Sunday, August 10, 2025
முகப்பு பதிவு பக்கம் 807

ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்!

124


“கலியுகத்துல நாடு கெட்டுப் போச்சே”ன்னு அவாள்கள் அவ்வப்போது சபிப்பது வழக்கம். இந்த கலியுகப் புலம்பலில் மற்ற பிரச்சினைகளை விட இந்துத்தவத்திற்கு மட்டும் டன் கணக்கில் வில்லங்கம் வந்து சேர்கிறது. நித்தியானந்தா பள்ளியறை பலாபலன்களால் நாடே சிரிப்பாய் சிரித்த அதே பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

ஜனவரி, 2009 இல் மங்களூரு பஃப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது சிரிராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்துகொண்டது. இப்போது இதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.

இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கம் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.

உரையாடலிலிருந்து சில பகுதிகள்:

நிருபர்: நான் பிரபலமானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்கள், எனக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். இந்த கலவரத்திற்காக நான் போலீசில் புகார் கொடுக்கமாட்டேன், இது நமக்குள்ளே மட்டும் நடக்கும் விசயம். முன்பணமாக எவ்வளவு தரவேண்டுமென்று சொல்லுங்கள், கொடுத்துவிடலாம்.

(இந்த வேலையைச் செய்வதற்கு தயாரான முத்தாலிக் அதற்கான ஏற்பாடுகளை பெங்களூருவிலேயே செய்துவிடலாமென்று சம்மதிக்கிறார்.)

நிருபர்: ஐயா, இதை நான் உறுதி செய்து கொள்ளவேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சில நாட்கள் கழித்துக் கூட நான் வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்குமென்று தெரிந்தால் நான் அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.

முத்தாலிக்: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களது கிளைத் தலைவர்…..

நிருபர்: பெங்களூருவில்…?

முத்தாலிக்: ஆமாம், பெங்களூருவில்தான். அவர், வசந்த் குமார் பவானி, பலமான கை. அவரோடு அறிமுகமாகியிருக்கிறீர்களா?

(இறுதியில் முத்தாலிக் கலவரத்தை நடத்துவதற்கு ஒப்புதல் தந்த உடன் மிச்சிமிருந்த ஒரே வேலை தொகையை நிர்ணயம் செய்வதுதான். அதற்கு முத்தாலிக் தனது தளபதிகளான பிரசாத் அட்டாவர் (சேனாவின் தேசிய துணைத் தலைவர்), மற்றும் வசந்த்  குமார் பவானி (சேனாவின் பெங்களூரு தலைவர்) இருவரையும் சந்திக்க சொல்கிறார். இதில் அட்டாவர் என்பவனை சிறையில் சந்திக்கிறார் நிருபர்.)

நிருபர்: நாங்கள் பதினைந்து இலட்சமாக கொடுத்து விடுகிறோம்.

அட்டாவர்: ஆமாம் ஆமாம்? இருந்தாலும் நான் அதை கணக்கட்டு சொல்கிறேன்.

(நிருபர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இருமுறையும், பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்து பேசுகிறார்கள். அட்டாவரும் மங்களூர் பஃப்பில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல செய்துவிடலாமென்று உறுதி கூறுகிறார்.)

அட்டாவர்: எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்வேன்.

நிருபர்: கலவரத்திற்கு எத்தனை நபர்களை கொண்டுவருவீர்கள்?

அட்டாவர்: ஐம்பது.

நிருபர்: ஆக கலவரம் செய்ய ஐம்பது பேர் வருவார்கள்?

அட்டாவர்: நிச்சயமாக. மங்களூர் பஃப்பில் நடந்த மாதிரிதான்.

(ஆனால் கலவரத்தை எப்படி பக்காவாக நடத்த வேண்டுமென்று சொன்னவர் சேனாவின் பெங்களூரு தலைவர் பவானிதான். அவரது உரையாடலைப் பாருங்கள்.)

பவானி: கண்காட்சியைத் திறப்பதற்கு மும்தாஸ் அலியைக் கூப்பிட முடியுமா?

நிருபர்: யார் அது?

பவானி: அவர்தான் கர்நாட வக்ப் போர்டு உறுப்பினர்.

(விசயம் இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் முத்தாலிக் தனது இமேஜூக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார்.)

முத்தாலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ விழுமியங்களின் ஆதரவாளனென்று சமூகத்தில் எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.

நிருபர்: ஆனால் ஐயா, இது யாருக்கும் தெரியாது.

முத்தாலிக்: எல்லாம் சரிதான். ஆனால் எனது மனசாட்சி நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்று எச்சரிக்கிறது.

நிருபர்: எம்.எப். ஹூசைன் மற்றும் மற்றவர்களது கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அது போல.

முத்தாலிக்: ஆமா ஆமாம்.

நிருபர்: அதே மாதிரி என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ, மங்களூருவிலோ இல்லை முசுலீம்கள் இருக்கும் எப்பகுதியிலும் இருக்கலாம்.

முத்தாலிக்: என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள்? அது மங்களூர், பெங்களூரு இரண்டிலும் செய்ய முடியும்.

நிருபர்: அறுபது இலட்சம் போதுமா?

முத்தாலிக்: இதை யார் உங்களுக்கு சொன்னார்கள்?

நிருபர்: வசந்த்ஜியுடன் பேசியிருக்கிறோம்.

முத்தாலிக்: பணத்தை நான் உறுதி செய்ய முடியாது. அது அவர்களின் (சேனாவின் மற்ற தலைவர்கள்) வேலை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மேற்கண்ட உரையாடலிலிருந்து ராம சேனாவின் தலைவர் முத்தாலிக்கும் அவரது சகபாடிகளும் கூலிக்கு கலவரம் செய்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி பிரமோத் முத்தாலிக்கின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.

______________________________________________

கர்நாடக மாநிலம், பெலகாம் மாவட்டம், ஹுக்கேரியில் பிறந்த முத்தாலிக்கின் தற்போதைய வயது 47. பதிமூன்று வயதாக இருக்கும்போது 1975இல் ஆர்.எஸ்.எஸ்இல் சேர்கிறார். 2004இல் பஜ்ரங்க தள்ளின் தென்னிந்திய அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். தேர்தல் அரசியலில் நுழைந்து ஒரு ஆளாக விரும்பினாலும் இவருக்கு பா.ஜ.க சீட்டு கொடுக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த முத்தாலிக் 2005இல் பஜ்ரங்தளத்தை விட்டு விலகுகிறார். அதே ஆண்டு சிவசேனாவின் கர்நாடக மாநில தலைவராக உருவெடுக்கிறார். பிறகு அதிலிருந்து விலகி 2006இல் ராஷ்ட்ரிய இந்து சேனாவை ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுக்க சுற்றுப் பிரயாணம் செய்து இந்துவெறிப் பேச்சாளராக பிரபலமாகிறார். இதில் மட்டும் இவர் மீது பதினொரு மாவட்டங்களில் வழக்கு இருக்கிறது. 2008இல் சிரிராம் சேனா ஆரம்பித்ததும்தான் முத்தாலிக் நாடு அறிந்த தலைவராக பிரபலம் ஆகிறார்.

முத்தாலிக்கின் சிறிராம சேனாவின் கைங்கரியங்கள் சில:

  • 2009 ஜனவரியில் இந்து கலாச்சாரத்திற்கு விரோதமென்று கூறி மங்களூர் பஃப்பில் பெண்களை அடித்து கலவரம் செய்தார்கள். இதில் முத்தாலிக்கும் 27 பேர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
  • ஆகஸ்ட்டு 2008 இல் சேனாவின் குண்டர்கள் எம்.எப்.ஹூசைனது கண்காட்சியை டெல்லியில் வைத்து தாக்கி கலவரம் செய்தார்கள்.
  • 2008 இல் மதமாற்றம் என்று குற்றம் சாட்டி கர்நாடகாவின் பல கிறித்தவ தேவாலயங்களை தாக்குகிறார்கள். 2009இல் ஆறு தேவாலயங்களை அடித்து நொறுக்குகிறார்கள்.
  • 2009 பிப்ரவரியில் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை பிடித்து திருமணம் செய்து வைக்கப் போவதாக முத்தாலிக் அறிவித்தார். இதை எதிர்த்து சில பெண்கள் அமைப்புகள் முத்தாலிக்கு பிங்க் நிற ஜட்டியை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்தன. இது நாடெங்கும் ஆதரவை ஏற்படுத்தியது.

________________________________________

நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாகிப் போன காதலர்தினம், பஃப் இரண்டையும் பாரதக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று முத்தாலிக் செய்த பிரச்சாரம் நடுத்தர வர்க்க பெற்றோர்களான இந்துக்களின் ஆதரவைப் பெறாமலில்லை. இளையவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்றாலும் பொதுவில் இந்துக்களின் சாம்பியனாக காட்டிக் கொள்ள இந்தப் போராட்டங்கள் கைகொடுத்திருக்கின்றது. மேலும் மேட்டுக்குடியின் நிகழ்ச்சி நிரலில் இத்தகைய தாக்குதல்கள் வந்த உடன்தான் தேசிய ஊடகங்கள் இதை கவனம் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்தன. மங்களூரு பஃப்பில் சுமார் 25 குண்டர்களை வைத்தே நடத்திய தாக்குதல் முத்தாலிக் பிரபலம் ஆவதற்கு போதுமானதாக இருந்தது.

இத்தகைய சிறு கும்பலை வைத்து ரகளை செய்யும் இந்தக் கூட்டத்தை இருக்கும் சட்டப்பிரிவுகளின் படியே கூட எளிதாக முடக்க முடியும். ஆனால் அதைச்செய்ய எந்த அரசும் துணியவில்லை என்பதை எந்த ஊடகங்களும் எழுதவில்லை. மேலும் கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரவணைக்கும் வேலையை செய்து வந்தது. இந்துத்தவா கும்பலில் இருக்கும் தீவிர இளைஞர்களை அணிதிரட்டும் வேலையை இவர்கள் செய்துவருகிறார்கள் என்பது பா.ஜ.க கும்பலுக்கு ஒரு போட்டியாக இருக்கிறது.

காதலர் தினத்திற்கு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா என நாடு முழுக்க இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், இந்த சிறு கும்பல்களை அடக்காமல் அரசு விட்டுவைப்பதும், ஊடகங்கள் இவர்களை பிரம்மாண்டமான சக்தி உடையவர்களாக விளம்பரம் கொடுப்பதும் தான் இவர்கள் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றது.

காசுவாங்கிக் கொண்டு இவர்கள் எதுவும் செய்வார்கள்  என்பது கூட புதிதில்லைதான். ஏனென்றால் விசுவ இந்து பரிஷத்தின் வேதாந்தி கூட ஹவாலா ஊழலில் கேமராவின் முன்னர் சிக்கியவர்தான். விசுவ இந்து பரிஷத் இயக்கம்தான் நாட்டிலேயே மிக அதிகமான வெளிநாட்டுப் பணத்தைப் பெறும் தன்னார்வ அமைப்பாகும். இந்தப் பணத்திற்கு முறையான கணக்குகள் எதுவுமில்லை என்பதுகூட ஊடகங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவ வேகம் போதுமானதல்ல என்ற போட்டியின் விளைவாகத்தான் சிரிராம் சேனா, இந்துமக்கள் கட்சி போன்றோர் தோன்றி பிரபலமாகிறார்கள் என்பது உண்மைதான். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நேரடியாக மறுகாலனியாதிக்கத்தின் மூலம் பெரும் ஆதாயத்தை அடையும் போது இந்தப் போட்டிக் கூட்டம் இந்துத்தவக் கற்பை முன்வைத்து இப்படி சில்லறை ஆதாயங்களை அடைகிறது. ஐ.பி.எல் ஊழலைக் காப்பதற்கு பா.ஜ.கவின் அருண் ஜெட்லி துணிவதும், பாரதா மாதாவின் கற்பைக் காப்பதற்கு காதலர் தினத்தை சிரிராம் சேன எதிர்ப்பதும் வேறு வேறல்ல.

இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன.

பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

புதிய ஜனநாயகம் – மே, 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!


புதிய ஜனநாயகம் மே 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. பத்திரிகை செய்தி “மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்!” -மாநில அமைப்புக் கமிட்டி, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)-இன் எட்டாவது பிளீனச் சூளுரை.
  2. சிதம்பரத்தின் காட்டுவேட்டைக்கு மாவோயிஸ்டுகளின் பதிலடி
  3. பசியைப் போக்குமா? பட்டினியில் தள்ளுமா?
  4. ரவுடி போலீசாருக்கு அரணாக நிற்கும் கருணாநிதிக்குக் கருப்புக் கொடி! வழக்குரைஞர்களின் கலகம்!
  5. கோக் எதிர்ப்பு: பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி!
  6. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமா? ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனமா?
  7. நக்சல்பாரி புரட்சி நாயகன் தோழர் கனு சன்யாலுக்கு வீரவணக்கம்!
  8. இராணுவச் செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?
  9. முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குலுங்கியது புதுச்சேரி!
  10. “கழுதைக்குத் தெரியுமா? கற்பூர வாசனை?” -தியாகிகள் நினைவிட இடிப்புக்கு எதிராகக் கண்டன ஆர்ப்பாட்டம்.
  11. நிதிச் சூதாட்டத்தால் திவாலானது கிரீஸ்!
  12. “டி.ஆர்.பாலுவின் சாராய ஆலைக்கு எதிரான வடசேரி மக்களின் போராட்டம் ஓங்கட்டும்!” -அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
  13. முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு விழுந்த முதல் அடி! ஓசூர் கமாஸ் வெக்ட்ரா தொழிலாளர் போராட்டம் வெற்றி!
  14. பாசிச மோடிக்குப் புரியுமா, ஒரு தாயின் பரிதவிப்பு!
  15. காவிக் கறை படிந்த தீர்ப்புகள்
  16. இருதலைக் கொள்ளி எறும்பாய் ஐதராபாத் நகரம்
  17. காமுகர்களின் கூடாரமாகக் கத்தோலிக்கத் திருச்சபை!
  18. பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வேட்டைக் காடாகிறது இந்தியா!
  19. “மின்கட்டண உயர்வைத் திணிக்க கருத்துக் கேட்பு நாடகமாடாதே!” -புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்

புதிய ஜனநாயகம் மே 2010 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

பட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியக் குழந்தைகள்: நாட்டிற்கே அவமானம்!

  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 19.5 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 6.1 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியின்றி உள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் உயரத்துக்கு ஏற்ற எடையின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 7.1 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 2.5 கோடி குழந்தைகள் உயரத்துக்கு ஏற்ற எடையின்றி உள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள ஏழை நாடுகளில் வயதுக்கு ஏற்ற எடையின்றி வாழும் ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளின் எண்ணிக்கை 12.9 கோடி.
    இதில் இந்தியாவில் மட்டும் ஏறத்தாழ 5.4 கோடி குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடையின்றி உள்ளனர்.

ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த பல ஏழை நாடுகளை விட, “வல்லரசு” இந்தியா பட்டினி இந்தியாவாக இருக்கிறது என்பதைத்தான் இந்தப் புள்ளிவிவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.
ஒருபுறம்,  நிரம்பி வழியும் இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகள்; இன்னொருபுறமோ, பல கோடி இந்தியக் குழந்தைகள் பட்டினிச் சாவை எதிர்கொண்டுள்ள அவலக் காட்சி.  ஏழைக் குழந்தைகளின் பட்டினியைப் போக்கப் பயன்படாத இந்த உணவு தானியக் கையிருப்பு யாருக்குப் பயன்படப் போகிறது?  அதோ, உணவு தானியங்களை ஏற்றுமதி செய்து அமெரிக்க டாலரைச் சம்பாதிக்கும் “பசியோடு” காத்துக் கிடக்கிறார்கள் முதலாளிகள்; மன்மோகன் சிங்கின் கண்ணசைவிற்காக!

புதிய ஜனநாயகம் – மே 2010

vote-012

தொடர்புடைய பதிவுகள்

கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!

213

அறியப்படாத மேற்கு தமிழகத்தின் ஆதிக்க சாதிவெறி!

vote-012சாதிக்கலவரம், சாதிப் பிரச்சினை என்றாலே நம் எல்லோரின் நினைவுக்கு வருவது தென் மாவட்டங்கள்தான். சாதிவெறியர்கள் என்றாலே அது தேவர் சாதிவெறி என்றுதான் நினைவுக்கு வருகிறதே தவிர ஏனைய ஆதிக்க சாதிகள் குறித்த பார்வை பெரும்பாலும் மக்களிடத்தில் எடுத்துச் செல்லப்படவில்லை என்றே தோன்றுகிறது.

முக்கியமாக தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இருக்கும் ஆதிக்க சாதிவெறியர்களின் கொடுமைகள் அதிகம் பேசப்படுவதில்லை. அப்படித்தான்  கொங்கு பகுதிககளில் நடக்கும் சாதிக்கொடுமை சந்திக்கு வருவதே இல்லை. கொங்குப் பகுதிகளில் அதிகம் வசிக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் வன்னியர்களை கவுண்டர் என்று இன்றளவும் அழைப்பதில்லை.

ஆனால் வன்னியர்கள் அதிகம் வாழும் கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் கவுண்டர் என்றால் அது வன்னியரையும் குறிக்கிறது. “கவுண்டர்ன்னா வெள்ளாளக்கவுண்டரா?” என்று கேள்வி கேட்டால் அவர்கள் முகம் கோணலாகி இல்லை படையாச்சி என்று செருமுவதை பல இடங்களில் கேட்க முடியும். என்னதான்  பணக்காரனாயிருந்தாலும் வன்னியர்கள்,  கொங்கு வேளாளக் கவுண்டருக்கு முன் ‘கீழ்சாதி’தான். வேளாளக் கவுண்டர்கள் “பள்ளி பசங்க” என்று வன்னியர்களை திட்டுவது சாதரணமான ஒன்று.

ஒரு தலித் “என்னா கவுண்டரு” என்று கேள்வி கேட்க முடியாது. ஆனால் ஒரு வேளாளக் கவுண்டர் “ஓ படையாச்சியா? பள்ளியா?” என்று கேள்வி கேட்க முடியும்.  தலித் அல்லாத சாதிக்காரர்கள் என்ன கவுண்டரே என்றால் வன்னிய சாதிக்காரர்களுக்கு ஒரே பெருமைதான். பார்ப்பன இந்து மதம் என்பதே வலம்புரி ஜான் சொன்னதைப்போல தனக்கு மேல் கால்களையும் தனக்கு கீழ் தோள்களையும் எப்போதையும் தேடும்.

ஆதிக்க சாதி என்பதே அடித்து வீழ்த்தப்பட வேண்டியதுதான் அதில் முற்போக்கு இருக்க முடியுமா? இதோ நாங்கள் இருக்கிறோம் என்கிறது வன்னியர் சங்கம். ராமதாஸ் ஒரு முறை சொன்னார் “வன்னிய சங்கம் மட்டும் சாதி வெறியற்றது. நாங்கள் எங்களுக்காக மட்டுமா போராடினோம்? மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வண்ணார், நாவிதர், மருத்துவர் எல்லா சாதிகளையும் நாங்கள்தானே கொண்டு வந்தோம்”.

வன்னியர் சாதி ஆதிக்க சாதியா என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.  ஒரு முறை என்னுடைய தென் மாவட்டத்து நண்பர் சொன்னார் “வன்னியர் சாதியெல்லாம் ஒடுக்கப்படுற சாதிதான” அவருடன் 3 மணி நேரத்துக்கு மேல் வன்னிய சாதிவெறியினை விளக்க வேண்டியிருந்தது. சாதி ஆதிக்கத்துக்கு தேவர் என்றோ,  நாடார் என்றோ, வன்னியர் என்றோ எதுவும் தெரியாது. தன் கோரப்பற்களால் உழைக்கும் மக்களை கடிப்பது மட்டும்தான் தெரியும். வன்னியர் சாதி ஆதிக்கத்தை பற்றி தெரிந்து கொள்ள நாமும் இப்போது அந்தக் கிராமத்துக்குள் நுழைவோம்.

கொளத்தூர் வட்டாரத்தில் கோலேச்சும் வன்னிய சாதிவெறி!

கொங்கு மண்டலத்தின் வடபகுதியில் உள்ள சேலம் மாவட்ட எல்லையையும் ஈரோடு மாவட்ட எல்லையையும் கொணடதுதான் கொளத்தூர். கொங்கு வெள்ளாள கவுண்டர்களும், வன்னியர்களும் பெரும்பான்மையாக வாழும் பகுதி.

கொளத்தூர் இந்தப் பெயரைக் கேள்விப்பட்டவுடனே பலருக்கும் தோன்றும் நினைவு “அட நம்ம வீரப்பன் ஊரு தான”. அது உங்கள் நினைவாயிருக்கலாம். ஆனால் “நம்ம” என்ற வார்த்தை இங்கு வன்னியர்கள் மட்டும்தான் உபயோகிப்பார்கள். கொளத்தூர் பேருந்து நிலையத்தில் பெரிய டிஜிட்டல் போர்டு இருக்கிறது பாருங்கள். அதில் வீரப்பன் படத்தைப் போட்டு “10 லட்சம் மானமுள்ள வீர வன்னியர்களே சித்திரை திருவிழாவுக்கு வாருங்கள்” என்ற வாசகம் உங்கள் கண்ணுக்கு புலப்படுகின்றதா?

இங்கு மட்டுமல்ல  சேலம் மாவட்டம் முழுக்க வீர வன்னியன் வீரப்பகவுண்டரு படத்தோடுதான், அய்யாவின் படமும் சின்ன அய்யாவின் படமும் இருக்கின்றது. வீரப்பனை தமிழனென்றும், தமிழக விடுதலையை சாதிக்க வந்த போராளி என்றும் கற்பனையில் இன்பம் தேடும் தமிழ்தேசக் குஞ்சுகள் ஒரு எட்டு கொளத்தூர் சென்று பார்க்கவும்.

கொளத்தூரைச் சுற்றி நூற்றுக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன. தனிக்குவளை முறை அவ்வப்போது ஒழிக்கப்பட்டதாக சொல்வார்கள். வெளியூர்க்காரன் யார் வந்தாலும் அங்கு டிஸ்போசபிள் டம்ளர் தான். எந்த ஊரில் இறங்கினாலும் புதிய நபர்  எந்தப்பக்கம் செல்கிறாரோ அது அவரின் ஜாதியாக இருக்கலாம். நீங்கள் தவறாக தலித் குடியிருப்புக்குள் சென்று விட்டு பேருந்து நிறுத்தத்தில் வந்து முகவரி விசாரித்தால் கிடைக்கும் மரியாதை அமோகமாக இருக்கும்.

இக்கிராமத்தில் ஒரு தாழ்த்தப்ப்ட்ட மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராக பணி புரிந்தார். அவர் ஊசி போடும் போது வன்னியர்களின் மீது கை படுவதால் பறையன் கை படையாச்சி மீது படுவதா என்று” அங்கு வேலை செய்த பெண்ணை வைத்து மருத்துவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவரை விரட்டியடித்தார்கள் வன்னிய வெறியர்கள். இதைப்போல பல நிகழ்ச்சிக்கு பேர் வாய்ந்ததுதான் கொளத்தூர் கிராமங்கள்.

நான் ஒருமுறை  கொளத்தூரை ஒட்டிய கிராமங்களில் ஒன்றிற்கு சென்ற போது என் நண்பர் என்னை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன்  மேற்கு பக்கம் வரச் சொன்னார். நான் இதை மறந்துபோக நிறுத்தத்தில் இறங்கி அவரின் பேரைச் சொல்லி “இந்த வேலை செய்கிறார் எந்தப்பக்கம் போக வேண்டும்” என்றேன். வந்த பதிலே “தெரியாது இடத்தைக் காலி பண்ணு” என்றதுதான்.

கருங்கலூர் துப்பாக்கி சூடின் பின்னணி!

இதோ இது தான் கருங்கலூர். இங்குதான் கடந்த 16-ம் தேதி  துப்பாக்கி சூடு நடைபெற்றது. பா.ம.கவின் கோ.க.மணி இது குறித்து சட்டசபையில் கூட பேசினார்.  பத்திரிக்கைகளில் கூட துப்பாக்கி சூடு ஏன் நடந்தது என்பது பற்றி விரிவாக போடவில்லை. கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கி சூடு, இரு சமூகத்துக்குள்ளே மோதல் இவை தான் செய்தியாக வந்தன.

ஆனால் உண்மை என்ன என்பதை அறிய காலம் அதிகம் பிடித்து விட்டது. காரணம் கடந்த 15.04.10 முதல் 24.04.10 வரை மேட்டூர் – கோவிந்தப்பாடி-க்கு பேருந்து மாலை 5 மணிக்கு மேல் இயக்கப்படவில்லை. நேற்று(25.04.10) அன்று இயக்கப்பட்டதாக சொன்னாலும் பாதுகாப்புடனே சென்றது. 24-ம் தேதி வரை கொளத்தூர் – கோவிந்தப்பாடி வரையிலான கிராமங்களில் போலீசுப்படைகள் குவிக்கப்படிருந்தன. 25ம் தேதிதான் கருங்கலூர் தவிர மற்ற கிராமங்களில் போலீசுப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. தாக்குதல் நடந்த கருங்கலூரில் தற்போது போலீசு குறைக்கப்பட்டிருக்கின்றது.

வன்னிய சாதி வெறியர்களைப் பொறுத்தவரை”பறையனுங்க வேணாமுன்னு தான நாங்க இருக்கோம், எதுக்கும் அவுனுங்கள கூப்புடறதுல்ல, தள்ளி வச்சிருக்கோம் , சும்மா மரியாத கொடு , மரியாத கொடுன்னு தேவையில்லாம பிரச்சினை பண்றாங்க. பெரியவங்க முன்னாடி கால் மேல கால் போட்டுகிட்டு இருக்கானுங்க, பெரியவங்க முன்னாடி சிகரெட்டு குடிக்கறாங்க புகைய வுடுறானுங்க” இது தான் அவர்கள் குற்றச்சாட்டு.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இக்கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் செருப்பு அணிந்து போகக்கூடாது, குடைபிடித்து போகக்கூடாது, வன்னியர் வந்தால் மரியாதை தரவேண்டும், சைக்கிளில் செல்லக்கூடாது என எல்லா கொடுமைகளும் நடந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் வன்னிய நாட்டமைகள்தான் வருவார்கள். தீர்ப்பு சொல்வார்கள். பின்னர் இப்பகுதி இளைஞர்கள் தங்களை அப்போது உருவாகிக்கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகளில் இணைத்து சாதி ஆதிக்கத்தை எதிர்த்து வந்தனர்.

அடிவாங்கிக்கொண்டே இருந்த அவ்விளைஞர்கள் அடித்தால் திருப்பி அடிக்க வேண்டும் என்று பேசவும் ஆரம்பித்தார்கள். முன்பெல்லாம் சாதாரணமாக 19 வயது வன்னிய பெரியவருக்கு மரியாதை தராத 60 வயது பறைய சின்னக்குழந்தைக்கு அடி விழும். இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை. நாம் அடித்தால் அவர்களும் அடிப்பார்கள் என்ற எண்ணம் வன்னிய வெறியர்களின் மத்தியில் வேர்விட்டவுடனே, இவர்களை எப்படியாவது ஒழித்துக்கட்டவேண்டுமென்று ஒவ்வொரு வருடம் திருவிழாவின் போதும் முயற்சி நடக்கும். சில முறை அப்படிப்பட்ட நிகழ்வுகள்  அரங்கேறி இருக்கின்றன. இந்த ஆண்டு அந்த ஆதிக்க சாதிவெறி அப்பட்டமாக வெடித்துவிட்டது.

இந்தப்பறையர்கள் தான் நாம் என்ன சொன்னலும் கேட்பதில்லையே அவர்களுக்கு ஏன் நாம் வேலை தர வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சமூகப்புறக்கணிப்பு  விரிக்கப்பட்டது. எப்போதும் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழைவதற்கு அனுமதியில்லை, அவர்களுக்கு முடி வெட்டுவதற்கு இங்கு எந்த சலூனும் திறக்கப்படவில்லை. தலித்துக்கள் முடி வெட்ட வேண்டுமானால் கொளத்தூருக்குத்தான் வரவேண்டும். அதுவும் இல்லை எனில் சேரிகளிலேயே முடி வெட்ட தாழ்த்தப்பட்டவரிலேயே ஒருவர் இருக்கிறார். இது அனைத்து கொளத்தூர் கிராமங்களிலும் தொடர்ந்தாலும் கருங்கலூருக்கு சீக்கிரம் திருவிழா வந்து விட்டதால் சீக்கிரமே தாக்குதலும் நடந்து விட்டது.

கருங்கலூர் வன்னிய நாட்டமைகள்  தீர்ப்பு சொன்னார்கள் ” நமக்கு அடங்காத பறையனுங்க இனிமே கோயில் விழாவுக்கு மேளம் அடிக்க கூடாது ,சக்கிலிங்கள வச்சு மேளம் அடிச்சுக்கலாம் “.  திருவிழாவின் முதல் நாள் முடிவில் ஆதி திராவிடர்கள் சிலர் மேளம் அடித்த அருந்ததியர்களிடம் “ஏன் நீங்கள் மேளம் அடித்தீர்கள்?” என்று தகராறு செய்ய, அது வாய்ச்சண்டையில் முடிந்திருக்கிறது.

சில அருந்ததியர்கள் வன்னியர்களிடம் ” நீங்க அடிக்க சொன்னீங்க, அவங்க சண்டைக்கு வராங்க ” என்று சொன்னவுடன் தாக்குவதற்காகவே காத்திருந்த வன்னிய வெறியர்கள் 15ம் தேதி காலை 8 மணியளவில் பா.ம.க கவுன்சிலர் மாரப்பன் தலைமையிலான 200 பேர் கொண்ட கும்பல்  கருங்கலூர் ஆதி திராவிட குடியிருப்புக்குள் நுழைந்து வீடுகளை அடித்து நொறுக்குகிறது. 7 பேருக்கு பலத்தக்காயம். அடித்து முடித்த கும்பல் ஆதிதிராவிட குடியிருப்பிற்குள் யாரும் நுழையாதவாறு முற்றுகையிடுகிறது. ஆளும் கட்சி போன் பண்ணுனா உடனே வரும் 108 ஆம்புலன்ஸ் ஊருக்கு வெளியே நான்கு மணி நேரமாக காத்துக் கொண்டிருந்தது.

வன்னியர்களின் தயவில்லாததால் மருத்துவம் பறையர்களுக்கு கிடைக்கவில்லை. தகவல்  கொளத்தூர் விடுதலை சிறுத்தை கட்சியினருக்கு தெரிய வர வேறு வழியின்றி அவர்கள் டயர்களை கொளுத்தியும், பேருந்துகளை உடைத்தும் தாக்குதல் சம்பவத்தை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் கொளத்தூர் போலீசு தனது ஜீப்பில் போய் காயமடைந்தவர்களை மீட்டுக்கொண்டு வந்தது. உள்ளூர் வி.சி.யினர் பிரச்சினையை அதிகப்படுத்துவார்கள் என்றெண்ணிய காவல் துறை 16ம் தேதி காலை  கருங்கலூருக்கு வந்தது கவுன்சிலர் மாரப்பன் உட்பட மூவரை கைது செய்ய வந்தது. வஜ்ரா வாகனக்கள் அணிவகுத்து வரிசையாய் நின்றன.

வெறியூட்டப்பட்ட வன்னிய மக்கள் மாதேஸ்வரன் மலைப்பாதையை மறித்து மறியலில் இட்டுபட்டு சாலையில் இருந்த ஒரு லோடு ஜல்லி கற்களையும் போலீசுப் படை மீது வீசித் தாக்குதல் நடத்தியது. ஓடிய காவலர்கள்  துரத்தி துரத்தி மண்டையுடைக்கப்பட்டனர்.

பின்னர் துப்பாக்கிசூடு 9 ரவுண்ட் என்று சொல்லப்படுகின்றது. அதில் காயமடைந்த சின்ன துரை மட்டும் அரசு மருத்துவ மனையில் இருக்க, இன்னும் சிலர் வெளியூரில் ரகசியமாய் வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பா.ம.க தலைவர் ஜீ.கே.மணி “சின்ன சின்ன பிரச்சினைக்கெல்லாம்  துப்பாக்கி சூடென்று” அரசை குற்றம் சாட்டினார்.

எது சின்ன பிரச்சினை? தாழ்த்தப்பட்ட மக்களின் வீடு புகுந்து அடிப்பது சின்ன பிரச்சினையா? அவர்களுக்கு (கொளத்துர் தவிர) கொளத்தூர் கிராமங்களில் கோயிலிலே நுழைய அனுமதி இல்லை, தீ மிதிக்கவோ, கரகம் எடுக்கவோ அனுமதி இல்லை, கருங்கலூர் – கோவிந்தப்பாடி வரை தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி வெட்ட சலூன் கடைகள் மறுப்புத் தெரிவிக்கின்றன. இதெல்லாம் சிறிய பிரச்சினைதானே ‘சத்திரியர்களுக்கு’?

ஆதிதிராவிடர்கள் மீது தாக்குதலும் தொடுத்துவிட்டு புது புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்கள் பா.ம.கவினர். “சக்கிலிங்கள பறையனுங்க வூடு பூந்து அடிச்சுட்டனுங்க, பாவம் சக்கிலி பொம்பளங்க  சிலமண்டையெல்லாம் உடஞ்சு போச்சு, நாங்க ஏண்டா இப்படி பண்ணுறீங்கன்னு சும்மா அவங்க ஊட்டுல போய் ரெண்டு அறை விட்டோம் அவ்வளவுதான், இதை என்னவே பெரிய பிரச்சினையாக்கிட்டாங்க இந்தப்பசங்க ”

ஆதி திராவிடர்களுக்கும் அருந்ததியர்களுக்கும் இடையில் மோதல் ஏதும் நடக்கவில்லை,  அப்படி நடந்தாலும் உன்னை யார் நாட்டாமையாக்கியது? சில ஆண்டுகளாக நடக்காத தாக்குதல் ஏன் இம்முறை நடந்தது?

கருங்கலூர் வன்னிய சாதிவெறியை எதிர்க்கும் தலித் இளைஞர்கள்!

இப்பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதி திராவிட இளைஞர்கள் அதிகமாவும் அருந்ததியர்கள் சிலரும் இருக்கின்றனர். அருந்ததியர்களைப் பொறுத்தவரை போதிய அளவுக்கு விழிப்புணர்வு இல்லாதிருப்பதாக கூறப்படுகின்றது. பறையர்கள் வன்னியர்களின் மேலாதிக்கத்தை தொடர்ந்து எதிர்த்து வருவது  அவர்களின் கோபத்தை கிளறிக்கொண்டிருந்தாலும் அருந்ததியர்களும்  ஆதிதிராவிடர்களோடு சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்ததுதான் இத்தாக்குதலுக்கு காரணம்.

சுமார் 2 மாதங்களுக்கு முன்பு அருந்ததிய இளைஞன் ஒருவர் அந்தியூரை சேர்ந்த வன்னிய பென்ணை காதலித்து கூட்டிக்கொண்டு வர, அந்தியூர் பா.ம.க மூலமாக கவுன்சிலர் மாரப்பனுக்கு தகவல் வர,அதற்குள் பயந்து போன இளைஞனின் தந்தை மாரியப்பன் “பையன் தெரியாம கூட்டிட்டு வந்துட்டான் பொன்ணை கூட்டிட்டு போயிடுங்க” என்றிருக்கிறார். அதற்குள் இளைஞனும் அப்பெண்ணும் காவேரிபுரம் விடுதலை சிறுத்தைகளிடம் தஞ்சம் புகுந்து விட்டனர்.

