Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 104

ஐ.பி.எல் 2023: கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்திற்கு!

0

மே 28, 2023 அன்று நாடே விழாக்கோலம் பூண்டதாக ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. ஒருபுறம், ‘தேச பக்தர்’களும் சங்கிகளும் ‘வீர’ சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட இருந்ததால் ஆரவாரமாகவும் உற்சாகமாகவும் இருந்தனர். இன்னொருபுறம், கிரிக்கெட் ரசிகர்கள் ஐ.பி.எல் ஜுரத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்; இறுதிப் போட்டிக்காகப் பேரார்வத்துடனும் உற்சாகத்துடனும் காத்திருந்தனர்.

அதே நாளில், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழா நடைபெறும் இடத்தை நோக்கி நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் அமைதிப் பேரணி செல்வதாக அறிவித்திருந்தனர். பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் பேரணி நடத்த இருந்தனர். பேரணியைத் துவங்க முயன்றபோது தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

செங்கோல் ஏந்தி முடி சூட்டிக்கொண்ட கொடுங்கோல் ’மன்னர்’ மோடியின் இந்த பாசிச நடவடிக்கை சங்கிகளின் உற்சாகத்தை மேலும் அதிகரித்திருக்கும். தங்களது மன்னரின் அதிகாரத் திமிரை எண்ணி களியுவகை கொண்டிருப்பார்கள். பாசிச சங்கிகளின் மனநிலை அப்படித்தானே இருக்கும்.

ஆனால் நமக்கு வேதனை அளிப்பது என்னவென்றால், ஐ.பி.எல் உற்சாக பெருவெள்ளத்தில் மூழ்கியிருந்த நமது இளைஞர்களுக்கும் கிரிக்கெட் ரசிகர்களின் கண்களுக்கும் மல்யுத்த வீரர்கள் மீதான பாசிச மோடி அரசின் அடக்குமுறை புலப்படவில்லை என்பதே.


படிக்க: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !


போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் கைது செய்யப்படாமல் சுதந்திரமாக புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு உள்ளிட்ட அரசு விழாக்களில் பங்கேற்று வருகிறார் பிரிஜ் பூஷண் சரண் சிங். ஆனால், பாசிஸ்டுகளை எதிர்த்து நீதி கேட்ட குற்றத்திற்காக மல்யுத்த வீரர்கள்மீது ஏழு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதனைக் கண்டும் நம் இளைஞர்களுக்குக் கோபம் வரவில்லை.

ஆனால், மே 28 அன்று நமது இளைஞர்கள் கடுஞ்சினம் கொண்டனர். அவர்களுக்கு யார் மீது கோபம் வந்தது தெரியுமா? அகமதாபாத்தில் மே 28 அன்று மாலை முதல் இரவு வரை பொழிந்து வெப்பத்தைத் தணித்த மழை மீது கடுங்கோபம் ஏற்பட்டது; ஐ‌.பி.எல் இறுதிப்போட்டிக்குத் தடையை ஏற்படுத்தி விட்டதென்பதால்.

ஆனால், நாம் உண்மையில் எதைக்கொண்டு கோபம் கொள்ள வேண்டும்?

நாடாளுமன்றத்தில் விவாதங்களையே விரும்பாத, மாற்றுக்கருத்துகளை எட்டிக்காயாகப் பார்க்கும் பாசிஸ்டுகள், இந்து ராஷ்டிர முடியாட்சியை நிறுவும் பொருட்டு, பார்ப்பனிய சடங்குகளைப் பின்பற்றி சாவர்க்கர் பிறந்த நாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறக்கவிருந்ததைக் கண்டு கோபப்பட்டிருக்க வேண்டும்.

‘மதச்சார்பற்ற’ இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பார்ப்பனர்கள் வளர்த்த ஹோமப் புகை, வெளியே போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர்களை நம் மக்களின் கண்களில் இருந்து மறைத்து விட்டதே! அதைக் கண்டு நமது இளைஞர்கள் கோபப்பட்டிருக்க வேண்டும்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரி நமது விவசாயிகள் போராடிய போது, வெளிநாடுகளில் இருந்து பல ஜனநாயக சக்திகள் ஆதரவுக் குரல் எழுப்பினர். அப்போது மோடியின் பிம்பம் உடைபடுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலர் “இது எங்கள் நாட்டுப் பிரச்சனை. இதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று ஒருமித்த குரலில் முழங்கினர். சச்சின், ரவி சாஸ்திரி, கோஹ்லி, ரோகித் சர்மா, யுவராஜ் சிங், ரெய்னா, ஆர் பி சிங், கௌதம் கம்பீர் எனக் குரல் எழுப்பியவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. மோடியைக் காப்பாற்றக் குரல் கொடுத்த இந்த கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணிக்காகப் பதக்கம் பெற்றுத் தந்த மல்யுத்த வீரர்களுக்குக் குரல் கொடுக்கவில்லை. (இர்ஃபான் பதான், கபில் தேவ், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சிலர் மட்டும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்). இதைக் கண்டு நமது கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கோபம் வரவில்லை.


படிக்க: ஐ.பி.எல்: முதலாளிகளின் மங்காத்தா!


2021-ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரின்போது இனவெறிக்கு எதிராக ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ என்று மண்டியிட்டு முழங்கிய இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இந்தியாவில் நடக்கும் சாதிவெறி குற்றங்களுக்கு எதிராக வாயைத் திறந்ததே இல்லை. இதனைக் கண்டும் நமது கிரிக்கெட் ரசிகர்களுக்குக் கோபம் வந்ததில்லை.

கிரிக்கெட் மோகம் பாசிச மோடி அரசின் அடக்குமுறைகள், மணிப்பூர் வன்முறை, மல்யுத்த வீரர்கள் போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளிலிருந்து பெரும்பான்மையினரின் கவனத்தை திசை திருப்பிவிட்டது. அதிலும் குறிப்பாக, வழக்கமான கிரிக்கெட் ரசிகர்களைக் கடந்து புதிதாகப் பலர் இவ்வாண்டில் ஐ.பி.எல் போதைக்கு அடிமையாகி உள்ளனர். பாசிசம் அரங்கேறிவரும் இந்த சூழலில், நமது இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டியது ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அல்ல.

மாறாக நாம் காவி பயங்கரவாதம் மீது, பாசிஸ்ட் மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். நாம் கோபம் கொள்ள வேண்டியது அவற்றின் மீது தான்; ஐ.பி.எல் போட்டியின்போது குறுக்கீடு செய்த மழையின் மீதல்ல.

முக்கிய பிரச்சினைகளின் போது பாசிஸ்டுகளுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் கிரிக்கெட் வீரர்களையும், வாயைப் பொத்திக்கொண்டு நடுநிலை காக்கும் கிரிக்கெட் வீரர்களையும் ரசிகர்கள் நிராகரிக்க வேண்டும். இளைஞர்கள் தமது சமூகப் பொறுப்பை உணர்ந்து கொண்டு கிரிக்கெட் நட்சத்திரங்களுக்கும் அவர்களது பொறுப்பை உணர்த்த வேண்டும்.


பொம்மி

புதிய ஜனநாயகம் – ஜூன் 2023 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஜூன் – 2023 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.240
இரண்டாண்டு சந்தா – ரூ.480
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,200

புதிய ஜனநாயகம் – ஜூன் 2023 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும் !

தொலைபேசி : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை : ரூ.20 + தபால் செலவு ரூ.5 : மொத்தம் ரூ.25
G-Pay மூலம் பணம் செலுத்த : 94446 32561

வங்கி மூலம் செலுத்த :
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444.

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :

  • தலையங்கம்: நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!
  • கர்நாடக தேர்தல் முடிவுகள்: தேர்தல் தோல்வி மட்டுமே பாசிசத்தை அளக்குமா?
  • மாநிலக் கல்விக் கொள்கை: மக்களுக்கு துரோகமிழைக்கும் தி.மு.க.!
  • எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!
  • டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் பறிப்பு: மோடி அரசின் சட்டப்பூர்வ பாசிச நடவடிக்கை!
  • கருப்புப் பண ஒழிப்பு 2.0: மக்கள் சேமிப்பை சூறையாடும் சதித்திட்டம்!
  • சிறப்புப் பதிவு: “வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” – வெற்றிகரமாக நடைபெற்ற புரட்சிகர அமைப்புகளின் மதுரை மாநாடு
  • மே நாள் போராட்டங்கள்: புரட்சிகரக் கட்சிக்காக உலகம் காத்திருக்கிறது!

திருமங்கலம் சுங்கச்சாவடி அடாவடித்தனம் || மக்கள் நேர்காணல்

துரை மாவட்டம் திருமங்கலம் சுங்கச்சாவடி நிர்வாகம் பொதுமக்களிடன் அராஜகமாக வழிப்பறி செய்து வருகிறது. அந்த சுங்கச்சாவடி ஒரு சட்ட விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கேரளா: மோடி அரசைக் கண்டித்து ரப்பர் விவசாயிகள் போராட்டம்!

0

கேரள ரப்பர் விவசாயிகள் மே 25, 26 ஆகிய தேதிகளில் பாசிச மோடி அரசை கண்டித்து திருவனந்தபுரத்தில் உள்ள ஆளுநர் இல்லம் முன்பு இரவு பகலாக போராட்டம் நடத்தினர். ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்க வேண்டும், ரப்பரை வேளாண் பயிராக அறிவிக்க வேண்டும், ரப்பர் விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.

அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (AIKS) துணை அமைப்பான கேரள கர்ஷக சங்கம் (Kerala Karshaka Sangham) ஒருங்கிணைத்த இப்போராட்டத்தில் 15,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பேரணியாக சென்ற‌ விவசாயிகள் ரப்பருக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ₹300-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், ரப்பரை உள்ளடக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் (FTA) இருந்து இந்திய அரசு விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் ஆதரவு ரப்பர் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்றும், ரப்பர் வாரியத்தை கேரள மாநிலத்திலேயே மீண்டும் அமைக்க வேண்டும் என்றும், ரப்பர் விவசாயிகளுக்கு முறையாக மானியம் வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் AIKS சார்பாக வலியுறுத்தப்பட்டது.


படிக்க: அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!


இப்பேரணிக்கு முன்னதாக, மாநிலம் முழுவதும் 600 கி.மீ தூரத்திற்கு 28 நீண்ட பேரணிகள் சுமார் 29,000 விவசாயிகளின் பங்கேற்புடன் நடத்தப்பட்டன. மேலும் 2.8 லட்சம் வீடுகளுக்குச் சென்று ரப்பர் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து விளக்கப்பட்டன. ரப்பர் விவசாயிகளின் பிரச்சினைகளை விளக்கி 3.3 லட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இந்தியாவின் மொத்த ரப்பர் உற்பத்தியில் 90 சதவிகிதத்தை கேரள‌ விவசாயிகள்தான் உற்பத்தி செய்கின்றனர். ரப்பர் விலை பல ஆண்டுகளாக, குறிப்பாக கடந்த 10 – 15 வருடங்களாக, ஏற்ற இறக்கமாக இருப்பதால் ரப்பர் விவசாயிகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக ரப்பருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக கிலோ ஒன்றிற்கு ₹300-ஐ உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். ஆனால், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இக்கோரிக்கையை ஏற்றுக்கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்தியாவில் கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து உயர்தர ரப்பர் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு ரப்பரின் இறக்குமதியை எளிதாக்கும் வகையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் முந்தைய காங்கிரஸ் மற்றும் தற்போதைய பா.ஜ.க அரசாங்கங்கள் கையெழுத்திட்டுள்ளதாக AIKS கூறுகின்றது. இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மத்திய அரசால் கவனத்தில் கொள்ளப்படவில்லை.


படிக்க: கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!


மேலும், ரப்பர் பணப் பயிர் என்பதால் அதை வேளாண் பயிராக வரையறுக்க முடியாது என்று கூறி மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருகிறது. வாகனங்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் டயர்களின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் டயர் உற்பத்தி நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக மத்திய அரசு விவசாயிகளை வஞ்சித்து வருவதாக AIKS கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி 2016-இல், விவசாயிகளின் வருமானத்தை 2022-ஆம் ஆண்டிற்குள் இரட்டிப்பாக்குவதாக மோடி வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர், டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் இயற்றுவதாக உறுதியளித்திருந்தார். ஆனால் இவற்றையெல்லாம் நிறைவேற்றுவது என்பது பாசிச மோடி அரசின் நோக்கமல்ல. தனது எஜமானர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மூலப் பொருட்களாக பயன்படும் வேளாண் உற்பத்தி பொருட்கள் மலிவு விலையில் கிடைப்பதை உத்தரவாதப்படுத்துவதே மோடி அரசின் நோக்கம்.


பொம்மி

மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடு!

திருவாரூர் மாவட்டம் தேவர்கண்டநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இரயிலடி கீழத்தெரு பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மக்கள் குடியிருப்பு பகுதியிலே இந்த டாஸ்மாக் கடையானது அமைய இருப்பதால் ஊர் பொதுமக்கள் கிராமசபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், மக்கள் நிறைவேற்றிய தீர்மானத்தைத் துளியும் மதிக்காத மாவட்ட நிர்வாகமே மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் கடையைத் திறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

கீழத்தெருவில் பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடையானது ஏற்கெனவே திருவாரூர்- மன்னை பிரதான சாலையில் இயங்கிவரும் விளமல் டாஸ்மாக் கடைகள் ஆகும். அங்குப் போக்குவரத்துக்கு நெருக்கடியாகவும் முக்கிய அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் வழியில் டாஸ்மாக் கடை இருப்பதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது என்று மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக சக்திகள் தொடர்ச்சியாகப் போராடி வந்தது, டாஸ்மாக் கடையை மூட வக்கற்ற அரசு தன்னுடைய லாபநோக்கத்திற்காவும் மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதற்தாகவும் விளமலுக்கு அருகே உள்ள தேவர்கண்டநல்லூர் ஊராட்சிக்கு டாஸ்மாக் கடையை மாற்றத் திட்டமிட்டுள்ளது. முதலில் தண்டலை ஊராட்சிக்கு உட்பட்ட தியான புரம் என்ற பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுவந்தது . தண்டலை ஊராட்சி மக்கள் மற்றும் தியான புரம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக டாஸ்மாக் திறக்கும் முயற்சியை அங்குக் கைவிட்டது. அதன் தொடர்ச்சியாக தியான புரம் பகுதியை அடுத்த 100 மீட்டரில் உள்ள கீழத்தெரு பகுதியில் டாஸ்மாக் திறக்கும் முயற்சியை மாவட்ட நிர்வாகம் தற்போது மேற்கொண்டுவருகிறது.

படிக்க : பாசிசத்தை எதிர்த்து ஓரணியில் திரள்வோம்! | தோழர் தொல்.திருமாவளவன் | காணொலி

இரயிலடி கீழத்தெரு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கும் முயற்சியை உடனே கைவிடக் கோரி ஊர் பொதுமக்கள் அனைவரிடமும் கையெழுத்து பெற்று ஊர் பொது மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இணைந்து 26-5-2023 அன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுக்கப்பட்டு நான்கு நாட்கள் ஆகியும் மனுவின் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் மெத்தனப் போக்காகச் செயல்பட்டு வருகிறது.

இப்படி தொடர்ச்சியாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராடிவரும் சூழலில் டாஸ்மாக் கடைகளை மூடாமல் வேறு வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கான காரணம், திருவாரூர் மாவட்டமானது அதிகமாக விவசாயம் நடைபெறக்கூடிய பகுதியாகவும் அதிக அளவு கனிம வளங்களைக் கொண்ட பகுதியாகவும் உள்ளது. இங்குப் பல ஆண்டுகளாக நிலக்கரி, மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. ஆனால் மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனத்தின் முயற்சியை முறியடித்துள்ளனர். அப்படிப்பட்ட மக்களின் போராட்டத்தையும், மக்களின் போராட்ட குணங்களையும் மழுங்கடிப்பதற்காகவே மாவட்டத்தின் எல்லா மூலைகளிலும் டாஸ்மாக் கடைகளைத் திறந்து வருகிறது அரசு. மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழித்தது மட்டுமல்லாமல், பள்ளி, கல்லூரி மாணவர், பெண்கள் என எல்லோரையும் போதைக்கு அடிமையாக்கி அரசின் கஜானாவுக்குக் கல்லாக்கட்டும் வேலையை அரசு செய்து வருகிறது.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் செய்தி செய்தித்தாள்களிலிருந்து இன்னும் மறையாத அதே வேலையில் திமுக அரசானது ஊரின் எல்லா மூலைகளிலும் அரசு டாஸ்மாக் கடையைத் திறக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இது சாராயம் குடித்து இறந்தாலும் அது அரசிற்கு வருமானத்தைக் கொடுத்து விட்டுச் சாக வேண்டுமென்ற எண்ணத்தில் திமுக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. ஆட்சியாளர்களை நம்பி இனி ஒருபோதும் பயனில்லை. மக்களின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை மக்கள் அமைப்பாகத் திரண்டு வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலம் மட்டுமே மூட முடியும்.

வினவு களச்செய்தியாளர்

தொடர்ந்து அம்பலமாகும் தி இந்துவின் காவிக் கொண்டை!

மே 28 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடம் பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. “இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதி இந்திய நாட்டின் தலைவர் மட்டுமல்ல, அவர் நாடாளுமன்றத்தின் ஓர் அங்கம். அவர் இல்லாமல் நாடாளுமன்றம் செயல்படாது. அப்படிப்பட்ட ஜனாதிபதி இல்லாமல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்துவைக்கும் முடிவை மோடி எடுத்துள்ளார். எனவே, திறப்பு விழாவைப் புறக்கணிக்கும் முடிவை எடுத்து இருக்கின்றோம்” என்று கூறி பிரதான 19 எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகளின் இந்த புறக்கணிப்பை விமர்சித்து, “இழக்கப்பட்ட வாய்ப்பு (Lost Opportunity)” என்ற தலைப்பில் ஆங்கில ‘தி இந்து’வில், தலையங்கம் எழுதப்பட்டிருக்கிறது. “நாடாளுமன்ற திறப்பு என்பது தேச ஒற்றுமைக்கான தருணம், இத்தருணத்தில் துரதிருஷ்டவசமாக எதிர்க்கட்சிகள் இந்நிகழ்வை வைத்து அரசியல் செய்கிறார்கள்” என்று எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பை கீழ்த்தரமாகவும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் குரலாகவும் தி இந்து ஒலித்திருக்கிறது. அதேசமயம் எதிர்க்கட்சிகளின் வாதத்திலும் ஒரு நியாயம் இருக்கிறது என்று ஒருபுறம் கூறிவிட்டு, மற்றொருபுறம் புறக்கணிப்பு என்பது ஒரு அதிதீவிரமான நடவடிக்கை என்று விமர்சித்துள்ளது.

