Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 589

காக்கா முட்டையில் பீட்சா கருணை சாத்தியமா ?

23

kaaka muttai vinavu (2)க்கள் திரையரங்கு (மல்டி பிளக்ஸ் அல்லாத அரங்கு) ஒன்றில் காக்கா முட்டை பார்த்த போது, எந்தக் காட்சிகளுக்கு அதிகம் கைதட்டல் என்று எண்ணினால் மொத்தம் மூன்று. தோசை மாவைக் கொண்டு ஆயா பீட்சா சுடும் காட்சி, சிறார் தள்ளு வண்டியில் தள்ளாடும் தண்டி வண்டி ஒன்று ஏறி கவிழ்ந்த காட்சி, பீட்சா நல்லாவே இல்லையே எனும் சிறுவர்களின் கடைசிக் காட்சி. மூன்றிலும் நகைச்சுவையோடு இழையோடும் உணர்ச்சி எது?

அது ஏமாற்றத்தின் சுய எள்ளலா? இல்லை ஆசைப்பட்டதை விட அகப்பட்டதே மேல் எனும் தெளிவா? அல்லது தரப்பட்ட வாழ்க்கை யதார்த்தத்தை சிரித்துக் கொண்டே ஏற்கும் பக்குவமா? அடி வாங்கிய பிறகு வேறுவழியின்றி வரும் அமைதியின் அருமையா? ஏன், அப்துல் கலாமின் வல்லரசு இந்தியக் கனவை ஒரு கம்மாக்கரை ஆண்டி பேசினால் எப்படியிருக்கும் எனலாமா?

தெளிவாகச் சொல்வதாக இருந்தால் இந்தப் படம் ஏழ்மையைக் கொண்டாடுகிறது. அந்தக் கொண்டாட்டத்தையே கருணை உணர்ச்சியாக படம் பார்ப்போர் சிலாகிக்கிறார்கள்.

ஏழ்மையின் துயரத்தை, உலகமயமாக்கத்தின் விளைவை பிரச்சார நெடியில்லாமல் வேறு எப்படி காட்ட முடியும் என்று இணையத்தில் வாழ்த்தியும் பாராட்டியும் ஏராளம் எழுதியிருக்கின்றனர். ஆனந்த விகடனின் 60 மதிப்பெண் அதற்கோர் குறியீடு. எனினும், சற்று நிதானமாக பார்த்தால் இந்தப்படத்தில் ஏழ்மை பற்றிய நமது பார்வையில் நெகிழ்ச்சியும் உணர்ச்சியும் இருக்குமளவுக்கு உணர்வு இல்லை என்பதை கசப்புடன் ஏற்க வேண்டியிருக்கும்.

இல்லையேல் சென்னை சைதாப்பேட்டை திடீர் நகரைப் போன்று புது தில்லியின் ரவிதாஸ் காலனியையும் நேசிக்க வேண்டி வரும்.

சுற்றிவரும் வாழ்க்கையுள்ள சென்னை வாசிகளுக்கு சைதை திடீர்நகர் குப்பம் பரிச்சயமான ஒன்று. ஆனால், அந்தப் பார்வை வானிலிருந்து மண்ணைப் பார்க்கும் பயணப் பார்வை. இயக்குநர் மணிகண்டனின் கேமராவும் அப்படி சில முறை காட்டுகிறது. சைதை அடுக்கு மாடிகளிலிருந்து பார்க்கும் போது தீப்பெட்டி வரிசைகளாய் ஏராளம் கூரைகள். கூவக்கரையில் ஒதுங்கியிருக்கும் மக்கள் வாழ்க்கையை இறங்கி வந்து பார்க்க வேண்டிய தேவை என்ன? கொசு, சாக்கடை, வறுமை, குடி, சண்டை இதைத்தாண்டி என்ன என வழக்கமாக சலித்துக் கொள்ளும் சென்னைவாசிகள் இந்தப் படத்தின் மூலம் அங்கே மகிழ்ச்சியும் இருப்பதாக அறிகிறார்களோ?

kaaka muttai vinavu (1)திடீர்நகரைச் சேர்ந்த இரு சகோதரர்களான சிறுவர்கள். அப்பா சிறையில், அம்மா சிறை மீட்பின் வலியில். அமர்ந்தபடியே பேரன்களின் சேட்டைகளுக்காக வாதிடும் ஆயா, சோம்பல் முறித்தவாறே தூங்கும் நாய்க்குட்டி. பெயரில் நகரமென்றாலும் இதர மக்கள் வழக்கில் இது ஒரு குப்பம். குப்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் விளையாடும் காலி மனை. மனையின் மரத்திலுள்ள காக்கா கூட்டில் முட்டைகளை எடுத்து சாப்பிடும் சகோதரர்கள். காலி மனையை விலைக்கு வாங்கும் பீட்சா முதலாளி.

பீட்சாவை சாப்பிட நினைத்து காசு சேர்த்து அது இயலாமல் போய், புது உடை வாங்கி, பீட்சா கேட்டு அடி பட்டு, அந்த அடி தற்செயலாய் ஊடக பரபரப்பாய் மாற, பீட்சா முதலாளி சிறுவர்களை அழைத்து பீட்சா துண்டுகளை ஊட்டி விசயத்தை தணிக்க, இறுதியில் பீட்சா நல்லா இல்லையே என சிறுவர்கள் தெளிய படம் முடிகிறது.

ஒரு ஆவணப்படத்தின் சாயலில் அதிகம் மிகை உணர்ச்சி காட்சிகள் இன்றி, திருத்தமான காட்சிகளின் தொகுப்பில், கதையில் விறுவிறுப்பும் காட்சிகளில் அமைதியும் கொண்டு ஒரு தமிழ்ப்படம் வெளியாவது அரிது. மசாலா ஃபார்முலா இல்லாமல் ரசிகர்கள் திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்று திரையுலக பெரு முதலைகள் டாஸ்மாக்கை நியாயப்படுத்துவது பொய்யென மற்றொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் மாஸ், அஞ்சான், உ.வில்லன் போன்ற மசாலாக்கள் தூக்கி எறியப்பட்ட காலத்தில் ஒரு குப்பத்தின் வாழ்க்கையை சொல்லும் படம் தூக்கி வைக்கப்பட்டு கொண்டாடப்படுவது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது.

எனினும், இந்தப் படத்தில் மசாலா இல்லையென்றாலும் வேறு ஒன்று தூக்கலாக இருக்கிறது. அதுவே நம் விமரிசனத்திற்குரியது.

சென்னையின் திடீர் நகரைப் போன்ற குப்பங்கள் அடிப்படையில் ஊர்களின் அருகில் இருக்கும் சேரிகளைப் போன்றவை. குப்பங்களின் சிறுவர்கள் அல்லது இளைஞர்களை வேலைக்கு வைக்கும் ஆதிக்க சாதி சென்னை சிறு முதலாளிகள், அவர்களை ‘சேரிப்பசங்க’ என்றே இழிவழக்காக அழைப்பார்கள். கிராமங்களில் இருக்கும் இயற்கையான வாழ்வியல் வசதிகள் கூட இங்கே இல்லை என்பதால் சென்னையின் சேரி மக்கள் ஊர்ப்புற சேரி மக்களோடு கணிசமாக மாறுபடுகிறார்கள்.

oliwer twist1838-ம் ஆண்டில் ஆலிவர் டிவிஸ்ட் நாவலை வெளியிடுகிறார் சார்லஸ் டிக்கன்ஸ். அந்தக் கதையில் சித்தரிக்கப்படும் லண்டன் வாழ்க்கையில் வரும் உதிரிப்பாட்டாளிகள்தான் முதலாளித்துவம் உருவாக்கிய புதுவகை ஏழைகள். இவர்களையே இன்றைய அறிஞர்கள் மட்டுமல்ல தமிழ் இணைய அரட்டை எழுத்தாளர்கள் கூட விளிம்புநிலை மக்கள் என்று தவறாக அழைக்கின்றார்கள்.

மையம், விளிம்பு என்ற பதமே மார்க்சியத்திற்கு எதிராக முதலாளித்துவம் கொண்டு வந்த சொற்பதம். அந்தjf பதம் பின்நவீனத்துவ சிந்தனை ஊடாக வந்திருந்தாலும் மையத்தில் இருக்கும் முதலாளி x தொழிலாளி முரண்பாட்டை ஓரத்தில் உதிரியாக இருக்கும் சிறுதிருடர்கள், விலை மாதர்கள், திருநங்கைகள், உதிரிவேலை செய்பவர்கள் தலையில் சுமத்தி உண்மையில் அந்த முரண்பாட்டை இல்லையென ஆக்க நினைக்கிறது இத்தவறான கருத்து. குப்பங்களின் ஏழைகளை இந்த இயக்குநர் பார்ப்பதிலும், அந்தப் பார்வையை கொண்டாடும் இரசிகர்களின் கருணையிலும் கூட அந்தத் தவறு வேறு வகையில் மையம் கொண்டிருக்கிறது.

உதிரிப்பாட்டாளிகளின் பண்புகளை தோழர் மாவோ கச்சிதமாக வரையறுக்கிறார். இன்றைக்கு என்ன வேலை, என்ன ஊதியம் என்று தெரியாமல் நகரத்து இழுப்பில் வழுக்கிச் செல்லும் இம்மக்களிடமிருந்து திருடர்களும், ரவுடிகளும் ஏன் உருவாகிறார்கள், ஆளும் வர்க்கங்கள் இவர்களை தமது சேவைக்கு பணியமர்த்துவது ஏன், திட்டமிட்ட வாழ்க்கை இல்லாத நிலை இலக்கணமான சமூக மதிப்பீடுகளை இல்லாமல் ஆக்குவது எப்படி என்று விளக்கும் மாவோ முதலாளித்துவத்தின் முரண்பாடு முற்ற முற்ற இம்மக்கள் அதிகரிப்பார்கள் என்கிறார். ஆகையால், இவர்களையும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நெறிப்படுத்தி அணிதிரட்டுவது தவிர்க்க இயலாதது என்கிறார். இன்றோ இந்தக் கடமை மலை போல திரண்டு நிற்கிறது.

திடீர் நகரின் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை இயக்குநர் உள்ளார்ந்து அறிந்திருக்கவில்லை. உதிரிப்பாட்டாளிகள் கூவம் கரையில் வாழ்ந்தாலும் முழு சென்னையின் நரம்பு மண்டலத்தையும், அதன் வழியே பாயும் ரத்த ஓட்டத்தையும் ஓரளவுக்கு அறிவார்கள். அதாவது முழு நகரத்திற்கும் சேவையாற்றும் வழியில் அவர்கள் பெருநகர வாழ்க்கையின் இரு பக்கங்களையும் குறிப்பிட்ட அளவுக்கு தெரிந்திருப்பார்கள்.

படத்தில் வரும் சிறுவர்களுக்கு பீட்சா என்றால் என்னவென்றே தெரியாது, புதுத்துணி வாங்க சிட்டி சென்டர் போகிறார்கள், பீட்சா டெலிவரி இளைஞரை புதிதாக பார்க்கிறார்கள். இவையெல்லாம் யதார்த்த மொழியில் சொன்னால் லாஜிக் மீறல்கள். சென்னையில் 10, 50, 100 ரூபாய்க்கு பிராண்டட் சட்டை கிடைப்பதோ, இல்லை அம்மா உணவகம் அல்லாத கடைகளில் 2 ரூபாய்க்கு இட்லி கிடைப்பதோ, இல்லை உயர்ரக பேக்கரிகளின் கேக்கு தூள்கள் கப்பு ஒன்றுக்கு ஐந்து அல்லது பத்து ரூபாயில் வாங்க முடியும் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியும்.

kaaka muttai vinavu (8)
இயக்குநர் மணிகண்டன், தனுஷ் சிறுவர்களுடன்

மேலும், “ஓகே கண்மணி”யில் வரும் “நேற்று என்பது இன்றில்லை நாளை நினைப்பே ஓ தொல்லை, இன்று மட்டும் கிங் அண்ட்  குயினா” எனும் அரதப்பழசான இளையோர் மகிழ்ச்சி இவர்களுக்கும் பொருந்தும். அதாவது வேலை இருக்கும் நாட்களில் அதுவும் தற்செயலாக அதிகம் ஊதியம் கிடைக்கும் பட்சத்தில் அன்று தீபாவளிதான். கறியோ, குடியோ, பிரியாணியோ காட்டு வெள்ளமாய் ஓடும். வேலையில்லாத நாட்களில் நாட்கணக்கில் கால்வயிற்றுக் கஞ்சியோடும் ஓட்டுவார்கள். இரண்டிலும் அவர்கள் அனேகமாய் ஒரே மனநிலையில்தான் இருப்பார்கள். அதாவது நடுத்தர வர்க்கத்தின் ஜாலி, துன்பம் என இருமைகளுக்கு இங்கே பொருளில்லை.

நாட்டுப்புறங்களில் இருந்து இங்கே சமீபத்தில் குடியேறிய ஏழை சிறுவர்கள் கூட சடுதியில் நகரத்து அடையாளங்களில் கை தேர்கிறார்கள். பீட்சாவும், ஸ்மார்ட் போனும், அல்ட்ரா மாடர்ன் பைக்கும் கூட அவர்களுக்குத் தெரியாத ஒன்றல்ல. பிரச்சினை என்னவென்றால் இந்த அதிக விலையுயர்ந்த அடையாளங்களை அவர்கள் மட்டுமல்ல, கீழ்த்தட்டு நடுத்தர வர்க்கமும் கூட வாங்க முடியாதவைதான். ஆனால் உதிரிப்பாட்டாளிகளின் நிலையில் படம் சித்தரிப்பது போன்ற ஒரு காவிய ஏக்கம் ஒரு பீட்சாவை தின்பதற்கு இருக்கும் என்பது எப்படிப் பார்த்தாலும் சரியல்ல.

எனில் இந்த மகிழ்ச்சிகளை அந்த சிறுவர்கள் எளிதாக கடந்து போகிறார்கள் என்பதல்ல. மேட்டுக்குடி பள்ளியில் படிக்கும் சிறுவர்களையோ, இல்லை அவர்களது பொம்மைகளையோ, நடை உடை பாவனைகள் அனைத்தையும் குழந்தைகளின் பார்வையில் பார்க்கிறார்கள். சுற்றி எது இருக்கிறதோ அதோடு உறவாடுவது, போலச் செய்வது குழந்தைகளின் இயல்பு என்றாலும் உதிரிப்பாட்டாளிகளின் குழந்தைமையை இப்படியான வார்த்தைகளில் நெகிழ்ச்சியாக விவரிப்பதும், விளக்குவதும் தவறென்கிறோம்.

கிராமத்தின் கருணையுடன் சென்னையில் ஒரு மக்கள் குடியிருப்பில் – கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க பகுதி – குடியேறிய நண்பர் ஒருவரின் வீட்டிற்கு ஒரு சிறுவன் ஏக்கத்தோடு வருவான். பசியால் வாடியவனது பார்வையை அறிந்த நண்பரது அம்மா தாயுள்ளத்தோடு பசியாற்றுகிறார். பிறகு அச்சிறுவன் மணிக்கொரு முறை வந்தான். ஜூஸ் வேண்டும், தீனி வேண்டும் என்று அதிகாரத்தோடு கேட்டான். ஓரிரு நாட்களில் கருணை முடிவுக்கு வந்தது.

அச்சிறுவனது அக்கா அவளும் சிறுமிதான், இப்படி மற்றவர் வீட்டில் வாங்கி உண்பது அவமானம் என்று இழுத்துச் செல்கிறாள். இருவரும் ஒரே வீட்டில்தான் வளர்கிறார்கள். எனினும் அச்சிறுவனது இயல்பு ஒரு உதிரிப்பாட்டாளியின் வகை மாதிரியில் வருவது. எனில் இந்தப்படம் இத்தகைய விழுமியங்களுக்கிடையிலான போராட்டத்தை, நடுக்கத்தை உணர்த்துகிறதா?

மதிப்பீடுகளுக்கான போராட்டம் எனும் உணர்ச்சியில் இம்மக்களை வைத்துப் பார்ப்பதே சரியல்ல என்பதோடு அது ஒரு கிரிமினல் குற்றமும் ஆகிறது. காரணம் இங்கே நல்லது கெட்டது என்ற நிதானத்தோடு கூடிய ஆளுமைப் போராட்டத்திற்கு இடமில்லை. எதை, எப்போது, எதற்காக செய்கிறார்கள் என்பதற்கு தர்க்க வகைப்பட்ட காரணங்கள் இருக்க வேண்டும் என்பதில்லை.

kaaka muttai vinavu (6)
மும்பையின் மிகப்பெரிய சேரியான தாராவியின் காட்சி

சென்ற மகளிர் தினத்தின் போது சென்னை மதுரவாயல் கூவம் கரையில் வாழும் ஒரு பெண்ணைப் பார்த்தோம். நான்கைந்து வீடுகள் அல்லது தீப்பெட்டிகள். ஆயிரம் ரூபாயில் ஓரறையில் வாடகைக்கு இருக்கும் அப்பெண் பத்து வருடங்களாக அங்கு வாழ்கிறாள். கிராமத்தில் கணவனால் கைவிடப்பட்டு கைக்குழந்தையுடன் வந்து வாழ்ந்து சமாளிக்கிறாள். கையேந்தி பவன் ஒன்றில் வேலை செய்கிறாள். அருகாமை அறையில் வட இந்திய இளைஞர்கள் ஹோலி பண்டிகைகையை இந்திக் குத்தாட்டம், மதுவோடு வெளியே கொண்டாடிக் கொண்டிருந்தனர். மற்ற கேள்விகளை முடித்து விட்டு அவளது பெண்மைக்கு இங்கே என்ன பாதுகாப்பு என்றோம்.

அங்கே பாதுகாப்பிற்கு எந்தக் குறைவுமில்லை என்றாள் அவள். இங்கே பாதுகாப்பு குறித்த நமது கவலையும், அவளது கவலையும் வேறு வேறு உலகிலிருந்து எழுபவை. அவளை துரத்தியடித்த சமூகம், ஆணாதிக்கம், சொந்தபந்தம் குறித்தே பயப்படுகிறாள். ஆனால் சமூகத்தின் வசதிகள் தந்த பாதுகாப்பில் வாழும் நாமோ தனி இளம் பெண்ணின் பயம் என்பதாக மதிப்பிடுகிறோம்.

இதுதான் உதிரிப்பாட்டாளிகளை நமது நல்லுள்ளம் கொண்ட பார்வையால் அளக்க முடியாது என்பது. எனினும் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு எப்போதும் இருக்கிறது என்பதல்ல. அப்படி பாதுகாப்பின்மையால் ஏதும் அநீதி நடந்தாலும் அது ஓரிரு கணங்களுக்கு மேல் நினைக்கப்படுவதில்லை. அப்படி நினைக்க முடியாதபடி துரத்துவதுதான் உதிரிப்பாட்டாளிகளுக்கென்று இந்த நகரம் இல்லை நரகம் விதித்திருக்கும் சாபம்.

படத்தில் நாயகச் சிறுவர்கள் கூட்ஸ் வண்டியில் சிதறி விழுந்த கரிகளை பொறுக்கி கிலோ ஒன்றிற்கு 3 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதே குப்பத்து சிறுவர்களோ உதிரிகளின் இயல்பின்படி சிறு சிறு குற்றங்கள் செய்து வாழ்கிறார்கள். மாநகர ரயிலின் படியில் செல்பேசியோடு இருப்போரை கம்பால் அடித்து பறிக்கிறார்கள். பெரிய காக்கா முட்டையும் தனது இலட்சியத்திற்காக ஒரு முறை கம்பெடுத்து பிறகு வேண்டாம் என்று போட்டு விடுகிறான்.

அந்த வேண்டாம் என்பது எப்படி வருகிறது அல்லது வராமல் போகிறது என்பதே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய கதை. ஆனால் இயக்குநர் மணிகண்டன் இந்த முரணை சில தற்செயலான நிகழ்வுகள் மூலம் நகர்த்திச் செல்கிறார். இதை எளிமைப்படுத்தி அவர் பிரச்சாரத்தோடு சொல்லாததை, வினவு பிரச்சாரத்தோடு சொல்ல வேண்டும் என்பதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

திடீர்நகரம் போன்ற குப்பங்களில் அனேகமான வாழ்க்கைக் காட்சிகள் தற்செயலாக நடப்பதாக தோன்றினாலும் அவற்றின் பின்னே அவசியமான சமூக அடிப்படைகள் இருக்கின்றன. படத்தின் நாயகக் குடும்பத்தில் நெகிழ்ச்சியான தருணங்கள், பாசம், அதில் பாட்டி பாசம், தாயன்பு, சிறையில் இருந்தாலும் மகன்களை நினைக்கும் தந்தையன்பு, பழைய பொருள் விற்கும் அக்காவின் நேயம், எவர்சில்வர் பட்டறையின் தொழிலாளிகளின் கருணை போன்றவை அழுத்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவை தோன்றி மறையும் விட்டில்பூச்சிகளைப் போன்றே காட்டப்பட்டிருக்க வேண்டும். காரணம் அங்கே அழுத்தமாக இருப்பது அவலம் அல்லது வெறுமை. வறுமையில் எப்படிப் பார்த்தாலும் இனிமையைத் தேடுவது தெற்று.

ஆரம்பக் காட்சியில் இரவு தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் சிறியவன் எழுந்து அது அம்மாவை தீண்டக்கூடாது என்று காலால் தடுக்கும் ஒரு கவிதைக் காட்சி உண்டு. ஆனால் குத்தாட்டங்களின் மண்ணில் ஒரு கவிதைக்கு இடமில்லை என்பதால் கவிதையெனப்படுவதே யாருக்குரிய வஸ்து என்ற கேள்வி வருகிறது.

kaaka muttai vinavu (16)
இந்தச் சேரியில் வழமையான வாழ்வின் மதிப்பீடுகள் எப்படி இருக்கும்?

அங்கே மகிழ்ச்சி, வேதனை, துன்பம், ஜாலி என்பதெற்கெல்லாம் பெரிய பொருளில்லை. படத்தின் ஓட்டத்தில் உரையாடல்களோடு வரும் பாடல்  காட்சியில் மழைக்காட்சி வருகிறது. திடீர்நகரில் மணிரத்தினத்தின் மழைப்பாடலுக்கு இடமுண்டா?

2012-ம் ஆண்டில் இதே குப்பத்திற்கு நாங்கள் சென்ற போது மழையின் கவித்துவ கர்மத்தை நேரில் அறிந்தோம். கொஞ்சம் பெருமழையாக இருந்தாலும் அங்கே வெள்ளம் வீடு தேடி வரும். மக்கள் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு அருகாமை அரசுப்பள்ளிகளில் அகதிகளாய் சில நாட்கள் ஒதுங்குவார்கள். வெள்ளம் வடிந்ததும், சகதியில் நடக்க முடியாது, இடிந்து விழுந்த சுவர், இதரவற்றை சரி செய்வதற்கு கடன் வாங்குவது, அந்தக் கடனை அடைக்க ஆண்டு முழுவதும் மீண்டும் வேலை … இங்கே மழைக்கால கவிதை ஆபாசமில்லையா?

சிறையில் இருக்கும் கணவனை பார்க்க மோட்டார் வைத்த மீன்பாடி வண்டியில் பயணிக்கிறார்கள், சிறுவர்களும், தாயும். இதே வண்டியை சில நாட்கள் முன்னாடி ஆர்.கே நகரில் வழிமறித்து சட்டவிரோதம் என்று டிராபிக் ராமசாமி நடவடிக்கை எடுத்தார். போலீசும் வண்டியை கைப்பற்றி அந்த தொழிலாளியை அழ வைத்து விரட்டியது. டிராபிக் ராமசாமியின் அஞ்சா நெஞ்சத்தையும் பாராட்டுகிறார்கள், திடீர் குப்பத்தின் சிறுவர்களுக்காகவும் கசிகிறார்கள் என்பது கொஞ்சம் எரிச்சலாகவும் இருக்கிறது.

உதிரிப்பாட்டாளிகள் என்றாலும் சிறுவர்களுக்கு பீட்சா சாப்பிட ஆசையில்லையா, அந்த ஆசையை வைத்து ஒரு கதை உருவாக்குவதில் என்ன தவறு என்று கேட்கலாம்.

பீட்சா சாப்பிடுவதில் ஒரு திடீர்நகரச் சிறுவனுக்கு இருக்கும் வேட்கை இங்கே சராசரியான குழந்தைத்தனத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படுவதில் கொஞ்சம் பிழையிருக்கிறது. சென்னை சேத்துப்பட்டில் அப்போது இருந்த பாமா (மறைவு) கடையில் கடித்து வீசப்பட்ட மாட்டு எலும்புகளை பார்த்து முதன் முறையாக சென்ற தோழர் ஒருவர் கலங்கிப் போனார். மாலையில் மாட்டுக்கறி குடல் வறுவல், அழுகிய பழங்கள் – காய்களை கூறுகட்டி விற்கும் முதியவர்கள், எல்லா நிகழ்வுகளிலும் காரமான மசாலாவில் தயாராகும் பிரின்ஜ்ஜிக்கள் என்று உணவிலும், உண்ணும் முறையிலும் அங்கே பீட்சாவின் நாசுக்கான நாகரீகங்கள் இல்லை.

மாட்டுக் கறியும், கருவாடும் மகத்தானதாக பார்க்கப்படும் குப்பங்களில் அதற்கு மேல் பார்வை போவது சிரமம். மாலை நேரக் குடிகளோடு துரித உணவகங்களை இப்பகுதி ஆண்கள் மொய்க்கிறார்கள் என்றாலும் அவை நீண்ட காலமாக நாக்கில் மறைந்திருக்கும் இருட்டுக் கடை அல்வாவின் சுவையுணர்வோடு சேரவே சேராது. ரயில்வேத் தொழிலாளியாக வரும் பழரசம் வெறும் ரசம் சோறு மட்டும் சாப்பிடுவது கூட எரிச்சலூட்டும் படிமமாகவே இருக்கிறது. கடுமுழைப்பு தொழிலாளிகள் காரமாகவும், கறிகளோடும் சாப்பிடுவதை விருப்பமாகக் கொண்டவர்கள்.

உணவு என்றில்லை உடை, விபத்து, நோய், பிரசவம் அனைத்தும் தோற்றத்திலும், உள்ளடக்கத்திலும் கடமுடாவென்று கடுமையாகவே இருக்கும். அவர்களுக்குத் தெரியாத நகரத்தின் நாகரிகங்களும், நுகர்பொருட்களும் இருக்கலாம். ஆனால் அவை கொலைப்பசியின் வேட்கையோடு மட்டுமே இருக்குமன்றி கலைப்பார்வையின் ரசனையாக ஒரு போதும் இராது.

kaaka muttai vinavu (11)
காக்கா முட்டையின் அன்பான குடும்பம் நிஜச் சேரியில் சாத்தியமா?

குப்பங்களில் இருக்கும் பொதுக்கழிப்பறைகளில் பாதை முதல் கூரை வரை மலம் இரைந்து கிடக்கும். நீரில்லாத அந்தக் கழிப்பிடங்களை அடுத்த நாள் மாநகர நகரசுத்தி தொழிலாளி வந்து கழுவது உண்மையிலேயே நரகத்தில் மட்டும் நடக்கும் ஒன்று. எனினும், காலை ஒன்பது மணிக்கு தாமதமாக கழிக்க வரும் நபர் இந்த நரகல்களை அசால்ட்டாக தாண்டிய படியே பீடியை வலித்துக் கொண்டு சாணியிறக்க குந்துவார். இத்தகைய இரும்புமனம் கொண்டவர்களிடம் ‘இளகிய’ உணர்ச்சிகளை தேடுவது எப்படி?

விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் குப்பத்து இளைஞர்கள் விரும்பி விளையாடும் கால்பந்தில் கூட உயிரைக் கொடுத்து விளையாடுவார்கள். ஒரு மாலை நேர பொழுதுபோக்கிற்கு இப்படி கை கால்களை அடிபடச் செய்வது எப்படி சாத்தியம் என்று புரிந்து கொண்டால் பீட்சாவின் ஏக்கம் அப்படி இருக்காது என்பதையும் யூகிக்கலாம். உடனே இது வீரம் மட்டுமென ரொமான்டிக்காக பார்க்க கூடாது. உடலுக்கும் உயிருக்கும் மதிப்பில்லாத வாழ்க்கையில் இப்படி உடலடி காயங்கள் எந்த அபாயத்தையும் உடன் கொண்டு வந்து விடாது. இன்னும் காதல், காமம், திட்டுவது, அனைத்தும் நேரில் பார்த்தால் நீங்கள் திடீர் நகரை விட்டு பதறியடித்துக் கொண்டு ஓடுவீர்கள்.

படத்தில் திடீர்நகரோடு முரண்பட்டு வரும் எம்.எல்.ஏ, பீட்சா முதலாளி, போலீசு அனைவரும் அளவாக காட்டப்பட்டிருந்தாலும் சரியாக காட்டப்படவில்லை. பீட்சா தொடர்கடைகளை சென்னையெங்கும் வைத்திருக்கும் ஒரு நிறுவனத்தின் நிறுவனர் படத்தில் காட்டப்படுவது போல முட்டாளாக இருக்க மாட்டார். மூடநம்பிக்கை, சட்ட விரோத வழிமுறைகளுக்கு பணத்தை அள்ளிவீசுவது இவையெல்லாம் அவர்களிடம் இருந்தாலும் இந்த சமூக அமைப்பு எப்படி இயங்குகிறது என்பதில் அவர்கள் நிச்சயம் முட்டாள்கள் இல்லை.

கடைசிக் காட்சியில் தனது நிறுவனத்தின் கெட்ட பெயரைக் காப்பாற்றும் பொருட்டு அந்த சிறுவர்களுக்கு தாரைதப்பட்டையுடன் வரவேற்பு கொடுத்து, பீட்சா ஊட்டி விட்டு, 299 ரூபாயில் மட்டுமல்ல, 45 ரூபாய்க்கு மலிவு விலை பீட்சா அறிமுகம் என்பதையெல்லாம் பார்த்து இது ஒரு திறமையான கிரைசிஸ் மேனேஜ்மெண்ட் என்கிறார் ஒரு எழுத்தாளர்.

இதைப் போன்று ஆயிரம் முறை இதை விட அதிகமாய் அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனங்கள் மக்களை இழிவுபடுத்தியிருக்கின்றன. அவை வீடியோவாக அல்லது, சாட்சிகளாக வெளிப்பட்டாலும் அந்த பிராண்டுகளின் பெயர்களோ அல்லது நற்பெயரோ பாதிக்கப்படவில்லை. தற்போது மேகியும் அப்படித்தான் தான் தவறே செய்ய வில்லை என்று பகிரங்கமாக அறிவிக்கிறது. போபால் படுகொலைக்காக யூனியன் கார்பைடு என்ன இழந்தது? 10,000 பேர் படுகொலையே ஒன்றுமில்லை என ஆக்கிய முதலாளித்துவ உலகில் இந்த பீட்சா அடியை ஒரு கிரைசிஸ் என்று எப்படி ஏற்பது?

இதே சென்னை நகரில் ஒரு கிரிக்கெட் கிளப்பில் ஒரு நீதிபதிக்கே வேட்டி கட்ட அனுமதி இல்லை என்பது பகிரங்கமாக பேசப்பட்டிருக்கிறது. ஐ.டி நிறுவனங்களின் ஆட் குறைப்பு, தற்கொலை, உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்டது – அதற்கு  போக்குவரத்து உரிமையை ரத்து செய்த டாடா என்று பகிரங்கமான கொடுமைகள் பல நடந்தும் யாரைக் கேட்க முடிந்தது?

ஆகவே இது வெறுமனே இமேஜ் பற்றிய பிரச்சினை அல்ல. கார்ப்பரேட்டுகளின் சர்வரோக வல்லமை பற்றிய விவகாரம். திடீர் நகரை தவறாக காட்டுவதை விட ஒரு நிறுவன முதலாளியை கோயிந்தாக காட்டுவது பாரிய பிழை. இதனால் அவரை ஒரு ஆக்சன் பட வில்லனாக ஆக்ரோஷமாக காட்ட வேண்டுமென்பதில்லை. படத்தில் பீட்சா கடையில் சிறுவர்கள் அடிபட்ட சம்பவம் ஏதோ விபத்து போல ஊடகங்கள் வரை போய் ஒரு பெரிய செய்தியாக மாறுவதில் ‘பொருட் பிழை’ நிறைய இருக்கிறது – வார்த்தைகள் சரியாக இருந்தாலும்.

kaaka muttai vinavu (19)
தாராவி மக்கள் – இவர்களின் கவலை எதுவாக இருக்கும்?

மேலும் பா.ம.க எம்.எல்.ஏ போன்ற ஒருவர் தலைவர், லோக்கல் போலீசு, மற்றும் திடீர் நகரில் சிறு மோசடிகளை செய்யும் இரு இளைஞர்கள் வழியாக இந்தப்படம் காட்டும் சித்தரிப்பு பல தமிழ் சினிமாக்களின் ஃபார்முலாவில் வரும் ஒரு வழக்கமான சித்தரிப்புதான். உதார் அரசியல்வாதிகள் கமிஷன் வாங்குவது, அவர்களை நம்பி சில்லறைகள், மக்களை பகடையாக்கி பயன்படுத்துவது போன்றவை மூலம் நடுத்தர வர்க்கத்தின் போலித்தனமான அரசியல் விமரிசனத்தை ஊக்குவிக்கவே உதவும்.

உண்மையில் எஸ்.ஆர்.எம்முக்கு படியளந்து, அப்பல்லோவிற்கு அழுது கொட்டி இறுதியில் ஐ.ஐ.டி அல்லது அமெரிக்காவிற்கு சொத்தை விற்று போக கனவு காணும் வர்க்கத்தோடு திடீர் நகரம் இணைக்கப்பட்டிருந்தால் மேலே சொன்ன அபத்தமான அரசியல் உலகம் கொஞ்சம் மாறி விவரமான அரசியல் உலகத்தை தொட்டிருக்கும். படத்தில் நடுத்தர வர்க்க சிறுவன் வெறுமனே முரண்பாட்டிற்காக மட்டும் அடையாளமாக தொட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறான்.

அது பொம்மை, உடை, பீட்சா என்று மட்டும் போவதால் திடீர்நகரின் பிரச்சினை அந்தக் குறியீடுகளின் எதிர்மையாக மட்டும் உணரப்படுகிறது. நேர்மைறையில் குப்பத்தின் உலகை அறிய, கனவுகளால் சூழப்படும் நடுத்தர வர்க்கத்தின் உலகம் அவசியம் வேண்டும். ஏனெனில் இத்தகைய கனவுகளுக்காக சாமர்த்தியமாக பேசும் வர்க்கத்தின் மூலம்தான் அத்தகைய சாமர்த்தியம் ஏதுமின்றி வாழ்வை கடந்து போகும் மற்றொரு வர்க்கத்தை அறிய முடியும்.

இயக்குநர் மணிகண்டனின் திடீர் நகரம் பற்றிய பார்வைக்கு உலகளாவிய முறையில் ஒரு பின்னணி இருக்கிறது – அதை இயக்குநர் அறியாமல் இருந்தாலும்.

“மேற்கத்திய சுற்றுலா பயணிகளில் பலர் பாரிசின் ஈஃபில் கோபுரம், நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை, ஆக்ராவின் தாஜ்மகால் இவற்றில் கிடைக்காத புதிய உணர்வை தேடி ஏழ்மை பீடித்துள்ள நகர்ப் பகுதிகளை தேடி போகிறார்கள் என்கிறது பிபிசி உலக சேவையின் பிசினஸ் டெய்லி.

2006-ம் ஆண்டிலிருந்து கிருஷ்ணா புஜாரி என்பவரும் அவரது பிரிட்டிஷ் நண்பர் கிரிஸ் ரே என்பவரும் ரியாலிட்டி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய சேரியான மும்பையின் தாராவி பகுதியை சுற்றிக் காட்டும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.

“இதை வறுமை என்று மட்டும் நினைத்தால் அது மட்டும்தான் உங்களுக்குத் தெரியும், ஆனால் இந்த வறுமையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது” என்கிறார் பூஜாரி.

kaaka muttai vinavu (15)
ஆப்பிரிக்காவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் சேரிச்சுற்றுலா

நுகர்வு கலாச்சாரத்தில் ஊறித் திளைக்கும் மேற்கத்திய சுற்றுலா பயணிகள் வறுமையில் வாழும் மக்களைப் பார்த்து,

  • எளிமையாக வாழ்கிறார்கள், நிரம்பி வழியும் சாக்கடைகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்! 1400 பேருக்கு ஒரு கழிப்பறை என்ற அவலச் சூழலை திறமையாக சமாளிக்கிறார்கள்!
  • இடிந்து போகவிருக்கும் பள்ளி கட்டிடங்களில் குழந்தைகள் இயல்பாக படிக்க போகிறார்கள்!
  • சிறு கிளினிக்கில் இருக்கும் ஒற்றை டாக்டரிடமே ரூ 15-க்கு மருந்து வாங்கிக் கொண்டு உடல் நலக் குறைவை சரி செய்து கொள்கிறார்கள்!
  • காற்றோட்ட வசதி இல்லாமல் இருட்டாக இருக்கும் குடிசைகளில் தொழில் செய்து ஒவ்வொரு ஆண்டும் ரூ 5,000 கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்!

என்று வியக்கிறார்கள். வறுமையுடனான மக்களின் போராட்டத்தை ‘உண்மையில் ஏழைகள்தான் மகிழ்ச்சியாக இருக்காங்க, தெரியுமா!’ என்று  புனிதப்படுத்துகிறார்கள்.”

– மேற்கண்ட வரிகள் வினவு தளத்தில் 2012-ம் ஆண்டில் எழுதப்பட்டவை. இதற்கு முன்பேயே 2009-ம் ஆண்டில் வெளிவந்த “ஸ்லம்டாக் மில்லியனர்” திரைப்படம் குறித்து புதிய கலாச்சாரத்தில் விரிவான விமரிசனம் வந்திருந்தது. அது வினவிலும் வெளியாகியிருக்கிறது.

இந்தப் படத்தை தயாரித்த ஃபாக்ஸ் குழும நிறுவனமே தற்போது காக்கா முட்டையையும் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரும் திரைப்பட நிறுவனம் இத்தகைய சேரிப்படங்களை தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன?

kaaka muttai vinavu (10)
பீட்சாவின் ஏக்கம் இவர்களிடம் எப்படி இருக்கும்?

உலகமயத்தால் சேரிகள் மட்டும் அதிகரிக்கவில்லை, பிரச்சினைகளும் அதாவது வன்முறையும் பெருகி வருகின்றது. மாநகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தில் எல்லா நகரங்களிலும் சேரிகள் நகரத்திற்கு வெளியே தூக்கி எறியப்படுகின்றன. சென்னையில் சேரி குறித்த செய்திகள் அதிகம் தீவிபத்தின் மூலம் மட்டுமே நாம் அறிந்திருப்போம். ‘விபத்திற்கு’ பிறகு அவர்கள் செம்மஞ்சேரி எனும் எந்த அடிப்படை வசதியுமற்ற அகண்ட திறந்த வெளிச் சிறைக்கு போக வேண்டும். அங்கிருந்து தினசரி 50 கி.மீட்டர் பயணம் செய்து நகரத்திற்கு வந்து போக வேண்டும். ஆக உதிரிப்பாட்டாளிகளின் வாழ்க்கை இன்னும் நெருக்கடிக்குள்ளாகிறது.

இவர்களை தணிப்பது ஆளும் வர்க்கத்திற்கு பெரும் சவாலாகி வருகிறது. இவர்களை முற்றிலும் ஒழிக்கவும் முடியவில்லை, அருகில் வைத்திருக்கவும் விரும்பவில்லை. இதன் போக்கில் உலகளாவிய என்.ஜி.வோக்களின் வலைப்பின்னலில் சேரிகளே முதன்மையான இலக்குகள். கடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது சேரிவாழ் சிறுவர்களுக்கென்றே ஒரு உலகக் கோப்பை பிரேசிலில் நடந்தது. அதில் சென்னை சேரி சிறுவர் அணியும் கலந்து கொண்டது. இது போக விமானம், ஹெலிகாப்டர், சுற்றுலா என்று பெயருக்கு சில சிறுவர்களை அழைத்து செல்வது, சேரிகளில் ஏராளமான அடையாள சேவைகளை செய்வது என்று இவர்கள் கண்காணிப்பிலேயே வைத்திருக்கப்படுகிறார்கள்.

திடீர்நகரத்திற்கும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவிற்கும் தோனிக்கும் என்ன சம்பந்தம்?
திடீர்நகரத்திற்கும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவிற்கும் தோனிக்கும் என்ன சம்பந்தம்?

காக்கா முட்டை பட வெற்றிக்கு பிறகு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம், இயக்குநர் மற்றும் அந்த இரண்டு சிறுவர்களை அழைத்துக் கொண்டு போய் மும்பையில் தோனியை சந்திக்க வைத்து செய்தியை வெளியிடுகிறது. இந்த சந்திப்பிற்கு தோனி எவ்வளவு வாங்கினார் அல்லது இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் கிரிக்கெட் ஊழலை அமுக்குவதற்கு எவ்வளவு கவனித்தார் என்பதெல்லாம் அந்தச் சிறுவர்களோ இல்லை இயக்குநர் மணிகண்டனோ அறியமாட்டார்கள்.

ஆனல் சேரியை ஏன் இப்படி அருவெறுப்பாக வியாபாரம் செய்ய வேண்டும்? ஸ்லாம்டாக் மில்லியனர் படத்தில் தாராவியின் பின்னணியில் கோன்பனேகா குரோர்பதியில் மில்லியனராகும் சேரி இளைஞனின் கதை காட்டப்படும். அந்தப் படத்திலும் உதிரிப்பாட்டாளிகளின் சேரிகள் ஒருவித புனிதப்படுத்தலோடு, இன்னும் நிறைய மசாலாவோடும் சித்தரிக்கப்படும்.

Actor, presenter and DJ Reggie Yates (R), television journalist Angela Rippon (2nd R), actress and singer Samantha Janus and comedian and actor Lenny Henry converse as they wait to listen to experts giving them a brief on what to expect in the following days at the beginning of their one-week experience living in Kibera slum, September 19, 2010, Nairobi Kenya. Kenya suffered devastating post-election violence following a disputed presidential election result in 2007 in which 1,300 people lost their lives.
கென்யா நைரோபி சேரி ஒன்றில் நன்னெறிகளை கற்றுக் கொடுக்க இறங்கியிருக்கும் அமெரிக்காவின் சுமாரான பிரபலங்கள்!

இறுதியில் மேற்குலகின் அட்வென்சர் சுற்றுலாவில் சேரிகளும் வருகின்றன. உழைப்பிற்கும், மரணத்திற்கும், துன்பங்களுக்கும் அஞ்சாத அல்லது அவற்றை சட்டை செய்யாத அம்மக்களின் வாழ்க்கைக் காட்சிகள் சுற்றுலா பயணிகளுக்கு பரவசமளிக்கின்றன. கழைக்கூத்தாடி கர்ணம் அடிப்பதில் ஏற்படும் அதே பரவசம்.

அனாதைக் குழந்தைகளின் ஆசிரமங்களுக்கு பிறந்த நாள் சென்று லட்டும், கேக்கும், இரண்டு நோட் புக்கும் கொடுத்து கொண்டாடும் நட்ச்திரங்களுக்கு இத்தகைய குழந்தைகள் இல்லையென்றால் கருணையைக் காட்டுவது எப்படி? அது போல பெருகி வரும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கும் இத்தகைய கருணைக் கடத்தல்கள் தேவைப்படுகின்றன. அதற்கு ஃபாக்ஸ் ஸ்டூடியோக்களுக்கு மணிகண்டன்கள் பயன்படுகிறார்கள்.

இன்னமும் நீங்கள் இந்த விமரிசனத்தை ஏற்கவில்லை என்றால் ரவிதாஸ் காலனிக்கு சென்று பாருங்கள்.

சொல்லப் போனால் உதிரிப்பாட்டாளிகளின் வாழ்வியல் உலகை மகிழ்ச்சி கொள்ள முடியாத கவனத்தோடும் பதட்டத்தோடும் ஊடுருவிப் பார்த்த படமொன்றில்தான் அந்த ரவிதாஸ் காலனி வருகிறது.

அந்த படத்தின் பெயர்  “இந்தியாவின் மகள்”. ஆம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பி.பி.சியின் ஆவணப்படம்.

மருத்துவ மாணவி ஜோதியை வன்புணர்ந்து கொடூரமாக தாக்கி சாலையில் வீசுகிறார்களே அந்த இளைஞர்கள், அவர்கள் வாழும் சேரியின் பெயர்தான் ரவிதாஸ் காலனி.

MukeshSingh_screengrab1இந்த இளைஞர்கள் யாரும் தொழில்முறைக் கிரிமினல்களோ இல்லை உளவியல் ரீதியில் சிதைவுண்டவர்களோ இல்லை என்கிறார் திஹார் சிறையின் உளவியல் மருத்துவர். ரவிதாஸ் காலனியில் வாழும் ஒரு இளைஞன் அப்படி இருப்பதில் ஆச்சரியமில்லை என்பதை படம் நுட்பமாக உணர்த்துகிறது. திடீர் நகரைப் போன்ற நெருக்கடி, வசதிகள் இல்லை, குடி, அடி, குறிப்பாக பெண்களை அடிவாங்குவதற்கென்றே வைத்திருக்கும் வட இந்திய பார்ப்பனியம், வேலைக்கு செல்லுமிடத்தில் அச்சுறுத்தும் நுகர்வுக் கலாச்சார வசதிகள் எல்லாம் சேர்ந்து அவர்களை இயல்பாகவே அப்படி உருவாக்கியிருக்கிறது.

தாங்கள் செய்வது தவறு அல்லது குற்றம் என்பதாக அவர்கள் கருதவில்லை. அதுதான் அவர்களது பார்வையில் திமிராக இருப்பதாக ஜோதியின் தந்தை கருதுகிறார். அவர்கள் ஏன் அதைக் குற்றம் என்று கருத வேண்டும்? இங்கே குற்றம், நன்னடத்தை என்று நாம் தீர்மானிக்கும் விழுமியங்கள் உண்மையில் வாழ்வதற்கென்றே சில அடிப்படை வசதிகள் இருக்கும் இடங்களில்தான் செல்லுபடியாகும். அல்லாத இடங்களிலும் வேண்டும் என்பது பேராசை மட்டுமே. ஒரு வகையில் உங்களது ஒழுக்கத்தை அதற்கு சம்பந்தம் இல்லாதவர்களிடம் திணிப்பதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

எனில் அன்பு, பாசம், கருணை, எளியோர் மீதான பரிவு போன்றவை உலகப் பொதுவான உணர்ச்சிகள் இல்லையா? அவை ஒரு ஏழைக்கு அதாவது வினவு  சொல்லும் உதிரிப்பாட்டாளிக்கு இல்லையா?

இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

நாகரிக உலகின் மெக்காவான அமெரிக்காவிடம் இவை இல்லை என்பதை அரசியல் ரீதியாக ஏற்போர், ஏழைகளின் உறைவிடமான ஆப்பிரிக்காவிலும் அது இல்லை என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். ஆப்பிரிக்க உள்நாட்டு போரில் அமெரிக்கா போன்று அதி உயர் ஆயதங்களோ குண்டுகளோ இல்லை, அல்லது அப்படி கொலை செய்வதற்கான பொருளியல் ராஜதந்திரங்களோ அம்மக்களிடம் இல்லை. ஆனாலும் கூட இருப்போர், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று மலிவாக கொல்லப்படும் அந்த உள்நாட்டு போரில் எங்கு தேடினாலும் மனிதாபிமானத்தை காண இயலாது.

ஆம். ஏழ்மை என்பது நல்ல பண்புகளை பராமரித்து மேம்பட்ட சமூகமாக ஆக்கும் நேர்மறை சக்தியல்ல. அது எதிர்மறைச் சக்தி. நாட்பட்ட வறுமையோ ஆண்டுகணக்கிலான ஏழ்மையோ ஒரு மனிதனின் நம்பிக்கைகள், விழுமியங்கள், நன்னெறிகள் அனைத்தையும் வெறிகொண்டு உறிஞ்சி தீர்த்துவிடும். விவசாயம் காலியாகி, வேறு வாழ்க்கை இல்லை என்ற நிலையில் பெண்கள் விலைமாதராக ஆவதோ, சிறுவர்கள் குற்றவாளிகள் ஆவதோ, இளைஞர்கள் கூலிப்படையினராக மாறுவதோ இயல்பாக நடக்கும்.

அதனால்தான் ஏழ்மை ஒரு அழிவுச் சக்தி. ஏழைகள்தானே கம்யூனிஸ்ட் கட்சிகளின் அடிப்படை வர்க்கம் என்று சிலர் நினைக்கலாம். முதலில் ஒரு நாடு ஏழை நாடு என்பதால் மட்டும் புரட்சியோ, கம்யூனிசமோ வருவதில்லை. புரட்சி என்ற நெறியை போதிக்கக் கூட அங்கே ஒரு குறைந்தபட்ச வாழ்க்கை வேண்டும். அதனால்தான் உதிரிப்பாட்டாளிகளை அமைப்பாக்கும் முயற்சியில் கம்யூனிஸ்ட்டுகளே இன்றும் போராடித்தான் வருகிறார்கள்.

Untitled-2இந்தியாவின் மகள் படத்தில் கடைசிக் காட்சியில் அந்த ஓட்டுநர் இளைஞன் முகேஷ் சிங் “என்னைத் தூக்கிலிட்டால் இனி நடக்கும் கற்பழிப்புகளுக்கு பிறகு அந்தப் பெண்களை இளைஞர்கள் கொன்று விடுவார்கள்” என்று சொல்வான். இதை அவன் திமிரிலிருந்து சொல்கிறான் என்று நினைக்கும் தோழர்களிடம் இல்லை இதை அவனது ‘கருணைப்படி’யே சொல்கிறான், காரணம் அவனது ரவிதாஸ் காலனி ஒழுக்கத்தின்படி இது மிகப்பெரும் ‘மனிதாபிமானம்’ என்று விவாதித்தது நினைவுக்கு வருகிறது.

எனினும், சில தோழர்கள் அந்தக் குற்றவாளிக்கு தண்டனை வேண்டாம் என்பதாக இந்த வாதம் இருக்கிறது என்று குறைபட்டார்கள். காக்கா முட்டை விமரிசனத்திற்கு கூட அப்படித்தான் கருத்துக்கள் வரும். எனினும் காக்கா முட்டையை ரசித்தவர்கள் உண்மையான திடீர்நகரமான ரவிதாஸ் காலனியை பார்க்க வேண்டும்.

ஆனால் காக்கா முட்டையை பார்த்த பிறகும் தொடரும் விருப்பம், இந்தியாவின் மகளை பார்க்கும் போதே இருக்காது.

பார்க்க முடியாத ஒரு படத்தை பார்ப்பது எப்படி? அதை விரும்புவது எப்படி?

வெயிலில் மரணம் – ஏ.சி அறையில் எச்சரிக்கை

5

“அப்பப்பப்பப்பா கூலிங் கிளாஸ் போடலைன்னா ரெண்டு கண்ணும் அவிஞ்சுருமே…” என இந்த ஆண்டு கோடை வெயிலை பார்த்து அங்கலாய்ப்பவர்களா நீங்கள்?

ஆனால், பல கோடி மக்களுக்கு இது வெறும் அங்கலாய்ப்பல்ல, வாழ்வா சாவா போராட்டமாக உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டு இது வரை கோடை வெயிலுக்கு 1400 பேருக்குமேல் பலி கொடுக்கப்பட்டிருகிறார்கள். அதிக பட்சமாக ஆந்திராவில் 1020 பேரும், தெலங்கானாவில் 350 பேரும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

வெப்ப்ச சாவுகள்
பல கோடி மக்களுக்கு இது வெறும் அங்கலாய்ப்பல்ல, வாழ்வா சாவா போராட்டமாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இக்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. எனினும், கொல்லப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை அரசு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை வெளியிடத் தயாரில்லை என்பதே உண்மை.

கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வெப்பத்தாக்கு நோய் (sun stroke) அல்லது உடலில் நீர் வற்றிப்போதலினால் (dehydration) மரணமடைகின்றனர். உடலின் வெப்பச்சமனிலை குலையும் பொழுது அதாவது உடல் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டும் பொழுது வெப்பத்தாக்கு நோய் ஏற்பட்டு அதிக பட்சமாக மரணத்தை விளைவிக்கிறது. ஆனால் இந்தியாவின் மத்திய பகுதிகளில் இந்த ஆண்டு வெயிலோ, புற வெப்பநிலையை 48 டிகிரி செல்சியஸ் அளவுக்கு ஏற்றியிருக்கிறது.

வெப்ப சாவுகள்
கடந்த 25 ஆண்டுகளில் வெப்பத் தாக்குதலால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை (அதிகாரபூர்வ பதிவுகளின்படி)

இங்கு கொல்லப்பட்டவர்கள் யாரும் “கடும் உழைப்பினால்” முன்னேறியதாக சொல்லப்படும் அதானி, ரத்தன் டாடா, நாராயண மூர்த்தி வகையறாக்கள் அல்ல. யாருடைய கடும் உழைப்பினால் மேற்படியார் குளுகுளு அறைகளில் காலத்தை கழிக்கிறார்களோ அந்த விவசாயக்கூலிகளும், கட்டுமானத் தொழிலாளர்களும் ஏனைய உழைக்கும் வர்க்கத்தை சார்ந்தவர்களுமே கொல்லப்படுகின்றனர்.

வெப்பத் தாக்குதல் சாவுகள்
கொல்லப்பட்டவர்கள் யாரும் “கடும் உழைப்பினால்” முன்னேறியதாக சொல்லப்படும் அதானி, ரத்தன் டாடா, நாராயண மூர்த்தி வகையறாக்கள் அல்ல

இந்தியாவிலேயே அதிக அளவு பேர் உயிரிழந்த ஆந்திர மாநில அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கை என்னவெனில், விழிப்புணர்வு இயக்கம் என்னும் மலைப்பிரசங்கத்தை நடத்தி, மதியம் 1 மணிக்கும் 4 மணிக்கும் இடையே வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும், வெளியில் போக வேண்டி வந்தால் தலையை வெயில் படாமல் அகன்ற தொப்பிகளால் மூடிக்கொள்ளுமாறும், வெளிர் நிற பருத்தி உடை அணியுமாறும், குடை பயன்படுத்துமாறும், நிறைய தண்ணீர் குடிக்குமாறும் கோடைக் கால “டிப்ஸ்” அளிப்பதுதான். கூடுதலாக, நகரங்களின் என்.ஜி.ஓக்களிடம் கையேந்தி தண்ணீர் பந்தல், மோர் வினியோகத்துக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

ஆமாம், இந்த அறிவுரையை எல்லாம் கேட்காமல் கொளுத்தும் 48 டிகிரி செல்சியஸ் வெயிலில் வெளியே சுற்றுவானேன், செத்துப்போவானேன்? என்ற கேள்வி தோன்றலாம்.

தினம் 200 ரூ கூலி பெறும் கட்டிடத்தொழிலாளியானா தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தை சேர்ந்த மகாலெட்சுமி இதற்கு பதில் சொல்கிறார். “இந்த வெயிலுக்கு பயந்து நான் வேலைக்கு வராமல் வீட்டுக்குள் இருந்தால் என் குடும்பத்துக்கு யார் சோறு போடுவது?”

வெப்பத் தாக்குதல் சாவுகள்
மதியம் 1 மணிக்கும் 4 மணிக்கும் இடையே வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு மலைப்பிரசங்கம்

அரசின் அபார  யோசனைப்படி வீட்டுக்குளேயே இருந்தால் மட்டும் என்ன  குலு மனாலி காற்றா வீசப்போகிறது? நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மின்சாரமென்றால் புளிக்குமா, துவர்க்குமா எனக்கூட தெரியாத நிலையில், கொஞ்சம் வசதி படைத்த திரிசங்கு சொர்க்கத்தில் ஊசலாடும் நடுத்தர வர்க்கத்தின் மின் விசிறி, ஏர் கூலர்களின் தலையில் கணக்கு வழக்கற்ற மின்வெட்டை சுமத்தி மங்களம் பாடியிருக்கிறது ஆந்திர அரசு.

2005-ல் ஐ.நா.வின் கணக்குப்படியே 7 கோடியே 80 லட்சம் வீடற்றவர்களை  கொண்ட இந்தியாவில், சாலையோரத்திலும், பாலத்தின் அடியிலும், சாக்கடையோரத்திலும்  வசிக்கும் மக்களை இவர்கள் எந்த வீட்டுக்கு போகச் சொல்கிறார்கள்? ஐ.நா வீடற்றவர்கள் என குறிப்பிடுவது தலைக்கு மேல் கூரை கூட இல்லாமல் தெருவில் உறங்குபவர்களை.

வெப்பத் தாக்குதல் சாவு
வெளியில் போக வேண்டி வந்தால் தலையை வெயில் படாமல் அகன்ற தொப்பிகளால் மூடிக்கொள்ள வேண்டுமாம்.

ஆனால், இந்தியாவின் கிராமங்களின் மண் சுவற்றின் மேல் வெய்யப்பட்ட பிய்ந்துபோன ஓலைக் குடிசைகளை, நகர் புறச்சேரிகள் மற்றும் புலம் பெயர்ந்த வட இந்திய கூலித்தொழிலாளிகளின் தகரக் கொட்டகைகளை ‘வீடு’ என்னும் வகைக்குள்ளேயே அடக்க முடியுமா? ஆக, இன்னும் கணக்கில் வராத கோடிக்கணக்கான உழைக்கும் இந்திய மக்களுக்கு வெயிலிலிருந்து பாதுகாப்பளிக்கும் குறைந்தபட்ச குடிசை கூட இல்லை என்பதே நிதர்சனம்.

மேலும், கோடை கால வெப்பநிலை கடந்த 15 வருட சராசரியை விட 2 லிருந்து 5 டிகிரி வரை அதிகரித்துள்ளது எனவும் பருவ மழை சரியான நேரத்திற்கு வராமல் போனதும் இந்த வெப்பநிலை தொடர்ந்து நீடிப்பதற்கு காரணமெனவும் இந்திய வளிமண்டலவியல் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெப்பத் தாக்குதல் சாவுகள்
முதலாளிகள் குளு குளு அறையில் காலத்தை கழிக்க வெயிலில் உருகும் தொழிலாளிகள்

உடனே, ‘பேங்க்குலயே பணமில்லைன்னா செக்(காசோலை) குடுத்தவன் என்னய்யா பண்ணுவான்?’ என காரணத்தை ஆராயாமல் பருவ மழை மீது பழியை போடுகிறார்கள் அறிஞர் பெருமக்கள். வெப்பநிலை அதிகரிப்பதற்கும், பருவமழை முறைதவறுவதற்கும் காரணமான இயற்கை அழிவுகளை நிகழ்த்துவதும் முதலாளி வர்க்கம்தான் என்பது அந்த அறிஞர்கள் அறியாத ஒன்றல்ல.

  • தன் சொகுசுக்காய் ஏசி அறையில் அமர்ந்து கொண்டே பசுமை இல்ல வாயுக்களால் ஓசோனை கிழித்து போடுவது.
  • தாதுவளத்திற்காக தண்டகாரண்ய காடுகளை மொட்டையடித்து, நியமகிரி மலையை  கபளீகரம் செய்வது.
  • நீலமலை, கொடைக்கானல் மலைப் பகுதிகளை சுற்றுலா பெயரில் கபளீகரமாக்கி சராசரி மழை அளவைக் குறைத்து, காடுகள், புல்வெளிகளை அழித்து மழை நீரை விரயமாக்குவது.
  • நிலத்தடி நன்னீர் வளத்தையும், தாமிரபரணி, பாலாறு போன்ற ஆறுகளையும், ஏரிகளையும் ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் ஆக்கிக் கொழுப்பது

என்று தமது லாபத்துக்காக இயற்கையை அழிப்பவர்கள்தான் தான் இதற்கு பொறுப்பு. ஆனால், அதன் விலையை கொடுப்பவர்களோ உழைக்கும் மக்கள்.

வெப்பத் தாக்குதல் சாவுகள்
ஐஸ் கட்டியையே கட்டி இழுத்தாலும், வெப்பத் தாக்குதலிலிருந்து தப்பிக்க வழியில்லை!

கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை என சந்திரபாபு அரசு விஷயத்தை கை கழுவி விட்டு, அதை விட அதிமுக்கியமாக சந்திர சேகர ராவுடன் தெருவில் புரண்டும், மிகப்பெரிய கல்லறை தோட்டம் அமைக்குமளவு மாநிலமெங்கும் இழவு விழுந்து கிடக்கும்போது, புதிய தலைநகரத்துக்குச் செங்கல் நட்டும் ஊடக வெளிச்சத்தை தக்கவைத்துகொள்ளும் முயற்சியில் இருக்கிறது.

சாவு வீட்டிலும் சஃபாரி போட்டு செல்பி எடுக்கும் மோடியின் கூட்டணிக் கட்சிக்காரர் என்பதை நிரூபிக்க வேண்டுமா இல்லயா?

‘சண்டைல கிழியாத சட்ட எங்கைய்யா இருக்கு வெய்யலடிச்சா சாவத்தான் செய்வான்’ என `கனிவுள்ளத்தோடு` பேசும் நல்ல வாய்களும் இங்கே அதிகம் என்பதால் இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இதைக்காட்டிலும் சுட்டெரிக்கும் வெப்ப நிலையும், சுரண்டலையும் கொண்ட வளைகுடா நாடுகளில் கூட கடும் வெய்யில் நேரத்தில் கட்டுமான வேலையை நிறுத்தி சில மணி நேரம் ஓய்வு கொடுக்கும் நடைமுறை இருக்கிறது.

வெப்பத் தாக்குதல் சாவுகள்
ஆறுகளையும், ஏரிகளையும் ஆக்கிரமித்து ரியல் எஸ்டேட் ஆக்கிக் கொழுப்பது யார்?

ஆனால், இங்கு அதைப்பற்றிய எந்த வழிகாட்டுதலோஅல்லது சட்டமோ இல்லை, இருக்கின்ற போராடிப்பெற்ற தொழிலாளர்  உரிமைகளையே ஊத்தி மூடிக்கொண்டிருக்கும் பாசிஸ்டுகலின் கூடாரமான மோடி அண்ட் கோவும், இதுவரை மக்களுக்காக இயங்குவதாக வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருக்கின்ற ஏனைய ஓட்டுப்பொறுக்கும் கட்சிகளும் இதைப்பற்றியெல்லாம் மூச்சுக்கூட விடவில்லை.

கொளுத்தும் வெயிலிலும் விவசாய மற்றும் கட்டுமானப்பணியில் கூலித்தொழிலாளர்கள் மீது சாட்டை சொடுக்குகின்றது முதலாளி வர்க்கம்.

முறை சார்ந்த மற்றும் முறை சாரா தொழிலாளர்கள் நலன், வேலை நேரம், ஊதியம், மருத்துவ உதவி, பணியிடப் பாதுகாப்பு என எதைப்பற்றியும் கண்டுகொள்ளாமல் இருக்கின்ற தொழிலாளர் நலச் சட்டங்களையும் சவக்குழிக்குள் அனுப்பிவைக்கிறது மோடி அரசு.

ஆக, இந்த 1400 பேர் கொல்லப்பட்டிருப்பது இயற்கைப் பேரழிவல்ல, பச்சைப்படுகொலை!

– எட்கர்

செய்தி ஆதாரங்கள்:

புதிய ஜனநாயகம் – ஜூன் 2015 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

0

புதிய ஜனநாயகம் ஜூன் 2015

புதிய ஜனநாயகம் ஜூன் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. பெரம்பலூர் கண் பறிப்பு வழக்கு தரும் பாடம் :
கோர்ட்டு படியேறாதே! தண்டனையை அங்கேயே நிறைவேற்று!!

2. மீண்டும் முதல்வராக ஜெயா:
கோலோச்சுகிறது பார்ப்பன மனுநீதி!

3. ஜெயா விடுதலை :
மண்டபத்தில் எழுதப்பட்ட தீர்ப்பு
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயா சசி – கும்பலை விடுதலை செய்துள்ள நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பு பிழையானது, மோசடியானது என்று கூறுவதற்கு பெரிய சட்ட அறிவெல்லாம் தேவையில்லை.

4. 4+3=8
விடுதலை!
இந்த நாட்டின் நீதித்துறையே தோற்றுவிட்டது என்ற உண்மையை பல கோணங்களில் மீண்டும் மீண்டும் ஜெயலலிதா நிரூபித்துக் காட்டி வருகிறார்.

5. ஊரறிந்த கொள்ளைக் கும்பலுக்கு உத்தமவேடம் கட்டும் ஊடகங்கள்
கிரிமினல் ஜெயலலிதா மீது பிரமையூட்டி நம்பிக்கை ஏற்பட்டும் வேலையைப் பார்ப்பன மற்றும் பிழைப்புவாத ஊடகங்கள் தொடர்ந்து பல வழிகளிலும் கூச்சநாச்சமின்றி செய்கின்றன.

6. “மேடம் 45 பர்சென்ட்!”
பொதுப்பணித்துறையில் 45 சதவீதம் வரை கமிசன் அடிக்கும் ஆட்சியின் தலைவி ஜெயா, சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டிருப்பதை முரண்நகையென ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.

7. நீதியே உன் விலை என்ன?
நீதித்துறையின் புனிதத்தை நிர்வாணமாக்கிக் காட்டிய புர்ரட்ச்சித் தலைவியின் சாகச வரலாறு!

8. “தனியார் பள்ளி தாலி அறுக்குது, அரசுப் பள்ளி அனைத்தும் வழங்குது!”
– அரசுப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்கக் கோரி பு.மா.இ.மு.வின் பிரச்சாரம்

9. அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத் தடையை எதிர்த்து பரவும் போராட்டம் :
பார்ப்பனத் திமிருக்கு விழுந்த செருப்படி!

10. மோடியின் ஓராண்டு ஆட்சி :
ஒப்பனை கலைந்தது!

11. அரசு :
அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல!

12. செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் :
பாலியல் வக்கிரக் கூடங்கள்

13. ஜெயா நிரபராதியா?
பார்ப்பனியத்துக்கும் பணத்துக்கும் கைப்பாவையே நீதிமன்றம்!
நீதியை நிலைநாட்ட ஒரே வழி மக்கள் அதிகாரம்

புதிய ஜனநாயகம் ஜூன் 2015 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

மேகி முதலாளிகளை கைது செய் – திருச்சி பெ.வி.மு

5
  • உணவில் நச்சு ரசாயனங்கள் கலப்படம், குழந்தைகளுக்கு இரைப்பை புற்றுநோய்!
  • நெஸ்லே – மேகி நூடுல்ஸ், ரிலையன்ஸ் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் உள்ளிட்ட பெரும் முதலாளிகளை கைது செய்!

என்ற முழக்கங்களுடன் 08-06-2015 திங்கள் காலை 10.30 மணிக்கு பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள ரிலையன்ஸ் மெகா மார்கெட் கடை முன்பு மேகி மற்றும் பன்னாட்டு நிறுவனப் பொருட்களை தீயிட்டு கொளுத்தி முற்றுகையிட்டு சிறுவர், சிறுமியர் உட்பட 28 பேர் கைதாகினர்.

trichy-protest-maggi-noodles-corporate-food-14மேற் கூறிய தலைப்பில் எரிப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு அன்று காலையிலேயே  நூற்றுக் கணக்கான சுவரொட்டிகளை திருச்சி புறநகர் பகுதி முழுவதும் ஒட்டியதால் மக்கள் மத்தியில் விரிவாக பிரச்சாரம் ஆனது.

trichy-protest-maggi-noodles-corporate-food-01சுவரொட்டியில் தரப்பட்டிருந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு, “ஏம்மா ஏங்கமா எரிக்கப் போறீங்க டவுன்க்கு உள்ளேயா அவுட்டரிலா? கொஞ்சம் சொல்லுங்கம்மா” என்று “க்ளூ குடுங்க” என்பது போல கேட்டது கியூ பிரிவு போலீஸ்.

trichy-protest-maggi-noodles-corporate-food-06“ஏங்க சார், அனுமதி கேட்டா மட்டும் நடத்த விட்டுடுவீங்களா? வந்து 10 நிமிசத்துக்குள்ள வேனில் ஏத்துறீங்க. அதனால இடத்தைச் சொல்ல முடியாது” என்றதும், வேறு தோழர்களின் போனை தொடர்பு கொண்டு, “தோழர் நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க” என்று தகவலை அறிய கடும் முயற்சி செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

நாம் திட்டமிட்டபடி அரியமங்களம் ரைஸ் மில் பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் மெகா மார்க்கெட் கடை முன் எரிப்பு நடத்த தருணம் பார்த்து கொண்டிருந்த போது முன்னெச்சரிக்கையாக ரிலையன்ஸின் உள்ளே இரு காவல்துறை வாகனங்கள் பாதுகாப்பிற்கு தயாராக நின்றன.

ரிலையன்ஸ் மெகா மார்க்கெட்டுக்கு எதிரே ஒரு சந்துக்குள்ளிருந்து சிவப்பு பதாகையுடன் பேனர் முழக்கத் தட்டி போன்றவற்றுடன் ஆக்ரோசமாக முழக்கமிட்டு சிறுவர், சிறுமியர், பெண் தோழர்கள் தோழர் நிர்மலா தலைமையில் ரிலையன்ஸ் வாசலை நோக்கி பாய்ந்தனர்.

trichy-protest-maggi-noodles-corporate-food-07காவல் துறையினர் இந்த சிறுவர் படையை பார்த்து மிரண்டு ஓடிச் சென்று ரிலையன்ஸ் மார்க்கெட்டின் கேட்டை இழுத்து சாத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

காத்திருந்த பத்திரிகையாளர்கள் தோழர்களை சூழ்ந்துகொண்டனர். சிறுவர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தை கேமராவில் பதிய வைத்தனர், தோழர்களிடம் பேட்டி எடுத்தனர். தோழமை அரங்குகளின் தோழர்களும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத் தோழர்களும் உடனிருந்து போராட்டத்தை உற்சாகப் படுத்தினர்.

மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சிறுவர்கள் எரிக்க முயன்றபோது, நாட்டுச் சொத்தை பாதுகாப்பது போல் காவல் துறையினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி அணைத்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத நேரம் இரு சிறு தோழர்கள் கோக், பெப்சி பாட்டிலை தூக்கிபோட்டு காலால் பந்தாடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதன் பிறகு அரைமணி நேரத்துக்கு மேல் போராட்டம்  நடத்தப்பட்டது. பொதுமக்கள் இந்த பரபரப்பான சூழலை ஓடிவந்து நின்று பார்த்தனர்.

சாலையில் வண்டியில் சென்ற ஒருவர் இறங்கிவந்து தனது போனில் புகைப்படம் எடுத்தார். அந்த பரபரப்பினூடே ரிலையன்ஸின் ஊழியர் ஒருவர், நமது பேனரில் உள்ள முழக்கத்தை படம் பிடித்தார். உடனே காவல்துறை “போப்பா, ஏற்கனவே கண்டிச்சு போராட்டம் நடத்துறாங்க இதுல நீ வேற போட்டோ எடுக்கிற” என்றார்.

அதன்பிறகு “சரி இப்படியே முடிச்சிட்டு போறீங்களா?” என நமது  தோழர்களிடம் கேட்டனர், அதற்கு மறுக்கவே அனைவரையும் வேனில் ஏற்றினர்.

பிறகு ரிலையன்ஸ் மார்க்கெட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாத்த காவல்துறையினர் அனைவருக்கும் உள்ளே அழைத்து சென்று சிறப்பு விருந்து கொடுத்தது ரிலைன்ஸ் நிர்வாகம்.

trichy-protest-maggi-noodles-corporate-food-23நம்மை அருகாமையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், கூட்டிப் போய் வைத்தனர். மண்டப நிர்வாகி, பீதியாகி மின்சாரத்தை நிறுத்தினார். அங்கு நாற்காலிகள் இருந்தும் அதனை எடுத்து போடாமல், “கீழே அமருங்கள்” என்றனர் காவல்துறையினர்.

உடனே தலைமைத் தோழர்கள் காவல்துறை ஆய்வாளரிடம், “உட்கார முதலில் நாற்காலி எடுத்து போடச் சொல்லுங்க, மின்சாரத்தை போடச் சொல்லுங்க, குழந்தைகளை வைத்து கொண்டு வெக்கையில் இருக்க முடியாது”, என்றதும் காவல்துறையை சார்ந்தவர் “இல்லம்மா, கரண்டு பில்லு யாரு கட்டுவான்னு கேக்குறாரு” என்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதற்கு தோழர்கள் “சார், அது உங்க வேல. கரண்டப்பத்தி காசப்பத்தி நீங்கதான் பேசணும்” என்றதும் மின்சாரம் போட்டு விட்டனர். நாற்காலி போடப்பட்டு அனைவரும் அமர்ந்தனர்.

மண்டபத்தில் பாடல் பாடி, தோழர்களுக்கு மேகி நூடுல்ஸை மட்டுமல்லாது, புதிய கலாச்சாரம் 2012 கட்டுரை குப்பை உணவு தொப்பை வயிறு சப்பை மூளை கட்டுரையில் உள்ள நொறுக்குத் தீனி அபாயங்களை விளக்கிய போது காவல்துறையினரும் ஆர்வமுடன் கவனித்தனர்.

“தேசத்துரோகி ஆகணுன்னா பெப்சிய குடி,
வெள்ளக்காரன் வாரிசாகணுன்னா கோலா குடி
பெப்சி கோக் மிராண்டா, குடிச்சா
பெரியாஸ்பத்திரி வராண்டா,
சொன்ன பேச்ச கேக்கலன்னா சுண்ணாம்பு தான்டா,”

எனும் பாடல்களும் பாடி உற்சாகப்படுத்தினர்.

trichy-protest-maggi-noodles-corporate-food-02போராட்ட அனுபவத்தை கேட்டபோது, சிறுவர்கள், “எமக்கு போலீசை பார்த்து பயம் வரவில்லை” என்றனர். வருங்காலத்தின் போராளிகளின் போர்குணம் பிரமிப்படைய வைத்தது. அன்று மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

முழக்கங்கள்

trichy-protest-maggi-noodles-corporate-food-16விரட்டியடிப்போம் ! விரட்டியடிப்போம் !
குழந்தைகள் உயிரை காவு வாங்கும்
நெஸ்லேவின் மேகி நூடுல்ஸ்
ரிலையசின் பாக்கெட் உணவை
விரட்டியடிப்போம் ! விரட்டியடிப்போம் !

குழந்தைகளின் உணவிலே
விஷம் கலந்து லாபம் பார்க்கும்
பன்னாட்டு முதலாளிகளை
கைது செய் ! கைது செய் !

துணைபோகாதே ! துணைபோகாதே !
தமிழக அரசே ! துணைபோகாதே !
தற்காலிக தடை போட்டு
முதலாளிகளின் லாபவெறிக்கு
துணைபோகாதே ! துணைபோகாதே !

குப்பை உணவு, தொப்பை வயிறு
சப்பை மூளை உருவாக்கும்
பன்னாட்டு கம்பெனிகளை
விரட்டியடிப்போம் ! விரட்டியடிப்போம் !

தரக்கட்டுப் பாட்டு சட்டங்களை
கால்தூசுக்கு நிகராக
குப்பையில் போடும் முதலாளிகளை
கைது செய் ! கைது செய் !

கோக், பெப்சி குளிர்பானங்கள்
உயிரைக் குடிக்கும் எமன்கள்
மேகி நூடுல்ஸ் வகையறாக்கள்
உணவல்ல குப்பைகள்
துரித உணவு என்ற பெயரில்
உழைக்கும் மக்களே, ஏமாறாதீர் !

உணவே மருந்து, மருந்தே உணவு.
பாரம்பரிய உணவு பழக்கத்தை
உயர்த்தி பிடிப்போம் ! உயர்த்தி பிடிப்போம் !
ஏகாதிபத்திய பண்பாடு மீது
காறி உமிழ்வோம் ! காறி உமிழ்வோம் !

செய்தி:

பெண்கள் விடுதலை முன்னணி,
திருச்சி.

மேகி நூடுல்ஸ் – பிரச்சினை காரீயமா ? முதலாளிகளின் காரியமா ?

32

32 இரண்டு ஆண்டுகளாக இந்தியக் குழந்தைகளின் இரைப்பையையும் பெற்றோரின் பணப்பையையும் விளம்பரங்களின் உதவியுடன் சுரண்டி வருகிறது பன்னாட்டு நிறுவனமான நெஸ்லே. இதன் ‘பிரபலமான’ உணவுத்தயாரிப்பான மேகி நூடுல்ஸ், அளவுக்கு அதிகமான அஜினோமோட்டோவாலும் காரீயம் கலந்திருப்பதாலும் நாடு முழுவதிலும் தடை செய்யப்பட்டு வருகிறது.

மேகி விவகாரம்
“நரகல்ல சீனி போட்டாக் கூட நகரத்தில வித்துறும்”

இதில் ‘பிரபலமான’ எனும் சொல்லிற்கு விளக்கமாக அன்றைக்கே 23-ம் புலிகேசி “நமது மக்கள் ஆட்டு மூத்திரத்தை சுத்த இளநீர் என்று விளம்பரப்படுத்தினாலும் வாங்கிக் குடிப்பார்கள்” என்று அர்த்தம் கொடுத்திருந்தார்.

அல்லது கிராமங்களில் கிழவிகள் இன்னும் சொலவடையாக “நரகல்ல சீனி போட்டாக் கூட நகரத்தில வித்துறும்” என்று யதார்த்தமாக நுகர்வுக்கலாச்சாரத்தைத் தோலுரித்ததுண்டு.

இதில் முத்தாய்ப்பாக இரண்டு விசயங்கள் இன்றைக்கு நாடெங்கிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

1. மக்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் மேகி போன்ற பொருட்களை தடை செய் அல்லது கடும் சோதனை செய் என்று ஓட்டுக்கட்சிகள், என்ஜிஓக்கள், பொதுமக்கள், ஆளும் வர்க்க ஊடகங்கள் அனைவரும் கருத்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். மேகியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டிவிட்டதாக அம்மாவைப் புகழ்ந்தும் மேற்கு வங்கத்து தீதியை காய்ச்சியும் கார்ட்டூனில் காவடி ஆடியிருக்கிறது ‘தமிழ் இந்து’ நாளிதழ்.

2. மறுபுறம், மேகி விளம்பரத்தில் நடித்த நடிகர்களின் மீது வழக்குப்போட வேண்டும் என்று ஆதரவாகவும் எதிராகவும் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது.

முன்கூட்டியே ஒன்றைக் கராறாக சொல்லிவிடுகிறோம். நெஸ்லேவின் மேகி நூடுல்சைப் பொறுத்தவரை அஜினோமோட்டோ மட்டுமே பிரச்சனை அல்ல. கார்ப்பரேட்டுகளின் விளம்பரங்களால் கல்லா கட்டும் ஊடகங்களும் பிரச்சனையை உடல்நிலை, விழிப்புணர்வு தாண்டி போகவிடாமல் பொதுப்புத்தியை வடிவமைத்து வருகிறது.

மேகி விவகாரம்
நெஸ்லேவின் மேகி நூடுல்சைப் பொறுத்தவரை அஜினோமோட்டோ மட்டுமே பிரச்சனை அல்ல

மற்றபடி நடிகர்கள் பிரச்சனையை புலிகேசி தவிர வேறு யாரும் சிறப்பாகச் சொல்ல முடியாது. வெள்ளைக்காரன் ‘மா’மன்னனிடம் அக்கமாலா மற்றும் கப்சி விளம்பரப்படுத்துவதற்காக ‘நமது உள்ளூர் நாடக நடிகர்களை பயன்படுத்தப்போகிறோம்’ என்று சொன்னதற்கு மறுமொழியாக எமது புலிகேசி ‘கிராதகா!’ என்று பாராட்டுவார். இதைத் தாண்டி ஒரே ஒரு வாதம் மட்டும் எஞ்சியிருக்கிறது.

‘நடிகர்களுக்கு மேகி நூடுல்ஸ் பற்றி எப்படி மன்னா தெரியும்?’ ஆகையால் ‘எப்படி தண்டிக்க முடியும்?’ என்று வெள்ளந்தியாக நடித்துக் கொண்டு பத்திரிக்கைகள் கருத்துக்கணிப்புகள் நடத்துகின்றன. ஆனால் இத்துணை நிமிடத்திற்கு கோகோ-கோலாவை வாயில் வைத்து கொப்புளிப்பதற்கென்றே சச்சினும் ஹிருத்திக் ரோசனும் ஐஸ்வர்யாவும் கோடிக் கணக்கில் வாங்கிக் கொள்கிறார்கள் எனும் செய்தி இவர்களின் தொழில் ரகசியத்தை புட்டு புட்டு வைக்கின்றன. மாகி நூடில்சை வாங்கச் சொல்லி இவர்கள் மக்களிடம் வைப்பது சுகாதாரம், உடல் நலத்தை முன் வைத்தல்ல; தமது பிரபலத்தையே விற்கிறார்கள்.

இதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் உதவும் கரங்கள் அமைப்பை நடத்தும் வித்யாகர், ‘எய்ட்ஸ் குழந்தையை தூக்கி அணைக்க வேண்டும்’ என்று உலக அழகி ஐஸ்வர்யா ராயிடம் கேட்ட போது உலக அழகியோ தனது மருத்துவரிடம் கலந்து ஆலோசித்துவிட்டு பதில் சொல்வதாக சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். உயிருள்ள ஒரு குழந்தையை தூக்குவதற்கே இவர்கள் இப்படி எச்சரிக்கையாக இருக்கும் போது அனைத்து குழந்தைகளும் உண்ணும் நூடில்சு குறித்து யாரிடம் கேட்டார்கள்? கேட்டால் அரசு அனுமதித்து விட்டதே என்று கூறலாம். எனில் எய்ட்ஸ் குழந்தைகைள வாரி அணைத்து முத்தமிடலாம் என்றும் அரசுதானே  கூறியிருக்கிறது?

மேகி விவகாரம்
‘நடிகர்களுக்கு மேகி நூடுல்ஸ் பற்றி எப்படி மன்னா தெரியும்?’ ஆகையால் ‘எப்படி தண்டிக்க முடியும்?’

விளம்பரங்களைப் பொறுத்தவரை எச்சிக்காசு பொறுக்கும் நடிகர்கள் எத்துணை காரியவாதிகளாக இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

இது ஒருபுறமிருக்க மேகியின் அடிநாதப் பிரச்சனை என்ன?

மேகி விசயத்தை முதலாளிகள் மிகுந்த கவலையோடும் அதிர்ச்சியோடும் நோக்குகிறார்கள். இந்தியாவில் மட்டுமல்ல, உலகமெங்கும் அதன் சந்தை படுத்து விட்டது. மக்களிடம் கொள்ளை இலாபம் அடிக்கும் முதலாளித்துவத்துக்கு இலாபத்தைப் பெருக்குவதற்கு புதுப்புது சந்தைகள் கண்டிப்பாக தேவை.

சந்தையில் பணம் புழங்காவிட்டால் அது முதலாளித்துவத்திற்கு மிகப்பெரும் கேடு! 2008-ல் உலகப்பொருளாதார பெருமந்தம் அனைத்து நாடுகளையும் தாக்கிய பொழுது (ஒவ்வொரு சில பல வருடத்திற்கும் பொருளாதார பெருமந்தம் என்பது முதலாளித்துவ இழவுக்கதையாகவே இருக்கிறது!) முதலாளிகள் புதிய சந்தைகளை உருவாக்குவதற்கு நாடுகளின் அரசாங்கங்களையே நம்பியிருந்தனர். இதில் இந்தியா, சந்தைக்கான தேவையை நிறைவேற்றும் பொருட்டு நிதிமூலதன விரிவாக்கத்திற்கு ஒரு வாய்ப்பாக அமைகிறது.

நெருக்கடி தருணத்தில் சந்தையை ஜாக்கி வைத்து தூக்கி நிறுத்த வேண்டுமானால் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும். அதற்காகவே வட்டிவிகிதம் குறைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இப்படி இந்திய சந்தை முற்றி நிற்கும் நெருக்கடியில் தான் நெஸ்லே நிறுவனத்தின் மேகி விவகாரம் அஜினோமோட்டோவாக வந்து நிற்கிறது.

மேகி விவகாரம்
இந்திய சந்தை முற்றி நிற்கும் நெருக்கடியில் தான் நெஸ்லே நிறுவனத்தின் மேகி விவகாரம் அஜினோமோட்டோவாக வந்து நிற்கிறது.

முதலாளித்துவத்தை ஆதரிக்கிற அறிவுஜிவிகள் மேகி விவகாரத்தைப் பார்த்து பல்லைக் கடிக்கிறார்கள். உதாரணத்திற்கு தீரஸ் நைய்யார், “மேகி விவகாரம் சந்தைக்கு எந்தவிதத்திலும் ஆரோக்கியமானதல்ல” என்கிறார். விசயமறியாத நடுத்தர வர்க்கம் உடல்நலப் பிரச்சனையாக மேகி விசயத்தை பார்க்கிறது.

பிரபலமான பிராண்ட் நுகர்வோரிடமிருந்து அம்பலப்பட்டு நிற்பது சந்தை நெருக்கடிக்கு உவப்பானதல்ல. இன்றைக்கு நெஸ்லே மாட்டியது போல் நாளைக்கு ஒவ்வொரு நிறுவனமும் மாட்டினால் சந்தையின் நிலைமை என்னவாகும் என்று பிரச்சனையின் மையத்தை சரியாகவே தொட்டுச் செல்கிறார்கள் முதலாளித்துவ அறிவு ஜீவிகள்!

மேகி விவகாரம் வெளியே வருவதற்கு முன்னமே அரசு இதில் தலையிட்டு தடுத்திருந்தால் இன்றைக்கு பிரச்சனை கையை மீறிப்போயிருக்காது என்று அங்கலாய்க்கிறார்கள். முதலாளித்துவமே வளர்ச்சி என்று செல்போனையும், பிளாஸ்மா டிவியையும் வைத்து முடிவு செய்பவர்களுக்கு இந்த வாதம் கண்டிப்பாக அதிர்ச்சியளித்திருக்க வேண்டும்.

‘தொழில் துறையில் அரசு தலையிடவே கூடாது, பொதுத்துறையை தனியார்மயமாக்க வேண்டும், லைசன்ஸ் ராஜ் ஒழிக’ என்று லா பாயிண்டுகள் பேசியவர்கள் இன்று அரசு ‘தலையிட்டு’ தடுத்திருக்க வேண்டும் என்கிறார்கள். எதை ஐயா தடுத்திருக்க வேண்டும்? விளம்பரத்திற்கு செலவழிக்கும் தொகையில் ஐந்து சதவீதத்தைக் கூட தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு நெஸ்லே ஒதுக்கவில்லை. இவ்வளவு ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றெல்லாம் அரசு கூறியிருந்தால் எங்கள் தொழில் உரிமையில் எப்படி தலையிடலாம் என்றல்லவா கத்தியிருப்பார்கள்?

இன்றைக்கு மேகி விவாகரத்தால் சந்தையில் நெஸ்லேவின் பங்குகள் மூன்று சதவீதக்கும் மேல் விழுந்திருக்கின்றன. இதே போன்று ஒவ்வொரு நிறுவனமும் நுகர்வோர் எதிர்ப்புக்கு உள்ளானால் இந்திய சந்தைக்கு பெரும் ஆபத்து என்கின்றனர். சக முதலாளிகளோ இன்னும் ஆக்ரோசமாக நெஸ்லேவின் முட்டாள் தனத்தைக் கண்டிக்கின்றனர். அதாவது நெஸ்லே தனது பொருளை வாபஸ் வாங்குவதாக அறிவித்திருக்க கூடாதாம்.

அதற்கு சான்றாக மெக்டோனல்டை உதாரணம் காட்டுகின்றனர். மெக்டோனல்ட் உணவு விடுதியில் தெருவோர சிறுவன் கழுத்தைப் பிடித்து வெளித்தள்ளப்பட்ட பொழுது வந்த எதிர்ப்பினால் பிராண்ட் பாதிக்கவில்லை என்று மூர்க்கமாக பேட்டியளிக்கின்றனர். இவர்களின் மனநிலை என்ன சொல்கிறதென்றால் அற உணர்ச்சி அல்லது விழுமியங்கள் மீது அடிவிழுந்தாலும் கூட அதை துடைத்து விட்டு சந்தையில் நிற்க முடியும். ஆனால் முட்டாள் நெஸ்லே இதைக் கூட பயன்படுத்தவில்லையென்று கையைப் பிசைகிறார்கள்.

ஆனால் நெஸ்லே இதைத்தான் வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறது. தனது பொருட்களில் தரக்குறைவு எதுவுமில்லை, தற்போது நுகர்வோருக்கு குழப்பம் ஏற்பட்டிருப்பதால் மேகியை திரும்ப பெறுகிறோம், எதிர்காலத்தில் இப்போதைய சேர்மானங்களோடு மாகி வெளிவரும் என்றே நெஸ்லே ஊடகங்களில் பேசிவருகிறது.

கூட்டிக் கழித்தால் என்ன வருகிறது? மக்களின் வாழ்க்கை, ஆரோக்கியத்திற்கும் பிராண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. அது சந்தைக்கு மட்டுமே கட்டுப்பட்டது. எத்தனை பேர் இறந்தாலும் சந்தையில் இருந்து பிராண்டை திரும்ப பெறவே கூடாது. இதுதான் முதலாளித்துவம் கூறும் அறம்.

முதலாளித்துவ அறிஞர்களின் திட்டப்படி, இது வெற்றிகரமான உணவுப் பாதுகாப்பு பிரச்சனையாக மடைமாற்றப்பட்டிருக்கிறது. நெஸ்லே இதை ஊதிவிட்டு விரைவிலேயே வரும். அதிக பட்சம் நுகர்வோர் சட்டத்தைப் பயன்படுத்தி ரூ 5000 அபராதம் விதிக்கப்படலாம். மற்றபடி தனது பிராண்டு பாதிப்புக்குள்ளானதை அடுத்து மீண்டும் தூக்கி நிறுத்த நட்சத்திரங்களை பெரும் செலவில் இருத்தும். தேவைப்பட்டால் நீங்கள் மதிக்கும் அறிஞர் பெருமக்களோ இல்லை அமைச்சர் பெருமக்களோ கூட அதை செவ்வனே செய்யலாம். அடுத்து நெஸ்லேவை எதிர்த்து எழுதுபவர்கள் மீது வழக்கு போட்டு அச்சுறுத்தலாம்.

ஆக மேகி பிரச்சினையை வெறும் உடல் நலம் குறித்த முன்னெச்செரிக்கை முத்தண்ணா பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது.

445 கோடி ரூபாய் விளம்பரத்திற்காக செலவிட்ட நெஸ்லே நிறுவனம் 19 கோடி ரூபாய் மட்டும் தரக்கட்டுப்பாட்டிற்கு செலவழித்திருக்கிறது. இதை வைத்துப் பார்த்தாலும்  மேகி விவகாரம் உணவுப் பாதுகாப்பு குறித்த பிரச்சனையல்ல. மாறாக மக்களை பணையம் வைத்து முதலாளித்துவ பயங்கரவாதம் நடத்தும் அப்பட்டமான இலாபம்-சுரண்டல் குறித்த பிரச்சனை.

நெஸ்லே உணவுத்துறைக்கு வருவதற்கு முன், குறுந்தொழில்கள் பட்டியலில் இருந்து பல சுயேச்சையான உழைப்புத் தொழில்களையும் சிறு குறு முதலாளிகளைக் இந்திய அரசு கொன்றிருக்கிறது. இதற்கு பா.ஜ.க மற்றும் காங்கிரசு இரண்டு கட்சிகளுமே காரணம்.

இன்றைக்கு இந்தப்பட்டியலில் மோடி அரசு மேலும் இருபது தொழில்களான ஊறுகாய், ரொட்டி, கடுகு எண்ணெய், கடலை எண்ணை, வீட்டு உபயோக மரப்பொருள்கள், பதிவேடுகள், நோட்டு புத்தகங்கள், மெழுகுவர்த்தி, சலவை சோப், தீக்குச்சி, பட்டாசு, ஊதுவத்தி, கண்ணாடி வளையல், ஸ்டீல் அலமாரி, ரோலிங் ஷட்டர் தயாரிப்பு, ஸ்டீல் சேர், ஸ்டீல் டேபிள், ஸ்டீல் பர்னிச்சர், பூட்டு, எவர்சில்வர் பாத்திரம், வீட்டு உபயோக அலுமனியப் பாத்திரம் என ஏகபோக முதலாளிகளுக்கு திறந்துவிட்டிருக்கிறது.

மேக் இன் இண்டியா, மேகி நூடுல்சை சமைத்த கதை இது தான்!

இது தெரியாத நம்மில் பலரும் விட்ட இடத்திலிருந்து தொடங்குகிறோம் ‘அஜினோமோட்டோ உடம்புக்கு கெடுதி என்று’.

உண்மை என்ன? அஜினோமோட்டோ எனும் கெடுதியை சந்தைப்படுத்தி காசு பார்த்து விட்டு அதை நியாயப்படுத்தும் முதலாளித்துவம் எனும் கெடுதியை குறிபார்த்து அடிக்காமல் நாம் நம் குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை வழங்கிவிட முடியாது.

– இளங்கோ

மேகி நூடுல்ஸ் – பன்னாட்டு நிறுவன உணவுப் பொருட்களுக்கு எதிராக திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆர்ப்பாட்டம்

குறிப்புகள் எடுக்கப் பயன்பட்டவை

  1. மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியில் சில சிறப்பியல்புகள்-லெனின்-கீழைக்காற்று வெளியீட்டகம்
  2. Reliance Retail removes 11 instant noodle brands from stores
  3. Maggi lessons for India
  4. Nestle India: Rs 19 crore for quality testing, Rs 445 crore for ads
  5. மேகி விற்பனை அதிகரிக்கக் காரணம் சோம்பல் மிகு தாய்மார்களே: பாஜக எம்.எல்.ஏ.
  6. மத்திய அரசின் அறிவிப்பு குறுந்தொழில்களைப் பாதிக்குமா?

 

புதுச்சேரி பல்கலையில் மாணவர் சித்திரவதை – வீடியோ ஆதாரம்

1

பார்ப்பனிய அதிகார முறைகேடுகளுக்கும், மாணவர்களின் உரிமைபறித்து சித்திரவதை செய்வதற்கும் எதிராக மாணவர்கள்-பேராசிரியர்கள் இணைந்து புதுவை மத்திய பல்கலையில் போராட்டம் நடத்துகின்றனர்.

புதுவை பல்கலைக் கழக பேராசிரியர் - மாணவர் போராட்டம்
பார்ப்பனிய அதிகார முறைகேடுகளுக்கும், மாணவர்களின் உரிமைபறித்து சித்திரவதை செய்வதற்கும் எதிராக…

கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இராதாகிருஷ்ணன் என்கிற முதலாம் ஆண்டு தமிழ் முதுகலை எம்.ஏ மாணவரை 27 மணி நேரம் இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்த ஹரிஹரன் (director acadamic staff collage), பூசன் சுதாகர் (பொருளாதாரத்துறை துணை பேராசிரியர்) மற்றும் விடுதிகள் தலைமை வார்டன், பாதுகாப்பு அதிகாரி உட்பட 5 பேர் பற்றிய செய்தி ஏற்கனவே வினவு இணையதளத்தில் வெளிவந்துள்ளது. மாணவர்கள் இந்த முறைகேடுகளுக்கு எதிராக போராடி விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது பற்றிய செய்தியும் வினவு இணையத்தில் வந்துள்ளது.

இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் (மும்பை பதிப்பு) வலைத்தளத்தில் புதுவை மத்திய பல்கலைக் கழகத்தில் முறைகேடுகள், மாணவர் மீது நடத்தப்பட்ட சித்திரவதை பற்றி வீடியோ ஆதாரத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

போலீஸ் விசாரணையின்படி, பெண்கள் விடுதியில் அன்னியர் நுழைந்ததாக கூறப்படும் நேரத்தில் குற்றம் சாட்டப்படும் மாணவர் நூலகத்தில் இருந்ததாக கூறியது CCTV பதிவுகளிலிருந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவரை மிரட்டி அவரை குற்றங்களை ஏற்றுக் கொள்ளும்படி செய்திருக்கிறது ஹரிஹரன் கும்பல்.

இது பற்றி பூசன் சுதாகரிடம் விசாரித்த போது, “துணைவேந்தரின் உத்தரவுபடிதான் அதைச் செய்தோம்” என பேட்டி அளித்திருக்கிறார். இந்த வீடியோவை எடுத்தது பூஷன் சுதாகர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட வீடியோவை பார்த்த பல்கலைக் கழக ஆசிரியர் சங்கமும், அலுவலக ஊழியர்கள் சங்கமும் இணைந்து 09-06-2015 மாலை 4.30 மணிக்கு விரிவான பத்திரிகை சந்திப்புக்கு, பல்கலைக் கழக இராசாயனத் துறை கட்டிடத்திற்கு எதிரில் உள்ள புல்வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் சுமார் 50 மாணவர்களும், ஆசிரியர்களும் கூடினார்கள்.

பல்கலைக் கழக நிர்வாகமோ மெயின்கேட் கதவை இழுத்து மூடி பத்திரிகையாளர்களை உள்ளே விட மறுத்தது. ஆனால் இந்த ஜனநாயக மறுப்புக்கு முன்பாகவே TIMES NOW, INDIA TODAY ஆகிய ஊடகத்தார் வளாகத்திற்கு உள்ளே வந்திருந்தார்கள். உள்ளே வரமுடியாத மற்ற செய்தியாளர்கள் முதலாவது நுழைவு வாயில் வழியாக வந்து சேர்ந்தனர்.

புதுவை பல்கலைக் கழக பேராசிரியர் - மாணவர் போராட்டம்
புதுவை பல்கலைக் கழக பேராசிரியர் – மாணவர் போராட்டம்

கூடியிருந்த மாணவர்கள், பேராசிரியர்கள் “துணைவேந்தர் சந்திராகிருஷ்ணமூர்த்தியை பல்கலைக் கழகத்தில் இருந்து நீக்க வேண்டும்” என முழக்கமிட்டனர். பல்கலைக் கழக ஆசிரியர் சங்க செயலாளர் தஸ்தகிர் ரெட்டி ஆங்கில மீடியாவிற்கு பேட்டியளித்தார். பின்னர் நூலகர் சம்யுக்தா தமிழ் மீடியாவிற்க்கு பேட்டியளித்தார்.

மாணவர் இராதாகிருஷ்ணன் மீதான சட்டவிரோத கடத்தல், சித்திரவதை தொடர்பாக இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் இந்தப் போக்கை எதிர்த்து போராடிய மாணவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. 70, 80 ஆய்வாளர்கள் ஆய்வு அறிக்கையை சமர்பித்து பத்து மாதங்கள் ஆகியும் அறிக்கையை மதிப்பீடு செய்வதற்காக அனுப்பும் எந்த நடவடிக்கையும் இல்லை.

புதுவை பல்கலைக் கழக பேராசிரியர் - மாணவர் போராட்டம்
மாணவர் இராதாகிருஷ்ணன் மீதான சட்டவிரோத கடத்தல், சித்திரவதை மீதான இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

துணைவேந்தர் பொய்யான ஆவணங்கள் கொடுத்து பதவியை பெற்றுள்ளார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டி பிரதமர், ஜனாதிபதி, கல்வி மந்திரி ஆகிய அனைவருக்கு அனுப்பி வைத்தும் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை. துணைவேந்தர் உத்தரவின் பேரில் ஹரிஹரன், பூஷன் சுதாகர் ஆகியோரால் 27 மணி நேரம் சித்திரவதை செய்யப்பட்ட மாணவர் மனித வளத் துறை அமைச்சகத்துக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் அனுப்பிய மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதுவை பல்கலைக் கழக பேராசிரியர் - மாணவர் போராட்டம்ஒரு மொட்டை கடிதாசிக்கு தலைவணங்கி அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்திற்கு உடனடியாக ஐ.ஐ.டி நிர்வாகத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை சந்திராகிருஷ்ணமூர்த்தியின் தகிடுதத்தங்களை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியும் அதை பரிசீலிக்கக்கூட முடியாது என்று பார்ப்பன பாசத்தோடு தெனவெடுத்து திரிகிறது இந்த கும்பல்.

காங்கிரஸ் ஆட்சியில் பதவிக்கு வந்த சந்திராகிருஷ்ணமூர்த்தி, மோடி ஆட்சியிலும் நீடிப்பதற்கு என்ன காரணம்? பார்ப்பனர்களை யாரும் தண்டிக்கமுடியாது என்ற மனுநீதியே…

பேராசிரியர்களின் பதவி உயர்வு, அலுவலக ஊழியர்களின் பதவி உயர்வு, மற்றும் பணிபாதுகாப்பு உட்பட எந்த பொருளாதார பாதுகாப்பிற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாணவர்கள் பட்டம் பெற்றுச் சென்றாலும் கூட அவர்களின் ஆய்வறிக்கையை பரிசீலிக்காமல் மாதக்கணக்கில் கிடப்பில் போட்டு பழிவாங்குகிறது சந்திரா கும்பல்.

இவரின் சட்டவிரோத மனித உரிமை மீறலுக்கு எதிராக போராடிய குற்றத்திற்கு மாணவர்களின் வாழ்வை பறிக்கும் வேலையை செய்து வருகிறது.

இரண்டு பெண் மாணவிகள் பாலியல் ரிதியில் பாதிக்கப்பட்டு நீதி மன்றம் சென்று நீதி பெற்ற பின்பும் அவர்களுக்கான இழப்பீடு மற்றும் நியாயத்தை இன்று வரை சந்திராகிருஷ்ணமூர்த்தி வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்காக துணை நின்று உறுதியாய் போராடிய கேரள மாணவிகளை பழிவாங்கும் நோக்கோடு கேரளாவில் விரிவாக இருந்த நுழைவுத் தேர்வு மையங்களை ரத்து செய்துவிட்டு பாண்டிச்சேரி வந்து தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிட்டது, பாண்டிச்சேரிக்கு தேர்வு எழுத வந்த மாணவிகளை காலை 10:00 மணிக்கு மேலே எழுதுஙகள் என்று எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு அந்த மாணவிகளை அலைக்கழித்து தேர்வு எழுத விடாமல் பல்கலைக் கழகத்திற்கே நுழைய விடாமல் தடுத்து அவர்களின் வாழ்வை பறித்தது ரசித்தது பார்ப்பன பாசிச சந்திராகிருஷ்ணமூர்த்தி கும்பல்.

ஜெயலலிதாவை எப்படி சட்டப்படி தண்டிக்க முடியாதோ அது போல புதுவை பல்கலைக் கழக தில்லாலங்கடி பார்ப்பன சந்திராகிருஷ்ணமூர்த்தியை சட்டத்தின் மூலம் தண்டிக்க முடியாது. எல்லா கல்வி நிலையங்களையும் கைப்பற்றி பார்ப்பன பாசிச மயமாக்கும் சதியின் ஒரு பகுதியாகத்தான் சந்திராகிருஷ்ணமூர்த்தியின் சட்ட விரோத நடவடிக்கைகளையும் பா.ஜ.க அரசு பாதுகாத்து வருகிறது.

எனவே மக்கள் விரோத அரசானாலும் பல்கலைக் கழக கிரிமினல் பாசிச பார்ப்பன கும்பலானாலும் இவர்களை தண்டிக்க அரசியல் அதிகாரம் கொண்ட மக்கள் அமைப்பின் மூலமே தண்டிக்க முடியும்.

தகவல்

புதிய ஜனநாயகம் செய்தியாளர்,
புதுச்சேரி.

வேலூர் போக்குவரத்து உரிமை விருத்தாச்சலத்தில் கல்வி உரிமை

2

பொதுப் போக்குவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரை வார்க்கும் மோடி அரசின் சதி – வேலூரில் பு.ஜ.தொ.மு பிரச்சாரம்

“நாட்டின் பொதுப் போக்குவரத்தை கார்ப்பரேட் கம்பெனிகளிடம் தாரை வார்க்கும் கார்ப்பரேட் கைக்கூலி மோடி அரசின் சதியை முறியடிப்போம்” என்கிற முழக்கத்தின் கீழ் ஆர்ப்பாட்டம் நடத்துவும் இந்த அபாயத்தை பெரும்பான்மை உழைக்கும் மக்களிடம் கொண்டு செல்லுவும் ஆட்டோ ஓட்டுநர்கள், லாரி ஷெட், மெக்கானிக் ஷெட், சிறு உதிரி பாகங்கள் செய்யும் தொழிலாளர்களை சந்தித்த, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி  வேலூர் நகரில் பரவலாக பிரச்சாரம் மேற்கொண்டது.

vellore-ndlf-against-road-bill-4கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை குறிவைக்கும் இந்த சட்டம் குறித்த தமது ஆதங்கங்களை மக்கள் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தினர்.

“இந்தச் சட்டம் நடைமுறைக்கு வராது, வீணாக ஏன் பேசுறிங்க” என்று தைரியம் கூறிக் கொண்டார் ஒருவர்.

ஆனால், பெரும்பான்மை தொழிலாளர்கள், பொதுமக்கள், “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் என்ன செய்வது” என புலம்பினார்கள்.

78 வயதான ஒரு தொழிலாளி,  “அரசியல் கட்சிகள் எவனும் சரியில்லை, இந்த அரசாங்கம் மக்களுக்கானது இல்ல” எனக் கடுமையாக திட்டினார்.

“இனி மேலும் இவர்களை நம்பக் கூடாது. அதே நேரம் மக்களிடம் இந்த விழிப்புணர்வு இல்லை” என்றார், இன்னொரு தொழிலாளி.

இன்னும் ஒரு சிலர், “மோடி நல்லவர் என்று நம்பி ஓட்டு போட்டோம், இனி எவனையும் நம்பக்கூடாது” என்றனர்.

“இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், அனுபவம் வாய்ந்தவர்கள், திறமையானவர்கள் எல்லாம் வேலையில்லாமல் போய்விடும்” என்றனர்.

இன்னும் ஒரு சிலர், “இப்படிப்பட்ட சட்டங்களை, இவர்கள் எங்கிருந்து கொண்டு வருகிறார்கள்” என்று கேட்டனர்.

பெரும்பாலானவர்கள் தங்கள்  கருத்துக்களை கூறிய பின் தங்களால் முடிந்த நிதி கொடுத்து உதவினார்கள்.

பேருந்து பிரச்சாரத்தின் போது ஓட்டுனர் நடத்துனர்கள் பிரச்சாரத்தை ஆதரித்து நிதி கொடுத்தனர்; பேருந்தை நிறுத்தி, பிரச்சாரத்திற்க்கு ஆதரவு தெரிவித்தனர்.

வேலூர் தலைமை தபால் நிலையம் அருகில் 08-06-2015 அன்று காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள், தரைக்கடை வியாபாரிகள் மற்றும் பல பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சாலை போக்குவரத்து மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
“இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், அனுபவம் வாய்ந்தவர்கள், திறமையானவர்கள் எல்லாம் வேலையில்லாமல் போய்விடும்”

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ஒட்டுனர் பாதுகாப்பு சங்க செயலாளர் தோழர் ஆல்வின் தலைமை தாங்கினார். தரைக் கடை வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் தோழர் தாமோதரன், செயலாளர் சரவணன், ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க பொருளாளர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தோழர் சிவா சிறப்புரையாற்றினார். இறுதியாக லோகேஷ்குமார் நன்றியுரை கூறினார்.

சாலை போக்குவரத்து மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
தோழர் சிவா சிறப்புரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத்தின் பல்வேறு பகுதியிலிருந்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சாலை போக்குவரத்து மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
“அரசியல் கட்சிகள் எவனும் சரியில்லை, இந்த அரசாங்கம் மக்களுக்கானது இல்ல”

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
வேலூர்

_______________

விருத்தாசலம் கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு : அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்

விருத்தாசலத்தில் ஜூன் 13-2015 அன்று நடைபெறவிருக்கும் கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு ஒட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

அரசுப் பள்ளி விளையாட்டு போட்டிகள்
விருத்தாசலம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க போட்டி (Chess), ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் வரும் ஜூன் 13 ம் தேதி அன்று விருத்தாசலத்தில் கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு, நடத்துகிறோம். இதற்காக மே மாதம் முழுவதும் விருத்தாசலம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கல்வி தனியார் மயத்தின் கொடூர விளைவுகளையும், அரசுப் பள்ளிகளை காக்க வேண்டியதன் அவசியத்தையும் விளக்கி சைக்கிள் விழிப்புணர்வுப் பேரணி நடத்தப்பட்டது. மேலும், அரசுப் பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்தும் விதமாக 06-06-2015 மற்றும் 07-06-2015 ஆகிய இரு தினங்களும் விருத்தாசலம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க போட்டி (Chess), ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது.

அரசுப் பள்ளி விளையாட்டு போட்டிகள்
விளையாட்டுப் போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொள்ள வந்த தனியார் பள்ளி மாணவர்களிடம் அரசு பள்ளியின் முக்கியத்துவத்தை விளக்கி அனுமதி மறுக்கப்பட்டது.

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்காக 5 தினங்களுக்கு முன்பே சுற்று வட்டாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்காக இலவச நுழைவுச் சீட்டு அச்சடித்து வழங்கப்பட்டது. இரு தினங்களுக்கு பிறகு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சதுரங்க விளையாட்டு போட்டி நடத்துவதற்காக கடலூரில் இருந்து திரு பிரேம்குமார் என்பவர் விருத்தாசலம் வந்திருந்து மூன்று தினங்கள் குறிப்பிட்ட பள்ளிகளுக்குச் சென்று காணொலி காட்சி மூலம் சதுரங்க விளையாட்டு சட்டதிட்டங்கள், விளையாட்டு முறை பற்றி விளக்கம் அளித்து மாணவர்களுக்கு ஆர்வமூட்டினார்.

அரசுப் பள்ளி விளையாட்டு போட்டிகள்
சதுரங்கப் போட்டி

06-06-2015 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு சதுரங்க போட்டி தொடங்கியது. மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு ராஜூ, மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் வை.வெங்கடேசன், சிறுதொண்ட நாயனர், வீரகாந்தி, ஆடியபாதம், ஆனந்த்குமார், வழக்கறிஞர் புஷ்பதேவன், செல்வம், அசோக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சதுரங்க போட்டியை திரு பிரேம்குமார் முறைப்படுத்தி 5 சுற்றுகளாக போட்டி திட்டம் வகுக்கப்பட்டு நடத்தப்பட்டது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகள் 158 பேர் போட்டியில் கலந்து கொண்டனர். பிள்ளைகளின் பெற்றோர்களும் வந்திருந்தனர். அனைவருக்கும் டீ, பிஸ்கெட், மதிய உணவாக தக்காளி சாதம் தயார் செய்து வழங்கப்பட்டது. மாலை 5.30 மணி அளவில் போட்டி நிறைவு பெற்றது. 30 மாணவ மாணவிகள் பரிசுக்குரியவர்களாக திரு பிரேம்குமார் தேர்வு செய்தார்.

மறுநாள் 07-06-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. ஓவியப்போட்டியை தலைவர் வை.வெங்கடேசன், அசோக், வீரகாந்தி, ஆடியபாதம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடத்தினர்.

அரசுப் பள்ளி விளையாட்டு போட்டிகள்
“விவசாயம் நாட்டின் முதுகெலும்பு” – ஓவியப்போட்டி

ஆசிரியர் திரு ராஜன் மேற்பார்வையில் போட்டி நடத்தப்பட்டது. ஓவியப்போட்டிக்கு “விவசாயம் நாட்டின் முதுகெலும்பு” என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்தது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, ஓவியங்களை வரைந்தனர்.

அரசுப் பள்ளி விளையாட்டு போட்டிகள்
“வள்ளுவர் நோக்கில் சமுதாய மேன்மைக்கு அடிப்படை அறமா? பொருளா?” – பேச்சுப் போட்டி

பேச்சுப்போட்டியை ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிவராம சேது, தலைமை ஆசிரியர் சிற்றரசு ஓய்வு பெற்ற உதவி தொடக்கக் கல்வி அலுவலர் கோ.சீனுவாசன் நடுவர்களாக இருந்து நடத்தி கொடுத்தனர். பேச்சுப் போட்டிக்கு வள்ளுவர் நோக்கில் சமுதாய மேன்மைக்கு அடிப்படை “அறமா? பொருளா?” என்ற தலைப்பு வழங்கப்பட்டிருந்த்து. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது.

அரசுப் பள்ளி விளையாட்டு போட்டிகள்
மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட இந்த போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் மிகுந்த உற்சாகத்தையும் பெரும் வரவேற்பையும் பெற்றது.

மாநாட்டை ஒட்டி நடத்தப்பட்ட இந்த போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களிடத்திலும், பெற்றோர்களிடத்திலும் மிகுந்த உற்சாகத்தையும் பெரும் வரவேற்பையும் பெற்றது. விளையாட்டுப் போட்டிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டது. போட்டியில் கலந்துகொள்ள வந்த தனியார் பள்ளி மாணவர்களிடம் அரசு பள்ளியின் முக்கியத்துவத்தை விளக்கி அனுமதி மறுக்கப்பட்டது.

அரசுப் பள்ளி விளையாட்டு போட்டிகள்
பல பகுதிகளை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் ஒன்றாக ஒரே இடத்தில் சந்தித்து போட்டியில் கலந்து கொண்டனர்.

பல பகுதிகளை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் ஒன்றாக ஒரே இடத்தில் சந்தித்து போட்டியில் கலந்து கொண்டது, மிகுந்த மகிழ்ச்சியாகவும், ஆர்வமூட்டுவதாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

தகவல்
மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்,
கடலூர் மாவட்டம்

வரலாறு: ம.க.இ.க.வின் கிடா வெட்டும் போராட்டம்

7

கோயில்களில் அன்னதானம், மதமாற்றத் தடை சட்டம், பாபர் மசூதி இடிப்பு ஆதரவு என்று பா.ஜ.கவின் இளைய பங்காளியாக ஜெயலலிதா செய்த நடவடிக்கைகள் பல. இதன்படி கோயில்களில் கிடா வெட்டுவதற்கு தடையை அமல்படுத்த 2003-ம் ஆண்டுஆணை பிறப்பித்தது, அதிமுக அரசு. நாட்டார் வழிபாட்டை பார்ப்பனமயமாக்கும் இந்த முயற்சியை எதிர்த்த்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய கிடா வெட்டும் போராட்டம் பற்றிய செய்தி இது. இந்த சட்டம் வந்தவுடன் தமிழகத்தின் கோவில் கொடை நிகழ்வுகளில் வீரப்பரம்பரை என்று சவுண்டு விட்ட எந்த முறுக்கு மீசை சாதியும் வாய் திறக்கவில்லை. ஒரு கோழிக்குஞ்சை கூட கொல்லவில்லை என்பது முக்கியம்.

– வினவு

கிடா வெட்டுவதற்கெல்லாம் ஒரு போராட்டமா என்று கேட்கலாம். சாமி கும்பிடுவதற்கும், செருப்புப் போட்டு நடப்பதற்கும், தேநீர் குடிப்பதற்கும் கூட தலித் மக்கள் போராட வேண்டியிருக்கிற இந்தத் திருநாட்டில் இக்கேள்விதான் அபத்தமானது. பேச்சுரிமை மறுக்கப்பட்ட இடத்தில் வெறும் பேச்சு கூடத்தான் போராட்டமாகி விடுகிறது.

செப்டம்பர் 8, காலை போராட்ட அறிவிப்புச் சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டவுடனே போலீசின் “தேடுதல் வேட்டை” தொடங்கியது. திருச்சி, உறையூர் குழுமாயி அம்மன் கோயிலுக்குக் கிடாவெட்டும் மந்தையில் லாரி லாரியாகப் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. முன்னால் பெண் தோழர்கள் பறை முழங்கி வர ஆட்டுக் கிடாவும் அரிவாளுமாக தோழர்களின் ஊர்வலத்தைக் கண்டவுடன் 3 லாரி போலீசும் அவர்கள் மீது பாய்ந்தது.

தோழர் செல்வராசின் கையிலிருந்த ஆட்டைப் பிடுங்குவதற்கு இன்ஸ்பெக்டர் மல்லுக்கட்டினார். போலீசார் நடத்திய இந்த ஜீவமரணப் போராட்டத்தின் நோக்கம் பன்முகத்தன்மை வாய்ந்தது. ஆட்டைக் கைப்பற்றுவதன் மூலம் சட்டத்தைக் காப்பாற்ற முயல்வதாக சிலர் கருதியிருக்கலாம். ஆட்டின் வடிவத்தில் செல்வராசு கையில் சிக்கியிருந்த தன் பதவியைக் காப்பாற்றத்தான் இன்ஸ்பெக்டர் போராடுகிறார் என்ற உண்மை போலீசாருக்கு மட்டும் தெரிந்திருந்தது. ஆனால், யாருடைய இன்னுயிரைக் காப்பாற்ற புரட்சித் தலைவியின் ஆணையின் பேரில் 100 போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனரோ, அந்த ஆட்டின் மூளைக்கு தனது உயிருக்குத்தான் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை உறைத்திருக்காது என்பதுதான் பெரிய துரதிருஷ்டம்

ஒரு மாபெரும் குற்றத்தைத் தடுத்து விட்ட மகிழ்ச்சியில் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு கோயிலின் வாசலில் ஒரு ஆட்டுக் கிடாவின் உயிர் பிரிந்தது. கிடா வெட்டும் ‘குற்றத்தை’ இழைத்து அதற்குரிய நடவடிக்கையை எதிர்கொள்வதன் மூலம் நாட்டார் கோயில்களை பார்ப்பனமயமாகும் இந்தச் சட்டத்தை அம்பலப்படுத்துவது என்று நாம் முடிவு செய்திருந்ததால் இன்னொரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைக்கோட்டைக் கோயிலிலிருந்து சுமார் ½ கி.மீ தொலைவில், பெரிய கடைவீதியில் இருக்கும் சுடலை மாடன் – சப்பாணி கோயில் வாசலில் கிடாவை வெட்டி எடுத்துக் கொண்டு கிளம்பிய ஊர்வலம் மலைக்கோட்டைக் கோயிலை அடைந்தது. ஒரு கையில் வீச்சரிவாள், இன்னொரு கையில் ஆட்டுத் தலையுடன், முழக்கங்களால் போர்க்குணமூட்டப்பட்ட கொடிகளுடன் கம்பீரமாகச் சென்ற ஊர்வலத்தை கடைவீதியே கூடி நின்று ரசித்தது. மலைக்கோட்டை வாயிலில் ஊர்வலத்தை மறித்த போலீசார், பிரேதத்தையும் அரிவாளையும், ‘குற்றவாளிகளிடமிருந்து’ கைப்பற்றினர்.

குற்றமிழைக்கப்பட்டு விட்டது. போலீசாருக்கு இது கிரிமினல் குற்றம். கோயில் நிர்வாகிகளைப் பொறுத்த வரை தெய்வக் குத்தம்.

‘நேற்று கும்பாபிஷேகம் நடந்த கோயிலில் இன்று கிடா வெட்டித் தீட்டாக்கி விட்டார்களே’ என்று அவர்கள் பதறினார்கள். உண்மைதான். சப்பாணி – சுடலை மாடன் கோயிலை “சுடலை மாடஸ்வாமி சப்பாணி ஸ்வாமி” திருக்கோயிலாக்கி, உள்ளே ஒரு விநாயகரையும் ‘பிரதிஷ்டை’ செய்து, யாக குண்டங்கள் அமைத்து, நாள் முழுதும் வேள்வி நடத்தி, ஒரு பார்ப்பன அர்ச்சகரையும் கோயிலுக்கு நியமித்திருந்தார்கள். கோனார் சாதியினருக்குச் சொந்தமான அந்தக் கோயில் முழுமையாக பார்ப்பனமயமாக்கப்பட்டிருந்தது. எனவே, 8-ம் தேதி மாலை கோயில் வாசலில் உறைந்திருந்த ரத்தத்தை கழுவிவிட்டு, தீட்டுக் கழிப்பு சடங்கும் நடத்தி நிம்மதியடைந்தனர்.

இவ்வளவு வேலை செய்த இந்தப் புத்திசாலிகளுக்கு கோயில் வாசலில் தாங்கள் அமைத்திருந்த அலங்கார வளைவில் கொட்டை எழுத்தில் எழுதியிருந்த இரண்டு சொற்களுக்கு பொருள் புரியவில்லை போலும். “மகா சம்ப்ரோட்சணம்” என்பதே அந்த வாசகம். அதாவது, “மாபெரும் தீட்டுக்கழிப்பு”. வேறு யாருக்கு? சுடலை மாடனுக்கும் சப்பாணிக்கும்தான்.

போலீசுக்கும் தீட்டுப்பட்டு விட்டது. கோயில் வாசலிலேயே புறக்காவல் நிலையம் இருந்தும், ஊர்வலப் பாதையில் நகரக் காவல்நிலையம் இருந்தும், மலைக்கோட்டை வாயிலில் இன்னொரு புறக்காவல் நிலையம் இருந்தும், அனைத்தையும் மீறிக் ‘குற்றம்’ நடந்து விட்டதால் அரை டஜன் குற்றப் பிரிவுகளில் வழக்கு போட்டனர். ஆனால், எந்தச் சட்டத்தை மீறி இந்தக் குற்றம் இழைக்கப்பட்டதோ, அந்தக் குற்றப் பிரிவு மட்டும் போடப்படவில்லை. ஏனென்றால், அந்தச் சட்டநகலே போலீசிடம் இல்லை. மாறாக, கிடாவெட்டைத் தடுக்க வந்த கோயில் நிர்வாகி ஒருவரைக் கொலை செய்ய வழக்குப் பதிவு செய்தனர்.

பச்சையான பொய்வழக்கு என்று தெரிந்தும் பிணை மறுத்தது நீதிமன்றம். 15 நாட்களுக்குப் பின் காவல் நீட்டிப்பை ஆட்சேபித்தோம். “கொலை செய்யப்பட்ட ஆட்டின் சவப் பரிசோதனை அறிக்கை தயாராகாததால் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது” என்று வாதாடியது, அரசுத் தரப்பு. கேலிக்குரிய இந்த வாதத்தை ஏற்று தோழர்களை மீண்டும் சிறைக்கு அனுப்பியது நீதிமன்றம்.

“என்னைக் கொலை செய்ய முயன்றதாக நான் புகாரே கொடுக்கவில்லை” என்று கோயில் நிர்வாகியே நீதிமன்றக் கூண்டில்  ஏறி வாக்குமூலம் கொடுத்தபின், வேறு வழியின்றி பிணை வழங்கப்பட்டது. அதுவும், “அன்றாடம் காலையும், மாலையும் நீதி மன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்ற நிபந்தனையுடன்!

போராட்டம் என்றால் போலீசு அடக்குமுறை உண்டு என்பது நாமறிந்ததுதான். எனினும் இப்போராட்டம் குறித்து இவ்வாறு விவரித்து எழுதக் காரணம் இருக்கிறது. இந்தத் தடைச்சட்டத்தை எதிர்க்காத மக்களில்லை. எதிர்க்காத பூசாரிகளில்லை. எனினும் களத்தில் நின்று எதிர்ப்பைக் காட்டத் தயங்குகிறார்கள்.

பாசிச ஜெயாவின் இரண்டாண்டு ஆட்சிக் காலத்தில் தமது சொந்த உரிமைகளைப் போராடிக் காப்பாற்றிக் கொள்ளவியலாத மக்களால், தங்கள் தெய்வத்தின் உரிமையையும் காப்பாற்ற முடியவில்லை. அரசு அன்றே கொல்லும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கும் மக்கள், தெய்வம் நின்று கொல்லும் என்று நம்புகிறார்கள். ஆனால், “என்று கொல்லும்” என்று அவர்களுக்கே தெரியவில்லை.

மூடநம்பிக்கையை ஒழிப்பதாகச் சொல்லிப் பார்ப்பன கும்பல் திணித்துள்ள இந்தச் சட்டம், அவர்கள் முற்றிலும் எதிர்பாராதவொரு கோணத்தில் மக்களிடம் பகுத்தறிவுச் சிந்தனைக்கு விதை போடவிருக்கிறது. தங்கள் தெய்வத்தின் ‘உரிமை’யைக் கூட தாங்கள் போராடித்தான் பெற்றுத் தர வேண்டும் என்ற அனுபவம் அர்களைத் தெய்வ நம்பிக்கையிலிருந்து விடுவிக்கும் ஒரு படிக்கல்லாக அமையும்.

போராட்டம் குறித்த செய்தி தமிழகம் முழுவதுமுள்ள பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட போதும் போராட்டத்தின் நோக்கத்தை மட்டும் அவை கவனமா இருட்டடிப்புச் செய்தன.

“நாட்டார் தெய்வங்களைப் பார்ப்பனமயமாக்குவது, கோயில்களை ஆர்.எஸ்.எஸ் முகாமாக்குவது” என்ற இந்தச் சட்டத்தின் நோக்கத்தை வெளியிடாமல் பரபரப்புச் செய்தியாக மட்டுமே பல பத்திரிகைகள் வெளியிட்டன. தொலைக்காட்சிகளோ தோழர்கள் எழுப்பிய முழக்கங்களின் ஒலியை மிகக் கவனமாகத் தணிக்கை செய்தன. எங்கே இருக்கிறது பார்ப்பன ஆதிக்கம் என்று கேட்போருக்கு இதை விட வேறு விளக்கம் தேவையில்லை.

போராட்டம் முடிந்த மறுநாளே ‘விசுவ இந்து பரிசத்’ தலைவர் வேதாந்தம் ஒரு அறிக்கை விட்டார். சட்டத்தை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் சில ‘இந்து விரோத சக்திகள்’ இதைப் பயன்படுத்திக் கொள்கின்ற காரணத்தால் கிடா வெட்டும் பக்தர்களைக் கைது செய்ய வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இறுதியாக, அந்த அறிக்கை நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்க முடியாத இன்னொரு கேள்வியையும் எழுப்பியிருந்தது. “கிடா வெட்டும் இந்துக்களை கைது செய்யும் அரசு பக்ரீத்துக்கு ஆடு அறுக்கும் முசுலீம்களை கைது செய்யுமா?” என்பதே அந்தக் கேள்வி. சட்டத்தின் நோக்கம் இப்போது புரிகிறதா?

திருச்சியில் நாம் கிடா வெட்டிய கோயில் அமைந்துள்ள இடம் சரஸ்மீரான் தெரு, அங்கே 100 முசுலீம் குடும்பங்களும், 4 மாட்டிறைச்சிக் கடைகளும் உள்ளன. சுடலை மாடன் ஏன் “ஸ்ரீ சுடலை மாடஸ்வாமி”யானார் என்று இன்னுமா புரியவில்லை?

– சூரியன்
______________
கிடா வெட்டைத் தடை செய்ய சட்டம்!

பார்ப்பனரல்லாத பூசாரியைத் துரத்திப்
பார்ப்பானை நுழைக்கும் சதித்திட்டம்!

மதுரை வீரன், மாரியாத்தா,
ஒண்டிக்கருப்பன் போன்ற
நாட்டார் தெய்வங்களைப்
பார்ப்பனமயமாக்கி
சங்கராச்சாரியிடம் ஒப்படைக்கும்
சதித்திட்டத்தின் முதல் கட்டம்தான்
கிடா வெட்டத் தடைச் சட்டம்

கிடா வெட்டி, கோழி அறுத்துச்
சாமி கும்பிடுவது அசுத்தம்;
பார்ப்பானை வைத்துச்
சாமி கும்பிடுவதுதான் சுத்தம் என்றால்
கிடா வெட்டிச் சாமி கும்பிடும் 90 சதவீத ‘இந்துக்கள்’
அசுத்தமானவர்களா?

கோயிலில் கிடா வெட்டியவர்களைக்
கிரிமினல் குற்றவாளிகள் என்று
கைது செய்யும் அரசே,
வெட்டியவன் கிரிமினல் என்றால்
கறி தின்பவர்கள் எல்லோரும்
கிரிமினல்களா?
கறி கேட்கும் கடவுளும் கிரிமினலா?

பார்ப்பன முனிவர்களும் அவதாரங்களும்
மாட்டுக்கறி தின்றதற்கு ஆதாரம்
வேத புராணங்களில் இருக்கிறது.
மாட்டுக் கறியைத்
தடை செய்யக் கோரும்
இந்து முன்னணியே,
வேதங்களையும் தடை செய்யலாமா?

பிணத்தின் சாம்பலை உடலில் பூசி
மண்டையோட்டைக் கையிலேந்தி
சுடுகாட்டில் ஆடும்
பரமசிவன் தெய்வம்!
மண்டையோட்டு மாலையணிந்து
மனித ரத்தம் குடிக்கும்
பத்ரகாளியும் தெய்வம்!
கிடா வெட்டுபவன்
கிரிமினல் குற்றவாளியா?

பட்டுச்சேலை, வேட்டி
தானியங்களை
வேள்வித் தீயில் போட்டு
டன் டன்னாய் நெய்யை ஊற்றி
எரிப்பது காட்டுமிராண்டித்தனமா?
கிடா வெட்டிப் பொங்கல் வைத்துச்
சாப்பிடுவது காட்டுமிராண்டித்தனமா?

தாழ்த்தப்பட்டவன் நுழைந்தால்
கோவிலுக்குத் தீட்டு!
சூத்திரன் நுழைந்தால் கருவறை தீட்டு!
தமிழ் மொழியா, சாமிக்கே தீட்டு!
இந்தப் பார்ப்பன ஆதிக்க
மனுதர்மத்தின் மறுபதிப்பு தான்
கிடா வெட்டத் தடைச் சட்டம்

கிடா வெட்டுவது குற்றம் என்றால்
ஏழைக்குழந்தைகள்
பாலின்றி தவிக்கையில்
சாமிக்குப் பாலாபிஷேகம் செய்வது
காட்டுமிராண்டித்தனமில்லையா?

மிருதங்கத்தில் கட்டி இருப்பது
பசுமாட்டுத் தோல்!
மிருதங்கம் வாசிக்கும்
பார்ப்பன வித்வான்களே,
மாடு வெட்டத் தடை என்றால்
மிருதங்கத்திற்கு
யார் தோலை உரித்துக் கட்டுவது?

மகாமகம், கும்பமேளாவில்
நூற்றுக்கணக்கான மக்கள்
மிதிபட்டுச் சாவது
நாகரிகமான வழிபாட்டு முறை!
கிடா வெட்டுவது
காட்டுமிராண்டித்தனமா?

ஆயிரக்கணக்கில்
அரசு ஊழியல் வேலை நீக்கம்,
பத்தாயிரம் சாலைப் பணியாளர்கள் நீக்கம்!
விவசாயிகள், நெசவாளர்கள்
பட்டினிச் சாவு!
உலகவங்கிக்கு நரபலியிடும்
ஜெயலலிதாவிற்கு
ஆட்டுக்கிடா மீது ஜீவகாருண்யமாம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

(திருச்சி கிடா வெட்டும் போராட்டத்தின்போது ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்)
_______________________________
புதிய கலாச்சாரம், அக்டோபர் 2003
______________________________

மோடி அரசு உதவியுடன் ஆட்டம் போடும் சீன முதலாளி – சிறப்புச் செய்தி

4

சென்னை மறைமலைநகரை அடுத்த மகேந்திரா குளோபல் சிட்டி (மகேந்திரா உலக நகரம்)-ல் இன்ஃபோசிஸ், கேப் ஜெமினி, பி.எம்.டபிள்யூ போன்ற ஐ.டி நிறுவனங்களும், டி.வி.எஸ் குழுமத்தைச் சேர்ந்த சுந்தரம் ஃபாஸ்ட்னர்ஸ் முதலான தொழிற்சாலைகளும் உள்ளன.

மகேந்திரா சிட்டி
மகேந்திரா சிட்டி – ‘நவீன’ தொழில்நகரம்

மகேந்திரா சிட்டியின் 8-வது நிழற்சாலையில் அமைந்துள்ளது கிரீடோ மோல்ட்ஸ் என்ற சீன நிறுவனம். இந்நிறுவனத்தில் பணிபுரியும் 250 தொழிலாளர்கள் நிறுவனத்தின் சுரண்டலையும், ஒடுக்குமுறையையும் எதிர்கொள்ள 3 மாதங்களுக்கு முன்பு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் சங்கமாக திரண்டிருக்கின்றனர்.

மகேந்திரா சிட்டி
மகேந்திரா சிட்டி உண்மையில் தொழிலாளர்களுக்கு செங்கல் சூளை அடிமை வேலை போன்ற கொத்தடிமை கூடாரம்தான்.

அதைத் தொடர்ந்து, கடந்த மே 28 அன்று சரத்குமார் என்ற தொழிலாளி சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு தொழிற்சாலையை துரத்தப்பட்ட போது, அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தொழிலாளர்கள் பணியை நிறுத்தி உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள்.

கிரீடோ மோல்ட்ஸ் தொழிற்சங்கம்
கிரீடோ மோல்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் சங்கமாக திரண்டிருக்கின்றனர்.

கிரீடோ மோல்ட்ஸ் சீனாவின் குவாங்தோங் மாகாணத்தின் ஜியயாங் நகரின் ஜியதோங் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இயங்கி வரும் சீன நிறுவனம். இந்நிறுவனம், வாகனங்களின் ரப்பர் டயர்கள் செய்வதற்கான உலோக வார்ப்பு அச்சுகளை தயாரித்து அளிக்கிறது. இந்த வார்ப்பு அச்சுகள் ரூ 45 லட்சம் முதல் ரூ 1 கோடி ரூபாய் வரை மதிப்பிலானவை.

கிரீடோ மோல்ட்ஸ்
சீன முதலாளிகள் சென்னையின் மகேந்திரா சிட்டியில் தமது கொடூர சுரண்டல் கரங்களை நீட்டியிருக்கின்றனர்.

2011-ம் ஆண்டு சென்னையில் 7 தொழிலாளர்களை வேலைக்கு எடுத்தது கிரீடோ மோல்ட்ஸ் நிறுவனம். சீனாவுக்கு பயிற்சிக்கு அனுப்பப்பட்ட தொழிலாளிகள் 6 மாத பயிற்சி முடித்து திரும்பும் முன், மஹிந்திரா சிட்டியில் ஒரு தொழில் கூடத்தை கட்டி முடித்து 2012 ஜூன் மாதம் முதல் உற்பத்தியை ஆரம்பித்தனர்.

இப்போது மகேந்திரா சிட்டியில் உள்ள தொழிற்சாலையில் மாதத்துக்கு 25 மோல்டுகள் தயாரிக்கப்படுகின்றன அனுப்பபடுகின்றன. ஆரம்பத்தில் ஒரு மோல்டு செய்து முடிப்பதற்கான நேரம் 26 மணி நேரமாக இருந்தது இப்போது 13 மணி நேரமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, நிமிடத்துக்கு 20 சுற்றுகள் வேகத்தில் இயங்கக் கூடிய ஒரு எந்திரத்தை நிமிடத்துக்கு 40 சுற்றுகள் என்று அதிகரித்து இயக்க வைக்கின்றனர். அதாவது, தொழிலாளர்கள் மீதான உழைப்புச் சுரண்டல் இரண்டு மடங்காக அதிகரித்திருக்கிறது.

சீனாவில் பாக்ஸ்கான் முதலான தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை கொடூரமாக சுரண்டும் சீன முதலாளிகள் சென்னையின் மகேந்திரா சிட்டியில் தமது கொடூர சுரண்டல் கரங்களை நீட்டியிருக்கின்றனர்.

சீனப்பூச்சாண்டியை காட்டியே மோடி அரசு தனது செட்டப் தேசபக்தியை அவிழ்த்து விட்டு மக்களை ஏமாற்றுகிறது. குஜராத்தின் பிள்ளையார் ஊர்லவத்திற்கு பயன்படும் பிள்ளையாரோ, இல்லை தேர்தல் காலத்தில் அச்சுறுத்தும் மோடி முகமூடிகளோ அனைத்தும் சீனாவில் இருந்துதான் இறக்குமதியாகின்றன. சமீபத்தில் சீனா சென்ற மோடியும் அங்கிருக்கும் முதலாளிகளை குஷிப்படுத்தி பேசியிருக்கிறார்.

ஆக இங்கு இவர்கள் பேசும் சீன எதிர்ப்பு என்பது சீன முதலாளிகள் மீதான எதிர்ப்பல்ல. மாவோவின் சீனாவைத்தான் இவர்கள் எதிர்க்கிறார்கள் – முதலாளிகளின் இன்றைய சீனாவை அல்ல. இந்தியாவில் வந்திறங்கும் சீன முதலாளிகளுக்கு ஆதரவாக சட்டங்களை திருத்திக் கொண்டிருக்கிறார் திருவாளர் மோடி.

இனி கிரீடோ மோல்ட்சில் வதைபடும் தொழிலாளிகளின் வாழ்க்கையை பார்க்கலாம்.

முதல் ஷிப்டுக்கு வரும் தொழிலாளர் 6 மணிக்கு தொழிற்சாலையில் வேலை ஆரம்பித்து விட வேண்டும்.

முன்பெல்லாம், காலையில் 6.30-க்கு காலை உணவு என்ற நடைமுறை இருந்திருக்கிறது. அது வேலை நேரத்தை ‘சாப்பிடு’வதாகக் கூறிய நிர்வாகம், ‘வேலையை ஆரம்பிக்கும் முன்னரே சாப்பிட்டு விட வேண்டும்’ என்று, காலை 5.45-க்கு மணிக்கே காலை உணவை திணித்துக் கொண்டு வேலை செய்ய போகும்படி கட்டாயப்படுத்துகிறது நிர்வாகம். இதற்காக, தொழிலாளர் வீட்டில் காலையில் 4.30 மணிக்கு எழுந்து 5.30-க்கு பேருந்தில் ஏறி விட வேண்டும்.

6 மணிக்கு வேலை ஆரம்பித்தால், இடைவெளியே இல்லாமல் மதியம் 12 மணி வரை வேலை செய்ய வேண்டும். இடையே 11 மணிக்கு டீ பணியிடத்துக்கே கொண்டு வரப்படும். ஆனால், அதற்காக வேலையை நிறுத்தி விட்டு ஓய்வெடுக்கப் போக முடியாது. வேலை செய்து கொண்டே டீயை குடிக்க வேண்டும் – சார்லி சாப்ளினின் “மாடர்ன் டைம்ஸ்” போல.

நடுவில் ஒண்ணுக்கு, ரெண்டுக்கு வந்தால் அருகில் இருக்கும் தொழிலாளியிடம் வேலையை ஒப்படைத்து விட்டு வேகமாக போய் வர வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் உற்பத்தி நின்று விடக் கூடாது, மதியம் 12 மணிக்கு உற்பத்தியை நிறுத்தி விட்டு சாப்பிட ஓட வேண்டும். அரை மணி நேரத்துக்குள் சாப்பிட்டு கை கழுவி, இளைப்பாறி அடுத்த சுற்று உழைப்புக்கு தயாராகி விட வேண்டும்.

எந்த ஷிப்டில் வந்தாலும் கிளம்பும் கடைசி அரை மணி நேரத்தில் அடுத்த மூன்று மணி நேரம் கூடுதல் வேலை செய்ய வேண்டும் என்பார்கள். மறுத்தால், “மார்க் போட மாட்டேன், இன்க்ரிமெண்ட் கட்” என்று மிரட்டுவார்கள். போதாத குறைக்கு மகேந்திரா சிட்டியின் மிகவும் உட்புறமாக இருப்பதால் பேருந்தும் கிளம்பாமல் நடந்துதான் போக வேண்டும். மேலும், சம்பளம் வாழ்க்கை நடத்தவே போதாது என்பதால் மிகை நேர உழைப்புக்கு சம்மதிக்கிறார்கள் தொழிலாளிகள்.

வேலையை முடித்து புறப்படும் முன்பு 6S-என்ற உத்தியின்படி தொழிலாளர்களே சுத்தம் செய்ய வேண்டும். பாத்ரூம் தவிர எல்லா இடத்தையும் கழுவி விட்டுத்தான் அனைவரும் வெளியே வர வேண்டும். அதன் பிறகுதான் பேருந்து கிளம்பும்.

எவ்வளவு சோர்வாக இருந்தாலும் விடுமுறை எடுக்க முடியாது. முன்கூட்டியே சொல்லி அனுமதி வாங்கி விடுப்பு எடுக்க வேண்டும். மாறாக, ஒரு நாள் விடுப்பு எடுத்தால் 3 நாட்கள் சம்பளம் பிடிக்கப்படும்.

இந்த ஆள்தின்னி பகாசுர உற்பத்தி சாலை 7 நாட்களும், வருடத்துக்கு 365 நாட்களும் உழைப்பைக் கோருகிறது. ஞாயிற்றுக்கிழமையும் கூட 11 மணி நேரம் வேலை வாங்கிக் கொண்டுதான் விடுகிறது. மாதமொன்றுக்கு 160 முதல் 200 மணி நேரம் வரை கூடுதல் நேரம் வேலை செய்ய அனைவரும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

ராஜேஷ் என்ற தொழிலாளர் அவரது ஒன்றரை வருட அனுபவத்தில் ஞாயிற்றுக் கிழமை ஓய்வு நாள், விசேஷ நாட்கள், தனிப்பட்ட விடுப்புகள் உட்பட மொத்தமே 25 நாட்கள்தான் பணியிலிருந்து விடுப்பு எடுத்திருக்கிறார்.

கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளி ராஜேஷ்
ஒன்றரை வருட பணி வாழ்க்கையில் மொத்தமே 25 நாட்கள்தான் பணியிலிருந்து விடுப்பு (தொழிலாளி ராஜேஷ்)

இங்கு வேலை செய்யும் 260 தொழிலாளிகளில் பெரும்பாலானோர் டிப்ளமோ படிப்பு படித்தவர்கள். சிலர் ஐ.டி.ஐ படித்தவர்கள். யாருக்கும் முறையான சம்பளம் கொடுப்பதில்லை. எச்.ஆர் மேனஜருக்கு தெரிந்த யாராவது வேலைக்கு வந்தால் சம்பளம் மாதம் 7500-8500 வரையும், தெரியாதவர்கள் வந்தால் 5500-6500 வரையும் தருவார்கள்.

படிப்பு சான்றிதழ்களின் ஒரிஜினலை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். மூன்று மாதம் வரைதான் தேவை என்றவர்கள், பின்னர் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை கொடுத்து விட்டு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும்படி கூறி விட்டனர். சான்றிதழ் பெற்றிருக்கிறோம் என்பதற்கான சான்றொப்பமாவது தாருங்கள் என கொடுத்தவர்களை கேட்கச் சொன்ன போது மிரட்டி அனுப்பியிருக்கிறார்கள்.

ஒரு நாளைக்கு 11-12 மணி நேர வேலை, மாதத்துக்கு 30 நாட்கள் வரை வேலை என்று செய்தால் ஒரு தொழிலாளி சுமார் ரூ 9,000 வரை வீட்டுக்குக் கொண்டு போகலாம். சட்ட விரோதமாக சேம நல நிதியில் தொழிலாளியின் பங்கை மட்டுமின்றி நிர்வாகத்தின் பங்கையும் தொழிலாளியின் சம்பளத்திலிருந்தே பிடித்தம் செய்கின்றனர்.

ஒரு தொழிலாளியால் உற்பத்தியில் குறை நேர்ந்தது என்று தரக் கட்டுப்பாட்டு துறை அறிக்கை பதிவு செய்து, ஒரு பதிவுக்கு அத்தொழிலாளியின் ஊதியத்திலிருந்து 300 ரூபாய் பிடிக்கிறார்கள்.

“புடிக்கிறது மட்டுமில்லாம, தப்பு பண்ணினவங்கள, யெல்லோ கலர்ல ரவுண்டா பாக்ஸ் வெச்சிருப்பாங்க, குத்தவாளி போல அங்க நிக்க வைச்சி, ஏன் தப்பு பண்ணினேன்னு கேள்வி கேப்பாங்க.”

கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளி பிரபாகரன்
“தப்பு பண்ணினவங்கள, யெல்லோ கலர்ல ரவுண்டா பாக்ஸ் வெச்சிருப்பாங்க, குத்தவாளி போல அங்க நிக்க வைச்சி, ஏன் தப்பு பண்ணினேன்னு கேள்வி கேப்பாங்க.” (தொழிலாளி பிரபாகரன்)

அதாவது, தொழிலாளியின் தவறு என்று நிர்வாகம் சுமத்தும் பழிக்கு ஒன்றுக்கு 3 முறை தண்டனை. மேலும், ஒரு நாள் விடுப்பு எடுத்தால் மூன்று நாள் சம்பளத்தை வெட்டி விடுகின்றனர்.

நிறுவனம் உழைப்பையும், ஊதியத்தையும் உறிஞ்சிய பிறகு எஞ்சிய பணத்தில் அறை வாடகையும், சாப்பாடும் கொடுக்கவே சரியாகப் போகிறது. “திருநெல்வேலியில் இருக்கும் எனது குடும்பத்துக்கு இந்த ஒன்றரை வருடத்தில் ரூ 20,000 மட்டும்தான் அனுப்பியிருக்கிறேன்” என்கிறார் ராஜேஷ்.

ஊதியம் இப்படியிருக்க, தொழிலாளிகளை புழு பூச்சி போல நடத்துகின்றனர்.

கிரீடோ மோல்ட்ஸ்
“அதான் அப்பப்போ புழு பூச்சினு நான் வெஜ் வருதுல்லாப்பா”

தொழிலாளர் ஒருவர் சாப்பாட்டில் புழு கிடப்பதாக புகார் சொன்ன போது “அப்படித்தான் இருக்கும். வேணும்ணா நீ வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வா” என்றும் சாப்பாட்டில் குக்கர் மூடி விழுந்து கிடந்தது பற்றி புகார் தெரிவித்தால், “இரும்பு சத்துதானேப்பா” என்றும், “ஏதாவது ஒரு நாள் முட்டை போடுங்கள் சார்” என்று கேட்டபோது, “அதான் அப்பப்போ புழு பூச்சினு நான் வெஜ் வருதுல்லாப்பா” என்று நக்கலாக பதில் சொல்லியிருக்கின்றனர் மனித வளத்துறை அதிகாரிகள்.

  • சாண்ட் பிளாஸ்டிங் என்று ஒரு எந்திரம் உள்ளது. கண்ணாடித் துகள்கள் பதிக்கப்பட்ட உருளையில் தேய்த்து மோல்டை பாலீசாக்கா இதனை பயன்படுத்துகிறார்கள். கண்ணாடித் துகள் பறந்து கொண்டே இருக்கும்.அதை சுவாசிப்பதால் மூச்சு விட முடியாமல் இரவெல்லாம் திணறுவேன் என்கிறார் பிரபாகரன் என்ற தொழிலாளி. அவரது நுரையீரல் முழுவதும் உலோக துகள் படிந்து விட்டிருக்கிறது என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் கூறியிருக்கிறார். இவர் வேலை செய்யும் போதும், இரவிலும் மூச்சு இழுக்கும், சரியாக தூங்க முடியாது. 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்குச் சேரும் போது இந்தப் பிரச்சனை அவருக்கு இருந்ததில்லை.
  • வெல்டிங் துறையில் சா வெல்டிங் மிசின் என்று ஒன்று உள்ளது. அதில் வரும் புகையினால் கைகளில் அம்மை போன்ற புண் ஏற்படுகிறது. புகையை சுவாசித்தால் ஒரு பத்து நிமிடத்திற்கு தலைசுற்றல் ஏற்படும். பொதுவாக வெல்டிங் என்பது திறந்த வெளியில்தான் நடக்க வேண்டும். ஆனால் இங்கு மாத்திரம் மூடப்பட்ட குடோன் பகுதியில் நடப்பதால் இந்த புகை வெளியேறாமல் அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
  • ரிப்பேர் வேலைக்கு வரும் வார்ப்புரு அச்சு டயர் துகள்கள் ஒட்டிக் கொண்டுதான் வரும். “அதை கிளீன் பண்ணச் சொன்னால் மாட்டங்க. அப்படியே வெல்ட் அடிக்கச் சொல்லுவாங்க. அப்படியே வெல்ட் அடிச்சாக்க அந்த டயர்ல இருக்குற ஸ்பார்க் பட்டு புகை வரும்.அவங்க செலவ சேவ் பண்றாங்களாம். ஆனா எங்களோட ஹெல்த் சேவ் பண்றதுக்கு அவங்க விட மாட்டாங்க. கேஸ் ஃபுள்ளா உள்ளதான் போகும், உள்ள போயிடுச்சின்னா, எப்படின்னா ஒரு 1000 சிகரெட்டு பிடிச்சா எப்படி இருக்கும் அந்த மாதிரி இருக்கும். மாஸ்க் கேட்டா கொடுக்க மாட்டாங்க.” என்கிறார்கள் தொழிலாளர்கள்
  • “கையில கூலன்ட் ஆயில் பட்டு இப்படி ஆகியிருக்கும. இன்னும் நிறைய பேரு மார் எல்லாம் பபுள்ஸ் மாதிரி வந்தது எல்லாம் இருக்கு.”
  • [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

  • “யூனிஃபார்ம் மேல பர் (சூடான இரும்புத் துகள்) சூடா விழும். நாங்க போய் இந்த யூனிஃபார்ம் மாத்தி கொடுங்க, நீங்க போடுற மாதிரி சட்டை கொடுங்கன்னு கேட்டா, அதெல்லாம் போடறதுக்கு ஒரு தகுதி வேணும்பா என்கிறார்கள். ஹீட்டா வரக் கூடாதுன்னு ஃபீட் ரேட் கொஞ்சம் கம்மியா வச்சா, என்ன கம்மியா வக்கிற அப்படின்னு சொல்லி சைனீசே வந்து கூட்டி விட்டுட்டு போவாரு. மெசின்ல ஆர்.பி.எம் 40தான் வைக்கணும் 200 வைக்க சொன்னா . 40-க்கு பதிலா 80 வைக்கச் சொல்லுவாங்க.”
  • [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இந்தத் தொழிலாளர்கள் அனைவருமே சுமார் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். இவ்வளவு தீவிரமான உழைப்புச் சுரண்டலை தாங்கும் உடல் வலு உள்ளது. அதைத் தாங்க முடியாமல் சிறிது சிறிதாக அவர்களது உடல்கள் தேய்ந்து கொண்டிருக்கின்றன.

4 மாதங்களுக்கு தேனியைச் சேர்ந்த பிரபாகரன் என்ற தொழிலாளிக்கு முன்பு சுமார் 250 கிலோ எடையுடைய ஒரு உலோகப் பகுதி காலில் விழுந்து பெருவிரல் துண்டாகி தொங்க ஆரம்பித்தது. வலியில் துடித்துக் கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கூட கிடையாது. தொழிற்சாலையின் முதலுதவிப் பெட்டியில் பஞ்சும், டிஞ்சரும் மட்டும் இருந்தன.

“வாகனம் ஏற்பாடு பண்ண முடியுமா” என்று கேட்டதற்கு “ஜெனரல் ஷிப்டுக்கு வருபவர்களை ஏற்றப் போன பேருந்து வரட்டும் அதன் பிறகு போகலாம்” என்றிருக்கிறார்கள். பின்னர், அவருடன் பணிபுரியும் தொழிலாளி ஒருவரை பைக்கில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ‘பெரிய மனதுடன்’அனுமதித்திருக்கிறார்கள்.

அங்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்து விட்டு, “நீங்கள் பெரிய மருத்துவமனைக்குப் போக வேண்டும்” என்று கூறி விட்டனர். அவர் மறுபடியும் தொழிற்சாலைக்குக் கொண்டு வரப்பட்டு மியாட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து நடந்த மாதத்தில் அவர் வேலை செய்த 15 நாட்களுக்கு ஊதியம் கொடுத்திருக்கின்றனர். அடுத்த மாதம் வெறும் 5,000 மட்டும் ஊதியம், 3-வது மாதம் ரூ 2,000 மட்டும் கொடுத்திருக்கின்றனர்.

தாக்குப் பிடிக்க முடியாமல் முழுவதும் குணமாகாமலேயே வேலைக்கு வர ஆரம்பித்திருக்கிறார் பிரபாகரன். இப்போதும் விரல் துண்டுபட்ட காலில் நிற்க முடியாமல் தடுமாறுகிறார் பிரபாகரன்.

“வேலைக்கு வந்து கால் வலிச்சா லீவு கேட்பேன். இதுக்குமேல கம்பெனி செய்ய முடியாது. கம்பெனி எவ்வளவோ செய்திருச்சி. லீவு ஒனக்கு அதிகமா போயிருச்சி, போச்சுன்னா கம்பெனிய விட்டு தூக்குறதுக்கு வாய்ப்பிருக்கு” அப்படின்னு சொல்றாங்க.

கை துண்டான சரத்குமார் என்ற தொழிலாளி இரவில் வண்டி இல்லாமல் 2 மணி நேரம் காத்திருக்க வைக்கப்பட்டிருக்கிறார். அதன்பிறகு பைக்கில் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்.

“ஆள் துடிச்சிட்டு இருந்தாலும், மெசினுக்கு சேதாரம், டேமேஜ் ஆயிருச்சான்னு பார்ப்பான். ஆள் அங்க துடிச்சிட்டிருப்பான், இவனுங்க மெசின சுத்திச் சுத்தி வருவானுங்க” என்கிறார்கள் தொழிலாளர்கள்.

கிரீடோ மோல்ட்ஸ் பு.ஜ.தொ.மு தோழர் சிவா
“மேக் இன் இந்தியா திட்டத்தின்படி வெளிநாட்டு கம்பெனி எல்லாம் வந்தா வளர்ச்சி என்கிறார் மோடி. ஆனால், பன்னாட்டு கம்பெனி வருவது நம்மை முன்னேற்றுவதற்கு இல்லை என்பதை கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளர்கள் நேரடி அனுபவத்தில் உணர்கிறார்கள்.” – பு.ஜ.தொ.மு தோழர் சிவா (வலது ஓரத்தில் இருப்பவர்)

மகேந்திரா சிட்டி என்றால் ஒரு தொழில்நகரம், சொர்க்க பூமி என சித்தரிப்பு இருக்கிறது. ஆனால், உண்மையில் தொழிலாளர்களுக்கு செங்கல் சூளை அடிமை வேலை போன்ற வேலைதான். கொத்தடிமை கூடாரம் இது. இருங்காட்டுக் கோட்டை ஹூண்டாய் சிப்காட், ஸ்ரீபெரும்புதூர் செஸ் போன்ற இடங்களில் இருப்பது போலத்தான் இங்கும் நடந்து கொண்டிருக்கிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தின்படி வெளிநாட்டு நிறுவனங்கள் வந்து உற்பத்தி செய்தால் வளர்ச்சி என்கிறார் மோடி. ஆனால், பன்னாட்டு கம்பெனி வருவது நம்மை முன்னேற்றுவதற்கு இல்லை என்பதை கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளர்கள் நேரடி அனுபவத்தில் உணர்கிறார்கள்.

இந்த சீன நிறுவனம் இந்திய நாட்டின் சட்டங்களை குப்பைக் காகிதம் போல சுருட்டி காது குடைந்து கொண்டிருக்கிறது. மேலும் எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் இப்படித்தான் இங்கே செயல்படுகின்றன. இவர்களுக்கு அடியாள் வேலை செய்வதையே மோடி அரசு இலட்சியமாக கொண்டு செயல்படுகிறது. முந்தைய மன்மோகன் சிங் அரசும் இப்படித்தான் என்றாலும் காங் பெருச்சாளிகள், பாஜகவைப்போல தேசபக்த சீன் போட முடியவில்லை.

சீனாவிலிருந்து வந்த 22 பேர் தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர். அவர்களில், நான்கு பேருக்குதான் வேலை செய்வதற்கான விசா உள்ளது. மற்றவர்கள் டூரிஸ்ட் விசாவில் வந்துதான் வேலை செய்கிறார்கள். “ஒர்க் பெர்மிட் கிடையாது. இங்கு வந்து மிசின் ஓட்டுகிறார்கள். இதை நாம் வெளிநாட்டில் செய்ய முடியுமா?” என்கின்றனர் தொழிலாளர்கள். (அதற்கான விசா சான்று, வேலை பார்ப்பதற்கான வீடியோ சான்றுகளை காண்பிக்கின்றனர்)

கிரீடோ மோல்ட்ஸ்
“ஒர்க் பெர்மிட் கிடையாது. இங்கு வந்து மிசின் ஓட்டுகிறார்கள். இதை நாம் வெளிநாட்டில் செய்ய முடியுமா?”

பணி நியமன உத்தரவு 6 மாத பழகு காலம், 6 மாதம் நீட்டிப்பு, அதன் பிறகு விருப்பப்படி நீட்டிப்பு. இந்திய தொழிலாளர் சட்டம் இவர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது.

இப்படி தொழிலாளிகளை ஒடுக்குவதிலும், பெயரளவு சட்ட உரிமைகளை, விதிகளை மீறினாலும் நிறுவனத்தை தட்டிக் கேட்பதற்கு ஆள் இல்லை.

இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கடந்த மூன்றாண்டுகளாக பணி நிரந்தரம் கோரி வருகின்றனர் தொழிலாளர்கள். ஆரம்பத்தில் எடுத்த ஏழு பேரில் மூன்று பேரை அதிக சித்திரவதை, அழுத்தம் கொடுத்து, வேலையை விட்டு விலகச் செய்து விட்டனர். மற்ற மூன்று பேரும் நிர்வாகத்திற்கு ஆமாம் சாமி போடுவதால் உள்ளே பணியில் இருக்கிறார்கள். எதிர்த்துக் கேட்டதால் மனோஜ்குமார் என்ற தொழிலாளி இப்போது வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

முன்னதாக, பிரச்சனை நீறு பூத்த நெருப்பு போல பூத்துக் கொண்டிருந்த சூழலில் சங்கமாக சேர வேண்டும் என்ற உணர்வுக்கு வந்து பு.ஜ.தொ.முவை தொடர்பு கொண்டிருக்கிறார் மனோஜ். தொழிலாளர்கள் பு.ஜ.தொ.முவில் இணைய ஆரம்பித்திருக்கின்றனர். சங்கத்தின் இணைச்செயலாளர் ராஜேசிடம் “உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை. நரி வேலை எல்லாம் பார்க்காதே. இரு இன்னும் இரண்டு நாளில் ரிக்கார்டு ரெடி பண்ணி உன்னை வெளியே அனுப்பி விடுகிறோம்” என்று மிரட்டியிருக்கின்றனர். அடுத்து மனோஜ் குமாரையும் மிரட்டியிருக்கிறது நிர்வாகம்.

கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளி மனோஜ்குமார்
“உனக்கு எதுக்கு தேவையில்லாத வேலை. நரி வேலை எல்லாம் பார்க்காதே. இரு இன்னும் இரண்டு நாளில் ரிக்கார்டு ரெடி பண்ணி உன்னை வெளியே அனுப்பி விடுகிறோம்” என்று மிரட்டல். (தொழிலாளி மனோஜ்குமார் – சீருடை அணியாதவர்)

ராஜசேகர் ஒரு டீம் லீடர். ராஜசேகரை கூப்பிட்டு, “சங்கத்தில் சேராதே உன்னை உதவி மேனஜராக நியமிக்கிறேன்” என்று விலை பேசியிருக்கிறார்கள். அவர் தன்மானத்துடன் மறுத்து விட்டார்.

“சங்கத்தில் எப்படி சேரலாம்” என்று அவர்கள் கேட்க, “ஏழு பேர் சேர்ந்தால் சங்கம் அமைக்க முடியுமே” என்று இவர் சொல்ல, “சரி இவன் சட்டம் பேச ஆரம்பித்து விட்டான் இனி நமது ஜம்பம் செல்லாது” என்று நிர்வாகம் கப்சிப் ஆகி விட்டது. இதுபோல பலரையும் சாம பேத தண்ட வழிமுறையில் மிரட்டி பணிய வைக்க பார்த்திருக்கிறார்கள். தொழிலாளர் ஒற்றுமை இந்த முயற்சிகளை தூள்தூளாக்கி விட்டது.

இதனால் கடுப்பாக இருந்திருக்கிறது நிர்வாகம்.

இந்நிலையில் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பாளராக பணியாற்றி வந்த மனோஜ்குமார், அவரது அனுமதியின்றி சீனத் தொழிலாளி ஒருவர் செய்யும் வெல்டிங் வேலை குறித்து விளக்கம் கேட்கிறார். உடன சீனாவைச் சேர்ந்தஇன்னொரு நிர்வாக பொறுப்பாளர் அதனால உனக்கென்ன என்று கத்தியபடியே மனோஜ்குமாரை அடித்திருக்கிறார்.

கிரீடோ மோல்ட்ஸ் தொழிலாளி ராஜசேகர்
“முதலில் எனக்கு ஒழுங்காக சம்பளம் தாருங்கள்” – தொழிலாளி ராஜசேகர்

இதனையும், இதற்கு முன்னர் நான்கு தொழிலாளிகள் இப்படி நிர்வாகிகளால் அடிபட்டிருப்பதையும் புகாராக எடுத்துக் கொண்டு போனதற்கு ராய் என்ற நிர்வாகி “இதெல்லாம் சாதாரணமப்பா, சீனாவிலும் அப்படித்தான் அடிப்பார்கள்” என்று வக்காலத்து வாங்கியிருக்கிறார். அடித்தவரை அவர்களது நாட்டுக்கு அனுப்பி விட்டு மனோஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்து விட்டனர்.

உள்விசாரணை என்ற பெயரில ஒரு நாடகத்தை ரெண்டே நாளில் நடத்தி, குமாரசாமியை காட்டிலும் வேகமாக, அநியாயமாக ஒரு தீர்ப்பு கொடுத்து அவரை தற்காலிக பணி நீக்கம் செய்தது,  நிர்வாகம்.

கிரீடோ மோல்ட்ஸ்
“குமாரசாமியை காட்டிலும் வேகமாக, அநியாயமாக ஒரு தீர்ப்பு”

அதைத் தொடர்ந்து சரத்குமார் என்ற தொழிலாளி அம்மை போட்டதன் காரணமாக வேலைக்கு வரவில்லை. அதை காரணமாக காட்டி நிர்வாகம் அவரை பணிநீக்கம் செய்கிறது.

இங்கு சங்கமாக உருவாகிறார்கள் என்பதை முன்வைத்து முன்னணியாளர்களை ஒவ்வொருவராக கட்டம் கட்டி தூக்க ஆரம்பித்திருக்கிறது நிர்வாகம் என்பதை புரிந்து கொண்டார்கள் தொழிலாளிகள். ஜூன் 2ம் தேதி  சரத்குமாரை மிரட்டி ஐ.டி கார்டு எல்லாம் பிடுங்கி வைத்து விட்டு வெளியில விரட்டியதை  நேரில் பார்க்கும் தொழிலாளிகள் “இதை அனுமதிக்க முடியாது. கண் முன்னாடி மனோஜ்குமார் போயிட்டாரு இவரும் போயிட்டா என்ன பண்றது” என்று உணர்வு பெற்று உள்ளிருப்புப் போராட்டம் நடத்துகிறார்கள்.

“அது பொய்யான குற்றச்சாட்டு, அவரு அனுமதி பெற்று லீவு எடுத்திருக்கிறார். தப்பே செய்திருந்தாலும், சஸ்பெண்டதான் செய்ய முடியும். பணி நீக்கம் செய்ய முடியாது. உங்கள் நிர்வாக முறைப்படியே விளக்கம்தானே கேட்டிருக்க வேண்டும்.” என்று பு.ஜ.தொ.மு தொழிலாளி தரப்பில் தொழிலாளர் உதவி ஆணையரிடம் வாதாடியது.

சிக்கிக் கொண்டதை உணர்ந்த நிர்வாகம் “டெர்மினேசனை திரும்பப் பெறுகிறோம். 5 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கொடுத்து பின்னர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கிறோம்” என்று கூறியது.

கிரீடோ மோல்ட்ஸ்
“ஒரு வெ்ளிநாட்டு கம்பெனி நம்ம கொத்தடிமையாக வைத்திருக்கிறான். அத எதுத்து நாங்க போராடுவோம். கடைசிச் சொட்டு ரத்தம் வரும்வரை நாங்கள் போராடுவோம்.”

அதன்படி தொழிலாளர் உதவியாளர் தர்மசீலன் ஒரு லெட்டர் தயாரிக்கிறார்.

  1. கடந்த 2-6-2015 அன்று இரவு 7 மணி வாக்கில் பு.ஜ.தொ.மு-வின் சார்பாக புகார் தரப்பட்டது. இயற்கை நீதிக்கு எதிரான முறையில் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் சரத்குமார் என்ற தொழிலாளி. இது தொடர்பாக தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அதனால், உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.
  2. பேச்சுவார்த்தையில் அந்தத் தொழிலாளி பணிநீக்கம் செய்யப்பட்டதை நிர்வாகம் திரும்பப் பெறுகிறது. 5 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கொடுத்து 6-வது நாள் தற்காலிக பணிநீக்கம் செய்யும் என்ற முடிவை தொழிலாளர் தரப்பும் நிர்வாகத் தரப்பும் ஏற்றுக் கொள்கிறது.
  3. திடுதிப் என உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருக்கக் கூடாது என்ற அறிவுரையை தொழிலாளர் தரப்பு ஏற்றுக் கொண்டது.
  4. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர் மீது எந்த விதமான பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.
  5. வேலை நிறுத்தம் செய்யப்பட்ட கால கட்டத்தில் no work, no pay என்ற அடிப்படையில் தீர்த்துக் கொள்ள வேண்டும். சட்டப்படி 8 நாட்கள் சம்பளம் பிடிப்பேன் என்ற நிர்வாகத்தின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
  6. தொழிலாளர் தரப்பும், நிர்வாகத் தரப்பும் தொழில் உறவு, தொழில் அமைதிக்கும் உத்தரவாதம் பரஸ்பரம் ஒத்துழைப்பு தர வேண்டும்

இந்த முடிவுகளை தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால், “பு.ஜ.தொ.மு சங்கம் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கையெழுத்து போட மறுத்து விட்டது” நிர்வாகம். அடுத்த நாளும் அதே நிலைப்பாட்டில் நின்றனர்.

“சங்கம் வேண்டாம். வொர்க்கர்ஸ் கமிட்டி வைச்சிக்கிங்க” என்றனர். “சரி, சங்கம் வேண்டாம் ஆனால் தொழிலாளர் குழுவை தொழிலாளர்களாகத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று தொழிலாளர்கள் கூறினர்.

கிரீடோ மோல்ட்ஸ்
“சரி, சங்கம் வேண்டாம் ஆனால் தொழிலாளர் குழுவை தொழிலாளர்களாகத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்”

ஆனால், “பிரதிநிதிகளை நாங்கள்தான் தீர்மானிப்போம்” என்று வாதம் செய்தது நிர்வாகம்.

சங்கம் என்ற வார்த்தை கெட்ட வார்த்தையா என்ன? தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையா கேட்டார்கள். அரசமைப்பு சட்டம் அங்கீகரித்த சங்கம் வைக்கும் உரிமையை கேட்டால் ஒரு அன்னிய நிறுவனம் அதை மறுக்கிறது, அதை இந்த அரசு வேடிக்கை பார்க்கிறது.

எனவே, தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துகின்றனர்.

இதை ஒட்டி 5-ம் தேதி வழங்க வேண்டிய சென்ற மாதத்துக்கான சம்பளத்தை போடாமல் நிறுத்தி வைத்திருக்கிறது நிர்வாகம். சம்பளத்தை வெட்டி விட்டால் போராட்டம் நடக்காமல் போய் விடும் என்ற இழிவாக நடந்து கொள்கிறது நிறுவனம்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை 9-ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கவுள்ளது

சட்ட பூர்வமாகவும், வேறு வழியிலும் தொழிலாளர்கள் போராட்டத்தை தொடர்வதாக உறுதியுடன் உள்ளனர்.

இந்த சீன நிறுவனம் இங்கே மட்டுமல்ல, சீனாவிலும் இப்படித்தான் தொழிலாளிகளை வதைக்கிறது. சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுனவங்கள் மற்றும் அவர்களுக்கு உற்பத்தி  செய்து கொடுக்கும் சீன நிறுவனங்கள் அனைத்திலும் இதுதான் நிலைமை. இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து சீனாவிலேயே வருடந்தோறும் தொழிலாளர் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

சீனா மனித உரிமையை மீறுகிறது என்று கூப்பாடு போடும் மேற்கத்திய செய்தி நிறுவனங்கள் எவையும் இந்த தொழிலாளர் போராட்டத்தை தெரிவிப்பதில்லை. மாவோ காலம் வரையிலும் கம்யூனிச நாடாக இருந்த சீனாவில் இத்தகைய அநீதிகளை, ஒடுக்குமுறைகளை நினைத்து கூட பார்க்க முடியாது. இன்றைக்கு சீனாவை ஆளும் அதிகார வர்க்க முதலாளிகளின் ஆட்சியில் அங்கே ஒடுக்குமுறை தலை விரித்து ஆடுகிறது.

இந்தியாவில் சீனாவைப்பற்றி உண்மையில் மாவோவின் கம்யூனிச சீனாவைப் பற்றி வெறுப்புணர்வை வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் யோக்கியதை சீன முதலாளிகளின் ஒடுக்குமுறைக்கு துணை போவதே! ஆனால் செஞ்சீனத்தில் மக்களுக்காக போராடிய அதே கம்யூனிசம் இன்று சென்னையிலும் இருக்கிறது. சீன முதலாளிகளை எதிர்த்து போராடுகிறது. நக்சல்பாரி எழுச்சியை வசந்தத்தின் இடி முழக்கம் என வரவேற்ற மாவோ இருந்தால் பு.ஜ.தொ.முவை வாழ்த்தியிருப்பார்.

– வினவு செய்தியாளர்கள்

கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு – விருத்தாசலம்

3

ன்பார்ந்த பெற்றோர்களே! வணக்கம்!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடுபெரும்பான்மையான வளர்ந்த நாடுகளில் தாய்மொழியில், பொதுப்பள்ளிகள் மூலமாக அரசுதான் முற்றிலும் இலவசமாக கல்வி வழங்குகிறது. அருகமைப்பள்ளிமுறை – அதாவது நம்ம ஊர் ரேசன் கடை போன்று அந்தந்தப் பகுதியில் வாழும் மக்கள், தங்கள் பிள்ளைகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்த்து, கல்வி கற்கும் முறை – தான் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றல், தனி மனித ஆளுமை வளர்ச்சி ஆகியவற்றிற்கு அடிப்படையாக இருப்பது, அனைவருக்கும் ஒரே சீரான, தரமான கல்வி முறைதான். அதை அரசுதான் இலாப நோக்கமின்றி வழங்க முடியும். இந்தியாவின் பார்ப்பனிய சாதிக் கொடுமையுடன், வர்க்க பாகுபாடுகளும் அதிகரித்துள்ள இன்றைய நிலையில், பணத்திற்கு தகுந்த பள்ளிக் கூடம் என்பது மேலும் இத்தகைய பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யும். பணம் சம்பாதிக்க மட்டும் படிப்பு என்ற, கல்வி தனியார்மயக் கொள்கையை ஒழிப்பது, பாம்பை பார்த்தவுடன் அடிக்கும் முடிவுக்கு ஒப்பானது. ஆனால், அதை வரவேற்பது என்ற இன்றைய நிலை குறித்து நாம் சிந்திக்க வேண்டும்.

தனியார் பள்ளி தரமானதா?

‘தனியார் பள்ளியில் படித்தால், நம் பிள்ளை ஆங்கிலத்தில் பேசுவான். அறிவு வளரும், டாக்டர், எஞ்சினியர் ஆவான், நம்மைப் போல கஷ்டப்பட மாட்டான். அதிகம் பணம் சம்பாதிப்பான்’ என்ற மூட நம்பிக்கையில், அவரவர் வசதிக்கேற்றாற் போல் தனியார் மெட்ரிக் பள்ளிகளை நோக்கி விட்டில் பூச்சியாய் ஓடுகிறார்கள்.

தனியார் பள்ளி தாளாளர்களுக்கு ஒழுக்கம், நேர்மை, எதுவும் கிடையாது. கட்டணக் கொள்ளை அடிப்பது, பணம் கட்டாத மாணவர்களை துன்புறுத்துவது, பெற்றோரை அவமானப்படுத்துவது, 10-ம் வகுப்பு பாடத்தை 9-ம் வகுப்பிலும், 12-ம் வகுப்பு பாடத்தை 11-ம் வகுப்பிலும் படிக்கச் சொல்வது என்று மாணவர்களின் படிக்கும் முறையை, அர்த்தம் புரியாத தேசிய கீதம் போல், பாயாசத்தின் சுவை அறியாத கரண்டி போல் மாணவர்களிடம் பதிய வைக்கப்படுகிறது.

‘கருப்புப் பணமாக கல்விக் கட்டணம், வினாத்தாளை முன்கூட்டியே சொல்வது, காப்பி அடிப்பது, தேர்வு கண்காணிப்பாளரை ஃபிக்ஸ் செய்வது, என அனைத்து முறைகேடுகளிலும் ஈடுபடுவது தவறில்லை, அதுதான் திறமை’ என்று மாணவர்களுக்கு வாழ்க்கை பற்றிய சிந்தனைகளை பள்ளிப் பருவத்திலேயே ஊழல்படுத்துகிறார்கள். தங்களிடம் பணிபுரியும் ஆசிரியர்களை கொத்தடிமைகளாக, குறைந்த சம்பளத்திற்கு ஓய்வு இன்றி வேலை வாங்குவது, அவர்களை செங்கல் சூளைக்கு ஆள் பிடிக்கும், புரோக்கர் போல் மாணவர்களை பிடிக்க வெளியே அனுப்புவது அனைத்தும் தெரிந்த பெற்றோர்கள் காரியவாதமாக தனியார் பள்ளி பற்றி பேச மறுப்பதுடன், ஆசிரியர் இல்லை, சொல்லிக் கொடுப்பதில்லை என அரசுப் பள்ளிகளின் தரம் பற்றி பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள்.

அரசுப் பள்ளி நமது பள்ளி!

கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடுகடைக்கோடி ஏழை மாணவனுக்கும் கல்வி போய்ச் சேர வேண்டும். அதை அரசால் மட்டுமே செய்ய முடியும். அரசுப் பள்ளிகளோடு தனியார் பள்ளிகளை ஒரு நாளும் ஒப்பிட முடியாது. அரசுப்பள்ளி மாணவர் ரேசன் கடை, அப்பா குடிபோதை, விவசாய வேலை, ஊரில் நல்லது கெட்டது என்ற காரணத்தால் பள்ளிக்குப் போகாமல் இருப்பது, புரிந்து கொள்ள முடியாமை, டியூசன் படிக்க இயலாமை, இதை எல்லாம் தாண்டிதான் 80 சதவீத தேர்ச்சி, 495 மதிப்பெண் என பெறுகிறார்கள். இன்றைக்கு உயர்பதவிகளில் இருப்பவர்கள், மருத்துவ நிபுணர்கள், விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் என பெரும்பான்மையானவர்கள் அரசுப் பள்ளியில் தாய் மொழியில் படித்தவர்கள்தான். அரசுப் பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதி இல்லை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, இருக்கும் ஆசிரியர்களும் சரியாக சொல்லிக் கொடுப்பதில்லை என்ற குறைகளை பெற்றோர் கண்காணித்து போராடினால் சரிசெய்ய முடியும்.

அரசின் தனியார்மயக் கொள்கையால் வாழ்விழந்த மக்கள் வீதிக்கு வந்து போராடினால் போலீசு தடி அடி, பொய் வழக்கு, சிறை என சந்திக்கிறார்கள். அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் நம்பிய காலம் முடிந்து விட்டது. அவர்கள்தான் இத்தனை பஞ்சமா பாதகங்களையும் அமல்படுத்துகிறார்கள். நீதிமன்றமும் அதை உறுதி செய்கிறது. அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்த மட்டுமல்ல, அனைத்திற்கும் நாம் ஒன்று திரண்டு போராடி பாதுகாக்க வேண்டும். ஆளுகின்ற அரசு மக்களுக்கு எதிராகப் போவதுடன், நம்மை ஆளும் தகுதியை இழந்து விட்டது. ஆங்கிலேயனை எதிர்த்த சுதந்திர போராட்டம் போல நமக்கான அரசை நாம்தான் மீட்டெடுக்க வேண்டும்.

மாணவர்களின் கல்வி உரிமைக்காக போராட எமது பெற்றோர் சங்கத்தில் இணையுங்கள். உங்கள் ஊரில் பெற்றோர் சங்கக் கிளையை உடனே ஏற்படுத்துங்கள். அனைத்திற்கு நாங்கள் உதவத் தயாராக இருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கு நாம் போராடாமல் வேறு யார் போராடுவார்கள்? கல்வி உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறோம். நிதிச்சுமை எங்களை பெருமளவில் அழுத்துகிறது. நீங்கள் கொடுக்கும் சிறுதொகை கூட பல போராட்டங்களை உயிர்ப்பிக்கும்.

நிதி தாருங்கள், மாநாட்டுக்கு வாருங்கள், நன்றி.

கல்வி தனியார் மய ஒழிப்பு மாநாடு

பேரணி, மாநாடு, தப்பாட்டம், புரட்சிகர கலை நிகழ்ச்சி

ஜூன் 13, 2015 சனிக்கிழமை

பேரணி துவங்குமிடம் : திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி, விருத்தாசலம்
நேரம் : மாலை 4 மணி

மாநாடு : வானொலித் திடல், விருத்தாசலம்
நேரம் : மாலை 5 மணி

  • தனியார் பள்ளிகளை அரசுடமையாக்கு
  • பள்ளிகளில் தாய்மொழியில் கல்வி வழங்கு
  • அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உரிய உட்கட்டமைப்பு வசதிகளை உடனே செய்
  • அரசுப் பள்ளி நமது பள்ளி! அதனை மக்கள் கண்காணிப்புக்கு உட்படுத்துவோம்.

அமர்வுகள்

  1. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு அரசுப் பள்ளிகளை முன்னேற்றும்
  2. தாய்மொழிக் கல்வியே சிந்திக்கும் ஆற்றலை வளர்க்கும்
  3. நகர்மன்ற ஊழலை ஒழித்தால், நகராட்சிப் பள்ளிகள் சிறக்கும்
  4. தனியார் பள்ளிகளால் தரமான கல்வி தர முடியாது

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் – 93450 67646

தகவல்

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
கடலூர் மாவட்டம் 93600 61121

புதிய தலைமுறை ஊழியர்களை அச்சுறுத்தும் ஆர்.எஸ்.எஸ்

11

மீபத்தில் பொரி உருண்டை ஒன்று தன் ஏவல் பொரி உருண்டைகளை அனுப்பி டிபன் பாக்ஸில் பட்டாசை வைத்து புதிய தலைமுறை அலுவலக வாசலில் வீசிச் சென்றது உங்களுக்கு நினைவிருக்கலாம். அடுத்த நாள் காலையில் ஏதோ ஒரு எலிவளையிலிருந்து வெளியே வந்த தலைமை பொரி உருண்டை மதுரையில் கைதாகியது.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
கேமரா மேனை தாக்கியது மட்டுமில்லாமல், அந்த வழியாக வந்த பெண் நிருபரையும் தாக்க முனைந்தனர்.

மோடி ஆட்சியில் சாமியாரெல்லாம் அமைச்சராகி நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் வெறுப்பு வாந்தியெடுத்து மக்களை சித்திரவதை செய்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த ரவுடி கும்பலுக்கு தலைமை வகிக்கும் எச்.ராஜாவுக்கு அடுத்தப்படியாக அந்த பொரி உருண்டை கிளம்பியிருந்தது. இது ஏதோ ஒரு நமத்துப் போன பொரி உருண்டையின் ஊசிப்போன விளம்பர முயற்சி என்பது மட்டுமல்ல. பார்ப்பனிய இந்து மதவெறி பாசிசத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழகத்தை எப்படியாவது அடிமைப்படுத்த வேண்டும் என்று காவி கும்பல் கொலை வெறியுடன் முயற்சித்து வருகிறது. பொரி உருண்டைகளும் அதன் ஒரு அங்கம்தான்.

சென்ற பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு “நேருக்கு நேர்” நேர்காணல்களில் பிரபலமான வீரபாண்டியன் என்ற சன் தொலைக்காட்சியின் மூத்த பத்திரிகையாளர் – நிகழ்ச்சி தொகுப்பாளர், இஸ்லாமிய அமைப்பு  ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் போய் மோடியை எதிர்த்து பேசினார் என்றதுமே ஆர்.எஸ்.எஸ் வானரங்கள் துள்ளிக் குதித்தன. உடனே சன் டி.வி மாறன்களை மிரட்டி வீரபாண்டியனது நிகழ்ச்சிகளை தடை செய்தன. பார்ப்பனிய எதிர்ப்புக்கு புகழ் பெற்ற திராவிட இயக்கத்தை வைத்து ஆளான மாறன்களே இதை வெட்கமின்றி ஏற்றுக் கொண்டனர்.

இதே சன் நிர்வாகம் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ராஜாவை மீண்டும் பணியில் சேர்த்துக் கொண்டது. சட்டமன்றங்களிலேயே நீலப்படங்கள் பார்க்கும் பா.ஜ.க தலைவர்களின் தமிழக வாரிசுகள் இதை எதிர்க்காதது ஆச்சரியமல்ல. வேறு ஊடகங்களும், கட்சிகளும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே போல சன் நிர்வாகம் வீரபாண்டியனை முடக்கி போட்டதற்கும் யாரும் குரல் கொடுக்கவில்லை. காவி கூட்டத்தினை கண்டிக்கவும் இல்லை.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் லோகோவின் கீழ் இருக்கும் வாசகம் – உண்மை உடனுக்குடன்… ஆனால் பொய்களும், கோழைத்தனமுமே உடனுக்குடன் என்று வைப்பதே சாலச்சிறந்தது.

அசுரர்களைப் போற்றிய மண்ணில் இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் ஒளிபரப்பி பக்திச் சேவை செய்யும் சன் தொலைக்காட்சி, காவி பயங்கரவாதிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்தது எதேச்சையானது அல்ல. ‘வாழும் பெரியார்’ என்று பெரியாரின் பெயரை தவறாக பயன்படுத்தும் கருணாநிதியும் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்தவர்தான். அதற்கு கருணாநிதியை கன்வின்ஸ் செய்ததே முரசொலி மாறன்தான். அதற்கு தவறான கட்சியில் சரியான மனிதர் வாஜ்பாயி என்று சப்பைக்கட்டு வேறு.

புதிய தலைமுறையின் கதை வேறு. நடுநிலை வேசம் கட்டிக் கொண்டு ஊடக உலகில் நுழைந்த புதிய தலைமுறை உண்மையில் பா.ஜ.கவை ஆதரிப்பதுதான் நடுநிலைமை என்று நடுநிலைமைக்கு ஒரு புதிய விளக்கத்தையே உருவாக்கியிருந்தது. அப்பேற்பட்டவர்கள் மீது ஏன் இந்த டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு? தன்னுடைய முதல் நிகழ்ச்சியிலிருந்தே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு கூட தெரியாதவர்களாக வாழ்ந்த பா.ஜ.க காரர்களை வம்படியாக பிடித்து வந்து தமிழகத்திற்கு அறிமுகம் செய்து காவிப்பணியாற்றிய புதிய தலைமுறையின் மீது ஏன் இந்த குண்டு வீச்சு?

இது புதிய தலைமுறை ஊழியர்களுக்கே குழப்பமாக இருந்திருக்கும். அங்கே வேலை பார்க்கும் ஊழியர்களை பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு அன்றாடம் புதிய தலைமுறைக்கு வந்து சென்றவர்கள்தான், இந்த காவி கூட்டத்தினர். அதே போல என்னதான் தேசியக் கட்சி, ஆளும் கட்சியாக வெயிட்டாக இருந்தாலும், வருவதற்கு பேட்டா காசும் வாங்கி சென்ற பா.ஜ.க.வினர், என்னை கூப்பிடலையா  என்று இந்த டி.வியில் கெஞ்சிக் கிடந்த பா.ஜ.க.வினர் இன்று மோடி ஆட்சி வந்தவுடன் நேரெதிராக மிரட்டுகிறார்களே, என்ன காரணம் என்று ஊழியர்கள் குழம்பித்தான் போயிருப்பார்கள். பா.ஜ.கவுடன் முதல் கூட்டணி அமைத்து பாதை போட்ட பச்சமுத்துவுக்கே நாம நல்லாத்தானே மோடிக்கு சொம்படிக்கிறோம் பிறகு ஏன் பிரச்சினை செய்கிறார்கள் என்று தோன்றியிருக்காதா என்ன?

“தாலி பெண்களை இழிவுப்படுத்துகிறதா? பெருமைப்படுத்துகிறதா?”  என்னும் விவாத நிகழ்ச்சிதான் தற்செயலாக சில விசயங்களை நிறைவேற்றி மேற்கண்ட குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் படபிடிப்பு முடிந்து முன்னோட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு புதிய தலைமுறையில் ஒளிப்பரப்பட்டது. அந்த முன்னோட்டத்தில் ஒரு பெண் ‘தாலிங்கிறது பெண்களுக்கு நாய்ச்சங்கிலி மாதிரிங்க’ என்று தெரிவித்தார்.  உடனே இந்து மனம் அதாவது வானர பரிவாரங்களால் வழிநடத்தப்படும் வெறி துள்ளி எழுந்து கத்த ஆரம்பித்தது.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
தமிழகத்தில் இந்த ரவுடி கும்பலுக்கு தலைமை வகிக்கும் எச்.ராஜா

தமிழ்நாட்டு பெண்கள் பெரும்பாலானவர்களின் தாலியை டாஸ்மாக் அவிழ்த்துக் கொள்ளும் அவலம் நடைமுறையில் இருக்கும் நிலையில் தாலி நாய்ச் சங்கலியா, தூக்கு கயிறா என்பதெல்லாம் ஒரு பெரிய பிரச்சினை இல்லை. அப்படி இல்லாத பிரச்சினையை இருப்பதாக ஆக்குவதற்கு காவி கும்பல்கள் முடிவெடுத்தனர். உடனே புதிய தலைமுறை அலுவலகத்திற்கு தொடர் மிரட்டல் அழைப்புகளால் தொந்தரவு செய்திருக்கின்றனர்.

பெண்களின் மானத்தை காப்பாற்றுவதற்கே தாலியின் அவமானத்தை எதிர்க்கிறோம் என்று பொங்கிய கூட்டம் உண்மையில் புதிய தலைமுறை அலுவலகத்தின் வரவேற்பாளர்களாக வேலை செய்யும் பெண்களை கலப்படமில்லாத கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தது. இது போக தாலியை குறித்து அந்த முன்னோட்டத்தில் (டிரைலரில்) பேசிய அந்தப் பெண்ணையும் மிரட்டியிருக்கிறது. மன்னிப்பு கேட்கச் சொல்லி அச்சுறுத்தியிருக்கிறது. அந்த பெண்ணோ தன் அனுபவத்தில் உணர்ந்த தாலி பற்றிய உண்மைகளை மறுத்தெல்லாம் பேச முடியாது என்றிருக்கிறார்.

பிறகு அந்த பெண்ணின் வீட்டில் கல்லை விட்டெறிந்து தொடர் மிரட்டல்களை ஏவிவிட்டாலும் அந்த பெண்ணை பணிய வைக்க முடியவில்லை. இதற்காகவே இவர்கள் அந்தப் பெண்ணின் தொலைபேசி எண், வீட்டு முகவரியை ஆள் வைத்து கண்டுபிடித்திருக்கிறார்கள். இல்லை மத்திய உளவுத்துறை கூட கண்டுபிடித்து கொடுத்திருக்கலாம்.

இதற்கு பிறகு முன்னோட்டம் ஒளிபரப்பான பிறகு அடுத்த நாள் காலையில் புதிய தலைமுறை வாசலில் இந்துமதவெறியர்கள் கூடினார்கள். அன்றைய புதிய தலைமுறையின் காலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாலு வார்த்தை பொருளோடு பேசுவதற்கு திண்டாடும் டால்பின் ஸ்ரீதர் எனும் பா.ஜ.க ஆள் கிளம்பிய பிறகு வானரங்கள் புதிய தலைமுறை வாசலை சூழ்ந்துவிட்டன. ஒரு வாசலை அடைத்தால், மறு வாசலில் நுழையுமாம் நரி என்பதற்கேற்ப இன்னொரு வாசல் வழியாக வந்தும் காத்து கிடந்திருக்கின்றனர். அந்த வழியாக சென்று கொண்டிருந்த கேமரா மேனை தாக்கியது மட்டுமில்லாமல், அந்த வழியாக வந்த பெண் நிருபரையும் தாக்க முனைந்தனர்.

இதையடுத்து ஊழியர்களிடையே கொந்தளிப்பு மனநிலை தொற்றிக் கொண்டிருக்கிறது. அதை புதிய தலைமுறையின் செய்தியாளர் தியாகச் செம்மல் இயல்பாக வெளிப்படுத்தினார். தாக்கியவர்களை  இந்துத்வ குண்டர்கள் என்று குறிப்பிட்டார். அதற்கடுத்து புதிய தலைமுறை நிர்வாகம் கொடுத்த அழுத்தத்தின் பெயரில் இந்துத்துவ குண்டர்கள் என்ற உண்மை அடையாளம் தெரியாத நபர்களாக மாற்றப்பட்டது.

இந்துத்துவ குண்டர்கள் என்று அழைத்ததற்காக தியாகச் செம்மல் ஃபேஸ்புக்கின் காவிப் பக்கங்களில் மிரட்டப்பட்டார். அவருடைய திருமண புகைப்படத்தை போட்டு ஆபாச அர்ச்சனைகளை செய்தார்கள். தாலியின் மானம், மற்றும் பெண்களின் மானம் குறித்த கவலைப்பட்ட ஓநாய்களின் சுயரூபம் வெளிப்பட்டது.

தான் ஒரு முழு முட்டாள் என்ற உண்மை தெரிந்தும் தொலைக்காட்சியில் பேச வாய்ப்புக் கொடுத்தது பச்சமுத்து டிவிதான் என்பதையெல்லாம் மறந்து டால்பின் ஸ்ரீதர் போன்ற அனாமதேயங்கள் கூட சங்க பரிவாரங்களோடு சேர்ந்து பொங்கியது.

அந்த கோல்மால் டால்பின் பகிர்ந்திருந்த மற்றோரு பதிவு நம்பி நாராயாணன் எனும் ஆர்.எஸ்.எஸ் அம்பியுடையது. அதில் தாலியை பற்றிய விவாதத்தை 2000 பேரின் எதிர்ப்பை மீறி நடத்த முயற்சித்தது அராஜகம் என்று சாடுகிறார். உண்மையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகத்தினர், தாலி குறித்த சிறு எதிர்ப்பு வந்த உடனேயே முந்தைய நாள் இரவே அந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வேறு நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முடிவை எடுத்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் தொடை நடுங்கிகள் என்பது மட்டுமல்ல, அவர்களே கூட பா.ஜ.கவின் அதிகாரப்பூர்வமற்ற தொலைக்காட்சியாகத்தான் இயங்கினார்கள்.

இது தெரிந்தும், அதாவது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு நமது மேலாண்மை நிலைநாட்டப்பட்டுவிட்டது என்று தெரிந்தும் இனி இப்படியான தலைப்புகளை  எடுக்கக் கூடாது என்று  ஒரு மிரட்டலுக்காகவே அங்கே வந்து, கேமராமேனை இழுத்துப் போட்டு அடித்து, நெஞ்சிலேறி மிதித்து, கேமராவை உடைத்து வீசியிருக்கிறது இந்த கும்பல்.

தங்களுக்கு சாதகமான தொலைக்காட்சி ஊழியர்களை தாக்கும் நோக்கம் இந்த இந்துத்வ வானரங்களுக்கு ஏன் வருகிறது என்பதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கிறது. தேர்தல் நடந்து கொண்டிருந்த போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் பயணம் செய்து அங்குள்ள நிலையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியை புதிய தலைமுறை ஒளிபரப்பி வந்தது. அதில் குஜராத் பற்றிய பதிவில், குஜராத் பற்றிய பிம்பம் உண்மையில் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை என்று இருந்தது. இதெல்லாம் பச்சமுத்துவுக்கு தெரிந்து நடக்கவில்லை என்றாலும், இந்த மெல்லிய மயிலிறகு விமரிசனத்தை ஊட ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இணைப்பு 1:

இணைப்பு 2:

பாரி வேந்தர் என்னும் கல்வி கொள்ளையர் மோடியுடன் கூட்டு வைத்திருப்பதற்கும், அவருடைய திருட்டு சாம்ராஜ்யத்தை காப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட புதியதலைமுறை பா.ஜ.கவின் பிரதமர் வேட்பாளர் மோடியை கேள்வி கேட்பதா?  என்று அவர்களுக்கு ஏற்கனவே ஒரு சிறு கடுப்பு உண்டு.

அடுத்த கடுப்பு….சட்டமன்றத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் ப்ளூ பிலிம் பார்க்கும் செய்திகளை வெளியிட்டது. இதுமட்டுமில்லாமல், இவர்களின் பார்ப்பனிய சித்தாந்தத்தை ஏற்றுக் கொள்ளாத சிலர் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக இருப்பதும் அவாளுக்கு பிடிக்கவில்லை. இதை அவர்களின் இணைய தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் பரவலாக பார்க்கலாம்.

puthiya-thalaimurai-screen-shot-1இவர்கள் குறிப்பிடும் அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்தான் அடுத்த வீட்டுக்காரர்களுக்கே தெரியாமல் வாழ்ந்து கொண்டிருந்த பா.ஜ.க கோயிந்துகள் பலரை பிரலமாக்கினார்கள். தமிழகத்தில் இல்லாத பா.ஜ.க.வை இருப்பது போன்றதொரு தோற்றத்தை  ஏற்படுத்தியதும் இந்த தொகுப்பாளர்கள்தான். ஆனாலும், அவர்களை பார்ப்பன கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனெனில் சில நேரம் நிகழ்ச்சி சுவாரசியம், மற்றும் சமநிலை படுத்துவது என்ற நோக்கிலும் பா.ஜ.க முட்டாள்களிடம் ஏதாவது சில கேள்விகளை கேட்க வேண்டியிருக்கிறது. இது கூட அந்த கோயிந்துகளுக்கு பிடிக்கவில்லை. கேள்வி கேட்பவர்களை பொதுவாகவே பாசிச கும்பலுக்கு பிடிப்பதில்லை.

புதிய தலைமுறையை தாக்கும் ஆர்.எஸ்.எஸ்
திருட்டு சாம்ராஜ்யத்தை காக்கத்தானே மோடி மஸ்தானின் விளம்பர ப்ரோக்கராக மாறி கோடிக்கணக்கில் ஸ்பான்சர் செய்தார், பச்சமுத்து.

‘ஜென்ராம் ஒரு கம்யூனிஸ்ட். குணசேகரன் ஒரு தி.க – இவர்களை புதிய தலைமுறையில் இருந்து தூக்கி எறிய வேண்டும்’ என்று இவர்கள் திரும்பத் திரும்ப கத்துகிறார்கள். மேற்கண்ட இருவரும் என்ன கருத்து வைத்திருக்கிறார்கள், எதை ஆதரிக்கிறார்கள்  என்பதாக நடந்து கொள்வதில்லை. ஒரு வேளை அப்படிக் கேட்பதாக  வைத்துக் கொண்டாலும் அது  குறிப்பிட்ட பிரச்சினை குறித்து சமூகத்தின் மனநிலையோடு சேர்ந்தும் வரலாம். மேலும் ஒரு உரையாடலை விறுவிறுப்புடன் வளர்த்துக் கொண்டு செல்வதற்கே எதிரெதிர் கேள்விகளை கேட்பது உலகமெங்கும் உள்ள வழக்கம்.

‘மிஸ்டு கால் மூலம் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக சேர்ந்தும் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வெறும் 5000 வாக்குகள் வாங்கியது ஏன்’ என்று கேட்டால் அது தவறாம்! இதை பாண்டே கேட்பது போல, ‘மக்களுக்காக மோடி, பா.ஜ.க அனைவரும் மிகுந்த பணியாற்றியும் மக்கள் வோட்டுப் போடவில்லை ஏன்’ என்று கேட்க வேண்டுமாம். எனில் இதற்கு பெயர்தான் ஜெயா டி.வி. அதையெல்லாம் எந்த பொதுவான மக்கள் பார்க்கிறார்கள்? தந்தி டி.வி பாண்டே போன்ற ஒரு அக்மார்க் வெறிகொண்ட ஆர்.எஸ்.எஸ் காரர்களாகவே புதிய தலைமுறை தொகுப்பாளர்கள் இருக்க வேண்டும் என்பது பா.ஜ.கவின் நிலை.

புதிய தலைமுறை தீபாவளி
“முந்தைய கால தமிழகத்தில் தீபாவளி எனும் பண்டிகையே கிடையாது”

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், “தீபாவளிக்கு வெடி வெடிக்கும் பழக்கமே வங்காளத்திலிருந்து வெடி மருந்து தொழிற்சாலைகள் சிவகாசி பக்கம் வந்த பிறகே ஆரம்பித்தது” என்றார். அதேபோல், “முந்தைய கால தமிழகத்தில் தீபாவளி எனும் பண்டிகையே கிடையாது”  என்றார்.

இதற்கு எதிராக பேசிய ஆர்.எஸ்.எஸ்-இன் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ராமமூர்த்தி வழக்கம் போல….எலி பொந்துக்குள் இருந்து பேசுவது போல, மெல்ல தொடங்கி, அங்கே கொண்டாடுனாங்க, இங்கே கொண்டாடுனாங்கன்னு கதை விட்டு ஆரம்பித்து பிறகு, “நம்பிக்கை தர்ற பண்டிகையை இப்படி கொச்சை படுத்துறாங்களே…கொச்சை படுத்துறதுக்கும் மெக்காலே புத்திரர்களின் இந்து விரோத மனபோக்கு காரணம்”னு நிகழ்ச்சிக்கு அவதூறு காவி மசாலா எபெஃக்ட் கொடுக்கத் தொடங்கினார். (7:35)

நாயக்கர் காலத்திற்கு பிறகுதான் தீபாவளி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறதேயொழிய, ஈராயிரம் ஆண்டுகளாக இந்த பண்டிகை கொண்டாடப்பட்டதற்கு சான்றில்லை என்று எஸ்.ரா கூறினார். உடனே, அது இருள் அகற்றி ஒளியேற்றும் நாள், நரகாசுரன் தமிழனெல்லாம் கிடையாது என்று மீண்டும் பொங்கினார், ராமமூர்த்தி. ஆனால், நேரலை அரங்கில் தங்கள் சுபாவத்தின் படி முழுமையாக அதாவது அம்மணமாக பொங்க முடியாது என்று மறுநாள் தங்கள் வானரங்களை அனுப்பி யாரையாவது பிராண்டிவிட அனுப்பியது பரிவார கும்பல்..

இணைப்பு :

 

வந்த கும்பல் அலுவலக வாயில் முன்னே கத்தியதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.

அதில் அவர்கள் எஸ்.ராவை  விட்டுவிட்டு, சுப.வீரபாண்டியனை திட்டித் தீர்த்தார்கள். ஒத்தைக்கு ஒத்த வர்றியான்னு சுபவீயையும், ஏன் ஒரு கட்டத்தில் பச்சமுத்துவையும் திட்டிக் கொண்டே சவால் விட்டார்கள்.

இதனுடைய தொடர்ச்சியாகத்தான் தாலி நிகழ்ச்சி பிரச்சினைக்கு பிறகு பா.ஜ.க கும்பல், புதிய தலைமுறையை புறக்கணிக்கும் முடிவை அறிவித்தார்கள். தங்கள் இருப்பை குறைந்தபட்சம் கிராபிக்ஸிலாவது உறுதி செய்து கொள்ள வாய்ப்பளிக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சியை  என்ன தைரியத்தில் புறக்கணிக்கிறார்கள்?

பச்சமுத்துவின் கல்வி சாம்ராஜ்யம் ஒன்றும் அன்பு சாம்ராஜ்யம் இல்லை. ஊழலில் உருவான திருட்டு சாம்ராஜ்யம்தான். இந்த திருட்டு சாம்ராஜ்யத்தை காக்கத்தானே மோடி மஸ்தானின் விளம்பர ப்ரோக்கராக மாறி கோடிக்கணக்கில் ஸ்பான்சர் செய்தார். பச்சமுத்துவின் ‘தொழில்’ பலவீனத்தை நம்பித்தான் காவிகள் புதிய தலைமுறையை புறக்கணித்தார்கள். இதன்படி புதிய தலைமுறை தொலைக்காட்சி என்றுமே மோடிக்கு எதிராகவோ ஏன் மோடி வீட்டு கொசுவுக்கு எதிராக கூட பேசவோ, பார்க்கவோ முடியவே முடியாது. அதனால் நாளையே இவர்கள் சமாதானமாகி சேர்ந்து விடுவார்கள். இப்போதே அதனுடைய முன்னோட்டோமாக பா.ஜ.கவின் எஸ்.வி.சேகர் எனும் நடிகர் விவாதங்களில் கலந்து கொள்கிறார். அவரை சில பா.ஜ.க நபர்கள் கண்டித்தாலும், பலர் ஆதரிக்கவே செய்கிறார்கள்.

ஆகவே இன்று புதிய தலைமுறையை புறக்கணிப்பதாக இந்துமதவெறியர்கள் அறிவித்திருப்பதற்கு காரணம் என்ன? பச்சமுத்து பாக்கெட்டில் இருந்தாலும் தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் அனைவரும் தமது சொல்படி கேட்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இதை நிர்வாகத்திற்கு அழுத்தம் தருவதன் மூலம் ஊழியர்களை அச்சுறுத்தி தங்களுக்கு  எதிரான செய்திகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம் என்று இந்த புறக்கணிப்பை செய்திருக்கிறார்கள்.

காவிகளுக்கு அடிபணிந்து நடப்பதை தங்களுடைய தார்மீக கடமையாக எண்ணும் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் லோகோவின் கீழ் இருக்கும் வாசகம் – உண்மை உடனுக்குடன்…  ஆனால் பொய்களும், கோழைத்தனமுமே உடனுக்குடன்  என்று வைப்பதே சாலச்சிறந்தது.

பா.ஜ.க கும்பலுக்கு ஆதரவாக ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் நிர்வாகம் இறங்கும் நேரத்தில் ஊழியர்களைப் பாதுகாப்பதற்கென்று அந்த நிறுவனத்தில் தொழிற்சங்கம் கூட இல்லை. அன்றியும் தொழிற்சங்கம் இல்லாததின் விளைவாக தொடர்ந்து ஊழியர்களை கட்டாய வெளியேற்றம் மூலம் அனுப்புவதும் அங்கே சகஜம். ஆரம்பத்தில் அதிகம் ஊழியர்கள் எடுக்கப்பட்டு பிராண்டை நிலை நிறுத்திய பிறகு ஆட் குறைப்பு சப்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி ஊழியர்களே ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுதான் கதை. அதைப் போல வெளியேற்றப்பட்ட சூர்யா  என்னும் பெண் எடிட்டர்  எழுதிய கடிதம் கீழே..

இந்தக் கடிதத்திலிருந்து பு.த நிர்வாகம் ஊழியர்களை எப்படி கொத்தடிமைகள் போல நடத்துகிறது, தூக்கி எறிகிறது, என்னென்ன பாதிப்புகள் உருவாகிறது எல்லாம் தெரியவரும். இது போக புதிய தலைமுறையில் வேலைக்கு ஆள் எடுக்கும் போது குறைந்த பட்சம் 8 மணி நேரமும், அதிக பட்சம் எவ்வளவு மணி நேரமும் வேலை பார்க்க வேண்டியது இருக்கும் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்குகிறார்கள். இப்படியெல்லாம் எந்தச் சட்டமும் அனுமதிக்கவில்லை.

மேலும் இன்க்ரீமெண்ட் கேட்கும் துணிச்சல் வந்துவிடக்கூடாதென்று , ஒவ்வொரு மூன்றாம் மாதமும் பணி நீக்கம் நடக்க வாய்ப்பிருக்கிறது என்ற ஒரு செய்தியை பரப்பி விடுவதின் மூலம் ஊழியர்களை அச்சத்திலேயே வைத்திருப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் ஊருக்கு நியாயம் சொல்லும் இவர்களது நிகழ்ச்சிகள்தான் எத்தனை?

இறுதியில் இந்துமதவெறியர்கள் கோரியது போல குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை நிர்வாகம் நீக்குவதற்கு விரும்பவே செய்யும். அதை எதிர்த்து அந்த பத்திரிகையாளர்கள் போராடுவார்களா என்பதும் சந்தேகம்தான். அத்தகைய போராட்டமும், அந்த போராட்டத்தை சாதிக்கின்ற தொழிற்சங்கமும் இருந்தால்தான் வெளியே அடிக்கும் இந்துமுன்னணி கும்பலிடமிருந்தும், உள்ளே அடிக்கும் நிர்வாகத்திடமிருந்தும் ஊழியர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

– வினவு செய்தியாளர்கள்

பொரி உருண்டை

https://www.youtube.com/watch?v=FH8DFhFnjVs

காமராமேன் தாக்கப்பட்டார்

H Raja against frontline editor

Journalist protest

 

ஐ.டி தம்பதியினர் தற்கொலை – குற்றவாளியை மறைக்கும் ஊடகங்கள்

5

முன்னணி ஐ.டி நிறுவனம் செய்த இரட்டைக் கொலைக்கு எப்போது தண்டனை?

ன்னிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த பணியாளரை “ஆன்சைட்” வேலைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்திருந்தது, இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனம் ஒன்று. தனது ஆட்குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவரை சென்னைக்கு வரவழைத்து வேலையில்லாத நிலையில் ‘பெஞ்ச்’சில் அமர்த்தியது. பின்னர் ஒரு நாள் அவரை வேலையை விட்டுத் துரத்திவிட்டது.

ஐ.டி தம்பதி தற்கொலை
மனைவியின் கோரச்சாவைக் கண்டு மனம் வெதும்பிய அவர் ஓடும் ரயிலில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

சென்ற மாதம் அவரின் மனைவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் கோரச்சாவைக் கண்டு மனம் வெதும்பிய அவர் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டார்.

அந்த சோக முடிவுக்கு அவர்கள் வரும் வரை இத்தம்பதியினரின் பெயர் நம் யாருக்கும் தெரியாது. அந்த நபரின் பெயர் ராதாகிருஷ்ணன். அவரது மனைவியின் பெயர் ஜாக்குலின். பத்திரிகைகளில் இவை செய்தியான பின்னர்தான் இந்த விபரங்கள் நமக்குத் தெரியவந்தது.

ஆனால், இவர்களை இக்கோர முடிவை நோக்கித் தள்ளிய நிறுவனத்தின் பெயர் இன்னமும் வெளியுலகுக்கு வரவில்லை. இவர்களை சட்டவிரோதமாக ‘ஆட்குறைப்பு’ செய்த போதும் அந்நிறுவனம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கவில்லை, இப்போது இவர்களது உயிர் பறிக்கப்பட்ட பிறகு அந்நிறுவனத்தின் பெயர் கூட வெளியில் சொல்ல முடியாதபடி மூடி மறைக்கப்படுகிறது.

ஐ.டி தம்பதி தற்கொலை
உண்மையில் அவர்களைக் கொன்றது எது என்று தெரிந்து கொள்வதற்காக போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டியவை இன்னமும் உள்ளன.

ஐ.டி. ஊழியர்களின் மத்தியில் மவுனம் நிலவுகின்ற வரைக்கும், ஐ.டி நிறுவனங்கள் பல நூறு கோடிகளை தமது லாபக்கணக்கில் சேர்த்தபடி ஓராயிரம் ஜாக்குலின், ராதாகிருஷ்ணன்களை சாவுக்குத் தின்னக் கொடுத்து விட்டு இந்தியாவின் தரகு முதலாளிகளின் கல்லாப் பெட்டிகளை நிரப்பிக் கொண்டுதான் இருக்கும்.

ராதாகிருஷ்ணன், ஜாக்குலின் ஆகியோரின் உடல்கள் அப்போதே போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டுவிட்டன. இருவரும் யாராலும் கொல்லப்படவில்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு அரசுக்கு இருப்பதால் அந்த போஸ்ட் மார்ட்டம் நடந்திருக்கிறது.

உண்மையில் அவர்களைக் கொன்றது எது என்று தெரிந்து கொள்வதற்காக போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டியவை இன்னமும் உள்ளன.

இவர் தற்கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடித்த தினகரன் நாளிதழ், “கடந்த சில மாதங்களாக ராதாகிருஷ்ணன் வேலையின்றி ஊர் சுற்றி வந்தார்” என்றும் “குடிப்பழக்கமும் அவரை தொற்றிக் கொண்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்” என்றும் துப்பறிந்து தனது பத்திரிகை அறத்தை நிலைநிறுத்தியது.

ஐ.டி தம்பதி தற்கொலை
‘கொடுக்கிற காசை விட அதிகமாகக் கூவும்’ கார்ப்பரேட் சேவகர்கள்.

இறப்புக்கான பொறுப்பை முழுக்க இறந்து போன ராதாகிருஷ்ணன் பக்கமே தினகரன் தள்ளி விட்டுள்ளது. அவரை மன்னிக்க முடியாத குடும்பத் தலைவனாக ஆக்கி ‘வேலையின்றி ஊர் சுற்றி இருக்கிறான்’. என்றும் ‘குடிக்கவும் செய்திருக்கிறான்’ என்றும் எழும்பிவந்து பதில் சொல்ல முடியாத ராதாகிருஷ்ணன் மீது அவதூறு செய்துள்ளது.

ஐ.டி தம்பதி தற்கொலை
தினகரனின் புலனாய்வு திறன்

ராதாகிருஷ்ணன் தங்கி இருந்த வீட்டின் எதிர்ப்புறம் இருக்கும் அந்த நடுத்தர வயதுப் பெண்மணி, ‘அவங்க வீட்டில இருந்தாங்க என்பதே தற்கொலை பரபரப்புக்குப் பிறகுதான் எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லுவதோ, ‘சண்டை எல்லாம் அவர்கள் போட்டதில்லை’ என்று சொல்வதோ தினகரனின் புலனாய்வு திறனுக்கு புலப்படவில்லை. ஆனால், செத்தவர்களின் ஆவியிடம் பேசி ‘பல உண்மை’களைக் கண்டறிந்திருக்கிறது, தினகரன்.

ஆவியிடம் பேசும் கலையில் தேர்ந்த தினகரன் ஜாக்குலின் தற்கொலை செய்வதற்கு முன், தகராறில் பேசிய உரையாடல் முதற்கொண்டு, பதிந்துள்ளது.

ஆத்திரமடைந்த ஜாக்குலின், ‘குடிப்பதற்கு மட்டும் பணம் இருக்கிறது. வேலைக்கும் போவதில்லை. வீட்டு செலவுக்கும் பணம் தருவதில்லை’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு ராதாகிருஷ்ணன், ‘ நான் அப்படிதான் குடிப்பேன் என்னை கேட்க உனக்கு அதிகாரம் இல்லை’ என்று கூறியதாக தெரிகிறது.

இறந்து போன இருவரும் பேசிய இவ்வாக்கியங்களை தினகரனுக்குத் தெரிவித்தது செத்துப் போனவர்களின் ஆவியா அல்லது கார்ப்பரேட்டிடம் எச்சில்காசு பொறுக்கிய ஆதம்பாக்கம் காவல் நிலையமா என்பதை நாம்தான் கண்டுபிடிக்க வேண்டும்.

ஐ.டி தம்பதி தற்கொலை
தினமணியின் திரைக்கதை

ராதாகிருஷ்ணன் “வேலைக்கு செல்லாமல், மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விட்டதாக தெரிகிறது.இதனால் கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் ஜாக்குலின், வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாள்.” என்று எழுதிய இணையப் பத்திரிக்கையின் பெயரோ ‘சத்தியம்’.

ராதாகிருஷ்ணன் ‘சென்னை ராஜீவ்காந்தி சாலையில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்ததைக்’ கண்டறிந்த தினமணி, அவர் வேலை பறிக்கப்பட்டதை மூடி மறைத்துவிட்டு, அவரை குடிகாரனாக்கி, குடும்பத்தகராறு உருவாக்கி சாவுக்கான திரைக்கதையை எழுதிச் சென்றுள்ளது.

ஆனால் தமிழ் இந்து அந்த அளவுக்கு மோசமில்லை. அவர் குடிகாரர் ஆனதை நம்பும்படிச் சொல்ல சில காரணங்களைக் கண்டுபிடித்திருந்தது. அக்காரணம் ‘அவர் சில நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை’ என்பதோடு நின்று விட்டது.

tamil-hinduஏன் வேலைக்குச் செல்லவில்லை என்று அந்தக் கேள்வி நீளவில்லை. இக்கதைக்கு நம்பகத் தன்மையை வரவழைக்க இராதாகிருஷ்ணன் தன் மனைவியை சம்பவம் நடந்த இரவன்று ‘அடித்தார்’ என்று இறந்து போனவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயத்தை எழுதி வழக்கை மூடிக் கொண்டது.

மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவே, அவர் வேலைக்குச் செல்லாமல் இருந்தார் என்ற கதையை எழுதிவிட்ட பிறகு, கள்ளக்காதல்களையும் லாட்ஜ்களில் பிடிபட்ட அழகிகளையும் வைத்து கல்லாப்பெட்டி கட்டிய சி.பா.ஆதித்தனாரின் பத்திரிக்கை தன் பங்குக்கு ‘வேலைக்கு செல்லாமல் சுற்றித்திரிந்ததாக தெரிகிறது’ என்றும் எழுதி விட்டது.

வேலை இழப்பு உருவாக்கிய மன அழுத்தமும், பொருளாதார நெருக்கடியும் ஒரு இணையையே கொன்றொழித்து விட்டது. இதை டெக்னிக்கலாக தற்கொலை எனக் குறிப்பிட்டாலும் மனசாட்சிப்படி பார்த்தால், அந்த ஐ.டி நிறுவனம் தூண்டிவிட்டு இரு உயிர்களைக் கொன்றுள்ளது. பச்சைப் படுகொலையை நடத்திவிட்டு அனைத்து ஊடகப் பொறுக்கிகளையும் இக்கொலைகளைத் திரித்து எழுத வைத்துள்ளது அந்த நிறுவனம். அந்த நிறுவனம் எது என்பதை வெளியிடாமல் மூடி மறைக்கின்றன அனைத்து பத்திரிக்கைகளும்.

ஐ.டி தம்பதி தற்கொலை
ஆப்பிள் நிறுவனத்தின் தற்கொலைகளை தூண்டும் நடவடிக்கைகளை கண்டித்து, அதன் விளம்பரத்தை கிண்டல் செய்யும் படம்.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில் வேலை பறிப்பினாலும் மன உளைச்சலாலும் தம்பதியினர் தற்கொலை செய்தனர் என்ற செய்தி வந்தவுடன் இதன் பின்னணியை விசாரித்து உண்மையைக் கண்டறிய 4 நாட்களுக்கும் மேலாக நாம் மேற்கொண்ட முயற்சிகளின் பின் பல கசப்பான உண்மைகள் தெரியவந்தன, ஒன்றே ஒன்றைத் தவிர.

அது, எந்த நிறுவனத்தால் ராதாகிருஷ்ணன் பலிகடாவாக்கப்பட்டார் என்பதே..

பத்திரிகைச் செய்தியாக இக்கோரச் சாவின் பின்னணியை விவரித்து நாம் எழுதிய பிறகு சில பத்திரிகை நிருபர்கள் நம்மைத் தொடர்பு கொண்டு பேசினர். ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரை வெளியிடக்கூடாது என்ற விசயத்தில் அனைவரும் உறுதியாக நின்றனர். நெருக்கமான தொடர்பு மூலம் சிலரை விசாரிக்கச் செய்தபோது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில், “முதல் தகவல் அறிக்கையில் நிறுவனத்தின் பெயர் இல்லை” என்று சொன்னார்கள்.

அத்தம்பதியினர் வசித்த வீட்டின் எதிர்புறம் இருந்த ஒரு மூதாட்டி, இச்சாவுகளுக்காக நம்மிடம் வருந்தினார். ‘சரிங்கம்மா…அந்தப் பையன் வேலை பார்த்த கம்பெனி தெரியுமா?’ என்று கேட்டதுமே ‘இதுக்கு மேல எதுவும் சொல்ல முடியாதுபா…எந்தக் கம்பெனின்னு யாருக்கு தெரியும்..நீங்க போய்டுங்க’ என்று கடுமையாகக் கூறிக் கதவை அடைத்தார். கடும் பிரயத்தனப்பட்டு அந்த வீட்டின் உரிமையாளர் எண்ணைக் கண்டுபிடித்துப் பேசினோம். ‘சாப்ட்வேர்னு சொன்னார். எந்தக் கம்பெனின்னு சத்தியமாத் தெரியாதுப்பா’ என்றார்.

ஐ.டி தம்பதி தற்கொலை
கோவை, ஓசூர், சென்னை தொழிலாளர் வர்க்கம் ஆலையில் அநீதி இழைக்கப்படுகையில் தீர்வு காணும் வரை போராடுகிறது

எல்லோரையும் ஒரே மாதிரி ‘தெரியாது’ எனக் கூறவைத்தது எது? ‘அந்த’ நிறுவனத்தின் செல்வாக்கா? அது தந்த அச்சுறுத்தலா? அல்லது நமக்கேன் வம்பு என்ற நடுத்தர வர்க்க ‘பாதுகாப்பு’ உணர்வா?

எதுவும் புரியாத நிலையில் ஒரு பத்திரிகையின் நிருபர், ஜாக்குலினின் சகோதரி எண்ணைத் தந்தார். அவரிடம் பேசினோம். அவர் மனம் வருந்திப் பலவாறு பேசினார். அவரிடம் ‘எந்த நிறுவனம்’ எனக் கேட்டவுடன் தொலைபேசித் தொடர்பை நிறுத்திக் கொண்டார்.

ராதாகிருஷ்ணனின் முக நூல் பக்க நண்பர்கள் அனைவருக்கும் மெசேஜ் அனுப்பியதில் அனைவரும் மவுனம் சாதித்தனர். சிலர் மட்டும் ‘அவர் எங்க ஊருக்காரர். ஆனால் கம்பெனி எதுன்னு தெரியாது’ எனச் சொல்லி உண்மையை மறைப்பதில் பிடிவாதம் காட்டினர்.

கணவன் மனைவி இருவரையும் வேலை பறிப்பு சாகடித்து விட்டது. செத்த பிறகு போலீசு தரும் திரைக்கதையை கூடுதலாக செதுக்கி புதுப்புதுக் கதைகளை உருவாக்குகின்றன, ஊடகங்கள. அதன் மூலம் செத்துப்போனவரை வில்லனாக்கி, கொலையாளியான ஐ.டி நிறுவனத்தைக் காப்பது யார்? நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தார் அனைவரிடமும் அச்சத்தையோ சுயநலத்தையோ விதைத்துள்ளன, கார்ப்பரேட் கொலைகார நிறுவனங்கள். சாவுக்குப் பின்னும் இத்தகைய மவுனத்தால் ராதாகிருஷ்ணனை அவதூறு செய்து அவரின் மீது சேறு அடிக்கிறோம் என்ற குற்ற உணர்வு ஏதுமின்றி கார்ப்பரேட்டின் விருப்பத்துக்கு அனைவரும் பக்கமேளம் வாசிக்கின்றனர்.

அந்த ஐ.டி.நிறுவனத்தில் ராதாகிருஷ்ணனுடன் பணி புரிந்த நண்பர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவரை வேறொருவர் மூலம் தொடர்பு கொண்டபோது, ‘அதான் செத்துப் போயிட்டானே..இன்னும் அந்தக் கம்பெனி பெயரை ஏன் கேக்கிறே..சொல்ல முடியாது போ’ எனச் சொன்னது நம்மிடம் அதிர்ச்சியை உருவாக்கியது.

சக நண்பனின் சாவுக்குக் காரணமான கொலையாளியை தப்புவிக்க, இதைச் சொன்னால் எங்கே நமது கேரியர் பாதிக்கப்படுமோ என்ற சுய நலத்தின் பேரில் சுரணையின்றி ஐ.டி. நட்பு வட்டம் இருந்துகொண்டிருப்பதை எண்ணிப் பார்க்கவே உடலெல்லாம் நடுங்குகிறது.

(“யூதாசுக்காவது 30 வெள்ளிக்காசுகள் தர வேண்டியிருந்தது. ஆனால் பேதுருவோ யாரும் சில்லரை தராமலேயே கோழி கூவும் முன் 3 முறை இயேசுவை மறுதலித்தார்” – புதிய ஏற்பாடு நூலில் இருந்து.)

ஆளை அட்ரஸ் இல்லாமல் ஆக்குவது என்பார்களே…அக்கொடுமையை உறவினர்களும் நண்பர்களுமே செய்து கொண்டுள்ளனர் என்பதுதான் இன்னும் கொடுமை.

ஒரு நாள் ராதாகிருஷ்ணனின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் அந்த வீட்டைக் காலிசெய்ய வந்திருந்தபோது ஒரு பத்திரிகை நண்பர் அவ்வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். அந்தச் சந்திப்பின்போது ராதாகிருஷ்ணனின் உறவினரிடம் ‘டி.சி.எஸ். இல் எத்தனை ஆண்டுகள் வேலை செய்தார்?’ என்று கேட்டதற்கு முதலில் ‘சில ஆண்டுகள்தான்’ எனச் சொல்லியுள்ளார். ஆனால் உடனே குறுக்கிட்ட ராதாகிருஷ்ணின் தாயார், ‘அவர் படிச்சது கேட்டரிங்’ எனச் சொல்லி தனது மகனின் மரணத்தைக் கூட கார்ப்பரேட், போலீசின் கதையை வைத்து மறைக்க முயன்றுள்ளார்.

(சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் போலீசால் கொல்லப்பட்ட உதயகுமாரின் தந்தை..’செத்துப்போனவர் என் மகனே அல்ல’ என்று கூறினார்)

கோவை, ஓசூர், சென்னை தொழிலாளர் வர்க்கம் ஆலையில் அநீதி இழைக்கப்படுகையில் தீர்வு காணும் வரை போராடுகிறது. தங்கள் வயிற்றில் அடிக்கும் முதலாளியையும், அவர்களின் கைக்கூலி ஹெச்.ஆர்.களையும் துரோகியாகவும், பயங்கரவாதியாகவும் சித்தரித்து அந்தக் கைக்கூலிகளின் புகைப்படத்தை மக்கள் மத்தியில் சுவரொட்டிகளாக்கி அம்பலப்படுத்தி போர்க்குணத்தோடு போராட்டத்தில் நிற்கின்றது.

ஆனால், ஐ.டி.துறையிலோ, கார்ப்பரேட்டுகள் மரணத்தையே பரிசாகத் தந்தபோதும், தன் உயிர் நண்பனைக் கொலை செய்த கார்ப்பரேட்டின் நற்பெயரை காப்பாற்றும் துரோகத்தை மனம் உவந்து செய்கின்றது.

இந்த முடிவு நாளை ஒவ்வொருவருக்கும் காத்திருக்கிறது. அப்போதும் கார்ப்பரேட்களும், காவல் துறையும், ஐ.டி. நட்பு வட்டமும் நம்மை அடையாளமில்லாதவர்களாக்கத்தான் முயல்வார்கள்.

ஐ.டி.யில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த உண்மையை உணர முன்வர வேண்டும். நமது நண்பர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவதை எதிர்த்து நின்றாக வேண்டும். அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு கோபம் வர வேண்டும்.

“அதான் செத்துப் போயிட்டானே..அப்புறம் என்ன?’ எனக் கேட்கும் சொரணையற்ற தனமே போதும் என முடிவெடுத்து விட்டால் நமது முடிவுக்குப் பின்னர் மற்றவர்கள் நம்மைப் பற்றிக் கேட்கையில் இதே வசனத்தைதான் சொல்லுவார்கள்.

இந்த நிலை ஐ.டி. நண்பர்களிடம் தொடரும் வரை ஐ.டி நிறுவனங்கள் தாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் தற்கொலைகளுக்காக தண்டிக்கப்படப் போவதில்லை. ராதாகிருஷ்ணன், ஜாக்குலின் தம்பதியினரைப் படுகொலை செய்ததற்காக விசாரிக்கப்படப் போவதில்லை. நாம் வாயைப் பிளந்தபடி அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோமா?

– புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஐ.டி ஊழியர் பிரிவு

கற்பகவிநாயகம், அமைப்பாளர்
தொலைபேசி : 90031 98576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

குற்றங்களின் அம்மா – புதிய கலாச்சாரம் ஜூன் வெளியீடு

7

குற்றங்களின் அம்மா – புதிய கலாச்சாரம் – ஜூன் 2015 வெளியீடு

குற்றங்களின் அம்மா - புதிய கலாச்சாரம் - ஜூன் 2015 வெளியீடுட்டுக்கு 1000, தீச்சட்டிக்கு 2000, மொட்டைக்கு 3,000 என்ற ஜெயலலிதாவின் விலைப்பட்டியலில் தீர்ப்புக்கு என்ன விலை என்பது மட்டும்தான் தெரியவில்லை. மற்றபடி குமாரசாமி தீர்ப்பின் யோக்கியதை சந்தி சிரிக்கிறது. “பதவியில் இருப்பவர்கள் வாங்கும் அன்பளிப்ப சட்டபூர்வமான வருமானம்; கஞ்சா விற்று பணம் பண்ணியிருந்தாலும் வருமானவரி கட்டி விட்டால் அது சட்டபூர்வமான வருமானம்; வருமானத்துக்கு அதிகமாக 10% வரை சொத்து சேர்க்கலாம்” – இவையெல்லாம் குமாரசாமி தீர்ப்பில் மின்னும் பொன்மொழிகள்.

ஜெயலலிதாவைப் பொறுத்தவரை இவர் ‘முதல் குமாரசாமி’  அல்ல. கடந்த 20 ஆண்டுகளில் நீதிபதிகளாகவும், அமைச்சர்களாகவும், கவர்னர்களாகவும், அதிகாரிகளாகவும் இருந்த குமாரசாமிகளின் துணையோடு கிரிமினல்தனமான வழிகளை பயன்படுத்தித்தான் எல்லா வழக்குகளிலிருந்தும் ஜெயலலிதா தப்பியிருக்கிறார். அ.தி.மு.க கொள்ளைக் கூட்டத்தின் கிரிமினல்தனங்களுக்கு அடிபணிந்து செல்ல தமிழ்ச் சமூகத்தைப் பழக்குவதிலும் வெற்றி கண்டிருக்கிறார்.  இதுதான் இன்று நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய அபாயம்.

இளம் தலைமுறையினருக்கு ஜெயலலிதா அரசியலின் முழுப் பரிமாணமோ, இந்த வழக்குகளின் வரலாறோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, கடந்த 25 ஆண்டுகளில் வினவு, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களின் வெளிவந்த பொருத்தமான கட்டுரைகளை தெரிவு செய்து இங்கே தொகுத்து தந்திருக்கிறோம்.

ஜெயா – சசி கும்பல் மீது ஆத்திரம் கொண்ட தமிழ் மக்கள் 1996 தேர்தல் பிரச்சாரத்தின்போது, அ.தி.மு.க அமைச்சர்களை அடித்தே விரட்டினார்கள். அக்காலகட்டத்தின் போடப்பட்டதே இவ்வழக்கு. இன்று அந்தக் குற்றவாளி வெற்றியுலா வருகிறார். தமிழகம் மவுனம் காக்கிறது. அவமானகரமான இந்த மவுனத்தை உடைக்கும் கருவியாக இவ்வெளியீடு நிச்சயம் பயன்படும்.

நன்றி!

தோழமையுடன்,
புதிய கலாச்சாரம்.

__________________

பொருளடக்கம்

1. கொள்ளைக்காரி ஜெயா விடுதலை – ஏன்?
நீதி என்பது விற்கப்படும் பொருளாக மாறி வெகு காலமாகி விட்டது. ஜெயலலிதா பெற்றிருக்கும் வெற்றி, இந்த அரசுக் கட்டமைவின் தோல்விக்கு ஒரு சான்று.

2. யானையை பானைக்குள் அடைக்க முடியுமா?
வழக்கு, நீதிமன்றம் என்ற வழக்கமான வழியில் ஜெயலலிதாவை தண்டிப்பது ஏன் சாத்தியமில்லை என்பதை விளக்குகிறது, 1996-ல் எழுதப்பட்ட இந்த தலையங்கம்.

3. பார்ப்பன ஜெயா : தமிழ்ச் சமுதாயத்தைச் சீரழிக்கும் சதிகாரி!
கொள்ளையே தியாகம்; பார்ப்பனியமே சமூகநீதி; நீதி மன்றங்கள் அரச மரத்தடி சொம்புகள்; ஊடகங்களோ மாமாக்கள்; அதிகார வர்க்கம்தான் கமிஷன் ஏஜெண்டு; போலீசு துறை ஏவல் நாய்; சர்வாதிகாரமே நிர்வாகத் திறன்; சதிச்செயலே சாணக்கியம் – பாசிச ஜெயா உருவாக்கியிருக்கும் அரசியல் அகராதியையும் அவரது அரசியல் வரலாற்றையும் விளக்கும் கட்டுரை.

4. ஜெயா – சசி மீதான குற்றப் பட்டியல்
1991-96 முதல் ஆட்சிக் காலத்தில், ஜெயா – சசி கும்பல் நடத்திய கொள்ளைகளின் ஆவணத் தொகுப்பு இது. அந்த இருண்ட காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் பாசிச ஜெயா ஆட்சியை எதிர்த்துப் போராடின. ஜெயலலிதாவை சட்டபூர்வமான வழிகளில் தண்டிப்பதோ, கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்வதோ சாத்தியமில்லையென்றும், அந்தக் கும்பலை மக்கள் மன்றங்கள்தான் தண்டிக்க முடியும் என்றும் எடுத்துக் காட்டுவதற்காக, 1996 ஜூலையில் தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்று்ம் போராட்டம் நடைபெற்றது. இதனையொட்டி ஒரு இலட்சம் பிரதிகள் விற்கப்பட்ட வெளியீட்டிலிருந்து…

5. நீதிமன்றங்களைத் திணறடித்த ஜெயாவின் வாய்தா புரட்சி
நீதிமன்றங்களை 18 ஆண்டுகளால் பந்தாடிய வாய்தா ராணியின் வரலாறு!

6. சொத்துக் குவிப்பு வழக்கு : ஜெயாவின் கைப்பாவையாக உச்சநீதி மன்றம்!
தனக்கு எதிராக எந்த அரசு வழக்குரைஞர் வழக்கு நடத்த வேண்டும், எந்த நீதிபதி தனது வழக்கை விசாரிக்க வேண்டும் என்று குற்றவாளி உத்தரவு போட, அவ்வாறே ஆகட்டும் என்று உச்சநீதி மன்றம் பணிந்து ஏற்றுக் கொண்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் சொற்படி இப்படி ஒரு அயோக்கியத்தனத்தை அரங்கேற்றினார்கள் உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

7. கிரிமினல் ஜெயா கும்பல் நீதித்துறைக்கு சவால்!
நீதிபதி குன்ஹாவை வசைபாடி அ.தி.மு.க காலிகள் தமிழகமெங்கும் சுவரொட்டி வெளியிட்டதை நாடறியும். இந்தக் காலிகளின் அம்மா ஜெயலலிதாவோ, நிலக்கரி ஊழல் வழக்கை விசாரித்த நீதிபதி இலட்சுமணனை மிரட்ட, அவரது மருமகன் மீது கஞ்சா கேஸ் போட்டவர். பயந்து போன நீதிபதி இலட்சுமணம் அந்த வழக்கிலிருந்தே விலகிக் கொண்டார்.

8. தமிழக தேர்தல்கள் – ஜெயா பதவியேற்பு : அம்பலமானது அரசியல் சட்ட போலித்தனம்!
நீதித்துறையின் புனிதம், நாடாளுமன்றத்தின் உன்னதம், ஊடக நடுநிலைமை, அதிகார வர்க்கத்தின் நேர்மை அனைத்தின் உண்மை சொரூபத்தையும் உள்ளது உள்ளபடி தோலுரித்துக் காட்டியவர் ஜெயலலிதா. நீதிபதிகள், தேர்தல் ஆணையர்கள், கவர்னர்கள், குடியரசுத் தலைவர்கள் என்ற ஜெயாவில் தூண்டிலில் சிக்காதவர்கள் யாரும் இல்லை.

9. ஜெயாவிடம் விலைபோகும் நீதித்துறை!
18 ஆண்டுகள் சொத்துக் குவிப்பு வழக்கை இழுத்தடித்த ஜெயாவுக்கு, மேல் முறையீட்டை மூன்றே மாதத்தில் முடித்துக் கொடுத்தார் தத்து. இது முதன்முறை நிகழ்வதல்ல. டான்சி வழக்கிலும் நீதியின் செங்கோல், நரம்பில்லாத தசையைப் போல இப்படித்தான் வளைந்தது.

10. புர்ரட்சித் தலைவி…!
சூத்திரனுகுத் தண்டனை; பார்ப்பானுக்குப் போதனை; ஆளப்படும் மக்களுக்கு பாசிசம்; ஆளும் வர்க்கங்களுக்குப் பரிகாரம்; அசுரர்களுக்கு நஞ்சு, தேவர்களுக்கு அமிழ்தம்!
இந்திய ஜனநாயகம் எனும் பாற்கடலை டான்சி வழக்கெனும் மத்தால் எட்டாண்டுகள் இடையறாது கடைந்து, இந்த தேவ ரகசியத்தை உலகறியச் செய்தார் ‘புரட்சி’த் தலைவி.

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

_______________________

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.

தொலைபேசி
044-2371 8706,
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

ஐ.ஐ.டி நிர்வாகத்தின் நரித்தந்திர வேலைகள்

3

.ஐ.டி நிர்வாகம் தனது ஆளும் வர்க்க நரித்தந்திரத்தை பயன்படுத்தி, அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை தடை செய்ததில் தனது குற்றத்தை மறைக்க முயற்சிக்கிறது. அது தொடர்பாக APSC தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் நிலைத்தகவலை தமிழில் மொழிபெயர்த்து தருகிறோம்.

– வினவு

APSC தடை - பேச்சுவார்த்தை
ஐ.ஐ.டி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, 02-06-2015 கண்டன போராட்டத்துக்குப் பிறகு APSC உறுப்பினர்கள் பொறுப்பு இயக்குனரை சந்தித்தனர்.

.ஐ.டி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நேற்று (02-06-2015) கண்டன போராட்டத்துக்குப் பிறகு நாங்கள் பொறுப்பு இயக்குனரை சந்தித்தோம். பொறுப்பு இயக்குனர், தனது அதிகார வரம்புக்குள் வராத “மனித வளத்துறை அமைச்சகம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்ற கோரிக்கையைத் தவிர எங்களது பிற கோரிக்கைகளை வாய் வார்த்தையாக ஏற்றுக் கொண்டார். ஆனால், “இந்த விவகாரத்தை அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்தான் மாணவர்கள் அவையின் முன்பு எடுத்துச் செல்ல வேண்டும், நிர்வாகம் அதைச் செய்யாது” என்று கூறினார். இந்த நிபந்தனையை நாங்கள் நிராகரிக்கிறோம். இது தொடர்பாக பொறுப்பு இயக்குனருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எங்களது நிலைப்பாடு விளக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தை கீழே தருகிறோம்.

————————————————————————–

அனுப்புநர்

அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – மெட்ராஸ்,
சென்னை – 600 036

பெறுநர்
இயக்குனர் (பொறுப்பு)
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – மெட்ராஸ்,
சென்னை – 600 036

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : நமது சந்திப்பின் முடிவு குறித்து APSC-ன் நிலைப்பாடு.

உங்கள் கோரிக்கைக்கிணங்க, 02-06-2015 பிற்பகல், எங்கள் குழுவைச் சேர்ந்த 5 உறுப்பினர்கள் உங்களை உங்கள் அலுவலகத்தில் சந்தித்தோம்; எங்களது கோரிக்கை பட்டியலை உங்களிடம் அளித்தோம். அந்த சந்திப்பின் போது, மனித வளத்துறை அமைச்சகம் உங்கள் அதிகார வரம்புக்குள் வருவதில்லை என்பதால் அது தொடர்பான கோரிக்கையைத் தவிர எங்களது மற்ற அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொள்வதாக கூறினீர்கள்.

ஆனால், இதை ஒரு கடிதமாக எழுதித் தருவதற்கு பதிலாக, ‘எங்களது கோரிக்கைகளை நாங்கள் மாணவர்கள் அவையின் முன்பு முன்வைத்த பிறகுதான் அவற்றை ஏற்றுக் கொள்வது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்’ என்று கூறினீர்கள். APSC இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதாக எழுதித் தரப்பட வேண்டும்.

இது தொடர்பாக APSC குழு விவாதித்து செய்த முடிவு என்னவென்றால், நிர்வாகம்தான் மாணவர்கள் அவையின் முன்பு தேவையான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். APSC மாணவர்கள் அவையின் முன் வாதிடுவது பொருத்தமற்றதும், தொடர்பற்றதுமாகும் என்று கருதுகிறோம்.

கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வது குறித்து APSC-ம் மாணவர் அவையும் இணைந்து முடிவெடுக்கும் என்று கூறுவது ஐ.ஐ.டி-மெட்ராஸ் நிர்வாகம் இந்த பிரச்சனையில் தனது பொறுப்பை கைகழுவுவதாகும். அங்கீகார ரத்து விவகாரம் மாணவர் அவைக்கும் APSC-க்கும் இடையிலானது இல்லை, மாணவர்கள் விவகாரங்களுக்கான முதல்வர் (ஐ.ஐ.டி-எம் நிர்வாகம்)-க்கும் APSC-க்கும் இடையேயானதுதான் என்பதால் நாங்கள் மாணவர் அவையை சந்திக்க மறுக்கிறோம் என்பதை இங்கு பதிவு செய்கிறோம்.

இந்த விவகாரம் பேசித் தீர்க்கப் படாத நிலையில், மாணவர் விவகாரங்களுக்கான குழு (SAC) 31-05-2015 அன்று மாணவர்களிடையே ஒரு கருத்துக் கணிப்பை நடத்த ஆரம்பித்தது. அதில் “மாணவர் அவை கூடுவதற்கு முன்பாகவே APSC அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாக செயல்பட அனுமதிக்கப்பட வேண்டுமா” என்பன போன்ற கேளவிகள் இடம் பெற்றிருந்தன.

மாணவர் விவகாரங்களுக்கான குழுவின் இந்தச் செயல் பிரச்சனை என்ற  பனிமலையின் ஒரு சிறு விளிம்பை காட்டுகிறது. அங்கீகரிக்கப்பட்டவை, அங்கீகரிக்கப்படாதவை என்று மாணவர் அமைப்புகளை பிரிப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால், நன்னடத்தை விதிகள் என்று ஐ.ஐ.டி-எம் நிர்வாகமும் மாணவர் விவாகரக் குழுவும் முன்வைக்கும், இப்போது நடைமுறையில் இருக்கும் மாணவர் அமைப்புகளை வகை பிரித்தல், வர்ணாசிரம கட்டமைப்பின் நவீன பதிப்புதான். சுதந்திரமான மாணவர் அமைப்புகளை இன்ஸ்டிட்யூட்டால் அங்கீகரிக்கப்பட்டது, அங்கீகரிக்கப்படாதது என்று வகை பிரிப்பது, பொது நலனுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் நிற்கும் மாணவர் அமைப்புகளுக்கு வசதிகளையும் (அரங்கு, செயல்படுவதற்கான இடம், இணைய வசதி, நிதி முதலியன) உரிமைகளையும் மறுப்பதற்கான ஒரு வழி ஆகும். இதன் மூலம், “அங்கீகரிக்கப்படாத” மாணவர் அமைப்பை நீங்கள் “சூத்திரர்”களின் நிலைக்கு தாழ்த்துகிறீர்கள்.

மேலும், நாங்கள் புதிதாக எதையும் கோரவில்லை. “பிரிவு 19a-க்கு எதிரான ஜனநாயக விரோத நன்னடத்தை விதிகளை ரத்து செய்”, என்ற கோரிக்கையையும், “அனைத்து சுதந்திரமான மாணவர் அமைப்புகளையும் அதிகாரபூர்வமாக அங்கீகரி” (அதாவது, மாணவர் அமைப்புகளில் “அங்கீகரிக்கப்படாதவை”, “அங்கீகரிக்கப்பட்டவை” என்ற எந்த வகை பிரித்தலும் இருக்கக் கூடாது) என்ற கோரிக்கையையும் தவிர, பிற கோரிக்கைகளுக்கும் மாணவர் அவைக்கும் எந்த தொடர்பும் இல்லை. “அனைத்து படிப்பு வட்டங்களுக்கும் ஒரே மாதிரியான வசதிகள்” என்ற கோரிக்கையும் புதிதானதல்ல, ஏனெனில் விவேகானந்தா படிப்பு வட்டம் நாங்கள் கோரும் வசதிகளை ஏற்கனவே அனுபவித்து வருகிறது.

APSC-க்கும், ஊடகங்களுக்கும் நிர்வாகம் கொடுத்த திரிக்கப்பட்ட அறிக்கைகள், மாணவர் விவகாரங்களுக்கான குழுவின் சட்டவிரோத நடத்தை இவற்றின் காரணமாக உங்கள் வாய்வழி உறுதிமொழிகளின் மீது நாங்கள் நம்பிக்கை இழந்து விட்டோம். எனவே, APSC அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதை திரும்பப் பெறுவது தொடர்பாகவும், “பிரிவு 19a-க்கு எதிரான ஜனநாயக விரோத நன்னடத்தை விதியை ரத்து செய்தல்” “அனைத்து சுதந்திரமான மாணவர் அமைப்புகளையும் அதிகாரபூர்வமாக அங்கீகரி” (அதாவது, மாணவர் அமைப்புகளில் “அங்கீகரிக்கப்படாதவை”, “அங்கீகரிக்கப்பட்டவை” என்ற எந்த வகை பிரித்தலும் இருக்கக் கூடாது) ஆகிய கோரிக்கைகளை மாணவர் அவையில் நிறைவேற்றுவது தொடர்பாகவும் ஐ.ஐ.டி.எம்-ன் எழுத்து பூர்வமான அதிகார பூர்வ அறிக்கையை நாங்கள் கோருகிறோம்.

வணக்கத்துடன்,

APSC குழு

APSC-க்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் முழக்கங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தொழிலாளிகள் மீது ரவுடிகளை ஏவிய EMPKEE கொலைகார முதலாளி பெரியசாமி

0

போராடிய தொழிலாளிகள் மீது ரவுடிகளை ஏவி கொலைவெறியாட்டம் நடத்திய EMPKEE ஆலை முதலாளி ஓ.எம் பெரியசாமி

ம்பத்தூர் அருகே வானகரத்தில் அமைந்துள்ளது EMPKEE ஆலை. காற்றாலைக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் இவ்வாலையில் 48 நிரந்தரத் தொழிலாளர்களும் 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். 4 யூனிட்களில், பல ஆண்டுகளாக உழைத்துக் கொடுக்கும் தொழிலாளிகள் பணிநிரந்தப்படுத்தாமல், கட்டற்ற சுரண்டலையும், உரிமை பறிப்பையும் நிரந்தரமாக செய்து வந்தார் ஓ.எம் பெரியசாமி. வெறும் ரூ 7,000-9,000 ஊதியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கொடுமையை அனுபவித்து வந்த தொழிலாளர்கள், இனியும் பொறுக்க முடியாதென புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

‘தொழிற்சங்க ஜாம்பவான்கள்’ என்று சொல்லிக்கொள்ளும் தலைவர்களிடம், தொழிலாளர்கள் சென்று தஞ்சமடைந்திருந்தால் கிஞ்சித்தும் அச்சமடைந்திருக்க மாட்டார் திருவாளர் பெரியசாமி. சேர்ந்த இடம் நக்சல்பாரி சங்கம் என்பதால் கதி கலங்கி நின்றார் பெரியசாமி. உள்ளுக்குள் வயிறு கலங்கினாலும், “உட்றா, உட்றா சூனா பானா, உட்றா” என்று ஒன்றுமே நடக்காததைப் போல பாவனை செய்தார்.

15 வருடமாக உழைத்துக் கொடுத்த தொழிலாளிகளுக்கும் கூட ESI, PF போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டு, அடிமைகளைப் போல நடத்தப்பட்டு வந்ததை எதிர்த்து சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டது பு.ஜ.தொ.மு. தினந்தினம் ஏறி வரும் விலைவாசி உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என தொடுக்கப்படும் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டுமென்றால், குறைந்தபட்ச ஊதியம் இல்லாது குடும்பம் நடத்த இயலாது. உயிர் வாழவே ஊதிய உயர்வு தேவை என்றாகிவிட்ட நிலையில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர் உதவி ஆணையரிடம் கடந்த நவம்பர் மாதம் தொழிற்தாவா எழுப்பப்பட்டது.

தொழிலாளர் துறையை மயிரளவுக்கும் மதிக்காத எல்லா முதலாளிகளையும் போலவே பெரியசாமியும் மதிக்கவில்லை. “என் பொண்டாட்டி புள்ளலாம் சோத்துக்கே வழியில்லாம நடுத்தெருவுல நிக்குது சார்” என்ற வார்த்தையை மட்டும் சொல்லாமல் மற்ற எல்லா வகையிலும் ஆலை நட்டத்தில் இயங்குகிறது என்பதற்கு போலி ஆவணங்களைத் தயாரித்து கொடுத்து விட்டார் பெரியசாமி. ஆனால் உண்மையில் மூன்று ஷிஃப்ட்களிலும் தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்டு பல கோடி ரூபாயை சுருட்டி வருகிறார் பெரியசாமி. தொழிற்தாவாவில் சமரச முறிவறிக்கை கொடுத்து தனது கடமையை நிறைவு செய்து கொண்டார் உதவி ஆணையர்.

தொழிலாளர் போராட்டம்
தொழிலாளியை வேலைக்கு அனுமதிக்காததாலும், மின்சாரத்தை துண்டித்து அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை தர மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், உள்ளிருப்புப் போராட்டத்தினை துவங்கினர் தொழிலாளர்கள்.

இந்நிலையில் கடந்த மே மாதம் ESI உரிமை மறுக்கப்பட்ட நிலையில், கார்த்திக் என்கிற சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளார். விடுப்பு முடிந்து வேலைக்கு வந்த தொழிலாளியை ஒரு வாரம் கழித்து வருமாறும், மீண்டும் 10 நாட்கள் கழித்து வருமாறும் கூறி அலைக்கழித்துள்ளனர். கடைசியில் 25-ம் தேதியன்று வாய்மொழி உத்தரவாக வேலைக்கு அனுமதித்துள்ளனர்.

இதை ஏற்காத தொழிலாளர்கள் நேராக சென்று மேனேஜரை சந்தித்துள்ளனர். என்ன பிரச்சனை என்றே கேட்காமல் தொழிலாளர்களை மிரட்டி, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார் மேனேஜர். சுயமரியாதை உள்ள எவருமே செய்வதைப் போல, மேனேஜரை சிறைபிடித்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கச் சொல்லியுள்ளனர் தொழிலாளர்கள். முதலாளிகளின் கொழுப்பால் ஊட்டி வளர்க்கப்பட்ட மேனேஜர், வழக்கம் போல எதுவும் உறைக்காமல் ஜந்துவைப் போலவே அமைதியாக நின்றுள்ளார். தொழிலாளியை வேலைக்கு அனுமதிக்காததாலும், மின்சாரத்தை துண்டித்து அனைத்து தொழிலாளிகளுக்கும் வேலை தர மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்தும், உள்ளிருப்புப் போராட்டத்தினை துவங்கினர் தொழிலாளர்கள்.

நிர்வாகத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கையையும், தொழிலாளர் விரோதப் போக்கையும் கண்டித்து தொழிலாளர் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு சுமூகமான சூழலை உண்டாக்கும் பொருட்டு, தொழிலாளர் உதவி ஆணையர் 01-06-2015 அன்று பேச்சு வார்த்தைக்கு உத்தரவிட்டார்.

பேச்சுவார்த்தை தேதியை நோக்கி காத்திருந்த நேரத்தில் கடந்த 31-ம் தேதி இரவு 40 ரவுடிகள் ஆலையினுள்ளே புகுந்து தொழிலாளிகளை தாக்கியுள்ளனர். வானகரத்தில் பாண்டியன் ஹோட்டல் நடத்தி வரும் பெரியசாமியின் தம்பி முத்து, அ.தி.மு.க கவுன்சிலர் ஜி.எஸ். மணி தலைமையில் 40-க்கும் மேற்பட்ட கூலிப்படை ரவுடிகள் ஆலையில் நுழைந்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் குட்டி என்ற வெங்கடேசன் தொழிலாளிகளின் போராட்டங்களை நசுக்க ரவுடிகளை ஏவுவதும், மிரட்டுவதும் செய்துவந்தார். இண்டெக்ரா என்கிற நமது சங்கத்தில் நடந்த உள்ளிருப்புப் போராட்டத்திலும் இதையே கையாள முயற்சி செய்து தோற்றுப் போய் அம்பலப்பட்டு, அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் தகுதியே பறிக்கப்பட்டு இன்று பரிதாபகரமான நிலையில் உள்ளார். இதை அறியாமல் எப்படியும் ‘கெத்து’ காட்டி வட்டச் செயலாளர் பதவியை வாங்கிவிடலாம் என்ற போதையில் ரவுடிகள் போதையேற்றி அனுப்பியுள்ளார்.

ரவுடிகள் சுவரேறி குதித்து ஆலையினுள்ளே நுழைவதைக் கண்டதும் யுனிட் 1 -ல் இருந்த தொழிலாளிகள் சுதாரித்துக் கொண்டு 100-க்கு அழைத்து போலிசுக்கு தகவல் சொல்லியுள்ளனர். போலிசு வருவதை பார்த்த ரவுடிகள் அங்கிருந்த முன்னாள் செக்யூரிட்டியின் உதவியோடு, யூனிட் -4 க்கு சென்று தொழிலாளிகள் மீது கொலைவெறியாட்டம் நடத்தியுள்ளனர். போலிசிடம் இந்தத் தகவலை சொன்ன போதும், “யுனிட் -1 ல் பிரச்சனைனு தான் சொன்னாங்க இங்கதான் இருப்போம், நீ சொல்றதலாம் கேக்க முடியாது” என ‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்று எழுதப்பட்ட வேனின் அருகில் நின்று சொன்னார் உதவி ஆய்வாளர் கோபிநாத்.

தகவல் அறிந்ததும் பு.ஜ.தொ.மு மேற்கு மாவட்ட நிர்வாகிகளும், மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமாரும் ஆலைக்கு விரைந்துள்ளனர். காயமடைந்த தொழிலாளர்களை சென்னை KMC-யில் அனுமதித்துவிட்டு, சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர்.

உதவி ஆய்வாளர் கோபிநாத்திடம் சம்பவத்தை கூறிக்கொண்டிருக்கும் போதே, “நீங்களெல்லாம் ரவுடிகளா” என்று தோழர்களைப் பார்த்து கேட்டதோடு, மிக மோசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

“நீங்கள் தவறாக அணுகுகிறீர்கள்” என்று சுட்டிக்காட்டியபோதும் கேட்கவில்லை.

அப்போதே, வட்டச் செயலர் கனவில் வலம் வரும் கவுன்சிலர் ஜி.எஸ். மணியும், ரவுடிகளுக்கு வழிகாட்டிய முன்னாள் செக்யூரிட்டியும் வந்தனர். தொழிலாளிகள் இவர்கள் இருவரையும் அடையாளம் காட்டியும், எஸ்.ஐ கோபிநாத் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் “எங்களுக்கு எல்லாம் தெரியும்” என்றார். இதனால் எஸ்.ஐ கோபிநாத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. முதலாளி பெரியசாமி எஸ்.ஐ கோபிநாத்துக்கு படியளக்கும் ’பெரிய சாமியாக’ இருப்பாரோ என்று நாம் நினைப்பதற்குள், “ஆமாம், நான் முதலாளியோட கைக்கூலிதான்” என தன்னை அம்பலப்படுத்திக்கொண்டார் கோபிநாத்.

“இந்த சங்க செயலாளர் பேரு ரஜினிகாந்த் தானே? வேணும் அந்தாளுக்கு இப்படிதான் நடக்கும்” என்றார் கோபிநாத். நாம் இன்னும் புகார் கொடுக்காத நிலையில் சங்கச் செயலாளர் பெயரைச் சொல்லி, அவர் ரவுடிகளால் அடிபட வேண்டுமென எஸ்.ஐ கோபிநாத் விரும்புகிறார். பெரியசாமியின் விருப்பமும் அதுவே. ஆகவே இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் என தெளிவானது.

பு.ஜ.தொ.மு-வின் சட்ட ஆலோசகர் தோழர் பார்த்தசாரதி உடனடியாக காவல் உதவி ஆணையருக்கு தகவல் சொன்னதன் பேரில் அவர் வந்த விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில், ஜி.எஸ் மணி மீதும், முதலாளியின் பெரியசாமியின் தம்பி முத்துவின் மீதும் புகார் பெறப்பட்டது.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளும், உரிமைகளும் முதலாளிகளால் மறுக்கப்படுகிறது. தொழிற்தாவா எழுப்பினால் முதலாளிகள் தொழிலாளர் நலத்துறையை மதிப்பதில்லை. உரிமைகளை மறுப்பதோடு அதைக் கேட்கும் தொழிலாளர்களை பணியிடைநீக்கம், பணிநீக்கம், ரவுடிகளை வைத்து மிரட்டுவது என தொழிலாளர்களின் வாழ்க்கையை நாசப்படுத்துகின்றனர்.

மறுபுறம், தொழிலாளர் நலச் சட்டங்கள் இருந்தால் தானே அங்கே போவீர்கள் என்று, தொழிலாளர் நலச் சட்டங்களை முதலாளிகளுக்குச் சாதகமாக திருத்தச் சொல்கிறார்கள் முதலாளிகள். அரசோ அதையே முதல் வேலையாக செய்கிறது. 700 கோடி ரூபாய் நமது பணத்தில் 18 நாடுகளுக்குச் சென்று முதலாளிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் மோடி.

தொழிலாளர்களின் வாழ்க்கையோ படுபாதாள நிலையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. வேலையை தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டம் என்பது போய் இன்று உயிரை காத்துக் கொள்ளவே போராட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் தொழிலாளர்கள். முன்பு ஆசியாவிலேயே மிகப்பெரிய தொழிற்பேட்டை என்று பெயரெடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இன்று நியாயமான உரிமைக்காக போராடினால் கூட வேலைநீக்கம், ரவுடிகளை வைத்துத் தாக்குவது என்ற அவல நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் துவங்கிய இந்த ‘ரவுடிக் கலாச்சாரம்’ மெல்ல மெல்ல எல்லா முதலாளிகளாலும் கையாளப்படுகிறது. இதனாலெல்லாம் துவண்டு விடுமா தொழிலாளி வர்க்கம்?

நாட்டையே இயங்க வைத்துக்கொண்டிருக்கும் தொழிலாளி வர்க்கம் அதன் பலத்தை உணரவில்லை. அதன் பலத்தை தொழிலாளி வர்க்கத்துக்கு உணர்த்தும் வேலையைத்தான் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செய்து வருகிறது.

தோற்க பிறந்ததல்ல தொழிலாளி வர்க்கம், ஆளத் தகுதி வாய்ந்தது.

பலமான அமைப்பாக திரண்டு அடிமை விலங்கொடித்து உலகை ஆளும். அப்போது, பெரியசாமி உள்ளிட்ட அனைத்து சாமிகளும் துடைத்தெறியப்படுவார்கள்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர்