Wednesday, August 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 824

ஈழத்தமிழர் ரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பிப் போ! படங்கள்! வீடியோ!

tamilnadu1

முல்லைத் தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு எங்கும் சுடுகாட்டு ஓலம் கேட்கும் சமயத்தில் சென்னை வந்த சோனியா, மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக வெட்கமின்றி புளுகியிருக்கிறார். போரினால் அல்லல்படும் தமிழ் மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களது புனர்வாழ்விற்கு தேவையான உதவிகளை காங்கிரசு கூட்டணி அரசு செய்வதாகவும் பெருமையடித்தார்.

கருணாநிதியின் கவலையோ ஜெயலலிதா ஈழம் குறித்து பேசுவதால் அவரும் பேச வேண்டியிருக்கிறது என்பதைத் தாண்டி தேர்தலில் தொகுதிகளை வெல்வதைத் தவிர வேறு இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய குலக்கொழுந்து ராகுல்காந்தி அ.தி.மு.கவை பாராட்டியதால் சினமைடைந்த கருணாநிதியை சமாதானப்படுத்துவதற்காக டெல்லியிலிருந்து தனி விமானத்தில் வந்திறங்கிய கல்லுளி மங்கன் மன்மோகன் சிங், பத்திரிகையாளர் சந்திப்பில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மத்திய அரசு ஈழப்பிரச்சினையில் அக்கறை கொண்டிருப்பதாக அருளினார். நல்ல அக்கறை!

சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொடுத்து, அதிகாரிகளை அனுப்பியும் அக்கறை கொண்டிருக்கும் காங்கிரசு பெருச்சாளிகள் என்ன திமிரிருந்தால் தங்களால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக பேசுவார்கள்? போரை நிறுத்தவில்லை என அன்றாடம் எக்காளமிட்டு வரும் ராஜபக்க்ஷே அரசு இறுதி யுத்தம் என்ற பெயரில் பாதுகாப்பு வலையப் பகுதியில் மிச்சமிருக்கும் மக்களை கூண்டோடு அழித்து வருகிறது. இந்த கொலை பாதகச் செயலுக்கு இந்திய அரசு உதவுவதை நன்றியோடு வெளிப்படையாகவே இலங்கை அரசு அடிக்கடி கூறிவருகிறது.

செருப்பை வீசினால் படக்கூடாது என்பதற்காக பாதுகாப்பான தூரத்தில் இருந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் மன்மோகன் சிங், பயங்கரவாதிகள் தாக்குவது இருக்கட்டும், தன்னை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி கூட பறப்பதை அனுமதிக்க முடியாது என விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக வந்திறங்கும் சோனியா இருவர் மீதும் சிறு துரும்புகூட படக்கூடாது என்பதற்காக எவ்வளவு கோடிகள் செலவு, எத்தனை போலீசார் பாதுகாப்பு?

ஆனால் கேட்பார் கேள்வியின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்படும் ஈழதமிழ் மக்களின் பிணங்கள் எவ்வளவு என்பது கூட எண்ண முடியாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை நாடகங்கள்? ஈழத்தை பிணக்காடாக மாற்றும் இலங்கை அரசின் செயலுக்கு பால் வார்க்கும் காங்கிரசு அரசு, காங்கிரசு அரசுக்கு வக்காலத்து வாங்கும் கருணாநிதி அரசு, மத்தியில் பொறுக்கித் தின்பதற்காக தொகுதிகளை வெல்லவேண்டுமென்றால் கருணாநிதியை வீழ்த்த வேண்டுமென்பதற்காக ஈழத்தை வலிந்து பேசும் ஜெயலலிதா….இவர்கள் கையில் ஈழம்தான் என்ன பாடுபடுகிறது.

சென்னை விமான நிலையத்தில் இறங்கிய சோனியா அப்படியே ஹெலிகாப்டரில் பறந்து தீவுத்திடலில் இறங்கி ஒரு இருபது நிமிடம் பேசிவிட்டு, போஸ் கொடுத்து விட்டு, கையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டார். ஈழத்தமிழரின் இரத்தம் குடிக்கும் சோனியாவை தியாகத்தின் திருவிளக்கு என்றார் கருணாநிதி. அன்னை சோனியா வாழ்க என்று முழங்கிய திருமாவளவன் கைகளை மேலே கூப்பி எப்படியாவது ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று தொழுதார். தீவுத் திடலையே இராணுவக் கோட்டை போல முற்றுகையிட்ட போலீசின் பாதுகாப்பிற்குள் கூட்டிவரப்பட்ட கூட்டம் வேடிக்கை பார்க்க காங்-தி.மு.கவின் தேர்தல் கூட்டம் ஒருவழியாக முடிந்தது.

சோனியா சென்னையில் இருந்த நேரம் அவரை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ம.க.இ.கவுன் அதன் தோழமை அமைப்புக்களும் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையின் முன்பு இரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பி போ என்ற முழக்கத்துடன் எழுச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தின. பின்னர் பெண்கள், குழந்தைகள், பார்வையற்றவர்கள் தவிர 77 தோழர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் வராதபடி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின் பழ.நெடுமாறன், பாரதிராஜா தலைமையில் தமிழார்வலர்கள், திரைப்படத்துறையினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்களில் 109பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மெமோரியல் ஹால் அருகே தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பெண்கள் குழுவினர் முப்பது பேர் ஆர்ப்பாட்டம் செய்ததால் கைது செய்யப்பட்டனர்.

ம.க.இ.கவின் ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளியை இங்கே வெளியிடுகிறோம்.

[flashvideo file=”https://www.vinavu.com/wp-content/files/arpattam.flv /]

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


ஈழப் ‘போர் நிறுத்தம்’: காங்கிரசு – தி.மு.க கம்பெனியின் கபட நாடகம்!

கருணாநிதி முதலைக் கண்ணீர்

ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு  தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன்  எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து போர் நிறுத்தத்தை வலியுறுத்திவிட்டு வந்துள்ளதாக ஏய்த்த பின்னரும்கூட, போர் நிறுத்தம் நிகழவில்லை. இதோ, இன்னும் இரண்டே நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதி கூறிய கெடு முடிந்த பின்னரும், ஈழத் தமிழின அழிப்புப் போர் நிறுத்தப்படவில்லை. இதனால், தமிழக மக்களின் வெறுப்பும் ஆத்திரமும் அதிகரிக்கும் முன்னே அதைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு, “இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சாகும் வரை உண்ணாவிரதம்” எனும் சூப்பர் நாடகத்தை கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அதிகாலைக் காட்சியாக அரங்கேற்றினார், இந்த ‘தமிழின’த் தலைவர்.

இதற்குக் கதை, வசனம், நடிப்பு, இயக்கம்  அனைத்துமே அவர்தான். கதாநாயகனும் அவர்தான். கதாநாயகிகள் இருவர். அவர்கள் கருணாநிதியின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் அமர்ந்து கொள்ள, அந்தச் சோகக் காட்சிக்காக ஆஸ்கார் பரிசு அளிக்காததுதான் பாக்கி. இந்த நாடகம் ஃபாஸ்ட் ஃபுட் உணவைப் போல, காலை 6 மணிக்குத் தொடங்கி பகல் 12 மணிக்குள் வெகு விரைவாக முடிந்து விட்டது. மற்ற ஓட்டுக் கட்சிகளெல்லாம் காலை உணவை முடித்துக் கொண்டு பகல் உணவை மட்டும் தவிர்க்கும் பழைய பாணி உண்ணாவிரத நாடகத்துக்குப் பதிலாக, அதிகாலையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கி பகல் சாப்பாட்டுக்கு முன்னரே உண்ணாவிரதத்தை முடித்து, புதுமைப்பாணியில் அவர் இந்த நாடகத்தை நடத்தியுள்ளார்.

உண்ணாவிரதம் தொடங்கிய அடுத்த சில மணி நேரத்தில், “எனக்கு தொலைபேசி செய்தி வந்துள்ளது” என்று அவரே ஒரு அறிக்கை வாசித்து விட்டு, ‘ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி அவரே உண்ணாவிரத நாடகத்தை முடித்துக் கொள்கிறார். இந்த நாடகத்தின் துணை வசனகர்த்தாவான ப.சிதம்பரம், மைய அரசின் கோரிக்கையை ஏற்று ராஜபக்சே போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார் என்று பின்பாட்டுப் பாடுகிறார். “கலைஞரின் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி! போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அறிவிப்பு!” என்று சன் டி.வி.யும் பிற ஊடகங்களும் பரபரப்பூட்டின. மாலையில் “இலங்கையைப் பணிய வைத்த கலைஞரின் உண்ணாவிரதம்” என்று கொட்டை எழுத்துக்களில் நாளேடுகளில் செய்திகள் வெளியாகின.

ஆட்சியதிகாரத்திலிருக்கும் கருணாநிதியின் அரைநாள் பட்டினிக்கே, இலங்கை அரசு அஞ்சி நடுங்கி போர் நிறுத்தத்தை அறிவிக்கிறதென்றால், அவ்வளவு வலிமை கொண்ட அவர் இதை ஏன் முன்னரே செய்யவில்லை? ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் செத்து மடிந்த பின் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? ஈழத் தமிழர்களின் கொலைகளைத் தடுத்து நிறுத்துமளவுக்கு அதிகாரம் கொண்ட அவர் இத்தனை காலமும் முடங்கிக் கிடந்தது ஏன்? தியாகி முத்துக்குமார் தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் போர் நிறுத்தம் கோரி தொடர்ந்து போராடி வந்த நிலையில் அவர்களுடைய போராட்ட உணர்வுகள் மீதும் தியாகங்கள் மீதும் மலத்தில் தோய்த்தெடுத்த செருப்பால் அடித்தது போல் அமைந்திருக்கிறது, கலைஞரின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்த அறிவிப்பு என்ற மோசடி.

போர் நிறுத்தமுமில்லை; புண்ணாக்குமில்லை என்று அடுத்த நாளே அறிவித்து விட்டது இலங்கை அரசு. “பயங்கரவாதப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் எந்தவிதத் தற்காலிக இடைநிறுத்தமும் இல்லை. போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசும் ஊடகங்களும் கூறுவது தவறான தகவல்” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது, இலங்கை இராணுவ அமைச்சகம். விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இந்தியா மற்றும் உலக நாடுகளின் நிர்பந்தங்கள் காரணமாக இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது என ஊடகங்கள் திரிக்கப்பட்ட தவறான செய்தியை வெளியிட்டுள்ளன என்று இராணுவ அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் தர்க்க ரீதியாக அவற்றின் இறுதி முடிவை எட்டியுள்ளதாக இலங்கை அரசு கருதுகிறது. பொது மக்களுக்குப் பாதிப்பையும் உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்துவதையும் வான்வழித் தாக்குதல் நடத்துவதையும் முடிவுக்குக் கொண்டு வருமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள தமிழ் மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இது போர் நிறுத்தப் பகுதியில் ஏற்கெனவே நிலவி வரும் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய கொள்கையின் தொடர்ச்சியே தவிர, போர் நிறுத்தம் அல்ல. புலிகளைத் தாக்கி அழிக்கும் போர் நடவடிக்கையில் தமிழ் மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படாமல், பொதுமக்களின் பாதுகாப்பு விசயத்தில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு இராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெற்றியை நெருங்கி விட்டதாக இராணுவ அமைச்சகம் கருதுகிறது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் தான் போர் நிறுத்தம் எதையும் அறிவிக்கவில்லை என்கிறார்.

இருப்பினும், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழனை இளிச்சவாயனாகக் கருதிக் கொண்டு காதில் பூ சுற்றுகிறார் கருணாநிதி. இலங்கை இராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைக்கு புதிய விளக்கமும் பொழிப்புரையும் எழுதுகிறார் ப.சிதம்பரம். போர் நடவடிக்கைகள் அதன் இறுதி முடிவை எட்டியுள்ளன என்ற இலங்கை அரசின் கூற்றுக்கு, இதன் பொருள் போர் நடவடிக்கைகள் தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்று அயோக்கியத்தனமாக விளக்கமளிக்கிறார் அவர். கனரக ஆயுதங்களுடன் தாக்குதல் இருக்காது  பீரங்கித் தாக்குதலுக்குப் பதிலாக துப்பாக்கிச் சூடும் எறிகணைத் தாக்குதலும் தொடரும்  என்று இலங்கை இராணுவ அமைச்சகம் குறிப்பிடுவதை தொடரும் போர்த் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து விட்டதாக இந்திய அரசு பொருள் கொள்கிறது; இந்த அறிவிப்பு எமக்கு ஆறுதல் அளிக்கிறது என்று தமிழனைக் கேணையாகக் கருதிக் கொண்டு விளக்கமளிக்கிறார்.

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துக் கொண்டே, மறுநாளே சிங்கள பாசிச இராணுவம் பீரங்கித் தாக்குதலையும் வான்வழித் தாக்குதலையும் நடத்தி, போர் நிறுத்தப் பகுதியிலேயே நூற்றுக்கணக்கானோரைக் கொன்றொழித்துள்ளது. கயவாளிகளின் புளுகு அடுத்தநாளே நாறியது. இருப்பினும் “மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்று இப்போர்த் தாக்குதலுக்கு வெட்கங்கெட்ட முறையில் விளக்கமளிக்கிறார், கருணாநிதி.

ஈழத் தமிழர்களின் குலையறுக்கும் இக்கொடிய போரின் சூத்திரதாரியே இந்திய மேலாதிக்க அரசுதான். எனவேதான் இந்தக் கயவாளிகள் சொல்லி வைத்த மாதிரி நாடகத்தைத் திறமையாக நடத்துகிறார்கள். தமிழகத் தேர்தலுக்கு முன்னதாக, பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்து, புலிகளை அழித்தொழித்து, போர் வெற்றிக்கு இலக்கு தீர்மானித்துக் கொண்டு இந்தியஇலங்கை அரசுகள் போர்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தின. ஆனால் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் வலுப்பெற்று நிர்பந்தம் ஏற்பட்டதால் இந்திய அரசின் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனும் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் இலங்கைக்குப் பறந்து ராஜபக்சேவிடம் விரைவில் இலக்கை நிறைவேற்றக் கோரி பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்படி 2 நாளில் இலக்கை முடித்துவிட ராஜபக்சே உறுதியளித்திருக்கிறார். அதைத்தான் 2 நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதியும் கூறிவந்தார். அந்த நல்ல முடிவு இலங்கை அரசிடமிருந்து அறிக்கையாக வெளிவரும் என்று தெரிந்துதான் அரசியல் ஆதாயமடையும் நோக்குடன் திடீர் உண்ணாவிரத நாடகத்தை நடத்தியுள்ளார். இந்தக் கபட நாடகத்துக்கு ஒத்தூதிக் கொண்டு தங்கபாலுவும் சேலத்தில் உண்ணாவிரதமிருந்ததுதான் கயமையின் உச்சகட்ட காட்சி.

காங்கிரசு  தி.மு.க. கம்பெனிகளின் இந்த மோசடி நாடகத்தை விஞ்சும் வகையில் பார்ப்பனபாசிச ஜெயா, தமிழனை அடி முட்டாளாகக் கருதிக் கொண்டு அதிரடி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று கூட்டணி கூஜாக்களைத் திருப்திபடுத்த தேர்தல் பிரச்சாரம் செய்துவந்த அவர் இப்போது, “இந்தியாதான் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து இந்தப் போரை நடத்துகிறது. இதை நான் இரண்டு ஆண்டுகளாக எதிர்த்து வந்தேன். ஈழத் தமிழரின் துயர் போக்க தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன்” என்று சாமியாடத் தொடங்கிவிட்டார்.

தேர்தல் நெருங்க நெருங்க தமிழனைக் கேணையனாகக் கருதிக் கொண்டு, இக்கயவாளிகள் நடத்தும் மோசடி நாடகங்கள் தீவிரமாகலாம். ஈழத் தமிழின அழிப்புப் போருக்கு எதிராகப் போராடி வரும் தமிழக மக்கள், இக்கேடு கெட்ட மோசடி நாடகக் கூட்டத்தை முச்சந்தியில் கட்டி வைத்து தோலுரிக்காவிட்டால், இனித் தமிழினம் சூடு  சொரணையற்ற கூட்டம் என்ற அவப்பெயர்தான் வரலாற்றில் எழுதப்படும்.

-புதிய ஜனநாயகம், மே’2009

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

ஈழம் – பதுங்கு குழி – ம.க.இ.க வின் குறும்படம்

வன்னியிலும், முல்லைத்தீவிலும் எந்த அடிப்படைத் தேவைகளுமின்றி அகதிகளாயும், இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்டும், படுகாயமுற்றும் சிதறிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை அங்கிருந்து தப்பித்தவறி வரும் புகைப்படங்கள் மூலம் நாம் அறிவோம். அங்கே எந்தப் பன்னாட்டு சேவை அமைப்பும் நுழையக் கூடாது என்பதில் ராஜபக்ஷே அரசு உறுதியாக இருக்கிறது. போர் தொடர்பாக இலங்கை ராணுவம் கூறும் செய்திகளைத்தான் நம்பவேண்டும் என உத்தரவு போடுகிறார் ராணுவ அமைச்சர் கோத்தாய ராஜபக்ஷே. மேலும் இந்தப் போரை மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியிருக்காவிட்டால் இந்நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என்றும் அந்த அபயாத்தை தற்போது வென்று விட்டதாகவும் கூவுகிறார்.

