Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 303

ஜனவரி 8 – 2020 வேலை நிறுத்தத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுப்போம் !

மோடி அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து, 2020-ம் ஆண்டில் ஜனவரி – 08-ம் தேதியன்று, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ள அனைத்து துறை தொழிலாளர்களது வேலை நிறுத்தத்தில், தொழில் மற்றும் துறைவாரியான, பல்வேறு தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.

இப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் புதுச்சேரியில் கடந்த டிசம்பர் – 28 அன்று திருபுவனை தொழிற்பேட்டை – மதகடிப்பட்டு பகுதியில் உள்ள ஆனந்த செல்லம்மாள் திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஏற்கெனவே மோடி தலைமையிலான ஆறு ஆண்டு கால ஆட்சியில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக் கட்டுவது, நீம், FTE திட்டங்களால் தொழிற்சங்க உரிமை, பணி நிரந்தர உரிமைகள் பறிக்கப்படுவது என தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறைகளும், பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, வறுமை, பொதுத்துறைகள் ஒழிப்பு என பரந்துபட்ட மக்களின் வாழ்வுரிமைகளைப் பறித்து வருகிறது மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

மறுபுறம், தகவல் பெறும் உரிமைச் சட்டம், ஊபா ஆள்தூக்கிச் சட்டம், ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை ஜனநாயக விரோதமான முறையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியும் வருகிறது. இந்த நிலையில் தற்போது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான நாடு தழுவிய அளவில் நடந்து வரும் போராட்டங்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

இன்றைய நிலையில் அப்படிப்பட்ட போராட்டங்களை வலுப்படுத்துவதும், இப்போராட்டங்களை, ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கான அரசியல் போராட்டமாக முன்னெடுக்க வேண்டியதும், நம்மைப் போன்ற சமூக ஜனநாயக இயக்கங்கள், தொழிற்சங்கங்களின் கடமையாகும் என்ற அடிப்படையில் பிற தொழிற்சங்கங்களை ஒருங்கிணைப்பது என்ற அடிப்படையில் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.சி.சி.டி.யூ. ஆகிய சங்க முன்னணியாளர்களின் பங்கேற்புடன் இந்த அரங்கக்கூட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த அரங்கக்கூட்டத்தில், பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கமான ரானே பிரேக் லைனிங் எம்ப்ளாயீஸ் யூனியன் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர். தினேஷ் பொன்னையா, சிஐடியூ சங்கத்தின் புதுச்சேரி பிரதேச பொருளாளர் தோழர். பிரபுராஜ் மற்றும் ஏஐசிசிடியூ தொழிற்சங்கத்தின் மாநிலத் தலைவரும், சேதுராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பின் முக்கிய பொறுப்பாளருமான தோழர் மோதிலால் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர். மகேந்திரன் ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர்.

தோழர் சரவணன் தனது தலைமையுரையில் மோடி கும்பல், மாட்டுக்கறி பிரச்சினை முதல் குடியுரிமைச் சட்டத் திருத்தம் வரையில் ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ செயல்திட்டங்களை தொடர்ச்சியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய வெறி, தேசபக்தி என மக்களை மடைமாற்றி கார்ப்பரேட்டுக்களுக்கான பொருளாதார திட்டங்களையும்  செயல்படுத்தி வருகிறது. இது அனைத்து தரப்பு உழைக்கும் மக்களையும் பாதித்துள்ளது. இவற்றை முறியடிக்க தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்திப் பேசினார்.

ஏஐடியூசி மாவட்டத் தலைவர் தோழர் தினேஷ் பொன்னையா, நமது முயற்சியை வாழ்த்தியதோடு, நீம், FTE போன்ற திட்டங்களை விளக்கிப் பேசியும், நிதிமூலதனத்தை கார்ப்பரேட்டுக்கள் சூறையாடுவதற்கு தேர்ந்தெடுத்துள்ள வடிவமே பாசிசம். அந்தப் பாசிசத்தை ஒழித்து மக்களைப் பாதுகாப்பதற்கு இடதுசாரிகளைத் தவிர மாற்று இல்லை என்பதை விளக்கிப் பேசினார்.

சிஐடியூ புதுவை பிரதேச பொருளாளர் பிரபுராஜ், ஜனவரி-8 வேலைநிறுத்தம் தொடர்பான புஜதொமு-வின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் எனக் கூறியதுடன், இன்றைய நிலையில் தொழிலாளி வர்க்கம், அரசியல் மனமாச்சரியங்களைக் கடந்து ஒன்று சேர வேண்டும் என்பதையும், மோடி கொண்டுவரும் பல்வேறு ஒடுக்குமுறைகளைப் பேசி விளக்கினார். தொழிலாளி வர்க்கத்தையும், மக்களையும் காப்பாற்ற இடதுசாரிகள் தவிர யாரும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

ஏஐசிசிடியூ தலைவர் தோழர் மோதிலால், தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்தால் சாதிக்க முடியும் என்பதை சேதுராப்பட்டு தொழிற்பேட்டை அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து தொழிலாளர்கள் கூட்டமைப்பு மூலமாக செய்த போராட்ட அனுபவங்களைக் கூறி நம்பிக்கை ஊட்டினார். தொழிலாளர்கள் செய்ய வேண்டிய வேலைகள் மற்றும் தொழிற்சங்கத்தின் கடமைகள் பற்றியும் விமர்சன, சுயவிமர்சன ரீதியாக விளக்கிப் பேசி, ஜனவரி 8, வேலை நிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டியது நம் அனைவரது கடமையாகும் என்றார்.

படிக்க :
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
கழிவு நீர் ஊர்தி வேலை நிறுத்தம் : சாக்கடை அள்ற கையின்னு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க !

இறுதியாகப் பேசிய புஜதொமு புதுச்சேரி மாநில செயலாளர் மகேந்திரன், நமது அழைப்பை ஏற்று வந்த தொழிற்சங்கத் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஜனவரி-8 வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடத்த வேண்டிய கடமை தொழிலாளி வர்க்கத்திற்கு உண்டு என்பதை வலியுறுத்தும் விதமாக, மோடியின் பல்வேறு திட்டங்களை விளக்கியும், தொழிலாளர் மீதான சட்டத் திருத்தம் பற்றியும் அதன் ஒடுக்குமுறைகளையும் விளக்கிப் பேசினார். இந்தப் போராட்டத்திற்குப் பிறகும், கூட்டமைப்பை உருவாக்கும் வகையில் இணைந்து செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தும் உரையை நிறைவு செய்தார்.

ஜனவரி 8, 2020 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டிய அவசியத்தை, தொழிலாளி வர்க்கத்திற்கு உணர்த்தும் வகையிலும், பல்வேறு மாற்றுக்கட்சி தொழிற்சங்கங்கள் கலந்து  கொண்டது  நம்பிக்கையூட்டுவதாக அமைந்திருந்தது.


தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு : 95977 89801.

பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !

இந்தியக் குடியுரிமைச் சட்டத்திருத்தம் மக்களுக்கான ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் மத சார்பின்மையையும் கால்களில் போட்டு மிதித்துள்ளது.

ண்மையில் இந்திய நாடாளுமன்றத்தில் தமக்கிருக்கும் பெரும்பான்மையைக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் இந்தியக் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை நிறைவேற்றியிருக்கிறது. இச்சட்டமானது மக்களுக்கான ஜனநாயகத்தையும் மனித உரிமையையும் மதசார்பின்மையையும் கால்களில் போட்டு மிதித்துள்ளது.

மூன்று நாடுகளிலிருந்து ஆறு மதங்களைச் சேர்ந்தவர்கள் ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருப்பின் அவர்களுக்கு குடியுரிமை வழங்க மேற்படிச் சட்டம் வழிவகுக்கிறது. இச்சட்டமானது முஸ்லிம் மக்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போன்று இலங்கைத் தமிழ் மக்களையும் புறந்தள்ளியிருக்கிறது. அதேவேளை இந்தியாவின் முஸ்லிம் மக்களின் குடியுரிமைக்குரிய ஆதாரங்களையும் கேட்டு நிற்கிறது. இச்சட்டமானது இந்துத்துவா அடிப்படையில் இந்துத்துவ பாசிசச் சட்டமாகவே கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அதன் காரணமாக இந்திய மக்கள் நாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தலைநகர் புதுடில்லியில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதி எதிர்ப்புப் போராட்டத்தை குண்டர்களும் பொலீசும் இணைந்து கொடூரமாகத் தாக்கியிருக்கிறார்கள். இதற்கு எதிராக எல்லா மாநிலங்களிலும் மக்களும் மாணவர்களும் போராடி வருகிறார்கள். அவர்களது ஒரே கோரிக்கை, பாசிசச் சட்டமான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற்று இரத்துச் செய்யவேண்டும் என்பதேயாகும்.

இந்திய மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ள மேற்படிக் கோரிக்கைகளையும் அதற்கான எழுச்சிப் போராட்டங்களையும் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆதரித்து தனது ஒருமைப்பாட்டினைத் தெரிவித்துக்கொள்கிறது. அதேவேளை இப்போராட்டத்தில் ஈடுபட்ட தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் மீது அரசும் பொலீசும் காவிப்படைக் குண்டர்களும் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் போராட்டங்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அரச பயங்கரவாதத்தினையும் எமது கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

படிக்க:
♦ அருந்ததி ராய் : மக்களை சிரிக்க சொல்வது கிரிமினல் குற்றமா ?
♦ இலங்கை ஜனாதிபதி தேர்தல் : பிரச்சினைகளுக்குத் தீர்வு இல்லை | பு.ஜ.மா.லெ. கட்சி அறிக்கை

மேலும் நரேந்திர மோடி தலைமையிலான இந்துத்துவ அடிப்படைவாத நிலைப்பாடுடைய பாசிச பா.ஜ.க அரசு காஷ்மீரில் கைவைத்து, அதன்பின் பாபர் மசூதி நிலத்தை நீதிமன்றத்தின் மூலம் பெற்று, இப்போது ஜனநாயகத்திற்கும் மதசார்பின்மைக்கும் பெயர்பெற்றதாகக் கூறப்படும் இந்திய அரசியல் சாசனத்தின் மீதே கைவைத்திருக்கிறது.

இந்துத் தீவிரத் தேசியவாதம் பாசிசத்துக்கு இட்டுச்சென்றுள்ளதையே எடுத்துக்காட்டுகின்றது. எனவே இவற்றுக்கெதிராகப் போராடிவரும் மக்களை எமது கட்சி ஆதரித்து நிற்கின்றது.

புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி, இலங்கை

disclaimer

பென்னாகரம் : குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய் ! பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம் பேரணி – ஆர்ப்பாட்டம்

பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட முற்போக்கு ஜனநாயக இயக்கங்களை ஒருங்கிணைத்து ’பாசிச எதிர்ப்பு கூட்டியக்கம்’ கட்டமைக்கப்பட்டு அதன் தலைமையில் “குடியுரிமை திருத்த சட்டத்தையும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் ரத்து செய்!” என்ற தலைப்பில் 28.12.2019 அன்று காலை 11 மணிக்கு பென்னாகரம் அம்பேத்கர் சிலையிலிருந்து பேருந்து நிறுத்தம்வரை பேரணியும் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந்த பேரணியை வி.சி.க.-வின் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொறியாளர் கருப்பண்ணன் துவங்கிவைத்தார். ஆர்ப்பாட்டத்தை மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முத்துகுமார் தலைமைதாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட செயலாளர் தோழர் எழில், சிபிஎம் கட்சியின் பென்னாகரம் நகர செயலாளர் தோழர் வெள்ளியங்கிரி, விசிக தோழர் கருப்பண்ணன், மக்கள் அதிகாரம் தோழர் கோபிநாத், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜானகிராமன், திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் திரு முகமது அலி முதலியோர் இந்நிகழ்வில் கண்டன உரையாற்றினர்.

படிக்க :
பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !
♦ “என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !

இதில் திரளான இஸ்லாமியர்கள் மற்றும் மேற்குறிப்பிட்ட கட்சியின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள் என சுமார் 600 பேர் கலந்துகொண்டனர்.

முதலில் பேரணி, ஆர்ப்பாட்டத்திற்கு போலிசு பாதுகாப்பு தரமுடியாது, 30(2) சட்டம் நடைமுறையில் உள்ளது என்ற காரணத்தை கூறி அனுமதி மறுத்தது. ஆனால் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடக்கும் என்பதை அறிந்ததும் போலிசு; பேரணியை கைவிட்டு ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்திக்கொள்ளுங்கள் அனுமதி தருகிறோம் என்று கேட்டுக்கொண்டது. எனினும் பாசிச எதிர்ப்பு கூட்டியக்கதினர் தடையை மீறி பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தருமபுரி மாவட்டதில் போராட்டங்கள் தனித்தனியாக நடத்தப்பட்டு வந்த நிலையில் ஒரு கூட்டியக்கத்தை ஏற்படுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தியதும், இதில் திரளான அளவில் முஸ்லீம் சமூக மக்கள் கலந்துகொண்டதும் பென்னாகரம் மக்களை கவர்ந்துள்ளது. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டம் தொடரும் என்று கூட்டியக்கம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி.

ஒட்டுப்போட்டு மாளாது … இது நைந்து போன சங்கதி !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 04

க்காக்கியின் மேல்கோட்டும் சக எழுத்தர்களின் பரிகாசத்திற்கு இலக்காய் விளங்கியதென்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லி விட வேண்டும், மேல்கோட்டு என்ற மதிப்புயர்ந்த பெயரைக் கூட இழந்து, வீட்டிலணியும் கோட்டு எனப் பொருள்படும் “கப்போத்” என்ற அவப்பெயரைப் பெற்றிருந்தது அது. அதன் தையல் பாங்கு உண்மையிலேயே விசித்திரமானது தான்: அதன் கழுத்துப்பட்டை மற்ற இடங்களுக்கு ஒட்டுப் போடுவதற்காகக் கத்தரிக்கப்பட்டு வந்ததால் ஆண்டுக்கு ஆண்டு அளவில் சிறுத்துக்கொண்டே போனது. ஒட்டுக்களோ, தையல்காரனின் கலைத்திறனைக் காட்டவில்லை; விளைந்தது சாக்கு மூட்டை போன்ற, அழகற்ற பொருள். மேல்கோட்டில் என்ன கோளாறு என்பதைக் கண்டுகொண்ட அக்காக்கிய் அதைச் சீர்படுத்துவதற்காக பெத்ரோவிச் என்ற தையல்காரனிடம் எடுத்துச் செல்லத் தீர்மானித்தான். எங்கோ ஒரு வீட்டின் பின்கட்டில் நான்காவது மாடியில் குடியிருந்த இந்த பெத்ரோவிச், ஒற்றைக் கண்ணும், அம்மைத் தழும்பு முகமும் கொண்டவனாயினும் எழுத்தர்கள், மற்றவர்கள் ஆகியோரின் காற்சட்டைகளையும் கோட்டுகளையும் பழுது நீக்கும் தொழிலை வெற்றிகரமாக நடத்திவந்தான் – அதாவது அவன் குடிமயக்கமின்றி நிதானமாகவும், வேறு எதேனும் திட்டங்களைப் போட்டு மூளையைக் குழப்பிக் கொள்ளாமலும் இருக்கும் வேளைகளில்.

இந்தத் தையல்காரனைப் பற்றி விரிவாக வருணிப்பது தேவையில்லை தான், எனினும் கதையில் வரும் எல்லாவிதமான பாத்திரங்களையும் முழுமையாகச் சித்திரிப்பது இக்காலத்திய பாணியாகி விட்டபடியால் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை; இதோ, பெத்ரோவிச்சைப் பற்றிப் பார்ப்போம். ஆரம்பத்தில் அவன் வெறுமே கிரிகோரிய் என்றே அழைக்கப்பட்டான், யாரோ நிலப்பிரபுவின் பண்ணையடிமையாயிருந்தான்; விடுதலை பெற்ற பின்பே அவன் தன்னைப் பெத்ரோவிச் என அழைக்கலானான், எல்லா விழா நாள்களிலும் அளவுமீறிக் குடிக்கத் தொடங்கினான்; முதலில் பெரிய திருநாள்களில் மட்டுமே குடித்தான், பிறகு சர்ச் விழாக்கள் ஒவ்வொன்றிலும், உண்மையில் நாள் காட்டியில் சிலுவைக்குறி இடப்பட்ட நாள்களில் எல்லாம் குடிக்க ஆரம்பித்தான். இந்த விஷயத்தில் அவன் பாட்டன் -முப்பாட்டன் காலத்திலிருந்து வழிவழி வந்த மரபையே கடைப்பிடித்தான்; மனைவியுடன் சச்சரவிடுகையில் அவளை மத விசுவாசம் அற்றவள், ஜெர்மன்காரி என்று பழித்துவந்தான். மனைவியைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டதால் அவளைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் சொல்லுவது அவசியம்; ஆயினும் வருந்தத்தக்க விஷயம், பெத்ரோவிச்சுக்கு மனைவியுண்டு, அவள் தலைக்குட்டை அணிவதில்லை, மூடுதொப்பியே போட்டுக்கொள்வாள் என்பது தவிர அவளைப் பற்றி நாம் அறிந்தது சொற்பமே. அழகைப் பொருத்தவரை பெருமை பாராட்டிக் கொள்ள அவளிடம் ஒன்றும் இல்லை. அது எப்படியாயினும், வீதியில் அவளைச் சந்தித்த போது மூடுதொப்பியின் அடிவழியே அவள் முகத்தை உற்றுப் பார்த்தவர்கள், மீசையை முறுக்கிய வண்ணம் விந்தைக் குரலில் உறுமும் சிப்பாய்கள் மட்டுமே.

பெத்ரோவிச் குடியிருந்த வீட்டின் மாடிப்படிகள் – அவற்றுக்கு உரிய நியாயத்தைச் செலுத்துவதானால் நீராலும், கழிவுநீராலும் சொதசொதவென்று நனைந்து ஊறி, கண்களைக் கரிக்க வைக்கும் சுள்ளென்ற ஸ்பிரிட் நெடியால் நிறைந்திருந்தன (இந்த நெடி பீட்டர்ஸ்பர்க் நகரின் பின்மாடிப் படிகளுக்கெல்லாம் பொதுவான சிறப்பியல்பு என்பதுதான் உலகறிந்த சேதியாயிற்றே). மாடிப்படி எறும் போதே அக்காக்கிய், மேல்கோட்டைச் செப்பஞ் செய்வதற்கு பெத்ரோவிச் என்ன கூலி கேட்பானோ என்று எண்ணியவனாக இரண்டு ரூபிள்களுக்கு மேல் கொடுக்கக் கூடாது என மனத்துக்குள் நிச்சயித்துக் கொண்டான். பெத்ரோவிச்சின் வீட்டுக் கதவு திறந்திருந்தது, ஏனென்றால் அவன் மனைவி எதோ மீனைப் பொரியல் செய்கையில் கிளப்பிய புகை சமையல் அறை முழுதும் மண்டி, கரப்பான் பூச்சிகள் கூடக் கண்ணில் படாதவாறு அடித்திருந்தது. அக்காக்கிய், வீட்டு எஜமானிக்குக் கூடத் தெரியாதபடி சமையலறையைக் கடந்துபோய், முடிவில் தையல்காரனின் அறையை அடைந்து, அங்கே வர்ணம் பூசப்படாத அகன்ற மர மேசை மீது துருக்கியப் பாதுஷா போல மண்டியிட்டு அமர்ந்திருந்த பெத்ரோவிச்சைக் கண்டான். வேலையில் ஈடுபட்டிருக்கும் தையல்காரர்களின் வழக்கம் போல அவன் வெறுங்கால்களுடன் உட்கார்ந்திருந்தான். அக்காக்கியின் பார்வையில் முதலில் பட்டது பெத்ரோவிச்சின் கால் கட்டை விரல்; ஆமையோடு போன்று தடித்து முடிடாய்க் கோணல் மாணலான நகங்கொண்ட அந்த விரல் அக்காக்கிய்க்கு நன்கு பரிச்சயமானது. பட்டு, பருத்தி நூல் கண்டு ஒன்று பெத்ரோவிச்சின் கழுத்திலிருந்து தொங்கியது; அவன் முழங்கால் மேல் கிடந்தது எதோ கந்தையுடை. கடந்த ஓரிரு நிமிடங்களாக நூலை ஊசியில் கோக்க முயன்று தோல்வியுற்ற பெத்ரோவிச் இருண்ட அறை மீதும், நூல் மேலுமே கோபங்கொண்டு, “போக மாட்டேங்குது சனியன்! என் உயிரை வாங்குது துப்புக்கெட்ட சனியனே!” என்று வாய்க்குள்ளாகவே கிசுகிசுத்தான். பெத்ரோவிச் எரிச்சலாக இருக்கும் நேரம் பார்த்து வந்தோமே என்று அக்காக்கிய் வருந்தினான். பெத்ரோவிச் கொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கும் போது, அல்லது “மிடாக்கணக்கில் சாராயத்தைக் குடித்து விட்டு உட்கார்ந்திருக்கிறான், ஒற்றைக் கண் பிசாசு!” என அவன் மனைவி சொல்வது போன்ற நிலையிலிருக்கும் போது அவனிடம் வேலையை ஒப்படைப்பதுதான் அக்காக்கிய்க்குப் பிடிக்கும்.

அந்த மாதிரி நிலையிலிருக்கையில் பெத்ரோவிச் சாதாரணமாக மிகவும் விட்டுக்கொடுப்பான், எந்தக் கூலிக்கும் இணங்கி விடுவான்; அது மட்டுமன்று, தலைவணங்கி நன்றி வேறு தெரிவிப்பான். அப்புறம் அவன் மனைவி அக்காக்கியிடம் கண்ணீரும் கம்பலையுமாக வந்து கணவன் குடிமயக்கத்திலிருந்ததால் மிகக் குறைந்த கூலிக்கு ஒப்புக்கொண்டு விட்டதாக முறையிடுவாள் என்பது உண்மையே; என்றாலும் பத்து காசு கூடக் கொடுத்துவிட்டால் போதும், விஷயம் தீர்ந்துபோகும். இப்போதோ பெத்ரோவிச் மிகவும் நிதானத்தோடிருந்தான், இதனால் எரிச்சலும் புடைச்சலுமாக, எதற்கும் இணங்கிவராத மன நிலைமையில் விளங்கினான்; என்ன கூலி கேட்பானோ, சைத்தானுக்கே வெளிச்சம். இதைப் புரிந்து கொண்ட அக்காக்கிய், வழக்குமொழியில் சொல்வதுபோல, மெதுவாக நழுவப் பார்த்தான், ஆனால் அதற்குள் சுணங்கி விட்டது: பெத்ரோவிச் தனது ஒற்றைக் கண்ணை இடுக்கிக்கொண்டு அவனையே உறுத்து நோக்கினான். அக்காக்கிய் வேறு வழியின்றி, “வணக்கம், பெத்ரோவிச்!” என்று சொல்ல வேண்டியதாயிற்று. பெத்ரோவிச் அவன் என்ன கொணர்ந்திருக்கிறான் என்று தெரிந்து கொள்ள அக்காக்கியின் கைகளையே குத்திட்டுப் பார்த்தவாறு, “வணக்கம், ஐயா, நலந்தானே?” என்று விசாரித்தான்

“ம்ம்… நான் வந்து… பெத்ரோவிச், உன்கிட்டே… ஒரு காரியமாக…” என்றான் அக்காக்கிய் அக்காக்கியெவிச்.

அக்காக்கியின் பேச்சில் உருபிடைச் சொற்கள், வினையுரிச் சொற்கள், எவ்விதப் பொருளுமற்ற அசைகள் ஆகியவையே பெரும் பகுதி விரவிவரும் என்பதை இங்கே தெரிவித்து விடுவது அவசியம். விஷயம் கொஞ்சம் கடினமாயிருந்தால், வாக்கியங்களை முடிக்காமலே அந்தரத்தில் விட்டு விடுவது அவன் வழக்கம். “இது… வந்து… முக்கியமாக என்னவென்றால்…” என்று ஆரம்பித்து விட்டு, சொல்ல வேண்டியதைச் சொல்லியாகி விட்டது என்ற நினைப்பில் வாக்கியத்தை முடிக்க மறந்து, அப்படியே தொங்கலில் விட்டு விடுவான்.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !
தொல்.திருமாவளவன் | மதம் | ஸ்டெர்லைட் வழக்கு | அரபுலகம் | கேள்வி – பதில் !

“என்ன கொண்டு வந்திருக்கிங்க?” என வினவிய பெத்ரோவிச் அதே சமயம் அக்காக்கியின் உடுப்பைக் கழுத்துப்பட்டையிலிருந்து தொடங்கி, கைகள், முதுகு, பின் நுனி, பொத்தான் துவாரங்கள் என்று ஆதி முதல் அந்தம் வரை தனது ஒற்றைக் கண்ணால் நோட்டமிட்டான். அது அவன் கைப்படத் தயாரித்ததாகையால் இவையெல்லாம் அவனுக்கு மிக மிகப் பரிச்சயமானவையாயிருந்தன. உடையை இம்மாதிரிப் பார்வையிடுவது தையல்காரர்களின் தொன்று தொட்ட பழக்கந்தான்; வாடிக்கைக்காரர்களைக் கண்டதும் முதன் முதலாக அவர்கள் செய்வது இது தானே.

“நான் வந்து… பெத்ரோவிச்… இந்த இதை… மேல் கோட்டு இருக்கே… துணி கொஞ்சம் போல… வந்து… இதோ… மற்ற எல்லா இடத்திலேயும் அழுத்தமாத்தான் இருக்கு…. நல்ல அழுத்தமா… கொஞ்சம் தூசிபடிந்தாற்போல இருக்கு… பார்வைக்கு எதோ பழசாகி விட்டது போல… ஆனா புத்தம் புதிசு… எதோ ஓரிடத்தில் மட்டுந்தான் கொஞ்சம் போல… முதுகுப் பக்கம்… அப்புறம் தோள்பட்டையில் லேசாக விட்டுப் போயிருக்கு… அதோடு இந்தத் தோள்பட்டையிலும் கொஞ்சம் போல… இதோ… அவ்வளவுதான். வேலை ஒன்றும் பிரமாதமில்லை…” என்றான் அக்காக்கிய்.

பெத்ரோவிச் ‘கப்போத்’ என மற்ற எழுத்தர்கள் பெயரிட்டிருந்த மேல்கோட்டை வாங்கி, முதலில் மேசை மேல் பரப்பி, நீண்ட நேரம் பார்வையிட்டு விட்டுத் தலையை அசைத்துக் கொண்டே சன்னல் புறம் கையை நீட்டி, குறட்டில் இருந்த பொடி டப்பியை எடுத்தான். அதன் மேல் எதோ ஜெனரலின் உருவப்படம் பதிந்திருந்தது. ஆனால் யார் என்று தெரியாதபடி ஜெனரலின் முகமிருந்த இடம் விரலால் அழுத்தி உட்குழிக்கப்பட்டு அதன் மேல் சதுரக் காகிதத் துண்டு ஒட்டப்பட்டிருந்தது. ஒரு சிமிட்டாப் பொடி உறிஞ்சிய பின்பு பெத்ரோவிச் மேல் கோட்டைக் கையில் விரித்துப் பிடித்தவாறு வெளிச்சத்துக்கு நேரே காட்டி, மற்றொரு முறை பரிசீலனை செய்து விட்டு மீண்டும் தலையை அசைத்தான். அப்புறம் உள்பக்கத்தை வெளியே புரட்டி நோட்டமிட்டவன், மறுபடியும் தலையை அசைத்து, ஜெனரல் உருவத்தின் முகத்தில் காகிதம் ஒட்டிய பொடி டப்பி மூடியைத் திறந்து, பொடியை மூக்கில் திணித்துக் கொண்டபின் டப்பியை மூடி ஒரு புறமாக வைத்து விட்டு, “ஊஹும். ஒட்டுப்போட்டு மாளாது. நைந்து போன சங்கதி” என்று கடைசியில் வாய் மலர்ந்தான்.

இந்தச் சொற்களைக் கேட்டதுமே அக்காக்கியின் நாடி விழுந்துபோயிற்று. “ஏன் முடியாது, பெத்ரோவிச்?” என்று மன்றாடும் குழந்தை போன்ற குரலில் வினவினான். “அட தோள்பக்கம் மட்டுந்தானே கொஞ்சம் போல விட்டுப் போயிருக்கு! உங்கிட்ட ஏதாவது துண்டுத்துணி இருக்குமே…” என்று அழாக்குறையாய்ச் சொன்னான்.

“துண்டுத் துணிக்கென்ன, கிடைக்கும், எத்தனை வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனா ஒட்டுத் தைக்கத் தான் முடியாது. இது ஒரேயடியா இத்துப் போன சமாச்சாரம். ஊசி பட வேண்டியதுதான், தும்பு தும்பாய்ப் போயிரும்” என்றான் பெத்ரோவிச்.

“தும்பு தும்பாய்ப் போகட்டுமே. உடனே சேர்த்து ஒட்டுப் போட்டுவிடேன்.”

“அட என்ன சொல்றீங்க! ஒட்டை எதன் மேலே போடுறதாம்? கெட்டிப் படுத்துகிறதுதான் எப்படி? துணி என்று பெயர் தானே ஒழிய ஊதினாப் பறந்துபோகும்.”

“கிடக்கு, எப்படியாவது கெட்டிப்படுத்து. அப்படி ஒரேயடியாகச் சொன்னால் அப்புறம்!..”

பெத்ரோவிச் உறுதியாக ”முடியாது” என்றான். “ஒன்னுமே செய்ய முடியாது. சங்கதி படு பாடாவதி. நான் சொல்றதைக் கேளுங்க. குளிர்காலம் வந்ததும் இதை நீள நீளப் பட்டியாகக் கிழிச்சு காலிலே சுத்திக்கங்க. என்னா காலுறையாலே கதகதப்பு உண்டாக்க முடியாது. இந்தக் காலுறை விவகாரம் இருக்கிறதே, இது ஜெர்மன்காரன் குயுக்தி, பணம் பறிக்க வழி (சமயம் வாய்த்த போதெல்லாம் ஜெர்மானியர்களைத் தூற்றுவதில் பெத்ரோவிச்சுக்குப் பிரியம்); மேல்கோட்டு விஷயத்தைப் பொருத்த வரையில் நீங்க புதுசாத் தைத்துக் கொள்ள வேண்டியதுதான்” என்றான்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு | வில்லவன் நேர்காணல்

ந்தக் கல்வியாண்டு முதல் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தவுள்ளதாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கும் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன்னரே, அதில் அமல்படுத்தப்படவிருக்கும் ஏழை மக்கள் விரோத நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அடிமை அரசு நடைமுறைப்படுத்தத் தொடங்கியிருக்கிறது.

பிஞ்சு வயதில் 5, 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வை சந்திப்பது அவர்களது வாழ்விலும், எதிர்காலத்திலும் ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புகள் குறித்து மன நல ஆற்றுப்படுத்துனராக பள்ளி மாணவர்கள் மத்தியில் பணிபுரியும் வில்லவன் அவர்கள் வினவு இணையதளத்துக்கு நேர்காணல் அளித்துள்ளார்.

இந்த நேர்காணலில் இந்தப் பொதுத் தேர்வுத் திட்டம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தக் கூடிய உளவியல் சிக்கல்கள் குறித்தும், இது ஏற்படுத்தப் போகும் சமூக ரீதியான பாதிப்புகள் குறித்தும் விளக்குகிறார். மேலும் இதன் பின்னணியில் உள்ள அரசியல் நகர்வுகளையும் விளக்குகிறார் வில்லவன்.

பாருங்கள் ! நண்பர்களுக்கும் பகிருங்கள் !

 

 

பாஜக-வுக்கு முட்டுக் கொடுக்கும் இராணுவத் தளபதி பிபின் ராவத் !

1

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இராணுவ தளபதி பிபின் ராவத், மாணவர்கள் ‘தவறான திசையில்’ வழிநடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “தலைமைத்துவம் என்பது முன்னணியில் நின்று வழிநடத்துவது. தலைமை வகிப்பதில் மிகவும் சிக்கலான விஷயம் என்னவெனில், நீங்கள் முன்னின்று செல்லும் போது, அனைவரும் உங்களை பின் தொடர்வார்கள். இது சாதாரணமானது அல்ல. மிகவும் எளிமையான விஷயம் போல இது தோன்றும்.

இராணுவ தளபதி பிபின் ராவத்

தேவையற்ற வழியில் நடத்தி செல்பவர்கள் தலைவர்கள் அல்ல. வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமைத்துவம் இல்லை. ஏனெனில், ஏராளமான பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களைக் காண்கிறோம். நகரங்களிலும், சிறு நகரங்களிலும் தீ வைப்பு மற்றும் வன்முறைகளைச் செய்ய அவர்கள் ஏராளமான மக்களை வழிநடத்திச் செல்கிறார்கள்… இது தலைமை பண்பு அல்ல,” என்று தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகத்தான் தற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்களும் பொதுமக்களும் போராடி வருகின்றனர். தனது பேச்சில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து என குறிப்பிடாவிட்டாலும் இராணுவ தளபதி, மறைமுகமாக இச்சட்டத்தை எதிர்த்து போராடி வரும் மாணவர்களைத் தான் குறிப்பிடுகிறார்.

இராணுவத்துக்கு தொடர்பில்லாத, அரசியல் உணர்வுப் பூர்வமான விசயம் குறித்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் இராணுவ தலைவராக உள்ள ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார் என்று இச்சம்பவம் குறித்து எழுதியிருக்கிறது டெலிகிராப் இதழ்.

பொது மக்கள் தொடர்பான எந்தவொரு விசயத்திலும் இராணுவம் ஒருபோதும் தலையிடக்கூடாது என முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு வலியுறுத்தியிருந்தார். தற்போதிருக்கும் ஆட்சியில் நிர்வாகத் தலைமைக்கும் இராணுவத்துக்குமான உறவு எப்படி மாறிவிட்டது என்பதை ராவத்தின் பேச்சு உணர்த்துவதாக அந்நாளிதழ் சுட்டிக் காட்டியுள்ளது.

நேருவின் தொலைநோக்கு சிந்தனையின் காரணமாக அண்டை நாடுகளைப் போலல்லாமல், எந்தவொரு இராணுவ ஆட்சிக்குழுவும் இதுவரை இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்க துணியவில்லை.

படிக்க :
“என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !
♦ பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !

டிசம்பர் 31-ம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிதாக உருவாகப்பட உள்ள பாதுகாப்புத் தளபதி பதவிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துகொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், தனக்கு தொடர்பில்லாத விசயத்தில் கருத்து தெரிவித்துள்ளார் ராவத்.

ராவத்தின் பேச்சு அரசியல் வட்டாரங்களில் கண்டனத்துக்குள்ளான நிலையில், இந்திய இராணுவம் அவருடைய பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளது. ராவத், குடியுரிமை திருத்த சட்டம் குறித்தும், எதிர் போராட்டங்கள் குறித்தும் பேசவேயில்லை எனவும் பூசி மொழுகியுள்ளது.

பல முன்னாள் இராணுவ தலைமை பதவிகளில் இருந்தவர்கள், ராவத்தின் பேச்சு முழுமையான அரசியல் கருத்து எனவும் இனியும் அவர் இராணுவத் தளபதியாக தொடரும் தகுதி அவருக்கு இல்லை எனவும் கூறியுள்ளனர்.

ஓய்வு பெற்ற விமானப்படை துணை தலைவர் கபில் கக், “இந்தியாவின் ஆயுதப்படைகள் அரசியலற்றவை. இராணுவ தலைமை எந்தவொரு அரசியல் கருத்தையும் வெளியிடக்கூடாது. குடிமக்கள் ஆயுதப்படைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இராணுவ தலைமை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கடற்படை தலைவர் எல். ராம்தாஸ், “நாங்கள் நாட்டுக்கு சேவை செய்கிறோம். அரசியல்வாதிகளுக்கு அல்ல என்பது தெளிவான விதி. எந்தவொரு அரசியல் கருத்தையும் அவர் தலைவர் பதவியில் இருந்தாலும், கீழ் பதவிகளில் இருந்தாலும் கூறுவது தவறானதாகும். அது முறையானது அல்ல” என்கிறார்.

ஓய்வு பெற்ற ஒரு இராணுவ வீரர் கூறினார்: “ஒரு இராணுவ தலைவர் தனது அரசியல் எஜமானர்களுடன் ஒத்துப்போய் இதுபோன்ற அரசியல் அறிக்கைகளை வெளியிடுவது தகுதியற்றது. இந்தியா இன்னும் ஒரு ஜனநாயக நாடு என்பதையும், ஆயுதப்படைகள் ஒரு ஜனநாயக அமைப்பின் கீழ் செயல்பட வேண்டும் என்பதையும் அவர் மறந்துவிடக் கூடாது. அவர் ஓய்வுக்குப் பின் பதவிக்காக காத்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. ”

ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவர் கடந்த காலங்களில் எந்தவொரு இந்திய ராணுவத் தலைவரும் இதுபோன்ற அரசியல் கருத்துக்களை வெளியிட்டதில்லை என்கிறார். “இது பாகிஸ்தான் இராணுவத்தில் நடக்கிறது. நாம் இப்போது பாகிஸ்தானை நம் முன்மாதிரியாகக் கொண்டுள்ளோம் என்பது தெரிகிறது. பாரபட்சமான சட்டங்களை இயற்றுவதன் மூலம் நாடு இந்து பாகிஸ்தானாக மாறுவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

இவை நரேந்திர மோடி அரசாங்கம் ஆயுதப் படைகளை அரசியல்மயமாக்குவதன் ஒரு பகுதியாகும் என்றும், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பாஜகவும் அரசாங்கமும் பாலகோட் வான்வழித் தாக்குதலை எவ்வாறு அரசியலுக்காகப் பயன்படுத்தினார்கள் என்பதையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மூத்த வீரர் ஒருவர் “தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அரசியலுக்காக இராணுவம் சுரண்டப்படுவதை நாங்கள் கண்டுகொண்டிருக்கிறோம், அதிர்ச்சியூட்டும் விஷயம் என்னவென்றால், இராணுவத் தலைவரே அதன் ஒரு பகுதியாகியிருக்கிறார்.” எனக் கூறினார்.

படிக்க :
தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !
♦ இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

உத்தரபிரதேச முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் பிரகாஷ் சிங் கூறுகிறார்: “ஒரு இராணுவ தலைவரோ அல்லது காவல்துறை தலைவரோ எந்த அரசியல் கருத்தையும் வெளியிடக்கூடாது.”

அதுபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளும் இராணுவ தளபதியின் அத்துமீறிய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, “அவர் இந்திய இராணுவத்தின் தலைவர், எந்த அரசியலிலும் இல்லை. எல்லைகளைப்பாதுகாப்பதே அவருடைய பணி. அரசியல் கருத்துக்களை தெரிவிப்பது அல்ல. போராட்டத்தின் தலைமை குறித்து அவர் விமர்சித்துள்ளார், இது ஆளும் அரசின் பக்கம் அவர் சாய்கிறார் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பாசிச பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பின்னணியில், ஒரு ஜனநாயக நாட்டின் இராணுவத் தலைமை செயல்படுகிறது என்பதையே இந்தச் சம்பவம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.  இது தற்போது நடக்கும் விசயம் மட்டுமல்ல. இதற்கு முந்தைய இராணுவத் தளபதி வி.கே.சிங் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதும் முழுநேர கரசேவகராகி பாஜக இணைந்து மந்திரியாகவும் பதவி பெற்றார். ஸ்பெக்ட்ரம் ஊழல் சமயத்தில் ராணுவம் டில்லியை முற்றுகையிட முயற்சித்து முன்னேறியதாகக் கூறப்பட்ட காலகட்டத்தில் வி.கே சிங் தான் இராணுவத் தளபதி என்பதோடு இதனைப் பொருத்திப் பார்த்து புரிந்து கொள்ள வேண்டியது இருக்கிறது.

சங்க பரிவாரக் கும்பல் அனைத்து இராணுவம் உட்பட அனைத்து அரசு நிறுவனங்களையும் விழுங்கிவிட்டது என்ற உண்மையிலிருந்து நாம் எதிர்கொள்ளப் போகும்  அபாயத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள் !


கலைமதி
நன்றி :  டெலிகிராப் இந்தியா. 

நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்

மார்க்சின் மூலதனம் எனும் நூலைப் பற்றி எங்கெல்ஸ் எழுதியுள்ளவற்றில் ஒரு சிறு பகுதி மட்டுமே இந்த வெளியீட்டில் இடம் பெறுகிறது. அரை நூற்றாண்டு காலத்துக்கும் அதிகமாகவே எங்கெல்சின் படைப்பாற்றல் பெரு முயற்சிகள், மார்க்சின் படைப்பாற்றல் பெருமுயற்சிகளுடன் நெருக்கமாகப் பின்னியபடி இணைந்து விளங்கின. மூலதனம் எனும் நூலின் மிகவும் முக்கியமான புதுக்கருத்துகளை உருவாக்குவதில் எங்கெல்ஸ் செயலூக்கமாகப் பங்கேற்றார் என்பதையும் தமது ஆலோசனைகள், மெய்த்தகவல்கள், விமர்சனக் குறிப்புரைகள் மூலம் மார்க்சுக்கு உதவி புரிந்தார் என்பதையும் மார்க்சியத்தின் மூலவர்களது கடிதப் போக்குவரத்து புலப்படுத்துகிறது. எங்கெல்சின் பல சிறந்த நூல்கள் மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையான கருத்துகளை வளப்படுத்துவதிலும் ஆதாரப்படுத்திக் காட்டுவதிலும் முழுமையாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மார்க்ஸ் வாழ்ந்த காலத்துக்குள் அவருடன் எங்கெல்ஸ் பூண்டிருந்த பல ஆண்டு கால ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக மூலதனத்தின் இரண்டு கடைசித் தொகுதிகளை வெளியிடும் மாபெரும் சாதனை நிறைவேறியது. இவற்றை மார்க்ஸ் கையெழுத்துப் பிரதி வடிவில் விட்டுச் சென்றிருந்தார். இதோடு மூலதனத்தின் முதல் தொகுதியும் மார்க்சின் வேறு பல நூல்களும் புதிய பதிப்புகளில் எங்கெல்சின் முயற்சியால் வெளியிடப்பட்டன. எங்கெல்சால் பிரசுரிக்கப்பட்ட மார்க்சின் நூல்கள் பலவற்றுக்கு அவர் முகவுரைகள் எழுதினார். இம்முகவுரைகள் மார்க்சிய போதனையை அதன் எல்லா விரோதிகளிடமிருந்தும் பாதுகாக்கும் பணியில் அருந் தொண்டாற்றியுள்ளன.

இந்தத் திரட்டில் எங்கெல்சின் ஒரு சில சிறிய நூல்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டுள்ளன. இவை வடிவில் சுயேச்சையானவை. அதே சமயம் மார்க்சின் மூலதனத்துடன் நேரடியான தொடர்புடையவை.

இந்தத் திரட்டின் முதல் பாகம் மூலதனத்தின் முதல் தொகுதி குறித்த மூன்று மதிப்புரைகள் கொண்டதாகும். 1867-ல் மூலதனத்தின் முதல் தொகுதி வெளிவந்ததன் பின்னால் மார்க்சும் எங்கெல்சும் எதிர்கொள்ள நேர்ந்த கடமைகளில் ஒன்று, முதலாளித்துவ வர்க்கம் தான் பகைக்கும் இந்தத் தத்துவத்தை முளைப்பருவத்திலேயே நெரித்தழிக்கும் நோக்குடன் கையாண்ட அமுக்கி மறைக்கும் சதியை உடைத்தெறிவதாகும். 1859-ல் மார்க்சின் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனத்துக்குச் செலுத்தும் ஒரு பங்கு எனும் நூல் தோன்றியவுடன் ஒரு அமுக்கி மறைக்கும் சதியுடன் முதலாளித்துவ வர்க்கம் எதிரிட்டது. மூலதனத்தின் முதல் தொகுதியையும் இதை அச்சுறுத்தியது. மார்க்சின் சக போராட்டத் தோழர்களும் முதலாவதாக எங்கெல்சும் இந்தத் திட்டத்தைச் செயல் குலைக்கு பல முயற்சிகள் மேற்கொண்டனர். அந்தச் சமயத்தில் தொழிலாளர் பத்திரிகைகள் மிகவும் பலவீனமாக இருந்தன. இந்த நாலில் அடங்கியிருந்த கருத்துகளை மேலும் பரப்பும் ஆற்றலுடைய வாசகர்கள் மத்தியில் இந்த நூலின் மீது ஆர்வத்தை உண்டாக்குவது முதலாளிகளின் கைகளில் இருந்து வந்த பொதுவான பத்திரிகைகளின் மூலம், மறைமுகமான முறையில் மட்டுமே சாத்தியம். முதலாளித்துவப் பத்திரிகை ஆசிரியர்களின் அவநம்பிக்கையினை அகற்றும் பொருட்டு எங்கெல்ஸ் மாபெரும் நுண்திறனைக் கையாள வேண்டி இருந்தது. ஜாராட்சியின் தணிக்கைக்கு இலக்கான வெளியீடுகளில் ருஷ்யப் புரட்சியாளர்கள் பயன்படுத்திய மொழியினை ஒத்ததான, மெய்யாக ஈசாப் பாணி மொழியில் அவர் பல மதிப்புரைகளை எழுதின் முதலாளித்துவ பத்திரிகை ஆசிரியர்களின் வர்க்கத் தணிக்கையால் விளைவாக எங்கெல்சின் சில மதிப்புரைகள் பிரசுரிக்கப்பட சில மதிப்புரைகள் புரட்டப்பட்டன.  (நூலிலிருந்து பக்.3 – 4)

மதிப்பின் விதி மற்றும் லாபத்தின் விகிதம் பற்றிய எங்கெல்சின் கட்டுரை மூலதனத்தின் மூன்றாம் தொகுதிக்கு ஒரு முக்கியமான சேர்ப்பாகும். அதே சமயம் மார்க்சின் பொருளாதாரத் தத்துவத்தைச் சரியாக முழுமையாகப் புரிந்து கொள்வதற்கும் இது மிகவும் முக்கியமானதாகும். மார்க்சை விமரிசனம் செய்த எண்ணற்ற பலர் மூலதனத்தின் முதல் தொகுதிக்கும் மூன்றாவது தொகுதிக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகக் குறை கூறி அதை நிரூபிப்பதற்கு என எழுதிக் குவித்து வீணாக்கிய காகித மலைகள் எத்தனையோ. தமது கட்டுரையில் எங்கெல்ஸ் அவர்களுக்கு உறுதியான பதிலடி கொடுத்தார்.

மார்க்சியத்தின் இந்தப் பகிரங்கமான விரோதிகளையும் மார்க்சியத்தின்  நண்பர்கள் போல வேஷமிடும் எதிராளிகளையும் ஒருங்கே முழுமையாக அம்பலப்படுத்தினார். இந்த நட்பு வேஷம் போட்டவர்கள் மதிப்பை ‘ஒரு தர்க்க மெய்யாகச்’ சுருக்கினார்கள் (சோம்பார்ட்) அல்லது ‘தத்துவார்த்த ரீதியில் அவசியமான ஒரு கற்பனை’ (ஸ்மித்) ஆக்கினார்கள். மதிப்பு என்பது தத்துவார்த்த வழியில் மட்டுமன்றி வரலாற்று வழியிலார் கூட உற்பத்தியின் விலைக்கு முன்னோடி எனும் மார்க்சின் புதுக்கருத்தை வைத்துத் தொடர்ந்து செயல்படும் எங்கெல்ஸ், பரிவர்த்தனை உதித்தெழுந்து வளர்ச்சியடைவதை ஒட்டி மதிப்பின் வரலாற்று வழித் தோற்றம் ஏற்படுவதையும், சாமான்ய பண்ட உற்பத்தி முதலாளித்துவத்தால் மாற்றீடு செய்யப்படும் போது மதிப்பில் இருந்து உற்பத்தியின் விலைக்கான வரலாற்று மாறுதல் ஏற்படுவதையும் புலப்படுத்துகிறார். எங்கெல்சின் கட்டுரை மதிப்புப் பற்றிய மார்க்சிய தத்துவத்தின் மெய்யான பொருள் முதல்வாத விளக்கத்திற்கான ஓர் அரிய உதாரணமாகும். மார்க்சியத்தை ஊறு செய்யும் எல்லாவகையான சித்தாந்தப் புரட்டுகளையும் எதிர்த்துப் போராடுவதற்குரிய ஈடும் எடுப்புமில்லாப் பேராயுதமாக இது இன்னும் விளங்குகிறது.

படிக்க :
தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !
“என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !

சாமானிய பண்ட உற்பத்தியின் இயல்பு, அதிலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறிச் செல்லும் நடைமுறை பற்றிய தெள்ளத் தெளிவான தன்மைக் குறிப்புகள் இக்கட்டுரையில் அடங்கியிருக்கின்றன என்ற மெய்விவரத்தில் தான் இதன் தனி முக்கியத்துவம் காணக் கிடக்கிறது. மதிப்பின் விதியை எங்கெல்ஸ் பண்ட உற்பத்தியின் இயக்க விதியாகக் காட்டுகிறார். மதிப்பின் விதி செயல்படும் சகாப்தத்தின் அதி தீர்க்கமான அளவை வலியுறுத்துகிறார். பல வரலாற்று உதாரணங்கள் மூலம் அவர் முதலாளித்துவ உறவுகளின் தோற்றத்தைத் தடம் கண்டு, இந்த உறவுகள் எவ்வாறு உற்பத்தித் துறையில் பரவின என்பதையும் காட்டுகிறார். (நூலிருந்து பக்.7-8)

நூல் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
ஆசிரியர் : பிரடெரிக் எங்கெல்ஸ்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 | 2433 2924

பக்கங்கள்: 144
விலை: ரூ 70.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : marinabooks | panuval

தேர்தலைப் புறக்கணித்த ஜார்கண்ட் பழங்குடிகள் !

ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 3

முதல் பாகம்  படிக்க

ற்றைக் கற்களை இடுவது ஒரு பழமையான முண்டா ஆதிவாசி பாரம்பரியம் என்றாலும், 1990 -களில் ஆர்வலர்கள் கிராமவாசிகளுக்கு பஞ்சாயத்து (விரிவாக்கம்) திட்டமிடப்பட்ட பகுதிகள் சட்டம் மற்றும் பிற கூறுகளான – அரசாங்கத் திட்டங்களை நிராகரித்தல், தேர்தல்களைப் புறக்கணித்தல் போன்றவைகளை குஜராத்தில் உள்ள சதிபதியின் மில்லினேரிய வழிபாட்டு முறையிலிருந்து இவர்கள் கிரகித்துக் கொண்டனர்.

இத்தகைய கருத்துக்கள் அவர்களிடையே கலப்பதற்கான கூடுதல் தெளிவைப் பெற வேண்டுமானால் நீங்கள், மே 2018 இல் சமூகவியலாளர் நந்தினி சுந்தர் கலந்துகொண்ட பத்தல்கடி அனுபவத் தொகுப்பையோ அல்லது தற்போது தலைமறைவு வாழ்வை நோக்கி இருக்கும் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அரசுக் கல்லூரி விரிவுரையாளர் ஜோசப் பூர்த்தியின் நேர்காணலைப் பாருங்கள்.

குன்த்தி மாவட்டத்தில் ஒரு கிராம சந்திப்பில் ஒற்றைக் கல்வெட்டு.

ஒடுக்குமுறை இருந்தபோதிலும், ஜார்க்கண்டின் பிற மாவட்டங்களில் ஒற்றைக் கல்வெட்டுகள் தொடர்ந்து வளர்ந்தன. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் இருக்கும் அண்டை மாநிலமான சத்தீஸ்கரிலும் இந்த இயக்கம் பரவியது.

பெரும்பாலான பத்தல்கடி தலைவர்கள் படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், பலர் அரசாங்க வேலைகளில் இருந்தவர்கள். ஆனால் ஜார்கண்ட் அரசாங்கம் இவர்களின் விரிவான வேண்டுகோளை நிராகரித்து இந்த இயக்கத்திற்கு மாவோயிஸ்டுகள், கிறிஸ்தவ மிஷனரிகள் மற்றும் அபின் சாகுபடியாளர்கள் நிதியளிப்பதாக முத்திரை குத்துகிறது.

தனது வாழ்க்கை அனுபவத்தோடு இந்த இயக்கம், அவருடன் ஏன் ஒன்று கலந்தது என்பதை குன்த்தி மாவட்டத்தில் கக்ரா கிராமத்தில் வசிக்கும் ஒரு இளைஞர் விவரிக்கிறார்.

இளைஞர் : அரசாங்கம் எங்கள் நிலத்தை எடுத்துக் கொண்டு எங்களுக்குத் தேவையில்லாத திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் எங்களுடன் கலந்தாலோசிக்காமல் கிராமத்திற்கு வந்தன. நிர்வாகம் மக்களின் விருப்பதிற்கு எதிராக செயல்படுகிறது. ஒப்பந்தக்காரர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்.

ஒரு ஒற்றைக் கல்வெட்டு போடுவதற்கான தனது கிராமத்தின் முடிவு மிகக் கவனமாக விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்டது என்கிறார் அவர்.

இளைஞர் : முதல் விழா பாந்த்ரா தரப்பில் நடந்த பிறகு, நாங்கள் அனைத்து பத்தல்கடி கூட்டங்களிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தோம். அங்கு சொல்லப்படுவதை நாங்கள் கவனித்தோம், நாங்கள் கோரும் உரிமை சரிதானா என்பதை உறுதி செய்து கொள்ள சொந்த முறையில் ஆராய்ச்சி செய்தோம். இதற்காக நாங்கள் ஒரு ஆண்டு எடுத்துக் கொண்டோம். ஒற்றைக் கல்வெட்டில் உள்ளவை அரசியலமைப்பின் தவறான விளக்கம் என அரசாங்கம்  கூறிக்கொண்டிருந்தது. ஆனால் கல்வெட்டில் உள்ள கூற்றுக்கள் சரியானவை என்று நாங்கள் உறுதியாக நம்பினோம்

கூட்டங்களில் கலந்துகொள்வது மக்களுக்கான கல்வி போன்றது :

இளைஞன் : “அபுவா டிஸம், அபுவா ராஜ்” [எங்கள் நிலம், எங்கள் ஆட்சி – 19 ஆம் நூற்றாண்டில் பிர்சா முண்டாவால் உருவாக்கப்பட்ட ஒரு முழக்கம்] கேள்விப்பட்டோம். ஆனால் அரசியலமைப்பு மூன்று வெவ்வேறு ஆளுகைத் திட்டங்களை வழங்குகிறது என்று யாரும் எங்களிடம் கூறவில்லை – ஒன்று பொதுப் பகுதிகள், மற்றொன்று ஆறாவது அட்டவணை மற்றும் ஐந்தாவது அட்டவணையின் கீழ் பழங்குடிப் பகுதிகளுக்கு, மூன்றாவது ஜம்மு-காஷ்மீருக்கான 370 வது பிரிவின் கீழ் உள்ளது. பத்தல்கடி இயக்கத்தின் மூலம், இதைப் பற்றி அரசாங்கத்திற்கு நினைவூட்ட விரும்பினோம். நாங்கள் புதிய சட்டங்களைக் கூட கேட்கவில்லை, ஏற்கனவே உள்ள சட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம்.

காவல்துறையின் இலக்கில் தான் சேர்க்கப்படக்கூடும் என்பதாலும், தனது பெயர் எந்த முதல் தகவல் அறிக்கையிலும் சேர்க்கப்படலாம் என அஞ்சியதாலும், தனது அடையாளத்தை பாதுகாக்குமாறு அந்த இளைஞர் கேட்டுக் கொண்டார். குறிப்பாக தனது கிராமமான கக்ராவின் மக்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று அவர் கூறினார்.

2018 ஜூன் 26 அன்று அங்கு நடைபெற்ற பத்தல்கடி விழா ஒரு பெரிய ஒளிரும் இடமாக மாறியது. பத்தல்கடி இயக்கத்தின் சில தலைவர்கள் மீது காவல்துறையினர் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்த சில நாட்களில் இந்த விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்வதற்காக ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் கிராமத்தில் கூடியிருந்தபோது, ​​காவல்துறையினர் தலைவர்களைத் தேடினர்.

காவல்துறையினர் தங்களை லத்திகளால் தாக்கி, சிலரை சிறைபிடித்ததாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் ஏற்பட்ட கோபத்தில், அருகிலுள்ள கிராமத்தில் உள்ளூர் எம்.எல்.ஏ.வின் வீட்டில் பாதுகாப்புப் பணியில் இருந்த மூன்று போலீசாரை கிராம மக்கள் தடுத்து வைத்தனர். அடுத்த நாள் காலை வரை இந்த மோதல் தொடர்ந்தது.

போலீசார் சொன்னதை யாரும் கேட்காததால், கூட்டத்தில் ஒரு தடியடி நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக ஜூன் 27, 2018 அன்று தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் காவல்துறையினர் கூறி உள்ளனர்.

பங்கேற்பாளர்களை காவல்துறையினர் லத்தியால் தாக்கியது மட்டுமல்லாமல், வீடுகளில் இருந்து மக்களை வெளியே இழுத்து அடித்து உதைத்ததாக கிராமவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.

படிக்க :
இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !
♦ ஜார்கண்ட் : தொடரும் இந்திய அரசின் பட்டினிப் படுகொலைகள் !

இளைஞன் : அவர்கள் எங்களைத் துரத்திச் சென்று மோசமாக அடித்தார்கள். தப்பி ஓடிய ஆதிவாசிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, சாம்தி கிராமத்தில் வசிக்கும் பிர்சா முண்டா என்பவரை படுகொலை செய்தனர் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மல்லாக்கப் படுத்திருக்கும் நிலையில் கொல்லப்ட்ட ஒருவரின் தலையின் பின்புறத்திலிருந்து இரத்தம் வெளியேறியதை ஒரு புகைப்படம் காட்டுகிறது. அவர் நெரிசலில் இறந்ததாக போலிசார் கூறுகின்றனர், ஆனால் அவரது சகோதரர் சனிகா முண்டா இதை மறுக்கிறார்.

சனிகா முண்டா : அவரது தலையில் ஏற்பட்ட காயம் ஒரு தோட்டாவால் மட்டுமே ஏற்பட்டிருக்கக்கூடும் என ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில், ஒரு பெண் மருத்துவர் சொன்னதைக் கேள்விப்பட்டேன். மருத்துவமனையிலிருந்து நாங்கள் உடலை வீட்டிற்கு கொண்டு வந்தபோது, ​​அவரது தலை காதுக்கு மேலே எவ்வளவு மோசமாக சிதைந்தது என்று பார்த்தேன்.

தொலைபேசியில் காணப்பட்ட புகைப்படம், தலையில் இருந்து இரத்தம் வழிந்து தரையில் கிடக்கும் பிர்சா முண்டா.

பல முறை முயற்சித்த போதும், பிரேத பரிசோதனை அறிக்கையின் நகலை சகோதரரால் பெற முடியவில்லை. ஸ்க்ரால்.இன் குந்த்தி போலீசாரிடம் ஒரு நகலைக் கேட்டது, ஆனால் எந்தப் பதிலும் இல்லை.

இதற்கிடையில், கொலை மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் காக்ரா கிராமத்தின் வழக்கமான தலைவர் கரம் சிங் முண்டாவும் ஒருவர். அவர் 145 கி.மீ தூரத்தில் உள்ள ஹசாரிபாக் சிறைக்கு மாற்றப்பட்டதாக அவரது மனைவி கூறினார். அவரது குடும்பத்தார் அவரைப் பார்ப்பதுகூட மிகவும் கடினமாக உள்ளது என்கின்றனர்.

கரம் சிங் முண்டாவின் மனைவி கக்ரா கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு வெளியே கரம் சிங் முண்டாவின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்.

ஸ்க்ரால்.இன் பகுப்பாய்வு செய்த 19 முதல் தகவல் அறிக்கைகளில் இருந்த 132 பெயர்களில், 43 பேர் கிராமப் பிரதான் அல்லது கிராமத் தலைவர்கள் என்பது வியப்பாக இருந்தது. முழு கிராமங்களையும் மிரட்டி அமைதியாக்குவதற்கான ஒரு தந்திரம் இது என்று பாந்த்ரா கிராமத்தின் தலைவர் பிர்சா முண்டா கூறினார்.

பாந்த்ராவிலிருந்து 20 கி.மீ தொலைவில், மற்றொரு கிராமத் தலைவரான கெவ்ரா கிராமத்தைச் சேர்ந்த பைஜ்நாத் பஹான், எட்டு மாத சிறைவாசம் கழித்து வீடு திரும்பினார். அவரது கிராமத்தில் கல் பலகை போடுவதற்கு முன்பே காவல்துறையினர் அவரை தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உட்படுத்தியிருந்தனர். கிராமப் பள்ளி கட்டிடத்திற்குள் போலீசார் முகாம் ஒன்றை அமைத்த பின்னர் கிராமவாசிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான முரண்பாடு குறித்து பஹான் கண்டுபிடித்தார்.

அரசு நடுநிலைப்பள்ளியின் வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள போலிஸ் முகாம்.

பைஜ்நாத் பஹான் : சில பெண்கள் சந்தையில் இருந்து திரும்பி வந்தபோது போலீஸ்காரர்கள் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டனர். பின்னர், அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, ​​காவல்துறையினர் தங்கள் முகாமுக்கு விறகுகளை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். சுமை அதிகம் என்று அவர் மறுத்துவிட்டார், ஆனால் அவர்கள் அவரை கட்டாயப்படுத்தினர். அதிக சுமை ஏற்றியதால் அவரது சைக்கிள் சேதமடைந்தது. எனது கிராமத்தில் முகாம் அமைக்க காவல்துறையை ஏன் அனுமதித்தேன் என்று கேள்வி கேட்டு அவரின் கிராமத்திலிருந்து எனக்கு ஒரு அறிவிப்பு வந்தது.

காவல்துறையினர் அவரிடம் அனுமதி கேட்கவில்லை என்பது மற்றொரு விஷயம். ஆனால் கிராம சபையுடன் கலந்தாலோசித்த பின்னர், காவல்துறையினரிடம் சென்று இந்தக் கவலைகளை எழுப்ப முடிவு செய்தார். கூட்டம் சூடாக மாறியது.

பைஜ்நாத் பஹான் : அங்கு நேரடி மோதல் எதுவும் இல்லை, உரத்த வார்த்தைகள் மட்டுமே. ஆனால் காவல் நிலையத்திற்குள் கட்டைகள் மற்றும் ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

மார்ச் 13, 2018 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டு உண்மையில் மிகவும் மோசமானது. பஹான் மற்றும் 300 பேர் காவல் நிலையத்தைக் கைப்பற்றியதாகவும், காவல்துறை அதிகாரிகளின் கைகளில் இருந்து ஆயுதங்களை அவர்கள் பறித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர், இவை அனைத்தும் பத்தல்கடி இயக்கத்தினர் மீதான தேசத்துரோக வழக்கின் ஒரு பகுதியாகும்.

பஹானைத் தவிர, கெவ்டா கிராமத்தில் வசிக்கும் நேதா நாக் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் 400 கி.மீ தூரத்தில் உள்ள டும்காவில் இன்னமும் சிறையில் இருக்கிறார்.

படிக்க :
கல்விக் கடன் பயனாளிகளில் 10% மட்டுமே பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் | சாதிய அவலம்
♦ CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் ! காணொளி

பைஜ்நாத் பஹான் : அவர் எப்போதாவதுதான் கிராமக் கூட்டங்களில் கலந்துகொள்வார். அவர் படிப்பறிவற்றவர். ஏன் அவருக்கு இந்திகூடத் தெரியாது, அவரால் என்ன செய்திருக்க முடியும்? விறகுகளை விற்று வாழும் அவர் என்ன செய்வார் பாவம்?

தந்தையைச் சந்திக்க டும்காவுக்குச் செல்லக்கூட தன்னிடம் வசதி இல்லை என்கிறார் நேதா நாகின் மகன்.

நேதா நாகின் மகன், கெவ்டா கிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு வெளியே.

மாவட்டத்தில் அச்சம் பரவி வருவதால், கல் போடும் விழாக்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் ஒரு அமைதியான எதிர்ப்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது: முழு கிராமங்களும் தங்கள் ஆதார் அட்டைகள் மற்றும் ரேஷன் அட்டைகளை ஒப்படைத்துவிட்டு, அரசாங்க உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள மறுத்து வருகின்றன. சில கிராமங்களில் ஆதார் மற்றும் ரேசன் அட்டைகளை எரித்த போது, மற்றவர்கள் அட்டைகளை சேகரித்து தபால் மூலம் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆதிவாசிகள் மேற்கொண்ட மற்றொரு எதிர்ப்பு தேர்தல் புறக்கணிப்பு. கோடையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பல கிராமங்கள் வாக்களிக்கவில்லை.

மங்கள் முண்டா : காந்திஜி ஒத்துழைமை இயக்கம் போன்றே நாங்களும் செய்து கொண்டிருந்தோம்.

சம்பர் துட்டி : எங்களது பாரம்பரிய உரிமைகளுக்கு மதிப்பு கொடுக்கவோ அல்லது எங்களைப் பற்றியோ அல்லது எங்களது கிராம சபையைப் பற்றியோ; யாரும் பேச மறுப்பதால் தேர்தல் எனும் ஜனநாயகத் திருவிழாவிலிருந்து நாங்கள் விலகியே இருந்தோம். பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராக வாக்களிக்கும் பல ஆதிவாசிகள் தேர்தலில் விலகியே இருந்ததால் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 1,100 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தேர்தல் புறக்கணிப்பு பாஜகவின் நலன்களுக்கே உதவியது என்று பலர் நம்புகின்றனர்.

நாங்கள் தேர்தலில் பங்கேற்கவில்லை, ஆனால் பா.ஜ.க தோற்கடிக்கப்படும், காங்கிரஸ் வெற்றி பெறும் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் முடிவுகள் அதற்கு மாறாக இருந்தன, எப்படி என்று எங்களுக்குத் தெரியவில்லை. காங்கிரஸ் வென்றால், அது எங்கள் பிரச்சனையை சீர்தூக்கிப் பார்க்கக்கூடும் என்று நாங்கள் நினைத்தோம்.

சுப்ரியா சர்மா : இந்த மாநிலம் முன்பு காங்கிரஸ் மற்றும் பிறகு பா.ஜ.க அல்லாத கட்சிகளால் ஆளப்பட்டது. அந்த அரசாங்கங்கள் ஆதிவாசிகள் மீது அதிக அக்கறையுடன் இருந்தனரா?

சம்பர் துட்டி : அவர்களும் எங்களைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் குறைந்தபட்சம் அவர்கள் எங்களை குறைவாகக் கொள்ளையடித்தனர். பா.ஜ.க அரசு ஆதிவாசிகளை மிகவும் மோசமாக நடத்தியது. பத்தல்கடி ஆதரவாளர்களான எங்களை விடுங்கள், பெண்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள்கூட போலீஸ்காரர்களால் விலங்குகளைப் போல தாக்கப்பட்டனர், இடஒதுக்கீடு கேட்கும் இளைஞர்கள் தாக்கப்பட்டனர்

பாஜக-வுக்கு எதிரான கோபம் இருந்தபோதிலும், தேர்தல் புறக்கணிப்பு பா.ஜ.கவுக்கு உதவும் என்பதை நன்கு அறிந்திருந்தாலும், குந்த்தியில் உள்ள பல ஆதிவாசி கிராமங்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் இருந்தும் விலகி இருக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது.

காக்ரா கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் : பழங்குடியினர் ஆலோசனைக் குழுவின் ஆலோசனையின் பேரில் திட்டமிடப்பட்ட பகுதிகளில் தேர்தல்களுக்கு ஆளுநர் ஒரு தனி அறிவிப்பை வெளியிட வேண்டும். அவர் அவ்வாறு செய்யாவிட்டால், இங்கே நடத்தப்படும் தேர்தல்கள் சட்டவிரோதமானவை.

தேர்தல் புறக்கணிப்பு பா.ஜ.க. -வுக்கு உதவுவதால் மட்டுமல்ல அது ஒரு மோசமான யோசனை என்று நம்புகிறார் குந்த்தியில் சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவின் சார்பில் போட்டியிடும் ஆதிவாசி சமூக ஆர்வலர் தயாமணி பார்லா. தயாமணி பார்லா – அன்று ஜெய்பால் சிங் முண்டா (ஹாக்கி வீரர்) அரசியலமைப்பு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை என்றால், எங்களுக்கு ஐந்தாவது அட்டவணை கூட இருந்திருக்குமா எனத் தெரியவில்லை?

அடுத்த தொடரில், பத்தல்கடி மற்றும் இந்திய ஜனநாயகம் குறித்து தயாமனி பார்லாவுடனான உரையாடலில் தேர்தல் புறக்கணிப்பு பற்றிய கேள்வியை மிக நெருக்கமாக ஆராய்வோம்.

(தொடரும்)

தொடரின் முந்தைய பாகத்துக்கு :


கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
தமிழாக்கம் :
ஊரான்
நன்றி : ஸ்க்ரால்.

உலக வரலாற்றில் ஆத்திகர் – நாத்திகர் சொல்லாடல் !

0
நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 02

முதல் பாகம்

ந்திய நாத்திகர்கள் கடவுள் ஒரு பொய்த் தோற்றம் என தர்க்க ரீதியாக நிரூபிக்கப் பாடுபட்டார்கள். அவர்களுடைய தர்க்க முயற்சிகள் வெற்றி பெற்றன. ஏனெனில் அவர்களுடைய வாதங்களுக்கு பதிலளித்த ஆன்மீகவாதிகள் தர்க்க ரீதியாக விடை கூற முடியவில்லை. ஆயினும் இந்திய நாத்திகவாதிகள் மார்க்ஸுக்கு முந்திய மேலை நாட்டு நாத்திகவாதிகளைப் போலவே கடவுளை சமூக வாழ்க்கையிலிருந்து பிரித்து தனியாக ஆராய்ந்தார்கள்.

மார்க்ஸ் தான் சமூக வாழ்க்கையிலிருந்து சிந்தனை படைக்கப்படுகிறது என்ற மகத்தான உண்மையை விளக்கினார். ஒவ்வொரு சமூகமும் அது நிலைத்திருப்பதற்கான பொருளுற்பத்தியில் ஈடுபடுகிறது. அச்சமூகத்தில் வாழ்கிற மனிதர்கள், இப்பொருளுற்பத்தியில் வகிக்கும் ஸ்தானத்தின் நிலையால் ஒருவருக்கொருவர் உறவு கொள்ளுகிறார்கள். ஆகவே உற்பத்திச் சாதனங்களுக்குச் சொந்தக்காரர்களும், உற்பத்திக்கு உழைப்பை அளிப்பவர்களுமாக சமூகம் பிரிகிறது. இந்த அடிப்படையில் தான் அக உலகம் மனத்தால் படைக்கப்படுகிறது.

காரல் மார்க்ஸ்

சிந்தனைகள் மேற்கோப்பாக, சமூக அடிப்படையின் மீது எழுகின்றன. சமூக விருட்சத்தின் ஆணிவேர் பொருளாதார அடிப்படையும், உறவுகளுமே. தரைக்கு மேல் தெரிகிற மரம், கிளை, இலை போன்றுதான் மனதின் சிந்தனைகள். புற உலக வாழ்க்கைதான் சிந்தனைக்குக் காரணம். கடவுள் கூட ஒரு குறிப்பிட்ட சமுதாய வளர்ச்சி கட்டத்தில் மனிதனால் படைக்கப்பட்ட ஒரு கருத்துத்தான். சிந்தனைகள் கூட சமூக அடிப்படையின் இயக்கத்தை வேகமாக்கவோ , மந்தப்படுத்தவோ செய்யலாம். ஆனால், முற்றிலும் மாற்றிவிட முடியாது. அடிப்படை மாற்றப்பட்டால், சிந்தனைகள் மாறும். இது உடனடியாக நிகழாது. பழைய சமுதாய அடிப்படையில் எழுந்த சிந்தனைகள் பல காலம் மக்கள் மனத்தில் நீடிக்கும். இதனால் தான் சிந்தனைகளை எதிர்த்து நடத்துகிற தர்க்கப் போராட்டம் மட்டும் வெற்றியடைவதில்லை. சிந்தனையின் சமூக அடிப்படையை மாற்ற வேண்டும். அப்பொழுதுதான் சிந்தனை மாறும். ‘கடவுளை பற்றி நினைத்து மனிதன் ஏங்குவதைத் தடுக்க, சமூகப் புரட்சி ஒன்றால் தான் முடியும்.’ இது மார்க்ஸின் சிந்தனை.

இந்திய நாத்திகவாதிகள் மிகப் பழங்காலத்தில் வாழ்ந்தவர்கள். மனிதன் இயற்கையை அறிந்து அதனை மாற்றும் அறிவியல் முயற்சிகள் துவக்க நிலையில் தான் அப்போது இருந்தன. எனவே அறிவியல் இயக்க விதிகளை அவர்கள் பயன்படுத்தித் தங்கள் நாத்திக வாதங்களை உருவாக்க இயலவில்லை. பிற்கால பிரெஞ்சு நாத்திகவாதிகளுக்கு அறிவியல் அறிவு கைகொடுத்தது. அவர்களுடைய வாதங்கள் செல் அமைப்பு, டார்வினது பரிணாமம், புதிய அணுக்கொள்கை, ரசாயன மாறுதல்கள் குறித்த அறிவு இவற்றையெல்லாம் சான்றுகளாகக் கொண்டிருந்தது. ஆயினும் விஞ்ஞான சோஷலிஸக் கொள்கையின் முதல்வர்களுக்கு, பிற்கால நாத்திகவாதிகளின் கொள்கைகள் கூட திருப்தியளிக்கவில்லை. அவர்கள் இயக்கவியல் பொருள்முதல்வாதம் வரலாற்றியல் பொருள் முதல்வாதம் ஆகிய முரணற்ற தத்துவச் சித்தனையை உருவாக்கி பொருள் இயக்கம் பற்றியும், சமூக இயக்கம் பற்றியும் முழுமையான விளக்கம் கொடுத்த பின்னர் தான், நாத்திகம் சித்தனைப் போக்கில் அதன் ஸ்தானத்தில் அமர்த்தப்பட்டது.

அனெக்ஸ கோராஸ்.

இக்குறைபாடு இந்திய நாத்திகத்தில் இருந்தபோதிலும் கூட, தத்துவ வரலாற்றின் சிந்தனைப்போக்கில் மிக முக்கியமான தர்க்க வாதங்களை அவர்கள் படைத்துள்ளார்கள். ‘கடவுளை’, இந்திய தத்துவ சிந்தனையில் இருந்து அகற்றுவதற்கு அவர்களுடைய சிந்தனை முயற்சிகள், அவர்களுடைய தர்க்கவாதங்கள், பல நூற்றாண்டுகளாகத் தோற்கடிக்க முடியாமலே இருந்தது.

இக்கட்டுரையில் ’நாத்திகம்’ என்ற சொல்லை எந்தப் பொருளில் பயன்படுத்துகிறோம் என்று தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலை நாட்டுத் தத்துவத்தில், ஆதிக்கத்தில் இருக்கும் கொள்கைக்கு விரோதமான புதிய கொள்கையைச் சொல்லுபவர் நாத்திகர் என்று ஏசப்பட்டார்கள். ‘சூரியனை ஒரு தெய்வம்’ என்று கருதி வந்த காலத்தில் அனெக்ஸ கோராஸ் என்னும் தத்துவஞானி, ‘அது பொருளால் ஆக்கப்பட்ட ஒரு வஸ்து’ என்று கூறினார். அவரை நாத்திகர் என்று குற்றம் சாட்டி , கிரேக்கர்கள் நாடு கடத்தினார்கள். ஸாக்ரடீஸ் தமது புதிய தத்துவத்தை விளக்கியபோது அவர் நாத்திகர் என்ற பட்டம் சூட்டப் பட்டார். ‘மறு உலகம் இல்லை’ என்று வாதித்த எபிக்யூரஸ், நாத்திகர் என்று அழைக்கப்பட்டார்.

மேற்குறிப்பிட்ட தத்துவ ஆசிரியர்களெல்லாம் கடவுள் இல்லை என்றா வாதித்தார்கள்? அவர்களுடைய ‘கடவுள்’ ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கிற கடவுளாக இல்லை. எனவே அரசை ஆதரிக்கிற, பாதுகாக்கக்கூடிய சிந்தனைகளை உருவாக்கிப் பரப்பிய சிசரோ, புளூடார்க் ஆகிய தத்துவ ஞானிகள், தங்களுக்கு உதவாத அனெக்ஸ கோராஸ் முதலிய தத்துவ ஞானிகளின் தத்துவங்களை நாத்திகம் என்று அழைத்தார்கள்.

ஸாக்ரடீஸ்.

அக்காலத் தத்துவாசிரியர்களில் சிலர் ஆளும் வர்க்கத்தின் அரசுக்குப் பயன்படாத தத்துவங்களைப் போதித்ததால், நாத்திகவாதிகள் என்று அரசுக்கு ஆதரவான தத்துவவாதிகளால் பழிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். ‘கடவுள் வெறி’ பிடித்த ஸ்பைனோஸா, நாத்திகர் என்ற பட்டத் தோடு சமய விலக்கு செய்யப்பட்டார். பைபிளில் காணப் படும் “அர்ச்.ஜானின் காட்சி” (Revelation) என்ற வருங்காலம் பற்றிய வாக்குகளை ஆதரித்து எழுதிய ஃபிட்ஷே (Fitche) என்ற தத்துவவாதி, அரசை ஆதரிக்காததால், தம்முடைய பேராசிரியர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.

இதிலிருந்து ஆதிக்கத்திலுள்ள தத்துவக் கொள்கைகளுக்கு முரணான எந்தக் கொள்கையும் நாத்திகம் எனக் கருதப்பட்டது என்று பொருள்படுகிறது.

இத்தகைய கொள்கைக் குழப்பம் இந்தியாவில் இருந்ததில்லை. இவ்வாறு கூறுவதனால் சமய விரோதங்களும், போராட்டங்களும் இருந்ததில்லை என்று நான் சொல்லுவதாக எண்ண வேண்டாம். பல சமய முரண்பாடுகளும், சமய விரோதங்களும் பண்டைக்காலம் முதல் இந்தியாவில் இருந்து வந்துள்ளன. ஆனால் அவை நாத்திகம், ஆதிக்கம் என்ற கருத்துக்களில் இருந்து பிரித்துத்தான் எண்ணப்பட்டு வந்துள்ளன. ஒவ்வொரு காலத்திலும் ‘ ஆத்திகம்’, ‘நாத்திகம்’ என்ற சொற்கள் பொருள் தெளிவோடு பயன்படுத்தப்பட்டு வந்தன. உதாரணமாக வேத யக்ஞங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் ‘ஆத்திகர்’ என்றும், அவற்றை எதிர்ப்பவர்கள் ‘ நாத்திகர்’ என்றும் பண்டைக் காலத்தில் கருதப்பட்டனர். ‘கடவுள்’ நம்பிக்கை என்பது வேறோர் பிரச்சினையாக இருந்தது.

எபிக்யூரஸ்.

உதாரணமாக வேத யக்ஞங்களை நம்பிய மீமாம்சகர்கள் ஆஸ்திகர்கள் தான். ஆனால் இவர்கள் தான் கடவுள் மறுப்பில் மிக முனைப்பாக இருந்தவர்கள். சைவர்களும், பாசுபதர்களும் சிவன் ஒருவனே சகல சக்திகளும் வாய்ந்த கடவுள் என்ற நம்பிக்கையுடையவர்கள். இவர்கள் வேதங்களைப் பிரமாணம் என்றோ, முக்கியத்துவம் கொண்டவையென்றோ கருதவில்லை. அதனால் கடவுள் நம்பிக்கை கொண்ட இவர்கள் நாத்திகர்கள் என்று வேதவாதிகளால் கருதப்பட்டார்கள். சமூக ஒடுக்குமுறையை நியாயப்படுத்தி, அரசின் பாதுகாப்புக்கு ஏற்ற நீதி – ஒழுக்க முறைகளை வகுத்த, மனு முதலிய நீதி நூலார், சைவர், பாசுபதர் முதலியோரைத் தீண்டத்தகாதவர் என வருணித்தார்கள். அவர்களைத் தீண்டிவிட்டால் உடனே குளிக்க வேண்டும் என்று எழுதி வைத்தார்கள். சமயவெறியும், பகைமையும் இந்தியாவிலும் இருந்துள்ளது என்பதற்கு நீதி நூல்களே சான்று கூறுகின்றன.

ஆனால் ‘கடவுள்’ என்ற சொல்லுக்குத் தெளிவான பொருளை இந்தியத் தத்துவம் வழங்கியுள்ளது. கடவுள் என்பவர் “அனைத்தையும் படைத்து அளித்துக் துடைப்பவர். உலக ஒழுங்கு, நியதிகளுக்கெல்லாம் காரணம் ஆனவர் (moral governor). அவனன்றி ஓரணுவும் அசையாது.” இத்தகைய தன்மைகள் கொண்டவர் கடவுள். இக்கருத்தை ஏற்றுக் கொள்பவர்கள் ஆத்திகர்கள். இதனை மறுப்பவர்கள். நாத்திகர்கள்.

ஃபிட்ஷே.

இத்தெளிவான பொருளில் மிகப் பெரும்பாலான இந்தியத் தத்துவவாதிகள் நாத்திகர்களே. ‘கடவுள்’ என்ற மாயக்கருத்து ஒரு மூட நம்பிக்கை, பொய்யான ஒன்றை உண்மை என்று நம்புவது தவறாக மதிப்புச் செலுத்தப்படும் ஓர் கற்பனை என்றே நாத்திகவாதிகள் கருதினர்.

மிகப் பல நாத்திகவாதிகள் ‘கடவுளை’ ஆழ்ந்த அங்கத உணர்ச்சியோடு கேலி செய்தார்கள். ஒரே ஒரு உதாரணம் தருவோம். ஆத்திகர்கள் கடவுளுக்குப் பல இயல்புகளைக் கற்பனையில் படைத்தார்கள். சர்வ வல்லமை, சர்வ ஞானம், எவ்விடத்தும் இருத்தல் ஆகிய இயல்புகளை அவருக்கு அளித்தார்கள். கடவுளை பரிபூரணானந்தம் என்று கருதி உள்ளமுருகிப் பாடினார்கள்.

இவை குறித்து குணரத்னா என்னும் ஜைனத் துறவி கீழ்வருமாறு எழுதினார்:

“இக்குணங்களையெல்லாம் இல்லாத ஒன்றிற்குப் படைப்பது வீணானது. ஒரு அழகிய இளம்பெண்ணை, வீரியமற்றவனுக்கு அளிப்பது போன்றது இது. பாலுணர்ச்சி இல்லாதவனுக்கு, அழகிய இளம்பெண் எப்படிப் பயனற்றவளோ, அதுபோலவே இல்லாத கடவுளுக்கு இந்த இயல்புகளும் பயன்படாது.”

இது, ‘கடவுள்’ மூடநம்பிக்கையின் சிகரம் என்று காட்ட ஜைனர்களின் உவமை. இவ்வாறு உவமைகளால் மட்டும் இந்திய நாத்திகர்கள் மக்களை வசப்படுத்த முயலவில்லை. கடவுள் என்ற கருத்துப்பற்றி தத்துவரீதியான வாதங்களை அவர்கள் முன் வைத்தார்கள். கடவுள் என்ற நம்பிக்கையின் முரண்பாடுகளைத் தர்க்கரீதியாகச் சுட்டிக் காட்டினார்கள். ஆனால் நாத்திகர்கள் வேறு நம்பிக்கைகளுக்கும், தங்கள் கடவுள் இன்மைக் கொள்கைக்கும் முரண்பாடுகள் இருப்பினும், கடவுளை மறுக்கும் வாதங்களில் முரண்பாடு எதுவும் இல்லாமலேயே தர்க்கரீதியாக வாதித்தார்கள். நாத்திகர்களது பிற நம்பிக்கைகளில் உள்ள முரண்பாடுகளை ஆத்திகர்கள் தர்க்கரீதியாகத் தாக்க முடியவில்லை. ஏனெனில் அவை போன்ற பல நம்பிக்கைகளையே அவர்கள் கொண்டிருந்தார்கள். உதாரணமாக விதி, கர்மம், நரகம், சுவர்க்கம் போன்ற ஆத்திகர்களின் நம்பிக்கைகள், நாத்திகர்கள் நம்பிக்கைகளோடு ஒன்றுபட்டது.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

“என் கண்முன்னே என் தந்தை சுட்டு வீழ்த்தப்பட்டார்” : மங்களூருவில் போலீசு பயங்கரவாதம் !

1

“என் கண் முன்னாலேயே என் தந்தையைக் கொன்றார்கள்” என்கிறார் பத்து வயதான சாபில். சாபிலின் தந்தை அப்துல் ஜலீல் டிசம்பர் 19-ம் தேதி, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, போலீசு சுட்டுக் கொன்றவர்களில் ஒருவர்.

டிசம்பர் 19-ம் தேதி ஜலீலும் அவருடைய இளைய மகனான சாபிலும் மாலை 4 மணியளவில் தொழுகைக்காக வீட்டிலிருந்து கிளம்பினர். அப்போது எங்கிருந்தோ வந்த போலீசின் துப்பாக்கி குண்டு ஜலீலின் இடது கண்ணில் பாய்ந்தது. உடனடியாக அவர் உயிரிழந்தார்.

‘கட்டுக்கடங்காத கூட்டம்’ வன்முறையில் இறங்கியதை கட்டுப்படுத்தவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீசு தெரிவித்தது. ஆனால், சாபில், அங்கே கட்டுக்கடங்காத கூட்டமும் இல்லை; வன்முறையும் வெடிக்கவில்லை எனக் கூறுகிறார்.

49 வயதான ஜலீல், மங்களூரு நகரத்தில் உள்ள பந்தர் பகுதியில் மீன் வியாபாரியாக உள்ளார்.

“அன்றைக்கு அப்பா, சற்று முன்பாகவே வீட்டுக்கு வந்துவிட்டார். என்னுடைய அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவினார். எங்களை பள்ளியிலிருந்து அழைத்து வந்தார். எங்கள் வீட்டிலிருந்து சற்று தள்ளி நடந்திருப்பார்; அதற்குள் அந்தக் கொடூர சம்பவம் நடந்துவிட்டது.” என்கிறார் ஜலீலின் 14 வயது மகள் ஷிபானி.

இந்தக் குடும்பம் ஜலீலின் வருமானத்தை மட்டுமே நம்பி இயங்கியிருக்கிறது. 32 வயதான சயீதா செய்வதறியாது, அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.

படிக்க:
குடியுரிமை திருத்தச் சட்டம் : உத்தர பிரதேசத்தில் போலீசு நடத்திய படுகொலைகள் !
♦ இந்த அடக்குமுறை காலனிய ஆட்சியில்கூட கிடையாது : வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் !

ஜலீல் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருந்தவர். அவருக்கு குடியுரிமை திருத்த சட்டம் என்ன என்பது குறித்துகூட எதுவும் தெரிந்திருக்காது. அவர் எந்த போராட்டத்திலும் இதுவரை கலந்துகொண்டதில்லை. மங்களூரு போராட்டத்துக்கும் அவருக்கும்கூட எந்தத் தொடர்பும் இல்லை என்கிறார் ஜலீலின் உறவினர் சகினா.

மங்களூரு போராட்டத்தின்போது ஜலீல் உள்பட இருவர் போலீசு துப்பாக்கிச்சூட்டில் பலியாகியிருக்கிறார்கள். பலர் படுகாயமடைந்திருக்கிறார்கள். போலீசு கூற்றுக்களை நேரடி சாட்சியங்களோ அல்லது வீடியோ ஆதாரங்களோ உண்மை எனக் கூறவில்லை. ஆனால், பலர் மீது போலீசு பொய் வழக்குகளை பதிவு செய்துள்ளது.

ஜலீலை குண்டு துளைத்த சில நிமிடங்களுக்குப் பிறகு 22 வயதான நவுசீன் குத்ரோலி அதே போன்ற முறையில் கொல்லப்பட்டர். நவுசீனும் அவருடைய நண்பர் முகமது ஹனிஃபும் வெல்டிங் ஒர்க்‌ஷாப்பிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, போலீசின் குண்டு நவுசீனை துளைத்தது.

நவுசீன் குத்ரோலி குடும்பத்தினர்.

“அந்த இடமே கண்ணீர் புகை குண்டால் வெடித்துக்கொண்டிருந்தது. புகையால் என்ன நடந்துகொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. அடிவயிற்றில் ஒரு குண்டு பாய்ந்து நவுசீன் கீழே கிடந்தான்” என்கிறார் ஹனிஃப்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நவுசீனை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த இரண்டு போலீசு படுகொலைகளும் மங்களூருவில் உள்ள முசுலீம்களிடையே அச்சத்தை உண்டாக்கியிருக்கின்றன. மருத்துவமனைக்கு போலீசு கண்ணீர் புகை குண்டுகளை வீசுவதும், மசூதிக்குள்ளும் மசூதி அலுவலகத்துக்குள்ளும் போலீசு படை புகுந்ததும் போர் நடைபெறும் இடங்களிலும்கூட காணமுடியாத காட்சி. இவை அனைத்தும் வீடியோ ஆதாரமாக வெளியாகியுள்ளன.

மசூதியை குறிவைத்து போலீசு ஒருவர் துப்பாக்கியால் சுடும் காட்சி ஒன்றும்கூட வீடியோவாக பதிவாகியுள்ளது.

கர்நாடகத்தை ஆளும் எடியூரப்பா தலைமையிலான பாஜக தட்சிண கன்னட மாவட்டத்தில் டிசம்பர் 19 – டிசம்பர் 23-ம் தேதி வரை இணைய சேவையை நிறுத்தி வைத்தது. மேலும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீசின் அடாவடித்தனங்களை மூடிமறைக்கவே இத்தகைய தடைகளை அரசாங்கம் அமலாக்கியதாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.

“நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இங்கேயும்கூட அமைதியான முறையிலேயே நடந்தது” என்கிறார் ஆசாத் கண்டிகா என்ற உள்ளூர் பத்திரிகையாளர்.

மங்களூரு போலீசு, பல போலீசார் கல்வீச்சு சம்பவத்தால் காயமடைந்ததாக கூறினர். உள்ளூர் மருத்துவமனையில் நேரடி விசாரணையில் இறங்கியபோது ஒருவர்கூட அங்கே சிகிச்சையில் இல்லை. மருத்துவர் ராஜேஸ்வரி தேவி, மொத்தம் 66 போலீசார் மருத்துவமனைக்கு வந்ததாகவும் அதில் 64 பேருக்கு முதலுதவி செய்யப்பட்டு உடனடியாக அனுப்பப்பட்டதாகவும் இருவர் மட்டும் 24 மணி நேரம் மருத்துவமனையில் இருந்ததாகவும் கூறுகிறார். அவையும் சொல்லும்படியான காயங்கள் இல்லை என்கிறார்.

படிக்க:
அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்
♦ CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் ! காணொளி

இந்தப் படுகொலை நடந்து முடிந்தபோது, எடியூரப்பா இரு குடும்பங்களுக்கும் நிவாரணமாக ரூ. 10 லட்சம் தருவதாக அறிவித்தார். ஆனால், 25-ஆம் தேதி, முழு விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டு முடிவுகள் வரும்வரை நிவாரணத்தில் ஒரு பைசாகூட தரமுடியாது எனக் கூறிவிட்டார்.

கொல்லப்பட்டவர்களின் உடலும், போலீசால் தாக்கப்பட்டவர்கள் ஹைலேண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, காயமடைந்தவர்களின் உறவினர்களும் போராட்டக்காரர்கள் மருத்துவமனையில் கூடினர். சட்ட நடைமுறைக்காக மருத்துவமனை நிர்வாகம் போலீசை அழைத்தபோது, மருத்துவமனை என்றுகூட பார்க்காமல் கண்ணீர் புகை குண்டை வீசியிருக்கிறது போலீசு.

அவசர சிகிச்சை பிரிவு அறைக்குள் கதவை உதைத்துக்கொண்டு திறக்கிறது வெறிப்பிடித்த போலீசு. இவையாவும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளன.

“அவர்கள் திரும்பத் திரும்ப எங்களுடைய பெயர்களை சொல்லி அழைத்தார்கள். எங்கள் மீது குண்டுகளை பொழியப்போவதாக சொன்னார்கள். அது ஒரு கொடூரமான கணம்” என்கிறார் சிகிச்சை பெற்றுவரும் முசுலீம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்.

72 வயது இதய நோயாளி அப்துல் ரஹ்மான், கண்ணீர் புகை குண்டு வீச்சினால் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஐ.சி.யூ. -வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹைலாண்டு மருத்துவமனை இசுலாமியர் ஒருவரால் நடத்தப்படுகிறது. முசுலீம்கள் அதிகமாக வரக்கூடிய இந்த மருத்துவமனைக்கு சமீபத்திய போலீசு தாக்குதல் காரணமாக முசுலீம்கள் இங்கே வர அஞ்சுவதாக மருத்துவமனை ஊழியர் ஒருவர் தெரிவிக்கிறார்.

அடிவயிற்றில் தோட்டா பாய்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முகமது இம்ரான்.

படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்களில் அடிவயிற்றில் துப்பாக்கி குண்டால் தாக்கப்பட்ட 34 வயது முகமது இம்ரானும் ஒருவர். மட்டுமல்லாமல் கடுமையாக தாக்கப்பட்டதால் எலும்புகள் உடைந்த நிலையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.

கையில் குண்டடிப்பட்ட அபுஸ் அலி.

கையில் குண்டடிப்பட்ட 40 வயது அபுஸ் அலி ஒரு தினக்கூலி தொழிலாளி.

போராட்டக்காரர்கள் மட்டுமல்லாது, போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க வந்த கேரள பத்திரிகையாளர்கள் பலரை கைது செய்தது போலீசு. கன்னட ஊடகங்கள் இவர்களோடு நிற்பதற்கு பதிலாக, ‘ஆயுதம் ஏந்திய கேரள நபர்கள் மங்களூருக்குள் ஊடுருவியுள்ளதாக’ செய்தி வெளியிட்டன.

கேரள அரசு தலையிட்டதன் பேரில் கைதான மீடியா ஒன், ஏசியாநெட், நெட்வொர்க் 18, 24 உள்ளிட்ட ஊடகங்களைச் சேர்ந்த எட்டு கேரள பத்திரிகையாளர்கள் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையான கேரள பத்திரிகையாளர்கள் போலீசு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவந்தனர். போலீசு சொன்னதுபோல அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல என்பது தெரியவந்தது.

போலீசார் ஏன் இந்து பத்திரிகையாளர்கள் முசுலீம் பத்திரிகையாளர்களுடன் பணிபுரிகிறீர்கள் எனவும் கேட்டதாக மலையாள பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். வர்த்தபாரதி என்ற உள்ளூர் ஆங்கில இணையதளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் இஸ்மாயில் போலீசாரால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். பத்திரிகையாளர் அட்டையை காட்டிய பிறகு, அவர் தாக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தைப் போன்று காவிகளின் தென்னிந்திய நுழைவாயிலான கர்நாடகத்தை போலீசு ராஜ்ஜியமாக மாற்றியிருக்கிறார் ஊழல் மதவெறி பெருச்சாளி எடியூரப்பா. நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும்தான் இரக்கமில்லாமல் மக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இது ஹிட்லருக்கு இணையான மதவெறி பாசிசம் என்பதை இன்னமும் சந்தேகப்படத் தேவையில்லை.


செய்திக் கட்டுரை: சுகன்யா சாந்தா.
தமிழாக்கம் :
அனிதா
செய்தி ஆதாரம் : தி வயர்.

அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்

அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்

த்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்காலத்திய மனித இனமே (ஹோமோ சேப்பியன்ஸ்) பரிணாமவளர்ச்சியில் தோன்றியிருக்கவில்லை; மனிதனுக்கு முந்தைய மூதாதையர்கள்தான் (ஹோமோ எரக்டஸ்) பூமியில் உயிர் வாழ்ந்து வந்தார்கள் என்பதுதான் அறிவியல் உண்மை. எனவே, கடவுள் இராமன் தற்காலத்திய மனித வடிவில், தற்காலத்திய அயோத்தியில், அதுவும் பாபர் மசூதியின் மையக் கோபுரத்திற்கு கீழ்தான் பிறந்தான் எனக் கருதுவது கற்பனையும் மூடத்தனமும் கலந்த நம்பிக்கை தவிர, வேறு எதுவுமாக இருக்க முடியாது. மேலும், இராம பக்தி அயோத்தியில் அனாதிக் காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறதா என்றால், அதுவும் கிடையாது.

மனிதனுக்கு முந்தைய மூதாதையர்கள்.

இந்தியாவில் இராம பக்தி 12-ம் நூற்றாண்டில்தான் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியதென்றும், இராமனைக் குல தெய்வமாக வழிபடும் இராமநந்தி வகையறாக்கள் 18-ம் நூற்றாண்டில்தான் அயோத்தியில் குடியேறத் தொடங்கினார்கள் என்றும், தற்போது அயோத்தியில் காணப்படும் பத்துக்கணக்கான இராமர் கோவில்கள் அதன் பிறகுதான் உருவாகின” என்றும் குறிப்பிடுகிறார், வரலாற்றுத் துறை பேராசிரியர் கே.என்.பணிக்கர்.

பாபர் மசூதி நில வழக்கில் சம்மந்தப்பட்ட மூன்று மனுதாரர்களுள் ஒரு பிரிவான நிர்மோகி அகாராவின் பூர்வாசிரமப் பெயர் இராமநந்தி பைராகி. இந்த பைராகிகள் அயோத்தியை ஆக்கிரமித்தது பற்றி பத்திரிகையாளர் வலாய் சிங், ”அயோத்தி: நம்பிக்கைகளின் நகரம், பூசல்களின் நகரம்” என்ற தனது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

மன்னன் மான் சிங்.

இராமநந்தி பைராகிகள் பீகார் பகுதியிலிருந்து அயோத்திக்கு இறக்குமதியானவர்கள் என்பதோடு, பார்ப்பன சாதியைச் சேர்ந்த மன்னன் மான் சிங்கின் ஆதரவோடு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அயோத்தியில் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். இந்த ஆக்கிரமிப்பில் மசூதிகளும் இடுகாடுகளும்கூட அடங்கும். இக்காலக்கட்டத்தில்தான் பாபர் மசூதியின் கிழக்குப் பகுதியில் ஒரு சிறிய மேடையை எழுப்பி, அங்குதான் ராமபிரான் பிறந்ததாகக் கூறத் தொடங்கினார்கள். இச்சமயத்தில்தான் அவத் மாகாணத்தை ஆண்டு வந்த நவாப்களின் ஆட்சி வீழத் தொடங்கியது. பைராகிகள் மட்டுமல்ல, இன்னும் பலரும் தமது வழிபாட்டுத் தலத்தில்தான் இராமன் பிறந்ததாகக் கூறி வந்தனர். எடுத்துக்காட்டாக, பாபர் மசூதியின் வடக்குப் புறத்தில், அம்மசூதியிலிருந்து 40 மீட்டர் தொலைவில் இராமஜென்ம கோவில் ஒன்று இருந்தது. இந்தக் கோவிலுக்கான நிலத்தைத் தானமாக வழங்கியவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த மிர் மாசும் அலி மாஃபிதார் என செவிவழிச் செய்தியும் உண்டு.”

புராணங்களில் இராம ஜென்மபூமி

பாபர் மசூதியின் மையக் குவிமாடத்திற்கு நேர் கீழேதான் இராமன் பிறந்தான் என்பதோ மத நம்பிக்கையே கிடையாது. அது இந்து மதவெறிக் கும்பலின் அரசியல் பிரச்சாரக் கருத்து. 1850-ம் ஆண்டு, அயோத்தியில் நிர்மோகி அகாராவைச் சேர்ந்த இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த மோதலின்போதும், அதனையொட்டி நடந்த வழக்கிலும்கூட பாபர் மசூதி கட்டப்பட்டிருக்கும் இடத்தில்தான் இராமன் பிறந்தான் என இந்துக்கள் கோரியதில்லை.

இராம சரித மானஸ் நூலின் முகப்பு.

இந்த நம்பிக்கைக்கு ஆதாரமாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும், தீர்ப்பின் இணைப்பிலும் காட்டப்படும் ஸ்கந்த புராணம் மிகப் பழமையான சமஸ்கிருத நூல் கிடையாது. வெறும் 400 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட இந்நூலின் அயோத்யா மகாத்மியா என்ற பகுதியில்தான் அயோத்தி தீர்த்த யாத்திரை தலமென்றும், இராமஜென்ம பூமி பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. எனினும், அப்பகுதியிலும்கூட அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. அயோத்யா மகாத்மியா என்ற அப்பகுதி 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 19-ம் நூற்றாண்டில் ஸ்கந்த புராணத்தில் சேர்க்கப்பட்ட இடைச்செருகல் எனக் குறிப்பிடுகிறார்கள், வரலாற்றாசிரியர்கள்.

16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராம பக்தரான துளசிதாஸ் இயற்றிய இராமசரித மானஸ் நூல் வெளியான பிறகுதான், இராமாயணக் கதை மக்கள் மத்தியில் சரளமாகப் புழக்கத்திற்கு வந்தது. அந்த நூலில் துளசிதாஸ், தான் அவத்புரிக்குச் (அயோத்தியின் மத்திய காலப் பெயர்) சென்று ராமனின் பிறந்தநாள் கொண்டாட்டங்களைக் கண்டதாக மட்டும்தான் குறிப்பிடுகிறார்.

வரலாற்றுத் துறை பேராசிரியர் கே.என்.பணிக்கர்.

அவர் வாழ்ந்த காலத்தில் இராமஜென்ம பூமி பற்றியும், அங்கு இருந்த இராமர் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டது குறித்தும் பேசப்பட்டிருந்தால், துளசிதாஸ் அதனை வேதனையோடு பதிவு செய்யாமல் புறக்கணித்திருப்பாரா?” என வினவுகிறார், வரலாற்றுத் துறை பேராசிரியர் இர்ஃபான் ஹபீப்.

ஸ்கந்த புராணம், இராம சரித மானஸ் காலக்கட்டத்தைச் சேர்ந்த லட்சுமிதாரா, மித்ர மிஸ்ரா, புஷுந்தி ராமாயணா ஆகிய சமஸ்கிருத நூல்கள் அயோத்தியை இந்துக்களின் தீர்த்த யாத்திரைத் தலமாகக் குறிப்பிட்டாலும், அவற்றில் ராமஜென்ம பூமி பற்றிய குறிப்புகள் இல்லை. இப்புராண நூல்களில் அயோத்தியிலுள்ள கோபுரதாரா தீர்த்தம்தான் முக்கிய புண்ணியத் தலமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறதேயொழிய, ராம ஜென்மபூமியல்ல.

பயணக் குறிப்புகளில் அயோத்தி

ஜோசப் டிஃபென்தாலர் மற்றும் மோண்ட்கோமேரி மார்டின் என்ற இரு வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புக்களிலிருந்து, இராமரின் பிறப்பிடம் சர்ச்சைக்குரிய பகுதிதான் என இந்துக்கள் நம்பினார்கள், சீதாவின் சமையலறை, சொர்க்க வாசல், தொட்டில் ஆகிய இடங்களில் இந்துக்கள் வழிபாடு செய்தனர், இந்துக்கள் பாபர் மசூதியைச் சுற்றி வலம் வந்து வழிபட்டனர், திருவிழா நாட்களில் பெரும் கூட்டம் கூடியது, 1850-க்கு முன்பாகவே இந்துக்கள் சர்ச்சைக்குரிய பகுதியில் வழிபட்டு வந்தனர்” ஆகிய முடிவுகளுக்கு வர முடியும் எனக் குறிப்பிடுகிறது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.

தெருவுக்கு இரண்டு இராமர் கோயில்கள் இருக்கும் அயோத்தி நகரம்.

பயணக் குறிப்புகள் பெரும்பாலும் ஆதாரங்களின் அடிப்படையில் எழுதப்படுவதில்லை. மக்களிடம் நிலவும் கருத்துக்கள், வாய்வழிச் செய்திகள் அடிப்படையில் எழுதப்படுகின்றன” என விமர்சிக்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். குறிப்பாக, ஜோசப் டிஃபென்தாலர் பரவலாக அறியப்படாத வெளிநாட்டுப் பயணி எனக் குறிப்பிடும் இர்ஃபான் ஹபீப், அவர் பாபர் மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுப் பதிவுகள் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்கிறார். மசூதியைக் கட்டியது ஔரங்கசீப் என ஜோசப் டிஃபென்தாலர் தனது பயண நூலில் குறிப்பிடுவதிலிருந்தே, அவரது குறிப்புகளின் நம்பகத்தன்மையை எடை போட்டுக் கொள்ளலாம்.

1850-க்குப் பின் பாபர் மசூதி வளாகத்தினுள் அமைந்திருந்த ராம் சபுத்ரா, சீதாவின் சமையலறை ஆகிய பகுதிகளில் இந்துக்கள் வழிபட்டு வந்ததை முஸ்லிம் தரப்பும் மறுக்கவில்லை. எனினும், இந்துக்களின் இந்த வழிபாடு பாபர் மசூதிக்குக் கிழக்கே, வெளிப்புறப் பகுதியில்தான் நடந்து வந்தன. டிஃபென்தாலர் அயோத்திக்கு வந்திருந்த சமயத்தில் பாபர் மசூதி வளாகத்தில் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டு அது இரண்டாகப் பிரிக்கப்படவில்லை. அதனால் அவர் பாபர் மசூதி வளாகத்தினுள் இந்துக்கள் வழிபாடு நடத்தியதை உட்புறமா, வெளிப்புறமா என வேறுபடுத்தாமல் பொதுவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் குறிப்பை வைத்துக்கொண்டு, 1800-க்கு முன்பே இந்துக்கள் மசூதியினுள்ளும் சென்று வழிபாடு நடத்தி வந்தனர் என்ற முடிவுக்கு நீதிபதிகள் வந்திருப்பது  எதார்த்தனமான உண்மைக்கு மாறான திரிபு தவிர வேறல்ல.

வரலாற்றுத்துறைப் பேராசிரியர் இர்ஃபான் ஹபீப்.

டிஃபென்தாலரைவிடப் பலராலும் அறியப்பட்ட வெளிநாட்டுப் பயணியான யுவான் சுவான் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், அல்பெருனி 11-ம் நூற்றாண்டிலும் அயோத்திக்கு வருகை தந்திருந்தபோதும், அவ்விருவரும் அயோத்தி இராம ஜென்மபூமியாகக் கொண்டாடப்பட்டதாகத் தமது குறிப்புகளில் பதிவு செய்யவில்லை. மதுராவிற்கும் பகவான் கிருஷ்ணருக்கும் இடையேயான தொடர்பு பற்றிக் குறிப்பிட்டிருக்கும் அல்பெருனி, அயோத்தியை முக்கிய நகரமெனக் குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, அயோத்தியையும் இராமரையும் தொடர்புபடுத்தி எதனையும் குறிப்பிடவில்லை” எனச் சுட்டிக்காட்டுகிறார், இர்ஃபான் ஹபீப்.

குப்பன்

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

இந்தியாவில் எய்ட்ஸ் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ! | ஃபரூக் அப்துல்லா

ன்ஸ்பிரேசன் (Inspiration) என்பார்களே… அதாவது இவர் சாயலில் இவர் போன்று அனைவரும் இருந்தால் நன்றாக இருக்குமே.. இவரை இந்த விசயத்தில் கடைபிடித்தால் நன்றாக இருக்குமே.. என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் எப்போதும் தோன்றி மறைந்து கொண்டே இருக்கும்.

அது போன்று எனக்கு ஒரு பலமான இன்ஸ்பிரேசனாக இருப்பவர்கள் இந்த படத்தில் உள்ள மூன்று பேரும்…

சரி இவர்கள் மூவரும் அப்படி என்ன சாதித்தார்கள் ?

அதற்கு நாம் 1986-ம் வருடத்திற்குச் செல்ல வேண்டும். அப்போது 32 வயதான Dr. நிர்மலா அவர்கள் மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் நுண்ணியிரியியல் (micro biology) மேல்படிப்பு படிக்கும் மருத்துவர்.

Dr. சுனிதி சாலமன் இவரது துறை பேராசிரியர். பட்ட மேற்படிப்பு மாணவர்கள் கட்டாயம் ஒரு ஆராய்ச்சி செய்து சமர்ப்பிக்க வேண்டும் இதை thesis / dissertation என்பார்கள்.

Dr.சுனிதி தனது மாணவிக்கு கொடுத்த தலைப்பு “தமிழகத்தில் எய்ட்ஸ் நோய் குறித்த மேற்பார்வை” (“surveillance of AIDS in Tamilnadu”) இந்த டாபிக் கொடுக்கப்பட்ட போது இந்தியாவில் அதுவரை அதிகாரப்பூர்வமாக ஒரு எய்ட்ஸ் நோயாளி கூட கிடையாது.

நம்ப முடிகிறதா?

அதாவது சுமார் 80 கோடி பேர் மக்கள் தொகை கொண்டிருந்த நாட்டில் ஒரு எய்ட்ஸ் நோயாளி கூட அப்போது கண்டறியப்பட்டிருக்கவில்லை. காரணம் அப்போது பொது மக்கள், சட்டம் இயற்றுவோர் இடையே பலமான ஒரு மூட நம்பிக்கை இருந்தது.

அதாவது இந்தியா ஒழுக்கமான தேசம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை மதித்து வாழும் தேசம். எனவே இங்கெல்லாம் ஒழுக்கக்கேடானவர்களுக்கு வரும் எய்ட்ஸ் நோய் வராது என்றே நினைத்தனர்… நம்பினர்.

எய்ட்ஸ் என்பது மேற்குலக நோய் என்றும், அது தன்பாலின சேர்க்கையாளர்கள் போன்ற இயற்க்கைக்கு எதிரான உறவுமுறைகளைக் கொண்ட மேற்குலகுக்கு மட்டும் வரும் நோய். இந்தியா அது குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அனைவரும் எந்த கவலையும் இன்றி இருந்தனர்.

படிக்க :
புர்கா என்றாலே ஜனாதிபதிக்கு அலர்ஜியா ? பதக்கத்தை உதறிய பெண் !
♦ பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !

இதற்கு முன் மும்பை, டில்லி, கொல்கட்டா போன்ற பெருநகரில் செய்த ஆராய்ச்சியிலும் கூட எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறியப்படவில்லை.

அவையெல்லாம் விட சென்னையை ஒழுக்கமான நகரமாக அப்போது பார்க்கப்பட்டது. காரணம் மேற்சொன்ன நகரங்களில் எல்லாம் ரெட் லைட் ஏரியா என்ற பெயரில் விலைமாதர்கள் தொழிலாகவே; சட்டத்துக்கு உட்பட்ட தொழிலாகவே செய்து வந்த இடங்கள் இருந்தன.

மும்பையில் சோனாபூர். டில்லியில் ஜி.பி.ரோட். கல்கத்தாவில் சோனா காச்சி என்று இதற்கென தனியிடம் ஒதுக்கி இருக்கும். அங்கேயே எய்ட்ஸ் இல்லை எனும் போது தமிழகத்தில் எப்படி இருக்கும்???

இந்த சூழ்நிலையில் தான் இந்த தலைப்பை Dr.சுனிதி அவர்கள் தன் மாணவிக்கு தருகிறார். ஆனாலும் Dr.நிர்மலா கூறுகிறார் “மேடம் எப்படியும் நெகடிவ் என்று தான் வரப்போகிறது.” அதற்கு பேராசிரியர் கூறுகிறார்.

“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. இருப்பினும் ஒரு முயற்சி செய்து பார்.” என்கிறார். உடனே அந்த ஆராய்ச்சியை கையில் எடுக்க ஒப்புக்கொள்கிறார் Dr. நிர்மலா.

அப்போது அவருக்கு எய்ட்ஸ் என்றால் என்ன? அது எப்படி பரவும் ? என்றெல்லாம் தெரியாது.

சரி.. எப்படி இந்த ஆராய்ச்சியை நடத்துவது ?

எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற நிலையில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களிடம் ரத்த மாதிரிகளை எடுக்க வேண்டும்.

இவர்கள் High Risk Population என்று அழைக்கப்படுவார்கள்

1. விலைமாதர்கள்.
2. தன் பாலின உடலுறவு புரிபவர்கள்.
3. ஆப்பிரிக்க மாணவர்கள்.

இது போன்ற 200 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்க வேண்டும்.

அப்போது சென்னையில் தனியான ரெட் லைட் ஏரியா கிடையாது
அதனால் நிர்மலா அவர்கள் நேராக சென்னை மருத்துவக்கல்லூரியில் உள்ள பால்வினை நோய்கள் பிரிவில் சிகிச்சை எடுக்க வரும் விலைமாதர்களில் இருவரை நண்பர்களாக்கிக் கொண்டார். அவர்கள் மூலம் மற்ற விலை மாதர்களின் வீட்டு முகவரியை பெற்றார்.

அப்போது விலைமாதர்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் விஜிலண்ஸ் ஹோம் எனும் இடங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் கேஸ் சீட்டுக்கு மேல் “V” home என்று எழுதியிருக்கும். இதை ரிமாண்ட் ப்ரிசன் என்றும் கூறுவார்கள்

கிராமத்தில் வெளியில் எங்கும் செல்லாமல் வளர்க்கப்பட்ட Dr. நிர்மலா அவர்களுக்கு இந்த ரிமாண்ட் ப்ரிசனுக்கு சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் பேசி உள்ளே சென்று விலைமாதர்களிடம் ரத்த மாதிரி எடுப்பது பெரிய சவாலாக இருந்தது.

அப்போது அவருக்கு உந்து சக்தியாக இருந்தவர் கணவர். வீரப்பன் ராமமூர்த்தி. காலையில் பணிக்கு செல்லும் முன் தன் மனைவியை ஸ்கூட்டரில் ஏற்றிக்கொண்டு ரிமாண்ட் ஹவுஸிற்கு சென்று விடுவார். அங்கு நிர்மலா ரத்த மாதிரிகளை சேகரிப்பார்.

இப்படியாக 80 ரத்த சாம்பிள்களை சேகரித்து விட்டார். ரத்தம் சேகரிக்கும் போது க்ளவுஸ் (கையுறை) போடவில்லை. பாதுகாப்பு உபகரணங்கள் கிடையாது.

Dr. நிர்மலா கூறுகிறார் “விலைமாதர்களிடம் எதற்காக ரத்த பரிசோதனை எடுக்கப்படுகிறது என்று நான் கூற வில்லை. கூறினாலும் அவர்களுக்கு புரிந்திருக்காது. காரணம் அப்போது எய்ட்ஸ் என்ற நோயை பற்றி மருத்துவர்களுக்கே தெரியாது” என்கிறார்.

எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் இருந்து serum மட்டும் தனியாக பிரிக்கப்பட்டது. இதற்காக Dr. சுனிதி சாலமன் அவர்கள் தனியாக ஒரு சின்ன லேப் ஒன்று தயார் செய்திருந்தார். அதற்கு உதவியது அவரது கணவர்.

இப்படியாக தயார் செய்யப்பட்ட சீரம் சாம்பிள்களை கெட்டுப்போகாமல் ஸ்டோர் செய்யும் வசதிஇல்லை. அதனால் Dr.நிர்மலா அவர்கள் தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதனப்பெட்டியில் (fridge) வைத்திருந்தார். அந்த காலத்தில் சென்னையில் எச்.ஐ.வி கிருமியை கண்டறியும் ELIZA (Enzyme linked immuno sorbent assay) பரிசோதனை செய்யும் வசதி இல்லை.

இதற்காக Dr. சுனிதி, வேலூரில் இயங்கி வரும் கிறிஸ்துவ மருத்துவ கல்லூரியில் ஏற்பாடு செய்தார். Dr.நிர்மலாவும் அவரது கணவரும் இந்த ரத்த மாதிரிகளை ஒரு ஐஸ் பாக்ஸில் போட்டுக்கொண்டு வேலூர் காட்பாடிக்கு செல்லும் இரவு ரயில் வண்டியில் ஏறினர். காட்பாடியில் இருந்து CMC மருத்துவமனைக்கு ஆட்டோவில் சென்று இறங்கினர்.

அங்கு வைராலஜி துறைத்தலைவர் Dr. ஜேகப் T ஜான் அவர்கள் இவர்களுக்கு ஜார்ஜ் பாபு , எரிக் சிமோஸ் என்ற இரண்டு ஜீனியர்களை துணைக்கு வேலை செய்ய கொடுத்தார்.

காலை 8.30 மணிக்கு ரத்த மாதிரிகளை ஆராயும் பணியை Dr.நிர்மலா, Dr. ஜார்ஜ் பாபு , Dr.எரிக் சிமோஸ் தொடங்கினர்.

படிக்க :
ஏழுமலை வாசா! உன்னைத் தேடி வந்தா எய்ட்ஸா!!
♦ சர்வதேச ஆண்கள் தினம் | பெண்கள் இல்லாத ஊரில், ஆண்கள் சிறப்பாக வாழ இயலாது ! | ஃபரூக் அப்துல்லா

வேலை நடந்துகொண்டிருக்கும் போது மதியம் கரண்ட் போய் விட.. சரி ஒரு டீ சாப்பிட்டு வரலாம் என்று மூவரும் சென்று கரண்ட் வந்ததும் நிர்மலா மற்றும் ஜார்ஜ் இருவரும் வந்து திறந்து பார்த்தால் ஆறு சாம்பிள்கள் மஞ்சள் நிறத்தில் மாறியிருந்தன.

பின்னால் வந்த எரிக் சிமோசும் இதை ஆமோதித்தார். அவர்கள் யாராலும் அந்த முடிவுகளை நம்ப முடியவில்லை.

இருப்பினும் பாசிடிவ் என்று வந்த அந்த தகவலை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் என்று வைராலஜி தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நேரே சென்னை சென்று விட்டனர் கணவனும் மனைவியும். கூடவே ஜார்ஜ் மற்றும் சிமோசும் சென்றனர்.

நேராக துறைத்தலைவர் சுனிதி சாலமனிடம் விசயம் கூறப்பட்டது. அடுத்த நாள் காலை சுனிதி அவர்கள் நேராக ரிமாண்ட் ஹோமிற்கு சென்று அந்த ஆறு பாசிடிவ் ரிசல்ட் வந்த ரத்த மாதிரிகளை கொண்ட விலைமாதர்களிடம் இருந்து மீண்டும் ரத்த எடுத்தார்.

அந்த மாதிரிகளைக் கையில் எடுத்துக்கொண்டு சிமோஸ் அவர்கள் உடனே அமெரிக்காவுக்கு பறந்தார். அங்கு தான் எச்.ஐ.விக்கான கன்பர்மேசன் டெஸ்ட்டான western blot அப்போது இருந்தது.

அங்கு செய்யப்பட்ட வெஸ்டர்ண் ப்ளாட் டெஸ்ட் இந்தியாவுக்குள் எய்ட்ஸ் நோய் நுழைந்து விட்டதை உறுதி செய்தது. இந்த செய்தி உடனே ICMR (Indian council for medical research) -க்கு தெரிவிக்கப்பட, அங்கிருந்து செய்தி பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது .

பிறகு தமிழக சுகாதார அமைச்சர் ஹண்டேவுக்கு தெரிவிக்கப்பட்டது. மே மாதம் நடந்த, தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தில் இந்த கெட்ட செய்தியை ஹண்டே மக்களுக்கு கூறினார்.

அப்போது Dr. சுனிதியும், Dr. நிர்மலாவும் சட்டமன்றத்தின் பார்வையாளர் கூடத்தில் அமர்ந்திருந்தனர்.

இந்த செய்தி வெளியிடப்பட்டதும் மக்கள் கொந்தளித்தனர்

“என்னது தமிழ்நாட்டுல எய்ட்ஸா?”

” ஒழுக்க பூமியான தமிழ்நாட்டுல எய்ட்ஸ் வாய்ப்பே இல்லை. இந்த டாக்டருங்க எடுத்த டெஸ்ட்ல தான் தப்பு இருக்கும்”

“சுனிதி சாலமன் மஹாராஷ்ட்ரா காரவுங்க… தமிழ்நாட்டு மேல வீணா பொய் புரளி கிளப்புறாங்க ” என்றெல்லாம் பேச ஆரம்பித்தனர்.

இதுபோன்ற அத்தனை பேச்சுகளையும் தாண்டி தனது ஆராய்ச்சிக்கு தேவையான 200 சாம்பிள்களை எடுத்து முடித்து கட்டுரையை சமர்ப்பித்தார்.

1987-ல் ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தார். மேற்படிப்பை முடித்தார். 2010-ம் ஆண்டு கிண்டி கிங்க்ஸ் தடுப்பூசி இண்ஸ்டிட்யூட்டில் வேலை செய்து ஒய்வு பெற்றார். இவர் கண்டுபிடித்த அந்த முதல் நோயாளிகளுக்கு பிறகு இந்தியா எய்ட்ஸ் மீது கொண்ட பார்வை மாறியது.

2006 கணக்குப்படி 20 லட்சம் எய்ட்ஸ் நோயாளிகள் கொண்டு உலகில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் வசிக்கும் நாடாக நாம் இருக்கிறோம். எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவசமாக anti retro viral therapy கொடுக்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் விதை போட்டது Dr. நிர்மலா, Dr .சுனிதி சாலமன் ஆகிய இரு பெண்மணிகள்.

இத்தனை செயற்கரிய சாதனை புரிந்த Dr. நிர்மலா அவர்களை கவுரவிக்கும் பெரிய விருதுகளோ பரிசுகளோ அவருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது அவர்கூறினார்:

“நான் கிராமத்தில் வளர்க்கப்பட்டவள். அங்கே யாரும் தாங்கள் செய்த விஷயங்களுக்காக துள்ளி குதிக்கவும் மாட்டார்கள் / சோர்ந்து போகவும் மாட்டார்கள்.
எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சி. இதன் மூலம் சமுதாயத்துக்கு நல்லது செய்ய முடிந்ததே போதும்” என்று முடிக்கிறார் Dr. நிர்மலா.

இந்த கட்டுரை வழி, நமக்கு இன்ஸ்பிரேசன்களாக பலர் இருக்கின்றனர்.

டாக்டர் நிர்மலா

ஆசிரியரின் பேச்சை தட்டாமல் ஆராய்ச்சியை முன்னெடுத்த அவரின் முயற்சி / தைரியம் / உழைப்பு . சமூகம் தனக்கான அங்கீகாரத்தை வழங்காவிட்டாலும் அதற்காக நான் என்னால் முடிந்ததை செய்வேன் என்ற அவரின் எண்ணம்.

டாக்டர் சுனிதி சாலமன்

அதுதான் இந்தியாவின் பிற மாநிலங்களில் எய்ட்ஸ் இல்லை என்று வந்து விட்டதே என்று விடாமல் தனது மாணவியை அது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட வைத்தது. அத்தோடு ஒதுங்கிக்கொள்ளாமல் மாணவியோடு கடைசி வரை நின்று உதவி செய்த அவரின் ஊக்கம்

திரு. வீரப்பன் ராமமூர்த்தி

மனைவி செய்யும் அலுவல்களுக்கு துணையாக கணவன் நிற்க வேண்டும். இவர் ஒருபடி மேலே போய் விலைமாதர்களின் வீடு தேடி மனைவிக்காக வண்டி ஓட்டியுள்ளார். இவரிடம் கணவனாக நான் கற்றுக்கொண்டது அதிகம்.

இத்தகைய பெரியோரை எய்ட்ஸ் விழிப்புணர்வு தினமான டிசம்பர் 1 அன்று நினைவில் கொள்வோம். நான் என் வாழ்வில் எய்ட்ஸ் குறித்து எப்போது பேசினாலும் இவர்கள் மூவரைக்குறிப்பிடாமல் இனி பேசப்போவதில்லை. நீங்களும் பேசுங்கள்.

இன்று நாம் எய்ட்ஸ் குறித்து இத்தனை விழிப்புணர்வு அடைந்திருக்கிறோம் என்றால் அதற்கு ஆரம்ப காரணம் இவர்கள் தான்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய  ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை

சென்னை கோயம்பேடு, பேருந்து நிலையம், பூ, பழம், காய்கறி மார்கெட்டுக்கு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் சரக்குப் பெட்டகமும் கூட. சிறு குறுந்தொழில்களின் நாடித்துடிப்பு சீராக இயங்க மக்களுக்குத் தேவையான உயிர்காக்கும் பண்டங்களை தன்னகத்தே கொண்டதுதான் கோயம்பேடு.

இங்கு இந்தியாவின் எல்லா எல்லைகளிலிருந்தும் வந்து குவியும் சரக்கு லாரிகள். இந்த லாரிகள் கொண்டுவரும் சரக்குகளை வாங்கி, மொத்த வியாபாரிகளிடம் ஒப்படைக்கும் டிரான்ஸ்போர்ட் அலுவலகங்கள், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் ஏதோ விபத்தில் உயிர் தப்பியவர்கள் போல் மிரட்சியுடன் நம்முடன் உரையாடினார்கள்.

***

நவீன்குமார், மேலாளர், டெக்சிட்டீஸ் சர்வீஸ்

பகலில் டெக்சிட்டீஸ் மேனேஜர், இரவில் இட்லி கடை ஓனர். ரெண்டு வேல பார்க்குறதுனாலதான், ஒடம்பு முடியாத அம்மா அப்பாவ காப்பாத்த முடியுது.

இங்கு வெளி மாநிலங்களிலிருந்து லாரிகளில் வரும் சரக்குகளை தமிழ்நாட்டின் வெளி, உள் நகரங்களுக்கும் மாவட்டத் தலைநகரங்களுக்கும் பிரித்தனுப்பும் வேலைகளை நாங்கள் செய்கிறோம்.

அழுகும் பொருட்கள், அழுகா பொருட்கள் எனத் தரம் பிரிக்கப்படும் இந்த வணிகம் முழுவதுமாக பல மாதங்கள் கடனிலும் நம்பிக்கையிலும்தான் நடந்து கொண்டிருக்கிறது. இங்கு நம்பிக்கைதான் சொத்து. நட்டம் ஏற்பட்டால்கூட எழுந்து விடுவார்கள். ஆனால், வியாபாரத்தில் நம்பிக்கையிழந்தால் மொத்தமாக இடிந்து போய்விடுவார்கள்.

ஜி.எஸ்.டி, டிமானிஸ்டேசன் இரண்டும் சரக்கு வர்த்தகத்தில் பெரும் இடிபோல் இறங்கி விட்டது. அதிலிருந்து மீளவே முடியவில்லை. அதனால் சரக்கு ஆங்காங்கே தேங்கி சுழற்சி இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. 10 லாரி சரக்கு வரும் இடத்தில் 3 லாரிகள் கூட வருவதில்லை. கடன் வர்த்தகமே செய்ய முடியாமல் போய்விட்டது. அப்படி கடன் கொடுத்தாலும் திரும்பி வருவதில்லை. நெருக்கடி முற்றி வியாபாரத்தில் சந்தேகம், நம்பிக்கையின்மை பெருகி விட்டது. பணச் சுழற்சி இல்லை என்கிறார்கள் எங்கள் முதலாளிகள்.

தரம் பிரித்து பல இடங்களுக்கு அனுப்ப காத்திருக்கும் சரக்கு பொருட்கள்.

சரக்கு இருப்பு வைக்கும் குடோன்களுக்கு வாடகை கொடுக்க முடியாமல் இப்போது மூடிக் கொண்டிருக்கிறார்கள். சொல்வதற்கே சங்கடமாக இருக்கிறது. டிரான்ஸ்போர்ட் சர்வீசில் ஊழியர்களுக்கு மாதச் சம்பளம் ஒழுங்காகக்கூட கொடுப்பதில்லை. 4 மாதங்களுக்குப் பிறகு, 2 மாதங்களுக்கான சம்பளத்தைத் தருகிறார்கள். நெருக்கிக் கேட்டால், “வேறு வழியில்லை, வேலையிலிருந்து நின்று விடு” என்கிறார்கள்.

இந்த வியாபாரத்தில் இப்போது புதுத் தொல்லை வேறு. ஃபாஸ்டேக் அட்டையை நாங்கள் ஜி.எஸ்.டி கொண்டு வந்ததிலிருந்தே நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அப்படியும் சரக்கு உரிய நேரத்தில் போய்ச் சேர்வதில்லை. ஃபாஸ்டேக் அட்டையால் பயணத்தில் எந்த முன்னேற்றமும்  இல்லை. காரணம் லாரியில் இந்த அட்டையை ஒட்டி அனுப்பினால், அதை சென்சார் செய்ய டோல்கேட்டில் கேமராக்கள் இல்லை; பெயருக்கு 1, 2 டிராக்கில் சென்சார் கேமரா பொருத்திவிட்டு மற்றவற்றில் பணம் கையால் செலுத்தி ரசீது தருகிறார்கள்.

படிக்க:
♦ அஸ்திவாரம் இழந்த செங்கல் தொழிலாளர்கள் ! – படக்கட்டுரை
♦ லாரி தொழிலை அழிக்கும் மோடி அரசு – நேர்காணல்

இதனால், எந்த டிராக்கில் கேமரா இருக்கிறது எனத் தெரியாமல் டிரைவர்கள் தடுமாறுகிறார்கள். கடைசியில் ஹேன்ட் டிவைஸ் சென்சாரை எடுத்துக் கொண்டு இங்குமங்கும் ஓடி ஒட்டியுள்ள அட்டையை ஸ்கேன் செய்கிறார்கள். அதன் பிறகே லாரியை அனுப்புகிறார்கள். அந்த ஹேன்ட் டிவைஸ் கூட ஒன்றிரண்டுதான் வைத்துள்ளார்கள்; போதுமானதாக இல்லை. டோல்கேட் ஊழியர்கள், ஒரு ஹேன்ட் டிவைசை வைத்துக்கொண்டு இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் ஓடும் கொடுமையும் நடக்கிறது.

சலிப்படைந்த டிரைவர்கள் இதைத் தட்டிக் கேட்டால், ஊழியர்கள் சண்டைக்கு வருகிறார்கள்; போலீசை ஏவி மிரட்டுகிறார்கள். சமயத்தில்  அடிக்கவும் செய்கிறார்கள்.

சரக்கு வாகனங்களைப் பாதுகாக்க, பராமரிக்க ஏராளமான நடத்தை விதிகளை சுங்கச் சாவடிகள் பின்பற்ற வேண்டும். அதில் ஒரு சதவீதம் கூட அவர்கள் செய்வதில்லை. நெடுஞ்சாலைகளில் பழுதுபட்ட லாரிகளை நிறுத்த டிரைவர்கள் ஓய்வெடுக்க, தங்க வசதிகள் செய்து தரும் பொறுப்பு சுங்கச் சாவடிகளுக்கு உண்டு என்று ஏட்டில் மட்டுமே உள்ளது.

இதில் வரும் சிக்கல்களை எதிர்கொள்ள முடியாமல் முதலாளிகள் சலிப்படைந்து சரக்கு வாகனத்தையே குறைத்து வருகிறார்கள். இதனால் சரக்குகளை ஒழுங்காக விநியோகிக்காமல் அந்தந்த இடத்திலேயே தேங்கிக் கிடக்கின்றன. சரக்கு விற்று முதல் கைக்கு வராமல் தொழிலே முடங்கிப் போய்கிடக்கிறது. தற்காலிகமாக பேருந்துகளில் முடிந்தளவு சரக்குகளை அனுப்பும் மாற்று வழிகளை பின்பற்றுகிறார்கள்.

வாரநாட்களில் சரக்கு பொருட்களை நம்பி தான் பல ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன. (சரக்குகள் பதிவு செய்யும் அலுவலகங்கள்.)

தனியார் ஆம்னி பஸ்களில் வாரத்துக்கு வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் மட்டுமே சீட்டுகள் ஃபுல் ஆகும். மற்ற நாட்களில் இம்மாதிரி சரக்குகளை ஏற்றித்தான் டீசல் செலவுகளைச் சமாளிக்கிறார்கள். இதற்காகவே இப்போது ஆம்னி பஸ் முதலாளிகள் வால்வா வண்டிகளைக் குறைத்துவிட்டு சீட் வண்டிகளை அதிகமாக்குகிறார்கள். பயணிகள் இருக்கைகளுக்கு இணையாக சரக்கு வைப்பதற்கு கீழே இடம் ஒதுக்கி பாடி கட்டுகிறார்கள் என்றார்.

அவரை இடைமறித்த நாம், “ஆம்னி பஸ் முதலாளிகளின் வருமானம் குறைந்து விட்டதாகக் கூறுவதை ஏற்க முடியவில்லை. ஒவ்வொரு புது அரசாங்கத்திடம் முதலில் கப்பம் ஒப்படைப்பது இந்த ஆம்னி பஸ் முதலாளிகள்தான். குறுக்கு வழியில் ஆயிரம் கோடி சம்பாதிக்கத்தானே இப்படி செய்கிறார்கள்?” என்றோம்.

உடனே அவர், “எல்லா முதலாளிகளும் அவ்வாறு வசதியானவர்கள் இல்லை. 10 சதவீத முதலாளிகள்தான் இந்த கப்பம் கட்டும் வேலையைச் செய்கிறார்கள். அவர்கள் வேறொரு தொழிலை செய்துகொண்டு, கூடுதலாக பேருந்துகளை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, எஸ்.ஆர்.எம், பர்வீன், கே.பி.என்…” என்றார்.

படிக்க:
♦ மோடியின் ஜி.எஸ்.டி போனஸ் – முடங்கியது லாரி – உயர்கிறது விலைவாசி
♦ நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்

நாம் அவரிடம் விடைபெறும்போது அவர் கூறியது நம்மை நெகிழ வைத்தது.

பி.இ படித்துவிட்டு, எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு அழுக்குமூட்டைகளுக்கு மத்தியில் இருக்கிறீர்களே? என்றதற்கு…

இந்த வேலையை நான் விரும்பித்தான் செய்கிறேன். சொல்லப்போனா இது எனக்கு சவுகரியமாகவும் இருக்கு. என் அம்மா, அப்பா இருவரும் சுகர் பேசன்ட். அவர்களால் வேலை செய்ய முடியாது. அவர்களுக்கு மருத்துவமும் பார்க்க வேண்டும். அதனால், இந்த வேலை செய்துகொண்டே இரவில் தள்ளுவண்டி டிபன் கடை வியாபாரமும் செய்கிறேன். சொந்தக் காலில் நிற்பதால் சந்தோசமாக இருக்கிறேன் என்று சிரித்தார்.

***

ஆனந்த், கனரக வாகன ஓட்டுநர்

தொழில் வியாபாரம் பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. எனக்கு தெரிஞ்சதெல்லாம் டிரைவர் தொழில். இதுக்கு ஃபாரின்ல நல்ல மதிப்பு இருக்குறதா சொல்றாங்க. ஆனா, இங்கே யாரும் எங்கள மதிக்கிறதில்லை. டிராபிக்குல வண்டி ஓட்டுறதவிட டிராபிக் போலீசை சமாளிக்கிறதுதான் எங்களுக்கு பெரும் கஷ்டமா இருக்கு. நாங்க அடக்கமா பேசுனாகூட அசிங்க அசிங்கமாக திட்டி அனுப்புவாங்க.

இந்த லட்சணத்துல ஃபாஸ்டேக்குன்னு புது அட்டை வேற வண்டியில ஒட்டிட்டாணுங்க. அந்த அட்டையக்கூட ஒழுங்கா சென்சார் பண்ண முடியாம எங்கள டார்ச்சர் பண்றாங்க. கேமரா எங்கே இருக்குன்னு பார்த்து இன்ஞ் இன்ஞ்சா வண்டிய நகர்த்தணுமாம். பொம்பளங்க நெத்தியில பொட்டு வைக்கிற மாதிரி, கேமரா முன்னாடி வண்டிய ஒட்ட வைக்கவா முடியும்?

இனிமே, நாங்க பூலோகத்தில் இல்ல, பரலோகத்தில்தான் வண்டி ஓட்ட முடியும் என்றார் விரக்தியுடன்.

சரக்குகள் பதிவு செய்யும் அலுவலகங்கள்.

வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

தெவிட்டத் தெவிட்ட நகலெழுதித் தீர்க்கும் எழுத்தன் !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 03

க்காக்கிய் தன் உடையைப் பற்றி அவன் சிந்தித்ததே கிடையாது. அலுவலக உடுப்பு பச்சை வண்ணம் போய் ஏதோ செம்மை படிந்த மாவு நிறமாயிருந்தது. கழுத்துப் பட்டை மிகக் குட்டையாக இருந்தபடியால் அவன் கழுத்து உண்மையில் நீளமாய் இல்லாவிடினும் காலருக்கு வெளியே துருத்திக் கொண்டு இருப்பது போல் தோன்றியது.

அவனுடைய உடுப்பில் வைக்கோல் துரும்போ, நூலோ எதுவோ ஒன்று எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும். தெருவில் நடக்கும்போது ஜன்னல் வழியே குப்பை வெளியே கொட்டப்படும் சமயம் பார்த்து அதற்கு அடியாக செல்லும் தனித் திறமை அவனிடம் இருந்தததாகையால் முலாம் பழத் தோல்களோ, அவை போன்ற வேறு குப்பையோ எப்போதும் அவன் தொப்பியின் மேல் ஒட்டிக் கொண்டிருக்கும். தெருவில் நாள்தோறும் என்னதான் நடக்கிறது என்று வாழ்வில் ஒரு தரமாவது அவன் கவனித்ததே கிடையாது. இந்த விஷயத்தில் அவன் தனது சகோதர எழுத்தர்களுக்கு முற்றிலும் மாறாக இருந்தான்: அவர்களோ வீதி விவகாரங்களில் நாட்டம் செலுத்துவதில் நிபுணர்கள் என்பதை யாவரும் அறிவர். எதிர் நடைபாதையில் செல்லும் எவனுடைய காற்சட்டை வடிவார் நெகிழ்ந்து விட்டது என்று கூட எதிர் நடைபாதையில் இருந்தபடியே கூர் விழிகளால் நோட்டங் கண்டு மர்மப் புன்னகை புரிபவர்கள் அல்லவா அவர்கள்!

அக்காக்கிய் எதையேனும் பார்த்தால் கூட அதில் அவன் கண்டதெல்லாம் ஒரே மாதிரியான வீச்சுடன் தான் எழுதிய கச்சிதமான வரிகளை மட்டுமே; எங்கிருந்தோ வந்த குதிரையின் முகம் அவன் தோள் மீது படிந்து அவன் கன்னத்தின் மேல் நாசித்துவாரங்கள் வழியே புயல் வீசினால் தான் அவனுக்கு உணர்ச்சி வரும் – தான் இருப்பது வரியின் நடுவிலல்ல, தெருவின் மத்தியில் என்று.

வீடு திரும்பியதுமே உணவு மேசையருகே உட்கார்ந்து முட்டைக்கோஸ் சூப்பை மடக்குமடக்கென்று பருகிவிட்டு, மாட்டிறைச்சித் துண்டை வெங்காயத்துடன், அது எப்படி ருசிக்கிறது என்று கவனிக்காமலே, அந்த வேளையில் ஆண்டவன் அனுப்பிய ஈக்கள், மற்றவை எல்லாவற்றோடும் சேர்த்து மென்று விழுங்கிவிடுவான். வயிறு நிறைந்தாற் போலப் பட்டதுமே எழுந்து, மைக்கூட்டை எடுத்துவந்து, அலுவலகத்திலிருந்து தான் வீட்டுக்குக் கொண்டு வந்திருக்கும் ஆவணங்களை நகல் எடுக்கத் தொடங்குவான். நகலெடுப்பதற்குப் பத்திரங்கள் எதுவுமில்லாமல் தீர்ந்து போய்விட்டால், தனது சொந்த இன்பத்துக்காக, தன்னிடம் வைத்துக்கொள்ளும் பொருட்டு அதிகப்படி நகல் ஒன்று எழுதிக்கொள்வான்; நடை அழகினால் இல்லாவிடினும் யாரேனும் புதிய, அல்லது முக்கியமான நபருக்கு முகவரி எழுதப்பட்டிருக்கும் காரணத்தால் பத்திரம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலோ, கேட்கவே வேண்டியதில்லை.

பீட்டர்ஸ்பர்க் நகரின் சாம்பல் நிற வானம் ஒரேயடியாகக் கருண்டு போயிருக்கும்; அரசாங்க அலுவலர்கள் அனைவரும் தத்தம் சம்பளத்துக்கும் சுவைக்கும் எற்ப வயிறார உண்டு தீர்ந்திருப்பார்கள்; துறையில் பேனாக்களை ஓட்டி முடிந்து, ஓட்ட சாட்டங்களெல்லாம் ஓய்ந்து, தவிர்க்க முடியாத சொந்தக்காரியங்களும் பிறரது அலுவல்களும், களைப்பறியாத மனிதன் தானாக விரும்பித் தேவைக்கும் மேலாகவே தன்மேல் சுமத்திக்கொள்ளும் வேறு பலவும் முடிவடைந்தபின் எல்லாரும் இளைப்பாறியிருப்பார்கள்; எல்லா எழுத்தர்களும் மீதியிருக்கும் ஓய்வு நேரத்தை முடிந்தவரை குதூகலமாகக் கழிக்க விரைந்து கொண்டிருப்பார்கள் – அதிக உற்சாகமுள்ள ஒருவன் நாடகமன்றம் செல்வான், மற்றொருவன் பெண்களின் தொப்பிகளைக் கண்டு களிப்பதற்காக வீதியில் உலாவப் போவான், வேறொருவன் சிறு எழுத்தனது மண்டலத்தின் விண்மீனாகச் சுடரும் அழகிய கன்னிக்குப் பாராட்டுரை பகர்வதில் பொழுதை வீணடிப்பதற்காக விருந்துக் கொண்டாட்டத்திற்கு செல்வான், நான்காமவன் (பத்துக்கு ஒன்பது பேர் செய்வது போலவே) மூன்றாம் மாடியிலோ நான்காம் மாடியிலோ இரண்டு அறைகளும் சிறு நடை அல்லது சமையலறையும் கொண்ட – சாப்பிடாமலிருப்பது, நகர்ப்புறப் பயணங்களை நிறுத்தி வைப்பது போன்ற எத்தனையோ தியாகங்களை விலையாகச் செலுத்திப் பெற்ற விளக்கு அல்லது வேறு பொருள்களால் நாகரிகப் பாவனையில் அலங்கரிக்கப்பட்ட – வீட்டில் வசிக்கும் சக எழுத்தன் எவனையாவது காணச் செல்வான்.

சுருங்கக் கூறின் எல்லா எழுத்தர்களும் தங்கள் நண்பர்களின் சிறு சிறு வீடுகளில் பரவி, கிளாசுகளில் தேநீரை உறிஞ்சுவதும், ஒரு காசு விலையுள்ள ரொட்டிகளைக் கறவுவதும், நீண்ட சுங்கான்களிலிருந்து புகையை இழுப்பதுமாக உற்சாகம் கரைபுரளச் சீட்டாடிக்கொண்டும், சீட்டுக்களைக் கலைத்துப் போடும் சமயத்தில் உயர் சமூகத்தினரைப் பற்றி அவதூறாக அரட்டையடிப்பதும் (ருஷ்யனால் தான் உயர் சமூகத்தை விட்டுவிட்டு ஒரு கணங்கூட இருக்க முடியாதே), பேசுவதற்கு வேறொன்றுமில்லாவிட்டால், கோட்டைத் தலைவனிடம் யாரோ வந்து பால்கோனெட்டி என்னும் சிற்பி அமைத்த முதல் பீட்டர் சக்கரவர்த்தியின் நினைவுச் சிலையிலுள்ள குதிரையின் வால் செதுக்கப்பட்டுவிட்டது என்று சொன்ன பழைய கதையைப் பன்னியுரைப்பதுமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டுமிருப்பார்கள். ஒரு வார்த்தையில் சொன்னால் எல்லாரும் உல்லாசமாயிருக்க முயன்று கொண்டிருப்பார்கள்; ஆனால் அந்த வேளையில் கூட அக்காக்கிய் எவ்வித இன்பத்தையும் நாடுவது கிடையாது. மாலைக் களியாட்டம் எதிலும் அவனைக் கண்டதாக எவனும் சொல்ல முடியாது.

தெவிட்டத் தெவிட்ட நகலெழுதித் தீர்ந்தபின்பு, அவன் படுக்கையில் படுத்து, மறுநாள் வரவிருக்கும் இன்பத்தைப் பற்றிய நினைப்பாலேயே முகம் முறுவலால் மலர, நாளை ஆண்டவன் நகலெழுதுவதற்கு எதை அனுப்புவானோ எனச் சிந்தித்தபடியே உறங்கிப் போவான். ஆண்டுக்கு நானூறு ரூபிள் சம்பளத்தில் தனது விதியில் திருப்தியுடன் இருக்க முடிந்த இம்மனிதனின் வாழ்க்கை இவ்வாறு அமைதியாகக் கழிந்தது; பட்டம்பெற்ற ஆலோசகர்கள் மட்டுமல்ல, அந்தரங்க, செயல்முறை, ராஜசபை முதலிய பல்வேறு வகை ஆலோசகர்கள் வாழ்விலும், எவருக்கும் ஆலோசனை கூறாமலும் எவரது ஆலோசனையையும் ஏற்காமலும் இருப்பவர்களின் வாழ்விலுங்கூட மொய்க்கும் பலவித விபத்துக்கள் நேராமலிருந்தால் இந்த வாழ்க்கை கனிந்த முதுமைப் பருவம் வரை இவ்வாறே கழிந்திருக்கலாம்.

பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆண்டுக்கு நானூறு ரூபிள்களோ, ஏறக்குறைய அதே தொகையோ சம்பளம் வாங்குபவர்கள் எல்லாருக்கும் பெரிய எதிரி ஒன்று உண்டு. அது வேறு எதுவுமன்று, நமது வடக்கத்தியக் கூதல் தான் – அது உடம்புக்கு நல்லது என்று சிலர் சொன்ன போதிலும். காலை ஒன்பது மணிக்கு, அலுவலகம் செல்லும் அரசாங்க ஊழியர்களால் தெருக்கள் நிறைந்திருக்கும் வேளை பார்த்து அது விதி விலக்கின்றி எல்லா மூக்குகளையும் வலிமையாகச் சுரீர் சுரீர் என்று நிமிட்டுகிற நிமிட்டில் அப்பாவி எழுத்தர்கள் மூக்குகளை எங்கே வைத்துக்கொள்வது என்று தெரியாமல் தவிப்பார்கள். மிக உயர் பதவி வகிப்பவர்களுக்குக் கூடக் கடுங்குளிர் காரணமாக நெற்றிப் பொட்டு விண்விண்ணென்று தெறித்து, கண்களில் நீர் நிறைந்து வழியும் அந்நேரத்தில் பாவம், பட்டம்பெற்ற ஆலோசகர்கள் சில சமயம் முற்றிலும் தற்காப்பற்றவர்கள் ஆகிவிடுவார்கள். மெல்லிய, நைந்த மேல்கோட்டுகளுடன் முடிந்த வரை வேகமாக ஓடி, ஐந்தாறு தெருக்களைக் கடந்து அலுவலகம் சேர்ந்ததும், வழியிலே உறைந்து போன வேலைத் திறமையும் இயற்கைத் திறன்களும் மீண்டும் குளிர் நீங்கிக் கதகதப்படையும் வரை தலைவாயிலில் கால்களைத் தொப்புத் தொப்பென்று அடித்துச் சூடேற்றிக் கொள்வது தான் அவர்களைக் காக்கும் ஒரேவழி.

படிக்க:
பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்த மாணவி !
இந்திய ஹிட்லர் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெர்மன் மாணவரின் கல்வி முடக்கம் !

வீட்டிலிருந்து அலுவலகம் வரையுள்ள சட்டபூர்வமான தூரத்தை எவ்வளவுதான் விரைவாக ஓடிக் கடக்க முயன்றாலும், தனது முதுகுத்தண்டும் தோள்களும் கடுங்குளிரால் ஒரேயடியாக நொந்து விறைத்துப் போவதை அக்காக்கிய் சிறிது காலமாக உணரலானான். இது தன் மேல் கோட்டின் குற்றமாயிருக்கலாமோ என்ற எண்ணம் முடிவில் அவன் மனத்தில் எழுந்தது. வீட்டிலே அதை நன்றாக ஆராய்ந்து பார்த்தவன், இரண்டு மூன்று இடங்களில், அதாவது முதுகிலும் தோள் பட்டைகளிலும் அது வலை வலையாக நெய்த நார்த்துணி போல ஆகியிருந்ததைக் கண்டான்; குளிர் தாராளமாக உட்புகும் அளவுக்கு மேல் துணி நைந்திருந்தது; உள் துணியோ இழை இழையாகப் பிரிந்து போயிருந்தது.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் ! காணொளி

குடியுரிமை திருத்த சட்டம், சபரிமலை தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு வழக்கு ஆகியவற்றை பற்றி மதுரையில் கடந்த டிச-22 அன்று நடைபெற்ற மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் 16ஆம் ஆண்டு விழா கூட்டத்தில்,  வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் ஆற்றிய உரைகளின் காணொளி!

CAB – NRC : மோடி அமித்ஷாவை தீண்டாமை குற்றத்தில் கைது செய் !
– வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

யார் ஒருவர் பாதிக்கப்பட்டு ஒரு நாட்டுக்கு வந்தாலும் அவர்களுக்கு அகதி அந்தஸ்து தருவதும், அவர்களுக்கு குடியுரிமை தருவதும்தான் ஐநா-வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை!

இஸ்லாமியர்கள் வரக்கூடாது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ், பிஜேபி வைத்திருக்கும் காரணம் என்ன? ஈழத்தமிழர்கள் வரக்கூடாது என்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் காரணம் என்ன? மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும் ஒருவரை புறக்கணித்தால் அது தீண்டாமைதான் ! எனவே தீண்டாமை குற்றத்தின் கீழ், மோடியும் அமித்ஷாவும் இந்த சட்டத்திற்கு வாக்களித்த அனைத்து எம்.பிக்களும் கைதுசெய்யப்பட வேண்டும்.

முஸ்லீம்களை ஒழித்துக் கட்டவே தேசிய குடிமக்கள் பதிவேடு !
– ஆளூர் ஷாநவாஸ் 

மோடி அரசு அறிவித்திருக்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு முசுலீம்களை இந்தியாவில் இருந்து ஒழித்துக் கட்டி ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றவே ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம் என்பதை அம்பலப்படுத்துகிறார் ஆளூர் ஷாநவாஸ்..

பாருங்கள் ! பகிருங்கள் !