காவேரிபுரம், வி.சிக்களின் செல்வாக்கான பகுதி என்பதால் பா.ம.க  வன்னிய வெறியர்கள்  மாரியப்பனின் வீட்டை அடித்து நொறுக்கி அவரின் மனைவி மற்று இரு உறவினர்களை பலமாக தாக்கியிருக்கின்றனர். பின்னர் அவரின் ஆடு, மாடு, டி.வி.எஸ் வண்டியை திருடிக்கொண்டு போயிருக்கின்றனர். இதை ஒளிந்திருந்து பார்த்த மாரியப்பன் வி.சிக்களிடம் சொன்னவுடன், அவர்கள் அடுத்த நாள் ஈரோடு சாலையில் 3 மணி நேரம் மறியல் செய்கிறார்கள். வேறு வழியின்றி மாரப்பன் உள்ளிட்ட சிலர் மீதி பி.சி.ஆர் வழக்கு போடப்படுகின்றது. ஆனால் மாரப்பனோ கைது செய்யப்படாமல் சட்டத்தில் ஓட்டைகளை வைத்து போலீசின் உதவியால் எப்படியோ முன்ஜாமீன் பெற்று விட்டு தப்பிக்கிறார்.

“வன்னிய பொண்ணை சக்கிலி தொட்டுட்டான் என்பதுதான்  பிரச்சினை, அதுவும் பொண்ணை மீட்க முடியாதிருப்பது வன்னியர்களுக்கு மாபெரும் அவமானம், இன்னும் அவர்கள் ஏதோ ஒரு ஊரில் வாழ்ந்து கொண்டிருப்பது மிகக் கேவலம்”. அதற்கு சின்ன பரிகாரம் பறையர்களின் மீதான தாக்குதல். நாங்க சொல்றதக் கேட்டுக் கொண்டு இருந்தால் ஏன் இந்தப்பிரச்சினை? என்கிறார்கள் வன்னிய சாதி வெறியர்கள்.

இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விசயம் இருக்கிறது. இது கூட எதேச்சையாக பேருந்தில் ஒருவர் பேசியதைக் கேட்டதுதான் “டி.எஸ்.பி தாழ்த்தப்பட்ட சாதிதான , அவரு போன முறை அந்தப் பையன் வன்னிய பொண்ணை கூட்டிக்கிட்டு வந்தப்போ பாதுகாப்பு கொடுத்தார், டி.எஸ்.பி நம்மாளுங்க கையை பிடிச்சு ஜீப்புல ஏத்துறத பார்த்தவுடனே நம்மாளுங்க செம டென்சன் ஆயிட்டாங்க, போலீசுக்கு செம அடி”.

இப்போது வன்னியர் சங்கத்தினர் கொளத்தூர் கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்களூக்கு மீண்டும் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.  பிரச்சினை எனில் வழக்குக்கான நிதியை நாம் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்றும் அது  வன்னியசாதிக்கு கடைமை என்றும் சாதிவெறி பரப்பி வருகின்றனர்.

உழைக்கும் மக்களின் பிரச்சினையைத் திசைதிருப்பும் வன்னிய சாதிவெறி!

வீரப்பன் தேடுதல் வேட்டையில் அப்பாவி மக்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள். சோளகர் தொட்டி என்ற நூல்  சித்திரவதைகளின் சில பக்கங்கள்தான். வீரப்பனின் கூட்டாளி என்று சந்தேகித்து தினமும் பலரை இழுத்து வரும் அதிரடிப்படை அவர்களை தினமும் உதைத்துக் கொண்டே  இருக்கும். அப்படி அடிபட்டவனில் ஒருத்தன் கூட வன்னியன் இல்லையா, அந்த சித்திரவதை முகாம்கள்  அருகில் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்குமா வன்னியர் சங்கம்?

கொளத்தூர் கிராமங்களில் விவசாயம் அறவே இல்லை, விவசாயம் செத்துப்போய் விட்டதே, நம் வாழ்வினை பறித்து விட்டார்களே என்ற கோபம் அரசாங்கத்துக்கெதிராக எப்போதும் வருவதில்லை. பி.டிபருத்தியை பயிரிட்டு நாசாமாய்ப்போன வன்னியனை எப்போதும் வன்னியர் சங்கம் முகர்ந்து பார்ப்பதில்லை. ஆனால் பறையன் கால்மேல் கால் போட்டால் கோபம் வரும். மக்களைத் தின்னும் ஆளும் வர்க்கத்துக்கெதிராக எப்போதும் தூக்கப்படாத அரிவாள், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமையைக் கேட்கும் போது சீறிப்பாய்ந்து வருகிறது.

“வடமாவட்டம் முழுவதும் வன்னியர்கள் ஏமாற்றப்படுகிறார்கள், இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, எங்களுக்கு உள் ஒதுக்கீடு கொடு” என்ற போர்வையில் வன்னிய வெறி பரப்பும் பா.ம.கவினர், இந்த தனியார்மய தாராளமய உலகமய சூழலில் இட ஒதுக்கீடு செல்லாக்காசுதான் என்பதைப் பற்றி பேச மறுக்கின்றனர். கல்லூரிகளில் படிக்க லட்சக்கணக்கில்  செலவு, தனியார்மயத்தின் விளைவால் மூடப்பட்ட ஆலைகளால் துரத்தப் படும் தொழிலாளர்கள்  இது எதைப்பற்றியும் பா.ம.க மற்றும் எந்த சாதிச்சங்கமும் பேசுவதில்லை. ஏன் பேசுவதில்லை என்பதல்ல, அவர்கள் பேச மாட்டார்கள் என்பதுதான் உண்மை.

மேட்டூரில் CPM பொரட்சி கட்சியின் சி.ஐ.டி.யூ தான் மிகப்பெரிய தொழிற் சங்கம். ஏற்கனவே தோலர் சீரங்கன்  சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். மாவட்டச்செயலாளரும் இந்த மேட்டூர் தான். இந்தப் பிரச்சினையைப்பற்றி அவர்களுக்கு பேசவே நேரம் இல்லை. மேடை போட்டு எவ்வளவு அழகாக செயாவுக்கு சேலை துவைக்கிறோம் என்று சொல்லவே அவர்களுக்கு  நேரம் சரியாக இருக்கிறது. தனிக்குவளை முறைக்கெதிராக போராடப்போன அந்த சி.பி.எம் தோலர்களையும் காணவில்லை. ஏற்கனவே கொளத்தூர் கிராமங்களில் தீண்டாமை இருப்பதாக  சவடால் விட்ட தோலர்கள் தற்போது தங்களின் வாய்களை இருக்க மூடிக்கொண்டார்கள்.

வன்னிய சாதி வெறியர்கள் மீதான வழக்கை வாபஸ் வாங்க ஜீ.கே. மணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். முதல் கட்டமாக அமைதிகமிட்டி அமைக்கப்பட்டு 21-ம்தேதி திருவிழா தொடங்கப்பட்டு முடிந்தும் விட்டது. வருகின்ற வாரத்தில் அரசு மூலமாக வழக்குகள் பைசல் செய்யப்படும் என்று தெரிகிறது. இது பற்றி திருமாவளவன் ஏதும் அறிக்கைகூடவிடவில்லை.

ஆளும் வர்க்கங்களிடம் சரணடைந்த விடுதலைச் சிறுத்தைகள்!

இந்த ஆதிக்கத்துக்கெதிராக போராடும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் விடுதலை சிறுத்தைகள் என்ற ஆளும் வர்க்கங்களிடம் சரண்டைந்த கட்சியில் இருப்பது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். சுமார் 4 அண்டுகளுக்கு முன்  வன்னியர் தலித் பிரச்சினை தீவிரமாக இருந்த போது தேர்தலும் வந்தது. ஜி.கே மணி மேட்டூர் தொகுதியில் வேட்பாளராக நின்றார். அவருக்கு வி.சிக்கள் ஓட்டு சேகரித்தனர். பெரும்பான்மை தலித் மக்கள்  பா.ம.கவிற்குத்தான் வாக்களித்தனர். “சாதிவெறி எல்லை மீறிபோன இங்கு பா.ம.கவோடு எங்களால் எப்படி இணைந்து வேலை செய்ய முடியும்? இதோ இப்போது கைகுலுக்கிக்கொண்டால் சாதி பிரச்சினை ஒழிந்து விடுமா?” என்று யாரும் கேட்கவில்லை.

சட்டசபையில் சின்ன பிரச்சினை என்று ஜி.கே மணி பேசும் போது  வி.சியின் சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்ன செய்து கொண்டிருந்தார்?  வன்னியர்கள் மீதான துப்பாக்கிச்சூடு என்று இதை மாநில பிரச்சினையாக்கினார் ஜி.கே.மணி. அப்போது திருமா என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது கட்சியினருக்கு தெரிகிறதா என்பதும் புரியவில்லை.

சாதி ஆதிக்க எதிர்ப்பு போராட்டங்கள் வி.சிக்களால் தொடர்ச்சியாக நடத்தப்படுவதில்லை. அவர்களுக்கு திருமாவளவன் புகழ் பாடவே நேரம் சரியாக இருக்கும். வி.சி கட்சிக்கு இப்போதைய  வேலையே கட்டப்பஞ்சாயத்துதான். உழைக்கும் மக்களிடமிருந்து அவர்கள் வெகுதூரம் விலகிப்போய்விட்டார்கள். ஆதிக்கத்துக்கு எதிராக தொடர்ச்சியாக போராடும் தருணங்களிலே ஒரு தேர்தல் வரும். தேர்தலில் எதை எதிர்த்துப் போராடுகிறார்களோ அதற்காக ஓட்டு கேட்கும் அவலமும் நடைபெறும். இந்த இலட்சணத்தில் விடுதலை எப்படி?

இப்படி பாதிக்கப்படும் இளைஞர்கள் போராடினால் அவை கட்சியின் துரோகத்தால் முற்று பெறாமலே போய்விடுகிறது. சாதிவெறியை ஒழிப்பதோ, சாதியை ஒழிப்பதோ அவ்வப்போது எடுக்கப்படும் தாக்குதலுக்கான எதிர் போராட்டத்தால் மட்டும் முடியாது. அது தொடர்ச்சியாக முனைப்புடன் அரசியல், பண்பாட்டு, கலாச்சார வடிவங்களில் ஊன்றி இருக்க வேண்டும். அதன்படி வி.சி இயக்கம் மூலம் சாதி ஒழியும் என்பது பகற்கனவே.

ஆனால் தாழ்த்தப்பட்ட இந்த இளைஞ்ர்கள் திருமாவைபோல கருணாநிதி வீட்டிற்கும், ஜெயா தோட்டத்திற்கும் சென்று  பொறுக்கித் தின்னவில்லை. பாதிப்பு இருக்கும் வரை எதிர்தாக்குதலும் இருக்கும் என்பதுதான் நியதி . அவ்வகையில் அவர்களின் ஆதிக்கத்துக்கெதிரான போரில் பிற உழைக்கும் மக்களும், புரட்சிகர – ஜனநாயக சக்திகளும் அவர்களோடு களமிறங்க வேண்டியது அவசியம்.

______________________________________________________

– சேலம் மாவட்டத்திலிருந்து வினவு நிருபர்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!

15

vote-012அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார சுனாமி ஐரோப்பிய கரைகளை வந்தடைந்துள்ளது.  அட்லாண்டிக் சமுத்திரக் கரையை அண்டிய அயர்லாந்து,  மத்திய தரைக் கடல் நாடுகளான போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி, கிறீஸ்   ஆகிய   நாடுகளும்  சுனாமியின்  அகோரமான  தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. இவற்றில் கிரீசில் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டும் வெளித் தெரிய ஆரம்பித்துள்ளது. முதன் முதலாக செல்வந்த மேற்கு ஐரோப்பிய வட்டத்தை சேர்ந்த ஒரு தேசம் திவாலாகின்றது. மக்கள் வங்கிகளையும், வங்கிகள் அரசாங்கத்தையும், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.  யார் குற்றவாளி?

துருக்கி, ஜெர்மனி என்று அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்புக்குள் உள்ளாகி சின்னாபின்னமான கிறீஸ், செல்வந்த நாடுகளின் வரிசையில் சேர்ந்த பொருளாதார அதிசயம் எதிர்பாராதது தான்.  பலமான  பொருளாதாரத்தைக்  கொண்ட ஜெர்மனியிடம் இருந்து கடன் பெறக் காத்திருக்கும் கிறீஸ், இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் திருடிய தங்கத்தை மீட்க முடியாமல் உள்ளது. கேந்திர முக்கியத்துவம் காரணமாக, கிறீஸ் சோஷலிச முகாமில் சேர விடாமல் தடுத்த பிரிட்டன், புராதன கலைப்பொருட்களை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை.

கிரேக்கம் ஐரோப்பிய நாகரீகத்தின்  தொட்டில் என புகழப்படுவதெல்லாம், பாட நூலில் மட்டும்தான். நாகரீகம் கற்றுக் கொண்ட நாடுகள், தற்போது கிரீசை  அடிமையாக்க  திட்டம்  போடுகின்றன. அந்நிய நாட்டு கடனை வாங்கி ஒலிம்பிக் போட்டி போன்ற ஆடம்பரங்களில் செலவிட்டதால், பொதுநல சேவைக்கு அள்ளிக் கொடுத்ததால், வந்தது இந்த நெருக்கடி என்று திட்டுகின்றன. கொடுத்த கடனை அடைப்பதற்கு 110 பில்லியன் டாலர் கடன் வழங்கப்படுகின்றது. இந்தக் கடனில் ஜெர்மனியின் பங்கு அதிகம்.  ஜெர்மனி நெருக்கடியில் சிக்கிய தனது வங்கிகளின் மீட்சிக்காக ட்ரில்லியன்  யூரோக்களை அள்ளிக் கொடுத்த்து. அதனோடு ஒப்பிடும் போது சகோதர ஐரோப்பிய நாடான கிரீசுக்கு வழங்கியது சொற்பத் தொகை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்தவராக இணையும் நாடுகளுக்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. வருடாந்த பட்ஜெட்டில் துண்டு விழும் தொகை மூன்று வீதத்திற்கு கூடக் கூடாது. அரசின்  மொத்த  அந்நிய/உள்நாட்டு  கடன்கள் 60 வீதத்திற்கு மேலே அதிகரிக்க கூடாது.மீறினால் அபராதம் விதிக்கப்பட்டது. கிறீஸ் அரசால் ஒரு போதும் அந்த இலக்கை அடைய முடியவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பொய்க் கணக்கு காட்டிக் கொண்டிருந்தது.

மோசடியான கணக்குகளை எழுதுவதற்கு, பொருளாதாரத்தில் சூரப் புலிகளான அமெரிக்க கணக்காளர்களை அமர்த்தியது. அமெரிக்க முதலீட்டு வங்கியான Goldman Sachs அரசாங்கத்தின் கடன் தொகையை குறைத்துக் காட்டி கணக்கை முடித்தார்கள். எப்படி? கிரேக்க அரசின் கடன் பத்திரங்கள் யென், டாலர் நாணயப் பெறுமதிக்கு மாற்றப் பட்டன. அரசாங்கம் கொடுக்க வேண்டிய கடன் நிலுவைகளை எதிர்காலத்தில் கொடுப்பதாக வேறொரு கணக்கில் குறித்தார்கள். மேலதிகமாக Goldman Sachs வங்கியே ஒரு பில்லியன் யூரோ கடனாக கொடுத்து சரிக்கட்டியது.

கிரேக்க மக்கள் கடன் அட்டைகளில் வாழ்ந்து கொண்டிருக்கையில், அரசாங்கம் அந்நியக் கடன்களால் இயங்கிக் கொண்டிருந்தது. நிதி நெருக்கடி தோன்றிய காலத்தில் இருந்தே, வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாத மக்கள் கடன் அட்டைகளில் பணம் எடுத்து செலவழிக்கின்றனர். இந்தக் கடனை எல்லாம் எப்போது திருப்பிக் கட்டுவோம் என்பது அவர்களுக்கே தெரியாது. இது நெருக்கடியை இரட்டிப்பாக்குகின்றது. தற்கால கிரேக்க பொருளாதாரம் ஒரு மாயையின் மேலே தான் கட்டப்பட்டிருந்தது.

பாரம்பரிய விவசாய நாடான கிரீஸ், எழுபதுகளுக்குப் பின்னர் விவசாயத்தைக் கைவிட்டது. அதிக வருமானம் ஈட்டித் தரும் உல்லாசப் பிரயாணத் துறையில் நம்பியிருந்தது. இருப்பினும் உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்க அரசு வழங்கிய மானியத்தைக் கொண்டு, விவசாயத் துறையும் மறுமலர்ச்சி கண்டது. அகதிகளாக அல்லது சட்டவிரோதமாக குடியேறிய அல்பேனிய, இந்திய, பாகிஸ்தானிய கூலியாட்கள் வயல்களில் குறைந்த கூலிக்கு வேலை செய்தார்கள். இதனால் கிரேக்க விவசாயிகள் வளமாக வாழ முடிந்தது. தனது நாட்டு விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கும் ஜெர்மனி போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகள், கிரேக்க விவசாயிகளுக்கு கொடுத்த மானியத்தை பொருளாதாரத் தவறாக சுட்டிக் காட்டுகின்றன. ஆமாம், கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனைப் போல வாழ நினைக்கலாமா?

இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த கிரீசை விடுவிக்க கம்யூனிச கட்சியின் விடுதலைப் படை போராடியது.  எந்த வல்லரசின் உதவியுமின்றி, பெரும்பாலான பகுதிகளை விடுதலை செய்து தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள்.  பெரும்பான்மை  கிரேக்க மக்கள் விவசாய சமூகமாக இருந்தமையும், கம்யூனிஸ்ட்களின் வெற்றிக்கு மூல காரணம். பிரிட்டனின் உதவியுடன்  கம்யூனிசக்  கிளர்ச்சி  முறியடிக்கப்பட்டது.

அதன் பிறகு கிரீஸ் மேற்குலக பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் வந்தது. விவசாய பொருளாதாரம் புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் புகுத்தப்பட்டது. ஒரு காலத்தில் மீனவ சமூகத்தினர் மட்டுமே வாழ்ந்து கொண்டிருந்த  தீவுகள்  மெருகூட்டப்பட்டன.  பிரிட்டன், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற பணக்கார ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்த உல்லாசப் பயணிகள் கிரேக்க தீவுகளை தமது கோடைகால காலனிகளாக மாற்றினார்கள். அவர்கள் கொண்டு வந்து கொட்டிய பணம் கிரேக்க மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக் காரணமாக இருந்தது.

கை நிறையச் சம்பாதித்து வாய் நிறையச் சாப்பிடும் மக்கள், கம்யூனிஸ்ட்கள் சொல்வதைக் கேட்க மாட்டார்கள் என்பது உண்மை தான். சிறிது காலம் தடை செய்யப் பட்டிருந்து, பின்னர் புத்துயிர் பெற்ற கிரேக்க கம்யூனிசக் கட்சியும்  பாராளுமன்ற அரசியல் சாக்கடையில் கலந்து விட்டது. இருப்பினும்  கம்யூனிச அபாயம் கனவில் வந்து மிரட்டினாலும், கிரேக்க அரசு கலங்கிய அப்படியான சந்தர்ப்பங்களில்,” யாமிருக்கப் பயமேன்” என்று ஆட்சியைப் பிடித்தது இராணுவம்.

பாசிசவாதிகளும், தேசியவாதிகளும் நிறைந்திருந்த கிரேக்க இராணுவம், அயல் நாடான துருக்கியைக் காட்டி மக்களைப் பயமுறுத்தி கொண்டிருந்த்து. கிரீசுக்கும் துருக்கிக்கும் ஜென்மப் பகை.  பிற்கால  இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு  தலைமை  தாங்கிய  ஓட்டோமான் துருக்கியர்கள், முழு கிரீசையும் தமது சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக வைத்திருந்தார்கள். கிரேக்க கிறிஸ்தவ மதகுருக்கள் தலைமையில் துருக்கியருக்கு எதிரான விடுதலைப் போராட்டம் நடந்தது.

முதலாம் உலகப் போரின் பின்னர்தான் நவீன கிரேக்க தேசம் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை தன்னை துருக்கியின் முதன்மை எதிரியாகக் காட்டிக் கொள்வதில், கிரீசுக்கு அலாதிப் பிரியம். நிலப்பரப்பில், மக்கட்தொகையில் பல மடங்கு பெரிதான துருக்கியுடன் இராணுவரீதியாக மோதுவது சாத்தியமில்லை. இருப்பினும் அதைச் சொல்லிச் சொல்லியே ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. அன்று கிரீசுக்கு  ஆயுதங்களை ஆயுதங்களை விற்றுக் கொண்டிருந்த மேற்குலக நாடுகள், இன்று பொருளாதார பிரச்சினைக்கு அதையே காரணமாகக் காட்டுகின்றன.

கிரேக்கர்களையும், துருக்கியரையும் மதம், மொழி போன்ற அம்சங்கள் பிரித்து வைத்திருந்தாலும், நெருங்கிய கலாச்சார ஒற்றுமைகளை கொண்டுள்ளனர். சராசரி கிரேக்கர்களின் மனோபாவத்தை, மேற்கு ஐரோப்பியருடன் ஒப்பிட முடியாது.  கிறிஸ்தவ மதம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் அவர்களை பிற ஐரோப்பியருடன் பிணைப்பதில்லை. மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றியம் உருவானால், கிரீஸ் அதில் மிகக் கச்சிதமாக பொருந்தும்.  “லஞ்சம், ஊழல் கிரேக்க சமூகத்தை விட்டு இன்னும் அகலவில்லை, அது தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்…” என்று ஐரோப்பிய பொருளாதார நிபுணர்கள் ஒப்பாரி வைக்கின்றனர். ஐரோப்பிய மத்திய வங்கியும் ஏதோ இப்போது தான் கண்டுபிடித்ததைப் போல பதறுகின்றது.

கிரீசில் சிறிது காலம் வாழ்ந்த அகதிகளுக்கு கூட இதெல்லாம் எப்போதோ தெரியும். அகதித் தஞ்சம் கேட்ட குற்றத்திற்காக சிறை சென்றதும், பணம் கொடுத்து விடுதலையானதும் பல அகதிகளுக்கு அவர்களது தாயகத்தை நினைவுபடுத்தின. சாதாரண கிரேக்க மக்கள் முன்னர் லஞ்ச, ஊழல் பிரச்சினை குறித்து முறையிடவில்லை என்பது உண்மைதான். நமது நாடுகளில் லஞ்சம் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொள்ளும் மத்திய தர வர்க்கத்தைப் போலத்தான் சராசரி கிரேக்கர்களும் வாழ்ந்தார்கள். லஞ்சப் பேய் ஒரு காலத்தில் தமது இருப்பிற்கே ஆப்பு வைக்கும் என்பதை காலம் தாழ்த்தித்தான் புரிந்து கொண்டார்கள்.

நல்லது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்கு என்ன தீர்வு? ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை சீர்குலைக்கும் கிரீசை வெளியேற்றி விடலாம். மேற்குலக முதலீட்டு வங்கிகள், அரசாங்கத்தின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.  அரை வாசித் தொகை திருப்பித் தரப் படும் என்று ஒப்பந்தம் போடப் பட்டுள்ளது. மிகுதி அரைவாசி யார் தருவார்கள்? சந்தேகமில்லாமல் கிரேக்க பிரஜைகள் தான். தமது சம்பளத்தை, ஓய்வூதியத்தை குறைத்து, காப்புறுதிகளுக்கு அதிக கட்டுப்பணம் கட்டி, வங்கிச் சேவைக்கு அதிக கட்டணம் செலுத்தி, கடனை அடைப்பார்கள்.

இந்த நிபந்தனைகளுக்கு கிரேக்க பாராளுமன்றத்தில் ஆளும் சோஷலிசக் கட்சியும், தீவிர வலதுசாரிக் கட்சியும் ஒப்புதல் அளித்துள்ளன. இவையெல்லாம் கிரேக்க மக்களை ஆத்திரமுற வைத்ததில் வியப்பில்லை. இன்றைக்கும் தமது லாபத்தை குறைத்துக் கொள்ளாத முதலாளிகளும், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொள்ளாத பணக்காரர்களும் கடன் சுமையை பொறுப்பேற்க வேண்டும். தேசத்தின் தவறான முகாமைத்துவத்திற்கு இவர்கள் காரணமில்லையா? அதிகம் படித்த கணக்கியல் நிபுணர்கள் தானே கணக்கில் மோசடி செய்தார்கள்? சிக்கலான பொருளாதார சூத்திரமெல்லாம் சாதாரண பொதுமகனுக்கு புரியாத சிதம்பர ரகசியம். ஆயினும் அப்பாவி பொது மக்கள் தான் பொருளாதார பிரச்சினைக்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.

கிரீசின் பொருளாதாரப் பிரச்சினை யூரோ நாணயத்தை பாதிக்கின்றது. இது ஒரு வகையில் நன்மையை தந்தாலும், நீண்ட கால நோக்கில் தீங்கு விளைவிக்கலாம். யூரோ நாணயத்தின் பெறுமதி குறைந்துள்ளதால் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்கு வழிவகுத்துள்ளது. ஆயினும் பணக்கார ஐரோப்பிய நாடுகள் மட்டுமே இதனால் லாபமடைந்துள்ளன. தற்போது முன்பு இருந்ததைப் போல முன்னேறிய வட ஐரோப்பிய நாடுகள், பின் தங்கிய தென் ஐரோப்பிய நாடுகள் என்ற பிரிவினை மீண்டும் தோன்றியுள்ளது. கிரீஸ், தென் இத்தாலி, தென் ஸ்பெயின், தென் போர்த்துக்கல் என்பன, ஒரு காலத்தில் வறுமையில் வாடிய அபிவிருத்தியடையாத பகுதிகளாக இருந்தன. அந்தப் பகுதி மக்கள் வேலை தேடி செல்வந்த வட- ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தாராளமான நிதி வழங்கல், தென் ஐரோப்பாவின் அபிவிருத்திக்கு உதவியது. குறிப்பாக உல்லாசப் பிரயாணத் துறை, ரியல் எஸ்டேட் போன்ற பொருளாதார அபிவிருத்திகளே இடம் பெற்றன. அங்கேயெல்லாம் உல்லாசப் பயணிகளாக சென்றதும், வீட்டுமனை வாங்கியதும் வட- ஐரோப்பியர்கள் தான். பொருளாதார நெருக்கடியால் அவர்கள் தமது நாடுகளிலேயே தங்கி விட்டார்கள். அவர்களது அரசுகளும் கடும் பிரயத்தனப் பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டன. இதனால் என்ன நடந்தது என்றால், தென்னக ஐரோப்பிய பகுதிகளில் வேலைகள் பறி போயின. அந்த இடத்தில் வட ஐரோப்பிய மக்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.

யூரோ நாணய கூட்டமைப்பில் இருந்து கிரீசை வெளியேற்றுவதால், பிற ஐரோப்பிய நாடுகள் தமது பொருளாதாரத்தை பாதுகாக்க நினைக்கின்றன. கிரீசை தொடர்ந்தும் வைத்துக் கொள்வதற்காக ஆகும் செலவு, தற்போது வழங்கிய கடனை விட மூன்று மடங்கு அதிகம். அதனால் கிரீசை கழற்றி விடுவதே உத்தமம். கிரீசும் வேறு வழியின்றி தனது பழைய தேசிய நாணயமான டிராக்மாவை மீண்டும் கொண்டு வர வேண்டும். ஆனால் புதிய டிராக்மாவை யூரோவுக்கு பரிமாற்றம் செய்யும் போது, ஐரோப்பிய ஒன்றியம் குறைந்த விலையை நிர்ணயிக்கும். இதனால் கிரேக்கர்கள் வாங்கிய கடன், திருப்பிச் செலுத்தப் படும் காலம் வரும் போது இரண்டு மடங்காகி இருக்கும். அதனோடு வருடாந்தம் கட்ட வேண்டிய வட்டியையும் சேர்த்துப் பாருங்கள். கிரீஸ் திவாலானதால் பணக்கார ஐரோப்பிய நாடுகளும், ஐ.எம்.எப்.பும் புதிய வருமானத்தை தேடிக் கொண்டுள்ளன.  அதை விட பெறுமதி குறைந்த டிராக்மாவை சுவீகரித்துக் கொண்ட கிரீசுக்கு வட- ஐரோப்பிய உல்லாசப் பிரயாணிகள் அதிகளவில் படையெடுப்பார்கள். சுருக்கமாக சொன்னால், மேற்கு ஐரோப்பிய நாடுகள் கீழே விழுந்த கிரீசை தமது காலனிய சுரண்டலுக்கு உட்படுத்தப் போகின்றன. “கிரேக்க அரசாங்கம் தீவுகளை வெளிநாடுகளுக்கு விற்கப் போகின்றது,” என்ற வதந்தியும் மக்கள் மத்தியில் உலவுகின்றது.

சாதாரண கிரேக்க மக்களின் தார்மீக கோபாவேசம், வேலை நிறுத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மூலம் வெளிப்படுகின்றது. ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையத்தை மூடும் அளவிற்கு தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ளன. கிரீசில் போர்க்குணமிக்க தொழிற்சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி (KKE )  யினுடையது.   ஆயினும் இன்றைய கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிக்கு தயாராக உள்ளதா என்பது கேள்விக்குறி. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராக இருப்பதே தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. பாசிச இராணுவ ஆட்சியின் கீழ் கடுமையாக பாதிக்கப்பட்ட கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி, தற்போது ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டத்திற்கு தயாராக இல்லை. அந்த இடத்தை வேறு சில இடதுசாரி இயக்கங்கள் பிடித்துள்ளன.

எழுபதுகளில் இராணுவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததில் ஏதென்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி  மாணவர்களின்  போராட்டம் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது. மார்க்சிச-லெனினிசத்தையும், கூடவே அனார்கிசத்தையும் கொள்கையாக கொண்ட தீவிரவாத அமைப்புகள் உருவாகின. நீண்ட காலமாக பிடிபடாமல் இருந்த அதன் தலைவர்கள், மேற்குலகின் நிர்ப்பந்தத்தின் பின்னர் கைது செய்யப்பட்டனர். இத்துடன் கிரீசின் இடதுசாரி தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக, ஏகாதிபத்தியம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. எல்லாம் சிறிது காலம்  மட்டும் தான். அமெரிக்காவின் நிதி நெருக்கடி அவர்களின் உறக்கத்தை கெடுத்தது.

கிரீசில் முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டிக் கொண்ருந்தது. பொய், சூதுவாது, மோசடி மூலம் மக்கள் மத்தியில் அம்பலப்பட்ட கும்பல் ஒன்று, காவல்துறையை ஏவி மக்கள் எழுச்சியை அடக்க முடியாது தத்தளிக்கின்றது. நிதி நெருக்கடியின் விளைவாக தன்னிச்சையாக தோன்றிய மக்கள் போராட்டம் அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இவையெல்லாம் ஒரு சில தினங்களில் ஓய்ந்து போகும் சலசலப்புகள் என்று தான் பலரும் நினைத்தார்கள். இரண்டு வருடங்கள் போராட்டம் தொடரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

மே 5  அன்று, ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள் அணிதிரண்ட ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல.  அனைத்தையும் இழந்தவர்களின் கலகம், வங்கிகளை கலக்கமடைய வைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள், வங்கிகள், ஆடம்பர அங்காடிகள், என்று எவையெல்லாம் முதலாளித்துவத்தின் குறியீடாக உள்ளதோ, அவையெல்லாம் இலக்குகளாகின. அமைதிவழிப் போராட்டம் எதையும் சாதிக்காததைக் கண்ட இளைஞர்கள் பலர் தீவிரவாத வழியை நாடுகின்றனர். பெற்றோர்களால் தமது பிள்ளைகளை தடுக்க முடியவில்லை. அல்லது விரும்பவில்லை. அவர்களைப் பொறுத்த வரை இழப்பதற்கு எதுவுமற்றவர்கள். போராட்டத்திற்கு தள்ளப்பட்டவர்கள். அவர்களுக்கு நேற்று வரை அரசியல் வேப்பம்காயாக கசத்தது. இன்று அரசியல் அவர்களை பற்றிக் கொண்டுள்ளது.

கிரேக்க அரசுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்பவர்கள் அனார்கிஸ்ட்கள் என்ற இடதுசாரி அமைப்பை சேர்ந்தவர்கள். அவர்களை ஒரு அமைப்பு என்று கூற முடியாது. அப்படி சொல்வதையே வெறுக்கிறார்கள். அவர்களுக்கென்று கட்சி, தலைவர், செயலாளர் என்று எதுவும் கிடையாது. ஒவ்வொருவரும் சுதந்திரமான தனிநபர்கள். ரகசிய வலைப்பின்னல் மூலம் சந்தித்துக் கொள்கிறார்கள். பொதுவான போராட்டத்தில் இணைந்து கொள்கின்றனர். செல்லிடத் தொலைபேசி, இன்டர்நெட் போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகளை போராட்டங்களை ஒழுங்குபடுத்த பயன்படுத்துகின்றனர்.

இதுவரை காலமும், இந்த சாதனங்களை எல்லாம், முதலாளித்துவம் தனது எதிரிகளை கண்காணிக்கவும், எதிரி நாட்டு அரசுகளை கவிழ்க்கவும் பயன்படுத்தி வந்தது. “ஆஹா, எழுந்தது பார் டிவிட்டர் புரட்சி.” என்று தமது சாதனைகளை தாமே பாராட்டிக் கொண்டிருந்தனர்.  ஆனால் என்றோ ஒரு நாள், மேற்குலக நாடுகளிலும் “டிவிட்டர் புரட்சி” வெடிக்கும் என்று கனவு கண்டிருக்க மாட்டார்கள்.  கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், என்று எங்கெல்லாம் நெருக்கடி தோன்றுகிறதோ, அங்கெல்லாம் மக்கள் போராடக் காத்திருக்கிறார்கள். ஏனென்றால் நூறாண்டு கால போராட்டத்தின் ஊடாக பெற்றுக் கொண்ட உரிமைகளை, அவர்கள் ஒரே நாளில் இழக்கத் தயாராக இல்லை.

_______________________________________

•கலையரசன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்

இந்தியாவை எதிர்நோக்கும் அபாயம் ?

இந்தியாவின் மோசமான அச்சுறுத்தல்!

-ஜி எஸ்.வாசு (ஆசிரியர் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ்-ஆந்திரா)

________________________________________________________

vote-012“தென் அமெரிக்காவை புரட்டிப் போட்ட சந்தை பொருளாதார அடிப்படை வாதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளாவிட்டால் தற்போதைய பொருளாதார கொள்கையே நமது சீரழிவிற்கும் காரணமாக இருக்கும்”

கடந்த மாத மத்தியில் சட்டீஸ்கர் மாநிலத்தின் தண்டேவாடாவில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் மாவோயிஸ்டுகளால் தாக்கப்பட்டதை தொடர்ந்து நடத்தப்படும் விவாதங்கள் வேடிக்கையாக இருக்கிறது.  மத்திய ரிசர்வ் காவல் படையினர் மாவோயிஸ்ட்டுகள் விரித்த வலையில் வீழ்ந்தனரா? நாம் இராணுவத்தை பயன்படுத்துவதா? ஆளில்லா விமானத்தை பயன்படுத்தலாமா? இத்தகைய ஒரே மாதிரியான கேள்விகள்தான் கேட்கப்படுகிறதேயொழிய, ஏன் இது நிகழ்ந்தது என்பதை விவாதிக்க ஆளில்லை.