போர் நடக்கும் பகுதிகளின் இன்னும் ஐம்பதாயிரம் மக்கள் இருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. இலங்கை இனவெறி ராணுவம் இதுவரை கொன்ற கணக்கிற்கு அளவில்லை, இனி கொல்லப்போவதற்கு வரம்பும் இல்லை. குண்டு வீச்சிலிருந்து தப்பித் தவறி வரும் மக்களும் கூட குடிநீரும், உணவுமின்றி பட்டினிச்சாவை எதிர் கொள்ளும் அவலத்தில் இருக்கிறார்கள். அன்றாடம் அவலத்தையும், மரணத்தையும் எதிர் கொண்டு இதற்கு விடிவே இராதா என உழலும் அந்த மக்களின் துடிப்பை ஒரு சில காட்சிகளால் உயிர்த்தெழவைக்க முயல்கிறது இந்த காட்சிப் படிமம்.

ஈழத்தின் துடிப்பு எந்த அளவுக்கு நமது உணர்ச்சியை தட்டி எழுப்புகிறதோ அந்த அளவுக்கு நாம் சரியான அரசியல் நிலைப்பாட்டோடு போராடவேண்டும். அதை மறுப்பதற்காகவே தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் ஈழத்தை வெறும் உணர்ச்சிகரமான பிரச்சினையாக மாற்றயிருக்கின்றன. ஜெயவும், கருணாநிதியும் யார் ஈழத்திற்காக பிடுங்கப் போகிறார்கள் என்ற கூச்சலோடு சண்டையிடும் நேரத்தில் இந்திய அரசின் உதவியோடு ஈழத்தில் தமிழினத்தை கருவறுக்கும் வேலையை ராஜபக்ஷே அரசு ஆர்ப்பாட்டத்துடன் செய்கிறது.

இந்திய அரசையும், அதற்கு உதவியாய் நேரடியாகவும், மறைமுகமாகவும் பரப்புரை செய்கின்ற ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளையும் எதிர்கொண்டு சமர் புரிவதற்கு நமக்குள்ள ஒரே ஆயுதம் தேர்தல் புறக்கணிப்புதான் என்ற கடமையையும் இந்த வீடியோப்படம் நினைவுபடுத்துகிறது.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதற்கு இந்த வீடியோ படத்தை அனைத்து பிரிவினரிடமும் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். ம.க.இ.க மையக் கலைக்குழு தயாரித்திருக்கும் இந்த இசைச் சித்திரம் தமிழகத்தின் பலபகுதிகளில் நடந்த எமது பொதுக்கூட்டங்களில் மேடை நிகழ்வாக நடத்தப்பட்டது.

ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி! ம.க.இ.க தோழர்கள் கைது !! – படங்கள்

இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்கு நேரடியாகவே உதவிகள் செய்யும் இந்திய அரசின் நிலையினை மறைப்பதற்குக் கூட மத்தியில் உள்ள காங்கிரசுப் பெருச்சாளிகள் பயப்படவில்லை. இந்தக்கயமையைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமெனவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் தமிழகமெங்கும் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை வீச்சாக செய்து வருகின்றன.

இதன் அங்கமாக இன்று (8.5.09) தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரசு குலக்கொழுந்து ராகுல் காந்தியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஏற்கனவே போலீசு சோதனை, குண்டு துளைக்காத மேடை, டெல்லியிலிருந்து வந்திரங்கிய குண்டு துளைக்காத கார் என பாதுகாப்பு ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டன. இதையும் மீறி சிவகங்கையில் ராகுல் காந்தி உரையாற்றியபோது நான்கு தோழர்கள் கருப்பக்கொடி காட்டி முழக்கமிட்டனர். தோழர்கள் அருகே இருந்த காங்கிரசு அடிப்பொடிகள் தோழர்களை தாக்க வந்தனர். மேடைக்கருகே வந்த எதிர்ப்பைப் பார்த்து திகைத்து நின்ற ராகுல் அதன்பிறகு மொத்தம் பதினைந்து நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்டார். பதட்டத்தில் அவர் சிதம்பரம் பெயரையும், கை சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதற்கும் மறந்து மேடையை விட்டு இறங்க, உடனே சிதம்பரம் கையைப்பிடித்து இழுக்காத குறையாக ராகுல் மறந்து போனதைப் பேசுமாறு கூற ஒரு வழியாக கூட்டம் முடிந்தது.

சிவகங்கையை முடித்துவிட்டு திருச்சி உழவர் சந்தையில் ராகுல் காந்தி பேசுவதற்கு வந்தார். அவர் வந்த வாகன வரிசையை சாலையில் மறித்த பெண் தோழர்களையும் உள்ளிட்டு எழுபது தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டவாறு கருப்புக் கொடி ஏந்தினார்கள். எவ்வளவோ பாதுகாப்பு செய்து விட்டோமென இறுமாந்திருந்த போலீசு செய்வதறியாது ஒரு கணம் திகைத்து நிற்க அப்புறம் சகஜநிலைக்கு வந்து அனைத்துத் தோழர்களையும் கடுமையாக தடியடி செய்து கைது செய்தது. போலீசு வேன்களில் தோழர்கள் முழக்கமிட்டுச் செல்லும் காட்சியைப் பார்த்த ராகுல் காந்தியை போலிசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். சாலையிலேயே வந்த மறியலைக் கண்டு உள்ளூர் காங்கிரசுக்காரர்கள் தலை தெரிக்க ஓடினார்கள். இந்த எதிர்ப்புக் குறித்து தமிழக காங்கிரசு வேட்டிகள் அவர்களது இளவரசரிடம் மறைப்பதற்கு முயலலாம். ஆனால் மத்திய உளவுத்துறை காங்கிரசுக் கோமானிடம் உள்ளது உள்ளபடி தெரிவித்துவிடும்.

ஈழத்தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஒத்தூதும் காங்கிரசு பெருச்சாளிகள் தமிழகத்திற்கு நிம்மதியாக வந்து செல்லமுடியாது என்ற நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தக் கருப்புக் கொடி எதிர்ப்பு ஒரு துவக்கம்.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்

14

jayalalithathumbநேற்று இடப்பட்ட ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்! கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களுக்கான பதில் இந்த இடுகை. ,  புதிய வாசகர்கள் அந்தக் கட்டுரையையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்

// காரணம் எங்களிடம் வேறு தெரிவு இல்லை //

// கருணாநிதியை நண்பன் என நம்பினோம். அவர் ஏமாற்றி விட்டார் //

// குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு சரித்திரங்கள் தேவையில்லை. யார் குத்தினாலும் அரிசியானால் போதும்.//

// எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம்.//

ஜெயல்லிதாவின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய விவரத் தொகுப்பு ஒரு நினைவூட்டல். அவ்வளவே. மற்றப்படி சிடி பார்த்து ஜெயல்லிதா அடைந்த்தாக கூறிக்கொள்ளும் மனமாற்றம் என்பது விளக்கம் ஏதும் தேவைப்படாத ஒரு மோசடி. அதை விளக்கும் நோக்கிலும் இந்தப் பதிவு இடப்படவில்லை என்பதை ஆர்.வி புரிந்து கொள்வார் எனக்கருதுகிறோம்.

“எம்மிடம் வேறு தெரிவு இல்லை. சரித்திரங்கள் தேவையல்லை. இந்திய உள் அரசியல் தேவையில்லை” என்ற கருத்துகள் எவ்வளவுதான் வேதனையிலும் விரக்தியிலும் எழுதப்பட்டிருந்தாலும் அவை மிகவும் தவறானவை.

காங்-பாஜக, திமுக-அதிமுக, ஐக்கிய தேசியக் கட்சி-சிறீலங்கா சுதந்திரக் கட்சி, குடியரசுக்கட்சி-ஜனநாயக கட்சி..   – இவற்றை விட்டால் வேறு தெரிவு இல்லை என்ற நிலையையும் கருத்தையும் ஆளும் வர்க்கங்கள் தோற்றுவித்து இருக்கின்றன. இந்த சட்டகத்தை உடைக்காமல் நாம் ஒரு அங்குலம் கூட முன்னேறமாட்டோம். அவ்வளவு ஏன், ஈழத் தமிழ் மக்கள் “வேறு தெரிவு இல்லை” என்ற வலைக்குள் சிக்கியிருந்தால் ஈழ விடுதலைப் போராட்டம் என்பதே துவங்கியிருக்குமா?

1983 க்கு முந்தைய இலங்கைச் சரித்திரம்தான் தேர்தல் பாதையைக் கைவிட்டு ஆயுதப்போராட்டத்தை தெரிவு செய்ய வைத்தது. எத்தகைய துயரமான சூழலில் இருந்த போதும் “சரித்திரம் தேவையில்லை” என்று கூறிவிட இயலுமா? 1983 முதல் இன்று வரை இந்திய அரசை நண்பனாக கருதி ஈழப்போராட்டம் இழைத்த தவறுகளைக் கொஞ்சம் கூட பரிசீலிக்காமல் அதே பாதையில், இன்னும் ஆழமான படுகுழியில் கால்வைப்பது எந்த வகையில் அறிவுடைமை? உணர்ச்சிகள் மேலோங்கியிருந்தால் அறிவு விடைபெற்றுக் கொள்ளவேண்டும் என்பது விதியா என்ன? ஒரு வேளை, ஜெயலலிதா பிரதமராகி, அவர் கூறுவது போல ராணுவத்தை அனுப்பி, ஜெயா-ராஜபக்சா ஒப்பந்தம் ஒன்று போட்டு அமைதியை நிலைநாட்டினால், இன்னொரு அமைதிப்படை ஈழத்தில் இறங்காதா?

இந்தியாவின் உள் அரசியல் தேவையில்லை என்ற ஒற்றை வரியில், குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள், ஒரிசாவின் கிறித்தவர்கள், இந்து வெறியர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் தலித் மக்கள்.. போன்றோரின் துயரத்தை ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா என்ன? அல்லது பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் ஒருவேளை ஈழத்தமிழர்க்கு ஆசுவாசம் கிடைக்கலாம் என்பதற்காக, இந்திய மக்கள் உத்திரவாதமான பாசிசக் கொடுங்கோன்மைக்கு வாக்களிக்க வேண்டுமா? ஜெயா ஈழம் வாங்கித்தரட்டும். அதற்காக, குஜராத் படுகொலையை நடத்தி முடித்து, தேர்தலில் வெற்றி வாகை சூடிய மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ஜெயலலிதா போய்வந்ததையும், ஜெயாவின் பார்ப்பன பாசிச அடக்குமுறைகளையும் மறந்து விட முடியாதல்லவா?

இன்று துக்ளக் சோ எழுதியுள்ள தலையங்கத்தில் க”கருணாநிதிக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது” என்று விளக்கியிருக்கிறார். “மத்திய அரசில் செல்வாக்கு இருந்த்தால், தமிழகத்தில் புலிப் பிரச்சாரத்தைப் பெரிய அளவில் தாராளமாக நடத்தியது” என்பது கருணாநிதிக்கு எதிராக அவர் கூறும் காரணங்களில் ஒன்று. ஜெயல்லிதாவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கும் சோ, அவரது “தமிழ் ஈ.ழம் அமைப்போம்” முழக்கத்தை ஒரு விசயமாகவே கண்டுகொள்ளவிலைல. “அது சும்மா தேர்தல் நாடகம்” ஏன்று ஏற்கெனவே கூறிவிட்டார். அதே நேரத்தில், அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பா.ஜ.க ஆட்சியமைக்கப் பயன்படும் என்பதை மட்டும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

ஜெயலலிதாவை எதிர்த்தால் அவர்கள் கருணாநிதியின் ஆட்கள் என்று பார்ப்பதும், கருணாநிதியை எதிர்த்தால் ஜெயாவின் ஆட்கள் என்று பார்ப்பதும் அரசியல் பாமரத்தனம். தெரிந்தே இதனைச் செய்வது கீழ்த்தரமான தந்திரம்.

பெரியார் திகவினர் இந்திய அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுவது என்பது வேறு; அதிமுக ஆதரவு என்பது வேறு. குஜராத் இனப்படுகொலை நடந்தபோது திமுக பாஜகவின் அமைச்சரவையில் இருந்தது. வைகோ மோடிக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார். அதன் பின் பெரியார் திக எடுத்த தேர்தல் நிலைப்பாட்டுக்கு என்ன அளவுகோல்? பெரியார் திகவினர் ஆத்திரப்படாமல் சிந்திப்பது நல்லது.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது என்ற பேச்செல்லாம் நகைக்கத்தக்கவை. ஊழல், அடக்குமுறைகளுக்காக திமுக, காங், அதிமுக முதலான கட்சிகளுக்கு மக்கள் எத்தனை முறை “பாடம்” கற்பித்திருக்கிறார்கள்? இதனால் அவர்கள் அஞ்சிவிடுவார்கள், மாறிவிடுவார்கள் என்று நம்புவது அசட்டுத்தனம்.

அல்லது தமிழகத்தில் அதிமுக அணி வெற்றி பெற்றுவிட்டால் “அது இந்திய அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக தமிழகம் கூறிய தீர்ப்பு” என்று கருதி மகிழ்ந்து கொள்வதும் மிகையானது. ராஜீவ் பிணத்தைக் காட்டித்தான் 1991 இல் ஜெயா வெற்றி பெற்றார். “ராஜீவுக்காக மக்கள் எனக்கு ஓட்டுப் போடவில்லை” என்று அடுத்த சில மாதங்களிலேயே கூறி காங்கிரசின் முகத்தில் கரியைப் பூசினார். இன்று ஜெயாவுக்கு வாக்கு கேட்டு அலையும் தமிழ் உணர்வாளர்கள் ஒருவேளை இதையெல்லாம் மறந்திருக்கக்கூடும்.

ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்!

67

ஈழத்திற்கெதிரான பாசிச ஜெயாவின் குற்றப்பட்டியல்

இந்தியாவின் “வருங்காலப் பிரதமர்” ராகுல் காந்தி, கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டிதான் இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்தி. அந்தப் பேட்டிக்குள் இடம்பெற்ற முக்கியச் செய்தி ஒன்றும் உண்டு. பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி போகிறபோக்கில் புகழ்ந்துரைத்தார் ராகுல். திறமையாளர்கள் யாராக இருந்தாலும் போற்றுகின்ற கண்ணியவானின் தோரணையில் இந்தப் பாராட்டு கூறப்பட்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைக் குறி வைத்தே இது பேசப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.

சில நாட்களுக்கு முன்னர் என்.டி.டி.வி சென்னையில் நடத்திய தேர்தல் விவாதத்தில் ஈழம் முக்கிய விவாதப் பொருளாக இருந்த்து. விவாதத்தின் இறுதியில் “தேர்தலுக்குப் பின் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்வீர்களா?” என்று அதில் பங்கேற்ற அதிமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் மைத்ரேயனிடம் கேட்டபோது, “இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மறுக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார் மைத்ரேயன். “கூட்டணி அமைக்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லவில்லை. பதிலளிக்க மாட்டோம் என்றுதான் கூறுகிறீர்கள்” என்று கூறிச் சிரித்தார் தொலைக்காட்சி நிருபர். தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ஈழப்பிரச்சினை பற்றிப் பேசும்போது கூட காங்கிரசை ஜெயலலிதா தாக்குவதில்லை. கருணாநிதியைத்தான் குற்றம் சாட்டுகிறார்.

இருப்பினும், ஜெயலலிதாவின் “தமிழீழ ஆதரவு போர்முழக்கத்தை” வைகோ, ராமதாசு, நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுப் புளகாங்கிதப் பட்டிருக்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகம் “ஜெயலலிதா மீது தங்களுக்கு எவ்வித பிரமையும் கிடையாது” என்று கூறிக்கொண்டே தீவிரமாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறது. “காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் நோக்கம்” என்றும் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். “ம.க.இ.க வின் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் மறைமுகமாக காங்கிரசுக்கு உதவுவதாகவே அமையும்” என்றும் இவர்களெல்லாம் கருதுகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் பகுத்தறிவுப் பேச்சாளர்கள் பக்தர்களை இடித்துரைப்பதற்காக அடிக்கடி மேற்கோள் காட்டும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்பது அந்தப் பாட்டு.  பாட்டைப் பாடிக்காட்டிவிட்டு,  “இவனையெல்லாம் திருத்தமுடியுமா?” என்று பக்தர்களை எள்ளி நகையாடுவார்கள் பேச்சாளர்கள். தற்போது “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், இரட்டை இலையை மறந்து விடாதீர்கள்” என்று வீதி தோறும் பிரச்சாரம் நடக்கிறது.

அம்மையாரின் தமிழ் விரோத, ஈழ விரோத நடவடிக்கைகள் பற்றி வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் தெரிந்த அளவுக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்தவரை அம்மாவின் வரலாற்றைக் கீழே தொகுத்துத் தந்திருக்கிறோம். வரலாறு தெரியாத தமிழகத்தின் இளம் தலைமுறையினருக்கும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கும், வரலாற்றை மறந்துவிட்ட மூத்தோருக்கும் இது உதவக்கூடும். வரலாற்றை மறைக்க விரும்புவோருக்கும் தங்கள் சொந்த மூளையிலிருந்தே அவற்றை அகற்றிவிட விரும்புவோருக்கும் நிச்சயம் இவை உதவ மாட்டா.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் இலக்கு என்று கூறிக்கொள்வோருக்கு ஒரு கேள்வி. காங்கிரசு எல்லாத் தொகுதிகளிலும் தோற்று, அதிமுக எல்லாத் தொகுதிகளிலும் வென்று, அம்மையார் டில்லியில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து அரசும் அமைத்து விட்டால்…? அப்படி ஒரு விபரீதம் நடக்கக்கூடாது என்று இஷ்டதெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொள்ளலாம். மீறி அப்படி நடந்துவிட்டால்? அதை எப்படி விளங்கிக் கொள்வது?

“நம்மைப் பொருத்தவரை காங்கிரசுக்குப் பாடம் கற்பித்து விட்டோம். தன் பங்குக்கு ஜெயலலிதாவும் நமக்குப் பாடம் கற்பித்து விட்டார். இரண்டு பேருடைய நோக்கமும் நிறைவேறியது” என்று விளங்கிக் கொள்ளலாமா? ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்வது என்பது காங்கிரசுக்குச் செய்யும் நேரடி உதவியா, மறைமுக உதவியா?

சிந்திக்க வேண்டும். “பாடம் கற்பிப்பதற்கு” முன், வரலாறு கற்பிக்கும் பாடத்தை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். ஏதோ “நேற்று ஜெயலலிதா ஈழத்தை எதிர்த்தார் – இன்று ஆதரிக்கிறார்” என்று மிகவும் எளிதாக இதனைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் இதனைப் படியுங்கள். உங்கள் கருத்தைப் பரிசீலியுங்கள்.

ராஜீவ் கொலைக்கு முன்:

தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ‘புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுஙகிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது’ எனப் பீதியைக் கிளப்பினார்.ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் கூறிய ஜெ, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே ‘விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்

ஜூலை 1991:

ராஜீவ் கொலையானவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். ராஜீவ் கொலையான சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெ. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களை கருணையுடன் நடத்துவோம் என்று முழங்கினார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர் நலன்கள் என்ற பெயரில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ.

செபடம்பர் 1991:

சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய பெரியாரிய- மார்க்சிய பொதுவுடமைக் கட்சியினர் சிலர் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் ‘சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பு ஈழ ஆதரவு, புலி ஆதரவு எனக்கூறி நீக்கப்பட்டது. பாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும் வன்முறையையும் பிளவுவாதத்தையும் தூண்டுவதாகவும் சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்கள் கூட தடை செய்யப்பட்டு ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப்போவதாக மிரட்டினார்.

‘என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தறகொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுறுவி உள்ளனர். ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தை தகர்க்கவும் ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்’ என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார். புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும் ‘புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது’ என்றார்.

1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார். ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெ, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.

ஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும் அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார். பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.

ஈழ அகதிகள்-போராளிகள் உரிமைக்கும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார். ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.கவினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.

ஜெயா-வாழப்பாடி கும்பல் கரடியாய்க் கத்தியதால் ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழ அகதிகள் வாரம் ஒரு கப்பல் வீதம் கட்டாயாப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போயஸ் தோட்டத்துக்கு முன்பு நரிக்குறவர்களையும், ‘வயர்லெஸ்’ கருவியுடன் இருந்த ‘கூரியர்’ நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெ.

1992

தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜெ.அரசால் கைது செய்யப்பட்டனர்.

‘தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுறுவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளும், சாதனங்களும் இன்று அவசியமாக உள்ளது’ என்று ஜெ கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.

1992- செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய ‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து ‘தேசத் துரோக, பிரிவினை சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’ எனப் பாய்ந்த ஜெ, ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் மாநாட்டில் தீவிரமாகப் பேசியதாகக் கூறி சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீதிபதி கந்தசாமிபாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124-ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.

தமிழகத்தின் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி 4 புலிகளை – அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி – கைது செய்ததாக ஜெ அரசு சொன்னது. மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி ‘கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன் ‘ என்றும் சொன்னார்.

1993

புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார்.

1993 மே – ‘நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்’ என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.

கோவை ராமகிருஷ்ணன், சிறு பொறியியல் தொழிலை கோவையில் நடத்திக் கொண்டு தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார். (தற்போது பெ.தி.கவின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) இவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச்செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.

பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ‘திராவிடம் வீழ்ந்தது’ என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ தடாவில் உள்ளே தள்ளினார்.

ஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும். கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.  அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும் அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு போலீசால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.கவை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்க ஐ.பி தயாரித்திருந்த சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்க அவரை மிரட்டினர். அவர் அதற்கு மறுக்கவே, சட்ட விரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தனர். தீலீபன் மன்றத்தில் தியாகு ( இன்றைய தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர்) தொடுத்த ஆட்கொணர்வு மனுவால் 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த ( அதாவது பாலச்சந்திரன் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய ) கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டு வெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக தே.பா.சட்டக்காவலுக்கான ஆணையில் காரணம் சொல்லப்பட்டது.( அதே தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார் ). தே.பா.ச.காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தும் தீர்ப்புக்கு எதிராக சிறப்பு முகாமில் ஜெ.அரசு அவரை அடைத்தது. கொடைக்கானல் வழக்கில் அதிகாரிகள் இவரை கொடைக்கானல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாததால் பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது. மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டிய 14 ஏனைய நபர்களுக்கு அப்போது பிணை வழங்க நீதித் துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் அரசு அவரை வாட்டியது. இன்று ஈழத்துக்கு ஆதரவாக சவுடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் எவ்வாறெல்லாம் ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்தார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் பாலச்சந்திரனின் கதை.

1995 – இல் தஞ்சையில் ஜெ நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர். ஜெயின் கமிசன் விசாரணையில் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்’ என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.

2002

புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ‘பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என ஜெ கொக்கரித்தார். ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

இதே ஆண்டில் ஜெயா சட்டசபையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றினார்.

ஜூலை 2002:

விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வை.கோ மற்றும் 8பேர்கள் மீது ஜெ கொடிய பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார். பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, ‘ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்; அதற்கான பரிசீலனையில் உள்ளோம்’ என எச்சரித்தார். ம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார். புலிகளின் ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி ஜெ பிரிவினைவாதப் பீதியூட்டினார்.

செப்டம்பர் 2002:

பயங்கரவாத – பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர். இக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். ஆள்பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

செப்டம்பர் 2007

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெ ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.

2008:

அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசுக்காரர்களிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு எதிர்தரப்பினரை தள்ளிவிட்டனர். ஆனால் இச்சம்பவத்தைக் கூட ஜெ ‘கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுறுவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது’ என ஊளையிட்டார்.

மற்றபடி ஈழத்தமிழ் மக்கள் செத்து மடிவதைப் பற்றி ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என திமிராகப் பேசினார். திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் அவர்களை கைது செய்யவேண்டுமென கருணாநிதிக்கு உத்தரவுபோட்டார். அதன்பிறகு திருமாவைக் கைது செய்யவேண்டுமென்றார். கடைசில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இப்படி பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய் இப்போது நாற்பது சீட்டையும் வெற்றிபெற வைத்தால் தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருவதாக கூக்குரலிடுகிறது. ஈழப்பிரச்சினைக்காக அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டுமென முடிவெடுத்துள்ள அப்பாவிகள் இனியாவது திருந்துவார்களா?

ஈழம்…நேபாளம். தொடர்கிறது இந்தியாவின் மேலாதிக்க வெறி!

15

Nepal May Day

நேபாள பிரதமர் தோழர் பிரசண்டா ராஜினாமா செய்திருக்கிறார். நேபாள இராணுவத்தின் தலைமை ஜெனரல் ருக்மாங்கத் கட்வாலை பதவி நீக்கம் செய்து பிரசண்டா பிறப்பித்த உத்தரவை நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவ் நிராகரித்ததற்கான எதிர் நடவடிக்கை இது. இது ஜனாதிபதியின் அதிகார வரம்பை மீறியது என்றும் அரசமைப்பு முறைக்கு எதிரானது என்றும் அம்பலப்படுத்தி, தனது பதவி விலகலை தொலைக்காட்சி மூலம் அறிவித்திருக்கிறார் பிரசண்டா. “நேபாளத்தின் மக்களாட்சியைக் கருவிலேயே கொல்வதற்கு இந்தியா (அண்டை நாடு) சதி செய்கிறது” என்று குற்றம் சாட்டியுமிருக்கிறார்.

இந்திய ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்க கொலைக்கரங்கள் நேபாளத்தில் நடத்தி வரும் சதிவேலைகள் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாகவே வெளிவந்து கொண்டிருந்தன. தற்போது பிரசண்டாவின் ராஜினாமா அதனை முழுமையாக அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

நேபாள மன்னராட்சியைத் தூக்கியெறிவதில் மாவோயிஸ்டுகள் ஆற்றிய முதன்மைப் பாத்திரத்தை வெறிகொண்ட கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்களும் கூட மறுக்க முடியாது. மன்னராட்சியை அகற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு நேபாளத்தின் ஓட்டுக்கட்சிகள் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அவ்வாறு அகற்றும் நோக்கத்துடன் அவர்கள் அந்தப் போராட்டங்களை நடத்தவும் இல்லை. மன்னராட்சியுடன் சமரசம் செய்து கொண்டு அதிகாரத்தில் அமர்ந்து ஆதாயங்களைப் பெறுவதை மட்டுமே செய்து வந்தனர். அதன் காரணமாகவே மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டனர். இறுதியில் மன்னர் ஞானேந்திரா நாடாளுன்றத்தை முடக்கி, கட்சித் தலைவர்களை சிறை வைத்து அடக்குமுறையை ஏவிவிட்ட காலத்தில் செய்வதறியாமல் இந்திய அரசிடம் தங்களைக் காப்பாற்றுமாறு மன்றாடிக் கொண்டிருந்தன நேபாள காங்கிரசு, யு.எம்.எல் முதலான ஓட்டுக் கட்சிகள். மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டமும் அவர்கள் துவக்கி வைத்த மக்கள் எழுச்சியும்தான் ஞானேந்திராவைத் தூக்கி எறிந்தன. ஓட்டுக் கட்சித்தலைவர்களை சிறையிலிருந்து மீட்டன. இது உலகறிந்த வரலாற்று உண்மை.

எனினும், மாவோயிஸ்டுகள் அதிகாரத்துக்கு வராமல் தடுப்பதற்கும், மன்னராட்சியை எப்படியாவது காப்பாற்றுவதற்கும் இந்தியாவும் அமெரிக்காவும் இறுதிவரை பெரிதும் முயன்றன. எல்லா வகையான சூழ்ச்சிகளையும் செய்து பார்த்தன. ஏழு கட்சிக் கூட்டணி மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து ஒர் முன்னணி அமைத்து விடாமல் தடுப்பதற்கு இந்தியா எல்லா சூழ்ச்சிகளையும் செய்து தோற்றது. பிறகு, மன்னர் ஒழிக என்ற முழக்கத்துடன் இந்தியா ஒழிக என்று நேபாள மக்கள் தெருவில் முழங்கத் தொடங்கிய பின்னர்தான் வேறு வழியே இல்லாமல் மாவோயிஸ்டுகளின் வெற்றியை கசப்புடன் விழுங்கிக் கொண்டது இந்தியா.

பிறகு, மாவோயிஸ்டுகள் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக, தெராய் பகுதியில் மாதேசி மக்கள் மத்தியில் கலவரங்களைத் தூண்டியது. பின்னர் இந்து பாசிஸ்டுகளுக்கு ஆயுதம் கொடுத்து நேபாளத்துக்குள் அனுப்பி, (இதில் மட்டும் அத்வானி சோனியா கூட்டணி) நிராயுதபாணிகளாகத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த மாவோயிஸ்டு அணிகளைக் கொலை செய்தது. இத்தனைக்கும் பிறகு மாவோயிஸ்டுகள் பெற்ற தேர்தல் வெற்றி இந்தியாவின் மேலாதிக்க மகுடத்தில் இரண்டாவது செருப்படியாக இறங்கியது.

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதை வாய் பேச்சுக்கு வரவேற்ற போதிலும், மாவோயிஸ்டுகளை அதிகாரத்திலிருந்து அகற்றும் தனது முயற்சியை இந்தியா நிறுத்தவில்லை. இராணுவ தலைமை ஜெனரல் கட்வால் விவகாரத்தில் இது வெடித்து வெளியே வந்திருக்கிறது.

ராயல் நேபாள் ஆர்மி என்று முன்னர் அழைக்கப்பட்ட நேபாள இராணுவத்தின் தலைமை ஜெனரல் ருக்மாங்கத் கட்வால், ஞானேந்திராவின் தந்தையான மன்னர் மகேந்திராவின் வளர்ப்பு மகன். நேசனல் டிஃபென்ஸ் அகாதமி, இந்தியன் மிலிட்டரி அகாதமி போன்ற இந்திய இராணுவ நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்பட்டவர். மன்னராட்சிக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் விசுவாசமான அடியாள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பிறகு, அதன் உத்தரவுகளுக்குக்  கட்டுப்படுவதாக வாயளவில் ஏற்றுக் கொண்டு, செயலில் நேரெதிராகச் செயல்பட்டார் கட்வால். மிக முக்கியமாக, மன்னராட்சிக்கும் இந்தியாவுக்கும் விசுவாசமான பல இராணுவ அதிகாரிகளுக்கு ஓய்வுக்காலத்துக்குப் பின்னரும் பதவி நீட்டிப்பு அளித்தார். மாவோயிஸ்டுகளின் மக்கள் படையைச் சேர்ந்த சிப்பாய்களை நேபாள இராணுவத்தில் சேர்த்துக் கொள்வது என்ற அரசின் நிராகரித்தது மட்டுமின்றி, தன்னிச்சையாக ஆளெடுப்பு நடத்தி, மன்னராட்சிக்கு சாதகமான ஆட்களை இராணுவத்தில் பெரும் அளவில் சேர்க்கத் தொடங்கினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்த காரணத்தினால், இவருக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பினார் பிரசண்டா. அவரது பதில் திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தினால் இவரைப் பதவிநீக்கம் செய்தார். கட்வாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய உடனேயே “கட்வாலை நீக்கக் கூடாது” என்று பிரசண்டாவை மிரட்டியது இந்திய அரசு. ஏற்கெனவே மாவோயிஸ்டுகளை வேறு வழியின்றி சகித்துக் கொண்டிருந்த நேபாள காங்கிரசு, யு.எம்.எல் கட்சியினரை மாவோயிஸ்டுகளுக்கு எதிராகத் தூண்டி விட்டது. ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துவதற்கான சதிவேலைகளையும் இந்தியா தொடங்கியது.

இந்தியாவின் இந்த தலையீட்டுக்கு இரண்டாவது முக்கியக் காரணம், சீனாவுடன் நேபாள அரசு செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்த ஒப்பந்தம். ஏற்கெனவே நேபாளத்தின் மீது இந்தியா திணித்திருந்த மேலாதிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள் மாவோயிஸ்டுகள். இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் உணர்வு நேபாள மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றிருப்பதால், வேறு வழியின்றி பிற ஓட்டுக் கட்சிகளும் இதனை ஆதரிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில் சீனாவுடன் நேபாளம் சுயேச்சையாக செய்து கொள்ளும் இந்த ஒப்பந்தம், தனது மேலாதிக்க நோக்கத்துக்கு எதிராக அமையும் என்ற காரணத்தினால், அந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே மாவோயிஸ்டு அரசை வீழ்த்திவிட வேண்டும் என்பது இந்திய அரசின் திட்டமாக இருந்திருக்கிறது. இதனை ஒட்டித்தான் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி வந்த முன்னாள் மன்னன் ஞானேந்திரா, சோனியாவை இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தப் பின்புலத்தில்தான் நடந்திருக்கிறது பிரச்ண்டாவின் ராஜினாமா. இப்போது தனது எடுபிடிக் கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து நேபாளத்தில் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முனைந்திருக்கிறது இந்தியா.

இவை எதையும் “இல்லை” என்று இந்திய அரசு மறுக்வே முடியாது. அனைத்தும் அப்பட்டமாக அம்பலமாகி விட்டன. இந்தியாவின் நலனுக்கு அவசியமான நடவடிக்கைகள் என்ற கோணத்தில் இவற்றை நியாயப்படுத்தி எழுதுகின்றன ஆளும் வர்க்கப் பத்திரிகைகள். “இந்தியாவின் மேலாண்மையை இந்தப் பிராந்தியத்தில் நிலைநாட்ட காங்கிரசு தவறிவிட்டது” என்பதுதான் நேபாளம் குறித்த பா.ஜ.க வின் விமரிசனம். இன்னும் கொஞ்சம் சூழ்ச்சித் திறனுடன், குட்டு உடைபடாத வண்ணம் இதனை செய்திருக்க வேண்டும் என்பது ஆளும் வர்க்க அரசியல் விமரிசகர்கள் கூறும் விமரிசனம்.

மாவோயிஸ்டு அரசின் நடவடிக்கைகளில் இந்தியாவை அச்சுறுத்தும் மூன்று விசயங்கள் எவை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பட்டியலிடுகிறது. முதலாவதாக நேபாள இராணுவத்தில் மாவோயிஸ்டுகளின் மக்கள் படையின் வீரர்களைச் சேர்ப்பது. இதில் இந்தியாவுக்கு என்ன நோக்காடு? நியாயமாக மன்னராட்சி தூக்கியெறியப்பட்ட உடனேயே அதனைப் பாதுகாத்து நின்ற இராணுவம் கலைக்கப் பட்டிருக்க வேண்டும். நேபாளத்தின் சூழலும், இன்றைய உலகச் சூழலும் அதனை சாத்தியமற்றதாக்கியிருந்தன. எனவேதான் மக்கள் படையை இராணுவத்தில் சேர்ப்பது என்ற கோரிக்கையை மாவோயிஸ்டுகள் முன்வைத்தனர். மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்த அந்தக் காலத்தில் 7 கட்சிக் கூட்டணி இதனை ஏற்றுக் கொண்டது.

மன்னராட்சியை அகற்றி குடியரசை நிறுவுவதற்காகப் போராடி, பல்லாயிரம் உயிர்களைப் பலி கொடுத்த மக்கள் படைதான் குடியாட்சியைப் பாதுகாக்க முடியும். ஆனால் இந்த நடவடிக்கை நேபாள ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் பாதுகாப்பானது இல்லையே! அதன் விளைவுதான் இந்தியத் தலையீடு. ஞானேந்திரா சோனியா சந்திப்பு.

இரண்டாவதாக, இராணுவத்தில் ஊடுறுவுவதைப் போலவே, நீதிமன்றத்திலும் மாவோயிஸ்டுகள் ஊடுறுவி விடுவார்களாம். மக்கள் நீதிமன்றம் என்ற தங்களது அமைப்பை நீதித்துறைக்குள்ளும் புகுத்தி விடுவார்களாம். அந்த அபாயம் குறித்து நேபாள பிரபுக்குலம் மட்டுமின்றி, இந்திய மன்னர் குலமும், நேபாளத்தில் முதலீடு செய்திருக்கும் இந்திய தரகு முதலாளிகளும் கவலைப்படுகிறார்கள். இது இந்தியாவிற்கான இரண்டாவது அபாயம்.

மூன்றாவதாக, நேபாளம் சீனாவுடன் செய்து கொள்ள விரும்பும் ஒப்பந்தம். ஒரு இறையாண்மை மிக்க நாடு, வேறொரு நாட்டுடன் ஒப்பந்தம் போடுவதை இந்தியா எப்படி தடுக்க முடியும்? ஏனென்றால் தனது அண்டை நாடான சீனாவுடன் நேபாள அரசு ஒப்பந்தம் போடுவது இந்திய நலனுக்கு எதிரானதாம். நேபாளத்தில் தனக்குப் போட்டியாக சீனா கால் பதிப்பதை இந்தியா விரும்பவில்லையாம்.

அண்டை நாட்டின் இறையாண்மையை இந்தியா மதிக்கும் யோக்கியதை இதுதான். இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரினால், “இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் நாம் எப்படித் தலையிட முடியும்?” என்று கேட்கும் அதே வாயால்தான் இராணுவ ஜெனரலை பதவி நீக்கம் செய்யக் கூடாது என்று மாவோயிஸ்டுகளை மிரட்டுகிறது இந்தியா. ஆட்சிக் கவிழ்ப்புக்கும் சதித்திட்டம் தீட்டுகிறது. இராணுவ ஜெனரல் விவகாரம் கிடக்கட்டும். கேவலம் பசுபதிநாதர் கோயில் பூசாரியை மாற்றியதற்கே இந்தியா தலையிடவில்லையா?

இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசிய வட்டாரத்திலேயே தேசிய இனப் போராட்டமோ ஜனநாயகப் புரட்சியோ வெற்றி பெறுவதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது. அன்று ஐரோப்பியப் புரட்சிக்குத் தடையரணாக இருந்த ரசியாவின் ஜாராட்சியைப் போல, இன்று இந்திய அரசு தெற்காசியப் பகுதியில் பிற்போக்கின் காவலன், அமெரிக்காவின் அடியாள்.

தற்போது பொருளாதார வலிமை பெற்றிருக்கும் சீன முதலாளித்துவ அரசு, அமெரிக்காவுக்குப் போட்டியாக, தனது செல்வாக்கை தெற்காசியப் பகுதிக்கும் விரிவு படுத்தும் நோக்கத்தில் இலங்கையிலும் நேபாளத்திலும் பாகிஸ்தானிலும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் காரணம் காட்டித் தனது மேலாதிக்க நோக்கத்தை இந்திய ஆளும் வர்க்கம் மறைத்துக் கொள்ள முனையும். இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்த்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடியாளாக நியமனம் பெற்றுவிட்டதால், சீனப்பூச்சாண்டி காட்டி தனது அமெரிக்க அடிவருடித்தனத்தை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்யும்.

ஆனால் அதில் கடுகளவும் உண்மை இல்லை. சீனாவின் தற்போதைய ஆசைகள் தான் புதியவை. ஆனால் இந்திய

ஆளும் வர்க்கத்தின் ஆசையும் ஆதிக்கமும் மிகவும் பழையவை. 1950 களிலேயே அது தொடங்கி விட்டது. இந்திய நேபாள ஒப்பந்தம் முதல், ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் வரை இதற்குப் பல சான்றுகள் உண்டு.

1990 களில் நேபாளத்தில் மன்னர் பிரேந்திராவுக்கு எதிராக நேபாள ஓட்டுக் கட்சிகள் நடத்திய ஜனநாயகத்துக்கான இயக்கத்தைப் பின்நின்று இந்தியா இயக்கியதற்கும், 1983 இல் இந்தியா ஈழப்போராளிக் குழுக்களுக்கு பயிற்சியும் அடைக்கலமும் கொடுத்ததற்கும் ஒற்றுமைகள் உண்டு. இன்று ராஜபக்சேவுடன் இணைந்து இனப்படுகொலையை நடத்துவதற்கும், சோனியா ஞானேந்திரா சந்திப்புக்கும் கூட ஒற்றுமை உண்டு. ஒருவேளை சோனியாவுக்குப் பதில் அத்வானியோ, ஜெயல்லிதாவோ பிரதமராக இருந்திருந்தாலும் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தே இருக்கும். ஈழத்து இனப் படுகொலைக்கும் இந்திய அரசின் ஆதரவு கிடைத்தே  இருக்கும்.

“ஹவாய் செருப்புக்கும் தோல் செருப்புக்கும் வித்தியாசமில்லையா?” என்று டெல்லிக்குக் காவடி எடுத்துக் கொண்டிருக்கும் அறிவாளிகளும் தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழலாம். இல்லை என்று நாம் கூறவில்லை. அந்த வித்தியாசத்தைக் காட்டிலும், அவையிரண்டுமே ஆளும் வர்க்கத்தின்  கால்செருப்புகள் என்ற ஒற்றுமையே முதன்மையானது என்ற உண்மையைப் பணிவுடன் சுட்டிக் காட்டுகிறோம். வர்க்கம் என்ற சொல்லை தமிழ் உணர்வாளர்களும் ஈழ ஆதரவாளர்களும் எவ்வளவுதான் வெறுத்தாலும், கண்களை மூடிக்கொண்டாலும், ஆளும் வர்க்க நலன்தான் இந்திய அரசை இயக்குகிறது.

இறுதியாக, பிரசண்டாவின் பதவி விலகல் உரையிலிருந்து சில வாக்கியங்கள்:

“நாற்காலி ஆசைக்காக வெளிநாட்டவரின் தயவை எதிர்நோக்கிய காலம் முடிந்து விட்டது. தேசத்தின் கவுரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராகுமாறு நாட்டுப் பற்று கொண்டவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தங்கள் உயிரை அர்ப்பணித்திருக்கும் பத்தாயிரக்கணக்கான மக்களின் இரத்தத்தின் மீது நின்று கொண்டு, “அந்நியக் கடவுளர்களின்” முன் நாம் தலைவணங்க மாட்டோம்.”

இறையாண்மை நாட்டுப்பற்று என்ற பெயரில் மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் ஆளும் வர்க்கங்களின் மிரட்டலுக்குத் நாமும் தலை வணங்க கூடாது.  தெற்கே ஈழம். வடக்கே நேபாளம். இந்திய மேலாதிக்கத்தின் கொலைக்கரங்கள் நீள்கின்றன. அவற்றை வெட்டி எறிவது நம் கடமை. மேலாதிக்கத்தின் தயவில் விடுதலையைச் சாதிக்கலாம் என்று நம்புவது மடமை.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சில  தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மே 1 முதல் 8 தேதி வரை இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் அழிந்துவிட்டன. கூடிய விரைவில் அவற்றை மீட்க முயல்கிறோம். இனிமேல் வரும் பின்னூட்டங்களுக்கு பிரச்சினையில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம்.


ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! – ம.க.இ.கவின் மே தினப் பேரணி – புகைப்படங்கள் !

ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்! என்ற தலைப்பில் மே 01 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை இணைந்து மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வீச்சாக நடத்தின.

தஞ்சை திருவள்ளுவர் திடலில் காலை எட்டு மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் அவர்களால் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு 9 மணிக்கு ஓவியக் கண்காட்சியை தோழர் துரை. சண்முகம் துவங்கி வைத்தார். தோழர் முகிலன் வரைந்த அந்த ஓவியங்களில் ஈழம் பற்றிய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதமும், தேர்தல் கூட்டணி என்பதற்கு கொள்கை ஒற்றுமை கிடையாது என்பதை நிறுவும் அப்போலி ஜனநாயக தாசர்களின் வாக்குமூலமும் ஓவியங்களில் சிறப்பாக வெளிப்பட்டு இருந்தது.

பேருந்துகள் மற்றும் புகைவண்டிகளின் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து தோழர்கள் வந்த வண்ணமிருந்தனர். மாலை 4 மணிக்கு சரியாக புகைவண்டி நிலையத்திலிருந்து கூட்டம் நடக்கவிருந்த திருவள்ளுவர் திடல் வரை ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. கம்பம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் மோகன் தலைமையில் நடந்த இப்பேரணியில் ஈழப்பிரச்சினையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றோர் போடும் வேடங்களை அம்பலப்படுத்தியும், ஈழத்திற்கு எதிராக சிங்கள இனவெறி அரசை மேலாதிக்க நலனுக்காக ஆதரிக்கும் இந்திய தரகு முதலாளிகளை முறியடிக்க அறைகூவல் விடுத்தும், பணநாயகத்தை விடுத்து மானத்தோடு இருக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டவாறு பேரணி நடைபெற்றது.

ஓட்டுப் பொறுக்கிகளின் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை அதன் கூச்சத்தைக் கேட்டுச் சலித்த தஞ்சையின் வீதிகளில் எதிரொலித்த புரட்சிகர அரசியலின் நம்பிக்கையூட்டும் எழுச்சியான முழங்கங்களை மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட இப்பேரணியில் குழந்தைகளும், பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து கொண்டனர்.

ஈழத்தின் அவலநிலையை எடுத்துக்காட்டும் காட்சிப்படிமத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் சிறப்பாக ஊர்வலத்தில் நடத்திச் சென்றது பார்வையாளர்களைக் கவர்ந்தது. தேர்தல் புறக்கணிப்பு, ஈழப்போரில் இந்திய அரசின் தலையீட்டை எதிர்ப்பது, தனியார்மய தாராளமய உலகமயமாக்கல் எதிர்ப்பு போன்ற முழக்கங்களுடன் கூடிய பதாகைகளையும், அனைத்து தோழமை அமைப்புகளும் தத்தமது கொடிகளுடன் ஊர்வலத்தில் வந்தது பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் இருந்தது.

ஊர்வலம் மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் திடலை வந்தடைந்தவுடன் பொதுக்கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம் தலைமையில் தியாகிகளுக்கான வீரவணக்கத்துடன் துவங்கியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் சுப. தங்கராசு சிறப்புரை ஆற்றினார். ஈழப்பிரச்சினைக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் ஜனநாயகம் என்பது எப்படி பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் போலி ஜனநாயகமாக இருக்கின்றது, தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை இயற்றும் அதிகாரத்தைத் தவிர அமல்படுத்தும் அதிகாரமில்லை, உண்மையான அதிகாரம் கொண்ட மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டி புரட்சிகர அதிகாரத்தை மக்கள் கைப்பற்றுவதுதான் இதற்கு தீர்வு, நக்சல்பாரிகளின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டுமெனவும் தோழர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரை ஆற்றினார். இந்திய அரசும், இந்திய ஆளும் வர்க்கங்களும் ஈழத்திற்கு எப்போதும் எதிரிதான் என்பதை ஈழத்தின் போராளிக் குழுக்களும், தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு இயக்கங்களும் புரிந்து கொள்ளாமல், இந்தியாவை நண்பனென்று ஆதரிப்பதையும் அதன் விளைவே இன்றைக்கு நடைபெறும் இனப்படுகொலை உச்சத்தை அடைந்திருப்பதாகவும் தோழர் குறிப்பிட்டார். இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒன்றுபட்ட இலங்கையின் சந்தை தேவைப்படுவதால் அவர்களின் நலனைக் காப்பதற்காக இந்திய அரசு நேற்றும், இன்றும், நாளையும் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்பதையும் விளக்கினார்.

அடுத்து இன்றைய ஈழத்தின் மீதான இனப்படுகொலைக்கு நேரடியாக உதவும் காங்கிரசு அரசிற்கு பாடம் கற்பிப்பதற்காக ஈழ ஆதரவுக் குழுக்கள் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவை ஆதரிப்பதன் அபாயத்தை தோழர் புரியவைத்தார். கருணாநிதி நாளைக்கே ஈழம் கிடைக்குமென்றால் தனது பாரளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் அது இல்லாத பட்சத்தில் ராஜினாமா செய்வதால் பலனில்லை எனவும் கூறுகிறார். ஜெயலலிதாவோ தனக்கு தமழிக மக்கள் நாற்பது தொகுதிகளையும் தந்தால் புதிய மத்திய அரசின் மூலமாக ஈழத்தை வாங்கித் தருவாதக கூறுகிறார். இதிலிருந்து இருவரும் தமது பதவி ஆதாயத்திற்காக ஈழத்தின் பிணங்களை வைத்து நாடகமாடுவதை தோழர் உணர்த்தினார்.

தோழர் காளியப்பனின் உரைக்குப் பிறகு ம.க.இ.கவின் மையக் கலைக்குழு உணர்ச்சிகரமாக நடத்திய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஈழத்தின் அவலத்தை துல்லியமாக எடுத்தியம்பும் இசைச்சித்திரம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர் நிர்மலா நன்றியுரை நிகழ்த்தினார். பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் இரவு 10 மணிக்கு நிறைவு பெற்றது. மிச்சமிருக்கும் நாட்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை இன்னும் வீச்சாக கொண்டு செல்லும் உறுதியுடன் தோழர்களும், ஆதரவாளர்களும் கலைந்து செல்ல மே தின நிகழ்ச்சிகள் தஞ்சையில் முடிவடைந்தது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சில  தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மே 1 முதல் 8 தேதி வரை இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் அழிந்துவிட்டன. கூடிய விரைவில் அவற்றை மீட்க முயல்கிறோம். இனிமேல் வரும் பின்னூட்டங்களுக்கு பிரச்சினையில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம்.


அமெரிக்காவில் ஒரு அம்பியின் சாதிவெறி!

51

poonol

மே 2 தினத்தந்தியில் ஒரு செய்தி! ” குழந்தை பெற்றுக் கொள்ளத் தடை, கணவனை, ஜெயிலுக்கு அனுப்ப துடித்த மனைவி, சென்னை போலீசு நிலையத்தில் ருசிகரமான வழக்கு” – இதுதான் அந்த செய்தியின் தலைப்பு. தலைப்பை பார்த்ததும் ஏதோ வழக்கமான தந்தி பாணியிலான க.காதல் மேட்டர் என்றுதான் பலருக்குத் தோன்றும். முதலில் செய்தியைப் பார்ப்போம்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஷியாம் நாராயணன் அமெரிக்காவில் மாதம் நான்கு இலட்ச சம்பளத்தில் என்ஜினியராக வேலை பார்க்கிறார். அவரைப் போல அதே சம்பளம், படிப்புடன் அங்கேயே வேலை பார்க்கும் நந்தினி என்ற பெண்ணை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்கிறார் நாராயணன். இனிமேல்தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.

நாராயணன் ஒரு சுத்த பத்தமான பார்ப்பன சாதியைச் சேர்ந்த அம்பி. நந்தினியோ தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். அம்பி நந்தினியை ஏற்றுக் கொண்டதற்கு அவரது சம்பளம், படிப்பு, அமெரிக்க வாசம் என்பதைத் தவிர வேறு காரணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. நந்தினியைப் பொறுத்தவரை தன் சுயசாதி அவலத்தை ஒரு பார்ப்பனரை திருமணம் செய்வதன் மூலம் வென்றுவிட்டதாக நினைத்திருக்கலாம். எப்படியும் அமெரிக்காவில் செட்டிலான ஒரு தலித் பெண்ணுக்கு அம்மக்களின் போராட்ட உணர்வு இருக்கும் என்பதற்கு அவசியமில்லை. இருவரின் சாதியையும் தினத்தந்தி நேரடியாக குறிப்பிடவில்லை எனினும் நாம் உறுதியாகவே ஊகமின்றி அவர்களது சாதியை அறிய முடியும்.

ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த ஆணோ, பெண்ணோ ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்யும் போது அங்கே சமூகப்புரட்சி நடப்பதில்லை. தம்பிதியினர் இருவரும் யாரது சாதி படியெடுக்கில் மேலிருக்கிறதோ அந்த சாதியின் பண்பாட்டில் சங்கமித்து விடுவார்கள். இதைப் பற்றி தனியாகவே எழுதலாம். இங்கே நாம் கூற விரும்புவது நந்தினியும் அப்படி பார்ப்பனமயமாக்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்பதைத்தான். அப்படியெல்லாம் அவர் மாறியிருக்கக் கூடுமென்றாலும் அம்பி நாராயணனின் பெற்றோர்கள் ஏற்பதாக இல்லை.

ஒரு தலித் பெண்ணின் உறவில், இரத்தக் கலப்பில் குழந்தை கூடாது என அவர்கள் அம்பியை மாம்பலத்தில் இருந்தவாறே நோண்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். தலித் பெண்ணின் நான்கு இலட்ச ரூபாய் சம்பளத்தை உற்சாகமாக வரவேற்ற அம்பியும் இறுதியில் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று குழந்தை வேண்டாமெனவும் கடைசியில் தாம்பத்திய உறவே கூடாது எனவும் வக்கிரமாக நடந்திருக்கிறார். இந்தக் கயமைத்தனத்தை நான்கு ஆண்டுகளாக போராடியிருக்கிறாள் அந்த அபலைப் பெண். இறுதியில் இருவரும் சென்னை வந்திருக்கிறார்கள்.

தன் உறவில் குழந்தை  கூடாதென இழிவு படுத்தும் நாராயணனோடு சேர்ந்து வாழ்வதில் பயனில்லை என பெற்றோருடன் சேர்ந்து முடிவெடுத்த நந்தினி கூடுதலாக அம்பியின் மேல் தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் கொடுக்கவும் முடிவு செய்திருக்கிறார். அவ்வாறே போலீசு ஆணையரிடம் புகார் பதிவு செய்தார். ஆணையரின் உத்தரவுப்படி அசோக் நகர் போலீசார் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தனர். முதலில் இருவருக்கும் கவுன்சிலிங் செய்து சேர்ந்து வாழ முயற்சி எடுத்த போலீசாரை நாராயணன் சட்டை செய்யவில்லை. நந்தினியுடன் சேர்ந்து வாழத்தயாராக இருப்பதாகவும் குழந்தை மட்டும் கிடையவே கிடையாது என அந்த திமிரெடுத்த மாம்பலத்துப் பார்ப்பான் உடும்புப் பிடியாக நிற்கிறார்.

கடைசியில் நாராயணன் மேல் தீண்டாமை சட்டத்தின் கீழ் கைது செய்யப் போவதாக அறிவித்த போலீசு போனால் போகட்டுமென ஒரு நாள் சிந்திப்பதற்கு வாய்ப்பு கொடுத்தது. அமெரிக்காவில் ஆர்ப்பாட்டமாய் வாழ்ந்து விட்டு இப்போது புழல் சிறைக்கு செல்ல வேண்டுமா என பயந்து போன அம்பி அடுத்த நாள் நந்தினிக்கு அவர் விரும்பியவாறு குழந்தை தருவதாக ஒப்புக் கொண்டாராம். தலித் சாதி மக்களுக்கு மட்டும் தண்டனைகளை பாவம் பார்க்காமல் வாங்கித் தரும் போலீசு ஒரு அக்ரகாரத்துப் பார்ப்பானை தண்டிப்பதற்கு தயாராக இல்லை. என்ன இருந்தாலும் இது மேன்மக்களின் பிரச்சினையல்லவா! அப்புறமென்ன, அடுத்த முறை அமெரிக்காவிலிருந்து வரும்போது குழந்தையுடன் வரவேண்டுமென போலீசு வாழ்த்துக்களுடன் அவர்களை அனுப்பி வைத்ததாம்.

தலித் மக்களின் மீது ஆதிக்கத்தை அரிவாளின் மூலம் நிலை நிறுத்தும் தேவர் சாதி – வன்னிய சாதி வெறிகளைப் போல பாரப்பன சாதி வெறி வன்முறை செய்வதில்லை என சிலர் பேசுவது வழக்கம். ஆனால் இந்த பிரச்சினையின் வன்முறையும், அநாகரிகமும், அயோக்கியத்தனமும் அரிவாளை விட அணுதினமும் சித்திரவதை செய்யும் வல்லமை கொண்டது. எவ்வளவு நுட்பமாக பாரப்பன சாதி தன்னை தக்கவைத்துக் கொள்கிறது பாருங்கள்! இத்தகைய சாமர்த்தியங்களெல்லாம் நிச்சயமாக தேவர், வன்னிய சாதி வெறியர்களிடம் இல்லை. அதனால்தான் இவர்களை திருத்துவது முடியும் என்பதோடு பார்ப்பனர்களை திருத்துவது இயாலாததாக இருக்கிறது.

போகட்டும், நந்தினியின் இந்த கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற முடிவை நம்மால் ஏற்க முடியவில்லை. காதலித்து மணந்த ஒரு பெண்ணை உலகில் வேறு எவரும் இதைப் போல கேவலப் படுத்த முடியாது என்றளவுக்கு இலக்கணம் படைத்திருக்கும் இந்த நபரின் உறவை அவர் வழக்குப் போட்டு தண்டித்திருக்க வேண்டும். அந்த மண உறவையும் துண்டித்திருக்க வேண்டும். இவ்வளவு கீழான நடத்தை உள்ளவனோடு எப்படி குடும்பம் நடத்த முடியும்? ஆனாலும் இந்தியப் பெண்கள் இத்தகைய கொடுமைகளை சகித்துக் கொண்டு வாழும் அடிமை மனநிலையை நந்தினி அமெரிக்கா சென்றும் கூட வெல்ல முடியவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

நாராயணன் இத்துடன் முடித்துக் கொள்ளும் ஆள்மாதிரி தெரியவில்லை. அமெரிக்க திரும்பியதும் சுலபமாக அந்த நாட்டு சட்டப்படி ஏதாவது ஒரு போண்டா காரணத்தைச் சொல்லிக்கூட விவாகரத்து செய்யலாம் என நினைத்திருக்கலாம். ஊர் உலகம் என்ன சொன்னாலும், எப்படியிருந்தாலும் பார்ப்பனர்கள் தமது இருப்பை தந்திரமாக காத்துக் கொள்வதில் விற்பன்னர்களாயிற்றே! பாவம் நந்தினி!!

தலைவர்களின் சுயமோக போதை !

5

jaya-karuna

திருச்சியில் மே தினமன்று தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி அற்ப விசயங்களை ஆராதித்தும், ஒன்றுமில்லாத பிரச்சினைகளை மாபெரும் தியாகமாகவும் சித்தரித்தார்.  சான்றாக அவருக்கு நடந்த ‘வரலாற்றுச்’ சிறப்பு மிக்க முதுகுத்தண்டு மைனர் சர்ஜரியைக் குறிப்பிட்டவர், அந்த அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் அவரது 85 வயதைக் குறிப்பிட்டு சிகிச்சை வெற்றிபெற்றால் முதுகுவலி மறையும், தோல்வியடைந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்றார்களாம். குடும்பத்தினரெல்லாம் அழுது அரற்றி அறுவை சிகிச்சையே தேவையில்லை என்று போராடினார்களாம். அதுதானே மூன்றுமணிநேர உண்ணாவிரதத்தன்று தலைமாட்டில் ராஜாத்தி அம்மாளும், கால்மாட்டில் தயாளு அம்மாளும் எங்கே பங்கு பறிபோய்விடுமென்ற கவலையுடன் அமர்ந்திருந்ததை பார்த்தோமே!  வலியிலிருந்து  நிவராணம் அல்லது அமைதியான முடிவு என்று அவர்தான் சிகிச்சைக்கு சம்மதித்தாராம். இப்போது தேர்தல் பிரச்சாரத்துக்கு சுற்றுப் பிரயாணம் கிளம்பியதற்குக் கூட மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்களாம். மீண்டும் முதுகுத் தண்டில் பிரச்சினை ஏற்பட்டால் மரண அபாயம் உண்டு என்பதையும் மீறித்தான் அவர் பிரச்சாரத்துக்கு கிளம்பினாராம்.

ம.க.இ.க பாடலொன்றில் அரசு மருத்துவமனைகளின் அவல நிலையை சுட்டுவதற்காக ” அறுத்துப் போட்டுவிட்டு இல்லேன்கறான் நூலு ” என்று ஒரு வரிவரும். உண்மையில் அபாயகரமான அறுவை சிகிச்சைகளெல்லாம் கால்நடை மருத்துவமனைகளின் தரத்துக்கும் கீழான அளவில் அன்றாடம் செய்துகொள்ளும் மக்கள் நிறைந்த நாட்டில் கலைஞரின் அறுவை சிகிச்சைக்கு என்ன ஆர்பாட்டமெல்லாம் செய்தார்கள்? இந்தியா முழுவதும் சிறப்பு மருத்துவர்கள் விமானத்தில் வந்து கவனிக்க, உண்ணாவிரதத்தில் கூட அவர்களும் வந்து காத்திருக்க, ஆம்புலன்ஸ் எல்லாம் தயார் நிலையில் இருக்க என்ன ஒரு கவனிப்பு? இதையெல்லாம் வைத்து கருணாநிதியின் முதுமையை நாம் கேலி செய்யவில்லை. முழு அரசு எந்திரமும் அந்த சிகிச்சைக்காக இயங்கிய நிலையில் அதை மாபெரும் தியாகச் செயலாக சித்திரிப்பதுதான் சகிக்க முடியவில்லை.  அந்தக் கூட்டத்தில் திருக்குவளையில் சாதாரண குடும்பத்தில் பிறந்த தன்னை இயற்கை இன்னமும் வாழவைத்திருப்பதற்கு காரணம் அவர் தமிழினித்திற்கு இன்னும் சேவை செய்வதற்காம். இருக்கட்டுமே!

கருணாநிதியைப் பொறுத்தவரை அவர் காந்தி, நேரு முதலான அதிகாரப்பூர்வமான ஆரம்பிக் கல்வி வரலாற்று நாயகர்களின் பட்டியலில் இடம் பெற நினைக்கிறார். அப்படி ஒரு பிம்பத்தை அவரது ஜால்ராக்கள் சும்மா எதுகை மோனைக்காக பேசுவதை வைத்து அவருக்கும் அப்படி ஒரு ஆசை வந்திருக்கக் கூடும். இதற்கு என்ன ஆதாரம்?

கருணாநிதி ஆட்சியிலிருக்கும் போதெல்லாம் திரையுலகினர் விதம் விதமான தலைப்புக்களில், கலையுலகின் முதல்வர், பொன்விழா, சலுகைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழா என்றெல்லாம் எடுப்பார்கள். இந்த நிகழ்ச்சிகள் நான்கைந்து மணிநேரம் நடக்கும் என்றால் கருணாநிதியும் இதற்கு ஒப்புக்குச் சென்றுவிட்டு புறப்படாமல் நீராருங்க கடலெடுத்தவில் ஆரம்பித்து ஜயகே வரைக்கும் அப்படியே அசையாமல் கவனிப்பார். இந்த நிகழ்ச்சிகளில் கர்ச்சிப்பைக் கட்டிக்கொண்டு நடிகைகள் குத்தாட்டம் போடுவதுதான் முக்கியமான ஒன்று. இடையில் நட்சத்திரங்களெல்லாம் இதற்கு முன் ஜெயலலிதாவுக்கு விழா எடுத்து பாராட்டியவர்க ளெல்லாம் இப்போது கருணாநிதியை இந்திரனே சந்திரனே என்று வெட்கமில்லாமல் பிழைப்புக்காக உருகுவது போல உளறுவார்கள்.

பாமரனுக்குக் கூட அருவெறுப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த மேனா மினுக்கிகளின் பாராட்டுமழையில் தமிழினத்தலைவர் மட்டும் உள்ளபடியே மயங்கிக் கிடப்பார். ஒரு வேளை இந்தக் கூத்துக்களுக்கு செல்லாமல் தவிர்த்திருந்தால் அவருக்கு முதுகுவலியே வராமல் இருந்திருக்கக்கூடும். இதுமட்டுமல்ல,  நண்பர் லக்கிலுக்கே விமரிசனம் எழுதாமல் நிராகரிக்கும் குப்பைப் படங்களைக்கூட அந்தப் படத்தின் தயாரிப்பாளர்கள் சிறப்புக் காட்சிக்கு அழைத்தால் மறுக்காமல் சென்று பார்ப்பார். ரம்பாவீட்டு நாய்க்குட்டிக்கு இருமலென்றாலும், நமிதா வீட்டு பூனைக்கு ‘பர்த் டே’ என்றாலும் அழைப்பு வரும் பட்சத்தில் ஆவலுடன் சென்று வாழ்த்துவார். எல்லாம் எம்.ஜி.ஆர் சினிமாவை வைத்தே அவரை அழவைத்த காலத்தின் கட்டாயம். நாளை யார் எம்.ஜ.ஆர் போல வருவார்கள் என்பது தெரியாதே? அந்தக் கொடுமை சிம்புவாகக்கூட இருக்கலாம்

இப்படித்தான் கருணாநிதி அவரைப் பற்றிய புகழுரையில் மயங்கி தனது அற்ப பிரச்சினைகளைக் கூட தமிழினத்திற்கு அவர் செய்யும் தியாகமாக கற்பித்துக் கொள்கிறார். இந்த வெற்றுப் பாராட்டுரை வீரமனியின் வாயில் இருந்து வந்தாலும், எஸ்.வி.சேகரது ஆசனவாயிலிலிருந்து வந்தாலும் அவரைப் பொறுத்தவரை எல்லாமும் முக்கியமானது. கருணாநிதியின் சமீபத்திய உழைப்பில் அவர் இந்த வெற்றுரைகளுக்கு முகம் கொடுத்து காது குளிரக் கேட்பதற்கென்றே கிட்டத்தட்ட 75% நேரத்தை ஒதுக்கியிருப்பார் என்றால் மிகையல்ல. ஊதிப்பெருக்கப்பட்ட தனது பொய்யான பிம்பத்தை பார்த்து மகிழும் இந்த நார்சிச நோய்தான் குறிப்பாக தமிழக அரசியல் கட்சித்தலைவர்களை பிடித்திருக்கின்ற மிகப்பெரிய நோய்.

இதில் முதலிடம் புரட்சித்தலைவிக்குத்தான். தமிழின் அகராதியில் கட்அவுட் என்ற சொல்லுக்கு புதிய பொழிப்புரை எழுதியவர் அந்தத்தலைவி. யானை வருமுன்னே அவரது கட்டவுட் உயரும் பின்னே. வால்டர் தேவாராத்தை அப்பளம் சுடவைத்து அவர் நடத்திய ‘வரலாற்றுச்’ சிறப்புமிக்க வளர்ப்புமகன் திருமணத்தில் உடலெடையை மிஞ்சும் வகையில் நகையணிந்து, உடன்பிறவா தோழியுடன் அவர் சென்னையில் நடத்திய மாப்பிள்ளை அழைப்பை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த ஊர்வலத்தில் அவர் முகத்தில் தென்பட்ட சுயவீக்க பெருமித உணர்ச்சிதான் அவரின் ஒரே உண்மையான உணர்ச்சி. அவர் ஆங்கிலம் பேசினாலும், இந்தியில் போலோன்னாலும், தெலுங்கில் செப்பினாலும், மலையாளத்தில் சம்சாரிச்சாலும், அவை வரலாறு. கன்னியாகுமாரியில் வண்ண மணல் பாக்கெட்டுக்களை விற்கும் சிறுவர்கள் இந்தியாவின் எல்லா மொழிகளையும் பிளந்து கட்டினாலும் அவர்கள்கூட அம்மாவுடன் போட்டிபோட முடியாது.

எஸ்.எஸ்.சந்திரன் என்ற சலிப்பூட்டும் நகைச்சுவை நடிகர் கருணாநிதியைக் கேவலமாக, வக்கிரமாக பேசும் போது அம்மா குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார். அதனாலேயே இது போன்ற அனாமதேயங்கள் தலைவியின் கடைக்கண்பார்வை பட்டு எம்.பியாகவோ, மந்திரியாகவோ எழுந்தருளும். காசுக்கு வழியில்லாத கடைமட்டத் தொண்டன் கூட கடன்வாங்கி தலைவியின் கட்வுட் வைபோகத்தை கலக்கலாக செய்வான். ஒருவேளை இது தலைவியன் பார்வைக்கு தென்பட்டு அவனது வாழ்க்கையில் அதிரடி முன்னேற்றங்கள் நிகழலாம். மேடையில் அம்மா மட்டும் அமருவதற்கு நாற்காலி போடப்பட்டு, வேட்பாளர் கூப்பிய கைகளுடன் நிற்பது என்ற திருபூஜைக்கு வைகோவும். தா.பாண்டியனும் கூட தப்பவில்லை என்றார்கள் மற்ற பாவங்களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.

அம்மாவின் உற்சவ வலத்திற்கு துணை வரும் தளபதிகளில் அவர் தொண்டு கிழம் எஸ்.டி.எஸ் ஆனாலும் வேனில் தொங்கியவாறு வருவதை தமிழக வரலாறு பதிந்திருக்கிறது. மற்றபடி ‘வீரத்திற்கு’ பெயர்போன தேவர்சாதி பிரபலங்கள்கூட அவரது காலில் சாட்சாங்க நமஸ்காரம் செய்யும் போது முழு தமிழகமுமே அதை பின்பற்றியாக வேண்டுமென்பதையும் வலியுறுத்தத் தேவையில்லை. இப்படி எந்தத் தகுதியுமில்லாமல் அ.தி.மு.க எனும் ஆண்கள் மட்டும் நிறைந்த கொள்ளைக் கூடாரத்தை கட்டி மேய்ப்பதையே சாதனையாக செய்து வரும் தலைவியின் அகராதியில்தான் தன்னையே வெறியுடன் விரும்பும் சுயமோக நார்சிசம் தலைவிரித்தாடியது. இதில் புரட்சித் தலைவியை வேறு யாருடனும் ஒப்பிட முடியாதென்பது அவரது பெருமைக்கு மணிமகுடமாகும்.

வைகோ இந்தப் புகழுரைகளை செயற்கையாக உணர்ச்சிவசப்படச் செய்து வலிய பெறுவதற்கு ஒட்டு மீசையைப் போன்ற அந்த வஸ்துவுக்கு டை அடிப்பதில் துவங்கி உலக வரலாற்றின் துணுக்குகளை சம்பந்தமே இல்லாமல் இழுத்து பேசி அழுது, புலம்பி, ஆர்ப்பாட்டமெல்லாம் செய்வார்.எனினும் இப்போது அவரது கட்சிக்காரர்களே அவரை புகழுவதற்கு தயாராக இல்லை எனும் அவல நிலையில் வைகோ வாடுவதால் அவரை விட்டு விடுவோம்.

செல்வமணியின் புண்ணியத்தில் கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்து, லியாகத் அலிகான் தயவில் ஆர்ப்பாட்டமாய் பேசி நடித்த விஜயகாந்த் பிறகு அதை உண்மை என்று நம்ப ஆரம்பித்து விட்டார். வெள்ளித் திரையின் இமேஜ் தந்த போதையிலேயே தள்ளாடத் துவங்கயிருக்கும் கேப்டன் 2011 சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்திருப்பதால் இவர் எல்லா பலூன்களையும் தூக்கிச் சாப்பிட வாய்ப்பிருக்கிறது. கல்யாண மண்டபத்தையும், கல்லூரியையும் காப்பாற்றுவதற்காக கட்சி ஆரம்பித்து தனது மாயையை மட்டும் வைத்து மக்களிடன் செல்வாக்கை அறுவடை செய்ய நினைக்கும் இந்த கருப்பு எம்.ஜி.ஆரின் லீலைகள் இனிமேல்தான் வெளித்தெரிய ஆரம்பிக்கும்.

தலித்துக்களின் விடிவெள்ளியாக முளைத்திருக்கும் திருமாவளவன் தேர்தல் அரசியலில் கரைவதற்கு முன்னர் அடங்க மறு, அத்துமீறு, புலி, சிறுத்தை என்றெல்லாம் அறியப்பட்டிருந்த பிம்பமே போதுமானதாக இருந்தது. இதற்காகவே மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, சிறுத்தையுடன் போட்டோஷாப்பின் தயவில் தாய்மண்ணின் அட்டை டூ அட்டையில் தேவனின் நற்செய்தி உபதேசியார் போல எழுந்தருளும் திருமாவை தென்னாட்டின் அம்பேத்கார், தமிழ்நாட்டின் சே குவேரா (உபயம்- பா.ஜ.கவின் தமிழிசை சௌந்தர்ராஜன்) என்றெல்லாம் ஜொள்ளுவிடப்படும் போது அதையே கேட்டு கேட்டு அவரும் அதுவாகவே மாறிப் போனார். உண்மையில் இந்த சிறுத்தை முன்பு மூப்பனாரை புரட்சித் தலைவராகவும், தற்போது தங்கபாலுவை காந்தியாகவும் எடுத்துரைத்து வாழ்கிறது. சிறுத்தையின் சத்தம் அதிகம் கேட்பதற்கேற்ப அது பூனையாக மாறி வருகிறது. இருந்தாலும் இந்தப் பூனைக்கு சென்னை கே.கே நகரில் நாளொன்றுக்கு மூன்று கட்டவுட் வைத்து பூஜை நடப்பதற்கு ஒன்றும் குறைவில்லை.

தமிழக காங்கிரசின் தலைவர்களை எடுத்துக் கொண்டால் இப்படியெல்லாம் அவர்களுக்கு நடக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் அதற்கான முயற்சிகளுக்குக்கூட அவர்கள் தயாராக இல்லை. எல்லாம் ஓசியில் பெற்று வயிறு வளர்த்த கூட்டமல்லவா இதையும் யாராவது ஒரு இளித்தவாயன் தானமளித்தால் அதையும் வாங்கிச் சுருட்டிக் கொள்ள காத்திருக்கும் காக்கைகள் கூட்டமது. வேட்டியை உருவி கோஷ்டி சண்டை போடுவதற்கே நேரம் சரியாக இருக்கும் போது இந்த மின்வித்தைகளுக்கெல்லாம் அவர்கள் தயாரில்லை.

இப்படிப்பட்ட சோம்பேறிக் காக்கைகள் தும்மினாலும், துவண்டாலும் தவறாமல் உச்சரிப்பது அன்னை சோனியாவின் திருநாமத்தை. கக்கா போவதற்கும், குறட்டை விடுவதற்கும் கூட அன்னையின் அனுமதியை எதிர்பார்த்திருப்பதாக ஆயிரம் வாட்ஸ் சவுண்ட் ஸ்பீக்கரில் டிடி.எஸ் எபெக்டில் பேசிப்பேசியே அந்த அன்னைக்கு அப்படி ஒரு மனப்பிராந்தி உருவாகிவிட்டது. அதன்படி முழு இந்தியாவும் அந்த இத்தாலியின் மகளுக்காக காத்திருப்பதாக சோனியா காந்தியும் நிச்சயமாக நம்புகிறார். அதனால்தான் போனால் போகிறெதென மன்மோகன்சிங் போன்ற முழு அடிமைகளிடம் ஆட்சியை ஒப்படைத்தாலும் அன்னையின் மகிமை குறைந்தபாடில்லை. இப்போது இந்த மகிமை அன்னையின் தவப்புதல்வன் ராகுல் காந்திக்கு திட்டமிட்ட வகையில் 2014 தேர்தலில் அவர்தான் பிரதமரென்ற இலக்குடன் காதைப் பிளக்கும் சப்தத்துடன் பரப்பப்படுகிறது.

இங்கிலாந்தில் கொலம்பியக் காதலியுடன் ஊரைச் சுற்றிய இந்த மேட்டுக்குடிக் குலக்கொழுந்து இன்று கிராமங்களுக்குச் செல்வதும், கயிற்றுக்கட்டிலில் தூங்கியதும், வறண்டுபோன ரொட்டிகளை சாப்பிட்டதும் மாபெரும் தியாகமாக, நாட்டு மக்களின் முன் வைக்கப்படுகிறது. எப்படியும் ஒரு பத்து ராஜீவ்காந்திகள் ஒன்றாகச் சேர்ந்தால் விளையும் அபயாத்தை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

பா.ஜ.கவைப் பொறுத்தவரை சுயமோக பிம்பத்திற்காக மக்கள் பிரச்சினைகள் என்றெல்லாம் மெனக்கெடாமல் சாதி, மத உணர்வை மேலோட்டமாக கிளறிவிட்டு காரியத்தை சாதித்து வந்திருக்கிறார்கள். தற்போது அது மட்டுமே வேலைக்காகாது என்பதால் அத்வானியின் படத்தை வைத்து சில வார்த்தைகளை  கோர்த்து இணையத்தில் எங்கு பார்க்கினும் உலவ விட்டிருக்கிறார்கள். ஆனால் அத்வானிக்கு போட்டியாக மோடி சங்க வானரங்களால் இறக்கி விடப்பட்டிருப்பதால் இந்த தேர்தலில் போண்டியாகவில்லை என்றால் அத்வானி அரசியலில் இருந்து வாஜ்பாயியைப் போல ஒய்வு பெறவேண்டியதுதான். மோடியின் மதவெறியும், பொருளாதார முன்னேற்றமும் இந்தியா முழுவதும் போணியாக விட்டாலும் இந்திபேசும் மாநிலங்களில் எடுபடலாம். அதற்குள்ளேயே மோடியின் முகமூடிகள் குஜராத்தில் இலட்சக்கணக்கில் இறக்கிவிடப்பட்டுள்ளன. சுயமோக இலட்சணத்தில் பாசிஸ்ட்டுகளை மற்றவர்கள் விஞ்சுவது சிரமம்.

போலிக் கம்யூனிஸ்ட்டுகளுக்கும் இந்த சுயமோகத்தில் வெறி இருந்தாலும் கேவலம் கேப்டன், மற்றும் புரட்சித் தலைவிக்கு இருக்கும் சாமர்த்தியத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. அதனால்தான் இராம.நாராயணன் என்ற அம்மன் புகழ் இயக்குநர் தனது படத்தில் செங்கொடியையோ, அரிவாள் சுத்தியலையோ, சிவப்பாடையையோ காட்டினால் உடனே அந்த படத்திற்கு விழா எடுத்து தங்களது இமேஜைக் கூட்டுவார்கள். மற்றபடி பொதுக்கூட்டத்தில் பேசும் திறனால் இருக்கும் கூட்டத்தை கலைத்துவிடும் ஆற்றல் பெற்ற போலிகளுக்கு பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்டும் வீக்கு.

சுயமோக நார்சிசம் என்ற நோய் குறிப்பாகத் தமிழகத்தில்தான் அதிகம். இதில் தி.மு.கவின் அலங்காரப் பேச்சுக்கள், அர்த்தமற்ற வருணணைகள், காமடியான பட்டங்கள் உருவாக்கியிருக்கும் தொற்று நோய் அபாயகரமானது. இதன் தோற்றுவாய் தமிழ் சினிமாவாக இருப்பதும் மற்றொரு விபத்து. ஒரிரு படங்கள் வெற்றிபெற்று விட்டால் அந்த புதிய இயக்குநர்கள் டிஸ்கஷன் அறையின் விரிக்கப்பட்ட மெத்தையில் மூலவரைப் போல அமர்ந்து அடிமைகளைப் போல அமர்ந்திருக்கும் உதவி இயக்குநர்களிடம் அறிவே இல்லாமல் பேசுவதும் அதை உலகமே உண்மையாக ஏற்றுக் கொள்வதாக நம்புவதும், அதை வழிமொழிவது போல உதவி இயக்குநர்கள் வேறுவழியின்றி சிங்கி அடிப்பதும், வாய்ப்பு கிடைத்தால் அந்த இயக்குநர்களிடன் பேசிப் பாருங்கள், அவர் உங்களை பேசவே விடமாட்டார். இதனால்தான் அடுத்த படங்களுக்கான சரக்கை அவர் விரைவிலேயே இழந்து போவதும், பழைய பெருமையை வைத்து மிச்சமிருக்கும் காலத்தை ஓட்ட நினைப்பதற்கும் பலரை எடுத்துக் காட்டலாம்.
இதிலிருந்துதான் மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது என்பது அறவே இல்லாமல், தங்களை மீட்பர்களாக அவதாரங்களாக கருதிக் கொள்ளும் தற்புகழ்ச்சி நோய் பிறக்கிறது.

தமிழகத்தில் இந்த நோய் முற்றுவதற்கு சினிமாவும், ஓட்டுப் பொறுக்கி அரசியிலும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களைப் போல கச்சிதமாக ஒன்றுக்கொன்று உதவி சராசரித் தமிழனை அறிவேயில்லாமல், மேலோட்டமான உணர்ச்சியில் மூழ்கவைத்து கேப்டன்களையும், தமிழினத் தலைவர்களையும், தளபதிகளையும், அஞ்சாநெஞ்சன்களையும், புரட்சித் தலைவிகளையும் பன்றி போட்ட குட்டிகளைப் போல அளித்துவருகிறது. ஆகவே இந்த நார்சிச நோய் என்பது தமிழர்களின் ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது. சிங்கங்களைப் போல தோற்றம் தரும் இந்த எலிகளின் அலங்காரம் கலைக்கப்படும் போதுதான் அந்த ஆரோக்கியம் மீண்டுவரும். அதுவரை அந்த சிங்கங்களின்…இல்லை எலிகளின் உறுமலிலிருந்து நமக்கு விடுதலையில்லை.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

மே தினத்தில் கனவுகளுடன் வினவு !

3

leninஅன்பார்ந்த நண்பர்களே,

அடி மனதின் ஆழத்தில் நனவாக நடந்தேற முடியாத ஆசைகளுடன் புதையுண்டு அன்றைய தினத்தை முடித்துக் கொண்டு நித்திரை கொள்ளும் மனம், அடுத்த நாளின் உயிர்த்தெழலுக்காக அந்த ஆசைகளை கனவுலகில் நிஜம் போல நிகழ்த்தி ஆசுவாசப் படுத்தும். அப்படித்தான் போதாமைகளுடனும், நம்பிக்கையற்றும், சலித்துப் போன விரக்திகளுடனும் கடந்து செல்லும் நாட்களில் கனவுகள் கனவாகவே நமத்துப் போகின்றன.

2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் பதினேழாம் தேதி வினவுத் தளத்தை ஆரம்பிக்கும் போது எங்களுக்கு பெரிய ஆசைகள் எதுவுமில்லை. இணைய உலகில் சமூகத்தின் ஒரு சிறிய பிரிவில் எமது கருத்துக்களை வாசகருடன் நெருக்கமாக பகிர்ந்து கொள்வதைத் தாண்டி வேறு திட்டம் இல்லை. ஆயினும் நாட்படச் சென்ற பதிவுகளில் பல, அரசியல் தொடங்கி பண்பாடு, சமூகம் வரை அனைத்தும் கூர்மையாக உடனுக்குடன் எழுதப்பட்டு, படிப்பவர்களின் சுய அனுபவத்தில் புரட்சிகர அரசியலை நம்பிக்கையுடனும், நெருக்கமாகவும் முன்வைத்ததன. விவாதத்துடன் பங்கேற்ற நண்பர்களின் எண்ணிக்கை வலைப்பூ என்ற வரம்பை கடந்து சென்றது. நாங்கள் அவ்வளவாக எதிர்பார்த்திராத இந்த உற்சாக வரவேற்பு வலைப்பூ எனும் பகுதிநேர, தனிப்பட்ட விருப்பத்தில் எழுதும் தன்மையை எங்களுக்கே தெரியாமல் மாற்றியமைத்து, முழுநேரமாக ஒரு செய்திப் பத்திரிகைக்குரிய பரப்பில், சமூகத்தை அடியோடு மாற்றியமைக்கும் நோக்கில், கண்ணோட்டத்தை தோழமையோடு பகிர்ந்து கொள்ளும் வகையில் எழுதுவதாக மாறிப் போனோம்.

வாசகர்கள் செப்பனிட்டு, பதம்பார்த்து, அங்கீகரித்து, கற்றுத்தந்த இந்தப் பாதையில் தீர்மானகரமாக பயணம் செய்யும் நோக்கில்தான் நாங்களும் கனவுகளைக் கண்டடைந்தோம். இந்தக் கனவுகள் எல்லாம் இனிய நினைவுகளின் இணைப்பில் மலர்ந்தவையல்ல. ஈழத்தின் துயரக் குரலிலிருந்தும், உலகமயத்தின் பெயரில் சுரண்டலும், நெருக்கடியும் இந்திய உழைக்கும் மக்களின் தலையில் இடியாய் இறங்கியிருக்கும் தருணத்திலிருந்தும், தமிழகத்தின் அரசியலை வணிக நோக்கில் இலாபம் பார்க்கும் தொழில் போல மாற்றியமைத்திருக்கும் அரசியல்வாதிகளின் இரைச்சலிலிருந்து விடுபடும் கடினமான கடமையிலிருந்தும், பல்வேறு காரணங்களால் வாழ்க்கையைப் பல தேசங்களில் சிக்க வைத்திருக்கும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் சிந்தனையை இணைக்க முடியுமா என்ற ஆசையிலிருந்தும் இந்தக் கனவுகள் மலர ஆரம்பித்தன.

அப்படித்தான் கருத்துப்படம், ஒளிப்படம், போராட்டச்செய்திகள், பதிவுலகில் பெயர் பெற்ற எழுத்தாளர் நண்பர்களின் எழுத்துக்களெல்லாம் வினவில் பூக்க ஆரம்பித்தன. ஒரு வகையில் சொன்னால் வினவின் பாதையை வினவே தெரிவு செய்து கொண்டது. இந்தப் பாதையில் அது கோரும் கடமையை ஆற்ற விரும்பும் நாங்களும், அதற்கு கைகோர்க்கும் நீங்களும் இணைந்து பயணம் செல்கிறோம். இந்தப் பாதை இன்னும் விரிந்து பரந்து செல்லும் போது நாங்களும் அதற்காக தயாராக வேண்டும் என்பதுதான் எங்களுக்குரிய சிக்கல். இப்போது கனவே எங்களை மகிழ்ச்சியாக அச்சுறுத்துகிறது. எனினும் நீங்களும் இந்த இன்பச்சுமையை சுமந்து கை கோர்ப்பீர்கள் என்பதால் இந்தப் பாதையில் நாங்கள் தனியாக செல்லவில்லை.

மனித குலம் தனக்குள் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்ளும் அருகதையைப் பெற்றிருக்கும் ஓரிரு தினங்களில் மே தினமே முதலிடத்தைப் பெற்றிருக்கின்றது. அன்றாட வாழ்க்கையின் மகிழ்ச்சியை பறித்துக் கொண்டு துன்பத்தையே முடிவேயில்லாத அமத சுரபியாக அள்ளி வழங்கியிருக்கும் இந்த சமூக அமைப்பின் விசித்திரமான இயக்கத்தை தொழிலாளி வர்க்கத்திற்கு கற்றுத் தந்த நாள் மே நாள். தொழிலாளி வர்க்கம் எவ்வளவு ஆழமாக இந்த விதியை தன் சொந்த அனுபவத்தில் கற்றுக் கொள்கிறதோ அவ்வளவு சீக்கிரத்தில் மானிட குலம் தன் துயரங்களிலிருந்து விடுதலை அடையும். உலகமயத்தின் விஷக் கொடுக்குகளிலில் சிக்கி வதைபடும் பெரும்பான்மை மக்களின் நோக்கில் பார்த்தால் இன்றைக்கு மே தினம் நிச்சயமாக கொண்டாட்ட தினமாக இல்லை. மாறாக போராட்டத்தை பற்றியெழும் அவசியத்தை உழைக்கும் மக்களுக்கு முன்னிலும் அதிகமாய் உணர்த்தும் விரிந்த பொருளினை மே தினம் கொண்டிருக்கிறது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க, புதிய வரலாற்றை கட்டியமைக்கப் போகின்ற மே தினத்தில் வினவு புதிய வசதிகள், வடிவமைப்பில் உங்களைச் சந்திக்கிறது. இதன் தொழில் நுட்ப பணிகளுக்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காகவே இரண்டு வாரங்களாக புதிய இடுகைகள் வெளியிட இயலவில்லை. அதே நேரம் மே தினத்திற்குள் இந்த வேலை கைகூடுமா என்ற நிச்சயமின்மையால் இதை முன்கூட்டியே அறிவிக்கவும் இல்லை. வினவு.காமின் வேலைகளை மனமுவந்து எடுத்துக் கொண்டு நிறைவேற்றிக் கொடுத்த நண்பர் ரவிசங்கர் அவர்களுக்கு எமது நன்றிகள். புதிய வினவின் வசதிகளுக்கேற்ப உங்களின் பங்கேற்பும் அதிகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் இந்த இரண்டாம் பயணத்தை ஆரம்பிக்கிறோம். இனி வழக்கம் போல தேவைக்கேற்ற இடுகைகள் மற்ற பகுதிகள் தொடர்ந்து வரும்.

உலகத் தமிழ் மக்களுக்கு வினவு ஒரு நம்பகமான தமிழ்ப் பத்திரிகையாக மட்டுமல்ல, சமூக அநீதிகளின் பால் வெறுப்புற்று சோர்வுற்று படுத்திருக்கும் இதயங்களை வருடி உலுக்கி நம்பிக்கையை விதைக்கும் தோழனாகவும் செயல்படும்.

அனைவருக்கும் மே தின வாழத்துக்கள் !

தோழமையுடன்
வினவு

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சில  தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மே 1 முதல் 8 தேதி வரை இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் அழிந்துவிட்டன. கூடிய விரைவில் அவற்றை மீட்க முயல்கிறோம். இனிமேல் வரும் பின்னூட்டங்களுக்கு பிரச்சினையில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம்.


மூன்றாவது அணி: போலி கம்யூனிஸ்டுகளின் பதவிப் பித்து !

wrap

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், கொள்கைக்கான கூட்டணி என்பதெல்லாம் காலாவதியாகி, இத்தனை தொகுதிகள் கொடுத்தால் இந்தக் கூட்டணி; இல்லையேல் அந்தக் கூட்டணி என்பதாக ஓட்டுக் கட்சிகளின் பிழைப்புவாதம் நாடெங்கும் நாறுகிறது. கூட்டணிக் குழப்பமே நாட்டின் மையமான அரசியலாக மாற்றப்பட்டு, கடந்த ஐந்தாண்டுகளில் இக்கட்சிகளும் ஆட்சிகளும் அடித்த கொள்ளைகள், அடக்குமுறைகள், துரோகங்கள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு வருகின்றன.

ஈழத் தமிழ் மக்கள்  மீது சிங்களஇந்திய அரசுகள் நடத்திவரும் கொடூரமான போரை எதிர்த்து சவடால் அடித்துவந்த திருமாவளவன் 2 சீட்டுக்காக கருணாநிதியிடம் பம்மிப் பதுங்கிவிட்டார். மருத்துவர் அண்ணன் ராமதாசு, அன்புச் சகோதரி பாசிச ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து கிடக்கிறார். தமிழினவாதக் குழுக்களோ, காங்கிரசு  துரோகிகளை தேர்தலில் வீழ்த்துவது என்ற பெயரில் பாசிச ஜெயா, பா.ஜ.க.வுக்கு மறைமுகமாகச் சேவை செய்யக் கிளம்பிவிட்டனர். இப்பிழைப்புவாதிகளின் துரோகங்கள் மூடிமறைக்கப்பட்டு, ஈழவிவகாரம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஓட்டுச்சீட்டு சந்தர்ப்பவாதக் கூட்டணியை தமிழகத்தின் மையமான அரசியலாக்கப்பட்டு வருகிறது.

காங்கிரசும், பா.ஜ.கவும் கடந்த தேர்தலில் வென்ற தொகுதிகளை மீண்டும் கைப்பற்ற முடியுமா என்பதே கேள்விக்குறியாகி விட்டது. தமிழகத்தில் முன்பு காங்கிரசு  தி.மு.க. கூட்டணியிலிருந்த பச்சோந்தி ராமதாசின் பா.ம.க.வும் இடதுவலது போலி கம்யூனிஸ்டுகளும் கூட்டணியிலிருந்து வெளியேறி ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ளனர். ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவியின் கட்சி காங்கிரசின் வாக்கு வங்கிகளைச் சிதறடித்து விடும் என்று கூறப்படுகிறது. உ.பி.யில் முலயம்சிங், பீகாரில் லல்லுபிரசாத் யாதவ்  ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் காங்கிரசுக்கு அற்பமான இடங்களை மட்டுமே ஒதுக்கியுள்ளனர். மகாராஷ்டிராவில், சரத்பவார் கட்சியும் காங்கிரசும் கூட்டணி கட்டிக் கொண்டுள்ள போதிலும், இன்னமும் தொகுதிப் பங்கீட்டில் கழுத்தறுப்புகள் நீடிக்கின்றன. இதேபோல, மே.வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் காங்கிரசு கட்சி கூட்டணி கட்டிக் கொண்டுள்ள போதிலும், தொகுதிப் பங்கீட்டில் நாய்ச் சண்டை தொடர்கிறது.

காங்கிரசின் நிலைமை இப்படியிருக்க, பா.ஜ.க.வின் நிலைமையோ அதைவிடக் கேவலமாக உள்ளது. பா.ஜ.க.வில் நாற்காலியைப் பிடிப்பதற்கான கோஷ்டிச் சண்டை புழுத்து நாறுவது ஒருபுறமிருக்க, ஒரிசாவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி கட்டிக் கொண்டிருந்த பிஜு ஜனதா தளம் இப்போது பா.ஜ.க.வைக் கை கழுவி விட்டது. மகாராஷ்டிராவில் சிவசேனாவும், பா.ஜ.க.வும் கூட்டணிக் கட்டிக் கொண்டாலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறிகள் நீடிக்கின்றன. பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்களிடம் நிலவும் அதிருப்தி காரணமாகவும், கட்சியில் புழுத்து நாறும் கோஷ்டி சண்டைகள் காரணமாகவும் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் சுருங்கிவிட்டன.

இப்படி பா.ஜ.க.வும் காங்கிரசும் பலவீனப்பட்டுப் போயுள்ள நிலையில், அவற்றுக்கு மாற்று என்ற பெயரில் காங்கிரசு  பா.ஜ.க.வுடன் கூட்டணி சேராத பிழைப்புவாதக் கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியை இடது வலது போலி கம்யூனிஸ்டுகள் உருவாக்கியுள்ளனர். ‘இந்த மூன்றாவது அணியிலுள்ள கட்சிகள் மொத்தத்தில் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால், நாடாளுமன்ற தொங்கு நிலை ஏற்பட்டு, இந்த அணியின் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு உருவாகும் புதிய கூட்டணியால் இந்த அணியே ஆட்சியில் அமரும்’ என்று போலி கம்யூனிஸ்டுகள் வாக்கு சதவீத கணக்கு போடுகின்றனர்.

இதனால் தற்போதைய, தேர்தல் கூட்டணியை விட, தேர்தலுக்குப் பிறகு உருவாகும் கூட்டணிதான் பெருத்த எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது. ஒன்று, போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் ஆதரவோடு காங்கிரசு ஆட்சி அமைவது; இரண்டு, காங்கிரசின் ஆதரவோடு போலி கம்யூனிஸ்டுகள் மற்றும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் ஆட்சி அமைவது; மூன்று, பா.ஜ.க.வுக்குக் கூடுதல் இடங்கள் கிடைத்தால் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகள் அதனுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி கட்டிக் கொண்டு ஆட்சியமைப்பது என்கிற வாய்ப்புகளே நிலவுகின்றன.

இதிலே, பா.ஜ.க., காங்கிரசு மட்டுமின்றி, மூன்றாவது அணியுடனும் கூட்டணி சேராமல், தனி ஆவர்த்தனம் செய்கிறார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதி. அதேசமயம், மூன்றாவது அணியுடன் நட்பும் பாராட்டுகிறார். பா.ஜ.க.  காங்கிரசு அல்லாத மூன்றாவது அணி ஆட்சியமைக்க வாய்ப்பு கிடைத்தால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் தன்னையே பிரதமராக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். அவர் மட்டுமல்ல; போலி கம்யூனிஸ்டுகளும் மூன்றாவது அணியிலுள்ள கட்சிகளின் தலைவர்களும் தேர்தலுக்கப் பிந்தைய இழுபறியில் தாமும் பிரதமராகி விடலாம் என்று நப்பாசையுடன் கணக்கு போடுகின்றனர்.

மூன்றாவது அணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைப்பது கடினம்தான் என்றாலும், ஒருவேளை காங்கிரசு ஆதரவு ஆட்சிமைக்க வாய்ப்பு கிடைத்தால், அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் காங்கிரசுக்கு ஆதரவளிக்க நேர்ந்தால், இடதுசாரிகள் இம்முறை மைய அரசில் பங்கேற்க வேண்டும் என்று உபதேசித்திருக்கிறார், பழம் பெரும் சி.பி.எம். தலைவரான ஜோதிபாசு. இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் எந்த ஆட்சி அமைந்தாலும் அந்த ஆட்சியை வெளியிலிருந்து கண்காணித்து நெறிப்படுத்தும் வேலையை மட்டும் செய்து கொண்டிராமல், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில், அந்த ஆட்சியில் பங்கேற்கும் கூடுதல் பொறுப்பையும் இடதுசாரிகள் ஏற்க வேண்டும் என்றும், 1996இல் நடந்ததைப் போல ‘வரலாற்றுத் தவறை’ச் செய்து விடக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

1996இல் சி.பி.எம். கட்சியின் மூத்த தலைவரும் மே.வங்க முதல்வருமான ஜோதிபாசுவைப் பிரதமராக்க மூன்றாவது அணியின் கட்சிகள் பரிந்துரைத்த போது, சி.பி.எம். கட்சித் தலைமை அதை ஏற்காமல் ‘வரலாற்றுத் தவறு’ என்று சாடி, தடுத்து நிறுத்தி விட்டது. அப்போதைய சி.பி.எம். கட்சித் திட்டத்தில், மாநில அரசில் சி.பி.எம். கட்சி பங்கேற்கலாம் என்ற விதி இருந்தபோதிலும், மைய அரசில் பங்கேற்பது பற்றி குறிப்பாக எந்த விதியும் வகுக்கப்படவில்லை என்று அப்போது கட்சித் தலைமை தனது நிலையை நியாயப்படுத்தியது. பின்னர் 2000வது ஆண்டில் நடந்த கட்சியின் சிறப்புப் பேராயத்தில் இந்த விதி திருத்தப்பட்டு, மைய அரசிலும் பங்கேற்கலாம் என்று மாற்றப்பட்டது. அதைக் காட்டியே இப்போது ஜோதிபாசுவும் மீண்டும் அந்த வரலாற்றுத் தவறைச் செய்து விடக் கூடாது என்று கட்சிக்கு வழிகாட்டுகிறார். இதை வரவேற்று பக்கமேளம் வாசிக்கத் தொடங்கிவிட்டார், சி.பி.எம்.மின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான யெச்சூரி. நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டங்களை நடத்தி புரட்சி செய்யப் போவதாக நாடகமாடி வந்த சி.பி.எம். கட்சி, கடைசியில் மைய அரசிலும் பங்கேற்று நாற்காலி சுகம் தேடும் இழிந்த நிலைக்குச் சென்று விட்டது.

எந்தக் கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்றும், மீண்டும் நாடாளுமன்ற தொங்குநிலைதான் ஏற்படும் என்றும், தேர்தலுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய கூட்டணி உருவாகி நிலையான ஆட்சி அமையும் என்றும் முதலாளித்துவ அரசியல் நோக்கர்களும் போலி கம்யூனிஸ்டுகளும் மதிப்பீடு செய்கின்றனர். ஆனால் தொங்கு நிலையானாலும் தொங்கா நிலையானாலும் முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக மூடுதிரையின் பின்னே, அதிகாரவர்க்க போலீசு இராணுவ நீதித்துறை அடங்கிய அரசு எந்திரம் இருந்து கொண்டு நிரந்தரமாக நிர்வாகத்தை நடத்தி வருகிறது. அதைக்கொண்டு ஆளும் வர்க்கங்கள் சட்ட ரீதியாகத் தமது அடக்குமுறை சுரண்டலை நடத்தி வருகின்றனர். இத்தகைய அரசியலமைப்பு முறை தொடர்வதற்குத் தடையாகி நாடாளுமன்ற அராஜகம் முற்றினால், ஆளும் வர்க்கங்கள் பாசிச அல்லது இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவவும் தயங்காது. உலகெங்கும் முதலாளித்துவ ஜனநாயக ஆட்சியின் தர்க்க ரீதியான தவிர்க்க முடியாத அங்கமாகவே இது தொடர்கிறது. ஆகவே, தொங்கு நிலையில் இருப்பது நாடாளுமன்ற அமைப்பு முறை மட்டுமல்ல; முதலாளித்துவ ஜனநாயக அரசியலமைப்பு முறை முழுவதும்தான்.

இத்தகைய கேடுகெட்ட முதலாளித்துவ நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைத்தான் இப்போலி கம்யூனிஸ்டுகள் முட்டுக் கொடுத்து தூக்கிப் பிடிக்கின்றனர். அழுகி நாறும் முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வுகளைத் தேடி, நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பது, வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவது என்ற பெயரில் காங்கிரசுக்கு வால் பிடித்துச் செல்கின்றனர்.

தேர்தலுக்குப் பின்னரும் வகுப்புவாத சக்திகள் அதிகாரத்துக்கு வருவதைத் தடுப்பது என்ற பெயரில் காங்கிரசை உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ ஆதரிக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்.

இப்@பாலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசுடன் முரண்பட்டு நிற்பதாகக் காட்டிக் கொண்ட அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல; அந்நிய நாடுகளுடனான எந்தவொரு ஒப்பந்தத்தையும் விவாதித்து, வாக்கெடுப்பு நடத்தி நாடாளுமன்ற ஒப்புதல் பெற்ற பிறகுதான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறுவதற்கு இந்திய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது. அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல; உலக வங்கிஐ.எம்.எஃப் மற்றும் உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களும் இப்படித்தான் இந்நிய நாடாளுமன்றத்துக்கு மேலானதாக, அதன் வாக்கெடுப்பு விவாதத்துக்கு வராமலேயே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. அந்நிய நாடுகளுடனான துரோகத்தனமான ஒப்பந்தங்களை எதிர்த்து முறியடிக்கும் அதிகாரமே இல்லாத நாடாளுமன்றம், நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகமிழைத்து வரும் ஓட்டுக் கட்சிகள் இவை பற்றிய உண்மைகளை மக்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகவே தேர்தல் நாடகம் முதல் நம்பிக்கை வாக்கெடுப்பு, வெளிநடப்பு முதலான கூத்துக்கள் நடக்கின்றன.

காங்கிரசுடனான தேர்தல் அரசியல் கூட்டு வைத்துக் கொள்வதற்காகவும் மதச்சார்பின்மை போலி நாடகமாடுவதற்காகவும் மட்டுமே ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. வகுப்புவாத சக்திகளை எதிர்ப்பதாக இப்போலி கம்யூனிஸ்டுகள் பித்தலாட்டம் செய்து வருகின்றனர். மற்றபடி, பாபர் ம‹தி இடிப்பு முதல் சேது சமுத்திர திட்ட எதிர்ப்பு வரை எல்லா விவகாரங்களிலும் இந்துத்துவா கும்பலுடன் சமரசப் போக்கைக் கடைபிடிப்பதே இப்போலி கம்யூனிஸ்டுகளின் கொள்கையாக உள்ளது. மும்பை, குஜராத், ஒரிசா என மதச் சிறுபான்மையினருக்கு எதிராக இந்துவெறி பயங்கரவாதிகள் நடத்திய படுகொலைஅட்டூழியங்களுக்கு எதிராக அறிக்கைகள்அடையாள எதிர்ப்புக்கு மேல் இப்போலிகள் வேறெதுவும் செய்யவில்லை. அதேபோல, மதச்சார்பின்மை நாடகமாடி முஸ்லிம் ஆதரவாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்டு, ஓட்டுக்காக இஸ்லாமிய மதவெறியர்களின் நிலையைச் சந்தர்ப்பவாதமாக ஆதரிக்கும் இப்போலி கம்யூனிஸ்டுகளும் அதன் இடது சாரி அரசும் வங்கதேச மருத்துவரும் எழுத்தாளருமான தஸ்லிமா நசுரீனை நாடு கடத்தின.

தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் எனும் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கத்துக்கு மனிதமுகம் கொடுப்பது என்கிற தோரணையோடு, மாற்றுக் கொள்கை என்ற பெயரில் மறைமுக ஆதரவளிப்பது; மாநிலத்தைத் தொழில்மயமாக்குவது என்ற பெயரில் சிங்கூர், நந்திகிராம விவசாயிகளிடமிருந்து விலைநிலங்களைப் பிடுங்கி அவர்களை ஒடுக்கி, பன்னாட்டு உள்நாட்டுத் தரகு முதலாளிக்குத் தாரை வார்ப்பது; சிறு வணிகர்களை ஒழிக்கும் ரிலையன்ஸ், வால்மார்ட் முதலான ஏகபோகங்களுக்கு நடைபாவாடை விரிப்பது என்று பலநூறு வழிகளில் இப்போலி கம்யூனிஸ்டுகள் மக்கள் விரோதநாட்டு விரோத நடைமுறையைக் கொண்டுள்ளனர். மொத்தத்தில், போலி கம்யூனிஸ்டுகளுக்கும் ஆளும் வர்க்க கூட்டணிக் கட்சிகளுக்குமிடையே அடிப்படையில் வேறுபாடு ஏதுமில்லை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணி, மதச்சார்பற்ற மூன்றாவது அணி, இடது சாரி கூட்டணி என்ற வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டு விரோதமக்கள் விரோத மறுகாலனியாதிக்க கூட்டணி ஒன்று மட்டுமே ஓட்டுக் கட்சிகளிடம் உள்ளது.

இதனால்தான் எந்தவொரு ஓட்டுக் கட்சிக்கும் அவற்றின் கூட்டணிக்கும் ஆதரவு அலை வீசவில்லை. எதிர்ப்பு அலையுமில்லை. ஓட்டுக் கட்சிகளும் முன்னிறுத்திப் பேச முக்கியமான விசயமோ, கொள்கையோ இல்லை.

போலி கம்யூனிஸ்டுகளின் மூன்றாவது அணியில் பங்கேற்கும் கட்சிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தவெறி பா.ஜ.க. வுடன் மாறிமாறி கூட்டுச் சேர்ந்தவைதான். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாகச் சேவை செய்பவைதான். சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக் ஆகியோர் அப்பட்டமான ஏகாதிபத்திய அடியாட்களாகச் செயல்பட்டு, மக்கள் போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கியவர்கள். பாசிச ஜெயலலிதாவோ பார்ப்பன பாசிசத்தையும் தமிழின எதிர்ப்பையும் தனது சித்தாந்தமாகவே கொண்டுள்ளார். மக்களால் வெறுத்தொதுக்கப்படும் இத்தகைய கழிசடை அரசியல் சக்திகளுக்கு மதச்சார்பற்ற முற்போக்கு அலங்காரம் செய்து மீண்டும் இச்சக்திகள் அரசியல் அரங்கில் வேரூன்ற மூன்றாவது அணியின் மூலம் போலி கம்யூனிஸ்டுகள் ஏற்பாடு செய்து தருகின்றனர். அதன் மூலம் இம்மக்கள் விரோத பாசிச சக்திகளை மக்கள் நலனில் அக்கறை கொண்ட முற்போக்கு சக்திகளாகக் காட்டி மக்களை ஏ#த்து வருகின்றனர்.

அனைத்துலக முதலாளித்துவத்தின் பெருந்தோல்விபொருளாதாரச் சரிவின் காரணமாக எழும் நெருக்கடிகளின் சுமைகளை ஏகாதிபத்தியவாதிகள் உழைக்கும் மக்கள் மீது சுமத்திவருவதை எதிர்த்து ஏகாதிபத்திய நாடுகளிலேயே மக்கள் போராட்டங்கள் வெடித்துப் பரவுகின்றன. முதலாளித்துவத்தை எதிர்த்து சோசலிசமே ஒரே தீர்வு என்று மக்கள் போராடி வரும் நிலையில், இந்தியாவிலும் அத்தகைய போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டிய சூழலில், மனித முகம் கொண்ட மாற்றுப் பொருளாதாரத் திட்டம் என்ற பெயரில், ஏகாதிபத்திய மறுகாலனியாக்கத்துக்கு விசுவாசமாக இப்போலி கம்யூனிஸ்டுகள் செயல்பட்டு வருகின்றனர். மைய அரசில் தாமும் பங்கேற்பதன் மூலம், மக்கள் போராட்டங்களைத் திசை திருப்பி நாடாளுமன்றத் தேர்தல் மூலம் இன்றைய முதலாளித்துவ அமைப்பிற்குள்ளேயே தீர்வுகாண முடியும் என பிரமையூட்டி மக்களை மோசடி செய்து வருகின்றனர்.

இப்படி நாடாளுமன்ற மோசடி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையூட்டி, பாசிசபிழைப்புவாத சக்திகளுக்கு முற்போக்கு அலங்காரம் செய்து சந்தர்ப்பவாத கூட்டணி கட்டி மக்களை ஏய்த்து வரும் இப்போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தாமல், மறுகாலனியாக்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவே முடியாது. எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லாத உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சிக்கு”ரப்பர் ஸ்டாம்ப்”பாகச் சீரழிந்து விட்ட நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தில், மறுகாலனியாதிக்கத் தாக்குதலுக்குத் தீர்வு காணவும் முடியாது. போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணித்து, நாடாளுமன்ற அரசியலமைப்பு முறைக்கு வெளியே மக்கள் போராட்டங்களின் வழியே ஓர் அரசியல் புரட்சியைச் சாதிப்பதன் மூலம் மட்டுமே இம் மறுகாலனியாதிக்கத்தை முறியடிக்க முடியும். பதவிப்பித்து கொண்ட இப்போலி கம்யூனிசத் துரோகிகளாகத் திரைகிழித்து தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் முடியும்.
 ________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 09

 ________________________________________________

கொலைகார காங்கிரசடி – குதம்பாய் கொலைகார காங்கிரசடி…

chidambaram shoe congressபடம் நன்றி : நான் 1084

ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே
சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் – ஆனா
சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி!

பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே
புறப்பட்டு வந்தடி குதம்பாய்….
அந்தச் செருப்புக்கு நன்றியடி!

சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட
சிதம்பரம் மூஞ்சிக்கு
சிவகங்கை ஏதுக்கடி குதம்பாய் – காங்கிரசுக்கு
தேர்தல் ஒரு கேடாடி!

செருப்படிபட்டதை வெளியில் சொன்னாக்கா
தண்டிக்க வேணுமாண்டி குதம்பாய் – தமிழின துரோகி
தங்கபாலுதான் மிரட்டுறாண்டி!
இந்த மூஞ்சிக்கு ஏத்த அளவு என்னான்னு
பாத்து வீசுங்கடி குதம்பாய்…. ஈழத்து
செருப்பையும் சேத்துக்கடி!

ஜெர்னைல் சிங் போட்ட செருப்புக்கும் கோவம்
வந்த்து ஏதுக்கடி குதம்பாய் – அந்த
வரலாறை கூறுங்கடி!

பிந்தரன்வாலாவை வளர்த்து விட்டதே
இந்திராகாந்திதாண்டி குதம்பாய்….
இந்திராகாந்திதாண்டி – பின்னே பிந்த்தரன்வாலாவை
பயங்கரவாதின்னு பேயாட்டம் போட்டாளடி
குதம்பாய்…
பொற்கோயிலையே குருதியில் நனச்சாளடி!

சொந்த இனத்தும் பிணங்களைப் பார்த்து
இரத்தம் கொதிச்சானடி குதம்பாய் – அந்தச் சீக்கியன்
இந்திரா கதையை முடிச்சானடி!

இந்திரா கொலைக்கு பழிக்கு பழிவாங்க
பகையை வளர்த்தானடி குதம்பாய் – காங்கிரசு
பச்சைப் படுகொலை செய்தானடி!

ஆயிரக்கணக்குல சீக்கிய மக்களை
வெட்டிப் போட்டானடி குதம்பாய்… கொளுத்தி
வெறியாட்டம் போட்டானடி…
ஒத்தப் பொணத்துக்கு மொத்த இனமுன்னு
கத்தித் தீர்த்தானடி குதம்பாய்…. காங்கிரசு
கொலைகார கும்பலடி!

சீக்கியப் பெண்கள் ஆயிரக்கணக்கில்
விதவையர் ஆனாரடி குதம்பாய்….அவர்
வேதனை கொஞ்சமோடி!
பிஞ்சுக் குழந்தையும் தப்பவில்லை சொல்லவே
நெஞ்சு வேகுதடி குதம்பாய் – பலரை
டயரோடு சேர்த்து எரித்தானடி!

பெத்தவயிறு பத்தி எரியுதுன்னு பெண்கள் ராஜீவிடம்
நியாயம் கேட்டாரடி குதம்பாய் நியாயம் கேட்டாரடி!
”ஆலமரம் விழுந்தால் நிலம் அதிரத்தான் செய்யுமென்னு”
ஆணவம் பேசினாண்டி குதம்பாய் – அந்தக் குரூரத்தை
யாரும் மறப்பாரோடி !

சஜ்ஜான் குமாரும் ஜகதீஷ் டைட்லரும் – இதை
முன்னின்று நடத்திய பாவியடி! குதம்பாய் – பயங்கரவாதிகளை பாதுகாப்பது காங்கிரசடி!
ப.சிதம்பரம் வாங்கிய செருப்படி – குதம்பாய்
உண்மையை ஊருக்கு சொல்லுதடி!

சொந்த நாட்டு மக்களையே கண்டம் துண்டமாக
வெட்டுனானே! குதம்பாய் – காங்கிரசு கையாலே
காசுமீரு, வடகிழக்கு மாநிலத்தில்
தினம் காணாப் பிணங்கள் எத்தனையோடி!

ஈழம் எரியுது, தமிழ் இனம் கருகுது
காரணம் இந்திய அரசுதாண்டி – குதம்பாய் இந்தக்
காங்கிரசு அரசுதாண்டி

உன்காலுக்கு ஒரு செருப்பு இல்லேன்னாலும்
கடன் வாங்கியாவது வீசுங்கடி குதம்பாய்
தமிழின சொரணையைக் காட்டுங்கடி!

– துரை.சண்முகம்.

கருத்துப்படம்: ஈழத்துக்கு திரு.மு.க தலைமையில் இறுதி ஊர்வலம்!

22

karunanithi-perani-cartoon(படத்தை பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கவும்)

ஈழத்தில் ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பி விடக்கூடாதென ராஜபக்ஷேவின் சிங்கள ராணுவம் மக்களை கொன்று குவித்து வருகிறது. அன்றாடம் வரும் உயிரிழப்புக்களின் சோகம் தமிழகத்தில் வெறும் புள்ளிவிவரங்களாய் நீர்த்து போகிறது. அ.தி.மு.க ஆதரவில் நெடுமாறனின் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு பேரவையும், தி.மு.க ஆதரவு நல உரிமைப் பேரவையும் மாறி மாறி தேர்தல் காலத்தில் பத்தோடு ஒன்றாக ஈழம் குறித்த அழுகுணிக் குரலை ஒலிக்கின்றன.

குஜராத்தில் முசுலீம்களை இனப்படுகொலை செய்த பா.ஜ.கவையும், ஈழப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரிக்கும் அ.தி.மு.கவின் ச்சிகலா நடராஜனையும் அருகில் வைத்துக் கொண்டு நெடுமாறன் ஈழத்திற்காக கண்ணீர் விடுகிறார். அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க, சி.பி.ஐ முதலான கட்சிகளெல்லாம் மத்திய அரசும், கருணாநிதியும் ஒன்றும் செய்வில்லை என லாவணி பாடுகிறார்கள். இதே மத்திய அரசில் இவ்வளவு நாளும் பொறுக்கித் தின்ற ராமதாஸ் இதைச் சொல்வதற்காக கூச்சப்படுவதில்லை.

போயஸ் தோட்டத்தில் புரட்சித் தலைவியின் மூன்று நிமிட தரிசனத்திற்காக மூன்று மணிநேரம் காத்திருந்து

நாலு சீட்டு கூட தரமறுக்கும் அம்மாவிடம் ராப்பிச்சைக்காரனைப் போல மன்றாடும் இந்த வீரர் ஈழத்தில் பிரபாகரனுக்கு ஏதாவது நடந்தால் தமிழகத்தில் இரத்த ஆறு ஓடுமென சவடால் அடிக்கிறார். கோமாளிகள் வீர வசனம் பேசினால் எப்படி?

செவ்வாய்க்கிழமை நெடுமாறன் பேரவை ஆர்ப்பாட்டம் செய்ததற்காக தாங்களும் கணக்குக் காட்ட வியாழக்கிழமை தி.மு.க ஈழத்தில் போரை நிறுத்துமாறு ஊர்வலம் நடத்துகிறது. போரை நடத்துபவர்களே அதை நிறுத்தச் சொன்னால் அதன் பொருளென்ன? தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈழத்தில் ஏதாவது நடந்து மக்களின் உணர்வு தனக்கு எதிராக திரும்பக்கூடாது என்பதற்காத்தான் இந்த நாடக ஊர்வலம்.

ராமேஸ்வரத்தின் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கப்பற்படையால் சுடப்படுகிறார்கள். அதைக் கூட தடுக்க வக்கற்ற கருணாநிதி ஈழத்திற்காக நாடகமாடுவதைத் தவிர வேறு என்ன செய்யமுடியும்? விஷவாயுக் குண்டுவீச்சால் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் கரிக்கட்டையாக எரிந்து கிடக்க இந்த குண்டை அளித்தும், படையை வழிநடத்தியும் உதவி செய்வது இந்திய அரசுதான் என்பது இப்போது உலக நாடுகள் எல்லாமும் அறிந்த விசயம். அத்தகைய அரசில் அமைச்சர்களாய் பங்கேற்று ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க யாரை எதிர்ப்பதாக ஏய்க்கிறது?

அழகரி என்ற ரவுடி தனதுமகன் என்ற ஒரே காரணத்திற்காக எம்.பியாக்கி பார்க்கத் துடிக்கும் கருணாநிதிக்கு ஈழத்தின் துயரம் என்னவென்று தெரியுமா? எம். பிக்கள் ராஜீனாமா, மத்திய அரசுக்கு தந்தி, மனித்ச் சங்கிலி, உண்ணாவிரதம், எல்லாம் முடிந்து விட்டது. மிச்சமிருப்பது கோவணம் கட்டிய ஊர்வலம்தான. அதுதான் சுயமரியாதை அற்ற இந்த ஜன்மங்களுக்கு சரியாகப் பொருந்தும்.

தமிழகத்தில் எவ்வளவு தீவிரமாக ஈழம்பற்றிய உணர்ச்சி மேலோங்கியதோ அவ்வளவு சீக்கிரம் வற்றிப் போவதற்கு இந்த துரோகிகளே முழு முதல் காரணம். இதைத் தாண்டி தமிழக மக்களிடமும், இளைஞர்களிடமும் ஈழத்தில் நல்லது ஏதும் நடக்காதா, நாம் ஏதாவது செய்யவேண்டாமா என்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால் அதை ஓட்டுப் பொறுக்குவதற்கான முகாந்திரமாக எல்லாக் கட்சிகளும் மாற்றிவிட்டன.

தி.மு.க நடத்தும் ஊர்வலத்தில் ஈழத்தில் குண்டு போட்டு தமிழனைக் கொல்லும் காங்கிரசு கட்சியும் கலந்து கொள்கிறதாம். இவ்வளவு நாளும் இந்தக் காங்கிரசை எதிரி என பிலாக்கணம் வைத்த திருமாவளவனும் இந்த ஊர்வலத்தில் மானங்கெட்டு கலந்து கொள்கிறாராம். இவர்களையெல்லாம் நம்பி ஏதாவது செய்வார்கள் என எண்ணிய ஈழத்தமிழ் மக்கள் இப்போதாவது  இவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று உலகமெங்கும் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்களால் செய்ய முயன்ற அனைத்தையும் செய்து போராடுகிறார்கள். அந்தப் போராட்டங்களோடு தமிழகமக்களும், மாணவர்களும் இந்த ஓட்டுக் கட்சிகளைப் புறந்தள்ளி தனியாக, எழுச்சியான போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும். அந்தப் போராட்டம் இந்திய அரசின் கழுத்தைப் பிடித்து உலுக்குவதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் ஈழத்தின் இறுதி மூச்சை காப்பாற்ற நாதி இருக்காது.