Monday, July 28, 2025
முகப்பு பதிவு பக்கம் 211

தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி

PP Letter head

10.05.2021

ம.க.இ.க-வின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினரும், மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா-வின் தந்தையுமான தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது  !

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும் மக்கள் அதிகாரம்  கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா அவர்களின் தந்தையுமான  தோழர் சம்புகன் இன்று காலை உடல்நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் மரணமடைந்தார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தொடக்க காலம்  முதல் இறப்பு வரை அந்த அமைப்பிலேயே இருந்து அதன் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தவர்.

அவர் தங்கியிருக்கக் கூடிய சூலூர் ஆதிக்க சாதிவெறியர்களின் மதவெறியர்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும். அப்பகுதியில் ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரங்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடியவர்.

கோவை குண்டுவெடிப்பின் போது போலீசால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளானவர். மக்கள் பிரச்சினைகளுக்காக ஓயாது போராடி பலமுறை சிறை சென்றவர்.

ஒண்டிப்புதூர் பகுதியில் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டு அவர்களின் தலைவராக விளங்கியவர்.

தொழிற்சங்கப் பணியில் தொழிலாளர்களுக்காக சமரசமின்றிப் போராடியதால் முதலாளிகளால் பலமுறை தாக்குதலுக்கு ஆளானவர்.

மக்கள் அதிகாரம் நடத்திய முதல் மாநாடான மூடு டாஸ்மாக்கை முதல் எல்லா இயக்கங்களிலும் மாணவர்கள், இளைஞர்களோடு ஒருங்கிணைந்து அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு இயக்க வேலை செய்தவர்.

மறைந்த தோழர் மணிவண்ணனும், தோழர் சம்பூகனும் நக்சல்பாரி இயக்கத்தின் அடையாளமாக கோவையிலும் ஒளிர்ந்தார்கள்.

இரண்டாயிரத்தின் தொடக்கத்தில் பார்ப்பன பாசிச சக்திகள் மேலோங்கி வந்த சூழலில் கோவையில்  மறுகாலனியாக்க எதிர்ப்பு மாநாட்டினை நடத்திய தோழர்களில் அவரும் ஒருவர்.

தாராளவாதம், கலைப்புவாதம் ஆகியவற்றுக்கு எதிராக இறுதிவரைப் போராடி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் புதிய மாநில ஒருங்கிணைப்பு குழு உருவாகப் பாடுபட்டவர்.

கடந்த வருடம் ஒரு விபத்தில் நடக்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட போதும் அமைப்பு வேலைகளை திறம்பட கொண்டு சென்றவர்.

தன்னுடைய மகளை அரசியல் ரீதியாக வளர்த்தும் சாதிமறுப்புத் திருமணம் செய்துவைத்தும் ஆண் பெண் வேறுபாடின்றி தவறைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற உணர்வோடு வளர்த்தவர்.

இறுதியாக, கடந்த ஏப்ரல் 24 லெனின் பிறந்த நாளை ஒட்டி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட தோழர் சம்பூகன் இன்று உயிரிழந்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி வர்க்க விடுதலைக்காக தன் குடும்பத்தையும் தன் வாழ்வையும் அர்ப்பணித்த தோழர் சம்பூகன் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது  !

கோவை மண்டல மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா அவர்களுக்கும் தோழர் சம்பூகனுடன் நீண்ட காலம் இணைந்து பணியாற்றிய அனைத்து தோழர்களுக்கும் மக்கள் அதிகாரம் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.


தோழமையுடன்,
தலைமைக்குழு, 
மக்கள் அதிகாரம் 
தமிழ்நாடு – புதுவை
9962366321

அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்தது, காத்துக் கிடக்கிறது நமது போராட்டக் களம் !

0

அவர்களது தேர்தல் நாடகம் ஓய்ந்துவிட்டது !
நமது போராட்டக் களம் காத்துக் கிடக்கிறது !

ந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், தமிழகம், மேற்கு வங்கம், கேரளா ஆகியவற்றின் முடிவுகள், அதிலும் குறிப்பாக, மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது. சில ஜனநாயக – மதசார்பற்ற சக்திகளும், டெல்லியில் போராடும் விவசாய சங்கங்களும், சில ஆங்கில ஊடகத்தினரும் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்.

சில ஆங்கில ஊடகங்கள், “தீதி”யை (மம்தா பேனர்ஜியை வங்க மொழியில் அக்கா என்று அழைப்பார்கள்) புகழ்வதோடு, “மம்தாவிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” என்றும், “சரியான தேர்தல் வியூகங்களை வகுத்து செயல்பட்டால் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையைத் தருவதாகவும்” கூறுகின்றன.

படிக்க :
♦ தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு? || மக்கள் அதிகாரம்

♦ நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

இதேபோல, “தி வயர்” இணைய தளத்தில் வந்த ஒரு கட்டுரை, “தமிழகத்தில் இனி எந்தக் காலத்திலும் இந்துத்துவா வெற்றி பெற முடியாது” என்று கூறுகிறது. “இனமானப் போரில் திராவிடம் வென்றது!”, “மு.க.ஸ்டாலின் உருவாக்கிய வரலாற்று வெற்றி” என்று தி.மு.க. ஆதரவு பத்திரிகைகள் குதூகலிக்கின்றன.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தோல்வியடைந்திருந்தாலும், கேரளாவில் நிபா வைரஸ் தாக்கியது முதல் தற்போது கொரோனா வைரஸ் தாக்கியது வரை மக்களின் நல்வாழ்வில் கேரளத்தின் பினாரயி விஜயன் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளே அவரை மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றி பெற வைத்துள்ளது என்று பலரும் கூறி மகிழ்கின்றனர்.

அஸ்ஸாமிலும் புதுச்சேரியிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தாலும், மற்ற மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல் வெற்றிகள் பா.ஜ.க. எதிர்ப்பாளர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.

இந்த அரசுக் கட்டமைப்பிற்குள் தீர்வைத் தேடுபவர்களும், சுவாசிப்பதற்கான அவசாகம் (breathing space) வேண்டும் என்று சொன்னவர்களும் இந்த தேர்தல் முடிவுகளால் பூரித்துப் போயுள்ளார்கள்.

ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள வகையில் பலவாறாக வெளியாகும் கருத்துகள் சரிதானா? இத்தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வுகள்தானா? இந்த தேர்தல் முடிவுகள் உண்மையில் எதை உணர்த்துகின்றன? பா.ஜ.க.வை தேர்தல் மூலம் வீழ்த்திவிட முடியுமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

பாசிச ஜெயாவின் மறுவுருவம்தான் மம்தா !

தமிழகத்தில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. கேரளத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் இடது முன்னணி கூடுதல் இடங்களைப் பெற்றுள்ளது. மேற்கு வங்கத்தில் “நிச்சயம் 200” என சவடாலடித்த மோடி – அமித்ஷா கும்பலின் கனவு பலிக்கவில்லை என்பதோடு, திரிணாமுல் காங்கிரசு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த மூன்று ஆண்டுகளில் பா.ஜ.க. ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. மோடி – அமித்ஷா கும்பல் தேர்தல் தொடங்குவதற்கு முன்பிருந்தே மேற்கு வங்கத்தைக் குறிவைத்துப் பிரச்சாரம் செய்தது. தேர்தல் ஆணையத்தையும் கைக்குள் போட்டுக் கொண்டு 7 கட்டமாக தேர்தல் அட்டவணையைக் கொண்டு வந்தது.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை நன்கு தெரிந்திருந்தும், மக்களைப் பற்றி சிறிதும் கவலையின்றி தேர்தல் வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு கடைசி வரை தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது பாசிச பா.ஜ.க.

தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே, திரிணாமுல் காங்கிரசினரை விலைக்கு வாங்கியது, அமலாக்கத் துறையை ஏவியது உள்ளிட்ட அனைத்து அரசியல் சதிராட்டங்களிலும் பட்டவர்த்தனமாக ஈடுபட்டது. ஆள்பலம், பண பலம், அதிகார பலம் – என அனைத்தையும் பயன்படுத்தி திரிணாமுல் காங்கிரசுக்கு நெருக்கடிகளைக் கொடுத்தது.

“வளர்ச்சி, மதவெறி” என்ற தனது இரட்டை சீட்டை மாற்றி மாற்றிப் போட்டு மோடி மஸ்தான் வேலையைக் காட்டி வரும் பா.ஜ.க, இந்த தேர்தலில் மற்ற மாநிலங்களில் ஊழல் பிரச்சினையை முன்னிறுத்தியது. மேற்கு வங்கத்தில் இந்து மதவெறியைக் கிளறி ஆட்சியைப் பிடிக்கும் வேலையைச் செய்தது. சி.ஏ.ஏ பிரச்சினையை கிளப்பி, அதன் மூலம் முசுலீம் எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டது.

இத்தனை நடவடிக்கைகளையும் மீறி திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றிருப்பதால், ஓட்டுச் சீட்டு அரசியல் எல்லைக்குள் நின்று சிந்திப்பவர்களுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. மாயாவதி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகியோரெல்லாம் பா.ஜ.க.வை  வீழ்த்துவதற்கு முயற்சித்தும் அவர்களால் முடியவில்லை; ஆனால், மம்தா சாதித்துக் காட்டியுள்ளார் என்று ஊடகங்கள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை.

சி.ஏ.ஏ விசயத்தில் மோடி அரசுக்கு மம்தா எதிர்ப்பு தெரிவித்தார்; மோடி அரசின் பல்வேறு திட்டங்களுக்கும்,  ஜி.எஸ்.டி போன்ற மாநில உரிமைகள் பறிக்கும் நடவடிக்கைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்தார் என்று ஊடகங்களால் சொல்லப்படும் காரணங்களைவிட முக்கியமான ஒரு அம்சம் இருக்கிறது.

மம்தா அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக சாரதா சீட்டுக் கம்பெனி ஊழலை விசாரிக்க மோடி அரசால் சி.பி.ஐ ஏவிவிடப்பட்டபோது, மாநில அரசு விவகாரத்தில் நுழைய அனுமதிக்க முடியாது என்று அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்துவது; தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க. கும்பல் தன்னைத் தாக்கியதால் கால் உடைந்து விட்டது என நாடகமாடி அனுதாபம் தேடிக் கொள்வது – என எதற்கும் துணிந்து களம் காணும் துணிச்சல் ஜெயலலிதாவிற்குப் பிறகு மம்தாவிடம்தான் வெளிப்படுகிறது. ஜெயலலிதாவைப் போலவே, பேறுகால உதவித் தொகை, பெண்களுக்கு கல்வி உதவித் தொகை போன்ற சில நலத்திட்டங்களை அடித்தட்டு  உழைக்கும்  மக்களுக்கு வழங்குவதன் மூலம் சமூக ஆதரவையும் அவர் தேடிக் கொண்டுள்ளார்.

அ.தி.மு.க-விற்கு இருக்கும் அதே வர்க்க அடித்தளம்தான் மம்தாவிற்கான வர்க்க அடித்தளமாகும். தனியார்மயம் – தாராளமயத்தின் விளைவாக உருவான திடீர் அரசியல் பணக்கார ரௌடிகளுக்குப் பழைய பாணியில் இருக்கும் காங்கிரசைவிட பட்டவர்த்தனமான ஒரு கொள்ளைக் கும்பலின் ஆட்சி முறை தேவைப்படுகிறது. தமிழகத்தில் அப்படி ஒரு தேவையை அ.தி.மு.க ஈடு செய்து கொடுத்தது என்றால், மேற்கு வங்கத்தில் அதனை மம்தாவின் திரிணாமுல் காங்கிரசு ஈடு செய்து கொடுத்தது. 34 ஆண்டுகால போலி கம்யூனிஸ்ட் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பைப் பயன்படுத்தி, போலி கம்யூனிஸ்டுகளை விட பலமடங்கு தீவிரமாகக் குண்டாயிசத்தை வைத்துக் கட்சியை நடத்தி, தடாலடியாக ஆட்சியதிகாரத்தைப் பிடித்ததுதான் மம்தாவின் வரலாறு.

ஆளும் வர்க்க அரசியலையே ஒரு தனிநபரின் செல்வாக்கின் கீழ் அதிரடி சர்வாதிகார பாணியில் மேற்கொள்ளப்படும் ஆட்சிக்கு என்ன கதி நேர்ந்தது என்பதை ஜெயலலிதாவிற்கு நேர்ந்த கதியுடனும், பா.ஜ.க-வின் எடுபிடியாக அ.தி.மு.க மாறியுள்ள இன்றைய அதன் நிலைமையுடனும் ஒப்பிட்டால் புரிந்து கொள்ள முடியும். ஆளும் வர்க்க அரசியலில் தனக்கு ஒரு இடத்தைத் தக்க வைக்க ஜெயலலிதாவிற்கு பார்ப்பன சாதி பின்னணியாவது உதவியது; ஆனால், மம்தாவிற்கு அதுவும் கிடையாது.

ஆகையால், தற்போதைய மம்தாவின் வெற்றி என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் கருத்தியல் ரீதியாக மக்களைத் தமது சித்தாந்தத்தின் கீழ் கொண்டு வருவதற்கு, நிரந்தரமான வெற்றியைச் சாதிக்கும் வகையில் களத்தைத் தயார் செய்து கொள்வதற்குக் கிடைத்துள்ள அவகாசமேயாகும். மாறாக, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-விற்கு எதிராக மக்களைத் தயார்ப் படுத்துவதற்கு மம்தா கும்பலுக்குக் கிடைத்துள்ள வாய்ப்பல்ல. அப்படி ஒரு நோக்கமும் மம்தா கும்பலுக்குக் கிடையாது.

காங்கிரசின் ‘மென்மையான’ காவி, ‘மனித முகம்’ கொண்ட தனியார்மயம் என்ற கொள்கையுடன் தனிநபர் அதிரடி சர்வாதிகாரம் கலந்த கலவைதான் மம்தா அரசியலே தவிர, அது காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரானதல்ல.

கேரளம் : பா.ஜ.க எதிர்ப்புணர்வே வெற்றியைத் தீர்மானித்தது !

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி ஆட்சியும், காங்கிரசும் மாறி மாறி வெற்றி பெற்று வந்த வரலாறு இப்போது மாறிப் போயுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக இடதுசாரி கூட்டணி அரசு அமைந்திருப்பது கேரள வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

கேரள அரசு கொரானா காலத்திலும் நிபா வைரஸ் தாக்கிய காலத்திலும் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஒக்கிப் புயலின்போது மேற்கொண்ட நிவாரணப் பணிகள் ஆகியன மார்க்சிஸ்ட் கட்சியின் மீதான மக்களின் செல்வாக்கை ஓரளவிற்கு அதிகரிக்கச் செய்துள்ளது.

சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் விவகாரத்தில் பா.ஜ.க மதவெறியைக் கிளப்பிவிட்டு ஆதாயம் அடைய முயற்சித்தது. ஆனால், அது எதிர்ப்பார்த்த அளவிற்கு நடக்கவில்லை. இதேபோல, மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக தங்கக் கடத்தல் விவகாரத்தை மோடி அரசு முன்னிலைப் படுத்தினாலும், அதுவும் எடுபடவில்லை.

மோடி அரசின் தொடர்ச்சியான தனியார்மய – தாராளமயக் கொள்கைகளும், அதன் மதவெறி வெறுப்பு அரசியலும் கேரள மக்களிடம் கடுமையான எதிர்ப்பையே ஏற்படுத்தியது. சபரிமலை விவகாரத்தில் காங்கிரசும் பா.ஜ.க-வும் ஒரே நிலையை எடுத்ததால், காங்கிரசின் மீதான நன்மதிப்பும் குறைந்து போனது.

இவையன்றி, கேரளத்தின் பொருளாதாரம், அரபு நாடுகளில் பணிபுரியும் கேரள மக்களைச் சார்ந்திருப்பது; பாரம்பரியமாக பார்ப்பன எதிர்ப்பு மரபைக் கொண்டிருப்பது போன்றவையும் பா.ஜ.க-வின் தோல்விக்கு முக்கியக் காரணங்களாகும்.

அதேவேளையில், மார்க்சிஸ்டு முதல்வர் பினாரயி விஜயனின் ஆட்சியானது, கார்ப்பரேட் சேவை, ஊழல், மக்கள் விரோத செயல்பாடுகளில் பா.ஜ.க-விற்கு சற்றும் சளைத்ததல்ல. மக்கள் உரிமைகளுக்காகப் போராடுபவர்களைக் கருப்புச் சட்டங்களைக் கொண்டு ஒடுக்குவது, நக்சல்பாரி புரட்சியாளர்களைப் போலி மோதல் கொலைகள் மூலம் சுட்டுக் கொல்வது – என அனைத்து வகையிலும் எதேச்சதிகார ஆட்சியாகவே அது செயல்படுகிறது.

ஆகையால், பா.ஜ.க-விற்கு எதிரான மக்களின் உணர்வுதான் போலி கம்யூனிஸ்டுகளைத் தேர்வு செய்ய வைத்துள்ளது. மக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுகளில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யும் ‘உரிமை’யை இந்த ‘ஜனநாயகம்’ மக்களுக்கு வழங்கியிருப்பதால், போலி கம்யூனிஸ்டுகளுக்கு வேறுவழியின்றி மக்கள் வாக்களித்துள்ளனர்.

தமிழகம் : இது திராவிட அரசியலின் வெற்றியா?

தமிழகத்தில் 10 ஆண்டு காலமாக எதிர் கட்சியாக செயல்பட்ட தி.மு.க, தமிழகத்தின் வாழ்வாதாரத்தை அழிக்கும் அழிவுத் திட்டங்களுக்கு எந்த வகையிலும் எதிரானதல்ல. ஆளுங்கட்சியாக இருந்தபோது, தமிழகத்தின் நலன்களுக்கு எதிராக செயல்பட்ட கட்சிதான் அது. மீத்தேன், கூடங்குளம், ஸ்டெர்லைட் – என அனைத்திலும் அதன் கொள்கை, கார்ப்பரேட் கொள்ளையை ஆதரித்து, அனுசரித்துப் போவதுதான்.

மோடி அரசால் தொடுக்கப்பட்ட தாக்குதல்களான ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை, புதியக் கல்விக் கொள்கை, நீட் – என அனைத்திலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக தி.மு.க குரல் கொடுத்தது என்பதெல்லாம் வெற்று கண்டன அறிக்கைகள் என்ற வரம்பிலானவை மட்டுமே.

தமிழக மக்களின் வாழ்வுரிமைப் பறிப்புக்கு எதிராக எந்தத் தீவிரப் போராட்டங்களையும் தி.மு.க நடத்தியதில்லை. கருப்புக் கொடி காட்டுதல், மோடிக்கும் பா.ஜ.க-விற்கும் எதிராக ஹேஸ்டேக் உருவாக்கி சமூக ஊடங்களில் கருத்துருவாக்கம் செய்தல் போன்றவற்றையும், தேர்தல் பிரச்சாரத் தரகன் பிரசாந்த் கிஷோரின் உத்திகளையும் நம்பித்தான் தேர்தலை எதிர்கொண்டது.

படிக்க :
♦ கையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் ? || தேர்தல் பாடல் || மக்கள் அதிகாரம்

♦ மக்கள் அதிகாரம் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? || தோழர் மருது

“ஸ்டாலிந்தான் வாராரு, விடியலைத் தரப் போறாரு” என்று தி.மு.க கவர்ச்சிகரமான பிரச்சாரங்களைச் செய்வதென்பது இப்போது முதல்முறை அல்ல. கவர்ச்சி – பொறுக்கி அரசியலை முன்னிறுத்துவதில் அ.தி.மு.க-விற்கு தி.மு.க எந்த வகையிலும் சளைத்ததுமல்ல. ஆகையால், தமிழக மக்களின் பா.ஜ.க எதிர்ப்புணர்வுதான் தி.மு.க கூட்டணியை வெற்றிப் பெறச் செய்துள்ளதே தவிர, தி.மு.க மீதான மக்களின் நம்பிக்கையால் அல்ல.

முக்கியமாக, 10 ஆண்டுகால அ.தி.மு.க-வின் மக்கள் விரோத ஆட்சியில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டது, நீட், புதிய கல்விக் கொள்கை, உயர்கல்வியில் இட ஒதுக்கீடு, ஏழு பேர் விடுதலை – என அனைத்திலும் அ.தி.மு.க அரசு பா.ஜ.க-விற்கு பக்கத் துணையாக இருந்தது, எங்கும் எதிலும் ஊழல்மயம், தொடர்ச்சியான விலைவாசி உயர்வு, ஸ்டெர்லைட் படுகொலை, மீத்தேன், எட்டுவழிச் சாலை போன்ற அழிவுத் திட்டங்கள், விலைவாசி உயர்வு, லாக்கப் படுகொலைகள்… போன்றவற்றால் மக்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துள்ளனர்.

இன்னொரு பக்கம், ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க கட்சியானது, அ.தி.மு.க, அ.ம.மு.க என பிளவுப் பட்டிருப்பதும் அ.தி.மு.க-வில் நிலவும் கோஷ்டிப் பூசல்களும் மக்களுக்கு அதன் மீதான நம்பிக்கையைக் குறைத்துள்ளது. இவ்வளவு இருந்தும் இந்த கும்பலுக்கு தமிழகத்தில் 66 சீட்டுகள் கிடைத்திருக்கிறது என்பது தமிழகத்தின் அவல நிலை.

2011-இல் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து தி.மு.க-வைத் தோற்கடித்தவைதான் சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய போலி கம்யூனிஸ்டு கட்சிகள். 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆட்சி அமைக்க கூட்டணி வைத்த கட்சிதான் ம.தி.மு.க. மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைத்த பின்னர், 2016-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், ம.தி.மு.க அனைத்தும், கடைசி நேரம் வரை ஜெயா-வின் ஆசிக்காக கூட்டணி அமைக்கச் சொல்லி சீட்டு கேட்டு போயஸ் தோட்டத்திற்குக் காவடி தூக்கியவைதான். ஜெயாவின் ஆசி கிடைக்காமல் போன பின்னர் கூட, மூன்றாவது அணி (மக்கள் நலக் கூட்டணி) அமைத்து, ‘பா.ஜ.க-வின் பி.டீமாக’ செயல்பட்டு தி.மு.க-வைத் தோற்கடித்தவைதான்.

இவர்கள் யாருக்காவது பா.ஜ.க எதிர்ப்புக் கொள்கை இருக்கிறதா? தங்களது அரசியல் வாழ்வே கேள்விக் குறியாக இருந்த நிலையில், பா.ஜ.க எதிர்ப்பலையைப் பயன்படுத்தி, சீட்டுகளை வாங்குவதற்குதான் இக்கட்சிகள் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்திருக்கின்றன.

இப்படிப்பட்ட தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜ.க-வின் காவி அரசியலை எதிர்க்கும் அருகதை இல்லை என்பது மட்டுமல்ல, தனது திராவிட அரசியல் மீதும் தி.மு.க-விற்கு நம்பிக்கையிருந்ததில்லை. அதனால்தான் மோடி அரசின் காவித் திட்டங்களுக்கு எதிராக தி.மு.க போராடாதது மட்டுமல்ல, இந்துக்களின் ஓட்டை அறுவடை செய்து கொள்வதற்காக, கோவில்களைப் புனரமைப்பதற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும் என தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது.

ஆகையால், “பா.ஜ.க-விற்கு தோல்வி”, “திராவிடம் வென்றது”, “மதசார்பின்மைக்கு வெற்றி, தமிழகம் தலை நிமிர்கிறது” என்று பேசுவதெல்லாம் பச்சையான மோசடிப் பிரச்சாரமாகும்; பிழைப்புவாத அரசியலாகும்.

பிழைப்புவாத அரசியலும் மதவெறி அரசியலும்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் மூலம் பா.ஜ.க தோல்வி அடைந்துள்ளதாக மதிப்பீடு செய்வது, பா.ஜ.க-வை மற்றக் கட்சிகளைப் போல பிழைப்புவாதக் கட்சியாக மட்டுமே கருதும் மனநிலையின் வெளிப்பாடாகும். இது ஆபத்தானதும் கூட.

பா.ஜ.க தனது தேர்தல் வெற்றிக்காக அனைத்து வகை சதி, அதிகார முறைகேடுகள், மதவெறிப் பிரச்சாரங்களில் ஈடுபட்ட பின்னரும் அது எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என்று சொல்லலாமே தவிர, பா.ஜ.க படுதோல்வி அடைந்துவிட்டதாக கருதுவது உண்மையைக் காண மறுக்கும் ஒருதலைப்பட்சப் பார்வையே.

ஏனெனில், பிழைப்புவாதக் கட்சிகளைப் போல தேர்தல் வெற்றி என்ற தற்காலிக நலன்களை அடைவது மட்டும் பாசிச பா.ஜ.க-வின் நோக்கமல்ல. அது இந்துராஷ்டிரம் என்ற நீண்ட கால இலக்கும், ஆளும் வர்க்கச் சேவையில் பரம விசுவாசமும் கொண்டது.

இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் என்ற நூற்றாண்டு அனுபவம் கொண்ட பார்ப்பன பாசிச அமைப்பையும், பார்ப்பன சித்தாந்தம் என்ற இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த சித்தாந்தத்தையும் கொண்டது.

ஆகையால், குறுகிய தேர்தல் வெற்றியை அடைவதற்காக மட்டுமே பா.ஜ.க தேர்தலில் போட்டியிடவில்லை. எந்தவொரு நடவடிக்கையிலும் தனது நோக்கமான இந்துராஷ்டிரம், பார்ப்பன ஆதிக்கம், கார்ப்பரேட் சேவை ஆகியவற்றை நோக்கி முன்னேறுவதற்குப் பல்முனை தந்திரோபாயங்களைப் பயன்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ் முன்னேறிய அனுபவம் கொண்ட அமைப்பு என்பதை நாம் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த கண்ணோட்டத்தில் இருந்து பா.ஜ.க-வையும் தற்போதைய ஐந்து மாநிலத் தேர்தல்களையும் சரியாக அலசிப் பார்க்க வேண்டும்.

000

குடியுரிமைச் திருத்தச் சட்டத்தால் பா.ஜ.க பலனடைந்த மாநிலங்களில் ஒன்று அஸ்ஸாம். மக்கள் மத்தியில் இருந்து கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்த போதும், பா.ஜ.க தனது மதவெறி அரசியலை சிறிதும் தளர்த்தவில்லை. அஸ்ஸாமிய இனவெறியையும் இந்து மதவெறியையும் இணைத்துப் பிரச்சாரம் செய்தது பா.ஜ.க. வங்கதேச முசுலீம்களால் அஸ்ஸாமியர்களுக்கு ஆபத்து என்று அச்சத்தைக் கிளப்பியது. எதிர்கட்சித் தலைவர் வங்கதேச முசுலீம்களை ஆதரிப்பவர் என்று பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

தற்போது இந்த மாநிலத்தில் இரண்டாவது முறையாக பா.ஜ.க வெற்றிப் பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையும் கூட சென்ற தேர்தலைவிட 2.71 சதவிகிதம் உயர்ந்து 32.25 சதவிகிதமாகியுள்ளது. இசுலாமியர் எதிர்ப்புப் பிரச்சாரமும் இந்துமதவெறியும் இங்கு வலுப்பெற்றுள்ளதையே இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.

புதுச்சேரியில் ரெங்கசாமி கும்பலும் பா.ஜ.க-வும் வெற்றி பெற்றிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. காங்கிரசு அரசின் ஆட்சி காலம் முடியும் வரை காங்கிரசில் இருந்து கொண்டு, ஆட்சி காலம் முடிவடையும் கடைசி நேரத்தில் பா.ஜ.க-விற்கு தாவி, ரெங்கசாமி காங்கிரசுடன் கூட்டணி வைத்து ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு அந்த மாநிலத்தில் சாதிய, பிழைப்புவாத அரசியல் கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

மொத்தத்தில், பிழைப்புவாத அரசியல்தான் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்குக் களத்தை செப்பனிட்டுக் கொடுக்கிறது.

பா.ஜ.க தோல்வியடையவில்லை !

பா.ஜ.க-வும் அதன் கூட்டணியும் வெற்றி பெற்றுள்ள இந்த மாநிலங்களில் மட்டுமல்ல, பா.ஜ.க தோல்வியைச் சந்தித்துள்ளதாக சொல்லப்படும் மாநிலங்களில் என்ன நிலைமை ?

மேற்கு வங்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 3 இடங்களில் இருந்து உயர்ந்து 77 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. 10.16 சதவிகித வாக்குகளிலிருந்து மிக பிரம்மாண்டமாக வளர்ந்து 38.13 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதைப் பற்றி பேசுகின்ற பா.ஜ.க எதிர்ப்பாளர்களின் கண்களுக்கு இந்த விசயம் ஏனோ தெரிவதில்லை.

போலி கம்யூனிஸ்டுகள் முற்றிலுமாக துடைத்தொழிக்கப்பட்டு, திரிணாமுல் காங்கிரசும் பா.ஜ.க-வும் மட்டுமே அரசியல் அரங்கில் நீடிக்கும் நிலையை ஏற்படுத்தியிருப்பதே பா.ஜ.க-வின் பெரிய வெற்றியாகும். காங்கிரசும் கம்யூனிஸ்டுகளும் துடைத்தொழிக்கப்பட்டு, இரு துருவ அரசியல் நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை உருவாக்கியது யார் ? மம்தா அல்ல, பா.ஜ.க.!

“திரிணாமுல் காங்கிரசின் ரௌடி கலாச்சாரத்தை மார்க்சிஸ்டு கட்சியால் எதிர்கொள்ள முடியாது, அதனை எதிர்கொள்ள சரியான சக்தி பா.ஜ.க தான்” என்று அரசியலற்ற பெரும்பான்மையான மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு சக்திகள் பா.ஜ.க-வின் பக்கம் சென்றுள்ளன. ஓரளவு சிந்திக்கும் ஜனநாயக சக்திகளோ, “பாசிச பா.ஜ.க-வை கம்யூனிஸ்டுகளால் எதிர்கொள்ள முடியாது, அதற்கு மம்தாதான் சரியான பதிலடி கொடுப்பார்” என்று திரிணாமுல் காங்கிரசின் பக்கம் சென்றுள்ளன.

சட்டமன்றத்தில் தனது 77 எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டு, தான் நினைத்த அனைத்து காரியங்களையும் பா.ஜ.க-வால் அடுத்தடுத்து நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும். மேலும், கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளைப் பேசிக் கொண்டே பா.ஜ.க எதிர்ப்பு என்ற அரசியலில் பயணித்த மம்தாவின் 10 ஆண்டுகால ஆட்சியும், அதே திசையில் இனி நடக்கப் போகிற ஐந்தாண்டுகால ஆட்சியும், ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் உணர்வு வளர்வதைத் தவிர்ப்பது கடினம்.

அதே வேளையில், பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மேலும் தீவிரமாக வேலை செய்து, கலவரங்களையும் அரசியல் சதித்தனங்களையும் அரங்கேற்றி மம்தா ஆட்சியைக் கவிழ்க்கவோ அல்லது அடுத்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரசை தோற்கடிக்கச் செய்வதோ கடினமான காரியமல்ல; இந்தியாவின் பல மாநிலங்கள் இதற்கு சாட்சியாகவும் உள்ளன.

தமிழகத்தின் நிலைமையோ இன்னும் மோசமானது. பா.ஜ.க-வின் பினாமியான அ.தி.மு.க 66 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இன்னொரு அடியாள்படை போல செயல்படும் வன்னிய சாதிவெறிக் கட்சியான, பிழைப்புவாதத்தையே தனது கொள்கையாகக் கொண்டுள்ள பச்சையான சந்தர்ப்பவாதக் கட்சியான பா.ம.க, ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஒட்டுண்ணி கும்பல்கள்தான் இன்று பா.ஜ.க-வின் அடியாள் படையாகச் செயல்படுகின்றன.

இதுமட்டுமல்ல; இது பெரியார் பிறந்த மண் என்று திராவிட இயக்கத்தினரால் பீற்றிக் கொள்ளப்படும் தமிழகத்தில் இதுவரை கண்டிராத அளவிற்கு பா.ஜ.க நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

“பா.ஜ.க தனித்து போட்டியிட்டிருந்தால் இந்த வெற்றியைப் பெற்றிருக்க முடியாது. பா.ஜ.க-வை முன்னிறுத்தாமல், அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர் என பெரிதாகக் காட்டி வேட்பாளரின் பெயரை முன்னிறுத்தித்தான் வெற்றி பெற்றனர். தாமரை சின்னத்தை ஓரமாக சிறியதாக போட்டுக் கொண்டனர்” என்றும், “இதுதான் தமிழ்நாடு; பா.ஜ.க பேரைச் சொல்லி ஓட்டுக் கூட கேட்க முடியாது” என்றும் மார்த்தட்டிக் கொள்கின்றனர் தி.மு.க ஆதரவாளர்களும், கட்டமைப்பிற்குள் தீர்வைத் தேடும் பா.ஜ.க எதிர்ப்பாளர்களும். இவ்வாறு மார்த்தட்டிக் கொள்வதற்கு எந்த ஒரு அடிப்படையும் இல்லை.

தனது பிறப்பிலேயே நயவஞ்சகத்தையும் சதியையும் பயங்கரவாதத்தையும் சாதி – வர்ணாசிரம பார்ப்பன சிந்தனையையும் கொண்டுள்ள பா.ஜ.க-விற்கு எந்த வழிமுறையும் ஒரு பொருட்டல்ல. பா.ஜ.க கையாண்டது நேர்மையான வழிமுறையா, இல்லையா என்பதையெல்லாம் வைத்து, பா.ஜ.க தோல்வியைந்திருப்பதாக மதிப்பீடு செய்வது, ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, காவி – கார்ப்பரேட் பாசிசம் போன்றவை குறித்த தவறான சித்தாந்தப் புரிதலாகும்.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை அது முற்றிலும் துடைத்தொழிக்கப் படவேண்டிய கொடிய பாசிச அமைப்பு. தேர்தல் களம் என்பது ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ஒரு களம் மட்டும்தான். பஜ்ரங் தளம், இந்து முன்னணி, ஏ.பி.வி.பி, விஸ்வ இந்து பரிஷத் போன்று சிறிதும் பெரிதுமாக பல பாசிச குண்டர் படைகள் அதனிடம் உள்ளன. சித்தாந்த ரீதியாக மக்களை ஏமாற்ற பல கலாச்சார அமைப்புகளும் உள்ளன. ஐந்தாண்டு மோடி ஆட்சியில் அரசின் அதிகார அமைப்புகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் மயமாக்கப் பட்டுள்ளன. இராணுவம் முதல் பள்ளிக் கல்வி வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்று கொண்டிருக்கிறது. இப்படி சமூகத்தின் அனைத்து அங்கங்களும் பாசிசமயமாக்கப்பட்டு வருகிறது.

ஆகையால், பாசிச பா.ஜ.க-வை தேர்தல் களத்தில் ஒருக்காலும் முறியடிக்க முடியாது. மக்களைத் திரட்டி, போராட்டக் களத்தில்தான் மோதி வீழ்த்த முடியும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலை எதிர்ப்பதற்கு பலமுனைகளைக் கொண்ட செயல்தந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, “பா.ஜ.க தோல்வி”, “தமிழகத்தில் இந்துத்துவா வெற்றி பெறாது”, “தலைவர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார்” என்பதெல்லாம் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல, மக்களை பாசிசத்திற்குப் பலி கொடுப்பதில் சென்று முடியும்.

கார்ப்பரேட் சேவையில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, போலி கம்யூனிஸ்டுகள் ஓரணியில் கைக் கோர்த்து நின்றதை, மிக அண்மையில், ஆக்சிஜன் உற்பத்தியை சாக்கிட்டு கொலைகார ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் விவகாரத்தில் பார்த்த பின்னரும், பா.ஜ.க-வை தி.மு.க வீழ்த்திவிடும் என்று கருதுவதில் எந்தப் பொருளும் இல்லை.

உண்மையில், தமிழகத்தில் தி.மு.க பெற்றிருக்கும் வெற்றி என்பது பா.ஜ.க எதிர்ப்புணர்வின் வெளிப்பாடே அன்றி, பா.ஜ.க-விற்கு எந்தத் தோல்வியையும் தி.மு.க கூட்டணி ஏற்படுத்தி விடவில்லை. சென்ற சட்டமன்றத் தேர்தல்களைவிட இந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்குக் கூடுதல் இடங்களும், வாக்குகளும் கிடைத்துள்ளன; ஆட்சிக் கவிழ்ப்புச் சதிக்கு அ.தி.மு.க என்ற அடிமை கட்சியும் பா.ஜ.க-வுக்குக் கிடைத்துள்ளது.

மேற்கு வங்கம், தமிழகத்தில் மட்டுமல்ல; கேரளாவிலும் பா.ஜ.க-வின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்ற தேர்தலில் பா.ஜ.க 10.6 சதவித வாக்குகளைப் பெற்றது. இந்த தேர்தலில் 11.30  சதவிகித வாக்குகளை பா.ஜ.க பெற்றுள்ளது. இது குறைவான வாக்கு வளர்ச்சி; மார்க்சிஸ்ட் கட்சி பெற்ற வாக்குகளை ஒப்பிடும்போது இதனை வைத்துக் கொண்டு பா.ஜ.க-வால் ஒன்றும் செய்துவிட முடியாது என்று கருதலாம். ஆனால், கேரளத்தில் பா.ஜ.க பலவீனமடைந்துவிடவில்லை, மாறாக, மெல்ல வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை.

மொத்தத்தில், ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் பார்ப்பன பாசிச பா.ஜ.க-வின் வாக்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம், மேற்கு வங்கத்தில் அதன் சீட்டு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

போராட்டக் களம் காத்துக் கிடக்கிறது !

ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு, நமது நாட்டில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் இருந்த கொரோனா நோய்த்தொற்று, இன்று இலட்சக் கணக்கில் உயர்ந்துள்ளது; ஆக்சிஜன் இல்லாமலும், உரிய மருத்துவ வசதி இல்லாமலும் மக்கள் கொத்துக் கொத்தாக மடிகின்றனர்; பிணங்கள் குவிகின்றன; சுடுகாடுகள் கூட வெப்பத்தில் தகிக்கின்றன; மக்கள் சொல்லொணாத் துன்பத்தில் துடிக்கின்றனர்.

கொரோனா நோய்த் தொற்று பரவிய முதல் அலையின்போது கூட, மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் மோடி அரசு அறிவிக்கவில்லை. மக்கள் மத்தியில் எதிர்ப்புக் குரல் வலுத்த பின்னர்தான், கண் துடைப்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டது. இப்போது தாக்கி வரும் இரண்டாவது அலையோ மேலும் கொடுமையாக இருக்கிறது. ஆனால், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்துப் பேசுவதற்குக் கூட மோடி அரசு தயாராக இல்லை. மொத்தத்தில், மோடி அரசு கொரோனா நோய்த் தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மௌனம் சாதிக்கிறது. அது பாசிஸ்டுகளுக்கே உரிய, கடுகளவும் மனிதாபிமானமற்றக் கொடூர அணுகுமுறையாகும்.

மற்றொரு புறம், மக்களை நிரந்தரமாகப் பிளவுப்படுத்தி இரத்த வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு (சி.ஏ.ஏ) எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். போராடியவர்கள் மீது பா.ஜ.க அரசுகளும் காவி பயங்கரவாதிகளும் துப்பாக்கிச் சூடுகளையும், டெல்லியில் கலவரங்களையும் நடத்தின.

அதன் வடுக்கள் மறையாத நிலையில், அடுத்தத் தாக்குதலாக இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக் கொள்வதற்கு வழிவகுக்கும் வகையில் மோடி அரசு மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. இதற்கு எதிராக டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். ஐந்து மாதங்களைக் கடந்தும் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

இவை மட்டுமின்றி, புதியக் கல்விக் கொள்கை, தொழிலாளர் சட்டத் திருத்தங்கள், சுற்றுச்சூழல் மதிப்பீடு சட்டம், போக்குவரத்துச் சட்டத் திருத்தம் – என மக்கள் மீது பல்வேறு தாக்குதல்களை காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசு தொடுத்து வருகிறது. பொத்துறைகளைத் தனியார்மயாக்கும் வேலையையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

மோடி ஆட்சியில் வீழ்ந்தப் பொருளாதாரம் எழவில்லை; வேலையின்மையும் வறுமையும் தலைவிரித்தாடுகிறது; உழைக்கும் மக்களின் குறைந்தபட்ச வாழ்வாதாரங்கள் அன்றாடம் பறிக்கப்பட்டு வருகின்றன; பெட்ரோல் – டீசல் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு, சமூக விரோத செயல்கள் அதிகரிப்பு, தலித்துகள் – இசுலாமியர்கள் அடித்துக் கொல்லப்படுதல் – என அனைத்து அநீதிகளும் தாண்டவமாடுகின்றன.

படிக்க :
♦ விடியல் வேதாந்தாவுக்கா? || தி.லஜபதி ராய்

♦ தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியுமா ? || வெற்றிவேல் செழியன் || காணொலி

நாளும் அதிகரித்து வரும் காவி – கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளால் இந்தப் போராட்டக் களம் பரந்து விரிந்து வருகிறது; தேர்தல் அரசியல் களமோ, இதில் இருந்து மக்களைத் திசைதிருப்புகிறது. நாட்டையும் மக்களையும் கொள்ளையிடுவதற்குப் போட்டிப் போடும் தேர்தல் நாடகம் என்பது, பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கான களம் அல்ல; அது, பாசிஸ்டுகள் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்வதற்கு உருவாக்கப்பட்டுள்ள களம் !

ஆகையால், பா.ஜ.க-விற்கும் காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலுக்கும் எதிரான நமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். பாசிஸ்டுகளின் செல்வாக்கிலிருந்து மக்களை மீட்பதும் பாசிஸ்டுகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் களத்தில் நின்று வீழ்த்துவதும் நமது உடனடிக் கடமையாகும்.

வினவு

விடியல் வேதாந்தாவுக்கா? || தி.லஜபதி ராய்

கஸ்டு 18, 2020 அன்று நெடிய வாதப் பிரதிவாதங்களுக்குப் பிறகு தமிழகத்தின் மற்றும் தில்லியின் சிறந்த நட்சத்திர வழக்கறிஞர் பட்டாளங்களுடன் நடத்தப்பட்ட வேதாந்தா நிறுவனம் எதிர் தமிழக அரசு மற்றும் பலர் என்ற ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு நீதிபதிகள் திருமிகு டி.எஸ்.சிவஞானம் மற்றும் திருமிகு வி.பவானி சுப்பராயன் ஆகியோரால் வழங்கப்பட்டது.

815 பக்கங்கள் கொண்ட மிக ஆழமான சட்ட மற்றும் சமூகப் புரிதல்களுடன் விளக்கமாக நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அவர்களால் எழுதப்பட்ட அத்தீர்ப்பு சுற்றுச்சூழல் வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகவும்¸ நீதிமன்றங்களது சமூகப் பங்களிப்பில் விதிவிலக்கான ஒரு முக்கிய தீர்ப்பாகவும் விளங்கும். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி  பி.என்.பகவதி அவர்கள் ஒருமுறைக் கூறியதைப் போல, இது போன்ற அரிதினும் அரிதான தீர்ப்புகளை ஜூடிசியல் லாட்டரி என்றேக் கொள்ளலாம்.

படிக்க :
♦ ஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு ! | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்

♦ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்

1990-களில் 102.50 ஹெக்டேர் நிலங்கள் சிப்காட் மூலம் செம்பு உற்பத்தி செய்யும் வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு வழங்கப்பட்டது.

ஜனவரி 16, 1995-ஆம் ஆண்டு அன்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அத்தொழிற்சாலையை தொடங்க அனுமதி அளித்தது. பின்னர் மே 22, 1995-ஆம் நாள் அன்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீர் மற்றும் காற்று சட்டங்கள் கீழ் தொழில் தொடங்க அனுமதி அளித்தது.

தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 391 முதல் 900 டன் செம்பு உற்பத்தி திறன் கொண்டதாக அமைக்கப்பட்ட அத்தொழிற்சாலையானது பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய உற்பத்தி திறனைப் பெருக்கி 2006-ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 1,200 டன்கள் உற்பத்தி திறன் கொண்டதாகவும்¸ 2009-ஆம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 2,400 டன்கள் உற்பத்தி திறன் கொண்டதாகவும் மாறியது.

செம்பைத் தவிர செம்புக் குச்சிகள்¸ செம்புக் கம்பிகள், கந்தக அமிலம்¸ பாஸ்போரிக் அமிலம் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அது விளங்கியது.

ஒருசில நீதிமன்ற வழக்குகளுக்குப் பின்னர் ஜனவரி 14, 2016 அன்று தொழிற்சாலையை நடத்த வழங்கிய ஒப்புதல் 2023-ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்தது. அதை தொடர்ந்து அந்நிறுவனம் நீர் மற்றும் காற்று சட்டங்களின் கீழ் அனுமதியைப் புதுப்பிக்க விண்ணப்பம் செய்தது. மார்ச் 14, 2017-ஆம் நாளில் நீர்ச் சட்டத்தின் கீழ் ஏழு மீறல்களும் காற்றுச் சட்டத்தின் கீழ் ஆறு மீறல்களும் கண்டறியப்பட்டன.

பிப்ரவரி 05, 2018-ஆம் ஆண்டில் தூத்துக்குடி குமாரரெட்டிபாளையம் அருகில் பொதுமக்களின் எதிர்ப்பு தீவிரமாகத் தொடங்கியது. மார்ச் 15, 2018-ஆம் நாளில் போராட்டம் நடத்த அனுமதிகேட்டு மக்கள் விண்ணப்பம் செய்தனர். ஏபரல் 09, 2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீர் மற்றும் காற்றுச் சட்டங்களின் கீழான இசைவாணைகளைப் புதுப்பிக்காமல் நிராகரித்தது.

மே 18, 2018-ஆம் ஆண்டு வேதாந்தா நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபர் வேதாந்தா நிறுவனத்தின் ஒரு கிலோ மீட்டர் எல்லைக்குள் எவ்வித ஆர்ப்பாட்டங்களை நடத்தக் கூடாது எனவும், மக்கள் அதிகாரம் என்ற அமைப்பு மே 22, 2018-ஆம் நாள் அன்று போராட்டம் ஒன்று நடத்தப்போவதாக எழுந்த சூழல் காரணமாக ஆலையைச் சுற்றி போராட்டங்களுக்கு  தடையாணை வேண்டும் என தங்கள் நீதிப்பேராணை முறையீட்டில்  கூறி இருந்தது. மே 18, 2018-ஆம் நாளன்று உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி ஒருவர் வேதாந்தா நிறுவனத்தின்  வேண்டுகோளைப் பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட்டார். அவ்வுத்தரவிலேயே தேவை ஏற்பட்டால் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் தடை உத்தரவு வழங்கவும் பரிந்துரை செய்திருந்தார்.

மே 22, 2018-ஆம் ஆண்டு அன்று மக்கள் போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உழைக்கும் சமூகங்களிலிருந்து 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மறுநாளே மே 23, 2018-ஆம் தேதி அன்று மாசுக்கட்டுபாட்டு வாரியம் ஸ்டெர்லைட்  தொழிற்சாலையின் அனுமதிகளை ரத்து செய்து  மூட உத்தரவிட்டது.

மேற்சொன்ன உத்தரவுகளை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் நீதிப்பேராணைகளை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த வழக்குகளைத்  தவிர தூத்துக்குடியைச் சேர்ந்த பாத்திமா என்பவர் தொழிற்சாலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். வேதாந்தா நிறுவன வழக்குகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், மக்கள் அதிகாரத்தின் வழக்கறிஞர்  திரு.ராஜூ¸ மறுமலர்ச்சி திராவிட கட்சியின் தலைவர் திரு.வைக்கோ ஆகியோர்களும் எதிர்தரப்பினர்களாக முன்னிலையானார்கள்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் செம்பு உற்பத்தி தொழில், சிவப்புப் பட்டியலின் கீழ் வரும் தொழில்களில் ஒன்று. அத்தொழிற்சாலையானது சட்டப்படி சிறப்பு தொழிற்சாலை மற்றும் இடர்விளையும் பகுதியில் அமைய வேண்டுமே தவிர (Special Industrial and hazardous Zone) பொது தொழிற்சாலைப் பகுதியில் அமையக் கூடாது. இது தொடர்பான உத்தரவு ஜூலை 24, 1974-ஆம் நாள் அரசாணை எண்.1730-இன்படி வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைந்துள்ள மீளவிட்டான் கிராமத்தில் பொது தொழிற்சாலை பகுதி மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதுதவிர தூத்துக்குடி மாவட்டம் சுவாமிநத்தம் மற்றும் பழைய காயல் பகுதியில் மட்டுமே இடர் விளைய கூடிய தொழிற்சாலைகளை அமைக்க முடியும் என தூத்துக்குடி மாவட்ட பெருந்திட்ட வரைபடம் காட்டுகிறது. அத்திட்டத்தின் பகுதிகளை மாற்றுவது உள்ளுர் மக்களின் கருத்துகளைக் கேட்காமல் செய்யக் கூடியது அல்ல. எனவே, ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைய கூடிய இடம் தகுதி இழப்பிற்கு உள்ளாகிறது.

எம்.சி.மேத்தா வழக்கில் 2004-ஆம் ஆண்டின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சட்ட மீறலை சட்டமியற்றும் அரசு நியாயப்படுத்த இயலாது என்ற கோட்பாட்டை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அவர்கள் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.

ஏப்ரல் 09, 2018-ஆம் நாளிட்ட தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்படி ஒப்புதலை புதுப்பிக்க மறுத்தமைக்கு முதன்மைக் காரணங்களாக வெள்ள நீர் ஓடையான உப்பார் மற்றும் பட்டா நிலங்களில் செம்பு கழிவுகளை குமித்தமையும்¸ நிலத்தடி நீர் ஆய்வறிக்கைளை வழங்காமையும்¸ இடர்தரும் கழிவுகளை குவித்து வைத்தமையும்¸ ஜிப்சம் சேமிப்பு குட்டையை அமைக்காமையையும் காரணங்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்டது.

காப்பர் ஸ்லாக் எனப்படும் செம்பு கழிவுகள் 3,50,000 டன்கள் தனியார் நிலத்தில் சேமிக்கப்பட்டன. இது தவிர பழைய கழிவுகள் 7¸47¸327 மெட்ரிக் டன்கள் அகற்றப்பட்டதாக வேதாந்தா நிறுவனம் குறிப்பிட்டது. தொழிற்சாலைக்கு வெளியே 10 இடங்களில் கொட்டப்பட்ட செம்பு கழிவுகளின் எடை மட்டும் 5¸37¸765 மெட்ரிக் டன்கள்.

மேற்சொன்ன கழிவுகள் கொட்டுவதற்கு தனியார் நில உரிமையாளருடன் ஸ்டெர்லைட் தொழிற்சாலை நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டாலும், அக்கழிவுகளை பொது நீர்ஓடைகளில் கலக்கவிடாமல்¸ நிலத்தை மாசுப்படுத்தாமல் வேறு பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் பொறுப்பு ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை செம்பு கழிவுகள் ஆலைக்கு வெளியே 10 கிலோ மீட்டர் தொலைவில் கொட்டப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மேம்பாலம் அருகில் குன்றைப்போல தோற்றம் அளிக்கும் அக்கழிவுகள் தூத்துக்குடியில் 2016-ஆம் ஆண்டில் நடந்த வெள்ள நிகழ்வுக்கு பெரும் காரணமாக அமைந்தது.

மழை நீர்ஓடைகளில் நீரோடுவதை மறிக்கும் விதத்தில் கழிவுகள் கொட்டப்பட்டதால் வெள்ளநீர் தூத்துக்குடி நகருக்குள் புகுந்து மக்களுக்கு பெரும் இடர்விளைவித்தது.

ஜூலை 14, 2016 அன்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் ஆறு வருடங்களுக்குப் பின்னர் தீடீர் என விழித்துக் கொண்டு சாதாரணமாக யாரும் எளிதாகப் பார்க்க கூடிய கழிவு குவியலைக் கண்டு கொள்ளாமல் போனதும்¸ மாசுக்கட்டுபாட்டு வாரியமும்¸ மாவட்ட நிர்வாகமும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வாளவிருந்ததும்¸ அரசியல் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டு காரணமாகவா? என்பதையும் ஆய்வு செய்து அத்தவறுக்கு காரணமானவர்கள் கண்டறியப்பட வேண்டும் எனவும் தீர்ப்பில் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது.

2011-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர் உயர்நீதிமன்றத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களுடன் இணைந்து அளித்த அறிக்கையில் மீளவிட்டான்¸ தெற்கு வீரபாண்டியபுரம்¸ சங்கரப்பேரி உள்ளிட்ட கிராமங்களையும் ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் தெற்கு பக்க கால்வாயையும் ஆய்வு செய்த போது 2002-ஆம் ஆண்டிற்கு பிறகு அங்கு கிடைக்கும் நிலத்தடி நீர் குடித்தண்ணீருக்குப் பயன்படுத்த முடியாதபடியும்¸ 2011-ஆம் ஆண்டின் களஆய்வின் போது அப்பகுதி மக்கள் தங்களுக்கு கண் எரிச்சல்¸ மூச்சு திணறல் ஆகியன விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரை நிகழ்வதாகவும் அந்நேரத்தில் மாசு ஏற்படுத்தும் வாய்வுகள் காற்று மண்டலத்தில் கலப்பதால் அவ்வாறு நிகழ்கிறது எனவும்¸ கழிவுகள் நீரோடைகள் கலப்பதாலும் கால்நடைகள் அந்நீரை குடித்து இறந்துப் போவதாகவும் தெரிவித்ததை நீதிமன்றம் பதிவு செய்தது.

1998-ஆம் ஆண்டில் நீரி என்ற (NEERI) சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் ஸ்டெர்லைட் நிறுவன கழிவுகளை மறுசுழற்சி செய்யும் சுத்திகரிப்பு நிலையங்களை ஒழுங்காக நிறுவவில்லை எனத் தனது நவம்பர் 07, 1998-ஆம் நாள் அறிக்கையின்படி தெரிவித்தது.

இது தவிர மிக முக்கியமாக ஸ்டெர்லைட் நிறுவனம் அளித்த தகவலின்படி செம்பு உற்பத்தியின் போது பாதரசம் எனும் நச்சுத்தன்மை கொண்ட உலோகம் கழிவாக வெளியேறும் எனவும் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையின்படி பாதரசம் அகற்றும் கோபுரம் அமைக்கப்பட்டு இருக்க வேண்டுமெனவும் ஆனால், அங்கு கழிவாக உற்பத்தியாகும் பாதரசம் வளிமண்டலத்தில் காற்றோடு காற்றாகக் கலந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் பயணிக்கும் எனவும் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் இதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட அப்பாதரசத்தின் அளவானது குறைந்தது 25.91 மெட்ரிக் டன்கள் இருக்குமெனவும் கூறிய 9-வது எதிர்மனுதாரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளரின் கூற்றை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கொடைக்கானல் இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் 7.95 கிலோ எடையுள்ளப் பாதரசத்தை விதிகளை மீறி வெளியேற்றி மாசுப்படுத்தியதற்காக மூடப்பட்டதை சுட்டிக்காட்டியதையும் கருத்தில் கொண்டு இது தீவிர விசாரணை செய்ய வேண்டிய கூற்று எனவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதை கருத்தில் கொண்டிருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில் 374 பத்தியில் மாசுக்கட்டுபாட்டு வாரியத்தின் நடைமுறைகளின்படி மாசு அளவீடு செய்யப்படவில்லையெனவும் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ச்சியாக தாங்கள் சர்வதேச விதிமுறைகளை பின்பற்றுகிறோம் எனவும் கூறுவதை நீதிபதி கண்டித்து ஒழுங்குபடுத்துவர்களான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் நடைமுறை விதிகளைத் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் நிறுவனம் கடைபிடிக்கவில்லையெனவும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

காற்றில் மாசின் அளவை கண்டறிய அமைக்கப்பட்ட நிலையங்களை மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஒழுங்காக கண்காணிக்கவில்லையெனவும் அந்த அளவுகள் தவறாக இருப்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, 2015 முதல் 2018-ஆம் ஆண்டு வரை காற்றின் தரம் முறையாக கண்காணிக்கப்படவில்லையெனவும் அங்குள்ள தொழிற்சாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு நிலையங்களுக்குள் எடுத்ததாகக் கூறப்பட்ட தர அளவுகள் நிலையாக ஒரே அளவில்  இருப்பதையும் அவ்வாறு இருக்க வாய்ப்பில்லையெனவும் அவ்வளவுகள் உண்மைக்கு மாறானவையாக இருக்கின்றன எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 2005-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நீரி (NEERI) நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தணிக்கை அறிக்கையின் படி நிலத்தடி நீரில் ஆர்சனிக் மற்றும் காட்மியம்¸ குரோமியம்¸ செம்பு¸ ஈயம் போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக இருப்பதையும் நீதிபதிகள் கவனத்தில் கொண்டனர்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்குள் அமைக்கப்பட்ட 40 ஏக்கர் ஜிப்சம் குட்டையில் ஒரு லட்சம் டன் ஜிப்சம் சேமிக்கப்பட்டு இருந்தது. இது தவிர நான்கு லட்சம் டன்கள் பழைய ஜிப்சமும் அங்கு சேமித்து வைக்கப்பட்டு இருந்தது. ஜிப்சம் குட்டைக்கு வெளியில் இருந்தக் கண்காணிப்பு கிணறுகளில் இருந்து எடுத்த தண்ணீரின் தரம் மிக குறைவாகவும் அதில் நச்சுத்தன்மை மிகுந்து இருந்ததையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டறிந்தது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த வண்ணப் புகைப்படங்களில் ஜிப்சம் குட்டைக் கிணற்றுப் பகுதி பனிப்பொழியும் இடத்தைப்போல் தோற்றமளித்ததை நீதிபதிகள் கண்டனர். நிலத்தடி நீர் மோசமாகப் பாதிக்கப்பட்டதையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போதிய உட்கட்டமைப்பின்றி இயங்குவதையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

2013-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்க அனுமதித்து இருந்தாலும் கூட 2013-ஆம் ஆண்டுக்கு முன்பாக நிகழ்ந்த நிகழ்வுகளை கருத்தில் கொள்ள முடியாது என்ற வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. தொழிற்சாலை இயங்க இசைவாணை வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் தொழிற்சாலை இயங்கும் வரை நடப்பில் இருக்குமெனவும் நிபந்தனைகள் நிரந்தரமானவை என்பதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ரூ.100 கோடி அபராதம்  எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலையானது நீர் மற்றும் காற்றை தொடர்ந்து மாசுப்படுத்தி வந்ததாகவும் சாதாரணக் காற்றைவிட தொழிற்சாலையில் 100 மடங்கு அதிகமான மாசு இருப்பதாகவும் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த பொதுமக்களுக்குக் கூட கண் எரிச்சல்¸ மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கந்தகவாய்வு வெளியேற்றம் மூச்சு தொடர்பான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துவதையும் நீதிமன்றம் கண்டறிந்து தீர்ப்பின் 408-வது பத்தியில் பதிவு செய்தது.

படிக்க :
♦ ஆய்வுக்குழு முன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட ஸ்டெர்லைட் | காணொளி

♦ வேதாந்தாவின் அனில் அகர்வாலை தோலுரித்து சோஃபியா எழுதிய கட்டுரை

நாளொன்றுக்கு 870 மெட்ரிக் டன்கள் மட்டுமே உற்பத்தி செய்ய இயலும் என்ற காலத்தில் விதியை மீறி அனுமதிக்கப்பட்ட உற்பத்தி திறனுக்கு மேலாகவே ஸ்டெர்லைட் நிறுவனம் உற்பத்தி செய்வதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீர் மற்றும் காற்று சட்டங்கள் மீறல்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பை மட்டும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் அனுப்பிவிட்டு அவ்விதி மீறலுக்கான தண்டனையைப் பெற்றுத்தராததுக் குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

செம்பு கழிவு அல்லது ஸ்லாக் ஒரு இடர்தரும் நச்சுப்பொருள் அல்ல என்ற மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்தானது ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் கழிவு குவியலுக்குப் பொருந்தாது எனவும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு எனும்போது மிகையான செம்பு கழிவுகள் கொட்டப்படும் போது கிணறுகளிலும்¸ நிலத்தடி நீரிலும்¸ ஆர்சனிகழிவு மற்றும் காட்மியம் ஆகியன சேர்வதையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

தொழிற்சாலை வளாகத்தை சுற்றி 250 மீட்டர் தூரம் பசுமை வளையம் ஏற்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைக் காரணமின்றி குறைக்கப்பட்டதையும்¸ 25 மீட்டர் பசுமை வளையமும் ஏக்கருக்கு 1000 மரங்கள் என்ற அளவில் நடப்படவேண்டும் என்ற நிபந்தனையானது மீறப்பட்டதையும் தொழிற்சாலை வளாகத்தை சுற்றி காற்று மாசைத் தடுக்கும் பசுமை வளையத்திற்கு பதிலாக மரங்கள் தீவுகளாக பல ஹெக்டேர்கள் பரப்பளவில் குடியிருப்பு பகுதிகளிலும் பிற பகுதிகளிலும் நடப்படுவது காற்று மாசைத் தடுக்க பசுமை வளையம் அமைக்கப்படுவதின் நோக்கத்தை நிறைவேற்றாது எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

60,000 பணியாளர்கள் பணிபுரியும் ரஷ்யாவின் இரும்புத் தொழிற்சாலை ஒன்றில் 2 கிலோ மீட்டர் சுத்தமான பகுதித் தொழிற்சாலையை சுற்றி அமைப்பதன் காரணத்தையும் அதை நிறைவேற்ற வழக்கிட்டு வெற்றி பெற்ற பெண்ணின் வழக்கையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக 172.17 ஹெக்டேர் நிலங்கள் இருப்பதாகக் கூறிய வேதாந்தா நிறுவனம் உண்மையில் 102.31 ஹெக்டேர் நிலங்கள் மட்டுமே வைத்திருந்தது எனவும் அங்குள்ள 60 தொழிற்சாலைகளில் இயங்கக் கூடிய நிலையில் உள்ள 51 சிவப்புப் பட்டியல் தொழிற்சாலைகளில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை போல அதிக நச்சு வாய்வுகளை வெளியிடுவது இல்லையென்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கூற்றையும் நீதிபதிகள் பதிவு செய்தனர்.

84 மீட்டர் உயரப் புகைக் கூண்டு அமைப்பதற்குப் பதிலாக இரு கூண்டுகளைச் சேர்த்து 60.38 மீட்டர் கோபுர உயரம் அமைந்ததாக ஸ்டெர்லைட் தொழிற்சாலை கூறுவது சரியல்ல எனவும்¸ புகைக் கூண்டின் உயரம் குறைவாக இருந்தால் கந்தக வாய்வு காற்றில் கலப்பது அதிகமாகும் எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இது தவிர காற்றில் வெளியேற்றப்படும் நச்சு வாய்வின் அளவு அதிகப்படுத்துவதும் அந்த நச்சு வாய்வை வெளியேற்றும் கோபுரத்தின் உயரம் ஒற்றை கோபுரமாக 80 மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும் என ஐ.ஐ.டி வல்லுநர் பரிந்துரை செய்ததையும்¸ ஆனால் இரண்டு கோபுரங்கள் சராசரி 60 மீட்டர்களில் அமைந்திருப்பது போதாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

முழுமையாக மூடப்பட்ட லாரிகளில் மூலப் பொருள்களை தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 18 கிலோ மீட்டர் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையை மீறி திறந்த தார்ப்பாயினால் அல்லது பிளாஸ்டிக் தாள்களைக் கொண்டு மூடிய லாரிகளில் மூலப்பொருள் கனிமங்களைப் பாதுகாப்பின்றி எடுத்துச் செல்வதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

செம்பு மூலப் பொருளில் ஆர்சனிக் நச்சு பொருள் இருப்பதால் அது உடல்நலக் குறைவையும் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாக இருப்பதையும் துறைமுகத் தொழிலாளர்களுக்கு உடல்நலக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதையும் அதன் காரணமாகவே குறைந்த தரமுடைய செம்புக் கனிம மூலப்பொருள் “முட்டாள்களின் தங்கம்” என அழைக்கப்படுவதையும் நீதிமன்றம் பதிவு செய்தது.

வேதாந்தா நிறுவனம் இறக்குமதி செய்யும் செம்புக் கனிமத்தின் தரத்தை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சோதனையிடுவதில்லையெனவும் நீதிமன்றம் கூறியது.

சுற்றுச்சூழல் உணர்வற்ற வேதாந்தா நிறுவனம் இன்று வரையில் பசுமை வளைய நிபந்தனைகளை கடைப்பிடிக்கவில்லையெனவும் 1995-லிருந்து 2018 வரை முறையான அனுமதியில்லாமல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கியது அதிர்ச்சி தருகின்ற உண்மையெனவும் நீதிபதிகள் குறிப்பிடுகின்றனர். தீர்ப்பின் 516-ஆம் பத்தியில் பல்வேறு நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாய உத்தரவுகளின் அடிப்படையில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை இயங்கியதையும் இசைவாணை இல்லாமலேயே 01.04.2000 முதல் 18.04.2005 வரை தொழிற்சாலை இயங்கியதையும் 16 வருடங்கள் 92 நாட்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவாணை இல்லாமல் இயங்கிய ஸ்டெர்லைட் தொழிற்சாலை 10 வருடங்கள் 2 மாதங்கள் 15 நாட்கள் இடர்தரும் கழிவு மேலாண்மை அனுமதி இல்லாமல் இயங்கியதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஸ்டெர்லைட் தொழிற்சாலையை கண்காணிக்க வேண்டிய, ஒழுங்குப்படுத்தக்கூடிய¸ சீர்செய்யக் கூடிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஒழுங்குப்படுத்துவதற்கு மாறாக கையறு நிலையில் இருந்ததையும்¸ ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் முந்தைய நடத்தைகளை கருத்தில் கொண்டு அரசு அதை மூட உத்தரவிட்டதைத் தவிர வேறு வழி ஏதுமில்லை எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

2017-2018-ஆம் ஆண்டுகளில் செம்பு உற்பத்தியின் போது துணைப் பொருளாக உருவான 721.59 மெட்ரிக் டன் ஆர்சனிக் கனிமத்திற்குக் கணக்கு இல்லையென்றும் அந்த ஆர்சனிக்கானது சுற்றுச்சூழலில் கலந்திருக்கும் எனவும், வேதாந்தா நிறுவனம் செம்பு கனிமத்தை வேறு வேறு நாடுகளில் இருந்து பெறும் போது அதிலுள்ள ஆர்சனிக் வேதி பொருளின் அளவு மாறுபடும் எனவும் ஆர்சனிக் ஒரு இடர்தரும் கழிவுப் பொருள் எனவும் இடர்தரும் கழிவுப்பொருளின் மேலாண்மை அனுமதியில்லாதப் போதிலும் செம்பு உற்பத்தியின் துணைப் பொருளாக உருவான ஆர்சனிக் எவ்வித கட்டுப்பாடுமின்றி வெளியேற்றப்பட்டதையும் 2004-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலை வளாகத்திலேயே ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள ஆர்சனிக் அடங்கிய செம்பு கழிவுகள் குவித்து வைக்கப்பட்டதையும் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறமாலேயே ஆலை விரிவாக்கப்பட்டு இருந்ததால் நீர் மற்றும் காற்றுச் சட்டத்தின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டுமென நீதிபதிகள் சுட்டிக்காட்டினார்.

இடர்தரும் கழிவுகளை கையாளும் உட்கட்டமைப்புகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் இல்லையென்பதையும் குவித்து வைக்கப்பட்டுள்ள செம்புக் கழிவுகளிலிருந்து கழிவு நீர் கசிவு ஏற்படுவதால் அவற்றிலிருந்து ஆர்சனிக் கசிந்து நிலத்தை அடைவதையும் மறுக்க முடியாது எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

இடர்தரும் கழிவுகளை மகராஷ்ட்டிராவில் உள்ள திருவாளர் சுகான்ஸ் கெமிக்கல் நிறுவனத்திற்கு  கொடுத்தப் போதிலும்¸ சுகான்ஸ் கெமிக்கல் நிறுவனம் பெருமளவிலான இடர்தரும் கழிவுகளை கையாள அனுமதிப் பெறவில்லையெனவும்¸ தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இடர்தரும் கழிவு மேலாண்மை விதிமுறைகளை பின்பற்றவில்லையெனவும்¸ சுகான்ஸ் கெமிக்கல் நிறுவனத்தின் கழிவு கையாளும் திறன் நிக்கல் கழிவுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்ட கழிவு மேலாண்மை நடைமுறைகள் திருப்தியளிப்பதாக இல்லையெனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மார்ச் 23, 2013 அன்று உருக்காலை கூரையில் குளிரூட்டி குழாயில் ஏற்பட்ட ஓட்டைக் காரணமாக உருக்காலை மூடப்பட்டதாகவும் அதிகாலை 4 மணியளவில் மாற்று வழியில் செம்புக் கரைசல் செலுத்தப்பட்டதாகவும் அந்நேரத்தில் காற்றின் திசையால் கந்தக வாய்வு தூத்துக்குடி நகருக்குள் புகுந்து பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாகவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவிப்பு தெரிவிக்கிறது. அந்நேரத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றுக் கவனிப்பு மையத்துடன் ஸ்டெர்லைட் ஆலையின் கந்தக வாய்வு வெளியேற்றக் கண்காணிப்பு கருவியுடன் இணைக்கப்படவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையின் காற்று வாய்வு வெளியேற்ற அளவு குறித்த அறிக்கைகள் கையால் எழுதப்பட்டதாக இருப்பது மிகச்சிறந்த தொழில்நுட்பங்களைத் தங்களது தொழிற்சாலையில் புகுத்தியதாகக் கூறியப்போதும் வேதாந்தா நிறுவனத்தின் அறிக்கைகள் கையால் எழுதப்படுதப்பட்டதாகக் கூறுவது நம்பும்படியாக இல்லை எனவும் கந்தக வாயு வெளியேறிய நிகழ்வுக்காக 5 நாட்கள் 133 குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி மாவட்ட நிர்வாகத்தால் ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டு இருந்ததையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

ஸ்டெர்லைட் நிறுவனம் கந்தக வாய்வு கசிவின் போது தங்கள் நிறுவன மென்பொருள் சரிசெய்வதற்காக சில பராமரிப்பு வேலைகளை செய்ய வேண்டிய இருந்ததால் அவ்வாறு சரி செய்வது வரையில் தங்களது மென்பொருளை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மென்பொருள் அமைப்புடன் இணைக்க முடியவில்லை என்று கூறுவது நம்பும்படியாக இல்லை என்பதும் காற்றின் தர பரிசோதனை கருவியானது கூடுதல் அளவு எதையும் பதிவு செய்யவில்லை என்று கூறுவது ஸ்டெர்லைட் நிறுவனத்தை பொறுப்பிலிருந்து விடுவிக்காது எனவும் 5 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் பொது மக்களை கண் எரிச்சல் ஏற்பட்டு அவர்கள் மருத்துவர்களிடம் சென்றதும் பொது மக்களைப் பரிசீலித்த மருத்துவர்களும் வாக்குமூலங்கள் கொடுத்திருப்பது அந்நிகழ்வை உறுதி செய்கிறது எனவும் தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

ஐந்து நாட்கள் தொழிற்சாலையை மூடி மறுபடியும் தொடங்கியதை மாவட்ட நிர்வாகம் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தெரிவிக்கவில்லை என்றும் 2008-ஆம் ஆண்டில் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியில் சமூக மருந்தியல்; துறையில் நடத்திய ஆய்வறிக்கை ஒன்றில் தொழிற்சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் 80,725 பேர்களைப் பரிசோதனை செய்ததில் மூளைக் கட்டிகள் ஏற்படும் விகிதம் ஆயிரக்கணக்கான மடங்கு தேசிய அளவைவிட அதிகமாகவும் 12.6 விழுக்காடு மரணங்களையும், நரம்பியல் நோய்களையும் பிற நோய்களையும் கண்டறிந்தனர்.

ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தங்களது 4,000 தொழிலாளர்களுக்கு எவ்வித சுகாதார இடர்பாடுகளும் நேரவில்லை என்றக் கூற்றை நிராகரித்த நீதிமன்றம் திருநெல்வேலி மருத்துவ கல்லூரியின் அறிக்கையை ஏற்றுக் கொண்டது.

எம்.சி.மேத்தா¸ வேலூர் சிட்டிசன் வெல்பர் அசோசியேஷன் வழக்கு¸ இந்தியன் கவுன்சில் பார் லீகல் ஆக்சன் வழக்கு¸ திருப்பூர் டையிங் அசோசியேஷன் வழக்கு போன்ற ஏராளமான வழக்குகளை அலசி ஆராய்ந்த உயர்நீதிமன்றம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொருளாதார நலன்களை விட மேலானது என கூறியது. முன்னெச்சரிக்கைக் கோட்பாடு தங்கள் வழக்குக்குப் பொருந்தாது என்ற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாதத்தை மறுத்த உயர்நீதிமன்றம் 2013-ஆம் ஆண்டு மாசுப்படுத்துபவர் காசுக் கொடுக்க வேண்டும் என்ற கோட்பாட்டின்படி ரூ.100 கோடி ஸ்டெர்லைட் நிறுவனம் கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைச் சுட்டிக் காட்டிய நீதிபதிகள்¸ ஆலையை மூடும் உத்தரவு பொது மக்கள் போராட்டத்தின் விளைவால் முழங்காலில் தட்டினால் காலை உதறும் நிலைபோல நிகழ்ந்தவை அல்ல என்றும்¸ ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக சமூக வலைதளங்களில் உலா வந்த செய்திகளை வதந்திகள் எனக் கூறுவதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

1997-லிருந்து 2018 வரையில் தொழிற்சாலை வளாகத்தில் நடந்த ஏராளமான விபத்து மரணங்களையும் நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டிய நீதிமன்றம் நாட்டின் செம்பு தேவையை இறக்குமதியும் உள்நாட்டில் உள்ள வேறு தொழிற்சாலைகளும் நிறைவு செய்யும் என்ற மாநில அரசின் வாதத்தையும், மாநில அரசோ அல்லது மாசுக்கட்டுப்பாட்டு வாரியமோ கெட்ட நோக்கத்தினால் தொழிற்சாலை மூடி விட்டதாகக் கூறாதாதக் காரணத்தாலும், மாசுக்கட்டுப்பாட்டு  வாரியத்தின் நிபந்தனைகளை ஸ்டெர்லைட் நிறுவனங்கள் மீறியதாலும் தூத்துக்குடியைத் தவிர மகாராஷ்டிராவிலும் இதே போல் மாசு ஏற்படுத்தியதால் மக்கள் கிளர்ச்சியால் தொழிற்சாலை அங்கிருந்து அகற்றப்பட்டதையும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் பதிவு செய்தனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டங்கள் ஒரு சிலரால் மட்டும் எடுக்கப் படுவதாகவும், தூத்துக்குடி சென்னையை விடப் பாதுகாப்பானது என்ற ஸ்டெர்லைட் நிறுவனத்தின் வாதத்தையும் நீதிமன்றம் நிராகரித்தது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பத்தாவது தொகுப்பில் இதுகாறும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொடுத்தப் புகார்களை கருத்தில் கொண்ட நீதிபதிகள் மத்திய அரசின் புள்ளி விவரங்களின் படியே தூத்துக்குடி நகர் இந்தியாவிலேயே மாசுபட்ட நகர்களில் தமிழ்நாட்டிலுள்ள ஒரே நகராக விளங்குவதையும்¸ எனவே தூத்துக்குடி சென்னையை விடப் பாதுகாப்பானது என்ற வாதம் தவறானது எனவும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

திருமிகு.பாத்திமா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு 21547/2019 ஆலையை முற்றிலுமாக அங்கிருந்து அகற்ற வேண்டும் என்ற வேண்டுகோளைக் கொண்டிருந்தது. அந்த நீதிப்பேராணையானது மதுரை உயர்நீதிமன்றத்தில் சிப்காட் நிறுவனம் நில ஒப்படைப்பை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த நீதிப்பேராணையுடன் மதுரையில் விசாரிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.

மேலும், காற்று மற்றும் தண்ணீர் சட்டங்களின் கீழ் இசைவாணைகளைப் புதுப்பிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுகள் செல்லும் என உறுதி செய்தது. இது தவிர தொழில் பாதுகாப்பு இணை இயக்குநர்¸ பாய்லர் இயக்குநர்¸ தீயணைப்புத் துறை இயக்குநர் ஆகியோர் ஆலைக்குக் கொடுத்த அனுமதியை ரத்து செய்ததையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.

இறுதியாக  ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவை எதிர்த்த நீதிப்பேராணையையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

படிக்க :
♦ அனல் மின் நிலையம் : அதானிக்காக தளர்த்தப்படும் காற்று மாசுபாடு வரம்புகள் !

♦ ஸ்டெர்லைட் : வேதாந்தாவிற்கு வளைந்து கொடுக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் !

இந்தியாவில் 60 விழுக்காடு மருத்துவ உயிர்வளி உற்பத்தி செய்யும் ஐனாக்ஸ் போன்ற தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கும்போது, உயிர்வளி உற்பத்திக்காக 22 வருடங்கள் அனுமதிப் பெறாமல் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தி காற்றுச்சட்ட விதிமீறலுக்காக மூடப்பட்ட வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தொழிற்சாலை தற்காலிகமாகத் திறக்கப்பட விடியல் தரப்போகும் கட்சிகளும் ஆதரவளித்தது சரியான முடிவாகத் தெரியவில்லை. விடியல் வேதாந்தாவிற்கா என நான்கு மாதங்களுக்கு ப்பின்னரே தெரியும்.

ஆகஸ்டு 18, 2020 அன்று இந்தியா சுற்றுச்சூழல் சட்ட வரலாற்றில் நிலைத்து நிற்கும் தீர்ப்புகளில் ஒன்றாக உயர்நீதிமன்றம் வழங்கியது. அத்தீர்ப்பை உச்சநீதிமன்றம் மாற்றாது என்று நம்புவோமாக!

தி.லஜபதி ராய்
மதுரை-20

30.04.2021

(நன்றி நவிலல் :உதவிய தோழர்கள் புஷ்பவள்ளி, நர்கிஷ், சீனி சையத் அம்மா, பாலமுருகன் ஆகியோருக்கு நன்றி)

நன்றி : Lajapathi Roy முகநூலில்

disclaimer

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்

கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வரும் நிலையில், மக்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதைக் காரணமாக வைத்து, ஆக்சிஜன் தயாரித்து தருகிறேன் என்ற பெயரில் தூத்துக்குடியில் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முற்படுகிறது வேதாந்த குழுமம். அதற்கு அரசியல் கட்சிகள், உச்ச நீதிமன்றம், மத்திய-மாநில அரசுகள் அனைத்து துணை நிற்கிறது.

தூத்துக்குடி மக்களை கேன்சரில் சாகடித்த, காற்றை நஞ்சாக்கிய, எதிர்த்து போராடிய மக்களை கைக்கூலி அரசை கொண்டு சூட்டுக்கொன்ற ஸ்டெர்லைட் தற்போது மக்களுக்கு ஆக்சிஜன் தருகிறேன் என்று சொல்வது ஏமாற்று என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி மண்ணில் இருந்து நிறந்தரமாக அகற்ற வேண்டும் என்பதே அவர்களின் போராட்ட முழக்கம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிறந்தரமாக அகற்ற கோரும் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலம், புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலை காணொளி வடிவில் வெளியிடுகிறோம்!

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல்இசை :
புரட்சிகர கலைக்குழு, தருமபுரி
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
செல்: 97901 38614

சமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள் !

பெயர் : Gopinath P
கணக்கு எண் : 6720415617
வங்கி விவரம் : Indian Bank, Pennagaram Branch
IFSC NO : IDIB000P076

பாடல் வரிகள் :

வீரவணக்கம் ! வீர வணக்கம் !
ஸ்டெர்லைட் போரில் உயிர்நீத்த
தியாகிகளுக்கு வீரவணக்கம் ! (2)

விடமாட்டோம் விடமாட்டோம்
ஆலையை திறக்க விடமாட்டோம் (2)

தூத்துக்குடி தியாகிகளின்
உதிரம் இன்னும் காயல
ஸ்டெர்லைட்டை விரட்டாமல்
எதிர்காலமே இல்ல இல்ல (2)
கட்சிகளெல்லாம் ஒரே கூட்டணி
கார்ப்பரேட்டுக்கு கைக்கூலி (2)

மாண்டுப்போன தியாகிகள் உயிறு
கேள்வி கேக்குது பதில்சொல்
பதில்சொல் பதில்சொல்
கேள்வி கேக்குது பதில்சொல் (2)

மீண்டும் வருது நச்சுக்காத்து
நிதீமன்றம் அடிக்குது கூத்து (2)
மக்களுக்கில்ல மக்களுக்கில்ல
கலெக்டரும் போலீசும்
அடியாளு அடியாளு (2)
கார்ப்பரேட்டுக்கு அடியாளு (2)

ஆக்சிஜனை கொடுக்கிறேனு
கதை அலக்கிறான் டி.வி.யில
விஷ காத்துல கொன்னவன்
நல்ல காத்து கொடுக்கிறானாம் (2)
கேலிக்கூத்து கேலிக்கூத்து
கைக்கூலிகளின் கேலிக்கூத்து (2)

உதவது உதவாது
பாராளுமன்றம் உதவாது
இறங்கிடுவோம் இறங்கிடுவோம்
வீதியில் உடனே இறங்கிடுவோம். (2)

வீடியோ ஆக்கம்
வினவு

கொரோனா காலத்தில் மன வலிமையை உயர்த்துவது எப்படி? || மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கோவிட்டுக்கு பின்னால் உள்ள உளவியல் சிக்கல்
எப்படி மீள்வது ?

ங்கு நம் சமூகத்தில் கொரோனாவை இரண்டு விதமாக அணுகுகிறார்கள். நோய் தொற்று வரும் வரை கொரோனா என்ற ஒன்றே இல்லை என்பது போலவும், கொரோனா வந்து இறப்பவர்களை ஏளனம் செய்தும், கொரோனா நோயை வைத்து கேலி பேசியும், இது இலுமினாட்டி சதி பொய் புரட்டு என்று கண்ட கதைகளையும் படித்து விட்டு அலட்சியத்துடனே பொழுதைக் கழிப்பார்கள். ஒரு நாள் இவர்களின் அலட்சியத்தின் விளைவால் தொற்றை அடைந்த பிறகு, உலகமே இருண்டது போலவும் மரணம் நெருங்கிவிட்டதைப் போலவும் அழுது அரற்றுவார்கள்.

படிக்க :
♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

♦ கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

நான் கூறுகிறேன். கொரோனா பெருந்தொற்றை அதன் சரியான தன்மையோடு அணுகத் தொடங்கிவிட்டால் நம் மனம் சஞ்சலமடைவதை தவிர்க்கலாம். கொரோனா தொற்று என்பது எளிதில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்பதை மனதார ஏற்க வேண்டும். கோவிட் நோயின் அறிகுறிகள் தோன்றினால் உடனே பரிசோதனை செய்து நோயைக் கண்டறிதல் வேண்டும்.

கோவிட் நோய் ஏற்பட்ட அனைவரும் மரணமடைவதில்லை என்பதையும் மனதில் பதிய வைக்க வேண்டும். கண்டறியப்படும் ஒவ்வொரு 100 கொரோனா நோயாளியிலும் 1.2 பேர் மட்டுமே மரணமடைகிறார்கள். எனவே, நோய் தொற்றும் அனைவரும் மரணமடைந்து விடுவோம் என்று எண்ணுவது தவறான எண்ணமாகும். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு 100 நோய் தொற்றாளரிலும் 80 பேருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாமலோ அல்லது மிகச்சாதாரண அறிகுறிகளுடன் அடுத்த நிலைக்குச் செல்லாமலே எந்த சிகிச்சையும் இன்றி நோய் குணமாகின்றது.

எத்தனை உருமாற்றமடைந்த கொரோனா வந்தாலும் இந்த 80:20 விகிதம் இன்னும் பெரிதாக மாறவில்லை. எனவே தொற்று அடையும் ஐந்தில் இரண்டு பேருக்கு சாதாரணமாக கொரோனா விடைபெற்று சென்றுவிடும். இவர்களுக்கு இலவசமாக கொரோனாவுக்கு நோய் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தந்து சென்று விடுகிறது.

எனவே, கொரோனா ஏற்பட்டவர்கள் சந்தோசமாக இருங்கள். உங்களுக்கு தொற்றுக்கான எதிர்ப்பு சக்தி கிடைக்க இருக்கிறது. பதட்டமடையாதீர்கள். பதட்டமடைவதால் இதயம் அதிகமாக துடிக்கும். மூச்சு விடுவது அதிகமாகும். மூச்சு இரைக்கும். இது ஏதோ மூச்சுத் திணறல் நிலை ஏற்பட்டதைப் போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும். அச்சமின்றி எச்சரிக்கை உணர்வுகள் அறிகுறிகளைக் கவனித்து வாருங்கள் அது போதுமானது.

கொரோனா நோயில் உளவியிலில் இன்னுமொருப் பிரச்சனை “தனிமை”. முதலில் தொற்றை அடைந்தவர்கள் முன்கூட்டியே புரிந்துக் கொள்ள வேண்டியது, தொற்றை அடைந்த உங்களுக்கு அதைப் பிறருக்கு கடத்தி விடக் கூடாது என்பதில் பொறுப்புணர்வு இருக்கிறது. அதனால்தான் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கிறீர்கள். தனிமைப்படுத்தப்படும் போது, பெரும்பாலும் தங்களது அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளுக்கும் தேவைகளுக்கும் மனைவியை தாயை நம்பியருக்கும் ஆண்கள்தான் அதிகம் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

காரணம் தங்களை அன்றாடம் கவனித்துக் கொண்ட அந்த கவனிப்பு இல்லாமல் போய் விடுகிறதல்லவா ? அதுதான் அங்கு மன வலிமையில் முதல் அடியாக விழுகிறது. எனவே, இன்றிலிருந்து அவரவர் வேலையை அவரவர் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். இது கொரோனா தனிமைக் காலத்தில் மனவலிமையுடன் இருக்க உதவும்.

அடுத்து நோய் குறித்த எச்சரிக்கை உணர்வு மட்டும் இருந்தால் போதும். அச்சமின்றி தனிமைக் காலத்தில் தங்களுக்கு விருப்பமான முறையில் காலத்தைக் கழிக்கலாம் விருப்பமான நாவல் / புத்தகங்களைப் படிக்கலாம். விருப்பமான திரைப்படங்களை ஓடிடி தளங்களில் பார்க்கலாம். முகநூலில் அதற்கு ரிவியூ எழுதலாம். விருப்பமான இசை அமைப்பாளரின் பாடல்களை கேட்கலாம். சமய நூல்கள் படிக்க விரும்புபவர்கள் அவற்றை படிக்கலாம்.

முகநூல்/ வாட்சப் செயலிக்கு வருவது மன அமைதியை சீர்குலைப்பதாக தோன்றினால் அந்த செயலிகளை தனிமை காலங்களில் டெலிட் செய்துவிடலாம். தயவு செய்து கூகுள் மூலம் கோவிட் நோய் குறித்த தகவல்களை தேவைக்கு மீறி படித்து மன அமைதி குலையும் நிலைக்குச் செல்ல வேண்டாம்.

வீட்டில் தனிமைப்படுத்திக்  கொள்ளும் போதும் உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருடன் / செவிலியருடன் தொலைப்பேசியில் தொடர்பில் இருப்பது சிறந்தது. தினமும் ஒரு முறை பேசலாம். வீட்டில் உள்ள பிறரிடம் தேவையான இடைவெளியை பேணி பேசிக் கொண்டிருக்கலாம். மருத்துவமனையில் தனிமை படுத்திக் கொண்டிருந்தால் வீடியோ கால் செய்து உறவுகளுடன் பேசலாம்.

இவையனைத்துக்கும் மேல் மன உளைச்சல் / மன அமைதி குலைந்தது போலத் தோன்றினால் உடனே சைக்கயாட்ரிஸ்ட் (மனநல மருத்துவர்) சைக்காலஜிஸ்ட் (மனநல ஆலோசகர்) உதவியை நாடவேண்டும். தேவைப்பட்டால் கட்டாயம் மன அமைதி மருந்துகள் தேவைப்படலாம்.  தன்னை வருத்திக் கொள்ள வேண்டும் / தன் உயிருக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றினால் உடனே மனநல மருத்துவரை அழைத்துப் பேசிட வேண்டும்.

உடனே மருந்துகள் வழங்கினால் இந்த நிலையில் இருந்து சரியாக முடியும். மிகவும் தேவைப்பட்டால் இவர்களுடன் ஒரு உறவினரை போதுமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இருக்கவும் அனுமதி அளிக்கலாம்.

படிக்க :
♦ விவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்

♦ கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம் || ஜயதி கோஷ் || கணியன்

கொரோனா சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தவர்களை உறவினர்கள் சிறப்பான அன்பைப் பொழிந்து வரவேற்க வேண்டும். அவர்கள் மீது அருவருப்பு செய்து ஒதுக்கக் கூடாது. தனிமைக் காலத்தை முழுமையாக முடித்தவர்களிடம் இருந்து நோய் பரவாது எனவே, ஒதுக்குதல் அவசியமற்றது.

கொரோனா நோயாளிகளை உடலால் தான் தனிமைப்படுத்தி வைக்கிறோமே அன்றி, மனதால் அரவணைப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். மீண்டும் கூறுகிறேன், கொரோனா என்றாலே “மரணம்” என்று அர்த்தம் இல்லை. தயவு செய்து அஞ்சாதீர்கள். எச்சரிக்கை உணர்வு போதுமானது. அலட்சியம் ஆபத்தானது அச்சம் தேவையற்றது. மன நலம் முக்கியமானது.

நன்றி !

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை

கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

கொரோனா தாக்குதல் : அவலத்தின் உச்சத்தில் இந்திய மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி மற்றும் அரசியல் கட்சிகள் !

உலகின் மிகப் பெரிய நாடான இந்தியாவில் தடுப்பூசிகள் மட்டுமல்ல, ஆக்சிஜன், ரெம்டெசிவிர், ஃபாவிபிராவிர், ஐவெர்விமெக்டின், டாகஸ்சைக்ளின், ஆஸித்ரோமைசின், ஸின்க் அடிப்படையாகக் கொண்ட துணைப்பொருள்கள், பி.பி.இ கிட்ஸ், ஆம்புலன்ஸ்கள், மருத்துவனைப் படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், RT-PCR பரிசோதனை சக்தி, சுடுகாடுகள் எல்லாமே பற்றாக்குறையாகவே இருப்பதையும், இதன் காரணமாக மக்களின் கொடுமையான அனுபவங்களையும் சமூக ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன.

தினமும் பல்வேறு தரப்பினரிடம் விவாதம் என்ற பெயரில் பேசி வரும் மோடியோ, நாடு எல்லாவற்றிலும் சிறப்பாக இருப்பதாக கூறுவதுடன் பிரச்சனைகளை சந்தித்து வெற்றி பெறப்போவதாக இரண்டு கைகளையும் உயர்த்தி கர்ஜிக்கிறார். ஆனால், அதற்கான எந்த திட்டமும் இதுவரை மோடியிடம் இல்லை என்பது மட்டுமல்ல, இந்தியாவின் இத்தகைய அவல நிலைக்கு காரணமே மோடி தான் என்பதை, டைம்ஸ் பத்திரிக்கை உட்பட அயல்நாட்டு பத்திரிக்கைகள் அம்பலபடுத்தி வருகின்றன.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?
♦ போர்கால அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பொதுத்துறை ஊழியர்கள் !

ஊருக்கே வெளியே இருந்த இடுகாடுகள், பூங்காக்களிலும் மைதானங்களிலும் காலிமனைகள் உட்பட இடம் மாறிவிட்டன. இதுவும் பற்றாக்குறையாக இருப்பதால் எரியூட்டப்படுவதற்குப் பிணங்களை வரிசையாக வழியெங்கும் வைத்திருக்கும் அவலங்களை அனைத்து ஊடகங்களும் காட்டுகின்றன. தகனம் செய்யும் தளங்களில் தொடர்ந்த எரியூட்டுவதன் காரணமாக அதிலிருக்கும் உலோக தளங்கள் உருகி வழிகின்றன.

ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கும் மருத்துவமனைப் படுக்கைகளுக்காகவும் சுற்றி சுற்றி அலைகையில், நமக்கு அன்பானவர்கள் தெருக்களிலும் சுற்றுச் சுவர்களிலும் எரியூட்டப்படும் இடங்களில் வரிசையில் இடம்பிடித்துப் புதைக்க இடம் இல்லாமல் தூக்கிக் கொண்டு அலையும்போது மனித மாண்புகள் மற்றும் கெளரவங்கள் கிழிந்து கிடக்கின்றன.

இந்தப் பிணக்குவியல்கள் மேலே நின்று கொண்டுதான் ஒரு நபர் ஜனநாயகத்தை காப்பாற்றப் போவதாகப் பேசுகிறார்.

குடும்ப நண்பர்கள், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் யாராவது சொந்தக்காரர்கள் என ஒவ்வொரு குடும்பத்திலும் உறுப்பினர்களில் யாராவது ஒருவர் தங்களுடைய உறவினர்களுக்காக, அன்பானவர்களுக்காக, இந்த கொளுத்தும் வெயிலில், உயிர்காக்கும் மருந்துக்காக, ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக, அதிகாலை முதல் நீண்ட வரிசைகளில் கண்களில் ஏக்கத்துடன் நிற்கின்றக் கொடுமையான அவலநிலையை தினம் தினம் ஊடகங்களில் பார்க்கிறோம்.

இந்த அவலங்களில் பெரும்பகுதி தலைநகர் டெல்லியில் மோடியின் கண்களுக்கு எதிராக நடந்து வருகிறது. துல்லியமானத் தாக்குதலை நடத்தியதாகப் பெருமைபட்டுக் கொண்ட மோடி அரசு உயிர்காக்கும்  மருந்துகளை எளிதாகக் கிடைக்க செய்ய அல்லது கள்ளச் சந்தைக்கு கைமாறாமல் இருக்க ஏன் துல்லியத் தாக்குதலைக் கையிலெடுக்கவில்லை ? அதற்கு பதில் தினமும்  ‘வாயால் வடை சுடுகிறார்’ பிரதமர் மோடி.

உலகிலேயே தடுப்பூசிகள் உற்பத்தியில் பெரிய அளவில் இருக்கக் கூடிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றாக்குறை எதனால் ஏற்பட்டது?

கொரோனாவின் முதல்அலை எதிர்பாராதது என்றீர்கள். அதனால், தட்டெடுத்து தாளம் போட சொன்னீர்கள் விளக்கேற்ற சொன்னீர்கள். சங்கு ஊத சொன்னீர்கள். எவ்வித முன்னேற்பாடின்றி திடிரென ஊரடங்கு அறிவித்தீர்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் பிழைப்புக் கெட்டுப்போய் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஆயிரக்கணக்கான மைல்கள் நடக்க நேர்ந்தது.

நடந்தார்கள் என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின்னால் எத்தனை எத்தனை அவலங்கள் ! மாநில எல்லையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானங்கள் ! அநீதிகள் !  வயதானவர்கள் குழந்தைகள் ! வெட்டவெளியில் ஒதுங்கக் கூட நிழல் இல்லாமல் நடந்தக் கொடுமைகள் ! அதனால் ஏற்பட்ட இறப்புகள் ! தற்கொலைகள் ! சாலை விபத்துகள் ! ரயில்வேப் பாதைகளில் ஓய்வு எடுத்தவர்கள் மருத்துவ உதவி கிடைக்காதவர்கள் ! போலீசின் தாக்குதலால் இறந்தவர்கள் ! பசிப் பட்டினியால் இறந்தவர்கள் ! ஷராமிக் ரயில்களில் இறந்தவர்கள் என ஆயிரக்கணக்கில் அனாதைகளாக இறந்தக் கொடுமை ! இதை விடவும் கொடுமை இந்த புலம்பெயர் தொழிலாளர் பற்றி எவ்வித விவரங்களும் இறப்பு விவரங்கள் புலம்பெயர்ந்த விவரங்கள் மொத்தம் எத்தனை பேர் என்பது உட்பட எந்த விவரத்தையும் தங்களது அரசு பராமரிக்கவில்லை என நாடாளுமன்றத்தில் அறிவித்ததுதான்.

ஒரு வைரஸ் பரவலும் அதனால் திடிரென எவ்வித முன்னறிவிப்போ திட்டமோ இல்லாமல் தான்தோன்றித்தனமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கும் இந்திய மக்களின் வாழ்க்கையை புரட்டிப் போட்டு பொருளாதார ரீதியில் பல பத்தாண்டுகள் பின்னோக்கி தள்ளியது. இந்த அனுபவங்கள் எதுவும் மத்திய அரசையோ மோடியையோ சிறிது கூட சிந்திக்க தூண்டவில்லை என்பது இந்தியாவின் துரதிஸ்டம்.

இரண்டாவது அலை மிக வேகமாக உலக நாடுகளில் பரவிய போது இந்தியாவை சேர்ந்த எதிர்கட்சி தலைவர் வல்லுநர்கள் மருத்துவர்கள் அபாயத்தை பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தனர். உலக நாடுகள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கையிருப்பில் வைத்துக் கொண்டு மக்களைக் காப்பாற்ற முயற்சி செய்து கொண்டிருந்த போது, மோடியோ  தேர்தல் திருவிழாவில் நாட்டை மூழ்கடித்து கும்மியடித்துக் கொண்டிருந்தனர். பிணக்குவியல்களின் மேலே நின்றுக் கொணடு ஜனநாயகத்தைக் காப்பாற்றுகிறேன் என்று தேர்தல் கமிசனும் மத்திய அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த 365 நாட்களும் எந்த அரசியல் கட்சிகளும் மக்களின் துயர் துடைக்க வீதிக்கு வந்துப் போராடவில்லை. அப்பாவி மக்கள் தங்களது பிரச்னைகளுக்காக தாங்களே கஷ்டப்பட்டு கொண்டிருந்தார்கள் என்பது மிகப்பெரிய அவலம் ! சாவின் வாயிலில் மக்கள் நின்று கொண்டு இருந்த போதும் அவர்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் ஓட்டுகளைப் பறிக்கக் காத்து கிடந்தனர்.

பிரதமர் நரேந்திர மோடியோ “மேற்கு வங்கத்தின் கடைசி கட்ட தேர்தலில் அனைவரும் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவில் கலந்துக் கொள்ள சொல்லி” ட்வீட் போடுகிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் உலகமே கண்டிராத வகையில் 4 லட்சம் புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இது பற்றி எந்த கவலையும் மத்திய அரசாங்கத்தக்கோ அரசியல் கட்சிகளுக்கோ ஏன் மக்களுக்கோ கூட இல்லாமல்தான் இருக்கிறது. இன்றைய தினம் எக்சிட் போல் பற்றிதான் நாடெங்கும் பேச்சாக இருக்கிறது. இந்த நாட்டில் அரசாங்கம் செய்கிறத் தவறுகளைப் பற்றி எந்த விதமான சீரியஸ் நெஸ் சும் மக்களிடம் இல்லாதப் போது இந்த அரசியல்வாதிகள் நம்மை ஏமாற்றும் வேலையைத்தான் பார்த்து வருவார்கள்.

நாம் எந்தவித கேள்விகளும் கேட்காதபோது தாங்கள் விரும்பும் குரங்காட்டத்தில் தள்ளிவிடத்தனத்தான் பார்ப்பார்கள். இதைத் தாண்டி ஒரு அரசாங்கம் இப்படிப்பட்டதொரு பேரழிவு காலத்தில் மக்களுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்யாமல் தான் சார்ந்திருக்கக் கூடிய கட்சிக்கு முழுநேரமாக வேலை பார்த்த்தை பற்றி எந்தவித கேள்விகளும் கேட்காமல் அனுமதிக்கிறோம். அவர்களுக்காகவே அவர்களுடன் தேர்தல் களத்திலும் குதித்துவிட்டோம்.

நாட்டில் என்ன நடந்தாலும் பரவாயில்லை அதிகாரத்தில் அமர்வது மட்டுமே லட்சியமாகக் கொண்டு பிரதமர் முதல் பரிவாரங்கள் வரை களத்தில் சுற்றி வந்தார்கள். இப்படிபட்டதொரு அபாயகரமானக் காலத்தில் தேர்தல் அவசியமா என எந்த ஒரு அரசியல்வாதியும் கேட்கவில்லை. தேர்தல் நடக்கட்டும் எனக்கு மக்கள் நலன்தான் முக்கியம் பிரச்சாரக் கூட்டங்கள் பேரணிகள் வேண்டாம் என ஒரு பொறுப்பான பிரதமர் கூறியிருக்க வேண்டாமா? பீகாரில் தேர்தல் நடந்தது. மத்தியபிரதேசத்தில் 28 இடங்களுக்கான உ.ப தேர்தல் நடந்தது.

இந்த 28 எம்.எல்.ஏ-க்களையும் விலைக்கு வாங்கி காங்கிரசு ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றியது பாஜக. இதுவும் இதே காலக் கட்டத்தில்தான். தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி என ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதுவும் மேற்கு வங்கத்தில் எட்டுக் கட்டங்களாக எந்தப் பாதுகாப்பு திட்டங்களும் இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டது. அதனுடைய விளைவுதான் இன்றைக்கு இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது கொரோனா.

பிரச்சாரத்திற்காக மட்டுமே ஒவ்வொரு மாநிலத்திலும் ரூபாய் 400 முதல் 500 கோடிகள் வரை செலவிடப்பட்டுள்ளது. சிறிய மாநிலமான புதுச்சேரியில் கூட ரூபாய் 25 முதல் 50 கோடி செலவிடப்பட்டுள்ளது. இப்படி ஆயிரக்கணக்கானக் கோடிகளை வீணாக்கியதற்குப் பதிலாக நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதிகள் செய்திருக்கலாம். ஆக்சிஜன் சிலிண்டர்கள் உற்பத்தியை பெருக்கி இருக்கலாம். இருக்கும் மருத்துவமனைகளில் வசதிகளை அதிகப்படுத்தி இருக்கலாம். உயிர்காக்கும் மருந்துகளை மக்களுக்கு எளிதாகக் கிடைக்க செய்திருக்கலாம். இப்படி எத்தனையோ ‘லாமை’ செய்திருக்கலாம். செய்திருக்க முடியும்.

இந்த கொரோனாக் காலக்கட்டத்தில் பிரதமரின் வேலை இந்த நாட்டு மக்களின் நலனை காப்பதுதான். அவரது அமைச்சரவை சகாக்களின் வேலையும் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவம் உட்பட அனைத்தும் சரியாகக் கிடைக்கிறதா என்பதைக் கண்காணித்து சரிசெய்வதுதான்.

வேறு என்ன வேலைகளுக்கு மக்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து வரிகள் கட்டி அமர வைத்தனர் ? ஆனால், இவர்களெல்லோரும் கடந்த ஒரு ஆண்டாக என்ன செய்தார்கள் ? தேர்தல் திருவிழாவில் குதித்து விட்டார்கள். இந்த அபாயகரமானக் காலகட்டத்தில் எதை செய்திருக்கக் கூடாதோ இந்த காலகட்டத்தில் எப்படி மக்களைப் பாதுகாத்திருக்க வேண்டுமோ அதே காலகட்டத்தில் மக்களை நரபலி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இதன் விளைவைத்தான் ஒவ்வொரு மருத்தவமனையின் வாசலிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பீகார் தேர்தலுக்காக 2020 அக்டோபரிலிருந்து நவம்பர் வரை பிரதமர் மட்டுமே 12 பேரணிகளை நடத்தியிருக்கிறார். மேற்கு வங்கத்தில் 18 பேரணிகள், அசாமில் ஏழு. தமிழகத்தில் ஏழு தேர்தல் பிரச்சார கூட்டங்கள். கேரளாவில் ஐந்து. புதுச்சேரியிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள். மொத்தமாகக் கிட்டத்தட்ட 50 பேரணிகள். ஒரு பிரதமர் தனது மக்கள் கொடூரமான நோய் தொற்றில் சிக்கி சீரழிந்துக் கொத்து கொத்தாக செத்துக் கொண்டிருக்கும்போது 50 நாட்களை தான் சார்ந்த கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செலவழித்திருக்கிறார்.

அதே நாட்களை மக்களைக் காப்பாற்றத் திட்டங்கள் தீட்டி நிறைவேற்ற செலவழித்திருந்தால் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம். உள்துறை அமைச்சர் முதல் பன்னிரண்டு அமைச்சர்கள் வரை தங்களது முழு நேரத்தையும் தேர்தல் வேலைகளுக்கு மட்டுமே செலவழித்துள்ளார்கள். லட்சக்கணக்கில் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்கள் குவிக்கப்பட்டனர். பேரணிகளுக்கும் ஓட்டு வேட்டைக்கும் மக்கள் லட்சக்கணக்கில் அழைத்துவரப்பட்டனர். எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் அவர்கள் திரும்ப சென்ற போது நாடு முழுதும் வைரஸ்களும் பயணித்தன.

அது மட்டுமா? கொரோனா பரவல் உச்சத்தை நோக்கி பயணித்தபோது உத்திரகாண்ட் கும்பமேளாவில் ஒரே சமயத்தில் முதல் நாள் 35 லட்சம் பேர் நதியில் குளிக்கக் கூடினர். மொத்தமாக கிட்டத்தட்ட 70 லட்சம் பேர் அங்கே ஒரே இடத்தில் கூடியிருக்கின்றனர்.  மக்கள் கூட்டமாகக் கூடினால் இந்த நோய் தொற்றின் வேகம் அபாயகரமானது கட்டுபடுத்த முடியாதது என்பது தெரிந்தும் நாகரிகமடைந்த எந்த நாடாவது தனது மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் இதை அனுமதித்திருக்குமா?

நெறிபடுத்த வேண்டிய சுப்ரீம் கோர்ட் கடந்த 365 நாட்களாக நாட்டில் நடக்கும் செயல்களை கண்டு கொள்ளவில்லை. இப்படி உலகத் தொற்று அபாய காலத்தில் எப்படி தேர்தல்கள், கும்பமேளாக்கள்  என்ற பெயரில் லட்சக்கணக்கான மக்களைக் கூட்டுவதுப் பற்றியெல்லாம் ஒரு கேள்வியைக்கூட சுப்ரீம் கோர்ட், மத்திய அரசாங்கத்தையோ – மாநில அரசாங்கத்தையோ கேட்கவில்லை.

கொரோனோ பரவல் இந்த அளவுக்கு வேகமாக மக்களை தொற்றவும் அதன் விளைவான மரணங்களுக்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

தடுப்பூசிகள் கடந்த 60 நாட்களுக்குள்தான் இந்திய மக்களுக்கு கிடைக்க ஆரம்பித்தது. அதுவும் இந்தியாவில் இரண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதித்தது மத்திய அரசு. அதன் விளைவாக உற்பத்தியில் பெரும் பற்றாக்குறை நிலவியது. 140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் வெறும் 10 கோடி பேருக்கு (அதாவது ஒரு சதவீதம் கூட அல்ல) தடுப்பூசி போட்டுவிட்டோம் என்று பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள் மோடியும் பரிவாரங்களும் சங்கிகளும்.

இந்திய மக்கள் தொகையில் 70 சதவிதத்தினருக்காவது தடுப்பூசிகள் போடப்பட்டால்தான் கொரோனா வை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதற்கான நமது தேவை கிட்டத்தட்ட 145 கோடி டோஸ்கள். இப்போதைய நமது உற்பத்தி அளவு மாதத்திற்கே 6 கோடி டோஸ்கள்தான். எல்லாமே நல்ல படியாகப்போனால் 20 முதல் 24 மாதங்கள் ஆகும். அதுவரை மக்களின் உயிரைப் பாதுகாக்கப்போவது யார்? எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம் ! இந்த மலையளவு கடினமானப் பணியை முடிக்க மோடியின் அரசு என்ன தயாரிப்பில் இருக்கிறது?.

விமர்சனம் செய்வோருக்கு இந்தியாவின் எதிரி என்று பட்டம் கட்டி கேவலப்படுத்தவது யோகி போன்றவர்கள் ஆக்சிஜன் இல்லை என்று சொன்னால் தேசப் பாதுகாப்பு சட்டம் பாயும் சொத்துக்களை கைப்பற்றுவோம் என மிரட்டுவது. இப்படித்தான் நடக்கிறது இந்தியாவின் கொரோனாவிற்கு எதிரான இயக்கம்.

இதைப் பற்றி கேள்விகள் எழுப்ப வேண்டிய உள்ளூர் ஊடகங்கள், மெயின்ஸ்டிரீம் ஊடகங்கள் மத்திய அரசாங்கத்துக்கு ஊதுகுழல் வேலை செய்கின்றன. மக்களைப் பார்த்து கேள்வி கேட்கின்றன அறிவுரைகள் சொல்கின்றன !

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த நாட்டை நேசிக்கும்படி மோடியின் பரிவாரங்களும் அரசியல்வாதிகளும் நமக்கு அறிவுறுத்துகிறார்கள். ஆனால், இந்த நாடு அவர்களுக்குக் கொடுத்த அன்பின் மற்றும் கண்ணியத்தின் ஒரு பகுதியைக் கூட திருப்பித் தர மறுத்து இழிவுபடுத்துகிறார்கள்.

இன்னும் எத்தனைக் காலத்துக்கு இப்படி ஏமாளிகளாக இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற அக்கறையின்மை மற்றும் அப்பட்டமான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் சகித்துக் கொண்டு வாழ்ந்து என்ன சாதிக்கப் போகிறோம் ?

படிக்க :
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

இத்தனை அனுபவங்களும் நமக்குப் போதிப்பது ஒன்றைத்தான் நமது பிரச்சனைகளுக்கு நாம்தான் போராடியாக வேண்டும். இன்றைக்கு தெருவில் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசைகளில் நிற்கிறோமே இதை விடவாப் போராட்டம் துன்பத்தை தரப்போகிறது ? மாயையைகளை களைந்தெறியுங்கள் !

நாம் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அரசாங்கம் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு நம்மை  பேசக்கூட அனுமதிக்காது ! அப்போதும், வீதிகளில் நடக்கும் நமது போராட்டங்கள்தான் நமக்கு விடிவை கொடுக்கும் !

உழைக்கும் மக்களுக்குப் போராட்டமே வாழ்க்கை ! வாழ்வதே ஒரு போராட்டமாகத்தான் இருக்கிறது ! இருக்கத்தான் போகிறது ! நாம் என்ன செய்ய போகிறோம் ! ?


மணிவேல்
செய்தி ஆதாரம் : Scroll.in, ROOSTER NEWS

 

கொரோனா தடுப்பூசிகள் பற்றாக்குறை : யார் காரணம் ? பிரச்சனை தீருமா ?

பாரத் பயோடெக்கின் பொது நிதியளிக்கப்பட்ட கோவாக்சின் யாருடைய அறிவுசார் சொத்து ? இந்திய மக்கள் பதில்பெறத் தகுதியானவர்கள்தான்.

ICMR அல்லது அரசாங்கம் அந்த உரிமைகளை வைத்திருக்குமானால் ஒரு உலகத் தொற்று அபாயத்தின் போது, இவை எப்படி தங்களை மதிப்புயர்த்திக் கொண்டன என்பதைப் பற்றி அறிவதற்கான உரிமை இந்திய மக்களுக்கு உண்டு.

சமீபத்தில் பாரத் பயோடெக் மருந்து கம்பெனி அதிகாரப் பூர்வமாக கோவிட்-19 தடுப்பூசி மருந்து கோவாக்சின் விற்பனை விலையை அறிவித்தது. மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.600 எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 எனவும் விலையை நிர்ணயித்து வெளியிட்டது. (கொள்ளை லாபத்தில் ரூ.100 குறைத்துக் கொண்டதாக அறிவித்துள்ளது) சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா தயாரித்து வெளியிட்டிருக்கும் தடுப்பூசி கோவிசீல்டு-க்கு அது நிர்ணயித்திருந்த விலையை விட இது மிக அதிகமாக இருந்தது. விமர்சகர்கள் இந்த விலையேற்றத்தை பல்வேறு கேள்விகளுடன் பார்க்கின்றனர்.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு
♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

சீரம் இன்ஸ்டிட்யூட் தனது தரப்பில் ஸவிடிஸ்-பிரிட்டிஷ் நிறுவனமான அஸ்ட்ராஸெனிகா-க்கு ராயல்டியாக நிதி தரவேண்டும். அதனிடமிருந்துதான் தடுப்பூசி தயாரிப்பதற்கான லைசன்ஸ் பெற்றுள்ளது. ஆனால், பாரத் பயோடெக் யாருக்கும் ராயல்டியாக நிதி கொடுக்க தேவையில்லை. கோவாக்சின் பெரிய அளவில் இந்தியாவின் இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற அக்கறையின்மை மற்றும் அப்பட்டமான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் சகித்துக் கொண்டு வாழ்வது கடினம்தான். அதுதான் உண்மையில் உள்ளது. பொது நிதியைக் கொண்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும்.

கோவேக்சின் SARS-CoV-2 strain-ஐ அடிப்படையாக கொண்டது. புனேயில் உள்ள தேசிய இன்ஸ்டிடியுட் ஆப் வைராலஜி-யில் பிரித்தெடுக்கப் படுகிறது. இந்த நிறுவனம் இந்தியன் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. ICMR இந்த ஸ்ட்ரெயினை பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு வளர்ச்சி மற்றும் உற்பத்திக்காக மாற்றித் தருகிறது.

ICMR 10 மே, 2020-ல் விடுத்த ஒரு அறிக்கை இந்த கூட்டியக்கத்தை பின்வரும் வார்த்தைகளில் விளக்குகிறது.

“தடுப்பூசி மேம்பாட்டிற்கானப் பணி இரண்டு பங்குதாரர்கள் இடையே தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ICMR-NIV தனது தொடர்ந்த ஆதரவை BBIL (பாரத் பயோடெக்)-ன் தடுப்பூசி மேம்பாட்டு பணிகளுக்கு வழங்கி வரும். ICMR மற்றும் BBIL தடுப்பூசி மேம்பாடு கூடுதலாக விலங்குகள் பற்றிய ஆய்வு மற்றும் தனிநபர் தடுப்பூசிக்கான மருத்துவ மதிப்பீடு ஆகியவற்றுக்கான பணிகளை துரிதபடுத்தும் விதமாக விரைவுவழி அனுமதியை கோரியிருக்கிறது”.

ஊடகங்களில் ஓரு ICMR அலுவலர் கூறும் போது “ICMR and BBIL ஆகிய இரண்டும் தடுப்பூசியின் முன்-மருத்துவ மற்றும் மருத்துவ மேம்பாட்டிற்காகக் கூட்டாக வேலை செய்கின்றன” என்றார். தடுப்பூசியின் மருத்துவ சோதனைகளுக்காக 12 இன்ஸ்டிடியுட்களை தேர்வு செய்திருப்பதாக ICMR அறிவித்துள்ளது.

ICMR மற்றும் பாரத் பயோடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையிலானக் கூட்டு வேலை பற்றி பொதுக் களத்தில் கிடைக்கும் விவரங்கள் இவை மட்டுமே. ஆனால், கோவாக்சின் இரண்டு நிறுவனங்களின் நெருக்கமானக் கூட்டுப் பணியின் விளைவுதான் என்று அவை விளக்குகின்றன.

என்றாலும், SARS-CoV-2 திரட்டை பிரித்தெடுத்தல் மற்றும் இதுதொடர்பான குறுக்கீடுகள் பற்றி இதுவரை நமக்கு எதுவும் தெரியாது. தடுப்பூசியை வடிவமைத்தல் மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவற்றுக்கு செலவிடப்பட்ட மொத்த நிதியில் பொது நிதி முதலீட்டின் அளவை எவராலும் அளவிட முடியாது.

ஆனால், தடுப்பூசியை மேம்படுத்துவதில் ICMR-ன் ஈடுபாடு மற்றும் கட்டுபாடும் உண்மையில் கணிசமானது என்பதை வேறுசில குறிகாட்டிகள் தெரிவிக்கின்றன. முதலில் ஜீலை 3-ல் மருத்துவ சோதனைகளை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு ICMR இயக்குநர் பல்ராம் பார்கவா எழுதியிருந்தக் கடிதத்தின் அம்சங்கள் – பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ஒரு நகல் என குறிப்பிடப்பட்டிருந்தது – செய்திகளில் வந்திருந்தன.

அந்த கடித்ததில் “அனைத்து மருத்துவ சோதனைகளும் முடிந்த பிறகு, பொதுச் சுகாதாரப் பயன்பாட்டிற்கான தடுப்பூசியை ஆகஸ்ட் 15, 2020-க்குள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. BBIL (பாரத் பயோடெக் இன்டர்நேசனல் லிமிடெட்) இந்த இலக்கை அடைவதற்காகவே துரிதகதியில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. என்றாலும், இறுதி விளைவு இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ சோதனைத் தளங்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தது.” என்றிருந்தது.

அந்த கடிதம் மேலும், எச்சரித்திருந்தது. “குறிப்பிட்டதற்கு மாறாக நடந்துக் கொள்வது மிகுந்த கண்டனத்துக்குரியதாகப் பார்க்கப்படும் என்பதை அன்புடன் கவனிக்கவும். எனவே, இந்த திட்டத்தை அதி உயர்ந்த முக்கியத்துவம் கொடுத்து எந்தவிதக் காலவிரயமும் இல்லாமல் கொடுக்கப்பட்ட கால அளவுகளை கடைபிடிக்க வேண்டும் என நீங்கள் அறிவுறுத்தப் படுகிறீர்கள்” என்றிருந்தது.

மிக தெளிவாக இந்திய அரசு கோவாக்சினை எந்த வகையிலாவது  2020 சுதந்திரதினத்தன்று அடிப்படை மருத்துவச் சோதனைகளை முடிக்கும் முன்னரே  வெளிக் கொண்டுவர வேண்டும் என்பதில் மிகுந்த அவசரம் காட்டியது. தனது தோழமை நிறுவனங்களுக்கும் பாரத் பயோடெக் உட்பட ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்னாலேயே அவர்களது பணியினை முடிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது.

எந்த அதிகாரத்தின் அடிப்படையில் ICMR-ன் இயக்குநர் ஜெனரல் இப்படியொருக் கடித்ததை எழுதினார் ? நிச்சயமாக தடுப்பூசி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் நடைமுறைகள் மீது ICMR சில கட்டுப்பாட்டை  பெற்றிருக்க வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டின் சரியான தன்மை என்ன ? துரதிர்ஷடவிதமாக நமக்கு தெரியாது.

இரண்டாவதாக, இந்த ஆண்டு ஏப்ரல்-17 இந்திய அரசு மும்பையிலிருக்கும் ஹாஃப்கின் (Haffkine) உட்பட மூன்று புதிய நிறுவனங்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்க அனுமதியளித்தது. எந்த அதிகாரத்தின் பேரில் இந்திய அரசு பாரத் பயோடெக்கின் கோவாக்சினை தயாரிக்க இந்த நிறுவனங்களுக்கு லைசன்சுகளை வழங்கியது ? அரசின் சாதாரண நிர்வாக அனுமதியா அல்லது தடுப்பூசியின் அறிவுசார் சொத்துரிமையின் உரிமையாளர் என்ற அடிப்படையில் கொடுக்கப்பட்ட அனுமதி கடிதமா ?

நிச்சயமாக இந்திய அரசு இப்படிப்பட்ட அனுமதியைக் கொடுப்பதற்கான சில அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, கட்டாய உரிமம் வழங்கும் எந்த ஏற்பாடுகளையும் செய்திருக்காதபோது. அது என்ன அதிகாரம்? துரதிர்ஷடவிதமாக நமக்கு தெரியாது.

மொத்தத்தில் பாரத் பயோடெக் குடனான ICMR-ன் உறவைச் சுற்றி இருக்கும் ஒப்பந்தங்கள் மற்றும் உடன்பாடுகள் ஒளிஊடுருவ இயலாநிலையைக் குறிக்கிறது. கோவாக்சினின் அறிவுசார் சொத்துடமையின் உரிமையை யார் வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் பொதுக்களத்தில் இல்லை. இந்த தலைப்பிலான ஒரு முக்கியமானக் கட்டுரையில் அனுப்பிரியா தோன்சக் மற்றும் அனிக் பாதுரி ஆகியோர் இந்த மையமானக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

மத்திய அரசின் பொதுநிதி விதிகள் 2017-ல் இருக்கும் வழிமுறைகளை உதவிபெறும் திட்டங்களுக்கோ அல்லது செயல்பாடுகளுக்கோ நிதி அளிப்பதற்கு மேற்கோள் காட்டுகிறார்கள். அந்த விதிகள் இந்த திட்டங்கள் நிறைவேறியவுடன் “இந்த மாதிரியான விசயங்களில் ஒரு நிபந்தனைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். அந்த மாதிரியான நிதிகளில் உருவாக்கப்பட்ட அல்லது பெறப்பட்ட பௌதீக மற்றும் அறிவுசார் சொத்துகளின் உரிமையாளர் பற்றி ஸ்பான்ஸரில் காட்டப்பட வேண்டும்” என்கிறது. ICMR-க்கும் பாரத் பயோடெக்கிற்கும் இடையிலான ஒப்பந்தத்திலிருக்கும் நிபந்தனை என்ன ? துரதிஸ்டவசமாக நமக்கு தெரியாது.

தடுப்பூசியை மேம்படுத்துவதற்கான ஆய்வில் பொதுநிதி ஈடுபடுத்தப் பட்டிருக்கிறதா என்பதை அறிய இங்கு ஒரு மாற்று வழி உள்ளது. தடுப்பூசி சம்பந்தமாக வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வுக் கட்டுரைகளில் இதுவரை நிதி ஆதரவுக் குறித்து கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை நம்மால் ஆய்வு செய்ய முடியும். பாரத் பயோடெக் கூற்றுப்படி இன்று வரை கோவாக்சின் மீதான ஆறு சர்வதேச மதிப்பாய்வு இதழ் வெளியீடுகள் இருக்கின்றன. கீழே இருக்கும் அட்டவணையில் ஆறு வெளியீடுகள் மற்றும் நிதி ஆதாரசீட்டுகள் பற்றிய சுருக்கமான வடிவம் உள்ளது.

ஒன்று சுகாதாரம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் அல்லது புனேயிலிருக்கும் தேசிய இன்ஸ்டிடியுட் ஆப் வைராலஜி அல்லது ICMR ஆகியவற்றிலிருந்து நிதி உதவிப் பெற்றிருப்பதை தனது ஆறு கட்டுரைகளில் நான்கில் தெளிவாக அங்கீகரித்திருப்பதை நாம் அறிந்து கொண்டோம். அந்த ஆறு ஆய்வுக் கட்டுரைகளும் பாரத் பயோடெக் மற்றும்  ICMR/National Institute of Virology ஆகியவற்றிலிருந்து ஸ்காலர்ஸ் இணைந்து எழுதப்பட்டவை. ஆறு கட்டுரைகளில் ஐந்தில் ICMR Director General பலராம் பார்கவா ஒரு இணை ஆசிரியர்.

இந்த ஆறு கட்டுரைகளும் நிதி உதவியின் அளவு குறித்து எந்த விவரங்களையும் தரவில்லை. என்றாலும், தடுப்பூசியின் வெற்றிகரமான உருவாக்கத்திற்குக் காரணமாயிருந்த ஆய்வுகளுக்கு பொதுநிதி உண்மையில் செலவிடப் பட்டிருப்பதைப் பற்றி மறுக்க முடியாத ஆதாரங்களை தருகிறது. (பார்க்க ஆங்கில மூலக்கட்டுரை)

இந்திய மக்களில் வரிக் கட்டுவோரின் பணம் இந்த ஒப்பந்தத்தில் ஈடுபடுத்தப் பட்டிருந்தால் மத்திய அரசு இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் பொதுவெளியில் வைப்பதுதான் பொருத்தமானது. அரசு அல்லது ICMR கோவாக்சினின் அறிவுசார்சொத்துடமை உரிமையை வைத்திருப்பது உண்மையாக இருந்தால் இன்னொரு கேள்வி எழுகிறது. அறிவுசார் சொத்துரிமை பொது உரிமையாக இருக்கும் போது பாரத் பயோடெக் என்ற ஒரு கம்பெனிக்கு மட்டும் தயாரிப்புக்கானப் பிரத்யோகமான உரிமம் வழங்கப் பட்டிருப்பது ஏன்? தடுப்பூசி தயாரிப்பதற்கான பிரத்யோகமற்ற உரிமங்களை பல உற்பத்தியாளர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை.

தடுப்பூசிகள் பற்றாகுறை மற்றும் அதன் இமாலய விலை ஆகியவற்றுக்கு இவை முக்கியமான காரணமாகும். குறிப்பிட்ட இரு நிறுவனங்கள் மட்டும் இந்திய மக்களின் சோதனையானக் காலத்தில் கொள்ளை லாபம் அடிக்க மோடி அரசு சேவை செய்கிறது என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?

பின்னதாக, Ocugen ஆகுஜென் போன்ற பல  நிறுவனங்களுடன் அமெரிக்காவில் 100 மில்லியன் டோஸ்ஸ் கோவாக்சின் தடுப்பூசியை வழங்கிட பாரத் பயோடெக் தனது பிரத்யோகமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாரத் பயோடெக் இந்த மாதிரியான ஏற்பாடுகள் மூலம் பெற்றிருக்கும் லாபத்தில் அறிவுசார் சொத்துரிமையில் பங்குகள் வைத்திருக்குமானால் ICMR தனதுப் பங்கினைப் பெற்றுக் கொள்கிறதா? துரதிஸ்டவசமாக நமக்கு தெரியாது.

உண்மையில் ICMR மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் அனுபவங்கள் Oxford-AstraZeneca ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசிகள் இங்கிலாந்தில் பொது உரிமையாக இருந்து தனியார் உரிமையாக மாறியதை நினைவுப் படுத்துகிறது. ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி தயாரிக்க தேவைப்படும் நிதியில் 97 சதவீதம் இங்கிலாந்து அரசு துறைகள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இருக்கும் அறிவியல் நிறுவனங்கள் ஐரோப்பியன் கமிசன் மற்றும் பலவேறு அறக்கட்டளைகள் ஆகியவற்றின் மூலமே வந்திருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆயினும், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தடுப்பூசிகளுக்கு திறந்த வகை உரிம்மேப் பராமரிக்கப்படும் என்று உறுதியளித்ததிலிருந்து பின்வாங்கியது. அஸ்ட்ரா ஜெனிகாவுடன் பிரத்யோகமான ஒரு உரிமத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

நன்கு அறிந்தபடி அஸ்ட்ரா ஜெனிகா அதே தடுப்பூசிக்காக சீரம் இன்ஸ்டிடியுட் ஆப் இந்தியாவுடன் மற்றொரு பிரத்யோகமான ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டது அதன்படி கோவிஷில்டு என்ற பெயரில் இந்தியாவில் விநியோகிக்கப்படும். பொது நிதியில் உருவாக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி தனியார் நிறுவனங்களின் லாபமீட்டும் கருவியாக மாறிவிட்டது.

இந்தியா இதே விதியை கோவாக்சினுக்கு அனுமதிக்கக் கூடாது அப்படி நீடித்தால் இன்றிருக்கும் இதே மோசமான நிலைதான் இந்திய மக்களுக்குத் தொடரும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இந்தியா உடனடியாக செய்ய வேண்டியது கோவாக்சின் தடுப்பூசி சம்பந்தபட்ட அனைத்து உடன்பாடுகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை தகவல்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ICMR மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் இந்த விசயத்தில் முன்கையெடுக்க வேண்டும்.

ICMR அல்லது இந்தியா அரசாங்கத்துக்கு கோவாக்சினின் அறிவுசார் சொத்துரிமை, உரிமையானதாக இருந்தால் இந்த உலக தொற்று அபாயகரமான நிலைமையில் இந்த அறிவுசார் சொத்துரிமை பொது மக்களின் நலனுக்கு அந்நியமானது பற்றி அறிந்துக் கொள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமை உள்ளது. அது மட்டுமல்ல, அதை எதிர்த்து வீதியில் இறங்கிப் போராடுவதன் மூலம் தடுப்பூசி பற்றாக்குறையை முற்றிலும் போக்க முடியும்.

படிக்க :
♦ ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி
♦ கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ

இந்த அரசாங்கத்தின் பொறுப்பற்ற அக்கறையின்மை மற்றும் அப்பட்டமான அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது ஆகியவற்றுடன் சகித்துக் கொண்டு வாழ்ந்து என்ன சாதிக்க போகிறோம்.

ஏற்கனவே, மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவற்றுக்காக வீதிகளில், அடிக்கும் வெயிலில் வரிசைகளில்தான் நிற்கிறோம். அதை கலைத்து அப்படியே நம்மை ஏமாற்றி கார்ப்பரேட்களின் கையாளாக செயல்படும் மத்திய அரசுக்கு எதிரானப் போராட்டமாக மாற்றுவோம். இரண்டுக்கும் வித்தியாசம் அதிகமில்லை. விளைவுகளோ மலையளவு மாற்றங்கள் நமது வாழ்வில்.


மூலக்கட்டுரை : R. Ramakumar is Professor, Tata Institute of Social Sciences, Mumbai.
தமிழாக்கம் : மணிவேல்
செய்தி ஆதாரம் :
Scroll.in

இந்தியாவின் தடுப்பூசி திட்டத்தில் என்ன தவறு ஏற்பட்டுள்ளது? || தாமஸ் ஆபிரகாம் || நாகராசு

ரு கடுமையான இரண்டாவது அலையின் மத்தியில், இந்தியா ஆகஸ்ட்-க்கு அப்பால் அதன் 45+ மக்கள் தொகைக்கு தடுப்பூசிப் போடுவதைத் தாமதப்படுத்தும் தடுப்பூசிப் பற்றாக்குறையை வெறித்துப் பார்க்கிறது. அரசாங்கம் தவறாக இருக்கவில்லை என்றும் மற்றும் அதன் திட்டமிடலில் மெத்தனமாக இருக்கவில்லை என்றும் நினைத்துக் கொண்டிருந்ததுதான் இப்போதைய நிலைமைக்குக் காரணம்.

மோசமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் உள்ள ஒரு நாட்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் நடுப்பகுதியில் 100 மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்களுக்கு தடுப்பூசிப் போடுவது சாதாரணமான சிறிய விசயம் அல்ல. ஆனால், இதுவரை இந்தியாவில் தடுப்பூசியின் வேகம் பெருந்தொற்றுநோயின் பேரழிவுகரமான இரண்டாவது அலையாக இருக்கக் கூடியதைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு விரைவாக இல்லை. இப்போது தடுப்பூசிகள் பற்றாக்குறையில் உள்ளன.

படிக்க :
♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

♦ போர்கால அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பொதுத்துறை ஊழியர்கள் !

எண்ணிக்கைகள் கணக்கிடப்படவில்லை

தடுப்பூசிப் பற்றாக்குறைக் கணிக்கக் கூடியதாக இருந்தது. இந்தியாவில் உள்ள இரண்டு உற்பத்தியாளர்களான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் தடுப்பூசிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்தது. இவர்களிடமிருந்து நமது தேவைக்கான தடுப்பூசிகளை விரைவாகப் பெற முடியாது என்பது தெளிவாக தெரிகிறது: 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், அத்துடன் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் தொழில் அவர்களை அதிக ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது சுமார் 400 மில்லியன் மக்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசிப் போடுவதற்கு 800 மில்லியன் டோஸ் தடுப்பூசி தேவைப்படும். மேலும் 10 சதவீதம் வீணாவதாகக் கணக்கில் கொண்டால் 80 மில்லியன் டோஸ் கூடுதலாகத் தேவைப்படும்.

சீரம் நிறுவனம், அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவாலா-வின் அறிக்கைகளின் அடிப்படையில், ஒரு மாதத்திற்கு சுமார் 60-65 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்கிறது. பாரத் பயோடெக் ஒரு மாதத்திற்கு சுமார் 5 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பெங்களூருவில் ஒரு புதிய உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டுள்ளதையும் கணக்கிலெடுத்தால் அது கோடையில் இயங்கும் போது இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

400 மில்லியன் மக்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் 800 மில்லியன் டோஸ்கள் என்ற இலக்கை இந்தியாவில் தற்போதுள்ள உற்பத்தித் திறனைக் கொண்டுப் பூர்த்தி செய்ய முடியாது.

தற்போதைய உற்பத்தி மட்டங்களில் இது இரு உற்பத்தியாளர்களிம் இருந்தும் ஒரு மாதத்திற்கு 65-70 மில்லியன் டோஸ்களைப் பெற முடியும். இந்த விகிதத்தில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, ஒரு சிறந்த மதிப்பீட்டின்படி சுமார் 350 மில்லியன் டோஸ்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கும். ஜனவரி முதல் ஏப்ரல் 1 வரை ஏற்கனவே நிர்வகிக்கப்பட்ட 80 மில்லியன் டோஸ்களை ஒருவர் சேர்த்தால், ஜனவரி முதல் ஜூலை வரை சுமார் 430 மில்லியன் டோஸ்கள் கிடைக்கும்.

சீரம் நிறுவனம் அதன் உற்பத்தியை மே மாதத்திற்குள் 100 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்க முடியும் என்று நாங்கள் கருதினால் (இது சில காலமாக செய்ய முயற்சிக்கிறது), இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திற்குள் 500 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் வரை செல்லலாம். இது இன்னும் தேவைப்படும் 800 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது. 400 மில்லியன் மக்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் 800 மில்லியன் டோஸ்கள் என்ற இலக்கை இந்தியாவில் தற்போதுள்ள உற்பத்தித் திறனைக் கொண்டு பூர்த்தி செய்ய முடியாது.

கடந்த ஆண்டு, மற்ற முக்கிய நாடுகள் தங்கள் உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டுத் தேவைகளை (சீனா செய்தது போல்) உற்பத்தித் திறனை விரிவுபடுத்த உதவியிருந்தாலும் அல்லது தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதியளித்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் செய்து கொண்டிருந்தது போல் முன்கூட்டியே வாங்கும் உறுதிமொழிகளை அளித்திருந்தாலும், இந்தியா தமது தேவைக்கான இலக்கை அடைந்திருக்கலாம். ஆனால், இந்தியா இவ்வாறெல்லாம் செய்யவில்லை.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உள்நாட்டிலேயேக் கண்டுபிடித்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்ய அந்த அமைப்புடன் இணைந்துப் பணியாற்ற பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனத்தை அரசு ஊக்குவித்தது. ஆனால், இது நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்காது என்பது தெளிவாகிறது. சீரம் நிறுவனம் அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் கோவாக்ஸ் (உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் அமைக்கப்பட்ட உலகளாவிய தடுப்பூசி விநியோக முறை) ஆகியவற்றுடன் விற்பனை ஒப்பந்தங்களை செய்து கொண்டது. மேலும் சீரம்-இன் உற்பத்தியில் குறைந்தபட்சம் பாதி இந்திய பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் என்று கருதப்பட்டது.

ஆனால், அரசாங்கமே அதற்கு எத்தனை தடுப்பூசிகள் தேவைப்படும் என்பதைக் குறித்து எந்த முயற்சியும் செய்யவில்லை. ஜனவரி முதல் வாரத்தில்தான் அரசாங்கம் 45 மில்லியன் டோஸ்களுக்கு கொள்முதல் ஆணையை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 100 மில்லியன் டோஸ்களுக்கு மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுவில் கிடைக்காத, ஆனால் சீரம் இன்ஸ்டிடியூட்டின் அளவை விட கணிசமாக குறைவாக இருக்க வேண்டும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டன. தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள 400 மில்லியன் மக்களுக்கு இந்த அளவு தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

தேவையான தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் மூலோபாயமும் ஒருபோதும் முழுமையாக வெளியிடப்படவில்லை. பெருந்தொற்றின் இரண்டாவது அலை தொடங்குவதற்கு முன்பு, தேவையான தடுப்பூசிகளின் எண்ணிக்கை சிறியதாக இருந்தது. தேவை மிகவும் சிறியதாக இருக்கும் என்று கருதப்பட்டதால், தற்போதுள்ள திறனுடன் நிர்வகிக்க முடியும் என்று அரசாங்கம் கருதியிருக்கலாம். இப்போது, தேவை மிக அதிகமாகி, அரசாங்கம் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினாலும், தேவைப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவில்லை.

உத்தியோகபூர்வ அறிவிப்புகள்… இந்திய விதிவிலக்கான தன்மை, தவறே இல்லாத தன்மை, சுயசார்பு மற்றும் உலகளாவிய தலைமையின் உருவப்படத்தை உருவாக்க முதன்மையாக வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இருப்பினும், தடுப்பூசிகளுக்குப் பஞ்சமில்லை என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. “பற்றாக்குறைப் பற்றிய கேள்வி எங்கே எழுகிறது? நாங்கள் தொடர்ந்து கண்காணித்து விநியோகத்தை மேம்படுத்துகிறோம்” என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் ட்வீட் செய்தார். பல மாநிலங்களில் உள்ள தடுப்பூசி மையங்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் இருந்தன. அந்த புகைப்படங்களில் பொதுமக்களிடம் தங்களிடம் இருப்பு இல்லை என்ற தடுப்பூசி மையங்களின் நோட்டீஸ்கள் காட்டப்பட்டிருந்தன.

எந்தவொரு குறைபாடுகளையும் ஒப்புக்கொள்ள மறுப்பது தொற்றுநோய் பற்றிய அரசாங்கக் கொள்கையில் ஒரு நிலையான கருப்பொருளாக இருந்து வருகிறது. அமைச்சர்களிடமிருந்து அல்லது மூத்த அரசு ஊழியர்களிடமிருந்து வரும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் முதன்மையாக இந்தியாவானது விதிவிலக்கான, தவறே இல்லாத தன்மை, சுயசார்பு மற்றும் உலகளாவிய தலைமையின் உருவப்படத்தை உருவாக்க வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. (“இந்தியா மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது,” “இந்தியா உலகின் மருந்தகம்,” “தடுப்பூசிகளுக்காக இந்தியாவுக்கு உலகம் நன்றி தெரிவிக்கிறது.”)

உண்மை சற்றே வேறுபட்டது. உலகளவில் கோவிட் நோயாளிகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்படவில்லை. இந்தியா உலகின் மருந்தகமாக இருக்கலாம், ஆனால் அது அடிப்படை மருந்துகளுக்கான மூலப் பொருட்களுக்கு சீனாவை தீவிரமாக நம்பியுள்ளது. தடுப்பூசி ஏற்றுமதிகளைப் பெற்ற நாடுகள் முதலில் நன்றியுள்ளவையாக இருந்தன, ஆனால் இப்போது அதிர்ப்த்தியாக உள்ளன. ஏனெனில் அரசாங்கம் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்தியுள்ளது. குறிப்பாக சீரம் நிறுவனம் கோவாக்ஸ் (COVAX)-க்கான அதன் ஒப்பந்த கடமைகளை நடைமுறைப் படுத்துவதிலிருந்தும், அத்துடன் தடுப்பூசி விநியோகங்களுக்காக சீரம் நிறுவனத்துடன் நேரடியாக ஒப்பந்தம் செய்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் தடுக்கிறது.

இந்திய அரசாங்கம் இதில் எதிலும் செயலூக்கமானப் பங்கை வகிக்கவில்லை அல்லது கோவிட் தடுப்பூசிகளுக்கான சீரம் நிறுவனத்திற்கு நிதி அளிக்கவில்லை.

சீரம் இன்ஸ்டியூட்டின் கோவிஷீல்ட் தடுப்பூசியை ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசி என்று விவரிப்பதுக் கூட தொழில்நுட்ப ரீதியாக சரியானது என்றாலும், முழு உண்மையையும் வெளிப்படுத்தவில்லை. இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய் தடுப்பூசிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் ஒரு சர்வதேசக் குழுவான தொற்றுநோய் தயார் நிலைக்கானக் கூட்டணியான சி.இ.பி.ஐ-யின் ஆரம்ப நிதியுடன் உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும். அஸ்ட்ரா ஜெனிகா, ஆங்கிலோ-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனம், ஆக்ஸ்போர்டு குழுவுடன் உலகளவில் தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகிக்க ஒரு ஒப்பந்தத்தில் நுழைந்தது.

இதையொட்டி அஸ்ட்ரா ஜெனிகா இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்களிடம் இருந்து உறுதியான விநியோகங்களுக்கு ஈடாக தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கும் சோதிக்கவும் உதவுவதற்கு நிதியைப் பெற்றது. அஸ்ட்ரா ஜெனிகா ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை தயாரிக்க சி.ஓ.வி.ஏ.எக்ஸ் இருந்து நிதி பெற்றது.  அஸ்ட்ரா ஜெனிகா இதையொட்டி ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசியின் நூறு கோடி டோஸ்களை உற்பத்தி செய்து விநியோகிக்க சீரம் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியது. அவற்றில், 400 மில்லியன் டோஸ்கள் 2021-இல் வழங்கப்பட இருந்தன. சீரம் நிறுவனம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் ஒரு சர்வதேச தடுப்பூசி கூட்டணியான கவியிடமிருந்து 300 மில்லியன் டாலர்களைப் பெற்றது. இது அதன் கோவாக்ஸ் கடமைகளை பூர்த்தி செய்ய உற்பத்தி வசதிகளை அமைக்க உதவியது.

இந்திய அரசாங்கம் இதில் எதிலும் செயலூக்கமானப் பங்கை வகிக்கவில்லை அல்லது கோவிட் தடுப்பூசிகளுக்கான சீரம் நிறுவனத்திற்கு நிதி அளிக்கவில்லை. அதன் ஒரே உதவி ஒழுங்குமுறை தடைகளை அகற்றுதல் மற்றும் சீரம் நிறுவனம் நாட்டில் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு உரிமம் பெறுவதற்கு முன்பு, 2020-இல் தடுப்பூசியை உற்பத்தி செய்து சேமிக்க அனுமதித்தது.

தடுப்பூசி மைத்ரி தரையில் இறங்குகிறது

தடுப்பூசி மைத்ரி பிரச்சாரம், அதன் கீழ் உலகெங்கிலும் உள்ள 85 நாடுகளுக்கு 64 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது உத்தியோகபூர்வ அறிக்கைகளில் (செய்தி ஊடகங்களில் மீண்டும் மீண்டும் வந்தது). தடுப்பூசி தேசியவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய தலைமையை வழங்குவதற்கும் ஒரு அரசாங்க முன்முயற்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாடுகளில் இந்த ஏற்றுமதிகளில் பெரும்பாலானவை சி.ஓ.வி.ஏ.எக்ஸ் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகாவுக்கு அதன் ஒப்பந்தத்தின் உறுதிப்பாடுகளின் ஒரு பகுதியாக சீரம் இன்ஸ்டிடியூட் விற்பனை செய்கின்றது. எந்தவொரு இந்திய நிறுவனமும் செய்யும் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் அது கடன் பெறவேண்டுமானால், அரசாங்கம் இதற்கு க்ரெடிட் எடுத்துக் கொள்வது அர்த்தமற்றது.

மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை உண்மையில் நன்கொடையாக வழங்கிய உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்: 10.5 மில்லியன் டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன…

அதே நேரத்தில், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை உண்மையில் நன்கொடையாக வழங்கிய உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்: அண்டை நாடுகளுக்கும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கும் 10.5 மில்லியன் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நன்கொடைகள், குறிப்பாக தெற்காசியா மற்றும் மியான்மரில், சீனாவுடன் செல்வாக்கிற்காக போட்டியிட வேண்டிய தேவையால் உந்தப்பட்டன என்று வாதிடலாம். ஆனால், இந்த நாடுகளில் உள்ள மக்கள் அவசரமாக தேவைப்படும் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்ற உண்மையிலிருந்து இது திசைதிருப்பவில்லை.

எடுத்துக்காட்டாக, இது அமெரிக்காவிற்கு மாறாக உள்ளது. அங்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் 20 மில்லியன் டோஸ்கள் வாங்கி வைத்திருக்கிறது. அது பயன்படுத்த வாய்ப்பில்லை. ஆனால், தேவைப்படும் நாடுகளுக்குக் கொடுக்கத் தயங்குகிறது. ஆனால், இந்தியாவின் தடுப்பூசி நன்கொடைகள் பாராட்டத்தக்கவை. சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் வர்த்தக விற்பனையுடன் அவர்களை கிளப் செய்து, அரசாங்கம் ஒரு முக்கிய உலகளாவிய தடுப்பூசி சப்ளையர் என்றத் தோற்றத்தை உருவாக்குகிறது.

ஏப்ரல் 8 ஆம் தேதி பங்களாதேஷின் டாக்காவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்த தடுப்பூசியை ஒரு சுகாதார ஊழியர் தயாரிக்கிறார்.

இரண்டாவது அலையின் பாதிப்பு, உள்நாட்டு தடுப்பூசித் திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதை விட அதிக தடுப்பூசி அளவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது தெரிய வந்தபோது பொதுமக்களிடம் ஏற்பட்ட அவநம்பிக்கை, ஏற்றுமதியை நிறுத்த அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. சீரம் நிறுவனம் வெளிநாடுகளுக்கான அதன் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டியிருந்தது.

இந்த கோடைக்குள் கோவாக்ஸ்-க்கு 240 மில்லியன் டோஸ் தடுப்பூசி வழங்குவதற்கான அதன் வாக்குறுதிய நடைமுறைப்படுத்தவில்லை. அஸ்ட்ரா ஜெனிகாவுடனான ஒப்பந்தங்களையும் அது கைவிட்டது. இதன் மூலம் சீரம் நிறுவனம் அஸ்ட்ரா ஜெனிகா அதன் உலகளாவிய தடுப்பூசி வழங்கல் உறுதிப்பாடுகளில் சிலவற்றை நிறைவேற்ற உதவுவதாக இருந்ததை கைவிட்டுள்ளது. பொதுவாக, அரசாங்கம் எந்த தடையும் விதிக்கவில்லை என்று மறுத்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியைத் தடுக்கிறது.

தடுப்பூசிப் பரிசுகளைப் பெற்று சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் வாங்க திட்டமிட்டிருந்த அண்டை நாடுகள், திடீரென்று தங்கள் தடுப்பூசி விநியோகம் வறண்டு இருப்பதைக் கண்டுள்ளன. உதாரணத்திற்கு நேபாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய அரசாங்கம் நேபாளத்திற்கு 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டை நன்கொடையாக வழங்கியது, நேபாள அரசாங்கம் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 20 லட்சம் டோஸ்களை வாங்கியது. அது வாங்கிய அளவுகளில் (குறைந்தபட்சம் பகுதியளவு முன்கூட்டியே பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது) இந்தியா ஏற்றுமதியை நிறுத்துவதற்கு முன்பு சீரம் இன்ஸ்டிடியூட் 10 லட்சம் டோஸ்களை மட்டுமே வழங்கியது.

இது நேபாளம் தங்கள் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ்களை தாமதப்படுத்தவும், இளைய வயதினரை உள்ளடக்கும் வகையில் தடுப்பூசியை விரிவுபடுத்தும் அதன் திட்டங்களை நிறுத்தி வைக்கவும் வழிவகுத்தது. சீனா தனது தடுப்பூசித் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்காக 5,00,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசியை வாங்கிய நேபாளத்திற்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கானக் கதவைத் திறந்துள்ளது.

உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா ஒரு தலைவராக உருவெடுக்கும் என்று நம்பியிருந்தால், கொள்கையின் திடீர் மாற்றம் நாட்டின் நற்பெயரை உருவாக்க உதவியிருக்க வாய்ப்பில்லை…

ஏற்றுமதியை நிறுத்துவது, சி.ஓ.வி.ஏ.எக்ஸ் திட்டத்தின் கீழ் ஏழை நாடுகளுக்கு விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதற்காக சீரம் நிறுவனம் முக்கிய சப்ளையராக உள்ளது. உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா ஒரு தலைவராக உருவெடுக்கும் என்று நம்பியிருந்தால், கொள்கையின் திடீர் மாற்றம், நம்பக் கூடிய தடுப்பூசிகளின் ஆதாரமாக நாட்டின் நற்பெயரை உருவாக்க உதவியிருக்க வாய்ப்பில்லை.

‘ஆத்மனீர்பார்’ல் இருந்து விலகிச் செல்கிறது

தடுப்பூசி பற்றாக்குறையின் யதார்த்தம் அரசாங்கத்தை அதன் ‘ஆத்மனீர்பார்’ அல்லது சுயசார்புக் கொள்கையில் இருந்து பின்வாங்க நிர்ப்பந்தித்துள்ளது.

முந்தைய தசாப்தங்களில் நடந்தது போல், ரஷ்யா இந்தியாவின் தடுப்பூசிப் பிரச்சாரத்திற்கு ஒரு உயிர்நாடியை வழங்கக் கூடும். கடந்த ஆகஸ்டு 2020-ல், ரஷ்ய அதிகாரிகள் அதன் ஸ்புட்னிக் V தடுப்பூசியை நாட்டில் விற்பது பற்றியும், உலகளாவிய ஏற்றுமதிக்கான தளமாக இந்திய நிறுவனங்களைப் பயன்படுத்துவது பற்றியும் இந்தியாவை அணுகினர்.

செப்டம்பர் 2020-ல், ஸ்புட்னிக் V-ல் முதலீடு செய்துள்ள ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியம் நிறுவனமும் (RDIF) டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களும் இந்தியாவில் ஸ்புட்னிக் V-ஐ சந்தைப்படுத்த ஒப்பந்தம் போட்டன. ஸ்புட்னிக் V தடுப்பூசி அவசரப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் டாக்டர் ரெட்டி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு தேவையான இணைப்பு மருத்துவச் சோதனையை ஏற்பாடு செய்தவுடன், இந்தியாவில் 100 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசியை விற்க ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தது.

இந்த சோதனைகளின் முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஏப்ரல் 13 அன்று தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதல் வழங்கப்பட்டது. தடுப்பூசி விநியோகத்தை 100 மில்லியன் டோஸ்கள் அதிகரித்தது. அரசாங்கம் தடுப்பூசியை வாங்கும் விலையில் உடன்படமுடியும்.

உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இந்தியா இப்போது அந்த வரவேற்பு கம்பளத்தை விரித்துள்ளது. ஆனால், இது தடுப்பூசி விநியோகத்தில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாக இல்லை…

ஸ்புட்னிக் V வருகையானது, ஆத்மானீர்பார் கொள்கையில் இருந்து விலகிச் செல்வதைக் குறிக்கிறது என்றால், அதே நாளில், வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த அனுமதிக்கப்படுவதற்கு முன்பு இந்தியாவில் இணைப்பு சோதனைகளை நடத்த வேண்டும் என்ற விதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ரத்து செய்தபோது, இரண்டாவது, இன்னும் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சோதனைகளுக்கான தேவை நீக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்ட பிறகு இதைச் செய்ய முடியும் (இது உண்மையில் எவ்வாறு அடையப்பட வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்).

அரசாங்க தடுப்பூசி கொள்கையில் ஒரு முக்கிய நபரான வி.கே.பால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜப்பான் அல்லது உலக சுகாதார அமைப்பில் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் அவசர காலப் பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அகற்றியிருந்தால், அது இந்தியாவில் பயன்படுத்தப்படலாம் என்று செய்தி அறிக்கைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன்&ஜான்சன் போன்ற தடுப்பூசி உற்பத்தியாளர்களை விரைவில் இந்தியாவுக்கு வர தயாராக இருக்கும்படி நாங்கள் நம்புகிறோம், அழைக்கிறோம் என்றார் அவர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபைசர் தனது தடுப்பூசியை இந்தியாவில் சந்தைப்படுத்த அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த போது அரசாங்கத்தின் கொள்கைக்கு மாறாக இது உள்ளது. அந்த நேரத்தில் மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், ஃபைசர் ஒப்புதலுக்குமுன் இந்தியாவில் சோதனைகளை செய்ய வேண்டும் என்று கூறினார், உற்பத்தியாளர் செய்ய தயாராக இல்லை.

உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இந்தியா இப்போது அந்த வரவேற்பு கம்பளத்தை விரித்துள்ளது. ஆனால், இது நாட்டில் தடுப்பூசி விநியோகத்தில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாக இல்லை. உலகளாவிய தடுப்பூசி வழங்கல்கள் மிகவும் இறுக்கமாக உள்ளன. மேலும், காத்திருப்புப் பட்டியல் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியை வழங்குவது குறித்து சண்டையிட்டு வருகின்றன.

இந்தியாவிற்கு சமீபகாலத்தில் கிடைக்கும் ஒரே பொருட்கள் ஸ்புட்னிக் V மட்டுமே. அரசாங்கம் அதை வாங்கக் கூடிய விலையில் பெற முடியும் என்றால், தடுப்பூசி வாங்குவதற்கான நிதி ஒரு பிரச்சினை அல்ல என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அது நிச்சயம் ஒரு பிரச்சினையாக இருக்கும். சீரம் நிறுவனம் மீது இந்திய அரசாங்கம் செல்வாக்கு செலுத்துவது போல ரஷ்ய அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்த இயலாது என ஒரு உற்பத்தியாளர் கூறினார்.

படிக்க :
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு
♦ ஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு

முடிவுகள்

இரண்டாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அரசாங்கம் திட்டமிட்டு, நோய்த் தொற்றுகளின் அதிகரிப்பைக் குறைப்பதற்கான வழிகளை சிந்தித்திருந்தால், ஜனவரியில் தொடங்கித் தடுப்பூசிகளை வெளியேற்றுவதை அது கட்டுப்படுத்தியிருக்கும். வெளிநாடுகளில் இருந்து அல்லது பொதுத்துறை உட்பட தனியார்களையும் உற்பத்தியைத் தொடங்க ஊக்குவிப்பதன் மூலம் விநியோகங்களை அதிகரிக்கக் கொள்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.

பின்குறிப்பு

இந்த அறிக்கையில் பாரத் பயோடெக் ஒரு மாதத்திற்கு 5 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்த எண்ணிக்கை அப்போதைக்கு கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு குறைந்த மதிப்பீட்டாக இருந்தது. பாரத் பயோடெக் டாக்டர் கிருஷ்ணா எல்லா, கோடை இறுதிக்குள் மாதாந்திர திறனை 10 மில்லியனில் இருந்து 60 மில்லியன் டோஸ்கள் (ஆண்டுக்கு 700 மில்லியன் டோஸ்கள்) வரை உயர்த்துவது குறித்து பொதுவில் பேசியுள்ளார். இருப்பினும் இது தடுப்பூசி வழங்கல் மற்றும் தேவைக்கு இடையிலான இடைவெளியை இன்னும் நிரப்பவில்லை. (குறிப்பு: ஒரு மில்லியன் – பத்து லட்சம்.  ஒரு பில்லியன் – நூறு கோடி.)


கட்டுரையாளர் : தாமஸ் ஆபிரகாம்
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : The India Forum

கம்போடியா : நாட்டு மக்களின் நிலங்களை அபகரித்து சுற்றுச்சூழலை நாசம் செய்யும் அரசு

‘வேறு எந்த நாடு தனது மக்களுக்கு இதைச் செய்யும்?’ கம்போடிய நில அபகரிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச நீதியை நாடுகிறார்கள்.

“தீடிரென அரசுத்தரப்பிலிருந்து வந்தவர்கள் நாங்கள் ஒரு சமூகமாக வாழும் அந்த இடத்தை சுற்றி வளைத்துக் கொண்டு எங்களிடம் நீங்கள் எல்லோரும் இந்த இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கொண்டிருக்கீறீர்கள்” என்றதில் இருந்து ஆரம்பித்தது எல்லாப் பிரச்சனைகளும்” என்கிறார் 2020 ஜீனில் சாயி கிம்சுரூர்.

“நாங்கள் இங்கே 1995-லிருந்து குடியிருந்து வருகிறோம். ஆனால், திரும்பவும் ஆறுமாதம் கழித்து வந்தவர்கள் எனது ஏரியை தூர்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது “இது எங்கள் நிலம்” என அரசு தரப்பிலிருந்து வந்தவர்கள் அறிவித்தார்கள். அந்தப் பகுதியிலிருந்த குடியிருப்புவாசிகள் அனைவரும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாயினர்.

படிக்க :
♦ கம்போடியா : மேற்குலகிற்கு நாங்கள் என்ன செருப்பா ?
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

அந்த சமயத்தில் அந்த ஏரியில் மீனும் முதலையும் வளர்த்து வந்தார் கிம்சுரூர் பியோங் சாம்ரோங். இது ஒரு சிறிய சமூகமாக குடும்பங்கள் வாழுமிடம். ஃபனாம் பேன் பகுதியின் புறப் பகுதியில் வடமேற்கே இருக்கிறது. ஒரே கூரையின் கீழ் மூன்று தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். அவரது மூன்று ஏரிகளில் இரண்டு ஏரிகளை தூர்க்கும் வரை அவரது குடும்பம் வாழ்ந்து வந்ததே இந்த நீராதார வணிகத்தினால்தான் என்கிறார். இந்த நிலம் உண்மையில் அரசு-பொது நிலம் என்று கூறி, அதிகாரிகள் கோருகிறார்கள், ஒரு பூங்காவைக் கட்ட வேண்டும் என்று கூறப்படுகிறது.

“அவர்கள் எனக்குச் சொந்தமான இடத்தில் என்னை கேட்காமலே சாலை போட்டனர். அவையெல்லாம் எனது ரத்தத்தை வியர்வையாக்கி நான் உழைத்து சம்பாதித்த எனக்கு சொந்தமான சொத்துக்கள். வேறு எந்த நாடு தனது மக்களுக்கு இது மாதிரியான கொடுமைகளை செய்யும்?” என்கிறார் கிம்சுரூர்.

“முனிசிபல் துறையிலுள்ள நில நிர்வாகம் அமைத்து தந்துள்ள அதிகாரத்துவ நிர்வாக செயல்முறைகளை கடந்துப் போவதற்குள் தனது நிலத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தை இழந்துள்ளதாகவும் அதேசமயம் தனக்காக வாதிட ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொள்ளவும் முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்” என்று மார்ச் 2021-ல் கிம்சருர் உறுதி செய்கிறார்.

“அரசு இழப்பீடு தருவதாக சென்ற ஆண்டிலிருந்து (2020) உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரை எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. அந்த நிலம் பல பத்தாண்டுகள் என்னுடையதாக இருந்தது. இழப்பீடு எப்போது வரும்?” என்று ஆற்றாமையுடன் கேட்கிறார்.

2020 ஜூன் மாதம் அவரது அனுமதியின்றி அழிக்கப்பட்ட அவரது நிலத்தை டச் சோயுன் பார்க்கிறார்.

ஜீலை 2020-ல் டச்சோயுன் மக்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் புல்டோசர்கள் தங்கள் பகுதிக்கு வந்துவிடும் என்ற பயத்தில்தான் எழுந்திருக்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்னதாக அந்த புல்டோசர்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போலீசு அதிகாரிகள் ஆகியோருடன் வந்தன. தன்னிடம் வடக்கு பேனம்பென்-னின் அருகேயிருக்கும் போயங் சௌக் என்ற குக்கிராமத்தில் அங்கிருக்கும் பெயர் தெரியாத ஒரு சொத்து மேம்பாட்டாளரது நிலம் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப் பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

“அந்த சமயத்தில் புல்டோசர்கள் ஆறு வீடுகளின் குறுக்காகக் கிழித்து இடித்துக் கொண்டிருந்தன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வீட்டு சொந்தக்காரருக்கு மாரடைப்பு வந்து விட்டது.” என மக்களின் பரிதாப நிலைகளை சோயுன் விவரித்தார்.

“கடந்த மாதம் (ஜீன்-2020) சிட்டி ஹாலுக்கு நான் சமர்பித்த புகார் மனு பற்றி இதுவரை எனக்கு எந்த பதிலும் வரவில்லை. ஆனால், புல்டோசர்கள் திரும்ப வந்துவிட்டால் என்ன நடக்குமோ எனப் பயத்துடன் வாழ்க்கையை ஓட்டுகிறோம்” என்று ஜீலை மாதம் அவர் தெரிவித்தார். “எங்களது சமூகம் ஒற்றுமையாக இருக்கிறது. எங்களது வீடுகளை அவர்கள் அபகரிக்காமல் தடுக்க நாங்கள் ஒன்றாக தயாராகிக் கொண்டிருக்கிறோம் பார்ப்போம்” என்று மேலும் தெரிவித்தார்.

“ஆனால், இப்போது போயுங் சௌக் கிலுள்ள 22 குடும்பங்களும் பதைபதைப்புடன் முடிவை எதிர்நோக்கிய வாழ்க்கையில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மார்ச் 2021 நிலவரப்படி இவர்களது வழக்கில் எவ்வித முன்னேற்றமில்லாமல் இருக்கிறது. அதோடு, அதிகாரிகள் இவர்கள் சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் முரட்டுத் தனமாக இருப்பதோடு காலி செய்தால் இழப்பீடு வழங்கப்படும் என பசப்பிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் சோயுன்.

“இப்போதைய நிலவரப்படி பிரச்னையில்லாமல் வாழ்வதாக நினைக்கிறோம். முதலில் வீட்டைப் பிளந்து நாசப்படுத்திய நிகழ்வு நடந்து ஒன்பது மாதங்களாகிவிட்டது. என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. ஆனால், இங்கிருந்து வெளியேற எங்களுக்கு விருப்பமில்லை” மார்ச் 2021-ல் அவர் சொன்னார்.

சர்வதேச நீதிக்கான சாத்தியம்

கம்போடியாவில் கிம்சருர் சோயுன் ஆகியோரதுப்போன்ற சோகங்களேப் பொதுவாக எல்லோரிடமும் நிலவுகிறது. சர்வதேச மனித உரிமைகள் கழகம் (FIDH) கூறுவது படி 2014-ல் 77,000 மக்கள் இந்த நிலஅபகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 4 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் மக்களிடமிருந்து பிடுங்கியெடுக்கப் பட்டுள்ளதாகவும் அதில், பேனம் பென் பகுதியில் மட்டும் 1,45,000 ஹெக்டேர் நிலங்கள் பறித்தெடுக்கப் பட்டுள்ளன என்றும் தெரிய வருகிறது.

நன்கு ஆவணப்படுத்தப்பட்ட அரசியல்மயமாக்கப்பட்ட கம்போடியாவின் நீதித்துறை நீதி வழங்குவதில் ஏமாற்றத்தையே தருகிறது. நில சம்பந்தமானப் பிரச்னைகள் அடிக்கடி வந்தாலும் நீதிமன்றம் மிக அரிதாகவே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

FIDH, along with Global Witness and Climate Counsel உலகளாவிய சாட்சி மற்றும் காலநிலை ஆலோசகருடன் ஒரு திறந்த கடிதத்தை மார்ச் 16 அன்று சர்வதேச கிரிமினல் நீதிமன்ற (ஐசிசி) தற்போதைய வழக்கறிஞர் படாவ் பென்சௌடாவுக்கு அனுப்பியுள்ளனர். அதில் கம்போடியாவின் நில அபகரிப்புகள் பற்றி முதல் கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

கம்போடியாவின் இப்போதைய நிலைமை ஐ.சி.சி-க்கு மனித இனம் சந்தித்துக் கொண்டிருக்கின்ற தனிப்பெரும் பயங்கரத்தை (கால நிலை மற்றும் சுற்றுச்சூழல் அவசரநிலை) சந்திக்கின்ற ஒருங்கிணைந்த சந்தர்ப்பத்தை தந்திருக்கிறது” என எழுதுகின்றனர்.

மேலும், ”நிலப் பறிப்பு என்பது அங்கிருக்கும் குடியிருப்புவாசிகளைப் பலவந்தமாக மிரட்டி வெளியேற்றுவது பற்றி மட்டுமல்ல அல்லது அவர்களை அடித்தல், கொலை செய்தல் அல்லது நிலப் பாதுகாப்புப் போராளிகளை சட்டவிரோதமாக சிறையிலடைப்பது என்பதோடு முடிவதல்ல” என்று அதில் எழுதுகின்றனர்.

FIDH, Global Witness and Climate Counsel (உலகளாவிய சாட்சி மற்றும் காலநிலை ஆலோசகர்) அக்டோபர் 2014-ல் தனது நடைமுறைகளைத் துவங்கியது. அதன் முதல் தகவல் தொடர்பை ஐ.சி.சி வழக்கறிஞருக்கு அனுப்பிய போது – தொடர்ந்து ஜீலை 2015-ல் இரண்டாவது தகவலை அனுப்பியபோதும் – அது பற்றிய நடவடிக்கை என்னவோ மிக மோசமாக மெதுவாகவே நடந்தது. FIDH சமீபத்தியக் கடித்ததில் பென்சௌடாவின் பதவிக்காலம் முடிவதற்குள்ளாக அதாவது, ஜீன் 15, 2021-க்குள் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.

“வழக்கறிஞருக்காக நாம் ஒரு முடிவை எடுக்க முடியாது என்பது தெளிவாக தெரிகிறது” என்ற ஆன்ட்ரியா ஜியோர் ஜெட்டா FIDH-ன் ஆசியப் பகுதிக்கான இயக்குநர்.

“இந்த வழக்கு அவரது கவனத்துக்கு பல ஆண்டுகளாகவேக் கொண்டு செல்லப் படுகிறது. எனவே, அவரது முடிவு ஏற்கனவே கொடுக்கப் பட்டிருக்க வேண்டியது – முடிவு என்பது இதுதான் என தெரியாவிட்டாலும் அதிக பட்சமாக ஒரு வழி அல்லது மற்றொன்று என்றுதான் தரப்படும் என நாங்கள் நம்புகிறோம்” என ஒரு தொலைபேசி உரையாடலின் போது தெரிவித்தார்.

“நாம் இது சம்பந்தமாக ஐ.சி.சி வழக்கறிஞர் அலுவலகத்தின் கருத்தை அறிய முயன்றோம். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை. டிசம்பர் 2020 தகவல்படி முதற்கட்ட விசாரணை பற்றிய நடவடிக்கைகளில் பென்சௌடா அலுவலகம் இந்த ஆணட்டில் கம்போடியாவின் நிலப் பறிப்புக் குற்றங்கள் உட்பட மேற்கொண்டு விசாரணை தேவைப் படுகிறவை பற்றி தனது ஆலோசனையைத் தெரிவிக்கும்” என அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையில், பிப்ரவரி 17-ல் சர்வதேச மற்றும் ஐரோப்பிய விவகாரங்களுக்கான நிறுவனத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் பென்சௌடா தனது முதன்மை உரையில் கம்போடியா விவகாரத்தில் தனதுப் பணிக்காலம் முடிவடையும் முன் அதாவது ஜீன் 15 2021-க்குள் ஒரு முடிவு எட்டப்படும் என்பதை மறுபடியும் உறுதி செய்தார்.

“நாங்கள் தற்போது கம்போடியாவின் நிலப் பறிப்புப் பிரச்னை குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். வெகுவிரைவில், அதற்கானப் பதிலை தருவோம்” என்று தனது உரையினிடையே குறிப்பிட்டார்

சோயனின் வீட்டையும் அங்கு இருந்த மரங்களையும் அழித்துவிட்டார்கள்

கம்போடியாவில் நிலப் பறிப்புப் பிரச்னையில் நீதிகேட்டு போராடிக் கொண்டிருந்தவர்களுக்கு எச்சரிக்கையான நம்பிக்கை ஐ.சி.சி செப்டம்பர் 15, 2016-ல் ஒரு கொள்கை அறிக்கையை வெளியிட்டதன் மூலம் ஏதோ ஒரு வகையில் புதுப்பிக்கப்பட்டது. வழக்குகளை தேர்ந்தெடுப்பதிலும் அதை வரிசைப் படுத்துவதிலும் தங்களது நடைமுறையை விரிவாக்கியிருப்பதை அந்த கொள்கை அறிக்கை விவரித்திருந்தது.

ஆதாரங்களை சட்டவிரோதமாகச் சுரண்டுவது அல்லது எங்களது அலுவலகம் ரோம் சட்டகுற்றங்கள் பற்றி விசாரிக்கக் குறிப்பானக் கவனத்தை தரும். அவை, எதனால் எதன் விளைவாக செய்யப்பட்டன, மற்ற செயல்பாடுகளில் சுற்றுப்புறச்சூழலை அழித்தல் இயற்கை சட்டவிரோதமாக நில உரிமையைப் பறித்தல் போன்றவற்றை விசாரிக்க குறிப்பானப் பரிசீலனைகளை தரும் என்று அந்த கொள்கை அறிக்கை குறிப்பிட்டது.

“அதனால்தான் நாங்கள் நம்பிக்கையோடு இருந்தோம்” என்கிறார் ஜியார் ஜெட்டா. மேலும், அவர் “ஏனென்றால் அவர்களது கொள்கை அறிக்கை எந்த மாதிரியான நிலைமைகளை பரிசீலிக்க வேண்டுமென  விவரிக்கிறதோ, அவற்றுக்குள் எங்களது பிரச்சனையும் வருகிறது” என்கிறார்.

இவ்வாறு கூறப்பட்டால் ஜியார் ஜெட்டா விரைவாக சுட்டிக் காட்டுவது ஐ.சி.சி தனது அடிப்படை நோக்கங்களை விரிவுபடுத்தவில்லை வழக்கறிஞர் அலுவலக தரப்பில் இன்னமும் ரோம் சட்டத்தின் கீழுள்ளக் குற்றங்களைப் புலன் விசாரணை செய்வதில்தான் முழுதும் ஈடுபட முடிகிறது. மாறாக, தற்போது பட்டியலிடப்பட்ட குற்றங்கள் சுற்றுச்சூழல் சீரழிவு, இயற்கை வளங்களை சட்டவிரோதமாக சுரண்டுவது அல்லது சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பங்களித்த வழக்குகளுக்கு நீதிமன்றம் முன்னுரிமை அளிக்க முடியும்.

ஐ.சி.சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மத்தியில், வழக்கறிஞர் அலுவலகத்திற்கு மட்டுமே தகவல் தொடர்புகளை சமர்ப்பிப்பது ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மற்றும் கம்போடியா முழுவதும் நில அபகரிப்பில் ஈடுபடுவோரின் நடத்தையை மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது; ஆனால், ஜியர் ஜெட்டா கவனித்தபடி இது அப்படி இல்லை நடந்தது இதற்கு எதிரானது.

அரசு இந்த தகவல்களை அனுமதிக்கவில்லை இதனைப் புறக்கணிப்பதாகத் தெரிகிறது. அரசியல் உறுதி இருக்கவில்லை என்ற செய்தியை மறுபடி உறுதிபடுத்தியது. குறிப்பாக, இந்த பிரச்சனையின் மீது கவனம் செலுத்துமளவு நீதித்துறை சுதந்திரமில்லாதிருந்தது.

இந்த நிகழ்வுகள் குறித்தும் ஐ.சி.சி-யால் பரிசீலிக்கப்படும் நிலப் பறிப்பு விசாரணை குறித்தும் கருத்துக் கேட்கத் தொடர்புக் கொண்ட போது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நேத் பீகாட்ரா, பதில் சொல்வதற்கு உரிய நபர் தான் அல்ல என்று மறுத்துவிட்டார். நில மேலாண்மை அமைச்சகத்தின் செங்லாட்டை தொடர்புக் கொள்ள முடியவில்லை. அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் கூட இது பற்றி பொதுவெளியில் பேச மறுக்கின்றன.

அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ஃபேசிபான் ஐ.சி.சி-யின் முன்னேற்றம் குறித்து அரசு என்ன நினைக்கிறது என்று பேச மறுத்த்தைப் போல, கம்போடியன் மக்கள் கட்சி செய்தித் தொடர்பாளர் சாக் எய்சான், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோய்குயான்க் மற்றும் அமைச்சரவையின் செய்தித் தொடர்பாளர் ஏக்தா ஆகியோரும் ஏற்கனவே மறுத்திருந்தனர்.

எனவே, பிரதம மந்திரி ஹன் செனின் நிர்வாகத்தில் உள்ள எவரும் குறிப்பாக நில அபகரிப்பில் ஈடுபடுவதை இலக்காகக் கொள்வதில் அக்கறைக் கொண்டுள்ளார்களா என்பதை தெரிந்துக் கொள்ள முடியாத நிலையில், ஆனால் ஜியர் ஜெட்டா குறிப்பிட்டது போல, சர்வதேச தடைகளின் எதிர்பார்ப்பில் அரசாங்கம் முன்னதாகச் சற்று முன்னேறியது.

இங்கே நாங்கள் பொருளாதார தடைகளைப் பற்றி பேசவில்லை குற்றவியல் பொறுப்பு கூறலைப் பற்றிதான் பேசிக் கொண்டிருக்கிறோம் சர்வதேச சமூகம் தனிநபர்களை குறிவைத்து செயல்படும் போது அரசு அதற்கு எதிர்வினை ஆற்றுகிறது. சில அலுவலர்களும் உயர் அதிகாரிகளும் தங்கள் வியாபாரத்தை மறைக்கிறார்கள் என்று தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

வரலாற்று சிக்கல்களும் தீர்வுகளின் பற்றாக்குறையும்

கம்போடியாவில் இனப் படுகொலைக்குப் பிறகு கேமர்ருஜ் பகுதியில் நில உரிமைகள் அழிக்கப்பட்டன. நில உரிமை என்பது நீண்ட காலமாக ஒரு உணர்வு பூர்வமான சமுகப் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த நடவடிக்கை நீண்ட காலமாக நீடித்த நில உரிமைகளை 1980-ல் ரத்து செய்வதில் முடிந்தது. ஆனால் 1990-ன் பெரும்பகுதி கம்போடியாவை சூறையாடியக் கசப்பானப் போர் நடந்த போது நிலங்களுக்குத் தரப்பட்ட சலுகைகளின் மதிப்புத் தெளிவாகியது.

கம்போடியாவில் ஐக்கிய நாடுகளின் இடைக்கால அதிகார சபையை அடுத்து, பல்வேறு அரசியல் பிரிவுகள் மேலாதிக்கத்திற்கான ஏலங்களுக்கு நிதியளிக்க முயன்றதால், 1991 மற்றும் 1997-க்கு இடையில், அரசாங்கம் சுமார் 7 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை வன சலுகைகளாக ஒதுக்கியது.

கிம்சருர் சோயுன் போன்றோர்கள் 1995-லிருந்தே பேனம் பென் பகுதியின் புறப்பகுதியில் வந்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். 1999 வரை நில மேலாண்மை அமைச்சகம் இருந்ததில்லை. கம்போடியா நில சட்டம் 1992-ன் பதிப்பு, அதன் 2001 சட்டத் திருத்தம், அதன் 2001 திருத்தம் வரை பலவீனமான – எந்தவொரு அமலாக்கத்தாலும் பாதிக்கப்பட்டது.

ஆனால், 1995-ஆம் ஆண்டில் நில நன்கொடைகளை வழங்க சர்வதேச நன்கொடையாளர்களின் ஆதரவைக் கோரியப் போதிலும், 2001-ஆம் ஆண்டில் உலக வங்கி கம்போடியாவின் நிலப்பரப்பில் 80 சதிவீதம் அரசின் சொத்தாகக் கருதப்பட்டதாகவும், நிலப் பட்டாக்களுக்கான 4 மில்லியன் விண்ணப்பங்களில் 6,00,000 மட்டுமே செயல்படுத்தப்பட்டதாகவும் மதிப்பிட்டுள்ளது.

2010-ல் ஐ.நா மூலதன மேம்பாட்டு நிதி கம்போடியாவின் 30 சதவீத நிலங்கள் ஒரு சதவீத மக்களிடம் குவிந்திருந்ததாகக் கண்டுபிடித்தது. 2001-ல் சட்டதிருத்தம்தான் இதற்கு முக்கியமான காரணம். அதுதான் அரசு-பொது நிலங்களை எளிதாக அரசு-தனியார் நிலங்களாக மாற்றிக் கொள்ள வழிவகைகளை ஏற்படுத்தியிருந்தது. ஓரு சில பிரிவுகள் சரியாக இருந்தாலே நிலங்களை விற்பதற்கு அனுமதியளித்தது.

“இப்போது பலவந்தமாக வெளியேற்றலும் நிலப் பறிப்புகளும் விரிவான அளவில் பிரச்சனைகளாக உருவெடுத்ததால், அதன் விளைவாக சர்வதேச கவனத்தை ஈர்த்த்தாலும் அரசாங்கம் நிலச் சலுகைகள் விசயத்தில் தனது வழிமுறைகளை மாற்றிக் கொள்ள நிர்பந்தப் படுத்தப்பட்டது” என்கிறார் உள்ளூர் நில உரிமைகளுக்கான என்ஜிஓ ஈக்விடபிள் கம்போடியா வின் இயக்குநர் ஏங்க் வுதி.

2020 செப்டம்பரில் நில மேலாண்மை அமைச்சகத்தின் முன் நடைபெற்ற நில அபகரிப்புக்கு எதிரானப் போராட்டம்.

“மிக அதிகமான அரசு-பொது நிலங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவது. அதோடு, ஆறுகள் ஏரிகள் ஈரநிலங்கள் எல்லாம் தூர்ந்துப்போக வைப்பதையெல்லாம் பார்க்கும்போது நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்கிறது” என்கிறார். இந்த மாதிரியான தனியாருக்கு தாரை வார்க்கும் நிகழ்வுகள் நகர்புறங்கள் மட்டுமின்றி நாடு முழுக்க குறிப்பாக கடலோரப் பகுதிகளில் நடந்துக் கொண்டிருக்கிறது என்கிறார் கூடுதலாக.

செப் 22, 2020-ல் மூன்று பகுதிகளை சேர்ந்த 400 கம்போடிய மக்கள் பேனம் பென் நில மேலாண்மை அமைச்சகத்தின் வெளியே தீர்க்கப்படாத நிலப் பிரச்னைகளை சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரும்பாலானப் பிரச்சனைகள் அரசு மக்களிடம் நிலங்களை திரும்ப ஒப்படைக்கும்படி உத்திரவிட்டதை அடுத்து ஏற்பட்டவை.

“நிலப் பறிப்பு என்பது நில சலுகைகளாக அரசாங்கத்தால் நியாயப்படுத்தப் படுகிறது. வீட்டு வசதி மேம்பாடு அல்லது உள்கட்டமைப்பு திட்டங்கள், ஆனால் மக்களுக்கு இதைப் பற்றிய எந்த புரிதலும் இருப்பதில்லை குறிப்பிடப்பட வேண்டியது கட்டுமானம் ஏதாவது தொடங்கும் போதோ அல்லது இடிக்கப்படும் போதோதான் மக்களுக்கு தெரிய வரும்” என்கிறார் வுதி.

இந்த வழக்குகளில் நீதி கிடைப்பது என்பது அரிதானது அல்லது மிக மெதுவானது. 2010-ல் ஒட்டார் மேன்செய் ஹோகாங் காம்போங் ஸ்பெயு மற்றும் ப்ரே விஹியர் பகுதிகளில் சர்க்கரை தோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டதை ஒட்டி எழுந்த நிலப் பிரச்னைகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன.

“”ஒட்டார் மின்சேய் பகுதியில் பாதிக்கப்பட்ட 700 குடும்பங்களில் பாதிக்கு சற்று மேலானவர்கள் 2 ஹெக்டர் ப்ளாட் நிலம் இழப்பீடாக பெற்றனர். ஹோகான் பகுதியில் 1000 குடும்பங்களுக்கு 1.5 ஹெக்டர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டு நிகழ்வுகளிலுமே இடம் மாற்றி தந்தது மற்றும் இழப்பீட்டு தொகுப்புகள் அந்த சமூகத்தின் தேவையை ஈடுசெய்வதாக இல்லை என்பதுதான் உண்மை” என்கிறார் வுதி.

வுதி மேலும் சொல்வது காம்போங்க் ஸ்பியு மற்றும் ப்ரிய விகியர் ஆகிய பகுதிகளில் உள்ள தங்கள் நிலங்களை மிகப்பெரிய செல்வந்தரும் சி.பி.பி செனட்டருமான லி யுங்-க்கு தொடர்புடைய சர்க்கரை ஆலைகளுக்காக இழந்த 2130 குடும்பங்களுக்கு இந்த இழப்பீடுகள் கூட கிடைக்கவில்லை.

ரத்னகிரி பகுதியில் வியாட்நாமிய மிகப்பெரிய ரப்பர் கம்பெனி HAGL அங்கு இருக்கக் கூடிய 2000 உள்நாட்டு பழங்குடியினரின் புனித நிலங்களை சட்டவிரோதமாக பறித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

பூர்வீக சமூகங்கள் நிலப் பறிப்பு மூலமாக எதிர்மறையாக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். வூதி மேலும் சொல்கிறார் நிலங்கள் எப்போதுமே அவர்களது ஆன்மிக நம்பிக்கை மற்றும் வாழ்க்கைக்கான ஆதாரங்களின் மையமாக உள்ளது. மேலும், கேமர் பாதிக்கப்பட்டவர்களை விடக் குறைவாக நீதி வழங்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பெரிய பிரச்னைகள் மேலும் நீடித்து போகக் காரணம் போதுமான இழப்பீடு கிடைக்காததுதான். பல ஆண்டுகளுக்கு முன்னால் தங்கள் நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹோகான் பகுதியிலிருந்த மக்கள் தங்கள் நிலங்களில் சிறிதளவை திரும்பப் பெற்றனர். ஆனால், நிலத்தை திரும்பப் பெற்றதே அவர்களது வாழ்வாதார பிரச்சனைகளை தீர்க்கவில்லை. அவர்கள் எப்போதும் மிகப்பெரியக் கடனில் சிக்கி தவித்து வந்தனர். அதனால், எந்தவித நிதி ஆதாரமும் இல்லாமல் தங்களது வணிகத்தை மீட்டெடுக்க முடியாமல் தவித்தனர். இதனால், தங்களது நிலங்களையாரிடம் பறிக்கொடுத்து மீட்டெடுத்தார்களோ அதே ஆட்களிடம் விற்கும் நிலைக்கு சென்றனர்.

நிலப் பறிப்பாளர்கள் – சுற்றுச்சூழலை கெடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.

ஐ.சி.சி-க்கு அனுப்பப்பட்ட தகவல் தொடர்பில் ஒரு செய்திக் கொண்டு வரப்படாமலேயே இருந்தது. அது கம்போடியாவில் நிலப் பறிப்பு மற்றும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளுக்கும் சுற்றுச்சூழலை சீரழித்தல் ஆகியவற்றுக்கும் உள்ளுர உண்மையானத் தொடர்பு இருக்கிறது என்பதுதான்.

2016 கொள்கை அறிக்கை மற்றும் சமீபத்தில் டிசம்பர் 2020-ல் ஐ.சி.சி விளக்குவதாக உறுதியளித்திருந்த பிரச்சனை இதுதான் சர்வதேச வழக்கறிஞர் பிலிப்பி சாண்ட்ஸ் மற்றும் ப்ளாரன்ஸ் மும்பா கம்போடியாவின் நீதிமன்றங்களில் சிறப்பு சாம்பர்களில் நீதிபதியாக இருப்பவர் இருவரும் சர்வதேசக் குற்றங்களின் வரிசையில் சுற்றுச்சுழல் மாசுப்படுத்துவர்களை இனப்படுகொலை மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் கொடுமைகள் செய்பவர்களாக பொருள்வருமாறு வரைவறிக்கை தயாரிப்பதாக அறிக்கை விட்டுள்ளனர். அவர்களது விளக்கங்கள் இந்த ஆண்டே வரும் என்று எதிர்பார்க்கப் படுவதாகவும் அப்போது சுற்றுச்சூழலை அழிக்கும் கொடியவர்களை சர்வதேச நீதியின் முன்னால் நிறுத்த முடியும். தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும்.

புனோம் சாம்கோஸ் வனவிலங்கு சரணாலயத்திற்குள் சமீபத்திய காடழிப்பு.

தொழில்துறை முன்னேற்றம் என்ற நடவடிக்கை கலாச்சார இனப் படுகொலை மற்றும் சுற்றுச்சூழல் அழித்தல் ஆகிய நிலைமைகளை உருவாக்கும் நிபந்தனை என்கிறார் கர்டினி வொர்க் தேசிய சென்க்சி பல்கலைக் கழகத்தில் மனித இனங்களை பற்றி ஆராயும் அறிவுத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணிப்புரிபவர். கொடுமைகாரர்கள் மக்களை அல்லது சுற்றுச்சுழலை கொலை செய்ய வேண்டுமென்று வெளிப்படையான நோக்கத்துடன் செய்வதில்லை. குறைந்தபட்சம் அவர்கள் செய்வதை நிரூபிப்பது கடினம். ஆனால், தங்களுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே எதையும் செய்கிறார்கள்.

மார்ச் 12-ல் கெமர் படிப்புகளுக்கான மையம் நடத்திய ஒரு இணையவழிக் கருத்தரங்கத்தில் வொர்க் கூறுகிறார் “2000-ம் ஆண்டில் தீடிரெனப் பொழியப்பட்ட நில சலுகைகள் மிகப்பெரிய அளவில் சுற்றுச்சூழல் அழிய காரணமாயிற்று”. ஒரு கம்போடியன் சொன்னதை மேற்கோள் காட்டுகிறார். அது “கேமர்ருஜ் தலைவர் போல்பாட் மக்களை கொன்றார். தற்போதைய முன்னேற்றங்களோ – நில சலுகைகளுடன் தொடர்புடைய பெரும்பாலான பணிகள் –  மிச்சம் மீதி இருக்கும் எல்லாவற்றையும் கொல்கிறது.”

“தற்போது ஐ.சி.சி-யில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்கள் சில மாறுபாடுகளை கொண்டுவரக் கூடிய சாத்தியக் கூறுகளைத் தெரிவிக்கின்றன. நமக்கு தேவை தற்போது நடைமுறையிலிருக்கும் நிலைமைகளில் மாற்றம் புதிய சட்டம் அல்ல.” என்கிறார் அவர்.

தங்களுக்குள்ளேயே நெருக்கமான தொடர்பும் அதேவிதமாக அரசாங்கத்துடனும் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டப் பொருளாதார நிலச் சலுகைகள் வொர்க்-ன் கவனத்துக்குரியப் பகுதியாக இருக்கும் ப்ரேலாங் வனவிலங்கு சரணாலாயத்தில் பரவலாகப் பதியப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன.

ப்ரேலங் என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருக்கும் தங்களது நிறுவனங்களான திங்க் பையோடெக் கின் சேர்மனும் ஆங்கர் ப்ளைவுட் போர்டில் இருப்பவருமான சூ-சங்லு சட்டவிரோத இணைப்பில் தங்கள் நிறுவனங்கள் இருப்பதாக சொல்வதை ஒத்துக்கொள்ளவில்லை. அதேசமயம், கம்போடியாவிலோ சர்வதேச ரீதியிலோ சட்டநடவடிக்கைக்கான வாய்ப்புகளுக்குப் பயப்படவில்லை என்றும் கூறுகிறார்.

திங்க் பயோடெக்கின் மர சலுகையின் உள்ளே முதன்முதலில் பெரிய காடுகளை காடழிப்பதைக் காட்டுகின்றன, இது இரை லாங் வனவிலங்கு சரணாலயத்தை கைவிடுகிறது.

“என்னை ஏன் நிறுத்த வேண்டும்? காற்றில் மாசு ஏற்படுத்துமளவு எல்லாவற்றையும் எரிப்பவன் நான் அல்ல” என்கிறார் லூ. மேலும், சொல்கிறார் “காடுகளைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பு. நாங்கள் வியாபாரிகள். சட்டவிரோதப் பதிவுகளை நிறுத்த இங்கே நாங்கள் இல்லை” என்கிறார்.

2009-ல் கம்போடியாவில் தனது ஆராய்ச்சியை கம்போடியா முழுவதும் நிலச் சலுகைகளின் விளைவாக ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் விளைவுகளை அவற்றின் பல வடிவங்களில் உள்ளடக்கியது துவங்கினார். வொர்க் புர்சாட் காம்போங், சனாங் காம்போங் ஸ்பெ மற்றும் ஸ்டங் ட்ரங்க் பகுதிகள் உள்ளிட்டு ஒவ்வொரு பகுதியிலும் பொருளாதார நிலச் சலுகைகளுக்குப் பின்னால் நிலம் உரிமைப் பறிக்கப்படுவது மற்றும் சுற்றுச்சூழல் அழிவுத் தொடர்ந்து உள்ளன.

“1990-களின் முந்தைய வனச்சலுகைகளை விட இவை மிகவும் கொடூரமானவை” என்று அவர் கூறினார், மேலும், கம்போடியாவில் 2012-ஆம் ஆண்டில் வழங்கப்படுவதை நிறுத்தும் வரை பொருளாதார நில சலுகைகள் கம்போடியாவில் 2 மில்லியன் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்களை எடுத்துக் கொண்டன.

சர்வதேச வளர்ச்சி கம்போடியாவில் தோல்வியுற்றதா?

பொருளாதார நிலச் சலுகைகள், சமூக நிலச் சலுகைகளுக்கு வழிவகுத்தது. இது உலக வங்கியால் முயற்சியெடுத்து அறிமுகப்படுத்தப்பட்டது. கம்போடியாவில் வளர்ந்து வரும் நிலமற்றோரின் மக்கள் தொகையைக் கணக்கிலெடுத்து அவர்களுக்கு நில அனுபோக காலத்தை உறுதி செய்ய வடிவமைக்கப்பட்டது. ஆனால், உரிமம் பெற்றவர்களின் செயற்பாட்டாளர்கள் ஏறக்குறைய நிலபட்டாக்களுக்கு சம்பந்தமான எல்லா நல்ல நோக்கங்களுடையத் திட்டங்கள் முறைதவறியதென எச்சரித்தனர்.

உள்ளூர் நில உரிமையாளர்களின் வழக்கறிஞர்கள் தெரிவித்ததிலிருந்து அவர்களது கருத்தாக நில அபகரிப்புகளைத் தொடர்ந்து வெளியேற்றப்பட்ட சமூகத்தினருக்கு முறையான இழப்பீடு வழிமுறைகளுக்குப் பதிலாக சமூக நிலச் சலுகைகள் பயன்படுத்தபடுவதில்லை என்பது மட்டுமல்ல ராணுவ அலுவலர்களுக்கு உள்ளூர் அதிகாரிகளின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கும் சேர்ந்து நிலங்கள் வழங்கப்படுவதன் மூலம் இது தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது எனப் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜீன் (2020) உலக வங்கி 93 மில்லியன் டாலரை கம்போடியா நில அனுபோகக் காலதிட்டத்தின் மூன்றாவது கட்டத்திற்கென  அறிவித்தது. இந்த முறைமையில் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தப் போதிலும், நில அபகரிப்பு மற்றும் அது ஏற்படுத்திய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலக வங்கி உடந்தையாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

“உலக வங்கி எந்த அளவிற்கும் தருமசிந்தனையுள்ளதல்ல என்பதில் வியக்க ஒன்றுமில்லை” என்று வொர்க் தனது இமெயிலில் எழுதுகிறார். கம்போடியா தீவிர பிடுங்குவோராக இருந்தாலும் தொடர்ந்து உலக வங்கியிடமிருந்து நிதிப் பெற்றுக் கொண்டிருப்பதற்கு காரணம் வங்கிகளின் முன்னுரிமை யாருக்கானது என்பதற்கான அடையாளம் ஆகும்.

கம்போடியாவில் இருக்கும் உலக வங்கியின் பிரதிநிதிகள் LASED திட்டங்கள் மூலம் நிலம் அளிக்கப்பட்டது தொடர்பாக இவ்வளவு மோசமானப் பிரச்னைகள் இருப்பதை அறிந்திருக்கவில்லை என்கிறார்கள். LASED-1, LASED-2 திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறியதால்தான் மூன்றாவது LASED-3வது திட்டத்திற்கு நிதி அதிகரிக்கப்பட்டு அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள்.

SLC நிகழ்வுகளில் நீண்டகாலமாக இணைந்து வேலை செய்ததன் காரணமாக விவரித்தபடி உலக வங்கி எப்போதுமே ஏழை வீட்டுக்காரர்களுக்கு நிலம் சென்று சேருவதற்குப் பாதுகாப்பாகவும் ஆதரவாகவும் இருப்பதாக ஒரு இமெயிலில் எழுதியுள்ளார். நிலப் பாதுகாப்பு ஒரு மதிப்புமிக்கப் பாதுகாப்பு வலைபின்னலை COVID-19  பயமுறுத்தும் காலகட்டத்தில் சாதித்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.

முதன்மை வனத்தின் பகுதிகள் சமீபத்தில் பீபிமெக்ஸ் சலுகைக்கு வெளியே மற்றொரு பகுதியில் எரிக்கப்பட்டன. யு.எஸ். விண்வெளி நிறுவனமான நாசாவின் தரவுகளின்படி, சலுகையில் தீ செயல்பாடு தொடங்கியது.

முதல் இரண்டு தவணை LASED திட்டங்களுக்கு இதுவரை 39.86 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இது 2008-லிருந்து செயல்படுகிறது. LASED-3 2021 முதல் 2026 வரை திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு செலவாகும் தொகையாக மொத்தம் 146.8 மில்லியன் டாலர்கள் என திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், இதுவரை 3,362 நிலப் பட்டாக்கள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் கையகபடுத்தப்பட்ட ஒவ்வொரு நிலப் பட்டாவிற்கும் உலக வங்கி செலவழித்த தொகை 12,000 டாலர்கள்.

மார்ச் 12 அன்று, உலக வங்கி சுற்றுச்சூழல் கணக்கியல் கட்டமைப்பிலிருந்து கண்டுபிடிப்புகளை வெளியிட்டது. இது ஒரு டாலர் மதிப்பை சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் அவற்றைப் பாதுகாக்க உதவும் முயற்சியில் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

கம்போடியா அரசாங்கம் உலக வங்கியிடம் கம்போடியா வனப் பிரதேசங்களில் 65 சதவீதத்தைப் பாதுகாக்கும் முடிவுக்கு ஆதரவாகப் பொருளாதாரத் தரவுகளைக் கோரியதாகக் கூறப்படுகிறது. அந்த ஆய்வு வனப்பாதுகாப்பு மூலம் கிடைக்கும் லாபம் என்பது கரி தயாரிப்புக்காக மரங்களை வெட்டுவதைப் போல 5 மடங்கு அதிகமானது  அல்லது விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வனச் சுற்றுச்சூழல் அமைப்புகள் வனப் பராமரிப்பதற்கான செலவை விட 20 மடங்கு அதிக லாபம் பெறும் என்றும் பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது

ஆனால், விமர்சனங்கள் உலக வங்கியின் நோக்கங்கள் குறித்து திருப்தியடையவில்லை மற்றும் கம்போடியாவின் பாதுகாப்புத் தொடர்பான உறவில் மாற்றத்தைத் தூண்டும் ஐ.சி.சி.யின் திறனைக் கூட சந்தேகிக்கிறது.

“நேர்மையாக, அவர்கள் (உலக வங்கி) சுற்றுச்சூழல் மதிப்பை அங்கீகரிப்பது பற்றிப் பேசுகிறார்கள், உண்மையில் சுற்றுச்சூழல் அமைப்புகளை மதிப்பிடுவதற்கு தேவையானதைச் செய்யவில்லை என்பது பயமுறுத்துகிறது என்கிறார் வொர்க். மாற்றம் மற்றும் மதிப்பு குறித்து நிறையப் பேசுகிறார்கள் ஆனால் களத்தில் செயல்பாடுகளில் மிகக் குறைவான மாற்றங்களைத்தான் பார்க்க முடிகிறது. மதிப்பு என்பது பொருளாதாரம் மட்டும்தான். எங்களது கூட்டுத்துவ வாழ்க்கை ஆதரவு அமைப்புகளுக்கு எந்த உள்ளார்ந்த மதிப்பும் இல்லை என்றுதான் தெரிகிறது.

படிக்க :
♦ கம்போடியா – விரட்டப்படும் விவசாயிகள்
♦ கம்போடியா : 4 தொழிலாளிகள் சுட்டுக் கொலை !

அபிவிருத்தி பங்குதாரர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், செயற்பாட்டாளர்கள் அல்லது வலுவான சாத்தியமான ஐ.சி.சி வழக்குப் போன்ற எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் இதுவரை அரசாங்கம் தங்கள் பதிலை மாற்றவில்லை என்று அவர் மேலும் கூறினார். ஆனால், ஐ.சி.சி சில அரசாங்க அதிகாரிகளை “கொஞ்சம் வியர்த்துக் கொள்ளக் கூடும்” என்றுக் கூறினார்.

“முழு உலக முன்னேற்றத்திற்கானத் திட்டம் தனக்கு தானேக் காட்ட வேண்டியது அதிகம் என நான் நம்பவில்லை” என்று அவர் கூறினார். ஆனால் “இது எல்லாமே கம்போடியாவில் தெளிவாகத் தெரிகிறது நமது உலகளாவியப் பொருளாதார அமைப்பில் எல்லாமே தவறு என்பதற்கான எடுத்துக்காட்டாக ஒளிவீசி நிற்கிறது.”


தமிழாக்கம் : மணிவேல்
செய்தி ஆதாரம் : news.mongabay.com

 

கொரோனா தடுப்பூசிக்கான காப்புரிமையை ரத்து செய் || வீடியோ

கொரோனா முதல் அலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். தற்போது இரண்டாம் அலையில் வடமாநிலங்கள் முழுவது மருத்துவமனைகளில் இடமில்லாம், ஆக்சிஜன் இல்லாமல், தடுப்பூசிகள் இல்லாமல், இறந்தவர்களை இடுகாட்டில் எறிக்கமுடியாமல் மிகபெரும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. ஆனால், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசிகளை அரசே தயாரிக்காமல், தனியார் நிறுவனங்கள் இலாபமிட்ட வைத்துக்கொண்டிருக்கிறது.

மேலும் ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஸ்டெர்லைட்டை திறக்க முயற்சிக்கும் அரசை  தோழர் அமிர்தா இந்த காணொளியில் அம்பலப்படுத்துகிறார்.

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

000

பாகம் 1 : தூத்துக்குடியில் நடைபெற்ற லட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்ற 100 நாள் போராட்டத்தில் போலீசின் கொலை செயல்களை பற்றி கலந்தில் இருந்து பார்த்த தோழர் குருசாமி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை பற்றியும், அதன் பின் தூத்துக்குடி மக்களுக்கு நிகழ்ந்த சொல்லவொன்னா துயரங்கள் பற்றியும் இந்த காணொளியில் விளக்குகிறார்.

000

பாகம் 2 : ஆக்சிஜன் பற்றாக்குறை என்ற நாடகத்தை அறங்கேற்றி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயற்சிக்கும் வேதாந்தம். அதற்கு துணைப்போகும் மத்திய-மாநில அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றத்தை தோழர் மருது மற்றும் தோழர் குருராமி ஆகியோர் இந்த காணொளியில் அம்பலப்படுத்துகிறார்கள்.

000

பாகம் 3 : அரசியல் கட்சிகளை நம்புங்கள், தேர்தலில் ஓட்டுப்போட்டால் பிரச்சனை தீரும் என்று சொன்னவர்கள் தற்போது ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்களாம் என ஓட்டுக்கட்சிகள் கூறியதை அடுத்து தங்கள் கருத்துக்களை வேறுவிதமாக மாற்றும் பச்சோந்தி தனங்களை தோழர் மருது மற்றும் தோழர் குருராமி ஆகியோர் இந்த காணொளியில் அம்பலப்படுத்துகிறார்கள்.


மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

பெண்களுக்கு எதிரான அடக்குமுறையைக் காட்சிப்படுத்தும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” || விஜயகணேஷ்

ஜியோ பேபி இயக்கிய “தி கிரேட் இந்தியன் கிச்சன்” எனும் மலையாள மொழி திரைப்படம் பெரும்பாலான மக்களிடையே பெரும் கவனம் பெற்றுள்ளது. குடும்ப அமைப்பில் பெண்களின் நிலையை மையக் கருத்தாக கொண்டு இந்தியாவில் பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மேம்பட்ட எதார்த்த திரைமொழியைப் பயன்படுத்தி நுட்பமான ஆணாதிக்கக் கூறுகளை வெளிக்கொணர்ந்த விதத்தில் இத்திரைப்படம் வேறுபடுகிறது.

மிக முக்கியமாக, கதையமைப்பு காட்சிப் படிமங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அப்படிமங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் நமது சமூக அமைப்பில், குறிப்பாக குடும்ப அமைப்பில் பல அடுக்குகளாகப் படர்ந்திருக்கும் பெண் சார்ந்த மதிப்பீடுகளை நன்கு புரிந்து கொள்ள முடியும். ஒரு சரியான புரிதலின்றி அடுக்களையில் பெண்கள் படும் துயரம் என்றளவில் ஒரு தட்டையான வாசிப்பை தவிர்க்க வேண்டும்.

படிக்க :
♦ சைக்கோ திரை விமர்சனம் : அல்வாவை வெட்ட திருப்பாச்சி அருவாள் !
♦ திரை விமர்சனம் : அறம் ஒரு வரம்தான் ஆனாலும்….

மாறாக, பரந்த வாசிப்பும் நுண் அரசியல் பார்வையும் கொண்டு அக்கறையுள்ள பார்வையாளராக இத்திரைப்படத்தைப் பார்த்தால் ஒவ்வொரு படிமத்தையும் பெண்ணிய அரசியல் சார்ந்த விவாதங்களின் அடிப்படையில் வாசிக்க உந்துதல் ஏற்படும். அத்தகைய பார்வையாளரின் வாசிப்பை பதிவு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

000

திரைப்படத்தின் தொடக்கத்திலே நடனமும் சமையலும் மாறி மாறி வரும் காட்சிகள் முன்னுரை போல் செயல்படுகின்றன. தனது லட்சியத்தை விடுத்து திருமண வாழ்வில் சிக்கித் தவிக்கும் பெண்ணின் கதை என்பது இதன் மூலம் உணர்த்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து திருமண முறையில் உள்ள அடிப்படை முரணைப் பிரதிபலிக்கும் வண்ணம் பெண் பார்க்கும் நிகழ்வின்போது சூரஜ், நிமிஷா  பேசிக் கொள்ளும் காட்சி வருகிறது.

இக்காட்சியில் ஒருவரையொருவர் அறிந்ததில்லை என்பதை ஒப்புக் கொண்டாலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கின்றனர். மாப்பிள்ளை பாரம்பரியமானக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது பெண் வீட்டார் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டில் திருமணம் என்பது தனி நபர் விருப்பம் சார்ந்த ஒன்றாக என்றுமே இருந்ததில்லை. மாறாக மணமக்களின் வீட்டார் தீர்மானிக்கும் விதமாக இருந்து வருகிறது.

சூரஜ், நிமிஷாவிற்கு திருமணம் நடைபெறுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அத்திருமணத்தைக் கொண்டாடித் தீர்க்கின்றனர். பல சடங்குகளும் இடம்பெறுகின்றன. பொதுவாக திருமணத்திற்கு வருகைப் புரிபவர்கள் நல்ல ஆடை அணிந்து, ஒப்பனை செய்து கொண்டு, தங்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பேசி மகிழ்வார்கள்.

மொத்தத்தில், அவர்களுக்கு தங்களின் கொண்டாட்டமே முக்கியம். திருமணமுறைப் பற்றியோ தம்பதிகளின் இல்லற வாழ்க்கை பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை. செய்யப்படும் சடங்குகளும் போலியான உணர்வுகளை வெளிப்படுத்தவே பயன்படுகின்றன. திருமணம் முடிந்து தம்பதிகள் வீட்டிற்கு வந்ததும் வாசலில் நிற்கும் வாகனங்கள் அனைத்தும் புறப்படும் காட்சியை இரண்டு விதமாகப் புரிந்துக் கொள்ளலாம்: திருமணக் கொண்டாட்டம் முடிந்து தம்பதிகள் சாதாரண வாழ்க்கைக்குள் நுழைகிறார்கள் என்பதையும் இனி அவர்களின் இல்லற வாழ்க்கையில் எந்தவிதமான தலையீடும் இருக்காது என்பதையும் குறிக்கும் விதமாக அக்காட்சி அமைகிறது.

திருமணத்தன்று இரவு சூரஜும், நிமிஷாவும் அவர்களது அறையில் முதன்முதலாக பேசிக் கொள்கின்றனர். அப்பொழுது சூரஜ் நிமிஷாவிடம் தனது வீட்டை, தனது பெற்றோரை பிடித்திருக்கிறதா என்று கேட்கிறான். அவன் தனது மனைவியின் சௌகரியத்தை விசாரிப்பதாக எண்ணி இக்கேள்வியை சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை.

எதிர்கேள்வி கேட்கவோ அல்லது எதிர்மறையாக பேசவோ நிமிஷாவிற்கும் அனுமதியில்லை. மேலும், மனைவி தனது கணவரின் குடும்பத்தை தன் குடும்பமாக நினைத்து அவர்களின் பழக்கவழக்கங்களை எந்த கேள்வியுமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் என இக்காட்சி உணர்த்துகிறது.

திருமணமான மறுநாள் நிமிஷா குளித்து விட்டு மகிழ்வுடன் அடுக்களையில் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சூரஜ் தனது மனைவியிடம் நெருக்கமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறான். நிமிஷாவின் மகிழ்ச்சியையும் அடுக்களையில் இருவரின் நெருக்கத்தையும் பின்வரும் காட்சிகளில் நம்மால் காண முடியாது. இதற்குக் காரணம் என்னவென்றால் திருமணமான புதிதில் பெண்கள் மகழ்ச்சி பொங்க அடுக்களையில் வேலை செய்வதும் கணவன் மனைவியிடம் அடுக்களை வரை சென்று நெருக்கமாக உரையாடுவதும் தற்காலிகமானவை தான்.

மறுபுறம், நிமிஷாவின் மாமியார் தனது கணவருக்கு டூத் பிரஷ் எடுத்து கொடுப்பதிலிருந்து விதவிதமாக சமைத்து கொடுப்பது வரை மிகப் பக்குவமாகப் பார்த்துக் கொள்கிறார். அவர் வேலை செய்யும் விதத்தை கடமை உணர்ச்சியின் வெளிப்பாடாகப் பார்ப்பதை விட சலிப்பின் உச்சம் என்று தான் புரிந்துக் கொள்ள முடிகிறது. அவர் தனது கருவுற்றிருக்கும் மகள் வெளிநாட்டிற்குக் கூப்பிடும் போது பலவித சமையல் பொருட்களையும், பாத்திரங்களையும் எடுத்துச் செல்கிறார். பொதுவாக இதை அம்மாவின் பொறுப்பு, நாட்டின் பாரம்பரியம் என புகழ்வார்கள். ஆனால், அனைத்து திறமைகளும் மழுங்கடிக்கப்பட்டு சமையல் செய்ய மட்டுமே பழகிய இயந்திராமாகத் தான் அவர் காட்சியளிக்கிறார்.

உடல் நலம், ஒய்வு, ஆன்மீகம் ஆகிய அனைத்தும் பெண்களுக்கு மறுக்கப்படுவதை அடுத்தடுத்து வரும் காட்சிகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அடுக்களையில் நிமிஷா தொடர்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் அதே வேளையில் அவரது கணவர் வெள்ளை உடை அணிந்துக் காற்றோட்டமான இடத்தில் யோகா செய்து கொண்டும் அவரது மாமனார் செய்தித்தாள் வாசித்துக் கொண்டும் இருக்கின்றனர்.

அடுக்களையும் படுக்கையறையும் மட்டுமே நிமிஷாவின் ஒரே வெளியாக மாறி மேற்கூறப்பட்ட சௌகரியங்கள் அனைத்தும் அவளுக்கு மறுக்கப்படுகிறது. சூரஜ் சமூகவியல் படித்திருந்தாலும் தனது மனைவி என்னென்ன வேலைகள் செய்கிறாள், அடுக்களையில் அவளது நிலைமையென்ன, அவளது மனநிலையென்ன என்பவைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லை. மாறாக எவ்வித கஷ்டமுமின்றி தான் அவளைப் பார்த்துக் கொள்வதாக கருதுகிறார்.

ஒரு காட்சியில் நிமிஷா தான் அழுக்காக இருப்பதாக சொல்லிய பிறகும் அவளை சூரஜ் முத்தமிடுகிறார். அம்முத்தத்தோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளும் சூரஜ் தினம் தினம் சாப்பிட்ட எச்சங்களை எடுக்கும் போதும், பாத்திரங்களைக் கழுவும் போதும், பாத்திரம் கழுவும் தொட்டியில் கழிவு நீரை அகற்றும் போதும் தனது மனைவி அருவருப்பாக உணர்வதை கவனத்தில் கொள்ளவில்லை.

மற்றுமொரு காட்சியில் நிமிஷாவும் சூரஜும் ஹோட்டலில் சாப்பிடுகிறார்கள். சூரஜ் டேபிள் மேனர்ஸ் காரணமாக சாப்பிட்ட எச்சங்களை ஒரு தட்டில் ஒதுக்கி வைக்கிறார். இதைப் பார்த்ததும் ‘ஏன் வீட்டில் இந்த டேபிள் மேனர்ஸ் இல்லை’ என நிமிஷா சூரஜிடம் கேலியாகக் கேட்கிறார். ‘என் வீடு, என் சௌகரியம்’ என சூரஜ் கோபமாகப் பதில் கூறுகிறார். அப்படியொரு கேள்வியை ஏற்றுக் கொள்ள முடியாத சூரஜ் அக்கேள்வியைக் கேட்டதே தவறு என்றும் அதற்காக நிமிஷாவை மன்னிப்பும் கேட்க வைக்கிறார்.

இக்காட்சியின் மூலம் அழுக்கை அகற்றி வீட்டை சுத்தமாக வைப்பது மனைவியினது கடமையே என்ற செய்தியும் கடத்தப்படுகிறது. அடுக்களையில் பாத்திரம் கழுவும் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறும் குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சீர் செய்ய வேண்டும் என்று நிமிஷா சூரஜிடம் கூறுகிறார். அப்போது ஹோட்டலில் நடைப்பெற்ற உரையாடலை மனதில் வைத்துக் கொண்டு கழிவைப் பற்றியே அவளுக்கு எப்போதும் கவலை இருப்பதாக நக்கலாகக் கூறிவிட்டு சூரஜ் நகர்கிறார்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் இழிவு நீங்க வேண்டும் என்று ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கும் அதே வேளையில், வீட்டிற்குள்ளிருக்கும் அனைத்து விதமான கழிவுகளையும் தங்கள் கைகளால் அகற்றும் பெண்களின் நிலைப் பற்றியும் நாம் கவனிக்க வேண்டும்.

ஒரு கட்டத்தில் நிமிஷாவிற்கு திருமண வாழ்க்கையில் சலிப்பு ஏற்படவே நடன ஆசிரியராக வேலைப் பார்க்கலாம் என முடிவு செய்கிறார். தனது கணவரிடமும் மாமனாரிடமும் அம்முடிவை சொன்னதும் அவர்கள் இருவரும் அதிர்ந்துப் போகின்றனர். நிமிஷாவின் மாமனார் தங்களது குடும்பத்தில் பெண்கள் வேலைக்கு செல்லும் பழக்கமில்லை என்றும் சாப்பிட்டு முடித்து எழுந்து செல்லும் போது அவள் சமைத்த கடலை ருசியாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

இக்காட்சியின் மூலம் அவளிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட சமையல் திறன் ஏற்கனவே செம்மையாக இருக்கும் பொழுது வேலைக்குப் போக நிர்பந்தமில்லை என்று அவர் குறிப்பிடுவது போல் புரிந்துக் கொள்ளலாம். மறுபுறமோ அவளது கணவன் பதட்டம் ஏதுமின்றி வேலையைப் பற்றி பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறான். இக்காட்சியில் சூரஜ் நிதானமாகப் பேசுவதை நல்ல விதம் என்று கருத முடியாது. ஏனென்றால் அவனது பதில் நாட்களைக் கடத்தி நிமிஷாவே அந்த எண்ணத்தை மறக்கும்படி செய்கின்ற முயற்சியே.

இவையனைத்தையும் மீறி வேலைக்குச் செல்ல முற்படும் பொழுது அவள் இருமுனைத் தாக்குதலை சந்திக்கிறாள். ஒன்று, அவள் வீட்டில் செய்யும் வேலைகள் அனைத்தையுமே மிகப் பெரும் சேவையாகக் கருத வேண்டும் என்றும் அவளே வீட்டின் ஐஸ்வர்யம் என்றும் அவளது மாமனார் கூறுகிறார்.

இக்கருத்தையொட்டி பல கேள்விகள் எழும்புகின்றன: நிமிஷாவின் அச்சேவையால் பயன்பெறுபவர்கள் யார்? அவள் பெரும் சேவை செய்கிறாள் என்று வைத்துக் கொண்டாலும் அது ஏன் அவளதுப் பொறுப்பாக மட்டுமே இருக்கிறது? எப்பொழுதும் அழுக்காகவும், கழிவுகளுடன் போராடிக் கொண்டிருக்கும் நிமிஷா திடீரென்று வீட்டின் ஐஸ்வர்யமாக ஆக முடியுமா? அவளின் உடல்நிலைப் பற்றி கவலைப்படுவது யார்? மேலே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தேட முற்பட்டால் ஆணாதிக்கத்தின் வேர்கள் நன்கு புலப்படும்.

இரண்டாவது தாக்குதல் கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அதை அப்படியே பின்பற்றும் நாகரிகம் கூடத் தெரியாதவளாய் நிமிஷா இருப்பதாக சூரஜ் சுட்டிக் காட்டுகிறார். பெண்களும் ஆண்களைப் போல் அறிவு, திறமை, அனுபவ ஞானம் கொண்டவர்கள் என்பதையும் அவர்களால் சமூக வளர்ச்சிக்கு ஆண்களுக்கு நிகராகப் பங்களிக்க முடியும் என்பதையும் ஒத்துக் கொள்ளாததே சூரஜ் போன்றோரின் இத்தவறானப் புரிதலுக்கு காரணம்.

ஏற்கனவே உளவியல் நெருக்கடியில் இருக்கும் நிமிஷாவிற்கு தாம்பத்திய வாழ்க்கையிலும் பெருத்த ஏமாற்றமே. தனதுக் கணவனோடு கொள்ளும் உடலுறவு மிகவும் இயந்திரத்தனமாக இருக்கிறது. தனது கணவனின் காம இச்சையைத் தீர்க்க மட்டுமே பயன்படும் ஒரு கருவியாக இருப்பதை அறிகிறாள். ஒரு சமயம் உடலுறவு வைத்துக் கொள்வதற்கு முன்பு இருவரும் முன்னின்பத்தில் (foreplay) ஈடுபடலாமா என்று சூரஜிடம் நிமிஷா தயக்கத்தோடு கேட்கிறாள். இதைக் கேட்டதும் சூரஜ் உனக்கு முன்னின்பம் பற்றியெல்லாம் தெரியுமா எனக் கேலியாகக் கூறிவிட்டு அவளது உடல் தன்னை ஈர்க்கவில்லை என முகத்தில் அறைந்தது போல் பதில் தருகிறான்.

சூரஜால் இந்த ஒரு அடிப்படை எதிர்பார்ப்பைக் கூடப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. செக்ஸ் என்பது முற்றிலும் ஆண்களுக்கானது என்ற எண்ணம் கொண்ட சூரஜ் அவளது எதிர்பார்ப்பு தனது ஆண்மையைச் சோதிப்பதாக நினைக்கிறான். மேலும், தனது இயலாமையை மறைக்கப் பழியை நிமிஷாவின் உடல் மீது போடுகிறான். படுக்கறையிலும் தனித்து விடப்பட்டவளாகவே உணர்கிறாள்.

சூரஜும் அவனது தந்தையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டதும் நிமிஷா அந்நியப்படுத்தப்படுகிறாள். அதே நேரத்தில் மாதவிடாய் ஏற்பட்டு முற்றிலுமாக ஒதுக்கி வைக்கப் படுகிறாள். இதன் காரணமாய் அவ்விருவரையும் கவனிக்க பெண் உறவினர் ஒருவர் வருகிறார். அவர் நிமிஷாவின் மாமியாரை விட ஒரு படி மேலே சென்று அன்றாட வீட்டு வேலைகளை சலனமின்றி செய்து முடிக்கிறார்.

வழக்கமாக மாதவிடாய் ஏற்படும் நாட்களில் அடுக்களையிலிருந்து ஒதுக்கி வைக்கப்படும் நிமிஷா இம்முறை சபரிமலைக்கு மாலைப் போட்டுள்ள சாமிகளின் கண்ணிலே படக் கூடாது என்று தனி அறையில் அடைத்து வைக்கப்படுகிறாள். வீட்டிற்குள் அவளுக்கான வெளி சுருக்கப் படுகிறது. மாதவிடாயை அறிவியல் பூர்வமாக அணுகாமல் அதையேக் காரணமாகக் காட்டி பெண்ணினத்தைப் புறக்கணிப்பது மாபெரும் குற்றமாகும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் இரத்தப்போக்கை அசுத்தம், தீட்டு எனக் கூறி பெண் உடலின் இயல்பான தன்மைக்குத் தவறானக் கோணம் கற்பிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வீட்டிற்குள்ளே பல மதில் சுவர்கள் கட்டப்பட்டு பெண்ணின் இயக்கம் கட்டுப்படுத்தப் படுகிறது என்பதும் தெளிவாகிறது.

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதால் அவர்கள் பிறக்கும் போதேத் தீட்டுப்பட்டவர்கள் என்ற கருத்துப் பரவலாக நம்பப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கபடாததற்கும் இதுவே காரணம். பெண்களை கோவிலுக்குள் அனுமதித்தால் சாமிக்கு தீட்டு என்று கூறுவது கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் கடவுளின் மீது கட்டமைத்திருக்கும் மதிப்பீடுகளைப் பொய்யாக்குகிறது.

இவ்விவாதத்தை முன்னெடுக்கும் பொருட்டு நமக்கு கிடைக்கும் ஒரே பதில்: ஒருவரின் மதநம்பிக்கை மீது சட்டமோ அரசாங்கமோ அதிகாரம் செலுத்தக் கூடாது என்பதே. இத்திரைப்படம் நேரடியாக இச்சிக்கலைப் பேசவில்லை என்றாலும் மாதவிடாய் பற்றிய தவறானப் புரிதல்களைக் கேள்விக்குட்படுத்துகிறது.

வீட்டிற்குள் தனக்கான வெளி இல்லாததாலும் தன் பிரச்சனையை பகிர்ந்துக் கொள்ள யாரும் இல்லாததாலும் சபரிமலை பிரச்சனைப் பற்றிய சமூக ஆர்வலர் ஒருவரின் காணொளியை தனது முகநூல் பக்கத்தில் நிமிஷா பகிர்கிறாள். இது அவளது குடும்பத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இதனைத் தொடர்ந்து சூரஜின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில முக்கிய ஆட்கள் அவரையும் அவரது தந்தையையும் சந்திக்க வருகின்றனர்.

தங்களின் சாதிக்கென்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது என்றும் அது சீர்குலையாமல் இருக்க அந்த பிரச்சனைக்குரிய காணொளியை நீக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சூரஜும் நிமிஷாவிடம் சென்று அக்காணொளியை நீக்க சொல்கிறான். இதில் கவனிக்க வேண்டிய விஷயமென்னவென்றால், அவன் அவளது அறைக்கு வெளியில் நின்று அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் பேசுகிறான்.

ஏற்கனவே பல்வேறு வழிகளில் அடக்குமுறைக்கு உள்ளான நிமிஷா இம்முறை எதிர்மறையாகப் பதில் கூறுகிறாள். சொல்வதைக் கேட்டால் தான் இந்த வீட்டில் இருக்க முடியும் என்று கூறிவிட்டு சூரஜ் சென்றதும் அவளது உள்ளம் மிகவும் புண்படுகிறது.

பல முனைகளிலிருந்து தாக்குதலை சந்தித்த நிமிஷா கோபத்தின் உச்சத்தில் இருக்கிறாள். சபரிமலைக்கு மாலை போட்ட சாமிகள் வீட்டிற்கு வந்து பூஜைகளைத் தொடங்குகிறார்கள். அப்போது சொல்லப்படும் மந்திரங்களும் செய்யப்படும் சடங்குகளும் நிமிஷாவின் கோபத்திற்கு பின்புலமாக செயல்படுவது கூடுதல் சிறப்பு. உணர்ச்சி குழம்பாக இருந்தாலும் தனது எதிர்ப்பை தெளிவாக திட்டமிடுகிறாள்.

கடைசி வரை சூரஜ் கண்டுக் கொள்ளாத கழிவு நீரைத் தனது ஆயுதமாக மாற்றுகிறாள். முதலில், சூரஜும் அவரது தந்தையும் தேநீர் கேட்கும் போது கழிவு நீரை டம்ளரில் ஊற்றி கொடுக்கிறாள். இரண்டாவதாக, கழிவு நீரை குடித்த பிறகு சூரஜ் தன்னை தாக்க வரும் போது அதே கழிவு நீரை அவன் மேலே ஊற்றிவிடுகிறாள்.

தினமும் அடுக்களையில் வேலை செய்வதால் ஏற்பட்ட சலிப்பு, தனது கனவு வேலையில் சேர அனுமதி மறுக்கப்பட்டது, கழிவுகளை அகற்றியதால் அருவருப்பான உணர்வு, இயந்திரமயமாக்கப்பட்ட தாம்பத்திய வாழ்க்கை, மாதவிடாய் காலங்களில் தனது வீட்டுக்குள்ளே சிறைக் கைதியாய் வாழும் சூழல், சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட எதிர்ப்பு என்று அனைத்து விதத்திலும் நிமிஷாவின் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சி இறுதிக் காட்சியில் வெளிப்படுகிறது.

கதையாடலில் எதார்த்தத்தை மீறி நிமிஷாவிற்கு ஒரு தற்காலிகமான சுதந்திரம் அளிக்கப்படுகிறது. இக்காட்சியைப் பார்க்கும் பார்வையாளர்களும் இந்த தற்காலிக சுதந்திரத்தில் கிடைத்த திருப்தியைக் கொண்டாடிவிட்டு திருமண அமைப்பிலிருந்து வெளியேறிய பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்காமல் இருந்துவிடக் கூடாது.

ஒரு சராசரி பார்வையாளர் நிமிஷாவின் அம்மாவை போன்று வீட்டிற்குள் நடக்கும் சாதாரணப் பிரச்சனைகளுக்காக ஒரு பெண் குடும்பத்தை விட்டு வெளியேறுவதற்கான அவசியம் இல்லை என்றே கூறுவார். பொதுவாகவே நமது சமூகம் பெண்களை உடலளவில் துன்புறுத்துதலை மட்டுமே வன்முறை எனக் கருதுகிறது.

இக்கதையில் வரும் சூரஜ் என்பவர் ஒரு நல்ல கணவர் என்ற சட்டகத்தில் மிக அருமையாகப் பொருந்திக் கொள்வார்: பாரம்பரியமானக் குடும்பத்தைச் சேர்ந்தவர், நல்லதொரு பணியிலுள்ளவர், குறிப்பாக குடிப்பழக்கம் இல்லாதவர், மனைவியை உடலளவில் துன்புறுத்தாதவர். ஆனால், சூரஜும் அவரது தந்தையும் மறைமுகமாக நிமிஷாவிற்கு தரும் ஒவ்வொரு நெருக்கடியும் வன்முறையே.

இத்திரைப்படத்தில் ஒவ்வொரு படிமமும் இந்த நெருக்கடியைத் துல்லியமாக காட்சிப் படுத்துகிறது. இந்நெருக்கடியை சற்றும் பொருட்படுத்தாமல் சில ஆண்கள் தாங்களே அனைத்து வீட்டு வேலைகளை செய்வதாகவும், வேறு சில ஆண்கள் நிமிஷாவைப் போன்ற பொறுப்பான பெண்கள் இன்றளவில் இல்லவே இல்லை எனவும் மற்றும் சிலர் வீட்டு வேலைகளை தங்களின் மனைவியோடுப் பகிர்ந்து செய்வதாகவும் கூறலாம்.

மேற்கூறப்பட்ட மூன்று சாராரின் கருத்துகளுமே ஏற்றுக் கொள்ளதக்கது. எனினும், பொது சமூகத்தின் ஒத்த மனப்பான்மை அல்ல. எனவே, இக்கருத்துகளைக் கொண்டு ஆணாதிக்கத்தின் ஆழத்தை ஆராய்வது சரியான அணுகுமுறையாக இருக்காது. உண்மையில் நம் சமூகத்தில் ஆணாதிக்கத்தால் கட்டமைக்கப்பட்ட சில கற்பிதங்களையும் தப்பெண்ணங்களையும் கேள்விக்குட்படுத்த வேண்டும்.

படிக்க :
♦ தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்

♦ NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !

எடுத்துக்காட்டாக, சமையல் வேலை பெண்களுக்கு மட்டும் ஆனது; அதை எளிதில் செய்து முடித்துவிடலாம்; இவ்வேலைகள் மட்டுமே பெண்ணின் தன்மையை வரையறுக்கக் கூடியது; ஆணும் பெண்ணும் பகிர்ந்து வேலை செய்வது கட்டாயம் கிடையாது; பெண் வேலைக்கு செல்வதற்கு அனுமதி அளிப்பது ஆணின் பெருந்தன்மை; உடலுறவு அனுபவத்தைப் பற்றி பெண் பேசவே கூடாது; பெண்ணை உடலளவில் துன்புறுத்தினால் மட்டுமே அது வன்முறை; பெண்ணின் இருத்தல் ஆணை மையமாகக் கொண்டே கட்டமைக்கப்படுகிறது.

மேலே கூறப்பட்டுள்ள இக்கற்பிதங்கள் அனைத்தும் ஆணாதிக்கத்தின் வேர் போன்றவை. இவற்றைத் தொடர்ச்சியாகக் கேள்விக்குட்படுத்துவது தான் பெண்ணின் உண்மையான சுதந்திரத்தை நோக்கி நகருவதற்கு நாம் எடுத்து வைக்கும் முதல் படி.


விஜயகணேஷ்

கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம் || ஜயதி கோஷ் || கணியன்

தடுப்பு மருந்துகளைக் கைப்பற்றுவது, பெருமளவில் மருந்தை உற்பத்தி செய்வதற்காக காப்புரிமையை தளர்த்துவதற்கான கோரிக்கையை ஏற்க மறுப்பது, தமது அரசின் ராஜீய விவகாரங்களுக்காக தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவது முதலானவைகள் கொரோனா பெருந்தொற்றிலிருந்து விரைவாக ஏழை நாடுகளைப் பாதுகாக்காது என்பது உறுதி. இதன் விளைவாக, பணக்கார நாடுகளில் கூட இந்த பெருந்தொற்றை ஒழிப்பது மிக நீண்ட காலமாகும்.

கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம்

கோவிட்–19 பெருந்தொற்றானது பல வழிகளிலும் வழக்கத்திற்கு மாறானதாக உள்ளது. பணக்கார நாடுகளிலுள்ள (குறிப்பாக ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா) மக்களிடையே இந்த கொரோனா தொற்றுப் பாதிப்பானது மிகப் பெருமளவில் சரிசமமற்றிருந்தது; இந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் எடுக்கும் கொள்கை ரீதியிலான எதிர்வினைகளின் பிரம்மாண்டம்; உலகளாவிய அளவிலான விரைவான மற்றும் அவசரமான எதிர்வினைகள் என பல வழிகளிலும் வழக்கத்திற்கு மாறானதாக இருக்கிறது.

படிக்க :
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

பணக்கார நாடுகள் இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் காட்டிய அதீத ஆர்வமானது தனிப்பட்ட நாடுகளின் எதிர்வினையை வடிவமைத்தது மட்டுமின்றி உலக அளவிலானக் கொள்கையையும் வடிவமைத்தது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதற்கான மருந்துக் கம்பனிகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக மிகப்பெருமளவில் மானியங்களை வாரி வழங்கியதன் மூலமும், முன்கூட்டியே தடுப்பூசி மருந்து கொள்முதலுக்கான ஒப்பந்தங்கள் போடுவதன் மூலமும் மற்றும் இன்னபிற வழிகளிலும் தடுப்பூசி மருந்துகளைத் தயாரிப்பதற்கு மிகப்பெரும் அழுத்தத்தை தந்தன.

இதனால் அதிவிரைவிலேயே பலமுனை கோவிட்–19 தடுப்பூசி மருந்துகளை பலரும் உருவாக்கியது மட்டுமின்றி அவற்றில் பல மருந்துகளுக்கு இன்னும் மிக அதிவிரைவான தரப்படுத்தல் ஒப்புதல் வழங்கப்பட்டன. வழமையாகவே தடுப்பூசிகள் கண்டுபிடிக்கவும், ஒப்புதல் பெற்று தயாரிக்கவும் பல ஆண்டுகள் ஆகும். ஏனெனில் பல கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கும், எந்த வகையிலாவது பக்கவிளைவுகள் உள்ளதா எனவும் சோதித்தறிய பல ஆண்டுகள் ஆகும்.

ஆனால் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் சில கோவிட்-19 தடுப்பூசி தயாரிப்பு மருந்துக் கம்பனிகளுக்கு அத்தியாவசிமான மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே பயன்பாட்டுக்கான ஒப்புதலை அந்த அரசுகள் வழங்கியுள்ளன. இன்னும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கூட ஒழுங்குபடுத்தும் நடைமுறைகள் முடுக்கிவிடப்பட்டு, அதாவது முழுமையான தரவுகள் மற்றும் பக்கவிளைவுகள் குறித்து பரிசோதிக்காமலேயே அவற்றைப் புறந்தள்ளிதான் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி அதிஅவசரக் கொள்கைகளைப் பின்பற்றி கோவிட்-19 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றை உற்பத்தி செய்வதிலும் மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதிலும் உலக நாடுகளிடையே தீவிரமான சமத்துவமின்மை நிலவுவது அம்பலமாகியுள்ளது. முக்கியமாக, 1) பணக்கார நாடுகள் தடுப்பூசியை அப்பட்டமாக பிடுங்கிக் கொள்ளுகின்றன. 2) முன்னேறிய நாடுகளின் காப்புரிமைப் பாதுகாப்பு கொள்கைகளின் காரணமாகப் பரவலாக அதிகரித்த அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுவதுத் தடுக்கப்படுகிறது. 3) இந்த தடுப்பூசி விநியோகம் மூலம் தேசியவாதமும் மற்றும் ராஜதந்திர ரீதியிலான மென் அதிகாரமும் (Soft Power) வளர்க்கப்படுகிறது.

மிகப்பெரிய தடுப்பூசி கொள்ளை (அ) பிடுங்குதல் !

இப்பெருந்தொற்றிலிருந்து கடந்து வரவேண்டுமெனில் உலகம் முழுவதிலுமிருந்து இது கடந்து வரப்பட்டால்தான் முடிவுக்குவரும் என்பது வெளிப்படையானது. உலக மக்களிடையே தடுப்பூசிப் போடுவதில் உள்ள தாமதம் காரணமாக கொரோனா வைரஸ் மாற்றமடைவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். இது, பணக்கார நாடுகள் தங்கள் பைகளில் தடுப்பூசிகளை நிரப்பி வைத்துக் கொண்டாலும் இப்பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான திறனைக் குறைக்கும்.

போதுமான அளவில் தடுப்பூசிப் போடாததன் காரணமாக தொற்று நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்ற அச்சத்தின் விளைவாகப் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இதன் மறுவிளைவாக உலகப் பொருளாதாரம் மீட்சியடைவது மேலும் தடைபடும், தாமதமாகும். இந்த பாதிப்புகள் மிகப்பெரும் அளவிலானது. உலக மக்கள் அனைவருக்குமான தடுப்பூசிப் போடும் செலவு முழுவதையும் பணக்கார நாடுகள் தாமே ஏற்றுக் கொண்டால் கூட அந்தப் பணக்கார நாடுகள் இதன் மூலம் பலனடையும் வாய்ப்புகளே மிக அதிகம்.

‘ஒவ்வொரு நாடும் தனக்காக’ என்ற அணுகுமுறையானது பகுத்தறிவற்றது மட்டுமின்றி மிகப்பெரும் பின்னடைவுக்கும் இட்டுச் செல்லக் கூடியது. ஆனால் இதுதான் தற்போது அச்சு அசலாக நடந்து கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மூன்று முக்கிய தடுப்பூசிகளுக்கு [பிசெர்-பயோNடெக் (Pfizer-BioNTech), மாடெர்னா (Moderna), அஸ்ட்ராசெனெகா (AstraZeneca) என்ற 3 மருந்து கம்பெனிகளின் மருந்துகள்] ஒப்புதல் அளித்தவுடனேயே பணக்கார நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தடுப்பூசி மருந்துகளை வாங்கிக் குவித்தன. இதன் விளைவாக 2021 பிப்ரவரி முடிவில் கோவிட்-19 தடுப்பூசி மருந்தானது உலகின் வளர்ந்த நாடுகளில் மிக அதிகளவு குவிந்தன. (ஆங்கில கட்டுரையில் படம் உள்ளது. படம்-1).

படம் 1

இது நடந்திருக்கக் கூடாது. இந்த கோவிட்-19 உலகளவில் தடுப்பூசி பெறும் வசதி (COVAX-கோவாக்ஸ்) என்ற அமைப்பானது உலக சுகாதாரக் கழக (WHO) தலைமையின் கீழ் இயங்குகிறது. பெருந்தொற்றுக்கு எதிராகத் தயாராவது மற்றும் கண்டுபிடிப்புக்கான கூட்டமைப்பு மற்றும் கவி (Gavi) போன்ற அமைப்புகள் இப்படி நடப்பதைத் தடுப்பதற்கு என்றே குறிப்பாக உருவாக்கப்பட்டவை. அதாவது, பணக்கார நாடுகள் தடுப்பூசியைக் கைப்பற்றுவதைத் தடுக்கவும், உலகின் ஏழை மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்குமாக ஏற்படுத்தப்பட்டவை.

கோவிட்-19க்கான தடுப்பூசியை உருவாக்குவதை விரைவுபடுத்துவது, அனைத்து நாடுகளுக்கும் கிடைப்பதை உறுதிப்படுத்துவது மற்றும் பகிர்ந்து கொடுப்பதில் வெளிப்படையாகவும் அதிக அபாயத்திற்கு இலக்காகும் மக்களுக்குக் கிடைப்பதை நோக்கமாகக் கொண்டும் கோவாக்ஸ் செயல்படுகிறது. 2021 துவக்கத்திலேயே 190 நாடுகள் இதில் சேர்ந்தன. பிப்ரவரியில் அமெரிக்காவும் (முன்னால் ஜனாதிபதி டிரம்ப் இதில் சேராமல் தடுத்து வைத்திருந்தார்) இதில் சேர்ந்தது. உயர் வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தங்களுக்கான தடுப்பூசி மருந்தை கட்டணம் செலுத்தியும், 92 குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கட்டணம் இன்றியும் பெற்றுக் கொள்ளலாம்.

கொவாக்ஸ் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி மருந்தை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அந்நாடுகளின் மக்கள் தொகையில் 3% பேருக்கு, நோய்த் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகக் கூடிய முன்களப் பணியாளர்களுக்கு, அதாவது சுகாதாரம் மற்றும் சமூக சேவைப் பணியாளர்களுக்கு வழங்குதல். பிறகு ஒவ்வொரு நாட்டின் மக்கள் தொகையில் 20% பேருக்கு, அதாவது நோய் தாக்குதல் அபாயம் உள்ள வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு வழங்குதல்.

இரண்டாவது கட்டமாக நோய் பரவல் வேகம், பிற நோய் தொற்றுக் காரணிகளால் (அம்மை போன்ற நோய்கள்) நோய் பரவுதல் மற்றும் அந்த நாட்டின் சுகாதார கட்டமைப்பு எவ்வளவு பலவீனமானதாக உள்ளது ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்குதல். இறுதியாக அனைவருக்கும் என செயல்படுத்தப்பட உள்ளது.

மருந்து உற்பத்தியிலான கட்டுப்பாடுகளைக் கணக்கில் கொண்டால் இது ஒரு சிறப்பான முறையாகும். ஆனால், இம்முறையில் எதிர்பார்த்த நிதியான 680 கோடி டாலரில் 400 கோடி டாலர் மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. இதனால், திட்டமிட்டபடி ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி மருந்தை வினியோகிக்க முடியவில்லை. ஏனெனில் கோவாக்ஸ்-ன் உறுப்பு நாடுகள் தனியே மருந்துக் கம்பனிகளிடம் நேரடியாக தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதிப்பதால், செல்வந்த நாடுகள் சம்பந்தப்பட்ட மருந்துக் கம்பனிகளிடம் கோவாக்ஸ்-க்கு வெளியே ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.

இதனால் தரக்கட்டுப்பாட்டு முறை மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் மூன்று மருந்துகள் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரே மாதத்திற்குள் உலக மக்கள் தொகையில் 14 சதிவீதம் மட்டுமே உள்ள முன்னேறிய செல்வந்த நாடுகளின் வசம் 2021-ஆம் ஆண்டில் உற்பத்தியாகும் மொத்த தடுப்பு மருந்துகளில் 85 சதவீதம் தடுப்பு மருந்துகள் சென்றன. (கோஷ் 2020).

இவற்றில் பெரும்பாலானவை ஒழுங்குமுறை ஒப்புதல் வழங்குவதற்கு முன்பாகவே கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டவை. கோவிட்-19 தடுப்பு மருந்து தயாரிப்பில் ஈடுபட்ட 48 நிறுவனங்களில் 13 நிறுவனங்களின் 750 கோடி தடுப்பு மருந்துகள் (Doses) பெரும்பாலும் பணக்கார நாடுகளால் நவம்பர் 2020-க்குள்ளாகவே வாங்கப்பட்டன. சில நிகழ்வுகளில் மருத்துவப் பரிசோதனைகள் முடிவடைவதற்கு முன்பே இவ்வாறு ஒப்பந்தங்கள் மூலம் வாங்கப்பட்டுவிட்டன. (ஆச்சாரியா & ரெட்டி 2021)

கடந்த 2020-ஆம் ஆண்டு 44 ஒப்பந்தங்கள், இந்த ஆண்டில் 2021-ல் இதுவரை 12 இருதரப்பு ஒப்பந்தங்கள் அரசாங்கங்கள் மற்றும் மருந்து நிறுவனங்களிடையேப் போடப்பட்டுள்ளன. தமது நாட்டு மக்கள் தொகையை விட கனடா பத்து மடங்கும், அமெரிக்கா நான்கு மடங்கும் கூடுதலான தடுப்பூசி மருந்துகளை வாங்கிக் குவித்துள்ளன. கோவாக்ஸ்-சிடம் குறைவான விலையில் விற்பதை விட அதிகவிலை கொடுத்து, வளர்ந்த செல்வந்த நாடுகள் வாங்க தயாராக இருப்பதால் மருந்து நிறுவனங்கள் இந்த நாடுகளுக்கு மருந்துகளை விற்கின்றன. மேலும் ஒப்பந்தங்களின் அடிப்படை அம்சங்களான விலை உள்ளிட்டவற்றை மருந்து நிறுவனங்கள் மறைமுகமாக வைத்துள்ளன.

இவ்வாறு செல்வந்த நாடுகள் தடுப்பு மருந்துகளைக் கொள்ளையடிப்பதால் உலகின் பெரும்பாலான நாடுகள் பாதுகாப்பான, முறையான ஒப்புதல் வழங்கப்பட்ட தடுப்பூசியைப் 2022-ஆம் ஆண்டுதான் பெற முடியும் அல்லது சில நேரங்களில் 2024 வரை கூடக் காத்திருக்க நேரலாம். உலக சுகாதார நிறுவன தலைவரின் அறிக்கைப்படி, 2021 ஜனவரி மத்தியில் செல்வந்த நாடுகளில் 390 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. ஒரு ஏழை நாட்டில் மொத்தத்தில் 25 பேருக்கு மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

மேலும் 170 பரம ஏழை நாடுகளில் ஒருவருக்குக் கூட தடுப்பூசிப் போடப்படவில்லை. அவர் மேலும் கூறுகிறார்: “நான் கூறுவது முரட்டுத்தனமாயிருக்கலாம் – உலகம் சமூகத்திலான மதிப்பு, நெறிபிறழ்வினது பேரழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த தவறின் விலையானது உலகின் ஏழைநாட்டு மக்களின் வாழ்வும் வாழ்வாதாரத்தின் அழிவாக இருக்கும்”. (ஐ.நா.செய்திகள், ஜனவரி 2021).

நியாயப்படுத்த முடியாத அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு !

மிகமோசமான, சமனற்ற தடுப்பூசி மருந்து விநியோகத்திற்கான முக்கியமான காரணம் போதுமான அளவு உற்பத்தி நடக்காததுதான். எனினும் இந்த பற்றாக்குறை முற்றிலும் தேவையற்றது மட்டுமின்றி, எளிதாகவும், விரைவாகவும் தீர்க்கப்படக் கூடியதே. குறைந்த அளவிலான ஒப்புதல் அளிக்கப்பட்ட மருந்து உற்பத்திக்கு முக்கிய காரணமே மருந்துக் கம்பனிகளிடம் உள்ள காப்புரிமைதான்.

இந்த காப்புரிமை மருந்துக் கம்பனிகளுக்கு உற்பத்தியில் ஏகபோகத்தை வழங்குகின்றன. அந்த மருந்துக் கம்பனிகளிடம் உள்ள உற்பத்தித் திறன் மற்றும் மிகவும் ஒரு சிலருக்கு அந்த கம்பனிகள் வழங்கும் உற்பத்திக்கான அனுமதி ஆகியவையே பெருமளவிலான மருந்து உற்பத்திக்கான தடைகளாக உள்ளன.

காப்புரிமை பொதுவாகப் புதிய கண்டுபிடுப்புக்கான அத்தியாவசியமான பண வெகுமதியாக பார்க்கப்படுகிறது. இது இல்லையென்றால் தொழில்நுட்ப மாற்றங்கள் நடக்காது அல்லது மிகவும் வரம்புக்குட்பட்டு இருக்கும் என்ற கருத்து உள்ளது. பெரிய மருந்து நிறுவனங்கள் (உலக வர்த்தகக் கழகம் (WTO) மற்றும் அதைத் தொடர்ந்து வணிக மற்றும் பொருளாதார கூட்டுகளுக்கான ஒப்பந்தங்களில் இந்த பெரிய மருந்து நிறுவனங்கள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி ’லாபி’(lobby) செய்து இந்த அறிவுசார் சொத்துரிமையை முன் தள்ளிச் சேர்த்தன) புதிய மருந்துகள் கண்டுபிடிப்பதற்கு மிக அதிகளவு செலவு பிடிப்பதாலும் சில சமயங்களில் ஆண்டுக் கணக்கில் ஆய்வு செய்து கண்டுப் பிடிக்கப்பட்ட மருந்துகள் வெற்றிப் பெறாமல் போவதாலும் இப்படிப்பட்ட ஊக்கத் தொகையான காப்புரிமை தேவை என வாதாடுகின்றன.

படிக்க :
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

♦ கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?

ஆயினும், கோவிட்-19 தடுப்பூசி மருந்து தயாரிப்புக்காக அரசாங்கங்களிடமிருந்து மிகப்பெருமளவிலான மானியத் தொகைகளை மருந்துக் கம்பனிகள் பெற்றுள்ளன. பெருமளவில் இந்தத் தொகையானது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான மருந்துக் கம்பனிகளின் செலவுகளை முற்றிலும் ஈடுசெய்துள்ளன என்பதே உண்மை. அமெரிக்காவில் மட்டும் ஆறு பெரிய மருந்துக் கம்பனிகள் கோவிட்-19 மருந்து தயாரிப்பதற்காக 1200 கோடி டாலர் நிதியை மானியமாகப் பெற்றுள்ளன. (MSF 2021). பிற செல்வந்த நாடுகளின் அரசாங்கங்களும் இதேபோல மானியங்களை வாரி வழங்கியுள்ளன.

தனியார் மருந்துக் கம்பனிகள் முந்தையப் பொது ஆராய்ச்சிலிருந்து (Scientific American 2020) பலனடைந்தது மட்டுமின்றி, தன்னார்வலர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் மூலம் மாதிரி சோதனைகளுக்கான செலவினங்களும் குறைந்து ஆதாயம் அடைந்துள்ளன. இவ்வாறு முன்னணி நிறுவனங்கள் அவர்களின் முதலீட்டை ஏற்கனவே பெற்றுவிட்டன. சில நிறுவனங்கள் அதற்கும் மேலாகவே ஆதாயம் அடைந்துவிட்டன. இனி விற்பதெல்லாமேக் கூடுதலான லாபம்தான். (Super Profits).

உதாரணமாக, ஃபைசர் (Pfizer) நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து நேரடியான மானியம் எதுவும் பெறாவிட்டாலும் பத்து கோடி (Doses) டோஸ் மருந்துகளுக்கு முன்கூட்டியே 195 கோடி டாலர் பணம் பெற்றுள்ளது. (Industry Week 2020). மேலும், இது தொழில் நுட்பத்துக்காக பியோஎன்டெக் நிறுவனத்தைச் சார்ந்துள்ளது. இந்த பியோஎன்டெக் நிறுவனம் தனது ஆராய்ச்சிக்காக ஜெர்மன் அரசாங்கத்திடமிருந்து 44.5 கோடி டாலரைப் பெற்றுள்ளது. (Bloomberg 2020). ஃபைசர் (Pfizer) நிறுவனம் இந்த தடுப்பு மருந்து தயாரிக்க 310 கோடி டாலர் செலவு (பி.பி.சி 2020) செய்து, 2021-க்குள் 1500 கோடி டாலர் விற்பனைக்கு உத்தேசித்துள்ளது. (Quartz 2020). மாடர்னா (Moderna) நிறுவனம் தடுப்பு மருந்து உருவாக்கத் தேவையான 250 கோடி டாலரை அமெரிக்க அரசாங்கமே ஏற்றுள்ளது. (USA Today 2020). சமீபத்தில் ஒப்புதல் பெற்ற ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து மானியங்களும், பத்து கோடி தடுப்பூசி டோஸ்களுக்கான முன்ஆணையும் (pre-orders) பெற்றுள்ளது. (ஜான்சன் & ஜான்சன் 2020).

அஸ்ட்ரா ஸெனகா (Astra Zeneca) தடுப்பு மருந்தானது வளரும் நாடுகளில் பயன்படுத்தப் படுகிறது. (குறிப்பிட்ட அளவு இந்த தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தயாரிக்கிறது). இத்தடுப்பு மருந்தானது முற்றிலும் பொது மக்களின் பங்களிப்பின் அடிப்படையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. துவக்கத்தில் அசலான விநியோக திட்டப்படி வெளிப்படையான அனுமதி அடிப்படையில், எந்த ஒரு தயாரிப்பாளரும் இந்த மருந்தை தயாரிப்பதற்கு இலவசமாக அனுமதிக்கப்படும் என்றே இருந்தது.

இருப்பினும், பில் கேட்ஸ் அறக்கட்டளை நிறுவனம் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக ஆக்ஸ் ஃபோர்டுக்கு 75 கோடி டாலர் நன்கொடை தந்தபின் இந்த அசல் திட்டம் முற்றிலுமாக மாறிப்போனது. தனது திட்டத்தை ஏற்றுக் கொள்ளும்படி பல்கலைக் கழகத்தைப் பணிய வைத்து, ஒப்பந்தமும் போட்டுவிட்டது. இந்த ஒப்பந்தப்படி, ”அஸ்ட்ரா ஸெனிகா நிறுவனத்துடனான பிரத்யேக ஒப்பந்தப்படி, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமே மருந்து தயாரிக்கும் முழுஉரிமை உள்ளது மற்றும் குறைந்த விலைக்கான எந்த உத்தரவாதமுமில்லை” என்பதை சேர்த்து புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. (Jav Hancock 2020).

ஆக்ஸ்ஃபோர்டும் அஸ்ட்ராஸெனெகாவும் இணைந்து தடுப்பு மருந்து விற்பனையில் லாபம் பார்க்க மாட்டோம் என வாக்குறுதியளித்தாலும் அதன் ஒப்பந்த விவரங்கள் தெளிவாகவோ வெளிப்படையாகவோ இல்லை. இந்த பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்ஸ் ஃபோர்டு ராயல்டி எதையும் பெறாவிட்டாலும் காப்புரிமை காரணமாக தொழில்நுட்பம் போன்றவற்றில் ஆதாயம் அடைந்துள்ளது.

அதேநேரம், அஸ்ட்ராஸெனெகா வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பிய தடுப்பு மருந்துகளுக்கு வெவ்வேறு விலைகளை நிர்ணயித்துள்ளது. சில ஏழை நாடுகள் அதிகப்படியான விலை கொடுத்துள்ளன. ஐரோப்பிய கூட்டமைப்பு ஒரு டோஸ் மருந்துக்கு 3.5 டாலர் விலை கொடுக்க, ஏழை நாடான பங்களாதேஷ் 4 டாலர் விலை கொடுத்து வாங்கியுள்ளது. தென்ஆப்பிரிக்காவோ 5.25 டாலர் கொடுத்து வாங்கியுள்ளது. (Politico.2021). (விலை அதிகமுள்ள தடுப்பு மருந்தை சீரம் இன்ஸ்டிடியுட் ஆஃப் இந்தியா நிறுவனம் கொடுத்துள்ளது).

இந்த விலையிலான வேறுபாடு அஸ்ட்ராஸெனெகா நிறுவனத்துடன் மட்டும்  நின்றுபோய்விடவில்லை. ஏனெனில் தடுப்பு மருந்துக்கான போட்டி, ஒப்பந்த பேரம் ஆகியவற்றின் அடிப்படையில் தடுப்பு மருந்திற்கான விலை மார்ச் 1-ஆம் தேதிய விவரப்படி 2.19 டாலர் முதல் 44 டாலர் வரை வேறுபடுகிறது. (UNICEF, Covid Dashboard).

2020 அக்டோபரில் உலக வர்த்தக கழகத்தில் (WTO) இந்தியாவும் தென்ஆப்ரிக்காவும் கொண்டு வந்த முன்மொழிவை ஏற்றிருந்தால் இவ்வாறு உற்பத்தியில் உள்ள கட்டுப்பாடு காரணமாக எழக்கூடிய தடுப்பு மருந்துப் பற்றாக்குறை, கொள்ளை, அதிக விலை, வேறுபட்ட விலை மற்றும் உலகின் பெரும்பாலான மக்களுக்கு போதுமான அளவில் கிடைக்காமை போன்றவற்றை சரி செய்திருக்கலாம். இம்முன்மொழிவானது கோவிட்-19 தொடர்பானப் பொருட்களுக்குக் காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமையிலிருந்து விலக்கு கோரியிருந்தது. (MSF, November 2020).

இதன் பொருள் என்னவென்றால், உலக வர்த்தகக் கழகத்தில் உள்ள உறுப்பு நாடுகளுக்கிடையே இந்த பெருந்தொற்று காலம் முழுதும் கோவிட்-19 நோய்த் தொற்றோடு தொடர்புடைய மருந்துகள், தடுப்பூசிகள், நோய் கண்டறியும் உபகரணங்கள், மற்றும் பிற தொழில்நுட்பங்கள், மாஸ்க் மற்றும் வெண்டிலேட்டர்கள் உட்பட அனைத்தின் மீதான காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை வழங்குவதிலிருந்து தடுத்திருக்கலாம். மேலும் இந்நாடுகளுக்கிடையே ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, தொழில்நுட்ப பரிமாற்றம், உற்பத்தி, அதை அதிகரிப்பது, மற்றும் கோவிட்-19 கருவிகள் வழங்குவது  ஆகியவற்றில் எளிதாக கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்திருக்கலாம்.

பெரும்பாலான வளரும் நாடுகள் இதனை ஆதரித்தாலும், வளர்ந்த நாடுகள் உலக வர்த்தக கழகத்தின் ’டிரிப்ஸ்’ (TRIPS) கவுன்சிலில் தொடர்ச்சியாக முட்டுக்கட்டைப் போட்டன. (Prabhalaet al 2020). இது ஆச்சரியப்படத்தக்கது. ஏனெனில் காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமைகள் ரத்து செய்யப்பட்டிருந்தால் தடுப்பூசி மருந்துகள் அதிகப்படியாகவும் விரைவாகவும் கிடைத்து வளர்ச்சியடைந்த நாட்டு மக்களுக்கும் பயனுள்ளதாயிருந்திருக்கும். அதிகளவு தடுப்பூசி உற்பத்தியானது மருந்து உற்பத்திச் செலவைக் குறைத்து, உலக மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் குறைவான விலையில் மருந்து கிடைக்கச் செய்திருக்கும்.

உலக வர்த்தகக் கழகத்தின் டிரிப்ஸ் (TRIPS) கவுன்சிலில் ஐந்து முறையும் இந்த முன்மொழிவு தடுக்கப்பட்டதற்கு பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் பேரம் பேசி, தில்லு முல்லு செய்கின்ற மோசடி செயலே (லாபி) காரணம். (குறிப்பாக பில்கேட்ஸ் இந்த முன்மொழிவை ஆதரிக்க மறுத்தார்). (Mail & Guardian 2021).

படம் 2

(ஆங்கில மூல கட்டுரையில் உலக வரைபடம்-2 வடக்கு, தெற்கு பிளவைக் காட்டுகிறது). படம் 2 உலக வர்த்தகக் கழகத்திலான இந்த முன்மொழிவுக்கு உலக நாடுகள் எப்படி வினையாற்றி வடக்கு – தெற்கு என இரண்டாக பிளவுண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. மிகப்பெரும் பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் தாயகமான செல்வந்த நாடுகள் இந்த முன்மொழிவைத் தடுத்தன. இந்த நாடுகள் ஏற்கனவே தமது தேவைக்கும் கூடுதலான கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளைக் கொண்டுள்ளன. (இம்மருந்துகளை தமது நாட்டுக்குள்ளேயே விரைந்து விநியோகிப்பதில் வெற்றிப் பெறாதப் பெரும்பாலான இந்நாடுகள் இந்த தடுப்பூசிகளை அடுக்கி வைத்து அழகு பார்க்கின்றன என்பது வேறு விசயம்).

சிலர் இந்த முன்மொழிவே தேவையில்லாதது என வாதாடுகின்றனர். ஏனெனில் உலக வர்த்தகக் கழகத்தின் ’டிரிப்ஸ்’ குறித்தான ஒப்பந்தத்தில் கட்டாய உரிமம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது என்கின்றனர். ‘டிரிப்ஸ்’ மற்றும் பொதுச் சுகாதாரம் பற்றிய 2001 டோஹா பிரகடனத்திலேயே பொதுச் சுகாதார அவசரக் காலங்களில் காப்புரிமைப் பெற்றவரிடமிருந்து ஒப்புதல் பெறாமலேயே மூன்றாம் நபருக்குக் காப்புரிமைப் பெற்ற பொருளை உற்பத்தி செய்ய உரிமம் வழங்கும் அதிகாரம் அரசாங்கங்களுக்கு உண்டு என குறிப்பிடப்பட்டுள்ளது (பார்க்க WTO FAQs) எனவும், இது காப்புரிமை பெற்றவரின் பிரத்யேக உரிமையை மீற அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது எனவும், இதனால் முற்றுரிமையைத் தடுத்து உற்பத்தியை செய்யவும் மற்றும் அதிக விலை நிர்ணயிப்பதை தடுக்கவும் வழிவகை செய்கிறது எனவும் கூறுகின்றனர்.

கட்டாய உரிமம் அளிப்பதற்கான நிபந்தனையான பொதுச் சுகாதார நெருக்கடியை இப்பெருந்தொற்றுக் கொண்டிருந்தது. சிலி, இஸ்ரேல் போன்ற நாடுகள் அத்தகையக் கட்டாய உரிமத்தை இப்பெருந்தொற்று உருவானப் போதே வழங்கி தீர்மானம் இயற்றின. இருப்பினும் தடுப்பு மருந்துக் கண்டுபிடிப்பாளர் அதற்கான தொழில் நுட்பத்தை உரிமம் பெற்ற உற்பத்தியாளரிடம் வழங்க வேண்டியக் கட்டாயமில்லாததால் வளரும் நாடுகள் கட்டாய உரிமம் வழங்கினாலும் அதை நடைமுறைப்படுத்துவது கடினமாகும்.

காப்புரிமை பெற்றவர் அதற்கான தொழில் நுட்பத்தை உரிமம் பெற்ற உற்பத்தியாளரிடம் வழங்கினால் மட்டுமே மேற்படி கட்டாய உரிமம் முறையை செயல்படுத்தப்பட முடியும். கோவிட்-19 தடுப்பூசியைப் பொறுத்தவரை, பெரிய மருந்து நிறுவனங்கள் செல்வந்த நாடுகளுக்கு, இந்த நாடுகள் குறந்த அளவு உற்பத்தியாகும் தடுப்பூசி மருந்துகளைப் பெறுவதில் போட்டி போடுகின்றன, விநியோகம் செய்வதன் மூலம் மகிழ்ச்சி அடைகின்றன. மறுபுறம், குறைவான சந்தை அல்லது மானிய விலையில் தர வேண்டிய நாடுகளைப் பற்றி கவலைப்படவே இல்லை. உலக அளவிலான காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமையை இரத்து செய்திருந்தால் நிலைமை மாறியிருந்திருக்கும்.

எனவே, அத்தியாவசியமான பொதுச் சுகாதாரத்தைப் பொறுத்தவரை அறிவுசார் சொத்துரிமை தற்காலிகமாக இரத்து செய்யப்பட வேண்டும் அல்லது திருத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம் என உலகலாவிய ஓர் இயக்கம் மேற்கொள்ளப்பட வேண்டும். பெரும்பாலான தடுப்பு மருந்துகள் எவ்வளவு காலம் நோயைத் தடுக்கின்ற ஆற்றல் கொண்டிருக்கும் என்பது பற்றிய விவரங்கள் ஏதும் இல்லை என்பதால் இந்த தற்காலிகத் தடைக் காலம் நீட்டிக்கப்பட வேண்டிய தேவை இருக்கலாம். இந்த தடைக் காலங்கள் தடுப்பூசிகளுக்கு மட்டும் என்றில்லாமல் பரிசோதனைகள், மருத்துவம், மற்றும் பெருந்தொற்று சம்பந்தமானப் பொருட்களுக்கும் சில ஆண்டுகளுக்கு தேவையாக உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தால் ஆதரவளிக்கப்பட்ட, கோஸ்டாரிகா நாட்டால் முன்மொழியப்பட்ட மற்றொரு வழிமுறை “தன்னார்வமாக பொதுப் பயன்பாட்டிற்கு ஒன்றிணைவது” (Voluntary pooling) ஆகும். இதன்படி கோவிட்-19 தொழில்நுட்பத்தைப் பெற ஒன்றிணைவது (Covid-19 Technology Acess pool(CTAP)) என்ற ஒன்று உருவாக்கப்பட்டது. இது அனைத்து நாடுகளுக்கும் சோதனைகள், மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளுக்கான உரிமைகளின் தொகுப்பை உருவாக்குகிறது, நியாயமான மற்றும் எளிமையான விதிமுறைகளில் இலவசமாக அனுமதி பெறுவது அல்லது உரிமம் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஆனால், இதுவரை 40 வளரும் நாடுகள் மட்டுமே இதில் இணைந்துள்ளன. வளர்ந்த நாடுகள் எதுவும் இதில் இணையவில்லை. சர்வதேச ஆதரவு இல்லாததால், சி.டி.ஏ.பி உண்மையில் இதுவரை பயனுள்ளதாக இல்லை – ஆனால் அது எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்கதாக மாறலாம், தற்போதைய கோவிட்-19 தொற்றுநோய்க்கு அப்பால் எதிர்காலத்தில் சுகாதார அவசரநிலைகளுக்கு நீட்டிக்கப்படலாம்.

ஒழுங்குமுறை ஒப்புதலும் பொதுமக்களின் நம்பிக்கையும் !

மற்ற இடங்களில் உருவாக்கப்படும் மற்ற தடுப்பூசி மருந்துகளும் இப்பெருந்தொற்றுநோயை எதிர்த்துப் போராடவும் தற்போதைய தடுப்பூசிகள் பற்றாக்குறையைக் குறைக்கவும் சாத்தியம் உள்ளது. ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி மற்றும் சீனாவில் உருவாக்கப்பட்ட சினோவாக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா, கியூபா மற்றும் பிற இடங்களில் மற்ற தடுப்பூசிகள் உருவாக்கப்படுகின்றன.

தேவையான சோதனைகள் மற்றும் பிற செயல்முறைகள் இல்லாமல் போதுமான சோதனை மற்றும் அவசர ஒழுங்குமுறை ஒப்புதல் பற்றி சிலருக்கு கவலைகள் உள்ளன. ஆனால், இந்த தடுப்பூசி மருந்துகள், மருத்துவ சோதனைகள் மூலம் பாதுகாப்பானதாக மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என சான்றளிக்கப்படும் போது கூட, அம்மருந்துகள் உலகலாவிய அளவில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு மேலும் தடைகள் உள்ளன.

உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் செயல்முறைப் பணக்கார நாடுகளில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு ஆதரவாக பெரிதும் சாய்ந்திருப்பதாக பெரும்பாலும் உள்ளது. உலக சுகாதார நிறுவனம் தரக் கட்டுப்பாட்டிற்காக நம்பும் “கடுமையான ஒழுங்குமுறை அதிகாரிகளின்” பட்டியலைக் கொண்டுள்ளது. அவை ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானில் உள்ள வளர்ந்த நாடுகளில் இருந்து மட்டுமே உள்ளன.

உலகின் மற்ற பகுதிகளுக்கு, தடுப்பூசி (மற்றும் பிற மருந்து) தயாரிப்பு நிறுவனங்கள் ‘முன்தகுதி’ மூலம் செல்ல வேண்டும் – மிகவும் சிக்கலான மற்றும் நீண்ட செயல்முறை. இது மற்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு எடுக்கும் நேரத்தைப் பெரிதும் நீண்டதாக ஆக்குகிறது.

உதாரணமாக, உலக சுகாதார நிறுவனம் 2020 இறுதியில் ஃபைசர்-பியோஎன்டெக் தடுப்பூசியை அங்கீகரித்தது. இவற்றின் பயன்பாடு இரண்டு மாதங்களுக்கும் குறைவானது. ஏனென்றால், உலக சுகாதார நிறுவனம் ஐரோப்பிய மருந்துகள் முகமையுடன் (EMA) ஒத்துழைக்கிறது. இருப்பினும், ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிக்கு முன்பே, ஒப்புதலுக்காக விண்ணப்பித்திருந்த ரஷ்ய (ஸ்புட்னிக்) மற்றும் சீன (சினோவாக் மற்றும் சினோபார்ம்) தடுப்பூசிகள் இன்னும் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறவில்லை. (பிரபாலா மற்றும் லிங், 2021). இந்த மூன்று நிறுவனங்களும் ஒவ்வொன்றும் 2021-ல் நூறு கோடி தடுப்பூசிகள் வரை உற்பத்தி செய்ய முடியும். மேலும் வளரும் நாடுகளில் உள்ள உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்வதற்கும் இந்நிறுவனங்கள் அனுமதி வழங்கியுள்ளன.

இந்த பெருந்தொற்று காலத்தில், வளர்ந்த நாடுகள் உட்பட உலகெங்கிலும் வழக்கமான ஒழுங்குமுறை தரக் கட்டுப்பாடுகள் பெரிதும் தளர்த்தப்பட்டுள்ளன. கோவிட்-19 தடுப்பூசி மருந்து எதுவும் வெளிப்படைத் தன்மையுடன் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படவில்லை. மற்ற நாடுகளில் ஒழுங்குமுறை தரக் கட்டுப்பாடுகள் கடுமை குறைவானதாக இருக்கலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கருதினாலும், அனைத்து தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களும் சமமான நிலையில் நடத்தப்படுவதை உறுதிசெய்ய பல்வேறு தேசிய ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் அது இன்னும் வேலை செய்ய முடியும்.

ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை மறுக்கும் உலகளாவிய பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, உலக சுகாதார நிறுவனம் அத்தகைய தடுப்பூசிகள் சில இணக்கமான தரங்களைப் பூர்த்தி செய்யும்போது உலகளாவிய விநியோகத்தை செயல்படுத்த ஒரு செயலூக்கமான அணுகுமுறையை எடுக்க வேண்டும்.

இது செய்யப்பட்டால், கோவிட்-19 தடுப்பூசிகள் மீதான பெரிய மருந்து நிறுவனங்களின் கொடூரப்பிடியை மீறுவது சாத்தியமாகலாம். இப்பெரிய தனியார் மருந்து நிறுவனங்கள் ஒரு சுகாதார நெருக்கடி மற்றும் பரந்தப் பொருளாதாரத் துயரத்தின் மத்தியில் இலாப வெறியுடன் செயல்படுகின்றன. சில நாடுகள் ஏற்கனவே மற்ற தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை உள்நாட்டுப் பயன்பாட்டிற்காக அங்கீகரித்துள்ளன மற்றும் இந்த அணுகல் மூலம் பயனடைந்துள்ளன.

எடுத்துக்காட்டாக, பிப்ரவரி 2021-இன் பிற்பகுதியில் சிலி, சீனாவின் சினோவாக் தடுப்பூசியை இறக்குமதி செய்து, அதன் மக்கள் தொகையில் 17 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட முடிந்தது. இந்த தடுப்பூசியே பொலிவியா, பிரேசில், இந்தோனேசியா மற்றும் துருக்கியிலும் பயன்படுத்தப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், எகிப்து, ஜோர்டான், ஈராக், செர்பியா, மொராக்கோ, ஹங்கேரி மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகள் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பல நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது.

கோவிட்-19 தடுப்பூசிகளை வெற்றிகரமாக உற்பத்தி செய்து விநியோகித்ததற்கான முக்கிய எடுத்துக்காட்டாக இந்தியா இருந்திருக்க வேண்டும். இது பல முக்கிய தடுப்பூசி நிறுவனங்களைக் கொண்டுள்ளது, பல்வேறு தடுப்பூசிகளைப் பயன்படுத்திய நீண்ட மற்றும் வெற்றிகரமான வரலாற்றைக் கொண்டுள்ளது, சமீபகாலம் வரை, தடுப்பூசிகள் மீது அதிக அளவிலான பொது நம்பிக்கை இருந்தது.

துரதிருஷ்டவசமாக, தேவையான மருத்துவ சோதனைகள் முடிக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களை (பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின்) முதலில் ஊக்குவிக்கவும் பின்னர் தள்ளவும் அரசாங்கம் மேற்கொண்ட உற்சாகமான முயற்சிகள் எதிர்மறையாகப் போனது. இது இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் பொது மக்களின் நம்பிக்கையைக் குறைத்துவிட்டது. இந்தியாவில் மக்கள் – சுகாதார ஊழியர்கள் உட்பட – கொவாக்சின் தடுப்பூசி போட மறுப்பதாக பல அறிக்கைகள் வந்துள்ளன.

இது துரதிருஷ்டவசமானது, ஒருமுறை நம்பிக்கை இழந்தவுடன், அதை சரிசெய்யவும், மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெறவும் நீண்டகாலம் ஆகும். இப்போதும் எதிர்காலத்திலும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் இந்தியாவின் ஆற்றலில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. 17 வளர்ந்த நாடுகளில் 19,000 பேரிடம் சமீபத்தில் நடத்தப்பட்ட யூகோவ் கருத்துக் கணிப்பில், ரஷ்யா, சீனா மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள்,  மிகக் கீழான இடத்தைப் பிடித்துள்ளன. இந்தியா அதன் முந்தைய தடுப்பு மருந்து விநியோகம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால் மிகவும் பின்தங்கியுள்ளது முக்கிய பிரச்சினையாகும்.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி-ஆக்சிஜன் தட்டுப்பாடு : கார்ப்பரேட் கொள்ளைக்கு திறந்துவிடும் கயமைத்தனம் || பு.ஜ.தொ.மு

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

நியாயமாகச் சொல்வதானால், வளர்ந்த நாடுகள் உட்பட பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி விநியோகத்தில் மோசமான செயல்திறனைக் காட்டியுள்ளன. செல்வந்த நாடுகள் உலகளாவிய விநியோகத்தின் தேவையான பங்குகளில் பலமடங்குகளைப் பெற முயன்றுள்ளன. ஒட்டுமொத்தமாக, தடுப்பூசிகளின் உள்நாட்டு விநியோகம் பெரும்பாலும் உலகளாவிய விநியோகத்தைப் பிரதிபலிக்கிறது: சமமற்றது, அநீதியானது மற்றும் திறமையற்றது.

இந்த அணுகுமுறையானது இப்பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டு வருவதில் காலதாமதத்தையும் மற்றும் வரவிருக்கும் இன்னும் பெரிய சவால்களை எதிர்கொள்வதில் மனித குலத்தின் திறன் பற்றியும் உலகளாவிய ஒத்துழைப்பைப் பெறுவதில் உள்ள அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.


கட்டுரையாளர் : ஜயதி கோஷ்
(ஜே.என்.யூ.-வில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர்)
தமிழாக்கம் : கணியன்
நன்றி : The India Forum

சுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும் || தாமிரா

சுழலும் ஆட்சிப் பம்பரம் ஓர் நாள் வீழ்ந்தே தீரும்

அன்பு மகனே…!

அரசியல் சூது நிறைந்த இந்த தேசத்தில்,
உனது எதிர்காலம் குறித்த அச்சம் தான்
இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டுகிறது !

உன்னுள்ளிருக்கும்
அன்பையும், அறத்தையும்
காவு கேட்கின்ற காலமாக இருக்கிறது,
இந்தக் காலம்.

என் போன்ற தந்தைகளெல்லாம்,
தன் மக்களை
தற்கொலைக்குத் தப்பிய உயிராகப் பார்ப்பது
எத்தனை வன்கொடுமை !

இப்போதுதான்
நீ உறுதியான நம்பிக்கையுடனும், தெளிவுடனும்
இருக்க வேண்டும் மகனே !

அவர்கள் என் நிகழ்காலத்தையும்
உன் எதிர்காலத்தையும்
நசுக்கும் வன்மத்துடன்
காய் நகர்த்துகிறார்கள்.

இந்த சதுரங்க ஆட்டத்தில்
எண்ணிக்கையில் நமக்கு பலம் அதிகம்.

ஆனால் மகனே !
ஒற்றுமையிலும், அதிகாரத்திலும்
அவர்களது கை ஓங்கி நிற்கிறது.

ஆட்டத்தின் விதிமுறைகள்
நமக்கு மட்டும் தான் !
அவர்கள்
எத்தனைக் கட்டம் வேண்டுமானாலும்
தாண்டி வருவார்கள்.
நம்மை வீழ்த்துதல் மட்டுமே
அவர்களது நோக்கம் !

இங்கே வெற்றி கொள்தலை விட
நம்மை தக்க வைத்துக் கொள்தலே முக்கியம்.

உயிர் ஆயுதம் என்ற சொல்லை
சற்று ஒதுக்கி வை மகனே !
உனது தூக்குக் கயிற்றை
உன் கையில் கொடுத்திருக்கிறார்களே !
அதுதான் அவர்களது சூழ்ச்சி.
நீ அதை பயன்படுத்தினால்
அவர்களுக்குத்தான் வெற்றி !

உன் மரணத்தால்
அவர்களை வெற்றி கொள்ளச் செய்யாதே !
அதிகாரம் என்பது சுற்றப்பட்ட பம்பரக் கயிறு !
ஆட்சி என்பது சுழல்கின்ற பம்பரம் !
சுழலும் ஆட்சிப் பம்பரம்
ஓர் நாள் வீழ்ந்தே தீரும் !

காலமெலாம் சுழல்வதற்கு
இது சனாதனம் அல்ல
ஜனநாயகம் !

சோர்ந்து போகாதே மகனே !
சற்று பொறு
ஒன்றுபடு !

நாம் இணைந்து நின்றால்
நம் மூச்சுக்காற்றில்
அணைந்து விடக் கூடியதுதான்
அவர்களது அதிகார வெளிச்சம்..!

இது தமிழ் நிலம்
நாம் தமிழ் இனம்..
இது தவிர்த்து நம்மில்
எந்த பேதமுமில்லை..
சாதியாகவோ மதமாகவோ
யாரையும் விலக்கி வைக்காதே மகனே !

குறிப்பாக
சங்கிகளென யாரையும் இகழாதே விலக்காதே !
அவர்கள்
தங்கள் கழுத்திற்கு வரும் குறு வாளை
அணிகலன் என எண்ணி மகிழும் அப்பாவிகள் !
தனக்காக கண்ணீர் சிந்தும்
முதலைகளை
நம்பும் ஆடுகள் !

நீ எதை இழக்கிறாயோ?
அதைத்தான்
அவர்களும் இழக்கிறார்கள்
உனக்கு என்ன துரோகம் இழைக்கப்படுகிறதோ?
அதே துரோகம் தான்
அவர்களுக்கும் இழைக்கப்படுகிறது.

கடவுள் என்கிற
ஒரு மந்திரச் சொல்லை உபயோகித்து
அவர்களை மயக்கி வைத்திருக்கிறார்கள்.

ஜிடிபி குறைகிறதா?
ஒரு கடவுளை சுழற்றிப் போடு..
கல்வியைக் களவாட வேண்டுமா?
மற்றொரு கடவுளை சுழற்றிப் போடு.
எதற்கும் சிக்கவில்லையென்றால்
தேசபக்தியைத் திருப்பிப் போடு.

அவர்களது ஆட்டத்தில்
கடவுளும் தேசபக்தியும்
ஒரு பகடைக் காய் !

நமக்குத்தான்
விநாயகன், முருகன் ,
ராமர், யேசு, அல்லா….
அவர்களுக்கு கார்ப்பரேட்தான் கடவுள்.

நம் வளங்களைக்
கொள்ளை கொள்தல்தான் நோக்கம்.
நமது பண்பாடுகளையும்
பழக்க வழக்கங்களையும்
அரித்தெடுக்க போடப்பட்டிருக்கிறது.
அவர்களது மடிவலை..!

கடவுளைத் திருடுவதிலிருந்து
காய்கறிகளை மலடாக்குவதுவரை
யாவற்றையும் கவனத்துடன் செய்கிறார்கள்..!

இப்போது
கல்வியை நோக்கி நீண்டிருக்கிறது
அவர்களது ஆயுதம்.
தகுதிப்படுத்துகிறோம் என
சொம்படிப்பார்கள் மகனே
நம்பி விடாதே…!

நாம் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல..!
ஆழத்தோண்டி தேடி எடுக்கும்
நம் பண்டைய வரலாற்றில்
திமிறித்திமிறி மேலெழுகிறது
நமது அறிவும், நாகரீகமும்,கட்டுமானமும்…!

அங்கு
அவர்களது கடவுளர் இல்லை.
இந்தத் தரவொன்று போதும் மகனே…!
பிறப்பில் இழிவில்லை
நாம் எவனுக்கும் அடிமையில்லை…
பதட்டம் கொள்ளாதே
பசப்பு வார்த்தைகளில்
ஒருபோதும் மயங்காதே…

எதிரிகளின் இலக்குகளை
கவனத்தில் கொள்..
அதை
அருகிருக்கும் சகோதரனை உணரச் செய்.

ஒன்றுபடுதலும்
உறுதி கொள்ளலும் தான்
இப்போதையத் தேவை.

அந்த விற்பனைச் சந்தை
துவங்கி விட்டது.
வியாபாரமும்
நடந்து கொண்டிருக்கிறது.
நாம் வேடிக்கை பார்க்கும்

மனிதர்களாக இருக்கிறோம்.

திரைப்பட இயக்குனர் தாமிரா

நம்மில் அந்த வியாபாரத்திற்கு
முட்டுக் கொடுக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள்.
முற்று முதலாக விற்றுத் தீர்ந்தபின்..

அதை மீட்டெடுக்கும் போர்
உன் கைவசப்படலாம்..

நீ
சுழியத்திலிருந்து துவங்க நேரலாம்.
எதற்கும் கவலை கொள்ளாதே மகனே..

சுழியத்திலிருந்து துவங்கி வென்றெடுக்கலாம்.
உலகிற்கே சுழியத்தை கற்றுத் தந்தவர்கள் நாம்.
அச்சம் கொள்ளாதே…!

இந்தப் போருக்கு வேர் எது என கண்டுணர்..
மூலம் அறி
அதை வேரோடு அழி
இத்தனைக்கும் காரணம்
ஒரு நூலிழைத் தவறுதான்..
சில நூற்றாண்டுகளாய் தொடர்கிறது….

அறுத்தெறிவது அத்தனை கடினமில்லை
அத்தனை எளிதுமில்ல…..
இனி யாவும் உன்கையில்
தலைமுறைத்தவறை
சீர் செய்யும் பொறுப்பு
உன்னிடம் இருக்கிறது..

உறுதியாய் நின்று போராடு..
உயிர் தொலைக்காமல் களமாடு….!

தாமிரா
(தன் மகனுக்கு எழுதிய கடிதம்)
நன்றி :
பாரதி கவிதாஞ்சன் முகநூல் பதிவிலிருந்து

disclaimer

‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு

மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதம் அளவிற்குச் சுருங்கிப் போன வருடத்தில், புலம் பெயர் தொழிலாளர்கள் தமது கிராமங்களுக்கு மீண்டும் திரும்பக் கூடிய கெடுவாய்ப்பை நாம் எதிர்பார்த்திருக்கும் நிலையில், விவசாயிகள் செவிமடுக்கப்படாமல் டெல்லி வாயிலில் காத்திருக்கும் நிலையில் இந்தியக் கோடீசுவரர்கள் சாதனை படைக்கும் செல்வ வளத்தை அடைந்துள்ளனர்.

– பி.சாய்நாத்

***

ஃபோர்பஸ் இதழ் 2021-இல் வெளியிட்டுள்ள பட்டியலை நம்பினோம் எனில், (கோடீசுவரர்கள் மற்றும் அவர்களது செல்வ வளம் குறித்து அறிய ஃபோர்பஸ் இதழ்தான் அதிக நம்பிக்கைக்கு உரியது) இந்தியக் கோடீசுவரர்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு மாதங்களில் 102-லிருந்து 140-ஆகப் பெருத்திருக்கிறது. அவர்களது செல்வத்தின் கூட்டு மதிப்பு கடந்த ஆண்டில் ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்களாக, கிட்டத்தட்ட இருமடங்காகியிருக்கிறது எனக் கூறுகிறது, அவ்விதழ்.

படிக்க :
♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு

இதன் பொருள் என்னவெனில், இந்த 140 தனிநபர்களின் அல்லது மக்கள் தொகையில் 0.000014 சதவீதமே உள்ள இவர்களின் திரண்ட (சொத்து) மதிப்பு, நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பான ரூ.2,62,000 கோடி அமெரிக்க டாலர்களில் 22.7 சதவீதத்திற்குச் (அல்லது ஐந்தில் ஒரு பங்கிற்கும் கூடுதலானது) சமமாகும்; வழமையாக அவர்கள் செய்கிறபடி, (இந்த 140 பேர் தவிர) மற்ற அனைவரும் சேர்ந்தது தான் “மொத்த” என்பதாகும். 

பெரிய இந்திய தினசரிகளுள் அநேகமானவை, ஃபோர்பஸின் இந்த அறிவிப்பை, தவறான வழியில் குவிக்கப்பட்ட செல்வம் குறித்துக் குறிசொல்லும் சாமியாடி மிகவும் வெளிப்படையாக, நாணயமாகக் குறிப்பிட்டதையெல்லாம் தவிர்த்து விட்டு, இத்தகைய சாதனைகளை அங்கீகரிப்பதற்கென்றே அவைகள் சேமித்து வைத்திருக்கும் மொழியில் வெளியிட்டுள்ளன.

“இந்தியாவெங்கும் மற்றொரு கோவிட்-19 அலை வீசிக் கொண்டிருப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.2 கோடியைத் தாண்டிவிட்டது. ஆனாலும், நாட்டின் பங்குச் சந்தை புதிய உச்சத்தைத் தொடும் வகையில் இந்த பெருந்தொற்றுப் பீதியை ஒதுக்கித் தள்ளியிருக்கிறது. பங்குச் சந்தைக் குறியீட்டுஎண் கடந்த ஆண்டை விட 75 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

இந்தியக் கோடீசுவரர்களின் மொத்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் 102-லிருந்து 140-ஆக உயர்ந்திருப்பதோடு, அவர்களது செல்வத்தின் கூட்டு மதிப்பு ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்களாக, ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது” என இந்த நாடு குறித்த தனது செய்தி அறிக்கையின் முதல் பத்தியிலேயே குறிப்பிட்டிருக்கிறது ஃபோர்பஸ்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதம் சுருங்கிப் போன அதேவருடத்தில் இந்தச் செல்வாக்குமிக்க 140 பெருந்தனவந்தர்களின் சொத்து மதிப்பு வாயைப் பிளக்கும் அளவிற்கு 90.4 சதவீதம் உயர்ந்திருக்கிறது. தீவிர கவனத்துடன் கணக்கிட வேண்டிய அளவில் பெரும் எண்ணிக்கையிலும், சிதறுண்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் ஒருமுறை அலை அலையாக நகரங்களிலிருந்து தமது கிராமங்களை நோக்கித் திரும்பத் தொடங்கியிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தச் சாதனைச் செய்தி வெளிவருகிறது.

இதன் விளைவாகத் தோன்றவுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு எந்தவொரு நன்மையும் செய்யப் போவதில்லை. ஆயினும் கருணைமிக்க வகையில், நமது கோடீசுவரர்களையும் அதிகம் பாதிக்கப் போவதில்லை. அது குறித்த ஃபோர்பஸின் உறுதிமொழி நம்மிடம் உள்ளது.

மேலும், கோடீசுவரர்களின் செல்வ வளம் கோவிட்-19-னின் தர்க்க நியாயத்திற்குத் தலைகீழ் விகிதத்தில் செயல்படுவதாகத் தெரிகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக (செல்வ வளம்) குவிகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு எவ்விதமானத் தீவிரப் பரவலின் தாக்கம் குறைகிறது.

“மிக உச்சத்தில் செல்வச் செழிப்பு ஆட்சி செலுத்துகிறது” எனக் கூறுகிறது, ஃபோர்பஸ்.

“மூன்று மிகப் பெரும் இந்தியக் கோடீசுவரர்கள் மட்டும் கிட்டத்தட்ட ரூ.10,000 கோடி அமெரிக்க டாலர்களுக்குச் சற்று அதிகமான சொத்தைத் தமக்குள் சேர்த்துக் கொண்டுள்ளனர்.” அந்த மூன்று கோடீசுவரர்களின் சொத்து மதிப்பானது – ரூ.15,350 கோடி அமெரிக்க டாலர்கள் – 140 கோடீசுவரர்களின் மொத்தச் சொத்து மதிப்பில் 25 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

உச்சத்திலுள்ள முதல் இரண்டு பேரின், அம்பானி (ரூ.8,450 கோடி அமெரிக்க டாலர்கள்) மற்றும் அதானி (ரூ.5,050 கோடி அமெரிக்க டாலர்கள்) ஆகியோரின் சொத்து மதிப்பானது பஞ்சாப் (ரூ.8,550 கோடி அமெரிக்க டாலர்கள்) அல்லது அரியானா (ரூ.10,100 கோடி அமெரிக்க டாலர்கள்) மாநிலங்களின் மாநில மொத்த உற்பத்தி மதிப்பைவிட மிக அதிகமாகும்.

இந்தப் பெருந்தொற்று வருடத்தில், அம்பானியின் சொத்து மதிப்பு மேலும் ரூ.4,770 கோடி அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ ரூ.3,57,000 இலட்சம் கோடி ரூபாய்) அதிகரித்திருக்கிறது. அதாவது, அவரது சொத்து மதிப்பு ஒவ்வொரு விநாடியும் சராசரியாக ரூ.1,13,000 என அதிகரித்திருக்கிறது. இந்த அதிகரிப்பு, ஆறு பஞ்சாப் விவசாயக் குடும்பங்களின் (சராசரியாக 5.24 நபர்களைக் கொண்ட குடும்பம்) மொத்த மாத வருவாயை விட (ஒரு குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூ.18,059) அதிகமாகும்.

அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் பஞ்சாப் மாநிலத்தின் மொத்த மாநில உற்பத்தி மதிப்பிற்கு ஏறத்தாழ சமமாக உள்ளது. மேலும், இது மூன்று விவசாயச் சீர்த்திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு முந்தைய நிலை. அவை நடைமுறைக்கு வந்தால், இது மேலும் வீங்கவே செய்யும். இதனிடையே, ஒரு பஞ்சாப் விவசாயியின் தனிநபர் ஆண்டு வருமானம் வெறும் ரூ.3,450 தான் (தேசிய மாதிரி ஆய்வின் 70 ஆவது சுற்று) என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அநேக தினசரிகளும் பி.டி.ஐ., அறிக்கையைத்தான் அப்படியே (அல்லது சற்று மாற்றி) வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையோ, ஃபோர்பஸ் இதழ் செய்ததைப் போல, எந்தவொரு இடத்திலும் ஒப்புமைப்படுத்தியோ அல்லது தொடர்புபடுத்தியோ தயாரிக்கப்படவில்லை. பி.டி.ஐ. அறிக்கையில் கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் அல்லது பெருந்தொற்று ஆகிய சொற்கள் இடம்பெறவே இல்லை.

இந்த அறிக்கை மட்டுமல்ல, வேறு எந்தவொரு அறிக்கையும், “பத்து இந்தியக் கோடீசுவரர்களுள் இரண்டு பேர் தமது செல்வ வளத்தை மருத்துவத் தொழிலில் இருந்துதான் (உலகெங்கிலும் பெருந்தொற்றைப் பயன்படுத்தி வளர்ச்சியடையும் துறை இதுதான்) பெறுகிறார்கள்” என ஃபோர்பஸ் இதழ் அழுத்திக் குறிப்பிட்டிருப்பதைப் போலக் குறிப்பிடவே இல்லை. 

மருத்துவத் துறை என்ற சொல் பி.டி.ஐ., அறிக்கை அல்லது அநேகமாக வேறெந்த அறிக்கையிலும் இடம் பெறவில்லை. எனினும், 140 இந்தியக் கோடீசுவரர்களுள் 24 பேரை மருத்துவத் துறையில் வைத்துக் குறிப்பிடுகிறது, ஃபோர்பஸ் இதழ்.

ஃபோர்பஸ் இதழ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்திய மருத்துவத் துறை சார்ந்த 24 கோடீசுவரர்களுள், முதல் பத்து பேர் பெருந்தொற்று வருடத்தில் மட்டும் ரூ.2,490 கோடி அமெரிக்க டாலர்களை தமது சொத்தில் (நாளொன்றுக்குச் சராசரியாக ரூ.500 கோடி ரூபாய்) கூடுதலாகச் சேர்த்ததையடுத்து, அவர்களது மொத்தச் சொத்து மதிப்பு 75 சதவீதம் அதிகரித்து ரூ.5,830 கோடி அமெரிக்க டாலர்களை (ரூ.4,30,000 கோடி) எட்டியது.

கோவிட்-19 பாரபட்சமற்றது எனக் கதைக்கப்பட்டதையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நமது “இந்தியாவில் தயாரிப்போம் – எங்காவது குவித்து வைப்போம்” கோடீசுவரர்கள் (மற்றைய உலகக் கோடீசுவரர்களுக்கு இணையாக) ஃபோர்பஸின் சிகரத்தில் இருக்கிறார்கள், அதன் உச்சியிலிருந்து வெறும் இரண்டு இடங்கள் தள்ளி. 140-க்குப் பின்னும் ஆட்டம் தொடர்ந்து வரும் நிலையில், அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் அடுத்த இடத்தில் உலகிலேயே அதிகக் கோடீசுவரர்களைக் கொண்ட மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது. கோடீசுவரர்களின் நாடாகத் தம்மைக் காட்டிக் கொண்ட ஜெர்மனியும், ரசியாவும் இந்தப் பட்டியலில் நம்மைப் பின்னுக்குத் தள்ளியகாலம் ஒன்றிருந்தது. ஆனால், இந்த வருட பட்டியலில் அவைகளின் இடம் எதுவெனக் காட்டப்பட்டிருக்கிறது.

இந்தியக் கோடீசுவரர்களின் சொத்தின் கூட்டு மதிப்பான ரூ.59,600 கோடி அமெரிக்க டாலர்கள் என்பது ஏறத்தாழ ரூ.44,50,000 கோடிக்குச் சமமாகும். இது 75 ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்களின் மதிப்பிற்குச் சற்றுக் கூடுதலாகும். இந்தியாவில் செல்வ வரி கிடையாது. அப்படியான வரி இருந்து, அதிகம் உறுத்தாத வகையில் 10 சதவீத வரி விதித்தோம் எனில், ரூ.4,45,000 கோடி வரி வருமானம் ஈட்ட முடியும்.

இதனைக் கொண்டு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் (2021-22) மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.73,000 கோடி என்ற அதே அளவில், தொடர்ந்து ஆறு ஆண்டுகளுக்கு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும். அவ்வாறு நடைமுறைப் படுத்தும் போது, ரூ.1,680 கோடி மனித உழைப்பு நாட்களை அடுத்த ஆறு ஆண்டுகளுக்குக் கிராமப்புறங்களில் உருவாக்கவும் முடியும்.

புலம்பெயர் தொழிலாளர்கள் மாநகரங்களையும் நகர்ப்புறங்களையும் விட்டு வெளியேறும் இரண்டாவது அலை எழுந்துள்ள நிலையில் – அவர்களது இத்துயரம் ஒரு சமூகம் என்ற வகையில் அவர்கள் நம்மை நம்பவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது – மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேற்சொன்னதைவிட அதிகப்படியான வேலைநாட்கள் நமக்குத் தேவைப்படுகிறது.

இந்த அதிசயத்தக்க 140 கோடீசுவரர்களும், தமது நண்பர்களிடமிருந்து சிறு சிறு உதவிகளையும் பெற்று வந்தனர். கடந்த இரு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கண் மண் தெரியாத வேகத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பிரம்மாண்ட வரிக் குறைப்பு, ஆகஸ்டு 2019-லிருந்து இன்னும் வேகமெடுக்கும்படி முடுக்கிவிடப்பட்டது.

விவசாய விளைப் பொருட்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையில் கூடுதலாக ஒரு பைசாகூட விவசாயிகளுக்காகச் சலுகை காட்டப்படவில்லை. தொழிலாளர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வைப்பதற்கு வகை செய்யும் அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. (சில மாநிலங்களில் இந்தக் கூடுதல் நான்கு மணி நேர உழைப்புக்குக் கூடுதல் கூலி கொடுப்பதும் மறுக்கப்பட்டது.) மேலும், முன்பைவிட அதிகமாக இயற்கை வளங்களும், பொதுச் சொத்தும் கார்ப்பரேட் பெருந்தனவந்தர்களுக்குக் கையளிக்கப்பட்டது – இவை அனைத்துமே பெருந்தொற்றுக் காலத்தில் நடந்தன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்பெருந்தொற்றுக் காலத்தில்தான், உணவுப் பொருள் சேமிப்பு ஒரு கட்டத்தில் ரூ.10.4 கோடி டன்னாக உயர்ந்தது. ஆனால், மக்களுக்கு இலவசமாகக் கிடைத்ததோ, 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு மட்டுமே – அதுவும் ஆறு மாதங்களுக்கு. இந்த இலவசமும் கூட, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருபவர்களுக்கு மட்டும்தான்; அச்சட்டமோ தேவையுள்ள பெரும்பாலோரை ஒதுக்கி வைத்திருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு பல பத்து இலட்சக்கணக்கான இந்தியர்கள் பட்டினி கிடக்க நேர்ந்த வருடத்தில்தான் இவையெல்லாம் நடந்தன.

ஃபோபர்ஸ் குறிப்பிடும் இந்தத் திடீர் சொத்துக் குவிப்புப் பாய்ச்சல் உலகெங்கும் நடந்து வருகிறது. “கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு 17 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீசுவரர் உருவாகியிருக்கிறார். மொத்தத்தில், உலகப் பெரும் கோடீசுவரர்களின் சொத்து மதிப்பு  முந்தைய ஆண்டை விட 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் அதிகரித்திருக்கிறது.” இந்த 5 இலட்சம் கோடி அமெரிக்க டாலரில் இந்தியப் பெரும் கோடீசுவரர்களின் பங்கு கிட்டத்தட்ட 12 சதவீதமாகும். இது,  நமது நாட்டில் அனைத்துத் துறைகளிலும் ஏற்றத் தாழ்வு எவ்விதக் கட்டுப்பாடுமின்றி, மிகத் துரிதமாக வளர்ந்து வரும் வேளையில் நடந்திருக்கிறது.

வறுமையும் பெருந்துயரமும் அதிகரிக்கும் போதுதான், அதன் மீது சவாரி செய்த படியே செல்வக் குவிப்பும் அதிகரிக்கிறது. மேலும், இது பெருந்தொற்று பற்றிய விடயம் மட்டுமல்ல. பேரிடர்கள் வளமான வியாபாரமாகும். பலரின் துயரத்திலிருந்து பணத்தை ஈட்டுவது எப்பொழுதுமே நடைபெறுகிறது. ஃபோர்பஸ் நம்புவுதைப் போலன்றி, நமது ஆட்கள் பெருந்தொற்றுப் பீதியைக் கண்டு ஒதுங்கிப் போய்விடவில்லை.

அவர்கள் ஓங்கி அடித்த அந்த அலையில் மிகச் சிறப்பாகப் பயணித்துள்ளனர். உலகெங்கும் நிலவி வரும் பெருந்தொற்று பெருக்கத்தை அனுபவித்துக் கொண்டிருப்பது மருத்துவத் துறையாகும் என்ற ஃபோர்பஸின் கூற்று சரியானதுதான். எனினும், திடீர் பேரழிவுகளைப் பொருத்து மற்ற துறைகளிலும் இத்தகைய வளர்ச்சியும் குவிப்பும் நிகழக் கூடும்.

டிசம்பர் 2004-இல் சுனாமி பேரழிவு ஏற்பட்ட ஒரே வாரத்திற்குள்ளாக, உலகெங்கிலும், குறிப்பாக, சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளிலும் கூட பங்குச் சந்தை வளர்ச்சியைக் காண முடிந்தது. பல இலட்சக்கணக்கான வீடுகளும், படகுகளும், ஏழைகளின் அனைத்து விதமான சொத்துக்களும் அழிக்கப்பட்டிருந்தன.

சுனாமிக்கு இலட்சம் உயிர்களுக்கும் மேலாகப் பலி கொடுத்த இந்தோனேஷியாவில், ஜகர்தா பங்குச் சந்தை குறியீடு, அதனின் முந்தைய சாதனைகளை முறியடித்து, அதுவரையில்லாத உச்சத்தைத் தொட்டது. நமது பங்குச் சந்தைக் குறியீடும் அது போலவே. அச்சமயத்தில், மறுகட்டுமானத்திற்கான டாலர்கள், ரூபாய்கள் குறித்த முன்னுணர்வுதான் கட்டுமானம் மற்றும் அதோடு தொடர்புடைய துறைகளின் பிரம்மாண்ட வளர்ச்சியை இயக்கியது.

இச்சமயத்தில், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் (குறிப்பாக, மென்பொருள் சேவைத் துறை) உள்ளிட்டவைதான் நன்றாகச் செயல்பட்டன. ஃபோர்பஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்தியாவைச் சேர்ந்த முதல் பத்து தொழில் நுட்ட ஜாம்பவான்கள், பன்னிரெண்டே மாதங்களில் தமது சொத்து மதிப்பில் கூடுதலாக ரூ.2,280 கோடி அமெரிக்க டாலர்களைச் (நாளொன்றுக்குச் சராசரியாக ரூ.460 கோடி ரூபாய்) சேர்த்துக் கொண்டதையடுத்து, அவர்களது ஒருங்கிணைந்த மொத்த சொத்து மதிப்பு ரூ.5,240 கோடி அமெரிக்க டாலர்களை (ரூ.3,90,000 கோடி) எட்டியது. இது 77 சதவீத உயர்வாகும்.

மேலும், இணையவழிக் கல்விச் சேவையும் – பெரும்பாலும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த பல இலட்சக்கணக்கான மாணவர்கள், எவ்விதக் கல்வி வாய்ப்பும் இன்றி ஒதுக்கப்பட்ட நிலையில் –  சிலருக்குப் பலன்களை அளித்தது. பைஜு ரவீந்தரன், தனது சொத்து மதிப்பை 39 சதவீதம் அதிகரித்து, ரூ.250 கோடி அமெரிக்க டாலர் (ரூ.18,700 கோடி) பெறுமான சொத்தை அடைந்தார்.

படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

♦ ஆக்சிஜன் கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமாம் – இந்துராஷ்டிர இளவல் ஆதித்யநாத் எச்சரிக்கை !

நாம் உலகின் பிற நாடுகளுக்கு அவர்களது இடத்தைக் காட்டிவிட்டோம் எனக் கூறுவது நாணயமாக இருக்கும் என நான் கருதுகிறேன். ஐ.நா மனித வளர்ச்சி குறியீட்டுப் பட்டியலில் நமது இடமும் காட்டப்பட்டுவிட்டது. 189 நாடுகள் உள்ள பட்டியலில் 131-வது இடம் நம்முடையது. எல் சல்வடார், தாஜிக்கிஸ்தான், குவாதிமாலா, நிகரகுவா, புடான், நமீபியா, கபோ வெர்தே ஆகிய நாடுகள் எல்லாம் நமக்கு முன் உள்ளன.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, நம்மை இடித்துக் கீழே தள்ளிய சர்வதேச சதி குறித்த உயர்மட்ட விசாரணைக் குழுவின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும் என நான் அனுமானிக்கிறேன். இந்தப் பத்தியைக் கவனித்து வரவும்.


தமிழாக்கம் : ஆர்.ஆர்.டி.
நன்றி : தி வயர் (15.04.2021) மற்றும் People’s Archive of Rural India

கோவிட்-19 நோயாளிகளை கைவிட்ட அரசு : ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது எப்படி?

0

வினய் ஸ்ரீவத்சவாவின் ஆக்சிஜன் அளவானது அபாயகரமான அளவை எட்டியிருந்த நிலையில்,  லக்னோவின் எந்த மருத்துவமனையும் தன்னுடைய தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை என ஏப்ரல் 16 அன்று இரவு 8 மணி அளவில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு 94-க்கும் கீழே சென்றால் ஆபத்து நிலை என கொள்ளப்படும். ஸ்ரீவத்சவா தன்னுடைய ஆக்சிஜன் அளவு 32 என சொன்னார்.

65 வயதான நிறுவனம் சாரா பத்திரிகையாளரான ஸ்ரீவத்சாவின் பதிவு ட்விட்டரில் வைரலான பின், உத்தரப்பிரதேச முதலமைச்சரின் ஊடக ஆலோசகர், அடுத்த நாள் மதியம் மேலதிக தகவல் வேண்டும் எனக் கேட்டார். அப்போது ஸ்ரீவத்சவாவின் ஆக்சிஜன் அளவு 31-ஆக குறைந்தது.

படிக்க :
♦ கொரோனாவில் அம்பலமாகும் மோடியின் குஜராத் மாடல்  !!

♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்

அதே நாளில் மாலை 4.20 அளவில் அவருடைய மகன் ஹர்ஷித் ஸ்ரீவத்சவா தன்னுடைய தந்தை இறந்துவிட்டார் என ட்விட்டரில் பதிவு செய்து, ஆம்புலன்சுக்கு காத்திருப்பதாக தெரிவித்தார். “நாங்கள் எதையும் பெறவில்லை. நான் அனைத்து எண்களுக்கும் அழைத்து ஆக்சிஜன் சிலிண்டர் கேட்டேன். ஆனால், எவரும் பதிலளிக்கவில்லை” என்கிறார் அவர்.

அவர்களுடைய வீட்டிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அரசு மருத்துவமனையான சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனை ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைக்காக காத்திருக்கிறது. மருத்துவ தேவைக்கான ஆக்சிஜன் உற்பத்திக்காக மருத்துவமனைகளிலேயே நிறுவப்பட 8 மாத கால கோவிட் பெருந்தொற்றுக்குப் பின் கடந்த ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு 150 மாவட்ட மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலை அமைக்க டெண்டர் கோரியிருந்தது. அதில் மேற்கண்ட மருத்துவமனையும் ஒன்று.

ஆனால், ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் ஆக்சிஜன் ஆலை நிறுவப்படவில்லை. சரியான நேரத்தில் நிறுவப்பட்டிருந்தால் லக்னோ வாசியான ஸ்ரீவத்சவா போன்றோர் கோவிட்-19னில் இருந்து பிழைந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். 3 மில்லியன் மக்கள் வாழும் இந்த நகரத்தில் தற்போது 44,485 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

“என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம்” என்கிறார் ஹர்சித். அவர் இன்னமும் தனது தந்தையின் கோவிட்-19 அறிக்கைக்காக காத்திருக்கிறார். “இது முழுக்க முழுக்க அரசாங்கத்தின் தவறு” என்கிறார் அவர்.

1,200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குஜராத்தின் நவ்சாரியில் மற்றொரு மாவட்ட மருத்துவமனையில், ஆக்சிஜன் ஆலை நிறுவப்படாதக் காரணத்தால் ஆக்சிஜன் தேவைப்படும் கோவிட்-19 நோயாளிகளைக் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சேர்க்க மறுத்து வருகிறது.

“இங்கு முழுமையாக ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது” என்கிறார் 175 படுக்கைகள் கொண்ட மாவட்ட பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அவினாஷ் துபே.  அரசின் கணக்குப்படி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஆக உள்ள நிலையில், கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் 5 கோவிட் 19 நோயாளிகள் உயிரிழந்தனர்.

ஆக்சிஜன் ஆலை மட்டும் சரியான நேரத்தில் நிறுவப்பட்டிருந்தால், குஜராத்தில் மோசமாகப் பாதிக்கப்பட்ட சூரத்திலிருந்தும் கூட நோயாளிகளை அனுமதித்திருக்கலாம். தற்போது அருகில் உள்ள மருத்துவமனைகள் துபே-ஐ அழைத்தால் “இங்கே அனுப்ப வேண்டாம்” என சொல்வதாக தெரிவிக்கிறார்.

000

ரூ.200 கோடி மதிப்பிலான டெண்டரை கோர 8 மாதங்கள் !

2020, மார்ச் 20-ஆம் தேதி அன்று இந்தியா, கொரோனா வைரஸ் பெருந்தொற்றை, பேரழிவு என அறிவித்தது.  பத்து நாட்கள் கழித்து, கோடிக்கணக்கான மக்கள் உலகின் மிக மோசமான பொது முடக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அப்போது அரசாங்கம், நாட்டின் சுகாதாரத் திறனை விரிவாக்க நேரம் தேவை எனக் கூறிக் கொண்டது.

பெருந்தொற்றின் தொடக்கத்திலேயே, வைரசுக்கு எதிரானப் போரில் ஆக்சிஜன் என்பது மிக முக்கியமான பொருள் என தெளிவாகத் தெரிந்தது. ஆனபோதும், நரேந்திர மோடியின் அரசாங்கத்துக்கு ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் அமைப்பதற்கான ஏலத்துக்கு அழைக்க 8 மாதங்கள் தேவைப்பட்டது.

அக்டோபர் 21-ஆம் தேதி அன்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமான மத்திய மருத்துவ சேவைகள் சொசைட்டி, நாடு முழுவதும் 150 மாவட்ட மருத்துவமனைகளில் பிரஷர் ஸ்விங் அட்ஸார்ப்ஷன் (Pressure Swing Adsorption – PSA) ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ ஏலதாரர்களுக்கு அழைப்பு விடுத்தது.

PSA தொழில்நுட்பம் வளிமண்டலத்தில் உள்ள ஒரு கலவையிலிருந்து வாயுக்களைப் பிரித்து, குழாய் வழியாக செறிவூட்டப்பட்ட ஆக்சிஜனை மருத்துவமனைப் படுக்கைகளுக்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மற்ற மூலங்களிலிருந்து அழுத்தப்பட்ட திரவ ஆக்சிஜனை மருத்துவமனைகள் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த டெண்டர் செயல்முறைத் தொடங்கப்படாததற்கானக் காரணம் நிதிப் பற்றாக்குறை எனத் தெரிகிறது. 162 ஆலைகள் நிறுவ (12 ஆலைகள் பின்னர் சேர்க்கப்பட்டவை) வெறும் ரூ.201.58 கோடி போதுமானது. இந்த பணம் பி.எம்.கேர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டது. 2020, மார்ச் 27-ஆம் தேதி அன்று உருவாக்கப்பட்ட பி.எம்.கேர் நான்கு நாட்களில் ரூ.3,000 கோடியை நன்கொடையாகப் பெற்றது.

இப்போது, கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில், பிஎம்-கேர் நிதியிலிருந்து மேலும் 100 ஆக்சிஜன் ஆலைகள் நிறுவப்படும் என மோடி அரசு கடந்த வாரம் ஓர் அறிக்கையில் கூறியது. 2020-ஆம் ஆண்டில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட 162 ஆக்சிஜன் ஆலைகளின் நிலை குறித்து, அவை அனைத்தும் “100 சதவீதம் முழுமையடைந்த ஆலைகளாக விரைவாக முடிப்பதற்காக உன்னிப்பாகப் பரிசீலிக்கப் படுகின்றன” எனக் கூறியது அந்த அறிக்கை.

ஸ்காரல் இணையதளம் மேற்கொண்ட விசாரணையில், ஏன் தாமதமாகிறது என்பதற்கான விடையாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது. 14 மாநிலங்களில் உள்ள 60 மருத்துவமனைகளை அவர்கள் அழைத்துப் பேசிய நிலையில், ஆக்சிஜன் ஆலைகள் வரும் என எதிர் பார்ப்பது தெரிந்தது. நிறுவப்பட்ட 11 யூனிட்டுகளில் 5 மட்டும் செயல்படும் நிலையில் உள்ளன.

162 ஆக்சிஜன் ஆலைகளில் 33 நிறுவப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல், 2021 இறுதிக்குள் 59 நிறுவப்படும் எனவும் மே மாதத்துக்குள் 80 நிறுவப்படும் எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் அறிவிப்பின்படி பார்த்தால் 172 ஆலைகள் வருகிறது. இந்தக் கணக்கையும் கூட அமைச்சகம் சரியாக தெரிவிக்கவில்லை என்கிறது ஸ்க்ரால் இணையதளம்.

இந்தியாவில் தற்போது இருபது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல மாநிலங்கள் அனைத்து தொழில்துறை ஆக்சிஜன் உற்பத்தியையும் மருத்துவ நோக்கங்களுக்காகத் திருப்பி விடுகின்றன. 50,000 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை இறக்குமதி செய்யப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிய ஆக்சிஜன் ஆலைகள் மாதத்திற்கு 4,500 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும்.  தற்போது இரண்டாவது அலையில் காணப்படும் தேவையைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இல்லை, ஆனால் ஒவ்வொரு கூடுதல் திறனும் உயிர்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.

“கோவிட்-19  இல்லாவிட்டாலும், ஆக்சிஜன் ஆலைகள் அங்கு இருக்க வேண்டும்”  என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுவான தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் முன்னாள் இயக்குனர் டி.சுந்தரராமன் கூறுகிறார்.

அவரைப் போன்ற பொது சுகாதார வல்லுநர்கள், பெருந்தொற்று இந்தியா தனது சுகாதார அமைப்புகளில் வெளிப்படையான இடைவெளிகளை நிரப்புவதற்கான ஒரு வாய்ப்பு என வாதிட்டனர். அவற்றில் ஒன்று லட்சக்கணக்கான மக்களுக்குப் பயன்படும் மாவட்ட மருத்துவமனைகளில் குழாய் பதிக்கப்பட்ட ஆக்சிஜன் இல்லாதது.

“ஆக்சிஜன் இல்லாததால் துன்பத்துக்கு பின் துன்பம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது” என்கிறார் சுந்தரராமன். ஆக்சிஜன் இல்லாததால் பாம்பு கடித்தல், மூளையழற்சி (encephalitis), சாலை விபத்துக்கள் போன்ற இறப்புகளும் இதில் அடங்கும்.

மருத்துவமனையிலேயே நிறுவப்பட்ட ஆலைகள் மூலம் குழாய் ஆக்சிஜன் கிடைத்திருந்தால் இதுபோன்ற லட்சக்கணக்கான இறப்புகளைத் தவிர்க்க முடியும், இது சமீபத்திய ஏலங்களில் காட்டப்பட்டுள்ளபடி, ஒரு சிறிய செலவில் வந்துள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு வெறும் ரூ.200 கோடி மட்டுமே செலவு பிடிக்கும்!

ஆனால், இப்போது கோவிட்-19னும் இந்த மரண பட்டியலில் சேர்க்கிறது.

000

மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்கள் வர்த்தகக் கட்டணங்களால் அதிகரிக்கும் தாமதங்கள்

ஒரு பெருந்தொற்றின் போது உள்கட்டமைப்பு போர்க்காலத்தில் அதிகரிக்கப்படும்போது ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதில் ஏற்படும் தாமதம் சொல்ல வருவது என்ன ?

அசாம், பீகார், சத்தீஸ்கர், டெல்லி, குஜராத், ஜார்க்கண்ட், கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களில் உள்ள மருத்துவமனை அதிகாரிகளுடன் பேசியபோது, தாமதங்களுக்கு ஒப்பந்தங்களை வென்ற நிறுவனங்களே காரணம் என பெரும்பாலான அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

புதிய ஆக்சிஜன் ஆலைகளுக்கான டெண்டர் ஆவணத்தில், மருத்துவமனையில் உள்ள மொத்தப் படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஆலையின் திறன் ஆகியவற்றுடன் மாவட்ட மருத்துவமனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில், 14 மாவட்டங்களில் மாறுபட்ட திறன் கொண்ட அதிக எண்ணிக்கையிலான ஆலைகள் உத்தரப்பிரதேசத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 10 மாவட்டங்களில் மராட்டியத்துக்கு ஆலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெல்லிக்கு நிமிடத்திற்கு 7,700 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எட்டு ஆலைகள் ஒதுக்கப்பட்டன.

உத்தம் ஏர் ப்ராடக்ட்ஸ், ஏரோக்ஸ் டெக்னாலஜிஸ் மற்றும் ஆப்ஸ்டெம் டெக்னாலஜிஸ் ஆகிய மூன்று நிறுவனங்களிடம் இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசத்தில், 14 மருத்துவமனைகளில் ஒன்று கூட ஆக்சிஜன் ஆலை செயல்படுவதாக தெரிவிக்கவில்லை.

ஒப்பந்த நிறுவனங்கள், பல காரணங்களைக் காட்டி ஆலைகள் நிறுவதை தாமதித்து வருகின்றன. நிறுவனங்களை கண்காணித்துப் பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிக்க அரசாங்க தரப்பில் எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை என்பது ஸ்க்ரால் இணையதளத்தில் விசாரணையில் தெரிய வருகிறது. வெறுமனே கண் துடைப்புக்காக ஏலம் விட்டு, ஒப்பந்தங்கள் தரப்பட்டுள்ளன என்பதும் தெரிய வருகிறது.

000

பற்றாக்குறை மரண சுழலுக்கு வழி வகுக்கிறது

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவர்கள் இரண்டாவது அலை மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம் என கூறுகிறார்கள். ஏனெனில், வைரஸின் புதிய வகைகள் மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்தியதால் அல்ல (இது குறித்து இன்னும் தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை) ஆனால், அதிக அளவு நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் நோயாளிகளுக்கு கடினமாக இருக்கும். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் கூட ஆக்சிஜன் இல்லாமல் செல்ல வேண்டியிருக்கும்.

மருத்துவ ஆக்சிஜனின் பற்றாக்குறை, குஜராத்தில் உள்ள மருத்துவர்களை “யாருக்கு முக்கியத்துவம் தருவது போன்ற சூழ்நிலைக்கு” கட்டாயப் படுத்தியதாகக் கூறுகிறார்கள். அதாவது எந்த நோயாளிக்கு ஆக்சிஜன் தருவது என முடிவெடுக்க வேண்டிய நிலையை அவர்கள் கூறுகிறார்கள்.  அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை, ஆனால் சிலருக்கு மட்டுமே அதை வழங்க முடியும்.

குஜராத்தின் சுரேந்திர நகர் மாவட்டத்தில் உள்ள CU ஷா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் டாக்டர் ரூபம் குப்தா கூறுகையில், “கடந்த ஆண்டு தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை. ஆனால், இந்த ஆண்டு அலை திடீரென உயர்ந்துள்ளது, எனவே இந்த நேரத்தில் அப்போதைய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முடிகிறது” என்கிறார்.

இந்த மருத்துவமனையில் 700 படுக்கைகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 200 கோவிட்-19 நோயாளிகள் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட அனைவருக்கும் ஆக்சிஜன் தேவை என குப்தா கூறினார். 100 ஆக்சிஜன் சிலிண்டர்களைக் கொண்ட இரண்டு டிராலிகள்தான் இந்த மருத்துவமனையை காத்திருக்கிறது. ஒரு நோயாளிக்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்பட்டால், மற்ற நோயாளிகளுக்கு ஆக்சிஜன் போதாமை ஏற்படும். இவற்றை ஈடுகட்டித்தான் நோயாளிகளை காக்க வேண்டியுள்ளது என்கிறார் மருத்துவர்.

000

வெற்று சிலிண்டர்களில் இயங்கும் மருத்துவமனைகள்

அதிக எண்ணிக்கையிலான சிக்கலான நோயாளிகளைக் கொண்ட பெரிய மருத்துவமனைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் போதுமானதாக இல்லை என்றாலும், அதிக தேவை உள்ள காலங்களில் அவை ஒரு பயனுள்ள கருவியாக இருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நாடு முழுவதும் வணிக ஆக்சிஜனின் கடுமையானப் பற்றாக்குறை இருக்கும் போது ஆக்சிஜன் ஆலைகளின் தேவை முக்கியத்துவம் பெறுகிறது.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, குஜராத், பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பத்து உற்பத்தியாளர்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் விநியோகிப்பாளர்களிடம் பேசிய போது, கடந்த ஆண்டு கோவிட்-19 முதல் அலைகளின் போது இருந்ததை விட இரண்டாவது அலையில் ஆக்சிஜன் தேவை அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர்.

பலர் தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் தயாரிப்பதை நிறுத்தி விட்டு, மருத்துவ ஆக்சிஜன் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள போதும், தட்டுப்பாடு அதிகமாகவே உள்ளது. அதிக அளவு தேவையும் உள்ளதாக தனியார் ஆலை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர். கடந்த 15 நாட்களில் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமாக ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளதாக குஜராத்தின் சூரத் நகரத்தில் உள்ள விநியோகிப்பாளர் ஒருவர் கூறுகிறார்.

உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில் ஆக்சிஜன் நொடிப் பொழுதில் விற்று தீர்ந்து விடுவதாக ஒரு உற்பத்தியாளர் கூறுகிறார். “ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நோயாளி இருந்தால், நிலைமை எப்படி இருக்கும்? தேவை அந்த அளவுக்கு உள்ளது” என்கிறார் அவர்.

படிக்க :
♦ அகண்ட பாரதத்தில் ஆக்சிஜன் இல்லை ! எரியூட்ட இடமுமில்லை ! ஜெய் ஸ்ரீ ராம் || படக்கட்டுரை

♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

எந்தவித தணிக்கைக்கும் உட்படாமல் தனிப்பட்ட வகையில் பெருந்தொற்றின் போது உருவாக்கப்பட்டு இயக்கப்படும் பி.எம்.கேர் நிதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் குவிந்துள்ளது. அதில் ரூ.200 கோடி என்பது வெறும் துளி மட்டுமே. ஓராண்டு காலத்தில் மக்கள் நலனில் அக்கறைக் கொண்ட அரசாக இருந்திருந்தால், ஆக்சிஜன் ஆலைகளை நிறுவி மக்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதி திரட்டுவதில் காட்டியிருந்த ஆர்வத்தில் ஒரு பகுதியைக் காட்டியிருந்தால் கூட குஜராத், மராட்டியம், உத்தரப்பிரதேசத்தில் மரண ஓலங்களின் எண்ணிக்கை குறைத்திருக்க முடியும். ஆனால், மதத்தின் பெயரால் ஆட்சி நடத்தும் இந்துத்துவ பாசிச அரசு பிணங்கள் எரிவதைக் கண்டு குதூகலித்துக் கொண்டிருக்கிறது.


கட்டுரை : விஜய்தா லால்வானி & அருணாப் சாய்கா
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : அனிதா
நன்றி : Scroll.in