார்கள். தன் குழந்தை மேடையில் பாடினால், அரங்கில் அமர்ந்தபடி தந்தை நடனமாடுகிறார். பாட்டி எழுந்து குத்தாட்டம் போடுகிறார்.

ஆட்டமும், பாட்டமும் உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருப்பது போன்ற யதார்த்தம் நடுத்தர வர்க்கத்திடம் இல்லை. ஆனாலும் அவர்கள் ஆடுவதும், பாடுவதும் மனித உணர்ச்சிகளை இயல்பாக பண்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை. அது செயற்கையாக தன்னை பிறர் பார்க்க வேண்டும், அப்படி ஆடினால்தான் காமரா தன்னைப் பார்க்கும், தான் அதிகம் பார்க்கப்பட்டால்தான் தனது குழந்தையின் பிராண்ட் இமேஜ் உயரும் என்ற பச்சையான சுயநலமே இத்தகைய ஜோடனைகளைத் தோற்றுவிக்கின்றது.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.

இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.

ஐந்து வயது கூட நிரம்பாத குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள். முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் பெற்றோர்கள் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.

விஜய் டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.

குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி விஜய் டிவியோ அல்லது பெற்றோர்களோ கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் பாலியல் வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து தூண்டிவிடுதலும், குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.

சமூகச் சூழலைப் பற்றி கவனிக்காமல் அல்லது கவலைப்படாமல், சாயப்பட்டறைளிலும், பட்டாசுத் தொழிற்சாலையிலும், டீக்கடைகளிலும் பணிபுரியும் குழந்தைகள் தங்கள் குழந்தை பருவத்தைத் தொலைத்து விடுவதாகவும், குழந்தை தொழிலாளிகளை ஒழிக்க வேண்டுமென்றும் கூச்சல் இடும் நடுத்தர வர்க்கத்தின் கண்களுக்கு, விஜய் டிவி குழந்தைகளின் உண்மையான திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக தெரிவதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இந்த நிகழ்ச்சிக்கு வெளியே, சமூக அரசியல் காரணங்களால் வஞ்சிக்கப்பட்ட எண்ணற்ற குழந்தைகளின் நிலை பற்றி எண்ணுவதற்குக் கூட இவர்களுக்கு நேரமிருப்பதில்லை.

விஜய் டி.வி ஏர்டெல் சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல் !
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – விஜய் டி.வி.யின் அடுத்த சுரண்டல் ரெடி

குரங்காட்டியிடம் மாட்டிய குரங்குகளுக்குக் கூட சுதந்திரமிருக்கும். ஏர்டெல் சூப்பர் சிங்கருக்காக விஜய் டிவியிடம் மாட்டிய குழந்தைகள் நிலை அதைவிடப் பரிதாபம்.  போட்டியாளராகிவிட்டால், பள்ளிக்கூடத்துக்கு குறைந்தது மூன்று மாதங்கள் மட்டம்தான். ஏதோ வானத்திலிருந்து குதித்தது போல, பள்ளிக்கூடங்களும் குழந்தைகளுக்கு விடுமுறை கொடுத்து அனுப்பி விடுகின்றன. போட்டி முடிந்து விட்டாலோ, அடுத்த சீசன் தொடங்கி விடுகிறது. அடுத்த பலியாடு மாட்டும் வரை, விஜய் டிவி எங்கெல்லாம் நிகழ்ச்சி நடத்துகிறதோ அல்லது ஆட்டம் பாட்டம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த வெற்றியாளர்கள் சென்று நிகழ்ச்சி நடத்த வேண்டும். கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போலவே விஜய் டிவி இந்த வெற்றியாளர்களைத் தமது பிரச்சாரப் பீரங்கிகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றது. இலவசமாகக் கிடைத்த விளம்பரத்தை மனதில் கொண்டோ அல்லது விஜய் டிவிக்கு காட்ட வேண்டிய நன்றி விசுவாசத்தை நினைத்தோ, வெற்றியாளர்கள் இதனை மறுத்துப் பேசவும் முடியாது.

முதலாளித்துவ சமூகத்தில், பண்டங்களை சந்தைப்படுத்துவதற்கே ஊடகங்கள் தேவை. சந்தையில் பலியிட தங்கள் குழந்தைகள்  பண்டங்களா என்பதை பெற்றோர்கள் சிந்திக்கட்டும்.
_____________________________________________

– புதிய கலாச்சாரம், மார்ச் – 2012

___________________________________________________

மறந்து விடுவதற்கு எதிரான போராட்டம்! – பாரா நக்வி

27
குஜராத்-படுகொலைகள்
படம் - www.thehindu.com

குஜராத் 2002ஐ நம்மில் சிலர் விரும்புவது போல ‘நடந்து முடிந்த ஒன்று’ என்று ஏற்றுக் கொள்வதன் மூலம் நமது நிகழ்கால வாழ்வின் அர்த்தத்தை அச்சுறுத்துவதோடு, எதிர்காலத்தை ஆபத்துக்குள்ளாக்குகிறோம்.

நாள்: ஷா-இ-ஆலம் நிவாரண முகாம், அகமதாபாத், மார்ச் 27, 2002:

அகமதாபாத் ஷா இ ஆலம் நிவாரண முகாம் 10,000 க்கும் அதிகமான தப்பிப் பிழைத்தவர்களுக்கான மிகப்பெரிய முகாம். அதன் முற்றத்தில் சிதறிக் கிடக்கும் மனித எச்சங்களில் சாய்ரா (வயது 12), அப்ஸனா (வயது 11), நைனா (வயது 12), அஞ்சு (வயது 12 ), ருக்சத் (வயது 9), நீலோபர் (வயது 10), நீலோபர் (வயது 9), ஹேனா (வயது 11) ஆகியோரும் அடங்குவர். அவர்கள் அனைவரும் நரோடா பாடியாவில் தப்பிப் பிழைத்தவர்கள். எந்தக் குழந்தையும் பார்க்கக் கூடாதவற்றை அவர்கள் பார்த்திருக்கிறார்கள், எந்தக் குழந்தையும் கற்றிருக்கக் கூடாத வார்த்தைகளை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

“பலாத்கார்” (பாலியல் வன்முறை) -என்ற வார்த்தை அவர்களுக்குத் தெரியும். “மெயின் பதாவூம் தீதீ?” (நான் சொல்லட்டுமா, அக்கா?), “பலாத்கார் கா மத்லப் ஜப் அவுரத் கோ நங்கா கர்தே ஹைன், அவுர் பிர் உசே ஜலா தேத்தே ஹைன்” (பாலியல் வன்முறை என்றால் ஒரு பெண் நிர்வாணப்படுத்தப்பட்டு, பிறகு எரிக்கப்படுவது). அதன் பிறகு அவள் தரையை நோக்கி வெறித்துப் பார்க்கிறாள். ஒரு குழந்தை மட்டுமே இப்படி பேச முடியும். நரோடா பாடியாவில் இதுதான் மீண்டும் மீண்டும் நடந்தது. பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு, எரிக்கப்பட்டனர். (‘தப்பி பிழைத்தவர்கள் பேசுகிறார்கள், ஒரு மகளிர் குழுவின் உண்மை அறிதல்’ ஏப்ரல் 16, 2002 – பக்கம் 13)

சிதைக்கப்பட்ட அந்த பெண்களில் எதுவும் மிச்சமில்லை – உடல்கள், தடயங்கள், நீதி எதுவும் மிச்சம் இல்லை. இந்த சிறுபெண்ணின் மனதில் ஏற்பட்டுள்ள வடுக்களைத் தவிர எதுவும் எஞ்சியிருக்கவில்லை. எனக்கு இன்னும் அவளது முகம் நினைவில் இருக்கிறது. இன்று 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவள் எங்கே இருக்கிறாள், எப்படி கொலையும் பாலியல் வன்முறையும் நிரம்பிய மன பிம்பங்களுடன் வாழ்க்கையில் பயணிக்கிறாள் என்று நினைத்துப் பார்க்கிறேன். இத்தனை குழந்தைப் பருவங்களை வெட்டிச் சிதைத்த, அதற்காக தண்டிக்கப்படாமல் தப்பித்து விட்ட அந்த ஆண்கள் எங்கே இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். தனது குடிமக்களை பாதுகாப்பதற்கான அரசியல் கடமை உடைய அரசு தனது சொந்த குடிமக்களின் படுகொலையில் கூட்டுச் சதி செய்தது குறித்து மீண்டும் மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்.

காயம் ஒன்று இருக்கிறது

குஜராத்தில் இனப் படுகொலைக்கு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, நான் திரும்பிப் பார்க்க முயற்சிக்கிறேன். ஆயிரக்கணக்கான உயிர் பிழைத்தவர்கள் மற்றும் ஆர்வலர்கள் போலவே எனக்கும் அது முடியாத ஒன்றாக இருக்கிறது. நிகழ்காலத்தின் பிரிக்க முடியாத பகுதியாக விளங்கும் ஒன்றை எப்படி திரும்பிப் பார்க்க முடியும்? அதனால், எப்போதும் இருக்கும் தொடர்ந்து இருக்கும் ஆழமான காயமாக குஜராத் இருக்கிறது. 2002ல் நான் அடிக்கடி அழுதிருக்கிறேன். நான் இன்னும் அழுகிறேன். அதுதான் சரி என்று நினைக்கிறேன். ஏனெனில் குஜராத் நம்மைக் கூட்டாக அழ வைக்க வேண்டும். ஒரு தேசம் ஆக நம்மை நாமே உண்மையிலேயே வெட்கப்படச் செய்ய வேண்டும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது வரலாறு படுத்தப்பட மறுக்கும் வகையிலான கிளர்ச்சியாக உள்ளது. எந்த ஒரு வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்களிலும் அதை அடக்கம் செய்து முற்றுப் புள்ளி வைத்து விட முடியாது. அதற்கான காரணத்தின் ஒரு பகுதி – பிப்ரவரி-மார்ச் 2002க்கும் வெகு காலத்துக்குப் பிறகும் அது தொடர்ந்து கொண்டிருப்பது, அழித்தொழிக்கப்பட்ட முஸ்லீம் குடும்பங்களின் அச்சுறுத்தப்பட்ட பல டஜன் சிறு வாழ்க்கைகளில், வெளிப்பார்வைக்கு கொழித்துக் கொண்டிருக்கும் நகரங்களின் மாநகரங்களின் விளிம்புகளில் ஒதுக்கப்பட்டிருக்கும் ‘மறுவாழ்வு குடியிருப்புகளில்’ உழன்று கொண்டிருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைகளில் இன்றும் தொடர்ந்து கொண்டிருப்பது. அந்த காரணத்தின் இன்னொரு பகுதி, நியாயத்துக்கான போராட்டங்கள் இன்னும் பல நீதிமன்றங்களில் தைரியத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதும், அதைப் பற்றிய விவரிப்பு இன்னும் வெளியாகிக் கொண்டிருப்பதும். ஆனால், காரணத்தின் பெரும்பகுதி, குஜராத் நிகழ்வுகள் இந்தியாவுக்கு இழைத்ததன் அர்த்தம் இன்னமும் போட்டி விவாதக்குட்பட்டதாகவே இருப்பதாகும்.

“போகட்டும் விடுங்க, நடக்க வேண்டியதை பாருங்கள். ஏன் இந்த ஆர்வலர்கள் இந்த ‘மகிழ்ச்சியற்ற’ கடந்த காலத்தை திரும்பத் திரும்பக் கிளறி கொண்டே இருக்கிறார்கள்? 10 வருடங்கள் ஆகிவிட்டன” என்று சிலர் சொல்கிறார்கள். ஏன்? ஏனென்றால் சிலர் விரும்புவது போன்ற திரைக்கதையின் அடிப்படையில் கடந்த காலத்தை முடிவு கட்டினால், அது நமது நிகழ்காலத்தின் அர்த்தத்தை சிதைப்பதோடு எதிர்காலத்தையும் ஆபத்துக்குள்ளாக்குகிறது. இந்த வாக்குவாதங்கள் நீதிமன்றங்களில் நடத்தப்பட வேண்டிய போராட்டங்களைப் பற்றியவை மட்டும் இல்லை. இந்த வாக்குவாதம் குடியுரிமையின் அர்த்தத்தைப் பற்றியது. இது குடிமக்கள் மற்றும் அரசுக்கு இடையே உள்ள உறவை பற்றியது. அரசாங்கத்தின் தண்டனையைத் தாண்டிய நிலையைப் பற்றியது. குஜராத் என்பது மறப்பதற்கு எதிராக, கூட்டு நினைவைக் கைப்பற்றுவதற்கான போராட்டம். ஏனென்றால் கடைசியில் அது இந்தியா என்ற ஆதர்சத்துக்கான போராட்டமாக உள்ளது.

இந்தியா அதன் சிறுபான்மையினர் கௌரவமாகவும் குடியுரிமையின் முழு உரிமைகளுடனும் வாழ்வதற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தை 1950 ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. மீண்டும் மீண்டும், அந்த புனிதமான வாக்குறுதி மீறப்பட்டிருக்கிறது – தில்லி, நெல்லி, மீரட், பகல்பூர், ஹாஷிம்புரா, கந்தர்மால், குஜராத் மற்றும் மிகச் சமீபத்தில் கோபால்கர் (செப்டம்பர் 2011) என்று ஒவ்வொரு நிகழ்விலும், அவர்களது சிறுபான்மை அடையாளத்துக்காகவே, அவர்கள் யார் என்பதற்காகவே அப்பாவிகள் கொல்லப்படவும், முடமாக்கப்படவும், பாலியல் தாக்குதலுக்குட்படுத்தப்படவும், வீட்டிலிருந்தும் சமையலறையிலிருந்தும் எரிக்கப்பட்டு காற்றில் வீசப்படவும் செய்யப்பட்டார்கள்.

குறிவைக்கப்பட்ட ஒவ்வொரு நிகழ்விலும், அரசாங்கத்தின் அலுவலர்கள் ஒரு பக்க சார்பாக நடந்து கொண்டிருக்கிறார்கள். பாதுகாக்கவும், வழக்கு தொடரவும், நீதி வழங்கவும் உள்ள தமது கடமையிலிருந்து தவறியிருக்கிறார்கள். இப்படியே எவ்வளவு காலம் போக முடியும்? அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசாங்கத்தின் வல்லமையையும் துப்பாக்கிகளையும் போலீசையும், சைரன்களையும் குடிமக்களின் ஒரு குழுவினருக்கு எதிராக பயன்படுத்தவும் அதற்கு பதில் சொல்லப் பொறுப்பில்லாமலும் எவ்வளவு காலம் தப்ப முடியும்? அரசு நிறுவனத்தின் நிறுவன சார்புநிலைகள் எந்த நாகரீக ஜனநாயகத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதுதான் குஜராத் சொல்லும் பாடம்.

சவால்கள்

குஜராத் படுகொலை ஒரு தேசமாக நமக்கு முன் பல சவால்களை முன் வைக்கிறது. நமது இதயங்களிலும் சமூகக் கட்டமைப்பிலும் குற்றவியல் நீதிஅமைப்பு, சட்டங்கள், மற்றும் நீதிபரிபாலனத்திலும் உள்ள ஓட்டைகளை வெளிக் கொணர்கிறது. மக்களின் இதயங்களிலும் மனங்களிலும் இனவாத பாரபட்சம் மற்றும் வெறுப்புக்கு எதிராக சட்டம் இயற்ற முடியாதுதான். நமது கூட்டு மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைகளில் பல லட்ச வேறுபட்ட தருணங்களில் பல லட்ச வேறுபட்ட வழிகளில் நாம் ஒரு சமூகமாக முன்னெடுக்க வேண்டிய ஒரு போராட்டம் அது. ஆனால் பலவீனமானவர்களுக்கு நீதியை உறுதி செய்ய சட்டம் இயற்ற முடியும், இயற்ற வேண்டும்.

நழுவிப் போகும் நீதி

இந்தியாவின் சமீபத்திய வரலாற்றின் வேறு எந்த வன்முறை நிகழ்வையும் போலல்லாமல், குஜராத் 2002 நமது ஜனநாயக நிறுவனங்கள் பலவற்றின் வலிமையையும் தாங்கும் தன்மையையும் சோதித்தது – தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, கெளரவத்துக்குரிய உச்ச நீதிமன்றம், மற்றும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம். ஒவ்வொன்றும் முன் வந்து நடவடிக்கை எடுத்தன. இருப்பினும், எப்படியோ, குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களை நீதி என்ற விஷயம் இன்னும் எட்டவில்லை.

சட்டத்தின் செயல்பாட்டில் அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவம் என்பதை நிலைநாட்ட, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர்பிழைத்தவர்கள் நமக்கு அறைகூவல் விடுக்கிறார்கள். அரசாங்கத்தின் நிறுவனமயமான பாரபட்சத்துக்கு ஒரு சட்ட நிவாரணம் உருவாக்க; கையில் கத்திகளோடு பிடிபடாத, ஆனால் மற்றவர்களை பொய் சொல்லவும் கொல்லவும் தேர்தல் ஆதாயங்களுக்காக சட்டத்தை தவறுதலாக பயன்படுத்தவும் தூண்டிய அதிகாரத்தில் இருப்பவர்களிடம், தண்டனைச் சட்ட பொறுப்புகளை உறுதி செய்ய மீண்டும் மீண்டும் தவறிய நமது சட்டங்களிலும் நீதி பரிபாலனத்திலும் உள்ள இடைவெளிகளை நிரப்ப நமக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்.  இதை சரிவர செய்து முடிப்பது, நீதிக்கும் சட்டத்துக்கு முன்பு சமத்துவத்துக்கான நமது அரசியலமைப்பு வாக்குறுதியை கண்டெடுக்க, இதுவரை இருப்பதை விட சிறப்பாக உதவும். நீதி இல்லாமல், நாம் நகர்ந்து செல்ல முடியாது.

உயிர்தப்பிய ஒருவரின் தைரியம்

ஜனவரி 12, 2008ல் பேச முடியாததை பேசுவதற்கான தைரியத்தைக் கொண்டிருந்த, 20 நாட்களுக்கு மேலான கடுமையான குறுக்கு விசாரணையை தாங்கிக் கொண்ட பில்கிஸ் பானோ என்ற குஜராத் தப்பிப் பிழைத்தவர் சிறிதளவு நீதியை பெற்றார். 2002ன் கொடூரமான நாட்களின் போது அவரை கும்பலாக பாலியல் வன்முறை செய்த, அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேரை கொல்லவும் பாலியல் வன்முறைக்குட்படுத்தவும், அவரது மூன்று-வயது-மகளை தரையில் அடித்து சிதறடிக்கவும் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 12 பேருக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் ஒன்று ஆயுள் தண்டனை வழங்கியது.

ஜனவரி 21, 2008 அன்று தில்லியில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பில்கிஸ் இந்த அறிக்கையை வெளியிட்டார்:

“கடந்த ஆறு வருடங்களாக நான் பயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தேன். என் குழந்தைகளையும் சுமந்து கொண்டு ஒரு தற்காலிக இல்லத்திலிருந்து இன்னொன்றுக்கு அல்லாடிக் கொண்டிருந்தேன். இத்தனை மக்களின் மனங்களில் இன்னமும் இருக்கும் வெறுப்பிலிருந்து அவர்களை பாதுகாக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன். இந்த தீர்ப்பு அந்த வெறுப்புக்கு முடிவு கட்டி விடப் போவதில்லைதான், ஆனால் எங்காவது, எப்படியாவது நீதி நிலைநாட்டப்படும் என்பதை அது உணர்த்துகிறது. இந்த தீர்ப்பு எனக்கு மட்டுமின்றி கொல்லப்பட்ட எல்லா அப்பாவி முஸ்லீம்களுக்கும் என்னைப் போன்று முஸ்லீமாக இருந்ததாலேயே உடல்ரீதியாக மீறப்பட்ட எல்லா முஸ்லீம் பெண்களுக்குமான வெற்றியாகும். இதற்குப் பிறகு 2002ன் அந்த பயங்கரமான நாட்களில் குஜராத்தின் பெண்களுக்கு என்ன நடந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது என்பதால் இது ஒரு வெற்றி. ஏனென்றால், குஜராத்தின் வரலாற்றுப் பதிவுகளில் பாலியல் வன்முறை எங்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்று அழிக்க முடியாமல் பதிக்கப்பட்டு விட்டது. குஜராத் மக்கள் அந்த வன்முறை மற்றும் வெறுப்புணர்வின் களங்கத்துடன் வாழ முடியாமல் என்றாவது ஒரு நாள் இன்னும் எனது தாய்வீடாக திகழும் மாநிலத்தின் மண்ணிலிருந்தே அதை வேரோடு பிடுங்கி எறிந்து விட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.”

குஜராத்தில் நீதிக்கான போராட்டத்தை நமது சொந்த அபாயத்தில்தான் நாம் கைவிட வேண்டும். குஜராத்தை கைவிடுவதன் மூலம் நாம் ஒரு சிறந்த இந்தியாவை, ‘இந்தியா நம் ஒவ்வொருவருக்கும் உரிமையுள்ள வீடு’ என்ற நம்பிக்கையை கைவிடுகிறோம்.

_________________________________________________________________

– பாரா நக்வி,
நன்றி: தி ஹிந்து

தமிழாக்கம்: செழியன்.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

_____________________________________________________

இலங்கையின் கொலைக்களங்கள் – 2: முழுமையான தமிழ் விளக்கத்துடன் !

11

sri-lankas-killing-fields-unpunished-war-crimes

கடந்த மார்ச் 14ம் தேதி, ‘இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ என்ற தலைப்பில் இங்கிலாந்து நாட்டின் சேனல் 4 என்ற தொலைக்காட்சி, 2009-ல் இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்கள் மீது நடத்திய போர்க்குற்றங்களையும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் பற்றிய ஆதாரங்களை தொகுத்து வழங்கியிருக்கிறது

ஜூன் 2011-ல் இலங்கையின் கொலைக் களங்கள் என்ற பெயரில் ஒளிபரப்பபட்ட நிகழ்ச்சியின்  தொடர்ச்சியாக இந்த நிகழ்ச்சி உருவாக்கப்பட்டது. இலங்கை அரசு தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய போரின் இறுதிக் கட்டங்களில் நடந்த மனித உரிமை மீறல்களைப் பற்றி ஆய்வு செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.

இந்த ஆவணப்படத்தின் நோக்கம் மிகவும் குறுகிய அளவில் வரையறுக்கப்பட்டது. இறுதிக் கட்டப் போரில் 2009ம் ஆண்டில் ஜனவரி மாதத்திலிருந்து மே மாதம் வரை விடுதலைப் புலிகள் கிளிநொச்சியிலிருந்து வெளியேறி வடகிழக்குப் பகுதிகளை நோக்கி நகர்ந்து இலங்கை அரசு படைகள் வெற்றி அடைவது வரையிலான கால கட்டத்தில் போர்க்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் நடந்தனவா என்பதை மட்டும் ஆய்வு செய்கிறது இந்த நிகழ்ச்சி.

இந்த ஆவணப்படம் அந்த காலகட்டத்தில்,

1. தொலைக்காட்சி நிறுவனங்களால் எடுக்கப்பட்ட வீடியோக்கள், படங்கள்

2. இலங்கை இராணுவத்தினர் தமது மொபைல் போன்களில் எடுத்த வீடியோக்கள்

3. அமெரிக்க சேட்டிலைட் மூலமாக கிடைத்த படங்கள்

இவற்றையும்,

1. போரின் இறுதிக் கட்டத்தில் போர்ப் பகுதியில் பணி செய்த ஐநா ஊழியர்களின் அறிக்கைகள்

2. விக்கிலீக்ஸ் மூலமாக வெளியான அந்த காலத்தில் நடத்தப்பட்ட அமெரிக்க தூதரக செய்திகள்

3. இலங்கை அரசின் அறிக்கைகள்

இவற்றையும்,

இணைத்து இலங்கை அரசு படைகள், இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்கத்தின் அரசின் உயர் மட்டத் தலைமையின் ஆதரவோடும், உத்தரவின் கீழும் போர்க்குற்றங்களை நிகழ்ந்தன என்பதற்கான ஆதாரங்களை முன் வைக்கிறது.

இந்த படத்தில் காட்டப்படும் காட்சிகள் அனைத்தும் பல்வேறு இடங்களிலிருந்து திரட்டப்பட்ட, பிற நோக்கங்களுக்காக செய்யப்பட்ட பதிவுகள். இவற்றை இணைத்து போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை இந்த நிகழ்ச்சி வழங்குகிறது. இதைப் பார்க்கும் போது புலப்படும் கொடூரங்கள் கடலுக்குள் மூழ்கியிருக்கும் பனிமலையின் விளிம்பு மட்டுமே என்று புரிகிறது. வீடியோ கேமராக்களால் படம் பிடிக்கப்படாத, பார்வையாளர்களால் பதிவு செய்யப்படாத, களத்தில் நடந்த கொடுமைகள் இதை விட பல நூறு மடங்கு அதிகமானவை, தீவிரமானவை என்பது தெரிகிறது. இலங்கை பேரினவாத அரசின் கொடூரமான நடவடிக்கைகளைப் பற்றிய முக்கியமான ஆவணம் இந்த படம்.

அந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் தினமலர் பத்திரிகையின் இணைய பதிப்பில் ‘அது சேனல் four இல்லை சேனல் bore’ என்று தலைப்பிட்டு, ‘எதுவும் சொல்லும்படியாக இல்லை, பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டு கிடப்பதைத் தவிர எதுவும் புதிதாக காண்பிக்கவில்லை, பிரபாகரன் இறந்த விதத்தைப் பற்றி புதிதாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை’ என்று படத்தில் த்ரில்லிங்காக எதுவுமில்லை என்பதாக ஒரு வக்கிரமான கட்டுரை எழுதியிருந்தார்கள். தமிழ், தெலுங்கு படங்களில் வன்முறை காட்சிகளை பார்த்து கை தட்டி ரசிக்கும் ‘தினமலர்’ போன்றவர்கள் போரில் நிகழும் மக்களின் துயரங்களையும் அழிவுகளையும் புரிந்து கொள்ள முடியாதுதான்.

21ம் தேதி ஐநா மனித உரிமை கமிஷனில் அமெரிக்க அரசு கொண்டு வந்த தீர்மானம் ‘இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை இலங்கை உள்நாட்டிலேயே விசாரிக்க வேண்டும்’ என்று இலங்கை அரசையே அதன் தவறுகளுக்கு நீதிபதியாக செயல்படும்படி மட்டுமே வற்புறுத்துகிறது (http://www.youtube.com/watch?v=rmgh0RKr6w4)

இந்த பின்னணியில் ‘இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’ நிகழ்ச்சியை பார்த்து புரிந்து கொள்ள அதில் சொல்லப்படும் விபரங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு கீழே தரப்படுகிறது. இதில் முழு நிகழ்ச்சியின் தமிழாக்கம் – வருணணை, நேர்காணல், விளக்கம், அனைத்தும் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியை படித்து உடன் வீடியோவைப் பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும். ஆங்கிலம் தெரியாத தமிழ் மக்களுக்கு இது பெரிதும் உதவும் என்பதால் உங்கள் நட்பு வட்டத்தில் இந்தக் கட்டுரையினை விரிவாக கொண்டு செல்லுமாறு கோருகிறோம்.

ஜான் ஸ்னோ மறுபடியும் இலங்கையின் உள்நாட்டுப் போரின் கொடூரமான முடிவை ஆய்வு செய்கிறார். மனதை உலுக்கும் விவரிப்புகளுடனும் பொது மக்கள் மீது குண்டு வீசப்படுவது, படுகொலைகள் நிகழ்த்தப்படுவது மற்றும் அட்டூழியங்கள் பற்றிய காட்சிகளுடனும் ‘இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்’  துவங்குகிறது.

இது வரை நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளிலேயே அதிகம் அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் இடம் பெற்ற ஆவணப்படம் ஒன்றை சென்ற ஆண்டு சேனல் 4 ஒளிபரப்பியது. அவை இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் எனப்படும் போராளி படைகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டமான 2009ம் ஆண்டில் படம் பிடிக்கப்பட்டவை.

அந்த காலகட்டத்தில் அரசு படைகள் 40,000க்கும் அதிகமான பொதுமக்களை கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் ஆவணங்கள் சொல்கின்றன. மற்றவர்கள் இந்த எண்ணிக்கை அதை விட பல மடங்கு அதிகம் என்று சொல்கின்றனர். எங்களது ஆவணப்படம் இரு தரப்பிலும் நிகழ்த்தப்பட்ட கொடூரங்களைப் பற்றி ஆதாரங்களை வழங்கியது. ஆனால் அதன் மனதை பெரிதும் உலுக்கும் கண்டுபிடிப்புகள் இலங்கை அரசு படைகள் நிகழ்த்திய வரிசையான போர்க்குற்றங்களே.

பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் பொது மக்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் குண்டு வீசியது அதில் காட்டப்பட்டது. பெண் போராளிகள் மீதான பாலியல் ரீதியாக தாக்குதலுக்கான ஆதாரங்களையும் அது வழங்கியது. கட்டப்பட்ட கைதிகள் திட்டமிட்டபடி கொல்லப்பட்டதற்கான ஆதாரத்தையும் அது வழங்கியிருந்தது. அந்த ஆவணப்படம் ஜெனீவா முதல் நியூயார்க் வரை உலகத் தலைவர்களுக்கும் அயலுறவுத் துறை அலுவலர்களுக்கும் காட்டப்பட்டது. உலகின் பல பகுதிகளிலும் இருக்கும் தொலைக்காட்சி நிலையங்களிலிருந்து ஒளிபரப்பப்பட்டது.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் கேமரூன்:

“ஒரு பெரும் தாக்கம் ஏற்படுத்திய நிகழ்ச்சி. கவலை தரக்கூடிய நிகழ்வுகளைப் குறிப்பிட்டது, என்ன நடந்தது என்பதைப் பற்றிய முழு விபரங்களையும் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.”

இது ஆஸ்திரேலிய செனட்டிலும் பேசப்பட்டது

“சேனல் 4ல் மிகவும் தெளிவாகவும் மனதை உலுக்கும் வகையிலும் ஒளிபரப்பப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய கடும் குற்றச்சாட்டுகள் ஒளிபரப்பப்பட்டுள்ளன”

ஆச்சரியப்படும்படியாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவின் மனசாட்சியை உலுக்கி ஒரு அறிக்கையை வெளியிட வைத்தது. “எனது 28 வயது மகன் என்னை அழைத்தான். தொலைபேசியில் அழுது கொண்டே, ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு தன்னை ஒரு சிங்களன் அல்லது இலங்கை குடிமகன் என்று சொல்வதற்கே வெட்கப்படுவதாக சொன்னான்”

எங்களது ஆவணப்படம் போர்க்குற்றங்களுக்கான குறிப்பான ஆதாரங்களையும் சர்வதேச சமூகத்தால் கைவிடப்பட்ட மக்களின் கொடும் துயரங்களையும் காண்பித்தது. இந்த மக்களுக்கு நியாயம் கிடைக்குமா என்பதே இப்போது விடை சொல்லப்பட வேண்டிய கேள்வியாக இருக்கிறது. அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டு, அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா? இதுவரை, அது நடக்கவில்லை. எனவே, அதன் தொடர்ச்சியான இந்த ஆவணப்படத்தில் நாங்கள் போர்க்குற்றங்களுக்கான புதிய ஆதாரங்களை தருவதோடு, அவற்றுக்கு யார் பொறுப்பானவர்கள் என்பதையும் ஆய்வு செய்கிறோம். இலங்கை அரசின் மிக உயர் பதவிகளில் இருப்பவர்கள்தான் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்று சுட்டிக் காட்டுகிறது இந்த ஆய்வு.

விடுதலைப் புலிகள் சுதந்திர தமிழ் ஈழ நாட்டை அமைக்கப் போராடிய கொடூரமான ஆனால் ஆற்றல் மிகுந்த ராணுவமாக இருந்தனர். கட்டாய ஆள் சேர்ப்பு, குழந்தை போராளிகள், இந்த அரசு அதிகாரியை கொல்ல நடந்த முயற்சியைப் போல தற்கொலை வெடிகுண்டுகளை கூடப் பயன்படுத்த அவர்கள் தயாராக இருந்தனர்.