இதை நான் மட்டும் வேடிக்கையாக பார்க்கவில்லை.சத்தீஸ்கர் நிகழ்வையொட்டி நான் நக்சல் இயக்கத்தினரை எதிர்கொள்வதில் அனுபவம் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரியை சந்தித்தேன்.  அவரும் என் போல் இந்த விவாதங்களை ஒரு வேடிக்கையாகத்தான் பார்க்கிறார்.  மேலும், அவர் என்னிடம் இன்னொரு கேள்வியை முன்வைத்தார். “ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சர்வதேச நிறுவனங்களுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாய இடப்பெயர்ச்சிக்கு ஆளாக்கப்படும் போது என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கின்றீர்கள்?  அவர்கள் எதிர்தாக்குதலில் ஈடுபடுவது இயல்புதானே?”.  அறியாதது போல், அவரிடம் நான் ஒரு வினாவை முன் வைத்தேன். “நக்ஸலிசத்தை வேரறுக்க புதுடில்லியில் திட்டமிடும் கூட்டங்களில் இது குறித்து விவாதிக்கப்பட்டதா?” – “இல்லை” என்றார் அவர்.  அத்தகைய விவாதங்களில் எப்போதுமே எத்தனை படைப்பிரிவை அனுப்புவது, எங்கே, எத்தகைய நவீன ஆயுதங்களை பயன்படுத்துவது, என்பது மட்டுமே விவாதிக்கப்படும்.

உண்மை நிலை நன்கு தெரிந்திருந்தும், இது தான் இன்றைய போக்கு. “வசந்த கால இடி” (ஸ்பிரிங் தண்டர்) என்ற நக்சலுக்கு எதிரான அதிரடி தாக்குதல் தொடங்கி தற்போது நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த காலத்தில் “மோதல்” (என்கவுன்டர்) என்ற பெயரில் “மாவோயிஸ்ட்டுகள்” என்று சந்தேகப்படுபவர்கள் 10 ஆயிரத்திற்கு மேல் கொல்லப்பட்டதும், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் செலவில் அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு, அவர்களுக்கு அதி நவீன ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதை தவிர்த்து, அந்த இயக்கம் ஒரு மாநிலத்தின் ஒரு மாவட்டத்திலிருந்து 15 மாநிலங்களின் 200 மாவட்டங்களுக்கு பரவுவதற்குத்தான் உதவியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு மாவோயிஸ்ட்டுகள்தான் காரணம் என்று நான் கூற முடியாது. இன்று விவாதிக்கப்படும் மாவோயிஸ்ட்டுகள் உருவாவதற்கு இந்திய அரசும், அதனது பொருளாதார கொள்கையும்தான் முழுக்காரணம்.

சமீபத்திய எனது ஆந்திர பிரதேச சுற்றுப்பயணத்தில், ஒரு ஆயிரம் பேரை வலுக்கட்டாயமாக இடப்பெயர்ச்சி செய்து உருவாக்கப்பட்ட “சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு” சென்றிருந்தேன்.  தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் இருந்த அவர்களது நிலங்களை ஏக்கருக்கு 18 ஆயிரம் முதல் ரு 60 ஆயிரம் வரை கொடுத்து வாங்கப்பட்டிருக்கிறது.  அந்த பொருளாதார மண்டல கட்டுமான பணிகள் துவங்கப்பட்ட போது எந்த நிலத்தை உழுது பயிரிட்டு வாழ்ந்து வந்த அந்த மக்களே, அந்த நிலத்தில் நாளொன்றுக்கு ரூ 100 க்கு தினக்கூலியாக செங்கல் சுமப்பவர்களாகவும், கூலி வேலை பார்ப்பவர்களாகவும் மாறிப்போயிருந்ததை பார்க்க முடிந்தது.  அந்த மண்டலத்தின் ஒரு பிரிவை திறந்து வைக்க அந்த மாநிலத்தின் முதலமைச்சர் வந்த போது அந்த பகுதிக்குள் அந்த மக்களால் இடையூறு வரும் என, அவர்கள் வராமலிருக்க காவல் துறையினர் தடுப்பு சுவரே எழுப்பியிருந்தனர்.  இது எனக்கு இந்திய-பாகிஸ்தான் எல்லையைத்தான் நினைவூட்டியது.

மற்றொரு மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள நிலத்தை வேறு ஒரு நிறுவனத்தின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ 50 லட்சம் வரை விலைபேசி ஒதுக்கியுள்ளது என்பதுதான் கொடுமை.  இத்தகைய தரகர்கள் பகுதியில் உள்ள பாக்சைட் போன்ற இயற்கை கனிமங்களை தனியார் நிறுவனம் தோண்டி எடுக்க அனுமதியில்லாததால், அரசு நிறுவனமே அந்த மூலப் போருட்களை தோண்டி எடுத்து அந்த வெளிநாட்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கி வருகிறது. இது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவுகைள “மாக்கிவில்லியன்” (தனியாருக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கை) பாணியில் மீறுவதும், அந்த சாசனம் மக்கள் சுரண்டப்படுவதிலிருந்து காக்க அளித்திருக்கும் பாதுகாப்பையும் மீறுவதாகும்.

இத்தகைய சிறப்பு பொருளாதார மண்டலங்களை சார்ந்து கோடிக் கணக்கில் முதலீடு செய்துள்ள நிறுவனங்களின் நலனில் அதிகார வர்க்கத்தினர் அதிக அக்கரை காட்டி வருகின்றனர்.  பதவி ஏற்கும் காலத்தில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு உண்மையாகவும், அச்சமின்றி, விருப்பு வெறுப்பின்றி, சாதக பாதகமின்றி செயலாற்றுவேன் என்று உறுதிமொழியேற்று பதவிக்கு வந்தவர்களுக்கு அந்த உறுதிமொழிகைள தற்போது யார் நினைவூட்டுவது?  நாளை இத்தகைய திட்டங்களால் (சிறப்பு பொருளாதார மண்டலங்கள்) பாதிக்கப்பட்டு மாவோயிஸடுகளாக மாறிப் போவதற்கு யாரை குற்றம் சொல்வது?

இது இத்தோடு நின்றுவிடவில்லை. இன்று கிராமப்புற சுகாதார மையங்கள் முற்றாக செயல்படவில்லை.  நகர்புறங்களிலுள்ள அரசு மருத்துவ மனைகள் மூடப்படும் நிலையில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆந்திராவில் இத்தகைய பொருளாதார மண்டலங்கள் உள்ள பகுதிகளில், ஆதிவாசிகள் தீராத வியாதிகளால், வயிற்றுப்போக்கு போன்ற வியாதிகளால் நூற்றுக்கணக்கில் மடிந்து வருகின்றனர். இவர்களுக்காக யார் கவலைப்படுகிறார்கள்?  நமது “மக்கள் சுகாதாரத் திட்டம்” முற்றாக பெரிய தனியார் மருத்துவமனைகளிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது.

சத்தீஸ்கர்- ஆந்திராவில் சிறப்பு மண்டல பகுதிகளில் ஆதிவாசிப் பெண்கள் பாதுகாப்பு படையினரால் பாலியல் பலாத்காரம், கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதை பற்றி சிறிதும் கவலைப்படாத நாம், டெல்லியிலோ, மும்பையிலோ, ஒரு நடுத்தர வர்க்கப் பெண்மணி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுவதை நமது பத்திரிக்கைகளில் முதல் பக்க செய்தியாக வெளியிடுகிறோம்.  நான் பின்னர் நடந்ததை கண்டிக்கவில்லை என்று அர்த்தம் அல்ல, ஆதிவாசிகள் மத்தியில் நடப்பதை வெளியிடாதது நமது வர்க்க பாகுபாட்டை காட்டுகிறது என்கிறேன்.  அப்படியென்றால் ஆதிவாசிப்பெண்கள் கற்பழிக்கப்படுவதை நாம் ஏற்றுக் கொள்கிறோமா அல்லது பொறுத்துக்கொள்கிறோமா என்பதே கேள்வி.

இதே நிலைதான் கல்வித்துறையிலும். அரசு நடத்தி வந்த தங்கிப் பயிலும் கல்வி நிறுவனங்களிலிருந்து பல சிறந்த கல்விமான்கள் உருவாகி வந்தது பழங்கதையாகி விட்டது. சுகாதாரத்திட்டம் போல், கல்வியும் லாப நோக்கமுள்ள பெரும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டது. அந்த கல்வி சாலைகளில் சேர முடியாதவர்கள் கல்வி கற்கவே தகுதியற்றவர்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. உலகமயமாதல் கொள்கையால் பலதுறைகள் அழிந்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

கடன் தொல்லையிலிருந்து மீள முடியாத விவசாயிகள், நெசவாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.  நகர்ப்புறங்களில் தங்கம் உள்ளிட்ட, பெட்ரோல், உணவுப்பொருள், பால், காய்கறி, காலணி போன்ற பொருள்கைள விற்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெரும் நிறுவனங்களால் உள்நாட்டு தொழில்கள் நசிந்து விட்டது.  இன்று, அத்தகைய பெரும் முதலாளிகள் தாங்கள் இவ்வாறு ஈட்டும் பெரும் பணத்தை கோடி கோடியாக “இந்தியன் பிரிமியர் லீக்” ( ஐ பி எல்) (கிரிக்கெட் போட்டிகள்) போன்ற ஆடம்பர நிகழ்ச்சிகளில் முதலீடு செய்துவிடுகின்றனர். ஒரு காலத்தில் அரசியல்வாதி-வியாபாரிகள் கூட்டை ஏற்காமல் இருந்தோம்.  ஆனால் தற்போது பெருமுதலாளிகளான வியாபாரிகள் சட்ட சபைக்கும், மக்கள் சபைக்கும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வந்து கொள்கை முடிவுகளை தீர்மானிக்கின்றனர்.

“லால்கர், ஒரிஸ்ஸா அல்லது சத்தீஸ்கர் ஆகிய இடங்களெல்லாம் மாவோயிஸ்ட்டுகள் இயக்கம் வலுவடைவதற்கு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்காக ஆதிவாசிகைள இடம் பெயர்ந்து செல்ல வைக்கும் – அரசின் இத்தகைய கொள்கையே காரணம்” என்கிறார் புரட்சிகர எழுத்தாளர் தோழர் வரவரராவ். தென் அமெரிக்க நாடுகளை புரட்டிப் போட்ட உலகமய, சந்தைப் பொருளாதார அடிப்படைவாதத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ளாவிடில், தற்போதைய பொருளாதாரக் கொள்கையே நமது சீரழிவிற்கு காரணமாக இருக்கும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மாவோயிஸ்ட்டுகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, அவர்கள் வலியுறுத்தியதெல்லாம் இரண்டே இரண்டு முக்கிய பிரச்சனைகள்தான்.

அ) நிலச்சீர்திருத்தத்தை உடன் அமுல்படுத்துங்கள்
ஆ) ஆதிவாசிகளையும், அவர்களது நிலங்கள் மீது அவர்களுக்கு உள்ள உரிமையை பாதுகாக்கும் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்பதுதான்.

இதில் விநோதம் என்னவென்றால், இந்திய அரசியல் சாசனத்தில் நம்பிக்கை வைக்காத ஒருபிரிவினர் (மாவோயிஸ்ட்) அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடத்திவரும் மற்றொரு பிரிவினருக்கு (ஆட்சியாளர்கள்) என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதே.

உண்மை என்னவென்றால், நகர்ப்புறங்களில் பிரகாசிக்கும் வெளிச்சமே உண்மையான இந்தியா இல்லை என்பதுதான்.  அது கனிந்து கொண்டிருக்கும் ஒரு எரிமலையின் வெளிச்சமே. நமது உள்துறை அமைச்சர் நக்சல் பகுதிகளில் சட்டம், ஒழுங்கு நிலைநாட்டப்படுவது பற்றி பேசிவருகிறாரேயொழிய அதற்கான மூலகாரணத்தை உணர மறுக்கிறார்.

“லஞ்சம் நமது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்” என நமது துணை ஜனாதிபதி நம்ப, மாவோயிஸ்ட்டுகள்தான் பெரும் அச்சுறுத்தல் என நமது பிரதமர் நம்பிவரும் நிலையில், ஒரு கட்டத்தில் பண வீக்கம், ஏற்றத் தாழ்வான வருமான பங்கீடுமுறை, லஞ்சம் நாட்டின் ஸ்திரத்தன்மையை உலுக்குவதோடு, அரசின் அதிகாரத்திலும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக போகிறது. நான் சந்தித்த அந்த உயர் காவல்துறை அதிகாரி மிகவும் நாசுக்காக ஒன்றை கூறினார்.  “எவ்வளவு பாதுகாப்பு படையினரை குவித்து, எவ்வளவு நக்சல்பாரி போராளிகைள கொன்று குறித்தாலும் “மன்மோகனமிசம்” (உலகமய, தாராளமய கொள்கைகள்) இருக்கும் வரை மாவோயிசமும் இருக்கும்”.

தற்போது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு அச்சுறுத்தல் “மன்மோகனமிசமா” “மாவோயிசமா” என்பதைப்பற்றி நாட்டின் அறிவுசார் சான்றோர்கள் ஆழமாக விவாதிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

___________________________________________________

நன்றி : தி இந்தியன் எக்ஸ்பிரஸ் – 21 ஏப்ரல் 2010

தமிழில்:  சித்திரகுப்தன்

வாசகர்களுக்கு:

நாம் வாழும் இந்தியாவில்

— ஒரு கிலோ அரிசி ரூ 40

— சிம் கார்டு இலவசம்

— பிட்ஸா, ஆம்புலன்ஸ்-காவல்துறையைக்காட்டிலும் விரைவாக வீட்டிற்கு வருகிறது.

— கார் லோன் வட்டி 5 சதம், கல்விக்கடன் வட்டி 12 சதம்

— சட்டசபை கட்டிடம் ஒரு ஆண்டில் கட்டி முடிக்கப்படுகிறது.  ஆனால் மக்கள் பயன்பாட்டிற்கான பாலங்கள் கட்ட பல ஆண்டுகள் ஆகிறது. – – – இது இன்றைய இந்தியா!

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

மும்பை 26/11 – கசாப் மட்டும்தான் குற்றவாளியா?

132

vote-01226.11.08 மும்பையில் இசுலாமிய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஈடுபட்டு பலரைக் கொன்ற கசாப்பை உயிருடன் பிடித்து, கிட்டத்தட்ட ஒன்றரை வருடத்தில் விசாரணை முடித்து அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம். தண்டனையும் தூக்குதான் என்பதில் சந்தேகமில்லை. இனி வரும் வாரத்தில் இந்திய தேசபக்தியும், அடக்குமுறைச் சட்டங்களை கருணையின்றி பயன்படுத்த வேண்டுமென்ற பாசிசமும் பெருக்கெடுத்து ஓடும்.

மும்பைத் தாக்குதலை பாக்கிலிருந்து வந்த முட்டாள்தனமான பயங்கரவாதியாக மட்டும் சுருக்கிப் பார்த்தால் அது பல குற்றவாளிகளுக்கு ஆதாயமே. கசாப்பை துரித கதியில் தண்டித்த நீதி, குஜராத்தில் 2002ஆம் ஆண்டு முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த மோடியையும், ரத யாத்திரை, பாபர் மசூதி இடிப்பு மூலம் 90களில் ரத்த வெள்ளத்தை ஓடவிட்ட அத்வானியையும் இத்தனை ஆண்டுகளாகியும் ஏன் தண்டிக்கவில்லை? மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு முன்பாக மும்பையை ரத்த வெள்ளத்தில் ஆழ்த்திய பால்தாக்கரே, சிவசேனா கொலைகாரர்களது சுண்டு விரலைக் கூட இந்த நீதி தொட்டதில்லையே?

தாலிபான்களையும், பின்லாடன்களையும் திட்டமிட்டு உருவாக்கிய அமெரிக்கா இன்று இசுலாமிய சர்வதேச பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாக பிரகடனம் செய்து போரை நடத்தி வருகிறது. அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டால் ஒரு இசுலாமியப் போராளி முஜாகிதீனாகவும் தேவையில்லை என்றால் பயங்கரவாதியாகவும் மாற்றப்படும் மர்மம் என்ன?

உலக அரங்கில் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை வீழ்த்தாமல், இந்திய அரங்கில் இந்துமதவெறி பாசிஸ்ட்டுகளை அழிக்காமல் இரண்டு அரங்குகளிலும் இசுலாமிய பயங்கரவாதத்தை வேரறுக்க முடியாது.

மும்பையில் தாக்குதல் நடந்த சில நாட்களுக்குள்ளாகவே வினவில் “மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! என்ற தலைப்பில் ஆறு பாகங்களாய் ஒரு தொடர் கட்டுரை வெளியிட்டோம். பொது உணர்ச்சியின் பொய்யான தேசபக்தியில் மூழ்கிய உள்ளங்களை உண்மையான விவரங்கள், உண்மையைக் கண்டுபிடிக்கும் கண்ணோட்டத்துடனும் எழுதப்பட்ட அந்தத் தொடரை தேவை கருதி இங்கு மீள்பதிவு செய்கிறோம்.

கசாப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நேரத்தில் மறைந்து கொள்ளும் பயங்கரவாதிகளை இனம் காணும் இந்த நெடிய கட்டுரையை மீண்டும் படிப்பதோடு விவாதித்திலும் பங்கேற்குமாறு வாசகரை கோருகிறோம்.

மும்பை 26/11: அமெரிக்காவால் ஆசிர்வதிக்கப்பட்ட பயங்கரவாதம் ! (பாகம் – 1)

முதலாளிகளின் உல்லாசபுரி தாக்கப்பட்டதையே தேசத்தின் மீதான தாக்குதலாக சித்தரிக்கின்றன ஊடகங்கள். மக்கள் அடிபட்டால் கண்டும் காணாமலும் இருப்பவர்கள் முதலாளிகள் தாக்கப்பட்டதும் கதறி அழுகிறார்கள்……மேலும் வாசிக்க…

இந்துமதவெறியால் பிளவுண்ட மும்பை  ! (பாகம் – 2)

நிதியமைச்சகத்தை பிரதமரே வைத்துக் கொண்டிருப்பது அந்நிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியதோடு, மும்பைத் தாக்குதலால் சீர்குலைந்த பங்குச் சந்தை மீண்டும் எழுந்திருக்கிறதாம். அவர்களது பாதுகாப்புக்காகக் கவலைப்பட்டுச் செய்யப்படும் மாற்றங்கள் கூட அவர்களது பங்குச் சந்தை பாதிக்காதவாறு செய்ய வேண்டுமாம்.…..மேலும் வாசிக்க…

பொடா முதலிய அடக்குமுறை சட்டங்கள் பயங்கரவாதத்தை ஒழிக்கவா?  (பாகம் – 3)

தமிழகத்தில் ஈழம் என்று பேசினால் பொடா, காஷ்மீரில் சுதந்திரம் என்று உச்சரித்தால் பொடா, வடகிழக்கில் இந்தியா ஒடுக்குகிறது என உண்மையை உரைத்தால் பொடா, மோடியின் குஜராத்தில் முசுலீம் என்று சொன்னாலே பொடா…இவைதானே நடந்தது…..மேலும் வாசிக்க…

போலீசு, இராணுவம் – மக்களுக்கா, ஆட்சியாளர்களுக்கா ? (பாகம் – 4)

போலீசும், இராணுவமும் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளைக் காப்பாற்றுகிறது என்பதால்தான் அவர்கள் செல்லப்பிள்ளைகள் போல சீராட்டி வளர்க்கப்படுகிறார்கள். மும்பையில் கொல்லப்பட்ட கமாண்டோக்களின் பிரதான பணியைப் பார்த்தாலே இது விளங்கும்.…..மேலும் வாசிக்க…

காஷ்மீர், அப்சல் குரு…. இந்திய அரசின் பயங்கரவாதம் ! (பாகம் – 5)

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுத்த இந்தியா, அரச பயங்கரவாதத்தின் மூலம் அந்தப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி வந்தது. முதலில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற மதச்சார்பற்ற இயக்கங்கள் விடுதலைப் போராட்டத்தில் முன்னிலை வகித்தன. பின்னர் இந்தியா, பாக்கிஸ்தான் இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் காஷ்மீர் பிரச்சினையை வைத்து தத்தமது நாட்டு மக்களிடம் தேசிய வெறியைக் கிளறிவிட்டு ஆதாயம் அடையப் பார்த்தன.…..மேலும் வாசிக்க…

அமெரிக்கா ஊற்றி வளர்த்த ஜிகாதிப் பயங்கரவாதம் ! (பாகம் – 6)

ஆப்கானில் நாத்திகர்களும் சாத்தானின் வாரிசுகளுமாகிய கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அமெரிக்கா அவர்களை விரட்டுவதற்கு புனிதப்போர் துவங்குமாறு இசுலாமிய மதவாதிகளை அணிதிரட்ட ஆரம்பித்தது. இன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து புனிதப்போர் நடத்தும் பயங்கரவாதிகள் இப்படித்தான் தோற்றுவிக்கப்பட்டனர்.…..மேலும் வாசிக்க…

மும்பை 26/11: விளக்கமும் விவாதமும் – நூல் அறிமுகம்

வினவுத் தளத்தில் மும்பைத் தாக்குதல் குறித்து ஆறு பாகங்களாக வெளிவந்த தொடர் கட்டுரை  இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது. இதற்கு வந்த மறுமொழிகளும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் வந்த பின்னூட்டங்களை தமிழில் மொழிபெயர்த்து சேர்க்கப்பட்டுள்ளன…இசுலாமிய சர்வதேசியம் என்பது நிறைவேறவே முடியாத ஒரு அபத்தம். அன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்டு, இன்று அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புவதற்கும், இசுலாமிய நாடுகளின் மக்களை அடிமைப்படுத்துவதற்கும் பயன்பட்டு வரும் ஒரு கருவி. அவ்வளவே. ஆனால், மூலதனத்தின் சர்வதேசியமும், அதனை முன் தள்ளும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும் நாம் எதிர்கொண்டிருக்கும் உண்மைகள். உலக மக்களால் எதிர்க்கப்பட வேண்டிய உண்மையான எதிரிகள். பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் இந்த உண்மையான எதிரிகளைத் தப்பவிடுவதுடன், அவர்களுடைய கையாளாகவே நமது நாடு மாறிவிடக்கூடாது என்று எச்சரிப்பதே இக்கட்டுரைகளின் நோக்கம்.…..மேலும் வாசிக்க…

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? ஒரு அனுபவம் !!

97

vote-012தோழரொருவரின் மகள் பிளஸ் 2 தேர்வு எழுதியதை விசாரிக்கும் போது இந்த ஆண்டில், அறிவியல் பாடங்களின் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவிகள் கவலைப்படுவதைத் தெரிவித்தார். பத்திரிகைகளிலும் அப்படியே செய்திகள் வந்தன. தேர்வு குறித்த கவலைகள், அடி வயிற்றைப் பற்றிக் கொள்ளும் பதட்டம், விடுமுறையின் இனிய காத்திருப்பு எல்லாம் தாண்டித்தானே வந்திருப்போம். பாழாய்ப் போன நமது கல்வி அமைப்பை சிந்திக்கையில் ஒரிரு வருடங்களுக்கு முன்னர் ஒரு தோழரோடு தேர்வில் காப்பி அடிப்பது குறித்து நடந்த காரசாரமான விவாதம் நினைவுக்கு வந்தது. அப்படியே கொஞ்சம் சைக்கிளை ரிவர்சில் சுற்றி கடந்த காலத்திற்குச் சென்று பார்ப்போம்…..

_____________________________________________________

பத்தாவது வகுப்பில் காப்பி அடித்த கதை!

தந்தை அரசு அதிகாரியாக பணியாற்றியதால் தமிழகத்தின் பல ஊர்களில் வாழ்ந்து படித்த கதையில் இப்போது நேரே பத்தாவது வகுப்பிற்கு போய்விடலாம். ஒன்பதாவது வகுப்பில் எனது விடலைப்பருவ சேட்டைகள் அதிகமடைந்து விடுமுறையில் வீட்டில் பணம் எடுத்துக் கொண்டு பத்து நாட்கள் ஊர்சுற்றி விட்டு பணம் தீர்ந்த பிறகு வீடு திரும்பினேன். இந்தக் குழப்பத்தில் பத்தாவது வகுப்பின் ஒரிரு மாதங்கள் முடிந்து விட்டன.

அது கிராமங்கள் சூழப்பட்ட ஒரு சிறு நகரம் அல்லது பெரிய கிராமம். என் உடன் பிறந்தோர் எல்லாம் அந்த ஊரின் அரசுப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். நான் மட்டும் சற்று தாமதமாக பத்தாவதில் சேர்ந்தேன். சுற்றுப்பட்டு கிராமங்களிலிருந்து தினுசு தினுசாக மாணவர்கள். ஒரே ஒரு மாணவி. நான் பின்னாடி பெஞ்சில் ஐக்யமானேன். பையன் இனியாவது ஒழுங்காகப் படிக்க வேண்டுமென்று அப்பாவின் முடிவுப்படி கணக்கு, ஆங்கிலத்துக்கு டியூஷன்.

மற்றபடி பள்ளியில் படித்ததை விட ஊர் சுற்றியதுதான் அதிகம். சுற்று வட்டாரத்தின் எல்லா ஓட்டல்களுக்கும் படையெடுத்துப் போய் உணவு வகைகள் தீரும் வரை சாப்பிடுவது, அருகாமை கானக அருவிக்கு சென்று மீன் பிடித்து சுட்டு சாப்பிடுவது, பம்பு செட்டில் மணிக்கணக்கில் குளிப்பது, மிச்ச நேரம் எல்லா வகை விளையாட்டுக்களையும் விளையாடுவது என்றபடி சிறப்பாக போய்க் கொண்டிருந்த நேரத்தில் வில்லன் போல இறுதித் தேர்வு வந்தது. கொஞ்சம் பயமும் வந்தது.

அக்காவும் தம்பியும் அப்துல் கலாம் டைப் மாணவர்கள். அதாவது ஒழுங்காக படிப்பவர்கள். தங்கை கொஞ்சம் அய்யோ பாவம். நான் வீட்டீல் ஏற்கனவே ரவுடி என்று பேர் வாங்கியிருந்ததால் படிப்பு குறித்து நானோ மற்றவர்களோ பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. முக்கியமாக என்னைப் போல வகுப்பில் பலர் இருந்ததால் தெம்பாகத்தான் இருந்தேன். என்ன, அவர்களுக்கு நடப்பதுதான் எனக்கும் நடக்கும். இருந்தாலும் இறுதித் தேர்வில் ஃபெயிலாகி விட்டால்……?

வேலையில்லாமல் இருந்த முன்னாள் மாணவர்கள் தேர்வில் பாஸாவதற்குரிய எல்லா ‘வழி’களையும் சொல்லிக் கொடுத்து துணிவூட்டினார்கள். எங்கள் கடைசி பெஞ்ச் அணி கூட்டம் கூடி யோசித்ததில் ஒவ்வொருவரது பலவீனமும் தெரிய வந்தது. கணக்கு, ஆங்கிலம் டியூஷனால் ஓகே. மற்ற பாடங்களுக்கு என்ன செய்வது? இருந்த ஒரே வழி பிட்டடிப்பது அதாவது காப்பியடிப்பது. பழைய வினாத்தாள்கள், முக்கிய பாடங்கள், சூத்திரங்கள், எல்லாம் வைத்து எழுத வேண்டியதை முடிவு செய்து விட்டோம்.

அப்போது நாங்கள் அக்ரகாரத் தெருவில் குடியிருந்தோம். அன்றே பார்ப்பனர்கள் சென்னை, டெல்லி என்று சென்றுவிட்டதால் பார்ப்பனரல்லாதாருக்கும் அதுவும் அரசு அதிகாரிகள் என்றால் கண்டிப்பாக வீடு வாடகைக்கு கிடைக்கும். அக்ரகாரத்திற்கேயுரிய இரண்டு தெருக்களை இணைக்கும் நீண்ட வீடு. கடைசி வாரத்தில் தீவிரமாக படிக்கிறேன் பேர்வழியாக புழக்கடை முற்றத்தில் புத்தகங்களுடன் பல மணிநேரம் முடங்கிக் கிடப்பேன். வீட்டிலோ பையன் தீவிரமாக படிக்கிறான் என்று நினைக்க நானோ அங்கு தீவிரமாக எழுதிக் குவித்தேன். சின்ன சின்ன பேப்பரில் இடைவெளியில்லாமல் ஒரு முழுக் கட்டுரையையும் திணிப்பது  பேப்பரில் சிலை வடிப்பது போல. அல்லது அரிசியில் குறளையெல்லாம் எழுதி பெயர் வாங்குகிறார்களே அப்படி குறுகிய இடத்தில் பெருகிய வார்த்தைகளை குட்டி குட்டியாய் வடிக்கும் கலை என்றும் சொல்லலாம்.

மற்ற மாணவர்கள் எவ்வளவு படித்தாய் என்று வினவும் போது எங்கள் கடைசி பெஞ்ச் மட்டும் எவ்வளவு எழுதினாய் என்று அக்கறையுடன் விசாரிப்போம். ஆரம்பத்தில் ஆங்கிலம், கணக்கிற்கு பிட்டுக்கள் வேண்டாமென்று முடிவெடுத்திருந்தாலும் பின்னர் கொள்கையை மாற்றிக் கொண்டோம். காப்பி அடிப்பது என்று முடிவான பிறகு சில பாடங்களை மட்டும் ஒதுக்குவது நல்லதல்ல என்பதோடு, உருப்போட்ட ஆங்கிலப் பாடங்களைக் கூட காப்பி அடித்து எழுதுவது தனி சுகமாயிற்றே.

ஆவேசமாக எழுதியதாலோ என்னவோ கிட்டத்தட்ட முழுப் புத்தகத்தையும் கவர் பண்ணியதில் பிட்டுக்கள் மலையாக குவிந்து விட்டன. அவசரக் கூட்டம் கூடியது. அதில் ஆய்வு செய்து தீர்வு கண்டோம். அப்போது பேண்ட் இல்லை ட்ராயர்தான். ட்ராயர், சட்டையின் கீழ் தையல்களை பிரித்து குட்டி குட்டி லாக்கர்களை உருவாக்கினோம். அப்புறம் உடல் பாகங்களில் எங்கே என்னென்ன பிட் இருக்கிறது என்ற மேப் அல்லது மாஸ்டர் பிட் தயாரித்தோம். பிறகு எது எங்கே என்று குழம்பி விடக்கூடாதல்லவா. இனி தேர்வுக்கு செல்லலாம்.

தமிழ் முதல் தேர்வில் பிரச்சினையில்லை. ஆங்கில முதல் தேர்வில் அநேக கேள்விகளுக்கு பதில் தெரிந்தாலும் எழுதிய பிட்டுக்கள் வீணாகக் கூடாது என்று பார்த்தே எழுதினேன். வினாத் தாளையும், விடைத் தாளையும் பிரிக்கும் ஒரு மைக்ரோ செண்டி மீட்டரின் இடைவெளியில் பிட்டுக்களைப் பார்த்து எழுதவேண்டும். எழுதிக் கொண்டிருந்த போது தேர்வறை ஆசிரியர் என் மேசையருகே குனிந்து ஒரு பிட்டுப் பேப்பரை எடுத்து என்னிடம் நீட்டியவாறு நோக்கினார்.

முதலிலேயே சிக்கிவிட்டேன் என்ற அதிர்ச்சியில் உறைந்து அவர் முகம் பார்க்க அவரோ, ” இது உன்னுடையதா” என்று கேட்டவாறு கொடுத்து விட்டு போய்விட்டார். தெய்வமே…………..

ஆனால் என்னுடைய பிட்டை கீழே போடுமளவு நான் ஒன்றும் முட்டாளல்ல. எவ்வளவு ஒத்திகைகள், பிரயத்தனங்கள்? அது யாருடையது என்று எனக்குத் தெரியாது. ஆனால் அந்த தெய்வம் அதைக்கூட பொறுப்பாக எடுத்து நீட்டியதை இப்போது நினைத்தாலும் பூரிக்கிறது. சரி நமக்கு இவ்வளவு வரவேற்பா என்று அடுத்த அடுத்த தேர்வுகளுக்கு உற்சாகத்துடன் தயாரானோம்.

தமிழ், ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு பிட்டுக்கள் பெரிய அளவு பயன்படாது. இலக்கணம், அட்டவணைப் பொருத்துதல், கோடிட்ட இடங்களைப் நிரப்புதல் இப்படி சில்லறைத் தொல்லைகள். அதற்கு முன்னாள் மாணவர்கள் கை கொடுத்தார்கள். தேர்வு தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் வினாத் தாள் எப்படியோ வெளியே சென்று விடும். காவலுக்கு நிற்கும் காவலர்களை சில அண்ணன்கள் தேநீர்க்கடைக்கு அழைத்துச் செல்ல மற்ற அண்ணன்கள் காம்பவுண்டிற்கு வெளியே நின்று பதிலை கத்துவார்கள். எல்லாம் ஒரு வார்த்தை பதில்தானே. இருப்பினும் நாங்கள் ஒன்ஸ்மோர் கேட்க நினைக்கும்போது அவர்களே அதை இரண்டு முறை ரிப்பீட்டுவார்கள்.

இப்படியாக இலக்கணம் ஒழிந்தது. அடுத்த சனியன் அறிவியல். இதில் என்ன பிரச்சினை என்றால் என்னிடமிருக்கும் பிட்டுக்களுக்கு பொருத்தமான கேள்வி எது என்றே எனக்குத் தெரியாது. முதல் அரை மணிநேரத்தில் திணறிவிட்டேன். அப்புறம் ஆசிரியர் பின்னோக்கி உலவும் நேரத்தில் கேள்வித் தாள்களை மாற்றிக் கொண்டு பதில்களை அறிவாளி மாணவர்களின் உதவியுடன் கண்டு பிடித்தேன். வரலாறு இந்த அளவுக்கு மோசமில்லை. அதில் மட்டும்தான் காப்பியடிக்கவில்லை என்ற அளவுக்கு அந்த பாடத்தில் காதல் இருந்தது. இன்றைய என் நிலமைக்கு இப்படி ஒரு குருத்து அன்றே இருந்திருக்குமோ?

ஒரு வழியாக தேர்வுகள் முடிந்து பிட்டடித்த அனுபவங்களை பரிமாறிக் கொண்டு எப்படியும் பாஸாகிவிடுவோம் என்று முடிவு செய்தோம். விடுமுறையைக் கொண்டாடி வந்த போது அப்பாவுக்கு ஒரு மாவட்டத் தலைநகருக்கு மாற்றல் வந்தது. இந்த ஊரை விட்டு வெளியேறும் போது ஆங்கிலம் எடுத்த ஆசிரியர் என்னைப் பற்றி சொன்ன மதிப்பீடை நினைவு கூரவேண்டும். ” தம்பி இங்க வரும்போது பால் மாதிரி சுத்தமாக வந்த. இப்ப கள் மாதிரி கெட்டுப் போயிட்ட”

அப்புறம் மாலை முரசிலோ, தினத்தந்தியிலோ முடிவுகள் வர எனது எண்ணும் இருந்தது. ஆத்தா நான் பாஸாயிட்டேன் என்று பெரிய த்ரில் இல்லை. கடைசி பெஞ்சு முழுவதும் வெற்றி பெற்றனர். ஆனால் மதிப்பெண்கள் மட்டும் நிறைவாக இல்லை. எனக்கு 338 கிடைத்தது. சரி, பரவாயில்லை ஓசியில் இதுவாவது கிடைத்ததே என்று நார்மலாகி விட்டேன். பெற்றோருக்கு சற்று வருத்தம்தான். அக்கா, தம்பிக்கு ரவுடியை கிண்டலடிப்பதற்கு நல்ல வாய்ப்பு. இருந்தாலும் பயம் காரணமாகவோ, நல்ல எண்ணத்தாலோ அவர்களும் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

_____________________________________________

+2வில் படித்து வெற்றி பெற்ற கதை!

நகரின் புகழ் பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2. அறிவியல், கணக்குக்கு பெயர் பெற்ற குரூப் 1, 2இல் சேர்க்கத்தான் தந்தை விரும்பினார். என் அக்கா நான் பிட்டடித்த அதே பள்ளியில் பிளஸ் 2 முதல் குரூப்பில், தமிழ்வழிக் கல்வியில் 945 மதிப்பெண்கள் வாங்கி மெரிட்டிலேயே அரசு பொறியியல் கல்லூரி சென்று விட்டாள். மகளைப் போன்று மகனும் அப்படி செல்ல வேண்டுமென்பது தந்தையின் விருப்பம். அறிவியலின் கேள்வித் தாளையே புரிந்து கொள்ள முடியாத பாவத்தில் இருந்த நான் குரூப் 1 என்ற கொடுமையை எப்படி சமாளிப்பது? நான் மூன்றாவதோ இல்லை நாலாவதோ இல்லை இருப்பதிலேயே இழிவாகவோ கருதப்படும் வணிகவியல் – வரலாறு – பொருளாதாரம் எனும் அவியல் குரூப்பை விரும்பினேன். உண்மையில் வரலாறுதான் எனக்கு பிடித்த பாடம். ஆனால் என் தந்தையோ அப்படியே பி.காம், சி.ஏ செல்லலாம் என்று எண்ணினாரோ என்னமோ எனது விருப்பத்தை ஏற்றுக்கொண்டார். நானும் ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தேன்.

எனது தந்தை எங்கள் குடும்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு படித்த முதல் பட்டதாரி. அவருக்காக எங்கள் பாட்டி பட்ட கஷ்டங்கள், கதைகள் எல்லாம் மனப்பாடமாகும் அளவுக்கு கேட்டிருந்தோம். “என் தலையை அடகு வைத்தாவது உங்களை படிக்க வைப்பேன்” இதுதான் அப்பா அடிக்கடி சொல்லும் குடும்ப முழக்கம். அதிலும் எனக்காகத்தான் நிறைய மெனக்கெட்டார். சில புகழ் பெற்ற விடுதிப் பள்ளிகளிலெல்லாம் விட்டுப் பார்த்தார். ஆனாலும் எனக்கு சரஸ்வதி கடாட்சம் ஏனோ கிடைக்கவில்லை.

பிளஸ் 2வில் நிறைய அனுபவங்கள் இருக்கின்றன என்றாலும் நேரே இறுதித் தேர்வுக்கு சென்று விடலாம். அரையாண்டு முடிந்து மூன்று ரிவிஷன் டெஸ்ட்டுகள் நடந்தன. மூன்றிலும் எல்லா பாடத்திலும் வேண்டுமென்றே ஃபெயிலானேன். சும்மா இப்படி பயங்காட்டி எழுதவைக்கும் அந்தத் தேர்வுகள் எனது சுயமரியாதையை இழிவுபடுத்துவதாக எண்ணம். மற்றபடி அப்போது நான் கடைசி பெஞ்ச், வகுப்பு லீடர் என்றெல்லாம் ஆதிக்கம் செய்ததோடு கொஞ்சம் நன்றாக படிக்கும் மாணவன் எனுமளவுக்கு முன்னேறியிருந்தேன். அரையாண்டு ரேங்கிலெல்லாம் முதல் பத்துக்குள் வந்த்தாக ஞாபகம். அதுவே பெரிய விசயம்தானே.

தேர்வுக்கு முந்தைய மாதம் தீடிரென்று ஒரு பல்பு மூளையில் பிரகாசிக்க இப்போதாவது கொஞ்சம் தீவிரமாகப் படிப்போமே என்று இறங்கினேன். பத்தாவதுக்கு பிட்டடித்தது போல அமைந்த வீரர் குழாம் இங்கில்லை. பலரும் அப்துல்கலாம் டைப் மாணவர்கள்தான். அந்தப் பள்ளியும் மாவட்டத்தில் பிரபலமானது என்பதால் சிறுநகர சண்டித்தனங்கள் இங்கே எடுபட முடியாது.

எப்படியோ வீட்டு முற்றத்தில் ஒரு மாதத்திற்கான திட்டத்தோடு படித்தேன். படித்தேன். படித்துக் கொண்டே இருந்தேன். அப்போது அப்பாவும் உடன்பிறந்தோரும் வேறு வேறு ஊர்களில். நானும் அம்மாவும்தான். அம்மா எனக்காக இரவு தூங்கிக் கொண்டிருந்த நேரத்திலும் திடீரென்று விழித்து தேநீர் போட்டுக் கொடுப்பாள். அம்மாவைப் பற்றியும் இந்த மகளிர் தினத்திற்காக “கம்யூனிஸ்ட்டுகளும் அம்மாக்களும்” என்ற தலைப்பில் முக்கால்வாசி எழுதி அப்படியே நிற்கிறது. அடுத்த வருடம் வெளியிட வாய்ப்பு வரலாம். அதனால் இங்கே அம்மாவுக்கு பெரிய இடமில்லை.

நானே இப்படி என்றால் அப்துல் கலாம் டைப் மாணவர்கள் எல்லாம் எவ்வளவு தீவிரமாக படித்துக் கொண்டிருப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எனது நண்பன் ஒருவன் யாரெல்லாம் எப்படி எவ்வளவு படிக்கிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்வான். கடைசியில் தேர்வு வந்தது.

எங்கள் பிரிவு தமிழ் வழிக் கல்வியில் வருகிறது. எல்லோரும் பள்ளிப்படிப்பை தமிழில் படித்து வந்தவர்கள்தான். இதனால் எல்லாரும் பயந்த பாடம் ஆங்கிலம். மற்ற பாடங்களையெல்லாம் நம்பிக்கையோடு படித்தவர்கள் கூட ஆங்கிலத்திற்கு வெகுவாக அஞ்சினார்கள். முக்கியமாக இரண்டாம் தாளில் உள்ள இலக்கணப் பிரிவு. என் வரலாற்றில் நல்ல ஆசிரியர்கள் இருந்தார்களோ என்னமோ எனக்கு ஆங்கில இலக்கணம் எப்படியோ உள்ளே சென்று விட்டது. தேர்வுக்கு முந்தைய நாட்களில் சில மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நம்பிக்கை ஊட்டினேன். இருப்பினும் அன்று மட்டும் எனது விடைத்தாளை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று சிலர் கோர நானும் ஏற்றுக் கொண்டேன்.

அன்றைக்கு ஒருவரிக் கேள்விகளை எழுதி முடித்த பிறகு எனது விடைத்தாள் நானிருந்த அறையில் சுற்றுப் பிரயாணம் செய்து கடைசி அரை மணிநேரத்திற்கு முன்னர் என்னிடம் திரும்பியது. அது வந்த ஐந்து நிமிடங்களுக்குள் பறக்கும்படை என்ற வில்லன்கள் வந்து கழுகு போல சுற்றி வந்தார்கள். என்னைப் பார்த்து எழுதிய மாணவன் ஒருவன் அவனுக்குப் பின்னால் உள்ள மாணவனுக்கு தாளைக் கொடுத்திருந்தான். இருவரும் அந்த வில்லன்களிடம் சிக்கிவிட்டார்கள்.

பிறகென்ன. இருவரும் அறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களது பிளஸ் 2 வாழ்க்கை அத்துடன் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு மூன்று ஆண்டுகள் வரை அவர்கள் தேர்வெழுதமுடியாது என்று ஆனதாக நினைவு. அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து போனோம். அன்றைக்கு அந்த வில்லன்கள் சற்று முன்னாடி வந்திருந்தால் நான் உள்ளிட்டு பலரும் மாட்டியிருப்போம். பிறகு அந்த மாணவர்கள் எங்கள் நினைவுகளை விட்டு அகன்று போனார்கள். பின்னாடி அதில் ஒருவன் எல்லாப்பாதுகாப்பு படையில் இருப்பதாக கேள்விப்பட்டு ஆறுதலடைந்தோம்.

பரிட்சை முடிவுகள் வந்தன. எனது நண்பன் ஓடி வந்து ” நீதான் வகுப்பில் முதல் மார்க், 947″ என்றதோடு அப்துல்கலாம் டைப் மாணவர்கள் எவரும் 900த்தை தாண்டவில்லை என்பதால் வருத்தத்தில் இருப்பதாகக் கூறினான். சரி அதுதான் ‘இறைவனின்’ திருவிளையாடல் என்றால் யார் என்ன செய்வது? அப்புறம் அந்த நண்பர்களை தேற்றி விட்டு வீடு திரும்பினேன்.

பத்தாவதில் பிட்டடித்துப் பாஸாகி பன்னிரெண்டாவதில் வகுப்பில் முதலிடமென்றால் என்னால் நம்ப முடியவில்லை. அப்பாவிடம் நான் சொன்ன முதல் விசயம் அக்காவை விட இரண்டு மார்க் அதிகம் என்ற பந்தாதான். அதையே என் தந்தை எல்லோரிடத்திலும் சொல்லிச் சொல்லி திருப்தி அடைந்தார். அடுத்து கல்லூரி வாழ்க்கை.

____________________________________________

கல்லூரியில் கடமைக்காக படித்த கதை!

எங்கள் நகரில் இரண்டு கல்லூரிகள் பிரபலம். ஒன்று நன்றாகப் படிப்பவர்களின் கல்லூரி என்றால் மற்றது சுமாராகப் படிக்கும் சாதாரண மாணவர்களின் கல்லூரி. எல்லோரும் இரண்டிலும் விண்ணப்பித்தோம். எனக்கு மட்டும் அப்துல்கலாம் டைப் கல்லூரியில் இடம் கிடைத்தது. மற்ற வகுப்புத் தோழர்கள் சாதா கல்லூரிக்கு சென்றார்கள். அவர்களை பிரிய நேர்ந்தது இன்றைக்கும் எனக்கு வருத்தமே. மற்றபடி புதிய கல்லூரியில் மாணவிகளும் வருகிறார்கள் என்பதுதான் எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல்.

அந்த ஆறுதலும் நேரில் பார்த்த சில நாட்களில் கரைந்து போனது. மாணவிகள் மட்டுமல்ல, மாணவர்களும் கீ கொடுக்கப்பட்ட பொம்மைகளைப் போல வந்து போனார்கள். பரபரப்போ, கலாட்டாவோ, குதூகலமா எதுவும் இல்லை. கல்லூரிக் காலங்களில் எனது அரசியல் ஆர்வம் முளைவிட்டு எண்ணத்தை ஆக்கிரமித்திருந்த காலம். சமூகப்பணிகளை முடித்து விட்டு கடனே என்று கல்லூரி சென்று வந்தேன். அப்பா எனக்கு வாங்கிக் கொடுத்த சைக்கிள் ஊரைச் சுற்றுவதற்கு கை கொடுத்தது.

தமிழ் வழியில் கற்றிருந்த எனக்கு அதாவது ” உள்வருவன பற்று, வெளிச்செல்வன வரவு ” என்று புரிந்து, கணக்குப் பதிவியலில் – அதாங்க அக்கவுண்டன்சி – கிட்டத்தட்ட சென்டம் வாங்கியிருந்த எனக்கு ஆங்கிலம் புரிபடவில்லை. இதில் ஏதோ சுக்லாவோ, பக்லாவோ அவருடைய தலையணை சைஸ் புத்தகத்தை தினசரி சைக்கிளில் சுமந்து செல்லவேண்டும். உடற்பயிற்சி, அம்மாவின் வக்கனையான சாப்பாடு, நீண்ட சைக்கிள் பயணம் எல்லாம் சேர்ந்து கண்களைச் செருகும். திறந்தபடியே தூங்கும் கலையைக் கற்றுக் கொண்டேன். அந்தப் பேராசிரியரும் அதை தெரிந்தே அனுமதித்திருப்பாரோ?

பொருளாதாரம், வணிகவியல் பேராசிரியர்களெல்லாம் தாங்கள் ஆங்கிலத்தில் பேசுவதே பெருமை என்ற அளவில் மட்டும் கதைத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது பார்த்தால் அது ஆங்கிலத்திலும், பாடத்திலும் தரமில்லாத மொக்கைகள் என்று தெரிகிறது. சரி எப்படியோ மூன்று வருடம் குப்பை கொட்டி இறுதி பருவத் தேர்வுக்கு வந்துவிட்டேன்.

இடையில் சாதாரண மாணவர்கள் படிக்கும் கல்லூரி நண்பர்களை அடிக்கடி சந்தித்து அளவளாவுவேன். அப்போதுதான் அங்கே மட்டுமல்ல தமிழகத்தில் பல அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில வழியில் படித்து விட்டு தமிழில் தேர்வு எழுதும் விசயம் அறிந்தோம். இதில் மதிப்பெண்கள் அதிகம் கிடைக்காது என்றாலும் முதலுக்கு மோசமில்லை. ஆகவே எல்லாத் தியரி பேப்பர்களையும் தமிழில்தான் எழுதி சுமாராக மதிப்பெண் பெற்று இறுதி ஆண்டு வந்தடைந்தோம்.

அப்போது நானும், எனது நண்பனும் என்ன செய்வோமென்றால் பரிட்சைக்கு முந்தைய நாட்களில் அநேக தடவை முதல்நாளில் அந்த கோனார் நோட்ஸ் போன்ற புத்தகத்தை வாங்கி இரண்டாக கிழித்து மாற்றி மாற்றி படிப்போம். அப்துல்கலாம் டைப் மாணவர்கள் இதை கேலியுடன் பார்த்தாலும் யாரும் பயம் காரணமாக நேரில் காட்டுவதில்லை.

இறுதியாண்டு தேர்வுகளில் அதையே கடைபிடித்தோம். எனினும் புள்ளியியல், கணக்குப் பதிவியல் இரண்டுக்கும்  தமிழ் உதவாது. அதை மட்டும் முன் பக்கம் இருந்த அப்துல் கலாம் டைப் மாணவனைப் பார்த்து எழுதினேன். அவன் இப்போது கண்டிப்பாக சி.ஏ படித்துவிட்டு ஏதோ ஒரு அம்பானி கம்பெனியில் கள்ளக்கணக்கு எழுதிக் கொண்டிருப்பான் என்பது மட்டும் நிச்சயம். கடைசியில் புள்ளியலில் மட்டும் ஃபெயில். அதை மட்டும் அடுத்த ஆண்டு டியூஷன் சென்று முடித்தேன். இப்படியாக பி.காம் முடிந்தது.

அப்பறும் பொழுது போகாமல் அஞ்சல் வழிக் கல்வியல் இரண்டு எம்.ஏ படித்து ஒன்றில் தேர்வானேன். அதுவும் எனக்குப் பிடித்த வரலாறும், அரசியல் விஞ்ஞானமும். வரலாற்று பாடங்களையெல்லாம் முன்னதாகவே நூலகத்தில் படித்து முடித்திருந்த படியால் தேர்வில் சுவாரசியமில்லை. இருந்தும் ரசிய வரலாறோ இல்லை ஐரோப்பிய வரலாறோ ஏதோ ஒரு பாடத்தில் மிக நன்றாக எழுதியும் பெயிலாக்கியிருந்தார்கள். இந்த பாடத்தில் நான் டியூஷன் எடுத்த நண்பன் பாசாகியதுதான் கேலிக்கூத்து. இதுதான் அஞ்சல் வழிக்கல்வியின் இலட்சணம். இரண்டாவது எம்.ஏவிற்காக அரசியல் விஞ்ஞானம் படிக்கும் போது தந்தை ஒரு பட்டயப் படிப்பிற்காக சென்னைக்கு அனுப்பவதாக கூறினார். அது படித்தால் வெளிநாட்டிலெல்லாம் வேலை வாய்ப்பு குவியுமாம்.

அப்பாவின் ஆசைக்கு தலையாட்டிய நானோ அரசியல் தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பாக சென்னைக்கு விரும்பி வந்தேன். வந்து ம.க.இ.கவில் தோழராகி உண்மையான கல்வி, அறிவு, வாழ்க்கையை இன்றும் தொடர்கிறேன். இன்றுவரை எனது டிகிரி சான்றிதழ்களை வாங்கவில்லை. அதற்கான தேவையுமில்லை. மற்றபடி எனக்கே தெரியாமல் நடக்கும் உறவினர் திருமணங்களில் எனது பெயர் பி.காம், எம்.ஏ என்று பின்னிணைப்புகளுடன் வருவதாக தம்பி கூறுவான். அதைத் தவிர எனது வரலாற்றில் இந்த மொக்கை டிகிரிகளுக்கு மதிப்பேதுமில்லை.

மார்க்சியத்தை அறிந்த பின்தான் எது கல்வி என்பதையும், சமகால வாழ்க்கையை புரிந்து கொள்ள உதவும் அதன் வியப்பூட்டும் பலத்தையும், இளமைத் துடிப்பையும் அனுபவித்து கற்றிருக்கிறேன். அப்போது ரசியாவில் போலி சோசலிசம் உடைந்து கம்யூனிசம் என்றாலே தோல்வி மனப்பான்மை என்று மற்றவர்கள் எக்காளமிட்ட காலம். அக்காலத்தில் மார்க்சியத்தை தோழர்களின் உதவியால் படித்ததும், அதையே நடைமுறையில் மாற்று அரசியல் கொண்டோரிடம் விவாதித்து செழுமைப் படுத்தியதும் என்னைப் பொறுத்தவரை முக்கியமான காலகட்டம். அது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல, பல தோழர்களுக்கும் பொருந்தும்.

____________________________________________

காப்பி அடிப்பதை எப்படி நிறுத்துவது?

சில ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த தோழர் படித்து முடித்த கையோடு ஒரு கல்லூரியில் மாலைநேர பகுதி ஆசிரியராகச் சேர்ந்திருந்தார். தினசரி கல்லூரி அனுபவங்களை தொலை பேசுவார். வினவிலும் அவ்வப்போது பின்னூட்டமிடுவார். ஒரு முறை பேசும் போது ஆங்கிலப் பாடத்திற்காக காப்பி அடித்த இரு மாணவர்களை நிர்வாகத்திடம் பிடித்துக் கொடுத்தாக கூறினார். எனக்கு கடுமையான கோபம். இருவரும் காரசாரமாக விவாதித்தோம்.

அவரைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு ஒழுக்கமும், கட்டுப்பாடும் அவசியம், அதை இந்த வயதில்தான் கற்றுக் கொடுக்க வேண்டும், தேவையென்றால் இத்தகைய தண்டனைகள் அவசியம் என்கிறார். என்னைப் பொறுத்தவரை சென்னை நகரில் இருக்கும் அந்தக் கல்லூரியில் ஏழை, நடுத்தர மாணவர்கள் படிக்கிறார்கள். ஆங்கிலத்தை நேர்த்தியுடன் பேசும் பின்புலமற்ற, ஆங்கிலம் என்றாலே தாழ்வு மனப்பான்மைக்குள்ளாகும் அவர்களை அப்படி தண்டிப்பது தவறு. ஆங்கிலம் என்ற வில்லனால் அறிவுக்கூர்மையும், திறமையும் கொண்ட பல மாணவர்கள் தத்தமது துறையில் நீர்த்துப் போயிருப்பதை நேரிலேயே கண்டிருக்கிறேன்.

ஆகவே இந்தப் பின்புலத்தைக் கணக்கில் கொண்டு ஆங்கிலப் பாடத்தை காப்பியடிக்கும் அந்த மாணவர்களை அந்த தோழர் கண்டுகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பதுதான் எனது வாதம். கடைசிவரை தோழர் அதை ஏற்கவே இல்லை.

சென்னையில் கல்லூரியின் படிக்கட்டுக்களைக் கூட மிதிக்காமல் பல ஆயிரங்களை செலவிட்டால் டிகிரி வாங்க முடியும். அப்படி சிலர் வாங்குவதாக பத்திரிகைகளும் தெரிவிக்கின்றன. ஏழை மாணவர்களோ எப்பாடு பட்டாவது படித்து ஒரு வேலை தேட நினைக்கின்றனர். ஆங்கிலம் போன்ற பிரச்சினைக்குரிய பாடங்களில் காப்பி அடிப்பதும் அப்படித்தான்.

இதனால் காப்பி அடிப்பதை நியாயப்படுத்தவில்லை. அதன் பின்புலத்தை மாற்றுவது  குறித்தே என் அக்கறை. காப்பி அடிப்பதால் மாணவர்கள் ஒன்றும் கலகக்காரர்களாகி விடுவதில்லை. அவர்களது சமூக அக்கறையையும் அது தீர்மானிப்பதில்லை. காப்பி அடிப்பதின் தேவையும் வர்க்க பின்புலத்தை வைத்து மாறுகின்றன. பொதுவில் காப்பி அடிக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை, அவர்களது கல்லூரி வாழ்க்கையை பாதிக்காத வண்ணம் சிறு சிறு தண்டனைகள் என்று இருக்கலாம். மற்றபடி மெக்காலே பாணி குமாஸ்தாக்களை பொம்மை போல உருவாக்கும் இந்தப் பாடங்களை படித்தோ, காப்பியடித்தோ பாசானாலும் எந்தப் புண்ணியுமும் இல்லை.

பல தனியார் பள்ளி, கல்லூரிகளில் ரிசல்ட் காட்டவேண்டுமென்பதற்காக பார்த்து எழுதுவதை ஏதோ ஒரு முறையில் அனுமதிக்கிறார்கள். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால் மாணவர்கள் காப்பி அடிக்கக் கூடாது என்பதை தீவிரமாக அமுல்படுத்தும் போது காப்பி அடிப்பதை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் பணிதொடர்பான பிரச்சினையாக மாற்றவேண்டும்.

அதாவது மாணவர்களின் தவறுகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்குவது. மாணவன் காப்பி அடித்தால் ஆசிரியரின் ஊக்கத்தொகையை குறைப்பது, அவனுக்கு தனி இலவச டியூஷன் எடுப்பது என்று மாற்றினால்  நன்றாக இருக்கும். மாணவர்களைப் பொறுத்தவரை இந்த மொக்கைப் பாடத்திட்டங்களை ஓரிரு மாதங்களுக்கு படித்தாலே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பதை உணரவேண்டும். எங்களைக் கேட்டால் மாணவர்களின் வாழ்க்கையில் அரசியல் செயல்பாடுகள் கலந்தால் இந்த காப்பி அடிக்கும் பிரச்சினை மட்டுமல்ல, விடலைப் பருவ பிரச்சினைகள் கூட தீரும் என்று கருதுகிறோம்.

“என்னது மாணவர்களுக்கு அரசியலா” என்பவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களை சந்தித்து தெளிவடையலாம்.

_________________________________________________

பின் குறிப்பு: இதையே ஒரு தொடராக எழுதுமாறு பதிவுலக நண்பர்களைக் கோருகிறோம். எது கல்வி, எது அறிவு, காப்பியடிப்பது, கல்வி முறை, தேர்வுமுறை, ஆங்கிலம் படிப்பதில் உள்ள பிரச்சினைகள் என்று உங்கள் அனுபவத்தோடு எழுதலாம். வாசகர்கள் இங்கேயே விவாதிக்கலாம்.

_______________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்:


இரத்தத்தால் வரையப்பட்ட லத்தீன் அமெரிக்கா !புதிய தொடர் !!

37

தோழர் கலையரசனின் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” தொடர் வினவுத் தளத்தில் வெளிவந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்று, பின்னர் அது தனி நூலாக வெளிவந்து சென்னை புத்தகக் கண்காட்சியில் பெரும் எண்ணிக்கையில் விற்பனையானது. இப்போது அவர் எழுதும் லத்தீன் அமெரிக்காவைப் பற்றிய தொடரை வெளியிடுவதில் வினவு பெருமை கொள்கிறது. தோழர்கள், வாசகர்கள், பதிவர்கள் அனைவரும் இந்த தொடரைப் படித்து பயன்பெறுவதோடு, அது தொடர்பான அரசியல் விவாதங்களில் பங்கு கொள்ளுமாறும் கோருகிறோம். – வினவு

____________________________________________________________

உலகில் இன்னொரு அமெரிக்கா இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த “ஐக்கிய அமெரிக்க நாடுகளை” விட பரப்பளவால் இரண்டு மடங்கு பெரியது. அந்தக் கண்டத்தை சேர்ந்த 500 மில்லியன் மக்கட்தொகை ஸ்பானிய, போர்த்துக்கீசிய மொழிகளைப் பேசுவதால் “லத்தீன் அமெரிக்கா” என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மொழிகள் பண்டைய லத்தீன் மொழியின் அடிப்படையில் அமைந்ததால் அந்தப் பெயர் வந்தது. சரியான அர்த்தத்துடன் தான் அந்தப் பெயர் சூட்டப்பட்டதா?

வாஷிங்டனை தலைநகராகக் கொண்ட அமெரிக்கா என்ற 50 மாநிலங்களின் குடியரசில், நாற்பது மிலியன் ஸ்பானிய மொழி பேசுபவர்கள் வாழ்கிறார்கள். அது இன்று உலகில் ஐந்தாவது ஸ்பானிய மொழி பேசும் நாடு! நியூ மெக்சிகோ போன்ற மாநிலங்களில் ஆங்கிலத்தை விட, ஸ்பானிஷ் அதிகம் பேசப்படுகின்றது.தென் கிழக்கு ஃப்ளோரிடா என்றழைக்கப்படும் மூன்று மாவட்டங்களில் மட்டும் (மயாமி, ப்ராவர்ட், பாம் பீச்) ஸ்பானிய மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.  இன்னும் கொஞ்சம் மேலே செல்லுங்கள். கனடாவில் லத்தீன் அடிப்படையில் அமைந்த இன்னொரு மொழியான பிரெஞ்சு பேசும் மக்கள் தனியாக “கெ பெக்” (Québec ) என்ற மாநில சுயாட்சியின் கீழ் வாழ்கின்றனர்.

தென் அமெரிக்கா கண்டம் முழுவதும் லத்தீன் மொழிகள் மட்டுமே பேசப் படுகின்றனவா? கயானாவிலும் சிறிய கரீபியன் தீவுகளிலும் ஆங்கிலம் ஆட்சி மொழி. சுரினாமில், நெதர்லாந்து உத்தியோகபூர்வ மொழி. இவை லத்தீன் அடிப்படை அற்ற, ஜேர்மனிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகள். சிலி நாட்டில் கணிசமான அளவு ஜெர்மானியர்கள், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வாழ்கின்றார்கள். அவை இன்றும் “குட்டி ஜெர்மனிகளாக” காணப்படுகின்றன. பிரேசிலில் சாவோ பவுலோ (São Paulo) நகரில் வாழும் சில மில்லியன் ஜப்பானியர்கள், இன்றைக்கும் தமது ஜப்பானிய மொழியை மறக்கவில்லை.

பெரு நாட்டு பொருளாதாரத்தில், ஜப்பானிய வணிகர்களின் ஆதிக்கம் தவிர்க்க முடியாதது. அங்கே புஜிமோரி (புலம்பெயர்ந்தாலும் பெயரை மாற்றவில்லை) என்ற ஜப்பானியர் ஒரு தசாப்தமாக ஜனாதிபதியாக வீற்றிருந்தார். பதவியிழந்ததும் பாட்டன்மாரின் தாயகத்தில் சென்று தஞ்சம் புகுந்தார். ஆர்ஜன்தீனாவில் ஒரு மில்லியன் ஆங்கிலேயர்கள், விக்டோரியா இராணி காலத்து தொடர்புக்கு சாட்சியாக வாழ்கின்றனர். புவனொஸ் ஐரெஸ் (Buenos Aires ) நகரில் சாயங்கால தேநீர் விருந்தில் “புவனஸ் அயர்ஸ் ஹெரால்ட்” நாளேட்டுடன், ஆங்கிலம் பேசுவதை இன்றைக்கும் பார்க்கலாம்.

அமெரிக்கா என்ற புதிய பூமியை கொலம்பஸ் கண்டுபிடித்தது ஒரு புறம் இருக்கட்டும். யார் “லத்தீன் அமெரிக்கா” என்ற சொல்லைக் கண்டுபிடித்தார்கள்? நிச்சயமாக 19 ம் நூற்றாண்டு பிரெஞ்சு காலனியாதிக்கவாதிகளின் அரசியல் சொல்லாடலாக இருக்க வேண்டும். வட அமெரிக்கக் கண்டத்தில் பெருமளவு பகுதிகளை கபளீகரம் செய்த ஆங்கிலேயரை எதிர்க்க முடியாமல் போர்க்களத்தில் தோல்வியுற்றனர் பிரெஞ்சுக்காரர்கள். லூசியானா (அமெரிக்கா), கெபேக் (கனடா) என்று தமது உடன்பிறப்புகளின் மாநிலங்களையும் பறிகொடுத்தார்கள்.

பிரெஞ்சு அரசுக்கு கொள்கை வகுத்துக் கொடுத்த அறிவுஜீவிகளின் மனதில் தோன்றிய தீர்க்கதரிசனம் வரப்போகும் உலகை மாற்றியது. வட அமெரிக்க ஆங்கிலேயரின் பலத்தை சமன் செய்ய தென் அமெரிக்காவை முன் நிறுத்தினார்கள். எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு வைத்த பெயரான லத்தீன் அமெரிக்கா என்ற சொற்பதம் இன்று வரை நிலைத்து நிற்கிறது.

“கொலம்பஸ் 1492 ம் ஆண்டு அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.” உலக நாடுகள் எங்கும் பள்ளிச் சிறுவர்களின் மனதில் புகுத்தப்படும் சரித்திர பாடம். அமெரிக்கா ஒன்றும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் அடியில் மறைந்திருக்கவில்லை, கொலம்பஸ் வந்து கண்டுபிடிப்பதற்கு. கொலம்பஸ் வருவதற்கு 35000 வருடங்களுக்கு முன்னரே ஆசியாவில் இருந்து (இன்றைய ரஷ்யாவின் கிழக்கு எல்லை) மக்கள் அமெரிக்கா வந்து குடிபுகுந்துள்ளனர். தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த ஆசிய இனக்குழுக்கள், நாகரிக வளர்ச்சி அடைந்திருந்தனர். மாபெரும் சாம்ராஜ்யங்களைக் கட்டியுள்ளனர். இந்த நாகரீங்களில் பல, கொலம்பஸ் பஹாமாஸ் தீவில் கால் பதிப்பதற்கு நூறாண்டுகளுக்கு முன்னரே அழிந்து விட்டன. கொலம்பஸ் பிறப்பதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஸ்காண்டிநேவியாவில் இருந்து வந்த வைகிங் மக்கள் குடியேறியுள்ளனர். சிறு தொகையினரே என்றாலும், கனடாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட “நியூ பவுன்ட்லான்ட்”(New Foundland ) எனுமிடத்தில் தமது தடயங்களை விட்டுச் சென்றுள்ளனர். இதைவிட எழுதப்பட்ட ஆவணங்கள் கிடைக்கப் பெறாத பினீசிய(லெபனான்), சீன கடலோடிகளின் கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசப்படுவதில்லை. அப்படியானால் கொலம்பஸ் எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறார்?

500 வருட கால “ஐரோப்பிய மையவாத அரசியல்” கொலம்பஸின் உதவி இன்றி உயிர் பெற்றிருக்காது. இன்றைக்கு ஐரோப்பிய கலாச்சாரம் உலகை ஆக்கிரமித்திருக்கிறது. ஐரோப்பியரின் அரசியல் ஆதிக்கம் உலகை அச்சுறுத்துகிறது. அதற்கெல்லாம் அவர்கள் கொலம்பஸிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளனர். ஆம், ஐரோப்பியர்கள் உலகை ஆள வழி திறந்து விட்டவர்தான் கொலம்பஸ்.

அன்றைய ஸ்பானிய இராணி இசபெல்லா தனது நகைகளை விற்று கொலம்பஸின் கடற்பயணத்திற்கு நிதி சேர்த்தார். அவர் கண்களில் கனவுகள் இருந்தன. கடல் கடந்து புதிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் கனவு. நூறாண்டுகளுக்கு முன்பு உதிரிகளாக உலகை சுற்றிய கடலோடிகள் எழுதிவைத்த குறிப்புகளுடன் வந்தார், ஜெனோவாவை (இன்று, இத்தாலி) சேர்ந்த கொலம்பஸ். “செல்வந்த நாடான இந்தியாவில் இருந்து சரசேனர்கள் (அரேபிய முஸ்லிம்கள்) திரவியங்களை கொண்டு வந்து விற்று லாபம் சம்பாதிக்கின்றனர். நாம் நேரடியாக வியாபாரத்தில் இறங்க வேண்டுமானால் கடல் பாதையை கண்டுபிடிக்க வேண்டும்.” கொலம்பஸின் திட்டம் இசபெல்லாவின் மனதில் ஆழமான தாக்கத்தை உண்டுபண்ணியது.

கஸ்திலிய நாட்டு (ஸ்பானியாவின் பழைய பெயர்) கொடியுடன் புறப்பட்ட கொலம்பஸின் கப்பல்கள் பஹாமாஸ் தீவில் தரை தட்டின. ஆரம்பத்தில் தங்கம் கிடைக்கிறதா எனத் தேடினார்கள். அது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கரீபியன் தீவுகளின் மக்களை அடிமைப்படுத்தினார்கள். மூட்டைப்பூச்சிகளைக் கொல்வதைப் போல தேடித் தேடி அழித்தார்கள். இன்றைய உலகம் அதை இனவழிப்பு என்று கூறும். அன்று அதுதான் அரச கொள்கை. கத்தோலிக்க கிறிஸ்தவ மதமும் இனவழிப்புக்கு துணை போனது. முதலில் கரீபியன் கடல் பகுதி தீவுகளை சுத்திகரித்தார்கள். பிறகு ஸ்பானியாவில் இருந்து படைகளைத் தருவித்தார்கள். மத்திய அமெரிக்காவை கைப்பற்ற குறி வைத்தார்கள். இவை அனைத்தும் கொலம்பஸின் காலத்தில் நடந்தவை.

கொலம்பஸ் ஒரு கண்டுபிடிப்பாளன் மட்டுமல்ல, கப்பற்படைத் தலைவன், நிர்வாகி… இவ்வாறு மட்டும் வரலாற்றில் பதியப்பட்டிருக்கலாம். ஆனால் கூடச் சென்ற கொலம்பஸின் தம்பி ஒரு ஆக்கிரமிப்புப் படைகளின் தளபதி. ஆம், கொலம்பஸ் வெறுமனே அமெரிக்காவை கண்டுபிடித்ததுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. படையெடுத்து ஆக்கிரமிக்கவும், அடிமைப்படுத்தவும் வழிகாட்டினான். அதனால் தான் எமது சரித்திரப் பாட நூல்களில் கொலம்பஸிற்கு சிறப்பான இடம் வழங்கப் பட்டுள்ளது. உலகம் கண்டிராத மாபெரும் இனவழிப்புக்கு வித்திட்ட ஒருவர் உதாரண புருஷராக போற்றப்படுகிறார்.

அமெரிக்காவை கண்டுபிடித்தது ஒரு தற்செயல் நிகழ்வல்ல. கொலம்பஸ் புறப்படுவதற்கு 50 வருடங்களுக்கு முன்னரே, ஸ்பானிய, போர்த்துக்கேய கடலோடிகள் அட்லாண்டிக் சமுத்திரத்தில் அருகில் இருந்த தீவுகளை கண்டுபிடித்தார்கள். கனாரி, மடைரா போன்ற தீவுகளை சொந்தமாக்கிக் கொண்டார்கள். ஆப்பிரிக்காவின் சில கரைகளுக்கும் சென்றார்கள். அங்கு வாழ்ந்த மக்களை சிறைப் பிடித்தார்கள். தாய்நாட்டில் அடிமைகளாக வேலை வாங்கினார்கள். அன்றைய ஐரோப்பாவில் அவர்களிடம் தான் சிறந்த கடற்படை இருந்தது. நவீன கப்பல்கள் இருந்தன.

ஆனால் அவர்கள் தாயகம் இன்றைய ஸ்பெயின், போர்த்துக்கல்லின் வடக்கே உள்ள ஒரு சிறிய பிரதேசமாக இருந்தது. இபேரிய உபகண்டம் என்றழைக்கப் படும் அந்தப் பகுதியில், பெருமளவு அரேபியரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. அரபு ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஐரோப்பாக் கண்டத்திலேயே நாகரிக வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தது. உயர்தர கம்பளியை இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்யுமளவிற்கு வணிகத்தில் சிறந்து விளங்கியது. தொழிற்துறை வளர்ச்சி காணப்பட்டது. வடக்கே இருந்த கிறிஸ்தவ ஸ்பானியர்களும், போர்த்துக்கேயரும் இதைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிரான கத்தோலிக்கர்களின் புனிதப்போர் அறிவிக்கப் பட்டது. உண்மையான ஆண்டவரைக் கொண்ட கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தவர்கள், மோசக்கார முஸ்லிம்களை எதிர்த்து போரிட வேண்டும் என்றார்கள். வத்திக்கானில் இருந்த பாப்பரசரும் ஆசீர்வாதம் வழங்கினார். வரலாற்றில் அது, இரு மதங்களுக்கு இடையிலான போராக பதியப்பட்டது. உலக வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் அரசியல் பிரச்சாரம் அது. புனிதப் போரை நடத்தியவர்களிடம் கத்தோலிக்க மதவெறி மட்டும் காணப்படவில்லை. அவர்கள் மனதில் பூகோள அரசியல் ஆதிக்கமும், செல்வத்தைக் கொள்ளையிட்டு பொருளாதார முன்னேற்றம் காணும் நோக்கமும் மறைந்திருந்தன. ஆனால் அனைத்தையும் மதப் போர்வையால் மூடிக் கொண்டார்கள். மக்களை தம் பின்னால் அணிதிரட்ட மதம் என்ற சித்தாந்தத்தை கையில் எடுத்தார்கள். அவர்களின் நோக்கம் நிறைவேறியது. மதம் மக்களைப் பிரித்தது. போர்க்கள வெற்றிகளைப் பெற்றுத் தந்தது.

அன்றும் இன்றும் புனையப்படும் பிரச்சாரத்திற்கு மாறாக, அரபு முஸ்லிம்களின் ஆட்சியில் இருந்த ஸ்பெயினிலும், போர்த்துக்கல்லிலும் மதப் பிரச்சினை அறவே இருக்கவில்லை. பெரும்பான்மை முஸ்லிம்களும், சிறுபான்மை கிறிஸ்தவர்களும், யூதர்களும் சமாதான சகவாழ்வு வாழ்ந்து வந்தனர். கத்தோலிக்கப் படைகள், அரபு முஸ்லிம்களை ஸ்பெயினில் இருந்து அடித்து விரட்டின. ஸ்பெயினிலும், போர்த்துகல்லிலும் ஆட்சிக்கு வந்த கத்தோலிக்க அரசர்களின் நாட்டில் முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்கும் இடம் இருக்கவில்லை. அனைவரும் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர். அல்லாவிட்டால் கொல்லப்பட்டனர்.

ஆயிரம் ஆண்டு கால இஸ்லாமியப் பேரரசை தோற்கடித்த கத்தோலிக்க ஸ்பெயினும், போர்த்துக்கல்லும் ஐரோப்பிய வல்லரசுகளாக மாறின. அவர்கள் வட ஆப்பிரிக்கா மீதும் படையெடுத்தனர். சில பகுதிகளை தக்க வைத்துக் கொண்டனர். (மொரோக்கோவின் வட கரையை சேர்ந்த செயுத்தா,மெலியா இன்றைக்கும் ஸ்பெயினின் பகுதிகள்.) ஆனால் அவர்களது தொலைநோக்கு முழுவதும் தங்கம் விளையும் புது உலகம் மீதிருந்தது. கொலம்பஸின் பின்னர் மாபெரும் கடற்படையணிகள் அமெரிக்கா என்ற கண்டம் நோக்கி பயணமாகின. அதில் ஒரு பகுதி தான் இந்தியாவிற்கு கடல்வழிப் பாதை கண்டுபிடிப்பது. அவர்களுக்கு அதுவரை தடையாகவிருந்த அரேபியரின் அச்சுறுத்தல் இப்போது இல்லை. உலகம் ஐரோப்பியருக்காக திறந்து விடப்பட்டது. அடுத்தடுத்து ஆப்பிரிக்கா, ஆசியா, இலங்கை, இந்தியா எல்லாவற்றையும் ஆக்கிரமித்தார்கள். ஐரோப்பியரின் காலனிய சாம்ராஜ்யங்களின் கீழ் கொண்டு வந்தார்கள்.

உலகை வெல்லக்  கிளம்பிய ஐரோப்பியர்கள், அமெரிக்கக் கண்டங்களை மட்டும் குடியேறுவதற்காக தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் அமெரிக்காவை ஆண்டவரால் தமக்கு நிச்சயிக்கப் பட்ட பூமியாக கருதிக் கொண்டார்கள். மத்திய அமெரிக்காவில் வந்திறங்கிய ஸ்பெயின் அரச பிரதிநிதிகளும், கத்தோலிக்க பாதிரிகளும் ஆண்டவன் கட்டளையை பறைசாற்றினார்கள். “இதனால் அனைவருக்கும் அறிவிக்கப் படுவதாவது. பரிசுத்த வேதாகமத்தின் கர்த்தர் எமக்கு இந்த நாட்டை சொந்தமாக்கும் படி உத்தரவிட்டுள்ளார்…” அவர்களின் அறிவிப்பை செவி மடுப்பதற்கு அந்தப் பிரதேசத்தில் எந்த மனிதப் பிறவியும் காணப்படவில்லை.

_________________________________________________________

–          தொடரும்

தோழர் கலையரசனின் வலைப்பூ முகவரி: http://kalaiy.blogspot.com/

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

பரிதாப பார்வதியம்மாள் ! பகடையாடும் கருணாநிதி EXCLUSIVE !!

29

ஆறு மாதகால விசா பெற்று மருத்துவ சிகிச்சைக்காக சென்னை  வந்த பார்வதியம்மாளை விமானத்தை விட்டே இறங்க விடாமல் தமிழக போலீசின் உதவியோடு  திருப்பி அனுப்பினார்கள் சென்னை விமான நிலைய அதிகாரிகள். இது தொடர்பாக வினவில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதி விட்டோம். பார்வதியம்மாள் விவாகரம் தொடர்பாக முதலில் அறிக்கை வெளியிட்ட கருணாநிதி “நள்ளிரவு 12 மணிக்கு தகவல் தெரிந்து விமான நிலையத்தை தொடர்பு கொண்ட போது அவரை திருப்பி அனுப்பி விட்டதாகச் சொன்னார்கள்” என்றார். பின்னர் சட்டமன்றத்தில் இது தொடர்பாகப் பேசிய கருணாநிதி “காலையில் நாளிதழ்களைப் பார்த்தே நான் தெரிந்து கொண்டேன் என்று” மாற்றிப் பேசினார்.

ஆனால் கருணாநிதி ஆதரவு தமிழுணர்வாளர்களோ வைகோவும், நெடுமாறனும் பார்வதியம்மாளை வைத்து தமிழின எழுச்சி மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்ததாக உளவு நிறுவனம் கொடுத்த தகவலின் பேரிலேயே  பார்வதி திருப்பி அனுப்பப்பட்டதாகவும், ஆளும் கட்சிக்கு நெருக்கமான திருமா, சுப.வீரபாண்டியன் போன்றோர் மூலம் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் கருணாநிதியிடம் பேசி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்திருப்பார்கள் என்றும் சொன்னார்கள்.

நெடுமாறன், வைகோ போன்றவர்கள் பார்வதியம்மாளை வைத்து ஆடிய ஐ.பி;எல்- ஆட்டம் தோற்றுப் போக அதையே தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்ட திருமா, சு,ப. வீரபாண்டியன், கி.வீரமணி போன்றோர் பார்வதியம்மாளை திருப்பி அனுப்ப முன்னர் கடிதம் எழுதிய ஜெயலலிதாவைக் கண்டித்து பெரியார் திடலில் கூட்டம் நடத்தினார்கள்.  தொடர்ந்து கருணாநிதியை நேரில் சந்தித்து வீரமணியும், சு,ப.வீரபாண்டியனும் பார்வதியம்மாளுக்கு சிகிச்சை வேண்டி கோரிக்கை விடுத்தனர். வெளியில் வந்து பேசிய சுப.வீ. “பார்வதியம்மாள் மனுக் கொடுத்தால் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்திருக்கிறார்”” என்றார்.

இதற்கிடையில் மூத்த வழக்கறிஞர் கருப்பன் பார்வதியம்மாளை திருப்பியனுப்பியது தொடர்பாக வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு வழக்கறிஞர் ,”மனுத்தாக்கல் செய்துள்ளவர் பார்வதியம்மாளின் உறவினரோ, அவருக்கு தொடர்பானரவோ கிடையாது, இந்தியரல்லாத ஒருவரின் விசாவை ரத்து செய்யும் உரிமை குடியுரிமை அதிகாரிகளுக்கு உண்டு எனவும், 2003- ல் தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரிலேயே மத்திய அரசு பார்வதியம்மாள் பெயரை எச்சரிக்கைப் பட்டியலில் சேர்த்துக் கொண்டதாகவும், இந்த நடைமுறையை அறியாத மலேஷியாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தவறுதலாக விசா கொடுத்துள்ளதாகவும்”  விளக்கமளித்திருக்கிறார்.”

இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் “’இந்த ஏழு ஆண்டுகளில் அதாவது பார்வதியம்மாள் வன்னிக்குத் திருபிச் சென்ற 2003- ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை எவ்வளவோ மாற்றங்கள் நடந்து விட்ட நிலையில் தமிழக அரசு தனது நிலையை பரிசீலித்து தனது முடிவை நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்””” என்று தெரிவித்திருக்கிறது. மறுநாள் 30-04-2010 அன்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு வழக்கறிஞர்  ரவீந்திரன் மாநில அரசு கேட்டுக் கொண்டால் மத்திய அரசு பார்வதியம்மாளுக்கு சிகிச்சை தொடர்பாக பரிசீலிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். மாநில அரசு வழக்கறிஞர் ராஜாகலிபுல்லா “’பார்வதியம்மாளிடம் இருந்து மனு எதுவும் இன்னும் வரவில்லை. வந்தால் அதை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கோரப்படும்”” என்றிருக்கிறார். இந்த அளவில் இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு மாதம்.

வழக்கு – மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கபடிப் போட்டி

ஈழ ஆதரவாளர்களும், தமிழுணர்வாளர்களும் இன்று இரு பிரிவாக பிரிந்து நிற்கின்றனர். ஒன்று சுப.வீ, வீரமணி, திருமா தலைமையிலான கருணாநிதிக் கூட்டணி, இன்னொன்று நெடுமாறன் வைகோ, தலைமையிலான ஜெ கூட்டணி. முத்துக்குமாரின் உயிர்த்தியாகத்தில் தொடங்கிய இந்தக் கேடுகெட்ட துரோகத்தனம் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜெ, கருணா என்ற இந்த இரண்டு தமிழின விரோதிகளாலும் குறைந்த பட்ச மனித நேய உதவிகளைக் கூட செய்ய முடியாத இரக்கமற்ற போக்கை ஈழ ஆதரவாளர்கள் கண்டுணரத் தயங்குகிறார்கள்.

2003-ல் பார்வதியம்மாளை அனுமதிக்க மறுத்த ஜெயலலிதா அதற்கு முன்னரும் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அனுமதி கோரிய புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத்தலைவர் ஆண்டன் பாலசிங்கத்தையும் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்தவர் என்பதோடு, ஆண்டன் பாலசிங்கமும் கருணாநிதி அரசிடம் இவ்விதமாய் மருத்துவ உதவி வேண்டி கேட்ட போது ஜெயலலிதாவைக் காட்டியே கருணாநிதியும் ஆண்டனுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த கதைகள் முன்னுதாரணங்களாய் கிடக்கின்றன. சரி 2003-ல் ஜெயலிதா மறுத்தார்; கருணாநிதி ஆட்சிக்கு வந்து ஆட்சியும் முடியப் போகிறதே இந்தக் காலத்திலேனும் அந்த எச்சரிக்கைப் பட்டியலில் இருந்து பார்வதியம்மாள் பெயரை நீக்க முடியாதா? என்ற கேள்விகள் எல்லாம் இருந்த போதும் பார்வதியம்மாள் விவாகரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்தும் கபடியாட்டத்தையும் நாம் இங்கே புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசோ’’ 2003-ல் மாநில அரசு கேட்டுக் கொண்டதன் மூலமே விசா மறுத்ததாகவும் மாநில அரசு விரும்பினால் பார்வதியம்மாள் சிகிச்சை தொடர்பான விஷயத்தை மைய அரசு பரிசீலிக்கும்” என்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்து விட்டது. மாநில அரசோ, “’பார்வதியம்மாளிடம் இருந்து கடிதம் வந்தால் மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி கோருவோம்”” என்று சொல்கிறது. சரி அப்படியானால் ஜெயலலிதா 2003-ல் பார்வதியம்மாளுக்கு கொண்டு வந்த தடையை நீக்க வேண்டியது யார் பொறுப்பு? அந்தத் தடையை நீக்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாலேயே மீண்டும் மலேஷியத் தூதரகம் விசா வழங்கிவிடுமா, என்ன?

ஆக ஜெ மத்திய அரசுக்கு மாநில அரசின் சார்பில் செய்த பரிந்துரை ரத்து செய்யப்படாதவரை பாவதியம்மாள் சிகிச்சைக்கு வர சாத்தியமில்லை.  ஆனால் மாநில அரசோ “மனுக்கொடுத்தால் மத்தியா அரசுக்கு அனுப்புவோம், அதாவது நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம், செய்யச் சொல்லி நிர்பந்திக்கவும் மாட்டோம், கடிதமோ, மனுவோ எது வந்தாலும் மத்திய அரசுக்கு அனுப்புவோம்” என்று நரித்தனத்துடன் பேசுகிறது. ஆனால் மத்திய அரசோ “இதில் நாங்கள் செய்ய எதுவும் இல்லை எல்லாம் மாநில அரசின் கையில்தான் இருக்கிறது, அவர்கள்தான் பார்வதியம்மாளை அனுமதிக்க வேண்டாம் என்றார்கள், ஆகவே அவர்கள்தான் இப்போது பார்வதியம்மாள் விவாகாரம் தொடர்பாக மத்திய அரசிடம் பேச வேண்டும்” என்று சொல்கிறது.

பாருங்கள் யார் முதுகில் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. வார்த்தைகளில் விளையாடிய இந்த மத்திய மாநில துரோகிகளின் நிலையைப் பார்த்து புரிந்து கொண்ட நீதிமன்றமோ வழக்கை ஒரு மாதம் தள்ளிப் போட்டு விட்டது. அப்பாடா……. ஒரு மாதம் இந்த ஒரு மாதத்தில் ஈழத்து தமிழறிஞர்களை எல்லாம் அழைத்து தனக்கு ஒரு பாராட்டு விழாவும் விருதும் கூட கருணாநிதி வாங்கிவிடுவார். ஆனால் பார்வதியம்மாள் என்ற எண்பது வயதைக் கடந்து விட்ட அந்த தாய்க்கு பக்கவாதம். சரியாக நினைவில்லை.

ஒரு மாதத்தில் அவருக்கு ஏதாவது ஒன்று ஆனால் கருணாநிதி என்ன செய்வார்? பழியைத் தூக்கி அப்படியே ஜெயலிதா மீது போடுவார். திருமா போய் அஞ்சலி செலுத்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பார். ஏதோ ஒரு வார இதழில் தொடர் எழுதுவார். நெடுமாறனும், வைகோவும் கருணாநிதிதான் காரணம் என்று அறிக்கை விடுவார்கள். கடைசி வரை நிம்மதியில்லாத நிலையில் அவர் மரித்துப் போகக் கூடும். மீண்டும் சில காலத்திற்கு நீங்கள் உற்சாகமிழந்த பின் மீண்டும் உங்களின் கபடி ஆட்டத்திற்கு இன்னொரு ஈழத்து இழிச்சவாயன் கிடைப்பான்.

பார்வதியம்மாளின் கடிதம் கீழே இணைக்கப்பட்டுள்ளது

பார்வதியம்மாள் கடிதம் – சில கசப்பான உண்மைகள்!

பார்வதியம்மாள் தொடர்பான வாதம் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த (30-04-2010) அன்றே பார்வதியம்மாளிடம் இருந்து கருணாநிதிக்கு கடிதமும் வந்து விட்டது. மனிதம் அறக்கட்டளையின் அமைப்பாளர் அக்னி சுப்பிரமணியன் என்பவர் மூலம் வந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கடிதம் தமிழுணர்வாளர் சுப.வீரபாண்டியனிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுய நினைவு பாதித்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பார்வதியம்மாளால் இப்படி ஒரு கடிதத்தை சுய நினைவோடு எப்படி எழுத முடியும்? பார்வதியம்மாள் எழுதியதாகச் சொல்லப்படும் இக்கடிதத்தின் படி விசா விண்ணப்பித்தால் அதற்கான நேர்முகத்திற்கு அவரே செல்வாரா? அவரால் அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலுமா? என்பதெல்லாம் இக்கடித்ததின் பின்னால் எழும் கேள்விகள். ஒரு வயதான சுயநினைவு சரியாக இல்லாத அம்மாள் தனது கைப்படக் கடிதம் எழுதவேண்டுமென்றால் இதை விட வக்கிரமும், ஆபாசமும் என்ன இருக்கிறது?

பார்வதியம்மாள் பெற்ற பிள்ளையான விநோதினி எழுதிய கடிதத்தை மறுத்து பார்வதியம்மாளிடமே கடிதம் கேட்கும் மனோபாவம் ஆளும்வர்க்கங்களின் வக்கிர புத்தியா?அல்லது செய்ய முடியாத நிலையை சட்டத்தின் மீது பழி போட்டுத் தப்பித்துக் கொள்ளும் முயற்ச்சியா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.ஆனாலும் பார்வதியம்மாளுக்கு  சிகிச்சையளிக்க மத்திய மாநில அரசுகள் அனுமதித்தால் போதும் என்ற மன நிலையே எல்லோரிடமும் இருக்கிறது.

பார்வதியம்மாள் கடிதம் எழுதுவதற்கு முன்னர் பிரபாகரனின் சகோதரி விநோதினி தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் ஆனால் பார்வதியம்மாள் கைப்பட மட்டுமே கடிதம் வேண்டும் என்று கேட்கவே இப்போது பார்வதியம்மாளின் கைநாட்டில் கடிதத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். பார்வதியம்மாள் சென்னையில் வைத்து திருப்பியனுப்பப்பட்ட போது “’இப்போதுதான் எங்களை எல்லாம் நினைவுக்கு வந்ததா?” என்று கேட்ட சுப. வீரபாண்டியன் “சிறிது நேரம் முன்னால் பேசியிருந்தால் கலைஞரிடம் பேசி ஏற்பாடு செய்திருப்பேனே””  என்று அங்கலாய்த்திருக்கிறார்.

இப்போது பார்வதியம்மாள் எழுதிய கடிதம் அவர் கையில்; நெடுமாறனோ, வைகோவோ, ஜெயலலிதாவோ இதில் தலையிட முடியாது. வந்து தடுத்தால் கருணாநிதிக்கு கிடைத்துள்ள துரோகப் பட்டம் அவர்களுக்கும் கிடைக்கும். சுப.வீரபாண்டியனே கலைஞரிடம் பேசி மத்திய அரசுக்கு சம்பிரதாய கடிதம் அல்ல, பார்வதியம்மாளுக்கு சிகிச்சை செய்யும் படியான நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம். ஜெகத்ரட்சகன் நடத்திய வள்ளுவர் கோட்டம் விழாவில் கலந்து கொண்டு பல மணிநேரம் குத்தாட்டம் பார்த்ததால் தனக்கு ஏற்பட்ட முதுவலியை ஏதோ உலகப் பிரச்சனை ரேஞ்சுக்கு ஊதிப் பெருக்கிய கருணாநிதி அடுத்தவர் வலிகளையும் அதுவும் தன்னை விட வயதில் மூத்தவரான ஒரு தாயின் வலிகளைகளையும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நமது ‘ஆசை’.

நளினி, பார்வதியம்மாள் ஒரு ஒற்றுமை

“நளினி விடுதலையில் மத்திய அரசு செய்வதற்கு ஒன்றுமே இல்லை, ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை தொடர்பாக முடிவு செய்ய வேண்டியது மாநில அரசின் பொறுப்பு” என்றது மத்திய அரசு.  முதலில் காலம் கடத்தி  நளினி விஷயத்தில் பதில் சொல்லாமல் இழுத்தடித்து வந்த மாநில அரசோ கடைசியில் ” நளினி விவாகரத்தில் நாங்கள் எங்களுக்கு சுயக்கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளோம்”  என்று விடுதலைக்கு ஆப்பு வைத்தது. நளினி மீண்டும் மனு செய்தார். அது விசாரணைக்கு வருவதற்கு முன்னரே நளினியின் அறையில் செல் போனைக் கண்டு பிடித்து அடுத்த ஆப்பை இறுக்கமாக இறுக்கி விட்டார்கள்.

இனி சில ஆண்டுகளுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் விடுதலை கோர முடியாத அளவுக்கு பொய் பிரச்சாரம் ஒன்றை நளினிக்கு எதிராக செய்து விட்டது கருணாநிதி அரசு. இதோ பார்வதியம்மாள் விவாகரத்திலும் மத்திய அரசு செய்ய எதுவும் இல்லை எல்லாமே மாநில அரசு கையில்தான் இருக்கிறது என்று விட்டது மத்திய அரசு. மாநில அரசோ பார்வதியம்மாளிடம் மனு வந்தால் மத்திய அரசுக்கு போஸ்ட் பண்ணுவோம் கடிதம் எழுதுவோம் என்று காலம் கடத்தத் துவங்கிவிட்டது.  பல சூழல்களில் பார்வதியம்மாள் விஷயத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வீர்களா? செய்ய மாட்டீர்களா? என்ற நெருக்கடி வரும் போது பார்வதியம்மாள் மீதும் குண்டு வீசப்படலாம். கருணாநிதி வீசாத குண்டுகளா?  அதை எந்த நேரத்திலும் யார் மீதும் செய்யத் தயங்காதவர் அவர். பார்ப்போம் பார்வதியம்மாளை வைத்து எப்படி எல்லாம் விளையாடுகிறார் என்று?

வன்னியில் பல ஆயிரம் மக்களைக்கொன்ற சிங்கள இனவெறியின் அழிவுப் போர் நடந்து ஓராண்டு ஆகப்போகிறது. அப்போது போரின் முடிவைத் தெரிந்து கொண்டே போரை நிறுத்துவதாக நாடகமாடிய இந்த அரசுகளும், தலைவர்களும் இப்போது ஒரு முதிய ஈழத்து பெண்மணிக்கு மருத்துவத்தைக்கூட தரமுடியாமல் சட்ட மொழியில் குள்ளநரித் தந்திரத்துடன் விளையாடுகிறார்கள். இந்த நரிகளை எப்போது வேட்டையாடப் போகிறோம்? நரிகளுக்கு பஜனை பாடும் ஈழ, தமிழின ஆதர்வாளர்களை எப்போது சட்டையைப் பிடித்து நாக்கை பிடுங்குமளவு கேட்கப் போகிறோம்?

_____________________________________________

–          இராவணன்.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

கனடாவில் கரையும் ஈழத்தமிழ் வாழ்க்கை !!

69

 

ஈழத்தின் நினைவுகள்: பாகம் – 12

சமகால கனடாவும் அதன் வரலாற்றுப் பின்னணியும்!

 

O Canada! Our home and native land! கனடாவின் மண்ணின் மைந்தர்கள் இந்த மண்ணை எங்களின் வீடு மட்டுமல்ல பூர்வீகமும் கூட என்று தேசியகீதத்தில் பாடுமளவிற்கு அனுமதித்திருக்கிறார்கள். கனடா ஒரு வந்தேறு குடிகளின் நாடு. அவலப்பட்டு வரும் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இந்த மண்ணின் சொந்தக்காரர்களுக்கு நன்றியை சொல்லிக்கொண்டு தொடர்கிறேன்.

முதலில் பிரான்சிலிருந்தும் பிறகு பிரித்தானியாவிலிருந்தும் வந்தவர்கள் கனடாவை தேசியகீதத்தில் தங்கள் பூர்வீக பூமி என்று அழைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் என் புரிதல். கால ஓட்டத்தில் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் குடிபெயர்ந்தோ அல்லது அகதியாகவோ வருபவர்கள் எல்லோரும் அவர்களை தொடர்ந்து அதையே பாடிக்கொண்டிருக்கிறோம். கனடாவுக்கு உண்மையாகவும் இருக்கிறோம். பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ இரண்டு விடயங்கள் கனடியர்களை அவ்வப்போது சில சமயங்களில் எதையாவது முணு, முணுக்கவைக்கிறது.

அமெரிக்காவுக்கு அருகாமையில் தெற்கு எல்லையில் பெருநிலப்பரப்போடும் தனக்குரிய மரபுகளோடும் யாருடைய வம்புச்சண்டைக்கும் போகாமல் இருக்க கனடா முடிந்தவரை முயற்சி செய்கிறது. அமெரிக்காவின் அருகாமையில் இருந்துகொண்டு அதை தக்கவைத்துக்கொள்வது எவ்வளவு சிரமம் என்று நான் நினைப்பதுண்டு. இரண்டாவது கனடாவின் Constitutional Monarchy.  இன்னமும் இங்கிலாந்தின் ராணிதான் கனடாவுக்கும் ராணி. முந்தையது மாற்ற முடியாது.  முணுமுணுக்க மட்டுமே முடியும். பிந்தயதை மாற்ற வேண்டுமென்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள்.

கனடாவுக்குள் நுழையுமுன் வரலாற்றின் கரையோரம் கொஞ்சம் கால் நனைக்கலாம். கனடாவுக்கென்று ஓர் சுவாரசியமான வரலாறு உண்டு. ஐரோப்பியர்கள் கிழக்கு இந்தியாவை கண்டுபிடிக்கிறோம் என்று அதிர்ஷடவசமாக தடுமாறி பகுதி, பகுதியாக   கனடாவையும் கண்டுபிடித்தார்கள். இந்த மண்ணில் ஆரம்பத்தில் ஐரோப்பாவிலிருந்து வந்தவர்கள் இங்கிருந்த பூர்வீக குடிகளோடு வியாபாரத் தொடர்புகளை ஏற்படுத்தி இங்கேயே தங்கியும் விட்டார்கள். இந்த நாட்டை சீரும்  சிறப்புமாய் கட்டி எழுப்பியவர்களும் அவர்கள்தான். அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.

இந்த நாட்டின் மூத்த குடிகள் கனடாவை கட்டியெழுப்புவதில் அதிகம் பங்களிக்கவில்லை என்ற ஓர் கூற்றும் முன் வைக்கப்படுகிறது. கனடாவின் மூத்த குடிகளை (Aboriginal Peoples) மூன்று வகையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்கள். First Nations (Indians), Inuits அல்லது Metis அல்லாதவர்கள். இவர்களில் (First Nations) பாதிப்பேர் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலங்களில் (Reserve Land) தான் வாழ்வதாக சொல்லப்படுகிறது. Inuits, இவர்களின் முன்னோர்களின் பூர்வீகம் Arctic ஆதலால் இன்றும் சிறு, சிறு குழுக்களாக அங்கேதான் வாழ்கிறார்கள். பூர்வீக குடிகள் அல்லாத ஐரோப்பியர்களை மணந்தவர்கள் Metis என்றும் அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் எல்லோரினதும்  பூர்வீக பூமி இதுவென்றாலும் அதற்குரிய சலுகைகளைப் பெறுவதற்கு தங்களை கனடிய அரசிடம் பதிந்து வைத்துக் கொள்ளவேண்டும் என்பது அரசியல் நடைமுறை.

சில சமயங்களில் ஒரே நாட்டிற்குள்ளிருக்கும் இன, மத, மொழி, பண்பாடு, கலாச்சாரம் இன்னும் என்னென்னெல்லாம் உண்டோ அதன் முரண்பாடுகளிலேயே மக்கள் தங்களுக்குள் பிளவுபட்டுப் போயிருப்பார்கள். பாரபட்சமாக நடத்தப்படுவார்கள். ஒருவேளை அப்படியேதும் இல்லையென்றாலும் தங்கள் பங்கிற்கு அரசியல்வாதிகள் எதையாவது கிளப்பிவிடுவார்கள். ஒத்துவராது என்றால் சிலசமயங்களில் அரசியல்வாதிகளை ஓரங்கட்டிவிட்டு ஜனநாயக வழிகளில் முயல்வதே மேல் என்பது என் கருத்து.

கனடாவிலும் Quebec மாகாணத்தின் மொழி, கலாச்சாரம் முதல் அனைத்து உரிமைகளுக்கும் சட்டரீதியான சமவுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் தன் பிரெஞ்ச் தனித் தன்மைகளோடு வாழ, பிரிந்துபோக இரண்டுமுறை ஜனநாயக வழியில் (Referendum) முயன்று வெற்றியளிக்காமல் போனாலும் இன்னோர் சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. ஈழத்தில் எங்கள் அடிப்படை உரிமைகளுக்கு மட்டுமல்ல உயிருக்கு கூட உத்தரவாதம் இல்லாத எங்களுக்கு இப்படியோர் ஜனநாயக ரீதியான ஓர் சந்தர்ப்பத்தை கொடுக்க மறுக்கும் உள்ளூர், உலக அரசியல் சதுரங்க விளையாட்டுகள் ஊமைப்படங்கள். உலகத்தமிழரெல்லாம் அதன் பார்வையாளர்கள்.

கனடாவில் நீண்ட காலமாக வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த பல்லின, பல்கலாச்சார மக்கள் (Multiculturalism) அடுத்தவர் நம்பிக்கைக்கும் உரிமைகளுக்கும் மதிப்பு கொடுத்து இங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்கள் தனித்தன்மைகளை பேணிக் காப்பதோடு, இந்த நாட்டின் ஆங்கில, பிரெஞ்சு மொழி, கலாச்சாரம், பொருளியல் வாழ்க்கை முறை என்பவற்றிற்க்கு தங்களை பழக்கப்படுத்தி தேசிய நீரோட்டத்தில் கலந்து போகிறார்கள் (Assimilation). வாழச்சிறந்த நாடுகள் என்ற பட்டியலில் கனடா தனக்கென்றோர் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மூன்றாம் உலக ஜனநாயகம் போலல்லாது அந்த தலைப்பை தக்க வைத்துக்கொள்ளும் அல்லது தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றான தனி மனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்புக் கொடுப்பதில் கனடாவை யாரும் குறை கூற முடியாது.

ஆனாலும் கனடாவின் வரலாற்றுப் பக்கங்களை பின்னோக்கிப் புரட்டிப் பார்த்தால் கழிசடை அரசியல் கொஞ்சம் முகம் சுழிக்க வைக்கும். பூர்வீக குடிகளுக்கும், 1800 களில் Canadian Railway யை கட்டி முடிக்க குறைவான கூலியில்  கொண்டு வரப்பட்ட சீன தேசத்தவர்களுக்கும் இந்த அரசு செய்த தவறுகள் “White-Collar Crime” என்று தான் வர்ணிக்கப்பட்டிருக்கிறது. மேலைத் தேசங்களின் வரலாறு, அரசியல், பொருளாதார கொள்கைகளை கொஞ்சம் விளங்கிக் கொண்டால் தான் புரியும், எங்களைப்போன்ற அகதிகள் எல்லாம் இந்நாடுகளில் வேண்டப்படாத விருந்தாளிகள் என்பது. அதுவும் கடந்த வருடம் மே மாதத்திற்குப் பிறகு அதை எங்கள் மனங்களில் இன்னும் ஆழமாக பதிந்து போக வைத்து விட்டார்கள்.

கனடாவின் சமூகவாழ்க்கை – ஒரு பறவைப் பார்வை

கனடாவுக்கு அகதியாகவோ அல்லது குடிபெயர்ந்தோ வருவதென்பது உரிமையல்ல. அது மனிதாபிமானத்துடன் கூடிய ஓர் சலுகை. இங்கு வருபவர்களின் இன, மத, கலாச்சார முரண்பாட்டுக் கோலங்களை தன்னக்கத்தே உள்வாங்கி அதற்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுப்பது மட்டுமன்றி அவர்களை கெளரவ மனிதர்களாக வாழவும் வழிவகைகளை செய்துகொடுக்கிறது கனடா. நிறைகளும் குறைகளும் அதனதன் அளவுகளில் பரிமாணங்களில் இருந்தாலும் (pros and cons), கனடாவின் ஒவ்வொரு சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளும் சிறப்பாகத்தான் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது.

சமூக நலத்திட்டங்களில் ஒன்றான Social Assistance என்பது புதிதாக வருபவர்களுக்கும் அல்லது வேலையை இழந்தவர்களுக்கும் (Unemployment Insurance தவிர்த்த) குறைந்த பட்ச உணவு, உடை, உறைவிடம் என்பவற்றுக்கான செலவுகளை வழங்குகிறது. வேலை பறிபோனால் அதன் தாக்கங்கள் தனிமனிதனையும், குடும்பத்தையும், சமூகத்தையும் பாதிக்காமல் விடாது. அது மனித இயல்பு. துன்பியல் வாழ்வு. ஆனால், வேலை போய்விட்டதே இனி ஒருவேளை உணவுக்கு என்ன செய்வது, பிள்ளை குட்டிகளோடு வீதியில் உறங்கமுடியுமா என்ற கவலைகள் எல்லாம் இங்கு வாழ்பவர்களுக்கு வரக்கூடாது என்று அரசு கவனமாகவே இருக்கிறது.

இதையெல்லாம் கவனிக்காமல் விட்டால் அது தனிமனித வாழ்வில், சமூகத்தின் அத்தனை நிலைகளிலும் அதன் பன்முகத்தாக்கத்தை உண்டுபண்ணுமே; பஞ்சம், திருட்டு, சமூகவாழ்வின் சீர்கேடுகள், கொள்ளை, எல்லாவற்றுக்கும் மேல் குடும்ப உறவுகள் சீரழியும் என்பது வரை. குடும்ப உறவுகள் சீரழிந்தால் குழந்தைகளின் மனநலம் மற்றும் எதிர்காலம்  பாதிக்க கூடாது என்ற அக்கறையோடு திட்டங்கள் வகுக்கப்பட்டிருகின்றன. அரச சேவைகள் ஆயிரந்தான் செலவு செய்தாலும் இங்கேயும் வருமானம் குறைந்த மக்கள் வாழும் பகுதிகள், அதன் விளைவான சமூகப் பிரச்சனைகள், வீடில்லாதவர்கள் பிரச்சனை (Homeless people) என்பதெல்லாம் அரசுக்கு தலையிடியாக இல்லாமலும் இல்லை.

என்னைப்பொறுத்த வரை இந்த வீடில்லாதவர்கள் என்போர் அவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தவிர்த்த, தாங்களாக தெரிந்தெடுத்த வாழ்க்கை அது. அரசு எவ்வளவுதான் ஆராய்ந்து அதற்குரிய திட்டங்களை கொண்டு வந்தாலும் அவர்களில் பலர் மறுபடியும் வீதியில் வந்து முடிகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு shelters என்று வைத்து உணவு, உறங்கும் வசதிகள் எல்லாம் இலவசமாக செய்து கொடுக்கிறார்கள். பொதுமக்கள் பலபேர் அங்கே சேவையாக (Volunteer) பணியாற்றுகிறார்கள். இங்கே volunteer work என்பது மிகவும் மதிக்கப்படும் ஓர் விடயம். அதாவது, நான் சொல்லவருவது என்னவென்றால் அரசு, மக்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் மீது, சகமனிதர்கள் மீது அக்கறையோடும் விழிப்புணர்வோடும்  இருக்கிறார்கள் என்பது தான்.

எங்களைப்போல் தஞ்சம் கோரி வருபவர்களுக்கு வாழ்வின் அடுத்த படியில் காலடிஎடுத்து வைக்க உண்டான எத்தனையோ திட்டங்களை அமுல்படுத்தியிருக்கிரார்கள். புதிதாக வருபவர் தனக்குப் பிடித்த ஓர் வேலையை, தொழிலை, அல்லது படிப்பை தொடருவதற்கான வசதிகள், கடன்கள் வழங்கப்படுகின்றன. அதற்கான வழிகாட்டிகள் எத்தனையோ பேரை அரசு பணிக்கமர்த்தியிருக்கிறது. கனடாவில் வாழும் ஒருவர் சொந்த வாழ்வில் முன்னேற முடியவில்லை என்றால் அது நிச்சயமாக நம்பும்படியாக இருக்காது. முன்னேறுவதற்கான சந்தர்ப்பங்கள் இங்கே நிறையவே இருக்கின்றன. கல்லில் நார் உரிக்கும் கடும் முயற்சி மட்டுமே அதன் மூலதனம்.

கல்லூரிக்கோ அல்லது பல்கலைக்கழகம் சென்று மேல் படிப்பை தொடர கடனுதவிகள் வழங்கப்படும். எனக்கு மிகவும் பிடித்தது இதுதான். வாங்கிய கடன் வட்டியோடு குட்டிபோடும் என்பதால் மாணவர்கள் பொறுப்போடு படிப்பார்கள். பெற்றோருக்கும் அது பொருளாதார சுமையாக இருக்காது. காரணம், வாங்கும் கடனுக்கும் வட்டிக்கும் அவரவரே (மாணவரே) பொறுப்பு. வேலைக்கு செல்பவராயின் அவரின் வருமானத்திற்கேற்றவாறு குழந்தை பராமரிப்பு வசதிகள் வழங்கப்படும். ஒருவர் வீட்டில் இருந்து குழந்தையை பராமரிப்பதிலும் படித்து வேலைக்கு போனால் அரசுக்கு வரி வருமானம் வரும் அல்லவா. வரி செலுத்தும் போது வலித்தாலும், அதன் பலன்களை கல்வி, சுகாதாரம் என்று உலகின் எத்தனையோ பேருக்கு கிடைக்காத சர்வதேச தராதரத்துடனான சலுகைகளை நாங்கள் பெற்றுக்கொள்ளும் போது மூன்றாம் உலக ஜனநாயகத்தில் இருந்து தப்பி வந்த ஓர் visible minority யின்  மனம் நிறைந்து போகிறது.

இந்த நாட்டின் பிரதம மந்திரிக்கு கிடைக்கும் அத்தனை மருத்துவ வசதிகளும் ஓர் சாதாரண கடைநிலை குடிமகனுக்கும் கிடைக்கும் படி செலவின்றி, பாரபட்சமின்றி இருக்கிறது. கனடா வந்தாரை அவரவர்க்குரிய தனித்தன்மைகளோடு, திறமைகளோடு, முயற்சிகளோடு சுகதேகிகளாக வாழவைக்கிறது. நாங்களும் வாழ்ந்து எங்களுக்கு புதுவாழ்வு தந்த இந்த நாட்டையும் வாழவைக்கவேண்டும் என்பது தான் என் கருத்து.

கனடாவில் ஈழத்தமிழர்கள் – வந்த விதமும், இணைந்த நிலையும்!

கனடாவில் ஈழத் தமிழர்களில் பெரும்பான்மையானோர் அகதிகளாய் தஞ்சமடைந்தவர்கள்தான். ஆசியாவிற்கு பிறகு தமிழர்கள் அதிகமாக வாழுவது இங்குதான். மேல்தட்டு இந்தியர்களைப் போல் நாங்கள் படித்துவிட்டு வேலைதேடி குடிவந்தவர்களோ அல்லது மில்லியன் டாலர் வியாபாரத்தை முதலீடு செய்தவர்களோ கிடையாது. ஆனாலும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி இன்று கல்வி, வியாபாரம், பொருளாதாரம் என்று மிக குறுகிய காலத்திலேயே ஆண்கள், பெண்கள் என இரு சாராரும் மற்றவர்கள் வியக்கும் படி அதன் எல்லைகளைத் தொட்டிருக்கிறோம். அதற்கான சந்தர்ப்பங்கள் கனடாவில் பாரபட்சமின்றி எல்லோருக்கும் பொதுவாயிருப்பதால் அது சாத்தியமும் ஆயிற்று.

முயற்சி திருவினையாக்கும் என்பதை என் அனுபவத்தினூடே உணர்ந்து கொண்டது இங்கேதான். கனடாவின் வாக்கு வங்கியில் எங்கள் வாக்குகளின் இருப்பு லட்சத்திற்கு மேல் என்பதால் அரசியலிலும் கொஞ்சம் கொஞ்சமாக இப்போது தான் உள்வாங்கப்படுகிறோம். கனடாவின் வளங்கள், பொருளாதாரம் பற்றி தெரிய வேண்டுமானால் அண்மையில் கனடா மற்றும் இந்திய பிரதமர்கள் சந்தித்து சிரித்துபேசி போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை நினைவுகூர்ந்து பாருங்கள் புரியும்.

செல்வமும், செழுமையும் புதைந்தும் ஒளிந்தும் கிடக்கும் இந்த பரந்த பூமியில் தான் தஞ்சமடைவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இங்கே வரவில்லை. தமிழ்நாட்டில் அகதி வாழ்வின் கசப்பான அனுபவங்கள், கொழும்பில் எந்த நேரமும் ஏதோ ஓர் இனம்புரியாத பயம், உயிரை பிச்சையாய் கேட்கும் தலைவிதி இவற்றிலிருந்து தப்பிக் கொள்ளவும், தற்காத்துக் கொள்ளவும் முயன்று எனக்கு கிட்டியது கனடா என்ற நாடு. “சிங்கள” என்ற அடைமொழியோடு கூடிய எல்லாமே என்னை, என் உயிரை வதைத்தது. இதில் நல்லது, கெட்டது எது என்று பிரித்துப்பார்த்து பயப்படுமளவிற்கு ஓர் ஈழத்தமிழ் என்ற வகையில் எனக்கு தெரிவுகள் எப்போதுமே இருந்ததில்லை.

தலைநகரில் தமிழர் என்றாலே வெளியில் தலைகாட்டப் பயம். கைது, சித்திரவதை, தமிழனா காவல் நிலையத்தில் உன் வரவை பதிந்துகொள் என்ற நடைமுறைகளும் பீதியை கிளப்பின. பாரதியார் பாணியில் சொல்வதானால், ஈழத்தமிழன் அஞ்சாத பொருள் இல்லை இலங்கையிலே. அது அப்படியே எங்களுக்குப் பொருந்துவது போல் கொழும்பில் அன்றும் சரி இன்றும் சரி தமிழர்கள் ஏதோ Phobia வால் பீடிக்கப்பட்டவர்களாய்தான் உலாவந்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக “தெனாலி” திரைப்படத்தில் எங்களை பரிதாபத்திற்குரிய கோமாளிகளைப்போல் போல் உருவகப்படுத்தியது, கேலிபேசியது எல்லாம் கசப்பானதே. பசியை கூட பிணி என்ற உவமையால் அதன் கொடுமையை உணரவைக்கலாம். சிங்களப்பேரினவாதம் எங்கள் மனங்களில் அதன் வன்கொடுமைகள் மூலம் உண்டாக்கிய வலிகள், வடுக்கள், தீராப்பயம் அனுபவங்களால் மட்டுமே உணர முடியும். அதை எழுத்துக்களில் விவரிக்க முடியாது.

கடல் கடந்து பரதேசம் வந்த உடனேயே பயம் மறைந்து சந்தோசம் ஓடிவந்து ஒட்டிக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் புதிதாய் எதுவுமே புரியாத ஓர் தேசமாய் தோன்றியது. இலங்கை ராணுவம், மனித உரிமை மீறல்கள் பற்றிய பயம் போலில்லாமல் புதிதாய் ஓர் இனம்புரியாத மிரட்சி மனமெங்கும் விரவிக் கிடந்தது; மொழி, கல்வி, வேலை, கலாச்சாரம், காலநிலை முதல் மனிதர்கள் வரை. இலங்கையிலிருந்து வந்ததாலோ என்னவோ கருத்து சுதந்திரம் (Freedom of Speech) என்பதின் யாதார்த்தபூர்வமான அர்த்தத்தை புரிந்துகொள்ளவே சில காலம் பிடித்தது.

பயமுறுத்தும் ஆங்கிலத்தை கற்ற கதை!

கனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சு இரண்டுமே தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள். அந்நாட்களில் ஆங்கிலத்தோடு எனக்கு ஏதோ ஒரு பயம் கலந்த சிறிய பரிச்சயம் மட்டுமே இருந்தது. ஆனாலும் அதுவே தொடர்பாடலுக்கான என் ஊடகமானது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தை கண்டு நான் மிரண்டதுதான் அதிகம். பொது இடங்களுக்குப் போனாலும் யாராவது ஆங்கிலத்தில் ஏதாவது கேட்டு தொலைத்து விடுவார்களோ

என்ற பயம் மூளையின் முடுக்கில் கூட மண்டிக் கிடந்தது. கனடாவில் என் சுய முன்னேற்றத்திற்கு பிள்ளையார் சுழி போட்டது ஆங்கிலம்தான். ஆங்கிலத்தை நான் ஓர் வெறியோடுதான் படித்தேன். அதற்கு வேறோர் காரணமும் உண்டு. புலத்தில் ஆங்கிலம் தெரியாவிட்டால் எம்மவர்களில் ஒருசாரார் அடுத்தவரை இளக்காரமாய் பார்த்த, பார்க்கும் சமூக அவலம் தான் அது.

ஈழத்தில் நான் என் சொந்த ஊரில் கல்வி கற்ற நாட்களில் யாழ்ப்பாணம் நகர்ப்புறத்தில் இருக்கும் பாடசாலைகளில்தான் ஆங்கில வழிக்கல்வி கற்கும் வசதிகள் இருந்தன. அது அந்த காலங்களில் எனக்கு கொஞ்சம் பொறாமையாகவும் எரிச்சலாகவும் கூட இருந்தது.

இங்கே குடியேறியோ அல்லது தஞ்சமடைந்தோ வருபவர்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஓர் பாரமாய் அல்லது சுமையாய் இருக்கக் கூடாது என்பதில் கவனமாயிருந்து கனடிய அரசு புதிதாய் வருபவர்களுக்கு மொழியை அரச செலவில் கற்றுத் தருகிறார்கள். நாங்கள் மொழியை கற்றுக் கொண்டு மேலும் படிப்பிலோ அல்லது வேலையிலோ முன்னேறி இந்நாட்டிற்கு எங்களின் பங்களிப்பை வரியாகவும், வேறு வழிகளிலும் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆங்கிலத்தில் எனக்கு அதிகம் பிடித்த வார்த்தை “determination”. அது மட்டும் இருந்தால் ஆங்கிலம் கற்பதும் ஒன்றும் கடினமல்ல என்பது என் சொந்த அனுபவம். ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புகளோடு பேசவேண்டுமென்ற அவாவோடு நான் குழந்தைகளின் Cartoon மற்றும் செய்திகளிலிருந்துதான் தொடங்கினேன். அதில்தான் நிறுத்தி நிதானித்து அழகாக பேசுகிறார்கள். ஆனாலும், புலம் பெயர் வாழ்வில், பொருளுலகில் மனிதம் தொலைத்த மானுட வாழ்வு ஒளியின் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற பிரம்மையை என்னிலிருந்து உதறமுடியவில்லை.

இந்த அக்கப்போரில் எனக்கு ஏதாவது தெரியவில்லை என்றால் அதற்காக யாரும் எனக்காக காத்திருந்து என்னை இழுத்துக்கொண்டு ஓடுவார்கள் என்ற குழந்தைத்தனமான எதிர்பார்ப்புகளை தவிர்த்துவிட்டு, எல்லோருக்கும் சமமாய் நானும் ஓடவேண்டுமானால் என்னை நான் தயார்ப்படுத்த வேண்டும். இப்படித்தான் கனடாவில் ஓட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஆங்கிலத்தோடு மல்லுக்கட்டி, அப்படியே படிப்படியாக படிப்புவரை சென்று, அகதியாய் அடிமேல் அடிவாங்கினேன். அழுவதற்கு கூட நேரமில்லாமல் அடித்துப் பிடித்து படித்து முடித்து அந்நியதேசத்தில் ஓர் கெளரவமான  வேலைசெய்து வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டே இன்றுவரை ஓடிக்கொண்டிருக்கிறேன்.

உத்தியோகம் புருஷலட்சணம் என்ற பழமைவாதம் ஈழத்திலே குழிதோண்டிப் புதைக்கப்படுமளவிற்கு பெண்கள் படிப்பில், வேலைக்குப்போவதில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் என் கருத்து. போர்பூமியில் ஏதோ இயன்றவரை படித்தார்கள். தலைநகர் வாழ்வின் சம்பிரதாயம் மீறாமல் அங்கே வாழ்ந்தவர்கள் ஆங்கில வழிக்கல்வி கற்றார்கள். இந்த வாழையடி வாழை வழமைகளை வேரோடு தறித்தது புலத்தின் பொருளாதார வாழ்க்கை முறை. கனடாவில் தமிழ்ப் பெண்களின் மன உறுதியையும் முயற்சிகளையும் நான் கண்டு வியப்படைந்திருக்கிறேன்.

ஈழத்திலும் சரி, புலத்திலும் சரி குழந்தைகள், கணவன், உறவுகள் என்பவற்றுக்கு நடுவே தங்களையும் வளர்த்து முன்னேறும் அளவிற்கு ஈழப்போர் பெண்களை புடம்போட்டு புதியவர்களாக்கியிருக்கிறது. இது நிஜம். ஈழத்தவர்களின் யதார்த்த வாழ்க்கை. குறைந்தபட்ச கூலியை கொடுக்கும் வேலைகள். படித்து கொஞ்சம் கெளரவமான நான்கிலக்க ஊதியத்துடனான வேலை. புலத்தில் இதில் எது வேண்டுமென்று தீர்மானிக்க வேண்டியது அவரவர் பொறுப்பு அல்லது முயற்சி. தனி ஆளாய் அல்லது மாணவராய் இருக்கும் பட்சத்தில் இதில் கஷ்டங்கள் குறைவே. ஆனாலும், இங்கே படிப்பை தொடர்ந்து கொண்டே ஈழத்திலோ அல்லது தமிழ்நாட்டிலோ இருக்கும் குடும்பத்தின் பொருளாதார சுமையையும் தாங்கிக்கொள்ளும் ஆண்கள், பெண்கள் பலர் இங்கே இருக்கிறார்கள்.

குடும்பத்தையும் கட்டிக்காக்க வேலை ஒருபுறம், பகுதிநேர படிப்பு மறுபுறம் என்ற முன்னேற்றத்திற்கான முயற்சிகள் அதன் அழுத்தங்கள் எங்களுக்கு புதிது. புலத்தில் ஈழத் தமிழர்கள் என்னென்ன சவால்களை எல்லாம் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல ஓர் தனிப்பதிவே போடவேண்டும். ஆனாலும் சுருக்கமாகவேனும் அதை சொல்லாமல் விடமுடியாது.

கடின உழைப்பில் காலம் தள்ளும் ஈழத்து அகதிகள்

சாதாரண வேலை,General Labor, (தமிழாக்கம் சரியா தெரியவில்லை) செய்பவர்கள் இங்கே இரண்டு, மூன்று வேலை செய்து மனைவி, குழந்தைகள் குடும்பம் வீட்டிலிருக்க இவர்களில் சிலர் தங்கள் வாழ்க்கையை வேலை தளத்திலேயே வாழ்பவர்களும் உண்டு. அவர்கள் மத்தியில் பொதுவான ஓர் சொல்வழக்கு, “நான் double அடிக்கிறன்”. அதன் அர்த்தம் ஒன்றில் பதினாறு மணித்தியாலங்கள் மாடாய் உழைக்கிறார்கள் அல்லது இரண்டு வேலை செய்கிறார்கள் என்பது தான். கணவன் மனைவி இருவரும் வேலை பார்ப்பவர்களாயிருந்தால் ஒருவரையொருவர் சந்திக்காமலேயே குடும்பம் என்ற பெயரில் வாழ்க்கையை ஓட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

யார் எந்த வேலை செய்தாலும் அடிப்படை தேவைகள் இந்த நாட்டின் வாழ்க்கைத் தரத்திற்கேற்ப நிர்ணயிக்கப்படவேண்டுமென்று அதற்கான கூலியும் சட்டத்தால் வரையறுக்கப்பட்டுள்ளது. ஒருவரின் வருமானத்திற்கேற்றவாறு தனக்கென்றோர் வீட்டையோ, சொத்தையோ வாங்குமளவிற்கு பொருளாதார உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. எல்லலாமே சரிதான். ஆனால் அன்றாட வாழ்விலும், வேலைவாய்ப்பு என்று தேடும் சந்தர்ப்பங்களிலும் என் சிந்தனையில் அடிக்கடி இடறும் ஓர் வார்த்தை “Visible Minorities”. இவர்கள் யாரென்று கேட்டால், பூர்வீக குடிகள் தவிர்ந்த இனத்தாலோ அல்லது நிறத்தாலோ வெள்ளையர்கள் அல்லாதவர்கள். (Visible Minorities, “Persons, other than Aboriginal peoples, who are non-caucasian in race or non-white in colour” -Federal Employment Equity Act). Visible Minority என்று சொல்லப்படும் சிறுபான்மை சமூகங்களில் நாங்களும் அடக்கம்.

எங்களுக்கும் வேலைவாய்ப்புகளில் சமமாக சந்தர்ப்பங்கள் அளிக்கப்படவேண்டுமென்று சட்டம் போட்டது சந்தோசம்தான். ஆனால் சட்டத்தின் அளவுகோலும் சமூகத்தின் அளவுகோலும் எப்போதுமே ஒன்றாய், சமமாய் இருப்பதில்லையே. வேலை வாய்ப்புகளில், வேலைத்தளங்களில், அன்றாடவாழ்வில், ஊடகங்களில் இந்த சிறுபான்மை சமூகங்கள் (Visible Minority) என்ற பதம் அதன் அரசியல் அர்த்தங்களை பிரதிபலிக்காமல் இல்லை. அந்த வார்த்தை எனக்கு கனடாவில் என் உரிமை பற்றிய உறுதியை அளித்தாலும் அதன் அரசியல் பரிமாணம் அந்த உறுதியை சில சமயங்களில் சோதித்தும் பார்க்கிறது. இதை பலபேரின் அனுபவங்களை கேட்டபின்னே பதிய வேண்டுமென்று தோன்றியது.

இப்படி அரசியல், பொருளாதார, சமூக நிலைகளிலுள்ள சவால்களை எதிர்கொண்டுதான் வாழ்க்கையையும் ஈழத்தில் எங்கள் உரிமைப்போருக்கான அங்கீகாரத்தை பெறுவதையும் முன்னெடுத்து செல்லவேண்டியுள்ளது.

பண்பாட்டு அதிர்ச்சியும், பாதை மாறிய ஈழத்து இளையோரும்!

கலாச்சாரம் என்று பார்த்தால் ஈழத்திலிருந்து இங்கே வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை Culture Shock தாக்காமல் இருந்ததில்லை. கனடாவில் தனிமனித உரிமைகளுக்கும், விருப்பு வெறுப்புகளுக்கும் அதிக மதிப்பு கொடுப்பதனால் அவர்களின் வாழ்க்கை முறையும் கூட சுதந்திரமாகவே, இன்னும் சொன்னால் கொஞ்சம் காட்டாற்று வெள்ளம் போன்றது. அது மொழி, நடை, உடை, மரபுகள், கல்வி என்று வாழ்க்கையின் எல்லா பக்கங்களிலும் கிளைபரப்பி ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் கட்டற்ற வேகத்தோடும் பண்புகளோடும் ஒட்டிக்கொண்டு ஓடவும் முடியாமல், வெட்டிக்கொண்டு வாழவும் முடியாமல் தத்தளிக்கும் போது ஈழத்தமிழர்கள் (பெற்றோரும் குழந்தைகளும்) தொடக்கத்தில் திணறத்தான் செய்வார்கள்.

புலத்தில் இப்படியான சவால்கள் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால் ஒவ்வொருவரும் அவற்றை சமாளித்து தன் ஆளுமையை வளர்த்துக் கொள்வதில்தான் வேறுபடுகிறார்கள். மனிதனுக்கு எந்த கலாச்சாரம் அல்லது மதம் எதைக் கற்றுக் கொடுத்தாலும் சீரிய சிந்தனை, தனிமனித ஒழுக்கம் என்பனதான் ஓர் மனிதனை தலைநிமிர்ந்து வாழவைக்கும் என்பது என் கருத்து. சீரான சிந்தனை, தனிமனித ஒழுக்கம் என்பதெல்லாம் தேடல், கற்றுக்கொள்ளல் மற்றும் அனுபவம் மூலம்தான் சாத்தியமாகிறது. ஆனால் மாறாக மன உளைச்சலுக்கு ஆளாகி புலத்து வாழ்வின் அழுத்தங்களுக்கு ஆளாகும் போது சிலபேர் தவறான வடிகால்களை தேடிக் கொள்கிறார்கள்.

ஈழத்தமிழர்கள் குறிப்பாக இளைய சமுதாயம் போர்பூமியிலிருந்து கசக்கி எறியப்பட்டவர்கள் ஆதலால் சரியான நெறிப்படுத்தலும் வழிகாட்டலும் இன்றி ஆரம்பகாலங்களில் கொஞ்சமல்ல நிறையவே வன்முறைகளில் இளைப்பாறி மனச்சலனங்களோடு குழுச்சண்டைகளில் ஈடுபட்டார்கள். நானும் ஓர் முன்முடிவோடு யோசித்ததால் ஆரம்பத்தில் அவர்கள் மேல் எனக்கு கோபமே விஞ்சியிருந்தது. அதைப்பற்றி கொஞ்சம் ஆழமாக யோசிக்கையில் எப்படி தங்களை சூழ உள்ளவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, தங்களை அறியாமலேயே வன்முறைக்குள் நழுவிப்போனார்கள் என்று ஓரளவுக்கு புரிந்தது.

இந்த நாட்டில் கல்விக் கூடங்களில் சகமாணவர்கள் அவர்களுக்குரிய comfort zone என்னவோ, அது பெற்றோர், வீடு முதல் சமூகம் வரை அவர்களின் செளகர்யங்கள், உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. எங்கள் குழந்தைகள் போரில் பெற்றோரை, இரத்த உறவுகளை இழந்தவர்கள். உறவினர்களின் உதவியில், தயவில் புலத்தில் வாழ்பவர்கள். இல்லையென்றால், கலாச்சார முரண்பாடுகள், அன்றாடவாழ்வின் அழுத்தங்கள் காரணமாக மனதின் சமநிலையை தடுமாறவிட்டு வீட்டோடு, பெற்றோரோடு முரண்பட்டு போவார்கள். பெற்றோர்களால் தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் விலக்கிவைக்கப்பட்ட (taboo) சில நியாயமான விருப்பங்களுக்கு நட்பு வட்டத்தில் மட்டுமே அதற்குரிய அங்கீகாரம் கிட்டியது. ஒருசிலரின் முரண்பாடுகளின் உடன்பாடுகளே அவர்களை ஓர் குழுவாய் உருவாக்கியது.

இந்த குழுக்கள் என்பது தமிழ் இளையோர் சிலர் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களினாலும் கூட உருவாக்கப்படதுதான். ஆனால், சில அரசியல் அநாமதேயங்கள் அதற்கு அரசியல் சாயம் பூசி அதில் குளிர்காய்ந்துகொண்டதுகள். இப்படியாக இவர்களின் வன்முறை சமன்பாடுகளில் இவர்களோடு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களின் உயிர்கள் பலிவாங்கப்பட்டபோது, தங்கள் சொந்த எதிர்காலத்தையே இருண்டதாய் ஆக்கிக் கொண்டபோது தான் வன்முறையிலிருந்து விழித்துக் கொண்டார்கள்.

தமிழ்சினிமாவில் காண்பிப்பது போல் ஒருவரின் உயிரை எடுத்துவிட்டு ஸ்லோ மோஷனில் இந்தநாட்டு சட்டத்திலிருந்து தப்ப முடியாது என்பதை விரைவாகவே புரிந்துகொண்டார்கள். புலத்தில் ஈழத்தமிழ்சமூகத்திற்கு இவர்களின் வன்முறை உண்டாக்கிய அவப்பெயர் இவர்களை தமிழர்களிடமிருந்து ஒதுக்கிவைத்தது. முடிவாக அவர்களே வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டார்கள். இன்றுவரை புலம்பெயர் வாழ்வில் இவர்களின் மன உளைச்சலையும் கலாச்சார பண்பாட்டு முரண்பாடுகளையும் ஒத்துக்கொள்ளும் என்னால் அதற்குரிய வடிகாலாய், வழிமுறையாய் இவர்களின் வன்முறைச் சமன்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், எங்களை இன்று புலத்தில் தமிழனாய் தலை நிமிர்ந்து வாழவைப்பது இந்த இளைய சமுதாயம் என்றால் அது நிச்சயமாய் மிகையில்லை. இதைப்பற்றி விரிவாக அடுத்த பதிவில் சொல்கிறேன்.

இளையவர்களின் கலாச்சார முரண்பாடுகள் சீரியஸாக இருந்தால், பெரியவர்களின் முரண்பாடுகள் அர்த்தங்களோடு அபத்தங்களும் கலந்தது. திரைகடலோடியும் திரவியம் தேடு என்பதற்கிணங்க தமிழர்கள் பொருளீட்டுவதில் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல. புலம் பெயர்ந்து வந்தாலும் வேலை, வேலையென்று ஓடுவார்கள். அலுக்காமல் சலிக்காமல் வேலை செய்வார்கள். மேலைத்தேய கலாச்சார சம்பிரதாயப்படி சனி, ஞாயிறு என்று வார இறுதி நாட்களில்தான் வாழ்க்கையை வாழ முயற்சிப்பார்கள். கல்யாணம், பிறந்தநாள் கொண்டாட்டம்,  சாவு என்று எல்லாத்துக்குமே Week-end தான்.

இந்தியாவிலிருந்து நிறையவே விதம், விதமாக ஆடை ஆபரணங்கள் இறக்குமதியாகின்றன. இவற்றையெல்லாம் உடுத்தி, அழகு காட்டி, உண்டு, குடித்து, புலத்து வாழ்க்கையை அனுபவிக்கவும் தவறவில்லை நாங்கள். இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் புடவைகளில், ஆடைகளில் FLA (Fair Labor Association)  லேபிள் இருந்தால் மனட்சாட்சி உறுத்தாமல் இருக்கும் என்று நான் நடைமுறை சாத்தியமற்று சிந்திப்பதுமுண்டு. வியர்வை கூடங்களில் (Sweat Shops) தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிய மனம் ஏனோ ஒப்புக்கொள்வதில்லை எனக்கு.

ஈழத் தமிழனுக்காக அழத் தவறினாலும் மெகா சீரியல்கள் பார்த்து கண்கள் கரைந்தோம். எங்கள் வாழ்க்கையை, அவலத்தை பிரதிபலிக்காத தமிழ் சினிமாவை உலகமெல்லாம் சக்கை போடு போடவைத்தோம். எப்படியோ, ஈழ, இந்திய, கனடிய கலாச்சாரங்களை ஒன்றாய் கலந்து வாரநாட்களில் கனடியர்களாகவும், வார இறுதி நாட்களில் ஈழத் தமிழர்களாகவும் இரட்டை வாழ்க்கை வாழ கற்றுக்கொண்டோம். கொஞ்சம் போதையோ, கவலையோ மிஞ்சிப்போனால், “சூ! அதென்ன வாழ்க்கை” என்று ஈழம் பற்றிய பழைய நினைவுகளை அடுத்தவர்கள் கேட்டே தீரவேண்டும் என்று அடம் பண்ணி ஒப்புவித்தோம்.

அப்படி ஒப்புவிக்கும் நினைவின் மீட்சிகள் உறவுகள் அல்லது நண்பர்களின் இழப்புகள், ஈழத்தில் நாங்கள் இழந்த சந்தோசம், பள்ளிக்கூடவாழ்க்கை, போர் தின்ற காதல், பழகிய நண்பர்கள், பறிகொடுத்த நண்பர்கள், ராணுவத்திடமிருந்தும் தலையாட்டியிடமிருந்தும் (கறுப்பு துணியால் முகம் மூடப்பட்ட ஆட்காட்டி) தப்பித்தது என்று மனதில் காட்சிகளாய் நீளும். உடல் இங்கேயும் மனம் ஈழத்திலுமாய் திரிசங்கு சொர்க்கத்தில் தவிப்போம். அதன் நீட்சியாய் தூக்கம் தொலைக்கும் இரவுகள். கலையாத தூக்கமும், தொலையாத துக்கமுமாய் திங்கட்கிழமை அடித்துப் பிடித்து காலில் சுடுதண்ணீர் கொட்டியது போல் வேலைக்கு ஓடுவோம்.  இன்னோர் அல்லது அடுத்த  week-end இல் வாழ்க்கையை வாழலாம் என்ற நம்பிக்கையுடன்…..!

_____________________________________________ தொடரும்……..

–          ரதி

vote-012

தொடர்புடைய பதிவுகள்

 

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம் !!

vote-012 25 ஏப்ரல், 2010 அன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின் கூட்டத்தில் அமர்ந்திருந்த வக்கீல்கள் எத்தனை பேர்? வக்கீல்கள் உடுப்பில் வந்திருந்த திமுக தொண்டர்கள் மற்றும் குண்டர்கள் எத்தனை பேர்?

கருப்புக் கொடி காட்டி அடிபட்ட HRPC வழக்குரைஞர்கள் மீது வழக்கு. வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் இருந்தும் வக்கீல்களைத் தாக்கிய ரவுடிகள் மீது வழக்கு இல்லை.

______________________________________________

“வக்கீல் சங்கத் தலைவர் பால் கனகராஜ் தலைமையில் 200 வக்கீல்கள் முதல்வருக்கு கருப்புக் கொடி காட்டுவார்கள்”- இது ஏப்ரல் 22, 2010 தினத்தந்தி செய்தி. ஏப்ரல் 23 அன்று தினத்தந்தியில் பால் கனகராஜின் மறுப்பு செய்தி. — இடையில் நடந்தது என்ன?

நீதி மன்றத் தடை ஆணை காரணமாகத்தான் 4 போலீசு அதிகாரிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க இயலவில்லை என்று முதல்வர் கூறியிருப்பது உண்மையா? அல்லது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கச் சொன்ன பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மையா?

_____________________________________________________

மறக்க முடியுமா?

பிப்ரவரி 19, 2009.

உயர்நீதிமன்ற வளாகத்தில் போலீசு வெறியாட்டம்

அன்று குற்றமிழைத்த போலீசுக்கு அரணாக இருக்கும் முதல்வருக்கு இன்று கருப்புக் கொடி காட்டிய HRPC  வழக்குரைஞர்கள் மீது வக்கீல் வேடமணிந்த திமுக ரவுடிகள் தாக்குதல்!

__________________________________________________________

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா?  கண்டனக்கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில், ஹாட் சிப்ஸ் அருகில்

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு

கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குறைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குறைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குறைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குறைஞர் கூட்டமைப்பு.

ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குறைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!

_____________________________________________

கறுப்புக் கொடியும் பெருச்சாளிகளும்!

கறுப்புக் கொடிக்கெல்லாம்
அஞ்சாதவராம் கலைஞர்.
ஒத்துக் கொள்ளலாம் உண்மைதான்,
இந்தியக் கொலைக்கரத்தால்
துண்டு துண்டாக்கப்படட்ட
ஈழத்தமிழரின் தொப்புள்கொடிக்கே
அஞ்சாதவர்தான்…!

“யாரோ! தூண்டிவிடப்பட்டவர்களாம்”
உண்மைதான்,
ஈழத்தமிழர்களுக்காக போராடிய வழக்குரைஞர்களை
போலீசை ஏவித் தாக்கிய கருணாநிதி அரசுதான்
புறநிலையாக அவர்களைத் தூண்டிவிட்டது.
மற்றபடி,
காக்கிச் சட்டைகள், குண்டாந்தடிகள்
கரைவேட்டியில் ரியல் எஸ்டேட்டும்
கந்துவட்டியுமாக கழகப் பணியாற்றும் குண்டர்கள்
இத்தனையும் சூழ்ந்திருக்க
எழுந்து நின்று முழங்கிய தோழர்களைத் தூண்டியது
மார்க்சிய-லெனினிய அரசியல் சக்தி.

“கறுப்புக்கொடி காட்டியவர்கள்
எண்ணிக்கை குறைவாம்!”
உண்மைதான் ஆனால்
அந்த ஆறு தோழர்களின்
அரசியல் உறுதி கண்டு
சாயம்போன உங்கள் முகத்திற்கு
அது ஒன்றும் குறைவில்லை.

ஆள், அம்பு, சேனை, அதிகாரம்
அத்தனைக்கும் மத்தியில்
அவர்களால் உண்மை பேச முடிந்தது.
அத்தனையும் வைத்துக்கொண்டு
உங்களால் தைரியமாக
ஒரு உண்மை பேச முடிந்ததா?

தெளிவாகக் “கருணாநிதிக்கு கறுப்புக் கொடி”
எனக் கண்டனம் முழங்கியும்
“அம்பேத்கார் சிலை திறப்புக்கோ!?”
என நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை விஞ்சியதைப் பார்த்து
அதிர்ச்சியில்,
கோல்வால்கர் கோயபல்சு பிணங்கள்
குப்புறத் திரும்பிப் படுத்துக் கொள்கிறது.

தமிழினத் தலைவரின் நாக்கிலேயே
தூக்குமரம் பார்த்து
உயிரெழுத்து தவிக்குது!
மெய்யெழுத்து நடுங்குது!
பொய்யுரைகள் தீண்டியதால்
செம்மொழி உயிருக்குப்போராடி  துடிக்கிறது!

உற்சவமூர்த்திக்கே உக்கிரம் குறைந்தாலும்
அடிப்பொடி, ஆழ்வார்களுக்கோ
வக்கிரம் குறையவில்லை.

“ஊடகக் கவனத்தை ஈர்ப்பதற்காக
கறுப்புக் கொடி காட்டினார்கள்” என்று
கோபாலபுரத்து பூனை இரவிக்குமார்
கலைஞர் மடியிலிருந்து குதிக்கிறார்.

பீச்சாங்கரையில் படுத்துக்கொண்டு
மூச்சுக்காற்று இரத்தத்தில் கலப்பதற்குள்
இலங்கை யுத்தத்தை நிறுத்தியதாக
உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட
கருணாநிதியின் ஊடகக்கவனத்தைப் பற்றி
மூச்சு கூட விடாத இந்த சூரப்புலி
முந்திக் கொண்டு பாய்வது எதற்காக?

இரவிக்குமார் சாதாரண ஆள் இல்லை!
என்றாவது கலைஞர் ஒரு
எம்.பி. துண்டை வீசியெறிந்தால்
சிறுத்தை வேடத்தை கலைத்துவிட்டு
கரைவேட்டியில் உலாவர காத்திருக்கும்
புளுகுப் பூனை இது!

எங்கே பிணம் விழுந்தாலும்
இடப்பக்கம் எனக்கு, வலப்பக்கம் உனக்கு
என போயசு நரியுடன் சேர்ந்து
புரட்சிகர ஊளையிடும்
புல்லறிவாளர்களுக்கும் பொத்துக் கொண்டு வருகிறது.

சட்டவரம்பை மீறி கருப்புக் கொடி காட்டியதை
எங்கள் திட்டப்படி ஏற்க முடியாது என
போற வழிக்கு புண்ணியம் தேடுகிறார்
வலது கம்யூனிஸ்டு சிவபுண்ணியம்.

சட்டமன்றத்தில் சமர்த்தாக
“என்ன இருந்தாலும் கொஞ்சம்
இடம் பார்த்து அடித்திருக்கலாம்” என்று
இதமாக நலங்கு வைக்கிறார்
நாத்தனார் பாலபாரதி!

