Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 351

உலகமயத்தின் சாதனை : அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை | படக் கட்டுரை

0

உலகமயத்தின் புதிய சாதனை – 2018-ம் ஆண்டில் அகதிகளின் எண்ணிக்கை 7.8 கோடி மக்கள்

லகம் முழுவதிலும் 2018-ம் ஆண்டில் தங்களது வாழிடங்களை விட்டு 7.8 கோடி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அவையின் ஆணையம் (UNHCR) கூறியுள்ளது. 2017-ம் ஆண்டை விட இது 20 இலட்சம் அதிகம். அகதிகளின் எண்ணிக்கை என்ற அடிப்படையில் பார்த்தால் உலகின் 20-வது பெரிய மக்கள் தொகை கொண்ட நாடாக இது இருக்கும்.

ரோஹிங்கிய அகதி முகாம் ஒன்றில் சிறுமி.

இடம்பெயர்ந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் உள்நாட்டு அகதிகள் என்று ஆணையம் கூறுகிறது. பெர்லினில் இதற்கான அறிக்கையை வெளியிட்ட போது இந்த போக்கு கவலையளிப்பதாக ஆணையத்தின் தலைவர் ஃபிலிப்போ கிராண்டி கூறியிருக்கிறார்.

புலம் பெயர்ந்த 2.59 கோடி அகதிகளில் பாலஸ்தீன மக்கள் கிட்டதட்ட 20 விழுக்காடாக இருக்கின்றனர். இவர்கள் தற்போது ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பில் உள்ளனர். 2018-ம் ஆண்டில் மட்டும் 1.36 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாகவும், அவர்களில் 28 இலட்சம் மக்கள் வேறு நாடுகளுக்கும் 1.08 கோடி மக்கள் உள்நாட்டிலும் இடம்பெயர்ந்துள்ளதாக ஆணையம் கூறுகிறது.

மத்திய ஆப்பிரிக்க குடியரசின் (Central African Republic) ஜைக் (Zike) கிராமத்திலிருந்து தப்பி வந்துள்ள அகதிகளை பாதுகாக்கும் கேமரூன் அமைதிப்படை வீரர்கள். மத்திய ஆப்பிரிக்க குடியரசில் தொடர்ந்து நடக்கும் உள்நாட்டு வன்முறையிலிருந்து தப்பி வெளியேறியவர்களின் எண்ணிக்கை உலக அளவில் எட்டாவது பெரியதாகும்.

காங்கோ மக்கள் குடியரசிலிருந்து வெளியேறிய மக்கள் உள்நாட்டு அகதிகள் முகாமொன்றில் ஆடைகளை வாங்குவதற்காகக் காத்திருக்கின்றனர்.

அஃப்கானிஸ்தான் காபூலிலுள்ள உள்நாட்டு அகதிகள் முகாமொன்றில் சுற்றித்திரியும் சிறுவர்கள். 2018-ம் ஆண்டின் இறுதிவாக்கில் 21 இலட்சம் மக்கள் உள்நாட்டு அகதிகள் முகாம்களில் வாழ்கின்றனர்.

லெபனானிலுள்ள ஒரு முறைசாரா முகாமில் உள்ள சிரிய அகதிகள். அரசாங்க மதிப்பீடுகளின்படி, 2018-ம் ஆண்டின் இறுதியில் சுமார் 15 இலட்சம் அகதிகள் அங்கே வாழ்கின்றனர். போரில் இருந்து தப்பிச் செல்லும் சிரியர்களுக்கு முதன்மையான நாடு இதுவாகும்.

தெற்கு சூடான் தலைநகரின் புறநகர் பகுதியில் உள்நாட்டு மேங்கடீன் அகதிகள் முகாமில் தண்ணீர் சேகரிக்க வரிசையில் நிற்கும் உள்நாட்டு அகதிகள். சென்ற ஆண்டின் கணக்குப்படி சுமார் 19 இலட்சம் உள்நாட்டு அகதிகள் இங்கே இருந்தனர்.

எரித்திரியா மற்றும் பங்களாதேசைச் சேர்ந்த அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தவர்கள். ஐரோப்பா செல்வதற்காக லிபியாவிலிருந்து கிளம்பிய நெரிசல் மிகுந்த ஒரு மரப்படகில் இருந்து மீட்கப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.

கொலம்பியாவில் பாம்ப்லொனாவில் (Pamplona) உள்ள ஒரு பெட்ரோலிய நிலையத்தில் ரொட்டி மற்றும் காஃபிக்காக காத்திருக்கும் வெனிசுலா அகதிகள். 2018-ம் ஆண்டின் இறுதிவரை 30 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர்.


– சுகுமார்
நன்றி : அல்ஜசீரா

கியூபாவில் ஒருவர் பணக்காரனாக உருவாகவே முடியாதா ?

1

கலையரசன்
ன்னுடன் கூட வேலை செய்யும் கியூபா நாட்டவர் ஒருவர், தனது நாட்டு நிலைமை பற்றி நிறைய சுவையான தகவல்களை தெரிவித்தார். அவற்றை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

*****

கியூபாவில் பொதுவாக சம்பளம் குறைவுதான். எனது சக தொழிலாளி அங்கு ஓர் ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவருக்கும் அதிக சம்பளம் இல்லை. அதனால் தனது ஆங்கில மொழிப் புலமையை பயன்படுத்தி சுற்றுலா வழிகாட்டியாக வேலை செய்தார். அங்கு கொடுக்கும் சம்பளம் அதிகம்தான். அது வாழ்க்கைக்கு திருப்தியாகப் போதும். ஆனால் எல்லோருக்கும் சுற்றுலாத் துறையில் தொழில் செய்யும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக, சிறு தொழில் முனைவோர் ஊக்குவிக்கப்படுகின்றனர். கடை வியாபாரம், முடி திருத்துதல் போன்ற பல சேவைத் துறைகளில் திறமை உள்ளவர்கள் சுயமாக தொழில் செய்து சம்பாதிக்கலாம். அவர்கள் தமது வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதம் அரசுக்கு வரியாகக் கட்ட வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை.

எந்தக் காலத்திலும், சிறு தொழில் முனைவோர் பெருமளவு பணம் திரட்டி கோடீஸ்வரனாக வர முடியாது. உலகில் எந்த நாட்டிலும் இந்த அதிசயம் நடப்பதில்லை. ஆகவே இத்தகைய சிறு தொழில் முதலாளித்துவத்தால் அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இன்று வரையில் பெரிய நிறுவனங்களில் முதல் இடும் ஏகபோக உரிமை கியூப அரசிடம் மட்டுமே உள்ளது.

இருப்பினும் சிறு தொழில் முனைவோர் தமக்கு வரும் இலாபப் பணத்தைக் கொண்டு கியூபாவில் வசதியாக வாழ முடியும். அதிகபட்சம் சொந்தமாக வீடு கட்டிக் கொள்ளலாம். அது சரி, சிலநேரம் யாராவது ஓர் அதிர்ஷ்டசாலி அதிக இலாபம் சம்பாதித்து பணம் சேர்த்து வைத்திருந்தால் என்ன செய்யலாம்? அப்படியானவர்கள் தமது வீட்டையும், வியாபாரத்தையும் வேறு யாருக்காவது விற்று விட்டு வெளிநாடொன்றுக்குச் சென்று குடியேறி விடுவார்கள்.

அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஒருவர் எந்தளவு பணம் வைத்திருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. கையில் உள்ள பணத்தைக் கொண்டு அதிகபட்சம் காணி, வீடு, நகை, கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை வாங்கி வைத்திருக்கலாம். ஆனால், மாளிகை போன்ற வீடு கட்டி, ஊதாரித்தனமாக செலவழித்து பணக்காரத்திமிர் காட்டுவோர் கியூபாவில் வாழ முடியாது. அதாவது, சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வந்தாலும், அது எல்லை மீற விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

கியூபா முழுமையான சோஷலிச நாடு அல்ல. அந்நாட்டின் பொருளாதாரம் சில கட்டுப்பாடுகளுடன் முதலாளித்துவத்தையும் ஏற்றுக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. சுருங்கக் கூறின், முதலாளித்துவ உற்பத்தி சாதனங்கள் உருவாக்கும் செல்வம், அனைத்து மக்களுக்குமான சோஷலிச நலத் திட்டங்களில் முதலிடுவதற்கு உதவுகின்றது. கியூபாவுக்கு உலகவங்கி, IMF என்று யாருமே கடன் கொடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க:
கிரனடா : புரட்சியின் நாயகன் மொரிஸ் பிஷப் !
♦ ஃபிடல் காஸ்ட்ரோ – சிறப்புக் கட்டுரை !

கியூபா இன்னமும் ஓர் ஏழை நாடுதான். இருப்பினும் உலகில் பிற ஏழை நாடுகளில் உள்ள ஏழை மக்களைப் போன்று, கியூபாவில் யாரும் பட்டினி கிடப்பதில்லை. தெருவில் அல்லது குடிசையில் வசிப்பதில்லை. இலங்கையை விட சற்றுப் பெரிதான கியூபாத் தீவின் சனத்தொகை பத்து அல்லது பதினொரு மில்லியன்கள். இருப்பினும் அந்நாட்டில் ஒருவர் விடாது அனைவருக்குமான அத்தியாவசிய தேவைகளை அரசு செய்து கொடுத்துள்ளது.

அதாவது, எல்லோருக்கும் வசிப்பதற்கு ஒரு வீடு இருக்கிறது. தண்ணீர், மின்சாரக் கட்டணம் மிகவும் குறைவு. பிள்ளைகள் படிப்பதற்கு எந்த செலவும் இல்லை. பல்கலைக்கழகம் வரை கல்வி இலவசம். மருத்துவம் இலவசம். அது மட்டுமல்ல, எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரசு உணவுப் பொருட்களுக்காக பெருமளவு மானியம் ஒதுக்குகின்றது.

அரிசி, சீனி, மாவு, எண்ணை, மரக்கறி, இறைச்சி எல்லாம் அரசு கடைகளில் மிக மிகக் குறைந்த விலையில் வாங்கலாம். அதற்காக ஒவ்வொரு குடும்பத்திற்கும் முத்திரைகள் அல்லது கூப்பன்கள் கொடுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த உணவுப் பொருட்கள் அதிகபட்சம் இரண்டு கிழமைகள் தாராளமாகப் போதும். மிகுதி நாட்களுக்கு தேவையென்பதை அறிந்து மிச்சம் பிடிக்க வேண்டி இருக்கும். அல்லது சில பொருட்கள் தேவைக்கு அதிகமாக இருந்தால், அவற்றை அயலவருடன் பண்டமாற்று செய்து கொள்ளலாம்.

அயலவருக்கு இடையிலான பண்டமாற்று வணிகம் சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ளது. பண்டமாற்று செய்ய எதுவும் இல்லாவிட்டாலும், காசு கொடுத்தும் ஒரு பொருளை வாங்கலாம். உதாரணத்திற்கு, ஒரு கிராமத்தில் ஒருவர் கோழிப் பண்ணை வைத்திருந்தால், அவரிடம் கோழி, முட்டை வாங்கலாம். வீட்டுத் தோட்டத்தில் மாமரங்கள் வைத்திருப்பவரிடம், மாம்பழங்கள் வாங்கலாம். இப்படியான வணிகமும் அரசால் அங்கீகரிக்கப்பட்டதுதான். ஆனால், பிரச்சினை என்னவென்றால் இவற்றை விற்பவர்கள் சந்தையை வைத்து பொருட்களின் விலையை தீர்மானிக்கிறார்கள். அதாவது அந்த ஊரில் மற்றவர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு விற்கிறார்கள் என்பதை விசாரித்துவிட்டு, அயல்வீட்டுக் காரரும் தனது கோழியை அதே விலைக்கு விற்பார்.

அதை விட, கியூபாவில் சட்டவிரோதமான சந்தையும் (Black Market) உள்ளது. அங்கே எல்லா விதமான பொருட்களும், சேவைகளும் விற்கப்படுகின்றன. இந்த கறுப்புச் சந்தை இயங்குவது அதிகாரிகளுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாத மாதிரி இருப்பார்கள். எங்காவது யாராவது நிறையப் பணம் வைத்திருப்பது கேள்விப்பட்டால் மட்டும் தலையிடுவார்கள். இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று விசாரித்து கறுப்புச் சந்தை வணிகத்தில் சேர்ந்த இலாபம் என்று கண்டுபிடித்து விடுவார்கள். அதற்குப் பிறகு அது ஒரு குற்றமாகக் கருதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

படிக்க:
திபெத் மடாலய மர்மங்கள் | கலையரசன்
♦ மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்

அண்மைக் காலத்தில், ரவுல் காஸ்ட்ரோ அரசாங்கம் கொண்டு வந்த முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தம் காரணமாக, சிறு தொழில் முனைவோர் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கும் வழக்கமும் வந்துவிட்டது. உதாரணத்திற்கு, ஒருவர் தனது வீட்டைத் திருத்தி, விரிவுபடுத்தி கட்டி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட முடியும். ஆனால், அது சர்வதேச தரத்துடன் கூடிய தங்குமிடமாக தயார்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தத் தரம் இல்லா விட்டால், அதிகாரிகள் அனுமதி கொடுக்க மாட்டார்கள். அதனால், சில இடங்களில் இலஞ்சம் கொடுப்பதும் நடக்கிறதாம்.

கியூபாவில் சோஷலிசம் உச்சகட்டத்தில் இருந்த காலத்தில், அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் கூட சாதாரண வீடுகளில்தான் வசித்தார்கள். பணக்காரர் என்று யாரும் இருக்கவில்லை. இருந்தாலும், யாரும் தம்மிடம் பணம் இருப்பதாக வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஒருவர் தன்னை மற்றவர்களை விட வசதிபடைத்தவராக காட்டிக் கொள்வது அவமானத்திற்குரிய செயலாக கருதப்பட்டது. அந்த நிலைமை இன்றைக்கும் நீடிக்கிறது.

ஆனால், தற்போதைய முதலாளித்துவ சீர்திருத்தங்களுக்கு பின்னரான சமூக நிலைமையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. பல்வேறு முதலாளித்துவ உற்பத்தி நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட அரசாங்க அல்லது இராணுவ அதிகாரிகள் சிலரிடம் தாராளமாக பணம் புழங்குகிறது. அவர்கள் அந்தப் பணத்தை வைத்து கியூபாவில் ஆடம்பரம் காட்டுவதில்லை. ஆனால், அவர்களது பிள்ளைகள் பாரிஸ், லண்டன் என்று ஐரோப்பிய நகரங்களுக்கு சென்று தம்மிடம் உள்ள பணத்தை செலவழிக்கிறார்கள்.

(தொடரும்)

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

 

மக்களிடையே நெருங்கிய பிணைப்பை பராமரிக்கும் பாசிஸ்டு கட்சி !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 20

டோக்ளியாட்டி

பாசிஸ்டுக் கட்சியின் உட்கட்சி வாழ்க்கை செத்துவிட்டது என்றே கூறலாம். பெயரளவுக்கு ஆண்டுதோறும் உறுப்பினர்களின் பொதுச்சபைக் கூட்டம் நடைபெறுகிறது. அங்கு படாடோபமாக நிகழ்த்தப்படும் பல உரைகளை உறுப்பினர்கள் செவிமடுத்துக் கேட்கின்றனர். அவர்கள் பழைய இயக்கத்தின் பணியை அங்கீகரிக்கின்றனர். புதிய இயக்கத்தின் பொறுப்புகளை உறுதி செய்கின்றனர். ஆனால் இது வெறும் சம்பிரதாயம்தான். ஜனநாயக ரீதியான தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

எனினும் பாசிஸ்டுக் கட்சியில் அறவே உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று கருதுவது தவறு. ஏன்? ஏனென்றால் பாசிஸ்டுக் கட்சி அணிகளிடையே அதிலும் குறிப்பாக மத்திய மட்டத்திலுள்ள அணிகளிடையே கீழ்மட்டத்திலுள்ள ஊழியர்களுடன் இடையறாது தொடர்பு கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள். மேலும் தாங்கள் அன்றாடம் தொடர்பு கொண்டிருக்கும் வெகுஜனங்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டவர்கள் அவர்கள்.

அர்பினிதி (leandro arpinati)

இத்தகைய அணிகளிடமிருந்துதான் கருத்து எதிரலைகள் வருகின்றன. எந்த மார்க்கமாக, எந்த வழியில் அவை வருகின்றன? முரண்பாடான முறையில் அவை வருகின்றன. நிலைமை மிகவும் முற்றிய பிறகுதான் இந்தப் பிரதிபலிப்புகளை ஒருவர் காணமுடியும். பொலோக்னாவில் அர்பினிதி ¹¹ விவகாரத்தை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். இந்தக் கோஷ்டியினர் அதிகாரப்பூர்வமான வேலைத் திட்டத்துக்கு மாற்றாக வேறொரு திட்டத்தை முன்வைக்கத் துணிந்தபோது, அதனை பாசிசத்தால் மேற்கொண்டும் சகித்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டபோதுதான் இந்த விவகாரம் அம்பலத்துக்கு வந்தது.

இந்த நிகழ்வுப் போக்கு கவனிக்கப்படாமலேயே நடைபெற்று வருகிறது. கிராமப் பகுதிகளிலுள்ள பாசிஸ்டுக் கட்சி அமைப்புகளில்தான் இது அநேகமாக விகசிதமாகத் தெரிகிறது. ஏனென்றால் இங்குதான் மக்களின் அதிருப்தி அதிகம்; இங்குதான் பாசிஸ்டு அமைப்புகள் வெகுஜனங்களுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளன; இங்குதான் நகரங்களில் இருக்கும் அளவுக்கு காவல்துறையின் உதவி அதிகமில்லை. மக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ள எமிலியாவில் வெகு அண்மையில் மிகப் பெருமளவுக்கு கலக உணர்ச்சியும் கொந்தளிப்பும் அதிகரித்தற்கு இதுவே காரணம்.

கடைசியாகக் குறிப்பிடப்பட்ட இந்த நிகழ்வு 1933-34-ம் ஆண்டில் நடைபெற்றது. இதனால் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டத்துக்கு பாசிசம் ஓராண்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டியதாயிற்று. வருடாந்தர அழைப்பின்போதுதான் உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் நடைபெறும். இதுதான் வழக்கமாக நடைபெறும் வழிமுறை. இதற்கு மத்தியில் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில்தான் கட்சியின் கதவுகள் திறந்துவிடப்படும். இன்று அவை மூடப்பட்டுவிட்டன. 1933-34-ல் உறுப்பினர் சேர்க்கும் பணி நடைபெற்றது. அப்போது தொழிலாளர்களைக் கட்சிக்குள் ஈர்க்க பெருமுயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது.

படிக்க:
மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி ?
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !

உறுப்பினர் சேர்க்கும் இந்த இயக்கத்துக்குப் பலன் கிட்டிற்று என்பதை மறுக்க முடியாது. உறுப்பினர்கள் எண்ணிக்கை 7 இலட்சம் முதல் 8 இலட்சம் அதிகரித்தது. தொழிலாளர்கள் பாசிஸ்டுக் கட்சியில் சேரும் சம்பவங்கள் ஏற்கெனவே அங்குமிங்குமாக நடைபெற்று வந்தன. 1932 ஆரம்பத்தில் ஃபியட்டிலும் வேறு சில தொழிற்சாலைகளிலுமுள்ள பாசிஸ்டுக் கட்சியில் தொழிலாளர்கள் சேர்ந்ததை இதற்கு உதாரணமாகக் கூறலாம். எனினும் 1934-ம் ஆண்டில்தான் உறுப்பினர் சேர்க்கும் இயக்கம் மிகப் பெரும் பாய்ச்சலைக் கண்டது. ஆண்டுத் தொடக்கத்தில் உறுப்பினர் எண்ணிக்கை 10,99,000 ஆக இருந்தது. அதே ஆண்டு இறுதி வாக்கில் 18,50,000-ஐ எட்டிற்று: அதாவது கிட்டத்தட்ட 8 இலட்சம் அதிகரித்தது. ஏராளமான ஆலைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர் என்பதில் ஐயமில்லை.

பாசிஸ்டுக் கட்சி இவ்விதம் புது வலுவும் உத்வேகமும் பெற்றதன் விளைவாக அதிகார வர்க்க ஜபர்தஸ்துகள் முடுக்கிவிடப்பட்டன. வெகுஜனங்களின் வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்டது. ஆனால் அதே சமயம் வேறொரு விளைவும் ஏற்பட்டது. கட்சியில் ஓரளவு உட்கட்சி ஜனநாயகம் தலைதூக்கிற்று. நகர்ப்புறங்களை விடக் கிராமப்புறங்களில்தான் இது துலாம்பரமாகத் தெரிந்தது.

இந்த வளர்ச்சிப் போக்கின் முடிவுக்கு இன்னும் நாம் வந்துவிடவில்லை. நம் முன்னால் 18 இலட்சம் உறுப்பினர்களைக் கொண்ட பாசிஸ்டுக் கட்சி இருக்கிறது. இத்தாலிய மக்களின், இத்தாலிய பூர்ஷுவாக்களின் முக்கியமான பகுதியினர் அதில் அங்கம் வகிக்கின்றனர். வேறு எந்த இத்தாலிய பூர்ஷுவா அமைப்பும் இப்போது இல்லை. பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினரல்லாத ஒரு பூர்ஷுவாவைக் கூடக் காண்பது மிகவும் அபூர்வம். பூர்ஷுவாக்களின் பழைய அரசியல் வடிவங்கள் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டன.

இது பூர்ஷுவாக்களுக்குப் புது வலுவை அளித்துள்ளது. கட்சியானது ஒரு கட்சிக்குரிய இயல்பை இழந்துவிட்டாலும் இத்தாலிய பூர்ஷுவாக்களின் சித்தாந்தத்தை அது பெரிய அளவுக்கு ஒன்றுபடுத்தியுள்ளது. இது கட்சிக்குப் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. இதை மறந்துவிடக் கூடாது; இது மிக முக்கியமானது.

தொழிலாளி வர்க்கத்துக்கு எதிராகப் பகிரங்கமாகச் சர்வாதிகாரத்தைப் பிரயோகிக்கக் கூடிய ஒரு புது வகையான அரசியல் கட்சியைப் பாசிஸ்டுக் கட்சியில் இத்தாலிய பூர்ஷுவாக்கள் காண்கின்றனர். மேலும், இதர பல அமைப்புகள் மூலமும் பிணைப்புகள் மூலமும் எக்காலத்திலும் தொழிலாளர் வர்க்கத்தினர் மீது ஆயுதந்தாங்கிய நிர்ப்பந்தத்தைப் பிரயோகிக்கக் கூடிய ஆற்றலை இத்தாலியப் பூர்ஷுவா வர்க்கத்தினருக்கு அளிக்கும் ஓர் அமைப்பாக பாசிஸ்டுக் கட்சி பரிணமித்திருக்கிறது. பாசிஸ்டுக் கட்சி தோற்றுவித்துள்ள படையும் பல மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் பாசிஸ்டுக் கட்சி ஓர் ஆயுதந்தாங்கிய கட்சி என்ற இயல்பையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. பாசிஸ்டுக் கட்சியின் படை கரபினியரி படைப்பிரிவு போன்றதோ அல்லது இராணுவத்தைப் போன்றதோ அல்ல. எனினும் அது இராணுவத்தின் அம்சத்தை ஓரளவுக்குப் பெற்றிருக்கிறது. கட்சி தனது படையின் மூலம் வெகுஜனங்களின் மிகப் பரந்த பகுதியினரைக் கட்டுப்படுத்தி வருகிறது. இது சர்வாதிகாரத்தின் வலிமைக்கு பிரதான அடித்தளங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

எனினும் இங்கு கூட சில முரண்பாடுகள் தென்படுகின்றன. அரசியல் வாழ்க்கை இல்லாத காரணத்தால் படைக்குக் குறிப்பிட்டளவு திட்பத்தையும் உறுதியையும் அளிக்க இயலாமல் இருக்கிறது. படைக்குள் நாம் குறிப்பிட்டளவு பணியை மேற்கொள்வதற்கு இது நமக்கு வாய்ப்பளிக்கிறது. எனினும் இந்த முரண்பாடுகளைக் காணாதிருப்பதும், பாசிஸ்டுக் கட்சி ஒரு வலுவான அம்சத்தைக் கொண்டிருக்கிறது என்பதைக் கருத்தில் கொள்ளாதிருப்பதும் தவறாகும்.

பாசிஸ்டு கட்சி தனது படையின் மூலம் வெகுஜனங்களின் மிகப் பரந்த பகுதியினரைக் கட்டுப்படுத்தி வருகிறது. இது சர்வாதிகாரத்தின் வலிமைக்கு பிரதான அடித்தளங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

அடிமட்டத்தில், பாசிஸ்டுக் கட்சியில் உறுப்பினராக இருப்பது ஒருவித பிணைப்பை, ஏறத்தாழ ஒரு சித்தாந்தப் பிணைப்பை, ஸ்தாபனப் பிணைப்பைப் பெற்றிருக்கிறது. ஒருவகையில், கட்சியில் சேர்ந்துள்ள தொழிலாளர்கள் ஒருவிதமான இராணுவ சீருடையை அணிந்திருக்கின்றனர் எனலாம். இந்தப் படைவீரனும் இன்றைய நிலைமை குறித்து அதிருப்தி அடைந்திருக்கிறான். ஆனால், அவன் ஒரு படைவீரன், அவனுக்கென்று ஒரு சீருடை இருக்கிறது. எனவே, அவன் பணிகிறான், கீழ்ப்படிகிறான். ஒரு புரட்சிகர நெருக்கடி தோன்றினாலொழிய அவன் எதிர்த்துக் கிளர்ச்சி செய்ய முடியாது.

நமது கட்சி விடாஉறுதியோடு, அயராது சோராது பணியாற்றினால்தான் இந்தப் பிணைப்புகளைத் துண்டிக்க முடியும். இந்தப் பிணைப்புகள் தாமாகவே நொறுங்கி விழும் என்று நினைப்பது தவறு. இந்தப் பிணைப்பை எப்படித் துண்டிக்க முடியும் என்பதை எப்போதும் நாம் புரிந்து கொள்ளாததே அடித்தளத்தில், தொழிற்சாலைகளில் நாம் செய்யும் பணிக்கு ஓரளவு இடையூறாக இருக்கிறது. நமது கோஷங்களை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது என்பதை நாம் எப்போதுமே அறியாதிருக்கிறோம். இந்த வகையான சீருடையை அணிவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் விஷயத்தில் நமது குறிக்கோள்கள் சரிவர வரையறுத்துக் கொள்ளத் தெரியாதவர்களாகவும் இருக்கிறோம். இதேபோல், அவர்களது மனநிலையைப் புரிந்து கொள்ளாதவர்களாகவும், அவர்களைப் போராட்டத்தில் ஈடுபடச் செய்யும் பாதையைப் புரிந்து கொள்ளாதவர்களாகவும் நாம் இருக்கிறோம்.

சட்டரீதியான சாத்தியக்கூறுகளை நடைமுறையில் பயன்படுத்திக் கொள்ளும்போது இந்த அம்சத்தை நாம் மனதிற்கொள்ள வேண்டும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

11. லியான்ரோ அர்ப்பினதி (1892-1945) 1929 செப்டம்பர் முதல் 1933 மே வரை உள்துறை உதவிச் செயலாளராக இருந்தார். பி.என்.பி.லிருந்து இவரும் இவரைப் பின்பற்றும் சிலரும் வெளியேற்றப்பட்டனர். முசோலினிக்கு எதிராகச் சதி செய்ததாக குற்றம் சாட்டி அவர் ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பொலோக்னா அருகில் 1945 ஏப்ரல் 22-ம் தேதி கொரில்லாக்களால் கொல்லப்பட்டார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

மத்திய பட்ஜட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் | மக்கள் அதிகாரம்

பத்திரிகைச் செய்தி

மத்திய பட்ஜெட் : படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில் !

06.07.2019

னித்த பொறுப்புடன் செயல்படும் முதல் பெண் நிதியமைச்சர் என்ற ‘பெருமை’யுடன் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள மத்திய நிதி நிலை அறிக்கை ‘படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்’ என்பது போலத்தான் இருக்கிறது.

45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயத்தில் தீராத நெருக்கடி, விவசாயிகள் தற்கொலை, பெருகிவரும் ஏற்றத்தாழ்வு, தொழில்துறை மந்தம், சிறு தொழில் நசிவு, வர்த்தகப் பற்றாக்குறை, பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் நெருக்கடி என்று மூச்சுத்திணறும் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் சிக்கலில் தள்ளிவிடும் நிதிநிலை அறிக்கையே இது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட்ஜெட் மதிப்பீடுகள் எல்லாம் முழுமையாக நிறைவேறக் கூடியவை அல்ல என்பதை மனதிற்கொண்டே நாம் பரிசீலிக்க வேண்டும். உதாரணமாக கடந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட வரி வருவாய் குறைவாகவே வசூலானது. இராணுவம் உள்ளிட்ட நிர்வாகத்திற்கான செலவை அரசு சிறிதும் குறைக்காது. எனவே வருவாய் குறைந்தால் முதலில் பலியாவது மக்கள் நலத்திட்டங்கள்தான்.

கிராமங்கள் ஏழைகள், விவசாயிகள் இவர்களை மையமாகக் கொண்டுதான் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதியமச்சர் பேசியிருக்கிறார். இது ஒரு ஏமாற்று. விவசாயத்திற்கு ரூ. 1,51,518 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 78% அதிகம் என்கிறார்.

இதில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஆறாயிரம் உதவித்தொகை வழங்க ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 75,000 கோடியைக் கழித்தால் விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்டிருப்பது கடந்த ஆண்டைவிட ரூ. 21,686 கோடி குறைவு. இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளின் விளைபொருளுக்கு ஆதரவு விலைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ. 3,000 கோடி. ‘சோளப் பொறி யானையைப் பசியை எப்படித் தீர்க்கும்?’

100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்ற ஆண்டை விட ரூ. 1,054 கோடி குறைக்கப்பட்டிருக்கிறது. 27% விவசாயிகளும், 28% சாகுபடிப் பரப்பும்தான் பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. மீதிப்பேரின் கதி என்ன?

படிக்க:
பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்
♦ வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !

செலவில்லாத விவசாயம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. விவசாயத்திற்கு வழங்கப்படும் மானியத்தை ஒழித்துக்கட்டும் சதித்திட்டத்திற்குத்தான் இப்படியொரு அழகான பெயர்.

45 ஆண்டுகளில் இல்லாத வேலையின்மையைப் போக்க, புதிய வேலைவாய்ப்பை உருவாக்க ஒதுக்கியிருக்கும் தொகை ரூ. 4,583 கோடி. இது எத்தனை பேருக்கு வேலை வழங்கும் என்பது நிர்மலாவுக்கே வெளிச்சம். வேலைவாய்ப்பை உருவாக்க வாய்ப்புள்ள மூலதனச் செலவு சென்ற ஆண்டைவிட ரூ. 50,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வேலைவாய்ப்பில் மிகப் பெரும் பங்கு வகிக்கும் சிறு தொழில்களைப் பாதுகாக்க எந்தத் திட்டமும் இல்லை. 2 சத வட்டிச் சலுகைக்கு வெறும் ரூ. 300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் துறை எப்படி வளரும்? வாராக்கடனால் திணறும் வங்கிகள் எப்படிக் கடன் கொடுக்கும்?

கிராமப்புற மேம்பாடு, பள்ளிக்கல்வி, சமூக நலம் ஆகிய துறைகளுக்குக் கடந்த ஆண்டை விட நிதி குறைக்கப்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறையில் உருப்படியான திட்டமேதுமில்லை.

44 தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்து 4 நெறிமுறைத் தொகுப்பாக மாற்றுவது என்ற அறிவிப்பின் மூலம் போராடிப் பெற்ற உரிமைகளை பறித்து, தொழிலாளிகளை கார்ப்பரேட் முதலாளிகளின் கொத்தடிமைகளாக்கும் துரோகத்தையும் அரங்கேற்றியிருக்கிறார் நிதியமைச்சர். மேலும் இருக்கும் வாய்ப்பு பறிபோகும் அபாயம் அதிகரிக்கும்.

அதே நேரத்தில் அந்நிய, தனியார் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குக் கதவுகளை திறந்து விட்டிருக்கிறார். இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீடு, விமானப் போக்குவரத்து, ஊடகத்துறை, இரயில்வே ஆகியவற்றில் வெளிநாட்டு மூலதனம் அனுமதிக்கப்படுகிறது. இருக்கும் பொதுத்துறைகளை அழிக்கும் நோக்கில் ரூ. 1,05,000 கோடிக்கு பங்குகளை விற்கத் திட்டமிட்டிருக்கிறார்.

ரிசர்வ் வங்கியின் சேமிப்பிலிருந்து ரூ. 90,000 கோடியை உருவுவதன் மூலம் அந்த நிறுவனத்தையும் ஆபத்தில் சிக்க வைத்திருக்கிறார். 99% தொழில் நிறுவனங்களுக்கு நிறுவன வரியைக் குறைத்திருக்கிறார். எனவே கார்ப்பரேட், தனியார் முதலாளிகளை வாழவைக்க உழைக்கும் மக்களை வதைக்கும் மக்கள் விரோத பட்ஜெட். அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த பட்ஜெட்டை வரவேற்றிருப்பதே, இது யாருக்கான பட்ஜெட் என்பது தெளிவாகும்.

தோழர் காளியப்பன்
மாநில பொருளாளர்

அர்ச்சனை, உண்டியல் என அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி போதும் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 10

மக்கு நாலு, ஆறு, நாற்பத்தெட்டுக் கண்படைத்த கடவுள்கள் வேண்டாம். நமக்கு ஒரே ஆண்டவன் போதும். உருவமற்ற தேவன் ! ஊன் வேண்டாத சாமி! ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி! ஆடல் பாடல் அலங்காராதிகள், அப்பம் பாயசம் அக்காரவடிசில் கேட்காத சாமி! அங்கே, இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து வைக்காத சாமி! அர்ச்சனை, உண்டியல் என்று கூறி, அக்கிரகாரத்தைக் கொழுக்க வைக்காத சாமி இருந்தால் போதும். நம்மிடமிருந்து தியானத்தை பெறட்டும். அருளைத் தரட்டும்; நம்மிடமிருந்து தட்சணை பெற்றுத் தர்ப்பாசூரர்களுக்குத் தானம் தரும் தேவதைகள் நமக்கு வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தவே, நாம் நம்மை இந்து அல்லவென்று கூறுகிறோம்.

ஆள் நடமாட ஓர் உலகம், ஆவி உலவ மற்றோர் உலகம்; இந்திரன் இருக்க ஓர் உலகம், நாகன் தங்க ஓர் உலகம் ; மேலே ஏழு, கீழே ஏழு எனப் பதினான்கு உலகங்களாம்! அதல, விதல, சுதல, தராதல, இரசாதல, மகாதல, பாதாளம் என ஏழாம்! பூலோக, புவலோக, சுவலோக, சனலோக, தபலோக, மகலோக, சந்திரலோகம் என மேல் உலகம் ஏழாம்! இத்தனை உலகங்கள் இந்துவுக்கு உண்டு ஏட்டிலே.

நமக்கு இவை வேண்டாம்; நாமிருக்கும் நாடு நமக்கு இருந்தால் போதும்; நன்செயும், புன்செயும், சாலையும், சோலையும், வாவியும் நதியும், மக்களும் சுபீட்சமும் இருக்கட்டும். காமதேனுவும் கற்பக விருட்சமும், ரம்பையும் ஊர்வசியும் இருக்கிற உலகத்திலே, டாக்டர் வரதராஜுலுவே உலவட்டும்! முடிசூட்டிக் கொள்ளட்டும்! நாமிருக்கும் நாட்டிலே நமது உழைப்பு நமக்குப் பயன்பட்டு, நாலு ஜாதியிலே நாம் கீழ் ஜாதி என்ற கொடுமை இன்றி “நாமார்க்குங் குடியல்லோம்” என்று நாம் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தில்தான், நாம் நம்மை இந்து அல்ல என்று கூறிக்கொள்கிறோம்.

நாம் யாருக்கும் மேல் அல்ல, யாரும் நமக்கு மேலோர் அல்ல! நாம் ஆள ஆட்கள் வேண்டாம்! நம்மை ஆளவும் ஐயர்மார் வேண்டாம்! நம்மிடையே தரகர் கூடாது. தர்ப்பை ஆகாது. சேரியும் கூடாது. அக்கிரகாரமும் ஆகாது. யோக யாகப் புரட்டுகள், புரோகிதப் பித்தலாட்டம், மனுக் கொடுமை வேண்டாம். மனிதர் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று கூறுபவர் எப்படித் தம்மை ‘இந்து’ என்று கூறிக்கொள்ள முடியும்? மூட மதிக்காரர், கொடுமைக்காரர், அடிமை, சூத்திரன் என்று கூறிக்கொள்ள எப்படித்தான் மனம் இடந்தரும்? எப்படித்தான் துணியும்?

இந்து மதம் என்பதிலே உள்ள கடவுள் முறை, சமுதாய முறை, மதக்கதை முறை, மக்கள் வாழ்க்கை முறை ஆகியவற்றை அலசிப் பார்த்த பிறகு யாருக்குத்தான் தன்னை ஓர் “இந்து” என்று கூறிக் கொள்ள மனம் இடந்தரும்? பாம்பை எடுத்துப் படுக்கையில் விட்டுக் கொள்வாரா? விஷத்தை எடுத்து உணவில் சேர்ப்பாரா? வீதிக் குப்பையை வீட்டுக்குள் கொண்டு போய்ச் சேர்ப்பாரா? மதி துலங்கும் விஷயங்களை விட்டு, மதி கெடுக்கும் கற்பனைகளைக் கட்டி அழுவாரா? மீள மார்க்கம் தேடுவதை விட்டு, மாளவழி தேடிக்கொள்வாரா? விடுதலைக்கு வழி பிறந்த பின்னர், அடிமை முறிச்சீட்டில் கையொப்பமிடுவாரா? கண் தெரியும் போது குழியில் வீழ்வாரா? தாம் திராவிடர் என்று தெரிந்த பிறகு திராவிடர் தன்னிகரற்று வாழ்ந்த இனம் என்பது தெரிந்த பிறகு, தம்மை இழிவு செய்து கொடுமைக்கு ஆளாக்கும் இந்து மார்க்கத்தில் போய்ச் சேர இசைவாரா? வீரத் திராவிடர் என்ற ஓர் உணர்ச்சி வீறிட்டு எழப்பெற்றோர், இனி ஈனமாய் நடத்தும் இந்து மார்க்கத்தை ஏறெடுத்தும் பாரார்! அதன் இடுக்கில் போய்ச் சேரார்; இழிவைத் தேடார்!

படிக்க:
மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !
முசுலீம்களுக்கு விடிவைத் தருமா மத்தியப் பிரதேச அரசின் பசுவதை சட்டதிருத்தம் ?

டாக்டர் நாயுடு, ஆரியராவது திராவிடராவது என்று கூறும் அவசரவாதி. எல்லாம் கலந்துவிட்டது என்று பேசும் சமரசவாதி. ஆராய்ச்சியாளர்கள் அவர் போல், அரசியல் ஊஞ்சலில் உள்ளவர்களல்லர்; அவர்களின் அபிப்பிராயம் படிப்பாலும் பண்பாலும், விருப்பு வெறுப்பு அற்ற விவேக விளக்கத்தாலும் உண்மையைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உயர் நோக்கத்தாலும் உண்டாவன. இந்துமகா சபையிலே சேர்ந்தோம்; எனவே இனி அதற்குத் தக்கபடி கருத்தைத் திருத்தி அமைப்போம் என்ற முறை டாக்டர் வரதருக்குப் பிரியமாக இருக்கலாம். அறிஞர், தமது அபிப்பிராயத்தை அப்படி விபச்சார விடுதிக்கு அனுப்பிட மாட்டார்கள்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

கொடிய வேதனை இருக்கும்போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா ?

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8-ஆ

“ஆமாம், எதற்காக, எதற்காக நீங்கள் இப்படி இருக்கிறீர்கள்? இவ்வளவு கொடிய வேதனை இருக்கும் போது சிரிப்பதும் கிண்டல் செய்வதும் பயங்கரம் அல்லவா? உங்களுக்கு வலிக்கிறது என்பதை நினைக்கையில் என் நெஞ்சு சுரீர் என்றது. தனி வார்டில் இருக்க ஏன் மறுத்துவிட்டீர்கள்?”

இவ்வாறு கூறியவள், அழகிய தோற்றமும் இதமான இனிமையும் வாய்ந்த வார்டுத்தாதி க்ளாவ்தியா மிஹாய்லவ்னா அல்ல போலவும் யாரோ அசரீரி போலவும் அலெக்ஸேக்குத் தோன்றியது. மன எழுச்சி பொங்க எதிர்ப்பு தெரிவித்த அந்த மாது பேசினாள். அவளுடைய குரலில் துயரம், ஒருவேளை இன்னும் சோக உணர்ச்சி, ஒலித்தது. மெரேஸ்யெவ் கண்களைத் திறந்தான். சாந்தமும் அன்பும் சுடர்ந்த விழிகள் கொண்ட கமிஸாரின் வெளிறி ஊதிய முகமும், மருத்துவத்தாதியின் மென்மையான பெண்மைப் பாங்குள்ள பக்கத் தோற்றமும் மப்ளரால் மறைக்கப்பட்டிருந்த விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவனுக்குத் தென்பட்டன. பின்புறத்திலிருந்து பட்ட வெளிச்சத்தில் தாதியின் செழித்து வளர்ந்த பொன் கூந்தல் மின்னி ஒளிர்ந்தது. தான் செய்வது சரியல்ல என்று உணர்ந்ததும் அவள் மீதிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை.

“அடா-டா-டா, ஸிஸ்டர்…. கண்ணீ ர் விடுகிறீர்களே இப்படி! ப்ரோமைட் அருந்தலாமா? ஊம்?” என்று சிறுமியிடம் சொல்வது போல அவளிடம் சொன்னார் கமிஸார்.

“மறுபடியும் கேலி செய்கிறீர்கள். என்ன மனிதர் நீங்கள்! இது விகிருதம், தெரிகிறதா, அழ வேண்டிய சமயத்தில் சிரிப்பதும், தானே துண்டுதுண்டாகப் பிய்ந்து கொண்டிருக்கும் போது மற்றவர்களை தேற்றுவதும் நல்ல ஆள்தாம்! சொந்த விஷயத்தில் இப்படி நடந்து கொள்ளத் துணியாதீர்கள், உங்களுக்கு அந்த உரிமை கிடையாது….”

தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு அவள் நெடுநேரம் சத்தமின்றி அழுதாள். மேலங்கிகள் நடுங்கிய அவளுடைய மெல்லிய தோட்களை ஏக்கமும் பரிவும் ததும்ப நோக்கினார் கமிஸார்.

“நேரம் கடந்துவிட்டது, அருமைப் பெண்ணே. சொந்தக் காரியங்களில் இப்போது நான் எப்போதுமே தவறாகவே தாமதம் செய்தேன், நேரமே இல்லாதிருந்தது. இப்போதோ, முற்றிலும் நேரம் கடந்து விட்டது என்று தோன்றுகிறது.”

கமிஸார் பெருமூச்சு விட்டார். மருத்துவத் தாதி நிமிர்ந்து கண்ணீர் மல்கும் விழிகளுடன், ஆர்வம் பொங்கும் எதிர்பார்ப்புடன் அவரை நோக்கினாள். அவர் முறுவலித்தார், மறுபடி பெரு மூச்சுவிட்டார், பின்பு தமக்கு வழக்கமான நல்லியல்பும் ஓரளவு கிண்டலும் தொனிக்கும் குரலில் பேச்சைத் தொடர்ந்தார்.

படிக்க :
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள் : பாஜக தலைவியின் அறைகூவல் !

“கேளுங்கள் ஒரு கதையை, சமர்த்துப் பெண்ணே. எனக்குச் சட்டென்று நினைவு வந்தது. இது நடந்தது வெகு காலத்துக்கு முன்பு, உள்நாட்டுப் போர் நாட்களில், துர்கிஸ்தானில். ஆம்… ஒரு குதிரைப் படைப் பிரிவு பஸ்மாச்சிகளை விரட்டிக் கொண்டு போயிற்று. ஒரு பாலைவனத்தை அடைந்தது. குதிரைகளோ, ருஷ்யப் பரிகள், மணலுக்குப் பழக்கப்படாதவை, எனவே விழத் தொடங்கின. திடீரென்று நாங்கள் காலாட்கள் ஆகிவிட்டோம். அப்போது கமாண்டர் முடிவு செய்தார் – சுமைகளை எறிந்து விட்டு துப்பாக்கிகளை மட்டும் எடுத்துக் கொண்டு கால்நடையாக பெரிய நகரத்துக்குப் போவது என்று. நகரமோ நூற்று அறுபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. நாங்கள் வெற்று மணலில் நடக்க வேண்டியதாயிற்று.

புரிகிறதா உங்களுக்கு? ஒரு நாள் நடந்தோம், இரண்டாம் நாள், மூன்றாம் நாள். வெயில் அனலாய் பொசுக்கிற்று. குடிக்க நீர் இல்லை. வாயில் தோல் வெடிக்கத் தொடங்கிவிட்டது. கால் கொதிக்கும் மணல். கால்களுக்கு அடியில் மணல் சரசரத்தது. பற்களுக்கிடையே கரகரத்தது, கண்களில் படிந்தது, தொண்டைக் குழியை நிறைத்தது. எங்களுக்குத் தாவு தீர்ந்து போய் விட்டது. ஒருவன் மணல் அலை மேல் விழுவான், தரையில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அப்படியே கிடந்துவிடுவான். எங்கள் கமிஸாராக இருந்தவர் வலோதின் யாக்கோவ் பாவ்லவிச். பார்வைக்கு ஒடிந்து விழுந்து விடுவது போல இருப்பார். படிப்பாளி. வரலாற்று நிபுணர் அவர். ஆனால் உறுதிமிக்க போல்ஷெவிக். பார்க்கப் போனால் அவர்தாம் முதலில் தொய்ந்து விழுந்திருக்க வேண்டும். அவரோ, விடாது நடந்தார், ‘நகரம் இதோ வந்துவிடும், பக்கத்தில் தான் இருக்கிறது’ என்று எல்லோரையும் உற்சாகப்படுத்தினார். விழுந்து கிடந்தவர்களை ரிவால்வரைக் காட்டி, ‘எழுந்திரு, இல்லா விட்டால் சுட்டுவிடுவேன்’ என்று பயமுறுத்தினார்..,

“நாலாம் நாள். நகரம் இன்னும் பதினைந்தே கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தபோது, எல்லோருமே செத்துச் சாவடைந்து போனோம். கால்கள் பின்னின. குடிவெறி கொண்டவர்கள் போலத் தள்ளாடினோம். எங்கள் பின்னே காலடித்தடங்கள் காயமடைந்த விலங்கினது போன்று கோணல் மாணலாக இருந்தன. திடீரென்று கமிஸார் ஒரு பாட்டுப் பாடத் தொடங்கினார். அவருடைய குரல் மகா மோசம், பலவீனமானது. அவர் பாடத் தொடங்கியதும் பாடாவதியான, பழைய வீரர் பாட்டு. ஆனாலும் அந்தப் பாட்டை எல்லோரும் பாடினோம்! ‘அணிவகுங்கள்!’ என்று நான் கட்டளை இட்டேன், அடி வைப்பை ‘இடம், வலம்’ என்று கணக்கிட்டேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள் – இப்படி நடப்பது எளிதாக இருந்தது.”

“இந்தப் பாட்டுக்குப் பின் இன்னொரு பாட்டும் அப்புறம் மூன்றாவது பாட்டும் பாடப்பட்டது. வறண்டு வெடிப்புக் கண்ட வாய்கள், கொளுத்தும் வெயில் – அந்த நிலைமையிலும் ஆட்கள் பாடினார்கள்! புரிகிறதா? தெரிந்த பாட்டுக்களை எல்லாம் வழி நெடுக மறுபடி மறுபடி பாடிக் கொண்டு போனோம். ஒரு ஆளைக் கூட மணலில் விட்டுவிடாமல் நகரை அடைந்தே தீர்ந்தோம்…… பார்த்தீர்களா, எப்பேர்பட்ட விஷயம் என்று?”

“கமிஸார் என்ன ஆனார்?” என வினவினாள் கிளாவ்தியா மிஹாய்லவ்னா.

“கமிஸாருக்கு என்ன? இப்போதும் உயிரோடு சௌக்கியமாக இருக்கிறார். அவர் பேராசிரியர், தொல்பொருள் இயல் அறிஞர். வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட குடியிருப்புகளை தரைக்கு அடியிலிருந்து அகழ்ந்து எடுக்கிறார்கள். அந்த நடைப் பயணத்துக்கு பிறகு அவர் தொண்டை போய்விட்டது. கம்மிய குரலில் பேசுகிறார். அவருக்குக் குரல் எதற்காம்.? நல்லது.. போதும் அரட்டை.. நீங்கள் போங்கள், அருமை சகோதரி. இன்று இனி சாகமாட்டேன் என்று குதிரைப் படை வீரன் என்ற முறையில் வாக்குறுதி அளிக்கிறேன்.”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மேற்கு வங்கம் : சிவப்பு காவியாக மாறியது எப்படி ?

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்டு கட்சியின் படுதோல்விக்கும் பா.ஜ.க.-வின் வெற்றிக்குமான காரணங்கள் என்ன? 2014 மக்களவைத் தேர்தலில் 17.02% வாக்குகளையும் 2 இடங்களையும் கைப்பற்றிய பா.ஜ.க., இன்று 40.25% வாக்குகளையும் 18 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. 2014-ல் 30% வாக்குகளைப் பெற்று 2 இடங்களை மட்டுமே பெற்ற மார்க்சிஸ்டு கட்சியின் வாக்குவீதம் 6.28% ஆகச் சரிந்து விட்டது.

பா.ஜ.க.வும் திருணமுல் காங்கிரசும் போட்டி போட்டுக்கொண்டு மதவெறியைத் தூண்டியதால் ஏற்பட்ட மதரீதியான முனைவாக்கத்தின் காரணமாக ஜனநாயக உணர்வுக்கான வெளி இல்லாமல் போய்விட்டதாகவும், வாக்காளர்கள் அதற்குப் பலியாகிவிட்டதாகவும், இதுதான் தங்களது தோல்விக்குக் காரணமென்றும் கூறியிருக்கிறார் யெச்சூரி.

தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு பா.ஜ.க. திட்டமிட்டே முஸ்லிம் எதிர்ப்பு இந்துவெறியைத் தூண்டியது என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். ஆனால், எதிர்த் தரப்பிலிருந்து இந்து எதிர்ப்பு முஸ்லிம் மதவெறியும் தூண்டப்பட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. இது பா.ஜ.க.-வின் பக்கம் சாய்ந்து விட்ட பெரும்பான்மை சமூகத்தை தாஜா செய்து, மீண்டும் தங்கள் பக்கம் கொண்டுவரும் பொருட்டு வேண்டுமென்றே உண்மையைத் திரிக்கின்ற தந்திரமாகும்.

மேற்கு வங்க பா.ஜ.க. வின் மாநிலத் தலைவர் திலிப் கோஷ் காரக்பூர் சதார் தொகுதியில் வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடத்திய ராம நவமி ஊர்வலம்.

மார்க்சிஸ்டுகளின் வீழ்ச்சியும் பா.ஜ.க.வின் வளர்ச்சியும் திடீரென்று இந்தத் தேர்தலிலோ, திருணமுல் ஆட்சிக்கு வந்ததன் விளைவாகவோ நடந்து விடவில்லை. மாறாக, மார்க்சிஸ்டுகளின் வீழ்ச்சிதான் மமதாவை ஆட்சியில் அமர்த்தியது. “நாடாளுமன்றத்தை வர்க்கப் போராட்டத்துக்கான கருவியாகப் பயன்படுத்தப் போகிறோம்” என்று தேர்தல் பங்கேற்புக்கு விளக்கம் சொல்லி, பிறகு தேர்தல் பாதை மூலமாகவும், தேர்தல் பாதைக்கு அப்பாற்பட்ட வடிவங்கள் மூலமாகவும் புரட்சியை நோக்கிச் செல்லப்போவதாகத் தமது சந்தர்ப்பவாதத்துக்குப் பொழிப்புரை கூறி, இறுதியில் சட்டமன்ற, நாடாளுமன்றப் பதவிகள் இல்லாமல் உயிர்வாழவே முடியாது என முதலாளித்துவக் கட்சிகளின் நிலைக்குத் தாழ்ந்து, ஊழல், கிரிமினல்மயம் உள்ளிட்ட எல்லாத் தீமைகளும் வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளுக்குள் குடியேறிவிட்டன.

மூன்று பத்தாண்டுகள் வங்கத்தில் ஆட்சியிலிருந்த மார்க்சிஸ்டு கட்சி, அதிகாரவர்க்கத்துடன் சேர்ந்து கொண்டு மக்களின் மீது அதிகாரம் செலுத்துகின்ற இன்னொரு ஒடுக்குமுறைக் கருவியாகவே மாறிவிட்டது. சிங்குர், நந்திகிராம் பிரச்சினைகளில் புத்ததேவ் அரசு புதிய தாராளவாதக் கொள்கையின் வெறி பிடித்த முகவராகச் செயல்பட்டது மட்டுமின்றி, கட்சி அணிகள் என்று கூறிக்கொண்ட குண்டர் படைகள் மக்களுக்கு எதிராக வெளிப்படையாகவே களத்தில் நின்றன.

இப்போராட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரத்துக்கு வந்த மமதாவின் கட்சி, அதனினும் கொடியது என்பதை விரைவிலேயே அனைவருக்கும் புரிய வைத்தது. கடந்த 8 ஆண்டுகளில் மார்க்சிஸ்டு கட்சியினர் பலரைக் கொலை செய்ததுடன், அவர்களது கட்சி அலுவலகங்களையும் திருணமுல் கட்சிக் குண்டர்கள் கைப்பற்றிக் கொண்டனர்.

படிக்க :
♦ பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்
♦ மேற்குவங்கம் : இடதுசாரிகளின் இறங்குமுகம் – புத்ததேவ் எச்சரிக்கை

மமதா கட்சியினரின் ரவுடித்தனத்தை எதிர்கொள்ள இயலாத நிலையில்  இருந்த மார்க்சிஸ்டு கட்சியின் அணிகளும் சரி, மக்களும் சரி, “சட்டத்தின் ஆட்சி”யை யாரேனும் நிலைநாட்ட மாட்டார்களா என்று ஏங்கிக்கொண்டிருந்த சூழல், வங்கத்தில் பா.ஜ.க. காலூன்றுவதற்கு மிகவும் பொருத்தமான தருணமாக அமைந்துவிட்டது.

“ஒழுங்கை” இந்துத்துவத்துடனும், “மதச்சார்பின்மையை” ரவுடித்தனத்துடனும் இணைத்துப் பெரும்பான்மை சமூகத்தை நம்ப வைப்பதில் சங்கப் பரிவாரம் வெற்றி பெற்று விட்டது. “மோடியின் ஆட்சி வந்தால், சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படும்” என்ற நம்பிக்கை நகர்ப்புற நடுத்தரவர்க்கதினரிடமே நிலவுவதாகப் பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அது மட்டுமல்ல, “தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு பா.ஜ.க.-வுக்கு வாக்களிப்பதும், அந்தக் கட்சியிலேயே சேர்ந்து விடுவதும்தான் தீர்வு” என்று மார்க்சிஸ்டு கட்சியினரே கருதியதன் விளைவுதான் மார்க்சிஸ்டு கட்சியினரின் வாக்குகள் அனைத்தும் பா.ஜ.க.வை நோக்கித் திரும்பியதற்குக் காரணமாகும்.

“கிராமப்புற ஏழை இந்துக்கள்தான் பா.ஜ.க.-வின் முக்கியமான சமூக அடித்தளம். இதை வைத்துப் பார்த்தால், முஸ்லிம்களின் ஆதரவு இல்லாத இடதுசாரிக் கட்சியைப் போல பா.ஜ.க. தோற்றமளிக்கிறது” என்று கிண்டலாக எழுதுகிறார், காவிப் பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா.

மே.வங்கத்தின் இந்த வீழ்ச்சி திடீரென்றும் நிகழ்ந்து விடவில்லை. கடந்த சில ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். -ஆல் நடத்தப்படும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் மாநிலம் முழுவதும் தோன்றியிருக்கின்றன. சங்கப் பரிவாரத்தின் பல்வேறு அமைப்புகளும் கிராமப்புறங்கள் முதல் பழங்குடி மக்கள் பகுதிகள் வரையில் மாநிலம் முழுவதும் எல்லா இடங்களிலும் பெருகியிருக்கின்றன. அந்த மாநிலத்தின் பண்பாட்டுக்கே அறிமுகமில்லாத ராமன் வழிபாடும், அனுமன் கோயில்களும் மாநிலம் முழுவதும் பெருகியிருக்கின்றன. ராமநவமி ஊர்வலம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பஸிர்ஹாட், துலாகோரி ஆகிய இடங்களில் கலவரங்கள் நடந்திருக்கின்றன.

மேற்கு வங்க மாநிலம், 24 பர்கானா மாவட்டத்திலுள்ள பஸிர்ஹாட் பகுதியில் நடந்த மதக் கலவரம். (கோப்புப் படம்)

மமதாவின் அரசு இவற்றைக் கண்டுகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, மார்க்சிஸ்டு கட்சியும் இந்துத்துவ பாசிசம் தலையெடுப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. எனவே, எந்தவிதத் தடையும் இல்லாமல் பார்ப்பன பாசிச சக்திகள் அங்கே வளர்ந்திருக்கின்றன.

வங்காளத்தின் மக்கள் தொகையில் 27% முஸ்லிம்கள் என்பதால், இந்து வெறியைத் தூண்டுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மே.வங்க முஸ்லிம்களில் பலர் சட்டவிரோதக் குடியேறிகள் என்றும் அவர்களை வங்கதேசத்துக்கு அனுப்பவேண்டுமென்றும் பா.ஜ.க. மேற்கொண்ட பிரச்சாரத்தையும் நடவடிக்கைகளையும் மமதா எதிர்த்த காரணத்தினால், மமதாவை முஸ்லிம் ஆதரவாளர் என்று பா.ஜ.க. முத்திரை குத்தியது.

பா.ஜ.க. வின் இத்தகைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் முஸ்லிம் எதிர்ப்பு இந்து வெறியைப் பரவச் செய்வதில் முக்கியப் பங்காற்றின. குறிப்பாக, மதச்சார்பற்றவர்களாகத் தங்களைக் கூறிக்கொண்ட வங்காளத்தின் இந்து நடுத்தர வர்க்கத்தினர், பண்பாட்டுரீதியாகவும், கருத்தியல்ரீதியாகவும் மிதவாத இந்துத்துவ கருத்துகளைக் கொண்டவர்களாகவே இருந்திருக்கின்றனர். குறிப்பாக, புதிய தாராளவாதக் கொள்கைகளின் ஆதாயத்தை நுகர்ந்து, சமூக உணர்வை இழந்திருக்கும் நடுத்தர வர்க்கம் இந்துத்துவத்துக்கு எளிதில் பலியாகியிருக்கிறது.

படிக்க :
♦ தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !
♦ வட இந்தியர்கள் காந்தியையும் விரும்புகிறார்கள் ! மோடியையும் நேசிக்கிறார்கள் !

“மமதா பானர்ஜி பிறப்பால் முஸ்லிம் என்பதனால்தான், அவர் முஸ்லிம்களை ஆதரிக்கிறார்” என்று சங்கப் பரிவாரம் கிளப்பிவிட்ட மட்டரகமான பொய்ப் பிரச்சாரத்தை, உண்மை என்று கொல்கத்தா நகரின் படித்த இந்து நடுத்தர வர்க்கத்தினரே நம்பத்தொடங்கி விட்டனர் என்று கூறுகிறார் ஒரு மே.வங்கப் பத்திரிகையாளர்.

பெரும்பான்மைச் சமூகத்தின் மதரீதியான சாய்வைக் கண்டு அஞ்சிப் பின்வாங்குகிறது மார்க்சிஸ்டு கட்சி. விநாயகர் ஊர்வல எதிர்ப்பு, ராமராஜ்ய ரதயாத்திரை எதிர்ப்பு, ராமர் பால எதிர்ப்பு, இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு, சங்கராச்சாரி எதிர்ப்பு ஆகிய நடவடிக்கைகள் தமிழகத்தில் நடந்ததைப் போல, அங்கே நடந்ததில்லை.

பன்மைத்துவம் என்ற பெயரில் பார்ப்பன இந்து மதத்தையும், ஒருமைப்பாடு என்ற பெயரில் பார்ப்பன இந்து தேசியத்தையும் வழிமொழிவதே வலது,  இடது கம்யூனிஸ்டுகளின் கொள்கையாக இருந்ததால், கருத்தியல்ரீதியாக இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து நிற்கும் அடிப்படையே அக்கட்சியினருக்கு இல்லாமல் போய்விட்டது.

ஆகவே, மார்க்சிஸ்டு கட்சியின் ஆதரவாளர்கள் கூண்டோடு பா.ஜ.க.-வுக்கு வாக்களித்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மருதையன்
புதிய ஜனநாயகம் ஜூன் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம் !

1

காவி பயங்கரவாதிகள் 2002 -ல் குஜராத்தில் நடத்திய முசுலீம் இனப்படுகொலைக்கு அப்போதைய முதலமைச்சர் நரேந்திர மோடி தூண்டுதலாகவும் துணையாகவும் இருந்தார் என ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட், உச்சநீதிமன்றம் வரை சாட்சியளித்தார்.

ஏகபோகமாக பதவியில் அமர்ந்திருக்கும், குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள் சஞ்சீவ் பட்-ஐ பழிவாங்க, இது போதுமான காரணமாக இருக்கிறது. அரதப்பழசான ஒரு வழக்கு தூசித்தட்டப்பட்டு, அந்த வழக்கில் 30 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்றுவிட்டார் சஞ்சீவ் பட்.

அவருடைய நண்பரும் சமூக செயல்பாட்டாளருமான ஹர்ஸ் மந்திர், அரச அதிகாரத்துக்கு எதிராக எதிர்த்து நின்ற சஞ்சீவ் பட்டின் மன உறுதியை கடிதமாக எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே…

*****

அன்புள்ள சஞ்சீவ்,

ங்களிடம் இந்தக் கடிதம் படிக்கக் கொடுக்கப்படுமா, அப்படி கொடுக்கப்பட்டால் எப்போது கிடைக்கும் என்பது குறித்தெல்லாம் எனக்குத் தெரியவில்லை. ஈடில்லாத உங்களுடைய வாழ்க்கை இணையர் ஸ்வேதா பட் மூலம் இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்கலாம் என நினைக்கிறேன். ஆனால், இந்தக் கணத்தில் எதிர்த்து நிற்கவும் சமாளிக்கவும் ஏராளமான விசயங்கள் உள்ளன. எனவே, இந்தக் கடிதத்தில் இருக்கும் அற்பமான விசயங்களை அவர் மறக்கக்கூடும்.

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் அவருடைய குடும்பத்தாருடன். (கோப்புப் படம்)

இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைக்குமானால், ஜாம்நகர் மாவட்டத்தின் எங்கோ உள்ள கடுமையான சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நின்று தனிமையில் இந்தக் கடிதத்தை படிப்பதாக கற்பனை செய்கிறேன், துக்கம் கொள்கிறேன். என்னுடைய பல ஆண்டுகால ஆட்சிப்பணியில், இந்தியாவின் பல சிறைச்சாலைகளைக் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாக இருக்கும், தரையில் படுப்பது கடினமாக இருக்கும், நாற்றமடிக்கும் கழிப்பறையை பயன்படுத்த நேரிடும், ஈக்கள், கொசுக்கள் தொல்லை கொடுக்கும்… எனவே, சிறை என்பது எத்தகைய கடுமையானதாக இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

நீங்கள் ஏற்கனவே ஒன்பது மாதங்கள் சிறையில் கழித்துவிட்டீர்கள். ஆனாலும், இது கடினமாகவே இருந்திருக்கும். உங்களுக்கு இன்னும் சில நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை இருக்கலாம் – மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது, அகமதாபாத் அல்லது டெல்லியில் உள்ள இந்தியாவில் உயரிய நீதிமன்றங்கள் உங்களுக்கு நீதியை வழங்கலாம்.

ஜாம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதற்கு எதிரான நிலைப்பாட்டை அவை எடுக்கக்கூடும். எப்படியாயினும் நீங்கள் மன உறுதி மிக்கவர், போராட்ட குணம் மிக்கவர் என்பதை நான் அறிவேன். நீதிக்காக நீங்கள் தொடர்ந்து போராடுவீர்கள், நீங்கள் அப்பாவி என்பதை நிரூபிக்க தொடர்ந்து போராடுவீர்கள். ஒரு நாள் சுதந்திரமாக வெளிவருவீர்கள்.

கடுமையான சிறையின் பின்னால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் உங்களுக்கு, இந்தியாவில் சிறந்த மனிதர்கள், உலகம் முழுமைக்கும் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக, உங்களுடைய வாழ்க்கையின் கடினமான போராட்டத்தில் ஆதரவாக நிற்கிறார்கள் என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அப்பாவி என்பதை நாங்கள் நம்புகிறோம். இந்த நாட்டின் சக்திவாய்ந்த ஒரு நபருக்கு எதிராக சாட்சி சொன்ன தைரியத்தின் காரணமாக நீங்கள் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையும் அறிவோம். இந்திய சுதந்திரத்துக்குப் பின் 2002 -ல் நடந்த மிகக் கொடூரமான படுகொலைகளில் அந்த நபருக்கும் இருந்த தொடர்பை நீங்கள் வெளிக்கொண்டுவந்தீர்கள்.

படிக்க:
பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்
♦ சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

இந்த நாட்டின் முதலாவது, இரண்டாவது சக்தி வாய்ந்த நபர்களின் தீவிர கர்வத்தின் வெளிப்படையான விளைவுகளை நீங்கள் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். சிறிய விசயங்கள் பேரில் உங்களின் தைரியத்துக்கு எதிராக அரசு அதிகாரம் கட்டவிழ்த்துவிடப்படுகிறது. இந்தியாவில் அரசு அதிகாரத்தில் இருப்பவர்களின் தவறுகளை வெளிக்கொண்டு வந்ததால் உங்களைப் போல பாதிக்கப்பட்ட நபர் வேறு எவரும் இல்லை. உயர்ந்த அதிகாரம் கொண்ட அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரை எதிர்த்து குரல்கொடுத்ததற்காக முப்பது ஆண்டுகள் தனது வாழ்நாளை சிறையில் கழிக்க தண்டனை விதிக்கப்பெற்றவர் உங்களைத் தவிர எவரும் இல்லை.

இந்த வழியில் நீங்கள் தண்டிக்கப்படலாம் என்பது இந்தியாவின் குற்றவியல் நீதி – புலன்விசாரணை முகமைகள், நீதிமன்றங்கள் மற்றும் மனித உரிமை முகமைகளின் நேர்மை மற்றும் சுதந்திரத்தின் வீழ்ச்சியை கண்ணாடி போல காட்டுகிறது. நீங்கள் வீழ்த்தப்பட்டிருப்பது காக்கிச் சீருடையில் உள்ள உங்களுடைய சகோதர, சகோதரிகளை பெரிதும் புண்படுத்தும், உங்களுடைய ஆயுள் சிறை தண்டனைக்குப் பிறகு, அவர்கள் மவுனமாவார்கள்.

ஊடகங்களில் இதுகுறித்து எந்தவொரு குறிப்பிட்ட சீற்றமும் இல்லாதிருப்பது, அரச அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை அது வெளிப்படையாக எந்தவித கோபமோ எதிர்ப்போ இல்லாமல் வெளிப்படையாகவே பார்க்க விரும்புகிறது என்பதைத்தான் பிரதிபலிக்கிறது.

அரசு அமைப்புகளின் நிலைகுலைவு, UPSC போன்ற அரசியலமைப்பு அமைப்புகளும்கூட உங்கள் விசயத்தில் அவமானகரமாக காட்சியளிக்கின்றன. 2015 -ஆம் ஆண்டு நீங்கள் உங்களுடைய பணியிலிருந்து அனுமதி இல்லாமல் விடுப்பு எடுத்ததாகக்கூறி நீக்கப்பட்டபோது, அரசியலமைப்பின் 315 பிரிவு குடிமை பணி அதிகாரிகளின் சுதந்திரத்தை பாதுகாக்கிறது, அந்த அடிப்படையிலாவது UPSC பேசியிருக்கலாம். ஆனால், மவுனம் சாதித்தது அதை அப்போது எழுதினேன்.

பணிநீக்கம் என்பது ஒரு அதிகாரியைக் கையாளக்கூடிய மிகப் பெரிய நிர்வாக ரீதியிலான தண்டனையாகும். இது மிகவும் அரிதான வழக்குகளில் அரசு அதிகாரிகளின் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகும். ஆனால், UPSC உங்களிடம் உரிய விளக்கத்தைக்கூட பெறாமல், பணிநீக்கம் செய்தது. எனக்குத் தெரிந்த பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஆண்டுக்கணக்கில் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்து, தனியார் நிறுவனங்களுக்காக பணியாற்றியவர்கள், தண்டனையிலிருந்து தப்பியுள்ளனர். அவர்கள், ஒருபோதும் பணியிலிருந்து நீக்கப்பட்டதில்லை.

நீங்கள் அனுமதியில்லாமல் விடுப்பு எடுத்தது உண்மைதான் எனில், எச்சரிக்கை கடிதமோ அல்லது விடுப்பு எடுத்த காலத்துக்கு சம்பள பிடித்தமோ, அந்தக் குற்றத்துக்கு ஏற்ற தண்டனையோ தரப்பட்டிருக்கலாம் என அப்போது நான் எழுதினேன்.

நாட்டின் உயர்ந்த இடத்தில் உள்ளவர்களால் நீங்கள் ஏன் பணியிலிருந்து நீக்கப்பட்டீர்கள் என்கிற மர்மத்தை, நீங்கள் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்த நாட்களை எதற்காக பயன்படுத்தினீர்கள் என்பதிலிருந்து அறியலாம். குஜராத்திலிருந்து இந்திய போலீசு சேவை பணிக்கு வந்த நீங்கள், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, படுகொலைகளை நடத்தியதில் உள்ள பங்கு குறித்து சாட்சியளித்தீர்கள்.

உச்சநீதிமன்றத்தின் சிறப்பு புலனாய்வு குழுவின் முன், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் முன் சாட்சியமளித்தீர்கள். பின்பு இது எழுத்துப்பூர்வமாகவும் உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழுவும் ராஜூ ராமச்சந்திரனும் ஜாக்கியா ஜஃப்ரி (குல்பர்க் சொசைட்டியில் 2002 மிகக் கொடூரமாக கொல்லப்பட்ட 70 பேரில் முன்னாள் எம்.பி. இஷான் ஜஃப்ரியும் ஒருவர். அவருடைய மனைவி ஜாக்கியா )அளித்த புகாரை விசாரித்தனர். ஜாக்கியா ஜஃப்ரி, குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி முதல் குற்றவாளி என்றும், வெளிப்படையாகவும்; வேண்டுமென்றும், உயிர்களை – உடைமைகளை காக்கத்தவறியவர் என்றும்; தன்னுடைய அரசியலமைப்பு கடமையை ஆற்றத்தவறியவர் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

உங்களை பணிநீக்கம் செய்தது அனுமானிக்க முடியாதததாக இருந்தது, அதிர்ச்சியளித்தது. ஆனால், அவர்கள் உங்களுக்கு மோசமானதைச் செய்தார்கள் என நாங்கள் நினைத்தோம். அதையும் காட்டிலும் மோசமான விளைவு உங்களுக்கு வரும் என எதிர்ப்பார்க்கவில்லை. நீங்கள் வாழ்நாள் வரை சிறையில் கழிக்கும் தண்டனை பெறும்வரை அவர்கள் ஓயப்போவதில்லை என நினைக்கவில்லை.

சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான வகுப்புவாத படுகொலையில் நீங்கள் ஒரு சாட்சியாக வலிமையான மற்றும் அச்சுறுத்தலாக இருக்கிறீர்கள் என்பதையே உங்கள் தண்டனை பிரதிபலிக்கிறது. நீங்கள் வெளிக்கொண்டுவந்த ஆதாரங்கள் எவ்வளவு ஆபத்தானவை. உங்களுக்கு மட்டுமல்ல, நாட்டின் எந்தவொரு நபரும் சக்திவாய்ந்த நபர்களுக்கு எதிராக வாள் சுழற்றினால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு செய்தியை சொல்ல விரும்பினார்கள். மூத்த காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண குடிமகனின் நிலைமை என்னவாகும்?

2002- ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி மோடி தலைமையில் நள்ளிரவில் நடந்த சர்ச்சைக்குரிய அந்தக் கூட்டத்தில் போலீசு அதிகாரிகளும் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் அப்போது என்ன பேசப்பட்டது என நினைவில்லை என்றும் மோடி என்ன அறிவுறுத்தல்களை கொடுத்தார் என்பது குறித்தோ தெரியவில்லை என கூறினார்கள். நீங்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை எனவும் கூறினார்கள். ஆனால், உங்களுடைய ஓட்டுநரும், பிபிசி செய்தியாளரும் இந்தக் கூட்டத்துக்கு நீங்கள் செல்லும் முன் உங்களிடமிருந்து விடைப்பெற்றார்கள், அவர்கள் நீங்கள் கூட்டத்தில் கலந்துகொண்டதை உறுதி படுத்தினார்கள்.

படிக்க:
குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !
♦ ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை ! பழிவாங்கும் மோடி அரசு !

மூத்த அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மோடி சொன்ன அறிவுறுத்தல்கள் குறித்து பேசினால் என்ன நடக்கும் என்பதுகுறித்து நீங்கள் அறிவீர்கள். ஆனாலும் நீங்கள் பேசத் துணிந்தீர்கள். உயர்ந்த மன உறுதியுடன் என்ன சொல்ல வேண்டுமோ, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தீர்கள்.

நீங்கள் சிறப்பு புலனாய்வு குழுவிடமும் உச்சநீதிமன்றத்திடமும் “இந்துக்கள் மிக மிக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருப்பதாகவும், அவர்கள் கோபத்தை வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டியது அவசியம் என்றும் மோடி பேசினார்” எனத் தெரிவித்தீர்கள். இந்துக்களின் ஆத்திரம் – கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் போது மோடி வெளிப்படுத்திய கருத்து இது.

“குஜராத்தில் வகுப்புவாத கலவரங்களின் போது, குஜராத் போலீசு இந்துக்கள் மற்றும் முசுலீம்களை சமநிலையில் அணுகும் போக்கை கடைப்பிடித்து வந்திருக்கிறது. இந்த சூழ்நிலை, முசுலீம்களுக்கு பாடம் கற்பிக்க தகுந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, அதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காது” என மோடி மீது குற்றச்சாட்டுகளை வைத்தீர்கள். இந்தக் குற்றச்சாட்டுகள் ஏற்கப்பட்டிருந்தால் மோடி மீது கிரிமினல் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டிருகும்.

உங்களுடன் பணிபுரிந்த சிறப்பு புலனாய்வு அதிகாரிகள், சக போலீசு அதிகாரிகள் உங்களுடைய குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்கள். நீங்கள் சொல்வதற்கு ஆதாரம் இல்லை எனவும் அந்தக் கூட்டத்தில் நீங்கள் கலந்துகொள்ளவே இல்லை எனவும் அவர்கள் கூறினர். புலனாய்வு குழு நிராகரித்த உங்களுடைய குற்றச்சாட்டின் மீது, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன், உங்களுடைய வார்த்தைகள் சட்டத்தின் முன் நிரூபிக்கப்பட வேண்டும் என சொன்னார். அவருடைய கருத்து ஏற்கப்பட்டிருந்தால் இந்தியாவின் வரலாறும் உங்களுடைய தலைவிதியும் மாறியிருக்கும்.

நரேந்திர மோடி பிரதமரான பிறகு சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ஓய்வுக்குப் பிறகு மதிப்பிற்குரிய போலீசு அதிகாரி பதவியைப் பெற்றார். நீங்கள் வாழ்நாள் சிறைவாசத்தை பெற்றிருக்கிறீர்கள். இரண்டும் எதிர்பாராதவை.

நாட்டின் மிக சக்தி வாய்ந்த இடத்தில் இருக்கும் நபருக்கு இந்தக் காரணங்களே உங்களைப் பழிவாங்கப் போதுமானவை. ஆனால், இந்திய அமைப்புகள் சிறு குற்றங்களுக்கு பழிவாங்கும் வகையில் அரச அதிகாரத்தால் பயன்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தடுப்பு காவலில் வைத்திருந்த ஒருவர் இறந்துவிட்ட வழக்கில் நீங்கள் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, உங்களுக்கு ஆதரவாக பேசுவதை எதிர்த்து எவரேனும் வழக்கு தொடுக்கலாம்.

படிக்க:
நரவேட்டை மோடியை எதிர்த்து நிற்கும் சஞ்சீவ் பட்’டை ஆதரிப்போம்!
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

குடிமைப் பணியில் என்னுடைய பல வருடங்களை கழித்த நான், தடுப்பு காவல் வன்முறைகள் மற்றும் நீதிக்கு அப்பாற்பட்ட கொலைகளை எதிர்த்தே வந்திருக்கிறேன். எப்படியாயினும் 2001 – 2016 வரை குஜராத்தில் 180 தடுப்பு காவல் மரணங்கள் நடந்திருப்பதாக தேசிய குற்ற பதிவு பணியகம் தெரிவிக்கிறது. ஆனால், ஒரே ஒரு காவல் அதிகாரிகூட இந்த மரணங்களுக்காக தண்டிக்கப்பட்டதில்லை. உங்களுக்கு எதிரான நடவடிக்கையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

தடுப்பு காவல் மரணங்களில் எத்தனை விசாரிக்கப்பட்டிருக்கின்றன, எத்தனை போலீசு அதிகாரிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்? அப்படி நடந்திருந்தால் உங்கள் மீதான நடவடிக்கையையும் நான் ஆதரித்திருப்பேன். ஆனால், தடுப்பு காவலிலிருந்து விடுதலையான 30 நாட்களுக்குப் பிறகு, இறந்த ஒருவருக்காக நீங்களும் மற்றொரு போலீசு அதிகாரியும் மட்டும் தண்டனை பெற்றிருக்கிறீர்கள்.

சுதந்திர இந்தியா கண்ட மிக சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவருக்கு எதிராக, மிகக் கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய உங்களின் மன தைரியத்தை இந்தியாவில் உள்ள ஏராளமான மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பது உங்களுடைய கடுமையான சிறை வாழ்க்கையை ஒருபோதும் குறைத்துவிடாது. எனக்குத் தெரியும், உங்களுக்கும் தெரியும், ஸ்வேதா, உங்களுடைய குழந்தைகளுக்கும் தெரியும் நீதிக்காக போராட்டம் நீண்டது, எதிர்பாராது, ஏராளமான ஏமாற்றங்களாலும் நிரம்பியது.

ஆனால், நீங்கள் உண்மை, நீதி என நம்புகிற ஒன்றுக்காக தொடர்ந்து உறுதியுடன் போராடுவீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். மேலும், ஒரு நாள்… ஒரு நாள் நிச்சயமாக நீங்கள் சுதந்திரமாக நடப்பீர்கள். ஸ்வேதாவுடனும் உங்கள் குழந்தைகளுடனும், நாட்டின் பெருந்திரளான ஆண்கள் பெண்களுடனும் நடப்பீர்கள். அந்த நாளுக்காக நான் காத்திருக்கிறேன்.


தமிழாக்கம் : அனிதா
செய்தி ஆதாரம்: த வயர். 

பாஜக : ஞானஸ்நானத்துக்கு தயாராகும் சாத்தான்கள் | வில்லவன்

48

வில்லவன்
பாஜக வட்டாரத்தில் சில மாற்றங்களை நீங்கள் அவதானித்திருக்கக்கூடும். இதுவரை மன்மோகன் சிங்கை முடிந்தவரைக்கும் அவமரியாதை செய்தது பாஜக, இப்போது ‘நிம்மி’ திடீரென அவரை சந்தித்து பேசுகிறார்.

முஸ்லீம்களின் ரத்தத்தை எரிபொருளாக பயன்படுத்தி இயங்கும் கட்சியின் பிரதமர் தன் கட்சிக்காரனின் ரவுடியிசத்தை கட்சி கூட்டத்தில் கண்டித்ததாக செய்தி வருகிறது. எழுபது ஆண்டுகளில் செய்ய முடியாததை எங்களால் ஐந்து ஆண்டுகளில் செய்ய முடியாது என நாடாளுமன்றத்தில் சொல்கிறார் மோடி. நாம் எல்லோரும் சேர்த்து நாட்டை உயரத்துக்கு கொண்டு செல்லலாம் என மற்ற கட்சிகளை முதல் முறையாக அழைக்கிறார். வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பது எல்லோருடைய கடமை என்பதாக இருந்தது மோடியின் சமீப உரை ஒன்று.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் “மத்திய அரசால் மட்டுமே எல்லாவற்றையும் செய்ய இயலாது” என மறைமுகமாக சொல்லிவிட்டார் (மாநில அரசுகளும் இணைந்து பணியாற்றினால்தான் முடியுமாம்). போன முறை ஆட்சிக்கு வந்தபோது பொங்கிப் பிரவாகம் எடுத்த எந்த சவடால்களும் இப்போது இல்லை. மயிலை மாமாக்களும்கூட ஜென் நிலையை பராமரிக்கிறார்கள். அடிமட்ட சங்கிப் பொறுக்கிகள் மட்டும்தான் ஜெய்ஸ்ரீராம் கொலைகளையும் தாக்குதல்களையும் செய்கிறார்கள். மேல்மட்டம் கொஞ்சம் உறைநிலையில் இருப்பதை கவனித்தீர்களா?

முன்பைவிட பெரிய வெற்றி, பாஜகவின் ஆளுகையின் கீழ் வராத அமைப்புக்களே இன்று இல்லை. ஓரிரு ஆண்டுகளில் மேலவையிலும் பெரும்பான்மை கிடைக்கவிருக்கிறது. எதிர்கட்சிகள் எல்லாமே தோல்வி மனோபாவத்திற்கு சென்றுவிட்டன. இன்று பாஜகவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம்வரை அரசாங்கத்திலும் அரசியலிலும் எதிரிகளே இல்லை. ஆனாலும் இந்த அமைதியும் பொறுப்புத்துறப்பும் நிகழ என்ன காரணம்?

இனி பாஜக சண்டையிடப்போவது இந்திய பொருளாதாரத்தோடும் அதன் வழியே மக்களோடும்தான். போலியான ஜிடிபி கணக்கீட்டின் மூலம் சொல்லிக்கொள்ளும்படியான எண்களை மத்திய அரசு காட்டிவிட்டது. ஆனால் அது பொய்தான் என முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் இந்தியாவின் நிஜ பகவான் அமெரிக்காவிடம் ஒப்புக்கொண்டுவிட்டார்.

படிக்க:
தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !
இந்திய நாடு, அடி(மை) மாடு !

35,000 கோடி மதிப்புள்ள கார்களும் 17,000 கோடி மதிப்புள்ள இருசக்கர வாகனங்களும் இந்திய சந்தையில் விற்பனையாகாமல் தேங்கி நிற்கின்றன. வண்டிகளை நிறுத்த இடமில்லாமல் நிறுவனங்கள் லே-ஆஃப் கொடுக்க தயாராகிறது. ஆட்டோமொபைல் உதிரிபாக தொழிற்சாலைகளுக்கு ஆர்டர்கள் வருவது குறைந்திருக்கிறது. சூரத், திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் வீழ்ந்துகொண்டிருக்கின்றன. ஏற்றுமதி சரிந்திருக்கிறது. மூன்று முறை வட்டிவிகிதம் குறைக்கப்பட்டும் பொருளாதாரம் மோசமாகவே இருப்பதை ரிசர்வ் வங்கி கவர்னர் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைக்காட்டிலும் குறைவாகவே பெய்யும் என வானிலை முன்னறிவிப்புக்கள் சொல்கின்றன. வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் இருக்கிறது. சீனா, ஆசிய பசிபிக் நாடுகளைக் காட்டிலும் அது குறைவுதான் என அரசு சொல்கிறது.

ஊடகங்கள் ஒழுங்காக வேலை செய்தால் இன்னும் மோசமான தரவுகள் வெளிவரக்கூடும். இவை எதுவும் சரியாவதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. ஐ.எல்.எஃப்.எஸ் எனும் இந்திய பெரு நிறுவனம் செத்துவிட்டது. பி.எஸ்.என்.எல், ஓ.என்.ஜி.சி வரிசையில் நிற்கிறது. பட்டியலில் எல்.ஐ.சியும் சேர்ந்துவிட்டால் சொந்தக்காரர்களுக்கு சொல்லியனுப்பிவிடலாம். பொருளாதார நெருக்கடி உச்சகட்ட வீக்கத்தில் இருக்கிறது. கச்சா எண்ணை விலை ஏறுவது அல்லது பருவமழை பொய்ப்பது போன்ற எது நிகழ்ந்தாலும் வீக்கம் வெடிப்பது உறுதி.

ஆகவே கிளுகிளுப்பூட்டும் வாக்குறுதிகளோ, தற்காலிக சமாதானங்களோ பாஜக தரப்பில் இருந்து வர வாய்ப்பில்லை. எதிர்முனையில் நிற்கும் பெரு முதலாளிகள் எரியும் வீட்டில் பிடுங்கும் முனைப்பில் இருக்கிறார்கள். அவர்களுக்குள் சண்டை வராமல் பிரித்துக்கொடுக்கும் வேலை ஒரு கூடுதல் தலைவலியாக மோடிக்கு இருக்கும்.

படிக்க:
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
♦ ஐந்து மாதங்களாக சம்பளம் தராமல் வஞ்சிக்கப்படும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்தத் தொழிலாளர்கள் !

அடிப்படைவாதத்துக்குக்கு பலியாகும் மக்கள்திரள், செய்திகளை தேடிப்போகாமல் வாட்சாப் தகவல்களால் சுயஇன்பம் காணும் இளைஞர்கள், எல்லா பிரச்சினைகளுக்கும் பக்தியின் வழியே தீர்வை கண்டடைய முனையும் மிடில்கிளால் இவை எல்லாம் சேர்த்து இந்த பிரச்சினைகள் பூதாகரமாகாமல் தடுக்கின்றன.

போதிய வருமானம் இல்லாமல் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் இல்லாத நாளே இல்லை. இதைவிட வலுவான ஒரு எச்சரிக்கை நம் நாட்டுக்கு இருக்க முடியாது. ஆனாலும் அடுத்தவர்களைப் பற்றி கவலைப்பட முடியாத அளவுக்கு துரத்தும் வாழ்வியல் நெருக்கடியும் அடுத்தவன் பிரச்சினை பற்றி எனக்கு கவலையில்லை எனும் சுயநலமும் இந்த செய்திகளை கவனத்துக்கு வராமல் செய்கின்றன.

தாராளமயம் எல்லாவற்றையும் தனிநபர் பிரச்சினையாக பார்க்க கற்றுக்கொடுத்திருக்கிறது. மதமோ அது உன் தலையெழுத்து, பூஜை செய்து நிவாரணம் தேடு அல்லது சொர்கத்தில் கூலியை வாங்கிக்கொள் என சமாதானம் சொல்கிறது. ஆனால் சோத்துக்கு சண்டை போடும் காலம் வந்தால் இது எதுவும் அரசை காப்பாற்றாது.

இந்த கள எதார்த்தமும் அவை எதையும் சரிசெய்ய வாய்ப்பற்ற கையாலாகத்தனமுமே பாஜக தரப்பை அடக்கி வாசிக்க வைக்கிறது. இந்த பட்ஜெட்டின் பெரும் சவாலாக இருப்பது யாரிடம் இருந்து பிடுங்கி பற்றாக்குறையை சமாளிப்பது என்பதுதான். அதனால்தான் அவர்கள் தமது திமிர் பிடித்த பொறுக்கி முகத்தை மறைத்துக்கொண்டு விக்ரமன் பட நாயகனைப்போல வேதாந்தம் பேசும் சாந்த முகத்தை காட்ட முற்படுகிறார்கள்.

அவர்கள் காட்டும் முகம் எதுவானாலும் சரி, உங்களுக்கு அதனால் எதுவும் ஆகப்போவதில்லை. பொருளாதார சுயமைதுனங்கள் அதன் வேலிடிட்டியை இழந்துவிட்டது. இனி இந்த நாடு ஒரு கறைவை நின்றுபோகப்போகும் மாடு. அடிமாடு என்றாலும் முதலாளிகள் அதனை கசாப்புக்கு அனுப்பி லாபம் பார்க்க முடியும். அதன் வலியும் சுமையும் விடியப்போவது நமது பிள்ளைகள் தலையில்தான்.

ஜெய்ஸ்ரீராம் சொல்லச்சொல்லி கொல்லப்படுபவனும் நாமும் கிட்டட்டத்தட்ட ஒன்றுதான். இன்னும் சொல்வதானால் நம் நிலைமை இன்னும் மோசம், காரணம் நாம்தான் நம் பிள்ளைகள் அழிவை நேரில் காணப்போகும் தலைமுறை.

போலோ ஜெய் ஸ்ரீ ராம்…

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

சென்னையில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் மிகக் கடுமையான வறட்சி நிலை !

1

சென்னையின் தண்ணீர் பிரச்சினை குறித்து தேசிய ஊடகங்கள் கடந்த வாரம் திடீர் அக்கறை கொண்டன. ‘ஒரு நகரம் வறண்டு போனது’, ‘மனிதர் ஏற்படுத்திய நெருக்கடி’, ‘21 நகரங்களில் வறண்டு போன நிலத்தடி நீர்’, ‘துளியும் இல்லை; சொட்டும் இல்லை’, ‘தானாக உருவாக்கிக்கொண்ட நீர் பற்றாக்குறை’ என விதவிதமான தலைப்புகளில் சென்னையில் தண்ணீர் பிரச்சினை அலசப்பட்டது. பிபிசி -யில் வந்த செய்தியின் அடிப்படையில் ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி காப்ரியோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தென்னிந்திய நகரமான சென்னையின் தண்ணீர் பிரச்சினைக்கு கவலை தெரிவித்திருந்தார்.

சென்னை நகர மக்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்தை அனுபவிக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வறட்சிக்குரிய அறிகுறிகள் சென்னையில் மட்டுமல்ல, தென் இந்தியாவின் பல பகுதிகளில் காண முடிந்தது.

இந்திய வானிலை ஆய்வுத் துறை ‘2018 -ல் இந்திய பருவநிலை குறித்த அறிக்கை’யை ஜனவரி 16-ஆம் தேதி வெளியிட்டது. அக்டோபர் – டிசம்பரில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் அளவு சராசரிக்கும் கீழே பதிவாகியிருந்ததை சுட்டிக்காட்டியிருந்தது அந்த அறிக்கை. அதாவது நீண்ட கால சராசரியான 56% மழை மட்டுமே பதிவானதாக அறிக்கை கூறியது. 1901 -ஆம் ஆண்டிலிருந்து மழை குறைவாக பெய்த ஆண்டுகளில் இந்த பருவம் ஆறாவது இடத்தில் இருந்தது.

கேரளாவைத் தவிர, தென்னிந்தியாவின் மற்ற நான்கு துணை வானிலை ஆய்வு மையங்களான கடலோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி ஆகியவை குறைந்த மழையளவையே பதிவு செய்ததாக இந்திய ஆய்வு மையம் கூறியது.

ஆண்டின் தொடக்கத்திலேயே சென்னைக்கு நீராதாரமாக விளங்கும் நான்கு நீர் தேக்கங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, செங்குன்றம், சோழாவரம் ஆகியவை முற்றிலுமாக வறண்டன. குடிநீர் விநியோகம் குறைக்கப்பட்டது.

படிக்க:
நூல் அறிமுகம் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்
♦ காவிக் கும்பல் வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் !

நாட்டின் பெரும்பாலான இடங்களில் தென்கிழக்கு பருவமழை வேகமெடுக்கத் தொடங்கிய நிலையிலும் சென்னையிலும், சில தென்னிந்திய பகுதிகளும் தண்ணீர் பிரச்சினை குறைந்தபாடில்லை. ஏனெனில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை (அக்டோபர் – டிசம்பர்), தென்கிழக்கு பருவமழை (ஜூன் – செப்டம்பர்) இரண்டுமே சரியான மழை பொழிவை இந்தப் பகுதிகளில் கொடுக்கவில்லை.

உதாரணத்துக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி துணை வானிலை ஆய்வு பிரிவில், வடகிழக்கு பருவமழையில் வருடாந்திர மழை பொழிவில் 50% மட்டுமே பெற்றதாக பதிவாகியுள்ளது. வடகிழக்கு பருவமழையே ஆண்டின் தண்ணீர் தேவையை தீர்த்து வைக்கும் மழையை அள்ளித்தருவதாகும். அதற்கு இன்னும் மூன்று மாத காலம் உள்ளது.

ஆனால், நாம் சென்னையைக் கடந்து பார்த்தால் நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சினை உள்ளதைப் பார்க்க முடிகிறது. காந்திநகர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் பராமரிக்கும் தெற்காசிய வறட்சி கண்காணிப்பகம், நாட்டின் 44% இடங்களில் வறட்சியை ஒத்த நிலை இருப்பதாகக் கூறுகிறது. 17% க்கும் அதிகமான இடங்கள் கடுமையான வறட்சியை சந்தித்துள்ளன. இவற்றில் சில பகுதிகளில் சராசரியான பருவமழையைப் பெற்றாலும்கூட வறட்சியிலிருந்து அவற்றால் மீள முடியாது என்கிறது வறட்சி கண்காணிப்பகம்.

கடந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழையும் தென்மேற்கு பருவமழையும் சராசரிக்கு கீழாகவே பெய்தன. அதனால்தான் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இந்த வறட்சி நிலையை இந்த ஆண்டு பருவமழைக்கு முன்னதாக மார்ச் – மே மாதங்களில் பெய்த மிகக்குறைந்த மழையளவு (மைனஸ் 24%) மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

வழக்கமாக ஜூன் 1-ஆம் தேதி ஆரம்பிக்கும் தென்கிழக்கு பருவமழை இந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி கேரளாவில் தொடங்கியது. எனவே, பருவமழை முன்னேற்றமும் மெதுவாக உள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் தாமதமாக மும்பையில் பருவமழை ஜூன் 25-ஆம் தேதி வந்தது.

ஜூன் 26-ஆம் தேதி கணக்கின்படி, 36 வானிலை துணை ஆய்வு பிரிவுகளில் 31 மையங்கள் பற்றாக்குறை மற்றும் பெரிய அளவிலான பற்றாக்குறை மழையளவை பதிவு செய்தன. இதுவரை தென்கிழக்கு பருவமழையின் அளவு மைனஸ் 36% அளவில் குறைவாக பதிவாகியுள்ளது.

தண்ணீர் சேமிப்பை கண்காணிக்கும் மத்திய தண்ணீர் ஆணையத்தின்படி, நாட்டின் 91 நீர்த்தேக்கங்களில் 27.265 பில்லியன் ச.மீ. அளவிலான தண்ணீர் மட்டுமே உள்ளது. அதாவது நீர்தேக்கங்களில் முழு கொள்ளளவில் 17% மட்டுமே நீர் உள்ளது. கடந்த ஆண்டு 29.699 பில்லியன் ச.மீ. நீரளவு இருந்தது.

வறட்சி பாதித்த மாவட்டங்களில் விவசாயிகள் காரீஃப் விதைப்பு தாமதமான நிலையில் செய்வதறியாதது உள்ளனர். ஆனால், வறட்சி முன்னறிப்பு இல்லாமல் வரவில்லை. அக்டோர்பர் 2018 -லேயே மகாராஷ்டிர அரசு பல தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. அதிகாரப்பூர்வமாக 151 தாலுக்காக்களைச் சேர்ந்த 28,524 கிராமங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 358 தாலுக்காக்களைக் கொண்ட மகாராஷ்டிராவில், 42% பகுதி வறட்சி பாதிப்புக்கு ஆளானது.

ஜூன் 26 நிலவரப்படி மகாராஷ்டிராவில் உள்ள அணைகளில் 5.96 % மட்டுமே தண்ணீர் உள்ளது. அவுரங்காபாத் பிரிவில் இந்த நிலைமை மிக மோசமான கட்டத்தில் உள்ளது. வறட்சி பாதிப்புக்கான மராத்வாடா பிராந்தியத்தில் உள்ள இதில், 0.47% தண்ணீர் மட்டுமே உள்ளது. அவுரங்காபாத்தில் ஒன்பது அணைகளில் ஏழு அணைகள் வறண்டு விட்டன.

கர்நாடக மாநிலம் முன் அனுமானிக்கமுடியாத சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறது. 24 மாவட்டங்களில் உள்ள 100 தாலுக்காக்கள் வறட்சியை சந்தித்துத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலம் ரூ. 16,500 கோடி அளவிலான நட்டத்தை சந்தித்துள்ளது.

கடந்த நவம்பரில் ஜார்க்கண்ட் அரசு, 18 மாவட்டங்களில் உள்ள 126 தொகுதிகள் வறட்சி தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகக்கூறி நிவாரணமாக ரூ. 8.16 பில்லியனை மத்திய அரசிடமிருந்து பெற்றது. ஜார்க்கண்டில் 24 மாவட்டங்களில் 260 தொகுதிகள் உள்ளன. அதாவது, மாநிலத்தின் பாதி பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு மாதம் கழித்து, குஜராத் அரசு, 51 தாலுக்காக்களில் உள்ள 3,367 கிராமங்கள் வறட்சி தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாக அறிவித்தது. பீகார், ஆந்திரம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தன.

ஆண்டின் தொடக்கத்தில் மத்திய அரசு, ரூ. 6,680 கோடியை வறட்சி நிவாரணமாக மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களுக்கு நிதியை அளித்தது. இதில் பெரும்பகுதியை ரூ. 4700 கோடியை மகாராஷ்டிரம் பெற்றது. கர்நாடகத்துக்கு ரூ. 950 கோடியும் ஆந்திராவுக்கு ரூ. 900 கோடியும் குஜராத்துக்கு ரூ. 130 கோடியும் நிதி உதவி வழங்கியது மத்திய அரசு.

வறட்சி கடுமையாக இருக்க பருவமழை பொய்த்தது மட்டுமல்ல, தவறான நிலத்தடி நீர் மேலாண்மையும் முக்கிய காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 1970 -களில் எதிர்கொண்ட கடுமையான வறட்சி காலத்திலும்கூட இத்தகைய நிலமையை சந்தித்ததில்லை என்கிறார்கள் மராத்வாடா பகுதி மக்கள். வானத்திலிருந்து நீர்த்துளிகள் விழவில்லை என்றபோதும், நிலத்துக்கடியிலிருக்கும் நீர் குறைந்ததில்லை என்கிறார்கள் அவர்கள்.

படிக்க:
வரலாறு காணாத வறட்சி – ஆயிரக்கணக்கான கிராமங்கள் காலியாகின்றன !
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

இப்போது, மராத்வாடா பகுதிகளில் ஆயிரம் அடிக்கீழேயும் நிலத்தடி நீர் இல்லை. பல கிராமங்கள் வெறுச்சோடிக் கிடக்கின்றன. தண்ணீர் இல்லாத காரணத்தால் மக்கள் தங்களுடைய வீடுகளைப் பூட்டிவிட்டு, வேறு இடம் தேடி சென்றுவிட்டார்கள்.

நாடு முழுவதும் வறட்சி கடுமையடைந்து வந்த சூழ்நிலையில், அதை எதிர்கொள்ள தென்மேற்கு பருவமழையின் முடிவில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. கடந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை காலத்தின் முடிவில் நாட்டின் பாதிப் பகுதி வறட்சியை நோக்கிச் சென்றது. இருக்கும் நீர் ஆதாரங்களை மேலாண்மை செய்திருந்தால் இத்தகைய மோசமான தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டிருப்பது தவிர்க்கப்பட்டிருக்கும்.

இப்போது அனைவருடைய கவனமும் தாமதமானாலும் தென்மேற்கு பருவமழையையே நம்பியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு துறை மே 31, விடுத்த வானிலை அறிக்கையில் சராசரியான மழைபொழிவை எதிர்ப்பார்க்கலாம் என தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை காலம் நடந்துகொண்டிருக்கிறது. நாடு, மைனஸ் 36% குறைந்த மழைபொழிவையே பெற்றிருக்கிறது. இனி மழை பெய்ய ஆரம்பித்தாலும் விதைப்புப் பருவம் தப்பிவிட்ட நிலையில் தென் மாவட்டங்களில் வேளாண்மை பாதிப்புக்குள்ளாகும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் சராசரிக்கும் குறைவான பருவ மழை பொழிவும், இந்த ஆண்டின் வறட்சி பாதிப்பும், அரசும் – மக்களும் ஒன்றிணைந்து பருவ மழையின் ஒவ்வொரு துளியையும் பாதுக்காக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கின்றன.


கட்டுரை: நிதி ஜம்வால்
கலைமதி
செய்தி ஆதாரம்: த வயர். 

வாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – ஆப்பக் கடை !

வாசகர் புகைப்படம் : பொன்னம்மா ஆயா – 10 ரூபாய்க்கு ஆறு ஆப்பம், 5 ரூபாய்க்கு ஆறு இட்லி !

ய்யம்பேட்டை கிராமம் ராஜீவ் காந்தி நகர். அங்கே ஆப்பக்கார ஆயாக் கடை; பொன்னம்மா ஆயா ஆப்பம் சுடுறதுல ஸ்பெஷலிஸ்ட். ரேஷன் அரிசி. கொஞ்சோண்டு வெல்லம். சுள்ளி அடுப்பு. இரும்பு கடாய் இத வெச்சிக்கினு அந்த நகரையே ஆப்பத்துக்கு அடிமையாக்கியது ஆயாவின் கடை. பத்து வருசமா ஒரு ஆப்பத்தோட விலை 2 ரூபா தான். 10 ரூபாய்க்கு ஆப்பம் வாங்குனா 6 ஆப்பம் தரும். இட்லியும் பத்து வருசமா 1 ரூபாதான் 5 ரூபாய்க்கு 6 இட்லி தரும்.

காலை 6 மணியிலருந்தே டிபன் ரெடியாயிடும். 10 மணி வரைக்கும் டிபன் இருக்கும். எந்த நேரமும் சாம்பாரும் இட்லியும் சூடாவே இருக்கும். காரணம் அடுப்பு எரிக்கும்போதே கனக்கும் நெருப்பை வெளியில் தள்ளி அந்த நெருப்பில சாம்பார் சட்டி வைக்கப்பட்டு இருக்கும். ஆப்பத்தை வடை போட்டு முடிச்ச சட்டியிலத்தான் போடும். வெல்ல ஆப்பம் அவ்வளவு சூப்பரா இருக்கும். முட்டை ஆப்பம் வேணும்னா முட்டைய நாமே வாங்கிக் கொடுத்துடணும்.

பாட்டியின் வேலை நம்மை பிரமிக்க வைக்கும். காலை 4 மணிக்கு எழுந்து ஆரம்பிக்கும் கடை மதியம் 12 மணி வரை ஓடும். பசியினு வர்ரவங்கள திருப்பி அனுப்பாது. தனக்குன்னு வச்சிருக்கும் மாவில் தோசை ஊத்திக்கொடுத்தாவது பசி போக்கும்.

மதியம் 2 மணிக்கு மேல பக்கத்து ஏரிக்கரைக்கு கிளம்பிடும், தண்ணி வறண்ட ஏரியில சுள்ளி ஒடைச்சிட்டு வரும். அதையும், செம கட்டி தனி ஆளா தூக்கி வரும். எப்ப பார்த்தாலும் எதாவது ஒரு வேல செய்துட்டே இருக்கும். 4 மணிக்கு வீட்டுக்கு திரும்பும். இப்ப, ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாடித்தான் கிரைண்டர் வாங்கிச்சு. அப்பக்கூட உரல்ல அரைக்கிற மாதிரியே கிரைண்டர் பக்கத்துலயே இருக்கும். போட்டுட்டு எட்ட வராது. ஏன்னுக்கேட்டா, மாவு இட்லிக்கும், ஆப்பத்துக்கும் எடுக்கணும், அந்த பதம் வரும்போது டக்கு எடுத்தாத்தான் சரியாயிருக்கும்னு சொல்லும் ஆப்பக்கார ஆயா.

பொன்னம்மா பாட்டியின் கடையில் பசியாறும் மழலைகள்.


காமாட்சி


வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!

தீவிரமடையும் பொருளாதார நெருக்கடி : மோடி வித்தைகள் பலிக்காது !

மோடி அரசை வீழ்த்தும் வலிமை எதிர்க்கட்சிகளுக்கோ, மக்கள் இயக்கங்களுக்கோ தற்போது இல்லை என்பது உண்மைதான். ஆனால், முற்றி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது. இது உலக முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடி. புதிய தாராளவாதக் கொள்கை எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி.

உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சி முடங்கி, அது முட்டுச்சந்துக்கு வந்திருக்கிறது. 70% உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி மந்தமடைந்துவிட்டதாக ஐ.எம்.எஃப். கூறியிருக்கிறது.

“2020-இல் உலகு தழுவிய பொருளாதாரத் தேக்கத்தை (Recession) நோக்கி நிலைமைகள் முற்றி வருகின்றன. ஆனால், 2008 நெருக்கடியின் போது இருந்ததைவிடக் கடன் பன்மடங்கு அதிகரித்து விட்டதால், முன்னர் அரசுத் தலையீட்டின் மூலம் நெருக்கடியைச் சமாளித்ததைப் போல இந்த முறை சமாளிக்க முடியாது. அரசுகளின் கைகள் கட்டப்பட்டிருக்கும். வரவிருக்கும் நெருக்கடி மிகவும் கடுமையானதாக இருக்கும். நெருக்கடி வெகு நாட்கள் நீடிக்கும்” என்று எச்சரித்திருக்கிறார் அமெரிக்க அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் நொரியேல் ரூபினி. இத்தகைய எச்சரிக்கையை உலகப் பொருளாதார மன்றமும் விடுத்திருக்கிறது.

உலகப் பொருளாதாரத்தின் தேக்கநிலை காரணமாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து, வளர்ச்சி விகிதமும் குறைந்திருக்கிறது. உலகம் முழுவதும் காப்புவாதம் அதிகரித்து வருகின்ற காரணத்தினால், ஏற்றுமதியைச் சார்ந்து இயங்கும் பொருளாதாரங்களான இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளின் வளர்ச்சி விகிதம் 4.6% ஆகக் குறையும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

தனியார்மயம் – தாராளமயம் 10 சதவீத மேல்தட்டு வர்க்கத்தினருக்காக உருவாக்கியிருக்கும் நுகர்வுப் பண்பாடு.

ஏற்றுமதி வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதனை ஈடுகட்டும் வகையில் உள்நாட்டுச் சந்தை விரிவடையவில்லை. விரிவடைய வாய்ப்பும் இல்லை. ஏனென்றால், புதிய பொருளாதாரக் கொள்கையின் கீழ் ஊக்குவித்து வளர்க்கப்பட்டுள்ள சந்தை என்பது மக்கட்தொகையின் மேல் மட்டத்திலுள்ள 10% பேரை மட்டுமே சார்ந்து இயங்கும் நுகர்பொருள் சந்தை. இது தேங்கி விட்டது. கார்கள், இருசக்கர வாகனங்களின் விற்பனை வீழ்ச்சியடைந்ததன் விளைவாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைக்கின்றன. மாருதி நிறுவனம் 30% உற்பத்தியை குறைத்திருக்கிறது.

சோப், பற்பசை போன்ற எளிய நுகர் பொருட்களின் விற்பனையே வீழ்ச்சியடைந்திருக்கிறது. அந்த அளவுக்கு மக்களுடைய வாங்கும் சக்தி குறைந்து வருகிறது. கிராமப்புற வறுமை தீவிரமடைந்திருக்கிறது. இதன் விளைவாக ஒரு இந்தியனின் சராசரி உணவு உட்கொள்ளும் அளவு ஆப்பிரிக்க சராசரியை விடவும், மிகவும் பின்தங்கிய நாடுகளின் சராசரியை விடவும் குறைவானதாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

விவசாயத்தின் அழிவு கிராமப்புற வேலையின்மையைத் தோற்றுவித்து, நகரமயமாக்கத்தைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. நகர்ப்புற வேலையின்மையும் அதிகரித்திருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவது குறித்த தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத மோடி, வேலையின்மை குறித்து தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனம் வெளியிட்ட புள்ளி விவரத்தைத் தேர்தலுக்காக முடக்கி வைத்துவிட்டார்.

படிக்க :
♦ வேலை வாய்ப்பின்மை புள்ளி விவரத்தை மறைத்து மோடி அரசுக்கு ஜிஞ்சக்க போடும் தி இந்து !
♦ மைய நீரோட்டமாக மாறிவரும் இந்து பயங்கரவாதம் !

தேர்தல் வெற்றிக்குப் பிறகு வேறு வழியின்றி அது வெளியிடப்பட்டிருக்கிறது. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1% வேலையின்மை நிலவுவதாக அது கூறுகிறது. இது குறைவான மதிப்பீடு. இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் (CMIE) கணக்கீட்டின்படி ஏப்ரல் 2019-இல் வேலையின்மையின் அளவு 9.35% ஆகும். அதாவது 4.17 கோடிப் பேருக்கு வேலை இல்லை. இவர்களில் 1.1 கோடி பேர் பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேல் படித்தவர்கள். 2.2 கோடிப் பேர் 10 முதல் 12 -ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்.

உள்நாட்டுச் சந்தை சார்ந்த தொழில்கள் வளர்ச்சியடைந்தாலொழிய, இவர்களுக்கு வேலை வழங்குவதற்கான வாய்ப்பே இல்லை. இதுதான் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் முதல் இன்றைய பிரதமரின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ரதின்ராய் வரையிலான அனைவரும் கூறும் கருத்து. உள்நாட்டுச் சந்தை விரிவடைந்தால்தான், அதனைச் சார்ந்த தொழில்கள் வளரும். 90% உள்ள பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்தால்தான் உள்நாட்டுச் சந்தை விரிவடையும். விவசாய வளர்ச்சியை உத்திரவாதப்படுத்துவது, உள்நாட்டுத் தொழில்களை ஊக்குவிப்பது, சுயசார்புப் பொருளாதாரம் ஆகியவையே இதற்கான தீர்வு.

ஆனால், அம்பானிகளையும் அதானிகளையும் கொழுக்க வைத்து, ஏழைகளைப் பரம ஏழைகளாக மாற்றி வரும் புதிய தாராளவாதக் கொள்கையின் கீழ் ஏழைகளின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதென்பது சாத்தியமற்றது. சர்வதேச நிதிமூலதனத்தின் அடிமையான மோடி அரசு சுயசார்பு பொருளாதாரத்தைக் கனவு காணவும் முடியாது.  90 -களில் அவ்வப்போது சுதேசி சவடால் அடித்து வந்த சுதேசி ஜாக்ரண் மஞ்ச் இன்று சத்தமில்லாமல் அடங்கிவிட்டது.

மிகவும் பலவீனமான பிரதமர்கள் என்று கருதப்பட்ட சந்திரசேகர், ஐ.கே.குஜ்ரால் போன்றவர்கள்கூட அமெரிக்காவைக் கண்டு இந்த அளவுக்கு தொடை நடுங்கியதில்லை.  வெனிசுவேலாவிலிருந்தும், இரானிலிருந்தும் எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டுமென்று டிரம்ப் உத்தரவிட்டவுடனே, மறுபேச்சின்றி அதற்கு அடிபணிந்தார் மோடி.

வேலைவாய்ப்பை உருவாக்கித் தராத மோடி அரசையும், வேலைவாய்ப்பு குறித்த அவரது திமிர்ப் பேச்சையும் கண்டித்துப் படித்த, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நடத்தியப் போராட்டம். (கோப்புப் படம்)

இரான் எண்ணெயை விட அதிகமான விலை கொடுத்து சவுதி மற்றும் அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது மோடி அரசு.  இதனைப் புதிய காலனியம் (Neo- Colonism) என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு கூறும் அளவுக்கு தேசத்தையும் தேசிய கவுரவத்தையும் அடகு வைக்கும் அடிமையாகவே மோடி அரசு நடந்து கொண்டிருக்கிறது.

டிரம்பின் மிரட்டலுக்குப் பயந்து, ஹார்லே டேவிட்சன் என்ற ஆடம்பர மோட்டார் சைக்கிளின் இறக்குமதி வரியை மோடி அரசு பாதியாகக் குறைத்தது. வாஷிங்டன் ஆப்பிள் முதல் அமெரிக்காவில் கழித்துக் கட்டப்படும் கோழிக்கால்கள் வரை அனைத்துக்கும் இறக்குமதி வரியைத் தள்ளுபடி செய்தது. இத்தனைக்குப் பிறகும் சில இந்தியப் பொருட்களுக்கு (தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள் போன்றவை) அளிக்கப்பட்டு வந்த வரிவிலக்குகளை தற்போது டிரம்ப் அரசு ரத்து செய்துவிட்டது. இதனால் ஆயத்த ஆடை மற்றும் தோல் தொழில்கள்  பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலையிழப்பர்.

தொழில் உற்பத்தித் துறையில் தானியங்கித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை அறிவு ஆகியவற்றின் வளர்ச்சி காரணமாக உலகெங்குமே புதிய முதலீடுகள் வேலைவாய்ப்பை உருவாக்காத முதலீடுகளாகவே இருக்கின்றன. இதற்கு இந்தியா விதிவிலக்கல்ல. இந்தியத் தரகு முதலாளிகளும் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் முதலீடு செய்யவில்லை.

பெரும்பாலான இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீளமுடியாத கடனில் சிக்கியிருக்கின்றனர். இந்தியாவை விடச் சர்வதேச நிதிநிறுவனங்களில் வட்டி விகிதம் குறைவு என்பதால், இவர்களுடைய கடன்களில் கணிசமான பகுதி அந்நியக்கடன்களாக உள்ளன. உள்நாட்டில் மின்சாரம், சாலை மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் மட்டும் பொதுத்துறை வங்கிகளுக்கு 3 இலட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளனர்.

வங்கி அல்லாத கடன் வழங்கும் நிறுவனமான ஐ.எல். அண்டு எஃப்.எஸ். நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து நடைபெற்ற புலன் விசாரணையில், சுமார் 61,375 கோடி ரூபாயை 82 நிறுவனங்கள் விழுங்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

ஐ.எல். அண்டு எஃப்.எஸ். நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து அதற்குக் கடன் கொடுத்திருந்த பொதுத்துறை வங்கிகள் நெருக்கடியில் சிக்கிக் கடன் வழங்குவதைச் சுருக்கிவிட்டன. இதன் காரணமாக ரியல் எஸ்டேட் முதல் நுகர்பொருள் கடன் வரையிலான அனைத்தும் முடங்கி விட்டன. இதனால் அந்தச் சந்தைகள் தேங்கியிருக்கின்றன. இந்த துறைகளின் வேலைவாய்ப்பும் வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேசச் சந்தையின் தேக்கம் காரணமாகவும், அமெரிக்க அரசின் காப்புவாத நடவடிக்கைகள் காரணமாகவும் ஏற்றுமதி சுருங்கி விட்டது. உள்நாட்டுச் சந்தைதான் கதி என்ற போதிலும், அதனை உருவாக்கக்கூடிய முக்கியமான தொழிலான விவசாயம் நலிந்து விட்டது. சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களின் போது, ம.பி., இராஜஸ்தான், சட்டிஸ்கரில் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யப்போவதாக காங்கிரசு வாக்குறுதி அளித்தவுடன், அதனைக் கடுமையாகச் சாடினார் அன்றைய நிதியமைச்சர் ஜெட்லி.

நகர்ப்புறங்களில் தெருவோரங்களில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் உழைக்கும் மக்கள். தாராளமயம் உருவாக்கியிருக்கும் சமூக ஏற்றத்தாழ்வின் எடுத்துக்காட்டு.

தற்போது மோடி அரசு, 14 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் தருவதாக வாக்களித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், வழக்கமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்களை மிகக் கடுமையாக எதிர்க்கின்ற இந்திய தரகு முதலாளிகளின் சங்கமான எஃப்.ஐ.சி.சி.ஐ., விவசாயிகளுக்கு ரூ.6000 கொடுக்க வேண்டும் என்பதைத் தனது கோரிக்கையாகவே முன்வைத்திருக்கிறது. ஏனென்றால், அந்த மானியத்தின் உண்மையான நோக்கம் தேங்கிக் கிடக்கும் நுகர்பொருள் சந்தையை உயிர்ப்பிப்பதுதான்.

இந்த 84,000 கோடியை எங்கிருந்து திரட்டுவது? இந்த நிதியைத் திரட்ட கார்ப்பரேட்டுகளுக்கு வரி விதிக்க முடியாது. அவர்கள் ஏற்கனவே கார்ப்பரேட் வரியைக் குறைக்க கோரி வருகிறார்கள். அப்படி வரி விதித்தாலும் அதனைச் சர்வதேச நிதிமூலதனம் ஒப்புக்கொள்ளாது.

84,000 கோடியைப் பற்றாக்குறை பட்ஜெட் மூலம் ஈடுகட்ட முயன்றால், பற்றாக்குறையின் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% -ஐத் தாண்டும். இதன் விளைவாக கடனைத் திருப்புவதற்கான இந்தியாவின் நம்பகத்தன்மையைச் சர்வதேசத் தர நிர்ணய நிறுவனங்கள் குறைத்து விடும். இந்த வழியையும் நிதி மூலதனம் ஏற்றுக் கொள்ளாது. எனவே, மக்களிடமிருந்துதான் இது வரியாக வசூலிக்கப்படும்.

படிக்க :
♦ பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் 7.34 இலட்சம் கோடி ரூபாய்
♦ மலை முழுங்கி கார்ப்பரேட் திருடர்களைக் காப்பாற்றும் ரிசர்வ் வங்கி !

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவது, இரானிடம் எண்ணெய் வாங்குவது தடுக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்கவேண்டியிருப்பது ஆகிய காரணங்களால் அந்நியச் செலாவணி இருப்பு குறையும். இதன் தொடர்ச்சியாக அந்நிய முதலீடுகளும் குறையத் தொடங்கும்.

வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டுமென்றால் நிலம், உழைப்பு, மூலதனம் ஆகியவற்றின் மீது இருக்கின்ற எஞ்சிய சட்டத் தளைகளை நீக்கவேண்டுமென்றும், பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்க வேண்டுமென்றும் ஆளும் வர்க்கங்கள் கூறுகின்றன. அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அமல்படுத்துகிறது மோடி அரசு.

பதவியேற்ற முதல் நூறு நாட்களில், பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமாக இருக்கும் நிலங்களை கையகப்படுத்தி, நில வங்கி ஒன்றை உருவாக்கி பன்னாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான நிலத்தை வழங்கப்போவதாகவும், 42 பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் சாலை முதலான உள் கட்டுமானங்களுக்கான நிதியைத் திரட்டப்போவதாகவும், ஏர் இந்தியா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டுக்கு இருக்கும் உச்ச வரம்பை அகற்றுவதன் மூலம் அந்நிறுவனத்தை விற்பனை செய்யப்போவதாகவும், தொழிலாளர் நலம் தொடர்பான 44 சட்டங்களை ரத்து செய்துவிட்டு, ஊதியம், தொழிலுறவு, சமூகப் பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு என்ற நான்கு பிரிவுகளில் அடங்குமாறு அவை அனைத்தையும் மாற்றப்போவதாகவும் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் ராஜீவ் குமார் கூறியிருக்கிறார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம், எட்டு வழிச்சாலை, சாகர்மாலா திட்டம், தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழிப்பது, நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்ற அடுத்தடுத்த தாக்குதல் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆளும் வர்க்கம் வைத்திருந்தவை. அவற்றை இப்போது  தீவிரமாக மோடி அரசு நடைமுறைப்படுத்தும்.

இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கோ, கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கோ மோடி அரசிடம் மட்டுமல்ல, புதிய தாராளவாதக் கொள்கையைப் பின்பற்றும் எந்தக் கட்சியிடமும் தீர்வு இல்லை.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது மட்டுமல்ல, இருக்கின்ற வாழ்வாதாரங்களையும் ஆளும் வர்க்கம் மக்களிடமிருந்து பறிக்கின்றது. இதனை மக்களிடம் நியாயப்படுத்த முடியாத நிலை வந்து விட்டது. இந்த நெருக்கடியைச் சமாளிக்கத்தான் வலதுசாரி பாசிச அரசியல் சக்திகள் உலகெங்கும் அரசியல் அரங்குக்கு வந்திருக்கின்றன. நமது நாட்டில் இது கார்ப்பரேட் பாசிசம்.

தொரட்டி
புதிய ஜனநாயகம் ஜூன் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

அரசுக்கும் பாசிஸ்டுக் கட்சிக்குமிடையிலான உறவு !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 19

டோக்ளியாட்டி

பாசிஸ்டுக் கட்சியை ஓர் இயக்கம் என்ற கண்ணோட்டத்துடன் முசோலினி ஆரம்பத்தில் செயல்பட்டு வந்தார். கட்சிதான் தலையாயது, மற்றவை எல்லாம் அதற்குக் கீழ்ப்பட்டவைதான் என்பதுதான் இதற்குப் பொருள். இதுதான் முசோலினியின் ஆரம்பகாலக் கண்ணோட்டம். ஆனால் அகஸ்டியோவில் நடைபெற்ற காங்கிரசில் இந்தக் கண்ணோட்டம் கைவிடப்பட்டது.

இதன் பின்னர், இரண்டு நிலைப்பாடுகளை நீங்கள் தெளிவாகக் காணலாம்; கட்சிதான் யாவற்றுக்கும் மேலான சக்தி என்பது ஃபரினாஸ்ஸியும் ஏனைய குட்டி பூர்ஷுவா அணிகளும் மேற்கொண்ட நிலையாகும். கட்சியானது அரசுக்கு கீழ்ப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது தேசியக் கட்சியைச் சேர்ந்த பழைய கன்சர்வேடிவ் சக்திகளும், ஃபெதர்ஸோனி, ரோக்கோ போன்றோரும் எடுத்த இரண்டாவது நிலைப்பாடாகும். 1923 முதல் 1932 வரை இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையே ஊசலாட்டங்கள் இருந்து வந்தன. இதன் இறுதி முடிவு என்ன? தேசிய பாசிஸ்டுக் கட்சியின் சட்டதிட்டங்களில் இதனை நீங்கள் காணலாம். முழுவிவரங்களையும் படிக்காமல் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை மட்டும் படித்தால் போதுமானது.

பிஎன்எப் அரசுக்கு சேவை செய்யும் ஒரு மக்கள் படை என்று முதலாவது விதி கூறுகிறது. இதன் பொருள் என்ன? பிஎன்எப் இனியும் ஒரு கட்சி அல்ல, அது ஒரு மக்கள் படை. அதுவும் அரசுக்கு சேவை செய்யும் படை என்பதே இதற்குப் பொருள். எனவே இதிலிருந்து அரசுதான் பிரதானம் என்பது தெள்ளத் தெளிவு.

கட்சிக்கும் அரசுக்கும் இடையே கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. அரசின் உருவகமாக மாகாண ஆளுநரும், பாசிஸ்டுக் கட்சியின் உருவகமாக மாகாணக் கட்சி செயலாளரும் செயல்பட்டனர். 1923-ல் இந்தப் போராட்டம் முழு அமைப்பையுமே சீர்குலைத்துவிட்டது. அதிகாரவர்க்கத்தினர் மீது ஆதிக்கம் செலுத்த கட்சிச் செயலாளர் விரும்பினார். இந்த நெருக்கடிகளை மட்டுப்படுத்த பல்வேறு வழிமுறைகள் கைக்கொள்ளப்பட்டன. பாசிஸ்டுகளை அதிகாரிகளாக நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை இவ்வகையில் குறிப்பிடலாம்.

இந்தப் போராட்டத்தில் மிகவும் முனைப்பான கட்டம் 1924 – 1925-ம் ஆண்டுகளில் ஏற்பட்டது. அச்சமயம் பாசிசம் தோல்வியின் விளிம்புக்கே வந்து விட்டது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது அதிகாரத்தை இழக்கப் போகும் நிலையில் இருந்தது. இச்சமயம் ஸ்தாபன அமைப்பில் என்ன செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது. கட்சியையும் அரசையும் இரண்டற ஒன்றாக்கும் திட்டம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்படி நேர்ந்தது. பழைய அணிகள் கட்சிக்குத் திரும்பின. 1924-ல் ஃபரினாஸ்ஸி பாசிசத்தைக் காப்பற்றினார். 1924 ஜனவரி 3-ம்10 தேதி சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரை உட்பட அந்த ஆண்டில் முசோலினி தொடர்ந்து பல உணர்ச்சிகரமான, நாடி நரம்புகளை முறுக்கேறவைக்கும் உரைகளை நிகழ்த்தினார். எனினும் பழைய சித்தாந்த அடிப்படையிலும், கட்சியின் ஆரம்பகால வடிவங்களுக்குத் திரும்பும் வகையிலும் இத்தாலி முழுவதிலும் ஃபரினாஸ்ஸி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கவில்லை என்றால் முசோலினியின் உரைகளால் எந்தப் பலனும் கிட்டியிருக்காது.

பாசிஸ்டுக் கட்சி எவ்விதம் தனது செயல்முறைகளை மாற்றிக் கொண்டது என்பதையும், கட்சிக்கும் அரசுக்குமுள்ள உறவுகள் பிரச்சினையும், பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்க உரிமையை ஒழுங்கமைக்கும் பிரச்சினையும் எவ்வாறு சமாளிக்கப்பட்டன என்பதையும் பார்த்தோம்.

ஏற்கெனவே நாம் பார்த்தது போல் 1925-ம் வருடம் ஒரு முக்கியமான கட்டமாகும். அப்போது ஃபரினாஸ்ஸியாலும் பழைய கட்சி அணியினராலும் பாசிசம் காப்பாற்றப்பட்டது. இது முக்கியமான தகவலாகும். இதனை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் கூர்ந்து கவனித்தால், ஒரு தீவிர அரசியல் நெருக்கடி நிலைமை ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், வெகுஜன இயக்கங்கள் விரிவடையும் ஒவ்வொரு சமயத்திலும் உடனே பாசிசம் இவ்வகையான சூழ்ச்சிகளில் இறங்குகிறது என்பதைப் பார்க்கலாம்.

இவ்வாறுதான் 1932-1933-ல் இளைஞர் பிரச்சினை எழுந்தது. வெகுஜன இயக்கங்கள் வளர்ந்தன. நமது கம்யூனிஸ்டுக் கட்சியின் செல்வாக்கு அதிகரித்தது. அப்போது பாசிசம் தனது பழைய கட்சி அணிகளைத் திரும்ப அழைத்துக் கொண்டது.

படிக்க:
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !

ஆனால், இன்று கட்சி அணிகள் பிரச்சினை, பாசிஸ்டுக் கட்சிக்கு 1924-ம் ஆண்டில் இருந்ததுபோல் இல்லை. முன்னர் போல் இனியும் அபாயகரமானதாக இல்லை. பாசிஸ்டுக் கட்சி பெரிதும் வலுவடைந்துள்ளது. அரசுடன் உறுதியாகப் பிணைக்கப்பட்டுள்ளது. பழைய குட்டிபூர்ஷுவா சித்தாந்தம் அடிப்படையில் ஒழித்துக் கட்டப்பட்டுவிட்டது. இன்று, பழைய கட்சி அணியினர் செல்லாக் காசுகளாகி விட்டனர். ஒரு பகுதியினர் தீர்த்துக்கட்டப்பட்டு விட்டனர். இன்னொரு பகுதியினர் வெஞ்சிறையில் தள்ளப்பட்டுவிட்டனர். குடி பெயர்ந்தோர் இடையிலிருந்து சில சமயங்களில் அவர்கள் ஆத்திரமூட்டுபவர்களாகத் தலைகாட்டுகின்றனர் அல்லது பாசிஸ்டுக் கட்சியால் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றனர். எனினும் முன்னர் போல் கட்சியின் கொள்கையை நிர்ணயிக்கும் அளவுக்கு அவர்கள் செல்வாக்கு பெற்றவர்களாக இல்லை. கட்சிக்கும் அரசுக்கும் இடையேயான உறவு பற்றிய விவாதம் முன்போல் எவ்வகையிலும் கூர்மையானதாகவோ, காரசாரமானதாகவோ இல்லை.

1932-ல் அங்கீகரிக்கப்பட்டு இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள திட்டம் நாட்டில் நடைமுறையில் தற்போது நிலவும் உறவுகளைப் பிரதிபலிக்கிறது. ஆனால், அதனைச் செயல்படுத்தும்போது பாசிஸ்டுக் கட்சிக்கு பல உள் நெருக்கடிகளைத் தோற்றுவிக்கிறது. அநேக மோதல்கள் நிகழ்கின்றன. பலர் தீர்த்துக்கட்டப்படுகின்றனர். பலரது பொறுப்புகள் மாற்றப்படுகின்றன.

இந்த மாற்றம் 1927-ல் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது எனக் கூறலாம். பூர்ஷுவாக்களின் தீர்மானமான சக்திகள் பாசிஸ்டுக் கட்சி அமைப்பின் பகுதியாக இருந்தன. ஊதியம் பெறும் ஊழியர்களும் அதிகாரிகளும் ஏற்கெனவே பாசிஸ்டுக் கட்சியில் பெரும் எண்ணிக்கையில் இருந்தனர். ஆலைத் தொழிலாளர்களும் பண்ணைத் தொழிலாளர்களும் இன்னமும் ஓரளவுக்குத்தான் பிரதிநிதித்துவம் பெற்றிருந்தனர். இது 1927-ம் ஆண்டில் இருந்த நிலைமை.

இவ்விதம், அரசுடன் பாசிஸ்டுக் கட்சிக்குள்ள உறவு குறித்த பிரச்சினை தீர்க்கப்படும் தருவாயிலிருந்தது. தீர்வு நோக்கி அது முன்னேறிக் கொண்டிருந்தது. பாசிஸ்டுக் கட்சியின் உள் கட்டமைப்பு மாற்றப்பட்டு வந்தது.

நடைமுறையில், பாசிஸ்டுக் கட்சி, ஒரு கட்சி என்ற நிலையைக் கைவிட்டுவிட்டது. இங்கு அதன் தருக்கரீதியான வளர்ச்சியை நீங்கள் காணலாம். அது ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குப் படிப்படியாக மாறி உயர் மட்டத்தை அடைந்ததைப் பார்க்கலாம். பாசிஸ்டுக் கட்சி ஒரு கட்சியாக இருப்பதை நிறுத்திக் கொண்டது. அது குறித்த எல்லா விவாதமும் முடிவுக்கு வந்தது.

அரசியல் வாதங்கள் எதுவும் நடைபெறுவதில்லை. பாசிஸ்டுக் கட்சி தனது கொள்கையில் ஏதேனும் மாற்றம் செய்யும்போது, வேறு எந்தக் குடிமகனையும் போலவே அதன் உறுப்பினர்கள் இது குறித்த செய்தியைப் பத்திரிகைகளில்தான் படிக்கிறார்கள். கட்சியின் கொள்கையை வகுப்பதில் அவர்கள் எவ்வகையிலும் பங்கெடுத்துக் கொள்வதில்லை. உட்கட்சி ஜனநாயகம் என்பது அரிதினும் அரிதாகிவிட்டது. அதிகாரவர்க்க அடிப்படையில் கட்சி மேலிருந்து ஒழுங்கமைக்கப்படுகிறது.

உச்சியில் இயக்ககம் (Directorate) இருக்கிறது. இது பாசிசத்தின் மாமன்றத்தால் (Grand Council) தேர்ந்தெடுக்கப்படுகிறது. இத்தனைக்கும் இந்த மாமன்றம் என்பது ஒரு கட்சி அமைப்பல்ல; அரசாங்க அமைப்பு. இதில் கட்சி, அரசு, வங்கிகள், தொழில்துறை முதலியவற்றின் பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். பாசிசத்தின் இந்த மாமன்றம் பாசிசத்துடன் பிணைந்துள்ள இத்தாலியப் பூர்ஷுவா வர்க்கத்தின் தலையாய குழுக்களை ஸ்தாபனரீதியாக உருவகப்படுத்துகிறது எனலாம். இங்கிருந்துதான் இயக்கம் தனது அதிகாரத்தைப் பெறுகிறது. இயக்ககத்திலிருந்து அந்த அதிகாரம் உள்ளூர் இயக்ககங்களுக்கும் அடிமட்டத்திலுள்ள பாசிஸ்டு அமைப்புகளின் தலைவர்களுக்கும் பிரிந்து செல்லுகிறது.

(தொடரும்)

அடிக்குறிப்பு :

கியாசோமோ மாட்டியோட்டி (Giacomo Matteotti).

10. கியாசோமோ மாட்டியோட்டி (1885-1924) சீர்திருத்தவாத யூனிடரி சோஷலிஸ்டு கட்சியின் செயலாளர். அந்த ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலில் ஏற்பட்ட பலாத்காரத்தையும் தில்லுமுல்லுகளையும் கண்டித்து 1924 மே 30-ல் பிரிதிநிதிகள் சபையில் பேசியதற்காக ஜூன் 10-ம் தேதி ஒரு பாசிசக் கும்பலால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மாட்டியோட்டியின் மறைவு – ஆகஸ்ட் மத்தியில் வரை அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை – நாடெங்கும் பலமான ஆத்திர அலையையும் கலகத்தையும் ஏற்படுத்திற்று. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்தன; எதிர்க்கட்சிகளின் குழு அவென்டைனில் கூடியது. போர்க்குணம் படைத்த இத்தாலிய கம்யூனிஸ்டுக் கட்சி அப்போது ஆட்டம் கண்டு கொண்டிருந்த முசோலினியின் ஆட்சியைக் கவிழ்க்க பொதுஜனப் போராட்டத்திற்கும் பொது வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்தது.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

நூல் அறிமுகம் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்

வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு விலையில்லை; வருமானமில்லை; உண்ண உணவும், குடிக்க தண்ணீருமில்லாமல் ஏழை, மத்திய விவசாயத் தொழிலாளர்கள் வாழ்வு அஸ்தமித்துக் கொண்டுள்ளது. மொத்த சமூகத்திற்கு உணவு படைக்கும் உழவர் பெருமக்களின் பட்டினிச் சாவுகள் தற்கொலைகள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. இரண்டாம் உலக யுத்தத்தின் போதும், கொடுமையான வங்க பஞ்சத்தின்போதும் ஒரு கிராமப்புற மனிதனுக்கு கிடைத்த ஒரு நாள் சராசரி உணவு அளவைவிடவும், நடப்பு ஆண்டுகளில் குறைவான உணவு கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்திய விடுதலைக்குப் பின் கடந்த 10 ஆண்டுகளில்தான் முதன்முறையாக உணவுப் பொருள் உற்பத்தியில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது சாதாரண விஷயமல்ல…

தேசத்தின் இத்தகைய நிலைக்கு என்ன காரணம் என  விளக்கம் கேட்டால், ‘வானம் பொய்த்து, வரலாறு காணாத வறட்சி தாண்டவமாடுகிறது’ என மத்திய மாநில ஆட்சியாளர்கள் வாய்க்கூசாமல் சரடுவிடுகின்றனர். மொத்த நெருக்கடியும் வறட்சியால்தான் என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர். ஆனால், வறட்சிக்கு முந்தைய ஆண்டுகளிலும் இதே நிலைதான் நீடித்தது என்பதை முழுமையாக மறந்துவிடுகிறார்கள் அல்லது மறைத்துவிடுகிறார்கள்.

உலகமயம், தாராளமயம் என்பதே நமது ஆட்சியாளர்களின் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. உலக வங்கியும், உலக வர்த்தக நிறுவனமும் எழுதித் தயாரித்த இக்கொள்கைகளையே மத்திய அரசும் தமிழக அரசும் போட்டி போட்டுக்கொண்டு அமுலாக்குகின்றன…

கடந்த 10-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக அமுலாக்கப்படும் இக்கொள்கைகளின் மோசமான விளைவுகளே இந்திய கிராமப்புற மக்கள் அனுபவிக்கும் வேதனைகளாகும். அடுத்தடுத்து வந்துள்ள வறட்சி இவ்வேதனைகளை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என்பதே உண்மை… (நூலின் முன்னுரையிலிருந்து…)

இந்தக் கொள்கையின் பிரதான அம்சங்கள் என்ன?

1. இடுபொருட்கள் விலையிலோ, விளைபொருட்கள் விலையிலோ அரசு தலையிடாது.
2. விவசாயத்துறையில் நீர்ப்பாசனம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கு அரசு மூலதனம் படிப்படியாகக் குறைக்கப்படும்.
3. மின்சாரம், விதைகள், உரம், பூச்சி மருந்து ஆகிய எந்தப் பொருளுக்கும் அரசு மானியங்கள் அடியோடு ஒழிக்கப்படும் அல்லது பெருமளவு வெட்டப்படும்.
4. வெளிநாட்டுப் பொருட்களின் தங்கு தடையற்ற இறக்குமதி அனுமதிக்கப்படும்.

மத்திய பி.ஜே.பி. அரசு 2000-ம் ஆண்டிலும் 2001-ம் ஆண்டிலும், மொத்தம் 1429 பொருட்கள் எந்தத் தடையுமின்றி இறக்குமதி செய்யலாம் என்று சட்டம் இயற்றியது. இதில் 854 பொருட்கள் விவசாயம் சார்ந்த பொருட்கள். உலக வங்கி மற்றும் உலக வர்த்தக நிறுவன நிபந்தனைகளின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் இது. இதில் விஷேசம் என்னவென்றால் 2004-ம் ஆண்டுக்குள் இந்தத் தடைநீக்கம் அமலாக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. ஆனால், முன்கூட்டியே அமலாக்கி, தனது எஜமான விசுவாசத்தைக் காட்டி கொண்டது, மத்திய அரசு. இதன் விளைவு என்ன?… (நூலிலிருந்து பக்.12)

படிக்க :
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?

சுருங்கச் சொன்னால், சோறு, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து ஆகிய அத்தியாவசியத் தேவை, எதுவாய் இருந்தாலும், அதனை அளிக்கும் பொறுப்பு அரசுக்கு இல்லை. அனைத்தையும் சந்தையே தீர்மானிக்கும். அந்த சந்தையின் விதிகளை உலகில் கொழுத்த நாடான அமெரிக்க ஏகாதிபத்தியம் தீர்மானிக்கும் என்பதுதான், உலகமயத்தின் உண்மையான பொருள்…

உலகமயமாக்கலின் நிபந்தனை அடிப்படையில் இந்திய அரசு, அத்தியாவசிய தேவைகள் உற்பத்தி மற்றும் விநியோகத்திலிருந்து சிறுக சிறுக சுழன்று கொண்டு வருகிறது என்று விவரங்கள் தெரிவிக்கின்றன…

இதே நிலைதான் விவசாயிகளுக்கு விவசாயத்திற்கென கொடுக்கப்பட்டு வந்த கடன் விசயத்திலும் தொடர்கிறது. அரசு வங்கிகள், மற்றும் கூட்டுறவு ஸ்தாபனங்கள் மூலம் இன்று விவசாயிகளின் கடன்களில் 25 சதமானமே அளிக்கப்படுகிறது. மீதம் 75 சதமானக் கடன் விவசாயிகள் தனியாரிடம், மற்றும் தனியார் நிறுவனங்களில்தான் பெறுகிறார்கள். இந்த கந்துவட்டிக் கடன்களுக்கு வசூலிக்கப்படும் பயங்கரமான வட்டி, சமீபத்தில் நாடு தழுவிய அளவில் நடைபெற்ற விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் என்கிறது. ஆந்திர விவசாயிகள் தற்கொலை பற்றி பரிசீலித்த ஆய்வறிக்கைகள். இந்த அரசுக் கடனும் கிராமப்புறத்தில் வலுத்தவர்களுக்கே பெரும்பாலும் கிடைக்கிறது என்பதும், ஏழை விவசாயிகளுக்கு  பெயரளவுக்கே கிடைக்கிறது என்கிற உண்மையும் கவனிக்கத்தக்கது…

மத்திய – மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளின் காரணமாக அதிகம் பாதிக்கப்படும் பகுதி விவசாயத் தொழிலாளர்கள் ஆகும். தலித், ஆதிவாசி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியில் இருந்துவரும் இந்தத் தொழிலாளர்களின் நிலை இன்று வாழ்வின் விளிம்பிற்கே சென்றுவிட்டது என்பது உண்மை. நிலம் மற்றும் ரேஷன் பிரச்சினைகளில் இவர்கள் எப்படி கடும் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள் என்று பார்த்தோம் தவறான கொள்கைகளின் விளைவாக விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது…

குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லை; குந்துவதற்கு ஒழுகாத குடிசையில்லை; வியாதிக்கு மருந்தில்லை; குழந்தைகளுக்கு கல்வி இல்லை; என அனைத்து வகைகளிலும் நிராகரிக்கப்பட்ட இவர்களின் பலர் சாதீய ஒடுக்குமுறைக் கொடுமைகளிலும் தாக்கப்பட்டு, நிற்கும் கொடுமை கண்டு கொந்தளிக்காதவர்கள் மனிதர்களே இல்லை… (நூலிலிருந்து பக்.29-30)

நூல் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்
ஆசிரியர் : கே. வரதராஜன்

வெளியீடு : தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்,
தமிழ்நாடு மாநிலக் குழுவுடன் இணைந்து பாரதி புத்தகாலயம்,
2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதாப்பேட்டை, சென்னை – 600 015.
தொலைபேசி எண் : 044 – 2433 2424.
மின்னஞ்சல் : info@tamizhbooks.com

பக்கங்கள்: 32
விலை: ரூ 5.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சிந்திக்கும் குழந்தைகளைப் பார்ப்பதே மகிழ்ச்சி !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 06

சிந்திக்கும் மனிதனைப் பார்ப்பதே மகிழ்ச்சி

“குழந்தைகளே, எனக்கு ஆறு முக்கோணங்கள் தெரிகின்றன.”

“அவை முக்கோணங்கள் அல்ல சதுரங்கள்” என்று ஒரு சில குரல்கள் ஒலிக்கின்றன.

“ஆமாம், ஆமாம், சதுரங்கள். என்னைத் திருத்தியதற்கு நன்றி. கவனமாகப் பாருங்கள், அங்கே எவ்வளவு சதுரங்கள் உள்ளன? ஆறா? ஏழா?”

“ஆறு!” என்று சிலர் அவசரமாகக் கூறுகின்றனர்.

“ஏழு!” என்று இன்னும் சிலர் கத்துகிறார்கள்.

ஏன் ஆறு வயதுக் குழந்தைகளின் நாக்கு இப்படி சிந்தனையை முந்துகிறது? மற்றவர்கள் சிந்திக்க இடையூறாக இவர்கள் தம் பதிலை உரக்கச் சொல்வதில் மட்டும் விஷயம் இல்லை. சாதாரணமாக நடைமுறையில் ஆசிரியர்கள் பாடவேளைகளின் போது வரும் இப்படிப்பட்ட கூச்சல்களை எளிய வழிகளில் கட்டுப்படுத்தி விடுவார்கள்: கட்டுப்பாட்டை மீறியதற்காக குழந்தைகளைக் கண்டிப்பார்கள், கை உயர்த்தவும் கேட்கும் வரை காத்திருக்கவும் சொல்லித் தருவார்கள்.

ஆனால் இதனால் என்ன மாறுகிறது? பதிலின் உட்பொருள் அடையப்படும் பொழுது இது நல்ல வழி. குழந்தை தன் பதிலை யோசித்து, சரிபார்த்து, வார்த்தைகளைக் கண்டுபிடித்து, பின் கையை உயர்த்திக் கூப்பிடும் வரை அமைதியாகக் காத்திருப்பான். ஆனால் பிரச்சினை என்னவெனில் குழந்தையால் அமைதியாகக் காத்திருக்க இயலாது, விஷயத்தை இன்னமும் முழுமையாக அறிந்துணரவில்லை, ஆனால் அதற்குள்ளாகவே மற்றவர்களை முந்திக்கொண்டு பதில் சொல்ல அவசரப்படுகிறான்.

பல நேரங்களில் நான் கேள்வி கேட்பதற்காக வாயைத் திறந்ததுமே குழந்தைகளின் கரங்கள் உயரும். “நான் என்ன கேட்கப் போகிறேன் என்றே உங்களுக்குத் தெரியாதே” என்று நான் ஆச்சரியப்படுவேன். அனேகமாக அவர்களுக்குப் பதில் சொல்வதுதான் முக்கியமே தவிர, என்ன கேள்வி, பதில் சரியா என்பதெல்லாம் அவ்வளவு முக்கியமல்ல.

அவர்கள் ஆசிரியரின் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்ல எப்போதும் “தயார்”. அவர்களுடைய மூளை நாக்கிற்கு “இடம் மாறியது” போன்றும், எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் பதில்கள் ஏற்கெனவே “தயார்” போன்றும் அவை நாக்கின் நுனியில் உள்ளன போன்றும் தோன்றும். இதோ, அவர்கள், பதில்கள் தவறு என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே “ஆறு”, “ஏழு” என்று கத்துகின்றனர். சிந்திக்கவில்லை, ஆனால் பதில் சொல்கின்றனர், சொல்ல அவசரப்படுகின்றனர்.

ஒருவேளை தம் ஆசிரியருடன் கலந்து பழக முயலுகின்றார்களோ? மற்றவர்களிடமிருந்து தனித்துத் தம்மை வெளிப்படுத்த ஒருவேளை விரும்புகின்றார்களோ? அல்லது சிந்திக்க வேண்டுமென அவர்களுக்குத் தெரியாதோ, அல்லது எப்படி சிந்திப்பதெனத் தெரியாதோ? இவர்களுடைய நடவடிக்கைகளின் திடீர் எழுச்சிகள் ஒரு புறமிருக்க இவர்களுடைய யோசனையற்ற கூச்சல்களுக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

எனவே, நான் இக்கூச்சல்களை வெறுமனே கட்டுப்படுத்த வேண்டியதில்லை. குழந்தைகள் சரியான பதிலைச் சொல்லும் போது, உண்மையைக் கண்டறிந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது இவை அவ்வளவு பயங்கரமானவையல்ல.

ஒருவன் உண்மையைக் கண்டறிந்ததும் இதை மற்றவர்களுக்குச் சொல்ல அவசரப்படுவது இயல்பே. ஏதாவது ஒரு விஷயத்தில் முதன்முதலாகக் கண்டுணரவும் இதற்காக மகிழ்ச்சியடையவும் உரிமையுண்டு. சரி, குழந்தைகள் திடீரென எதையாவது புரிந்து கொண்டதும், உண்மை “பிடிக்கப்பட்டதும்” அல்லது கண்டுபிடிக்கப்பட இருக்கையில் கையை உயர்த்தியபடி எனது பொறுமையான அழைப்பிற்காக அவர்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கும்படி எப்படி செய்வது? “குழந்தைகளே, கூச்சல் போடாதீர்கள், என்னைக் கூப்பிடாதீர்கள், சத்தம் போடாதீர்கள், அமைதியாக உட்காருங்கள்” என்று அவர்களிடம் எப்படிச் சொல்வது? எல்லோரும் பதில் சொல்ல விரும்பும் போது முதலாவதாக நான் (உதாரணமாக) தாத்தோவிற்கு பதில் சொல்ல வாய்ப்பளித்தால், அதன் மூலம் உண்மையைக் கண்டுபிடித்ததில் தாத்தோவிற்கு முதல் இடத்தை செயற்கையாக அளிக்கவில்லையா? ஒவ்வொருவரும் “கொலம்பசாக” முடியும்.

அப்படியிருக்கையில் எனது நடவடிக்கையின் மூலம் நான் தேர்ந்தெடுக்கும் ஒருவனை “கொலம்பசாக்குகிறேன்”. இது நியாயமா? இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லோரை யுமே ‘கொலம்பசாக்கவே” நான் விரும்புகிறேன். நான் வகுப்பறையின் நடுவில் நின்று கொண்டு, எல்லோரும் ஒரே குரலில் பதில் சொல்லும் வாய்ப்பைத் தருகிறேன். அப் போது எல்லோருக்கும் திருப்தி.

படிக்க:
மோடியின் வெற்றிக்கு அடிகோலிய அரசியல் பாமரத்தனம் !
’ நீட் ’ தேர்வு – ’ ரிசல்ட் ’ கதைகள் !

எனவே, கூச்சல்களை அடக்க வேண்டியதில்லை, யோசிக்கப்படாத பதில்களுக்குத்தான் முடிவு கட்ட வேண்டும். இதை நளினமாகச் செய்ய வேண்டும். “ யோசியுங்கள், யோசியுங்கள்” என்று நான் குழந்தைகளுக்குச் சொல்வது உதவி புரியுமா? எப்படி யோசிப்பது என்று அவர்களுக்கு நன்கு சொல்லித் தராவிடில், உண்மையை அறியும் போக்கு தனியாக முன் நிற்பதைக் காட்டிலும் முக்கியமானதாகும் படி அவர்களுடன் நான் கலந்து பழகாவிடில் இது சாத்தியமில்லை .

இதை எப்படிச் செய்வது?

எல்லோர் முன்னும் அடிக்கடி வாய் விட்டு யோசித்து நடந்து கொள்வேன்; இதன் மூலம் எப்படி யோசிப்பது, செயல்படுவது என்று நடைமுறையில் காட்டுவேன்.

அவர்களிடம் விசேஷக் கேள்விகளைக் கேட்பேன். நன்கு சிந்திக்காமல் இவற்றிற்கு பதில் சொல்ல முடியாது. தொடர்ச்சியான மூளை நடவடிக்கைகளைத் திட்டமிட அவர்களுக்கு உதவுவேன்.

அவர்கள் சுதந்திரமாக விவாதிக்க, நிரூபிக்க, மறுக்க, சந்தேகிக்கத் தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்துவேன்.

யோசிக்கவும் சிந்தனையில் பதில்களை முடிவு செய்யவும் அவர்களை பழக்கப்படுத்துவேன். அப்போது, இவற்றிற்குப் பின் தான் பதில் சொல்லும் பழக்கம் வரும்.

நன்கு சிந்திக்க, யோசிக்க, “அவசரப்பட்டு பேசாமலிருக்க” ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள நாட்டத்தை பலப்படுத்துவேன்.

இப்போது “ஆறு”, “ஏழு” என்ற கூச்சல்களின் மீது நான் கவனம் செலுத்தவில்லை. எனது கருத்தை சரிபார்ப்பதில் இறங்குகிறேன். எனக்குள் முணுமுணுத்தபடியே படத்தில் உள்ள சதுரங்களை எண்ணுகிறேன். நான் செய்வதையே குழந்தைகளும் திரும்பச் செய்கின்றனர்.  நான் இன்னமும் சதுரங்களை எண்ணிக் கொண்டிருக்க, பலர் ஏற்கெனவே சரியாக எண்ணிவிட்டனர்:

“ஆறல்ல, ஐந்து சதுரங்கள் தான்.”

“ நான்கு சிறிய சதுரங்களும் ஒரு பெரிய சதுரமும்.”

“நீங்கள் ஏழு சதுரங்கள் என்று சொன்னீர்கள், அங்கு ஐந்து தான் உள்ளன.”

சில நிமிடங்களுக்கு முன் லேலா நன்கு சிந்திக்காமல் “ஏழு சதுரங்கள்” என்று கத்தியதைக் கேட்டேன்.

“லேலா, அங்கு ஐந்து சதுரங்கள் தான் உள்ளன என்று உன்னால் நிரூபிக்க இயலுமா? ஒரு வேளை, மூக்குக் கண்ணாடி இல்லாததால் எனக்குச் சரியாகத் தெரியவில்லையோ, அங்கு ஏழு சதுரங்கள் உள்ளதாக எனக்குப்படுகிறதோ?”

லேலா, தான் “ஏழு சதுரங்கள்” என்று கத்தியதையே மறந்து விட்டாள். இப்போது அவள் சரியாக எண்ணினாள். ஓடி வந்து எல்லாவற்றையும் காட்டுகிறாள்.

“ஆம், நான் சரியாகப் பார்க்கவில்லை. நன்றி. சரி, அங்கு ஐந்து சதுரங்கள் உள்ளன?…”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!