Thursday, May 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 105

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்! | மக்கள் அதிகாரம்

25.05.2023

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை
அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்!

கண்டன அறிக்கை

மிழ்நாட்டின் ஆவின் நிறுவனமானது சில குறைபாடுகளுடன் இருந்தபோதிலும் தமிழ்நாட்டு மக்களின் பால் தேவையை பெருமளவு நிறைவேற்றி செய்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு ஆவின் பாலையே மருத்துவர்கள் இன்றளவும் பரிந்துரை செய்து வருகிறார்கள். ஆவின் நிறுவனமானது பால் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்வது தொடர்பாக சில பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த முரண்பாட்டை ஊதிப் பெருக்கி பாரதிய ஜனதா கட்சியும் சங்கப் பரிவாரங்களும் தொடர்ச்சியாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

இச்சூழலை பயன்படுத்திக் கொண்டு  குஜராத்தின் அமுல் நிறுவனமானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது.

படிக்க : ஒன்றிய அரசின் 12 துறைகளில் கார்ப்பரேட் நிபுணர்களை நியமிக்க முடிவு!

இதுகுறித்து தமிழ்நாட்டு அரசுக்கு எவ்வித முறையான தகவலும் கொடுக்காமல் திருட்டுத்தனமாக இந்த முயற்சியை குஜராத்தின் அமுல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்பதே உண்மை. குஜராத்தின் அமுல் நிறுவனம் தனிப்பட்ட முறையில் இதை மேற்கொள்ளவில்லை மாறாக ஒன்றிய அரசின் துணையோடு இப்படிப்பட்ட ஊடுருவலை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே, கர்நாடகத்தின் நந்தினி பால் நிறுவனத்தை ஒழித்துக்கட்ட மோடி அரசு செய்த சதிகளை அம்மக்கள் விரட்டி அடித்தனர்.

இந்தியாவில், மாநிலங்களுக்குள் ஒருவருக்கொருவர் பால் உற்பத்திப் பகுதியை மீறாமல், தங்களது கூட்டுறவுச் சங்கங்கள் வளர பால் கொள்முதல்-ஐ அனுமதிப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதியில் பாதிப்பினை ஏற்படுத்தி தமிழ்நாட்டு மக்களுக்கு பால் தட்டுப்பாட்டை ஏற்படுத்த செய்யும். படிப்படியாக ஆவின் நிறுவனத்தை ஒழித்துக்கட்டி நாளை தமிழ்நாடு பாலுக்கு கையேந்த வேண்டிய சூழலும் உருவாகும்.

அது மட்டுமல்லாது, மோடி அரசின் இச்செயல்பாடு மாநில அரசின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சியாகவும் நாம் கருத வேண்டி உள்ளது.

தமிழரின் பெருமை என்று கூறிக்கொண்டு புதியதாக திறக்க உள்ள நாடாளுமன்றத்தில் செங்கோல் வைப்பது என்பதெல்லாம் ஏமாற்று. தமிழ்நாட்டின் பெருமைகளை ஒழித்துக் கட்டுவதுதான் மோடி அரசின் உண்மையான முகம். ஆவின் நிறுவனத்துக்கு எதிரான மோடியின் செயல்பாடு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

படிக்க : சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் போராட்டம்!

குஜராத்தின் அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் பாசிச மோடி அரசின் சதியை தமிழ்நாட்டு மக்கள் முறியடிக்க வேண்டும் இன்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் மருது
செய்தி தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

ஆர்.எஸ்.எஸ். உளவாளி ஆர்.என்.ரவி | ம.க.இ.க சிவப்பு அலை பாடல் | வீடியோ

வினவு யூடியூப் சேனலில் ம.க.இ.க சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழுவின் “ஆர்.எஸ்.எஸ். உளவாளி ஆர்.என்.ரவி” பாடல் காணொலி வடிவில்

பாருங்கள்! பகிருங்கள்!!

டெல்லி: பாசிஸ்டுகளின் அதிகார வெறிக்கு நீதிமன்றம் தடைபோட முடியாது!

0

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அரசாங்கத்திற்கும் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா-விற்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முட்டல் மோதல்கள் ஏற்பட்டு வந்தன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இவ்‌வழக்கின் தீர்ப்பு கடந்த மே 11 அன்று வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில் “டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லை என்றாலும், சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே அதிகாரம் இருக்க வேண்டும். டெல்லி அரசுக்கு பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் உள்ளன. குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும் அரசுக்கே உள்ளது” என்று கூறப்பட்டது.

இத்தீர்ப்பு ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே கெஜ்ரிவால் சில முக்கிய அதிகாரிகளையும் மாற்றியிருந்தார். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள “துணைநிலை ஆளுநர் டில்லி சட்டமன்றத்திற்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும்” என்பதையும், “அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படவில்லை என்றால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும்” என்பதையும் பலரும் கொண்டாடி வந்தனர். அதிகார வெறி பிடித்த பாசிஸ்டுகளால் இதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கொண்டாட்டங்கள் முடிவடைவதற்குள் பாசிச மோடி அரசு தனது அடுத்த தாக்குதலைத் தொடுத்துவிட்டது.

கடந்த மே 19 அன்று டெல்லி அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுடன் மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்தை (The Government of National Capital Territory of Delhi Act, 1991) திருத்தியும், குடிமைப் பணி அதிகாரிகளை கட்டுப்படுத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் நிராகரிக்கும் வகையில் இந்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


படிக்க: நீதித்துறையால் பாசிசத்திற்கு முட்டுக்கட்டை போட முடியாது!


இந்த அவசர சட்டம் வாயிலாக, குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் தொடர்பான விவகாரங்களில் முடிவெடுக்க தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையம் (National Capital Civil Service Authority) என்ற அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இதில் டெல்லி முதல்வர், டெல்லி அரசு தலைமைச் செயலாளர் (chief secretary) மற்றும் முதன்மை உள்துறைச் செயலர் (principal home secretary) ஆகியோர் அங்கம் வகிப்பர். இதற்கு டெல்லி முதல்வர் தலைமை தாங்குவார். இக்குழு பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும். நியமனம் தொடர்பான இறுதி முடிவை துணைநிலை ஆளுநர் தான் எடுப்பார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல்வரின் முடிவு இக்குழுவில் சிறுபான்மை ஆகிறது. இது மே 11 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யும் நடவடிக்கையாகும்.

டெல்லி என்பது சிறப்பு அதிகாரங்கள் மற்றும் சொந்த சட்டசபையைக் கொண்ட யூனியன் பிரதேசமாகும். 2015-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. அப்போது டெல்லி துணைநிலை ஆளுநராக இருந்தவர் காங்கிரஸ்-ஆல் நியமிக்கப்பட்ட நஜீப் ஜங் (Najeeb Jung). இவர் ஆம் ஆத்மி அரசாங்கத்திற்கு கொடுத்து வந்த குடைச்சல்களைக் கண்ட மத்திய பா.ஜ.க அரசு டிசம்பர் 2016 வரை இவரை பதவியில் விட்டு வைத்திருந்தது. பின்னர், உள்துறை அமைச்சகத்தின் நிர்பந்தத்தால் இவர் திடீர் ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சாசனம் ஆளுநருக்கு வழங்கியுள்ள அதிகாரத்தையும், பொதுப் பட்டியலில் (Concurrent list) மத்திய அரசுக்கு உள்ள அதிகாரத்தையும் பயன்படுத்தி பா.ஜ.க ஆளாத மாநிலங்களை நிலைகுலையச் செய்வதை ஒரு உத்தியாகக் கடைப்பிடித்து வருகிறது பாசிச மோடி அரசு. அதிலும் குறிப்பாக, மோடியின் 2019 தேர்தல் வெற்றிக்கு பிறகுதான் துணைநிலை ஆளுநர்கள் உக்கிரமானவர்களாக மாறியுள்ளனர். இந்நிலையில் தான் மே 2022-இல் வினய் குமார் சக்சேனா டெல்லியின் புதிய துணைநிலை ஆளுநராக நியமிக்கப்படுகிறார்.

சக்சேனா தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல்‌ தனது ‘பணி’யை செவ்வனே செய்யத் தொடங்குகிறார். அமைச்சர்களைத் தொடர்பு கொள்ளாமல் நேரடியாக அதிகாரிகளுடன் கூட்டங்களை நடத்துவது போன்ற மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மதிக்காத போக்கை கடைப்பிடிக்கிறார். சக்சேனா மீது டெல்லி அரசாங்கம் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறது. துணைநிலை ஆளுநரைக் கொண்டு மத்திய அரசு மேற்கொள்ளும் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியாத டெல்லி அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தை நாடியது.


படிக்க: ஆளுநர்கள் நியமனம்: அடிவருடிகளுக்கு பரிசு! அடியாள் வேலைக்கு பதவி!


உச்ச நீதிமன்றமும் டெல்லி அரசாங்கத்திற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. ஆனால், இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் சரத்து 123-ஐ பயன்படுத்தி, தனது கைப்பாவையான குடியரசுத் தலைவரைக் கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை செல்லாக் காசாக்கும் வண்ணம் அவசர சட்டத்தை இயற்றியுள்ளது பாசிச மோடி அரசு.

அரவிந்த் கேஜ்ரிவால் உச்சநீதிமன்றம் சென்று சட்டப்போராட்டம் நடத்தி உரிமையை வென்றெடுக்க வழிவகை செய்த அதே அரசியல் அமைப்பு சாசனம் தான், பாசிச மோடி அரசு குடியரசு தலைவரின் துணைகொண்டு அவசர சட்டம் இயற்றி வென்றெடுக்கப்பட்ட அந்த உரிமையை பறித்துக்கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. நாம் இங்கு கவனிக்க வேண்டிய விசயம் இது தான்.

கேஜ்ரிவாலோ தற்போது மாநிலங்கள் அவையில் இந்த சட்டத்தை தோற்கடிக்கும் பொருட்டு பா.ஜ.க எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவை திரட்டி வருகிறார். ஆனால், நாடாளுமன்றத்தில் இச்சட்டம் தோற்கடிக்கப்பட்டாலும் இதே சட்டத்தை அச்சு பிறழாமல் மீண்டும் ஒருமுறை அவசர சட்டமாக் கொண்டுவர இந்த அதிகாரவெறி பிடித்த பாசிச மோடி அரசு தயங்காது.

பாசிசம் அரசியல் அமைப்பு சாசனத்தைப் பயன்படுத்தியே தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. சிலர் இதை அறியாமல் இருக்கின்றனர். இன்னும் சிலரோ, இதை அறிந்ததும் அறியாததுபோல் “அரசியலமைப்பு சாசனத்தை காப்போம்” என்று முழங்குகின்றனர். எனவே பாசிசத்தை வீழ்த்த, அரசியல் அமைப்பு மாயைகளை விட்டொழிந்து பாசிச எதிர்ப்பு ஜனநாயக குடியரசை அமைப்பதற்கான போராட்டத்தில் அனைவரும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.


பொம்மி

ஒன்றிய அரசின் 12 துறைகளில் கார்ப்பரேட் நிபுணர்களை நியமிக்க முடிவு!

ன்றிய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் அவ்வப்போது ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவன நிபுணர்களை அனுமதித்து வந்த மோடி அரசு, தற்போது மேலும் 12 துறைகளில் கார்ப்ரேட் தனியார் நிறுவன நிபுணர்களை நேரடி இயக்குநர்களாகவும், துணை செயலாளர்களாகவும், இணைச் செயலாளர்களாகவும் நியமிக்க முடிவு செய்துள்ளது.

மேலும், ஒன்றிய அரசின் திட்டங்களை சரியாக அமல்படுத்த ஒவ்வொரு துறையிலும் துறைசார்ந்த உயர் பொறுப்புகளில், சிறந்த நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்று கூறும் பா.ஜ.க அரசு, அதற்காக அரசு துறைகளில் பணி அமர்த்துவதற்கு பின்பற்றப்படும் சட்ட விதிகளிலும் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ள உள்ளது. மேலும் தொழில்நுட்ப நிபுணர்கள் வல்லுனர்களுக்கான காலி பணியிடங்களை உடனே கண்டறியும் படி அந்தந்த துறைசார்ந்த அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது.

அந்த வகையில் மத்திய அரசின் முக்கிய அமைச்சகங்களான வருவாய்த்துறை, நிதித்துறை, பொருளாதாரத்துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்துறை போக்குவரத்து துறை, நெடுஞ்சாலை துறை, கப்பல் போக்குவரத்து துறை, சுற்றுச்சூழல் துறை, வனத்துறை விமானத்துறை, வர்த்தகத்துறை மரபுசாரா எரிசக்தி துறை உள்ளிட்ட துறைகளில் முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கவும் அரசின் திட்டங்களை சரியாக செயல்படுத்தவும் இவர்கள் மிகுந்த உதவியாய் இருப்பார்கள் என அறிவித்திருக்கிறது ஒன்றிய அரசு.

இந்த அறிவிப்பானது சட்ட விரோத செயல் என்றும்; இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள சமூகநீதிக் கோட்பாட்டைச் சீர்குலைக்கும் விதத்தில் இருப்பதால் இவற்றை எதிர்த்து அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் சமூகநீதிக்காக போராடும் அனைத்து மாநில முதல்வர்களும் தங்களுடைய வலுவான கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


படிக்க: விசாகப்பட்டினம் எஃகு ஆலை தனியார்மயமாக்கலுக்கு எதிராக VSP தொழிலாளர்கள் போராட்டம்


யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றிய அமைச்சகங்களிலும் ஒன்றிய அரசு பணியிலும் செயலாற்றி வரும் பணியாளர்களையும் அந்தத் துறைகளின் தலைவர்களாக பொறுப்பில் உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் அவர்களின் திறமைகளையும் கொச்சைப்படுத்தும் செயல் இது என்றும், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தபட்ட பிரிவினர் ஒன்றிய அரசின் உயர்பதவிகளுக்கு வந்துவிடக்கூடாது என இதுபோன்ற நடவடிக்கைகளை பா.ஜ.க அரசு மேற்கொள்கிறது என்றும் அம்பேத்கரிய பெரியாரிய அமைப்புகளும் கட்சிகளும் கூறுகின்றன. இப்படி ஒவ்வொருவரும் இந்நடவடிக்கைக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.

இப்படி இவர்கள் கூறும் அனைத்தையும் கடந்து நாம் பார்க்க வேண்டியது இந்த அரசுக்கட்டமைப்பு முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதன் மூலமே தங்கள் விருப்பமான இந்துராஷ்டிரத்தை அமைக்க முடியும் என்று திட்டமிட்டு இதுபோன்று நடவடிக்கைகளில் காவி கும்பல் ஈடுபடுகின்றனர் என்பதையே. மேலும் ஒவ்வொரு துறைகளிலும் கொள்கை முடிவு எடுக்கும் உயர் அதிகாரிகள் பொறுப்பில் அமர்ந்து கொண்டு இந்துத்துவ கருத்துக்கள் அடிப்படையிலான திட்டங்களை வகுத்து அவற்றை சட்டபூர்வமாக அமுல்படுத்த முயல்கிறது ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல். அவர்களுக்கு தேவையான பாதையை அமைத்து கொடுப்பதுதான் மோடி அரசின் முதன்மையான வேலையாகவும் உள்ளது.

மற்றொரு பக்கம் தங்களுடைய கார்ப்ரேட் நண்பர்கள் கொள்ளையடிக்க வசதியாக இதுபோன்ற தனியார் நிறுவன நிபுணர்களை ஒன்றிய அரசின் உயர் பதவிகளில் நியமனம் செய்கிறார் மோடி.


படிக்க: பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!


அண்மையில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக மல்லிகா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் டி.வி.எஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் வேணு சீனிவாசனின் மனைவி. தமிழகத்தைச் சேர்ந்த டிராக்டர் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் (டாஃபே) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியவர்

தனியார் துறையில் தலைவராக இருந்த இவரைத்தான் பொதுத்துறை நிறுவன தேர்வு வாரியத்தின் தலைவராக நியமித்து முதல் முறையாக இத்திட்டத்தை அமல்படுத்தியது ஒன்றிய அரசு.

இது போன்ற தனியார் நிறுவனங்களில் உள்ள தொழில்நுட்ப நிபுணர்கள் வல்லுநர்களை ஒன்றிய அரசின் உயர்பதவிகளில் நியமிப்பதன் மூலம் அவர்கள் தங்களுடைய கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தேவையான கார்ப்ரேட் நல திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்களே தவிர இவர்கள் கூறும்படியான அரசு பொதுத்துறையில் எந்த முன்னேற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை.மேலும் அவர்கள் கார்ப்ரேட் திட்டங்களை வகுப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதால் அரசு நிறுவனங்களை சிறிது சிறிதாக தனியார் நிறுவனத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு பின் முழுவதுமாக தனியார்மயமாக்கி விடுவார்கள். இதைத்தான் மோடி அரசும் வேண்டுகிறது. அதற்காகவே தேசிய பணமயமாக்கல் திட்டம், அரசு தனியார் கூட்டு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நாம் சொல்லிக்கொண்டே போகலாம்

இவர்களின் இந்துமதவெறி காவிக்கும்பலின் கனவை நிறைவேற்றவும் தனியார் கார்ப்ரேட் முதலாளிகள் பொதுத்துறையை சூறையாடவும் இதுபோன்ற பல்வேறு வகையான சட்ட திட்டங்களை செயல்படுத்தி வரும் பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பலை விரட்டியடிப்போம். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க உழைக்கும் மக்களாய் ஒன்றிணைவோம்


சித்திக்

மூடு டாஸ்மாக்கை! | தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம்

23.05.2023

விஷசாராய பலிகள்: திமுக அரசே முதல் குற்றவாளி!
மூடு டாஸ்மாக்கை!

அன்பார்ந்த உழைக்க்கும் மக்களே!

சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில்  கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனவர்களின் எண்ணிக்கை 25-ஐ தொட்டுவிட்டது. இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய்  கொடுத்து அந்த குடும்பங்களின்  ஒப்பாரியை முடிவுக்கு கொண்டு வந்தது திமுக அரசு. தமிழ்நாட்டின் டிஜிபி ஆனால் சைலேந்திரபாபு, இது கள்ளச்சாராயம் இல்லை, மெத்தனாலை திருட்டுத்தனமாகக் கொண்டு வந்து விற்றுள்ளார்கள் என்று சொல்கிறார்.கள்ளச்சாராய மரணங்களுக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்றால் எதற்காக போலீஸ் காரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்? எதற்காக கலெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்?

டாஸ்மாக்கை ஏன் மூடவில்லை என்று திமுக அரசை கேட்டால்,  கடந்த 2016 ஆம் ஆண்டு நாங்கள் கொடுத்த வாக்குறுதி அது; 2021 ஆம் ஆண்டு தேர்தலில் டாஸ்மாக்கை மூடுவோம் என்று வாக்குறுதி கொடுக்கவில்லை என்கிறார்கள். இப்படி எல்லாம் தங்களுடைய தவறை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது சமூக நீதி’ திமுக அரசு.

டாஸ்மாக்கால் பாதிக்கப்படுவோர் யார்? கூலி வேலை செய்யும் மக்கள் மட்டுமல்ல; கல்லூரி, பள்ளி செல்லும் மாணவர்களும் தான்.

ஏழை எளிய மக்களின் உழைப்பையும் உயிரையும் பறித்து மனித வளத்தையும் மொத்த சமூகத்தையும் முடமாக்கி அதில் கிடைக்கும்  வருமானம் தான் தமிழ்நாட்டின் பெருமையா?

கீழடி பெருமை பேசும் தமிழ்நாட்டில் தான் ஆண்டுக்கு ரூபாய்  400 கோடி டாஸ்மாக்கில் வருமானம் வருகிறது! அடடா இதை எந்த கல்வெட்டில் எழுதுவது?

டாஸ்மாக்கை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் ஆறாக பெருகும் என்கிறார்கள் . கள்ளச்சாராயம், நல்லச்சாராயம் ,கஞ்சா ,விஷச்சாராயம் , சந்துக்கடை ,பொந்துக் கடை  எல்லாமே போலீசுக்கு தெரியாமல் தான் நடக்கிறதா என்ன?

போலீசின் ஒத்துழைப்போடு தான் தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம், டாஸ்மாக், கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை பொருள்களும் மாறாக ஓடுகின்றனவே!

ஒரு நாளைக்கு பத்து, பன்னிரண்டு மணி நேரம் வேலை செய்யும் தொழிலாளி டாஸ்மாக் கடையில் சுருண்டு கிடக்கிறான். அவனால் தனது உரிமைகளைப் பற்றி பேச முடியாது. வேலை இன்றி தவிக்கும் இளைஞர்களும் கல்வி உரிமை மறுக்கப்பட்ட  மாணவர்களும் சாராய போதையில் மிதக்கும் போது எப்படி சமூக மாற்றத்தை பற்றி சிந்திப்பார்கள்?

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் கொள்கைகளின்  சுரண்டலுக்கு எதிராக யாரும் சிந்திக்கக் கூடாது என்பதற்காகத்தான் ஆண் –  பெண் பேதமின்றி அத்தனை பேரும் நுகர்வு கலாச்சாரத்திலும் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களிலும் சிக்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

மொத்த சமூகத்தையே சாராய போதையில் சீரழித்து விட்டு பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவேன் என்பதும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பதும் தேர்தல் அரசியலுக்கு பயன்படுமே தவிர எவ்வகையிலும் பெண்களையோ அல்லது இந்த சமூகத்தையோ உயர்த்துவதற்கு ஒருபோதும் பயன்படாது.

மூடு டாஸ்மாக் என்பது டாஸ்மாக் கடைகளை மூடுவது என்பது மட்டுமல்ல ; கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட அனைத்து விதமான போதை பொருட்களையும் ஒழித்துக் கட்டுவது தான்.

கோன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்பது போல   அரசே டாஸ்மாக் கடைகளை நடத்தும் போது குடிமக்களில் சிலர் கஞ்சாவையும்  சாராயத்தையும் விற்று வருகின்றனர். ஆக கள்ளச்சாராய வியாபாரிகளுக்கும் இந்த அரசுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்பதே உண்மை.

சாராயத்தை விற்பதற்கு ஒரு துறையை உருவாக்கி அதற்கு ஒரு அமைச்சரை உருவாக்கி இருக்கும் இந்த அரசிடம்  டாஸ்மாக்கை மூடுங்கள் என்று கோரிக்கை வைப்பதும் கெஞ்சுவதும் ஒருபோதும் பயனில்லை.

ஆகவே டாஸ்மாக் ஆகட்டும்,  கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களுகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் மக்களாகிய நாம் அமைப்பாக அணி திரண்டு போராட வேண்டும்!

மூடு டாஸ்மாக்கை!

தோழமையுடன்
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு- புதுவை
9962366321

மலியானா படுகொலை குற்றவாளிகள் விடுதலை: தொடரும் இந்துராஷ்டிர (அ)நீதி!

1987 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரத்தில் உள்ள மலியானா கிராமத்தில் 72 முஸ்லிம்கள் துப்பாக்கியால் சுடப்பட்டும், அரிவாளால் துண்டுதுண்டாக வெட்டப்பட்டும், எரியும் நெருப்பில் தூக்கி வீசப்பட்டும் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். மலியானாவில் நடைபெற்ற இந்த பாசிச வெறியாட்டம், இந்துமதவெறி கும்பலின் குஜராத் பெருந்திரள் படுகொலைக்கு முன்னோடியாகும்.

36 ஆண்டுகளாக இவ்வழக்கில் விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், நீதி கிடைக்கும் என்று காத்திருந்த முஸ்லிம் மக்களின் முதுகில் குத்தும் வகையில் கடந்த மார்ச் 31ஆம் தேதி குற்றவாளிகளை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது மீரட் மாவட்ட நீதிமன்றம். “சாட்சிகளின் வாக்குமூலங்களில் போதுமான ஆதாரம் மற்றும் நம்பகத்தன்மை இல்லாததால்” குற்றம்சாட்டப்பட்ட 39 பேரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளார் நீதிபதி லக்விந்தர் சூட். குஜராத் படுகொலை வழக்கு, பாபர் மசூதி வழக்கு, பில்கிஸ் பானு வழக்கு போன்ற வழக்குகளின் தொடர்ச்சியாக இந்த வழக்கிலும் முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

“குற்றவாளிகள் அனைவரும் நிரபராதிகள் என்றால் எங்கள் மக்களை கொன்றது யார்” என்று கேள்வி எழுப்புகின்றனர் தங்கள் அன்புக்குரியவர்களை பறிகொடுத்த முஸ்லிம் மக்கள். 1987 ஆம் ஆண்டு, மலியானா கிராமத்தில் நடைபெற்ற படுகொலையைப் போலவே, ஹாசிம்புரா பகுதியில் நடைபெற்ற படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையிலும் 2015 ஆம் ஆண்டு “போதிய ஆதாரம் இல்லை” என்று குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

மலியானா படுகொலை நிகழ்வதற்கு முதல் நாள், ஹாசிம்புராவில் 41 முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ். குண்டர் படையோடு, போலீசு, துணை ராணுவம் உள்ளிட்ட அரசின் உறுப்புகளும் இணைந்து முஸ்லிம் மக்கள்மீது நடத்திய இந்த பாசிசப் படுகொலைகளுக்கு எதிராக உறுதியான சாட்சியங்கள் இருந்தபோதும், “போதுமான சாட்சியங்கள் இல்லை” என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் உ.பி.யை ஆண்ட பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் போலீசு, துணை ராணுவப் படையைச் சேர்ந்த குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே முயற்சித்தன.

யோகியின் ஆட்சிக்கு பிறகு உத்தரப்பிரதேசம் இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாற்றப்படவில்லை; மாறாக அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே உத்தரப்பிரதேசத்தின் அரசுக் கட்டுமானங்கள் எப்படி பாசிசமயமாக்கப்பட்டிருந்தன என்பதற்கு மலியானா, ஹாசிம்புரா படுகொலை நிகழ்வுகளே சாட்சியங்கள்.

பிரதேச ஆயுதப் படை: இந்துமதவெறியர்களின் சட்டப்பூர்வ குண்டர் படை!

ராமஜென்ம பூமி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது, பாபர் மசூதி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர் சிலையை வழிபடுவதற்காக இந்துக்களை வளாகத்தினுள் அனுமதிக்க வேண்டும் என்று பைசலாபாத் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இத்தீர்ப்பை ஏற்று 1986 பிப்ரவரியில் அன்றைய ராஜீவ் காந்தி அரசாங்கம் மசூதி வளாகத்தை வழிபாட்டுக்காக திறந்துவிட்டது. இது ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கும்பல் தனது பாசிச நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மேலும் ஊக்கமளித்தது.

“அறம் காப்போம், ஆலயம் காப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து வடமாநிலங்கள் முழுக்க ஊர்வலங்களையும் ரத யாத்திரைகளையும் நடத்தியது ஆர்.எஸ்.எஸ். கும்பல். அதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல இடங்களிலும் இந்து-முஸ்லிம் கலவரம் வெடித்தது. 1987 ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மீரட் நகரத்தில் காவிக் குண்டர்களால் முஸ்லிம் மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களும் கலவரங்களும் நடத்தப்பட்டன.


படிக்க: மலியானா படுகொலை வழக்கு : முசுலீம்களோடு நீதியையும் கொல்கிறார்கள்


உத்தரப்பிரதேச அரசாங்கம் கலவரத்தைக் கட்டுப்படுத்த, பிரதேச ஆயுதப் படை (uttar pradesh – provincial armed constabulary) என்றழைக்கப்படும் துணை ராணுவப் படையை அனுப்பியது. இந்து மதவெறியர்கள் நிரம்பியிருந்த இப்படை, கலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக காவிக் குண்டர்களுடன் இணைந்து முஸ்லிம்களைக் கொத்துக் கொத்தாக கொன்றொழித்தது.

மலியானா கிராமத்தின் அனைத்து வழிகளிலும் சுற்றிவளைத்த இந்து மதவெறியர்கள், கையில் அகப்பட்ட முஸ்லிம்களை அரிவாள்களால் இரக்கமில்லாமல் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்தார்கள். பலர் அரிவாளால் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு எரியும் நெருப்பில் தூக்கி வீசப்பட்டனர். உயிருக்கு பயந்து வீடுகளுக்குள் பதுங்கி இருந்த மக்கள், வெளியில் தாழிட்டு உயிரோடு கொளுத்தப்பட்டனர். பிஞ்சுக் குழந்தைகள் எரியும் நெருப்பில் தூக்கிவீசப்பட்டனர்.

கலவரத்தை அடக்குவதற்காக அனுப்பிவைக்கப்பட்ட துணை ராணுவப் படையினர், மதவெறிக் கும்பலோடு சேர்ந்துகொண்டனர். ஒரு மசூதியில் மதியவேளை தொழுகையை முடித்துவந்த முஸ்லிம்கள்மீது, ஆயுதப் படையினர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அலறித் துடித்து சிதறியோடியவர்கள் விரட்டி விரட்டி சுடப்பட்டனர்.

சில இடங்களில் துணை ராணுவப் படைதான் கலவரத்தையே தொடங்கியுள்ளது. அதன் பிறகுதான் அவர்களுடன் காவிக் குண்டர்கள் இணைந்துக் கொண்டுள்ளனர். “இங்கு கலவரம் தொடங்கப்பட்டது பிரதேச ஆயுதப் படையினரால்தான். முதலில் காவல்துறையும் பிரதேச ஆயுதப் படையினரும் தாக்குதலைத் தொடங்கினர். பின்னர் கலவரக் கும்பல் வந்தது” என்று கூறுகிறார் இடுப்பில் சுடப்பட்டு உயிர்பிழைத்த வக்கில் அகமது.

மலியானாவைப் போல, ஹாசிம்புரா பகுதியிலும் காவிக் கும்பலும் துணை ராணுவப் படையினரும் இணைந்து அப்பாவி முஸ்லிம்களை படுகொலை செய்தனர். இரண்டு கிராமங்களிலும் மே 18 முதல் 23 வரை நடைபெற்ற கலவரங்கள் மிகக் கொடிய பாசிச வெறியாட்டங்களாகும்.

ஹாம்சிபுராவை சுற்றிவளைத்த பிரதேச ஆயுதப் படை, மக்கள் அனைவரையும் நடுத்தெருவில் துப்பாக்கி முனையில் நிறுத்தியது. வீடுகளில் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தது. மக்களை தனித்தனியாக பிரித்து இளம்வயது முஸ்லிம் இளைஞர்கள் 42 பேரை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி, சட்டவிரோதமாக கடத்திச் சென்றது. 324 பேர் அருகிலுள்ள போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்ட 42 பேர், முராத் பகுதியில் உள்ள மேல்கங்கை கால்வாய் பகுதியிலும், மகான்பூர் பகுதியில் உள்ள ஹிண்டன் கால்வாய் பகுதியிலும் நிற்க வைக்கப்பட்டு ஒருவர் பின் ஒருவராக சுடப்பட்டு கால்வாய்களில் வீசியெறியப்பட்டனர். அவர்களில் ஆறு பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர். போலீசு நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட 324 பேரும் கொடூரமாக தாக்கப்பட்டு மீரட் மற்றும் ஃபதேகர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். போலீசு குண்டர்களின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

மீரட் நகரையும் உள்ளடக்கிய காசியாபாத் மாவட்ட போலீசு கண்காணிப்பாளராக இருந்த விபூதி நாராயண் ராய், இப்படுகொலையைப் பற்றி நினைவுகூறுகையில், “போலீசு மற்றும் பிரதேச ஆயுதப்படையைச் சேர்ந்த காவலர்களுள் பெரும்பாலானோர் இந்துக்களாக இருந்ததோடு, அவர்கள் அனைவரும் கலவரத்திற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று நம்பினர். மீரட் மினி பாகிஸ்தானாக மாறிவிட்டதென்றும் முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டுவது அவசியமானது என்றும் அவர்கள் கருதி வந்ததாக”வும் குறிப்பிட்டிருக்கிறார்.

குற்றவாளிகளின் விசாரணை?

முஸ்லிம் மக்களை திட்டமிட்டு படுகொலை செய்த பிரதேச ஆயுதப் படை, போலீசு மற்றும் காவிக் குண்டர்களை காப்பாற்றுவதற்காக ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் துணை நின்றுள்ளது. மலியானா படுகொலையில் முக்கிய குற்றவாளிகளான பிரதேச ஆயுதப் படை மற்றும் போலீசு மீது ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. மாறாக அவர்களுக்கு அடுத்தடுத்து பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. முதல் தகவல் அறிக்கையில் காவி குண்டர்கள் உள்ளிட்டு 94 பேரின் பெயர்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தன. அவர்களில் பலர் சம்பவத்திற்கு முன்பே இறந்துவிட்டனர். பலரைக் காணவில்லை. இறுதியாக 38 பேர் மீது மட்டும் வழக்கு நடந்தது.

குற்றப்பத்திரிகை தொலைந்துவிட்டதாக காரணம்கூறி, 20 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெறவே இல்லை. 2009 ஆம் ஆண்டுதான் முதல் சாட்சியான வழக்கறிஞர் அகமதுவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. 35 சாட்சிகளில் 14 சாட்சிகள்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். காயம் அடைந்தவர்கள் மற்றும் சாட்சி அளித்தவர்களின் அசல் மருத்துவ அறிக்கைகள் கூட சமர்பிக்கப்படவில்லை. சிகிச்சை அளித்த மருத்துவரின் சாட்சியம் சமர்பிக்கப்படவில்லை. எந்த துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்கள் வந்தன என்பதை கண்டறியும் சோதனைகளும் மேற்கொள்ளப்படவில்லை.


படிக்க: 2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!