மனிதகுல விரோதி
ஞானசேகரனுக்கோ
மாவோயிஸ்டு பேதி!

மொத்தத்தில் நாறியது ஜனநாயகம்!

ஒரு கறுப்புக்கொடியை உதறப்போக
சட்டமன்றப் பொந்திலிருந்து
எத்தனை பெருச்சாளிகள்
எடுக்குது ஓட்டம்!

கறுப்புக்கொடிக்கே உருட்டுக்கட்டை அடி என்றால்
இது பேசி தீர்க்க கூடிய ஜனநாயகமா?
இல்லை… தீர்த்துவிட்டு
பேசக்கூடிய ஜனநாயகமா?

தெரிந்துகொள்ளுங்கள்
உழைக்கும் மக்களே!

–          துரை. சண்முகம்

__________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?

37

vote-012

ரோமன் கத்தோலிக்க மதத்தலைவரான போப்பாண்டவர் 16ஆம் பெனடிக்ட், போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும், அவரை கைது செய்ய வேண்டும் என்ற கூக்குரல்கள் தற்பொழுது உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. போப்பாண்டவருக்கு ஆதரவான வாதங்களும், எதிர் வாதங்களும் அமெரிக்க ஊடகங்களிலும், ஐரோப்பிய ஊடகங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. தற்போதைய போப்பாண்டவரான பெனடிக்ட் இதற்கு முன்பு கார்டினலாக இருந்த பொழுது பல கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் வன்முறைகளை மூடி மறைத்தார் என்றும், அதில் ஈடுபட்ட பல கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

_______________________________________

போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட்டின் இயற்ப்பெயர் ஜோசப் ராட்சிங்கர். இவர் போப்பாண்டவர் பதவிக்கு வரும் முன்பு கார்டினலாக பணியாற்றி இருக்கிறார். கார்டினலாக இருந்த பொழுது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாகவும் (Leader of the Congregation for the Doctrine of the Faith) ராட்சிங்கர் பொறுப்பு வகித்தர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்துமீறல்கள் குறித்த பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது. அவ்வாறு இருந்தும் ஒழுக்கம் தவறிய பாதிரியார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள கத்தோலிக்க பாதிரியார்களை மிகவும் ரகசியமாகவே விசாரிக்க வேண்டும் என அனைத்து கத்தோலிக்கத் திருச்சபைகளுக்கும் ராட்சிங்கர் அனுப்பிய ரகசிய உத்தரவும் தற்பொழுது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. தன்னுடைய திருச்சபைக்கு களங்கம் நேராமல் காப்பாற்றவே வாடிகன் முனைந்ததே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் வாடிகன் எடுக்கவே இல்லை. இதன் காரணமாக குற்றம் செய்த பாதிரியார்கள் எந்த தண்டனையும் இல்லாமல் தொடர்ச்சியாக பல ஆண்டுகள் இத்தகைய குற்றங்களை செய்து வந்திருக்கிறார்கள்.

அதுவும் இத்தகைய பாலியல் வன்முறை யார் மீது தொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா ? குழந்தைகளின் மீது. ஆம், பத்து வயது கூட நிரம்பாத சிறுவர்களையும், சிறுமிகளையுமே தங்களுடைய செக்ஸ் வக்கிரத்திற்கு இந்தப் பாதிரியார்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். Pedophiles எனப்படும் குழந்தைகளை பாலியலுக்கு உட்படுத்தும் பாலியல் வல்லூறுக்கள் தான் இந்தக் கத்தோலிக்க கிறுத்துவ பாதிரியார்கள்.

கத்தோலிக்கத் திருச்சபைகள் உலகெங்கிலும் பல்வேறு அனாதை ஆசிரமங்களையும், குழந்தைகளுக்கான காப்பகங்களையும் நடத்தி வருகிறது. இத்தகைய காப்பகங்களிலும், பள்ளிகளிலும் இருக்கும் சிறார்களின் மீது பாலியல் வன்முறைகள் தொடுக்கப்படுவதாக பலக் குற்றச்சாட்டுகள் பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. இந்தக் குற்றங்களை போப்பாண்டவர் பதவிக்கு வருவதற்கு முன்பு தற்போதைய போப்பாண்டவர் மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டே தற்பொழுது எழுந்துள்ளது.

வழக்கம் போல போப்பாண்டவரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே இத்தகைய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாக வாடிகன் கூறியுள்ளது. போப்பாண்டவருக்கு இத்தகையக் குற்றங்கள் நடந்தது தெரியாது என வாடிகன் பிரச்சனையை பூசி மொழுக முனைகிறது. இதை விட வேடிக்கை என்னவென்றால் வாடிகனைச் சேர்ந்த ஒரு உயரதிகாரி போப் மீதான குற்றச்சாட்டினை யூதர்கள் மீதான வெறுப்புடன் (Antisemitism ) ஒப்பிட்டுள்ளதும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. இதனை பல யூத அமைப்புகள் கண்டித்துள்ளன. பல யூதர்கள் கொல்லப்பட காரணமான யூதர்கள் மீதான வெறுப்பினை (Antisemitism ) தற்போதைய போப் மீதான வெறுப்பாக கட்டமைக்க முனைவது வேடிக்கையானது. வாடிகன் தற்போதையப் பிரச்சனையை எவ்வாறு கையாளுவது என குழம்பிப் போய் உள்ள சூழ்நிலையையே இது வெளிப்படுத்துகிறது.

எப்படி எழுந்தது இந்தக் குற்றச்சாட்டு ?

கத்தோலிக்கத் திருச்சபைகளின் மீதான இந்தக் குற்றச்சாட்டு புதியது அல்ல. பல்வேறு நாடுகளில் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்ச்சியாக கடந்த காலங்களில் எழுப்பப் பட்டிருக்கின்றன. தற்போதையக் குற்றச்சாட்டு கடந்த காலங்களில் நடந்த குற்றங்களை ஒட்டியே எழுந்திருக்கிறது. குறிப்பாக அயர்லாந்து, அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த பாலியல் குற்றங்களே தற்போதைய குற்றச்சாட்டிற்கும் காரணமாக உள்ளது.

அயர்லாந்தில் நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பல்லாயிரம் குழந்தைகளை பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பல்வேறு விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அது போல அமெரிக்காவிலும் பல்வேறு குற்றாச்சாட்டுகள் கத்தோலிக்க திருச்சபைகள் மீது வைக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரச்சனை என்னவென்றால் இத்தகைய எந்தப் பாதிரியார்களும் தண்டிக்கப்படவே இல்லை.

ஏன் தண்டனை இல்லை ?
கத்தோலிக்க வாடிகன் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியாதா ?

கத்தோலிக்கத் தலைமைக்கு இந்தக் குற்றங்கள் தெரியும். ஏனெனில் திருச்சபைகளில் நடக்கும் ஒவ்வொரு பாலியல் குற்றங்களும் வாடிகனுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நெறிமுறை உள்ளது. ஆனால் இந்தக் குற்றங்கள் கத்தோலிக்க திருச்சபைக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என வாடிகன் அஞ்சியது. இதனால் இந்தக் குற்றங்களை மூடி மறைக்க கத்தோலிக்கத் திருச்சபை முனைந்தது. இத்தகையக் குற்றங்களை மூடி மறைக்க தனி நெறிமுறைகளையே வாடிகன் வகுத்துள்ளது.

1962ல் வாடிகன் ஒரு ரகசிய ஆணையை பிறப்பித்து உள்ளது. இதன் பெயர் Crimen Sollicitationis. இதன் படி கத்தோலிக்க பேராயர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும் பொழுது அந்தக் குற்றங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் குற்றங்கள் குறித்து வெளியில் எதுவும் பேசக் கூடாது என்பதும் ரகசிய உத்தரவாகும். பாலியல் குற்றம் செய்தவர், பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானவர்கள், குற்றத்தைக் கண்ட சாட்சிகள் என அனைவரும் இந்தச் சட்டத்தின் படி பாலியல் குற்றம் குறித்த ரகசியத்தை கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு ரகசியத்தை கடைப்பிடிக்காவிட்டால் கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்து நீக்கப்படுவார்கள் (excommunication). திருச்சபையில் இருந்து நீக்கப்படுவது என்பது சில இடங்களில் கிராமத்தை விட்டு ஒதுக்கி வைப்பது போன்றதுதான். இது குறித்த ஒரு பிபிசி ஆவணப்படத்தில் தனது ஐந்து வயது பேரனுக்கு நடந்த பாலியல் வன்முறையை வெளிப்படுத்தியமைக்காக தான் எவ்வாறு திருச்சபையில் இருந்தும், கிராமத்தில் இருந்தும் ஒதுக்கப் பட்டேன் என ஒரு மூதாட்டி விளக்குகிறார்.

பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட சிறார்கள் இந்தக் குற்றத்தைக் குறித்து வெளியில் பேசக்கூடாது என வரையறுத்த கத்தோலிக்கத் திருச்சபை, குற்றம் செய்த பாதிரியார்களுக்கு எந்த தண்டனையும் வழங்கவில்லை. Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். இந்தக் குற்றம் குறித்து வெளியே கூறக்கூடாது என்ற ரகசிய உத்தரவு இருந்ததால் இது போலீசாருக்கோ, உள்ளூர் அரசாங்கத்திற்கோ தெரியப்படுத்தப்படவே இல்லை. கத்தோலிக்கத் திருச்சபையின் இத்தகைய நெறிமுறை குற்றம் செய்தவர்களுக்கே சாதகமாக இருந்தது. காரணம் இத்தகைய குற்றம் செய்த பாதிரியார்கள் வேறு இடங்களுக்கு இடமாற்றம் மட்டுமே செய்யப்பட்டனர். இதன் காரணமாக ஒரு இடத்தில் குற்றம் செய்த பாதிரியார்கள், வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக குற்றம் இழைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகளை பல நூற்றுக்கணக்கான பாதிரியார்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பிரச்சனைக் குறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டப்பட்டனர். பலர் பல ஆண்டுகள் இதனை வெளியே கூறவே இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது தான் பலர் தங்கள் மீது சிறு வயதில் இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து கூறத் தொடங்கியுள்ளனர். இதில் எரிச்சல் ஊட்டும் வேதனையான உண்மை என்னவென்றால் கத்தோலிக்கத் திருச்சபை இத்தகைய பாலியல் குற்றங்களை ஒரு பாவமாகவும், பாவத்திற்கு மன்னிப்பாக பாவமன்னிப்பையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வலியுறுத்தி வந்துள்ளது. இதனால் குற்றம் செய்த குற்றாவளிகளான பாதிரியார்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பல சிறார்களை தொடர்ந்து தங்கள் காமவெறிக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.

பாலியல் குற்றம் தொடர்பாக அமெரிக்காவில் தேடப்படும் சில பாதிரியார்கள் அமெரிக்காவை விட்டு தப்பி வாடிகனில் அல்லது ரோமில் சுதந்திரமாக திரிவதாக கூட ஒரு தொலைக்காட்சியில் கூறப்பட்டது. ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

இந்தக் குற்றங்களை கடந்த காலங்களில் பல ஊடகங்கள் வெளியிட்டு இருந்தாலும் வாடிகனின் போக்கில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 2006ல் பிபிசி இந்தக் குற்றங்களைச் சார்ந்து ஒரு ஆவணப் படத்தை வெளியிட்டு உள்ளது. அந்த ஆவணப் படத்தில் ஒரு பாதிரியார் செய்த குற்றங்கள் குறித்து விவரிக்கப்படுகிறது. குற்றம் செய்த பாதியாரின் பெயர் டார்டிசியோ. முதன் முதலில் 1991ம் ஆண்டு இவர் செய்த பாலியியல் குற்றம் பிரேசிலில் வெளியாகி உள்ளது. ஆனால் இவர் மீது எந்த நடவடிக்கையையும் வாடிகன் எடுக்க வில்லை. மாறாக அவரை வாடிகன் இடமாற்றம் மட்டுமே செய்துள்ளது. இவர் இடம்மாறிய இடங்களில் எல்லாம் இத்தகைய குற்றங்களை தொடர்ச்சியாக செய்துள்ளார். இவர் குற்றம் செய்வதும், இடமாற்றம் செய்யப்படுவதுமாக நிலைமை இருந்துள்ளது. இவ்வாறு சுமார் நான்கு முறை இவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இறுதியாக 2005ல் இவர் போலீசாரால் பிடிபட்ட பொழுது தான் இவர் பற்றிய விபரங்கள் வெளியுலகுக்கு தெரிய வந்தது. இந்தப் பாதிரியார் எழுதியுள்ள டைரியில் ஏழு வயது முதல் பத்து வயதிற்குட்பட்ட ஏழை மற்றும் பெற்றோர் இல்லாத அனாதைக் குழந்தைகளையே இவர் தன் பாலியல் இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.

பாதிரியார்கள் செய்த குற்றத்திற்கு போப்பாண்டவர் பெனடிக்ட் பொறுப்பாக முடியுமா ?

தற்போதைய போப்பாண்டவர், இந்தப் பதவிக்கு வரும் முன்பு திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வாடிகன் அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். இதன் காரணமாக உலகெங்கிலும் நடக்கும் பல்வேறு பாலியல் அத்துமீறல்கள் குறித்தப் பிரச்சனைகளை நெறிப்படுத்தும் பொறுப்பும் ராட்சிங்கருக்கு இருந்து வந்துள்ளது.

இவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தும், குழந்தைகளை பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய பாதிரியார்களை நெறிப்படுத்தும், ஒழுங்குப்படுத்தும், தண்டிக்கும் எந்த நடவடிக்கையையும் ராட்சிங்கர் எடுக்கவில்லை. மாறாக 2001ல் ராட்சிங்கர் ஒரு ரகசிய உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதன் படி பாதிரியார்கள் திருச்சபைகளில் செய்யும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட எல்லா செக்ஸ் குற்றங்களையும் மிகவும் ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்ற உத்தரவை மறுபடியும் வலியுறுத்தியுள்ளார். அதாவது 1962ல் இருந்த உத்தரவை மிகவும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதே அவரது ரகசிய உத்தரவு. இவ்வாறு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிமென் (Crimen) எனப்படும் ரகசியத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வலியுறுத்திய ராட்சிங்கர் இத்தகைய குற்றங்களை தடுக்கவோ, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அது மட்டுமில்லாமல் பாலியல் குற்றம் தொடர்பான ஒவ்வொரு குற்றத்தையும் வாடிகனுக்கு அனுப்ப வேண்டும் என்பதும், அவை வாடிகனின் நேரடிப் பார்வைக்கு வர வேண்டும் என்பதும் அவரது ஆணை. ஆனால் வாடிகனுக்கு அனுப்பப்பட்ட எந்தக் குற்றத்தின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே போப்பாண்டவர் பெனடிக்ட் தான் கத்தோலிக்கத் திருச்சபைகளில் நடந்த எல்லா குற்றங்களுக்கும் முழு பொறுப்பேற்க வேண்டியவராகிறார்.

போப்பாண்டவர் பெனடிக்ட் மீது இத்தகைய குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வந்தாலும் அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு பாலியல் அத்துமீறலில் போப்பாண்டவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களைக் கடந்த மாதம் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டதை தொடர்ந்தே போப்பாண்டவர் குறித்த பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கி உள்ளன. கார்டினலாக பணியாற்றுவதற்கு முன்பு ஜெர்மனியில் பேராயராக பணியாற்றிய பொழுதும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடிமறைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்தே தற்போதைய போப்பாண்டவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல் குறித்து பிபிசி தமிழோசை இணையத்தளம் பின்வருமாறு செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் முன்பு கேட்கும் திறன் அற்ற கிட்டத்தட்ட 200
சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தொடர்பாக தனக்கு என்னென்ன தெரியும் என்பதை உலகுக்கு வெளியிட வேண்டும் என்ற குரல்களை தற்போது போப்பாண்டவர் பெனடிக்ட் எதிர்கொண்டுவருகிறார்.

அமெரிக்காவின் விஸ்கான்ஸின் பகுதியில் ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்த சிறார்களை திட்டமிட்டு தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி உட்படுத்திவந்திருந்தார். இந்த துஷ்பிரயோகம் குறித்து லாரன்ஸ் மர்ஃபிக்கு மேலேயிருந்த திருச்சபை அதிகாரிகள் 1990களின் மையப் பகுதியில் அப்போது திருச்சபை உறுப்பினர்களின் ஒழுக்க விவகாரங்களுக்கு பொறுப்பான வத்திகான் அதிகாரியாக இருந்த கார்டினல் ராட்ஸிங்கருக்கு இரண்டு முறை கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்படுகிறது.

போப்பாண்டவர் மீதான குற்றச்சாட்டு

பிற்பாடு போப்பாண்டவராக உருவெடுத்தவரான கார்டினல் ராட்ஸிங்கர் அக்கடிதங்களுக்கு பதில் எழுதியிருக்கவில்லை. பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி தனது கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர் திருச்சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கவில்லை. போப்பாண்டவர் பெனடிக் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று விமரிசகர்களும், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தவர்கள் பலரும் கூறுகின்றனர். திருச்சபைக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த விஷயத்தை மூடி மறைக்க நடந்த முயற்சிகளில்
போப்பாண்டவருக்கும் பங்கிருந்தது என்று கூட அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

பிபிசியில் விடுபட்டுப் போன ஒரு தகவல் – பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபி நேரடியாக ராட்சிங்கருக்கே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதே சுமார் 200 காது கேளாத குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் லாரன்ஸ் மர்ஃபியின் வேண்டுகோள். அதற்கு ராட்சிங்கர் என்ன விடை அளித்தார் என்பது தெரியவில்லை. ஆனால் சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்த லாரன்ஸ் மர்ஃபிக்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை. இறுதி காலம் வரை பாதிரியாராக இருந்து லாரன்ஸ் மர்ஃபி 1998ல் இறந்திருக்கிறார். இந்தத் தகவல்களை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவில் வெளியான குற்றச்சாட்டினை தொடர்ந்து ஜெர்மனியிலும் ராட்சிங்கர் பாலியல் குற்றங்களை மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டும் தற்பொழுது வெளியாகி உள்ளது. பாதிரியார் ஹல்லர்மேன் ஜெர்மனியைச் சேர்ந்தப் பாதிரியார் ஆவார். இந்தப் பாதிரியார் பாலியல் குற்றம் செய்ததான ஒரு பிரச்சனை 1980ல் எழுந்தது. அப்பொழுது அங்கு பேராயராக இருந்தவர் ஜோசப் ராட்சிங்கர். ஒரு 11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் பாதிரியார் ஹல்லர்மேன். பேராயராக இருந்த ஜோசப் ராட்சிங்கர் இந்தப் பாதிரியாரை முனிச் நகரத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். ஆனால் பாலியல் குற்றம் குறித்து போலீசாருக்கோ, அரசாங்கத்திற்கோ எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இடமாற்றம் செய்யப்பட்ட பாதிரியார் இடம் மாறிய இடத்திலும் தொடர்ந்து பாலியல் வன்முறை செய்துள்ளார். இவ்வாறு இவரது பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்றாலும் இவர் மீது கத்தோலிக்கத் திருச்சபை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பது மட்டுமல்ல, இவர் தொடர்ந்து குழந்தைகளுடன் பணியாற்றவும் அனுமதித்து இருக்கிறது. இறுதியாக 1986ல் இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வளவு நடந்தும் அவர் பாதிரியார் பொறுப்பில் இருந்து விலக்கப்படவில்லை, கடந்த மாதம் இந்தக் குற்றச்சாட்டுகள் வெளியான பிறகே பாதிரியார் பொறுப்பில் இருந்து ஹல்லர்மேன் நீக்கப்பட்டார்.

இவையெல்லாம் போப்பாண்டவர் எத்தகைய பொறுப்புடன் இந்தப் பிரச்சனையை அணுகியிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?

போப்பாண்டவர் பல்லாயிரக்க்கணக்கான குழந்தைகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய பாதிரியார்களின் குற்றங்களை மூடி மறைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் இந்தக் குற்றங்கள் குறித்த தகவல்கள் திருச்சபையை விட்டு வெளியில் செல்லாத வண்ணம் பாதுகாத்து மறைத்துள்ளார். அதற்கான உத்தரவுகளை பிறப்பித்து இந்தக் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற ”மறைமுக” காரணமாக இருந்துள்ளார். Pedophile என்பது ஒரு கிரிமினல் குற்றமாகும். அந்தக் குற்றத்தை மறைப்பதும், உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றமே ஆகும். அந்த வகையில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை தங்களின் காமப்பசிக்கு இரையாக்கிய பாதிரியார்களை பாதுகாத்த போப்பாண்டவர் மிக மோசமான குற்றம் செய்த ஒரு கிரிமினல் என்ற குற்றச்சாட்டு உலகின் பல்வேறு நாடுகளில் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த வாதங்களில் இருக்கும் உண்மையை யாராலும் மறுக்க முடியாது. போப்பாண்டவர் பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஒரு கிரிமினல் குற்றவாளி என்ற வகையில் அவர் போப்பாண்டவர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.

போப்பாண்டவரை கைது செய்ய முடியுமா ? அது நடைமுறையில் சாத்தியமா ?

போப்பாண்டவர் கிறுத்துவ மதத்தலைவர் மட்டுமல்ல. வாடிகன் என்ற நாட்டின் தலைவரும் ஆவார். இந் நிலையில் அவரை கைது செய்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஆனால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளின் கற்பழிப்பிற்கு காரணமாக இருந்ததன் மூலம் மனித குலத்திற்கு எதிரான செயல்கள் புரிந்தவர் என்ற வகையில் அவரை கைது செய்ய முடியும் என சில பத்திரிக்கையாளர்கள் கூறி வருகின்றனர். போப்பாண்டவர் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். அப்பொழுது அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதற்கான சட்டரீதியிலான முயற்சியில் சில வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இவையெல்லாம் நடைமுறைச் சாத்தியம் அற்றது. என்றாலும், கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறையில் சாத்தியமானதா என்பதைக் கடந்து தார்மீக நோக்கிலே சரியான கோரிக்கையாகவே உள்ளது. எனவே போப்பாண்டவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தொடர்ந்து எழுப்பியாக வேண்டிய சூழ்நிலையே தற்பொழுது உள்ளது.

************

மதங்கள் மக்களை மடையர்களாக்கவும், அடிமைகளாக்கவுமே உருவாக்கப்பட்டதாக தந்தை பெரியார் கூறுகிறார். மதத்தை புனிதத் தன்மை மிக்கதாகவும், மதவாதிகளை புனிதர்களாகவும் சமுதாயத்தில் கட்டமைத்து உள்ளனர். ஆனால் இந்த மதவாதிகளே பல்வேறு கிரிமினல் வேலைகளை தொடர்ந்து செய்து வந்துள்ளனர். இது எல்லா மதங்களிலும் நடந்து கொண்டே தான் இருக்கிறது. மதத்தலைவர்கள் செய்த பல்வேறு பாலியல் வன்முறைகள், எல்லா நாடுகளிலும் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு வெளிவந்தும் மதத்திற்கு புனித வட்டம் கட்டும் பணி எப்பொழுதும் நிற்பதில்லை. நித்தியானந்தாவின் பாலியல் வீடியோ காட்சிகள் வெளியான பொழுது ஹிந்து மதத்தின் புனிதத்தை அழிக்க முனைவதாக ஹிந்துத்வா கும்பல் அலறியது. ஹிந்து மதத்தின் ஆணிவேராக புனித வட்டம் கட்டப்பட்ட காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோரின் கிரிமினல் வேலைகளும், பாலியல் குற்றங்களும் கடந்த காலங்களில் வெளிவந்திருக்கின்றன. ஹிந்து மத சாமியார்கள் தொடங்கி கிறுத்துவ பாதிரியார்கள், போப்பாண்டவர் வரை எல்லோருமே பல்வேறு கிரிமினல் செயல்களை செய்து கொண்டே இருக்கின்றனர். அவர்களை பாதுகாத்து புனித வட்டம் கட்ட முனைவர்களும் தங்களின் பணிகளை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றனர். மக்களின் ஞாபக மறதி மட்டுமே வாழையடி வாழையாக தொடர்ந்து மதத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

___________________________________________________

– தமிழ் சசி

தமிழ் சசியின் வலைப்பூ முகவரி: http://www.tamilsasi.com/

(தோழர் தமிழ் சசி எழுதிய இந்தக் கட்டுரையை, அவரது அனுமதியோடு,  நன்றியுடன் வெளியிடுகிறோம்)

vote-012

தொடர்புடைய பதிவுகள்:

ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?

45

“365 நாளும் நடக்கட்டும்
மண்ணில், விண்ணில், பேச்சில், எழுத்தில்
அதுவே பேசப்படட்டும்.
ஆட்டங்களில் சூடு பறக்கட்டும்
ஆரவாரங்களில் போதை ஏறட்டும்
விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும்
விளையாட்டில் தேசம் திருடப்படட்டும்”

சென்னை அணியும், மும்பை அணியும் மோதும் பந்தயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் தமிழ் என்பதால் சென்னை அணியின் வீரர்கள் அடிக்கும் போது நான்கும், ஆறும் பறக்காதா என்று உங்கள் வயிற்றில் மெல்லிய பதட்டம். சென்னை அணி வென்ற பிறகும் உங்கள் சிந்தனை அந்தக் காட்சியினைப் பின்தொடர்கிறது. கோப்பை வழங்குதல் முடிந்தாலும் மனதில் வழியும் கேளிக்கை உணர்ச்சி நிற்கவில்லை. என்னமோ, ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. இத்தகைய உணர்ச்சி உண்மையெனில் நீங்கள் கிரிக்கெட்டால் வீழ்த்தப்பட்ட ஒரு விரும்பிப் பறிபோன இந்தியக் குடிமகன்.

காலனிய விளையாட்டு காசு கொட்டும் விளையாட்டாய் ஆனது எப்படி?

இந்தியாவை ஆட்சி செய்து களைத்துப்போன வெள்ளையர்கள் பொழுது போக்கிற்காக ஆபத்தில்லாத விளையாட்டாக கிரிக்கெட்டை விளையாடிதோடு, தங்கள் ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த மெக்காலே கல்வி கற்ற இந்தியக் குமாஸ்தாக்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள். பார்ப்பன மேல் சாதியினரைக் கொண்டிருந்த இந்த அதிகார வர்க்கமும், சமஸ்தானத்து மன்னர்களும், பண்ணையார், மிட்டா மிராசுகளும் கிரிக்கெட்டிற்கு இந்திய அஸ்திவாரம் போட்டார்கள்.

அந்தக் காலத்தில் ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளை வானொலி மூலம் பெருமைபடக் கேட்கும் கூட்டத்தினர் மேற்கண்டவர்களின் வழியில் கிரிக்கெட்டின் இரசனையை கீழே வரை பரப்பினர். பின்னர் அறிவியல் தொழில் நுட்பப் புரட்சியின் காரணமாக நேரடி ஒளிபரப்பு சாத்தியமானதும் கூடவே ஒரு நாள் பந்தயங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. தொலைக்காட்சி விளம்பரங்களும், இந்தியாவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இருந்த மிகப்பெரிய சந்தையும் இணைந்து இதன் வர்த்தக மதிப்பை ஆயிரக்கணக்கான கோடிகளில் எகிற வைத்தன.

உலகக் கோப்பை கிரிக்கெட்டும், இந்தியத் துணைக் கண்டத்தின் சந்தை மதிப்பும், கிரிக்கெட்டை இந்திய முதலாளிகளின் ஆதிக்கத்தின் கீழ் தவிர்க்க முடியாத வண்ணம் கொண்டு சேர்த்தன. மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த 2007 உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இந்திய அணி குறைந்த பட்சம் அரையிறுதிக்காவது தகுதி பெறும் என்று பெரும் மூலதனத்தை முதலீடு செய்திருந்த முதலாளிகள் பின்னர் இந்திய அணி முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியதால் கையை சுட்டுக் கொண்டனர்.

இந்திய அணி எப்போதும் வெற்றிபெறுவது சாத்தியமில்லாதது. வெற்றி பெறும் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய முதலாளிகள் ஸ்பான்சர் செய்வதும் இயலாது. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு தரும் முறையில்தான் கிரிக்கெட்டின் எதிர்கால வர்த்தகம் உண்டு என்பதை உணர்ந்து கொண்ட முதலாளிகளின் ஒரு பிரிவு உருவாக்கியதுதான் ஐ.சி.எல் கோப்பை போட்டி.

21ஆம் நூற்றாண்டில் அறிமுகமாகி, பிரபலமாகிவிட்ட இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் இந்த விளையாட்டும் மற்ற விளையாட்டுகள் போல ஒரிரு மணி நேரங்களுக்குள் ஆடும்படியான அம்சத்தை கொண்டிருந்தது. இதனால் கிரிக்கெட்டை நேரிலும், சின்னத்திரையிலும் பார்க்கும் கண்களை வகை தொகையில்லாமல் அதிகப்படுத்தலாம் என்று முதலாளிகள் கண்டு கொண்டனர்.

அப்படித்தான் Z டி.வி முதலாளிகள் இருபது ஓவர் போட்டிகளை ஐ.சி.எல் என்று சர்வதேச வீரர்களைச் சேர்த்துக் கொண்டு நடத்த ஆரம்பித்தனர். உலகிலேயே கிரிக்கெட்டை வைத்து அதிகம் சம்பாதிக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஏகபோகத்தை தகர்க்கலாம் என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலே (ஐ.சி.சி)  இந்திய சங்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் போது ஐ.சி.எல் எதிர்பார்த்தது போல களை கட்ட அனுமதிக்கப்படவில்லை.

லலித் மோடியின் ஐ.பி.எல்லும் அதன் அசுரவளர்ச்சியும்

ஆரம்பத்திலிருந்தே இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தை பெரிய இடத்து மனிதர்கள்தான் நிர்வகித்து வந்தனர். இன்றும் கூட முதலாளிகளும், அரசியல்வாதிகளும்தான் சங்கத்தின் கடிவாளத்தை வைத்திருக்கின்றனர். சரத்பவார், காங்கிரசின் சுக்லா, பி.ஜெ.பியின் அருண் ஜெட்லி, முதலான அரசியல்வாதிகளும் பல்வேறு முதலாளிகளும் சங்கத்தில் உள்ளனர். முக்கியமாக கிரிக்கெட் ஒரு பணம் காய்ச்சி மரமென்று தெரிந்த உடன் இந்த போக்கு எழுதப்படாத விதியாக மாறிவிட்டது.

இப்படி கிரிக்கெட்டிற்கு மக்களிடம் இருக்கும் பேரார்வமும், அரசியல்வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் என அனைத்து மேல்மட்டப் பிரிவினரிடமும் இருக்கும் செல்வாக்கையும் புரிந்து கொண்ட லலித் மோடி முழுவீச்சில் அறிமுகப்படுத்தியதுதான் ஐ.பி.எல். இதற்குத் தேவையான எல்லா உதவிகளையும் பி.சி.சி.ஐ யும் ஐ.சி.சி. யும் செய்து கொடுத்தது. புதிய வழிகளில் கோடிகள் கொட்டப்ப் போகிறது என்பதால் அவர்களும் இதில் ஆதாயமடையலாம் என்பதை மோடி உறுதி செய்தார். ஏற்கனவே மேட்ச் பிக்சிங் போன்ற ஊழல்கள் வெளியே தெரியும்படியாக பரவியிருந்த்தால் கவலைப்பட்ட முதலாளிகளுக்கு அப்படி ஒரு பிக்சிங் தேவைப்படாமலேயே பணத்தை சுருட்டலாம் என்பதை மோடி நிரூபித்துக் காட்டினார்.

விளையாட்டு உணர்ச்சியை வர்த்தகமாக்கிய  கிளப் போட்டிகள்!

பல்வேறு விளையாட்டுக்களில் கிளப் பாணி போட்டிகள் இருந்தாலும் கால்பந்தில் அது மிகவும் பிரபலம். குறிப்பாக ஐரோப்பாவில் நடக்கும் இந்த கிளப் கால்பந்து போட்டிகளில் பல பில்லியன் டாலர் பணம் புரள்கிறது. இதன் மூலமாகத்தான் தேசிய அணிகளின் மோதலாக பிரபலமடைந்திருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் சர்வதேச கால்பந்து சங்கம் ஒரு பிரம்மாண்டமான பன்னாட்டு நிறுவனம் போல வளர்ந்திருக்கிறது.

முதலாளித்துவ நாடுகளில் கால்பந்துக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு காரணமாக இதன் பரிமாணம் பரந்து விரிந்து கிடக்கிறது. நாடுகளுக்காக ஆடும் வீரர்கள் தங்களது திறமையைக் காட்டிவிட்டால் போதும், பிறகு அவர்கள் ஆயுசுக்கும் கஷ்டமில்லை என்பதாக கோடிகளை கிளப்போட்டிகளில் அள்ளலாம். ஐரோப்பாவில் உள்ள பல்வேறு கிளப் முதலாளிகள் திறமையான வீரர்களை வாங்குவதற்கு போட்டி போடுவர். கிளப்புகளை பின்னணியில் இருந்து கட்டுப்படுத்தும் முதலாளிகளும், கால்பந்தை வைத்து விளம்பரம் செய்யும் பன்னாட்டு முதலாளிகளும் இதன் வர்த்தக மதிப்பை தீர்மானிக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் கூடைப்பந்து மற்றும் பேஸ்பால் லீக்-களும் கிளப் வகை போட்டிகள்தான். இங்கும் கிளப்புகளை முதலாளிகள்தான் கட்டுப்படுத்துகின்றனர்.

விளையாட்டில் தேசியவெறி மட்டும் இருக்காது கிளப் வெறியையும் உருவாக்க முடியும் என்பதை இந்த சர்வதேச அனுபவங்கள் நிரூபிக்கின்றன. முக்கியமா தேசிய வகை போட்டிகளில் குறிப்பிட்ட அணி வெற்றி பெற்றால்தான் அந்த அணி வீரர்களை வைத்து செய்யப்படும் விளம்பர முதலாளிகள் ஆதாமடையும் என்ற ரிஸ்க் கிளப் போட்டிகளுக்கு இல்லை.  ஐ.பி.எல்லும் முதலாளிகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருப்பதற்கு இது ஒரு முக்கியக் காரணமாகும். இந்திய அணியை ‘தேசப்பற்றுடன்’ ஆதரித்துக் கொண்டிருந்த இரசிகர்கள் இன்று பிராந்திய அணியினை ஆதரிப்பவர்களாக உடனடியாக மாறினர்,  வெள்ளையர்களும், வேற்று மாநிலத்தவர்களும், நாட்டவர்களும் இருந்தாலும் இந்த ‘நம்ம டீம்’ உணர்வு சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது.

தொழிற்துறை முதலாளிகளை ஈர்த்த கிரிக்கெட்டின் பெரும் வர்த்தகம்!

இத்தகைய பின்புலத்தில்தான் லலித்மோடியால் ஐ.பி.எல் போட்டிகள் திறமையாக வடிவமைக்கப்பட்டது. எட்டு அணிகள், எட்டு முதலாளிகள், எட்டு முதலாளிகளின் பின்னே உள்ள மற்ற முதலாளிகளின் விவரம் தெரிவிக்கப்படாமை, வீர்ர்களை ஏலம் எடுக்கும் உரிமை, எங்கிருந்து வேண்டுமானாலும் முதலீடு செய்யும் வசதி, அணிகளை ஏலத்தின் மூலம் முதலாளிகள் வாங்கும் வசதி, அந்த ஏலத்தை சிண்டிகேட் அமைத்து நிதானப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு, விளம்பரம், போட்டிகள் மூலம் அணி உரிமையாளர்கள் இலாபம் காண்பதற்கு உத்திரவாதம், ஒளிபரப்பும் உரிமை மூலம் ஊடக முதலாளிகள் பணம் அள்ளுவதற்கு வாய்ப்பு, இதையெல்லாம் அனுமதித்து கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு பி.சி.சி.ஐக்கு தரப்படும் கப்பம், என்று ஐ.பி.எல்லின் மூலம் கிரிக்கெட் புரட்சியை லலித் மோடி பிரம்மாண்டமாக விற்பனை செய்திருக்கிறார். Z டிவியின்  ஐ.சி.எல்லை ஒழிப்பதற்க்காக இறக்கப்பட்ட அங்கீகாரிக்கப்பட்ட ஒன்றைப்போல போல தோற்றம் கொண்டிருந்தாலும் ஒரே வருடத்தில்  அதுவே தனியாக தனது சாம்ராஜ்ஜியத்தைப் பரப்பத்துவங்கியது.

