Thursday, May 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 352

காஷ்மீர் : நான் நான்கு மகன்களை இழந்திருக்கிறேன் | படக் கட்டுரை

0

ந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அனந்தநாக், காஷ்மீர் பிரச்சினையில் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பெண்களைக் கொண்ட பகுதி.  பலர் தங்களுடைய கணவர்களை, மகன்களை, தந்தைகளை இழந்தவர்கள்.  மேலும், ஏறக்குறை 1500 அரை கைம்பெண்களுக்கு தங்களுடைய கணவர்கள் எங்கே இருக்கிறார்கள் எனத் தெரியாது.

“நான் நான்கு மகன்களை இழந்திருக்கிறேன். அதில் மூவர் கிளர்ச்சியாளர்கள். நான்காவது மகன், கிளர்ச்சியாளர்களுக்கு உணவு எடுத்துக்கொண்டு போனபோது, என்கவுண்டர் செய்யப்பட்டான்” என்கிறார் 83 வயதான நப்சா பானோ. தெற்கு காஷ்மீரில் உள்ள சோம்ப்ரைட் கிராமத்தில் சிறியதொரு வீட்டில் வசிக்கிறார் இவர்.

நப்சா தன்னுடைய மகன்கள் உயிரிழந்த நேரத்தை நினைவில் கொண்டுவருகிறார்.  சிறுநீரக பிரச்சினை காரணமாக தனது கணவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இறந்தபோது தனது நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டதாகச் சொல்கிறார் இவர்.

அணு ஆயுத நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் உள்ளது. இரு நாடுகளும் இந்தப் பகுதியை முன்வைத்து இரண்டு போர்களை நிகழ்த்திவிட்டன.  கடந்த மூன்று பத்தாண்டுகளில் 70 ஆயிரம் மக்கள் தங்களுடைய வாழ்க்கையை தொலைத்திருக்கிறார்கள்.

மன்சூர் அகமதுவின் 85 வயதான தாய் குருஷி, அரை இருள் சூழ்ந்த அறையில் தனது மகன் இறந்ததைக்கூட அறியாமல் அமைதியாக இருக்கிறார். இந்திய இராணுவத்தில் பணியாற்றிய அகமது, ஜம்மு பகுதியில் 2018-ம் ஆண்டில் நடந்த சன்ஜுவான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

“அவர் திரும்பத் திரும்ப தன்னுடைய மகனைப் பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார். அவர் உயிரோடு இல்லை என்பதை அவர் அறியவில்லை” என்கிறார் அகமதுவின் தங்கை. “தன்னுடைய மகனின் தொலைபேசி அழைப்புக்காக அவர் காத்திருக்கிறார்”.

படிக்க:
இந்தியனே…. காஷ்மீரின் குரலைக் கேள் !
காஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு !

மனநல மருத்துவரான ஆரிஃப் மக்ரிபி கான், ஸ்ரீநகர் பகுதியில் மனநல பிரச்சினைக்குள்ளான நோயாளிகளுக்கென்று தன்னார்வதொண்டு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். 2016-ம் ஆண்டுக்கு பிறகு நோயாளிகளின் வருகை அதிகமாகியுள்ளதாக தெரிவிக்கிறார்.

“இவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினை அதிர்ச்சியினால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் சீர்கேடு (post-traumatic stress disorder – PTSD). ஒரு பெண் தன்னுடைய குடும்ப உறுப்பினரை இழக்கும்போது, பல மாதங்களுக்கு PTSD தவிர்க்க முடியாததாகிறது.  அது இன்னும் மோசமான பிரச்சினைகளுக்கு இட்டுச் சென்று, அதிலிருந்து வெளிவர முடியாமல் போகிறது” என்கிறார் ஆரிஃப்.

முகப்புப் படத்துக்கான குறிப்பு: தெற்கு காஷ்மீரின் சோபியனில் ஒரு கிளர்ச்சியாளரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட பெண்கள்.  2016-ம் ஆண்டு ஆளுமைக்குரிய கிளர்ச்சியாளர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதற்கு பிறகு, சோபியன் மற்றும் புல்வாமா மாவட்டங்கள் உள்ளூர் கிளர்ச்சியாளர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.

ஷகிலாவின் கணவர் ஒரு போலீசு அதிகாரி. ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு வெளியே அவரும் உடன் பணியாற்றியவர்களும் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.  “என்னுடைய குழந்தைகள் அவருடைய அப்பாவைப் பற்றி தொடர்ந்து கேட்டபடியே இருக்கிறார்கள். அவருக்கு என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. சில நேரங்களில் அவர்களுடைய கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடிவதில்லை” என்கிறார் ஷகிலா.

காஷ்மீரில் 1500-க்கும் மேற்பட்ட அரை கைம்பெண்கள், தங்களுடைய கணவர்களின் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.

தெற்கு காஷ்மீரில் உள்ள குத்வானியில் என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து அதிச்சிக்குள்ளான ஒரு பெண்ணை ஒரு இளைஞர் அழைத்துச் செல்கிறார். கடந்த சில ஆண்டுகளில் இந்தப் பகுதி அதிகப்படியான எதிர்த்தாக்குதல்களையும் என்கவுண்டர்களையும் எதிர்கொண்டு வருகிறது.

நான்கு மகன்களை இழந்த நப்சா பானோ.

தெற்கு காஷ்மீரில் கிளர்ச்சியாளர் ஆசிப் மாலிக்கின் தாய், அவருடைய இறுதி ஊர்வலத்தில் முழுக்கங்களை எழுப்புகிறார்.

16 ஆண்டுகளாக தனது கணவரின் வருகைக்காக காத்திருக்கிறார் நசீமா பானோ. காஷ்மீரில் காணாமல் போன 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் அவரும் ஒருவர்.

தெற்கு காஷ்மீரின் கொகெர்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட கிளர்ச்சியாளருக்கு அஞ்சலி செலுத்தும் பெண்கள்.

இந்திய பாதுகாப்புப் படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், குல்காமின் வானிகுந்த் பகுதியில் உள்ள வீட்டிலிருந்த யாஷ்மினாவின் மகள் முஸ்கானின் நெற்றியைத் துளைத்தது ஒரு துப்பாக்கிக் குண்டு.

இந்திய இராணுவத்தில் பணியாற்றிய மன்சூர் அகமதுவின் 85 வயதான தாய் குருஷி, தன் மகன் பலியானதை இன்னமும் அறியவில்லை.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் நகரில் உள்ள ஒரு சன்னதிக்கு வெளியே வழிபடும் பெண்கள்.

காஷ்மீரி கிளர்ச்சியாளரின் தாய் இவர். எல்லை தாண்டிச் சென்ற 20-களில் இருந்த இவருடைய மகன் திரும்பவேயில்லை. 1990-களின் ஆரம்ப காலத்தில் காஷ்மீரில் கிளர்ச்சியாளர்கள் உருவாகத் தொடங்கியபோது, பல இளம் சிறார்கள் பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீருக்குள் ஆயுத பயிற்சிக்காகவும் இந்தியாவின் ஆட்சியை எதிர்த்தும் போராடவும் எல்லைத் தாண்டிச் சென்றார்கள்.

தெற்கு காஷ்மீரின் அர்வானி கிராமத்தில் ஒரு கிளர்ச்சியாளரின் இறுதி சடங்கை பார்வையிடும் பெண்கள்.

தெற்கு காஷ்மீரில் உள்ள சூஃபி சன்னதியை வணங்கும் ஒரு பெண்.


தமிழாக்கம்: கலைமதி
நன்றி: அல்ஜசீரா


படிக்க:
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !
காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!
காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!

மக்களின் வரிப் பணத்தில் மோடியின் புகழ்பாடும் ஃபேஸ்புக் விளம்பரங்கள் !

ஃபேஸ்புக் விளம்பரங்கள் வெளியிடப்படுவதில், பிரமோட் செய்யப்படுவதில் உள்ள வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வாரமும் யார், யார் எந்தப் பிரதேசத்திலிருந்து விளம்பரங்களை அளித்தார்கள், எவ்வளவு ரூபாய்களுக்கு அளித்தார்கள் என்ற தகவல்களை வெளியிட ஆரம்பித்துள்ளது.
இந்தத் தகவல்கள் தேடக்கூடிய வகையிலான தகவல் தொகுப்பாக பயனாளர்களுக்குக் கிடைக்கிறது. 2019 பிப்ரவரி முதல் மார்ச் 2, 2019 வரையில் விளம்பரம் கொடுத்தவர்களின் பட்டியல் இப்போது வெளியிடப்பட்டிருக்கிறது.

எதிர்பார்த்ததைப் போலவே அதிகம் விளம்பரம் செய்திருப்பது பாரதீய ஜனதாக் கட்சி, அதன் ஆதரவு ஃபேஸ்புக் பக்கங்கள் ஆகியவைதான். ஆனால், அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், இந்திய அரசும் மக்களின் வரிப் பணத்தை பெருமளவில் இந்த விளம்பரங்களில் வாரியிறைத்திருக்கிறது. இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவை பிரதமரின் புகழ்பாடுபவை.

படிக்க:
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !

பிப்ரவரி முதல் மார்ச் வரை 4,13,88,087 ரூபாய் இந்தியாவிலிருந்து ஃபேஸ்புக்கில் செலவிடப்பட்டுள்ளது. அதில் முதலிடத்தில் இருப்பது பாரத் கி மன் கி பாத் என்ற பா.ஜ.க. ஆதரவு பக்கம்தான். மொத்தமே 3 லட்சத்து பத்தாயிரம் ஃபாலோயர்களைக் கொண்ட இந்தப் பக்கம், ஒரு கோடியே 19 லட்சத்து சொச்சம் ரூபாய்களை விளம்பரத்திற்காக அள்ளியிறைத்திருக்கிறது. மொத்தம் ஆயிரத்து ஐநூறு விளம்பரங்கள்!! இந்த பாரத் கி மன் கி பாத் ஃபேஸ்புக் பக்கத்தின் உள்ள இணைய தள முகவரியை அழுத்தி யார் எனப் பார்த்தால், அது பாரதீய ஜனதாக் கட்சிக்குச் சொந்தமானதாக இருக்கிறது.

இரண்டாவது இடத்தில் இருப்பது NationwithNaMo. மொத்தம் 66 லட்ச ரூபாயை விளம்பரங்களுக்குச் செலவழித்திருக்கிறார்கள். இதுவும் பா.ஜ.க.வின் இணையதளம்தான்.

மூன்றாவது இடத்தில் இருப்பது MygovIndia. இது இந்திய அரசுக்குச் சொந்தமான ஃபேஸ்புக் பக்கம். ஒரு மாதத்தில் 34 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை விளம்பரங்களுக்கு வாரி இறைத்திருக்கிறார்கள். எல்லாம் நம் வரிப்பணம்தான். விளம்பரங்களில் எல்லாம் நரேந்திர மோதியின் சாதனைதான். ஒரு கட்டத்தில் ஒன்பது விளம்பரங்களுக்கு சுமார் 9 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது. கீழே ஸ்க்ரீன் ஷாட் இருக்கும் விளம்பரத்திற்கு மட்டும் 1 முதல் 2 லட்ச ரூபாய் செலவழித்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து அளிக்கப்பட்ட விளம்பரத்தில் அதிகமாக செலவழித்த அரசியல் கட்சி பா.ஜ.கதான். 96 சதவீதம்!! காங்கிரஸ் வெறும் மூன்று சதவீதம்தான்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கே.சி. பழனிச்சாமி போன்றவர்கள் தலா 20 ஆயிரம் ரூபாயை செலவழித்திருக்கிறார்கள்.

திராவிட நாஜி இன வெறியர்கள் ஒரு பைசாவைக்கூட ஃபேஸ்புக்கில் செலவழிக்கவில்லை.

முகநூலில் : Muralidharan Kasi Viswanathan

பொள்ளாச்சி கொடூரம் : தெருவில் நிறுத்தி தண்டனை கொடு ! தீவிரமடையும் மாணவர் போராட்டம் !!

பொள்ளாச்சி கொடூரம்! ஒருத்தனையும் தப்பவிடாதே! அதிமுக கிரிமினல் நாகராஜ் – திரு கும்பலை தூக்கிலிடு! என்ற முழக்கம் தமிழகமெங்கும் எதிரொலிக்கிறது.

இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு எதுவுமில்லை என்று மாவட்ட போலீசு அதிகாரி தாமாக முன்வந்து விளக்கமளிக்கிறார். வாழ்வாதாரம் பறிக்கப்படுவதற்கு எதிராகப் போராடும் மக்கள் தங்கள் கோரிக்கைகளை நேரில் முறையிட முயற்சித்தாலும் மாவட்ட ஆட்சியரை சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கீழ்நிலை அதிகாரிகளிடம் மனுவை கொடுத்துவிட்டு செல்லுங்கள் என துரத்தியடிப்பதுதான் வாடிக்கை.

இன்று, அதிமுக கிரிமினல் கும்பலைச் சேர்ந்த பார் நாகராஜனிடமிருந்து பவ்யமாக மனுவை பெற்றுக் கொள்கிறார் மாவட்ட ஆட்சியர். பொள்ளாச்சி கொடூரத்தை நிகழ்த்திய குற்றவாளிகளை சுதந்திரமாக உலவ அனுமதித்துவிட்டு, இந்த கொடூரத்தை அம்பலப்படுத்திய நக்கீரன் இதழ் ஆசிரியர் கோபாலுக்கு நோட்டீசு அனுப்பி விசாரணைக்கு அழைத்திருக்கிறது, சி.பி.சி.ஐ.டி. போலீசு.

பொள்ளாச்சி கொடூரத்தை நிகழ்த்திய குற்றக்கும்பலுக்கும் அதிமுக-வுக்கும் மட்டுமல்ல அதிகார வர்க்கத்துக்கும் தொடர்பிருப்பதை வெட்டவெளிச்சமாக்கியிருக்கிறது இந்த சம்பவங்கள். சட்டமும் சர்க்காரும் தண்டிக்கும் என்று பாமர மக்களிடம் மிச்சமிருந்த நம்பிக்கையையும் தகர்த்திருக்கிறது.

இந்தச் சூழலில்தான், தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக தொடர்கிறது மாணவர்களின் எழுச்சிமிக்கப் போராட்டங்கள். முன்னுதாரணமும் உத்வேகமும் கொண்ட மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பது நமது கடமை! அதிமுக கிரிமினல் கும்பலும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து நிற்பது அம்மணமான நிலையில் தெருப்போராட்டங்களை தீவிரமாக்குவதைத் தவிர வேறு என்ன வழியிருக்கிறது?

சிதம்பரம் – அண்ணாமலைப் பல்கலை கழகம் :

பொள்ளாச்சி பாலியல் வன்முறை – வெறியாட்டம்! அதிமுக கிரிமினல் நாகராஜ் – திரு கும்பலை தூக்கிலிடு! என்ற முழக்கத்துடன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். கடந்த மார்ச் – 12 அன்று கலைத்துறை மாணவர்களும்; மார்ச் – 13 அன்று அனைத்துக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் கலை – அறிவியல் துறை மாணவர்களும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று மார்ச் – 14 அன்று பொறியியல் துறை மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பல்கலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

மதுரை – சட்டக்கல்லூரி :

மாணவர்களின் மனித சங்கிலிப் போராட்டம்.

திருச்சி – மக்கள் அதிகாரம் :

பாலியல் குற்றவாளிகளை மக்கள் முன்னிலையில் தண்டிக்க வேண்டும் – திருச்சி ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் கோரிக்கை.

சீர்காழி – மக்கள் அதிகாரம் :

தேனி – மக்கள் அதிகாரம் :

தேனி மாவட்டம் கம்பம் வ.உ.சி. திடலில் மார்ச்-14 அன்று பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் மக்கள் அதிகாரம் அமைப்பும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போலீசு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டம்.

தஞ்சை மண்டலம் – மக்கள் அதிகாரம் :
தொகுப்பு:


படிக்க:
பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

நீதிமன்றத்தில் அல்ல ! போராட்டத்தில்தான் தீர்வு ! | வழக்கறிஞர் பாலன் உரை | காணொளி

திருச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் 23 அன்று, கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் ! மாநாட்டில் கலந்து கொண்டு பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தோழர் பாலன் அவர்கள் உரையாற்றுகையில்,

”ஓட்டுப் போடும் அந்த 5 நொடிகளுக்கு மட்டுமே நமக்கு வழங்கப்படும் இந்த 5 வினாடி ஜனநாயகத்தில், சட்டத்தின் ஆட்சி துப்பாக்கியின் ஆட்சியாக மாறிவிட்டது. இந்தியா முழுவதும் கடந்த 5 ஆண்டுகளாக இதுதான் நிலைமை. மணிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் இதே நிலைமைதான் கடந்த 60 ஆண்டுகளாக நீடிக்கிறது. அங்கு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஏகாதிபத்தியங்களுக்கு இந்தியாவை சூறையாட அனுமதிக்கும் தனியார்மயம் தாராளமயம் நடைமுறைப்படுத்தப்பட்ட போது, தடா சட்டம் அமல்படுத்தப்பட்டது. போராடியவர்களை, செயற்பாட்டாளர்களை ஒடுக்க அச்சட்டத்தில் போலீசுக்கு கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டது, இந்தச் சட்டமும் இந்தியாவின் அரசியல் சாசனத்தின்படி செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

படிக்க:
♦ பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி
♦ விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !

இந்தச் சட்டம் காலாவதியானதும், இதன் சரத்துகளை அப்படியே கொண்ட MCOCA, KCOCA,RCOCA, GCOCA என்பது போன்ற மாநிலந்தழுவிய ஒடுக்குமுறைச் சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்னர், வாஜ்பாயி ஆட்சிக்காலத்தில் பொடா சட்டம் அமல்படுத்தப்பட்டது. காங்கிரசு கட்சி தான் ஆட்சிக்கு வந்தால் பொடாவை ரத்து செய்வதாகக் கூறியது. ஆட்சிக்கு வந்ததும் பொடாவை நீக்கி விட்டு ஊபா சட்டத்தைக் கொண்டுவந்தது. இன்றுவரை அச்சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்களுக்காக களத்தில் நிற்பவர்கள் மீது இன்று வரை இத்தகைய கருப்புச் சட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

ஒருபுறத்தில் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களை அங்கீகரிக்கும் நீதிமன்றம், மறுபக்கத்தில் அனைத்து மக்கள் நலத் திட்டங்கள் ரத்து செய்யப்படுவதையும் அங்கீகரிக்கிறது. இவை அனைத்தும் ஒன்றை மட்டுமே நமக்கு அப்பட்டமாகச் சொல்கின்றன. நீதிமன்றத்தில் தீர்வு என்றும் கிடைக்காது. மாறாக வீதியிலேதான் தீர்வு. ஆகவே கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடிக்க வீதியில் இறங்கிப் போராடாமல் தீர்வு இல்லை” என்றார்.

முழு உரையையும் காண …

பாருங்கள் ! பகிருங்கள் !

போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !

0

மார்ச் 14-ம் தேதியன்று (1883-ம் ஆண்டு) பிற்பகல் இரண்டே முக்கால் மணிக்கு நம்மிடையே வாழ்ந்த மாபெரும் சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். நாங்கள் அவரை விட்டுப் பிரிந்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. நாங்கள் திரும்பி வந்த பொழுது அவர் தன்னுடைய சாய்வு நாற்காலியில் அமைதியாக ஆனால் நிரந்தரமாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம்.

இந்த மேதையின் மரணம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் போர்க்குணமிக்க பாட்டாளி வர்க்கத்துக்கும் வரலாற்று விஞ்ஞானத்துக்கும் அளவிட முடியாத இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இம்மகத்தான மனிதருடைய பிரிவினால் ஏற்பட்டிருக்கின்ற இடைவெளியை நாம் சீக்கிரமாகவே உணருவோம்.

அங்கக இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல, மனித சமூக வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்; மனிதன் அரசியல், விஞ்ஞானம், கலை, சமயம், இதரவற்றில் ஈடுபடும் முன்னர் முதலில் உண்ண உணவையும், இருக்க இருப்பிடத்தையும், உடுக்க உடையையும் பெற்றிருக்க வேண்டும், என்னும் சாதாரணமான உண்மை இதுவரை சித்தாந்த மிகை வளர்ச்சியினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது; ஆகவே உடனடியான பொருளாயத வாழ்க்கைச் சாதனங்களை உற்பத்தி செய்தல், அதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட மக்களினம் அல்லது குறிப்பிட்ட சகாப்தத்தின் போது அடைந்திருக்கின்ற பொருளாதார வளர்ச்சியின் அளவு என்னும் அடிப்படையின் மீது சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்கள், சட்டவியல் கருதுகோள்கள், கலை மற்றும் மதக் கருத்துக்கள் கூட வளர்ச்சியடைகின்றன; ஆகவே அதன் ஒளியில்தான் அவற்றை விளக்க வேண்டுமே அல்லாது இதுவரை செய்யப்பட்டதைப் போல மறுதலையாக விளக்கக் கூடாது.

ஆனால் அது மட்டுமல்ல. மார்க்ஸ் இன்றைய முதலாளித்துவ உற்பத்திமுறை மற்றும் அந்த உற்பத்திமுறை தோற்றுவித்துள்ள பூர்ஷ்வா சமூகத்தின் இயக்கத்தின் விசேஷ விதியையும் கண்டுபிடித்தார். அவர் உபரி மதிப்பைக் கண்டுபிடித்தது திடீரென்று அந்தப் பிரச்சினையின் மீது ஒளியைப் பாய்ச்சியது; அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதலாளி வர்க்கப் பொருளியலாளர்கள், சோஷலிஸ்டு விமர்சகர்கள் ஆகிய இரு தரப்பினரும் இதற்கு முன்பு செய்த எல்லா ஆராய்ச்சிகளும் இருட்டிலே திண்டாடிக் கொண்டிருந்தன.

படிக்க:
♦ மார்க்ஸ் எனும் அரக்கன் ! வீடியோ
♦ சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்

ஒரு முழு வாழ்க்கைக் காலத்துக்கு அத்தகைய இரண்டு கண்டுபிடிப்புகளே போதும். அத்தகைய ஒரு கண்டுபிடிப்பைச் செய்ய முடிந்தால் கூட அந்த மனிதர் அதிர்ஷ்ட முடையவரே. ஆனால் மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியின் ஒவ்வொரு துறையிலும் அவர் பல துறைகளை ஆராய்ந்தார், ஒரு துறையில்கூட மேம்போக்கான ஆராய்ச்சி செய்யவில்லை – கணிதத்தில் கூட சுயேச்சையான கண்டுபிடிப்புகளைச் செய்தார்.

அத்தகைய விஞ்ஞான மனிதர் அவர். ஆனால் இது அவருடைய சாதனையில் அரைப் பங்கு கூட அல்ல. மார்க்ஸ் விஞ்ஞானத்தை இயக்காற்றலுடைய, புரட்சிகரமான சக்தியாகக் கண்டார். ஏதாவதொரு தத்துவார்த்த விஞ்ஞானத் துறையில் ஒரு புதிய கண்டுபிடிப்பை – அதன் செய்முறைப் பிரயோகம் எப்படியிருக்கும் என்பது இன்னும் முழுமையாகக் கற்பனை செய்ய முடியாத நிலையில் அவர் எத்துணை அதிகமான மகிழ்ச்சியுடன் வரவேற்ற போதிலும், அக்கண்டுபிடிப்பு தொழில்துறையில் மற்றும் பொதுவாக வரலாற்று வளர்ச்சியில் உடனடியான புரட்சிகர மாற்றங்களைத் தூண்டுமானால் முற்றிலும் வேறுவிதமாக மகிழ்ச்சி அடைந்தார். உதாரணமாக, மின்சாரத் துறையில் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியை அவர் நுணுக்கமாகக் கவனித்தார். சமீப காலத்தில் மார்செல் டெப்ரேயின் ஆராய்ச்சிகளைப் பற்றியும் அப்படியே செய்தார்.

பாட்டாளி வர்க்கத்தின் இரு பெரும் மேதைகள்

ஏனென்றால் மார்க்ஸ் முதலில் ஒரு புரட்சிக்காரர். ஏதாவதொரு வழியில் முதலாளித்துவ சமூகத்தை மற்றும் அது உருவாக்கியிருக்கின்ற அரசு நிறுவனங்களை ஒழிப்பதற்கு, நவீனப் பாட்டாளி வர்க்கத்தின் – அதன் சொந்த நிலைகளையும் அதன் தேவையையும் உணரும்படி, அதன் விடுதலையின் நிலைமைகளை உணரும்படிச் செய்த முதல் நபர் அவரே – விடுதலைக்குப் பங்களிப்பது அவருடைய மெய்யான வாழ்க்கைப் பணியாகும். போராட்டமே அவருக்கு உயிர். அவரைப் போல உணர்ச்சிகரமாக, உறுதியாக, வெற்றிகரமாகப் போராடுவதற்கு எவராலும் முடியாது. முதல் Rheinische Zeitung (184 2), பாரிஸ் Vorwarts (1844), Deutsche-Brüsseler-Zeitung (1847), Neue Rheinische Zeitung (1848 – 1849), New-York Daily Tribune (1852 – 1861) இதழ்களிலும் போர்க் குணமிக்க பிரசுரங்களிலும், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ் மற்றும் லண்டன் ஸ்தாபனங்களிலும் அவருடைய பணி; இறுதியாக, எல்லாவற்றுக்கும் சிகரமாக சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். அவர் வேறு ஒன்றையும் செய்யாதிருந்தால் கூட இந்தச் சாதனையைப் பற்றி மட்டுமே நிச்சயமாகப் பெருமை அடைய முடியும்.”

ஆகவே மார்க்ஸ் தம் காலத்தில் அதிகமாக வெறுக்கப்பட்ட, மிகவும் அவதூறு செய்யப்பட்ட மனிதராக இருந்தார். எதேச்சதிகார அரசாங்கங்கள், குடியாட்சி அரசாங்கங்கள் ஆகிய இரண்டுமே அவரைத் தம்முடைய நாடுகளிலிருந்து வெளியேற்றின. முதலாளி வர்க்கத்தினர், அவர்கள் பழமைவாதிகளோ அல்லது அதி தீவிர ஜனநாயகவாதிகளோ – மார்க்ஸ் மீது அவதூறுகளைக் குவிப்பதில் ஒருவருக்கொருவர் போட்டியிட்டனர். இவை அனைத்தையும் அவர் ஒட்டடையைப் போல ஒதுக்கித் தள்ளினார். அவற்றைப் புறக்கணித்தார்; இன்றியமையாத அவசியம் நிர்ப்பந்தித்தால் மட்டுமே அவற்றுக்குப் பதிலளித்தார். சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பா மற்றும் அமெரிக்கக் கண்டங்களின் எல்லாப் பகுதிகளிலும் லட்சக்கணக்கான புரட்சிகர சகதொழிலாளர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரியவராக அவர் மரணமடைந்த பொழுது அவர்கள் கண்ணீரைச் சொரிந்தார்கள். அவருக்குப் பல எதிரிகள் இருந்திருக்கலாம், ஆனால் அநேகமாக ஒரு தனிப்பட்ட விரோதிகூட இல்லை என்று நான் துணிந்து கூறுவேன்.

அவர் பெயர் யுகங்களுக்கும் நிலைத்திருக்கும்; அவருடைய பணியும் நிலைத்திருக்கும் !

– மார்ச் 17, 1883-ல் லண்டன், ஹைகேட் இடுகாட்டில் பி. எங்கெல்ஸ் ஆங்கில மொழியில் நிகழ்த்திய உரை.

நூல்: மார்க்ஸையும் ஏங்கெல்சையும் பற்றிய நினைவுக் குறிப்புகள்
பக்கம் 510 – 513
வெளியீடு: முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ

பொள்ளாச்சி கொடூரம் : ஒருத்தனையும் தப்ப விடாதே ! கிளர்ந்தெழும் மாணவர் போராட்டம் !

பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய ஒருத்தனையும் தப்ப விடக்கூடாது; நேர்மையான நீதிபதி கண்காணிப்பில் சிறப்பு விசாரணை நடத்தி உடனடியாகத் தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டங்களும், சாலை மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

பரவலாக தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளில்  மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். உடுமலை GVG கல்லூரி மாணவிகளும், வேலூர் ஊரிஸ் கல்லூரி மாணவிகளும் ஆயிரக்கணக்கில் திரண்டதோடு உணர்வுப் பூர்வமான பங்கேற்புடன் சாலை மறியல் போராட்டங்களையும் முன்னெடுத்திருக்கின்றனர்.

சமூகவலைத் தளங்களில் போராட்ட செய்திகள் உடனுக்குடன் பகிரப்படுவதோடு, தமிழகமெங்கும் தீயாய் பரவிவருகிறது மாணவர்களின் எழுச்சிமிக்கப் போராட்டம்!!

உடுமலை  GVG மகளிர் கல்லூரி :

பொறுப்பில்லாத ஆட்சி! பொள்ளாச்சியே சாட்சி!! – உடுமலை GVG கல்லூரி மாணவிகள் முழக்கம்! உடுமலை – பொள்ளாச்சி சாலையை மறித்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

வேலூர் ஊரிசு கல்லூரி :

வேலூர் ஊரிசு கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு சட்டக்கல்லூரி :

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி :

சென்னை மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புமாஇமு தோழர்கள் ஒருங்கிணைத்தனர்.

கரூர் அரசு கலைக் கல்லூரி :

கரூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஒருங்கிணைத்திருந்தது.

ஈரோடு CNC கல்லூரி :

வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஈரோடு CNC கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் – அண்ணாமலை பல்கலை :

அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், குற்றவாளிகளை தண்டிக்கக் கோரி மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

சென்னையில் பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் :

அதிமுக கிரிமினல் குற்ற கும்பலை கைது செய்து சிறையிலடை! தூக்கில்போடு! என்ற முழக்கங்களுடன், சென்னை மதுரவாயல் ரேசன்கடை பேருந்து நிறுத்தம் அருகே பு.மா.இ.மு. – வின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பொள்ளாச்சி பாலியல் வன்முறை – வெறியாட்டம் ! அதிமுக கிரிமினல் நாகராஜ் – திரு கும்பலை தூக்கிலிடு! அதிகாரத்தை மக்கள் கையில் எடுப்போம்! பாலியல் வெறியர்களைத் தண்டிப்போம்! என்ற அறைகூவலோடு மக்கள் அதிகாரம் அமைப்பினர் தாங்கள் செயல்படும் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.

“அ.தி.மு.க. நாகராஜ், துணை சபாநாயகர் மகன்கள் பிரவீன், முகுந்தனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஏன் கைது செய்யவில்லை?’’ எனக் கேள்வி எழுப்பும் இவ்வமைப்பினர், “பாலியல் வக்கிரங்களை உற்பத்தி செய்யும் ஆணாதிக்க பாலியல் நுகர்வு வெறி, ஆபாச இணையதளங்களை தடுக்கமுடியாத அரசே குற்றவாளி!’’ எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

திருச்சி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் :

திருச்சி – மத்திய பேருந்து நிலையம் விக்னேஷ் ஓட்டல் அருகில் மார்ச் – 14 அன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு நுற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

புதுச்சேரி மக்கள் அதிகாரம் :

புதுச்சேரியில், மார்ச் -13 அன்று மாலை பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் சிந்தனையாளர் இயக்கம்; மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்; திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த முன்னணியாளர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

பென்னாகரம் – மக்கள் அதிகாரம் :

பென்னாகரம் – பேருந்து நிலையம் அருகே மார்ச் – 14 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் – வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் :

பொள்ளாச்சி கொடூரத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் கோவை எஸ்.பி பாண்டியராஜனை கண்டித்து மார்ச் – 14 அன்று காலை தஞ்சாவூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொகுப்பு:


படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்

”தெய்வம் தொழாஅள்” என்ற குறளானது பெண்அடிமைத்தனம் அல்ல,
மாறாக இது ஒரு பார்ப்பனிய எதிர்ப்புக்கலகக் குரல் – வி.இ.குகநாதன்

ள்ளுவரின் பின்வரும் குறளானது பெரிதும் அறியப்பட்ட ஒன்றாகும்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் : 55)

இந்தக் குறளிற்கான விளக்கத்தினைப் பலரும் “வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!” என்ற பொருள் படவே கூறிவருகின்றார்கள். உண்மையிலேயே கணவனைக் கடவுளிலும் மேலாக வழிபடச்சொல்லும் ஒரு பெண் அடிமைத்தனக் குறளாகவா இக் குறள் உள்ளது எனப் பார்ப்போம். கணவனை வழிபடச்சொல்லுகின்றார் என வைத்தாலும் ஏன் கடவுளைக் கும்பிட வேண்டாம் என்கின்றார்? ஒருவேளை கடவுளையே கும்பிடவேண்டாம் எனப் பகுத்தறிவு பேசுகின்றார் என்றால், அந்தப் பகுத்தறிவு பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துமா? போன்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன. பிறப்பால் எல்லோரும் சமன் (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்) என்று கூறிய வள்ளுவர் எவ்வாறு பிறப்பினடிப்படையிலான பால் வேறுபாட்டினை நியாயப்படுத்துவார்? மேற்கூறிய காரணங்களால், குறித்த இக் குறளிற்கு ஏற்கனவே பலர் கூறிய விளக்கம் பொருத்தமற்றது எனத் துணிந்து கூறலாம்.

எனவேதான் இக் குறளிற்கான விளக்கத்தினை வேறு வகையில் பார்க்கவேண்டியுள்ளது. இக் குறளினை எளிமை கருதி மூன்று பகுதிகளாப் பிரித்துப் பொருள் கண்டு, பின்னர் முழுமையாகப் பார்ப்போம்.

“தெய்வம் தொழாஅள் ; கொழுநன் தொழுதெழுவாள் ;
பெய்யெனப் பெய்யும் மழை.”

இந்த மூன்றுபகுதிகளிற்குமான பொருளை பின்னிருந்து முன்னாகப் பார்ப்போம் (இது ஒரு வகையில் தேர்வில் எளிமையான கேள்விகளை முதலில் அணுகுவது போன்ற ஒரு முறை).

பெய்யெனப் பெய்யும் மழை :

“பெய் எனப் பெய்யும்” மழை என்பதற்கு “மனைவி ஆணையிட மழை பெய்யும்” என்பது போன்றே இதுவரைப் பலராலும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிற்குப் பொருந்தாத “மந்திரம் ஓத மாங்காய் வரும்” போன்ற கருத்தை வள்ளுவர் வேறு எங்குமே கூறாதபோது, இந்த விளக்கம் பொருத்தமில்லை என்பதே எனது கருத்து. பொதுவாக இன்றும் பெரு மழை பெய்யும்போது பேச்சுவழக்கில் “மழை பெய்யோ பெய் எனப் பெய்தது” என்கின்றோம். இங்கு பெய் என்று கூறியவுடன் பெய்கின்றது என்ற பொருள் அல்லவே. அதுபோன்றே இங்கும் ‘’பெய் எனப் பெய்யும்’’ என்பதனைத் தேவைப்படும்போது பெய்யும் மழை என்றே கொள்ள வேண்டும். மழை பொதுவாக நன்மை தருவது என்றாலும், பொருத்தமற்ற நேரங்களில் பெய்யும் மழையால் உழவர்களிற்கு அழிவும் ஏற்படலாம். எனவேதான் பொருத்தமான நேரத்தில் பெய்யும் மழை முதன்மை பெறுகின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், உழவர் மழை பெய்ய வேண்டும் என நினைக்கும்போது மழை பெய்தால், அதுவே சிறப்பானது, அத்தகைய மழையினையே வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

திருக்குறள் இடம்பெறும் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எனும் அதே தொகுதியினுள் இடம்பெறும் இன்னொரு நூலான நல்லாதனார் எழுதிய திரிகடுகம் நூலிலும் ‘’பெய் எனப் பெய்யும் மழை’’ என்ற தொடர் உள்ளது (இவ்விரு நூல்களுமே காலத்தால் ஏறக்குறைய சமனானவை).

