காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக மதுரை வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !
வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை
  • 370 & Art.35-A-ன் கீழான ஜம்மு-காஷ்மீர் மாநில சிறப்புரிமை பறிப்புஅரசியல் சட்டத்திற்கு விரோதமானதுகூட்டாட்சி முறைக்கு எதிரானது ! உடனே ரத்து செய் !
  • கருத்துரிமை, அமைதியாகக் கூடுதல், இணைய – தகவல் தொடர்பு உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு உடனே வழங்கு !
  • அனைத்துக் கட்சிகள், ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகளை ஜம்மு – காஷ்மீர் செல்ல அனுமதி !

ந்திய அரசியல் சட்டம் பிரிவு 370 & பிரிவு 35-A-ன் கீழான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்புரிமை, குடியரசுத் தலைவரின் G.S.R.551 (E) (C.O.272) & G.S.R.562 (E) (C.O.273) உத்தரவுகள் & JAMMU AND KASHMIR (REORGANISATION) ACT-2019-ன் படி நீக்கப்பட்டிருக்கிறது. பாஜக அரசின் இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட உச்சபட்ச அநீதி. ஜம்மு-காஷ்மீர் அரசியல் சட்டம் & இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான கூட்டாட்சி முறைக்கு எதிரானது.

Madurai J&K Press Statement (2)

ஜம்மு-காஷ்மீர் அரசியல் சட்ட வரலாறு :

ஜம்மு-காஷ்மீர் மாநிலம்  80% இசுலாமியர்கள், 20% இந்து-பண்டிட்கள், புத்த, சீக்கிய மதத்தினர் உள்ளிட்டோரைக் கொண்டது.16.03.1846-ல் பிரிட்டிஷ் அரசின் கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் ஜம்மு காஷ்மீரின் டோக்ரா – இந்து வம்சாவளி மன்னர் குலாப் சிங் இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி காஷ்மீர் மீதான உரிமை மன்னர் மற்றும் மன்னரின் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே. 1947 வரை டோக்ரா வம்ச ஆட்சியே நடக்கிறது.

1947-ம் ஆண்டு சமஸ்தானங்கள் யாருடனும் சேரலாம் என் மவுண்ட் பேட்டன் அறிவிக்கிறார்.காஷ்மீர் மன்னர் ஹரிசிங் “காஷ்மீர் தனி நாடாக இருக்க விரும்புகிறது” என்கிறார். 1947, அக்டோபர் 22-ல் பாகிஸ்தான் ஆதரவு பழங்குடி படைகள் காஷ்மீரை ஆக்கிரமிக்கவே, 1947, அக்டோபர். 26-ல்  இந்தியா-காஷ்மீர்  இணைப்பு ஒப்பந்தம்(INSTRUMENT OF ACCESSION)  கையெழுத்தாகிறது.

ஒப்பந்தப்படி, இந்திய அரசு – காஷ்மீரின் “பாதுகாப்பு, வெளிவிவகாரம், தகவல் தொடர்பு குறித்து” சட்டம் இயற்றலாம் – மற்றவை தொடர்பாக காஷ்மீர் மன்னர் முடிவெடுப்பார். இதற்கிடையே மன்னராட்சிக்கு எதிராக சுதந்திர காஷ்மீருக்கான போராட்டமும் சேக் அப்துல்லா தலைமையில் நடந்து வருகிறது.

மே.15, 16 -1949 அன்று வல்லபாய் பட்டேல் வீட்டில் நேரு – சேக் அப்துல்லா இடையே காஷ்மீரின் “பாதுகாப்பு, வெளிவிவகாரம், தகவல் தொடர்பு தவிர மற்ற விவகாரங்கள் தொடர்பாக  ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபையே முடிவெடுக்கும்” என ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்திய அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு உறுப்பினர், முன்னாள் ஜம்மு-காஷ்மீர் திவான், பிரிவு 370-ஐ எழுதிய தஞ்சாவூரைச் சேர்ந்த கோபால்சாமி அய்யங்கார் அக்டோபர் 17,1949 அன்று இந்திய அரசியல் நிர்ணய சபையில் பேசும்போது “காஷ்மீர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்கலாம் – நேர்மையான, நடுநிலையான பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் – வாக்கெடுப்பில் காஷ்மீர் மக்கள் தனித்துச் செல்வதென முடிவெடுத்தால் இந்திய அரசு காஷ்மீர் மக்கள் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காது” என அறிவிக்கிறார்.

படிக்க:
காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !
♦ ஸ்டெர்லைட் எதிர்ப்பு வழக்கு விசாரணை ! என்ன நடக்கிறது ?

இணைப்பு ஒப்பந்தத்தில் சொல்லப்படாத விசயங்கள், ஜம்மு – காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபை ஒப்புதல் இன்றி-கொண்டு வரப்படாது எனவும் உறுதியளிக்கிறார். அதன்பின்னரே, 1949 அக்டோபர், 17 அன்று, பிரிவு 370 இந்திய அரசியல் சட்டத்தில் சேர்க்கப்படுகிறது. 1951, நவம்பர் 5-ல்  ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு, ஜம்மு-காஷ்மீருக்கென 158 பிரிவுகள் கொண்ட  புதிய அரசியல் சட்டம் உருவாக்கி நிறைவேற்றப்பட்டு நவம்பர் 17, 1956-ல் கலைக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் சிறப்புரிமையா? :

இந்திய அரசியல் சட்டம் பிரிவு 371 நாகலாந்து, அசாம், மிசோரம், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், கோவா – ஹைதராபாத் – கர்நாடகா – மகாராஷ்டிரா – குஜராத்தின் சில பகுதிகளுக்கு சிறப்புரிமை வழங்குகிறது. நாகலாந்து மாநில சட்டமன்ற அனுமதியின்றி, இந்தியப் பாராளுமன்றம் நாகலாந்தின் மதம், பழக்க வழக்கங்கள், சட்ட நிர்வாகம் தொடர்பாகச் சட்டம் இயற்ற முடியாது. இந்திய அரசியல் சட்டம் SCHEDULES – V & VI -ன் படி பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் நிலப் பயன்பாடு தொடர்பாக பழங்குடி மக்களின் தன்னாட்சி குழுக்களே தீர்மானிக்கும் சிறப்புரிமை உள்ளது.

எனவே சிறப்புரிமை என்பது வரலாறு, நிலவியல், மக்கள் வாழ்நிலை, பண்பாடு, இந்தியாவுடன் சமஸ்தானங்கள் இணையும்போது போடப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையிலேயே பார்க்கப்பட வேண்டும். இந்த சிறப்புரிமைகள் இல்லாவிட்டால் பல மாநிலங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணைந்திருக்காது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான குடியரசுத் தலைவரின் G.S.R.551(E)(C.O.272) & G.S.R.562(E)(C.O.273) உத்தரவுகள் AND JAMMU AND KASHMIR (REORGANISATION) ACT-2019 – அரசியல் சட்ட விரோதமானது

1. பிரிவு 370 தொடர்பான குடியரசுத்தலைவர் மற்றும் இந்தியப் பாராளுமன்றத்தின் அதிகாரம் வரம்புடையது. இணைப்பு ஒப்பந்தத்தில் உள்ள  பாதுகாப்பு, வெளிவிவகாரம், தகவல் தொடர்பு தவிர மற்ற விவகாரங்கள் தொடர்பாக இந்தியப் பாராளுமன்றம் சட்டம் இயற்ற காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் ஒப்புதல் அவசியம். பிரிவு 370-ஜ நீக்க ஜம்மு – காஷ்மீர் அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரை அவசியம்.

இதனை மீறி “ஜம்மு – காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை” என்பதற்கு “ஜம்மு – காஷ்மீர் மாநில சட்டப்பேரவை” எனவும், ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை என்பதற்கு – “மாநில கவர்னர்” எனவும் பொருள் கொள்ள வேண்டும் என பிரிவு-367-ல் திருத்தம் செய்திருப்பது முழு அரசியல் சட்ட மோசடி- அதிகார வரம்பு மீறல். அரசியல் சட்ட நெறிமுறைகளின்(CONSTITUTIONAL MORALITY)படி “நேரடியாக நிறைவேற்ற முடியாத சட்டங்களை, மறைமுகமாக நிறைவேற்ற முடியாது”. ( You cannot do indirectly – what you cannot do directly)

2.ஜம்மு-காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை & சட்டப் பேரவை இல்லாத சூழலில் “கவர்னரும் – இந்தியப் பாராளுமன்றமும்” ஜம்மு-காஷ்மீர் மக்களின் பிரதிநிதியாகக் கொள்ளப்படுவர் என்று சொல்லி பிரிவு 370-யை நீக்கி-மாநிலத்தை இரண்டாகப் பிரித்துள்ளனர். மத்திய அரசு-தனது பிரதிநிதியான கவர்னரின் ஒப்புதலை பெற்றிருப்பதாகக் கூறுவது – இந்திய அரசியல் சட்டத்தின் மாற்ற முடியாத அடிப்படைக் கூறான மக்களாட்சி-கூட்டாட்சி முறைக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் வழங்கிய “கேசவானந்த பாரதி” மற்றும் “எஸ்.ஆர்.பொம்மை” வழக்குகளின் தீர்ப்புகளுக்கு நேர் எதிரானது.

3. மத்திய பாஜக அரசின் செயல் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் சட்டத்தை ரத்து செய்து விட்டது. பிரிவு.370-ன் கீழ் குடியரசுத் தலைவர் பிறப்பிக்கும் உத்தரவு மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியல் சட்டத்தை ரத்து செய்ய முடியாது.

4. ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்தே இறுதியானது. ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறு என்பது “தங்கள் அரசியல் சட்ட நிலையை மக்களே நேரடியாகத் தீர்மானிப்பது – தங்கள் பிரதிநிதிகள் மூலம் தீர்மானிப்பதுமாகும்”. ஆனால், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை நீக்க, ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து அதிகாரம் குறைக்கப்பட்ட “யூனியன் பிரதேசமாக” மாற்ற – பா.ஜ.க அரசு காஷ்மீர் மக்களிடமோ? – காஷ்மீர் மக்களின் பிரதிநிதிகளிடமோ – கருத்துக் கூடக் கேட்கவில்லை. பாஜக அரசின் இந்த நடவடிக்கை சரியென்றால் – நாளை பாஜக வெல்ல முடியாத தமிழகம், கேரளா, ஆந்திராவை – சட்டப் பேரவை அற்ற யூனியன் பிரதேசமாக மாற்றலாம். நேரடி மத்திய அரசு ஆட்சியின் கீழ் கொண்டு வரலாம். எனவே நடந்திருப்பது அரசியல் சட்ட கேலிக்கூத்து மட்டுமல்லாது மக்களின் இறையாண்மையை மதிக்காத பாசிசம்.

5. இந்திய அரசியல் சட்டம் – பிரிவு 1 & 3 – சட்டப் பேரவை உள்ள மாநிலத்தை – யூனியன் பிரதேசமாக மாற்ற அனுமதி அளிக்கவில்லை. எனவே குடியரசுத் தலைவரின் உத்தரவுகள் அரசியல் சட்டப்படி செல்லாது.

6. பாஜக அரசின் நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்தின் – CONSTITUTIONAL MORALITY மற்றும் காஷ்மீர் மக்களின்  அரசியல் சமத்துவம் மற்றும் கண்ணியமாய் வாழும் உரிமைக்கு எதிரானது.

படிக்க:
பெஹ்லு கானை கொன்றவர்களை விடுவித்தது நீதிமன்றம் !
♦ “காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

ஜம்மு-காஷ்மீரை ஒடுக்குவதற்கான அரசியல் பின்னணி :

♦ ஜம்மு-காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்வோம் எனத் தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியிருந்தது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சய்னி, “பாஜகவைச் சேர்ந்த மணமாகாத ஆண்கள் இனி காஷ்மீருக்குச் சென்று நிலத்தை வாங்கவும், அழகான பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவும் வரவேற்கப்படுகிறார்கள்” எனப் பேசியிருக்கிறார். பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கை குறித்துப் பேசிய முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் “இசுலாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலம் காஷ்மீர்- அங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தால்-பாஜக இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்காது” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாஜக-வின் இந்த நடவடிக்கை அதனது- மதவாத, வெறுப்பரசியலே.

♦ பாஜக-வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மட்டுமே தேசிய இன அடிப்படையிலான மொழிவாரி மாநிலங்களை எதிர்த்த ஒரே அமைப்பு. மாநிலங்கள் என்ற நிர்வாக அலகு தேவையில்லை – மாவட்டங்கள் என்ற வகையிலான நிர்வாக அலகு – அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரே மத்திய அரசு என்பதே ஆர்.எஸ்.எஸ் கொள்கை. இந்திய அரசமைப்பின் கூட்டாட்சி முறைக்கு நேர் எதிரான திசையில் சர்வாதிகாரப் பாதையில் பயணிக்கிறது பாஜக.

♦ ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பண்டிட்,டோக்ரா,சீக்கிய,புத்த மதத்தினர் பாஜக-வின் காஷ்மீர் சிறப்புரிமை பறிப்பை எதிர்த்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். எனவே காஷ்மீரில் உள்ள இசுலாமியர்கள் மட்டும் எதிர்க்கிறார்கள் என்ற பாஜக-வின் பிரச்சாரம் தவறு.

♦ பாஜகவின் நடவடிக்கை ஜம்மு-காஷ்மீர் மக்களை இந்திய நாட்டிலிருந்து அந்நியப்படுத்துமே தவிர, இந்தியாவோடு இணைக்காது. துப்பாக்கி முனையில் உலகின் எந்த நாட்டு மக்களின் மனதை வெல்லவோ, இணைக்கவோ முடியாது.

♦ சற்று அடங்கி இருந்த காஷ்மீர் பிரச்சனையை பாஜக அரசு தனது தவறான நடவடிக்கை மூலம் சர்வதேசப் பிரச்சனை ஆக்கியுள்ள முட்டாள்தனத்தைச் செய்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை செயலர் உலக நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் நிலையை விளக்கிக் கொண்டிருக்கிறார். ஐ.நா. சபையிலும் விவாதம் வருகிறது. பாஜக அரசின் இம் மாபெரும் அரசியல் தவறை உலகின் பணக்கார நாடுகள் தங்கள் பொருளாதார நெருக்கடியை தீர்க்கப் பயன்படுத்திக் கொள்ளும். இந்தியாவின் இராணுவச் செலவுகள் அதிகரித்து, பொருளாதாரம் வீழ்ச்சியடையும். மொத்த பாதிப்புகளும் இந்திய மக்கள் தலையில் விடியும்.

மேற்கண்ட காரணங்களால் காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடர்ந்து மீறி, அம்மக்களுக்கு அரசியல் சட்ட அநீதி இழைத்து வரலாற்றுத் தவறு செய்துள்ளது பாஜக அரசு.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எனச் சொல்லிக் கொண்டு “கொடுத்த வாக்குறுதியை மீறியிருப்பது – அதைக் கொண்டாடுவது – காஷ்மீர் பெண்களை மணக்க வேண்டும் – ஒரு சென்ட் இடம் வாங்க வேண்டும் என வக்கிரமாய் பேசுவது – அறம் கொன்ற – அரசியல் சட்ட விரோத செயல் எனக் கண்டிக்கிறோம்.

அறம் கொன்ற அரசின் கீழ் வாழ்வதை அவமானமாகக் கருதுகிறோம். ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள – மனசாட்சி உள்ள அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். இன்று நாம் பேசாவிட்டால், நாளை நாம் பாதிக்கப்படும்போது நமக்காகப் பேச யாரும் இருக்க மாட்டார்கள்!

வழக்கறிஞர்கள் – மதுரை