அமெரிக்காவில் அபின் வைத்திருந்த்தாகவும், ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்ட முதலாளி மைனரான லலித் மோடியின் கிரியேட்டிவிட்டி ஐ.பி.எல்லில் பூத்துக் குலுங்கியதை எல்லா முதலாளிகளும் பாராட்டியிருக்கின்றனர். சென்ற முறை பாராளுமன்றத் தேர்தலின் போது போட்டிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது சிரமம் என்ற பிரச்சினை வந்த போது போட்டியையே தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றி வெற்றிகரமாக நடத்திக்காட்டினார் மோடி. இனி வருங்காலத்தில் ஐ.பி.எல் போட்டியின் போதுதேர்தல் வந்தால் தேர்தலைத்தான் ஒத்திவைப்பார்கள் எனுமளவுக்கு ஐ.பி.எல் நிர்வாகம் தனி அரசையே நடத்திவருகிறது.

நேரடிப் போட்டிகளைக் காண பன்மடங்கு விலை உயர்த்தப்பட்ட மதிப்பிலான டிக்கெட்டுகள், திரையரங்கத்தில் பல மடங்கு கட்டணம் வாங்கிக் கொண்டு போட்டிகளைக் காண ஏற்பாடு, இணையத்தில் யூ டியூப் உதவியுடன் நேரடி ஒளிபரப்பு, மொபைல் ஃபோன்களில் ரீப்ள்ளே என்று தொழில்நுட்பத்தில் எல்லா சாத்தியங்களோடும் ஐ.பி.எல் தனது வர்த்தக்த்தை வேர்விடச்செய்திருக்கிறது.

அம்பானியும், இந்திய சிமெண்ட்ஸ் சீனிவாசனும், டெக்கான் குரோனிக்கிளின் ராமோஜி ராவும், விஐய் மல்லயாவும் இன்று மக்களின் ஆதரவு பெற்ற ஐ.பி.எல் அணி முதலாளிகளாகப் பரிணமித்திருக்கின்றனர் என்றால் அவர்கள அதற்கு லலித் மோடிக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த முதலாளிகளிடம் பணியாற்றும் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்தாலும் மக்களின் ஆதரவைப் பெறமுடியாத செல்வாக்கை இரசிகர்கள் இம்முதலாளிகளுக்கு கொடுக்க முடியும். மேலும் ஷாருக்கான், ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி, முதலான சினிமா முதலாளிகள் பினாமி வேடத்தில் அணி உரிமையாளர்களாக முன்னேற்றம் அடைந்திருப்பதற்கும் மோடியே காரணம். இதனால் மார்க்கெட்டை பெற்ற, இழந்த எல்லா நட்சத்திரங்களும் பினாமி முதலாளிகளின் முகவராக வலம் வருவர்.

இன்று ஐ.பி.எல்லின் வர்த்தக மதிப்பு பற்றி தினசரிகளில் புதிய புதிய கதைகள் நாளொருமேனி பொழுதொரு வண்ணம் வந்த படி இருக்கின்றன. இன்று ஒட்டு மொத்தமாக ஐ.பி.எல்லின் வர்த்தக மதிப்பு 20,000த்தில் தொடங்கி 50,000 கோடிகள் வரை இருக்குமென்று ஊகிக்கப்படுகிறது. 2008இல் சிலநூறு கோடிகளுக்கு எடுக்கப்பட்ட அணிகளின் மதிப்பு இன்று சில ஆயிரம் கோடி என்று உயர்ந்திருக்கிறது. மூன்று ஆண்டுகளாக தலா 60 போட்டிகள் என்று மொத்தம் 180 போட்டிகள் நடந்திருக்கின்றன. இந்த 180 ஆட்டங்களுக்கான வர்த்தக மதிப்பு பல ஆயிரம் கோடி என்பதை நம்பத்தான் முடியவில்லை. ஒன்றரை மாதமாக நடக்கும் ஐ.பி.எல் போட்டிகள் முதலாளிகளைப் பொறுத்தவரை ஆண்டு முழுவதும் பணத்தை அள்ளிக் கொடுக்கின்றன.

ஆளும்வர்க்கங்களின் ஆசியுடன்தான் ஐ.பி.எல் மோசடிகள்!

இன்று ஐ.பி.எல் மோசடிகளை இந்திய அரசு பயங்கரமாக புலனாய்வு செய்வதாக நடிக்கிறது. எட்டு அணிகளை வைத்தே இவ்வளவு கொள்ளையடிக்க முடியுமென்றால் இன்னும் எத்தனை அணிகளை சேர்க்க முடியுமோ அத்தனையும் கொள்ளை இலாபம்தான் என்பதை முதலாளிகள் உணராமலில்லை. இப்படித்தான் கொச்சி, புனே அணிகள் ஏலமிடப்பட்டு தலா 1,500 கோடிகளுக்கு விலை போயிருக்கின்றன. இனி ஆண்டுக்கு 90 பந்தயங்களாம்.

இதில் கொச்சி அணியை உருவாக்குவதற்கு துணைநின்ற முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் தனது தோழியான சுனந்த புஷ்காருக்கு 70கோடி மதிப்பிலானா பங்குகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கொச்சிக்குப் பதில் அகமதாபாத் அணி வென்றிருந்தால் லலித்மோடிக்கும் வேறு சில முதலாளிகளுக்கும் ஆதாயம் கிடைத்திருக்கும். அந்த ஆத்திரத்தில் ஐ.பி.எல் வளர்ச்சியினால் தன்னை அளவு மீறிய ஆண்டவனாகக் கருதிக் கொண்ட லலித்மோடி கொச்சி அணியின் பினாமி இரகசியங்களையும், சசிதரூரின் பங்கையும் வேண்டுமென்றே வெளியிட்டார்.

இத்தகைய இரகசியங்களை வெளியிடக்கூடாது என்பதுதான் ஐ.பி.எல்லின் சட்டதிட்டம். எனினும் முதலாளிகள் மக்களிடமிருந்து பெறும் இலாபத்தை சண்டை சச்சரவு இல்லாமல் எப்போதும் அமைதியாக பிரித்துக் கொள்வார்கள் என்பது எப்படி ஒரு மூடநம்பிக்கையோ அது போல இதுவும் ஏதோ ஒரு காரணத்தை வைத்து வெளிவந்தே தீரவேண்டும். இங்கே அது ஒரு அழகுக்கலை அலங்காரத் தொழிலைச் செய்யும் ஒரு சீமாட்டியை வைத்து வந்திருக்கிறது.

லலித் மோடியால் மந்திரி பதவியைத் துறக்கும் நிலைக்கு ஆளான சசிதரூர் பதிலுக்கு லலித் மோடி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கொண்டிருக்கும் பங்கு மற்றும் ஐ.பி.எல்லை வைத்து அவர் ஒரிரு வருடங்களில் சம்பாதித்திருக்கும் சில ஆயிரம் கோடிகளையும் பற்றி கசியவிட்டார். அப்புறம் ஏகப்பட்ட பூனைக்குட்டிகள் வெளிவரத்துவங்கின.

பி.சி.சி.ஐயில் இருக்கும் நிர்வாகிகள் எவரும் கிரிக்கெட்டை வைத்து வர்த்தக ஆதாயம் அடையக்கூடாது என்பது கூட ஐ.பி.எல்லுக்காக தளர்த்தப்பட்டது என்கிறார் ஸ்பிக் முத்தையா. அவரது தொழில் எதிரியான இந்தியா சிமிண்ட்ஸ் சீனிவாசன் பி.சி.சி.ஐயில் செயலாளராக இருக்கும்போதே சென்னை அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். மற்ற நிர்வாகிகளும் கூட பல பினாமிகளின் பெயரில் பல அணிகளின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கலாம்.

முதலாளிகளின் நேரடிப் பிரதிநிதியாக அரசியலில் இருப்பவர் சரத்பவார். முன்னாள் பி.சி.சி.ஐயின் தலைவராக இருந்து வேலை செய்த நேரம் போக உணவுத் துறை அமைச்சராக பொழுது போக்கியவர். மேற்கு மராட்டியத்தின் சர்க்கரை ஆலைகளை கட்டுப்படுத்தும்  பெருமுதலாளியான சரத்பவார் லலித்மோடியின் தீவிர ஆதரவாளராவார். சொல்லப்போனால் லலித்மோடி கூட ஓரவளவுக்கு சரத்பவாரின் பினாமி என்றால் மிகையில்லை. சரத்பவாரின் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல்பட்டேல் விமானத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இவரது மகள் பூர்ணா ஐ.பி.எல் நிர்வாகத்தின் விருந்தோம்பல் குழுவின் தலைவராம். இவரது செல்வாக்கில்தான் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டு கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாம்.

காங்கிரசைச் சேர்ந்த எம்.பியான சுக்லாவும், பா.ஜ.கவைச் சேர்ந்த அருண்ஜேட்லியும் பி.சி.சி.ஐ நிர்வாகிகளாகவும் இருக்கிறார்கள். லல்லு போன்ற சமூகநீதி அரசியல்வாதிகள் கூட மாநில அளவிலான கிரிக்கெட் சங்கங்களில் இருந்திருக்கிறார்கள். நாளைக்கு சசிகலாவும், அழகிரியும் கூட தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக இருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இப்போது வெளிவந்த மோசடிகளின் படி இந்தப் பகல் கொள்ளையில் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகமுதலாளிகள் எல்லோரும் சேர்ந்தே கூட்டணி வைத்து நடத்தியிருக்கின்றனர். மொரிஷியஸ் நாட்டிலிருந்து இந்தியாவில் முதலீடு செய்தால் வரி இல்லை என்பதை வைத்து எல்லா ஐ.பி.எல் அணிகளின் பினாதி முதலீடும் அந்த தீவிலிருந்துதான் வந்திருக்கின்றன. அந்தத்தீவுக்கு வந்த பணம் ஸ்விஸ் வங்கியிலிருந்து வந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து கருப்பு பணம் ஸ்விஸ் நாட்டுக்கு போயிருக்கிறது. இதன் அளவு ஐந்து இலட்சம் கோடிகள் என்பது ஏற்கனவே வெளிவந்த விசயம்.

மத்திய இந்தியாவில் பழங்குடி மக்களை ஒழிக்க மாவோயிஸ்ட்டுகளின் மீதான போர் தொடுத்திருக்கும் இந்திய அரசின் அமைச்சர்கள் இந்தப் பிரச்சினைக்கு அடுத்தபடியாக இப்போதைக்கு கவலைப்படும் விசயம் ஐ.பி.எல் மோசடிகள். அதுவும் எப்படியோ கசிந்துவிட்ட இந்த ஊழலை இதற்கு மேல் முட்டு கொடுத்து நிறுத்தவதற்கு பிரதமர், ப.சிதம்ரம், பிரணாப் முகர்ஜி, சோனியா எல்லோரும் அல்லும் பகலும் தனியாகவும், சந்தித்தும் வேலை செய்கிறார்கள். மக்களை தற்காலிகமாக ஏமாற்றுவதற்காக வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் ஐ.பி.எல் முதலாளிகளின் அலுவலகங்களை சோதிப்பதாக சீன் போடுகிறார்கள்.

சசிதரூர் கூட தனது வாய்க்கொழுப்பினாலும், வெட்டி பந்தாவினாலும்தான் அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். இந்த மோசடி ஆட்டத்தில் வெளியே தெரியாமல் பணிவாக ஆடவேண்டும் என்ற விதியை அவர் மீறியதால்தான் இந்தப்பதவி இழப்பு. அதே போல இப்போது லலித் மோடி மீது அவருக்கு போட்டியான முதலாளிகள், அரசியல்வாதிகள் குழுவிலிருந்து நிர்ப்பந்தம் வந்திருப்பதால் அவரையும் நீக்கியிருக்கிறார்கள். எனினும் இவ்வளவு அப்பட்டமான ஊழல் மோசடி நாயகனைக் கூட அம்பானி, விஜய் மல்லையா, சரத்பவார் போன்றவர்கள் ஆதரித்தார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஊடகங்கள் கூட இந்த மோசடிகளை ஒரு பரபரப்பிற்காக வேறு ஒரு பகைமை காரணமாகவும் வெளியிடுகின்றன. முக்கியமாக இந்த ஆண்டு ஊடகங்கள் செய்தி நேரத்தில் ஐ.பி.எல்லின் பந்தயங்களை நேரடியாக காட்டக்கூடாது, சமீபத்திய பதிவையும் காட்டக்கூடாது என்ற விதிகள் ஊடக முதலாளிகளுக்கு கடுப்பேற்றியிருக்கலாம். லலித்மோடியை அம்பலப்படுத்துவதன் மூலம் எதிர்கால நிர்வாகத்திற்கு தோழமையுடன் தெரிவிக்கக்கூடிய விமரிசனமாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

இனி புதிய நிர்வாகிகளின் கீழ் ஐ.பி.எல் நிர்வாகம் மாற்றியமைக்கப்படும் என்கிறார்கள். இதன்படி கொள்ளைப் பணத்தை எல்லா முதலாளிகளும் சரிசமமாக பிரித்துக் கொண்டு லலித்மோடி போட்ட ராஜபாட்டையில் அதே போலத்தான் பயணிக்கும். லலித் மோடி போனாலும் அவரது மோடியிசம் என்ற அமைப்பு முறையை இவர்கள் தகர்க்கப் போவதில்லை. இப்போது வெளிநாட்டு வீரர்களுக்கு அளிக்கப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்குத் தெரியாமலே சென்றிருக்கிறது என்ற தொழில்நுட்பமெல்லாம் புதிய நுட்பங்களால் நிரப்பப்படும். சுவிஸ் வங்கியில் இருக்கும் கருப்புப் பணம் மொரிஷியஸ் வழியாக இந்தியா வரும் இரகசிய வழித்தடங்கள் இப்போது போல வெளிப்படையாக தெரியாத வண்ணம் மறைக்கப்படும். மற்றபடி இரசிகனுக்கு தேவை  சிக்ஸரும், விக்கெட்டும் மட்டும்தான் என்பதால் இவையெல்லாம் முதலாளிகளுக்கு ஒரு பொருட்டே இல்லை.

ஐ.பி.எல் மோசடியில் இரசிகனின் பங்கு!

முதலாளித்துவ புரட்சி நிலைநிற்பதற்கு முந்தைய சமூகங்களில் விளையாட்டு என்பது சமூகம் தழுவியதாக இருந்தது. இன்றிருப்பது போல தனித்திறமைகளை வெளிப்படுத்தும் சூப்பர்மேன் வீரர்கள் அன்றில்லை. போட்டிகளும் மக்கள் எல்லாரும் கலந்து கொள்ளுமளவு அனைவரின் வாழ்விலும் விளையாட்டு என்பது இரண்டறக் கலந்திருந்தது. முக்கியமாக அவர்களது வாழ்க்கைத் தேவைகளுக்கான உழைப்பில்தான் அந்த விளையாட்டுகள் தோன்றி வளர்ந்தன.

இன்று அறிவியல் தொழில்நுட்ப புரட்சியின் காலத்தில் தனது உடலின் அதீத திறமைகளை காட்டும் சூப்பர் வீரர்கள் தோன்றி விட்டார்கள். நூறு மீட்டரை ஒன்பதே முக்கால் விநாடிகளில் கடந்து விட்ட சாதனை எதிர்காலத்தில் ஒன்பது, எட்டு, ஏழு என்று கூட வரலாம். ஆனால் உலகின் எந்த மூலையில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பில் காணும் வசதியைக் கண்டிருக்கும் இக்காலத்தில், அந்த அளவுக்கு விளையாட்டு என்பது சமூகமயமாவதற்குப் பதில் மக்களின் வாழ்விலிருந்து அன்னியப்பட்டுக் கொண்டிருக்கிறது.

போட்டிகளை உட்கார்ந்தபடி பார்த்து இரசிக்கும் அளவுக்கு பொருத்தமாக நடை, உடலுழைப்பு எல்லாம் இல்லாமல் ஆகிக் கொண்டிருக்கிறது. இப்படி தமது வாழ்வில் இல்லாத உடல் அசைவுகளின் நேர்த்தியான ஆட்டத்தை பார்க்கும் இரசனையை என்னவென்று சொல்வது?

இந்த உலகிலேயே சிக்கலான ஆட்ட விதிகள், நுணுக்கம் ஏதுமில்லாமல் இரசிக்கப்படும் விளையாட்டும் கிரிக்கெட்தான்.  ஸ்டெம்பு விழுந்தால் அவுட், பந்து பிடித்தால் கேட்ச், எல்லைக் கோட்டை உருண்டு தாண்டினால் நான்கு, பறந்து தாண்டினால் ஆறு என்பதை அறிந்து கொண்டாலே கிரிக்கெட் தெரிந்தமாதிரிதான் .

ஐந்து நாட்கள் போட்டியினை பொறுமையாக அசைபோடும் பெரிசுகள் ஒருநாள் போட்டி வந்தபோது மிரண்டு போனார்கள். இருபது ஓவர் போட்டி வந்தபோது புலம்பத் துவங்கினார்கள். ஆனாலும் கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் முன்பை விட பெரிதாகிக் கொண்டே வந்திருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் அறிவியல்-தொழில்நுட்ப புரட்சியும், வர்த்தக நோக்கமும் இணைந்து உருவாக்கிய பெரும் சந்தையே. கிரிக்கெட் ஒரு அமுதசுரபி என்று முதலாளிகள் புரிந்து கொண்ட பிறகு அது வெறும் விளையாட்டு என்பதை என்றோ இழந்துவிட்டது.

இன்றைக்கு மைதானத்தில் பார்க்கும் ஆட்டத்தை விட சின்னத்திரையில் பார்ப்பது என்பது விளையாட்டின் இந்திய தேசிய உணர்ச்சியாகி விட்டது. கிரிக்கெட் ஒளிபரப்பும் ஹாலிவுட் படங்களின் நேர்த்தியை விஞ்சும் வண்ணம் வளர்ந்து வருகிறது. கோக்கைக் குடித்தவாறும், லேயிஸ் சிப்ஸை கொறித்தவாறும் பார்ப்பதற்கு பொருத்தமான விளையாட்டு கிரிக்கெட் மட்டுமே என்பது இரசிகர்களின் அங்கீகாரத்தைப் பெற்று நாளாகி விட்டது. இவ்வளவு நாள் இந்திய அணியின் வெற்றிக்காக பதட்டப்பட்ட இரசிகர்கள் ஒரு மாறுதலுக்காக மாநில அணிகளுக்காக டென்ஷனாகிறார்கள்.

ஐந்து நாள், ஒரு நாள் போட்டிகளை அசைபோட்ட நேரத்தை விட இந்த குறுகிய காலப்போட்டிகள் அசைபோடப்பட்ட நேரம் அதிகம்தான். இந்த ஒன்றரை மாதமாக நாட்டின் பேசுபொருளாக ஐ.பி.எல் மட்டுமே நிகழ்ச்சி நிரலை தயாரித்திருந்தது. விளையாட்டிலிருந்து ஆட்டம், பாட்டம், இசை, ஆடை அணிவகுப்பு, குடி விருந்து, என்று எல்லா வகையிலும் அவை தொடர்ந்தது. பதிவுலகிலும் ஐ.பி.எல்லுக்காக வரையப்பட்ட இடுகைகள் எத்தனை எத்தனை?

ஏற்கனவே மதமாச்சரியங்களுக்குள் ஆழ்த்தப்ப்ட்ட இந்திய சமூகத்தின் நவீன மதமாக கிரிக்கெட் நிலை பெற்றுவிட்டது. கிரிக்கெட்டின் சமூக பொழுது போக்கு நேரங்களில் ஆழ்ந்திருக்கும் ஒரு இரசிகன் பலவற்றையும் இழக்கிறான் என்பதை அறியமாட்டான். முதலாளிகள் எதை விரும்புகிறார்களோ அதற்கேற்படி தான் உசுப்பிவிடப்படும் ஒரு உணர்ச்சிகரமான விலங்கு என்பது அவனுக்குத் தெரியாது.

பெப்சி, கோக் போன்ற முதலாளிகள் நினைத்தால் அவன் இந்திய வெறியையும், பால்தாக்கரே போன்ற இனவெறியர்கள் நினைத்தால் அவன் பாக் எதிர்ப்பு வெறியனாகவும், ஐ.பி.எல் முதலாளிகள் நினைத்தால் அவன் தேசிய இனவெறியனாகவும் மாறிவிடுவான். இந்திய அணிக்காக அவனால் பாரட்டப்பட்ட வீரர்கள் இன்று எதிர் ஐ.பி.எல் அணியில் இருந்தால் வெறுக்கப்படுவார்கள். வெளிநாட்டு வீரர்களை இந்திய அணியின் எதிரிகளாக நினைத்துப் பழக்கப்பட்டவன் இன்று அவர்களை வேட்டி கட்டிய தமிழனாகக்கூட அங்கீகரிக்கத் தயங்குவதில்லை.

முதல் ஆண்டு போட்டியில் பாக் வீரர்களை ஆரவாரத்துடன் ஏற்றவன் பின்பு லலித்மோடியின் சதியால் பாக் வீர்ர்கள் சேர்க்கப்படவில்லை என்பதையும் ஏற்றிருக்கிறான். இப்படி விற்பனைக்கேற்ற உணர்ச்சியை மாற்றி மாற்றி தரித்துக் கொள்வதில் அவனுக்கு வெட்கம் ஏதுமில்லை. அவனுக்குத் தேவை நான்கும், ஆறும்தான்.

வாடகைக்கு வீடு கிடைக்காமல் புறநகருக்கும் புறத்தே மக்கள் ஓடிக்கொண்டிருக்கும் சென்னை நகரில் மூட்டை சிமிண்டை நானூறு ரூபாய்க்கு கொள்ளை விலையில் விற்பனை செய்யும் இந்தியா சிமிண்ட்ஸ் நிறுவனம் சென்னை அணியின் உரிமையாளராக இருப்பதால் அவன் அவர்களை மன்னிக்கவும் செய்கிறான். பேருந்து நிலையத்தில் கருப்பு வெள்ளை போர்டு பேருந்து வந்தால் ஓரிரு ரூபாய்களை மிச்சப்படுத்தலாம் என்று பொறுமையாக காத்திருக்கும் அவன், சென்னை அணியின் இன்றைய மதிப்பு மூவாயிரம் கோடி என்பதை அறியமாட்டான்.

விதர்பாவில் சில ஆயிரம் ரூபாய் கடனுக்காக கொத்துக் கொத்தாய் தற்கொலை செய்திருக்கும் விவசாயிகளின் மண்ணில் புனே அணி 1500 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது என்பதும், ஒரிரு ஆண்டுகளில் அந்த அணியின் முதலாளி அதைப் போல பலமடங்கு சுருட்டப்போகிறார் என்பதையும் அவன் அறிய மாட்டான். உலகப் பணக்காரர்களின் வரிசையில் அணிவகுக்கும் முகேஷ் அம்பானி, மும்பை இந்தியன் அணிக்குச் சொந்தக்காரர்தான், தொழில் மோசடியில் நம்பர் ஒன் முதலாளி என்பது அவனுக்குத் தெரியாது.

ரப்பர் இறக்குமதியால் பால்வெட்டும் தொழிலாளிகள் பட்டினி கிடக்க, பாமாயில் இறக்குமதியால் தென்னை விவசாயிகள் காய்ந்து கிடக்க, தொழிலாளிகள் வரத்து இல்லாத்தால் கிராமப் புற டூரிங் தியேட்டர்கள் மூடப்படும் கேரள மண்ணில்தான் 1500 கோடிக்கு கொச்சி அணி வாங்கப்பட்டிருக்கிறது. ஐ.பி.எல் போட்டிகளில் ஒரு கேரள அணி இடம்பெற்றிருப்பதே அவனுக்கு கிடைத்திருக்கும் ஜன்மசாபல்யம்.

ஐ.பி.எல்லின் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பு என்பது அவனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து அவனுக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பணம்தான் என்பது அவனுக்குத் தெரியாது.

ஃபோரும் சிக்ஸரும் மட்டுமே எண்களில்லை. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் 32 கோடி மக்களும், ஊட்டச்சத்து இல்லாமல் சாகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் இந்தியாவும், ஒரு ரூபாய் அரிசிக்காக ரேஷன் கடை செல்லும் ஒரு கோடி தமிழகக் குடும்பங்களும், பன்னாட்டு நிறுவனங்களின் வேட்டைக்காக துரத்தப்படும் மத்திய இந்தியாவின் பல்லாயிரம் பழங்குடி மக்களும், அவர்களுக்காக தங்களது உயிர்களை அன்றாடம் பலிகொடுக்கும் மாவோயிஸ்ட்டுகளும் கூட எண்களாகத்தான் செய்திகளில் பதிக்கப்படுகிறார்கள்.

ஆயினும் இந்த அழுக்கான இந்திய எண்களை விட ஐ.பி.எல்லின் அலங்காரமான ஃபோரும். சிக்ஸரும் உங்களுக்கு முக்கியமாகத் தெரிகிறது என்றால், ஐ.பி.எல் மோசடிகளின் ஊற்று மூலம் உங்கள் பலத்தில்தான்.

இப்போது ஐ.பி.எல் முடிந்துவிட்டது. அடுத்து உலகக்கோப்பை ட்வெண்டி 20 போட்டி, சாம்பியன்ஸ் லீக், ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி என்று அடுத்த திருவிழாக்கள் வரப்போகின்றன. இரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சிரிப்பாச் சிரிக்கிது சி.பி.எம் வேலை நிறுத்தம் !!

vote-012இந்தியாவில் நிலவி வரும் கடுமையான விலைவாசியை எதிர்த்து நாளை, ஏப்ரல் 27ம் தேதி ஒரு நாள் பந்த் நடத்தப்போவதாக போலிக் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அறைகூவல் விடுத்தன. தொழிலாளர் கோரிக்கைகள் தொடர்பான வேலை நிறுத்த அறிவிப்புகள் வரும்போது கோடநாடு எஸ்டேட் சென்று ஓய்வெடுக்கும் ஜெயா திடீரென இந்த வேலைநிறுத்த அறிவிப்பின் மேல் கரிசனம் கொண்டு இடது, வலது, மதிமுக போன்ற கட்சிகளை போயஸ் தோட்டத்திற்கு அழைத்து, அவர்களும் அம்மாவிடம் மரியாதையாக நுனி சேரில் அமர்ந்து கொண்டு இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது என முடிவு செய்ததாக நாளிதழ்களில் செய்தி பார்த்தோம்.

பொதுவாக இது போன்ற வேலைநிறுத்தங்கள் ஒவ்வொரு ஆண்டும் சம்பிரதாயமாக மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை எதிர்த்து, தனியார்மய நடவடிக்கையை எதிர்த்து, காப்பீடு மற்றும் பொதுத்துறை பங்கு விற்பனையை எதிர்த்து என அறைகூவல் விடப்பட்டு, சி.பி.எம், சி.பி.ஐ கட்சிகளின் தோழர்கள் அன்றைய தினம் ஒரு மறியல் என்பதையும் கூடுதலாக அறிவித்து, காலையிலேயே அரசுப்பேருந்துகள் மூலம் பாதுகாப்பாக திருமண மண்டபங்களில் கைது என்ற பெயரில் வைக்கப்பட்டு மாலை டீ பிஸ்கட்டுடன் விடுதலையாவார்கள்.

எந்த நிறுவனங்களின் மேல், எந்த அரசின் மேல் தொழிலாளர் வர்க்கத்திற்கு வருகிற நியாயமான கோபத்தை, வன்முறை நோக்கி சென்றுவிடாமல் பாதுகாத்து ஒரு நாள் சம்பள இழப்புடன் அத்தகைய போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்படும். இதில் பிரதான பங்கு வகிப்பது முறைப்படுத்தப்பட்ட அப்பாவி போக்குவரத்துத் தொழிலாளர்களாக இருப்பார்கள். அவர்களின் செயலை சிறிதளவு முடக்கினால்தான் வேலை நிறுத்தம் வெற்றி என மறுநாள் அறிக்கை விட முடியும்.

ஆனால் சமீப காலங்களில் போக்குவரத்துக் கழகங்களில் பெருகிவிட்ட தொழிற்சங்க எண்ணிக்கையினால் அந்த தொழிலாளியின் பெரும்பகுதியினர் இது போன்ற வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை. மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கிளை மட்டத் தலைவர்கள் இது போன்ற வேலைநிறுத்தங்களில் முன்னணியில் இருப்பதாக செய்தி ஊடகங்களுக்கு போஸ் கொடுத்துவிட்டு, மாலை 6 மணிக்கு மேல் பேருந்து பணிக்கு சென்று அன்றைய தினத்திற்கு வருகைப் பதிவை பெற்றுவிடுவார்கள். ஸ்டைரைக்கிலும் கலந்த மாதிரி ஆச்சு, வேலைக்கும் போன மாதிரி ஆச்சு!

இத்தகையப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் அரசு ஊழியர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தோடு முடித்துக்கொண்டு டி.வி பார்க்க சென்றுவிடுவார்கள். மாநில ஆளும்கட்சி சார்பு ஓட்டுனர்கள், நடத்துனர்கள் அன்றைய தினம் பேருந்துகளில் இரட்டிப்பு பணி பார்த்துவிடுவார்கள். அடுத்தநாள் ஆப்சென்ட் கணக்கு பார்த்தால் 1.5 லட்சம் போக்குவரத்துத் தொழிலாளர்களில் 14,340 பேர் ஆப்சென்ட் என கணக்கு வரும். அது அந்த மாத சம்பளத்திற்கு கணக்கு முடிக்கும் போது பார்த்தால் 8000 மாக குறைந்திருக்கும்.

பலர் முதல் நாள் டபுள் டியூட்டி வண்டிக்கு போய்வந்தேன் எனவே எனக்கு டியூட்டி ரெஸட், சிலர் நான் அவசர வேலையாக சென்றேன் என விடுப்பு மனு அனுமதி வாங்கி மொத்தத்தில் அப்பாவியாகிய 8000 பேருக்கு சம்பள இழப்பு ஏற்பட்டிருக்கும். இதையும் அம்மா ஆட்சி வந்தால் அய்யா காலத்து ஆப்சென்ட்களுக்கு சம்பளம் தரப்படும், அய்யா ஆட்சி வந்தால் அம்மா காலத்து ஆப்சென்ட்களை லீவாக மாற்றி சம்பளம் தரப்படும். சேது சமுத்திர ஆப்சென்ட் (அய்யா உண்ணாவிரதம் இருந்தது) மட்டும் இன்னும் உச்சநீதிமன்றத்தில் அம்மா தொடர்ந்த வழக்கு நிலுவையிருப்பதால் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.

தற்போது அரசு ஊழியர்களின் 6 வது ஊதியக் குழு சம்பளம் அமுல் படுத்தப்பட்டு, அது போக்குவரத்துக் கழக அதிகாரிகள், மற்றும் கண்காணிப்பு பொறியாளர்களுக்கு மட்டும் அமுல்படுத்தப்பட்டு, மற்ற ஒன்றேகால் லட்சம் தொழிலாளர்களின் சம்பளத்தை ஒப்பிடுகையில் அது 27 சங்கங்கள் போடும் ஒப்பந்த வரம்பில் உள்ளதால் தொழிலாளர்கள் விரக்தியில் உள்ளனர்.

இந்த பின்னணியில் தற்போது அறிவிக்கப்பட்ட 27ம் தேதி வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்கங்களின் முடிவுகளைப் பார்ப்போம்.  சி.பி.எம் தொழிற்சங்கத்திற்கு போக்குவரத்தில் முதன்மையாக சென்னை, மதுரை, மற்றும் கோவையில் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இது போன்ற வேலைநிறுத்த அறைகூவல் வந்தவுடன் தடபுடலாக மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு பறக்கும். அந்த கூட்டத்தில் பங்கு பெறும் சி.பி.எம் ஆதரவு வங்கி, போக்குவரத்து, அரசு ஊழியர், கூட்டுறவு, ஆவின், சிவில் சப்ளை போன்றவர்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என்பார்கள்.

ஐ.என்.டி.யு.சி, எச்.எம்.எஸ் போன்ற சங்கங்கள் தங்கள் பேரவையை கேட்டுவிட்டு முடிவு சொல்கிறோம் என கலைந்து செல்வார்கள். கடைசிவரை முடிவு சொல்ல மாட்டார்கள். இந்நிலையில் 17ம் தேதி மதுரையில் சி.ஐ.டி.யு மாநில தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.கே.பத்மநாபன் தலைமையில் மதுரையில் கூடிய அவர்கள் சார்பு தொழிற்சங்கத்தினர் (பாசிச ஜெயா காலத்து ஒரு லட்சம் பேர் டிஸ்மிஸ்-ஐ மனதில் வைத்துக்கொண்டு), “15 நாள் வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்க அவகாசம் இல்லை. மேலும் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி அன்று உள்ளது. எனவே அன்றைய தினம் அவரவர் ஆலைவாயிலில் ஒரு ஆர்ப்பாட்டம் செய்து முடித்துக்கொள்ளலாம்” என முடிவு செய்தனர். இப்படி கள்ளழகர் ஆத்துல இறங்குவதை வைத்து தோழர்கள் வேலைநிறுத்தத்திற்கு தண்ணி தெளித்துவிட்டனர்.

மற்றுமொரு சுவையான சம்பவம் என்னவெனில் சி.பி.எம் தலைமை ஜெயாவுடன் அவ்வப்போது உறவாட தயாரானாலும் அதன் தொழிலாளர் அணியினர் இன்னும் பழையவற்றை மறப்பதாக இல்லை. எனவே உள் அரங்க கூட்டங்களில் கொதிக்கின்றனர்.  இந்நிலையில் “மதுரையில் மட்டும் வேலை நிறுத்தம் இல்லை மற்ற மாவட்டங்கள் வேலைநிறுத்தம் செய்யுங்கள்” என்றால் போக்குவரத்துத் தொழிலாளிகள் ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.

எனவே அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சங்க பொறுப்பாளர் என்ற பதவியுடன் சி.பி.எம்-லும் பொறுப்பில் இருப்பவர்கள் “மாஸ் கேசுவல் லீவு” என்று முடிவு எடுத்திருக்கிறார்களாம். இதுதான் இந்தியாவையே முடக்கிப் போடும் சி.பி.எம்மின் பாரத் பந்தாம். ஒரு நாள் காலை 6 முதல் மாலை 6 வரை சம்பிரதாய வேலைநிறுத்தம் என்பதே பம்மாத்து வேலை. அதையும் மதுரை அழகர் பெயர் சொல்லி கேலிக்கூத்து ஆக்கிவிட்டார்கள் நமது போலி கம்யுனிஸ்ட்டுகள்.

தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து சங்கத்திலேயே சி.பி.எம் கட்சி இப்படி தில்லாலங்கடி வேலை செய்து வேலை நிறுத்தம் செய்வது போல நடிக்கிறது என்றால் இந்தியா முழுவதும் இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்? இன்னுமா இந்த ஊரு இவுகளை கம்யூனிஸ்ட்டுன்னு கூப்பிடுது?

________________________________________________

-சித்திரகுப்தன்

vote-012

தொடர்புடைய பதிவுகள்: