Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 353

ஆறு வயதுக் குழந்தைகளுடன் ஆசிரியரின் அறிவுச் சண்டை !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 05

ம் கருத்து நிலைகளை, கண்ணோட்டங்களை, தமது சொந்த தனித்துவத்தை என்னிடமில்லாது வேறு யாரிடம் இவர்களால் நிலைநாட்ட முடியும்? என்னுடன் நடத்தும் விவாதங்களில் இல்லாமல் வேறு எதில் இவர்கள் தம் அறிவு வெற்றியின் மகிழ்ச்சியை, உண்மையைக் கண்டறிந்த சந்தோஷத்தை அடைவார்கள்?

ஆறு வயதுக் குழந்தைகளுடனான “அறிவுச் சண்டையில்” வெற்றி பெறுவது அவ்வளவு கடினமா என்ன? ஆனால், “அறிவுச் சண்டையின்றி” இதற்கான தயாரிப்பு முகமாக சலிப்பான தேர்வுகளை முடித்து விட்டு அவர்கள் அன்றாடம் பள்ளியிலிருந்து திரும்புவதால் யாருக்கு என்ன பயன்?

சிக்கலான கணக்குகளைப் போட நான் குழந்தைகளுக்குக் கற்றுத் தருவேன். அதே சமயம் நான் “தவறிழைப்பேன்”, பாவனை நயத்தோடு படிக்கச் சொல்லித் தருவேன். பின் அவர்கள் நான் படிக்கும் போது என்னைத் திருத்துவார்கள். சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொள்வேன், பின்னர் அவர்கள் என்னை வெற்றியடையும் போது மகிழட்டும்.

அவர்கள் புதியவற்றை அறிந்து கொள்வதன் மீது ஆர்வம் காட்டுவார்கள். “உங்களுக்கு எந்த மாதிரிக் கணக்குகளைத் தரட்டும்? சிக்கலான, கடினமான கணக்குகளையா, எளிய, சாதாரணமான கணக்குகளையா?” என்று கேட்கையில் “சிக்கலான, மிகச் சிக்கலான கணக்குகளைத் தாருங்கள்” என்று ஒருமித்த குரலில், வீராவேசமாக அவர்களிடமிருந்து பதில் வரும். எல்லோராலும் கணக்குகளைப் போட முடியாவிடில் பரவாயில்லை! ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு எல்லோரையும் உயர்த்தப் பாடுபட வேண்டும். குழந்தை சிந்தனை உலகில் மூழ்குவான், புதியவற்றை அறிய முற்படுவான்.

குழந்தைகளே, நீங்கள் விரைவிலேயே பள்ளி வாழ்க்கையை விரும்பத் துவங்குவீர்களென நம்புகிறேன். நீங்கள் பாடங்களின் மீது ஆர்வம் காட்டுவீர்கள். பாடங்கள் உங்கள் வாழ்க்கையின் உட்பொருளாகும். எனது செல்வாக்கைப் பொறுத்தமட்டில், உங்களது நல்லறிவையும் நுட்பமான மனதையும் நான் நம்புகிறேன். அனேகமாக, நான் எப்படிப்பட்ட ஆசிரியர் என்று உங்கள் மத்தியில் விவாதம் தோன்றக்கூடும்.

“நீங்கள் எவ்வளவு நகைச்சுவையுணர்வு மிக்கவர்!” என்பாள் மாரிக்கா. “நீங்கள் எங்களுக்கு எப்போதும் எவ்வளவு சிரிப்பு வரவழைக்கின்றீர்கள் தெரியுமா?”

“இல்லை!” என்று அவளுடன் விவாதம் செய்வான் சாஷா. “அவர் மிகவும் புத்திசாலியானவர்.”

“நீங்கள் அனேகமாக நூறுக்கு மேற்பட்ட நூல்களைப் படித்திருப்பீர்கள், அப்படித்தானே?” என்று போன்தோ என்னைக் கேட்பான்.

“நீங்கள் ஏன் தப்பு செய்கின்றீர்கள்? உண்மையிலேயே உங்களுக்கு இந்த எளிய சொற்களை எழுதத் தெரியாதா?” என்று தேன்கோ ஆச்சரியப்படுவான்.

“நீ என்ன, அவர் வேண்டுமென்றே தான் தப்பு செய்கிறார்” என்று என்னைப் பாதுகாப்பான் கோச்சா.

“நீங்கள் வேண்டுமென்றேதான் தவறு செய்கின்றீர்களா? ஏன்?” என்று புரியாமல் கேட்பாள் ஏக்கா.

“நான் விட்டம் என்றால் என்ன என்று சொல்லித் தந்தேனே உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று கீகா தம்பட்டம் அடித்துக் கொள்வான்.

“நீ ஒன்றும் அவருக்குச் சொல்லித் தரவில்லை, அவருக்கு எல்லாமே தெரியும்” என்று மாயா மறுப்பாள்.

படிக்க:
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?

“அவரும் மனிதர் தானே, அவருக்கு எப்படி எல்லாவற்றையும் அறிந்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும்? இது முடியாது, இல்லையா?” என்று இராக்ளி என்னைக் கேட்பான்.

என் அன்புக் குழந்தைகளே, இப்படிப்பட்ட உங்களுடைய சந்தேகங்களில்தான் உங்கள் கண்களில் என் செல்வாக்கு வளரும். உங்கள் ஆசிரியரும் ஒரு மனிதர், உங்களுக்குத் தேவையானவர் என்பது புரியும். நான் விருப்பமானவராக இருந்தால், அதை விட உயர்ந்த அங்கீகாரம் உங்கள் மத்தியில் எனக்குத் தேவையில்லை.

இப்படிப்பட்ட முறைக்கெதிராக குரல் எழுப்பும் பாரம்பரிய போதனை முறையைப் பொறுத்தவரை, அது கிடக்கட்டும். உங்கள் மீதான நம்பிக்கை எப்போதும் தொடர்ச்சியாக இருக்க எனக்கு உதவும்.

இப்போது, அடுத்த 15 நிமிடப் பாடவேளை துவங்கும் போது நான், கடைசி பெஞ்சில் தாத்தோ அருகே உட்கார்ந்து, கரும்பலகையை மூடியுள்ள திரையை விலக்கி வலது பகுதியைக் காட்ட யாரிடமாவது சொல்வேன். அங்கே பின்வருமாறு வரையப்பட்டிருக்கும் :

“குழந்தைகளே, எனக்கு ஆறு முக்கோணங்கள் தெரிகின்றன!”

“முக்கோணங்கள் அல்ல சதுரங்கள்” என்று உங்களில் யாராவது என்னைத் திருத்தக்கூடும்.

“ஆமாம், ஆமாம், சதுரங்கள்! நான் என்ன சொன்னேன்?… அங்கே ஆறு சதுரங்கள் வரையப்பட்டுள்ளதாக எனக்குப்படுகிறது. சரியா?…”

….5 நிமிட இடைவேளையின் கடைசி நொடிகள். நம் கல்விப் பாதையில் தொடர்ந்து செல்ல வேண்டும். இன்னுமொரு கட்டத்தை அனேகமாக நாம் கடக்கக் கூடும்.

“மாரிக்கா, மடி மீதிருந்து இறங்கு. சாஷா, நமது மணியை எடுத்து அடி.”

“டிங், டிங், டிங்!” இனிய மணியோசை ஒலிக்கிறது.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இரான் : அமெரிக்கப் பயங்கரவாதத்தின் அடுத்த இலக்கு !

ஸ்லாமியக் குடியரசு நாடான இரானில் ஆட்சி மாற்றத்தையும், அதனின் அரசுக் கட்டமைப்பில் பாரிய மாற்றங்களையும் கொண்டுவர வேண்டும் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நீண்ட நாள் கனவு. அந்நோக்கில்தான் இராக் மீது போர் தொடுத்த கையோடு, இரானை, “ரவுடி நாடு” (Rogue State) என்றும், “தீமையின் அச்சு” (Axis of Evil) என்றும் வசைமாரி பொழிந்து வந்தது.

பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை வைத்திருப்பதாக இராக் அதிபராக இருந்த சதாம் உசைன் மீது பழி போட்டது போலவே, இரானின் கொமெய்னி அணு ஆயுதங்களை இரகசியமாகத் தயாரித்து வருவதாகக் குற்றஞ்சுமத்திய அமெரிக்கா, அப்பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையுத்தரவையும் ஏவியது.

இப்பொருளாதாரத் தடையுத்தரவு அமெரிக்கா எதிர்பார்த்த பலன்களைக் கொடுக்காததாலும், இராக்கில் சன்னி முசுலீம் பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட உள்நாட்டுக் கலகங்களைச் சமாளிக்க, ஷியா முசுலீம்கள் பெரும்பான்மையாக உள்ள இரானின் தயவு அமெரிக்காவுக்குத் தேவைப்பட்டதாலும் ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த சமயத்தில் அமெரிக்கா இரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது.

அதனுடன் இங்கிலாந்து, பிரான்சு, ரசியா, சீனா ஆகிய அணு ஆயுத வல்லரசு நாடுகளும் இணைந்து கொண்டன. இப்பேச்சுவார்த்தையின் அடிப்படையில் கூட்டுச் செயல்பாட்டுத் திட்டம் என்ற ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு, அதில் இரு தரப்பும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தப்படி, இரானின் அணு உலைகள் அனைத்தும் சர்வதேச அணுசக்திக் கழகத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு, இரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபட முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அமெரிக்கா தன் பங்குக்கு இரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையுத்தரவுகளை விலக்கிக் கொண்டது.

அமெரிக்காவின் தீவிர வலதுசாரிக் கும்பலும் ஏகாதிபத்திய போர்வெறியர்களும் இந்த ஒப்பந்தத்தை, அதன் தொடக்கந்தொட்டே எதிர்த்து வந்தனர். இரானில் அமெரிக்க அடிவருடி ஆட்சியைத் திணிக்க வேண்டுமே தவிர, அந்நாட்டிற்குச் சிறிய சலுகைகூடக் காட்டக்கூடாது என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு.

டிரம்ப் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டபோதே இந்த ஒப்பந்தத்தைக் கைவிட வேண்டுமென போர்வெறியைக் கக்கி வந்தார். அவர் அதிபராகி ஒரு வருட காலத்திற்குள்ளாகவே, இரானுடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திலிருந்து தன்னிச்சையாக விலகிக் கொள்ளும் முடிவை அறிவித்ததோடு, இரானின் மீது மீண்டும் பொருளாதாரத் தடையுத்தரவுகளையும் திணித்தார்.

கூட்டுச் செயல்பாடுத் திட்ட ஒப்பந்தப்படி இரான் நடந்து வருவதாகச் சர்வதேச அணுசக்திக் கழகம் சான்றளித்திருப்பதை அதிபர் டிரம்ப் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இரான் இரகசியமாக அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாகப் பழி போட்டு, தனது முடிவை நியாயப்படுத்தி வருகிறார். ஆனால், இதை அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியான இங்கிலாந்துகூட ஒப்புக் கொள்ளவில்லை. இரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவரும் ஜப்பானும், சீனாவும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையுத்தரவுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன.

இந்த எதிர்ப்புகளைச் சமாளிக்க, இரானிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் சீனா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு, அவ்வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள ஆறு மாதங்கள் அவகாசம் அளித்தது, அமெரிக்கா. இந்தக் கால அவகாசம் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி முடிவுக்கு வந்ததையடுத்து, இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முற்றிலுமாகத் தடை போட்டுள்ள அமெரிக்கா, அந்நாட்டின் வங்கித் துறை செயல்பாடுகள் மற்றும் உலோக ஏற்றுமதிக்கும் தடையுத்தரவை விரிவுபடுத்தியிருக்கிறது.

இரானைப் பொருளாதாரரீதியாக முடக்குவதன் மூலம், உள்நாட்டில் ஆட்சிக்கு எதிரான அதிருப்தியையும் கலகத்தையும் தூண்டிவிடுவது எனும் நோக்கில் இப்பொருளாதாரத் தடையுத்தரவைக் கொண்டு வந்திருக்கும் அமெரிக்கா, இன்னொருபுறம், இரானை இராணுவரீதியாக அச்சுறுத்தும் நோக்கில் போர்விமானக் கப்பல் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்களையும் மேற்காசியப் பகுதிக்கு அனுப்பி வைத்திருக்கிறது. இரானின் இராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிப் படையைப் பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருக்கிறது. மேலும், ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவச் சிப்பாய்களையும் மேற்காசியாவுக்கு அனுப்பத் திட்டமிட்டு வருகிறது.

இசுரேல் பிரச்சினை, இசுரேல் லெபனான் பிரச்சினை, இராக் மீது அமெரிக்கா நடத்திய போரால் அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் சன்னி பிரிவுகளுக்கு இடையேயான மோதல் ஆகியவற்றால் உருக்குலைந்து போயிருக்கும் இராக்கின் பொருளாதார நிலை, சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவோடு அந்நாட்டில் நடந்துவரும் உள்நாட்டுப் போர், இவற்றுக்கு அப்பால் ஐ.எஸ். முசுலீம் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் என மேற்காசியப் பகுதியே நிரந்தரப் பதட்டத்திலும் போர் அபாயத்திலும் இருந்துவரும் நிலையில், இரானைக் குறிவைத்திருக்கிறது, அமெரிக்கா. இம்முடிவு எரியும் வீட்டின் மீது மண்ணெண்ணெயை ஊற்றிவிடும் முட்டாள்தனமும் திமிரும் இரண்டறக் கலந்தது.

படிக்க :
♦ ஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும் !
♦ பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே உலகப் பொருளாதாரம் மீளமுடியாத கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி, அதிலிருந்து மீள வழியில்லாமல் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் சூழலில் இரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையுத்தரவும், அமெரிக்காவின் போர் முன்னெடுப்புகளும் உலகப் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்களும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் எச்சரித்தும்கூட அமெரிக்க அதிபர் டிரம்பும், ஏகாதிபத்திய போர்வெறி கொண்ட அவரது அமைச்சர்களும் எதையும் காதில்போட்டுக் கொள்ளவில்லை. யார் குடி கெட்டாலும் பரவாயில்லை, இரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற வெறியோடு செயல்பட்டு வருகிறது, அமெரிக்கா.

ஒருபுறம், உள்நாட்டுப் பொருளாதார நலன்களைக் காப்பது என்ற பெயரில் சீனா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரித்துக்கொண்டே போகும் தேசிய வெறிக் கொள்கை; இன்னொருபுறம் தனது மேலாதிக்க நலன்களை விரிவாக்கிக் கொள்வதற்கு வெனிசுலா, இரான் மீது பொருளாதாரத் தடையுத்தரவுகளை விதிப்பது, எதிர்க்கட்சிகளைத் தூண்டிவிட்டு உள்நாட்டில் கலவரங்களைத் தூண்டிவிடுவது, போர் அச்சுறுத்தல்களில் ஈடுபடுவது என இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வருகிறார், அதிபர் டிரம்ப். அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அதில் வெற்றி பெறுவதற்கும் டிரம்பிற்கு இந்தத் தேசிய வெறியும், மேலாதிக்க போர் வெறியும் தேவைப்படுகிறது.

இரான் அதிபர் ஹஸன் ரௌஹானி.

“கூட்டுச் செயல்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய யூனியன் நாடுகள், எதிர்வரும் 60 நாட்களுக்குள் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காணவில்லையென்றால், அந்த ஒப்பந்தத்தின் சில விதிகளை அமல்படுத்த முடியாது என்றும், கச்சா எண்ணெய் ஏற்றுமதி வர்த்தகத்துக்குப் பயன்பட்டு வரும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மூடிவிடுவோம்” என்றும் இரான் அரசு எச்சரித்திருக்கிறது.

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்களே, அது போலவே, ஜனநாயகத்தைக் கொண்டுவருவது, ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவது என்ற முகாந்திரத்தைப் பயன்படுத்திக்கொண்டு அமெரிக்கா புகுந்த எந்தவொரு நாடும் அதன் பிறகு உருப்பட்டதில்லை.

எந்த தாலிபான்களை ஒழிப்பது என்ற பெயரில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானின் மீது படையெடுத்ததோ, இன்று அதே தாலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது. லிபிய அதிபர் கடாஃபியைக் கொன்றுவிட்டு, அங்கு ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்த பிறகு அந்நாட்டில் அமைதியும் வளர்ச்சியும் ஏற்படவில்லை. மாறாக, நாடே சுடுகாடாகிவிட்டது. லிபியாவில் அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் நுழைந்த பிறகுதான், ஐ.எஸ். முசுலீம் தீவிரவாத அமைப்பு உருவானது.

சிரியாவில் அமெரிக்கா தூண்டிவிட்டு நடத்திவரும் உள்நாட்டுப் போரால், அந்நாடே சீர்குலைந்து, இலட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டிலிருந்து அகதிகளாக வெளியேறியுள்ளனர். ஆப்கான், இராக், லிபியா ஆகியவை பழையதையும் இழந்து, புதிதாக எதுவொன்றையும் பெறாமால், திரிசங்கு நிலையில் சிக்கிக் கொண்டுவிட்டன.

படிக்க :
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !
♦ எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு உள்ளிட்ட ஐரோப்பிய யூனியன் நாடுகள், இரான் மீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதாரத் தடையுத்தரவை மீறி, அதனுடன் வர்த்தக உறவை மேற்கொள்வது குறித்துப் பேசிவரும் நிலையில், மோடி அரசோ இவ்விடயத்தில் நெடுஞ்சாண்கிடையாக அமெரிக்காவின் காலடியில் விழுந்துவிட்டது.

இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதிக்குப் பிறகுதான் இரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என அமெரிக்காவே சலுகை வழங்கியிருந்தாலும், மோடி அரசு ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்திலேயே இரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் கணிசமாகக் குறைத்துவிட்டது. அதற்கும் முன்பாகவே வெனிசுலாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. “இந்திய அமெரிக்கா உறவின் நலன் சார்ந்தே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக” விளக்கம் அளித்திருக்கிறார், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ஹர்ஷவர்த்தன்.

இம்முடிவில் இந்தியாவின் நலன் எங்கே இருக்கிறது? இரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்களுக்கு உடனடியாகவே 2,500 கோடி ரூபாய்க்கு மேல் நட்டமேற்படும் எனச் செய்திகள் வெளிவருகின்றன. அமெரிக்காவின் இந்த மேலாதிக்க வெறி தொடர்ந்து நீடித்தால், இந்தியாவின் எண்ணெய் இறக்குமதிச் செலவு அதிகரித்து, அதன் காரணமாக இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையும் (ஏற்றுமதி, இறக்குமதிக்கு இடையிலான வேறுபாடு) அதிகரிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருவதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல், அமெரிக்காவிற்குத் தப்பாமல் தாளம் போட்டுவருகிறார், மோடி.

பயங்கரவாதம் என்பது குண்டு வைப்பதும், கொலை செய்வதும் மட்டுமல்ல. ஒரு நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதும் பயங்கரவாதம்தான். அந்த வகையில் இரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் மீது அமெரிக்கா விதித்திருக்கும் தடையுத்தரவு இரான் மீது மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மீது ஏவிவிடப்பட்டிருக்கும் பொருளாதார பயங்கரவாதம் ஆகும்.

பாகிஸ்தான் ஏவிவிடும் முசுலீம் தீவிரவாதத்திற்கு எதிராக சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்தியதாகப் பெருமை பேசிவரும் மோடி, அமெரிக்கா ஏவிவிட்டிருக்கும் பொருளாதார பயங்கரவாதத்தின் முன் மண்டியிட்டுக் கிடக்கிறார்.

அமெரிக்கா ஏற்படுத்தியிருக்கும் இந்த நெருக்கடியை மக்கள் மீது சுமத்தி, அதாவது பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தித் தப்பித்துக் கொள்ளலாம் எனத் திட்டமிடுகிறது, மோடி அரசு. அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதத்தைத் தனது வர்க்கநலன் காரணமாக எதிர்த்து நிற்கத் துணிவில்லாத மோடி அரசு, அதிலிருந்து தப்பிக்க விலையேற்றம் என்ற சர்ஜிகல் ஸ்டிரைக்கை மக்கள் மீது ஏவும்.

குப்பன்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

வறண்ட இந்தியா : நீரைத் தேடி … | படக்கட்டுரை

0

நாடு முழுவதும் தலைவிரித்தாடுகிறது வறட்சி. முழு பொறுப்பையும் பருவநிலை மாற்றத்தின் மீது சுமத்தி விட முடியாது; ஆட்சியாளர்களுக்கு நீர் மேலாண்மையில் தொலைநோக்குப் பார்வையில்லாததே நாம் எதிர்கொண்டுள்ள தண்ணீர் பிரச்சினைக்கு முக்கியமான காரணம்.

கையில் குடங்களோடு தண்ணீருக்காக அலைவது அன்றாடம் காணும் காட்சியாகிவிட்டது. மகாராஷ்டிராவின் விதர்பா, மராத்வாடா, கந்தேஷ் பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. பருவமழை பொய்த்துப்போன நிலையில், மக்கள் தண்ணீருக்காக அல்லாடுகிறார்கள். அதை ஆவணப்படுத்தியிருக்கின்றன இந்தப் படங்கள்…

ஒரு பழங்குடியின பெண், பல்கார் மாவட்டத்தில் தண்ணீரைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்.

நாசிக் மாவட்டத்தில் இகாட்பூரி மாவட்டத்தில் உள்ள ஒரு வனத்தில் அமைந்துள்ள குளத்தில் தண்ணீர் சேகரிக்கும் பழங்குடிகள்…

டெண்டேல் கிராமத்தில் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கிறார் இவர். இந்த ஊரில் லாரிகள் மூலம் விநியோகிக்கும் தண்ணீர் வாரம் ஒரு முறை மட்டுமே கிடைக்கும்.

பால்கர் மாவட்டத்தில் கோசாலி கிராமத்தின் அருகே, பெரிய பிளாஸ்டிக் கூடையில் தண்ணீரை சுமக்கிறார் இந்தப் பெண்.

நாசிக் அருகே, கால்நடைகளுக்காக வறண்ட நிலையில் உள்ள ஒரு கிணற்றில் இருக்கும் நீரை சுறண்டிக் கொண்டிருக்கிறார்கள் சோனாலி கரூட் (24), புஷ்பா கரூட் (49) இருவரும்.

நாசிக்கில் டேங்கர் லாரிகளுக்காக காத்திருக்கும் பெண்கள்…

வறட்சியால் துவண்டு போன மாடுகள் நிழலில் இளைப்பாறுகின்றன.

தங்கள் கிராமத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தள்ளியுள்ள ஆழ்துளை குழாயில் தண்ணீர் பிடித்துவரும் இணையர்…


படங்கள் : Apoorva Salkade
கலைமதி
நன்றி : அவுட்லுக் இந்தியா

தந்தை பெரியார் சிந்தனைகள் – pdf வடிவில் !

உங்கள் கையில் தந்தைப் பெரியார் சிந்தனைகள் 3 தொகுதிகள் 2200 பக்கங்கள் pdf வடிவில்.

நண்பர்களே…

பொ.வேல்சாமி

1973 வரை பதிவான தந்தைப் பெரியாரின் பேச்சுக்களை ஆனைமுத்து ஐயா அவர்கள் சுமார் 2,200 பக்கங்களில் 3 தொகுதிகளாக 1974-ல் வெளியிட்டதை நாம் அறிவோம். அந்த 3 தொகுதிகளையும் பலரும் pdf வடிவில் வைத்திருக்கக்கூடும்.

அப்படியில்லாத நண்பர்களும் இந்நுாலை உங்கள் கணிணியில் வாசிப்பதற்கு உதவியாக இந்த 3 நூல்களின் இணைப்பை இங்கே கொடுத்துள்ளேன். இதில் இரண்டாம் தொகுதியில் மட்டும் பக்.952-லிருந்து 1085 வரை விடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது, அந்தப் பக்கங்களுடன் கூடிய இரண்டாம் தொகுதியை வைத்துள்ள தோழர்கள் அந்நூலை pdf வடிவில் கொடுக்கும்படிக் கொள்கிறேன்.

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 1

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 2

பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் – தொகுதி 3

( பிடிஎஃப் டவுண்லோடு செய்ய )

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

இத்தாலி : சர்வாதிகார ஆட்சியில் அமைச்சர்களான தேசியவாதிகள் !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 17

டோக்ளியாட்டி

ழைய அரசியல் கட்சிகள் அழிக்கப்பட்டு பாசிஸ்டுக் கட்சியால் ஜீரணிக்கப்பட்ட விவரங்களை ஏற்கெனவே பார்த்தோம். 1920-ம் ஆண்டிலும் 1922-ம் ஆண்டிலும் ரொமாக்னாவையும் எமிலியாவையும் சேர்ந்த பெரும்பாலான குடியரசுவாதிகளும், மாஜினியின் குழுக்களும் குடியரசுக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டன. 1923 மே மாதம் தேசியக் கட்சி இணைக்கப்பட்டதைப் பார்த்தோம். இந்த இணைப்பு இரு வகையில் பலன் தந்தது.

ஒருபுறம் ஸ்தாபனக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது பூர்ஷுவா வர்க்கத்தைச் சேர்ந்த மிகப் பிற்போக்கான குழுக்கள் எத்தகைய தயக்கமும் மயக்கமுமின்றி பாசிஸ்டுக் கட்சியின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டதை இது குறித்தது. அதே சமயம் பாசிஸ்டுக் கட்சியின் வளர்ச்சிப் பாதையை இது மாற்றமடையவும் செய்தது. இச்சமயத்தில் பாசிஸ்டுக் கட்சி மிக ஆழமான மாறுதல்களுக்கு உள்ளாகி வந்ததையும் காணலாம். கிரேக்கத்தையும் ரோமாபுரியையும் பற்றிக் கூறுப்படுவதை இந்த இரு கட்சிகளுக்கும் கூறலாம். இணைவுக்கு முன்னர் தேசியக் கட்சி மிக சாதாரணமானதாகவே இருந்தது. சில இடங்களில் பாசிஸ்டுகள் தேசியவாதிகளை முரட்டுத்தனமாக நடத்தினர். இவ்வாறு அவர்கள் வெற்றி கொள்ளப்பட்டனர். ஆனால் பிறகோ இதே தேசியவாதிகள் வெற்றியாளர்களாகி விட்டனர்.

பொட்டாய் (giuseppe bottai)

பாசிச சர்வாதிகாரத்தின் இயல்பைப் புரிந்து கொள்வதற்கு இது மிக முக்கியமானதாகும். தேசியவாதியான ரோக்கோ இந்த சர்வாதிகார ஆட்சியில் சட்ட அமைச்சரானது தற்செயல் நிகழ்ச்சி அல்ல; இதே போன்று மற்றொரு தேசியவாதியான பொட்டாய் 3 பாசிஸ்டு சர்வாதிகார ஆட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவராக மாறியதும் தற்செயல் நிகழ்ச்சி அல்ல. அரசு மற்றும் கட்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் பாசிஸ்டுகளுக்கும் தேசியவாதிகளுக்கும் இடையே ஒரு போராட்டமே நடைபெற்று வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினைகளுக்கான தீர்வின் அடிப்படை சாரம் எப்போதும் தேசியக் கட்சியிடமிருந்தே வந்திருக்கிறது. இவ்வாறே அவர்களது தீர்வின் சாராம்சம் எப்போதுமே பிற்போக்கானதாகவும் பூர்ஷுவாக்களுக்குச் சாதகமானதாகவுமே இருந்து வந்திருக்கிறது.

பெனடூஸ் (Beneduce)

நிட்டியின் ஜனநாயகம், லிபரல் ஜனநாயகம், ரேடிக்கல் ஜனநாயகம், சமூக ஜனநாயகம், ஸ்காட்லந்து வினைமுறைகளைப் பின்பற்றும் கூட்டுரிமைக் கழக ஜனநாயகம் முதலான எல்லா வகையான இத்தாலிய ஜனநாயக அமைப்புகளையும் கலைத்தது மூன்றாவது கட்டமாகும். இடித்துத் தகர்த்துத் தூள் தூளாக்கப்பட்ட இந்த இத்தாலிய ஜனநாயகங்களின், யுத்தத்துக்கு முற்பட்ட ஆண்டுகளில் ஜீவித்திருந்த இந்த ஜனநாயகங்களின் பிரதிநிதிகள் இன்று இத்தாலியப் பொருளாதாரத்தின் கேந்திர இடங்களில் அமர்த்தப்பட்டிருப்பதைக் காணலாம். இப்போது இத்தாலியப் பொருளாதாரத்தில் மிகவும் அதிகாரம் பெற்ற பெயராக விளங்குவது பெனடூஸ் 4 என்பது. இவர் இக்கட்சிகளில் ஒன்றின் தலைவர். அவரைப் போன்ற மற்றவர்களும் இத்தாலியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

செசரே அலெஸாண்டிரி (cesare alessandri)

1923-ல் கிரோண்டே மாக்சிமலிஸ்டுகள் பாசிஸ்டுக் கட்சியுடன் தம்மை இணைத்துக் கொண்டனர். இவர்களின் தலைவர் செசரே அலெஸாண்டிரி 5. 1924-ல் பாப்புலர் கட்சியின் முறை வந்தது. அது பாசிஸ்டுக் கட்சியை ஆதரித்தது மட்டுமன்றி, அதன் ஜோதியில் முற்றிலுமாகக் கலந்து, முழுக்க முழுக்க பாசிஸ்டாகிவிட்டது. 1922 கோடை காலத்திலும், 1925 அக்டோபரிலும் வலதுசாரி லிபரல்களின் முறை வந்தது. சலாண்ட்ரா 6 முதல் கியோலிட்டி கட்சியின் வலதுசாரிப் பிரிவினர் வரை பலரும் பாசிஸ்டுக் கட்சியில் ஐக்கியமாயினர். முடிவாக, 1927-ல் ரிகோலாவும் அவருடைய பரிவாரத்தினரும் 7 வருகிறார்கள். அவர்கள் பாசிஸ்டுக் கட்சியில் நேரடியாகச் சேராவிட்டாலும் ஒரு வகையில் அதனுடன் தங்களைப் பிணைத்துக் கொண்டனர்.

இதுவரை நாம் கூறிவந்ததிலிருந்து பழைய அமைப்புகள் உடைத்து நொறுக்கப்பட்டு, அவற்றின் தலைவர்களும் ஏனையோரும் எவ்வாறு பாசிஸ்டுக் கட்சியில் இணைக்கப்பட்டனர் என்பதைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இத்தகைய நிலைமையில்தான் பிரச்சினை கூர்மை அடைந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில்தான் கட்சிக்கு நெருக்கடிகள் ஆரம்பமாயின. இது ஏன்?

(தொடரும்)

அடிக்குறிப்புகள் :

3. கியூசெப்பி பொட்டாய் (1895-1959) : ஆட்சிக்கு உள்ளார்ந்த தத்துவத்தை ஏற்படுத்துவதில் மிகவும் ஈடுபாடு கொண்ட அறிவாளிகளில் ஒருவர். 1926 முதல் 1929 வரை கார்ப்பரேஷன்களின் துணைச் செயலாளராகவும் கார்ப்பரேஷன்களின் அமைச்சராக 1929-32 வரையிலும் இருந்த இவர், சோஷலிசத்திலிருந்தும் முதலாளித்துவத்திலிருந்தும் குணாம்சத்தில் வேறுபட்ட கதம்ப உருவான பொருளாதார அமைப்பைக் கண்டுபிடிக்க முயன்றார். ஆரம்பத்தில் புதிய பொருளாதார ஏற்பாட்டை வியந்து பாராட்டுபவராக இருந்த பொட்டாய், அரசாங்க பாதுகாப்பு எல்லைக்குட்பட்ட பொருளாதார ஜனநாயகத்திற்கும் பாசிசத்தின் கீழ் பூர்ஷுவாக்களின் அரசியல் பொருளாதார சர்வாதிகாரத்தின் இரக்கமற்ற யதார்த்தத்திற்கும் இடையே உள்ள முரண்பாட்டை அவரால் தீர்க்க முடியவில்லை. உற்பத்தியை ஒருவாறு கட்டுப்படுத்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்க அதிகப்படியான “அவசரநிலை” ஏற்படுத்தியபோது அதனை பொட்டாய் எதிர்த்தபோது 1932-ல் முசோலினி, சர்க்காரிலிருந்து அவரை நீக்கினார். பின்பு 1936 முதல் 1943 வரை பொட்டாய் கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பாசிசத்தின் உயர் கவுன்சில் கூட்டத்தில் – 1943 ஜூலை 25-ல் – முசோலினிக்கு எதிராக வாக்களித்தார். அந்தக் கூட்டத்தில் ஆட்சி தன்னைத் தானே கலைத்துக் கொண்டது.

4. வால்டர் பெனடூஸ் (1877-1944) பிஸ்ஸோலட்டியின் சமூக சீர்திருத்தவாதக் கட்சியின் உறுப்பினரான இவர் 1921-22-ல் தொழிலாளர் இலாகா அமைச்சராக இருந்தார்; 1925 பாசிஸ்டு ஆட்சியோடு பகிரங்க ஒத்துழைப்பு அளிப்பதென்ற நிலைக்குச் சென்றார். நடைமுறையில் பயனுள்ளவற்றிற்கும் பொதுப் பணிகளுக்கும் நிதி வழங்குவதற்காக பகுதிப் பொதுக் கடன் வழங்கும் நிறுவனங்களை முதலில் இவர் ஏற்படுத்தியிருந்தார். 1933-ல் தொழில் புனரமைப்புக் கழகம் அமைக்கப்பட்டதற்குக் காரணமாக இருந்தார்.

5. அலெஸாண்டிரியின் குழு ஆட்சியுடன் இணங்கிப் போக விரும்பியதால் “கிரோண்டே” என்ற பெயரை தனக்குச் சூட்டிக் கொண்டது. விரைவில் (1863—?) அலெஸாண்டிரி பெயர் தெரியாமல் போனார்.

அன்டோனியோ சலாண்ட்ரா (Antonio Salandra)

6. அன்டோனியோ சலாண்ட்ரா (1853-1931) தீவிர பழைமை விரும்பும் அரசியல்வாதி; அபுலியனின் நிலவுடமை வர்க்கத்தின் பிரதிநிதி, 1914-16-ல் பிரதம மந்திரியாக இருந்தார். இவரும் இவரது அரசியல் ஆலோசகர், வெளியுறவு அமைச்சர் சிட்னி சொன்னிகோவும், இத்தாலி முதல் உலக யுத்தத்தில் தலையிட ரகசியமாக ஏற்பாடு செய்தனர். இந்தத் தலையீட்டிற்கு பலமான மக்கள் எதிர்ப்பு இருந்தது. ஆனால், புத்தகால நிலைமைகளில் அரசின் அடக்குமுறை அதிகாரங்களுக்கு ஆக்கம் கொடுக்க இது ஒரு சந்தர்ப்பம் என்று சலாண்ட்ராவும் சொன்னினோவும் பார்த்தனர். 1922 செப்டம்பரில் தன்னை ஒரு “கெளரவ பாசிஸ்டாக” சலாண்ட்ரா பிரகடனப்படுத்திக் கொண்டார்.

7. தொழிலாளர் பிரச்சினைகள் ஆய்வு செய்யும் தேசியக் கழகமும் பிராப்ளமி டெல் லவோரோ என்னும் அதன் இதழும் பொதுத் தொழிலாளர்கள் சம்மேளத்தின் முன்னாள் செயலாளர் ரினால்டோ ரிகோலாவால் 1927-ல் ஸ்தாபிக்கப்பட்டது. அவ்வாண்டு ஜனவரி 4-ம் தேதி ரிகோலாவும் ஏனைய சீர்திருத்தவாதச் சங்கத் தலைவர்களும் பொது தொழிலாளர் சம்மேளனத்தை கலைப்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

ரினால்டோ ரிகோலா (Rinaldo rigola)

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பின்னால் ரிகோலாவும் அவருடன் சேர்ந்த சில சீர்திருத்தவாதிகளும் மிலானில் சந்தித்து, கார்ப்பரேட்டில் ”சோதனை” வெற்றி பெறுவதற்குத் தங்கள் ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் ஒரு செயல்திட்டத்தையும் அளிப்பதாகக் கூறும் ஒரு தஸ்தாவேஜில் கையொப்பமிட்டனர். வர்க்கப் போராட்டத்தின் யதார்த்தத்தையும் சோஷலிசத்தின் செல்லுபடியாகும் தன்மையையும் தாங்கள் மறுக்கவில்லை என்று அந்தக் குழு கூறிற்று; ஆனால் அதே சமயம் ஆட்சியின் சீர்திருத்தங்களுக்கும் 1926, ஏப்ரல் 3 சட்டம், அப்போது தயாரிக்கப்பட்டு வந்த தொழிலாளர் சாசனம், வேலைத்திட்டத்திற்கும் சாதகமான கணிப்பை அது அளித்தது.

மேலும், சாராம்சத்தில் ஒத்துழைக்கும் தனது நிலையை யதார்த்தம் என்ற பாசாங்குத் தனத்தின் மூலம் நியாயப்படுத்துவதற்கு, கார்ப்பரேட்டிவிசத்திற்கு தாங்கள் இதற்கு முன்னர் காட்டி வந்த எதிர்ப்பு தொழிலாளர் நலன்களுக்கு உகந்ததல்ல என்று இப்போது உணர்வதாக அந்தக்குழு தனது அறிக்கையில் கூறிற்று. சமூக, பொருளாதாரக் கொள்கையின்பால் பாசிசம் கடைப்பிடிக்கும் கண்ணோட்டம்தான் தொழிலாளர்களின் நலன்களை சிறப்பாகப் பாதுகாக்கும் என்று அது மேலும் கூறியது.

படிக்க:
இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !

முதல் 10 ஆண்டுக் காலம் இவர்களது ஆய்வு வெளியீட்டை ஆட்சி சகித்துக்கொண்டது. ஏனெனில் அதிதீவிரவாதிகளின் தீங்கற்ற ஆக்கபூர்வமான விமர்சனத்தைவிட அவர்களது ஒத்துழைப்புதான் மிகவும் அனுகூலமானது என்பதை ஆட்சி தெரிந்து கொண்டிருந்தது. 1914லிருந்து 1920 வரை மிலானின் சோஷலிஸ்டு மேயராக இருந்த எமிலி கல்டாரா பிராப்ளமி டெல்லவோரோவுக்கு கட்டுரைகள் அளித்து வந்தார்.

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 08

பாணர் எழுதிய ஹர்ஷ சரித்திரத்தைப் படிப்போர், ஹர்ஷரின் வீரத்தை உணர்வர். கனோஜ் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹர்ஷர், ஆறு ஆண்டுகள் வாளை உறையிலிடாது போர் புரிந்த வீரர், எத்தனையோ வெற்றிகள் கண்டவர். அவர் தோற்று தமது உறைவாளை உறையிலிட்டு ஓடியது, திராவிட நாட்டு எல்லையில்தான்! நருமதைக்குத் தெற்கேதான்! இரண்டாம் புலிகேசி எனும் இரணகளச் சூரன் ஹர்ஷனைத் தோற்கடித்தான்.

இங்ஙனம் வடநாட்டில் ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை. ‘வீராதி வீரர்கள்’ வாழ்ந்த போதெல்லாம் திராவிடம் தனி நாடாகவே இருந்தது; தனிச் சிறப்புடனே விளங்கிற்று:

கஜினி, கோரி, குத்புதீன், அலாவுதீன், துக்ளக், பாபர், அக்பர், அவுரங்கசீப் ஆகியோர் காலத்திலும் திராவிடத்தை எந்த வல்லரசும் அடக்கி அழிக்க முடியாது போயிற்று!

ஏன்? திராவிடம் ஆண்டவனின் அவதார புருடர்களை மட்டுமே நம்பிக்கொண்டு வாழ்ந்ததா? அற்புதங்களை, யோகங்களை நம்பிக்கொண்டு வாழ்ந்ததா? இல்லை இல்லை ! வீரத்துடன் இருந்தது.

“மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும்
கருவிரலூகமும் கல்லிமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாடு குநிசியும்!
கால்பொன் னுலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயூவித் துலாமும் கைபெய ருசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்
எழுவும் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்…”  கொண்டு போரிடும் வீர மரபினராகத் திராவிடர் இருந்ததால், அம்பெய்யும் பொறி, கரிய விரலையுடைய குரங்கு போன்ற கடிக்கும் பொறி, கல்லெறியும் கவண், கோட்டை மீதேற முயலும் எதிரி மீது காய்ச்சி ஊற்றும் எண்ணெய். அவ்விதமான எண்ணெய் முதலியன ஊற்றுதற்கான பாத்திரம். இரும்புக் கம்பிகளைக் காய்ச்சும் உலை, கல்லும் கவணும் வைக்கும் கூடை, கோட்டை மதில்மீது ஏற முயலும் எதிரிமீது மாட்டி வலிக்கும் தூண்டில் போன்ற கருவி, சங்கிலி , எதிரியின் மீது வீசச் சேவல் தலை போன்ற பொறி , அகழியைத் தாண்டி மேலே ஏறும் எதிரியைத் தாக்கிக் கீழே தள்ள இரும்பு உலக்கை அம்புக்கூட்டம், எதிரிகள் மீது தீ வீசும் பொறி, சிற்றம்புகள் எய்யும் யந்திரம், மதின் மேற்புறத்து உச்சியில் ஏறும் எதிரியின் கைகளைக் குத்தும் ஊசிகள், மதிலில் ஏறினவன் உடலைக் கிழிக்கும் இரும்பாற் செய்த பன்றி உருவுடைய யந்திரம். மூங்கில் போன்ற உருவுடைய இரும்புக் கம்பிகள், கோட்டைக்கு ஆதரவாகப் போடப்படும் பெரிய மரக்கட்டைகள், அவற்றுக்குக் குறுக்கே போடும் உத்திரங்கள், தடி, ஈட்டி, வேல், வாள் வீசும் பொறி முதலியன கொண்டு போரிட்டனர் திராவிடர்.

சிலப்பதிகாரத்தைப் படிப்போர், இந்த நெஞ்சை அள்ளும் சேதியைக் காண்பர்.

அன்று திராவிடர், ஆரியர்போல் “அரி அர மாயை” மேக வாயுவாஸ்திரம், சித்து முதலியன ஜாலங்களை, கட்டுக் கதைகளைப் புனைந்து கொண்டு வாழவில்லை. வீரத்தோடு வாழ்ந்தனர். தனித்து நின்று தனிச்சிறப்புப் பெற்றனர்.

திராவிட நாடு இங்ஙனம் இருக்கவில்லை என்று இந்து மகா சபையினர் கூற முடியுமா? அத்தகைய நாடு மீண்டும் தனிநாடானால், பண்டைக் காலத்திற்கேற்ற பொறிகள், போர்க்கருவிகள் கொண்டு தம்மைத் தாம் பாதுகாத்துக் கொண்டதுடன், வடக்கே ஆரியர் ஏற்படுத்திய எந்த வல்லரசுக்கும் தலைவணங்காது வாழ்ந்தது போலவே, இக்காலப் போர்க்கருவிகளான துப்பாக்கி, தோட்டா, பீரங்கி, வேட்டு, டாங்கி, டார்பிடோ, விமானம், வெடிகுண்டு, கப்பல், சப்மெரைன் முதலியன கொண்டு வல்லரசுகளுக்கு இரையாகாமல் வாகை சூடி வாழ முடியாதா என்பதைத்தான் திருப்பாவை பாடும் திவான்பகதூர் யோசித்துப் பார்த்துப் பதில் கூற வேண்டுகிறோம். கூறுவாரா?

திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி.

திராவிடம் தனிநாடாகவே இருந்து வந்தது என்பதைச் சரித்திர, இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு நாம் விளக்கினோம். ஆனால், அது திவான் பகதூர் இராமசாமி சாஸ்திரி போன்றோர்க்கு விளக்கம் தராது!

”ஆரியர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், திராவிடர் இங்கேயே தோன்றினவர் என்றுரைக்கிறார்கள். இதுவும் தவறு” என்று சாஸ்திரியார் மதுரை மாநாட்டிலே கூறினார். அவருக்குத் ததாஸ்து கூறும் பேர்வழிகளைப் பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால் சாஸ்திரியாரும் அவரது சீடர்களும் இங்ஙனம் கூறினாலும், அவர்கள் பிள்ளைகள் இன்று பள்ளிக் கூடங்களில் படிப்பது, ‘ஆரியர் வெளிநாட்டார் – திராவிடர் பூர்வகுடிகள் – திராவிடரை ஆரியர் தஸ்யூக்கள் என்று இழிவாகக் கூறினர்’ என்பதுதான். சிறு பிள்ளைகள் உள்ளத்திலே இந்த உண்மை இடம்பெறும்போது நரைத்த நடுங்கிகள் வேறுவிதமாக நாவசைப்பது பற்றி நமக்கென்ன கவலை!

“இந்துக்கள் பெருந்தன்மையான, உதாரணமான நோக்கமுள்ளவர்கள்” என்று சாஸ்திரியார் கூறுகிறார். இது உண்மை என்று சேரியை ஒருமுறை கண்ட எவரேனும் ஒப்புக்கொள்ள முடியுமா? கொடுங்கோன்மைக்கு, மக்களை மக்கள் கசக்கிப் பிழிவதற்கு, மிருகத்தனமாக நடத்துவதற்கு, மனுவை விடச் சிறந்த குரு வேறு எங்கும் இராரே, மனு ஆரிய சிரோமணி! ‘இந்து’ பெருந்தன்மை அதிலே தெரிகிறதே தெளிவாக! இன்னமுமா, ஏய்க்கப் பார்ப்பது?

மலத்தை மிதித்துவிட்டால் காலைக் கழுவினாலே போதும்; மனிதனை (ஆதிதிராவிடனை)த் தீண்டிவிட்டால், குளிக்க வேண்டுமே! பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டுமே பிராமண குலோத்தமர்கள்! இதுதான் தாராளம், பெருந்தன்மை!

இங்ஙனம் வீணுரை நிகழ்த்திக் கொண்டு, வெந்த புண்ணில் வேல் நுழைக்க வேண்டாம். மிதிபடும் புழுவும் சில சமயம் கொட்டும் என்று நாம் சாஸ்திரியாருக்குக் கூறுகிறோம்.

சனாதனத்துக்கு, வைதீகத்துக்கு புதுத் தத்துவார்த்தப் பொருள் கொடுத்துவிட்டால் போதாது. “என் இராமன் வேறு, என் வர்ணாஸ்ரமம் வேறு” என்று காந்தியார் கூறுவது போல், ‘சனாதனி பல ஜாதி இருக்க வேண்டுமெனக் கூறலாகாது!’ என்று கூறிவிட்டால் போதாது, தாம் உழைப்பதுதான் சனாதனம், வழக்கத்தில் நடைமுறையில் இருப்பது உண்மையான சனாதனமாகாது என்று திவான் பகதூர் சாஸ்திரியார் உள்ளபடி ‘இருதயப் பூர்வமாக! நம்பினால், இன்று முதல் உண்மைக்கு மாறானது என்று அவர் கருதும்படி இருக்கும். சனாதனத்தை அழிக்க முற்படட்டும், அது வீரம்! அது ஆண்மகன் செயல்!

படிக்க:
நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !
இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !

”முஸ்லீம் லீக் பாகிஸ்தான் கேட்கத் தொடங்கியதைப் பார்த்துப் பெரியார் இராமசாமி நாயக்கரும் அவருடைய கட்சியைச் சார்ந்தவர்களும், தமிழ்நாடு திராவிடநாடு என்றும், அதை வேறு தேசமாகப் பிரித்துவிட வேண்டும், அதிலிருந்து ஆரியர்களை நீக்கிவிட வேண்டும் என்றும் ஆரம்பித்தார்கள்’’ என்று சாஸ்திரியார் கூறுகிறார்.

பாகிஸ்தான் என்பதின் எதிரொலியல்ல, “திராவிடஸ்தான்” என்ற முழக்கம். மூலம் திராவிடஸ்தான் என்ற முழக்கமே! அதன் வடநாட்டுப் பதிப்பே பாகிஸ்தான் என்ற முழக்கம். பாகிஸ்தான், லாகூர் லீக் மாநாட்டில் எழும்பியது 22-3-40-ல். திராவிட நாட்டைத் தனி நாடாக்க வேண்டும் என்பது ஜஸ்டிஸ் கட்சி மாநாடு சென்னையில் கூடிய போது பெரியாரின் பேருரையிலிருப்பது. இது 1938 டிசம்பரில்! இந்த ஆண்டு வித்தியாசங் கூடச் சாஸ்தியாருக்குத் தெரியாமற் போனது அதிசயமே!

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

கால்களோடு கனவுகளையும் பறிகொடுத்த விமானி

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 8

லெக்ஸேய் மெரேஸ்யெவும் நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து கொண்டு போனான். எல்லோருடைய உள்ளங்களுக்கும் திறவு கோல் தேடிக்காண கமிஸாருக்கு இயன்றது. ஆனால் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அவருக்கு மசிவதாயில்லை. மெரேஸ்யெவுக்கு அறுவை நடந்த பிறகு முதல் நாளே “வீரம் விளைந்தது” என்ற நவீனம் வார்டிற்கு கொண்டு வரப்பட்டது. மற்றவர்கள் அதை உரக்கப் படிக்கத் தொடங்கினார்கள். இது யாருக்காகப் படிக்கப்படுகிறது என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். ஆனால் இது அவனுக்கு வெகுவாக தேறுதல் அளித்து விடவில்லை. இந்த நவீனத்தின் கதாநாயகன் பாவேல் கர்ச்சாகினை அவன் பிள்ளைப் பருவம் முதலே போற்றி வந்தான். அவனது விருப்பத்துக்கு உரிய கதாநாயகர்களில் அவன் ஒருவனாயிருந்தான். “ஆனால் கர்ச்சாகின் விமானி அல்லவே. விமானத்துக்காக ஏங்குவது என்பதன் அர்த்தம் அவனுக்குத் தெரியுமா என்ன?” என்று இப்போது எண்ணமிட்டான் அலெக்ஸேய்.

ஆக இந்தச் சந்தர்ப்பத்தில் நவீனம் வெற்றி பெறவில்லை. அப்போது கமிஸார் சுற்றி வளைத்துச் செல்லும் நடையை மேற்கொள்ளலானார். பேச்சுவாக்கில் போல ஒரு மனிதனைப் பற்றிப் பிரஸ்தாபித்தார் அவர். திமிர்வாதத்தால் பீடிக்கப்பட்டிருந்த கால்களுடன் பெரிய சமூக வேலையை நிறைவேற்ற அந்த மனிதனுக்கு முடிந்ததாம். உலகிலுள்ள எல்லா விஷயங்களிலும் அக்கறை கொண்டவரான ஸ்தெபான் இனாவிச் ஆகா அப்படியா என்று வியந்தார். தம்முடைய வட்டாரத்தில் ஒரு கை இல்லாத மருத்துவர் ஒருவர் இருப்பதாகவும், வட்டாரம் பூராவிலும் தலை சிறந்த வைத்தியர் அவர்தாம் என்றும், அவர் குதிரை சவாரி செய்வதாகவும் வேட்டைக்குப் போவதாகவும், ஒற்றைக் கையால் துப்பாக்கிச் சுடுவதாகவும் அணிலின் கண்ணில் குண்டு பாயும் படி குறி பிசகாமல் சுடுகிறார் என்றும் தாமே விவரிக்கத் தொடங்கிவிட்டார்.

அப்புறம் கமிஸார் காலஞ்சென்ற அகாதமீஷியன் வில்லியம்ஸை நினைவு கூர்ந்தார். இயந்திர டிராக்டர் நிலைய வேலைத் தொடர்பில் கமிஸாருக்கு நேர்முகமாகத் தெரியுமாம். பாதி உடம்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அந்த மனிதருக்கு ஒரு கை மட்டுமே வழங்கியதாம். அப்படியும் அவர் கல்லூரித் தலைவராகத் தொடர்ந்து பணியாற்றி வந்தாராம், மிகப் பெரிய அளவில் வேலை செய்து வந்தாராம்.

மெரேஸ்யெவ் இந்தக் கதைகளை எல்லாம் கேட்டு வாய்க்குள் நகைத்துக் கொண்டான். சிந்தனை செய்வது, பேசுவது, எழுதுவது, உரையாடுவது, சிகிச்சை செய்வது, வேட்டையாடுவது கூட கால்கள் இல்லாமலே முடியும். ஆனால் அவன் விமானி, இயல்பிலேயே விமானி. சிறுவனாயிருக்கையில் அவன் முழாம் பழ வயலைக் காவல் காத்துக் கொண்டிருந்தான். வறண்டு வெடிப்புக் கண்ட நிலத்தில் வாடிய இலைகளுக்கு நடுவே கிடந்தன பிரம்மாண்டமான உருண்டைகள், வோல்காப் பிரதேசம் முழுவதிலும் புகழ்பெற்ற தர்பூஸ் பழங்கள் அவை. அலெக்ஸேய் அந்த வயலைக் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் சிறு வெள்ளித் தட்டாம் பூச்சி ஒன்றின் ரீங்காரத்தை முதலில் கேட்டான், பின்பு வெயிலில் இரட்டை இறக்கைகளுடன் அது மினுமினுக்கக் கண்டான். புழுதி நிறைந்த ஸ்தெப்பிக்கு வெகு உயரே ஸ்டாலின் கிராத் நகரை நோக்கிக் காற்றில் மிதந்து சென்றது அது. அந்த நாள் முதலே விமானி ஆக தீர்மானித்து விட்டான் அலெக்ஸேய். இந்தக் கனவு அது முதல் அவனை விடாது பற்றிக் கொண்டது.

இளங்கம்யூனிஸ்ட் சங்கம் அவனை சோவியத் தூரக் கிழக்குக்கு அனுப்பியது. அங்கே தைகா காட்டில் ஆமூர் நதிக் கரையில் இளமை நகரான கம்ஸமோல்ஸ்க்கை நிறுவுவதில் அவன் பங்கு கொண்டான். ஆனால் பறப்புகள் பற்றிய தன் கனவை அவன் தைகாவிலும் விட்டுவிடவில்லை. நகரை நிறுவியவர்களில் தலைசிறந்த விமானத் தொழிலை மேற்கொள்ள விரும்பிய யுவ யுவதியர்களை அவன் கண்டான். அதுவரை வெறும் திட்டங்களில் மட்டுமே நிலவிய அந்த நகரில் அவர்கள் தங்கள் கரங்களால் தங்கள் விமானப் பயிற்சிக் கழகத்தை கட்டினார்கள் என்பதை நம்புவதே கடினம்.

மங்குல் வந்து, மூடுபனி அந்த பிரம்மாண்டமான நிர்மாண இடத்தைச் சூழ்ந்து கொண்டதும் கட்டுமானப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் பராக்குகளில் குழுமி, ஜன்னல் கதவுகளைச் சாத்தி விடுவார்கள். வன்மத்துடன் மெல்லிய ரீங்காரமிட்டவாறு காற்றில் படலம் படலாமாகப் பறந்த கொசுக்களையும் மற்றப் பூச்சிகளையும் அப்பால் விரட்டும் பொருட்டுக் கதவுகளுக்கு முன்னே ஈரக்கிளைகளால் புகை மண்டும் நெருப்பை மூட்டுவார்கள்.

அவர்கள் மரங்களை ரம்பங்களால் அறுத்து வீழ்த்தி, அடிக்கட்டைகளை வேரோடு பிடுங்கி அகற்றி, தரையை சமப்படுத்தி, தைகாக் காட்டில் விமான நிலையத்துக்கு இடம் செய்வார்கள்.

உழைப்புக்குப் பின் நிர்மாணத் தொண்டர்கள் இளைப்பாறுகையில் விமானப் பயிற்சிக் கழகத்தினர், கொசுக்களையும் கடி பூச்சிகளையும் நெருங்கவொட்டாது விரட்டும் மண்ணென்ணையை உடம்பில் பூசிக் கொண்டு, கோடாரிகளையும் பிக்காசிகளையும் ரம்பங்களையும் மண்வெட்டிகளையும் வெடி மருந்தையும் எடுத்துக் கொண்டு அலெக்ஸேயின் தலைமையில் தைகாவுக்குச் செல்வார்கள். அவர்கள் மரங்களை ரம்பங்களால் அறுத்து வீழ்த்தி, அடிக்கட்டைகளை வேரோடு பிடுங்கி அகற்றி, தரையை சமப்படுத்தி, தைகாக் காட்டில் விமான நிலையத்துக்கு இடம் செய்வார்கள். முடிவில் காட்டைத் திருத்தி விமானப்பறப்புத் திடலுக்குச் சில கிலோ மீட்டர் இடத்தைத் தங்கள் கைகளால் செப்பம் செய்துவிட்டார்கள்.

இந்த விமான நிலையத்திலிருந்துதான் அலெக்ஸேய் பயிற்சி விமானத்தில் முதன் முதலாக வானில் கிளம்பினான். அவனது பிள்ளைப் பிராயக் கனவு முடிவில் நனவாயிற்று.

படிக்க:
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் !
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !

பிறகு அவன் இராணுவ விமானப் பயிற்சிக் கல்லூரியில் பயின்றான், தானே இளைஞர்களுக்கு அதில் பயிற்சி அளித்தான். அப்போதுதான் போர் மூண்டது. கல்லூரி நிர்வாகிகள் அச்சுறுத்தியதைப் பொருட்படுத்தாமல் அலெக்ஸேய் பயிற்சி ஆசிரியன் வேலையை விட்டுவிட்டுப் போரிடும் இராணுவத்தில் சேர்ந்தான். வாழ்க்கையில் அவனுடைய முன்னேற்றம் எல்லாம், அவனது கிளர்ச்சிகளும் மகிழ்வும், அவனது வருங்காலத் திட்டங்களும் நிகழ்கால வாழ்க்கை வெற்றியும் – எல்லாமே விமானப் பறப்புடன் இணைந்திருந்தன….

இவர்கள் என்னடாவென்றால் வில்லியம்ஸைப் பற்றிக் கதைக்கிறார்கள்!

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்

குடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்

மிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?, எப்போது சாதி உருவாக்கப்பட்டது?, ஆதியில் யார் ஆண்ட சாதி?, இராசராச சோழன் எந்தச் சாதி?, சாதியைக் கொண்டு யார் தமிழர் எனக் கண்டுபிடிக்கமுடியுமா? என்பன போன்ற பல கேள்விகள் அண்மைக் காலத்தில் பரவலாக எழுப்பப்படும் கேள்விகளாகக் காணப்படுகின்றன.

அத்தகைய கேள்விகளிற்குப் பதில் காணுமுகமாக தமிழர்களிடம் சாதியின் தோற்றம் பற்றிய ஒரு சுருக்கமான விளக்கமாகவே இக் கட்டுரை அமையும். இதனை முழுமையாகப் பார்ப்பதற்கு தமிழர்களின் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளிலான எழுத்திலுள்ள வரலாற்றினைப் பார்க்கவேண்டும்.

பொதுவாக இலக்கியங்கள் அந்ததந்த காலங்களைப் படம்பிடித்துக் காட்டும் கருவியாகச் சொல்லப்படுவதால், ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகள் இடைவெளியில் இடம்பெற்ற இரு பாடல்களைக் கொண்டு; இச் சிக்கலினை அணுகுவோம்.

முதலில் இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன்னர் சங்க காலத்தில் இடம்பெற்ற புறநூனூற்றுப் பாடல் ஒன்றினைப் பார்ப்போம். `அடலருந் துப்பின்…..’ எனத் தொடங்கும் பாடலின் (புறம்335) பின்வரும் வரிகளைப் பாருங்கள்.

‘துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான் கல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி,
ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்,
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே’

இப் பாடல் வரிகளில் புலவர் மாங்குடி கிழார் `துடியன், பாணன், பறையன், கடம்பன்’ என்ற நான்கு குடிகளே சிறந்த குடிகள் என்கின்றார். {இப் பாடலைக் கொண்டே சிலர் “முன்பு பறையர்கள் தான் ஆண்ட சாதி” என தற்போதைய தாழ்த்தும் சாதிகளிற்குப் போட்டியாக, தமது சொந்தச் சாதிப் பெருமையினைப் பேசிவருகின்றார்கள். இது ஏன் தவறு எனப் பின்னர் பார்ப்போம்}.

இப்போது அப்படியே 2000 ஆண்டுகளைக் கடந்துவந்து இன்னொரு பாடலினைப் பார்ப்போம்.  அலை ஓசை (1985) என்ற படத்தில்  “போராடடா ஒரு வாளேந்தடா, வேங்கைகளும் இனித்  தூங்கதடா…” எனத் தொடங்கும் பாடலின் பின்வரும் வரிகளைப் பாருங்கள். {இப் பாடல் அண்மையில் வெளிவந்த பரியேறும் பெருமாள் படத்திலும், ஈழத்தில் போர்க் காலங்களிலும் மீள ஒலித்திருந்த ஒரு பாடல்}

‘இன்னும் இங்கு பள்ளு பறையென
சொல்லும் மடமைகள் உள்ளதடா
நித்தம் சிறு சேரி சிறகுகள்
வேள்வி விறகென மாறுதடா’

இப்போது பள்ளு, பறை என்று சொல்வதே கீழானதும், மடமையானதும் என்ற நிலை வந்துவிட்டது. இவ்விரு பாடல் வரிகளையும் மேலோட்டமாகப் பார்த்தால், சங்ககாலத்தில் சாதியடுக்குகளில் மேலேயிருந்த ‘பறையர்’ போன்ற சாதிகள் தற்போது கீழே வந்துவிட்டது என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படலாம் (அவ்வாறு கூறியும் சிலர் அரசியல் செய்கின்றார்கள்).

உண்மை அதுவன்று, உண்மையில் சங்ககாலத்தில் சாதி என்ற சொல்லோ அல்லது அந்தக் கருத்துருவாக்கமோ தமிழர்களிடமில்லை. அவ்வாறாயின் மேற்கூறிய புறநானூற்றுப் பாடல் வரிகள் என்ன? என்ற கேள்வி எழலாம். அப் பாடல் வரியிலேயே அதற்கான பதில் உண்டு. அதுதான் ‘குடி’.  சாதி என்பது குடி-குலம் என்பதிலிருந்து வேறுபட்டது. இதனைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

படிக்க:
இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
♦ ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் !

தமிழர்களிடம் சாதியின் வரலாறு :

சாதி (Caste) என்பது பிறப்பிலடிப்படையிலான தொழிற் பாகுபாட்டினையும், அக மணமுறையினையும் கெட்டியாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்ட மக்களின் குழுக்களைக் குறிக்கும். இங்கு பிறப்பிலடிப்படையிலான தொழில், அக மணமுறை, மதப்பின்புலம் என்பன சாதியின் அடிப்படைக் கூறுகளாகும்.

இக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட முதலாவது கேள்வியான “தமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா?” என்ற கேள்விக்கான பதில் சாதி என்ற சொல்லிலேயே உண்டு, அதாவது சாதி என்ற சொல்லே தமிழல்ல. அது ஜாதி என்ற வடசொல்லின் கிரந்தம் நீக்கிய வடிவமே (ஜாதகம்- சாதகம் போன்று).

ஜா என்பது ஜனனம் (பிறத்தல்) என்பதுடன் தொடர்புடையது. ஜாதி/ சாதி என்ற சொல் தமிழல்ல என்பது மட்டுமல்ல, அதற்கு இணையான தமிழ்ச்சொல் வேறு எதுவும் கூட வழக்கில் இல்லை (குலம், குடி போன்ற தமிழ்ச்சொற்களின் பொருளினைப் பின்பு பார்ப்போம்).

இப்போது பலர் `சாதி` என்று சொல்லக் கூச்சப்பட்டு/ அவ்வாறு நடித்து சமூகம், சமுதாயம் (சமன்+ஆயம்) என்ற சொற்ளால் சாதியினைக் குறிக்கின்றார்கள். இது முற்றிலும் தவறு; ஏனெனில் அவ்விரு சொற்களும் சமன் என்ற வேர்ச்சொல்லினை அடியாகக் கொண்ட சொற்களாகையால், அவை சமனற்ற சாதி முறையினைக் குறிக்கமாட்டாது (அதே போன்று ஸமூகம் என்ற வடசொல்லும் ‘ஸங்கமித்தல் = ஒன்றுசேர்தல்’ என்பதனைக் குறிப்பதால் அதுவும் பொருத்தமற்றது). அதனால்தான் சொல்கின்றோம் சாதி என்ற சொல்லிற்கு பொருத்தமான தமிழ்ச்சொல்லே இல்லை, ஏனெனில் சாதி தமிழரின் மரபன்று. {தமிழிலுள்ள சாதி என்ற மற்றொரு சொல்லிற்கு உயர்திணையுடன் அறவே தொடர்பில்லை (சாதிமுத்து, சாதிமல்லி போன்றன)}.

சொல்லின் பொருளைப் பார்த்தோம். இப்போது இலக்கியச் சான்றுகளைப் பார்ப்போம். சாதி என்பது பிறப்பினடிப்படையிலானது என முன்னரே பார்த்தோம். இந்த நிலையில் பின்வரும் குறளினைப் பாருங்கள்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்” –  (குறள் 972)

இக்குறளானது பிறப்பினால் அனைவரும் ஒருவரே. பிறப்பில் வேறுபாடு இல்லை என்பதை உலகிற்கு உரக்க உரைத்திற்று.

அடுத்ததாக சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலுள்ள ஒரு பாடலைப் பாருங்கள்.

“யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப் பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே”

இப்பாடலானது தமிழர்களிடையே புறமணமுறை காணப்பட்டதனை ஆணித்தரமாக எடுத்துரைக்கிறது. புறமணம் உள்ள ஒரு சமூகத்தில் சாதியமைப்பு இருப்பதற்கான சாத்தியமேயில்லை.

இந்த ஒரு பாடல் மட்டுமன்றி சங்கப் பாடல்களில் பலவற்றிலும் {எ.காட்டு- குறுந்தொகை 167 ‘முளிதயிர் பிசைந்த’ , கலித்தொகை 107 ‘அன்னை நோதக்கதோ இல்லைமன் நின் நெஞ்சம்’,….} ஒரு ஆயத்திலுள்ள தலைவியினை ஆயத்திற்கு வெளியேயிருந்து வரும் ஒரு தலைவனே விரும்புகிறான், அதனால் சங்ககாலத்திலிருந்தது புறமணமுறையே என பேரா .கா.சிவத்தம்பி “சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும்” எனும் நூலில் 85-86 பக்கங்களில் நிறுவுகிறார்.

சங்க காலத்தில் புற மணமுறை காணப்பட்டதனை மேலே பார்த்தோம். அதே போன்று பிறப்பிலடிப்படையிலான தொழிலினை மேற்கொள்ளவில்லை என்பதனையும் ஐங்குறுநூறுவில் இடம்பெறும் பின்வரும் பாடல் காட்டுகின்றது.

‘முள் எயிற்றுப் பாண்மகள் இன் கெடிறு சொரிந்த
அகன் பெரு வட்டி நிறைய, மனையோள்
அரிகாற் பெரும் பயறு நிறைக்கும் ஊர!
மாண் இழை ஆயம் அறியும் நின்
பாணன் போலப் பல பொய்த்தல்லே.’ – (ஐங்குறுநூறு 47)

இப் பாடலில்  பாட்டுப்பாடும் பாணரே  மீன்பிடித்து ஊரில் கொண்டு சென்று, மீனுக்கு நிகர் பயறோ, நெல்லோ கொடுத்துப் பண்டம் மாற்றிக்கொண்ட நிகழ்வினை ஐங்குறுநூறு காட்டும்.

அதே போன்று நக்கீரப்புலவரிற்கோ புலவர் பணி, தந்தைக்கோ கணக்காயர் பணி; புலவரான சீத்தலைச் சாத்தனாரின் தந்தை கூலவாணிகம் தொழில் செய்பவர். இவ்வாறு பல சான்றுகள் சங்ககாலத்தில் பிறப்பிலடிப்படையிலான தொழில் காணப்படவில்லை என்பதனை எடுத்துக்காட்டும்.

மேற்கூறியவற்றை உற்றுப் பார்த்தால் சங்ககாலத்தில் நிலவிய குடி / குலம் என்பதற்கும் இன்றைய சாதி முறைக்குமுள்ள வேறுபாட்டினை அறிந்துகொள்ளலாம். சுருக்கமாகச் சொன்னால் பழங்கால குடிகளிடம் அகமணமுறையோ / கட்டாய பிறப்பிலடிப்படையிலான தலைமுறைத் தொழில்முறையோ இல்லை.

தமிழர்களிடம் சங்ககாலத்தில் காணப்பட்ட குலக்குழுக்கள் (tribes), குடிகள் என்பவற்றைச் சாதியுடன் போட்டுக்குழம்பத்தேவையில்லை, ஏனெனில் அவை உலகெங்கும் பழங்குடி மக்களிடையே காணப்பட்ட பிரிவுகள் போன்றனவையே. அவற்றில் அகமணம், பிறப்பிலடிப்படையிலான தொழில் கட்டாயம் என்பனவில்லை. இதுவே சாதிக்கும்-குடிக்குமுள்ள வேறுபாடாகும்.

படிக்க:
நூல் அறிமுகம் : சாதியற்ற தமிழர் – சாதியத் தமிழர்
♦ கூடிக் கரையும் காகங்களின் கூட்டமாக சாதி ஒழிப்பு மாநாடு

இலக்கியச் சான்றுகளையும் விட முதன்மையானது அகழ்வாய்வுச் சான்றுகளாகும். கீழடி அகழ்வாய்வில் முதல் நான்கு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட 12,000 -இற்கும் மேற்பட்ட பொருட்களில் எதுவுமே சாதி – மத அடையாளத்தைக் குறிக்காமலிருப்பது, நமது ‘சங்க காலத்தில் சாதி இல்லை’ என்ற கூற்றினை வலுப்படுத்துகின்றது.

சாதி என்ற சொல்லே சங்கமருவிய காலத்திலேயே முதன்முதலில் சிலப்பதிகாரத்தில் வர்ணங்களை குறித்தே வருகின்றது.

“நால்வகை சாதியும், நலம்பெற நோக்கி “-(வேனில் காதை41)

அடுத்ததாக மணிமேகலையில் இடம்பெறுகின்றது.

“நாமம் சாதி..கிரியையின் அறிவது ஆகும்.”- (சமயக்கணக்கர் 23).

சங்கமருவிய காலத்தில் கூட சாதி என்ற சொல் வர்ணங்களை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களிடம் வந்து சேர்ந்துவிட்டபோதும், சாதி என்ற கோட்பாடானது, இன்றைய பொருளில், அன்றும் உருவாகவில்லை.

தமிழர்களிடம் எங்கிருந்து சாதி வந்தது ?

பார்ப்பனர்களின் தமிழக வருகையுடனேயை சங்கமருவிய காலத்தில் சாதி வருகின்றது. பார்ப்பனர்களிடமும் முதலில் வர்ணங்களே தோன்றுகின்றன. இதனை ரிக் வேதம் புருச சூத்திரம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

வர்ணங்கள் எவ்வாறு சாதியாக மாறுகின்றது என்பதனை அம்பேத்கார் சிறப்பாக Revolution and Counter-Revolution in Ancient India, Annihilation of Caste எனும் நூல்களில் விளக்கியிருப்பார்.

வர்ணங்கள் மேலும் பிரிவுகளாகப் பிளவுற்ற பின் ஜாதி என்ற சொல் முதன்முதலில் பகவத்கீதையில் (1: 42) உத்ஸாதயந்தே ஜாதி தர்மா சாஸ்வத” என வருகின்றது. இவ்வாறு வைதீக மதத்தினூடாகவே சாதி தமிழரிடையே புகுத்தப்பட்டது.

இப்போதெல்லாம் மதவாதிகளில் சிலர் பகவத்கீதை கூறும் வர்ணங்கள் ஜாதிகள் என்பன பிறப்பினடிப்படையிலானதல்ல, அவை குணத்தினடிப்படையிலானவை எனப் புதிய விளக்கம் கொடுக்கிறார்கள். இதற்கு இவர்கள் காட்டும் சுலோகம் “குண-கர்ம விபாசக” (4-13) என்பதாகும். இங்குள்ள குண கர்ம என்பது சாதிக்கு விதித்த வேலையின் குணம் என்பதே. இதற்கு உரை எழுதிய ஆதிசங்கரரும் “ பிறப்பால்” என்றே எழுதியுள்ளார்.

கீதையின் 18 இயலின் 44-47 வது பாடல்களில் நாலு வருணங்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அவற்றிற்கான தொழில்களும் குறிப்பிடப்படுகிறது. கீதையின்படி ஒரு வர்ணத்தை சேர்ந்த ஒருவர் வேறு ஒரு தொழினை சிறப்பாகச் செய்வார் எனினும் தனது குலத்தொழிலினைவிட வேறு தொழில் செய்யக்கூடாது (ஸ்ரோயான் ஸ்வ-தர்மா விகுண. பர தர்மாத் ஸ்வ-அனுஸ்திதா).

மேலும் இன்னொரு சுலோகமானது (வர்ண சங்கரோ நரகாயைவ, பித்ரு லுப்த பிண்டோதம் க்ரியக) கலப்புமணம் செய்தால் பிண்டம் கூட உங்களிற்கு வந்து சேராது, நரகமே செல்வீர்கள் எனக் கூறுகின்றது.

இவற்றின் மூலம் கீதை சொல்வது பிறப்பினடிப்படையிலான, அகமணமுறையினை வலியுறுத்தும் சாதியமைப்பினையே என்பது தெளிவாகின்றது. இத்தகைய வைதீக (இன்றைய இந்து) சிந்தனைகளையே சாதிகளாக தமிழர்களிடம் கொண்டுவரப்பட்டன. இதற்கு தமிழர்களிடம் ஏற்கனவேயிருந்த குடிப் பெயர்களையே, தமது வர்ணக்கோட்பாட்டிற்கமைய சாதிகளாக பார்ப்பனியம் மாற்றிவிட்டது.

குடிகள் சாதிகளாக்கப்பட்ட வரலாறு :

தமிழர்களிடம் தொழில்களை அடிப்படையாகக்கொண்ட குடிகள் இருந்தது போன்றே, திணைகளை அடிப்படையாகக் கொண்ட குடிகளுமிருந்தன. மனிதர்களின் ஆதித்தொழிலான வேட்டையினைச் செய்தவர்கள் வேடர்கள். அந்தவகையில் பார்த்தால் நமது முன்னோர்கள் யாவருமே வேடர்கள்.

முல்லையில் மேய்ச்சல் வாழ்வில்  ஆடு மாடுகளை பார்த்துக் கொண்டிருந்ததால் நமக்குப் பெயர் கோனார். குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்தவர்கள் குறவர்கள்.  நமது முன்னோர்கள் அத்தனை பெரும் குறவர்களாக இருந்தவர்கள் தான்.  காட்டிற்கும் மலைக்கும் இடையிலே  வாழ்கின்றவர்களிற்கு  இடையர்கள் என்று பெயர்.  மருத நிலத்தில் வேளாண்மை செய்யும் போது அங்கு மேட்டுப் பாங்கான நிலத்தில் குடில்களை அமைத்துக்கொண்டு, பள்ளத்தில் இறங்கி வேலை செய்தோர் பள்ளர்கள். பழந்தமிழ் இலக்கியங்களில் பள்ளு என்றால் உழவு என்ற பொருள் உண்டு. பின்னரே உழவர்கள் வேளாளர்கள் எனப்பட்டனர். பறையோர் என்பது அரசரின் தூதுவர்களையே குறிக்கும்.

இன்றும் ஈழத்தில் பறைதல் என்றால் பேசுதல் என்ற பொருள் உண்டு. அரசரின் ஆணைகளை மக்களிடம் எடுத்துச் செல்லல், தூது செல்லல், போரில் முன்னின்று பறை முழங்கிப் போரினைத் தொடக்கி வைத்தல் எனப் பல சிறப்பான பணிகளை ஆற்றுவோரே ‘பறையர்’ எனப்பட்டார்கள். இத்தகைய சிறப்பான பணிகளை மேற்கொண்டமையாலேயே மேற்கூறிய புறநானூற்றுப் பாடலில் (புறம்335) ‘பறையர் சிறந்த குடி’ எனப் பாடப்படுகின்றது. பறைக்கு பலியிடப்படுவதன் மூலம் தெய்வத்திற்கு நிகராகப் பறை கருதப்பட்டதனை சங்ககால பத்திற்பத்தில் இடம்பெறும் பின்வரும் பாடலில் காணலாம்.

“கடம்பு அறுத்து இயற்றிய வலம்படு வியன்பனை
ஆடுநர் பெயர்ந்து வந்து அரும்பலி தூஉய்
கடிப்புக் கண் உறூஉம் தொடித்தோள் இயவர்”- (பதி. 17: 6-7)

சங்கமருவிய காலத்தில் கூட சிலப்பதிகாரத்தில் பறையின் பெருமை பேசப்படுகின்றது.

“பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க் கூத்தன் சாக்கையன்” – நடுகல் காதை வரி 76-77 {பொருள்- சிலம்பில் இக்கூத்தை ஆடியவன் பறையூரைச் சேர்ந்தவன் என்றும், அவ்வூர் நான்மறையோரைக் கொண்டதென்றும் சிலப்பதிகாரம் செப்புகிறது}.

மேற்கூறியவை எல்லாம் குடிகளே தவிர, சாதிகளன்று.

இத்தகைய தமிழ்க் குடிகளினையே, பார்ப்பனியமானது தனது நான்கு வர்ணக் கோட்பாட்டினை அடிப்படையாகக்கொண்டு சாதிகளாக்கியது. இத்தகைய மாற்றம் ஒரே நாளில் இடம்பெறவில்லை. மாறாக பல நூற்றாண்டுகள் கடந்தே இப் படிமுறை மாற்றம் ஏற்பட்டது.

படிக்க:
சோழர் கால சமூகமும் இராஜராஜ சோழனும் !
♦ பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?

இராச ராச சோழனின் சாதி :

இன்று பல்வேறு சாதிக்காரர்களும் இராச ராச சோழன் தமது சாதி என உரிமை கொண்டாடுகின்றார்கள். உண்மையில் அக் காலத்தில் கூட சாதி முறையானது இறுக்கமடைந்து இன்றைய நிலையினை அடையவில்லை.

சோழர் காலத்தில் சங்ககால நிலமை மாற்றமடைந்து பல ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுவிட்டபோதும், சாதி நிலை இன்று போல மாற்றமடைந்திருக்கவில்லை  என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக சேரிகள் காணப்படுகின்றன. ஒரு வகையில் தொழிலினை அடிப்படையாகக் கொண்ட குலங்கள் மட்டுமே ஒரிடத்தில் சேர்ந்து இருப்பதனை சேரிகள் காட்டுகின்றன (இது சாதி முறையில் ஒரு கட்ட வளர்ச்சிதான்).

அதே நேரம் பறைச்சேரி புறம்பாகவும், தீண்டத்தகாதோர் சேரி புறம்பாகவும் குறிப்பிடப்படுவதால் ‘யார் அந்த தீண்டத்தகாதோர்?’ என்ற கேள்வி ஏற்படுகின்றது. அங்கிருந்த தீண்டத்தகாதோர் இன்னமும் பொது  நீரோட்டத்தில் சேர்ந்திராத வேடுவர்களே என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இராச ராச சோழன் காலத்திலிருந்து காலப்பொறியில் (Time machine)  ஏறி 1,500 ஆண்டுகளிற்கு முன் சென்றால் எல்லோருடைய தொழிலாகவுமிருந்த வேட்டை இன்று தீண்டத்தகாத தொழிலாகிவிட்டது. இப்போது காலப்பொறியில் ஏறி  சோழன் காலத்திலிருந்து இன்னமும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் பின்னே வந்து, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு வந்தால்; இப்போது வேட்டை என்பது பிரபுக்கள், செல்வந்தர்களின் பொழுதுபோக்கும் மரியாதைக்குரிய பகுதிநேரத் தொழில். இவ்வளவுதான் தீண்டாமை.

மேற்கூறியவாறு சாதி அமைப்பு தனது முழு வடிவத்தினைப் பெறாமையினாலேயே  “இராச ராச சோழன் காலத்தில் சாதிகளே இல்லை” என்று புலவர் செந்தலை ந.கவுதமன் கூறுவார். உண்மை அவ்வாறிருக்க இராசராச சோழன் தேவர் சாதியினைச் சேர்ந்தவர் என கல்வெட்டு அறிஞர்(?) நாகசாமி கூறுவது வழமையான அவரது நஞ்சுக்கருத்தே.

உண்மையில் முத்துராமலிங்கத்தேவர் காலத்திற்கு பின்னரே தேவர் என்ற சாதியே தோற்றம் பெறுகின்றது. முக்குலத்தோர் என்பதுகூட ஏற்கனவே கூறிய மூன்று குடிகளை (பின்நாளில் சாதியாக்கப்பட்ட) ஒன்றாக்கி பின்நாட்களில் ஏற்படுத்திய ஒன்றே. சாதியமைப்பானது ஒரளவிற்கு முழுவளர்ச்சியைப் பெற்றது ஏறத்தாழ ஒரு 800 ஆண்டுகளிற்கு முன்னர்தான்.

‘யார் தமிழன்’ என சாதி அடையாளம் காட்டுமா?

தமிழ்த்தேசியம் பேசுவோரில் சிலர் இப்போது தமிழன் யார் எனக் கண்டுபிடிக்கும் ஒரு கருவியாக சாதியினைப் பயன்படுத்த முனையும் போக்கு அண்மைக் காலமாகக் காணப்படுகின்றது.

இது முற்றிலும் நகைப்பிற்கு இடமானது; ஏனெனில் சாதியே தமிழரிற்கு ஒரு வந்தேறிப் பண்பாடாகக் காணப்பட, எவ்வாறு சாதியைக் கொண்டு தமிழரைக் கண்டுபிடிப்பது? வேண்டுமென்றால் ஒன்று உறுதியாகக் கூறலாம்;  அதாவது யாரெல்லாம் சாதி பார்க்கின்றார்களோ, அவர்கள் எல்லாம் தூய தமிழர்கள் (ஏன் மனிதர்களே) அல்ல {இதற்கான சான்றுகள் நிறையவே மேலே ஏற்கனவே கூறப்பட்டுள்ளன}.

சாதி ஒழிப்பு :

சாதி அறம் சார்ந்த ஒன்றல்ல, மேலும் அது தமிழர்களின் மரபுமன்று. எனவே சாதி ஒழிக்கப்படவேண்டிய ஒன்றாகும். சாதி முறையினை இன்று தாங்கிப் பிடித்திருக்கும் நான்கு தூண்களாக சொந்தச் சாதிப்பற்று, மத நம்பிக்கை, பிறப்பிலடிப்படையிலான தொழில், அக மணமுறை என்பன காணப்படுகின்றன.

இதில் முதலாவதாக தாழ்த்தும் சாதியினரோ அல்லது தாழ்த்தப்படும் சாதியினரோ தமது சாதிப் பற்றினை விட்டொழிக்கவேண்டும் (அதேவேளை தாழ்த்தப்பட்டோர் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றிணைவது தவறன்று, அதேவேளை தாமும் ஒரு காலத்தில் ஆண்டசாதி எனக் கூறுவது தவறானது).

இரண்டாவதாக சாதிமுறையினை வலியுறுத்தும் எந்த மதக்கோட்பாடும் கேள்விக்கு உள்ளாக்கப்படவேண்டும்.

மூன்றவதாக, பிறப்பிலடிப்படையிலான தொழில் செய்வதனை முடியுமானவரைத் தவிர்த்து, எத் தொழில் விருப்பமானதோ/ எதில் திறமையுள்ளதோ, அதனையே செய்ய வேண்டும்.

இறுதியாக, புறமணமுறை ஊக்குவிக்கப்படவேண்டும். அதாவது சொந்தச் சாதி பார்த்து திருமணங்கள் செய்வதனைத் தவிர்க்கவேண்டும். இப் புறமணமுறையானது ஈழப்போரின் போது, விடுதலைப் புலிப் போராளிகளிடையே பெருமளவிற்கு கடைப்பிடிக்கப்பட்டு, அப்போது சாதியானது போராளிகள் மட்டத்திலாவது பெருமளவிற்கு ஒழிக்கப்பட்டிருந்தது. எனவே புறமணமுறையே சாதி முறைக்கான சாவு மணியாக அமையும்.

வி.இ.  குகநாதன்

துணை நின்றவை

  1. `சங்க இலக்கியம் கவிதையும் கருத்தும்` – பேரா .கா.சிவத்தம்பி
  2. `உலகத்தமிழாய்வு மாநாடு 2019 கட்டுரை` – புலவர் செந்தலை ந.கவுதமன்
  3. `அறியப்படாத தமிழ்மொழி` -முனைவர் கண்ணதாசன் இரவிசங்கர்
  4. `Annihilation of Caste`- B. R. Ambedkar
  5. `பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்றுப் புரிதலை நோக்கி`- பேரா .கா.சிவத்தம்பி.

திருச்சி : கஞ்சா வியாபாரிகளுடன் கை கோர்த்த காஜா பேட்டை போலீசு !

லக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஆளும் எடப்பாடி அரசு, அமைச்சர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை 26.06.2019 அன்று நடத்தினர்.

தமிழகத்தில் டாஸ்மாக் பார் நடத்தி இளைஞர்களை சீரழித்து, பெண்களின் வாழ்க்கை நிர்மூலமாக்கி  சமூகத்தையும், பண்பாட்டையும் சிதைத்து “சாராயம் வித்த காசில் சர்கார் நடத்தும் ”  இந்த எடப்பாடி அரசுக்கு போதை ஒழிப்பு பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது. சந்துக்கு சந்து டாஸ்மாக்கும், குட்கா, கஞ்சா போதை பொருட்கள் விற்பனை போலீசு கூட்டுடன் அமோகமாக நடக்கிற சமூக விரோத கும்பலின் குற்றம் பெருகி மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்.

அழுகி நாறும் அரசு கட்டமைப்பு ! மக்களை ஆளும் தகுதியைஇழந்து விட்டதை மீண்டும் நிரூபிக்கிறது திருச்சி  சம்பவம்.

கஞ்சா பார்ட்டியுடன் பாலக்கரை போலீசு !

திருச்சி காஜாபேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட இளைஞர்கள், மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் முருகானந்தம் மீதும் பொய் வழக்கை பொய் வழக்கு பதிந்துள்ளது பாலக்கரை போலீசு!

கஞ்சா விற்பனை கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் பாலக்கரை போலீசார் மற்றும் ஆய்வாளரை கண்டித்து 26.06.2019 காலை 11 மணியளவில் மாநகர காவல் ஆணையர் அவர்களை காஜாபேட்டை இளைஞர்கள் – பெண்களுடன் இணைந்து மாநகர ஆணையாளர் திரு. அமல்ராஜ் அவர்களை சந்தித்து நுற்றுக்கணக்கான மக்களின் கையொப்பங்களுடன் மனு அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் காஜாபேட்டையில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், கஞ்சா விற்பனையை தடுக்க கோரியும் எமது மக்கள் அதிகாரம் அமைப்பு அண்மையில் பகுதி  மக்களுடன் இணைந்து கஞ்சா போதை  எதிர்ப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டது.

இந்நிலையில் கஞ்சா விற்ற குற்றச்சாட்டில் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் கொளஞ்சி என்ற பெண்ணின் மகள் மலர் கொடி உள்ளிட்ட குடும்பத்தினர் கஞ்சா போதைக்கு எதிராக போராடிய இளைஞர்கள் மீது கோபமுற்றனர். மேலும் அதே பகுதியில் வசிக்கும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் முருகானந்தம் குடும்பத்தினரை அவதூறு செய்ததுடன் “நாங்க காலம் காலமாக கஞ்சா விற்கிறோம் – இனியும் விற்போம்… எவன்டா புகார் கொடுத்தது, போலீசே எங்களுக்கு பக்கபலமா தான் உள்ளது… ” என மிரட்டியுள்ளனர்.

அத்துடன் அப்பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரை கட்டையால் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். இப்படி ஒரு அட்டூழியத்தை செய்து விட்டு, தங்களை அடித்து விட்டதாக மருத்துவமனையில் படுத்து கொண்டு; தன்னை இளைஞர்கள் தாக்கியதாகவும்; (மலர் கொடியை) மானபங்கம் செய்ததாக பொய் புகாரும் தந்துள்ளனர். ‘மாதாந்திர மாமூல்’ மூலம் போலீசுடன் உள்ள நெருக்கத்தை பயன்படுத்தி, தட்டி கேட்ட வழக்கறிஞர் முருகானந்தம் மற்றும் இளைஞர்கள் மீதே பொய் வழக்கும் பதிவு செய்துள்ளது கஞ்சா கும்பல்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கஞ்சா வியாபாரி குடும்பம் இப்படி பயன்படுத்திக் கொண்டது என்பதை விட, இப்பகுதியில் கடந்த காலத்தில் காவல்துறை நடத்திய கட்டுப்பாடற்ற காட்டு தர்பாருக்கு தடையாக செயல்பட்ட வழக்கறிஞர் முருகானந்தத்தை பழி தீர்க்க இந்த சம்பவத்தை பாலக்கரை ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் பயன்படுத்திக் கொண்டார்.

கடந்த 2018 -ல் மனித உரிமை மீறல், சட்ட விரோத கைது நடவடிக்கையை கண்டித்தும் இதே ஆய்வாளர், அடாவடியாக நடந்து கொண்டதை கண்டித்தும் தோழர் முருகானந்தம் அளித்த தனிப்புகார் வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் (CC-441/2018)  நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் பெண் கஞ்சா வியாபாரியிடம்; “மக்கள் அதிகாரம் அமைப்பிற்காக அவ்வப்போது தோழர் முருகானந்தம் மிரட்டி பணம் வசூலிப் பார் என்றும், இரண்டு நாட்களுக்கு முன் அவ்வாறு பணம் கேட்டபோது தராததால், தண்ணியடித்து விட்டு இளைஞர்களை சேர்த்து கொண்டு தன்னை வம்பிழுத்து தாக்கியதாகவும், ‘பெண்னை இழிவு செய்து துன்புறுத்தும்’ வகையில் நடந்து கொண்டதாகவும், கீழ்த்தரமாக புகார் தரச் செய்து எந்த விசாரணையும் செய்யாமல் வழக்கு பதிவு செய்தார் பாலக்கரை ஆய்வாளர் ஆரோக்கியதாஸ்.

எமது அமைப்பு குறித்து இதுவரை எந்த எதிரியும் சொல்ல முன்வராத கேவலமான அவதூறை எழுதி அதை செய்தித்தாள் மூலம் பரப்பவும் செய்தார். முருகானந்தத்தை கைது செய்யும் நோக்கில் இரவில் வீட்டிற்கு தேடிச் சென்றதுடன் அவர் இல்லாததால் வேறு இரு இளைஞர்களை வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி கைது செய்து சிறையிலடைத்துள்ளார் ஆரோக்கியதாஸ்.

படிக்க:
இந்தியா : போதை உலகின் வளரும் சந்தை !
♦ ஹைட்ரோகார்பனுக்கு எதிராக பேசினாலே சிறை ! குட்கா புகழ் எஸ்.பி ஜெயக்குமாரின் அடாவடி !

உண்மையில், கஞ்சாவை எதிர்த்ததால் தாக்குதலுக்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கார்த்திக்கிடம் வாக்குமூலம் பெற்ற உதவி ஆய்வாளர் சட்டநாதன், அவர் கூறியதையெல்லாம் எழுதியதாக படித்துக்காட்டி விட்டு, “ஸ்டேசனில் சென்று தெளிவாக எழுதிக் கொள்வதாக”க்கூறி யோக்கியரைப் போல பேசி, வெற்றுத்தாளில் கையொப்பம் வாங்கியுள்ளார். ஆனால், ஆய்வாளர் ஆரோக்கியதாசின் அறிவுரைப்படி “தான் தண்ணியடித்துவிட்டு வந்து வம்பிழுத்து தாக்கியதாகவும் மானபங்கம் செய்ததாகவும்” கார்த்திக் தானே ஒப்புதல்வாக்கு மூலம் தந்ததாக எழுதி வழக்குப் பதிந்துள்ளார். கஞ்சா கும்பலிடம் வாங்கிய காசுக்கு மேலேயே வாலைக் குழைத்துள்ளது போலிசு. சட்டத்துக்குப்புறம்பாக செயல்படும் இவருக்கு ‘சட்டநாதன்’ என்று பெயர் வேறு!

சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை இப்படிகேடான முறையில் பயன்படுத்தி கற்றறிந்த வழக்கறிஞரையே பாடாய்ப்படுத்த முனையும் ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் – சட்டநாதன் கும்பலிடம் சாதாரண மக்கள் என்ன பாடுபடுவார்கள் என்பதை எண்ணிப்பார்த்தால் மனம் பதைபதைக்கிறது.

கஞ்சா விற்பனையைத் தடுக்கவேண்டிய ‘காவல் ஆய்வாளரே’ கஞ்சா விற்பனைக் கெதிராக போராடுவோரை ஒடுக்கி கஞ்சா விற்பனையை ஊக்கப்படுத்துவதை வழக்கறிஞர்களும், ஜனநாயகஉள்ளம்கொண்ட அனைத்துப்பிரிவுமக்களும் கண்டிக்க வேண்டும். போலிசின் அராஜக செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மாணவர் – இளைஞர் சமுதாயம் கஞ்சாவிற்கு அடிமையாகி எண்ணற்ற குடும்பங்களும், பெண்களும் பாதிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பாலக்கரை ஆய்வாளர் ஆரோக்கியதாசே !

  • பெண் கஞ்சாவியாபாரியைத் தூண்டிவிட்டு பெண்களுக்கெதிரான வன்கொடுமை (4 of women harassment act) பிரிவில் வழக்குப் போடுவது பேடித்தனம்!
  • கஞ்சா விற்பனையைத் தடுத்து உன்வீரத்தைக் காட்டு!

தமிழக அரசே ! காவல்துறையே !!

  • அதிகாரத் திமிரில் கஞ்சா பார்ட்டிக்கு ஆதரவாக வழக்கறிஞரைப் பழிவாங்கும் ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடு! பதவியைவிட்டுநீக்கு !
  • டாஸ்மாக், குட்கா, கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதை பொருட்களையும் தடைசெய் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி, தொடர்புக்கு : 94454 75157.

இந்திய நாடு, அடி(மை) மாடு !

இந்திய நாடு, அடி(மை) மாடு !

ராமனை விடவும் பாரதிய ஜனதாவின் வெற்றிக்குப் பெரிதும் பயன்பட்ட மாடுதான் சங்கப் பரிவாரத்தின் பக்திக்கு உரியது என்றால், அது மிகையல்ல. சிறுபான்மை மக்களை உரிமைகள் அற்ற அடிமைகளாக அச்சுறுத்தி வைப்பதற்கு மாட்டின் புனிதம் குறித்த இந்துத்துவக் கோட்பாடுதான் அவர்களுக்குப் பெரிதும் உதவியது. அதே கோட்பாடு இந்நாட்டை மட்டுமின்றி, பெரும்பான்மை இந்துக்களாகிய தங்களையும் அடிமைகளாக நடத்துவதற்கு பாசிஸ்டுகளுக்குப் பயன்படும் என்பதை மோடிக்கு வாக்களித்த மக்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

தேர்தலுக்குச் சில மாதங்கள் முன் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் வீழ்ச்சியடைந்திருந்த மோடிக்கான ஆதரவு, “புல்வாமா தாக்குதல், பாலகோட் எதிர்த் தாக்குதல்” என்ற மர்ம நாடகங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவில் மாறியது.

தேசம், மதம், கட்சி ஆகிய அனைத்தின் உருவமாகவும், தேசத்தின் ஒரே பாதுகாவலனாகவும் மோடியை உருப்பெருக்கிக் காட்டின ஊடகங்கள். கழிவறை முதல் காப்பீடு வரையிலான அனைத்துக்கும் மோடி என்ற தனிமனிதனின் கருணையை நாடே எதிர்பார்த்து நிற்பதைப் போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது. இந்தப் பிரச்சாரத் தாக்குதலுக்குக் கணிசமான மக்கள் பலியாகினர்.

இவ்வாறு பலியானதை வெறும் ஏமாளித்தனம் என்று மட்டுமே மதிப்பிட முடியாது. ரோகித் வெமுலாவின் தற்கொலை, பசுக் குண்டர்களும், சனாதன் சன்ஸ்தாவும் நடத்திய படுகொலைகள், உனா முதல் பீமா கோரேகான் வரையிலான தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் ஆகிய அனைத்தையும் அங்கீகரித்துச் செல்லும் ஒரு புதிய “சகஜ நிலை” நாடெங்கும் ஏற்பட்டிருக்கிறது.

படிக்க :
♦ பாசிசத்தின் ஏழு அறிகுறிகள் : பாஜகவை தெறிக்கவிட்ட திரிணாமூல் எம்.பி. !
♦ ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !

ஒருவேளை இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெற்றிருந்தாலும், கடந்த ஐந்தாண்டுகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த “சகஜ நிலை”யை அவர்களால் மாற்றியிருக்க முடியாது. அப்படிப்பட்ட முயற்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபடவுமில்லை. மாறாக, இந்த “சகஜ நிலை”யிடம் அவர்கள் சரணடைந்து விட்டார்கள். போர் தொடங்குவதற்கு முன்னரே தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டார்கள்.

மோடியின் வெற்றி தங்களது வாழ்க்கையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்துவிடும் என்ற மயக்கம் ஏதும் மக்களிடம் இல்லை. நிலவுகின்ற அமைப்பின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அதிருப்திக்கும், மாற்று குறித்த அவநம்பிக்கைக்கும் நடுவில் இருந்த இடைவெளி, ஒரு பாசிஸ்டின் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கிறது.

தமது வர்க்க நலன் குறித்த மக்களின் சிந்தனையைப் பின்னுக்குத் தள்ளி, கற்பனையான எதிரியைக் காட்டி, தேசவெறியும் மதவெறியும் ஊட்டிப் பெறப்பட்டிருக்கும் வெற்றி இது. இவ்வெற்றி அளித்திருக்கும் அதிகாரத்தையும் குண்டர்படைகளின் வலிமையையும் பயன்படுத்தி எதிர்ப்புக் குரல்கள் அனைத்தையும் பாசிசக் கும்பல் ஒடுக்கும். அந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தினூடாகத்தான் மக்களின் சிந்தனை மீது கவிந்திருக்கும் காவி இருளை நாம் அகற்ற முடியும்.

இது நமக்கு மட்டுமே நேர்ந்திருக்கும் துயரமல்ல. உலக முதலாளித்துவக் கட்டமைவின் நெருக்கடி பல்வேறு நாடுகளிலும் பாசிஸ்டுகளை அதிகாரத்தில் அமர்த்தியிருப்பது போல, நமது நாட்டில் காவி பாசிஸ்டுகளை ஆட்சியிலமர்த்தியிருக்கிறது. பாசிசம் பெற்றிருக்கும் இந்த வெற்றி என்பது முதலாளித்துவக் கட்டமைவு சந்தித்து வரும் தோல்வியின் ஒரு விளைவு. எனவே, காரணத்தை மறந்து விட்டு விளைவை மட்டும் எதிர்ப்பது நிழற்சண்டையாகவே அமையும்.

நிஜமான சண்டைகள் அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த அரசியல் கட்டமைவுக்கு உள்ளே தீர்வு கண்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இப்போராட்டங்களை மக்கள் நடத்துகிறார்கள்.

இக்கட்டமைப்புக்குள் தீர்வு இல்லை என்ற உண்மையை குண்டாந்தடியின் மூலம் அவர்களுக்கு இந்துத்துவ பாசிசக் கும்பல் புரியவைக்கும். அந்தப் புரிதலின் ஊடாகத்தான் இந்துத்துவக் கருத்தியலின் பிடியிலிருந்தும் பாசிசக் கும்பலின் பிடியிலிருந்தும் நாட்டையும் மக்களையும் விடுவிக்க முடியும்.

இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

அரசியல் கட்சிகளை கருவறுத்த இத்தாலி பாசிஸ்ட் கட்சி

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 16

டோக்ளியாட்டி

பாசிஸ்டுக் கட்சி அதிகார பீடமேறுவதற்கு முன்னர் இந்த இயல்பைத்தான் பெற்றிருந்தது: குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதர பூர்ஷுவாவின் ஆரம்பகால அடையாள முத்திரையை இன்னமும் கொண்டிருந்தது. புரட்சிகர போக்குகளுடைய பிரச்சினைகளை இன்னமும் எழுப்பிக் கொண்டிருந்தது. பாஸ்ஸி டி கம்பாட்டிமென்டோ வேலைத் திட்டத்தை இன்னமும் முற்றிலும் கைவிடாது இருந்தது. பாசிஸ்டுக் கட்சியானது பூர்ஷுவாக்களின் தாக்குதல் படையாக அப்போதுதான் உருவாக ஆரம்பித்திருந்தது.

பாசிஸ்டுக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும் இரண்டு குறிக்கோள்களை வரித்துக் கொண்டது. முதல் குறிக்கோளை உடனடியாக அல்லாமல் படிப்படியாகத்தான் செயல்படுத்திற்று. இதர எல்லா இத்தாலியப் பூர்ஷுவாக் கட்சிகளையும், பொதுவாக அனைத்துக் கட்சிகளையும் ஒழித்துக் கட்டுவதே இந்த முதல் குறிக்கோள். அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனேயே இந்தக் குறிக்கோளை அது மேற்கொள்ளவில்லை; பாசிச சர்வாதிகாரம் வளர்ச்சியடைந்து வந்தபோதுதான், அப்போது எழுந்த அரசியல், பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிப்பதற்கு முயற்சி செய்துவந்த போதுதான் இந்தக் குறிக்கோள் உருவெடுத்தது.

பாஸ்ஸி டி கம்பாட்டிமென்டோ வேலைத் திட்டம்.

இத்தாலிய பூர்ஷுவாக்களின் இதர கட்சிகளுடன் நேசஉறவு ஏற்படுத்திக் கொள்ளும் முயற்சியில் பாசிஸ்டுக் கட்சி ஈடுபட ஆரம்பித்தது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 1921-ல் பூர்ஷுவாக்களது இதர பல்வேறு அரசியல் கட்சிகளின் நண்பனாக வாக்காளர்களின் முன்னால் தன்னைக் காட்டிக் கொண்டது. அதிகாரத்துக்கு வந்த பின்னர் கூட, அதிலும் 1924-ல் பாசிஸ்டுக் கட்டுப்பாட்டின் கீழ் நடைபெற்ற தேர்தல்களில் பாசிஸ்டுக் கட்சி தான் மட்டும் தன்னந் தனியாகப் போட்டியிடவில்லை; பாசிஸ்டு சக்திகளுடன் மட்டுமின்றி, பழைய மிதவாதிகள் மற்றும் லிபரல்கள் முதல் கியோலிட்டின்கள் வரை பல்வேறு பழைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன் சேர்ந்தே அது போட்டியிட்டது.

நான் கூறுவது தவறாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றால் கியோலிட்டியே கூட முசோலினியின் வேட்பாளர்களில் ஒருவராக இருந்தார். பாசிஸ்டுக் கட்சி மேற்கொண்ட நிலையை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். 1921 இல் ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தல்களில் போட்டியிட்டபோதிலும் கூட முப்பது இடங்களை மட்டுமே பெற முடிந்தது. 1924 ஆம் ஆண்டிலோ மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அது வென்றது. மொத்த வாக்குகளில் ஐம்பது சதவிகித வாக்குகளைப் பெற்ற கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று புதிய தேர்தல் சட்டத்தின் மூலமும், இத்தாலிய பூர்ஷுவாக்களின் பழைய லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதன் மூலமும் இது சாதிக்கப்பட்டது. இத்தாலிய பூர்ஷுவாக்களின் இந்த அரசியல் அமைப்புகளுடனான உறவு சம்பந்தமாக பழைய கியோலிட்டியன் முறை இந்தக் காலகட்டத்தில் கைக்கொள்ளப்பட்டது.

படிக்க:
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?
அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

எனினும் இதர அரசியல் கட்சிகளை ஒழித்துக்கட்டும் பிரச்சினை 1923, 24, 25-ம் ஆண்டுகளில் திடீரென எழுந்தது. பாசிசத்தின் ஆரம்பகால வெகுஜன அடித்தளத்தை ஒத்த வெகுஜன அடித்தளங்களைக் கொண்ட கட்சிகள் மீது பாசிஸ்டுக் கட்சி முதலில் தாக்குதல் தொடுத்தது. சீர்திருத்தக் கட்சியைத் தாக்குவதற்கு முன்னர் பாப்புலர் கட்சி மீதும் கம்யூனிஸ்டுக் கட்சியைத் தாக்குவதற்கு முன்னர் சீர்திருத்தக் கட்சி மீதும் அடக்குமுறைக் கணைகளை அது ஏவிற்று. இது ஏன்? அந்தக் காலகட்டத்தில் நம்மை விட பாப்புலர் மற்றும் சீர்திருத்தக் கட்சிகளுக்கு எதிராகத்தான் மிக மூர்க்கமாகப் போராட்டம் நடைபெற்று வந்தது.

ஏனென்றால் இந்தக் கட்சிகளின் வெகுஜன அடித்தளங்கள் பாசிசத்தின் தொடக்கக்கால வெகுஜன அடித்தளங்களை ஒத்திருந்தன; இக்கட்சிகள் குட்டி பூர்ஷுவா மற்றும் விவசாயப் பகுதியினரிடையே பரவியிருந்தன. ஒரு வெகுஜனக் கட்சியாவதற்கு பாசிசம் தனது அணிகளுக்குள் சேர்த்துக் கொள்ள விரும்பிய அதே வெகுஜனப் பகுதியினரிடையே இக்கட்சிகள் செல்வாக்குப் பெற்றிருந்தன. எனவே, இந்த வெகுஜனப் பகுதியினரைத் தம்வசம் நீடித்து வைப்பதற்கு அல்லது அவர்களைத் தம் பக்கம் ஈர்ப்பதற்குக் கடும் போட்டி ஏற்பட்டது. இது மிக உக்கிரமான அரசியல் போராட்டமாக உருவெடுத்தது. இதர கட்சிகளை அழித்தொழித்துக் குழி தோண்டிப் புதைக்கும் திட்டம் உறுதியாக விரிவுபடுத்தப்பட்டது. முடிவில் பழைய கட்சிகளை எல்லாம் தடை செய்யும் சட்டங்கள் 1925-26 இல் இயற்றப்பட்டன. இவை யாவற்றுக்கும் உச்சகட்டமாக, யுத்தத்திற்கு முன்னர் இத்தாலிய பூர்ஷுவாக்களின் ஒரே அரசியல் அமைப்பாக இருந்த கூட்டுரிமைக் கழகத்தின் மீதும் (ஃப்ரிமசோன்றி) தாக்குதல் தொடுப்பதற்கான அபாய அறிகுறிகளாக இந்தச் சட்டங்கள் காட்சியளிக்கின்றன.

கூட்டுரிமைக் கழகத்தின் மீது சற்றுத் தாமதமாகத்தான் பாசிசம் தனது விஷப் பார்வையைத் திருப்பிற்று. இது 1925 இல் நடைபெற்றது. ஆனால் புயல் வேகத்தில் காரியங்கள் நடைபெற்று இறுதி முடிவு எய்தப் பெற்றது. கூட்டுரிமைக் கழகம் இருந்து வருவதைப் பாசிசத்தால் பொறுத்துக் கொள்ள முடியாது. இத்தாலிய பூர்ஷுவாக்களின் ஒரே கட்சியாக இருக்க பாசிஸ்டுக் கட்சி விரும்பியதால் கூட்டுரிமைக் கழகம் நீடிப்பதை அது அனுமதிக்க முடியாது. பூர்ஷுவாக்களின் ஒரே கட்சியாக பாசிஸ்டுக் கட்சி இருக்க வேண்டும் என்ற இந்தப் பிரச்சினை முக்கியமாக 1925, 1926-ம் ஆண்டுகளில் எழுந்தது. அந்தக் கணம் முதல் கூட்டுரிமைக் கழகத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது. அதற்குச் சாவுமணி அடிக்கப்பட்டு விட்டது. இதேபோன்று இதர எல்லா அரசியல் கட்சிகளும் அஸ்தமிக்க வேண்டியதேற்பட்டது.

பாசிசத்தின் அரசியல் திட்டம் இச்சமயம் விரிவடைந்தது. இவ்விதம் அதன் பரிணாம வளர்ச்சியின் இரண்டாவது கட்டத்துக்கு நாம் செல்லுகிறோம். பூர்ஷுவாக்களின் மிகப் பிற்போக்கான, அப்பட்டமான சர்வாதிகாரத்தை எதிர்த்த கட்சிகளுக்குச் சமாதி கட்டுவதோடு பாசிசம் திருப்தியடையவில்லை. இந்தக் கட்சிகளின் அடிமட்ட ஊழியர்களைத் தனது அணிகளில் ஈர்த்து இணைத்துக் கொள்வதிலும், இதன் மூலம் ஸ்தாபனக் கண்ணோட்டத்தில் ஆளும் வர்க்கங்களிடையே ஒற்றுமையை ஈட்டுவதிலும் பாசிஸ்டுக் கட்சி மிகவும் முனைப்பாக இருந்தது.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

நூல் அறிமுகம் : எது நல்ல பள்ளி ?

து நல்ல பள்ளி? எது தரமான பள்ளி? தேர்ச்சி விழுக்காடு மட்டுமா? இசை, ஓவியம், விளையாட்டு வேண்டாமா? ஆய்வுக்கூடம் நூலகம் பயன்படுத்த வேண்டாமா? ஆங்கிலம் மட்டும் பேசினால் போதுமா? பாடத்திட்டம் மட்டும் போதுமா?… என்பது உள்ளிட்ட எளிமையான அதேசமயம் சிந்திக்கத் தூண்டும் கேள்விகளை முன்வைத்து மிகச் சுருக்கமான பதிலையும் தந்திருக்கிறார், நூலாசிரியர்.

பள்ளியில் தாய்மொழி வழிக் கல்வி நடைபெற வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழ்வழிக் கல்வி நடைபெற வேண்டும். தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்பதற்கு நாம் இன்னும் ஆராய்ச்சி முடிவுகளைத் தேடி அலைந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. வளர்ந்த நாடு எதை வேண்டுமானாலும் பாருங்கள். அங்கே தாய்மொழி வழிக் கல்விதான் இருக்கும். நான் அறிந்தவரை எந்த ஐரோப்பிய நாட்டிலும் தாய்மொழி வழிக்கல்வியே பள்ளிகளில் கற்பிக்கப்படுவதுடன் முதல் வகுப்பிலேயே ஆங்கிலம் சொல்லித்தரப்படவும் இல்லை. பொதுவாக நான்காம் வகுப்பில் ஆங்கிலம் அல்லது வேறொரு மொழி கற்பிக்கத் தொடங்கப்படுகிறது. பிறகு ஏழாம் வகுப்பில் மற்றொரு மொழியைக் கற்பிக்கத் தொடங்குகிறார்கள். சில நாடுகளில் விரும்பும் மாணவர்கள் மட்டும் நான்கு மொழிகளைக் கூடக் கற்கிறார்கள். ஆனால், அந்தந்த நாட்டில் அந்தந்த நாட்டு மொழி வழியாகவே கற்கிறார்கள். ஆகவே, ஒரு நல்ல பள்ளிக்கூடம் அடிப்படையில் தமிழ் வழிக் கல்விக்கூடமாக இருக்கவேண்டும்…

கற்பித்தலும் கற்றலும் சிறப்பாக நடைபெறவேண்டுமானால் ஆசிரியர் மாணவர் விகிதம் குறைவாக இருக்க வேண்டும். நான் பரிந்துரைக்கும் அளவு இதுதான். மழலையர் வகுப்புகளில் இருபது பேரும் தொடக்கநிலை வகுப்புகளில் முப்பது பேரும் உயர்நிலை வகுப்புகளில் நாற்பது பேரும் மேல்நிலை வகுப்புகளில் ஐம்பது பேரும் இருக்கலாம்… ஆசிரியர் மாணவர் உறவு என்பது கற்றலில் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல உறவு இருக்கும்போது கற்றல் சிறப்பாக இருக்கும்.

படிக்க:
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !

ஒரு பள்ளி நல்ல பள்ளியா என்பதை முடிவு செய்தலில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு கூறு. அந்தப் பள்ளிக்கு எவ்வாறு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது. பெற்றோர்கள் இருவரும் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது, பணக்கார குழந்தைகளை மட்டும் தேர்வு செய்வது, மிக இளம் வயதிலேயே போட்டித் தேர்வு நடத்தித் தேர்வு செய்வது போன்றவை நல்ல பள்ளிக்குரிய அடையாளங்கள் இல்லை… நூலகமும் ஆய்வுக்கூடமும் இல்லாத பள்ளி, பள்ளியே இல்லை. இவை இருந்தும் மாணவர்களுக்குப் பயன்படாத பள்ளியை என்னவென்று சொல்வது?…

மாணவர்களுக்கு வாழ்வில் பயன்தரப் போவது திறன்களே அல்லாமல் வெறும் தகவல்கள் அல்ல. ஏனென்றால், உலகில் உள்ள எல்லா தகவல்களையும் யாரும் தெரிந்து வைத்திருக்க முடியாது. இதனால் எல்லா நேரங்களிலும் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாது. ஆனால், திறன்கள் எப்பொழுதும் உதவும்…

குழந்தைகள் பெரியவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதைவிடச் சக குழந்தைகளிடமிருந்து எளிதாகவும் அதிகமாகவும் கற்றுக்கொள்கிறார்கள். இது பள்ளிக்கு வெளியே மட்டுமல்ல பள்ளியிலும் நடைபெறக்கூடியதே. இந்த இயல்பைப் பயன்படுத்தி மாணவர்கள் நன்கு கற்றுக் கொள்ளப் பள்ளிகள் உதவ வேண்டும்…

பொதுவாக நமது மாணவர்களிடம் லண்டனில் ஓடும் ஆறு எது என்று கேட்டால் சொல்லிவிடுவார்கள். ஆனால், உள்ளூருக்கு அருகில் ஓடும் ஆறுபற்றிக் கேட்டால் தெரியாது. ஏனென்றால் அவர்களுக்குக் கற்பிக்கப்படும் பாடத்திட்டம் அத்தகையதாய் இருக்கிறது… (நூலிலிருந்து)

நூல் : எது நல்ல பள்ளி ?
ஆசிரியர் : த. பரசுராமன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424.
மின்னஞ்சல் : thamizhbooks@.com

பக்கங்கள்: 16
விலை: ரூ 10.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளே உங்களுக்கு விளையாடப் பிடிக்குமா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 04

“பழைய பிரெஞ்சுப் பாடலுக்கேற்ப” வகுப்பறையில் நடனமாடும் இந்தச் சின்னஞ்சிறு பிஞ்சு உள்ளங்களில் ஞானத்தையும் உறவுமுறைகளையும் எப்படி இரண்டறக் கலந்து ஊட்டுவது, இவர்களில் ஒவ்வொருவருடைய மனதிலும் தனிச் செயல் முனைப்பை எப்படி ஊக்குவிப்பது? இந்தப் பாதை எவ்வளவு சிக்கலானது என்று என் ஆசிரியர் அனுபவம் காட்டுகிறது. நான் என் வகுப்புக் குழந்தைகளுடன், இப்பாதையின் ஆரம்பத்தில் நிற்கிறேன். நாங்கள் இப்பாதையில் முதலடிகளை எடுத்து வைக்கின்றோம். நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? அவர்கள் இப்பாதையில் மெதுவாக ஊர்ந்து செல்லும்படி கட்டாயப்படுத்தி, அவர்களின் புகார்களைக் கண்டும் காணாமல் இருப்பதா? வேறு பாதை கிடையாது, என்ன நேர்ந்தாலும் எல்லா தடைகளையும் கடக்க வேண்டும் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைகளே, உங்களுக்கு விளையாடப் பிடிக்குமா? விளையாட்டுதானே உங்கள் வாழ்க்கையின் அடிப்படை. மிக்க நன்று. உங்களுடன் விளையாடுவதில் எனக்கு ஆட்சேபணையில்லை. நாம் என்ன விளையாட்டு விளையாடுவது? நீங்கள் குழந்தைகள், பள்ளி மாணவர்கள், நான் உங்கள் ஆசிரியர், பெரியவர். நான் சொல்லித் தருகிறேன், நீங்கள் கற்றுக் கொள்கின்றீர்கள், நான் கணக்குகளைத் தர நீங்கள் அவற்றைப் போடுகின்றீர்கள், நான் கேள்விகளைக் கேட்க, நீங்கள் பதில் சொல்கின்றீர்கள். ஏன் சோர்வடைகின்றீர்கள்? இப்படி விளையாட மாட்டார்களா? இது விளையாட்டில்லையா? ஏன், இதிலென்ன தவறு? இந்த விளையாட்டில் எல்லாமே உண்மை என்பதாலா? அதாவது நான் உண்மையில் ஆசிரியர், நீங்கள் உண்மையில் மாணவர்கள் என்பதாலா? இங்கே கற்பனைக்கும், மாற்றங்களுக்கும் இடம் இல்லை, இங்கே கற்பனைப் பாத்திரங்கள் கிடையாது. அப்படித்தானே? நான் உங்களைச் சரியாகப் புரிந்து கொண்டேனா? சரி, அப்போது வேறு விதமாகச் செய்வோம். நாமனைவரும் நண்பர்கள்; நீங்கள் என் சக ஊழியர்கள், கருத்தாழமுள்ள, வயது வந்த மனிதர்கள்; நான் கவனக் குறைவான, ஞாபகமறதியுள்ள ஆசிரியனாக இருக்கிறேன், நீங்கள் என்னை விட்டுவிடாமல், கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் விளையாட்டில் முன்னின்று விளையாடுபவன். இந்தக் கற்பனை நிலையை யதார்த்தமாக்க உங்களுக்கு உதவுகிறேன்; நீங்கள் உண்மையிலேயே வயது வந்த, விளையாட்டுத்தனமற்ற நபர்கள் என்று நீங்கள் நம்ப உதவுகிறேன். இவ்வாறு ஒன்றாகச் சேர்ந்து நம் பாடங்களைப் “படைப்போம்” வாருங்கள். “தாய் நாடு” எனும் சொல்லில் எவ்வளவு எழுத்துகள் உள்ளன என்று எனக்குத் தெரியாது”. ஐந்து எழுத்துகளா? ஏழு எழுத்துகளா? இதில் கடைசி எழுத்திற்கு முந்தைய எழுத்து எது? ‘நா’ எனும் எழுத்தா ‘ய்’ எனும் எழுத்தா?… பத்து மணி நேரமாக கார் நிறுத்தும் ஓரிடத்தில் ஒவ்வொரு மணி நேரமும் எட்டு கார்கள் வந்து, ஏழு கார்கள் வெளியேறின என்றால் அங்கு எவ்வளவு வாகனங்கள் எஞ்சியுள்ளன? இதுவும் எனக்குத் தெரியாது! நீங்கள் ஏன் இவ்வளவு அவசரப்படுகின்றீர்கள்? என்னால் உங்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை!

நீங்கள் பத்து கார்கள் என்கின்றீர்கள், எனக்கோ ஒன்பது கார்கள் என்று படுகிறது!
நீங்கள் மகிழ்ச்சியை விரும்புகின்றீர்கள். உங்களுக்கு எது மகிழ்ச்சி தருகிறது? சாக்லேட்டா? புதிய விவரங்களைத் தெரிந்து கொள்வதா? நிச்சயமாக இரண்டும் மகிழ்ச்சி தருவதாகும். புதியவற்றைத் தெரிந்து கொள்ளும் மகிழ்ச்சியை கல்வி கற்கும் போது தோன்றும் இடர்ப்பாடுகளை அகற்றுவதன் மூலம் அளிப்பதை நான் என் கடமையாகக் கருதுகிறேன். நான் கல்வியை உங்கள் “தலைகளில் புகுத்தும்” வழிகளைத் தேடவில்லை, மாறாக, நீங்கள் என்னிடமிருந்து இவற்றை “எடுத்துக் கொள்ள முயலும்படி” செய்ய, என்னுடன் “அறிவுச் சண்டை” போட்டு இவற்றை கிரகிக்குமாறு செய்ய, இடைவிடாத தேட்டங்களின் மூலம், அயராத வேட்கையின் மூலம் இவற்றைப் பெறுமாறு செய்ய நான் பாடுபடுகிறேன். இவற்றை செயல்படுத்தும் பொருட்டு நான் உங்கள் அறிதல் பாதையில் தடைகளை வைப்பேன், நீங்கள் உங்கள் மூளையைப் பயன்படுத்தி இவற்றைக் கடக்க வேண்டும்.

படிக்க:
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?

புதியவற்றைத் தெரிந்து கொள்வதில் ஏற்படும் சண்டைகளினால் உண்டாகும் குழந்தைகளின் சிரிப்பு நம் பாடங்களுக்கு அழகூட்டும். இப்படிப்பட்ட சிரிப்பு இவ்வாறு புதியவற்றைத் தெரிந்து கொள்வதை ஊக்குவிப்பதோடன்றி, புதிய விவரங்களைத் தெரிந்து கொள்ளும் வழிகளில் ஒன்றாயும் இந்நிகழ்ச்சிப் போக்கின் விளைவுகளில் ஒன்றாயும் இருப்பது என் அனுபவத்திலிருந்து எனக்குத் தெரியும். சிரிப்பு மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த முறையாகும். தேவையற்று இச்சிரிப்பு பாடவேளைகளிலிருந்து அகற்றப் பட்டுள்ளதாக எனக்குத் தோன்றுகிறது. பல ஆசிரியர்கள், புதியவற்றைத் தெரிந்து கொள்வதில் “சண்டைகளை” மூட்டி விட்டு சிரிப்பை வரவழைப்பதற்குப் பதில் இதை விரட்டியடிக்கின்றனர்.

என்னைப் பொறுத்தமட்டில் குழந்தைகளின் சிரிப்பு ஒரு ஆசிரியரின் முக்கியப் பிரச்சினையாகும், என் பாடவேளைகளில் இவர்கள் அடிக்கடி “’கருத்தாழத்தோடு“ சிரிப்பார்கள். நகைச்சுவையான படக்கதைகளைச் சொன்னால் வகுப்பறையில் சிரிப்பு வெடிக்கும். “ஏன் நீங்கள் சிரிக்கின்றீர்கள்? இதில் சிரிப்பதற்கென்ன உள்ளது?” என்று நான் கேட்டதும் குழந்தைகள் போட்டி போட்டுக் கொண்டு விஷயத்தை விவரிப்பார்கள், அது ஏன் சிரிப்பிற்கிடமானது என்று விளக்குவார்கள். நாங்கள் சேர்ந்து சிரிப்போம். இதே திருப்தியை, மகிழ்ச்சியை பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் விளக்குமாறு விஷயத்தை வார்த்தைகளால் விவரிக்குமாறு நான் கேட்டுக் கொள்வேன். “உங்களால் மற்றவர்களைச் சிரிக்க வைக்க முடிந்தது என்றால், உங்களால் நன்றாக, உள்ளது உள்ளபடி கதை சொல்ல முடியுமென்று பொருள்” என்று நான் குழந்தைகளிடம் சொல்வேன்.

“பிழைகளைக் கண்டுபிடிக்குமாறு அவர்களிடம் சொல்லி நான் வேண்டுமென்றே தப்பாகப் படித்துக் காட்டும் போது குழந்தைகள் சிரிப்பார்கள். அவர்கள் தாம் சொல்வது சரி என்று நிரூபிக்கும் வரை நான் விடாப்பிடியாகத் தீவிரமாக நிற்பேன். பின் அவர்களை எனக்குக் கணக்கு தரச் சொல்லி வேண்டுமென்றே நான் அவற்றை தவறாகப் போடும் போதும் அவர்கள் சிரிப்பார்கள். என் “தவறு” என்ன என்று அவர்கள் சிரிப்புடன் நிரூபிப்பார்கள்.

அனேகமாக சிரிப்பு என்பது நம்பிக்கையை வெளிப்படுத்தவும் நிலையை ஊர்ஜிதப்படுத்தவும் சிறந்த வழிகளில் ஒன்றாயிருக்கும். குழந்தைகளுடனான பணியில் நான் இதை இப்படித்தான் பார்ப்பேன். மகிழ்ச்சிகரமான சிரிப்பை குழந்தைகளிடம் வரவழைப்பதற்காக மட்டும் நான் “தவறு” செய்யப் போவதில்லை. எனது “தவறுகள்” குழந்தையின் சிந்தனையைத் தட்டிவிடும். குழந்தைகள் என்னுடன் விவாதம் செய்யத் துவங்குவார்கள், நான் ஒப்புக் கொள்வேன்; “நீங்கள் சொன்னது சரி… என்னை மன்னிக்கவும்!”

நான் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்? ஆசிரியர் தவறிழைத்து விட்டுப் பின் குழந்தைகள் முன் மன்னிப்பு கேட்கலாம், குழந்தைகள் ஆசிரியருடன் விவாதிக்கலாம் என்பதை ஆசிரியரியல் ஒப்புக் கொள்கிறதா என்ன? இது பற்றி இப்போது என்னால் ஒன்றும் சொல்ல இயலாது. இது புதியவற்றை அறிய உயிர்த்துடிப்புள்ள, சுவாரசியமான பாதையென அனுபவம் எனக்குச் சொல்கிறது. குழந்தைகள் இதை மேம்படுத்த எனக்கு உதவுவார்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

எங்க சாமி கருப்பனும் சுடலைமாடனும்தான் ! ஜெய் ஸ்ரீராம் கிடையாது | #NoToJaiShriRam

டந்த ஒரு வாரத்தில் நாட்டின் பல இடங்களில் இந்துத்துவ கும்பல் அரங்கேற்றிய தாக்குதல் சம்பவங்களின் போது, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் முதன்மையாக இடம்பெற்றிருந்திருக்கிறது. பாராளுமன்றத்திலும் எதிர்க்கட்சியினர் பதவி ஏற்கும்போது ”ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்தைக் கூவினர் பாஜக எம்பிக்கள்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்துத்துவ வெறியேற்றப்பட்ட ஒரு கும்பல் தாக்கியதில் தப்ரேஸ் அன்சாரி என்ற இளைஞர் கொல்லப்பட்டார். அவரை ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல கட்டாயப்படுத்தி அடிக்கிறது அந்த கும்பல். அதுபோல, கொல்கத்தாவில் இரயிலில் சென்ற முசுலீம் இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போதும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்லும்படி காவிக் கும்பல் அவரைக் கட்டாயப்படுத்தியிருக்கிறது.

இப்படி ‘ஜெய் ஸ்ரீராமின்’ பெயரால் காவி கும்பல் கையிலெடுத்துள்ள வன்முறையைக் கண்டிக்கும் வகையில் #NoToJaiShriRam என்ற ஹேஷ் டேக் டிவிட்டரில் டிரெண்டானது. இதை டிரெண்டாக்கியவர்கள் தமிழர்கள். தமிழர்களின் எதிர்ப்புக்குரலில், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இணைந்து கொண்டனர். அதிலிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்.

தமிழ் நடராஜ்:

சான்றிதழின்படி நான் இந்து. ஆனால், நான் “ஜெய் ஸ்ரீராம்” சொல்ல மாட்டேன். இது என்னுடைய வாழ்தலுக்கான லட்சியத்தை கூறவில்லை. இன்று ‘வேண்டாம் ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்கிறேன், ஏனெனில் இது மனிதநேயத்தைக் குறிக்கிறது. வாழ்தலுக்கான நோக்கத்தைக் குறிக்கிறது.

பழுவேட்டரையர்:

கடவுள் ராமனுக்கு வெற்றியை என முழங்கி, மக்களைக் கொல்கிறீர்கள். ராமனுக்கு நீங்கள் சமர்ப்பிக்கும் வெற்றி எத்தகையது? கோழைத்தனமான கிரிமினல்தனத்தின் மூலம் மனித சதையை சமர்ப்பிப்பதால் மகிழ்ச்சியடைவாரெனில் என்ன வகையான  கடவுள் அவர் ?

வைசாலி:

இந்தியாவில் உள்ள எவருக்கும், ஏன் மோடிக்குமே கூட முசுலீம்களாகிய உங்களை  ‘ஜெய் ஸ்ரீராம்’ என சொல்ல வற்புறுத்த உரிமை கிடையாது.

மணிமாறன் ராஜசோழன்:

ராமன் யார்? ராமாயண கதையின்படி தனது மனைவியை நம்பாத ஒருவர். ராமன் ஒரு கதாபாத்திரம் மட்டுமே. இவர் உண்மையான கடவுள் இல்லை. இந்த முட்டாள்கள் ராமனை வழிபட விரும்புகிறார்கள். நான் ஏன் வழிபட வேண்டும்?

விவேக் கோபாலகிருஷ்ணன்:

காவி இந்துத்துவக் கும்பல் சக முசுலீம் சகோதரர்களை மதத்தின் பேரால் கொல்வதற்கு எதிராக தமிழர்கள் நாங்கள் நிற்கிறோம்.

குரு தமிழ் :

ராவணனைப் போல இதுவும் கற்பனைக் கதாபாத்திரம்தான். ராமன் தன்னுடைய மனைவியை சந்தேகித்து நெருப்பில் இறங்கச் சொன்னார். அவரை ஒரு மனிதராகக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியிருக்கும்போது ஏன் அவரைக் கடவுளாக வழிபடுகிறார்கள்?

ஆஸ்டின் பெஞ்சமின் :

மதம் மனிதனை, விலங்காக மாற்றுகிறது.

இக்‌ஷ்தீப் சிங்:

இந்திய அரசியலமைப்பு நமது மதத்தைப் பின்பற்றும் உரிமையை வழங்கியுள்ளது. ஒருவருடைய மத நம்பிக்கையை கட்டாயமாக திணிக்கும் சக்தி எவருக்கும் இங்கே இல்லை.

சித்தார்த்தா சரண்:

எங்களுடைய கடவுளர்கள் அய்யனார், கருப்பன், சுடலைமாடன், மதுரைவீரன் போன்றோர். அவர்கள்தான் எங்களைக் காப்பவர்கள், வீரர்கள். நாங்கள் எங்களுடைய தாய்மொழியில் அவர்களை துதிப்போம். ராமன் யார்? தனது மனைவியை சந்தேகித்துக் கொன்றவன். நாங்கள் ஏன் அந்த சமஸ்கிருத பயங்கரவாதியைத் துதிக்க வேண்டும்?

அமெரிக்காவாசி:

நாட்டின் சிறுபான்மையினரைக் கொன்று கொண்டிருக்கும் “ஜெய் ஸ்ரீராம்” சொல்வதை நிறுத்துவோம். இந்தியா எப்போதும் மதச்சார்பற்ற நாடுதான்.

குரு:

உங்கள் அருகே யாரேனும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்கிக் கொண்டிருந்தால், நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள். அவன்/அவள் ஒரு பயங்கரவாதியாக இருக்கலாம்.

அனுஷ்கா அகர்வால்:

ஒரு ரயில் நிலையத்தில் முசுலீம்கள் தொழுதுகொண்டிருப்பதைப் பார்த்து ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என சிலர் கத்தும் வீடியோவை இப்போது பார்த்தேன். தயவு செய்து மனிதத்தன்மையற்ற இந்தச் செயலை நிறுத்துங்கள்.

இதனால் உங்களுக்குக் கிடைக்கப்போவது என்ன? அனைத்து இந்தியர்களும் சகோதர, சகோதரிகளே.. தயவுசெய்து நிறுத்துங்கள்.

சுபம் ராஜ் பிராமி:

இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நம்முடைய நாட்டில் இத்தகைய வன்முறைகளுக்கு இடமில்லை. இது மதச்சார்ப்பற்ற நாட்டின் மீது விழுந்த அடி. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சக நாடாளுமன்றவாதிகளை ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழங்க வேண்டாம் என்றும் வலியுறுத்துங்கள்.

முகமது ஆரிஃப்:

கும்பல் வன்முறையாளர்களால் ஐம்பதுக்கும் அதிகமான முசுலீம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அரசு அதுபற்றி கவலைப்படவில்லை. சட்டமும் இல்லை, நடவடிக்கையும் இல்லை. இதுதான் நாம் விரும்பும் இந்தியாவா? தயவுசெய்து உங்களுடைய குரல்களை உயர்த்துங்கள்.

அப்துல் அஜீஸ்:

மனிதநேயம் தேவையாக உள்ளது.

கணேஷ் பாண்டியன்:

உங்களுடைய அமைதி அவர்களை கொல்லக்கூடும்.

முகமது உமர்:

நீங்கள் சிறு குற்றச்சாட்டுக்கு உள்ளான முசுலீம் எனில் கொல்லப்படுவீர்கள். நீங்கள் இந்து, பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் எனில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்படுவீர்கள்.


தொகுப்பு : அனிதா

தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !

0

நாடு முழுவதுமுள்ள தொழிலாளர் நிலைமை, அவர்களது வாழ்க்கை மற்றும் போராட்டங்களைக் குறித்து ஒரு பருந்துப் பார்வையில் தொகுத்துள்ளது தி வயர் இணையதளம். அக்கட்டுரையில் இருந்து சில துளிகள் :

கடும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள தமிழ்நாடு.

குறைந்துபோன மழைப்பொழிவும் வறண்டு வரும் நீராதாரங்களும் மற்றுமொரு கடினமான ஆண்டை தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளவிருப்பதற்கு கட்டியம் கூறுகின்றன. பெரும் அணைக்கட்டுகளில் நீரின் அளவு குறைந்திருப்பதாலும், மற்ற நீராதாரங்களான குளங்கள் ஏரிகள் உள்ளிட்டவை வறண்டு போயிருப்பதாலும் குறுவை சாகுபடியைக் கைவிட விவசாயிகளை நிர்பந்தித்துள்ளது.

பருவ மழை பொய்த்துப் போனதைக் காரணம் காட்டி மாநில அரசு கை கழுவ முயல்கிறது; ஆனால், விவசாயிகளும் செயல்பாட்டாளர்களும் மாநில அரசின் கொள்கைகளும் நீர் மேலாண்மையைக் கைவிட்டதும், ஆறுகளையும் குளங்களையும் காக்கத் தவறியதும்தான் இப்பிரச்சினைக்குக் காரணம் என்கின்றனர்.

தில்லி அரசாங்கம் பெண்களுக்கு இலவச போக்குவரத்தையும் தலைமைச் செயலகத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

தனது லிபரல் கொள்கைகளின் வரிசையில் தில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, தலைமைச் செயலகத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய குழந்தைகள் நலன் மற்றும் பெண்களுக்கான அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் தில்லியின் துணை முதல்வர்.

தனது கடிதத்தில் பணியாளர்களின் வேலை மற்றும் சொந்த வாழ்க்கைக்கு இடையிலான சமன்பாட்டை உறுதி செய்வது குறிப்பிட்ட நிறுவனத்தின் கடமை என்பதை குறிப்பிட்டுள்ளார். தில்லி தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் குழந்தைகள் காப்பகம் அவர்களுக்குப் பெரிதும் பயன்தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பொதுப் போக்குவரத்தில் பெண்கள் இலவசமாக பயணிக்க வகை செய்யும் விதமாகத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. பெண்கள் எந்த நேரமும் எங்கும் பாதுகாப்பாக பயணிப்பதை இத்திட்டம் உறுதி செய்யும் என அக்கட்சி கூறுகின்றது. இத்திட்டத்தின்படி தில்லி மெட்ரோ இரயில் மற்றும் தில்லி அரசுக்குச் சொந்தமான பேருந்துக் கழகம் ஆகிவற்றில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்பதால் இது தொடர்பாக பெரும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இன்னொருபுறம், தில்லியின் பொதுப் பேருந்துகள் அனைத்தும் சி.என்.ஜி எரிவாயுவில் செயல்படுபவை என்பதும், அவை பெருமளவு விரிவாக்கம் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேறுகாலச் சலுகைகளை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு விரிவுபடுத்துகின்றது அருணாச்சலப் பிரதேச அரசாங்கம்.

இரண்டாவது முறையாக முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள பெமா கந்து அரசாங்கம், பேறுகால சலுகைகளை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. இதுவரை நிரந்தரத் தொழிலாளர்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்பட்டு வந்தது.

பேறுகாலச் சலுகைகளின்படி, ஒப்பந்தத் தொழிலாளர்கள் 180 நாட்கள் ஊதியமில்லா விடுப்பு எடுத்துக் கொள்ள முடியும். மேலும் 60 நாட்கள் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக விடுப்பெடுத்துக் கொள்ளவும் முடியும். இந்த நடவடிக்கையின் விளைவாக 20 ஆயிரம் பணியாளர்கள் பயன்பெறுவர் என அம்மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

படிக்க:
சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் !
♦ மனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் !

ஆந்திராவின் ஆஷா ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

இந்தியா முழுவதுமுள்ள ஆஷா (சுகாதாரப் பணியாளர்கள்) ஊழியர்கள் சம்பள உயர்வுக்காகப் போராடி வருகின்றனர். மிகக் கடுமையான வேலையாக இருந்தாலும், அவர்களது சம்பளம் குறைவு என்பதோடு அவர்கள் முழுநேர ஊழியர்களாகவும் கருதப்படுவதில்லை. எனினும், புதிதாக ஆந்திராவில் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு ஆஷா ஊழியர்களின் சம்பளத்தை மூவாயிரத்தில் இருந்து பத்தாயிரமாக உயர்த்தியுள்ளது.

தேசிய ஊரக சுகாதார திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆஷா ஊழியர்களின் பங்கு மிக முக்கியமானதாகும். நாடெங்கும் உள்ள ஆஷா ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராடியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அவர்களது மதிப்பூதியத்தை சொற்ப அளவில் அதிகரித்திருந்தது மத்திய அரசு. தற்போது ஆந்திர அரசு எடுத்திருக்கும் முடிவு பிற மாநிலங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கும்.

ஆலையில் நடந்த வெடிவிபத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்; இரண்டு தொழிலாளிகள் படுகாயமுற்றனர்.

தெலுங்கானாவில் உள்ள ரெஜினிஸ் வெடி மருந்துக் கம்பெனியில் நடந்து விபத்தில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார். டெட்டனேட்டர் ஒன்று தவறுதலாக தூண்டப்பட்டதால் நடந்த இவ்விபத்தில் மேலும் இரண்டு தொழிலாளிகள் படுகாயமுற்றனர். இறந்த தொழிலாளி சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர்.

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை இந்தியாவில் தலைவிரித்து ஆடுவதாக அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களே அறிவிக்கின்றன.

மிகக் கடுமையாக விவாதிக்கப்பட்ட தேசிய மாதிரி சர்வே அமைப்பு நடத்திய தொழிலாளர்கள் குறித்த ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் வேலைவாய்ப்பின்மையை கணக்கிட புதிய முறைமையை மத்திய அரசு புகுத்தியுள்ளது. இப்புதிய முறையின்படி பார்த்தாலும் தேசிய அளவில் 6.1 சதவீத அளவு வேலைவாய்ப்பின்மை நிலவுவதாக தெரிய வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவுகள் புதிய முறையின்படி அளவிடப்பட்டது என்பதால் முந்தைய ஆண்டுகளின் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 -ம் ஆண்டு அக்டோபர் மாதமே தயாராகிவிட்ட ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளிடாமல் வைத்திருந்தது. இதன் காரணமாகவே அரசு உயரதிகாரிகளுக்கும் புள்ளியியல் நிபுணர்களுக்கும் இடையே ஒரு முறுகல் நிலை தோன்றியிருந்தது. அந்த அறிக்கையின் முக்கியமான பகுதிகள் அப்போதே ஊடகங்களில் கசிந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களில் வெளியான அறிக்கையின் விவரங்கள் சரிபார்க்கப்படாதவை என அப்போது மத்திய அரசு சொன்னது. எனினும், தேர்தலில் வெற்றி பெற்றவுடன் ஊடகங்களில் வெளியான அதே அறிக்கை அதிகாரப்பூர்வமானதாக வெளியிடப்பட்டுள்ளது. வேலையின்மை அதிகரித்துள்ளதா இல்லையா என்பதைக் கடந்து நமது பொருளாதாரம் ஒரு பெரும் நெருக்கடியில் உள்ளது என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் அருகி வரும் வேலையிடங்களே இதை உணர்த்துகின்றன.

பி.எம்.ஜே ஆய்வின்படி இந்தியாவில் நபர்வாரியான மருத்துவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் 10,000 பேருக்கு 22.8 பேர் அளவில் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால் நாம் இலங்கை தாய்லாந்து உள்ளிட்ட பல தெற்காசிய நாடுகளை விட பட்டியலில் பின் தங்கியுள்ளோம். உலக சுகாதார நிறுவனம் தற்போது அபாயகரமான அளவில் மருத்துவர்கள் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவை வைத்துள்ளது.

விலைக் குறைப்பிற்குப் பின் 5000 ஊழியர்களின் வேலையைப் பறித்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சுமார் 5,000 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்திருப்பதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களே பணி நீக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். இதில் சுமார் 500 – 600 பேர் நிரந்தரத் தொழிலாளர்கள். ரிலையன்ஸ் ஜியோ பணி நீக்கம் குறித்த செய்தியை மறுத்துள்ளதோடு தாங்களே மிக அதிக பணி நியமனங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. எனினும், குறைந்த லாபத்தில் இயங்கி வருவதால் பணி நீக்க நடவடிக்கையை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் கட்டுரை தெரிவிக்கின்றது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டது மற்றும் அதிரடி விலைக்குறைப்பின் காரணமாக செல்பேசி சந்தையின் பெரும் பகுதியை அந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. எனினும், அதன் நிர்வாகச் செலவுகளை உடனடியாக கட்டுப்படுத்தியாக வேண்டும் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். நிர்வாகச் செலவுகளை குறைப்பதற்கு தனது பணியாளர்களின் வேலைகளைப் பறித்துள்ளது அந்நிறுவனம். இத்தனைக்கும் அதன் நிர்வாகச் செலவுகளில் தொழிலாளர்களின் ஊதியத்தின் அளவு வெறும் 5 சதவீதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியாரமயமாக்கலும் தொழிலாளர் சட்டங்களைச் சீர்திருத்துவதும்தான் மோடி 2.0 அரசின் முக்கிய திட்டம்

மத்திய அரசின் சிந்தனைக் குழாமாகச் செயல்படும் நிதி ஆயோக்கின் துணை சேர்மன் இந்த அரசின் முதல் 100 நாட்களில் ஏராளமான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்ற முடியாத தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்களை இம்முறை நிறைவேற்ற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதே போல் தனியார்மயமாக்களைத் துரிதப்படுத்தவும், 46 பொதுத்துறை நிறுவனங்களை மூடவும் அரசு முன்னுரிமை வழங்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்விரு நடவடிக்கைகளுமே பாரதிய ஜனதாவுக்கு ஓட்டளித்து வெற்றிபெறச் செய்த தொழிலாளர்களுக்கே உவப்பானதாக இருக்கப்போவதில்லை. மேலும் பரவலான வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி நாட்டைக் கவ்விப் பிடித்திருக்கும் இந்நிலையில் இது போன்ற நடவடிக்கைகள் நிலைமையை மேலும் மோசமாக்கி விடும்.

படிக்க:
100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு !
♦ “ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !

முன்னறிவிப்பின்றி ஊதியத்தை மாற்றம் செய்வதை எதிர்த்து ஸ்விக்கி ஊழியர்கள் போராட்டம்

ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர்கள் ஊதியப் பிரச்சினைக்காக போராடி வருகின்றனர். கொச்சின், முஷீராபாத் மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த ஊழியர்கள் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஸ்விக்கி நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப் போக்குகள் கடந்த காலங்களில் தொடர்ந்து செய்திகளில் அடிபட்டு வந்துள்ளன. திடீரென்று ஊதியம் குறைக்கப்பட்டதை அடுத்து கொச்சினைச் சேர்ந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை கடந்த மே மாதம் 28 தேதி துவங்கி நடத்தி வந்தனர்.

நிர்வாகத்தின் தரப்பிலிருந்து இறங்கி வந்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் வெள்ளிக்கிழமை போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. எனினும், நிர்வாகத்தினர் ஒரு வாரத்திற்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை துவங்கவிருப்பதாக தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

முதலில் 4 கிலோ மீட்டர்களுக்குள் உணவு சப்ளை செய்ய 25 ரூபாயும் கூடுதல் கிலோ மீட்டர் ஒவ்வொன்றுக்கும் 5 ரூபாயுமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதை எந்த அறிவிப்பும் இன்றி 5 கிலோ மீட்டர்களுக்கு 25 ரூபாய் என மாற்றியது ஸ்விக்கி. அதே போல் காத்திருப்புக்கான கட்டணத்தையும் நீக்கியது ஸ்விக்கி நிறுவனம். இப்புதிய ஊதியம் கடந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து எந்த அறிவிப்புமின்றி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்விக்கி டெலிவரி ஊழியர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன் இதே போன்ற ஊதிய பிரச்சினைகளை ஒட்டி திடீர் வேலை நிறுத்தம் ஒன்றிற்கு திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்கியன்

மேலும் வாசிக்க :

♦ The Life of Labour: Job Cut at Reliance Jio, Bonanza for ASHA Workers in Andhra