ரோபோக்கள் வருகை : முறைசாரா வேலைதான் எதிர்கால வேலைகளின் யதார்த்தமா ?

முறைப்படுத்தப்பட்ட தொழில்களே தற்போது முறையற்ற ஒப்பந்தம், அதிக பணி நேரம், குறைந்த கூலி என மாறியுள்ளது. இதனை மேலும் தீவிரப்படுத்த வருகிறது தானியங்கல் முறை.

புதிய தொழில்நுட்பங்களை அனைத்து தொழிலாளர்களுக்கும் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்துவது முதலாளித்துவத்தின் சாத்தியமாகாத விஷயம். கார்ப்பரேட்டுகள் தொழில்நுட்பங்களின் மூலம் சாத்தியமாகும் தானியக்கத்தை தமது லாபத்தை அதிகரிக்க பயன்படுத்துகின்றனர்; மேலும் மேலும் அதிக தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்து, நிச்சயமற்ற எதிர்காலத்துக்குள் தள்ளுகின்றனர்.

இது தொடர்பாக த வயர் இணைய பத்திரிகையில் வெளியான ஆய்வு கட்டுரை
ஒன்றின் சுருக்கமான தமிழாக்கத்தை தருகிறோம்.

*****

இதற்கு என்னதான் தீர்வு? மனிதகுலத்தின் மகத்தான சாதனைகளை பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பயன்படுத்துவதற்கு என்னதான் வழி?

விஸ்டாரா ஏர்லைன்ஸின் பயணிகள் , ‘ரடா’ என்னும் ரோபாட் மூலம் வரவேற்கப்படுவார்கள். ‘ராடா’ , வாடிக்கையாளர் கருத்துக்களைச் சேகரிப்பது , அவர்களது கேள்விகளுக்கு பதில் தருவது, போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்தல் போன்ற சேவைகளைக் கொடுக்க வல்லது.

ராடா ஒரு ‘இந்திய தயாரிப்பாகும் (Made in India). இது டாடா இன்னோவேஷன் மையம் வடிவமைத்தது. அடிப்படை மனித செயல்பாடுகளைச் செய்ய எளிய, விலையுயர்ந்த ரோபோவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது. இது போன்ற புதுமைகள், நிச்சயமாக நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும்.

விஸ்டாரா ஏர்லைன்ஸில் பயணிகளை வரவேற்கும் , ‘ரடா’ என்னும் ரோபாட்.

ஆனால், இவை, குறிப்பாக நுழைவு நிலை, குறைந்த-நடுத்தர வேலைகள் செய்துவரும் பணியாளர்களின் வேலையைப் பறிக்கும். புதிய தனித் திறன் தேவைப்படும் வேலைகளை குறைந்த அளவில் மட்டுமே உருவாக்கும்.

உதாரணமாக, இந்தியாவில், பெரும்பாலான தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் வேலை செய்கின்றனர். பல கோடி தொழிலாளர்கள் இன்னும் பழைய, அடிப்படைத் தொழில்நுட்பங்களிலேயே வேலை செய்கிறார்கள். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் தாக்கம் உலகெங்கிலும் வளர்ந்து வரும் ஒரு சிக்கலாகும். எனினும், உலகளாவிய விளக்கங்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். அவை தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கங்களாலும், உள்ளூர் சமூக-பொருளாதார நிலைமைகளாலும் வடிவமைக்கப்படும்.

நான்காவது தொழில்துறைப் புரட்சியில் (4IR) தொடர்புடைய தொழில்நுட்பங்கள் இந்தியாவின் எதிர்கால உழைப்புச் சந்தையை என்ன செய்யும்?

இந்தத் தொழில்நுட்பங்கள் இப்போது தான் வளர்ந்து வருவதால், அவற்றின் தாக்கம் பற்றிய முழுமையான ஆய்வுகள் தற்போது சாத்தியம் இல்லை. தொழில் துறை, அரசு துறை, குடிமை சமூகம், கல்வியாளர்கள் போன்ற பல தரப்பு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

4IR தொழில்நுட்பங்களை கைக்கொள்வது, நிகர வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் குறைந்தபட்ச தாக்கத்தையே ஏற்படுத்தும் என எமது ஆய்வு கூறுகிறது, குறிப்பாக, இந்தியாவின் பெரும்பாலான தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்படாத துறையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயினும்கூட, தொழில்நுட்பத்தின் தலையீடு, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் சந்தைகளின் இன்றைய நிலையை மேம்படுத்தப் போவதில்லை, இதே நிலையிலேயே இருத்தி வைக்கும். அது சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய அணுகுமுறைகளை கோருகிறது.

4IR தொழில்நுட்பங்கள், முதன்மையாக ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறையிலும், சேவைத் துறையிலும், அதாவது உழைப்பு செலவினமும், உட்கட்டமைப்பு செலவும் அதிகமாகத் தேவைப்படும் துறைகளில் கைக்கொள்ளப்படும்

பெரு மூலதனம் தேவைப்படும் உற்பத்தித் தொழில்கள், 4IR தீர்வுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கும். உதாரணமாக, வாகன உற்பத்தித் துறை, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து தொழிற்துறை ரோபோக்களில் 60%-ஐ வாங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதனால், இந்த உற்பத்தித் துறைகளில் தொழிலாளர் எண்ணிக்கை ஏற்கனவே கணிசமாகக் குறைந்துவிட்டது.

சேவைத் துறைக்குள்ளேயே, ஒரே மாதிரியான பணிகளைத் தொடர்ந்து செய்ய, 4IR அதிகம் பயன்படும். நிதி, சட்டம், ஐ.டி, பி.பி.ஓ சேவைகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் பயன்பாட்டு வீதம் மிக அதிகமாக இருக்கும்.

Comprising small enterprises, daily wage and self-employed workers, the unorganised sector lacks the financial capital, supporting infrastructure and requisite skills to support the adoption of advanced technologies.

ஐ.டி., பி.பி.ஓ பிரிவுகளில் வேலைவாய்ப்பு ஏற்கனவே குறைந்துள்ளது.
2021-ம் ஆண்டில் இந்தியா வேலைவாய்ப்புகள் 14% வீழ்ச்சியை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் எப்போதுமே பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்கவில்லை. எடுத்துக்காட்டாக, ஐ.டி. துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய போதிலும், அதில் 37 லட்சம் ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 4IR தொழில்நுட்பம் வழங்கும் நிகர வேலைவாய்ப்பு இன்னும் குறைவாகவே இருக்கும்.

ஆனால், இந்தியாவின் தொழிலாளர்களில் 80% க்கும் மேலாக ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், உலகச் சந்தையில் போட்டியிடத் தேவையான 4IR தொழில்நுட்பம் அவர்களுக்கு எட்டாமலே போய்விடும்.

எந்தவொரு குறிப்பிடத்தக்க விதத்திலும் 4IR உடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் தாக்கத்தை, ஒழுங்கமைக்கப்படாத துறைகள் உணர முடியாது என்று எங்கள் ஆய்வு கூறுகிறது.

இந்தியாவின் தொழிலாளர்களில் 80% க்கும் மேலாக ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கூலி மட்டத்துடன் ஒப்பிடும் போது 4IR தொழில்நுட்பங்களின் செலவை பார்க்கும் போது அவை ஒழுங்குபடுத்தப்படாத துறைகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். ஏனெனில், அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் மிக அடிப்படையான, பழைய தொழில்நுட்பங்களையே பயன்படுத்துகின்றன.

அவற்றில் பணி புரியும் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்கள் எந்திரங்களில் அல்லாமல், உடலுழைப்பையே சார்ந்துள்ளனர். சிறிய நிறுவனங்களில், தினசரி ஊதியம் பெறும், அல்லது சுய தொழில் செய்யும் தொழிலாளர்கள், போன்ற ஒழுங்கமைக்கப்படாத துறைகளிலும், மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாளத் தேவையான மூலதனமோ, உள்கட்டமைப்போ இல்லை.

இருப்பினும், எதிர்கால உழைப்பு உலகத்தில் ஒழுங்கமைக்கப்படாத வேலை வாய்ப்பு மேலும் மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே, ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்குள்ளேயே, 68% க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு முறையான ஒப்பந்தமோ, சமூகப் பாதுகாப்போ, பணிப் பாதுகாப்போ இல்லை. எங்களது ஆய்வின் படி, ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளிலேயே, நிலையற்ற வேலை ஒப்பந்தங்கள் அதிகரித்து, அவையும் ஒழுங்கமைக்கப்படாத துறை போலவே செயல்படத் துவங்கும்.

உற்பத்தி துறை, தானியங்கித் தொழில்நுட்பத்துக்கு மாறி உற்பத்தியை அதிகப்படுத்தும்போது, ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். சமீபகால ஆய்வுகள் இது ஏற்கனவே நிலவும் போக்கு என்கின்றன.

ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறையில் 47% ஒப்பந்தத் தொழிலாளர்களே உள்ளனர்.

சேவைகள் துறையிலும் ஒப்பந்த அடிப்படையிலான வேலை அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் தளங்கள், புதிய தகவல்தொடர்பு, தரவு பகிர்வுத் துறை ஆகியவை
வேலைகளைப் பிரித்து, குறைந்த செலவில் முடித்துத் தரும் நாடுகளுக்கு அனுப்புகின்றன.

குறிப்பிட்ட துறை சார்ந்த பொருளாதாரமும், ஒழுங்கமைக்கப்படாத தொழில் முறையிலேயே இயங்குகின்றன. ஓலா, ஊபர் போன்ற வாடகைக் கார்
சேவை வழங்கும் நிறுவனங்களும் சேவைத் துறையின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பும், பணிச்சூழல் பாதுகாப்பும் இன்றி தொடர்ந்து நிச்சயமற்ற நிலையில் இருக்கின்றனர்.

தொழில்மயமான பொருளாதாரங்கள் போலல்லாது, இவ்வகைப் பொருளாதாரங்கள் முறையான வேலைவாய்ப்புகளை முறைசாரா வேலைகளாக (ஒப்பந்தத் தொழில்களாக) மாற்றுகின்றன. உண்மையில், இவ்வகைப் பொருளாதாரம், புதிய சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்குகின்றது என்றாலும், அவை கோரும் தகுதி, திறமை, சமூகப் பாதுகாப்பு கொண்டோர் மட்டுமே ஆதாயமடைகின்றனர்.

ஒழுங்கமைக்கப்படாத வேலை வாய்ப்புகளிலிருந்து வெளியேறி ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் மேலும் சுருங்கும். தானியங்கித் தொழில்நுட்பம், தொழில்நீக்கத்தை துரிதப்படுத்துவதால், இந்தியா உற்பத்தித் துறை வழியிலான முன்னேற்றத்தை பயன்படுத்த இயலாமல் போகும். இந்தியாவின் குறைதிறன் கொண்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது மேலும் கடினமாகிவிடும்.

ஒழுங்கமைக்கப்பட்ட சேவைத் துறையில் உள்ள நுழைவு நிலை வேலைகள், ஒழுங்கமைக்கப்படாத துறையில் உள்ள முறைசாரா வேலைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாகும். ஆனாலும், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு தொழிலாளர்கள் தங்கள் பணிச்சூழலை மாற்ற வேண்டியுள்ளதால், அந்த வழியும் மூடப்படுகிறது. பாரம்பரியமாக, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் கிடைக்கும் நிரந்தர வேலை வாய்ப்பு, வறுமையிலிருந்தும், ஒப்பந்த வேலைகளிலிருந்தும் பாதுகாப்பு அளித்தன. ஆனால் இப்போது, முறையான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து, ஒப்பந்த வேலைவாய்ப்பு அதிகரிப்பது ஒரே நேரத்தில் நிகழ்கின்றது.

அதிகரித்து வரும் முறைசாரா வேலை நிலைமைகளால் ஏற்படும் சமூக விளைவுகளைக் கையாள விரைவான தீர்வுகள் காண்பது அவசியம்.
முறைசாராத தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குவதற்கு புதிய தளங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதே சமயம், வேலைச் சந்தைக்குள் நுழையும் இளைஞர்களுக்குப், புதிய தொழில்நுட்பக் கல்வியும், அதைத் தொடர்ந்து திறன் மேம்பாடும் வழங்கக் கணிசமான முதலீடுகள் தேவைப்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, உழைப்பாளர்கள் குறித்த பழைய சவால்கள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கொண்டு வரும் புதிய சவால்களைவிட மிக அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டியவை. இல்லையெனில், புதிய தொழில்நுட்பத்தைக் கையாளத் தெரிந்து பயனடைவோருக்கும், குறைந்தபட்ச வாழ் நிலையைத் தக்க வைக்கப் போராடுவோருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்.

– ஊர்வஷி அனேஜா

This article is based on Tandem Research’s report, Emerging Technologies & the Future of Work in India, supported by the International Labour Organisation. Urvashi Aneja is Founding Director, Tandem Research and Associate Fellow, Chatham House. @tandem_research; @urvashi_aneja

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க