எங்களது முதல் ஆவணப்படத்தில் போரின் அரசுப் படைகள் புலிகளையும் லட்சக்கணக்கான தமிழ் பொதுமக்களையும் வடகிழக்கின் மேலும் மேலும் சிறிய பகுதிக்குள், இலங்கையின் கொலைக்களத்துக்குள், எப்படி விரட்டிச் சென்றனர் என்பதை பதிவு செய்தோம்.

டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)

“அரசாங்கத்துக்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருந்தது. அவர்கள் 26 ஆண்டு காலமாக கொடூரமான ஒரு போரை நடத்தி வந்தார்கள். எவ்வளவு காலம் பிடித்தாலும், விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத சக்தியாக மீண்டும்  தலையெடுக்க முடியாதபடி அழித்தொழிக்க முடிவு செய்திருந்தார்கள்”

சர் ஜான் ஹோம்ஸ் – மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. தலைமை (2007-2010)

“பன்னாட்டு சமூகம், ஊடகங்கள், அல்லது மனிதஉரிமை பிரச்சனைகள் என்று யாரும் அதை செய்வதிலிருந்து தங்களை தடுப்பதை அவர்கள் அனுமதிக்க விரும்பவில்லை. அப்படித்தான் அது நடந்து முடிந்தது.”

எதைப் பற்றியும் கவலைப்படாமல் நடத்தப்பட்ட அந்த நடவடிக்கைகளை முன் நின்று நடத்தியவர்கள் இன்றும் இலங்கையில் மிகவும் சக்தி வாய்ந்த பொறுப்புகளில் இருக்கிறார்கள். பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவும்தான் போரை வழிநடத்தியவர்கள், போர்க்குற்றங்கள் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்து வருபவர்கள்.

கோத்தபய ராஜபக்சே

“வெளிநாட்டினர் தமது மதிப்பீடுகளை அல்லது தீர்ப்புகளை இலங்கையின் மீது சுமத்த முடியாது”

மாறாக ஜனாதிபதியின் உத்தரவுப்படி தங்களது சொந்த விசாரணை நடத்துவதாக வலியுறுத்தினர். அது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அல்லது LLRC என்று அழைக்கப்பட்டது. எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்வதற்கு இது போதுமானதாக இருக்கும் என்று அவர்கள் சொன்னார்கள்.

சென்ற ஆண்டு இறுதியில் LLRCயின் அறிக்கை இறுதியாக வெளியிடப்பட்டது. இதுதான் அது.

பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததை அது ஒப்புக் கொண்டது. இதுவரை அரசாங்கம் இந்த உண்மையை மறுத்து வந்தது. கைது செய்யப்பட்டு இப்போது காணாமல் போய் விட்ட பெரும் எண்ணிக்கையிலான தமிழர் போன்ற பல பிரச்சனைகளைப் பற்றி தனது கவலையை அது வெளிப்படுத்தியது. ஆனால் அதன் அது எதை சொல்லாமல் விட்டது என்பதுதான் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம் . அரசு படைகளின் போர்க்குற்றங்கள் தொடர்பான பெருவாரியான ஆதாரங்களை அது முறையாக பரிசீலிக்கவில்லை. பொதுமக்கள் வேண்டுமென்றே குறி வைக்கப்பட்டார்கள் என்பதை அது குறிப்பாக மறுக்கிறது. விளைவாக, போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பானவர்கள் யார் என்பதை அடையாளம் காட்டத் தவறியது.

இந்த ஆவணப்படத்தில் நாம் நான்கு குறிப்பான குற்றப்பதிவுகளில் கவனம் செலுத்துகிறோம். ஒவ்வொரு குற்றப்பதிவிலும் போர்க்குற்றங்களுக்கான புதிய ஆதாரங்களை அளிப்பதோடு அந்த குற்றங்களுக்கான இறுதி பொறுப்பு இலங்கை ராணுவம் மற்றும் அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் இருந்தது என்றும் காட்டுகிறோம்.

நமது முதல் குற்றப்பதிவு, போர்ப்பகுதிக்குள் கடைசி சாலை-வழி-உணவு-போக்குவரத்து-குழுவின் ஐநா ஊழியர்கள் சண்டை பகுதியில் மாட்டிக் கொண்ட ஜனவரி 23, 2009-ல் தொடங்குகிறது. அரசுப் படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே தீவிரமடையும் போரிலிருந்து தப்பிப் பிழைக்க லட்சக்கணக்கான பொதுமக்கள் போரின் முதல் ‘பாதுகாப்பு பகுதி’யாக இலங்கை அரசு அறிவித்த இடங்களுக்கு ஓடினார்கள்

இங்கு நீல டி-சட்டை அணிந்திருக்கும் பீட்டர் மெக்காய் என்ற ஆஸ்திரேலியரையும் சேர்த்து இரண்டு பன்னாட்டு ஊழியர்களால் வழிநடத்தப்பட்ட ஐநா அணியினர் போர்நிறுத்தப் பகுதியில் உடையார்கட்டு என்ற பகுதியில் ஒரு தற்காலிக மருத்துவமனை அருகில் முகாம் இட்டார்கள். அருகில் வசிக்கும் பொதுமக்களின் உதவியுடன் பதுங்குகுழிகள் தோண்டி ஐநா பணிகளுக்கான மையத்தை உருவாக்கினார்கள்.  தகுதர நெறிமுறைகளின்படி மெக்காய் ஐநா மையத்தின் சரியான ஜிபிஎஸ் விபரங்களை குறித்துக் கொண்டார். அவை ஐக்கிய நாடுகள் சபைய இலங்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இருப்பினும் அந்த மையத்தின் மீது குண்டு வீசப்பட்டது.

அடுத்த சில நாட்களில் பாதுகாப்பு பகுதியில் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது. பல குண்டுகள் ஐநா வினியோக மையத்தின் மீது அல்லது அருகில் விழுந்தன. அதனால் ஏற்பட்ட அழிவுகளை ஐநா ஊழியர்களே படம் எடுத்திருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களிடையே பதுங்குகுழிகள் தோண்டுவதற்கு உதவி செய்த அப்பாவி பொதுமக்களும் இருந்தார்கள்.

நாம் இந்த புகைப்படங்களை ஒரு தடயவியல் வல்லுனரிடம் காட்டினோம்.

பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடயவியல் வல்லுனர்

“இந்த புகைப்படங்கள் பெருமளவிலான காயங்களை காண்பிக்கின்றன. முகத்தின் ஒரு பகுதி சிதைக்கப்பட்டு விட்ட ஒரு மனிதர், இன்னொரு மனிதரின் தலை துண்டிக்கப்பட்டு துண்டுகள் சிதறிக் கிடக்கின்றன, அதன் பிறகு ஒரு பெண்ணும் குழந்தையும். இது போன்ற காயங்கள் உலோகத் துண்டுகளால் ஏற்பட்டவை. குண்டு வெடிப்புகள், பறக்கும் உலோகத் துண்டுகள், மற்றும் சிதைவுகளைப் பற்றி பேசுகிறோம்”

“இந்த தடயங்கள் குண்டு வீச்சுடன் பொருந்துகின்றனவா?”

“ஆமாம். இவை குண்டு வீச்சுடன் ஒத்துப் போகின்றன. இவை குண்டு வீச்சால் விளைந்தவை என்பதை மறுக்க எந்த தடயமும் இல்லை”

ஆனால், குண்டு வீச்சு எங்கிருந்து வந்தது என்பது முக்கியமான கேள்வி. அரசு செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நானயகாரா அரசின் பொறுப்பை மறுத்தார். விடுதலை புலிகள் சில சமயம் பொது மக்களை குறி வைத்தார்கள் என்றார்.

ஒரு ரகசிய ஐநா அறிக்கை களத்தில் இருக்கும் அதன் ஊழியர்களுக்கு குண்டு வீச்சு எங்கிருந்து வருகிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று பதிவு செய்கிறது. “குண்டு வீச்சு இலங்கை அரசு படைகளிடமிருந்து வருகின்றன என்பதற்கான சாத்தியம் 100% என்று கருதப்படுகிறது”

இதை உறுதி செய்வதற்கு இன்னும் ஆதாரம் இருக்கிறது. உடையார் கட்டு மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும் போது, போர் நிறுத்தப் பகுதியிலிருந்த ஐநா ஊழியர்கள் கொழும்பில் இருக்கும் ஆஸ்திரேலிய தூதரகத்துக்கும் ஐநா அலுவலர்களுக்கும் அவசர தகவல்களை அனுப்பி குண்டு வீச்சை நிறுத்தும்படி வேண்டினர். அந்த கோரிக்கைகள் இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவுக்கும் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவுக்கும் நேரடியாக அனுப்பப்பட்டு விட்டதாக ஐநா ஊழியர்களுக்கு சொல்லப்பட்டது. இந்த தொலைபேசி உரையாடல்களுக்கு சிறிது நேரத்துக்குப் பிறகு குண்டு வீச்சு ஐநா பதுங்குகுழிகளை விட்டு சிறிது தூரம் விலகியது. ஆனால் போர் நிறுத்தப் பகுதியில் தொடர்ந்து பொழிந்து கொண்டிருந்தது. சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டு பீட்டர் மெக்காய் பதிவு செய்த வாக்குமூலத்தில் குண்டு வீச்சின் இலக்கு எப்படி மாற்றியமைக்கப்பட்டது என்பதை விவரிக்கிறார்

“இப்போது எங்களுக்கு 100 மீட்டர் தொலைவில் குண்டுகள் விழுந்தன. அவர்கள் விரும்பினால் குண்டு வீச்சை கட்டுப்படுத்த முடியும் என்று இது காட்டியது”

இந்த நிகழ்வு முக்கியமானது. குறைந்தபட்சம் பாதுகாப்பு அமைச்சரும் இராணுவ தளபதியும் போர் நிறுத்தப் பகுதியின் மீது குண்டு வீசப்படுவதைப் பற்றி அறிந்திருந்தார்கள் என்று இது சுட்டிக் காட்டுகிறது. ஐநா பதுங்கு குழிகளிலிருந்து விலகி தாக்கும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால் பாதுகாப்பு பகுதியில் குண்டு வீச்சுக்கு முடிவே இல்லாமல் இருந்தது. பொதுமக்களை கொல்லும்படியான தாக்குதல்கள் குறி வைத்து நடத்தப்பட்டவை என்பதை இது சுட்டிக் காட்டுகிறது.

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்

“இது மிகவும் முக்கியமான நிகழ்வு என்று நான் நினைக்கிறேன். இலங்கை இராணுவத்தின் வெகு உயர் மட்டங்களில் இந்த தாக்குதல்கள் பற்றி அறிந்திருந்தார்கள் என்று நமக்கு தெரிகிறது. இராணுவம் அவர்களது உத்தரவுகளின் படி தாக்குதல்களை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறது.”

“இது வரை நம்மிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்சேவும் சரத் பொன்சேகாவும் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?”

“அவர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த நிகழ்வு சரிவர பரிசீலிக்கப்பட்டால், ஊகங்கள் கூடுதல் தடயங்களால் உறுதி செய்யப்பட்டால், குற்றவியல் வழக்குக்கான சாத்தியம் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்”

பொதுமக்கள் யாரும் கொல்லப்படக் கூடாது என்பதுதான் தனது கொள்கை என்று இலங்கை அரசு போர்க்காலம் முழுவதிலும் வலியுறுத்தி வந்தது. ஆனால் பல வாரங்களாக தொடர்ந்த அரசு குண்டு வீச்சு தமிழ் மக்களை பாதுகாப்பு பகுதிகளிலிருந்து தப்பி ஓட வைத்தது. அதன் பிறகு பிப்ரவரி 12 அன்று அரசு வடக்கில் இருக்கும் நீண்ட மணல் திட்டை புதிய பாதுகாப்பு பகுதியாக அறிவித்தது. சுமார் 3 லட்சம் பொதுமக்கள் இங்கு முகாமிட்டார்கள். இந்த கடற்கரைப் பகுதியில் வாழ்க்கை கொடூரமாக இருந்தது. குண்டு வீச்சு இடைவிடாமல் நடந்தது. இன்னும் ஒன்று நடந்தது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

நமது இரண்டாவது குற்றப்பதிவில், இன்னொரு முக்கியமான தொடர்ச்சியான இலங்கை அரசின் போர்க்குற்றம் பற்றிய ஆதாரங்களை பரிசீலிக்கிறோம். இலட்சக்கணக்கான சிக்கிக் கொண்ட பொதுமக்களுக்கு உணவுப் பொருட்களையும் மருந்துகளையும் வேண்டுமென்றே மறுத்த குற்றம்.

(பெண் தமிழில் நிலைமையை விளக்குகிறார்)

உணவுப் பற்றாக்குறையின் விளைவுகள் மோசமாக மோசமாக இன்னொரு பற்றாக்குறை தீவிரமானது. தற்காலிக மருத்துவமனைகளில் மருந்துகள் பரிதாபமான அளவுக்கு குறைவாக இருந்தன.

(காயமடைந்த ஆண் நிலைமையை விளக்குகிறார்)

பாதுகாப்பு பகுதியில் மாட்டிக் கொண்ட அரசு நியமித்த மருத்துவர்கள் கூட நிலைமையைப் பற்றி புகார் செய்ய ஆரம்பித்தனர். கூடுதல் மருந்துகள் அனுப்பும்படியான அவர்களின் கோரிக்கைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாக சொன்னார்கள்.

“இவர்கள் எல்லோரும் தீவிர சிகிச்சை பிரிவு (ICU) நோயாளிகள் – அவசர உதவி தேவைப்படும் நோயாளிகள். எங்களிடம் ஆன்டிபயாடிக்குகளும் தேவையான இரத்தமும் இல்லவே இல்லை. பல முறை தகவல் தெரிவித்தும் அரசாங்கம் மருந்துகள் எதையும் இங்கு அனுப்ப விரும்பவில்லை.”

ஆனால், போர்ப்பகுதிக்கு போதுமான மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பது ஒரு சட்டப்படியான பொறுப்பாகும். பொருட்கள் அனுப்புவதை மட்டுப்படுத்தியதை அரசு எப்படி நியாயப்படுத்தியது? பாதுகாப்பு பகுதிகளில் உணவும் மருத்துவ உதவியும் தேவைப்படும் அகதிகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்துச் சொல்வதன் மூலம் அதை செய்தார்கள் என்று புதிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில வாரங்களாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் பொதுமக்களின் எண்ணிக்கையை சுமார் 60,000 ஆக அரசாங்கம் மதிப்பிட்டது என்று ஏப்ரல் 2009-ல் கொழும்புவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிள் தெரிவிக்கிறது. விக்கிலீக்ஸ் இணையதளத்தால் வெளியிடப்பட்ட பெருவாரியான தகவல் பரிமாற்றங்களில் ஒன்றாக அந்த கேபிள் வெளியாகியிருக்கிறது. உண்மையான எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்பதை ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் செயற்கை கோள் படங்கள் மூலம் தெரிந்து வைத்திருந்தன.

இலங்கை அரசாங்கத்திடமும் அதன் உளவு பார்க்கும் மிதவைகளும் செயற்கை கோள்களும் இருப்பதால் அவர்களுக்கும் அது தெரிந்திருக்கும். அகப்பட்டுக் கொண்ட பொதுமக்கள் மீது இந்த குறைந்த மதிப்பீட்டின் விளைவுகள் படு பயங்கரமாக இருந்தன.

டேவிட் மில்லிபண்ட்

“60,000 பேருக்கு ஒரு நாள் உணவளிக்க 30 டன் உணவுப் பொருட்கள் தேவை. ஏப்ரல் மாதத்தில் இரண்டு மூன்று லட்சத்துக்கு குறையாத மக்கள் அந்த பகுதியில் இருந்தார்கள் என்று நமக்கு தெரிகிறது. ஆனால், ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து 27ம் தேதி வரை 60 டன் மட்டுமே அனுப்பப்பட்டது. எனவே, இந்த நான்கு வாரங்களிலும் இரண்டு நாட்களுக்கு 60,000 பேருக்கு போதுமான உணவுதான் கொண்டு வரப்பட்டது. ஒரு மாதத்துக்கு 3 லட்சம் பேருக்கு உணவளிக்கும் அளவு அங்கு வழங்கப்படவில்லை. அங்கு நிலவிய மனிதாபிமான அவசர நிலையின் தீவிரத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதற்கான பொறுப்பு கொழும்புவில் இருக்கும் அரசாங்கத்துக்கு நேரடியாக போகிறது”

ஒரு சில பொதுமக்கள் பாதுகாப்பு பகுதியிலிருந்து தப்பிப் போக முடிந்தாலும் இலங்கை அரசு மாட்டிக் கொண்ட அகதிகளின் எண்ணிக்கையை தொடர்ந்து குறைவாகவே காட்டி வந்தது. ஐநா கணக்கீடுகளின் படி ஏப்ரல் இறுதியில் 1,25,000க்கும் அதிகமான மக்கள் அந்த பகுதியில் மாட்டிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஜனாதிபதி ராஜபக்சே ஏப்ரல் 28 அன்று சிஎன்என்னுக்கு கொடுத்த மதிப்பீடு

“நாங்கள் பொருட்களை அனுப்புகிறோம். அதனால்தான் இதை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடித்து மக்களை எங்கள் பக்கம் கொண்டு வர விரும்புகிறோம். ஏனென்றால் அங்கு 5000 பேர்தான் இருப்பார்கள், வேண்டுமென்றால் 10,000 என்று சொல்லப்படுவதை கூட வைத்துக் கொள்ளலாம்”. இது மிகப்பெரிய அளவிலான குறைமதிப்பீடு. ஜனாதிபதியே போதுமான மனிதாபிமான பொருட்கள் மறுப்பதை நியாயப்படுத்தும் மோசடியான கணக்கீடுகளை அங்கீகரித்தார்.

ஆதாரங்களை பரிசீலித்த இலங்கைக்கான ஐநாவின் சிறப்பு நிபுணர் குழு என்ன நடந்தது என்பதில் தெளிவாக இருக்கிறது.

“சண்டை நடக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அரசாங்கம் வேண்டுமென்றே உணவு, மருந்து பொருட்கள், குறிப்பாக அறுவை சிகிச்சைக்கான தேவைகள் போன்ற மனித உதவிகளை இல்லாமல் செய்து அவர்களது துன்பத்தை அதிகரித்தது. இந்த நோக்கத்துடன் சண்டை பகுதியில் இருந்த பொதுமக்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைவாக மதிப்பிட்டது”

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை

“பன்னாட்டு சட்டம் பழங்கால சித்திரவதை நடவடிக்கைகளை தடை செய்கிறது. பொதுமக்களை பட்டினி, பஞ்சம் அல்லது பெருநோய்க்கு உள்ளாக்குவதை இராணுவ வெற்றிக்கான வழிமுறையாக பயன்படுத்த கூடாது”

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்

“அலுவலகங்களில் உட்கார்ந்து மின்னஞ்சல் அனுப்பியும் உத்தரவு பிறப்பித்துக் கொண்டும் இருப்பவர்களையும் சட்டத்துக்கு முன் கொண்டு வருவது பன்னாட்டு சட்டத்தின், பன்னாட்டு குற்றவியல் சட்டத்தின் ஒரு பகுதியாகும். பொதுமக்கள் மீதான தாக்குதல், உயிர் வாழ்வதற்கான பொருட்களை பொதுமக்களுக்கு மறுப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தால் போர்க்குற்றங்களை நிகழ்வதில் பெருமளவு பங்கேற்றதாக கருதப்படும்.”

இறுதி வாரங்களில் போர் நுழைந்தபோது, இன்னும் பல முக்கிய நிகழ்வுகள் போர்க்குற்றங்கள் நிகழ்த்துவதில் அரசாங்கத்தின் பங்களிப்பு நிறைய இருந்தது என்று நிரூபிக்கின்றன.

ஏப்ரல் மத்தியில் அரசு படைகளின் குண்டு வீச்சும் உணவு பற்றாக்குறையும் பாதுகாப்பு பகுதி 2 – புது மாத்தளத்தில் வாழ்க்கையை சகிக்க முடியாததாக்கியிருந்தது. அது மிகவும் அது இன்னும் மோசமாக போகிறது.

ஏப்ரல் 20ம் தேதி அதிகாலை 1 மணிக்கு இலங்கை இராணுவத்தின் தரைப் படைகள் கனத்த ரக ஆயுதங்களை பயன்படுத்தி புது மாத்தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர். கொடூரமான காட்சிகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே ஒரு தற்காலிக மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டு நூற்றுக் கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர். நாம் பரிசீலிக்கும் மூன்றாவது குற்றப் பதிவின் நிகழ்வுகள் அதிலிருந்து தொடங்குகின்றன.

அது ஒரு பிணைக்கைதிகள் விடுவிப்பு நடவடிக்கை என்று இலங்கை அரசு அதிகாரபூர்வமாக சொன்னது. உண்மையில் அது ஆயிரக்கணக்கான பொதுமக்களை அவர்களது சொந்த பாதுகாப்புக்காக கூடும்படி அரசாங்கம் சொல்லியிருந்த பாதுகாப்பு பகுதியின் மீது நடத்தப்பட்ட முழு அளவிலான இராணுவத் தாக்குதலாக அமைந்தது. தெரிந்தே பொதுமக்களை குறிவைப்பது ஒரு போர்க்குற்றம். அது நடந்தது மட்டுமின்றி, இராணுவத் தலைமையில் உயர் மட்டங்களில் அங்கீகரிக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை நாம் பரிசீலிக்கிறோம்.

தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்க, எடுத்துச் செல்லும் நிலையில் இருந்த காயம்பட்டவர்கள் டிரக்குகளிலும் டிராக்டர்களிலும் ஏற்றப்பட்டு பாதுகாப்பு பகுதியில் இன்னும் உள்ளே இருந்த இன்னொரு தற்காலிக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்கள். காயங்களினாலும், கட்டுப்படுத்தாத இரத்த இழப்பினாலும் பலர் வழியிலேயே உயிரிழந்தார்கள். பீதிக்கும் குழப்பத்துக்கும் நடுவே என்ன நடந்தது என்று மெதுவாக புலனாகியது.

இலங்கை அரசு படைகள் பாதுகாப்பு பகுதியின் நடுவாக ஒரு கோடு கிழித்து மேற்கு பகுதியில் இருந்த நிலத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன. பாதுகாப்பு பகுதி இரண்டாக பிரிக்கப்பட்டிருக்க, விடுதலை புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பொதுமக்கள் அரசு படைகளிடமிருந்து தப்பி எஞ்சியிருந்த பாதுகாப்பு பகுதிக்குள் ஓடினார்கள். பீரங்கி குண்டு வீச்சும், வான் வழி தாக்குதலும் நாள் முழுவதும் தொடர்ந்தது. அதற்கு பிறகு முன்னறிவிப்பின்றி சாவு வந்தது. இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு கிழக்கே சுமார் ஒரு லட்சம் மக்கள் அதுவரை பாதுகாப்பு பகுதியாக இருந்த இடத்தை விட்டு தப்பிக்க போராடினார்கள். முடிந்தவர்கள் கடல் நீரில் இறங்கி நடந்தார்கள். அவர்களில் பலர் காயமடைந்தவர்கள், ஊட்டச் சத்து குன்றியவர்கள்.

தனது காயமடைந்த குழந்தைக்கு உதவி கேட்டு ஒரு தந்தை பரிதாபமாக கதறுகிறார். அவர்கள் அனைவரும் வளைக்கப்பட்டு சிறை முகாம்களுக்கு கொண்டு போக ஒரு பேருந்தில் ஏற்றப்பட்டனர். அந்த தந்தை இன்னமும் தனது குழந்தையை கையில் ஏந்தியிருக்கிறார், இப்போது பிணமாக.

ஏப்ரல் 22ம் தேதி அதிகார பூர்வ இராணுவ செய்தி தொடர்பாளர் கனரக ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று போர்க் காலம் முழுவதும் அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தியது போலவே வலியுறுத்தினார். “நான் ஏற்கனவே சொன்னது போல இந்த மீட்பு நடவடிக்கையில் கனரக ஆயுதங்களையோ டாங்கிகளையோ பயன்படுத்தவேயில்லை.”

இத்தனை ஆதாரங்கள் இருந்தும் அரசு சார்பு ஊடகங்கள் தாக்குதலில் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று சொன்னார்கள்.

“வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் படையினர் புதுமாங்குளத்திலிருந்து அம்பலம் புக்கணை வரை விடுதலை புலிகளால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் எல்லா பொதுமக்களையும் விடுவித்து விட்டதாக நம்பப்படுகிறது. கொடூர விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் பிணையாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளை தாக்குவதை படைகள் தவிர்த்துக் கொண்டிருக்கின்றன. ”

டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)

“விடுதலை புலிகள் பொதுமக்களை பாதுகாப்பு கேடயமாக வைத்திருந்தால், அப்படி சில இடங்களில் அதை செய்தார்கள் என்பது உண்மைதான், அதுவும் ஒரு போர்க்குற்றம்தான். ஆனால், அந்த இடங்கள் மீதும் மக்கள் மீதும் குண்டு வீசி தாக்குவதை அது நியாயப்படுத்தாது. பயங்கரவாத அமைப்புகளை விட ஜனநாயக அரசுகளுக்கு அதிகமான பொறுப்பு உள்ளது, அந்த பொறுப்புகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.”

இலங்கை பாதுகாப்பு அமைச்சக இணையதளம் அதை கச்சிதமான மீட்பு நடவடிக்கையாக சித்தரித்தது. ஐநா மற்றும் பிற மதிப்பீடுகள் 1500 வரையிலான உயிர்கள் பறிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டுகின்றன.

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை

“இப்போது கிடைத்திருக்கும் ஆதாரங்கள் போர்க்குற்றங்கள் நடந்தன என்று உறுதியாக சுட்டிக்காட்டுகின்றன. மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் நடந்திருக்கலாம். ஒரு முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்”

புதுமாங்களத்துக்கு யார் பொறுப்பாக இருந்தார்கள்? மேற்கிலிருந்து தாக்குதல் பிரிகேடியர் பிரசன்னா டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த 55வது படைப்பிரிவினால் நடத்தப்பட்டது. நேரடி தாக்குதல் சுரேந்திர டி சில்வாவின் கட்டுப்பாட்டில் இருந்த 58வது பிரிவினால் நடத்தப்பட்டது. தாக்குதல் நடந்த இடத்தில் அவர் கொடுத்த பேட்டி

“நாங்கள் பெரும் வெற்றி அடைந்திருக்கிறோம். இது பிணைக்கைதிகள் மீட்பு நடவடிக்கைகளிலேயே மிக வெற்றிகரமான ஒன்று என்று சொல்லலாம்”

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு இராணுவத் தாக்குதலால் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஏற்றுக் கொண்டது. அந்த சாவுகள் எதிரெதிர் குண்டு வீச்சினால் ஏற்பட்டவை என்றும் இராணுவத்தின் குண்டு வீச்சுகள் அளவுடனும் நியாயப்படுத்தும்படியாகவும் இருந்தன என்றது. ஆனால் ஆதாரங்களின்படி இது ஒரு சாத்தியமான போர்க்குற்றம் என்று சார்பில்லாத பார்வையாளர்கள் சொல்கிறார்கள்.

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்

“இவை ஊகங்கள்தான், தாக்குதல்கள் நடந்த போது அவை தேவைக்கு அதிகமாக இருந்திருக்கலாம், பொதுமக்கள் அல்லது மருத்துவமனை போன்ற பொது இடங்கள் தாக்கப்பட்டிருக்கலாம். உண்மைகளை கண்டறியும் வழி கடுமையான குறுக்கு விசாரணையுடன் கூடிய முழுமையான விசாரணையே ஆகும். பொருத்தமான விளக்கம் தரும்படி தலைவர்கள் கேட்கப்பட வேண்டும்

முறையான எந்த ஒரு விசாரணையும் சந்திக்க வேண்டிய முக்கிய கேள்வி, யார் இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டார்கள்? பொறுப்பு எவ்வளவு உயரம் வரை போகிறது?

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை

“ஜனாதிபதி ராஜபக்சே நாட்டின் மிக உயர்ந்த இராணுவ அதிகாரி. அவர்தான் தலைமை தளபதி, அப்படித்தான் அவர் தன்னை சித்தரித்துக் கொண்டார். பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சேவும், தான் இராணுவ போர்த் திட்டங்களில் பெருமளவு ஈடுபட்டிருந்தாக அறிவித்துக் கொண்டார். குறிப்பான நிகழ்வுகளைப் பற்றி இவர்கள் இரண்டு பேரையும் கேள்வி கேட்பதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன. கட்டளை சங்கிலி நடைமுறையில் என்னவாக இருந்தது என்பதை நிறுவுவதற்கு எல்லா காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக இறுதி வாரங்களில் நடந்த இரணகளமான, எதிர்பார்த்தபடியே இரணகளமான நிகழ்வுகளுக்கு இது மிக மிக அவசியமானது”

அடுத்த சில வாரங்களில், கனரக குண்டு வீச்சும் இடைவிடா தாக்குதலும் பாதுகாப்பு பகுதியில் மேலும் மேலும் களேபரத்தை உருவாக்கி வந்த போது அரசாங்கத்தின் மேல் மட்டத்திலிருந்து வந்த மறுப்புகள் மேலும் மேலும் திட்டவட்டமாக இருந்தன.

மகிந்த ராஜபக்சே

“நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்ற உண்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை என்றால் அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது.  நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தவில்லை, நாங்கள் இல்லை என்று சொன்னால் இல்லை என்றுதான் பொருள்.”

செயற்கை கோள் படங்களையும் ஐநா நிபுணர்கள் குழுவின் வரைபடங்களையும் இணைத்த ஐநாவின் ரகசிய அலசல் அறிக்கையை நாங்கள் பெற்றிருக்கிறோம். அவர்கள் அப்படிப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தத்தான் செய்தார்கள் என்றும் அவற்றை பாதுகாப்பு பகுதிகளின் மீது குறி வைத்தார்கள் என்றும் அவை சுட்டிக் காட்டுகின்றன.

“கனரக ஹௌவிட்சர் ரக பீரங்கிகளின் சுடும் முனையை மீண்டும் மீண்டும் திருப்பி முதலில் பாதுகாப்பு பகுதி 2ன் மீதும் பின்னர் பாதுகாப்பு பகுதி 3ன் மீதும் இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினார்கள் என்பது காலவரிசைப் படியான பீரங்கி படைகளின் நகர்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் தெரிய வந்தது. பொருத்தமான இராணுவ இலக்குகள் இல்லாத பாதுகாப்பு பகுதி 2 மற்றும் பாதுகாப்பு பகுதி 3க்குள் இருக்கும் இடங்கள் மட்டும் இருக்கும் போதும் இலங்கை இராணுவம் பீரங்கி அணிகளை நிறுத்தியிருந்தது”

போரின் கடைசி அரை மாதத்தில், மே 8, 2009 இரவில் பாதுகாப்பு பகுதி ஒரு மைல் அகலமுள்ள சிறுபகுதியாக குறைக்கப்பட்டது. இதுதான் போரின் மூன்றாவதும் இறுதியானதுமான பாதுகாப்பு பகுதியாகும். மே 17 அன்று அமெரிக்கர்கள் ஒரு போர் நிறுத்தத்தை பரிந்துரைத்தார்கள் என்று புதிதாக வெளியிடப்பட்ட விக்கிலீக்ஸ் கேபிள்கள் பதிவு செய்கின்றன.

“நிலவர அறிக்கை 74: வெளியுறவு தூதுவர் கோத்தபய ராஜபக்சேவிடம் பேசி சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினை சண்டை பகுதிக்குள் அனுமதித்து சரணடைதலை ஏற்பாடு செய்ய அனுமதிக்கும்படி வேண்டினார். ‘நாங்கள் அந்தக் கட்டத்தை எல்லாம் தாண்டி விட்டோம்’ என்பதுதான் ராஜபக்சேவின் பதில்”

அதே நேரம் மீண்டும் குண்டு வீசித் தாக்கப்பட்ட மருத்துவமனைகள் இறந்தவர்களாலும் இறந்து கொண்டிருப்பவர்களாலும் நிரம்பி வழிந்தன. ஆனால் வெளியிலிருந்து உதவி எதுவும் வரவில்லை. அமெரிக்க கேபிள்கள் தெரிவிப்பது போல ஜனாதிபதியின் அலுவலகம் செஞ்சிலுவை சங்கத்துக்கு அனுமதி மறுத்துக் கொண்டே இருந்தது.

“நிலவர அறிக்கை 74: காயமடைந்தவர்களை மீட்டு வருவதற்கு பன்னாட்டு செஞ்சிலுவை சங்கத்துக்கு தூதுவர் மீண்டும் அனுமதி வேண்டினார்”

அந்த கோரிக்கை “உறுதியாக மறுக்கப்பட்டது”

செஞ்சிலுவை சங்கம் மக்களை மீட்க தவறியதால் அரசு படைகள் தாமே அதை செய்ய வேண்டி வந்தது என்று அரசாங்கம் சொன்னது. மீட்பு பணி நடைமுறையில் எப்படி நடந்தது என்று இவர் சொல்கிறார். அரசு படைகள் வரும் போது அவர் பலத்த காயங்களுடன் பதுங்குகுழியில் ஒழிந்து கொண்டிருந்தார்.

(முகம் மறைக்கப்பட்ட மனிதர் பேசுகிறார் -தமிழில்)

படைகள் முன்னேற முன்னேற இன்னும் ஒரு கொலை செய்யும் முறை உருவானது. நிர்வாணப்படுத்தப்பட்டு கட்டப்பட்ட விடுதலைப் புலி போராளிகள் இரக்கமின்றி சுட்டுக் கொல்லப்படுவதே எங்களது முதல் ஆவணப்படத்தின் மிகவும் சின்னமாக விளங்கிய காட்சிகளாக இருந்தன. பெண் போராளிகளுக்கு எதிராக பாலியல் வன்முறை நடந்திருக்கலாம் என்பதை சுட்டும் காட்சிகளையும் ஒளிபரப்பினோம். விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சி வழங்குனர் இசைப்பிரியாவும் இதில் அடங்குவார்.

பெரும்பான்மை வீடியோக்கள் இலங்கை இராணுவத்தின் படைவீரர்களால் வெற்றியின் நினைவுச் சின்னங்களாக மொபைல் போன் கேமராக்களில் பிடிக்கப்பட்டவை. இந்த வீடியோக்கள் சார்பில்லாத வீடியோ நிபுணர்களாலும், தடயவியல் நிபுணராலும் பின்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் அமர்த்தப்பட்ட சிறப்பு நிபுணர் குழுவினாலும் நம்பகமானவை என்று உறுதி செய்யப்பட்டன. அவை போலியானவை என்று இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எல்எல்ஆர்சி இந்த வீடியோக்களையும் சட்ட விரோத கொலைகளையும் பரிசீலித்த போது ஒரு முடிவை எட்டுவதை தவிர்த்து விட்டது. பதிலாக இன்னொரு விசாரணை நடத்த பரிந்துரை சொன்னது.

சென்ற மாதம் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றிக் கொண்ட இலங்கை இராணுவம் எல்எல்ஆர்சி எழுப்பிய விஷயங்களைப் பற்றியும் எமது சென்ற ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சசாட்டுகளையும் விசாரிக்க முன் வந்தது. ஆனால் இந்த விசாரணை சுதந்திரமான இன்னொரு அமைப்பால் இல்லாமல் இராணுவத்தாலேயே நடத்தப்படும். யாருக்கெல்லாம் இந்த கொலைகளைப் பற்றி தெரிந்திருந்தது என்பதும் யார் இதற்கு ஒப்புதல் கொடுத்தார்கள் என்பதும் முக்கியமான கேள்விகள். ஏனெனில் நமது 4வது குற்றப் பதிவு கொலைகளுக்கான புதிய ஆதாரங்களை கொண்டுள்ளது. அதற்கான பொறுப்பு இலங்கை அதிகார அமைப்பின் மிக உயர் நிலை வரை போகின்றன என்று சுட்டிக் காட்டுகிறது.

நாங்கள் இப்போது பெற்றுள்ள இந்த மனதை உறைய வைக்கும் புதிய வீடியோ பதிவில் குறைந்தது ஒரு கொலை செய்யப்பட்டவரை அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன். இந்த பதிவு முன்னணி சார்பற்ற நிபுணர்களால் பரிசீலிக்கப்பட்டு அதன் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடயவியல் நிபுணர்

“இது ஐந்து ஆண்களும் ஒரு சிறு பையனும் உள்ள ஒரு கொலைக் காட்சி. 5 ஆண்களின் கைகள் பின்புறம் இருக்கின்றன. அவர்கள் இப்போதுதான் இறந்திருக்கிறார்கள். அவர்கள் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் கடைசி மனிதனைத் தவிர மற்றவர்கள் கட்டப்பட்டதற்கான அடையாளம் தென்படவில்லை. நாம் பார்த்த பிற பதிவுகளைப் போலவே இதுவும் இருக்கின்றது. அவற்றிலும் கைதிகள் கைகள் பின்புறம் கட்டப்பட்டு, கண்கள் கட்டப்பட்டு, தரையில் முட்டியிட வைத்து சுடப்பட்டார்கள்”

பாலசந்திரன் பிரபாகரன் என்ற 12 வயது பையனின் கதைதான் இந்த வெறி பிடித்த கொலைகளின் இயல்பை தெளிவாக்குகின்றன. ஒரு மூத்த இலங்கை அதிகாரி சத்திய பிரமாணத்தின் கூழ் கீழ் கொடுத்த வாக்குமூலத்தின் படி அவனது தந்தையின் இருப்பிடத்தைப் பற்றி விசாரணை நடத்தப்பட்டு அந்த பையன் கொல்லப்பட்டான்

“அவன் 5 பாதுகாவலர்களுடன் சரண்டைய அனுப்பி வைக்கப்பட்டான். சிறிது காலத்துக்குப் பிறகு அவரது மகன் மூலம் பிரபாகரன் எங்கு இருக்கிறார் என்று அறிந்து கொண்டார்கள் என்று தெரிய வந்தது. அதற்கு பிறகு அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள் என்று எனக்குத் தெரிய வந்தது”

அந்த 12 வயது பையன் சுடப்பட்டது கொலைதான், சண்டையில் ஏற்பட்ட காயங்களினால் அல்ல என்பதை இந்த உயர் விவர படங்களில் தெளிவாக பார்க்க முடிகிறது.

பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடய நோயியல் நிபுணர்

“அவன் மீது 5 துப்பாக்கிச் சூட்டு காயங்கள் இருக்கின்றன, இங்கே, இங்கே, இங்கே, மற்றும் இந்த இடத்தில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு காயங்கள். இதுதான் முதலில் சுடப்பட்ட காயமாக இருக்க வேண்டும். அதைச் சுற்றி வெடிமருந்து புகையும் துகள்களும் படிந்திருப்பதால் அது அழுக்காக தெரிகிறது. இதனால் சுடப்பட்ட ஆயுதத்துக்கும் பையனின் உடம்புக்கும் தூரம் 2 அல்லது 3 அடிக்குள்தான் இருந்திருக்கும் என்று தெரிகிறது. அவன் கையை நீட்டி தன்னை கொன்ற துப்பாக்கியை தொட்டிருக்க முடியும். இந்த காயம் பெற்றவுடன் அவன் பின் நோக்கி விழுந்திருக்கிறான். அதன் பிறகு இந்த இரண்டு காயங்களையும் பெற்றிருக்கலாம். அவை கீழ் பகுதியில் மழுங்கலாக இருப்பது, குண்டுகள் உடம்பில் மேல் நோக்கி சென்றன என்று காட்டுகின்றது. அவனது இடது தோளின் மேல் பகுதியில் சந்தேகத்துக்கிடமில்லாத ஒரு வெளியேறும் காயம் இருப்பதை பார்க்க முடிகிறது. எனவே சுடுபவர் அவன் தரையில் விழுந்து கிடக்கும் போது அவன் காலுக்கு அருகில் நின்று கொண்டு மேல் நோக்கி சுட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இது ஒரு கொலை, சந்தேகமில்லாத படுகொலை”

“இந்த குழந்தை சித்திரவதை செய்யப்பட்டதாக ஏதாவது அறிகுறிகள் தெரிகின்றனவா? ஏனென்றால் அவனிடமிருந்து இன்னும் பலரைப் பற்றி தகவல் பெற முயற்சி செய்து கொண்டிருந்தார்கள் என்பது தெளிவு”

“உடல் ரீதியான சித்தரவதைக்கான அறிகுறிகள் எதுவும் உடலில் தென்படவில்லை. ஆனால் அவன் இருந்த நிலைமையை நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. அவனுக்கு அருகில் 5 உயிரிழந்த ஆண்களை பார்க்கிறோம். அவர்கள் இவனுக்கு முன்னதாக கொல்லப்பட்டிருக்கலாம். அவன் கண்கள் கட்டப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை என்பதும் அவன் காலருகில் நின்று கொண்டிருக்கும் ஒருவனால் சுடப்பட்டிருக்கிறான் என்பதும் தெளிவாகிறது. எனவே, இதுவே ஒரு வகையான உளவியல் சித்திரவதைதான்.”

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர் :

“இது ஒரு போர்க்குற்றம். இது ஒரு குற்றம், சாதாரண வகை குற்றம், சூழ்நிலைகளை பொருத்திப் பார்க்கும் போது குறிப்பாக ஒரு போர்க்குற்றமாகிறது அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதுதான் எதிர்பார்ப்பு”. அப்படி எந்த விசாரணையும் இது வரை நடக்கவில்லை.

“நாம் இலங்கையில் பார்த்த நடவடிக்கைகளிலிருந்து இது ஒரு மூடி மறைப்பு என்று தெளிவாகிறது. இந்த நிகழ்வுகள் நடந்தன என்பதை மறுக்கும் முயற்சி”

அடுத்த நாள் பையனின் தந்தை பிரபாகரனே கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. தலை துணியால் மூடப்பட்ட அவரது உடல் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. நாங்கள் பெற்ற அதிகாரபூர்வமற்ற பதிவு ஒரு தலைக் காயத்தையும், இராணுவ மருத்துவ பணியாளர்கள் மூளையிலிருந்து மாதிரி எடுப்பதையும் காட்டுகின்றன. இன்னொரு புகைப்பட வரிசையில், முதலில் பிரபாகரனின் உடல் இராணுவ சீருடையிலும், பின்னர் நிர்வாணமாகவும், பின்னர் சேறு பூசப்பட்டும் காணப்படுகின்றது. தலைக் காயம்தான் மிகவும் முக்கியமானது.

பேராசிரியர் டெரிக் பவுண்டர், தடயவியல் நிபுணர்

இது உயர் வேக துப்பாக்கி சூட்டு காயம் ஒன்றின் காட்சி. முன்பக்கம் இருக்கும் வெளியேறிய பகுதியை நாம் புகைப்படத்தில் பார்க்கிறோம். புகைப்படத்தில் தெரியாத தலையின் பின்பக்கம் நுழைவு காயம் இருக்கும் என்று ஊகிக்கலாம். தலையில் ஒற்றை துப்பாக்கி குண்டு காயம் படுவது சண்டை சூழலில் சாத்தியமில்லாத ஒன்று. எனவே, தாக்கப்படுபவர் நகராமல் இருக்கும் போது குறி வைத்து சுடப்பட்டிருக்கலாம் என்று சொல்ல வேண்டும்”

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்

“சட்ட விரோதமான மரண தண்டனைகளை நடத்தும் படைகளுக்கு பொறுப்பான மூத்த இராணுவ அதிகாரி, அவை நடக்க சாத்தியமுள்ள நேரத்தில் அவற்றை நிறுத்தும்படி ஆணையிடா விட்டால், நடந்த பிறகு அவர்களை தண்டிக்காமல் இருந்தால் அவரே போர்க்குற்றங்களுக்கான வழக்கை சந்திக்க வேண்டும். ஒரு வகையில் அவர் இந்த குற்றத்தில் பங்கேற்றிருக்கிறார்”

இந்த ஆவணப்படத்திலும் முதல் படத்திலும் நாங்கள் காட்டிய ஆதாரங்கள் இன்னும் அதிகமான பொறுப்பை சுட்டிக் காட்டுகின்றன. கைகள் கட்டப்படுவது, உடைகள் நீக்கப்படுவது, தலைக்குப் பின் துப்பாக்கியால் சுடுவது, அனைத்தும் இது பிடிக்கப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப் புலி போராளிகளை திட்டமிட்ட முறையில் கொல்வது கொள்கையாக இருந்தது என்பதை சுட்டுகின்றன.

பேராசிரியர் வில்லியம் ஷாபாஸ், மனித உரிமைகள் வழக்கறிஞர்

“இது மிகவும் கடுமையான குற்றம். தலைமை இதை கண்டு கொள்ளாமல் மட்டும் இருக்கவில்லை நேரடியாக வழிநடத்தி கட்டுப்படுத்தி உத்தரவிட்டு நடத்தியது என்று நிரூபிக்க முடிந்தால் கடுமை இன்னும் அதிகமாகிறது. நாங்கள் முழுக் கட்டுப்பாடு வைத்திருக்கிறோம் என்று உயர் அதிகாரிகள் சொல்லிக் கொண்டிருக்கும் போது, இந்த மாதிரிகள் தொடர்ந்து நடந்தன என்று நிரூபித்தால், கீழ் மட்டத்தில் குற்றவாளிகள் இவற்றை நடைமுறையில் நடத்தினார்கள் என்று நிரூபித்தால், உயர் மட்டத்தையும் கீழ் மட்டத்தையும் இணைப்பதில் இருக்கும் சட்ட சிரமங்கள் பெருமளவு நீக்கப்பட்டு விடுகின்றன”

பிரபாகரன் இறந்து விட, போர் நடவடிக்கைகள் மே 18, 2009-ல் முடிவுக்கு வந்தன. போர்க்களத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட உடல்கள் பலவற்றில் கொலை, பாலியல் வன்முறைக்கான அடையாளங்கள் தெரிந்தன.

கடற்கரையில் வெற்றிமாலை சூடிய இராணுவ வீரர்கள் போரில் பயன்படுத்தவே இல்லை என்று சாதித்த கனரக பீரங்கிகளிலிருந்து கொண்டாட்ட முழக்கங்களை எழுப்பினார்கள்.

உலகத்தின் முன்பு இது ஒரு வெற்றி முழக்கம், ஒரு போரிடும் சக்தியாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதை குறிக்கும் செய்கை. போர் முடிந்து விட்டது. ஆனால், நாங்கள் காட்டியது போல போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இலங்கையின் எதிர்வினை பெருமளவிலான பன்னாட்டு பிரச்சாரமும் அனைத்து எதிர்ப்பு குரல்களையும் இரக்கமில்லாமல் ஒடுக்கும் முயற்சியுமாக இருந்தது.

இலங்கையின் உள் நாட்டுப் போரின் முடிவைப் பற்றிய உண்மைகள் வெளியாகும் போது உலகம் அவற்றை எப்படி அனுமதித்தது என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடை ரகசிய பன்னாட்டு வெளியுறவுகளுக்கான உலகில் இருக்கிறது.

வடக்கில் போர் உச்சக் கட்டத்தில் இருக்கும் போது ஏப்ரல் 29, 2009 அன்று அன்றைய பிரிட்டிஷ் வெளியுறவு செயலர் டேவிட் மிலிபேண்ட் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரொஹீதா பகலகாமாவுடன் பேச்சு நடத்த இலங்கை தலைநகர் கொழும்புக்கு வந்தார். சூழல் இணக்கமாகவே தென்பட்டது. ஆனால் வெளியிடப்பட்ட ஆதாரம் மிலிபேண்ட் உண்மையில் இலங்கை அரசைப் பற்றி என்ன நினைத்தார் என்று காட்டுகின்றது.

“அவர்கள் பொய்யர்கள்” என்று அவர் சொல்லியிருந்தார். அவரது சொற்கள் கொழும்புவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திலிருந்து வாஷிங்டனில் இருக்கும் வெளியுறவுத் துறைக்கு அனுப்பபட்ட கேபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது கருத்து முறையானதாக இல்லாமல் இருந்தாலும் ஆதாரங்கள் சுட்டிக் காட்டுவது போல துல்லியமானதாக இருந்தது. அவர் சொல்ல முயற்சித்த பொய்க்கு ஒரு கணக்கிடப்பட்ட நோக்கம் இருந்தது.

டேவிட் மில்லிபண்ட்

“தெளிவாக, ஒரு பிரச்சார யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ராஜபக்சே அரசாங்கத்தின் அணுகுமுறை முழுக்க முழுக்க தூய்மையானது என்று வலியுறுத்த வேண்டிய அவசியம் இருந்தது. போரின் இறுதி வாரங்கள், இறுதி நாட்களை நடத்திச் செல்வதற்கு அது தேவையாக இருந்தது”

உலகத்துக்கு எதை வேண்டுமானாலும் சொல்லி, எவ்வளவு நம்பமுடியாததாக இருந்தாலும் சொல்லி, வேண்டிய அவகாசத்தை ஈட்டுவதற்கு பெறுவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இருந்தது. ஆதாரங்கள் சுட்டுவது போல விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவும் திட்டமிட்டு தமிழ் பொதுமக்களை குறி வைக்கவும் அந்த அவகாசம் தேவைப்பட்டது.

ஜனாதிபதி ராஜபக்சேவை கொழும்பில் சந்திக்கும் ஜான் ஹோம்ஸ் அப்போது ஐநா மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான தலைவராக இருந்தார்.

“ராஜபக்சே அரசு உண்மையில்லாத உறுதிகளை அளித்தது, பொய்களை சொன்னது, ஆனால் செய்து கொண்டிருந்ததை தொடர்ந்து செய்தது என்பதுதான் ஐநாவுக்கும் பன்னாட்டு சமூகத்துக்கும் எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டு.”

சர் ஜான் ஹோம்ஸ், மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. தலைவர், 2007-2010

“அது பெருமளவில் உண்மை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் வாக்குறுதிகளை கொடுத்து விட்டு பிறகு அவற்றை காப்பாற்றவில்லை. அவர்கள் செய்ய நினைத்திருந்ததை இறுதி வரை செய்து முடித்தார்கள். அதாவது பொதுமக்கள் உட்பட எத்தனை உயிர்கள் போனாலும் சரி விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக ஒழித்துக் கட்டுவது அவர்களது நோக்கமாக இருந்தது. பன்னாட்டு சமூகத்தில் யாரும் அவர்களை தடுத்து நிறுத்த தயாராக இருக்கவில்லை என்று அவர்கள் நம்பினார்கள், அதுதான் நடந்தது”

அச்சுறுத்தப்பட்ட பொது மக்கள் மீது அனுதாபம் இருந்தாலும் பயங்கரவாதத்தின் மீது போர் என்ற முழக்கத்தின் ஆதிக்கத்தில் இருந்த உலகில் அவர்களுக்காக எதையும் செய்ய யாருக்கும் விருப்பம் இருக்கவில்லை.

“பெரும் அளவிலான தமிழ் மக்கள் வாழும் இந்தியாவின் அரசு உட்பட பல அரசுகள், மக்கள் மீது தமது அக்கறையை காட்ட விரும்பிய போதும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு இலங்கை அரசுக்கு மறைமுகமான பச்சை விளக்கு காட்டிக் கொண்டிருந்தன”

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை :

“விடுதலைப் புலிகள் தீர்த்துக் கொட்டப்படுவதை கண்களை மூடிக் கொண்டு மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள பல பேர், பல நாடுகள் உலகெங்கிலும் இருந்தனர்”

சர் ஜான் ஹோம்ஸ், மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. தலைவர், 2007-2010

“இதைச் சுற்றி ஒரு வகையான இராஜதந்திர நடனம் நடைபெற்றது. இதன் முடிவு இலங்கை அரசின் தவிர்க்க முடியாத இராணுவ வெற்றியாகவும், விடுதலைப் புலிகளின் தவிர்க்க முடியாத தோல்வியாகவும் இருக்கும் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அது நடப்பதற்காக காத்திருப்பதுதான் தேவையானதாக இருந்தது. முடிந்த வரை சீக்கிரமாக முடிந்து விட வேண்டும் என்ற நம்பிக்கையும், குறைந்த அளவு உயிரிழப்புடன் நடந்து விட வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. கொஞ்சம் கோணலான எண்ணமாக இருந்தாலும், நான் அவதானித்த நிதர்சனம் அதுதான்.”

போரில் வெற்றி பெற்று விட்ட பிறகு இலங்கை அரசு உலகின் பிற நாடுகள் இலங்கை விவகாரங்களிலிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று எச்சரித்தது. நியூயார்க்கில் ஐக்கியநாடுகள் சபையில் நிகழ்த்திய ஒரு முக்கிய உரையில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்சே தனது சொந்த வழியில் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதாக வலியுறுத்தினார்.

“வரலாறு நமக்கு ஒன்றை கற்றுக் கொடுத்திருக்கிறது. வெளியிலிருந்து தீர்வுகளை சுமத்துவது துயரத்தையும், கோபத்தையும் கொண்டு வந்து இறுதியாக தோல்வியில் கொண்டு விடுகின்றது. இதற்கு மாறாக எங்களுடையது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முறை ஆகும்

இருப்பினும் தனது செய்தியை கொண்டு சேர்க்க ராஜபக்சே வெளிநாட்டு உதவியை மகிழ்ச்சியாக தேடிக் கொண்டார்.   ரகசியமாக பதிவு செய்யப்பட்ட பிரிட்டிஷ் பொது உறவு நிறுவனத்தின் நிர்வாகி ஒருவருடனான இந்த உரையாடல் அதை வெளிப்படுத்துகிறது

“எங்கள் ஒரு அணி ஜனாதிபதி அலுவலகத்தில் வேலை செய்தது. கடந்த ஆண்டு ஜனாதிபதி ராஜபக்சேவின் ஐநா உரையை நாங்கள்தான் எழுதினோம், அது நல்ல முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.”

ஜனாதிபதி இராஜபக்சேவின் அந்த உரை சர்வதேச விமர்சனங்களை தவிர்த்து விடுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பெரும் பிரச்சார தாக்குதலுக்கு முன்னோடியாக இருந்தது. எங்களது முந்தைய ஆவணப்படம், இலங்கையின் கொலைக்களங்கள், உலகம் முழுவதும் காட்டப்பட்டது. இலங்கை அரசாங்கம் அதற்கு பதிலளிக்க தனது சொந்த ஆவணப்படம் ஒன்றை தயாரித்தது. “ஒப்புக் கொள்ளப்பட்ட பொய்கள்” என்று அழைக்கப்பட்ட ஒரு மணி நேர ஆவணப்படம்

மினோலி ரத்னாயகே :

“மோசடி செய்யப்பட்ட காட்சிகள், வேண்டுமென்றே சொல்லப்படும் பொய்கள், உண்மையானவையாக காட்டப்படுகின்றன. வெற்றிடத்திலிருந்து எண்ணிக்கைகள் உருவாக்கப்பட்டு உண்மையாக காட்டப்படுகின்றன. தகவல்களுக்கான ஆதாரம் சொல்லப்படவில்லை, முகங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன, குரல்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.”

போர்ப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை மனதை உருக்கும் வகையில் வெளிப்படுத்திய அரசு மருத்துவர்களின் வாக்குமூலத்தின் நம்பகத் தன்மையை உடைப்பது இந்த ஆவணப் படத்தின் முக்கிய முயற்சியாக இருந்தது. உயிரிழப்பு விபரங்களை மிகைப்படுத்தி சொல்லும்படி விடுதலைப் புலிகளால் மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்று இலங்கை அரசாங்கத்தின் படம் குற்றம் சாட்டுகிறது. போரின் முடிவில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் வெளிப்படையாக தமது வாக்குமூலங்களை திரும்ப பெற்றதாக ஒரு படத்தை காட்டுகிறார்கள்.

“அவர்கள் இப்போது பயமில்லாமல் பேச முடிகிறது. வாருங்கள் கேட்கலாம்”

“நாங்கள் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்தோம். விடுதலைப் புலிகள் எங்களிடம் பொய்களை சொன்னால் அதை நாங்கள் சொல்ல வேண்டியிருந்தது. சில சமயம் அவர்கள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் வந்து அதை வெளியிடச் சொன்னார்கள்”

சரி, இந்த மருத்துவர்கள் எப்படி இந்த மறுப்பை வந்தடைந்தார்கள்? இந்த அமெரிக்க கேபிள் ஒரு துப்பு கொடுக்கிறது. போருக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட பிணைக்கைதிகள் என்று கொண்டாடப்படாமல் இந்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் கொழும்பில் குற்றவியல் விசாரணைப் பிரிவில் தடுப்பு ஆணையில் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்றும் அது தெரிவிக்கிறது.

அங்கே என்ன நடந்தது என்பதற்கான ஒரு நேரடி சாட்சியை நாங்கள் இப்போது பெற்றுள்ளோம். அவர்கள் சொன்னதை திரும்பப் பெறாவிட்டால், இலங்கையின் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 18 மாதங்களுக்கு சிறை வைக்கப்பட்டு அதன் பிறகு வழக்கு தொடரப்பட்டு பல ஆண்டு சிறைத் தண்டனை பெறுவார்கள் என்று சொல்லப்பட்டது. அரசாங்க பத்திரிகையாளர்கள் என்ன கேள்விகள் கேட்பார்கள் என்று சொல்லப்பட்டு அவற்றுக்கு எப்படி பதில் சொல்ல வேண்டும் என்றும் சொல்லித் தரப்பட்டது. செய்தியாளர் கூட்டத்திற்கு பிறகு மருத்துவர்கள் மீண்டும் பல வாரங்கள் காவலில் வைக்கப்பட்டார்கள்.

உள்நாட்டில் விமர்சகர்களை அடக்குவதோடு மட்டுமில்லாமல் வெளிநாட்டு விமர்சகர்களின் நம்பகத்தன்மையை தாக்கும் இயக்கமும் நடத்தப்பட்டது. அரசு சார்பு இலங்கை ஊடங்களை சந்தித்த போது எங்கள் குழுவினர் நேரடியாக அனுபவித்ததை இங்கு குறிப்பிடலாம். ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் அரசு தலைவர்கள் சந்திப்பு நிகழ்வின் போது. ஜனாதிபதி ராஜபக்சேவின் ஊடக ஆலோசகர் உள்ளிட்ட அரசு சார்பு ஊடகவியலாளர்களை நாங்கள் எதிர் கொண்டோம்.

“தமிழீழ விடுதலைப் புலிகள்தான் உங்களுக்கு நிதி அளிக்கிறார்கள்”

“இது முழுமையான திரித்தல், பத்திரிகை தொழிலுக்கு அவமானம். இது நெறிமுறைக்கு மாறானது.

“நீங்கள் அந்த வீடியோக்களை உண்மை என்று மறுக்கிறீர்களா?”

“நிச்சயமாக நான் மறுக்கிறேன். நான் அனைத்தையும் மறுக்கிறேன். நீங்கள் பேசுபவர்களை நிழலில் காட்டினீர்கள், சரிதானே? நீங்கள் சொல்வது .. ”

“ஆமாம், அவர்கள் தமது உயிருக்கு பயப்பட்டதால் நிழலில் காட்டினோம்”

“நீங்க எல்லாம் நிஜம்தானா, நீங்க நிஜமானவங்களா”

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீதான அச்சுறுத்தல் மிகவும் நிதர்சனமானது. நாடு கடத்தப்பட்ட இந்த சிங்கள பத்திரிகையாளருக்கு அது நன்கு தெரிய வந்தது.

பஷானா அபயவர்தனே, இலங்கையில் ஜனநாயகத்துக்கான பத்திரிகையாளர்கள்

“உண்மையில் நீங்கள் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்க விரும்பினால் கொல்லப்படும் ஆபத்தை சந்திக்க அல்லது சிறையிடப்பட தயாராக இருக்க வேண்டும் அல்லது நீங்கள் நாட்டை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுவீர்கள். ஏனென்றால் இது வரை 60 க்கும் மேற்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பத்திரிகையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள். 2005 ஆம் ஆண்டு முதல், 26க்கும் அதிகமான ஊடகத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்”

தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் தமிழர்கள் கொடூரமாக அடக்கப்படுகிறார்கள். தமது வீடுகளுக்கு போகக் கூட பலருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, இராணுவம் அவர்களின் நிலங்களை கையகப்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

“இதை போருக்கு பிந்தைய நிலைமை என்று சொன்னாலும் போர் கொள்கை இன்னும் தொடர்கிறது. தமிழ் மக்களின் தேசிய வாழ்க்கை அழிக்கப்பட வேண்டும், தமிழ் பகுதிகள் முழுமையாக இராணுவமயமாக்கப்பட வேண்டும். அதன் மூலம் அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பும் வராது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்பதுதான் போர்க் கொள்கை.”

ஜனாதிபதி நியமித்த கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் சமரச குழுவின் கண்டுபிடிப்புகள் பன்னாட்டு விமர்சனங்களை சமாதானப்படுத்த போதுமானவை என்று ராஜபக்சே அரசு எப்போதுமே வலியுறுத்தி வந்தது. அது அவ்வாறு செய்யவில்லை.

பொதுமக்கள் கணிசமான அளவில் இறந்தார்கள் என்பதையும் மனிதாபிமான உதவிகள் பற்றாக்குறையாக இருந்தன என்பதையும் பலர் காணாமல் போனார்கள் என்பதையும் குழு ஏற்றுக் கொண்ட போதிலும் அரசாங்கத்திற்கு எந்த பொறுப்பும் இல்லை என்று சொல்கிறது. கொலை செய்யப்படுவதை காட்டும் வீடியோ ஆதாரங்கள் மீதான முடிவை தவிர்த்ததோடு பிரபாகரனின் 12 வயது மகன் கொல்லப்பட்டது போன்ற குறிப்பான நிகழ்வுகளைக் கூட பதிவு செய்யவில்லை. எந்த இடத்திலும் நாம் இந்த ஆவணப்படத்தில் விளக்கியுள்ளவை உள்ளிட்ட போர்க்குற்றங்களுக்கான அதிகாரப் பொறுப்பு பற்றி அது விவாதிக்கவில்லை

கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் சமரச குழுவின் கண்டுபிடிப்புகள் பன்னாட்டு விமர்சனங்களை சமாதானப்படுத்த போதுமானவை என்று இலங்கை அரசு சொன்னது. அப்படி சமாதானப்படுத்தி விட்டதா?

டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)

“தனது உருவாக்கம் அல்லது அமைப்பு அல்லது முடிவுகளில் அந்தக் குழு இதை சாதித்து விட்டதாக நான் நம்பவில்லை. இது ஐ.நா. பொது செயலாளரும் நானும் இன்னும் பலரும் கேட்டதை நிறைவு செய்வதற்கு போதுமானதாக இல்லை. குற்றச்சாட்டுகளை பற்றிய சுதந்திரமான மதிப்பீடு தேவை”

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை

“போரின் இறுதிக் கட்டங்களில் என்ன நடந்தது என்று விசாரிப்பதாக இலங்கை அரசு பன்னாட்டு சமூகத்துக்கு வாக்குறுதி கொடுத்தது. LLRC அந்த விசாரணைக்கான களமாக இருக்கும் என்றும் அதன் மூலம் இந்த கடும் குற்றச்சாட்டுகளை விசாரிக்கப் போவதாகவும் சொன்னது. இப்போது LLRCன் இறுதி அறிக்கை வெளியான பிறகு இலங்கை அரசாங்கம் அப்படி எதுவும் செய்யவில்லை என்று நமக்குத் தெரிகிறது.

இந்த அச்சம் தரும் இரத்தம் தோய்ந்த போரின் சண்டை நடவடிக்கை இறுதியாக 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்த நாசமாக்கப்பட்ட நிலப்பரப்பில் எத்தனை பேர் உயிழந்தார்கள் என்று யாருக்கும் சரியாக தெரியாது. இதறகு பொறுப்பான சிலர் யார் என்று நமக்குத் தெரியும். ஜனாதிபதி ராஜபக்சே, அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே இருவரும் இன்னும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். பாதுகாப்பு பகுதியில் இருந்த புதுமாங்குளத்தின் மீது இரத்த தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவர்கள் வெளியுறவு பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஜெனரல் சுரேந்திர சில்வா, நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபையில் இருக்கிறார். போர் குற்றங்களுக்கு பொறுப்பானவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அவர் சில காலத்துக்கு ஐ.நா. பொது செயலாளர் பான் கி மூன் உடைய அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான மூத்த ஆலோசனை குழுவில் நியமிக்கப்பட்டார். பிரிகேடியர் பிரசன்னா டி சில்வா லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இராணுவ தூதராக இருக்கிறார். இவர்களில் பெரும்பாலானோருக்கு வழக்கு தொடரப்படுவதிலிருந்து வெளியுறவுத் துறை சட்ட பாதுகாப்பு இருக்கிறது.

எனவே, இலங்கை அரசாங்கம் இதிலிருந்து தப்பி விட்டதா? அல்லது உலகம் இன்னமும் நீதி கேட்குமா?

டேவிட் மிலிபண்ட், பிரிட்டன் வெளியுறவு செயலாளர் (2007-2010)

“அந்த குற்றச்சாட்டுக்கள் இன்னும் அடுக்குகளில் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இது பாதுகாப்பு சபை உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகளின் மற்றும் ஐநா மனித உரிமைகள் குழுவின் பொறுப்பு. வெறும் சொற்களில் மட்டுமில்லாமல் செயலிலும் குற்றங்களுக்கான பொறுப்பு நிர்ணயிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்”

சாம் ஜாரிபி, சர்வதேச பொதுமன்னிப்பு சபை

“ரத்தக் களறியை சரிவர விசாரிக்காத ஐநாவின் தோல்வியும், இலங்கையில் நடந்த துன்பியல் நிகழ்வுகளும் ஐநாவின் நம்பகத்தன்மையை பெரிதளவு பாதிக்கும். இது போன்ற மனித துயரங்களை தவிர்ப்பதற்காகவே அமைக்கப்பட்ட நிறுவனம் ஐநா.”

கடந்த வாரம், லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் அவர்கள் இந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட “துர் நோக்கமுடனான குற்றச்சாட்டுகளை உறுதியாக நிராகரிப்பதாகவும்” , “சேனல் 4 ஒளிபரப்புக்கு முன்பாகவே ஒளிபரப்புக்கு ஆதாரமான வீடியோன பதிவுகளையும் பிற ஆவணங்களையும் தம்முடன் பகிர்ந்து கொள்ளாததை எண்ணி” வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார்கள். “சேனல் 4ன் இலங்கை பற்றிய அறிக்கைகளில் தெரியும் தொடர்ச்சியான பகைமை உணர்வும் பக்க சார்புடனுமான கருத்துக்களை” எண்ணி வருந்துவதாகவும், நாங்கள் “மிகவும் போலியான வீடியோக்கள், நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகள் மூலம் முழுக்க முழுக்க பொய்யாக இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் மூத்த தலைவர்களை குற்றம் சாட்டுவதில்” கவனம் செலுத்துவதாகவும் சொன்னார்கள். சேனல் 4, “போருக்கு பின்னர் இப்போது நாட்டில் நடக்கும் பல நேர்மறையான முன்னேற்றங்களை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும் அத்தகைய அணுகுமுறை இப்போது நடந்து கொண்டிருக்கும் முழுமையான சமரச பாதையை பாதிக்கும்” என்றும் இலங்கை தூதரகம் சொன்னது.

கடந்த ஆண்டு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்சே மற்றும் அரசு குழுவினர் ஆஸ்திரேலியாவில் கூடிய 2011 காமன்வெல்த் அரசு தலைவர்களின் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள். ஷாம்பெயின் குடித்துக் கொண்டு நொறுக்குத் தீனிகளை மென்று கொண்டே உலக தலைவர்களுடனும் பிரிட்டிஷ் ராணியுடனும் உறவாடிக் கொண்டிருந்த போது, தமது மறுவாழ்வு உறுதி செய்யப்பட்டு விட்டதாகஅவர்கள் நினைத்திருக்க வேண்டும். அடுத்த காமன்வெல்த் அரசு தலைவர்களின் சந்திப்பு 2013-ல் இலங்கையில் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்ட போது 40,000 தமிழர்களின் உயிரை வாங்கிய போரின் நினைவுகள் ஒரு தொலைதூர நினைவாக தோன்றியிருக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகமும்தான் அவை மறக்கப்படவில்லை என்று உறுதி செய்ய வேண்டும்.

இத்துடன் ஆவணப்படம் நிறைவடைகிறது.

_________________________________________________________

– தமிழாக்கம்: அப்துல்

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

பிட்டுப் படம்னா அது பி.ஜே.பிதான்! ‘யோக்கியன்னா’ அது எடியூரப்பாதான்!!

79
ஆர்-எஸ்.எஸ்
மில்ட்ரீ டிஜிப்ளின்

“பரம் வைபன்யே துமே தத்ஸ்வராஷ்ட்ரம்” என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? இது ஆர்.எஸ்.எஸ் காக்கி டவுசர்கள் தினசரி காலையில் பாடும் பஜனையில் வரும் ஒரு வரி. இதற்கு, ‘பரம வைபவமான நிலையில் உன்னை வைத்திருப்பேன் என் ஸ்வராஷ்ட்ரமே’ என்று பாரதத் தாயைப் பார்த்து பாடுவதாகப் பொருள் சொல்லிக் கொள்கிறார்கள். பாரதத் தாய் பரம வைபவமான நிலைக்குப் போனாளோ என்னவோ – காக்கி டவுசர் கும்பல் பரம வைபவத்தை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் முன்னேறி வருவதாக தினசரி செய்தித் தாள்களின் பக்கங்கள் கோலாகலமாக அறிவிக்கின்றன.

ஒழுக்கம் என்றால் ஆர்.எஸ்.எஸ் – ஆர்.எஸ்.எஸ் என்றால் ஒழுக்கம் என்பது தான் அவர்களின் பாரம்பரிய மார்க்கெட்டிங் தந்திரம். இந்த தந்திர மந்திரத்தை தமிழகத்தில் துக்ளக், தினமலர் போன்ற பார்ப்பன ஊடகங்கள் தவறாமல் ஓதுவது நாம் அறிந்த செய்திதான். ஆர்.எஸ்.எஸ் காரர்களிடம் போய் ‘இந்த முக்கு முக்குறீங்களே… அப்டி இன்னா தான் சாதிக்கப் போறீங்கபா’ என்று கேட்டுப் பாருங்கள், “நாங்கள் ஒழுக்கமான கட்டுப்பாடான மனிதர்களை உண்டாக்குகிறோம்; அவர்கள் பல்வேறு துறைகளுக்கும் சென்று தமது நேர்மையான ஒழுக்கமான நடவடிக்கைகளால் தேசத்துக்கு சேவையாற்றுவார்கள்” என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்கள்.

இப்படி ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒழுக்கப் பல்கலைக்கழகத்தில் கடுமையாக ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பயின்று பட்டம் பெற்று அரசியல் துறைக்கு அனுப்பப் பட்டவர்களைக் கொண்ட கட்சி தான் பாரதிய ஜனதா. சங்கப் பரிவாரத்தின் அரசியல் முகம். இந்தியாவில் மேற்கில் ஒன்றும் தெற்கில் ஒன்றுமாக பெரிய மாநிலங்களான குஜராத்திலும் கருநாடகத்திலும் அவர்களின் நல்லொழுக்க ராமனாட்சி நடந்து வருவதாக அவர்கள் மட்டுமல்ல – தினமலரும் கூட சொல்கிறது. தினமலருக்கு பார்த்தசாரதிகள் எழுதும் கடிதங்களில் ‘என்னயிருந்தாலும் குஜராத் மாதிரி வருமா.. மோடி போல வருமா… தல போல வருமா’ என்கிற புலம்பல்களைத் தவறாமல் பார்க்க முடியும்.

இவ்வாறாக ‘நல்லொழுக்க ராமராஜ்ஜியம்’ நடந்து வருவதாக சொல்லப்பட்ட இவ்விரு மாநிலங்களிலும் உண்மையில் நடப்பது ‘ஜொள்ளொழுகும் காமராஜ்ஜியம்’ தான் என்கிற உண்மை சமீபத்திய செய்திகளின் மூலம் அம்பலமாகியுள்ளது. கடமை கண்ணியம் ‘பிட்’டுப்பாடு என்கிற ரீதியில் கருநாடகத்தைச் சேர்ந்த மூன்று பாரதிய ஜனதா அமைச்சர்கள் பிட்டுப் படம் பார்த்து கையும் மெய்யுமாக பிடிபட்டு அதற்கு நாடே காறித்துப்பி அந்த எச்சிலின் ஈரம் கூட காயும் முன் குஜராத்தைச் சேர்ந்த இரண்டு பாரதிய ஜனதா எம்.எல்.ஏக்கள் இதே காரியத்தைச் செய்துள்ள விவகாரம் வெடித்துள்ளது.

குஜராத் சட்டமன்றத்தில் பட்ஜெட் பற்றிய விவாதம் ‘சூடாக’ நடந்து கொண்டிருக்கும் போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சவுத்ரி மற்றும் பார்வாத் ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்கள் கையில் உள்ள ஐ.பேடில் எதையோ பார்த்து தமக்குள் ‘சூடாக’ விவாதிப்பதை அவதானித்த பத்திரிகையாளர் ஜனக் தாவே, மக்கள் நலன் பற்றித் தான் ஏதோ பார்த்துக் கொண்டிருப்பார்களோ என்று கூர்ந்து கவனித்துள்ளார். முதலில் விவேகானந்தரின் படங்களைப் பார்த்து மகிழ்ந்த காவி வேட்டி ராம பக்தர்கள், அதைத் தொடர்ந்து நிர்வாணப் படங்களைக் கண்டுகளித்து காவிக்குள் பதுங்குவது ராமபக்தியல்ல – காமபக்தி தான் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளனர். பட்ஜெட் சூட்டுக்கு இதமான குளிராக அந்த குஜால் மேட்டர் இருந்தவிதம் இந்தியாவுக்கே தெரிந்தது.

அதிர்ச்சியடைந்த ஜனக் தாவே, விஷயத்தை சபாநாயகர் கன்பத் வாஸ்வாவின் காதுகளுக்குக் கொண்டு சென்றுள்ளார். விஷயத்தைக் கேட்டுக் கொதித்தெழுந்த சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளாராம். பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சபா நாயகரின் ‘கொதிப்பை’ அவர் வார்த்தைகளிலேயே கேளுங்களேன் – “இது போன்ற சம்பவங்களைச் சகித்துக் கொள்வதற்கில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இப்படி ஊடகங்களால் குறிவைக்கப்பட்டு அவமானத்துக்குள்ளாவதை சகித்துக் கொள்ளவே முடியாது. இது பற்றி உண்மையறிய ‘ப்ளா ப்ளா ப்ளா’ சட்டப்பிரிவுகளின் படி விசாரணை செய்வோம்”

கர்நாடகா-குஜராத்-பிட்டு
கடமை-கண்ணியம்-பிட்டுப்பாடு - ஜெய் ஸ்ரீ ராம்

இனி இந்த விசாரணை முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை தனியே வேறு எழுத வேண்டுமா என்ன? இப்படி கருத்துக்களைக் கச்சிதமாகக் கவ்விக் கொள்ளும் கன்பத் வாஸ்வாவின் அறிவுக்கூர்மை கருநாடக சபாநாயகருக்கு இல்லாமல் போனதை நினைத்து ‘நமக்கு வாய்த்தது இவ்வளவு தான்’ என்று தலைமேல் கைவைத்து அமர்ந்துள்ளார் அம்மாநில பாரதிய ஜனதா முதல்வர் சதானந்த கவுடா. கருத்துக்களை கச்சிதமாக கவ்விக் கொள்ளும் விஷயத்தில் கருநாடக பாரதிய ஜனதா வேண்டுமானால் தத்திகளாக இருக்கலாம், ஆனால் அம்மாநில நீதித் துறையோ இந்த விசயத்தில் கப்பென்று பற்றிக் கொள்ளும் பெட்ரோலில் ஊறிய கற்பூரமாய் இருக்கிறது.

கருநாடக மாநில முன்னாள் லோக் ஆயுக்தா சந்தோஷ் ஹெக்டே அம்மாநிலத்தில் நடந்த சுரங்க ஊழல்கள் பற்றிய விரிவான விசாரணை அறிக்கை ஒன்றை முன்பு தாக்கல் செய்திருந்தது. அதில், ஈஸ்ட் வெஸ்ட் மைனிங் கம்பெனி என்கிற நிறுவனம், சுரங்க ஒப்பந்தங்கள் பெற எடியூரப்பா குடும்பத்துக்கு எந்தெந்த வகைகளில் எல்லாம் லஞ்சம் கொடுத்தது என்கிற விவரங்கள் அடங்கியுள்ளன. அந்த அறிக்கையின் 22ம் அத்தியாயத்தில், எடியூரப்பா குடும்பம் பல்வேறு வகைகளில் சுமார் 30 கோடி ரூபாய்களை மேற்படி கம்பெனியிடமிருந்து லஞ்சமாகப் பெற்ற விவரங்கள் அடங்கியுள்ளது. இதனடிப்படையில், எடியூரப்பாவின் மேல் முதல் தகவலறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்ற வருடம் ஜூலை ஆகஸ்டு மாதங்களில் நடந்த கோமாளிக் கூத்துகளைத் தொடர்ந்து எடியூரப்பா தனது விசுவாசியான சதானந்த கவுடாவை ஒப்புக்குச் சப்பானியாக முதல்வர் நாற்காலியில் அமர வைத்து விட்டு பதவியிலிருந்து இறங்கினார். சிறைக்குப் போனார் – ஜாமீனிலும் வந்தார்.

தற்போது இதனை விசாரித்த உயர் நீதிமன்ற ஆலமரத்தடி பஞ்சாயத்துக் கூட்டத்தார், லஞ்சம் கொடுக்கப்பட்ட விவரம் இருக்கிறது – ஆனால், அதை வாங்கிக் கொண்டு தான் உரிமங்கள் வழங்கப்பட்டன என்பதற்கு எங்கே ஆதாரம் – அதனால் ‘செல்லாது செல்லாது’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், காசு வாங்கித் தான் சலுகை காட்டப்பட்டது என்றால் அதைப் பற்றி எடியூரப்பாவின் கருத்தைக் கேட்கவில்லையே – அப்படிக் கேட்பது தானே இயற்கையான நீதிமுறை என்று அங்கலாய்த்துள்ளது. இதே பஞ்சாயத்து தீர்ப்பை அப்படியே விரிவாக்கிப் பாருங்கள் – கலைஞர் டீவிக்கு காசு வந்தது என்னவோ சரிதான் – ஆனால், அது சலுகை காட்டப் பட்டதற்காகத் தான் வழங்கப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம் அப்படியே இருந்தாலும் என்கிட்டே ஒரு வார்த்தை கேட்டிருக்கப் படாதா என்று ஆ.ராசா மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருப்பது கேட்கிறதா?.

வலது கை தான் தின்றது – இடது கை தான் கழுவியது ஆனாலும் ரெண்டும் வேற வேற கையாச்சே? என்று கூட இந்தத் தீர்ப்பை விளங்கிக் கொள்ளலாம். மேலும் இந்தத் ‘தீர்ப்பை’ விளங்கிக் கொள்ள பல்வேறு வகைகளிலும் முயன்று பார்த்தோம்.. நாராசமான உதாரணங்களே நினைவுக்கு வருவதால், நீதிமன்ற ‘மாண்பையும்’ ‘புனிதத்தையும்’ கணக்கில் கொண்டு இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம். இத்தீர்ப்பில் உயர் நீதிமன்றம் எழுப்பியிருக்கும் கேள்வி ஒன்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதாவது,  வெறும் சந்தேகத்தை  மட்டும் அடிப்படையாகக் கொண்டு அரச பதவியில் இருக்கும் ஒருவரின் புகழுக்குக் களங்கம் விளைவிப்பது நியாயமில்லை என்று சொல்லியிருக்கிறது.

புகழெல்லாம் ஒருபக்கம் கிடக்கட்டும் – வெறும் சந்தேகத்தை மட்டும் அடிப்படையாக வைத்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வருடக்கணக்கில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்த முசுலீம்கள் எத்தனை ஆயிரம் பேர் இருப்பார்கள்? முசுலீம்கள் என்பதலேயே சந்தேகத்தின் அடிப்படையில் நடந்த போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? க்ரோசின் மாத்திரை வைத்திருப்பதாலேயே நக்சலைட் என்று சந்தேகப்பட்டு போலி மோதல்களில் கொல்லப்பட்டவர்கள் எத்தனை பேர்? இந்தியாவின் மொத்த ஆலமரத்தடி பஞ்சாயத்து கும்பல்களுக்கும் எடியூரப்பாக்களின் புகழின் மேல் இருக்கும் விசுவாசமும் கவலையும் இந்த அப்பாவிகளின் வாழ்க்கை மேலும் உயிரின் மீதும் என்றாவது தோன்றியிருக்குமா?

எடியூரப்பா
எப்பூடி!!!

இது ஒருபக்கமிருக்க, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும் ‘பாத்தீங்களா நாங்க ரொம்ப நல்லவங்கன்னு சொன்னோம்ல’ என்று பாரதிய ஜனதாவின் மேலிடம் சட்டையின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டிருக்கும் போதே கீழே வேட்டியை உருவி விட்டார் எடியூரப்பா. தனக்கு விசுவாசமான 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் ஓட்டிக் கொண்டு போய் பெங்களூரு நகரத்துக்கு வெளியே இருக்கும் ஐந்து நட்சத்திர ஆட்டுப் பட்டி ஒன்றில் அடைத்த எடியூரப்பா, ‘சரி சரி கிளம்பு காத்து வரட்டும்’ என்று சதானந்த கவுடாவுக்கு கெடு விதித்து விட்டார். ஏற்கனவே கட்டுப்பாட்டுக்குப் பேர் போன காவி கும்பலின் கட்டுப்பாடு ‘பிட்’டுப்பாடாகிக் கிழிந்து கந்தலாகத் தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மிச்சம் மீதி ஒட்டிக் கொண்டிருப்பதையும் எடியூரப்பா அவிழ்த்தெறிந்து விடுவாறோ என்று அஞ்சிய பாரதிய ஜனதா டவுசர் பாண்டிகளின் மேலிடம் களத்தில் இறங்குகிறது.

தொடர்ந்து நடந்து வரும் சமாதானப் பேச்சு வார்த்தைகள் இன்று வரை ஒரு முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கிடையே தில்லியை நோக்கி ஒரு படையெடுப்பையும் நடத்தி முடித்துள்ளார் எடியூரப்பா. பாரதிய ஜனதாவின் தலைவர் நிதின் கட்காரியில் இருந்து அத்வானி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஸ்வயம் சேவகத் தலைவர்களுக்கு இரண்டு பக்கமும் இடி – ஒன்று, எடியூரப்பாவைப் பகைத்துக் கொள்வது உடனடியாக ஆட்சிக்கு ஆப்பு வைத்து விடும் என்பதோடு நீண்ட கால நோக்கில் அவருக்கு விசுவாசமான சாதி ஓட்டுகளை இழக்க வேண்டி வருமே என்று தயங்குகிறார்கள். இன்னொரு பக்கம், அவரை முதல்வராக்கினால் அகில இந்திய ரீதியில் ஊழல் ‘ஒழிப்பை’ முன்வைத்து தாம் போட்டு வரும் சீனின் திரை கிழிந்து விடும். இனி என்ன கிழிவதற்கு? ஏற்கனவே நார் நாராய் தொங்குவது வேறு விசயம்.

கழுதை முன்னே போனா கடிக்கும் பின்னே போனா உதைக்கும் என்கிற இந்த இக்கட்டான நிலையில் கடிவாங்கலாமா உதை வாங்கலாமா என்பது பற்றி முடிவெடுப்பதற்காகக் கூடிய பாரதிய ஜனதா உயர்மட்டக் கூட்டம் ஒன்று நடந்து எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது – அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியே வரும் போது நிதின் கட்காரின் மூஞ்சில் ஒரு சங்கடமான புன்னகையொன்று தோன்றியதை செய்திச் சேனல்களில் காண முடிந்தது. அடேங்கப்பா.. ஆர்.எஸ்.எஸ் காரவுக என்னமா டிரெய்னிங் குடுக்கறாங்கபா!

___________________________________________

– தமிழரசன்

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: பாசிச ஜெயா அரசைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்!

10

கடந்த 25 வருடங்களாக கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையை எதிர்த்து போராடி வருகின்றார்கள். கடந்த பல மாதங்களாக  தொடர்ந்து பலவகைப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். சில நாட்களுக்கு முன்னர் போராட்டக்குழுத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரை தமிழக அரசு கைது செய்தும், அம்மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக காவல் துறையை குவிப்பது மற்றும்
அம்மக்கள் மீது பொய் வழக்குகள் போடுவது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.

அப்பகுதியில் 144 தடை உத்திரவை அமல்படுத்தி அப்பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம் உட்பட அனைத்தையும் தடை செய்து விட்டது. குழந்தைகளுக்கு பால் இல்லை என்றாலும் அம்மக்கள்
அரசுக்கு பணிய மறுத்து வீரஞ்செறிந்த போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.  அரசின் இந்த செயலை கண்டித்தும், கூடங்குளம் அணு உலையை உடனே மூட வலியுறுத்தியும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பில்  22.03.12 முதல் கடந்த வாரம் முழுவதும் தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூடங்குளம்-முழக்கங்கள்
முழக்கங்கள்

சென்னை:

சென்னையல் உயர் நீதிமன்றம் அருகில் 22.3.2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காலை சரியாக 11 மணிக்கு திடீரென ஆங்காங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் செஞ்சட்டையுடன்  சீறிப்பாய்ந்த படி உயர் நீதிமன்றத்தின் அருகில் உள்ள குறளகத்தின் முன்னர் முள்ளிவாய்க்காலாக கூடங்குளத்தை மாற்ற எத்தணிக்கும் அரசிற்கு எதிராக முழங்கினார்கள்.  குறளகம் செங்கொடிகளால் சூழப்பட்டிருக்க ஓடிவந்த காவல் துறையோ என்னசெய்வதென்று தெரியாமல் முழிந்துக்கொண்டிருக்கும் போதே ஆர்ப்பாட்டம் தொடங்கியது.

சுமார் இருபது நிமிட முழக்கங்களுக்கு பின்னர்  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த ம.க.இ.க, மாவட்டச்செயலாளர்  தோழர்.வே.வெங்கடேசன் ”மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல அணு உலை என்பதையும் , கடந்த பத்து ஆண்டுகளில் ஆட்சியமைத்த கருணாவும் ஜெயாவும் ஒரு மின் உற்பத்தி நிலையங்களைக்கூட திறக்காமல் பன்னாட்டு முதலாளிகளுக்கு இலவசமாகவும் சலுகை விலையிலும் மின்சாரத்தை தாரை வார்க்கும் அயோக்கியத்தனத்தையும் விளக்கிப்பேசினார்.”

பின்னர் கண்டன உரை ஆற்றிய பு.ஜ.தொ.மு மாநில இணைச்செயலர் தோழர் ஜெயராமன் ” சங்கரன் கோவில் தேர்தலுக்காக கூடங்குளம் மக்களின் கழுத்தை நம்ப வைத்து அறுத்த பாசிச ஜெயாவை முறியடிக்க வேண்டிய அவசியத்தையும்,  அம்மக்கள் தற்போது பால், தண்ணீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் அரசால் தடை செய்யப்பட்ட போதும் போராட்டத்தை தொடர்வதையும், அம்மக்களின் போராட்டத்தை , அந்த போராட்டத்தீயை வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமை என்றும் விளக்கினார். இதில் பெண்கள், மாணவர்கள் – மாணவிகள், இளைஞர்கள் தொழிலாளர்கள் என  150க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர்.

தருமபுரி:

தருமபுரியில் 22.3.2012 அன்று பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், இராஜகோபால் பூங்கா பின்புறம், பூங்கா முன்புறம் ஆகிய 4 இடங்களில் விவசாய விடுதலை முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கோபிநாத் (வட்டச் செயலர், பென்னாகரம் வட்டம்) தலைமை தாங்கினார். போலீஸ் அனுமதியை மீறி இந்த நான்கு இடங்களிலும் ஆர்ப்பாட்டம் மக்கள் ஆதரவுடன் நடைபெற்றது. ஒரு சமயத்தில் நான்கு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் நூற்றுக்கணக்கில் மக்களிடையே பிரச்சாரம் சென்று சேர்ந்தது. திரளான தோழர்கள் கலந்து  கொண்டனர்.

திருச்சி:

திருச்சியில் பேருந்து நிலையம் காதிகிராஃப்ட் அருகில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்கள், குழந்தைகள் உட்பட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர். பாசிச ஜெயாவின் அடக்குமுறை இடிந்த கரையில் இறக்கிவிடப்பட்டதை கண்டித்து உடனே நடந்த ஆர்ப்பாட்டம் திருச்சி மக்களிடையே பிரச்சாரத்தை வீச்சாக கொண்டு சென்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ம.க.இ.க மாவட்ட செயலர் தோழர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் சேகர் கண்டன உரையாற்றினார். ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்க சிறப்பு தலைவர் தோழர். தர்மராஜ் எழுச்சியுரை ஆற்றினார். இறுதியாக பெண்கள் விடுதலை முன்னணி தோழர் நிர்மலா நன்றியுறை ஆற்றினார்.

விழுப்புரம்:

கூடங்குளத்தில் தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து பு.மா.இ.மு வும், வி.வி.மு வும் சேர்ந்து விழுப்புரத்தில் 22 .03 .12  அன்று மாலை 4 .00 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை நடத்தின. ஆர்ப்பாட்டத்தில் 50 க்கும்  மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அனுமதி கேட்டு கொடுத்த விண்ணப்பத்தை மறுத்து அனுமதி தரமுடியாது என விழுப்புரம் DSP கைப்பட மறுப்பு எழுதி தந்தார். அதையும் மீறி அன்றைய ஆர்ப்பாட்டம் நடந்தது. 250 சுவரொட்டிகள் விழுப்புரம் முழுக்க ஒட்டி வலுவான பிரச்சாரம்  குறுகிய  நாட்களில் எடுத்து செல்லப்பட்டது. அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைகாட்சி சேனல்களும் செய்தி சேகரித்தனர். மக்கள் தொலைக்கட்சியில் செய்தியும் வந்துவிட்டது. 50 நிமிடங்கள் ஆர்ப்பாட்டம் போலீஸ் குவிப்பை மறுத்து வெற்றிகரமாக நடந்தது! காவல் துறை கெஞ்சாத குறையாக ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டனர்.
வி.வி.மு தோழர் மனோகரன் தலைமையில், பு.மா.இ.மு விழுப்புரம் செயலாளர் தோழர்.செல்வகுமார் விளக்கி பேசினார். வி.வி.மு மாவட்ட அமைப்பாளர் தோழர்.அம்பேத்கர் முழக்கங்கள் எழுப்ப திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.

மதுரை:

மதுரையில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் சார்பில் விரிவான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைவருக்கும் மின்சாரம் வேண்டும், ஆபத்தான அணு உலை வேண்டாம் என்றும், கூடங்குளத்தில் கைது செய்யப்பட்ட மக்களை விடுவிக்குமாறும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தோழர்களும் மக்களும் கலந்து கொண்டனர்.

ஓசூர்:

ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களின் உயிருக்கும், நாட்டின் அரைகுறை இறையாண்மைக்கும் உலைவைக்கும் கூடங்குளம் அனு உலையை இழுத்துமூடு! கூடங்குளம் மற்றும் இடிந்தக் கரை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள பெரும் போலிசு படையை திரும்பப் பெறு! மக்கள் போராளிகளின்மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை நீக்கு! கைது செய்யப்பட்ட முன்னணியாளர்கள் மற்றும் பொதுமக்களை உடனே விடுவி! என்ற முழக்கங்களின் அடிப்படையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே 22.03.2012 மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

இவ்வார்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் தோழர் சின்னசாமி தலைமைத் தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் வெங்கடேசன் கண்டன உரையாற்றி பேசினார். சிறப்புரையாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் அணுஉலையை கொண்டுவருவதற்கான அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தின் அரசியலை அம்பலப்படுத்திப்பேசினார். இறுதியாக, நாட்டின் இறையான்மைக்கும், மக்களின் உயிருக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடிய மக்களை விடுவி! கூடங்குளம் பிரச்சினையை தமிழக மக்களின் பிரச்சினையாக பாவித்துப் போராடுவோம். என்று முழங்கி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்தனர். ஏறக்குறைய 1.30 மணிநேரம் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை பொது மக்கள் திரளாக திரண்டு கவனித்துச் சென்றனர்.

கடலூர்:

கூடங்களம் போராட்ட முன்னணியாளர்கள் சிறை வைக்கப்பட்டிருக்கும் கடலூரில் எழுச்சிகரமான ஆர்ப்பாட்டத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்தியது. திரளான மக்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்:

கூடங்குளம் அணுஉலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்வது என்ற தமிழக அரசின் முடிவைக் கண்டித்தும், போராடும் மக்கள் மீதான பொய் வழக்குகள், கைதுகளைக் கண்டித்தும் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரியும் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் 21.3.2012 அன்று தஞ்சை இரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் ம.க.இ.க தஞ்சை கிளைச்செயலர் இராவணன் தலைமையில் நடைபெற்றது. ம.க.இ.க மாநில இணைப் பொதுச் செயலாளர் தோழர் காளியப்பன் கண்டன உரையாற்றினார்.

“ஜெயலலிதா கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கும் முடிவைத்தான் எடுப்பார் என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல. தனக்கு ஆதாயம் தரும் வகையில் எப்படி காய் நகர்த்துவது என்பதில்தான் இவ்வளவு நாள் காலம் கடத்தினார். போராடும் மக்களுக்கு ஆதரவாக இருப்பதுபோல் போக்குகாட்டிக் கொண்டே அவர்கள் மீது 156 வழக்குகளைப் பதிவு செய்தபோதே கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுவார் என்பதும் உறுதியாயிற்று. அடித்தட்டு மக்களின் நலனை ஜெயலலிதா பாதுகாப்பார் என நம்புவது எவ்வளவு பெரிய அசட்டுத்தனம் என்பதை உதயக்குமார் போன்ற அறிஞர்களுக்கும் புரியவைத்துவிட்டார்.” என்று தோழர் பேசினார்.

மேலும், “5000க்கும் மேற்பட்ட போலீசு துணை ராணுவப்படைகளை குவித்துள்ளதோடு வான்வழிக்கண்காணிப்பு கடலோரக்காவல்படை கண்காணிப்பு என கூடங்குளம் சுற்றுவட்டாரமே யுத்தகளம்போல் மாற்றி மக்களை அச்சுறுத்துகிறார்கள். அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை வீடு வீடாகச்சென்று அச்சுறுத்தும் வேலையை போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது. இப்பகுதியில் 144 தடை உத்தரவு போட்டு மக்கள் நடமாட்டமே முடங்கியுள்ளது. வழக்குரைஞர்களைக்கூட அப்பகுதியில் அனுமதிக்க மறுக்கிறது காவல்துறை. இடிந்தகரை பகுதிக்கு குடிநீர் மின்சாரம் நிறுத்தப்பட்டு மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவியுள்ளது ஜெயலலிதா அரசு.”

“மக்கள் விரோத ஜனநாயக விரோத இத்தகைய நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். பொய்வழக்குகளை திரும்பப் பெறுவதுடன் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்றார்  தோழர் காளியப்பன்.

இவ்வார்ப்பாட்டத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி பட்டுக்கோட்டை வட்டாரச் செயலாளர் தோழர் மாரிமுத்து, பேராசிரியர் அரங்க சுப்பையா ஆகியோர் கண்டண உரையாற்றினார்.

மேலும் பல ஊர்களில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: இலண்டன் ஜி.டி.வியில் சபா.நாவலன் நேர்காணல்!

