படம் : ஓவியர் முகிலன்
சொர்ணாக்கா திருநெல்வேலிய காணலையாமே?
வீடியோ

நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலுக்கு பா.ஜ.க வேட்பாளரான வெள்ளையம்மாள் வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளான நேற்று தனது கைக்குழந்தையுடன், கணவர் ராஜா, வக்கீல் மகாராஜன் ஆகியோருடன் வந்து தனது வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான மனுவை பூர்த்தி செய்து கொடுத்து விட்டு சென்று விட்டார். இதைத் தொடர்ந்து நெல்லை மேயராக அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்துள்ளதாக அ.தி.மு.க அறிவித்துள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் மிரட்டலுக்கு பயந்தே பா.ஜ.க வேட்பாளர் வாபஸ் என்றும் “மனுதாக்கல் செய்யப்பட்ட பல இடங்களில் பா.ஜ.க.வினரின் மனுக்களை ஏற்கப்பட்டதாக முதலில் நோட்டீசு போர்டில் தகவல் வெளியிடப்படுகிறது. அதன் பின்னர், மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்றும் பா.ஜ.க மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் புலம்பியிருக்கிறார். வெள்ளையம்மாள் 3 நாட்களாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனின் பாதுகாப்பில் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பாரதீய ஜனதா கட்சி டெல்லி மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பணம் கொடுத்து வளைக்க முயற்சித்துள்ளது.
டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு பதவி விலகிய பிறகு சட்டமன்றம் கலைக்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்தியில் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைந்ததை அடுத்து, சட்ட மன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பா.ஜ.கவை ஆட்சி அமைக்க அழைப்பதற்கு அனுமதி கேட்டு டெல்லி துணை நிலை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பி உள்ளார்.
தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையை சரிக்கட்ட, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ஒருவருக்கு ரூ 4 கோடி கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாரதீய ஜனதா முயற்சித்திருக்கிறது. சங்கம் விகார் தொகுதியின் ஆம் ஆத்மி கட்சி சட்ட மன்ற உறுப்பினர் தினேஷ் மொகானியாவுக்கு, பா.ஜ.க டெல்லி துணைத் தலைவர் ஷெர்சிங்க் தாகர் ரூ 4 கோடி கொடுப்பதாகவும், அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதாகவும், தேர்தலில் தோற்றால் ஏதாவது வாரியத் தலைவர் பதவி தருவதாகவும் உறுதி அளித்திருக்கிறார். இது தொடர்பான உரையாடல், காட்சிப் பதிவுகள் தன்னிடம் இருப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியிருக்கிறார்.
லேடியும் சரி, கேடியும் சரி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு ‘ஜனநாயக’த்தை விலைக்கு வாங்குவதில் வல்லவர்கள் என்பதைத் தவிர இது வேறு எதைக் காட்டுகிறது?
நெல்லை தவிர இன்னும் சில இடங்களில் அ.தி.மு.கவுக்கு வழி விட்ட பா.ஜ.க வேட்பாளர்கள்.
1. பா.ஜனதா வேட்பாளர் வாபஸ் பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவிப்பு – “நான் வாபஸ் கடிதம் கொடுக்கவில்லை” என்கிறார் பா.ஜனதா வேட்பாளர்.
– மதுரை மாநகராட்சி 85-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் அ.தி.மு.க போட்டியின்றி தேர்வு
2. ஆலந்தூர் மண்டல 166-வது வட்ட இடைத்தேர்தல் : பா.ஜனதா வேட்பாளர் திடீர் வாபஸ்; அ.தி.மு.க போட்டியின்றி தேர்வு.
– பா.ஜனதாவினர் அவர்கள் கட்சி வேட்பாளர் நீதிசேவியர் வீட்டின் முன் போராட்டம்
3. ஆவடி நகராட்சி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் திடீர் வாபஸ் – அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
– ஆவடி நகராட்சி 33-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் பா.ஜனதா வேட்பாளர் தரணி திடீரெடனு தனது மனுவை வாபஸ் பெற்றார். அவருடன் மாற்று வேட்பாளர் ஸ்ரீகிருஷ்ணவேணியும் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். இருவரும் பா.ஜ.கவில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்து கொண்டனர்.
4. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு பா.ஜனதா வேட்பாளர் உட்பட 4 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்கள் தங்களுடைய வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் அ.தி.மு.க வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
5. சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சி 7-வது வார்டு, 33-வது வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர்களின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
6. பல்லாவரம் நகராட்சி 2-வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க தவிர பா.ஜ.க வேட்பாளர் உட்பட மற்றவர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றதால் அ.தி.மு.க போட்டியின்றி வெற்றி பெற்றது.
தேசியகீதத்திற்கு நிற்கா விட்டால் தேச துரோகம்
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பேரூர்கடா என்கிற பகுதியைச் சேர்ந்த சல்மான் என்கிற இசுலாமிய இளைஞர் தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி அன்று நள்ளிரவில் போலீசாரால் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் இழுத்துச் செல்லப்படும் சல்மான், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு “பயங்கரவாதியைப்” போல் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சல்மானின் பெற்றோர் தங்கள் மகனின் நிலை என்ன, எங்கே வைக்கப்பட்டுள்ளான், அவன் செய்த குற்றம் என்ன என்பதை அறிய மறுநாள் முழுவதும் அலைந்து திரிந்துள்ளனர். போலீஸ் தரப்பில் அவர்களுக்கு எந்தப் பதிலும் தரப்படவில்லை. ஆகஸ்டு 21-ம் தேதி மாலை “தேசிய கீதத்தை அவமதித்த” காரணத்தின் பேரில் சல்மான் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார், பின்னர் முகநூலில் தேசத்திற்கு விரோதமான தகவல்களை சல்மான் பரிமாறியதாகச் சொல்லி தேச துரோக குற்றத்தையும் இணைத்துக் கொண்டனர்.
ஒரு பயங்கரவாதியைப் போல் நடத்தப்படுவதற்கு காரணமாக கூறப்பட்ட சல்மானின் தேசதுரோகச் செயல் என்ன?
கடந்த 18-ம் தேதி சல்மானும் அவரது ஆறு நண்பர்களும் (அதில் இருவர் பெண்கள்) கேரள மாநில அரசுக்குச் சொந்தமான திரையரங்கு ஒன்றிற்குச் சென்றுள்ளனர். அங்கே திரைப்படம் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் போட்டிருக்கின்றனர். தேசிய கீதம் திரையில் ஓடிய சமயத்தில் சல்மானும் அவரது நண்பர்களும் அமர்ந்தே இருந்துள்ளனர். இதைக் கவனித்த இந்துத்துவ காலிகள் சிலர் சல்மான் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக அங்கேயே கலாட்டா செய்து போலீசிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.
சல்மானின் அடையாளம் அவர் இசுலாமியர் என்பதல்ல. திருவனந்தபுரத்திலும் அவர் வசிக்கும் பகுதியிலும், கல்லூரியிலும், நண்பர்கள் வட்டத்திலும் அவருக்கு வேறு அடையாளம் இருந்தது. சல்மான் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரிடையேயும் அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலராக இருந்தார். கடந்த ஆகஸ்டு 14-ம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள அரசுத் தலைமைச் செயலகத்தின் முன் ஊஃபா சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றில் பங்கெடுத்திருந்தார். மேலும், மனித உரிமை மீறல் தொடர்பான சில மேடை நாடகங்களிலும் பங்கேற்றிருந்தார். அவரது முகநூலில் பதிந்திருக்கும் அனேகமான நிலைத் தகவல்கள், போலீசாரின் அதிகார அத்துமீறலைக் கண்டிப்பதாகவே உள்ளன.
திரையரங்கில் ’தேசிய கீதத்தை’ அவமதித்து வெளியேறிய சல்மான், அவரது பெண் நண்பர் ஒருவர் “தேசியக் கொடியின் நிறத்தில் உள்ளாடை தேவை” என்பதைப் போல வெளியிட்டிருந்த முகநூல் நிலைத்தகவல் ஒன்றிற்கு விருப்பம் தெரிவித்திருந்த தேச ‘துரோக’த்தையும் செய்திருந்தார். இத்துடன் அவர் ஒரு இசுலாமியராகவும் இருக்கவே போலீசார் அவர் மேல் தேச துரோக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.
தேசிய கீதம் குறித்து இந்தளவுக்கு அக்கறை காட்டி தம் கட்டும் அதிகார வர்க்கம் ஏன் அரசுத் திரையரங்கில் மட்டும் தேசிய கீதத்தை ஒலிக்க விடுகிறது? ஏன் தனியார் திரையரங்கில் ஒலித்துக் கொண்டிருந்த தேசிய கீத ரிக்கார்டை உருவிப் போட்டது?
ஏனென்றால், திரையரங்குகளில் தேசிய கீதம் வாசிக்கப்படும் போது மக்களே அதை மதிக்கவில்லை. தேசமே அடிமையாகும் போது தேசிய கீதத்திற்கு மட்டும் என்ன மதிப்பிருக்க முடியும்? ஆகவே சுதந்திரமாக வெளியே தம்மடிக்க சென்று விட்டனர். எனவே தான், முன்பு தனியார் திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதாக இருந்த விதிமுறையைத் தளர்த்தினர். ”தேசியப் பெருமிதத்திற்கு அவமரியாதை நேர்வதைத் தடுக்கும்” 1971-ம் ஆண்டின் சட்டம் ‘யாரெல்லாம் தேசிய கீதம் இசைப்பதற்கு இடையூறு செய்கிறார்களோ அவர்களெல்லாம் தண்டனைக்குரியவர்கள்” என்று சொல்வதன் படி பார்த்தால், முதலில் தண்டனைக்குரியவர்கள் தனியார் திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதை தடுத்த அதிகாரிகள் தான்.

அப்படியே தனியார் திரையரங்குகளில் மீண்டும் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்தாலும் ‘அஞ்சரைக்குள்ள வண்டி’, ’மாயக்கா’ போன்ற ஷக்கீலாவின் திரைக்காவியங்கள் துவங்குவதற்கு முன் தேசிய பெருமிதத்தை எழுச்சியுறச் செய்த குற்றத்தை இழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள். ஆபாசப் படங்களுக்கும் தேசிய கீதம் போடவேண்டுமென்றால் பிறகு இணையத்தின் நீலப்பட தளங்களுக்கும் அதை அமல்படுத்தலாமே? தற்போது ஷகீலா திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டாலும், வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் வரும் குத்தாட்டங்கள் ஷகீலா படங்ககளுக்கே சவால் விடுப்பதாகவே இருக்கின்றன என்பது வேறு விசயம்.
தேசியக் கொடியை அவமரியாதை செய்த குற்றத்தைப் பொருத்தவரை, இந்தியாவிலேயே தேசிய பெருமிதம் அதிகபட்சமாக பொங்கி வழியும் ஒரே இடம் கிரிக்கெட் மைதானம் தான். மைதானங்களில் உயர் வர்க்க குலக்கொழுந்துகளின் முகரைகளிலும், முதுகு மற்றும் மார்புகளிலும் தேசிய கொடியின் வண்ணங்கள் சீப்பறுந்து சீரழியும் காட்சிகள் நமக்குப் புதிதில்லை. தேசிய கொடியின் வண்ணத்தில் உள்ளாடை கிடைக்குமா என்று கேட்டதற்கு விருப்பம் தெரிவித்தது தேச துரோகம் என்றால், கொடியைத் தன் சளியொழுகும் மூஞ்சியில் வரைந்து கொண்டும், கொடியால் விசிறிக் கொண்டும் மைதானத்தில் அமர்ந்து 20-20 கிரிக்கெட்டை ரசிக்கும் திருமதி. அம்பானியையும் ப்ரீதி ஜிந்தாவையும் எத்தனை முறை கைது செய்யலாம்?
காலனிய ஆட்சியாளர்களால் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேச துரோகச் சட்டம் எனப்படும் IPC 124 Aவின் படி பார்த்தால், ‘சட்டப்படி அமைந்த இந்திய அரசாங்கத்தை வெறுப்பது” குற்றமாகிறது. இந்த வரையறையின் படி பார்த்தால், ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலத்தையும், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும், தண்டகாரண்யா, கூடன்குளம், ஜெய்தாபூர், விதர்பா என்று நாடெங்கும் பரவலாக அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் உள்ளே தள்ள வேண்டியிருக்கும். ’இந்திய அரசே ஒழிக’ என்பதும் ’தேச துரோக’ குற்றமாகி விடும். 99% சதவீத மக்களின் செயல் தேச துரோகமென்றும் எஞ்சிய 1% கொழுப்பெடுத்தவர்களே தேசபகதர்கள் என்றும் சொல்கிறது ஆங்கிலேயன் போட்ட சட்டம்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பெரும் நிலப் பிரதேசங்களையும், தண்ணீர் தனியார்மயத்தின் கீழ் ஆறுகளையும், பன்னாட்டு சுரங்க நிறுவனங்களிடம் மலைகளையும், வங்கி இன்சுரன்சு துறைகள் தனியார்மயமாக்கல் என்கிற பெயரில் மக்களின் சேமிப்பையும், இராணுவத்துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி என்ற பெயரில் இராணுவத்தையும் – ஆகமொத்தத்தில் முழு நாட்டையும் கூறுகட்டி விற்பது தேசபக்தியில் சேர்த்தியா என்பது பற்றி வெள்ளைக்காரன் சட்டங்கள் ஏதும் போட்டுள்ளானா, நமக்குத் தெரியவில்லை; ஏனெனில், என்னதான் சுதேசிகளாக இருந்தாலும் தேச பக்தி அல்லது துரோகம் என்று வரும் போது காலனிய எஜமானர்கள் கழித்துச் சென்ற அளவுகோல்களைத் தானே பயன்படுத்தியாக வேண்டியுள்ளது?
நாட்டின் இறையாண்மையை விற்பது தேசபக்தி, பொருளாதார நடவடிக்கை என்றும் அதை எதிர்ப்பது தேசத் துரோகம் என்றும் சட்டங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் சல்மான்கள் கைது செய்யப்படாமலிருந்தால் தான் அதிசயம். சமகாலத்தில் தேசத்தை விற்றதன் மூலம் புகழ்பெற்ற ‘தேசபக்தர்களின்’ பெயர் பட்டியலைப் பார்த்தால், நாமெல்லாம் தேச துரோகிகளாக இருப்பதே உத்தமம்!
எனவே, தேச துரோகிகளாக மாறுவோம் – தேசத்தைக் காப்போம்!
அவாக்கள் யாருமில்லை – ஃபேஸ்புக் பிள்ளையார் பதிவுகள்
1. உண்மைத்தமிழன் (truetamilan)

தமிழ்க் கலாச்சாரத்திலேயே இல்லாத இந்த பிள்ளையார் கரைப்பு.. ஊர்வலமாகக் கொண்டு செல்வது போன்ற நிகழ்ச்சிகளெல்லாம் பாரதீய ஜனதா கட்சி தலையெடுத்த பின்புதான் நாட்டில் அதிகமாகப் பரவியது.. மத பின்னணியில் ஆட்சியைப் பிடித்தவர்கள் செய்த கோலம் இது..!
ஊர்வலத்துல தண்ணிய போட்டுட்டு ஆடிக்கிட்டே போயிருக்காங்க..! ஆக… ஒரு பக்கம் தண்ணியை போட்டுட்டு தலையை விரிச்சுப் போட்டு கிராமத்துல பிள்ளையாரோட அப்பன் முனியாண்டியை பிரியாணி விருந்து போட்டு வணங்குற ஒரு கூட்டம்.. இன்னொரு பக்கம் இப்படி புல்லா ஒரு கட்டுகட்டிட்டு.. ஒரு ஆஃப் அடிச்சிட்டு மவனைத் தூக்கிட்டு போய் கடல்ல தூக்கி வீசுற எந்தக் கொள்கையுமில்லாத இன்னொரு கூட்டம்..!
பக்தியை நல்லா வளர்க்குறாய்ங்கய்ய நாட்டுல.!
பிள்ளையாரப்பா உன்னால் முடிந்தால் இவர்களை தண்டித்து பார்..! நீயே இந்த நாட்டுல இருக்க மாட்ட..!!!
2. பிரகாஷ் ஜே பி (prakash.jp.73)
இன்று காரில் “U” டேர்ன் சிக்னலுக்காக காத்துகொண்டிருந்தபோது, பக்கத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் தங்களின் இருசக்கரவாகனத்தில் அதே சிக்னலுக்கு காத்திருந்தனர்… கணவன், மனைவி, பிள்ளைகள் (பர்தா & தொப்பி அணிந்து)…

அப்போது பக்கத்தில் ஒரு மினி டெம்போவில் ஒரு பத்து பேர் காவி துண்டுகள் அணிந்து, ஆட்டமும் பாட்டமுமாய், அந்த இரு சக்கர வாகனத்தை மிக நெருங்கி வந்து, அவர்களை பார்த்து ஏளனமாய் சத்தத்துடன் ஊளையிட்டு, நேராக சென்றுவிட்டது… விநாயகர் சிலைகளை கரைத்துவிட்டு வருகிறார்கள் போல்..
இடது பக்க சாலையில் நேராய் செல்ல காலியாக இருந்தபோதும், இவர்கள் நின்றுகொண்டிருந்த வலதுபக்கம் தேவையில்லாமல் நெருங்கிவந்தனர்… அந்த முஸ்லிம் குடும்பம், அமைதியாய், தலைதொங்க, மீடியன் பக்கமாக தள்ளிவந்து நின்றுகொண்டார்கள்….
இன்று பார்த்த இதுபோன்ற பல மினி டெம்போக்களில் “அவாக்கள்” யாரும் கிடையாது.. நமது ஆட்கள்தான் இப்படி வழிதவறி ஹிந்துத்துவா அடியாட்களாய் இருக்கிறார்கள்…
3. கார்ட்டூனிஸ்ட் பாலா (cartoonistbala)
(பழைய மும்பை அனுபவம்) பாவம் அந்த பிள்ளையார்!
—————————————
மிகச் சரியாக நினைவில் இருக்கிறது. இதேப்போன்ற ஒரு விநாயகர் சதுர்த்தியின் மழை நாளில் தான் அவரை நான் பார்த்தேன்.
பத்தாண்டுகள் இருக்கும். அப்போது `மும்பை தமிழ் டைம்ஸ்’ நாளிதழில் உதவி ஆசிரியராக பணியிலிருந்தேன். அன்றைய பணி முடிந்து நானும் அலுவலக சகாக்கள் இருவரும் தாதர் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தோம். நேரம் இரவு மணி பத்தரை இருக்கும். லைட்டாக மழை தூறிக் கொண்டிருந்து.
தாதர் ரயில் நிலையத்தில் எல்லா நாளும் கூட்டம் அள்ளும். அன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் அழகான குட்டி பிள்ளையார் சிலைகளை தங்கள் பகுதிக்கு ரயில் கொண்டு செல்ல காத்திருந்தனர்.
சில நிமிடத்தில் சர்ச்கேட் டூ போரிவலி ரயில் வந்தது. சிலைகளை வைத்திருந்த குரூப் ஒன்று முண்டியடித்து ஏறியது. அவர்களுக்குப் பின்னாடியே என் சகாக்கள் இருவரும் ஏறிவிட்டிருந்தனர்.
நான் மட்டும் கூட்டம் உள்ளே போகட்டும். வாசல் ஓரம் நின்றுக் கொள்ளலாம் என்று வாசலை ஒட்டி இருந்த சிறு கைப்பிடியை பிடித்துக் கொண்டு ரயிலில் ஒரு காலும் பிளாட்ஃபார்மில் ஒரு காலும்வைத்தபடி நின்று கொண்டிருந்தேன்.
ரயில் கிளம்புவதற்கான `பூம்ம்ம்ம்ம்ம்..’ அலாரம் ஒலித்தது. மெதுவாக ரயில் நகர ப்ளாட்ஃபார்மிலிருந்த எனது காலை எடுத்து ரயில் வைக்க முயன்றபோதுதான் அந்த சம்பவம் நடந்தது.
மெலிந்த உடலும், பரட்டை தலையும், தாடியும், அழுக்கு உடையுமாக இருந்த 50 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் ரயிலின் உள்ளிருந்த கூட்டத்தை பிளந்தபடி மிதித்து தூக்கி வீசப்பட்டார்.
ஒரு கணம் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் ஓடும் ரயிலில் இருந்து ஒருவர் மிதித்து வீசப்பட்டது நிஜம்.
விழுந்த நபர் கூட்டத்துக்கு நடுவே அப்படியே சுருண்டு கிடந்தார்.
யார் அந்த நபர்.. உள்ளே என்ன நடந்தது எதுவும் எனக்கு தெரியாது. ஆனால் யாரோ ஒருவரை ஓடும் ரயிலிருந்து மிதித்து தள்ளியிருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.
கோபத்துடன், “ அரே க்யூம் அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்கா..” (ஏன் இப்படி அடிச்சு வீசுறீங்க.. அந்த ஆள் செத்துப்போவான்” ) என்று சத்தம் கொடுத்தேன்.

அவ்வளவுதான்.. அடுத்த நொடி,
“ஆய்லா.. கோன் ஆய்ரே த்தோ..” (..த்தா.. யார்ல அது..) என்று உள்ளிருந்து தடித்த குரல் ஒன்று வந்தது.
குரல் மிதித்து தள்ளியவனுடையதுதான். 40 வயது இருக்கும். மராட்டியர்களுக்கான பாரம்பரிய வெள்ளை உடையுடன் ஆள் வேறு பார்க்க கொஞ்சம் `பல்க்காக’ இருந்தான்.
கூடவே அவனுக்கு ஆதரவாக இருக்கையில் உட்கார்ந்திருந்த குஜராத்தி, மார்வாடிகள் வேறு குரல் எழுப்பினார்கள். அவர்கள் எப்போதுமே அப்படிதான்.. சண்டைபோட மாட்டார்கள்.. வெட்ட மாட்டார்கள்.. குத்தமாட்டார்கள். ஆனால் மத கலவரத்தை பின்னிலிருந்து நன்கு ஊதி பெருசாக்குவார்கள்.
கேள்வி எழுப்பியது நான் தான் என்பதை பார்த்துவிட்டான் அந்த தடியன்.. பதுங்கவும் முடியாது. என்னுடைய குரலுக்கு ஆதரவாக யாராவது வந்திருந்தால் கொஞ்சம் தைரியமாக இருந்திருக்கும்.
ஆனால் நான் நிற்கும் இடம் மதவெறியர்களுக்கு மத்தியில். எதிர்த்து நின்றால் அடுத்து ரயில் நிலையத்தில் மிதித்து தள்ளப்படப்போவது நானாகக்கூட இருக்கலாம். வேறு வழியில்லை.. இந்த இடத்தில் பதுங்க வேண்டும் என்று என் ஏழாம் அறிவு அவசரமாக எச்சரித்தது.
இந்த ரகளை நடந்து கொண்டிருக்கும்போது என்னுடன் வந்த சகாக்கள் இருவரும் கூட்டத்துக்கு நடுவில் குனிந்து தலையை மறைத்து எஸ்ஸாகியிருக்க கூடும்.
கொழுப்பெடுத்துப்போய் கேள்வி கேட்ட குற்றத்திற்காக நான் அடிவாங்கலாம். கூட வந்த பாவத்திற்காக அவர்கள் அடி வாங்க முடியாதில்லையா..
என்னை நோக்கி முன்னேறி நகர்ந்து வந்த அந்த நபரை நோக்கி,
“பாய்.. அய்ஸா மார்க்கே ஃபேக்த்தேஹோ.. ஓ ஆத்மி மர்ஜாய்ஹாதோ க்யா கரேகா தும்..” என்றேன் குரலை தாழ்த்தியபடி..
(அண்ணே.. இப்படி மிதிச்சு தள்ளுறீங்களே.. அவன் செத்துப்போனா என்ன பண்ணுவீங்க..)
அந்த முரடன் அதற்கு பதில் சொல்லாமல் முறைத்தபடி, `
“தூ கோன் ஆய்ரே..” என்றான். ( நீ யார்ரா..)
அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கக்கூடும். ஒரு மதபோதை ஏறியவனின் கண்களை நீங்கள் நேருக்கு நேராக சந்தித்திருக்கிறீர்களா.. நான் பார்த்தேன்.. அவன் கண்களில் அத்தனை வெறி.
அந்த முரடன் மராட்டியன் என்பது தெரிந்ததால்,
“மீ… பிரஸ்ச்சா மானூஷ்..” என்று மராட்டியில் பதிலளிக்க ஆரம்பித்தேன்.
பிரஸ் என்றதும் அவன் மூர்க்கம் லைட்டாக குறைந்தது. ஆனால் குரலின் கடுமையை குறைக்காமல்,
“பிரஸ் மஞ்சே காய்பன் போல்னார் காய்..குட்சா பிரஸ்?”
( பிரஸ்னா என்ன வேணும்னாலும் சொல்வியா .. எந்த பத்திரிகை?) என்று அடுத்த கேள்வியை கேட்டான்.
அப்போதுதான் என் `மீடியா புத்தி’ கூடுதலாக வேலை பார்க்க ஆரம்பித்தது. சும்மாவே வட இந்தியர்களுக்கு தமிழர்கள் மீது ஒரு எரிச்சல் இருக்கும். வாய்ப்பு கிடைத்தால் இழிவு படுத்துவார்கள்.
அதனால் தமிழ் டைம்ஸ் என்று தமிழ் பத்திரிகை பெயரை சொல்லாமல், எங்கள் குழுமத்திலிருந்து வெளிவரும் மராட்டி பத்திரிகையானா `மும்பை சவ்ஃப்பர்’’ என்ற பெயரை குறிப்பிட்டேன்.
மராட்டியர்கள் அதிகம் படிக்கும் பத்திரிகை அது. அவனும் அதன் வாசகனாக இருந்திருக்க கூடும் என நினைக்கிறேன். கொஞ்சம் கூலாகிவிட்டான்.
“அரே.. அப்லா சவ்ஃப்பர்ச்சா மானூஷ் ஆய்காய்.. கசா.. அசா போல்தே துமீ.. தோ பாஹல் அப்லா கண்பத்திலா டச் கேலே.. மாய்த்தேகாய்.. தெஜா சாட்டி மீ மார்லே..” என்று சொல்லிவிட்டு இருக்கையை நோக்கி நகர்ந்து சென்றுவிட்டான்.
நடந்த விசயம் இதுதான்..
அந்த பிச்சைக்காரர் இருக்கையில் படுத்து கொண்டு வந்திருக்கிறார். இவர்கள் உள்ளே நுழைந்த வேகத்தில் அவரை தட்டி எழுப்பியிருக்கிறார்கள். அப்போது பதறி எழுந்ததில் அந்த பிச்சைக்காரரின் கை தடியன் கையில் வைத்திருந்த பிள்ளையார் சிலை மீது பட்டுவிட்டது.
பிள்ளையார் சிலையை தொட்டுவிட்டான் என்ற ஒற்றை காரணத்திற்காகதான் அந்த பிச்சைக்காரர் மிதித்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறார்..
சிலையை ஒரு பிச்சைக்காரன் தொட்டுவிட்டான் என்ற அல்ப காரணத்திற்காக ஓடும் ரயிலில் இருந்து ஒருவரை மிதித்து தள்ள மனம் வர முடியுமா என்பதே எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.. என்ன செய்வது என்று தெரியவில்லை.
“கண்பத்தி பப்பா மோரியா..’’ கோஷம் காதுகளை பிளக்க.. ரயில் வேகமெடுக்க ஆரம்பித்திருந்தது..
அமைதியாக வாசல் ஓரம் நகர்ந்து வெளியே எட்டிப்பார்த்தேன்..
ரயிலிலிருந்து மிதித்து தள்ளப்பட்டு ப்ளாட்ஃபார்மில் பரிதாபமாக விழுந்து கிடைந்த பிள்ளையாரை சிலர் கைதூக்கி எழுப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள்…
-கார்ட்டூனிஸ்ட் பாலா
29-8-14
கலையரசன் (Kalaiy Arasan)
விநாயகர் சதுர்த்தி அன்று, இந்து மக்கள் கட்சி விநாயகர் சிலையை கொண்டு சென்று கடலில் கரைக்கும் ஊர்வலம் ஒன்றை ராமேஸ்வரத்தில் நடத்தியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. யோகேஸ்வரன், அதில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் இருந்து சென்றிருந்தார். ஆனால், தமிழக பொலிசார் அவர் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு அனுமதியளிக்கவில்லை. யோகேஸ்வரன் இது குறித்து “ஈழத் தாய்” ஜெயலலிதாவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தமிழகத்தில் விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்லும் இந்து மக்கள் கட்சியும், சிறிலங்காவில் புத்தர் சிலையுடன் ஊர்வலம் செல்லும் பொதுபல சேனாவும், ஒரே மாதிரியான கொள்கை கொண்ட மதவெறி அமைப்புகளாகும். பத்து வருடங்களுக்கு முன்னர், விநாயகர் சிலை கொண்டு செல்லும் ஊர்வலங்கள் இஸ்லாமியருக்கு எதிரான மதவெறியை தூண்டியதால், பல தடவை மதக் கலவரங்கள் நடந்துள்ளன. யோகேஸ்வரன் எம்.பி., ஒரு மதவெறி அமைப்பின் ஊர்வலத்தில் கலந்து கொண்டது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை அறிய முடியவில்லை.
ராஜஸ்தானில் குடிநீருக்கு ஏடிஎம் எந்திரம்
கேன் இந்தியா (Cairn India) தனியார் எரிசக்தி பெருநிறுவனமும், நவீன தொழில்நுட்பமும் இணைந்ததன் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் சத்தமில்லாமல் ஒரு ‘புரட்சி’ நடத்தப்பட்டுள்ளதாக முதலாளித்துவ ஊடகங்கள் வியந்தோதுகின்றன. தண்ணீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையங்கள் அமைத்து அவற்றை அக்கிராம மக்களே சுயமாக நிர்வகித்துக் கொள்வது தான் அந்த புரட்சி. இத்தகைய ‘புரட்சி குறித்து’ 2 ஆண்டுகளுக்கு முன்பே முன்னறிவித்திருந்தது வினவு.

இந்தியாவின் மொத்த பரப்பளவில் 10.4 சதவீதத்தையும், மக்கள் தொகையில் 5.5% சதவீதத்தையும் கொண்டுள்ள ராஜஸ்தான் மாநிலம் நாட்டின் மொத்த நீராதாரத்தில் 1.15% மட்டுமே பெற்றுள்ளது. வருடாந்திர மழையளவோ 100 மி.மீ இருந்து 800 மி.மீக்குள் தான் இருக்கிறது.
ராஜஸ்தானின் வறட்சி மிகுந்த இரு மாவட்டங்களில் 22 எதிர் சவ்வூடுபரவல் (Reverse Osmosis RO) தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டு அவற்றுடன் தானியங்கி தண்ணீர் வழங்கும் இயந்திரங்கள் (ATM) இணைக்கப்பட்டுள்ளன.
கவாஸ், குடா, ஜோகாசாகர், பைய்டு உள்ளிட்ட தண்ணீர் பஞ்சம் நிலவும் கிராமங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த தண்ணீர் ஏ.டி.எம் மையங்களில் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி ரூ 5 விலையில் 20 லிட்டர் குடிநீரை 24 மணி நேரமும் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக கிராம மக்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கார்டின் ஆரம்ப விலை ரூ 150. குறைந்தபட்சம் ரூ 20-க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
“இத்திட்டத்தால் சுமார் 22,000-க்கும் மேற்பட்டோர் பயன் பெற்று வருகின்றனர். எதிர்காலத்தில் குடிநீர் ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்” என்று மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தண்ணீர் ஏடிஎம்கள் மக்களிடையே பிரபலமடைந்து வருவதாகவும் பலரும் தண்ணீருக்கான ஸ்மார்ட் கார்டுகளை வாங்கி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கேன் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவு, ஜீவன் அம்ரித் திட்டத்தின் (Jeevan Amrit Project) மூலம் இத்திட்டத்திற்கு நிதியளித்திருக்கிறது. டாடா திட்டங்கள் (TATA Projects) நிறுவனம் RO நிலையங்களையும், ATM-களையும் நிறுவும் வேலையை மேற்கொண்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் பொது சுகாதார பொறியியல் துறை (PHED) நீராதாரத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தண்ணீர் இணைப்பையும், இந்நிலையங்களுக்கான வளாகங்களையும் கட்டித்தந்துள்ளது. உள்ளூர் கிராமப் பஞ்சாயத்துக்கள் இதற்கான இடத்தை வழங்கியுள்ளன. அதாவது, இடம், தண்ணீர் இணைப்பு, கட்டிடம் கட்டியது போன்ற அடிப்படை அம்சங்கள் அரசு செலவில்; மக்களிடம் பணம் வசூலிப்பதற்கான ஏ.டி.எம், சுத்திகரிப்பு நிலையம் போன்ற கூடுதல் அம்சங்களை தனியார் அமைக்கின்றனர்; மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கிக் கொள்ள வேண்டும். மக்கள் பணத்தில் அரிசி, தனியாரின் உமி என்ற இந்த வகை மாதிரிதான் அரசு-தனியார் கூட்டிணைவு செயல்படும் அடிப்படை.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட கிராமங்களில் 15 பேர் கொண்ட ‘தண்ணீர் கமிட்டிகள்’ ஏடிஎம்களையும் வரவு செலவுகளையும் நிர்வகிக்கும் என்றும், தண்ணீர் விற்பனை செய்து வரும் பணத்தில் ஏடிஎம்களின் பராமரிப்பு, இயக்குபவருக்கான ஊதியம் போக மீதியுள்ள தொகை கிராம நலனுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்கு செலவளிக்கப்படும் என்றும் கேன் இந்தியா நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்த வளர்ச்சிப் பணிகளுக்கான செலவும் தனியார் முதலாளிகளின் கல்லாவை நிறைக்கும் வகையில் திட்டமிடப்படும் என்பதில் சந்தேகமில்லை.
இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு தாரா (Dhara) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் பங்குதாரராக செயல்படுகிறது. இந்நிறுவனம் கிராம தண்ணீர் கமிட்டிகளை ஒருங்கிணைப்பதோடு, சுத்தமான, சுகாதரமான குடிநீர் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்துவருகிறது. அதாவது, அரசுத் துறை கொண்டு வரும் தண்ணீரை, கிராம பஞ்சாயத்து கட்டிடத்தில் நாம் பிடித்துக் கொள்கிறோம். இடையில் குடத்துக்கு ரூ 5 என்று மொட்டை அடிப்பது எதற்காக என்று யாரும் கேள்வி கேட்டு விடாமல் இந்த ‘சிறப்பு’ தண்ணீரின் தேவையை மக்களிடம் நிறுவுவது இந்தத் தொண்டு நிறுவனத்தின் வேலை.
இத்திட்டத்திற்கு நிதியளித்திருக்கும் கேன் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு (CSR) பிரிவின் தலைவர் நிலேஷ் ஜெயின் – இது அரசு – தனியார் கூட்டு (PPP) திட்டங்களுக்கும், சுயமேலாண்மைக்கும் மிகச் சிறந்த உதாரணம் என்று கூறியுள்ளார்.
வறட்சியான கிராமங்களுக்கு சுகாதாரமான குடிநீர் வசதி செய்து கொடுப்பதில் கேன் இந்தியா, டாடா, தாரா என்.ஜி.ஓ இவர்களுக்கெல்லாம் இவர்களுக்கு அப்படி என்ன ஆனந்தம்?
இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு, உற்பத்தியில் ஈடுபடும் பெரும் தனியார் நிறுவனங்களில் ஒன்றான கேன் இந்தியாவின் சந்தை மதிப்பு சுமார் 60,000 கோடி ரூபாயாகும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியில் 30 சதவீதத்தை கேன் இந்தியா உற்பத்தி செய்கிறது. ராஜஸ்தானில் உள்ள மங்களா, பாக்கியம், ஐஸ்வர்யா போன்ற இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல்கள் கேன் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் தற்போதைய உரிமையாளர் வேறு யாருமல்ல, தூத்துக்குடி ஸ்டெர்லைட் முதல் செசா கோவா சுரங்க நிறுவனம், சத்தீஸ்கர் ஜர்சுகுடாவில் வேதாநாத அலுமினியன் வரை இழிபுகழ் ஈட்டியிருக்கும் வேதாந்தா நிறுவனம் தான்.
எண்ணெய் உள்ளிட்ட இந்நாட்டின் பொதுச் சொத்துக்களான இயற்கை வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலையில் கொடுத்து அவை கொள்ளை லாபமீட்ட வழி செய்கிறது தனியார் மயக் கொள்கை. இதன் மறுபக்கமாக அரசு மக்கள் நலத் திட்டங்களை வெட்டி வரும் நிலையில், தனியார் முதலாளிகளே சமூக நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதாக காட்டுவதற்கு பெயர்தான் கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்ஸிபிலிடி.
சுய ஆளுகைக்கு (Self Governance) சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்படும் இந்தத் தண்ணீர் ஏ.டி.எம் திட்டம், தண்ணீர் உயிர்வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பதை மாற்றி, காசு உள்ளவருக்கு தண்ணீர் என்பதைக் கொண்டு வந்திருக்கிறது. பணம் உள்ளவர் அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொண்டு எல்லா தண்ணீரையும் தனக்கு திருப்பி விட்டுக் கொண்டு, காசில்லாதவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போனால் அதை இந்த சுயஆளுகை அமைப்புகள் தடுத்து நிறுத்துவது சந்தையின் செயல்பாட்டில் குறுக்கிடுவதாக ஆகும் என்பதால் அது அனுமதிக்கப்படாது. மேலும், கிராம தண்ணீர் கமிட்டிகளை கையாளும் பொறுப்பையும், இத்திட்டத்தின் வரவு செலவை நிர்வகிக்கும் பொறுப்பையும், ஏற்றிருக்கும் தொண்டு நிறுவனமான தாராவின் கணக்குகளை தணிக்கை செய்து சரிபார்க்க யாராலும் முடியாது.
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்பதை சோதித்தறிய மங்கள்யான் அனுப்பி மக்களின் வரிப்பணத்தை செலவழிக்கும் அரசுக்கு, தன்னுடைய குடிமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க தேவையான நிதியும், தொழில்நுட்பமும் இல்லையாம். அதனால் தான் இது போன்ற அரசு – தனியார் கூட்டு திட்டத்தின்(PPP) மூலம் செயல்படுத்துவதாக அரசு கூறுகிறது.
குடிமக்களுக்கு தண்ணீர், மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை சேவைகளை வழங்கும் தனது பொறுப்பிலிருந்து அரசு விடுவித்துக் கொண்டு, அவற்றை விற்பனை சரக்குகளாக சந்தை செயல்பாட்டுக்கு திறந்து விடுவதுதான் PPP என்ற அரசு-தனியார் கூட்டு திட்டங்கள் போன்றவற்றின் நோக்கம். உதாரணமாக PPP திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கர சாலைகள் எனப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் திட்டத்தில் முதலீடு செய்த தனியார் நிறுவனங்கள் சுங்கச் சாவடிகளை அமைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டதன் மூலம் சாலைகளை பயன்படுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நாள் வரையிலும் இந்த கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து கொடுக்காமல் மக்களைத் தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கவிட்ட அரசு இன்று இத்திட்டத்திற்கு தண்ணீர் இணைப்பை வழங்கி வேறு வழியில்லாமல் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் நிலைக்கு மக்களை தந்திரமாக தள்ளியுள்ளது.
ஏற்கனவே நகர்ப்புறங்களில் உயிரின் ஆதாரமான குடிநீர், லாபத்திற்கான சரக்காக விற்பனை செய்யப்பட்டுவருகிறது, காசு கொடுத்து வாங்கிக் குடிக்க மக்களும் பழகிவிட்டார்கள். கிராமப்புற மக்களையும் தண்ணீரை காசு கொடுத்து வாங்கும் முறைக்கு பயிற்றுவிக்கும் முகமாகவே இத்தண்ணீர் ஏ.டி.எம்கள் PPP, CSR மற்றும் NGO-களின் கூட்டணியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த செயல்தந்திரமும் கூட இந்த அரசின் சொந்த தயாரிப்பு இல்லை. உலகவங்கி தீட்டிக்கொடுத்த ’குடிநீர் வழங்கி வரும் அரசு முதலில் கட்டணம் விதிக்கத் தொடங்கி படிப்படியாக கட்டணத்தை உயர்த்திக் கொண்டே போய் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்ற திட்டம் தான் இது.
சாலை வசதி, கல்வி, மருத்துவம், சுகாதாரம், தண்ணீர் முதலான அடிப்படைத் தேவைகளை பெறுவது குடிமக்களின் அடிப்படை உரிமை. இவற்றை குடிமக்களுக்கு ஏற்படுத்தி தருவது அரசின் கடமை. அரசு இப்பொறுப்பிலிருந்து விலக்கிகொண்டு அடிப்படை உரிமைகள் அனைத்தையும் விற்பனை சரக்காக்க வேண்டும் என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி. மொத்தத்தில் தண்ணீர் தனியார்மய நிகழ்ச்சி நிரலில் வரக்கூடிய மற்றுமொரு திட்டமே இத்தண்ணீர் ஏ.டி.எம்.
குடிமக்களின் அடிப்படை தேவைகளை செய்துகொடுக்கும் கடமையிலிருந்து அரசை விடுவிப்பதன் மூலம் அதன் பணிகளை வெட்டிச் சுருக்கியுள்ளன புதிய தாராளவாத கொள்கைகள். இத்தாராளமயக் கொள்கைகளை அமல்படுத்தும் போது அதை எதிர்க்கும் மக்களை ஒடுக்குவதை மட்டுமே தனது தலையாய கடமையாக செய்துவருகிறது அரசு.
பூமியைத் தவிர வேறெந்த கோளிலும் தண்ணீர் இல்லாததால் அங்கு நுண்ணுயிரிகள், தாவரங்கள் உள்ளிட்டு எந்த உயிரினமும் இல்லை. உயிர் வாழ்வதற்கு மூலாதாரம் தண்ணீர். அது இயற்கையின் அருட்கொடை. அது ஒட்டுமொத்த மனித குலத்திற்கு மட்டுமல்லாது அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. அதை சில முதலாளிகள் அபகரித்துக் கொண்டு, மக்களை சுரண்டுவது என்பது இயற்கை நியதிக்கு எதிரானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களுக்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள பயங்கரவாதம். இது தொடர்ந்தால் நாளை நாம் சுவாசிக்கும் காற்றும் கூட தனியார்மயமாக்கப்படும்.
மேலும் படிக்க…
மோடியின் அச்சே தின் – கார்ட்டூன்கள்





கார்ட்டூன்கள் : நன்றி IndiaTomorrow.net
சென்னை விநாயகர் ஊர்வலம் – வினவு நேரடி ரிப்போர்ட்
நாம் அங்கே செல்லும் போது ஆர்.எஸ்.எஸ்-ன் சவுண்டு சர்வீஸ் பிரபலம் எச்.ராஜா பேசிக் கொண்டிருந்தார்.
“நம்மை அந்தத் தெரு (ஐஸ் ஹவுஸ் மசூதி) வழியே செல்ல தடை விதிக்கிறார்கள். முஸ்லீம்கள் இந்தப் பகுதி வழியே வரக்கூடாது என்று இந்துக்கள் நாம் தடை விதித்தால் என்னவாகும்” என்றதும் கூட்டம் “பாரத்மாதா கி ஜெய்” என்று வெறியுடன் சத்தமிட்டது. அதாவது இந்துமுன்னணியினர் பல ஆண்டுகளுக்கு முன்பு திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதி பள்ளிவாசலில் கலவரம் செய்ததால் அந்தத் தெரு வழியே மதவெறி ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அதை வைத்து மதவெறியை கிளப்ப முயற்சிக்கிறது ஆர்.எஸ்.எஸ் கூட்டம்.
“நாய் செல்கிறது, பன்னி செல்கிறது, ஆனால் நாம் செல்லக் கூடாது என்று தடை விதிக்கிறார்கள்” என்று தம் முன்னால் அமர்ந்திருக்கும் சிந்திக்கத் தெரியாத பார்ப்பன அடிமைகளிடம் நஞ்சை கக்கி பேச்சை முடித்தார், எச் ராஜா. சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதியினரை பல நூறு ஆண்டுகளாக தெருவுக்குள் நுழையக் கூடாது, தண்ணீர் எடுக்கக் கூடாது என்று மனித உரிமைகளை மறுத்து சட்டம் செய்த பார்ப்பன ஆதிக்க சாதிக் கூட்டம் இதை பேசுவது நல்ல வேடிக்கை.

“நாய், பன்னி போறத பத்தி பேசும் எச்.ராசாவே, சங்கராச்சாரி, தேவநாதன் மாதிரியான நாய், பன்றிகள் கருவறைக்குள் செல்லும் போது எங்களை அனுமதிக்க மறுக்கிறாயே?” என்று கேட்கும் பகுத்தறிவு, கேட்டுக் கொண்டிருந்த அடிமைகளுக்கு இல்லை.
அடுத்து தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி ராமகிருஷ்ணா ஆசிரமத்தை சேர்ந்த ராமானந்த மகராஜ் சுவாமிகள் என்ற ஒரு சாமியார் பேச ஆரம்பித்தார். சாமியார் ஏதாவது ஆன்மீகம் பேசுவார் என்று பார்த்தால் எச்.ராஜா பேசியதை விட அதிகமாக மதவெறியை கக்கினார். “நட்சத்திரத்தை பார்த்து ‘அறிவியல்’ முறைப்படி பிறந்த நாள் கொண்டாட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். “பகுத்தறிவு என்று பெயரில் இந்து இளைஞர்களை மூளைச்சலவை செய்தது இனியும் செல்லுபடியாகாது. இளைஞர்கள் விழிப்படைந்து விட்டார்கள். தி.க இன்று ஆளில்லாத அநாதை கூட்டமாகி விட்டது. ஆனால், மோடிக்கு இளைஞர்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. பிஜேபியை இளைஞர்கள் ஆதரிக்கிறார்கள். அவர் தன்னை ஒரு இந்து பிரதமர் என்று பெருமையாக அழைத்துக் கொள்கிறார்” என்று இந்துத்துவ ஆட்சியின் ‘பெருமை’களை அளந்து கொட்டினார்.
சென்னையில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகளின் பின்னே தனிப்பெரும் கதைகளும், சதித்திட்டங்களும் இருக்கின்றது. அதை பின்னர் பார்ப்போம். ஆனால் இந்த பிள்ளையார் சிலை ஊர்வலங்களுக்கு மட்டுமல்ல, தெருக்களில் வைக்கப்பட்ட பிள்ளையாரை வணங்குவதற்கும் பல ‘செலவுகளை’ செய்தே பக்தர்களையும், தொண்டர்களையும் இழுக்க வேண்டியிருந்தது.
அந்த சாமியார் பேசியதும், ஊர்வலம் புறப்பட்டது. பிள்ளையாரை கிளப்புவதற்கு போலீசார் படாதபாடுபட்டார்கள்.

முதலில் ஐந்தாறு பிள்ளையாருடன் ஆரம்பித்த ஊர்வலம், நகரும் போது குறுக்கு சந்துகளில் இருந்த வந்த பிள்ளையார்களுடன் சேர்ந்து எண்ணிக்கை கூடியது.
மையமான பிள்ளையார் சிலை ஊர்வலத்தின் இறுதியில் இழுத்து வரப்பட்டது. இதைச் சுற்றி இந்து முன்னணியின் தலைவர்கள் இருந்தனர். ஊர்வலத்தின் மொத்த கூட்டத்தில் ஆறு நபர்கள் மட்டும் தான் “ஓம் காளி, ஜெய் காளி” என்று பிள்ளையார் முன்பு கோசம் போட்டுக் கொண்டு வந்தார்கள்.
ஒவ்வொரு பிள்ளையாரின் முன்பும் மேளதாளமும், அதற்கேற்ப இளைஞர்களின் குத்தாட்டமும் கனஜோராக நடந்தது கொண்டிருந்தது. டாஸ்மாக் பற்றி திராவிட இயக்கங்களை பழிக்கும் இந்துத்துவ கும்பல் இளைஞர்களை குத்தாட்டம் போட வைக்க அதே டாஸ்மாக் சரக்கை ஊற்றிக் கொடுத்ததது. இதில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் பதின்ம வயதினர். நேரம் ஆக ஆக ஆபாசமான உடல் அசைவுகளும், பெண்ணைப்போல வேடமிட்டு ஆடியவர் சேலையை அவிழ்ப்பது எனவும் அவர்களது போதை ஆட்டம் எல்லை மீறி சென்று கொண்டிருந்தது.
மெயின் பிள்ளையார் போகும் பாதையில் முன்னால் சென்ற பிள்ளையார் ஒற்றை மாட்டு வண்டியில் சென்று கொண்டிருந்தார். மாட்டின் முதுகில் ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து வைத்திருந்தார்கள். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட பக்தர் ஒருவர் மாட்டை கொஞ்சுவது போல அதனுடன் முட்ட ஆரம்பித்தார். மாடு கொஞ்சம் கலவரமாகி இரண்டாவது மூன்றாவது முறையில் தன்னுடைய எதிர்ப்பை காட்ட ஆரம்பித்தது. ‘கோமாதாடா விளையாடத’ என்று சொல்லி இழுத்து விட்டு மாட்டின் தலையை தடவிக் கொடுக்க போனார், இன்னொருவர். அவரையும் மாடு எதிர்க்க ஆரம்பித்தது. இதற்கிடையில் யாருடைய குத்தாட்டம் பெரிய தெரு சந்திப்பில் சிறப்பாக இருக்கிறது என்ற போட்டியில் இரு இந்து பிரிவினரிடையே சிறிய சண்டை ஆரம்பித்த்து. தடுக்க வந்த போலீசை நெஞ்சில் கைவைத்து தள்ளினார்கள் பொறுப்பாளர்களான இளைஞர்கள்.
ஒரு பிள்ளையாரின் முன்பு ஆடிக்கொண்டிருந்தவர்கள் திருநங்கைகளை அழைத்து வந்திருந்தனர். அவர்களும் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஒரு இளைஞர் தன்னுடைய சட்டைப் பையில் இருந்த ரூபாய் நோட்டுகளை ஒரு திருநங்கையிடம் நீட்டியபடியே ஆடினார். அவரும் அதை வாங்க முயற்சி செய்தபடி ஆடிக் கொண்டிருந்தார். இருவரும் ஆபாசமான உடலசைவுகளுடன்தான் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

சற்று நேரத்தில் அந்த இளைஞர் பணத்தை தன்னுடைய ஜட்டியினுள் நுழைத்து அதை எடுக்கும்படி சவால் விட்டார். அந்த திருநங்கையும் அதை எடுப்பதற்கு முயற்சி செய்தார். இந்துக்களை திரட்ட பிள்ளையாரும், இந்து முன்னணி கும்பலும் எத்தகைய ‘தியாகங்களை’யெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது? வரும் காலத்தில் ஐபிஎல் சியர்ஸ் லீடர்ஸ் பெண்கள் கூட இறக்குமதி செய்யப்படலாம். அதை மல்லையாவும் ஸ்பான்சர் செய்யலாம்.
மற்றொரு பிள்ளையாரின் முன்பு, அதிமுகவின் மகளிர் அணியினரை மிஞ்சிவிடும்படி குத்தாட்டத்தில் பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தனர் சில பெண்கள். இவர்கள் அனைவருமே சூத்திர அல்லது பஞ்சம உழைக்கும் பெண்கள் தான். அருகில் இருக்கும் குடிசைப் பகுதியில் இருந்து அழைத்து வரப்பட்டிருக்கலாம். இவர்கள் ஆடுவதை பார்ப்பனப் பெண்களும் ஆண்களும் சாலை ஓரங்களில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர். இந்து தர்மம் எப்படி தீயாய் பரவுகிறது என்ற வெற்றிக் களிப்புடன் அவர்கள் சிரித்திருக்க வேண்டும்.
“எல்லோரும் இந்துதானே, பின்னர் ஏன் பாப்பனத்தி குத்தாட்டம் ஆடுவது இல்லை. சூத்திர உழைக்கும் பெண்களையும், திருநங்கைகளையும் ஆடவைக்கிறார்கள்” என்று தங்களை இந்து என்று கருதிக் கொள்வோர் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஜட்டிக்குள் பணம் எடுப்பதோ, இல்லை பாலியல் வெறியை நிகழ்த்தும் உடல் அசைவுகளோ சூத்திர, பஞ்சம சாதிகளுக்கு மட்டும்தான் சொந்மென்றால் அங்கே இந்து ஒற்றுமை அடிபடுகிறது. இந்த காட்சியில் அவாள்களும், ஷத்ரியர்களும், வைசியர்களும் இடம் பெற்றால்தான் இந்து தர்மத்துத்துக்கும் மதிப்பு, ஜட்டிக்கும் மதிப்பு!
“எந்த பாப்பானாவது சாமியாடி பாத்திருப்பீர்களா? பேய்பிடித்து ஆடுவதை பார்த்திருப்பீர்களா? நம்மாளு தான் ஆடுறான்” என்ற பெரியாரின் வார்த்தைகளை பொய்ப்பிக்கவாவது இந்ந இந்து ஒற்றுமைக்கு இந்துத்துவ அறிஞர்கள் முயல வேண்டும்.
தற்போது ஊர்வலம் பிரதான சாலையை அடைந்திருந்தது. இநத ஊர்வலத்தை ஒட்டி பெரும்பாலான கடைகள் அச்சத்தின் காரணமாக அடைக்கப்பட்டிருந்தன. சில கடைகள் ஷட்டரை பாதி வரை அடைத்து வைத்திருந்தனர். தெருவோர கடைகள் மூட்டைகட்டி வைக்கப்பட்டிருந்தன.
“ஏம்மா கடைய எல்லாம் பூட்டி வெச்சிருக்காங்க” ஒரு தெருவோர வியாபாரிடம் கேட்டோம்.
“அதாம்பா ஊர்வலம் வுடுறாங்கல்ல. அதுக்குத்தான்.”
“எதும் பண்ணிருவாங்கன்னா?”
“ஆமா. வியாபார சங்கத்திலிருந்து சொல்லிட்டாங்களாம். ஊர்வலம் உடுற ரெண்டு மணிநேரம் கடைய அடைச்சிருங்க. அடைக்காம அப்புறம் வந்துட்டு அது இதுனு சொன்னா நாங்க எதும் பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்களாம். நாங்களும் மூடிட்டோம்”

ஊர்வலம் மிகமிக மெதுவாக ஊர்ந்து சென்றது. வேண்டுமென்றே மெதுவாக நகர்த்தினார்கள். ஒவ்வொரு பிள்ளையாரின் முன்பும் கழுத்தில் விசிலுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் விசில் அடித்தால் பிள்ளையாரை இரண்டு அடி நகர்த்துகிறார்கள். மீண்டும் விசில். பிள்ளையார் நகருவதில்லை. ஒவ்வொரு பிள்ளையாருக்கும் இடையில் பல நூறு மீட்டர் தூரம் இடம் காலியாக இருந்தது. ஆனாலும் வண்டியை நகர்த்தாமல் காலம் தாழ்த்தினார்கள். விசில் வைத்திருப்பவர்கள் இதைத் திட்டமிட்டு செய்தார்கள்.
போலீசார் அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். “தயவு செய்து நகத்துங்கப்பா. பாருங்க அந்த பிள்ளையார் எங்க போயிருச்சினு. நகத்துப்பா நகத்து”. உழைக்கும் மக்கள் காவல் நிலையம் சென்றால் கிள்ளுக்கீரையாக மதிக்கும் காவல்துறை இந்துத்துவ கும்பலை கண்டு பம்மியதும், மன்றாடியதும், கெஞ்சியதும் தனிக்கதை.
கடந்த பத்து நாட்களாகவே இப்படித்தானாம். நகரெங்கும் பிள்ளையார் சிலைகளுக்கு காவலாக நிற்க வைக்கப்பட்டிருந்த இந்த வீரர்கள், “உக்கார சேரு தரமாட்டுறாங்கப்பா. போலீசு ஜீப்ல கேரம் விளையாடுறாங்க. பொம்பளைங்க இந்த பக்கம் வரதில்லை, பாத்தீங்களா? எங்களுக்கு லீவு இல்ல தம்பி. வீட்டம்மாவுக்கு காய்கறி வாங்கி குடுக்கக் கூட போக முடியல. பத்திரிகைகல எழுதுங்க” என்று புலம்பினார்கள். அது குறித்து தனியே எழுதுகிறோம்.
ஊர்வலத்தில் வந்தவர்கள் போலீசை கிஞ்சித்தும் மதிக்கவில்லை. அதிலும் குறிப்பாக பெண் போலீசின் நிலைமை மோசம்.
“தம்பி, கரைக்கப்போற பிள்ளையாரு தான. அதுக்கு ஏன் இவ்வளவு நேரம். தயவு செய்து நகர்த்துப்பா” இது ஒரு பெண் காவலர்.
ஒரு சிறுவனிடம் ஒரு பெண் போலீஸ் அதிகாரி “ஒரு ஆபீசரையே இப்படி பேசுறியே. நீ எல்லாம் உருப்படுவியா” என்று சாபம் விட்டுக் கொண்டிருந்தார். உழைக்கும் மக்களை கடித்துக் குதறும் போலீசு இங்கே இந்துத்துவ பொறுக்கிகளிடம் பங்களா நாய் போல கட்டுப்பட்டு சென்றது.
பிள்ளையார் ஊர்வலத்தால் பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களும் அரசியல் இயக்கங்களும் அரசியல், பொருளாதார கோரிக்கைகளுக்காக சாலையை மறித்து போராடினால் “லெட்டர் டூ எடிட்டர்” எழுதி புலம்பும் பார்த்தசாரதிகள் வீதிகளிலும், வீடுகளின் மொட்டைமாடிகளிலும் நின்று கொண்டு ஊர்வலத்தை பெருமிதத்துடன் கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.

கடைசி விநாயகரின் அருகில் கோசம் போட்டுக்கொண்டிருந்த சிலரும் இப்போது சுணங்கியிருந்தனர்.
“ஜீ நீங்க போடுங்கஜி”
“அந்தா அவரு நல்லா போடுவாருஜி” என மந்தமாக சென்ற ஊர்வலத்தில் சற்று நேரத்தில் சுருதி கூடியது. முன்னால் சென்ற பிள்ளையாருக்கு முன்னால் ஆடிக்கொண்டிருந்த சில இளைஞர்கள் இப்போது பெரிய பிள்ளையாரின் அருகே கூடிக்கொண்டிருந்தனர். ஏன்?
சற்று தூரத்தில் மசூதி இருந்தது.
சரியாக மசூதிக்கு அருகே பிள்ளையார் நிறுத்தப்பட்டார். வேறு எங்கும் சாலைகளில் தேங்காய் உடைக்கப்படாத நிலையில் ஐஸ்ஹவுஸ் மசூதி வழியே செல்ல தடைவிதிக்கப்பட்ட சந்திப்பில் தேங்காய் உடைத்தார்கள். பிறகு ஒரு சாக்கு நிறைய தேங்காய் கொண்டுவரப்பட்டு மசூதி இருந்த சாலையில் உடைக்கப்பட்டது.
மசூதியின் அருகில் அவர்கள் போடும் கோசமும் அதன் சுருதியும் மாறியிருந்தது. மற்ற இடங்களில் “ஓம் காளி ஜெய்காளி”, “பாரத் மாதாகி ஜெய்” என்றும் இன்னும் சிலர் “எல்.ஐ.சி ஹைட்டு எங்க பிள்ளையாரு வெயிட்டு”, “கோக்கோ கோலா கருப்பு, எங்க பிள்ளையாரு நெருப்பு” என்றும் முழக்கமிட்டவர்கள் மசூதியின் அருகில் வந்து நின்றதும் முழக்கத்தை மாற்றினார்கள்.
“கட்டுவோம்! கட்டுவோம்! ராமர் கோவில் கட்டுவோம்.
எந்த இடத்தில் கட்டுவோம்! அயோத்தியில் கட்டுவோம்!.
இந்த நாடு! இந்து நாடு!
இந்து மக்கள்! சொந்த நாடு!.
இந்த ரோடு! இந்து ரோடு!.
இந்தக் கடை! இந்து கடை!.
பாகிஸ்தானா? பாதிரிஸ்தானா? இல்லை இல்லை ‘இந்து’ஸ்தான்!.
பாரத்மாதாகீ ஜெய்”
என்று வெறிக் கூச்சலை திரும்ப திரும்ப போட்டுக்கொண்டே இருந்தார்கள். குரலில் அப்படி ஒரு வன்மம்.
பிள்ளையார் அந்த இடத்தை விட்டு நகருவதாக இல்லை. மற்ற இடங்களில் நின்ற நேரத்தைவிட இந்த இடத்தில் பல மடங்கு கூடுதலான நேரம் நின்று வெறிக் கூச்சல் போட்ட பிறகு போலீசார் கிளம்புமாறு தொடர்ந்து கெஞ்ச பிள்ளையார் கிளப்பப்பட்டார்.

அல்லிக்கேணி ராஜா என்று பேனர் பிடித்துகொண்டு வந்த ஒரு குரூப்பில் சற்று வயது அதிகமாக மதிக்கத்தக்கவரை ஓரம் கட்டினோம்.
“சார், எச்.ராஜா பேசும் போது அந்த வழியா போக அனுமதியில்லைனு சொன்னாரே. என்ன பிரச்சனை சார்”.
“19 வருசத்துக்கு முன்பு அந்த வழியா, மசூதி அருகே போகும் போது செருப்பு மாலை போட்டுட்டாங்க. அதனால நாம கடைகளை புகுந்து அடிச்சிட்டோம். செம அடி அவங்களுக்கு. இதோ இந்த சோபா கடையிருக்குல்ல உள்ளே புகுந்து அடி.” முகத்தில் பெருமிதம் பொங்கக் கூறினார்.
“அதுக்கு அப்புறம் அந்த வழியா போக அனுமதி தர்றதில்லை. நாமதாங்க பாயி பாயினு சொல்றோம். அவனுங்க நம்மள சொல்றாங்களா? ஆறு (வேல்) படம் பாத்தீங்களா அதுல ஒரு டயலாக் வரும் ‘அவன் தான் அண்ணனு சொன்னான் நான் தம்பினு சொல்லலியே என்று’ அது மாதிரிதான்.”
“நாலுவருசம் முன்னாடி நடந்த அமைதிகூட்டத்தில ஏ.சி கிட்டே கேட்டேன். ‘சார் புட்பால் மேட்ச் பாப்பீங்களா? அதுல ரசிகர்கள் அடிச்சிப்பாங்களா? சமயங்களில் கொலை கூட நடக்குதா? அதுக்காக அதே இடத்தில் மீண்டும் மேட்ச் நடத்துறது இல்லையா? நடக்கத்தானே செய்யுது. மறுபடியும் சண்டை வரலாம். ஆனா, அத தடுக்கத்தானே நீங்க இருக்கீங்க. பாதுகாப்பு போடுங்க. அதைவிட்டுட்டு போகக் கூடாதுனு சொன்னா எப்படி?’ அவர் பதிலே பேசவில்லை.”
“நம்ம தமிழ்நாட்டில மட்டும் தான் சார் இப்படி நடக்கும். இந்தியாவுல வேற எங்கயும் இப்படி கிடையாது. மசூதி வழியா போகக் கூடாதுனு வேற எங்கயும் சொல்ல முடியாது. ஹைதராபாத்துல ரெண்டு நாளு லீவு விடுறாங்க. விநாயகர் சதுர்த்திக்கும் அதை கரைக்கும் நாளுக்கும்.”
“அதான் சென்டர்ல நம்மவா ஆட்சி வந்திருச்சே. இன்னும் ஏன் பெர்மிசன் தரமாட்டேங்கறாங்க?”
“ஆட்சி யாருங்குறது முக்கியமில்ல. மக்கள் வரணும், அதுதான் முக்கியம். நரசிம்மராவ் யாரு காங்கிரஸ். பாபர் மசூதியை இடிக்கும்போது என்ன நடந்துச்சி? போலீஸ், துணை ராணுவம் எல்லாம் (..கையைக் கட்டி காண்பிக்கிறார்.), ஒண்ணும் பண்ணல. ஏன்? மக்கள் வரணும்”
“தடையை மீறி போலாம்ல?”
“பாத்தீங்கல்ல போலீசை. வஜ்ரா வண்டி வேற வெச்சி இருக்காங்க. இயக்கமா போனா யாரா இருந்தாலும் அடிப்பாங்க. 2001-ல திமுகவே கடற்கரையில அடிவாங்குனானுக. நம்ம கூட மக்கள் வந்தாதான் போலீசால ஒண்ணும் செய்ய முடியாது.”
“இங்க இருக்கிறவங்க மக்கள் தானே?”
“இல்ல இது பல இயக்கங்கள். நான் சொல்றது மக்களை” கையைக் குவித்து, “இப்படி வீட்டுப் பிள்ளையாரை கையில் எடுத்துட்டு அவர்களும் வரவேண்டும். ஆனால் இவங்க என்ன செய்யுறாங்க. விநாயகர் சதுர்த்தி முடிந்த அடுத்த நாளே வீட்டு வாசலில் போட்டுறாங்க. அதை இரண்டு நாளு கூட வீட்டுல வைக்க மாட்டுறாங்க. வீட்டுல இருக்குறவங்க அதை கையில் பிடித்துக்கொண்டு ஊர்வலத்தில் வரணும். அப்போ தான் போலீசால நம்மள தடுக்க முடியாது.”
“நீங்க எந்த இயக்கம்?”
“ஆர்.எஸ்.எஸ். யோகா மாஸ்டர்” என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.
“சரி சரி. ஆனா பாருங்க பசங்க இவ்வளவு ஆபாசமா குத்தாட்டம் போட்டுட்டு வாராங்க மோசமாக இல்லையா?”
“நான் என்ன சொல்றேன், அப்படியாவது அவங்க வரட்டும். டான்ஸ் ஆடுனா தான் வாராங்களா, குடிச்சிட்டு ஆடுறாங்களா? பரவாயில்லை, வரட்டும். வர்றதுதான் முக்கியம். ஒண்ணு தெரிஞ்சிக்குங்க, கெட்ட இந்துவை மாத்திறலாம், நல்ல முஸ்லீம மாத்த முடியாது.”
“ம். …. இல்ல சார் குத்தாட்டம் ரொம்ப மோசமாக இருக்கு. நம்ம கலாச்சாரத்திற்கு ஒத்துவருமா?”
(பெரிய டிரம் வாத்தியக் குழுவை காட்டி) “இதுக்கு 30,000-க்கு மேல செலவு ஆச்சி. இப்படி வெச்சாதான் ஆடுறதுக்குனு வாரங்க. இவஙக வரலைனா போலீசு நம்மளை கொஞ்ச நேரத்துல வேகமாக நகரச் சொல்லிருவான். விநாயகரை அள்ளிட்டு போயிருவான். இப்ப அப்படி சொல்ல முடியாதுல்ல.”
“நீங்க முன்னாடி சொல்லும் போது மக்கள் வர்ரதில்ல. இயக்கங்கள் தான் வாரங்கனு சொன்னீங்க. இங்க குடிச்சிட்டு குத்தாட்டம் போடுறது எல்லாம் ஆர்.எஸ்.எஸ் தான் இல்ல?”
(சற்று சமாளித்துக்கொண்டு) “இல்ல மக்களும் வாராங்க. அவங்கதான் ஆடுறாங்க. நான் என்ன சொல்றேன்னா வீட்டுல பிள்ளையார் வராதவரை யார் வந்தாலும் போலீசை பொருத்தவரை இயக்கம்தான். அதைத் தான் சொன்னேன்.”
இந்துத்துவ கும்பல அல்லாத சாதாரண மக்கள் யாரிடமாவது கருத்து கேட்கலாம் என்று ஒருவரை அணுகினோம்.
“என்ன சார் அந்த வழியா போக கூடாதுனு சொல்றாங்க.”
“ஆமாப்பா. கொஞ்ச வருசத்திற்கு முன்னாடி அந்த வழியா போகும்போது நம்மாளுக மசூதில செருப்ப எறிஞ்சிட்டாங்க, அது பிரச்சனையாயிருச்சி. அதுனால போக உடுறதுல்ல”
“நம்மாளுக தான் எறிஞ்சாங்களா?”
“ஆமா. யாரோ பண்ணிட்டாங்க.”
“பல வருசம் ஆச்சி இன்னும் போக உடமாட்டேன் சொல்றது எப்படி?”
“ஊர்வலத்துக்கு மட்டும்தான். முடிஞ்ச உடன ஒண்ணும் கிடையாது. அங்க போவாங்க இங்க வருவாங்க. பிரச்சனைலாம் ஒன்னும் இல்ல.”
உண்மைதான் சாதாரண மக்களுக்கு பிரச்சனை இல்லை. தொடர்ந்து பிரச்சனை இல்லாமல் அமைதி நிலவ வேண்டுமானால் மதவெறி ஆபாச குத்தாட்ட விநாயகர் ஊர்வலங்கள் தடைசெய்யப்பட வேண்டும். இந்துத்துவ இயக்கங்கள் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும்.
– வினவு செய்தியாளர்கள்
மாணவர்களை அடிமையாக்கும் குரு உத்சவ்
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தை இனி ‘குரு உத்சவ்’ என்று அழைக்க வேண்டுமென்று நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியிருந்தது. 1962 முதல் நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்த கல்வியாளர் ராதாகிருஷ்ணன் நினைவாக இந்த ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஏற்கெனவே வலைத்தளங்களில் கட்டாய இந்தி, பள்ளிக் கல்வியில் வேத பாடங்களை கட்டாயமாக்குதல், சிபிஎஸ்சி பள்ளிகளில் கட்டாய சமஸ்கிருத வாரம் கொண்டாட வைத்தல், வரலாற்றை நம்பிக்கையின் அடிப்படையில் திருத்தி எழுத வேண்டும் என்ற புதிய இந்தியா வரலாற்று ஆய்வு குழு (ஐ.சி.எச்.ஆர்) தலைவர் ஒய்.எஸ்.ராவின் அறிவிப்பு எனத் தொடரும் பாஜகவின் பார்ப்பனியக் கொள்கையின் தொடர்ச்சியாகத்தான் தற்போதைய குரு உத்சவ் அறிவிப்பும் வந்துள்ளது.
தமிழகத்திலிருந்து இந்த அறிவிப்புக்கு கடுமையான எதிர்ப்பு வந்ததை அடுத்து, ‘நாங்கள் ஆசிரியர் தினம் என்ற பெயரை மாற்றவில்லை. மாறாக அதில் நடைபெற உள்ள கட்டுரைப் போட்டியை மட்டும் தான் அப்படி ஒரு தலைப்பின் கீழ் நடத்துகிறோம்’ என்று சொல்லி தமது சுற்றறிக்கையை சமாளிக்கிறார் மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி.
தற்போதைய பள்ளிக் கல்வி முறை பழைய குரு குல கல்வி முறைக்கு திரும்ப வேண்டும் என்றுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்க வானரங்கள் விரும்புகின்றன. நவீன பள்ளிகள் மாணவனுக்கு சம உரிமையளிக்கும் வகையில் ஜனநாயகத்தை போதிக்கும் இடங்களாக மாற வேண்டிய தேவை இருப்பதை பல கல்வியாளர்கள் பல பத்தாண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் நடத்தும் பாரதிய வித்யா பவன் பள்ளிகளில் எல்லாம் ஆசிரியர் தினத்தன்று மாணவ மாணவிகள் தமது ஆசிரியர்களின் கால்களை கழுவி விடுவதும், அவர்களது பாதங்களில் பூக்களை கொட்டி பூஜை செய்வதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இதுபோல பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதங்களை கழுவி ஆசி பெறுவது என்பது ஒரு பத்தாண்டுகளாக இன்னும் பல பெயர்பெற்ற பள்ளிகள் வரை வந்து விட்டது. இதனை அனைத்துப் பள்ளிகளுக்கும் நீட்டிப்பதற்கான முயற்சியாகத்தான் மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது.

இந்த அறிவிப்பு குறித்து பல காங்கிரசு தலைவர்கள் கருத்து தெரிவிக்க தயங்குகின்றனர். காரணம் அதுவே ஒரு மிதவாத இந்துத்துவா கட்சிதான். சிபிஎம், சிபிஐ போன்ற கட்சிகள் இதனை கண்டித்திருந்தாலும், அக்கட்சி அணிகளே பண்பாடு என்ற முறையில் பார்ப்பனியத்தின் பழக்கங்கள் பலவற்றை ஏற்றுக் கொண்டே வாழ்கின்றனர். திருவண்ணாமலை தீபத்திற்கு தீக்கதிர் சிறப்பிதழ் போடும் போது குரு குல பூஜைகள் பெரிய அளவுக்கு பிரச்சினைகளாக இருக்காது.
ஆசிரியர் தினத்தன்று நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்சி பள்ளி மாணவர்களிடம் இணையம் மூலமாக பிரதமர் மோடி உரையாடியிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகளை எல்லா பள்ளிகளும் வீச்சாக செய்ததையும் இங்கே பொருத்திப் பார்க்கவேண்டும். இணைய வசதி, தடையற்ற மின்சார வசதி, அன்றைக்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களது கட்டாய வருகையை உறுதி செய்தல் ஆகியவற்றை முடித்து செப்டம்பர் 1-ம் தேதிக்குள் மத்திய அரசுக்கு ஒவ்வொரு பள்ளியும் அறிக்கை அனுப்ப வேண்டும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வழிகாட்டியிருக்கிறது.
இப்படி மாணவர்கள், பள்ளிகள் அனைத்தும் இந்துமதவெறியர்களின் பிடியில் சட்டபூர்வமாக மாற்றப்பட்டு வருகிறது. இவர்களது கருத்துக்களை பாடத்திட்டமாக, பாடத்துக்கு வெளியேயான நடைமுறையாக கொண்டு வளரும் மாணவர்கள் பின்காலத்தில் எத்தகைய மதவெறியைக் கொண்டிருப்பார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படி மோடி சிபிஎஸ்சி மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடியதை வரவேற்றுள்ள வைகோ மற்றும் ராமதாசு போன்றவர்கள் குரு உத்சவ் என்ற பெயர் மாற்றத்தை திரும்ப பெறும்படி கூட்டணிக் கட்சி என்ற முறையில் மத்திய அரசுக்கு வேண்டுகோளை முன் வைத்துள்ளனர். இந்த மானங்கெட்ட செயலுக்கு அவர்கள் மோடி காலிலேயே விழுந்து பூஜை செய்யலாம். மம்தா பானர்ஜியாவது மாணவர்களுடன் இணையம் மூலமாக பிரதமர் உரையாடுவதை விட பள்ளிகளில் தேவையான அளவு கழிப்பறைகளை கட்டித் தருவது முதன்மையானது என்று தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளத்தில் எந்த ஒரு சிபிஎஸ்சி பள்ளியிலும் பிரதமருடனான இணைய உரையாடல் நடைபெற விடாமல் கண்காணிக்க மாநில அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கெத்து கூட திராவிட இயக்கத் தலைவர்களுக்கு இல்லை.

திமுக தலைவர் கருணாநிதி குரு உத்சவ் என்ற இப்பெயர் மாற்ற முடிவை கடுமையாக கண்டித்திருந்தாலும், உடன்பிறப்புகளின் குழந்தைகளே இத்த்கைய பள்ளிகளில்தான் படிக்கின்றனர், ‘மக்கள் கருணாநிதியின் இந்த வெறுப்பு பேச்சை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அவர் ஏன் இவ்வளவு தூரம் கோபமடைகிறார் என்று தெரியவில்லை. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது தான் நமது மரபு. குருவிற்கு பிறகுதான் கடவுளையே வைத்திருக்கிறோம். அதனால் குருவுக்கு மரியாதை செலுத்துவதில் தவறில்லை’ என்று கூறியிருக்கிறார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன். மகாராஷ்டிராவை சேர்ந்த பாஜக எம்.பி இதுபற்றி கூறுகையில் ‘நமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் எல்லோருக்கும் ஏன் தயக்கம் என்றே தெரியவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்.
எதிர்ப்பவர்கள் தற்காப்பிலிருந்து பேசும்போது அமல்படுத்துபவர்கள் ஏறி அடிப்பது பிரச்சினையே இல்லை. இந்தியாவில் இந்து மதவெறியை வீழ்த்துவதற்கு இந்த மண்குதிரைகளை ஒருபோதும் நம்ப முடியாது என்பது இங்கே மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்து, இந்தி, இந்தியா என்ற தங்களது அகண்ட பாரத கனவில் வருணாசிரம தர்மத்தினை ஆயுதமாக கொண்டு செயல்பட விரும்புகின்றன இந்துத்துவா வானரங்கள். தற்போதைய கல்விமுறையில் ஜனநாயக அடிப்படையில் இன்னமும் மாற்றங்கள் தேவைப்படுவதாக பல கல்வியாளர்கள் சொல்லி வரும் வேளையில் குருவை அடிமைத்தனத்தோடு ஏற்றிப் போற்றும், கேள்வி கேட்காத கல்வியை, மாணவர்களை ஆர்.எஸ்.எஸ் உருவாக்க விரும்புகிறது. ஏபிவிபி என்ற அவர்களது மாணவர்களது அமைப்பே இதற்காகத்தான் செயல்பட்டு வருகிறது. குரு உத்சவ் என்பது குரு குலக் கல்வி முறையினைப் போற்றும், மீட்டெடுக்க முனையும் சனாதனவாதிகளின் கனவு. அதற்கு கல்லறை கட்டுவது ஜனநாயக வாதிகளின் கடமை.

கல்வி தனியார்மயமாகிய பிறகு கல்வி மறுக்கப்பட்ட மாணவர்கள் அதிகரித்து வருகின்றனர். கல்வி வழங்கும் இடத்தில் கல்வித் தந்தைகள் அதாவது முன்னாள் சாராய வியாபாரிகள், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் தான் அதிகம் இருந்து வருகின்றனர். அல்லது சினிமா கருப்புப் பண முதலைகள் தான் அதிகமும் இருந்து வருகின்றனர். பாஜகவின் கூட்டணியில் இருக்கும் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து, நீதிக்கட்சி சண்முகம் போன்ற கல்வி முதலாளிகளுக்கு இந்த குரு உத்சவை விட வேறு என்ன வேண்டும்?
கல்வி முதலாளிகளை எதிர்த்து போராடாமல் இருப்பதற்கு பார்ப்பனிய அடிமைமுறைகள் நன்கு பயன்படும்.
குரு உத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒய்.ஜி. பார்த்தசாரதி, லதா ரஜினிகாந்த், பச்சமுத்து, சாராய உடையார், ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு ஆகியோரின் கால்களை மாணவர்கள் கழுவி பூச்சொரிய வேண்டியிருக்கும்.
கல்வி தனியார்மயத்தை எதிர்ப்பதும், மாணவர்கள்-ஆசிரியர்கள் உறவில் ஜனநாயகத்திற்காக போராடுவதும் தான் குரு உத்சவ் என்ற இந்த இந்துத்துவா பண்டிகையின் நோக்கத்திற்கு சாவு மணி அடிப்பதாகும். மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் இதற்காக களம் காண வேண்டும்.
அமித் ஷாவை விடுவித்த சதாசிவத்திற்கு ஆளுனர் பதவி
- முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கேரள கவர்னர் பதவி!
- பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீதான கொலை வழக்கை ரத்து செய்ததற்கான வெகுமதி!
- நீதித்துறை மீதான மோடி அரசின் தொடர் அத்துமீறல்
அன்பார்ந்த நண்பர்களே!

06.09.2014 அன்று கேரள மாநில ஆளுநராக முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பதவி ஏற்றிருக்கிறார். இதை முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் அகமதி, பட்நாயக் உள்ளிட்ட பலரும் கண்டித்துள்ளனர். கேரள வழக்கறிஞர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பதவியில் இருக்கும் போதே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது போல் படம் காட்டிய நீதிபதி சதாசிவம் காங்கிரசுக்குப் பயந்து வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றினார். இவ்வழக்கை பாராளுமன்ற தேர்தல் ஆதாயத்திற்க்கு ஜெயலலிதா பயன்படுத்த உதவி செய்தார். ஓய்வு பெற்றபின் மகா கேவலமாக அரசு தரும் எந்தப் பதவியையும் ஏற்கத் தயார் என அறிவித்தார். இப்பேற்பட்ட பெருமைகள் கொண்ட நீதிபதி சதாசிவம் மோடி அரசின் கவர்னர் பதவியை ஏற்பதன் மூலம் பெயரளவுக்கு இருக்கும் நீதித்துறை சுதந்திரத்தையும் வீழ்த்தியுள்ளார்.
நீதிபதி சதாசிவம் ஓர் ஊழல் பேர்வழி என்பது ஊரறிந்த இரகசியம் என்றாலும் நீதிபதி சதாசிவத்திற்கு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் கள்ளக் கூட்டும் இவ்விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 8, 2013 அன்று துளசிராம் பிரஜாபதி என்பவரை போலி என்கவுண்டரில் சுட்டுக் கொன்றது தொடர்பான வழக்கில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீது சி.பி.அய் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், சவுகான் அடங்கிய அமர்வு. இவ்வழக்கின் பின்னணி மிகவும் கொடூரமானது. திகில் படங்களை மிஞ்சக் கூடியது.
2002 இனப்படுகொலையின்போது குஜராத்தில் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவுக்கு அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியுடன் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக, குஜராத் படுகொலை குறித்து விசாரணை நடத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் தலைமையிலான சிட்டிசன்ஸ் டிரிபியூனலின் முன், 2002 பிப்ரவரி 27 அன்று நடந்த காவல்துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியது என்ன என்பதை ஹரேன் பாண்டியா வாக்குமூலமாக தெரிவித்தார். இந்தத் தகவல் மோடிக்குத் தெரிந்ததைத் தொடர்ந்து மார்ச்23, 2003 அன்று பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். பழி முஸ்லீம் தீவிரவாதிகள் மீது போடப்பட்டது. இக்கொலை வழக்கில் மோடி அரசால் கைது செய்யப்பட்ட அஸ்கர் அலி உள்ளிட்ட 11 பேரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
கடந்த 2004-ம் ஆண்டு சபர்மதி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட் என்ற அதிகாரியிடம் அதே சிறையில் வைக்கப்பட்டிருந்த அஸ்கர் அலியும் மற்ற கைதிகளும் பாண்டியாவைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் சோரபுதீன் என்பவனின் கும்பலைச் சேர்ந்த துளசிராம் பிரஜாபதி என்பவன்தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிருக்கின்றனர். பாண்டியா கொலையில் சோரபுதீன் கும்பல் மட்டுமின்றி உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அரசுத் தலைமையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவற்றை அதிகாரபூர்வமான கடிதமாக எழுதி உள்துறை அமைச்சருக்கே அனுப்பியிருக்கிறார் பட்.
பின்னர் 2005-ம் ஆண்டு சோரபுதீன் ஷேக்கும் அவர் மனைவி கவுசர் பீவியும் போலி மோதலில் குஜராத் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டனர். “இந்தப் போலி மோதல் கொலையை” கண்ணால் கண்ட ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006-ம் ஆண்டு இன்னொரு போலி மோதலில் கொல்லப்பட்டான்.
அதன்பின் சோரபுதீன் கொலை வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் மோடி அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டார். 2010-ல் குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்த போது இதற்காக பதவி விலகிய அமித் ஷா உடனடியாக மத்திய புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டு மூன்று மாதம் சபர்மதி சிறையிலும் இருந்தார். நிபந்தனை பிணையில் வெளிவந்த அமித் ஷா இரண்டு ஆண்டுகள் குஜராத் மாநிலத்திற்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இப்போது, பாஜகவின் தேசியத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அமித் ஷா மீது போடப்பட்ட சோராபுதீன், துளசிராம் பிரஜாபதி ஆகியவர்களைக் கொன்ற போலி மோதல் வழக்குகளில் துளசிராம் பிரஜாபதி கொலை வழக்கின் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ததற்குத்தான் நீதிபதி சதாசிவத்திற்க்கு இன்று கவர்னர் பதவி பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே முன்வைத்துள்ளது. இதற்கு மோடியோ, அமித் ஷாவோ உரிய பதில் அளிக்கவில்லை.
மேற்குறிப்பிட்டது சதாசிவம் பதவி பெற்றதின் ஒரு பரிமாணம்.
சட்டப்படி தீர்ப்பளித்தார் சதாசிவம் என்று கருதும் சிலர் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-சங் பரிவார் கட்சியினர் கவர்னர் பதவிக்கு காவடி தூக்கிய நிலையில் நீதிபதி சதாசிவத்திற்கு இப்பதவி வழங்கப்பட்டதன் பின்னணியை விளக்க வேண்டும்.
இன்றைய மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி கடந்த ஆண்டு தனது வலைப்பக்கத்தில் எழுதியது “I have held a strong view that Judges of the Supreme Court and the High Courts must not be eligible for jobs in the Government after retirement. In some cases the pre-retirement judicial conduct of a judge is influenced by the desire to get a post retirement assignment”. இன்று இக்கருத்து மாறியதன் பின்னணியை அருண்ஜேட்லியும்,பி.ஜே.பி.யும் விளக்க வேண்டும்.
ஏற்கனவே உச்ச, உயர்நீதி மன்ற நீதிபதிகள் பலர் தமது பதவியின் இறுதிக் காலத்தில் அரசுக்கு சாதகமாக இருந்து கமிசன்கள், தீர்ப்பாயங்களில் பதவிகள் பெரும் நடைமுறை உள்ளது. அதன் அடுத்த நிலை ஆளுநர் போன்ற நேரடி அரசியல் நியமனங்களை ஏற்பது. ஏற்கனவே சட்ட ஆணையம் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசுப் பதவிகளை ஏற்கக் கூடாதென வலியுறுத்தியுள்ளது. அத்தனையையும் மீறி மோடி, சதாசிவத்திற்கு இப்பதவியை வழங்கியுள்ளார். மோடி அரசு நீதித்துறை சுதந்திரத்தின் மீது வீசிய முதல் குண்டு தனக்கெதிராக வழக்காடிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தை நீதிபதி ஆக விடாமல் தடுத்தது. அடுத்து கொலீஜியம் முறையை ஒழித்து தேசிய நீதித்துறை ஆணையம் என்ற பெயரில் நீதித்துறையை காவிமயமாக்க முயற்சிப்பது. மூன்றாவதாக நீதிபதி சதாசிவத்திற்கு கவர்னர் பதவி வழங்கியது.
இந்நடவடிக்கைகள் மூலம் மோடியும், அமித் ஷாவும் இந்திய நீதித்துறைக்கு சொல்லும் செய்தி இதுதான். எங்களை எதிர்த்தால் கோபால் சுப்பிரமணியத்திற்க்கு நேர்ந்ததுதான் உங்களுக்கும். ஆதரித்தால் சதாசிவம் போன்ற பதவி வெறிபிடித்தலையும் இழிபிறவிகளுக்கு கிடைத்தது போல பதவி கிடைக்கும்.
நீங்களும் தேர்வு செய்யுங்கள் இழிபிறவியாக வாழ்வதா? இல்லை அநீதிகளை எதிர்த்துப் போராடுவதா? என்பதை.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்திற்கு கேரள ஆளுநர் பதவி மோடி அரசால் வழங்கப்பட்டதைக் கண்டித்தும், பதவி பேரத்தின் பின்னணியான அமித் ஷா-மோடி-சதாசிவம் உறவை அம்பலப்படுத்தியும், நீதித்துறை மீதான மோடி அரசின் தொடர் அத்துமீறலைக் கண்டித்தும் மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை சார்பில் கடந்த 05.09.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை வாயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
துண்டறிக்கைகளை விநியோகம் செய்து கொண்டே தொடங்கிய ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் தலைமை தாங்கினார்.
நீதித்துறை மீதான மோடி அரசின் அத்துமீறலையும், நீதிபதி சதாசிவம்-அமித் ஷா-மோடி-கள்ள உறவை அம்பலப்படுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 30 வழக்கறிஞர்களும், மனித உரிமை பாதுகாப்பு மைய உறுப்பினர்களும், ஒத்தக்கடை சில்வர் பட்டறைத் தொழிலாளர்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மோடி அரசின் நீதித்துறை மீதான தொடர் தாக்குதலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் பலர் உரையாற்றினர்.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான பீட்டர் ரமேஷ்குமார், செயலாளர் ஏ.கே.மாணிக்கம், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேந்திரன், மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.ரத்தினம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க இணைச் செயலர் அப்பாஸ், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாராயணன், ராஜீவ் ரூபஸ் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
உரையின்போது, முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் எப்படிப்பட்ட ஊழல் பேர்வழி, பாலியல் பொறுக்கி என்பதைக் குறிப்பிட்டு, சதாசிவம் ஓய்வு பெற்ற பின் பதவிக்காக வெளிப்படையாக அலைந்து திரிந்ததையும், தற்போதைய கவர்னர் பதவி பேரத்தின் பேரில்தான் பெறப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டினர். மூவர் தூக்கு வழக்கிலும் சதாசிவத்தின் நடவடிக்கை சந்தேகத்திற்குரியதாக, காங்கிரசுக்கு ஆதரவாக இருந்ததாக சந்தேகித்தனர்.
மேலும் தடா சட்டத்திற்க்கு ஆதரவாக தீர்ப்பளித்ததற்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியனுக்கு 5-வது ஊதியக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டதையும், கூடங்குளம் வழக்கில் அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்ததற்கு முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணிக்கு பசுமைத் தீர்ப்பாயத்தில் பதவி வழங்கப்பட்டதையும், இன்னும் நீதிபதிகள் சவுகான், சொக்கலிங்கம், முருகேசன், பாசா உள்ளிட்ட பலருக்கு அரசுப் பதவிகள் வழங்கப்பட்டது, அரசுக்கு ஆதரவாக அவர்கள் தீர்ப்பு வழங்கியதற்கா? என்ற சந்தேகம் எழுப்பினர். நீதிபதிகள் ஓய்வு பெற்றபின் அரசு பதவிகளை ஏற்கக் கூடாது என வலியுறுத்தினர். நீதித் துறையை காவிமயமாக்கும் சதிக்கெதிரான மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தொடர் போராட்டத்தை பாராட்டிப் பேசினர்.
இறுதியாக ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டத் துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும் போது, “நீதிபதி சதாசிவம் ஓர் ஊழல் பேர்வழி என்பது ஊரறிந்த இரகசியம் என்றாலும் நீதிபதி சதாசிவத்திற்கு, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா- பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் கள்ளக் கூட்டும் இப்பதவி பேரத்தில் அம்பலமாகியுள்ளது. இக்குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே முன்வைத்துள்ளது. இதற்கு மோடியோ, அமித் ஷாவோ உரிய பதில் அளிக்கவில்லை.
2002 குஜராத் கலவரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் என ஒரு தவறும் செய்யாத அப்பாவி மக்கள் 2000 பேர் பி.ஜே.பி.யால் கொல்லப்பட்டனர். அதன் தொடர்ச்சிதான் துளசிராம் பிரஜாபதி என்பவரை போலி என்கவுண்டரில் குஜராத் போலீசு சுட்டுக் கொன்றது. இக்கொலை தொடர்பான வழக்கில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீது சி.பி.அய் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், சவுகான் அடங்கிய அமர்வு. இதற்கு பிரதிபலன்தான் கவர்னர் பதவி.
இப்பேரத்தில் மோடி-அமித் ஷா பங்கை யாரும் பேச மறுக்கிறார்கள். இதற்கு வெளிப்படையான விசாரணை தேவை. பா.ஜ.க சிறுபான்மை இனத்தைச் சர்ந்த மக்களுக்கு மட்டுமல்ல பார்ப்பான் தவிர அனைத்து சமூக மக்களுக்கும் எதிரி. பரமக்குடி துப்பாக்கிச் சூடு, தர்மபுரி நத்தம் காலனி, சிதம்பரம் நடராஜர் கோவில், நாடு முழுவதும் நடந்து வரும் தலித் மக்களின் ஆலய நுழைவுப் போராட்டங்கள் என எதையும் பா.ஜ.க.ஆதரித்ததில்லை. ஆனால் சங்கராச்சாரிக்கு ஆதரவாகப் போராடுகிறார்கள்.
இன்று நாடு பாசிசத்தை நோக்கிச் செல்கிறது. ஆர்.எஸ்.எஸ் நபர்கள் அனைத்துப் பதவிகளிலும் நியமிக்கப்படுகிறார்கள். நீதித் துறையை காவிமயமாக்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது. இதை எதிர்த்துப் பெரியார் பிறந்த மண்ணிலிருந்து போராட்டத்தை தொடங்குவோம். மோடி-அமித் ஷா-நீதித் துறை ஊழலுக்கு எதிராகப் போராடினால் ஊடகங்கள் செய்தி வெளியிட மறுக்கின்றன. மோடி-அமித் ஷாவிடம் அனைத்துக் கட்சிகளும், சகல ஊடகங்களும் சரணடைகிறார்கள். ஆனால் மனித உரிமை பாதுகாப்பு மையம் மக்களுக்கான தன் கடமையை எச்சூழலிலும் நிறைவேற்றும். எங்கள் உயிரைக் கொடுத்தாவது மோடியின் பாசிசத்தை தமிழகத்தில் முறியடிப்போம்” என்றார்.
இறுதியாக ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான ராஜசேகர் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல்:
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக் கிளை
98653 48163, 94434 71003
லிபியா – அமெரிக்காவின் மற்றுமொரு புதைகுழி ?
லிபியாவின் தலைநகர் திரிபோலியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தை லிபியா டான் (லிபிய விடியல்) என்ற இசுலாமிய குழுக்களின் படைகள் கைப்பற்றியிருக்கின்றன.

லிபியாவில், மிசுராத்தா என்ற கடலோர நகரத்தைச் சேர்ந்த இசுலாமிய போராளிகளைக் கொண்ட லிபிய விடியல் குழுவிற்கும், ஓடிப்போன ஜெனரல் காலிஃபா ஹிஃப்டருடன் சேர்ந்திருக்கும் கிழக்குப் பகுதி மற்றும் மேற்கத்திய மலை நகரமான சிந்தானைச் சேர்ந்த போராளிகள், கடாஃபியின் முன்னாள் வீரர்கள் ஆகியோருக்கும் இடையேயான உள்நாட்டுப் போர் தீவிரமடைந்திருக்கிறது.
எதிரெதிராக பிரிந்துள்ள ஆயுதம் தாங்கிய இந்த குழுக்களுக்கிடையேயான சண்டை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த ஜூலை மாதம் அமெரிக்க தூதரக அதிகாரிகள் லிபியாவை விட்டு அண்டை நாடான துனிசியாவுக்கு ஓடிவிட்டார்கள். நிலைமை மேம்படும் வரை தூதரக நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்திருந்தது.
முன்னதாக, 2012-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் அமெரிக்கத் தளம் ஒன்றில் நடந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ், கடற்படை அதிரடி வீரர்கள் டைரோன் வுட்ஸ், கிளென் டோரத்தி, வெளியுறவுத் துறை தகவல் தொடர்பு அதிகாரி சோன் ஸ்மித் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்.
இப்போது, லிபிய விடியல் குழு திரிபோலி விமான நிலையத்தை கைப்பற்றியிருக்கிறது. லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காசியில் ஜெனரல் காலிஃபா ஹிஃப்டரின் படைகளுக்கு எதிராக லிபிய விடியல் குழுவினர் வெற்றி பெற்று வருகின்றனர்.
திரிபோலி விமான நிலையத்தில் லிபிய விடியல் அமைப்பு கைப்பற்றிய 11 ஜெட் விமானங்கள் செப்டம்பர் 11, 2001-ல் அமெரிக்காவில் நடத்தப்பட்டது போன்ற தாக்குதல்களை நடத்த பயன்படுத்தப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்திருக்கிறது. இசுலாமிய குழுவினர் விமானங்களின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டு இணையத்தில் வெளியிடுகின்றனர். அவர்கள் வசம் ஏர்பஸ் 319 (பறக்கும் திறன் 3,700 நாட்டிக்கல் மைல்), ஏர்பஸ் 320 (3,300 நாட்டிக்கல் மைல்), ஏர்பஸ் 330 (4,000-7,000 நாட்டிக்கல் மைல்), ஒரு ஏர்பஸ் 340 (7,900 நாட்டிக்கல் மைல்) வகையிலான விமானங்கள் சிக்கியிருக்கின்றன. இந்த விமானங்களின் பறக்கும் திறன் லண்டன், பாரிஸ், வாஷிங்டன் டிசி, நியூயார்க் போன்ற மேற்கத்திய நகரங்களை எட்டும் அளவிலானது.

இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் அவரது நாடு, இது வரை இல்லாத அளவு தீவிரமான, ஆழமான பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக கூறிக் கொண்டு அமெரிக்கா தமது மூக்குகளையும், ஆயுதங்களையும் நுழைத்த லிபியா இன்று அராஜகத்திலும், வன்முறையிலும் மூழ்கிக் கொண்டிருப்பது குறித்து, தனது முன்னாள் தூதரக வளாகம் கூட இசுலாமிய தீவிரவாதிகள் வசம் போய் விட்டது குறித்து கருத்து கூறிய அமெரிக்க வெளியுறவுத் துறை கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சாதிக்கிறது.
“நாங்கள் செய்திகளையும், வீடியோக்களையும் பார்த்தோம், கூடுதல் விபரங்களை திரட்டிக் கொண்டிருக்கிறோம். இந்த நேரம் வரை தூதரக வளாகம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், கள நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்கிறார் ஒரு மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி. “லிபிய அரசுடனும் தொடர்புடைய மற்ற குழுக்களுடனும் தொடர்ந்து உரையாடி வருகிறோம். வாஷிங்டனிலிருந்தும், வலெட்டாவிலிருந்தும் தூதரக அதிகாரிகள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் அவர்.
லிபியாவுக்கான அமெரிக்க தூதர் டெபொரா ஜோன்ஸ், தூதரக வளாகம் கைப்பற்றப்பட்டதாகத்தான் தெரிகிறது, சூறையாடப்பட்டதாக தெரியவில்லை என்றும் ஜூலையிலேயே அந்த வளாகத்தை விட்டு போய் விட்டதால், அதை அமெரிக்காவின் இறையாண்மைக்குட்பட்ட பகுதி என கருத முடியாது என்று இன்னொரு அதிகாரியும் சப்பைக் கட்டு கட்டுகின்றனர்.
3 ஆண்டுகளுக்கு முன்பு லிபியாவின் அப்போதைய சர்வாதிகாரி முவாம்மர் கடாஃபிக்கு எதிரான இசுலாமிய குழுக்களுக்கு ஆயுதம் வழங்கி ஊக்குவித்தன நேட்டோ கூட்டமைப்பு நாடுகள். பெங்காசி நகரில் பெருமளவு படுகொலைகள் நடக்கவிருப்பதாக சொல்லி, அதை தடுப்பதற்காக லிபியாவில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதாகக் கூறி கடாஃபியின் படைகள் மீது வான்வழி, கடல் வழி தாக்குதல் நடத்தின.

இறுதியில் கடாஃபியின் தலைக்கு விலை வைத்த நேட்டோ நாடுகள் அவரை பிடித்து கொடூரமாக கொன்றொழித்த இசுலாமிய பயங்கரவாத படைகளை லிபியாவை விடுவிக்க வந்த ஜனநாயக சக்திகள் என்று போற்றினர்.
“பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர்” என்று இளைய புஷ் அறிவித்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது உலக ஆதிக்கத்தை நிலைநாட்டவும், எண்ணெய் வளங்களை கைப்பற்றவும் ஆரம்பித்து வைத்த போரில் பரிதாபமான முறையில் தோற்றுக் கொண்டிருக்கிறது. தனது உண்மையான நோக்கங்களை மறைத்து அமைதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டப் போவதாக பொய் சொல்லி தலையிட்ட ஆப்கானிஸ்தான், ஈராக், இப்போது லிபியா என அனைத்து நாடுகளும் தீராத உள்நாட்டு போரில் சிக்கியிருக்கின்றன. அமெரிக்கா திட்டமிட்டு வளர்த்து விட்ட இசுலாமிய பயங்கரவாத குழுக்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பை திசைதிருப்புகின்றன.
ஒருவகையில் இத்தகைய நாடுகள் இப்படி உள்நாட்டுச் சண்டையில் முடிவே இல்லாமல் சிக்கியிருப்பது அமெரிக்காவிற்கு உதவவும் செய்யும். அடிமைகளை இப்படி சண்டையிட்டுக் கொள்ள வைப்பது ஆதிக்கம் செய்பவனுக்கு தொந்தரவாக மாறாது. அதே நேரம் அமெரிக்காவின் பிரச்சினையே வேறு.
2001-ம் ஆண்டுக்குப் பிறகு லிபிய சர்வாதிகாரி முவாம்மர் கடாஃபி மேற்கத்திய கோரிக்கைகளுக்கு அடிபணிந்து, லிபியாவின் அணுஆயுத திட்டத்தை கண்காணிப்புக்கு உட்படுத்தி, லிபியாவில் மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்கள் நுழைய அனுமதி அளித்தார். ஆனால், முழுமையாக பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு சரணடையவில்லை என்பது அமெரிக்காவின் பிரச்சனை.
அமெரிக்கா கொண்டு வருவதாகச் சொன்ன ஜனநாயகமும் சுதந்திரமும் அந்த மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களுக்கானவைதான். கடாஃபியின் ஆட்சியின் கீழ் லிபிய தேசிய எண்ணெய் கழகத்திடம் உரிமம் பெற்று தொழில் செய்ய வேண்டிய அவர்களது அடிமை நிலையை ஒழித்து, லிபியாவின் எண்ணெயை எடுத்து விற்பதற்கான ஜனநாயக உரிமையை ஈட்டிக் கொடுப்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாக இருந்தது ஆதாரங்களின் மூலம் அம்பலமானது.
ஈராக்கில், “சாதித்து விட்டோம்” என்று இளைய புஷ் அறிவித்தது போன்று லிபியாவில் கடாஃபி வீழ்ந்தவுடன், “நான் அனைவரும் சேர்ந்து வெற்றியை சாதித்திருக்கிறோம்” என்று அறிவித்தார் நேட்டோ தலைவர். ஆனால், அமெரிக்காவின் ஏகாதிபத்திய விரிவாக்க நடவடிக்கைகள் ஈராக்கைப் போலவே லிபியாவையும் வன்முறை சுழலுக்குள் ஆழ்த்தியுள்ளன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ராணுவ பலமும் தொழில்நுட்ப வல்லமையும், உலகையே அதற்க்கு அடிமையாக்கும் நோக்கத்துக்கு உதவப் போவதில்லை. ஏகாதிபத்தியங்கள் வெறும் காகிதப் புலிதான் என்பதும் லிபியாவிலும் நிரூபணம் ஆகிக் கொண்டிருக்கின்றது. மற்றொரு புறம் அமெரிக்கா உதவியுடன் விடுதலை பெற்றதாக கூறப்படும் நாடுகளின் யோக்கியதை என்ன என்பதை லிபியாவின் நிலையிலிருந்தும் புரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
- Pictured: Libyan Islamist rebels pose with planes seized from Tripoli airport as U.S. officials warn they could be used to carry out terrorist attack on 9/11
- Inside the US Embassy Annex in Libya Overrun by Islamic Militia
- Libyan Militias Seize Control of Capital as Chaos Rises
- ISIS, Libya, NATO, and Preventing the Next 9/11
- Islamic militia group says it has ‘secured’ US compound in Libya
இந்தோனேஷியா முசுலீம் அறிஞர் பெயர் லெட்சுமணன்
மக்கள் கலை இலக்கியக் கழகம் 2003-ம் ஆண்டு பிப்ரவரி 22,23 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தி பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளிலிருந்து…
மொகலாய ஆட்சிக்குட்படாத பகுதிகளில்தான் அதிகமான மதமாற்றம் நடந்துள்ளது
இர்பான் அலி எஞ்சினியர்
“இசுலாமிய மக்களும் இசுலாமிய பயங்கரவாதமும்” எனும் தலைப்பில், மும்பய் நகரில் செயல்பட்டு வரும் “சமூகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான ஆய்வு மையம்” என்ற அமைப்பின் உறுப்பினரும் வழக்குரைஞருமான திரு. இர்ஃபான் அலி எஞ்சீனீயர் உரையாற்றினார். “பயங்கரவாதம், தீவிரவாதம் என்பதெல்லாம் மக்கள் சார்ந்தவையாக இருப்பதில்லை; அரசுதான் பயங்கரவாதியாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுத் தனது உரையைத் தொடங்கினார்.

“முசுலீம்கள் முரட்டுத்தனமான மத நம்பிக்கை கொண்டவர்கள்; மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள்; இறுக்கமான மதச் சமூகம் முசுலீம் சமூகம். முசுலீம்களின் நாட்டுப்பற்று சந்தேகத்திற்குரியது; முசுலீம் மதமும், கிறித்தவ மதமும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்ததால், அவர்கள் இந்தியாவிற்கு விசுவாசமானவர்களாக இருப்பதில்லை.”
-இந்தப் பொய்களை ஆர்.எஸ்.எஸ். 365 நாட்களும் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகிறது. பெருவாரியான மக்களும் கூட இந்தப் பொய்களை உண்மையென்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், உண்மை மாறானது என்பதற்கு அநேக உதாரணங்களைத் தர முடியும்.
எனது தந்தை – திரு. அஸ்கர் அலி எஞ்சினீயர் கேரள முசுலீம்களின் வாழ்க்கையை ஆய்வு செய்தபொழுது, கேரளாவைச் சேர்ந்த ஒரு முசுலீம் பெண்ணை மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு பேட்டி காணச் சென்றார். அப்பொழுது அந்தப் பெண் மொழி பெயர்ப்பாளரிடம், “மலையாளம் தெரியாத இவர் எப்படி முசுலீமாக இருக்க முடியும்!” எனக் கேட்டார். அப்பெண்ணைப் பொறுத்தவரை மலையாள மொழியையும், முசுலீம்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.
நான் சார்ந்திருக்கும் சமூகம் மற்றும் மதச் சார்பின்மைக்கான ஆய்வு மையத்தின் கூட்டத்தில், “வழிபாட்டு முறையைத் தவிர, வேறெந்த விதத்தில் ஒரு மனிதனின் மதத்தைக் கண்டுபிடிக்க முடியும்” என்ற கேள்வியைக் கேட்டபொழுது, பலரும் பெயரை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்றார்கள்.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த, புகழ்பெற்ற முசுலீம் மார்க்க அறிஞரின் பெயர் லெட்சுமணன். லெபனான் நாட்டில் வாழும் கிறித்தவர்களின் பெயர்களைக் கேட்டால் அவர்களை முசுலீம் என்று நீங்கள் கருதக்கூடம். அப்துல்லா போன்ற பெயர்கள் முசுலீம் மதப் பெயர்கள் அல்ல. அவைகள் அரேபிய மொழிப்பெயர்கள்.
“அடுத்ததாக, தாடி வைத்திருந்தால், அவன் முசுலீம் என்றார்கள். ஆர்.எஸ்.எஸ். காரர்களால் தேசிய விரனாகக் கொண்டாடப்படும் சிவாஜிகூட தாடி வைத்திருந்தார். அதனால் அவர் முசுலீமாகி விடுவாரா?”
அரியானா மாநிலத்தில் உள்ள மேவார் பகுதியில் வாழும் மியோ முசுலீம்கள், மகாபாரத, இராமாயணக் கதைகளைக் கூறுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். மியோ முசுலீம்கள், இந்து முறைப்படி நெருப்பை ஏழுமுறை வலம் வந்தும், இசுலாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இசுலாமிய நெறிமுறைகளைக் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்க வேண்டும் எனப் போதிக்கும் தப்லீக் இயக்கம், மியோ முசுலீம்களை, ‘உண்மையான’ முசுலீம்களாக மாற்ற முயன்றபொழுது, ‘மியோ முசுலீம் மியோவாகவே வாழ்வான்’ எனக் கூறித் திரும்பி அனுப்பிவிட்டனர்.
1980-களில் விசுவ இந்து பரிசத், மியோ முசுலீம்களை இந்துவாக்க முயன்று தோற்றுப் போனது.
குஜராத்தைச் சேர்ந்த பரிணாம் பந்தி முசுலீம்கள் இசுலாமிய -இந்து பாரம்பரியப்படி வாழ்ந்து வருகின்றனர். அந்த முசுலீம் குடும்பங்களில் அண்ணன் குடுமி வைத்திருந்தால், தம்பி தாடி வைத்திருப்பான். இறந்து போனவர்களைப் புதைக்கவும் செய்வார்கள்; எரிக்கவும் செய்வார்கள். அவர்களின் மதக் கோட்பாடு, கீதை, குரான் இரண்டும் கலந்தது. அவர்களின் மதப் புனித நூலை பரிணாம் பந்தி முசுலீம்களைத் தவிர, பிற முசுலீம்கள் கூடத் தொடமுடியாது.
மொகலாய மன்னர்கள் வாள் முனையில் கட்டாயமாக மதம் மாற்றினார்கள் என்பது ஆர்.எஸ்.எஸ்.-இன் குற்றச்சாட்டு. ஆனால் உண்மை என்னவென்றால், மொகலாய ஆட்சிக்கு உட்பட்ட தில்லி, ஆக்ரா பகுதிகளை விட அந்த ஆட்சிக்கு உட்படாத எல்லைப் பகுதிகளில் வங்காளம், பஞ்சாப், எல்லைப்புற மாகாணம் ஆகிய இடங்களில்தான் பெருவாரியான மதமாற்றம் நிகழ்ந்துள்ளது.
சூஃபி ஞானிகள் மனிதத்துவத்தையும், அன்பே கடவுள் என்றும், எல்லோரும் கடவுளை வழிபடலாம் என்றும் போதித்ததுதான் சூத்திர சாதி மக்களை இசுலாத்தை நோக்கி ஈர்த்தது. மத மாற்றம் மேல்சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1981-இல் நடந்த மீனாட்சிபுர மதமாற்றம்.
கலாச்சார மாற்றம் இரண்டு அரசியல் காரணங்களுக்காக நடக்கிறது. முசுலீம் மதத்திலுள்ள மேல் சாதியினருக்கு ஷெரீப் முசுலீம்கள் என்று பெயர். ஓரளவு வசதி வாய்ப்பு வரப் பெற்ற கீழ்ச் சாதியைச் சேர்ந்த நடுத்தர வர்க்க முசுலீம்கள், ஷெரீப் முசுலீம்கள் போல மாற விரும்புகின்றனர். உடனே, தங்கள் வீட்டுப் பெண்கள் பர்தா அணிய வேண்டும் எனக் கட்டாயப் படுத்துகின்றனர். இரண்டாவதாக, இந்து மதவெறியர்களின் தாக்குதல், சில முசுலீம்களை மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள் பக்கம் தள்ளிவிடுகிறது.
இந்த முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். ஆனால், இந்த எண்ணிக்கை வளர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது; ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ்.-இன் வளர்ச்சியும், முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் வளர்ச்சியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன.
____________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003
____________________________
புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்
1. ரவுடிகளை வீழ்த்திய பு.ஜ.தொ.மு – புதுச்சேரி வரலாற்றில் புதிய திருப்பம் !
2. குண்டர் சட்டத் திருத்தம் : திறந்தவெளி சிறைச்சாலையாகும் தமிழகம் !
3. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம்…. அம்மா சாராயம் எப்போது?
அம்மா திட்டங்கள் அனைத்தும் தனியார்மயக் கொள்ளைக்கு எதிராக மக்களின் கோபம் வெடித்துவிடாமல் காப்பாற்றும் பாதுகாப்பு வால்வுகள்.
4. ஜனநாயக வெறுப்பில் விஞ்சி நிற்பது யார்? மோடியா? லேடியா?
சட்டமன்றத்தில் 110-ம் விதியின் கீழ் மட்டுமே அறிக்கை வாசிக்கும் அம்மா; நாடாளுமன்றத்தில் காட்சி தருவதற்குக் கூட நேரமில்லாத செயல்வீரர் மோடி; சபாஷ், சரியான போட்டி!
5. உணவு மானியம் : மோடியின் கபடத்தனம் காங்கிரசை விஞ்சுகிறது!
உலக வர்த்தகக் கழகக் கூட்டத்தில் ஏழை விவசாயிகளின் நலன் பற்றிப் பொளந்து கட்டிய மோடி அரசு, உள்நாட்டில் மானியங்களை வெட்டுவதைத் தீவிரப்படுத்தி வருகிறது.
6. நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் : தனியார்மயம் – காவிமயத்துக்கு ஏற்ப நீதித்துறை மறுவார்ப்பு!
இச்சட்டத்தால் மக்களுக்கு நீதி கிடைக்கப் போவதில்லை. மாறாக, மோடி அரசு நீதித்துறையைக் காவிமயமாக்குவதற்கு மட்டுமே பயன்படும.
7. கால்டுவெல் : சமஸ்கிருத ஆதிக்கம், இந்துத்துவத் திணிப்புக்கு எதிரான போர்வாள்!
8. பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்குக் கட்டாய ஓய்வு : பொதுத்துறையைப் பாதுகாக்காமல் வேலையை மட்டும் பாதுகாக்க முடியுமா?
இத்தனியார்மயத் தாக்குதலை எதிர்த்து தொழிலாளர்கள் கலகத்தில் இறங்காமல், அமைதியாக இருப்பது தற்கொலைக்கு ஒப்பானது.
9. மணிப்பூர் : இராணுவத்தின் குற்றத்தை விசாரிப்பவனும் குற்றவாளியாம்?
10. சன்னி மார்க்க ஐ.எஸ்.ஐ பயங்கரவாதிகள் : இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!
இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளால் முன்வைக்கப்படும் இஸ்லாமிய சர்வதேசியம், முஸ்லிம் மக்களையே பிளவுபடுத்துவதுடன் அவர்களை மத்தியகால அடிமைத்தனத்திற்குள்ளேயும் தள்ளிவிடும்.
11. வண்ணப் புரட்சிகள் : “மேட் இன் அமெரிக்கா!”
அமெரிக்கா தனது இராணுவத்தைக் கொண்டு மட்டுமல்ல, சர்வதேசத் தொண்டு நிறுவனங்களைக் கொண்டும் ஆட்சி மாற்றங்களை நடத்தியிருக்கிறது, நடத்தும்.
12. பன்னாட்டு முதலாளிக்கு சுதந்திரம் ! பணிபுரியும் தொழிலாளிக்கு குண்டாந்தடி!!
13. முகேஷ் அம்பானி, லட்சும மிட்டல், திலிப் சாங்வி, அஸிம் பிரேம்ஜி, பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்திரி :
கோடீசுவரக் கொள்ளையர்கள்!
புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு சுமார் 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.
நயவஞ்சகன் இராமன் – டாக்டர் அம்பேத்கர்
இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 1
இராமன், வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணத்தின் கதைத் தலைவன். இராமாயணக் கதையே மிகச் சுருக்கமானது தான். இராமாயணக் கதை எளியது, நயமானது என்பது தவிர வேறு சிறப்பு எதுவும் அதில் இல்லை.

தற்காலத்தில் வாரணாசி என வழங்கும் அயோத்தியை ஆண்டு வந்த மன்னன் தசரதனின் மகன் இராமன். தசரதனுக்கு கௌசல்யா, கைகேயி, சுமித்ரா என மனைவியர் மூவர் இருந்தனர். இவர்களைத் தவிர நூற்றுக்கணக்கான வைப்பாட்டிகளைத் தசரதன் தன் ஆசை நாயகிகளாக கொண்டிருந்தார். கைகேயி தசரதனைத் திருமணம் செய்து கொண்ட போது இன்னதென்று குறிப்பிடாத ஒரு நிபந்தனையை விதித்திருந்தார். கைகேயி விரும்பிக் கேட்கும்போது மன்னன் தசரதன் அவள் விரும்பியதை நிறைவேற்ற வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
தசரதனுக்கு நெடுங்காலமாக பிள்ளைப் பேறு இல்லாமல் இருந்தது. தனக்குப் பின் ஆட்சி பொறுப்பேற்பதற்கு ஒரு வாரிசு தேவையென்று தசரதன் பெரிதும் விரும்பினார். தன்னுடைய மனைவியர் மூவர் மூலமாக ஒரு மகன் பிறப்பான் என்ற நம்பிக்கை இல்லாமற் போனதால், பிள்ளைப் பேற்றுக்காக புத்திர காமேஷ் யாகம் நடத்த முடிவு செய்தார். அதன்படி சிருங்கன் என்னும் முனிவரை அழைத்து யாகம் வளர்த்து அதன் முடிவில் மூன்று பிண்டங்களைப் பிடித்துத் தன் மனைவியர் மூவருக்கும் கொடுத்து உண்ணச் செய்தார். அப்பிண்டங்களை உண்ட மூவரும் கருத்தரித்துப் பிள்ளைகளைப் பெற்றனர். கௌசல்யா இராமனைப் பெற்றாள். கைகேயி பரதனைப் பெற்றாள். சுமித்ராவுக்கு இலட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய இரட்டையர் பிறந்தனர்.
இவர்கள் வளர்ந்து பிற்காலத்தில் இராமன் சீதையை மணந்தான். இராமன் ஆட்சிப் பொறுப்பேற்கும் வயதை அடைந்த போது இராமனுக்கு முடிசூட்டி மன்னர் பதவியில் அமர்த்தி விட்டு, தான் அரசு பொறுப்பிலிருந்து விலகி ஓய்வு எடுத்துக் கொள்ளலாமென்று தசரதன் எண்ணினான். இந்த வேளையில், தன் திருமணத்தின் போது தசரதன் தனக்கு வாக்களித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றித் தருமாறு கைகேயி பிரச்சினையைக் கிளப்பினாள். மன்னன் அவளுடைய விருப்பம் யாது எனக் கேட்டபோது, இராமனுக்குப் பதிலாக தன் மகன் பரதனுக்கு முடிசூட்ட வேண்டும், இராமன் 12 ஆண்டுகள் காட்டில் வனவாசம் செய்ய வேண்டும் என்று கைகேயி கூறினாள். மிகுந்த சஞ்சலத்திற்குப் பின் தசரதன் அவளது விருப்பத்தை நிறைவேற்ற இசைந்தான். பரதன் அயோத்தியின் மன்னனானான். இராமன் தன் மனைவி சீதையோடும் தன் சிற்றன்னையின் மகன் இலட்சுமணனோடும் வனவாசம் போனான்.
இவர்கள் மூவரும் காட்டில் வாழ்ந்திருந்த போது இலங்கையின் மன்னன் இராவணன் சீதையைக் கவர்ந்து கொண்டு போய் அவளைத் தன் மனைவியருள் ஒருத்தியாக்கிக் கொள்ளும் நோக்கத்தில் அரண்மனையில் வைத்தான். காணாமற்போன சீதையை இராமனும், இலட்சுமணனும் தேடத் தொடங்கினர். வழியில் வானர இனத் தளபதியான சுக்ரீவனையும், அனுமானையும் சந்திக்கின்றனர். அவர்களோடு தோழமை கொள்கின்றனர். அவர்களுடைய உதவியுடன் சீதை இருக்குமிடத்தை அறிகிறார்கள். இலங்கை மீது படையெடுத்து இராவணனுடன் போரிட்டுத் தோற்கடித்து சீதையை மீட்டு வருகின்றனர். இராமன், இலட்சுமணன், சீதை ஆகியோர் அயோத்திக்குத் திரும்புகின்றனர். அதற்குள் கைகேயி விதித்திருந்த 12 ஆண்டு கெடு முடிந்து விடுகின்றது. அதன்படி பரதன் பதவி விலகுகிறான். இராமன் அயோத்தியின் மன்னனாகின்றான்.
வால்மீகி கூறும் இராமாயணக் கதையின் சுருக்கம் இதுதான்.
இராமன் வழிபட்டு வணங்குவதற்கு உரியவன் என்னும் அளவிற்கு இந்தக் கதையில் எதுவுமில்லை. இராமன் கடமையுணர்வுள்ள ஒரு மைந்தன், அவ்வளவுதான். ஆனால் வால்மீகியோ, இராமனிடம் தனிச்சிறப்பான அருங்குணங்கள் உள்ளதெனக் கருதி அவற்றை சித்தரித்துக் காட்ட விரும்புகிறார். அவர், நாரதரிடம் கேட்கும் கேள்வியிலிருந்து இந்த விருப்பம் புலப்படுவதைக் காணலாம் (பால காண்டம், சருக்கம் 1, சுலோகங்கள் 1-5):
‘’நாரதா, நீயே சொல் – இன்றைய உலகில் உயர் பண்புகள் நிறைந்தவன் யார்?’’ – இது வால்மீகி கேள்வி, அவர் கருதும் உயர் பண்புகள் எவை என்பது பற்றி விளக்குவதாவது:
‘’வல்லாண்மையுடைமை, மதத்தின் நுட்பங்களை அறிந்திருத்தல், நன்றியுடைமை, உண்மையுடைமை, சமய ஆச்சாரங்களை நிறைவேற்றுவதற்கு மேற்கொண்ட விரதங்களை உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் இழந்து துன்புற நேர்ந்த போதிலும் கைவிடாமை, நல்லொழுக்கம், அனைவரின் நலன்களையும் காப்பதற்கு முனைதல், தன்னடக்கத்தால் எவரையும் கவர்ந்திழுக்க வல்ல ஆற்றல், சினம் காக்கும் திறம், பிறர்க்கு எடுத்துக்காட்டாக விளங்குதல், பிறராக்கம் கண்டு அழுக்காறு கொள்ளாமை, போர்க்களத்தில் கடவுளர்களை கதிகலங்கச் செய்யும் பேராற்றல்’’ ஆகியவை.
இவற்றைக் கேட்டு ஆழ்ந்து யோசித்துப் பதில் சொல்வதற்கு சற்று கால அவகாசம் கேட்ட நாரதர், இந்தப் பண்புகளையெல்லாம் பெற்றிருப்பவன் என்பதற்கு தக்கவன் தசரத குமாரன் இராமன் ஒருவனே என்கிறார்.
இந்தப் பண்புகளையெல்லாம் பெற்றிருப்பதால் தான் இராமன் தெய்வமாகப் போற்றிப் பூசிக்கத் தக்கவனாகின்றான் என்கின்றனர்.
ஆனால் இராமன் இத்தகைய பூசனைக்குத் தக்கவனா? இராமனுடைய பிறப்பே அதிசயமாக உள்ளது. சிருங்க முனிவரும் கௌசல்யாவும் கணவன், மனைவி என்ற உறவு கொண்டிருக்கவில்லையாயினும் இந்த முனிவன் மூலம் தான் கௌசல்யா இராமனைப் பெற்றெடுத்தாள் எனத் தெளிவாகத் தெரியும் ஓர் உண்மையை மூடி மறைப்பதற்காகவே சிருங்க முனிவன் பிடித்துக் கொடுத்த பிண்டத்தின் மூலம் கௌசல்யா இராமனைப் பெற்றெடுத்தாள் என்று சொல்லப் பட்டிருக்கலாம். இராமனுடைய பிறப்பில் களங்கம் எதுவுமில்லை என்று வாதிக்கப்பட்ட போதிலும், அவனது தோற்றம் இயற்கைக்கு முரணானது என்பது உறுதியாகின்றது.
இராமனுடைய பிறப்புத் தொடர்பான மறுக்க முடியாத அருவெறுப்பான வேறு பல நிகழ்ச்சிகளும் உள்ளன.
இராமாயணக் கதையின் தொடக்கத்திலேயே தசரதனின் மகன் இராமனாகப் பிறப்பதற்கு உடன்பட்டும் அதன்படி விஷ்ணுவே இராமனாக அவதரித்ததாக வால்மீகி கூறுகிறார். இதனைப் பிரம்மதேவன் அறிகின்றான். விஷ்ணு இராமாவதாரம் எடுத்துச் சாதிக்கவிருக்கும் காரியங்கள் யாவும் வெற்றியுடன் முடிய வேண்டுமானால் அவனோடு ஒத்துழைத்து உதவக் கூடிய வல்லமை மிக்க துணைவர்கள் இருக்க வேண்டும் என்பதையும் பிரம்மன் உணர்கின்றான். ஆனால் அத்தகைய துணைவர்கள் எவரும் அப்போது இருக்கவில்லை.
இந்தத் தேவையை நிறைவேற்றுவதற்காக கடவுள்கள், பிரம்ம தேவனின் கட்டளையை ஏற்று விலைமாதர்களான அப்சரசுகள் மட்டுமின்றி யக்ஷர்கள், நாகர் ஆகியோரின் மணமாகாத கன்னிப் பெண்கள் மட்டுமின்றி முறையாக மணமாகி வாழ்ந்து கொண்டிருந்த ருக்ஷா, வித்யாதர், கந்தர்வர்கள், கின்னரர்கள், வானரர்கள் ஆகியோரின் மனைவியரையும் கற்பழித்து, இராமனுக்கு துணையாக அமைந்த வானரர்களை உருவாக்கினர்.
இத்தகைய வரம்பு மீறிய ஒழுக்கக்கேடானது இராமனுடைய பிறப்பு அல்ல என்றாலும், அவனுடைய துணைவர்கள் பிறப்பு அருவெறுப்புக்குரியது. இராமன், சீதையை மணந்ததும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. பௌத்தர்களின் இராமயணத்தின்படி சீதை, இராமனின் சகோதரியாவாள். சீதையும், இராமனும் தசரதனுக்கு பிறந்த மக்கள். பௌத்த இராமாயணம் கூறும் இந்த உறவு முறையை வால்மீகி இராமாயணம் ஏற்கவில்லை. வால்மீகியின் கூற்றுப்படி விதேக நாட்டு மன்னனான ஜனகனின் மகள் சீதை என்றும், அவள் இராமனுக்கு தங்கை உறவு உடையவள் அல்ல என்றும் ஆகின்றது. சீதை ஜனகனுக்கு பிறந்த மகள் அல்லவென்றும், உழவன் ஒருவன் தன் வயலில் கண்டெடுத்து ஜனகனிடம் அளித்து வளர்க்கப்பட்ட வகையிலேயே சீதை ஜனகனுக்கு மகளானாள் என்றும் கூறப்பட்டிருப்பதால் வால்மீகி இராமாயணத்தின் படியே கூட சீதை, ஜனகனுக்கு முறையாகப் பிறந்த மகள் அல்ல என்றாகிறது. எனவே பௌத்த இராமாயணம் கூறும் கதையே இயல்பானதாகத் தோன்றுகின்றது.

அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்கு தக்கது அல்ல எனலாம். இராமன் ‘ஏக பத்தினி விரதன்’ என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது. இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது. வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்.
இனி இராமன் ஒரு மன்னன் என்ற அளவிலும், ஒரு தனி மனிதன் என்ற முறையிலும் அவனுடைய குணநலன்களைக் காண்போம். இராமன் ஒரு தனி மனிதன் என்ற வகையில் அவனுடைய வாழ்வின் இரு நிகழ்ச்சிகளை மட்டுமே குறிப்பிட விரும்புகிறேன். ஒன்று வாலி தொடர்புடையது; மற்றொன்று இராமன் தன் மனைவி சீதையை நடத்திய விதம் பற்றியது. முதலில் வாலி தொடர்பான நிகழ்ச்சியைப் பார்ப்போம்.
வாலி, சுக்ரீவன் ஆகிய இருவரும் சகோதரர்கள். கிஷ்கிந்தையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் வானர இனத்தைச் சேர்ந்தவர்கள். இராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு போன போது, வாலி கிஷ்கிந்தையை ஆண்டு கொண்டிருந்தான். இதற்கு முன் வாலி மாயாவி என்று இராட்சசனோடு போரிட நேர்ந்தது. வாலி-மாயாவி ஆகியோருக்கு இடையே நடந்த போரில் மாயாவி தப்பிப் பிழைத்தால் போதுமென்று தோற்று ஓடினான். வாலியும், சுக்ரீவனும் மாயாவியை துரத்திச் சென்றனர்.
மாயாவி ஒரு மலைப் பிளவில் ஓடி ஒளிந்து கொண்டான். வாலி, சுக்ரீவனை அந்தப் பிளவின் வாயிலில் நிற்கச் சொல்லி விட்டு உள்ளே சென்றான். சற்று நேரத்திற்குப் பின் அந்தப் பிளவிலிருந்து உதிரம் வடிந்தது. இதைக் கண்ட சுக்ரீவன் தன் அண்ணன் வாலி மாயாவியால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று தானே முடிவு செய்து கொண்டு, கிஷ்கிந்தைக்குத் திரும்பி வந்து தன்னை அரசனாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு, தனக்கு தலைமை அமைச்சனாக அனுமனை நியமித்துக் கொண்டு அரசாளத் தொடங்கினான்.
ஆனால் வாலியோ உண்மையில் கொல்லப்படவில்லை. வாலியால் மாயாவிதான் கொல்லப்பட்டான். மாயாவியை கொன்றுவிட்டு, மலைப்பிளவிலிருந்து வெளிவந்த வாலி, தான் நிற்கச் சொன்ன இடத்தில் தம்பி சுக்ரீவன் இல்லாததை அறிந்து கிஷ்கிந்தைக்குச் செல்கிறான். அங்கு சுக்ரீவன் தன்னை மன்னனெனப் பிரகடனப் படுத்திக் கொண்டு ஆட்சி செய்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றான். தன் தம்பி சுக்ரீவன் செய்த துரோகத்தை எண்ணிய வாலிக்கு இயல்பாகவே கடுங்கோபம் ஏற்படுகின்றது.
மலைப் பிளவில் வாலிதான் கொல்லப்பட்டானா என்பதைத் தெரிந்து கொள்ள சுக்ரீவன் முயன்றிருக்க வேண்டும். வாலிதான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனத் தானாகவே அனுமானித்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி வாலியே கொல்லப்பட்டிருந்தாலும் வாலியின் முறைப்படியான வாரிசாக உள்ள அவனுடைய மகன் அங்கதனையே அரியணையில் அமர்த்தி இருக்க வேண்டியது சுக்ரீவனின் கடமை. இந்த இரண்டில் எதையும் செய்யாத சுக்ரீவனின் செயல் அப்பட்டமான அபகரிப்பே ஆகும். எனவே வாலி, சுக்ரீவனை விரட்டிவிட்டு மீண்டும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டான். இதனால் அண்ணனும் தம்பியும் பரம எதிரிகளாகின்றனர்.
இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த சில காலத்திற்கு பின், காணாமற் போன சீதையைத் தேடிக் கொண்டு இராமனும், இலக்குவனும் காடு, மலைகளில் சுற்றித் திரிகின்றனர். அதே வேளையில் சுக்ரீவனும் அவனுடைய தலைமை அமைச்சன் அனுமனும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு உதவக்கூடிய நண்பர்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எதிர்பாராத வகையில் இவ்விரு அணியினரும் காட்டில் சந்திக்கின்றனர். இரு அணியினரும் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைப் பறிமாறிக் கொள்கின்றனர். அவர்களுக்கு இடையே ஓர் உடன்பாடு ஏற்படுகின்றது. அதன்படி, சுக்ரீவன் தன் சகோதரனான வாலியைக் கொன்று ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இராமன் உதவிட வேண்டும், அதே போல காணாமற்போன தன் மனைவி சீதையை இராமன் பெறுவதற்கு வானரர்களான சுக்ரீவனும், அனுமனும் உதவிட வேண்டும் என்று முடிவாகின்றது.

வாலியும், சுக்ரீவனும் தனிப் போரில் ஈடுபட வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். இவர்கள் இருவரும் வானரர்கள் ஆதலால் சுக்ரீவன் யார், வாலி யார் என்று அடையாளம் கண்டு கொள்வதற்கு சுக்ரீவன் தன் கழுத்தில் ஒரு மாலையை அணிந்து கொள்ள வேண்டும். அவர்கள் இருவரும் போரிடும்போது, இராமன் ஒளிந்திருந்து அம்பு எய்தி வாலியைக் கொன்று விட வேண்டும் என்று திட்டம் வரையறுக்கப்படுகின்றது. இதன்படியே வாலியும் சுக்ரீவனும் சண்டையிடுகின்றனர். சுக்ரீவன் கழுத்தில் மாலையை அணிந்து கொண்டிருந்தான். மரத்தின் பின்னால் மறைந்திருந்த இராமன் வாலியை அடையாளம் கண்டு அம்பு எய்கிறான். அதனால் வாலி இறக்கின்றான்.
இதன் மூலம் சுக்ரீவன் கிஷ்கிந்தைக்கு அரசனாகும் வாய்ப்பு ஏற்படுகின்றது. வாலியின் படுகொலை இராமனுடைய நடத்தையில் படிந்த மாபெரும் களங்கமாகும். இராமனின் கோபத்திற்கு ஆளாகக் கூடிய எந்தக் குற்றத்தையும் செய்யாத வாலியை மறைந்திருந்து இராமன் கொன்றது மிகக் கடுமையான குற்றமாகும். நிராயுதபாணியாக இருந்த வாலியை அம்பு ஏவிக் கொன்ற இராமனின் செயல் கோழைத்தனமானதும், பேடித்தனமானதுமாகும். வாலியின் கொலை திட்டமிட்டுச் சதி செய்து நிகழ்த்தப்பட்ட படுகொலையாகும்.
இனி இராமன் தன் சொந்த மனைவியான சீதையை நடத்திய விதத்தை காண்போம்.
(தொடரும்…)
(டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர், பக். 449 – 481)
மலரிடைப் புதைந்த கந்தகக் குண்டுகள்
அரசியலிலும், பொருளாதாரத்திலும் இந்தியாவின் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. இன்றோ உலகமயமாக்கத்தின் அதிவேகத்தில் அழிக்கப்பட்டும் வருகின்றன. அதேபோல இலக்கியம், இன்னபிற கலை வடிவங்களிலும், இந்தியாவின் பெரும்பான்மையான விவசாய மக்கள் இடம்பெறுவதில்லை. இடம்பெறும்போது காட்சிப் பொருளாகவும், மலிவான ரசனையாகவும் – கலை வியாபாரிகளால் விற்கப்படுகின்றனர்.
இந்திய மக்களின் விடுதலை வழி – பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஆயுதந்தாங்கிய விவசாயிகளின் எழுச்சியினால் விடுவிக்கப்படும் கிராம்பபுறங்களிலே இருக்கிறது என முழங்கியவாறு 1969-ல் பிறந்தது, நக்சல்பாரி இயக்கம். அதில், விவசாய மக்களுடன் நகர்ப்புற நக்சல்பாரிக் கலைஞர்கள் இணைந்து ஆரம்பித்த ஓர் இலக்கியப் பயணத்தை இங்கே தருகிறார் சுமந்தா பானர்ஜி. நானே சகலமும் என்ற நகர்ப்புற மேட்டிமைத்தனத்தை உதறி, கிராமத்தின் மொழியை, அறிவை, கலையைக் கற்றுக் கொண்டு, தங்களின் அரசியல் இலட்சியத்தை வடிக்கச் செய்த அந்த முயற்சி எந்த வரலாற்றிலும் அழுத்தமாக இதுவரை பதியவில்லை. அந்தப் பயணத்தின் வரலாற்றைத் தருகிறார், பத்திரிக்கையாளர் சுமந்தா பானர்ஜி.
***

கலைஞனுக்கும் மக்களுக்கும் இடையே, இந்திய நகர்ப்புறப் படைப்பாளிகளுக்கும் நாட்டுப்புற ஏழைகளுக்கும் இடையே ஒரு பெரும் இடைவெளி பெரிய கடல் அளவு விரிந்துவிட்டது. அதைக் குறைக்கவோ, உடைத்தெறியவோ முயற்சிகள் மிகக் குறைவாகவே நடக்கின்றன.
மேற்கத்திய கலை, கலாச்சாரம் நமது கலை, இலக்கியத்தின் மீது மயக்கு வலை வீசி வருகிறது; நமது படைப்பாளி அதன் முன்னே பலமிழந்து போய் நிற்கிறான்; அதையே தனது இலக்கியத்திலும் போலி செய்து உருவாக்க முயலும் போது, பெரும்பாலான மக்கள் தன்னைக் காது கொடுத்துக் கேட்பது கூட இல்லை என்பதை உணர்கிறான்; மெல்ல மெல்ல ஒரு சிறு வட்டத்துக்குள்ளே சுருங்கிப் போகிறான்; அதிலேயே மன நிறைவடைந்தும் போகிறான்.
இதற்கு மாறாக, சமூக உணர்வுள்ள கலைஞனோ மேலும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கிறான். புதிய சமுதாயத்தைப் படைக்க முனையும் ஓர் குடிமகனாகவும், அதே சமயம் தற்போது ஆளும் வர்க்கத்தின் நிறுவனத்துக்குள்ளே சார்ந்தும் முரண்பட்டும் வாழ்பவனாகவும் இருக்கிறான். இதனால் ஒருவித குற்ற உணர்வு அவனுக்குள்ளே தோன்றுகிறது; இரட்டை உணர்வுகளுக்கு அவன் ஆட்படுகிறான்.
ஒருபக்கம் பாரம்பரியத்தின் நிலைக்களானான நிலப்பிரபுத்துவ கிராமச் சமூகத்தின் அழிவு; மறுபுறம் அதே சமுதாயம் உருவாக்கிய பாரம்பரியக் கலை வடிவங்கள் -புதியனவற்றைப் படைக்க விருபும் கலைஞன் இந்த முரண்பாட்டில் சிக்கித் தவிக்கிறான்.
இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் வங்காளத்தில் தாகூர் சில பரிசோதனைகளை மேற்கொண்டார். நாட்டுப்புறக்கலை, கலாச்சாரத்தின்பால் ஈர்க்கப்பட்ட அவர் ‘பாவுல்’, ‘படியாலி’, ‘சாரி’ போன்ற இசை மெட்டுக்களில் பாடல்களை எழுதினார். இந்தப் பாடல்கள் வங்காளத்தில் உள்ள எல்லா மத்தியதர வர்க்கக் குடும்பங்களிலும் இன்றும் பாடப்படுகின்றன. இதில் உள்ள வேடிக்கை – சாந்தி நிகேதனத்திலிருந்து (தாகூர் ஆசிரமம்) ஒரு சில மைல் தொலைவில் உள்ள பிர்பூம் மாவட்டக் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு அந்தப் பாடல்களில் ஒன்று கூடத் தெரியாது. விவசாயிகளுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத சொற்களும், பாடல் வடிவமும் தான் காரணமாக இருக்க வேண்டும்; அல்லது இப்பாடல்களைப் பாடும் நடுத்தர வர்க்கம் இவற்றைக் கிராமத்துக்குக் கொண்டு செல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவையெல்லாம் விவசாயிகளுக்குப் புரியாது என்று சொல்லித் தப்பித்துவிட முடியாது. நமது நாட்டுப் பாடல்களில் எத்தனையோ நெடியகதைகள், புராணக் கதைகளை ஒப்பிட்டுச் சொல்லும் உருவகங்கள், பருவகால மாற்றம் – சடங்குகள் – இன்னும் எத்தனையோ தொகுக்கப்படுகின்றன; அவர்களும் எளிதாகப் புரிந்து கொள்கிறார்கள்.
எனவே, இடைவெளி, உயர்ந்த அல்லது தாழ்ந்த கலாச்சார மட்டங்களினால் வருவதில்லை. கிராமங்களில் யதார்த்தத்தை, உலகத்தை அறிந்து கொள்ளும் விதம் வேறாகவும், நகர்ப்புறத்தில் வேறாகவும் இருப்பதால்தான் அந்த இடைவெளி. பள்ளி, கல்லூரிகளில் பெற்ற கல்வியை வைத்துக் கொண்டு மேற்கத்திய இலக்கியத்தை ரசிக்கக் கற்றுக் கொண்டு விட்டோம். ஆனால், நமது நாட்டுப்புறக் கலாச்சாரம் பற்றி நாம் கற்கவில்லை; நாட்டுப்புற யதார்த்தத்திலிருந்து நாம் வெகுதூரம் விலகி இருக்கிறோம்; அது மட்டுமல்ல, அதன் மொழி, கலாச்சாரத்திலிருந்தும் தொலைவில் நிற்கிறோம்.
நகர்ப்புறப் பார்வையாளர்களுக்கு நாட்டுப்புறக் கலைஞர்கள் நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். இதன் விளைவு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விபரீதமாக இருக்கிறது. முதலில் நாட்டுப்புறப் பாடலின் துரித தாளலயத்தை மட்டுப்படுத்தி இந்துஸ்தானி போன்ற இசை முறையின் மந்த கதியைத் தழுவ ஆரம்பித்தார்கள் கிராமிய இசைக் கலைஞர்கள்; நகர்ப்புறப் பார்வையாளர்களைக் கவருவதற்கு சினிமாப் பாடலைப் பாடினார்கள்; நமது கலாச்சாரத்தில் ‘சமஸ்கிருத ஆதிக்கம்’ (பார்ப்பனீய கலாச்சாரம்) இப்படித்தான் ஊடுருவி விட்டது.
இதன் பொருள் – நாட்டுப்புறக் கலாச்சாரத்தை எந்தவிதப் பாதிப்பும் இல்லாம்ல் பரிசுத்தமாக அருங்காட்சியகப் பொருளைப் போலப் பாதுகாக்க வேண்டும் என்பதல்ல. எது தேவையானது? மிக இயற்கையான வளர்ச்சியில், மாற்றத்தில் தற்கால ஒலிகளை, படிமங்களை, சித்திரங்களை இலகுவாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சமுதாயத்தில் சமூக – கலாச்சாரத் தேவைகளைப் புறக்கணித்தும் கூட வியாபார நோக்கத்தோடு புதுப்புது வடிவ உத்திகளைத் தறிகெட்டுப் பயன்படுத்துகிறார்கள்.
நாட்டுப்புற, நகர்ப்புறக் கலாச்சாரங்கள் இணைய வேண்டும். நகர்ப்புறக் கலாச்சாரம், நாட்டுப்புறக் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் காவலன் போல நடந்து கொண்டாலோ, நாட்டுப்புறம் மறுதலையாகச் சேவை செய்வது போல நடந்து கொண்டாலோ இரண்டு கலாச்சாரங்களும் எதிரும் புதிருமாகவே இருக்கும்.
எனினும் வரலாற்றிலே சில சமயங்களில் – எடுத்துக்காட்டாக, அரசியல் இயக்கங்களின் போது, அரசியல் எழுச்சிகளின்போது – இரு தரப்பிலிருந்தும் ஒரே லட்சியத்துக்காக உறவுகள் நெருக்கமாவதைப் பார்க்க முடியும்.
மேற்கு வங்க எடுத்துக்காட்டு ஒன்று: 1859 – 60-ல் நெல் பயிரைப் புறக்கணித்து, ஆங்கிலேயரின் ஆணைக்கு அடிமைப்பட்டு லாபத்துக்காக அவுரிச்செடி பயிரிட்டார்கள் சிலர். உடனே, அவுரிச் செடி பயிரிடுவோர்க்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தினார்கள். இப்போராட்டத்தை ஆதரித்து எழுதிய ஹரீஷ் முகர்ஜி இறந்த போது விவசாயிகளில் யாரோ சிலர் சேர்ந்து ஒரு சோகப்பாடல் எழுதினார்கள். நாட்டுப்புற, நகர்ப்புற இணைப்பாக அப்பாடல் எழுந்தது.

1905-இல் நடுத்தர வர்க்கப் புரட்சியாளர் இளைஞர் குதிராம் போஸ் தூக்கிலிடப்பட்ட போது பெயர் தெரியாத ஒரு கிராமத்துப் பாடகர் தியாகிக்கான பாடலை ஆக்கினார். அதன் நேர்த்தியான படிமங்கள் இன்றுவரை கூட மக்கள் மத்தியில் ஒளியோடும், வலுவோடும் நிற்கின்றன.
“பத்து மாதமும் பத்துநாட்களும்
போகட்டும்.
மறுபடி அம்மா நான்
பிறந்திடுவேன்.
என்னை நீ தெரிந்து கொள்ள
கழுத்தில் பார் – தூக்குக்
கயிற்றின் வடு
அழுத்தமாய்ப் பதிந்திருக்கும்.”
1940-களில் கொடிய வங்களாத்துப் பஞ்சம் வந்தது. தெபகா விவசாயிகளின் இயக்கம் அப்போதுதான் வீறுகொண்டு எழுந்தது. கம்யூனிஸ்டு கலைஞர்கள் நகரங்களிலிருந்து கிராமப் புறங்களுக்குச் சென்றார்கள்; கிராமத்துப் பாடகர்களுடன் சேர்ந்து கூட்டாகப் பல பாடல்களை எழுதினார்கள்; விவசாயிகளின் துன்ப துயரங்களும், போராட்டங்களும் உயிர்த் துடிப்போடு வடிக்கப்பட்டன.
நாட்டுப்புறம், நகர்ப்புறம் – இரண்டும் உணர்வெழுச்சியோடு, அற்புதமாக இணைந்தது – மார்க்கிஸ்டு – லெனினிஸ்டு கட்சியின் ஆயுதப் புரட்சி எழுச்சியிலே. (இந்த நக்சல்பாரி உழவர் எழுச்சிதான் ‘நக்சலைட்’ பயங்கரவாத இயக்கம் என்று அரசினால் அவதூறு செய்யப்பட்டு வருகிறது.) 1967-ல் நக்சல்பாரி கிராமத்தில் முதல் தீப்பொறி கிளப்பினார்கள் உழைக்கும் விவசாயிகள்.
கூலி ஏழை விவசாயிகளின் உதவியோடு நாட்டுப்புறத்தில செந்தளப் பிரதேசங்களை எழுப்புகின்ற அந்த அரசியல், ஆயிரக்கணக்கில் நடுத்தர வர்க்கச் செயல் வீரர்களைத் தன் அணியிலே ஈர்த்தது. தங்களை முற்றாக அரசியல் ரீதியில், கலாச்சார ரீதியில் புடம் போட்டுக் கொள்ள, அவர்கள் நக்சல்பாரி இயக்கத்தோடு முழுமையாக இணைந்தார்கள். அரைக் காலனியக் கல்வி ஊட்டப்பட்டுத் தயாரானவர்கள் அதிலிருந்து பிய்த்துக் கொண்டு, நலிந்த விவசாயிகளின் பார்வை மூலமாக சமூக அரசியல் யதார்த்தத்தைப் புதிதாக அறிந்து கொண்டார்கள்; ஒரு விதத்தில் பார்த்தால், தங்களது வாழ்க்கையின் பழைய பகுதியை வெட்டி எறிந்தார்கள்.
இயக்கத்தில் இணைந்த நடுத்தர வர்க்கச் செயல் வீரர்கள் தங்களை மாற்றிக் கொண்டதன் காரணமாக அரசியல் தளத்திலும், கலாச்சார தளத்திலும் ஒரு தாக்கத்தை உண்டாக்கினார்கள். மிகச் சிலருக்கே அப்போது உருவான இலக்கியங்கள் பற்றிய பதிவுகள் தெரியும். இயக்கத்தில் பங்கெடுத்தவர்களே பாடல்களை, கவிதைகளை எழுதினார்கள். ஒரு சில சிறிய ஏடுகளில் அவை இடம் பெற்றன; செவி வழியாகவே பல பாடல்கள் பதிவு பெற்றன; கிராமங்களில் அந்ததப் படைப்புகள் இன்றுவரை கூடப் பாடப்படுகின்றன.
***
முதல்தடம் ஆந்திரத்தில் 1960-களில் பிறந்தது. ஓர் இளம் கவிஞர் சிரிகாகுளம் மாவட்டப் பகுதிகளில் பண்ணைக்கும், போலீசுக்கும் எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டம் நடத்திய விவசாயிகளோடு இணைந்தார்; போராட்டத்தின் மத்தியிலேயே 1969 டிசம்பரில் போலீசால் படுகொலை செய்யப்பட்டார். அந்தப் புரட்சிக் கவிஞர்தான் சுப்பாராவ் பாணிக்கிரகி. இவர் விவசாயிகளின் போராட்டம் பற்றி பல பாடல்களை எழுதிக் குவித்தார்; மிகப் பழைய ‘ஜமுக்குலகதா’ (இது ஒரு நாட்டுப்புற நாடக உத்தி – மூன்று நடிகர்கள் – பாடல், நடிப்பு மூலம் கதை சொல்வார்கள்.) என்ற நாட்டுப்புறக் கலை வடிவத்தை உயிர் பெறவைத்தார். சிரிகாகுளப் புரட்சி இயக்கம் அதில் பதியப்பட்டது.
இன்னமும் பசுமையாக என் நெஞ்சில் நிற்கும் ஓர் சம்பவம். 1973 சிரிகாகுளப் பகுதியில் ஓர் கிராமத்தில் தங்கியிருந்தேன். விவசாயிகள் வீட்டுச் சிறுவர்கள், சிறுமிகள் சுப்பாராவின் பாடலைப் பாடினார்கள். “சிவப்பென்றால் சிலருக்குப் பயம் பயம்” – அங்கே இங்கே கிடந்த நசுங்கிப் போன அலுமினியக் குவளைகள், கரண்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்து தாளம் போட்டுப் பாடினார்கள்; குரலில் ஒரே உற்சாகம்:
“சிவப்பென்ற பேரைக்
கேட்கும்போதே சிலருக்கு
முகமெல்லாம் கறுப்பாக மாறுது
இளம்பிள்ளை நெஞ்சமோ
என்றுமே மறவாது
உடலெங்கும் சிவப்பு
நிறம்தானே ஓடுது.”
சுப்பாரவ் பாணிக்கிரகியின் மிகச் சிறந்த பாடல்:
“கஷ்ட ஜீவிகள் நாங்கள் கம்யூனிஸ்டுகள், துணிந்து நாங்கள் சொல்கின்றோம் மார்க்சிஸ்டுகள் நாங்கள் லெனினிஸ்டுகள்”
இந்தியாவெங்கும் உள்ள கம்யூனிஸ்டு புரட்சியாளர்களின் படை நடைப் பாடலாக இருந்து வருகிறது.
தற்கால புரட்சி தெலுங்குக் கவிஞர்களுக்கு முன்னோடியாக சுப்பாராவ் வாழ்ந்து காட்டினார். அத்தெலுங்குக் கவிஞர்கள் பழமைப் பிற்போக்கினை எதிர்த்தார்கள்; புதிய கவிதை உத்திகளைப் பயன்படுத்தினார்கள். தங்களை ‘திகம்பர கவிகள்’ (பழமையை உதறி எறிந்தவர்கள் என்ற பொருளில்) என்று அழைத்துக் கொண்டார்கள்.
சிரிகாகுளம் எழுச்சி இவர்களது கவனத்தை புரட்சியின் பக்கம் ஈர்த்தது. அவர்கள் ஜூலை 1970-ல் ‘வி-ர-ச-ம்’ (விப்ளவ – ரசயிதள – சங்கம்) – புரட்சிகர எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள். அடுத்த ஆண்டே அவர்கள் பதிப்பித்த முதல் கவிதைத் தொகுப்பு ஆந்திர அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது; ஜுவாலாமுகி, நிகிலேஷ்வர், செரபண்டராஜு போன்ற கவிஞர்கள் கைது செய்யப்பட்டார்கள்.

வி-ர-ச-ம் கவிஞர்களில் முன்னோடியாக நின்றவர் செரபண்டராஜு. ஆந்திர உழைக்கும் விவசாயிகளின் புரட்சி அமைப்பான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட ஒரே காரணத்துக்காகப் பன்னிரண்டாண்டுகளுக்குச் சிறைவாசம் அனுபவித்தார். சிறை தந்த பரிசான மூளைப் புற்று நோய் காரணமாக 1982 ஜூன் மாதம் இறந்து விட்டார்.
ஏழை விவசாயக் குடும்பத்திலே பிறந்து, கிராமப்புறக் கலாச்சாரத்திலே ஊறி வளர்ந்த செரபண்டராஜு புதிய இலக்கியத் துறைகளில் தேர்ச்சி மிக்கவராக வளர்ந்தார். ஆனால், நக்சல்பாரி உழவர் இயக்கமே அவரை மீண்டும் நாட்டுப்புறத்தோடு இணைத்தது. அரசியல் இயக்கத்தில் முறைப்பட்டு வளர்ந்த போது நிறைய பாடல்களை உருவாக்கினார். அவை ஆந்திரக் கிராமங்களில் இ.பொ.க. (மா-லெ) இயக்கக் கூட்டங்களில் பாடப்பட்டன.
1978-ல் மரணப்படுக்கையிலிருந்து அவர் கைப்பட எழுதிய வரிகளுக்கு எடுத்துக்காட்டாக இறுதி வரை வாழ்ந்து காட்டினார்: “என் மணிக்கட்டையே நீ வெட்டி எறிந்தாலும் ஏந்தியவாளை நான் எந்நாளும் விடமாட்டேன்!”
நக்சல்பாரி இயக்கம் தொடங்கியதிலிருந்து இன்றுவரை மக்கள் கலாச்சாரத்தைப் பரப்பும் உணர்வுபூர்வமான முயற்சிகள் இடைவிடாமல் செயல்படுத்தப்படுகின்றன; முக்கிய நகரங்களில் கலையும் கலாச்சாரமும் குவிந்துவரும் போக்கிற்கு நேர்எதிராகக் கிராம்பபுறத்தை நோக்கி கலாச்சார இயக்கம் திருப்பப்பட்டுள்ளது; கலை, பரந்துபட்ட மக்களுக்காக மாற்றப்பட்டுள்ளது.
பல பாடல்கள் கூட்டுப் படைப்புக்களாகச் சிறையில் தயாரிக்கப்பட்டன. ஒரே அறையில் அடைக்கப்படும் விவசாயிகளும், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்; அவை வயிரம் வாய்ந்த கவிதைகளாக, பாடல்களாக சிறையின் கதவுகளை உடைத்துக் கொண்டு வெளியேறின. 1970-ல் மேற்கு வங்க மித்னபூர் சிறையிலே நக்சல்பாரிகள் கூட்டுப்பாடல் ஒன்றைத் தயாரித்தார்கள்.
சிறையின் நாலு சுவர்க்குள்ளே காத்திருப்பது கொடுமையானது. அந்த இயலாமையிலிருந்து தொடங்குகிறது பாடல். மெள்ள கிராமத்தின் சூழ்நிலை, வீடுகளில் தாய்மார்கள் கஞ்சி கூட இல்லாமல் தவிப்பது ஆகியவற்றை விவரித்துவிட்டு, மாற்றம் நிச்சயம் என்ற நம்பிக்கை பிறப்பதாக முடிகிறது பாடல்.
“கவியாய்க் கிடக்கிறது
அரிசிப் பானை
ததும்புகிறது விழிக்குடம்
இதயம் நோகிறது
தாயே உன்னை நான்
எப்படிக் காப்பாற்றுவேன்?
இனியும் நான்
இங்கே இருக்க முடியாது-
அதோ
மக்கள் படை செல்கிறது
மலைகள் அதிரும் ஒலிகேட்கிறது
மாடமாளிகை நொறுங்கும்
ஒலி கேட்கிறது
இனியும் என்னைக்
காத்திருக்க வைக்காதே
தாயே
நானும் அங்கே போக வேண்டும்
விடியலைக் கீறிச்
சூரியனைக் கொண்டு வர!”
நடுத்தர வர்க்கச் செயல் வீரகளுக்கு இன்னொரு பிரச்சனை இருக்கிறது. உழைக்கும் வர்க்கத்திலிருந்து வரும் தோழர்களின் துயரங்களைக் காணும் போது தங்களையே ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையோடு பார்க்கிறார்கள். அந்த வர்க்கத் தோழர்களை நன்றாகப் புரிந்து கொள்ளும் வரை இந்த இடைவெளி விழுந்து கொண்டேதான் இருக்கும். ‘வி-ர-ச-ம்’ செயலாளரான வரவரராவ் எழுதிய கவிதை வரிகள் அந்தக் கேள்விகளைச் சரியாக எழுப்புகின்றன.
“தொழிலாளி
சிந்தும் வியர்வையால்
வெளியிடமுடியாத
ஓர் உண்மையை
அவனது காலி
வயிற்றால்
வெளியிட முடியாத
ஓர் உண்மையை
அவனது கண்ணீர்
வெளியிடமுடியாத
ஓர் உண்மையை
அவனது
உறுதிமிக்க
கைமுஷ்டிகள்
வெளியிட முடியாத
ஓர் உண்மையை
கவிஞனின் பேனா சிந்தும்
ஒரு துளி மை
என்றாவது
வெளியிட முடியுமா?”
நடுத்தர வர்க்கக் கவிஞன் தனது வேரினை இடம் பெயர்த்துப் பாட்டாளி வர்க்கத்தின் பக்கம் வைக்கும் போது எப்போதும் தனக்குப் பிடித்தமான கடந்த கால கற்பனைக் கோலங்களை உதறி எறியவே விரும்புகிறான்.
“காதலில் சந்திரனாக வராதே
முடியுமானால்
சூரியனாக நீ வா – அதில்
கொஞ்சம் நெருப்பை அள்ளி
இருண்ட காட்டில்
விளக்கேற்றப் போகிறேன்
காதலில் மலராக வராதே
முடியுமானால்
இடியென நீ வா – அந்த
ஒலியினை வாங்கி
எட்டுத் திக்கும்
போர்ச் செய்தி
முழக்கப் போகிறேன்
நிலவு ஆறு – மலர் –
தாரகை – பறவை
இவற்றை ஓய்வாகப் பார்க்கலாம்
பின்னால் ஒருநாள்.
ஆனால் இன்றோ
இறுதிப் போர் நடந்து முடியாத
இன்றோ,
தேவை – நம் சேரியில்
புரட்சித் தீ!”
இப்பாடலை எழுதியவர் முராரி முகோபாத்யாயா. ‘இறுதிப் போரில்’ அவர் 1970-களில் போலீசால் கொல்லப்பட்டார்.
நகர்ப்புறச் சூழலில் எழுதப்பட்ட கவிதைகள் ஒரு போக்கை எடுத்துச் சொல்லுகின்றன. அதாவது, மேலும் மேலும் பிரச்சார மொழியில், நடையில் கவிதையின் அக்கறை பெருகியிருப்பது தெரிய வருகிறது. சரோஜ் தத்தா (நக்சல்பாரிப் புரட்சியாளர்), கவிஞர் 1970-களில் கொந்தளித்த நாட்களில் கட்சி அணிகளுக்கு இது பற்றிச் சில செய்திகள் சொன்னார்:
“கடந்த காலத்தை மறந்துவிடுங்கள்; மிகப் பழைய கவிஞர்களை மறந்து விடுங்கள்; ஆயுதப் புரட்சியை உயர்த்திப் பிடிக்கும் புதிய போர்க்குணம் மிக்க கவிஞர்களைப் போற்றுங்கள்.” பண்டையப் பொதுவுடைமைச் சமுதாயத்தில், கூட்டுச் சமூகத்தின் முழக்கமாக மொழி இருந்ததல்லவா, அதே போன்ற செயல்பாட்டை மொழி இப்போது எடுத்துக் கொள்கிறது. கூட்டுச் சமூக மதிப்பீடுகளை ஏந்திச் செல்லும் கருவியாகவே புரட்சிகர முழக்கங்களும், உரை வீச்சுக்களும் அமைய வேண்டும்.
நகர்ப்புற நடுத்தர வர்க்கக் கலைஞர்கள் இத்தகைய சோதனைகளைச் செய்தார்கள்; முயற்சி முழுவதும் வெற்றியல்ல என்றாலும் நக்சல்பாரி கலாச்சார இயக்கத்தில் அவை ஆவணம் போல பயன்பட்டன. இந்திய வரலாற்றில் ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பான நேரத்தில் உயிர்த் துடிப்போடு இயங்குவது எப்படிப்பட்ட அனுபவம் என்பதைச் சித்தரிக்கின்ற அளவுக்கு அந்த இயக்கங்கள் நினைவில் இருக்கும். ஒரே சமயத்தில் பிரசுர எழுத்தாளராகவும் கவிஞர்களாகவும் எப்படிச் செயல்படுவது என்பதற்குப் பல பரிசோதனைகளும் நடந்துள்ளன.
அவ்வாறு படைப்பை உருவாக்கும் போது அழகியல் அவசியங்கள் இரண்டாம்பட்சமாயின. எல்லா அரசியல் கொந்தளிப்புக் கட்டங்களிலும், அழகியல் மதிப்பீடுகள் நெருக்கடிக்குள்ளாகின்றன. அந்த மாதிரி நேரங்களில் உருவாக்கப்பட்ட படைப்புகளை விமரிசிக்க, பொதுவாகக் கலைக்குப் பயன்படுத்தும் அதே விமர்சன அளவு கோல்கள் தேவையா?
நக்சல்பாரி இயக்கக் கலைஞர்கள் – ஏடுகளில் பதிப்பித்து வருவதும், பதிப்பிக்காமல் வாய்மொழி மூலமோ, பாடலோ மட்டும் செய்தவர்களாயினும் – நாட்டுப்புற, நகர்ப்புற – இரண்டு கலாச்சாரங்களிலும், சிறந்தவற்றைக் கிரகித்துக் கொள்ள முயன்றார்கள்.
அவர்கள் பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டுக்குத் தங்களை மாற்றிக் கொள்ளும் போக்கில் படைப்பு வேலையில் உச்சநிலையை எட்டுகிறார்கள். புதிய வாழ்க்கை முறையை ஏற்கும்போது சில நேரங்களில் தவறாகப் புரிந்து கொண்டு செயல்பட்டுத் திருத்திக் கொள்கிறார்கள். இந்த நுணுக்கமான விஷயங்களும் விவசாயத் தோழர்கள் மற்றும் தியாகிகளோடு கொண்ட உணர்வெழுச்சி மிக்க பிணைப்புகளும் செழுமையாக அவர்களது படைப்புகளில் வெளிப்பட்டன. குறைபாடுகள் பல இருந்தாலும் இந்திய வாழ்நிலையை மாற்ற அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும், வருங்கால ஆவணத்துக்காக – போலீசு துப்பாக்கிச் சூட்டில் கொலை செய்யப்படும் வீரர்களின் முழக்கங்களையும், சிரிகாகுளம் விவசாயிகள் சித்திரவதை செய்யப்படும்போது எழுப்பும் துயரமிக்க, கோபாவேசம் மிக்க வசவுகளையும் – துணிச்சலோடு பதிவு செய்வதையும் நாம் மறக்க முடியாது.
அவர்களது கவிதையை, பாடலை நாம் கேட்கும்போது இரண்டு உலகங்களுக்கு மத்தியில் முன்னும் பின்னும் போய் வருகிறோம்.
பட்டினியால் வாடும் விவசாயி, சமூகச் சடங்குகள், மலைவாழ் மக்களின் திருவிழாக்கள், கொரில்லாப் போராட்டங்கள், போலீசு வெறியர்களால் நாசமாக்கப்பட்ட கிராமங்கள், ரத்தம் தோய்ந்த வயல்வெளிகள், நகர்ப்புற இளைஞர் மாணவர்களின் உலகம், சிறை உடைப்புகள், ‘போலீசுடன் மோதல்’ என்ற நாடகத்தின் பின்னே புரட்சியாளர்களைப் படுகொலை செய்வது – இவை மட்டுமல்ல; நகர்ப்புறக் கவிதை வடிவத்தின் சந்தங்கள், மழைவாழ் மக்களின் பறை ஒலியோடும், சந்தால் பழங்குடி மக்களின் போர்ப்பறை முழக்கத்தோடும் இவர்களது கவிதைகளில் இணைந்து கலப்பதைப் பார்க்கலாம். மண்ணைத் தோண்டும் கொந்தாளங்களின் ஒலிகளை நாம் கேட்கலாம்; எரியும் கந்தகத்தூளின் மணத்தை நுகரலாம்.
“மலரிடைப் புதைந்த கந்தக்குண்டுகள்” -ஷூமான் என்ற ஜெர்மானிய இசைப்பாடலாசிரியன் பயன்படுத்திய சொற்கள் இவை. போலந்து தேசிய இன எழுச்சிகளின் போது சோபின் என்ற இசையறிஞன் எழுதித் தயாரித்த போலிஷ் நாட்டுப்புற நாட்டிய இசையை இப்படி வருணித்தார் ஷூமான்.
ஆங்கில மூலம்: “The Truth Unites” (“உண்மை ஒற்றுமைப்படுத்தும்” – மாத ஏடு) தமிழில் : இராசவேல்
“புதிய கலாச்சாரம்”, ஏப்ரல் ’86-இல் வெளியிடப்பட்ட கட்டுரையின் மறுவெளியீடு.
_____________________________
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2000
_____________________________