உத்தரப்பிரதேச அரசு முதல் தகவல் அறிக்கையில் பிரதேச ஆயுதப் படை மற்றும் போலீசின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்களை காப்பாற்றியது என்றால், தற்போது வழக்கை இழுத்தடித்து சாட்சிகளை கூட முறையாக விசாரிக்காமல் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி காவிக் குண்டர்களை காப்பாற்றியுள்ளது நீதித்துறை.

மலியானாவில் பணியமர்த்தப்பட்ட துணை ராணுவப் படைப் பிரிவு ஆர்.டி.திரிபாதி தலைமையிலானது ஆகும். அப்போதைய காங்கிரஸ் அரசு திரிபாதியை இடைநீக்கம் செய்வதாக அறிவித்தது. ஆனால் அவர் மீது துறைரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறும் வரை பல்வேறு பதவிகளில் இருந்தார்.

ஹாம்சிபுரா படுகொலையிலும் துணை ராணுவப் படை அதிகாரிகள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இப்படுகொலை நடந்த இரண்டாவது நாளே உ.பி மாநில அரசின் சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணையைத் தொடங்கிவிட்டாலும் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஆயுதப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டு 60 பேரை சி.பி.சி.ஐ.டி குற்றவாளிகளாக அடையாளம் காட்டி இருந்தாலும் 19 கீழ்நிலை போலீசார் மீது மட்டுமே வழக்கு தொடரப்பட்டது. அதில் 16 பேர் மீதுதான் கொலைக் குற்றம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், 19 பேரும் பதவியில் இருந்து இடைநீக்கம் கூட செய்யப்படவில்லை. மாறாக, அவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன.

உ.பி: இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலை!

மலியானா மற்றும் ஹாசிம்புராவில் முஸ்லிம் மக்கள் காவிக் குண்டர்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்படும்போது காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. ஆனால் உண்மையான அதிகாரம் காவிகளின் கையில் இருந்தது. மேலும், காவிகள் உத்தரப்பிரதேசத்தில் தங்களுக்கான ஒரு அடித்தளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நீண்டகாலமாக செயல்பட்டு வந்தனர். அரசு உறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகளை நுழைத்து வந்தனர்.

1987-ல் நடந்த மலியானா மற்றும் ஹாசிம்புரா படுகொலைகள் மட்டுமல்ல, இதற்கு முன்னரும் பின்னரும் முஸ்லிம் மக்கள் மீது பல்வேறு திட்டமிட்ட தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தாக்குதல்களில் காவி குண்டர்களுடன் போலீசு மற்றும் துணை ராணுவப் படையினரும் இணைந்து செயல்பட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடலாம்.

1961 ஆம் ஆண்டு அலிகார் முஸ்லிம் பல்கலைகழகத்தில், முஸ்லிம் இளைஞர்களால் இந்து மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார் என்ற வதந்தியைப் பரப்பி, காவிக் குண்டர்கள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்தினர். அதைத் தொடர்ந்து மீரட்டில் கலவரம் வெடித்தது. போலீசு இந்துமதவெறி குண்டர்களுடன் இணைந்துகொண்டு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.

1977 ஆம் ஆண்டு வாரணாசியில் இந்துமதவெறிக் குண்டர்கள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்துவதற்காக துர்கா பூஜை ஊர்வலத்தை முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிக்குள் நடத்த முயன்றனர். இதில் கலவரம் வெடித்தது. முஸ்லிம் வீடுகளில் கொள்ளையடித்தல் மற்றும் தீ வைத்தல் போன்ற சம்பவங்களில் போலீசே ஈடுபட்டது.

1980 ஆம் ஆண்டு மொராதபாத் கலவரத்தில், போலீசு மற்றும் பிரதேச ஆயுதப் படை காவிக் குண்டர்களுடன் இணைந்துக் கொண்டு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. 400 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அப்பகுதி முஸ்லிம் மக்கள் 2500 பேர் வரை கொல்லப்பட்டதாகக் கூறுகின்றனர்.

இக்கலவரங்கள் மூலம் காவி பாசிஸ்டுகள், இந்துமதவெறியைத் தூண்டி மக்கள் மத்தியில் தங்களுக்கான அடித்தளத்தை உருவாக்கியுள்ளனர். ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி, வெளிப்படையாக இந்துராஷ்டிர ஆட்சி என்று மட்டும்தான் அறிவிக்கப்படவில்லை. எனவே, இந்துராஷ்டிரத்தில் மலியானா படுகொலை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. இந்த கொடிய இந்துராஷ்டிர பாசிச ஆட்சிதான், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களையும் தாண்டி இன்று நாடு முழுக்க நான்கு திசைகளிலும் விரிந்து பரவிவருகிறது!


அமீர்

தோழர் விஜயகுமார் (எ) புஷ்கின் 124(A) தேசத்துரோக வழக்கில் கைது!

0

விஜயகுமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையைச் சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி, மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலிருந்து சம்மன் ஒன்று விஜயகுமார் அவர்களுக்கு வந்தது. விஜயகுமார் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் நீதிபதிகளுக்கு விரோதமாக கருத்து தெரிவித்ததாகவும் பல்வேறு கொலை மிரட்டல்கள் விடுத்ததாகவும் கலவரத்தை தூண்டும் விதமாக எழுதியதாகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேசத்துரோக வழக்கு 124A மற்றும் கொலை மிரட்டல் வழக்கு 506, இன்னும் இது போன்று பல வழக்குகளையும் விஜயகுமார் மீது பதிந்துள்ளார்கள்.

அழைப்பாணையில் கொடுத்திருந்த தேதியில் விஜயகுமார் அவர்களால் செல்ல முடியாத காரணத்தினால் மீண்டும் அழைப்பாணை அனுப்பும்படி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு மீண்டும் சம்மன் வந்தது. அந்த அழைப்பாணை என்பது பேஸ்புக்கில் எழுதியது சம்பந்தமாக விளக்கம் கோருவது தான். ஆனால் போலீசு, தோழரின் தொலைபேசியை பிடுங்கி வைத்துக்கொண்டு அடுத்த நாள் வரச் சொல்லி நெருக்கடி கொடுத்திருக்கிறது. அடுத்த நாள் போலீஸ் நிலையம் சென்றபோது தோழரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தோழரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் இன்று வரை அரசு மருத்துவமனையில் உள்ள சிறையில் அவதிப்பட்டு வருகிறார்.


படிக்க: கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?


தோழர் விஜயகுமார் அவர்கள், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டில் அனுமதி அளித்ததை கண்டித்து தான் எழுதியிருந்தார். சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்த விஷயம் தான் இது. தோழரின் பதிவில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்:

“உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன தலைமை. ஜாதிச்சங்கமான RSS ஊர்வலத்திற்கு தடை கோரினால் இப்படித்தான் தீர்ப்பு வரும். அவர்கள் ஜாதியை ஜாதி நலனை விட்டுக் கொடுப்பார்களா, அதுவும் பார்ப்பனர்களின் பொற்கால ஆட்சியான மோடி ஆட்சியில். இந்த இந்துத் தீவிரவாத RSS இயக்கத்தை சட்டப்படி நேரிட முடியாது
அவர்களை களத்தில் நேரிட வேண்டும். அவர்கள் ஊர்வலம் நடத்தினால் ஊர்வலத்தைத் தடுக்க அனைத்து வழிமுறைகளையும் தமிழர்கள் பயன்படுத்த வேண்டும்.

இதை அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த சட்டவிரோத மதத் தீவிரவாத கும்பலை விரட்டியடிக்க வேண்டும்.

இது மோடியின் குஜராத் அல்ல
இது பெரியாரின் தமிழ் மண் என்பதை உணர்த்த வேண்டும்”

இதை பதிவிட்டதற்காக தேசத்துரோக வழக்கு என்றால் நாம் இருப்பது தமிழ்நாட்டில் தானா என்ற பெருத்த சந்தேகம் எழுகிறது? பெரியாரின் வாரிசுகள் என மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல் அரசு, ஒடுக்கு முறையை ஏவுவது ஏன்? காவி கும்பலிடம் பம்முவது ஏன்?

ஆர்.எஸ்.எஸ் கலவர கும்பலுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கொடுத்த நீதிமன்றத்தை விமர்சிக்கக் கூடாதா? இதுதான் ‘ஜனநாயக’ நாடா? இது நிச்சயமாக கேலிக்கூத்தான ‘ஜனநாயகம்’ தான்.


படிக்க: பரந்தூர் செல்ல முயன்றால் கழுகாக பறந்து கைது செய்யும் தமிழ்நாடு போலீசு


மே 2022-இல் உச்ச நீதிமன்றம் தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யக்கூடாது என வழிகாட்டுதல் வழங்கியதையும் மீறி தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. காவிகளின் விசுவாசமான சேவை ஆளாக போலீசுத்துறை மாறிக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

தோழர் விஜயகுமார் அவர்கள் மேற்கண்ட பதிவில் எழுதியிருந்ததின் இடையில் பல்வேறு செருகல்களை சேர்த்து பல்வேறு வழக்குகளையும் போட்டுள்ளது போலீசு.

இந்த வழக்கின் போது கீழமை நீதிமன்றத்தில் பிணை வழங்க மறுத்த நீதிபதி, “ஏற்கெனவே விஜயகுமாரின் மீது இதே குற்றச்சாட்டு உள்ளது. அதற்காக அவர் ஏற்கனவே பிணை வாங்கியுள்ளார். மீண்டும் இத்தகைய செயலில் ஈடுபட மாட்டேன் என சொல்லியுள்ளார்” என பேசுகிறார்.

ஒருமுறை பிணை வாங்கிவிட்டால், அடுத்து நாட்டில் நடக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து பேசக்கூடாதா? இது என்ன வகையான ஜனநாயகம் என நீதிபதி தான் விளக்க வேண்டும். இல்லை அனைவரும் சாவர்க்கராக நடந்துகொள்ள முடியுமா?

தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல் அரசு’ என சொல்லிக்கொள்ள தான் வேண்டுமே தவிர உண்மையில் நடப்பது என்னவோ கார்ப்பரேட் சேவையும் காவி கும்பலுக்கு அடிபணிந்து போவதும் தான். இதை எதிர்த்து அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும்.


ரவி

ஸ்டெர்லைட்டை திறக்கச் சதி: மீண்டும் ’வேதாந்தாவின் தோட்டாக்கள்’!

மிழ்நாட்டில் கார்ப்பரேட்டுக்கு எதிரான குறிப்பிடத்தக்க மக்கள்திரள் போராட்டம், தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம். 2018 ஆம் ஆண்டு, மே 22 ஆம் நாள் சுற்றுச்சூழலை கேடாக்கி, சுவாசிக்கும் காற்றையும் நஞ்சாக்கி, புற்றுநோயை பரப்பிய கொலைகார ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் நூறாவது நாளில் லட்சம் மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர். மக்கள் பெருந்திரளைப் பார்த்து பீதியுற்ற வேதாந்தாவின் கைக்கூலி அரசு, எதிரிகளை சுட்டு வீழ்த்துவதைப் போல மக்களை சுட்டு வீழ்த்தியது. 17 வயது சிறுமியான ஸ்னோலின் உட்பட 15 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டுதுளைக்கப்பட்டதால், கடுமையாக காயமுற்றனர்.

மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்தாலும் உயிர்த்தியாகத்தாலும் ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டு, வரும் மே 22 ஆம் தேதியோடு ஐந்து ஆண்டு ஆகப்போகிறது. ஆலை மூடப்பட்டிருந்தாலும் வேதாந்தாவுக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நாள் முதல் மீண்டும் எப்படியாவது ஆலையைத் திறந்துவிட வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனமும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலும் மேற்கொண்டுவரும் பல்வேறு சதி நடவடிக்கைகளை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் போராடிவருகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், இவ்வழக்கில் தமக்கு சாதகமாகத் தீர்ப்பைப் பெறுவதற்காக வேதாந்தாவின் கைக்கூலிகள் மேற்கொண்டுவரும் சதிகள் ஒரு உச்சகட்ட நிலையை எட்டியிருக்கின்றன. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வீரம்செறிந்த தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெளிநாட்டு நிறுவனங்களால் பணம் கொடுத்து தூண்டிவிடப்பட்டது என்ற சகிக்கமுடியாத அவதூறை மேற்கொண்டுவரும் இக்கைக்கூலிகள், இந்த அவதூறுக்கான ‘ஆதாரங்களை’த் தயாரித்துவருகிறார்கள்.

கதை, திரைக்கதை – காவி!

ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்பட்டது என்ற வேதாந்தாவின் பிரச்சாரத்தை நம்பவைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மண்டபத்தில் உட்கார்ந்து ஒரு புதிய நச்சுக் கதையை தயாரித்துள்ளது.

ஏப்ரல் 5-ஆம் தேதி மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகம் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக “தி அதர் மீடியா” (The Other Media) என்ற அரசுசாரா தொண்டு நிறுவனத்தை விசாரித்து வருவதாக தெரிவித்தது. இந்நிறுவனம் ஜெர்மனி, நெதர்லாந்து, ஐரிஷ், கனடா போன்ற நாடுகளில் இயங்கும் கத்தோலிக்க கிறித்துவ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறியது. தனது கூற்று தொடர்பாக எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்காமல், கதையை அவிழ்த்துவிட்டு பொதுவிவாதத்தை கட்டமைத்தது காவிக் கும்பல்.


படிக்க: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை! | மக்கள் அதிகாரம் கண்டனம்


“ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டம்! பின்னணியில் என்ஜிஓ சதி?” போன்ற தலைப்புகளில் இவை ஊடகங்களில் செய்திகளாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் “எண்ணித் துணிக” என்ற தலைப்பில் உரையாடிய ஆர்.என்.ரவி, “நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர். போராட்டத்திற்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றது தெரியவந்துள்ளது. விழிஞ்சம் துறைமுகம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிவற்றிற்கு எதிராக நடந்த போராட்டங்களும் வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்பட்டவை” என மண்டபத்துக் கதையை பிரச்சாரம் செய்தார்.

ஆளுநரின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். வாயிலும் மார்பிலும் குண்டுதுளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தம் மக்களை காசு வாங்கிக் கொண்டு போராடியவர்கள் என்று கொழுப்பெடுத்துப் பேசிய ஆர்.என்.ரவியின் பேச்சு தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு பிறகு, ஒட்டுமொத்த சங்கிக் கூட்டமும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் தீவிரமாக குதித்தது. வட இந்தியாவில் #sterlitethetruthrevealed (ஸ்டெர்லைட் உண்மைகள் வெளியானது) #supportsterlite (ஸ்டெர்லைட்டை ஆதரிப்போம்) போன்ற ஹேஷ்டேக்குகள் திட்டமிட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டன. பத்திரிகையாளர் என்ற போர்வையில் இருக்கும் சந்தியா ரவிசங்கர் போன்ற சங்கி “மீனவக் குப்பங்களுக்கு பணம் கொடுத்துதான் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள், பசித்த வயிறோடு எப்படி போராட முடியும்” என பார்ப்பனக் கொழுப்பெடுத்து பேசினார்.

திட்டமிட்ட கருத்துருவாக்கம்!

ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா தாக்கல் செய்த இடைக்கால மனு ஏப்ரல் 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தநிலையில், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக திட்டமிட்டே கட்டமைக்கப்பட்டன.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் கைக்கூலிகளால் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்படுகிறது என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மக்களில் ஒரு சிலரை ஊழல்படுத்தி, “ஆலை மூடப்பட்டதால் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறோம்” என்று பேச வைப்பது, மனு கொடுக்க வைப்பது போன்ற வேலைகளிலும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஈடுபட்டது. மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என பெண்களை உறுதிமொழி எடுக்க வைத்துள்ளார்கள்; “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் தூத்துக்குடி மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த இலவசக் கல்வி, மருத்துவம் முதலியவற்றை செய்து தருவோம்” எனவும் பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மே 22 ஆம் தேதி தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கே ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து, போலீசை குவித்து அச்சுறுத்தும் அரசு நிர்வாகம், ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் இத்தகைய சட்டவிரோத பிரச்சாரத்தை தொடர்ந்து அனுமதித்து வருகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் நின்று போராடிவருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா, திடீரென ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என பேசிவந்தார். விக்கிரம ராஜாவின் கருத்துக்கு தூத்துக்குடி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 18-03-2023 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற வணிகர் சங்கப் பேரமைப்பின் மண்டலக் கூட்டத்தில், விக்கிரம ராஜாவின் கருத்துக்கு தூத்துக்குடி வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, “ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்று தீர்மானமும் போட வைத்துள்ளனர்.

விழிஞ்சம் ஃபார்முலா!

சாதி மதம் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றுகூடி நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல், “கிறித்துவ மிஷனரிகளின் தூண்டுதலால் நடைபெற்றது” என பேசுவது வெறுமனே அவதூறு மட்டுமல்ல. இதன்மூலம் போராடும் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ளும் சதித்திட்டமுமாகும்.

விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான கேரள மீனவர்களின் போராட்டத்தை சிதைக்கவும் இதே வழிமுறையே கையாளப்பட்டது. அதானியின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக மீனவர்கள் நூறு நாட்களை கடந்து உறுதியாக போராடினார்கள். கேரள அரசால் ஒரு அடிகூட கட்டுமான வேலைகளை நகர்த்த முடியவில்லை. அதானியின் துறைமுகம் அமைந்தால் மண் அரிப்பு ஏற்பட்டு தங்கள் வீடுகள் அழிந்து போகும், வாழ்வாதாரம் பாதிக்கும் என்று போராடிய மீனவர்களின் போராட்டத்தை ‘வளர்ச்சி’க்கு எதிரான ‘கிறித்தவர்களின் சதி’ என்று பிரச்சாரம் செய்தது ஆர்.எஸ்.எஸ்.

மீனவ மக்கள் போராட அமைத்திருந்த கூடாரத்திற்கு எதிராக, “விழிஞ்சம் துறைமுகத் திட்டத்திற்கு ஆதரவாக இந்துக்களின் போராட்டம்” என்று தனது கைக்கூலிகளை திரண்டிவந்து போராடியது. இதன்மூலம் கேரளாவில் ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்காக முயற்சித்தது. இதே ஃபார்முலாவைத்தான் தற்போது ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராகவும் கையாளுகிறது பாசிசக் கும்பல்.

இந்த அடிப்படையில்தான் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டங்களில் முன்னணியில் நிறுத்தப்படுகிறார். காவிக் கும்பல் கொங்கு மண்டலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கவுண்டர் சாதிவெறியை மூலதனமாக்கிக் கொண்டு வேலைசெய்வதைப் போல, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற தென் மாவட்டங்களில் கிறித்தவ மக்களுக்கு எதிராக நேரடியாக இந்துமதவெறியை தூண்டிவிட்டு வளருகிறது. அண்மையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அர்ஜூன் சம்பத் “கிறிப்டோ கிறித்தவர்களின் ஆதிக்கத்திலிருந்து தென்மாவட்டங்களை விடுவிக்க வேண்டும், தென் மாவட்டங்களை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்” என்றார். இந்த ஒருங்கிணைந்த கிறித்தவ எதிர்ப்பு திட்டத்தில், அவர்கள் ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்தையும் இணைத்துக் கொண்டு வேலைசெய்கிறார்கள்.

ஊடகங்களும் வேதாந்தாவின் பக்கம்!

வேதாந்தாவிடம் காசுவாங்கிய கைக்கூலிகளான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல், தூத்துக்குடி மக்களை காசு வாங்கிக் கொண்டு போராடினார்கள் என்று அவதூறு செய்கிறது. உண்மையில் பா.ஜ.க.தான் வேதாந்தாவிடம் சட்டத்திற்கு புறம்பாக கட்சிநிதி பெற்றது; இது பொதுவெளியிலேயே அம்பலமான செய்தியாகும். 2014-ஆம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்புச் சட்டம் 1976-ன் விதிகளுக்குப் புறம்பாக வேதாந்தாவிடமிருந்து நிதிபெற்றதாக டெல்லி உயர்நீதிமன்றம் பா.ஜ.க.வை கண்டித்துள்ளது.

அர்ஜுன் சம்பத் முதல் ஆர்.என்.ரவி வரையிலான சங்கபரிவாரக் கும்பல், நம் மக்களை இழிவாகப் பேசுவதை இனியும் அனுமதிப்பதே தவறாகும்.

ஸ்டெர்லைட் விஷயத்தில் எது பேசு பொருளாக மாற வேண்டுமோ அது திட்டமிட்டு மறைக்கப்பட்டு காவிகளால் திசை திருப்பப்படுகிறது. கார்ப்பரேட் ஊடகங்களும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான விளம்பரங்களையும், ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் பொய்மூட்டைகளையுமே வெளியிட்டு வருகிறார்கள். “ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போலீசால் திட்டமிட்டே நடத்தப்பட்ட பச்சைப்படுகொலை” என்று அருணா ஜெகதீசன் அறிக்கை அம்பலப்படுத்திய பிறகும், இன்றுவரை கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது குறித்து எந்த ஊடகங்களிலும் விவாதிக்கப்படவில்லை.


படிக்க: தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


ஸ்டெர்லைட் போராட்டம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் என்று பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு அருணா ஜெகதீசன் அறிக்கை தெரிவித்தபோது, ஸ்டெர்லைட் கைக்கூலிகள் எங்கே சென்று ஒளிந்துகொண்டிருந்தார்கள்? இந்த அரசும் ஆளும்வர்க்கமும் வேதாந்தாவின் கூலிப்படையாக செயல்பட்டுள்ளன என்று அம்பலமான சூழலில் வாயைத் திறந்து பேசினால், மக்களின் கோபாவேசத்துக்கு இரையாக வேண்டியிருக்கும் என்பதால்தானே ஒளிந்துகொண்டார்கள். இன்றோ கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் தாங்கள் விதைக்க நினைக்கும் விசக் கருத்தைப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

அன்று ஏவப்பட்ட வேதாந்தாவின் தோட்டங்கள் போராளிகளின் உடல்களைச் சாய்த்தன. இன்று ஏவப்படும் ‘வேதாந்தாவின் தோட்டக்கள்’ அவதூறுகளாலும் சதிகளாலும் நமது போராட்டத்தை சிதைக்கப் பார்க்கின்றன.

வெற்றியை தக்கவைக்க போராடுவோம்!

ஏப்ரல் 10 அன்று நடந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாட்டு அரசின் அனுமதியில்லாமல் ஆலைக்குள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கிடையாது என்று மறுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இருப்பினும் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால், அக்கழிவுகளை மட்டும் அகற்றிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசு ஆலையை மூடும்போதே அனுமதி அளித்துவிட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளாகியும் கழிவுகளை அகற்றாத ஸ்டெர்லைட் நிறுவனம், தற்போது ‘சுத்தம் செய்யப்போகிறேன்’ என்று கூறுகிறது.

எப்படியாவது ஆலையை மீண்டும் திறந்துவிட நினைக்கும் வேதாந்தா, இந்த அனுமதியை கேடாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பே அதிகம். இந்த அனுமதியையே முகாந்திரமாக வைத்து நாளை பராமரிப்பு பணிக்கான அனுமதி கேட்கலாம். அடுத்து, போலியான ஒரு ஆய்வறிக்கையை தயாரித்து ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று நிறுவலாம். எல்லாவற்றையும் நாம் எதிர்பார்க்க வேண்டும்.

பண பலமும் அரசின் துணையும் பெற்ற ஒரு பகாசூர பன்னாட்டு நிறுவனத்தை வீரம்செறிந்த மக்கள்திரள் போராட்டத்தின் மூலம் வீழ்த்தியிருக்கிறோம். நாம் ரத்தம் சிந்திப் பெற்ற வெற்றி இது. வெற்றிபெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமே நெடியது. தொடர்ந்து போராடுவோம். தூத்துக்குடி தியாகிகள் நம்மை வழிநடத்துவார்கள்!

மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவு ஏற்படும்: பரகல பிரபாகர்

பிரபல பொருளாதார நிபுணரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகல பிரபாகர் மோடியையும் அவர் ஆட்சியையும் விமர்சித்து தி வயர் இணையத்தளத்திற்கு நேர்க்காணல் ஒன்றை அளித்துள்ளார். இந்தியாவில் மோடி அரசை விமர்சிக்கும் பொருளாதாரவாதிகளில் ஒருவராக அறியப்படும் பரகல பிரபாகர்,  பல ஆங்கில பத்திரிகைகளில் மோடி ஆட்சி குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

சமீபத்தில் பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை மோடி அரசு கையாள்வது குறித்த இவரின் தொடர் கட்டுரைகள் ”கூன் விழுந்த புதிய இந்தியா: நெருக்கடியிலுள்ள குடியரசு பற்றிய கட்டுரைகள்” (The Crooked Timber Of New India: Essays on a Republic in Crisis) என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியது. அரசு கட்டமைப்புக்குள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டமிட்டு ஊடுருவுவது, வெறுப்புணர்வை பரப்புவது, நாட்டின் பன்மைத்துவ நல்லிணக்கத்தை சீர்குலைப்பது, சரிந்துவரும் இந்திய பொருளாதாரம் குறித்தெல்லாம் புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.

இப்புத்தகம் குறித்து தி வயர் இணையதளத்தில் கரன் தாப்பருக்கு பேட்டியளித்த பிரபாகர், பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தில் மட்டுமின்றி மற்ற பல துறைகளிலும் திறமையற்றவராக மாறிவிட்டார்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “பிரதமர் மோடி பல விஷயங்களில் திறமையற்றவராக இருந்தாலும் சில விஷயங்களில் திறமையாக இருக்கிறார். சமூகத்தில் பிளவை உருவாக்கி, இனவாத வெறுப்புணர்வை உருவாக்குவதில் திறம்பட செயலாற்றியிருப்பதை நாட்டில் நடந்த சம்பவங்களிலிருந்து பார்க்க முடிகிறது” என மோடியின் மதவெறி பாசிச ஆட்சி குறித்து குறிப்பிட்டுள்ளார்.


படிக்க: பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?


இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய பிரபாகர், “பாரதிய ஜனதா கட்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே எந்தவொரு பொருளாதாரத் தத்துவமோ ஒத்திசைவான சிந்தனையோ இல்லை” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக ‘மாண்புமிகு’ நிதியமைச்சர் நிர்மலாவின் கணவரான பரகல பிரபாகர், “எந்த பில்லி சூனிய பொருளாதார நிபுணர் இன்று மோடி அரசுக்கு ஆலோசனை கூறுகிறார் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

மோடி குறித்து, “எந்த பொருளாதார நிபுணரின் ஆலோசனையின் பேரில் பணமதிப்பு நீக்கம் போன்ற மூர்க்கத்தனமான மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத முடிவை அவர்(மோடி) எடுத்தார் என்பது தெரியவில்லை. அவர் கருப்புப் பணத்தைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால், எந்தப் பொருளாதார நிபுணரிடம் வேண்டுமானாலும் கருப்புப் பணம் பணமாக இருக்குமா என்று கேளுங்கள்?” என்று வினவியுள்ளார்.

மேலும், “2024-இல் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் அது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார் பிரபாகர். இந்த நேர்காணலும் பிரபாகரரின் நூலும் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளன.


படிக்க: நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?


பரகல பிரபாகர் மட்டுமின்றி பல்வேறு பத்திரிகையாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் பொருளாதாரவாதிகளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் பாசிச கொள்கைகளைப் பற்றியும் 2024 தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் இந்திய மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் கொடூரமான பாசிச அபாயம் குறித்தும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

குறிப்பாக, எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்களும் அறிவுஜீவிகளில் பலரும் முதலாளித்துவவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பாசிசத்திற்கு எதிராக புரட்சி நடத்தி மாற்று கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்பதெல்லாம் நோக்கமல்ல. இருக்கும் போலி ஜனநாயக கட்டமைப்பை சிதையாமல் பாதுகாக்க  வேண்டுமெனில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு பதிலாக மனித முகம் கொண்ட புதிய தாராளவாத ஆட்சியாளர்கள் வரவேண்டும் என்பதே இவர்களது நோக்கம்.

எளிமையாக சொல்வதெனில், பிரபல பொருளாதார வல்லுநரான ரகுராம் ராஜன் “முதலாளித்துவத்தை முதலாளிகளிடமிருந்து காப்பாற்றுதல்” (Saving Capitalism from the Capitalists) என்று எழுதியதை போல போலி ஜனநாயக கட்டமைப்பை காப்பாற்றும் மனநிலை கொண்ட இவர்கள் பாசிஸ்டுகளுக்கு எதிராக தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.

ஆனால், இருக்கின்ற போலி ஜனநாயக கட்டமைப்பிலிருந்து தான் பாசிசம் வளர்ந்து வருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதே அரசியலமைப்பு சட்டத்தைப் பயன்படுத்தியும் அரசு நிறுவனங்களில் ஊடுருவியும் தான் இந்தியாவில் பாசிசம் வளர்ந்து வருகிறது. எனவே பாசிசத்தை வீழ்த்த போலி ஜனநாயகத்திற்குள்ளேயே தீர்வை தேடாமல் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவதே சரியான தீர்வு.


சோபியா

மூடு டாஸ்மாக்கை! கள்ளச்சாராய பலிகள் – திமுக அரசே முதல் குற்றவாளி! || தோழர் வெற்றிவேல் செழியன்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு திமுக அரசாங்கமும், காவல்துறையுமே முழு பொறுப்பு. கள்ளாசாரயமோ அல்லது மதுக்கடையோ – அனைத்து போதை பொருட்களும் உடனே தடை செய்யப்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியும் மதுக்கடையை மூட முன்வருவதில்லை. மதுக்கடை வருமானத்தை வைத்துத்தான் இந்த அரசை நடத்த வேண்டிய கேவலமான நிலையில்தான் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

போலீசுகாரர்களோ, அரசு அதிகாரிகளோ கள்ளசாரயத்தை தடுக்கமாட்டார்கள். காரணம் அதை விற்க அனுமதியளித்து பாதுகாப்பு வழங்குவதே அவர்கள்தான். கையூட்டு வாங்கி கொண்டு கண்டுகொள்ளாததன் விளைவே இதுபோன்ற மரணத்திற்கு காரணம்.

இதுபோன்ற செயல்களை தடுக்க ஊர், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் உழைக்கும் மக்களை கொண்ட படை கட்டி அடித்து உதைத்து விரட்டியடிப்பது ஒன்றே தீர்வு.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

350 நாட்களுக்கும் மேலாக தொடரும் டெல்லி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

0

புது டெல்லியில் மத்திய அரசால் நடத்தப்படும் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனையில் (பல்நோக்கு மருத்துவமனை) தூய்மைப் பணியாளர்கள் ஜுன் 1, 2022 முதல் தற்போது வரை 350 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2022-ஆம் ஆண்டு, மே 31 அன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி கிட்டத்தட்ட 400 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இத்தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணிக்கு அமர்த்தக்கோரி நாள்தோறும் மருத்துவமனை வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, ஒப்பந்ததாரர்கள் மாற்றப்படும்போது தொழிலாளர்களின் வேலையை பறிக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. ஆனால் அதையும்மீறி, 400 பேரில் 150 பேருக்கு மட்டுமே மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது; அதுவும் ₹30,000 லஞ்சம் பெறப்பட்ட பின்பே வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் வழங்காத 250 பேருக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது.

பணியில் சேர்ந்ததிலிருந்து உரிமை மறுக்கப்பட்ட இத்தொழிலாளர்கள் டிசம்பர் 2017-இல் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில்-இன் (All India Central Council for Trade Unions – AICCTU) கீழ் கலாவதி சரண் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் (Kalawati Saran Contract Karamchari Union) அமைக்கப்பட்ட பின்னர்தான் சில உரிமைகளை பெற்றுள்ளனர்.

சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பாக, ஒப்பந்ததாரர்களும் மருத்துவமனையும் கூட்டு சேர்ந்துகொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை முறையாக வழங்காமல் இருந்தனர். குறைந்தபட்ச ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே வழங்கி வந்தனர். பல சட்ட வழக்குகளுக்கு பின்பு தான், 2019-ஆம் ஆண்டில் ஊதியம் உயர்த்தப்பட்டது.


படிக்க: தமிழ்நாடு: பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் போராட்டம்!


டிசம்பர் 29, 2021 அன்று மண்டல தொழிலாளர் ஆணையர் (RLC(C)) தொழிலாளர்களுக்கு இதுநாள் வரை வழங்கப்படாத ஊதியத்தை (unpaid wages) வழங்குமாறு உத்தரவிட்டார். ஆனால், வழங்கப்பட வேண்டிய ₹1.61 கோடி ஊதிய பாக்கி தற்போது வரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தான், கொரோனா தொற்று காலத்திலும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த 400 தூய்மை பணியாளர்கள் மே 31, 2022 அன்று தீடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

கொரோனா தொற்று காலத்தின்போது, இத்தொழிலாளர்களை கடுமையாக சுரண்டியது மருத்துவமனை நிர்வாகம். எந்நேரமும் இவர்களின் சேவை தேவைப்படும் என்பதால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு வெளியிலேயே தூங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவக் கழிவுகளை வெறும் கைகளில் கையாளும் அவலநிலையில் தான் தொழிலாளர்கள் இருத்தப்பட்டிருக்கிறார்கள்.

தூய்மை பணியாளர்கள் சங்கம் அமைத்துக் கொண்டு தங்கள் உரிமைகளை கேட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் தான், அவர்களை நீக்கும் பொருட்டு மருத்துவமனை நிர்வாகம் ஒப்பந்ததாரரை மாற்றியுள்ளது. தொழிலாளர் ஒற்றுமையை உடைப்பதற்காகவே சுலப் இன்டர்நேஷனல் (Sulabh International) என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு பதிலாக கோரக் செக்யூரிட்டி (Gorakh Security) என்ற புதிய ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டுள்ளார்.


படிக்க: தூய்மை பணியாளர்களை சுரண்டும் கிரிஸ்டல் நிறுவனமும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகமும்!


போராட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இத்தொழிலாளர்கள் பலமுறை போலீசு அடக்குமுறையை சந்தித்துள்ளனர். ஜூன் 20, 2022 அன்று எண்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போலீசால் கைது செய்யப்பட்டனர். அதன்பின்பு 10 முதல் 15 தொழிலாளர்கள் மட்டுமே மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே போராட அனுமதிக்கப்பட்டனர்.

ஏறக்குறைய ஒரு வருடமாக போராடிவரும் இத்தொழிலாளர்கள், தங்களின் உணவுத் தேவைக்காக மருத்துவமனை முன்பாக உள்ள லங்கரை சார்ந்து உள்ளனர். லங்கர் (langar) என்பது சீக்கிய சமய வழிபாட்டுத் தலமான குருத்துவாராக்களில் உணவு வழங்கும் சமையல் கூடம். இதே நிலை நீடித்தால், தங்கள் குழந்தைகள் திருடர்களாக மாறும் அவலநிலைதான் ஏற்படும் என்று போராடும் தொழிலாளி ஒருவர் வேதனையுடன் கூறுகிறார்.

இப்படிப்பட்ட ஒரு அவல நிலையிலும், தங்களின் உரிமையை நிலை நாட்டுவதற்காக கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களின் போர்க்குணம் நம்மை வியக்க வைக்கிறது. ஆனால், ஊடகங்களின் கண்களுக்கோ இப்போராட்டம் தென்படவேயில்லை.

தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்திற்கு பணிக்கமர்த்தப்பட்டு ஈ.எஸ்.ஐ – பி.எஃப் போன்ற எவ்வித சமூகப் பாதுகாப்பும் வழங்கப்படாமல் மனிதத்தன்மையற்ற முறையில் ஒட்டச் சுரண்டப்படுவது கலாவதி சரண் மருத்துவமனையில் மட்டும் நடப்பதில்லை. நாடு முழுவதும் இத்தொழிலாளர் விரோதப்போக்கு காணப்படுகிறது. ஒப்பந்த முறை ஒழிக்கப்படும் வரை தொழிலாளர்களுக்கு விடிவேதும் இல்லை.


பொம்மி

ஜல்லிக்கட்டுக்கு என்ன செய்தார் மோடி || தோழர் மருது

ச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த தீர்ப்பு வந்ததாக நான் கருதவில்லை. மக்களுடைய போராட்ட உணர்வுகள் தான் காரணம். ஒருவேளை இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஜல்லிக்கட்டு கூடாது என்று வந்துவிட்டால் இன்னுமொரு போராட்டத்தை தாங்குவதற்கு ஒன்றிய அரசு வலுவில்லாமல் போய்விடுமோ என்ற நிலையில்தான் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாலஸ்தீனியர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க ஐ.நா சபை மறுப்பு

பாலஸ்தீனத்திற்கு ஐ.நா சபை உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்களில் 60 சதவீதத்தை அடுத்த மாதம் முதல் நிறுத்தப்போவதாக தற்போது ஐ.நா சபை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பின் காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் படைகள் மேற்கொண்டுவரும் ஆயுத தாக்குதல்களால் பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாக நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ளாமல் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பாலஸ்தீனத்தில் தொடர் போர் பதற்றம் காரணமாக கடுமையான உணவுப் பஞ்சம் நிலவி வருகிறது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக உணவுப் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் தரவுகளே தெரிவிக்கின்றன.

பதற்றம் நிறைந்த காசா பகுதியைச் சுற்றியுள்ள 63 சதவீதம் பேர் கடுமையான உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36 சதவீதமான பெண்களுக்கு போதுமான உணவு, குடிநீர் கூட கிடைக்கவில்லை என்று ஐ.நா சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக ஐ.நா சபையின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாலஸ்தீனத்தில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரேஷன் முறையில் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஒன்று தற்போதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


படிக்க: இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!


இந்நிலையில், கடுமையான பொருளாதார நெருக்கடிகளை காரணம்காட்டி அடுத்த மாதம் முதல் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்களின் அளவில் 60 சதவீதத்தை குறைக்கவுள்ளதாக பாலஸ்தீனத்துக்கான ஐ.நா-வின் உணவு பாதுகாப்பு திட்ட இயக்குநர் சமர் அப்தெல் ஜாபர் (Samer Abdel Jaber) தெரிவித்துள்ளார்.

இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு வரும் ஜூன் மாதம் முதல் ஐ.நா சார்பில் வழங்கப்பட்டு வந்த உணவு பொருள் மற்றும் ஒரு தனிநபருக்கு டாலர் மதிப்பில் வழங்கப்பட்டு வந்த $10.30 மதிப்புள்ள மாதாந்திர வவுச்சர்கள் வழங்கும் திட்டம் ஆகியவை நிறுத்தப்படவுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் முக்கிய பகுதியான காசா கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய ஹமாஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு 25 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் இவர்களில் 45 சதவீதம் பேர்  வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாலஸ்தீனத்தில் உள்ள 80 சதவீத குடும்பங்கள் ஐ.நா உதவி போன்ற சர்வதேச உதவியை நம்பித்தான் இருக்கிறார்கள் என ஐ.நாவின் தரவுகள் கூறுகின்றன.

அதேபோல் ஐ.நா உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், “பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டுவரும் உணவு மற்றும் நிதியுதவிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிறுத்துவதற்கான கட்டாயத்திற்கு ஐ.நாவின் உணவு பாதுகாப்பு திட்டம் தள்ளப்படும்” எனவும் சமர் அப்தெல் ஜாபர் எச்சரித்துள்ளார்.


படிக்க: இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்!


ஐ.நா.சபையின் இந்த கடுமையான முடிவால் ஏற்கனவே போர் மற்றும் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவர். குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் உள்நாட்டு கலவரங்களின் போது துப்பாக்கி மற்றும் குண்டுகளுக்குப் பலியாகி வந்த மக்கள் தற்போது பசி, பட்டினியால் இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தங்களுடைய நலனுக்காக இஸ்ரேலை கைப்பாவையாக வைத்துக் கொண்டு பாலஸ்தீன மக்களின் மீது மறைமுக தாக்குதல் நடத்தி வருவதே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள்தான்.

குறிப்பாகப் பார்த்தோமென்றால் இதுபோன்ற ஏகாதிபத்தியங்கள் நடத்தும் உள்நாட்டு போரின் விளைவாகத்தான் மக்கள் பசி பட்டினி போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அப்படி பல துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் வெகுண்டெழுந்து அந்நாட்டின் அரசிற்கெதிராக போராட்டங்களை மேற்கொண்டுவிடக் கூடாது, ஒரு பேரெழுச்சி ஏற்பட்டுவிட கூடாது என்பதை தடுப்பதற்கே இது போன்ற சில சலுகைகளை ஐ.நா போன்ற அமைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது.

ஆனால் ஏகாதிபத்திய மேலாதிக்க நாய்ச்சண்டையினால் (ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட) ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் இதுபோன்ற திட்டங்களை தொடர்வதிலும் நெருக்கடிகள் ஏற்படுகிறது.

ஏகாதிபத்திய பிடியில் இருக்கும் வரை இப்பிரச்சினைக்கு தீர்வே கிடையாது. இஸ்ரேல் மற்றும் அதன் பின் மறைந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு மக்கள் எழுச்சியை கட்டமைப்பதன்மூலமே இப்பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வரமுடியும்.


சித்திக்

மே 15 மதுரை மாநாட்டை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி! | தோழர் வெற்றிவேல்செழியன்

மே 15 மாநாட்டை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி! | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!

பெரும்பான்மை மக்களிடம் சிறுபான்மையினராக உள்ள ஒருதரப்பு மக்களை, அவர்களின் எதிரிகளாகக் காட்டுவதும், மொழி, இனம், மதம், பண்பாடு என பலவகைகளிலும் அச்சிறுபான்மை சமூகத்தினரை ‘அந்நியர்களாக’ச் சித்தரித்து பெரும்பான்மை மக்களிடம் வெறுப்புணர்வை உருவாக்குவதும் பாசிஸ்டுகளின் பொது வழிமுறையாகும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் முன்வைக்கும் இந்துதேசியமும் சரி, சீமான் கும்பல் முன்வைக்கும் ‘தமிழ்தேசிய’மும் சரி, ஒருதரப்பு மக்களை எதிரிகளாகக் காட்டி கட்டமைக்கப்படும் பாசிச அரசியலே. தமது பாசிச அரசியலைக் கட்டமைக்க அவர்கள் பல்வேறு விவகாரங்களை, தமது அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில், இடஒதுக்கீடு இன்று முக்கியமானதாக மாறியிருக்கிறது.

1990-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டபோது, இது ‘இந்துதேசத்தை பிளவுபடுத்தும்’ முயற்சி என்று கொதித்தது ஆர்.எஸ்.எஸ். மண்டல் கமிஷனுக்கு எதிராக வடமாநிலங்களை வன்முறைக்காடாக்கியது சங்கப்பரிவாரக் கும்பல். எந்த இடஒதுக்கீடு இந்துதேசத்தை பிளவுபடுத்தும் என்று நஞ்சைக் கக்கியதோ, இன்று அதே இடஒதுக்கீட்டை இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கு தமது அரசியல் கருவியாக பயன்படுத்திக்கொள்ள விழைகிறது பாசிசக் கும்பல்.

இன்னொருபக்கம், தமிழினத்தின் ஒற்றுமைக்கு பெருந்தடையாக உள்ள சாதியை ஒழிப்பது பற்றி பேசாமல், சாதி அடையாளத்தை பெருமிதமாகக் கருத வேண்டும் என்கிற சீமான், ‘தமிழனை ஒன்றிணைப்பதற்கும்’ ‘வந்தேறிகளுக்கு எதிராக போர் புரியவும்’ இடஒதுக்கீட்டை கையிலெடுத்துள்ளார்.

சங்கிகளின் மதவெறி துருப்புச் சீட்டு!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமது வாக்குவங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 15-லிருந்து 17 சதவிகிதமாகவும் எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 3-லிருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு. மேலும், முஸ்லிம்களுக்கு இருந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்த பா.ஜ.க, அதை லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகா சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 2 சதவிகிதமாக பிரித்து வழங்கியுள்ளது.

இதன்மூலம் ஒரேநேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைக் கிளறிவிடுதோடு, கர்நாடகத்தில் மிகப்பெரிய வாக்குவங்கியைக் கொண்டுள்ள லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகர் சமூகத்தை தன் பக்கம் திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது பா.ஜ.க.


படிக்க: முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!


முஸ்லிம்களின் 4 சதவிகித இடஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டதை கர்நாடக காங்கிரஸ் எதிர்த்துள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் 4 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார்.

சாமராஜ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் டி.கே.சிவக்குமாரின் அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசிய அமித்ஷா, “அப்படியானால் யாருடைய இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இடஒதுக்கீட்டைத் தருவீர்கள்? லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு அளவைக் குறைப்பீர்களா” என மத மோதலைத் தூண்டும்வகையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் கையாண்ட இதே உத்தியை பா.ஜ.க பிற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளது. அமித்ஷா தெலுங்கானாவில் தான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும், அரசின் சமூக நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. இதுபோன்ற இரட்டைச் சலுகைகளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யும்” என்று அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்-ன் பழங்குடி அமைப்பான ஜன்ஜாதி சுரக்‌ஷா மஞ்ச் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. நாராயண்பூர் மாவட்டத்தில், 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிறித்தவ மதத்திற்கு மாறிய பழங்குடிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். “தாய்மதத்திற்கு திரும்ப வேண்டும் அல்லது வசிப்பிடத்தைவிட்டு வெளியேற வேண்டும்” என்பது வன்முறையில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் குண்டர் அமைப்பின் முழக்கம். மதம்மாறிய பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் என்பதும் அக்கும்பலின் முக்கிய பிரச்சாரமாக உள்ளது.

சங்கப்பரிவார அமைப்புகளுள் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத், மதம் மாறிய எஸ்.சி, எஸ்.டி.க்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டுமென பல பிரச்சார இயக்கங்களை நடத்தியுள்ளது. அண்மையில்கூட, கடந்த மார்ச் 4-5 தேதிகளில் உத்தரப்பிரதேசத்தில், “இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய எஸ்.சி.க்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா?” என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தியுள்ளது.

பார்ப்பன-உயர்சாதி மேலாதிக்கத்திற்கு எங்கே பங்கம்வந்துவிடுமோ என்று ஒருகாலத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, இன்று சமூகநீதி வேடம்போடுகிறது. ஆனால், வாக்குவங்கி அரசியலுக்காகக்கூட பா.ஜ.க. அறிவித்துள்ள இடஒதுக்கீட்டு பலன்கள் அம்மக்களை சென்றடையப் போவதில்லை. “எல்லாம் தனியார்மயம்” என்ற தாரக மந்திரத்தை உயிர்மூச்சாக அமல்படுத்திவரும் மோடி ஆட்சியில், அரசு வேலைவாய்ப்புக்கு எங்கே போய் நிற்பது? கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரைகுறையாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த இடஒதுக்கீட்டுக்கும் குழிபறிப்பதற்கு உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) 10 சதவிகித இடஒதுக்கீடு என்ற அம்பை எய்துள்ளது பாசிசக் கும்பல். இதன்மூலம் மீண்டும் இந்திய சமூகத்தில் பார்ப்பன மேலாதிக்கம் முற்றுமுழுதாக நிலைநாட்டப்பட இருக்கிறது.

இவை எதுகுறித்தும் நாம் சிந்திக்கமுடியாதபடி மதவெறியை நம் மண்டைக்குள் திணித்துவருகிறது பாசிசக் கும்பல்.

தம்பிகளின் இனவெறி துருப்புச் சீட்டு!

உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய சீமான், தமிழ்நாட்டில் மட்டும்தான் கர்நாடகம், ஆந்திரா, கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதாகவும், ஆனால் அந்த மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்கு அம்மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குவதில்லை என்று பொருள்படும்படியும் பேசியிருந்தார்.

“நான் இங்கிருக்கிற ரெட்டியாருக்குக் கொடுப்பேன். தெலுங்குச் செட்டியாருக்குக் கொடுப்பேன். கன்னடச் செட்டியாருக்குக் கொடுப்பேன். நாயுடுக்கு கொடுப்பேன். ஆனால், ஆந்திராவுக்குப் போவேன். கர்நாடகாவுக்குப் போவேன். இங்கிருக்கிற கன்னடர்களுக்கு நான் இவ்வளவு கொடுத்திருக்கேன். இங்க ஒன்னேகால் கோடி என் தமிழன் இருக்கான். அவனை நீ ஓ.பி.சி.ல வச்சிருக்க. out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்)ன்னு வச்சிருக்க. அதில்லாம நாங்க இடஒதுக்கீடு கொடுப்பத போல கொடு என்பேன்” என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Other backward class (அதர் பேக்வேர்ட் கிளாஸ்) என்பதை out of backward caste (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்று சீமான் குறிப்பிட்டிருப்பதன் மூலம், அவருக்கு இடஒதுக்கீடு பற்றிய அடிப்படை அறிவே இல்லையென்பதை வெளிப்படுத்தியுள்ளார் என்றும், சீமானை உட்காரவைத்து ஓ.பி.சி (OBC) என்றால் other backward class என்று எழுதப் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் பலரும் வருத்தெடுத்துவிட்டனர்.


படிக்க: அருந்ததியர் மக்களை வந்தேறி என்ற சீமான் | மக்கள் அதிகாரம் கண்டனம்


யூடர்ன் போன்ற சில வலைதளங்களை நடத்துவோர், பிற மாநிலங்களில் வாழும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்ற சீமானின் கூற்று அடிப்படையிலேயே பொய் என்பதை அம்பலப்படுத்தினர். எந்தெந்த சாதிப்பட்டியலில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்ற ஆதாரங்களையும் வெளியிட்டனர். மேலும் ஓ.பி.சி இடஒதுக்கீட்டுப் பிரிவானது ஒன்றிய அரசின் வகைப்படுத்தல் எனவும், மாநிலங்களின் இடஒதுக்கீட்டு வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை எனவும் அம்பலப்படுத்தியிருந்தனர்.

எப்படி இருந்தபோதிலும் சீமானின் பேச்சு, “தற்குறித்தனமாக உளருகிறார்” என்று நையாண்டி செய்து கடந்துசெல்லப்பட்டதே தவிர, சீமான் கையிலெடுத்துள்ள அபாயகரமான அரசியலைப் பற்றி எந்த ஒரு பொதுவிவாதமும் நடத்தப்படவில்லை.

சீமான் ஏதோ ஒன்றும் தெரியாமல் உளரவில்லை. கர்நாடகத்திலோ, ஆந்திரத்திலோ தமிழை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது சீமானுக்கு தெரியாததல்ல. out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்ற சொல்லாடலை சீமான் தெரிந்து உதிர்த்திருந்தாலும் சரி, தெரியாமல் தற்குறித்தனமாகவே கூறினாலும் சரி, அதற்கு பின் ஒரு கேடான நோக்கம் உள்ளது.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசும் சாதிகளுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதால்தான் இங்குள்ள ‘தமிழ்க் குடிகளுக்கு’ (சாதிகளுக்கு) வாய்ப்பு பறிக்கப்படுகிறது. ஆனால், நமது ‘தமிழ்க் குடிகளுக்கு’ அந்த மாநிலங்களில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதில்லை என்று இனவெறியைத் தூண்டிவிடுவதுதான் சீமான் உரையின் நோக்கம்.

இனவெறியைத் தூண்டிவிடுவதற்கு கூட சீமானால் எப்படி இவ்வளவு பெரிய அண்டப் புளுகுகளை அவிழ்த்துவிட முடிகிறது என்று சிலருக்கு கேள்வி எழலாம். தனது உரைக்கு கைதட்டி விசிலடிக்கும் கூட்டத்திற்கு நாம் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பும் அளவிற்குதான் ‘பொது அறிவு’ உள்ளது என்ற நம்பிக்கையே அவ்வாறு பேசுவதற்கு சீமானுக்கு தைரியம் கொடுத்தது. ஆனால், கேட்பவர்கள் தனது தம்பிமார்கள் மட்டுமில்லை என்பதை மறந்துபோனதுதான் சீமான் செய்த பிழை.

ஆகவே இடஒதுக்கீடு பற்றிய சீமானின் பேச்சை ஏதோ உளறலாகப் புரிந்துகொள்ளக்கூடாது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், அருந்ததியர்கள் விஜயநகரப் பேரரசு காலத்தில் தமிழ்நாட்டில் தூய்மைப் பணி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட ‘வந்தேறிகள்’ என்று பேசியது ஜனநாயக சக்திகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு அமைப்பினர் சார்பில் சீமானது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தபட்டது. ஆதித்தமிழர் பேரவை சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

அதன் பிறகும் அருந்ததியர் மக்களுக்கு எதிரான இனவெறி பிரச்சாரத்தை சீமானது தம்பிமார்கள் தொடர்ந்தார்கள். ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றில் பேசிய சீமான் தெலுங்குக் குடியான அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுத்ததால் ஆதித் தமிழ்க் குடிகளின் இடஒதுக்கீடு பறிபோனதாகப் பேசினார்.

“ஏற்கெனவே போராடித்தான் ஆதித்தமிழ்க் குடிகள் 18 சதவிகிதம் இடஒதுக்கீடு வைத்திருக்கிறோம். அதில் 3 சதவிகிதம் உள் இடஒதுக்கீடாக அருந்ததியினருக்கு ஏன் கொடுத்தீங்க? தனி இடஒதுக்கீட்டை உருவாக்கித் தர வேண்டியதுதானே. முழுவதும் வஞ்சகம், துரோகம், ஏமாற்று” என்று பேசினார்.

அருந்ததியின மக்களுக்கு எதிராக பிற ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களைத் தூண்டிவிடுவது, இதன்மூலம் சாதியக் கலவரங்கள் மூண்டெழுந்தால், அதை ‘இன உரிமைப் போராக’ சித்தரித்து அதில் தனது தலைமையை நிறுவ முயற்சிப்பது ஆகியவைதான் சீமானின் சதித்திட்டம்.

சாதிகளையே, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட சாதிகள், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளைப் பூர்வீகமாகக் கொண்ட சாதிகள் என இரண்டாகப் பிரித்து, தன்னை தமிழ் சாதிகளுக்கான பிரதிநிதியாகவும், தி.மு.க. மற்றும் திராவிட அமைப்புகளை பிற மொழியைப் பூர்விகமாகக் கொண்ட சாதிகளின் பிரதிநிதியாகவும் காட்டி அரசியல் செய்வதுதான் சீமானின் ‘குடிதேசிய அரசியல்’. இந்த மொழிவழி சாதிவெறி அரசியலைத்தான் ‘தமிழ்த்தேசிய அரசியல்’ என்று அழைத்துக் கொள்கின்றனர் சீமானின் தம்பிமார்கள்.

இதனால்தான், தமிழ்பேசும் வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர் ஆகிய ஆதிக்க சாதிவெறியர்கள் பறையர், பள்ளர் போன்ற தமிழ்பேசும் ஒடுக்கப்பட்ட சாதிகளைத் தாக்கும்போதெல்லாம் அண்ணன் பெரிதாக சவுண்டுவிடுவதில்லை; அதேநேரம் நாயுடு ஆதிக்க சாதிவெறியர்களால், பறையர் சமூக மக்களுக்கு கோவில்நுழைவு மறுக்கப்படும் காந்தாரியம்மன் கோவில் பிரச்சினையை இன உரிமைப் போராக மடைமாற்றத் துடிப்பார்கள்.

Out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்று சீமான் தன் தம்பிகளுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்த அதே கூட்டத்தில் தேவர் சாதியைச் சார்ந்த ஒரு தம்பி, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பிய போது, “அதைப் பற்றி கேட்கக் கூடாது. உனக்கு 20.5 சதவிகிதம் வேணும்னு கேளு அண்ண உனக்காக வந்து நிக்குறேன்” என்று பேசினார். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் தவறில்லை. ஆனால், அருந்ததியினர்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான் சீமானின் ‘தமிழ்த்தேசிய அரசியல்’.

ஆண்ட பெருமைபேசும் தமிழ்ச் சாதிகள் ஐக்கியப்படும்போது, சீமான் தான் கூறும் தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்க முடியும். அந்த பொன் நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் தம்பிமார்கள்.


பால்ராஜ்