நாட்டின் முதல் குடிமகனாகக் கருதப்படும், நாட்டின் தலைவராகவும் நாடாளுமன்றத்தின் தலைவராகவும் கருதப்படும் குடியரசுத் தலைவரைப் புறக்கணித்திருப்பது ஒரு குற்றமாகவோ, பொருட்டாகவோ தி இந்து-விற்கு தோன்றவில்லை. அதனால்தான், குடியரசுத் தலைவரைப் புறக்கணித்தது ஒரு விசயமா? அதற்காக எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டுமா? என்று நிர்மலா சீதாராமன் போலவே பேசுகிறது.

எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு குறித்து விமர்சிக்கின்ற, ‘ஜனநாயகம் என்பது என்ன, நாடாளுமன்றம் என்பது என்ன’ என்று வகுப்பெடுக்கின்ற தி இந்து, குடியரசுத் தலைவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்காதது குறித்து மோடி அரசைத் தெரிந்தே விமர்சனம் செய்யவில்லை. அதேசமயம் முன்னாள் பிரதமரான இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் கூட அவர்களாகத்தான் இணைப்புக் கட்டிடத்தையும், நூலகத்தையும் திறந்து வைத்துள்ளனர் என்று ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வுக்கு பக்கவாத்தியம் வாசிக்கிறது.


படிக்க: வெனிசுலா குறித்து தி இந்துவில் ஒரு அபத்தக் கட்டுரை | கலையரசன்


மேலும், நாடாளுமன்றத்தின் முக்கிய செயல்பாடுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருவதாக தி இந்து தனது கட்டுரையிலேயே கவலை கொள்கிறது. ஆனால், இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம்தான் நாடாளுமன்ற விவாதத்திற்கான, புதிய பொலிவான தளமாக இருக்கும் என்றும், இந்த திறப்பு விழாவானது ஒரு புதிய துவக்கமாக இருக்கும் என்றும் பச்சையாகப் புளுகுகிறது. பழைய நாடாளுமன்றத்தில் பாசிச மோடி அரசு குறித்தோ மோடியின் நண்பர் அதானி குறித்தோ வாயைத் திறக்க எதிர்க்கட்சியினர் அனுமதிக்கப்பட்டனரா என்பது தி இந்து-விற்கு தெரியாதா என்ன?

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு என்பது, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க‌ கும்பலின் இந்துராஷ்டிர கனவிற்கான திறவுகோல் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. முதலாளித்துவ பத்திரிகையாளர்களும் ஜனநாயகவாதிகளும் இந்த கட்டிடத் திறப்பு என்பது இந்துராஷ்டிரத்தை நிறுவ வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டதுதான் என்று அம்பலப்படுத்துகின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வரம்புகள் மோடியின் ஆட்சியில் வெட்டி சுருக்கப்பட்டு, ஒரு பாசிச மன்றமாகத்தான் இருக்கிறது.

நாடாளுமன்றம் மட்டுமன்றி அரசு கட்டுமானம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ்-மயமாகி இருக்கிறது. பாசிச அபாயம் நாட்டை சூழ்ந்திருக்கிறது. இந்தச்சூழலில் நாடாளுமன்ற கட்டிடத் திறப்பை ‘தேசிய பெருமை’ என்று கருதுவது இழிச்செயலாகும்.

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிர கனவு குறித்தோ, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் நாடாளுமன்ற கட்டிடத் திறப்பின் நோக்கம் குறித்தோ வாயைத் திறக்காமல், வெறும் ‘தேசிய பெருமை’ குறித்துப் பேசுவதென்பது கருத்தியல் தளத்தில் ஆர்‌.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு அடியாள் வேலை பார்ப்பதாகும். “இழக்கப்பட்ட வாய்ப்பு (Lost Opportunity)” கட்டுரை தி இந்துவின் மண்டைமேல் இருக்கும் காவிக் கொண்டையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியிருக்கிறது.


கயல்

ரத்தினகிரி மீது பாசிச அடக்கமுறையை ஏவும் பா.ஜ.க – பின்னணியில் அதானி!

ஹாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரி மாவட்டம், மீண்டும் ஒரு கார்ப்பரேட் பேரழிவுத் திட்டத்திற்கு எதிராக போர்கோலம் கொண்டிருக்கிறது. பார்சு-சோல்கன் பகுதியில் அமையவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார கிராம மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைக் கட்டுவதற்காக, 2015-ஆம் ஆண்டு ரத்தினகிரி சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை அறிவித்தது அன்றைய பா.ஜ.க-சிவசேனா கூட்டணி அரசாங்கம்.

இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் கூட்டமைப்பும், கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் முதலிடம் வகிக்கும் சவூதி அரேபியா எண்ணெய் நிறுவனம் (சவுதி அராம்கோ) மற்றும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் ஆகியவையும் இத்திட்டத்தின் முதலீட்டாளர்கள். மொத்தம் 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தின் சரிபாதி பங்குகள் அந்நிய நிறுவனங்களான சவூதி மற்றும் அபுதாபி எண்ணெய் நிறுவனங்களுக்கு விடப்பட்டுள்ளன.

இந்த ஆலை பயன்பாட்டுக்கு வந்தால் ஆண்டுக்கு 12 லட்சம் பேரல் எண்ணெய் சுத்திகரிப்பு செய்வதுடன், 1.8 கோடி டன் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை உற்பத்தி செய்யும் பிரமாண்டமான சுத்திகரிப்பு ஆலையாக இருக்கும் என கருதப்படுகிறது. இதனால் மிகப்பெரிய சுற்றுசூழல் மாசு ஏற்படும் என்று அஞ்சப்பட்டது.

மேலும், இத்திட்டத்திற்காக புகழ்பெற்ற அல்போன்சா வகை மாம்பழங்கள் விளையும் மாமரங்களும் முந்திரித் தோட்டங்களும் நெல் வயல்களும் நிறைந்த, இயற்கை எழில் கொஞ்சும் ரத்தினகிரி மாவட்டத்தின் சுமார் 17 கிராமங்களை உள்ளடக்கிய 16,000 ஏக்கர் நிலத்தை கையப்படுத்த இருந்தனர். இதனால் சுமார் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுவாசல்களை இழந்து அகதிகளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


படிக்க: மகாராஷ்டிரா: போராடும் ரத்தினகிரி மக்களுக்கு துணைநிற்போம்!


இத்திட்டம் அறிவிக்கப்பட்ட தொடங்கத்திலேயே, ரத்தினகிரி மாவட்டம் முழுக்க பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். “கொங்கன் சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பு நடவடிக்கைக் குழு” என்ற அமைப்பைத் தொடங்கி தொடர்ச்சியான போராட்டங்களில் இறங்கினர். மக்கள் போராட்டங்களால் தமது ஆட்சிக்கு நெருக்கடிக்கு வரும் என்று அஞ்சிய உத்தவ் தாக்கரே, நானார் பகுதியிலிருந்து இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு கோரிக்கை விடுத்தார். அதன் விளைவாக, 2019ஆம் ஆண்டு போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.

அதேநேரம், உத்தவ் தாக்கரே இத்திட்டத்தை முழுமையாக கைவிடக் கோரவில்லை. 2022 ஜனவரி மாதம் உத்தவ் தாக்கரே மோடிக்கு எழுதிய கடிதத்தில், இந்த திட்டத்தை நானார் பகுதியிலிருந்து ராஜப்பூர் வட்டத்திலுள்ள பார்சு பகுதியைச் சுற்றி மாற்றிக் கொள்ளும்படி கோரிக்கை விடுத்திருந்தார். பார்சு, நானாரிலிருந்து வெறும் 15 கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ள கிராமமாகும்.

தற்போது ஆட்சியிலுள்ள ஷிண்டே-பட்னவிஸ் அரசாங்கம் பார்சு பகுதியில் சுத்திகரிப்பு ஆகையை கட்டுவதற்கான பணியை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி சுத்திகரிப்பு ஆலை கட்டுவதற்காக அப்பகுதியின் மண்ணை ஆய்வுசெய்வதற்காக வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்சு பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏறத்தாழ 3,000 மக்கள் சாலையை மறித்து மிகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இப்பகுதி கிராமங்களுக்கு பலமுறை அதிகாரிகள் ஆய்வுக்காக வந்தபோதும், மக்கள் தங்களது போராட்டங்களால் அவர்களை விரட்டியடித்துள்ளனர். எனினும் ஷிண்டே-பட்னவிஸ் தலைமையிலான அரசு, இத்திட்டத்தை எப்படியாவது அமலுக்கு கொண்டுபோக வேண்டுமென வெறியோடு செயல்பட்டுவருகிறது.

மண்ணாய்வு செய்வதற்கு அதிகாரிகள் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பே (ஏப் 22) போராட்ட இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த சத்யஜித் சவான், மங்கேஷ் சவான் மற்றும் சில முக்கியச் செயல்பாட்டாளார்கள் போலீசாரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். ராஜப்பூர் வட்டார நிர்வாகவும் நீதிமன்றமும் பார்சு-சோல்கன் சுத்திகரிப்பு நிலைய எதிர்ப்பியக்கத் தலைவரான அமொல் பொலே, அவ்வட்டாரத்தில் நுழைவதற்கும், சுற்றுவதற்கும் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தது.


படிக்க: ரத்தினகிரி பெட்ரோலிய ஆலை – சேலம் எட்டு வழிச்சாலை : விவசாயிகளை விரட்டும் பாஜக அரசு !


மேலும், ஏப்ரல் 22 முதல் மே 1 வரையில், மண்ணாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களான பார்சு சதா, பார்சு, பன்ஹாலே தர்பே ராஜப்பூர், தொபேஷ்வர், கொவல் மற்றும் கல்சி வாடி கொவல் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் மக்கள் நடமாடுவதற்கு தடைவிதிக்கப்படுள்ளது. 27ஆம் தேதி நிலவரப்படி, மொத்தம் அப்பகுதியில் 1,800 போலீசார் நிறுத்திவைக்கப்பட்டிருந்தனர். எல்லாவற்றையும் மீறித்தான் பார்சு சதா பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே, பார்சு-சோல்கான் பிராந்தியத்தில் உள்ள கிராமப் பஞ்சாயத்துகள், சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியிருந்தனர். அத்தீர்மானங்களை மாவட்ட நிர்வாகம் ஒரு துரும்பாகக் கூட மதிக்கவில்லை.

செயல்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்ட அதேநாளில் (ஏப் 22), ராஜப்பூர் மாவட்ட ஆட்சியரான தேவேந்திர சிங், சுத்திகரிப்பு ஆலை அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். சுத்திகரிப்பு ஆலை எதிர்ப்பாளர்களுக்கு இத்தகவல் கடைசி 30 நிமிடங்களுக்கு முன்புதான் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நான்கு பேர் மட்டுமே வர முடிந்துள்ளது. அதேநேரம், ‘சுத்திகரிப்பு ஆலை ஆதரவாளர்கள்’ என்ற பெயரில், ஆளும்கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கைக்கூலிகள் கூட்டத்தை திரட்டிவந்துள்ளனர்.

எதிர்ப்பாளர்களுக்கு பேசுவதற்கு போதிய நேரம் வழங்காத மாவட்ட ஆட்சியர், கூலிப்படையினர் பேசுவதற்கு அதிகநேரம் கொடுத்ததோடு ஆலை அமைப்பதற்கு ஆதரவாக அவர்கள் முன்வைத்த வாதங்களைப் பதிவுசெய்துள்ளார்.

தூத்துக்குடியில் போலீசு, வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என ஒட்டுமொத்த அரசு நிர்வாகத்தையும் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதைப் போலவே, மஹாராஷ்டிரத்தின் ராஜப்பூரிலும் உள்ளது.

போராடும் மக்களை அச்சுறுத்தும் வேலையில் பா.ஜ.க.வைச் சேர்ந்த உள்ளூர் கிரிமினல் குண்டர் படைத் தலைவனான அம்பெர்கர் என்பவன் செயல்படுகிறான். செயல்பாட்டாளர்களுக்கு மிரட்டல்விடுவது, தாக்குவது ஆகியவற்றோடு சுத்திகரிப்பு ஆலைக்கு ஆதரவாக விளம்பரமும் செய்துவருகிறான். இச்சட்ட விரோத அச்சுறுத்தலை அம்பலப்படுத்திய உள்ளூர் பத்திரிகையாளர் வாரிஷே, அம்பெர்கரால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அரசு நிர்வாகத்தை வைத்தும், தனது குண்டர் படையை வைத்தும் பா.ஜ.க. இத்திட்டத்தை வெறித்தனமாக அமல்படுத்த நினைப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. 6 லட்சம் கோடி ரூபாய் மூலதனம் பாய்கிற இத்திட்டத்தின் முக்கிய பங்குதாரராக உள்ள சவுதி அராம்கோ நிறுவனத்தின் கூட்டுப் பங்குதாரராக இணைய அதானி குழுமம் முயற்சிப்பதாக கடந்த ஆண்டு செய்திகள் வந்துள்ளன.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமத்தால் வாங்க முடியுமா? மூலதனத்திற்கு அதானி குழுமம் என்ன செய்யும் என பொருளாதாரப் பத்திரிகைகள் அப்போதே விவாதித்துக் கொண்டிருந்தன. அதற்கான பதில்தான் இந்த திட்ட ஒப்பந்தம்.

இந்திய பொதுத்துறை எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு சவூதி அராம்கோவுடன் இணைந்து இச்சுத்திகரிப்பு ஆலையை நிறுவ வேண்டுமென்றால், அதானி குழுமத்தை எந்த வகையிலாவது தங்களுடைய கூட்டுப் பங்குதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மோடி அரசு நிச்சயமாக டீல் பேசும். இது கைகூடுமானால், ஹிண்டன்பர்க் அறிக்கையால் பங்குமதிப்புகள் சரிந்த அதானி, ஒரு நொடியில் உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் போட்டிபோட்டுக் கொண்டிருப்பார்.

அதானிக்கு புரோக்கர் வேலை பார்ப்பதற்காகத்தான் ரத்தினகிரி மக்கள் மீது கொடும் பாசிச அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகின்றன. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிறுவனத்தை முதன்முதலாக விரட்டியடித்தது ரத்தினகிரி மண், அதானிக்கான இந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையும் முழுமையாக விரட்டியடிக்கப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை.


வேல்முருகன்

புதிய நாடாளுமன்றம் – யாருக்கு இது? | கவிதை

கவிதை 1: யாருக்கு இது ?

வீசும் காற்றுக்கு,
விழும் ஓலை வீடு,
குரல் கொடுக்க யாருமில்லை.

கொழுத்தவன், இழைத்தவனை
விழுங்குவதை கேட்க – நாதியில்லை.

நாயாய் நாங்கள் நடந்து- கால்கள்
தேய்ந்த பின்னும் எதிர்பார்க்கும்
முதியோர் ஊக்கத்தொகை
கொடுக்க துப்பில்லை.

பட்டினியில் வாடும்
மக்களின் நிலை போக்க
பணமில்லை -ஆனால்.

உன்னை தேர்ந்தெடுத்த – நாங்கள்
பஞ்சத்தில் வாட
நீ-லஞ்சத்தில்
எங்களை வேட்டையாட கட்டுகிறாய்
ஒரு கோட்டை.

நந்தி வைத்த செங்கோலை – கண்டு
சந்தி சிரிக்கும் – உன்னை
முந்தி அடிக்கும்.
நினைவு கொள் இந்துராஷ்டிரமே.

வாரிக் கொடுக்கும்
என பீற்றிக்கொள்ளும் இனவாதியே
எல்லா இனமும் தந்த வரிப்பணம், மக்களை வாழவைக்க,
உன்னை வாழ வைப்பதற்கில்லை.

கோடிகள் செலவு செய்து- அதில்
கேடிகள் உலவுவதற்கு பெயர்தான்
புதிய நாடாளுமன்றம்!

***

கவிதை 2: தாழ்ந்தவன்!

கடவுள் என்னிடம் கேட்டார்
என்னை வைத்து சாதி படைத்தார்கள்
அதில் எது தாழ்ந்த சாதி ?

நான் சொன்னேன்
குடியரசுத் தலைவர்!
காரணம் கேட்டார் கடவுள்,

ஆர்.எஸ்.எஸ் தடுக்கிறது அவள் தாழ்ந்த சாதி பெண்,
நாடாளுமன்றத்தை திறக்க
அனுமதியும் இல்லை அழைப்பும் இல்லை
என்றேன்.

கோபம் கொண்ட கடவுள் சொன்னார்,
“கடவுள் இல்லை
கடவுள் இல்லை
கடவுள் இல்லை”

பின்பு நீ-யார்?
உன்னால் உருவாக்கப்பட்டவன்.

கவிதைகள் : மணிவண்ணன்

பாசிசத்தை எதிர்த்து ஓரணியில் திரள்வோம்! | தோழர் தொல்.திருமாவளவன் | காணொலி

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கர்நாடகா தேர்தல் முடிவுகள்: இந்துத்துவம் தோற்றுவிட்டதா?

0

மீபத்தில் நடந்து முடிந்த கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135-இல் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சி அமைத்துள்ளது. யார் முதலமைச்சர் ஆவது என்ற பிரச்சினையிலும் ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்டு, குதிரை பேரத்துக்கான கதவுகளும் தற்சமயம் அடைக்கப்பட்டு விட்டன. முதலமைச்சராக சித்தராமையா பொறுப்பேற்றுக்கொண்டார்; மாநிலத் தலைவர் டி.கே. சிவக்குமார் துணை முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கர்நாடகா தேர்தலில் பா.ஜ‌.க அடைந்த தோல்வி, பா.ஜ.க எதிர்ப்புணர்வு கொண்ட அனைவராலும் கொண்டாடப்பட்டது. அதிலும் குறிப்பாக, தென்னிந்திய மாநிலங்களில் “தெற்கு பா.ஜ.க.வை நிராகரித்துவிட்டது” (The South Rejects BJP), “பா.ஜ.க அல்லாத தென்னிந்தியா” (BJP Mukt Dakshin Bharat) போன்ற முழக்கங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

பா.ஜ‌.க-வின் தேர்தல் தோல்வி என்பது ஒரு மகிழ்ச்சியான நிகழ்வுதான். ஆனால், இதை மதவெறி அரசியலின் – இஸ்லாமிய வெறுப்பு இந்து முனைவாக்க அரசியலின் – ஒட்டுமொத்த தோல்வியாகப் பார்க்க முடியுமா என்பதுதான் தற்போது எழும் கேள்வி. இதற்கான விடையை அறிந்து கொள்ள கர்நாடக தேர்தல் முடிவுகளை ஆழமாக நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது.


படிக்க : கர்நாடக தேர்தல்: பாசிஸ்டுகளின் தோல்வி – நாம் இறுமாந்து இருக்க முடியுமா? || தோழர் மருது


கடந்த 2018 கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து ஓராண்டு கழித்து “ஆப்ரேஷன் கமலா” மூலம் பா.ஜ.க கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தது. அப்போது காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த 17 எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது பா.ஜ‌.க. அப்போது காங்கிரஸ் கட்சி 38.04 சதவிகித வாக்குகளைப் பெற்று 80 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது; இது பா.ஜ.க பெற்ற வாக்குகளை விட 1.5 சதவிகிதம் அதிகமாகும். அதேபோல, மதச்சார்பற்ற ஜனதா தளம் 18.36 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது.

தற்போது முடிவடைந்த 2023 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கடந்த சட்டமன்ற தேர்தலை விட 5 சதவிகித வாக்குகளை கூடுதலாக பெற்று மொத்தம் 43 சதவிகித வாக்குகளை அறுவடை செய்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 5 சதவிகித வாக்குகளை இழந்து, கடந்த தேர்தலில் தான் பெற்ற 37 தொகுதிகளை விட 18 குறைவாகப் பெற்று, மொத்தம் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், கடந்த 2018 தேர்தலில் வெற்றி பெற்றிருந்த 104 தொகுதிகளை விட 40 தொகுதிகள் குறைவாகவே வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதமோ அதே 36 சதவிகிதத்தில் தான் உள்ளது. வாக்கு எண்ணிக்கையின் படி பார்த்தோமேயானால், கடந்த 2018 தேர்தலில் பெற்ற 1.32 கோடி வாக்குகளை விட 8 லட்சம் வாக்குகளை கூடுதலாக பெற்று, இந்த 2023 தேர்தலில் மொத்தம் 1.40 கோடி வாக்குகளை பா.ஜ.க பெற்றுள்ளது.

கடந்த கர்நாடகா சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க பெற்ற வாக்கு சதவிகிதங்களை ஆராய்ந்தோமேயானால், 1989-ஆம் ஆண்டிலிருந்து பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதத்தில் ஒரு நேர்கோட்டு வளர்ச்சியைக் காண முடியும். 1989-ஆம் ஆண்டு தேர்தலில் 4.14 சதவிகித வாக்குகள் பெற்றிருந்த பா.ஜ.க, 1994-ஆம் ஆண்டில் 16.99 சதவிகித வாக்குகளையும், 1999-ஆம் ஆண்டில் 20.69 சதவிகித வாக்குகளையும், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் 28.33 சதவிகித வாக்குகளையும், 2008-ஆம் ஆண்டில் 33.86 சதவிகித வாக்குகளையும், 2018 மற்றும் 2023 தேர்தல்களில் 36 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது.

பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, அதன் சமூக அடித்தளம் பெரிதாகிக் கொண்டே வருகிறது என்பதைத்தான் மேற்கண்ட புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 1990-களின் பிற்பகுதியில் காங்கிரஸின் வீழ்ச்சிக்கு லிங்காயத்துகளின் செல்வாக்கை இழந்தது ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அதேபோல 2023 தேர்தலில் பா.ஜ.க தோல்வியுற்றதற்கும் லிங்காயத்துகளின் செல்வாக்கை இழந்தது ஒரு காரணம் தான். ஆனால், பா.ஜ.க தனது மதவெறி அரசியலால் லிங்காயத் நெருக்கடியை காங்கிரசை விட சுலபமாக கையாண்டுள்ளது.


படிக்க: கர்நாடகா: சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவி தொகையை குறைக்கும் பாசிச அரசு!


1989 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஜனதா கட்சியை தோற்கடித்தது; வரலாறு காணாத அளவிற்கு 178 இடங்களில் வெற்றி பெற்று, 43.76 சதவிகித வாக்குகளையும் பெற்றிருந்தது காங்கிரஸ். அப்போதைய முதல்வராக இருந்த லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த வீரேந்திர பாட்டீல் அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜிவ் காந்தியால் நீக்கப்பட்ட பின்னர் லிங்காயத்துகளின் செல்வாக்கை இழந்தது காங்கிரஸ். 1994 தேர்தலில் 27 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்று வெறும் 34 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

அதேபோன்றதொரு சூழலை 2023 தேர்தலில் தற்போது பா.ஜ.க எதிர் கொண்டது. லிங்காயத்துகளின் செல்வாக்கிற்கு உரியவரான எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டிருந்தார். மற்ற லிங்காயத்து தலைவர்களான ஜெகதீஷ் ஷட்டர், லக்ஷ்மன் சவதி ஆகியோருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. ஆனால், கிட்டூர் கர்நாடகா மற்றும் கல்யாண கர்நாடகா ஆகிய லிங்காயத்துகள் பெரும்பான்மை வகிக்கும் பகுதிகளில் பா.ஜ.க வெறும் 3.5 சதவிகிதம் மற்றும் 2.6 சதவிகிதம் வாக்குகளை மட்டுமே இழந்துள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உள் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவுள்ளதாக அறிவித்ததால் லம்பானி மற்றும் மடிகா சமுதாய மக்களின் வாக்குகளை இழந்ததும் இப்பகுதிகளில் வாக்கு சதவிகிதம் குறைந்ததற்கு ஒரு கூடுதல் காரணமாகும். லம்பானி சமுதாய மக்களின் வாக்குகள் 63 தொகுதிகளில், அதிலும் குறிப்பாக வட கர்நாடகத்தில், பா.ஜ.க-விற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட லிங்காயத்து தலைவர் ஜெகதீஷ் ஷட்டர் பா.ஜ.க-வில் இருந்து விலகி காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கினார். ஷட்டருக்கு எதிராக ஷட்டரின் முன்னாள் அபிமானியும் அதே லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவருமான மகேஷ் தெங்கினகை (Mahesh Tenginkai) பா.ஜ.க களம் இறங்கியது. தெங்கினகை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். லிங்காயத்துகள் பா.ஜ.க-வை விட்டு விலகவில்லை என்பதற்கு இதுவொரு கூடுதல் சான்றாகும்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மதவெறி பிரச்சாரங்களை அதிக அளவில் மேற்கொண்ட உடுப்பி, ஸ்ரீரங்கப்பட்டணா, சிவமோக்கா ஆகிய பகுதிகளில் பா.ஜ.க-வின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. உடுப்பியில் ஹிஜாப் விவகாரத்தை பற்றவைத்த யஷ்பால் சுவர்ணா அமோக வெற்றி பெற்றுள்ளார். திப்பு சுல்தான் ஆட்சியின்போது தலைநகரமாக இருந்த ஸ்ரீரங்கப்பட்டணாவில் திப்புவிற்கு எதிராக விஷம பிரச்சாரத்தை மேற்கொண்டு அங்கேயும் கடந்த 2018 தேர்தலை விட தற்போது அதிக வாக்குகளை பெற்றுள்ளது பா.ஜ‌.க.

இந்துத்துவத்தின் சோதனைச் சாலையான தட்சிண கன்னடா பகுதியில் உல்லால் தொகுதி தவிர்த்து மற்ற எல்லா தொகுதிகளிலும், பெற்ற வாக்குகள் சற்று குறைந்தாலும், பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. அதீத அளவில் இந்துத்துவா பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்ட கிட்டூர் கர்நாடகாவின் விஜயபுராவிலும் பா.ஜ.க வென்றுள்ளது.


படிக்க : தேர்தல் பரப்புரைகளில் மட்டுமே ஈடுபடும் பாசிஸ்டு மோடி!


எனவே, இத்தேர்தலில் பாஜக தோற்றிருக்கலாம். ஆனால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலின் தோல்வியாக இதை கருத முடியாது. தேர்தல் புள்ளி விவரங்களும், இந்துத்துவ மையங்களில் பா‌.ஜ.க-வின் செல்வாக்கு அதிகரித்திருப்பதையே காட்டுகின்றன. முறைகேடான பா.ஜ.க ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பின் காரணமாகவே தற்போது காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

மென்மையான இந்துத்துவ அரசியலை முன்வைக்கும் காங்கிரஸ் கட்சியோ மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தும் போது நெருக்கடியில் சிக்கும். அந்நெருக்கடி, பா.ஜ.க இன்னும் அதி தீவிர மதவெறி அரசியலை முன்வைத்து ஆட்சி கட்டிலில் அமர துணை புரியும். கர்நாடகத்தில் இன்னும் அதிக அளவில் இந்து முன்னவாக்க மையங்கள் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வால் உருவாக்கப்படும். ஆகவே, காங்கிரசின் வெற்றியில் புளகாங்கிதம் அடையாமல், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-விற்கு எதிராக மக்களை அமைப்பாக்கும் பணியில் முற்போக்கு – ஜனநாயக – புரட்சிகர சக்திகள் ஈடுபட வேண்டும். அதன்மூலம் மட்டுமே பாசிசத்தை எதிர்கொள்ள முடியும்.


பொம்மி
செய்தி ஆதாரம்: தி நியூஸ் கிளிக்

“வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!” | தோழர் வெற்றிவேல் செழியன் | காணொலி

ர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தேவசேனாவின் உறக்கம்

ண்பருக்கு ஒரு வாரமாக காய்ச்சல். அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். காலை 10 மணி இருக்கும். நாங்கள் மருத்துவமனைக்கு உள்ளே வரும்போது ஒரு குழந்தை அழுது கொண்டே வெளியே போனது. “இது ஒன்னு, நேரத்துக்கு திங்குதா பாரு. காலைல வூட்ட வுட்டு கிளம்பும்போது சாப்பிடச் சொன்னேன் சாப்பிடவே இல்லை, இப்ப பாரு உயிர எடுக்குது” என்று திட்டிக் கொண்டே சென்றார் அந்த குழந்தையின் தாய். அந்தத் தாய்க்கு 23 வயது இருக்கலாம்.

சீட்டு வாங்கிவிட்டு வரிசையில் உட்கார்ந்தோம். எங்களுக்கு முன்னே 20 பேர் இருந்தனர். மருத்துவர் வெளியே போயிருந்தார். இருபது நிமிடம் ஆனபோது மருத்துவர் வந்தார், அழுது கொண்டே ஓடிய குழந்தை, சந்தோஷமாக ஆடிக்கொண்டே வந்தது அம்மாவுடன்.

அந்தக் குழந்தையால் வரிசையின் இடத்தை பறி கொடுத்த அந்த அம்மா, மீண்டும்  வரிசையின் கடைசியில் உட்கார்ந்தார். அந்தத் தாய் மீண்டும் கருவுற்றிருக்கிறார், அனேகமாக ஆறு மாதமாக இருக்கலாம்.

படிக்க : நாடாளுமன்றத்தில் செங்கோல் – பாசிச ஆட்சிக்கு அடிக்கல்! | தோழர் மருது

அந்தக் குழந்தையிடம் பேசத் தொடங்கினேன்.

“பேர் என்னப்பா ?”

“தேவசேனா!”

“பாகுபலில வர தேவசேனா நீ தானா!”

“இல்ல, நான் தான் தேவசேனா, என் பேரு தான் அந்த படத்துல வந்திருக்கு”

“வீடு எங்க இருக்கு ?”

“அம்பேத் காலனி,  3-வது தெரு”

“சரி என்னப்பா படிக்கிற ?”

“ஒன்னாவது இல்ல இல்ல இரண்டாவது” என்று சிரித்துக் கொண்டே கூறியது தேவசேனா.

“ஒன்னாவதா இரண்டாவதா தெளிவா சொல்லு” என்றேன்.

“ஸ்கூல் முடிஞ்சிடுச்சில்ல, நான் இரண்டாவது போக போறேன்” என்றது தேவசேனா.

ஒன்றும் ஒன்றும் எத்தனை என்றேன்.

“இரண்டு” என்றது. அது மட்டும் இல்லை. கேட்ட எல்லா கேள்விக்கும் பதில் வந்தது.

ஒன்னு ரெண்டு மூணு சொல்லட்டுமா என்று 100 வரை திணறாமல் ஒப்பித்தது.

எனக்கும் ஆச்சரியம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளோடு பேசிக் கொண்டிருப்பவன் என்பதால் இந்த வயதில் இவ்வளவு அழகாக பேசும் பதில் அளிக்கும் குழந்தையை ஆச்சரியமாக பேசியபடி ரசித்துக் கொண்டிருந்தேன்.

ஒவ்வொருவரையும் பொறுமையாகவும் தாமதமாகவும் சோதித்துப் பார்த்தார் மருத்துவர். அது இன்னமும் எனக்கு வசதியாக போய்விட்டது.

“வீட்ல அம்மாவுக்கு உதவி பண்ணுவியா?” என்றேன்.

“அம்மா சொல்ற வேலையெல்லாம் செய்வேன், கடைக்கு போக சொல்லுவாங்க போவேன், சாமா விளக்க சொல்லுவாங்க விளக்குவேன்”.

“காலைல என்ன சாப்ட்ட”

“தேங்காய் பால், ஆப்பம், எனக்கு கொழம்பு பிடிக்காது”

“வேற என்ன சாப்பிடுவ?”

“லேஸ் தான் எனக்கு பிடிக்கும்”

“கொய்யாப்பழம் சாப்பிடுறியா” என்றபடி என்னிடம் இருந்த கொய்யாப்பழத்தை கொடுத்தேன்.

“லேஸ் சாப்பிடக்கூடாது உடம்புக்கு கெடுதல் சரியா?”

“தினமும் லேஸ் சாப்பிட மாட்டேன், ஒரு நாளைக்கு லேஸ் சாப்பிடுவேன். இன்னொரு நாளைக்கு கொய்யாப்பழம் சாப்பிடுவேன். இப்ப நீங்க கொடுத்தீங்கல்ல அது மாதிரி” என்றது.

தண்ணி குடிச்சிட்டு வரேன் என்று மருத்துவமனையின் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரைப் குடித்து விட்டு தன்னுடைய அம்மாவுக்கு தண்ணீரை பிடித்துக் குடிக்க கொடுத்து விட்டு வந்து,

“உங்களுக்கு தண்ணி வேண்டுமா?” என்றது.

“எங்க அம்மாவுக்கு சீக்கிரமே பாப்பா பொறந்திடும். எங்க அம்மாவை எந்த வேலையும் செய்ய வுட மாட்டேன். நானே தண்ணி புடிச்சியாருவேன். சாமான் எல்லாம் கழுவுவேன். கடைக்கு போய் வருவேன். அம்மாவை பத்திரமா பாத்துப்பேன்.”

என்ன சொன்னாலும் சொல் பேச்சு கேட்காத குழந்தை, வீட்டில் இந்த வேலை சொன்னாலும் செய்யாத குழந்தை இப்படி குழந்தைகள் பணம் படைத்தவர்கள் மத்தியில் இருக்கும்போது. உழைக்கும் வர்க்கத்திலிருந்து வந்த இந்த குழந்தைக்கு இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

அப்பா என்ன பண்றாரு? என்றேன்.

“அப்பா கொழுத்து வேலைக்கு போறாரு. ரொம்ப நல்லவரு எனக்கு ஏதாவது வாங்கிட்டு வருவாரு. ஆனா தெனம் குடிச்சிட்டு வந்து வீட்ல ஒரே சண்டை போடுவாரு. நேத்து கூட என்னோட விளையாட்டு சாமான், வீட்டில் இருந்த அடுப்ப எல்லாம் தூக்கி போட்டு உடைச்சுட்டாரு, நைட் முழுக்க எனக்கு பயம், தூக்கமே இல்ல தெரியுமா?” என்றபடி அமைதியானது தேவசேனா.

அதற்கு மேல் என்ன பேசுவது என்று எனக்கு தெரியவில்லை. நானும் அமைதியாகிப் போனேன்.

அந்த அமைதியையும் உடைத்தது தேவசேனாவின் மெல்லிய குரல்.

“சரி உங்க போன்ல கேம் இருக்கா? என்றது தேவசேனா.

இல்லப்பா அதெல்லாம் வச்சுக்கறது இல்ல என்றேன்.

“உங்க வீட்டில பாப்பா எதுவும் இல்லையா”

“ஆமா எதுவும் இல்ல” என்றேன்.

“சீக்கிரம் கேம் டவுன்லோட் பண்ணி வச்சுக்கோங்க. பாப்பா வந்தா விளையாடனும்ல்ல” என்று சொல்லி குலுங்கி குலுங்கி சிரித்தது.

படிக்க : “கீழடியும் ஈரடியும்” | தோழர் திருமுருகன் காந்தி | காணொலி

அதற்குள் என்னுடைய நண்பர் மருத்துவரை பார்த்து விட்டு வெளியேற, தேவசேனாவிடம் டாடா சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

மருந்து வாங்கி விட்டு எட்டிப் பார்த்தேன். அருகில் இருந்தவரின் செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தது தேவசேனா.

இன்று இரவாவது தேவசேனா நிம்மதியாக தூங்குமா என்ற கவலை என்னை தொற்றிக் கொண்டது.

இந்த டாஸ்மாக்குகள் எத்தனை தேவசேனாவின் உறக்கத்தை கலைத்துப் போட்டிருக்கின்றனவோ!

– மருது

பாசிசத்தின் சதியை முறியடிப்போம்! | தோழர் திருமுருகன் காந்தி | காணொலி

ர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் மே 17 இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரை காணொலியை வடிவில்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நாடாளுமன்றத்தில் செங்கோல் – பாசிச ஆட்சிக்கு அடிக்கல்! | தோழர் மருது

லக பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா மிகவும் கீழ்நிலையில் இருக்கிறது. ஊட்டச்சத்துக்குறைபாடு உள்ள மக்களை அதிகம் கொண்டிருக்கிறது. உணவின்றி சாகும் மக்களை அதிகம் கொண்டிருக்கிறது. ஆனால் பல்லாயிரம் கோடி செலவு செய்து மிகப்பெரிய ஒரு நாடாளுமன்றம்.

இது, ரோம் நகரம் பற்றியெரியும் போது நீரோ மன்னம் பிடில் வாசித்தான் என்பதை போல மக்கள் வாழ்க்கை கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது மிகப்பெரிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படவிருக்கிறது.

மேலும்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறப்பு: இந்துராஷ்டிரத்திற்கான கால்கோள்!

ர்நாடக சட்டமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அடைந்த மகிழ்ச்சியும் அவர்கள் செய்த ஆராவாரமும் அடுத்த வாரமே காணாமல் போய்விட்டது. இப்போது, அவர்கள் ‘புறக்கணிப்பு’ப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆம், மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் ஆட்சியில் நாடாளுமன்றத்திற்குக் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 19 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றக் கட்டடத் திறப்புவிழாவைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடத்தை நாட்டின் குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, குடியரசுத் தலைவர் அந்த நிகழ்வுக்கு அழைக்கப்படவுமில்லை. அதனைவிடுத்து பிரதமர் புதிய கட்டடத்தைத் திறந்து வைக்க இருப்பது அரசியல் சாசனத்தை அவமதிப்பதாகும் என்று எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வைக் குற்றஞ்சாட்டியுள்ளன.

மோடி – அமித்ஷா கும்பலின் இந்த நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, பிரிவு 79-இல், ஒன்றிய அரசுக்கு ஒரு நாடாளுமன்றம் இருக்கும்; அது, குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டு  அவைகளைக் கொண்டதாக இருக்கும்; அந்த இரண்டு அவைகள் முறையே மாநிலங்களவை மற்றும் மக்களவை என அறியப்படும்” என்று கூறுகிறது.

படிக்க : போலி ஜனநாயகத்தை நொறுக்கு ! புதிய ஜனநாயகத்தை எழுப்பு !!

குடியரசுத் தலைவர் என்பவர் நாட்டின் தலைவர் மட்டுமல்ல, நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியும் ஆவார். அவர் நாடாளுமன்றத்தைக் கூட்டி, முன்னுரை செய்து, உரையாற்றுகிறார். நாடாளுமன்றத்தின் சட்டம் அமலுக்கு வருவதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் குடியரசுத் தலைவர் இல்லாமல் நாடாளுமன்றம் இயங்க முடியாது.

ஆனாலும் குடியரசுத் தலைவர் இல்லாமலேயே புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்க பிரதமர் முடிவு செய்துள்ளார். இந்த கண்ணியமற்ற செயல், குடியரசுத் தலைவரின் உயர் பதவியை அவமதிப்பதோடு, அரசியலமைப்பின் உறுதி மற்றும் உணர்வை மீறுகிறது; இந்திய தேசம் தனது முதல் பெண் ஆதிவாசி குடியரசுத் தலைவரைக் கொண்டாடுகிற அந்த உணர்வைக் குறைத்து மதிப்பிடுகிறது.

நாடாளுமன்றத்தை இடையறாது வெறுமையாக்கிய பிரதமருக்கு ஜனநாயக விரோதச் செயல்கள் புதியவை அல்ல. இந்திய மக்களின் பிரச்சினைகளை எழுப்பிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்; இடைநீக்கம் செய்யப்பட்டனர்; அவர்களின்  குரல் நெரிக்கப்பட்டது.

ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை சீர்குலைத்துள்ளனர். மூன்று விவசாயச் சட்டங்கள் உட்பட பல சர்ச்சைக்குரிய சட்டங்கள் கிட்டத்தட்ட எந்த விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றக் குழுக்கள் நடைமுறையில் செயலிழந்துவிட்டன.

புதிய நாடாளுமன்றக் கட்டடம் தொடர்பாக இந்திய மக்களுடனோ அல்லது எம்.பி.க்களுடனோ கலந்தாலோசிக்காமல், நூற்றாண்டிற்கு ஒருமுறை நடக்கும் தொற்றுநோய் பரவல் காலத்தின்போது பெரும் செலவில் கட்டப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், புதிய கட்டடத்தின்பால் எந்த மதிப்பையும் நாங்கள் காணவில்லை. புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பது என்ற எங்களின் கூட்டு முடிவை அறிவிக்கிறோம்.

இந்த எதேச்சதிகாரப் பிரதமர் மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராக – உறுதியான முறையிலும், உணர்வுப்பூர்வமான முறையிலும், வலுவான முறையிலும் – தொடர்ந்து போராடுவோம்; மேலும் இச்செய்தியை நேரடியாக இந்திய மக்களுக்கு எடுத்துச் செல்வோம்” என்று எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஆகையால், எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புப் போராட்டத்தை இவ்வாறு சொல்லலாம். இது ‘புறக்கணிப்பு’க்கு எதிரான ‘புறக்கணிப்பு’!

முதல் புறக்கணிப்பு, பாசிசத்தின் கை மேலோங்கியிருப்பதை உணர்த்துகிறது. இரண்டாவது புறக்கணிப்பு, பாசிசத்தை எளிதாக (தேர்தலின் மூலம் மட்டுமே) வீழ்த்திவிடலாம் என்று கனவு கண்டவர்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

எதிர்க்கட்சிக்களுக்கு எதிரான மொன்னை வாதங்கள்

நாட்டின் நாடாளுமன்றத்திற்குப் புதிய கட்டடம் திறக்கப்படும் சூழலில், இதற்கு குடியரசுத் தலைவரை வைத்து திறக்காததும், அவரை அந்நிகழ்ச்சிக்கு அழைக்காமல் புறக்கணித்திருப்பதும் கண்டிக்கத்தக்கது என்பதுதான் எதிர்க்கட்சிகளின் வாதமாகும். எதிர்க்கட்சிகளின் வாதத்தில் உள்ள நியாயத்தில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

எனினும், நாடாளுமன்றத்திற்குப் புதிய கட்டடத்தைத் திறந்து வைப்பது வரலாற்று முக்கியத்துவமுள்ள நிகழ்ச்சி, நாட்டிற்கு பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது தவறு என்று பா.ஜ.க.வினர் எதிர்க்கட்சிகளைக் கண்டித்துள்ளனர். நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளப்படும் சிலரும் எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு பா.ஜ.க. முன்வைத்திருக்கும் வாதத்தையே வழிமொழிந்தனர்.

தமிழக சட்டமன்றத்திற்கு புதிய கட்டடத்தை அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதிதான் திறந்து வைத்தார். அப்போது குடியரசுத் தலைவராக, பிரதீபா பாட்டில் என்ற பெண் இருந்தார் எனினும் அவரை அழைக்கவில்லை. அதைப்போலவே, நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நூலகத்தை அன்றைக்கு ராஜீவ்காந்திதான் திறந்துவைத்தார். ஆகையால், நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடத்தை ஒரு டீ விற்றவர் திறந்துவைப்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய விசயம் என்று பா.ஜ.க. ஆதரவாளர்கள் பேசுகின்றனர்.

பாசிஸ்டுகளுக்கு எப்போதும் இரட்டை நாக்கு, இரட்டை செயல்பாடு.

நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் திறக்கப்படும் நிகழ்ச்சியை, ஒரு வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிகழ்வுபோல சித்தரிக்கின்றனர். படாடோபமாக பிரச்சாரங்களையும் ஏற்பாடுகளையும் செய்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் உள்ள நிகழ்வுக்கு ஏன் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேட்டவுடனே, எதிர்க்கட்சிகள் கடந்த காலத்தில் செய்த, அற்ப நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பேசுகின்றனர். இவ்வாறு பா.ஜ.க.வின் செயல்பாடுகளை எல்லாம் நியாயப்படுத்தி, பா.ஜ.க.வினர் பேசுவதெல்லாம், எதிர்க்கட்சிகளை இழிவுப்படுத்துகின்ற கருத்துகளாகும்.

“குடியரசுத்தலைவர் புறக்கணிப்பு” மனுவாதத்தின் ஒருபகுதி மட்டுமே

நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடம் திறக்கப்படும் இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல, இதற்கு முந்தைய நிகழ்ச்சியான புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழாவின்போதும் குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். அன்றைய குடியரசுத் தலைவர் தலித், இன்றைய குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தவர் என்பதுதான் முக்கியமான விசயமாகும்.

குறிப்பாக, தற்போதைய புதிய கட்டடத்திற்கான திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநிலங்களவைத் துணைத் தலைவர் ஆகியோரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. மரபுப்படி பார்த்தால் மக்களவைத் துணைத்தலைவரின் பெயரும் இடம்பெற்றிருக்க வேண்டும். மக்களவைத் துணைத்தலைவரின் பெயரைப் போட்டால் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரையும் இணைக்க வேண்டியதாகிவிடும் என்பதற்காக, குடியரசுத் தலைவரின் பெயர் இடம்பெறக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இக்கட்டுரை எழுதப்படும் வரை இதுதான் நிலைமை. ஒருவேளை, எதிர்க்கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக, குடியரசுத் தலைவர் இந்த நிகழ்விற்கு அழைக்கப்படலாம்.

படிக்க : கால்நடைகளை கைவிட்டால் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்குமாம் உ.பி அரசு!

எனினும், நாட்டில் நடக்கும் முக்கியமான எல்லா நிகழ்ச்சிகளிலும் மோடியின் பெயர் மட்டும்தான் இருக்க வேண்டும்; மோடியின் பெயர் மட்டும்தான் வரலாற்றில் இடம்பெற வேண்டும், நாளைய வரலாறு மோடியின் புகழ்பாட வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து குடியரசுத் தலைவர் நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும், குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தவர் என்பதால், மனுதர்மப்படி இந்தக் கட்டடத்தை அவர் திறந்து வைக்கக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ். கும்பல் கருதுகிறது என்றும் ஜனநாயக சக்திகள் தெரிவிக்கும் கருத்துகள் சரியானவையே.

மேற்படி நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடம் என்பது ஒரு அடையாளமாகும். இந்த கட்டடத்தில் 888 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடுத்து சில ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்போவதையும் மனதில் கொண்டு இக்கட்டடம் திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளது. அவ்வாறு மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, மக்கள் தொகை வளர்ச்சி குறைவான தென்னிந்தியாவிற்கு மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ள வடஇந்தியாவுடன் ஒப்பிட தொகுதிகளின் விகிதாச்சாரம் குறையும். பா.ஜ.க. ஆதரவு பசு வளைய மாநிலங்களில் இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவை மட்டுமின்றி, தேசிய சின்னமாகிய நான்கு சிங்கங்கள் சீற்றத்துடன் இருப்பதை வடிவமைத்து அதனை நாடாளுமன்றத்திற்கு மேல் வைத்துள்ளனர். மேலும், வெள்ளையர்களிடம் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடுதலைப் போராட்டத்தைக்காட்டிக் கொடுத்த சர்வாக்கர் பிறந்த நாளான மே 28-ஆம் தேதி இப்புதிய கட்டடத்தைத் திறக்கின்றனர்.