5

இலண்டனில் இயங்கும் ஜி.டி.வி எனும் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 24.03.2012 சனிக்கிழமையன்று கூடங்குளம் தொடர்பான விவாதமொன்று ஒளிபரப்பானது. வெளிச்சம் எனும் விவாத நிகழ்ச்சிக்காக நடைபெற்ற இந்நிகழ்வில் இனியொறு தோழர் சாபா.நாவலன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் பங்கேற்றனர். நாவலன் நேரிலும், மருதையன் தொலைபேசி மூலமும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதன் முழு வீடியோ யூ.டியூபில் வெளியிடப்பட்டிருக்கிறது. சுமார் ஒன்றேகால் மணி நேரம் இடம் பெறும் விவாதத்தில் இரு முறை விளம்பர இடைவேளை வருகின்றது. ஆரம்பத்தில் தோழர் மருதையனின் புகைப்படம் என்று தோழர் மதிமாறனது படத்தை தவறாக காட்டியிருக்கிறார்கள். பின்னர் நீக்கியிருக்கிறார்கள்.

விவாதத்தில் கூடங்குளம் போராட்டம் தொடர்பாகவும், அதன் அரசியல் பரிணாமங்களும் விளக்கப்பட்டிருக்கின்றது. அதன் பொருட்டு அந்த உரையாடலை இங்கு வெளியிடுகிறோம்.

 

படிக்க

கோவை சூரிய பிரபா மில்: பெண்கள் தாலியறுக்கும் சுமங்கலி சுரண்டல் திட்டம்!

7
சுமங்கலி
கொத்தடிமை வாழ்க்கை

கோவை புறநகர் பகுதிகளில் நள்ளிரவு நேரங்களிலோ அல்லது அதிகாலை நேரங்களிலோ தான் குடிதண்ணீர் திறந்துவிடுவது வாடிக்கை. அன்றும் (20. 03. 2012 ) அவ்வாறுதான்  அதிகாலை 4 மணிக்கு கோவை விஜயலட்சுமி மில்ஸ் (கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில் குனியமுத்தூர் தாண்டி உள்ள பகுதி) பகுதி மக்கள் தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது ”காப்பாத்துங்கள்,  காப்பாத்துங்கள்”  என்று ஆறு இளம்பெண்களின் கதறல் கேட்டது. தண்ணீர் பிடித்துக்கொண்டு இருந்தவர்கள் அந்த இளம்பெண்களை பாதுகாத்து மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

ம.உ.பா.மை தோழர்கள் சென்று பகுதி மக்களை சந்தித்தபோது. தங்களது பகுதியில் (விஜய லக்ஷ்மி மில்ஸ் பகுதியில்) இயங்கி வரும் ”சூரிய பிரபா” பஞ்சு மில்லில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை சுமங்கலி திட்டம் என்ற பெயரில் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்குவதாகவும்.
மில் நிர்வாகத்தின் கடுமையான துன்புறுத்தலை தாக்குப்பிடிக்க முடியாமல் 6 பெண்கள் மில்லில் இருந்து சுவர் ஏறிக்குதித்து முல்வேளிக்கம்பிகளை தாண்டி வந்து தங்களிடம் அடைக்கலம் புகுந்ததாகவும் தகவல் கூறினார்.

அதன் பிறகு தோழர்கள் அந்த பெண்களை சந்தித்து பேசினார். அதன் பிறகு தங்களுக்கு நடந்த கொடுமைகளை குறித்து அப்பெண்களே தோழர்களிடம் விளக்கமாக கூறி தங்களை எப்படியாவது ஊருக்கு அனுப்பி வைக்கும்படியும்  நிர்வாகத்தால் ஏதும் தீமை நடந்துவிடாமல் தங்களை பாதுகாக்கும் படியும் தங்களது புகைப்படங்களை ஊடகங்களுக்கு அளிக்கவேண்டாம் என்றும் கோரினர்.

சூரிய பிரபா மில்..

கோவை குனியமுத்தூர் பகுதியில் சூரிய பிரபா மில் இயங்கி வருகிறது. இந்த மில்லில் 18 வயதுக்கும் குறைவான பெண்களை சுமங்கலி திட்டத்தின் கீழ் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து வேலை வாங்குகின்றனர். மில் நிர்வாகம் தங்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறது என்பதை அப்பெண்கள் கூறக்கேட்டபோது நமக்கு நெஞ்சம் பதறுகிறது.

மாதம் ரூ 3000 சம்பளம். தங்குமிடம், உணவு இலவசம் எனப்பேசி கூட்டி வந்ததாகவும், ஆனால் உண்மையில் தங்களுக்கு எவ்வளவு சம்பளம் என இதுவரையில் தெரியாது எனவும் கூறினார். நாள் ஒன்றிற்கு ரூ 75 பிடித்தம் செய்வதாகவும், நிர்வாகத்தின் தொலைபேசியில் இருந்து எப்போதாவது ஒருமுறைதான் வீட்டுக்கு போன் பேச அனுமதிப்பார்களாம். அதுவும் நிமிடத்திற்கு 2 ரூபாய் கட்டணத்தில்.அவ்வாறு பேசும் வேலைகளில் அருகிலிருந்து ஒட்டுக்கேட்கவும் செய்வார்களாம்.

உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து போவதும் இல்லையாம். மிகவும் கவலைக்கிடமானால் அழைத்து சென்றுவிட்டு வாகனம் மற்றும் மருத்துவ செலவிற்கு சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்துகொள்வார்களாம். மாதம் ரூ 200 கொடுப்பார்கள் அதை வைத்துதான் துணி,சோப்பு,குளிக்கும் சோப்பு,நாப்கின்,பேஸ்ட், எண்ணெய்,etc அனைத்திற்கும் பயன்படுத்தி கொள்ளவேண்டுமாம். ஒப்பந்தம் முடியும் வரை வெளியிலோ, சொந்த ஊருக்கோ செல்ல அனுமதிப்பது இல்லை. விடுதியில் தரமற்ற மோசமான. உணவு பிடிக்கவில்லை என்று கீழே கொட்டினால் அதற்கும் அபராதம்(FINE ) போடுவார்களாம்.

தங்குமிடமோ ஒரு பூலோக நரகம். 150 பெண்கள் தங்கி இருக்கும் இடத்தில் 3 கழிவறைகளும்,3 குளியலறைகளும் மட்டுமே உள்ளதாம்.
மேலும் வேலை நேரம் 16 மணிநேரம் வரையும் மில் சுமார் 2 நாட்கள் 48 மணிநேரம் தொடர்ந்தால் போல வேலை செய்ய கட்டாயப்படுத்துவது. போன்ற ஏராளமான கொடுமைகளை அங்கு வேலை செய்யும் பெண்கள் தினமும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றும் கூறினார்கள் அந்த பெண்கள்.

புரோக்கர் பிரேமலதா

மில் நிர்வாகத்திற்கு புரோக்கராக பிரேமலதா என்ற பெண் உள்ளார். இந்த பிரேமலதாதான் மைனர் பெண்களை பொய் சொல்லி ஏமாற்றி கூட்டிவந்து மில்லில் வேலைக்கு சேர்த்து விடுகிறார் என்றும், இதற்காக மில் நிர்வாகத்திடம் மிக அதிக அளவு பணம் பெற்றுக்கொள்கிறார் என்றும், வேலையில் தொடர விருப்பம் இல்லாத பெண்களின் வீடுகளுக்கு சென்று காவல்துறையில் பொய்யாக புகார் கொடுத்து உங்களை கம்பி என்ன வைத்துவிடுவேன் என மிரட்டி மீண்டும் மில்லில் வேலைக்கு கூட்டி வந்து விடுகிறார் என்றும் கூறினார். இப்படிப்பட்ட எண்ணற்ற கொடுமைகளை கூறி தோழர்களிடம் கண்ணீர்விட்டு அழுதுள்ளனர் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள்.

ம.உ.பா.மை தோழர்கள் மனு ஒன்றை தயார் செய்து 6 பெண்களையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கூட்டி சென்றனர். RDO விசாரணை நடை பெற்று பின்னர் FACTORY INSPECTOR ஐ வைத்து விடுதியில் ஆய்வு செய்வதாகவும். புகார் தொடர்பாக ஆய்வு செய்வதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

ஆனால் இந்த வெற்று வாக்குறுதி தங்களுக்கு வேண்டாம் என்றும். 18 வயதுக்கு குறைவான பெண்களை சட்டவிரோதமாக அடைத்து வைத்து கொத்தடிமையாக வேலை வாங்கிய மில் நிர்வாகத்தின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சுமங்கலி திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும்  மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் கோரிக்கை வைத்தனர்.

மேற்கண்ட கோரிக்கையை வலியுறித்தி அப்பகுதிவாழ் மக்களை திரட்டி மனித உரிமை பாதுகாப்பு மையம் அடுத்த கட்ட போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகிறது.

____________________________________________________
– மனித உரிமை பாதுகாப்பு மையம் , கோவை.
_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம்: அரசுக்கு எதிராகப் போர் தொடுத்த தீவிரவாதிகளில் 30 சிறுவர்கள், 42 பெண்கள்!

43

கூடங்குளம் குழந்தைகள் பெண்கள்

கூடங்குளம் போராட்டத்தின் இரண்டாவது சுற்று ஆட்டம் தொடங்கிவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதியன்று கூட்டப்புளியில் கைது செய்யப்பட்ட 178 பேரை திருச்சி சிறையிலும், கூடங்குளத்தில் கைது செய்தவர்களை கடலூர் சிறையிலும் வைத்திருக்கும் செய்தியை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

கூட்டப்புளி மக்கள் 178 பேரில் 106 பேர் ஆண்கள், 42 பெண்கள், 30 சிறுவர்கள். அவர்கள் மீது இ.பி.கோ 143, 188, 353, 294-B, 506(2), 7 1(A) ஆகிய குற்றப் பிரிவுகளின் கீழ் பொய் வழக்கு பதிவு செய்திருந்தது போலீசு. ஆபாசமாக திட்டுவது முதல் வன்முறையில் ஈடுபடும் முயற்சி வரை பல குற்றப் பிரிவுகள் இதில் அடக்கம்.

இவர்களைப் பிணையில் விடக்கோரி உடனே மனு தாக்கல் செய்தார்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள். பிணை மனு இன்றைக்கு வள்ளியூர் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர் தோழர் ராஜுவும் அவருடன் பத்துக்கும் மேற்பட்ட வழக்குரைஞர்களும் கூட்டப்புளி மக்கள் சார்பில் ஆஜராகினர்.

விசாரணை தொடங்கியவுடனே தனது வக்கிரமான அழுகுணி ஆட்டத்தை போலீசு தொடங்கியது. சிறை வைக்கப்பட்டிருக்கும் 178 பேரும், “அரசுக்கு எதிராகப் போர் தொடுப்பது (பிரிவு 121), அவ்வாறு போர் தொடுக்க சதி செய்வது (பிரிவு 121-A), போர் தொடுக்கும் நோக்கத்துடன் இரகசியமாக மறைந்திருப்பது (பிரிவு -123)” ஆகிய குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாகவும், அவை குறித்து தீவிரமாகப் புலன் விசாரணை செய்யவேண்டியிருப்பதால், இவர்களைப் பிணையில் விடக்கூடாது என்றும் தீவிரமாக ஆட்சேபித்தது போலீசு தரப்பு.

இபிகோ 121 க்கான அதிகபட்ச தண்டனைதூக்கு.                     
இபிகோ
121A, 123 க்கு அதிகபட்சம் ஆயுள் தண்டனை.

சிறையில் இருப்பவர்கள் யார்? சாதாரணமான எளிய மீனவ மக்கள். மீனவப் பெண்கள். சிறையில் வைக்கும் அளவுக்கு வயதில்லை என்பதால் திருச்சி சீர்திருத்தப் பள்ளியில் வைக்கப்பட்டிருக்கும் 30 பள்ளிச் சிறுவர்கள்.

இவர்கள் உண்மயிலேயே செய்த குற்றம் என்ன? கூடங்குளத்தில் போராட்டக்குழுவைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டதற்கு இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் ஊரில் உடனே சாலை மறியல் போராட்டம் செய்தார்கள். அவ்வளவுதான்.

அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டை கேலி செய்த தோழர் ராஜு,  “போலீசு அதிகாரிதான் குற்றம் சாட்டுபவர், இந்த வழக்கில் சாட்சியமும் அவர்தான். எனவே கூட்டப்புளி மக்களை மட்டுமல்ல, நீதிமன்றத்தில் உள்ள எல்லா வழக்குரைஞர்களையும் அரசுக்கு எதிராகப் போர் தொடுத்ததாக அவர் கைது செய்ய முடியும்” என்று கூறி எள்ளி நகையாடினார். “இபிகோ 302 இல் கொலை வழக்கு போடுவதென்றால் பிணம் ஒன்றைக் காட்ட வேண்டும். பிணமே இல்லாமல் கொலை கேசு போடமுடியாது. அரசுக்கு எதிராகப் போர் தொடுத்ததாக அன்றைக்கு சொல்லாத போலீசு இன்றைக்கு இவ்வாறு கூறுகிறதே, இடைப்பட்ட இந்த நாட்களில் இக்குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான சாட்சியம் எதையாவது, போலீசு நீதிமன்றத்திற்கு தந்திருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்.

வாதங்கள் எதற்கும் அரசு தரப்பு பதிலளிக்கவில்லை. வள்ளியூர் நீதிமன்ற வளாகம் முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு போலீசு குவிக்கப்பட்டிருந்தது – அது மட்டும்தான் அரசு தரப்பின் வாதம். மக்களுக்கு மட்டுமல்ல, நீதித்துறைக்கும் சேர்த்து அரசு விடுத்த எச்சரிக்கைதான் அந்த போலீசு குவிப்பு.

நமது தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிபதி, அரசு தரப்பு வாதத்தைப் பார்த்தார். பிறகு பிணை மனுவைத் தள்ளுபடி செய்தார்.

இனி நெல்லை அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றம். அதன் பின்னர் சென்னை உயர்நீதிமன்றம்… மனு, நோட்டீசு, வாய்தா.. . ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி ஜாமீன் வாங்கி விட்டால், சிறையை விட்டு வெளியே வர முடியாமல் அடுத்தது புதிதாக ஒரு வழக்கு வரும்.

இது நாள் வரை கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டி, ஜெயலலிதா ஏமாற்றிக் கொண்டிருக்க, போராடும் மக்கள் மீது சரம் சரமாகப் பல பொய் வழக்குகளை போலீசு பதிவு செய்து வைத்திருந்தது. அம்மாவின் அரசியல் சதுரங்க ஆட்டத்துக்கு “கூடங்குளம் போராட்டம்” என்ற காய் தேவைப்பட்ட நாள் வரையில் யாரும் கைது செய்யப்படவில்லை. இப்போது காய்கள் வெட்டுக் கொடுக்கப்படுகின்றன.

“யாரையும் நாங்கள் ஊருக்குள் புகுந்து கைது செய்யப்போவதில்லை” என்று அன்பும் கருணையும் ஒழுகப் பேசியிருக்கிறார் ஏடிஜிபி ஜார்ஜ். ஆனால் அவர்கள் போட்டிருக்கும் எப்.ஐ.ஆர்களில் அந்தக் கருணை இல்லை. வஞ்சகம்தான் இருக்கிறது.

போலீசு பதிவு செய்து வைத்திருக்கும் டஜன் கணக்கிலான முதல் தகவல் அறிக்கைகள் அனைத்திலும், முதலில் உதயகுமார், சிவசுப்பிரமணியம் என்று சில முன்னணியாளர்களின் பெயர் இருக்கிறது. அதன் பின்னர் மேற்படி நபர்களுடன் கண்டால் அடையாளம் சொல்லத்தக்க இரண்டாயிரம் பேரும் சேர்ந்து என்ற மங்கல வாக்கியம் எல்லா எப்.ஐ.ஆர்களிலும் இடம் பெற்றிருக்கிறது. அந்த இரண்டாயிரம் பேர் யார், யார் என்பதை போலீசு இன்றைய தனது தேவைக்கு ஏற்றபடி எழுதிக் கொள்ளும்.

ஆபாச வசவுக்காக கைது செய்யப்பட்ட 178 பேர் மீது தேசத்துரோக வழக்கு போட்டாகிவிட்டது. திருச்சி சிறையிலிருக்கும் அந்த 178 பேருக்குள்ளேயே 25 பேர் மீது மட்டும் தனியாக வேறு வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன.

இவையெல்லாம் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு அரசு விடுக்கும் எச்சரிக்கை. “உங்களில் ஒருத்தியாக இருப்பேன்” என்று இச்சகம் பேசி கழுத்தறுத்த அன்புச் சகோதரி, “அந்த 2000 பேரில் ஒருத்தியாக உன் பெயரையும் சேர்த்துக் கொள்ளட்டுமா?” என்று இப்போது மீனவப் பெண்களை மிரட்டுகிறார்.

“எங்களையும் சேர்த்துக்கொள்” என்று பல்லாயிரம் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஒலிக்கச் செய்வோம்.

________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தங்கம் தின்று, கடலைக் குடித்து, அடிமைகளின் உழைப்பில்….துபாய்!

24

துபாய்வளால் பேசமுடியவில்லை. தன் கதையைச் சொல்வதற்கு வாய் திறக்கும் போதெல்லாம் அவள் அழுகிறாள். வாழ்ந்து கெட்டவர்களுக்கே உரிய மங்கிப்போன பொலிவு கரேனின் முகத்தில் தெரிகிறது. துபாயின் மிகச்சிறந்த சர்வதேச நட்சத்திர விடுதி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் அவளைப் பார்த்தேன். அங்கிருக்கும் ஒரு கார்தான் பல மாதங்களாக அவளுடைய வீடு. இது சட்டவிரோதம்தான் என்றாலும் அங்கு வேலை செய்யும் வங்கதேசத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு அவளை விரட்டுவதற்கு மனம் வரவில்லை.  தன்னுடைய துபாய் கனவு இங்கே வந்து முடியும் என்று அவளும் நினைத்துப் பார்க்கவில்லை.

கரேன் கனடாவிலிருந்து இங்கு வந்தாள். ஒரு பிரபல பன்னாட்டு நிறுவனத்தின் துபாய் கிளையில் தனக்கு உயர் பதவி கிடைத்திருப்பதாக அவள் கணவன் டானியேல் சொன்னபோது, “அங்கே வந்து பர்தாவெல்லாம் போட முடியாது. மது அருந்தாமல் இருக்கவும் முடியாது” என்று கூறி முதலில் மறுத்தாள் கரேன். பிறகு கணவன் மீது கொண்ட காதலால் வந்து விட்டாள்.

“இது வயது வந்தவர்களுக்கான டிஸ்னிலாந்து. துபாயின் அதிபர் ஷேக் முகமதுதான் இந்த டிஸ்னிலாந்தின் தந்திரக்கார எலி” என்கிறாள் கரேன். “வாழ்க்கை அற்புதமாக இருந்தது. பிரம்மாண்டமான அபார்ட்மென்டுகள், கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரர்கள், வரியே கிடையாது, 24 மணி நேரமும் விருந்து கொண்டாட்டம்தான். நாங்கள் துபாயைப் பருகி அதன் போதையில் திளைத்தோம்”

“டானியேல் இரண்டு சொத்துகள் வாங்கினான். நாங்கள் கொஞ்சம் கடனாளி ஆனோம். பண விவகாரங்களில் கறாராக இருப்பவனான டானியேலா கடன் வாங்குகிறான் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் ஒரு ஆண்டுக்குப் பின்னர்தான் தெரிந்தது. டானியேலுக்கு மூளையில் கட்டி. ஒரு ஆண்டுதான் உயிர் வாழ முடியும் என்றார் ஒரு டாக்டர்.  இன்னொருவர் எந்தப் பிரச்சினையும் இல்லை, சரியாகிவிடும் என்றார். கடன் வளர்ந்து கொண்டிருந்தது.”

“எனக்கு துபாயின் சட்டங்கள் பற்றி தெரியாது. இந்த ஊரில் கடனை அடைக்க முடியாவிட்டால் சிறைத்தண்டனையாம். இங்கிருந்து உடனே கிளம்பி விடுவோம் என்று நான் டானியேலிடம் கூறினேன். வேலையை ராஜினாமா செய்தால் கிடைக்கக் கூடிய செட்டில்மென்ட் பணத்தை வைத்து கடனை அடைப்பது, உடனே துபாயிலிருந்து கிளம்புவது என்று முடிவெடுத்தோம்.  ஒப்பந்தப்படி தரவேண்டிய தொகையைக் கொடுக்காமல் குறைத்துக் கொடுத்தது நிர்வாகம். கடனை அடைக்க முடியவில்லை. துபாயில் ஒரு ஊழியர் வேலையை ராஜினாமா செய்தால், கம்பெனி நிர்வாகம்அந்த தகவலை உடனே ஊழியரின் வங்கிக்கு தெரிவித்து விடும். கடன் நிலுவை இருந்தால் உங்கள் கணக்கை வங்கி முடக்கி விடும். நீங்கள் நாட்டை விட்டு வெளியே போக முடியாது” அப்புறம் நடந்தது என்ன என்று கரேனால் சொல்ல முடியவில்லை. அவளது உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.

அவர்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். டானியேல் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டான். ஆறு நாட்களுக்குப் பின்னர்தான் சிறையில் கரேன் அவனைப் பார்த்திருக்கிறாள். கடனுக்காக கைது செய்யப்பட்ட 27 வயது இலங்கைக்காரனுடன் டானியேல் சிறையில் அடைக்கப் பட்டிருந்தானாம். தன் குடும்பத்துக்கு நேரக்கூடிய அவமானத்தை எண்ணி வருந்திய அந்த இளைஞன் இரவில் பிளேடுகளை விழுங்கிவிட்டான். துடித்துக் கொண்டிருந்த அவனைக் காப்பாற்ற டானியேல் சிறைக்கதவை இடித்துக் கத்திக் கதறியும் யாரும் திரும்பிக்கூட பார்க்கவில்லை. டானியேலின் கண் எதிரிலேயே அந்த இளைஞன் துடித்து அடங்கியிருக்கிறான்.

கரேன் நண்பர்களின் தயவில் கொஞ்ச நாட்களை ஓட்டியிருக்கிறாள். “பிச்சை கேட்டு வாழ்வது அவமானமாக இருந்தது. நான் கனடாவில் சொந்தமாக கடைகள் வைத்திருந்தேன். இப்படி நான் வாழ்ந்ததில்லை” என்று உடைந்து அழுதாள் கரேன். டானியேலுக்கு 6 மாதம் சிறைத்தண்டனை. நீதிமன்ற விசாரணை எல்லாம் அரபி மொழியில்தான். ஒன்றும் புரியவில்லை. “என்னிடம் பணம் இல்லை. எதுவும் இல்லை. நான் இப்போது துபாயில் இருப்பதே சட்டவிரோதமாகத்தான். டானியேல் வெளியில் வரும்வரை காலம் தள்ளவேண்டும். எப்படியாவது” என் முகத்தைப் பார்க்கக் கூசி எங்கேயோ வெறித்தபடி, “ஒரு சாப்பாடு வாங்கித் தருவீர்களா?” என்று கேட்கிறாள் கரேன்.

துபாய் எங்கும் அவளைப் போல ஏகப்பட்ட வெளிநாட்டவர்கள். விமான நிலையங்களிலும், கார்களிலும் இரவு நேரத்தைக் கழிக்கின்றனர். இவர்கள் எல்லாம் சட்டவிரோதமாக இங்கே இருக்கிறார்கள்.

“துபாயைப் பற்றி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இது ஒரு நகரமே அல்ல. செப்பிடு வித்தை. இதனை நவீன உலகமாக காட்டிக் கவர்ந்திழுக்கிறார்கள். அது வெறும் மேல் பூச்சு.  அடியில் இருப்பது மத்தியகாலக் கொடுங்கோன்மை” என்கிறாள் கரேன்.

 •• ••

துபாய்
பாலைவனத்தில் திறந்தவெளி சொர்க்கம் - கண்ணுக்குத் தெரியாத நரகம்

முப்பது ஆண்டுகளுக்கு முன் இன்றைய துபாய் கள்ளிச்செடிகளும் தேள்களும் மட்டுமே நிறைந்திருந்த ஒரு பாலைவனம். பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் முத்துக் குளிப்பதற்காக பாரசீகம், இந்தியா மற்றும் அரேபிய நாடுகளிலிருந்து பலர் இங்கே குடியேறினார்கள். தன் கண் முன் உள்ள அனைத்தையும் தின்றுவிடும் தபா என்றொரு ஒருவகை வெட்டுக்கிளியின் பெயரை இந்த ஊருக்கு அவர்கள் வைத்தார்கள். தபா, துபாய் ஆனது. 1971 இல்தான் பிரிட்டிஷ்காரர்கள் துபாயிலிருந்து வெளியேறினார்கள். அபுதாபியை ஒப்பிடும்போது துபாயில் எண்ணெய் வளம் மிகக் குறைவு. எனவே, துபாயின் ஷேக்கான மக்தூம், இந்த ஊரை வரி என்பதே இல்லாத நாடாக, சர்வதேச நிதிச்சூதாட்டம் மற்றும் சுற்றுலா  மையமாக மாற்றுவதென முடிவு செய்தார். உலகெங்கிலுமிருந்து கொட்டியது பணம். மக்கள் தொகையில் 95% வெளிநாட்டுக்காரர்கள். வானத்திலிருந்து திடீரென்று ஒரு நகரம் இந்தப் பாலைவனத்தின் மீது விழுந்ததைப் போல, முப்பதே ஆண்டுகளில் உருவாகிவிட்டது துபாய். ஒரே ஒரு தலைமுறைக்காலத்தில் அந்த மண்ணின் மைந்தர்கள் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து 21 ஆம் நூற்றாண்டுக்குள் தூக்கி வீசப்பட்டார்கள்.

துபாயை பேருந்தில் சுற்றிப்பார்க்க நீங்கள் கிளம்பினால், அதிலிருக்கும் சுற்றுலா  வழிகாட்டி, மிகவும் நேர்த்தியாகக் கத்தரிக்கப்பட்ட குரலில் சொல்வார், “துபாயின் கொள்கை திறந்த கதவுகள், திறந்த மனம். இங்கே உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு-விரும்பிய துணிகளை வாங்கலாம்”. பிரம்மாண்டமான கட்டிடங்களை ஒவ்வொன்றாக நீங்கள் கடக்கும்போது, “இது உலக வர்த்தக மையக் கட்டிடம். இதையும் மாட்சிமை தங்கிய மன்னர்தான் கட்டினார்” என்கிறார் வழிகாட்டி. அது பொய். துபாயைக் கட்டியவர்கள் அடிமைகள்.  அவர்கள் இன்னும் இன்னும் அதைக் கட்டியபடியே இருக்கிறார்கள்.

ஒரு துபாய்க்குள் மூன்று வெவ்வேறு துபாய்கள் ஒன்றையொன்று சுற்றிக் கொண்டிருக்கின்றன. கரேனைப் போன்ற வெளிநாட்டவர்கள், ஷேக் முகமதுவின் குடிமக்களான எமிரேட்டின் மைந்தர்கள், அப்புறம் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் உழைக்கும் வர்க்கத்தினர். இந்த நகரத்தைக் கட்டி எழுப்பிவிட்டு அதிலிருந்து வெளியேற வழிதெரியாமல் தவிப்பவர்கள்.

அன்றாடம் மாலைநேரத்தில், பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை துபாய் நகரத்திலிருந்து அள்ளிச்சென்று, நகரத்துக்கு வெளியில் இருக்கும் கண் மறைவான ஒரு கான்கிரீட் பொட்டலில் கொட்டுகின்றன பேருந்துகள். சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர்கள் ஒட்டக வண்டியில்தான் கொண்டு செல்லப்பட்டார்கள். அந்தக் காட்சி கண்ணுக்கு உறுத்தலாக இருப்பதாக மேற்கத்திய கனவான்கள் சிலர் தெரிவித்ததால், பேருந்துகள் என்று அழைக்கப்படும் தகரக் கூண்டுகள் இப்பாலைவனத்தில் தொழிலாளிகளை அவித்துச் செல்கின்றன.

மைல் கணக்கில் கற்குவியல்களைப் போலச் சிதறிக் கிடக்கும் ஒரே மாதிரியான இந்தக் கான்கிரீட் கட்டிடங்களில் 3 இலட்சம் மனிதர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதன் பெயர் சோனாப்பூர். அதாவது தங்க நகரம். உள்ளே கால் வைத்தவுடன் கழிவுநீரும் வியர்வையும் நாசியைப் பிளக்கின்றன. தங்கள் துயரத்தை யாரிடமாவது சொல்லத் துடிக்கும் ஒரு கூட்டம் உங்களை மொய்த்துக் கொள்கிறது.

சாஹினால் மொனிர் வங்கதேசத்தின் கங்கைச் சமவெளியிலிருந்து இங்கு வந்திருக்கும் 24 வயது இளைஞன். “உங்களை இங்கே கொண்டு வந்து தள்ளுவதற்காக துபாய் ஒரு சொர்க்கம் என்பார்கள். வந்து இறங்கிய பிறகுதான் புரியும். இது நரகம். “மாதம் 40,000 டாகா (வங்கதேச நாணயம்)சம்பளம்; 9 முதல் 5 வரை வேலை. நல்ல சாப்பாடு, தங்குமிடம். விசா எடுப்பதற்கு 2,20,000 டாகா செலவழித்தால் போதும். ஆறு மாத சம்பளத்தில் அந்தக் கடனை அடைத்து விடலாம்” என்றார்கள். இந்த சொர்க்கத்துக்கு வருவதற்காக பரம்பரை நிலத்தை விற்று, கந்து வட்டிக்கு கடனும் வாங்கினான் சாஹினால்.

துபாயில் வந்து இறங்கியதுமே பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொண்டார்கள் கம்பெனிக்காரர்கள். ஐந்து நிமிடம் கூட வெயிலில் நிற்காதீர்களென்று மேல்நாட்டு சுற்றுலா பயணிகள் அக்கறையுடன் அறிவுருத்தப்படும் அந்த 55 டிகிரி வெயிலில், “14 மணிநேரம் கட்டிட வேலை. 9000 டாகா சம்பளம். பிடிக்கவில்லையா, இப்படியே திரும்பிப் போய்விடலாம்” என்று கறார் குரலில் சொன்னார்கள். “பாஸ்போர்ட் உங்களிடம் இருக்கிறது. என்னிடம் பணமும் இல்லை. நான் எப்படிப் போகமுடியும்?”

“நல்லது. அப்படியானால் வேலைக்கு கிளம்பு”

சாஹினால் பீதியடைந்தான். அவன் மனைவி, பிள்ளைகள், பெற்றோர் அனைவரும் பையன் துபாய் போன சந்தோசத்தில் இருப்பார்கள். பணத்தை எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால் அவன் வாங்கிய கடனை அடைப்பதற்கே 2 வருசம் வேலை செய்யவேண்டும். சம்பளமோ ஊரில் அவன் சம்பாதித்ததை விடக் குறைவு.

அவன் தன்னுடைய அறையைக் காட்டினான். அது ஒரு கான்கிரீட் பொந்து. உள்ளே ஒன்றின் மேல் ஒன்றாக மூன்றடுக்கு படுக்கைகள். 11 பேர் அந்த அறையில். அறை நாறுகிறது. அந்தக் குடியிருப்பின் கழிவறைப் பொந்துகள் நிரம்பி ஈக்கள் மொய்க்கின்றன. அறையில் மின்விசிறி கூட இல்லை. “தூங்க முடியாது. இரவு முழுவதும் புழுக்கம். சூடு தாங்க முடியாவிட்டால் தரையில் படுப்போம், கூரை மேல் படுப்போம், எங்கு வேண்டுமானாலும் படுப்போம், கொஞ்சம் காற்றுக்காக.

கடல்நீரிலிருந்து தயாரிக்கப்படும் குடிநீர் வெள்ளை கேன்களில் வரும். சரியாக சுத்திகரிக்கப்படாத அந்த உப்புத் தண்ணீர்தான் குடிப்பதற்கு. தேடினாலும் வேறு தண்ணீர் கிடையாது.

துபாய்
55 டிகிரி வெப்பத்தில் வேலை; குடியிருப்பது பாலைவனப் பொந்தில்; தொழிலாளியா-அடிமையா?

வேலை? “கொடும் வெயிலில் 50 கிலோ செங்கல் அல்லது சிமென்டை சுமக்க வேண்டும்.  அந்த சூடு இருக்கிறதே, நாள் கணக்கில் அல்ல, வாரக்கணக்கில் சிறுநீரே வராது. உடம்பில் உள்ள தண்ணீர் எல்லாம் வியர்த்து வெளியேறி உடம்பு நாறும்.தலை சுற்றும். மேலேயிருந்து விழுந்தால் செத்து விடுவோம் என்று தெரியும். ஆனால் நிறுத்த முடியாது. நிறுத்தினால் சம்பள வெட்டு. இன்னும் அதிக காலம் இங்கே உழல வேண்டிவரும்.”

பளபளக்கும் ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 67 வது மாடியில் சாஹினால் இப்போது வேலை செய்து கொண்டிருக்கிறான். அடுத்த மாடி, அடுத்த மாடி என்று, வானத்திற்குள், வெம்மைக்குள் அவன் கட்டிக் கொண்டே போவான். அந்தக் கட்டிடத்தின் பெயர் அவனுக்குத் தெரியாது. சாஹினால் வந்து நான்காண்டுகள் ஆகிவிட்டன. இன்று வரை அவன் சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கமான அந்த பளபளக்கும் துபாயைப் பார்த்ததில்லை. இருப்பினும் அதன் ஒவ்வொரு தளத்தையும் அவன்தான் கட்டியெழுப்புகிறான்.

அவனுக்கு கோபம் வரவில்லையா? “இங்கே யாரும் கோபத்தைக் காட்டுவதில்லை; முடியாது. போன வருடம், சில தொழிலாளர்கள் தங்களுக்கு 4 மாதமாக சம்பளம் தரவில்லை என்று வேலைநிறுத்தம் செய்தார்கள். அவர்களுடைய குடியிருப்பை சுற்றி முள்கம்பி வேலி போட்டு, போலீசு வளைத்துக் கொண்டது. தண்ணீர் பீரங்கியால் தாக்கி வேலைக்குத் துரத்தினார்கள். தலைமை தாங்கியவர்களுக்கு சிறைத் தண்டனை.

“ஏன் வந்தோம் என்று வருத்தப்படுகிறாயா சோஹினால்?”  எல்லோரும் தலை குனிந்தார்கள். “அதையெல்லாம் நினைக்க முடியுமா? வருத்தப்பட ஆரம்பித்தால்..” அந்த வாக்கியம் மவுனத்தில் முடிகிறது. இன்னொரு தொழிலாளி அந்த மவுனத்தைக் கலைக்கிறான். “என்னுடைய மண்ணை, குடும்பத்தை இழந்து விட்டேன். ஊரில் விவசாயம் செய்வோம். இங்கே எதுவும் முளைக்காது. எண்ணையும் கட்டிடங்களும் மட்டும்தான்.

பொருளாதார மந்தம் பரவத் தொடங்கியதும் அவர்களுடைய குடியிருப்புகளுக்கு மின்சாரத்தை நிறுத்தி விட்டார்கள். பல கம்பெனிகள் அவர்களுடைய பாஸ்போர்ட்டையும் சம்பளத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டார்கள். “இருந்தாலும் வங்கதேசத்துக்குத் திரும்பிப் போக முடியாது. அங்கே கந்துவட்டிக் காரன் காத்திருப்பான்.”

சம்பளம் கொடுக்காதது, பாஸ்போர்ட்டை பிடுங்கிக் கொள்வது எல்லாம் சட்டவிரோதம்தான். ஆனால் துபாய் அரசின் ஒத்துழைப்போடுதான் எல்லாம் நடக்கிறது. சாஹினால் இங்கேயே செத்துப் போகலாம். தொழிலாளர் குடியிருப்புகளிலும், கட்டுமானப் பணி நடக்கும் இடங்களிலும் ஏராளமான தற்கொலைகள் நடப்பதாகவும், ஆனால் அவை விபத்துகள் என்று சித்தரிக்கப்படுவதாகவும், கட்டுமானக் கம்பெனியில் வேலை பார்க்கும் பிரிட்டிஷ்காரர் ஒருவர் என்னிடம் கூறினார். வெப்பத்தினாலும், மிதமிஞ்சிய உழைப்பினாலும், தற்கொலைகளாலும் இறப்பவர்களின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுவதை ஒரு மனித உரிமை அமைப்பு அம்பலமாக்கியது. 2005 ஆம் ஆண்டில் மட்டும் 971 இந்தியர்கள் துபாயில் இறந்துபோனதாக, இந்திய தூதரகமே கணக்கிட்டிருந்தது வெளியில் தெரிந்துவிட்டது. உடனே, ‘சாவுக்கணக்கு வைக்க வேண்டாம்’ என்று தூதரகங்கள் அறிவுருத்தப்பட்டுவிட்டன.

இரவு நான் சோஹினாலுடன் உட்கார்ந்திருக்கிறேன். எல்லோரும் சேர்ந்து கையில் உள்ள காசை சேர்த்து மலிவான ஒரு சாராயத்தை வாங்கி வந்து ஒரே மடக்கில் வெறி பிடித்தாற்போல விழுங்குகிறார்கள். மரத்துப் போக இதுதான் வழி என்கிறான் சோஹினால். தொலைதூர அடிவானில் அவன் கட்டியெழுப்பிய துபாய் மறந்தாற்போல் நின்று மின்னிக் கொண்டிருக்கிறது.

 •• ••

துபாய்
அமெரிக்க முதலாளிகளுடன் துபாயை ஆளும் ஷேக்குகள்! அடிமைகளை அழித்து எழுந்த அரசன் !!

சோஹினாலிடமிருந்து விடை பெற்று பத்து நிமிட கார் பயணத்தில் துபாயின் பிரம்மாண்டமான பளிங்கு மாளிகை ஒன்றில் நுழைந்து விட்டேன். அங்கிருந்து இங்கே – பிரமிப்பாகவும் தடுமாற்றமாகவும் இருக்கிறது. இங்கே தெருவுக்கு தெரு ஒரு மால். நுகர்வியத்தின் தேவாலயங்கள் பொழிகின்ற இந்தக் குளிரூட்டப்பட்ட  அருளில் வாடிக்கையாளர்கள் நனைகிறார்கள். சலிப்படைந்த ஒரு விற்பனைப் பெண் ஒன்றரை இலட்சம் ரூபாய் விலையுள்ள ஒரு ஆடையைக் காண்பித்து அதன் அருமை பெருமைகளை அலுப்பான குரலில் எனக்கு ஒப்பிக்கிறாள். இந்த அங்காடிகளில் காலம் நகர மறுக்கிறது. அதன் மின்விளக்குளின் ஒளியில், தரைகளின் பளபளப்பில் நாட்கள் அடையாளமிழந்து மங்குகின்றன.

குட்டைக் காற்சட்டை அணிந்த ஒரு 17 வயது டச்சுப் பெண்,  தன்னை மொய்க்கும் கண்களைக் கண்டு கொள்ளாமல் அங்கே திரிந்து கொண்டிருந்தாள். “இந்த சூடு, இந்த மால்கள், இந்த கடற்கரை! ஓ, நான் துபாயை காதலிக்கிறேன்!” என்றாள் அவள். “இது ஒரு அடிமைச் சமுதாயம் என்பது பற்றி உனக்கு அக்கறையில்லையா?” என்றேன்.

சோஹினாலைப் போல, இவளும் தலை குனிந்தாள். “அதையெல்லாம் பார்க்காமலிருக்க முயற்சிக்கிறேன்” என்றாள். எதார்த்தத்தை பார்க்காமலும் கேள்வி கேட்காமலும் இருப்பதற்கு இந்தப் பெண் 17 வயதிலேயே கற்றுக் கொண்டுவிட்டாள்.  அதெல்லாம் ரொம்பவும் வரம்பு மீறிய செயல்கள் என்று அவளுக்குப் புரிந்திருக்கிறது போலும்.

வெளிநாட்டவரையும் அடிமை வர்க்கத்தினரையும் அணுகுவது போல, எமிரேட்டின் குடிமக்களை அணுகி கேள்வி கேட்க முடியவில்லை. “உங்கள் நாடே வெளிநாட்டவர்களால் நிரம்பி வழிவது பற்றி எப்படி உணர்கிறீர்கள்?” கேட்டால் பெண்கள் வெறிக்கிறார்கள். ஆண்கள் அவமதிக்கப்பட்டது போல ஒரு பார்வை பார்க்கிறார்கள். எனவே வலைத்தளங்களைப் படித்துப் பார்த்து துபாயின் ஒரு இளைஞனைத் தெரிவு செய்து சந்தித்தேன். வேறெங்கே ஒரு மாலில்தான்.

அகமது அல் அதார். 23 வயது இளைஞன். நேர்த்தியாக கத்தரிக்கப்பட்ட தாடி, கச்சிதமான வெள்ளை அங்கி, விலை உயர்ந்த கண்ணாடி. லண்டன், லாஸ் எஞ்சல்ஸ், பாரிஸைப் பற்றி  மேலை நாட்டவரைக் காட்டிலும் தனக்கு நன்றாகத் தெரியும் என்பதை சுத்தமானஅமெரிக்க ஆங்கிலத்தில் வெளிப்படுத்தினார். “இளைஞனாக இருப்பதற்கு உலகிலேயே சிறந்த இடம் இதுதான். பி.எச்டி வரையில் படிப்பதென்றாலும் அரசாங்கம் பணம் கொடுக்கிறது. திருமணமானால் இலவச வீடு. இலவச மருத்துவம் – இங்கே வேண்டாமென்றால் வெளிநாட்டு மருத்துவமனையில். தொலைபேசி இலவசம். அநேகமாக எல்லோருக்கும் ஒரு வேலைக்காரி, ஒரு தாதி, ஒரு ஓட்டுனர். வரி என்பதே கிடையாது. துபாயில் பிறந்திருக்கக்கூடாதா என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?”

இந்த துதிபாடல் மீது கேள்வி எழுப்ப நான் முயன்றவுடனே அவன் சொன்னான்,    “இதோ பாருங்கள். என்னுடைய தாத்தா அன்றாடம் காலையில் கண்விழித்தவுடன் கிணற்றுக்கு ஓடுவார். தண்ணீருக்காக அவர் சண்டை போடவேண்டும். கிணறுகள் வற்றி விட்டால் ஒட்டகத்தின் மூலம்தான் தண்ணீர் கொண்டுவர வேண்டும். நிரந்தரமாக பசி, தாகம், வேலையின்மை. என் தாத்தாவுக்கு கால் எலும்பு உடைந்தது. மருத்துவம் கிடையாது. ஆயுள் முழுதும் நொண்டிக்கொண்டிருந்தார். இப்போது எங்களைப் பாருங்கள்!”

அவர்களைப் பொருத்தவரை அரசாங்கம் ஒரு கிறிஸ்துமஸ் தாத்தா. அது எப்படியோ பணம் பண்ணுகிறது. ஆனால் இவர்களுக்கு வாரிக்கொடுக்கிறது. ஆனால் எல்லா இளைஞர்களும் அகமதுவைப் போலத்தான் சிந்திக்கிறார்களா? பத்திரிகையாளரும் சீர்திருத்தவாதி என்று அறியப்படுபவருமான 31 வயது சுல்தான் அல் குசேமியை சந்தித்தேன். மேற்கத்திய உடை அணிந்திருந்தார். அதி வேகமாகப் பொரிந்து தள்ளினார்.“மக்கள் சோம்பேறிகளாகிக் கொண்டிருக்கிறார்கள். அம்மா அப்பாவால் பெத்த பிள்ளைகளைக் கூட வளர்க்க முடியாதா என்ன? அரசாங்கம் ரொம்பவும் தான் சீராட்டுகிறது” என்று சீறினார்.

துபாய்
அடிமைகள் உழைப்பில் அதிசயங்கள் - துபாயின் செயற்கை தீவுகள்

ஆனால் அடிமை உழைப்புதான் துபாயை உருவாக்கியிருக்கிறது என்ற விசயத்தை நான் பேசத்தொடங்கியதுமே அவர் ஆத்திரப்பட்டார். “அவர்கள் எங்களுக்கு நன்றி சொல்லவேண்டும். உலகத்திலேயே மிகவும் சகிப்புத்தன்மை கொண்ட மக்கள் நாங்கள்தான். இங்கே வருபவர்கள் எல்லோரும் மரியாதையாகத்தான் நடத்தப்படுகிறார்கள்” என்றார்.

சோனாப்பூர் என்றொரு இடம் இருப்பதாவது அவருக்குத் தெரியுமா? மெல்லக் கேட்டேன். அவர் ஆத்திரத்தில் வெடித்தார். “நியூயார்க்கில் மெக்சிகோகாரர்கள் மோசமாக நடத்தப்படவில்லையா? மக்களை கவுரவமாக நடத்தவேண்டும் என்று புரிந்து கொள்வதற்கே பிரிட்டனுக்கு எத்தனை காலம் பிடித்தது? நானும் லண்டனுக்கு வந்து ஆக்ஸ்போர்டு வீதியில் இருக்கும் வீடற்றவர்களைப் பற்றி எழுதி, ஒரு மோசமான நகரமாக அதை சித்தரிக்க முடியாதா? பிடிக்கவில்லை என்றால் தொழிலாளிகள் போகலாம். இந்தியனோ, ஆசியனோ.. பிடிக்கவில்லை என்றால் கிளம்பட்டுமே.”

“கிளம்பமுடியாதே. அவர்களுடைய பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்திருக்கிறார்கள். சம்பளமும் கொடுப்பதில்லை” என்றேன். உடனே “அப்படி நடந்திருந்தால் அது தவறுதான். யாராயிருந்தாலும் தண்டிக்கப்படவேண்டும்” என்றார்.

“நீங்கள் ஏன் தொழிலாளிகளின் வேலைநிறுத்த உரிமையைப் பறித்து அவர்கள் மீது வன்முறையை ஏவுகிறீர்கள்?” என்றேன். “கடவுளே, வேலை நிறுத்தத்தை நாங்கள் அனுமதிக்கவே முடியாது. அது பெரிய அசௌகரியம். வேலையை நிறுத்தி விட்டு தெருவுக்கு வருவார்கள். நாங்கள் பிரான்சு மாதிரி ஆவதை அனுமதிக்க முடியாது.” என்றார்.

“அப்படியானால் ஏமாற்றப்பட்ட தொழிலாளிகள் என்னதான் செய்வது?” என்று கேட்டேன். “நாட்டை விட்டுப் போகட்டும்” என்றார். நான் பெருமூச்சு விட்டேன்.   “மேலை நாட்டுக்காரர்களுக்கு எங்களைக் குறை சொல்வதே வேலையாகிருக்கிறது” என்று அலுத்துக் கொண்ட சுல்தான், தன் குரலை கீச்சுக்குரலாக மாற்றிக் கொண்டு, “மிருகங்களை நல்லபடியாக நடத்தமாட்டீர்களா?” “உங்கள் ஷாம்பூ விளம்பரத்தை கொஞ்சம் தரமாக செய்யக்கூடாதா?” “தொழிலாளிகளை கவுரவமாக நடத்தக்கூடாதா?” என்று கிண்டலாகப் பேசிக்காட்டினார்.

விலங்குகள், ஷாம்பூ விளம்பரம் அப்புறம் தொழிலாளிகள்! இந்த வரிசைக் கிரமத்தின் அமைப்பே உண்மையை எடுத்தியம்புகிறது.

“மேற்குலக பத்திரிகையாளர்கள் எங்களை விமரிசிப்பதன் மூலம், தங்கள் பாதங்களையே சுட்டுக் கொள்கிறார்கள்” என்று கூறி புன்னகைத்தார் சுல்தான்.  “துபாய் தோற்றுவிட்டால், மத்திய கிழக்கு மிகவும் அபாயகரமான பகுதியாக மாறும். ஒரு நவீன முஸ்லிம் நாடாக இருப்பது எப்படி என்பதை நாங்கள் காட்டிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தோற்றால் துபாய் இரானின் வழியில் இசுலாமியப் பாதையில் சென்றுவிடும்”என்றார்.

 •• ••

புள் டெக்கர். இது பிரிட்டனிலிருந்து குடியேறியவர்கள் கூடும் ஓட்டல். “துபாயின் வாழ்க்கை முறைக்காகத்தான் இங்கே தங்குகிறோம்” என்று எல்லோரும் கூறுகிறார்கள். “அதென்ன வாழ்க்கை முறை?” என்று கேட்டால் பலருக்கு விளக்கத் தெரியவில்லை. ஆன் வார்க் என்ற பெண்மணி அதை விளக்குகிறார். “ அன்றாடம் இரவு இங்கே கேளிக்கைதான். நம் ஊரில் அப்படி கிடையாது. நிறைய ஓய்வு நேரம் இருக்கிறது. பணிப்பெண்களும் ஆட்களும் இருப்பதால் நமக்கு வேலை இல்லை. எப்போதும் பார்ட்டிதான்”

இருந்தாலும் துபாயில் அவர்களுக்கு ஏமாற்றமும் உண்டு. “இங்கே விபத்து கேசில் சிக்கிவிட்டால் அப்பப்பா பயங்கரம். ஒரு பிரிட்டிஷ் பெண் எவனோ ஒரு இந்தியன்மீது காரை ஏற்றிவிட்டாள். அதற்காக 4 நாள் அவளை லாக் அப்பில் வைத்து விட்டார்கள். இந்த இந்தியர்கள் இருக்கிறார்களே, அவர்கள் வேண்டுமென்றே காரில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். செத்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு பணம் கிடைக்குமே அதற்குத்தான். ஆனால் போலீசு நம்மைத்தான் குற்றம் சொல்லும். பாவம் அந்தப் பெண்!” என்றாள் ஜூலிஸ் டெய்லர்.

“அதெல்லாம் இருக்கட்டும். ஜனநாயகமே இல்லாத ஒரு நாட்டில் வாழ்வது எப்படி இருக்கிறது?” என்று கேட்டேன். சிலர் என்னை விநோதமாகக் கருதிப் பார்த்தார்கள். சிலர் தம்மை அவமானப் படுத்தியதாக கருதினார்கள். “இது அரேபியக் கலாச்சாரம்” என்று கத்தினான் ஒரு இளைஞன்.

பிறகு அழகு சாதனத் துறையில் வேலை செய்யும் ஒரு அமெரிக்கப் பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தேன். “சொந்த ஊரில் விலைபோகாதவன் எல்லாம் இங்கே வந்து சேர்கிறார்கள். தங்கள் தகுதிக்கு மீறிய உயர் பதவி, பணத்தில் திடீரென்று குளிப்பதால், தங்கள் தனித்திறமை பற்றி பினாத்துகிறார்கள். எதற்கும் லாயக்கில்லாத மனிதர்கள் உயர்பதவிகளில் நிறைந்திருப்பதை உலகில் வேறு எங்கும் நான் கண்டதில்லை. இங்கே ஐரோப்பியப் பெண்கள் செய்யும் அதே வேலையை பிலிப்பைன்ஸ் பெண்கள் செய்கிறார்கள் – ஆனால் அவர்களுக்கு கால் பங்கு சம்பளம்தான். பச்சையான நிறவெறி!” என்று அவள் பொரிந்து தள்ளினாள்.

இந்தப் பெண் மட்டும் ஒரு விதிவிலக்கு. மற்றப்படி இங்கே மேல்நாட்டினர் அனைவரும் கருத்தொருமிக்கும் ஒரே விசயம் – பணிப்பெண்கள். நீங்கள் இங்கே ஒருபெண்ணை வேலைக்கு அமர்த்திக் கொண்டுவிட்டால்,  அவள் பாஸ்போர்ட்டை பிடுங்கி வைத்துக் கொண்டுவிடலாம். அதுதான் இங்கே மரபு. பிறகு அவளுக்கு என்ன வேலை, எப்போது ஓய்வு, எப்போது சம்பளம், அவள் யாருடன் பேசலாம், பேசக்கூடாது என்று அனைத்தையும் நீங்கள் முடிவு செய்யலாம்.

துபாய்
பகலிலும் இருண்டு போன அடிமைகளின் வாழக்கை மீது ஒளிமையாமான துபாயின் இரவு வாழ்க்கை

ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு சுற்றுலாப்பயணி சொன்னாள். “மால்களில் நடமாடுவதற்கே பயமாக இருக்கிறது. என்னைப் பார்த்தவுடன் பல பணிப்பெண்கள் ஓடி வருகிறார்கள். ‘காப்பாற்றுங்கள். என்னைக் கைதியாக வைத்திருக்கிறார்கள். வீட்டுக்கு போன் பேச விடுவதில்லை. ஓய்வு நாளே இல்லை’ என்று கதறுகிறார்கள்.  ‘அப்படியா, தூதரகத்துக்கு தெரிவிக்கிறேன். எங்கே வேலை பார்க்கிறீர்கள். அந்த வீட்டின் முகவரியைச் சொல்லுங்கள்’ என்று கேட்டால் அவர்கள் யாருக்கும் முகவரி தெரிவதில்லை. தூதரகமோ இவர்களைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. என்னால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலை!” என்றாள்.

துபாயில் பெண்களுக்காக ஒரேயொரு விடுதிதான் இருக்கிறது. அதில் இருப்பவர்கள் அனைவரும் தப்பித்து வந்த பணிப்பெண்கள். மேலா மாதாரி என்ற எத்தியோப்பியப் பெண் தன் கதையை சொல்கிறாள். இது சொர்க்கம் என்று நம்பித்தான் 4 வயது மகளை ஊரில் விட்டு விட்டு அவள் இங்கே வந்திருக்கிறாள். நான்கு குழந்தைகள் கொண்ட ஒரு ஆஸ்திரேலிய குடும்பத்தில் வேலை. சொன்ன சம்பளத்தில் பாதிதான் கொடுத்தார்கள். அன்றாடம் 19 மணிநேர வேலை. விடுமுறை கேட்டதற்காக வீட்டு எசமானி அடித்திருக்கிறாள். இரண்டு வருட ஒப்பந்தம் முடியும்போதுதான் சம்பளம் தருவேன் என்கிறாள் எசமானி. ஒரு நாள் அடி பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு தப்பித்து வந்து எத்தியோப்பிய தூதரகத்தை தேடி இரண்டு நாட்கள் நடந்திருக்கிறாள். அவர்களோ பாஸ்போர்ட்டை வாங்கிக் கொண்டு வந்தால்தான் உன்னை ஊருக்கு அனுப்ப முடியும் என்கிறார்கள். “நாட்டை இழந்தேன். மகளை இழந்தேன். எல்லாவற்றையும் இழந்து விட்டேன்” என்கிறாள் மேலா.

“துபாயில் உங்களுக்கு ரொம்பவும் பிடித்த விசயம் என்ன?” என்று டபுள் டெக்கர் ஓட்டலில் ஒரு பிரிட்டிஷ் பெண்ணிடம் கேட்டேன். “வேலைக்காரர்கள்” என்று அவள் கூவிய குரல் என் காதிலேயே இருக்கிறது. “நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அவர்களோ உங்களுக்கு எது வேண்டுமானாலும் செய்வார்கள்”

  •• ••

துபாய் முழுவதும் பல கிறுக்குத்தனமான திட்டங்கள் பொருளாதர மந்தத்தின் காரணமாகப் பாதியில் தொங்குகின்றன.  குளிரூட்டப்பட்ட கடற்கரை ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். கடல் மணலுக்கு அடியில் குளிரூட்டும் குழாய்கள். தண்ணீரில் கால் வைப்பதற்கு முன் பணக்காரர்களின் பாதங்கள் பொசுங்கிவிடக்கூடாதல்லவா – அதற்காக.

அட்லான்டிஸ் – செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு  தீவில் 1500 அறைகள் கொண்ட உல்லாச விடுதி. தென் ஆப்பிரிக்கப் பெண் எனக்கு விடுதியை சுற்றிக் காட்டுகிறாள். நெப்டியூன். இது 3 மாடிகள் கொண்ட ஒரு அறை. அறையின் கண்ணாடிச் சுவர்களுக்கு வெளியே கடல்.  கட்டிலில் படுத்தால் கண்ணாடிக்கு அந்தப்புறத்திலிருந்து சுறாமீன்கள் உங்களை வெறிக்கும். இதுதான் உலகின் அதி உயர் ஆடம்பரம். அந்த ஓட்டலின் உணவு மேசையில் நான். என்னைத்தவிர ஒரு நாதியில்லை. பொருளாதார மந்தம். ஓட்டலே காலியாக இருக்கிறது. அட்லான்டிஸ் அழிந்து போன கண்டமல்லவா?

துபாயின் பெருமிதம் என்று கூறப்படும் புர்ஜ் அல ஆரப் விடுதி. லண்டனிலிருந்து வந்திருந்த ஒரு ஜோடியிடம் பேச்சுக்கொடுத்தேன். பத்து ஆண்டுகளாக வருகிறோம். ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு மாற்றம் இருக்கும். வழக்கமாக நாங்கள் தங்கும் அறையின் சன்னலுக்கு வெளியே போன வருடம் கடல் இருந்தது. இந்த வருடம் அந்த இடத்தில் ஒரு தீவையே உருவாக்கி விட்டார்கள்.”

எங்கும் நிறைந்திருக்கும் வேலைக்கார அடிமைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டேன். “அதற்காகத்தானே வருகிறோம். அற்புதம்! உங்களுக்காக உங்களை கையால் எந்த வேலையையும் நீங்கள் செய்ய முடியாது” என்றாள் மனைவி. கணவன் தொடர்ந்தான், “குளியலறைக்குப் போனால் கதவைத் திறந்து விடுகிறார்கள். குழாயையும் திறந்து விடுகிறார்கள். அதற்கப்புறம் உங்கள் முயற்சியில்தான் சிறுநீர் கழிக்கவேண்டும். அதற்கு அவர்கள் உதவ முடியாது”  சொல்லிவிட்டு இருவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

  •• ••

ங்கே நிலத்தடி நீர் கிடையாது. இருப்பது மிகவும் சொற்பம். துபாய் கடலைக் குடிக்கிறது. கடல்நீரை சுத்திகரித்துக் குடிநீராக்கும் நிலையங்கள் வளைகுடாவெங்கும் இருக்கின்றன. உலகிலேயே இதுதான் மிகவும் விலை உயர்ந்த தண்ணீர். பெட்ரோலைச் சுத்திகரித்து எடுப்பதைக் காட்டிலும் தண்ணீரை சுத்திகரிக்கும் செலவு இங்கே அதிகம். பொருளாதார நெருக்கடி முற்ற முற்ற இங்கே தண்ணீரும் வற்றத் தொடங்கும். ஒரு வாரத்துக்குத் தேவையான தண்ணீர் மட்டுமே துபாயின் கையிருப்பு. ஏதாவது காரணத்தால் சுத்திகரிப்பு நின்றாலோ அல்லது எண்ணெய்க்கு மாற்றாக வேறொரு எரிபொருளை உலகம் கண்டுகொண்டாலோ .. அவ்வளவுதான்.

“இது பாலைவனம். அதன் சூழலை மறுக்க நாம் முயற்சிக்கிறோம். பாலைவனத்துடன் மோதினால் நாம் தோற்றுவிடுவோம்” என்கிறார் வளைகுடா ஆராய்ச்சி மையத்தின் சுற்றுச்சூழல் இயக்குநர் முகமது ரவூப்.

“துபாயில் எல்லாமே பொய். காண்பதனைத்தும் பொய். மரங்கள் பொய், தொழிலாளிகளின் ஒப்பந்தங்கள் பொய், தீவுகள் பொய், புன்னகைகள் பொய், இந்தத் தண்ணீரும் பொய். ஆனால் நான் இங்கே சிக்கிவிட்டேன்” என்று சொல்லிப் பெருமூச்செறிந்து விட்டு  தொடர்கிறாள் வரவேற்பறையில் நிற்கும் பிலிப்பைன்ஸ் பெண், “துபாய் ஒரு பாலைவனக் கானல்நீர். அது ஒரு மாயை. தூரத்திலிருந்து பார்த்தால் தண்ணீர் தெரியும். தாகத்துடன் நெருங்கிச் சென்றால் வாய் நிறைய மணல்தான் கிடைக்கும்”

அவள் சொல்லி முடிப்பதற்குள் ஓட்டலுக்குள் ஒரு புதிய வாடிக்கையாளர் நுழைகிறார். “ஐயா, இன்றிரவு உங்களுக்கு எந்த விதத்தில் நான் உதவ முடியும்?” வலிந்து வரவழைக்கப்பட்ட துபாய் சிரிப்பில் விரிகிறது அவள் முகம்.

  •• ••

_____________________________________

மத்திய கிழக்கின் சொர்க்கமாகவும், மேற்கத்திய முதலாளித்துவம் மற்றும் அரேபியத் தொழில்முனைவின் ஒளிமிக்க சின்னமாகவும் சித்தரிக்கப்படும் துபாயின் இருண்ட பக்கத்தை அம்பலப்படுத்துகிறார் ஜோஹன் ஹாரி. லண்டனிலிருந்து வெளிவரும் இன்டிபென்டெட் நாளேட்டில் (7.04.09) வெளிவந்த அவரது கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம் இது.

தமிழாக்கம்: மருதையன்

__________________________________________________________

புதிய கலாச்சாரம், மார்ச் – 2012.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஜெனிவா தீர்மானம்: முப்பதாண்டுகளாக உருகாத வெண்ணெய், சிக்காத கொக்கு!

49

ஜெனிவா தீர்மானம் : முப்பதாண்டுகளாக உருகாத வெண்ணெய், சிக்காத கொக்கு !ராஜபக்சே அரசு நடத்திய இன அழிப்புப் போர் தொடர்பாக விசாரிப்பதற்கு, ராஜபக்சே அவர்களால் நியமிக்கப்பட்ட LLRC குழுவின் பரிந்துரைகளை, ராஜபக்சே அரசு விரைந்து நிறைவேற்றியிருக்கிறதா என்பதை, ஐ.நா மனித உரிமைகள் குழு கண்காணிக்க வேண்டும் என்பது ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்.

மனித உரிமை என்பது மற்ற நாடுகளின் கையை முறுக்குவதற்கு அமெரிக்கா பயன்படுத்தும் கருவி என்பதும் ஐ.நா மன்றம் எனப்படுவது அமெரிக்க ஆக்கிரமிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கும் ரப்பர் முத்திரை என்பதும் எவ்வளவு உண்மையோ, அதே அளவிற்கு, ராஜபக்சே போன்ற பாசிசக் கிரிமினல்கள், தமது குற்றத்தை மறைத்துக்கொள்ளும் முகத்திரையாக மட்டுமே இறையாண்மை என்ற சொல் பயன்படுகிறது என்பதும் உண்மை.

இலங்கையின் இறையாண்மை விசயத்தில் இலங்கையை விடவும் அதிகமாக இந்திய அரசுதான் கவலைப்பட்டு வருகிறது என்பதே வரலாறு. இப்போதும் கூட அமெரிக்காவின் தீர்மானத்திற்கு திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்தியா. “ராஜபக்சே ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் ஐ.நா கண்கணிக்கலாம்” என்பது இந்தியா இந்த தீர்மானத்துக்கு கொண்டு வந்திருக்கும் திருத்தம்.

நேற்றைய தினமணியின் முதல் பக்க செய்தியைப் படித்துப் பாருங்கள்:

“போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆன பின்னரும் மனித உரிமை மீறல் பற்றி விசாரித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தீர்மானத்தினை அறிமுகப்படுத்தும் அமெரிக்க பிரதிநிதி பேசுகிறார்.

“போர் முடிந்து 3 ஆண்டுகளே ஆகியுள்ளது. மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகள் பேசியிருக்கின்றன.

“இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய அவகாசம் வழங்க வேண்டும்” என்று தீர்மானத்தை எதிர்த்துப் பேசிய இந்தியப் பிரதிநிதி, வாக்கை மட்டும் தீர்மானத்துக்கு ஆதரவாக அளித்திருக்கிறார். இந்தியா முன்வைத்த திருத்தம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

திருத்தப்பட்ட இந்த தீர்மானம், 2009 நாடாளுமன்றத் தேர்தல் நாளுக்கு முன், கருணாநிதி உண்ணாவிரதமிருந்து பெற்றுத்தந்த “போர்நிறுத்தத்தையும்”, ஈழத்தாய் வாங்கித் தர விரும்பிய “தமிழ் ஈழத்தையும்”  ஒத்ததாக இருப்பதனாலோ என்னவோ, கருணாநிதி ஜெயலலிதா ஆகிய இருவருமே இதனை ஆதரித்திருக்கின்றனர்.

இந்திய அரசின் உதவியும் வழிகாட்டுதலும் இல்லாமல் இன அழிப்புப் போரை ராஜபக்சே துவங்கியிருக்கவும் முடியாது, முள்ளிவாய்க்காலில் முடித்திருக்கவும் முடியாது என்பது அனைவரும் அறிந்த, மறுக்கவியலாத உண்மை.  எனினும், அமெரிக்க அரசின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென்று, தமிழக காங்கிரசு தொடங்கி, தமிழுணர்வாளர்கள் வரை அனைவரும் ஓரணியில் நின்று மத்திய அரசிடம் வலியுறுத்தினார்கள்.

மன்மோகன் அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் இன அழிப்புப் போர்க்குற்றத்திற்காக ராஜபக்சே அரசாங்கத்தின் மீது சர்வதேச விசாரணக்குழுவின் நேரடி விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற திருத்தத்துடன் இந்தியா இத்தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் கோரினார் பழ.நெடுமாறன்.

ஈழத்தமிழர்களின் கழுத்தில் ஈரத்துணி போட்டு இறுக்கிய இந்திய அரசு, கத்தி வைத்து அறுத்த ராஜபக்சேவுக்கு எதிராக வாக்களித்தால், அது இந்தியா செய்த பாவத்துக்குப் பிராயச்சித்தமாகி விடுமா? இன அழிப்புப் போர்க்குற்றத்துக்காக ராஜபக்சே மீது இந்தியா விசாரணை கோரவேண்டும் என்றால், இந்தக் குற்றத்தின் பங்காளியும் வழிகாட்டியுமான இந்தியா மீது யார் விசாரணை கோருவார்கள்? இந்தியக் குடிமகன் என்ற முறையில் இந்திய அரசின் குற்றத்தை அம்பலப்படுத்திக் கூண்டிலேற்றுவது நம்முடைய கடமையா, அல்லது இந்திய ஆளும் வர்க்கத்தை தப்பவைப்பதா?

இந்த விமரிசனம் தமிழுணர்வாளர்களுக்கு உவப்பானதாக இருக்காது. அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்திய வல்லாதிக்கம் பற்றியெல்லாம் தங்களுக்குத் தெரியுமென்றும், ராஜபக்சே அரசை சர்வதேச சமூகத்தின் முன் கூண்டிலேற்றுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர்கள் கூறக்கூடும்.

“இது இந்தியக் கொக்கின் தலையில் வெண்ணெய் வைத்து அமுக்கும் ராஜதந்திரம்” என்றும் அவர்கள் இதற்கு விளக்கம் தருவார்கள். இதுவும் 1983 முதல் நாம் பலமுறை கேட்டுப் புளித்த வசனம்தான். இந்திய உதவியுடன் ஈழ விடுதலையை சாதிக்க முடியும் என்று நம்ப வைத்து தமிழக, ஈழ இனவாதிகள் 1983 முதல் நடத்திவரும் சந்தரப்பவாத அரசியலின் நீட்டிப்புதான் இன்றைய கோரிக்கையும்.

மறுபடியும் முதல்லேர்ந்தா? அமாம், அதுவேதான்.

000

இனி தீர்மானத்துக்கு வருவோம். இரந்தேனும் இந்திய அரசின் ஆதரவைப் பெறவேண்டிய அளவுக்கு அந்த தீர்மானத்தில் என்ன இருக்கிறது? ஐ.நாவின் மனித உரிமைகள் மன்றத்தின் முன் வைக்கப்பட்ட அமெரிக்க அரசின் நகல் தீர்மானம், இலங்கையின் மீது இனக்கொலைக் குற்றமோ, போர்க்குற்றமோ சாட்டவில்லை. இத்தகைய குற்றங்கள் தொடர்பாக ஒரு சுயேச்சையான சர்வதேச விசாரணை வேண்டும் என்றும் கோரவில்லை.

மாறாக, “ராஜபக்சே அரசால் நியமிக்கப்பட்ட Lessons Learnt and Reconcilliation Commission (படிப்பினைகளைக் கற்றல் மற்றும் நல்லிணக்கத்தை உருவாக்குதலுக்கான ஆணையம்) முன்வைத்துள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகள் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும்” என்று பாராட்டுகிறது. அதன் ஆக்கபூர்வமான சிபாரிசுகளை அமல்படுத்துமாறும், எல்லா இலங்கையர்களுக்கும் நீதி, சமத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும், இதற்கான திட்டவரைவு ஒன்றினை, சாத்தியப்பட்ட அளவு விரைவில் முன்வைக்குமாறும் கோரியிருக்கிறது.

LLRC என்ற அமைப்பை ராஜபக்சே அரசு நியமிப்பதற்கான நோக்கம் என்ன? இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அரங்குகளுக்கு இழுக்கப்படுவோமென்பதை இலங்கை அரசு அறியும். நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கையில் அடைபட்டுவிடவில்லை என்று காட்டுவதன் மூலம் சர்வதேச தலையீட்டினை முறியடிப்பதுதான் ராஜபக்சே LLRC என்ற அமைப்பை நியமிப்பதற்கான நோக்கம். இது லாக் அப் கொலை நடந்தவுடன் அரசு போடும் ஆர்.டி.ஓ விசாரணையைப் போன்றது.

போரின் துவக்க காலத்தில், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டது மற்றும் பிற மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் எழுந்ததையொட்டி, அவற்றை சமாளிப்பதற்காக, 2007 இல் “சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழு” ஒன்றை, ஓய்வு பெற்ற இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் இலங்கை அரசு நியமித்தது. அதுவும் LLRC யைப் போன்றதொரு இழுத்தடிப்புத் தந்திரமே. இந்த தந்திரங்கள் அனைத்தையும் இந்தியாதான் இலங்கைக்குச் சொல்லிக் கொடுத்து வருகிறது.

தற்போது இந்தியா கொண்டுவந்திருக்கும் திருத்தம், “தொழில் நுட்ப உதவி” என்ற ஷரத்தின் கீழ் இலங்கை மனித உரிமை மீறல் விசாரணைகளில் ஐ.நா தலையிடுவதற்கான வாய்ப்பையும் அடைத்து விட்டது. தீர்மானத்தை ஆதரிப்பது என்ற பெயரில் இந்தியா கொண்டு வந்திருக்கும் இந்த “சின்ன” திருத்தம், மனித உரிமைக் கமிசனிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றும் கவசமாக செயல்படும். இது இந்திய இலங்கை அரசுகள் பேசி வைத்துக் கொண்டு நடத்தியிருக்கும் கபட நாடகம்.

ஐ.நா தீர்மானத்தை ஆதரிக்குமாறு இந்திய அரசிடம் மன்றாடியவர்கள், இனப்படுகொலைக் குற்றவாளியான மன்மோகன் அரசை, அக் குற்றத்திலிருந்து விடுவித்தது மட்டுமின்றி, நீதிபதியாகவும் நியமித்து விட்டார்கள். தீர்ப்பை “திருத்தி” எழுதி, குற்றவாளி ராஜபக்சேவை விடுவித்து விட்டார் மன்மோகன் சிங்.

இந்தியக் கொக்கின் தலையில் 30 ஆண்டுகளுக்கு முன், 1983 இல்  தமிழுணர்வாளர்கள் வெண்ணெய் வைத்தார்கள்.

“உருகு .. உருகு” என்று வெண்ணெயிடமும் கொக்கிடமும் மாறி மாறி இவர்கள்தான் மனமுருகினரேயன்றி, வெண்ணெய் உருகவில்லை.

உருகும் என்பது உணர்வாளர்களின் நம்பிக்கை.

__________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

” நடனத்திற்குப் பின் ” – டால்ஸ்டாயின் புகழ்பெற்ற சிறுகதை!

7

முன்னுரை:

எதனால் காதல் வயப்படுகிறோம் என்பதற்கு ஆழமான காரணங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எதனால் காதலை துறக்கிறோம் என்பதற்கு ஆழமான காரணங்கள் இருந்தாக வேண்டும். புறத் தோற்றம் காதலிப்பதற்கும், அகக் கட்டமைப்பு காதலின் பிரிவுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை இங்கு ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குநர் போல டால்ஸ்டாய் படம் பிடித்துக் காட்டுகிறார்.

மனிதர்களின் வாழ்வில் தற்செயலாக நடக்கும் சம்பவங்களே அவர்களது வாழ்வில் தீர்மானகரமான பாத்திரத்தை ஏற்படுத்துவதாக இக்கதையில் வரும் கதை சொல்லி கூறுகிறான். இதையே எழுத்தாளர் ஜெயமோகனும் பலமுறை சலிப்பூட்டும் விதத்தில் சுற்றி வரும் சொல்லாடல்கள் மூலம் கூறியிருக்கிறார்.

ஆனால் வாழ்வில் வரும் தற்செயலான சம்பவங்கள் நம் அகத்தில் சுற்றுப்புறச்சூழலினால் அல்லது அவரவருக்கு கிடைத்திருக்கும் சமூக சூழலின் மதிப்பீடுகளின்படிதான் பாதிப்பு ஏற்படுத்துமே அன்றி அவை முற்றிலும் தற்செயலானதல்ல. அதாவது அதன் நிகழ்வு மற்றுமே தற்செயலாக இருக்குமே அன்றி அதன் விளைவு நீடித்து வரும் சமூக மதிப்பீடுகளோடு தொடர்பு உடையவை.

ஒரு மனிதனின் வாழ்வில் அவனது வர்க்கம், சமூக சூழ்நிலை என்னென்ன விதத்தில் பாத்திரம் ஆற்றுகிறது, காதல், காதலின் சர்வலோக அன்பு மயத்தின் காரணம், என்று இந்தக் கதை முக்கியமான சில விசயங்களை அலசுகிறது.

கதையின் ஆரம்பத்தில் கதை சொல்லி எதன் பொருட்டு இந்தக் கதையை சொல்ல வந்தானோ அதை மறுத்தே கதையின் முடிவு இருக்கிறது. இதை உங்களால் கண்டு பிடிக்க முடியுமென்றால் நீங்கள் மார்க்சியத்தின் முதல் பாடத்தை கற்றுக் கொண்டவராகிறீர்கள் என்பதோடு ஜெயமோகன் போன்ற இலக்கியவாதிகளையும் புரிந்து கொள்ளும் சக்தியை வரித்துக் கொண்டவராவீர்கள். முயன்று பாருங்களேன்!

– வினவு

_______________________________________

ப்படியானால் நீங்கள் சொல்லுகிறீர்கள், நல்லது எது, கெட்டது எது என்று தானாகவே புரிந்துகொள்ள மனிதனால் முடியாது, எல்லாம் சுற்றுச் சார்பைப் பற்றிய விஷயம், மனிதன் சுற்றுச் சார்புக்கே வசப்பட்டவன் என்று. ஆனால் நானோ, எல்லாம் தற்செயலைச் சார்ந்த விஷயம் என்று கருதுகிறேன். என்னைப் பற்றியே சொல்கிறேன், கேளுங்கள்….”

தனி மனிதனைச் செவ்வைப்படுத்துவதற்கு மக்கள் வாழ்ந்துவரும் நிலைமைகளை மாற்றுவது இன்றியமையாதது என்பது பற்றி எங்களுக்குள் நடந்த உரையாடலின் முடிவில், எல்லோராலும் மதிக்கப்படும் இவான் வஸீல்யெவிச் இவ்வாறு கூறினார்.  நல்லது எது, கெட்டது எது என்று தானாகவே புரிந்துகொள்ளது இயலாது என உண்மையில் யாருமே சொல்லவில்லைதான், ஆயினும் உரையாடலினால் தூண்டிவிடப்படும் தமது சொந்த எண்ணங்களுக்கு விடையளிப்பதும், இந்த எண்ணங்களின் தொடர்பாகத் தன் வாழ்க்கை நிகழ்ச்சி எதையாவது விவரிப்பதும் இவான் வஸீல்யெவிச்சின் வழக்கம். அடிக்கடி தம் கதையில் ஒரேயடியாக ஈடுபட்டுப்போய், அதைச் சொல்ல வந்த காரணம் என்ன என்பதையே மறந்து விடுவார், அதிலும் விசேஷமாக அவர் உளமாரவும் உண்மையுடனும் பேசியபடியால்.

இப்போதும் அவர் அவ்வாறே செய்தார்.

”என்னைப் பற்றியே சொல்கிறேன். என் வாழ்க்கை முழுவதும் இன்னொரு வகையில் இன்றி, இந்த வகையில் உருவாகியிருப்பது சுற்றுச்சார்பினால் அல்ல, முற்றிலும் வேறொன்றினால் தான்” என்றார்.

”எதனால்?” என்று கேட்டோம்.

”அது நீண்ட கதை. உங்களுக்குப் புரிய வேண்டுமானால் நிறையச் சொல்ல நேரும்.”

”சொல்லுங்களேன்.”

இவான் வஸீல்யெவிச் சற்று யோசித்துவிட்டுத் தலையை ஆட்டினார்.

”ஆம், ஒரே இரவில், அல்லது அதிகாலையில் நடந்த நிகழ்ச்சியால் என் வாழ்க்கை முழுவதுமே மாறிவிட்டது” என்றார்.

”ஏன்? என்ன நடந்தது?”

”நடந்தது என்ன வென்றால், அப்போது நான் ஆழ்ந்த காதல் கொண்டிருந்தேன். முன்பும் பல தடவை நான் காதலித்தது உண்டுதான், இருந்தாலும் இம்முறை ஒரு போதுமில்லாத அளவு ஆழ்ந்த காதல் கொண்டு விட்டேன். என்றைக்கோ நடந்துபோன சேதி. அவளுடைய பெண்களுக்கு எப்போதோ கலியாணாமாகிவிட்டது. அவள் பெயர் ப…. ஆம், வாரெனிகா ப….” (இங்கே இவான் வஸீல்யெவிச் அவளுடைய குலப்பெயரைக் கூறினார்.)

”ஐம்பது வயதிலே கூட அவள் குறிப்பிடத்தக்க அழகியாகத் திகழ்ந்தாள். இளமையில், பதினெட்டாண்டுப் பருவத்திலோ, உயரமும், ஒடிசலும், ஒயிலும், பெருமிதமும் – ஆம், பெருமிதமும் – இலங்க, மோகனாங்கியாக விளங்கினாள். தலையைச் சற்றே பின்னுக்குச் சாய்த்தவாறு, எப்போதும் உடம்பை நேராகவே வைத்திருப்பாள் – குனியவே இயலாதவள் போல; ஒரே ஒடிசலாக, எலும்புந் தோலுமாகப் போல, இருந்த போதிலும், இந்த வழக்கமும், எழிலும் உயரமும் சேர்ந்து அவளுக்கு ராஜகம்பீரமான தோற்றப் பொலிவை அளித்தன. கனிவும் எப்போதும் மகிழ்ச்சிப் பெருக்கும் கொண்ட மென்முறுவல், கவர்ச்சியும் ஒளியும் சுடரும் விழிகள், இனிமையும் இளமையும் மிளிரும் தன்மை, இவையெல்லாம் இல்லாவிட்டால, இந்த ராஜகம்பீரம் அவளை அணுகவொட்டாதபடி பிறரை வெருட்டியிருக்கும்.”

”அடேயப்பா, எப்படிப் பிரமாதமாக வருணிக்கிறார் இவான் வஸீல்யெவிச்!”

”அட நான் என்னதான் பிரமாதமாக வருணித்தாலும், அவள் உண்மையில் இருந்தபடியே நீங்கள் புரிந்து கொள்ளும்படி வருணிப்பது இயலாது. ஆனால் முக்கிய விஷயம் அதுவல்ல. நான் சொல்ல வந்த நிகழ்ச்சிகள் ஆயிரத்து எண்ணூற்று நாற்பது – ஐம்பது ஆண்டுகளில் நடந்தன. அப்போது நான் பிராந்தியப் பல்கலைக் கழகம் ஒன்றில் மாணவனாயிருந்தேன். நல்லதோ கெட்டதோ, அறியேன், ஆனால் அந்தக் காலத்தில் எங்கள் பல்கலைக் கழகத்தில் எத்தகைய தத்துவ ஆராய்ச்சி வட்டங்களோ, எவ்விதமான சித்தாந்தப் பேச்சுக்களோ கிடையா; நாங்கள் வெறுமே இளைஞர்களாயிருந்தோம்; இளைஞரின் இயல்புக்கேற்ப, படிப்பதும் உல்லாசமாயிருப்பதுமாக வாழ்ந்தோம்.

நான் மிகுந்த களிப்பும் உற்சாகப் பெருக்கும் கொண்ட இளைஞன், அதோடு பணக்காரன். என்னிடம் துடியான குதிரையிருந்தது. சீமான்கள் வீட்டுப் பெண்களை அழைத்துக்கொண்டு ஸ்லேட்ஜில் சவாரி செய்வேன் (ஸ்கேட் செய்வது அப்போது மோஸ்தருக்கு வரவில்லை); நண்பர்களோடு குடியும் கேளிக்கையுமாகக் களிப்பேன் (அந்தக் காலத்திலே நாங்கள் ஷாம்பெயின் தவிர வேறு ஒன்றும் பருகுவதில்லை; பணமில்லாவிட்டால் ஒன்றுமே குடிக்க மாட்டோம், ஆனால் இப்போது போல வோத்கா குடித்ததே கிடையாது). எல்லாவற்றையும் விட எனக்கு உவப்பானவை விருந்துகளும் நடனங்களுமே. நான் நன்றாக நடனம் செய்வேன், தோற்றத்திலும் அப்படி விகாரமானவன் அல்ல.”

”ஓகோகோ, ரொம்பத்தானே சங்கோசம் பாராட்ட வேண்டாம்” என்றாள் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒரு பெண். ”உங்களுடைய ‘டாகரோடைப்’ போட்டோவைத்தான் நாங்களெல்லோரும் பார்த்திருக்கிறோமே. விகாரமானவர் அல்ல என்று சொன்னால் போதாது. நீங்கள் அழகராயிருந்தீர்கள், ஆமாம்” எனக் கூறினாள்.

”அழகனென்றால் அழகன் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் முக்கியமான விஷயம் அதுவல்ல. நான் மிக ஆழ்ந்த காதல் கொண்டிருந்த அந்தச் சமயத்தில், ‘ஷ்ரோவ்டைட்’ விழாவின் கடைசி நாளன்று குபெர்னியத் தலைமைப் பிரபு அளித்த நடன விருந்தில் கலந்து கொண்டேன். அந்த மனிதர் நல்லியல்புள்ள முதியவர், செல்வந்தர், விருந்துபசாரம் செய்வதில் விருப்பமுள்ளவர். அவரைப் போலவே இனிய சுபாவமுள்ள அவர் மனைவி, செம்பழுப்பு மகமல்கவுனும் வைர முடியணியும் இலங்க அவரருகே நின்று விருந்தினரை வரவேற்றாள். கொழுத்து வெளிறிய அவளது மூப்புற்ற கழுத்தும் தோள்களும் – பேரரசி எலிஸவெத்தா பெத்ரோவ்னாவின் படங்களில் காண்பது போல – திறந்திருந்தன.

நடன விருந்து பிரமாதம்: ஹால் நேர்த்தியாயிருந்தது; இசைப் பிரியரான ஒரு நிலப்பிரபுவின் பண்ணையடிமைகளாயிருந்த, அக்காலத்தில் புகழ் பெற்ற வாத்தியக்காரர்கள் வந்திருந்தார்கள்; உணவு வகைகள் ஏராளம்; ஷாம்பைன் கடலாகப் பொங்கிப் பெருகியது. நான் ஷாம்பெயினில் மோகங்கொண்டவனாயினும், மதுவின்றியே காதல் போதை ஏறியிருந்த படியால், குடிக்கவில்லை. ஆனால் கால்கள் தளர்ந்து தொய்யும்வரை நடனமாட மட்டும் செய்தேன். குவாட்ரில், வால்ட்ஸ்,போல்க்கா என்று எல்லா வகை நடனங்களும் ஆடினேன், அவற்றிலும் முடிந்தவரையில் வாரெனிகாவுடனேயே ஆடினேன் என்று சொல்லத் தேவையேயில்லை.

அவள் வெள்ளை உடையும், ரோஜா நிற இடைக்கச்சும், ஆட்டுக்குட்டித் தோலால் செய்த வெள்ளைக் கையுறைகளும் (இவை அவளது மெல்லிய, கூர்ந்த முழங்கை வரை எட்டியும் எட்டாமலுமிருந்தன), வெண்பட்டு ஸ்லிப்பர்களும் அணிந்திருந்தாள். மஸூர்க்கா நடனத்தில்தான் அனீஸிமவ் என்ற பாழாய்ப் போகின்ற எஞ்சினீயர் ஒருவன் அவளை என்னிடமிருந்து பறித்துக்கொண்டான் – அதன்பின் இன்றளவும் அவனை என்னால் மன்னிக்க முடியவில்லை. அவள் ஆட்ட மண்டபத்தில் அடிவைத்ததுமே அவன் அவளை நடன ஜோடியாக இருக்கும்படி வேண்டிக் கொண்டுவிட்டான்; நானோ, கையுறைகளை எடுத்து வருவதற்காக நாவிதன் கடைக்குப் போனவன், காலந்தாழ்த்துவிட்டேன்.

ஆக மஸூர்க்கா நடனம் அவளுடன் ஆடமால், முன்பு நான் ஓரளவு மோகங் கொண்டிருந்த ஜெர்மானியப் பெண் ஒருத்தியுடன் ஆடினேன். ஆனால் அன்று மாலை அந்தப் பெண்ணிடம் மிக அசட்டையாயிருந்திருப்பேன் என நினைக்கிறேன். நான் அவளோடு பேசவோ, அவளைப் பார்க்கவோ இல்லை. நான் கண்ணாரப் பருகியதெல்லாம், வெள்ளை உடையும் ரோஜா நிற இடைக்கச்சும் அணிந்து, உயரமும் ஒடிசலுமாக இலகிய நங்கையின் வடிவம், ஒளிர்வும் செம்மையும் படர்ந்து, கன்னங்களில் சுழியிட்டிருந்த அவளது வதனம், கனிவும் இனிமையும் பளிச்சிட்ட அவளது கண்கள் இவற்றை மட்டுமே. நான் ஒருவனேயல்ல, எல்லோருமே அவளைக் கண்டு வியந்தார்கள். ஆண்களும், பெண்களுங் கூட, அவள் அவர்களை மங்க அடித்துவிட்டபோதிலும், பார்த்து மகிழ்ந்தர்கள். அவளை வியக்காமலிருக்க முடியவில்லை ஒருவராலும்.

”சட்டப்படி சொல்வதானால் மஸூர்க்கா நடனத்தில் நான் அவளுடைய இணை அல்லதான், ஆயனும் உண்மையில் அநேகமாக நேரம் முழுவதும் நான் அவளுடனேயே ஆடினேன். அவள் கொஞ்சங்கூடத் தயக்கமில்லாமல் ஹாலின் ஒரு கோடியிலிருந்து நேரே என் அருகே ஆடி வருவாள்; நான் அழைப்புக்காகக் காத்திராமல் பாய்ந்து அவளிடம் செல்வேன்; தனது விருப்பத்தை நான் உய்த்துணர்ந்து கொண்டதற்காக அவள் புன்னகையால் எனக்கு நன்றி தெரிவிப்பாள்.

நடனம் ஆடியவாறே நாங்கள் அவளருகே இட்டுச் செல்லப்பட்டு, அவள் எனது தன்மையை ஊகித்துக் கொள்ளத் தவறி, மற்றோருவன் பக்கம் கரத்தை நீட்டி விடும் போது, மெல்லிய தோள்களைக் குலுக்கி, என்னைத் திரும்பிப் பார்த்து, வருத்தமும் தேறுதலும் தோன்ற முறுவலிப்பாள். மஸூர்க்கா ஆட்டப் பாங்கு சுழன்றாடும் வால்ட்ஸ் நடனமாக மாற்றப்பட்டதும், நான் நெடுநேரம் அவளுடன் வால்ட்ஸ் ஆடுவேன், அவளோ மூச்சு இரைக்க இள நகை அரும்பி, “Encore”(“Encore” என்ற பிரெஞ்சுச் சொல் ‘இன்னும்’ என்பது அதன் பொருள்) என மொழிவாள். அவ்வளவுதான், உடல் கனத்தையே உணராதவனாக நான் மேலும் மேலும் சுழன்றாடிக்கொண்டே போவேன்.”

”உணராமலாவது ஒன்றாவது, நன்றாய்ச் சொன்னீர்களே. அவளை இடையுற அணைத்துக் கொண்டு நடனமாடிய போது, சொந்த உடலை மட்டுமல்ல, அவளுடைய மேனியையுங்கூடத் தான் நன்கு உணர்ந்திருப்பீர்கள்” என்றான் ஒரு விருந்தாளி.

இவான் வஸீல்யெவிச் சட்டென முகம் சிவப்பேற, சீற்றம் பொங்க அநேகமாகக் கத்தினார்:

”ஆமாம், இதுதான் உங்கள், இந்தக் காலத்து வாலிபர்களின், நோக்கு. உடம்பைத் தவிர வேறு எதுவுமே உங்கள் கண்களுக்குப் படுவதில்லை. எங்கள் காலத்திலே இப்படிக் கிடையாது. நான் எவ்வளவுக் கெவ்வளவு ஆழ்ந்த காதல் கொண்டிருந்தேனோ, காதலி எனக்கு அவ்வளவுக் கவ்வளவு உடலற்றவளாகத் தோன்றினாள். இந்தக் காலத்திலே நீங்கள் என்னடா வென்றால், கால்களையும் கணுக்கால்களையும், இன்னும் எதெதை யெல்லாமோ பார்வையிடுகிறீர்கள், காதலித்த பெண்ணை ஆடையற்றவளாக்குறீர்கள்; என்க்கோ, Alphonse Karr* – (*அல்பான்ஸ் கார் என்ற பிரெஞ்சு எழுத்தாளர்.) அருமையான எழுத்தாளர் அவர் – சொன்னது போல, என் காதலின் இலக்கு மீது எப்போதும் வெண்கல உடை திகழ்ந்தது. ஆடையைக் களைவதற்குப் பதிலாக நாங்கள் நிர்வாணத்தை மூடி மறைக்கவே முயன்றோம் – நோவாவின் நற்புதல்வன் செய்தது போன்று. ஊம், இதெல்லாம் உங்களுக்குப் புரியாது…”

”அட அவன் கிடக்கிறான், விடுங்கள். அப்புறம் என்ன நடந்தது?” என்று எங்களில் ஒருவன் கேட்டான்.

”ஆயிற்றா. இப்படியாக நான் பெரும்பாலும் அவளுடனேயே நடனமாடினேன், நேரம் கழிவதையே உணராமல். வாத்தியக்காரர்கள் ஒரேயடியாக களைத்துப் போய் – நடன நிகழ்ச்சி முடிவில் இப்படி ஏற்படுவது சகஜந்தானே – மஸூர்க்கா ஆட்ட இசையையே விடாமல் இசைத்துக் கொண்டிருந்தார்கள்; அம்மாமாரும் அப்பாமாரும் இரவு போஜனத்தை எதிர்பார்த்துச் சீட்டாட்ட மேஜைகளை விட்டு அகலத் தொடங்கினார்கள்; எடுப்பாட்கள் எதெதையோ கொண்டு வருவதும் வைப்பதுமாக ஓடிச் சாடிக் கொண்டிருந்தார்கள். இரவு மணி மூன்றாவதற்கிருந்தது. இறுதிக் கணங்களைப் பயன்படுத்துவது அவசியமாயிற்று. நான் இன்னோரு முறை அவளை ஆட்டத்திற்கு அழைத்தேன். நாங்கள் நூறாவது தடவையாக ஹாலின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு ஆடிச் சென்றோம்.

” ‘இரவு உண்டிக்குப் பின்பு குவாட்ரில் ஆட்டத்தில் நான்தானே உங்கள் ஜோடி?’ என், அவளை இருக்கைக்குக் கொண்டு அமர்த்துகையில் கேட்டேன். ” ‘கட்டாயமாக, என்னை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய்விடாவிட்டால்’ என்றாள் அவள், புன்முறுவலுடன்.

” ‘அதற்கு விடமாட்டேன்’ என நான் சொன்னேன்.

” ‘என் விசிறியைக் கொடுங்களேன், சற்றே’ என்றாள்.

”சாதாரண வெண்ணிறகு விசிறியை அவள் பக்கம் நீட்டியவாறே, ‘திருப்பிக் கொடுப்பதற்கு வருத்தமாயிருக்கிறது’ என்றேன். ” ‘அப்படியானால் இந்தாருங்கள், நீங்கள் வருந்தாதிருப்பதற்காக.’ இவ்வாறு கூறி, விசிறியிலிருந்து ஓர் இறகைப் பிய்த்து எனக்குத் தந்தாள்.

”இறகை வாங்கிக்கொண்ட எனக்கு, பேருவகையையும் நன்றியையும் பார்வையினால் மட்டுமே வெளியிட முடிந்தது. நான் மகிழ்வும் மனநிறைவும் மட்டும் கொண்டிருக்கவில்லை, இன்பமுற்றிருந்தேன், பேரானந்தத்தில் திளைத்தேன், நல்லுணர்ச்சி வயப்பட்டிருந்தேன். நான் நானாகவே இல்லை, நிலவுலகைச் சேராத, தீமையே அறியாத, நன்மை மட்டுமே புரியத் திறன் கொண்ட, வேறு ஏதோ ஜீவனாகிவிட்டேன். இறகைக் கையுறைக்குள் மறைத்துக் கொண்டு, அவளை விட்டு அகல மாட்டாதவனாய் அங்கேயே நின்றேன்.

”வெள்ளித் தோள் சின்னங்கள் இலங்க, வீட்டு எஜமானியுடனும் வேறு சில பெண்டிருடனும் கதவருகே நின்று கொண்டிருந்த உயரமும் கம்பீரத் தோற்றமும் வாய்ந்த கர்னல் ஒருவரை வாரெனிகா சுட்டிக் காட்டி, ‘அதோ பாருங்கள், அப்பாவை நடனமாடச் சொல்லுகிறார்கள்’ என்றாள்.

” ‘வாரெனிகா, இப்படி வாருங்கள் சற்றே’ என்று கூவியழைத்தாள் வைர முடியணியும் பேரரசி எலிஸவெத்தா போன்ற தோள்களுமாக இலகிய வீட்டெஜமானி.

”வாரெனிகா கதவுப பக்கம் போனாள், நான் அவள் பின் சென்றேன்.

” ‘உங்கள் தந்தையாரை உங்களுடன் நடனமாடச் சொல்லுங்களேன் சற்றே, Ma chere*’ (”ma chere” என்ற பிரெஞ்சுச் சொல். ‘என் அன்பே’ என்று பொருள் படுவது.) என வாரெனிகாவிடம் கூறிவிட்டு, ‘ஊம், ப்யோத்ர்வ்ளாதிஸ்லாவிச், தயவு செய்து ஆடுங்கள்!’ என்று கர்னலிடம் சொன்னாள் வீட்டெஜெமானி.

”வாரெனிகாவின் தகப்பனார் மிகுந்த அழகர்.  மிடுக்கான  தோற்றமும், உயரமும், நிகுநிகுப்பும் கொண்ட முதியவர். செக்கச்சிவந்த முகம், முதலாவது நிக்கொலாய் போல முறுக்கிவிடப்பட்ட நரை மீசை, மீசையைத் தொட்டுக் கொண்டிருந்த கிருதா, பொருத்துக்கு மேல் முன்பக்கமாக வாரிவிடப்பட்ட கேசம். புதல்வியனது போலவே கனிவும் மகிழ்வும் ததும்பும் இளநகை அவர் கண்களிலும் உதடுகள் மீதும் ஒளிர்ந்தது. இராணுவ தோரணையில் முன்துருத்திய, அதிக ஆடம்பரமின்றிப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்ட அகன்ற மார்பும், வரிய தோள்களும், நீண்ட, வடிவான கார்களுமாக அவர் மிக நல்ல உடற்கட்டு வாய்ந்திருந்தார். பழவ்கால மாதிரியான, நிக்கொலாய் பாணியைச் சேர்ந்த இராணுவ அதிகாரி அவர்.

”நாங்கள் கதவருகே வந்த சமயம் கர்னல் நடனமாடுவதையே தாம் மறந்து விட்டதாகக் கூறி ஆட மறுத்தார். ஆயினும் முறுவலித்து, கையை இடப்புறம் கொண்டுபோய், உடைவாளை உறையிலிருந்து உருவி, தொண்டு செய்யத் தயாராகக் காத்திருந்த ஓர் இளைஞனிடம் அதைக் கொடுத்துவிட்டு, வலக்கையில் ‘ஸ்வீட்’ கையுறையை மாட்டிக்கொண்டு, ‘எல்லாம் சட்டப் பிரகாரம் இருக்கவேண்டும்’ என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு, புதல்வியின் கையைப் பற்றியவாறு கால்வாசி திரும்பி, தாளவாய்ப்பை எதிர்பார்த்து நின்றார்.

”மஸூர்க்கா நடன இசை தொடங்கியதுமே அவர் ஒரு காலை விரைவுடன் தரையில் டக்கென வைத்து, மற்றொரு காலை வீசியாட்டி முன் சென்றார். பின்பு அவரது உயரமான கனத்த உருவம் இக்கணம் மெதுவாகவும் ஒயிலுடனும், மறுகணம் ஓசையுடனும் விரைவுடனும் பாதங்களைத் தரைமீதும் ஒன்றோடொன்றும் அடித்தவாறு ஹாலைச் சுற்றிவந்தது. வாரெனிகாவின் எழில் வடிவம், கவனிக்க முடியாதபடி, தக்க தருணத்தில் அடிகளை அகற்றியும் குறுக்கியும் வைத்தவாறு, தனது சின்னஞ்சிறு பட்டுப்பாதங்கள் அவரது பாதங்களுடன் இணையும் வகையில் அவரருகே ஒய்யாரமாக நீந்திச் சென்றது. இந்த ஜோடியின் ஒவ்வோர் அசைவையும் ஹாலில் இருந்தவர்கள் யாவரும் உற்று நோக்கிக் கொண்டிருந்த்தார்கள்.

நானோ, வியப்பும் பாராட்டும் மட்டுமின்றி, பேரின்பமும் கனிவும் பெருக்கிட அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். கர்னலின் பூட்சுகளைக் கண்டு எனக்கு விசேஷ உளநெகிழ்ச்சி உண்டாயிற்று. அவை கன்றுக்குட்டித் தோலால் செய்த நல்ல ஜோடுகள்தாம், மோஸ்தர்படி நுனிப்புறம் கூராயில்லாமல் சப்பையானவை. பட்டாளச் செம்மான்தான் அவற்றைத் தைத்துக் கொடுத்திருக்க வேண்டும் என்பது தெளிவாய்ப புலப்பட்டது. ‘பெண்ணுக்கு நல்லுடை அணிவித்து அவளை நாலு இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே இவர் மோஸ்தர்படி அமைந்த ஜோடுகளை வாங்காமல் சாதாரண பூட்சுகளைப் போட்டுக்கொள்கிறார்’ என எண்ணினேன். அந்தச் சப்பை நுனி பூட்சுகள் என் நெஞ்சை ஒரேயடியாக உருக்கி விட்டன.

ஒரு காலத்தில் அவர் நேர்த்தியாக நடனமாடியிருக்க வேண்டும் என்பது துலக்கமாகத் தெரிந்தது. இப்போதோ, உடல் கனத்துப் போய்விட்டது, அவர் ஆடமுயன்ற  விரைவும் அழகும் வாய்ந்த ஜதிவரிசைகளுக்கெல்லாம் ஏற்றவாறு கால்களில் போதிய லாகவம் இல்லை. இருந்த போதிலும் ஒயிலாக இரண்டு சுற்று வந்தார். பின்பு அவர் கால்களைத் துடியாக அகற்றி, மறுபடி டக்கென ஒன்று சேர்த்து, ஒரு முழங்காலை – சற்று கனமாகவேதான் என்றாலும் – தரையில் ஊன்றி அமர, அவள் அவர் முழங்காலுக்கடியில் சிக்கிக்கொண்ட ஆடை நுனியைப் புன்முறுவலுடன் விடுவித்துக் கொண்டு ஒயிலாக அவரைச் சுற்றி வரவே, எல்லோரும் பலத்த கரகோஷம் செய்தார்கள். ஓரளவு சிரமத்துடன் அவர் கால்களை நிமிர்த்தி எழுந்து, மென்மையும் கனிவும் ததும்பப் புதல்வியின் காதுகளைப் பற்றி அவளுடைய நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, நான்தான் அவளது நடன ஜோடி போலும் என்று எண்ணி அவளை என் அருகே அழைத்து வந்தார். அவளது இணை நான் அல்ல என விளக்கினேன்.

”அவரோ, பரிவுடன் முறுவலித்து, வாளை உறையில் செருகியவாறே, ‘அதற்கென்ன, பரவாயில்லை. இப்போது நீங்கள் அவளுடன் சேர்ந்துகொள்ளுங்கள்’ என்றார். ”புட்டியிலிருந்து வெளிப்படும் முதல் துளியைத் தொடர்ந்து பெரிய பெருக்கு குபுகுபு வென்று கொட்டுவது போல, வாரெனிகா மீது எனக்கு உண்டான காதல் என் உள்ளத்தில் மறைந்திருந்த அன்பு செய்யும் திறனையெல்லாம் கட்டவிழ்த்து விட்டது. அந்தக் கணத்திலே நான் உலகம் முழுவதையும் காதலால் தழுவிக் கொண்டேன். வைர முடியணி பூண்ட வீட்டெஜமானி, அவள் கணவன், அவளது விருந்தாளிகள், அவளுடைய பணியாட்கள், எல்லோர் மீதும், என் மேல் காட்டமாயிருந்த எஞ்சினீயர் அனீஸிமவினிடம் கூட, அன்பு கொண்டேன். சாதாரண பூட்சுகள் அணிந்து, அவளைப் போலவே கனிந்த புன்னகையுடன் இலகிய அவளது தந்தையின் பாலோ, அப்போது எனக்குள் மகிழ்பொங்கும் மெல்லுணர்வு ஊற்றெடுத்தது.

”மஸூர்க்கா நடனம் முடிந்தது. வீட்டுக்காரர்கள் விருந்தினர்களை இரவு உண்டி உண்பதற்கு அழைத்தார்கள். கர்னல், தாம் மறுநாள் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டி யிருப்பதாகக்கூறி, வீட்டுக்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். எங்கே அவர் வாரெனிகாவையும் அழைத்துக்கொண்டு போய்விடுவாரோ என்று அஞ்சினேன். ஆனால் அவள் தன் தாயுடன் தங்கிவிட்டாள்.

”உண்ட பின்பு, அவளுடன் ஏற்கனவே பேசிவைத்துக் கொண்டபடி குவாட்ரில் நடனம் ஆடினேன். எல்லையற்ற இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்தேனாயினும், எனது இன்பம் நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டே போயிற்று. காதலைப் பற்றி நாங்கள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. அவள் என்னைக் காதலிக்கிறாளா என்று நான் அவளையோ என்னையேதானோ கேட்கவில்லை. நான் அவளைக் காதலிக்கிறேன் என்பதே எனக்குப் போதுமானதாயிருந்தது. ஏதாவது எனது இன்பத்தைக் குலைத்து விடக்கூடாதே என்று மட்டுமே அஞ்சினேன்.

”வீட்டுக்கு வந்து, மேல்கோட்டைக் களைந்து விட்டு, உறங்கலாம் என்று எண்ணியவன், அது முற்றிலும் இயலாத காரியம் என்பதைக் கண்டேன். அவளது விசிறியிலிருந்து எடுக்கப்பட்ட இறகும், அவள் தாயாரையும் அவளையும் நான் கைலாகு கொடுத்து வண்டியில் அமர்த்தி பின், விடை பெற்றுக்கொள்ளும் போது அவள் அளித்த கையுறையும் என்கையில் இருந்தன. அவற்றை நோக்கினேன். அப்போது விழிகளை மூடாமலே அவளை என் எதிரே கண்டேன்: நடனங்களுக்கிடையே இரண்டு ஆடவரில் ஒருவனைத் தேர்ந்தெடுக்கையில், எனது தன்மையை ஊகித்துக்கொண்டு, ‘கர்வமோ? ஊம்?’ என்று இனிய குரலில் மொழிந்தவாறே மகிழ்வுடன் என் புறம் கையை நீட்டிய சமயத்திலிருந்த அவளது தோற்றம் ஒரு கணம் தென்படும்; மறுகணம், இரவுச் சாப்பாட்டின் போது ஷாம்பெயின் பருகியபடியே கிளாசும் கையுமாகக் கனிந்த பார்வையுடன் அவள் என்னை நோக்கிய காட்சி தோன்றும். எல்லாவற்றையும் விட எனக்குக் கவர்ச்சி அளித்தது, தனது தந்தையுடன் ஒயிலாக இணைந்தாடியவாறு நடனம் புரிந்து கொண்டே, அவர் மீதும் தன் மீதும் கர்வமும் உவகையும் பெருக்கெடுக்க, வியந்து நோக்கும் பார்வையாளர்களை அவள் கடைக்கணித்த ஒய்யாரந்தான். என்னையுமறியாமலே அவர்கள் இருவரும் என் உள்ளத்தில் கனிவும் பரிவும் வாய்ந்த உணர்ச்சியில் ஒன்றாகிவிட்டார்கள்.

”எனது காலஞ்சென்ற சகோதரனும் நானும் அப்போது தனியாக வாழ்ந்து வந்தோம். சகோதரனுக்கு ஜனங்களுடன் பழகுவதில் விருப்பம் கிடையாது. நடனத்துக்கோ அவன் போவதே இல்லை. இப்போது தான் அவன் ‘காண்டிடேட்டு’ பரீட்சைக்குப் படித்துக் கொண்டிருந்தான், மிகமிக ஒழுங்கான வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் உறங்கிக் கொண்டிருந்தான். தலையணையில் புதைந்து, போர்வையால் பாதி மூடப்பட்டிருந்த அவனது தலையைப் பார்த்ததும் எனக்கு அன்பு கனிந்த வருத்தம் உண்டாயிற்று – நான் அனுபவிக்கும் இன்பத்தை அவன் அறியவுமில்லை, பகிர்ந்து கொள்ளவுமில்லையே என்ற வருத்தம்.

எங்களது பண்ணையடிமைப் பணியாள் பித்ரூஷ்க்கா மெழுகுவத்தி விளக்கும் கையுமாக என்னிடம் வந்து உடைமாற்றிக் கொள்வதில் எனக்கு உதவ விரும்பினான். ஆனால் நான் அவனைப் போகச் சொல்லி விட்டேன். அவனது தூங்கிவழிந்த முகமும் கலைந்த முடியும் என் உள்ளத்தை உருக்கி விட்டன. ஓசைப்படாமலிருப்பதற்காக நுனிக்காலால் நடந்து என் அறைக்குப் போய்ப் படுக்கைமீது உட்கார்ந்தேன். ஊஹும், மகிழ்ச்சிப் பெருக்கில் எனக்குத் தூக்கம் வருவதாயில்லை. கதகதப் பூட்டப்பட்ட அறைக்குள் எனக்கு ஒரே வெப்பமாயிருந்தது. உடுப்பைக் கழற்றாமலே சத்தமின்றி ஹாலுக்குச் சென்று, மேல் கோட்டைப் போட்டுக்கொண்டு வாயிற்கதவைத் திறந்து, தெருவுக்குப் போய் விட்டேன்.

”நடனம் முடிந்து நான் வெளிவந்த போது அநேகமாக ஐந்து மணி. அதன் பின் வீடு திரும்பி, வீட்டிலே உட்கார்ந்திருந்ததில் இன்னும் இரண்டு மணி நேரம் கழிந்திருந்தது. ஆகவே, நான் தெருவுக்கு வந்தபோது வெளிச்ச மாகிவிட்டது. ‘ஷ்ரோவ்டைட்’ விழாக்காலத்துக் கேற்ற பருவ நிலை: மூடுபனி அடர்ந்திருந்தது; தெருக்களில் ஈர வெண்பனி உருகிக் கொண்டிருந்தது; எல்லக் கூரைகளிலிருந்தும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. அந்த நாட்களிலே வாரெனிகாவின் குடும்பத்தார் நகர எல்லைக்கு வெளியே, பெரிய வயலின் ஓரத்திலிருந்த வீட்டில் வசித்து வந்தார்கள். வயலின் ஒரு கோடியில் உலாவு திடலும் மறு கோடியில் பெண்கள் பள்ளியும் இருந்தன. வெறிச்சோடிக் கிடந்த எங்கள் சந்தைக் கடந்து நான் பெரிய தெருவுக்கு வந்தேன்.

அங்கே கால்நடையாகச் செல்பவர்களும், ஸ்லேட்ஜ்களில் விறகேற்றிக் கொண்டு வரும் வண்டிக்காரர்களும் எதிர்ப்பட்டார்கள். ஸ்லேட்ஜ்களின் அடிச் சட்டங்கள் நடைபாதைவரை வெண்பனியைச் செதுக்கிக் கொண்டு போயின. என் கண்களுக்கு எல்லாமே – வார்னிஷ் அடித்த நுகங்களுக்கு அடியில் ஈரத் தலைகளை லயத்துடன் அசைத்தாட்டிச் சென்ற குதிரைகள், மரவுரிப் பாய்களைத் தோள்கள் மேல் போர்த்து, பிரம்மாண்டமான பூட்சுகள் அணிந்து, ஸ்லேட்ஜ்களுக்கு அருகாக நளுக்குப் பனிச் சேற்றில் சளப்சளப்பென்று நடந்து சென்ற வண்டிக்காரர்கள், தெருவின் இரு மருங்கிலும் மூடுபனியில் மிக உயரமாகத் தென்பட்ட வீடுகள் –எல்லாமே வெகு இனியவையாகவும், பொருள் பொதிந்தவையாகவும் இருந்தன.

”அவர்கள் வீடு இருந்த வயலை அடைந்ததும், உலாவு திடல்பக்கத்துக் கோடியில் பெரியதும் கரியதுமாக எதையோ கண்டேன், குழலும் டமாரமும் ஒலிக்கக் கேட்டேன். எனது இதயம் இவ்வளவு நேரமும் இசைத்துக் கொண்டுதான் இருந்தது; அவ்வப்போது மஸூர்க்கா நடன இசை என் காதுகளில் ஒலிக்கும். ஆனால் இது ஏதோ வேறு, கொடிய, கெட்ட இசை.

” ‘என்ன அது?’ என்று எண்ணிய நான் வயல் நடுவே சென்றிருந்த சறுக்கு வண்டித் தடத்தோடு நடந்து, ஒலிகள் வந்த திக்கை நோக்கிப் போனேன். ஒரு நூறடி நடந்ததும் பனி மூட்டத்திற்கிடையே எத்தனையோ மனிதர்களின் கரிய வடிவங்கள் எனக்குத் தென்பட்டன. படைவீரர்களாயிருக்க வேண்டும். ‘ஆமாம், கவாத்து பழகுகிறார்கள்’ என்று நினைத்து, எண்ணெய்க் கறை படிந்த ஏப்ரனும் கோட்டுமாக ஏதோ மூட்டையைச் சுமந்து சென்று கொண்டிருந்த கருமான் ஒருவனுடன் மேலே நடந்து அவர்களை அணுகினேன். கறுப்புக் கோட்டுகள் அணிந்த படைவீரர்கள், துப்பாக்கிகளைக் கால்களுக்கருகே நாட்டியவாறு இரண்டு வரிசைகளில் எதிரும் புதிருமாக அசையாமல் நின்றார்கள். அவர்களுக்குப் பின்னே நின்ற குழலூதுபவனும் டமாரம் அடிக்கும் பையனும் வேதனை தரும் கர்ண கடூரமான மெட்டை மறுபடி மறுபடி ஒலித்துக் கொண்டிருந்தார்கள்.

” ‘என்ன செய்கிறார்கள் இவர்கள்?’ என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கருமனை வினவினேன்.

”இரட்டை வரிசையின் மறு கோடியை உறுத்து நோக்கியபடியே, ‘தப்பியோடப் பார்த்த தாத்தார் ஒருவனை இழுத்து வருகிறார்கள்’ என்று முறைப்புடன் பதிலளித்தான் கருமான்.

”நானும் அதே திக்கில் பார்வையைச் செலுத்தியவன், இரு வரிசைகளுக்கும் நடுவே, பயங்கரமான ஏதோ ஒன்று என் பக்கமாக வந்து கொண்டிருக்கக் கண்டேன். என்னை நெருங்கிக் கொண்டிருந்தவன் இருமருகிலும் இரண்டு சிப்பாய்கள் பிடித்துக் கொண்டிருந்த துப்பாக்கியுடன் சேர்த்துக் கட்டப்பட்டு, இடுப்புக்கு மேல் வெற்றுடம்பாயிருந்த ஒரு மனிதன். இராணுவ மேல்கோட்டும் தொப்பியும் அணிந்த உயரமான அதிகாரி அவனருகே வந்து கொண்டிருந்தான். அதிகாரியின் உருவம் எனக்கு அறிமுகமானதாகப் பட்டது.

கைதி, இரு புறமிருந்தும் மாறி மாறிப் பொழிந்த அடிகளைப் பட்டுக் கொண்டு, உடம்பெல்லாம் துடிதுடித்து நெளிய, உருகும் வெண் பனியில் பாதங்கள் சளப்பிட, ஒரு கணம் பின்னே சாய்வதும் மறுகணம் முன்னே குனிவதுமாக என் பக்கம் நெருங்கினான். துப்பாக்கியைப் பிடித்திருந்த சிப்பாய்கள் அவன் பின்னே சாயும் போது இழுத்து முன்னுக்குத் தள்ளுவதும் முன் சரியும் போது அவன் விழுந்து விடாதபடிச் சுண்டி இழுப்பதுமாயிருந்தார்கள். உயரமான அதிகாரி பின் தங்கிவிடாமல் உறுதியாக எட்டு வைத்து அவனைத் தொடர்ந்து வந்தான். செக்கச் சிவந்த முகமும், நரை மீசையும் கிருதாவுமாக விளங்கிய அந்த அதிகாரி வாரெனிகாவின் தந்தையே தான்.

”ஒவ்வோர் அடி விழும்போதும் கைதி வேதனையால் சுளித்த முகத்தை அடி வந்த பக்கமாக வியப்புற்றவன் போலத் திருப்பி, வெண் பல்வரிசைகள் தெரியக் காட்டி, ஏதோ ஒரே மாதிரியான வார்த்தைகளைத் திருப்பித்திருப்பிச் சொன்னான். அவன் எனக்கு மிக அருகே நெருங்கிய பின்புதான் அந்தச் சொற்கள் என் செவிக்கு எட்டின. அவன் பேசவில்லை, ‘அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள். அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள்’ என்று தேம்பினான். ஆனால் அண்ணன்மார் இரக்கங் காட்ட வில்லை. அவர்கள் எனக்கு நேர் எதிராக வந்ததும், ஒரு சிப்பாய் தீர்மானத்துடன் முன்னே அடியெடுத்து வைத்து, பிரம்பை ஓங்கி ‘உஷ்’ ஷென்று  இரையும் படி முழுவலிமையுடன் தாத்தாரின் முதுகில் சொடேரென விளாறியதைக் கண்டேன். தாத்தார் முகங் குப்புறச் சரிந்தான், ஆனால் துப்பாக்கியைப் பிடித்திருந்த சிப்பாய்கள் அவனைச் சுண்டி இழுத்து நேராக்கி விட்டார்கள்.

பின்பு மறு பக்கத்திலிருந்து அதே போன்ற அடி, பிறகு இப்புறமிருந்து, பின் அப்புறமிருந்து… கர்னல் ஒரு கணம் தனது பாதங்களைப் பார்ப்பதும், மறு கணம் கைதியை நோக்குவதும், ஆழ்ந்து மூச்சு இழுத்து விடுவதும், கன்னங்களைக் காற்றால் உப்பிக் கொண்டு, குவிந்த உதடுகள் வழியே மெதுவாகக் காற்றை ஊதுவதுமாக, தாத்தாரின் அருகே நடந்து வந்தான். அவர்கள் நான் நின்ற இடத்தைக் கடந்து செல்கையில், படைவீரர் வரிசையின் இடை வழியே கைதியின் முதுகு சட்டேன என் பார்வையில் பட்டு மறைந்தது. கம்பி கம்பியாகத் தழும்பிட்டு, சொதசொதத்து, செக்கச் செவெலென்று, இனங்கண்டு கொள்ள முடியாததாயிருந்த அந்தப் பயங்கரம், மனித உடலின் அங்கம் என்று நம்பவே எனக்கு இயலவில்லை.

” ‘ஐயோ ஆண்டவனே!’ என முணுமுணுத்தான் என் பக்கத்தில் நின்ற கருமான்.

”அவர்கள் மேலே நடந்தார்கள். இடறிவிழுந்து தள்ளாடித் தவித்துத் துடித்துக் கொண்டிருந்த மனிதன் மீது இரு புறமிருந்தும் அடிகள் முன்போலவே விழுந்த வண்ணமாயிருந்தன, முன்போலவே டமாரம் ஒலித்தது, குழல் இசைத்தது, கர்னலின் வாட்டசாட்டமான, மிடுக்கான உருவம், கைதியின் அருகே முன் போலவே உறுதியாக அடிவைத்து  நடந்தது. திடீரெனக் கர்னல் நின்று, ஒரு சிப்பாயை விரைந்து நெருங்கினான்.

” ‘குறி தவறுகிறதோ? இதோ காட்டுகிறேன் உனக்கு! ஊம்? இனிமேல் தவறுவாயா? தவறுவாயா குறி? ஊம்?’ என்று அவன் இரைந்ததைக் கேட்டேன்.

”அந்தப் பக்கம் நோக்கியவன், ‘ஸ்வீட்’ கையுறையணிந்த கர்னலின் வலிய கரம் சிறுகூடான, நோஞ்சல் சிப்பாயின் முகத்தைப் புடைக்கக் கண்டேன் – அந்த மனிதன் தாத்தாரின் வழன்று சிவந்த முதுகில் போதிய உரத்துடன் பிரம்பால் அடிக்கவில்லை என்பதற்காக.

” ‘புதுப் பிரம்புகள் வரட்டும்!’ என்று கூவினான் கர்னல். இப்படிச் சொல்லிவிட்டுத் திரும்பியவன் என்னைப் பார்த்துவிட்டான். என்னை அடையாளந் தெரிந்துகொள்ளாதது போலப பாவனை செய்து, குரூரமும் சினமும் பீரிட முகத்தைச் சுளித்து, சட்டெனத் திரும்பிவிட்டான். எனக்கு ஒரேயடியாக ஏற்பட்ட வெட்கத்தில், ஏதோ அவமானகரமான இழிசெயல் புரிந்து விட்டவன் போன்று, எங்கே பார்ப்பது என்று தெரியாமல், தலை கவிழ்ந்து விரைவாக வீட்டைப் பார்க்க நடந்தேன். டமாரத்தின் அதிரலும், குழலின் கீச்சொல்லியும், ‘அண்ணன்மாரே, கொஞ்சம் இரக்கங் காட்டுங்கள்’ என்ற சொற்களும், கர்னலின் தன்னம்பிக்கை நிறைந்த கோபக் குரல், ‘இனிமேல் தவறுவாயா? தவறுவாயா குறி? ஊம்?’ என்று இரைவதும் ஒன்று மாற்றி ஒன்றாக வழி நெடுகிலும் என் காதில் கேட்டுக் கொண்டிருந்தன.

இவற்றால் எனது நெஞ்சில் உடல் வலி போன்ற, குமட்டலுண்டாக்கும் வேதனை ஏற்படவே, நான் பலதடவை நின்று நின்று போக வேண்டியதாயிற்று. நான் கண்ட காட்சி என்னுள் நிறைத்திருந்த ஆபாசமெல்லாம் இதோ, இதோ வாந்தியாக வெளிவந்துவிடப் போகிறது எனப் பட்டது. எப்படி வீடு சேர்ந்தேனோ, கட்டிலில் படுத்தேனோ, அறியேன். ஆனால் தூக்கம் வர ஆரம்பித்ததுமே எல்லா நிகழ்ச்சிகளும் மீண்டும் தோற்றமளித்தன, செவியில் ஒலித்தன. நான் துள்ளியெழுந்தேன்.

” ‘எனக்குத் தெரியாதது எதுவோ அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்பது தெளிவு’ எனக் கர்னலைப் பற்றி எண்ணமிட்டேன். ‘அவருக்குத் தெரிந்திருப்பது எனக்குத் தெரிந்திருந்தால் நான் கண்டதைப் புரிந்து கொண்டிருப்பேன், அது எனக்குத் துன்பமளித்திருக்காது’ என்று நினைத்தேன். ஆனால் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும், கர்னல் அறிந்திருப்பது என்ன என்பதை என்னால விளங்கிக் கொள்ள முடியவில்லை. மாலையில் தான் எனக்கு உறக்கம் பிடித்தது – அதுவும் ஒரு நண்பன் வீட்டுக்குப் போய் முழு போதையேறும் வரை குடித்த பின்பே.

”நான் கண்டது ஏதோ கெட்ட விஷயம் என்று நான் அப்போது முடிவு செய்ததாக நினைக்கிறீர்களோ? கிடையவே கிடையாது. ‘இதெல்லாம் இவ்வளவு நிச்சயத்துடன் செய்யப்பட்டு, அவசியமான தென்று எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறது என்றால், எனக்குத் தெரியாத ஏதோ ஒன்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று ஆகிறது’ – இவ்வாறு எண்ணி, அது என்ன விஷயம் என அறிந்து கொள்ள முயன்றும் என்னால் இதை அப்போதும் சரி, அப்புறமும் சரி, தெரிந்து கொள்ளவே முடியவில்லை. அதற்கு முன் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரியத் தீர்மானித்திருந்தேன். ஆனால், இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமல் இராணுவத்தில் சேர என்னால் முடியவில்லை. இராணுவத்தில் பணி புரியாதது மட்டுமல்ல, எங்குமே பணி புரியவில்லை. விளைவாக, நீங்கள் காண்பது போலவே, ஒன்றுக்கும் உதவாதவனாகிவிட்டேன்.”

”ஓகோகோ, நீங்கள் எப்படி ஒன்றுக்கும் உதவாதவராகி விட்டீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். நீங்கள் மட்டும் இல்லாவிட்டால் எத்தனையோ பெயர் ஒன்றுக்கும் உதவாதவர்கள் ஆகியிருப்பார்கள் என்று சொல்லுங்கள். அதுதான் உண்மை” என்றான் எங்களில் ஒருவன்.

”இதுதான் அடிமுட்டாள் பேச்சு” என்று உண்மையான சள்ளையுடன் சொன்னார் இவான் வஸீல்யெவிச்.

”கிடக்கட்டும். காதல் என்ன ஆயிற்று?” என்று கேட்டோம்.

”காதலா? அந்த நாள் முதல் காதல் கொஞ்சங் கொஞ்சமாகத் தேய்ந்து போய்விட்டது. வழக்கமாகச் செய்வது போல அவள் முகமெல்லாம் புன்னகை ஒளிர, சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் போது, வயலில் கண்ட கர்னலின் தோற்றம் அக்கணமே எனக்கு நினைவுக்கு வந்துவிடும். அவ்வளவுதான், அசட்டுப் பிசட்டென்று சங்கடமாயிருக்கும் எனக்கு. வர வர, அவளைப் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். காதல் மங்கி மாய்ந்து போயிற்று. அதுதான் சொல்கிறேன், இந்த மாதிரிச் சம்பவங்கள் நிகழ்கின்றன, இவற்றினாலேயே மனிதனின் வாழ்க்கை மாறி விடுகிறது, நடத்தப்படுகிறது என்று. நீங்கள் என்னடா வென்றால் சுற்றுச் சார்பு என்கிறீர்கள்.” இவ்வாறு கூறி முடித்தார் இவான் வஸீல்யெவிச்.

______________________________________________________________________________

லியோ டால்ஸ்டாய் ( லேவ் தல்ஸ்தோய்)

லகப் புகழ்பெற்ற எழுத்தாளர். போரும் சமாதானமும், அன்னா  கரேனினா, மறு உயிரிப்பு முதலிய நாவல்கள் புகழ் பெற்றவை. “நடனத்திற்கு பின்” என்ற கதை (1903) அவரது இறுதி காலப் படைப்புக்களில் ஒன்று

_______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

மார்ச் 23 தியாகிகள் தினம்: நினைவுக்கு உயிர் கொடு!

6
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு
பகத் சிங் - சுகதேவ் - ராஜகுரு

மார்ச் 23 – பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவுநாள்.

இன்னும் எத்தனை வார்த்தைகள்
நமக்காக பேசியிருப்பானோ!
தூக்குக் கயிறு அதற்குள்
பகத்சிங்கின் தொண்டையை இறுக்கியது.

இன்னும்,
எத்தனை உணர்ச்சிகளை
உருவாக்கியிருப்பானோ!
அதற்குள்,
ராஜகுருவின் கண்களை
பிதுக்கிவிட்டது கயிறு.

இன்னும் எத்தனை தூரம்
மக்களைத் திரட்ட நடந்திருப்பானோ?
அதற்குள்,
துடித்து அடங்கிவிட்டன
சுகதேவின் கால்கள்.

சட்லெஜ் நதியில்
கரைந்த சாம்பல்
முல்லைப் பெரியாறில்
முழங்கும்போது,

லாகூர் சிறையில்
முழங்கிய குரல்கள்
இடிந்தகரையில்
எதிரொலிக்கும்போது,

அவர்கள் இல்லையென்று
எப்படிச் சொல்வது?

நாலாபக்கமும்
சுற்றி வளைக்கப்பட்டிருக்கும்
இடிந்தகரை
இன்னுமொரு ஜாலியன்வாலாபாக்காய்
நம் கண்ணில் தெரியுது!

கூட்டப்புள்ளியில் படகினிலேறி
சீருடை கயவரை
துடுப்பினில் ஒதுக்கி,
இடிந்தகரையினில் கால்வைக்கும் துணிச்சலில்
இருக்குது பகத்சிங், சுகதேவ், ராஜகுரு உணர்ச்சிகள்!

போராடும் மக்களுக்கு
மின்தடை, பஸ்தடை, பால்தடை
என வெறியாடும் போலீசின்
பயங்கரவாதத்துக்கு மத்தியில்,

உண்ணாவிரதப் பந்தலில்
தாயின் பசியறிந்து
தானும் நீரருந்தி
சகல படைகளுக்கும் சவால்விட்டு
பயமறியா குழந்தைகளின்
பார்க்கும் விழிகளில்
பகத்சிங்கின் போர்க்குணம் தெரியுது!

கொளுத்தும் வெயிலில்
கண்கள் செருகுது,
கண்ணிமை நுனியில்
பொழுதுகள் கருகுது

முன்னேறும் போலீசை தடுக்கும்
அந்த மூதாட்டியின்
போராட்டக் குரலில்…
சுகதேவின் தீவிரம் தெரியுது!

என்னமாய் படையைக் குவித்தாலும்
துரோகி கருணாநிதி, ஜெயலலிதா இணைந்தாலும்
தெலுங்கானா போராட்டம் போலவே
மார்க்சிஸ்டும், தா.பாவும் காட்டிக் கொடுத்தாலும்
இன்னுமென் உயிர் உள்ளவரை
அந்நியன் கால் மிதிபட்டு
என் தாய்மண் அழுக்கடைய
அனுமதியோம்! என
திண்ணமாய் போரிடும்
தெக்கத்திச் சீமை இளைஞர்களின் ஆவேசத்தில்
ராஜகுருவின் பிடிவாதம் தெறிக்கிறது!

சுற்றி வளைக்கப்பட்டது
முள்ளிவாய்க்கால்!
கழுத்து இறுக்கப்படுகிறது
இடிந்தகரை!

மறுகாலனியச் சுருக்கில்
மாட்டித் தவிக்கிறார்கள் மக்கள்.

இப்படியொரு சூழலில்,
சும்மாய் நினைவுகளை
சுமந்து நிற்பது
பகத்சிங்கிற்கு பாரம்!

நீ பகத்சிங்காய் இயங்குவதொன்றே
பகத்சிங் பார்வையில் நியாயம்!

__________________________________________

–  துரை. சண்முகம்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: