Sunday, June 15, 2025
முகப்பு பதிவு பக்கம் 109

தோழர் விஜயகுமார் (எ) புஷ்கின் 124(A) தேசத்துரோக வழக்கில் கைது!

0

விஜயகுமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறையைச் சேர்ந்தவர். கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி, மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திலிருந்து சம்மன் ஒன்று விஜயகுமார் அவர்களுக்கு வந்தது. விஜயகுமார் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் நீதிபதிகளுக்கு விரோதமாக கருத்து தெரிவித்ததாகவும் பல்வேறு கொலை மிரட்டல்கள் விடுத்ததாகவும் கலவரத்தை தூண்டும் விதமாக எழுதியதாகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தேசத்துரோக வழக்கு 124A மற்றும் கொலை மிரட்டல் வழக்கு 506, இன்னும் இது போன்று பல வழக்குகளையும் விஜயகுமார் மீது பதிந்துள்ளார்கள்.

அழைப்பாணையில் கொடுத்திருந்த தேதியில் விஜயகுமார் அவர்களால் செல்ல முடியாத காரணத்தினால் மீண்டும் அழைப்பாணை அனுப்பும்படி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதன் பிறகு மீண்டும் சம்மன் வந்தது. அந்த அழைப்பாணை என்பது பேஸ்புக்கில் எழுதியது சம்பந்தமாக விளக்கம் கோருவது தான். ஆனால் போலீசு, தோழரின் தொலைபேசியை பிடுங்கி வைத்துக்கொண்டு அடுத்த நாள் வரச் சொல்லி நெருக்கடி கொடுத்திருக்கிறது. அடுத்த நாள் போலீஸ் நிலையம் சென்றபோது தோழரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தோழரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் இன்று வரை அரசு மருத்துவமனையில் உள்ள சிறையில் அவதிப்பட்டு வருகிறார்.


படிக்க: கல்வித் தொலைக்காட்சியில் சங்கி நியமனம்! ஆர்.எஸ்.எஸ்-க்கு அடிமட்ட வேலை பார்க்கிறதா திமுக?


தோழர் விஜயகுமார் அவர்கள், ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டில் அனுமதி அளித்ததை கண்டித்து தான் எழுதியிருந்தார். சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்த விஷயம் தான் இது. தோழரின் பதிவில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார்:

“உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் பார்ப்பன தலைமை. ஜாதிச்சங்கமான RSS ஊர்வலத்திற்கு தடை கோரினால் இப்படித்தான் தீர்ப்பு வரும். அவர்கள் ஜாதியை ஜாதி நலனை விட்டுக் கொடுப்பார்களா, அதுவும் பார்ப்பனர்களின் பொற்கால ஆட்சியான மோடி ஆட்சியில். இந்த இந்துத் தீவிரவாத RSS இயக்கத்தை சட்டப்படி நேரிட முடியாது
அவர்களை களத்தில் நேரிட வேண்டும். அவர்கள் ஊர்வலம் நடத்தினால் ஊர்வலத்தைத் தடுக்க அனைத்து வழிமுறைகளையும் தமிழர்கள் பயன்படுத்த வேண்டும்.

இதை அனைத்து கட்சிகளும் இணைந்து இந்த சட்டவிரோத மதத் தீவிரவாத கும்பலை விரட்டியடிக்க வேண்டும்.

இது மோடியின் குஜராத் அல்ல
இது பெரியாரின் தமிழ் மண் என்பதை உணர்த்த வேண்டும்”

இதை பதிவிட்டதற்காக தேசத்துரோக வழக்கு என்றால் நாம் இருப்பது தமிழ்நாட்டில் தானா என்ற பெருத்த சந்தேகம் எழுகிறது? பெரியாரின் வாரிசுகள் என மார்தட்டிக் கொள்ளும் திராவிட மாடல் அரசு, ஒடுக்கு முறையை ஏவுவது ஏன்? காவி கும்பலிடம் பம்முவது ஏன்?

ஆர்.எஸ்.எஸ் கலவர கும்பலுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கொடுத்த நீதிமன்றத்தை விமர்சிக்கக் கூடாதா? இதுதான் ‘ஜனநாயக’ நாடா? இது நிச்சயமாக கேலிக்கூத்தான ‘ஜனநாயகம்’ தான்.


படிக்க: பரந்தூர் செல்ல முயன்றால் கழுகாக பறந்து கைது செய்யும் தமிழ்நாடு போலீசு


மே 2022-இல் உச்ச நீதிமன்றம் தேசத்துரோக வழக்குகளை பதிவு செய்யக்கூடாது என வழிகாட்டுதல் வழங்கியதையும் மீறி தமிழ்நாடு அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. காவிகளின் விசுவாசமான சேவை ஆளாக போலீசுத்துறை மாறிக் கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

தோழர் விஜயகுமார் அவர்கள் மேற்கண்ட பதிவில் எழுதியிருந்ததின் இடையில் பல்வேறு செருகல்களை சேர்த்து பல்வேறு வழக்குகளையும் போட்டுள்ளது போலீசு.

இந்த வழக்கின் போது கீழமை நீதிமன்றத்தில் பிணை வழங்க மறுத்த நீதிபதி, “ஏற்கெனவே விஜயகுமாரின் மீது இதே குற்றச்சாட்டு உள்ளது. அதற்காக அவர் ஏற்கனவே பிணை வாங்கியுள்ளார். மீண்டும் இத்தகைய செயலில் ஈடுபட மாட்டேன் என சொல்லியுள்ளார்” என பேசுகிறார்.

ஒருமுறை பிணை வாங்கிவிட்டால், அடுத்து நாட்டில் நடக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து பேசக்கூடாதா? இது என்ன வகையான ஜனநாயகம் என நீதிபதி தான் விளக்க வேண்டும். இல்லை அனைவரும் சாவர்க்கராக நடந்துகொள்ள முடியுமா?

தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல் அரசு’ என சொல்லிக்கொள்ள தான் வேண்டுமே தவிர உண்மையில் நடப்பது என்னவோ கார்ப்பரேட் சேவையும் காவி கும்பலுக்கு அடிபணிந்து போவதும் தான். இதை எதிர்த்து அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும்.


ரவி

ஸ்டெர்லைட்டை திறக்கச் சதி: மீண்டும் ’வேதாந்தாவின் தோட்டாக்கள்’!

மிழ்நாட்டில் கார்ப்பரேட்டுக்கு எதிரான குறிப்பிடத்தக்க மக்கள்திரள் போராட்டம், தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம். 2018 ஆம் ஆண்டு, மே 22 ஆம் நாள் சுற்றுச்சூழலை கேடாக்கி, சுவாசிக்கும் காற்றையும் நஞ்சாக்கி, புற்றுநோயை பரப்பிய கொலைகார ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் நூறாவது நாளில் லட்சம் மக்கள் திரண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக வந்தனர். மக்கள் பெருந்திரளைப் பார்த்து பீதியுற்ற வேதாந்தாவின் கைக்கூலி அரசு, எதிரிகளை சுட்டு வீழ்த்துவதைப் போல மக்களை சுட்டு வீழ்த்தியது. 17 வயது சிறுமியான ஸ்னோலின் உட்பட 15 பேர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் குண்டுதுளைக்கப்பட்டதால், கடுமையாக காயமுற்றனர்.

மக்களின் போர்க்குணமிக்க போராட்டத்தாலும் உயிர்த்தியாகத்தாலும் ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டு, வரும் மே 22 ஆம் தேதியோடு ஐந்து ஆண்டு ஆகப்போகிறது. ஆலை மூடப்பட்டிருந்தாலும் வேதாந்தாவுக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட நாள் முதல் மீண்டும் எப்படியாவது ஆலையைத் திறந்துவிட வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறுவனமும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலும் மேற்கொண்டுவரும் பல்வேறு சதி நடவடிக்கைகளை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் போராடிவருகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் நிலையில், இவ்வழக்கில் தமக்கு சாதகமாகத் தீர்ப்பைப் பெறுவதற்காக வேதாந்தாவின் கைக்கூலிகள் மேற்கொண்டுவரும் சதிகள் ஒரு உச்சகட்ட நிலையை எட்டியிருக்கின்றன. ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வீரம்செறிந்த தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெளிநாட்டு நிறுவனங்களால் பணம் கொடுத்து தூண்டிவிடப்பட்டது என்ற சகிக்கமுடியாத அவதூறை மேற்கொண்டுவரும் இக்கைக்கூலிகள், இந்த அவதூறுக்கான ‘ஆதாரங்களை’த் தயாரித்துவருகிறார்கள்.

கதை, திரைக்கதை – காவி!

ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்பட்டது என்ற வேதாந்தாவின் பிரச்சாரத்தை நம்பவைப்பதற்காக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் மண்டபத்தில் உட்கார்ந்து ஒரு புதிய நச்சுக் கதையை தயாரித்துள்ளது.

ஏப்ரல் 5-ஆம் தேதி மாநிலங்களவையில் உள்துறை அமைச்சகம் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு நிதிகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக “தி அதர் மீடியா” (The Other Media) என்ற அரசுசாரா தொண்டு நிறுவனத்தை விசாரித்து வருவதாக தெரிவித்தது. இந்நிறுவனம் ஜெர்மனி, நெதர்லாந்து, ஐரிஷ், கனடா போன்ற நாடுகளில் இயங்கும் கத்தோலிக்க கிறித்துவ தொண்டு நிறுவனங்களிடமிருந்து பணம் வாங்கியதாகவும், அந்த பணத்தை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறியது. தனது கூற்று தொடர்பாக எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்காமல், கதையை அவிழ்த்துவிட்டு பொதுவிவாதத்தை கட்டமைத்தது காவிக் கும்பல்.


படிக்க: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை! | மக்கள் அதிகாரம் கண்டனம்


“ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டம்! பின்னணியில் என்ஜிஓ சதி?” போன்ற தலைப்புகளில் இவை ஊடகங்களில் செய்திகளாக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாகத்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் “எண்ணித் துணிக” என்ற தலைப்பில் உரையாடிய ஆர்.என்.ரவி, “நாட்டின் மொத்த தாமிர உற்பத்தியில் 40 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்து வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர். போராட்டத்திற்கு காரணமான அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றது தெரியவந்துள்ளது. விழிஞ்சம் துறைமுகம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகிவற்றிற்கு எதிராக நடந்த போராட்டங்களும் வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்பட்டவை” என மண்டபத்துக் கதையை பிரச்சாரம் செய்தார்.

ஆளுநரின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் அனைவரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். வாயிலும் மார்பிலும் குண்டுதுளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட தம் மக்களை காசு வாங்கிக் கொண்டு போராடியவர்கள் என்று கொழுப்பெடுத்துப் பேசிய ஆர்.என்.ரவியின் பேச்சு தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆர்.என்.ரவியின் இந்த பேச்சுக்கு பிறகு, ஒட்டுமொத்த சங்கிக் கூட்டமும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான பிரச்சாரத்தில் தீவிரமாக குதித்தது. வட இந்தியாவில் #sterlitethetruthrevealed (ஸ்டெர்லைட் உண்மைகள் வெளியானது) #supportsterlite (ஸ்டெர்லைட்டை ஆதரிப்போம்) போன்ற ஹேஷ்டேக்குகள் திட்டமிட்டு ட்ரெண்ட் செய்யப்பட்டன. பத்திரிகையாளர் என்ற போர்வையில் இருக்கும் சந்தியா ரவிசங்கர் போன்ற சங்கி “மீனவக் குப்பங்களுக்கு பணம் கொடுத்துதான் போராட்டத்தை நடத்தியுள்ளார்கள், பசித்த வயிறோடு எப்படி போராட முடியும்” என பார்ப்பனக் கொழுப்பெடுத்து பேசினார்.

திட்டமிட்ட கருத்துருவாக்கம்!

ஸ்டெர்லைட் ஆலைக்குள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா தாக்கல் செய்த இடைக்கால மனு ஏப்ரல் 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தநிலையில், ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் படிப்படியாக திட்டமிட்டே கட்டமைக்கப்பட்டன.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஸ்டெர்லைட் கைக்கூலிகளால் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ஸ்டெர்லைட் போராட்டம் வெளிநாட்டு சக்திகளால் தூண்டப்படுகிறது என்ற பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மக்களில் ஒரு சிலரை ஊழல்படுத்தி, “ஆலை மூடப்பட்டதால் வேலையில்லாமல் கஷ்டப்படுகிறோம்” என்று பேச வைப்பது, மனு கொடுக்க வைப்பது போன்ற வேலைகளிலும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஈடுபட்டது. மார்ச் மாதம் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்டெர்லைட் ஆலையில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என பெண்களை உறுதிமொழி எடுக்க வைத்துள்ளார்கள்; “ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் தூத்துக்குடி மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த இலவசக் கல்வி, மருத்துவம் முதலியவற்றை செய்து தருவோம்” எனவும் பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மே 22 ஆம் தேதி தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்துவதற்கே ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து, போலீசை குவித்து அச்சுறுத்தும் அரசு நிர்வாகம், ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் இத்தகைய சட்டவிரோத பிரச்சாரத்தை தொடர்ந்து அனுமதித்து வருகிறது. இவை எல்லாவற்றையும் தாண்டி தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் நின்று போராடிவருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரம ராஜா, திடீரென ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என பேசிவந்தார். விக்கிரம ராஜாவின் கருத்துக்கு தூத்துக்குடி மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 18-03-2023 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற வணிகர் சங்கப் பேரமைப்பின் மண்டலக் கூட்டத்தில், விக்கிரம ராஜாவின் கருத்துக்கு தூத்துக்குடி வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, “ஸ்டெர்லைட்டை திறக்க அனுமதிக்க மாட்டோம்” என்று தீர்மானமும் போட வைத்துள்ளனர்.

விழிஞ்சம் ஃபார்முலா!

சாதி மதம் கடந்து உழைக்கும் மக்கள் ஒன்றுகூடி நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல், “கிறித்துவ மிஷனரிகளின் தூண்டுதலால் நடைபெற்றது” என பேசுவது வெறுமனே அவதூறு மட்டுமல்ல. இதன்மூலம் போராடும் மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி காரியத்தை சாதித்துக் கொள்ளும் சதித்திட்டமுமாகும்.

விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிரான கேரள மீனவர்களின் போராட்டத்தை சிதைக்கவும் இதே வழிமுறையே கையாளப்பட்டது. அதானியின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக மீனவர்கள் நூறு நாட்களை கடந்து உறுதியாக போராடினார்கள். கேரள அரசால் ஒரு அடிகூட கட்டுமான வேலைகளை நகர்த்த முடியவில்லை. அதானியின் துறைமுகம் அமைந்தால் மண் அரிப்பு ஏற்பட்டு தங்கள் வீடுகள் அழிந்து போகும், வாழ்வாதாரம் பாதிக்கும் என்று போராடிய மீனவர்களின் போராட்டத்தை ‘வளர்ச்சி’க்கு எதிரான ‘கிறித்தவர்களின் சதி’ என்று பிரச்சாரம் செய்தது ஆர்.எஸ்.எஸ்.

மீனவ மக்கள் போராட அமைத்திருந்த கூடாரத்திற்கு எதிராக, “விழிஞ்சம் துறைமுகத் திட்டத்திற்கு ஆதரவாக இந்துக்களின் போராட்டம்” என்று தனது கைக்கூலிகளை திரண்டிவந்து போராடியது. இதன்மூலம் கேரளாவில் ஒரு மதக் கலவரத்தைத் தூண்டுவதற்காக முயற்சித்தது. இதே ஃபார்முலாவைத்தான் தற்போது ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராகவும் கையாளுகிறது பாசிசக் கும்பல்.

இந்த அடிப்படையில்தான் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டங்களில் முன்னணியில் நிறுத்தப்படுகிறார். காவிக் கும்பல் கொங்கு மண்டலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கவுண்டர் சாதிவெறியை மூலதனமாக்கிக் கொண்டு வேலைசெய்வதைப் போல, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, நாகர்கோயில் போன்ற தென் மாவட்டங்களில் கிறித்தவ மக்களுக்கு எதிராக நேரடியாக இந்துமதவெறியை தூண்டிவிட்டு வளருகிறது. அண்மையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அர்ஜூன் சம்பத் “கிறிப்டோ கிறித்தவர்களின் ஆதிக்கத்திலிருந்து தென்மாவட்டங்களை விடுவிக்க வேண்டும், தென் மாவட்டங்களை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும்” என்றார். இந்த ஒருங்கிணைந்த கிறித்தவ எதிர்ப்பு திட்டத்தில், அவர்கள் ஸ்டெர்லைட் ஆதரவு போராட்டத்தையும் இணைத்துக் கொண்டு வேலைசெய்கிறார்கள்.

ஊடகங்களும் வேதாந்தாவின் பக்கம்!

வேதாந்தாவிடம் காசுவாங்கிய கைக்கூலிகளான ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல், தூத்துக்குடி மக்களை காசு வாங்கிக் கொண்டு போராடினார்கள் என்று அவதூறு செய்கிறது. உண்மையில் பா.ஜ.க.தான் வேதாந்தாவிடம் சட்டத்திற்கு புறம்பாக கட்சிநிதி பெற்றது; இது பொதுவெளியிலேயே அம்பலமான செய்தியாகும். 2014-ஆம் ஆண்டு வெளிநாட்டு பங்களிப்புச் சட்டம் 1976-ன் விதிகளுக்குப் புறம்பாக வேதாந்தாவிடமிருந்து நிதிபெற்றதாக டெல்லி உயர்நீதிமன்றம் பா.ஜ.க.வை கண்டித்துள்ளது.

அர்ஜுன் சம்பத் முதல் ஆர்.என்.ரவி வரையிலான சங்கபரிவாரக் கும்பல், நம் மக்களை இழிவாகப் பேசுவதை இனியும் அனுமதிப்பதே தவறாகும்.

ஸ்டெர்லைட் விஷயத்தில் எது பேசு பொருளாக மாற வேண்டுமோ அது திட்டமிட்டு மறைக்கப்பட்டு காவிகளால் திசை திருப்பப்படுகிறது. கார்ப்பரேட் ஊடகங்களும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான விளம்பரங்களையும், ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் பொய்மூட்டைகளையுமே வெளியிட்டு வருகிறார்கள். “ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு போலீசால் திட்டமிட்டே நடத்தப்பட்ட பச்சைப்படுகொலை” என்று அருணா ஜெகதீசன் அறிக்கை அம்பலப்படுத்திய பிறகும், இன்றுவரை கொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படாதது குறித்து எந்த ஊடகங்களிலும் விவாதிக்கப்படவில்லை.


படிக்க: தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!


ஸ்டெர்லைட் போராட்டம் மக்களின் தன்னெழுச்சியான போராட்டம் என்று பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு அருணா ஜெகதீசன் அறிக்கை தெரிவித்தபோது, ஸ்டெர்லைட் கைக்கூலிகள் எங்கே சென்று ஒளிந்துகொண்டிருந்தார்கள்? இந்த அரசும் ஆளும்வர்க்கமும் வேதாந்தாவின் கூலிப்படையாக செயல்பட்டுள்ளன என்று அம்பலமான சூழலில் வாயைத் திறந்து பேசினால், மக்களின் கோபாவேசத்துக்கு இரையாக வேண்டியிருக்கும் என்பதால்தானே ஒளிந்துகொண்டார்கள். இன்றோ கார்ப்பரேட் ஊடகங்களின் மூலம் தாங்கள் விதைக்க நினைக்கும் விசக் கருத்தைப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்.

அன்று ஏவப்பட்ட வேதாந்தாவின் தோட்டங்கள் போராளிகளின் உடல்களைச் சாய்த்தன. இன்று ஏவப்படும் ‘வேதாந்தாவின் தோட்டக்கள்’ அவதூறுகளாலும் சதிகளாலும் நமது போராட்டத்தை சிதைக்கப் பார்க்கின்றன.

வெற்றியை தக்கவைக்க போராடுவோம்!

ஏப்ரல் 10 அன்று நடந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாட்டு அரசின் அனுமதியில்லாமல் ஆலைக்குள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கிடையாது என்று மறுத்திருக்கிறது உச்சநீதிமன்றம். இருப்பினும் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால், அக்கழிவுகளை மட்டும் அகற்றிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றுவதற்கு தமிழ்நாடு அரசு ஆலையை மூடும்போதே அனுமதி அளித்துவிட்டது. ஆனால், ஐந்து ஆண்டுகளாகியும் கழிவுகளை அகற்றாத ஸ்டெர்லைட் நிறுவனம், தற்போது ‘சுத்தம் செய்யப்போகிறேன்’ என்று கூறுகிறது.

எப்படியாவது ஆலையை மீண்டும் திறந்துவிட நினைக்கும் வேதாந்தா, இந்த அனுமதியை கேடாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பே அதிகம். இந்த அனுமதியையே முகாந்திரமாக வைத்து நாளை பராமரிப்பு பணிக்கான அனுமதி கேட்கலாம். அடுத்து, போலியான ஒரு ஆய்வறிக்கையை தயாரித்து ஸ்டெர்லைட் ஆலையின் இயக்கத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லை என்று நிறுவலாம். எல்லாவற்றையும் நாம் எதிர்பார்க்க வேண்டும்.

பண பலமும் அரசின் துணையும் பெற்ற ஒரு பகாசூர பன்னாட்டு நிறுவனத்தை வீரம்செறிந்த மக்கள்திரள் போராட்டத்தின் மூலம் வீழ்த்தியிருக்கிறோம். நாம் ரத்தம் சிந்திப் பெற்ற வெற்றி இது. வெற்றிபெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமே நெடியது. தொடர்ந்து போராடுவோம். தூத்துக்குடி தியாகிகள் நம்மை வழிநடத்துவார்கள்!

மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவு ஏற்படும்: பரகல பிரபாகர்

பிரபல பொருளாதார நிபுணரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகல பிரபாகர் மோடியையும் அவர் ஆட்சியையும் விமர்சித்து தி வயர் இணையத்தளத்திற்கு நேர்க்காணல் ஒன்றை அளித்துள்ளார். இந்தியாவில் மோடி அரசை விமர்சிக்கும் பொருளாதாரவாதிகளில் ஒருவராக அறியப்படும் பரகல பிரபாகர்,  பல ஆங்கில பத்திரிகைகளில் மோடி ஆட்சி குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார்.

சமீபத்தில் பொருளாதாரம், அரசியல் மற்றும் பிற பிரச்சினைகளை மோடி அரசு கையாள்வது குறித்த இவரின் தொடர் கட்டுரைகள் ”கூன் விழுந்த புதிய இந்தியா: நெருக்கடியிலுள்ள குடியரசு பற்றிய கட்டுரைகள்” (The Crooked Timber Of New India: Essays on a Republic in Crisis) என்ற பெயரில் புத்தகமாக வெளியாகியது. அரசு கட்டமைப்புக்குள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் திட்டமிட்டு ஊடுருவுவது, வெறுப்புணர்வை பரப்புவது, நாட்டின் பன்மைத்துவ நல்லிணக்கத்தை சீர்குலைப்பது, சரிந்துவரும் இந்திய பொருளாதாரம் குறித்தெல்லாம் புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.

இப்புத்தகம் குறித்து தி வயர் இணையதளத்தில் கரன் தாப்பருக்கு பேட்டியளித்த பிரபாகர், பிரதமர் மோடி மற்றும் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி பொருளாதாரத்தில் மட்டுமின்றி மற்ற பல துறைகளிலும் திறமையற்றவராக மாறிவிட்டார்” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “பிரதமர் மோடி பல விஷயங்களில் திறமையற்றவராக இருந்தாலும் சில விஷயங்களில் திறமையாக இருக்கிறார். சமூகத்தில் பிளவை உருவாக்கி, இனவாத வெறுப்புணர்வை உருவாக்குவதில் திறம்பட செயலாற்றியிருப்பதை நாட்டில் நடந்த சம்பவங்களிலிருந்து பார்க்க முடிகிறது” என மோடியின் மதவெறி பாசிச ஆட்சி குறித்து குறிப்பிட்டுள்ளார்.


படிக்க: பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?


இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய பிரபாகர், “பாரதிய ஜனதா கட்சிக்கு ஆரம்பத்தில் இருந்தே எந்தவொரு பொருளாதாரத் தத்துவமோ ஒத்திசைவான சிந்தனையோ இல்லை” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக ‘மாண்புமிகு’ நிதியமைச்சர் நிர்மலாவின் கணவரான பரகல பிரபாகர், “எந்த பில்லி சூனிய பொருளாதார நிபுணர் இன்று மோடி அரசுக்கு ஆலோசனை கூறுகிறார் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

மோடி குறித்து, “எந்த பொருளாதார நிபுணரின் ஆலோசனையின் பேரில் பணமதிப்பு நீக்கம் போன்ற மூர்க்கத்தனமான மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத முடிவை அவர்(மோடி) எடுத்தார் என்பது தெரியவில்லை. அவர் கருப்புப் பணத்தைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆனால், எந்தப் பொருளாதார நிபுணரிடம் வேண்டுமானாலும் கருப்புப் பணம் பணமாக இருக்குமா என்று கேளுங்கள்?” என்று வினவியுள்ளார்.

மேலும், “2024-இல் மீண்டும் மோடி ஆட்சி அமைந்தால் அது பொருளாதாரத்திற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்கும் பேரழிவை ஏற்படுத்தும்” என்று எச்சரித்துள்ளார் பிரபாகர். இந்த நேர்காணலும் பிரபாகரரின் நூலும் தற்போது பெரும் பேசுபொருளாகியுள்ளன.


படிக்க: நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?


பரகல பிரபாகர் மட்டுமின்றி பல்வேறு பத்திரிகையாளர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் பொருளாதாரவாதிகளும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-வின் பாசிச கொள்கைகளைப் பற்றியும் 2024 தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைத்தால் இந்திய மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் கொடூரமான பாசிச அபாயம் குறித்தும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

குறிப்பாக, எச்சரிக்கும் பொருளாதார வல்லுநர்களும் அறிவுஜீவிகளில் பலரும் முதலாளித்துவவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு பாசிசத்திற்கு எதிராக புரட்சி நடத்தி மாற்று கட்டமைப்பை அமைக்க வேண்டும் என்பதெல்லாம் நோக்கமல்ல. இருக்கும் போலி ஜனநாயக கட்டமைப்பை சிதையாமல் பாதுகாக்க  வேண்டுமெனில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு பதிலாக மனித முகம் கொண்ட புதிய தாராளவாத ஆட்சியாளர்கள் வரவேண்டும் என்பதே இவர்களது நோக்கம்.

எளிமையாக சொல்வதெனில், பிரபல பொருளாதார வல்லுநரான ரகுராம் ராஜன் “முதலாளித்துவத்தை முதலாளிகளிடமிருந்து காப்பாற்றுதல்” (Saving Capitalism from the Capitalists) என்று எழுதியதை போல போலி ஜனநாயக கட்டமைப்பை காப்பாற்றும் மனநிலை கொண்ட இவர்கள் பாசிஸ்டுகளுக்கு எதிராக தொடர்ந்து குரலெழுப்பி வருகின்றனர்.

ஆனால், இருக்கின்ற போலி ஜனநாயக கட்டமைப்பிலிருந்து தான் பாசிசம் வளர்ந்து வருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதே அரசியலமைப்பு சட்டத்தைப் பயன்படுத்தியும் அரசு நிறுவனங்களில் ஊடுருவியும் தான் இந்தியாவில் பாசிசம் வளர்ந்து வருகிறது. எனவே பாசிசத்தை வீழ்த்த போலி ஜனநாயகத்திற்குள்ளேயே தீர்வை தேடாமல் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசுக்காக போராடுவதே சரியான தீர்வு.


சோபியா

மூடு டாஸ்மாக்கை! கள்ளச்சாராய பலிகள் – திமுக அரசே முதல் குற்றவாளி! || தோழர் வெற்றிவேல் செழியன்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22-க்கும் மேற்பட்டோர் பலியானதற்கு திமுக அரசாங்கமும், காவல்துறையுமே முழு பொறுப்பு. கள்ளாசாரயமோ அல்லது மதுக்கடையோ – அனைத்து போதை பொருட்களும் உடனே தடை செய்யப்பட வேண்டும். எந்த அரசியல் கட்சியும் மதுக்கடையை மூட முன்வருவதில்லை. மதுக்கடை வருமானத்தை வைத்துத்தான் இந்த அரசை நடத்த வேண்டிய கேவலமான நிலையில்தான் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

போலீசுகாரர்களோ, அரசு அதிகாரிகளோ கள்ளசாரயத்தை தடுக்கமாட்டார்கள். காரணம் அதை விற்க அனுமதியளித்து பாதுகாப்பு வழங்குவதே அவர்கள்தான். கையூட்டு வாங்கி கொண்டு கண்டுகொள்ளாததன் விளைவே இதுபோன்ற மரணத்திற்கு காரணம்.

இதுபோன்ற செயல்களை தடுக்க ஊர், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் உழைக்கும் மக்களை கொண்ட படை கட்டி அடித்து உதைத்து விரட்டியடிப்பது ஒன்றே தீர்வு.

மேலும்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

350 நாட்களுக்கும் மேலாக தொடரும் டெல்லி மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

0

புது டெல்லியில் மத்திய அரசால் நடத்தப்படும் கலாவதி சரண் குழந்தைகள் மருத்துவமனையில் (பல்நோக்கு மருத்துவமனை) தூய்மைப் பணியாளர்கள் ஜுன் 1, 2022 முதல் தற்போது வரை 350 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

2022-ஆம் ஆண்டு, மே 31 அன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி கிட்டத்தட்ட 400 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இத்தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணிக்கு அமர்த்தக்கோரி நாள்தோறும் மருத்துவமனை வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, ஒப்பந்ததாரர்கள் மாற்றப்படும்போது தொழிலாளர்களின் வேலையை பறிக்கக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. ஆனால் அதையும்மீறி, 400 பேரில் 150 பேருக்கு மட்டுமே மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது; அதுவும் ₹30,000 லஞ்சம் பெறப்பட்ட பின்பே வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் வழங்காத 250 பேருக்கு பணி மறுக்கப்பட்டுள்ளது.

பணியில் சேர்ந்ததிலிருந்து உரிமை மறுக்கப்பட்ட இத்தொழிலாளர்கள் டிசம்பர் 2017-இல் அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில்-இன் (All India Central Council for Trade Unions – AICCTU) கீழ் கலாவதி சரண் ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் (Kalawati Saran Contract Karamchari Union) அமைக்கப்பட்ட பின்னர்தான் சில உரிமைகளை பெற்றுள்ளனர்.

சங்கம் அமைக்கப்படுவதற்கு முன்பாக, ஒப்பந்ததாரர்களும் மருத்துவமனையும் கூட்டு சேர்ந்துகொண்டு குறைந்தபட்ச ஊதியத்தை முறையாக வழங்காமல் இருந்தனர். குறைந்தபட்ச ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே வழங்கி வந்தனர். பல சட்ட வழக்குகளுக்கு பின்பு தான், 2019-ஆம் ஆண்டில் ஊதியம் உயர்த்தப்பட்டது.


படிக்க: தமிழ்நாடு: பல்வேறு இடங்களில் தூய்மைப் பணியாளர்கள், ஓ.எச்.டி ஆபரேட்டர்கள் போராட்டம்!


டிசம்பர் 29, 2021 அன்று மண்டல தொழிலாளர் ஆணையர் (RLC(C)) தொழிலாளர்களுக்கு இதுநாள் வரை வழங்கப்படாத ஊதியத்தை (unpaid wages) வழங்குமாறு உத்தரவிட்டார். ஆனால், வழங்கப்பட வேண்டிய ₹1.61 கோடி ஊதிய பாக்கி தற்போது வரை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் தான், கொரோனா தொற்று காலத்திலும் தங்கள் உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த 400 தூய்மை பணியாளர்கள் மே 31, 2022 அன்று தீடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

கொரோனா தொற்று காலத்தின்போது, இத்தொழிலாளர்களை கடுமையாக சுரண்டியது மருத்துவமனை நிர்வாகம். எந்நேரமும் இவர்களின் சேவை தேவைப்படும் என்பதால் இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு வெளியிலேயே தூங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவக் கழிவுகளை வெறும் கைகளில் கையாளும் அவலநிலையில் தான் தொழிலாளர்கள் இருத்தப்பட்டிருக்கிறார்கள்.

தூய்மை பணியாளர்கள் சங்கம் அமைத்துக் கொண்டு தங்கள் உரிமைகளை கேட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத காரணத்தினால் தான், அவர்களை நீக்கும் பொருட்டு மருத்துவமனை நிர்வாகம் ஒப்பந்ததாரரை மாற்றியுள்ளது. தொழிலாளர் ஒற்றுமையை உடைப்பதற்காகவே சுலப் இன்டர்நேஷனல் (Sulabh International) என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு பதிலாக கோரக் செக்யூரிட்டி (Gorakh Security) என்ற புதிய ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டுள்ளார்.


படிக்க: தூய்மை பணியாளர்களை சுரண்டும் கிரிஸ்டல் நிறுவனமும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகமும்!


போராட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இத்தொழிலாளர்கள் பலமுறை போலீசு அடக்குமுறையை சந்தித்துள்ளனர். ஜூன் 20, 2022 அன்று எண்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போலீசால் கைது செய்யப்பட்டனர். அதன்பின்பு 10 முதல் 15 தொழிலாளர்கள் மட்டுமே மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே போராட அனுமதிக்கப்பட்டனர்.

ஏறக்குறைய ஒரு வருடமாக போராடிவரும் இத்தொழிலாளர்கள், தங்களின் உணவுத் தேவைக்காக மருத்துவமனை முன்பாக உள்ள லங்கரை சார்ந்து உள்ளனர். லங்கர் (langar) என்பது சீக்கிய சமய வழிபாட்டுத் தலமான குருத்துவாராக்களில் உணவு வழங்கும் சமையல் கூடம். இதே நிலை நீடித்தால், தங்கள் குழந்தைகள் திருடர்களாக மாறும் அவலநிலைதான் ஏற்படும் என்று போராடும் தொழிலாளி ஒருவர் வேதனையுடன் கூறுகிறார்.

இப்படிப்பட்ட ஒரு அவல நிலையிலும், தங்களின் உரிமையை நிலை நாட்டுவதற்காக கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களின் போர்க்குணம் நம்மை வியக்க வைக்கிறது. ஆனால், ஊடகங்களின் கண்களுக்கோ இப்போராட்டம் தென்படவேயில்லை.

தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்திற்கு பணிக்கமர்த்தப்பட்டு ஈ.எஸ்.ஐ – பி.எஃப் போன்ற எவ்வித சமூகப் பாதுகாப்பும் வழங்கப்படாமல் மனிதத்தன்மையற்ற முறையில் ஒட்டச் சுரண்டப்படுவது கலாவதி சரண் மருத்துவமனையில் மட்டும் நடப்பதில்லை. நாடு முழுவதும் இத்தொழிலாளர் விரோதப்போக்கு காணப்படுகிறது. ஒப்பந்த முறை ஒழிக்கப்படும் வரை தொழிலாளர்களுக்கு விடிவேதும் இல்லை.


பொம்மி

ஜல்லிக்கட்டுக்கு என்ன செய்தார் மோடி || தோழர் மருது

ச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் அடிப்படையில் மட்டுமே இந்த தீர்ப்பு வந்ததாக நான் கருதவில்லை. மக்களுடைய போராட்ட உணர்வுகள் தான் காரணம். ஒருவேளை இந்த தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஜல்லிக்கட்டு கூடாது என்று வந்துவிட்டால் இன்னுமொரு போராட்டத்தை தாங்குவதற்கு ஒன்றிய அரசு வலுவில்லாமல் போய்விடுமோ என்ற நிலையில்தான் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாலஸ்தீனியர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க ஐ.நா சபை மறுப்பு

பாலஸ்தீனத்திற்கு ஐ.நா சபை உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்களில் 60 சதவீதத்தை அடுத்த மாதம் முதல் நிறுத்தப்போவதாக தற்போது ஐ.நா சபை அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ஆக்கிரமிப்பின் காரணமாக தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலஸ்தீனத்தில் உள்நாட்டு போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் படைகள் மேற்கொண்டுவரும் ஆயுத தாக்குதல்களால் பாலஸ்தீன மக்கள் பல ஆண்டுகளாக நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ளாமல் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட பாலஸ்தீனத்தில் தொடர் போர் பதற்றம் காரணமாக கடுமையான உணவுப் பஞ்சம் நிலவி வருகிறது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாக உணவுப் பஞ்சத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவின் தரவுகளே தெரிவிக்கின்றன.

பதற்றம் நிறைந்த காசா பகுதியைச் சுற்றியுள்ள 63 சதவீதம் பேர் கடுமையான உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 36 சதவீதமான பெண்களுக்கு போதுமான உணவு, குடிநீர் கூட கிடைக்கவில்லை என்று ஐ.நா சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக ஐ.நா சபையின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பாலஸ்தீனத்தில் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரேஷன் முறையில் உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் ஒன்று தற்போதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


படிக்க: இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!


இந்நிலையில், கடுமையான பொருளாதார நெருக்கடிகளை காரணம்காட்டி அடுத்த மாதம் முதல் பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டு வந்த உணவுப் பொருட்களின் அளவில் 60 சதவீதத்தை குறைக்கவுள்ளதாக பாலஸ்தீனத்துக்கான ஐ.நா-வின் உணவு பாதுகாப்பு திட்ட இயக்குநர் சமர் அப்தெல் ஜாபர் (Samer Abdel Jaber) தெரிவித்துள்ளார்.

இதனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு வரும் ஜூன் மாதம் முதல் ஐ.நா சார்பில் வழங்கப்பட்டு வந்த உணவு பொருள் மற்றும் ஒரு தனிநபருக்கு டாலர் மதிப்பில் வழங்கப்பட்டு வந்த $10.30 மதிப்புள்ள மாதாந்திர வவுச்சர்கள் வழங்கும் திட்டம் ஆகியவை நிறுத்தப்படவுள்ளதாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் முக்கிய பகுதியான காசா கடந்த 2007-ஆம் ஆண்டு முதல் இஸ்லாமிய ஹமாஸ் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு 25 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் இவர்களில் 45 சதவீதம் பேர்  வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாலஸ்தீனத்தில் உள்ள 80 சதவீத குடும்பங்கள் ஐ.நா உதவி போன்ற சர்வதேச உதவியை நம்பித்தான் இருக்கிறார்கள் என ஐ.நாவின் தரவுகள் கூறுகின்றன.

அதேபோல் ஐ.நா உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளும் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால், “பாலஸ்தீனத்திற்கு வழங்கப்பட்டுவரும் உணவு மற்றும் நிதியுதவிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நிறுத்துவதற்கான கட்டாயத்திற்கு ஐ.நாவின் உணவு பாதுகாப்பு திட்டம் தள்ளப்படும்” எனவும் சமர் அப்தெல் ஜாபர் எச்சரித்துள்ளார்.


படிக்க: இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்!


ஐ.நா.சபையின் இந்த கடுமையான முடிவால் ஏற்கனவே போர் மற்றும் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்கள் மேலும் கடுமையாக பாதிக்கப்படுவர். குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் உள்நாட்டு கலவரங்களின் போது துப்பாக்கி மற்றும் குண்டுகளுக்குப் பலியாகி வந்த மக்கள் தற்போது பசி, பட்டினியால் இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தங்களுடைய நலனுக்காக இஸ்ரேலை கைப்பாவையாக வைத்துக் கொண்டு பாலஸ்தீன மக்களின் மீது மறைமுக தாக்குதல் நடத்தி வருவதே அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள்தான்.

குறிப்பாகப் பார்த்தோமென்றால் இதுபோன்ற ஏகாதிபத்தியங்கள் நடத்தும் உள்நாட்டு போரின் விளைவாகத்தான் மக்கள் பசி பட்டினி போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அப்படி பல துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் வெகுண்டெழுந்து அந்நாட்டின் அரசிற்கெதிராக போராட்டங்களை மேற்கொண்டுவிடக் கூடாது, ஒரு பேரெழுச்சி ஏற்பட்டுவிட கூடாது என்பதை தடுப்பதற்கே இது போன்ற சில சலுகைகளை ஐ.நா போன்ற அமைப்புகள் மூலம் வழங்கப்படுகிறது.

ஆனால் ஏகாதிபத்திய மேலாதிக்க நாய்ச்சண்டையினால் (ரஷ்யா – உக்ரைன் போர் உட்பட) ஏற்பட்டிருக்கும் நெருக்கடியால் இதுபோன்ற திட்டங்களை தொடர்வதிலும் நெருக்கடிகள் ஏற்படுகிறது.

ஏகாதிபத்திய பிடியில் இருக்கும் வரை இப்பிரச்சினைக்கு தீர்வே கிடையாது. இஸ்ரேல் மற்றும் அதன் பின் மறைந்து கொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு மக்கள் எழுச்சியை கட்டமைப்பதன்மூலமே இப்பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வரமுடியும்.


சித்திக்

மே 15 மதுரை மாநாட்டை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி! | தோழர் வெற்றிவேல்செழியன்

மே 15 மாநாட்டை வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி! | தோழர் வெற்றிவேல்செழியன்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

பாசிஸ்டுகளின் துருப்புச் சீட்டாகும் இடஒதுக்கீடு: சங்கப்பரிவாரங்களும் தம்பிமார்களும்!

பெரும்பான்மை மக்களிடம் சிறுபான்மையினராக உள்ள ஒருதரப்பு மக்களை, அவர்களின் எதிரிகளாகக் காட்டுவதும், மொழி, இனம், மதம், பண்பாடு என பலவகைகளிலும் அச்சிறுபான்மை சமூகத்தினரை ‘அந்நியர்களாக’ச் சித்தரித்து பெரும்பான்மை மக்களிடம் வெறுப்புணர்வை உருவாக்குவதும் பாசிஸ்டுகளின் பொது வழிமுறையாகும்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் முன்வைக்கும் இந்துதேசியமும் சரி, சீமான் கும்பல் முன்வைக்கும் ‘தமிழ்தேசிய’மும் சரி, ஒருதரப்பு மக்களை எதிரிகளாகக் காட்டி கட்டமைக்கப்படும் பாசிச அரசியலே. தமது பாசிச அரசியலைக் கட்டமைக்க அவர்கள் பல்வேறு விவகாரங்களை, தமது அரசியல் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில், இடஒதுக்கீடு இன்று முக்கியமானதாக மாறியிருக்கிறது.

1990-ல் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டபோது, இது ‘இந்துதேசத்தை பிளவுபடுத்தும்’ முயற்சி என்று கொதித்தது ஆர்.எஸ்.எஸ். மண்டல் கமிஷனுக்கு எதிராக வடமாநிலங்களை வன்முறைக்காடாக்கியது சங்கப்பரிவாரக் கும்பல். எந்த இடஒதுக்கீடு இந்துதேசத்தை பிளவுபடுத்தும் என்று நஞ்சைக் கக்கியதோ, இன்று அதே இடஒதுக்கீட்டை இந்துராஷ்டிரத்தை நிறுவுவதற்கு தமது அரசியல் கருவியாக பயன்படுத்திக்கொள்ள விழைகிறது பாசிசக் கும்பல்.

இன்னொருபக்கம், தமிழினத்தின் ஒற்றுமைக்கு பெருந்தடையாக உள்ள சாதியை ஒழிப்பது பற்றி பேசாமல், சாதி அடையாளத்தை பெருமிதமாகக் கருத வேண்டும் என்கிற சீமான், ‘தமிழனை ஒன்றிணைப்பதற்கும்’ ‘வந்தேறிகளுக்கு எதிராக போர் புரியவும்’ இடஒதுக்கீட்டை கையிலெடுத்துள்ளார்.

சங்கிகளின் மதவெறி துருப்புச் சீட்டு!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி, தமது வாக்குவங்கியை அதிகரிக்கும் நோக்கத்தில் எஸ்.சி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 15-லிருந்து 17 சதவிகிதமாகவும் எஸ்.டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை 3-லிருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்தியிருக்கிறது பா.ஜ.க. அரசு. மேலும், முஸ்லிம்களுக்கு இருந்த 4 சதவிகித இடஒதுக்கீட்டை ரத்துசெய்த பா.ஜ.க, அதை லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகா சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு தலா 2 சதவிகிதமாக பிரித்து வழங்கியுள்ளது.

இதன்மூலம் ஒரேநேரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சியைக் கிளறிவிடுதோடு, கர்நாடகத்தில் மிகப்பெரிய வாக்குவங்கியைக் கொண்டுள்ள லிங்காயத்துக்கள் மற்றும் ஒக்கலிகர் சமூகத்தை தன் பக்கம் திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது பா.ஜ.க.


படிக்க: முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!


முஸ்லிம்களின் 4 சதவிகித இடஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டதை கர்நாடக காங்கிரஸ் எதிர்த்துள்ளது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் 4 சதவிகித இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளார் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார்.

சாமராஜ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் டி.கே.சிவக்குமாரின் அறிவிப்பை சுட்டிக்காட்டி பேசிய அமித்ஷா, “அப்படியானால் யாருடைய இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இடஒதுக்கீட்டைத் தருவீர்கள்? லிங்காயத்துகள், ஒக்கலிகர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டு அளவைக் குறைப்பீர்களா” என மத மோதலைத் தூண்டும்வகையில் கேள்வியெழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் கையாண்ட இதே உத்தியை பா.ஜ.க பிற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ளது. அமித்ஷா தெலுங்கானாவில் தான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும், அரசின் சமூக நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. இதுபோன்ற இரட்டைச் சலுகைகளை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யும்” என்று அறிவித்துள்ளார்.

கடந்த ஜனவரியில், காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில், ஆர்.எஸ்.எஸ்-ன் பழங்குடி அமைப்பான ஜன்ஜாதி சுரக்‌ஷா மஞ்ச் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. நாராயண்பூர் மாவட்டத்தில், 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிறித்தவ மதத்திற்கு மாறிய பழங்குடிகளுக்கு எதிராக நடைபெற்ற தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். “தாய்மதத்திற்கு திரும்ப வேண்டும் அல்லது வசிப்பிடத்தைவிட்டு வெளியேற வேண்டும்” என்பது வன்முறையில் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் குண்டர் அமைப்பின் முழக்கம். மதம்மாறிய பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும் என்பதும் அக்கும்பலின் முக்கிய பிரச்சாரமாக உள்ளது.

சங்கப்பரிவார அமைப்புகளுள் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத், மதம் மாறிய எஸ்.சி, எஸ்.டி.க்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டுமென பல பிரச்சார இயக்கங்களை நடத்தியுள்ளது. அண்மையில்கூட, கடந்த மார்ச் 4-5 தேதிகளில் உத்தரப்பிரதேசத்தில், “இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய எஸ்.சி.க்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா?” என்ற தலைப்பில் ஒரு மாநாட்டை நடத்தியுள்ளது.

பார்ப்பன-உயர்சாதி மேலாதிக்கத்திற்கு எங்கே பங்கம்வந்துவிடுமோ என்று ஒருகாலத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, இன்று சமூகநீதி வேடம்போடுகிறது. ஆனால், வாக்குவங்கி அரசியலுக்காகக்கூட பா.ஜ.க. அறிவித்துள்ள இடஒதுக்கீட்டு பலன்கள் அம்மக்களை சென்றடையப் போவதில்லை. “எல்லாம் தனியார்மயம்” என்ற தாரக மந்திரத்தை உயிர்மூச்சாக அமல்படுத்திவரும் மோடி ஆட்சியில், அரசு வேலைவாய்ப்புக்கு எங்கே போய் நிற்பது? கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அரைகுறையாக அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த இடஒதுக்கீட்டுக்கும் குழிபறிப்பதற்கு உயர்சாதி ஏழைகளுக்கான (EWS) 10 சதவிகித இடஒதுக்கீடு என்ற அம்பை எய்துள்ளது பாசிசக் கும்பல். இதன்மூலம் மீண்டும் இந்திய சமூகத்தில் பார்ப்பன மேலாதிக்கம் முற்றுமுழுதாக நிலைநாட்டப்பட இருக்கிறது.

இவை எதுகுறித்தும் நாம் சிந்திக்கமுடியாதபடி மதவெறியை நம் மண்டைக்குள் திணித்துவருகிறது பாசிசக் கும்பல்.

தம்பிகளின் இனவெறி துருப்புச் சீட்டு!

உசிலம்பட்டியில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய சீமான், தமிழ்நாட்டில் மட்டும்தான் கர்நாடகம், ஆந்திரா, கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதாகவும், ஆனால் அந்த மாநிலங்களில் வாழக்கூடிய தமிழர்களுக்கு அம்மாநில அரசுகள் இடஒதுக்கீடு வழங்குவதில்லை என்று பொருள்படும்படியும் பேசியிருந்தார்.

“நான் இங்கிருக்கிற ரெட்டியாருக்குக் கொடுப்பேன். தெலுங்குச் செட்டியாருக்குக் கொடுப்பேன். கன்னடச் செட்டியாருக்குக் கொடுப்பேன். நாயுடுக்கு கொடுப்பேன். ஆனால், ஆந்திராவுக்குப் போவேன். கர்நாடகாவுக்குப் போவேன். இங்கிருக்கிற கன்னடர்களுக்கு நான் இவ்வளவு கொடுத்திருக்கேன். இங்க ஒன்னேகால் கோடி என் தமிழன் இருக்கான். அவனை நீ ஓ.பி.சி.ல வச்சிருக்க. out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்)ன்னு வச்சிருக்க. அதில்லாம நாங்க இடஒதுக்கீடு கொடுப்பத போல கொடு என்பேன்” என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Other backward class (அதர் பேக்வேர்ட் கிளாஸ்) என்பதை out of backward caste (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்று சீமான் குறிப்பிட்டிருப்பதன் மூலம், அவருக்கு இடஒதுக்கீடு பற்றிய அடிப்படை அறிவே இல்லையென்பதை வெளிப்படுத்தியுள்ளார் என்றும், சீமானை உட்காரவைத்து ஓ.பி.சி (OBC) என்றால் other backward class என்று எழுதப் பயிற்றுவிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் பலரும் வருத்தெடுத்துவிட்டனர்.


படிக்க: அருந்ததியர் மக்களை வந்தேறி என்ற சீமான் | மக்கள் அதிகாரம் கண்டனம்


யூடர்ன் போன்ற சில வலைதளங்களை நடத்துவோர், பிற மாநிலங்களில் வாழும் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை என்ற சீமானின் கூற்று அடிப்படையிலேயே பொய் என்பதை அம்பலப்படுத்தினர். எந்தெந்த சாதிப்பட்டியலில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்ற ஆதாரங்களையும் வெளியிட்டனர். மேலும் ஓ.பி.சி இடஒதுக்கீட்டுப் பிரிவானது ஒன்றிய அரசின் வகைப்படுத்தல் எனவும், மாநிலங்களின் இடஒதுக்கீட்டு வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை எனவும் அம்பலப்படுத்தியிருந்தனர்.

எப்படி இருந்தபோதிலும் சீமானின் பேச்சு, “தற்குறித்தனமாக உளருகிறார்” என்று நையாண்டி செய்து கடந்துசெல்லப்பட்டதே தவிர, சீமான் கையிலெடுத்துள்ள அபாயகரமான அரசியலைப் பற்றி எந்த ஒரு பொதுவிவாதமும் நடத்தப்படவில்லை.

சீமான் ஏதோ ஒன்றும் தெரியாமல் உளரவில்லை. கர்நாடகத்திலோ, ஆந்திரத்திலோ தமிழை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது சீமானுக்கு தெரியாததல்ல. out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்ற சொல்லாடலை சீமான் தெரிந்து உதிர்த்திருந்தாலும் சரி, தெரியாமல் தற்குறித்தனமாகவே கூறினாலும் சரி, அதற்கு பின் ஒரு கேடான நோக்கம் உள்ளது.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் பேசும் சாதிகளுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதால்தான் இங்குள்ள ‘தமிழ்க் குடிகளுக்கு’ (சாதிகளுக்கு) வாய்ப்பு பறிக்கப்படுகிறது. ஆனால், நமது ‘தமிழ்க் குடிகளுக்கு’ அந்த மாநிலங்களில் இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதில்லை என்று இனவெறியைத் தூண்டிவிடுவதுதான் சீமான் உரையின் நோக்கம்.

இனவெறியைத் தூண்டிவிடுவதற்கு கூட சீமானால் எப்படி இவ்வளவு பெரிய அண்டப் புளுகுகளை அவிழ்த்துவிட முடிகிறது என்று சிலருக்கு கேள்வி எழலாம். தனது உரைக்கு கைதட்டி விசிலடிக்கும் கூட்டத்திற்கு நாம் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்பும் அளவிற்குதான் ‘பொது அறிவு’ உள்ளது என்ற நம்பிக்கையே அவ்வாறு பேசுவதற்கு சீமானுக்கு தைரியம் கொடுத்தது. ஆனால், கேட்பவர்கள் தனது தம்பிமார்கள் மட்டுமில்லை என்பதை மறந்துபோனதுதான் சீமான் செய்த பிழை.

ஆகவே இடஒதுக்கீடு பற்றிய சீமானின் பேச்சை ஏதோ உளறலாகப் புரிந்துகொள்ளக்கூடாது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில், அருந்ததியர்கள் விஜயநகரப் பேரரசு காலத்தில் தமிழ்நாட்டில் தூய்மைப் பணி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட ‘வந்தேறிகள்’ என்று பேசியது ஜனநாயக சக்திகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மக்கள் அதிகாரம் உள்ளிட்டு பல்வேறு அமைப்பினர் சார்பில் சீமானது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தபட்டது. ஆதித்தமிழர் பேரவை சார்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

அதன் பிறகும் அருந்ததியர் மக்களுக்கு எதிரான இனவெறி பிரச்சாரத்தை சீமானது தம்பிமார்கள் தொடர்ந்தார்கள். ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றில் பேசிய சீமான் தெலுங்குக் குடியான அருந்ததியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுத்ததால் ஆதித் தமிழ்க் குடிகளின் இடஒதுக்கீடு பறிபோனதாகப் பேசினார்.

“ஏற்கெனவே போராடித்தான் ஆதித்தமிழ்க் குடிகள் 18 சதவிகிதம் இடஒதுக்கீடு வைத்திருக்கிறோம். அதில் 3 சதவிகிதம் உள் இடஒதுக்கீடாக அருந்ததியினருக்கு ஏன் கொடுத்தீங்க? தனி இடஒதுக்கீட்டை உருவாக்கித் தர வேண்டியதுதானே. முழுவதும் வஞ்சகம், துரோகம், ஏமாற்று” என்று பேசினார்.

அருந்ததியின மக்களுக்கு எதிராக பிற ஒடுக்கப்பட்ட பட்டியல் சமூக மக்களைத் தூண்டிவிடுவது, இதன்மூலம் சாதியக் கலவரங்கள் மூண்டெழுந்தால், அதை ‘இன உரிமைப் போராக’ சித்தரித்து அதில் தனது தலைமையை நிறுவ முயற்சிப்பது ஆகியவைதான் சீமானின் சதித்திட்டம்.

சாதிகளையே, தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட சாதிகள், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளைப் பூர்வீகமாகக் கொண்ட சாதிகள் என இரண்டாகப் பிரித்து, தன்னை தமிழ் சாதிகளுக்கான பிரதிநிதியாகவும், தி.மு.க. மற்றும் திராவிட அமைப்புகளை பிற மொழியைப் பூர்விகமாகக் கொண்ட சாதிகளின் பிரதிநிதியாகவும் காட்டி அரசியல் செய்வதுதான் சீமானின் ‘குடிதேசிய அரசியல்’. இந்த மொழிவழி சாதிவெறி அரசியலைத்தான் ‘தமிழ்த்தேசிய அரசியல்’ என்று அழைத்துக் கொள்கின்றனர் சீமானின் தம்பிமார்கள்.

இதனால்தான், தமிழ்பேசும் வன்னியர்கள், கவுண்டர்கள், தேவர் ஆகிய ஆதிக்க சாதிவெறியர்கள் பறையர், பள்ளர் போன்ற தமிழ்பேசும் ஒடுக்கப்பட்ட சாதிகளைத் தாக்கும்போதெல்லாம் அண்ணன் பெரிதாக சவுண்டுவிடுவதில்லை; அதேநேரம் நாயுடு ஆதிக்க சாதிவெறியர்களால், பறையர் சமூக மக்களுக்கு கோவில்நுழைவு மறுக்கப்படும் காந்தாரியம்மன் கோவில் பிரச்சினையை இன உரிமைப் போராக மடைமாற்றத் துடிப்பார்கள்.

Out of backward (அவுட் ஆஃப் பேக்வேர்ட் கிளாஸ்) என்று சீமான் தன் தம்பிகளுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்த அதே கூட்டத்தில் தேவர் சாதியைச் சார்ந்த ஒரு தம்பி, வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்து கேள்வி எழுப்பிய போது, “அதைப் பற்றி கேட்கக் கூடாது. உனக்கு 20.5 சதவிகிதம் வேணும்னு கேளு அண்ண உனக்காக வந்து நிக்குறேன்” என்று பேசினார். வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கலாம் தவறில்லை. ஆனால், அருந்ததியினர்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான் சீமானின் ‘தமிழ்த்தேசிய அரசியல்’.

ஆண்ட பெருமைபேசும் தமிழ்ச் சாதிகள் ஐக்கியப்படும்போது, சீமான் தான் கூறும் தமிழ்த்தேசியத்தை வென்றெடுக்க முடியும். அந்த பொன் நாளுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் தம்பிமார்கள்.


பால்ராஜ்

ஆசிரியர்கள் போராட்டம்: அரசுவேலை வழங்க எந்த ஆட்சியும் தயாராக இல்லை!

டந்த ஐந்து நாட்களுக்கு முன்னதாக சென்னை நுங்கம்பாக்கம் கல்வி வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நடந்த தொடர் போராட்டத்தில் 40-க்கும் மேற்பட்டோர் மயங்கிவிழுந்தனர். போராட்டம் தீவிரமாவதை உணர்ந்த அரசு அதிகாரிகள் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தினர்.

கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்கள், துறைசார்ந்த அமைச்சர் நேரில் வந்து வாக்குறுதி கொடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கான பணி நிரந்தர ஆணையை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து போராடினர். அதன் விளைவாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களை சந்தித்தார்.

வழக்கம்போல ”10 நாட்களில் உங்கள் பிரச்சினைகள் முடித்து வைக்கப்படும்” என்று கூறியதோடு துறைசார்ந்த நடவடிக்கையையும் உடனே மேற்கொள்வதாக நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி தற்காலிகமாக ஆசிரியர்களின் போராட்டத்தை திரும்பப்பெற வைத்தார்.

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ”நாங்கள் அனைவரும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோம். எங்களுக்குரிய அரசுப்பணியை வழங்காததோடு மீண்டும் எங்களுக்கு ஒரு போட்டி தேர்வு வைத்து அதில் தேர்ச்சிபெற்றால்தான் அரசுப்பணி என்பது எந்த வகையில் சரியாகும். நாங்கள் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு (TET) எழுதியபோது இதுபோன்ற எந்த நிபந்தனைகளும் இல்லை. அதன்பின் 2018 ஆம் ஆண்டுதான் ஆசிரியர் தகுதி தேர்வில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. அந்த மாற்றங்கள், 2013 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற எங்களுக்கு எப்படி பொருந்தும்”.


படிக்க: ஒப்பந்த செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு!


மேலும், “இந்த பிரச்சினையை இதற்கு முந்தைய முதலமைச்சர் எடப்பாடி  பழனிச்சாமி கவனத்திற்கும் எடுத்துச் சென்றோம். ஆனால் அவர் எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அப்போதைய எதிர்கட்சி தலைவரும் இப்போதைய தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க ஸ்டாலின், அவருடைய தேர்தல் வாக்குறுதி 177-ல் 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் போட்டி தேர்வு தேவையற்றது என்றும் அவர்களுக்கான அரசுப்பணியை வழங்க திமுக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும் என்றும் கூறியிருந்தார்” என்று அந்த ஆசிரியர் கூறினார்.

”2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 149-இல் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வு 2013-இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அந்த அடிப்படையில் நாங்கள் அவருக்கு வாக்களித்தோம். ஆனால் ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுகுறித்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற பலவிதமான  போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு கிடைத்தபாடில்லை” என்றும் ஆசிரியர்கள் வேதனை தெரிவித்தனர்.


படிக்க: “சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?


இப்படி தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் என அனைவரும் தங்களுடைய தற்காலிக பணியை நிரந்தரம் செய்யக்கோரி பல வழிகளில் அன்றாடம் போராடி வருகின்றனர். அப்படி போராடும்பட்சத்தில் நூறு இருநூறு பேரை மட்டும் அவ்வப்போது பணிக்கமர்த்தி போராட்டத்தை தணிய வைக்கிறது அரசாங்கம்.

இவற்றுக்கெல்லாம் காரணம் ஒன்றுதான். பொது கட்டமைப்புகளை வலுப்படுத்தினால் தனியார்மய கொள்கையை அமல்படுத்தமுடியாது. இதை நன்கு புரிந்துகொண்ட அரசியல்வாதிகள் தங்களுடைய தேர்தல் வெற்றிக்காக ”பணிநிரந்தரம் செய்வது” போன்ற வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள்.


சித்திக்

ஒப்பந்த செவிலியர்களின் மகப்பேறு விடுப்பு உரிமையை பறித்துள்ளது திமுக அரசு!

0

ர்வதேச செவிலியர் தினம் என்று கூறப்படும் மே 12-அன்று, சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நிரந்தர செவிலியர்களின் சம்பளத்திற்கு இணையாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த செவிலியர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தற்காலிகமாக பணிக்கு அமர்த்தப்பட்ட செவிலியர்களின் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உரிமையை திமுக அரசு தற்போது பறித்துள்ளது. 2021-ஆம் ஆண்டு செவிலியர்களின் கடும் போராட்டத்தின் விளைவாகப் பெறப்பட்ட உரிமை அது.

கடந்தாண்டு நவம்பரில், தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் (NHM) ஒப்பந்த செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பின்போது ஊதியம் வழங்க முடியாது என்று சுகாதாரத்துறை சுற்றறிக்கை வெளியிட்டது. கடந்த மே 2 அன்று, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (எம்.ஆர்.பி) நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் உட்பட அனைத்து ஒப்பந்த செவிலியர்களுக்கும் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டவர்களுக்கும் இந்த சுற்றறிக்கை பொருந்தும் என்று தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்கம் அறிவித்துவிட்டது.

மேலும், எம்.ஆர்.பி-யால் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு வழங்கப்பட்ட மகப்பேறு விடுப்பு ஊதியத்தை மீட்டெடுக்குமாறு சுகாதாரத்துறை அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இப்போது நிரந்தர செவிலியர்கள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புக்கு தகுதியானவர்களாக உள்ளனர்.


படிக்க: பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!


2015-ஆம் ஆண்டுமுதல் சுமார் 13,000 செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஒப்பந்தப்படி, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

3,000-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர பணியாளர்கள் இல்லை. ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து எம்.ஆர்.பி செவிலியர்களை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரிய செவிலியர் ஊழியர் சங்கம் (TNMNEA) மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

“கொரோனா தொற்று உச்சக்கட்டத்தில் இருந்தபோது தங்கள் உயிரைப் பணயம் வைத்த செவிலியர்களை அரசாங்கம் உடனடியாக பணியில் நியமிக்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் ₹18,000 மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும். அரசு அனைத்து பொருட்களின் விலையையும் உயர்த்தி வருகிறது; ஆனால் சம்பளத்தை உயர்த்தி வழங்க மறுக்கிறது” என்று அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் (AIDWA) துணைத் தலைவர் வாசுகி அவர்கள் கூறினார்.

மேலும், “அரசின் கருணையால் தொழிலாளர் நலச் சட்டங்கள் இயற்றப்படவில்லை; கடினமாக போராடி பெறப்பட்டவை அவை. மகளிர் அமைப்புகளின் நீண்ட போராட்டத்துக்குப் பிறகே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு உரிமை வழங்கப்பட்டது. நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே மகப்பேறு விடுப்பு என்பது என்ன நியாயம்?” என்று வாசுகி கேள்வி எழுப்பினார்.


படிக்க: கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களை கைவிடும் தமிழக அரசு !


தினமும் 12 – 14 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்தாலும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்கப்படுவதில்லை. நோயாளிகளை கவனிப்பது மட்டுமல்லாமல், தரவு உள்ளீடு (Data entry) போன்ற நிர்வாக பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், மகப்பேறு காலத்திலும் கூட விடுப்பின்றி வேலை செய்யவேண்டிய கட்டாயத்தையும் தற்போது ஏற்படுத்தியிருக்கிறது மு.க. ஸ்டாலினின் திமுக அரசு.

திமுக தனது 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் 356-வது வாக்குறுதியாகக் கூறியிருந்த  ”அரசு மருத்துவமனைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படுவதோடு, ஒப்பந்த நியமன முறையில் தற்போது பணியாற்றும் மருத்துவர்களும், செவிலியர்களும் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள்” என்ற வாக்குறுதி என்னவாயிற்று என்று போராடிய செவிலியர்கள் கேள்வி எழுப்பினர்.

ஏற்கெனவே, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியுடன் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட பணி நிரந்தரம் செய்யப்படாத 2472 செவிலியர்களை தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து தமிழ்நாடு முழுவதும் தர்ணா, ஆர்ப்பாட்டம், முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், திமுக அரசோ பணி நிரந்தரம் செய்ய மறுத்துவிட்டது.

பாஜக-வை எதிர்க்கும் தேர்தல் கட்சிகள்கூட, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தியே தீரும் என்பதை செவிலியர்கள் மீதான திமுக அரசின் தாக்குதல் நமக்கு உணர்த்துகிறது.


பொம்மி

தி கேரளா ஸ்டோரி: முஸ்லீம் வெறுப்பிற்கான மற்றுமொரு கருவி!

மீபத்தில் “தி கேரளா ஸ்டோரி” என்ற முஸ்லீம் வெறுப்பு திரைப்படம் வெளியானது. இது கேரளா, தமிழ்நாடு உள்ளிட தென்னிந்திய மாநிலங்களில் பெரிதளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும், பாசிஸ்டுகளால் முஸ்லீம் வெறுப்புணர்வு ஊட்டப்பட்டிருக்கும் வட மாநிலங்களில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது.

கல்லூரிகளிலேயே படத்தை திரையிடுவதும், பெண்களுக்கு காவித் துப்பட்டா அணிவித்து படத்திற்கு அழைத்து சென்றதும் நடந்தது. சமீபத்தில் ராஜஸ்தான் திரையரங்குக்குள் நுழைந்த இந்துத்துவ பயங்கரவாதியான சாத்வி பராசி, முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்பு கருத்தைப் படம் பார்க்க வந்தவர்களிடம் பிரச்சாரம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்கில் பரவியது. அவரது வெறுப்பு பேச்சுக்கு படம் பார்க்க வந்திருப்போரும் ஆமோதித்து கரகோஷங்கள் எழுப்பிய சம்பவங்களும் நடந்தன.

இப்படத்தை வைத்து முஸ்லீம்களுக்கு எதிரான மத வெறுப்பையும் பிரிவினைவாதத்தையும் ஏற்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறது இந்துத்துவ கும்பல். இதற்கு சமீபத்தில் நடத்த இரண்டு சம்பவங்களே சான்று.

ஜம்மூவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஒன்றில் மாணவர் ஒருவர், அதே கல்லூரியில் பயிலும் இந்து மாணவர்களால் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார்.


படிக்க: என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’


அக்கல்லூரியில் “தி கேரளா ஸ்டோரி” படத்தை வைத்து முஸ்லீம்கள்மீது நடத்த திட்டமிட்டிருந்த தாக்குதல்களில், மாணவர் ஒருவர் படுகாயமடைந்தார். அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் இந்து மாணவர்கள் சிலர், கல்லூரியின் வாட்ஸ் அப் குழுக்களில், “தி கேரளா ஸ்டோரி” கட்டாயமாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்று பதிவிட்டனர். மேலும், இதனை கல்லூரி விடுதியில் பார்க்கவும் திட்டமிட்டுள்ளனர். முதலாமாண்டு படிக்கும் முஸ்லீம் மாணவர் ஒருவர், “கல்லூரி குழுக்களில் இதுபோன்ற செய்திகளை பகிர வேண்டாம்” என தெரிவித்திருக்கிறார்.

முஸ்லீம் மாணவரின் எதிர்ப்பு இந்து மாணவர்களை ஆத்திரமடையச் செய்திருக்கிறது. அம்மாணவனை தாக்க திட்டமிட்ட இந்து மாணவர்கள் வெளியில் இருந்து கூலிப்படையை அழைத்து வந்திருக்கின்றனர். கூலியாட்கள் கல்லூரிக்குள் நுழைவதை தடுத்து நிறுத்த முயன்ற இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் கடுமையான தாக்கப்பட்டனர். அதில் மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

“தி கேரளா ஸ்டோரி” படம் வெளியானபோது இப்படத்திற்கு எதிராக கல்லூரியில் போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த எதிர்ப்புணர்வுதான் இந்துத்துவா குண்டர்களின் ஆத்திரத்தை கிளப்பிவிட்டிருக்கிறது.

***

இதேபோல கடந்த மே 13-ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா எனும் பகுதியில், “தி கேரளா ஸ்டோரி” தொடர்பாக எழுந்த சர்ச்சையில் முஸ்லீம்களை இந்துமதவெறி குண்டர்கள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

தீவிர வலதுசாரியான கரண் சாஹூ என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் முகமது நபியை கேலி செய்து பதிவிட்ட பிறகுதான் முஸ்லீம்களுக்கு எதிரான இவ்வன்முறை வெறியாட்டங்கள் கட்டவீழ்த்துவிடப்பட்டிருக்கின்றன.

இதுகுறித்து முஸ்லீம் மக்கள் அளித்த புகாரை போலீஸ் ஏற்றுகொள்ள மறுத்துவிட்டதால், முஸ்லீம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் குறித்த செய்தியோடு, முஸ்லீம்கள் இந்துக்களின் கோவில்களை இடிப்பதாக வதந்திகளும் இந்துக்கள் அதிகமாக வாழும் அருகாமை பகுதிகளில் வேகமாக பரவியது. இதனையடுத்து அங்கு திரண்ட இந்துமதவெறி குண்டர்கள் முஸ்லீம்களை தாக்க ஆரம்பித்ததோடு, மசூதிக்குள் நுழைந்து அட்டூழியமும் செய்தனர்.


படிக்க: ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !


இந்துமதவெறி குண்டர்கள் நடத்திய தாக்குதலில் 40 வயதான விலாஸ் கெய்க்வாட் என்ற நபர் கொல்லப்பட்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் கலவரம் நடத்த இடத்தில் ஆட்டோ ஓட்டி சென்றபோது முஸ்லீம் என்று கருதி பாசிசக் கும்பலால் தாக்குதலுக்குள்ளானார். விலாஸ் கெய்க்வாட் தன்னை தாக்கவந்த கும்பலிடம், “தான் முஸ்லீம் அல்ல” என்று மீண்டும் மீண்டும் கூறிய பிறகும் அவர் கடுமையாக தாக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறினார்கள்.

அப்பகுதி கலவரக்காடானது. பல இருசக்கர வாகனங்கள், கடைகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. கலவரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்த 28 பேரில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள்தான். வன்முறையை நடத்திய இந்துத்துவ குண்டர்களை கைது செய்யாமல் தாக்கப்பட்ட முஸ்லீம்களை குற்றவாளிகளாக்குவது ஆளும் பாசிஸ்டுகளின் அடியாளாக போலீசுத் துறை இருப்பதையே காட்டுகிறது. வன்முறை நடந்ததையடுத்து அகோலா பகுதியில் 144 ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

“தி கேரளா ஸ்டோரி”யை வைத்து தென்னிந்தியாவில் மத பிரிவினையை ஏற்படுத்த திட்டமிட்டிருந்த பாசிசக் கும்பல் மண்ணைக் கவ்வியிருக்கும் அதேவேளையில், வட இந்தியாவில் இதன் தாக்கமும் இதை அடிப்படையாக வைத்து முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களும் அதிகரித்து வருகின்றன. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜீ அரசு இத்திரைப்படத்திற்கு தடை விதித்ததைப்போல நாடு முழுவதும் இப்படத்தைத் தடை செய்ய முற்போக்கு ஜனநாயக சக்திகள் குரலெழுப்புவது அவசியம்!


ஸ்வாதி

ஹூண்டாயின் ₹20,000 கோடி முதலீடு யாருக்கானது?

தென்கொரிய  நிறுவனமான ஹூண்டாயின்  ‌ இந்திய ‌கிளையான “ஹூண்டாய்  மோட்டார் இந்தியா” சார்பாக ₹20,000 கோடி  முதலீடு செய்ய இருப்பதாக  அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், மின்னூர்தி உற்பத்திக்கான புதிய தொழிற்சாலை மற்றும் ‌‌தமிழ்நாடு அளவில்  100 இடங்களில் சார்ஜர் பாயிண்டுகள் ஆகியவற்றை‌  நிறுவ உள்ளதாகவும் ஹூண்டாய்  மோட்டார் கூறியுள்ளது.

ஹூண்டாயின் இப்புதிய முதலீடு குறித்து, “மாற்று எரிபொருள் மூலம் ‌சுற்றுசூழலை  பாதுகாக்கும் வகையில் ஹூண்டாயின் முதலீடு அமைந்துள்ளது” என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.

அந்நிறுவனத்தை பாராட்டியுள்ள  முதல்வர் ஸ்டாலின்,  “தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என்ற நமது இலட்சிய இலக்கினை அடைவதற்கு இந்த முதலீடு ஒரு பாய்ச்சலாக அமைந்துள்ளது. நாட்டின் ‌ ஆட்டோ மொபைல் ‌துறையில்  தமிழ்நாட்டின் பங்கு 34 சதவீதம்.  ஹூண்டாயின் வளர்ச்சியோடு தமிழ்நாடும் வளர்கிறது. தொழிற்துறை முதலீட்டை ஈர்ப்பதற்கு அதற்குரிய வசதிகளை  தமிழ்நாடு அரசு  செய்து கொடுக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த  ஒப்பந்தம் மூலம் பல ஆயிரக்கணக்கான பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு பெருகும் என  அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையில், மேற்கண்ட  ஒப்பந்தங்கள் ‌ மூலம் வேலைவாய்ப்பு பெருகும், மாநிலத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியானாக‌ வளரும்  என்பதெல்லாம்  கடைந்தெடுத்த  பித்தலாட்டம். புதிய  ஆலைக்கான  இருபதாயிரம் கோடி முதலீடு  எங்கிருந்து வந்தது? எப்படி  வந்தது? ‌என்பதை  புரிந்து  கொள்வதின்  மூலம் சொல்லப்படும் வேலைவாய்ப்பு என்பது மோசடி  என்பதை  யாவரும்  அறியலாம்.


படிக்க: தென்கொரியா ஹூண்டாய் தொழிலாளர் போராட்டம் !


பூந்தமல்லி அடுத்த பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில்  திருபெருமந்தூர் அருகில் உள்ள ‌ இருங்காட்டுகோட்டை சிப்காட்டில்  இயங்கிவரும்  ஹூண்டாய் கார் தொழிற்சாலை  200  ஏக்கர்  பரப்பளவில் பிரம்மாண்டமாய்  அமைந்துள்ளது. இந்த ஆலை கடந்த  1998-ஆம் ஆண்டு ₹4000 ‌கோடி  முதலீட்டில் தொடங்கப்பட்டது.  தொடங்கும்போது 1 பிளானட்டாக இருந்த ஆலை இன்றோ இரண்டு  பிளானட்டுகளாக விரிவடைந்துதிருக்கிறது. இன்றைக்கு ஆண்டொன்றுக்கு, 7 இலட்சம் காருக்கு மேல் உற்பத்தி செய்யப்படுவதுடன்,  கார் விற்பனையிலும்  ஏற்றுமதியிலும் இந்தியாவில் இரண்டாம் நிலையில் உள்ள  பெரும்  நிறுவனமாக ஹூண்டாய் திகழ்கிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம் என ‌கேட்டால், அரசின் வரிவிலக்கு, நவீன தொழில்நுட்பம், அதிகாரிகளின் திட்டமிடல், விளம்பர உத்தி மற்றும்  இன்னும்  இதர காரணிகள் என பட்டியல் ‌ இடுகின்றன முதலாளித்துவ பத்திரிகைகள். ஆனால் இவையெல்லாம்  உண்மையில் இரண்டாம்பட்ச காரணிகள் தான்.  உண்மையான  காரணம் , தொழிலாளி வர்க்கத்தின் “உழைப்பு ‌ சக்தி”யே ஆகும்.

மார்க்சின்  வார்த்தைகளில்  சொல்வதென்றால், “ஒரு  பொருளின்  மதிப்பு அதாவது பரிவர்த்தனை மதிப்பு, அதற்கு  செலுத்தப்பட்ட உழைப்பு சக்தி,  கச்சா பொருட்கள், இயந்திர தேய்மானம், இட வாடகை இன்னும் இதரவற்றை  கணக்கிட்டு மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது” என்கிறார். அதன்படி  தனது  உற்பத்திக்கு, ஆலைக்குள் வரும்  அனைத்து  பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கும் உரிய விலை கொடுத்து வாங்கும் முதலாளித்துவம், ஒன்றுக்கு மட்டும்  உரிய விலை கொடுப்பதில்லை அல்லது விலையை  தானே தீர்மானிக்கிறது. அதுதான்  தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பு சக்தி.

இன்னும் சற்று எளிமையாக பார்ப்போம். ஒரே வேலைக்கு டிரெய்னி, அப்ரெண்டீஸ், ஒப்பந்த தொழிலாளி, நிரந்தர தொழிலாளி என  நான்கு விதமான விலைகளில் உழைப்பு சக்தியை  வாங்கும்  முதலாளித்துவம், எதை அடிப்படையாகக் கொண்டு விலையை தீர்மானிக்கிறது? இதை ஒரு கணக்கின் மூலம் பார்க்கலாம்.  நிரந்தர தொழிலாளி என்போர் மிக மிக சொர்ப்பம். இவர்களை தவிர்த்து மேற்கண்ட  மூன்று பிரிவினர் தான் ஆலை இயங்குவதற்கு அச்சாணி என்றால் மிகையாகாது. இத்தொழிலாளர்களுக்கு மாதம் ₹20,000 கூலி என வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் நாளொன்றுக்கு ₹666, ஒரு மணி நேரத்திற்கு ₹84 ஆகும்.

இப்போது  ஹூண்டாயின் உற்பத்தியோடு ஒப்பிடுவோம். ஹூண்டாய் ஆலையில் 8 மணி நேர வேலைக்கு  400  கார்களை அசெம்பிள் ஆகுகிறது.  தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் இயந்திர திறனை வைத்து பார்த்தால், நமது தொழிலாளி நாளொன்றுக்கு பெறும் ஊதியமான ₹666  பண மதிப்புக்கு   இரண்டு  மணி நேர உழைப்பு சக்தியே போதுமானது. மீதமுள்ள  ஆறு மணி நேர உழைப்பை  முற்றிலும் இலவசமாக  பெற்றுக் கொண்டு  உழைப்பு சக்தியை உரிய விலை கொடுத்து வாங்கியதாக  கணக்கிட்டு தனது பொருளை விற்பனை  செய்கிறது முதலாளித்துவம்.


படிக்க: வாழ்க்கை : மாருதி, ஹூண்டாயைச் சுமக்கும் மனிதர்கள் !


ஆக, உயிருள்ள மனிதனின் உழைப்பு  சக்தி  சரக்காக, பண்டமாக,  மாறியுள்ளதை நாம்  முதலில்  புரிந்து கொள்ள வேண்டும்.  அன்றாடம்  ஆலை வாயிலில்  ஒப்பந்ததாரர்கள்  மற்றும் அதிகாரிகள்  “இன்றைக்கு மேன் பவர் (man power)  சரியாக  வந்துவிட்டதா?” என கேட்பார்கள். இதுதான், உயிருள்ள உழைப்பை  செலுத்தும்  மனிதன்  ஏதோ செங்கல்  ஜல்லியைப்‌ போல சடப்பொருளாக  மாற்றப்பட்டுள்ளதை இதன் மூலம் புரிந்துகொள்ள முடியும். இதற்காக ஒட்டுமொத்த சமூகத்தையே தனக்கு  ஏற்றவாறு மாற்ற முனைகிறது  முதலாளித்துவ வர்க்கம்.

அதன்படி, நமது நாட்டில் கடந்த கால் நூற்றாண்டுக்கும்  மேலாக நடைமுறையில் இருக்கும் உலகமயமாக்கல் கொள்கையானது நாட்டின் முதுகெலும்பு என சொல்லப்படும்  விவசாயத்தையும் சிறு தொழில்  – சிறு‌ வணிகத்தையும்  அழித்து  பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம்  மற்றும் உரிமைகளை  பறித்து  பிழைப்புக்காக  நகர்புறங்களை நோக்கி – குறிப்பாக சொல்வதென்றால் தொழிற்பேட்டைகளை நோக்கி விரட்டுகிறது.  இன்னும் எளிமையாக சொல்வதென்றால், மக்கள் தங்கள் சொந்த காலில் நிற்கும் வேலையையும், தொழிலையும் அழித்துவிட்டு கூலி அடிமையாக மாற்றுகிறது.

மேலும், இக்கொள்கையின் மூலம் எப்போதும் சந்தையில் உழைப்பு  சக்தி மலிவாக இருக்கும்படி அரசு பார்த்து கொள்கிறது. இதனால், மாத ஊதியம்‌  ₹15,000 அல்லது ₹20,000  கிடைப்பதே  பெரிய  விசயம் என்ற எண்ணத்தை  ஏற்படுத்தி  தொழிலாளியின்  மீதான  சுரண்டலை சுதந்திரமாக நடத்துகிறது  முதலாளித்துவம்.


படிக்க: சென்னை ஹூண்டாய் ஆலையில் போராட்டம்!


நாம் முன்னரே விளக்கிய ஹூண்டாயின் இருபதாயிரம் கோடி முதலீட்டின் மோசடியை இப்போது  குறிப்பாக  ஆராய்வோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள  தொழிற்பயிற்சி  கல்லூரிகள் மற்றும்  பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவர்கள்   ஹூண்டாயில்  ஒரு வருடம்  அப்ரெண்டீஸ், இன்னொரு வருடம் டிரெய்னி பயிற்சிகளை முடித்த பிறகு வெளியேறிவிட‌ வேண்டும். அடுத்த வருடம் புது அணி (batch) மாணவர்கள் இதை செய்வர். இவ்வாறு, முடிவே இல்லாமல் இளம்தொழிலாளிகளுக்கு  வேலை  கொடுப்பதின் பேரில்  அவர்களை ஒட்ட சுரண்டுகிறது ஆலை நிர்வாகம்.

மறுபுறம்  கிராமப்புறங்களில் இருந்து  விவசாயத்தால் வருமானம் இழந்தவர்கள் மற்றும் பள்ளி கல்வியில்  இடை நின்றவர்கள், நெசவு தொழில் நலிவுற்று போனதால் தொழிலில் இருந்து  விரட்டப்பட்டவர்கள் என பல்லாயிர கணக்கானோர் ஒப்பந்த தொழிலாளியாக   அதாவது  கூலி அடிமையாக மாற்றப்படுகின்றனர். இவ்வாறு மனித தன்மையற்ற,  கொடூரமான முறையில் தொழிலாளி வர்க்கத்தின் மீதான உழைப்பு சுரண்டலின் விளைவே முன்பு சொன்ன இருபதாயிரம் கோடி முதலீட்டுக்கான பணம். இது ஹூண்டாய் நிறுவனத்திற்கு மட்டுமல்ல; ரெனால்ட் நிசான், ராயல் என்ஃபீல்டு, யமஹா ஆகிய நிறுவனங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.

இப்படிப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் நாசகர நிறுவனத்தை தான் சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கிறது தி.மு.க அரசு. ஆக, சமூக நீதி பேசும் திராவிட மாடல் என்றாலும் சரி காவி சித்தாந்தத்தை உயர்த்தி பிடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க பாசிஸ்டுகள் என்றாலும் சரி மறுகாலனியாக்க கட்டமைப்புக்குள் உள்ள அனைத்து கட்சிகளுமே கார்ப்பரேட்டுகளின் ‌கைக்கூலிகளே!

எனவே பா.ஜ.க-விற்கு மாற்று தி.மு.க என்ற மயக்கத்தில் இல்லாமல் கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு எதிராகப் போராட வேண்டும்.


ஆ.கா.சிவா

மரக்காணம் – விழுப்புரம் கள்ளச்சாரய மரணம் | தோழர் மருது வீடியோ

ந்த அரசு கள்ளச்சாரயத்தை பாதுகாக்கிறதா? அரசு அதிகாரிகள் இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவில்லை என்றால் மாவட்ட கண்காணிப்பாளர் உட்பட பல போலீஸ்காரர்களை ஏன் பணியிடை மாற்றம் இடைநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த அரசு செய்த கொலையை மறைப்பதற்காக ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறதா?

இன்று நாங்கள் டாஸ்மாக்கை எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம்; ஆனால் மற்ற கட்சி இயக்கங்கள் தி.மு.க அரசை எதிர்த்தால் பி.ஜே.பி வந்துவிடும் என்று கூறிக்கொண்டு ஒன்றிணைய தயங்குகிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நாங்கள்  தி.மு.க அரசின்  பல்வேறு தவறுகளை கண்டித்துப் போராடி வருகிறோம். அரசு செய்யும் தவறை தவறு எனவும் சரியை சரி எனவும் பேசுவதுதான் கம்யூனிஸ்டுகளின் வேலை; அதை துறந்து ஓடிய கோவன் ஆளும் வர்க்க தி.மு.க அரசின் அனுதாபி என்பதை தவிர வேறுயாராக இருக்க முடியும்.

மேலும்..

காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை: தேசிய கல்விக் கொள்கை 2020-இன் மாறுபட்ட வடிவமே!

பா.ஜ.க அரசால் 2020-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட “புதிய கல்விக் கொள்கை”க்கு எதிராக தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான அம்சங்களை கணக்கில் கொண்டு மாநில கல்விக் கொள்கை ஒன்றை வகுக்கப் போவதாக தி.மு.க அரசு கூறி வந்தது. அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஜவஹர் நேசன். இது மாநிலம் முழுவதும் பேசுபொருளாகி உள்ளது.

2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்த போது, இந்த குழுவின் உருவாக்கம் பற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியான சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் தில்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

குழு அமைக்கப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த குழு “தமிழ்நாடு மாநிலத்தின் எதிர்கால கல்விக் கொள்கையை வகுப்பதில் பெரும் பங்காற்றும்” என்று பலவாறாக பேசப்பட்டது. ஆனால், இந்த குழு ஜனநாயகமற்ற முறையில் செயல்படுவதாக கூறித்தான் ஜவஹர் நேசன் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த கடிதத்தில், “ரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும் செயல்படும் தலைமையைக் கொண்டதாலும், சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அதிகார எல்லைமீறல்களாலும், முறையற்ற தலையீடுகளாலும், உயர்நிலைக் கல்விக் குழு சரியாகச் செயல்பட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தேசியக் கொள்கை 2020-இன் அடியைப்பின்பற்றி மாநிலக் கல்விக்கொள்கையை வடிவமைக்கும் திசையில் குழு முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.


படிக்க: தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !


இதற்கிடையில், ”தலைமை செயலகத்திலேயே ஒரு மீட்டிங் நடத்தி தேசிய கல்வி கொள்கையில் உள்ள அம்சங்களை இதில் இணைத்து கொள்கை உருவாக்குங்கள்” என அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி நிர்பந்தித்ததாகவும்,  இதை கேள்விகேட்ட ஜவஹர் நேசனை முதல்வரின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் ஒருமையில் பேசியும் குழுவை கலைத்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதை அறம் ஆன்லைன் அம்பலப்படுத்தி செய்தி எழுதியுள்ளது.

இந்த அளவு ஒன்றிய அரசுக்கும் அதன் கொள்கைகளுக்கும் விசுவாசத்தை காட்டும் அதிகாரிகளின் கை குழுவில் ஓங்கியுள்ளது. ஆனால் இந்த குழுவும் கூட தி.மு.க அரசு செய்யும் கண்துடைப்பு வேலைதான் என்பதையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

இதிலிருந்து  காவிக் கொள்கையில் பா.ஜ.க-வும் தி.மு.க-வும் வேறுபட்டிருந்தாலும் கார்ப்பரேட் கொள்கையில் பா.ஜ.க-வும் தி.மு.க-வும் ஒன்றுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்தில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 140 கோடி மக்கள் வாழ்கின்றனர். இதில் கணிசமான எண்ணிக்கையில் பள்ளிக் கல்வி, உயிர் கல்வி, தொழில்க் கல்வி என பயின்று வருகின்றனர். இந்தியாவின் 2022-ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்விக்கான சந்தை மதிப்பு மட்டுமே 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். வருங்காலத்திலும் இந்த கல்வியின் சந்தை மதிப்பு மிக அதிகமாகும். இதனைக் கணக்கில் கொண்டு தான், கார்ப்பரேட்கள் கல்விச் சந்தையை கைப்பற்ற துடிக்கின்றன.

இந்த கார்ப்பரேட்களின் ஆதரவை பெற்று கட்சியை வளர்த்து அதன் மூலமாக தங்களது வயிறு வளர்க்கத்தான் கல்வியை தனியார் கார்ப்பரேட்களின் கைகளில் ஒப்படைக்கும் கொள்கையை அனைத்து ஓட்டுக் கட்சிகளும் செய்து வருகின்றன. ஏனெனில் இந்த அத்தனை ஓட்டுச் கட்சிகளும் புதிய தாராளவாத கொள்கையை ஏற்றுக்கொண்டவைதான். எந்த கட்சிகளிடமும் புதிய தாராளவாத கொள்கைக்கு மாற்று ஏதுமில்லை. அதனால் அந்த கட்சிகளால் கார்ப்பரேட்களின் நிதி மூலதன ஆதிக்கத்தை எதிர்க்க முடியாது. அதனால் தான்  இந்த ஓட்டு அரசியல் அமைப்புக்குள் மக்களின் எந்த அடிப்படை உரிமையையும் பெறமுடியாது என்று சொல்கிறோம்.

ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய கல்விக் கொள்கையை வெவ்வேறு பெயர்களை வைத்து அமல்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இதை இந்த சமூகத்தில் ஓட்டுப் கட்சிகளுக்கு பரிவாக பேசும் தாராளவாதிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.


படிக்க: புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !


“ஒருபக்கம், மாநிலத்திற்காக தனித்துவமான கல்வி கொள்கையை உருவாக்க குழுவை அமைத்துவிட்டு, மற்றொரு பக்கம், யு.ஜி.சி, என்.சி.இ.ஆர்.டி ஆகியவை கொடுக்கும் பரிந்துரைகளை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 2020-ஆம் ஆண்டில் தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது 3 ஆண்டுகள் முடியப்போகிற நிலையில், புதிய கல்விக் கொள்கையின் பல கூறுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதை அரசும், குழுவும் கருத்தில் எடுத்துகொண்டனவா என்று தெரியவில்லை,” என்கிறார் மாநிலக் கல்விக்கான பொது மேடையைச் சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு.

ஆனால், இப்படி புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை நடைமுறை படுத்துவது அதிகாரிகள் தானே தவிர தி.மு.க அரசு இல்லை என்ற வகையில் வாய் கூசாமல் பேசுகிறார் “மதிப்பிற்குரிய தாராளவாதியான” பிரின்ஸ் கஜேந்திரபாபு.

“நான் முதல்வன் திட்டம் ஆகட்டும், இல்லம் தேடி கல்வி ஆகட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய கல்விக் கொள்கை என்பது தமிழ்நாட்டில் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால், இல்லை என்று சொல்லி அதிகாரிகள் அமைச்சரையும் அமைச்சரவையையும் நம்ப வைக்கின்றனர். எனவே, உடனடியாக அமைச்சரவை இது குறித்து விவாதிக்க வேண்டும். அப்போதுதான், அமைச்சர்களுக்கு தெரிந்து இது நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவரும்” என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

அதாவது அமைச்சருக்கும் அமைச்சரவைக்கும் தெரியாமலே அதிகாரிகள் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறை படுத்திவருகிறார்கள் என்றும் இதனை தனி ஆணையம் அமைத்து விசாரணை செய்தால் தான் உண்மை வெளிவரும் என்று பேசியுள்ளார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு தி.மு.க அரசு செய்யும் அத்தனை வேலைகளுக்கும் இணையத்தில் முட்டுக்கொடுக்கும்  இணைய உ.பி-கள் கூட தி.மு.க ஆட்சிக்கு இத்தனை விசுவாசமாக நடந்துகொள்ள மாட்டார்கள்.

விதவிதமான பெயர்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதும்; அதனை மறைக்க மாநிலத்திற்காக தனித்துவமான கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைப்பதும்; அதை உயர்மட்ட அதிகாரிகளின் கைகளில் ஒப்படைப்பதும் எல்லாம் கல்வியைத் தனியார்மயப்படுத்தும் தி.மு.க-வின் கார்ப்பரேட் விசுவாசமே. அதே நேரத்தில் மக்களிடம் தனது முகமூடி அம்பலப்பட்டுவிடாமல் இருக்க அது செய்யும் ஜோடிப்பு வேலைகள் தான் இது என்பதும் நமக்குத் தெரியாமலில்லை.


படிக்க: இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!


தமிழ்நாட்டில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் அவை அமைக்கும் குழுக்களில்  ஆதிக்கம் செலுத்துபவராக இருக்கும் பேராசிரியர் இராமனுஜத்தை இந்த குழுவில் நுழைத்த போதே தி.மு.க-வின் வேடம் கலைந்து விட்டது. இந்த பேராசிரியர் இராமனுஜம் தான், தற்போது தி.மு.க அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வரும் தேசிய கல்வி கொள்கையின் ஒரு அங்கமான எண்ணும், எழுத்தும் திட்டத்தின் மூளையாக செயல்படுபவர். இதிலிருந்து கார்ப்பரேட்களுக்கு கல்வியை படையல் வைக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதையே தனது ஆட்சியின்  நலனுக்கு உகந்தது என்று ‘சரியான முடிவில்’ தி.மு.க அரசியல் செய்கிறது. ஆனால் இந்த so called அப்பாவி தாராளவாதிகள் தான் தி.மு.க ஆட்சியாளர்களுக்கு எதுவும் தெரியாது என்று முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி முட்டுக் கொடுக்கும் தாராளவாதிகளுக்கு தெரிவான‌ நோக்கமிருக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இவை அனைத்தையும் கடந்து நாம் கவனிக்க வேண்டியது, “இந்த உயர்நிலைக் குழு உருவாக்கும் மாநிலக் கல்விக் கொள்கை, பெயரில் மட்டும் மாற்றம் கொண்ட தனியார்மய, வணிகமய, கார்ப்பரேட், சந்தை, சனாதன சக்திகளின் நலன்களைக் கொண்டிருக்கின்ற தேசிய கல்விக் கொள்கை 2020-இன் (புதிய கல்விக் கொள்கை) மற்றொரு வடிவமாகவே இருக்கும்” என்று ஜவஹர் நேசன் வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வார்த்தைகளைத்தான். இவை கார்ப்பரேட்களுக்கு கல்விச் சந்தையை திறந்துவிடுவதையே நோக்கமாக வைத்து இந்த மத்திய மாநில அரசுகளும் அதிகார வர்க்கமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற அபாயமான உண்மையை சொல்வதாக உள்ளன.


ராஜன்