வெள்ளையர்களிடமிருந்து அதிகார மாற்றம் இந்தியர்களுக்கு மாற்றியதைக் குறிக்கும் வகையில் அன்று வெள்ளையர்களால் வழங்கப்பட்ட மன்னராட்சியின் சின்னமாகிய “செங்கோலை” அன்றைய பிரதமர் நேரு அருங்காட்சியகத்தில் வைத்தார் என்று ஒரு கதையைச் சொல்லி, மனுதர்மத்தின் படி ஆட்சி நடப்பதைக் குறிக்கும் வகையிலான, “மனுதர்மக் கோலை” நாடாளுமன்ற அவைத்தலைவருக்கு அருகில் கொண்டுவந்து வைக்கின்றனர்.

இவையெல்லாம், நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முடிவுகட்டி மன்னராட்சி முறையைக் கொண்டுவருவதைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்துராஷ்டிரத்திற்கான புதிய அரசியல் சாசனத்தை எழுதி வைத்துள்ளது. அதனை இரகசியமாக வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் இந்த கட்டடமும் திறப்புவிழாவும் அரங்கேற்றப்படுகிறது. தற்போது நடந்தேறும் நிகழ்வுகள் அதைத்தான் நமக்கு உணர்த்துகின்றன.

இத்துடன், 2024-இல் இராமர் கோவில் திறக்கப்பட இருக்கிறது; அடுத்த ஆண்டில் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற முறையில் நடத்த இருப்பதாக மோடி – அமித்ஷா கும்பல் அறிவித்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட இருக்கின்றன. இவையன்றி, ஏற்கெனவே நிலவிவரும் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் மாநிலங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு வருகின்றன. இனி, அவற்றை அதிகாரங்கள் ஏதுமற்ற சமஸ்தானங்களாக சுருக்குவது மட்டுமே எஞ்சி நிற்கிறது.

ஆகையால், பிரச்சினையின் ஒரு சிறுமுனைதான் நாடாளுமன்றத்திற்குப் புதிய கட்டடம் திறக்கப்படும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வாகும். உண்மையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் என்று இவர்கள் சொல்வது, இந்துராஷ்டிர அடிப்படையிலான புதிய ‘நாடாளுமன்றத்திற்கான’ கட்டடம்; மன்னராட்சியின் அரண்மனை!

எழுத்துரிமை, பேச்சுரிமை, கல்வி கற்கும் உரிமை, வாழ்விட உரிமை, மொழி உரிமை, வழிபாட்டு உரிமை என முதலாளித்துவ ஜனநாயகம் ஏற்கின்ற குறைந்தபட்ச உரிமைகள், அதிகாரங்கள் ஏட்டளவிலும் இல்லாத, மன்னராட்சியை ஒத்த, பார்ப்பன சாதிய அடிப்படையிலான, மனுதர்மத்தின் அடிப்படையிலான, மாநிலங்கள் அதிகாரங்கள் ஏதுமற்ற சமஸ்தானங்களாக மாறியிருக்க இந்துராஷ்டிர முடியாட்சியை அறிவிப்பதன் தொடக்கம்தான் இந்த கட்டடத் திறப்பு விழாவாகும்.

இறந்துபோன ‘ஜனநாயகத்தை’ எப்போது புறக்கணிப்பது?

இப்படி ஆர்.எஸ்.எஸ்.யின் திட்டத்தின் கீழ் இயங்கும் மோடி – அமித்ஷா கும்பல், இப்புதிய கட்டடத்தைத் திறக்கும் நிகழ்வே பாசிசத்தை அரங்கேற்ற இக்கும்பல் மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானதாகும். அந்த நிகழ்ச்சிக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது ஆச்சரியத்திற்குரியதல்ல.

குடியரசுத் தலைவரை அழைத்திருந்தால் இந்நிகழ்வில் பங்கேற்றிருக்கலாம் என்ற எதிர்க்கட்சிகளின் கண்ணோட்டமே பிரச்சினையை சுருக்குவதாகும்; இன்னொரு வகையில், இந்துராஷ்டிர அடிப்படையிலான இந்த கட்டடத்தை ஏற்கவைக்கும் வகையிலானதாகும்.

மேலும், எதிர்க்கட்சிகளைப் புறக்கணித்து, மோடி – அமித்ஷா கும்பலுக்கு ‘எதிர்ப்பில்லாதவர்களை’ மட்டுமே கொண்டு இந்த கட்டடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்ற சதித் திட்டத்தின் ஒரு அங்கம்தான் குடியரசுத் தலைவரைப் புறக்கணித்திருப்பதாகும்.

இன்னும் தெளிவாகச் சொன்னால், “காங்கிரசு இல்லாத இந்தியா” என்ற ஆர்.எஸ்.எஸ்.யின் கொள்கை அரங்கேறுவதைக் குறிக்கும், இந்தியாவை ஆளும் கட்டடத்தின் திறப்புவிழா என்ற வகையிலும் எதிர்க்கட்சிகள் வரவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். இன்னும், தாங்கள் நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடம் திறப்பு விழாவைப் புறக்கணித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கருதினால், அது தவறு. அவர்கள், பா.ஜ.க.வால் திட்டமிட்டு ‘வெளியேற்றப்பட்டுள்ளனர்’!

நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதுகின்ற எதிர்க்கட்சிகளுக்கு, மோடி – அமித்ஷா கும்பலின் செயல்பாடுகள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் வழியே பாசிசம் அரங்கேறி வருவதை உணர்ந்தாலும், மோடி – அமித்ஷா கும்பலிடமிருந்து இந்த அரசியல் சாசனத்தைப் பாதுகாத்துவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.

2014-இல் மோடி – அமித்ஷா கும்பல் ஆட்சியைக் கைப்பற்றியதில் இருந்து இந்த நாடாளுமன்ற ஜனநாயக வடிவத்திற்கு குழிதோண்டும் பணிகளைத் தீவிரப்படுத்தி, இந்துராஷ்டிரத்திற்கான பல்வேறு கட்டுமான நடவடிக்கைகள் வேகமாக நடந்து வருகின்றன. சென்ற சில மாதங்களில் மட்டும், மகாராஷ்டிரா உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ப்பு, ராகுல் பதவி பறிப்பு; டெல்லி குடிமைப் பணி ஆணையத்தை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை பிறப்பித்துள்ளதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்றிய அரசு நீர்த்துப்போகச் செய்தது; காஷ்மீருக்கு தேர்தல் நடத்துவதைத் தள்ளிப்போடுவது போன்றவை இந்த ஜனநாயகத்தைத் தூக்கியெறிந்துவிட்டதை நமக்கு உணர்த்துபவையாகும்.

ஆர்.எஸ்.எஸ். தனக்கு இருக்கும் பலத்தைக் கொண்டு தேர்தல் அரசியலுக்கு அப்பால் அதிகார வர்க்கத்தின் அனைத்து அங்கங்களிலும் ஊடுருவி, தான் விரும்பியதை நிறைவேற்றும் நிலைக்கு உயர்ந்திருப்பதை இவை உணர்த்துகின்றன.

நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுதான் எதிர்க்கட்சிகளது விரும்பம் என்றாலும், இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்காக வளமாக இருந்த, என்றோ இறந்துபோன இந்த போலி ஜனநாயகக் கட்டமைப்பை அகற்றும் வேலையைத்தான் மோடி – அமித்ஷா கும்பல் செய்கிறது என்று எதிர்க்கட்சிகள் புரிந்து கொள்ளவில்லை. மாண்டவை மீளப்போவதில்லை! நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தின் பெருமைகளை இனியும் பேசிக்கொண்டிருப்பதில் எந்தப் பயனும் இல்லை.

படிக்க : டம்மி பீசாகும் நாடாளுமன்றம் – ஒரு போலிக் கம்யூனிஸ்டின் புலம்பல் !

மோடி – அமித்ஷா கும்பல் தலைமையில் ஒரு பாசிச அரசு அரங்கேறுவதைத் தடுக்க வேண்டுமெனில், வீழ்ந்து கொண்டிருக்கும் இந்த அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதைக் கைவிட்டு, பாசிசம் முகிழ்ந்தெழாத வகையில், பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு ஒன்றை கட்டியமைக்கும் பணியில் இறங்க வேண்டியதுதான் ஒரே தீர்வு.

இன்று, புதிய கட்டடத் திறப்புவிழாவில் தொடங்கியிருக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தப் புறக்கணிப்புப் போராட்டத்தை அதே திசையில் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், மோடி – அமித்ஷா வழியில் கார்ப்பரேட் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் எதிர்க்கட்சிகளிடம் இதனை எதிர்ப்பார்ப்பது நகைப்புக்குரியதே.

பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை எதிர்க்கட்சிகளிடம் கையளித்துவிட்டு வேடிக்கைப் பார்க்காமல், உழைக்கும் மக்களாகிய நாம் வீதியில் இறங்க வேண்டும்; பாசிசத்திற்கு எதிரான ஒரு மக்கள் எழுச்சியைக் கட்டமைக்க வேண்டும்.

புதிய ஜனநாயகம்,
2023 ஜூன் இதழுக்குரிய தலையங்கம்.