Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 587

காக்கா முட்டை திடீர் நகர் – நிழலும் நிஜமும் !

17

காக்கா முட்டை திரைப்படம் சொல்லும் திடீர் நகர் மக்களின் வாழ்க்கை குறித்து இயக்குநர் வசந்தபாலன் மெய்மறந்து உள்ளொளியின் உவகையுடன் பேசுவதைக் கேட்டோம்.

‘அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, அன்பாக, நெகிழ்ச்சியாக, வாழ்கிறார்கள்’ என்று அவர் மட்டுமல்ல பல்வேறு அப்பாவிகளும் உண்மையிலேயே ஃபீல் பண்ணி பேசுவதைப் பார்த்த போது ஒன்று தோன்றியது.

நாமே திடீர் நகருக்கு நேரில் சென்று படம் குறித்த படைப்பாளிகள், மற்றும் ரசிகர்களின் கருத்தை சொல்லி அப்பகுதி மக்களின் பதிலை பதிவு செய்வோம் என முடிவு செய்தோம்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள்

சென்னை-அண்ணாசாலையை ஒட்டிய சைதாப்பேட்டை மறைமறையடிகள் பாலம் அருகே கீழே உள்ள திடீர் நகர், கோதாமேடு-அண்ணாநகர் பகுதிகளுக்கு ஒரு ஞாயிற்றுக் கிழமை காலையில் சென்றோம்.

எறும்புகள் புற்றுக்குள் செல்வதுபோல் சாரைசாரையான சந்துகளில் நெரிசலாக உழைக்கும் மக்கள். மூன்றடி இடைவெளிச்சந்தில் இருபுறமும் தகரக் கொட்டகைகள்.

சிரிப்பு, கும்மாளம், அவலம், வெறுமை, சுறுசுறுப்பு, சோம்பிக்கிடத்தல் என விதவிதமான உணர்ச்சிகளுடன் தென்பட்ட சிறுவர் பெரியவர் அனைவரையும் சந்தித்தோம்.

“காக்கா முட்டை படம் சூட்டிங் நடந்த இடம் இதுதானே”

“ஆமாம்” என்று சிரித்தனர்.

“காக்காமுட்டை படம் பார்த்தீர்களா”

“டிவியிலே பார்த்தோம் பாட்டு, ட்ரெயிலர் எல்லாம்..” என்றனர். சிலர் டி.வி.டியிலும் ஓரிருவர் தியேட்டரிலும் பார்த்தாக சொன்னார்கள். பெரும்பான்மையினர் பார்க்கவில்லை. சொல்லப்போனால் அப்படம் திரையரங்குகளில் வந்ததே தெரியாது.

கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா…“, “கூவம் எங்கள் தாய்மடியாக தாலாட்டுமடா..” என்று காக்கா முட்டையில் கவிஞர் நா. முத்துக்குமார் உருவாக்கியிருக்கும் அற்புதமான மகிழ்ச்சி, சந்தோஷம், ஜாலி, நிம்மதி குறித்து மக்களிடம் கேட்டோம்.

அருகில் வந்த ஒருவர் “அவனுங்க, காக்காமுட்டை, பல்லிமுட்டைனு படம் காம்ச்சி, அவார்டு வாங்கி மேலேமேலே பூடுவனுங்கோ….நாங்க மட்டும் கூமுட்டையா கூவத்துலேயே இருக்கணும்னு படம் காட்டாறனுங்களா? இங்க எங்களுக்கு இன்னா… நிம்மதிய கண்டானுங்க… அவசரம்னா…. போறத்துக்கு வீட்டுல ஒரு கக்கூஸ் இருக்குதானு பாத்தானுங்களா? பொம்பளைங்க, குழந்தையுங்க, வயித்துவலி பேதி வந்தா, ரோடு வரைக்கும் ஓடணும். அங்கேயும் போனா…க்கியூதான்…அது வரைக்கும் …நீ நில்லுன்னா… அது…நிக்குமா? பெருசுங்கக்கூட காலோடோ…போ…ய்யி..டும். அந்த அசிங்கம் அவனுங்களுக்கு தெரியுமா? …

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“கூவம் என்பது சாக்கடை என்று யார் சொன்னதடா…”, “கூவம் எங்கள் தாய்மடியாக தாலாட்டுமடா..”

இங்க..2000 பேருக்கு மேல்..கிறோம்…2..கக்கூஸ்தான் (பொதுக் கழிப்பறை – ஆணுக்கு 2, பெண்ணுக்கு 2)…அதுலயும் அங்க தண்ணீ…இல்ல.. டப்பாவுல எடுத்துகினு போனோதான் கழுவ முடியும்…!…இன்னும் ஆயிரம் கப்பு (நாற்றம்)… இருக்குது இங்கே.. ..அதலதான் ..நாங்க வாழ்றோம். இந்த.. வாழ்க்கை அவனுங்களுக்கு சந்தோசமா.. தெரியுதா?” என்று எரிச்சலாகி முறைத்தார்.

அடுத்ததாக கூவம் கரைக்கு அதாவது காக்கா முட்டையின் படி “தாயின் மடி” கரைக்கு நம்மை அழைத்துச் சென்றனர், பகுதி சிறுவர்கள். “பச்சை பசுங்காடு” என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் “பச்சை பீக் காடு” கண்டு பீதியில் உறைந்தோம்! அதன் நடுவே, சிறுவர்கள் ஒரு கற்பாறையில் கிரிக்கெட் மட்டையுடன் நின்றுக் கொண்டிருந்தனர். அனுபவம் இல்லாததால், கவனமாக சென்றும்  பீயில் விழுந்து எழுந்த பிறகுதான் வினவு செய்தியாளர் அந்த இடத்திற்கு செல்ல முடிந்தது!

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“காலைல வெளிக்கி போறோமா அப்ப வழிக்கி விடும், அப்பால சேத்துல வெச்சா செருப்பு வேற மாட்டிக்கிது. அதனால தான் போடுறதில்ல!”

“சார்.. இங்க எதுக்கு வர்றீங்க …?” என்றனர், அருகில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த சிறுவர்கள்.

“இங்கு எப்படி விளையாடுவீர்கள்? பந்து ஆய் மீது விழுந்தால் என்ன செய்வீர்கள்”

‘அதெல்லாம் ஒரு மேட்ரா…’ என்பது போல் நம்மைப் பார்த்தார்கள்!

“டொக் (மெதுவாக அடிப்பது அல்லது கட்டை போடுவது) அடிச்சிதான் இங்க விளையாடணும். தூக்கி அடிக்கிறவன தொறத்திடுவோம்” என்றனர். ஆக இங்கே சிக்சரோ இல்லை ஃபோருக்கோ வழியில்லை. கிரிக்கெட்டிலே கூட திடீர் நகர சிறுவர்கள் சுதந்திரமாக விளையாட முடியாது என்ற போது அங்காடித் தெரு இயக்குநரின் அறிவு குறித்து நாம் கரிசல் மண் சென்றுதான் அழ வேண்டும்.

அரசுக்கு சொந்தமான டோபி கானா (வண்ணார் துறை – சலவைத் தொழிலாளர் பகுதி) நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சுதாகர் என்ற மாணவரிடம்…

“ஆமா நீ ஏன் செருப்பு போட மாட்டேங்குற?

“அத போட்டா வழுக்குதுண்ணே?”

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“சினிமாக்காரனுங்க எல்லாம் பங்களாவுல வாழறானுங்க. அவனுங்களுக்கு எங்க கஸ்டம் கொண்டாட்டமா தெரியுதுபோல”

“நடந்தாலே வழுக்குதா?”

“காலைல வெளிக்கி போறோமா அப்ப வழிக்கி விடும், அப்பால சேத்துல வெச்சா செருப்பு வேற மாட்டிக்கிது. அதனால தான் போடுறதில்ல!”

“சரி வீட்டுல டாய்லெட் இல்லயா?”

“வீட்டுல குளிக்க மட்டுந்தா முடியும்”

“நைட்ல டாய்லெட் வந்துச்சுன்னா என்ன பண்ணுவ?

“கரைக்கி(கூவம்) போயிட்டு இங்க வந்து கழிவிக்குவேன்”.

திடீர்நகர சிறுவர்கள் செருப்பில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தது பற்றி காக்காமுட்டை படம் உருவாக்கிய குறியீடு, படிமம், கவித்துவம் குறித்து கதையளந்த அந்த நல்லவர்கள் எங்கே?

வீட்டு வாசலில் துணி துவைத்துக் கொண்டிருந்த அம்மு என்பவர், “சொன்னா.. அசிங்கம்..சார்…எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் பண்ணனும், குளிக்கிறது, சாப்பிறது, தோய்க்கிறது, தூங்கறது, கக்கூஸ் போறது…” என்று மீண்டும்… கோபத்தோடு ஏதோ.. சொல்ல வந்தவரை அருகிலிருந்த பிற பெண்கள் இழுத்து வாயடைத்தனர்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
‘ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடும் ரீங்காரம். கட்டாந்தரையில் கைகளை மடித்து படுத்து தூங்கிறோம்’ என்பது உண்மையா?”

அத்தெருவில் சாப்பாட்டுக்கடை நடத்தும் கற்பகம் என்பவர், “இந்த சினிமாக்காரனுங்க எங்களப்பத்தி இப்படி காமிகிறதுக்கு புதுசு இல்ல! ஆனா இந்த சாக்கடையிலக் கூட எங்கள வாழவுடாம பலபேரு, இந்த எடத்த எப்படி புடிங்கிறதுனு குறியா கீறானுங்க. சினிமாக்காரனுங்க எல்லாம் பங்களாவுல வாழறானுங்க. அவனுங்களுக்கு எங்க கஸ்டம் கொண்டாட்டமா தெரியுதுபோல” என்றார், குரல் உடைந்து.

பக்கத்திலிருந்த கமலக்கண்ணன் என்பவரிடம், “உங்களை கொசுக்கள் கடித்தாலும் காக்கா முட்டையில் வரும் பாடல் போல ‘ராத்திரி எங்கள் கச்சேரிக்கு வண்டுகள் பாடும் ரீங்காரம். கட்டாந்தரையில் கைகளை மடித்து படுத்து தூங்கிறோம்’ என்பது உண்மையா?” என்று கேட்டோம்.

“….சார்…நல்லா வாய்ல்ல வருது சார்…பேமானிங்க, சினிமாக்காரனுங்கள இங்க ஒரேஒரு நாளைக்கு வந்து படுக்க சொல்லுங்க சார்…! 3 அடிஅகலம் உள்ள சாக்கடைதான் எங்களுக்கு தெருவு! அதுமேல சிமெண்டு ஸ்லாப் போட்டு  நடக்கிறோம், சாப்புடுறோம். தூங்றோம். இதுல, பீ, பெருச்சாளி, புழு நெளியும். ..பல ராத்திரி குழந்தைங்க திடீர்னு கத்தும்! எழுந்து பார்த்தா பெருச்சாளி ஓடும்!” என்றார்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“எல்லாத்தையும் நாங்க தெருவுலதான் பண்ணனும், குளிக்கிறது, சாப்பிறது, தோய்க்கிறது, தூங்கறது, கக்கூஸ் போறது…”

பாத்திரங்களைக் கழுவிக்கொண்டிருந்த சொளமியா என்பவர். “கொசுக்கடி மட்டுமில்ல, குடிக்க தண்ணீ, குழாயில ராத்திரி 12 மணிக்கு மேலதான் வரும்! பாதி ராத்திரி 1 மணி, 2மணிக்கு குடிக்கிற தண்ணிய புடிச்சுட்டு, அப்பிடியே குளிச்சிருவோம். அந்நேரத்திலதான் யார் பாப்பாங்களோன்ற பயம் இல்லாம குளிக்க முடியும்! பிறகுதான் தூங்கப் போவோம்.

எல்லார் தலைமாட்டிலும் ஒரு கொசு வத்திய கொளுத்தனாதான் தூங்க முடியும். அதனால பகல்லானா… குழந்தைங்க விடாம இருமுதுங்க… டாக்டர் கிட்டப்போனா கொசுவத்தி வைக்கக் கூடாதுனு சொல்றாரு.. .எங்க வேதனைய… யார்..கேக்றாங்க..” என்றார்.

திடீர்நகர் வீடுகளில் கழிப்பறை இல்லை. குளிக்கவே முடியாது. ஏனெனில் வடிகால் வசதி இல்லை. இந்நிலையில் பெண்கள் நள்ளிரவில் ஊர் அடங்கியதும் தெருக்கோடிகளில் சென்று குளிக்கிறார்கள். குளியல் என்றால் ஏற்படும் ஒரு ரம்மியம், மணம், மல்லிகை, ஸ்கந்தம், பாத்ரூம் பாடகர்கள் போன்ற குறியீடுகளில் வாழ்பவர்கள் தங்களது தெருக்களில் நள்ளிரவில் குளித்தால் காக்கா முட்டை குறித்த படிமங்கள் டமாலென உடைந்து விடும், கவனம்!

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“லின்ஸ, ராக், அண்டர்டேக்கர்-லாம் தெரியும். இப்பல்லாம் WWE- ஆனதுனால சும்மா டுபாக்கூர் விட்டுகினு இருக்காங்கண்ணா”

திடீர் நகர் சிறுவர்களின் ஆர்வம், கனவு, பணப் புழக்கம், நவீன நுகர் பொருட்கள் பற்றிய அறிவு என்ன?

நாங்கள் சென்ற நேரம் கோலிக்குண்டு சீசன். கோதாமேடு, அதை ஒட்டியுள்ள ஹவுசிங் போர்டு தான் இவர்களின் ஆடுகளம். காலை 7 மணிக்கு ஆட ஆரம்பித்த சிறுவர்கள் 1 மணி வரையில் பல்வேறு கூட்டமாகப் பிரிந்து பிரிந்து விளையாடினர்.

மாத்திரை (விஷ்ணு) வீட்டிற்குப் போய் குளித்துவிட்டு வந்து மீண்டும் கெத்தா விளையாட ஆரம்பித்தான். அப்போது அவனுடைய நண்பன் சொரி(சந்தோஷ்) “டேய் இவன யாரும் சேத்துக்க வேணாண்டா! இவனுக்க சாப்ட கொடுத்த துட்ட வெச்சி கோலிக்குண்டு வாங்கியாந்துட்டான்” செல்வம் தலையிட்டு பிரச்சினையை சரிசெய்தார்.

சஞ்சீவ், முட்டை பஜ்ஜி (ரகுமான்), கலீல், ஷாஜஹான், கவுதம், கமலேஷ் என எல்லாரும் கோலிக்குண்டு விளையாடி ஜெயிப்பதில் மூழ்கியிருந்தனர். இவர்கள் ஒரே அணியாக மட்டுமே விளையாடவில்லை. சிறிது நேரம் ஒரு குழு, பிறகு வேறு ஒரு கூட்டம் என மாறி மாறிக்கொண்டே இருந்தனர்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
திடீர் நகர் சிறுவர்கள் பிட்சா பற்றிக் கூட தெரியாத அப்பாவிகளா

ஒரு குண்டு ஒரு ரூபாய் என ஒவ்வொருவர் பாக்கெட்டிலும் 15 ரூபாய் மதிக்கத்தக்க குண்டுகள் இருந்தன. புதிதாக ஒரு கிரவுண்ட் இருந்தாலும் அங்கே வாலிபர்கள் பெரும்பாலும் ஆக்கிரமித்துக் கொள்வதாலும், வெயிலாக இருப்பதாலும், வெறும் மணலாக மட்டுமே இருப்பதாலும் சிறுவர்கள் வீட்டிற்கு அருகிலேயே விளையாடுகின்றனர்.

திடீர் நகர் சிறுவர்கள் பிட்சா பற்றிக் கூட தெரியாத அப்பாவிகளா, 15 ரூபாய் சம்பாதிக்க திண்டாடுவார்களா என்று அறிந்து கொள்ள முயற்சித்தோம்.

சுதாகரிடம்…

“ரயில்வே ட்ராக் பக்கமெல்லாம் போவீங்களா?

”இல்லண்ணே அங்க போனா பெரியவங்க தொரத்திருவாங்க”…

காக்கா முட்டை காட்டிய படங்கள்
கூவம் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதாக காட்சிப்படுத்திய காக்கா முட்டை குறித்து சிறுவர்கள் என்ன சொல்கிறார்கள்?

“பள்ளிக்கூடத்துல தெனமும் தீனி எதாவது வாங்கி சாப்புடுவியா?”

“சிப்ஸ், குர்குரே, பிங்கோ எல்லாம் சாப்புடுவேன்”

“சரி யாரு ஒனக்கு இவ்ளோ காசு கொடுப்பா?”

“எங்கம்மா தான் கொடுப்பாங்க, தெனமும் 5 ரூவா இல்ல 10 ரூவா கொடுப்பாங்க,

டீச்சர் கல்லூரியில் உள்ள அரசு மாடல் மேல்நிலைப்பள்ளியில் 11-வது படிக்கும் செல்வத்திடம்..

“என்னடா தம்பி கோலிக்குண்டு வெளையாடலியா?”

“இல்லண்ணா நாங்கெல்லாம் WWF-தான் பாப்போம்”

“அப்படியா யாரப் புடிக்கும்?”

“இப்பக்கி ஜான் சினா தான்”

“சரி வேற யாரையெல்லாம் தெரியும்?”

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“அவனுங்கள இங்க வந்து, காக்கா முட்டை, கூவம் கதை சொல்லச் சொல்லுங்க அவனுங்க தொண்டைய அறுத்துருவேன்.”

“காலின்ஸ, ராக், அண்டர்டேக்கர்-லாம் தெரியும். இப்பல்லாம் WWE- ஆனதுனால சும்மா டுபாக்கூர் விட்டுகினு இருக்காங்கண்ணா”

“ஏண்டா தம்பி பத்தாவது படிச்சவுடனே டிப்ளமோ படிக்க போயிருக்கலாம்ல?”

“இல்லண்ணா,  ஸ்கூல்ல படிச்சா ஃபிரண்ட்ஸ்களோட ஜாலியா பேசிக்கினு வெளையாடிக்கினு இருக்கலாம், காலேஜ்-னா செரமம் அதான் +1 சேந்துட்டேன்”

“ஒனக்கு நெறையா காசு கெடச்சா என்னடா தம்பி சாப்டுவ?”

“நெறையா காசு இருந்தா பீஃப் ரைஸ் தான்னே சாப்பிடுவேன்”

“பீசாவெல்லாம் சாப்பிடுவியா?”

“எங்கப்பாகிட்ட சொன்னா, ஆட்டோ ஓட்டி முடிச்சிட்டு வர்றப்ப வாங்கிக்கினு வருவாரு, பேக்கரில கூட 30 ரூவாக்கி கெடைக்குது. மெக்டொனால்ட்ஸ்-ல கூட 90 ருப்பீஸ்-கு போட்ருக்காங்கன்னா”

மற்றும் இங்கிருக்கும் பல சிறுவர்களுக்கு வாட்ஸ் அப் உட்பட அனைத்தும் பரிச்சயம். செல்பேசி இல்லாத சிறுவர்கள் கூட தங்களுக்கு ஃபேஸ்புக்கில் அக்கவுண்டு இருப்பதை சொல்லி பெயர் கொடுத்தார்கள்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“கொசுக்கடி, சாக்கட நாத்தம்னு நடுராத்திரி ஆனாலும் தூக்கம் வராம மெயின்ரோடு, பிளாட்பாரம் னு போய் படுப்பாங்க. போற வண்டிங்க பிரேக் பிடிக்காம, ஏறி செத்துப்போனங்க பலபேரு”

கூவம் ஆற்றில் குதித்து கும்மாளம் போடுவதாக காட்சிப்படுத்திய காக்கா முட்டை குறித்து சிறுவர்கள் என்ன சொல்கிறார்கள்?

சுதாகரிடம்…

“தினமும் பள்ளிக்கூடத்துக்கு போறப்ப குளிப்பியா?

“குளிப்பேன்”,

“எங்கடா தம்பி குளிப்ப?“

“வீட்ல தான் குளிப்பேன்!”

“கூவத்துல குளிக்க மாட்டியா?”

“சின்னப்புள்ளயா இருக்கப்ப தான் குளிச்சிருக்கேன், அப்பல்லாம் தண்ணி நல்லா இருக்கும், இப்பல்லாம் வீட்ல மட்டும் தான் குளிக்கிறோம்”

செல்வத்திடம்…

“ஒனக்கு ரொம்ப நாளா எதாவது ஆசையிருக்குதா?”

“அப்டியெல்லாம் ஒன்னுமில்ல, லீவு நாள்ல வாட்டர் கேன் சப்ளை பண்ணுவேன், கெடைக்கிற வச்சு சட்டையெல்லாம் எடுத்துக்குவேன், மீதி இருந்தா அம்மா கிட்ட கொடுத்துருவேன்”

“சரி தினமும் கூவத்துல குளிக்கிறியா?”

“என்னாண்ணா? அங்க குளிக்கிற மாதிரியா இருக்கு? ஒரே சேறா இருக்கு, நான் சின்ன புள்ளயா இருந்தப்ப குளிச்சிருக்கேன், அப்பொல்லாம் தண்ணி க்ளியரா இருக்கும், இப்பல்லாம் சாக்கடை தண்ணியா தொறந்து வுடுறாங்க, ஏ.பி.டி-லேர்ந்து தெனமும் அவ்ளோ சாக்கட தண்ணியா கொட்டுறாய்ங்க”

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“இதுல, பீ, பெருச்சாளி, புழு நெளியும். ..பல ராத்திரி குழந்தைங்க திடீர்னு கத்தும்! எழுந்து பார்த்தா பெருச்சாளி ஓடும்!”

“அப்ப ஆத்துகெல்லாம் எப்ப தான் போவீங்க?”

“காலைல கால் கழுவ மட்டும் தான்னா போவோம், அதுவும் வூட்ல கக்கூஸ் இருந்தா இன்னாத்துக்கு போறோம்.”

“சார்… இங்க.. வாங்க” என்றார் கமலக்கண்ணன், “பல நாள் சூட்டிங் எடுத்து எங்க பொழப்ப கெடுத்தாங்க சார்… எங்க வீட்டிலேயே எங்கள நிம்மதியா இருக்க விடாம…. அடிக்கடி வெளிய வராதீங்க.. வீட்டுல டிவி சவுண்டு கொஞ்சம் கொறைங்க… அப்படினு அவனுங்க சொல்லறது எல்லாம் கேட்டோம். இப்ப அந்த சினிமாவிலயே எங்களையே நக்கல் பன்றானுங்களா” என்றார் எரிச்சலாக.

ஆறுமுகம் என்பவர் “கொசுக்கடி, சாக்கட நாத்தம்னு நடுராத்திரி ஆனாலும் தூக்கம் வராம மெயின்ரோடு, பிளாட்பாரம் னு போய் படுப்பாங்க. போற வண்டிங்க பிரேக் பிடிக்காம, ஏறி செத்துப்போனங்க பலபேரு… அவங்க குழந்தைக்குட்டிங்க இப்ப அநாதையா இருக்குது சார்” என்றார் விரக்தியுடன். கவிஞர் நா. முத்துக்குமார் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் மற்றும் பல இணைய பிரபலங்கள் இந்த வரிகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.

எங்கள் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த விக்னேஷ் என்ற இளைஞர், “அவனுங்கள இங்க வந்து, காக்கா முட்டை, கூவம் கதை சொல்லச் சொல்லுங்க அவனுங்க தொண்டைய அறுத்துருவேன். சினிமாக்காரனுங்க எல்லாம் ஜோட்டா (பிராடு) வேலை பண்றவங்க” என்றார்.

அங்கு கும்பலாக இருந்த பெண்களிடம் பேசினோம், “மழைக்காலம் வந்தா இங்க எப்படி? குழந்தைகளோடு நீங்களும் சந்தோசத்தில் மிதப்பீங்களாமே?

“….அப்படியா….மழைவந்தா நீங்க இங்க வாங்க. எங்கக்கூட சேர்ந்து வெள்ளாடுவிங்க….” என்று சிரித்தனர்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
“மழை வந்தா நரகம்! மழைத்தண்ணீ ஊறி இந்த சாக்கடை கொப்பளிக்கும். வீடெல்லாம் பீ…தண்ணீ… மிதக்கும்! குழந்தைங்க ரொம்ப கஸ்ட்டப்படும்”

“மழை வந்தா நரகம்! மழைத்தண்ணீ ஊறி இந்த சாக்கடை கொப்பளிக்கும். வீடெல்லாம் பீ…தண்ணீ… மிதக்கும்! குழந்தைங்க  ரொம்ப கஸ்ட்டப்படும். காய்ச்சல், பேதி, நாத்தம், வேலையில்ல, சோறு இல்லனு…. செத்து பொழைப்போம்… இருந்தாலும் மழை வேணுமில்லனு… மனசு சொல்லும். குழந்தைகளை தேத்திகினு.. இருப்போம்” என்று வலியோடு பேசினர்.

மழையை ரசித்து சிறுவர்கள் ஆட்டம் போடுவதாக காக்கா முட்டை படத்தில் காட்டப்பட்டது பற்றி செல்வம் என்ற சிறுவனிடம்

“மழையெல்லாம் வந்தா என்னடா தம்பி செய்வீங்க”

“அண்ணா, மழை பெஞ்சுச்சுனா வீட்டுல ஒழுவுற எடத்துலெல்லாம் பானைய வெக்கணும், அப்புறமா ரெண்டு மூனு நாளு கழிச்சி கொசு கடி தாங்காது, வெள்ளம் கூடுனா உடனே பள்ளிக்கூடத்தண்ட போயிருவோம். தண்ணி வடிஞ்சப்புறம் வருவோம்”

நாம் பத்திரிக்கையிலிருந்து வந்திருக்கிறோம் என்று தெரிந்ததும் பலர் சூழ்ந்து கொண்டனர். காக்காமுட்டை படத்தில்  வரும்  டாஸ்மாக் கடைக்காக  தன்னுடைய டீக்கடையை தற்காலிகமாகக் கொடுத்தவர், கொதிப்புடன், “சூட்டிங் எடுத்துட்டு அப்பால, பேசுனது மாதிரி பணம் கொடுக்காம ஓடுன திருட்டுபசங்க சார் அவனுங்க… இந்தப்படம் தியேட்டருக்கு இல்ல… சின்ன பட்ஜெட்டு.. நீங்களெல்லாம் உதவி  பண்ணனும்னு…. பொய் சொன்னாங்க அவனுங்க. பிச்சைக்கார பசங்க! இப்ப அவனுங்கள வரச்சொல்லுங்க. 100 பொம்பளங்கள கூப்பிட்டு தொடப்பக்கட்டையாலேயே அடிப்போம்! அவனுங்க போலீசு ஸ்டேசன் இல்ல எங்கவேனாலும் போய் ரிப்போட் பண்ணட்டும். டூபாக்கூர் பசங்க… ” என்றார்.

காக்கா முட்டை காட்டிய படங்கள்
காக்காமுட்டை சினிமா கும்பலால் ஏமாந்த கதையை அடுத்தடுத்து சொன்னார்கள்.

இப்படி பலபேர், காக்காமுட்டை சினிமா கும்பலால் ஏமாந்த கதையை அடுத்தடுத்து சொன்னார்கள். “துணி காயப்போடும் சீனுக்காக, பலமுறை பசங்களை ஓட்டுமேல ஏத்தினாங்க, எங்க வீட்டு சிமெண்ட் ஓடெல்லாம் போச்சி. அத ரிப்பேரு பண்ண  பணம் தரேனு, கடைசியிலே ஏமாத்திட்டு போய்ட்டாங்க…” என்றார் ஒருவர்.

மேலும் சூட்டிங்க்குகாக தன்னுடைய காயலாங் கடையைக் கொடுத்தவர், தடுப்பு கட்டி பாத்ரூம் தந்தவர், அதில் நடித்த அப்பகுதி லட்சுமி பாட்டி…  இப்படி பலர் காக்காமுட்டை சினிமா கும்பல் தருவதாக சொன்ன சில நூறு ரூபாய்களைக் கூட கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு ஓடிய  கதையை சொன்னார்கள். ஆனல் காக்காய் முட்டை உலகமெங்கும் வசூலித்த தொகை பதினைந்து கோடி என்கிறார்கள்.

இப்படிப்பட்ட சினிமா படைப்பாளிகள்தான் காக்கமுட்டைத் திரைப்படத்தில் வரும் திடீர் நகர் மக்கள், தமது பகுதி சிறுவர்களை அடித்த பீட்சா முதலாளியை எதிர்த்து போராடுவதற்கு பணம் எதிர்பார்த்தார்கள் என்று காட்டுகிறார்கள். தங்கள் சொந்தப் பிரச்சினைக்குக்கூட, பேரணி, போராட்டம் என்று அவர்கள் தெருவுக்கு வருவது சாராயம், பிரியாணி, பணத்திற்குதான் என்று பார்வையாளர்களுக்கு குறிப்பால் புரிய வைத்து உலக சினிமா, ஈரானிய சினிமா என்று ஏங்க வைத்தார்கள்.

திடீர் நகர் மக்களிடம் இதைப்பற்றிக் கேட்டதும்,

காக்கா முட்டை காட்டிய படங்கள்
அவன்ங்க மட்டும் எந்த ஆட்சி வந்தாலும் பாராட்டு, விழானு ஸ்டேஜ்ஜில போய் குண்டிய ஆட்டுவான்களாமா?

“எங்க பசங்கள எந்த கஸ்மாலமோ அடிச்சதுக்கு, ஞாயம் கேக்க நாங்க காசு கேட்டோமுனு எந்த பாடு சொன்னான்? அவன இங்க இத்துணு வா, கீறி டிக்கிய பொளந்து பீசாக்குறேன். ஏன் சார், எங்க பசங்கள காப்பாத்தக்கூட நாங்க துட்டு கேப்பமா? இதெல்லாம் நிஜமென்னு நம்பிக்கினு உன்ன மாறி பட்ச்சவங்க வந்து கேப்பீங்களா? இதுவே அந்த சினிமா பாடு வந்து சொன்னான்னா கதை வேற! இதுக்கு மேல கேக்காதா, வாயில வந்துற போது”

“சினிமாக்காரனுங்கன்னா எங்கள எது ஒன்னாலும் சொல்வான்களா? அவனங்க மட்டும் எந்த ஆட்சி வந்தாலும் பாராட்டு, விழானு ஸ்டேஜ்ஜில போய் குண்டிய  ஆட்டுவான்களாமா?…. கண்டத சினிமான்னு காம்ச்சி எங்கள பணம் புடுங்குவோம்னு காட்டுவானுங்களா”, என்று கொதித்தனர்.

இனி என்ன? இந்த வினவு கட்டுரை பிரபலமாகி, காக்கா முட்டை படப்பிடிப்புக்குழு, தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றி மாறன், பெரிய தயாரிப்பாளர் முர்டோச் (ஃபாக்ஸ் ஸ்டூடியோ), 60 மார்க் ஆனந்த விகடன் அனைவரும் திடீர் நகர் சென்று இஸ்திரி பெட்டி, மூன்று சக்கர சைக்கிள்,
வேட்டி சட்டை, சேலை கொடுக்கும் விழாவை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

அப்படி ஏதும் திட்டம் அறிவிக்கப்பட்டால் காக்கா முட்டையின் கவித்துவத்தை அம்மக்களுக்கு காட்சிப்படுத்துவோம். மீதியை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

– வினவு செய்தியாளர்கள்

எச்சரிக்கை : இந்திய ரயில்வே இனி மக்களுக்கில்லை

12

ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்றதும் பேருந்து கட்டணம் எக்கச்சக்கமாக எகிறியது. அதுவரை 600 ரூபாயாக இருந்த மாதாந்திர பயண அட்டை 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இனி பேருந்தில் பயணிக்கவே முடியாது என்று லட்சக்கணக்கான மக்கள் ரயில் பயணத்திற்கு மாறினர். தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்காலங்களிலும் மக்கள் பெரிதும் நம்பியிருப்பது ரயில்களைத் தான். அனைத்து ரயில்களிலும் நான்கு பெட்டிகள் தான் பொதுப்பெட்டிகளாக இணைக்கப்பட்டாலும் நூற்றுக்கணக்கானவர்கள் நெருக்கியடித்துக்கொண்டு பயணிக்கின்றனர். மோடி ஆட்சியின் கீழ் இனிமேல் அதற்கும் வழியில்லை.

ஐ.சி.எஃப்
சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தற்போது ஐம்பதாயிரமாவது பெட்டியை தயாரித்துள்ளது.

ரயில்களுக்கான பெட்டிகளையும், இன்ஜின்களையும் இதுவரை பொதுத்துறை நிறுவனங்களே தயாரித்து வருகின்றன. சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தற்போது ஐம்பதாயிரமாவது பெட்டியை தயாரித்துள்ளது. ஆனால் தற்போது ரயில்களுக்கான பெட்டிகளையும், இன்ஜின்களையும் தயாரிக்க 2,500 கோடி ரூபாயை கொட்டி 15 ரயில் ஷெட்டுகளை தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்கவிருக்கிறது மோடி அரசு. இவற்றை வாங்குவதோடு ஏழு ஆண்டுகளுக்கு அவற்றின் முழு பராமரிப்பையும் வாங்கிய தனியார் நிறுவனங்களிடமே ஒப்படைக்கவிருக்கிறது. இதற்காக விரைவில் உலகளாவிய ஒப்பந்தம் கோரப்பட இருக்கிறது.

12,617 பயணிகள் ரயில்கள், 7,421 சரக்கு ரயில்கள், 7,172 ரயில் நிலையங்கள், 1.16 லட்சம் கி.மீ ரயில் பாதை, 13 லட்சம் ஊழியர்கள் என்று உலகிலேயே மிகப்பிரம்மாண்டமாக இயங்கும் பொதுத்துறை நிறுவனம் தான் இந்திய ரயில்வே. இந்திய ரயில்களில் தினமும் 2.30 கோடி மக்கள் பயணிக்கின்றனர். தனியார் முதலாளிகளுக்கு நிலம், நீர், மின்சாரம், வரிச்சலுகை, பல ஆயிரம் கோடி கடன்கள் என்று வாரி வழங்கும் அரசு, பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை கை தூக்கிவிடாமல் எட்டி உதைக்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தது, இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.

விவேக் தேவ்ராய்
மத்திய கொள்கைக் குழுவின் உறுப்பினரும், உலகமயமாக்கலுக்கு ஆதரவான பொருளாதாரவாதியும், ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ள விவேக் தேவ்ராய்.

ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நட்டம் ஏற்படுகிறதாம். இவ்வாறு கடனிலும் நட்டத்திலும் இயங்கும் ரயில்வே துறையை மேம்படுத்துவது பற்றி ஆராய்வது என்கிற பெயரில், மத்திய கொள்கைக் குழுவின் உறுப்பினரும், உலகமயமாக்கலுக்கு ஆதரவான பொருளாதாரவாதியும், ரயில்வே வாரிய சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும் உள்ள விவேக் தேவ்ராய் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவை நியமித்தார் மோடி. உடனே சுறுசுறுப்பாக ‘ஆய்வு’ மேற்கொண்ட குழு தனது பரிந்துரைகளை 300 பக்க அறிக்கையாக மார்ச் மாதம் அளித்தது.

அந்த அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் ரயில்வே துறையை முழுமையாக ‘மேம்படுத்துவதற்கான’ ஆலோசனைகளை முன்வைத்திருக்கிறது.. மேம்படுத்துவது என்றால் தனியார்மயமாக்குவது என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்ன ?

  • ரயில்வே மண்டலங்கள் ஒவ்வொன்றின் கணக்குகளையும் தனித்தனியே நிர்வகிக்க வேண்டும்.
  • மண்டல பொது மேலாளர்கள் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்க அதிகாரமளிக்க வேண்டும்.
  • ரயில் பெட்டிகள், இன்ஜின்களை பராமரிக்க தனியாருக்கு அனுமதி வழங்க வேண்டும்.
  • பயணிகள் ரயிலை தனியார்மயமாக்குவதற்கு முன்னோட்டமாக சரக்குப் போக்குவரத்தை முழுமையாக தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
  • ரயில்வே துறைக்கு தனி அமைச்சகம், தனி பட்ஜெட் தேவையில்லை.
  • ரயில்வேயை மத்திய போக்குவரத்துத் துறையுடன் இணைத்து விட வேண்டும்.

 

  • ரயில்வே துறையை உள்கட்டமைப்புக் கழகம், போக்குவரத்துக் கழகம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும். உள்கட்டமைப்புக் கழகத்தை அரசு நிர்வகிக்க வேண்டும்.
  • உள்கட்டமைப்புக்குள் எவை எல்லாம் அடங்கும்? தண்டவாளங்கள் போடுவது, ரயில் நிலையங்களைப் பராமரிப்பது, சிக்னல்களை பார்த்துக் கொள்வது போன்றவை மட்டும் இதில் அடங்கும்.
  • போக்குவரத்துக் கழகத்தை தனியார் நிர்வகிக்க வேண்டும்.

அதாவது ரயில் நிலையத்தை அரசாங்கம் நிர்வகித்து பராமரித்துக் கொள்ள வேண்டும். அதில் தனியார் முதலாளிகள் ரயில்களை இயக்குவார்கள். அதாவது விமான நிலையங்கள் போல.

ரயில்வே மருத்துவமனை
இப்போது ரயில்வே துறை பராமரித்து வரும் ரயில்வே பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
  • புறநகர் ரயில்கள் போன்ற நட்டம் ஏற்படுத்தும் ரயில்களை மாநில அரசுகளிடம் கொடுத்துவிட வேண்டும். அல்லது, மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து இயக்கலாம். அல்லது அதையும் தனியாரிடமே ஒப்படைத்து விடலாம்.
  • இப்போது ரயில்வே துறை பராமரித்து வரும் ரயில்வே பள்ளிகள், மருத்துவமனைகள், ரயில்வே பாதுகாப்புப் படை போன்றவற்றை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு, ரயில் போக்குவரத்தில் மட்டுமே ரயில்வே துறை கவனம் செலுத்த வேண்டும்.
  • கட்டணம் நிர்ணயிப்பதில் அரசு தலையிடக்கூடாது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தனியார் நிறுவனங்களே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
  • ஓய்வுபெறும் ஊழியர்கள் மற்றும் பணியின்போது மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு பணிக்கொடை உள்ளிட்ட நிதியை பணமாகத் தராமல், புல்லட் பாண்ட்டாக – ஒருவகையான நிதி பத்திரம் – தரவேண்டும். (இதை 30 ஆண்டுகள் கழித்து தான் பணமாக்க முடியும்).
  • தனியாருக்கும் ரயில்வே துறைக்கும் உள்ள பிரச்சினைகளைத் தீர்க்கவும், கட்டணத்தைக் கண்காணிக்கவும் ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
  • அடுத்த 4 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ள 2.25 லட்சம் தொழிலாளர்களுக்கு மாற்றாக புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது

என்பது போன்ற கொடூரமான பரிந்துரைகளை, அவற்றை அமுல்படுத்துவதற்கான கால இலக்குடன் வழங்கியிருக்கிறது இக்குழு.

ரயில்வே தனியார்மயம்
குழுவின் பரிந்துரைகள் வெளியாகி அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்ததும் மோடியும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்களைப் போல போகும் இடமெல்லாம் மழுப்பினர்.

இந்த குழுவின் பரிந்துரைகள் வெளியாகி அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்ததும் மோடியும், ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவும் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்களைப் போல போகும் இடமெல்லாம் மழுப்பினர். “நிதி திரட்டுவது தான் நோக்கமே தவிர, எந்த நிலையிலும் ரயில்வே துறை தனியார்மயமாகாது” என்றார் சுரேஷ் பிரபு.

பொய்யிலும் ஆங்காங்கே உண்மைகள் தூவி சதுரங்கவேட்டை நாயகன் போல பேசுவதில் மோடியை மிஞ்ச யாருமே இருக்க முடியாது. அவ்வாறு, வாரணாசியில் செய்தியாளர்களிடமும், ரயில்வே தொழிற்சங்கத்தினரிடமும் பேசிய போது மோடி கூறினார்.

“ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் ஒரு போதும் இல்லை, இதில் அன்னிய நேரடி முதலீடு பற்றி கவலைப்படத் தேவையில்லை. அன்னிய நேரடி முதலீடு ரயில்வேயின் வளர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும்” என்றும், “இந்த அந்நிய நேரடி முதலீடு தான், ரயில்வே துறையில் தனியார்மயம் கொண்டுவரப்படுகிறது என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என்றும், “கடந்த 60 ஆண்டுகளில் காணாத அளவுக்கு ரயில்வே துறையில் வளர்ச்சியை காண விரும்புகிறேன். ரயில்வேயை போக்குவரத்துக்கான கருவியாக மட்டும் நான் பார்க்கவில்லை. அதை நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் துறையாக மாற்ற விரும்புகிறேன்” என்றும் கூறியுள்ளார்.

மோடி - ஒபாமா
அந்நிய முதலீடு, மாற்றம், வளர்ச்சி, சீர்திருத்தம், நவீனமயம் என்கிற வார்த்தைகளுக்கெல்லாம் ஏகாதிபத்தியதாசர்களின் அகராதியில் ஒரே பொருள் தான்.

அந்நிய முதலீடு, மாற்றம், வளர்ச்சி, சீர்திருத்தம், நவீனமயம் என்கிற வார்த்தைகளுக்கெல்லாம் ஏகாதிபத்தியதாசர்களின் அகராதியில் ஒரே பொருள் தான். அரசு துறைகளை தனியார்மயமாக்குவது, தூக்கிக் கொடுப்பது, ஊத்திமூடுவது என்பது தான் அதன் பொருள். உண்மையை மூடிமறைக்க புத்திசாலி போல பேசுவதாக நினைத்துக்கொண்டு, மோடி அவிழ்த்துவிட்டிருக்கும் அனைத்தும் ரயில்வேயை தனியார்மயமாக்கத்தான் போகிறோம் என்பதற்கான ஆதாரங்களாக இருக்கின்றன.

ஜெயலலிதா மற்றும் மோடியின் அடிமைகளில் சிறந்த அடிமையாகவும், ஊடக ஜால்ராவாகவும் இருந்து வரும் தினமணி வைத்தி ‘மாற்றம் அவசியம்’ என்கிற பெயரில் ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறார். “ரயில்வேயை தனியார்மயமாக்குவது மக்கள் விரோத போக்கல்ல, ரயில்வேயில் நடக்கவிருக்கும் மாற்றங்களை முடக்க முயற்சிப்பது தான் மக்கள் விரோதப் போக்கு” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “விவேக் தேவ்ராய் குழு அளித்துள்ள பரிந்துரைகளில் பெரும் பகுதியை அப்படியே நிறைவேற்றினால் தான் ரயில்வே துறை பிழைக்கும்” என்றும், “இக்குழுவின் பரிந்துரைகள் ரயில்வே துறையை தனியார்மயமாக்க வேண்டும் என்று கூறவில்லை. ரயில்வேயில் தனியாரை அனுமதிக்க வேண்டும் என்று தான் பரிந்துரைத்திருக்கிறது” என்றும் அக்குழுவின் அறிக்கைக்கும், தனியார்மயத்திற்கும் புதிய விளக்கமளித்திருக்கிறார் வைத்தி மாமா.

ரயில்வேயில் தனியார்மயம் என்பது தற்போதே அமுலில் தான் இருக்கிறது. ரயில்களை சுத்தப்படுத்துவது, உணவு சமைத்து பரிமாறுவது, குளிர்சாதனப் பெட்டிகளில் கம்பளிப் போர்வை வழங்குவது, ரயில் நிலையங்களில் கழிவறைகளை பராமரிப்பது ஆகியவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தனியாரின் கைகளால் சுத்தப்படுத்தப்பட்டு வரும் ரயில்கள் என்ன லட்சணத்தில் இருக்கின்றன, கழிவறைகள் எப்படி இருக்கின்றன, கேட்டரிங் எப்படியிருக்கிறது என்பதெல்லாம் நாம் அறிந்தது தான். மட்டுமின்றி இவற்றில் எல்லாம் வரையமுறையின்றி கட்டணக் கொள்ளையும் அடிக்கப்படுகின்றன.

இங்கிலாந்து ரயில்வே
1990 களில் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து அரசு

தினமணி வைத்தி உட்பட பல அறிவாளிகளும் ரயில்வேயை தனியார்மயமாக்குவது அவசியம், தனியார்மயமானால் தான் சேவைத்தரம் உயரும், வசதிகள் பெருகும் என்று வாதிடுகின்றனர். பல செய்தி ஊடகங்கள் இதற்காகவே பிரச்சார இயக்கம் நடத்தி வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் ஐரோப்பாவில் உள்ள  ஒரு ரயில் நிலையத்தையும் காட்டி உங்களுக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் போல வேண்டுமா, அல்லது இந்த மாதிரி வேண்டுமா என்று கேட்கின்றன.

இவர்கள் விருப்பப்படி ரயில்வே துறையில் தனியார் முதலாளிகளை அனுமதித்தால்

  • தற்போது இயக்கப்படும் பல தடங்களில் ரயில்கள் நிறுத்தப்படும்.
  • வருமானம் அதிகமுள்ள பெருநகரங்களுக்கு மட்டும் அதிக சேவை இருக்கும். அதிலும் கட்டணம் பல மடங்கு உயரும்.
  • சிறு நகரங்களுக்கோ, ஊரகப் பகுதிகளுக்கோ போகும் ரயில்களும், சாதாரண மக்கள் பயன்படுத்தும் முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் ஒழிக்கப்படும்.
  • தொழிலாளர்கள் குறைக்கப்படுவார்கள். ஒப்பந்த சேவை அடிப்படையில் தொழிலாளிகள் இருப்பார்கள். அவர்கள் கசக்கி பிழிந்து வேலை வாங்கப்படுவார்கள். பாதுகாப்பு உணர்வு அதிகம் தேவைப்படும் ரயில்வேயில் அது குறையும்.
  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு அவ்வப்போது தீர்மானிக்கப்படுவது போல கட்டணங்களும் சீசனுக்கேற்ப, கிராக்கிக்கேற்ப தீர்மானிக்கப்படும். இதனால் காசுள்ளவருக்கே உடன் சேவை என்று ரயில்வே துறை மாற்றியமைக்கப்படும்.

ஒரு பொதுத்துறை தனியார் மயமானால் என்ன தீமை?

இந்தியாவில் உள்ள எந்த குக்கிராமத்திற்கு இணைப்பு கேட்டாலும் பி.எஸ்.என்.எல் வழங்கும். ஆனால் டாடாவோ, அம்பானியோ, அவ்வாறு வழங்குவதில்லை. அதே போல இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்படுத்தி வைத்திருந்த அடிக்கட்டுமானங்களை பயன்படுத்திக்கொண்டு தான் இன்று தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. டிராயிடமிருந்து அலைக்கற்றைகளை பெற்று சேவை வழங்குவதற்கு பதிலாக, அவற்றை பல நாட்கள் கையில் வைத்துக்கொண்டு பிற நிறுவனங்களிடம் பேரம் பேசி எப்படி கொளையடித்தனவோ அப்படி கொள்ளையடிக்கும் துறையாக ரயில்வேயும் மாறிவிடும்

இதற்கு சிறந்த உதாரணம் இங்கிலாந்து ரயில்வே. 1990 களில் ரயில்வேயை தனியாரிடம் ஒப்படைத்தது இங்கிலாந்து அரசு. 2013-ம் ஆண்டு Centre for Research on Socio-Cultural Change (CRESC) என்கிற குழு “ரயில்வேயை தனியார்மயமாக்கியதால் கிடைத்த நன்மை என்ன” என்கிற ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் இறுதியில் தொகுக்கப்பட்ட  அறிக்கைக்கு “ஒரு மாபெரும் ரயில் கொள்ளை-ரயில்வே தனியார்மயத்திற்கு பிறகு” என்று அவர்கள் பெயரிட்டனர்.

இந்திய ரயில்வேயை கொள்ளையடிப்பதற்காக மோடி நிபுணர் குழு அமைத்தார், நிபுணர்களும் கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்துவிட்டனர். அடுத்து, கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்து தர வேண்டும். இங்கிலாந்து ரயில்வேயில் என்ன நடந்ததோ அது தான் இந்தியன் ரயில்வேயிலும் நடக்கப்போகிறது. துவங்குவதற்கு முன்பே முடிவு தெரிந்துவிட்டது, நாம் என்ன செய்யப்போகிறோம் ?

– வையவன்

மேலும் விபரங்களுக்கு

போலிசு நம்மள என்ன பண்ணுவான் ? ஒரு தாயின் போராட்டம்

0

சி‌ஆர்‌ஐ தொழிலாளர் நேர்காணல் – 2

கோவையின் புறநகரான பெரியநாயக்கன்பாளையத்தை ஒட்டி அமைந்திருக்கும் தெக்குப் பாளையம் கிராமத்தில்தான் சி‌.ஆர்‌.ஐ தொழிலாளி ரவிக்குமார் வசிக்கிறார். திருநெல்வேலியிலிருந்து 25 வருடங்களுக்கு முன்பு இடம் பெயர்ந்து பல ஊர்களுக்கு மாறி பின்னர் இறுதியாக தெக்குப்பாளையத்துக்கு வந்து வாடகை அறையில் ஒரு மளிகைக் கடை வைத்துள்ளார்கள் வள்ளியம்மாள் தம்பதியினர்.

அவர்கள் இருக்கும் வாடகை வீட்டில் 10-க்கு 10 அறையும் அதை விட சிறிய சமையலறையும் இருக்கிறது. இங்கு ரவிக்குமாரின் தாயார் வள்ளியம்மாளும் அருகே மற்றொரு வீட்டில் ரவிக்குமாரின் குடும்பமும் இருக்கிறது. தனது இளமையின் ஆரம்பக் கட்டத்தில் சி‌.ஆர்‌.ஐ நிறுவனத்திற்கு வேலைக்கு சேர்ந்த ரவிக்குமார் சுமார் 11 வருடங்களாக உழைத்து வருகிறார். கடைசியாக அவர் வாங்கி வந்த சம்பளம் 6500.

சங்கம் துவங்கிய பின்னர் தொழிலாளர் நலத்துறையில் வழக்குப் போட்டு 35 பேரை நிரந்தரம் செய்ய உத்தரவு வாங்கிய பின்னர், இந்த உத்தரவை எதிர்த்து சி‌.ஆர்‌.ஐ நிறுவனம் மேல்முறையீடு செய்திருக்கிறது. அங்கு அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் தீர்ப்புக்காக 5 மாதங்களாக காத்திருக்கும் தொழிலாளிகளில் இவரும் ஒருவர். 10-ம் தேதி போராட்டப் பந்தலில் இருந்த இவரையும் சண்முகம் என்ற தொழிலாளியையும் 12 -ம் தேதி, “போராட்டமா நடத்துறீங்க போராட்டம்” என்று மிரட்டியவாறே கைது செய்தார் சரவணம்பட்டி பி9 காவல் நிலைய ஆய்வாளர் சோதி. “வீட்டில் இருந்து யாராவது வந்தால் விட்டு விடுவோம் போன் பண்ணி சொல்லுங்க“ என நயவஞ்சகமாக கூறி இவரது மனைவியை வரவழைத்துள்ளார்.படிப்பறிவில்லாத அந்தப் பெண்ணிடம் ஒன்றுமே எழுதாத வெள்ளைத் தாளில் கை ரேகை வாங்கிக் கொண்டு, “மூணு நாள்ல வந்துடுவாரு” என்று கூறி அனுப்பியுள்ளார் சோதி.

முதல் தகவல் அறிக்கையில், சின்னவேடம்பட்டி சி‌.ஆர்‌.ஐ நிறுவனக் கிளையின் முன்பு உள்ள போராட்டப் பந்தலில் இதர தொழிலாளிகளுக்காக மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்த சண்முகத்தையும் கேட்டின் முன்பு உள்ள கேமரா சாட்சியாக அவருக்கு உதவியாக நின்று கொண்டிருந்த ரவிக்குமாரையும் மணியக்காரன்பாளையத்தில் கைது செய்ததாக எழுதியுள்ளார் பொய்யர் சோதி.

இவர்கள் இருவர் மீதும் போடப்பட்ட வழக்கு விவரம் என்னவெனில், சி‌.ஆர்‌.ஐ நிறுவனத் தொழிலாளர்களை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்தார்கள் என்றும், சி‌.ஆர்‌.ஐ நிறுவனத்தை தீ வைத்துக் கொளுத்துவதாகவும் உடைத்து நொறுக்குவதாகவும் மிரட்டல் விட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார். 90 நாட்களாக இல்லாமல் 10ஆம் தேதிதான் திடீரென்று இப்படிப் பொய்க் கதை எழுதியிருக்கிறார் பொய்யர் சோதி.

இதை விட தோழர் விளவை இராமசாமியிடம் போலீசாரே எழுதி கையெழுத்துக் கேட்ட ஒப்புதல் வாக்குமூலம் இன்னும் செழுமையான திரைக்கதை கொண்டது. சினிமாக்களில் மட்டுமே அறிமுகமான இம்மாதிரியான காட்சிகளை கோயம்புத்தூரில் நடத்திக் காட்டியவர் பொய்யர் சோதி. பின்னர், இரவு வரை அலைக்கழிக்கப்பட்டு இரவோடு இரவாக சிறையில் அடைக்கப்பட்டனர் இருவரும்.

இந்த சிறை வாசம் ரவிக்குமாரை பாதித்ததை விட அந்த எளிய தாயின் மனதையும் கடுமையாக பாதித்திருந்தது. இதனிடையில் ஊராரின் தூக்க விசாரிப்புகள் வேறு. இந்த பாதிப்பு 12-ம் தேதி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற தாசில்தார் சந்திப்பிலும் ஆக்ரோஷமாக வெளிப்பட்டது. அதற்கு ஒரு உதாரணமாக, கோவை மாவட்ட தாசில்தாரை நேர் நின்று, “நீ எத்தன சூட்கேசு வாங்குன..?” என வள்ளியம்மாள் கேட்டதை கூறலாம்.

இனி வள்ளியம்மாள்.,

12-ம் தேதி உங்க அனுபவத்த சொல்லுங்க..

வள்ளியம்மாள்
நாம சங்கத்து மூலமா போறோம். எப்படியாவது நாம ஜெவிச்சு வரணும் சாமி. காசு இல்லாட்டிலும் பரவால்ல. கேச அடிச்சு வரணும்.

நான் இதுக்கு முன்னாடி வர்ல. மருமவ தான் வந்திருக்கா.. நான் அன்னிக்குதான் மொத தடவ வரேன். அன்னிக்கு ரோட்டுல கூட்டம் போட்டு பேசுனோம். சௌந்தர்ராசு கொடுமையெல்லாம் சொன்னாங்க. நாங்களும் பேசுனோம். “எங்க பொண்டாட்டி புள்ள வயித்துல அடிச்சு பசங்கள டேசனுக்கு அனுப்புறாங்க” அப்டின்னு பேசுனோம். பேச பேச உள்ள செயிலுக்கு போங்கனாங்க

அப்புறம் எங்கள குடோன்ல அடச்சுப் போட்டாங்க. காபி கொண்டு வந்து கொடுத்தாங்க., “நாங்க காப்பி குடிக்க மாட்டோம். எங்க பசங்க என்ன பண்ணுனாங்க..? எதுக்கு அடைக்கறாங்க..? வேலைய ஏன் நிப்பாட்டுனாங்க மூணு மாசமா…? அதுக்கு எல்லாம் ஒரு வழிப்பாடு செஞ்சாதான் நாங்க மற்றதெல்லாம் பேசுவோம்” எல்லாருமே பேசுனோம்.

“தாசில்தாரு வந்தாதான் போவோம்”னு சொன்னோம். அப்புறம் தாசில்தாரு வந்து பேசுனாரு. 22-ம் தேதி எல்லாம் நியாயம் பேசி தீர்ப்பாயிரும்ன்னு சொன்னாரு.

தாசில்தாரு கிட்ட நீங்க என்ன பேசுனீங்க..?

“இல்ல சார், நீங்க கண்டிப்பா முடிவு சொல்லணும். நீங்க கையெழுத்து போட்டு நோட்டீசுல கொடுக்கணும்.” அப்டினு சொல்லி அவரும் நோட்டீஸ் கொடுத்தாரு.

அப்புறம் 22-ம் தேதி அவன் (முதலாளி) வர்ல. அப்பவே நாங்க சொன்னோம். பேச்சுவார்த்தைக்கு நாங்க வரோம்னு. அப்புறம் இவங்களே இப்ப போயிட்டு வந்தாங்க. இப்ப இல்லைனு லெட்டர் கொடுத்துட்டானாம். இனி வேற ஏதாவது பண்ணனும். (22-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நிர்வாகம் கலந்து கொள்ளாமல் ஒரு கடிதம் மட்டும் கொடுத்திருந்தது. அதில் ‘சங்கம் சௌந்திர ராஜனை அவமானப்படுத்துகிறது. திருமணத்தை நிறுத்த முயற்சி செய்தது. நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறது’ என்பது போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வோம் எனக் கூறியிருக்கிறது)

கோர்ட்டில் பார்த்துக்கலாம் என்று நிர்வாகம் கூறியிருப்பதை பற்றி

அவங்க கோர்ட்டுல பாக்கலாம்கிறாங்க, கோர்ட்டுல போயி நம்மலாள பார்க்க முடியுமா சாமி..

நாம சங்கத்து மூலமா போறோம். காசு இல்லைனாலும் பரவால்ல, கேசுல நாம ஜெயிச்சோம்னு வரணும். முதலாளி கிட்ட நாம மண்டி போடக்கூடாது. பதினோரு வருசம் மண்டி போட்டாச்சு. இனிமே நம்ம கைதான் ஒசர இருக்கணும். முதலாளி கை கீழதான் போகணும்.

பக்கத்து வீடு சொந்தக் காரங்க என்ன சொல்றாங்க..?

“சங்கத்து காரங்க சங்கத்தை பார்த்துக்கிடுவாங்க. நீங்க வேற பக்கம் வேலைக்கு போக வேண்டியது தானே”. அப்டிங்கராங்க. எங்க பையன் “அவங்களா நாங்களா…? ஒனரா நாமளா..? கண்டிப்பா பாத்துதான் தீரணும்”ங்குறான்.

பத்து வருசத்துக்கு மேல வேலை செய்துட்டு விட்டுட்டு போக முடியுமா…?

ஹும்ம்., நான் சொந்தக்காரங்க கிட்ட இததான் சொல்றேன். எப்புடி உட முடியும். உயிர பூரா எடுத்தாச்சு சாமி, இனி சக்கைதான். இப்ப வயசும் ஆயிட்டு. அவனுக்கும் முப்பந்தஞ்சு முப்பத்தாறு ஆகுது. இனி வேற கம்பெனிக்கு போயி எத்தன வருசம் பாடுபட முடியும். கொழந்த குட்டிகள எப்படி படிக்க வைக்க முடியும். ரெண்டும் பொட்டப் புள்ள. ரெண்டையும் எப்பிடி படிக்க வெச்சு பட்டம் வாங்க முடியும். இவனுக்கு பாடுபட்டு ரத்தத்த எல்லாம் உறிஞ்சிட்டு சக்கய கொண்டாந்து போட்டுட்டான். இப்ப இந்திக்கார பசங்க நெறைய வந்துட்டாங்களா… இப்ப இவங்களா வேணாம்னுட்டு 3 ரூபா 4 ரூபா கொடுத்தாலும் இந்திக்கார பசங்க வேலை செய்றதுக்கு ரெடியா இருக்காங்க.. அவங்கள தான் எடுக்கலாம்னு கம்பெனிக்காரனுக்கு ஒரு நெனப்பு இருக்கும் போல.

ஊருக்குள்ள என்ன சொல்லுறாங்க

ஊருக்குள்ளதான், ஓனரு ஜெயிச்சிருவாரு, நாம தான் தோத்துப் போவோம்ங்கறாங்க. பணக்காரன் கிட்ட போயி மொத முடியுமா..? அவன் கடல் தண்ணி நீங்க குட்டத் தண்ணீம்பாங்க..! அவங்க, காச வெச்சு போலீசு எல்லாத்துக்கும் கொடுத்துருவாங்க. நீங்க என்னத்த செய்வீங்க…. அப்பிடிங்கறாங்க. மோதிப் பார்த்துட்டு தானே நிப்போம்னு நாங்க சொல்லுவோம்.

சி‌.ஆர்‌.ஐ முதலாளிய பத்தி என்ன நினைச்சிருந்தீங்க இதுக்கு முன்னாடி, இப்போ..?

பையன் வேலைக்கு போறான் அவனுக்கு தெரியும்னு இருந்தோம். வெளம்பரத்துல பூரா, பம்பு கம்பெனி பம்பு கம்பெனினு போடவும், நல்ல முதலாளின்னுதான் நெனச்சோம். போனசு ஒரு மூணு போனசு வாங்குனான். தீவாளிக்கு அப்ப கொஞ்சம் பரவாயில்லன்னு நெனச்சோம். அப்புறம் தானே தெரியுது சம்பளம் கம்மி பண்ணிதானே போனசே கொடுத்துருக்கறான் அவன். சம்பளம் 4000, 5000 தானே பசங்களுக்கு போட்டுருக்குறான். இப்ப பையன் சிக்கிட்டானேன்னு வேதனைப் பட்டுகிட்டு இருக்கறோம். இப்பவும் ரெண்டு மூணு கம்பெனிக்கு கூப்புடுறாங்க., எல்‌எம்‌டபில்யு க்கு கூப்புடுறாங்க. ரெண்டு மாசமா கூப்பிட்டுகிட்டு இருக்காங்க, எங்க பையன் அத பாத்துட்டு தாம்மா வருவேன்னு கொடிய புடிக்கறான்.

சங்கத்தின் சார்பாக வேலை நிறுத்தம் செய்யவே இல்லை. அவங்களாதான் கதவ அடச்சாங்க..?

ஆமாம். அவன்தான் மொதல்ல அடச்சது. போலீஸ்காரங்களுக்கு தெரியுமே. ஏன் நீ அடச்சன்னு அவனுகள கேக்கோனும். இப்ப டி‌.எஸ்‌.பி, எஸ்‌.பி எல்லாருமே ஓனர கேக்கணும். இவனுவ ஓனர கேக்காம பசங்கள கேட்டு மெரட்டுனா என்ன பண்ண முடியும்.

நாம நேர்மையா இருந்தும் எல்லாரும் முதலாளிக்கு சாதகமா இருக்காங்களே..?

அது தான் காசை வீசிட்டான்ல சாமி, அவங்கிட்ட காசு பேசுது. அன்னிக்கு, “எத்தன சூட்டு கேசு வாங்குனீங்க, சௌந்தர் ராசு எத்தன சூட்டு கேசு கொடுத்தான்”னு கேட்டேன்.

தாசில்தாரு, “என்னமா, பொம்பளைங்க இப்பிடி பேசுறீங்க”, அப்டிங்கறான்.

“என்ன எப்பிடி பேசிட்டாங்க. நீங்க சொல்றது என்ன நடக்கறது என்ன, இப்பிடி வந்து அடையணும்னு எங்களுக்கு விதியா சார்” அப்டின்னு சொன்னேன். எல்லாம் திரு திருன்னு முழிக்கரானுக. டெண்ட் கொடியெல்லாம் திருடிட்டு போனத பத்தி கேட்டா, இன்னும் கொடுக்கல யா அப்டின்னு திரும்பி கேக்கராணுக., எப்புடி.?

சங்க நிர்வாகிகளை கைது செய்தது பற்றி என்ன நினைக்கறீங்க…?

இவங்கள அரேஸ்டு பண்ணாதான், வெளியே பேச மாட்டாங்கன்னு அவங்கள மொதல்ல அடச்சுப் போட்டாங்க.நாம காந்திபுரத்துல போட்டு இருக்க கூடாது. அங்க மண்டபத்துக்கே போயிருக்கணும்.

அங்கதான் மூணு அடுக்கு பாதுகாப்பு போட்டு இருக்காங்களே..?

எந்த போலீசுகாரனுக நம்மள என்ன பண்ணிருவான் தம்பி, நாம யாரையும் வெட்டிட்டு வந்தமா குத்திட்டு வந்தமா.. என்ன பண்ணிட்டு வந்தோம். எதுக்கு பயரனும். எங்களுக்கு பதில் சொல்லிட்டு அவன் போயி தாலி கட்டட்டும். நாங்க அங்கண்ணுதான் நெனச்சு வந்தோம் அப்புறம் தானே இங்கன்னு தெரிஞ்சது.

அவன் நல்ல ஒனரா இருந்துருந்தா, எல்லோருக்கும் துணி மணி எடுத்து கொடுத்து பத்திரிக்கை வச்சு சந்தோஷமா வாங்க கல்யாணத்துக்குன்னு சொல்லிருக்கணும்

உங்க மகன் கைதானாதைப் பற்றி..?

எனக்கு தூக்கமே இல்ல. ஏழு நாளா. போனவன உள்ள புடிச்சு போட்டுட்டாங்க. அவங்க வீட்டுக்காரி போலீசுக்காரன் கேட்டதும் கைரேகை உருட்டீட்டு வந்திருக்கறா..

அடுத்து என்ன மாதிரி போராட்டம் பண்ணலாம்னு நினைக்கறீங்க..?

சௌந்தர்ராசு வீட்டுக்கு முன்னாடி எல்லோரும் போயி உக்காந்துரலாம். ஒண்ணு வேலை கொடு. இல்ல நஷ்ட ஈடு கொடு. அவனுக்கு இவனுக்குன்னு கொடுக்கறீல. கட்சிக்காரனுக்கு கொடுக்கற, போலீசுக்கு கொடுக்கற, கலெக்டர் தாசில்தாருக்கு கொடுக்கறீங்க, அந்தக் காச இல்லாத பசங்களுக்கு உனக்கு வேலை செஞ்ச பசங்களுக்கு கொடு. அப்டின்னு கேட்கணும். கண்டிப்பா வீட்டுக்கு போகணும்.

போராட்டங்களினால் மீண்டும் சிறைக்கு போவது பற்றி..?

மொதல்ல தான் கொஞ்சம் பயமா இருந்துச்சு. இப்ப இல்லை. இந்த தம்பிங்கல்லாம் (தெக்குப்பாளையத்தை சேர்ந்த வேறு சி‌.ஆர்‌.ஐ தொழிலாளிகள்) இருக்காங்கள்ல. இவங்க நல்லா பாத்தாங்க. என்ன வேணும்மா..? ன்னு தான் கேட்டாங்களே தவிர வேறு ஒண்ணும் சொல்லல. அவங்க அம்மா எனக்கு ரொம்ப சப்போர்ட் பன்னாங்க. நானுங் கூட சொல்லல, அவங்க அம்மாதான் கேட்டுச்சு.

“உங்க பையன் என்ன வேலை செய்வானோ அக்கா, அதே வேலைக்கு எங்க பசங்கள கூட்டீடு போங்க. ஜாமான் வாங்கிக் கொடுப்பான். உங்களுக்கு எங்க போகணுமோ கூட்டிட்டு போங்க”. அதே மாதிரி பசங்களும் நடந்துக்கிட்டாங்க. “அம்மா, உங்கள எங்க போகணுமோ கூட்டிட்டு போறோம். அண்ணன் இல்லைனு வருத்தப்படாதீங்க”, அப்டின்னு தான் சொன்னாங்க.

-தொடரும்

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

உலகமயமாக்கம் : மனிதச் சரக்கின் துயரக் கதை

42

ன்னுடைய மாத வருமானம் ஆயிரம் ரூபாயா? அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அன்றாடம் பார்க்கிறாயா? அப்படியானால் நீ வலையில் சிக்குவதைத் தடுக்க முடியாது.

– ஒரு ஹாங்காங் கப்பல் முதலாளி

சீனத் தொழிலாளி
கள்ளத் தோணிதான் தன்னைச் சொர்க்கத்தில் சேர்க்க முடியும் என்று முடிவு.

சென் கான் திங் 20 வயது இளைஞன். அவனது மாத வருமானம் ஆயிரமல்ல, ஆறாயிரம் ரூபாய். சீனாவின் பியூஜியான் மாநிலத்திலுள்ள ஒரு சிற்றூரில் உணவு விடுதி நடத்தி வந்தான். மீன் மொத்த வியாபாரம் செய்து பணக்காரனாகி விடலாம் என்று முயன்று சேமித்த பணத்தைத் தோற்றான்.

எனினும் சோற்றுக்கே வழியில்லாமல் போய்விடவி்ல்லை. சொந்த வீடு, தொலைபேசியுடன் தொலைக்காட்சிப் பெட்டியும் இருந்தது. எனவே அந்தக் கப்பல் முதலாளி சொன்னதைப் போல ”வலையில்” விழுந்தான். எப்படியாவது அமெரிக்கா சென்று முன்னேறிவிட வேண்டும் என்ற வெறி அவனைப் பிடித்துக் கொண்டது.

சட்டபூர்வமான முறையில் தன்னை அமெரி்க்காவுக்கு ஏற்றுமதி செய்து கொள்வதற்கு அவன் ஒரு மருத்துவரோ, கணினி வல்லுனரோ அல்ல; சாதாரணத் தொழிலாளி. எனவே கள்ளத் தோணிதான் தன்னைச் சொர்க்கத்தில் சேர்க்க முடியும் என்று முடிவு செய்தான்.

பாஸ்போர்ட்டும் விசாவும் இல்லாமல் அமெரிக்க சொர்க்கத்திற்கு மனிதர்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் கைதேர்ந்தவர்களான ”பாம்புத் தலையர்கள்” (Snake heads) என்ற சீன மாஃபியாக் கும்பலை அணுகினான்.

17,000 கிலோ மீட்டர் கடல் பயணம், 18 லட்சம் ரூபாய் கட்டணம். அமெரிக்காவில் ஆள் இறங்கியவுடன் பணத்தை சீனாவில் தந்துவிட வேண்டும். இந்த அபாயகரமான பயணத்திற்குத் தன் தாய் சம்மதிக்க மாட்டாள் என்பதால் மகனும் தந்தையும் சேர்ந்து ரகசியத் திட்டம் தீட்டினர். ஒருநாள் இரவு கடையை மூடியவுடன் நேரே கடற்கரைக்குக் கம்பி நீட்டினான் சென்.

***

து ஒரு பழைய சண்டைக் கப்பல். அந்தக் கப்பலில் ஒரு சரக்குப் பெட்டகத்தை வாடகைக்குப் பேசியிருந்தார்கள் பாம்புத் தலையர்கள். 40 அடி நீள சரக்குப் பெட்டகத்தில் 100 பேர். அவர்கள் யாருக்கும் ஒருவரைரொருவர் அறிமுகம் கிடையாது. எனினும் அவர்களின் லட்சியம் ஒன்றே. அமெரிக்கா – பணம் – முன்னேற்றம். இந்த ‘லட்சியவாதிகளில்’ சில பெண்களும் ஒரு மூன்று வயதுக் குழந்தையும் அடக்கம்.

சரக்குப் பெட்டியில் பயணம்
சரக்குப் பெட்டியில் பயணம் (படம் விளக்கத்துக்கு மட்டும்)

சரக்குப் பெட்டிக்குச் சன்னல் கிடையாது. ஒரு மின்விசிறி மட்டும் உள்ளிருந்து காற்றை வெளியேற்றிக் கொண்டிருந்தது. இரண்டே கழிப்பறைகள். எக்காரணம் கொண்டும் பெட்டிக்கு வெளியே யாரும் வரக்கூடாது. ஒருவர் அடுக்கி வைத்தாற்போலத்தான் தூங்க முடியும். சில நாட்களுக்கு ஒருமுறை உணவுப் பொட்டலத்தையும் தண்ணீரையும் உள்ளே எறிவார்கள். வாரத்திற்கு ஒருமுறை மேல்தளத்திற்கு வந்து உப்புத் தண்ணீரில் குளித்துக் கொள்ளலாம்.

தினமும் இரவு நேரத்தில் இரண்டு பெண்களை மேல்தளத்திற்கு வரச் சொல்வார்கள் பாம்புத் தலையர்கள். காலையில் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். என்ன நடந்திருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள். அது தங்கள் இலட்சியத்திற்கு அவர்கள் கொடுக்கும் விலை.

தாங்கள் ஏற்றிச் செல்லும் சரக்குகள் மனிதர்களாயிற்றே என்பதற்காக அந்த மாஃபியாக் கும்பல் இரக்கமெதுவும் காட்டவில்லை. மனைவி குழந்தையுடன் அமெரிக்க சொர்க்கத்திற்குப் பயணம் புறப்பட்ட கணவன் ஒருவன் வாந்தி பேதி கண்டு இறந்தான். அழுகிய தக்காளியைப் போலக் கடலில் வீசப்பட்டான். என்றாலும் என்ன? அநாதைகளான மனைவியும் குழந்தையும் சொர்க்கத்தை நோக்கித் தம் பயணத்தைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை.

இந்தப் பயணம் முடியவே முடியாதோ என்ற அச்சம் சென்னுக்கு ஏற்பட்டது. புயலுக்கும், சூறாவளிக்கும் இடையில் மரணத்துடன் போராடியபடியே 35 நாட்கள் இடைவிடாத பயணம், இறுதியாக வட அமெரிக்கக் கண்டத்தின் தென் முனையில் உள்ள கவுதமாலா நாட்டின் கடல் பகுதிக்கு வந்து சேர்ந்தது கப்பல்.

மனிதர்கள் கடத்தல்
“இந்தப் பயணம் முடியவே முடியாதோ”

இடுப்பளவு தண்ணீரில் எல்லோரும் இறக்கி விடப்பட்டனர், நள்ளிரவில் நடுக் கடலில் குளிரில் விறைத்தபடியே படகுகள் வருவதற்காகக் காத்து நின்றனர். ஐந்து படகுகளில் அனைவரும் ஏற்றப்பட்டனர். படகுகளை அந்நாட்டின் கடற்காவல் படை துரத்தத் தொடங்கியது. ஒரு படகு கவிழ்ந்து 12 பேர் இறந்தனர். மற்றவர்களுக்கோ அவர்களைத் திரும்பி பார்க்கக்கூட நேரமில்லை. இன்னொரு படகு கரை சேர்ந்தவுடனே போலீசு 36 பேரை கைது செய்தது.

மீதமிருந்தவர்கள் ஒரு மாஃபியா தலைவரின் மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கே நிலவறையில் அடைக்கப்பட்டனர். போலீசு கெடுபிடி குறையும் வரை வெளியே வரமுடியாது என்பதால் ஒரு மாதம் சென்னுக்கும் மற்றவர்களுக்கும் அங்கே சிறைவாசம்.

சீன விவசாயிகளின் வாழ்க்கையைக் காட்டிலும் படுமோசமான, வறிய வாழ்க்கையை கவுதமாலா விவசாயிகள் அனுபவிப்பதை சென் அங்கே கண்டான். சீன விவசாயிகளைக் காட்டிலும் தனது ஊரில் சென் பெற்றிருந்த வசதிகள் எவ்வளவோ அதிகம். ஆனால் சோற்றைத் தேடியா அவன் அமெரிக்கா போகிறான்? சொர்க்கத்தைத் தேடியல்லவா இந்தப் பயணம்.

ஒரு மாதம் நிலவறையில் சிறைவாசம். பிறகு சென்னும் அவனுடன் 24 பேரும் ஒரு லாரிக்குள் திணிக்கப்பட்டனர். அது மெக்சிகோவுக்கு திராட்சைப் பழம் ஏற்றிச் செல்லும் லாரி. லாரி நிறைய சரக்கிருந்தது. அடியில் ஒரு அடி உயரத்தில் ஒரு ரகசியத் தளம். அதில் மல்லாந்து படுத்தபடியே 40 மணி நேரப் பயணம். தண்ணீர், உணவு எதுவும் கிடையாது. கை காலை அசைக்கவும் முடியாது. முகத்துக்கு இரண்டங்குலம் மேலே லாரியின் தளம். முதுகுக் கீழே கரடு முரடான சாலையால் பதம் பார்க்கப்படும் பலகைகள்.

ஆள் கடத்தல் மாஃபியா
மெக்சிகோ அமெரிக்கா எல்லையில் போலிசு கெடுபிடி அதிகமாகி இருந்தது.

சென்னுக்கு மூச்சு முட்டத் தொடங்கியது. நாட்டை விட்டுக் கிளம்பியதே தவறோ என்று தோன்றத் தொடங்கியது. ஒரு வேளை அமெரிக்கா போய்ச் சேர்ந்து விட்டால் மறுகணமே பயணத்தொகை 18 லட்சம் ரூபாயை வசூல் செய்ய பாம்புத் தலையர்கள் தன் பெற்றோரிடம் போய் நிற்பார்கள். வட்டிக்கு வாங்கி கொடுத்து விடுவதாக அப்பா சொல்லியிருந்தார். ஒருவேளை அவரால் பணம் தர முடியாவிட்டால்?

நினைக்கவே அவனுக்குக் குலை நடுங்கியது. பணம் தராதவர்களை போதை மருந்துக் கும்பலிடம் விற்று விடுவார்கள் பாம்புத் தலையர்கள். போதை மருந்துக் கும்பலிடம் சிக்கினால் மீட்சியே கிடையாது. கோஷ்டி மோதலில் சாகலாம்; போலிசில் சிக்கினால் 20, 30ஆண்டுகள் சிறை.

இல்லையென்றால் பணம் தராத பயணிகளை பாம்புத் தலையர்கள் சுட்டுக் கொன்று விடவும் வாய்ப்புண்டு. மூச்சுத் திணறி லாரியிலேயே சாகப் போகிறோமா, சுட்டுக் கொல்லப்படுவோமா என்ன வகையான மரணம் என்று அவனது மனம் அலைபாய்ந்து கொண்டிருந்த போதே லாரி நடுக்காட்டில் ஓரிடத்தில் நின்றது.

சென்னும் மற்றவர்களும் மெக்சிகோவைச் சேர்ந்த மாஃபியாக் கும்பலிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஏற்கனவே கவுதமாலாவில் 12 பேர் இறந்து, 24 பேர் கைது செய்யப்பட்டிருந்ததால் மெக்சிகோ அமெரிக்கா எல்லையில் போலிசு கெடுபிடி அதிகமாகி இருந்தது. எனவே இரண்டு மாதங்கள் நடுக்காட்டில் தங்க வைக்கப்பட்டனர்.

முள்வேலிக்கு அப்பால் 'சொர்க்கம்'
முள்வேலிக்கு அப்பால் ‘சொர்க்கம்’

பின் திடீரென்று துவங்கியது பயணம். மெக்சிகோ பாலைவனத்தில் சனவரி மாதக் கடுங்குளிரில் கால்நடையாகவே பயணம். குளிர் உறைநிலைக்கும் கீழே போனது. எனினும் தீக்குச்சியைக் கொளுத்தவோ, சிகரெட் பிடிக்கவோகூட அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கிளம்பும்போது அணிந்திருந்த பாண்ட் சட்டை தவிர யாரிடமும் வேறு உடையில்லை. குளிரைச் சமாளிக்க ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

ஆறு நாட்கள் நடந்து சேர்ந்த பின் அமெரி்க்க எல்லையின் முள்வேலி கண்ணில் பட்டது. கம்பியை வெட்டி 25 பேரையும் சொர்க்கத்திற்குள் தள்ளி விட்டார்கள் மெக்சிகோ மாஃபியாக்காரர்கள். கறுப்புநிற வேன் ஒன்று அவர்களை அள்ளிப் போட்டுக் கொண்டு பறந்தது.

முதன்முதலாக அமெரி்க்க நகரமொன்றைப் பார்த்தான் சென். அது ஹூஸ்டன். அங்கிருந்து மறுநாள் லாஸ் ஏஞ்செல்ஸ் பயணம். லாஸ் ஏஞ்செல்ஸை அடைந்தவுடன் ஒரு அறைக்குள் அவனைச் சிறை வைத்தார்கள் பாம்புத் தலையர்கள். அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்துவிட்ட செய்தியை தொலைபேசி மூலம் சீனாவில் உள்ள பெற்றோருக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள்.

மகனுடையே குரலைக் கேட்டவுடனே தொலைபேசியிலேயே கதறி அழத்தொடங்கினாள் அவன் தாய். கள்ளத் தோணியில் சென்ற 12 சீனர்கள் கவுதமாலா அருகே கடலில் மூழ்கி இறந்தனரென்று செய்தித்தாளில் படித்தது முதல்,தனது மகனும் இறந்திருப்பானோ என்று இரண்டு மாதங்களாக அழுது கொண்டிருந்த தாய்க்கு மகனின் குரல் ஒரு ஆறுதல். தந்தைக்கோ அச்சம்.

'கள்ளத் தோணி' தொழிலாளர்கள்
சீனர்கள் வசிக்கும் பகுதியைக் கண்டுபிடித்து, ஒரு சீன முதலாளி நடத்தும் உணவு விடுதியில் வேலை.

பாம்புத் தலையர்களின் ஆட்கள் வருவார்கள். அமெரிக்காவில் ஆளைச் சேர்த்தவுடனே 18 லட்ச ரூபாய் தந்துவிட வேண்டும் என்பது பழைய ஒப்பந்தம். இப்போது தங்களது சரக்குகளில் 12 இறந்து போய்விட்டதாலும் 28 போலீசில் பிடிபட்டு விட்டதாலும் கட்டணத்தைக் கூட்டிவிட்டார்கள் பாம்புத் தலையர்கள். 25 லட்சம் ரூபாய் தரவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சென்னுக்கு ஆபத்து.

அலைந்து திரிந்து கந்து வட்டிக்குக் கடன் வாங்கி 25 லட்சம் ரூபாயைக் கொடுப்பதற்கு அவருக்கு இரண்டு வாரங்கள் தேவைப்பட்டது. அதுவரை லாஸ் ஏஞ்செல்சில் சிறை வைக்கப்பட்டிருந்த சென், பணம் கைமாறியவுடனே நியூயார்க்கில் கொண்டு விடப்பட்டான்.

நகரம் முழுவதும் அலைந்து திரிந்து சீனர்கள் வசிக்கும் பகுதியைக் கண்டுபிடித்து, ஒரு சீன முதலாளி நடத்தும் உணவு விடுதியில் வேலைக்கும் சேர்ந்து விட்டான். பாத்திரம் கழுவ வேண்டும். காய்கறி நறுக்க வேண்டும். ஒருநாளைக்கு 13 மணி நேரம் வேலை, மாதம் 1400 டாலர் (ரூ 70,000) சம்பளம்.

chinese-workersவாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி கடன் அடைக்க பெற்றோருக்கு பணம் அனுப்புகிறான். 25 லட்சம் ரூபாய் கடனும் வட்டியும் எப்போது அடையும்? மிக வேகமாக அடைத்தாலும் 8, 10 ஆண்டுகள் ஆகலாம்.

அமெரிக்க அரசைப் பொறுத்தவரை அவன் ஒரு கள்ளத்தோணி. பிடிபட்டால் திருப்பி அனுப்பிவிடுவார்கள். என்ன கொடுமை நடந்தாலும் கடை முதலாளியை எதிர்த்துப் பேச முடியாது. எதிர்த்தால் அவன் போலீசுக்கு காட்டிக் கொடுத்து விடுவான்.

எனினும் சென்னுக்கு மட்டும் இந்த நிலைமை இல்லை. அந்தச் சிறிய கடையில் அவனுடன் வேலை செய்யும் 17 சீனர்கள், 5 வங்காள தேசத்துக்காரர்கள், ஒரு இந்தியன் எல்லோரும் ‘கள்ளத்தோணிகள்’ தான் என்பதில் அவனுக்கு ஒரு ஆறுதல்.

நினைத்துப் பார்த்தால் நாம்தான் இந்தச் சாகசத்தைச் செய்தோமா என்று அவனுக்கே சந்தேகம் வருகிறது. 14,000 கிலோ மீட்டர் கடல் பயணம், கவுதமாலாவில் சிறை, மெக்சிகோ காட்டில் இரண்டு மாதம், பாலைவனத்தில் நடைபயணம், கடைசியில் மொழி தெரியாத பண்பாட்டால் வேறுபட்ட அறிமுகமான மனிதர்களே இல்லாத இந்த நாட்டில், அமெரிக்காவில் ஒரு வேலை!

இனி வாழ்க்கை எப்படிச் செல்லும்? குடியுரிமை கிடைக்குமா, திருமணம் உண்டா, குழந்தைகள் பெற்றுக் கொண்டால் அவர்களை என்ன செய்வது, வாழ்க்கையில் மீண்டும் ஒரு முறை தாய்நாடு செல்ல முடியுமா, பெற்றோர்களைப் பார்க்க முடியுமா… தெரியாது. இந்தக் கேள்விகள் எதற்கும் அவனுக்கு விடை தெரியாது.

இப்போதைக்கு அவனுக்கு தெரிவது ஒன்று மட்டும்தான். அவன் வெற்றிகரமாக வந்து சேர்ந்து விட்டான். டாலரைத் தொட்டுப் பார்த்து விட்டான்.

***

ரு வகையில் சென் அதிருஷ்டசாலி என்றே சொல்ல வேண்டும். அதே பியூஜியான் மாநிலத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் புறப்பட்ட 18 வயது ஜின் சிகாய் ஒரு ‘துரதிருஷ்டசாலி’

தொலைபேசி மெக்கானிக்கான ஜின் தரைவழியே இங்கிலாந்து செல்ல பாம்புத் தலையர்களிடம் 15 லட்ச ரூபாய் கொடுத்திருந்தான். பீகிங்கிலிருந்து ரயிலில் மாஸ்கோ; அங்கிருந்து லாரி, குதிரை வண்டியில் செக்கோஸ்லோவாகியா, அங்கிருந்து அப்படியே ஜெர்மனி, ஹாலந்து வழியாகச் செல்ல தேவையான போலி ஆவணங்களைத் தயாரித்திருந்தார்கள் பாம்புத் தலையர்கள்.

dead-in-containerகைச் செலவுக்குப் பணம் அனுப்புமாறு ஜூன் 10-ம் தேதி ஹாலந்திலிருந்து வீட்டுக்குப் போன் செய்தான் ஜின். ”தொண்ணூறு சதவீதம் பயணம் முடிந்து விட்டது. ஹாலந்திலிருந்து பெல்ஜியம், பிறகு இடையிலிருப்பது ஆங்கிலக் கால்வாய். அதைக் கடந்தால் இங்கிலாந்துதான்.” பெற்றோர்களுக்குப் பெரு மகிழ்ச்சி.

ஆனால் ஜூன் 18-ம் தேதி இங்கிலாந்திலிருந்து வெளியான செய்தி சீனாவையே அதிர்ச்சியிலாழ்த்தியது.

பெல்ஜியத்திலிருந்து தக்காளி ஏற்றிவந்த சரக்குப் பெட்டகத்தைச் சந்தேகத்தின் பேரில் சோதனை போட்டார்கள் பிரிட்டிஷ் சுங்க இலாகா அதிகாரிகள். தக்காளிகளை நகர்த்திவிட்டுப் பார்த்தால் ஒன்றன்பின் ஒன்றாக 54 மனித உடல்கள். அனைவரும் சீனர்கள்.

பெட்டகத்திலிருந்த ஒரேயொரு சன்னலும் வெளிப்புறமாக மூடிக் கொண்டு விட்டதால், மூச்சுத் திணறி, பெட்டகத்தின் சன்னலை மோதித் திறக்க முயன்று தோற்று, உடலில் நீர்வற்றி அதைச் சமாளிக்க தக்காளிகளைக் கடித்து உறிஞ்சி அதுவும் பயனின்றி மூச்சுத் திணறி துவண்டு செத்திருக்கிறார்கள்.

செத்தவர்கள் பெயரென்ன ஊரென்ன இந்தப் பெட்டகத்தை யார் யாருக்கு அனுப்பினார்கள் என்று எந்த விவரமும் தெரியாது. பிணங்களின் புகைப்படத்தைப் பார்த்துத்தான் தன் மகனின் மரணத்தை உறுதி செய்து கொண்டார்கள் ஜின்னின் பெற்றோர்கள்.

இது ஒரு துரதிருஷ்டசாலியின் கதை.

***

பிரான்சு நாட்டின் மேற்குக் கடற்கரையில் உள்ள கிராமம் சான்கேட். ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஜரோப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான மக்கள் புனிதயாத்திரைக்கு வந்த பக்தர்கள் போல அந்தக் கிராமத்தில் குழுமியிருக்கிறார்கள். ஒரே கூரையின் கீழ் உலகின் அனைத்து மொழிகளும், கலாச்சாரங்களும் உயிருடன் காணக் கிடைக்கும் அருங்காட்சியகம் அது. உண்மையான உலக கிராமம்.

கடவுச்சீட்டும் நுழைவுச் சீட்டும் இல்லாமல் இங்கிலாந்துக்கும், அங்கிருந்து அமெரிக்காவுக்கும் செல்லச் காத்திருக்கும் அந்தப் பயணிகளுக்காக செஞ்சிலுவை சங்கம் ஒரு மண்டபம் கட்டிக் கொடுத்திருக்கிறது. இந்த பெட்டகச் சாவுகளைப் பார்த்த பிறகும் இத்தகைய அபாயகரமான பயணம் குறித்து அவர்கள் அஞ்சவில்லையா?

இந்த மரணங்கள் மரத்துவிட்டன. எல்லைக் காவற்படையிடமிருந்து தப்பிப்பதற்காகப் படகின் உறைபனி நீரில் வீசியெறியப்பட்டு விரைத்துச் சாவோர் ஒவ்வொரு ஆண்டும் பலநூறு பேர். இவை கணக்கில் வராத சாவுகள். இத்தாலியின் கடற்பரப்பில் மட்டும் இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் 180 பேர்.

டோவர் நகரின் இந்தப் பெட்டகச் சாவு நடப்பதற்கு நான்கு நாட்கள் முன் ஒரு டச்சு அமைப்பு ‘ஜரோப்பாவில் நுழைய முயன்று இறந்தோர் இதுவரை 2000 பேர் என்று புள்ளி விவரம் வெளியிட்டிருந்தது. டோவர் சாவுடன் சேர்த்து 2054

”இது ஒரு வகையான ‘சி.என்.என் விளைவு (C.N.N-அமெரிக்கத் தொலைக் காட்சி). தங்கள் எதிர்காலத்தை அமெரிக்கக் கண்ணாடியின் வழியே பார்க்கப் பழகிவிட்டதன் விளைவு” என்று விமர்சிக்கிறார் சானகேட் நகரிலுள்ள செஞ்சிலுவை சங்கத்தின் அதிகாரி.

”வயது இருபதாகப் போகிறது இன்னும் ஏன் இங்கேயே சுற்றிக் கொண்டிருக்கிறாய். அமெரிக்கா போக வேண்டிதுதானே” என்று அறிவுரை கூறுவது சீனாவின் பியூஜியான் மாநிலத்தில் சகஜமாகிவிட்டது என்கிறார் ஒரு சீனப் பேராசிரியர்.

அமெரிக்க மோகம் பிடித்தவர்களை இந்தச் சாவுகள் அச்சுறுத்துவதில்லை. ‘சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புபவன் சாவுக்கு அஞ்சக் கூடாது’ என்று எண்ணுகிறார்கள் போலும்!ஜரோப்பவிலோ இச்சாவுகள் அப்போதைக்கு ஒரு பரபரப்புச் செய்தி. திருவிழாவில் கூழ் ஊற்றும் பண்ணையாரின் பேரப் பிள்ளைகள். கூலுக்கு அடித்துக் கொள்ளும் ஏழைகளை எப்படிப் பார்க்கிறார்களோ அப்படிப் பார்ப்பதற்குத்தான் அமெரிக்க, ஜரோப்பிய மக்களைப் பழக்கியிருக்கின்றன தகவல் தொடர்பு சாதனங்கள்.

”உலகத்தில் உள்ள ஏழைகளுக்கெல்லாம் நாங்கள் உயிர் காக்கும் படகாக முடியாது” என்று சலித்துக் கொள்கிறார் பிரிட்டிஷ் தொழிற்கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின் உழைப்பையும் இயற்கை வளங்களையும் இரண்டு நூற்றாண்டுக் காலம் சூறையாடிச் சேர்த்த சொத்தின் மீது அமர்ந்து கொண்டு இவ்வாறு பேசுவதற்கு எத்தனை திமிர் இருக்க வேண்டும்? உலகத்தையோ பரிபாலனம் செய்யும் பெரும் பொறுப்பைக் கடுகளவும் விருப்பமில்லாமல் தன் தோளில் சுமந்து கொண்டிருப்பதாகக் கூறும் ஏகாதிபத்தியவாதியின் கருத்து இது.

18,19-ம் நூற்றாண்டுகளில் ஆசிய ஆப்பிரிக்க அடிமைகளை வைத்துத்தான் தம் புதிய சாம்ராச்சியத்தை உருவாக்கிக் கொண்டன அமெரிக்காவும் பிரிட்டனும். இருபதாம் நூற்றாண்டில் கடினமான, ‘தரம் தாழ்ந்த’ வேலைகளைச் செய்ய கறுப்பு, பழுப்பு நிற மக்கள் இறக்குமதி செய்யப் பட்டனர்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் காலனி நாட்டு மக்கள் விடுதலைக்குப் போராடத் துவங்கிய பின், குடியேற்றத்தைத் தடுத்து ஜரோப்பா, சமமான குடிமக்களாக ஆசிய, ஆப்பிரிக்க மக்கள் தம்முடன் வாழ்வதை அவர்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு அடிமைகள் மட்டுமே தேவைப்பட்டனர்.

***

ப்போதோ மறுகாலனியாக்கக் காலம். தமே விரும்பி மனமுவந்து வருகிறார்கள் அடிமைகள். ‘வேறு வழியின்றி’ ஏற்றுக் கொள்வது போலப் பாசாங்கு செய்கிறார்கள் ஏகாதிபத்தியவாதிகள்.

கள்ளத் தோணிகளிலும், சரக்குப் பெட்டிகளிலும் பயணம் செய்து சட்டவிரோதமாகத் தங்கள் நாட்டில் நுழையும் ஏழை நாட்டு உழைப்பாளர்களை அவர்கள் தடுக்கவில்லை. கள்ளச் சாராயத்தைப் பிடிக்கும் போலீசைப் போல அந்தப் பக்கம் திரும்பிக் கொள்கிறார்கள். அவ்வப்போது கணக்குக்கு ‘கேஸ்’பிடிக்கிறார்கள். சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தாங்கள் விரும்பாததைப் போல நடிக்கிறார்கள்.

ஈராக்கின் குழந்தைகளுக்கு ஒரு பால் பவுடர் டப்பாவோ, ஒரு மாத்திரையோ கூட செல்லவிடாமல் தடுத்து ஆயிரக்கணக்கான குழந்தைகளைப் பட்டினி போட்டுக் கொன்ற அமெரிக்கா, சதாம் உசேனின் மாளிகையை விண்ணிலிருந்தே வேவு பார்த்து குண்டு வீசும் தொழில்நுட்ப ஆற்றல் பெற்ற அமெரிக்கா, சீனா, ரசியா போன்ற நாடுகளிலிருந்து ஒரு நபரோ ஒரு பத்திரிகையோ கூடத் தன் நாட்டில் நுழைந்துவிடாமல் இரும்புத்திரை போட்டு வைத்திருந்த அமெரிக்கா, இந்தக் கள்ளத் தோணிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுவது எத்தகைய பித்தலாட்டம்?

”சொல்லப் போனால் இந்தச் சட்டவிரோதக் குடியேற்றத்தால் அவர்களது பொருளாதாரத்திற்கு லாபம்தான். அவர்களுக்கு மலிவான கூலியில் தொழிலாளர்கள் கிடைக்கிறார்கள். எதற்காக இந்த பிரிட்டிஷ்காரர்கள் சும்மா அலட்டுகிறார்கள்?” என்று சர்வ சாதாரணமாக குட்டை உடைக்கிறார் சான்கேட் கிராமத்தில் காவல் இருக்கும் ஒரு போலீசுக்காரர்.

ஏழை நாடுகளின் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு வேலைவாங்க முடியுமென்பதால் அங்கெல்லாம் மூலதனத்தை ஏற்றுமதி செய்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்; தம் சொந்த நாட்டில் குறைந்த கூலிக்கு எடுபிடி வேலை செய்வதற்காக ஏழை நாட்டுத் தொழிலாளர்களை இறக்குமதியும் செய்கின்றன.

சீனா, பிலிப்பைன்ஸ், இந்தியா, வங்காள தேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அரசுகளோ, தம் மக்கள் கள்ளத் தோணியேறி திரைகடலோடி திரவியம் தேடுவதையே விரும்புகின்றனர். அந்தியச் செலவாணி பற்றாக்குறையை ஈடுகட்ட அவர்களுக்கு டாலர் தேவை. கள்ளத் தோணியேறி அமெரிக்கா செல்லும் சீனர்கள், பியூஜியான் மாகாணத்திலிருந்து மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர்.

ஏகாதிபத்தியச் சுரண்டலால் ஏற்படும் அந்நியச் செலாவணி நெருக்கடியைக் சமாளிக்க இன்னும் கொடூரமான ஏகாதிபத்தியச் சுரண்டலால் கிடைக்கும் டாலர் பயன்படுகிறது. கந்துவட்டி கட்டமுடியாதவன் பெண்டாட்டியை அடமானம் வைத்த கதை இது.

என்ரான், போர்டு, மைக்ரோ சாப்ட் முதலாளிகள் எல்லை கடந்து எந்த நாட்டிற்குள்ளும் நுழையலாம். தொழில் தொடங்கலாம். ஆனால் தொழிலாளர்கள் எல்லையைக் கடக்கக் கூடாது. இதுதான் உலகமயமாக்கக் கொள்கையின் நீதி.

மூலதனத்திற்கு தேசம் இல்லை, அரசு இல்லை. உழைப்புக்குத் தேசம் உண்டு சுரண்டுவதற்கு; அரசு உண்டு அடக்குவதற்கு.

மூலதனம் சந்தையைக் கைப்பற்றக் கள்ளத்தோணி ஏறினால் அதன் பெயர் ராஜதந்திரம் அல்லது போர். உழைப்பு தன்னை சந்தையில் விற்றுக் கொள்ளக் கள்ளத் தோணி ஏறினால் அது குற்றம்!

குற்றவாளிகளை உள்ளூர் போலீஸ்காரன் நேசிப்பதைப் போலவே உலகப் போலீஸ்காரனும் நேசிக்கிறான். அவர்கள் அளிக்கும் இலஞ்சம் மலிவான உழைப்பு.

உலகமயமாக்கமும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியும் உலகத்தையே கிராமம் ஆக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். உலகம் கிராமம் என்றால் நம்மைப் போன்ற நாடுகள் அந்தக் கிராமத்தின் சேரி.

– சூரியன்

புதிய கலாச்சாரம், டிசம்பர் 2000

தமிழ் மக்களின் உணவு புலால்

11

(2003-ல் புதிய கலாச்சாரம் இதழில் வெளியான கட்டுரை)

முன்னாள் குடியரசு தலைவரும், சங்கர மடத்தின் தலைமைச் செயலருமான ஆர்.வி தனது இளமையின் ரகசியம் மரக்கறி உணவுதானென்றும், புலால் உணவையே தடை செய்ய வேண்டுமென்றும் சமீபத்தில் பேசியிருக்கிறார். ஆர்.வி போன்ற ஜந்துக்கள் அழியாமலிருக்கக் காரணம் மரக்கறி உணவுதான் என்பது உண்மையாயின் முதலில் அதைத் தடை செய்ய வேண்டும் என்பது நம் கருத்து. அது ஒருபுறமிருக்க, கிடா வெட்டுத் தடைச் சட்டம் வந்ததிலிருந்து சைவம், ஜீவகாருண்யம் பிரச்சாரம் தீவிரமாகியிருக்கிறது. நமது நாட்டில் புலால் உணவு சாப்பிடாதவர்கள் அதிகம் போனால் பத்து சதவீதம் பேர். இவர்கள் பெரும்பான்மை மக்களை நாகரிகப்படுத்த முயற்சிப்பதும், அதை புலால் உண்ணும் பெரும்பான்மையினர் சகித்துக் கொள்வதும்தான் மிகப்பெரிய அவமானம்.

ஆர். வெங்கட்ராமன்
ஆர்.வி போன்ற ஜந்துக்கள் அழியாமலிருக்கக் காரணம் மரக்கறி உணவுதான் காரணம் என்பது உண்மையாயின் முதலில் அதைத் தடை செய்ய வேண்டும் என்பது நம் கருத்து.

உண்மையைச் சொன்னால் குரங்கு மனிதனாக மாறியதற்கான காரணங்களில் மிக முக்கியமானது புலால் உணவு. “இறைச்சி உணவுதான் குரங்கின் மூளை மனித மூளையாக வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான வேதியியல் அடித்தளத்தை உடலுக்கு அளித்து” என்கிறார் எங்கெல்ஸ்!

“மனிதனை மனிதக் குரங்காகப் பின்னுக்கு இழுப்பதுதான் பாசிசம்” என்பது தோழர் ஜூலியஸ் பூசிக்கின் மதிப்பீடு. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளத்தான் பார்ப்பன பாசிஸ்டுகள் நம்மை மரக்கறிக்கு இழுக்கிறார்கள் போலும்! பஜ்ரங் தள் என்பது குரங்குப் படைதானே!

எனினும், தமிழ் மக்களை அவ்வளவு சுலபமாகக் குரங்காக்க முடியாது. காரணம் நாகரிகம். இசை, கலை, மொழி ஆகியவற்றைப் போல உணவுப் பழக்கமும், சுவையறிவும் ஒரு பண்பாட்டின் வளர்ச்சியை மதிப்பிடும் அளவுகோல். அவ்வகையில் தமிழ் மக்களின் உணவுப் பழக்கம் குறித்து சில அரிய செய்திகளை நாம் தெரிந்து கொள்வதன் மூலம் குறைந்த பட்சம் குரங்காக மாற்றப்படும் அபாயத்திலிருந்து தப்பிக்கலாம்.

புலால் உணவு
இவர்கள் பெரும்பான்மை மக்களை நாகரிகப்படுத்த முயற்சிப்பதும், அதைப் புலால் உண்ணும் பெரும்பான்மையினர் சகித்துக் கொள்வதும்தான் மிகப்பெரிய அவமானம்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் வாழ்ந்த பழந்தமிழ் மக்கள் புலால் உணவை, அதாவது ஊன் உணவைப் பழக்கமாகக் கைக் கொண்டிருந்தனர் என்பது சங்கப் பாடல்களிலும், கல்வெட்டுகளிலும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கின்றன.

  • “அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்” என்று பெரும்பாணாற்றுப் படி அரிசிச் சோற்றுடன் வெள்ளாட்டு இறைச்சியைக் கலந்து உண்ட செய்தியைச் சொல்லுகிறது.
  • மதுரைக் காஞ்சியும் “ஆடுற்ற ஊன்சோறு நெறியறிந்த கடி வாலுவன்” என்று தமிழர்கள் ஊன் சோறு உண்டதை உவப்பக் கூறுகிறது. அதாவது, அந்தக் காலத்தில் பிரியாணிக்கு அழகிய தமிழ்ச் சொல் ஊன்சோறு.

 

  • ஏதோ நெய்தல் நிலத்திலும், மலை சார்ந்த குறிஞ்சி வாழ் மக்கள் மட்டும்தான் தாவர உணவு மட்டுமின்றி, புலால் உணவுக்குப் போயினர் என்று யாரும் பொய் சொல்ல முடியாது. உழுதும், பயிரிட்டும் வாழ்ந்த மருத நிலத்து மக்களும் “ஆமைக்கறியின் ருசி தெரியுமா உனக்கு, வேண்டுமானால் மருதநிலத்தில் வந்து தங்கிப்பாரு” என்பது போல அழைக்கின்றனர்.
மீன் பொரித்தல்
“மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்”

அறுசுவை என்றாலே சைவம்தான் என்று சரடு விடுபவர்களின் முகத்தில் புலால் உணவிலேயே விதவிதமாகச் சமைத்து உண்ட சங்கதிகளை உப்புக் கண்டம் போல் இலக்கியத்தில் காத்து வைத்திருக்கின்றனர் பழந்தமிழ் மக்கள்.

  • கடல் இறாலையும், வயல் ஆமையையும் கலந்து தின்ற சுவை வேண்டுமா? “கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும்” என்ற ‘பட்டினப்பாலை’க்கு வாருஙள்.
  • மீன் இறைச்சியும், விலங்கு இறைச்சியும் சேர்த்துப் பொரிக்கும் பக்குவம் வேண்டுமா? “மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்” – இந்தப் பட்டினப்பாலை வரிகளை சங்கராச்சாரிக்குப் படிக்கக் கொடுங்கள். அவரும் தண்டத்தைப் போட்டுவிட்டுக் கொண்டத்தைக் கேட்டுக் கத்த ஆரம்பித்து விடுவார்.
  • குறிஞ்சி நிலக் கடவுளான முருகளுக்கு குறமகள், “வலி பொருந்தி ஆட்டுக்கிடாயின் குருதியோடு கலந்த தூய வெள்ளரிசியைப் பலியாக சிதறுகிறாள்” என்று திருமுருகாற்றுப்படை பழந்தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையைச் சொல்கிறது. மலைகளில் ஏறி தேன் சேகரித்து, முயல் வேட்டையாடி உழைப்பில் ஈடுபட்டிருந்த உண்மையான முருகனுக்கு ஊன் உணவே பிடித்தமானது.

முருகன், ஸ்கந்தனான பிறகு உண்டைக்கட்டியே அவனுக்கும் உணவாகி விட்டது. இப்போது, சுடலை மாடன், ஸூடலை மாடஸ்வாமியாக மாற்றப்படுகிறார். இனி கிடாவெட்டும் கிடையாது. வெறும் பொங்கல்தான். அவாள் “சுத்தம்” செய்ய விரும்புவது சுடலை மாடனை அல்ல – சூத்திரம், பஞ்சமரைத்தான்.

– சுடர்விழி

இந்தக் கட்டுரைக்கு ஆதாரமாகப் பயன்பட்ட நூல், வாசகர்கள் படிக்க வேண்டிய நூல்.

தமிழர் உணவு
நூலாசிரியர் : சே. நமசிவாயம்
வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

அக்டோபர் 2003, புதிய கலாச்சாரம்

நீதியே உன் விலை என்ன?

3

2001-ம் ஆண்டில் ஜெயா மீண்டும் தமிழக முதல்வராக அமர்ந்தவுடன், அவருக்கு எதிராக நடந்துவந்த ஊழல் குற்ற வழக்குகள் அனைத்தையும் சட்டமன்றத் தீர்மானம் ஒன்றின் மூலம் மூட்டை கட்டிவிடலாம் என அப்பொழுது ராதாபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக (சுயேட்சை) இருந்த அப்பாவு கோரிக்கை வைத்திருக்கிறார். இதனை நிராகரித்த ஜெயா, “தான் இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதியாக வெளியே வருவேன்” எனத் தன்னடக்கதோடு கூறியிருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் இந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்து, அம்மாவைச் சட்டத்திற்கும் நீதிக்கும் தலைவணங்கும் கண்ணியமிக்கவராகக் காட்டுகிறார்கள், அ.தி.மு.க.வினர். இது மட்டுமல்லாமல், உச்சநீதி மன்றம் எந்தவிதமான நிபந்தனையின்றிப் பிணை வழங்கியபோதும், தனக்குத் தானே நிபந்தனை விதித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த பெருந்தகையாக ஜெயாவிற்கு மகுடம் சூட்டி வருகிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெயா மீது சுமத்தப்பட்டன. “வாடா, வா, உன்னைக் கவனிச்சுக்கிறேன்” என்ற விதத்தில்தான் இந்த வழக்குகளை அவர் நீதிமன்றத்தில் சந்தித்தாரேயொழிய, சட்டப்படியெல்லாம் அவர் நடந்து கொள்ளவில்லை. “சொத்துக் குவிப்பு வழக்கை ஜெயா நீதிமன்றத்தில் எதிர்கொண்ட விதத்தை முழுவதுமாக விளக்கினால், அது கிரிமினல்களுக்குச் சாதகமாகப் போய்விடும் என்பதனால், அதனை நான் அதிகம் விளக்கவில்லை” என சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவரது கூற்று மிகையானதல்ல. ஜெயா, தன் மீது தொடரப்பட்ட வழக்குகளில் சிலவற்றைச் சந்தித்த விதத்தை கீழே தொகுத்துக் கொடுத்துள்ளோம். கிரிமினல் கும்பலுக்குத் தலைவியாக இருக்கும் தகுதியை மட்டுமே கொண்டவர் ஜெயா என்ற உண்மையை அவை உங்களுக்குப் புரிய வைக்கும்.

ஜெயாவின் முதல் தவணை ஆட்சியின் பொழுது (1991-96) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளிலிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயா – சசி கும்பல் இலஞ்சம் வாங்கியது, ஜெயா பதவியில் இருந்த பொழுதே அம்பலமாகியது. மறைந்த தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இந்த ஊழலை விசாரிக்க தொடுத்த வழக்கில், உயர்நீதி மன்ற நீதிபதி இலட்சுமணன், நிலக்கரியை இறக்குமதி செய்யக்கூடாது என இடைக்காலத் தடை விதித்தார்.

நீதிபதி தினகர்
டான்சி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயாவைச் சட்டத்தை வளைத்து விடுதலை செய்தார் நீதிபதி தினகர்

ஜெயா, இந்த இடைக்காலத் தடையை சட்டத்தின் பொந்துகளில் புகுந்து உடனடியாக உடைத்துவிட்டாலும், தனக்கு எதிரான இந்த ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுவிடும் என பீதியடைந்து போயிருந்தார்; நீதிபதி இலட்சுமணன் வேறு சில வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருந்ததால், அவரை மிரட்டிப் பணிய வைப்பது என்ற சூழ்ச்சியை மேற்கொண்டது ஜெயா – சசி கும்பல்.

இச்சதியின்படி நீதிபதி இலட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா – கள்ளச்சாராயம் வியாபாரத்தில் ஈடுபட்டதாகப் பொய் வழக்கு சோடிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது பொய்வழக்கு என்பது விரைவிலேயே அம்பலமாகி, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டாலும், ஜெயா கும்பலின் நோக்கம் நிறைவேறியது. “நீதிமன்றத்துக்கு வெளியே நடக்கும் சில சம்பவங்கள் தன்னைப் பாதிப்பதாக” க் கூறி, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி இலட்சுமணன் விலகிக் கொண்டார்.

  • 1996-ல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய தி.மு.க., ஜெயா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது. இச்சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதை எதிர்த்து ஜெயா தொடர்ந்த வழக்கில் அப்பொழுது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த லிபரான், “சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது சட்டப்படி செல்லும்” எனத் தீர்ப்பளித்தார். இதனால் ஆத்திரமடைந்திருந்த ஜெயா, தனது ஆதரவோடு நடந்துவந்த பா.ஜ.க. கூட்டணி அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி லிபரானை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்குத் தூக்கியடித்து பழி தீர்த்துக் கொண்டார். ஜெயாவின் பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து வந்த மற்றொரு நீதிபதி, ஜெயாவின் நிர்ப்பந்தங்களுக்கு பணிய மறுத்ததால், அசாமுக்கு மாற்றப்பட்டார்.
  • “கொடைக்கானல் ப்ளஸண்ட் டே” விடுதி ஊழல் வழக்கில், ஜெயாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூவரும் அ.தி.மு.க. காலிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 2001-ல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பின்பு இந்த வழக்கின் போக்கே தலைகீழாக மாறியது. அ.தி.மு.க. குண்டர்களின் மிரட்டலுக்குப் பயந்து, 22 அரசு சாட்சிகளும் குற்றவாளிகளுக்குச் சாதகமாக பல்டியடித்தனர். இதனால் கொல்லப்பட்ட கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி, இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2001 இறுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் விசாரணை, அ.தி.மு.க. அரசின் இழுத்தடிப்புகளால் ஒன்றரை ஆண்டுகள் நடந்தது. “இவ்வழக்கை சேலத்திற்கு மாற்றியும், சீனிவாசன் என்ற குற்றவியல் வழக்குரைஞரை அரசு வழக்குரைஞராக நியமித்தும்” சென்னை உயர்நீதிமன்றம் 22.08.03 அன்று தீர்ப்பளித்தது.
நீதிபதி அருணா ஜெகதீசன்
சொத்துக்குவிப்பு வழக்கில் சட்டவிரோதமான முறையில் ஜெயாவின் பினாமி கம்பெனிகளை விடுவித்து தீர்ப்பளித்த நீதிபதி அருணா ஜெகதீசன்.

எனினும், வழக்குரைஞர் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்தரவு வழங்காமல் இழுத்தடித்ததன் மூலம், சேலம் நீதி மன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற முடியாமல் முடக்கி வைத்தது, அ.தி.மு.க. அரசு. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 14 மாதங்கள் ஆன பிறகும் கூட வழக்குரைஞர் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கப்படாததை எதிர்த்து, கோகிலவாணியின் தந்தை மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு விசாரணையின் பொழுது, மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட மூல வழக்கைக் குழி தோண்டிப் புதைத்துவிடும் நோக்கத்தோடு, “மூல வழக்கின் கேஸ் கட்டு காணாமல் போய்விட்டது; அதனை டிசம்பர் 2003-லிருந்து தேடிக் கொண்டிருக்கிறோம். புதிதாகக் கேஸ் கட்டுத் தயாரிக்கக் கால அவகாசம் வேண்டும்” எனக் குண்டைத் தூக்கிப் போட்டது தமிழக அரசு.

இப்படி அ.தி.மு.க.வால் அரசு அதிகாரத்தோடு உருவாக்கப்பட்ட எல்லா தடைகளையும் மீறி அக்கட்சியைச் சேர்ந்த 28 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகும் கூட, ஜெயா “நீதி”க்குத் தலை வணங்கவில்லை. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பங்களுக்குப் பல இலட்ச ரூபாய் கருணைத் தொகை ஏற்பாடு செய்து கொடுத்ததன் மூலம், நீதிமன்றத் தீர்ப்பை எள்ளி நகையாடி விட்டார்.

  • தமிழக முதல்வர் என்ற பதவியைப் பயன்படுத்தித் தான் அடித்தக் கொள்ளையைப் பகிரங்கமாகக் காட்டிக் கொள்ளும் விதமாக, தனது “வளர்ப்புப் பிராணி” சுதாகரனின் திருமணத்தை 1995-ம் ஆண்டின் இறுதியில் நடத்தினார் ஜெயா. அந்தத் திருமணம் தொடர்பாக நடந்து வந்த அதிகார முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தும்படி கோரி, பல வழக்குரைஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணையின் பொழுது, “வழக்குத் தொடுத்தவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கே என்ன பாதுகாப்பு?” என நீதிபதி புலம்பியதிலிருந்தே, நீதிபதிகள் – நீதிமன்றங்கள் மீதான ஜெயாவின் ‘பாசத்தை’ப் புரிந்து கொள்ள முடியும். “அதிகார முறைகேடுகள் நடந்திருந்தாலும், அவற்றுக்கு முதல்வர் ஜெயா பொறுப்பல்ல” எனத் தீர்ப்பெழுதி, தனது தோலைப் பாதுகாத்துக் கொண்டார், நீதிபதி.
அருண் ஜெட்லி - ஜெயா
நிதியமைச்சர் அருண் ஜெட்லி போயசு தோட்டத்தில் ஜெயாவைச் சந்தித்த சில நாட்களிலேயே அவர் வருமான வரி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
  • டான்சி நில பேர ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தபொழுதே அதில் தலையிட்டது, சென்னை உயர்நீதி மன்றம். இவ்வழக்கிலிருந்து ஜெயாவை விடுதலை செய்த உயர்நீதி மன்ற நீதிபதி தங்கராசு, “டான்சி நிலத்தை வாங்கியதில் ஜெயா எவ்வித மோசடியிலும் ஈடுபடவில்லை; மாறாக, வழக்குதான் மோசடியானது” எனப் பொருள்படும்படி தனது தீர்ப்பை அளித்தார். நீதிபதி தங்கராசு, அ.தி.மு.க.வின் மந்திரி ஒருவரின் சிபாரிசின் பின்னணியில்தான் நீதிபதி பதவியைப் பெற்றார் என்பதும்; டான்சி நிலபேர வழக்கில் தீர்ப்புக் கொடுக்கும் முன் உல்லாசச் சுற்றுலாவாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதும் பின்னர் அம்பலமாகியது.நீதிபதி தங்கராசின் தீர்ப்பை எதிர்த்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு வந்தபொழுது, “தனி நீதிமன்றத்தில் 80 சதவீத அளவு விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில், அதில் உயர்நீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டாம் என்று நாங்கள் கருதுகிறோம். இது எங்கள் தீர்ப்பு அல்ல; கருத்துதான். உங்கள் கட்சிக்காரர் (ஜெயா) மீண்டும் சிறப்பு நீதிமன்ற விசாரணையைச் சந்திக்க விரும்புகிறாரா?” எனக் குற்றவாளியிடமே தீர்ப்பைச் சொல்லும் உரிமையை வழங்கினார்கள் நீதிபதிகள்.டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பெற்ற ஜெயா, அத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தினகர், “டான்சி நிலம், அரசு சொத்தே அல்ல; அரசு ஊழியர், அரசு சொத்தை வாங்கக் கூடாது என்பது நன்னடத்தைக் குறித்த விதிமுறைதானே தவிர, சட்டமல்ல” எனச் சட்டத்தையே வளைத்து, புதிய விளக்கம் கொடுத்து, ஜெயாவை வழக்கில் இருந்தும், தண்டனையிலிருந்தும் விடுதலை செய்தார். நீதிபதி தங்கராசு தீர்ப்புக்கு முன் சிங்கப்பூர் சென்று வந்தார்; நீதிபதி தினகர் தீர்ப்புக்குப் பின் ஒரு மாத ஓய்வில் போனார்.நீதிபதி தினகரின் தீர்ப்பை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையும், அதனின் தீர்ப்பும் மிகவும் விநோதமாக அமைந்தன. சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த “பந்த்”-ஐ தடை செய்து ஞாயிற்றுக்கிழமை கூடி தீர்ப்பு அளித்த உச்சநீதி மன்றம், டான்சி நில பேர வழக்கில் விசாரணை முடிந்த பிறகும், தீர்ப்பு வழங்காமல் 14 மாதங்கள் இழுத்தடித்தது. அதன்பின் வந்த தீர்ப்போ, ஜெயாவின் விடுதலையை உறுதி செய்ததோடு, அவரின் மனசாட்சியிடம் மண்டியிட்டது.

    “முதல் குற்றவாளியான ஜெயலலிதா குற்றமிழைத்திருக்கிறாரா, இல்லையா என்கிற உண்மைக்கு அப்பாற்பட்டு, அவர் தமது மனசாட்சிக்குப் பதில் அளிக்கும் வகையில் பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி டான்சி நிலத்தைத் திருப்பிக் கொடுப்பதே பரிகாரமாக அமையும்.” – இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதிய வெங்கடராம ரெட்டி, ராஜேந்திரபாபு என்ற இரு நீதிபதிகளுக்கு ஜெயாவிடமிருந்து என்ன பரிகாரம் கிடைத்ததோ, அது அந்த “ராமனுக்கு”த்தான் தெரியும்!

நீதித்துறையை விலை பேசும் ஜெயா

  • சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தபோது, ஜெயா-சசி கும்பலின் லெட்டர் பேடு கம்பெனிகளை அவ்வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது, ஜெயா-சசி கும்பல். இந்த வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திற்குத் தெரியாமல் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்ததையும்; இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் சென்னை உயர்நீதி மன்றத்திற்குக் கிடையாது என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது சென்னை உயர்நீதி மன்றம். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞராக பவானி சிங்கிற்குப் பதிலாக, வேறொரு அ.தி.மு.க. கைக்கூலி வழக்குரைஞர் ஆஜரானதையும் சென்னை உயர்நீதி மன்றம் அனுமதித்தது. இப்படி சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட இவ்வழக்கில் நீதிபதி அருணா ஜெகதீசன் அந்த லெட்டர் பேடு கம்பெனிகளை வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பளித்த கேலிக்கூத்தும் அரங்கேறியது.
  • சொத்துக் குவிப்பு வழக்கைப் போலவே, வருமான வரி வழக்கிலிருந்தும் ஜெயா-சசி கும்பல் விடுவிக்கப்பட்டிருப்பது விநோதங்களும் மர்மங்களும் நிறைந்தது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருந்த சமயத்தில் வருமான வரி வழக்கை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்டது உச்சநீதி மன்றம். பின்னர் தேர்தல்கள் நடைபெறவிருப்பதைக் காட்டி விசாரணைக் காலத்தை நீட்டிக்க வேண்டுமென ஜெயா கேட்டுக் கொண்டவுடன் தனது தீர்ப்பையே மாற்றிக் கொண்டது உச்சநீதி மன்றம்.இவ்வழக்கை விசாரித்த சென்னை பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றம் நேரில் ஆஜராகுமாறு திரும்ப திரும்ப உத்தரவிட்டதை ஜெயாவும் சசியும் ஒரு பொருட்டாகக் கருதவேயில்லை. ஒருபுறம் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்த்துவந்த ஜெயா, இன்னொருபுறம் பா.ஜ.க. அரசில் தனது நண்பரான அருண் ஜெட்லி நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதைப் பயன்படுத்திக் கொண்டு இந்த வழக்கையே குழிதோண்டிப் புதைக்கும் முயற்சியில் இறங்கினார். வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாத குற்றத்திற்கு உரிய அபராதம் செலுத்த தயாராக இருப்பதாக ஜெயா-சசி கும்பல் வருமான வரித் துறைக்கு மனுச் செய்ய, அந்த மனுவை ஏற்றுக் கொள்வதாக நிதியமைச்சகம் தடாலடியாக அறிவிக்க, வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் வேறுவழியின்றி வழக்கை முடித்து வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இவ்வழக்கில் சிறைக்குச் செல்ல வேண்டிய ஜெயா-சசி கும்பல் பா.ஜ.க. அரசின் தயவால் அபராதத் தொகையைச் செலுத்திவிட்டுத் தப்பித்துக் கொண்டது.

***

ஜெயா வழக்கைச் சந்தித்த விதம் ஒவ்வொன்றும் சட்டம், நீதித்துறை ஆகியவற்றின் வரம்பு மற்றும் கையாலாகாத்தனத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அதற்கும் அப்பாற்பட்டு, இன்றைய அதிகார அமைப்பில் உச்சநீதி மன்ற நீதிபதிகள் உள்ளிட்டு யாரையும் எந்த விலை கொடுத்தும் வாங்க முடியும் என்றும் அவர் எடுத்துக் காட்டிவிட்டார். ஜெயா போன்ற சாதி, பணம், அரசியல் செல்வாக்கு கொண்ட கிரிமினல்களை இன்றுள்ள சட்டம், நீதித்துறை ஆகியவற்றைக் கொண்டு தண்டித்துவிட முடியாது எனப் புரட்சியாளர்கள் கூறிவருவதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களைக்கூட, சட்டத்திற்கு சவால் விடும் தனது நடவடிக்கைகளின் மூலம் திணறடித்து வருகிறார், அவர். அந்த வகையில் ஜெயா புர்ரட்ச்ச்சி தலைவிதான்!

– திப்பு
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் – 2015
____________________________

அரசு பள்ளிகளை உற்சாகப்படுத்தும் விருதை மாநாடு

5

விருத்தாச்சலத்தில் நடந்த கல்வி உரிமை மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகள் (தொடர்ச்சி)

தோழர் முருகானந்தம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருத்தாச்சலம்

privatization-of-education-cards-30 அன்று பார்ப்பானியம் ”பஞ்சமர்களும், சூத்திரர்களும் படிக்கக்கூடாது” என்றது. இன்றைய அரசும் அதையே செய்கிறது. தனியார் பள்ளிகள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக இன்று அரசுப்பள்ளிகள் இழுத்து மூடப்படுகின்றன.

முருகானந்தம், பு.மா.இ.மு
முருகானந்தம், பு.மா.இ.மு

ஜேப்பியார் போன்ற முன்னாள் கள்ளச்சாராய ரவுடிகளும், ஜெகத்ரட்சகன், தளி ராமச்சந்திரன் போன்ற ஓட்டுக் கட்சிக்காரன்களும்தான் இன்று கல்வி வியாபாரம் செய்கின்றனர். அதனால் தான் தனியார் பள்ளிகளை இழுத்து மூடு என்று எந்தக் கட்சியும் வாய் திறப்பதில்லை.

தனியார் பள்ளிகளில் என்ன நடக்கிறது. பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், 12-ம் வகுப்புப் பாடத்தைப் 11-ம் வகுப்பிலும் என ஒரே பாடத்தை இரண்டு ஆண்டுகளுக்குப் படிக்க வைக்கின்றனர். பாடப்புத்தகத்தை மட்டுமே படிக்கும் ரோபோட்டுகளாக, கறிக்காக வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளைப் போல மாணவர்களை மாற்றுகின்றனர். இதன் மூலமாக தேர்ச்சி விகிதத்தை கூட்டிக்காட்ட முயல்கின்றனர். ஆனால், நமது நாட்டின் அரசியல், வரலாறு, பொருளாதாரம், சட்டம் போன்ற எதையும் அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை.

privatization-of-education-cards-01‘அரசுப் பள்ளிகளில் படித்தால் அறிவு வளராது, ஆங்கிலம் தெரியாது, வேலை கிடைக்காது’ என்றும் கூறுகின்றனர். இது தவறு. கணிதமேதை இராமானுஜம், விஞ்ஞானி அப்துல் கலாம் போன்ற பல்துறை அறிவியல் மேதைகளும், இன்றைய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் உள்ளிட்ட ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் அரசுப் பள்ளிகளில், தாய்மொழியில் படித்து வந்தவர்கள்தான்.

இன்று அரசுப் பள்ளிகளில் ஒருசில குறைபாடுகள் இருப்பது உண்மைதான். நமது வீட்டின் கூரை ஒழுகினால் அதை மாற்றியமைக்கிறோமே தவிர யாரும் வாடகை வீட்டிற்குச் சென்றுவிடுவதில்லை. அதைப்போல, அரசுப் பள்ளிகளில் உள்ள குறைகளைக் களைய நாம் போராட முன்வரவேண்டும். மாறாக, தனியார் பள்ளிகளில் கொண்டுபோய் நம் பிள்ளைகளைச் சேர்க்கக்கூடாது.

விருத்தாசலத்திற்கருகிலே மணற்கொள்ளை தொடர்ந்து நடந்து வந்தது. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியும் மக்களுடன் இணைந்து போராடி மணற்கொள்ளையைத் தடுத்து அந்த மணல் குவாரியை மூடவைத்தன.

privatization-of-education-cards-27ஆர்.டி.ஓ “மணல் அள்ளலாம்” என்றார்; அப்பகுதி மக்கள், “மணலை அள்ள விடமாட்டோம்” என்று எதிர்த்தனர். ஆர்.டி.ஓ. பின்வாங்கிவிட்டார்.

அப்படியானால் அதிகாரம் யார் கையில் உள்ளது? போலீசு, அதிரடிப்படை என்று வைத்துள்ள அரசிடமா? அல்லது, உறுதியாகப் போராடி மணற்கொள்ளையைத் தடுத்து நிறுத்திய மக்களிடமா? சந்தேகமென்ன! உண்மையான அதிகாரம் மக்களிடம், நம்மிடம் தான் உள்ளது.

இதேபோல இந்தியா முழுவதும் மக்கள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நமது அரசுப் பள்ளிகளை, நகராட்சிப் பள்ளிகளைக் காப்பாற்ற முடியும்.

தோழர் ராஜு, ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Adv-Raju
வழக்குரைஞர் ராஜூ

இரண்டு விசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒன்று, அரசுப் பள்ளிகள் சரியில்லை என்று கூறுகிறார்கள்.

‘கட்டிடம், வகுப்பறை மோசமாக உள்ளது; ஒழுங்காகப் பாடம் நடத்துவதில்லை; அதனால் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற முடிவதில்லை; அங்கு பயிலும் மாணவர்களுடன் பழகினால் கெட்டுப்போய்விடுகிறார்கள்; இதனால் அவர்களது எதிர்காலம் பாழாகிவிடுகிறது’ என்றெல்லாம் கூறப்படுகிறது.

‘தனியார் பள்ளிகள் பளபளப்பாக உள்ளன; அங்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தரமான கல்வி வழங்கப்படுகிறது. எனவே, அதிக மதிப்பெண்கள் எடுத்து, நல்ல வேலைக்குச் சென்று பிரகாசமான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும்’ என்றும் கூறுகிறார்கள்.

privatization-of-education-cards-04தமிழகத்தில் சுமார் 18,000 தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளை நடத்தும் முதலாளிகளின் வாழ்க்கைதான் பிரகாசமாக உள்ளதே தவிர அங்கு பயிலும் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றமடையும் என்பதற்கான சாத்தியம் எதுவுமில்லை. ஏனென்றால் இன்றைய சமூகச் சூழல் அப்படியுள்ளது.

தனியார் பள்ளியில் படித்து ஆங்கிலத்தில் சிறப்பான தேர்ச்சிபெற்று, 1190-க்கும் மேலே மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் உறுதியாக வேலை கிடைத்துவிடும் என்று கூறமுடியுமா? முடியாது; அப்படியெல்லாம் இங்கே வேலைகள் கொட்டிக்கிடக்கவில்லை.

privatization-of-education-cards-05வெள்ளைக்காரன் வியாபாரம் செய்வதற்காக நம் நாட்டிற்கு வந்து, சூழ்ச்சியால் ஆட்சியைப்பிடித்து இங்குள்ள வளங்களையெல்லாம் சுரண்டி அவனது நாட்டிற்கு எடுத்துச் சென்றான். ஆனால் இன்றைய நமது ஆட்சியாளர்கள் நமது வளங்களையெல்லாம் சுரண்டி எடுத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வாரி வழங்குகிறார்கள். அதுதான் அவர்களது நோக்கம்; நமக்கு வேலை தருவதல்ல.

1927-ல் ஆசிரியர் மாநாடு ஒன்றில் பேசும்போது தந்தை பெரியார் ஆசிரியர்கள் சமூக சிந்தனையுடன் செயல்படவேண்டும் என்று வலியுறுத்துகிறார். “ஆசிரியர்கள் நடமாடும் புத்தக அலமாரிகளாக, அதாவது துறைசார்ந்த புத்தகங்களைப் படித்துத் தேர்ச்சி பெற்றவர்களாக மட்டுமே இருப்பதால் படிப்பைப் பற்றி மட்டுமே, பி.ஏ, எம்.ஏ என்று பட்டங்களைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர்; அவர்கள் தமது வாழ்க்கை வளம்பெறுவதற்காக மட்டுமே மாநாடு நடத்துகின்றார்களே தவிர சமூகத்தின் படிப்பை, சிந்தனையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணமின்றி இருக்கிறார்கள்” என்று அம்மாநாட்டிலேயே அவர்களைச் சாடினார். படிப்பு வேறு; அறிவு வேறு என்று அன்றே வேறுபடுத்திக் காட்டினார்.

privatization-of-education-cards-07 தாய்மொழிக் கல்விதான், தமிழ்வழிக் கல்விதான் அறிவு வளர்ச்சிக்கு அடிப்படையாகும். தாய்மொழியில் கல்வி கற்கும்போதுதான் குழந்தைகள் எதையும் எளிதாகக் கற்றுக்கொள்கின்றனர்.

ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு வளரும் என்பது மூடத்தனம் ஆகும். தனியார் பள்ளிகளில் ஆங்கிலத்தில் படித்து தமிழையும் சரியாகப் படிக்காத, ஆங்கிலத்திலும் தேர்ச்சியற்ற இரண்டுங்கெட்டான்களாக, படிப்பறிவற்ற ஆட்டுமந்தைகளாக, கூலி அடிமைகளைத்தான் இந்த அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

தனியார் பள்ளிகள் ஆண்களும், பெண்களும் இயல்பாக பேசிக்கொள்வதற்குக் கூட தடைவிதிக்கின்றன. ஆணும், பெண்ணும் இயல்பாகப் பழகி, நட்புடன் வளரும் வாய்ப்பு தனியார் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுவதால் பின்னாட்களில் குடும்ப வாழ்வில் எதிர்கொள்ளும் எளிய பிரச்சனைகளைக் கூட தீர்க்கும் வழிதெரியாமல் அவர்களது வாழ்க்கை சீரழிகிறது.

privatization-of-education-cards-08படிப்பு, வேலை, சம்பாத்தியம் என்று சேணம் பூட்டிய குதிரைகளாக வளர்த்தெடுக்கப்படும் தனியார் பள்ளி மாணவர்கள் சமூக அக்கறையற்ற சுயநலமிகளாகத்தான் சமூக வாழ்வில் வெளிப்படுகிறார்கள். பிரச்சனைகளை எதிர்கொண்டு, போராடி வெற்றிபெறும் ஆற்றலும் அவர்களுக்கு இருப்பதில்லை.

 

படிப்பு என்பது மனிதனின் சிந்தனையை, பகுத்தறிவை, தொலைநேக்குணர்வை, தொகுத்துப் பார்க்கும் அறிவை வளர்க்கவேண்டும். அவ்வாறு தொகுத்துப் பார்க்கும்போது தான் கல்வி தனியார்மயப் பிரச்சனை மட்டுமல்லாமல், இயற்கை வளங்கள் சூறையாடப்படுவது உள்ளிட்டு நாம் இன்று எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் இந்த அரசுதான் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும். இந்த அரசமைப்பே நமக்கு எதிரானதாக மாறிவிட்டதை உணர்ந்துகொள்ளமுடியும். அவ்வாறு உணர்ந்துகொண்டால்தான் அதனை மாற்றுவதற்கான போராட்டத்தை மேற்கொள்ள முடியும்.

மக்கள் அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும்போதுதான் இந்த மாற்றங்களை நிகழ்த்த முடியும். அந்தப் பாதையில் மக்களைத் திரட்டுவதற்குத்தான் இம்மாநாடு நடைபெறுகிறது. மக்கள் தமது சொந்த முயற்சியில் அதிகாரத்தைக் கையிலெடுத்தால், கல்வி உரிமை மட்டுமல்லாமல் அனைத்து உரிமைகளையும் பெறமுடியும்.

திரு. செ.நல்லமுத்து, ஆசிரியர் – கோத்தகிரி.

privatization-of-education-cards-07அரசுப்பள்ளிகளைக் காக்கவேண்டியது ஆசிரியர்களாகிய எங்களது கடமை. ஆனால் நாங்கள் செய்யத் தவறிய அப்பணியைச் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கும் ம.உ.பா.மையத்தைப் பாராட்டுகிறேன். இனி நாங்களும் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுவோம்.

எனது பள்ளி மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட விருதுகளை, கோப்பைகளை வென்று வந்துள்ளனர். குறிப்பாக, கேரம் விளையாட்டில் நீலகிரி மாவட்டத்திலுள்ள பல தனியார் பள்ளிகளைத் தோற்கடித்து மாநில அளவில் பரிசுகளை வென்றுள்ளனர். இந்த ஆண்டு எனது பள்ளியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது படிக்கும் மாணவியர் கேரம் விளையாட்டில் மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர். 20 மாணவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களாக இருக்கிறார்கள். எனது பள்ளி மாணவர்களின் ஆங்கிலக் கையெழுத்து நீலகிரி மாவட்டத்திலுள்ள மற்றெந்தப் பள்ளி மாணவர்களுடையதைவிடவும் மிகவும் அழகாக இருக்கும்.

privatization-of-education-cards-08இன்று இரண்டு வயதுக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். நம்பிக்கை, ஒழுக்கம், தியாகம், ஈகம், நகைச்சுவை உள்ளிட்ட நற்பண்புகளைக் கற்றுக்கொள்ளவேண்டிய வயதில் பாடப்புத்தகங்களைப் படிப்பதற்கே அவர்களுக்கு நேரமில்லை தனியார் பள்ளிகளில். ஆனால், அரசுப் பள்ளிகளில் இவை எல்லாமே மாணவர்களுக்குக் கிடைக்கும்.

பள்ளி மாணவர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக வேண்டும். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தாலே படிப்பு தானாகவே வந்துவிடும். எனது பள்ளியில் மாணவர்களைச் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் கற்றுக்கொடுக்கிறோம். எனது மாணவர்கள் எனது தெய்வங்கள். வகுப்பறை எப்போதும் கலகலப்புடன் இருக்கவேண்டும். ஆனால், தனியார் பள்ளிகள் மாணவர்களை சவங்களைப் போல மாற்றியுள்ளன.

privatization-of-education-cards-09 வகுப்பறைகளில் நகைச்சுவையுடன் பாடங்களைக் கற்றுக்கொடுத்தால் மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள். குழந்தைகள் இயல்பிலேயே மிகவும் புத்திசாலிகள். அவர்களது புத்திசாலித்தனத்தை மேலும் வளர்ப்பதற்கு நல்ல கல்வி தேவை;  அப்படிப்பட்ட நல்ல, தரமான கல்வி தரும் பள்ளிகள் அரசுப் பள்ளிகளே!

தனியார் பள்ளிகளின் பகட்டுக்கு மயங்காமல் தரமான கல்வி தரும் அரசுப் பள்ளிகளில் தங்களது குழந்தைகளைப் பெற்றோர் சேர்க்கவேண்டும். தன் பிள்ளைகள் எந்தப் பாடத்தை ஆர்வமுடன் விரும்பிப் படிக்கின்றார்களோ அதில் மேலும் சிறப்பாக வளர்ந்திட ஊக்கப்படுத்தவேண்டும்.

privatization-of-education-cards-09

அன்புகாட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் பிறர் மீதும் அதேபோல அன்பைப் பொழியும். அரசுப் பள்ளிகள் தான் குழந்தைகளை அன்போடு வளர்க்கின்றன. அடக்கி வளர்க்கப்படும் குழந்தைகள் பிறரை அடக்கியாள நினைக்கும். தனியார் பள்ளிகளில் குழந்தைகள் அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். எனவே, உங்கள் குழந்தைகள் நல்லவர்களாக, அடங்கி நடப்பவர்களாக வளர வேண்டுமென்றால் அரசுப் பள்ளிகளில் சேருங்கள்; கெட்டவர்களாக, வெடித்துக் கிளம்புவர்களாக மாறவேண்டுமென்றால் தனியார் பள்ளிகளில் சேருங்கள். எனவே, குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேருங்கள்! மகிழ்ச்சியாக வாழுங்கள்!

தாய்வழிக் கல்வியே சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும், புலவர் அ.சிவராமசேது, தலைமை ஆசிரியர்(ஓய்வு), விருத்தாசலம்.

புலவர் சிவராமசேது
புலவர் சிவராமசேது

தாய்மொழி என்பது தாய்ப்பால் போன்றது. குழந்தைகளுக்குத் தாய்ப்பால் தான் எளிதில் சீரணம் ஆகும். அதேபோல தாய்மொழியில் படித்தால்தான் எளிதில் புரிந்துகொள்ளமுடியும். எளிதில் சீரணமாகாத புட்டிப்பாலைப் போல ஆங்கிலத்தில் படிப்பதும் சிரமமானதே.

ஆங்கிலக்கல்வி நெஸ்லேவின் 8 வகை நூடுல்ஸைப் போன்றது. அது எவ்வித சத்தும் இல்லை என்பதுடன் பல்வேறு நோய்களுக்கும் ஆளாக்கக்கூடியது; கெடுதலானது. அந்நிய மொழியில் புரியாமல் படிப்பவர்கள் படித்ததையே மீண்டும், மீண்டும் படித்து ஞாபகத்தில் வைத்துக்கொண்டு தேர்வுகளில் விடையெழுதுவார்கள். அப்போது ஏதாவது மறந்துபோனால் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் தாய்மொழி மூலமாகப் புரிந்துகொண்டு படிப்பவர்களோ தமது சிந்தனைகளை விடைத்தாளில் சரளமாக எழுதுவார்கள்.

privatization-of-education-cards-10

தாய்மொழியில் படிப்பவர்கள் தமது பெற்றோர்களுடனும், உற்றோர்களுடனும், உறவினர்களுடனும் தாய்மொழியில் பேசிப்பழகி அன்பையும், நட்புறவையும் வளர்ப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் இளமையிலிருந்து தம்மை ஆங்கிலப் பள்ளிக்கொட்டடிகளில் சேர்த்து வதைத்ததற்குப் பழிதீர்க்கும் விதமாக தமது பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டுபோய் சேர்ப்பார்கள் ஆங்கிலப் பள்ளியில் பயின்றவர்கள்.

privatization-of-education-cards-11

காந்தியடிகளும், இரவீந்திரநாத் தாகூரும் தாய்மொழிக்கல்வியைத் தான் வலியுறுத்துகிறார்கள். ரஷ்யா. ஜப்பான், சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளும் தாய்மொழியில் தான் கற்பிக்கின்றன. அறிஞர் அண்ணா முதல் அப்துல் கலாம் வரையிலும், கணிதமேதை இராமானுஜம், பெர்னார்ட்ஷா போன்றவர்களும் தாய்மொழியில் பயின்றவர்கள்தான். எனவே, நாமனைவரும் நமது தாய்மொழியில், தமிழ் மொழியில் பயிலவேண்டும். தமிழில் படித்தோருக்கு இட ஒதுக்கீடும், வேலைவாய்ப்பில் முன்னுரிமையும் தந்தால்தான் தாய்மொழிக் கல்வி வளரும். அதற்காக பெற்றோர்களும், மாணவர்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.

நகர்மன்ற ஊழலை ஒழித்தால், நகராட்சிப் பள்ளிகள் சிறக்கும், மருத்துவர் மு. வள்ளுவன், முன்னாள் நகர்மன்றத் தலைவர், விருத்தாசலம்.

டாக்டர் வள்ளுவன்
டாக்டர் வள்ளுவன்

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 122 நகராட்சிகள், 529 நகரப் பஞ்சாயத்துகள் மற்றும் 12524 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. நாம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாயிலும் 2% ஆரம்பக் கல்வி நிதிக்கு ஒதுக்கப்படுகிறது.

குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் ரூ 500 கோடி அளவுக்கு சொத்து வரி விதிக்கப்படாமல் உள்ளது. அதேபோல, சுமார் 5,00,000 ஏக்கர் விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்ட வகையில் அதற்கான வரியாக ரூ 1,00,000 கோடி வசூலிக்கப்படாமல் விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி வசூலிக்க வேண்டிய தொகை ரூ 75,000 கோடி. இதுபோல இன்னும் பல உள்ளன.

privatization-of-education-cards-23இவை அனைத்தையும் முறையாக வசூலித்திருந்தால் அந்த மொத்தத் தொகையில் 2% தொகையாக சில ஆயிரம் கோடி ரூபாய்கள் ஆரம்பக் கல்வி நிதியாக வந்திருக்கும். இதைக் கொண்டு நமது அரசுப் பள்ளிகளை சிறப்பாக நடத்தியிருக்க முடியும். ஆனால், லஞ்ச, ஊழல்களில் ஊறித் திளைக்கும் நமது அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் இதில் அக்கறையின்றி உள்ளனர். நமது வரிப்பணத்தைத் தின்று கொழுக்கும் இந்த அதிகாரிகளின் லட்சணம் இதுதான். எனவே, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சியிலும் வசிக்கின்ற மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். தத்தமது பகுதிகளில் சொத்து வரி முறையாக வசூலிக்கப்படுகின்றதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். தமது ஊராட்சி, நகராட்சி நிர்வாகத்தை செம்மைப் படுத்தவேண்டும். இவ்வாறு தமிழக மக்கள் விழிப்புணர்வு பெற்றால் தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் தரம் உயர்ந்த பள்ளிகளாக மாற்ற முடியும்.

ஆசிரியர் செ. நல்லமுத்து, கோத்தகிரி

privatization-of-education-cards-22நான் வேலை செய்யும் கோத்தகிரி அரசுப் பள்ளியில் இதுவரை 20 சிறந்த மாணவ பேச்சாளர்களை உருவாக்கியுள்ளேன். பல விளையாட்டுகளை மாணவர்களை விளையாட உற்சாகப்படுத்தி, பயிற்சி கொடுத்ததின் மூலம் கோப்பைகளாலும், விருதுகளாலும் எங்கள் பள்ளி நிறைகிறது. பள்ளி மாணவர்களின் சேர்க்கையில் பின் தங்கியிருந்த எங்கள் பள்ளியில், இப்பொழுது மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிற்து.

வகுப்பறையில் மாணவர்களை எப்பொழுதும் கலகலப்பாக இருக்க சொல்வேன். இறுக்கமாக இருந்தால் எதுவும் மனதில் ஏறாது. வித்தியாசமான விக்குகள் வாங்கி வைத்திருக்கிறேன். அதை மாட்டிக்கொண்டு, பாடங்களை புதிய புதிய வழிகளில் நடத்தும் பொழுது, மாணவர்கள் எளிதாய் கற்றுக்கொள்கிறார்கள்.

வழக்குரைஞர் மீனாட்சி, சென்னை உயர்நீதிமன்றம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை

வழக்குரைஞர் மீனாட்சி
வழக்குரைஞர் மீனாட்சி

தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, பல மடங்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.

தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்த நீதிமன்றத்தை நாடினால், கடந்த காலத்தில் 11 பேர் கொண்ட பெஞ்ச் தனியார் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக தீர்ப்பளித்திருக்கிறது. உடனே அதைக் காண்பித்து வாதாடி, தடை வாங்கிவிடுகிறார்கள். அந்த மோசமான தீர்ப்பை உடைக்கவேண்டுமென்றால், 13 பேர் கொண்ட பெஞ்ச் தான் தீர்ப்பளிக்கவேண்டும். இப்பொழுது உள்ள தனியார்மய, உலகமய சூழலில் நடக்கிற காரியமா அது?

privatization-of-education-cards-20

தனியார் பள்ளிகளுக்கெதிராக நாம் அரசேயோ, சட்டங்களையோ, நீதிமன்றங்களையோ நம்பிப் பலனில்லை. நமக்கிருப்பது ஒரே வழிதான். அது, தனியார் பள்ளிகளைப் புறக்கணிப்பதுதான். அரசுப் பள்ளிகள் நமது வரிப்பணத்தில் உருவானவை; எனவே நாம்தான் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில்தான் அற்புதமான ஆசிரியர்கள் உள்ளனர். இன்று அரசுப் பள்ளிகளில் காணப்படும் குறைபாடுகளுக்குக் காரணம் இந்த அரசுதான். கல்விக்கென்று ஒதுக்கிய பணத்தைக் கூட முறையாகச் செலவிடாமல் அரசுப் பள்ளிகளை சீரழிவை நோக்கித் தள்ளுகிறது அரசு. எனவே, அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க அரசை நிர்ப்பந்திக்கும் வகையிலான போராட்டங்களை முன்னெடுப்பதே இன்று நம்முன் உள்ள ஒரே தீர்வு ஆகும்.

தகவல்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்

ஹைத்தி : ரொட்டி வழங்க கருப்பினப் பெண்களைச் சுரண்டும் ஐ.நா

1

லகின் வறுமை மிகுந்த நாடுகளில் ஒன்றான ஹைத்தியில் நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிப்படை வீரர்கள் ஹைத்தி பெண்களை பாலியல் ரீதியில் சுரண்டியுள்ளனர்.

ஐ.நா அமைதிப்படை
ஐ.நா அமைதிப்படை

2004-ம் ஆண்டு ஹைத்தி அதிபர் அரிஸ்டைடுக்கு எதிராக ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியது அந்நாட்டு ராணுவம். அரிஸ்டைட் ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி பரப்பின. ஆனால் அமெரிக்க ராணுவம்தான் தன்னை கடத்தியதோடு நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்தித்ததாக அரிஸ்டைட் குற்றம் சாட்டினார்.

அப்போதிலிருந்து ஐ.நா.வின் அமைதிப்படையை ஹைத்தியில் நிறுத்திய அமெரிக்கா, தனக்கான ஒரு தலையாட்டி பொம்மையை `ஜனநாயக` முறைப்படி ஏற்படுத்தி, ஜனாதிபதி, பிரதமர், மேல் சபை, கீழ் சபை என பாரளுமன்ற கொலுவை அங்கு வைத்துள்ளது.

ஹைத்தியில் 2004-ல் இருந்து ஐ.நா.வின் அமைதிப்படையைச் (MINUSTAH-United nations stabilization mission in HAITI) சேர்ந்த சீருடைப்பணியாளர்கள் 6,806 பேரும் (ராணுவம் 4,604 பேர், போலீசு 2,202 பேர்), 1,459 பிற ஊழியர்களும் ஆக 8,394 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் இந்திய ராணுவத்தின் 426 பேரும் அடக்கம். 2014-2015 ஐ.நா.வின் நிதி நிலை அறிக்கையின் படி ஹைத்தியில் அமைதிப்படைக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு $50 கோடி (சுமார் ரூ 3,198 கோடி).

ஐ.நா.வின் அமைதிப்படை என்ற உடன் ஏதோ சமணத்துறவிகள் மயிலிறகால் தரையை கூட்டிச் செல்லும் கற்பனைக் காட்சி ஏதாவது தோன்றினால் முதலில் அதை எச்சியைத் தொட்டு அழித்து விடுங்கள். நீல நிற இரும்பு தலைக்கவசமும், இயந்திரத் துப்பாக்கியும், குண்டு துளைக்கா உடையும், கையெறி குண்டுகளும் தரித்த கவச வாகனங்கள், ராணுவ டாங்கிகள் என அக்மார்க் கொலைகார ஆக்கிரமிப்பு ராணுவமே ஐ.நா.வின் அமைதிப்படை. புலிமார்க் சீகைக்காய் தூளுக்கும் புலிக்கும் இடையே என்ன சம்பந்தமோ அதே தான் ஐ.நா அமைதிப் படைக்கும் அமைதிக்கும்.

தருமி கேள்வியின் சாயலில், சேர்ந்தே இருப்பது எதுவென்றால் அன்னிய ஆக்கிரமிப்பு இராணுவங்களும், பாலியல் சுரண்டலும் எனுமளவு வரலாறு நெடுகிலுமே ஆக்கிரமிப்பு போர்களில் பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டியே வந்திருக்கின்றனர். இந்தியாவின் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், ஈழம், ஹைத்தி எங்கும் `அமைதியை` நிலை நாட்டச் சென்றவர்கள் எல்லோருமே ஆக்கிரமிப்பு அதிகாரத்தின் காரணமாகவும், துப்பாக்கியின் பலத்தாலும் பாலியல் குற்றங்களை செய்ததே வரலாறு. அதைப் போன்ற இன்னுமொரு கேடுகெட்ட ராணுவத்தின் அத்துமீறலே ஹைத்தி பெண்களின் மீதான பாலியல் சுரண்டல்.

ஹைத்தி
மேற்கிந்தியத் தீவுகளில் அமைந்துள்ள ஹைத்தி

ஹைத்தி இரண்டாம் உலகப் போருக்குப் பின் அமெரிக்க கைப்பாவை இராணுவ சர்வாதிகாரி ஃபிரான்கோயிஸ் டுவாலியரின் குடும்ப ஆட்சியில் சிக்கிச் சீரழிந்த நாடாகும். 1990-களில் போலி ஜனநாயக தேர்தலில் ஆட்சிக்கு வந்த அரிஸ்டைட் மற்றும் அவரது விசுவாசிகளால் ஊழல், மனிதஉரிமை மீறல், பஞ்சம் , படுகொலைகள் என சின்னாபின்னமாக்கப்பட்டது. அரிஸ்டைட் விரட்டியடிக்கப்பட்ட 2004 முதல் ஐ.நா அமைதிப்படையின் ‘பாதுகாப்பில்’ இருந்து வருகிறது. போதாக்குறைக்கு 2010-ம் ஆண்டில் 7 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டு ஹைத்தி பாதிக்கப்பட்டது.

ஐ.நா.வின் உள் மேற்பார்வை அலுவலகம் (office of internal oversight services) உலகின் மோசமான வாழ் நிலைகளை கொண்டுள்ள (ஐ.நா. வின் படைகள் நிலை கொண்டுள்ள 16 நாடுகள் உட்பட) 1.25 லட்சம் மக்களிடையே ஆய்வு செய்து, அவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டல் குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதன்படி 225 ஹைத்தியப் பெண்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவுக்காகவும், மருந்துக்காகவும், குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களுக்காகவும் பாலியல் சுரண்டலுக்கு உடன்பட வேண்டி இருந்ததாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கு 18 வயதிற்கும் குறைவான குழந்தைகள்.

ஐ.நா அமைதிப்படை
பான் கீ மூனுக்கோ ஐ.நா. வின் “நேம் பேட்ஜ்” மாட்டிக்கொண்டு பாலியல் குற்றத்தை செய்வதுதான் கவலை அளிகிறது

அம்மக்களின் பசியைப் பயன்படுத்திக்கொண்டு பாலியல் சுரண்டலைச் செய்யும் ரவுடிப் புத்தியுடைய கும்பல் ஜனநாயகத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் அமைக்க பாடுபடுவதாக வாய்கிழிய பேச ஏதாவது தகுதி இருக்கிறதா? பான் கீ மூனுக்கோ ஐ.நா. வின் “நேம் பேட்ஜ்” மாட்டிக்கொண்டு பாலியல் குற்றத்தை செய்வதுதான் கவலை அளிகிறது. ‘செய்வது களவாடித்தனமானாலும் அதுல ஒரு நாயம் வேணாமாய்யா’ என சகுனியாக கவலைப்படுகிறார் இவர்.

உலகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய படைகள் மூலம் அமைதியை காத்து வருவதாக படம் காட்டுகிறது, ஐ.நா. தற்சமயம் காங்கோ, லைபீரியா, தெற்கு சூடான், ஹைத்தி உட்பட 16 நாடுகளில் ஆயுதம் தாங்கிய படைகளை நிறுத்தியுள்ளது ஐ.நா. அரசியல் நிலைத்தன்மை அற்ற நாடுகளில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும், தேர்தல்களை நடத்துவதன் மூலம் அந்த நாடுகளில் ஜனநாயகத்தினை காத்துள்ளதாகவும் தனக்குத்தானே 12-க்கு 8 ஃபிளக்ஸ் வைத்துக் கொள்(ல்)கிறது.

கடந்த 15 ஆண்டுகளில் இந்த அடியாள் படையின் எண்ணிக்கை 20,000 பேரிலிருந்து ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது என்பது தற்செயல் நிகழ்வல்ல. உலகமயமாக்க சுரண்டலுக்காக ஏகாதிபத்தியங்கள் குறிப்பாக அமெரிக்காவை எதிர்த்து மக்கள் போராட்டங்களும், எழுச்சிகளும் உலகின் பல்வேறு பகுதிகளில் வெடிக்கின்றன. மூன்றாம் உலக நாடுகளின் வளத்தைச் சுரண்டவும், ஒடுக்கப்படும் நாடுகளின் மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும், `துப்பாக்கி முனையில்` வலுக்கட்டாயமாக தேர்தல்களை நடத்தி போலி ஜனநாயகத்தை நிலை நாட்டவும் போலீசு, உளவுப்படை, ராணுவம், தன்னார்வக்குழுக்கள் ஆகிய ஆட்கொல்லிகளை உள்ளிறக்கி விட்டு போராட்டத்தை மழுங்கடிக்கவும், ஜனநாயக சக்திகளை நசுக்கவும், ஒரு ஜனநாயக முகமூடி அணிந்த அமைப்பு தேவைப்படுகிறது.

ஹைத்தி நிலநடுக்கம்
2010-ம் ஆண்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஹைத்தி மக்களுக்கு உதவும் கியூப மருத்துவர்கள்.

ஏகாதிபத்திய நாடுகள் சொந்த ராணுவத்தை இறக்க முடியாத நாடுகளிலும், காசை வாங்கிக் கொண்டு காரியத்தை முடித்துக் கொடுக்கும் கமிசன் ஏஜண்ட் போல ஐ.நா சபையும் அமைதிப் படையை போன்ற அதன் துணை அமைப்புகளும் செயல்பட்டு வருகிறன. அவை நிறுவப்பட்ட காரணமும் அதுதான்.

ஐ.நா.வுக்கு என நிலையான ராணுவம் எதுவும் கிடையாது. ஏகாதிபத்திய நாடுகள் காசையும், பிற ஏழை நாடுகள் அடியாட்களையும் அமைதிப்படை பணிக்கு சப்ளை செய்கின்றன.

அமைதிப்படைக்கு மிகப்பெரிய நிதிப்பங்களிப்பு அளிக்கும் முதல் நான்கு நாடுகள் அமெரிக்கா (28.38%), ஜப்பான் (10.83%), பிரான்ஸ்(7.22%), ஜெர்மனி(7.14%). இவர்களெல்லாம் உலக அமைதியை விரும்பி, போரை வெறுத்த புத்தர்கள் அல்ல. அமைதிப்படை வீரர்கள் ஹைத்தி பெண்களுக்கு அளித்த பால் பவுடர் டப்பாவுக்கும், துண்டு ரொட்டிக்கும் பின் பாலியல் சுரண்டல் என்னும் தேவை இருந்ததைப் போல ஏகாதிபத்திய நாடுகளுக்கு வேறு வகையான சுரண்டல் நோக்கங்கள் உள்ளன.

துசா
1804-ல் ஹைத்தி விடுதலைக்கு தலைமை வகித்த துசா லூவேதியூர்

19-ம் நூற்றாண்டில் பிரான்சின் காலனிய ஆக்கிரமிப்பை முறியடித்து 1804-ம் ஆண்டு லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் முதல் குடியரசாக விடுதலை பெற்றது ஹைத்தி. முதல் உலகப் போரின் போது அமெரிக்கப் படைகள் ஹைத்தியில் இறங்கி அடுத்த 20 ஆண்டுகள் நேரடி ஆக்கிரமிப்பை தொடர்ந்தன. இப்போது ஹைத்தியில் அமைதியை நிலைநாட்ட பிரான்சும், அமெரிக்காவும் படைகள் ஏற்பாடு செய்கின்றன என்பதிலிருந்து ஐ.நா அமைதிப்படையின் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்.

அமைதிப் படை பணிக்கு அடியாள் பங்களிப்பாளர்களாக இருக்கும் நாடுகளின் பட்டியலில் பில்டிங்கும், பேஸ்மெண்ட்டும் ஒருசேர பலவீனமான நாடுகள் தான் இடம் பிடித்துள்ளன. முதல் நான்கு இடங்களில் வங்கதேசம் (9380 பேர்), பாகிஸ்தான் (8,797 பேர்), இந்தியா (8,102 பேர்), நேபாளம் (5,532பேர்) ஆகிய நாடுகள் உள்ளன. ஆனால், உலக நாட்டாமை அமெரிக்கா இந்த அமைதிப்படைக்கு அளித்திருக்கும் அடியாட்களின் எண்ணிக்கையோ வெறும் 80. கலவரம் செய்ய சங்க பரிவாரங்களுக்கும், `உலக அமைதியை` நிலை நாட்ட அமெரிக்காவுக்கு அவுட் சோர்சிங் தேவை என்பதை சொல்லவும் வேண்டுமோ?

அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய எபோலோ வைரஸ்காய்ச்சலுக்கு அனுப்பிய மருத்துவர்களின் எண்ணிக்கையோ பத்து விரல்களுக்குள் அடங்கி விடும். ஆனால், எபோலோ வைரஸ் பரவிய மக்கள் கொத்து கொத்தாக செத்து விழுந்த போது அமெரிக்கா, லைபீரியாவுக்கு 3,000 ஆயுதம் தாங்கிய அடியாட்களை அனுப்பி வைத்தது. இவர்களின் பண்பு பற்றியெரியும் வீட்டில் சுருட்டு பற்ற வைக்கும் பண்ணையார்களுடையது.

இன்று உலகின் மிக மோசமான பஞ்சத்தாலும், எல்லா வகைச் சுரண்டலாலும் அடிமைப்பட்டு கிடக்கிறது ஹைத்தி. உலக நாடுகள் அனைத்தின் காலனியாக வல்லரசுகளின் சிலந்தி வலையில் ஐ.நா போன்ற கட்டப்பஞ்சாயத்து அமைப்புகளின் அடியாள் படையை சுமந்துகொண்டு காயும் வயிற்றுடன், பஞ்சடைத்த கண்களுடனும், எல்லா வகைச் சுரண்டல்களையும் வேதனையுடன் அனுபவித்துக் கொண்டு மற்றுமொரு விடுதலைப் போருக்காக காத்திருக்கிறது.

– எட்கர்

தொடர்பான செய்திகள்

கவிதா முத்துச்சாமியின் கேள்விக்கு என்ன பதில் ?

1

சி‌ஆர்‌ஐ தொழிலாளர் வீட்டில் நேர்காணல் – 1

தான் அடிமையென்று உணராமல் இருப்பது தான் அடிமைத்தனத்தை விட மோசமானது” என்றொரு வழக்கு உண்டு. இங்கே இந்த வகையினர் பெரும்பான்மையாக உள்ளனர்.

எனினும் அடிமைத்தனத்தை உணர்ந்து சக மனிதர்க்கும் உணர்த்தி போராடத் தூண்டும் சமூகத்தின் உயிர்ப்பான மனிதர் குழாம் மிகச் சிறுபான்மையாக இருப்பினும் இரட்டிப்பு வேகத்தில் வளரக் கூடியது.

அப்படியான ஒரு அமைப்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இருப்பதும்; அதன் நிகழ்ச்சிப் போக்கில் சமரசமற்ற போராட்டங்கள் இருப்பதும் ஆச்சரியமல்ல.

அதில் ஒரு வகைமாதிரி போராட்டமாக கோவை சி‌.ஆர்‌.ஐ தொழிலாளர் போராட்டம் இருப்பதும் இதனாலேயே அரசுக்கு சவாலாக மாறி கோவை பு.ஜ.தொ.மு நிர்வாகிகளின் தொடர்ச்சியான கைதும் வாசகர்களும் தோழர்களும் அறிந்ததே.

முத்துசாமி
பத்தாம் வகுப்பு முடித்தவுடன் இந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த முத்துசாமி சி‌.ஆர்‌.ஐ யின் வளர்ச்சிக்கு உரமாக கொடுத்திருக்கும் உழைப்பு இருபது வருடங்கள்

குடும்பத்தோடு, மனைவி முதல் குழந்தைகள் ஈறாக தான் கொண்ட கொள்கையை வரிக்கச் செய்து போராட்டக் களத்துக்கு அழைத்து வருவதில் பு.ஜ.தொ.மு மற்ற தொழிற்சங்களுக்கு முன்னோடி. அப்படி களத்துக்கு வந்து கோவை மாவட்ட ஆட்சியரையும் அவருக்கு அடுத்த நிலை அதிகார மையமான தாசில்தாரின் அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்கிய பெண் தொழிலாளிகளின் வாழ்க்கையை நேரடியாக அறிந்து கொள்ளச் சென்றோம்.

முதலில் சி‌.ஆர்‌.ஐ தோழர் முத்துசாமி வீடு. பத்தாம் வகுப்பு முடித்தவுடன் இந்நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த முத்துசாமி சி‌.ஆர்‌.ஐ யின் வளர்ச்சிக்கு உரமாக கொடுத்திருக்கும் உழைப்பு இருபது வருடங்கள். அவரது மனைவியின் பெயர் கவிதா.

இனி கவிதா முத்துசாமியின் வார்த்தைகளில்…

நீங்க தாசில்தார்கிட்ட பேசும் போது என்ன தீர்வு சொன்னாரு?

“22-ம் தேதி பேச்சு வார்த்தைல பேசிக்கலாம்”னு சொன்னாரு.

அதுக்கு, “நாங்க இங்கிருந்து ஒரு முடிவு தெரியாம போக மாட்டோம். வாடகை கொடுக்க முடியல. குழந்தைங்களோட வந்திருக்கோம். சாப்பாட்டுக்கே வழியில்லாம சிரமப்பட்டுட்டு இருக்கறோம். 90 நாளாச்சு அதுக்கான முடிவு சொல்லுங்க. நீங்க வெளியே இருந்து பணம் வாங்கிட்டு இந்த மாதிரி பண்ணுறீங்களா?” அப்டின்னு கேட்டேன்.

“இருங்கம்மா, யாராவது ரெண்டு பேர் மட்டும் பேசுங்க. இத்தான பேரு பேசுனா எப்பிடி பேசறது. மெதுவா பேசுங்கம்மா…” -னு சொல்றாரு.

“26-ம் தேதி கதவை சார்த்தீட்டாங்க… சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் சோதி வந்தாரு. இன்ஸ்பெக்டர் ஆஃப் பேக்டரி ல இருந்து வந்தாங்க. இவங்க, எல்லாத்துக்கும் ஒரே பதில் ‘மேலிடத்துல இருந்து உத்தரவு, நாங்க என்ன செய்ய முடியும்’னு சொல்றாங்க.

சரி, பதினைந்து நாளுக்கு அப்புறமாவது ஏதாவது முடிவு தெரியும்னு போனோம். அப்பவும் இதே பதில் தான்.நாங்க வாடகை வீட்டுல இருக்கறம். மூவாயிரம் வாடகை. மூணு மாசமா வாடக கொடுக்க முடியல. எங்களுக்கு பதில் சொல்லுங்க” அப்டின்னு சொன்னா,

“22ஆம் தேதி பேசிக்கலாம்மா. முதலாளியே வருவாரு”-னு சொன்னாங்க.

திருமதி கவிதா முத்துசாமி
அடுத்தவங்க வயித்துல அடிச்சிட்டு நீ என்னத்த போயி சுப காரியம் பண்ற, உனக்காகத்தானே உழைச்சு கொடுத்துருக்கோம். நீ கல்யாணத்துக்கு 100 ரூவா செலவு பண்றீன்னா… தொழிலாளிகளுக்கு 10 ரூவா செய்யி

இந்தப் போராட்டம் 90 நாட்களா நடக்குது.. வருமானம் இல்லாம குடும்பத்த எப்பிடி சமாளிக்கறீங்க..?

நான் ஒரு ஆள் வேலைக்கு போறங்க. 5000 ரூவா வருது சம்பளம். அதிலயும் லீவு போட்டுட்டா 4000 தான் கெடைக்கும். அத வெச்சுதான் இருக்கறத வெச்சு ஓட்டிக்கிட்டு இருக்கோம்.

இந்தப் போராட்டத்தை பற்றி பக்கத்து வீடுகளில் உங்கள் சொந்தக்காரங்களில் என்ன சொல்றாங்க..?

போராடுங்க. கண்டிப்பா கிடைக்கும் அப்டின்னு ஒரு தரப்பு வாதம். இன்னொரு பக்கத்துல, இப்பிடியே போய்ட்ருந்தா என்ன பண்றது. சாப்பாட்டுக்குக் கூட வழியில்ல. வாடகை வேற தரணும்னு.

அனைத்து வழிகளில் போராடியும் ஏ‌.சி‌.எல், டி‌.சி‌.எல் முதல் கலெக்டர் வரையிலானவர்கள் தொழிலாளர்களுக்கு எதிரான நிலையையே எடுக்கிறார்கள். காவல் துறையும் இவர்களுக்கு சாதகமாகவே இருக்கிறது. இதைப் பற்றி..?

பணம் தான் மெயின் காரணமா தெரியுது. நம்ம கிட்ட அந்த இது இல்ல, தேவையுமில்ல. மக்கள் தான் நமக்காக போராடணும்.

வீட்டில இருக்கற எல்லா பொம்பளைங்களும் வரணும். எல்லாருமே போராடுனாதா ஜெயிக்க முடியும். எல்லா கட்சி மேலயும் வெறுப்பாதா இருக்கு. நாமெல்லாம் ஓட்டுப் போட்டுதான் ஜெயிக்க வைக்கறோம். எந்த ஆட்சி வந்தாலும் நமக்கு எதும் கெடையாது.

கஷ்டப்பட்டாதான் நமக்கு கூலின்னு ஆயிபோச்சு. கஷ்டப்பட்ட கூலியே கிடைக்கலேங்கற போது நாம என்னதான் பண்றது.

உங்க கணவர் சிறைக்கு போனது பற்றி உங்க கருத்து..?

தப்பான விசயத்துக்காக போகல. நல்லதுக்காக தான் போயிருக்காரு. இதுனால நாள பின்ன எதுவும் பாதிப்பு வரக்கூடாதுன்னு மட்டும் நினைக்கறேன்.

இவரு சிறைக்கு போனது பற்றி சொந்தக்காரங்க பக்கத்து வீட்டுல லாம் என்ன சொல்லுறாங்க…?

யாரும் எதுவும் சொல்லல. நல்லபடியா வந்துருவாரு. அப்டின்னு மட்டும் தைரியம் சொன்னாங்க. அவரோட அம்மா மட்டும் அழுதாங்க. “இவனுக்கு எதுக்கு அந்த வேலை, எழுதிக் கொடுத்துட்டு வந்துற வேண்டியது தானே” அப்டின்னு.

அப்புறம் பையனும் பொண்ணும்தான் ஒரே அழுக்காச்சு. பொண்ணுதான், “அப்பாவுக்கு ஏதாவது ஆயிருமா. அடிச்சிருவாங்களா” அப்டின்னு ஒரே அழுகை.

ஒரு வேளை 22-ம் தேதி பேச்சுவார்த்தைல முடிவு எதிர்மறையா வந்தா அடுத்த கட்டமா என்ன பண்ணலாம்..?

கதவை உடைக்கலாம்.

நேர்மையான வழில நம்ம போறோம். அதுக்கும் அவன் வல்லீனா, அப்புறம் ஏதாவது பண்ணிதான் ஆகணும். கதவ உடச்சு பார்ப்போம். அதுக்கு மேல அவனுக என்ன பண்ண முடியுமோ பண்ணட்டும்.

சங்கத்த பற்றி என்ன நினைக்கறீங்க..?

சங்கம் நல்ல சங்கம்தான். ஆனா இவரு வெளியே வர லேட் ஆகும் போது கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்துச்சு. ஏன் லேட் ஆகுதுன்னு குழப்பமா இருந்துச்சு. அப்புறம் ஒண்ணும் இல்லை.

இந்தப் போராட்டத்துக்காக உங்க கணவர் மறுபடியும் ஜெயிலுக்கு போறத பற்றி என்ன நினைக்கறீங்க.?

நீங்கல்லாம் இருக்கீங்க, எப்டியும் வெளியே கொண்டு வந்துருவீங்க… இனிமே நாங்களும் வரோம். அவங்க ஒரு பக்கம் நாங்க ஒரு பக்கம் இருக்க எங்களுக்கு விருப்பம் இல்லை.

நான் ஆரம்பத்துல இருந்து ஆதரவு தான். குமாரவேல் அண்ணா கிட்ட கூட சொன்னேன். “அண்ணா, போராடுங்க தேவைப்பட்டா நாங்களும் வரோம். ஏதாவது முடிவு கிடைக்கட்டும். நம்ம தப்பு செயல. நம்ம தப்பு செய்யாத போது எதுக்கு அடிமையா இருக்கணும்”.

முதலாளி கல்யாணத்துல வந்து நாம இப்பிடி பாடை கட்டுவோம்னு சொன்னது சரியா..?

அவன் அந்த அளவுக்கு பண்ணியிருக்கான், நம்மளுக்கு அந்த வேதனை, அதுனால அப்பிடி பண்ணிருக்கோம்.

இல்ல, நாம ஒரு சுப காரிய

அடுத்தவங்க வயித்துல அடிச்சிட்டு நீ என்னத்த போயி சுப காரியம் பண்ற, உனக்காகத்தானே உழைச்சு கொடுத்துருக்கோம். நீ கல்யாணத்துக்கு 100 ரூவா செலவு பண்றீன்னா… தொழிலாளிகளுக்கு 10 ரூவா செய்யி. அதுக்கே இப்பிடி பண்ணும் போது நாம என்ன செய்ய முடியும்.

-தொடரும்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

மக்கள் ஜனநாயகமா, கோடிசுவரர்களின் ஆட்சியா ?

1

இந்திய ஜனநாயகம் போலி ஜனநாயகமாக மட்டுமல்ல, ஒரு பாசிச அரசாகவும் மாறிவருகிறது என்பதை தரவுகளோடும், ஆய்வுகளோடும் நிறுவும்,

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!
கட்டுரையின் 2-வது பகுதி.

ஜனநாயகத்திலிருந்து மக்களை விலக்கி வைக்கும் கோடீசுவரர்களின் ஆட்சியாக

ந்தாவதாக, இன்று எம்.எல்.ஏ. ஆக வேண்டுமென்றால் கூட, குறைந்தபட்ச தகுதி கோடீசுவரனாக இருக்க வேண்டும்; சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நிற்க குறைந்தது 5 கோடி ரூபாய் செலவழிக்கத் தயாராக இருக்க வேண்டும். எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் இதை ஒரு விதியாகவே ஆக்கி விட்டன. அமெரிக்க மேல்நிலை வல்லரசு தலைமையிலான ஏகாதிபத்திய நலன்களுக்கு சேவை செய்வது, பருத்து கொழுத்த பன்னாட்டு நிறுவனங்களும் தரகு அதிகார வர்க்க முதலாளிகளும் நமது நாட்டின் வளங்களையும் அரசு சொத்துக்களையும் மக்களின் உழைப்புச் சக்தியையும் ஒட்டச் சுரண்டுவதற்கான முகவர்களாகச் செயல்படுவது, இந்தச் சேவைக்காக கார்ப்பரேட் முதலாளிகள் அடிக்கும் பகற்கொள்ளையில் ஒரு பங்கை பெற்றுக் கொள்வது – என்ற திருப்பணியைச் செய்வதற்காக யார் ஆட்சியில் இருப்பது என்ற ஒரேயொரு நோக்கத்திற்காக மட்டுமே எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளும் செயல்படுகின்றன. மற்றபடி, வேறு எந்த கொள்கையோ, இலட்சியமோ, நாட்டுப்பற்றோ இவர்களிடம் இல்லை.

கல்விக் கொள்ளையர்களும், தொழில் அதிபர்களும்
கல்விக் கொள்ளையர்களும், தொழில் அதிபர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆக்கப்படும் அவலம் : (இடமிருந்து) தம்பிதுரை (அ.தி.மு.க), ஜெகத்ரட்சகன் (தி.மு.க), நிதின் கட்காரி (பா.ஜ.க), நவீன் ஜிண்டால் (காங்கிரசு)

பி.ஜே.பி., ஜெயலலிதாவின் கட்சி போன்ற சில கட்சிகள் பார்ப்பனியத்தை அரியணையில் ஏற்றுவது என்ற நோக்கோடு செயல்பட்டாலும், மேலே சொன்னவாறு கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிப்பதற்கோ, அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு சேவை செய்வதிலோ இவர்களுக்கும் பிற தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடு கிடையாது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) லிபரேசன், சி.பி.ஐ., சி.பி.எம். போன்ற ’இடதுசாரி’ கட்சிகள் அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கும் எதிராக எடுக்கும் நிலைப்பாடுகள் சந்தர்ப்பவாதமாக இருக்கும் அதேவேளையில், இக்கட்சிகளின் மேல்மட்ட தலைவர்கள் உட்பட அடிமட்ட ஊழியர்கள் வரை பலர் இலஞ்ச இலாவண்யம், மோசடிகளில் ஈடுபடுபவர்களாகவும் இருக்கின்றனர். கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு இவர்களின் தலைமையிலான அரசுகளே சேவை செய்பவையாகவும் இருக்கின்றன; மேலும், இவர்கள் ஏதாவது ஒரு ஆளும் வர்க்க / போனபார்டிஸ்ட், காரியவாத, பிழைப்புவாத கட்சிகளின் கூட்டணியில் மாறி மாறி சந்தர்ப்பவாதமாகப் பங்கேற்கின்றனர். இவர்கள் சேர்ந்துள்ள கூட்டணி பதவிக்கு வந்து, அந்த அரசுகள் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கான சாதனமாகச் செயல்படும்போதும் கூட்டணியிலிருந்து விலகாமல், மென்மையான விமர்சனங்களை வைத்து விட்டு தொடர்ந்து ஆதரித்து, தங்களால் முடிந்தவரை அரசு சன்மானங்களைப் பெற்றுக் கொள்வதிலும் பதவி சுகம் காண்பதிலும் திருப்தி கொள்கிறார்கள். இவ்வாறு இவர்களும் ஆளும் வர்க்க / பிழைப்புவாத கட்சிகளின், கோடீசுவரர்களின் கையாட்களாக செயல்படுகின்றனர்.

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!கோடீசுவரர்கள்தான் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்; நிற்க முடியும் என்பதோடு, தனியார்மய தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கம் மிகவும் கருணையுடன் பேசும் தருணங்களில் கூட ’அனைவரையும் தழுவிய வளர்ச்சி’ (Inclusive growth) என்று கூறுகிறதேயன்றி பணக்காரர்களிடமிருந்து எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தல் என்பதையோ, நலிந்த பிரிவினருக்குச் சலுகைகள் வழங்கி கைதூக்கி விடுதல் என்பதையோ பேசுவதில்லை. இத்தகைய ‘கொள்கை வழிபட்ட அரசியல்’, அனைத்தையும் ‘ஜனநாயகத்திலிருந்து’ துடைத்தெறிந்து விட்டது. இதன்மூலம் வேறுபட்ட அரசியல் கொள்கைகளுக்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளின் பின்னால் மக்கள் அணிதிரளுதல், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல், அதனடிப்படையில் வாக்களித்தல் என்பதற்கான சாத்தியத்தையே நாடாளுமன்ற அரசியல் அரங்கிலிருந்து புதிய தாராளவாதம் எனப்படும் மறுகாலனியாதிக்கப் போக்கு நீக்கி வருகின்றது.

தேர்தல் லஞ்சம்
கொள்கைகளைப் பேசி ஓட்டுக்களை பெறுவதற்குப் பதிலாக பணத்தையும், பொருட்களையும் இலஞ்சமாகக் கொடுத்து ஓட்டுக்களைப் பொறுக்கும் கிரிமினல் வேலையாக முதலாளித்துவ தேர்தல் முறை மாறி விட்டது.

‘சிறந்த அரசாளுமை’ (good governance) என்பதே எல்லா அரசுகளின் நோக்கமாக இருக்க வேண்டுமெனவும் இப்போக்கு வரையறுத்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களால் முன்தள்ளப்படும் புதிய தாராளவாத வகையிலான கட்டுமான சீர்திருத்தங்களைக் கறாராகவும் ஈவு இரக்கமின்றியும் அமுல்படுத்துவதையே சிறந்த அரசாளுமை என்று உலக முதலாளித்துவம் போற்றுகிறது. மேலும் ‘சுயமாக’ சுறுசுறுப்பாக இயங்கும் அரசு’ (Proactive state) என்பதையும் மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்ப சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவதில் ’தோல்வியுற்ற அரசாக’ (failed state) இருக்கக்கூடாது என்பதையும் முன்தள்ளுகிறது.

சிறந்த அரசாளுமை, நல்லாட்சி போன்ற முழக்கங்களையே இன்று எல்லா ஓட்டுக் கட்சிகளும் வரித்துக் கொண்டு விட்டன. இதற்காக உலகவங்கி போன்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் தமது அரசுக்கு அளிக்கும் சான்றிதழையும் பெருமையுடன் விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. மேல்நிலை வல்லரசுகளால் திணிக்கப்பட்ட இந்த கட்டுமான சீர்திருத்தங்களின் எல்லைக்குள் நின்றுதான் நாடாளுமன்ற அரசியலில் முதலாளித்துவக் கட்சிகள் தமக்குள் மோதிக் கொள்கின்றன. இவைகளுக்கிடையில் வேறுபாடுகளே இல்லாத நிலைமையில், தேர்தல் போட்டியும் மாறுபட்ட கொள்கைகளுக்கு இடையிலான மோதலாக இல்லை. மாறாக, தனிநபர் பற்றிய குணாதிசயங்கள், திறமைகள், அவர்கள் செய்த இலஞ்சம் மற்றும் பிற முறைகேடுகள், மோசடிகள், சேர்த்த சொத்துக்கள் ஆகியவற்றை முதன்மைப்படுத்துகின்ற, நபர்களுக்கிடையிலான அதிகாரப் போட்டியாகவே தேர்தல்கள் இருக்கின்றன.

கொள்கை வேறுபாடுகள் அற்றுப் போனதால் அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் சாபக்கேடுகளான சாதி, மதவெறி ஆகியவற்றைத் தூண்டி விட்டும், இலவசத் திட்டங்களை அறிவித்தும், நேரடியாக ஓட்டுகளுக்கு விலை பேசியும்தான் ஓட்டுகள் அறுவடை செய்யப்படுகின்றன. அரசு அதிகாரத்திலிருந்து சொல்லிக் கொள்ளப்படுகிற ஜனநாயகத்தை வெளியேற்றி விட்டு, முதலாளித்துவ வர்க்கம் அதனைக் கைப்பற்றியிருப்பது போலவே, எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளிலும் உட்கட்சி ஜனநாயகம் ஒழிந்து ஒரு கும்பல் அல்லது குடும்பத்தின் அதிகாரமாகச் சீரழிந்திருக்கிறது. அரசாளுமையிலிருந்து அரசியலை விலக்கிவிட்ட இந்த ஜனநாயகத்தில்தான் ‘முறையாக’ தேர்தல் நடத்தப்பட்டு, பல்வேறு கட்சிகள் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வந்திருக்கின்றன.

தேர்தல் கருப்புப் பணம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்பொழுது ஓட்டுக்களைப் பெறுவதற்காகப் பல்வேறு ஓட்டுக்கட்சிகளின் வேட்பாளர்கள் பதுக்கி வைத்திருந்த 195 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக அறிவித்தது, தேர்தல் கமிசன். தேர்தல் என்பது கருப்புப் பணத் திருவிழா என்பதன் சாட்சியம் இது.

இதற்கேற்ப தேர்தல் நடத்தை முறைகளையே கோடீசுவரர்களுக்கு மட்டும் உரித்தான ஒன்றாக, பரந்துபட்ட உழைக்கும் மக்களை அதிலிருந்து விலக்கி வைக்கின்ற நடத்தை முறைகளாக ஆளும் வர்க்கங்களே தேர்தல் கமிஷன்கள் மூலம் அமல் நடத்துகின்றன. சேஷன் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையாளராக இருந்த காலத்திலிருந்து இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை சேஷனின் விசேட திறமை, தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற அவரது இலட்சியம், அதாவது ஒரு தனிநபரின் முன்முயற்சி என்ற கோணத்தில் பார்க்கக் கூடாது. மாறாக, ஆளும் வர்க்கம் மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கேற்ப அரசு, தேர்தல் முறை ஆகியவற்றில் கொண்டு வந்துள்ள பொது மாற்றங்கள் என்று இதைப் பார்க்க வேண்டும்.

இன்னொரு பக்கம், முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தில் சீரழிவும், ஊழல்களும், ரவுடித்தனமும், அராஜகங்களும், முறைகேடுகளும், மோசடிகளும், சந்தர்ப்பவாதங்களும், பிழைப்புவாதங்களும் மலிந்து நாறுவது என்பது அதிகரித்துக் கொண்டே போகிறது. இத்துடன் மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்பட்டதைத் தொடர்ந்து எல்லா சமூக மதிப்பீடுகளும் அறநெறிகளும் தூக்கியெறியப்பட்டு வருகின்றன. இதன் தாக்கம் ஏற்கெனவே நாறிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்திலும் ஏற்பட்டு, தேர்தல் ஜனநாயக நடைமுறைகள் மீதும், முதலாளித்துவ ஜனநாயகத்தின் மீதும் மக்களிடையே வெறுப்பும் அவநம்பிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, இந்த சமூக அமைப்பு மற்றும் முதலாளித்துவ தேர்தல் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையிழந்து புரட்சிகர இயக்கங்களின் பக்கம் மக்கள் திரும்புவதைத் தடுக்கும் நோக்கிலும் ஆளும் வர்க்கங்கள் தேர்தல் கமிசனைக் கொண்டு கடுமையான தேர்தல் நடத்தை விதிகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றன.

அரசு : அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!ஆனால், தேர்தல் கமிஷனின் நடத்தை விதிகள் எந்த விதத்திலும் மக்களுக்குப் பணம் கொடுத்தல், பிரியாணி, பீர் விருந்துகள், அன்பளிப்புகளை வழங்குதல், ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை வாரி வழங்குவோம் என்று கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அறிவித்து மக்களை ஈர்த்தல், சாதிய உணர்வுகளைத் தூண்டியும் ரவுடித்தனத்தில் ஈடுபட்டும் ஓட்டுப் பொறுக்குதல் போன்ற நடைமுறைகளைத் தடுக்கவில்லை; மாறாக இவை கனஜோராகவே நடந்து கொண்டிருக்கின்றன, அதிகரித்து வருகின்றன என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலும், குறிப்பாக திருமங்கலம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் நிரூபித்துள்ளன. சில கட்சி வேட்பாளர்களிடமிருந்து பணத்தைப் பறிமுதல் செய்வதும், தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக அமைச்சர்கள் உட்பட பலபேர் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளைப் பதிவு செய்வதும், பிறகு தேர்தல் முடிந்தவுடன் இந்த வழக்குகளை அப்படியே விட்டுவிடுவதும்தான் நடைமுறையாக உள்ளது. யாரும் தண்டிக்கப்படுவதில்லை. பதவியும் பறிக்கப்படுவதில்லை.

முன்பெல்லாம் தேர்தல் என்பது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லா உழைக்கும் மக்களும் கலந்து கொள்ளும் பிரச்சார முறைகளைக் கொண்டதாக, அவர்களால் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார முறைகள் எல்லாம் அனுமதிக்கப்பட்டு, இரவு பகலாக ஒரு இரண்டு மாத காலத்திற்கு திருவிழா போல நடைபெறும்; கட்சித் தொண்டர்கள் அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்; ஆனால், மறுகாலனியாதிக்க கொள்கைகளுக்கேற்ப இன்று தேர்தல் என்பது கோடீசுவரர்கள் மட்டுமே பங்கேற்கக்கூடிய, அவர்களால் மேற்கொள்ளக்கூடிய பிரச்சார நடைமுறைகள் மட்டுமே கொண்டதாக மாற்றப்பட்டு விட்டது. தொலைக்காட்சி நிறுவனம் நடத்த, செய்திப் பத்திரிகைகள் நடத்த அல்லது அவைகளில் விளம்பரம் செய்ய, கார்களில் பவனி வர ஆற்றல் கொண்டவர்கள் மட்டுமே, அதாவது கோடீசுவர வேட்பாளர்கள் மட்டுமே பங்கேற்கும் வண்ணம் தேர்தல் முறைகள் மாற்றப்பட்டு விட்டன.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள்
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் என்பது குத்தாட்ட ஆபாச வக்கிரமாக மாறிப் போனது.

கொள்கை, கோட்பாடு என்று எந்த வெங்காயமுமின்றி ஓட்டுக்கட்சிகள் அனைத்தும பிழைப்புவாதக் கட்சிகளாக மாறிவிட்ட நிலையில், பிரியாணியுடன் நாள் ஒன்றுக்கு ரூ 200 கொடுத்தால்தான் வேலை செய்யும் ‘தொண்டர்களை’க் கொண்டதாகவே இவைகள் மாறிவிட்டன. பணப்பட்டுவாடா உட்பட பல முறைகேடுகளை ஒழித்து நேர்மையான தேர்தலை நடத்துவது என்ற முகாந்திரத்தில் 85 விழுக்காடு உழைக்கும் மக்கள் தேர்தலில் பங்கேற்பது உட்பட பிரச்சாரத்தில் ஈடுபடுவது வரை தேர்தல் நடைமுறையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். பலாத்காரமாகத் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஒரே வேலை வாக்களிப்பது மட்டுமே. அவ்வளவுதான்! அதுவும் தேர்தல் நடத்துவதற்கான காலம் குறுக்கப்பட்டு அவசரம் அவசரமாக நடத்தப்படுகின்றது. பத்து அல்லது 15 நாள் பிரச்சாரத்தில் தேர்தல் முடிந்து விடுகின்றது.

எப்படியாவது ஆட்சிக்கு வந்து கொள்ளையடிக்கவேண்டும் என்ற வெறி; ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் நாலு சீட்டாவது ஜெயித்தால்தான் கட்சியையே தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லாவிட்டால் காக்காய்கள் கூட்டத்தில் கல்லெறிந்தது போல கட்சி நிர்வாகிகள் ஓடிப் போய் விடுவார்கள் என்ற பீதி ஆகிய ‘உன்னத நோக்கங்களே’ இன்று கட்சிகளை வழிநடத்துகின்றன. இந்த நோக்கங்களை ஈடேற்றிக் கொள்ள எந்தவிதமான சந்தர்ப்பவாதத்திற்கும் அவமானத்திற்கும் அவமதிப்புகளுக்கும் இழிவுபடுத்தலுக்கும் எல்லாவிதமான பிழைப்புவாதங்கள், தகிடுதத்தங்களைச் செய்யவும் எல்லா தேசிய, பிராந்திய, சாதியக் கட்சிகளும் கூட்டணிகள் அமைத்துக் கொள்கின்றன. கொள்கை, இலட்சியம், தேசப்பற்று, சமூகப்பற்று போன்று எதுவும், எந்த மதிப்பீடும் அறநெறியும் இக்கட்சிகளிடம் இல்லை.

தேர்தலுக்கு முன்பு அமைக்கப்படும் கூட்டணிகள் தேர்தல் முடிந்தவுடன் கலைந்து புதிய கூட்டணிகள் அமையும்; தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணிகள் மாறும். அதேவேளையில், கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு சேவை செய்வதிலும் தங்களது தலைமையிலான அரசுகளை அதற்கான கருவியாகப் பயன்படுத்துவதிலும், அதன்மூலம் எல்லாவிதமான முறைகளிலும் தங்களுக்கான சொத்துக்களைக் குவித்துக் கொள்வதிலும் இவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். ஆட்சி நடத்துகின்ற, அரசை இயக்குகின்ற கட்சிகளின் தன்மையில் இப்படிப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளன.

இன்னுமொரு மாற்றம் என்னவென்றால், எல்லா முதலாளித்துவ தேர்தல் அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது பினாமிகளின் (சாதிக் பாட்சா, பல்வா போன்ற பினாமிகளின்) பேரில் சுயநிதிக் கல்லூரிகள் நடத்துகிறார்கள்; ரியல் எஸ்டேட் தொழிலில் கோடிகோடியாகச் சொத்து சேர்க்கிறார்கள்; மணல் திருட்டு நடத்திக் கொள்ளையடிக்கிறார்கள்; கார்ப்பரேட் மருத்துவமனைகளில் பங்குதாரர்களாக உள்ளனர். கனிம வள சுரங்கத் தொழில் நடத்திக் கொள்ளையடிக்கிறார்கள். சொந்த மாநிலத்தில் தொழில் நடத்தினால் தெரிந்து விடும் என்பதால் வெளிமாநிலங்களில் தொழில் நடத்துகிறார்கள். இவ்வாறு அரசியல்வாதிகள் முதலாளிகளாக மாறியுள்ளனர்.

இதன் மறுபக்கமாக முதலாளிகள், குறிப்பாக, அவர்களின் இளைய வாரிசுகள் இன்று அரசியல்வாதிகளாக மாறியுள்ளனர். முதலாளி வர்க்கத்திற்காக அவர்களின் அரசியல் பிரதிநிதிகள் ஆள்வது மாறி, முதலாளி வர்க்கத்தினரே இன்று நேரடியாக ஆட்சி செலுத்துவதும், முதலாளிகள், நிலப்பிரபுக்களால் சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்டு வரும் ஏழைகள், தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோரின் மேம்பாட்டிற்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் ‘சோசலிசம்’, ‘சமூக நீதி’ போன்ற கொள்கைகளின் அடிப்படையில் வறுமை ஒழிப்பு, வேலையின்மை ஒழிப்பு போன்ற திட்டங்களைப் போட்டு அரசியல் சேவை செய்பவர்கள், தொண்டாற்றுபவர்கள் என்ற நிலைமாறி அவர்களே முதலாளிகளாக மாறி நேரடியாக சுரண்டுபவர்களாகவும் ஒடுக்குபவர்களாகவும் மாறிவிட்டனர்.

(தொடரும்)
____________________________
புதிய ஜனநாயகம், ஜூன் 2015
____________________________

கட்டுரையின் முதல் பகுதி : அரசு : அனைவருக்கும் பொதுவானதோ ஜனநாயகமானதோ அல்ல !

ரிச்சர்டு படிக்கணும்னா பவுலா வேல பாக்கணும்

13

ரிச்சர்டும் பவுலாவும் தட்டில வச்சி – படக்கதை

கொடுத்து வச்சவங்க பற்றிய ஒரு சிறுசரிதை
1-0
1-1
1-2
2-0
2-1
2-2
3-0 3-1
3-2
4-0
4-1
4-2

ஆங்கில மூலம் : The Pencilsword: On a plate
தமிழ் மொழிபெயர்ப்பு : செழியன்
தமிழ் வசனங்கள் சேர்ப்பு : ஓவியர் முகிலன்

இந்தியாவில் மாடுகள் : புனிதமா பொருளாதாரமா?

9

cowந்திய விவசாயிகளின் மாட்டுப் பிரச்சனை என்பது இந்து மதவாதிகள் கூறுவதைப் போல கோமாதா என்ற புனிதப் பிரச்சனையல்ல, மாட்டைத் தெய்வமென்பதற்காக கோடிக்கணக்கான மக்கள் வளர்க்கவில்லை. விவசாய வேலைகளுக்காகவும், பால் பொருள் சந்தைக்காகவும் வளர்க்கப்படும் மாடுகள் கால்நடைப் பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாகும்.

உலகிலேயே இந்தியாவில்தான் கால்நடைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். மாடு, ஆடு, குதிரை, கழுதை, ஒட்டகம் போன்ற கால்நடைகளின் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டுகிறது. அதில் அனைத்து வகை மாடுகள் மட்டும் 28.5 கோடிக்கு அதிகமாகும். இதில் 8.3 கோடி உழவு மாடுகள் 40 கோடி ஏக்கர் நிலத்தை உழுவதற்கும், விவசாயப் பொருட்களின் போக்குவரத்திற்கும் பயன்படுகின்றன. இவற்றில் பெரும்பங்கு காளைகள், சிறுபங்கு எருமைக் கடாக்கள்.

10.2 கோடி கன்றுகள் போக மீதமிருக்கும் கறவை மாடுகள் 10 கோடி. எண்ணிக்கையை வைத்துப் பார்த்தால் எருமைகள் குறைவாக இருந்தாலும் மொத்த பால் உற்பத்தியில் எருமைப்பால்தான் அதிகம். இந்தியாவின் தற்போதைய விவசாய, பால் தேவைக்கு மிக அதிகமாகவே மாடுகள் இருக்கின்றன. முக்கியமாக அறுபது சதவீத மாடுகளுக்குத்தான் தீவனம் அளிக்க முடியும் என்ற நிலையும் இருக்கின்றது.

30 ஆண்டுகளாக விவசாய வேலைகளுக்குப் பயன்படும் டிராக்டர்கள், பம்புசெட்டுகள், டெம்போ-லாரிகளின் எண்ணிக்கை பிரம்மாண்டமாக அதிகரித்து விட்ட நிலையில், இவ்வேலையைச் செய்து வந்த எருது, காளைகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது. அதேசமயம், நகர்ப்புற பால் சந்தையின் பெருக்கம், கலப்பின மாடுகளின் உருவாக்கம், பாலை பதப்படுத்தி விற்கும் முன்னேறிய தொழில்நுட்பம் ஆகிய காரணங்களால் கறவை மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்திருகின்றது. இருப்பினும், இந்தியாவின் மாடு வளர்ப்பு என்பது பெரும்பான்மையாக சிறு உற்பத்தியாளர்களின் தொழிலாக இருக்கிறதேயொழிய பண்ணை சார்ந்த பெரு உற்பத்தியாக இல்லை. அதிகமும் சிறு விவசாயிகளால் வளர்க்கப்படும் மாடுகள் விவசாயத்தின் அழிவையொட்டி பராமரிக்க இயலாத நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

ஒரு விவசாயி தன் பொருளாதார வாழ்க்கைக்காக மாடு வளர்க்கிறாரேயன்றி ‘சொர்க்கம் கிடைக்கும், புண்ணியம் வரும்’ என்பதற்காக அல்ல. பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கி ஆட்குறைப்பு செய்து வரும் உலகமயமாக்கம், விவசாயத்தையும் தனது இலாப வேட்டைக்கேற்ப அழித்தும் மாற்றியும் வருகிறது. இறால் பண்ணைகளினால் கூலி விவசாயிகள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான காளைகளும் வேலையிழந்திருக்கின்றன.

எனவே, சினை பிடிக்காத பசு மாட்டையும், வயதான, வேலையிழந்த காளைகளையும் ஒரு விவசாயியினால் பராமரிக்கவே முடியாது. வருமானமற்ற நிலையில், வருமானம் தராத மாடுகளுக்குச் செலவு செய்து தீனி போடுவது என்பது அவரால் முடியவே முடியாத காரியம். அதனால்தான் உதவாத மாடுகளை வெட்டுக்கு விற்று, உதவுகின்ற மாடுகளையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றப் போராடுகிறார் விவசாயி.

உலக மாட்டு இருப்பில் முதலிடம் பெற்றிருக்கின்ற இந்தியாதான் உதவாக்கரை மாடுகளை வைத்திருப்பதிலும் முதலிடம் வகிக்கின்றது. எனவே, இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் வெட்டப்படும் மாடுகள் அளிக்கும் வருவாய்தான் எஞ்சியிருக்கும் கால்நடைச் செல்வத்தைக் காப்பாற்றுவதற்கே ஒரு மறைமுகக் காரணமாக இருக்கிறது.

இந்தி பேசும் மாநிலங்கள் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஏற்கனவே பசுவதைத் தடைச்சட்டம் அமலில் இருப்பதால் வெட்டுக்குச் செல்லும் மாடுகள் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்கின்றன. எப்படியாவது விற்றாக வேண்டும் என்ற விவசாயியின் நிர்ப்பந்தம் இந்த இடையூறுகளைக் கடந்து வியாபாரத்தையும், சந்தையையும் உருவாக்கியிருக்கின்றது.

மேலை நாடுகளில் கால்நடைப் பொருளாதாரத்தில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாட்டுப் பண்ணைகள் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன. இது இறைச்சி, மக்களின் ஆரோக்கியம், மருந்துகள், தோல் பொருட்கள் என்று பன்முகப் பயன்பாடு கொண்டதாகவும், பொருளாதார ரீதியில் பெரும் வருவாய் ஈட்டும் முக்கியத் தொழிலாகவும் இருக்கின்றது. இந்தியாவில் இப்படி ஒரு பெரும் தொழில் உருவாகமல் தடுத்த ‘புண்ணியம்’ காங்கிரசு மற்றும் இந்துமதவெறிக் கும்பலுக்கே சேரும். அதனால்தான் உதவாத மாடுகளைக் கூட வெட்டுவதற்கு உள்ள இடர்கள் விவசாயிகளையும், வியாபாரிகளையும் சினமடைய வைக்கிறது. விற்பனை செய்ய முடியாததால் பசுமாடுகள் கைவிடப்படுகின்றன. லக்னோ நகரில் மட்டும் நாளொன்றுக்கு 100 மாடுகள் பாலிதீன் பைகளைத் தின்று சாகின்றன.

இந்தி பேசும் மாநில மாடுகள் இராஜஸ்தான் வழியாக பாகிஸ்தானுக்கும், பீகார் வழியாக மேற்கு வங்கத்திற்கும் – வங்க தேசத்திற்கும், தென்னிந்திய மாடுகள் இறைச்சிக்காக கேரளத்திற்கும், தோலுக்காக தமிழகத்திற்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இதில் அரசு ஏற்படுத்தியிருக்கும் தடைகள், தேவையற்ற போக்குவரத்துச் செலவு, உழைப்பு விரயம் மிக அதிகம். இந்தியா பாகிஸ்தான் எல்லையிலே ‘தீவிரவாதிகளை’ ஊடுருவாமல் கண்காணிக்கும் மத்திய அரசு இந்த மாட்டு வர்த்தகத்தை மட்டும் அனுமதிக்கின்றது. ஒருவேளை தடுக்க நினைத்தால் ‘இந்துக்களின்’ மாட்டுப்படை இராணுவத்தையே மோதி அழித்து விடும். இது கற்பனையல்ல.

உள்நாட்டில் பசுவின் புனிதம் பேசி மதவெறி அரசியல் நடத்த வேண்டும்; உதவாத மாடுகளை விற்பதற்கும் பல சுற்று வழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அவலமான, அயோக்கியத்தனமான சூழ்நிலையே இந்தியக் கால்நடைச் செல்வத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தீங்காகும். சற்று கற்பனை செய்து பாருங்கள் : இந்தியாவில் ஆங்காங்கே மாடுவெட்டும் தொழிற்சாலைகளும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளும் இருந்தால் விவசாயிகளுக்கு நன்கு பயன்படும் என்பதோடு, இறைச்சி மற்றும் தோலின் தரத்தை உயர்த்தி பல கோடி மக்களை ஒரு முறையான உற்பத்தியில் ஈடுபடச் செய்யவும் முடியும்.

தற்போது அந்த நிலைமை இல்லை. ஆனால், வெட்டுவதற்கான மாடுகள் அதிகம் இருந்தும் இங்கு வெட்டப்படும் மாடுகள் மிகவும் குறைவு. 1980-ம் ஆண்டு 1.56 கோடி மாடுகளும், 2000-ம் ஆண்டு 2.43 கோடி மாடுகளும் இறைச்சிக்காக வெட்டப்பட்டிருக்கின்றன. 20 ஆண்டுகளில் ஆண்டுக்கு 5 சதவீதம்தான் வளர்ந்திருக்கின்றது. இதனால் பாலுக்கும், விவசாய வேலைக்கும் பயன்படுகிற மாடுகளைப் பராமரிக்கும் திறன் விவசாயிகளிடம் கடுமையாகக் குறைந்திருக்கிறது. முக்கியமாக, இறைச்சிக்காக மாடு வளர்க்க வேண்டும் என்ற அவசியம் இருந்தும் இந்தத் திசையில் நாம் இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை.

இந்தியாவில் சட்டபூர்வமாக 3,600 மாடு வெட்டும் கூடங்களும், சட்டத்திற்குத் தெரியாமல் 32,000 கூடங்களும் இருக்கின்றன. மனிதனுக்கு அளப்பரிய பயனைக் கொடுக்கும் மாட்டை வெட்டுவது என்பது கிரிமினல் நடவடிக்கையாக மாற்றப்பட்டிருப்பது எத்தகைய அநீதி!

holycowபசுவதைத் தடைச்சட்டம் காரணமாக கேரளத்துக்கும் வங்காளத்துக்கும் மாடுகளைக் குறைந்த செலவில் கொண்டு போக வேண்டிய நிர்ப்பந்தத்தை உருவாக்கி விட்டு, வியாபாரிகளை மாடுகளை இரக்கமற்ற முறையில் கொண்டு போவதாக மிருகவதை தடுப்பு மனிதர்கள் ஊளையிடுகின்றனர். மாடுகளை வளர்க்கவும், வெட்டவும் தடையாயிருக்கின்ற இந்நிலைமை உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை எனலாம். இப்படி பல்வேறு தடைகளைத் தாண்டி வெட்டப்படும் மாடுகளை மட்டும் நம்பி தோல் பதனிடும் தொழிற்சாலைகள் 1,400-ம், தோல் பொருட்களைத் தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் இலட்சக் கணக்கிலும் இங்கு இருக்கின்றன. இதில் தமிழ்நாட்டின் பங்கு கணிசமானது. தோல் துறையை நம்பி மட்டும் 25 இலட்சம் இந்திய மக்கள் – அதில் மூன்றிலொரு பங்கினர் பெண்கள் – பிழைக்கின்றனர்.

கச்சாத் தோல் அளிப்பில் இறைச்சிக் கூடங்களிலிருந்து 60 சதவீதமும், இறந்து போகும் கால்நடைகளிலிருந்து 30 சதவீதமும், வெளிநாட்டு இறக்குமதியில் 10 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. பசுவதைத் தடைச்சட்டம் இந்தியா முழுவதற்கும் கடுமையாக அமலுக்கு வரும் பட்சத்தில், இலட்சக்கணக்கான குடும்பங்கள் வேலையிழக்கும். வெளிநாட்டிலிருந்து தோல் இறக்குமதி கணிசமாக அதிகரிக்கும். அதன் விளைவாக அத்தியாவசியத் தோல் பொருட்களின் விலை மிகவும் உயரும். ஒரு மாட்டுத் தோல் 25 சதுர அடியும், ஒரு ஆட்டுத்தோல் 4 சதுர அடி பரப்பையும் கொண்டிருப்பதால், தோல் பொருள் தயாரிப்பில் மாட்டுத் தோலின் பங்கே முக்கியமானது.

77.6 கோடி செருப்பு ஜோடிகளும், 1.8 கோடி ஆயத்த ஆடைகளும், 6 கோடி கைப்பொருட்களும் (பை, பர்ஸ், பெல்ட் முதலியன) 5 கோடி தொழிற்சாலை கையுறைகளும் – இந்தியத் தோல்பொருள் ஏற்றுமதியில் அடக்கம். இதன் மதிப்பு 10,000 கோடி இந்திய ரூபாய்களாகும். இதில் 60 சதவீத பங்கு சிறு – குடிசைத் தொழில்கள் செய்யும் மக்களிடமிருந்து வருகிறது. எனவே, பசுவதைத் தடைச்சட்டம் வர வேண்டும் என்ற இந்து மதவெறியர்களின் விருப்பம் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றுவிட்டுத்தான் அமலுக்கு வரமுடியும். ஆக பார்ப்பனியத்தின் கோமாதா என்ற புனிதத்தின் உண்மைப் பொருள் மனிதவதை என்பதே.

இளநம்பி

புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2003

மாட்டுக்கறி : பார்ப்பன மதவெறி – புதிய கலாச்சாரம் வெளியீடு

காக்கா முட்டை : விகடனின் விமரிசனத் தரம் என்ன?

4

விகடன் மதிப்பெண் நாற்பதுக்கு மேல் போனாலே அடுத்த நாள் அந்த சினிமா விளம்பரத்தில் அந்த மதிப்பெண் வந்துவிடும். “காக்கா முட்டை”க்கு 60 மதிப்பெண் வழங்கிய பிறகு, தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, இணையத்தின் அறிஞர் பெருமக்களும் தமது பொன் முட்டையை விகடனும் அங்கீகரித்திருப்பதை கொண்டாடினார்கள். ஒருவேளை படம் குறித்து முதல் ஐந்து நாட்களில் தமிழ் இணையம் காட்டிய நெகிழ்ச்சி அலையில் விகடன் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாமே என்று சிலர் கேட்கலாம்.

காக்கா முட்டை - விகடன் விமர்சனம்
இந்தப் படத்தை உலகத்துக்கான தமிழ் சினிமா என்றே விமரிசனத்தின் முதல் பத்தியில் கூறுகிறது விகடன்.

இந்த பத்தாண்டின் தலைசிறந்த குடும்ப சித்திரம் என்ற விளம்பரம் “காக்கா முட்டை”க்கும் மட்டுமல்ல, “ஸ்லம்டாக் மில்லினியரு”க்கும் கொடுக்கப்பட்டதைப் பார்த்த போது இந்த பீட்சாவின் இரக்கம் அனைத்துத் தரப்புகளிலும் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

தமது மேலான ரசனை போலவே முக்கிய ஊடகம் ஒன்றின் ரசனையும் இருப்பதாக இணைய மக்கள் நம்புவதைப் போல அவர்களை தாங்கள் மட்டுமே பிரதபிலிப்பதாக விகடனும் அதை காட்டிக் கொள்ளலாம். பரஸ்பர ஆதாயம்.

போகட்டும். 60 மதிப்பெண் கொடுத்திருக்கும் விகடன் அதை எப்படி ‘உலகத் தரத்தில்’ எழுதியிருக்கிறது என்று பார்ப்போம். ஏனெனில் இந்தப் படத்தை உலகத்துக்கான தமிழ் சினிமா என்றே விமரிசனத்தின் முதல் பத்தியில் கூறுகிறது விகடன்.

“தடதடப்பும், படபடப்புமாக கடக்கிறது படம்”, “போகிற போக்கில் போட்டுத் தாக்குகிறது”, “கலீச் சுளீர் உரையாடல்களாகவும்”, “அட்டகாசமாக அறிமுகமாகும் ரமேஷும், அதட்டும் விக்னேஷும் அகதளம்…அமர்க்களம்!”, “சினிமா கேரியரில் ஐஸ்வர்யாவுக்கு இது அர்த்தமுள்ள அடையாளம்”, “ஒவ்வொருவருமே கச்சிதமான காஸ்ட்டிங்,” “நக்கலும் நையாண்டியுமாகக் கடக்கும் ஆனந்த் அண்ணாமலை, ஆனந்த் குமரேசன் கூட்டணியின் வசனங்கள், சிரிப்பு செருப்பு அடிகள்”, “ஹேய் சூப்பரப்பு”, “கண்களை கலங்கச் செய்யும் ஈர அத்தியாயம்”, “ஏரியாவையே பதறவைத்த ஏக களேபரங்களுக்குப் பிறகு”, “கச்சித டைமிங்கால் சீனுக்கு சீன் விறுவிறுக்க வைக்கிறது கிஷோரின் எடிட்டிங்”,…………………

இவைதான் ஒரு உலக சினிமா குறித்து ஒரு உலகத் தரத்திலான விமரிசனம் தேடிக் கண்டுபிடித்த வரிகள்! எனினும் இவர்கள்தான் டி.ராஜேந்தரின் எதுகை மோனை ஏப்பங்களை கிண்டலடிக்கிறார்கள். மேடைகளில் பேசும் அரசியல்வாதிகள், செயற்கையான நடையிலும், உணர்ச்சிகரமான நடிப்பிலும் பேசுவதாக குறைபடுவர்களும் இவர்களே.

கேட்டால் மக்கள் திரளுக்கு புரிய வைக்கும் மொழியில், இளையோரின் நவீன நடையில், சுண்டி இழுக்கும் ரசனையில் எழுதுவதால், அரசியல் சார்ந்து சிந்திப்போருக்கு அதன் அருமை புரியாது என்பார்கள். ஒரு வேளை விமரிசனம் எப்படியிருந்தால் என்ன, இதை வைத்து திரையரங்கிற்கு இன்னும் பலரை இழுத்து வரும் வேலையை இது செய்யுமையா என்று வசூலை முன்வைத்தும் சிலர் நியாயப்படுத்தலாம்.

கலீர் சுளிர், கச்சிதமான காஸ்ட்டிங் போன்ற வரிகளை படித்து விட்டு ஒருவன் “காக்கா முட்டை”யை பார்த்தால் அவனிடம் இந்தப்படம் என்னவாக இறங்கியிருக்கும்? ஏற்கனவே மல்டிபிளக்சில் பீட்சாவை சுவைத்தவாறே இந்தப்படம் ரசிக்கப்படுவதின் அபத்தத்தை சிலர் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். இயக்குநர் மணிகண்டனோ, “இந்தப் படத்தைப் பார்த்து சிலர் தமது பிள்ளைகள் பீட்சாவை வேண்டாமென்று விட்டுவிட்டதாக கூறியது மனதுக்கு திருப்தியாக இருந்தது” என்றிருக்கிறார். இறுதியில் பீட்சாதான் வில்லனா?

பெப்சி-கோக், மெக்டனால்டு, கே.எஃப்.சி, லேஸ், ஹல்திராம், நெஸ்லே என்று பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் பலரும் கோலேச்சும் நுகர்வுத் துறையில் பீட்சாவை மட்டும் தவிர்ப்பதால் என்ன பயன்? படத்தில் பீட்சா ஒரு குறியீடு என்பவர்கள் என்ன பதில் சொல்வார்கள்? இங்கே இந்த குறியீட்டின் அரசியல் என்னவாக உணர்த்தப்பட்டிருக்கிறது அல்லது படவில்லை என்பதைப் பொறுத்தே பீட்சா புரிந்து கொள்ளப்படுகிறது. ஆகவே படத்தில் பீட்சா மட்டும் இருக்கிறது. ரசிகர்களும் பீட்சா மட்டும் வேண்டாம் என்று பர்கருக்கு மாறிக் கொள்ளலாம்.

மற்ற சினிமாக்களிலிருந்து இது வேறுபட்டிருப்பதால் உலகத்திற்கான சினிமா, சிவப்பு கம்பளம் விரித்து இயக்குநரை வரவேற்கிறான் விகடன் என்றெல்லாம் தூக்கிவிட்டு விமரிசனத்தில் அது ஏன் உலகத் தரம், எதனால் வரவேற்பு என்று கேட்டால் அது அரட்டை அரங்கின் தரத்தைத் தாண்டாது. விகடன் கருதும் தரம், உலகத்தின் அளவீடு என்ன?

விளிம்பைத் தாண்டியும் துரத்தப்பட்ட மண்ணின் மைந்தர்களை மனம் நிறையக் கரிசனத்துடன் இப்படம் அணுகியதாக கூறும் விகடன் அதற்கான ஆதாரத்தை படத்திலிருந்த தருவது இருக்கட்டும். அந்த கரிசனம் இவர்களுக்கு தெரியுமா புரியுமா என்பதற்கு என்னய்யா ஆதாரம்?

கிச்சன் கில்லர்கள்
கி கி ஆங்கில டைட்டில் போட்டுத்தான் நூடில்ஸ் பிரச்சினையை புரியவைக்க முடியும் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் வேறு ஒரு போ போ ரைமிங் கண்டுபிடிப்பு மூலம் அதைக் காலி செய்து விட முடியும்.

வலை பாயுதே, சைபர் ஸ்பைடர் எனும் மிரட்டும் வார்த்தைகளில் டிவிட்டுகளை தொகுத்து தருகிறது விகடன். அதில் “பஸ்ல பக்கத்து ஸீட்காரன் என் மொபைலையே பார்த்துட்டிருக்கான். ஏண்டா நீயெல்லாம் நோக்கியா, சாம்சாங்கோடு பொறக்கலியா” என்றொரு டிவிட் இருக்கிறது. ‘ஸ்மார்ட் ஃபோனை எட்டிப் பார்ப்பது ஒரு அநாகரிகம்’ என்பது ஒரு திமிரான மேட்டிமைத்தனமான மொழியில் இங்கே சொல்லப்படுகிறது. இது விகடனுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் பீட்சா சாப்பிட ஆசைப்பட்ட சிறுவர்களை பிடிக்கும் என்பதை நம்ப முடியவில்லையே?

கேபினட் கேமரா, மந்திரி தந்திரி எனும் பகுதியில் அ.தி.மு.க அமைச்சர்களின் தொகுப்பான வரலாற்று, நிர்வாக முறைகேடுகள், ஊழல் போன்றவற்றை “நாகரிகமான” மொழியில் தொகுத்து தரும் விகடன் தொடரில் இந்த வாரம் இடம்பெற்றிருப்பவர் முக்கூர் சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்.

“சத்துணவுக் கூடங்களுக்கு காய்கள் அளித்து வந்த சிறு வியாபாரி இன்று பள்ளிகளின் விழாவில் மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கும் அமைச்சராக மாறிவிட்டார்” என்று கூறுகிறது விகடன். இதையே அம்பானி, அதானி என்றால் உழைத்து முன்னுக்கு வந்த சாதனையாக காட்டுவார்கள். இங்கே சைக்கிள் ஓட்டி வியாபாரம் செஞ்வனெல்லாம் இன்று அமைச்சர் என்று மேட்டிமைத் திமிருடன் அலுத்துக் கொள்ளும் நடுத்தர வர்க்கத்தின் பார்வையில் இது சொல்லப்படுகிறது.

மேலும் அந்த அமைச்சரது ஊழலை குத்திக் காட்டும் விகடன் அதன் கூடவே படிப்பறிவற்ற ஒருவர் தகவல் தொழில் நுட்ப அமைச்சராகியிருக்கும் அவல நிலையாக அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறது. அந்தப் படிக்கு படிப்பறிவில்லாத காமராஜர் கூட இவர்களது  தகுதியில் தேற மாட்டாரே!

தனது டச் ஃபோனை இயக்கத் தெரியாத ஒருவர் கணினி துறைக்கு அமைச்சராகியிருக்கிறார் என்று கிண்டல் செய்கிறது விகடன். பீட்சாவின் ருசி தெரியாமல் அந்த சிறுவர்கள் அது நன்றாக இல்லை என்று புறக்கணித்தது விகடனுக்கு பிடித்திருக்கிறது. அந்தப் பிடிப்பின் அடிப்படை சாதா இரக்கமா, இல்லை நம்ம ஐட்டத்தை அதற்கு உரியவர்களல்லாத ஏழைகள் பிடிக்கவில்லை என்று சொன்னதால் ஏற்பட்ட ஸ்பெசல் இரக்கமா?

விமானத்துறை அமைச்சராக இருப்பவருக்கு ஹெலிகாப்டரை ஓட்டத் தெரியவில்லையென்று இவர்கள் எழுதுவார்களா? முக்கூர் சுப்ரமணியத்திற்கு டச் ஃபோன் இயக்கத் தெரிந்தாலோ தெரியாமல் போனாலோ என்ன பிரச்சினை? மேலும் இதுதான் பிரச்சினை என்று வைத்துக் கொண்டாலும் முக்கூர் உட்பட் பல்வேறு டுபாக்கூர்க்களை வைத்து ஆட்சி நடத்தும் பாசிச ஜெயாவின் பிரச்சினையல்லவா? அந்தப் படிக்கு டச் ஃபோன் மற்றும் ஆங்கிலம் தெரிந்த ஒரு பெண்மணியை விமரிசிக்காமல் காய்கறி சப்ளை செய்தவர் என்ற பெயரில் ஏழ்மையை பரிகசிப்பதன் காரணம் என்ன?

“கூகுள், யூடியூப், வாட்ஸ் அப்…இதெல்லாம் இங்கிலீஸ் படப் பேரா?” எனக் கேட்கும் அளவுக்குத்தான் துறை நிபுணராக இருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன் என்கிறது விகடன். இதையே காக்கா முட்டை மொழியில்  பெயர்த்தால் பீட்சா தெரியாதவனெல்லாம் உணவுத்துறை மந்திரியாக குப்பை கொட்டுகிறான் என்று பேஷா சொல்லலாமே?

காக்கா முட்டை - விகடன் விமர்சனம்
பெப்சி-கோக், மெக்டனால்டு, கே.எஃப்.சி, லேஸ், ஹல்திராம், நெஸ்லே என்று பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகள் பலரும் கோலேச்சும் நுகர்வுத் துறையில் பீட்சாவை மட்டும் தவிர்ப்பதால் என்ன பயன்?

ஒரு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தமிழகத்தின் விவசாயம், தொழில்துறை, மீன்வளம், கால்நடை இதர துறைகளுக்கு தேவையான நுட்பங்களை தெரிந்து கொள்வதும், அதை தெரிவிப்பதற்கு தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதும்தானே தேவை? மாறாக மக்கள் யூடியூப், கூகுள் பார்த்து “காக்கா முட்டை” நடிகை ஐஸ்வர்யாவின் ப்ளோ அப் சுவரொட்டிகள் தேடுவது குறித்தா அவர் அறிந்து வைத்திருக்க வேண்டும்? ஆக முக்கூர் சுப்பிரமணியனை விடுங்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கு என்ன தெரியவேண்டும் என்பது விகடன் பார்வையில் பீட்சாவை மட்டும் தெரிந்து கொள்வதாகவே இருக்கிறது. ஆக இவர்கள் கிண்டலடிப்பதில் மேட்டிமைத்தனம் இருக்கிறது என்றால் அறிவிலோ முட்டாள்தனம் கொடிகட்டிப் பறக்கிறது.

இப்படி டெக்னாலஜி அப்டேட் இருக்கட்டும், தமிழகத்தின் ஐ.டி துறையில் ஊழியர்கள் பந்தாடப்படும் நிலை குறித்து இந்த அமைச்சர் ஏதாவது பேசியிருக்கிறாரா என்றெல்லாம் விகடன் துளியளவு கூட நினைக்கவில்லை. மாறாக ஊர் ஊராக ஐ.டி பார்க் ஏன் வரவில்லை என்பதே இவர்களது கவலை. இதையும் தெருத்தெருவாக பீட்சா கடை வரவேண்டும் என்று எழுதலாம்.

பிட்ஸ் பிரேக் எனும் ஒரு மசாலா பகுதியில் இயக்குநர் மணிரத்தினம் ஆப்பிள் மேக்புக் ஏர் மடிக்கணினி வாங்கி அதை பாராட்டி தனது நண்பர்கள் இருவருக்கு பரிசளித்ததையெல்லாம் ஒரு செய்தியாக்கி வெளியிட்டிருக்கிறார்கள். சரி, இந்த ஆப்பிள், மேக்புக், கூகுள், வாட்ஸ் அப் போன்றவற்றில் அருகாமை பீட்சா கடை எங்கே உள்ளது, என்ன டாப்பிங்ஸ் புதிது, என்ன விலை, யாருடைய சர்வீஸுக்கு மதிப்பெண் அதிகம் இதைத்தானே அதிகம் தேடுகிறார்கள்? பிறகு ஏன் காக்கா முட்டைக்கு கண்ணீர் வடிக்கிறீர்கள்?

“இது காமடி வெடி”என்று சந்தானத்தின் புதுப்படம் குறித்த நேர்காணல் ஒன்று. “நீங்க வாழ்க்கையில என்ன வேணும்னாலும் ஆகணும்னு கனவு காணுங்க. ஆனா, இருக்கிறதை விட்டுட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படாதீங்க. அடுத்த உயரம் தொட படிப்படியா உழைப்பைக் கொட்டுங்க. இதான் மெசேஜ். ரீலையும் ரியலையும் மேட்ச் பண்ணோமா” என்று சந்தானத்தின் தத்துவ முத்து ஒன்றை போட்டே கட்டுரை ஆரம்பிக்கிறது.

இதுதான் காக்கா முட்டையின் கிளைமாக்ஸ். சிறுவர்கள் டேஸ்ட் காரணமாக அதை விலக்கினாலும் அதன் பின்னே இருப்பது எதிர்ப்புணர்வு அல்ல. சீ சீ இந்தப் பழம் புளிக்கும் என்று தானே விலக்குகிறார்கள். இதன் மூலம் ஓசியில் கிடைக்கும் பீட்சாவை அவர்கள் மறுப்பதான சுயமரியாதை ஒன்று, இரண்டாவதாக அவர்கள் பீட்சாவை போராடி மறுக்கவில்லை. இதைத்தான் நைந்து போன மொழியில் சந்தானம் கூறுகிறார். ஆகவே காக்கா முட்டையில் விகடனுக்கு பிடித்த தத்துவம் இதுவாகத்தான் இருந்திருக்கும்.

மாகி நூடில்ஸ் பிரச்சினையை ஒட்டிய அட்டைப்படக் கட்டுரைக்கு விகடன் வைத்திருக்கும் தலைப்பு “கிச்சன் கில்லர்கள்”. எனில் இந்த தலைப்பு திடீர் நகர், காசிமேடு சிறுவர்களோ இல்லை பெற்றோருக்கு புரியுமா? அவர்கள்தான் விகடனை படிப்பதே இல்லை எனில் பீட்சா சாப்பிடுபவர்கள்தான் வாசகர்கள். அவர்களுக்கு இந்த கி கி ஆங்கில டைட்டில் போட்டுத்தான் நூடில்ஸ் பிரச்சினையை புரியவைக்க முடியும் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் வேறு ஒரு போ போ ரைமிங் கண்டுபிடிப்பு மூலம் அதைக் காலி செய்து விட முடியும்.

ஆக, ஒரு விசயத்தை எத்தனை ஆழமாகவும், அரசியல் ரீதியாகவும் பார்க்கிறோம் என்பதே அது குறித்து எழுதவதற்கும், படிக்கப்படுவதற்கும், பயன்படுவதற்கும் காரணமாக இருக்கிறது. இங்கே நொறுக்குத் தீனி வாசிப்பையே மூலதனமாக வைத்திருக்கும் விகடன், அதற்குரிய படிமங்கள், காட்சிகள், களத்திலேயே சுற்றி கொண்டு விட்டு, ஒரு சேஞ்சுக்காக காக்கா முட்டையை ரசிக்கிறது. ஆனால் அந்த ரசனையில் மேற்கண்ட சுற்றி வரும் ஜாலி எப்படி தவிர்க்க முடியாமல் இணைந்திருக்கிறது என்று கண்டு கொண்டால் பிறகு நீங்கள் விகடன் விமரிசனத்தை எதிர்பார்க்க மாட்டீர்கள்.

தங்கமீன்கள் விமரிசனம் வந்த போது இயக்குநர் ராம் விகடனது சினிமா விமரிசன முறையை விமரிசித்து எழுதியிருந்தார். ஒரு படத்தை பார்த்து விட்டு உடன் ஏற்படும் உணர்ச்சியை பதிவு செய்வதை விமரிசனம் என்று எழுதுவதோ, மதிப்பெண் போடுவதோ தவறு, தனது படங்களுக்கு இத்தகைய விமரிசனங்கள் தேவையில்லை என்ற பொருளில் அவர் எழுயிருந்தார். விமரிசனம் என்பது ஒரு இயக்குநரின் படைப்பை தீவிரமாக படித்து, பார்த்து, முழுமையாக உள்வாங்கி எழுத வேண்டும், தமிழில் அத்தகைய விமரிசன மரபு இல்லை என்றும் அவர் கவலைப்பட்டிருந்தார்.

அவரைப் பொறுத்தவரை இது ஒரு டெக்னிக்கல் பிரச்சினை. அதாவது “திரைப்பட விமரிசனக் கலை எனும் துறையை இங்கே அறிந்தவர் இல்லை. அப்படி அறிந்தவர் இருந்து, ஊடகங்கள் அப்படி எழுத ஆரம்பித்தால் நல்ல விமரிசனங்கள் வரும், திரைப்படங்களுக்கு அவை நல்ல அறிமுகத்தை கொடுக்கும்” என்று அவர் எதிர்பார்க்கிறார்.

மங்காத்தா, மாஸ் போன்ற போடங்கள் அதிகம் வரும் தமிழ் சினிமாவிற்கு அந்த விமரிசனக் கலை வந்து என்ன ஆகப்போகிறது என்பது ஒருபுறமிருக்க ஒரு ஆழமான விமரிசனமோ இல்லை உடன் பார்த்து எழுதும் மொக்கைப் பதிவோ ஒருவரின் உலகக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. அது விமரிசனத்தில் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட நபரின் அனைத்து பார்வை, மதிப்பீடுகளிலும் அது நீக்கமற நிறைந்திருக்கும். இதன்படி விகடனின் விமரிசனப் பிரச்சினை சினிமா விமரிசனக் கலை தெரியாமல் வந்த ஒன்றல்ல. அவர்கள் இந்த உலகினை, சமூகத்தினை, அரசியலை, ஏழ்மையை, வாட்ஸ் அப்பை எப்படி பார்க்கிறார்கள் என்பதோடு தொடர்புடையது.

மற்ற துறைகளில் அவர்களது பார்வை என்ன தரிசனத்தை கொண்டிருக்கிறதோ அதுவே விமரிசனத்திலும், மதிப்பெண் போடும் முறையிலும் வெளிப்படும். ஒருவேளை சில பல சிபாரிசுகள், திரைப்பட தயாரிப்பாளர்களது தொழில் உறவுகள் காரணமாக மதிப்பெண்கள் சற்று அதிகமாகவோ குறைவாகவோ போடப்படலாம். அதனால் பார்வை மாறிவிடுவதில்லை.

ஆகவே விகடனை திருத்த வேண்டும் என்பது சினிமா விமரிசனத்தை நல்லவிதமாக எழுத வைப்பதன் மூலம் – அப்படி முடியாது என்ற போதிலும் – முடியாது. அது வெளியே நடக்கும் சமூக அரசியல் போராட்டங்களின் மூலமாகவே நடந்தேறும். முன்னர் கோலோச்சிய அக்ரஹார மொழி விகடனை விட்டு அகன்று போனதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது. ராம் அடிப்படையில் ஒரு சினிமாக் கலைஞர் என்பதால் அவர் சினிமாவை மட்டும் வைத்து விகடனை அளந்து பார்க்கிறார். ஆனால் சினிமாவோ, விமரிசனமோ, ஊடகங்களோ அனைத்தையும் தீர்மானித்து இயக்குவது இறுதியில் அரசியலே. அந்த அரசியலின் சரி தவறுகளில், போராட்டங்களில், மக்களின் பங்கேற்பு அதிகம் – குறைவு காரணமாகத்தான் நாம் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான கலைச் சூழல் பிறக்கும் அல்லது போராடும்.

காக்கா முட்டை விமரிசனத்திற்கு பிறகு வந்த இதழில் இயக்குநர் மணிகண்டனை நேர்காணல் செய்திருக்கிறது விகடன். அதில் ஒரு அறிமுக இயக்குநரின் முதல் படத்திற்கு 60 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டதிற்கு அவர் பெரும் நன்றிக்கடனை இயல்பாக செலுத்தியிருக்கிறார்.

விகடன் எழுதிய விமரிசனத்தின் தரம் என்னவென்று பார்த்து விட்டோம். அந்த தரம் மணிகண்டனுக்கு ஏன் தெரியவில்லை? கமர்சியல் படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டு தீவிர படிப்பு, நல்ல படங்களை மட்டும் பார்க்கும் அவருக்கு விகடனின் கமர்சியல் விமரிசன பாணி உறைக்கவில்லையா? இல்லை 60 மதிப்பெண் கொடுத்து விட்டால் நீயும் நண்பனே, நல்ல அறிஞனே எனும் சமரசமா?

காக்கா முட்டை படத்தின் குறியீடுகள் குறித்து கம்பராமாயணம் போல விளக்குகிறார்கள். அண்ணாவின் சந்திரமோகன் நாடக வரிகள் – மராட்டிய மன்னன் சிவாஜி தாழ்ந்த சாதி என்பதால் பார்ப்பனர்கள் மறுப்பது, கூண்டிலிருக்கும் நடுத்தர வர்க்கசிறுவன், சுதந்திரமாக அலையும் சேரி சிறுவர்கள், பாலிதீன் பையில் பிடித்து வரப்படும் நீர், உடைந்த கோக்பாட்டில், அரசியல் பேனரில் சே குவேரா படம் என்று நிறைய சொல்கிறார்கள். இந்த படம் குறித்து நமக்கு வகுப்பும் எடுக்கிறார்கள். நல்லது, இதைத்தாண்டி ஒரு குறியீடு படத்தில் உள்ளது. உண்மையைச் சொன்னால் அது குறியீடே இல்லை, வெளிப்படையான காட்சி.

“காக்கா முட்டை” படத்தில் பீட்சாக் கடைக்காரர்களால் தமது சிறுவர்கள் தாக்கப்பட்டது குறித்து திடீர் நகர் மக்களுக்கு கோபம் ஏதுமில்லை. போராட்டம் ரத்து செய்யப்பட்டதால் 100 ரூபாய் பணமும், ஒரு பிரியாணி போராட்டமும் பறிபோனதே அவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. அந்தக் காட்சியில் முதலாளி வர்க்கம் ஒழிக எனும் ஒரு நைந்து போன அட்டை தெரிகிறது.

இறுதிக் காட்சியில் சிறுவர்களின் அம்மா கூட அந்தக் கோபத்தை துறந்து பிள்ளைகள் பீட்சா சாப்பிடும் காட்சியில் மெய் மறக்கிறார். பார்வையாளர்கள் கரகோஷம் எழுப்புகிறார்கள். விகடன் 60 மதிப்பெண் போடுகிறது.

இது உண்மையிலேயே ஃபீல் குட் மூவிதான்.

இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?

22

ல்லூரி அட்மிஷன் கனஜோராக நடக்கும் இந்த சூழலில் உலகின் உள்ள எல்லா துறைகளைப் பற்றியும், அதில் எப்படி விற்பன்னராவது என்பது பற்றியும் பெரும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் என வர்ணிக்கப்படும் ஊடகத்துறை பற்றிய ஆலோசனைகள் யாராலும் தரப்படுவதில்லை.

ரங்கராஜ் பாண்டே
அவர்களும் தென்னகத்து அர்னாபாக, பர்கா தத்தாக மாற வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தோடு இந்த பயிற்சிக் கையேடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முன்னேறும் வழி தெரியாமல் ஆண்டுக் கணக்கில் சென்னை வீதிகளை ஓட்டை டூவீலரில் சுற்றி சைனஸ் வந்து அல்லலுறும் பத்திரிகையாளர்கள், வாடகை கட்டுப்படியாகாமல் வீட்டை வருடா வருடம் மாற்றிக் களைத்துப் போகும் பத்திரிகையாளர்கள் என ஒரு கூட்டம் துன்பப்படுவதைப் பார்த்து கண்களில் ரத்தக்கண்ணீர் வருகிறது. எதேச்சையாக சந்தித்த பிழைக்கத் தெரியாத ஓரிரு பத்திரிக்கையாளர்களுக்கு டீயும் பன்னும்கூட வாங்கித்தராத குற்ற உணர்வு இன்றைக்குவரை என்னை வாட்டுகிறது.

அவர்களும் ஏசி ரூமில் உட்கார்ந்து பணியாற்ற வேண்டும். அவர்களும் தென்னகத்து அர்னாபாக, பர்கா தத்தாக மாற வேண்டும் எனும் உயர்ந்த நோக்கத்தோடு இந்த பயிற்சிக் கையேடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தற்சமயத்துக்கு பைசா இருக்காது என்பதால் இந்த பயிற்சியை இலவசமாகவே தருகிறோம்.

முதலில் உறுதிமொழி,

1. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், காக்கி டவுசருக்கு எதிராக ஒரு போதும் சிந்திக்க மாட்டேன். கருப்பு சட்டைக்கு ஒரு போதும் துணைபோக மாட்டேன்.

ரங்கராஜ் பாண்டே
ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், ஆர்.எஸ்.எஸ்-ன் அபான வாயுவாக மாறி எட்டுத்திசைக்கும் அதன் ’கொல்’கைகளைப் பரப்புவேன்.

2. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், சிறுபான்மை மக்களையும் தலித் மக்களையும் முடிந்தவரை இழிவுபடுத்துவேன்.

3.  ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், ஆர்.எஸ்.எஸ்-ன் அபான வாயுவாக மாறி எட்டுத்திசைக்கும் அதன் ’கொல்’கைகளைப் பரப்புவேன். தேவைப்பட்டால் ஆர்.எஸ்.எஸ்சின் ஆயுதமாக மாறி ஒரு தரப்பை மட்டும்கூட தாக்குவேன்.

4. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், அதிகாரத்துக்கும் மக்களுக்கும் இடையேயான முரண்பாடுகளில் அதிகாரத்தின் பக்கம் மட்டுமே நிற்பேன்.

5. ரங்கராஜ் பாண்டேவாக விரும்பும் நான், அதிகாரத்துக்கும் ஆர்.எஸ்.எஸ்சுக்குமான முரண்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ் பக்கம் மட்டுமே நிற்பேன்.

வளர்த்துக் கொள்ள வேண்டிய சில தகுதிகள் :

1. பா.ஜ.ககாரனிடம் பேட்டி எடுக்கையில் ஒரு பா.ஜ.க.காரனைப் போலவே பேச வேண்டும்.

2. எதிர்கட்சிகளிடம் கேள்வி கேட்கையிலும் ஒரு பா.ஜ.க.காரனைப்போலவே கேள்வி கேட்கவேண்டும், நீ மட்டும் யோக்கியமா வகை கேள்விகள் சாலச்சிறந்தது.

3. இது மிக முக்கியமானது, உடல்மொழி ஒரு ஆகப்பெரும் தகுதி. நீங்கள் உரையாடுகையில் வெறும் 7 சதவிகித செய்தியை மட்டுமே வார்த்தைகள் மூலம் புரியவைக்கிறீர்கள். மீதமுள்ள 93 சதம் செய்தியும் உங்கள் உடல்மொழி வாயிலாகவே எதிராளிக்கு சென்று சேர்கிறது ஆகவே பா.ஜ.க.வுக்கும் ஆளும் வர்க்கத்துக்கும் எதிராக யார் பேசினாலும் அவர்களிடம் மிக சாதாரண கேள்விகளையும் ஒரு நக்கலான, மட்டம் தட்டும் வகையிலான உடல் மொழியில் கேட்கப் பழக வேண்டும்.

இதனால் எதிராளி உங்கள் உடல்மொழிக்கு பதிலளிக்க முயல்வார், பதற்றமடைவார்.

இதன்மூலம் விவாதத்தை திசை திருப்பலாம், பா.ஜ.க.வுக்கு எதிரான குற்றச்சாட்டை வலுவிழக்க வைக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக உங்களை ஒரு மேதாவியாக எல்லோரையும் மடக்கும் வாதத் திறமையுள்ளவனாக உலகம் நம்பும்.

ரங்கராஜ் பாண்டே
இந்துத்துவ பரிவாரங்கள் செய்யும் எந்த கலவரத்தையும் நினைவில் வைத்திருக்கவே கூடாது.

4.   இந்துத்துவ பரிவாரங்கள் செய்யும் எந்த கலவரத்தையும் நினைவில் வைத்திருக்கவே கூடாது. ஐ.எஸ், அல்கொய்தா ஆகிய இயக்கங்கள் நடத்திய தாக்குதல்களில் 5 செய்திகளையாவது தினமும் நினைவில் வைத்திருக்க வேண்டும். அதனை சமையல் நிகழ்ச்சி நடத்தினாலும் குறிப்பிட மறக்கக் கூடாது.

5.   மனிதாபிமானம், நியாய உணர்வு ஆகியவை அரை பர்செண்ட் கூட இருக்கக் கூடாது. இந்த இரண்டையும் வைத்துக் கொண்டு உங்கள் மனைவிக்கு ஒரு ஹேர்பின்கூட வாங்க முடியாது. பிறகெதற்கு இந்தக் கருமங்களை கட்டி சுமக்க வேண்டும்? (சுஷ்மா ஸ்வராஜுக்கு உள்ள மனிதாபிமானம் இந்த லிஸ்டில் வராது).

பாண்டேயாவதற்கான தொழில் நுட்பங்கள் (உதாரணங்களுடன்) :

1.  விவாதத்துக்கான தலைப்பு பிரச்சனையின் தீவிரத் தன்மையை கணிசமாக குறைப்பதாக இருக்க வேண்டும். தந்தி பேப்பரின் தலைப்புச் செய்திக்காகவா அது விற்பனையாகிறது? மூன்றாம் பக்க கள்ளக்காதல் செய்திதான் பேப்பரின் பலம். அதுபோல விவாதத்தின் தலைப்பும் செய்தியை சுட்டிக் காட்டவேண்டும், ஆனால் அதன் பொருள் எதிர்த்தரப்பை குற்றம் சாட்டுவதாக அமைய வேண்டும்.

உதாரணம். ஆர்.கே நகர் தேர்தல் விதிமீறல்கள் பற்றிய விவாதங்களின் தலைப்பு இப்படி இருக்கலாம்…

ஆர்.கே நகரில் தேர்தல் விதிமீறல் இருப்பதாக எதிர்கட்சிகள் சொல்வது, வழக்கமான அரசியலா அல்லது மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டா?

ஆர்.கே நகர் தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணிக்கக் காரணம், தோல்வி பயமா அல்லது அக்கறையின்மையா?

ரங்கராஜ் பாண்டே
சொத்துக் குவிப்பு வழக்கு என்பதன் இடக்கரடக்கல் – பாண்டேயிசத்தின் பாடங்கள்

இத்தகைய தலைப்புக்கள் எதிர்தரப்பை பெருமளவு தடுப்பாட்டம் ஆட வைக்கும். அதன்மூலம் ஆளும் தரப்பின் வேலையை எளிதாக்கலாம்.

2. நீங்கள் ஆய் போக ஆகும் நேரம் பத்து நிமிடமாக இருக்கலாம். ஆனால் அதற்காக உங்கள் வயிறு நாளெல்லாம் உழைக்கிறது. அதுபோலவே காவி சேவைக்கான காலம் ஒன்றிரண்டு மணிநேரமாக இருக்கலாம். ஆனால் அதற்காக நம்  மூளை நாளெல்லாம் உழைக்கவேண்டும். ஆகவே இந்துத்துவாவை ஒரு வேலையை காப்பாற்றிக் கொள்ளும் உத்தியாக கருதாமல் ஒரு வாழ்க்கை நெறியாக கொள்ள வேண்டும். இந்துத்துவா என்றதும் ஏதோ பெரிய ஃபார்முலாவோ என நினைத்து பயப்படவேண்டாம். வலியவனின் காலை நக்கு, எளியவனை எட்டி உதை என்பதுதான் அதன் ஒட்டுமொத்த சாரம்சம். இது தெரியாமல்தான் பச்சமுத்து ஃபவுண்டேஷன் டிவி தொகுப்பாளர்கள் சிலர் மஹா சந்நிதானத்தின் சீற்றத்துக்கு ஆளானார்கள்

உதாரணம் : ஆர்.எஸ்.எஸ்சை ஏன் எதிர்க்கிறீர்கள் எனும் கேள்வியை இப்படி கேட்கலாம்,

சுப்ரீம் கோர்ட்டே ஆர்.எஸ்.எஸ் ஒரு தீவிரவாத இயக்கமல்ல என்று சொல்லிவிட்ட பிறகும் நீங்கள் ஏன் அந்த இயக்கத்தை எதிர்க்கிறீர்கள்? உங்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கையில்லையா? இல்லையேல் உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயுமே?

நைஜீரியாவில் தாக்குதல் நடத்தும் போகோ ஹாரம் இயக்கத்தை எதிர்க்காத நீங்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை மட்டும் எதிர்ப்பதன் மர்மம் என்ன?

3. ஒருத்தனையும் முழுசாக பேசவிடாதீர்கள். பாஜக ஆட்கள் முழுசாக பேசிவிட்டால் நம் கொள்கைகள் அம்பலமாகி நாறிவிடும். அந்த மேன்ஹோல்கள் முழுசாச திறக்கப்பட்டுவிட்டால் அது எந்த செண்ட்டுக்கும் அடங்கமறுக்கும். எதிர்த்தரப்பை முழுமையாக பேசவிட்டாலும் இதுதான் கதி. அவர்களும் நம் சுயரூபத்தை அம்பலப்படுத்த முனைவார்கள்.

ஒரு விவாதம் என்பது நாம் சொல்ல விரும்பிய கருத்தை மக்களுக்கு கொண்டுசேர்க்கும் வழியேயன்றி அரங்கத்தில் பேசுபவர்கள் கருத்தை கொண்டுசேர்க்கும் நிகழ்ச்சியல்ல..

ரங்கராஜ் பாண்டே
“அப்போ பணக்கார முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா? இவ்வளவு மனிதாபிமானம் பேசும் நீங்கள் சிரியாவில் ஐ.எஸ் இயக்கம் கிருஸ்தவர்களை கொல்லும்போது எங்கே போயிருந்தீர்கள்?” என்று கேட்கலாம்

முசாபர் நகர் கலவரத்தில் ஏழை முஸ்லீம்கள் கொல்லப்பட்டு அகதிகளாக விரட்டப்படக் காரணம் என ஒருவர் பேசும்போது இடை மறித்து,

அப்போ பணக்கார முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் பரவாயில்லையா? இவ்வளவு மனிதாபிமானம் பேசும் நீங்கள் சிரியாவில் ஐ.எஸ் இயக்கம் கிருஸ்தவர்களை கொல்லும்போது எங்கே போயிருந்தீர்கள்?

என கேட்கலாம்.

4.  ஓரளவுக்கு தரவுகளையும், நியாயத்தையும் முன்வைத்து பேசுவோருக்கு எதிராக கோமாளித்தனமும் திமிரும் கலந்து பேசும் ஆர்.எஸ்.எஸ் கல்யாணராமன் போன்ற சல்லி கிராக்கிகளை அமர வையுங்கள். இதன்மூலம் ஐன்ஸ்டீனையே தெருச்சண்டைக்காரனாக மாற்றிவிடமுடியும். ஒரு திமிர் பிடித்த முட்டாளுடன் யாராலும் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்த முடியாது.

மேலும் இப்படியான கோளாறான விவாத அமைப்பின் மூலம் நல்ல முறையில் விவாதம் செய்பவர்கள் எனும் பெயரைப் பெற்ற நபர்களின் நன்மதிப்பை கணிசமாக சிதைக்க முடியும். அப்படிப்பட்ட ஆட்கள் பா.ஜ.க கூடாரத்தில் இருக்க மாட்டார்கள் என்பதால் நம் நாக்பூர் நாதாரிகள் சங்கத்துக்கு எந்த சங்கடமும் வராது. ஆரோக்யமான விவாதத்தில் ஒரு தொகுப்பாளரால் தனது மேதாவித்தனத்தை நிரூபிக்க முடியாது, விவாதத்தில் இருக்கும் எல்லோரையும் முட்டாளாக காட்டினால்தான் தொகுப்பாளனால் புத்திசாலியாக முடியும் என்கிறது பாண்டேயிசம்.

5. விவாதம் ஒரு சரியான முடிவை நோக்கி செல்லாமலிருப்பதை உறுதி செய்யுங்கள். விவாதத்தைப் பார்க்கும் பல ஆண்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு மட்டுமே (பெண்களுக்கு சீரியலைப் போல). அதனை கெடுக்கக்கூடாது. ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவசியமில்லை, அதனை பழக்கப்படுத்தினால் போதும். முடிவற்ற விவாதங்கள் எப்போதும் மக்களை பிரச்சனைக்கு பழக்கப்படுத்தும் கருவியாக மட்டுமே இருக்கும். நாய்க்கு எதிர்ப்புணர்வு என்றால் என்னவென்று தெரியாது அதனால்தான் அது கொடுமைக்கார எஜமானனுக்கும் வாலாட்டுகிறது. மக்களையும் அப்படிப்பட்ட நாயாகத்தான் பாண்டேயாக விரும்புபவன் கருத வேண்டும்.

ரங்கராஜ் பாண்டே
விவாதத்தில் ஒரு பொதுப் பிரச்சனையை தனிப்பட்ட பிரச்சினையாகவும், தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாகவும் மாற்ற வேண்டும்.

மேலும் சரியான விவாதம் ஒரு முடிவை நோக்கி செல்லும். அந்த முடிவு செயலாக மாறும. செயல் புரட்சியை நோக்கிச் செல்லும் வாய்ப்பிருக்கிறது. கலாச்சாரம் பேசும் பாண்டேயிசத்தில் புரட்சி என்பது விலக்கப்பட்ட வார்த்தை என்பதை நினைவில் வையுங்கள்.

6. கூமுட்டைகளையும், அறிவுபூர்வமான விவாதம் எப்படியிருக்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்ளக் கூட அக்கறையற்ற ஆஃப்பாயில்களையும் ஊக்குவியுங்கள். இதன் மூலம் பா.ஜ.க கூடாரத்து நபர்களின் தாழ்வு மனப்பான்மையை நீக்க முடியும். ஆதாரங்களோடு பேசமுடியா விட்டாலும் நாமும் அறிவுஜீவியாகலாம் எனும் நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும். அதனைக் கொண்டு ஒரிஜினல் அறிவுஜீவிகளுக்கு பழிப்பு காட்ட முடியும்.

7. விவாதத்தில் ஒரு பொதுப் பிரச்சனையை தனிப்பட்ட பிரச்சினையாகவும், தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாகவும் மாற்ற வேண்டும். இரண்டுக்குமான வெவ்வேறு அளவீடுகள் மக்களிடையே உண்டு. அதனால் பேசுவோரிடையே ஒரு குழப்பம் உருவாகும். அந்த கேப்பில் நான் ஒரு மீடியா டான் என பெயர் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்கலாம்.

  • குஜராத் கலவரம் ஒரு பொதுப்பிரச்சினை. அதனை இரண்டு தரப்புக்கு இடையேயான கலவரமாக சித்தரித்து கேள்வி கேளுங்கள்.
  • மாட்டுக்கறி தின்பதும் திங்காததும் ஒருவனது தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் மாட்டுக்கறி தின்றால் காயப்படப்போகும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு என்ன பதில் என கேட்கலாம். இதனால் இந்துன்னா மாட்டுக்கறி தின்பதை எதிர்க்க  வேண்டும் எனும் செய்தி பார்க்கும் வாசகன் மனதில் உருவாகும்.
ரங்கராஜ் பாண்டே
ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தாலே அவன் பிச்சைக்காரன் என்பது தெரிந்துபோகும். ஆனாலும் அவன் அம்மா தாயே என இறைஞ்சிக் கொண்டே இருக்கிறான், ஏன்?

8. விவாதத்தின் இடையே ஆர்.எஸ்.எஸ் ஒரு பண்பாட்டு அமைப்பு, அதற்கும் காந்தி கொலைக்கும் சம்பந்தம் இல்லை, பெரும்பான்மை இந்துக்கள் கோபப்பட்டால் சிறுபான்மையோர் கதி என்னாகும் தெரியுமா, மதம் மாறிய தலித் மக்கள் இசுலாம் கிருஸ்துவ மதங்களில் மோசமாக நடத்தப்படுகிறார்கள் தெரியுமா என்பன போன்ற கருத்துக்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும்.

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்தாலே அவன் பிச்சைக்காரன் என்பது தெரிந்துபோகும். ஆனாலும் அவன் அம்மா தாயே என இறைஞ்சிக் கொண்டே இருக்கிறான், ஏன்? பிழைக்க வேண்டுமானால் உங்கள் இருப்பை உலகத்துக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் தட்டில் தட்சணை விழும்.

9. எதிரணியானாலும் ஆள் பார்த்து பேசவேண்டும். குடியாத்தம் குமார், ஜெயராஜ் போன்ற ஆட்கள் சிக்கினால் அவர்களிடம் தி.மு.க மீதான மொத்த கடுப்பையும் இறக்கலாம். ஆனால் ஸ்டாலினிடம் பேசுகையில் அந்த சாயலே தெரியக்கூடாது.

ஒரு பாண்டேயிச மாணவனுக்கு இந்துத்துவ சிந்தனை ஜட்டி போன்றதென்றால் ஆளும்வர்க்க ஆதரவு வேட்டி போன்றது. வெறும் ஜட்டியோடு நீங்கள் ஒருக்காலும் பணியாற்ற முடியாது. ஆகவே தராதரம் பார்த்து வாலைக்காட்டவோ அல்லது நூலைக் காட்டவோ செய்யலாம்.

10. அனைத்துக்கும் மேலாக கர்மா என்றொன்று இருக்கிறது என்பதை நம்ப வேண்டும். நீங்கள் என்னதான் மல்லாக்கப் படுத்து குட்டிக்கரணம் போட்டாலும் மீடியாவில் பிராமணன் அடையக்கூடிய உயரம் என்றொன்று உண்டு, பிற்படுத்தப்பட்டவன் அடையக்கூடிய உயரம் என்றொன்று உண்டு. அவ்வாறே தாழ்த்தப்பட்டவன் அடையக் கூடிய உயரம் என்றொன்று உண்டு. அந்த விதிப்படி உங்கள் குலத்துக்கு உண்டான உயரத்துக்கு மட்டுமே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

ரங்கராஜ் பாண்டே
ஒரு பாண்டேயிச மாணவனுக்கு இந்துத்துவ சிந்தனை ஜட்டி போன்றதென்றால் ஆளும்வர்க்க ஆதரவு வேட்டி போன்றது. வெறும் ஜட்டியோடு நீங்கள் ஒருக்காலும் பணியாற்ற முடியாது.

இதற்கு மேலும் உங்கள் மனதில் தொழில் தர்மம்னு ஒன்னு இருக்கில்லையா எனும் எண்ணம் எழுந்தால் உடனடியாக பயிற்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கெல்லாம் பாண்டேவின் பெயரை உச்சரிக்கும் தகுதி கூட கிடையாது.

பாண்டே ஒரு பொய் சொன்னா அது நூறு உண்மைகளை கொல்லணும்.

பாண்டே ஒரு உண்மையை சொன்னா அது உலகமே காறித்துப்பற மாதிரி இருக்கணும்.

பாண்டே ஒரு சேதி சொன்னா காதுல ரத்தம் வரணும்.

தென்னாட்டின் ஆர்னாப்,
முடி உள்ள துக்ளக் சோ,
சுப்ரமணியம் சாமியின் ஆல்டர் ஈகோ
பரம பூஜனிய ரங்கராஜ் பாண்டேஜிக்கு ஜே ஜே!

–  வில்லவன்.

காக்கா முட்டைக்கு கலங்கியவர்கள் அறியாத சத்துணவின் கதை

0

காக்கா முட்டை படத்தில், கோழி முட்டை வாங்க முடியாத வறுமை திரைமொழியில் உணர்ச்சிகரமாக சித்தரிக்கப்படுவதாக பலரும் கருதுகின்றனர். உண்மை என்னவெனில் வறுமையையும் அதன் பிரச்சினைகளையும் நேரிட்டு நோக்கும் போது மனம் ஒன்றுவது கடினம். காரணம், வறுமையின் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வு ஏதுமில்லை என்பதோடு தமது மனிதாபிமானத்தை உடன் காட்டுவதற்கு வழியற்ற சோகங்களை பலரும் காது கொடுத்து கேட்பதில்லை.

ஒரு சினிமா வழியில் மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதற்கும், களத்தில் நேரடியாக செய்வதற்கும் பாரிய வேறுபாடு உண்டு. வறுமை குறித்த உண்மையை பிரச்சாரம் இல்லாமல் படம் பேசுகிறது என்பவர்கள் வறுமை குறித்த நேரடி அரசியல் நடவடிக்கைகளை தவிர்க்கவே செய்வார்கள்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
வறுமையின் பிரச்சினைகளுக்கு உடனடியான தீர்வு ஏதுமில்லை.

தமிழகத்தில் பெரும்பாலான அரசு மாணவர்களுக்கு சத்துணவு போடப்படுகிறது. அதில் புரதச்சத்து நிறைந்த பருப்பு வகைகள் தற்போது வாரம் ஒரு முறை ஆக்கிவிட்டார்கள். பா.ஜ.க மாநிலங்களிலோ முட்டையை தடை செய்துவிட்டார்கள். குறிப்பாக சத்துணவு ஊழியர்களை அரசு கடுகளவு கூட மதிப்பதில்லை. முப்பது வருடங்களாக பணிபுரிந்தாலும் தொகுப்பூதியம்தான். வேறு எந்த உரிமையும் அற்ற இந்த வேலைகளை அந்த மனிதர்கள் எத்தனை நெஞ்சுரத்துடன் செய்து வருகிறார்கள் என்பதறிய நீங்கள் நேரில் சென்று ஒரு சத்துணவு மையத்தில் பார்க்க வேண்டும்.

ஓய்வு பெற்ற பிறகும், புதிய ஆள் வரவில்லை என்பதால் ஊதியமின்றி (ஊதியமென்ன ஓரிரு ஆயிரங்கள்தான்) சமையல் செய்யும் பெண்கள், வீட்டு, உடல் பிரச்சினைகளை காரணம் காட்டி விடுமுறை எடுக்காமல் பிள்ளைகளுக்கு சமையல் செய்வதை அனிச்சை செயலாக மாற்றிக் கொண்ட ஊழியர்கள், முப்பது ஆண்டுகளாக அரசை எதிர்த்து எத்தனை எத்தனை போராட்டங்கள்…….

சத்துணவு நசிந்து போன கதைகளுக்கு முடிவில்லை.

காக்கா முட்டை பார்த்ததையே செல்ஃபி எடுத்து, ரெஸ்ட்ராண்டில் விருந்து சாப்பிட்டு அதுவும் பெப்சி-கோக்கோடு கொண்டாடியவர்கள் தமது மனிதாபிமானத்தின் தகுதி என்ன என்பதறிவதற்கு இந்த கட்டுரை உதவும்.

–    வினவு
______________________________

கடந்த ஏப்ரல் மாதம் (2015) சத்துணவு ஊழியர்கள் நடத்திய மாநிலம் தழுவிய போராட்டம் குறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் திரு.பழனிச்சாமி, சத்துணவு அமைப்பாளர்கள், சமையல் ஊழியர்கள் ஆகியோரைச் சந்தித்து பேசினோம்.

திரு பழனிச்சாமியிடம் நடத்திய நேர்காணல்

சத்துணவு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையின் தோற்றம், வளர்ச்சி பற்றி கூற முடியுமா?

எம்.ஜி.ஆர் 1982-ல் தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவு என்ற திட்டத்தை ஆரம்பித்தார்.

சத்துணவு திட்டம் சுரண்டல்கள்
“சத்துணவு ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்பது ஆபத்தான ஒன்று மேலும் இந்த முறை எல்லாத் துறைகளுக்கும் பரவக்கூடிய அபாயம் உண்டு”

ஆரம்பத்தில் பள்ளியின் தலைமையாசிரியர்களே இந்த வேலையில் பொறுப்பாளர்களாக அமர்த்தப்பட்டனர். கூடுதல் பணிச்சுமையினால் இந்தப் பணியை அவர்களால் சரிவர நிறைவேற்ற முடியவில்லை. இதனால் ஆசிரியர் பணி பாதிப்புக்குள்ளானது. எனவே அனைத்து ஆசிரியர் சங்கங்களும் 1983-ல் ஒருங்கிணைந்து அரசுக்கெதிராகப் இருவாரமாக போராட்டம் நடத்தின. அவர்களின் முக்கியமான கோரிக்கையே ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பணியை மட்டுமே செய்யமுடியும்; வேறு எந்த வேலைகளிலும் ஈடுபட முடியாது என்று போராடினார். இதன் விளைவாக 1983 ஜூன் மாதத்தில் சத்துணவு அமைப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

1980-களில் வேலை இல்லாத் திண்டாட்டத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. என்னைப் போன்ற படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது எட்டாக் கனியாக இருந்தது. இப்படியாக அரசு வேலை என்ற அங்கீகாரம், மற்றும் வேலை நிரந்தரம் என்பதால் நாங்களும் மிகவும் நம்பிக்கையோடு சத்துணவு வேலையில் சேர்ந்தோம்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
90% ஊழியர்களுக்கு சொந்த வீடே கிடையாது, நிறைய பேர் பெண்கள், அதிலும் விதவைப் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் கல்வியறிவில் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.

அந்த வேலைக்கு தொகுப்பூதியம் தருவது என்று அரசு முடிவு செய்தது. அப்போதே அரசு ஊழியர் சங்கத்தின் ஸ்தாபகர் எம்.ஆர்.அப்பன் அவர்கள், “சத்துணவு ஊழியர்களுக்கு தொகுப்பூதியம் என்பது ஆபத்தான ஒன்று மேலும் இந்த முறை எல்லாத் துறைகளுக்கும் பரவக்கூடிய அபாயம் உண்டு” என்று எச்சரித்தார். இன்றைய நிலை என்னவென்றால், அரசுத்துறையில் நிறைய பணியாளர்கள் தொகுப்பூதியம் தான் பெறுகின்றனர். 32 வருடங்களாக எங்களுடைய நிலையும் அதுதான்.

ஆரம்பத்தில் அமைப்பாளர்களுக்கு மாதம் ரூ 150, சமையலர்களுக்கு ரூ 60, உதவியாளர்களுக்கு ரூ 30 என்று சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 1,25,000 பேர் இதனடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

குறைந்த ஊதியம் தொடர்பாகவும் பிற வகைகளிலும் சத்துணவு ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன?

90% ஊழியர்களுக்கு சொந்த வீடே கிடையாது, நிறைய பேர் பெண்கள், அதிலும் விதவைப் பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் கல்வியறிவில் பின் தங்கிய நிலையில் உள்ளனர்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
மிகக் குறைந்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவை கடுமையான சிக்கல்களை உருவாக்குகின்றன

வறுமை காரணமாக யாராவது ஒரு படி அரிசி வீட்டிற்கு எடுத்துச்  சென்று விட்டால், எல்லா செய்திகளிலும் சத்துணவு ஊழியர்கள் எல்லாரும் திருடர்கள் என்ற எழுதுகின்றனர். மிகக் குறைந்த சம்பளம், ஓய்வூதியம் போன்றவை கடுமையான சிக்கல்களை உருவாக்குகின்றன. இதில் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி பணிநீக்கம் செய்யப்பட்டால் வாழ்க்கையே இருளில் மூழ்கிவிடுகிறது.

மேலும் அரசு வேலை வாங்கித்தருகிறேன் என்று சொல்லி அரசியல்வாதிகள் ரூ 2 லட்சம் முதல் ரூ 1.5 லட்சம் வரை லஞ்சம் பெறுகின்றனர். திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அரசுப்பணியில் இல்லாதவர்களுக்குத் தான் இந்த வேலை என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், இன்றோ போலிசுக்காரன் பொண்டாட்டி, டெப்யூட்டி தாசில்தார் பொண்டாட்டி என்று எல்லோரும் அமைப்பாளர்களாக உள்ளே நுழைந்து விட்டனர்.

ஆரம்ப காலத்தில் ஆளுங்கட்சியின் அராஜகம் கொஞ்ச நஞ்சமல்ல. அமைச்சர், வட்டம், கால் வட்டம், அரை வட்டம் என்று அவர்களின் தலையீடுகள் சத்துணவு ஊழியர்களுக்கு பெரும் குடைச்சலாக இருந்தது. யார் வேண்டுமானாலும் சமையலறைக்குள் வரலாம் என்ற நிலை இருந்தது. குறிப்பாக சமையல் வேலையில் ஈடுபட்ட இளம்பெண்களுக்கெதிராக பாலியல் வன்கொடுமைகள் நடந்தன. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் நான் வேலை பார்த்த இடத்தில் இருந்த சத்துணவு உதவியாளர் ஒருவர் அ.தி.மு.க பிரமுகர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார். இரவோடு இரவோடு சத்துணவு ஊழியர்கள் அனைவரும் மற்றும் அரசு ஊழியர் சங்கத்திலிருந்து கே.ஆர்.சங்கரனும் எங்களுடன் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு அந்த அ.தி.மு.க காலியை கைது செய்ய வைத்தோம்.

சத்துணவு ஊழியர் சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் பழனிச்சாமி

சவால்கள் நிறைந்த சூழல்களுக்கு மத்தியில், சத்துணவு ஊழியர்களின் பாதுகாப்பு, கோரிக்கைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் சங்கத்தின் முயற்சியால் 19-05-1985-ல் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் புதுக்கோட்டையில் உதயமானது. முதல் மாநாடு 1985 ஜூன் 25-ல் கோவையில் நடைபெற்றது. எங்களுடைய பிரதான கோரிக்கை என்னவெனில் “அரசு ஊழியராக்கப்பட வேண்டும், வரையறுக்கப்பட்ட ஊதியத்தைத் தரவேண்டும்”, நாங்கள் அன்று விடுத்த கோரிக்கை இன்றுவரை எந்த அரசாலும் நிறைவேற்றப்படவில்லை.

சங்கத்தின் மூலம் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடிந்ததா?

எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு சில சலுகைகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகுதான் தரப்பட்டதேயொழிய எந்த அரசாங்கமும் போராடாமல் தரவில்லை.

போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துவது நாங்கள், ஆனால் சலுகைகள் அறிவிக்கப்படுவதோ வேறொரு சங்கத்தின் வழியாக, அதாவது தி.மு.க, அ.தி.மு.க இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவான சத்துணவு சங்கங்கள் சில உண்டு, அவை போராட்டத்திலும் ஈடுபடுவதில்லை, ஊழியர்கள் நலனுக்கென்று எந்தக் கூட்டமும் நடத்துவதில்லை, ஆனால், நாங்கள் அரசுக்கெதிராகக் கடுமையான போராட்டத்தில் ஈடுபடும் போதோ, அரசு எங்களை அழைத்துப் பேசாமல் இவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பயன்படாத சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவிப்பார்கள். இது நிறைய நேரத்தில் ஊழியர்களின் மன உறுதியைக் குலைத்திருக்கிறது.

கடந்த ஏப்ரலில் நடந்த போராட்டத்தில் இது மாதிரியான 9 லெட்டர் பேடு சங்கங்கள் முழுவதும் அம்பலப்பட்டு விட்டனர்.

2015 ஏப்ரல் மாதம் நடந்த போராட்டம் பற்றி சொல்லுங்கள்.

1991-96-ல் வேலூரில் நடந்த மாநாட்டில், “சத்துணவு ஊழியர்களின் மொத்த சம்பளம் 450-ஐ மாற்றி அதை அடிப்படைச் சம்பளமாக மாற்றித் தர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தோம். அந்த நேரத்தில் அலுவலக உதவியாளர்களுக்கான அடிப்படைச் சம்பளம் ரூ 610-ஆக இருந்தது. இன்று அவர்களது சம்பளம் ஏறக்குறைய ரூ 15,000 முதல் ரூ 20,000 வரை ஆகும். எங்களுக்கும் ரூ 450 அடிப்படை சம்பளம் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் ரூ 12,000 முதல் ரூ 15,000 வரை வாங்கியிருந்திருப்போம்.

ஆனால் இப்போது கிடைக்கும் ஊதியம் சாப்பாட்டுக்கே போதாத நிலைதான் உள்ளது.

  1. அமைப்பாளர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  2. அமைப்பாளர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  3. அமைப்பாளர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  4. சமையலர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  5. சமையலர் 30 ஆண்டு பணி முடித்தவர்
  6. சமையல் உதவியாளர் 20 ஆண்டு பணி முடித்தவர்
  7. சமையல் உதவியாளர் 20 ஆண்டு பணி முடித்தவர்
விவரம் 1 2 3 4 5 6 7
1 ஊதியம் 3710 3580 3460 1520 1520 1110 1110
2 தர- ஊதியம் 500 500 500 300 300 200 200
3 ஆண்டு ஊதிய- உயர்வு 130 130 120 120 60 80 40
4 அகவிலைப்படி(113%) 4904 4757 4610 2192 2124 1571 1526
5 மொத்தம் 9244 8967 8690 4132 4004 2901 2876
6 ’வீட்டுவாடகைப்படி
7 ”நகர ஈட்டுப்படி
8 மருத்துவப்படி
9 மொத்தம்

பணி நிரந்தரம், 3,500 ரூபாய் ஓய்வூதியம் உட்பட 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரலில் போராட்டம் நடத்தினோம். தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களிலும் அரசே எதிர்பாராத வகையில் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளோம்; 3,2000 மையங்கள் மூடப்பட்டன, மொத்தம் 35,000 ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் வெளியீட்டிலிருந்து

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆளுங்கட்சியினரும், காவல்துறையும் எங்களைப் பல்வேறு வகையில் ஒடுக்கினர். நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்தவர்களை சமைக்க வைத்தது, ஆளுங்கட்சி ரவுடிகளின் மிரட்டல்கள், பூட்டை உடைத்து சமைக்க வைத்தது, செல்பேசியில் மிரட்டியது, தகாத வார்த்தைகளால் திட்டியது என சவால்கள் ஏராளம்.

தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் உங்கள் கோரிக்கைகளை ஆதரிக்கிறார்களா?

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
ஜெயலலிதா இம்முறை ஆட்சிக்கு வந்த போது, அம்மா உணவகத்திற்காக துவரம் பருப்பை திருப்பி விட்டதால், வாரம் முழுவதும் மாணவர்களுக்கு பருப்பு கிடைத்த நிலை மாறி வாரம் ஒரு நாள் என்று மாறிவிட்டது.

எங்களைப் பொறுத்த வரையில் இரண்டு கட்சிகளும் எங்களுக்கு அநீதி தான் இழைத்து வந்திருக்கின்றன, எங்களுடைய அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற இந்த இரண்டு கட்சிகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக, ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்ததும் ஏமாற்று என்று இரட்டை வேடம்தான் போட்டுக் கொண்டிருந்தனர்.

1991-96 அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், நாங்கள் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்தித் தரக்கோரி வேலூரில் மாநாடு நடத்தினோம். மேலும் பல கட்ட போராட்டங்களும் நடத்தினோம். அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி எங்கள் மேல் மிகுந்த கருணை காட்டும் உள்ளத்தோடு ஒரு அறிக்கை விட்டு ஒரு திருக்குறளையும் சொன்னார்.

”சத்துணவு ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் எதுவும் நிறைவேறாமல் கண்ணீரும் கம்பலையுமாக வீடு திரும்புகின்றனர்.

அல்லல்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

என்பதை ஆளும் அ.தி.மு.க நினைவிற்கொள்ள வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதற்கு சரியான தீர்வு வழங்கப்படும்” என்று கூறியிருந்தார்.

ஆனால், அதே கலைஞர் தான் 2011-ல் கோட்டை முற்றுகைப் போராட்டத்தின் போது எங்களைக் கடுமையாக ஒடுக்கினார். எங்களை மாவோயிஸ்டுகள் என்றெல்லாம் வர்ணித்துப் பேசினார்.

1988-ல் மூன்றாவது மாநில  மாநாடு நடந்தது. அதிமுக ஆளுங்கட்சியில் கொ.ப.செ-வாக இருந்த ஜெயலலிதா, சத்துணவு அமைப்பிற்கான உயர்மட்டக்குழுவின் தலைவர் பதவியிலும்  நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, “நீங்கள் குறைந்த சம்பளத்திற்கு மகத்தான சமையல் வேலையைச் செய்வதால் உங்களை சத்துணவு ஊழியர்கள் என்று அழைப்பதை விட “தேவதூதர்கள்” என்றே இனிமேல் அழைக்க வேண்டும்” என்றார். மேலும் “உரிய நேரத்தில் உரிய முறையில் எம்.ஜி.ஆரிடம் உங்களது கோரிக்கைகளைச் சொல்லி அவற்றை நிறைவேற்றித் தருகிறேன் ”என்று சொன்னார்.

இன்று 5-வது முறையாக முதல்வர் பதவியும் ஏற்று விட்டார், ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை. ஜெயலலிதா மக்கள் முதல்வராக இருந்த போதும், தமிழக முதல்வராக இருந்த போதும் இதே விதமான ஒடுக்கு முறைகள் தான்.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு 30 ஆண்டுகளில் மேம்பட்டிருக்கிறதா?

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
ஊட்டச் சத்து குன்றியிருக்கும் ஏழை மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான்.

ஊட்டச் சத்து குன்றியிருக்கும் ஏழை மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் தான். ஆனால் இன்றைய நிலையில் அரசாங்கம் இதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை.  புரதச்சத்து என்பது குழந்தைகளுக்கு, குறிப்பாக ஏழைக் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்று; ஆனால் ஜெயலலிதா இம்முறை ஆட்சிக்கு வந்த போது, அம்மா உணவகத்திற்காக துவரம் பருப்பை திருப்பி விட்டதால், வாரம் முழுவதும் மாணவர்களுக்கு பருப்பு கிடைத்த நிலை மாறி வாரம் ஒரு நாள் என்று மாறிவிட்டது. 13 வகையான  உணவு என்ற பெயரில் சத்தான சாப்பாட்டுக்கு தடை போடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் Central Canteen என்ற ஒரு திட்டம் கர்நாடகாவில் 25,000 குழந்தைகளுக்கு உணவு தயாரிப்பதற்காகத் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இதை நடைமுறைப்படுத்த மத்திய அரசின் ஆதரவு பெற்ற ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது. ஆளும் அதிமுக கட்சியும் இவர்களுடன் சத்தமின்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

த்துணவு அமைப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
“அரசாங்கத்த நடத்துறவங்களுக்கு புத்தியே கிடையாது, கொஞ்சம் கூட அடிப்படை அறிவும் கிடையாதுங்க!”

“சங்கத்தில் இருக்கிறீர்களா”

“இருக்கிறேன், எந்த சங்கம் என்ற போது அதெல்லாம் தெரியாது சார்! மாச மாசம் பணம் கட்டுவோம் அவ்ளோ தான், எங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் பாண்டியன் சார் தான்!..”

“போராட்டத்திலே கலந்து கொண்டீர்களா”

“இல்ல, ஒன்றியத்துல உத்தரவு போட்டுட்டாங்க அதனால கலந்துக்கல”

இன்னொரு அமைப்பாளர்

“பழனிச்சாமி தலைவராக இருக்குற சங்கத்துல இருக்கேன், நிறைய போராட்டங்கள்ல கைதாயிருக்கேன்! ஆனா இந்த அரசாங்கத்துல எனக்கு நம்பிக்கையில்ல.

நான் இங்க இருக்கேன், என் பொண்டாட்டி புள்ளங்கல்லாம்  என் சொந்த ஊருல இருக்காங்க! டிரான்ஸ்பர் கேட்டு பல வருசமாச்சு ஒருத்தனும் குடுக்க மாட்டேங்குறான்! ஊர்ல விவசாய நிலமெல்லாம் இருக்கு ஆனா தண்ணியில்ல! அதனால தான் நான் இங்கயே இருக்கேன்.

மூணு புள்ளங்க இருக்கு, பொம்பளப் புள்ளய இப்பத்தான் கட்டி கொடுத்திருக்கேன்!  ரெண்டு பசங்கள படிக்க வைக்கணும், என்னோட நெலம எம்புள்ளங்களுக்கு வந்துறக்கூடாதுன்னு நெனச்சேன்! அதுக்கு இந்த சம்பளத்த வச்சு ஒண்ணும் செய்ய முடியாது அதனால தான் நைட்ல செக்யூரிட்டி வேலைக்கும் போறேன்!”

“உங்களுக்கே சம்பளம் கம்மின்னு சொல்லுறீங்க, அப்படின்னா சமையலர், உதவியாளர் நிலையெல்லாம் எப்படி”

“அவுங்க நெலமையெல்லாம் வெளில சொல்ல முடியாது, அவுங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லங்க, மாசம் 3,000 ரூபா சம்பளத்த வெச்சுகிட்டு என்ன சார் பண்ணுவாங்க! வீட்டுக்கும் வேல பாக்குற இடத்துக்கும் 20, 30 கி.மீ தூரம் இருக்கும், இத வெச்சுகிட்டு அவுங்களால பஸ் செலவுக்குக் கூட சமாளிக்க முடியாது. அரசாங்கத்த நடத்துறவங்களுக்கு புத்தியே கிடையாது, கொஞ்சம் கூட அடிப்படை அறிவும் கிடையாதுங்க!

போன ஆட்சியில பென்சன் 700 ரூவா தான் கொடுத்தாங்க, அதுக்கு ஒரு போராட்டம் நடத்துனோம்! அப்பறம் தான் 1,000 ரூபா பென்சனா உயர்த்துனாரு கலைஞரு! எங்க போராட்டத்த நசுக்குனதுல கலைஞருக்கு முக்கியமான பங்கு இருக்கு, அவரு நெனச்சுருந்தா அப்பவே Pay Commission-ல சொன்னது மாதிரி பென்சன உயர்த்திக் கொடுத்திருக்கலாம், ஆனா ஒன்னுமே செய்யலிங்க!..”

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
சரசுவதி அம்மாள் (நடுவில்), அவர் மருமகள் (இடது), மல்லிகா (வலது).

சென்னைப் புற நகர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் மல்லிகாவின் வீட்டிற்குச் சென்றபோது, பள்ளிக்குச் சென்று வேலைகளை முடித்து விட்டு தலைவலியோடு வந்திருந்த அவர், இருந்தாலும் எங்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார். சத்துணவு ஊழியர்களின் போராட்டம் குறித்து கேட்டபோது, தான் பாலர் பள்ளியில் சமையல் வேலை செய்வதாகவும், நடுநிலைப்பள்ளியில் வேலை செய்து ஓய்வு பெற்ற ஒருவரிடம் செல்வோம் என்று அழைத்துச் சென்றார்.

60 வயதைத் தொட்ட சரசுவதி அம்மாள் 30 வருடங்களுக்கு முன்னர் 60 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்க்க ஆரம்பித்தவர் இறுதியாகப் பணி ஓய்வு பெறும்போது பெற்ற சம்பளம் ரூ 3,250. ஓய்வுபெற்ற பின் முதல் வருடத்தில் பி.எப் பணம் என்பதாக 20,000 ரூபாயும், சென்ற வருடம் 8,000 ரூபாய் பென்சன் என்ற பெயரில் கொடுத்திருக்கின்றார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, 1,000 ரூபாய் பென்சன் பணம் வரும் என்று பள்ளியில் சொன்னதாகவும், மேலும் எப்போது வருமென்பது பற்றி எதுவும் தெரியாது என்பதாகவும் சொல்லிவிட்டு “சார்! முதியோர் பென்சனும் 1,000 ரூவா தான், ரிடேர்மெண்ட் பென்சனும் 1,000 ரூவா தான், இத வாங்குறத வுட்டுட்டு அதையாவது வாங்கலாமான்னு கூட தோனுது சார்! கஷ்டப்பட்டு ஒழச்சாலும் அதே காசு தான், சும்மா இருந்தாலும் அதே காசு தான்னா, மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார்! இதெல்லாம் யாரு கேப்பா?? ” என்று மிகவும் விரக்தியாக பதிலளித்தார்

“இப்ப என்னம்மா பண்ணிகிட்டு இருக்கீங்க”

”நான் வேலையிலிருந்து ரிட்டயர் ஆன பிறகு, இன்னும் யாரையும் வேலைக்கு எடுக்கல! ஆனாலும் ஆறு மாசமா வேலைக்குப் போனேன்”

சத்துணவுத் திட்டம் - சுரண்டல்
“மழை பெஞ்சுச்சுன்னா, அடுப்ப ஊதி ஊதி சமைச்சு முடிக்குறதுக்குள்ள எத்தன செரமம் தெரியுமா?” – சத்துணவு சமைக்கும் இடம் (கிராமத்து பள்ளி ஒன்றில்)

“சரிம்மா! சம்பளம் எதும் கொடுத்தாங்களா?”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார், நானா வேலைக்குப் போனேன், பாவம்! புள்ளங்களுக்கு சமச்சுப் போட யாரும் இல்லன்னு நெலம வந்துறக்கூடாதுல்ல!

காலியான அந்த இடத்துல என்னோட மருமகளுக்கு இடம் தரேன்னு, ஸ்கூலுல சொல்லிருக்காங்க, புள்ளயும் எங்கேயும் வெளியில வேலைக்குப் போனதுல்ல, அதனால மருமகள சத்துணவு சமையல் வேலைக்கு அனுப்பிட்டு, நான் வீட்டு வேலைக்கு போய்ட்டு வரேங்க”

“ஏனம்மா, இப்படி நீங்க கஷ்டப்படனும்”

“சார், எம் பையன்,  ஒரு கியரு கம்பெனில வேல பாக்குறான். லோனு போட்டு வீட்ட கட்டிபுட்டான், இப்போ கடனு மேல கடனாகிப்போச்சு. அதுனால OT  பாத்தா தான் கொஞ்க காசு கூட கெடைக்கும்னு வெலையே கதின்னு கெடக்குறான். அதனால தான் நானும் என் பங்குக்கு எதாவது வேலைக்கு போனா கொஞ்கம் ஒத்தாசையா இருக்கும்ல”

“சரிங்கம்மா! சமையல் தேவைக்கான பொருளெல்லாம் யார் பொறுப்பு”

“அதெல்லாம், டீச்சர் வாங்கித் தந்துருவாங்க சார், எங்க வேல சமச்சுப்போடுறது மட்டும் தான் சார், டீச்சர் வேற ஊருலேந்து வர்றாங்க, அவுங்களுக்கு எல்லாமே தெரியும் சார்.”

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
முன்னடியேல்லாம் நாங்க சோத்த தனியா வடிச்சு, சாம்பார் தனியா வச்சு கொடுப்போம். இப்பெல்லாம் இந்த அம்மா வந்ததுலேர்ந்து பருப்பு ஒரு நாளு மட்டும் தான் போடச்சொல்லி உத்தரவு”

“சத்துணவு ஊழியர்கள் நிறைய பொருட்களை எடுத்துச் சென்று விற்று விடுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே”

“ஸ்கூலுல 45 நாட்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பாமாயில் எண்ணெய் எல்லாம் இருக்கும். டீச்சர் வந்து தான் எங்களுக்கு எடுத்துக் கொடுப்பாங்க! மத்தபடி 10 முட்டை மிஞ்சுனுச்சுனா கூட, அத அடுத்த நாள் கணக்குல ஏத்திடுவாங்க. இதுல எங்களுக்கு எந்த வேலயுமேயில்ல சார்! சோறு மீந்து போற மாதிரி இருந்தா அத வீட்டுக்கு எடுத்துட்டு வந்து ராத்திரிக்கு சாப்டுக்குவோம், அவ்ளோ தான் சார்!”

“சத்துணவு வேலையெல்லாம் ஒரு வேலையாகவே கருதக்கூடாது, அது என்ன ஒரு பாதி நாள்(பகுதி) வேலை மட்டும் தானே, இதுக்கு எந்தக் கல்வித் தகுதியும் தேவையில்லை தானே! என்கிறார்களே”

“சார்! அதேப்படி அது வேலையே இல்லன்னு சொல்ல முடியும், அப்போதெல்லாம் வெறும் கூரைக் கொட்டாய் தான்! மழை பெஞ்சுச்சுன்னா, அடுப்ப ஊதி ஊதி சமைச்சு முடிக்குறதுக்குள்ள எத்தன செரமம் தெரியுமா? கூரைய பொத்துகிட்டு மழை வேர சொர்ருன்னு ஊத்தி நாங்க நனைஞ்சே  போயிருவோம்! அடுப்பு வேற அணையாம பாத்துக்கணும், அப்பப்ப ஊதி விட்டுட்டு தண்ணி ஊத்தாத எடத்துல போயி நின்னுக்குவோம், இப்ப மட்டும் என்ன அதே வெறக வச்சுத்தான் சமைக்கிறோம், என்ன கட்டடத்துக்குள்ளே சமைக்கிறோம், அவ்ளோ தான்….ஆனா பாருங்க அடுப்பு புகையில நின்னு நின்னு என்னோட கண் பார்வையே மங்கிபோயி, இப்ப தான் கண் ஆபரேசன் பண்ணிருக்கோம், ஆனாலும் பழைய மாதிரி பார்வை இல்லங்க”.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
“ஒன்பது மணிக்கு ஸ்கூலுக்குல்ல போனா, அரிசிய கழுவி சுத்தம் செஞ்சு, பிறகு தண்ணி நெரப்பி அரிசிய ஊற போட்டுட்டு, மத்த வேலையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டு, சரியான நேரத்துக்கு சாப்பாடு போட்டுட்டு, பாத்திரமெல்லாம் கழுவி முடிக்க மத்தியானம் 2.30 மணியாகிடும்.”

“என்ன மாதிரியான சமையல் செஞ்சு போடுவீங்க”

“புளி, எலுமிச்சை, தக்காளி, பிரிஞ்சி சாதம், நான்கு நாட்களும், வெள்ளியன்று பருப்பு சாம்பார், முட்டை தொக்கு செய்து கொடுப்போம்”

“அது சரி தெனமும் பருப்பு சேக்குறதில்லையா?”

“சார்! முன்னடியேல்லாம் நாங்க சோத்த தனியா வடிச்சு, சாம்பார் தனியா வச்சு, ரெண்டு வரிசையில புள்ளங்கல வரச்சொல்லி ஒருத்தர் சோறு, ஒருத்தர் சாம்பாருன்னு கொடுப்போம். புள்ளங்க ரெண்டு மூனு மொற கேட்டு வாங்கி சாப்புடுங்க! இப்பெல்லாம் இந்த அம்மா வந்ததுலேர்ந்து பருப்பு ஒரு நாளு மட்டும் தான் போடச்சொல்லி உத்தரவு” என்று கவலையுடன் பதிலளித்தார்.

“சத்துணவு வேலையையும் பார்த்துகிட்டு வேற வேலைக்கு போனதுண்டா?”

“ஒன்பது மணிக்கு ஸ்கூலுக்குல்ல போனா, அரிசிய கழுவி சுத்தம் செஞ்சு, பிறகு தண்ணி நெரப்பி அரிசிய ஊற போட்டுட்டு, மத்த வேலையெல்லாம் செஞ்சு முடிச்சுட்டு, சரியான நேரத்துக்கு சாப்பாடு போட்டுட்டு, பாத்திரமெல்லாம் கழுவி முடிக்க மத்தியானம் 2.30 மணியாகிடும். அப்பறம் எங்க சார் வேற வேலைக்கெல்லாம் போக முடியும்”

லட்சுமி, கீதா என்ற இரு சத்துணவு சமையலர்களை சந்தித்தோம். லட்சுமி மிகவும் வெளிப்படையாக, தயக்கமின்றி பேசினார்.

“ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை”

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
லட்சுமி, கீதா

“சார்! நாங்க இன்னா சார் பண்றது, HM கூப்புட்டு சாப்பாடு கரெக்டான டைமுக்கு ரெடியா இருக்கனும், இல்லாவிட்டால் கலெக்டர் ஆபிசுக்கு போன் போட்ருவோம்-னு மெரட்டுராரு, அப்பால டீச்சருக எல்லாம் கலந்து பேசி போயிட்டு வாங்கன்னா, சந்தோசமா போய்ட்டு வருவோம்..ஆனா யாரும் எதுவுமே சொல்லல… நாங்க இன்னா சார் பண்றது, சமச்சுப் போடுன்னா அத செய்யனும், புள்ளங்களும் பாவம்ல….”

“முட்டையெல்லாம் பதுக்கி வெக்கிரீங்கன்னு எல்லாரும் சொல்லுராங்களே”

“சார், எங்கள நீங்க ஒண்ணும் நம்ப வேணாம்,  நாங்க தப்பு பண்ணுனா கூட மறைக்கத்தான் பார்ப்போம், நேரா இங்க உள்ள புள்ளங்ககிட்ட போயி கேளுங்க, அதுங்க பொய் சொல்லாதுங்க….ஒவ்வொரு புள்ளங்களுக்கும் முட்டை கொடுக்குறப்ப சில புள்ளங்க வேணாம்னு சொல்லும், அப்ப நான் அவுங்ககிட்ட அதெல்லாம் முடியாது சாப்புட்டு தான் ஆகணும், அப்படியும் முடியலன்னா, இத வாங்கிக்கிட்டு வேற எதாவது பண்ணிக்கோ..என்று தான் சொல்வேனே தவிர, ஒரு புள்ளக்கி ஒரு முட்ட சேர்ந்தே ஆகணும்” என்றார்.

சத்துணவுத் திட்டம் சுரண்டல்
“சத்துணவு எல்லா நாளும் சாப்பிடுவேன், தேர்வு நேரங்களில் மதியம் செல்வதால் சத்துணவு காலியாகிவிடும்” – சூரியா, பிரஜீத்

சூர்யா என்ற மாணவர் அரசு உதவி பெறும் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். 8 வயதில் தந்தையை இழந்தவர், தங்கை, தாய் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வருகின்றார்.”சத்துணவு எல்லா நாளும் சாப்பிடுவேன், தேர்வு நேரங்களில் மதியம் செல்வதால் சத்துணவு காலியாகிவிடும் எனவே வீட்டில் இருப்பதை சாப்பிட்டு விட்ட போவேன். வீட்டுச் சாப்பாட்டை விட சத்துணவு நன்றாக இருக்கும்” என்றார்.

அதே பள்ளியில் படிக்கின்ற இன்னொரு மாணவன் பிரஜீத் “தந்தை வேறு ஒருவருடன் சென்று விட்டதாகவும், அம்மா வீட்டு வேலை செய்து தன்னையும், தன் தங்கையையும் பார்த்துக் கொள்கிறார். சத்துணவு சாப்பாடு தினமும் சாப்பிடுவதாகவும், வேண்டுமளவு சாப்பாடு தருவார்கள், சாப்பாடும் நன்றாக இருக்கும்” என்று கூறினார்.

இவரைப் போன்ற மாணவர்களுக்கு இப்போதைக்கிருக்கும் ஒரே ஆரோக்கியமான ஊட்டச்சத்து வழி இந்த சத்துணவுக் கூடங்கள்தான். குடியால் வருமானத்தையும் நிம்மதியையும் இழக்கும் குடும்பத் தலைவர்கள், வேறு வழியின்றி அல்லாடும் குடும்பத் தலைவிகள், இடையில், தானே வளரும் குழந்தைகள்…. இத்தகைய சூழ்நிலையில் வருங்காலத் தலைமுறையின் ஆரோக்கியத்தை கொஞ்சமாவது வழங்குகிறது இந்த அரசுத் திட்டம். ஆனால் அந்த திட்டத்தின் இதயமான சத்துணவு ஊழியர்களை இதே அரசு எப்படி கொடூரமாக நடத்துகிறது என்பதை புரிந்து கொண்டால் ஒரு கேள்வி எழுகிறது.

சத்துணவு, ஆரோக்கியம், ஊட்டச்சத்து போன்றவை குறித்து ஐ.நா முதல் இந்திய அரசு, தன்னார்வக் குழுக்கள் முதல் காக்கா முட்டை படம் வரை பேசுகிறார்கள். எனில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கச் செய்யாமல் பறிக்கும் அந்த வில்லன்கள் யார்?

– வினவு செய்தியாளர்கள்