‘’கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன்; இவர் மூவர்
பெய் எனப் பெய்யும் மழை’’ திரிகடுகம் (96) – நல்லாதனார்

இங்கு அன்பால், அறிவால் ஆளும் பெண்டாட்டி (பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி), தவசி (தன் நெறிக்கு உண்டான நோன்புகளை, முறைப்படி செய்து முடிப்பான் தவசி), மக்களுக்கு வரும் கொடுமைகளை நீக்கி நல்லது செய்யும் அரசன் ஆகிய மூவரும் எந்தவித பயனும் கருதாமல் தேவைப்படும் போது பெய்யும் மழைக்குச் சமனானவர்கள் என்ற பொருளிலேயே பாடல் இடம்பெற்றுள்ளது (இங்கு தவசியோ அல்லது அரசனோ கணவனை வழிபடுபவர்கள் அல்ல). எனவே, இதே விளக்கத்தினையே நாம் குறளில் இடம்பெறும் பெய் எனப் பெய்யும் மழைக்கும் கொடுக்கலாம்.
கொழுநன் தொழுதெழுவாள்:

இத்தொடரில் கொழுநன், தொழு, எழுவாள் ஆகிய மூன்று சொற்களின் பொருள்களைப் பார்ப்போம். இங்கு கொழுநன் என்பது கணவனையும், எழுதல் என்பது படுக்கையிலிருந்து எழுந்திருத்தல் என்பதையும் குறிக்கும் என்பது பல உரையாசிரியர்கள் கூறியது போன்று சரியானவையே. எஞ்சியிருக்கும் ‘’தொழு’’ என்ற வினைச்சொல்லிற்கான பொருளிலேயே இக் குறளிற்கான விளக்கத்திற்கான திறவுகோலே உண்டு. ‘’தொழு’’ என்ற சொல்லினை ‘’வழிபடு’’ என்றே பலரும் கருதியிருந்தனர். இங்கு அச் சொல்லிற்கு வேறு பொருள் இருக்கின்றதா? எனப் பார்ப்போம். தொழு என்ற வினைச்சொல்லிற்கு பல்வேறு வகைகளில் பொருள் கொள்ளலாம் எனினும் இங்கு பொருத்தமாக வருவது சேர்தல் / இணைதல் என்பதாகும். இதனைச் சற்று விரிவாகவே பார்ப்போம்.

இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொகுதி (கூட்டம்) என்ற சொல் தொழுதி என்ற சொல்லின் மருவிய வடிவமேயாகும். ‘’பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி’’ என்ற பாடலில் (நெடுநல்வாடை-15) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் கூறும் தொழுதி என்ற சொல்லும், ‘’பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி’’ (குறுந்தொகை-175) என்ற பாடலிலும் இச் சொல்லின் (தொழுதி) பயன்பாட்டினைக் காணலாம். இவற்றில் தொழுதி என்ற சொல் கூட்டம் (இணைந்து வாழுமிடம்) என்ற பொருளிலேயே இடம்பெற்றுள்ளது. பெயர்ச்சொற்கள் எல்லாம் வினைச்சொல் அடியினை ஒட்டியே பிறக்கின்றன என்ற தமிழறிஞர்களின் கருத்துப்படி, இங்கு தொழுதி என்ற சொல்லிற்கு அடிப்படையாக அமைந்த வினைச்சொல் ‘’தொழு’’ (சேரல்) என்பதேயாகும். இன்றும் மாடுகள் வாழுமிடத்தை ‘’தொழுவம்’’ என்று அழைக்கின்றோம்.

“தொழுவினிற் புலியானான்’’ (கம்பராமாயணம் மூலபல-181) என்ற பாடலில் கம்பர் விலங்குகள் சேர்ந்து வாழுமிடத்தை தொழு என்கின்றார். ‘’தொழு’’ என்ற சொல் இணையர் (கணவன்-மனைவி) சேர்ந்து வாழ்வதனைக் குறிக்கும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு சீவக சிந்தாமணியில் உள்ளது.

தொழுவில் தோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூது எயில் போல் கிளர்வுற்றதே
– சீவக சிந்தாமணி-856

இப் பாடலில் ‘’தொழுவில் தோன்றிய’’ என்பதற்கு ‘’இல் வாழ்வில் உண்டான’’ என்ற பொருளே கொள்ளப்படுகின்றது (இங்கு தொழு = இல்வாழ்வுச் சேரல்). இதனைக் கொண்டு தொழுதல் என்பதனைச் சேரல் (புணர்தல்) எனவும் கூறலாம். உங்களிற்கு இந்த ‘’தொழு’’ என்ற சொல் இப்போது என்னவாயிற்று என்ற கேள்வி எழலாம். இப்போது ‘’தொழு’’ என்ற அந்த வினைச்சொல் ‘’தொகு’’ என்ற வினைச்சொல்லாக மருவியுள்ளது (மழவு – மகவு, முழை – முகை போன்று மருவியுள்ளது). இன்றும் ‘’தொகு’’ என்ற சொல்லிற்கு சேர்த்தல் என்ற பொருள் உள்ளபோதும், மனிதர்களின் இல்லறச் சேரலை அச்சொல் இப்போது குறிப்பதில்லை. அதே போன்று ‘’தொழு’’ என்றால் இப்போது ‘’வழிபடு’’ என்ற பொருளே பெருமளவிற்குப் பயன்படுத்தப்படுவதாலேயே, குறளிற்கான விளக்கத்தில் குளறுபடி நடந்துவிட்டது. உண்மையில் குறளின் விளக்கத்தினை நாம் அந்தக்காலப் பொருளிலேயே (இல்வாழ்வுச் சேரல்) கொள்ளவேண்டும்.

மேற்கூறிய விளக்கங்களின்படி, ‘’கொழுநன் தொழுதெழுவாள்’’ என்பது கணவனுடன் சேர்த்து (புணர்ந்து) படுக்கையிலிருந்து துயில் எழுபவள் என்ற பொருளே கொள்ளவேண்டும்.

தெய்வம் தொழாஅள்:

இப்போது குறளின் மூன்றாவது பகுதிக்கு வந்தால், இங்கு ‘’தொழாஅள்’’ என்பது ‘’சேர மாட்டாள்’’ என்ற பொருளில் (நாம் ஏற்கனவே பார்த்த விளக்கத்தின்படி) வரும். இங்கு நாம் பொருள் காண வேண்டியது `தெய்வம்` என்ற சொல்லிற்கே ஆகும். தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்றுவருகிறது. இங்கு நாம் முதன்மையாகப் பார்க்கும் ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற குறள் தவிர்த்த ஏனைய ஐந்து குறள்களையும், அவற்றில் தெய்வம் என்ற சொல்லினை என்ன பொருளில் பயன்படுத்துகின்றார் எனவும் பார்ப்போம்.

“தெய்வத்தால் ஆகா(து) எனினும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” – (குறள்: 619)
{தெய்வம் = ஊழ்}

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.” – (குறள்: 1023)
{தெய்வம் = ஊழ்}

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்ந்தோர்}

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (குறள்: 43)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்வோர்}

“ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,
தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்” (குறள்: 702)
{ தெய்வம் = ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்ல மனிதன்}

மேலே ‘’தெய்வம்’’ என்ற சொல் இடம்பெறும் ஐந்து குறள்களிலும், அச் சொல்லானது வெவ்வேறு பொருள்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைக் காணலாம். இந்த வகையில் ஆறாவது குறளிலும் (குறள்: 55) தெய்வம் என்ற சொல் வேறொரு பொருள் கொள்ளலாம் என்பது தெளிவாகின்றது.

இப்போது திருக்குறள் எழுதப்பட்ட காலத்தினை கவனத்திற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே நான் இன்னொரு கட்டுரையில் (வினவு இணையத்தளத்தில் இடம்பெற்ற திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) குறிப்பிட்டது போல, ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். எவ்வாறு முன்னைய குறள்களில் ஆசீவகக் கருத்தான ஊழ் என்பதனை தெய்வமாகவும், வேறு இடங்களில் தமிழரின் நீத்தார் வழிபாட்டினைத் (வாழ்வாங்கு வாழ்ந்து நீத்தார்) தெய்வமாகவும் கொண்டாரோ, அதேபோன்று இங்கு வைதீகத் தெய்வத்தினைக் குறிப்பிடுகின்றார் (இத்தகைய வெவ்வேறு தெய்வங்கள் எல்லாம் தமிழர்களிடையே அன்று காணப்பட்டமையாலேயே, அத்தகைய வெவ்வேறான தெய்வங்களை வெவ்வேறு குறள்களில் வள்ளுவர் கையாளுகின்றார்). சரி, அந்த வைதீக தெய்வம் யாதென வேதத்தின் வழியே பார்ப்போம்.

தெய்வாதீனம் ஜகத் ஸர்வம் = உலகம், தெய்வப் பிடியில்
மந்திராதீனம் ச தேவதா = தெய்வமோ, மந்திரத்தின் பிடியில்
தே மந்த்ரம் பிராமணா தீனம் = மந்திரமோ, பிராமணப் பிடியில்
பிராமணோ மம தேவதா = பிராமணர்களே, நம் தெய்வங்கள்!

ஆம், அந்த வைதீக தெய்வம் பார்ப்பனரே ஆகும். இந்தப் பார்ப்பனக் கடவுளிற்கும், ‘’தொழாஅள்’’ என்பதற்கும் என்ன தொடர்பு? என யோசிக்கின்றீர்களா? இதற்கு இன்றும் திருமணங்களில் ஓதப்படும் வடமொழி மந்திரமான “ஸோம: ப்ரதமோ…” (மந்திரத்தையும், அதற்கான விளக்கத்தினையும் படத்தில் காண்க) என்பதனை அறியவேண்டும். இந்த மந்திரமானது ரிக் வேதத்தில் (Rig veda 10, 7:85) இருந்து தொகுக்கப்பட்டவையே. சூர்யா என்ற தேவப் பெண்ணிற்கு ஒன்றின் பின் ஒன்றாக பல தேவர்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது சொல்லப்பட்டவையே இத் திருமண மந்திரங்கள். இதனையே இன்றும் திருமணங்களில் பார்ப்பனர்கள் ஓதிவருகின்றார்கள்.

இதற்கு வேறு விளக்கங்கள் கொடுக்க அண்மைக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இராமானுசர், ஆளவந்தார் (யாமுனாசார்யர்) போன்ற வேத விற்பனர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளார்கள். இன்று வெறும் மந்திரங்களாகவே உள்ள இந்த இழிநிலையினை பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் நடைமுறைப்படுத்தவே முனைந்துள்ளார்கள். இதனை நாம் இன்றும் கேரளாவிலுள்ள தறவாடு முறையின் எச்சங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். மற்றொரு கேரளா முறை “கெட்டு கல்யாணம்’’.

(“கெட்டு கல்யாணம்” என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் உரிமை கொடுக்கப்படும்). கேரளாவிற்கு ஏன் போகவேண்டும். தமிழ்நாட்டிலேயே எமக்கு கடந்த காலத்தில் “இயற்பகை நாயனார்” என்ற எடுத்துக்காட்டு உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? சிவாச்சாரியார் ஒருவர் நாயனாரின் மனைவியினைக் கேட்டபோது, நாயனார் கூட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல், குறுக்கே வந்த உறவினர்களையும் வெட்டிச் சாய்த்தவர்.

படிக்க:
உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா
திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் | பொ. வேல்சாமி

சிலர், சிவனே பிராமண வேடத்தில் வந்ததாகவும் கூறுவார்கள். இவ்வாறு தெய்வத்தின் வடிவம், தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி ) வடிவம் தாமே என, வேதத்தினைக் காட்டி பார்ப்பனர்கள் தமிழ் மணப்பெண்களை புணர முனைந்திருந்தார்கள். (இந்த தறவாடு, இயற்பகை நாயனார் போன்ற நிகழ்வுகள் யாவும் குறளிற்குக் காலத்தால் பிந்தியவை என்றாலும், அவை கடந்த கால நடைமுறைகளின் / நடைமுறைப்படுத்த முயன்றவற்றின் எச்சங்களே). இதனாலேயே பார்ப்பனர்கள் தமது சாதி தவிர்த்த ஏனையோரினை சூத்திரர்கள் என அழைப்பார்கள். இங்கு “சூத்திரர்” என்பது “வைப்பாட்டி மக்கள்” என்றே பொருள் கொள்ளப்படும் என மறைமலை அடிகளார் தனது நூலான “தமிழர் மதம்” என்ற நூலின் 52-வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற தொடர் தெளிவாக விளங்கும் என்று நினைக்கின்றேன். அதாவது வள்ளுவர் இங்கு வேதங்கள் கூறுவது போன்று பார்ப்பனத் தெய்வத்துடன் தொழ (புணர) வேண்டாம் என்று கூறுகின்றார்.

குறளின் விளக்கம்:

இப்போது மேலே பார்த்த மூன்று பிரிவுகளையும் ஒன்றாக்கினால் குறளின் விளக்கம் தெளிவாகும். (பார்ப்பனத்) தெய்வத்துடன் புணராமல், கணவனுடன் சேர்ந்திருந்து துயில் எழும் மனைவியானவள் தேவைப்படும்போது பெய்யும் மழை போன்றவள் என்பதே இக்குறளின் விளக்கமாகும்.

பார்த்தீர்களா! பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்தும் ஒரு பிற்போக்குத்தனமான குறள் என்று இதுநாள் வரை நாம் கருதியிருந்த ஒரு குறளானது, உண்மையில் எவ்வளவு முற்போக்குத்தனமான பார்ப்பனிய எதிர்ப்புக்குரலாக அமைந்துள்ளது என.

குறிப்பு: இக் கட்டுரையானது பேரா. ந. கிருஷ்ணன், ராமானுஜ தாத்தாச்சாரியார், முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான் ஆகியோரது பல்வேறுபட்ட எழுத்துகளிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

வி.இ. குகநாதன்

`

பாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் ?

1

முதன்முதலாக ஒரு ஆணை நிர்வாணமாக பார்த்தபோது, நான் அழுதேன். கட்டுப்பெட்டித்தனமான கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்த எனக்கு, என் உடல் உறுப்புகளைக்கூட நான் பார்த்ததில்லை. மேலும், சுயஇன்பம் கொள்வதற்காக நான் நரகத்துக்குப் போவேன் என நினைத்தேன். பாலுறவை தவிர்ப்பது என்பது மட்டும்தான் எனது பள்ளியிலும் வீட்டிலும் சர்ச்சிலும் நான் கற்றுக்கொண்டது. இது என்னை பல ஆண்டுகளாக அவமானத்திலும் தனிமையிலும் பயத்திலும் வைத்திருந்தது.

கோலரோடா, உட்டா, இடாஹோ போன்ற இடங்களில் பரந்துபட்ட பாலியல் கல்விக்கு அனுமதி குறித்த சமீபத்திய சச்சரவுகளை கவனித்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளுக்கு இது எவ்வளவு முக்கியமானது என்பது எனக்குத் தெரியும். பாலியல் கல்வியாளராகவும் தொழில்முனைவோராகவும், நான் ஆயிரக்கணக்கான தவறாக கற்பிக்கப்பட்ட இளைஞர்களுடன் பேசியிருக்கிறேன். இது எத்தகைய மன மற்றும் உடல்நல சேதத்தை உருவாக்கிவிடுகிறது என்பதை நான் அறிவேன்.

பாலுறவு குறித்து குழந்தைகளுடன் பேசுவது பெற்றோருக்கு ஏற்படுத்தும் சங்கடங்களை பற்றி அமெரிக்கர்கள் சிரிப்பதுண்டு. கடந்த 20 ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது பரந்துபட்ட பாலியல் கல்வியை ஒருசில மாணவர்கள் பெறுகின்றனர். 1990-களிலிருந்து பழமைவாத செயல்பாட்டாளர்கள், பழமைவாத அதிபர்களின் துணையுடன் பாலியல் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை தடுத்துவிட்டார்கள். பள்ளிகள் உள்ள ஒரே திட்டம் பாலுறவை தவிர்க்க சொல்வது என்பது மட்டும்தான்.

அமெரிக்காவில் பாதிக்கும் மேலான பள்ளிகளில் எந்தவொரு பாலியல் கல்வியும் இல்லை. மீதமுள்ளவற்றில் பாலுறவை தவிர்க்க சொல்வது மட்டும் தான் ஒரே அறிவுறுத்தல். கருவுறுவதலை தடுப்பது குறித்தோ, பாலுறவால் பரவும் நோய்களை தடுப்பது குறித்தோ, ஒப்புதலுடன் பாலுறவு குறித்தோ எந்த கற்பித்தலும் இல்லை.

சொல்லப்போனால், 18 மாகாணங்களில் உள்ள பயிற்றுநர்கள், திருமணத்துக்குப் பிறகான பாலுறவே ஏற்றுக்கொள்ளத்தக்கது என மாணவர்களிடம் சொல்கிறார்கள். ஒருபாலின மாற்றுப் பாலினத்தினர் குறித்து பேசுவது ஏழு மாகாணங்களில் ஆசிரியர்கள் பேசுவது தண்டனைக்குரியது. ஒரு பாலினத்தை எதிர்த்தோ, எச்.ஐ.வி. தொற்று குறித்தோ பேசுவதற்கும் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பத்து மாகாணங்களில் மட்டுமே பாலியல் வன்முறை அல்லது மனமொத்த பாலுறவு குறித்து பாலியல் கல்வியில் சொல்லித்தரப்படுகிறது.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !

மேலும், விரிவான பாலியல் கல்வி சொல்லித்தரப்படும் மாவட்டங்களில் தங்கள் பிள்ளைகளுக்கு இத்தகைய கல்வி தேவையா இல்லையா என்பதை பெற்றோர் முடிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பாலியல் கல்வி அளிப்பது அரசின் பணியல்ல என பழமைவாதிகள் எப்போதும் சொல்லிவருகிறார்கள். பாலியல்பு மற்றும் உறவுகள் குறித்து பெற்றோர் மட்டுமே சொல்லித்தர வேண்டும் என்பது அவர்களுடைய வாதம். ஆனால், பெரும்பாலான பெற்றோர் அத்தகைய வழிகாட்டுதலை தருவதில்லை. குழந்தைகளுக்கு தங்களுடைய பாலியல் வளர்ச்சி குறித்து மருத்துவ ரீதியிலான சரியான தகவல்களை வழங்க மறுப்பது கருத்தியல் அல்ல, அது அலட்சியம்.

அதுகூட பயனுள்ளதாக இல்லை. பாலுறவை தவிர்க்க வேண்டும் என்பதை மட்டுமே பாலியல் கல்வியாக சொல்லித்தரப்பட்ட மாகாணங்களில் அதிக அளவிலான பதின்பருவ கர்ப்பம் நிகழ்ந்துள்ளது.

ஒபாமா ஆட்சி காலத்தின் போது, பாலுறவை தவிர்க்க வேண்டும் என சொல்லித்தரப்பட்ட பாலியல் கல்வி, மேலும் விரிவடைந்த கல்வியாக சொல்லித்தரப்பட்டது. பதின்பருவ கர்ப்பம் தரித்தல் தேசிய அளவில் 41 சதவீதமாக குறைந்தது. டிரம்பின் அரசு, பாலுறவை தவிர்ப்பது மட்டுமே போதும் என முந்தைய கல்வி முறையை திருத்தியது. 200 மில்லியன் டாலர் அளவிலான நிதி ஒதுக்குதலையும் நிறுத்தியது.

இருந்தபோதிலும் சமூக பழமைவாதிகளின் கனவுகளுக்கிணங்க, சில பதின்பருவத்தினர் பாலுறவை தவிர்க்கின்றனர். சில ஆய்வுகளின் அடிப்படையில் பள்ளி படிப்பை முடிக்கும்போது கிட்டத்தட்ட 60% மாணவர்கள் பாலுறவு கொள்கின்றனர். ஆணுறைகள், தொற்று, மனமொத்த உறவு குறித்து தங்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது பள்ளியிலிருந்தோ எந்தவித அறிவுறுத்தலையும் பெறாமல் பலர் இதைச் செய்கின்றனர்.

அதனால்தான், நான்கில் ஒரு அமெரிக்க பெண் தன்னுடைய 20 வயதை அடையும்போதே கர்ப்பம் தரிக்கிறார். அல்லது முன்னெப்போதும் இல்லாத வகையில் பதின்பருவத்தினர் பாலியல் தொற்றுநோய்களுக்கு ஆளாகிவருகின்றனர்.

வெறும் 41% அமெரிக்க பெண்கள் மட்டுமே தங்களுடைய முதல் பாலுறவு அனுபவம் விரும்பத்தக்க வகையில் இருந்ததாக தெரிவிக்கிறார்கள்.

நாம் பாலுறவு குறித்து கற்பிக்க மறுக்கும்போது, பாலுறவை தடுப்பதில்லை. மாறாக, நாம் மேலும் அதை ஆபத்தானதாக மாற்றுகிறோம். இது பாலியல் தொற்று நோய்கள் தொடர்பானது மட்டுமல்ல.

தங்களது உடல் குறித்தோ தங்களுடைய உடலுக்கு தாம் மட்டுமே உரிமையாளர்கள் என்பது குறித்தோ அறிவற்ற குழந்தைகள் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். திருமணத்துக்கு முந்தைய பாலுறவு தவறானது என சொல்லித்தரப்படும்போது, பாலியல் வன்முறை அல்லது அத்துமீறல் குறித்து அந்த குழந்தையால் எதிர்த்து போராடவோ அல்லது புகார் அளிக்கவோ முடிவதில்லை.

பாலுறவை தவிர்க்கச் சொல்லித்தருவது, மனமொத்த பாலுறவை குறைக்கிறது. நான் பதின்பருவத்தில் இருந்தபோது, ஆண்கள் என்னிடமிருந்து பாலுறவை பெற எதிர்ப்பார்ப்பார்கள் என்றும் அதற்கு எதிர்ப்பது என்னுடைய வேலை என்றும் சொல்லித்தரப்பட்டது. பாலியல் வன்முறையோ அல்லது அத்துமீறலோ ஏற்பட்டால் அது என்னுடைய தவறுதான் என எண்ணவைத்தது அது. எல்லாவிதமான பாலியல் செயல்களும் தவறானவை. ஒரு பையன் என்னுடன் டேட்டிங் வந்தால், அவனை தொட அனுமதிப்பது என்னுடைய தவறு என்பதாக அவை சொல்லித்தரப்பட்டன.

குழந்தைகளை இருள் சூழந்த சூழலில் வைப்பது, வேட்டையாளர்களுக்குத்தான் வசதியாய் மாறும். அவமானம் கொண்டு அமைதியாக இருப்பது கலாச்சாரம் என நம்புகிறார்கள். கன்னித்தன்மை உயர்ந்த மரியாதையாக புகழப்படும்போது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுபவர்கள் தங்களை மதிப்பற்றவர்களாக உணர நேர்கிறது. அவமானம் மற்றும் குழப்பம் காரணமாக பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார் அளிக்கவும்கூட அவர்கள் தயங்கக்கூடும்.

ஒருபாலின – மாற்று பாலின குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பாலியல் கல்வியில் இவர்கள் குறித்து சொல்லித்தரப்படாதது, அவர்களை மேலும் தனிமைப்படுத்துகிறது; அவமானப்படுத்துகிறது. ஒருபாலின-மாற்று பாலின குழந்தைகளுக்கு ஒரளவே தரவுகள் கிடைக்கின்றன. ஆனால் அதிகப்படியான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை புகார் தெரிவிக்கும்போது உடல் ரீதியிலான தாக்குதலிருந்து வீடில்லாமல் தவிப்பது வரை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மருத்துவ அடிப்படையிலான பாலியல் நலனை சொல்லித்தருவதை தவிர்த்து பாலுறவை தவிர்ப்பது என்பதை மட்டும் சொல்லித்தந்தால், அது இளைஞர்களின் வாழ்நாள் முழுக்கவும் உடல் மற்றும் மன ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது இப்படியான வழிகளில் இருக்கக்கூடாது. பல நாடுகளில் பாலியல் நலன் குறித்த துல்லியமான தகவல்களை அளிப்பது முதன்மையானதாக கருதப்படுகிறது. நெதர்லாந்தில் மழலையர் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வி கற்றுத்தரப்படுகிறது. டச்சுக்காரர்களைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக அமெரிக்க பதின்பருவத்தினர் பிரசவிக்கின்றனர். பெரும்பாலான டச்சு பதின்பருவத்தினர் தங்களுடைய முதல் பாலுறவு குறித்து நேர்மறையாக கருத்து தெரிவிக்கின்றனர்.

பாலுறவை சொல்லித்தருவது கடினமாக உள்ளதாக நாம் சிரித்துக் கொள்கிறோம். நம்முடைய பெற்றோர் அதுகுறித்து பேசவில்லை என்பதால், நாமும் நம்முடைய குழந்தைகளிடம் அதுகுறித்து பேசுவதில்லை என்கிறோம். அடுத்த தலைமுறையினர் விரிவான பாலியல் கல்வியைப் பெற இந்த சுழற்சியை நாம் உடைக்கலாம். நம்முடைய அவமானத்தைவிட அவர்களுடைய பாதுகாப்பு முக்கியமானது.


கட்டுரை: ஆண்ட்ரியா பாரிகா
தமிழாக்கம்: கலைமதி
நன்றி: நியூயார்க் டைம்ஸ்

 

குழந்தைகள் என் ஆசிரியர்கள் , ஆசான்கள் என்கிறார் ஒரு ஆசிரியர் !

0

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 1-அ

அமனஷ்வீலி

அத்தியாயம் ஒன்று

குழந்தைகள் – என் ஆசிரியர்கள்

கல்வியாண்டு துவங்கும் தருவாயில்(*) (ஆகஸ்டு 31) …

ஜார்ஜிய சோவியத் சோஷலிசக் குடியரசின் தலைநகரமாகிய திபிலீசியில் ஆகஸ்டு மாதக் கடைசியில் எப்போதும் வெப்பமாக இருக்கும். தார் உருகி ஓடும், மக்களுக்கு எதன் மீதுமே அக்கறையில்லாததைப்போல் தோன்றும்.

தெருக்களில் குழந்தைகள் அதிகமில்லை. இவர்களில் பெரும்பாலோரை பெற்றோர்கள் கோடை ஓய்விடங்களுக்கும், சொந்த கோடையில்லங்களுக்கும், பயனீர் முகாம்களுக்கும், குறிப்பாக கிராமங்களில் உள்ள தாத்தா, பாட்டி மற்ற உறவினர்களிடமும் அனுப்பி விட்டனர்.

கிராமத்திற்குச் செல்லவும் அங்கேயுள்ள கிராமச் சிறுவர் சிறுமியருடன் சேர்ந்து விளையாடவும் அவர்களோடு சேர்ந்து காடுகளுக்குச் சென்று பழங்களைச் சேகரிக்கவும் கூடை பின்னவும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். காஹேத்தியாவின் சமவெளிகளில் நான் கழித்த குழந்தைப் பருவம் என்னுள் இப்போது விழித்துக் கொண்டது. நான் கிராமக் குழந்தைகளோடு சேர்ந்து ஆற்றில் குளிக்க ஓடியதுண்டு, சமவெளியில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை மீதேறி அமர்ந்து களைப்பின்றி சவாரி செய்ததுண்டு; மக்காச்சோளமும் கோதுமையும் நிறைந்த மூட்டைகளைத் தோள்கள் மீது சுமந்து கொண்டு நீர் சக்தியால் இயங்கும் அரவை இயந்திரத்திற்கு எடுத்துச் சென்றதுண்டு;

தானியக் களஞ்சியத்தினுள் மணம் மிகு மாவைக் கொட்டியபடி தட்டையான பெரும்வட்டக் கற்கள் சுற்றுவதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும்; மல்யுத்தப் போட்டிகள் நடக்கும்போது அவற்றைக் கண்டு களிப்பதற்காக கிராமம் முழுவதுமே சிறு திறந்த வெளியில் கூடும். குழந்தைகளுக்கு கிராமத்திற்குச் செல்ல மிகவும் பிடிக்கும். இது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் நானும் குழந்தையாக இருந்தவன், அங்கே நிறைய மகிழ்ச்சி கிடைக்கும், அதிக சுதந்திரம் உண்டு, ஆர்வமிக்க, ஆபத்தான அதிசாகசச் செயல்களுக்கு அங்கே பரவலான இடமுண்டு.

ஆகஸ்டில் திபிலீசியில் கடும் வெப்பம் நிலவும். செப்டெம்பர் 1-ம் தேதி விரைவிலேயே வரவிருக்கிறது. ஆனால் தெருக்களில் இன்னமும் குழந்தைகளின் ஆரவாரத்தைக் காணோம், குறைந்த அளவே குழந்தைகள் காணப்படுகின்றனர்.

கடும் வெப்பத்தின் காரணமாக கல்வியாண்டு இம்முறை செப்டெம்பர் 1-ம் தேதி துவங்கப் போவதில்லை, இரண்டு வாரமோ, ஒரு மாதமோ கழித்துதான் வகுப்புகள் ஆரம்பமாகும் என்றொரு வதந்தி மின்னல் வேகத்தில் பரவுகிறது. தம் கனவுகள் பலிக்கின்றன என்று குழந்தைகளுக்குத் தோன்றுகிறது.

பெற்றோர்களும் நம்புகின்றனர். ஏனெனில் வகுப்புகளை ஒத்திப் போடுவதற்கான காரணங்கள் நிறையச் சேருகின்றன.

ஆனால் ஆகஸ்டு மாதத்தின் கடைசி நாட்களில் இக்கனவுகள் கலைகின்றன. ”பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் கோடை விடுமுறைக்குப் பின் செப்டெம்பர் 1-ம் தேதி மீண்டும் துவங்கும்” என்ற பத்திரிகைச் செய்திகள் இதற்கு வழிகோலுகின்றன.

பள்ளி அழைக்கிறது! இது ஒரு புனிதமான அறைகூவல்.

பாடங்கள் விரைவில் ஆரம்பமாகும்! இரண்டு மூன்று நாட்களில் சூரிய வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நகரம், மனதைக் கிறங்க வைக்கும் வாசனையுடன் கூடிய ஒரு பெரிய, அழகிய, பல வண்ண மலர் விரிவதைப் போல் காட்சியளிக்கிறது. இந்த மலரை உயரே, பறவைகள் பறக்கும் உயரத்திலிருந்து பார்த்தால் அது எவ்வளவு அழகிய, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் தெரியுமா!

குழந்தைகளுக்கு கிராமத்திற்குச் செல்ல மிகவும் பிடிக்கும். இது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் நானும் குழந்தையாக இருந்தவன், அங்கே நிறைய மகிழ்ச்சி கிடைக்கும், அதிக சுதந்திரம் உண்டு, ஆர்வமிக்க, ஆபத்தான அதிசாகசச் செயல்களுக்கு அங்கே பரவலான இடமுண்டு.

நகரத்திற்கு உயிர் வருகிறது, உத்வேகம் வருகிறது, நகரம் தலையை உயர்த்தி, மெல்லிய காற்றில் ரோஜா செடியின் தண்டு ஆடுவதைப் போல் மெதுவாக ஆடத் துவங்குகிறது. ஒரு உண்மையை (இது ஒருவேளை இதுவரை தெரியாமலேயே இருந்திருக்கலாம்) நன்கு உணருகிறோம்: 1,500 ஆண்டுகட்கும் மேலாக நிலவிவரும் இந்நகரத்தில் இதன் மிகச் சிறு குடிமக்களாகிய குழந்தைகள் இல்லாவிடில் நகரமே வெறிச்சோடிக் களையிழந்து உள்ளது.

சத்தம்! தெருவில்தான் எவ்வளவு சத்தம், மகிழ்ச்சி, உற்சாகம்! குழந்தைகள் அவசர அவசரமாகப் போகின்றனர், ஓடுகின்றனர். பாதசாரிகளுக்கான இடங்களில் போவோர் வருவோர் மீது படாமல் வளைந்து வளைந்து மிதிவண்டி ஓட்டுகின்றனர். அமைதியாக, நிதானமாக நாம் தெருக்களில் நடப்பதற்கு அவர்கள் இடையூறு செய்கின்றனர், ”என்ன வெப்பம்” என்ற நமது வழக்கமான கோடைக்காலப் பேச்சின் போக்கை மாற்றுகின்றனர். வருவோர் போவோரின் முகங்களில் ஒருவிதக் களை, கவலை, மகிழ்ச்சி – குழந்தைகள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்!

வெப்பமானியில் வெப்பம் இறங்கவேயில்லை. ஆனால் குழந்தைகளுக்கு வெப்பமானியைப் பற்றி என்ன கவலை!

இன்று 38 டிகிரி. அவர்களுக்கு வெப்பமாக இல்லையா என்ன ?

இல்லை, குழந்தைகளுக்கு வெப்பமாயில்லை. அவர்களுக்கு வேறு கவலை – அவர்கள் பள்ளி செல்லத் தயாராகின்றனர். பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள், ஸ்கேல்கள், வரைபடச் சாதனங்கள், வண்ணப் பென்சில்கள் முதலியவற்றை வாங்க வேண்டும். இவற்றையெல்லாம் பள்ளிப் பையில் வைக்க வேண்டும். சீருடையை ஒழுங்குபடுத்த வேண்டும். அழகாகக் காட்சியளிக்க வேண்டும்….

ஆசிரியர்களாகிய நாங்களும் எம் அறைகளில் குழுமியிருக்கின்றோம். பரஸ்பரம் முகமன் கூறிக் கொண்டோம், கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். புதிய கல்வியாண்டிற்கான புதிய போதனை முறைத் திட்டங்களும் புதிய நம்பிக்கைகளும் நம்மிடமும் இருக்க வேண்டும், சிறுவர் சிறுமியரைச் சந்திக்கும் ஆர்வம் மிக்க எதிர்பார்ப்பு நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சியும் பதட்டமும் கலந்த ஒரு தெளிவற்ற நிலை ஒருவேளை உங்களை ஆட்கொள்ளக் கூடும்; கல்வி கற்பித்தல் எனும் விஞ்ஞானம் மற்றும் கலையின் சாரத்தை நம்மால் அறிய முடியுமா என்ற அச்சம்கூடத் தோன்றலாம்.

இத்தகைய உணர்வுகள் உண்மையிலேயே உங்களை ஆட்கொண்டால் அது நல்லது, நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் அன்பு, நம்பிக்கை எனும் மிக கெளரவமான பரிசு உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய எதிர்கால வகுப்புகளைப் பற்றிய எண்ணமே, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பாத இவர்களுடனான சந்திப்பைப் பற்றிய எண்ணமே உங்களைத் துன்புறுத்தினால் என்ன செய்வது?

அதுவரை விஷயம் போகாமலிருந்தால் நல்லது…. எப்படி நடந்து கொள்வதென நீங்களே முடிவு செய்யுங்கள்.

நான், ஆகஸ்டு மாதக் கடைசி நாட்களில் நள்ளிரவு வரை என் மேசையில் அமர்ந்து வேலை செய்கிறேன். நன்கு சிந்திக்கிறேன், திட்டமிடுகிறேன், மதிப்பிடுகிறேன், பொதுமைப் படுத்துகிறேன், என்னுடனேயே விவாதித்துக் கொள்கிறேன்; என் ஆசிரியர் பயிற்சி அனுபவத்தை யோசித்துப் பார்க்கிறேன். பல தலைமுறைகளைச் சேர்ந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய நான் என் குழந்தைகளோடு சேர்ந்து வளர்ச்சியடைய விரும்புகிறேன்.

அவர்களைவிட ஒரு நல்ல அனுகூலமான நிலையில் நான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்கு நான் ஒருவன்தான் ஆசிரியன், எனக்கோ முப்பத்தாறு அல்லது அதற்கும் அதிகமான ஆசிரியர்கள். இவர்கள் அனைவரும் எனது மிக விடாப்பிடியான ”ஆசிரியர்களாக” விளங்குவார்கள்.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சினை ?

நான் அவர்களுக்கு படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் வரையவும் பாடவும் சொல்லித்தர அவர்கள் எனக்கு மிக உயர்வான போதனை முறைக் கல்வியைத் தருவார்கள். குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஆசிரியர் வேண்டும் என்பதை அறிய தன்னை கல்வி கற்பவனாக, வளர்க்கப்படுபவனாக உணர வேண்டும். என் மேசை முன் அமர்ந்து, புதிய தயாரிப்பு வகுப்புடனான சந்திப்பைப் பற்றிச் சிந்திக்கும்போது ஒரு தாளில் பின்வருமாறு எழுதிக் கொள்கிறேன்:

குழந்தைகளுடைய மனதின் ரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி எனும் கலையையும், ஆசிரியனின் திறமையையும் அறிய முற்படுகையில், ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்.

இந்த வாசகத்தின் உண்மையை – பயனை இருபத்தொன்பது முறை நான் சோதித்து சரிபார்த்திருக்கிறேன். முப்பதாவது தடவையாக சரிபார்க்கப் போகிறேன்.

அடிக்குறிப்பு:
* சோவியத் நாட்டில், பள்ளியில் கல்வியாண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஆரம்பமாகும்.-(ப-ர்.)
(தொடரும்)

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

உடலுக்கும் மனதுக்கும் ஒரு நாள் பட்டினி நல்லது ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

விரதம் நல்லது !

மது மூதாதையர்களிடம் யாராவது “நீங்க எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க? ஏன் காடு கழனில கிடந்து மாடா தேயிறீங்க?” என்று கேள்வி கேட்டிருந்தால் அவர்கள் உடனே;

Great Famine of Madras
பஞ்சத்தில் வாழ்ந்த முன்னோர்கள்.

“இந்த அரை சாண் வயித்துக்கும் பசிக்கும் தான் இப்டி வேலை பாக்குறேன். மூனு வேளை பசி தெரியாம சாப்ட்டா போதும்னு இருக்கு” என்று கூறியிருப்பார்கள்

இப்போது நம்மிடம் யாராவது வந்து ஏன் இப்படி உழைக்கிறீர்கள் என்று கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும். “எனது பிள்ளைகள நல்ல பள்ளிகூடத்துல படிக்க வைச்சு டாக்டராவோ கலெக்டராவோ ஆக்கணும். இடம் கொஞ்சம் கெடக்கு. அதுல பெருசா ஒரு வீடு கட்டோணும்” என்று அவரவர் இருப்பிடம் பொறுத்து கூறுவோம்

காரணம் என்ன ?

ஒரு காலத்தில் சோற்றுக்கு அல்லல்படும் நிலைமை இருந்தது உண்மை. இப்போது அது மெல்ல மெல்ல மாறி வருகிறது. மிக மிக குறைவான சம்பளம் / கூலி வாங்கும் மக்கள் வீட்டில் கூட பட்டினி இல்லை. மூன்று வேலையும் உணவு கிடைத்து விடுகிறது. (தமிழகத்தில் அரிசியை இலவசமாகத் தரும் அரசுகளுக்கு இதற்குரிய நன்றிகள் உரித்தாக வேண்டும்)

உணவின்றி தவித்த நாம் இப்போது அளவின்றி அரிசியை உண்ணும் நிலைக்கு வந்திருக்கிறோம். இதில் இருந்து மெல்ல மெல்ல சரியாகி நாம் அரிசி உண்ணும் அளவை குறைக்கும் கட்டத்துக்கு நகர்ந்து செல்வோம்.

இருப்பினும் வாரம் ஏழு நாளும் மூன்று வேளையும் உணவு எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் என்ன இருக்கிறது? பசி, பட்டினி பற்றி நாம் கொஞ்சம் அறிந்திருந்தால் தான் என்ன? ஏன் ஒரு தலைமுறையை பசியே தெரியாமல் வளர்த்து வருகிறோம்?

திடீரென போர்கள் / உலக பொருளாதார சூழல் இவற்றால் செயற்கையாக பஞ்சம் உருவாக்கப்படுமானால் அப்போது பசியை எப்படி திடீரென கட்டுப்படுத்துவது?

உண்மையில் பட்டினி கிடப்பது நல்லதா? கெட்டதா?

பட்டினி கிடப்பது நல்லது. உடலுக்கும் மனதுக்கும் வலிமையை ஏற்றும் தன்மை கொண்டது பட்டினி. இதைத்தான் விரதம் என்று பல சமயங்களிலும் மார்க்கங்களிலும் கடைபிடித்து வருகிறோம்.

தினமும் ஒரு வேளை உணவை உண்ணாமல் இருப்பது விரதத்தின் மிகக்குறைந்த நிலை. தினமும் ஒரு வேளை மட்டுமே உண்பது என்பது விரதத்தில் உட்ச நிலை.

உங்களது நாட்குறிப்பில் வாரம் ஒரு நாள் மட்டும் விரதத்திற்கு ஒதுக்குங்கள். உதாரணம் சனிக்கிழமை அன்று விரதம் என்று வைத்துக்கொள்வோம். வெள்ளி அன்று இரவு உணவோடு அடுத்த உணவை சனிக்கிழமை இரவு உண்ண வேண்டும்.

படிக்க:
♦ உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ குடும்பச் செலவுக்கு கடன் வாங்கிய தோழர் ஸ்டாலின் | வரலாற்றுத் துளிகள் | கலையரசன்

இடையில் தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம். ப்ளாக் டீ/ ப்ளாக் காபி / க்ரீன் டீ ( சீனி/ சர்க்கரை மற்றும் எந்த இனிப்பும் இல்லாமல் பருகலாம்) இது மூலம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைக்கப்படும்.

எடை கூடாமல் பாதுகாக்கப்படும். ஜீரண மண்டலம் புத்துணர்வு பெறும். உடலின் எதிர்ப்பு சக்தி தன்னை மீளுருவாக்கம் செய்ய இந்த 24 மணிநேரங்களை எடுத்துக்கொள்ளும்.

நமது போனில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடைசியாக “Restore factory settings or Reset” என்ற ஆப்சனை பயன்படுத்துவோம் தானே… அதைப்போல இந்த வாரம் ஒரு முறை 24 மணிநேர தண்ணீர் விரதம் செயல்படும்.

நீங்கள் எந்த உணவு முறையில் இருந்தாலும் சரியே. வாரம் ஒரு முறை இந்த விரதத்தை கடைபிடியுங்கள். மாற்றங்களை உணர முடியும். நல்ல உடல் நிலையில் இருக்கும் யாரும் தாராளமாக விரதம் இருக்கலாம்.

யாரெல்லாம் 24 மணிநேர விரதத்தை கடைபிடிக்கக்கூடாது ?

1. மாத்திரைகளால் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தும் நீரிழிவு நோயாளிகள்.
2. இன்சுலின் ஊசி போடும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள்.
3. மிக அதிக ரத்த அழுத்தம் இருந்து அதற்கான மாத்திரை எடுப்பவர்கள்.
4. இதய நோயாளிகள்.
5. சிறுநீரக நோயாளிகள்.
6. கர்ப்பிணிகள்.
7. தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள்.
8. 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
9. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
10. கீமோ தெரபியில் இருக்கும் கேன்சர் நோயாளிகள்.
11. வயிறு மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள்.
12. வயிற்றுப்புண்(gastric ulcer) இருந்து அதற்கு சிகிச்சை எடுப்பவர்கள்.
13. மனநல சிகிச்சை எடுப்பவர்கள்.
14. குழந்தைப்பேறுக்கு முயல்பவர்கள்.
15. நீண்ட தூர வண்டி ஓட்டுநர்கள்.

இவையல்லாமல் இருக்கும் ஆண் பெண் இருபாலரும் இந்த விரதத்தை இருக்கலாம்.

24 மணிநேரம் உணவு இல்லாமல் இருக்கும் போதுதான் நம் முன்னோர்கள் பசியில் அடைந்த கஷ்டங்களை நம்மால் உணர முடியும். இன்னும் பசியில் தவிக்கும் ஏழைகளின் உணர்வையும் புரிந்து கொள்ள முடியும்.

ஏன் அரசாங்கம் அரிசியை இலவசமாகத்தருகிறது? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும். ஏன் சத்துணவு என்ற பெயரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு இலவசமாக உணவு வழங்குகிறது? என்பதும் நாம் பசியோடு ஒரு முழு நாள் கழித்தால் மட்டுமே உணர முடியும். பசியை உணர்வோம். பசி நம்மிடம் இருக்கும் அத்தனை கெட்டதையும் அழித்தொழிக்கும். உடல் மனம் இரண்டில் இருந்தும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

க்கள் அதிகாரம் அமைப்பின் ‘எதிர்த்து நில்’ மாநாடு கடந்த பிப்ரவரி 23, 2019 அன்று திருச்சியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் மருதையன் பங்கேற்று உரையாற்றினார். அதில் பேசுகையில்,

“மோடியின் ஐந்தாண்டுகால ஆட்சியில் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாநாட்டில் காவி கார்ப்பரேட் பாசிசம் என்ற தலைப்பு வைத்ததற்கு காவி இந்தியக் கொடியில் இருக்கும் நிறம் என்பதால், அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதாகத் தெரிவித்தது திருச்சி மாநகர போலீசு. சிறுமி ஆசிபா-வைக் கொன்ற குற்றவாளியை விடுதலை செய்ய தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு பாஜக ஊர்வலம் போனபோது, யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லையே ஏன் ?

படிக்க:
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்த ஃபேஸ்புக் பதிவுகள் !

பாசிசம் இன்று அதன் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. நோட்டீஸ் கொடுக்க அனுமதி வாங்கினாயா எனக் கேட்கிறது போலீசு. மோடியை விமர்சிக்கக் கூடாதாம்.. ஜனநாயக நாட்டில் பிரதமரை விமர்சிக்கக் கூடாது என்று கூறுகிறது பாஜக. கட்ந்த 2014-ம் ஆண்டில் மோடியை சர்வ வல்லமைமிக்கவராகக் காட்டின ஊடகங்கள்.

விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுத்த மோடி, ஆட்சிக்கு வந்தபின்னர் அதனை செய்யவில்லை. அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று கூறியது மோடி அரசு. தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்க நீம் தேர்வுகள், எங்கும் நீடிக்கும் வேலைவாய்ப்பின்மை, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, மருத்துவப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு என கல்வியில் மீளும் பார்ப்பனியம் – இதுதான் பாசிச மோடி அரசின் சாதனைகள்.

மக்களை இழிநிலைக்குத் தள்ளியிருக்கும் மோடிதான், அதானிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டேட் வங்கியின் தலைமை அதிகாரியை அழைத்துச் சென்று அவருக்கு சுரங்கம் வாங்கித் தருகிறார். அனில் அம்பானிக்காக முறைகேடான முறையில் ரஃபேல் விமானம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் செய்திருக்கிறார். அனில் அகர்வாலிடம் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்கியிருக்கிறார்.

மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் முடக்கப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். கவுரி லங்கேஷ் உள்ளிட்ட முற்போக்காளர்கள் கொலை முதல் தற்போது நடைபெறும் சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது வரை பாசிசம் தலைவிரித்து ஆடுகிறது. ஒடுக்கப்படும் மக்களைக் கொன்றொழிக்கும் அதே வேலையில் அவர்களுக்காக குரல் கொடுக்கும் ஜனநாயகவாதிகளை மிரட்டி முடக்கப்பார்க்கிறது, மோடி தலைமையிலான கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பல் ! இதனை முறியடிக்க நாம் வீதியில் இறங்க வேண்டும்.” என்று பேசினார். (முழு உரையைக் காண)

பாருங்கள் ! பகிருங்கள் !

பொள்ளாச்சி : குற்றவாளிகளை நடமாட விடாதே – வீதியிலிறங்கிய மாணவர்கள் !

பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரியும் அதிமுக பொறுக்கிகளை பாதுகாக்கும் எடப்பாடி போலீசு கும்பலுக்கு எதிராகவும் தமிழகமெங்கும் மாணவர்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மாணவர்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பாதுகாக்குது ! பாதுகாக்குது ! அதிமுக பொறுக்கிகளை போலீசும் அரசும் பாதுகாக்குது ! கிடைக்காதய்யா கிடைக்காது! நமக்கு நீதி கிடைக்காது! நடமாட விடாதே! நடமாட விடாதே! குற்றவாளிகளை நடமாட விடாதே! தமிழகமே திரளட்டும் ! குற்றவாளிகளை தண்டிக்கட்டும்!” என்பது உள்ளிட்ட முழக்கங்களையும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கேட்க முடிந்தது. இத்தகைய போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வீச்சாக நடைபெற்று வருகின்றன. மாணவர்களோடு கைகோர்த்து நாமும் களமிறங்க வேண்டிய நேரமிது !

பொள்ளாச்சியில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்:

நெல்லை – அரசு சட்டக் கல்லூரி :தருமபுரி – அரசு சட்டக்கல்லூரி:

மதுரை – அரசு சட்டக்கல்லூரி:

விழுப்புரம் – அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி :

திருச்சி – தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரி :

இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை – பச்சையப்பன் கல்லூரி :

சென்னை – எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரி :

தொகுப்பு:

 


படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

நாவில் இனிப்பு ஊறும் கருப்பட்டி – எரிந்து போன வாழ்க்கை ! | சரசம்மா

0

நெல்லையில கந்துவட்டி கொடும தாங்க முடியாம கலெக்ட்ரு ஆபீசு முன்னாடியே தீயில கருகின இசக்கிமுத்து குடும்பத்த அம்புட்டு சீக்கிரம் நம்மாள மறந்துட முடயாது. குடிச்ச பாலு கொடும்புல (வாயில்) இருக்க அந்த பிஞ்சு… உசுரு பிரிஞ்ச கோரத்த இன்னைக்கி நெனச்சாலும் மனசு திக்குனுருக்கு.

அதே ஊரு (திருநெல்வேலி), அதே கந்துவட்டி, அதே நெருப்பு வேற.. வேற காரணத்துக்காக முத்துமாரிங்கற பொண்ணையும் சுட்டுருக்கு.

பாதையோரமா கருப்படி விக்கிற பொண்ணு முத்துமாரி. தீயில வெந்து ஒடம்பு பூறா கருப்பாவும், கழுத்து நரம்பு அத்தனையும் தொண்டைக்கும் நெஞ்சுக்குமா அறுந்து தெரிச்சிற்றாப் போல இழுத்துகிட்டு நிக்கும்.

அந்த பொண்ண தாண்டி போரப்ப வாரப்பல்லாம் பேசனுமுன்னு தோனும். அன்னைக்கி அதுக்கு தோதான நேரம் அமஞ்சது. தாழ்பா கொண்டி இல்லாத மாநகராட்சி கழிப்பிடத்துகு உள்ள போயிவர, நாங்க ரெண்டேரும் ஒருத்தருக்கு ஒருத்தரு வெளிய காவலுக்கு நின்னதால நெருக்கமானோம்.

“பொண்ணுக்கு பொண்ணு பொறாமெப்படனும் அம்புட்டு அழகாருப்பேன். இன்னைக்கி அப்புடி நான் சொன்னா நம்புவீங்களா நீங்க.?”

கண்டிப்பா. உங்க உருவம் உருகொலைய காரணமாருந்த ஊரும்.. ஒறவுந்தாங்க அசிங்கம். ஒழச்சு பொழைக்கிற நீங்க என்னைக்கிமே அழகுதான்.”

“அடுத்த மொற நீங்க வா..ர்ரப்ப என்னோட பழய போட்டவ காட்றேன் பாருங்க ஆச்சர்ய படுவீங்க. அது ஒரு காலம்!… தாமரபரணி ஆத்துல ஆட்டம் போட்டுட்டு, ஊரச்சுத்தி வெளையாண்டு திரிஞ்சுட்டு, படிப்பு மண்டையில ஏறாம, பள்ளிக்கூட வாத்தியாருட்ட அடிய வாங்கிட்டு பெயிலாப் போன அந்த பதினாரு வயசோட போச்சு அழகெல்லாம்.

பருவம் வந்த பெறவு..தான் அழகப்பத்துன நெனப்பு, ஆசை எல்லாம் பொம்பளைக்கி வரும். பதினாரு வயசுல வயசுக்கு வந்து பதினேழு வயசுல கல்யாணம் முடிச்சு பதினெட்டு வயசுல இப்படி கரிக்கட்டையா பொசுங்கிட்டேன். அல்ப ஆயிசுல பொட்டுன்னு போறாப்போல பருவா வயசுலேயே அழகு அலங்கோலமா ஆயிடுச்சு.”

பிரச்சனை இல்லாத பொம்பள பொழப்பு ஏது? அதுக்கோசரம் தற்கொலை பன்னிக்க நெனைக்கலாமா நீங்க?”

“தற்கொலையா? இப்புடி இருக்கையிலயும் இழுத்து போத்திகிட்டு யாவாரம் பாக்குறே என்ன போயி இப்புடி கேட்டுபுட்டிங்க. அந்தமாதிரி கோழ கெடையாது நானு. சொந்த மாமா பையனுக்கு தான் கட்டிக்குடுத்தாங்க. அவனுக்கு வேற பொண்ணு மேல ஆசை. அதுக்கு எடஞ்சலா இருப்பேன்னு நெனச்சானொ என்னவோ தூங்கின எம்மேல மன்னெண்ணைய ஊத்தி கொளுத்திட்டான்.

சொந்தத்துல குடுத்தா பொண்ணு சொகுசா வாழுன்னு எங்க அம்மா நெனச்சுச்சு. எங்க அம்மா ஆசையெல்லாம் மொதலுக்கே மோசமா போச்சு. வீட்டுக்கு ஒரே பொண்ணு நானு எங்க அம்மா அண்ணனுங்க எல்லாம் உயிர கொடுத்து என்ன காப்பாத்துனாங்க.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை

அவன் மேல போலீசு கம்ளேண்டு கொடுக்க சொல்லி ஊருக்குள்ள பல பேரு சொன்னாங்க. அவனோட அக்கா இன்ஸ்பெக்டரு, இன்னொரக்கா டீச்சரு, அண்ணனுக்கு ஆஸ்பத்திரியில வேலை எல்லாருமே அரசாங்கத்து உத்தியோகம் நமக்கு ஞாயம் கெடைக்கிமா சொல்லுங்க. மேக்கொண்டு செலவு செய்யிற அளவுக்கு தெம்பும் கொடையாது. ஆண்டவனே நீ கேளுன்னு சொல்லிட்டு வந்துட்டோம்”

திருநெல்வேலியில இருந்து சென்னைக்கி எப்படி வந்தீங்க?”

“ரயில்லதான்” பழைய ஜோக்குதான் ஆனா அத சொல்லிட்டு அழகா சிரிச்சது அந்த பொண்ணு.

அட போங்க! சொல்லுங்கன்னா கலாய்க்கிறீங்க

“அண்ண..ங்களுக்கு கல்யாணம் ஆனதும் நானும் அம்மாவும் தனியாதான் இருந்தோம். நாலு லட்சம் பொறுமானம் உள்ள வீடு இருந்துச்சு. தெனசரி வருமானத்துக்கு ஒரு எடத்துல வேலைக்கி போனேன். எந்த பிரச்சனையும் இல்லாம அப்போதைக்கி நல்லபடியா போயிட்டு இருந்துச்சு.

எங்க சாதிய (தேவர்) சேந்த பொண்ணு ஒருத்தி வட்டிக்கி கடன் வாங்குனா. அதுக்கு சாட்சி கையழுத்து போட்டேன். வாங்குன கடனுக்கு ஒரு வருசம் போல வட்டி கட்டிட்டுருந்தவ திடீர்னு காதலிச்ச பையனோட ஓடிட்டா. அவ காதல் கீதல்னு நெனப்புல இருந்தான்னு நம்பளுக்கு தெரியாது.

எங்க சாதியில காதலிச்சாலே ஆவாது… இதுல சாதிமாறி காதலிச்சா ஏத்துப்பாங்கலா. பயந்து போயி கண்ணுக்கு எட்டாத தூரமா ஓடிட்டா. அந்த பொண்ண பெத்தவங்களும் தேடுனாங்க, நாங்களும் தேடுனோம் இப்ப வர எங்க இருக்கான்னே தெரியல.

நீதான் வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டுருக்க பணத்துக்கு நீதான் பெருப்புன்னு கடன குடுத்தவ..ன் வாசல்ல வந்து நின்னுட்டான். வட்டிகடன்னு தெரியும் கந்துவட்டின்னு தெரியாது. ஏதோ ரெண்டு போப்பர்ல கையழுத்து போட்டதால பெரும் பிரச்சனையா போச்சு. எங்களால எதுத்து நிக்க முடியல. வீட்ட வித்து, நகைய வித்து, தெரிஞ்சவங்க கிட்ட கடன வாங்கி கந்துவட்டிய குடுத்து முடிச்சோம். வாங்குனது அம்பதாயிரம் வட்டியும் மொதலுமா அவனுக்கு நாங்க தெண்ட..ம் அழுதது ஆறு லட்சம்.

கல்யாணமும் இந்த கதியாச்சு. இருந்த வீடும் போச்சு. இனிமே இந்த பொட்டபுள்ள எங்குட்டு போவாலோன்னு நெனச்சு நெனச்சு அழுது அம்மாவுக்கு பிரம்ம புடுச்சு போச்சு. வீட வித்த அன்னியிலேருந்து 46 நாளு சாப்புடாம கெடந்து உயிர விட்டுடுச்சு.

என்ன செய்றது ஏது செய்றதுன்னு ஒன்னும் புரியல. கண்ண தொறந்தாலே பயமாருந்துச்சு. நமக்கு கீழ எத்தனையோ கோடி பேத்துக்கு இந்த கதி அதுக்குன்னு சொனங்கி படுத்துட கூடாதுன்னு தைரியத்த கூட்டிகிட்டேன்.  கல்யாணம்… நெருப்பு… கடனு… அம்மா… எல்லாத்தயும் ஒரு பக்கம் ஒதுக்கி வச்சுட்டு அண்ணெங் குடும்பத்தோட சேந்து சென்னைக்கி வந்துட்டோம்.”

அடுக்கடுக்கா எப்புடிதான் இத்தன வலிய தாங்கினியலோ. எத்தனையோ எடஞ்சலுக்கு மத்தியில மனசு உறுதியா வாழ்ற ஒங்களப்போயி தற்கொல அப்புடி இப்புடி சொல்லிப்புட்டேனே!.. ப்ச்..”

“நான் விக்கிற கருப்பட்டிதாங்க நாக்குல எச்சி ஊறும் இனிப்பு. எங்கதயோ.. மொகம் சுழிக்கிற கசப்பு. அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்.”

படிக்க:
♦ தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !
♦ பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா ?

எனக்கு கூறே கெடையாது திரும்பவும் அதையே நெனவுபடுத்துறெ.. பாருங்க. பொறவு அங்கன ஊருக்குல்லேயே இருந்தா அதே நெனப்பு வருமுன்னு இங்க சென்னைக்கி வந்தியலா

“எடத்த மாத்துனா நெனப்பு போயிருமா என்னா? பொழப்ப தேடிதாங்க இங்க கூடி வந்தோம்.

பெரியம்மா பையங்க இங்கனக்குள்ள கருப்பட்டி யாவாரம் பாத்தாங்க. அவங்க கூட நாங்களும் சேந்துகிட்டோம். அண்ணெ.. மாசத்துக்கு ஒருக்கா திருந..வேலி போயி கருப்பட்டி காச்சுர எடத்துல தேவையான கருப்பட்டிய எடுத்துட்டு வந்துருவாரு. அதெ பிரிச்சு எடுத்து ஆளுக்கொரு பக்கமா நாங்க யாவாரம் பாத்துப்போம்.

ஒரு வீட வாடகைக்கி எடுத்து எட்டு பேரு தங்கியிருக்கோம். வருமானம் தனி. வாடக.. சமையலு.. சாப்பாட்டு செலவு.. எல்லாம் பொதுவுல. சேந்துருக்கதால செலவு கம்மி. பாதுகாப்பா இருக்கு. ஒரு நா இருநூறு.. முன்னுறு கெடைக்கும் திடிர்னு ஆயிரமும் கெடைக்கும். புடிமானமா சொல்லனுன்னா ஒரு நாளைக்கி நானூறு மேனி கெடைக்கும்.

ரெண்டு வருசமா யாவாரம் பாத்து செலவு போக கந்துவட்டி கடன அடைக்க வாங்குன ஒரு லட்சம் பணத்துல அம்பதாயிரத்த அடச்சுருக்கேன். ஏதோ நல்ல மனுசங்க அந்த நேரத்துல வட்டியில்லாமெ கடங்குடுத்து ஒதவுனாங்க. உயிரு இருக்கும்மட்டும் மறக்க மாட்டேன்.”

“ரெண்டு குடும்பத்த சேந்தவங்க சேந்துருந்தாலே நீயா.. நானா..ன்னு சிக்கல் வந்துருமே பலபேரு கூடிருக்குற எடத்துல நெலமய எப்புடி சமாளிப்பீங்க.?”

“சண்ட சச்சரவு இருந்தாதா.. அது குடும்பம், இல்லாட்டி எப்புடி. கோவம் வந்தா திருப்பிக்க வேண்டியதான் பொறவு சந்தோசமா கூடிக்க வேண்டியதான். ஒரு கூட்டுல பறவைங்க எறதேடிட்டு பொழுதுக்கா கூடு திரும்பையில ஒன்னோட ஒன்னு கொத்திகிட்டு அடிச்சுக்கும்… ஆனா காலையில மறுபடியும் சந்தோசமா எற தேட ஆறம்பிக்கும். அது போலதான் மனுச வாழ்க்கையும்.”

இத்தன வலிய தாங்கி வைராக்கியமா வாழ்கையில போராடுற ஒங்களப் பாத்து நெறையா கத்துக்கனும்...”

சரசம்மா

குடும்பச் செலவுக்கு கடன் வாங்கிய தோழர் ஸ்டாலின் | வரலாற்றுத் துளிகள் | கலையரசன்

2

லகை தனது கொடையின் கீழ் கொண்டுவருவேன், என கொக்கரித்த பாசிச ஹிட்லரின் கனவை சுக்குநூறாக்கி, ஏகாதிபத்தியங்களுக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்தவர் தோழர் ஸ்டாலின். ஹிட்லரிடம் இருந்து ரசியாவை மட்டுமல்லாது உலகையே காப்பாற்றிய ரசிய மக்களின் தலைவர் தோழர் ஸ்டாலின்.

ஆனால் அவரையும் ரசியப் பாட்டாளிகளின் தியாகத்தையும் வரலாற்றில் இருந்து மறைக்கப் பார்க்கிறது முதலாளிவர்க்கம். “வெட்ட வெட்ட துளிர்க்கும் மருதாம்பாய்” நிற்கிறது அவரின் புகழ்.

ஸ்டாலின் அவர்களின் நினைவு நாளான மார்ச் 5 அன்று தோழர்  கலையரசன் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட சில படங்கள் இதோ உங்களுக்காக…

***

ஸ்டாலின் ம‌ர‌ண‌ம‌டைந்த‌ நேர‌ம் கொரியாவில் போர் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. அப்போது அமெரிக்க ஆக்கிர‌மிப்புப் ப‌டைக‌ளின் அச்சுறுத்த‌ல்க‌ளுக்கு ம‌த்தியிலும் கொரிய‌ ம‌க்க‌ள் தாங்கள் செல்லுமிடமெல்லாம் தோழர் ஸ்டாலினின் படத்தைக் கொண்டு சென்று அவரை நினைவுகூர்ந்த‌ன‌ர்.

 

***

ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌ வ‌ர‌லாறு. 1947, சுத‌ந்திர‌த்திற்குப் பின்ன‌ர் இந்தியாவில் ஏற்ப‌ட்ட‌ உண‌வுப் ப‌ற்றாக்குறையை போக்குவ‌த‌ற்கு உத‌வி கோர‌ப் ப‌ட்ட‌ நேரம், தோழர் ஸ்டாலின் விரைந்து ந‌ட‌வ‌டிக்கை எடுத்து ஏற்கெனவே வேறு பகுதிக்கு தானியங்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தமது நாட்டுக் கப்பலை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டார். அப்போது குறுக்கிட்ட ஒரு ரசிய அதிகாரி, “இன்னும் ஆவணங்கள் கையெழுத்தாகவில்லை” எனத் தெரிவிக்க, அதற்கு தோழர் ஸ்டாலின் அளித்த பதில், “ஆவணங்கள் காத்திருக்கலாம். ஆனால் பசி காத்திருக்காது”.

(இந்த உரையாடலை, ரசியாவிற்கான இந்தியத் தூதுவர் P.ரத்தினம் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பத்திரிகையாளர் குழுவில் தெரிவித்தார்)

***

தோழர் ஸ்டாலினின் மரணச் சடங்கில் அலைகடலென திரண்டு வந்த மக்கள் வெள்ளம்.

***

ஸ்டாலின் சோவியத் அதிபராக ஆட்சி செய்த காலத்தில், தனது குடும்பச் செலவுக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டு கடன் வாங்கி இருக்கிறார் !

அவரது வாழ்க்கைக் குறிப்புகளில் இருந்து :

ஸ்டாலினின் மனைவி நாடியா, அடிக்கடி குடும்பத்தை பராமரிக்க பணமில்லாமல் கஷ்டப் பட்டுள்ளார். ஒரு முறை ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
– “இப்போது கையில் எந்தக் காசும் இல்லை. 50 ரூபிளாவது அனுப்பி வையுங்கள்.”
அதற்கு ஸ்டாலினின் பதில்:
– “நான் மறந்தே விட்டேன். இன்றைக்கு புறப்படும் சக ஊழியரிடம் 120 ரூபிள் கொடுத்தனுப்புகிறேன்.”
சில தினங்களுக்குப் பின்னர் (3-1-1928), அரச பதிப்பக (GIZ) நிர்வாகி கலாட்டாவோவுக்கு, ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதினார்.
– “எனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகின்றது. 200 ரூபிள் கடனாகத் தர முடியுமா?”

(நன்றி: Stalin: The Court of the Red Tsar)

ஊழல் கறை படியாத ஸ்டாலின், இறக்கும் போது வைத்திருந்த சொத்துகள்:
ஒரு சோடி காலணிகள்
இரண்டு இராணுவ உடைகள்.
வங்கிக் கணக்கில் 900 ரூபிள்கள்
பாட்டாளி வர்க்க அதிகாரம் ஒருபோதும் ஊழல்கறை படாது.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.” – குறள் 72

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !

பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்த முகநூல் பதிவுகள் தொகுப்பு …

ருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலர் கொந்தளிப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்றும் எழுதிவருகின்றனர். சில முகநூல் பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்…

இரா.கலையரசு

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண்.59/2019 ஆக இந்திய தண்டனை சட்டம் 354A, 354B, 392, தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-E மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது. ஆனால், வழக்கில் ஆரம்பத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் செய்த தவறுகள், வரும் காலத்தில் சிபிஐ அல்லது வேறு எந்த புலானாய்வு அமைப்புகள் விசாரித்தாலும் எதிரிகளுக்கு சாதகமாகத்தான் முடியப் போகின்றது.

1. எதிரிகளை பொள்ளாச்சி காவல் துறையினர் அவர்களுடைய காவலுக்கு (Police Custody) எடுத்து விசாரிக்கவில்லை. அவ்வாறு விசாரணைக்கு எடுத்து ஏன் விசாரிக்கவில்லை. அவர்களை எது தடுத்தது. அவ்வாறு விசாரித்திருந்தால் தான் அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார், சம்பந்தப்பட்டுள்ள பிற நபர்கள் யார், மிரட்டி பெறப்பட்ட பணம் மற்றும் நகையினை எங்கே வைத்துள்ளார்கள் என்ற விவரம் தெரிந்திருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு விசாரணையும் நடத்த பெறவில்லை. ஒருவர் கைது செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தான் காவல்துறை விசாரணைக்கு எடுக்க முடியும். வேறு எந்த விசாரணை அமைப்புக்கு மாற்றப்பட்டாலும் காவலுக்கு எடுத்து விசாரிக்க முடியாது.

2. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 161-ன் படி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தினை பெண் காவல் அதிகாரிதான் விசாரித்திருக்க வேண்டும். ஆனால், வழக்கு பதிவு செய்து விசாரித்தது பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆண் காவல் ஆய்வாளர். அவர் எப்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்திருப்பார். எப்படி அந்த பெண்ணும் தயக்கம் இல்லாமல் வாக்குமூலம் கொடுத்திருக்கும்.

3. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரினை வெளியிடக்கூடாது என பல்வேறு தீர்ப்புகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆனால், கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரினை வெளியிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பிற பெண்களும் புகார் கொடுக்க நிச்சயம் தயங்குவார்கள். ஏன் வேண்டுமென்றே காவல் துறையினர் அப்படி செய்தார்கள்.

4. காவல் துறையினர் ஆரம்பம் முதலே இந்த வழக்கினை சரியான முறையில் கையாளவில்லை என்றே தோன்றுகின்றது. காவல் கண்காணிப்பாளர் நான்கு வீடியோக்கள் மட்டும்தான் என உறுதிபட கூறுகின்றார். விசாரணை முடியும் முன்பே அவருக்கு இந்த விசயம் எப்படி தெரிய வந்தது. அவரை பொள்ளாச்சி எம்.பி. சந்தித்துவிட்டு செல்கின்றார். எம்.எல்.ஏ. வெளிப்படையாக புகார் கொடுக்கின்றார். ஆனால், அவர்கள் கொடுத்த புகார் மனு என்னவென்று பொது வெளியில் வைக்கவில்லை?.

5. ஆளும் கட்சியினை சார்ந்த நபர் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை அடித்ததாக கைது செய்யப்பட்டு உடனடியாக விடுதலையும் செய்யப்படுள்ளார். ஆனால், அவரின் பெயர் ஏன் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை? அதற்கு எந்த அரசியல்வாதி காரணம்?

6. தற்போது பாதிக்கப்பட்ட பெண், பொள்ளாச்சியில் ஒருவரும் உதவவில்லை ஆளும்கட்சி தலையீட்டில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறுகின்றார். அப்படியென்றால் சம்பவம் நடந்து 12 நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் பொள்ளாச்சி காவல் துறையினரை தடுத்த நபர்கள் யார்?

இந்திய வரலாற்றில் இல்லாதவகையில் ஒரு பாலியல் வழக்கினை குண்டர் சட்டத்தில் போட்டு, உடனே சிபிசிஐடிக்கு மாற்றி, அடுத்த 5 மணிநேரத்தில் சிபிஐக்கு மாற்றியது, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் மட்டுமே நடந்திருக்கும்.

7. முக்கிய எதிரி திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரினை பிடித்து சில நபர்கள் விசாரிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வந்துள்ளன. அவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்த பிறகு திருநாவுக்கரசினை கைது செய்யாமல் விடுவித்த அதிகாரி யார்? யாருடைய உத்திரவின் பேரில் அவ்வாறு செயல்பட்டார். திருநாவுக்கரசின் அம்மா தனது மகன் தலைமறைவாகவில்லை, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான் என 12.03.2019 அன்று பொள்ளாச்சி நீதிமன்றத்தில் எடுத்த வீடியோவில் கூறியுள்ளார். பிறகு எப்படி காவல் துறையினர் திருநாவுக்கரசு தலைமறைவு என கூறினார்கள்?

8. எஸ்.பி. புகார் வந்தால் மட்டுமே விசாரிப்போம் என்கிறார்கள். இந்த மாதிரி வழக்குகளில் காவல் துறையினர் புகார்தாரர்களை தேடிப்போக வேண்டும்.. வழக்கு முறையாக விசாரணை செய்யப்படவில்லை. எதிரிகள் காவலில் எடுத்து விசாரிக்ப்படவில்லை. அவர்கள் தொடர்பு குறித்து விசாரிக்கப்படவில்லை. யாரை காப்பாற்ற இப்படி செய்கின்றார்கள்?

மொத்தத்தில் காவல் துறையினரின் நடவடிக்கைகள் எதிரிகளுக்கு சார்பாகவே உள்ளது. இனிமேல் வேறு ஏஜென்சிக்கு விசாரணை மாற்றப்பட்டாலும் இவர்கள் செய்த தவறுகளால் நீதி கிடைப்பது அரிதுதான்.

நாச்சியாள் சுகந்தி:

இந்திய வரலாற்றில் இல்லாதவகையில் ஒரு பாலியல் வழக்கினை குண்டர் சட்டத்தில் போட்டு, உடனே சிபிசிஐடிக்கு மாற்றி, அடுத்த 5 மணிநேரத்தில் சிபிஐக்கு மாற்றியது, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் மட்டுமே நடந்திருக்கும். முரணா, அதிசயமா, மாற்றமா? புரியவில்லை.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறித்து மகிழ்ச்சிதான். இதுவரை சிபிஐ-ஆல் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துள்ளதா? கை புண்ணுக்கு எதற்கு கண்ணாடி? சிபிஐ ஒரு வழக்கை முறையாக விசாரித்து இருந்தால் ஏன் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 28 வருடங்கள் 7 பேர் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருப்பர்?

சரி, இந்த சிபிஐ அமைப்புதான் எப்படிபப்ட்டது? கடந்த ஜனவரி மாதம் சிபிஐ இயக்குநர்கள் மாறி மாறி பதவி மாற்றப்படட்தும், உச்சநீதிமன்றமே தலையிட்டதும் அந்த இயக்குநர்களில் ஒருவர் சிபிஐ அமைப்பை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டியதும் இன்னும் யாருக்கும் மறந்திருக்காது.

உலவும் பல மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. சிபிசிஐடிக்கோ அல்லது சிபிஐக்கோ வழக்கு சென்றால் நீதி கிடைக்கும் என்று, ஒரு வெங்காயமும் கிடைக்காது என்பதைத்தான் விஷ்ணுபிரியா ஐபிஎஸ் வழக்கில் உணர்ந்துகொண்டோம்.

சபரிராஜன் என்கிற குற்றவாளி முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராம். அதனால், அழுத்தம் அரை டவுசர்களிடமிருந்தும் அரை டவுசர்களின் தலைமை மோகன் பகவத் , அமித்ஷா, மோடியிடமிருந்தும் வராது என்பதற்கு யார் உத்திரவாதம்?

அதேவேளையில், வாச்சாத்தி வழக்கில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி நீதியை நிலைநாட்டிய இடதுசாரிகளின் போராட்டம் காலம் முழுவதுக்குமான நம்பிக்கையை அளிக்கவல்லது. இந்த வழக்கையும் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு சிபிஐ தான் விசாரித்தது. 215 பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது.

இதை அரசியல் ஆக்காதீர்கள் என கதறும் பொள்ளாச்சி ஜெயராமன், நேற்றிலிருந்து இரண்டு முறை ஊடகங்களைச் சந்த்தித்து ஏன் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்? கன்னத்து அறை புகழ், பாலியல் சீண்டல் புகழ் எஸ்.பி பாண்டியராஜன் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என சொல்வது போல், இதில் அரசியல் தலையீடு இல்லை என அழுத்திக் கூறுகிறார்?

சபரிராஜன் என்கிற குற்றவாளி முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராம். அதனால், அழுத்தம் அரை டவுசர்களிடமிருந்தும் அரை டவுசர்களின் தலைமை மோகன் பகவத் , அமித்ஷா, மோடியிடமிருந்தும் வராது என்பதற்கு யார் உத்திரவாதம்?

இந்த பதற்றத்தை உத்திரவாதப்படுத்துகிறது, பாதிக்கப்படட் பெண்ணின் ஆடியோ என சுற்றும் பதிவு. அதில் ஏன் ஜெயராமன் பெயர் திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறது? ஜெயராமன் மீடியாக்களுக்கு சொன்ன விஷயத்தை அந்த பெண்குரல் எப்படி அச்சுப்பிசகாமல் சொல்கிறது?

படிக்க:
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

நம்புவோம், இந்த வழக்கில் நீதி கிடைக்கும். வாச்சாத்திப் பெண்களுக்கு கிடைத்ததைப் போல, காலம் தாழ்த்தப்பட்ட நீதி எனினும் நிச்சயம் கிடைக்கும் என நம்புவோம். அதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த வழக்குக் குறித்து சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பேசி, குரல் கொடுத்து, அரசியலாக்கி நீதியைப் பெற்றுத் தர வேண்டும். குறிப்பாக அனைத்துக் கட்சிகளுமே.

நம்புவதுத் தவிர வேறு எதுவுமே நம் கையில் இல்லையே!

அதிஷா

ஒரு ரேப் போதுமாக இருக்கிறது தங்களுடைய துருப்பிடித்த யோனிப் பூட்டு அறிவுரைகளோடு ஆணாதிக்க சைக்கோக்கள் கிளம்ப… பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே…  ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்குப் போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை.

அறிவுரைகளைக் காண அருவருப்பாக இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் பெண்கள் கல்லூரிக்குப் போகக்கூடாது, காதல் பண்ணக்கூடாது, புத்தகம் படிக்கக் கூடாது மாதிரியான வக்கிர எண்ணங்கள் எல்லாமே. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த உலகமகா உத்தம ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் . 24 மணிநேரமும் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஃப்ரிட்ஜூக்குள் போய் கால்மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவேண்டுமா.

பர்தா போட்டுக்கொண்டால் ரேப் நடக்காது என்று சொல்கிற மதவாத முட்டாள்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு. ஒட்டுமொத்த ஆண்சமூகமுமே குற்றவாளிகள் என்று சித்தரிப்பது இன்னொருவகை பைத்தியகாரத்தனம். எத்தனையோ ஆண் குற்றவாளிகள் இருந்தும் இரண்டு பாலினத்தவர்களிடையேயான பரஸ்பர நம்பிக்கையில்தான் பல கோடி ஆண்டுகளாக இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதை சாக்காக வைத்துக்கொண்டு அடிப்படைவாத அறிவிலிகளைப்போல காதலுக்கு எதிராக ஆண்பெண் நட்புக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுப்பது இன்னும் கேவலம்… பாதுகாப்பாக இரு என்று அறிவுரை சொல்வது வேறு… ஆனால், குனிந்த தலை நிமிராமல் கட்டைவிரல் பார்த்து நட, அடக்க ஒடுக்கமாக இரு என்பது வேறு. அடிப்படைவாத மயிராண்டிகள் சொல்வது முடங்கிவிடு என்பதுதான்.

பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே…  ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்குப் போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் பெரும்பாலான ஒற்றுமை ஒன்று உண்டு. இந்த அயோக்கியர்களின் முக்கியமான ஆயுதமே குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர்கள் மீது இருக்கிற அச்சம்தான். உலகிலேயே குழந்தைகள் தன் வீட்டில் போய் எதையாவது சொன்னால் குழந்தைகளையே சந்தேகித்து அவர்களையே குற்றவாளியாக்கி மிரட்டுகிற வினோதமான சமூகம் நம்முடையது. இந்த பாலியல் சைக்கோக்கள் இதைத்தான் பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளின் தவறுகளுக்காக காத்திருப்பார்கள். அந்த தவறை பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவார்கள். தங்களிடம் பணியவைப்பார்கள். இதில் அந்தக்குழந்தையின் குற்றம் என்ன இருக்கிறது. பொள்ளாச்சியில் நடந்திருப்பதும் அவ்வகை குற்றமே.

குழந்தைகள் மீதான குற்றங்களில் மட்டுமல்ல பெண்கள் மீது நடக்கிற பெரும்பான்மை சைபர் குற்றங்களில் நடப்பது இதுதான். பொள்ளாச்சி வன்கொடுமையில் நடந்ததும் இவ்வகை குற்றம்தான். இந்த வீடியோவை வெளியிட்டால், இந்த புகைப்படத்தை இணையத்தில் பரவவிட்டால் வீட்டில் என்ன சொல்வார்களோ, சமூகம் தன்னை என்ன நினைக்குமோ என்கிற அச்சம்தான் இந்தப்பெண்களை எல்லாம் முடக்கிவிடுகிறது. இதுதான் இந்த குற்றவாளிகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்தியாவில் பாலியல் வன்கொடுமை ஒன்றில் மட்டும்தான் குற்றவாளிகளை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரை தண்டிக்கிற வினோத வழக்கமெல்லாம் வைத்திருக்கிறோம். Victim Shaming-ஐ ஒழிக்காமல் ஒரு மண்ணாங்கட்டி மாற்றத்தையும் நம்மால் உருவாக்கிவிட முடியாது.

நாம் தொடங்கவேண்டிய இடம் வீடு. குழந்தைகள் எத்தகைய தவறு செய்திருந்தாலும் அதை வீட்டில் வந்து உரையாடுவதற்கான வெளியை உருவாக்க வேண்டும். நாம் சொன்னால் பெற்றோர்கள் காதுகொடுத்து கேட்பார்கள் என்கிற நம்பிக்கையை விதைக்கவேண்டும். நாம் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவார்களோ என்கிற அச்சம் உருவாகிவிடாத படி சிறுவயதிலிருந்தே வளர்க்க வேண்டும். பாலின பேதங்களின்றி வளர்க்க வேண்டும். ஆம்பளை சிங்கம், பொம்பளை மயில்… என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருக்கக் கூடாது.

தவறு செய்தாலும் அதை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பையும், பரவால்ல பாத்துக்கலாம் என்று தோள் தட்டிக்கொடுக்கிற நம்பிக்கையும்தான் இவ்வகை குற்றங்களை தடுக்கும். ஏனெனில், என்னதான் கல்வி வந்தாலும் இன்னமும் இங்கே சாதி இருக்கிறது, மதவெறி இருக்கிறது, ஆணாதிக்கம் இருக்கிறது. அதற்கெல்லாம் மேல் இவ்வகை பாலியல் மனநோயாளிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இருப்பார்கள்.

லக்ஷ்மி சரவணகுமார்:

இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பொது இடங்களில் பெண்களின் மீது பாலியல் அத்துமீறல் செய்த வழக்கில் கைதானவர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் மனநிலையைப் புரிந்து கொள்கிறார்.அவரது தீர்ப்பில் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்.

‘பெண்கள் குறித்தான எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமல் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு குறைந்தபட்சம் பெண்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே சிக்கலாய் உள்ளது. பதினைந்து நாட்களுக்கு கொடைக்கானல் மதர் தெரஸா பெண்கள் கல்லூரி வளாகத்தில் அவர்களோடு தங்கி நன்னடத்தைக் கடிதம் பெற்று வரவேண்டுமென’’ இந்த வழக்கிற்கு பிறகு அந்த மனிதன் என்னவானார் என்பது தெரியாது. ஆனால், அந்த நீதிபதி குறிப்பிட்ட மிக முக்கியமான விஷயம் நீ பெண்கள் குறித்த எந்தவிதமான புரிதல்களும் இல்லாமல் வளர்க்கப்பட்டிருக்கிறாய். இது இந்தியச் சூழலில் 90 சதவிகித ஆண்களுக்கு பொருந்தும். ( என்னையும் சேர்த்து.)

இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு எல்லையில் தங்களின் யோக்கியத்தனத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் ஒரு குடும்பத்தின் தனிப்பெரும்பான்மை சொத்தாக பார்க்கப்படுவதிலிருந்து தான் அவர்களின் மீதான எல்லா வன்முறைகளும் துவங்குகிறது. அப்பாவுக்கு பணிந்து போகும் அம்மாவை அக்காவை தங்கைகளை பார்த்து வளரும் ஒருவன் பருவ வயதில் அப்பாவைப் போலவே மாறுகிறான். பெண்கள் தனது விருப்பங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற மனோபாவம் மிகச் சிறிய வயதிலிருந்தே ஆண்களுக்கு ஆழமாக மனதில் ஊன்றி வளர்ந்து விடுகிறது. குடும்பத்தில் பொதுவெளியிலென எல்லா இடங்களிலும் ஆண் ஆணாகவே மாறிப்போவதற்கான முதல் காரணம் அவன் குடும்பம் அவனை சரியான புரிதல்களோடு வளர்ப்பதில்லை.

இந்த உலகமகா உத்தம ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் . 24 மணிநேரமும் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஃப்ரிட்ஜூக்குள் போய் கால்மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவேண்டுமா.

2005-ம் வருடத்தின் மாட்டுப் பொங்கல் நாள். அப்போது ஒரு மருத்துவமனையோடு சேர்ந்த என்.ஜி.ஓ. வில் வேலை செய்து கொண்டிருந்தேன். மாலை நேரம், ஆட்டோவில் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். நாற்பது வயதிருக்கும். இடைக்குக் கீழ் உடையெங்கும் குருதி. பாதி மயக்கநிலை. பதறியடித்து அவரைத் தூக்கிக் கொண்டு போய் சிகிச்சைக்கு அனுப்பினோம். விசாரித்த போது அவர் பாலியல் தொழிலாளி என்று தெரிந்தது. முந்தைய நாள் மாலை இரண்டு இளைஞர்கள் அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியிலிருக்கும் கன்மாய்க்கு சென்றிருக்கிறார்கள். இவர்கள் உறவு கொள்ளும் போது பக்கத்து கிராமத்திலிருந்த ஆண்கள் கொஞ்சம் பேர் அங்கு வர இவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அதன்பிறகு 16 பேர் சேர்ந்து தொடர்ந்து மாறி மாறி அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கியுள்ளார்கள். இறுதியாக ஒருவன் முற்றிய போதையில் அந்தப் பெண்ணின் குறியில் க்ளிட்டை கடித்து துப்பியிருக்கிறான். கேட்கும் போது தலை சுற்றி மயக்கம் வந்தது.

தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட தரமுடியாத அளவிற்கு முட்டாள்தனமும் கோழைத்தனமும் நிரம்பிய இவர்களைப் போன்று இன்னும் எத்தனை பேர். கூட்டாக சேர்ந்து பாலியல் வன்முறை செய்வது யதார்த்தமானது, அதுவொரு சுவையென இவர்களை எது நம்பச் செய்கிறது? பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வீடியோவை என்னால் முழுமையாய் பார்க்க முடியவில்லை. அந்தப் பெண்களின் அலறல் ஒன்றாய் நூறாய் ஆயிரமாய் எதிரொலிக்கிறது. தெரிந்த பழகிய ஒவ்வொரு பெண்களின் குரல்களும் அதன் பின்னால் இருப்பதான வேதனை மனமெங்கும் எழுந்தபடியே இருக்கிறது. பாலியல் ரீதியிலான வன்முறைக்கு இணங்க வைப்பதற்காக ஒரு இளம் பெண்ணை பெல்ட்டால் அடிப்பதும் அந்தப் பெண் அடிக்க வேண்டாமென கெஞ்சுவதும் இதெல்லாம் ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியதுதானா என்கிற அச்சத்தை உருவாக்குகிறது.

அதிலும் ‘உன்ன நம்பித்தானடா வந்தேன், லூசாடா நீ இப்டிலாம் பன்ற? ‘ என அந்தப் பெண் சொல்லும் நொடியில் வீடியோவை நிறுத்திவிட்டேன். அவள் அவனை எத்தனை நேசித்திருந்தால் இதை சொல்லி இருக்கக்கூடும். ஒரு மனிதன் தான் எதிர்கொள்ளும் எந்தப் பெண்ணையும் நேசிக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறான் என்றால் பெண்கள் குறித்து வாழ்க்கை குறித்து அவனது புரிதல் தான் என்ன? இவர்கள் எப்படி தங்கள் வீட்டுப் பெண்களை தோழிகளை இயல்பாக பார்ப்பார்கள்? இந்தக் குற்றவாளிகளில் சாதாரண ஆட்களில் இருந்து பெரும் அரசியல்வாதிகள் வரை பட்டியல் நீண்டபடி இருப்பது ஒரு அதிர்ச்சியென்றால் அவர்கள் என்னென்ன காரியத்திற்கெல்லாம் இதை செய்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் நெருங்கி விசாரித்தால் அதைவிடவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு நண்பருடன் இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் இந்த கேங் பொள்ளாச்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மனைவியை இதேபோல் தங்கள் வலையில் வீழ்த்தி வீடியோவும் எடுத்து அதிலிருந்து மீள வேண்டுமானால் எண்பது லட்ச ரூபாய் தர வேண்டுமென மிரட்டி வாங்கி இருக்கிறார்கள். இதுவெறும் சாம்பிள்தான். இதுபோல் ஏராளமான ப்ளாக் மெயில்கள் ஒருபுறமென்றால் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்குவது இன்னொரு வகை. இதில் ஆளுங்கட்சியின் பல முக்கியஸ்தர்களும் அடக்கம்.

பெண்களை இத்தனை துட்சமாக நினைக்கும் ஒரு கட்சி மாநிலத்தை ஆண்டால் மயிரா விளங்கும்? கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவிகள் குடும்பப் பெண்கள் என இவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. இத்தனையாண்டு காலம் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இவர்களால் இதை செய்ய முடிந்திருக்கிறதென்றால் இவர்களுக்குப் பின்னால் இருந்து யாரோ பலமாக சப்போர்ட் செய்கிறார்கள் என்பதுதான் தெளிவாக விளங்குகிறது.

ஒரு சமூகத்தில் குடும்பம் அரசு யாவும் பெண்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருப்பதை முற்றிய மனநோய் என்று சொல்வதா? கூட்டு வன்முறை என்று சொல்வதா?

ஒரு சமூகத்தில் குடும்பம் அரசு யாவும் பெண்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருப்பதை முற்றிய மனநோய் என்று சொல்வதா? கூட்டு வன்முறை என்று சொல்வதா? இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனைகள் என்ன? அல்லது எப்போது இவர்களுக்கான நீதி கிடைக்கும்? தனக்கு உடமையில்லாத ஒரு பெண்ணின் உடல் மீது எல்லாவிதமான வன்முறைகளையும் செய்துவிட்டு அதுகுறித்து எந்தவிதமான குற்றவுணர்வுகளுமில்லாமல் அலையும் இவர்களோடு சேர்ந்த ஒவ்வொருவரையுமே நாம் சந்தேகிக்கத்தானே வேண்டும்.

பரஸ்பரம் புரிந்துணர்வுடன் நடக்கும் ஒவ்வொரு காதலின் மீதும் உடல் உறவுகள் மீதும் சந்தேகங்களையும் அவருவருப்புகளையும் இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டு பேர் பொதுவெளியில் நேசத்தோடு இருப்பதை பார்க்க முடியாதளவிற்கு சூழலை மாற்றிப் போட்டிருக்கிறார்கள். மாலை அயலகத்திலிருந்து அழைத்த நண்பர் ஒருவர் ஏன் உங்கள் தேசத்தில் மனிதர்கள் இத்தனை மனச்சிக்கல் கொண்டவர்களாய் இருக்கிறார்களென வருத்தப்பட்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பில் அவர் மருத்துவமனை சென்று வந்திருக்கிறார்.

300-க்கும் மேற்பட்ட பெண்கள் என பத்திரிக்கைகள் சாதாரணமாக சொல்லும் போது நமக்குத் தெரிந்த நம்மோடு இருக்கும் பெண்கள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கைகள் எல்லாம் உடைந்து நொறுங்குகிறது. பாலியல் குற்றங்களை புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நம்மோடு இயல்பாக பழகும் இவர்கள் எல்லோருக்கும் சகிக்கமுடியாத இன்னொரு பக்கமுண்டு. பெண்களை இத்தனை இழிவாக நடத்தக்கூடிய இவர்களால் எந்தக் குற்றங்களையும் எளிதாக செய்ய முடியும்.

பாலியல் குற்றங்களை புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நம்மோடு இயல்பாக பழகும் இவர்கள் எல்லோருக்கும் சகிக்கமுடியாத இன்னொரு பக்கமுண்டு.

நேசத்தை தேடி வந்த ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து அடித்து துன்புறுத்துகிறவனை முதலில் மனிதன் என்று சொல்வது சரியா? எதிர்பாலினத்தின் மீதான பாலியல் இச்சை, காதல் இதுவெல்லாம் இயல்பான விஷயங்கள். இவை எந்தப் புள்ளியில் சாடிஸமாக மாறுகிறது. ஆயிரத்தில் ஒன்றல்ல, இலட்சத்தில் ஒரு முறைதான் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. பல வழக்குகள் என்னவாகின்றன என்பதே தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் வரிசையில் நாம் முதலாவதாக இருக்கிறோம் என்று பெருமையொடு சொல்லிக் கொள்ளலாம்.

நீங்கள் எதிர்கொள்ளும் பத்தில் நான்கு பெண்கள் ஏதோவொரு சமயம் பாலியல் அத்துமீறலை எதிர்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும் போராட வேண்டும். ஏனெனில், இந்த பிரச்சனை நம் குடும்ப அமைப்புகளின் அடிப்படியை சிதைக்கக் கூடியதொன்று. பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதோடு அவை விரைவாக விசாரிக்கப்பட்டு நீதி வழங்குவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் குடுப்பதைப் போலவே, சிறு வயதிலிருந்தே பெண்களுடனான நட்பு அவர்களைப் புரிந்து கொள்வது குறித்து சரியான முறையில் கற்றுக் கொடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அநீதிகளுக்குப் பின்னாலிருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் இடைவிடாத போராட்டம் மட்டுமே ஒரே தீர்வு.

ராஜசங்கீதன்:

பெண்ணை குடும்பத்தின் சொத்தாக நினைக்கும் நிலப்பிரபுத்துவ முறையும் நுகரும் பண்டமாக ஆக்கும் கார்ப்பரேட் மூலதனமும் ஒன்றிணைந்திருக்கும் காலத்தில் பெண் இன்னுமே அதிக ஒடுக்குமுறைக்கும் பிற்போக்குக்கும் ஆளாகிறாள்.

உயிரியல் ரீதியாக எழும் விருப்பங்களின் பின் பின்னப்படுகிற குடும்பத்தின் கவுரவமும் கார்ப்பரேட்டின் சுதந்திரக் கனவும் அவளுக்கான சுமைகளை அதிகமாக்குகிறது.

‘என்னை விட்டுடுங்க’ என ஒரு பெண் கதறும் சம்பவத்தின் மறுமுனையில் ‘என் மகன் நல்லவன்’ என கதறும் தாயும் நிற்கிறாள். ஒரு இழி சம்பவத்தின் இரு முனைகளிலும் பெண்ணையே கையறுநிலையில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கிறது ஆண் கட்டிய சமூகம்.

பெண்ணின் உண்மையான விடுதலை குடும்பத்திலிருந்தும் நுகர்வு உற்பத்தியிலும் இருந்துதான் தொடங்குகிறது. ஆண் கட்டிய அதிகாரத்தை மறுப்பதிலிருந்துதான் தொடங்குகிறது.

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக பேட்டி கொடுக்கும் எஸ்பி விசாரணை தொடங்கும் முன்னமே அரசியல் தொடர்பு இல்லை என அறிவிக்கும் அளவுக்கு தீர்க்கதரிசனம் கொண்டிருக்கிறார். எந்தெந்த அதிகார மட்டங்களுக்கு இந்த கோரம் நீண்டிருக்கிறது என அறியப்பட வேண்டும். மொத்தமாக இந்த அதிகார அமைப்பு கவிழ வேண்டும். கோவையின் மீசை முறுக்குகளின் கவுரவத்தை அம்பலம் ஏற்றப்பட வேண்டும்.

பெண்ணுரிமை மற்றும் விடுதலையில் அரசின் பங்கை கட்டாயமாக்க வலியுறுத்துவோம். இச்சம்பவம் சமூகத்தின் இழிவு எனில், இந்த இழிவில் பங்கெடுத்திருக்கும் ஆளும் அரசை பொறுப்பேற்க வைப்போம்.

பெண்ணின் விடுதலையே சமூக விடுதலை. ஆண், பெண் சமத்துவமே சமூகத்தின் சமத்துவம். ஆகவே வா. திரளுவோம்.

சுசிலா:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிர்ச்சிதரும் பல தகவல்கள் வருகின்றன. இதுல என்ன கொடுமையென்றால், 2 ஆண்டுகளுக்கு முன்பே இதைப்பற்றி புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் காவல்துறை இதனை அலட்சியமாக உதாசீனப்படுத்தியிருக்கிறது. இதை அப்போதே பரிசீலினை செய்து, விசாரிக்கப்பட்டிருந்தால், கடந்த இரண்டு ஆண்டுகள் நடந்த குற்றங்களையாவது தடுத்திருக்க முடியும். இது உண்மையில் அலட்சியமா அல்லது யாரை காப்பாற்ற அரசு மூடிமறைத்திருக்கிறது என்ற உண்மை வெளிவரவேண்டும். அரசியல் பிரமுகர்கள், பெரும்புள்ளிகள் என பலர் இதில் தொடர்புடையவர்களாக இருப்பார்கள் போல… அதனால் தான் இப்போதும் புகார் கொடுத்த உடனே, நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தியுள்ளனர். புகார்கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியுள்ளனர். புகார்கொடுத்தவர் பெயரை வெளியில் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி நம்பி போனார்கள்’ என்ற கேள்வியை தயவுசெய்து முன்வைக்காதீர்கள்.’ நம்பிவந்த பெண்ணை இப்படி சீரழித்திருக்கிறார்களே ‘ என்ற கேள்வியை முன்வையுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் கொஞ்சமாவது சிந்திப்பார்கள்!

இப்போது என்னவென்றால், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவும், தேர்தல் சமயம் என்பதாலும், இந்த நால்வரை குண்டர்சட்டத்தில் அவசரம் அவசரமாக, போட்டிருக்கிறது. மேலும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட சிலமணி நேரங்களிலேயே, சிபிஐ க்கு பரிந்துரைத்திருக்கிறது தமிழக அரசு.!

ஆனால், விசாரணை நேர்மையாக நடந்தால் மட்டுமே உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. பாதிக்கபட்டபெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், மீண்டும் இதுபோல் கொடூரக்குற்றங்கள் நடைபெறாவண்ணம் தடுக்கப்படவேண்டும்.!

கடைசியாக, சில ஆண்களுக்கும், பெண்களுக்கும், பெற்றோர்களுக்கும் :

இந்த பெண்கள் மீதும் தவறு இருக்கிறது. இவர்கள் எப்படி நம்பி போனார்கள்’ என்ற கேள்வியை தயவுசெய்து முன்வைக்காதீர்கள்.’ நம்பிவந்த பெண்ணை இப்படி சீரழித்திருக்கிறார்களே ‘ என்ற கேள்வியை முன்வையுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் கொஞ்சமாவது சிந்திப்பார்கள்!

இரா. முருகவேள்:

பொள்ளாச்சியில் நடந்திருப்பது ஒரு குற்றச் செயல். ஒரு குற்றக் கும்பல் தங்களது கேளிக்கைக்காகவும், அதிகாரம் படைத்தவர்களின் நுகர்வுக்காகவும், மிரட்டிப் பணம் பறிக்கவும் பெண்களைக் கொடூரமாக வதைத்து வந்திருக்கிறது.

இந்த அயோக்கியர்களோடு, விடுதிகளை நடத்துபவர்கள், தரகர்கள் என்று ஒரு வலைப்பின்னல் இதில் இயங்குகிறது. பொள்ளாச்சியில் இத்தகைய கும்பல்கள் எப்போதுமே இருந்து வந்துள்ளன என்று தோழரும் வழக்குரைஞருமான இளங்கோவன் கூறுகிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள இத்தகைய கும்பல்களைப் பிடிப்பதும் இக் கொடுமைக்கு முடிவுகட்டுவதுமே சமூகத்தின் முன்னுள்ள கடமை. சமூக வலைத்தளங்களில் மக்கள் வெளிப்படுத்திய கோபமே இந்த வழக்கை ஊற்றி மூட இருந்த அரசைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஒட்டு மொத்த ஆண் சமூகமும் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும்; எல்லோருக்கும் இதில் பொறுப்பு உண்டு; எல்லா ஆண்களும் குற்றவாளிகள் தான் என்பது போன்ற பதிவுகள் இணைந்து நிற்க வேண்டியவர்களை விலகிப் போகச் செய்யும்.

பெண்ணியம், பெண்விடுதலை என்பவை குறித்து எந்தவிதமான கருத்தும் இல்லாத, ஒருவர் கூட இந்த நிகழ்வுகளால் சீற்றம் கொண்டு போராட முன்வந்தால் அவரையும் இணைத்துக் கொள்ள வேண்டுமே தவிர சங்கடமான கேள்விகள் எழுப்புவது திரண்டு வரும் மக்கள் சக்தியை பலவீனப்படுத்தவே செய்யும்.

சாத்தியமான அனைவரையும் இணைப்பதும், எதிரிகளைத் தவிர மற்ற அனைவரும் நண்பர்கள் என்பதுமே ஐய்க்கிய முன்னணி தந்திரம். அதுவே மக்கள் விரோதிகளைத் தனிமைப்படுத்தும்.

கொடுங்குற்றவாளிகளைத் தண்டிப்பதும் தடுத்து நிறுத்துவதுமே இப்போதுள்ள பணி. ஆண் – பெண் உறவுகளில் சமத்துவமும் முழுமையான ஜனநாயகமும் எந்த ஒரு நல்ல சமூகத்துக்கும் முக்கியமான இலட்சியமாகும். இரண்டும் ஒரு நீண்ட நெடிய பாதையில் அடுத்தடுத்த கட்டங்கள். ஒன்றிற்காக ஒன்றைப் புறக்கணிக்க முடியாது.

இளங்கோ கிருஷ்ணன்:

“நான் எதுக்கு வெட்கப்படணும்; நீங்கதான் வெட்கப்படணும்… என் மகன் நிரபராதி” என்று பொங்குகிறார் திருநாவுக்கரசின் தாய். உடனே ஆவேசமாக அவரைத் திட்டித் தீர்க்கிறார்கள் இங்கே. மறுபுறம் புனிதமான தாய் பாசம் அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்கிறார்கள் வேறு சிலர். நம் சமூகம் இதற்கு மேல் சீழ்பிடித்து நாற முடியாது.

அந்தத் தாய் செய்தது எவ்வகையிலும் ஏற்புடையது இல்லை நமக்கு. ஆனால், வேறு எப்படி அவர் நடப்பார். என் மகன் குற்றவாளி எனக் கூனிக்குறுகி அழுவார் என்று நினைத்தீர்களா? அதெல்லாம் நமது சினிமாக்களிலும் நாவல்களிலுமே சாத்தியம். நடைமுறையில் பெரும்பாலான தாய்மார்கள் இங்கு இப்படித்தான். ஜெயிலுக்குள் இருக்கும் மகனுக்கு பீடிக்கட்டு கொடுத்துவிடுவதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம்.

அவளுக எதுக்கு வந்தாங்க என்று நேற்று சில மேதைகள் கேட்டன அல்லவா? அதையேதான் தாய் மனமும் கேட்கும். நம் சமூகத்தின் குரூரமான எதார்த்தம் இது. தாய் என்று இல்லை. அந்தக் குற்றவாளி குடும்பத்தினர் அனைவரின் மனநிலையுமே இதுவாய் இருந்தாலும் நாம் வியக்க ஒன்றும் இல்லை. அவ்வளவு சமூக சுரணையற்று வாழப் பழகிவிட்டன நம் குடும்பங்கள்.

குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். குடும்பமும் தனி மனிதனுக்காக எதையும் செய்யும் எனும் ஏற்பாட்டில் சமூகம் என்பதன் விழுமியங்கள் எல்லாம் பொய்த்துவிடும்.

அறமார்ந்த விழுமியங்களை போதித்து தம் பிள்ளைகளை வளர்க்கும் குடும்பங்களும் இருக்கவே இருக்கின்றன. ஆனால், ஒரு பிரச்சனை என்று வந்தால் அந்தக் குடும்பம் நீதியின் பக்கம் நிற்பது என்பது எல்லாம் அரிதான குணங்களாகிவிட்டன. எப்படியாவது தன் குடும்ப உறுப்பினரைக் காத்தால் போதும் என்றே பெரும்பாலான குடும்பங்கள் நினைக்கின்றன.

சமூகம் x குடும்பம் என்று இரு எதிர்வுகள். இதற்கு இடையிலான உறவுகளை எப்படி சிவிக் முதிர்ச்சியோடு கையாள வேண்டும் என்பதை எல்லாம் நாம் போதுமான அளவு வளர்க்கத் தவறிவிட்டோம். தனி மனிதர்களை, குடும்பங்களோடு இணைத்து, குடும்பத்தை சாதியோடு இணைத்து, அவற்றை மதங்களோடு இணைத்து குடும்பம் என்ற அமைப்பையே சீர்குலைத்து வைத்திருக்கிறோம்.

சமூகம் என்பது குடும்பத்திலிருந்து ஒருவன் கிளம்பிப் போய் வேட்டையாடி வருவது. குடும்பத்தால் வென்றெடுக்கப்பட வேண்டியது என்ற மனநிலையை ஆழமாக வளர்த்துக்கொண்டுள்ளோம்.

குடும்பம் என்பதன் விரிவான வடிவமே சமூகம். சமூகத்தின் மீச்சிறு அலகே குடும்பம் என்பதை எல்லாம் உணர்வுப்பூர்வமாய் நாம் புரிந்ததே இல்லை.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

திருநாவுக்கரசின் தந்தை ஒரு லேவாதேவித் தொழில் செய்பவராம். இன்னொரு குடும்பத்திடமிருந்து அராஜகமாய் அடித்துப் பிடிங்கி வட்டிக் காசை கொண்டு வந்து தரும் கணவனிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அதை வாங்கி பீரோவில் வைத்துப் பூட்டும் ஒரு மனைவிக்கு சக குடும்பம் பற்றி என்ன உணர்வு இருக்கும்.

இன்னொரு குடும்பத்தின் உணவுத்தட்டிலிருந்து தன்னுடைய செல்வத்தைத் திரட்டிக்கொண்டு வெற்றியுடன் வீடு திரும்பும் குடும்பத் தலைவனுக்குத்தான் என்ன விழுமியம் இருக்க முடியும். அதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை என ஆதங்கப்பட…

குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். குடும்பமும் தனி மனிதனுக்காக எதையும் செய்யும் எனும் ஏற்பாட்டில் சமூகம் என்பதன் விழுமியங்கள் எல்லாம் பொய்த்துவிடும்.

வி. சபேசன்:

முன்னர் தமிழ்ச் சினிமாக்களில் ஒரு ரவுடிக் கதாநாயகன் மீது கதாநாயகிக்கு நல்லெண்ணம் வர வேண்டும் என்பதற்காக ஒரு வசனத்தை வைப்பார்கள். ‘விபச்சாரியைக் கூட அனுமதி இல்லாமல் நான் தொட மாட்டேன்’ என்று கதாநாயகன் வசனம் பேசுவான். இதைக் கேட்டதுமே கதாநாயகிக்கு அவன் மீது காதல் வந்து விடும்.

ரஜினிகாந்த் நடித்த ‘தங்க மகன்’ படத்தில் ஒரு காட்சி வரும். பூர்ணிமா ரஜினிகாந்தை கேலி செய்து பாட்டுப் பாடுவார். ‘ஆம்பிளையோ இவன் சோதிக்க வேணும்’ என்று வரி வருகின்ற போது ரஜினிகாந்த் கொதித்து எழுவார். பூர்ணிமாவை வன்புணருவதற்காக துரத்துவார். புதைகுழியில் ரஜினிகாந்த் விழுந்து விட, பூர்ணிமா அவரைக் காப்பாற்றி, தன்னை வன்புணரத் துரத்தியது நியாயம்தான் என்றும் சொல்லி, ரஜினி மீது காதல் வசப்படவும் செய்வார்.

ஒரு பெண்ணுக்கு காதலையும் காமத்தையும் தேடவும், நாடவும் முற்று முழுதான உரிமை இருக்கிறது. இந்தத் தேடல்கள் அவளிடம் அத்துமீறுகின்ற உரிமையை ஆணுக்கு வழங்கி விடாது.

இப்பொழுதெல்லாம் மேற்படியான வசனங்களோ, அல்லது காட்சிகளோ தமிழ்ச் சினிமாவில் வருவது இல்லை. பெண்ணுக்கு அவளுடைய உடல் சார்ந்து இருக்கின்ற உரிமை பற்றிய சிந்தனை தமிழ் சமூகத்தில் வளர்ந்திருப்பதே அதற்குக் காரணம் என்று நம்பியிருந்தேன்.

ஆனால், பொள்ளாச்சி சம்பவத்திற்கு பெண்களை குற்றஞ்சாட்டுபவர்களும் பரவலாக இருப்பதைப் பார்க்கின்ற போது, இந்தக் கூமுட்டைகள் இன்னும் திருந்தவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ஒரு பெண்ணுக்கு காதலையும் காமத்தையும் தேடவும், நாடவும் முற்று முழுதான உரிமை இருக்கிறது. இந்தத் தேடல்கள் அவளிடம் அத்துமீறுகின்ற உரிமையை ஆணுக்கு வழங்கி விடாது. அவளுடைய உடல் மீதான முழு உரிமையையும் அவளே கொண்டிருக்கிறாள்.

காதல், காமம், நட்பு, ஈர்ப்பு என்று ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு பெண் ஒரு ஆணுடன் பொது இடத்திலோ, தனியிடத்திலோ சந்திப்பது அவளுடைய உரிமை.

பெண்ணுக்கு உள்ள இந்த உரிமைகளை சமூகம் ஏற்கின்ற போதுதான் பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் குறையும். இந்த உரிமைகளை சமூகம் ஏற்கவில்லை என்பதையே பொள்ளாச்சியின் குற்றவாளிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி, பெண்களை தொடர்ந்தும் மிரட்டி பணிய வைக்கின்றார்கள். பெண்கள் பணிந்து போகின்றார்கள். அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அந்த பெண்களை வன்கொடுமை செய்தவர்களுக்கும், செய்பவர்களுக்கும் துணை நிற்கின்ற குற்றத்தை செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

கிருஷ்ண பிரபு:

துயர் நடுவில்…

சக மனிதர்களை உடலளவிலோ மனதளவிலோ காயப்படுத்தியும் கட்டாயப்படுத்தியும் காரியம் சாதித்தல் அரக்கக் குணத்திற்கு ஒப்பானது. நாம் முகமூடி அணிந்த மனிதர்களுடன்தான் உறவாடுகிறோம்.

பத்திரிகை, சினிமா, இலக்கியம், நுண்கலைகள் என எல்லா இடத்திலும் அத்துமீறல்கள் இருக்கிறது.

பாலியல் இன்பம் என்பது விருப்பத்துடன் சேர்த்து சம்மதத்தையும் கோரி நிற்பது. அதை அதிகாரப் படிநிலை கொண்டு அபகரிக்க நினைப்பதும் மிரட்டுவதும்தான் பிரச்சனையாகிறது. பொள்ளாட்சி சம்பவம் #MeToo குரல்களின் நீட்சி.

200 பெண்களின் 1500 ஆபாசக் காணொளிகள் என்பது மிரள வைக்கும் செய்தியாக இருக்கிறது. இந்த ஏழு ஆண்டுகளில் அதில் எத்தனை எத்தனைக் காணொளி வீடியோக்கள் நம் வாட்ஸ் ஆப் குழுமங்களில் வந்து போனதோ, தெரியவில்லை.

எந்த விதப் பயிற்சியும் மேற்பார்வையும் பாதுகாப்பும் முதிர்ச்சியும் அளிக்காமல்தான் நாம் ஒரு தலைமுறைக்கே டிஜிட்டல் ஆயுதத்தைக் கைகளில் திணித்திருக்கிறோம்.

கைமீறிப் போகும் விஷயங்களைக் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்க முடிகிறது. பொள்ளாட்சி சம்பவம் பெருந்துயர்.

தொகுப்பு: