Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 354

ஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் ! | தாகத்தில் தமிழகம் – ஆவணப்படம் !

மிழகத்தின் மூலை முடுக்குகள் எங்கும் மக்கள் தண்ணீர் இன்றி பரிதவிக்கின்றனர். வடக்கே தருமபுரி தொடங்கி தெற்கே திருநெல்வேலி வரை வறண்டு கிடக்கிறது தமிழகம்.

தண்ணீருக்காக ஐந்து மணிநேரம், ஆறு மணிநேரம் காத்திருந்தாலும் ஒரு குடம் கூட நிறைவதில்லை, எனக் கண்ணீர் மல்கக் குமுறுகின்றனர் கொட்டாம்பட்டி மக்கள். மக்களின் கண்ணீரைக் காசாக்கும் இரசவாதம் தெரிந்த, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இத்துயரத்திலும் பணம் பார்க்கும் அவலமும் நிகழ்கிறது என்பதுதான் கொடூரத்தின் சிகரம். இது ஏதோ ஒற்றை கிராமத்து பிரச்சினை இல்லை ஒட்டுமொத்த தமிழகத்தின் பிரச்சினை.

தண்ணீர் பஞ்சமும், இந்த அரசின் கையாலாகாத்தனமும் எப்படி வாழ்வின் அனைத்து அசைவுகளையும் பாதிக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த ஆவணப்படம். செயலிழந்து போன அரசின் தோல்வியை துலக்கமாகக் காட்டும் இந்தக் காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…


இதையும் பாருங்கள்…

தாகத்திற்கா தண்ணீர் லாபத்துக்கா ? – கோவன் பாடல் !

 

இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு !

1

லகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு எனப் பெயரெடுத்துள்ளது இந்தியா. கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின் முடிவு இவ்வாறு தெரிவிக்கிறது. இதே போன்றதொரு கருத்துக்கணிப்பில் ஏழாண்டுகளுக்கு முன் நான்காம் இடத்தில் இருந்தது இந்தியா.

உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) பாலின ஏற்றத்தாழ்வு மிகுந்த நாடுகளின் தரப் பட்டியலில் இந்தியாவுக்கு 108-வது இடத்தை வழங்கியுள்ளது. இந்தப் பட்டியலில் இருந்தது மொத்தம் 144 நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி ஆய்வானது பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் போன்றவற்றில் பெண்களின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டதாகும்.

அதே போல் 2017-18 ஆண்டுகளுக்கான “பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்புக் குறியீட்டுப் பட்டியலில்” கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 153 நாடுகளில் இந்தியா 131-வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆய்வானது, பெண்களின் சமூக இணைப்பு, நீதி, பாதுகாப்பு உள்ளிட்ட 11 அம்சங்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு நடத்தப்பட்டதாகும்.

இந்திய மக்கள் தொகையில் 49 சதவீதம் உள்ள பெண்களின் பாராளுமன்ற பங்கேற்பு வெறும் 12 சதவீதம்தான். அதே போல் பெண் தொழிலாளிகளின் சதவீதம் 2006-ம் ஆண்டு 37 சதவீதமாக இருந்து, 2017-ல் 27 சதவீதமாக சரிந்துள்ளது என்கிறது உலக வங்கியின் அறிக்கை ஒன்று. இதனடிப்படையில் 181 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா வகிப்பது 163-வது இடமாகும்.

முந்தைய காலத்தை விட இப்போது பெண்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். இதில் பல தொழில்துறைகள் இதுகாறும் ஆண்களுக்கேயானது எனக் கருதப்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. வாடகை வாகனங்கள் ஓட்டுவது, தொடர்வண்டி ஓட்டுநர், அறுவை சிகிச்சை நிபுணர், ஒலிம்பிக் வீரர் என்பதில் துவங்கி விமானங்கள் ஓட்டுவது வரை பெண்கள் ஈடுபடுகின்றனர். ஊரகப் பகுதிகளில் கூட பஞ்சாயத்து அளவிலான பொறுப்புகளை பெண்கள் வகித்து வருகின்றனர்.

2018-ம் ஆண்டுக்கான பொருளாதார கருத்துக்கணிப்பின் படி, கிராமப் பஞ்சாயத்துகளில் 43 சதவீதம் பெண்கள் தலைமை ஏற்றுள்ளனர். பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாலேயே இந்த பங்கேற்பு சாத்தியமாகி உள்ளது என்பதோடு, அவ்வாறு கிராமப்புற பெண்கள் பஞ்சாயத்து உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டாலும் பெரும்பாலும் அவர்கள் தங்களது கணவன்மார்களின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டாக வேண்டும் என்பதும் கவனத்திற்குரியது.

படிக்க:
பெண்களின் உயிரை உறிஞ்சும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள் !
♦ மோடி ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு : உண்மை நிலவரம் என்ன ?

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கேற்பு சதவீதம் பெருமளவிற்குக் குறைவாகவே உள்ளது என்கிறார் வழக்காடுதல் மற்றும் சட்ட ஆலோசனை சங்கத்தைச் (Association for Advocacy and Legal Initiatives (AALI)) சேர்ந்த ரேணு மிஷ்ரா. மேலும், அவ்வாறு குறைந்த சதவீதமாக இருக்கும் பெண் தொழிலாளிகளுக்கு அதேபோன்ற வேலையில் ஈடுபடும் ஆண் தொழிலாளிகளோடு ஒப்பிடும்போது குறைந்த ஊதியமே வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பெண்கள் தங்களது சொந்த முடிவுகளைக் கூட எடுக்க முடியாத நிலையையும், திருமண பந்தம் குறித்து ஒரு முடிவெடுக்கும் சுதந்திரம் இல்லாதிருப்பதையும் ரேணு சுட்டிக் காட்டுகிறார்.

தன்னுடைய வயதைக் கணக்கில் கொண்டு பார்த்தால் வேலை மற்றும் சொந்த வாழ்க்கைக்கு இடையிலான சமன்பாட்டை சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கிறது என்கிறார் மார்பகப் புற்றுநோய் நிபுணர் மருத்துவர் பூஜா ரமாகாந்த். “ஒரு பெண் அறுவை சிகிச்சை நிபுணர் எனும் வகையில் எனது ஆண் சக மருத்துவர்களைக் காட்டிலும் அதிக போராட்டங்களை நான் சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு ஆண் வழிச் சமூகம் விதித்துள்ள சட்டகத்திற்குள் மற்றவர்கள் ஏற்படுத்தியுள்ள சமூக நடைமுறைக்குள் ஒரு பெண் பொருந்திப் போக வேண்டும் என ஏன் எதிர்பார்க்கிறார்கள்? அது அந்தப் பெண்ணுக்கு நல்லது என்பதாகவே கூட இருக்கட்டுமே?” எனக் கூறும் பூஜா, பொருளாதார ரீதியில் நல்ல நிலைமையில் உள்ள பெண்களும் கூட சமூகத்தில் பிறர் என்ன சொல்வார்களோ என்கிற அச்சத்தால் தங்களுக்குப் பொருந்தாத திருமண பந்தத்தில் உழல்வதாகக் குறிப்பிடுகிறார்.

பெண்கள் கல்வி பெறுவதில் உள்ள சவால்களைப் பட்டியலிடுகிறார் கல்வியாளர் மரு. சித்ரா சிங். ஊரகப் பகுதிகளில் பெண்களுக்கான கல்வி நிலையங்கள் குறைவு என்பதோடு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தை நீண்ட தொலைவு சென்று படிப்பது பாதுகாப்பானதில்லை எனக் கருதுகின்றனர். மேலும், இருக்கும் பள்ளிகளிலும் ஒழுங்கான கழிவறை வசதிகள் இல்லாமல் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் சித்ரா.

அடுத்து, ஒரு பெண் குழந்தையின் கல்விக்கு செலவு செய்து அவளை இன்னொருவருக்கு கட்டிக் கொடுத்து விடுவதைக் காட்டிலும், ஆண் குழந்தையைப் படிக்க வைத்தால் அவன் தங்களைப் பிற்காலத்தில் பார்த்துக் கொள்வான் என பொருளாதார ரீதியில் பின் தங்கிய பெற்றோர் கருதுவதையும் சித்ரா குறிப்பிடுகிறார்.

படிக்க:
மனைவியின் பிரிவிலும் மக்களுக்காக நின்ற மருத்துவர் ரமேஷ் !
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

சரி, இந்த சிக்கலுக்கு என்னதான் தீர்வு?

வாழ்க்கை என்பது ரோஜா மலர்கள் தூவப்பட்ட படுக்கையாகவும் இருக்க வேண்டாம்; அதே போல் முட்கள் நிறைந்த சிம்மாசனமாகவும் இருக்க வேண்டாம். பெண்கள் தனிப்பட்ட முறையில் குடும்பத்தாராலும், சமூகத்தாலும் நிர்பந்திக்கப்படும் ஆண் வழிச் சமூகத்தின் நெறிமுறைகளுக்குக் கட்டுப்படத் தேவையில்லை என்கிறார் ரேணு. பெண்கள் தங்களுடைய கல்விக் கூடங்களில், பணி இடங்களில், இன்னபிற இடங்களில் இதற்கு எதிராக அச்சமின்றிப் போராட வேண்டும் என்கிறார். பெண்கள் பொருளாதார ரீதியில் சுதந்திரம் பெறாமல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறார் சித்ரா.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை இனிமேலும் அமைதியாகப் பொறுத்துக் கொண்டிராமல் அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும் என்கிறார் பூஜா. சமூகத்தை நினைத்து அஞ்சாமல் அவர்களது தெரிவுகளை – அது வேலையோ, குடும்பமோ – சொந்த முறையில் செய்ய வேண்டும் என்கிறார். மேலும், வீட்டு வேலைகளை எல்லா உறுப்பினர்களும் சமமாக பங்கிட்டுச் செய்ய வேண்டும் என்பதைப் பெண்கள் வலியுறுத்த வேண்டும் என்கிறார் பூஜா. “வேலைக்குச் செல்கிறார்களோ இல்லையோ.. எல்லா பெண்களும் வேலையில் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது” என்கிறார்.

பெண்கள் அச்சமின்றிப் போராடுவதே தீர்வு என்பதை இவர்கள் தங்களுக்கே உரிய முறையில் வெவ்வேறு வார்த்தைகளில் முன்வைக்கின்றனர். அந்தப் போராட்டத்தோடு தோள் கொடுப்பது அனைவரின் கடமையும் கூட. மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் உரிமைகளுக்காகப் போராடுவது பெண்களுக்கு மட்டுமே விதிக்கப்பட்டதல்ல; அதில் பாலின வேறுபாடின்றி அனைவரும் கைகோர்ப்பதே சரியானதும், அவசியமானதும் ஆகும்.

சாக்கியன்

திராவிட மலர்ச்சிக்குத் தாமதம் ஏற்படக்கூடுமே தவிர தடையேற்படாது !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 07

ரியர் –  திராவிடர் பிரச்சினை பற்றியும், பெரியாரின் திட்டமாகிய திராவிட நாட்டுப் பிரிவினை விஷயமாகவும் சாஸ்திரியார் பேசியிருப்பதுடன், அவை ஆதாரமற்றவை, ஆபத்தானவை என்றும் கண்டித்திருக்கிறார்.

பலமான அஸ்திவாரம் போட்டுக் கொள்ள வேண்டுமென்று சாஸ்திரியார் நினைக்கிறார். ஆகவே இந்து என்ற சொல்லுக்கே அவர், “இந்து என்றால், இந்த நாட்டைப் பிறந்த இடமாகவும் புண்ணிய பூமியாகவும் கருதுகின்றவன் என்பது பொருள்” என்று கூறுகிறார்.

இவரது வியாக்கியானத்துக்கு ஆதாரம் என்ன என்பதை அவர் கூறவில்லை .

“இந்து” என்ற பதத்திற்கு இதுவரை ஆராய்ச்சியாளர்களும், சரித்திரம் எழுதினோரும், அகராதிக்காரர்களும் கொடுத்துள்ள பொருள் என்ன என்று கேட்கிறோம்.

படித்த எவரிடமும் உள்ள ஜெம் அகராதியில் (Gem Dictionary) பார்க்கட்டும். மேதாவிகளுக்குத் தோழன் எனக் கருதப்படும் சேம்பர்ஸ் (Chambers) அகராதியைப் பார்க்கட்டும். பல நாட்டுத் தகவல்களைத் தொகுத்துத் தரும் என்சைக்ளோபீடியாக்களைப் பார்க்கட்டும். ”இந்து’’ என்பதற்கு என்ன பொருள் தரப்பட்டு இருக்கிறது என்பது விளங்கும். ஒரு டி.ஏ.சாமிநாதய்யர் என்பவர் வெளியிட்டாரே (Gem) ஜெம் அகராதி , அதில் ”இந்து”  என்பதற்கு 467- ம் பக்கத்தில் பொருள் கூறப்பட்டிருக்கிறது. யாது அப்பொருள்?

இந்து என்றால், சனாதன தர்மானுசாரி! இந்துஸ்தானம் என்பதற்கு பியர்ஸ் என்சைக்ளோபீடியா தந்துள்ள பொருள் : இமயத்துக்கும் விந்தியமலைக்கும் இடையே உள்ள பிரதேசத்தில் ஒரு பகுதி என்பதாகும். இந்து என்பது ஆரியரையும், இந்துஸ்தானம் என்பது ஆரிய வர்த்தனத்தையும் குறிக்கும். இதைச் சாஸ்திரியார் மறுக்க எந்த ஆதாரத்தையும் – அவரது ஆத்திரத்தைத் தவிர – காட்டுவதற்கில்லை.

இந்த இந்துஸ்தானம், இந்து, இந்துமதம் ஆகியவற்றிற்கும், திராவிடநாடு, திராவிடர், திராவிடர் சமயம் ஆகியவற்றுக்கும் அடிப்படையான வேறுபாடுகள் உள்ளன. நிலவளம் முதற்கொண்டு மக்கள் மனவளம் வரை வேறுபாடுகள் உண்டு. வேறுபாடுகள் இருப்பினும் கேடொன்றும் நேரிடாது என்றிருக்கலாம்! முரண்பாடுகள் உள்ளன! அவற்றை மறைத்துப் பயனில்லை; மூடி வைத்து ஆகப் போவது ஒன்றுமில்லை. மிக்க தந்திரத்தோடு ஆரியர் காங்கிரசின் துணையை நாடியோ, இந்து மகாசபையின் துணை கொண்டோ, வெள்ளையரின் துணை கொண்டோ திராவிட மலர்ச்சியைத் தடுக்க முயன்றால், “தாமதம் ஏற்படக் கூடுமே தவிர, ”தடை”யேற்படாது. முடிவு பிரிவினைதான்!

சரிதமும் இலக்கியமும், சான்றோர் சொல்லும் திராவிடமும் தனிநாடாக இருந்ததை மெய்ப்பிக்கின்றன. வேதகாலம் முதற்கொண்டு வேற்று நாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம் வரை திராவிடம் தனி நாடாகவே இருந்தது!

ஆரிய ராஜ்யங்களாகக் காந்தாரம், காம்போஜம், விதேகம் முதலியன இருந்தபோதும், திராவிடம் தனி ஆட்சியாகவே இருந்தது !

இராஜக்கிருகத்தைத் தலைநகராகக் கொண்டு “மகோன்னத” மாக மகதராஜ்யம் நடத்தப்பட்ட போதும், திராவிடம் தனிதான். மகதராஜ்யத்தின் ”மணிகள்’ எனப் பாணினி, பதஞ்சலி முதலிய “ஆரிய சிரேஷ்டர்கள்” ஒளி வீசவும் நாளந்தா, விக்ரமசீலா முதலிய ஆரிய சர்வகலா சாலைகள் ஆரியக் கதிர்களைப் பரப்பியபோதும், ஆரிய ஒளியும் – கதிரும் , விந்தியத்தைத் துளைத்துக் கொண்டு திராவிடத்தினுள்ளே வரமுடியவில்லை, திராவிடம் தலை நிமிர்ந்தே நின்றது.

சாணக்கியத் தந்திரம் இந்து சாம்ராஜ்யத்தைக் கட்டியாண்ட சந்திரகுப்தன் காலத்திலும், திராவிடம் தனியாகவே இருந்தது.

படிக்க:
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

அன்புடன் கூடிய ஆட்சியை நடத்திய அசோகர் காலத்தில் மட்டுமே, திராவிட எல்லைப் பிரதேசத்தின் ஒரு பகுதியை வடநாட்டு வல்லரசு தன்னுள் கொண்டிருந்தது. கடுமையான கலிங்கப் போருக்குப் பிறகு, இந்தப் பகுதி அசோகர் ஆட்சிக்குட்பட்டது. ஆனால் அந்தப் போரில் கலிங்கர் காட்டிய வீரம் அசோகரைத் திணற வைத்ததுடன், விடுதலை வீரர்கள் மடிந்து வீழ்ந்த குழிகள் அவரது குலையை நடுங்க வைத்தது! அதனால் இனிச் சண்டையே வேண்டாம் என்று கூறுமாறும் அன்புடன் ஆளவேண்டும் என்ற போக்கை அவர் கொள்ளும்படியும் செய்வித்தது. திராவிடம் காட்டிய வீரம் அசோகருக்கு அறத்தின் மீது அளவிலாப் பற்றுப் பிறக்கும்படிச் செய்தது.

குஷான் வகுப்பினர் ஏற்படுத்திய இராஜ்யம், விரிந்து பரந்து இருந்தது; ஆனால் விந்தியத்தோடு நின்றது. திராவிடம் தனி நாடே.

சந்திரகுப்தன்.

வீணை வாசிப்பதால் விற்பன்னர்களைப் பரவசப்படுத்தவும், வாள் எடுத்து வீசுவதால் வீரர்களைப் பயங்கொள்ளச் செய்யவும் ஒருங்கே ஆற்றல் பெற்றவரும் இந்திய நெப்போலியன் என்ற பட்டத்தைச் சரித்திராசிரியரிடமிருந்து பெற்றவரும், சூரனுமாகிய சந்திரகுப்தன் தனது வீரம் முழுவதையும் நர்மதை ஆற்றுக்கு மேலேதான் காட்ட முடிந்தது. திராவிடம் புகவில்லை !

மாளவம், கூர்ஜரம், சௌராஸ்டிரம் ஆகிய ராஜ்யங்களை வீழ்த்தியவனும் காளிதாஸர், அமரசிம்மர், தன்வந்திரி ஆகிய ஆரியக் கலைவல்லாருடன் அளவளாவி ஆண்டவனுமான விக்கிரமாதித்தியன் என்ற காரணப் பெயரும், இரண்டாம் சந்திரகுப்தன் என்ற இயற்கைப் பெயரும் பெற்ற மன்னனையும் விந்தியம் மடக்கிவிட்டது. அவன் திராவிடநாடு புகவில்லை !

ஆரியம் உச்சநிலை அடைந்திருந்த காலம் அது. ‘பொற்காலம்’ என்று புகழ்பெற்ற நேரம், புரோச் காம்பே துறைமுகங்களில் வியாபாரம் செழித்த சமயம். ஆரியபட்டர் தமது ஆற்றலைக் காட்டிய நேரம். ‘இந்து மதம்’ என்றுமடையா ஆதிக்கம் பெற்று புத்த மதத்தை ஒடுக்கிய சமயம். அந்தப் பொற்காலத்திலும் (Golden Age) திராவிடம் தனி நாடாகவே தழைத்திருந்தது.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

கடிதங்களைக் கண்டதும் கட்டுகள் போட்ட கரங்கள் விடுதலை பெற்றன

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 7-அ

“லெப்டினன்ட் க்யோஸ்தியேவ், குதி போடுங்கள்! அட, நீங்கள் என்ன இப்படி?”

க்யோஸ்தியேவின் உடம்பு சிலிர்த்ததை மெரேஸ்யெவ் கண்டான். அக்கணமே க்யோஸ்தியேவ் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நடுங்கும் குரலில் அலட்சியபாவத்தைக் காட்ட முயன்றவாறு, “தவறு. பக்கத்து வார்டிலே வேறு யாரோ ஒரு க்யோஸ்தியேவ் இருந்தான்” என்றான்.

எனினும், தாதி கொடிபோன்று உயர்த்திப் பிடித்திருந்த மூன்று உறைகளை அவனுடைய விழிகள் ஆர்வத்துடன், நம்பிக்கை தோன்ற நோக்கின.

“இல்லை, உங்களுக்குத்தான். பாருங்கள்: லெப்டினன்ட் கி. மி. க்யோஸ்தியேவுக்கு என்று எழுதியிருக்கிறதே. நாற்பத்து இரண்டாம் வார்டு என்றும் குறித்திருக்கிறது. ஊம்?”

கட்டுகள் போட்ட கரம் போர்வைக்கு உள்ளிருந்து ஆசையுடன் வெளியே துள்ளி வந்தது. கடிதத்தைப் பற்களால் பற்றி பொறுமையின்றிக் கிள்ளிக் கிள்ளி அவன் உறையைப் பிரித்த போது கை நடுங்கிக் கொண்டிருந்தது. க்யோஸ்தியேவின் கண்கள் கட்டுக்களின் இடையிலிருந்து சுடர் வீசின. விஷயம் விந்தையாக இருந்தது. ஒரே பல்கலைக்கழகத்தில் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மூன்று தோழிப் பெண்கள் வெவ்வேறு கையெழுத்துக்களில், அனேகமாக ஒரே விஷயத்தை வெவ்வேறு சொற்களில் எழுதியிருந்தார்கள். டாங்கிப்படை வீரர் லெப்டினன்ட் க்யோஸ்தியேவ் காயமடைந்து மாஸ்கோவில் சிகிச்சை பெற்று வருவதாக அறிந்து அவருடன் கடிதத் தொடர்பு கொள்ள அவர்கள் தீர்மானித்தார்களாம். அவர்களுடைய நச்சரிப்பால் லெப்டினன்ட் க்யோஸ்தியேவ் கோபம் அடையாவிடில், தாம் எப்படியிருக்கிறார், அவர் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று எழுதும்படி கேட்டுக் கொள்கிறார்களாம். “அன்யூத்தா” என்று கையொப்பம் இட்டிருந்த ஒரு பெண் எழுதியிருந்தாள்: “ஏதாவது ஒரு விதத்தில் தங்களுக்கு உதவ என்னால் முடியாதா? தங்களுக்கு நல்ல நூல்கள் ஒருவேளை வேண்டியிருக்குமே? ஏதேனும் தேவைப்பட்டால் கூச்சப்படாமல் எனக்கு எழுதுங்கள்.”

க்யோஸ்தியேவ் பகல் முழுவதும் இந்தக் கடிதங்களைத் திருப்பித்திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான், முகவரிகளைப் படித்தான், கையெழுத்துக்களை ஊன்றிக் கவனித்தான். இவ்வகையான கடிதப் போக்குவரத்துக்களை அவன் கட்டாயமாக அறிந்திருந்தான். ஆனால் இந்தக் கடிதங்கள் எதிர்பாராத விதமாக ஒரே சமயத்தில் வந்திருந்தன என்பதுதான் அவனுக்கு வியப்பளித்தது. மருத்துவப்பிரிவு மாணவிகள் அவனுடைய போர்ச் செயல்கள் பற்றி எப்படித் திடீரென்று தெரிந்து கொண்டார்கள் என்பதும் விளங்கவில்லை. வார்டுக்காரர்கள் எல்லாருமே இந்த விஷயம் புரியாமல் திகைத்தார்கள் – யாவரிலும் அதிகமாகத் திகைத்தார் கமிஸார். ஆனால் அவர் ஸ்தெபான் இவானவிச்சுடனும் மருத்துவத் தாதியுடனும் பரிமாறிக் கொண்ட பொருள் பொதிந்த பார்வையை மெரேஸ்யெவ் கண்டு கொண்டான். இது கமிஸாரின் கைவேலைதான் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது.

அது எப்படி ஆயினும் மறுநாள் காலையில் க்யோஸ்தியேவ் கமிஸாரிடம் காகிதங்களை கேட்டு வாங்கி, வலது கையை மருத்துவர் அனுமதி இன்றியே கட்டவிழ்த்து, சாயங்காலம் வரை எழுதுவதும் அடிப்பதும் கசக்கி எறிவதும் மறுபடி எழுதுவதுமாக, தனது அறிமுகமற்ற கடிதத் தோழிகளுக்குப் பதில் வரைந்து கொண்டிருந்தான்.

இரண்டு பெண்கள் தாமாகவே ஒதுங்கிக் கொண்டார்கள். ஆனால் அக்கறையுள்ள அன்யூத்தா மூவருக்கும் சேர்த்து எழுதலானாள். க்வோஸ்தயேவ் ஒளிவு மறைவற்ற சுபாவம் உள்ளவன். எனவே மருத்துவப் பிரிவின் மூன்றாவது ஆண்டு வகுப்பில் நடப்பதை வார்டு முழுவதும் அறிந்து கொண்டது.

க்வோஸ்திக் பேச மட்டும் தொடங்கவில்லை. அவன் ஒரு வகையில் முற்றிலும் மலர்ந்து விட்டான். அவன் உடல் நிலை விரைவாகச் சீர்படலாயிற்று. குக்கிஷ்கினுக்கு வைத்துக் கட்டப்பட்டிருந்த சிம்பு எடுத்து விடப்பட்டது. ஸ்தெபான் இனாவிச் கவைக்கோல்கள் இல்லாமல் நடக்கப் பயின்றார், போதிய அளவு நேராக முன் செல்லலானார். கமிஸாருக்கும் மெரேஸ்யெவுக்கும்தான் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிகொண்டு போயிற்று. அதிலும் கமிஸார் வெகு விரைவாகப் படுத்த படுக்கை ஆகிவிட்டார்.

அறைத்தாதி தினந்தோறும் காலையில் அவருடைய முகத்தைக் கழுவித் துடைப்பாள், சிறு கரண்டியால் அவருக்கு உணவு ஊட்டுவாள். கொடிய வேதனை அல்ல, இந்த ஏலாமைதான் அவரை வாட்டி வதைக்கிறது, அவருக்குக் கட்டுக்கு அடங்காத கோபம் உண்டாகிறது என்பது எல்லோருக்கும் புலப்பட்டது. ஆனால் அப்போதும் அவர் உள்ளம் சோர்ந்து விடவில்லை. முன் போலவே அவருடைய கட்டைக் குரல் பகலில் அதிர்ந்து ஒலித்தது, செய்தித் தாள்களில் செய்திகளை முன் போலவே ஆர்வத்துடன் அவர் படித்தார், ஜெர்மானிய மொழியைக் கூட தொடர்ந்து கற்றுக் கொண்டார். ஸ்தெபான் இவனாவிச் தனிப்பட அமைத்த கம்பிப் புத்தகந்தாங்கி மீது அவருக்காகப் புத்தகங்களை வைக்க வேண்டியதாயிருந்தது, ஸ்தெபான் இனாவிச் அவர் அருகே உட்கார்ந்து அவருக்காகப் பக்கங்களை திருப்பினார் என்பதுதான் வித்தியாசம்.

அவருடைய உடல் எவ்வளவு பலவீனம் அடைந்து திறனிழந்ததோ அவருடைய உள்ளம் அவ்வளவே அதிகப் பிடிவாதமும் வலிமையும் பெற்றதாகத் தோன்றியது. முன் போன்ற அதே அக்கறையுடன் அவர் ஏராளமான கடிதங்களைப் படித்து அவற்றிற்கு பதில்கள் அளித்து வந்தார். பதில்களை அவர் சொல்ல, குக்கூஷ்கினோ அல்லது க்வோஸ்தியேவோ எழுதுவார்கள். ஒரு நாள் சிகிச்சைக்குப் பிறகு உறங்கத் தொடங்கியிருந்த அலெக்ஸேய் அவருடைய இடிக் குரலைக் கேட்டு விழித்துக் கொண்டான்.

“சிவப்பு நாடாக்காரர்கள்!” என்று கோபம் பொங்க முழங்கினார் கமிஸார். கம்பிப் புத்தகந்தாங்கியில் வைத்திருந்த டிவிஷன் தினத்தாள். “படைப் பிரிவிலிருந்து வெளியே எடுத்துச் செல்லலாகாது” என்ற உத்தரவை மதியாமல் ஒரு நண்பன் அதை கமிஸாருக்கு ஒழுங்காக அனுப்பிக் கொண்டிருந்தான். “அங்கே தற்காப்பில் உட்கார்ந்து அவர்களுக்கு மூளை மழுங்கிவிட்டது. க்ரோவ்த்ஸோவாவது, அதிகாரச் சடங்கு பாராட்டுபவனாவது! சேனையிலேயே தலைசிறந்த மிருகவைத்தியன் சடங்கு பாராட்டுபவனோ ? கிரிகோரிய், எழுது, எழுது, இந்தக் கணமே!”

சேனையின் இராணுவ சபை உறுப்பினர் ஒருவருக்குச் சினம் பொங்கும் அறிக்கையை அவர் சொல்ல க்வோஸ்தயேவ் எழுதலானான். உழைப்பாளியான ஒரு நல்ல மனிதனுக்குக் காரணமின்றி அவப்பெயர் சூட்டிய பொறுப்பற்ற ‘எழுத்தர்களை’ அடக்கிவைக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

மருத்துவத்தாதி வசம் கடிதத்தை அனுப்பிய பிறகும் அவர் இம்மாதிரிச் “சளப்பர்களை” வெகுநேரம் வரை காரசாரமாகத் திட்டி நொறுக்கிக் கொண்டிருந்தார். தலையணை மேல் தலையை திருப்பக் கூட ஏலாத வாயிலிருந்து செயலார்வம் ததும்பும் இந்தச் சொற்களைக் கேட்க விந்தையாக இருந்தது. …

படிக்க:
“ஏன் குல்லா அணிந்திருக்கிறாய் ? ஜெய் ஸ்ரீராம் சொல்” கொல்கத்தாவில் காவிகளின் வன்முறை !
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

மாலையில் கமிஸார் உடல் நிலை இன்னும் மோசமாயிற்று. கற்பூரத் தைலம் ஊசி மூலம் செலுத்தப்பட்டது. ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. நெடு நேரம் அவருக்கு நினைவு திரும்பவில்லை. உணர்வுக்கு வந்ததுமே கமிஸார் ஆக்ஸிஜன் பையும் கையுமாகத் தம் அருகே நின்ற க்ளாவ்தியா மிஹாய்லவ்னாவை நோக்கிப் புன்முறுவல் செய்ய முயன்றார்.

நோயுடன் கடும் போராட்டத்தில் ஆவேசம் பொங்க எதிர்த்து நின்றவாறு இந்த, விறல் மிக்க மனிதர் நாளுக்கு நாள் வலிமை குன்றுவதைக் காணத் தாங்க முடியாத வேதனை உண்டாயிற்று.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் புகார் !

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் – மீளவிட்டான் மக்கள் ஆட்சியரிடம் புகார் !

மதிப்புடையீர்,

எங்கள் கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் நாடார், கோனார், பறையர், அருந்ததியர் என அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.

கடந்த ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகளிலிருந்து விடுபடுவதற்காக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டம் நடந்தது. எங்கள் கிராமத்திலும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எங்கள் ஊரில் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அமைதிப் போராட்டம் நடத்தினோம்.

மே-22, 2018-ல் நடந்த இப்போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு அப்பாவி மக்கள் 13 பேர் பலியானார்கள். நிறைய பேர் நிரந்தர ஊனமாகி காணப்படுகின்றனர். அதன் பிறகு தமிழக அரசு அரசாணை பிறப்பித்து அதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை தற்போது வரை மூடியுள்ளது. இந்த நிலைமையில் ஸ்டெர்லைட் நிறுவனம் எங்கள் ஊரில் மரக்கன்று நடுவது, குடிதண்ணீர் விநியோகிப்பது, பள்ளிக் குழந்தைகளுக்கு கல்விக் கடன் கொடுப்பது, மாதா மாதம் சிலர் பெயரில் வங்கியில் பணம் டெபாசிட் செய்வது என்ற பெயரில் எங்கள் ஊரில் பொது அமைதியைக் குலைக்கிறது.

தற்போது அரசாணை மூலமும், நீதிமன்றத் தீர்ப்பாணை மூலமாகவும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் எந்த பிரச்சினையும் இன்றி நாங்கள் அமைதியாக எந்த போராட்டமும் செய்யாமல் அரசு ஆணைக்கு கட்டுப்பட்டு உள்ளோம்.

மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அளித்த மனுவின் நகல் :

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

ஆனால் எங்கள் ஊரைச் சேர்ந்த ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் சிலர் ஸ்டெர்லைட்டிடமிருந்து முறைகேடாக பணத்தைப் பெற்றுக்கொண்டு ஊரின் பெயரை தவறாக பயன்படுத்தி லாபம் அடைந்து வருகின்றனர். அவர்களால் எங்கள் ஊரில் பொது அமைதி குலைந்து சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக சம்பத்தப்பட்ட காவல் நிலையங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் – இதற்கு முன்பு பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 18.6.2019-ம் தேதி நாளிதழ்களில் ஸ்டெர்லைட் சார்பில் தூத்துக்குடி பகுதியை சுற்றி சிறுதொழில்களை ஊக்குவிக்கும் விதமாக, கிராம மக்கள் 122 பேருக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் இஸ்திரி பெட்டி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியதாகவும் செய்திகள் வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கு எங்கள் ஊரைச் சேர்ந்த முத்துராஜ் மற்றும் பழனிக்குமார் உள்ளிட்டோர் தங்களை ஊர்த் தலைவர் என்று அறிவித்துக் கொண்டு அந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்துள்ளனர். இந்தச் செய்தி எங்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

படிக்க :
♦ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை ! பசுமை தீர்ப்பாய உத்தரவு செல்லாது ! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு !
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

ஏனெனில் எங்கள் கிராமத்தில் மேற்படி இருவரும் கிராமத் தலைவர்கள் கிடையாது. அவர்கள் தங்களைத் தாங்களே கிராமத் தலைவர்கள் என்று அறிவித்துக் கொண்டு ஸ்டெர்லைட்டிடம் இருந்து பணம் பெற்று வருகின்றனர். ஊரில் உள்ள ஒரு சிலருக்கு பணத்தாசை காண்பித்து ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என்று அரசாணைக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்கள்.

இதனால் எங்கள் ஊரில் சட்டம் ஒழுங்கு கெட்டு பொது அமைதி சீர்குலைந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் நாடார் சமூகத்திற்கு தங்கவேல் நாடார் என்பவரும், கோனார் சமூகத்துக்கு மாடசாமி கோனார் என்பவரும் தலைவர்களாக உள்ளனர். உண்மை இவ்வாறு இருக்க மேற்படி முத்துராஜ் மற்றும் பழனி குமார் தங்களை தலைவர்களாக அறிவித்துக்கொண்டு ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கி வரும் முறைகேடான பணத்தையும், பொருட்களையும் பெற்றுக்கொண்டு எங்கள் ஊர் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருகின்றனர். நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பணம் பெறுவதை பாவம் என்றும், இறந்த 15 பேருக்கு செய்யும் துரோகம் எனவும் கருதுகிறோம்.

எங்கள் ஊர் பொதுமக்கள் முடிவுக்கு விரோதமாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும் செயல்பட்டுக்கொண்டு ஊரில் குழு மோதல்களை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தூண்டிவிடும் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் மீதும், முத்துராஜ் மற்றும் பழனிக்குமார் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் மனு அளித்துள்ளோம்.

இப்படிக்கு
மீளவிட்டான் கிராம பொதுமக்கள்,
தூத்துக்குடி.

நாசா அதிர்ச்சி : மீனாட்சி அம்மன் கோவிலின் விண்வெளி அதிசயங்கள் !

ஜூன் 23 அன்று வெளியான வாரமலர் இதழில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குறித்த கட்டுரை ஒன்று வெளியாகியிருக்கிறது. அதைப் படித்தால் தலை சுற்றுகிறது. முதலில் இணைக்கப்பட்டிருக்கும் படங்களில் உள்ள கட்டுரையைப் படித்துவிடுங்கள்.

இதைப் படித்த பிறகு, ஒரு விஷயம் தெளிவாகப் புரியும். அதாவது இத்தனை ஆண்டுகளாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலைப் பார்த்துப் பயந்துபோயிருந்த நாசா தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்த்துப் பயந்து போயிருக்கிறது !

இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் வரிகள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

1. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கண்காணித்தபோது பல அறிவியல் அற்புதங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். பிறகு, வாழ்க்கையே ஒரு வட்டமாக இருந்த நிலையில், இந்தக் கோவில் மட்டும் சதுரமாக இருந்ததாம். சமூகத்தில் எல்லோரும் சமம் என உணர்த்துவதற்காக இப்படிக் கட்டப்பட்டிருக்கிறதாம்.

Fact: உண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செவ்வக வடிவமானது. இரு பக்கங்கள் 254 மீட்டர் நீளத்தையும் மற்ற இரு பக்கங்கள் 237 மீட்டர் அளவையும் கொண்டவை. அதுபோக, எல்லோரும் சமம் என நிரூபிக்க கோவிலை எதற்கு கஷ்டப்பட்டு சதுரமாக கட்டவேண்டும். எல்லா ஜாதியினரையும் அர்ச்சகராக்கிவிட்டால் போதாதா?

2. நீள்வட்டப் பாதையில் சுற்றும் செயற்கைக் கோளால், சதுர வடிவமான மீனாட்சி அம்மன் கோவிலைப் படம் பிடிக்க முடியாது.

Fact: உலகம் முழுவதும் எவ்வளவோ சதுர வடிவ கட்டடங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் செயற்கைக்கோள்கள் படம் பிடிக்காதா? இந்தக் கேள்வி ஒரு பக்கமிருக்க மீனாட்சி அம்மன் கோவிலை செயற்கைக்கோள் எடுத்த படத்தையும் இங்கே பார்க்கலாம்.

3. 1984-ல் ஜெர்மனியைச் சேர்ந்த மைக்கல் கெப்ளர் என்ற விஞ்ஞானி சதுரவடிவில் ஒரு செயற்கைக்கோளை அனுப்பி மீனாட்சி அம்மன் கோவிலை படம் பிடித்தார்.

Fact: மைக்கல் கெப்ளர் என ஜெர்மன் விஞ்ஞானி யாரும் கிடையாது. தவிர, 1984-ல் மைக்கல் கெப்ளர் மட்டுமல்ல, ஜெர்மனியே எந்த செயற்கைக்கோளையும் விண்ணுக்கு அனுப்பவில்லை.

4. சதுரமான கோவில் வட்டவடிவமாகத் தெரிய கோவிலின் ஒரு கோபுரமான மொட்டை கோபுரம் தான் என்பதைக் கண்டறிந்தார். சாட்டிலைட் சிக்னல்களை கிரகிக்கும் மற்ற கோபுரங்கள் அதை மொட்டை கோபுரத்திற்கு டிரான்ஸ்பர் செய்யும். மொட்டை கோபுரம் அந்த சிக்னல்களை கிரகித்து குழப்பி அடித்து புது சிக்னலை சாட்டிலைட்டிற்கு அனுப்பும்.

Fact: கோபுரங்களின் மீது கலசங்களும் இடிதாங்கிகளும்தான் இருக்கின்றனவே தவிர, டிரான்ஸ்பான்டர்கள் ஏதும் கிடையாது.

5. அதே போல மொட்டை கோபுரத்தின் மீது எந்த இராடாரும் வேலை செய்யாது எனவும் கண்டறிந்தார்..

Fact: இராடாரை எங்கு பொறுத்தினாலும் வேலை செய்யும். ஆனால், கோவில் கோபுரத்தின் மீது ஒருவரும் பொறுத்த மாட்டார்கள்.

6. ஆயிரங்கால் மண்டபம் உண்மையில் 965 கால்கள் உடையது என்பதை அறிந்து மிகவும் வியந்து போனார். காரணம் 965 என்பது விண்வெளியில் தவிர்க்க இயலாத எண்!! ஸ்பேஸ் சென்டர்களை நிலை நிறுத்தும் உயரத்தை 965 Stand எனக் குறிப்பிடுவார்கள்.!

Fact: ஆயிரங்கால் மண்டபம் 965 தூண்களைக் கொண்டதல்ல. 985 தூண்களைக் கொண்டது. மீதி 15 தூண்கள் இருக்க வேண்டிய இடத்தில் விஸ்வநாதர் சன்னிதி இருக்கிறது. தவிர, 965 ஸ்டான்ட் என விண்வெளியில் ஏதும் கிடையாது.

படிக்க :
♦ கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !
♦ தோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி

7. வாணியன் கிணற்று சந்துக்கு செல்லும் கிணற்று சுரங்கத்தில் இருந்த கல்லை புகைப்படம் எடுத்தவர் அதை என்லார்ஜ் செய்து பார்த்த போது ஓ.. ஜீசஸ் என அலறியே விட்டார்.! அப்பாறையில் இருந்த வரி வடிவங்கள் அச்சு அசலாக இராக்கெட்டுகளின் சர்க்யூட் பேனல்களின் வடிவத்தில் இருந்தது!!!

Fact: கிணற்றுச் சுரங்கம் எப்போதோ மூடி பூசப்பட்டுவிட்டது. அதிலிருந்து எந்தக் கல்லையும் யாரும் எடுக்க முடியாது.

8. மேலும் பொற்றாமரைக் குளத்தருகே மட்டும் இரவில் அமாவாசை பவுர்ணமி இரண்டிலும் ஒரே அளவுள்ள வெளிச்சம் இருப்பதைப் பார்த்து அதிசயத்து போனார்! அது எப்படி என்று இன்றுவரை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை.!

Fact: இதை கோவில் நிர்வாகத்திடம் கேட்டால் சொல்லியிருப்பார்கள். காரணம், அங்கு பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் அம்மாவாசை, பௌர்ணமி தினங்களில் ஒரே மாதிரிதான் எரியும். அதனால், வெளிச்சத்தில் எந்த மாறுபாடும் இருக்காது. அதுமட்டுமல்ல, தேர்தல் நடக்கும் தினம், ரம்ஜான் தினத்தன்றுகூட எந்த மாறுதலும் இருக்காது.

9 . சித்தர் சந்நிதி, தட்சிணாமூர்த்தி சந்நிதி, முக்குறுணி விநாயகர் சன்னிதி, இவையெல்லாம் விண்வெளி வீரர்கள் அமரும் சேம்பர்கள் வடிவில் கட்டப்பட்டிருந்தன!!

Fact: மீனாட்சி அம்மன் கோவிலைப் பார்க்காதவர்கள்தான் இப்படி எழுத முடியும். உண்மையில் இந்த சன்னிதிகள் வெவ்வேறு வடிவில் அமைந்தவை. விண்வெளி வீரர்கள் இருக்கும் ராக்கெட்டுகள் வட்ட வடிவிலானவை.

10. நாயன்மார்கள் பிரகாரம்,108 லிங்கங்கள் பிரகாரம் இவையெல்லாம் ஸ்பேஸ் ஷட்டில் வடிவில் கட்டப்பட்டிருந்ததை பிரமிப்புடன் பார்த்தார்.

Fact: நாயன்மார் சிலைகளும் 108 லிங்கங்களும் சுவாமி சன்னதி அம்மன் சன்னதியிலும் பிரகாரங்களிலும் அமைந்திருக்கின்றன. தனியாக சன்னதி கிடையாது.

ஷப்பா…

(அது ஏன் எப்போது பார்த்தாலும் நாசா மட்டுமே நம் கோவில்களைப் பார்த்து வியக்கிறது? இஸ்ரோ, ராஸ்காஸ்மாஸ், SpaceX, JAXA, CSAASC, CNSA, ESA போன்றவையெல்லாம் வியப்பதில்லை? அவற்றுக்கு வியக்கத் தெரியாதா? நாசா விஞ்ஞானிகள் மட்டும் வேலைவெட்டியை விட்டுவிட்டு எந்நேரம் பார்த்தாலும் வியந்துகொண்டேயிருக்கிறார்கள்?)

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

***

தமிழ்நாட்டில் பெரும் நிலவுடமையாளர்கள் கடவுளர்கள்தான். அதனாலேயே, நிலச் சீர்திருத்தங்கள் என்பவை மிகச் சிக்கலான ஒரு காரியமாகவே தமிழ்நாட்டில் இருந்துவருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள், மடங்களுக்குச் சொந்தமாக மட்டும் சுமார் 28 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த நிலங்கள் மூலம் கடவுள்களும் கோவில்களும் பயனடைவதில்லை என்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது.

குறிப்பாக, தமிழகத்தில் பெரும் அளவில் நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் கடவுள் நாகப்பட்டினத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர். கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏக்கர் நிலம் அவருக்குச் சொந்தம். ஆனால், 90களில் அந்தக் கோவிலின் வருவாய் வருடத்திற்கு சுமார் ரூ. 34,000. அப்படியானால், இந்த நிலங்களை யார் அனுபவிக்கிறார்கள்,ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்பதை அவரவர் யூகங்களுக்கே விட்டுவிடலாம்.

பேராசிரியர் வி. சிவப்பிரகாசம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்த ஆய்வேடு ஒன்று, கோவில்களின் நிலவுடமை குறித்தும், அதனை மீறி தமிழக அரசுகள் எப்படி நிலச் சீர்திருத்தத்தைச் செய்ய முயன்றன என்பது குறித்தும் ஆராய்கிறது. இதில் பல எளிதில் கிடைக்காத புள்ளிவிவரங்களும் இருக்கின்றன.

புத்தகத்தின் தலைப்பு: Temple Lands and the Agrarian Reforms in Tamilnadu during the Dravidian Rule.
270 பக்கங்கள்.
விலை : ரூ. 280/-

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

குற்றமும் தண்டனையும் | பொருளாதாரம் கற்போம் – 24

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 24

குற்றமும் தண்டனையும்
அ.அனிக்கின்

ருடங்கள் உருண்டோடின. புவாகில்பேர் புதிதாகப் புத்தகங்கள் வெளியிடக் கூடாதென்று அமைச்சர் உத்தரவு போட்டிருந்தார்; தன் கருத்துக்களைச் செயல்படுத்துகிற காலம் வரும் என்ற நம்பிக்கையில் அவர் பொறுத்துக் கொண்டிருந்தார்.

கடைசியில் 1705-ம் வருடத்தில் அவருடைய “பொருளாதாரப் பரிசோதனையைச்” செய்வதற்கென்று ஆர்லியான் மாநிலத்தில் ஒரு பகுதி அவரிடம் ஒதுக்கித் தரப்பட்டது. இந்தப் பரிசோதனையை அவர் எத்தகைய சூழ்நிலையில் எப்படிச் செய்தார் என்பது சரியாகத் தெரியவில்லை. எப்படி இருந்த போதிலும், அந்தப் பரிசோதனை அடுத்த வருடத்திலேயே தோல்வியில் முடிவடைந்தது. இத்தகைய ஒரு பரிசோதனையை ஒதுங்கியுள்ள ஒரு சிறு வட்டாரத்தில் – செல்வாக்குள்ள சக்திகளின் எதிர்ப்புக்கு இடையில் – செய்தால், அதற்கு வெற்றி கிடைக்குமா?

இனி அவரை எதுவும் தடுக்க முடியவில்லை. 1707-ம் வருடத்தின் தொடக்கத்தில் அவர் தன்னுடைய கட்டுரைகளின் இரண்டு தொகுப்புகளை வெளியிட்டார். அவற்றில் தத்துவ ரீதியான ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தவிர அரசாங்கத்தின் மீது தீவிரமான குற்றச்சாட்டுகளும் அரசியல் தாக்குதல்களும் அபாய அறிவிப்புகளும் அடங்கிய கட்டுரைகளும் இருந்தன. இதற்குப் பதில் கிடைப்பதற்கு அதிகமான காலதாமதம் ஆகவில்லை. புத்தகங்கள் தடை செய்யப்பட்டன; அதன் ஆசிரியர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

புவாகில்பேருக்கு இப்பொழுது வயது அறுபத்தொன்று. அவருடைய குடும்பம் பெரியது – ஐந்து குழந்தைகள். அவருடைய சொந்த விவகாரங்களில் அதிகமான சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. அவருடைய உறவினர்கள் அவரை அமைதிப் படுத்துவதற்கு முயற்சி செய்தார்கள். அவருடைய தம்பி ருவான் நகரத்தில் நீதிமன்றத்துக்கு ஆலோசகராகவும் எல்லோராலும் மதிக்கப்பட்டவராகவும் இருந்தார். அவர் தன்னுடைய அண்ணனுக்காகப் பரிந்து பேசினார்.

அவருக்காகப் பரிந்து பேசுவதற்குப் பலர் இருந்தார்கள். ஷமில்லாரும் அரசாங்கம் விதித்த தண்டனையின் பொருந்தாத் தன்மையை உணர்ந்தார். ஆனால் திட்டங்களைத் தயாரிக்கும் அந்தப் பைத்தியக்காரன் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். கற்சுவரின் மீது தலையை மோதிக் கொள்வதால் பலனில்லை என்பதை புவாகில்பேரும் உணர்ந்தார். எனவே அவரும் பற்களைக் கடித்தபடியே ஒத்துக் கொண்டார்.

அதன் பிறகுதான் அவர் ருவானுக்குத் திரும்புவதற்கு அனுமதி கிடைத்தது. அவர் ஊருக்குத் திரும்பிய பொழுது நகர் மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றுச் சிறப்பளித்தார்கள் என்று அவருடைய சமகாலத்துக் கட்டுரையாளரான சான்-சிமோன் கோமகன்(1) எழுதியிருக்கிறார். (இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கும் பல விவரங்களுக்காக நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்).

படிக்க:
இத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி !
♦ உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

இதற்குப் பிறகு புவாகில்பேர் மீது நேரடியான அடக்குமுறை ஒருபோதும் பிரயோகிக்கப்படவில்லை. அவர் தம்முடைய புத்தகங்களுக்கு இன்னும் மூன்று பதிப்புகளை வெளியிட்டார்; அவற்றில் தகராறுக்குரிய பகுதிகளை நீக்கியே வெளியிட்டார் என்பதும் உண்மையே. ஆனால் அவர் மனமுடைந்து போய்விட்டார்.

1708-ம் வருடத்தில் ஷமில்லார் வகித்த முக்கியமான பதவிக்குக் கொல்பேரின் மகனான டெமரே நியமிக்கப்பட்டார். இவர் கெட்டிக்காரர், திறமைசாலி. இவர் அவமானப்படுத்தப்பட்ட புவாகில்பேரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கொண்டவர். அவரை நிதித்துறை நிர்வாகத்துக்குள் கொண்டு வருவதற்குக் கூட சில முயற்சிகளைச் செய்தார்.

ஆனால் காலம் கடந்துவிட்டது. புவாகில்பேர் மிகவும் மாறிப்போயிருந்தார்; நாட்டின் நிதி நிலைமை வேகமாகச் சீர்கேடடைந்து கொண்டிருந்தது; ஜான் லோவின் பரிசோதனைக்குத் தளம் தயாராகிக் கொண்டிருந்தது. புவாகில்பேர் ருவானில் 1714-ம் வருடம் அக்டோபர் மாதத்தில் மரணமடைந்தார்.

அவருடைய புத்தகங்கள், கடிதங்கள், அவருடைய சமகாலத்தவர்கள் அவரைப் பற்றி எழுதிய குறைவான செய்திகள் ஆகியவற்றிலிருந்து அவர் பலமான ஆளுமை உடையவர் என்பதைத் தெரிந்து கொள்கிறோம். அவரிடம் எல்லா அம்சங்களும் இணைந்து பொருந்தியிருந்தன. சொந்த வாழ்க்கையிலும் மற்ற விவகாரங்களிலும் அவரோடு பழகுவது சுமூகமானதாக இருந்திருக்க முடியாது. ஏனென்றால் பிடிவாதமும் முரட்டுத்தனமும் மன உறுதியும் அவருடைய சிறப்பான குணங்கள்.

”அவருடைய உற்சாகமான இயல்பைப் பொறுத்தவரை, அந்த வகையில் அது ஒப்புவமையில்லாதது” என்று சான்-சிமோன் சுருக்கமாகக் குறிப்பிடுகிறார். எனினும் புவாகில்பேரிடம் அவர் ஆச்சரியம் கலந்த மரியாதை கொண்டிருந்தார் என்பது தெளிவாகும்.

அவருடைய வளைந்து கொடுக்காத சுபாவத்துக்கு அவர் கோட்பாடுகளில் வைத்திருந்த உறுதியே காரணமாகும். முக்கியமானவை, முக்கியம் இல்லாதவை ஆகிய இரண்டிலுமே அவர் தன்னுடைய கோட்பாடுகளை உணர்ச்சி வேகத்தோடு வலியுறுத்தினார். இந்தக் கோட்பாடுகள் அன்று புதுமையானவையாக இருந்தபடியால் தவிர்க்க முடியாத மோதல்கள் ஏற்பட்டன.

ருவான் நகரத்தைச் சேர்ந்த இந்த அடக்கமான நீதிபதி இருபது வருட காலம் விடாப்பிடியாகப் போராடினார்; மன அமைதியையும் வசதிகளையும் பொருளாயத நலன்களையும் இழந்தார். (அவருடைய பிடிவாதத்தை அடக்குவதற்காக ஷமில்லார் விசித்திரமான அபராதங்களை விதித்தார். அவர் பணம் கொடுத்து விலைக்கு வாங்கிய பதவிக்கே மறுபடியும் பணம் கட்ட வேண்டுமென்று உத்தரவு போட்டார்.) அமைச்சர்களுக்கு அவரைப் பிடிக்கவில்லை. அதே சமயத்தில் அவரிடம் அவர்களுக்கு லேசான (உண்மையைச் சொல்வதென்றால் சற்று அதிகமான) பயம் இருந்தது.

புவாகில்பேர் தன்னுடைய கருத்துக்களிலும் கோட்பாடுகளிலும் யாருக்கும் அஞ்சாத நேர்மையோடு உறுதியாக நின்றதில்தான் அவருடைய சிறப்பு அடங்கியிருக்கிறது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) இவர் மாபெரும் கற்பனாவாத சோஷலிஸ்டான சான்சிமோன் பிரபுவின் முன்னோர்.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !

வேண்டாம் ஹைட்ரோ கார்பன் ! எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !!

பொன் விளைந்த பூமியாக இருந்த நைஜர் டெல்டா, எண்ணெய்க் கிணறுகளால் மனிதர்கள் வாழத் தகுதியற்ற பூமியாக மாறிவிட்டது.

கோய் ஆற்றின் கரையில் நிற்கும் எரிக் தூவின் முகம் வியர்வையில் மின்னுகிறது. ஆறும் மின்னுகிறது. அதன் மீது எண்ணெய்ப் படலம். என் பெற்றோர் மிகச்சிறந்த விவசாயிகள்” என்று சொல்லியபடியே ஆற்றோரம் இருக்கும் தனது வயல்வெளியைக் காட்டுகிறார். எங்கும் களைகள் மட்டுமே முளைத்திருக்கின்றன. கடலை, சோளம், மரவள்ளி, கருணைக் கிழங்கு என்று அனைத்தும் விளைந்த நிலம் அது. எங்களுக்குச் சாப்பிடுவதற்கும், விற்பதற்கும், சேமிப்பதற்கும் போதுமான விளைச்சல் இருந்தது. நிலம் வளமாக இருந்தது. இங்கே விவசாயிகள் ஒருபோதும் ஏழையாக இருந்ததில்லை.”

நைஜர் டெல்டா
நைஜர் டெல்டாவை காட்டும் வரைப்படம்

அதெல்லாம் ராயல் டச்சு ஷெல் நிறுவனம் 1950 அங்கே எண்ணெயைக் கண்டுபிடிக்கும் வரைதான். எங்கள் கிராமத்திலிருந்து 70 மைல் தூரத்தில் அவர்கள் எண்ணெயைக் கண்டுபிடித்தார்கள். 80-களின் தொடக்கத்தில்தான் எங்கள் வயல்களில் எண்ணெய் படிவதை நாங்கள் பார்த்தோம். விளைச்சல் மெதுவாகத்தான் குறையத் தொடங்கியது. ஆனால், வரவிருக்கும் அபாயத்தை அப்போது நாங்கள் புரிந்து கொள்ளவில்லை” என்றார் எரிக்.

அந்த டெல்டா பகுதி முழுவதும் குறுக்கு நெடுக்காக ஷெல் நிறுவனத்தின் எண்ணெய்க் குழாய்கள் வந்தன. குழாய்களிலிருந்து எண்ணெய் கசிவது வழக்கமாகிவிட்டது. ஒருபுறம் இப்படி விவசாயம் அழிந்து கொண்டிருக்க, மறுபுறம் டெல்டாவிலிருந்து விவசாயிகளை மொத்தமாக வெளியேற்றுவதற்கான சட்டத்தை இயற்றியது நைஜீரிய அரசு. நாட்டின் நிலம் அனைத்தும் அரசுக்கே சொந்தம்” என்ற கோட்பாட்டின்படி, நிலத்தின் மதிப்புக்கு இழப்பீடு தரவியலாது என்றும், நிலத்தை கையகப்படுத்தும் ஆண்டில் விளைந்த பயிர்களின் மதிப்பு என்னவோ அதன் அடிப்படையில் கணக்கிட்டு மட்டுமே இழப்பீடு என்றும் அறிவித்தது நைஜீரிய அரசு.

மார்ச் 1993-ல், 3 இலட்சம் ஒகோனி இன மக்கள் கென் சரோ  விவா தலைமையில் மாபெரும் அமைதிவழிப் போராட்டத்தை தொடங்கினர். அதன் விளைவாக ஒகோனி பிராந்தியத்தில் இருந்த 30 எண்ணெய்க் கிணறுகளை ஷெல் நிறுவனம் மூடவேண்டியதாயிற்று. இப்போராட்டத்தைத் தொடர்ந்து கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது நைஜீரிய அரசு. கென் சரோவிவா உட்பட, ஒகோனி மக்கள் வாழ்வுரிமைக்கான இயக்கத்தின் தலைவர்கள் 8 பேர் மீது ஒரு பொய்வழக்கில் கொலைக்குற்றம் சாட்டித் தூக்கிலிட்டது நைஜீரிய அரசு. உலகம் முழுவதும் இதற்குக் கண்டனங்கள் எழுந்தன.

மாசடைந்த ஆறு. இந்த ஆற்று நீரைக் குடிக்கவோ அல்லது நீந்தவோ, மீன் பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கும் விளம்பரப்பலகை.

2004-ல் ஏற்பட்ட மிகப்பெரிய எண்ணெய்க் கசிவின் காரணமாக சுமார் 40 ஏக்கர் மாங்குரோவ் காடுகள் நாட்கணக்கில் தீப்பிடித்து எரிந்தன. கோய் கிராமத்தின் வயல்களுக்கும் அந்தத் தீ பரவியது. ஆறுகளிலும் ஓடைகளிலும் இருந்த மீன்கள் அழிந்தன. 2007-ல் மறுபடியும் எண்ணெய்க் கசிவு, மீண்டும் மாங்குரோவ் காடுகள் எரிந்தன. மர்மமான இருமல், புற்றுநோய், நுரையீரல் நோய், பார்வையிழப்பு உள்ளிட்ட இனம்புரியாத பல நோய்கள் பரவத்தொடங்கின. அங்கே வாழவே முடியாது என்ற நிலையில் மொத்த மக்களும் கிராமத்தை விட்டு வெளியேறினர்.

கோய் என்பது இப்போது ஒரு பேய்க் கிராமம். ”தடை செய்யப்பட்ட பகுதி. அருகே வராதீர்கள்” என்று ஒரு எச்சரிக்கைப் பலகையை அந்தக் கிராமத்தில் வைத்திருக்கிறது நைஜீரிய அரசு. இது ஒரு கிராமத்தின் கதை மட்டுமல்ல. நைஜர் டெல்டாவின் கதை.

படிக்க :
♦ இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?

30,000 சதுர மைல் பரப்புள்ள நைஜர் நதியின் டெல்டா ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரியது. உலகின் 3-வது மிகப்பெரிய சதுப்புநிலமும், மாங்குரோவ் காடுகளும் கொண்டது. 3 கோடி மக்கட்தொகை கொண்ட இந்த டெல்டாவின் 60% மக்கள் சுயசார்பு விவசாயிகள் மற்றும் மீனவர்கள்.

உலகிலேயே எண்ணெயால் சூழல் மாசுபடுத்தப்பட்ட பிராந்தியங்களில் நைஜர் டெல்டா முக்கியமான இடத்தில் இருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன் எண்ணெய்க் கசிவு ஏற்பட்ட இடங்களில் கூட இன்றளவும் மண்ணும் நிலத்தடி நீரும் பெரிதும் மாசுபட்டே இருக்கின்றன என்கிறது 2011-ம் ஆண்டு ஐ.நா நடத்திய ஆய்வு. இன்றைக்கும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 1.1 கோடி காலன் எண்ணெய்க் குழாய்களிலிருந்து கசிந்து நைஜர் டெல்டாவை நாசமாக்கிக்  கொண்டிருக்கிறது.

கென் சரோ விவா
நைஜர் டெல்டாவை சீரழித்த ஷெல் எண்ணெய் நிறுவனத்தை எதிர்த்து ஒகோனி இன மக்களை அணித் திரட்டிப் போரடியதற்காக நைஜீரிய இராணுவ சர்வாதிகார அரசால் தூக்கிலிடப்பட்ட போராளி கென் சரோ விவா

சூழலை நாசப்படுத்துவது மட்டுமின்றி, சமூகத்தையும் நாசமாக்குகின்றன எண்ணெய் நிறுவனங்கள். இன்று நைஜீரியாவில் எண்ணெய்த் திருட்டு என்பது ஆண்டொன்றுக்கு 60,000 கோடி ரூபாய் புழங்குகின்ற தொழில். ஆயுதம் தாங்கிய கூலிப்படைகள், சர்வதேச கார்ட்டல்கள், அரசு பாதுகாப்புப் படையினருக்கான இலஞ்சம் எனப் பல கோடி ரூபாய் புழங்கும் இந்த தொழிலில் சுமார் 26,000 பேர் வேலை செய்கின்றனர். 60,000 கோடி ரூபாயில் 80% அரசியல்வாதிகள், இராணுவம் மற்றும் எண்ணெய் வளத்துறையின் அதிகாரவர்க்கத்தினருக்குத்தான் செல்கிறது.

எண்ணெய்க் கசிவு மட்டுமல்ல பிரச்சினை. எண்ணெய்க் கிணறுகளிலிருந்து நிரந்தரமாக எரிகின்ற எரிவாயுத் தீயின் காரணமாக, சூழல் வெப்பமடைவது மட்டுமல்ல, அது அமில மழையாகவும் பூமிக்குத் திரும்ப வருகிறது. நைஜீரிய அரசின் கணக்குப்படியே ஆண்டொன்றுக்கு 31.3 கோடி கன அடி எரிவாயு எரிக்கப்பட்டு, 1.65 கோடி டன் கரியமிலவாயு டெல்டா பகுதியின் காற்றில் கலந்து வருகிறது.

இவ்வாறு சூழல் மாசுபடுவதன் விளைவாக டெல்டா பகுதியில் எங்கு திரும்பினாலும் தோல் நோய்கள், ஆஸ்துமா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களைக் காணமுடிகிறது. அதுமட்டுமல்ல, விளைச்சல் கடுமையாக வீழ்ச்சியடைந்து விட்டது. எண்ணெய் கசிவையும் மீறி வளரும் தானியங்கள் எண்ணெயையும் உட்கொண்டு வளர்கின்றன. இந்த ஆறுகளிலும் ஓடைகளிலும் வளரும் மீன்களிலும் எண்ணெயின் வீச்சம் தெரிகிறது. இந்த தானியத்தையும் மீனையும்தான் மக்கள் சாப்பிடுகிறார்கள்.

விளைவு, இந்தப் பகுதியில் மக்களின் ஆயுட்காலமே குறைந்து விட்டது. நைஜீரிய மக்களின் சராசரி ஆயுட்காலம் 65 ஆண்டுகள். நைஜர் டெல்டாவில் சராசரி ஆயுட்காலம் 40 முதல் 43 ஆண்டுகள்தான்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த ஓடைகளில் மீனும் நத்தையும் பிடித்து அதை விற்றுப் பிழைக்கும் பெண்கள் இங்கே ஏராளம். இந்த தொழில் செய்யும் பெண்கள் தோல் நோய் முதல் இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பலவிதமான நோய்களால் பாதிக்கப்படுவதும் சகஜம்.  ஒரு பெண் கருவுற்றாள். ‘‘உன் குழந்தை பிழைக்க வேண்டுமானால்,  ஓடையில் மீன் பிடிக்கப் போகாதே என்று எச்சரித்திருக்கிறார் மருத்துவர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு அந்த வேலை தவிர வேறு வழியில்லாத காரணத்தால், தொடர்ந்து மீன் பிடிக்கப் போனாள். விளைவு குழந்தை பிறந்த 6 மணி நேரத்தில் இறந்து விட்டது. நீ சுவாசித்த நச்சுக்காற்றுதான் உன் மகனைக் கொன்று விட்டது” என்று மருத்துவர் சொன்னதைக் கேட்டு உடைந்து அழுதாளாம் அந்தப் பெண். இதுபோல ஓராயிரம் கதைகள்.

இச்சூழல் மக்கள் மத்தியில் தோற்றுவித்த கோபத்தின் விளைவாக 2006-ம் ஆண்டில் நைஜர் டெல்டா மீட்பு இயக்கம்” என்ற பெயரில் பல ஆயுதக்குழுக்கள் தோன்றின. அவை நைஜீரிய அரசையும் போலீசையும் எதிர்த்து மோதின. 3 ஆண்டுகள் இந்த மோதல் தொடர்ந்தது. பிறகு 2009-ல் இந்த ஆயுதக் குழுக்களுடன் அரசு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஒகோனி இன மக்கள் ஆர்ப்பாட்டம்
நைஜர் டெல்டா பகுதியில் ஷெல் நிறுவனம் நடத்திய பச்சைப் படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கிற்கு ஆதரவு தரக்கோரி ஒகோனி இன மக்கள் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

அந்த ஒப்பந்தத்தின்படி 30,000 முன்னாள் ‘போராளிகளுக்கு மாதம் தோறும் உதவித்தொகை, தொழில் பயிற்சி, எண்ணெய்க் குழாய்களைப் பாதுகாப்பதற்கான காண்டிராக்டுகள்” ஆகியவற்றைக் கொடுத்து அவர்களை பன்னாட்டு நிறுவனங்களின் கூலிப்படையாக மாற்றிவிட்டது நைஜீரிய அரசு. இதன் விளைவாகப் போராடிய இளைஞர்களில் பலர் மாஃபியா தலைவர்களாக மாறினர்.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தபோது மாத உதவித்தொகையை அரசால் கொடுக்க முடியவில்லை. உடனே ’முன்னாள் போராளிகள்’ மீண்டும் ஆயுதம் ஏந்தினர். குழாய்களை உடைக்கத் தொடங்கினர். உடனே பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கான பாக்கியை செட்டில் செய்தது அரசு. வாழ்விழந்த மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், போராட்டத்தை ஊழல்படுத்தியதன் மூலம் தனக்கான கைக்கூலிகளை அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் உருவாக்கிக் கொண்டன.

படிக்க :
♦ இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
♦ ஹைட்ரோ கார்பன் : தமிழகத்தைச் சுடுகாடாக்க மீண்டும் நுழைகிறது வேதாந்தா !

ஷெல் நிறுவனத்துக்கு எதிராக மட்டும் சுமார் 1000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடியாகின்றன அல்லது சிறிய இழப்பீட்டுக்குப்பின் முடிக்கப்படுகின்றன. மற்றவை ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன.

ஷெல் நிறுவனம், ஆறுகளையும் வயல்களையும் மாசுபடுத்தியதற்கு இழப்பீடு கேட்டும், அவற்றைச் சுத்தம் செய்யக் கோரியும் 1997 எரிக்கின் தந்தை வழக்கு தொடுத்தார். 21 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த வழக்கு முடியவில்லை. ஆனால், பார்வை இழந்து, நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு எரிக்கின் தந்தை இறந்து போனார். இப்போது எரிக் அந்த வழக்கை தொடர்ந்து நடத்துகிறார்.

மீத்தேன் திட்டம்
எரிக் தூ

இத்தகைய வழக்குகளில் ஷெல் நிறுவனம் ஒரு மோசடியான வாதத்தை வழக்கமாக முன்வைக்கும். எண்ணெய்க் கசிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல. எண்ணெய்த் திருடர்கள் குழாய்களைச் சேதப்படுத்துவதுதான் காரணம்” என்று வாதிடும்.

ஒரு வாதத்துக்கு அதனை ஏற்றுக் கொண்டாலும், விளைநிலத்திலிருந்து விவசாயிகளை விரட்டி விட்டு, எண்ணெய்க் குழாய் போட்டால், பெண்டு பிள்ளைகளுக்குச் சோறு போடுவதற்காகச் சிலர் திருடத்தானே செய்வார்கள்?

ஆறுகளில் படிந்து விட்ட எண்ணெயை அகற்றுவோம்; விளை நிலத்தைச் சுத்தம் செய்து மீட்டுருவாக்கம் செய்வோம்; மீண்டும் மாங்குரோவ் காடுகளை உருவாக்குவோம்” என்று கூறுகிறது ஐ.நா-வின் ஹைட்ரோ கார்பன் மாசு அகற்றும் திட்டம். அவர்களது கணக்குப்படியே இதற்கு 30 ஆண்டுகள் ஆகுமாம்.

இன்று அப்பகுதி மக்கள் குடிக்கும் தண்ணீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 900 மடங்கு அதிகமாக பென்சீன் கலந்திருக்கிறது. நல்ல குடிநீருக்கும் வழியில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ சோதனைகூடச் செய்யப்படவில்லை.

“என்னையே எடுத்துக் கொள்ளுங்கள், நான் ஒரு வசதியான விவசாயியின் மகன். ஆனால், எனக்குக் கிடைத்திருக்கும் சொத்து – வறுமை. பலருக்கு வேலை கொடுத்த நான் இன்று வேலை தேடுகிறேன். குழந்தைகளுக்குச் சோறு போட முடியவில்லை, படிக்கவைக்க முடியவில்லை. என்னுடைய தந்தை வாழ்நாள் முழுவதும் போராடி, நீதியைக் கண்ணால் காணாமலேயே செத்துப்போனார். இப்போது நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை நான் செத்துவிட்டாலும், என் பிள்ளைகள் போராட்டத்தைத் தொடருவார்கள்” என்றார் எரிக் தூ.

அஜித்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !

காராட்டிராவில் கடந்த 2015 முதல் 2018 வரை 12,021 விவசாயிகள் தற்கொலை மூலம் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர். இந்தக் காலகட்டத்தில் நீங்கள் உங்களது  வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் கடக்கும் போது மகாராட்டிராவில் மட்டும் எட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

மகாராட்டிராவில் பா.ஜ.க தலைமையிலான தேவேந்திர பட்னாவிஸ் அரசு 2014 நவம்பர் முதல் ஆட்சி செய்து வருகிறது. சென்ற வாரத்தில் சட்டமன்றத்தில் மாநில  நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் தற்கொலை செய்து கொண்ட 12,021 விவசாயிகளில் 6,888 தற்கொலை சாவுகள் மட்டுமே மாவட்ட கமிட்டிகளின் ஆய்வின் படி அரசு உதவி பெறுவதற்கு தகுதியானவை என்று எழுத்துப்பூர்வமாக தெரிவித்து இருக்கிறார்.

அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், தற்கொலை செய்து கொண்ட 12,021 விவசாயிகளில்  6845 விவசாயிகளின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் நிதி உதவி செய்து இருப்பதாக கூறியிருக்கிறார். இன்னும் மூன்று மாதங்களில் மகாராட்டிரா சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில்  முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் விவசாயக் கடன் தள்ளுபடித் தொகையை ரூ. 8000 கோடி அதிகப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

படிக்க :
♦ இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
♦ இந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை !

மகாராட்டிராவில் பா.ஜ.க ஆட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஜுன் மாதம், 50 இலட்சம் விவசாயிகளுக்காக ரூபாய் இருபத்தி நான்காயிரம் கோடி விவசாயக் கடன் தள்ளுபடித் தொகையாக அறிவிக்கப்பட்டது.   இதுவரை 43.32 லட்சம் விவசாயிகள் இவ்விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தின் படி பயனுடைந்துள்ளதாகவும், மற்ற விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மீதித் தொகை செலுத்தப்பட இருப்பதாகவும் கூறுகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.

ஆனால் 2017 ஜூன் மாத விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்திற்குப் பின்னரும் 4500 விவசாயிகள் தற்கொலைகள் நடந்துள்ளன. இது கடந்த 2015 முதல் 2018 வரை நடந்த 12,021 விவசாயிகளின் தற்கொலையில் 32 விழுக்காடாகும்.

விவசாய நலிவையும்  விவசாயிகளின் தற்கொலைகளையும் பிரிக்கும் ஆளும் வர்க்க கும்பலின் நரித்தனம்:

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 610 விவசாயிகளின் தற்கொலை சாவுகளில் 192 விவசாயிகள் மட்டுமே அரசு அளிக்கும் நிதி உதவி பெறத் தகுதியானவர்கள். அதில் 96 பேர் இதற்கு தகுதியற்றவர்கள், மீதி 323 பேரின் தற்கொலை சாவுகளை விசாரித்து வருவதாக கூறியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான  மாநில அரசு. கடந்த 2014 நவம்பரில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க தலைமையிலான அரசு விவசாயிகளின் தற்கொலைகளை கொச்சைப்படுத்தி, அத்தற்கொலைகள் விவசாயம் சார்ந்தது இல்லை என்று  பொய்யுரைப்பதில் நரித்தனமாக செயல்படுகிறது.

கடந்த 2014 முதல் 2018 வரையிலும்,  தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின்  எண்ணிக்கையும், அவர்களில் மகாராட்டிரா அரசின் நிதி உதவி பெறுவதற்கு  தகுதியானவர்களாக தேர்வு செய்தவர்களின் எண்ணிக்கையையும் கீழே உள்ள படத்தில் ஆண்டுவாரியாக பார்க்கலாம்.

மகாராஷ்டிர விவசாயிகள் தற்கொலை
படம் -நன்றி: இந்து ஆங்கிலம்

தற்கொலை செய்து கொண்ட ஒவ்வொரு விவசாயியும்  தங்கள் நிலத்தை, பயிரை தனது பிள்ளைகள் போல ஒவ்வொரு பருவத்திலும்  நேசித்தவர்கள். அளப்பரிய விவசாய அனுபவம் பெற்றவர்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் தங்கள் உழைப்பின் மூலம் மக்களுக்கு உணவு வழங்கிய சமூக மனிதர்கள். சாகும்போது தன் நிலத்தில்தான் உயிர் விட வேண்டும் என்று மாய்ந்தவர்கள் ஏராளம்.

ஆனால் விவசாயிகளை ஒரு சடப் பொருளாகவும், அவர்களை சந்தைக்கேற்ப உழைத்துத் தரும் ஒரு பிண்டமாகவும் ஆளும் வர்க்கக் கும்பல் பார்க்கிறது. விவசாயிகளைக் கொலையும் செய்துவிட்டு, நிவாரணத்திற்காக வகை பிரிக்கும் கொலைகார அரசாக ஆட்சியில் அமர்ந்திருக்கிறது பா.ஜ.க மாநில அரசு.

விவசாயக் கடன் தள்ளுபடி – விவசாயிகளை மீட்க வந்த ரட்சகனா ? இல்லை தேர்தலில் ஓட்டுப் பொறுக்கவா ?

விவசாய நெருக்கடிக்கு நிவாரணம், தற்கொலைக்கு நிதி உதவி என்பது விவசாயப் பிரச்சினைக்குத் தீர்வுபோல ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. இது புண்ணுக்குத் புணுகு தடவுவது போன்றது.

விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தை ஆளும் மாநில அரசு அமல்படுத்தும் போது, அந்தந்த மாநில எதிர்க்கட்சிகள் கடன் தள்ளுபடி திட்டம் அனைத்து விவசாயிகளையும்  சென்றடையவில்லை என்று கூப்பாடு போடுவதும், அனைத்து மாநிலக் கட்சிகளும் வித்தியாசமின்றி, தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக விவசாய கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவிப்பதும் நடைபெறுகிறது.

இதுவரை  இந்தியாவில் அறிவிக்கப்பட்ட 18 விவசாயக் கடன் தள்ளுபடி திட்டங்களுக்கும் தேர்தலுக்கும் உள்ள தொடர்பை விளக்கும் படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 18 திட்டங்களில் பெரும்பான்மையானவை தேர்தல் வாக்குறுதியாகவும், தேர்தல் வெற்றித் திட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

விவசாய கடன் தள்ளுபடி
நன்றி: EPW –ஜூன் 8, 2019,

மகாராட்டிராவில் தொடர்ச்சியாக பல வருடங்களாக வறட்சி இருந்தாலும், விவசாயிகளைக் காக்க வந்த இரட்சகன் என்று கூறிக்கொண்டு 2014 நவம்பரில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க மாநில அரசு விவசாயிகளின் பல கட்டப் போராட்டத்திற்குப் பின் 2017-ல்தான் விவசாயக் கடன் தள்ளுபடித் திட்டத்தை அறிவித்தது. இப்போது இன்னும் 3 மாதங்களில் தேர்தல் நடைபெறவிருக்கிற நிலையில் கடன் தள்ளுபடித் தொகையில் கூடுதலாக ரூ. 8000 கோடி அதிகப்படுத்தியிருக்கிறது. சென்ற காங்கிரஸ் ஆட்சியின் போது தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் தற்கொலைகளை விட  மகாராட்டிரா பா.ஜ.க அரசின் ஆட்சியில்தான் விவசாயிகள்  தற்கொலைகள் இரட்டிப்பாகியிருக்கிறது.

விவசாய கடன் தள்ளுபடித் திட்டங்கள் சென்றடைய வேண்டிய விவசாயிகளைச் சேராமல், மடைமாற்றி விடப்படுகிறது. தங்கள் விவசாயக் கடன் தள்ளுபடியைக் கோரி விவசாயிகள், வங்கிகளின் வாயிலில் அலைந்து அலைந்து மனம் வெம்பி போயுள்ளனர்.

ashok manwar
அசோக் மன்வர்

அதற்கு உதாரணமாக, மகாராட்டிரா மாநிலத்தில் நடைபெற்ற இச்சம்பவமே சாட்சி: அசோக் மன்வர் என்ற மகாராட்டிராவின் வாசிம் மாவட்டத்தை சேர்ந்த  விவசாயி, முதலமைச்சர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் ரூ. 1.4 லட்சத்திற்கு, விவசாயக் கடன் தள்ளுபடி சான்றிதழ் பெற்றிருக்கிறார். இந்த சான்றிதழ் கடந்த 2018 தீபாவளி அன்று மும்பையில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அசோக்கிற்கு ரூ. 1.4 லட்சத்திற்குப் பதிலாக ரூ. 77,000-க்கு மட்டும்தான் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. மீதித் தொகையை தள்ளுபடி செய்ய அவர் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை சென்றும் பயனில்லை. இதனால் அவர் தன் கிராமத்திலிருந்து மும்பைக்கு வந்து முதலமைச்சரை சந்திக்கமுடியாமல், எதிர்க்கட்சித் தலைவர் தனஞ்செய் முண்டேவை சந்தித்து முறையிட்டு உள்ளார். தனஞ்செய் சந்திப்புக்கு பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, போலீசு அவரை ஒரு வேனில் ஏற்றி, மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் வைத்து மூன்று மணி நேர விசாரணைக்குப் பின் விடுவித்திருக்கிறது.

“ஊடகங்களா உனது கடனை தள்ளுபடி செய்கிறது? நீ தற்கொலை செய்து கொள்ள இங்கு வந்தாயா?” என்று போலீசு தொடர்ச்சியான கேள்விகளால் அவரை துளைத்தெடுத்துள்ளது. மறுபடியும் விசாரணைக்கு அழைத்துச் செல்வார்களோ, இல்லை வழக்கு பதிவு செய்வார்களோ என்ற பயத்திலும்,  இந்த விசாரணைக்குப் பின் போலீசால் தனக்கு அச்சுறுத்தல் நேருமோ என்ற அச்சத்திலும் அசோக் இருக்கிறார். தன்னுடைய ரூ. 1.4 லட்சம் கடன் தொகை முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்,  இந்தக் கடனுக்கு வட்டி முழுவதும் தான் வங்கியில் செலுத்த இருப்பதாகவும் கூறுகிறார் அவர்.

எந்த கார்ப்பரேட் முதலாளியாவது, தன்னுடைய கடனை தள்ளுபடி செய்ய வீதிக்கு வந்திருக்கிறானா? இல்லை கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறானா? ஆனால் இந்தியாவில் மட்டும் தனியார்மயம் தாராளமயம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு மூன்று லட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து இருக்கிறார்கள்.

farmers suicide

பிரதான் மந்திரி பாசல் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள  பயிர்க் காப்பிட்டுத் திட்டத்தின் படி பயிர் சேதங்களுக்கு வழங்கக் கூடிய தொகையில் மகாராட்டிராவில் மட்டும் 2018 டிசம்பர் வரை ரூ. 1416 கோடி நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடனும், அக்கடனுக்குத்  தள்ளுபடியும் அளவில்லாமல் வழங்கப்படுகிறது.

தொடர்ச்சியான வறட்சி, பயிர் சேதம், இடுபொருட்களின் விலை அதிகரிப்பு, வங்கிகளில் கடன் கிடைக்காமல் கந்து வட்டிகாரர்களிடம் கடன் சுமை, விவசாயக் கடன் தள்ளுபடி திட்டத்தின் தோல்வி, விவசாயம் பொய்த்துப் போனதால் பிற வேலைகளுக்கும் வழியில்லாமை, விளை பொருட்களின் விலை வீழ்ச்சி, விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை இல்லாமை போன்ற காரணங்கள் விவசாயிகளை வாழ வழிவிடாமல் மேலும் மேலும்  கடன் சுமையை சுமத்துகின்றன.

இடுபொருட்களின் விலைஉயர்வும், விவசாய விளைப் பொருட்களின் விலைகளை  தீர்மானிக்கும் அதிகாரமும் ஆட்சியாளர்கள், வர்த்தக சூதாடிகள், கார்ப்பரேட்  முதலாளிகள் கையில் குவிந்து உள்ளது.

இந்த அதிகாரத்தை அவர்களிடமிருந்து பறித்து, விவசாயிகள் அவற்றை தீர்மானிக்கும்  அதிகார சக்திகளாக மாறுவதுதான் விவசாய நெருக்கடிக்கு தீர்வாக இருக்க முடியும்.!

பரணிதரன்

செய்தி ஆதாரம் :
♦ 12,021 Farmers Committed Suicide Under the BJP Regime in Maharashtra
♦ The Politics of Farm Loan Waivers A Comparative Study
♦ Between 2015 and 2018, More Than 12,000 Farmers Killed Themselves in Maharashtra
♦ Maharashtra: CM Fadnavis’ plan to expand farm loan waiver to cost Rs 8,000 crore
♦ Maharashtra Farmer Comes To Mumbai With Loan Waiver Complaint, Detained
♦ Over 12,000 farmers died of suicide in three years in Maharashtra: Subhash Deshmukh

மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்

மல்லசமுத்திரம் – முகலப்பள்ளி இடையே போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல பேப்பர் சாலை ! – மக்கள் போராட்டம்

பாகலூருக்கு அருகே உள்ள மல்லசமுத்திரம், குடிசெட்லு, ஒத்தரப்பள்ளி, கணகண்டப்பள்ளி, ஆலூர் மற்றும் முகலப்பள்ளி ஆகிய கிராம உழைக்கும் மக்கள் புழங்கக்கூடிய சாலைகள் முழுவதும் தற்போது தார்ச்சாலைகளாக மாற்றப்பட்டதாக சொல்லப்படுகின்றன. ஆனால், உண்மையில் இந்த தார்ச்சாலைகள் மக்கள் பயன்பாட்டுக்கு சிறிதும் பயன்படாதவண்ணம் அதிகாரிகளின் கொள்ளைகளுக்கு கணக்குக் காட்டுவதற்கென்றே போடப்பட்ட சாலைகளாக உள்ளன.

“இங்கே இப்பகுதியில் போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல பேப்பர் சாலை!” என்று கோபத்துடன் குமுறுகின்றனர் இப்பகுதிவாழ் உழைக்கின்ற மக்கள். இந்நிலையில் மக்களின் கோபக்கனலை எதிரொலிக்கும் வண்ணம் இப்பகுதியில் செயல்பட்டு வருகின்ற மக்கள் அதிகாரத்தின் செயல்வீரர்கள் நேரில் சென்று மக்களை சந்தித்தும், கள ஆய்வு செய்தும் மக்களை திரட்டி போராடிவருகின்றனர்.

அந்தவகையில் மல்லசந்திரம் – முகலப்பள்ளி இடையே போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல! பேப்பர் சாலை! – என்ற முழக்கத்தை முன்வைத்து ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகள் தமிழிலும், தெலுங்கிலும் அச்சிட்டு அப்பகுதி மக்களிடையே விநியோகித்து பிரச்சாரம் செய்தனர்.

அதன் அடிப்படையில் திட்டமிட்டப்படி கடந்த 20.06.2019 அன்று காலை 11.00 மணியளவில் மக்கள் அதிகாரம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தை பாகலூர் சர்க்கிள் அருகே நடத்தினர். பாகலூர் பகுதி மக்கள் அதிகாரம் அமைப்பினை சேர்ந்த தோழர் இரவிச்சந்திரன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு-வைச் சேர்ந்த தோழர் சங்கர், மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் இராமசாமி, முகலப்பள்ளி கிராம விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயி திரு. இராமசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் ஜெயராமன் நன்றியுரையாற்றினார்.

தோழர் இரவிச்சந்திரன் தனது தலைமையுரையில்; “ஆர்ப்பாட்டம் மக்களின் ஆதரவுடன் நடத்தப்படவுள்ள செய்தியறிந்த அதிகாரிகள். உடனே தொடர்பு கொண்டு விரைவில் தரமான தார்ச்சாலையாக போடப்போகிறோம் என்றும், அதனால் தாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டாம் என நைச்சியமாக பேசிச் சென்றதை அம்பலப்படுத்திப் பேசினார்.

மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் இராமசாமி தனது உரையில், போடப்பட்ட தார்ச்சாலையின் அவலத்தை படம்பிடித்து மனுவாக தந்தும், வாட்சப்பில் அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்தும் பலமுறை வற்புறுத்தியும் பலனில்லாமல் போன அனுபவத்தை பட்டியலிட்டு பதிவுசெய்து பேசினார்.

விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயி திரு. இராமசாமி தனது உரையில் இப்பகுதிவாழ் உழைக்கின்ற மக்கள் இச்சாலையினால் அவதியுறும் கிராம மக்களின் துன்ப துயரங்களை பட்டியலிட்டு பகிர்ந்துச்சென்றார்.

படிக்க:
எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்

தோழர் சங்கர் தனது கண்டன உரையில் மக்களிடம் வரி வாங்கி வயிறு வளர்க்கும் இந்த அரசு, சாதாரண தார்ச்சாலைக்கூட ஒழுங்காக அமைத்துத் தராது தோற்றுப் போயிருக்கிறது. இதுவே கார்ப்பரேட்டிற்கு என்றால் ஓடோடிச்சென்று எட்டுவழிச்சாலை முதற்கொண்டு அனைத்தும் செய்து கொடுத்து கார்ப்பரேட்டின் அடியாளாகத் தன்னை காட்டிக்கொள்கிறது என்பதை விவரங்களுடன் பேசினார்.

இந்நிலையில் மக்களாகிய நம்மிடையே உள்ள ஒரே ஆயுதம் இதனை நாம் மக்கள் அதிகாரமாக ஒன்றுபட்டு எதிர்த்துப் போராடுவது ஒன்றுதான் நம்மிடையே உள்ள தீர்வு என்று பேசினார்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

***

துண்டறிக்கை :

மல்லசந்திரம் – முகலப்பள்ளி இடையே போடப்பட்ட சாலை தார் சாலை அல்ல பேப்பர் சாலை!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், குடிசெட்லுவிலிருந்து மல்லசமுத்திரம் வரை 40 லட்சத்துக்கு மேல் செலவு செய்து தார்சாலை போடப்பட்டுள்ளது.

மேடு, பள்ளங்கள் நிறைந்ததாகவும், பல இடங்களில் தடுப்புச் சுவர் கட்டப்படாமலும், தரமற்றதாகவும் இருக்கிறது இந்தச் சாலை. ஒரு நாள் பெய்த மழைக்கே சாலையில் அரிப்பு ஏற்பட்டு ஆங்காங்கே விரிசல் விட்டு, சாலையோரத்தில் போடப்பட்ட மண் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

அதிக பள்ளம் உள்ள இடங்களில் சிறு பாலங்கள் அமைக்காததால் மேட்டு நிலத்தில் இருந்து வரும் மழைநீர், ரோட்டின் மேல் ஓடி 200 அடி தூரத்திற்கு தார்ச்சாலை சேறும் சகதியுமாக மாறுவதும், ரோடு அறுந்து காணாமல் போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 28 லட்சம் செலவில் முகலப்பள்ளியில் போடப்பட்டிருக்கும் ஒரு கிலோ மீட்டர் சாலையோ இதைவிட மோசமான நிலையில் இருக்கிறது.

இதுமட்டுமன்றி மல்லசந்திரத்துக்கும் முகலப்பள்ளிக்கும் இடையில் 200 அடி தூரத்திற்கு மட்டும் சாலை அமைக்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இருபுறமும் புதுரோடு போட்டுவிட்டு, இடையில் ஏன் போடவில்லை என ஊர்மக்கள் கேட்டால், 2 கிலோ மீட்டருக்கு மட்டும்தான் ரோடு போட ஒப்பந்தமாகியுள்ளது என்கிறார்கள். 200 அடி தூரத்திற்கு மட்டும் தனியாக டெண்டர் விட்டு, தாரும் ஜல்லியும் வாங்கி, ரோலர் கொண்டு வந்து வேலை செய்வார்களா? இந்த லட்சணத்தில்தான் அரசாங்க வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகளும் காண்ட்ராக்டர்களும்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் போடப்பட்ட துண்டறிக்கைகள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

விதை, உரம், பூச்சிக்கொல்லி, டிராக்டருக்கு டீசல் என எல்லாவற்றுக்கும் வரி கட்டி, விளைந்த பொருளை எடுத்துச் செல்லும்போது டோல்கேட்டிலும் தண்டம் கட்டும் விவசாயிக்கு, முதுகெலும்பை பதம்பார்க்கும் தரமற்ற சாலை! சேலம் உருக்காலையை விழுங்கி, காடுகள், மலைகளை அழித்து கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் ஜிண்டால் கார்ப்பரேட் கம்பெனிக்கோ எட்டு வழிச்சாலை! இப்போது தெரிகிறதா, இந்த அரசு யாருக்காக வேலை செய்கிறது என்று?

மல்லசந்திரம் வழியாகத்தான் ஒத்தரப்பள்ளி, கணகொண்டப்பள்ளி, முகலப்பள்ளி ஆகிய ஊர்களை சேர்ந்த விவசாயிகள் தினம்தோறும் காய்கறிகள் எடுத்து செல்கிறார்கள். பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பல பள்ளி வாகனங்களும் செல்கின்றன. இப்படி விவசாயிகள் அன்றாடம் பயன்படுத்தும் சாலைகளைத் தரங்கெட்ட வகையில் போடுவதுதான் புதிய இந்தியாவா?

படிக்க:
காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?
♦ நாசகாரத் திட்டங்களை கைவிடு ! கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்

குடிசெட்டிலு – மல்லசந்திரம் இடையிலான இந்த சாலையை தரமான தார்சாலையாக போட வேண்டும். பக்கவாட்டில் தடுப்பு சுவர் அமைத்துத் தரவேண்டும். சிறுபாலங்கள் அமைத்து மழை நீர் ஓடுவதை முறைப்படுத்த வேண்டும். என பல மாதங்களாக பி.டி.ஓ -வுக்கு போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்புவது, நேரிலேயே அழைத்துச் சென்று காட்டுவது என எல்லாவற்றையும் செய்த பிறகும், இப்படி தரமற்ற சாலை அமைத்து உள்ளனர் என்றால் அந்த தைரியம் எங்கிருந்து வந்தது?

ஏன் இந்த அலட்சியம்? சாலைக்காக உத்தரவில் கையெழுத்துப் போடும் அதிகாரிகளோ சாலை போடும் காண்டிராக்ட்ரையோ மக்கள் கேள்வி கேட்க முடியாது. மீறி கேட்டால் போலீசை வைத்து பொய் கேஸ் போட்டு மிரட்ட முடியும் என்கிற தைரியத்தில்தான் கொள்ளையடிக்கிறார்கள். கேள்வி கேட்போரை மிரட்டுகிறார்கள். நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும், அரசு அதிகாரிகளை கேள்வி கேட்கவும், தவறு செய்தால் தட்டிக் கேட்கவும் மக்கள் வீதிக்கு வராமல் இந்த இழிநிலைக்கு முடிவு கட்ட முடியாது.! வாருங்கள் அணிதிரள்வோம்!

  • அதிகாரிகள் – காண்ட்ராக்டர்கள் கூட்டு கொள்ளையடிப்பதையும், தரமற்ற பேப்பர் சாலை போடுவதையும் தடுத்து நிறுத்துவோம்!
  • கிராமங்கள்தோறும் தரமான சாலைகள் அமைக்கப் போராடுவோம்!
  • 40%, 50% கமிஷன் வாங்கும் அரசு அதிகாரிகளின் சொத்துகளைப் பறிமுதல் செய்யப் போராடுவோம்!

போராட்டத்தின் போது எழுப்பப்பட்ட முழக்கங்கள் :

மக்கள் அதிகாரம், வாழ்க!
மக்கள் அதிகாரம், வாழ்க!

பேப்பர்சாலை! பேப்பர்சாலை!
மல்லசந்திரம் – முகலப்பள்ளியில்
போடப்பட்டது தார்ச்சாலை அல்ல!
பேப்பர்சாலை! பேப்பர்சாலை!

செல்லூர் ராஜு-வின் தெர்மாக்கோலு
காத்துல பறந்தது, காத்துல பறந்தது!
மல்லசந்திரத்தில் போட்ட சாலை,
மக்கள் வரிப்பணத்தில் போட்ட சாலை,
மழையில் கரையுது, மழையில் கரையுது!

ஓட்டு போட்டு, வரிப்பணம் கட்டி
ஊருக்கே சோறு போடும்
விவசாயிக்கு மரணச்சாலை!
காடு, மலையை வெட்டியெடுத்து
கனிம வளத்தைக் கொள்ளையடிக்கும்
கார்ப்பரேட்டு கம்பெனிகளுக்கு
ஆறுவழி, எட்டுவழி!
யாரு கேட்டா? யாரு கேட்டா?

கூட்டுக் கொள்ளை! கூட்டுக் கொள்ளை!
அதிகாரிகள், அரசியல்வாதிகள்
சேர்ந்து நடத்தும் கூட்டுக் கொள்ளை!
டெண்டருக்கே பத்து பர்சண்டு!
ரோடு போட்டா அம்பது பர்சண்டு!
அநியாயக் கொள்ளை! அநியாயக் கொள்ளை!

அம்பலப்படுத்துவோம்! அம்பலப்படுத்துவோம்!
ஏசி ரூம்ல உக்காந்துகிட்டு,
ஓசி சோத்த தின்னுகிட்டு,
ஊர்க்காசுல மஞ்ச குளிக்கும்,
ஊழல்பேர்வழிகளை அம்பலப்படுத்துவோம்!

தட்டிக் கேட்போம்! தட்டிக் கேட்போம்!
வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி,
லஞ்ச ஊழலில் மூழ்கித் திளைக்கும்
அதிகாரிகளைத் தட்டிக் கேட்போம்!

வரவைப்போம்! வரவைப்போம்!
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல
ஆணவம் பிடித்த அதிகாரிகளை,
அதிகாரத் திமிர் பிடித்த அதிகாரிகளை
வீதிக்கு வரவைப்போம்!
தகர்த்தெறிவோம்! தகர்த்தெறிவோம்!
ஆளும் தகுதி இழந்துவிட்ட,
மக்கள் எதிரி ஆகிவிட்ட
மக்கள்விரோத அரசமைப்பைத்
தகர்த்தெறிவோம்! தகர்த்தெறிவோம்!

கையில் எடுப்போம்! கையில் எடுப்போம்!
மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுப்போம்!

மக்களுக்கு சேவை செய்ய மறுக்கின்ற,
பதில் சொல்ல மறுக்கின்ற
அதிகாரிகள், அரசியல்வாதிகளைத்
தேர்ந்தெடுக்க – திருப்பியழைக்க
மக்களுக்கு அதிகாரம் உள்ள
அரசமைப்பைக் கட்டியமைப்போம்!

மக்கள் அதிகாரம், வாழ்க!
மக்கள் அதிகாரம், வாழ்க!

தகவல் :
மக்கள் அதிகாரம்
பாகலூர் பகுதி, 
தருமபுரி மண்டலம்.
தொடர்பு எண்: 9790138614, 9942953018.

தேசிய கல்விக் கொள்கை 2019 | CCCE கலந்துரையாடல் – செய்தி | படங்கள்

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தேசிய கல்விக் கொள்கை 2019 பற்றிய கலந்துரையாடல் கூட்டம் 20.06.2019 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரா. அரசு தலைமை தாங்கினார். பேரா. கதிரவன், பேரா. கருணானந்தன், பேரா. சிவக்குமார், டாக்டர். இரவீந்திரநாத், தோழர். கணேசன் மற்றும் தோழர். தினேஷ் ஆகியோர் உரையாற்றினர்.

பேச்சாளர்கள் தேசிய கல்விக் கொள்கையின் பாதகங்களை விளக்கி பேசினர்.

பேராசிரியர் அரசு

பேராசிரியர் அரசு தனது தலைமையுரையில், தேசிய கல்விக் கொள்கையில் பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு (UGC) பதிலாக தேசியக் கல்வி ஆணையம் (NEC) என்ற அமைப்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிரதமரும் துணைத்தலைவராக கல்வி அமைச்சரும் இருப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இது பேராபத்தானதாகும்.

உயர்கல்வியை தற்போது நிர்வகிக்கின்ற UGC ஒரு தன்னாட்சி அமைப்பு. அதன் தலைவராக கல்வியாளர்களே இருப்பார்கள். ஆனால் கல்விக் கொள்கை பரிந்துரைப்படி NEC ஆளும் அரசின் கைப்பாவையாக இருக்கும். ஏறத்தாழ BJP-யின் கிளை அமைப்பாகவே செயல்படும் என்று விளக்கி பேசினார்.

டாக்டர். இரவீந்திரநாத் பேசும்போது தேசிய கல்விக் கொள்கையில் சிறுவயதிலிருந்தே இந்துத்துவ கருத்துகளை திணிப்பதற்காக திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார். மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக தொண்டர்கள் நியமிக்கப்படுவார்கள் என கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. தொண்டர்கள் என்ற போர்வையில் RSS அமைப்பைச் சேர்ந்த நபர்களை ஆசிரியர்களாக நியமிப்பார்கள்.

மருத்துவக் கல்வியை பொருத்தவரை, நவீன அறிவியல் அடிப்படையிலான மருத்துவமுறைக்கு பதிலாக அறிவியல் அல்லாதவற்றை மருத்துவம் எனக் கூறி நடைமுறைப்படுத்துவார்கள். உதாரணமாக மோடி அரசு அறிவித்துள்ள தேசிய மருத்துவ ஆணையத்தில் உள்ள 24 பேர் குழு மருத்துவக் கல்வியை கட்டுப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. அதில் நான்கு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்.

டாக்டர். இரவீந்திரநாத்

இதனை கட்டுப்படுத்தக்கூடிய மொத்த அதிகாரமும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உள்ளது. இதன் விளைவாக பிஜேபி அரசு நேரடியாக பழைய புராணங்களில் சொல்லப்பட்டதெனக் கூறி அறியலற்ற விசயங்களை எளிதாக நடைமுறைப்படுத்துவர். உதாரணமாக இராஜஸ்தான் மாநிலத்தின் பிஜேபி ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் லைசாலுக்கு பதிலாக மாட்டு மூத்திரத்தைக் கொண்டு தரையை சுத்தம் செய்ய வேண்டும் என அமைச்சர் கூறினார்.
தேசிய கல்விக் கொள்கையிலே மருத்துவக் கல்லூரிகள் தாங்களே கல்விக்கட்டணத்தையும் பாடத்திட்டங்களையும் முடிவு செய்துகொள்ளலாம் எனக் கூறுகிறது.

மோடி அரசு சமீபத்தில் கார்ப்பரேட்கள் லாப நோக்கில் மருத்துவக் கல்லூரியை தொடங்கலாம் என அறிவித்துள்ளது. அதேபோல 600 மாவட்ட அரசு மருத்துவமனைகளை அரசு – தனியார் கூட்டின் மூலம் கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இதன்மூலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் தனியார்களுக்கு கொடுக்கப்படும்.

தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி கல்விக் கட்டணத்தையும் பாடத் திட்டத்தையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். இதன் வாயிலாக சாதாரண மக்கள் மருத்துவப் படிப்பிற்குச் செல்ல முடியாத நிலையே ஏற்படும். எனவே தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வந்துள்ள இந்த சதியை நாம் முடியடிக்க வேண்டும் எனப் பேசினார்.

பேராசிரியர் கதிரவன் பேசுகையில் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள தேசிய ஆராய்ச்சி அமைப்பை பற்றி விரிவாகப் பேசினார்.

தற்போது அரசு நடத்துகின்ற உயர்கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆராய்ச்சி நிதிக்கான வரவு செலவு கணக்குகள் மாநில அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளைக் கொண்டு சரிபார்க்கப்படுகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்கள் தாங்களே கணக்காளர்களைக் கொண்டு ஆராய்ச்சி நிதியை பயன்படுத்தியதாக கணக்கு காட்டுகின்றனர். இதில் அரசு தலையிடுவதில்லை. தனியார் பல்கலைக்கழகங்கள் நடத்துகின்றவர்கள் அதன் மூலம் வரும் லாபத்தைக் கொண்டு பல்வேறு தொழில்களை செய்கின்றனர் (சினிமா எடுப்பது, ஹோட்டல், போக்குவரத்து).

பேராசிரியர் கதிரவன்

தேசிய கல்விக் கொள்கையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை ஒரே மாதிரி நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்காக 20,000 கோடி ஒதுக்கப்பட்டால் 10,000 கோடி ரூபாய் தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். இது தனியார்களுக்கு சாதகமாகவே அமையும்.

கல்லூரிகள் தாங்களாகவே படிப்புச் சான்றிதழ்களை வழங்கிக் கொள்ளலாம் (degree granting colleges), கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் தனியார் நிறுவனங்களையும் அனுமதிப்பது போன்ற பரிந்துரைகள் உயர்கல்வியின் தரத்தை மேலும் மோசமாக்குவதோடு தனியார் கல்வி நிறுவனங்களின் தீவிரக் கொள்ளைக்கே ஆதரவாக அமையும் என்று விளக்கினார்.

அடுத்து பேசிய பேராசிரியர் கருணானந்தன் இந்துத்துவ கார்ப்பரேட் கூட்டணிதான் இந்த கல்விக் கொள்கை, இது ஒரே நாடு, ஒரே மொழி என்பதற்கான கல்விக் கொள்கை என்றார்.

இந்த கல்விக் கொள்கை முற்றிலுமாக மையப்படுத்துதலையே முன்வைக்கிறது. 40,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் 800 பல்கலைக்கழகங்கள் அனைத்தையும் பிரதமரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதன் விளைவாக கல்வி மாநில பட்டியலிருந்து மையப் பட்டியலுக்கு மாற்றப்படும். நமக்கு எவ்விதமான கல்வி வேண்டும் என்று நாம்தான் (மாநில அரசுதான்) முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நமக்கு வேண்டியதைப் பெற முடியும். ஆனால் தற்போது ஆளுகின்ற அடிமை அரசுக்கோ மாநில சுயாட்சி பற்றி எந்த அக்கறையும் கிடையாது. தங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும் என்று இருக்கின்றனர்.

பேராசிரியர் கருணானந்தன்

பள்ளி மாணவர்களுக்கு பல மொழிகளை கற்றுக்கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இதன் வழியே சமஸ்கிருதத்தை திணிப்பதுதான் இவர்கள் நோக்கம். பழைய பண்பாடு, இந்திய பெருமிதம், பழைய அறிவியல் பற்றியெல்லாம் கல்விக் கொள்கை பேசுகிறது. இவைகளனைத்தும் உண்மை பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை உணர்விலிருந்தும் நம்மை மாற்ற நினைக்கின்ற முயற்சி. எனவே இக்கல்விக் கொள்கையில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டும் என்பதெல்லாம் பொருளற்றது.

இக்கல்விக் கொள்கையை முற்றிலுமாக நாம் நிராகரிக்க வேண்டும். நமக்கான கல்விக் கொள்கையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும். எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும். மத்தியில் யாரோ ஒருவர் தீர்மானிப்பதை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

1986 கல்விக் கொள்கை வந்த போது ஆசிரியர் சங்கங்கள் போராடின. இறுதியில் ஊதிய உயர்வுக்காக கல்விக் கொள்கையை ஒப்புக்கொள்வதாக கையெழுத்திட்டனர். ஆனால் தற்போது ஆசிரியர் சங்கங்கள் கல்விக் கொள்கையைப் பற்றிப் பேசக்கூட இல்லை. இது போன்ற கூட்டங்கள் அவர்களுக்கு உத்வேகத்தை வழங்கலாம் என கூறி முடித்தார்.

அடுத்து பேசிய பேராசிரியர்  சிவக்குமார், சில அமைப்புகள் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டுள்ள இந்தி திணிப்பை எதிர்கின்ற அளவிற்கு தனியார்மயத்தை குறித்துப் பேசுவதில்லை. காரணம் அவர்கள் தனியார் கல்லூரிகள் நடத்துகின்றனர். இப்போக்கு தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஒருங்கிணைந்த போராட்டத்தை கட்டுவதற்கு தடையாக உள்ளது. 2000-ம் ஆண்டிலிருந்தே கல்வி குறித்து வந்த அறிக்கைகள் கல்வியாளர்களால் உருவாக்கப்படவில்லை.

பேராசிரியர்  சிவக்குமார்

முதலாளிகளை தலைவர்களாகக் கொண்டே உருவாக்கப்பட்டு வருகிறது. இவர்களின் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தியும் வருகிறது. பொதுவாக ஒரு நாட்டின் கல்விக் கொள்கைகள் அதன் ஆளும் வர்க்கங்களின் நலன்களை ஒட்டியே உருவாக்கப்படும். அதனடிப்படையில் பார்க்கும்போது தற்போதைய கல்விக் கொள்கை நான்காவது தொழிற்புரட்சியை கணக்கில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பொறியியல், அறிவியல் படிக்கும் மாணவர்கள் கலை, சமூக அறிவியல் பாடங்களையும் சேர்த்து சொல்லிக் கொடுக்க வேண்டும் அப்போதுதான் புதியவற்றை படைக்கின்ற ஆற்றல் உள்ள மாணவர்களை உருவாக்க முடியும் என்ற கருத்து உலக வர்த்தகக் கழகத்திலும்(WTO), உலகப் பொருளாதார மன்றத்திலும் (WEF) பேசிவருகிறார்கள். அதையே தற்போது கல்விக் கொள்கையும் பிரதிபலிக்கிறது என்று கூறினார்.

தோழர் கணேசன்

புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், தேசிய கல்விக் கொள்கையில் இரு முக்கிய அபாயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று கல்வியை காவிமயமாக்குவது மற்றொன்று இந்திய உயர்கல்வி சந்தையை சர்வதே சந்தையோடு இணைப்பது, அதாவது உயர்கல்வியை சர்வதேசமயமாக்குவது. இதனை முறியடிக்க தேசிய கல்விக் கொள்கை குறித்த அபாயத்தை RSYF மாணவர்களிடம் எடுத்துச் செல்லும் எனக் கூறினார்.

தோழர் தினேஷ்

அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியச் செயலாளர் தோழர் தினேஷ், தேசிய கல்விக் கொள்கையில் பள்ளிக் கல்வி குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளைப் பற்றி பேசினார். தற்போதுள்ள கட்டமைப்பை மாற்றி பள்ளிக் கல்வியில் 5+3+3+4 என்பதை கல்விக் கொள்கை முன்வைக்கிறது. மூன்று வயதிலிருந்தே கல்வி கட்டாயம் எனக் கூறுகிறது. எட்டாம் வகுப்பிற்கு மேல் தொழிற்கல்வி மற்றும் இளங்கலை படிப்பில் சேர்வதற்கு நீட் போன்ற பொதுத் தேர்வு போன்ற பரிந்துரைகளின் பாதகங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.

கூட்டத்தில் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். பெரும்பான்மையாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில் பேரா. அரசு அவர்களின் நன்றி உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

தகவல் :
பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, (CCCE)

இத்தாலிய பாசிஸ்டுக் கட்சி ஒரு பூர்ஷுவாக் கட்சி !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 3 | பாகம் – 15

டோக்ளியாட்டி

த்தாலிய பூர்ஷுவாக்கள் ஓர் ஒருங்கிணைந்த அரசியல் அமைப்பைப் பெற்றிருந்தனர். ஆனால், அது ஒரு அரசியல் கட்சி அல்ல. அது ஃப்ரீமசோன்றி அல்லது கூட்டுரிமைக் கழகம் என்று பெயர் பெற்றிருந்தது. யுத்தத்திற்கு முன்னர் ஃப்ரீமசோன்றிதான் பூர்ஷுவாக்களின் ஒரே முழுமையான அரசியல் அமைப்பாக இருந்து வந்தது. இத்தாலியை ஒன்றுபடுத்தும் போராட்டத்தில் அது தலையாய பங்கு கொண்டது. இத்தாலியின் தேச விடுதலை இயக்கத்துக்கான போராட்டத்திலும் முக்கிய பங்கு வகித்தது. அது மட்டுமன்றி, இத்தாலிய பூர்ஷுவாக்களின் பல்வேறு பிரிவுகளை அரசியல் ரீதியில் ஒற்றுமைப்படுத்துவதிலும், குட்டிபூர்ஷுவாக்கள், மத்தியதர பூர்ஷுவாக்கள் மீது பெரும் பூர்ஷுவாக்களின் செல்வாக்கை நிலைநாட்டுவதிலும் அது குறிப்பிடத்தக்க பங்காற்றிற்று.

அக்காலத்தில் ஃப்ரிமசோன்றியின் இயைபு குறித்த புள்ளி விவரங்கள் ஏதும் எனக்குத் தெரிந்தவரை கிடைக்கவில்லை. ஆனால் அவ்வாறு ஒருக்கால் சர்வே புள்ளி விவரங்கள் கிடைக்குமானால் குட்டிபூர்ஷுவாக்களும் ஊதியம் பெறும் ஊழியர்களும் பெரும் எண்ணிக்கையில் அதில் இருந்திருப்பது தெரியவரும். இந்த விஷயத்தை அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் துல்லியமாக இதே கூறுகள் பின்னால் தேசியப் பாசிஸ்டுக் கட்சியிலும் இடம் பெற்றதை நீங்கள் காணுவீர்கள்.

குட்டிப் பூர்ஷுவாக்கள் ஃப்ரீமசோன்றியில் ஏன் சேர்ந்தார்கள்? சட்டம் என்பது சரிவர மதிக்கப்படாத ஒரு சமுதாயத்தில், ஆளுபவர்களாலும் ஆளப்படுபவர்களாலும் அந்தச் சட்டம் அடிக்கடி மீறப்படும் ஒரு சமுதாயத்தில் ஃப்ரீமசோன்றி தங்களுடைய குழுக்களைப் பாதுகாக்கக்கூடிய ஓர் அமைப்பு என்று கருதியதாலேயே குட்டி பூர்ஷுவாக்கள் அதில் தம்மை இணைத்துக் கொண்டனர். அது ஒரு பரஸ்பர உதவிக்கழகமாக இருந்து வந்தது. ஊதியம் பெறும் ஊழியர்கள் தங்கள் வேலைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அதில் சேர்ந்தனர். இதன் மூலம் சிலர் உயர்பதவிகளையும் பெற முடிந்தது. விவசாயத்துறை பூர்ஷுவாக்களும் தொழிலதிபர்களும் கூட ஃப்ரீமசோன்றியில் சேர்ந்திருந்தனர். யுத்த முற்கால இத்தாலிய சமுதாயத்தில் மிகவும் விரிவான ஒன்றிணைந்த அமைப்பாக இதனைப் பூர்ஷுவாக்கள் கருதினர்.

முதலாளிகளின் கூட்டுரிமைக் கழகம். (freemasonry)

யுத்தப் பிற்காலத்தில் இரண்டு பெரிய கட்சிகள் அரசியல் அரங்கில் தோன்றின. யுத்தத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த சோஷலிஸ்டுக் கட்சி போர் தொடங்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே பூர்ஷுவாக்களுடன் தனக்கிருந்த தொடர்பைத் துண்டித்துக் கொண்டது (உண்மையில் ஃப்ரீமசோன்றியுடனான அதன் தொடர்பு போர் தொடங்குவதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் முடிவுக்கு வந்தது). அது வர்க்க உணர்வு கொண்ட ஒரு சுதந்திரமான கட்சியாக இத்தாலி முழுவதும் வியாபித்திருந்தது. அதே சமயம் பாப்புலர் கட்சியும் இத்தாலியில் செயல்பட்டு வந்தது.

பாப்புலர் கட்சி இத்தாலிய சமுதாயத்தில் ஒரு புதிய நிகழ்வுப் போக்காகும். நகரப்புற, கிராமப்புற குட்டி பூர்ஷுவாப் பகுதியினரையும் விவசாயிகளையும் அதுவரை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அடித்தளமாக இருந்த ஏனைய பகுதியினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக, அரசியல் கட்சியாக அது உருவெடுத்தது. அதுவரை இந்த நகர்ப்புற, கிராமப்புற குட்டி பூர்ஷுவாப் பகுதியினரின் ஆதரவில்தான் எல்லாக் கட்சிகளும் இயங்கி வந்தன.

பாப்புலர் கட்சி தனக்கே உரிய ஒரு வேலைத் திட்டத்துடன் மத சார்புடைய அமைப்பாக உருவெடுத்தது. சோஷலிஸ்டுக் கட்சியின் முன்னேற்றத்தை, வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும் ஓர் அமைப்பாக பாப்புலர் கட்சி இருக்க வேண்டும் என்பதே கத்தோலிக்க திருச்சபையின் விருப்பம். இந்தக் குறிக்கோள் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதே சமயம் பிளவுபடும் போக்கை இது வெளிப்படுத்திற்று. இத்தாலிய பூர்ஷுவாக் கட்சிகளின் பாரம்பரியப்படி அது பிளவுபடவும் செய்தது. யுத்தப் பிற்கால நெருக்கடி முற்றுவதற்கு இதுவும் காரணமாகும்.

ஆக, யுத்தத்திற்குப் பிறகு தங்களது சொந்த அரசியல் நிறுவனத்தை உருவாக்கிக் கொள்ளும் பிரச்சினை பூர்ஷுவாக்களுக்கு ஏற்பட்டது.

ஆரம்பத்தில் பாசிஸ்டுக் கட்சி இந்தப் பணியை வரித்துக் கொள்ளவில்லை. பூர்ஷுவா வர்க்கத்தின் மிகவும் பிற்போக்குப் பகுதியினரது சர்வாதிகாரத்தை நிலைநாட்டும் பொருட்டும், அந்தச் சர்வாதிகாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டும் தொழிலாளர்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது அது இந்தப் பணியை ஏற்றுக் கொண்டது.

தொடக்க காலத்தில் பாசிஸ்டுக் கட்சி எப்படி இருந்தது என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

பாசிஸ்டுக் கட்சிக் கருவாகி உருவாகி வளர்ந்து வலுப்பெற்று ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னரும் பின்னரும் அதன் நிலைமை எவ்வாறிருந்தது என்பதை இப்போது பார்ப்போம். அகஸ்டியோவில் நடைபெற்ற பாசிஸ்டுக் கட்சியின் மூன்றாவது காங்கிரசின்போது, அதாவது ரோம் காங்கிரசின்போது அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் நம்மிடம் இருக்கின்றன.

சட்டம் என்பது சரிவர மதிக்கப்படாத ஒரு சமுதாயத்தில், ஆளுபவர்களாலும் ஆளப்படுபவர்களாலும் அந்தச் சட்டம் அடிக்கடி மீறப்படும் ஒரு சமுதாயத்தில் ஃப்ரீமசோன்றி தங்களுடைய குழுக்களைப் பாதுகாக்கக்கூடிய ஓர் அமைப்பு என்று கருதியதாலேயே குட்டி பூர்ஷுவாக்கள் அதில் தம்மை இணைத்துக் கொண்டனர்.

இதன்படி கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 1 இலட்சத்து 51 ஆயிரம். இவர்களில் 14 ஆயிரம் பேர் வணிகர்கள் (வணிகர் என்ற சுட்டுப் பெயர் பல்வேறு பகுதியினரையும் குறிக்கும் என்பதையும் இவர்கள் செல்வந்தர்கள் என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும்), 4 ஆயிரம் பேர் தொழிலதிபர்கள், 18 ஆயிரம் பேர் நிலக்கிழார்கள், 21 ஆயிரம் பேர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், 10 ஆயிரம் பேர் வாழ்க்கைத் தொழிலாளர்கள், 7 ஆயிரம் பேர் அதிகாரிகள், 15 ஆயிரம் பேர் ஊதியம் பெறும் ஊழியர்கள், 25 ஆயிரம் பேர் ஆலைத் தொழிலாளர்கள், 27 ஆயிரம் பேர் விவசாயத் தொழிலாளர்கள்.

இந்தப் புள்ளி விவரங்களைச் சற்று மிகையானதாக எடுத்துக் கொண்டு பார்த்தாலும் கூட, உறுப்பினர்களில் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் விவசாயத் தொழிலாளர்கள் என்பதைக் காணலாம். இந்த விவசாயத் தொழிலாளர்கள் பெரும்பாலும் எமிலியாவைச் சேர்ந்தவர்கள். கிராமப்புறக் குட்டி பூர்ஷுவா மற்றும் மத்தியதர பூர்ஷுவா பிரிவின் கீழ் வருபவர்கள். பாசிச வளர்ச்சியின் முதல் கட்டத்தில் அதன் பிரதான வெகுஜன அடித்தளமாக இருந்தவர்கள்.

தொழிலதிபர்கள், வணிகர்கள், நிலக்கிழார்கள், மாணவர்கள் (முதலில் குறிப்பிடப்பட்டவர்களின் புதல்வர்கள்), வாழ்க்கைத் தொழிலாளர்கள் இவர்கள் எல்லோரையும் சேர்த்துக் கணக்கிட்டால் 67 ஆயிரம் பேராகிறது. அதாவது மொத்த எண்ணிக்கையில் பாதி ஆகிறது. அடுத்து 22 ஆயிரம் ஊழியர்களையும், அதிகாரிகளையும் எடுத்துக் கொண்டால் இதுவும் பெரும் எண்ணிக்கையை எட்டுகிறது. 25 ஆயிரம் தொழில்துறைத் தொழிலாளர்களும் மாலுமிகளும் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதான் மிகவும் ஐயத்துக்குரியதாக இருக்கிறது.

படிக்க:
இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?
ஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை !

எனினும் இதனை உண்மை என்று எடுத்துக்கொண்டால்கூட ஒட்டுமொத்த சதவீதத்தில் இந்த 25 ஆயிரம் பேர் கட்சியின் இயல்பை நிர்ணயிப்பவர்கள் அல்ல என்பது தெளிவு. உண்மையில் 67 ஆயிரம் பூர்ஷுவாக்களும் 22 ஆயிரம் ஊழியர்களும்தான் கட்சிக்கு அதன் இயல்பை அளிக்கிறார்கள். ஆக, பாசிஸ்டுக் கட்சி மிகப்பெரும்பாலும் பூர்ஷுவாக் கட்சி என்பதும், ஊதியம் பெறும் ஊழியர்கள் மீது வலுவான செல்வாக்கு செலுத்துகிறது என்பதும், அதன் கிளைகள் தொழிலாளி வர்க்கத்தின் மீதும் விவசாயத் தொழிலாளர்கள் மீதும் வியாபித்துள்ளன என்பதும் இதிலிருந்து புலனாகும்.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே ?

1

இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த தங்கம், வைரம், வைடூரியம் போன்ற நவரத்தின ஆபரணங்கள் எங்கே..?

நண்பர்களே….

பொ.வேல்சாமி

ஞ்சை பெரிய கோவிலுக்கு இராஜராஜ சோழனும் அவருடைய அக்காள் குந்தவை நாச்சியாரும் மற்றும் பலரும் கொடுத்த பல்வேறு வகையான ஆபரணங்களைப் பற்றிய தகவல்களை இராஜராஜ சோழன் வெட்டிய கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குறைந்தபட்சம் அந்த ஆபரணங்களை ஒரு லாரியிலாவது ஏற்ற வேண்டும். இராஜராஜ சோழன் காலத்திற்கு பின்னர் வந்த ஆட்சியாளர்களும் இறுதியாக ஆட்சி செய்த மராட்டிய மன்னர்கள் காலம் வரையில் அந்த ஆபரணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. மராட்டிய மன்னர்களும் ஏராளமான நிலங்களையும் நகைகளையும் தஞ்சை பெரிய கோவிலுக்கு அளித்த கல்வெட்டுகளும் உள்ளன. இந்த நிலங்களும் நகைகளும் எங்கே போயின..?

படிக்க:
அரசியலமைப்பை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கை – 2019 !
இந்திய நாடு அடி(மை) மாடு ! புதிய ஜனநாயகம் ஜூன் 2019

இதே போன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கும் திருப்பதி கோவிலுக்கும் சோழர் காலத்திலிருந்து 19-ம் நூற்றாண்டு வரை பல்வேறு வகையான நில தானங்களையும் பெரு மதிப்புள்ள ஆபரணங்களையும் பல மன்னர்கள் கொடுத்துள்ளனர். “கோயிலொழுகுஎன்ற நூலில் ஸ்ரீரங்கம் கோவில் பெற்ற தானங்களும் அக்கோவில் சார்ந்த பல வரலாற்று நிகழ்வுகளும் கடந்த 1000 ஆண்டுகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே போன்று திருப்பதி கோவிலில் வரலாற்றுக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட நூலைதிருமலை ஒழுகுஎன்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த இரண்டு பதிவுகளிலும் சொல்லப்பட்ட சொத்துகளும் நகைகளும் இன்றும் அந்தந்த கோவில்களில் உள்ளன. தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் ஏன் இவை இல்லை..?

ஸ்ரீரங்கம், திருப்பதி கோவில்களில் காலங்காலமாகப் பதிவு செய்யப்பட்ட செய்திகள் நூலாக வெளிவந்துள்ளன. அந்த இரண்டு நூல்களின் இணைப்பை உங்களுக்கு கொடுத்துள்ளேன். மேலும் இராஜராஜ சோழன் கொடுத்த ஆபரணங்களைப் பற்றிய கல்வெட்டுகள் ஒரு தனித் தொகுதியாகதஞ்சை பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் பாகம் 1 ” (தானங்களைப் பற்றியது) வெளிவந்துள்ளது. அந்த நூலின் இணைப்பையும் கீழே உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

(கீழுள்ள கோப்புகளை தரவிறக்கம் செய்ய, லிங்கின் மீது அழுத்தி, Free Download பட்டனை அழுத்தவும்)

தஞ்சை பெரிய கோவிலுக்கு இராஜராஜ சோழன் கொடுத்த தங்கம் வைரம் வைடூரியம் முத்து பவளம் போன்ற இரத்தினங்களால் செய்த நகைகளின் தொகுதிகளைக் கூறும் கல்வெட்டுகள் தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள்

கோயிலொழுகு (ஸ்ரீரங்கம் கோவில் வரலாற்றுப் பதிவு – 1000 ஆண்டு காலத்துப் பதிவுகள்)

1976-ல் பதிப்பிக்கப்பட்டது கோயிலொழுகு – 1976

திருமலை ஒழுகு (திருப்பதி கோவில் வரலாற்றுப் பதிவு – 1000 ஆண்டு காலத்துப் பதிவுகள்) திருமலை ஒழுகு

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

காவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா ?

ச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைக்கூடப் பின்பற்ற மறுப்பதன் மூலம் கர்நாடகாவிற்குச் சாதகமாகச் செயல்படுகிறது, காவிரி ஆணையம்.

“காவிரியில் தமிழகத்திற்குரிய ஜூன் மாத ஒதுக்கீடான 9.19 டி.எம்.சி. நீரைக் கர்நாடகா அரசு திறந்துவிட வேண்டும்” என மே மாத இறுதியில் நடந்த காவிரி ஆணையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனினும், ஜூன் மாதம் தொடங்கிப் பத்து நாட்கள் கடந்த பிறகும் ஒரு டி.எம்.சி. தண்ணீர்கூடக் கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு வந்துசேரவில்லை. இதுவரை வந்த நீரின் அளவு 0.76 டி.எம்.சி.தான் எனப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. வந்து சேர்ந்த நீரின் அளவைப் பார்த்தால், அது கர்நாடக அணைகளில் இருந்து கசிந்து வெளியேறிய நீராகத்தான் இருக்குமேயொழிய, திறந்துவிடப்பட்ட நீராக இருக்க வாய்ப்பேயில்லை.

காவிரி ஆணையம்
குறுவை சாகுபடிக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்.

காவிரிப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள், தீர்ப்புகளைக்கூடக் கழிப்பறைக் காகிதம் போலத் துடைத்துப் போடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கர்நாடக அரசு, ஒரு பல்லில்லாத ஆணையத்தின் உத்தரவுக்கு என்ன மதிப்பைத் தந்துவிடப் போகிறது? காவிரி ஆணையத்தின் கூட்டம் முடிந்த மறுநிமிடமே, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.சிவக்குமார், ஆணையத்தின் முடிவு குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்” என அறிவித்தார். இதன் பொருள், தண்ணீரைத் திறந்துவிட முடியாது என்பது தவிர வேறெதுவுமாக இருக்க முடியாது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் பொறுப்பும் கடமையும் காவிரி ஆணையத்திற்கு மட்டுமே உண்டு.  எனினும், இவ்வாணையம் காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தோடு அமைக்கப்படவில்லை. மேலும், இவ்வாணையம் அமைக்கப்பட்டு ஏறத்தாழ ஒரு வருடம் முடிந்துவிட்ட பிறகும்கூட, ஆணையத்திற்கான முழுநேரத் தலைவரை மோடி அரசு நியமிக்கவில்லை. காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையகம் பெங்களூருவில் அமைக்கப்படவில்லை. இவற்றைச் செய்து முடிப்பதற்கான அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை. காவிரி ஆணையம் தப்பித்தவறிக்கூடத் தமிழகத்திற்குச் சாதகமாக நடந்துவிடக் கூடாது என்பதுதான் இந்த இழுத்தடிப்பின் பின்னுள்ள உள்நோக்கம். காவிரி ஆணையமும் மோடி அரசின் இந்த உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில்தான் செயல்பட்டு வருகிறது.

காவிரி ஆணையம் சூன் மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் முடிய பத்து நாட்களுக்கு ஒருமுறை கூடி, கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்காணித்து, அதற்கேற்ப உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், ஆணையமோ கடந்த ஆண்டில் ஜூலையில் ஒருமுறை கூடியது. அதன் பின்னர் டிசம்பரில்தான் மற்றொருமுறை கூடியது. தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் குறுவை சாகுபடிக்காக ஆணையத்தை உடனே கூட்ட வேண்டும் எனக் கோரிய பிறகுதான் கடந்த மே மாத இறுதியில் ஆணையம் கூடியிருக்கிறது.

படிக்க :
♦ காவிரி : தொடருகிறது வஞ்சனை !
♦ காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் !

காவிரியின் குறுக்கே கர்நாடகாவில் உள்ள அணைகளில் காணப்படும் நீர்வரத்து எவ்வளவு, எவ்வளவு நீரை, எதற்காக கர்நாடக அரசு வெளியேற்றுகிறது, அணையின் நீர் இருப்பு எவ்வளவு என்பதையெல்லாம் ஆணையம் மாதாமாதம் கண்காணித்துப் பதிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த விதிமுறையை ஆணையம் நடைமுறைப்படுத்துவதேயில்லை.

குறிப்பாக, கர்நாடக அரசு கோடை கால சாகுபடிக்குக் காவிரியிலிருந்து எவ்வளவு நீரை எடுத்துப் பயன்படுத்துகிறது என்பதை ஆணையம் கண்காணிப்பதேயில்லை. மேலும், அம்மாநில அரசு காவிரி நீரைச் சட்டவிரோதமான முறையில் ஏரிகளுக்குக் கடத்திக்கொண்டு போய் பதுக்கி வைப்பதையும் ஆணையம் கண்டுகொள்வதேயில்லை.

கடந்த ஐந்து மாதங்களில் காவிரி ஆணையம் ஒருமுறைகூடக் கூடவில்லை. கடந்த அக்டோபர் 2018 தொடங்கி மே 2019 முடியவுள்ள எட்டு மாதங்களில் கர்நாடகம் தர வேண்டிய 51.61 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குப் பெற்றுத் தருவது குறித்து ஆணையம் அக்கறை கொள்ளவில்லை. பா.ஜ.க.-வின் பினாமியான எடப்பாடி அரசும் அந்நிலுவை நீர் குறித்து வாய் திறக்கவில்லை.

கடந்த மே மாத இறுதியில் நடந்த ஆணையத்தின் கூட்டத்தில் இந்த நிலுவை நீர் பற்றி விவாதிக்க முன்வராத ஆணையம், மேகேதாட்டு அணை தொடர்பாக விவாதிப்பதை நிகழ்ச்சி நிரலில் ஒன்றாக முன்வைக்க முயன்று, பின்னர் தமிழக அரசின் எதிர்ப்பின் காரணமாகப் பின்வாங்கிக் கொண்டது.

இப்படி மைய அரசும் காவிரி ஆணையமும் கர்நாடகாவிற்குச் சாதகமாகவே நடந்து வருவதால்தான், தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய பங்கைத் திறந்துவிடும் அளவிற்குத் தனது அணைகளில் தண்ணீர் இல்லை” எனத் துணிந்து சொல்கிறது, கர்நாடக அரசு. வறட்சி காலத்திலும்கூட, கர்நாடக அணைகளில் உள்ள நீர் இருப்பை அதற்கேற்ற விதத்தில் (distress formula) காவிரிப் பாசன மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், கர்நாடகாவோ காவிரி ஆற்றைத் தனக்கு மட்டுமே பாத்தியப்பட்ட சொத்தாகவும், அதில் தமிழகத்திற்கு எள்ளளவும் உரிமை கிடையாது என்றும் திமிர்த்தனமாகவே நடந்து வருகிறது.

கர்நாடக அரசு கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்திற்குக் காவிரியில் திறந்துவிட்டுள்ள நீரின் அளவையும், அந்நீர் திறந்துவிடப்பட்ட காலமுறையையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், தன்னால் தேக்க முடியாத உபரி நீரைத் திறந்துவிட்டிருக்கும் உண்மையையும், காவிரியின் மீதான தமிழகத்தின் உரிமையை மறுத்து, தமிழகத்தை உபரி நீரை வெளியேற்றும் வடிகாலாக மாற்றியிருக்கும் அவலத்தையும் யாரும் விளங்கிக் கொள்ள முடியும்.

காவிரிப் பிரச்சினை
குறுவை சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிடக்கோரி கல்லணையில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய தென்னிந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயிகள்.

உச்ச நீதிமன்றம் காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்குப் பாதகமான தீர்ப்பை அளிக்கிறது. மைய அரசோ ஒரு பல்லில்லாத ஆணையத்தை அமைக்கிறது. கர்நாடகமோ எதற்கும் கட்டுப்படாமல் அடாவடித்தனமாகச் செயல்படுகிறது. இந்த ஆட்டத்தைத் தமிழகம் இன்னும் எத்துணை நாட்களுக்குச் சகித்துப் போக முடியும்?

தமிழகம் குறுவை சாகுபடியை முற்றிலுமாகக் கைவிட்டுவிட வேண்டும் என்பதுதான் கர்நாடகாவின் இறுதி நோக்கம். ஏனென்றால் குறுவை சாகுபடி நடக்கும் ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் முடியவுள்ள மாதங்களில்தான் கர்நாடகம் தனது அணைகளிலிருந்து 143 டி.எம்.சி. நீரைத் தமிழகத்திற்குத் திறந்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

“தனது அணைகளில் போதிய அளவு நீரில்லை” என்ற காரணத்தைக் கூறியே, கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது நோக்கத்தை வெற்றிகரமாகத் தமிழகத்தின் மீது திணித்துவிட்டது, கர்நாடகா. இந்த ஆண்டாவது குறுவை பயிரிடுவதற்குரிய நீரைக் கர்நாடகாவிடமிருந்து பெற்றுத் தருமாறு டெல்டா விவசாயிகள் கோரிவரும்போது, அதனை உத்தரவாதப்படுத்தாத மைய அரசு, கிருஷ்ணா நதி நீர் இணைப்புப் பற்றி வாய்ப்பந்தல் போடுகிறது.

தமிழகம் தனக்குரிய காவிரி நீரைக் கேட்டால், மோடி அரசோ கானல் நீரைக் காட்டும் மோசடியில் இறங்குகிறது. இந்த நதி நீர் இணைப்பு என்பது காவிரியில் தமிழகத்திற்குரிய வரலாற்றுரீதியான, நியாயமான, சட்டரீதியான பங்கை மறுக்கும் நயவஞ்சகமாகும்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படிக் கர்நாடகம் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிடாவிட்டால், அது குறுவை சாகுபடியில் ஈடுபடும் டெல்டா மாவட்ட விவசாயிகளை மட்டும் பாதிக்கப் போவதில்லை. குடிநீருக்குக் காவிரியை நம்பியிருக்கும் தமிழகத்தின் 24 மாவட்ட மக்களையும் நா வறண்டு சாகச் செய்யும்.

படிக்க:
♦ அர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் ?
♦ அதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் !

காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கை கர்நாடகம் திறந்துவிடுவதை உத்தரவாதப்படுத்த மறுக்கும் மைய அரசுதான், டெல்டா மாவட்டங்களின் நிலத்திலும், கடலிலும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அடுத்தடுத்துத் திணிக்கிறது. தமிழக மக்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்ற மறுக்கும் மைய அரசுதான் தமிழக விவசாயிகளின் நிலங்களை ஆக்கிரமித்து எரிவாயுக் குழாய்களைப் பதிக்கிறது, மின்கோபுரங்களை அமைக்கிறது.

இவை ஒவ்வொன்றும் தனித்தனியான பிரச்சினைகள் அல்ல. தனித்தனியான போராட்டங்களுக்குப் பதிலாக ஒருங்கிணைந்த முறையில் தமிழகம் தழுவிப் போராடுவது மூலம்தான் தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசைப் பணிய வைக்க முடியும்.

ரஹீம்

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

 

விண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்

செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்டைக்குள் ‘கொம்பு’ முளைக்கிறது!
– ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திடுக்கிடும் தகவல்

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சுற்றுலா பயணிகள் செல்ல நாசா அனுமதி!

கருத்துப்படங்கள் : வேலன்