Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 786

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

22
துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

“குறிப்பாக ஒடுக்கப்பட்ட அரபு மக்களுக்கும், முழு உலகிற்கும் துனிசிய மக்கள் ஒரு செய்தியை தெரிவிக்க விரும்புகின்றனர். எவரிடமிருந்தும் எதனையும் எதிர்பார்க்காதீர்கள். எல்லாமே உங்களிடம் உண்டு. மனதையும், சக்தியையும் முடமாக்கும் அச்சத்தில் இருந்து விடுபட்டு மேலெழுந்து வாருங்கள்.”
– ஒரு துனிசிய பதிவர்

துனிசிய புரட்சி ஒன்றுமில்லாத இடத்தில் இருந்து எழவில்லை. வெறும் கலவரங்கள் மட்டும் புரட்சியை தோற்றுவிப்பதில்லை. காட்டுத்தீ பரவுவதற்கு காய்ந்த மரங்களும், வெப்பநிலை அதிகரிப்பும் காரணமாக இருந்திருக்கும். அத்தகைய அகவய, புறக் காரணிகள் நமது கண்களுக்கு தெரிவதில்லை. துனிசிய மக்களின் எழுச்சியையும், பி.பி.சி. போன்ற சர்வதேச ஊடகங்கள் நீண்ட காலமாக இருட்டடிப்பு செய்து வந்தன. அதனால் தமிழிலும் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இல்லை. தகவல்கள் கூட குறைவாகவே ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டன. துனிசிய புரட்சியில் இருந்து பெற்ற படிப்பினைகளை, தமிழ் உழைக்கும் மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் வரலாற்றுக் கடமை எமக்குண்டு. துனிசிய புரட்சி எவ்வாறு சாத்தியமாகிற்று? எத்தகைய அரசியல் சக்திகள் வழிநடத்தின? அது ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியா? பிரான்ஸ் போன்ற ஏகாதிபத்திய நாடுகள் ஏன் தலையிடவில்லை?

முதலில் துனிசிய மக்கள் எழுச்சி பற்றிய செய்திகள், ஏன் இவ்வளவு காலதாமதமாக நமக்கு வந்து சேர்ந்தன என்று பார்ப்போம். ஒரு மாதத்திற்கு முன்பு வரை, மக்கள் எழுச்சியினால் துனிசிய ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடுவார், என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நீண்ட காலமாக, துனிசியா எந்தவிதமான உள்நாட்டுப் பிரச்சினைகளுமற்ற ஸ்திரமான ஆட்சியைக் கொண்ட நாடாக அறியப்பட்டது. அயல்நாடுகளில் நடந்த அசம்பாவிதம் எதுவும் துனிசியாவில் நடக்கவில்லை. மத அடிப்படைவாதிகளுக்கு எதிரான போர், குண்டுவெடிப்பு, எதுவுமே இன்றி துனிசியா அமைதிப்பூங்காவாக காட்சியளித்தது. டிசம்பர் 17 , “சிடி புசிட்” என்ற சிறிய நகரத்தில், முஹமட் புவாசிசி என்ற இளைஞன் தீக்குளித்து மரணமடைந்தான். ஜனவரி 14 , ஜனாதிபதி பென் அலி நாட்டை விட்டு தப்பியோடினார். இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் நடந்த மாற்றங்கள் தாம், அரபுலகின் முதலாவது மக்கள் புரட்சிக்கு வழிவகுத்தது.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்பென் அலியின் வெளியேற்றத்திற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இருந்து தான் பி.பி.சி. துனிசியா பக்கம் கவனத்தை திருப்பியது. அது வரையில் அல்ஜசீரா மட்டுமே செய்தி தெரிவித்துக் கொண்டிருந்தது. துனிசியாவின் பெரு நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்குபற்றிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. கடந்த ஒரு மாத காலமாக, நாட்டின் பல பாகங்களிலும், தினசரி அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது போலிஸ் சுட்டது. குறைந்தது பத்துப் பேராவது மரணமடைந்தனர். மரணமடைந்தோர் எண்ணிக்கை என்பது என்று, ஊர்ஜிதப் படுத்தப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. வலைப்பதிவுகளில் எழுதிக் கொண்டிருந்த பதிவர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த செய்திகள் எதுவுமே வெளியுலகத்தை எட்டவில்லை. சர்வதேச ஊடகங்கள் அத்தனை கரிசனையுடன் நடந்து கொண்டன.

சர்வதேச ஊடகங்களின் மௌனத்திற்கு காரணம், இது மேற்குலகின் நிகழ்ச்சிநிரலின் படி நடக்கவில்லை என்பது தான். ஈரானில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களுக்கு, மேற்குலக ஊடகங்களில் இரட்டிப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டன. போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவி கொல்லப்பட்டதும், அந்த மாணவியின் இரத்தம் தோய்ந்த முகம் அனைத்து பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் பிரசுரமானது. மேற்குலக தலைவர்கள், கண்டனத்திற்கு மேல் கண்டனங்களை விடுத்துக் கொண்டிருந்தார்கள். துனிசிய சம்பவங்களை யாரும் அந்தளவு கவனம் எடுத்து பொருட்படுத்தியதாக தெரியவில்லை. பென் அலி தப்பியோடிய விமானம் மேலெழும் வரையில், அமெரிக்க அரசு வாய் திறக்கவில்லை. மிகவும் தாமதமாகத் தான் வாஷிங்டனில் இருந்து அறிக்கை வந்தது. அதுவும் எப்படி? “துனிசிய அரசின் நடவடிக்கைகளையிட்டு கவலையடைகிறோம். ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கைகளும் சமாதான வழியில் இருக்காததால் கவலையடைகிறோம்.” (இது தானா நடுநிலைமை?)

துனிசிய மக்கள் தமது புரட்சியை, “மல்லிகைப்பூ புரட்சி” என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். மேற்குலக ஊடகங்கள் அந்த சொற்பிரயோகத்தை புறக்கணித்துள்ளன. இதே ஊடகங்கள், லெபனானில் நடந்ததை “சிடர் புரட்சி” என்று வர்ணித்தன. (அமெரிக்கா அப்படி பெயரிட்டு அழைத்தது.) லெபனானின் சிடர் புரட்சி, சிரிய நாட்டு படைகளை வெளியேற்றுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டிருந்தது. ஜோர்ஜியாவில் “ரோஸ் புரட்சி”, உக்ரைனில் “ஆரஞ்சுப் புரட்சி” என்று கலர் கலரான புரட்சிகள் நடந்துள்ளன. பிற்காலத்தில் அதிகாரத்திற்கு வந்த, மேற்குலக சார்பு எதிர்க்கட்சிகளின் வர்ணத்தின் பெயரால் புரட்சிகள் நடந்தன. அந்தப் புரட்சிகளுக்கு எல்லாம், வெளிநாட்டு நிதி, மேற்குலக தொண்டு நிறுவனங்கள் ஊடாக கிடைத்துக் கொண்டிருந்தது. குறிப்பாக அமெரிக்க கோடீஸ்வரரின் “சோரோஸ் நிதியம்” ஆர்ப்பாட்டங்களை ஒழுங்குபடுத்த தேவையான செலவுகளை பொறுப்பேற்றது. துனிசிய புரட்சி இவற்றில் இருந்து பெருமளவு வேறுபடுகின்றது. எந்தவொரு வெளிநாட்டு சக்தியின் தூண்டுதலோ, நிதியுதவியோ இன்றி, தன்னெழுச்சியாக திரண்ட மக்கள் சர்வாதிகார அரசை தூக்கியெறிந்தனர்.

ஈரானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் டிவிட்டரை பயன்படுத்தியதை, மேற்குலக ஊடகங்கள் “டிவிட்டர் புரட்சி” என்று பெருமையாக குறிப்பிட்டன. துனிசியாவிலும் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி புரட்சி நடந்தது. நிச்சயமாக, இணையப் பாவனையாளர்கள் மட்டுமே புரட்சி நடத்தி விட முடியாது. வேலையற்ற இளைஞர்களின் கலவரம், உழைக்கும் வர்க்க மக்களின் ஆர்ப்பாட்டம், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் போன்ற பல்வேறு காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கன. இணையத்தை விட, இன்னொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு புரட்சிக்கு பெரிதும் உதவியது. வீடியோ கமெரா கொண்ட செல்லிடத் தொலைபேசிகள், இன்று எல்லோர் கைகளிலும் பரவலாக புழங்குகின்றன. தெருவில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் உடனுக்குடன் படமாக்கப்பட்டன. இப்போது தான் நேரடியாக தொலைபேசியில் இருந்து இணையத்திற்கு அனுப்பும் வசதி வந்து விட்டதே? கலவரங்கள், ஆர்ப்பாட்டங்களை காட்டும் வீடியோக்கள் சுடச்சுட “யூ டியூப்” பில் வெளியிடப்பட்டன. துனிசிய அரசின் அடக்குமுறையினால், பல யூடியூப் வீடியோக்கள் பின்னர் அழிக்கப்பட்டன. ஏற்கனவே துனிசியாவில் எதிர்க்கட்சிகளின் இணையத்தளங்களை பார்வையிடத் தடை இருந்தது. ஆயினும், டிவிட்டர், பேஸ்புக் தடை வருவதற்கு முன்னர், புரட்சியாளர்கள் முந்திக் கொண்டனர். கடுமையான செய்தித் தணிகை இருந்த நாட்டில், டிவிட்டர், பேஸ்புக் மூலம் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. பின்னர் அந்தத் தகவல்கள், தெருவில் ஆர்ப்பாட்டம் செய்த பாமரர்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள், பதிவர்கள், இணையப் பாவனையாளர்கள் அனைவரதும் கூட்டு முயற்சி இன்றி புரட்சி சாத்தியமாகி இருக்காது.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

துனிசிய பதிவர்கள், டிவிட்டர், பேஸ்புக் பாவனையாளர்கள் மட்டுமல்ல, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த துனிசியர்களும் விரைவான தகவல் பரிமாற்றத்திற்கு உதவியுள்ளனர். ஆனால் எந்தவொரு மேற்குலக ஊடகமும் இவற்றை கூர்ந்து கவனித்ததாக தெரியவில்லை. (ஈரான் மாணவர்களின் டிவிட்டர் தகவல்களுக்கு அவை தமது இணையத்தளத்தில் இடம் ஒதுக்கிக் கொடுத்திருந்தன.) துனிசிய மக்களில் பெரும்பான்மையானோர், அல்ஜசீரா தொலைக்காட்சி மூலமே தமது நாட்டில் நடக்கும் மாற்றங்களை அறிந்து கொண்டனர். சம்பவங்களை உடனுக்குடன் தெரிவித்தது மட்டுமல்ல, விவாதங்கள், ஆய்வுகள் மூலம், அல்ஜசீரா மக்கள் மனதை மாற்றிக் கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் விட, துனிசிய மக்களின் மனவுறுதி இறுதி வெற்றியை தேடித் தந்தது. அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தால் தண்டனைக்குள்ளாவோம் என்று தெரிந்து கொண்டும் வீதியில் இறங்கி போராடினார்கள். சனத்தொகையில் சரிபாதியான பெண்களும் தீரத்துடன் போராட்டத்தில் குதித்தனர். புரட்சியில் பலதரப்பட்ட மக்கள் பங்குபற்றினர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், வேலையற்றவர்கள், உழைக்கும் வர்க்க மக்கள், நடுத்தர வர்க்க மக்கள் எல்லோரும் கலந்து கொண்டனர்.

எந்த நாட்டிலும் பாட்டாளிகளின் எழுச்சி மட்டுமே புரட்சியை வெல்ல போதுமானதல்ல. நடுத்தர வர்க்கம் எந்தப் பக்கம் சாய்கின்றது என்பதும் அவசியம். பொருளாதார நெருக்கடியினால் ஒரு சிறிய மேட்டுக்குடியினர் மட்டுமே தப்பிப் பிழைக்க, பெரும்பான்மை நடுத்தர வர்க்கமும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்திற்கு ஊதியம் குறைவது பிரச்சினை. தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு பிரச்சினை. வேலையற்றவர்களுக்கோ உணவு வாங்க பணமற்ற பிரச்சினை. ஒரு நாட்டின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கமும், நடுத்தர வர்க்கமும் ஒன்று சேரும் போது தான் புரட்சி சாத்தியமாகின்றது. துனிசியாவில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களின் பக்கம் சார்ந்திருந்தமை பெரிய பலமாகும். துனிசிய தொழிலாளர் கூட்டமைப்பு, வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்தியது. குறிப்பாக மக்கள் எழுச்சி நகரங்களில் பரவிய பொழுது, ஒரே நாளில் நாடளாவிய வேலை நிறுத்த போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்அரசியல் கொள்கையைப் பொறுத்தவரை, “இஸ்லாமிய- தேசியம்” அல்லது “அரபு- தேசியம்” பேசிய யாருமே ஊர்வலங்களில் பங்குபற்றவில்லை. அவர்களுக்கு வர்க்க அரசியல் ஒத்துக் கொள்ளாது. ஒதுங்கியே இருந்தார்கள். கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், பல்வேறு இடதுசாரி சிந்தனை கொண்டவர்களை அதிகமாக காண முடிந்தது. இதே நேரம், இராணுவம் எந்தப் பக்கம் நிற்கின்றது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. இராணுவம் மக்களின் பக்கம் நிற்பதாக பரவலாக நம்பப்படுகின்றது. ஆனால் எந்த நேரமும் எதுவும் நடக்கலாம். உண்மையில் பென் அலி வெளியேறுவதை இராணுவமும் விரும்பியதால், அமைதியான சதிப்புரட்சிக்கு உடந்தையாக இருந்திருக்கும் என்ற சந்தேகமும் உண்டு. இதுவரை காலமும் பாதுகாப்புப் படைகள் வசம் மட்டுமே ஆயுதங்கள் இருந்துள்ளன. தற்போது பொதுமக்கள் கைகளில் ஆயுதங்கள் சென்று விட்டதாக வதந்திகள் உலாவுகின்றன. இராணுவத்தில் புரட்சிக்கு ஆதரவான சிலராலேயே அப்படி நடந்திருக்க வாய்ப்புண்டு என்பதால், இராணுவம் எந்தவித நடவடிக்கையிலும் இறங்கவில்லை என்றும் கருதப்படுகின்றது.

துனிசியாவின் புரட்சி எத்தகைய குணாம்சத்தைக் கொண்டிருந்தது என்பதை ஆராய்வது அவசியம். எப்போதும் மேற்குலக நிலைப்பாட்டில் இருந்து உலகைப் பார்ப்பது பல தவறான புரிதலுக்கு வழிவகுக்கின்றது. மேற்குலக ஊடகங்கள் சில இதனை “விக்கிலீக்ஸ் புரட்சி” என்று குறிப்பிட்டன. விக்கிலீக்ஸ் கசிய விட்ட இரகசியங்கள் பல ஏற்கனவே பலருக்கு தெரிந்த சங்கதி தான். அவற்றை இப்போது தான் மேலைத்தேய வெகுஜன ஊடகங்கள் கண்டுபிடித்துள்ளன. தாங்கள் சொல்லித் தான் உலக மக்களுக்கு இவை எல்லாம் தெரிய வேண்டும், என்பது போன்ற நினைப்பில் மிதக்கின்றனர். துனிசியாவில் சர்வாதிகாரி பென் அலி குடும்பத்தின் ஊழல் குறித்து, விக்கிலீக்ஸ் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று நினைப்பது மகா அபத்தம். அந்த கேபிளை எழுதிய அமெரிக்க தூதரக அதிகாரிக்கு அப்போது தான் ஞானம் பிறந்திருக்கலாம். 23 வருடங்களாக கொடுங்கோல் சர்வாதிகாரியின் கீழ் வாழும் துனிசிய மக்களுக்கு, இவை எல்லாம் அன்றாட வாழ்வியல் அனுபவம். சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடிய எத்தனையோ அரசியல் ஆர்வலர்கள், இரு தசாப்தங்களாக பிரான்சில் வாழ்கின்றனர். அவர்கள் அங்கிருந்த படியே பென் அலியின் அடக்குமுறை ஆட்சி பற்றியும், ஊழல் பற்றியும் தமக்கு தெரிந்த வழிகளில் எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். துனிசிய சர்வாதிகாரி மேற்குலக சார்பானவர் என்ற ஒரே காரணத்திற்காக, சர்வதேச ஊடகங்கள் அரச எதிர்ப்பாளர்களை புறக்கணித்து வந்துள்ளன.

கடந்த வருடம் பெல்ஜியத்தில் நடந்த சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மகாநாடு நடந்தது. பிரான்சில் அரசியல் அகதியாக வாழும், துனிசிய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி ஒருவரும் வந்திருந்தார். அவர் உரையாற்றும் பொழுது இஸ்லாமிய- தேசியவாதிகளுடனான வெகுஜன எதிர்ப்பு முன்னணியில் தமது கட்சி பங்கெடுப்பதை குறிப்பிட்டார். குறிப்பாக ரஷ்யாவை சேர்ந்த கம்யூனிஸ்டுகளுக்கு, “பிற்போக்கு மதவாதிகளுடனான கூட்டமைப்பு” என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரசாரமான விவாதத்தின் முடிவிலும், அவர்களை தனது கருத்தோடு இணங்க வைக்க துனிசிய பிரதிநிதியால் முடியவில்லை. அரபுலகில் புரட்சி என்பது, “இன்டிபதா” என்றே புரிந்து கொள்ளப்படுகின்றது. இன்டிபதா என்றால் “அநீதிக்கு எதிரான மக்கள் எழுச்சி” என்றும் அர்த்தம் கொள்ளலாம். இன்டிபாதாவில் பாட்டாளி வர்க்கம் மட்டுமல்லாது, பிற பாதிக்கப்பட்ட வர்க்கங்களும் கலந்து கொள்வார்கள். அது சிறு முதலாளிகளாக இருக்கலாம், மத்தியதர வர்க்கமாக இருக்கலாம். மேற்கத்தய அரசியல் சித்தாந்தப்படி புரிந்து கொள்ள வேண்டுமானால், இதனை “ஜனநாயகப் புரட்சி” என்று அழைக்கலாம். சோஷலிசப் புரட்சிக்கு முந்திய, புதிய ஜனநாயகப் புரட்சி குறித்து மாவோ கூட நிறைய எழுதியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சி, பூர்ஷுவா வர்க்கத்தின் எழுச்சியாக இருந்த போதிலும், அது வரலாற்றில் முற்போக்கான பாத்திரம் வகித்ததை கார்ல் மார்க்ஸ் வரவேற்றுள்ளார்.

துனிசிய மக்கள் புரட்சியின் படிப்பினைகள்

துனிசியாவில் இடம்பெற்றது பாட்டாளி வர்க்கப் புரட்சியோ, அன்றி சோஷலிசப் புரட்சியோ அல்ல. அத்தகைய மாயை யாருடைய மனதிலும் இல்லை. துனிசிய மக்கள் மேற்குலகில் நிலவுவதைப் போல, அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக போராடினார்கள். கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம், எல்லோருக்கும் உணவு கிடைக்கும் வசதி, இவை எல்லாம் மேற்கு ஐரோப்பாவில் தனி மனிதனுக்கு உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகள். மேற்கத்திய நெறிகளுக்கு உட்பட்ட தனி மனித உரிமைகள் தான், துனிசிய மக்களின் குறிக்கோளாக இருந்துள்ளது. புரட்சி அவற்றை சாத்தியமாக்கும் என்றே எல்லோரும் நம்புகின்றனர். அத்தகைய உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்காக துனிசிய மக்களுக்கு உதவ வேண்டிய மேற்குலகம், ஒதுங்கியிருந்து மௌனம் சாதிக்கின்றது. ஜனநாயக விழுமியங்களை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்வதாக கூறும் மேற்குலகின் இரட்டைவேடம் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

துனிசிய தொழிற்துறையில் 40 % முதலீட்டை செய்துள்ள பிரான்ஸ், சர்வாதிகாரி பென் அலிக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தது. அதற்கு காரணம், பிரான்ஸ் துனிசிய மக்கள் பால் கொண்ட கரிசனை அல்ல. பிரான்சில் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த துனிசியர்கள் வாழ்கிறார்கள். தனது நாட்டினுள்ளும் துனிசிய மக்களின் எழுச்சியை எதிர்கொள்ள பிரான்ஸ் தயாராக இல்லை. துனிசியா எண்ணெய் வளமற்ற சிறிய நாடு. அதனால் அமெரிக்காவும் தலையிடாமல் பிரச்சினையை தவிர்த்துக் கொள்கின்றது. “எண்ணெய் இல்லாத சின்னச்சிறு துனிசியாவில் வாழ்ந்த அதிர்ஷ்டசாலிகள் நாங்கள்.” என்று புரட்சி வென்றதற்கான காரணமாக துனிசியர்கள் கருதுகின்றனர்.

தற்போது எழுந்துள்ள அபாயம் என்னவெனில், சர்வதேசம் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதன் மூலம் புரட்சியை தோல்வியடைய வைக்க முனையலாம். வேலையில்லாப்பிரச்சினை, உணவுப்பொருள் விலையேற்றம் போன்ற பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க, திறந்த சந்தைக் கொள்கையை முன்வைக்கலாம். “சந்தைக்கு அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.” என்று நவ-தாராளவாத பொருளாதாரக் கொள்கையை போதிப்பார்கள். ஏற்கனவே ஐ.எம்.எப். ஆலோசனைப் படி, திறந்த சந்தை, உலகமயமாக்கல் என்று கிளம்பித் தான் பிரச்சினை இந்தளவு விஸ்வரூபம் எடுத்தது. சர்வதேச சமூகம் அந்த உண்மையை மறைக்கப் பார்க்கும். சிறிது காலத்தின் பின்னர் துனிசியர்கள் மீண்டும் ஒரு புரட்சியை நோக்கி தள்ளப்படுவார்கள். துனிசிய புரட்சியை, உலக நாடுகளில் தோன்றும் பல புரட்சிகளின் ஓர் அங்கமாகவே கருதப்பட வேண்டும்.

_________________________________________________________

– கலையரசன்

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பா.ராகவன் : ஆர்.எஸ்.எஸ்-இன் அஜினோமோட்டோ ராஜரிஷி !

120

கண் போனாலென்ன, பா.ராவின் ‘நடுநிலை’ போகாது!

ஒரு சைக்கோ நம் கண்களுக்குள் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொருகினால் என்னவாகும்? இந்தக் கேள்வியைக் கிழக்குப் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர் பா.ராகவனிடம் கேட்டால் ‘சிலர் குருடாகும் என்பார்கள், சிலர் குருடாகாது என்பார்கள், நான் நடுநிலையாக சொல்ல வருவது என்னவென்றால்….” என்று மென்று முழுங்குவார். அதன் பொருள் குருடாகாது என்பதுதான். அவர் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் “ஆர். எஸ். எஸ் – மதம், மதம் மற்றும் மதம்” புத்தகத்தின் முன் அட்டையில் ஆர்.எஸ்.எஸ் குறித்த நடுநிலைப் பார்வை என்று அவர் இதைத்தான் குறிப்பிடுகிறார்.

ஒரு வரலாற்றுச் சம்பவத்தை அதன் வரலாற்றுக் காலத்தில் வைத்து, விருப்பு-வெறுப்பின்றி விளக்குவதற்குப் பதில், தன்னுடைய இந்துத்வ திட்டத்திற்கேற்ப பச்சையான புளுகுகளையும் அரை உண்மைகளையும் கொண்டு  திரிப்பது ஆர்.எஸ்.எஸ்ஸின் உத்தி. ஆனால் நம்ம பா.ரா இந்த அளவுக்கு கச்சாவாக புளுகாமால் கொஞ்சம் உப்பு, புளி, அஜினாமோட்டா அதாவது சுஜாதா நயத்தில் பாமரரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுதுகிறார்.

லவ புராண ஒளியில் முசுலீமின் எதிர்வினையாய் ஆர்.எஸ்.எஸ் விசுவரூப தரிசனம்!

லாகூர் ராமனின் மகன் என்று நம்பப்படும் – வால்மீகி முனிவருக்குப் பிறந்ததாக சொல்லப்படும் – லவனால் நிர்மாணிக்கப்பட்டது என்கிற மாபெரும் வரலாற்றுக் கண்டுபிடிப்பிலிருந்து ஆரம்பிக்கிறார் பா.ரா. இராமரால் கட்டப்பட்ட மண்பாலத்தை இடித்து சேது சமுத்திரத் திட்டத்தை கட்டக்கூடாது என்று அவாள் கூறும் ஒரு பச்சையான புரட்டிற்கு ஒப்பான இந்த லவ லாகூர் கதையின் அவசியம் என்ன? இப்பேற்ப்பட்ட லாகூரிலிருந்தான் முசுலீம் லீகின் கொடூரமான பிரிவினை ஆரம்பிக்கிறது என்று சென்டிமெண்டாக போட்டு தாக்குவதுதான் பா.ராவின் நோக்கம்.

“ஒரு முடிவோடு இருந்தார் ஜின்னா. ஒரு முடிவோடு பிரசாரம் செய்தார்கள் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்கள். இது பஞ்சாபில் பல முஸ்லிம்களுக்கே பிடிக்கவில்லை. திடீரென்று இத்தனை அழுத்தமாக மதவாதம் பேச என்ன அவசியம்? இது சிக்கல் தரும். நிச்சயமாகப் பிரச்சினை வரும். மக்களின் அன்றாட அமைதி குலையப்போகிறது. சந்தேகமில்லை” – பக்.10

பேய்க்கதை மன்னன் பி.டி.சாமியின் மொழியில் பா.ரா சொல்வதன் பொருள் என்ன? லவன் விளையாடிய புண்ணிய பூமியில் இப்படி முசுலீம் லீக் அநீதியாக பிரிவினையை பேசியதன் காரணமாகவே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் வண்ணம் ஆர்.எஸ்.எஸ் கிருஷ்ண பரமாத்மாவாக களமிறங்கியது என்று புரியவைக்கிறார் பா.ரா. எனில் முசுலீம் லீகின் பிரிவினை வாதம்தான் ஆர்.எஸ்.எஸ் பகவானது விசுவரூபத்திற்கு காரணம் என்பது உண்மையா?

அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ் தோன்றியதற்கு பா.ரா கொடுக்கும் தத்துவப் புரணக்கதையைப் பார்ப்போம்

ஒத்துழையாமை இயக்கமும் இந்துத்தவ ‘போராளி’களும்!

1919ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த காந்தி, பின்னர் 1922இல் சௌரி சௌராவில் நடந்த ‘வன்முறை’ சம்பவத்தை அடுத்து அந்த போராட்டத்தை திரும்ப பெறுகிறார்.  இதைக் கண்டதுமே ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னோடியான சாவர்க்கர் மனம் கொதித்து ஹிந்து மகாசபையில் இணைந்து கொண்டார் என்கிறார் பா.ரா. இதைப் படிக்கும் வாசகர் சாவர்கர் என்ற அந்த தலைவர் வெள்ளையனை எதிர்த்து பயங்கரமாக போராடிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். உண்மை என்ன?

1911ஆம் ஆண்டு அந்தமானில் இரட்டை ஆயுள் தண்டனைக்காக சிறைவைக்கப்படும் சாவர்க்கர், ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறார். தொடர்ந்த வந்த இந்த மன்னிப்பு படையெடுப்பால் மனம் குளிர்ந்த வெள்ளையர்கள், சாவர்க்கரை மராத்திய மாநிலத்தில் உள்ள ரத்தினகிரிக்கு 1922ஆம் ஆண்டு அனுப்புகின்றனர். “இந்த மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது, வெள்ளையர்களை எதிர்க்கும் எந்த அரசியல் போராட்டத்திலும் பங்கேற்கக்கூடாது” என்று ஆங்கிலேயர் உத்தரவிட்டதை அவர் ஏற்றுக் கொண்டதால் சிறை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.

1910களின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்து மகா சபை எனும் இந்துத்வா அமைப்பு, வெள்ளையர்களின் மறைமுக ஆதரவுடன் அதாவது அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றுவது என்ற அடிப்படையில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் சாவர்க்கர் அதில் சேர்கிறார். வெள்ளையனை எதிர்த்து ஒரு எழுத்து கூட எழுதக்கூடாது, ஒரு சொல் கூட பேசக்கூடாது என்பதற்காக விடுதலை பெற்ற சாவர்க்கர் ஒத்துழையாமை இயக்கத்தின் அருகில் கூட செல்லவில்லை. மேலும் அந்த இயக்கத்தை அவர் எதிர்த்திருக்கிறார். ஏனெனில் கிலாபத் இயக்கத்தின் தொடர்ச்சியாக வந்த ஒத்துழையாமை இயக்கம் என்பது முசுலீம்களுக்கு ஆதரவானது என்பதே அவர் கருத்து. உண்மை இதுவாக இருக்க நம்ம அஜினோமோட்டோ பா.ரா படிக்கிறவெனெல்லாம் அடி முட்டாள்கள் என்று துணிந்து சாவர்கரை ஆங்கிலேய எதிர்ப்பு வீரராக அறிமுகம் செய்கிறார்.

இனி பா.ராவின் அடுத்த புளுகைப் பார்ப்போம். இதே ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி நிறுத்தியதை கண்டு கொதித்த கேசவ பலிராம் ஹெட்கேவார் எனும் மராத்தியப் சித்பவனப் பார்ப்பனர் 1925இல் ஆர்.எஸ்.எஸ் ஐ ஆரம்பித்தாராம். இவர் ஏற்கனவே திலகர் தலைமையில் காங்கிரசு கட்சியில் இருந்தார், சில அடையாளப் போராட்டங்களில் ஆபத்தில்லாமல் கலந்து கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் அரை உண்மைதான். உண்மையில் இவர் காங்கிரசில் அப்படி பட்டும் படாமலும் இருந்ததற்கு காரணம் ஆங்கிலேய எதிர்ப்பா, இந்துத்வ மீட்சியா என்பதுதான் கேள்வி. அதற்கு நாம் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தை அதன் வரலாற்றுப் பொருளை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ளவேண்டும்.

காந்தியை எதிர்த்தது பகத்சிங்கா, ஆர்.எஸ்.எஸ்ஸா?

அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தை பார்த்து விடுவோம். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் அருமை பெருமைகளை அடித்துவிடும் பா.ரா, பின்னர் காந்தி அதை நிறுத்தியவுடன் காங்கிரசில் இருந்த தேசபக்த தீவிரவாத சிங்கங்கள் அதிருப்தியுற்று தனிப்பாதையில் பயணித்தனர் என்கிறார். இந்த தீவிரவாதப் பெருமையைத்தான் வெள்ளைக்காரனை எதிர்த்து வாயே திறக்காத சாவர்க்கருக்கும், ஹெட்கேவாருக்கும் அளிக்கிறார். கூடவே அவர்கள் காந்தியின் முசுலீம் ஆதரவை ஏற்கவில்லை என்று ஒரு விளக்கம் அளிக்கிறார். அதிலும் அந்தக் காலகட்டத்தில் முசுலீம்களுக்கென்று தனிநாடு கோரிக்கையை எழுப்பியே இராத முசுலீம் லீகை பிரிவினை பேசினார்கள் என்று வாய் கூசாமல் புளுகுகிறார். காரணம் இப்போது உள்ள முசுலீம் மீதான வெறுப்புணர்வு கொண்ட இந்து பொதுப்புத்தி இதை கேள்வி கேட்காமலேயே ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கைதான்.

ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு காந்தி இழைத்த துரோகத்தை கண்டு சினமுற்றவர்கள் சாவர்க்கர், ஹெட்கேவார் முதலான தொடை நடுங்கிகள் அல்லர். அவர்கள் சந்திரசேகர ஆசாத், பகத்சிங் முதலான தோழர்கள். அவர்கள் ஆரம்பித்த அந்த புரட்சிப்பணிதான் அடுத்த பத்தாண்டுகளில் இந்திய வானில் மையமாக இருந்தது. 1931ஆம் ஆண்டு ஒரு சிங்கம் போல பகத்சிங் தூக்குமேடையில் நின்று கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ் கோழைகள் வெள்ளைக்காரனது ஸ்பான்சரோடு மைதானத்தில் கபடி ஆடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் நம்ம அக்மார்க் அம்பியான பா.ராகவன் கம்யூட்டரின் கீ போர்டே கதறி அழுமளவுக்கு பகத்சிங் தோழர்களின் வீர அத்தியாத்தை மறைத்துவிட்டு அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளை திருட்டுத்தனமாய் திணித்து விடுகிறார். இப்படித்தான் கோழைகள் பா.ரா கையால் குட்டுப்பட்டு போராளிகளாய் ஆபாசத்தோடு உருவாக்கப்படுகிறார்கள்.

ஹெட்கேவாரின் பார்ப்பனியக் கவலைகள்!

உண்மையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஹெட்கேவார் ஆரம்பிக்க என்ன காரணம்? அதை அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம்

“மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக நாட்டில் (தேசியத்திற்கான) உற்சாகம் குறைந்து வருகிறது. அந்த இயக்கம் தோற்றுவித்த தீமைகள் சமுதாயத்தில் அச்சமூட்டும் வகையில் தலைதூக்கியுள்ளன. தேசியப் போராட்ட அலை தணிந்து வந்த போது ஒருவருக்கொருவரிடையே உள்ள குரோதங்களும் பொறாமைகளும் வெளிப்படத் தொடங்கின. எங்கு பார்த்தாலும் தனிப்பட்டவர்களிடையே சச்சரவுகள். பல்வேறு சமூகங்களுக்கிடையே மோதல்கள் தொடங்கியிருந்தன. பிராமணருக்கும் பிராமணரல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடு அப்பட்டமாகவே தெரியத் தொடங்கியது. எந்த ஒரு அமைப்பிலும் ஒருமைப்பாடோ ஒற்றுமையோ இருக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தின் பாலைப் பருகி வளர்ந்த யவனப் பாம்புகள் நஞ்சைக் கக்கிப் படமெடுத்தபடி தேசத்தில் கலவரங்களைத் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தன” (The brotherhood in saffron: The RSS and Hindu revivalism. Anderson and Damle- எஸ்.வி.ராஜதுரையின் இந்து இந்தியா நூலிலிருந்து)

இந்த விளக்கத்தை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாமல் மேலோட்டமாக பார்த்தாலே, ஒத்துழையாமை இயக்கம் குறித்த போதாமைகளை அதாவது காந்தியின் மிதவாதத்தை ஹெட்கேவார் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது புரியும். இங்கே அவரது கவலை என்ன?

சமூகங்களுக்கிடையே உள்ள மோதல், மக்களிடையே ஏற்பட்டு வரும் பிளவு அதாவது தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப் பட்டோர், பார்ப்பனரல்லாதோர் முதலான சமூகங்கள் அம்பேத்கார், பெரியார், திராவிட இயக்கம் போன்றவர்களின் முயற்சியில் ஆதிக்க சாதிகளை எதிர்க்க துவங்கிவிட்டனர். குறிப்பாக அந்த வரலாற்று காலத்தை வைத்துப் பார்த்தால் 1922 ஒத்துழையாமை இயக்கத்திற்கு பிறகு பார்ப்பன ஆதிக்க சாதியினரை எதிர்க்கும் போக்கு, இயக்கங்கள் முன்னிலைக்கு வருகின்றன. ஆர்.எஸ்.எஸ் அவதரித்த மராட்டிய மண்ணில் அம்பேத்கரின் தாழ்த்தப்பட்டோருக்கான சம உரிமை போராட்டங்கள் சூல் கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் ஒத்துழையாமை இயக்கத்தின் உதவியால் யவனர்கள் அதாவது முசுலீம்கள் தங்களது சம உரிமைக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தனர். இவைதான் ஹெட்கேவாரின் இதயத்தை குடைந்தெடுத்த கவலைகள். இந்த கவலை அவரிடத்தில் வந்ததற்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் இன் தோற்றம் பார்ப்பனிய மீட்சிக்காகவே!

வெள்ளையர்கள் ஆதிக்கம் வரும் முன்பு 18ஆம் நூற்றாண்டில் மராட்டியத்தின் அரசியல், சமூக அதிகாரத்தில் இருந்தவர்கள் பேஷ்வாக்கள். சித்பவன் எனும் பார்ப்பன பிரிவைச் சேர்ந்த இவர்களது ஆட்சிக் காலம்தான் பார்ப்பனர்களின் பொற்காலம். அதாவது சூத்திரர்களும் பஞ்சமர்களும் அடிமைகளாக அவதிப்பட்ட இருண்டகாலம். இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை தனது சாம்ராஜ்ஜியத்தில் இணைத்த வெள்ளையர்கள் மராட்டியத்தையும் கைப்பற்றினார்கள். தங்களது இருண்ட காலத்தில் இருந்து விடுதலை பெற விரும்பிய சூத்திரர்கள் – குறிப்பாக மகர்கள் எனப்படும் தலித் மக்கள், வெள்ளையர்களின் இராணுவத்தில் சேர்ந்து உணர்வுப்பூர்வமாக போரிட்டு சித்பவன பேஷ்வாக்களை வீழ்த்துவதற்கு காரணமாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது பார்ப்பனக் கொடுங்கோன்மையிலிருந்து விடுவித்த சொந்தப் போர்.

இந்த முரண்பாட்டை வெள்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதும் இப்படி தமது சமூக அதிகாரத்தை இழந்த சித்பவன பார்ப்பனர்கள் வெள்ளையர்களின் மீது ஆத்திரம் கொண்டனர் என்பதும்தான் வரலாற்று உண்மை. ஆகவே மராட்டியத்தைப் பொறுத்தவரை அங்கே சித்பவன பார்ப்பனர்களிடேயே தோன்றிய ஆங்கிலேய எதிர்ப்பு என்பது காலனிய எதிர்ப்பு உணர்வல்ல. அது வாழ்ந்து கெட்ட ஒரு பண்ணையாரின் கசப்புணர்வு.

அதைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டில் ஜோதிர்ராவ் பூலே வருகிறார். வேதத்தை மறுத்து, பார்ப்பனர்களின் மேலாண்மையை எதிர்த்து, சூத்திர பஞ்சமர்களின் சம உரிமைக்காக அயராது பாடுபடுகிறார். இதுவும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்துகிறது. அதனால் எற்கனவே ஆட்சியிழந்த பார்ப்பனர்கள் மேலும் வயிறெறிந்து போகிறார்கள்.

இப்படித்தான் மராட்டியத்தில் திலகர் உள்ளிட்ட சித்பவன பார்ப்பனர்கள் காங்கிரசில் சேர்ந்து வெள்ளையனை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பின் உள்ளடக்கமாக இழந்துவிட்ட வருண சாதி ஆதிக்கத்தை மீட்டெடுப்பதே இருந்தது. விதவை மறுமண எதிர்ப்பு, பாலிய விவாகத் தடை எதிர்ப்பு போன்றவற்றில் திலகர் தீவிரமாக ஈடுபட்டார். பிளேக் நோயை பரப்பும் எலிகளை ஒழிப்பதற்காக எடுக்கபட்ட நடவடிக்கைகளை எதிர்க்கிறார்; அதற்காக விநாயகர் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறார். ஆக மொத்தம் இந்த நடவடிக்கைகளில் இருப்பது வெள்ளையர் எதிர்ப்பா, இல்லை பார்ப்பன மீட்பா?

இதே காலத்தில் தென்னிந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாதோர் இயக்கம் திராவிடர் இயக்கமாக வளர்கிறது. இந்த இயக்கத்தில் தமது சமூக ஆதிக்கத்தை இழக்க விரும்பாத பார்ப்பனர்கள் வெள்ளையர்களது அரசில் சேர்ந்து கொண்டும், காங்கிரசில் இருந்து கொண்டும் தந்திரமாக வேலை செய்கின்றனர். அன்று காங்கிரசு தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் தேவதாசி தடை சட்டத்தை கடுமையாக எதிர்த்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

மேற்கு வங்கத்தில் முசுலீம் நவாப்புகளை வீழ்த்திய வெள்ளையர்களை அங்கிருந்த பார்ப்பன ‘மேல்’சாதியினர் வரவேற்றனர். அதன் மூலம் இழந்து விட்ட தமது சமூக ஆதிக்கத்தை பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. இப்படி இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் வெள்ளையர் எதிர்ப்பு அல்லது ஆதரவு இரண்டுமே பார்ப்பனிய சாதி ஆதிக்கத்தின் மீட்போடு தொடர்புடையது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்ட காலகட்டத்தில்தான் அம்பேத்கரும் தனது செயல்பாடுகளை துவங்குகிறார். 1920கள் மற்றும் 1930களில் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து பொதுக்குளத்தில் நீரெடுக்கும் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் முதலானவற்றை நடத்துகிறார். அப்போது ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் இத்தகைய சோதனைகளால் இந்துக்களுக்கு அதாவது பார்ப்பனர்களுக்கு நேர்ந்துவிட்ட அபாயத்தை பற்றி கவலைப்படுகிறார்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பதை வாசகர்கள்  புரிந்து கொள்ள முடியும். இந்த வரலாற்றை மறுத்து நூலாசிரியர் பா.ரா உருவாக்கும் மோசடியையும் அறிந்து கொள்ள முடியும்.

ஆர்.எஸ்.எஸ் இன் புரவலர்கள் யார்?

1925க்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் எப்படி பரவியது? யார் உதவினார்கள்?

சுதந்திரப் போராட்டம் தங்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதில் தீர்மானகரமாய் இருந்த ஆர்.எஸ்.எஸ்ஐ குண்டாந் தடிகளுடன் இராணுவ பயிற்சி செய்வதற்கு வெள்ளையர்கள் அனுமதித்தார்கள்.

அந்த விசுவாசத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் நிறைய சந்தர்பங்களில் நாம் காணலாம். உதாரணத்திற்கு ஒன்று –

“We should remember that in our pledge we have talked of freedom of the country through defending religion and culture. There is no mention of departure of British in that.” (Shri Guruji Samgra Darshan, Vol 4, p. 2)”

இது ஆர்.எஸ்.எஸ் காரர்கள் “குருஜி” என்று ஏற்றிப் போற்றும் அவர்களது இரண்டாவது தலைவர் கோல்வால்கர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.

இப்படித்தான் ஆங்கிலேயர்கள் ஆசிர்வாதத்துடனும், மேல்மட்ட பார்ப்பனிய சனாதனிகளின் உதவயுடனும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பரவியது.

வட இந்தியாவில் குமாஸ்தக்களை உருவாக்கும் ஆங்கிலக் கல்விமுறையின் பரவலால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரிருவர் முன்னேறியதைப் பார்த்து தமது அஸ்திவாரத்தில் லேசான ஆட்டம் கண்டு போயிருந்த வருணாசிரம இந்து தரும ஆதிக்கத்தைக் காப்பாற்றவும், சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்த்தெழ வைக்கும் நோக்கத்திற்காகவும் ஜமீன்தார்கள், நிலப் பிரபுக்களிடம் நன்கொடை திரட்டி பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்தார் காங்கிரஸ்காரரும் இந்து மகாசபையை தோற்றுவித்தவர்களுள் ஒருவருமான மதன் மோகன் மாளவியா. இந்த பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்க்கு என்று தனியாக கட்டிடமே கட்டிக் கொடுதிருந்தார். இத்தகைய புரவலர்களால்தான் ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் பரவியது.

ஆனால் பா. ராவோ, பத்துப் பதினைந்து வயது சிறுவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய ஹெட்கேவார் “மெல்லியக் குரலில்” சித்தாந்தப் பயிற்சியளித்ததாகவும் அதிலிருந்து தேறியவர்கள் வடநாடு முழுக்கப் பரவி பத்தே ஆண்டுகளில் நாற்பதாயிரம் பேராகப் பெருகியதாக அதிசயக்கிறார்.

பிரிவினையை முதலில் பேசியது முசுலீம் லீகா, இந்து மகா சபையா?

அடுத்து புத்தகத்தின் துவக்கத்திலேயே முசுலீம் லீக் கட்சியினர் தனி நாடு கோரி பிரிவினை பேசினார்கள் என்றும் அதன் காரணமாக நடந்த கலவரங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் தரப்பில் களமிறங்கியதாலேயே அது பரவலான வெளிச்சத்துக்கு வந்தது என்றும் சொல்கிறார் பா.ரா.

ஆனால், உண்மையில் முசுலீம் லீக்கின் தனிநாடு கோரிக்கை வெளிப்பட்ட  பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு 1923ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதி வெளியிட்ட “ஹிந்துத்துவம்: யார் ஹிந்துக்கள்?” எனும் நூலில் தான் முதன் முறையாக இசுலாமியர்கள் இந்த நாட்டில் இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது எனும் பிரிவினை வாதம் பேசப்பட்டது. ஹெட்கேவார் அப்புத்தகம் கையெழுத்துப் பிரதியாக இருக்கும் போதே வாசித்தவர்.

அப்புத்தகம் தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஆரம்பத்தில் ஒரு தத்துவ அடிப்படையை வழங்குவதாக இருந்தது. மிகத் தெளிவாக பார்ப்பனிய இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக் கொள்வோரைத் தவிர்த்து வேறு எவருக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை அப்புத்தகத்தில் தெளிவாக சாவர்க்கர் அறிவிக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் வெகு காலம் முன்னதாகவே இந்துத்துவம் என்பது பேச்சளவிலும் செயல் அளவிலும் காங்கிரசில் இருந்த புகழ் பெற்ற பார்ப்பனப் பெருச்சாளிகளின் செயல்பாட்டில் இருந்தது.

இந்துத்வக் காங்கிரசில் முசுலீம்கள் இணைய முடியுமா?

மேலும் இந்திய அரசியலில் மதத்தை கலந்து அரசியல் செய்த முதல் கட்சியே காங்கிரசுதான். ஏற்கனவே அதன் தடங்களை திலகரது வரலாற்றில் பார்த்து விட்டோம். பின்னர் காந்தியின் காலத்திலும் அதுவே நடந்தது. இந்துக் கடவுளர்களின் உருவகமாக நாட்டை சித்தரித்து பாடும் வந்தே மாதரம் முசுலீம்களின் எதிர்ப்புக் கிடையிலும் காங்கிரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. காங்கிரசின் தலைவர்கள் பலர் இந்துத்வத்தின் பொற்காலத்தை மீட்டெடுக்கும் கனவினை கொண்டிருந்தவர்கள்தான். அதற்காக முசுலீம்களை அவர்களது சம உரிமைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

சாவர்க்கர், ஹெட்கேவார் கும்பலுக்கும் முன்பாகவே காங்கிரஸில் விபின் சந்திர பால் போன்ற மிதவாத இந்துத்துவவாதிகளும் லாலா லஜபதிராய், திலகர், மதன் மோகன் மாளவியா போன்ற தீவிர இந்துத்துவவாதிகளும் நிறைந்திருந்தனர். காங்கிரஸில் உறுப்பினர்களாக இருக்கும் போதே லாலா லஜபதிராய் ஆரிய சமாஜத்தில் இயங்கி வந்துள்ளார். மாளவியா உத்திரபிரதேசத்தில் “பாரத தர்ம மகாமண்டலம்” என்கிற அமைப்பை நிறுவியவர் – தான் இறக்குவரை காங்கிரஸில் இணைந்திருந்தவர். பின்னாளில் இவர்கள் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் தான் ஹிந்து மகாசபா.  இதற்காக காங்கிரசு இவர்களைக் கண்டித்து வெளியேற்றவில்லை.

அந்தக் காலகட்டத்தில் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களின் உறுப்பினர்களும் தலைவர்களும் காங்கிரசிலும் இருந்துள்ளனர். இவர்கள் தீவிரமான ஆங்கிலேய எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் காங்கிரசை ஒரு தீவிரமான இந்துத்வா போக்கில் மாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். 1937ஆம் ஆண்டு தான் வேறு இயக்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசிலும் உறுப்பினர்களாக இருப்பதைத் தடை செய்து ஒரு விதியைக் கொண்டு வருகிறது. இங்கே புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் காங்கிரசை அனைத்து பார்ப்பனியவாதிகளும் இது நம்ம ஆளு கட்சி என்றுதான் கருதினார்கள். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட இந்து காங்கிரசுக் கட்சியில் முசுலீம்கள் எப்படி சேர்ந்து பணியாற்ற முடியும்?

இப்படி இந்துத்துவவாதிகளின் கூடாரமாய் காங்கிரசு சீரழிந்து கிடந்த நிலையில் அதற்கான எதிர்வினையாக வேறுவழியின்றி தோன்றியது தான் முசுலீம் லீக். ஆங்கிலேயர்களும் இந்த முரண்பாட்டை திறமையாக பயன்படுத்தி முற்றவைத்தார்கள். முசுலீம் லீக் அதன் துவக்க காலத்தில் தேசப் பிரிவினையை செயல் திட்டமாகக் கொண்டிருக்கவில்லை. முசுலீம்களைக் கல்வியறிவு பெறச்செய்வது, மாகாண அரசுகளில் போதிய பிரநிதித்துவத்தைக் கோரிப் பெறுவது போன்றவைகளையே அதன் தலைவர்கள் முன்வைத்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தோடு சமரசமாகச் சென்று சில சில்லரைக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வது எனும் அளவில் காங்கிரஸின் இசுலாமிய பிரதி தான் முசுலீம் லீக்.

முதல் இந்திய சுதந்திரப் போரில் இந்து, முசுலீம் என மதவேறுபாடு இல்லாமல் மக்கள் ஒருங்கிணைந்து போராடியதைக் கண்டு உணர்ந்த ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறார்கள். இந்த சூழ்ச்சியை முறியடித்து மதசார்பற்ற தேசிய இயக்கத்தை கட்டுவதற்கு பதில் இந்துத்தவ வழியில் காங்கிரசு கட்சியைக் கட்டினார்கள் அதன் பிதாமகர்கள்.

இந்த வரலாற்று உண்மையை மறைத்துவிட்டு இதை அப்படியே புரட்டிபோட்டு முசுலீம்கள்தான் ஆர்.எஸ்.எஸ் ஐ துவங்குவதற்கு காரணம் என்று பா.ரா ஒரு பொய்யை விரல் கூசாமல் எழுதுகிறார்.

எமர்ஜென்சியில் ஆர்.எஸ்.எஸ்: கோழைகள் சூரர்களான அதிசயம்!

“மிசாவில் கைதாகி சிறை சென்றவர்களுள், முழு எமர்ஜென்சி காலமும் சிறைப்பட்டிருந்தவர்கள் அநேகமாக ஆர். எஸ். எஸ் காரர்கள்தாம்.” என்கிறார் பா.ரா. தேசமெங்கும் அவசர நிலையை எதிர்த்து போராடுமாறு தனது தொண்டர்களை அப்போதைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் அழைப்பு விடுத்தாராம். அதை ஏற்று “மாறு வேடங்களில் வீடுவீடாகச் சென்று இந்திரா அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை எடுத்துச் சொல்வது, பத்திரிகையாளர்களை ரகசியமாகச் சந்தித்து, சிறையில் இருக்கும் இயக்கத்தின் உறுப்பினர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை விவரிப்பது” போன்ற வேலைகளை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் செய்தார்களாம்.

நரியைப் பரியென்று காட்டும் பேராசை பா. ராகவையங்காருக்கு வந்ததில் தப்பில்லை – ஒரு ‘நூலின்’ துயரம் இன்னொரு ‘நூலு’க்குத்தானே புரியும்? அதற்காக தெளிவாய் நாடே பார்த்துக் கொண்டிருந்த போது பகிரங்கமாய் இந்திராவின் காலை நக்கியாவது சிறையிலிருந்து வெளியே வரத் தயாராக இருந்த ஆர்.எஸ்.எஸ் கோழைகளை வீரர்களாகக் காட்டுவது, போட்டுக் கொண்டிருக்கும் ‘நடுநிலை’ முகமூடிக்கு சற்றும் பொருந்தாமல் அசிங்கமாய் பல்லிளிப்பதை பா.ரா உணராமல் இல்லை. இதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் என்னவென்றால் ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக இயக்கம், அரசியல் இயக்கம் இல்லையாம். அதனால் அதன் தலைவர் அப்படித்தான் அணுகுவாராம்.

முதலில் இவர்கள் சொல்வது போல் இந்திரா காந்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் விரோதியல்ல. அன்றைக்கு இந்தியாவிலிருந்த அமெரிக்க சார்பு முதலாளிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்து நின்ற ரசிய சார்பினருக்குமான முரண்பாடுகளின் பின்னணியில் தனது சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த இந்திரா காந்தியால் எமர்ஜென்சி அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு நிலையிலிருந்ததாலேயே ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை ஆர்.எஸ்.எஸ் அதன் செயல்பாடுகளால் வரவழைத்துக் கொண்ட ஒன்றல்ல. மாறாக இந்திராவின் அரசியல் கணக்குகளுக்காக அதன்மேல் திணிக்கப்பட்டது.

அதேபோல ரசிய சார்பு கொண்ட வலது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்படாமல் இருந்ததற்கும், ரசிய சார்பற்ற இடது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டதற்கும் இந்திராவின் ரசிய சார்புதான் காரணம். இதே அவசர நிலை காலத்தில் நக்சல்பாரி புரட்சியாளர்கள் கொலை செய்யப்பட்டும், பலர் சிறைபட்டதற்கும் கூட அவர்கள் ரசிய சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்கள் என்பதோடு உள்நாட்டில் ஆளும் வர்க்கத்திற்கு தலைவலியாக செயல்பட்டார்கள் என்பதே.

மற்றபடி ஆர்.எஸ்.எஸ் வெளியிலிருந்தால் என்ன செய்திருக்குமோ அதை  எந்தக் குறையுமில்லாமல் இந்திராவே நிறைவேற்றினார். தில்லி குடிசை வாழ் மக்களை அகற்றுவது, கட்டாயக் குடும்பக்கட்டுப்பாடு போன்றவைகளை எதிர்த்துப் போராடிய ஏழை முசுலீம்களை ஆயுதம் கொண்டு காட்டுமிராண்டித்தனமாய் ஒடுக்கியது இந்திராவின் அரசாங்கம். இதனால் இன்றைக்கும் சஞ்செய் காந்தி எனும் சர்வாதிகார இளவலை ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பாராட்டித் திரிகிறது. மேனகா காந்தியும், வருண் காந்தியும் இன்று பா.ஜ.கவில் இருந்து கொண்டு இந்துவெறி பிரச்சாரத்தை செய்கிறார்கள் என்றால் அது அவர்களது மரபிலேயே இருக்கிறது என்பதுதான்.

அன்னை இந்திராவின் அடிமைகளாக ஆர்.எஸ்.எஸ் கும்பல்!

எமர்ஜென்சிக்கு முன்பே இந்திரா காந்தி வெளிப்படையாக விஷ்வ ஹிந்து பரிசத்தின் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் மேல் போடப் பட்ட தடையே ஒரு அடையாளத்திற்காகத் தானேயொழிய இவர்கள் அன்றைக்கு சிறையிலிருந்த கம்யூனிஸ்டு புரட்சியாளர்களைப் போல எமர்ஜென்சி கொடுமைகள் எதையும் அனுபவித்ததில்லை. இருந்த போதும் கைதான மறு நொடியிலிருந்தே இந்திராவுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதத் தொடங்கிவிட்டார்கள். அதுவும் எப்படி?

சிறையிலிருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் தேவரஸ் கடிதம் மேல் கடிதமாய் இந்திராவுக்கு எழுதித் தள்ளுகிறார். அவற்றில் இந்திராவை தைரியலட்சுமி, வீரலட்சுமி என்றெல்லாம் புகழ்ந்து விட்டு, இந்திராவின் சுதந்திர தின உரையைப் பாராட்டி விட்டு, தேர்தல் வழக்கின் மேல் முறையீட்டில் அவர் வென்றதற்கு வாழ்த்து சொல்லி விட்டு – தங்கள் மேலான தடையை விலக்குமாறும், தங்கள் இயக்கத்திற்கும் நெருக்கடி நிலை எதிர்ப்பியக்கத்திற்கும் தொடர்பிலை என்றும், தடையை நீக்கினால் அரசுக்கு விசுவாசமாக இயங்குவதாகவும் குறிப்பிடுகிறார்.

கருணாநிதியாவது எமர்ஜென்சிக் கொடுமைகளை அனுபவித்து முடித்த பின் தான் ‘நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக’ என்று சரண்டரானார். அடி வாங்கிய பின் தான் தி.மு.க அழுதது – இவர்களோ இந்திரா செல்லமாக கம்பை ஓங்கியதுமே தம் காலோடு மூத்திரம் பெய்து கண்ணீர் விட்டுக் கதறிய கோழைகள்.

எனினும் நூலாசிரியர் பா.ரா கூச்ச நாச்சமின்றி ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு அவசர நிலையை எதிர்த்த வீரர்கள் என்ற பட்டத்தை அவர்களே  வெட்கப்படுமளவுக்கு மனம் குளிர வழங்குகிறார். இன்று தேவரஸ் உயிரோடு இருந்திருந்தால் பா.ராவிற்கு “சங்கம் காத்த சிங்கம்” என்று பட்டமே வழங்கியிருப்பார்.

அயோத்தி – ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆலோசனை வழங்கும் பா.ரா

கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளாக இந்து வெறியர்கள் தொடர்ச்சியாகத் திட்டமிட்டு, சாமானிய மக்களிடையே மதவெறி நஞ்சைக் கலந்து மக்களிடையே கண்ணுக்குப் புலப்படாத ஒரு பெரும் தடைச் சுவரையே ஏற்படுத்தி, பல கலவரங்கள் நடத்தி பலநூறு முசுலீம் மக்களைக் கொன்று குவிப்பதற்கு காரணமான பாபர்மசூதி எனும் அயோத்தி விவகாரத்தை வரலாற்றறிஞர் பா. ரா வெறும் ஒன்றரை பக்கத்திலேயே முடித்துக் கொள்கிறார். இதை விரித்து எழுதியிருந்தால் அவரே விரும்பினாலும் ஆர்.எஸ்.எஸ்இன் கொலைபாதகத்தை மறைக்க முடியாது என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அயோத்தி விவகாரத்தை மூலதனமாக்கி, நாட்டு மக்களை ஒரு ரத்தக் குளியலில் மூழ்கவைத்து ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு இந்து மதவெறி பாசிஸ்டுகள் தலையெடுத்த அந்த நிகழ்வுக்கு பல முக்கியத்துவங்கள் இருக்கின்றன. இந்த நாட்டின் அரசு, அரசியல், நீதி, நிர்வாக, ஊடக அமைப்புகள் அனைத்தும் இந்துமதவெறி பாசிசத்தின் தூண்களாக அம்பலப்பட்டதன் பின்னணி குறித்து அவருக்கு அக்கறை ஏதும் இல்லை. ஏனெனில் அவரும் கூட இந்த தூண்களில் ஒருவர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதனால்தான் அயோத்தி விவகாரத்தை வேறு விதமாக சுமூகமாகத் தீர்த்திருக்க முடியும் என்கிறார் – அதற்கு உதாரணமாக ஆர்.எஸ்.எஸ் விவேகானந்தர் நினைவாலயம் நிறுவியதை ‘சாதுர்யமாகச்’ சாதித்துக் கொண்டதாக எடுத்துக் காட்டுகிறார்.

விவேகானந்த கேந்திரத்தின் வரலாறும், தமிழகத்தில் இந்துமதவெறியும்!

“விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதில் யாருக்குக் கருத்து வேறுபாடு இருக்க முடியும்?எனவே எந்தத் தடையுமின்றிப் பரபரவென்று ஆலோசனைகள் நடைபெறத் தொடங்கின.”

“சிக்கல், கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் வடிவில் வந்தது. பாறையில் விவேகானந்தருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதை ஏற்க முடியாது. நூறு வருடங்களுக்கு முன்னால் புனித  சேவியர் இங்கு வந்த போது அவர் அமர்ந்து ஜபம் செய்த பாறை அது. கிறிஸ்தவர்களுக்குச் சொந்தமானது” – பக்கம் 123.

இதன்படி பா.ரா கூறுவது என்ன?

நினைவுச்சின்னம் அமைக்க ஏக்நாத் ரானடே எனும் ஆர்.எஸ்.எஸ்-இன் அகில இந்திய பொதுச் செயலாளரை அதன் தலைவர் கோல்வால்கர் அனுப்புகிறார். வந்தவர் கையெழுத்து இயக்கம் எடுத்தது, தி.மு.க தலைவர் அண்ணாதுரையை நினைவுச் சின்ன கமிட்டிக்குள் இழுத்தது, உச்சகட்டமாக ஜோதிபாசு எனும் கம்யூனிஸ்ட் தலைவரிடமே விவேகானந்தர் வங்கத்துகாரர் என்று நன்கொடை கேட்டது, இப்படியே மத்திய மாநில அரசுகளை நைச்சியமாகப் பேசி சம்மதிக்க வைத்து நாசூக்காக காரியத்தை சாதித்ததாக பா.ரா சொல்கிறார்.

ஆனால் உண்மை என்ன?

தமிழகத்தில் பெரியாரின் தாக்கத்தினால் வளரமுடியாமல் தேங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு, பார்ப்பனரல்லாத இந்து மதப் பிரச்சாரகர் விவேகானந்தருக்குப் பொதுவில் இருந்த இரசிகர் பட்டாளம் நம்பிக்கையளித்தது. பார்ப்பனரல்லாதோரையும் உள்ளிழுக்கும் வகையில் வருண சாதி அமைப்புக்கு பங்கம் வராமல் சில சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்தவர் விவேகானந்தர். காங்கிரசு மட்டுமல்ல  போலி கம்யூனிஸ்டுகள் கூட விவேகானந்தரை ஏற்றுக் கொள்பவர்கள் தான்.

பொதுவாக ஆர்.எஸ்.எஸ் தனது வளர்ச்சிக்கு மக்களிடம் இயல்பாக இருக்கும் நம்பிக்கைகளையும் விழுமியங்களையும் கவர்ந்து கொண்டும், அவற்றுள் ஊடுருவிக் கைப்பற்றியும் அவற்றின் உள்ளடக்கத்தை தமக்கேற்றவாரு மறுசீரமைத்து மதவெறியூட்டுவதையும் தமது செயல் தந்திரங்களில் ஒன்றாகக் கொண்டுள்ளது. சாமானியர்கள் வழிபடும் வினாயகரைக் கைப்பற்றியதும், கிராமக் கோயில் பூசாரிகள் சங்கம் எனும் பெயரில் சிறு தெய்வங்களை சமஸ்கிருதமயமாக்குவதும் இதற்கான உதாரணங்கள்.

இப்படித்தான் விவேகானந்தரை வைத்து தமிழகத்தில் ஊடுறுவுவதற்கு ஆர்.எஸ்.எஸ் முயன்றது. காலம் காலமாக குமரி மாவட்ட கரையோர மீனவர்கள் கடலாடி வந்து உணவருந்தி ஓய்வெடுக்கவும், தமது வலைகளைக் காய வைக்கவும், ஆண்டுக்கொரு முறை சிலுவை வைத்து ‘குரூஸ்’ எனும் வழிபாடு நடத்தப் பயன்படுத்தி வந்த பாறையை ஆர்.எஸ்.எஸ் இதற்காக குறிவைக்கிறது.

நாட்டில் பெயர் பெற்ற பண்டாரம் பரதேசிகள் மூத்திரம் பெய்த, வெளிக்கு போன இடங்களையெல்லாம் கண்டுபிடித்து நினைவாலயம் அமைக்க வேண்டுமென்றால் இந்த நாட்டில் மக்கள் வசிக்கவே இடம் காணாது. விவேகானந்தரோ நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து பல இடங்களில் தங்கி தியானம் செய்திருக்கிறார் – சொற்பொழிவுகள் ஆற்றியிருக்கிறார். இவர்கள் குறிப்பாக அந்தப் பாறையைத் தேர்ந்தெடுக்கக் காரணம் அதைப் பயன்படுத்தி வந்த மீனவர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததும் – அம்மாவட்ட மக்கள் தொகையில் அவர்கள் கணிசமான அளவில் இருந்ததும் தான். மேலும் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை, புறக்கணிப்பு காரணமாக மதம் மாறியவர்கள் அந்த மக்கள். அதே போல நாடார்களில் கணிசாமானோரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். மிச்சமிருக்கும் இந்து நாடார்களையும் ஏனைய சாதி இந்துக்களையும் திரட்டுவதற்கு இந்த விவேகானந்தர் நினைவு சின்னம் வழி அமைத்துக்கொடுக்கிறது.

மேலும் இந்தியா முழுவதிலும் இருந்துவரும் மக்களுக்கு இந்த நினைவுச் சின்னம் ஒரு இந்துத்வ சுற்றுலாவாக இருக்கும் நன்மையையும் ஆர்.எஸ்.எஸ் கணித்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்த்ததைப் போலவே நினைவாலயம் அமைக்கப்பட்டால் தமது வாழ்வுரிமை பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த மீனவர்கள், அந்நடவடிக்கைகளை தம்மால் இயன்ற அளவில் கடுமையாக எதிர்க்கிறார்கள். ஏழை மீனவர்களின் இந்த பிரச்சினையை இந்துக்களுக்கு வந்த சோதனையாக பிரச்சாரம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.

மீனவர்களுக்கு அந்தப் பாறை மேல் இருந்த பாரம்பரிய உரிமையை மூடி மறைத்து, அவர்களிடம் இருந்து அதைத் தட்டிப் பறித்த ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு மத்தியில் ஆட்சியிலிருந்த சாஸ்திரியும், மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பக்தவத்சலமும் பக்கபலமாய் இருந்துள்ளனர். காஞ்சி சங்கராச்சாரி மறைமுகமாகத் துணை நின்றார். அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் தனக்கு பலமில்லாத காரணத்தால், கேரளாவில் இருந்து இரகசியப் படகுகள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் குண்டர்களையும், தமிழக போலீசையும் வைத்து மீனவர்களை அடித்து விரட்டி விட்டு தான் இந்த ஆக்கிரமிப்பை வெற்றிகரமாகச் செய்தனர்.

இறுதியில் 1970ஆம் ஆண்டு விவேகானந்தர் நினைவாலயம் திறக்கப்படுகிறது. கூடவே கன்யாகுமாரியில் ஆர்.எஸ்.எஸ்இன் நச்சுப்பணிக்கான தளவேலையும் ஆரம்பிக்கப்படுகிறது.

இயல்பாகவே ஆளும் அதிகார வர்க்கத்தினிடையே நிலவும் இந்துத்துவ ஆதரவு நிலைப்பாட்டை சாதகமாக்கிக் கொண்டு அதிகாரத்தையும், குண்டர்படையையும் துணைக்கு வைத்துக் கொண்டு எதிர்ப்புகள் நசுக்கப்பட்டதாலேயே விவேகானந்தர் பாறை நினைவாலயம் சாத்தியமானது. இந்த ‘அமைதி’ வழியைத் தான் பா.ரா அயோத்தி விஷயத்திற்கும் பரிந்துரைக்கிறார்.

அதாவது, இவர்கள் ஏன் அவசரப்பட்டு கலவரம் செய்து, முசுலீம்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்து, கைகளை இரத்தச் சகதியில் முக்கியெடுத்து, மசூதியை இடித்து இத்தனை கெட்ட பெயரை வாங்க வேண்டும்? கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தால், நீதி மன்றத்தின் மூலமே ‘முறையான’ தீர்ப்பைப் பெற்று, இராணுவத்தைக் கொண்டே மசூதியை இடித்து கோயிலைக் கட்டியிருக்கலாமே என்பது தான் பா.ராவின் அங்கலாய்ப்பு. இப்போது அலகாபாத் உயர்நீதி மன்றம் கொடுத்திருக்கும் தீர்ப்பின் பின்னணியில் பா.ராவின் அங்கலாய்ப்பைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் அயோத்தயில் இந்து கோவிலை இடித்துத்தான பாபர் மசூதியைக் கட்டினார் என்று ஆர்.எஸ்.எஸ் கூறும் அபாண்டத்தை பா.ராவும் வழிமொழிகிறார். கருத்து வேறுபாடு எதில் என்றால் இந்த விவகாரத்தை சாணக்கிய குள்ளநரித் தந்திரத்தின் மூலம் சிரமமின்றி சாதித்திருக்கலாம் என்பதே.

குஜராத் இனப்படுகொலையை ஆர்.எஸ்.எஸ் செய்யவில்லையாம்!

இதையே தான் குஜராத் கலவரங்கள் பற்றிய விவரணைகளின் பின்னும் சொல்கிறார்.

“அடிப்படை இது தான். குஜராத்தின் இன்றைய வளர்ச்சி, சுதந்திரம் அடைந்த நாளாக அந்த மாநிலம் காணாதது. மிகவும் பிரம்மாண்டமானது. மக்களுக்கு வளர்ச்சி தான் முக்கியம். வசதிகளே முக்கியம். குஜராத் என்றல்ல. உலகெங்கும்  இது தான். இது மட்டும் தான். ” பக்கம் – 138

ஆயிரக்கணக்கான முசுலீம்களை இனப்படுகொலை செய்து, பெண்களைக் கற்பழித்து, முசுலீம் பெண்களின் கருப்பையைக் கிழித்து கண்களைக் கூடத் திறக்காத பிஞ்சுகளை வீசியெறிந்து வாள் முனையில் சொருகிக் கொன்று ரத்த வெறியாட்டம் ஆடிய பின்னும் மோடி வென்றதற்கு மிக முக்கிய காரணம் அவர் குஜராத்திற்குக் காட்டிய வளர்ச்சிப் பாதை தான் என்றும் – வளர்ச்சியொன்றே முக்கியமென்றும் சொல்கிறார் பா.ரா.

யூதர்களை கொன்று பின்னர் ஜெர்மனியர்களின் வளர்ச்சிக்கு வித்திட்டு அவர்களது செல்வாக்கை அணிதிரட்டிய ஹிட்லரின் வெற்றியும் அப்படித்தான். நவீன இந்தியா கண்ட மிகக் கொடூரமான முசுலீம் மக்கள்  இனப்படுகொலைதான் 2002 கலவரங்கள். அது முடிந்து எட்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை. அதற்குள் அதெல்லாம் ஒரு பொருட்டல்ல, இனி வளர்ச்சிதான் மோடியின் தாரகமந்திரம் என்று பாவமன்னிப்பு வழங்குகிறார். இதன்படி இந்துமதவெறியர்கள் கலவரத்தின் மூலம் சிறுபான்மை மக்களைக் கொன்றுவிட்ட கையோடு ஏதாவது கார் தொழிற்சாலை, வளர்ச்சி என்று செட்டிலாகிவிட்டால் அது பிரச்சினையில்லை.

அடுத்து குஜராத் கலவரத்தை ஆர்.எஸ்.எஸ் திட்டமிடவில்லையாம். அதற்கு ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய மத உணர்வு கொண்டவர்கள் தான் காரணமாம். அதாவது, கொலைகளையும் கற்பழிப்புகளையும் குண்டு வீசியதும் ஆர்.எஸ்.எஸ்ஸால் மத உணர்வு ஊட்டப்பட்டவர்கள் தான் – அதற்கு ஆர்.எஸ்.எஸ் காரணமில்லை என்று பச்சையாய் புளுகுகிறார். இதே ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தான் தெகல்கா வீடியோ முன் அப்பட்டமாக நின்று எப்படித் திட்டமிட்டோம், எப்படிக் கொன்றோம் என்று குற்றவுணர்ச்சியே இல்லாமல் விவரித்தார்கள். ஆனாலும் ஆர்.எஸ்.எஸ் என்ற அர்ப்பணிப்பு உணர்வு மிக்க தேசபக்தர்களை கொலைகாரர்களாக பார்ப்பதற்கு பா.ரா தயாரில்லை. அதனால்தான் அந்த கொலைகாரர்களது சித்தாந்தத்தை நெஞ்சிலேந்தி விடம் கக்கும் அரவிந்த நீலகண்டன் போன்ற பாம்புகளெல்லாம் பா.ராகவனது தமிழ் பேப்பரில் படம் எடுத்து ஆடுகின்றன. நல்ல பாம்பு படமெடுப்பதை இரசிக்கும் பா.ரா போன்ற கண்ணியவான்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

பனியாக்களின் பின்புலத்தோடு குஜராத்தில் ஊடுருவிய ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக அங்கே வேலை செய்திருக்கிறது. கலவரத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே குஜராத்தைப் பற்றிய ஒரு முழுமையான சர்வேயை வி.எச்.பி எடுத்துள்ளது. அதில் முசுலீம்கள் மக்கள் தொகை, முசுலீம்கள் செய்து வந்த வியாபாரம் போன்ற விவரங்களைத் திரட்டி முன் தயாரிப்பு செய்திருக்கிறார்கள். வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் மூலம் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களிடையே மதவெறி நஞ்சூட்டி முசுலீம் சமுதாயத்திற்கு எதிராய் அணிதிரட்டியிருக்கிறார்கள்.

இது ராகவன் சொல்வது போல ஏதோ “உணர்வால் உந்தப்பட்டு” சட்டென்று நிகழ்ந்த ஒன்றல்ல; பல்லாண்டுகளாகத் திட்டமிட்டு படிப்படியாக ஊடுருவி ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்களையே பாசிசமயமாக்கியிருக்கிறார்கள். இத்தனை விமரிசையாக அம்பலப்பட்ட பின்னும் மோடியின் தேர்தல் வெற்றி சாத்தியமாகி இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இது தான். நாஜிக் கட்சியினர் எப்படி ஜெர்மானியர்களின் மனங்களை பாசிசமயமாக்கி யூதர்களுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை அமைதியாக வேடிக்கை  பார்த்துக் கொண்டிருக்கும் வெறும் பார்வையாளர்களாக ஆக்கினார்களோ அதே வழிமுறையைத் தான் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம் குஜராத்தில் பின்பற்றியது – தேசமெங்கும் அதையே விரித்துச் செல்லும் திட்டத்தையும் வைத்துள்ளது. அதனால்தான் குஜராத் இந்துத்வத்தின் சோதனைச் சாலையாக இருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ் எனும் பாசிச இயக்கத்தை பாராட்டும் பா.ரா!

1948ஆம் ஆண்டு காந்தி கொலை செய்யப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்படுகிறது. மராத்திய சித்பவன பார்ப்பனனும், இந்து மகா சபையின் தீவிரவாதியுமான நாதுராம் கோட்சேதான் காந்தியைக் கொல்கிறார். சாவர்க்கரின் தலைமையிலான ஒரு தீவிர இந்துத்தவ கும்பலே இதை திட்டமிட்டு செய்கிறது. கோட்சே ஒரு ஸ்வயம் சேவகரும் கூட. ஆனால் அவர் ஒரு முன்னாள் ஆர்.எஸ்.எஸ்காரர்தான், காந்தி கொலையின் போது அவர் அந்த இயக்கத்தில் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டதாம். இதை டெக்னிக்கலாக சொல்லி ஆர்.எஸ்.எஸ் பங்கை விடுவிக்கிறார், பா.ரா.

சரி, ஒரு ஸ்வயம் சேவக் ஆர்.எஸ்.எஸ் இல் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்கு ஏதாவது சாட்சியங்கள் இருக்கிறதா? இல்லை. உலகத்தில் உள்ள எல்லா கட்சிகளும், அமைப்புகளும் அவ்வளவு ஏன் நமது சிலம்பரசனது ரசிகர் மன்றத்தில் கூட உறுப்பினர்கள் என்றால் ஒரு அடையாள அட்டை கொடுப்பார்கள். அந்தந்த அமைப்புகளின் ஆவணங்களில் உறுப்பினர்களது பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆனால் இப்படி ஒரு ஜனநாயக நடைமுறை ஆர்.எஸ்.எஸ் இல் அறவே கிடையாது. யாரெல்லாம் அதன் ஷாகாக்களுக்கு வருகை தருகிறார்களோ அவர்களெல்லாம் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறுவார்கள். ஒரு வேளை அவர்கள் ஷாகாக்களுக்கு வருகை தருவதை நிறுத்தி விட்டால் அவர்களை முன்னாள் ஸ்வயம் சேவகர்கள் என்று கூறமாட்டார்கள். கேட்டால் வாழ்க்கையில் ஓரிரு நாட்கள் வந்தால் கூட அவர்கள் என்றுமே ஸ்வயம் சேகவர்கள்தான், இதில் முன்னாள், பின்னாள் என்று பாகுபாடெல்லாம் கிடையாது என்பார்கள். ஆர்.எஸ்.எஸ் இன் இந்த லாஜிக்படி கோட்சே ஒரு ஸ்வயம் சேவக்தான்.

ஆர்.எஸ்.எஸ்இல் இப்படி உறுப்பினர் பதிவேடுகள், இல்லாமல் இருப்பதற்கு காரணம் அது ஜனநாயகமற்ற பாசிச அமைப்பு என்பதுதான். ஆர்.எஸ்.எஸ்இல் ஒரு உறுப்பினருக்கு இன்னென்ன உரிமைகள், கடமைகள், அவருக்கு அதன் தலைவர்களை தெரிவு செய்யும் வாக்குரிமை என்று எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ்இன் பல்வேறு கீழ்மட்டத் தலைவர்களெல்லாம் மையத்திலிருந்து நியமனம் செய்யப்படுபவர்கள்தான். சான்றாக ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் தனக்கு பிறகு கோல்வால்கரை தெரிவு செய்கிறார். கோல்வால்கர் தனக்கு பிறகு தேவரசை தலைவராக தெரிவு செய்து உயில் எழுதிவிட்டு சாகிறார். அதே போல தேவரஸ்ஸுக்கு பிறகு ராஜேந்தர் சிங், அவருக்கு பிறகு சுதர்சன், சுதர்சனுக்கு பிறகு மோகன் பகவத் என்று சங்கராச்சாரிகளின் சங்கரமடம் போல ஆர்.எஸ்.எஸ்இன் பாரம்பரியம் தொடர்கிறது.
இதுதான் இந்த பாசிச அமைப்பின் இயங்கு முறை. ஆனால்

” ஜனநாயகத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் விவாத, விமரிசன கேலிக்கூத்துகள் அறவே தவிர்க்கப்பட்டன. இவர் தலைவர், இது முடிவு. தீர்ந்தது விசயம் ” பக்.57

என்று இதற்கு ஒளிவட்டம் போடுகிறார் பா.ரா. ஆர்.எஸ்.எஸ் இல் மருந்துக்குக் கூட ஜனநாயகம் இல்லை என்பதை பா.ரா விவரிக்கவில்லை என்பதும் அதையே போற்றுகிறார் என்றால் அது அவருடைய கருத்து மட்டுமல்ல. அவருடைய நூலை வாங்கி படிக்கும் ‘இந்துத்வ’ நடுத்தர வர்க்கத்திடம் கேட்டால் கூட ” இந்தியாவில் ஒரு சர்வாதிகார ஆட்சி வந்தால்தான் நாடு உருப்படும்” என்று சொல்வார்கள்.
காந்தி கொலைக்குப் பிறகு தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் அடுத்த ஆண்டே மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இந்த சலுகை அந்த இயக்கத்திற்கு எப்படி கிடைக்கிறது?

அமெரிக்க கைக்கூலியாய் கம்யூனிசத்தை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ்!

அப்போது தமது இயக்கத்தின் மேலான தடையை விலக்கக் கோரி ஆர்.எஸ்.எஸ்இன் தலைவர் கோல்வால்கர், நேருவுக்கு எழுதிய கடிதங்களில் உலகெங்கும் கம்யூனிச அபாயம் பரவுவதாகவும் இந்தியாவிலும் அது வேகமாகப் பரவிவருவதாகவும் இதை எதிர்த்த போராட்டத்தில் அரசுக்கு விசுவாசமான அடியாள் படையாக ஆர்.எஸ்.எஸ் இருக்கும் என்கிற உறுதி மொழியைக் கொடுத்துள்ளார். அன்றைய சூழ்நிலையில் உலகளவில் கம்யூனிஸ்டுகளைக் கண்டு அஞ்சியது அமெரிக்க ஏகாதிபத்தியமும் இந்தியளவில் நிலபிரபுக்களும், தரகு முதலாளிகளும் தான். இதிலிருந்தே இவர்களின் விசுவாசம் யாரிடம் இருக்கிறது என்பது தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

அந்த காலகட்டத்தில் தெலுங்கானாவில் நிலவுடைமை பண்ணையார்களை தூக்கி எறிந்துவிட்டு நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலத்தை சொந்தமாக்கி ஆயுதந் தாங்கிய போராட்டத்தை கம்யூனிஸ்ட்டுகள் நடத்தி வந்தார்கள். இந்த செயல் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதென்றால் அதற்கு பரிகாரம் செய்வதற்கு ஆர்.எஸ்.எஸ் துடித்திருக்கிறது. மேலும் உலக அளவில் கிழக்கு ஐரோப்பாவிலும், கொரியா, வியட்நாமிலும் கம்யூனிஸ்ட்டுகள் வென்று வரும் நேரத்தில் அமெரிக்கா அலறித் துடிக்கிறது. அந்த அமெரிக்காவின் கையை பலப்படுத்தி இந்தியாவில் கம்யூனிச அபாயத்தை வீழ்த்துவதற்கு தங்கள் மீதான தடையை விலக்க வேண்டுமென்று கோல்வால்கர் கூறுகிறார் என்றால் இதன் பொருள் என்ன?

ஆம். ஆர்.எஸ்.எஸ் என்பது இந்தியாவின் எதிர்ப்புரட்சி கும்பல் என்பதே. அதனால்தான் அந்த இயக்கத்தின் மீதான தடை நேரு அரசாங்கத்தால் நீக்கப்படுகிறது. இந்த வரலாற்று உண்மை பா.ரா என்ற ‘நூல்’ ஆசிரியரின் அக்கறைக்குரியதாக இல்லை. ஜமீன்தார்கள், மிட்டா மிராசுதாரர்கள், பண்ணையார்களது அதிகாரம், நில உடமை பறி போவதை பார்த்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பதறுகிறது என்றால் இந்த கட்சியின் யோக்கியதை குறித்து வாசகர் முடிவு செய்து கொள்ளலாம்.

மக்களுக்குகாக போராடாத ஆர்.எஸ்.எஸ்இன் பரிவார அமைப்புகள்!

இதன் பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் பல்வேறு பரிவார இயக்கங்களைப் பற்றி பிரம்மிப்பூட்டும் வகையில் விவரிக்கிறார் பா.ரா. இவை ஆரம்பிப்பதற்கு என்ன காரணம்? காந்தி கொலையின் போது அந்த இயக்கத்தின் சார்பில் பொது அரங்கில் பேசுவதற்கு யாருமில்லை என்று கோல்வால்கர் கவலைப்பட்டு இத்தகைய கிளைகளை ஆரம்பிக்கிறாராம். பா.ரா இதில் பார்க்கத் தவறிய உண்மை ஒன்று இருக்கிறது. என்னதான் தடை நீக்கபட்டாலும், பட்டேல் போன்ற தீவிர இந்துத்வவாதிகள் காங்கிரசில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ்இன் கொள்கையை நேரடியாக பேசுவதற்கும், செயல்படுத்துவதற்குமான ஒரு அரசியல் கட்சி இல்லை என்பதும், அரசியல் அதிகாரத்தில் நாமே நேரடியாக குதிக்க வேண்டும் என்ற அவாவே ஆர்.எஸ்.எஸ் பல்வேறு பரிவார இயக்கங்களை ஆரம்பிப்பதற்கு காரணமாகும். அந்த வகையில் ஜனசங்கம் என்ற முன்னாள் பாரதிய ஜனதா கட்சி ஆரம்பிக்கப்படுகிறது.

இன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பிக்கு ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்களாம். ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட பி.எம்.எஸ் எனப்படும் பாரதிய தொழிற்சங்கம் இருக்கிறதாம். இன்னும் தேசமெங்கும் செல்வாக்கான மடங்கள், மத நிறுவனங்கள் போன்றவற்றில் ஊடுருவி வேலை செய்யும் பலமான வி.எச்.பி, வடநாட்டில் அநேகமாக எல்லா மலைவாசி கிராமத்திலும் கிளைகள் கொண்ட வனவாசி கல்யாண் ஆஷ்ரம் என்று அவர்களது பலமான வலைப்பின்னலை ஒரு வியப்புடன் வாசகனுக்கு விவரிக்கிறார் பா.ரா.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தியாவில் கோடிக்கணக்கானோர் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளில் இருப்பதாகத் தோன்றும். இது தமிழ்நாட்டின் ஆதிக்க சாதி சங்கங்கள் அடித்துவிடும் பிரம்மாண்டமான உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஒப்பானதாகும். மேலும் பொட்டு வைத்தவெனெல்லாம் ஆர்.எஸ்.எஸ் காரன் என்ற பொதுப்புத்திக்கு முரண்படாத வாதமும் ஆகும்.

இருக்கட்டும். இப்படி ஒவ்வொரு அரங்கத்திற்கும் தனித்தனியான அமைப்புகளைப் பெற்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ், அந்தப் பிரிவு மக்களின் எத்தனை கோரிக்கைகளுக்குப் போராடியுள்ளது என்கிற செய்தியை மட்டும் பா.ரா சொல்லவில்லை. ஆர்.எஸ்.எஸ்ஸின் அபிமானத்திற்குரிய வாசர்களான மயிலாப்பூர் பார்த்தசாரதிகளுக்கு வேண்டுமானால் அது தேவைப்படாத தகவலாய் இருக்கலாம்; ஆனால் வினவு வாசகர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

தி.மு.க, அ.தி.மு.க போன்ற ஆளும் வர்க்க கட்சிகளிலும் மாணவர் பிரிவு, தொழிலாளர் பிரிவு, விவசாயிகள் பிரிவு என்று வைத்திருக்கிறார்கள். இவர்களாவது அந்தந்த வர்க்கப் பிரிவினரின் கோரிக்கைக்காக ஒரு சந்தர்ப்பவாதமாகவாவது போராடியிருக்கிறார்கள். இன்றைக்கு கல்வியே வியாபாரமாகப் போய்  விட்ட சூழலில், படித்த எத்தனையோ இளைஞர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்காமல் அவதியுறும் நிலையில், எத்தனையோ அரசுக் கல்லூரிகள் அரசால் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், ஏ.பி.வி.பி ஆரம்பிக்கப் பட்ட இத்தனை வருடங்களில் எத்தனை முறை போராடியிருக்கிறார்கள்?

மாணவர் சமுதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி நடத்திய இயக்கங்கள் எத்தனை? சொல்லிக் கொள்ளுமளவு ஒன்றுமில்லை என்பதே உண்மை. அப்படியிருக்க ஏ.பி.வி.பி ஏன் ஆரம்பிக்கப் பட்டது? யாருடைய நலனுக்காக இயங்குகிறது?

இதற்கு நாம் பதில் சொல்ல வேண்டாம். பா.ராவே பதில் சொல்கிறார் – மாணவர்களை மொழிப் போராட்டம், சாதி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் தடுத்து அவர்களை அரசியல் விலக்கம் செய்வது தான் நோக்கமாம். ஏ.பி.வி.பியில் இணையும் மாணவனை ஷாகாக்களுக்கு வரவழைத்து இந்துத்வத்தை ‘உணர்வாகவும் உணவாகவும்’ ஊட்டுவார்களாம் (பக்கம் 44). மொழி உரிமைப் போராட்டம் என்று பா.ரா குறிப்பிடுவது தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களைத் தான். அதாவது, தமது பார்ப்பன சனாதன தருமத்தின் பரவலுக்கு மாணவர் பிரிவினரிடம் இருந்து எதிர்ப்புகள் வந்து விடாமல் தடுத்து அவர்களை மடை மாற்றி மதவெறி ஊட்டி பாசிஸ்ட்டுகளாக வார்த்தெடுப்பது தான் ஆர்.எஸ்.எஸ்ஸின் நோக்கம்.

அதே போல் உலகிலேயே முதலாளிகளைக் கேள்வியே கேட்காமல் உழைக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு கருங்காலி தொழிற்சங்கம் தான் பி.எம்.எஸ். அந்த வகையில் முதலாளிகள் இந்த சங்கத்தை ஸ்பான்சர் செய்து வளர்த்தார்கள். முதலாளிகளும், தொழிலாளிகளும் முரண்படாமல் ஒருங்கிணைந்து பாரதத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்பதுதான் பாரதிய மஸ்தூர் சங்கத்தின் கொள்கை முழக்கம். மே தினத்திற்கு பதில் விசவகர்மாவின் ஜன்ம நட்சத்திர தினத்தைத்தான் தொழிலளிகளும், முதலாளிகளும் கொண்டாட வேண்டுமென்பது இந்த சங்கத்தின் சுதேசிக் கொள்கை.

பழங்குடிகள் போராட்டத்தை ஒடுக்கும் ஆர்.எஸ்.எஸ்!

வடநாட்டில் வனவாசிகள் வாழும் கிராமம் தோறும் கிளைகள் கொண்டிருப்பதாக பா.ராவால் வியந்தோதப்படும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் ஒரிசாவிலும் சட்டீஸ்கரிலும், ஆந்திரத்திலும், பீகாரிலும், மேற்குவங்கத்திலும் வனவாசி மக்கள், பன்னாட்டு நிறவனங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருந்த போது எங்கே போனது? இதன் இலட்சக்கணக்கான உறுப்பினர்கள் எங்கே மாயமாக மறைந்து போனார்களா?

அயோத்தி புனிதம். மதுரா புனிதம். காசி புனிதம். எனில்  நியாம்கிரி புனிதமில்லையா? கோண்ட் இன மக்களின் வாழ்வாதாரமாய் இருக்கும் அம்மலையை பன்னெடுங்காலமாய் அவர்கள் புனிதத்தாயாக வணங்கி வருகிறார்களே அதை அவர்களிடமிருந்து பறித்து, அம்மண்ணை விட்டும், கோண்ட் தாயை விட்டும் விரட்டியடித்து விட்டு பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்க இந்திய இராணுவமே களத்தில் இறங்கியிருக்கும் போது, குண்டாந்தடிப் பயிற்சி பெற்ற ஆர்.எஸ்.எஸ் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்களின் வழிபாட்டு உரிமையை காப்பாற்றப் போகிறோம் என்று புறப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா?

ஆனால் செய்ததென்ன? பாரதிய ஜனதா மூலமும் வனவாசி கல்யாண் ஆஷ்ரம் மூலமும் திரட்டப்பட்ட சில கைக்கூலி பழங்குடியினரை வைத்து சல்வாஜூடும் என்கிற குண்டர் படையை ஆரம்பித்து, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து லட்சக்கணக்கான பழங்குடியினர் மேல் ஏவி விட்டுள்ளனர். போஸ்கோ, மிட்டல் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் அடியாள் படையாக அணிதிரட்டி நிறுத்தியிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்இன் சங்க பரிவார அமைப்புகளின் உறுப்பினர் எண்ணிக்கையை கோடிகளில் காட்டும் கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரும், ‘மாபெரும் அறிஞரு’மான பா.ராவுக்கு இந்த உண்மைகள் மறந்தும் கூட தெரியாமல் போனது என்?

பெண்கள் சேரமுடியாத ஆர்.எஸ்.எஸ்ஸும் அல்கைதாவும்!

பெண்களுக்காகத் ‘தனியே’ ஒரு இயக்கம் ஆரம்பித்தது இவர்களுடன் பெண்கள் நிறைய சேர ஒரு காரணம் என்று பா.ரா ஆச்சரியமாய்க் குறிப்பிடுகிறார். ஆனால், இதில் அவர் குறிப்பிடாமல் மறைத்த இன்னொரு விஷயமும் இருக்கிறது.  தி.மு.கவாகட்டும், அ.தி.மு.கவாகட்டும் இன்னும் உலகில் எந்தவொரு அரசியல் சமூக இயக்கங்களாகட்டும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். ஆனால், உலகிலேயே பெண்களை இயக்கத்தில் சேர்க்காமல் ‘தனியே’ தள்ளி வைத்திருக்கும் இயக்கங்கள் மூன்று தான் – ஒன்று கூ -க்ளக்ஸ் – க்ளான், இரண்டு அல்காயிதா, மூன்று ஆர்.எஸ்.எஸ். ஆர்.எஸ்.எஸ்இன் விதிமுறைப்படி அங்கு பெண்களுக்கு இடமில்லை. அதனால்தான் பெண்களுக்கென்று தனியே ராஷ்ட்ரிய சேவிகா சமிதி என்று ஒன்றை ஆரம்பித்தார்கள். சங்கபரிவார அமைப்புகளின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் இல் ஒரு பெண் உறுப்பினராக சேரக்கூடாது என்று இன்றும் அதாவது இருப்பத்தியோராவது நூற்றாண்டிலும் ஒரு கூட்டம் இருக்கிறு என்ற பாசிச உண்மையை அதன் பக்தரான பா.ரா ஏறெடுத்தும் பார்க்கவில்லை. என்ன இருந்தாலும் அவரும் அத்தகைய விழுமியங்களை, பச்சையான ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சான்றோர்தானே?

ஆதாரம் வேண்டுவோர் பா.ராவை அணுகி அதுகுறித்து கல்கி பத்திரிகையில் செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி என்ன சொல்லியிருக்கிறார், உயிரோடு இருக்கும் ஜெயேந்திரர் என்ன சொல்லியிருக்கிறார் என்று கேட்டால் தப்பாமல் சொல்வார். ஏனெனில் அந்த மேற்கோள்களை பக்தி சிரத்தையோடு பிழை திருத்தம் பார்த்த பக்தர் அவர்தான்.

ஆர்.எஸ்.எஸ்இன் ஒழுக்கமும், தேசபக்தியும் உண்மையல்ல!

பா.ரா தனது நூலின் நெடுக ஆங்காங்கே ஆர்.எஸ்.எஸ்ஸைச் செல்லமாகக் கடிந்து கொள்ளவும் செய்கிறார். ஆனால், அதையெல்லாம் மீறி எந்த விமரிசனத்திற்கும் அப்பாற்பட்ட உண்மையாக அவர் கூறுவது, போற்றுவது, வாசகர்களிடம் உருவாக்க நினைப்பது என்ன? ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட தேசபக்தர்கள், முக்கியமாக திருமணத்தை தியாகம் செய்த பிரம்மச்சாரிகள் என்றும் புகழ்கிறார். இதை வாசகர்கள் எந்த சந்தேகமின்றியும் ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று பல இடங்களில் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்.

நாம் ஒரு வாதத்திற்காக பிரச்சாரக் கோவிந்தாச்சார்யா – உமாபாரதி காதல் கதைகளும், பிரச்சாரக் சஞ்சை ஜோஷியின் காமக் களியாட்டங்கள் சி.டியாக வலம் வந்ததையும், வாஜ்பாயி, இல.கணேசன் போன்ற அக்மார்க் பிரம்மச்சாரிகளின் யோக்கியதை குறித்து குமுதமே கிசுகிசு எழுதி அம்பலமாகி ஊரே நாறி சிரிப்பாய்ச் சிரித்ததை ஒதுக்கி வைத்து விட்டு பா.ரா அளிக்கும் ஒழுக்கவாத சான்றிதழைப் பார்க்கலாம்.

ஒழுக்கம் என்பது என்ன? அதன் அளவு கோள் என்ன?

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்க்கலாம். ஒருவன் ரொம்ப ஒழுக்கமானவன். புகைப் பழக்கம் இல்லை. மது அருந்தும் பழக்கம் இல்லை. பெண்களை ஏறெடுத்தும் பார்க்காதவன். நெற்றியில் பட்டை – கழுத்தில் கொட்டை; பெரிய பக்திமான். முக்கியமாக அவன் ஒரு பிரம்மச்சாரி. ஆனால், அவன் தொழிலில் மட்டும்  விபச்சாரத் தரகன். இவனின் ஒழுக்கம் பற்றி இப்போது நீங்கள் கொள்ளும் மதிப்பீடு என்ன?

ஆக, ஒழுக்கம் என்பது ஒரு தனிமனிதனின் பழக்க வழக்கங்களிலும் தனிப்பட்ட பண்புகளிலும் மட்டும் சுருங்கிக் கொள்வதல்ல. அது அம்மனிதன்  சமூக உறவில் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைக் கொண்டும் தான் உருவெடுக்கிறது. சமூக உறவுகளில் ஒழுக்கமில்லாத ஒருவன் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய ஒழுக்கவானாக இருந்தாலும் அவன் ஒரு அயோக்கியனே. இல்லையென்றால் எந்த கெட்டபழக்கமும் இல்லாமல், கோவில் கொடைகளுக்கு வாரி வழங்கும் பல்வேறு ரவுடிகளையும் நாம் பிரச்சாரக்குகள் போன்று போற்ற வேண்டும். இந்திய இராணுவத்தின் இரகசியங்களை விற்று கைதான தீவிர ஆன்மீக சிவபக்தரான கூமர் நாராயணனையும் நாம் வணங்க வேண்டும்.

வாஜ்பாயி தலைமையில் பா.ஜ.கவின் பாரத மாதா விற்பனை!

பா.ரா தனது நூலின் பல இடங்களில் ஆர்.எஸ்.எஸ் தேசபக்தியை கேள்விக்கப்பாற்பட்ட இடத்தில் வைத்து போற்றுகிறார். வேறு பெரிய விளக்கங்களை இதற்கு நாம் தேட வேண்டிய அவசியம் எதையும் வைக்காமல் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் ஒருவர் போராட்டம் ஒன்றின் போது சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப் பட்ட போது நீதி மன்றத்தில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமே ஆர்.எஸ்.எஸ் கொண்டிருந்த ‘தேசபக்தியை’ தெளிவாக விளக்குகிறது.

“He had given a confessional statement in the court which helped in his release from the jail for his being just the onlooker of the assembly which went on to damage the government property. At that time he was a dedicated and active member of RSS. In his confession he wriggles out of active participation. ‘ I along with my brother followed the crowd, I did not cause any damage. I did not render any assistance in demolishing the government buildings’ ” (<http://www.milligazette.com/Archives/15-12-2000/Art6.htm>)

மேலே உள்ள ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் காட்டியும் கொடுத்த அந்த தேசபக்தி நிறைந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கின் பெயர் அடல் பிகாரி வாஜ்பாய். தேசவிடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்த அந்த தேர்ந்த முன் அனுபவம் தான் பிற்காலத்தில் பன்னாட்டு முதலாளிகளுக்கு தேசத்தையே காட்டிக் கொடுக்க அவருக்குக் கை கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் தனது சுதேசி ஜாக்ரன் மன்ச் எனும் ஒரு காமெடி பீஸு இயக்கத்தை கொண்டு மக்களிடம் சுதேசிப் பொருள்களின் பட்டியலை விநியோகித்துக் கொண்டிருந்த போது இவரோ சுதேசி நிறுவனங்களை விதேசிகளிடம் ‘தேசபக்தியோடு’ விலை பேசிக் கொண்டிருந்தார்.

ஒழுக்கமான, நேர்மையான, பிரம்மச்சாரியான இன்றைய ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் என்ன செய்கிறார்? அப்பட்டமாய் அம்பலமாகி ஊரே காறித்துப்பிய பொம்பளைப் பொறுக்கி மற்றும் கொலைகாரனான காஞ்சி சங்கராச்சாரியின் காலைக் கழுவிக் குடிக்கிறார். நித்தியானந்தா அம்பலமாகி நின்ற போது ஒரு அடையாளமாகக் கூட எந்த ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கும் கண்டிக்க வில்லை. இன்னொரு ஒழுக்கமான பிரம்மச்சாரி பிரச்சாரக்கான வாஜ்பாயி, நம்மிடம் பாரதமாதா படத்தைக் கொடுத்து சூடம் சாம்பிராணி காட்டிக் கும்பிட்டுக் கன்னத்தில் போட்டுக் கொள்ளச் சொல்லி விட்டு – வெளியே பாரதமாதவைப் பன்னாட்டு முதலாளிகளிடம் கூட்டிக் கொடுத்துள்ளார். அதாவது பாரதமாதாவை ஏகாதிபத்தியங்கள் ‘கற்பழிப்பதற்கு’ ரேட்டு பேசினார்.

இந்தத் தேசத்தின் நதிகளெல்லாம் புனிதமென்று ஷாகாவில் பயின்று வந்த பிரச்சாரக்கான வாஜ்பாயி தான் கங்கையை விலை பேசினார். எங்கள் தேசத்தின் புழுதியே சந்தனம் தானென்று தினமும் ஷாகாவில் பஜனை பாடிய பயிற்சி பெற்று வந்த வாஜ்பாயி  சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களை சுயாட்சிப் பிரதேசங்களாகப் பட்டா போட்டுக் கொடுத்துள்ளார்.

தேசபக்தியென்பது காவிக் கொடியேந்திய லட்சுமி படத்தை பாரத மாதாவென்று சொல்லி சூடம் சாம்பிராணி காட்டி கும்பிடுவது தானா? தேசம் என்பது வெறும் நிலப்பரப்பு மட்டுமா? இல்லை காவிக் கொடியேந்திய லட்சுமி படமா? இல்லை. ஒரு தேசம் என்பது அதனுள் ரத்தமும் சதையுமாக வாழும் மக்கள். அந்த மக்களின் நலனுக்காக உழைப்பதே உண்மையான தேசபக்தி. இந்தப் பரிவாரங்களெல்லாம் ஆரம்பிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகளில் எத்தனை மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் போராட்டங்களை, இயக்கங்களை எத்தனை முறை முன்னெடுத்திருக்கிறார்கள்? ஒன்றுமில்லை என்பதே இந்த தேசபக்தர்களது யோக்கியதை.

ஆர்.எஸ்.எஸ்இன் பிரம்மச்சாரி பிரச்சாரக்குகள் தியாகிகளாம்!

அயோத்தி ராமனை இந்த நாட்டின் மாபெரும் இலட்சிய புருஷன் என்று அவாள் கம்பெனிகள் போற்றுவதற்கு என்ன காரணம்? எல்லா  இராமயணங்களும், அதன் உபன்னியாசர்களும் அதற்கு இறுதியில் கூறும் காரணமென்னவென்றால் இராமன் ஒரு ஏகபத்தினி விரதன் என்பதாகும். ஒரு நாட்டில் ஒருவன் ஒரு பெண்டாட்டியை வைத்திருக்கிறான் என்பதற்காகவே அவனை போற்றுகிறார்கள் என்றால் அந்த நாட்டில் மற்றவர்களெல்லாம் பொம்பள பொறுக்கிகள் என்று அர்த்தம்.

அதே போல ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகள் திருமணம் செய்யவில்லை என்பது தியாகமென்றால் பதிவுலகில் திருமணம் ஆகாத அத்தனை பேரும் தியாகிகள்தான். இந்த தியாகத்தை பல நூற்றாண்டுகளாய் கத்தோலிக்க பாதிரியார்களும் செய்து வருகிறார்கள். என்ன, திருச்சபையில் கொஞ்சம் ஜனநாயகம் இருப்பதால் அந்த தியாகங்கள் சந்தி சிரித்த கதைகள் நிறைய வெளியே வந்துவிட்டன. ஆர்.எஸ்.எஸ் ஒரு பாசிச இயக்கமென்பதால் இந்த தியாகத்தின் உண்மை ரூபம் வெளியே கசிவதில்லை.

ஈழத்திலும், ஈராக்கிலும், ஆப்கானிலும், காஷ்மீரத்திலும் குடும்பம், கணவன், மனைவி, குழந்தைகளை இழந்து அனாதைகளாய் கோடிக்கணக்கான மக்கள் வாழும் உலகத்தில் ஒரு ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகன் காமத்தை திருட்டுத்தனமாய் அடக்கினான் என்பதுதான் தியாகமா? பா.ராவின் ஆய்வு இந்த விசயத்தில் ஆபாசமாகவும், அருவெறுப்பாயும் இருக்கிறது.

முடிவுரை:

உலக பாசிச இயக்கங்களின் வரிசையில் ஆர்.எஸ்.எஸ்!

முதல் உலகப் போர் முடிந்து, ரசியாவில் கம்யூனிச எழுச்சி ஏற்பட்ட பிறகு 1920களில் உலகமெங்கும் உள்ள முதலாளிகளில் தீவிர தேசியத்தின் முகமூடியில் இனவெறி பேசிய பாசிச பிரிவினர் தோன்றுகிறார்கள். இனிமேலும் ஜனநாயகத்தை மக்களுக்கு வழங்க முடியாது என்று மத,சாதி,இனவெறியின் பேரில் தோன்றிய ஹிட்லரின் நாசிக் கட்சி, முசோலினியின் பாசிசக் கட்சி, ஜப்பானின் தேசியவெறி மன்னராட்சி முதலான சமகால பாசிச இயக்கங்களின் வரிசையில்தான் அதே காலத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸும் தோன்றுகிறது. மற்ற இயக்கங்கள் பாசிசத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்து பின்னர் அழிந்து விட்டன என்றால் ஆர்.எஸ்.எஸ் ஆட்சியைப் பிடிப்பதற்கு பல ஆண்டுகள் ஆனது. இதற்கு காரணம் இந்த நச்சுப் பாம்புகளை, இவர்களது பார்ப்பனியத்தை எதிர்த்து இந்தியாவில் பெரும் போராட்டங்கள் நடந்தன என்பதுதான்.

இன்று தீவிர இந்துத்வம் பேசினால் கடை ஓடாது என்ற நிலையில் அரசியல் ரீதியில் அவர்கள் காலாவதியாகும் நேரத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஒரு ஒளிவட்டம் போட்டு வாசகனுக்கு அறிமுகப்படுத்துகிறார் பா.ரா. உலகமயமாக்கத்தின் தயவில் நுகர்வுக் கலச்சாரத்தில் முங்கி எழும் நடுத்தர வர்க்கம் தனது பண்பாட்டு ஏக்க புலம்பலுக்காக ஆன்மீகம், கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் என்று சுயதிருப்தி அடையும் வரிசையில் ஆர்.எஸ்.எஸ்ஸும் வருகிறது. மேலும் பொதுப்புத்தியில் இந்துத்வம் வலுவாக படிந்திருக்கும் நிலையில் அதை விற்று காசாக்கும் நோக்கில்தான் கிழக்கு பதிப்பகத்தின் இந்த நூல் திட்டமிட்டு பொய்களோடும், புனைவுகளோடும் சந்தையில் இறக்கி விடப்பட்டிருக்கிறது.

பா.ராவை ஆதரிப்போரும், விமரிசிப்போரும் ஸ்வயம் சேவக்குகளே!

இதனால் அரவிந்த நீலகண்டன், ஜடாயு, டோண்டு ராகவன், ஜெயமோகன் போன்ற ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் இந்த நூலை வரவேற்பார்கள் என்பதல்ல. அவர்களைப் பொறுத்த வரை பா.ரா வை கொஞ்சம் செல்லமாக கடிந்து விட்டு அவர் இந்துத்வத்தின் தீவிர இலட்சியத்தை இந்த நூலில் முன்வைக்க வில்லை என்று விமரிசிப்பார்கள். இது அசோக் சிங்காலின் குரல் என்றால் அதே ஆர்.எஸ்.எஸ்ஸில் பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி, அருண் ஷோரி, இந்தியா டுடே, வாஜ்பேயி, கிழக்குபதிப்பகம், தமிழ் பேப்பர் போன்ற முதலாளித்துவத்தை முதன்மைப்படுத்தும் இந்துத்வவாதிகளும் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள்தான் இந்த நூலை வரவேற்பார்கள். அந்த வகையில் இந்த புத்தகம் தராளமய தாசர்களான இந்துத்வவாதிகளை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

எது வரலாறு?

வரலாறு என்பது எப்போதும் தெளிவான சித்திரத்தை பதிவு செய்து எதிர்காலத்திற்கு வழங்கிவிடும் ஒன்றல்ல. உண்மையில் வரலாறு என்பதே சமூகத்தின் நிகழ்ச்சிப் போக்கான இயக்கத்தை துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஒன்றாகும். இதில் எதை நீங்கள் கண்டு பிடிக்க போகிறீர்கள் என்பது உங்களது வர்க்க நலன் தீர்மானிக்கும். அந்த வகையில் எல்லா வரலாறுகளும் கூட அந்தந்த வர்க்க நலன்களின் விருப்பங்களோடும், தேவைகளோடும்தான் உருவாகிறது. அதனால் வரலாறு என்பது முழுக்க அகநிலை விருப்பங்களால் புனைந்துரைக்கப்படும் புனைவு என்று பொருளல்ல. அது பல்வேறு விசயங்களை பதிவு செய்திருக்கும் குறிப்பிட்ட காலகட்டத்தில் எதை பார்க்க விரும்புகிறீர்கள், எதை முன்னிலைப்படுத்த விரும்புகிறீர்கள், யாருக்காக ஆய்வு செய்கிறீர்கள் என்பதோடு தொடர்புடையது என்கிறோம்.

சாரமாக பெரும்பான்மை மக்கள் நலனிலிருந்து பார்த்தால் வரலாறு என்பது ஒடுக்கப்படும் வர்க்கங்கள் நீதிக்காக ஒடுக்கும் வர்க்கங்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்தை குறிக்கிறது என்று அறியலாம். அதன்படி பார்த்தால் ஆர்.எஸ்.எஸ் என்பது ஒடுக்கும் வர்க்கங்களின் தேவைக்கேற்ப உருவானது என்பதை சந்தேகத்திற்கிடமின்றி புரிந்து கொள்ளலாம். கூடவே நூலாசிரியர் பா.ராவின் பச்சையான அயோக்கியத்தனத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

ஆர்.எஸ்.எஸ் குறித்த இந்த நூலுக்கு பா.ரா படித்த புத்தகங்களில் அதிகம் இருப்பது ஆர்.எஸ்.எஸ்இன் வெளியீடுகள்தான். இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு அந்தக் காலத்திலேயே இராமன் குரங்கு கூட்டத்தை வைத்து மண்ணால் பாலம் கட்டினான் என்று வரலாறு எழுதும் இந்த கும்பலிடமிருந்து எதை ஆய்வுக்கு எடுக்க முடியும்? ஒருவேளை எடுத்துக் கொண்டாலும் அவர்களது பிற்போக்கு பாத்திரத்தை நிறுவுவதற்குத்தான் பயன்படவேண்டும். ஆனால் பா.ரா அவர்களது புளுகுகள் பலவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறார். அந்த வகையில் பா.ராவையும் நாம் ஒரு இலட்சியப் பூர்வமான ஸ்வயம் சேவக் என்றுதான் கொள்ள வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாது தலைவர் கோல்வல்கர் எழுதிய ஞானகங்கை நூலில் அவர் ஹிட்லரையும், இஸ்ரேலையும் வியந்தோதி வழிப்பட்டிருப்பதெல்லாம் கூட பா.ராவின் காமாலைக் கண்ணுக்கு தென்படவில்லை. சிறுபான்மை மக்கள் மீது வன்மத்தையும், துவேசத்தையும் கக்கும் படிமங்களும், வசனங்களும் அந்த நூலில் ஏராளம். இருந்து என்ன பயன்?

கிழக்கு பதிப்பகம் ஒரு கார்ப்பரேட் நிறுவனமாக இருக்கலாம். பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினால் கூட அதற்கு கடன் அட்டை வசதி வழங்கும் வெகு நவீனமான நிறுவனமாக இருக்கலாம். ஆனால் பா.ராவின் இந்த நூல் ஒரு காயலான் கடையில் இருக்கும் ராஜேஷ்குமாரின் பழைய பாக்கெட் நாவலின் தரத்தில் கூட அதாவது உள்ளடக்கத்தில் இல்லை. முதலாளித்துவ பதிப்பகங்களிடம் இருக்கும் குறைந்த பட்ச தரமும், நம்பகத்தன்மையும் இந்த நூலில் நிச்சயம் இல்லை. இதையெல்லாம் யார் கேள்வி கேட்பார்கள் என்ற அலட்சியம் கூட இந்த டவுண்லோடு அறிவாளிகளிடம் இருக்கலாம்.

கல்கி பத்திரிகையில் சீனியர் சங்கராச்சாரியின் அருள் வாக்கோடு அறிவைப் பயின்ற இந்த பா.ராகவன் சந்தேகத்திற்கிடமின்றி ஒரு பார்ப்பனிய அறிஞர்தான். கூடவே அவர் சுஜாதாவின் ‘சிலிர்ப்பான’ நடையையும் கொஞ்சம் பயின்றிருக்கிறார். இது பதிவுலகின் மொக்கைகள் பலரும் ஆராதிக்கும் விசயமாகும். ஆனால் பா.ராவின் இந்த நடையைப் பார்த்தால் நமக்கு குமட்டிக் கொண்டு வருகிறது. எது ஆர்.எஸ்.எஸ்இன் கருத்து, எது பா.ராவின் கருத்து என்று பிரித்தறிய முடியாமல் பேருக்கு ரெண்டு விமரிசனங்களையும் கலந்துவிட்டு ஏதோ மர்ம நாவலைப் போல திடுக்கிடும் கோணங்களில் அவர் எழுதுவதைப் பார்த்தால் காறித் துப்பத் தோன்றுகிறது.

கிழக்கு பதிப்பகத்தை கேள்வி கேளுங்கள்!

கிளியோபாட்ரா தினமும் குளிக்கும் கழுதைப்பாலின் கதை, இந்திய சமஸ்தான ராஜாக்களின் தங்கக் கழிப்பறைகள், தென்னிந்திய தேவதை திரிஷாவின் வாழ்க்கை வரலாறு, கருப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்தின் வெற்றிக் கதை போன்ற அதி முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளையெல்லாம் ஆயிரக்கணக்கான பக்கங்களில் அழகான தரத்தோடு கிழக்கு பதிப்பகம் நூலாக கொண்டு வந்தால் அதை நாம் ஆட்சேபிக்கப் போவதில்லை.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் என்பது இந்த நாட்டின் உழைக்கும் மக்களிடமும், சிறுபான்மை மக்களிடமும் இருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்து இந்த நாட்டை பல பத்தாண்டுகளில் ரத்த சகதியாக்கியருக்கும் ஒரு பாசிச அமைப்பு. அதன் வாழ்வும், இருப்பும், வரலாறும் இந்த நாட்டின் பிற்போக்குத்தனங்களுக்கு ஒரு அரண். அந்த அரணை இடித்து நொறுக்குவதில்தான் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் விடுதலை அடங்கியிருக்கிறது. எனவே இது நம்மைப் போன்றவர்களுக்கு சமூகக் கடமையாக இருக்கிறது. அத்தகைய கடமையேதும் இல்லாத, சந்தையில் விற்பனை இலாபம் என்ற பச்சையான சுயநலத்தை மட்டும் வைத்திருக்கும் கிழக்கு பதிப்பகம் போன்ற முதலாளிகளுக்கு ஆண்டாண்டு காலமாக இந்துத்துவ கூட்டத்தால் கொல்லப்பட்ட ஒரு முசுலீம் அல்லது ஒரு தலித்தின் அவலக்குரல் கேட்குமா என்ன?

சுரணையுள்ள வாசகர்கள் ஆர்.எஸ்.எஸ்  நூலை வாங்கியிருந்தால் அதை எடுத்துக் கொண்டு எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்கு பதிப்பகத்தின் அலுவகத்திற்கு சென்று வீசி எறிந்து விட்டு காசை திருப்பி கேளுங்கள்! ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பில் நியாயத்தை கேளுங்கள்! கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியரின் நூலே இந்த இலட்சணத்தில் இருக்கிறது என்றால் மற்ற கத்துக்குட்டிகளின் புரட்டுக்கள் எப்படி இருக்குமென்பதை அறிந்து கொள்ளுங்கள்!

வரலாறும், அறிவும் மேட்டுக்குடி கோமான்களது பொழுது போக்கல்ல. அவை நமது வாழ்க்கையில் இரத்தமும், சதையுமாய்  கலந்திருக்கும் சக்தி மூலங்கள். அதில் நாம் எந்த சமரசமும் செய்ய முடியாது. பா.ராகவனையும் மன்னிக்க முடியாது.

_______________________________________________________________

பின்குறிப்பு:

  1. எங்களுக்கு நேரம் அமைந்தால் இது குறித்து தனியான அரங்க கூட்டத்தை ஏற்பாடு செய்து இந்த கட்டுரையில் பேசாத விசயங்கள் அத்தனை குறித்தும் விளக்குகிறோம். முடிந்தால் தனியாக ஒரு நூலையும் கொண்டு வர முயல்கிறோம்.
  2. இந்த ‘நூல்’ ஆசிரியர் காஷ்மீர் குறித்தும் ஒரு வரலாறு எழுதியிருக்கிறார். கூடிய விரைவில் அது குறித்த விமரிசனம் வரும்.

__________________________________________________

விளக்கக் குறிப்புகள்:

ஆர்.எஸ்.எஸ்: ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம். பொருள்: தேசத்தின் தன்னார்வத் தொண்டர்களது இயக்கம்

விநாயக தாமோதர சாவர்கர்: ஆரம்பத்தில் இந்து விழுமியங்களோடு ஆங்கிலேயர்களை எதிர்த்த தேசியவாதியாகவும், பின்னர் காலனிய ஆட்சியோடு சமரசம் செய்து கொண்டு தீவிர இந்துத்வவாதியாகவும் மாறிய மராட்டியத்தை சேர்ந்த சித்பவன பார்ப்பனர்.

கேசவ பலிராம் ஹெட்கேவார்: ஆர்.எஸ்.எஸ்ஐ 1925இல் ஆரம்பித்தவர். 1940இல் மரணம் அடைகிறார்.

மாதவ சதாசிவராவ் கோல்வல்கர்: ஹெட்கேவாருக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரானவர்

மதுகர் தத்தாத்ரேய தேவரஸ்: கோல்வல்கருக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ்இன் மூன்றாவது தலைவரானாவர்.

ஷாகா: ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தினசரி உடற்பயிற்சிக்காக சந்திக்கும் கிளை

ஸ்வயம் சேவக்: ஆர்.எஸ்.எஸ் ஷாகக்களுக்கு வருகை தரும் உறுப்பினர்.

பிரச்சாரக்: ஆர்.எஸ்.எஸ்இன் முழுநேர ஊழியர்

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்: ஏ.பி.வி.பி எனப்படும் ஆர்.எஸ்.எஸ்இன் மாணவர் அமைப்பு.

வனவாசி கல்யாண் ஆஷ்ரம்: பழங்கடி மக்களை இந்துக்களாக மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த இயக்கம்.

ராஷ்ட்ரிய சேவிகா சமிதி: ஆர்.எஸ்.எஸ்இன் பெண்கள் அமைப்பு

விசுவ ஹிந்து பரிஷத்: உலக அளவில் இந்துக்களை அணிதிரட்டுவதற்காக ஆர்.எஸ்.எஸ் ஆரம்பித்த அமைப்பு

பி.எம்.எஸ்: பாரதிய மஸ்தூர் சங்கம் எனும் ஆர்.எஸ்.எஸ்இன் தொழிலாளர்(முதலாளிகளும்தான்) பிரிவு

அஜினோ மோட்டோ: நினைத்தாலே நாக்கில் நீர் சுரக்க வைக்கும் சீனத்து உப்பு. அப்படி பா.ராவின் மொழி நடையை நினைத்தால் மொக்கைகளுக்கு கிளர்ச்சி வருமாம்.

ராஜரிஷி: ஷத்திரிய மன்னர்களை இந்து வருண சாதி தர்ம அறத்தின் வழியில் நடத்திய பார்ப்பன சாணக்கிய குருக்கள்

___________________________________________________________

இந்த கட்டுரைக்கான ஆதாரங்கள்,நூல்கள் பல இருக்கின்றன. எனினும் இணையத்தில் உள்ள சுட்டிகளை மட்டும் இங்கு இணைக்கிறோம்.

http://www.countercurrents.org/gatade240507.htm

http://www.radianceweekly.com/38/67/Fascism-and-Muslim-Today/2006-10-22/Cover-Story/Story-Detail/Fascism-in-India.html

http://goanobserver.com/high-cost-of-freedom.html

http://www.countercurrents.org/dalit-george020906.htm – Fascism Versus Indigenous People

http://www.countercurrents.org/teltumbde100510.htm – Modi Vomits Caste Venom

http://www.countercurrents.org/dalit-sivaraman250903.htm – Amedkar vs Hindutva

http://www.countercurrents.org/desai160510B.htm – Background of Gujarat Riots

http://www.countercurrents.org/gatde130710.htm – Hindutva Terror

http://www.indianexpress.com/storyOld.php?storyId=34620 – GOA – A Liberation from Lies

http://www.storyofpakistan.com/articletext.asp?artid=A119 – Minto Morley Reforms

http://www.hinduonnet.com/fline/fl2207/stories/20050408001903700.htm – SAVARKAR’S MERCY PETITION

http://pd.cpim.org/2001/march25/march25_nalini.htmSavarkar Pledged Loyalty To British Government

http://www.indianexpress.com/res/web/pIe/columnists/full_column.php?content_id=2638 – Hindu Rashtravad

http://www.punjabspectrum.com/english/index.php?option=com_content&view=article&id=1840:golden-gloss-on-khaki-knickers-rss&catid=171:politics&Itemid=173 – GOLDEN GLOSS ON KHAKI NICKERS

http://www.rediff.com/news/2004/aug/23spec1.htm – Who was Veer Savarkar

http://www.revolutionarydemocracy.org/rdv7n1/videshi.htm – Videshi roots of RSS

மற்றும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்கள், ம.க.இ.க வெளியீடுகள், எஸ்.வி.ராஜதுரையின் நூல்கள்….

புனைவு : ”இந்து இராம் – மகிந்த இராசபக்சே” உரையாடல் !

22
இந்து ராம் – மகிந்த இராசபக்சே உரையாடல்

நீரா ராடியா உடனான இந்திய ஊடகவியலாளர்களின் தொலைபேசி ஒலிப்பதிவுகள் வெளிவந்த உடன், இந்திய ஊடகவியலாளர்களின் நடுநிலைமை பற்றி பல இடங்களில் விவாதிக்கப்பட்டது. இது போன்ற விவாதங்களில் இன்னும் ஊடக நேர்மையுடன் இருக்கும் சில மூத்த ஊடகவியலாளர்கள் பங்கு கொண்டார்கள். இது போன்ற சிக்கலான நேரங்களில் இந்த சவால்களை எல்லாம் சந்திக்கும் மிக மூத்த ஊடகவியலாளர்களில் இந்து நாளேட்டின் ஆசிரியர் திரு.என்.இராமும் ஒருவர். த‌ன‌து நாளேட்டின் த‌லைய‌ங்க‌த்திலும், தொலைக்காட்சி ஊடக நிகழ்ச்சிகளிலும், மாணவ பத்திரிகையாளர்களுக்கு தான் கற்பிக்கும் பாடங்களிலும் திரு.இராம் அவர்கள், ஊடகங்களுக்கு உள்ளிருந்தே ஒரு‌‌ அறுவை சிகிச்சை தேவை என்றும், ஊட‌க‌ நேர்மையின் அடிப்ப‌டைக‌ளை மீறும் வேண்டாத‌ க‌ளைக‌ள் எல்லாம் நீக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்றும் தொட‌ர்ந்து கூறி வ‌ந்துள்ளார்.

ஆனால் இங்குள்ள‌ பிர‌ச்சி‌னை என்ன‌வெனில் திரு.இராமே அவ‌ர் வைத்திருக்கும் இந்த‌ ஊட‌க‌ நேர்மை என்ற‌ வார்த்தைக்கு கூட‌ ம‌திப்ப‌ளித்த‌தே இல்லை என்ப‌து தான். வ‌ங்காளத்தில் உள்ள‌ த‌ன‌து விருப்ப‌மிகு மார்க்சிசுட்டுகள் முதல், த‌மிழ்நாட்டின் ஆன்மீக குருக்கள் வரை சிலரின் கிரிமினல் குற்றங்கள் முதல் படுகொலைகள் வரை திரு.இராமின் தலைமையில் இயங்கும் ஊடகம் வெளியிடுவதில்லை, மாறாக முழுவ‌துமாக‌ மூடி ம‌றைத்து, பொய்யான‌ த‌க‌வ‌ல்க‌ளை ப‌ர‌ப்புவ‌திலேயே குறியாக‌ இருக்கின்ற‌து. எல்லா தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளையும் இசுலாமிய‌ ச‌மூக‌மே ந‌ட‌த்துகின்ற‌து என்று இந்திய‌ உள‌வுத்துறை கூறும் ப‌ச்சைப் பொய்க‌ளை க‌ண்ணை மூடிக்கொண்டு அப்ப‌டியே கிளிப்பிள்ளை போல‌ ஒப்புவித்து வ‌ருகின்ற‌து இந்து நாளேடு. மேலும் இது ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ ந‌ட‌ந்து வ‌ரும் இந்த‌ தீவிர‌வாத‌ தாக்குத‌ல்க‌ளில் பங்கு கொண்டிருக்கும் இந்துத்துவ‌வாதிக‌ளைப் ப‌ற்றி விசாரிக்க‌க்கூட‌ ம‌றுத்து வ‌ருகின்ற‌து.

”ச‌ர்வ‌தேசிய‌வாதியான” திரு.இராம் இந்தியாவில் ந‌ட‌க்கும் நிக‌ழ்வுக‌ளை ம‌ட்டும் திரித்து எழுதுவ‌தோடு நின்று விடுவ‌தில்லை. உதார‌ண‌த்திற்கு, அவரது ந‌ண்ப‌ரும், இல‌ங்கை அதிபருமான‌‌ ம‌கிந்தாவிற்காக, ஊட‌க‌ நேர்மை எல்லாம் ம‌ற‌ந்துவிட்டே இந்துவில் வ‌ரும் இல‌ங்கையை ப‌ற்றிய‌ செய்திக‌ள் வ‌ருகின்ற‌ன‌. இல‌ங்கை அர‌சின் இன‌ப் பாகுபாடுக‌ள், போர்க் குற்ற‌ங்க‌ள், இன‌ப்ப‌டுகொலைக‌ள், அர‌சை விம‌ரிசிக்கும் ந‌ப‌ர்க‌ள் மர்மமான முறையில் கொல்ல‌ப்ப‌டுத‌ல், இராச‌ப‌க்சேவின் ச‌ர்வாதிகார‌ப் போக்கு இவை எல்லாம் இந்து என்ற‌ “செய்திக‌ளை ஆவ‌ணப்ப‌டுத்தும்” நாளித‌ழில் அற‌த்தின் வ‌ழியே ந‌ட‌ப்ப‌தாகவே ந‌மக்கு கூற‌ப்ப‌டும். இதை எல்லாம் கேட்டு பொய்யை மெய் போல உரைப்பதில் தன்னையே விஞ்சிவிட்டார்களே இவர்கள், என கோய‌ப‌ல்சே மூச்ச‌டைத்து இற‌ந்தாலும் ஆச்ச‌ர்ய‌ப்ப‌டுவ‌த‌ற்கில்லை .

நல்ல ஊடகத்தின் அடிப்படையான‌ ஊட‌க‌ நேர்மைக்காகவும், பொதும‌க்க‌ள் இந்த உரையாடலைப் பற்றி பல இடங்களில் விவாதிக்க ‌வேண்டும் என்ற‌ ந‌ல்ல‌ எண்ண‌த்துட‌னும் எங்க‌ளிட‌ம் உள்ள‌ இராம், இராச‌ப‌க்சே புனைவு (Fiction) தொலைப்பேசி உரையாட‌லை உங்க‌ளுக்கு எழுத்து வ‌டிவில் வ‌ழ‌ங்குகின்றோம். புனைவுச் செய்திக‌ளை உண்மையான‌ செய்திக‌ளாக‌ வெளியிடும் இந்து நாளித‌ழ் போல் நாங்க‌ள் அல்ல‌; ம‌ற்ற‌வ‌ர்க‌ள் பேசுவ‌தை ப‌திவு செய்ய‌ எங்க‌ளுக்கு உரிமை இல்லை என்ப‌தாலும், இந்த‌ தொலைபேசி உரையாட‌ல் முழுமையாக‌ எங்க‌ளால் புனைய‌ப்ப‌ட்ட ஒன்றே என்று உங்க‌ள் எல்லோரிட‌மும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உண்மையான‌(!) செய்தி என்று இன்று ஊட‌க‌ங்க‌ள் கூறும் செய்திகளை விட, இந்த‌ புனைவு உரையாடல் எவ்வளவு உண்மையானது என்பதை வாச‌க‌ர்க‌ளாகிய‌ நீங்க‌ளே முடிவு செய்துகொள்ளுங்க‌ள்.

இந்து ராம் – மகிந்த இராசபக்சே உரையாடல்

(தொலைபேசி ம‌ணி ஒலிக்கின்ற‌து,  இராச‌ப‌க்சே தனது நல்வாய்ப்பு தரும்  எண் ஒன்ப‌து வ‌ரை எண்ணிவிட்டு தொலைபேசியை எடுக்கின்றார் !)

இராம்: ஆயுபவ‌ன்(சிங்க‌ள‌த்தில் வ‌ண‌க்க‌ம் என‌ கூறுகின்றார்) அதிப‌ர் அவ‌ர்க‌ளே.

இராச‌ப‌க்சே: வ‌ண‌க்க‌ம் திரு.இராம்

இராம்: நீங்க‌ள் எப்பொழுது என்னை அழைத்தாலும் நான் வ‌ருவேன்

இராச‌ப‌க்சே: நான் “வ‌ண‌க்க‌ம்” என்று தான் சொன்னேனே த‌விர, ‘Wannacome’ என உங்க‌ளை இங்கே வரச்சொல்ல‌வில்லையே. தவிர இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றிய‌ விவ‌கார‌ங்க‌ளில் நீங்க‌ள் தானே எங்கள் தில்லியின் செல்ல‌ப்பிள்ளை?.

இராம்: எப்பொழுதிலிருந்து நீங்க‌ள் த‌மிழில் பேச‌ தொட‌ங்கினீர்க‌ள் அதிப‌ர் அவ‌ர்க‌ளே? இது உங்க‌ள‌ சிங்க‌ள‌ மொழிக்கு நீங்கள் செய்யும் துரோக‌மாகாதா?

இராச‌ப‌க்சே: நான் சிங்க‌ள‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே அதிப‌ராக‌ இருந்த‌ கால‌ம் முடிந்து விட்ட‌து ந‌ண்ப‌ரே, இப்பொழுது நான் இல‌ங்கையில் உள்ள‌ எல்லா இன‌க்குழுக்க‌ளுக்குமான‌ அதிப‌ர், த‌மிழ் இன‌க்குழுவையும் சேர்த்தே. அதாவது த‌மிழ‌ர்க‌ள் அனைவ‌ரும் சிறையில் இருந்தாலும் ச‌ரி, புல‌ம்பெய‌ர்ந்து வேறு நாடுக‌ளில் இருந்தாலும் ச‌ரி நான் தான் அவ‌ர்க‌ளின் அதிப‌ர்.

இராம்: உங்க‌ள் ச‌ர்வாதிகார‌த்தை அண்டி வாழும் சில‌ த‌மிழ‌ர்க‌ளை ம‌ட்டும்  நீங்கள் வெளியில் விட்டு வைத்துள்ளீர்க‌ள். நீங்க‌ள் தான் நான் ச‌ந்தித்ததிலேயே மிக‌ப் பெரிய‌ பொறுக்கி (செல்ல‌மாக‌). அதிலும் நீங்க‌ள் என் நெருங்கிய‌ ந‌ண்ப‌ரும் கூட .

இராச‌ப‌க்சே:
பொறுக்கி என்ற‌ சொல்லை எவ்வ‌ள‌வு அன்பாக‌ கூறுகின்றீர்க‌ள் இராம் !. என‌க்காக‌ நீங்க‌ள் உங்க‌ள் அர‌சுட‌ன் ந‌ட‌த்தும் திற‌மையான‌ அர‌சுற‌விய‌ல் இல்லை என்றால் நான் இங்கு இருந்திருக்க‌வே மாட்டேன். நீங்கள் எப்போதுமே ஊடகவியலாளர் என்பதற்கு ஒரு படி மேலானவர். எங்கள் அரசினுடைய விருப்பத்துக்குறிய தரகரல்வோ நீங்கள். வரும் ஆண்டுக்கான விபீச‌னா விருது ப‌ட்டிய‌லில் நான் உங்க‌ளின் பெய‌ரை சேர்த்திருக்கின்றேன் .

 

இந்து ராம் – மகிந்த இராசபக்சே உரையாடல்
லங்கா இரத்னா விருது பெறும் ‘இந்து’ என். இராம்

இராம்: நீங்க‌ள் த‌ரும் விருதுக‌ள் மட்டுமே உழைப்பிற்கு கிடைக்கும் ப‌ரிசுக‌ள் அதிபரே . இந்தியாவின் மற்ற பத்திரிகை ஆசிரியர்களைப்போல காசுக்கு அலையும் சில்லறை அல்ல நான்.  அப்பாவி ம‌க்க‌ளின் க‌ல்ல‌றைக‌ளில் என‌து பெயரை எழுதியாவது வ‌ர‌லாற்றில் ஒரு நிரந்தர இட‌ம் பிடிக்க விரும்புகிறேன்

இராச‌ப‌க்சே: இப்பொழுது தான் உண்மையான பிராமணன் பேசுகின்றான். கேவ‌ல‌மான‌ செல்வ‌த்தை விட நுட்பமான வ‌ர‌லாறே முக்கியமானது.  நான் உங்க‌ளைப் போல‌ ஒரு பிராமணன் கிடையாது. அதனால் தான் நான் வ‌ர‌லாற்றில் இட‌ம்பிடிக்கும் வேலையுடனே செல்வ‌த்தையும் சேர்த்து வ‌ருகின்றேன். ராஜபக்சே குடும்பத்துக்கு ஒரு ப‌குதி த‌ர‌காக‌ வ‌ராம‌ல் என் நாட்டில் எந்த‌ ஒரு ஒப்ப‌ந்த‌மும் நிறைவேறுவ‌தில்லை.

இராம்: உங்க‌ளுக்கு வ‌ரும் ப‌ண‌த்தின் அள‌வு சுருங்கிவ‌ருகின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே, இது உல‌க‌ப் பொருளாதார‌த்தின் தேக்க காலம். தவிர உங்க‌ள‌து க‌ழுத்தைச் சுற்றியிருக்கும் கயிறு இறுகுவது போலுள்ளது, உங்க‌ள‌து ஆட்சிகால‌த்தில் ந‌டைபெற்ற‌ போர்க்குற்ற‌ங்க‌ளை விசார‌ணை செய்ய‌ வேண்டும் என‌ பன்னாட்டு அமைப்புகள் கோரி வ‌ருகின்ற‌ன. க‌ட‌ந்த‌ ஆண்டு உங்க‌ள‌து இராணுவ‌ம் த‌மிழீழ‌ விடுத‌லைப்புலிக‌ள் அமைப்பை ஒன்றும் இல்லாம‌ல் செய்த‌ போது, ஒரு வார‌த்தில் மட்டும் 20,000 அப்பாவி த‌மிழ்ப் பொதும‌க்க‌ளை கொன்றார்க‌ளே, அந்த‌ கோர‌ நிக‌ழ்ச்சி நினைவிருக்கிறதா?

இராசப‌க்சே: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி தான். நான் க‌வ‌ன‌மாக‌ இருக்க‌ வேண்டும். அண்மையில் “சேனல் 4″ எம‌து ப‌டையின‌ர் த‌மிழீழ‌ விடுத‌லைப் புலிக‌ளையும், அவ‌ர்க‌ளிட‌ம் ஊட‌க‌விய‌லாள‌ராக‌ இருந்த‌ இசைப்பிரியா என்ற‌ பெண்ணையும் ப‌டுகொலை செய்யும் காணொளியை ஒளிப‌ர‌ப்பினார்க‌ளே. அதைப் ப‌ற்றி நீங்க‌ள் என்ன‌ நினைக்கின்றீர்க‌ள்?

இராம்: கொடூர‌மான‌ ஒன்று, அதாவ‌து கொடூர‌மான‌ ஊட‌க‌விய‌ல் என‌க் கூற‌வ‌ருகின்றேன். உங்க‌ள‌து அர‌சை த‌வ‌றான‌ இட‌த்தில் வைத்துக் காட்டும் ஒரு காணொளியை அவ‌ர்க‌ள் எப்ப‌டி ஒளிப‌ர‌ப்ப‌லாம்? இது ஒரு முறைய‌ற்ற‌ ஊட‌க‌விய‌லை (Bad journalism) பி.பி.சி ஒரு போதும் கடைப்பிடிக்க மாட்டார்க‌ள். சேனல் 4 ம‌ட்டும் இப்படி கீழ்த்தரமாக செல்வார்கள்.

இராச‌ப‌க்சே: நீங்க‌ள் பி.பி.சி யுடனும் ஏதாவ‌து ஒப்ப‌ந்த‌ம் செய்துள்ளீர்க‌ளா, என்ன? என்னைப் பொருத்த‌வ‌ரையில் அவ‌ர்க‌ள் எல்லாம் ஒன்று தான். இந்த‌ வெள்ளைய‌ர்க‌ள் இன்னும் த‌ங்க‌ள‌து கால‌னீய‌ ஆட்சி ந‌ட‌ந்து கொண்டிருப்ப‌தாக‌ நினைத்துக் கொண்டு அவ‌ர்க‌ள் ஆப்கானிசுதானத்திலும், ஈராக்கிலும் செய்யும் இன‌ப்ப‌டுகொலைக‌ளை ம‌றைத்து, நாம் செய்த‌ இனப்ப‌டுகொலையை ம‌ட்டும் எல்லோருக்கும் சுட்டிக்காட்டுகின்றார்க‌ள். அவ‌ர்க‌ளால் இன‌ப்ப‌டுகொலை செய்ய‌முடியுமென்றால் ந‌ம்மாலும் செய்ய‌ முடியும்.

இராம்: நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரி. இது மனிதநேய முகமூடியுடன் அலையும் உல‌க‌லாவிய‌ ஏகாதிப‌த்திய‌ம். மாநிற‌ ம‌க்க‌ள் ம‌ட்டும் எப்பொழுதும் தவறு செய்து கொண்டும், ம‌னித‌ உரிமை விதிக‌ளை எப்பொழுதும் மீறிக் கொண்டும் இருப்பவர்கள், ஆனால் வெள்ளை இன‌‌ ம‌க்க‌ள் மட்டும் அற‌த்தின் ப‌டி ந‌ட‌க்கும் சாத‌னையாள‌ர்க‌ளாம்… நான் கேட்கிறேன், இப்படி ஒரு மாநிற‌ ம‌க்க‌ள் குழு ம‌ற்றுமொரு மாநிற‌ ம‌க்க‌ள் குழுவை கொல்வ‌திலெல்லாம் அப்படி என்னதான் தவறு இருக்கிறதோ?

இராச‌ப‌க்சே: இராம் இங்கு பிர‌ச்ச‌னை என்ன‌வென்றால் சில‌ மாநிற‌, க‌ருப்பின‌ ம‌க்க‌ளும் வெள்ளையின‌த்த‌வ‌ரை போல‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இந்த‌ ச‌ர‌த் பொன்சேகாவை எடுத்துக் கொள்ளுங்க‌ள், அவ‌ன் என்னிட‌ம் இராணுவத்‌ த‌ள‌ப‌தியாக‌ இருந்தான், ஆனால் ப‌ணியிலிருந்து ஓய்வெடுத்த‌ பின்ன‌ர் அவ‌ன் என்னை அர‌சிய‌லில் எதிர்த்து போட்டியிடுகின்றான். மேலும் நானும், என‌து ச‌கோத‌ர‌ர்க‌ளும் செய்த‌ போர்க்குற்ற‌ங்க‌ளை உல‌குக்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டப்போவ‌தாக‌வும் கூறுகின்றான். இவை எல்லாம் எத‌ற்காக‌? அமைதிக்கான‌ ஒரு நோப‌ல் ப‌ரிசிற்காக‌வும், ஓய்வுக்கால‌த்தை சுவீட‌னில் க‌ழிப்ப‌த‌ற்காகவும் தானே?

இராம்: நீங்க‌ள் அந்த ஆளை சிறையில் அடைத்தது நல்லது. இல்லை என்றால் அவ‌ர் ந‌ம‌க்கு மிக‌ப்பெரிய‌ தொந்த‌ர‌வாக‌ இருந்திருப்பார். எங்களுக்கும் அவ‌ரது சத்தத்தை மூடி மறைத்துகொண்டிருந்தது  கூச்சமாக இருந்தது.

இராச‌ப‌க்சே: அதற்காக நான் ப‌ல‌ ச‌ட்ட‌ங்க‌ளை வ‌ளைக்க ‌வேண்டியிருந்தது, ஆனால் அது எல்லாம் இல‌ங்கையின் ந‌ல‌னிற்காக‌த்தானே. புத்த‌ர் வாழ்ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் என‌து நாட்டில் அர‌சிய‌லமைப்பு என்று எதுவும் இல்லை. அப்ப‌டியிருக்க‌ இப்போது ம‌ட்டும் எத‌ற்கு ஒரு அர‌சிய‌ல‌மைப்பு? என்ன‌ தான் இருப்பினும் நாங்க‌ள் ஒரு பௌத்த‌ நாடு தானே. எங்க‌ள‌து ம‌த‌க் கொள்கைக‌ளை பாதுகாப்ப‌து எம‌து முக்கிய‌ க‌ட‌மை தானே.

இராம்: ச‌ரியான‌ க‌ருத்து. புதிய‌ வ‌ர‌லாறு எழுதுவ‌த‌ற்கு முன்ன‌ர் ப‌ழைய‌ வ‌ர‌லாற்றை முற்றிலுமாக‌ துடைத்து எறிந்துவிடுங்க‌ள். அற‌த்தின் வ‌ழியாக‌ நாம் ந‌ட‌ப்ப‌து போல‌ காட்டிக்கொள்வ‌து மிக‌ முக்கிய‌மான‌ ஒன்று. ஏனென்றால் இந்த‌ (அற‌த்தின் வ‌ழி) த‌ள‌த்தில் எல்லோரும் ச‌ற்று குழ‌ம்பியே உள்ளார்க‌ள். மிக‌வும் ச‌த்த‌மான‌, உறுதியான‌ குர‌லே இறுதியில் எளிதாக‌ ம‌க்க‌ளைச் சென்ற‌டையும்.

இராச‌ப‌க்சே: குர‌ல் ம‌ட்டும் போதாது இராம், நம் மீது விம‌ர்சன‌ம் வைத்து ந‌ம்மைக் கீழே இற‌க்க‌ முய‌ல்ப‌வ‌ர்க‌ளை அமைதி ப‌டுத்த‌ ந‌ம‌க்கு துப்பாக்கியும் தேவை. ப‌டுகொலை என்ற‌ மிக‌ப்பெரிய‌ த‌ணிக்கை முறையை நான் ப‌ல‌ முறை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌ தேவை உள்ள‌து. உதார‌ண‌த்திற்கு அட‌ம்பிடித்த‌ அந்த‌ முட்டாள் பயல் ‘ச‌ண்டே லீட‌ர்’ இல‌சாந்த‌ விக்ர‌முதுங்காவிற்கும் இதே த‌ணிக்கை முறையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ வேண்டிய‌தாயிற்று.

இராம்: இதை எல்லாம் நீங்க‌ள் தொலைபேசியில் கூற‌க்கூடாது. நாம் பேசுவ‌தை எல்லாம் யாரோ ஒருவ‌ர் ப‌திவு செய்தால் என்ன‌வாகும் என‌ நினைத்துப்பாருங்க‌ள்?

இராச‌ப‌க்சே: நான் இந்த‌ தொலைபேசி ப‌திவு ஒரு இர‌ண்டாம் த‌ர‌ த‌மிழ் ந‌டிக‌னை வைத்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌து என‌க் கூறி ம‌றுத்துவிடுவேன். இப்பொழுது கொழும்பில் எங்க‌ளிட‌ம் எந்த‌ ஒரு ஒலி/ஒளி ஆதாரத்தையும் சிதைத்து போலியென மாற்றக்கூடிய ஆற்றல் படைத்த நிபுணர்கள் உள்ளனர்

இராம்: ஹா,ஹா..! நீரா ராடியா என்ற‌ பெரு முதலாளிகளின் வ‌ர்த்த‌க‌ த‌ர‌கு பெண்ம‌ணியுடனான தங்கள் தொலைபேசி உரையாடல் வெளிவ‌ந்த போது  இந்திய‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளான‌ ப‌ர்கா த‌த்தும், வீர் சிங்க்வீயும் எப்ப‌டி அதை பொய் என்று ம‌‌றுத்தார்க‌ளே, அவ்வளவு நேர்மையாக உள்ள‌து உங்க‌ள‌து ம‌றுப்புரையும். நான் கூட ஒரு தொலைக்காட்சி நிக‌ழ்ச்சியின் போது அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் வெளுத்து வாங்கி விட்டேன். அது என‌க்கு ந‌ன்றாக‌ இருந்த‌து. தாக்குத‌தல்தான்‌ பாதுகாப்பி‌ற்கான‌ சிறந்த வ‌ழிமுறை !.

இராச‌ப‌க்சே: நான் கூட‌ அந்த‌ நிக‌ழ்ச்சியைப் ப‌ற்றி கேள்விப்ப‌ட்டேன். அதில் நீங்க‌ள் பிர‌பு சாவ்லாவை ம‌ட்டும் க‌ண்டுகொள்ளாம‌ல் விட்ட‌தையும் நான் க‌வ‌னித்தேன். ப‌ர்கா, வீர் சிங்வீயை விட‌ மிக‌ மோச‌மான‌ ஆள் பிரபு சாவ்லா என கேள்விப்படுகிறேன். நீங்க‌ள் செய்த‌து புத்திசாலித்த‌ன‌மான‌ வேலை. அப்புறம்,  இந்தியாவில் உள்ள‌ பிர‌ப‌ல‌மான‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ள் யாராவ‌து வேலை இழ‌ந்தால் அவ‌ர்க‌ளை உட‌னே இல‌ங்கைக்கு அழைத்து ஊட‌க‌விய‌லை சொல்லித்த‌ரும் க‌ல்லூரிக‌ளில் ஆசிரிய‌ர்க‌ளாக‌ ப‌ணியம‌ர்த்த‌வேண்டும் என‌ என‌து ஊட‌க‌ ஆலோச‌க‌ர் என‌க்கு ஆலோச‌னை கூறினார். அவ‌ர்க‌ளிட‌ம் இருக்கும் திற‌மைக‌ளை வைத்துக்கொண்டு நாம் ந‌ம்மை காத்துக்கொள்ள‌வும் முடியும், நமக்கு ஆதரவாக அவர்களை வைத்து பிரச்சாரம் செய்யவும் முடியும். ஒரே க‌ல்லில் இர‌ண்டு மாங்காய்க‌ள்.

இந்து ராம் – மகிந்த இராசபக்சே உரையாடல்

இராம்: உங்க‌ள் காலடியிலேயே நான் கிடக்கும் போது  மற்றவர்களெல்லாம் எத‌ற்கு அதிப‌ர் அவ‌ர்க‌ளே?

இராச‌ப‌க்சே: இத‌ற்கு எல்லாம் ம‌ன‌வ‌ருத்த‌ம் அடையாதீர்க‌ள் இராம். இவ்வ‌ள‌வு நாட்க‌ளாக‌ என‌க்கு நீங்க‌ள் மிக‌ விசுவாச‌மாக‌ இருந்து வ‌ந்துள்ளீர்க‌ள். இந்திய‌ ஊட‌க‌ங்கள் உங்கள் மேல் கொண்டுள்ள‌ ந‌ம்ப‌க‌த்த‌ன்மை, ம‌ரியாதையைக் கொண்டு நான் இதுவ‌ரை செய்த‌ ப‌டுகொலைக‌ளையும் ,குற்ற‌ங்க‌ளையும் வெளியே தெரியாம‌ல் மூடி ம‌றைத்து விட்டீர்க‌ள். ஆனால் உண்மை என்ன‌வெனில் உங்க‌ளுக்கு இப்பொழுது வ‌ய‌தாகிவிட்ட‌து. முன்பிருந்த‌தை போல‌ இப்பொழுதெல்லாம் உங்க‌ள‌து குர‌ல் அறை முழுக்க‌ க‌ணீரென‌ கேட்ப‌து இல்லை.

இராம்: அது உண்மை தான். ப‌ல‌ நேர‌ங்க‌ளில் நான் கூறிய‌ வார்த்தைக‌ளையே நான் என்னுள் விழுங்க வேண்டியிருந்ததால் அவை எல்லாம் என‌து குர‌ல் நாள‌ங்களை பாதித்துவிட்ட‌ன‌. எப்ப‌டி இருப்பினும் இந்தியாவில், அதாவ‌து புது தில்லியைப் பொருத்த‌வ‌ரை நான் தான் இருப்ப‌திலேயே தூய்மையான‌ க‌றைப‌டியாத‌ ஊட‌க‌விய‌லாள‌ன்.

இராச‌ப‌க்சே: உங்களுடைய சொந்த நலனையெல்லாம் எப்படித்தான் உங்களால் ஊடகவியல் நேர்மையாக மாற்றி பிடிபடாமல் தப்பிக்க முடிகிறதோ? என்ன‌தான் இருப்பினும் இந்து முனிவ‌ர்க‌ளின் கருத்துப்ப‌டி இது “க‌லியுக‌ம்” தானே

இராம்: இந்த‌ வேலையை எல்லாம் என‌து ஆரவாரமான ஆங்கில‌ம் செய்கின்ற‌து அதிப‌ர் அவ‌ர்க‌ளே. நான் பேசும் போதும், எழுதும் போதும் ப‌ய‌ன்ப‌டுத்தும் சிக்க‌லான‌ வ‌ரிக‌ளை இந்த‌ முட்டாள்க‌ள் எல்லாம் வேத வாக்காக என்றே நினைக்கின்றார்க‌ள். நான் நினைக்கின்றேன் அங்கு உள்ள‌ பெரும்பாலானவ‌ர்க‌ள் என்னை முன்னாள் வைசிராயின் ம‌றுபிற‌வி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பாருங்களேன்.

இராசபக்சே: நீங்க‌ள ”மவுண்டு ரோட் மகாவிசுணு” அவதாரம் என்ற‌ல்ல‌வா நான் நினைத்தேன். ஹா,ஹா,ஹா.

இராம்: ஐயோ கடவுளே நான் ஒரு மார்க்சிசுடு கட்சியின் (சி.பி.எம்) உறுப்பினன்! நீங்க‌ள் கூறுவ‌து ந‌கைச்சுவையாக‌ இல்லை அதிப‌ர் அவ‌ர்க‌ளே. அந்த ‌ வ‌ரியை நான் வெறுக்கின்றேன்.

இராச‌ப‌க்சே: க‌ட‌வுளின் அவ‌தார‌மாக‌ இருப்ப‌த‌ற்கு வெட்க‌ப்ப‌டாதீர்க‌ள். நானும் கூட‌ என்னை போர்க்க‌ட‌வுளான‌ துட்ட‌கெமுனுவின் ம‌றுபிற‌வியாக‌க் கூறிக்கொள்வ‌தில்லையா என்ன‌. மார்க்சிசுட்டுக‌ள் கூட‌ க‌ட‌வுள்க‌ளாக இருக்க‌‌லாமே; இதை நாம் ந‌வீன‌ கால‌ வ‌ர‌லாற்றில் இருந்து தெரிந்துகொள்ள‌வேண்டும். ஆனால் உங்கள் மார்க்சிச‌ம் எனக்கு தலைகால் புரியவில்லை, அந்த வானவில்லில் நீங்கள் எந்த நிறத்தில் இருக்கிறீர்கள்? மஞ்சளா, ஊதாவா?  க‌ண்டிப்பாக‌ நீங்க‌ள் சிக‌ப்பு நிற‌த்தைச் சேர்ந்த‌வ‌ர் கிடையாது என்றே நினைக்கிறேன்.

இராம்: நான் க‌ண்டிப்பாக‌ இந்த‌ உண்மையை ஒப்புக்கொள்ள‌ வேண்டும் அதிப‌ர் அவ‌ர்க‌ளே. என‌து ஆன்மாவிற்குள் என்னுடைய வ‌ர்த்த‌க‌ இலாப‌த்திற்கும் மார்க்சியத்தின் பாலுள்ள அறிவுபூர்வமான  கவர்ச்சிக்கும் இடையே மிக‌ப்பெரிய‌ ச‌ண்டை போர் வ‌ருகின்ற‌து. ஒரு அற்ப முன்னாள் சோச‌லிச‌வாதியான‌ உங்க‌ளால் இதெல்லாம் புரிந்து கொள்ள‌முடியாது !.

இராச‌ப‌க்சே: என்னால் ச‌ரியாக‌ புரிந்துகொள்ள‌ முடிகின்ற‌து இராம். உங்க‌ள‌து ஆன்மா இலாப‌த்திற்கும் மார்க்சியத்துக்கும் இடையில் முரண்படும் போது,  உங்க‌ளிட‌ம் உள்ள‌ பிராமணன் அந்த இர‌ண்டு பக்கங்களிடமும் எவ்வ‌ள‌வு இலாப‌ம் பார்க்க‌முடியுமோ என்பதை கவனமாக கணித்து அதை பெறும் வேலையை செய்துகொண்டிருக்கின்ற‌து.

இராம்: நீங்க‌ள் ஒரு சாதிய‌வாதீ அதிப‌ர் அவ‌ர்க‌ளே. ஒரு ந‌ல்ல‌ பௌத்தரான‌ நீங்க‌ள் இதுபோல‌ல்லாம் பேச‌க்கூடாது. அது ஒரு ச‌ரியான‌ சோச‌லிச‌மோ, மார்க்சிய‌மோ அ‌ல்ல‌ !

இராச‌ப‌க்சே: இப்பொழுது நீங்க‌ள் கூற‌வ‌ருவ‌தை நான் ச‌ரியாக‌ புரிந்துகொண்டேன் இராம். இது போன்ற‌ குழப்பங்களிலிருந்து நீங்க‌ள் வெளியேவ‌ர‌ வேண்டும். நீ ஒரு சாண‌க்கிய‌னைப் போல‌ ந‌ட‌ந்தால், பேசினால். நீ ஒரு சாண‌க்கிய‌ன்! உங்கள் முதுமையை இப்போது நான் கணிக்கிறேன். உங்கள் ப‌த்திரிகைப் பேர‌ர‌சை இளைஞ‌ர்க‌ளிட‌ம் கொடுப்பதற்கு மறுப்பது, உங்கள் நண்பர்களை பாதிக்கக்கூடிய செய்திகளை வெளியிடாமல் மூடி மறைப்பது அதே நேரம் ஊடக நேர்மைக்கு வகுப்பெடுக்கும் ஒரு ‘மடமாக’ உங்களை நிலை நிறுத்திக்கொள்வது.

இராம்: நீங்க‌ள் எத்த‌னை கால‌ம் உங்க‌ள் பௌத்த‌ நாட்டிற்கு அதிபராக‌ இருக்கின்றீர்க‌ளோ, அதுவ‌ரை நானும் என‌து ப‌த்திரிகைக்கு ஆசிரியராக‌ இருக்க‌ விரும்புகின்றேன். இந்த ஒரு சின்ன‌ இல‌ட்சிய‌த்தைத் தான் நான் கொண்டுள்ளேன். இது எல்லாம் உங்க‌ள‌து ஆசிர்வாத‌மும், வாழ்த்துக‌ளும் இருந்தால் தான் ந‌ட‌க்கும்.

இராச‌ப‌க்சே: இனிய‌ இர‌வு இராம், உங்களின் மேம்படுத்தப்பட்ட‌ விவரணத்தை (Updated Curriculam Vitae)  நான் குறிப்பிட்ட‌ அந்த‌ விபிசன விருதிற்காக‌ அனுப்ப‌ ம‌ற‌ந்துவிடாதீர்க‌ள்.

இராம்: இனிய‌ இர‌வு அதிப‌ர் அவ‌ர்க‌ளே. உங்க‌ள‌து கெட்ட‌ க‌ன‌வுக‌ள் எப்பொழுதும் ப‌லிக்காம‌லே இருக்கவேண்டும்.

முற்றும்…..

இந்த புனைவை எழுதிய ச‌த்ய‌ சாக‌ர் ஒரு எழுத்தாள‌ர், இய‌க்குந‌ர். இவ‌ர் தில்லியில் வ‌சித்துவ‌ருகின்றார். இவ‌ரை நீங்க‌ள் sagarnama@gmail.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌ல் முக‌வரியில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

___________________________________________________________

மொழியாக்க‌ம்: ப.ந‌ற்ற‌மிழ‌ன்.

மூல‌ப்ப‌திவு: http://www.countercurrents.org/sagar091210.htm
___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

துனிசியா: சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி!

52
துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சி

குறிப்பு: இந்தியாவில் வெங்காயம் கிலோ 80 ரூபாய்க்கு விற்கிறது என்றால் மற்ற பொருட்களின் விலையை விளக்க வேண்டியதில்லை. உழைக்கும் மக்களில் பெரும்பான்மையோர் தற்போது ஓரிரு வேளை உணவை ரத்து செய்திருக்கின்றனர். ஆனாலும் இத்தகைய காந்திய வழி உண்ணாவிரதம் இன்னும் எத்தனை நாளைக்கு தொடர முடியும்?ஏகாதிபத்தியங்களின் சுரண்டலால் உலக பொருளாதாரம் தோற்றுவித்த ‘நெருக்கடி’ அமெரிக்காவில் துவங்கி, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா என்று எந்த கண்டத்தையும் விட்டுவைக்கவில்லை. முதலாளித்துவத்தின் சூதாட்டத்தால் வந்த நட்டத்தை இப்போது ஏழை நாடுகளின் மேல், உலக மக்களின் மேல் ஏற்றி வருகிறார்கள். விளைவு எங்கும் வேலை இழப்பு, விலைவாசி உயர்வு, அரசு மானியம் ரத்து…. ஆயினும் இந்த அநீதிகளை மக்கள் தொடர்ந்து சகிக்க மாட்டார்கள் என்பதற்கு கிரீசீல் எழுந்த தெருப்போராட்டம் ஒரு துவக்கம் என்றால் அந்த போராட்டத்தையே புரட்சியாக சாதித்திருக்கிறது துனீசிய மக்களின் எழுச்சி. ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த மக்கள் புரட்சியை தோழர் கலையரசன் விளக்குகிறார்.- வினவு

________________________________________________

26 வயதேயான வேலையற்ற பட்டதாரி இளைஞன் முஹமத்தின் தற்கொலை மரணம்,ஒரு மக்கள் புரட்சியாக மாறும் என்று எவரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். பட்டப் படிப்பு முடித்தும் வேலை வாய்ப்பு இல்லை. ஜீவனத்திற்காக நடைபாதையோரமாக காய்கறி விற்றுக் கொண்டிருந்தவன். போலிஸ் லைசன்ஸ் கேட்டு தொந்தரவு செய்ததன் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான். ஊர், பேர் தெரியாத இளைஞனின் மரணச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

விரைவிலேயே அவர்களது சீற்றம் அதிகார வர்க்கம் மீது திரும்பியது. அரசு நிறுவனங்கள் தாக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. 23 வருடங்களாக துனீசியாவின் சர்வாதிகார ஆட்சி நடத்த உறுதுணையாக இருந்த பிரெஞ்சு தூதரகம் கூட சுற்றி வளைக்கப்பட்டது. வேலையற்ற இளைஞர்களின் கலகமாக ஆரம்பித்தாலும், வழக்கறிஞர்களும், தொழிற்சங்கமும் தமது ஆதரவை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தில் குதித்தனர். உழைக்கும் வர்க்கமும், இழப்பதற்கு எதுவுமற்ற மக்களும் ஒன்று சேர்ந்து போராடினால் புரட்சி நிச்சயம் என்பதை துனீசியா மக்கள் சாதித்துக் காட்டியுள்ளனர்.

அரபுலகில் முதன் முதலாக இணையம் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சியும் இதுவாகும். கொடுங்கோல் அரசின் இணையத் தடையை மீறி, டிவிட்டர், முகநூல் (Facebook) போன்ற சமூக வலையமைப்புகள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் அறிவித்துக் கொண்டிருந்தன. போலிஸ் அடக்குமுறைகளை காட்டும் வீடியோக்களை, Youtube உடனுக்குடன் அழித்துக் கொண்டிருந்தது. ஆயினும் எல்லாவித தடைகளையும் மீறி, இறுதியில் புரட்சி வென்றது. “இணையத்தில் புரட்சி செய்கிறார்கள்!” என்று பரிகசிக்கும் கூட்டத்திற்கு இது சமர்ப்பணம்.

துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிகலகத்தை அடக்க அனுப்பப்பட்ட போலிஸ் படை, வழமையான துப்பாக்கிச் சூடு, கைதுகள், என்று மக்கள் எழுச்சியை அடக்கப் பார்த்தது. இறுதியில் துனிசியா சர்வாதிகாரி பென் அலியே முன் வந்து கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. திடீரென்று உறக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட பென் அலி, வேலையற்ற மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தப் போவதாக விடுத்த அறிவிப்பை யாரும் பொருட்படுத்தவில்லை. இறுதியில் நாட்டை விட்டு வெளியேறி, சவுதி அரேபியாவில் அகதித் தஞ்சம் கோர வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

உல்லாசப் பயணிகளால் அதிக வருமானம் கிடைக்கும் கரையோர நகரங்கள் என்றும் போல அமைதியாகத்தான் இருந்தன. ஆனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய உள்நாட்டு நகரங்களில் தான் மக்கள் வீதிக்கு வந்து போராடத் தொடங்கினார்கள். உணவுப் பொருட்களின் விலையேற்றம், ஏற்கனவே தொழில் வாய்ப்பற்ற பகுதிகளை மோசமாகத் தாக்கியது.

உலகம் முழுவதும் பொருளாதாரப் பிரச்சினைகளால் மக்கள் கிளர்ச்சிகள் வெடிப்பதைப் பற்றி நான் எழுதினால், பலருக்கு பிடிப்பதில்லை. “மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல, இன மான உணர்வே பெரிதென்று” வாதாடுகின்றார்கள். ஊடகங்களும் அரபு நாடுகளைப் பற்றியும் அப்படியான கருத்துகளைத்தான் பரப்பி வந்தன. “கலாச்சார மோதல்” தத்துவப் படி, அரேபியர்கள் முஸ்லிம்கள், வயிற்றை விட மதமே பெரிதென்று வாழ்பவர்கள் என்று தான் பிரச்சாரம் செய்தார்கள். “அரபு நாடுகளில் அல்கைதாவும் இல்லை, அரேபியர்கள் எல்லோரும் முஸ்லிம் மத அடிப்படைவாதிகளும் இல்லை,” என்று கடந்த பத்து வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன். உண்மையான பிரச்சினை என்ன என்றும் தெளிவு படுத்தியிருந்தேன்.

மேற்கத்திய நாடுகளால் ஆதரவளிக்கப்படும் சர்வாதிகாரிகள், ஜனநாயக சுதந்திரத்தை மறுக்கும் அரசு அடக்குமுறை, வேலைவாய்ப்பின்மை, வறுமை, இவை சாதாரண மக்களை பாதிக்கும் பிரச்சினைகள். விரக்தியுற்ற இளைஞர்கள் பட்டப் படிப்பு படித்தாலும் வேலையின்றி, வெளிநாடுகளுக்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடு போக வசதியற்றவர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். அமெரிக்காவும், உள்நாட்டு சர்வாதிகாரிகளும் அவர்களை அல்கைதா என்று முத்திரை குத்தி அடக்கினார்கள்.

துனிசியாவில் கலகம் செய்தவர்களையும், பென் அலி அப்படி சொல்லிப் பார்த்தார். யாரும் நம்பியதாகத் தெரியவில்லை. கடைசியாக அவரே முன் வந்து, நாட்டில் வேலையில்லாப் பிரச்சினையை தீர்ப்பது முக்கியம் என்பதை ஒத்துக் கொண்டார். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய முடியுமா? மக்களின் கோபாவேசத்திற்கு முகம் கொடுக்க முடியாமல், நாட்டை விட்டு தப்பியோடி விட்டார்.

துனிசியா - சர்வாதிகாரத்தை தூக்கி எறிந்த மக்கள் புரட்சிதுனிசியா கலவரத்தை சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது. கிரேக்க மக்கள் என்ன காரணத்திற்காக கிளர்ந்தெழுந்தார்கள்? வேலை, ஊதியம், உணவு பறிபோவதை எந்த மனிதன் தான் பொறுத்துக் கொண்டிருப்பான்? (இனமான உணர்வாளர்களுக்கு சுடலை ஞானம் பிறப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது.) வளர்ச்சியடைந்த ஐரோப்பாவை சேர்ந்த கிரேக்கர்களாக இருந்தால் என்ன, வறிய நாடான மொசாம்பிக்கை சேர்ந்த மக்களாக இருந்தால் என்ன, எல்லோரும் வயிற்றுக்காக போராடக் கிளம்புகின்றனர். “முஸ்லிம் நாடுகளான” துனீசியா, அல்ஜீரியா, சூடான் போன்ற நாடுகளிலும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் மக்களை போராடத் தூண்டுகின்றது.

“சிங்களப் பேரினவாதிகளின்” சிறிலங்காவிலும், “தமிழ் இனப்பற்றாளர்களின்” ஈழத்திலும் மக்கள் பொருளாதார பின்னடைவுகளை எதிர்த்து போராடுகின்றனர். முதலாளித்துவ தமிழ் ஊடகங்கள் அத்தகைய செய்திகளை கூறாமல் இருட்டடிப்பு செய்கின்றன. எல்லா நாடுகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு அரசு மானியம் அளிக்கின்றது. அரசு மானியத்தை விலக்கிக் கொண்டால் விலை ஏறும் என்பதும், அதனால் மக்கள் கலகம் செய்வார்கள் என்பதும், ஓரளவு பொருளாதாரம் தெரிந்த அனைவருக்கும் தெரியும்.

2009ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி துனிசியாவையும் பாதித்தது. பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்த உல்லாசப் பயணத் துறை, நஷ்டத்தை நோக்கி சென்றது. ஏற்றுமதி, அந்நிய முதலீடு அரைவாசியாக குறைந்தது. இதனால் வேலையற்றோர் தொகை அதிகரித்தது. பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்த காலத்தில், துனிசியா அரசு அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கியது. இதனால் படித்த வாலிபர்கள் பெருகினார்கள். அரபு நாடுகளில் அதிகளவு படித்த மத்தியதர வர்க்கத்தை கொண்ட நாடுகளில் துனிசியா முன்னணியில் திகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஒரு சராசரி ஐரோப்பிய நாட்டில் உள்ளதைப் போல, பெண்கள் சம உரிமையுடன் அனைத்து துறைகளிலும் பிரகாசித்தனர். ஆனால் அத்தகைய அபிவிருத்திக்குப் பின்னால், சர்வாதிகார கொடும்கோன்மை மக்களை அடக்கி வைத்திருந்தது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் தடை செய்யப்பட்டன.

எகிப்து போன்ற நாடுகளில் இருப்பதைப் போல, அன்றாட உணவுக்கே அல்லாடும் பரம ஏழைகள் துனிசியாவில் இல்லை. இருப்பினும்,Tunis, Sousse , Sfax, போன்ற நகரங்கள் சுற்றுலாத் துறை, சர்வதேச வணிகம் காரணமாக அதிக வளர்ச்சியடைந்திருந்தன. அப்படி எந்த அதிர்ஷ்டமும் வாய்க்கப் பெறாத பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, குறைந்த ஊதியத்துடன் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ வேண்டிய நிர்ப்பந்தம். மொத்த தேசிய வருமானத்தில் 30 % செல்வத்தை, 10 % பணக்கார கும்பல் அனுபவிக்கின்றது. கீழ் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் பொருளாதார பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திறந்த சந்தை, நவ தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்கள் எதுவும் அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை தோற்றுவிக்கவில்லை. சாதாரண பணியாளர்களும், பாவனையாளர்களும் வரி செலுத்திக் கொண்டிருக்கையில், பணக்காரர்களும், வணிக நிறுவனங்களும் வரிச் சலுகை பெற்று வந்தனர். நாட்டின் பெரிய வர்த்தக நிறுவனங்கள் ஜனாதிபதி பென் அலியின் குடும்ப சொத்தாக இருந்தன. பென் அலி குடும்பத்தின் பேராசையும், அகங்காரமும் ஊழலுக்கு காரணம் என்று துனீசியா பொது மக்கள் குறைப் பட்டுக் கொள்கின்றனர்.

துனிசியா மக்களின் புரட்சியை சர்வதேச சமூகம் இரு கரம் நீட்டி வரவேற்க தயாராக இல்லை. மேற்குலக ஊடகங்கள் ஏதோ கடமைக்கு செய்தி வாசித்து விட்டுப் போகின்றன. உலகம் முழுவதும் மனித உரிமைகளை ஏற்றுமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் துனிசியாவுக்கு அரசு முறை விஜயம் செய்த பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசி, “மனித உரிமைகள் நிலவரம் திருப்தியளிப்பதாக” நற்சான்றிதழ் அளித்தார். இன்று மக்கள் எழுச்சியை அடக்க, துனிசியா அரசு கேட்டுக் கொண்டால் படை அனுப்ப தயாராக இருப்பதாக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் கூறுகிறார். துனிசியா முன்னாள் பிரெஞ்சுக் காலனி என்பதும், பிரான்ஸ் முக்கியமான வர்த்தக கூட்டாளி என்பதும் குறிப்பிடத் தக்கது. சிறிய நாடான துனிசியாவில் மக்கள் புரட்சி வென்று விட்டது. அடுத்தது இயற்கை வளம் நிறைந்த அல்ஜீரியா புரட்சிக்காக தயாராகி வருகிறது.

_________________________________________________________

– கலையரசன்

_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பினாயக் சென்னை விடுதலை செய்! சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது!!

மனித உரிமைப் போராளி மரு. பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை!
விடுதலை கோரி சென்னையில் சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர்
90 பேர் கைது

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது

மருத்துவர் பினாயக் சென்னுடைய விடுதலையைக் கோரி சாலை மறியல் செய்த மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உட்பட 90 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய துணைத் தலைவரும், சத்தீஸ்கர் மாநிலத்தின் பொதுச் செயலருமாகிய மருத்துவர் பினாயக் சென்னுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

06.01.2011 வியாழனன்று முற்பகல் 10.30 மணியளவில் சென்னை உயர்நீதி மன்றம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்திற்கு தமிழகம் தழுவிய அளவில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய தினம் சென்னை மாநகரில் ஒட்டப்பட்டிருந்த மறியல் போராட்டச் சுவரொட்டிகளை  தேடித்தேடி காவல்துறை கிழித்து கிழிப்பு போராட்டம் நடத்தியது. ம.உ.பா. மைய சென்னை வழக்கறிஞர்கள் கிழிப்பு வீரர்களைக் கையும் களவுமாகப் பிடித்து கடுமையாக எச்சரித்த பின்னரே அப்பணியைக் கைவிட்டனர். மறியல் அன்று காலை முதலே சென்னை உயர்நீதி மன்ற வளாகம் முன்பு ஏராளமான போலீசு படை குவிக்கப்பட்டிருந்தது. உயர் அதிகாரிகளுக்கும் பஞ்சமில்லை. பிப்ரவரி 19 உயர்நீதி மன்ற வழக்கறிஞர் போராட்டம், கருணாநிதிக்கு ம.உ.பா. மைய வழக்கறிஞர்கள் கருப்புக் கொடி காட்டியது போன்ற கடந்த கால அனுபவங்கள் காவல் துறையினரை அங்கே குவித்து விட்டது போலும்.

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது
மரு. பினாயக் சென்னை நிபந்தனையின்றி விடுதலை செய்! ஆயுள் தண்டனையை ரத்து செய்! என்ற மைய முழக்கத்துடன் மறியல் போராட்டம் தொடங்கியது.

பழங்குடி மக்களுக்கு மருத்துவம் செய்த
பினாயக் சென் தேசத் துரோகியாம்,
அவருக்கு ஆயுள் தண்டனையாம்,
போபாலில் 25000 பேரைக் கொன்ற
கார்பைடு முதலாளிகளுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை,
உடனே ஜாமீனாம்.
என்னடா ஜனநாயகம், வெங்காய ஜனநாயகம்,
அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி, சட்ட விரோத சல்வாஜுடும், போலி என்கவுண்டர் சாம்ராஜ்யம்

என்று பாசிஸப் பேயாட்டமாடும் மத்திய, மாநில அரசுகளை அம்பலப்படுத்திய முழக்கங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது

ம.உ.பா மையத்தைச் சேர்ந்தவர்களோடு மேலும் சுமார் 50 பேர் இணையவே மறியல் போர் வலுத்தது. போலீசுக்கு இது மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டம் நடத்தி முடித்துக் கொள்ளுங்கள், கைது செய்யவில்லை என்று போலீசு பவ்யமாகக் கேட்டுக்கொண்டது. மறியல் தொடரும், கைது செய்து கொள்ளுங்கள் என்று அறிவித்து பிராட்வே நாற்சந்தியை நோக்கி ஊர்வலம் சென்றது.

‘மருத்துவர் பினாயக்சென் ஒரு ஜனநாயகவாதி. அவர் அரசு பயங்கரவாதத்தைப் போலவே மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தையும் கண்டித்தார். எனினும், அரசு பயங்கரவாதத்தின் அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு மருத்துவ உதவியும் அளித்தார். சிறைக் கைதிகளுக்கு அரசின் அனுமதியோடு தொடர்ந்த சிகிச்சை அளித்து வந்தார். நாராயண் சன்யால் என்ற மாவோயிஸ்ட் தலைவர் சர்க்கரை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கைதியாக சிறையிலிருந்தார். அவருக்கு சிகிச்சை அளித்ததைப் பொறுக்காத சத்தீஸ்கர் அரசு, மாவோயிஸ்டுகளுக்கு உதவி செய்தார் என்ற பொய்யான குற்றச் சாட்டின் கீழ் சத்தீஸ்கர் மக்கள் சிறப்பு பாதுகாப்புச் சட்டம் என்ற ஆள்தூக்கிச் சட்டத்தின் கீழ் தேசத்துரோக (124A) வழக்குப் போட்டு பினாயக் சென்ஐ கைது செய்தது. இவ்வழக்கில் உச்சநீதி மன்றம் 2 ஆண்டுகள் கழித்து அவருக்கு பிணை வழங்கியது. பிணையில் வெளியே வந்த அவருக்கு உடனடியாக ராய்ப்பூர் விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

பினாயக்சென்னை விடுதலை செய் சென்னையில் HRPC மறியல், 90 பேர் கைது

இந்த பாராளுமன்றம், அரசியல் சட்டம் மற்றும் இந்த ஜனநாயகத்தை நம்புகின்ற ஒரு நல்லவருக்கே இந்தக் கதியென்றால் இது மனித உரிமை மீறல்களை எதிர்த்துப் போராடுகின்றவர்களுக்கு விடப்படும் ஒரு எச்சரிக்கையே‘ என்று ம.உ.பா. மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.ராஜு உரையாற்றினார். சென்னை மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் சுரேசு, மதுரை மாவட்டச் செயலாளர் லயனல் அந்தோணி ராஜ், துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சி நாதன் ஆகியோர் உரையாற்றினர். ஒரு மணிநேர மறியல் போராட்டத்திற்கு பின் காவல்துறை அனைவரையும் கைது செய்தது. 29 வழக்கறிஞர்கள் (3 பெண் வழக்கறிஞர்கள் உட்பட) 90 பேர் கைது செய்யப்பட்டனர். பினாயக் சென் மீதான அநீதியான தண்டனையை எதிர்த்து, அவரது விடுதலையைக் கோரி மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை ம.உ.பா மையம் நடத்தி வருகிறது.

____________________________________________________________

– தகவல், புகைப்படங்கள்: மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு
____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

காஷ்மீர்: தலித் குடும்பத்திற்கு பெண் கொடுக்காதவன் தேசத் துரோகி !

127

no-india-no-pakistan-we-want-free-kashmir

இந்திய அரசு, இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. துப்பாக்கி தோட்டக்களை வெறும் கற்களால் எதிர் கொண்டு சிறுவர் முதல் பெண்கள் வரை அங்கே உயிரைத் துச்சமென மதித்து போராடி வருகின்றனர். கடந்த மதங்களில் பல பத்து காஷ்மீர் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இந்த அநீதியை எதிர்த்து அருந்ததிராய் குரல் கொடுத்ததால் அவரையே கைது செய்வதாக மிரட்டியது இந்திய அரசு. “காஷ்மீரின் விடுதலைக்கு குரல் கொடுத்த குற்றத்திற்காக என்னைக் கைது செய்ய வேண்டுமென்றால் இந்த குற்றத்தை இலட்சக்கணக்கான காஷ்மீர் மக்கள் அன்றாடம் தெருக்களில் செய்து வருகிறார்கள், முடிந்தால் அவர்களை கைது செய்து பாருங்கள்” என்று நெற்றியடி அடித்தார் அருந்ததி ராய். அதன் பிறகு தேசபக்தி குஞ்சுகள் ஒன்றும் சவுண்டு விடக் காணோம்.

ஆனால் தற்போது பா.ஜ.க என்ற பண்டாரங்களது கட்சி பெரியதாக ஒரு சவுண்டு விட்டிருக்கிறது. அதாவது வரும் ஜனவரி 26 குடியரசு நாளில் ஸ்ரீநகர் லால் சவுக்கில் இவர்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றப் போகிறார்களாம். “இந்திய அடக்குமுறையாளர்களே காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்” என்று உரக்க குரல் கொடுக்கும் மக்களை வெறுப்பேற்றுவதற்கு பா.ஜ.க விற்கு கிடைத்திருக்கும் ஒரு ஆயுதம்தான் இந்த கொடியேற்று தேசபக்தி.

ஆயிரக்கணக்கான உறவுகளை பலிகொடுத்து விட்டு வீட்டை விட்டு தெருவில் இறங்கினால் துப்பாக்கிகளின் அடக்குமுறையில் வாழ்க்கையை கழிக்கும் அந்த மக்களின் போராட்டத்தை ஆதரிக்க வில்லை என்றாலும் இப்படி குரூரமாக குத்திக் கிழிக்க வேண்டிய அவசியம் என்ன?

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் தலைவர் யாசின் மாலிக் இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து அறிக்கை விட்டிருக்கிறார். பா.ஜ.க அப்படி கொடியேற்றும் முயற்சியை செய்தால் இந்தியத் துணைக் கண்டமே தீப்பிடித்து எரியும் என்று அவர் அதை கண்டித்திருக்கிறார். மேலும் பா.ஜ.க மத்தியில் ஆண்டபோது கூட அவர்கள் இதை செய்யவில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். உண்மைதான். இதிலிருந்து தேசபக்தி என்பது கூட எதிர்க்கட்சி அரசியல் நடவடிக்கைகளின்போது மட்டுமே பொங்கி வழியும் என்றாகிறது. இருக்கட்டும்.

உடனே நமது தேசபக்திக் குஞ்சுகள் ” இந்தியாவின் தேசியக் கொடியை எங்கு வேண்டுமானலும் ஏற்றலாமே.. அது உரிமை, அதை எதிர்ப்பது தேச துரோகம்” என்று பொங்குவார்கள்.

அந்த கூ முட்டைகளுக்கு ஒன்றை புரியும் விதத்தில் சொல்வோம். தேசம் என்பது அந்த தேசத்தில் வாழும் மக்களைக் குறிக்கிறது. அப்படிப் பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் ஏழைகள் என்ற விதத்தில் வாழ்வைக் கழிக்க போராடுபவர்கள் யாரும் காஷ்மீர் மக்களின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கத்தான் செய்வார்கள். ஏனெனில் இவர்களுக்கு இந்தியா என்ற நாடு எந்த வாழ்க்கையையும், விடுதலையையும் தந்துவிடவில்லை. இப்படி பெரும்பான்மை மக்களை அடக்கி ஆளும் மேட்டுக் குடி கும்பல்தான் இந்தியா என்பதை பட்டாப் போட்ட அவர்களது அப்பன் வீட்டு சொத்து போல ஆட்டம் போடுகிறது.

சரி, அவர்களது வாதப்படியே பார்ப்போம். இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்” அவர்கள் ஸ்ரீநகரில் கொடி ஏற்றட்டும். அதே போல நாமும் வரும் ஜனவரி 26 அன்று இந்தியக் குடிமகன் என்ற ”உரிமையில்”  கீழ்க்கண்ட சமத்துவ தேசபக்தி நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

1.       கன்னியாகுமரியிலுள்ள மீனவர்கள் தங்களது உணவான மீனை எடுத்துக் கொண்டு விவேகானந்த கேந்திரத்திற்கு சென்று சமைத்து சாப்பிடுவார்கள். ஒரு இந்தியக் குடிமகன் தனது உணவை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று சாப்பிடலாம். விவேகானந்தா கேந்திராவில் அசைவம் சாப்பிடக் கூடாது என்று எவனாவது தேச துரோகம் புரிந்தால் செருப்பு கிழியும்.

2.       நெல்லை மாவட்டம் கொடியங்குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு தலித் பக்தர் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று கருவறையில் நுழைந்து அப்பனை பூஜை செய்வார். ஒரு இந்தியன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சென்று நுழைந்து பூஜை செய்வதற்கு உரிமை உண்டு. மறுப்பவர்களை உடண்டியாக தூக்கில் போட வேண்டும். கருணை மனு வெங்காயங்கள் எல்லாம் கிடையாது.

3.       ஜனவரி 26 அன்று இந்தியர்களின் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள் சபரி மலைக்கு சென்று ஐயப்பன் கோவிலில் வழிபாடு செய்வார்கள். எந்தக் கபோதியாவது தடுத்தால் துடப்பக்கட்டை பிஞ்சு போகும்.

4.       26 அன்று பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விவசாயிகள் அருப்புக் கோட்டையில் ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும் நாயுடுகளிடமிருந்து நிலத்தை தேசபக்த்தியோடு கைப்பற்றி  இந்தியனாகப் பிறந்த எவருக்கும் இந்தியாவில் நிலம் இருக்க வேண்டும் என்ற உரிமையை நிலைநாட்டுவார்கள். இல்லை என்று சொன்னால் இரட்டை ஆயுள் தண்டனை.

5.       இந்த பொன்னாளில் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அய்யங்கார் அக்ரகாரத்திற்கு பெண் கேட்டு சமயபுரத்தை சேர்ந்த பறையர்களாக இருக்கும் தலித்துகள் செல்வார்கள். இந்தியாவில் பிறக்கும் எவரும் எவரையும் மணப்பதற்கு உரிமை உண்டு. அதன்படி தலித்துக்களின் மண உரிமையை யாராவது மறுத்தால் அவர்களை பாக்கிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்.

6.       கோயம்புத்தூர் கொங்கு வேளாளக் கவுண்டர்களது மாளிகைகளுக்கு ஜனவரி 26 அன்று அருந்ததி இளைஞர்கள் பெண் பார்த்து மணம் முடிப்பதற்கு வருவார்கள். கூட வரும் நகர சுத்தி வேலை செய்யும் அவர்களது பெற்றோர்கள் முறைப்படி பேசுவார்கள். ” பீ அள்ளுற சக்கிலிப் பயலுக்கு கவுண்டன் பொண்ணு கேக்குதா” என்று எவனாவது சவுண்டு விட்டால் அவனது நாக்கை அங்கேயே அறுப்போம். இல்லையேல் இந்தியாவில் சமத்துவ உரிமை இல்லை என்றாகிவிடும். என்ன இருந்தாலும் இந்திய தேசபக்தி முக்கியமில்லையா!

7.       நமது சிவனடியார் ஆறுமுகசாமியை சங்கர மடத்தில் சங்கராச்சாரி ஆக்குவதற்கு இதே 26 அன்று பெரும் ஊர்வலத்துடன் காஞ்சிபுரம் வருவோம். எங்கள் சாமியாரின் அர்ப்பணிப்பும், பக்தியும் அந்த பன்னாடை ஜெயேந்திரனது பொம்பிளை பொறுக்கித்தனங்களோடு ஒப்பிட முடியாது. எனவே இந்தியாவில் பிறந்த எவரும் சங்கரமடத்தில் சங்கராச்சாரியாக ஆக முடியும் என்ற உரிமையை நிலை நாட்ட அன்றைக்கு வந்தே தீருவோம். இதை சங்கரசாச்சாரி மறுத்தால் அவரை மடத்தோடு சேர்த்து இந்திய அரசு சொந்த செலவில் புல்டோசர் வைத்து இடித்து தரைமட்டமாக்க வேண்டும் !

8.       இந்தியா குடியரசாக மலர்ந்த இந்த திருநாளில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இருக்கும் செம்மஞ்சேரி மக்கள் தமது இருப்பிடத்தைக்காலி செய்து விட்டு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்கள் வீட்டில் குடியேற வேண்டும். பதிலுக்கு மேற்கு மாம்பலம் பார்ப்பனர்களை சைதாப்பேட்டை கூவத்தின் கரையில் குடிசைகளை போட்டு குடியேற வைக்க வேண்டும். இந்த எக்ஸ்சேன்ஞ் மேளா மூலம்தான் உண்மையான சமத்துவத்தை இந்தியாவில் படைக்க முடியும். மறுப்பவர்களை காஷ்மீரிலோ அல்லது மணிப்பூருக்கோ நாடு கடத்த வேண்டும்.

9.       இந்த உன்னதமான நாளில் இந்தியாவிலேயே பணக்கார வசதிகளோடு வாழும் காஷ்மீர் பண்டிட் அகதிகளை டெல்லியிலிருந்து காலி செய்து கும்மிடிப்பூண்டி முகாமில் உள்ள ஈழ முகாமிற்கு அனுப்ப வேண்டும். அதே போல அந்த முகாமில் உள்ள அகதிகளை டெல்லியில் உள்ள ஹடெக் பண்டிட்களின் குடியிருப்புக்கு அனுப்ப வேண்டும். இப்படித்தான் இந்தியாவில் உள்ள அகதிகளின் உரிமையில் கூட  நாம் சமத்துவத்தை கொண்டு வரமுடியும். மறுப்பவர்கள் ராமேஸ்வரம் கடலில் இறக்கிவிட வேண்டும் அதற்கு மேல் ராஜபக்சேவின் சிங்கள கடற்படை உரிமையோடு பார்த்துகொள்ளும்.

10.   பெங்களூருவில் உள்ள விஜய் மல்லையாவின் கிங் பிஷர் ஆலையை இனிமேல் அதே ஊரில் உள்ள ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி எடுத்து நடத்துவார். பதிலுக்கு மல்லையா இனி செருப்பு தைத்து தனது வாழ்க்கையை ஓட்ட வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லாரும் எல்லாத் தொழில்களையும் பாகுபாடு இல்லாமல் செய்யும் உரிமையை இதன் மூலம் நிரூபிக்கமுடியும்.

இதையெல்லாம் செய்வதற்கு துப்பிருந்தால் காஷ்மீரில் கொடி ஏற்றும் உரிமையை பற்றி பேசு !

___________________________________________________________________________

இந்த பதிவு வினவை நாடு கடத்த விரும்பி பின்னூட்டமிடும், இந்தூஸ்தான் டைம்சில் யாசின் மாலிக்கை தூக்கில் போடச் சொல்லி சாமியாடும் ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளுக்கு சமர்ப்பணம்

___________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இசுரேலின் கோரப்பிடியில் பாலஸ்தீனத்தின் கதை – வீடியோ!

51

காசாவில் கமால் குடும்பம்


காஸாவில் 1390 மக்களை கொன்ற இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்ட கமால் குடும்பத்தின் போராட்டத்தை இந்த ஆவணப்படம் விவரிக்கிறது.

திடிரென நடைபெற்ற தாக்குதலில் முழு வீடும் தரைமட்டமாகி விட மிகுந்த இன்னலுடன் காப்பாற்றப்பட்ட தங்கள் குழந்தைகள் அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வர கமால் தம்பதிகள் போராடுகிறார்கள். அன்பான குழந்தைகள், அமைதியை விரும்பும் குடும்பம், ஆனால் காரணமில்லாமல் அவர்களை வெறியுடன் தாக்கும் இசுரேலிய ராணுவம்.

கமாலின் குடும்ப போராட்டமும், இழப்பும் சோகமும் பாலஸ்தீன குடும்பங்களின் அன்றாட நிகழ்வு. கமால் குடும்பத்தின் கதையை கேட்பதன் மூலம் மொத்த பாலஸ்தீனத்தின் அலறலும் நமது இதயத்தை உலுக்குகிறது.

_____________________________________________________________________

எங்கள் கதை


இந்த வீடியோவில் PNI இன் தலைவரான முஸ்தஃபா பகௌத்தி பாலஸ்தீன வரலாற்றையும், அது இசுரேலால் தொடர்ந்தும் கொடூரமாகவும் வஞ்சிக்கப்படுவதைப் பற்றி விவரிக்கிறார்.

விண்ணுயர விஞ்ஞானம் மற்றும் மனித சமுகம் வளர்ந்துவிட்டதாக கருதப்படும் இந்த நூற்றாண்டில் தான் இசுரேலின் பாஸிஸ அரசும், இராணுவமும் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டத்தை எதிர்ப்பார் இல்லாமல் மேற்குலகின் அங்கீகாரத்தோடும் நடத்தி வருகின்றன.

1947ல் 45 சதவீதமாக இருந்த பாலஸ்தீன நிலம் இப்பொழுது இசுரேலால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 11 சதவீதம்தான் மிச்சமிருக்கிறது. இசுரேலை பொருத்தவரை பாலஸ்தீன மக்கள் என்போர் மூன்றாந்தரமான அடிமைகள். பாலஸ்தீன மக்கள் 1.30 மணிநேரம் பயணம் செய்ய வேண்டி வந்தால் அதற்காக அனைத்து ராணுவ செக்போஸ்ட்களையும் எதிர் கொண்டு சோதனை செய்யப்பட்டு கடந்து போக 7 மணிநேரமாகிறது. இசுரேலியர்களுக்கான சாலையில் காரில் அல்ல நடந்து போனால் கூட 6 மாதம் சிறை தான்.

தண்ணிர், மின்சாரம் என எல்லாம் இசுரேலியர்களுக்கு கிடைப்பதைவிட இரண்டு மடங்கு அதிக விலையில் அதுவும் தட்டுப்பாட்டோடுதான் பாலஸ்தீன மக்களுக்கு கிடைக்கும். இசுரேலின் திடீர் தாக்குதல்களில் பலியான பாலஸ்தீன மக்கள் ஏராளம். கடந்த 10 ஆண்டுகளில் மாத்திரம் 86,000 வீடுகள் தரமட்டமாக்கப்பட்டன. 6 லட்சம் பாலஸ்தீனியர்கள் சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ளனர். குழந்தைகள் குண்ட்டிப்பட்டு இறப்பது இயல்பான நிகழ்வு.

இத்தனை அடக்குமுறைகள் இருந்தும் அதை மீறி பாலஸ்தீன மக்கள் தங்கள் சுதந்திரத்திற்காகவும், உரிமைகளுக்காக்வும், நாட்டிற்காகவும், போராடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். படத்தை பாருங்கள், இசுரேலின் மீதான வெஞ்சினத்தை வெளிப்படுத்துங்கள்!

___________________________________________________________________________

– படங்கள் தெரிவு மற்றும் குறிப்பு: அக்னிபார்வை

___________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கோவை என்.டி.சி தேர்தல்: “நக்சலைட்டுகளின்” வெற்றிவிழா பொதுக்கூட்டம்!

கோவை என்.டி.சி தேர்தல் நக்சலைட்டுகளின் வெற்றிவிழா பொதுக்கூட்டம்
திரண்டிருந்த பார்வையாளர்கள்

கோவை உட்பட ஏழு பஞ்சாலைகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு தொழிற்சங்க தேர்தல் சென்ற 2010 டிசம்பர் -18 ஆம் தேதி நடந்தது. 30 ஆண்டுகளாக நடக்காமலிருந்த தேர்தலை, 2008 ஆம் ஆண்டு கோவை முருகன் மில்லில் துவங்கப்பட்ட கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் (இணைப்பு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி) பெரும் முயற்சியால் தான் நடத்த முடிந்தது.

இத்தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க அனைத்து ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களும், அவற்றின் தொழிற்சங்க முதலாளிகளும் முடிந்தளவு முட்டுக்கட்டை இட்டு தடுக்க முயன்றனர். இதை தொழிலாளிகளிடம் தொடர்ந்து பிரச்சாரம் செய்தும், உயர் நீதிமன்றம் மூலம் போராடி தொழிலாளர்களுக்கு இவ்வுரிமையை வெற்றிகரமாக பெற்றுத்தந்தது, கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர்கள் சங்கம்.

தேர்தலில் வெற்றிபெற ஆளும் திமுக-வின் தொழிற்சங்கம் LPF ஏராளமாக செலவு செய்து முதல் இடத்தை வென்றது.   “நக்சலைட்”என்று அனைத்து ஓட்டுக்கட்சிகளாலும் அச்சுறுத்தி பயங்காட்டப்பட்ட கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கம் இரண்டாம் இடத்தையும் “பாரம்பரிய”பெருமைகளை கூறி ஓட்டுக்கேட்ட CITU மூன்றாம் இடத்தையும் பிடித்தது. இதில் முதலடம் பிடித்த திமுகவிற்கும் இரண்டாம் இடம் வென்ற பு.ஜ.தொ.முவிற்கும் 120 வாக்குகள்தான் வேறுபாடு.

கோவை என்.டி.சி தேர்தல் நக்சலைட்டுகளின் வெற்றிவிழா பொதுக்கூட்டம்
தோழர் மருதையன் சிறப்புரை

எனவே எல்லாவித அச்சுறுத்தல்களையும் தாண்டி தொழிலாளர்கள் “நக்சலைட்களை” ஆதரித்து, சரியானவர்களை இனம் கண்டு வாக்களித்துள்ளனர்.  இவ்வெற்றியை கொண்டாட கடந்த ஞாயிறு
(09 -01 11) மாலை கோவை பீளமேடு பகுதியில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டம் சரியாக மாலை 6 மணிக்கு  தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி கம்பீரமாகத் துவங்கியது.

தோழர் விளைவை ராமசாமி தலைமை உரையாற்றி துவங்கி வைக்க புதிதாக துவங்க பட்ட பஞ்சாலை கிளைகளின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை ஒவ்வொருவராக பகிர்த்து கொண்டனர். கோவைத் தமிழில் தேர்தல் அனுபவங்களை விளக்கியதோடு, தற்போது பு.ஜ.தொ.மு தொழிற்சங்கம் திமுகவை பின்தள்ளி முதலிடத்தை நோக்கி விரைவதையும் பலத்த கை தட்டலுக்கிடையில் பகிர்ந்து கொண்டனர்.

பின் உயர் நீதி மன்ற வழக்கறிஞரும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் உறுப்பினருமான தோழர் பார்த்தசாரதி இந்த தொழிற்சங்க தேர்தலுக்கான வழக்கு எப்படி நடந்தது, மற்ற கட்சிகள் என்னென்ன முட்டுக்கட்டைகளை நீதிமன்றம் மூலமாக செய்தனர், அதை எவ்வாறு பு ஜ தொ மு எதிர் கொண்டது போன்ற அனுபங்களை தொழிலாளர்களுக்கு விளக்கிப் பேசினார்.

இறுதியாக  மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரை ஆற்றினார். கடந்த கால துரோக சங்கங்களின் நோக்கங்களையும், தற்போதைய அவர்களின் செயல் தந்திரங்களையும் விளக்கிக் கூறினார். IT  ஊழியர்களின் அவலங்களையும், தொழிலாளர்களின் வலிமை எத்தகையது என்பதையும், இன்றைய உலக அரசியல் நிலைமையுடன் ஒப்பிட்டு விளக்கி பேசினார். பின் இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழுவினரின் கலை நிகழ்சிகள் நடைபெற்றது.

கோவை என்.டி.சி தேர்தல் நக்சலைட்டுகளின் வெற்றிவிழா பொதுக்கூட்டம்
புரட்சிகர கலை நிகழ்ச்சி

இறுதியாக தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி நிகழ்ச்சி  இரவு 10 மணிக்கு முடிவடைந்தது. நிகழ்ச்சிக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருவாரியாக தோழர்களும், தொழிலாளர்களும், பொதுமக்களுமாக 1500 பேர் வந்திருந்தனர். கூட்டம் முடிவடையும் வரை மக்கள் எழுந்து செல்லாமல் இருந்தனர் கோவையின் பீளமேடு பகுதியில் கடந்த காலங்களில் இப்படி ஒரு கூட்டம் எழுச்சியோடு நடந்தது இல்லை என்று பகுதிமக்கள் கூறினர். கூட்ட இறுதியில் கூட்டத்தில் வசூல் செய்த தோழர்களிடம் மக்கள் 7 ,200 ரூபாய்  அளித்தது தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

கோவையில் ஐம்பதுகளில் இருந்த தொழிலாளர்களின் போர்க்குணமிக்க மரபு இப்போது மீட்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதுவரை தொழிற்சங்க தரகர்களையே கண்ட அரசும், முதலாளிகளும் இப்போது முதன்முறையாக பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையை எதிர்கொள்ளுகின்றனர். வர இருக்கும் நாட்களில் கோவையின் தொழிலாளர்கள் தமிழகத்திற்கே முன்னுதாரணமான வரலாற்றை கட்டியமைப்பது உறுதி.

– தகவல், புகைப்படங்கள்: பு.ஜ.தொ.மு, கோயம்புத்தூர்
______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல்!

86
வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !இந்த உலகில் பைசாவுக்கு அருகதை இல்லாத விசயங்களுக்கெல்லாம் தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று சிலர் கூறுவது உண்மைதானோ? தமிழக அரசியலின் திசையை தீர்மானிப்பவர்களாக திரையுலக மாந்தர்கள் இருக்கும் அவலத்தினை பார்க்கும் போது அது பொய்யில்லை என்றே தோன்றுகிறது. பின்னே ஒரு தி.மு.க, அ.தி.மு.க தொண்டனுக்கு இருக்கும் அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத விஜயகாந்த் போன்ற அட்டைக்கத்திகள் அரசியல் உலகில் சுழற்றும் வாள் சண்டையைப் போய் ஆகா, ஓகோ என்று உளமாற உருகி ரசிப்பதற்கும் இங்கு ஒரு பரிதாபத்திற்குரிய கூட்டம் இருக்கிறதே?

1952இல் இது குழந்தையாக பிறந்த போது பின்னொரு நாளில் வருங்கால முதலமைச்சர் என்ற முழக்கத்தினைக் கேட்கும் பேறு வருமென்பதை அதனது பெற்றோர்களே அப்போது நம்பியிருக்கமாட்டார்கள். பணக்கார விவசாய குடும்பத்தை சேர்ந்த இந்த குழந்தையின் சுற்றமெல்லாம் பண்ணையார் உலகின் மதிப்பீடுகளோடுதான் புழங்கி வந்தன. அது என்ன பண்ணையார் உலக மதிப்பீடுகள் என்று கேட்போர், கருப்பு வெள்ளை பீம்சிங் படங்களையோ இல்லை கண்ணீர் விட்டுக் கதறும் சிவாஜி கணேசனின் அந்தக்கால படங்களையோ பார்க்க வேண்டும்.

1947க்குப் பிந்தைய தமிழக அரசியல் காலகட்டத்தில் காங்கிரசுக் கட்சியினை நிரப்பிய இந்தப் பண்ணையார்கள், மிட்டாமிராசுதார்களின் சூழலுக்கு மாற்றாக திராவிட இயக்கம் கொஞ்சம் நடுத்தரமான மனிதர்களை கொண்டு வந்தது. இதைக்கூட சகிக்க முடியாமல் அந்த மிட்டாமிராசுகள் “காலம் கெட்டுப்போச்சு, தி.மு.க காரன் அரசியல் தரத்தை கெடுத்துவிட்டான்” என்று புலம்புவது வழக்கம். அதன் இன்றைய தொடர்ச்சிதான் துக்ளக் சோ மற்றும் காங்கிரசு பெருச்சாளிகள் ஊளையிடும் காமராசரின் ஆட்சி பொற்காலம் வகையறா தொகையறாக்கள்.

ஆக 50களில் அதிகாரத்தை இழந்த காங்கிரசு பெரிசுகளின் ஆண்ட பரம்பரை திமிர்தான் தி.மு.க எதிர்ப்பாக அன்று இருந்தது. இன்று தி.மு.கவும் ஆண்ட பரம்பரை பட்டியிலில் சேர்ந்து விட்டது வேறு விசயம். இரண்டு ஆண்டான்களும் கூட்டணி வைத்து இருந்தாலும் காங்கிரசு முதலைகளின் பேச்சையோ எழுத்தையோ கவனித்து பார்த்தீர்களானால் அந்த பண்ணையார் மேட்டிமைத்தனத்தை போகிற போக்கிலேயே கேட்கலாம்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !விஜயகாந்த் பேசும் தி.மு.க எதிர்ப்பில் இந்த ஆண்ட பரம்பரை தொனிதான் மையமாக இருக்கிறது. மக்கள் அதை அப்படி எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், தி.மு.க ஊழலை யார் எதிர்த்தாலும், அதை வரவேற்கும் மனநிலையில் மக்கள் இருப்பதாலும் இதை யாரும் கவனிப்பதில்லை. மேலும் விஜயகாந்த், கொள்கை என்று பேசும் எல்லா வெத்துவேட்டுகளுக்கும், ஒழுக்கவாத நீதிகளுக்கும் இதுவே அடிப்படை என்று கூட சொல்லலாம்.

1978இல் “இனிக்கும் இளமை” திரைப்படத்தின் மூலம் தனது திரையுல வாழ்வை துவங்கிய விஜயகாந்த் 80 களில் கோபம் கொண்ட சிவப்பு இளைஞனாகவும், 90களில் அந்த கோபம் தணிந்து கொஞ்சம் பக்குவம் முதிர்ச்சி வந்து நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும், 2000த்தில் அந்த நேர்மை கொஞ்சம் எக்ஸ்ட்ரா லார்ஜ்ஜாக விரிந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடும் இராணுவ கேப்டனாகவும் பிரமோஷன் ஆனார். இறுதியில் விருதகிரி எனும் சூப்பர் கோமாளியாக அவரது திரையுலக வாழ்வு ஏறக்குறைய முடிந்து விட்டது எனலாம்.

விஜயகாந்தின் திரைப்படங்களில் நடந்த இந்த மாற்றம் அவரது இன்றைய அரசியல் பிரவேசத்திற்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது. பி, சி சென்டர்களின் உள்ள சாதாரண மக்கள் அவரது நேர்மையான போலீசு வசனங்களில் உள்ளத்தை பறிகொடுத்தார்கள் என்பது எம்.ஜி.ஆரின் ஃபார்முலா இன்னமும் மவுசை இழக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. எனினும் இனி இந்த ஃபார்முலாவுக்கு தேவையிருக்காது. உலகமயமாக்கத்தின் காலத்தில் இப்போது ‘உழைத்து’ முன்னேறிய முதலாளிகள்தான் நாயகர்களாக கொண்டாடப்படுகிறார்கள். இதன் சாட்சியமாக பிற்கால ரஜினியின் கதைகளைக் கூறலாம்.

எம்.ஜி.ஆர் ஃபார்முலாவின் இறுதிக் காலத்தில் இதை விட்டால் இனி கதியில்லை எனும் நேரத்தில்தான் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார். ரஜினி எனும் கோமாளி அரசியலுக்கு வரமாட்டார் என்ற தைரியம்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தில் சில கோமாளிகளின் யூகித்தறிய முடியாத மனப்போக்கு காரணமாக கூட வரலாற்றின் சில அத்தியாயங்கள் எழுதப்படுவதுண்டு. எனினும் எம்.ஜி.ஆர் கூட திராவிட இயக்கத்தின் செயல்பாட்டுப் பின்னணியோடு அரசியலுக்கு வந்தார் என்றால் விஜயகாந்திற்கு அவரது படத்திற்கு வசனமெழுதிய ஏதோ அலிகான் புண்ணியவானின் தயவில் சுலபமாக, எதையும் புடுங்காமல் குதித்து விட்டார்.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !2005 செப்டம்பர் 14 அன்று தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற எந்த பொருளுமற்ற அவியல் வார்த்தைகளை, அதுவும் சீட்டுக்குலுக்கி தெரிவு செய்து, ராகுகாலம் எமகண்டம் பார்த்து இந்த கோமாளி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆக இந்த கட்சியின் பெயரையும், ஆரம்பித்த நேரத்தையும் ஜோசியர்கள்தான் தீர்மானித்தார்கள் என்பதிலிருந்தே கேப்படனின் வீரத்தை புரிந்து கொள்ளலாம். அந்த வகையில் சனீஸ்வரனுக்கு மிளகாய் யாகமும், ஊட்டியில் கஜமுக யாகமும் செய்த புரட்சித் தலைவிக்கு போட்டியாக இந்த புரட்சிக் கலைஞரும் அவதரித்து விட்டார். இனி இவர்களது கூட்டணியில் ஜோசியக்காரர்களது காலம்பொற்காலமாக இருக்கும் என்பது பதிவுலக ஜோசியக்காரர் அதியமானுக்கு இனிக்கும் செய்தியாகும்.

கட்சி ஆரம்பித்த காலத்தில் அதற்கு தோதாக ஐயாவின் கல்யாண மண்டபம் இடிக்கப்பட்டதும் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ” என் மண்டபத்தையா இடிக்கிறாய், என்ன செய்கிறேன் பார்” என்று கருணாநிதியை எதிர்க்க ஆரம்பித்தார். தனது சொந்த பகையைக் கூட பொதுப்பகையாக மாற்றுகிறார் என்பது கூட தெரியாத மக்கள், கேப்டனின் போர்ப்பரணியை ரசித்தார்கள்.

2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்தது. ஜெயா எதிர்ப்பு அலையில் தி.மு.க கரையேறிது போல கேப்டனும் ஏதோ ஏழு, ஏட்டு சதவீத வாக்குகளைப் பெற்றார். விட்ட சவுண்டுக்கு இது பெரிய வெற்றி இல்லையென்றாலும் ஊடகங்களும், துக்ளக் சோ போன்ற கருணாநிதியை கட்டோடு வெறுக்கும் பார்ப்பன தரகர்களும் இதை மாபெரும் வெற்றியாக கொண்டாடி ஐயாவை உசுப்பி விட்டனர்.

பத்திரிகைகளைப் பொறுத்தவரை விஜயகாந்தை வைத்து வெளியிடப்படும் செய்திகள், அரசியல் கிசுகிசுக்கள், கூட்டணி பேரங்கள் அனைத்தும் பரபரப்பு தேவையை பூர்த்தி செய்வதால் அந்த நோக்கத்திற்காக நன்கு பயன்படுத்திக் கொண்டனர். துக்ளக் சோவைப் பொறுத்தவரை கேப்டனை கொஞ்சம் சரிக்கட்டி போயஸ் தோட்டத்தில் சேர்த்து விட்டால் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என்று படாதபாடு பட்டார். ஆனாலும் ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்கமுடியாது போலவே இரண்டு ஈகோ ஃபேக்டரிகளும் அப்போது அப்படி சேர்வதற்கான சாத்தியத்தில் இல்லை. இரண்டு தான்தோன்றி தன்னகங்காகர ஆளுமைகள் அவ்வளவு சீக்கிரத்தில் ஒன்றுபடாது என்பதையும் வரலாறு குறித்து வைத்திருக்கிறது.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !இது போக கேப்டன் சரக்கடித்துவிட்டு பேசுகிறார் என்ற உண்மையை அம்மா சொல்ல, கேப்டனும் “நீதான் கூட இருந்து ஊற்றி கொடுத்தாயா?” என்ற ஜாலி ஜம்பர் சண்டையை நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். மேலாக கருணாநிதியின் துரதிர்ஷடத்தை பாருங்கள், அரசியலில் தெற்கு வடக்கு தெரியாத விஜயகாந்தையெல்லாம் மதித்து பேச வேண்டியிருந்தது.

தனக்கு கூடிய கூட்டம், தேர்தலில் வாங்கிய எட்டு சதவீத வாக்குகள் எல்லாம் சேர்ந்து கேப்டனுக்கு முழு போதையை குடிக்காமலேயே அளிக்கத் தவறவில்லை. அடுத்த தேர்தலில் தான்தான் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று அவர் உண்மையிலேயே நம்பினார். இடையில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளில் வாழமுடியாத பண்ருட்டி போன்ற பழம்பெருச்சாளிகள் கேப்டன் கட்சியில் குவிய ஆரம்பித்தனர். கேப்டனும் தனது கட்சியில் ஏழை இரசிகன் செலவழிக்க முடியாது என்று தெளிந்து அந்த பணக்கார பெருச்சாளிகளை மானாவாரியாக சேர்க்க ஆரம்பித்தார். அந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் எவ்வளவு செலவழிப்பீர்கள் என்பதுதான் கேப்டனின் முக்கியக் கேள்வியாக இருந்தது.

மற்ற கட்சிகளிலிருந்து வந்த பெருச்சாளிகளுக்கு இந்த கட்சி தனியாக ஒன்றும் பிடுங்கமுடியாது என்பது தெரிந்திருந்தாலும் காலப்போக்கில் சில பத்து தொகுதிகளையாவது கூட்டணி பலத்தில் வென்று செட்டிலாகலாம் என்று தெளிவாக கணக்கு போட்டுத்தான் வந்தனர். ஆரம்பத்தில் இது குறித்து அவர்கள் பேசும்போதெல்லாம் அதாவது கூட்டணி  குறித்து ஆலோசனை வழங்கிய போதெல்லாம் கேப்டன் அதை சட்டை செய்யவில்லை. என்ன இருந்தாலும் தனியாக ஆட்சியைப் பிடித்து நாற்காலியில் அமரப்போகும் கனவை அவர் விடமுடியாது அல்லவா. இவ்வளவிற்கும் 2006 தேர்தலில் அவர் மட்டுமே விருத்தாசலத்தில் வென்றிருந்தார். பா.ம.க, வன்னியர் பகுதியில் சாதி பலம் இன்றி அவர் வெற்றி பெற்றதற்கான பாராட்டை நாம் அந்த தொகுதி மக்களுக்குத்தான் வழங்க வேண்டும்.

இந்நிலையில் வந்த இடைத்தேர்தல்களிலெல்லாம் தி.மு.கவின் அழகிரி ஃபார்முலாவை எதிர்கொள்ள முடியாமல் புரட்சித்தலைவியே சிங்கியடித்த போது கேப்டனின் கட்சி ததிங்கிணத்தோம் போட ஆரம்பித்தது. அப்புறம் 2009இல் வந்த பாராளுமன்ற தேர்தல். இதில் கூட்டணி குறித்து கேப்டன் இருமனதாக இருந்தார். கட்சியில் உள்ள பெருச்சாளிகளெல்லாம் தாங்கள் செலவழித்த கணக்கை காட்டி நெருக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து இப்படி செலவழிக்க முடியாது என்று லேசாக மிரட்டவும் செய்தனர். ஆனாலும் ஏதோ சில கணக்குகள் படியாததால் அப்போது கூட்டணி சாத்தியமாகவில்லை. சில தற்செயலான காரணங்களால் கூட வரலாற்றின் திசை இப்படித்தான் மாறிச் செல்லும் போலும்.

இந்தத் தேர்தலில் தே.மு.தி.க போட்டியிட்டு ஒரு தொகுதிக்கு தலா ஜம்பதாயிரம் வாக்குகளை வீதம் பெற்றது. இதுதான் இவரின் அதிகபட்ச சாதனை என்பதும் முடிவாயிற்று. இனி கூட்டணி இல்லாமல் குப்பை கொட்ட முடியாது என்பதை வேறு வழியின்றி கேப்டனும் உணரத் துவங்கியிருக்க வேண்டும்.

தற்போது தி.மு.க எதிர்ப்பு ஊடகங்கள் ஸ்பெக்டரம் ஊழலை வைத்து தி.மு.க கூட்டணியை கலைப்பதற்கும், அ.தி.மு.க கூட்டணியை பலப்படுத்துவதற்கும் பெரும் பிரயத்தனங்கள் செய்து வருகின்றன. அதிலும் தனக்கு வயிற்று போக்கு என்றால் கூட ஒரு நாளைக்கு எத்தனை முறை கழிப்பறை செல்ல வேண்டும் என்று அன்னை சோனியாவின் ஆணைக்கிணங்க கால்கழுவும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போன்ற வீராதிவீரசிகாமணிகளெல்லாம்  கேப்டனின் பிறந்த நாளைக்கு அவரது வீடு சென்று கேக்கை ஊட்டி, காங்கிரசு தலைமையில் கேப்டனின் தயவில் மூன்றாவது கூட்டணி என்ற காமெடி பீசுகளெல்லாம் ஊடகங்களில் நிரம்பி வழிந்தன.

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !அந்த வகையில் கேப்டன் மீண்டும் செய்திகளில் அடிபடுகிறார். அந்த நம்பிக்கையில் அவரது கட்சியில் உள்ள பெருச்சாளிகளும் சமீபத்தில் நடந்து முடிந்த சேலத்து மாநாட்டிற்காக நிறைய செலவழித்திருக்கின்றனர். சேலத்தை சுற்றி ஆயிரம் கிலோ மீட்டருக்கு வரவேற்பு தோரணங்களோ, பேனர்களோ கட்டியதிலிருந்தே அவர்களது நம்பிக்கையை புரிந்து கொள்ள முடிகிறது. போட்டதை எப்படியும் எடுத்துவிடலாம் என்று அவர்கள் துணிந்து முதலீடு செய்கிறார்கள்.

இது தெரியாத கேப்டன், சேலம் மாநாட்டில் இலட்சக்கணக்கில் திரண்ட கூட்டத்தை அதாவது முதலீடு போட்டு திரட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து தனது இமேஜை யானைக்கு வந்த டயனோசர் கால் நோயாக ஊதிப்பெருக்கி சுயதிருப்தி அடைகிறார். வரலாறு இத்தகைய விசித்திரங்களை எப்போதும் கண்டிருக்கிறது என்பது வரலாற்றுக்கு விதிக்கப்பட்ட சாபமா என்று தெரியவில்லை. எனினும் இனி அம்மா காலில் விழுந்து சில பல தொகுதிகளை தேற்றித்தான் தனது கட்அவுட் மகாமித்யத்தை காட்ட முடியுமென்பது அவருக்கும் தெரியாத ஒன்றல்ல.

சேலம் மாநாட்டில் அவர் கூட்டணி வேண்டுமா என்று கேட்ட போது தொண்டர்கள் அனைவரும் வேண்டுமென்று கை தூக்கினார்களாம். வேண்டாமென்று யாரும் சொல்லவில்லையாம். இதையே கேப்டனது கட்சியினர் கொண்டிருக்கும் சமரச பிழைப்பு வாதத்திற்கு அடையாளமாக சுட்டிக்காட்டலாம். அதாவது வறுமை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, மானாட மயிலாட ஒழிப்பு,  முதலான அன்லிமிட்டட் ஒழிப்புகளை யாருமே பேசாத அளவில் மாபெரும் கொள்கையாக பினாத்தும் ஒரு கட்சி அதை சாத்தியப்படுத்துவதற்காக ஊழல் நாயகியோடு அணிசேருமாம். என்ன ஒரு கொள்கை பிடிப்பு!

கூட்டணி தயவில்தான் இனி மிச்சமிருக்கும் காலத்தை ஓட்ட முடியும் என்பதை அறிந்ததினால்தான் கேப்டன் சமீப காலமாக, கூட இருந்து ஊற்றிக் கொடுத்தாயா என்று எகத்தாளம் பேசிய தலைவி குறித்து எதுவும் பேசுவதில்லை. அதுவும் மாலை பத்திரிகை ஒன்றில் அ.தி.மு.கவுக்கு எதிர்ப்பு காட்டும் விளம்பரம் ஒன்று தே.மு.தி.க சார்பில் வந்ததும் கேப்டன் படாதபாடு பட்டு அதை மறுத்தார். இது கூட்டணியை பிளப்பதற்கு கருணாநிதியின் சதி என்று சாடினார். காரியம் கை கூடும் நேரத்தில் காலை வாரிவிடும் வஞ்சகம் என்றும் அதை பார்த்தார்.

சரி, கேப்டன் போயஸ் தோட்டத்திலே போய் ஊழல் எதிர்ப்பு வசனம் பேசட்டும். ஆனால் இந்த யோக்கிய சிகாமணிக்கு ஊழலை எதிர்க்க என்ன அருகதை இருக்கிறது? ஆண்டாள் அழகர் பொறியியல் வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !கல்லூரியில் அரசு நிர்ணயித்திற்கும் மேலாகவும், சொந்த ஒதுக்கீட்டில் இலட்சம் இலட்சமாகவும் பணம் பெறுவதில் என்ன எழவு நேர்மை இருக்கிறது? அந்த கல்லூரி என்ன தர்ம சத்திரமாகவா இயங்குகிறது? கேப்டன் இதுவரை நடித்த படங்களில் கருப்பாகவும், வெள்ளையாகவும் வாங்கிய ஊதியத்தை வெளியிடுவாரா? இல்லை அவர் உச்சத்தில் இருந்தபோது அவரது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்றதைத்தான் திரும்பத் தருவாரா?

ஊரைக் கொள்ளையடித்து ஆளாகி, பிறந்த நாள் வந்தால் ஐந்து பேருக்கு தையல் மிஷன், நாலு மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு சைக்கிள்கள், பத்து பேருக்கு அன்னதானம் வழங்கிவிட்டு கொடை வள்ளல் என்று போஸ்டர் அடித்து விட்டு நானும் ஊழலை எதிர்க்கிறேன் என்றால் என்ன சொல்ல? ஊழலை எதிர்ப்பது இத்தனை சுலபமா என்று கையில் பேகான்ஸ்பிரேவுடன் நாளைக்கு வடிவேலுவும், சந்தானமும் இறங்கிவிட்டால் தமிழகத்தின் கதி, மோட்சமா இல்லை நரகமா?

கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்க்கும் கேப்டனின் யோக்கியதை என்ன? சாம்பார் எப்படி வைக்க வேண்டுமென்பது கூட தெரியாத, தெரிந்து கொள்ள தேவையில்லாத பண்ணையாரம்மா பிரேமலாதாவை மகளிர் அணி தலைவியாக்கி எல்லா கூட்டத்திலும் அமரவைத்து அந்த அம்மாவும் தே.மு.தி.கவை தனது பிறந்த வீட்டு சீதனம்போல உரிமை கொண்டாடி செய்யும் அளப்பறைகள் ஆபாசமாக இல்லையா? கேப்டனின் மச்சான் சதீஷ் இளைஞர் அணித் தலைவர். இந்த குடும்ப கிச்சன் கேபினட்தான் கூட்டணி பேரங்களுக்கான வரவு சேமிப்பு குறித்து முடிவெடுக்கிறது. இப்படி கட்சியையே முழு குடும்பத்தின் வருமானம் ஈட்டும் தொழிலாக்கி தமிழகத்தை வலம் வருபவர், கருணாநிதியை குடும்ப ஆட்சி என்று சாடினால் சொறிநாய் கூட காறித்துப்பாதா?

வெத்துவேட்டு விஜயகாந்தின் அதார் உதார் அரசியல் !பண்ணையாரம்மா பிரமேலதா சேலம் மாநாட்டில் பேசும் போது, ” இதுவரை நாம் நம் தலைவரை கேப்டன் என்று அழைத்தோம், இனி இந்த மேடையில் அவரை நாம் டாக்டர் என்று அழைக்கப் போகிறோம்” என்று உச்சிமோந்திருக்கிறார். இதையெல்லாம் எழுதித் தொலைப்பதற்கு குமட்டிக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஜேப்பியாருக்கோ, இல்லை பச்சமுத்து முதலியாருக்கோ ஒரு போனை போட்டு ஒரு மாலை கல்லூரி விழாவுக்கு கால்ஷீட் கொடுத்தால் டாக்டர் பட்டம் கலை ஞானி கமலுக்கோ, இளைய தளபதி விஜயிக்கோ வீடுதேடி வரப்போகிறது. இந்த எழவை ஏதோ அமெரிக்க அல்லேலூயா பார்ட்டிகளிடம் வாங்கி அதையும் கூச்சநாச்சமில்லாமல் இதயம் வெட்கப்படுமளவு கூவித்திரிவதை பார்த்தால் மீண்டும் கண்ணகி உயிர்பெற்று முழு தமிகத்தையே எரித்து விட்டால் தேவலை.

சேலம் மாநாட்டில் அந்த அம்மா பிரேமலதா, ” நாங்க எங்க கைக்காசைப் போட்டுத்தான் மாநாடு நடத்துகிறோம்” என்று வேறு பீற்றியிருக்கிறார். அதே மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அருண்குமார் 51 இலட்சம் ரூபாய் நிதியை கட்சிக்கு வழங்கியிருக்கிறார். மற்ற மாவட்டத்து கணக்குகள் நமக்கு தெரியவில்லை. ஆனால் இந்த காமா சோமா கட்சிக்கெல்லாம் இவ்வளவு நிதி எங்கிருந்து வரும்? யார் கொடுப்பார்கள்? இதை திரட்டுமளவு யாருக்கு சாமர்த்தியம் இருக்கும்? எல்லாம் முதலீடு போட்டு திரும்ப எடுக்கும் அந்த ஏனைய கட்சிகளிலிருந்து வந்த பெருச்சாளிகள்தான் காரணம். கூட்டணி தயவில் அம்மாவின் பிச்சையில் நாளைக்கு இவர்களிடமும் காரியம் சாதிக்க வேண்டியிருக்கலாம் என்று கூடவா திருவள்ளூர் மாவட்ட முதலாளிகளுக்குத் தெரியாது?

இப்போதே எல்லாவற்றையும் எழுதிவிட்டால் வரும் தேர்தலுக்கு சுவாரசியங்கள் மிஞ்சாது என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கிறோம். முக்கியமாக தே.மு.தி.கவின் கொள்கை, இலட்சிய முழக்கங்களை படித்தால் அதை நாள் முழுவதும் கம்பராமாயணம் போல பொழிப்புரையுடன் கலந்து கட்டி அடிக்கலாம். வாய்ப்பு இல்லாமலா போய்விடும்?

ஆனால் தமிகத்தின் ஆக்டோபஸ்ஸாக உருவெடுத்துவிட்ட கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வீழ்த்த, கேப்டனது குடும்பத்தால்தான் முடியுமென்று யாராவது நம்பினால் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளோம். அந்த கொடுமைக்கு நாம் கருணாநிதியையே சகித்துக் கொள்ளலாம்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பனமரத்துல வவ்வாலு ; டாஸ்மாக் இல்லேன்னா திவாலு !!

35

ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒளியில் டாஸ்மாக்கின் மகத்துவங்கள்!

வாழ்க்கையில் வரும் எந்த ஒரு நிகழ்வையோ, விசயத்தையோ முன்முடிவுகளோடு, கருத்து சார்புகளோடு பார்ப்பதுதான் ஆடம்பரம் என்றும், அப்படி எந்த சாய்வுகளும் இல்லாமல் ஒரு விசயத்தை அணுகுவதுதான் எளிமை என்றும் பெருந்தலைவர், சிந்தனையாளர் ஜே.கிருஷ்ணமூர்த்தி கூறியிருக்கிறார்.

இதை ஸ்பெக்ட்ரம் ஊழலோடு தொடர்புபடுத்திப் பாருங்கள், ஸ்பெக்ட்ரம் என்றாலே தி.மு.க ஏதோ ஒன்றே முக்கால் இலட்சம் கோடி ரூபாய்களை ஊழல் செய்திருப்பதாகவும், அதற்கு காரணம் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கம் என்றுதானே பார்க்கிறீர்கள்? இதுதான் முன்முடிவுகளோடு வாழ்வை எதிர்கொள்ளும் ஆடம்பரமான மேட்டிமைத்தனம்.

அத்தகைய ஆடம்பரமான பார்வை தமிழகத்தில் சக்கைபோடு போடும் டாஸ்மாக் விற்பனை குறித்தும் அநேகரிடத்தில் இருக்கிறது. ஏதோ தமிழகம் முழுவதும் தினமும் குடித்து விட்டு கெட்டுப் போகிறது என்று சிலர் பெரும் ஒழுக்கவாதிகளாக பேசுகிறார்கள். இதை முன்முடிவுகள் இல்லாமல் எளிமையான பார்வை மூலம் பார்க்கலாம்.

நலத்திட்டங்களுக்கு அள்ளி வழங்கும் அமுதசுரபி எது?

தமிழகத்தில்தான் வேறு மாநிலங்களில் இல்லாத அளவு பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஒரு ரூபாய் அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள், இலவச தொலைக்காட்சி, இலவச கேஸ் இணைப்பு – அடுப்பு, மழை வந்தால் இரண்டாயிரம் ரூபாய் பணம், மாணவர்களுக்கு சத்துணவு, தினமும் முட்டை, பள்ளியிறுதி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணமில்லாத உயர் கல்வி, ஒரு இலட்ச ரூபாய் காப்பீடு திட்டம், பெண்களுக்கு திருமண உதவித் தொகை, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம், முதியோர்களுக்கு ஓய்வூதியம், ஏழைகளுக்கு இலவச வீடுகள், சமத்துவபுரம், உழவர் சந்தை, கலைஞர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள்…….

எத்தனை எத்தனை திட்டங்கள்….சிலர் நினைக்கலாம், இந்த திட்டங்களின் பலன் முழுவதும் மக்களுக்கு போய்ச் சேரவில்லை என்று. அதை மறுக்க வில்லை. ரேசன் அரிசியும், இலவச தொலைக்காட்சியும் கேரளத்தில் அமோகமாய் விற்பனை செய்யப்படுவது உண்மைதான். மக்களுக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகளில் ஆயிரமோ, இரண்டாயிரமோ கட்சிக் காரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் செல்வதும் கூட உண்மைதான். இவையெல்லாம் ஒழுக்கவாதிகளின் கவலையாகத்தான் இருக்கிறதே அன்றி மக்கள் இவை குறித்து கவலைப்படுவதில்லை. தனக்கு இரண்டாயிரம் ரூபாய் சும்மா கிடைக்கும்போது அதில் கால்வாசி கழிவுத் தொகையாக எடுத்துக் கொள்ளப்படுவது குறித்து அவர்களுக்கு ஏமாற்றமில்லை.

ஏனெனில் இந்த நலத்திட்டங்களெல்லாம் தமது உரிமைகள் என்று மக்கள் நினைப்பதில்லை. அப்படி முன்முடிவோடு நினைத்தால்தான் அது ஆடம்பர பகட்டு என்று அழைக்கப்படும். கருணாநிதி தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்துதான் இவ்வளவு திட்டங்களுக்கும் செலவு செய்கிறார் என்று யதார்த்தமாக மக்கள் நினைக்கிறார்களே அதுதான் எளிமையான பார்வை. அந்த வகையில் இந்த திட்டங்கள் மூலம் கட்சிக்காரர்களோடு மக்களும் பயனடைகிறார்கள் என்பதே உண்மை.

இத்தகைய நலத்திட்டங்களுக்கான பணம் கருணாநிதியின் குடும்பச் சொத்திலிருந்து வரவில்லை, அது அரசு பணம் என்றாலும் அப்படி செலவழிப்பதற்கு அரசிடம் பணம் ஏது? தி.மு.கவையும் கருணாநிதியையும் கட்டோடு வெறுத்து விமரிசனம் செய்யும் எவரும் இது குறித்து கவலைப்படுவதில்லை. இங்கேதான் டாஸ்மாக் விற்பனை வருகிறது. ஆம். டாஸ்மாக் விற்பனை வருவாய் மூலம்தான் தமிழக அரசு தனது நலத்திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தை திரட்டுகிறது. இது உண்மையெனில் டாஸ்மாக் விற்பனையை ஏன் எதிர்க்க வேண்டும்?

புரட்சித் தலைவியின் தொலைநோக்கில் டாஸ்மாக் ஆரம்பம்!

நலத்திட்டத்தை விடுங்கள், அரசு ஊழியர்களுக்கே ஊதியத்தை அளிக்கமுடியாமல் தமிழக அரசு கஜானா கதி கலங்கிய வேளையிலே 2003ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், புரட்சித் தலைவி தொலைநோக்கோடு அரசே விற்பனை செய்யும் டாஸ்மாக் கடைகளை ஆரம்பித்தார். அன்றிலிருந்து வருடத்திற்கு 2000 கோடி ரூபாய் மேனிக்கு விற்பனை அதிகரித்து வருகிறது. ஜெயலலிதா துவங்கிய அந்த மகத்தான திட்டம் இன்று கருணாநிதி காலத்தில் சாதனை படைத்து வருகிறது.

டாஸ்மாக் சாதனைகள் புள்ளிவிவரங்களாய்!

அன்று சில நூறு கடைகளை இருந்ததென்றால் இன்று பல்கிப் பெருகி 7,434 கடைகளாய் பெரும் ஆல விருட்சமாய் விரிந்திருக்கிறது. சென்னையில் மட்டும் ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள். உலகெங்கும் பெப்சி கோக் கிடைப்பது போல தமிழகமெங்கும் டாஸ்மாக் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நுகர்வு பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் பல்லாயிரம் கோடி ரூபாய் விளம்பரம் செய்து விற்பனையை அதிகரிக்கும் நவீன யுகத்தில் டாஸ்மாக் மட்டும் எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் சக்கை போடு போடுகிறது.

தமிழகத்தில் எத்தனை கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள், என்று எதை வேண்டுமானாலும் கணக்கெடுங்கள். நீங்கள் என்னதான் கணக்கெடுத்தாலும் அவை யாவும் டாஸ்மாக் சில்லறை அங்காடிகளின் எண்ணிக்கையை நெருங்க முடியாது. தமிழகத்தில் அரசுப் பேருந்துகளும், மத்திய இரயில்வேயும் ஒரு நாளில் ஏற்றிச் செல்லும் பயணிகளை விட டாஸ்மாக்கிற்கு ஒரு நாளில் வந்து போகும் குடிமக்கள் மிகவும் அதிகம். இந்தியாவின் பிளாக்பஸ்டர் என்று சாதனையாக காட்டப்படும் எந்திரன் படத்தின் வருவாயெல்லாம் டாஸ்மாக்கின் ஒரு நாள் வசூலோடு போட்டி போட முடியாது.

டாஸ்மாக் அங்காடிகள் மூலம் கடந்த 2010ஆம் ஆண்டு மட்டும் 16, 445 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்திருக்கிறது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 2,464 கோடி ரூபாய் அதிகமாகும். சராசரியாக கணக்கிட்டால் மாதம் ஒன்றுக்கு 200 கோடி, நாள் ஒன்றுக்கு ஏழு கோடி ரூபாய் சென்ற ஆண்டை விட அதிகம் வருகிறது. தற்போது தினந்தோறும் 1.26 லட்சம் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானப் (IMFL)  பெட்டிகள் விற்பனையாகிறது. ஒரு கேஸ் 12 பாட்டில்கள் வீதம் 57,000 கேஸ் பீர் பாட்டில்கள் விற்பனையாகின்றன.

இன்னும் சாதனை படைக்கும் டாஸ்மாக்கின் புள்ளிவிவரங்களை பாருங்கள். அலுவலக நாட்களில் சராசரி விற்பனை 45 கோடி என்றால் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் அது 53 கோடியாக இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு வரை வருடத்திற்கு எட்டாயிரம் கோடி ரூபாயாக இருந்தது இன்று இரண்டு மடங்கு அதிகமாயிருக்கிறது என்றால் அது சாதனை அல்லவா?

மது விற்பனையில் முதலிடத்தை நோக்கி!

இந்தியாவில் குடிப்பதற்கு பெயர் போன கேரள மாநிலத்தில் கூட ஒணம் பண்டிகையின் போது முப்பது கோடி ரூபாய்க்குத்தான் மது விற்பனை ஆனதாம். ஆனால் நமது தமிழகத்தில் அன்றாட சராசரி இதைப்போன்று ஒன்றரை மடங்கு அதிகம். தீபாவளி, புத்தாண்டு முதலான திருவிழா நாட்களில் ஏறக்குறைய நூறு கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனை ஆகின்றன.

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் அதிகம் மது விற்பனையாகும் மாநிலமாக உத்திரப் பிரதேசம் இருக்கிறது. மக்கள் தொகை மிகவும் அதிகம் என்பதால்தான் இந்த முதலிடம். தற்போது இந்திய விற்பனையில் இரண்டாமிடத்தில் இருக்கும் தமிழகம் வெகு விரைவில் முதலிடம் பெறுவது உறுதி. அது அய்யா ஆட்சியிலா, இல்லை அம்மா ஆட்சியிலா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

டாஸ்மாக் விற்பனையால் தமிழகமே உயிர் வாழ்கிறது!

தமிழகத்தில் தற்போது பதினைந்திற்க்கும் மேற்பட்ட சீமைச்சாராய ஆலைகள் பல்லாயிரம் தொழிலாளிகளோடு மூன்று ஷிப்ட்டுகளிலும் மும்மூரமாய் உற்பத்தியில் ஈடுபடுகின்றது. இந்த ஆலைகளில் பாதி அ.தி.மு.க தலைமைக்கும், பாதி தி.மு.க தலைமைக்கும் நெருக்கமாகவோ இல்லை சொந்தமாகவோ இருப்பதை வைத்து சிலர் விமரிசனம் செய்கின்றனர். இதுவும் தொலைநோக்கோடு இல்லாமல் முன்முடிவுகளோடு செய்யப்படும் அவசரக் குடுக்கை விமரிசனமாகும். இந்த ஆலைகள் இப்படி இரு கட்சிகளோடு தொடர்புடையதாக இருப்பதால் மட்டுமே இங்கு அரசு விற்பனை சாத்தியமாகிறது என்பதை அந்த விமரிசன ஒழுக்கவாதிகள் உணரவேண்டும்.

மேலும் இந்த ஆலைகளுக்கு கிடைக்கும் வருமானத்தில் குறிப்பிடத்தக்க அளவு தேர்தல் காலத்தில் வாக்களர்களுக்கு கிடைக்கிறது என்பதையும் நாம்  நன்றியுடன் நினைத்துப் பார்க்க வேண்டும். தயாரிப்பு இலாபமும் மக்களுக்கு, விற்பனை இலாபமும் மக்களுக்கு என்றால் இதுதானே உண்மையான ஜனநாயகம்?

டாஸ்மாக்கில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் அதிகாரிகளும் பணியாற்றுகிறார்கள். இவர்களது குடும்ப உறுப்பினர்களையும் கணக்கிட்டால் இது சில இலட்சங்கள் வரும். இனி டாஸ்மாக்கினால் ஏற்பட்டிருக்கும் மறைமுக வேலைவாய்ப்புகள், செழிக்கும் தொழில்களைப் பற்றியும் பார்க்கலாம்.

கோடிக்கணக்கான பாட்டில்களை தயாரிக்கும் பாட்டில் தொழிற்சாலைகள், நல்ல நீரை ஆலைகளுக்கு அளிக்கும் தொழில், பாட்டிலில் இடம்பெறும் லேபிள் அச்சக தொழிற்சாலைகள், அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு, அதை அச்சிடல், கடைகளுக்கான ஸ்டீல் ரேக்குகள், மது ஆலைகளுக்கு தேவைப்படும் வேதிப்பொருட்களை அளிக்கும் தொழிற்சாலைகள், இவை அத்தனையையும் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் லாரிப் போக்குவரத்து இவை எல்லாம் கூட்டினால் தமிழகத்தில் கால்வாசிப் பேர்கள் இதில் உயிர் பிழைப்பது தெரியும்.

மேலும் ஒரு டாஸ்மாக் கடையை வைத்து நகரமென்றால் பத்து சாக்கனாக் கடைகளும், கிராமம் என்றால் ஐந்து சாக்கனாக் கடைகளும் விறுவிறுப்பாக இயங்குகின்றன. இதிலும் இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இங்கு இருக்கும் காரமான நொறுக்குத் தீனிகள் டன் கணக்கில் விற்பனை ஆகின்றன. அதன்படி இதனை தயாரிக்கும் குடிசைத் தொழில்கள் பல்லாயிரக் கணக்கில் செழித்து வளருகின்றன.

முக்கியமாக முட்டையும், சிக்கனும் மெட்ரிக் டன் கணக்கில் தினமும் விழுங்கப்படுகின்றன. அந்த வகையில் நாமக்கல் கோழிப்பண்ணைகளின் அட்சயப் பாத்திரமாக டாஸ்மாக் விளங்குகிறது. இதில் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மட்டுமல்ல கோழிகளுக்கு தீவனத்தை வழங்கும் வகையில் விவசாயிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். ஃபிரைடு ரைஸ் விற்பனையைப் பார்த்தால் பாசுமதி அரசி விளையும் பஞ்சாப் விவசாயிகள் தமிழக குடிமகன்களுக்கு வெகுவாக கடமைப்பட்டிருக்கின்றனர்.

ஆக டாஸமாக் என்ற சங்கிலியை பின்தொடர்ந்து பார்த்தால் அதில் முழு தமிகமும் ஏன் இந்தியாவும் கூட பிணைக்கப்பட்டிருப்பதோடு பல கோடி மக்கள் வீட்டில் அடுப்பெரியவும் இந்த மது விற்பனை பாரிய பங்காற்றி வருவது தெள்ளத் தெளிவாக விளங்கும். டாஸ்மாக்கின் மறைமுக வேலைவாய்ப்பு இத்தோடு முடியவில்லை.

குடியினால் வரும் நோய்கள் குறிப்பாக வயிற்று உபாதைகளுக்கான சிகிச்சைகள் என்ற வகையில் தமிழக மருத்துவமனைகளும் நன்றாக கல்லா கட்டுகின்றன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், போக மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் வரை பலர் வாழ டாஸ்மாக் கைகொடுக்கிறது. விஜய் மல்லையா போன்ற மது தொழிலதிபர்கள் ஐ.பி.எல் கிரிக்கெட்டிற்காக பல நூறு கோடி செலவழிப்பதற்கும் டாஸ்மாக்கே காரணம் என்பதால் கிரிக்கெட் இரசிகர்களும் இங்கே நன்றிகடன் செலுத்தும் பட்டியிலில் இருக்கின்றார்கள்.

தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியிருக்கும் டாஸ்மாக்!

எந்த ஒரு விசயத்தையும் பொருளாதார விசயம் என்ற முன்முடிவோடு அணுகுவது கம்யூனிஸ்ட்டுகளிடம் இருக்கும் மேட்டிமைத்தனமாக பார்வையாகும். டாஸ்மாக் எனும் தமிழகத்திற்கு படியளக்கும் ஆண்டவனை வெறுமனே பொருளாதார விசயமாக பார்க்காமல் உளவியல் ரீதியாக பரிசீலித்தால் இன்று தமிகம் பெருங் கலவரங்கள் இன்றி அமைதியாக இருப்பதற்கு டாஸ்மாக் பேணும் குடி வழி அமைதி காரணம் என்பது விளங்கும்.

தமிகத்தில் கட்டிடம் கட்டுவது முதல், கருங்கல்லை அள்ளி போடுவது வரை பல்வேறு கடுமுழைப்பு தொழில்கள் இருக்கின்றன. இதில் ஈடுபடும் தொழிலாளிகள் தமது முதலாளிகளிடம் சண்டை போடாமல், ஊதிய உயர்வு கேட்காமல் இருப்பதற்கு டாஸ்மாக் வழங்கும் ஆனந்த அமைதியே காரணம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தங்களை அடிமைகள் போல நடத்தும் மேலதிகாரிகளை தட்டிக்கேட்காமல் அடிபணிந்து அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் அமைதியாக வேலை பார்ப்பதற்கு மாலையில் உள்ள போகும் இந்த குவார்ட்டர்தான் காரணமென்பது எத்தனை பேருக்கு தெரியும்?

காலையில் பால்பாக்கெட் போடும் அண்ணாச்சியிலிருந்து, நள்ளிரவில் பாதுகாப்பிற்காக விசிலடிக்கும் நேபாளத்து கூர்க்கா முதல் தமிழகத்தின் அன்றாட வாழ்வில் இயங்கும் அத்தனைபேருக்கும் டாஸ்மாக்கே சரணாலயமாக இருக்கிறது. ஒருவேளை நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் இல்லையென்றால் முழு தமிழ்நாடும் தடுக்கி விழுந்துவிடும். பூனை விழுந்தால் பிரச்சினை இல்லை. யானை விழுந்தால் படுத்துக் கொள்ளும். முழு தமிழ்நாடும் விழுந்தால்? இந்தியாவே தள்ளாடும்.

குடித்து விட்டு மனைவிகளை அடிக்கும் ஆண்கள் சிலர்தான். பெரும்பாலான ஆண்கள் குடிப்பதினாலேயே சண்டை போடுவதில்லை. அந்த வகையில் தமிழகத்தின் குடும்பங்கள் சண்டை சச்சரவின்றி அமைதியாக இருப்பதற்கு இந்த மதுக்கடைகளே காரணம். இல்லத்தரசிகள் அம்மா மற்றும் அய்யா குடும்பத்து தொலைக்காட்சி தொடர்களை பார்த்து இளைப்பாறுவது போன்று இல்லத்தரசர்கள் அரசு மதுக்கடைகள் மூலம் அமைதியாக இருக்கின்றனர். இவையெல்லாம் ஆய்வு படிப்புக்குரிய விசயங்கள் என்பதால் தமிகத்தின் அறிவார்ந்த கல்வி அமைப்புக்கும் கூட டாஸ்மாக் பாரிய பங்காற்றுகிறது.

பதிவுலகம், எழுத்தாளர்களை மொக்கையாக வைத்திருக்கும் டாஸ்மாக்!

பதிவுலகை எடுத்துக் கொள்வோம். இங்கே கூகிள் பஸ்ஸில் இலக்கியம் வடிக்கும் குருஜிக்கள் முதல் அதற்கு பொழிப்புரை போடும் அக்மார்க் மொக்கைகள் வரை அவர்களுடைய பதிவுலக அரட்டை வழக்கத்தை டாஸ்மாக்கே வடிவமைக்கிறது. டாஸ்மாக் மட்டும் இல்லையென்றால் பதிவுலகம் சீரியசான கொள்களைப் பேசி அடித்துக் கொண்டு கொலையுலகமாக மாறும். அந்த வகையில் இணையத்தின் நிம்மதி கூட டாஸ்மாக்கின் அமுதம் மூலமாகவே தொடர்கிறது என்பதால் இங்கே நாமும் அதாவது இணைய மக்கள் அதற்காக அரசுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

சாரு தொடங்கி, அநேக சிறுபத்திரிகையாளர்கள்  தங்களுக்குள் அடித்துக் கொண்டோ இல்லை மூக்குடைத்துக் கொண்டோ இருப்பதால் மற்றவர்கள் செவனே என்று தத்தமது வேலையை பார்க்கலாம். இவர்களது அதி முக்கியமான விசயங்களாக அற்ப பிரச்சினைகள் இருப்பதற்கு டாஸ்மாக்கே காரணம். அந்த வகையில் தமிழகத்தின் அறிவு ஜீவிகளின் இயக்கமும் அரசு மதுக்கடைகள் இன்றி இல்லை. இன்று ஆண்டு தோறும் சில நூறு திரைப்படங்களை வழங்கும்  கோடம்பாக்கமும் தனது படைப்புக் களைப்பை டாஸ்மாக்கின் மூலமே தணித்து வருகிறது. ஹாலிவுட்டுக்கே சவால் விடும் எந்திரன் போன்ற மகத்தான படைப்புகள் பல டாஸ்மாக்கை அடித்து விட்டு நடக்கும் உரையாடல்கள் மூலமே சாத்தியமாகியிருக்கின்றது.

டாஸ்மாக் வெறும் குடியல்ல, அது ஒரு ஜனநாயகம்!

இன்றைக்கு தமிழகத்தில் இருக்கும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு மக்களிடையே நிதி உதவி என்று கேட்டிருந்தால் அவை சில இலட்சங்களை தாண்டப் போவதில்லை. சுனாமிக்கு கூட சில கோடிகள்தானே வசூலானது? ஆகையால் இந்த மக்கள் நலத்திட்டங்கள் தொய்வின்றி நடக்க வேண்டுமென்றால் டாஸ்மாக் கடைகள் தொந்தரவின்றி இயங்க வேண்டும். மக்களிடமிருந்து, மக்கள் வழியாக, மக்களுக்கே என்ற உயர்ந்த ஜனநாயகத்தை உலகிலேயே தமிழகத்தில் மட்டும் சாத்தியமாக்கியிருக்கும் டாஸ்மாக்கை இனியேனும் குடி, கூத்து என்று இழிவாக பாராதிருப்பதோடு, உங்களால் முடிந்த ஆதரவுத் தொகையை ஒரு குவார்ட்டர் வாங்கியாவது உதவி செய்யுங்கள்!

_______________________________________________________________________

– பொது மக்கள் நலன் கருதி, தமிழக அரசுக்காக வினவு வெளியிடும் இலவச விளம்பரம்.

________________________________________________________________________

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!

42
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ! அசீமானாந்தாவின் ஆதாரம் !!

ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம் ! அசீமானாந்தாவின் ஆதாரம் !!

சுவாமி அசீமானந்தா
சுவாமி அசீமானந்தா

ஒரு ஊரில் நல்ல கொழுத்த ஆடுகளைக் கொண்ட மந்தை ஒன்று இருந்தது. அம்மந்தைக்குக் காவலாய் ஒரு வேட்டை நாயும் இருந்தது. கொழுத்த ஆடுகளைக் கண்ட

அப்துல் கலீம்
நிரபராதி அப்துல் கலீம்

ஓநாய் ஒன்றுக்கு வாயில் எச்சில் ஊறியது. ஆடுகளை ஒவ்வொன்றாய்த் தின்ன தந்திரம் ஒன்றைச் செய்தது. அதன்படி, அது ஆட்டைப் போலவே தோற்றமளிக்கும் சட்டை ஒன்றைப் போட்டுக் கொண்டு மந்தைக்குள் ஊடுறுவியது. பின் தினமும் ஒரு ஆடாகத் தின்று வந்தது. மந்தையில் ஆடுகள் குறைந்து வருவதைக் கண்ட மேய்ப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஒரு நாள், எல்லா ஆடுகளும் போய் கடைசியாக ஆட்டுச் சட்டை போட்ட ஓநாய் மட்டுமே மிஞ்சியது. இதுவாவது மிஞ்சியதே என்று ஆறுதல் பட்டுக் கொண்ட மேய்ப்பன் அதை மட்டுமாவது பாதுகாத்துக் கொள்ளலாம் என்று எண்ணி கையில் எடுத்தானாம். அப்போது பார்த்து சட்டை நழுவிக் கீழே விழுது உள்ளே பதுங்கியிருந்த ஓநாய் அம்பலப்பட்டதாம்

மேலே சொன்ன அம்புலிமாமாக் கதையின் வில்லனான ஓநாயின் இருபத்தோராம் நூற்றாண்டுப்  பதிப்பு தான் ஆர்.எஸ்.எஸ். இதில் ஒரு சிறப்பான விசயமென்னவென்றால்,  ஆர்.எஸ்.எஸ் ஓநாய் எந்தக் காலத்திலும் மனிதச் சட்டை எதையும் அணிந்து கொள்ளவில்லை. அப்பட்டமாகத் தனது இந்து பாசிச செயல் திட்டத்தை பகிரங்கமாக வெளிப்படுத்திக் கொண்டே அப்படியொரு சட்டையை அணிந்து கொண்டிருப்பதாக நம்மிடம் சொல்லியது. தாம் தேசபக்தர்கள் என்றும் நல்லவர்களென்றும் தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டார்கள். அதை மக்கள் நம்பினார்களோ இல்லையோ, இந்த அரசும் ஆளும் வர்க்கமும் மனதார நம்பியதோடு பரப்பவும் செய்தார்கள். கூடவே அது காட்டிய திசையிலெல்லாம் பாய்ந்து ஒநாயின் குற்றங்களுக்காக அப்பாவி ஆடுகளைப் பிடித்து ஓநாய் என்று அறிவித்ததோடு சிறையிலும் அடைத்திருக்கிறார்கள்.

2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மகராஷ்ட்டிர மாநிலம் மாலேகான் நகரின் முசுலீம்கள் அடர்த்தியாய் வாழும் பகுதியில் நான்கு குண்டுகள் வெடித்தது. 2007ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத் மெக்கா மசூதியில் குண்டு வெடித்தது. அதேயாண்டு பிப்ரவரி மாதம் இந்தியா பாக்கிஸ்தான்

இந்திரேஷ் குமார்
இந்திரேஷ் குமார்

இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் இரயிலில் குண்டுகள் வெடித்தன. அதே ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் ஷெரீப் தர்காவிலும் குண்டுகள் வெடித்தன. மேலே குறிப்பிட்ட குண்டு வெடிப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள்; நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.

ஒவ்வொரு முறை குண்டுகள் வெடிக்கும் போதும் பார்ப்பன இந்துமதவெறி தலைக்கேறிய முதலாளித்துவ ஊடகங்கள் எந்த யோசனையுமின்றி இசுலாமிய

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

சமூகத்தை நோக்கி விரலை நீட்டின. அரசு தனது குண்டாந்தடிகளான போலீசு இராணுவத்தைக் கொண்டு இசுலாமியர்களின் குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றிவளைத்தது. அதிகாரப்பூர்வமான முறையிலும் அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் சட்ட ரீதியிலும் சட்டத்திற்கு விரோதமான முறைகளிலும் நூற்றுக்கணக்கான முசுலீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்கள் கடுமையான சித்தரவதைகளுக்கும் ஆளாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்கள் அலைக்கழிக்கப்பட்டன.

2006ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, மகாராஷ்டிர தீவிரவாதத் தடுப்புப் பிரிவு முதலில் அவசரகதியில் விசாரணை நடத்தி சிமி அமைப்பைச் சேர்ந்த ஒன்பது முசுலீம் இளைஞர்களைக் கைது செய்தது. மூன்று பேர் தேடப்படுவோர் பட்டியலில் இருந்தனர். தமது சொந்தங்களைப் பறிகொடுத்ததோடு மட்டுமின்றி பழியையும் சுமக்கும் அநீதியைக் கண்டு கொதித்தெழுந்த முசுலீம்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து மகராஷ்டிர அரசு இதன் விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது.

2007ஆம் ஆண்டு நடந்த சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ் குண்டு வெடிப்பில் 68 பேர் கொல்லப்பட்டார்கள்; 50 பேர் படுகாயம் அடைந்தார்கள். அது பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குர்ஷித் கஸூரி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வந்திருந்த நேரமாகும். குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களை

சுனில் ஜோஷி
சுனில் ஜோஷி

அடக்கம் செய்வதற்குள் பார்ப்பன-முதலாளித்துவ ஊடகங்கள் விசாரணையை நடத்தி தீர்ப்பையும் எழுதி விட்டன. ஒட்டு மொத்தமாக பத்திரிகைகள் “இது பாகிஸ்தான் சதி” என்று முன்மொழிய, அமெரிக்காவும் ஆமாம் இது ஹூஜி மற்றும் லஸ்கர் இ தொய்பாவின் சதி என்று வழி மொழிந்தது.

சம்ஜவ்தா குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அதில் பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ் ரக வெடி பொருள்,  முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித் கள்ளத்தனமாக

தயாநந்த் பாண்டே
தயாநந்த் பாண்டே

ஜம்முவில் இருந்து வாங்கிக் கொடுத்ததாக இருக்கும் சாத்தியங்களைச் சுட்டி சில துப்புகள் கிடைத்தன. அதே போல் 2008ஆம் ஆண்டு நடந்த மலேகான் குண்டு வெடிப்பில், குண்டுகளை வெடிக்கச் செய்ய உதவிய மோட்டார் சைக்கிள் ஒன்று ஆர்.எஸ்.எஸ்ஸின் பரிவாரத்தைச் சேர்ந்த அபிநவ் பாரத் எனும் அமைப்பின் பிரக்யா சிங் தாக்கூர் எனும் பெண் சாமியாருக்குச் சொந்தமானது என்கிற துப்பும் கிடைத்தது.

இப்படிக் கிடைத்த ஆதாரங்களைக் கண்டு கொள்ளாமல் தான் போலீசு அவசர கதியில் முசுலீம்கள் மேல் ஆரம்பத்தில் பழியைப் போட்டு பல அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கியது. இதில் ஒரு படி மேலே போன ஹைதரபாத் போலீசு, அவசர கோலத்தில் தான் கைது செய்த இளைஞர்கள் மேலான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திக் கொள்ள போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அவர்களை வெளியில் விட மனமில்லாமல் வேறு பொய்க் கேசுகளைப் போட்டு உள்ளேயே வைத்துது.

இந்நிலையில் வழக்குகள் மத்திய புலனாய்வுத் துறைக்குச் சென்று இந்த குண்டு வெடிப்புகளில் பார்ப்பன பயங்கரவாதிகளின் தொடர்பு விரிவாக அலசப்படுகிறது. சென்ற வருடம் நவம்பர் 19ஆம் தேதி சுவாமி அசீமானந்தா எனப்படும் நாப குமார் சர்க்கார் எனும் ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் (பிரச்சாரக்) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சரியாக ஒரு மாதம் கழித்து டிசம்பர் 18ஆம் தேதி தில்லி திஸ் ஹஸாரி மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஒப்புதல் வாக்குமூலம்

சந்தீர்ப டாங்கே
சந்தீர்ப டாங்கே

அளிக்கிறார். அந்த வாக்குமூலம் ஆர்.எஸ்.எஸ் அணிந்திருந்த ஓட்டைக் கோவணத்தையும் உருவியெறிந்து அம்மணமாய் நிறுத்தியுள்ளது.

அசீமானந்திற்கு இந்த மனமாற்றம் எப்படி நேர்ந்திருக்கும்? சாதாரணமாக ஒரு முழு நேர ஊழியரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்குவதற்கு, அல் காயிதா போன்ற தீவிரவாத அமைப்புகள் மனித வெடிகுண்டுகளைத் தயார் செய்யும் வழிமுறைகளைக் காட்டிலும் கச்சிதமான – கறாரான – உத்திரவாதமான வழிமுறைகளையே பின்பற்றுகின்றனர். கழுத்தை அறுத்தாலும் உண்மை வெளியாகிவிடாது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே இது போன்ற நாசவேலைகளுக்கு ப்ரச்சாரக்குகளைப் பயன்படுத்துவர்.

அசீமானந்தின் இந்த மனமாற்றம் அத்தனை லேசில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

நீதிமன்றக்காவலின் இடையில் சில நாட்கள் ஹைதரபாத் சன்ச்சல்குடா சிறையில் அசீமானந் அடைக்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்குத் தேவையான பணிவிடைகள் செய்ததும் ஆறுதலாய் இருந்ததும் கலீம் எனும் முசுலீம் இளைஞன். தனது கூட்டாளிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட 59 வயதான அசீமனந்தாவிற்கு தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, நாளிதழ்கள் கொண்டு வந்து கொடுப்பது போன்ற பல்வேறு சேவைகளை அந்த இளைஞன் தான் செய்துள்ளான். ஒரு சந்தர்பத்தில், தானும் தனது கூட்டாளிகளும் சதித்திட்டம் தீட்டி நிறைவேற்றிய ஹைதரபாத் குண்டு வெடிப்பிற்காகக் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவி முசுலீம் இளைஞர்களில் இந்த இளைஞனும் ஒருவன் எனும் உண்மை அசீமானந்திற்குத் தெரியவருகிறது.

இது அவருக்குள் கடுமையான மனவுளைச்சலையும் குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதற்குப்  பிராயச்சித்தம் செய்யும் விதமாகவே உண்மைகளை

ராம்ஜி
ராம்ஜி

பகிரங்கமாக ஒப்புக் கொள்வதாக மாஜிஸ்டிரேட் முன்பாக அசீமானந் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஒரு காரணமாக இருக்கலாம் – ஆனால், இதுமட்டுமே முழுமையான காரணமாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு.

ஏனெனில், ஆர். எஸ். எஸ் ஒருவனுக்கு அளிக்கும் ஆரம்ப கட்டப் பயிற்சியே அவனது மனசாட்சியைக் கொன்று விட்டு மாஃபியா கும்பலின் பாணியில் உத்தரவுக்குக் கீழ்படியும் குணத்தை ஏற்படுத்தும் விதமாகத் தான் திட்டமிடப்பட்டுகிறது.  ஆர்.எஸ்.எஸில் புதிதாக சேரும் எவரும் ஷாகா எனப்படும் அவர்களது தினசரி ஒருமணி நேர பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியது கட்டாயமாகும். எங்காவது இரகசிய மைதானங்களிலோ அல்லது ஆள் நடமாட்டம் குறைவான கோயில்களிலோ கூடும் அவர்கள், முதலில் உடற்பயிற்சி செய்வார்கள். பின்னர் இந்துத்வ பாசிசக்கதைகளை பேசி பயிற்சி கொடுப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ்இன் இந்த ஷாகா பயிற்சியானது பொதுவில் கேள்விக்கிடமற்ற கட்டுபாட்டையும், அடிமைத்தன சிந்தனையையும் உருவாக்குவதில் முக்கியபங்காற்றுகிறது. மேலும் ஜனநாயகத்தின் வாசம் கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ் இயக்க நடைமுறைகள் இந்த அடிமைத்தன உளவியலை மேலும் வலுவாக்குகிறது.

ஆர். எஸ்.எஸ்ஸின் பயிற்சி முறைகள் நேரடியாக இத்தாலி பாசிஸ்ட் கட்சியிலிருந்து பெறப்பட்டது. இதற்காகவே பி.எஸ். மூஞ்சே எனும் உயர்மட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் 1930களில் இத்தாலிக்குப் பயணித்து முசோலினியைச் சந்தித்துள்ளார். அங்கு இருந்த பாசிஸ்டு பயிற்சி முகாம்களை நேரடியாக கவனித்து அதன் அடிப்படையிலிருந்தே ஆர்.எஸ்.எஸ்ஸின் ஷாகா வகுப்புகள் வடிவமைக்கப்பட்டது. இந்துத்துவ இயக்கங்களுக்கு பெனிட்டோ முசோலினியின் பாசிஸ்ட் கட்சியோடிருந்த தொடர்புகள் பற்றிய மார்ஸியா கஸோலரி என்பரின் விரிவான ஆய்வுகளும் வேறு பல ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகளும் இணையத்தில்

புரோஹித்
புரோஹித்

வாசிக்கக் கிடைக்கிறது. ஆர்.எஸ்.எஸ்இன் இரண்டாவது தலைவரான கோல்வல்கர் ஹிட்லரை ஆதர்ச நாயகனாகவே வழிபட்டுள்ளார். இது குறித்த அவரது புத்தகம் இன்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தால் விற்பனை செய்யப்படுகிறது.

புதிதாக சேரும் சாதாரண உறுப்பினர்களையே இந்தளவுக்குத் தயாரிக்கிறார்கள் எனில் முழு நேர ஊழியர்களான ப்ரச்சாரக்குகளை எந்தளவுக்குத் தீவிரமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கியிருப்பார்கள் என்பதை எவரும் புரிந்து கொள்ள முடியும். தானும் தனது கூட்டாளிகளும் வைத்த குண்டுகளால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரற்ற உடல்கள் ஏற்படுத்தாத குற்ற உணர்ச்சியை, அதனால் நாடெங்கும் கோடிக்கணக்கான அப்பாவி முசுலீம்கள் சுற்றிவளைக்கப்பட்டு மனவுளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட போது ஏற்படாத குற்ற உணர்ச்சியை, பாதிக்கப்பட்ட ஒரு முசுலீம் இளைஞனின் நற்செயல்கள் ஏற்படுத்தியதென்று அசீமானந்த் குறிப்பிடுகிறார்.

இது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உண்மையை முழுமையாக்கும் முக்கியமான விஷயங்கள் சன்ச்சல்குடா சிறைச்சாலைக்கு வெளியேயும் இருந்திருப்பதற்கான வாய்ப்புகளை நாம் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. தற்போது தன்னோடு சதியில் ஈடுபட்டவர்கள் என்று ஆர்.எஸ்.எஸ் மத்தியக் கமிட்டி உறுப்பினர் இந்திரேஷ் குமார், மத்திய பிரதேச மாநில பிரச்சாரக்கான சுனில் ஜோஷி, இந்தூர் மாநகர பிரச்சாரக்கான சந்தீப் டாங்கே, மூத்த ப்ரச்சாரக் ராம்ஜி, மேல் மட்ட உறுப்பினர் சிவம் தாக்கத், முன்னாள் இராணுவ அதிகாரி புரோஹித், பிரச்சாரக் தேவேந்திர குப்தா, பிஜேபி எம்.பி யோகி ஆதித்யானந், குஜராத் விவேகானந்த சேவா கேந்திரத்தின் பாரத்பாய், மாநில அமைப்பாளர் டாக்டர் அசோக், இன்னொரு முக்கிய பிரமுகர் லோகேஷ் சர்மா, ராஜேஷ் மிஸ்ரா, சாமியார் தயானந் பாண்டே  ஆகிய பெயர்களை உதிர்த்திருக்கிறார்.

தேவேந்திர குப்தா
தேவேந்திர குப்தா

இதில் ஆர்.எஸ்.எஸ் மத்திய கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமார் தான் குண்டு வெடிப்புகளைத் திட்டமிட்ட சதிக்குழுவுக்கு வழிகாட்டும் தலைவராக செயல்பட்டுள்ளார். திட்டங்களை நிறைவேற்றிய கீழ் மட்ட பயங்கரவாத அலகுகளுக்குத் தொடர்பாளராக சுனில் ஜோஷி இருந்துள்ளார். குறிப்பாக குஜராத் –  பரோடா – பெஸ்ட் பேக்கரி வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு பேரை சுனில் ஜோஷி தனது பொறுப்பில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், அவர்கள் மாட்டிக் கொண்டால் இந்திரேஷ் குமாரும் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதால் அவர்களைக் கொன்று போடும் படி அசீமானந்த் ஜோஷியிடம் சொல்லியிருக்கிறார்.

அதற்கு சில தினங்களுக்குள் டிசம்பர் 2007ஆம் ஆண்டு ஜோஷி தனது சக ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலேயே கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் இது வரை ஆறு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விவகாரம் பெரியளவில் வெடித்து வருவதும், புலனாய்வுத் துறையினரின் விசாரணை ஒரு சங்கிலி போல் கீழ்மட்டத்தில் தொடங்கி மேல் மட்டம் வரை நீண்டு வருவதையும் யூகித்துக் கொண்ட ஆர்.எஸ்.எஸ் தலைமை தனது சொந்த உறுப்பினர்களையே கொல்வதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கக் கூடும்.

அசீமானந்தின் ஒப்புதல் வாக்குமூலத்திற்கு அப்பாவி கலீமின் நன்னடத்தை ஏற்படுத்திய குற்ற உணர்ச்சி ஒரு காரணமென்றால், ஜோஷியின் படுகொலை ஏற்படுத்தியிருக்கக் கூடிய மனக்கிலேசமும் முக்கியமான பங்காற்றியிருக்க வேண்டும். அசீமானந்தின் ஷாப்ரிதம் ஆஷ்ரமிற்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் முன்னாள் தலைவர் சுதர்சன் தொடங்கி இன்னாள் தலைவர் மோகன் பாகவத் வரை பல்வேறு உயர் மட்டத் தலைவர்கள் வருகை புரிந்துள்ளனர்.

தெட்டத் தெளிவாக ஆர்.எஸ்.எஸ் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதற்கான ஆதாரங்களும், சாட்சியங்களும் இப்போது கிடைத்துள்ள நிலையிலும் இது வரை இந்த அரசு அதன் மேல் ஒரு சின்னத் துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. ஒருவேளை ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படுமானால், அது பாரதிய ஜனதா ஸ்பெக்ட்ரம்,

லோகேஷ் சர்மா
லோகேஷ் சர்மா

ஆதர்ஷ், காமென்வெல்த் உள்ளிட்ட ஊழல்களைக் குறித்து எழுப்பும் கூச்சலின் அளவைப் பொருத்து வாயை அடைப்பதற்கு மட்டும் பயன்படும்.

ஆனால், இந்த பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கைகளை காங்கிரசின் கைகளில் கொடுத்து விட்டு மக்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது இக்கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்பட்டிருக்கும் அப்பாவி ஆடுகளின் வெகுளித்தனத்திற்கு ஒப்பானதாயிருக்கும். அந்த மந்தையின் மேப்பன் வேண்டுமானால் ஓநாய் புகுந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடியாத மூடனாயிருக்கலாம் – ஆனால், காங்கிரசு அப்பாவியும் அல்ல மூடனும் அல்ல. தேசத்தை ஏகாதிபத்தியங்களுக்குக் காட்டிக் கொடுக்கும் தனது லட்சியத்திற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அதன் வளங்களைத் திறந்து விடும் நடைமுறைக்கும் பாரதிய ஜனதாவாவும் வெகுவாக உதவுகிறதுஎன்பதால் பார்ப்பன பயங்கரவாதிகளின் எந்தச் செயலும் மன்னிக்கப்பட்டு விடும்.

இத்தனை நாட்களாக தேசத்தில் நிகழ்ந்த பல்வேறு குண்டு வெடிப்புச் சம்பவங்களை ஒட்டி பஜ்ரங் தள், ஏ.பி.வி.பி, சனாதன் சன்ஸ்தான், அபினவ் பாரத், வனவாசி கல்யாண் ஆஷ்ரம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற பரிவார அமைப்புகளின் பெயர்கள் அம்பலப்பட்ட போதும், குருடர்கள் சேர்ந்து யானையைத் தடவிப் பார்த்து புரிந்து கொண்டதைப் போல இந்த பெயர்களைத் தனித் தனியே உச்சரித்து வந்தன முதலாளித்துவ ஊடகங்கள். ஆனால், ஆக்டோபஸின் கரங்கள் தனித்தனியே இயங்கினாலும் அதன் மூளை ஒன்றாக இருப்பதை போல, இந்த அமைப்புகளின் மூளையாகவும், மைய்யமாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே இருந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.

சாதாரணமாக குண்டுவெடிப்புகள் என்றால் உடனே அப்பாவி இசுலாமிய மக்கள் கைது செய்யப்படுவதும், பாக் சதி என்று ஊடகங்கள் கதை பின்னுவதுமான நாட்டில் இந்து பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புகள் இத்தனை ஆதரங்களோடு வெளிப்பட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை தடை செய்ய வேண்டுமென்றோ, அவர்களது செயல்பாடுகள் முடக்கப்படவேண்டுமென்றோ யாரும் பேசுவதைக்கூட நாம் கேட்க முடிவதில்லை. காரணம் இந்து மதவெறி பயங்கரவாதம் என்பது இந்த நாட்டின் அமைப்பு முறையின் ஆசிர்வாதத்தோடு செயல்படுகிறது என்பதால் அதை எவரும் கண்டு கொள்வதில்லை.

ஆர்.எஸ்.எஸ் இந்த தேசத்து மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள பயங்கரவாதத்தை வெறும் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே எதிர் கொண்டு வெல்ல முடியாது. ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டவர்கள் இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். அவர்களின் கணக்குகள் தெருவில் வைத்துத் தீர்க்கப்பட வேண்டும். இடையில் காக்கி டவுசரோடும் கையில் குண்டாந் தடியோடும் தெருவில் நடமாடும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மக்கள் தெருவிலேயே பாடம் புகட்டும் நாளில் தான் இந்த நச்சுப் பாம்புகளின் கொட்டம் அடங்கும்.

__________________________________________________________________________

மேலும் வாசிக்கhttp://www.tehelka.com/story_main48.asp?filename=Ne150111Coverstory.asp

படங்கள் – தெஹெல்கா

_____________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்

32

அயோத்தி தீர்ப்பு

“பூட்டியிருந்த கோயிலின் கதவை பக்தர்களின் தரிசனத்துக்குத் திறந்து விடுவதற்கான உத்திரவை பிறப்பித்த அந்த நாளன்று, எனது நீதிமன்ற அறையின் மேற்கூரையில் கொடிமரத்தைப் பற்றியபடி ஒரு கருப்புக் குரங்கு அமர்ந்திருந்தது. அன்றைய தினம் தீர்ப்பு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பைசலாபாத், அயோத்தி நகரங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அந்தக் குரங்குக்கு வேர்க்கடலை, பழம் முதலானவற்றைக் கொடுத்தனர். அந்தக் குரங்கோ அவற்றைத் தொடக்கூட இல்லை. மாலை 4.40 க்கு நான் தீர்ப்பைப் படித்தவுடன் அந்தக் குரங்கு அங்கிருந்து அகன்றது. பின்னர் எனது பாதுகாப்புக்காக வந்திருந்த மாவட்ட ஆட்சியரும், போலீசு கண்காணிப்பாளரும் என்னை எனது பங்களாவுக்கு அழைத்துச் சென்றனர். பார்த்தால், எனது பங்களாவின் தாழ்வாரத்தில் அமர்ந்திருக்கிறது அந்தக் குரங்கு. எனக்கு அச்சரியம் தாங்கமுடியவில்லை. நிச்சயமாக ஒரு தெய்வீக சக்திதான் அந்தக் குரங்கு என்பதை உணர்ந்து கொண்டு அதனை வணங்கினேன்.”

பாபர் மசூதிக்குள் 1949இல் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமன் சிலையை, இந்து பக்தர்களின் வழிபாட்டுக்குத் திறந்து விடும் உத்திரவை 1986இல் பிறப்பித்த பைசலாபாத் மாவட்ட நீதிபதி கே.எம்.பாண்டே, பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின், 1991இல் வெளியிட்ட தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ள சம்பவம் இது.

செப், 30, 2010 அன்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கூரையிலும் நிச்சயமாக அந்தக் கருங்குரங்கு இருந்திருக்க வேண்டும் என்பதை தீர்ப்பிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் குரங்குகளின் எண்ணிக்கை ஒன்றா மூன்றா என்ற தெய்வீக உண்மை, பின்னாளில் இந்த நீதிபதிகள் சுயசரிதை எழுதும்போதுதான் நமக்குத் தெரியவரும்.

“ஒரு குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தமானது” என்று தீர்மானிப்பதற்கான உரிமை மூல வழக்கில், பட்டா பத்திரம் போன்ற சான்றாதாரங்களைச் சார்ந்து நிற்காமல், அந்தக் குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்ததாக இந்துக்கள் நம்புவதால், அவர்களுடைய நம்பிக்கையின் அடிப்படையில் அந்த இடத்தை இராமபிரானுக்குச் சொந்தமாக்குவதாகத் தீர்ப்பளித்திருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம். ஒரு உரிமை மூல வழக்கில் மனுதாரரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சொத்துரிமை வழங்கமுடியுமா என்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக எழுப்பப் படும் மையமான கேள்வி. மனுதாரரின் நம்பிக்கை கிடக்கட்டும். நீதிபதியின் நம்பிக்கைதான் 1986 தீர்ப்பையே தீர்மானித்திருக்கின்றது என்பதையல்லவோ குரங்கு கதை நமக்குக் காட்டுகிறது!

அயோத்தி - இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன் a'

அலகாபாத் தீர்ப்பு: இந்து பாசிச அரசியலுக்கு சட்டரீதியான அங்கீகாரம்!

அலகாபாத் தீர்ப்புக்கு முன் இந்துக்களின் நம்பிக்கையாக மட்டுமே இருந்த இராமஜென்மபூமி, இன்று சட்ட அங்கீகாரம் பெற்று விட்டதாகவும், இத்தீர்ப்பின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுக்குப் புதியதொரு அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார் அத்வானி. “இதுதான் இராமன் பிறந்த இடம் என்று நிரூபிக்கும் பட்சத்தில், அந்த இடத்தை விட்டுக் கொடுத்துவிடுவதாக வக்பு வாரியம் ஏற்கெனவே கூறியிருந்தது. இதோ இன்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. அவர்களுடைய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. வக்பு வாரியம் தனது வார்த்தையைக் காப்பாற்ற வேண்டும். அந்த இடத்தின் மீதான தனது கோரிக்கையைக் கைவிட வேண்டும்” என்று மிரட்டியிருக்கிறார் தொகாடியா. “அயோத்தியில் இராமனுக்கு பிரம்மாண்டமானதொரு ஆலயம் அமைக்கும் பணியில் இந்துக்களுடன் கைகோர்த்து நிற்க முஸ்லிம்கள் முன்வரவேண்டும். இரு சமூகங்களும் இணைந்து வலிமையான இந்தியாவைக் கட்டி எழுப்புவதற்குக் கிடைத்திருக்கும் இந்த அற்புதமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று முஸ்லிம் சமூகத்தை இந்து தேசியத்துக்கு அடிபணிந்து விடுமாறு அறிவுரை கூறியிருக்கிறார் அசோக் சிங்கால்.

அலகாபாத் உயர்நீதிமன்றம் தற்போது ஒதுக்கியிருக்கும் மூன்றில் ஒரு பங்கு நிலத்தையும் இந்துக்களிடம் ஒப்படைத்து விடவேண்டுமாம். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யக்கூடாதாம். இசுலாமிய மக்களின் உள்ளத்தில் இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கும் காயத்தின்மீது உப்பை வைத்துத் தேய்த்துக் கொண்டே, பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளுமாறு அவர்களைக் கேட்டுக் கொள்கிறது இந்து மதவெறிக் கும்பல். “சுமுகமான தீர்வு வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினால், நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள இயலும்” என்று பா.ஜ.க வின் கருத்தையே வேறு வார்த்தைகளில் சொல்லியிருக்கிறார் காங்கிரசு கட்சியின் சத்யவிரத சதுர்வேதி. 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மசூதியை மீண்டும் கட்டித்தரவேண்டும் என்று கூறிய திமுக, இன்று இத்தீர்ப்பை விமரிசித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.

“தீர்ப்பினால் மகிழ்ச்சியடைந்தோரும் சரி, ஏமாற்றமடைந்தோரும் சரி இதனைத் தெருவுக்குக் கொண்டு செல்லக்கூடாது. தீர்ப்பு யாருக்கேனும் திருப்தி அளிக்கவில்லையென்றால், அவர்கள் மேல் முறையீடு செய்யலாம்” என்றிருக்கிறார் வலது கம்யூ கட்சியின் தேசிய செயலர் டி.ராஜா. “நமது மதச்சார்பற்ற ஜனநாயக அமைப்பில், பிரச்சினையைத் தீர்த்துக் கொள்தற்கான ஒரே வழி உச்ச நீதிமன்றத்தை அணுகுவதாகத்தான் இருக்க முடியும்” என்று கூறியிருக்கிறது மார்க்சிஸ்டு கம்யூ கட்சி. மொத்தத்தில் எந்த ஓட்டுக் கட்சியும் இத்தீர்ப்பினை அரசியல் ரீதியாகவோ, சட்ட ரீதியாகவோ விமரிசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தீர்ப்பின் மீதான விமரிசனங்களும்
விமரிசனங்களிலிருந்து எழும் கேள்விகளும்!

ராஜீவ் தவான், பி.வி.ராவ், பிரசாந்த் பூஷண் போன்ற உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சச்சார் போன்ற துறைசார் வல்லுநர்கள் மற்றும் சிவில் உரிமை அமைப்புகள்தான் இத்தீர்ப்பு குறித்து கீழ்க்கண்ட விமரிசனங்களைத் தெரிவித்திருக்கின்றனர்:

“தந்தையைக் கொலை செய்கின்ற மகன், தந்தையின் சொத்தில் பங்கு கோரும் உரிமையை இழக்கிறான் என்பது சட்டம். இங்கோ 1992 இல் மசூதியை இடித்த குண்டர்களுக்கோ இத்தீர்ப்பு அவர்கள் கேட்டதைக் கொடுத்திருக்கிறது’’. “ 1949 இல் திருட்டுத்தனமாக இராமன் சிலையை உள்ளே வைத்ததை ஏற்றுக் கொள்ளும் நீதிமன்றம், மசூதியை அவர்களுக்கு வழங்கியதன் மூலம் அந்த திருட்டுத்தனத்தை அங்கீகரித்திருக்கிறது.” “ஒரு உரிமை மூல வழக்கில், நம்பிக்கையின் அடிப்படையில் சொத்தை வழங்க முடியாது. நம்பிக்கை என்பது பக்தனுக்கு வழிபாட்டு உரிமையைத்தான் வழங்குகிறதேயன்றி, இடத்துக்கு சொந்தம் கொண்டாடும் உரிமையை அல்ல. ஆயின் பிற மதத்தினருக்கும் இதே உரிமை வழங்கப்படுமா?” “ பாபர் காலத்தில் இந்து வழிபாட்டுத்தலம் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக கூறும் இத்தீர்ப்பு, நம் கண்முன்னே நடந்த மசூதி இடிப்பு குறித்து மவுனம் சாதிப்பதன் மூலம் அந்த கிரிமினல் நடவடிக்கையை நியாயப்படுத்தியிருக்கிறது.”

— இவையெல்லாம் தீர்ப்பின்மீதான இவர்களது விமரிசனங்கள்.

இவ்விமரிசனங்களிலிருந்து நமக்கு சில கேள்விகள் எழுகின்றன. மதச்சார்பின்மைக் கோட்பாடு குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையிலிருந்து வழுவி, இந்து மதவாதப் பார்வையிலிருந்து நீதிபதிகள் இத்தீர்ப்பை வழங்கியிருப்பதுதான் இந்த அநீதிக்கு அடிப்படையா, அல்லது மதச்சார்பின்மை குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையே இந்த அநீதியான தீர்ப்புக்கு இடமளிக்கிறதா?

குறிப்பிட்ட இடத்தில் இராமன் பிறந்தான் என்ற நம்பிக்கையோ, அல்லது பிறந்தானா இல்லையா என்பது குறித்த ஆதாரங்கள், சாட்சியங்களோ ஒரு உரிமையியல் வழக்கின் எல்லைக்குள் வருகின்ற, நீதிமன்றம் தலையீட்டுத் தீர்ப்புக் கூறத்தக்க பிரச்சினைகளா அல்லது இப்பிரச்சினையில் அலகாபாத் நீதிமன்றம் அத்துமீறி மூக்கை நுழைத்திருக்கிறதா?

வரலாறு, மதநம்பிக்கை, அரசியல், சட்டம் என்ற வெவ்வேறு வகைப்பாடுகளின் கீழ் அணுகப்பட வேண்டிய இப்பிரச்சினையில், தனது நோக்கத்துக்கு ஏற்ப ஒன்றை மற்றொன்றோடு சேர்த்துக் குழப்பும் சதித்தனமான உத்தியை பார்ப்பன பாசிசக் கும்பல் துவக்கமுதலே கையாண்டு வருகிறது. ‘பாசிசக் கும்பலின் சதி’ என்று நாம் எதைச் சாடுகிறோமோ, அதையே சட்டபூர்வமான அடித்தளத்தின்மீது நிற்க வைத்திருப்பதுதான் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு.

அரசியல்வரலாறுமதநம்பிக்கைசட்டம்
இந்து பாசிசத்தின் கண்ணாமூச்சி ஆட்டம்!

அயோத்தி - இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன் a'இப்பிரச்சினையில் பார்ப்பன பாசிசக் கும்பல் கையாண்டு வரும் உத்திகளை மீண்டும் நினைவுபடுத்திப் பார்ப்பது அவசியம்.

13 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் திரேதா யுகத்தில் பிறந்த விஷ்ணுவின் அவதாரமே இராமன் என்று கூறி, மத நம்பிக்கையின் அடிப்படையில் இந்துக்களைத் திரட்டியது சங்க பரிவாரம். “இராமஜென்மபூமி குறித்த தொன்மை வாய்ந்த இந்துக்களின் மதநம்பிக்கையை அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தவோ, தீர்ப்பளிக்கவோ நீதிமன்றத்துக்கு அதிகாரமே கிடையாது” என்றும் வாதிட்டது.

அதே இராமனை இந்து ராஷ்டிர அரசியலின் தேசிய நாயகனாக சித்தரிக்கும் வேளையில், மொகலாயப் படையெடுப்பு, பாபர் இடித்த இராமன் கோயில், அதற்கான தொல்லியல் ஆதாரம் என்று சங்க பரிவாரம் வரலாற்றைத் துணைக்கழைத்துக் கொண்டது.

1949 ஆம் ஆண்டில், சட்டவிரோதமான முறையில் இராமன் சிலையை மசூதிக்குள் வைத்து, உரிமையியல் வழக்கு தொடுப்பதற்குத் தேவையான தாவாவை திட்டமிட்டே உருவாக்கியது. இது தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், “அந்த இராமன் சிலை, பூமியை வெடித்துக் கிளம்பிய சுயம்பு விக்கிரகம் என்று இந்துக்கள் நம்புவதால், அதற்கு வழிபாடு நடத்துவது அரசியல் சட்டரீதியாக இந்துக்களின் மத உரிமை” என்று கூறி நீதிமன்றத்தில் பூசை நடத்தும் உரிமையை நிலைநாட்டிக் கொண்டது. 1986இல் பக்தர்கள் உள்ளே சென்று வழிபடும் உரிமையையும் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்டது.

டிசம்பர் 1992இல் வழிபாட்டு உரிமை என்ற அடிப்படையில், பஜனை பாடும் உரிமையை உச்ச நீதிமன்றத்திடம் பெற்று, மசூதியை இடிப்பதற்கு அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொண்டது. மசூதி இடிப்பு என்ற அந்த நடவடிக்கை கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டாலும், அந்தக் கிரிமினல் நடவடிக்கையின் மூலம் மசூதியின் இடிபாடுகளின் மீது நிறுத்தி வைக்கப்பட்ட இராமன் சிலைக்கு வழிபாடு நடத்துவது தமது மத உரிமை என்று கூறி நீதிமன்றத்திடம் வழிபாட்டு உரிமையையும் பெற்றுக் கொண்டது.

மசூதி இடிக்கப்பட்டு விட்டதால், “தொல்லியல் ஆய்வு, இந்துக் கோயில் இடிக்கப்பட்டதற்கான ஆதாரம்” என்று கூறி தனது முஸ்லிம் எதிர்ப்பு இந்து தேசிய அரசியல் கண்ணோட்டத்தில் வரலாற்றைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, தொல்லியல் சான்றுகளுக்கு வியாக்கியானம் தரத்தொடங்கியது. இருந்த போதிலும், “அந்த இடத்தில்தான் இராமன் பிறந்தான் என்ற இந்துக்களின் மதநம்பிக்கை, நீதிமன்றத்தின் ஆய்வுக்கு அப்பாற்பட்டது” என்ற தனது அறுதியான துருப்புச் சீட்டை சங்க பரிவாரம் கீழே போட்டுவிடவில்லை.

“எந்த இராமனின் பிறப்பிடம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பளிக்க முடியாது” என்று சங்க பரிவாரம் வாதிடுகிறதோ, அதே இராமனின் சிலையை (ராம் லல்லா) உரிமை மூல வழக்கில் ஒரு மனுதாரராக்கி, தான் பிறந்த இடத்தைத் தனக்கு கிரயம் செய்து தருமாறு அதே நீதிமன்றத்தின் முன்னால் முறையிடச் செய்து, அலகாபாத் தீர்ப்பின் மூலம் மசூதியின் மையப்பகுதி நிலத்தையும் பெற்றுவிட்டது.

இவை அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும்போதுதான், அரசியல் சட்ட உரிமை, மதநம்பிக்கை, வரலாறு, இந்துப் பாசிச அரசியல் ஆகியவற்றை வாளாகவும் கேடயமாகவும் தேவைக்கேற்ப எப்படியெல்லாம் சங்க பரிவாரம் பயன்படுத்தியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நாடகத்தில், சங்க பரிவாரத்தின் ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் நீதித்துறை உடந்தையாகவே இருந்து வந்திருக்கிறது. இந்து மதவெறியை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட ‘மதச்சார்பற்ற’ சக்திகள், பார்ப்பன பாசிசத்தை அரசியல் ரீதியாகவும், பார்ப்பனியத்தை சித்தாந்த ரீதியாகவும் எதிர்க்கவில்லை என்பதுடன் இப்போதும் கூட “உச்சநீதிமன்றத்தை அணுகினால் முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைத்துவிடும்” என்று கூறி, இந்திய அரசியல் சட்டம் குறித்த பிரமையை வளர்க்கின்றனர். அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையான சில அம்சங்களைப் பரிசீலித்தோமானால், பார்ப்பனப் பாசிசத்தின் பித்தலாட்டங்கள் அனைத்துக்கும் சட்ட அங்கீகாரம் தரும் சாத்தியத்தை “மத நம்பிக்கைக்கான சுதந்திரம்” என்ற பெயரில், இந்திய அரசியல் சட்டத்தின் 25, 26ஆவது பிரிவுகள்தான் வழங்கியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

பாபர் மசூதி வழக்கின் வரலாறு!

இந்த வழக்கின் மனுதாரர்கள் மொத்தம் 28 பேர். சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, குழந்தை இராமன் விக்கிரகத்தின் (ராம் லல்லா விராஜ்மன்) சார்பில் ராமனது நெருங்கிய நண்பர் திரிலோக் நாத் பாண்டே ஆகிய மூன்று மனுதாரர்களே இதில் முக்கியமானவர்கள். இவர்களுக்கு இடையில்தான் பாபர் மசூதி வளாகம் மூன்று பங்காகப் பிரிக்கப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இவ்விவரங்களுக்குள் செல்லுமுன் சுருக்கமாக இந்த வழக்கின் வரலாற்றைத் தெரிந்து கொள்வது அவசியம்.

1949 டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவில் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே ராமன் சிலை வைக்கப்பட்டதுதான் இந்த உரிமை மூல வழக்கின் தொடக்கம் என்று கருதப்பட்டாலும் இப்பிரச்சினைக்கான விதை முந்தைய நூற்றாண்டிலேயே போடப்பட்டுவிட்டது. 17ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் இன்றைய உத்தரப் பிரதேச மாநிலத்தின் எந்த ஊரிலும் ராமனுக்கு கோயில் எதுவும் இருந்ததில்லை என்றும், 1788இல் ஒரு கிறித்தவ ஜெசூட் பாதிரியார்தான் “இது இராமன் பிறந்த இடம்” என்று ஒரு குறிப்பினை போகிற போக்கில் குறிப்பிட்டு செல்கிறார் என்றும் கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர் டி.என்.ஜா. பாபர் மசூதியோ 1528ஆம் வாக்கில் கட்டப்பட்டிருக்கிறது.

1855ஆம் ஆண்டில்தான் முதன்முதலாக இப்பிரச்சினை இந்து தரப்பினரால் எழுப்பப்படுகிறது. அப்போது அயோத்தியை உள்ளடக்கிய பைசலாபாத் சமஸ்தானத்தின் மன்னனாக இருந்த வாஜித் அலி ஷா, பதற்றைத் தணிக்க ஒரு மூவர் குழுவை அமைக்கிறார். இந்த காலகட்டத்தில்தான் பைசலாபாத் சமஸ்தானத்தை விழுங்குவதற்கு கும்பினி ஆட்சி சதி செய்து கொண்டிருந்தது. வட இந்திய சுதந்திரப் போர் வெடிப்பதற்குக் காத்திருந்த காலம் இது. வாஜித் அலி ஷாவின் மனைவி பேகம் ஹசரத் மகல்தான் கும்பினிக்கு எதிரான போரைத் தலைமையேற்று நடத்தியவர் என்பதும், இந்தக் காலனியாதிக்க எதிர்ப்புப் போரில் முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க அளவில் பைசலாபாத் சமஸ்தானம் முழுவதும் இந்து முஸ்லிம் ஒற்றுமை நிலவியது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

பைசலாபாத் சமஸ்தானம் ஆங்கிலேயே ஆட்சியின் கீழ் வந்தபின், 1885இல் இது தொடர்பான முதல் உரிமையியல் வழக்கை மகந்த் ரகுவர் தாஸ் என்பவர் தொடர்கிறார். அன்றைய சப் ஜட்ஜ் பண்டிட் ஹரி கிஷன் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கவே, அதனை எதிர்த்து முஸ்லிம்கள் மாவட்ட நீதிமன்றத்துக்கு முறையிடுகின்றனர். “இந்துக்கள் புனிதமானதாகக் கருதும் ஒரு இடத்தில் மசூதி கட்டப்பட்டிருக்கிறது என்பது துரதிருஷ்டவசமானதுதான். எனினும் சம்பவம் நடந்து 356 ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டபடியால், தற்போது இதற்கு நிவாரணம் கோருவது மிகவும் காலம் கடந்ததாகும்” என்று மகந்தின் மனுவைத் தள்ளுபடி செய்து தற்போது உள்ள நிலையே நீடிக்கவேண்டும் என்று உத்தரவிடுகிறார் மாவட்ட நீதிபதி சேமியர்ஸ்.

“இந்துக்களின் புனிதமான இடம்” என்று அவர் கருதுவதற்கான ஆவணங்கள் எதுவும் அந்த வழக்கில் தரப்படவில்லை. எவ்வித ஆதாரமும் இன்றி போகிறபோக்கில் சொல்லப்பட்ட கூற்றே அது. எனினும் மசூதி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதுதான் அந்த தீர்ப்பின் சாரம். உரிமையியல் வழக்குகளில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை ஏற்றுக் கொள்வது என்பதுதான் இந்திய அரசியல் சாசனத்தின் நிலை. அந்த வகையில் இந்திய அரசியல் சட்டத்தின்படி இந்த வழக்கு ஏற்கெனவே விசாரித்து தீர்ப்பளிக்கப்பட்ட ஒன்று.

1855க்குப் பின்னர் 1948இல்தான் மீண்டும் அங்கே பிரச்சினைகள் எழுகின்றன. அது இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி வட இந்தியா முழுவதும் கலவரம் நடைபெற்ற காலம். 1948இல் மசூதியில் தொழுகை நடத்தும் முஸ்லிம்கள் மீது இந்து வெறியர்கள் கல்லெறிவதாக புகார்கள் வருகின்றன. அயோத்தியைச் சேர்ந்த காந்தியவாதியான அட்சய பிரம்மச்சாரி என்பவர், நகரம் முழுவதும் முஸ்லிம் மக்களை இந்துவெறியர்கள் அச்சுறுத்துவதாக லால் பகதூர் சாஸ்திரிக்கு கடிதம் எழுதுகிறார்.

அக்டோபர் 1949இல் அம்மாவட்ட ஆட்சியர், மசூதியின் ஒரு புறத்தில் கோயில் கட்டிக் கொள்ளுமாறு இந்துக்களுக்கு அனுமதி அளிக்கிறார். டிசம்பர், 22, 1949 இரவில் 50 பேர் கொண்ட கும்பல் மசூதியின் பூட்டை உடைத்து உள்ளே சிலைகளை வைக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

உடனே சிலைகளை அகற்றுமாறு உ.பி முதல்வருக்கு தந்தி அடிக்கிறார் நேரு. முதல்வர் பந்த் அகற்ற மறுக்கிறார். உள்ளே வைக்கப்பட்ட சிலைகளுக்கோ யாருமே உரிமை கோரவில்லை. பிறகு 1950 இல் “சுயம்புவாகத் தோன்றியிருக்கும் ராமபிரானுக்கு வழிபாடு நடத்த தங்களை அனுமதிக்க வேண்டும்” என்று கோபால்சிங் விசாரத், பரமஹன்ஸ் என்ற இருவர் மனு தாக்கல் செய்கின்றனர். “சிலைகளை அங்கிருந்து அகற்றவோ, பூசை நடத்துவதைத் தடுக்கவோ கூடாது” என்று மாவட்ட நீதிபதி நாயர் (பின்னாளில் ஜனசங்க கட்சியில் சேர்ந்தவர்) இடைக்காலத்தடை பிறப்பிக்கிறார்.

மேலும் 9 ஆண்டுகள் கழித்து, 1959இல்தான் மேற்படி சொத்தின் மீது (அதாவது பாபர் மசூதி அமைந்துள்ள 1500 சதுர கெஜம் அளவிலான நிலம்) உரிமை கோரி, நிர்மோகி அகாரா உரிமை மூல வழக்கை தொடுக்கிறது. இது அனுபவ பாத்தியதை அடிப்படையில் சொத்தின் மீது உரிமை கோரிய ஒரு சிவில் வழக்கு மட்டுமே. அந்த இடம் இராமன் பிறந்த இடம், மத நம்பிக்கை என்ற வாதங்களெல்லாம் நிர்மோகி அகாராவின் மனுவில் கிடையாது. இதற்கு எதிராக வேறு வழியில்லாமல் சன்னி வக்பு வாரியம் 1961 இல் எதிர் மனு தாக்கல் செய்கிறது.

1980களின் பிற்பகுதியில், ஷா பானு பிரச்சினையில் முஸ்லிம்களை தாஜா செய்வதாக ராஜீவ் காந்தி மீது பாரதிய ஜனதா குற்றம் சாட்டியவுடனே இந்து வாக்குகளைக் கவர்வதற்காக, பூட்டியிருந்த மசூதியின் கதவுகளைத் திறக்கும் சூழ்ச்சியில் ஈடுபட்டது ராஜீவ் அரசு. 1986இல், எதிர் தரப்பான சன்னி வக்பு வாரியத்துக்கே தெரியாமல், யாரோ ஒரு பக்தர் பெயரில் மனு தாக்கல் செய்யவைத்து, ராமன் சிலையை வழிபட இந்து பக்தர்களை அனுமதிக்கும் உத்தரவை ஒரு தலைப்பட்சமாகப் பிறப்பித்தார், ‘கருங்குரங்கை விழுந்து கும்பிட்ட’ நீதிபதி பாண்டே.

இதனைத் தொடர்ந்து ராம ஜென்மபூமி பிரச்சினையை அரசியல் ரீதியில் அறுவடை செய்வதற்கான இயக்கத்தை பாரதிய ஜனதா நாடெங்கும் கட்டத்தொடங்கியது. 1989இல் தேர்தலுக்கு சில நாட்கள் முன் பாபர் மசூதி வளாகத்தில் ராமன் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூசை நடத்த சங்கபரிவாரத்தை அனுமதித்தது ராஜீவ் அரசு.

அயோத்தி - இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன் a'

வழக்கில் மனுதாரராக நுழைக்கப்படுகிறான் இராமன்!

ஆனால் வழக்கைப் பொருத்தவரை, ‘ராமன் பிறந்த இடம் என்ற அடிப்படையில் பாபர் மசூதி நிலத்தின் மீது உரிமை கோரும் மனு’ எதுவும் 1989 வரை தாக்கல் செய்யப்படவில்லை. “வெறும் உரிமையியல் வழக்கின் மூலம் முஸ்லிம்களிடமிருந்து இந்த இடத்தை சட்டரீதியில் கைப்பற்ற முடியாது; இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையின் கீழ் இந்த வழக்கைக் கொண்டு வருவதன் மூலம்தான் சட்டப்படியே இதனைக் கைப்பற்ற முடியும்” என்ற சூட்சுமம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தேவகி நந்தன் அகர்வாலுக்கு மட்டுமே அன்று புரிந்திருந்தது. நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனே, குழந்தை இராமனையே மனுதாரர் ஆக்கி, குழந்தை இராமனின் நெருங்கிய நண்பர், காப்பாளர் என்ற முறையில் 1989 இல் மேற்கூறிய வழக்கில் தன்னையும் இணைத்துக் கொண்டார் தேவகி நந்தன் அகர்வால். அடுத்த சில ஆண்டுகளில் தேவகி நந்தன் அகர்வால் இறந்து விடவே, அவருக்குப் பதிலாக ‘ராமனின் நண்பனாக’ திரிலோக்நாத் பாண்டே என்பவர் வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தற்போது அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் இறுதித்தீர்ப்பு, பாபர் மசூதி வளாகத்தை மூன்றாகப் பிரித்து மூன்று மனுதாரர்களுக்கும் தரவேண்டும் என்று கூறியிருக்கிறது எனினும், சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா ஆகிய இருவரது மனுக்களும் உரிமையியல் வழக்குக்கு உரிய கால வரம்பு (Limitation Period) கடந்து தாக்கல் செய்யப்பட்டவை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. மசூதி அமைந்துள்ள இடத்தின் மீது உரிமை கோரும் ராமபிரானது மனு மட்டுமே நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பட்டா, பத்திரம் போன்ற ஆவணங்களின் அடிப்படையிலோ, அனுபோக பாத்தியதை குறித்த ஆதாரங்களின் அடிப்படையிலோ பரிசீலித்து தீர்ப்பு வழங்க வேண்டிய ஒரு உரிமை மூல வழக்கில், அவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, கடவுளின் சொத்துரிமை மற்றும் கடவுள் குறித்த இந்து பக்தனின் நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இத்தீர்ப்பில் உள்ள குறைபாடுகள், முறைகேடுகள் குறித்து வேறு பல கேள்விகளை எழுப்ப இயலுமெனினும், இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 25 (மத நம்பிக்கை தொடர்பான உரிமை), பிரிவு 26 (மத நிறுவனங்களின் சொத்துக்கள் தொடர்பான உரிமை) ஆகியவைதான் அநீதியான இந்தத் தீர்ப்புக்கு அடித்தளமாக அமைந்திருக்கின்றன. எனவே அவை குறித்து புரிந்து கொள்வது அவசியம்.

சிவில் வழக்கில் இராமன் (கடவுள்) ஒரு மனுதாரர் ஆக முடியுமா?

இந்த வழக்கில் ‘குழந்தை இராமன் சிலை’ ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். உரிமையியல் சட்ட விதி 32 இன் படி (Order 32 of the civil procedure code) இந்துக் கோயிலின் கடவுள் சிலை சட்டரீதியான ஒரு நபராகவும், நிரந்தரமான மைனராகவும் கருதப்படுகிறது. ஒரு சிலை என்ற முறையிலும் மைனர் என்ற முறையிலும் அது தானே தனக்காகப் பேசும் ஆற்றலற்றது என்பதால், ஒரு காப்பாளர், அறங்காவலர் அல்லது பக்தர் மூலமாக மற்றவர்கள் மீது வழக்கு தொடுக்கும் உரிமை கடவுள் சிலை பெற்றிருக்கிறது. அரசியல் சட்டரீதியான இந்த உரிமையை கடவுள் சிலை பெற்றிருப்பதால், அரசியல் சட்டத்துக்கு முரணாக அந்தக் கடவுள் இழைத்திருக்கக் கூடிய குற்றங்களுக்காக அந்தக் கடவுளுக்கு எதிராக சிவில் அல்லது கிரிமினல் வழக்குகளை யாரும் தொடர முடியாது. சொத்து தொடர்பான வழக்குகளை மட்டுமே கடவுளுக்கு எதிராகத் தொடரமுடியும்.

இந்திய அரசியல் சட்டம் இந்துக் கடவுளுக்கு வழங்கியிருக்கும் இந்த உரிமை இசுலாமிய, கிறித்தவ கடவுளர்களுக்கோ பிற மதக் கடவுளர்களுக்கோ கிடையாது. உலகின் வேறு எந்த நாட்டிலும் கடவுளுக்கு இப்படிப்பட்ட சட்டரீதியான உரிமை கிடையாது. கடவுளின் பெயரில் சொத்தை பதிவு செய்து விட்டு அதிகாரத்தில் இருக்கும் மன்னனோ, நிலப்பிரபுவோ, அறங்காவலரோ அதனை அனுபவிக்கும் வசதிக்காக பாரம்பரியமாக செய்யப்பட்டிருக்கும் இந்த ஏற்பாட்டை அரசியல் சட்டம் அங்கீகரித்திருக்கிறது. தில்லை நடராசனுக்கு எழுதி வைக்கப்பட்ட நிலத்தை நடராச தீட்சிதர் கையெழுத்துப் போட்டு விற்கும் முறைகேடுகள் இந்த ஏற்பாட்டின் மூலம்தான் சாத்தியமாகியிருக்கின்றன. “உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது, கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர், மந்திரம் பார்ப்பானுக்கு கட்டுப்பட்டது, எனவே உலகம் பார்ப்பானுக்கு கட்டுப்பட்டது” என்று கூறப்படும் சமஸ்கிருத சுலோகம் இதற்கும் பொருந்தும்.

சட்டப்பிரிவு 25 இந்துக் கடவுளுக்கு வழங்கியுள்ள இந்த தனிநபர் என்ற சட்டரீதியான அந்தஸ்தை, கார்ப்பரேஷன்களுக்கு (முதலாளித்துவ கூட்டுப்பங்கு நிறுவனங்கள்) வழங்கப்பட்டுள்ள உரிமையுடன் ஒருவகையில் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம். போபால் வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சன் மீது மட்டுமின்றி யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மீதும் கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது. எனினும் சட்டப்படி ஆண்டர்சனைத்தான் கைது செய்ய முடியுமேயன்றி, கார்ப்பரேஷனைக் கைது செய்ய முடியாது.

அயோத்தி - இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன் a'இந்துக் கடவுள் விசயத்தில், கடவுளின் குற்றத்துக்காக கடவுள் மீது மட்டுமல்ல, கடவுளின் காப்பாளர் மீதும் வழக்கு தொடர இயலாது. அதே நேரத்தில் கடவுள் சிலை நிரந்தரமான மைனர் என்ற சட்ட அந்தஸ்தைப் பெற்றிருப்பதால், உரிமையியல் வழக்கில் வக்பு வாரியத்துக்கும், நிர்மோகி ஆகாராவுக்கும் விதிக்கப்பட்டுள்ள கால வரம்பு என்பது கடவுளுக்குக் கிடையாது. இந்த அடிப்படையில்தான், 1949 இல் எழுந்த பிரச்சினைக்கு 1961 இல் தாக்கல் செய்யப்பட்ட அவர்களது மனுக்கள் காலம் கடந்தவை என்று அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. அதே நேரத்தில் 1989 இல் இராமபிரானின் சார்பில் தேவகி நந்தன் அகர்வால் தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்துக் கடவுள் பெற்றிருக்கும் இந்த சிறப்புரிமையை அரசியல் சட்டத்தின் 25, 26 வது பிரிவுகளே வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இராமன் பிறந்த இடம் என்பதனாலேயே அது இராமனின் சொத்தாகிவிட முடியுமா? பக்தனின் வழிபாட்டு உரிமை சொத்துரிமை ஆகிவிட முடியுமா?

இத்தீர்ப்புக்கு எதிரான விமரிசனங்கள் மற்றும் கேள்விகளில் இவை இரண்டும் மிகவும் முக்கியமானவை. ‘மசூதியின் மையப்பகுதியில்தான் இராமன் பிறந்தான்’ என்று இந்துக்கள் நம்புவதாக மூன்று நீதிபதிகளுமே ஏற்றுக்கொள்கிறார்கள். அயோத்தியிலேயே சுமார் 5,6 இடங்கள் இராமன் பிறந்த இடங்களாக கருதப்பட்டு வந்தன. பாபர் மசூதிதான் இராமன் பிறந்த இடம் என்ற கருத்து இந்து பாசிஸ்டுகளால் 80 களில் தொடங்கி உருவாக்கப்பட்ட கருத்தேயன்றி, இந்துக்கள் அனைவரின் நம்பிக்கை அல்ல. இராமன் கடவுள் என்பதும் எல்லா இந்துக்களின் நம்பிக்கை அல்ல, இராவணனைக் கடவுளாக வழிபடும் இந்துக்களும் உண்டு. இந்துக்கள் மத்தியிலேயே நிலவும் இத்தகைய மாற்றுக் கருத்துகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, சங்கபரிவாரம் உருவாக்கிய கருத்தையே இந்து சமூகத்தின் தொன்மையான, அத்தியாவசியமான நம்பிக்கை என்று வழிமொழிகிறது இத்தீர்ப்பு.

ஒரு குறிப்பிட்ட மதத்தின் சாராம்சமான நம்பிக்கை எது என்று வியாக்கியானம் அளிக்கவும், அதன் அடிப்படையில் அரசியல் சட்டத்தின் 25 வது பிரிவின் கீழ் அந்த மதத்தினரின் உரிமைகளை அனுமதிக்கவுமான அதிகாரத்தை உயர்நீதி மன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தியே இது இந்துக்களின் நம்பிக்கை என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறுகிறது.

அது இந்துக்களின் நம்பிக்கைதான் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டாலும், அத்தகைய மத நம்பிக்கையின் அடிப்படையில் மாற்றான் சொத்தின் மீது உரிமை கோரமுடியுமா என்ற கேள்விக்கு இத்தீர்ப்பு கீழ்க்கண்டவாறு பதிலளிக்கிறது. இராமன் மட்டும்தான் கடவுள், அவன் பிறந்த பூமி என்பது ஒரு அசையாச் சொத்து என்று பார்ப்பது தவறு என்றும், இராமன் பிறந்த அந்த இடமே (பூமியே) வாயு பகவானைப் போல தன்னளவில் அங்கே விரவி நிற்கின்ற கடவுளாகும் என்று கூறி ஸ்மிருதிகளை மேற்கோள் காட்டி விளக்கம் அளிக்கிறது இத்தீர்ப்பு.

ஒரு கோயில் இடிக்கப்பட்டு விட்டாலும், அங்கே கடவுள் சிலையே இல்லாமல் போனாலும், அந்த இடம் தனது தெய்வீகத்தன்மையை இழந்து விடுவதில்லை என்றும், கோயில் இருந்த அந்த இடமே ஒரு கடவுளாகவும், வழக்காடும் உரிமை பெற்ற நபராகவும் இருக்கிறது என்று கூறுகின்றது இத்தீர்ப்பு. இதற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் அலகாபாத் நீதிமன்றம் மேற்கோள் காட்டுகிறது.

எனவே, இந்தத் தீர்ப்பின் படி, குறிப்பிட்ட அந்த இடத்தில் இராமன் சிலை இருந்தாலும் இல்லாமல் போனாலும் அவன் பிறந்த பூமி என்பதே சுயம்புவான கடவுளாகிவிடுகிறது. நிலம் என்ற முறையில் அது ஒரு சொத்துக்கான தன்மையைப் பெற்றிருப்பது உண்மையே என்றாலும், அந்த நிலமே கடவுளாகவும் இருப்பதால் அந்த இடத்தை (இராமனைத் தவிர) வேறு யாரும் தமது சொத்தாக ஆக்கிக் கொள்ள முடியாது. இறையாண்மை கொண்ட அரசாங்கத்துக்கே கூட அந்த நிலத்தை (கடவுளை) கையகப்படுத்தும் அதிகாரம் கிடையாது என்கிறது இந்தத் தீர்ப்பு.

கோயில் இடிக்கப்பட்டாலும் கோயிலின் கடவுள் தன்மை அகன்றுவிடுவதில்லை என்ற அடிப்படையிலும், ராம ஜென்மபூமியே கடவுளாக இருப்பதாலும், மசூதியைக் கட்டிய பின்னர்கூட அந்த இடம் பாபருடைய சொத்தாகி விட்டதாகக் கருத முடியாது; அது இராமனுடைய சொத்தாகவே இருக்கிறது என்று விளக்கமளிக்கிறது இத்தீர்ப்பு. மேலும் உரிமையியல் சட்டப்படி இந்துக் கடவுள் நிரந்தர மைனர் என்று கருதப்படுவதால், மைனரின் சொத்தை எதிர் அனுபோகத்தின் மூலம் (adverse possession) பிறர் கைப்பறிக் கொள்வது செல்லத்தக்கதல்ல என்று, உரிமையியல் சட்டத்தின் அடிப்படையிலும் இதற்கு விளக்கமளிக்கிறது அலகாபாத் தீர்ப்பு. அந்த இடத்தில் ஒரு மசூதி இருந்தது என்ற உண்மையையே நிராகரிக்கும் இந்த வாதத்துக்கும், பக்தனின் மத நம்பிக்கை வழியாக கடவுள் தன்னுடைய சொத்துரிமையை நிலைநாட்டிக் கொள்ளும் ஏற்பாட்டுக்கும் அரசியல் சட்டத்தின் 25ஆவது பிரிவுதான் அடித்தளமாக இருக்கிறது.

அயோத்தி - இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன் a'
இந்து மதவெறி பாசிஸ்டுகளால் இடிக்கப்படும் பாபர் மசூதி

இராம ஜென்மபூமி புனிதம் என்றால், மசூதி புனிதமில்லையா?
சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா?

எதார்த்தமாக சிந்திக்கும் எந்த ஒரு மனிதனுக்கும் எழக்கூடிய நியாயமான கேள்வி இது. எல்லாக் குடிமக்களுக்கும் சமமான மத உரிமை இருப்பதாக நாம் கருதிக் கொண்டிருக்கலாம். ஆனால் நமது அரசியல் சட்டம் அவ்வாறு கூறவில்லை. மதம் என்பது ஒரு தனிமனிதனின் நம்பிக்கை சார்ந்த விசயம் மட்டுமே என்று வரையறுக்கப்படும் இடத்தில்தான் இந்த உரிமை சமமானதாக இருக்க முடியும். நமது அரசியல் சட்டம் மதநிறுவனங்களின் உரிமையையும் அங்கீகரிப்பதால், தனிநபரின் மத உரிமை என்பது நிறுவனத்தின் உரிமைக்கு உட்பட்டதாகிறது.

மத உரிமைகளைப் பொருத்தவரை “ஒவ்வொருவருக்கும் அவரவர் மதக் கோட்பாட்டுக்கு ஏற்ப” என்றுதான் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 கூறுகிறது. இந்த அடிப்படையில்தான் இந்து மதத்தில் பார்ப்பனரல்லாதாரும், பெண்களும் அர்ச்சகராக முடியாமல் தடுக்கும் ஆகமவிதிகளும், இசுலாமிய ஆண்களுக்கு நிகரான உரிமைகளைப் பெண்களுக்கு மறுக்கும் ஷரியத் சட்டமும் சட்டப்பிரிவு 25இனால் நியாயப்படுத்தப் படுகின்றன.

ஒரு மதத்தின் உறுப்பினர்களுக்குள் ஏற்றத்தாழ்வை அனுமதிக்கும் இந்த சட்டப்பிரிவுதான், இரு வேறு மதத்தினருக்கு இடையிலான உரிமையிலும் ஏற்றத்தாழ்வைக் கொண்டுவருகிறது. இந்திய விமானப்படையில் பணியாற்றும் சீக்கியர்கள் தாடி வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதைப் போல, தன்னையும் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரு முஸ்லிம் விமானப்படை அதிகாரி தொடுத்த வழக்கை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஒரு சீக்கியர் தாடி வைத்துக் கொள்வது சீக்கிய மதக் கோட்பாடுகளின் படி அத்தியாவசியமானது என்றும், ஆனால், ஒரு முஸ்லீமுக்கு தாடி அத்தியாவசியம் என்று இசுலாமிய மதக் கோட்பாடுகள் கூறவில்லை என்றும் தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம்.

‘கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம், குறிப்பிட்ட இடம் இராமன் பிறந்த இடம்’ என்ற நம்பிக்கைகள் இந்து சமூகத்தின் புனிதமான, புராதனமான, அத்தியாவசியமான நம்பிக்கைகள் என்று அங்கீகரிக்கும் அலகாபாத் தீர்ப்பு, “இசுலாமியக் கோட்பாடுகளின் படியே மசூதி என்பது புனிதமானதோ, இறைவனின் இருப்பிடமோ இல்லை” என்றும் விளக்கம் கூறுகிறது. ‘தொழுகை நடத்துவதற்கான ஒரு இடம்’ என்பதற்கு மேல் மசூதிக்கு மதம் சார்ந்த புனிதத்தன்மை எதுவும் கிடையாது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றமும் (இஸ்மாயில் பரூக்கி வழக்கு) இது குறித்து தீர்ப்பளித்துள்ளது.

இன்னும் ஒரு படி மேலே போய், இசுலாமியக் கோட்பாடுகளின் படியே ஒரு மசூதிக்குரிய இலக்கணங்கள் பாபர் மசூதிக்கு இல்லை என்பதை தனது தீர்ப்பில் விளக்குகிறார் நீதிபதி சர்மா. தனிநபரின் நம்பிக்கை, வழிபாட்டு உரிமை ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மதக் கோட்பாடுகளை முன்நிறுத்தும் இந்த அணுகுமுறைதான் அரசியல் சட்டப்பிரிவு 25 இன் சாரமாகவும் இருக்கிறது.

1949 இல் திருட்டுத்தனமாக ராமன் சிலை வைக்கப்பட்டதா இல்லையா? 1992 இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதா இல்லையா? இவை குறித்து தீர்ப்பு என்ன கூறுகிறது?

திருட்டுத்தனமாக சிலை வைக்கப்பட்டதை மூன்று நீதிபதிகளும் ஏற்கின்றனர். ஆனால் அது பற்றி தீர்ப்பு கருத்து எதுவும் கூறவில்லை. ஒரு வேளை சிலை வைக்கப்பட்டிராவிட்டாலும், இராமஜென்மபூமி என்ற அடிப்படையில், அந்த இடமே கடவுள்தான் என்பதே பெரும்பான்மை நீதிபதிகளின் கருத்து. மசூதிக்குள் சிலை வைக்கப்பட்டதன் காரணமாக, சிலை வணக்கத்தை மறுக்கும் முஸ்லிம்கள் அங்கே தொழுகை நடத்தவில்லை. அதே நேரத்தில் அங்கே பூசைநடத்த நீதிமன்றம் அனுமதித்திருக்கிறது. தொழுகை நடத்தவில்லை என்பதை, முஸ்லீம்களது அனுபோகத்தில் மசூதி இல்லை என்பதற்கான சான்றாக நீதிமன்றம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

1992 மசூதி இடிப்பைப் பற்றி இத்தீர்ப்பு எதுவுமே கூறவில்லை. மசூதி என்பது முஸ்லிம் மதத்தைப் பொருத்தவரை புனிதமான இடம் என்று கருதப்படுவதில்லை என்பதால், பாபர் மசூதி இடிப்பு என்பதை ஒரு வழிபாட்டுத் தலத்தை இடித்ததாக சித்தரிக்க முடியாது என்றும், சட்டவிரோதமாக ஏதோ ஒருகட்டிடம் இடிக்கப்பட்டது என்பதற்கு மேல் டிசம்பர் 6ஆம் தேதி நிகழ்வில் எந்த முக்கியத்துவமும் இல்லை என்றும், இஸ்மாயில் பரூக்கி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காட்டி சுப்பிரமணியசாமி கருத்து கூறியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அலகாபாத் தீர்ப்பும் இந்த கண்ணோட்டத்தையே பிரதிபலிக்கிறது.

1949 சிலை வைப்பும், 1992 மசூதி இடிப்பும் குற்றச்செயல்கள். குற்றத்தில் பிறந்தது எப்படி கோயில் ஆக முடியும், புனிதமானதாக முடியும்?

சட்டப்படி குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகள், மத ரீதியில் புனிதமாக்கப்பட்டிருக்கின்றன. அவை மத உரிமைகளாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. பால்ய விவாகம் என்பது சட்டப்படி குற்றம். ஆனால் பால்ய விவாகம் நடந்து முடிந்து விட்டால், அதனை நடத்தி வைத்தவர்களைத் தண்டிக்க முடியுமே அன்றி, அந்தத் திருமணம் செல்லாது என்று ஆகிவிடாது. இதுதான் சட்டத்தின் நிலை. அதே போல, மசூதியை இடித்ததும், திருட்டுத்தனமாக சிலையை வைத்ததும் குற்ற நடவடிக்கைகளே என்றபோதிலும், அவ்வாறு வைக்கப்பட்ட சிலை புனிதமற்றது ஆகிவிடுவதில்லை. பக்தர்களும் வழிபாட்டு உரிமையை இழந்து விடுவதில்லை. சட்டவிரோதமானவை எனினும், சட்டப்பிரிவு 25 வழங்கும் மத நம்பிக்கைக்கான உரிமையால் இந்த குற்றங்கள் புனிதப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொகுத்துக் கூறினால்,

1992 மசூதி இடிப்பு என்பது இந்து பாசிஸ்டுகள் நிகழ்த்திய ஒரு கிரிமினல் நடவடிக்கை. தற்போதைய தீர்ப்பு அந்த மசூதி இடிப்பை சட்டரீதியாக நியாயப்படுத்துகிறது. ஒருவேளை 1992இல் மசூதி இடிக்கப்பட்டிராவிட்டால், தற்போதைய தீர்ப்பை அமல்படுத்துவதற்காக மசூதியை இடிக்கச்சொல்லி அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்திரவிட்டிருக்குமா என்றுகூட தீர்ப்பை விமரிசிக்கும் சிலர் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அரசியல் சட்டப்பிரிவு 25 இந்து பாசிஸ்டுகளின் கருத்தை அரசியல் ரீதியாக வழிமொழிகிறது. 1949இல் திருட்டு சிலைக்கு வழிபாடு நடத்த அனுமதித்தது முதல், 1992 டிசம்பர் 6 அன்று பஜனை பாட உச்சநீதிமன்றம் அளித்த அனுமதி வரையில் அனைத்தும் சட்டப்பிரிவு 25ந்தால்தான் நியாயப்படுத்தப்படுகின்றன.

வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், இந்து பாசிஸ்டுகள் கடப்பாரை ஏந்தும் உரிமையை வழிபாட்டுரிமை என்ற பெயரில் உத்திரவாதப்படுத்தியது சட்டப்பிரிவு 25. தற்போது மசூதி இடிப்பை நியாயப்படுத்தியிருப்பதும் சட்டப்பிரிவு 25 தான். இவை இரண்டுக்கும் இடையிலான இடைவெளியில் நிகழ்ந்த சம்பவம்தான் மசூதி இடிப்பு.

எனவே, இனி ஒரு மசூதி இடிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், மசூதி இடிப்பின் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமானால், அலகாபாத் தீர்ப்பை முறியடிக்க வேண்டுமானால், பார்ப்பனியத்தையும், பார்ப்பன பாசிசத்தையும், எல்லா வகையான மதப் பிற்போக்குகளையும் பாதுகாத்து நிற்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 25 மற்றும் 26ஐ நாம் இடித்துத் தள்ள வேண்டும். தற்போதைய அரசியல் சட்டத்தின் வரம்புக்குள் நின்று பார்ப்பனியத்தையோ, பார்ப்பன பாசிசத்தையோ ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சில அம்சங்களில் கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஆனால் பார்ப்பனியம் மற்றும் மதப்பிற்போக்கின் ஆன்மாவைப் பாதுகாக்கும் கவசங்களாகவே மேற்கூறிய இரு சட்டப்பிரிவுகளும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு அதனை இன்னொருமுறை நிரூபித்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டம் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்ற உண்மையை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பையும் அளித்திருக்கிறது.

___________________________________________

மருதையன், புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010
___________________________________________

சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்!

சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அலமும்

சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அலமும்

உலோகம் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? நாம் பயணிக்கும் பேருந்து அல்லது இரயில், தார்ச்சாலை அல்லது தண்டவாளங்கள், அதன் மேல் வாகனங்களை நகர்த்தும் எரிபொருள், கட்டிடங்களையும் பாலங்களையும் உயர்த்திப் பிடிக்கும் இரும்புக் கம்பிகள்…

சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விடுவதாக கற்பனை செய்து பாருங்கள்…. மொத்த உலகின் நாகரீகமும் ஒரு நான்காயிரம் ஆண்டுகள் பின்னோக்கி ஓடிவிடும். நாம் கற்களை வைத்துக் கொண்டு மிருகங்களைத் துரத்திக் கொண்டிருப்போம்.

வரலாறு நெடுக மனித உழைப்பு தனது ஒவ்வொரு கட்ட வளர்ச்சியினூடாகவும் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையைப் புரிந்து கொண்டு, அதனோடு இயைந்தும் முரண்பட்டும் மூலக்கனிவளங்களை வெட்டியெடுத்து பலவித கருவிகளை உண்டாக்கிச் சிறுகச் சிறுக உருவாகி வளர்ந்ததன் நீட்சியே இன்று நாம் காணும் விண் முட்டும் கட்டிடங்களும் தேசத்தின் குறுக்கு நெடுக்காக ஓடும் சாலைகளும் அதன் மேல் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் பறக்கும் விமானங்களும் மிதக்கும் பிரம்மாண்டமான கப்பல்களும்.

இயற்கையின் இந்தக் கொடை அதன் இயல்பின் படி அனைவருக்கும் பொதுவானதே, எந்த தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. தனிச்சொத்துடைமையின் உச்சகட்டமான முதலாளித்துவம், இயற்கையினதும் உழைப்பினதும் பலன்களை லாபமாக ஓரே இடத்தில் குவித்துக் கொள்கிறது. செங்குத்தாய் நிற்கும் முக்கோணத்தின் தலைப்பாகமாக வீற்றிருக்கும் முதலாளித்துவம், அதன் கீழ்ப்புறத்தில் தன்னையே தாங்கி நிற்கும் உழைப்பையும் இயற்கைச் செல்வங்களையும் சுரண்டியே கொழுக்கிறது.

உலகின் எங்கோவொரு மூலையிலிருக்கும் சுரங்கத்தின் ஏதோவொரு குறுகிய பொந்துக்குள் பிராணவாயுவைக் கோரி விம்மும் நுரையீரலுக்கு கந்தகத்தின் நெடியை சுவாசமாய் அளித்துக் கொண்டு இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, புற்றுநோயை சம்பளமாகவும் மரணத்தை போனசாகவும் பெற்றுக் கொண்டு ஏதோவொரு முகம் தெரியாத தொழிலாளி வெட்டியெடுத்து அனுப்பும் நிலக்கரியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் தருகின்ற வெளிச்சமே நமது இரவுகளை ஒளிரவைக்கிறது.

சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அலமும்!
சீனத்து சுரங்கத் தொழிலாளி

உலகின் மொத்த மின்சாரத் தேவையில் 41% நிலக்கரியில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உலகின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் சீனத்தில் இருந்து மட்டுமே 50% உற்பத்தியாகிறது (worldcoal.org). குறிப்பாக சீனம், முதலாளித்துவ நாடாக மாறியபின் ஒவ்வொரு ஆண்டும் நிலக்கரி உற்பத்தியின் வளர்ச்சிக்கு ஏற்றாற் போல் சுரங்க விபத்துகளின் எண்ணிக்கையும் மரணங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே போகிறது.

உலகளவில் அரசினால் பதிவு செய்யப்பட்ட கணக்குகளின் படியே சராசரியாக 1,200 தொழிலாளர்கள் சுரங்கங்களில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள். சர்வதேச தொழிலாளர் கழகத்தின் செய்தி ஒன்றின் படி, உலகத் தொழிலாளர்களில் சுரங்கத் தொழிலாளர்களின் சதவீதம் ஒன்று  ஆனால் மொத்த தொழிற்சாலை விபத்துகளில் ஏற்படும் மரணங்களில் சுரங்கங்களில் மட்டும் 8% மரணங்கள் நிகழ்கின்றன.  http://mmc-news.net/2010/10/15/the-dangers-of-mining-around-the-world/ . இது பதியப்பட்ட மரணங்களின் கணக்கு தான். இன்னும் எத்தனையோ மரணங்கள் சுரங்க முதலாளிகளாலும் அரசாங்கத்தாலும் மறைக்கப்படுகின்றன.

சீனத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்குச் சற்று முன் நடந்த ஒரு சுரங்க விபத்தில் 34 தொழிலாளர்கள் இறந்த சம்பவம் முற்றிலுமாக மூடி மறைக்கப்பட்டு சமீபத்தில் வெளியானது http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/8385950.stm

‘விபத்துகள்’ என்று சொல்லப்பட்டாலும் இவை சாராம்சத்தில் திட்டமிட்ட படுகொலைகள் என்றே சொல்ல வேண்டும். தமது லாபவெறிக்காக அத்தியாவசியமான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட வேண்டுமென்றே புறக்கணித்து, அதன் காரணமாக ஏற்படுத்தப்படும் சாவுகளை வேறு எந்தப் பெயரிட்டு அழைப்பது? ஆபத்துகளைத் தவிர்க்கச் செய்யப்படும் பாதுகாப்புச் செலவினங்களால் வெட்டியெடுக்கப்படும் கனிமங்களுக்கான லாபம் குறைவதால் அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகள் மூலப்பொருட்களை சல்லிசாக அள்ளிப்போகும் புழக்கடையாக மூன்றாம் உலக நாடுகளை ஆக்கி வைத்துள்ளன.

இந்நாடுகளைச் சேர்ந்த தரகு முதலாளிகளாலும் பன்னாட்டுக் கம்பெனிகளாலும் நடத்தப்படும் சுரங்கங்கள் விலைமதிப்பற்ற கனிவளங்களை சுரண்டிச் செல்வதோடு இலவச இணைப்பாக தொழிலாளிகளின் உயிர்களையும் காவு வாங்கி விடுகின்றன. சுரங்க விபத்துகளால் மட்டுமே ஆசிய, லத்தீன் அமெரிக்க, ஆப்ரிக்க நாடுகளில் வருடந்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் உயிரிழக்கின்றனர். சுரங்கங்களில் வேலை செய்து பெற்ற நோயால் இறப்போரின் கணக்கு தனி.

பூமியின் அடியாழத்தில் உள்ள சுரங்கத்தில் செய்யப்படும் வேலையின் தன்மையை சமதளத்தில் செய்யப்படும் வேலையின் தன்மையோடு ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளக் கூடாது. சுரங்கத் தொழிலில் பல்வேறு முறைகள் பின்பற்றப்பட்டாலும், பூமியின் மேற்பரப்பில்  திறந்தவெளியில் பாறைகளைப் பிளந்து பிரம்மாண்டமாக பள்ளம் தோண்டி தாதுக்களை வெட்டியெடுக்கும் முறையும் (surface mining) பூமியைக் குடைந்து வெட்டியெடுக்கும் முறையும் (Sub-surface mining) பிரதானமாக பின்பற்றப்படுகிறது.

இதில் பூமியைக் குடைந்து அமைக்கப்படும் சுரங்கங்களின் பணிச்சூழலின் தன்மை நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட அபாயங்கள் நிறைந்த ஒன்று. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத சுரங்கங்களின் மேற்கூரை எந்த நேரத்திலும் இடிந்து விழுந்து விடக்கூடும். இதுவும் போக நாட்கணக்கில் சுரங்கத்தினுள் பணிபுரியும் தொழிலாளிகளுக்கான உணவு,  தண்ணீர் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான சப்ளை துண்டிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பூமியின் ஆழத்திற்குச் செல்லச் செல்ல பிராணவாயுவின் அளவு வெகுவாகக் குறைந்து விடும். மீத்தேன் போன்ற அபாயகரமான வாயுக்கள் திடீரென்று வெளிப்பட்டுவிடுவதும் அதனால் தீ விபத்துகள் ஏற்படுவதும் சாதாரணம்.

அபரிமிதமான உற்பத்தியை மிகக் குறைவான நேரத்தில் குறைவான கூலியில் சாதிப்பது என்பதில்தான் லாப அளவு நிர்ணயிக்கப்படும் என்பது முதலாளித்துவத்தின் அடிப்படை விதிகளில் ஒன்று. எனவே பாதுகாப்பான ஆழம் என்று நிர்ணயிக்கப்பட்ட அளவையும் கடந்து பூமியைக் குடைந்து செல்லுமாறு தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்தப் பகாசுர உற்பத்தி வேகத்தின் காரணமாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் செலவு செய்து லாபத்திலிருந்து ஒரு சிறு பகுதியும் வீணாகி விடக்கூடாது என்கிற முதலாளிகளின் பேராசைக் காரணமாகவும் அடிப்படை அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட செய்யாமல் விட்டுவிடுவதாலேயே ‘விபத்துகள்’ நடக்கின்றன.

அத்தகையதொரு விபத்துதான் சமீபத்தில் சிலி நாட்டில் நடைப்பெற்றது. சுரங்கத்தின் அடியாழத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்காக சிலி அரசு மேற்கொண்ட முயற்சியையும், அதற்கு அமெரிக்காவின் நாசா துணை நின்றதையும் உலகத் தொலைக்காட்சிகள் அனைத்தும் ஒளிபரப்பின.

சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அலமும்
சராசரியாக 1,200 தொழிலாளர்கள் சுரங்கங்களில் நடக்கும் விபத்துகளில் ஆண்டுதோறும் உயிரிழக்கிறார்கள்

ஆனால், இத்தகைய விபத்துகளுக்கெல்லாம் மூலகாரணமாக அமைந்தவொரு ‘பெருவிபத்தை’, 28 ஆண்டுகளுக்கு முன் இதே சிலியில் அமெரிக்க அரசு அரங்கேற்றியது. 1973ஆம் அண்டு பொதுத்தேர்தலில் சிலியின் சோசலிசக் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சால்வடார் அலண்டே, அமெரிக்க முதலாளிகள் கைப்பற்றி வைத்திருந்த சிலியின் தாமிரச் சுரங்கங்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்குவதாக அறிவித்தார். இன்று தொழிலாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கருணையுடன் முன்வந்ததைப்போலக் காட்டிக் கொள்ளும் அமெரிக்க அரசு, அன்று தனது முதலாளிகளுடைய சொத்தைக் காப்பாற்றுவதற்காக சிலியில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றியது.

செப்டெம்பர் 11, 1973 அன்று சிலியின் அரசு வானொலியில் பிரதமர் அலண்டேயின் குரல் கம்பீரமாக ஒலித்தது. “சிலியின் பாட்டாளிகளே, சிலியின் எதிர்காலம் குறித்து எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. வேறு எவராயிருப்பினும் தேசத் துரோகிகள் வெற்றியுலா வரும் இந்நேரத்தில் அதற்குப் பணிந்து பிழைத்துப் போயிருப்பார்கள். நான் எங்கும் ஓடப்போவதில்லை. நீங்கள் ஒன்றை மறந்து விடாதீர்கள். விரைவில் இந்தச் சூழல் மாறும். ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். சிலி வாழ்க. மக்கள் வாழ்க. பாட்டாளி வர்க்கம் வாழ்க!”

சீறி வெடித்த துப்பாக்கி குண்டுகளின் பின்புலத்தில் அச்சமின்றி ஒலித்த அலண்டேயின் குரல் நசுக்கப்பட்டது. அமெரிக்க சி.ஐ.ஏவினால் ஏவி விடப்பட்ட சிலியின் இராணுவ தளபதி அகஸ்டோ பினோசே (பினோச்செட்) யின் இரத்த வெறிபிடித்த இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அலண்டே தற்கொலை செய்து கொண்டதாக இராணுவம் புளுகியது  இறுதி வரை போராடிக் களத்தில் கொல்லப்பட்டார் என்று அலண்டேயின் ஆதரவாளர்கள் அறிவித்தார்கள்.

அன்றிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை சிலி, இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் கொண்டு வரப்பட்டது. ஜெனரல் பினோசே 1980ஆம் ஆண்டு நேரடியாக ஜனாதிபதியாகத் தன்னை நியமித்துக் கொண்டான். ஏழு ஆண்டுகளுக்குள்ளாகவே சுமார் 2000 எதிர்ப்பாளர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள் என்றும் சுமார் 27000 பேர் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள் என்றும் பின்னர் பிஷப் செர்ஜியோ வேலஷ் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி 2005ம் ஆண்டு வெளியிட்ட ‘வேலஷ் அறிக்கை’ சொல்கிறது. அமெரிக்கா இந்த ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தியதற்கான காரணம் சில வருடங்களிலேயே உலகிற்கு அம்பலமானது.

உலகில் உற்பத்தியாகும் தாமிரத்தில் மூன்றில் ஒரு பங்கு சிலியில் இருந்து வெட்டியெடுக்கப்படுகிறது. சிலியின் தாமிர வளத்தைக் கைப்பற்ற 1825லிருந்தே அமெரிக்காவும் பிரிட்டனும் கடுமையான போட்டியைத் துவக்கியிருந்தன. அலண்டேயின் ஆட்சிக்காலத்தில் ஏகாதிபத்திய முதலாளிகள் வசம் இருந்த தாமிரச் சுரங்கங்கள் தேசியமயமாக்கப்பட்டன.

இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சிய பினோசே, சுரங்கங்களை முற்றிலுமாக தனியார்மயமாக்காமல், அவற்றின் மேலிருந்தக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாக தளர்த்தினார். அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த சுரங்க நிறுவனங்களிலும் தனியார் முதலாளிகள் பங்குதாரர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இப்போதைய ஜனாதிபதி செபாஸ்ட்டியன் பெனேராவின் மூத்த சகோதர் ஜோஸ் பெனேரா 1980இல் பினோசேயின் ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த போதுதான் தொழிலாளர் நலச்சட்டங்கள் உலக வங்கியின் உத்தரவிற்கிணங்க மாற்றியமைக்கப்பட்டன. இதன் காரணமாக சிலியின் மொத்த தொழிலாளர்களில் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் பணி நிரந்தரமற்ற அன்றாடக் கூலிகளின் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மேலும், தொழிலாளர்களின் பணிச் சூழல் பாதுகாப்பு, விபத்து தடுப்புப் போன்றவைகளை தொழிற்சாலை முதலாளிகளின் கட்டாயமான பொறுப்பு அல்ல என்றும் இதன் காரணமாக ஏற்படும் விபத்துகளுக்கு தொழிற்சாலைகள் பொறுப்பேற்க வேண்டியதோ இல்லை நட்ட ஈடு தரவேண்டியதோ தேவையில்லை என்றும் தொழிலாளர் சட்டங்கள் மாற்றி எழுதப்பட்டன. தொழிலாளர்களின் எதிர்ப்புகளை துப்பாக்கிச் சப்தங்கள் மௌனமாக்கின. இந்தப் பின்புலத்தில் நிகழ்ந்திருப்பதுதான் சிலியில் இன்று நடந்துள்ள சுரங்க விபத்து.

சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அலமும்!

சிலியின் அட்டாகாமா பகுதியின் கொப்பியாபோ நகரின் அருகே அமைந்துள்ளது சான் ஜோஸே சுரங்கம். சுமார் எழுநூறு அடி ஆழம் கொண்ட இந்தச் சுரங்கத்தில் பிரதானமாக தாமிரமும் தங்கமும் வெட்டியெடுக்கப்படுகிறது. இந்த எழுநூறடி ஆழமும் நேர்வாக்கில் அமையாமல் சுருள் வட்டப்பாதையாக அமைந்துள்ளது. 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தச் சுரங்கம் மிகுந்த லாபகரமாக நடந்து வந்த போதிலும், சுரங்கத்தை நிர்வகித்து வந்த தனியார் நிறுவனம் சுரங்கத்தின் பாதுகாப்பு அம்சத்தைக் கண்டுகொள்ளாமல் கை கழுவியது.

2003ம் ஆண்டு தொடங்கி வரிசையாக விபத்துக்கள் நடந்து மூவர் கொல்லப்பட்டுள்ளனர். 2004ம் ஆண்டில் ஒருமுறையும் 2007ம் ஆண்டில் ஒருமுறையும் சுரங்கத் தொழிலாளர் சங்கம் இந்தச் சுரங்கத்தின் பாதுகாப்பு சரியில்லாததை சுட்டிக் காட்டி இதை மூடிவிட உத்தரவிடக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறையும் முதலாளிகளுக்குச் சாதகமாக வழக்கை சிலி நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்துள்ளன.

இறுதியாக 2007ம் ஆண்டு நடந்த ஒரு விபத்தில் நிலவியல் ஆய்வாளர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இச்சுரங்கம் வேறு வழியில்லாமல் மூடப்பட்டது. சர்வதேச முன்பேர வர்த்தக சூதாடிகளின் சூதாட்டத்தால் தாமிரத்தின் விலை கூடியதும், சீனத்திற்கு தாமிர இறக்குமதித் தேவை அதிகரித்ததும் சுரங்க நிறுவன முதலாளிகளின் வாயில் எச்சில் ஊற வைத்தது. மூடப்பட்ட சுரங்கத்தின் பாதுகாப்பு அம்சங்களை இம்மியளவும் மேம்படுத்தாமல்  எம்ப்ரெஸ்ஸா மினரா சான் எஸ்டிபான் என்கிற நிறுவனம், இச்சுரங்கத்தை 2008ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் திறந்தது.

2010,ஆகஸ்ட் 5ஆம் தேதி சுரங்கத்தின் மேற்கூரையிலிருந்து பாறைகள் இடிந்து விழுந்து சுரங்கம் அடைத்துக் கொண்ட போது அதனுள்ளே 33 தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். சம்பவம் நிகழ்ந்து பல மணிநேரம் கழிந்து மதியம் 2 மணியளவில்தான் சுரங்க நிர்வாகம் இது குறித்து அரசுக்குத் தெரியப்படுத்தியது. அவசரகாலத்தில் தப்பிப்பதற்கான ஏணியைக்கூட நிர்வாகம் அமைக்காததனால் சுரங்கத்தின் வெவ்வேறு பகுதிகளில் மாட்டிக் கொண்ட 33 தொழிலாளர்களும் வேறு வழியில்லாமல் உள்ளேயே இருந்த குகை போன்ற ஒரு தற்காலிக பாதுகாப்பு இடத்தில் ஒளிந்து கொண்டனர். உடனடியாக தப்பித்துச் செல்ல ஏதேனும் வழியிருக்குமா என்று தேடத் துவங்கினர்.

சுரங்கம் ஒன்றினுள் பதினேழு நாட்களாக, வெளியுலகத் தொடர்பு அற்று, மீட்கப்படுவோமா இல்லையா என்கிற நிச்சயமில்லாத ஒரு நிலையிலும், காற்றும் ஒளியும், நீரும் இல்லாத நிலையிலும் வாழ்வதற்கான நம்பிக்கையை மட்டும் உயிருடன் காப்பாற்றி வந்த அந்தப் போராட்டத்தை வார்த்தைகளால் விளங்க வைக்க முடியாது. சொந்த அனுபவத்தில் மட்டுமே அந்தத் துன்பத்தின் முழுப் பரிமாணத்தையும் உணர்ந்து கொள்ள இயலும்.

அந்தத் தொழிலாளர்களிடையே ஓரளவு அனுபவம் கொண்ட, 40 வயதான மரியோ செபுல்வெடாவிற்கு ஆபத்து காலத்தில் தப்பித்துச் செல்வதற்கு காற்று வரும் பாதையில் மிருகத்தோலால் செய்யப்பட்ட ஏணி ஒன்று இருக்கும் என்பது தெரியும். அதில் ஏறிச் சென்று வெளியேற வழி அகப்படுமா என்று பார்க்கிறார். ஆனால், அந்த ஏணி உரிய முறையில் பராமரிக்கப்படாமல் இருந்ததால் சிதைவுற்ற நிலையில் இருந்துள்ளது. அப்படியும் அதில் உயிரைப் பணயம் வைத்து ஏறிப்பார்க்கிறார்  அது 150 அடி தூரம் சென்றவுடன் முற்றிலுமாக சிதைவடைந்து கிடக்கிறது.

தலைக் கவசத்தில் இருக்கும் பாட்டரியினால் இயங்கும் விளக்கைத் தவிர்த்து வேறு வெளிச்சம் இல்லாத நிலை. இரவா பகலா என்று புரிந்துக் கொள்ள முடியாத சூழல். வெளியுலக சப்தம் ஏதும் அற்ற அந்த நிலையில் அவர்கள் தமக்குள் ஒன்றிணைந்து செயல்படுவதைத் தவிர்த்து வேறு வழியில்லை என்பதை உணர்கிறார்கள்.

தப்பிக்க மேற்கொள்ளும் எந்தவொரு செயலுக்கும் அவர்கள் தமக்குள் ஓட்டெடுப்பு நடத்தி பெரும்பான்மையானவர்கள் ஆதரித்த முடிவையே ஒருமனதாக செயல்படுத்துகிறார்கள். அவர்கள் தங்கியிருந்த இடத்தின் சுத்தத்தை பராமரிக்க ஒரு குழு, தப்பிக்கும் வழியைத் தேட ஒரு குழு, மீட்புக் குழு வருகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு குழு என்று அவர்களுக்குள் இயல்பாகவே குழுக்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அலமும்!
தனது வர்க்க ஒற்றுமை தோற்றுவித்த தோழமையால் மரணத்தை வென்ற தொழிலாளர்கள்

92 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தகித்துக் கொண்டிருந்த நிலையிலும், வெளிக்காற்றின் சுழற்சி தடைப்பட்டிருந்த நிலையிலும் அவர்களின் உடல் வெகுவேகமாக வியர்த்தது. உடலின் நீர்ச் சத்து வெகுவேகமாக குறைந்து வந்த அந்த நிலையில் கையிருப்பில் இருந்த தண்ணீரின் அளவும் அதே வேகத்தில் குறைகிறது. தண்ணீரும் மற்ற உணவுப் பொருட்களும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கே தாக்குப் பிடிக்கும் அளவிலேயே இருந்துள்ளது. எனவே அவர்களுக்குள் இருப்பதை சமமாக பகிர்ந்து கொள்ள ரேஷன் முறை அமுல்படுத்தப்படுகிறது. பேட்டரிகள் தீர்ந்து போய் முழுமையான இருளில் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்க எப்போதும் வெளிச்சத்தில் இருப்பதைத் தவிர்க்கிறார்கள்.

நாட்கள் செல்லச் செல்ல மீட்கப்படுவோம் என்கிற நம்பிக்கை மெல்ல மெல்லக் குறைகிறது. ஒருவேளை தங்கள் உடல்களாவது மீட்கப்பட்டால் குடும்பத்தாருக்குக் கிடைக்கட்டும் என்று அவரவர் தங்கள் இறுதிச் செய்தியை எழுதி வைத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை மரணம் நிச்சயம் என்பது உறுதியாகியிருந்தால் கூட அவர்களுக்கு ஒரு மனநிம்மதி ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால், ஏதும் நிச்சயமற்ற நிலையில் நாட்களைக் கடத்துவதன் பின்னுள்ள உளவியல் அழுத்தம் நமது கற்பனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவொன்று. எங்காவது எப்போதாவது கேட்கும் ட்ரில் இயந்திரத்தின் ஓசை அவர்களுக்கு வாழும் நம்பிக்கையை லேசாகக் காட்டிவிட்டு நின்று விடும். சாவுக்கும் வாழ்வுக்கும் இடையிலான அந்த மெல்லிய எல்லைக் கோட்டில் அவர்கள் பதினேழு நாட்கள் அமர்ந்திருந்தனர்.

பாட்டாளி வர்க்கத்திற்கே உரிய கூட்டுணர்வு ஒன்றுதான் அவர்கள் அந்த நிலையைக் கடந்து வர கைகொடுத்த உந்து சக்தியாய் இருந்தது. எல்லா பிரார்த்தனைகளும் நம்பிக்கைகளும் தகர்ந்துப் போன அந்தச் சூழலில்  தோழமை உணர்வுதான் அவர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது. இறுதியில் அவர்கள் அடைபட்டிருந்த இடத்தை ஆகஸ்டு 22ஆம் தேதி மீட்புப் படை அனுப்பிய ட்ரில் இயந்திரம் எட்டுகிறது. மீட்புப் படையிடம் சுரங்க நிர்வாகம் கொடுத்த வரைபடத்திற்கும் சுரங்கப் பாதைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாமல் இருந்ததே இந்த தாமதத்திற்குக் காரணம்.

ஊடகங்கள் மூலம் சர்வதேச அளவில் பெருவாரியான மக்களின் கவனத்தையும் இந்த சம்பவம் ஈர்த்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் நாசா போன்ற நிறுவனங்களை இறக்கிய சிலி அரசு, புதிதாக சுரங்கப் பாதைகளை அறிந்து, வரைபடம் தயாரித்தே மீட்பு நடவடிக்கைக்கான திட்டத்தை உருவாக்குகிறது. அந்தச் சுரங்கத்தின் தாமிரத்தை ஏற்றுமதி செய்து எத்தனையோ லாபத்தை அள்ளிக் குவித்த அதன் முதலாளிகள், மிக அடிப்படையான வரைபடத்தைக் கூட முறையாக வைத்திருக்கவில்லை.

ஊடக வெளிச்சத்தினால் உண்டான நெருக்கடியும், நெருங்கி வரும் தேர்தலில் தோற்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு காரணமாகிவிடக்கூடாது என்கிற அச்சமும் விரட்ட, மீட்பு நடவடிக்கையை முடுக்கி விட்டார் ஜனாதிபதி செபாஸ்டியன் பினேரா. பல்வேறு மீட்பு முறைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் சிலி கப்பற்படையும் அமெரிக்க நாசாவும் வடிவமைத்த ஃபீனிக்ஸ் என்கிற கூம்பு வடிவ கேப்சூலை சுரங்கப் பாதைக்கு இணையாக பூமியைக் குடைந்து உள்ளே அனுப்பி, ஒவ்வொரு தொழிலாளியாக மீட்பது என்று முடிவு செய்கிறார்கள்.

சுரங்கத்தினுள்ளே 33 தொழிலாளர்களும் மீட்பு கேப்சூல் வருகையை தவிப்புடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள். அது வெற்றியடையுமோ இல்லையோ; வெளியே சென்று குடும்பத்தாருடன் சேர்வோமோ இல்லையோ என்று ஒரு கலவையான உணர்ச்சியலையில் இருக்கிறார்கள். அவர்கள் வெளியுலகத்தோடு தொடர்பு கொண்டு 52 நாட்களாகிறது. அவர்கள் குடும்பத்தாரும் நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இடையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அக்டோபர் 12ம் தேதி நள்ளிரவு தொடங்கிய மீட்பு நடவடிக்கை, அடுத்த நாள் இரவு பத்து மணிக்கு 33வது தொழிலாளியையும் மீட்டவுடன் வெற்றிகரமாக முடிகிறது.

···

சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அலமும்!
தொழிலாளர் அவலத்தில் காசு பார்க்கும் ஊடகம்

‘வாவ்… இங்கே பாருங்கள் அதிசயத்தை. ஒரு சுரங்கத்தினுள் மீட்பு கேப்ஸ்யூல் இறங்குவதைத் திரையில் காண்கிறீர்கள். இது உங்களை ஆச்சர்யப்படுத்தா விட்டால் வேறு எதுவுமே ஆச்சர்யப்படுத்தி விடமுடியாது‘ என்று சி.என்.என் தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஆண்டர்சன் கூப்பர் அலறுகிறார்.

ஒரு திரில்லர் திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியைப் போல விவரித்து செய்தி ஊடகங்களில் காட்டப்பட்ட மீட்பு நடவடிக்கையின் இறுதிக் கட்டத்தை நூறு கோடி பேர் தொலைக்காட்சி செய்திகளில் பார்த்துள்ளனர். இணையத்தில் நெரிசல் இருபது சதவீதம் அதிகரித்துள்ளது. உலகெங்குமிருந்து சுமார் மூவாயிரம் செய்தியாளர்கள் சுரங்கத்தின் அருகில் கூடியிருந்தனர்  பந்தியில் கை நனைக்கும் வாய்ப்பை எவரும் தவற விடத் தயாரில்லை போல. இவர்களுக்காக ஒரு திடீர் நகரமே உருவாக்கப்பட்டிருந்தது.

மிருகக்காட்சி சாலைகளில் கூண்டுகளில் அடைபட்டிருக்கும் மிருகத்தைக் காட்சிப் பொருளாக்குவது போல் சுரங்கத்தினுள் மாட்டிக் கொண்ட தொழிலாளர்களின் ஒவ்வொரு அசைவையும் காட்சியாக்கி டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்திக் கொண்டன முதலாளித்துவ ஊடகங்கள். உள்ளே மாட்டிக் கொண்ட தொழிலாளர்களுக்கு வெளியுலக தொடர்பு கிடைத்தவுடன் அவர்களின் நடவடிக்கையையும் விரிவாக திரையில் காட்டி காசு பார்த்த ஊடகங்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் பற்றி மூச்சுக்காட்டாமல் அப்படியே மூடி மறைத்தன. தொழிலாளர்கள் மீட்கப்படும் வரையில் சுரங்கத்தின் பாதுகாப்பைப் புறக்கணித்த நிர்வாகத்தையும் அதைக் கண்டுகொள்ளாமல் விட்ட அரசையும் ஓரளவுக்கு விமர்சித்து வந்த ஊடகங்கள், தொழிலாளர்கள் மீட்கப்பட்டவுடன் ‘விவா சிலி’ (சிலி வாழ்க) என்று மங்களம் பாடி ஒட்டுமொத்தமாக சுபம் போட்டுவிட்டனர்.

சிலியின் மீட்பு நடவடிக்கையில் பல நாடுகளது அரசாங்கங்கள், அரசு நிறுவனங்கள் இணைந்துள்ளன. தங்களது தொழில்களில் எல்லாவிதமான அரசுத் தலையீட்டையும் எதிர்க்கும் தாராளமயதாசர்கள் எவரும் இந்த ‘அரசுத்தலையீடு’ பற்றி மூச்சுவிடவில்லை. தொழிலாளிகளின் உயிரைக் காக்கும் பொறுப்பை மட்டும் அரசுகள் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கருதுகின்றனர்.

நாளை இந்தச் சம்பவங்களை வைத்து ஏதாவது ஹாலிவுட் திரைப்படம் வெளியாகலாம். அதில் மீட்புப் படைத் தலைவராக  நாசா என்ஜினியராக  டாம் குரூஸ் வந்து சிலியின் தொழிலாளர்களை மீட்டுத் தரக்கூடும்.

சிலியின் சுரங்கத் தொழிலாளர்களின் நிலை உலகளவில் காட்சிப் பொருளாகிக் கொண்டிருந்த அதே நேரத்தில் சீனத்தில் நடந்த சுரங்க விபத்து ஒன்றில் 34 தொழிலாளர்கள் இறந்துள்ளனர். எதார்த்தத்தில் இன்றும் சிலியின் பெரும்பாலான சுரங்கங்கள் எவ்விதமான அடிப்படை பாதுகாப்பும் இல்லாமல்தான் இயங்கி வருகின்றன. . அவர்கள் உள்ளே மாட்டிக் கொள்ளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சுரங்கத்தின் உள்ளே கேமரா இறங்கப் போவதில்லை. ‘சிலியின் கதை’ ஏற்கெனவே உலகம் முழுவதும் ஓட்டப்பட்டு விட்டதால், இதை விடக் கொடிய, திகில் நிறைந்த, இதிலிருந்து முற்றிலும் வித்தியாசமான, புதிய ‘விபத்துகளை’ ஊடக முதலாளிகள் தேடிக்கொண்டிருப்பார்கள்.

தொழிலாளர்களோ, அதே பழைய தாமிரத்துக்காகவும், நிலக்கரிக்காகவும், முதலாளிகளின் கொள்ளை இலாபத்துக்காகவும், பாதுகாப்பற்ற சுரங்கங்களில் தமது உயிரைப் பணயம் வைத்து பூமியைக் குடைந்து கொண்டிருக்கிறார்கள்

____________________________________________________

– தமிழரசன், புதிய கலாச்சாரம், டிசம்பர் – 2010

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு !

சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு

அலைக்கற்றை ஊழலின் தொகை கற்பனைக்கு எட்டாததாகவும் பிரம்மாண்டமானதாகவும் இருப்பதே, அந்த ஊழல் மக்கள் மத்தியில் பெரும் முக்கியத்துவம் பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கிறது. ஆனால், தொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் போர்த்தந்திர ரீதியான முக்கியத்துவம்தான் ஏகாதிபத்தியங்கள் இதன் மீது தங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

தாராளமயக் கொள்கைகளில் தலையாயது நிதித்துறை தாராளமயம். உலகெங்கிலும் உள்ள பங்குச்சந்தைகள் மற்றும் நாணயச்சந்தைகள் உள்ளிட்ட நிதிச்சந்தையை ஒன்றிணைப்பதற்கும், ஏகாதிபத்திய நிதிமூலதனத்தின் சூதாட்டத் தேவைக்கு ஏற்ப, பல இலட்சம் கோடி டாலர் பணம் அன்றாடம் உலகின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு மின்னலைக் காட்டிலும் வேகமாகப் பாய்வதற்கும் அடிப்படையாக இருப்பது தகவல் தொழில்நுட்பத்துறை. நிதிச்சந்தையில் மட்டுமின்றி பல்வேறு சேவைத்துறைகளிலும், உற்பத்தித் துறையிலும் உலகமயமாக்கத்தை அமல்படுத்துவதற்கும்; உற்பத்தி, உழைப்புப் பிரிவினை, சந்தை ஆகியவற்றை உலகளவில் ஒன்றிணைப்பதற்கும் அடிப்படையாக இருப்பது தகவல் தொழில்நுட்பத் துறை.

எனவேதான் தனியார்மய, தாராளமயக் கொள்கைகளில், தொலைபேசி மற்றும் தகவல் தொடர்புத் துறையை தனியார்மயமாக்குவதற்கு ஏகாதிபத்தியங்களும் ஆளும் வர்க்கங்களும் முதன்மை முக்கியத்துவம் அளித்தன என்பதுடன், மிகப்பெரும் அளவு இலாபத்தைத் தரக்கூடியதாகவும் இருப்பதால் இந்தத் துறை முதலாளி வர்க்கத்தைக் கவர்ந்திழுத்தது.

கடந்த 15 ஆண்டுகளாக உள்நாட்டு – வெளிநாட்டுப் பெரு முதலாளிகளின் கொள்ளைக்கும் சூறையாடலுக்குமான களமாகவும் தொலைத் தொடர்புத் துறை இருந்து வந்துள்ளது.

காட் ஒப்பந்தத்தின்படி, தொலைத் தொடர்புத் துறையில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளிகளும் நுழைந்து சூறையாடுவதற்கேற்ப தேசியத் தொலைத் தொடர்புக் கொள்கை நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. அரசுத்துறையாக இருந்த தொலைத் தொடர்புத் துறையை அரசின் முழுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்ததுடன், டெல்லி மற்றும் மும்பை நகரங்களின் சேவைக்கென எம்.டி.என்.எல். உருவாக்கப்பட்டது. தொலைபேசித்துறை என்ற அரசுத்துறை, பி.எஸ்.என்.எல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனமாக்கப்பட்டது.

நாடெங்கும் பூமிக்கடியில் செயற்கைஇழைக் கம்பி வடங்களை அமைப்பது போன்ற அடிக்கட்டுமானப் பணிகளைச் செய்வதற்குப் பகிரங்க ஏலத்தை நடத்தி, 1995-இல் இத்துறையில் தனியார்மயத்தைத் துவக்கி வைத்தது ராவ் அரசு. ரூ. 85,000 கோடியை ஏலத் தொகையாகக் குறிப்பிட்ட ஹிந்துஸ்தான் ஃப்யூச்சரிஸ்டிக் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்துக்கு உரிமம் அளித்தார், தொலைபேசித்துறை அமைச்சர் சுக்ராம். உரிமத் தொகையைக்கூடச் செலுத்த முடியாத அந்நிறுவனத்துக்காக ஏல விதிகளைத் திருத்தினார். மற்றவர்களைக் காட்டிலும் மிக அதிகமாக ஏலத்தொகையைக் குறிப்பிட்டு, 9 மாநிலங்களுக்கான அடிக்கட்டுமான பணிகளை ஏலமெடுத்த இந்நிறுவனம், வருவாய் வரக்கூடிய டில்லி உள்ளிட்ட 3 மாநிலங்களைத் தவிர, பிற மாநிலங்களின் கட்டுமானப் பணியிலிருந்து விலகிக் கொண்டது. இதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 20,000 கோடி ரூபாய்.

இந்நிறுவனத்தின் மூலம் அமைச்சர் சுக்ராம் ரூ.1,500 கோடிகளைச் சுருட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 1995 – இல் அவரது வீடுகளிலிருந்து கத்தைகத்தையாக ரூ.3.62 கோடிப் பணத்தை மையப் புலனாவுத் துறையினர் வாரிச் சென்றதுடன் வழக்கும் தொடுத்தனர். 2009-இல் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சுக்ராமுக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது சிறப்பு நீதிமன்றம்.

அடுத்த பத்தாண்டுகளில் ரூ.9,45,000 கோடி வருவாய் தந்திருக்கக் கூடிய பல்வேறு தொலைத்தொடர்பு சேவைப் பிரிவுகள் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் வெறும் ரூ.1,15,000 கோடிக்கு அடிமாட்டு விலையில் விற்கப்பட்டதையும், அரசுக்குச் செலுத்த வேண்டிய உரிமத் தொகை பாக்கியைக்கூடச் செலுத்தாத இத்தனியார் நிறுவனங்களின் நிலுவைத் தொகை ரூ.8000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதையும் அப்போதைய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கை சுட்டிக் காட்டியது.

தனியார்மயக் கொள்கையின் கீழ் அரசுத்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் விழுங்க வகை செய்வது மட்டுமின்றி, தொலைபேசி, மின்சாரம் போன்ற அரசுத்துறைகளை படிப்படியாக ஒழித்துக்கட்டுவதற்கான ஏற்பாட்டை எல்லா துறைகளிலும் ஏற்படுத்த வேண்டும் என்பதும், உலக வர்த்தகக் கழகத்தின் விதியாகும். இதன்படி ‘ஏற்கெனவே அரசு ஏகபோகமாக இருந்துவந்த தொலைபேசித் துறை, வலிமையான உள்கட்டுமானத்தையும் மூலதன பலத்தையும் பெற்றிருப்பதால், புதிதாக இத்துறையில் நுழைந்துள்ள தனியார் முதலாளிகள் அதனுடன் போட்டி போட இயலாது என்றும், எனவே கட்டண விகிதத்தையும் ஒதுக்கீடுகளையும் முறைப்படுத்திக் கொடுத்துச் சமமான ஆடுகளத்தை உத்திரவாதம் செய்யவேண்டுமென்றும்’ கூறிக்கொண்டு தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்-TRAI) ஏற்படுத்தப்பட்டது.

கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட இந்த அமைப்பு 1997-இல் தேவ கவுடா ஆட்சியில் அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட நாள் முதல் அரசுத் தொலைபேசித் துறையின் கால்களை உடைத்து முடமாக்குவதே இதன் பணியாக இருந்தது. மொபைல் தொலைபேசிச் சேவை தொடங்கப்பட்ட ஆரம்ப நாட்களில் ஒரு நிமிடத்துக்கு 15 ரூபாய், 16 ரூபாய் எனக்கட்டணம் வசூலித்து கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தபோதே, சி.டி.எம்.ஏ. தொழில் நுட்பத்தின் மூலம் மலிவான கட்டணத்தில் கைபேசி சேவையை வழங்கும் தொழில்நுட்பத்தை பி.எஸ்.என்.எல். பெற்றிருந்தது.

எனினும், தனியார் முதலாளிகளின் கொள்ளையை ஊக்குவிக்கும் பொருட்டு, கைபேசி சேவையில் பி.எஸ்.என்.எல். நுழையக்கூடாது என்று ட்ராய் அமைப்பின் மூலம் தடுத்து நிறுத்தினார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துப் போராடிய பின்னரே கைபேசி சேவையில் பி.எஸ்.என்.எல். அனுமதிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் நுகர்வோரிடமிருந்து தனியார் முதலாளிகள் அடித்த கொள்ளை பல்லாயிரம் கோடிகள் ஆகும்.

இது போதாதென்று உரிமக் கட்டணங்கள் மிக அதிகமென்றும், தாங்கள் மூலதனத்தைத் திரும்பப் பெறப்போவதாகவும் மிரட்டின அமெரிக்க தொலைபேசி நிறுவனங்கள். உடனே, தேவகவுடா ஆட்சியில் (1996-98) தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த பேனி பிரசாத் வர்மா (காங்.), முன்பணமே வாங்காமல் பல நிறுவனங்களுக்கு அலைக்கற்றை உரிமங்களை வழங்கினார். பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கும் ஒவ்வொரு நிர்ப்பந்தத்துக்கும் ஏற்ப அவர்களுக்குச் சலுகைகள் வாரி வழங்கப்பட்டன.

பின்னர் பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த அருண்ஷோரி, அரசுத்துறை நிறுவனங்களைக் கரப்பான் பூச்சிகள் என்று வெறுப்பைக் கக்கியது மட்டுமின்றி, பி.எஸ்.என்.எல்.-இன் பங்குகளை விற்றபோது அவற்றின் உண்மை மதிப்பை வேண்டுமென்றே குறைத்துக் காட்டினார். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், புதிய தொலைத் தொடர்புக் கொள்கை அறிவிக்கப்பட்டபோது, இக்கொள்கையால் அரசுக்கு அடுத்த பத்தாண்டுகளில் ரூ.50,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணக்குத் தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியது. இருப்பினும், இந்தக் கொள்கைகூட மேலும் தளர்த்தப்பட்டது. குறிப்பிட்ட தொகையை உரிமக் கட்டணமாகச் செலுத்துவதாகக் கூறிப் பல்வேறு மாநிலங்களில் கைபேசி சேவையைத் தொடங்கிய தனியார் நிறுவனங்கள், தாங்கள் எதிர்பார்த்த அளவு வருவாய் வரவில்லை என்று கூறி ஒப்புக்கொண்ட உரிமக் கட்டணத்தை செலுத்த மறுத்தனர். உடனே, தமக்கு எவ்வளவு வருவாய் வருகிறதோ, அதில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும் என்று தனியார் முதலாளிகளுக்கு சலுகை வழங்கி, பல்லாயிரம் கோடி கொள்ளைக்கு கால்கோள் இட்டது பா.ஜ.க. அரசு. அப்போது தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர், ராம்விலாஸ் பஸ்வான்.

அதன் பின் அமைச்சரான பிரமோத் மகஜன், ரூ.100 வருவாய் ஈட்டினால் ரூ.2 செலுத்தினால் போதும் என வருவாய்ப் பகிர்வை 2 சதவீதமாகக் குறைத்தார். கைபேசி சேவைகளில், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பச் சேவைக்கு வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு இருந்ததால், ஏற்கெனவே சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் இயங்கிவந்த நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்துக்கு மாறிக்கொள்ள முயற்சித்தன. ஆனால், விதிப்படி இப்புதிய சேவைக்குப் புதிய உரிமம் பெற வேண்டும். இருப்பினும், சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தில் இயங்கி வந்த ரிலையன்ஸ் நிறுவனம், ஜி.எஸ்.எம். தொழில் நுட்பத்தில் இரண்டு ஆண்டுகளுக்குச் சட்டவிரோதமாக தொழில் நடத்த அரசு தாராள அனுமதி அளித்தது. தொலைத்தொடர்புத் துறை தாவாவுக்கான தீர்ப்பாயம் இது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த பின்னர், மிக அற்பமாக ரூ.485 கோடி மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது. பின்னர், சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பத்தைக் கொண்ட நிறுவனங்கள் கொல்லைப்புறமாக ஜி.எஸ்.எம். செல்போன் சேவையை வழங்க 2001-ஆம் ஆண்டில் தாராள அனுமதி வழங்கப்பட்டது. ரிலையன்சின் ஆதாயத்துக்காகவே அமைச்சர் பிரமோத் மகஜனால் இந்தக் கொள்கை கொண்டுவரப்பட்டது.

வெளிநாடுகளுக்கான தொலைத் தொடர்புச் சேவையை அளித்து வந்த  வி.எஸ்.என்.எல். எனும்  இலாபமிக்க அரசுத்துறை நிறுவனத்திடம் ஏறத்தாழ ரூ.3,000 கோடி உபரி இருந்த போதிலும், இந்நிறுவனத்தின் 25 சதவீதப் பங்குகள் அடிமாட்டு விலையில் ரூ.1439 கோடிகளுக்கு டாடாவுக்கு விற்கப்பட்டன. பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகக் கட்டுப்பாடு, அதன் 25 சதவீதப் பங்குகளை வாங்கும் தனியார் முதலாளிகளுக்கே தரப்படும் என்று பா.ஜ.க அரசு ‘கொள்கை’ முடிவு எடுத்திருந்ததால், டாடாவின் பிடியில் வி.எஸ்.என்.எல். சிக்கிக் கொண்டது. நிர்வாகம் தன் கைக்கு வந்த மறு கணமே, அந்நிறுவனத்தின் கையிருப்பி லிருந்து ரூ.1200 கோடிகளை எடுத்து, பங்குச்சந்தையில் கவிழ்ந்து கிடந்த டாடா டெலிசர்வீசஸ் என்ற தனது நிறுவனத்தின் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கும் மோசடியைப் பகிரங்கமாக செய்தார், டாடா.

இந்த முறைகேடுகள் அனைத்தும் தொலைத்தொடர்புத் துறையில் நடந்துள்ள கொள்ளைக்கு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே. இவையன்றி, நேரடியான கிரிமினல் நடவடிக்கைகளிலும் கார்ப்பரேட் கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். வாடிக்கையாளர்களை மோசடி செய்வது, கேட்டால் அச்சுறுத்துவது, பி.எஸ்.என்.எல்.-இன் தொலைத் தொடர்பு இணைப்புகளையும் நிலத்தடி கம்பித் தடங்களையும் சேதப்படுத்துவது, இதை எதிர்க்கும் அரசுத்துறை ஊழியர்களைத் தாக்குவது – என ரிலையன்ஸ், ஏர்டெல் நிறுவனங்களின் குண்டர்கள் எண்ணற்ற அட்டூழியங்களில் ஈடுபட்ட போதிலும், இக்கிரிமினல் நிறுவனங்களின் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புகளை உள்நாட்டு அழைப்புகளாகக் காட்டும் கிரிமினல் வேலையைச் செய்து வந்த திருட்டு கால் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைக் கையும் களவுமாக ஆதாரத்துடன் பிடித்துக் கொடுத்தனர் வாடிக்கையாளர்கள். பொருளாதார மோசடியாக மட்டுமின்றி, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது உள்ளிட்ட பாரிய கிரிமினல் குற்றப் பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய இந்தக் குற்றத்துக்கு, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1600 கோடி என்று மதிப்பிடப்பட்டது. இந்தத் தொகையைக் கூட முழுமையாக வாங்காமல் 600 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு நீதிமன்றத்துக்கு வெளியே பிரச்சினையைத் தீர்த்துக் கொண்டது அரசு. அம்பானியுடன் இந்தக் கட்டப் பஞ்சாயத்தைப் பேசி முடித்தவர், இத்துறையின் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 15 ஆண்டுகளில் இத்துறையில் நடைபெற்றுள்ள கொள்ளைகளுக்குக் கணக்கு வழக்கில்லை. உயர் தொழில்நுட்பத் துறையாக இருப்பதால் இதில் நடைபெறும் கொள்ளைகளை வல்லுநர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்ற நிலையையும் முதலாளிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். எனினும், அரசுத் தொலைபேசித் துறையின் தொழிற்சங்கங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வலது, இடது போலி கம்யூனிஸ்டுகள் இத்தகைய கொள்ளைகளுக்கு எதிராக ஊழியர்களைத் திரட்டி போராடியதோ, மக்கள் மத்தியில் கொண்டு சென்றதோ இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு இவர்கள் வெளியிலிருந்த ஆதரவு கொடுத்த காலத்தில்தான் தற்போதைய அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட அனைத்தும் நடந்துள்ளன. எனினும், தற்போது கணக்குத் தணிக்கை அறிக்கை வெளிவந்ததை ஒட்டி இப்பிரச்சினை பெரிதானவுடன், “நாங்கதான் பிரதமருக்கு இதுபற்றி முதலில் கடிதம் எழுதினோம்” என்று வெட்கங்கெட்டுப்போ, கருணாநிதி பாணியில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அரசுத்துறையான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவற்றை நிர்வகிக்கத் தலைமை இயக்குனர் பதவிக்குத் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த இயக்குனர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுப்பது’ என்பது கொள்கை முடிவாகவே எடுக்கப்படுவதால், இனி கார்ப்பரேட் திருடர்கள் அரசு சொத்தைக் ‘களவாட’ வேண்டிய அவசியம் இருக்காது. அதற்கு ஆ.ராசா போன்ற அமைச்சர்களின் தயவும் அவர்களுக்குத் தேவைப்படாது என்பதால், ‘ஊழல்’ குறித்த பேச்சும் இனி எழாது என்று நம்புவோமாக!

__________________________________________________________

– பாலன், புதிய ஜனநாயகம், ஜனவரி – 2011

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக்  கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில்.   மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய  மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின்  பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.

தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.

பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை  அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.

அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.

வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?

அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!

ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.

சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.

கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை  அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட  87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட  கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.

இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர்  முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன்  சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில்  நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.

ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.

நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!

ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.

சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது.  கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக  (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.

சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.

பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என  நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென  4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.

அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன.  ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று,  வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட  வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.

பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!

இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?

பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார்,  தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில்,  ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.

விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம்  அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது.  இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது.  மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக்  கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர்.  திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர்  தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.

பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள  கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’   நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.

தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.

அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.

இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர்.   வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.

ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர்.  கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள்,  மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!

ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான்.  கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத்  தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்” என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோது ‘செம்மொழிகொண்டானின்’ அரசு ‘அனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்’ எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது.   வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில்  ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன.  பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.

பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!

ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான்.  பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது.  ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.

பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.  அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.  250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.  இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.

வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன  நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.

பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது  தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.

மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.

சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை  ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.

வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில்  ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.

களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!

ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.

களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது.  களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.

இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த  திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.

இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்பட்டனர்.

இன்று மண்ணின் மைந்தர்களான இருளர்கள் வீடுகட்ட நிலம் கேட்டால் தடியடியால் பதில் சொல்லும் ‘ஆரூர்ச் சோழனின்’ ஆட்சி, ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களைப் ‘பொது நீக்கி’ ஹூன்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கிறதே, அதே போன்ற ‘பொது நீக்கி’ய அரசைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் நிறுவினார்கள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான். பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன இன்றைய ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.

ராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.

வடக்கே மகதப் பேரரசின்  அசோகனின்  ஆட்சிக் காலத்தில் பார்ப்பன வேள்விகள் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டன. தெற்கே களப்பிரர் ஆட்சிக்காலத்திலோ பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டிருந்த தேவதானங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பொதுவாக்கப்பட்டன.

பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.

தமிழின் மாபெரும் படைப்புகள், புதிதாகப் படைக்கப்பட்ட பாவினங்கள், விருத்தங்கள், அறநூலின் உச்சமான திருக்குறள் என  களப்பிரர் கால இலக்கியங்கள் எண்ணற்றவை. சோழர் காலத்தில் உருவான இலக்கியங்கள் யாவை?

சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?

இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றைய ‘மெய்க்கீர்த்தி’களும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர் ‘நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்க’ என்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.

சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.

சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.

இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.

வைதீக மதத்தை எதிர்த்து நின்ற புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2550 ஆம் ஆண்டை பத்தோடு பதினொன்றாக அனுசரித்த திமுக அரசு, பார்ப்பனதாசனான ராஜராஜனை மட்டும் கோலாகலமாகக் கொண்டாடக் காரணம், கருணாநிதி தன்னை ராஜராஜனுடன் இனம் காண்கிறார் என்பதுதான்.

சநாதன தர்மம் என்று சொன்னாலே காறித் துப்பிய காலம் ஒன்று இருந்தது. அதுதான் சுயமரியாதை இயக்கக் காலம். அந்தக் காலத்தை ‘களப்பிரர் காலத்தோடு’ ஒப்பிடலாம் என்றால், அதனை முனை மழுங்கவைக்க குல்லுகப்பட்டருடன் கூட்டு சேர்ந்த காஞ்சித்தலைவன் அண்ணா தான், பார்ப்பன மீட்சிக்கு அடிக்கொள்ளி வைத்த  நரசிம்ம பல்லவன்.  மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவிடமும் தினமலரிடமும் நல்ல பெயரெடுக்கத் துடிக்கும் ‘திருவாரூர் சோழன்’தான்,  பார்ப்பனர்களுக்கு பொற்கால ஆட்சி தந்த ராஜராஜன்.

விந்தியம் கடந்து வந்த பார்ப்பனர்களுக்கு உள்ளூரின் விளைநிலங்கள் எல்லாம் ‘வரி நீக்கி’அவன் வழங்கியதைத்தானே, தேசம் கடந்து வரும் கம்பெனிகளுக்கு ‘வரி நீக்கி’ வழங்குகிறார் கருணாநிதி.

கோவிலின் ஆணைகளை எதிர்த்தவர்களுக்கு  ‘சிவத்துரோகி’ப் பட்டம் என்றால் உலகவங்கி ஆணைகளை நிறைவேற்றும் அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இன்றோ ‘தேசத்துரோக’ வழக்கு.

பீகார் பார்ப்பனர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து வாழவைத்த ராஜராஜனின் வரலாறும், பார்ப்பனிய பாஜக வைத் தமிழகத்திற்கு இழுத்து வந்து காலூன்ற வைத்த கலைஞரின் வரலாறும் வேறுவேறா என்ன? அன்று ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட  தீண்டாச் சேரியை @பால்தானே, இன்று எழில்மிகு சென்னைக்கு வெளியே துரத்தப்படும் உழைக்கும் மக்களுக்காக இக்காலச் சோழன் ஒதுக்கும் செம்மண்சேரி?

இன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர்.  பொதுவை நீக்கி பார்ப்பனதாசனாக வாழ்ந்த ராஜராஜனும் இருந்தான்.

கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, ராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.

___________________________________________________

ஆதாரங்கள்:

  1. சதாசிவ பண்டாரத்தார்,
  2. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,
  3. மயிலை சீனி.வேங்கடசாமி,
  4. குடவாயில் பாலசுப்ரமணியம்,
  5. நா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ்,  ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள்.

_______________________________________

புதிய கலாச்சாரம் – டிசம்பர் – 2010
_______________________________________