Thursday, June 19, 2025
முகப்பு பதிவு பக்கம் 787

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

உலகின் மிக உயரமான கோபுரங்களைக் கொண்ட, பழமையான பெருங்கோவில்களில் தஞ்சைப் பெரியகோவிலும் ஒன்று. இன்றிருப்பதைப் போன்ற துரிதக் கட்டுமானப் பொறி நுட்பங்கள் ஏதும் வளர்ந்திராத, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கட்டிடப் பொறியியலில் மாபெரும் சாதனையாகக்  கட்டப்பட்டதுதான் இந்தக் கோவில்.   மழைபெய்தால் நீர்க்கசிவு ஏற்படாதிருக்கப் பதிக்கப்பட்டிருக்கும் நுண்குழாய்கள், ஒரே கல்லினால் ஆன மிகப் பெரும் நந்தி எனப் பல்வேறு பிரம்மாண்டமான பொறியியல் சாதனைகளை எல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே சாதித்துக் காட்டிய  மாமன்னன் ராஜராஜன் போற்றிக் கொண்டாடப்படுகிறான். கூடவே அவனது ஆட்சியும் ’தமிழகத்தின்  பொற்கால ஆட்சி’ என்று புகழப்படுகிறது.

தஞ்சைப் பெரியகோவிலின் கலைநுட்பமும், பொறியியல் சாதனையும் மனிதகுல வரலாற்றில் மகத்தான படைப்புகள்தான். அதே போல எகிப்தின் பாரோக்கள் கட்டிய பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும்கூட மனித வரலாற்றின் பெரும் சாதனைகள்தான். எனினும் அவை பொற்காலங்களாகக் கொண்டாடப்படுவதில்லை. கலைத்திறனைப் போற்றுவது என்பது வேறு. அரசாட்சியைக் கொண்டாடுவதென்பது வேறு.

பெரியகோவிலை எழுப்பிய ராஜராஜனின் ஆட்சியில்தான் குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை செழித்திருந்ததாகவும், வேந்தன் முன்னெப்போதும் இல்லாத வகையில் நிலங்களை  அளந்து முறைப்படுத்தி ’உலகளந்தான்’ எனும் பெயர் பெற்றதாகவும் கூறி ’தமிழனின் பொற்கால ஆட்சி’ என கலைஞர் முதல் தமிழினவாதிகள் வரை பலராலும் போற்றப்படுகிறது, ராஜராஜனின் ஆட்சி.

அன்றாடங்காச்சிகளாக வாழும் அப்பாவித் தமிழர்கள் கூட இப்பெருமிதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, ’கடாரம் கொண்டான்’ என்றும் ’சோழ சாம்ராச்சியம்’ என்றும் காதில் கேட்டமாத்திரத்தில் ’நம் தமிழனின் பெருமை’ என்று பெருமிதத்துள் வீழ்கின்றனர்.

வரலாறு நெடுகிலும், மன்னர் ஆட்சி, உழைக்கும் மக்களுக்கு கொடுங்கோல் ஆட்சியாகவே இருந்துள்ளது. இருப்பினும் அம்மன்னர்களின் வரலாற்றுப் பாத்திரம் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அசோகனின் பாத்திரமும் புஷ்யமித்திர சுங்கனின் பாத்திரமும் வேறுவேறுதான். முன்னெப்போதும் இல்லாப் பிரம்மாண்டமாக ராஜராஜன் பெரியகோவிலை எழுப்பியது ஏன்? அக்கற்றளிக் கோவிலின் கம்பீரம் மூலம் அவன் எதைச் சொல்ல நினைத்தான்?

அடிமை உழைப்பிலும் போர்க் கொள்ளையிலும் உருவான பெரிய கோவில்!

ராஜராஜனுக்கு முன்னர் நடுகல் வழிபாடுதான் தமிழ்நாட்டில் பரவி இருந்தது. அக்கம் பக்கமாக குறிஞ்சி (மலை சார்ந்த) , முல்லைப் பகுதிகளில் (காடு சார்ந்த) இருந்த வேளிர் எனும் இனக்குடிகளின் அரசுகளை ஒழித்துக் கட்டி, மருதநிலப் பரப்பில் பேரரசுகள் உருவாக்கம் பெற்ற வரலாற்றுக் காலமே ராஜராஜனின் காலம். தொடர் போர்கள் மூலம் சிற்றரசுகளை நிர்மூலமாக்கி, அவ்வரசுகளின் செல்வங்களை எல்லாம் கவர்ந்து வந்து தன் பேரரசைக் கண்டாலே அனைவரும் அச்சத்தால் உறைந்திடச் செய்யும் மாபெரும் சின்னம் ஒன்றை உருவாக்குவதும், அச்சின்னத்தையே அதிகார மையமாக மாற்றுவதுமே ராஜராஜனின் நோக்கமாக இருந்திருக்கிறது. அவ்வாறு உருவாக்கப்பட்டதுதான் பெரிய கோவில்.

சங்கம் மருவிய காலத்தின் பின் வந்த களப்பிரர் காலத்தில் வைதீகத்தின் கொட்டம் அடக்கப்பட்டு சமணம் தழைத்தோங்கி இருந்தது. களப்பிரர்களை வீழ்த்திய பாண்டியபல்லவர்கள் காலத்தில் ஆற்றுப்பாசனம் வளர்ச்சி பெற்று வேளாண் உற்பத்தி பெருகியது. சிற்றரசுகள் வீழ்த்தப்பட்டு பெருவேந்தர்கள் உருவாகும் வரலாற்றுக் கட்டத்தைச் சேர்ந்தது சோழர் ஆட்சி. கழுவேற்றி சமணத்தைக் கருவறுத்த சைவத்தின் வெற்றி, ராஜராஜனின் பேரரசு உருவாக்கத்தோடு ஒருங்கிணைந்தது. இக்காலத்தில்தான் சைவக்கொழுந்துகளான வேளாளர்களும் பார்ப்பனர்களும் கூட்டணி கட்டிக் கொண்டு அதிகார மையமானார்கள். இவர்களின் ஆட்சிக்கு பெரியகோவில்தான் மைய அச்சாக இருந்தது.

கருங்கற்பாறைகளே இல்லாததும் காவிரியாறு கொண்டு வந்து சேர்த்த வண்டலால் நிரம்பியதுமான தஞ்சைப் பகுதியில், ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம்தான் பெரிய கோவில். கட்டிடக் கலை சார்ந்த நவீன தொழில்நுட்பங்களோ, சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லாத அந்தக் காலத்தில் இத்தனை பெரிய கட்டிடத்தைக் கட்டிமுடிக்க, எவ்வளவு மனித உழைப்பு தேவைப்பட்டிருக்கும்? இந்தக் கட்டுமானப் பணியில் எத்தனை பேர் தங்களது உயிரை இழந்திருப்பார்கள்?

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தக் கோவிலை  அடிமைகளின் இலவச உழைப்புதான் உருவாக்கியது. தனது ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து போர்கள் நடத்திய ராஜராஜன் போரில் தோற்ற நாட்டு வீரர்களைக் கைதிகளாக்கிக் கொண்டுவந்து அவர்களின் உழைப்பிலேயே இக்கோயிலை எழுப்பினான். போர்க்களங்களில் இருந்து கைதிகளை மட்டுமல்ல, இக்கோவிலுக்குத் தேவையான அனைத்தையும் கொள்ளையடித்துத்தான் கொண்டு வந்தான்.

மேலைச் சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயனை வென்றபோது கைப்பற்றப்பட்ட செல்வங்களும், ஈழம், கேரளத்தின் தென் பகுதி, ஆந்திரத்தின் தென் பகுதி ஆகியவற்றை வென்று அந்நாடுகளின் கருவூலங்களைக் கொள்ளை அடித்த செல்வங்களும்தான் 216 அடிக் கற் கோபுரமாகியது. மலைநாடு எனப்படும் சேரநாட்டை வென்றபோது எடுத்து வந்த பொன் நகைகளும், பாண்டிய நாட்டை வென்றபோது கொள்ளையடித்து வந்த முத்து, பவளங்களும்தான் பெருவுடையாருக்குரிய நகைகளாயின.

சாளுக்கிய நாட்டிலிருந்து கொள்ளையிட்டு பெருவுடையாருக்கு சொந்தமாக்கப்பட்ட  87.593 கிலோ தங்க நகைகளும், சேர, பாண்டிய நாட்டுக் கொள்ளையில் கிடைத்த 95.277 கிலோ வெள்ளியும் இதில் அடக்கம். ஈழப் போரின்போது கைப்பற்றப்பட்ட  கிராமங்கள் பெரிய கோவிலுக்கான வருவாய்க் கிராமங்களாக (நிவந்தம்) விடப்பட்டிருந்தன. இவ்வாறு அண்டை நாடெங்கும் போர்தொடுத்து கொள்ளையடித்த பொருட்களால் உருவானதுதான் தஞ்சைப் பெரியகோவில்.

இக்கோவில் உருவாவதற்காக தென்னகத்தில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடிக் கொண்டே இருந்தது. காந்தளூர்  முதல் ஈழம் வரை இதற்காக ராஜராஜன் படை எடுத்துப் பேரழிவை நடத்தினான். காந்தளூரில் (இன்றைய திருவனந்தபுரத்தின் ஒரு பகுதி) சேரனைத் தோற்கடித்து, உதகை நகர் (கல்குளம் வட்டம்) கோட்டை தகர்க்கப்பட்டு எஞ்சிய நகரெங்கும் தீவைக்கப்பட்டது. இது அவனுடைய மெய்க்கீர்த்தியில் ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி’ என்று சொல்லப்படுகிறது.

அண்மையில் கண்டறியப்பட்ட கல்வெட்டில் இதன் அடுத்த வரி ‘மலையாளிகள் தலை அறுத்து‘ என்றுள்ளதாக முனைவர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். அடுத்து மேலைச் சாளுக்கிய மன்னன்  சத்தியாசிரயனைத் தோற்கடித்த போரில்  நகரங்களைக் கொளுத்தியும், குழந்தைகள் எனக்கூடப் பாராது அனைவரையும் கொன்று வெறியாட்டம் போட்டது சோழர்படை. கன்னிப்பெண்களைக் கைப்பற்றி மனைவியராக்கிக் கொண்டும் அளவற்ற பொருட்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினர்.

ஈழத்தின் மீது படை எடுத்து அந்நாட்டு அரசியையும், அவளுடைய மகளையும் கைப்பற்றி வந்தனர். புத்தசமய நினைவுச் சின்னங்களில் இருந்த பொன்னாலான உருவங்களைக் கொள்ளை அடித்தனர். இந்தப் படையெடுப்பின்போது அனுராதபுரம் நகரை தீவைத்து அழித்தனர். புது நகராக பொலனருவாவை உருவாக்கினர். ஜார்ஜ் புஷ், ஈராக்குக்கு ஜனநாயகம் வழங்கியதைப் போல ஜனநாதபுரம் என அதற்குப் பெயருமிட்டனர்.

நாட்டு மக்களைச் சுரண்டிய பெரிய கோவில் பொருளாதாரம்!

ஆகம நெறிப்படி பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கோவில்களில் தஞ்சைப் பெரிய கோவிலே முதற்கோவில் என்பர். சைவம் பரப்பும் வேலையை மட்டும் அக்கோவில் செய்துகொண்டிருக்கவில்லை. சோழர்காலத்தின் வட்டிக்கடையாகவும், நில உடைமையாளராகவும், பொற்களஞ்சியமாகவும் அரசின் அதிகார பீடமாகவும் விளங்கியது.

சோழநாட்டின் விளை நிலங்களில் பெரும்பகுதி பெருவுடையார் கோவிலுடன் இணைக்கப்பட்டிருந்தது. குடிகளிடம் இருந்து விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு கோவிலுக்கு வசூலிக்கப்பட்டது.  கோவில் நிதிக் குவியலில் (பண்டாரம்) இருந்து விவசாயிகள் தமது தொழிற்தேவைகட்கும், பெண்களுக்கு சீதனம் தரவும் கடன் பெற்றனர். பெருவுடையார் கோவில் கணக்கில் இருந்த பல்லாயிரக் கணக்கான களஞ்சு பொன்களும், காசுகளும் பெரும்பாலும் பல ஊராட்சி மன்றங்களுக்கும், சபைகளுக்கும் கடனாகத் தரப்பட்டு 12 சதவீதம் வட்டியாக  (பணமாகவோ பொருளாகவோ) வசூலிக்கப்பட்டது.

சிறிய அளவில் நிலம் வைத்திருந்த விவசாயிகட்குக் கடன் கொடுத்து விளைச்சல் இன்மையால் அவர்கள் கடன் கட்டத் தவறிய போது, அவர்களது நிலங்கள் பறிக்கப்பட்டு பெரியகோவிலுக்கு சொந்தமாக்கப்பட்டன. கடனாளியான விவசாயிகளை கோவில் அடிமைகளாக்கி, அவர்கள் முதுகில் சூட்டுக் கோலால் சூடுபோட்டு, கோவில் நிலங்களில் வேலை செய்ய வைத்தனர்.

பெரிய கோவில் இறைத் திருமேனிக்கு ராஜராஜன் அளித்தது 2.692 கிலோ தங்கமாகும். பெரியகோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து காணிக் கடனாக ஆண்டொன்றுக்கு வந்த நெல் மட்டும் 1 லட்சத்து 20 ஆயிரம் கலம். ஆண்டொன்றுக்கு கோவிலுக்கு வந்த வருவாயில் நெல் தவிர பொன், 300 களஞ்சு, காசுகள் 2 ஆயிரம் என  நாட்டின் ஒட்டுமொத்த செல்வமுமே பெரியகோவிலில் குவிக்கப்பட்டிருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கென  4 பண்டாரிகள், 116 பரிசாரகர்கள், 6 கணக்கர், 12 கீழ்க்கணக்கர் பெரியகோவிலில் பணி புரிந்தனர். கோவிலுக்கு நெல்லும், பொன்னும் கட்டாயமாகத் தரவேண்டும் என 57 கிராமங்களுக்கு ராஜராஜன் உத்தரவிட்டிருந்தான்.

அன்றாடம் இந்தக் கோவில் இயங்குவதற்கான இலவச உழைப்பும் மக்களிடம் இருந்து பெறப்பட்டது. இக்கோவிலுக்கு நுந்தா விளக்கெரிப்பதற்காக 400 இடையர்கட்கு ‘ சாவா மூவாப் பேராடுகள்’ எனும் பெயரில் ஆடு, மாடு, எருமைகள் வழங்கப்பட்டன.  ‘வெட்டிக் குடிகள்’ என அழைக்கப்பட்ட இந்த 400 பேரும் கோவிலுக்கு விளக்கெரிக்க நாளொன்றுக்கு உழக்கு நெய் கொடுக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருந்தது. கோவிலுக்குக் கொடுத்தது போக, இவர்களுக்கு ஆடுமாடுகளிடமிருந்து கிடைத்த உபரியைத் தவிர வேறு சம்பளம் கிடையாது. கால்நடைகளின் எண்ணிக்கை குறையாமல் அவற்றைப் பராமரித்து கோவிலுக்கு நெய் அளக்கும் ‘வெட்டிக் குடி’ (ஊதியம் இல்லா வேலையாட்கள்)களாக அவர்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. நெய் அளக்கத் தவறிய இடையர்களின் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெட்டிக்குடிகளைப் போன்றே பல பெண்கள், பெரிய கோவில் நெல் குற்று சாலையில் சம்பளம் இன்றி வேலை செய்ய அமர்த்தப்பட்டனர். ஆனால், பார்ப்பனர்களுக்கென்று,  வேதம் கற்க பாடசாலைகள், உணவு உறைவிட  வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டன. இப்பாடசாலை மாணவர்களுக்கு 6 கலம் நெல்லோடு 1 பொன் உபகாரச் சம்பளமாகவும் வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்தும், நிலப்பறிப்புச் செய்தும், அரசு வல்லமையால் வரி தண்டிச் சுரண்டியும்தான் பெரியகோவில் வானுயர்ந்து நின்றது.

பார்ப்பனிய நிலவுடமை ஆதிக்கத்தின் காலம்!

இவ்வாறு பெரிய கோவில் செழித்திருந்த காலத்தில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது?

பார்ப்பனரைத் தவிர அனைத்துத் தரப்பினரும் தத்தம் ஊர்களுக்கு அரசு ஏற்பாடு செய்திருந்த காவலுக்கென்று ‘பாடி காவல் வரி’ செலுத்தினர். கைத்தொழில் செய்வோர் ஒவ்வொரு தொழிலுக்கும் வரி (இறை) செலுத்த வேண்டி இருந்தது. நெசவாளர் ’தறி இறை’யும், எண்ணெய் பிழிபவர் ’செக்கு இறை’யும், தட்டார்,  தட்டாரப்பாட்டத்தையும், தச்சர், ‘தச்சு இறை’யும் வரிகளாகச் செலுத்தினர். மக்களிடமிருந்து புரவு, இரவு, குடிமை, திருமணவரி, போர்வரி எனப் பல வரிகளை அரசு வசூலித்த அதே நேரத்தில்,  ஊர், சபை போன்ற அமைப்புகளும் தனியாக வரி விதித்தன. இவ்வாறு விதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்ட வரிகளில் பெரும்பாலானவை, பார்ப்பன, வெள்ளாள சாதி தவிர்த்த பிற சாதியினரிடமிருந்துதான் வசூலிக்கப்பட்டன.

விவசாயிகள், விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை வரியாக செலுத்த வேண்டியிருந்தது. அந்த வரிக்குக் ’கடமை’ எனப் பெயரிட்டதன் மூலம்  அரசுக்கு நெல் கொடுப்பது உழவர்கள் வாழ்வின் நிரந்தரமான கடமையாக்கப்பட்டிருந்தது.  இந்த வரியை செலுத்தத் தவறினால், நிலம் பிடுங்கப்பட்டு, அந்த நிலம் ஊர்ப் பொதுவாக்கப்பட்டது.  மக்கள் பலர் பஞ்சத்தாலும் வறுமையாலும் வாடியுள்ளனர். வரிகொடுக்க இயலாதோரின் நிலங்கள் ஈவிரக்கமின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்களே அதனை விற்று பணத்தை வரியாக (இறை)க் கட்டின. நிலத்தைப் பறித்தல்தான் அன்றைய சமூக அமைப்பில் மிகப் பெரிய தண்டனையாக இருந்தது.

சோழர் ஆட்சிக்காலத்தில் அடிமை முறை இருந்துள்ளதையும் வறுமையினால் மக்கள் தம்மை கோவிலுக்கு அடிமையாக விற்றுக்  கொண்டதையும் கல்வெட்டு ஆதாரங்கள் காட்டுகின்றன. ஆறு பேர் பதின்மூன்று காசுகளுக்குத் தம்மைப் பெரிய கோவிலுக்கு விற்றுக் கொண்டுள்ளனர். நந்திவர்ம மங்கலத்தில் பதிகம் பாடுவதற்காக 3 பெண்கள் பரிசளிக்கப்பட்டனர்.  திருவிடந்தைப் பெருமாள் கோவில் எனும் ஊரிலுள்ள ஸ்ரீவராகதேவர் கோவிலுக்கு 12 மீனவர் குடும்பத்தினர்  தங்களை அடிமைகளாக விற்றுக் கொண்டிருக்கின்றனர். இதே போல நெசவாளர்களும் கோவிலுக்கு அடிமைகளாக தம்மை விற்றுக் கொண்டுள்ளனர். இவ்வடிமைகள் தங்களின் தொழில் மூலம் வரும் வருவாயில் களஞ்சுப் பொன், கோவிலுக்குத் தர வேண்டும் என்றும், ஆண்டுக்கு இருமுறை வரும் கோவில் திருநாட்களில் பணிகள் செய்யவேண்டும் என்றும் விதிகள் இருந்தன.

பார்ப்பனர் அல்லாதோரின் பஞ்சாயத்து ஆதிக்கத்திலுள்ள  கிராமங்களை ‘ஊர்கள்’ என்றழைத்தனர். ‘ஊர்களின்’   நில உரிமைகளை மாற்றியும், கோவிலுக்குக் குடிகள் கொடுக்க வேண்டிய காணிக்கடனை அதிகரித்தும் ராஜராஜன் கட்டளைப் பிறப்பித்தான்.

தங்கள் தேவைக்கென சிறு அளவில் வேளாண்மை செய்து வந்தவர்களின் நிலங்கள் அவ்வப்போது ஆட்சியாளர் களால் பறிக்கப்பட்டு, அந்த உழவர்களைக் கூலியாக மாற்றியோ (‘குடி நீக்கியா’), குத்தகையாளராக மாற்றியோ (‘குடி நீக்காமலோ’), அவர்களின் நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டன.

அரசனுக்கும், கோவிலுக்குமான பங்கான ‘மேல்வாரமும்’, குத்தகைதாரர்களின் பங்கான ‘கீழ்வாரமும்’ எடுக்கப்பட்டபின், ஊர் அறிவித்துள்ள மானியங்களை உரியவர்களுக்குக் கொடுத்த பின்பு எஞ்சியதே உழவர்களுக்குக் கிடைத்தது. இது விளைச்சலில் பத்தில் ஒருபங்கை விடக் குறைவானது. ‘மேல்வார’மாக செலுத்த வேண்டிய விளைச்சல் ஏற்கெனவே அதிகமாக இருந்ததுடன், அடிக்கடி இந்த அளவு உயர்த்தப்பட்டுக் கொண்டே போனதால் உழுபவர்க்குக் கிடைக்கும் பங்கு குறைந்து கொண்டே போனது.

இதனால் நில உடைமையாளருக்கு (கோவில்தான் உடைமையாளர்) அஞ்சி உழுகுடிகள் ஊரைவிட்டு ஓடியுள்ளனர்.   வரி அதிகமாகப் பிடுங்கியதால் தாங்கள் வெள்ளாமை செய்து குடியிருக்கப் போவதில்லை என மன்னார்குடி மக்கள் எச்சரிக்கையும் விட்டுள்ளனர். சாகுபடி செய்யாது கிடந்த நிலங்களுக்கும் வரி இருந்தது. அதை வசூலிக்கத் தவறிய புன்னைவாயில் எனும் ஊர்ச்சபை தண்டிக்கப்பட்டிருந்தது.

ஊரார் சிலரே வரி நெல்லைக் குறைத்து அளப்பதற்காக, தமது ஊர்நிலத்தில் வரி விலக்குப் பெற்றிருந்த (இறையிலி) நிலங்களின் அளவைக் கூடுதலாகக் கணக்குக் காட்ட முயன்றிருக்கின்றனர். சொந்த நிலமுடையவர்கள் கூட தங்கள் நிலத்தை வரியில்லா நிலங்கள் எனக் கணக்குக் காட்டி அனுபவித்து வந்தனர்.  கோவிலின் சுரண்டலில் இருந்து எவ்வாறெல்லாம் தப்பலாம் எனத் திட்டமிட்ட குடிமக்கள்,  மகிழ்ச்சியுடன் வரி செலுத்தி இருக்கக்கூடுமா?

பார்ப்பனர்கள் நிறைந்துள்ள ஊர்களில் மற்ற சாதியினர் யாரும் நிலவுடைமையாளராக இருப்பின் அவர்கள் நிலங்களை விற்றுவிடச் சொல்லி ராஜராஜன் ஆணை பிறப்பித்தான். அந்நிலங்களை ராஜராஜனின் தமக்கை குந்தவை விலைக்கு வாங்கி கோவிலுக்கு சொந்தமாக்கினாள். இவ்வாறாக பார்ப்பனர் ஊர்களில் பார்ப்பனரல்லாதோரின் நில உரிமை பறிக்கப்பட்டு அவர்கள் உழுகூலிகளாகத் தாழ்த்தப்பட்டனர்.

இவ்வாறு கோவிலைச் சார்ந்து பிறப்பிக்கப்படும் நிலப்பறிப்பு, வரி விதிப்பு போன்ற ஆணைகளை யாரேனும் உழவர்கள் எதிர்த்தால் அவர்கள், ‘சிவத்துரோகி’ எனப் பட்டம் கட்டி அடக்கப்பட்டனர்.

விவசாயத் தொழிலாளர்கட்கு நெல் கூலியாக அளக்கப்பட்டது. நெல் அளப்பவரின் பதவிப் பெயர் ‘கருமி’. இன்றளவும் அச்சொல் மக்கள் மத்தியில் கஞ்சத்தனத்திற்கு மாற்றாகச் சொல்லப்படுவதிலிருந்தே சோழர் காலத்தில் தொழிலாளர்கள் எவ்வாறெல்லாம் வயிற்றில் அடிக்கப்பட்டிருப்பர் என்பதைப் புரிந்துகொள்ளமுடியும்.

சேரிகள், அடிமை விபச்சாரம்: ராஜராஜ சோழனின் சாதனை!

ராஜராஜன், 400க்கும் மேற்பட்ட பெண்களை வலுவில் கொணர்ந்து உடம்பில் சூடு போட்டு ‘தேவரடியார்களாக’ மாற்றினான். இப்பெண்கள் கோவிலின் பணிகளோடு நிரந்தரமாகப் பிணைக்கப்பட்டனர். இறைவனின் பெயரால் விபச்சாரத்தைப் புனிதமாக்கி தஞ்சையில் ‘தளிச்சேரி’யை உருவாக்கினான்.  கோவில் அடிமைகளென கட்டாயப்படுத்தி இழுத்து வரப்பட்ட இப்பெண்கள், அரசனின் அந்தப்புரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடுமைகளும் சோழப் பொற்காலத்தில்தான் நிகழ்ந்தன. கோவில் பூசகர்கள், பெருநிலவுடமையாளர்களின் காமவெறிக்குப் பலி கொடுக்கப்பட்ட ‘தேவரடியார்’ குலப் பெண்களின் ஆயிரம் ஆண்டுகாலக் கொடுமையை 1929 இல் சுயமரியாதை இயக்கமும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும் போராடி சட்டம் மூலம் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

‘தமிழ்மறை மீட்டான்’ என சைவக் கொழுந்துகளால் போற்றப்படும் ராஜராஜன், தமிழ்மறைகளை ஒளித்து வைத்துக் கொண்டு சமயக்குரவர் நால்வரும் வந்து கேட்டால்தான் தருவோம் என தில்லை தீட்சிதர்கள் மிரட்டியபோது பம்மிப் பதுங்கி சமயக்குரவர்களின் தங்கச்சிலைகளைச் செய்து அவர்களுக்குத்  தானம் தந்து மீட்டானே ஒழிய, தளிச்சேரிப் பெண்டிர் மீது ‘சூடு’ போட்ட ‘வீரத்தை’ தீட்சிதரிடம் காட்டவில்லை. “சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடுவோம்” என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மிரட்டியபோது ‘செம்மொழிகொண்டானின்’ அரசு ‘அனைத்துத் தரப்பினரின் நலன்களும் காக்கப்படும்’ எனக் கெஞ்சியதே, ராஜராஜன் காட்டியதும் அதே வீரம்தான்.

தமிழ்நாட்டில் கிடைத்த கல்வெட்டுக்களில் தீண்டாமை பற்றிய முதல் குறிப்பே ராஜராஜனின் ஆட்சிக்காலத்தில் வந்துள்ளது.   வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர், இவன் காலத்தில்  ஊருக்கு வெளியே தீண்டாச் சேரியும், பறைச்சேரியும் இருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஒவ்வொரு சாதிக்கும் தனித் தனிச் சுடுகாடுகள் இருந்தன.

தாழ்த்தப்பட்ட சாதி அடிமைகள் சாகுபடி நாட்களில் சகதியில் உழல்வதும் மற்ற நேரங்களில் கல்லுடைப்பதும், பல்லக்கு சுமப்பதும் கட்டாயமானது. ராஜராஜனின் பொற்காலம் பற்றிப் பேசுபவர்கள் அவன் காலத்தில் இருந்த தீண்டாமைக் கொடுமையைப் பற்றியோ, சாதிகளால் மக்கள் பிரிந்து கிடந்ததைப் பற்றியோ பேசுவதே இல்லை.

கோவிலை மையமாகக் கொண்ட சோழர் கால அதிகார அமைப்பில் சாதிவாரிக் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப்பட்டன.  பார்ப்பன, வெள்ளாள நிலவுடைமை ஆதிக்க சாதிகள் ஒருபுறமும் விவசாயத் தொழிலாளிகள், அடித்தட்டு உழைப்பாளர் மற்றும் உடைமை,உரிமை அற்ற சமூக அடிமைகளாக கடைச் சாதி தீண்டப்படாதோர் மறுபுறமுமாக சமூகமே பிரிந்து கிடந்தது.

பொற்காலத்தில் கொழித்த பார்ப்பனர்களும், ஆண்டைகளின் ஜனநாயகமும்!

ராஜராஜனின் ‘பொற்கால ஆட்சி’யை அனுபவித்தவர்கள் யார்? தீட்சிதப் பார்ப்பனர்கள் தனக்கு பட்டம் சூட்ட மறுத்ததால் பீகார் பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பார்ப்பனர்களை சோழநாட்டிற்கு அழைத்து வந்து ராஜராஜன் அவர்களைக் குடியேற்றினான். தமிழக மன்னர்களின் வரலாற்றில் முதன்முதலாக ராஜகுரு என்றொரு பதவியை உருவாக்கி, ஈசான சிவப் பண்டிதர் எனும் காஷ்மீரப் பார்ப்பனரை அப்பதவியில் நியமித்தான்.  பின்னர் பார்ப்பனர்களே இப்பதவிக்கு வருவது மரபாக்கப்பட்டது.  ராணுவப் படையெடுப்பு போன்றவற்றை தான் கவனித்துக் கொண்டு, குடிமக்கள் நிர்வாகத்தை ராஜகுருவின் ஆலோசனைக்கு விட்டிருந்தான்.

பிரம்மதேயம் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டன.  அகரங்கள், அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் எனப்படும் தனிக் கிராமங்கள், கோவில்கள், மடங்கள் ஆகியவை அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.  250 ஊர்கள் சோழர் காலத்தில் பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன.  இந்தியச் சட்டங்கள் எவையும் செல்லுபடியாகாத இன்றைய சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போன்றே , குற்றவிசாரணைக்காகக்கூட அரசப்படையினர் இத்தகைய ‘மங்கலங்களின்’ உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது.

குடவோலை முறை எனும் ஜனநாயகமுறை சோழர் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுவது ஒரு இமாலயப்பொய். ஊர்ச்சபைகளைத் தேர்ந்தெடுக்க ஓலைகளில் வேட்பாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டு ஒரு குடத்துக்குள் அவ்வோலைகள் போடப்படும். பின்னர் குடத்துக்குள் கையை விட்டு எடுக்கப்படும் ஓலையில் வரும் பெயருக்குரியவர் சபைக்குத் தேர்வு செய்யப்படுவார். இந்த திருவுளச்சீட்டு ஜனநாயகத்தில் வேட்பாளராக நிற்பதற்கு வேதம் கற்றிருக்க வேண்டும், நில உடைமையாளராக இருக்க வேண்டும் என்ற இரு தகுதிகள் வைக்கப்பட்டிருந்தன.

வேதக் கல்வி பார்ப்பனர்களுக்கு மட்டுமேயான உரிமையாக இருந்ததால், பார்ப்பன  நிலவுடைமையாளர்கள் மட்டுமே ஊர்ச்சபைக்குத் தேர்வு செய்யப்பட்டனர். இதுதான் குடவோலை முறையின் யோக்கியதை. அதுமட்டுமல்ல, நிலவுடைமையாளர்களான பிராமணர்கள் மட்டுமே பெருவுடையார் கோவிலின் நிதி நிர்வாகிகளாக (பண்டாரி) இருக்க முடியும் என்று ராஜராஜன் ஆணை பிறப்பித்திருந்தான்.

பார்ப்பனர்களுக்கு தன் எடைக்கு எடை (துலாபாரம்) தங்கமும், தானியமும் பலமுறை தானமாகத் தந்தான் ராஜராஜன். அதுமட்டுமல்ல, அவனும் அவனது  தமக்கை குந்தவையும் தமது ‘பிறவி இழிவு நீங்கி’ சொர்க்கம் செல்வதற்காக, தங்கத்தால் பசுமாடு ஒன்றைச் செய்து, அதன் வயிற்றுக்குள் சென்று வந்த பின்னர், அந்த தங்கப் பசுவை பார்ப்பனர்க்கு தானமாகத் தந்துவிடும் ஹிரண்யகர்ப்ப தானம் செய்தனர்.

மண்ணும் பொன்னும் தந்து பார்ப்பனர்களை மகிழ்வித்த ராஜராஜன், தனது அரசாட்சியிலும் பார்ப்பன நீதிமுறைகளையே பின்பற்றினான். தனது அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்த பார்ப்பனர்களைக்கூட அவன் தண்டிக்கவில்லை. சோழ எல்லை தாண்டி சேர நாட்டிற்கு நாடுகடத்தினான். “கொலைக்குற்றம் செய்தாலும் பார்ப்பனர்களுக்கு மரணதண்டனை தரக்கூடாது” என்ற மனுதரும விதியைத் தனக்கே பிரயோகித்துக் கொண்ட மன்னன், மக்கள் மீது அவ்விதியை எங்ஙனம் நிலைநாட்டியிருப்பான் என்பதை யாரும் புரிந்துக் கொள்ளலாம்.

சோழநாட்டின் ஊர்களில் நிலம், ஊருக்குப் பொதுவாயினும், அவை கோவிலுக்குச் சொந்தமாக்கப்பட்டு, அதில் வேளாளரின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. விளைநெல்லில் பெரும்பங்கு, குத்தகை உரிமையாகவும் (காராட்சி) கோவிலுக்காக மேற்பார்வை  ஊதியமாகவும் (மீயாட்சி) வேளாளருக்கு மட்டுமே கிடைத்தது.

வேளாளர் தம் மேற்பார்வையில் இருந்த நிலங்களில்  ‘காராட்சி’, ‘மீயாட்சி’ப் பங்குகளை முன்னிலும் அதிகமாக வசூலித்தபோது பயிரிட்ட குடிமக்கள் கிளர்ச்சி செய்துள்ளனர். இந்த வேளாளர் பங்குகளுக்கு மன்னன் உச்சவரம்பு நிர்ணயிக்காததால், உழுகுடிகளையும் விவசாயக் கூலிகளையும் வேளாளச் சாதியினர் வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்தனர். ராஜராஜனின் காலம் மட்டுமின்றி, சோழர் காலம் முழுவதுமே வேளாளர், பார்ப்பனக் கூட்டணிக்கு பெருவாழ்வைத் தந்த பொற்காலமாக இருந்தது.

களப்பிரர் காலம்: உழைக்கும் மக்களின் பொற்காலம்!

ராஜராஜனது பொற்காலத்தை விதந்தோதும் சதாசிவ பண்டாரத்தாரில் இருந்து கருணாநிதி வரை தமிழக வரலாற்றில் இருண்டகாலமாக ‘களப்பிரர்’ காலமிருந்ததெனக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. அந்த ‘இருண்டகாலத்தை’ புரிந்து கொண்டால்தான் சோழர் பொற்காலத்தின் மகிமையை விளங்கிக் கொள்ள இயலும்.

களப்பிரர்களின் ஆட்சிக்காலத்துக்கு (கி.பி. 4 முதல் 6 ஆம் நூற்றாண்டுவரை)முந்தைய சங்கக் காலத்தில் (கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரை) விவசாய உற்பத்தி வளர்ச்சி பெற்று முற்காலப்பாண்டியர்களின் அரசு உருவாகி வந்தது. நிலவுடைமை என்பது பொதுவில் இருந்த வேளிர்களின் காலம் அது. பாண்டிய ஆட்சியின்போது விவசாயமயமாக்கல் தீவிரப்படுத்தப்பட்டு விளிம்புகளிலிருந்த இனக்குழு சமூகம் விவசாய விரிவாக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் உபரி உறிஞ்சப்பட்டது. அவர்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாக்கப்பட்டன. அரசனுக்கான வரியாக இனக்குழுக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டது. இதனை எதிர்த்து கிளர்ந்தெழுந்த இனக்குழு சமூகங்களின் எழுச்சி தமிழகமெங்கும் 300 ஆண்டுகள் தொடர்ந்தது.  களப்பிரர் ஆட்சிக்காலமாகக் குறிப்பிடப் படும் காலம் இதுதான்.

இக்காலத்தில் நிலங்கள் மீண்டும் ‘பொது’வாக்கப்பட்டன. பார்ப்பனர்களுக்குத் தானமாகத் தரப்பட்ட நிலங்கள் பறிக்கப்பட்டன. இந்த ‘இருண்ட’ காலத்தில்தான் தமிழிலக்கிய வளர்ச்சி உச்சத்தில் இருந்தது. மணிமேகலை, சீவக சிந்தாமணி, எலி விருத்தம், கிளி விருத்தம், கார் நாற்பது, இனியவை நாற்பது போன்ற இலக்கிய நூல்களும், விருத்தம், தாழிசை போன்ற பாவகைகளும், உரை நூல்களும் உருவாக்கப்பட்டன. தமிழுக்கு வச்சிரநந்தி தலைமையில் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டு தமிழ் இலக்கியம் வளர்ச்சி பெற்றது. வைதீகத்தை வீறுகொண்டு எதிர்த்து, ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பிரகடனம் செய்த  திருக்குறளும் களப்பிரர் காலத்தில்தான் இயற்றப்பட்டது. தமிழகமெங்கும் பவுத்தமும் சமணமும் தழைத்தோங்கியிருந்த காலமும் இதுதான்.

இந்த ‘இருண்டகால’த்தைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் வீழ்த்தினர். இனக்குழுக்களின் பொது நிலத்தை மீண்டும் பறித்து, பார்ப்பனர்களுக்கு தானமாக வழங்கினர். நிலத்தின் மீது நிலவிய பொதுவுடைமையை நீக்கியதனாலேயே ‘பொது நீக்கி’ என்று இம்மன்னர்கள் புகழப்பட்டனர்.

இன்று மண்ணின் மைந்தர்களான இருளர்கள் வீடுகட்ட நிலம் கேட்டால் தடியடியால் பதில் சொல்லும் ‘ஆரூர்ச் சோழனின்’ ஆட்சி, ஆயிரக்கணக்கான ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலங்களைப் ‘பொது நீக்கி’ ஹூன்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரிவழங்கிக் கொண்டிருக்கிறதே, அதே போன்ற ‘பொது நீக்கி’ய அரசைத்தான் பல்லவர்களும் பாண்டியர்களும் நிறுவினார்கள்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சதுர்வேதி மங்கலங்களாக்கப்பட்ட பொது நிலங்கள், மிகப்பெரும் அளவில் பார்ப்பனர்களுக்கு தானமாகவும் வேளாளர்களுக்கு தனி உடைமையாகவும் ஆக்கப்பட்டது ‘மா’மன்னன் ராஜராஜனின் ஆட்சியில்தான். பழங்குடி மக்களை அடித்து விரட்டிவிட்டு, மலைகளையும் காடுகளையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கின்றன இன்றைய ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்கள்.

ராஜராஜனின் காலத்திலும் அவன் வாரிசுகளின் காலத்திலும் தேவதானம், பள்ளிச் சந்தம், இறையிலி எனும் பெயரில் செப்பேடுகளில் பதியப்பட்டன. செழிப்பான காவிரிப் பாசன நிலங்களின் மீது, வேளாளர், பார்ப்பனக் கூட்டணியின் பிடி இறுகியது. ஏனைய சாதிகள் உழைக்கும் கூலிகளாக மாற்றப்பட்டனர். வானுயர நிற்கும் பெருவுடையார் கோவிலின் அடித்தளத்தில், பொற்காலப் புரட்டில் புதைந்திருக்கும் உண்மை இதுதான்.

வடக்கே மகதப் பேரரசின்  அசோகனின்  ஆட்சிக் காலத்தில் பார்ப்பன வேள்விகள் ஒட்டுமொத்தமாகத் தடை செய்யப்பட்டன. தெற்கே களப்பிரர் ஆட்சிக்காலத்திலோ பார்ப்பனர்களுக்குத் தரப்பட்டிருந்த தேவதானங்கள் பறிக்கப்பட்டு, நிலங்கள் பொதுவாக்கப்பட்டன.

பவுத்தமன்னர் பிருகதத்தரின் ஆட்சியை வீழ்த்த கிளர்ச்சி செய்து, வட இந்தியாவில் பார்ப்பன மீட்சியை உருவாக்கியவன், பார்ப்பனத் தளபதி புஷியமித்திர சுங்கன். அதேபோல தமிழகத்தில் களப்பிரரை வீழ்த்தி, ‘பொது நீக்கி’, பவுத்தத்தையும் சமணத்தையும் ஒழித்து சைவத்தை நிலைநாட்டி, பார்ப்பனியத்துக்குப் புத்துயிர் கொடுத்தவர்கள்தான் பல்லவ, பாண்டியர்கள். இந்தப் பார்ப்பன மீட்சியின் உச்சத்தையே தொட்டவன் ராஜராஜன்.

தமிழின் மாபெரும் படைப்புகள், புதிதாகப் படைக்கப்பட்ட பாவினங்கள், விருத்தங்கள், அறநூலின் உச்சமான திருக்குறள் என  களப்பிரர் கால இலக்கியங்கள் எண்ணற்றவை. சோழர் காலத்தில் உருவான இலக்கியங்கள் யாவை?

சோழர் காலம் பொற்காலமா, பார்ப்பனிய மீட்சிக் காலமா?

இன்று கருணாநிதிக்கு சூட்டப்படும் சமத்துவப் பெரியார், வாழும் வள்ளுவர் போன்ற எண்ணற்ற அடைமொழிகளைப் போலவே சோழர்களும் அடைமொழி சூடினார்கள். இன்று கருணாநிதியின் துதிபாடுவதற்காகவே நடத்தப்பட்டும் சொறியரங்குகளைப் போலவே, அன்றைய ‘மெய்க்கீர்த்தி’களும், ‘உலா’, பரணிகளும்தான் சோழர்களைச் சொறிந் தன. வருணாசிரமத்தை கடுமையாக எதிர்த்த திருக்குறளின் பொருளைத் திரிப்பதற்கு சோழர்கள் காலத்தில் பல உரையாசிரியர்கள் தோன்றினார்கள். வேதங்களையும், வேள்விகளையும் கண்டித்து, பிறப்பினால் அல்ல, ஒழுக்கத்தினாலேயே மனிதனுக்கு உயர்வு வரும் என்று கற்பித்த வள்ளுவரின் குறளையே திரித்துப் பரிமேலழகர் எனும் பார்ப்பனர் ‘நால் வருணத்தார் தத்தமக்கு விதிக்கப்பட்ட ஒழுக்கங்களில் வழுவாது நிற்க’ என்று சோழர்காலத்தில்தான் உரை எழுதினார்.

சோழர் காலத்துக்கு முந்திய நிலையை ஜெயங்கொண்டார் (சோழர் காலம்) கலிங்கத்துப் பரணியில் ‘மறையவர் வேள்வி குன்றி, மனுநெறிக் குலைந்து, சாதிகள் கலப்புற்றதாக’ப் பாடியுள்ளார். இவற்றை எல்லாம் மீண்டும் தலைகீழாக மாற்றி மனுநெறியை நிலைநாட்டியதுதான் சோழர்களின் ‘சாதனை’.

சோழ மன்னர்கள் சிங்களம், மலைநாடு, கங்கம், மாலத்தீவெல்லாம் படையெடுத்துச் சென்று தலை அறுத்துக் கொண்டிருந்தார்கள். தலையறுத்துக் கொள்ளையடித்த பொன்னையும் பொருளையும் கொண்டு, கோவில்கட்டுவதற்காக மக்களைக் கல்லறுக்கப் பணித்தார்கள். சற்சூத்திரர்களின் ‘ஊர்’களும், பார்ப்பனர்களின் ‘பிரம்மதேயங்களும்’ பார்ப்பன ராஜகுருவின் ஆலோசனைக்கும் ஆணைக்கும் கட்டுப்பட்டே இருந்தன. உழுகுடிகளை ஒட்டச் சுரண்ட பெரியகோவிலும் வட்டாரக் கோவில்களும் இருந்தன.

இதனைப் பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள். இவற்றையெல்லாம் யாரும் சிந்தித்து விடாதிருக்க, ‘கங்கை கொண்டான்’, ‘கடாரம் கொண்டான்’ என்று மாற்றான் தோட்டத்தில் தாலி அறுத்து வந்து தமிழ்நாட்டில் கோபுரம் கட்டியிருப்பதை அண்ணாந்து பார்க்கச் சொல்கிறார்கள். நாம் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே நம் காலடி மண்ணை ‘இறையிலி’ ஆக்கி ஏகாதிபத்தியங்களின் ‘மங்கலங்களாக’ மாற்றிக் கொண்டிருக்கிறது, கருணாநிதி அரசு.

வைதீக மதத்தை எதிர்த்து நின்ற புத்தர் பரிநிர்வாணம் அடைந்ததன் 2550 ஆம் ஆண்டை பத்தோடு பதினொன்றாக அனுசரித்த திமுக அரசு, பார்ப்பனதாசனான ராஜராஜனை மட்டும் கோலாகலமாகக் கொண்டாடக் காரணம், கருணாநிதி தன்னை ராஜராஜனுடன் இனம் காண்கிறார் என்பதுதான்.

சநாதன தர்மம் என்று சொன்னாலே காறித் துப்பிய காலம் ஒன்று இருந்தது. அதுதான் சுயமரியாதை இயக்கக் காலம். அந்தக் காலத்தை ‘களப்பிரர் காலத்தோடு’ ஒப்பிடலாம் என்றால், அதனை முனை மழுங்கவைக்க குல்லுகப்பட்டருடன் கூட்டு சேர்ந்த காஞ்சித்தலைவன் அண்ணா தான், பார்ப்பன மீட்சிக்கு அடிக்கொள்ளி வைத்த  நரசிம்ம பல்லவன்.  மவுண்ட்ரோடு மகாவிஷ்ணுவிடமும் தினமலரிடமும் நல்ல பெயரெடுக்கத் துடிக்கும் ‘திருவாரூர் சோழன்’தான்,  பார்ப்பனர்களுக்கு பொற்கால ஆட்சி தந்த ராஜராஜன்.

விந்தியம் கடந்து வந்த பார்ப்பனர்களுக்கு உள்ளூரின் விளைநிலங்கள் எல்லாம் ‘வரி நீக்கி’அவன் வழங்கியதைத்தானே, தேசம் கடந்து வரும் கம்பெனிகளுக்கு ‘வரி நீக்கி’ வழங்குகிறார் கருணாநிதி.

கோவிலின் ஆணைகளை எதிர்த்தவர்களுக்கு  ‘சிவத்துரோகி’ப் பட்டம் என்றால் உலகவங்கி ஆணைகளை நிறைவேற்றும் அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு இன்றோ ‘தேசத்துரோக’ வழக்கு.

பீகார் பார்ப்பனர்களை தமிழ்நாட்டுக்கு வரவழைத்து வாழவைத்த ராஜராஜனின் வரலாறும், பார்ப்பனிய பாஜக வைத் தமிழகத்திற்கு இழுத்து வந்து காலூன்ற வைத்த கலைஞரின் வரலாறும் வேறுவேறா என்ன? அன்று ஊருக்கு வெளியே ஒதுக்கப்பட்ட  தீண்டாச் சேரியை @பால்தானே, இன்று எழில்மிகு சென்னைக்கு வெளியே துரத்தப்படும் உழைக்கும் மக்களுக்காக இக்காலச் சோழன் ஒதுக்கும் செம்மண்சேரி?

இன்று ராஜராஜனை ‘மாமன்னன்’ என்றும் அவனது ஆட்சி ‘தமிழனின் பொற்காலம்’ என்றும் புகழ்பவர்கள் “அக்காலத்தில் ஒரு மன்னன் அப்படித்தான் இருந்திருக்க முடியும்” என்று நியாயப்படுத்துகின்றனர். வரலாற்றில் கீதையும் இருந்தது. அதே காலத்தில் அதனை எதிர்த்து நின்ற பவுத்தமும் இருந்தது. அசோகன் இருந்தான். பவுத்தத்தை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கனும் இருந்தான். பார்ப்பனர்க்கு தனிச் சலுகை நீக்கி நிலங்களைப் பொதுவாக்கிய களப்பிரர் இருந்தனர்.  பொதுவை நீக்கி பார்ப்பனதாசனாக வாழ்ந்த ராஜராஜனும் இருந்தான்.

கீதையா, பவுத்தமா? அசோகனா, சுங்கவம்சமா? களப்பிரரா, ராஜராஜனா? நாம் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி.

___________________________________________________

ஆதாரங்கள்:

  1. சதாசிவ பண்டாரத்தார்,
  2. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி,
  3. மயிலை சீனி.வேங்கடசாமி,
  4. குடவாயில் பாலசுப்ரமணியம்,
  5. நா.வானமாமலை, பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ்,  ஆ.சிவசுப்பிரமணியன், தொ.பரமசிவன் ஆகியோரது நூல்கள் மற்றும் கட்டுரைகள்.

_______________________________________

புதிய கலாச்சாரம் – டிசம்பர் – 2010
_______________________________________

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் ஜனவரி 2011 இதழ்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1.       ஸ்பெக்ட்ரம்: கொள்ளையே கொள்கை!

2.       ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!!

3.       சுக்ராம் முதல் ராசா வரை… அம்பானி முதல் டாடா வரை… – டெலிகாம் ஊழலின் வரலாறு

4.       கமாஸ் வெக்ட்ரா ஊதிய ஒப்பந்தம்: தொழிலாளர் வர்க்க ஒற்றுமையின் வெற்றி!

5.       தோழர் சதாசிவத்தின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

6.       தனியார்மயம்: ஊழலை உற்பத்தி செய்யும் சாக்கடை

7.       கார்ப்பரேட் கொள்ளைக்கேற்ற அரசின் கொள்கைகள்!

8.       ராடியா விவகாரம்: “லாபியிங்” சட்டபூர்வமாகிறது! ஊழல் ஒழிகிறது!!

9.       அயோத்தி தீர்ப்புக்கு எதிராக… -புரட்சிகர அமைப்புகளின் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், கருத்தரங்கம்.

10.   காக்கை, குருவிகளா விவசாயிகள்?

11.   – மின்சார வாரியத்தின் அலட்சியப் போக்கை அம்பலப்படுத்தி வி.வி.மு. ஆர்ப்பாட்டம்.

12.   உச்ச நீதிமன்றம்: ஆளும் வர்க்கம் அணைத்தும் போட்ட பீடி!

13.   கார்ப்பரேட்  கொள்ளை – ஊழல் மறைந்துள்ள உண்மைகள்!

14.   கோவை என்.டி.சி. தொழிற்சங்கத் தேர்தல்: பு.ஜ.தொ.மு. மாபெரும் வெற்றி!

புதிய ஜனநாயகம் ஜனவரி 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

__________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் !

32
Marudhiyan

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை!
கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!!

“பாசிசம் என்பதை கார்ப்பரேடிசம் என்ற சொல்லால் அழைப்பதே மிகவும் பொருத்தமானது. ஏனென்றால், பாசிசம் என்பது தனியார் குழும முதலாளித்துவத்தின் அதிகாரம், அரசு அதிகாரம் ஆகியவற்றின் ஒன்றிணைவைக் குறிக்கிறது”

என்று தனது கொள்கையான பாசிசத்துக்கு விளக்கம் அளித்தான் முசோலினி.
‘ஜனநாயகம்’ என்ற சொல்லிலிருந்து குடிமக்களின் உரிமைகள் மென்மேலும் அகற்றப்பட்டு, அவற்றின் இடத்தில் கார்ப்பரேட் அதிகாரம் கோலோச்சத் தொடங்கியிருக்கும் இன்றைய சூழலில், முசோலினி வகுத்த இலக்கணத்திற்கு மிகவும் அண்மையில் இருக்கிறது இந்திய அரசு. எனினும், கார்ப்பரேட் அதிகாரம்தான் ஜனநாயகம் என்ற புதிய தாராளவாதக் கருத்து உலகெங்கும் கோலோச்சுவதாலும், ஜனநாயக அங்கியைக் கழற்றி வீசாமலேயே தமது நோக்கத்ததை நிறைவேற்றிக் கொள்ள இயலும் என்று இந்திய ஆளும் வர்க்கங்கள் தமது அனுபவத்தில் உணர்ந்திருப்பதாலும், இந்திய ஜனநாயக சீரியல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சுயேச்சையான, நடுநிலையான  அரசு அதிகாரம் நிலவுவதைப் போன்ற தோற்றம் தொடர்ந்து பேணப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் கொள்ளை தொடர்பாக, அரசு அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ராசா ஆகியோரது வீடுகள் சோதனையிடப்படுகின்றன. டாடா குழுமத்தின் அதிகாரத் தரகராகப் பணியாற்றி, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பொதுச்சொத்தை கொள்ளையடிப்பதற்கு டாடாவுக்குத் தரகு வேலை பார்த்த நீரா ராடியா, ராசா மற்றும் அதிகாரிகளின் வீடுகளும் நிறுவனங்களும் சோதனையிடப்படுகின்றன. இவர்களையெல்லாம் சி.பி.ஐ., ‘துருவித்துருவி’ விசாரிக்கிறது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டியவர்களும், இந்தக் கொள்ளையைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர்களுமான டாடாவோ பிற தரகு முதலாளிகளோ விசாரிக்கப்படவில்லை. அவர்களது நிறுவனங்களை சி.பி.ஐ. சோதனையிடவும் இல்லை.

எனினும், தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் வெளியிடப்பட்டுவிட்டதனால் தனது உயிர்வாழும் உரிமை பாதிக்கப்பட்டுவிட்டதாக டாடா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து பாரம்பரியமிக்க இந்தியத் தொழிலதிபர்கள் பெரிதும் வேதனை அடைந்திருப்பதாகவும், அவர்களையெல்லாம் அரசு உடனே சமாதானப்படுத்த வேண்டுமென்றும் இல்லையேல், தமது முதலீடுகளையெல்லாம் வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றுவிடுவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார் எச்.டி.எஃப்.சி. என்ற பன்னாட்டு வங்கியின் தலைவர் தீபக் பரேக்.

பிரதமரும் பெரும் விசனத்துக்கு ஆளாகியிருக்கிறார். தொலைபேசி ஒட்டுக்கேட்புகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தோற்றுவித்துள்ள அச்சத்தைப் புரிந்து கொள்வதாகவும், அதனைப் போக்குவதற்கு ஆவன செய்வதாகவும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். ‘லாபியிங் செய்வது ஜனநாயக உரிமை’ என்றும் அதனை முறைப்படுத்துவதற்கு ஆவன செய்வதாகவும் முதலாளிகளுக்கு உறுதியளித்திருக்கிறார், கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித். புதிய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல், ஸ்பெக்ட்ரம் கொள்ளையின் நாயகர்களான டாடா, அனில் அம்பானி, மிட்டல் ஆகியோரை நேரில் சந்தித்து தொலைதொடர்புக் கொள்கை வகுப்பது குறித்த அவர்களது ஆலோசனைகளைக் கேட்டறிந்திருக்கிறார்.

இப்படி ஊழல் நதியின் ஊற்றுமூலமான கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் சந்நிதியில் மன்மோகன் சிங் அரசு மண்டியிட்டுக் கொண்டிருக்க, அந்த ஊழல் ஊற்றிலிருந்து வழிந்தோடிய சாக்கடைகளான ராடியாவையும், ராசாவையும், இன்ன பிறரையும் சி.பி.ஐ., தூர் வாரிக்கொண்டிருக்கும் கேலிக்கூத்து பரபரப்பு செய்தியாக அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இது மட்டுமல்ல; ஊழல் குறித்த விவாதங்கள் அனைத்தும் தனியார்மய-தாராளமயக் கொள்கைகளுக்கு ஆதரவான திசையில் திட்டமிட்டே கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய ஊழல்கள்தான் தனியார்மயக் கொள்கைகளுக்கும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், முதலாளிகளுக்குச் சோர்வை ஏற்படுத்துவதாகவும், எனவே இத்தகைய ஊழல்கள் உடனே ஒழிக்கப்பட வேண்டும் என்றும் சாமியாடுகிறார்கள் முதலாளித்துவ அறிஞர்கள். இத்தகைய மெகா ஊழல்களைச் சாத்தியமாக்கிய தனியார்மயக் கொள்கையும், இந்த ஊழல்களால் பல்லாயிரம் கோடி ஆதாயம் அடைந்த தரகு முதலாளிகளுமே ‘பாதிக்கப்பட்டவர்கள்’ போலச் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ராடியா, கனிமொழி, ராசா போன்றவர்களின் கையில் சிக்கி இந்திய ஜனநாயகம் சிரிப்பாய்ச் சிரிப்பதாகவும், டாடாவைப் போன்ற பாரம்பரியமிக்க கவுரவமான தொழிலதிபர்கள் இந்த நாலாந்தர மனிதர்களிடம் விவரம் தெரியாமல் சிக்கிச் சீரழிந்து நிற்பதாகவும் சித்தரிக்கிறார் “சோ” ராமஸ்வாமி. தனது தமிழ் வெறுப்பு, திராவிட வெறுப்பு, சாதித் துவேசம் ஆகியவற்றை வன்மத்துடன் வெளியிடுவதற்கான நல்வாய்ப்பாகவும் தி.மு.க.வினரின் இந்தக் களவாணித்தனத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், பார்ப்பன-இந்திய தேசியவாதிகள்.

மொத்தத்தில் இந்த ஊழலின் சூத்திரதாரிகளான கார்ப்பரேட் கொள்ளையர்களை ஊழல் எதிர்ப்பாளர்களைப் போலவும், ஊழலால் பாதிக்கப்பட்டவர்களைப் போலவும் சித்தரிக்கின்ற இந்த மோசடிதான் எல்லா ஊழல்களையும் காட்டிலும் பெரிய ஊழலாகும்.

பொதுச்சொத்தை  அம்பானி திருடினால், அது திறமை!
ஆ.ராசா திருடினால், அது ஊழலாம்!

இந்தியாவின் தேர்தல் அரசியலில் ஒரு கட்சிக்கோ தலைவருக்கோ எதிரான பொதுக்கருத்தையும், அறம் சார்ந்த வெறுப்புணர்ச்சியையும் மக்கள் மத்தியில் உருவாக்குவதில் ‘ஊழல்’ என்பது மிக முக்கியமான கருவியாக இருந்துவந்திருக்கிறது.  தனியார்மய, தாராளமய கொள்கைகளுக்கு ஆதரவாக மக்கள் மத்தியில் வலிமையானதொரு பொதுக்கருத்தை உருவாக்குவதற்கு ஆளும் வர்க்கம் பயன்படுத்திய மிக முக்கியமான ஆயுதமும் ‘ஊழல்’ தான். “அரசுத்துறை என்றால் ஊழல், தனியார் துறை என்றால் நேர்மை; அரசுத்துறை என்றால் திறமையின்மை, அலட்சியம்; தனியார்துறை என்றால் திறமை, பொறுப்புணர்ச்சி” என்ற கருத்தினைப் பரப்பி, அவற்றின் மீது சவாரி செய்துதான் அரசுத்துறைகளை விழுங்கும் தனது நோக்கத்துக்கு ஆதரவான பொதுக்கருத்தைத் தரகு முதலாளி வர்க்கம் உருவாக்கியது. நகராட்சி, மின்வாரியம், வட்டாட்சியர் அலுவலகம், போலீசு நிலையம், நீதிமன்றம் முதலான அனைத்து வகையான அரசுத்துறை நிறுவனங்களிலும் ஊழலையும் அதிகாரத்திமிரையும் அன்றாடம் அனுபவித்து வரும் மக்களும் ஆளும் வர்க்கத்தின் இந்தச் சூழ்ச்சிக்கு எளிதில் பலியாகினர், இன்னும் பலியாகிக் கொண்டும் இருக்கின்றனர்.

எனினும் கடந்த 20 ஆண்டுகளில், அதாவது தனியார்மயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1991-க்குப் பிறகுதான் இந்திய அரசியலில் நாம் கேள்விப்படும் ஊழல்களின் தொகைகள் 40,50 கோடியிலிருந்து ஆயிரம் கோடிகளுக்கும் இன்று இலட்சம் கோடிகளுக்கும் உயர்ந்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்கமுடியாது. ஹர்சத் மேத்தா, கேதன் பரேக் முதல் சத்யம் ராஜு வரையிலான அனைவரும் தனியார்மயம் பெற்றெடுத்த தவப்புதல்வர்களே. 1990-க்கு முன் எவையெல்லாம் சட்டவிரோதமென்றும், ஊழலென்றும் வரையறுக்கப்பட்டிருந்தனவோ, அவை அனைத்தையும் 1991 முதல் தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் படிப்படியாகச் சட்டபூர்வமாக்கியிருக்கின்றன. அந்நியச் செலாவணி மோசடியைக் கட்டுப்படுத்தும் சட்டம் நீக்கப்பட்டு, மோசடி சட்டபூர்வமாக்கப்பட்டது; கருப்பை வெள்ளையாக்கும் பல திட்டங்கள் மூலம் கறுப்புப் பணம் வெள்ளையாக்கப்பட்டுவிட்டது; வரி ஏப்புகளைத் தண்டிப்பதற்கு பதிலாக, முதலாளிகளுக்கான பல வரிகள் ஒழிக்கப்பட்டுவிட்டன. சட்டவிரோதமானவை அனைத்தும் சட்டபூர்வமானவை ஆக்கப்பட்டு விட்டதால், 1991-க்கு முன் முதலாளிகளின் ஊழல்களாகக் கருதப்பட்டவை அனைத்தும் இப்போது அவர்களது உரிமைகள் ஆகிவிட்டன.

டன் ஒன்றுக்கு 7000 ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட இரும்புத் தாதுவை டன் 27 ரூபாய்க்கு சுரங்க முதலாளிகளுக்கு விற்பனை செய்கிறது அரசு. இதனை ஊழல் என்றோ பகற்கொள்ளை என்றோ நாம் கூறலாம். ஆனால், முறையாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இந்த விற்பனை நடப்பதால், இது சட்டபூர்வமானதாகிவிட்டது. எண்ணெய் வயல்கள், பொதுத்துறை ஆலைகள், விளைநிலங்கள் போன்ற பல இலட்சம் கோடி மதிப்புள்ள பொதுச்சொத்துக்களைப் பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளிகளும் கொள்ளையடித்து வருகிறார்கள். மலைகளும் ஆறுகளும் காடுகளும் காணாமல் போகின்றன. தற்போது இரும்புத்தாது வெட்டியெடுக்கப்படும் வேகத்தில், அடுத்த 30 அண்டுகளில் இந்தியாவில் இரும்புக் கனிமமே இருக்காது என்று எச்சரிக்கிறார்கள், துறைசார் வல்லுநர்கள். ஒரு மிகப்பெரும் சூறையாடலையும் பேரழிவையும் கண்முன்னே அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள் கார்ப்பரேட் கொள்ளையர்கள். நாட்டின் தொழில் வளர்ச்சி என்று இது போற்றப்படுகிறது.

இப்படி ஊர்ச் சொத்தைக் கொள்ளையடித்து அம்பானி, அகர்வால், டாடா, மித்தல் போன்ற பெரும் தரகு முதலாளிகள் தமது சொத்துகளை 40,50 மடங்கு பெருக்கிக் கொண்டு உலகப் பணக்காரர்களாக உயர்ந்திருப்பதும், அவர்கள் வெளிநாட்டுக் கம்பெனிகளையே விலைக்கு வாங்குவதும் அவர்களுடைய தொழில் திறமைக்குக் கிடைத்த சன்மானமாகப் போற்றப்படுகிறது. இந்தியா வல்லரசாவதற்கான ஆதாரமாகவும் காட்டப்படுகிறது.

இந்தக் கொள்ளைக்கே தனியார்மயம் என்று பெயர் சூட்டி, சட்டபூர்வமான கொள்கையாக மாற்றி, நிறைவேற்றித் தருகின்ற அமைச்சர்களும் அதிகாரிகளும் இதற்காக முதலாளிகளிடம் கையூட்டு பெறுவதும், இதே தனியார்மயக் கொள்கையைப் பயன்படுத்தி கருணாநிதி, சரத் பவார் முதலான அரசியல்வாதிகளும் அவர்களது குடும்பத்தினரும் பொதுச்சொத்துக்களை வளைப்பதும் மட்டும்தான், ஊழல் என்ற பெயரில் மக்கள் முன் நிறுத்தப்படுகிறது.

தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நடைபெற்று வரும் விவாதங்களையே எடுத்துக் கொள்வோம். இதில் “அரசின் சொத்தான அலைக்கற்றைகளை ஏன் தனியார் முதலாளிகளுக்கு விற்க வேண்டும்?” என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. மாறாக, அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, அவ்வாறு விற்பனை செய்வதற்கு கையாளப்பட்ட வழிமுறை, பின்பற்றத் தவறிய நெறிமுறைகள், வேண்டியவர்களுக்கு சலுகை வழங்கிய அமைச்சர்கள் – அதிகாரிகளின் முறைகேடுகள் ஆகியவற்றை மையப்படுத்தியே ஊழல் குறித்த இந்த விவாதம் சுழன்று கொண்டிருக்கிறது.

அதாவது, அரசு சொத்துகளை முதலாளிகளுக்குத் தாரை வார்க்கின்ற தனியார்மயக் கொள்கை என்பது பொருளாதார ரீதியில் மிகவும் சரியான, அப்பழுக்கற்ற, அறிவுபூர்வமான கொள்கை போலவும், அதனை அமல்படுத்துகின்ற அரசியல்வாதிகள் மன்மோகன் சிங்கைப் போல, மோடி, புத்ததேவ், நிதிஷ் குமாரைப் போல தனிப்பட்ட முறையில் சொத்து சேர்க்காத உத்தமர்களாக நடந்து கொள்ளும் பட்சத்தில், இந்தியா வல்லரசாவது உறுதி என்பது போலவுமே சித்தரிக்கப்படுகிறது.

முதற்பெரும் ஊழல் –  தனியார்மயமே!

தனியார்மயம் என்பது இந்தியாவை வல்லரசாக்குவதற்காக மன்மோகன், அலுவாலியா, சிதம்பரம் முதலான பொருளாதார மேதைகள் இராப்பகலாகக் கண்விழித்து ஆராய்ந்து கண்டுபிடித்த கொள்கை அல்ல.

முன்பு இந்தியாவிலும் வேறு பல நாடுகளிலும் அரசுத் துறை ஏற்படுத்தப்பட்டதற்கும், தொலைபேசி, மின்சாரம், ரயில்வே, சுரங்கங்கள், துறைமுகங்கள் போன்ற கேந்திரமான துறைகளிலிருந்து முதலாளிகள் விலக்கி வைக்கப்பட்டிருந்ததற்கும் குறிப்பான காரணங்கள் உண்டு. இத்தகைய துறைகளை நிர்மாணம் செய்வதற்குத் தேவைப்படும் மூலதனம் அதிகம், இலாபம் குறைவு என்ற காரணத்தினால் முதலாளிகளே இவற்றை அரசின் தலையில் கட்டி விட்டு, அந்தச் சேவைகளை மட்டும் சலுகை விலையில் அனுபவித்தனர். மேலும், இத்தகைய உயிர்நாடியான துறைகளை முதலாளிகளின் முழுக்கட்டுப்பாட்டில் விடுவதனால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் காரணமாகக் காட்டித்தான், அரசு இத்துறைகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இத்தகைய துறைகளைத் தனியாருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்பது என்று முந்தைய கொள்கையைத் தலைகீழாக மாற்றிய போது, இதனால் நாட்டின் தற்சார்புக்கும் இறையாண்மைக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை சீர்தூக்கிப் பார்த்து இந்தக் கொள்கை மாற்றத்துக்கு எந்தக் கட்சியும் விளக்கமளிக்கவில்லை. ஏனென்றால், தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற இக்கொள்கை டில்லியில் உருவாக்கப்பட்டதல்ல; அது வாஷிங்டனில் உருவாக்கப்பட்டது.

அது, அமெரிக்காவின் தலைமையிலான உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் முதலான நிறுவனங்கள், பன்னாட்டு நிதிமூலதனத்தின் தேவைக்கு ஏற்ப உருவாக்கிய கொள்கை. இந்தியா போன்ற நாடுகளின் மீது அவர்களால் விதிக்கப்பட்ட ஆணை. பிரதமர் நாற்காலியில் மன்மோகனுக்குப் பதிலாக சேடப்பட்டி முத்தையா அமர்ந்திருந்தாலும் அமலாகியிருக்கக்கூடிய கொள்கை இதுதான். வல்லரசுக் கனவில் மிதக்கும் இந்தியாவின் பிரதமர் முதல், சின்னஞ்சிறு ஆப்பிரிக்க நாட்டை ஆளுகின்ற யாரோ ஒரு பழங்குடி யுத்தப்பிரபு வரையிலான அனைவரின் தலையிலும் அணிவிக்கப்பட்டிருக்கும் தொப்பி அது. அத்தொப்பிக்கு ஏற்ப தலையைச் செதுக்குவதும், தனியார்மயம் என்ற கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு  ஆதரவாக மக்கள் மத்தியில் பொதுக் கருத்தை உருவாக்குவதும்தான், ஓட்டுக்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் ஏகாதிபத்தியங்கள் ஒதுக்கியிருக்கும் பணி. எனவே, ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் மென்று துப்பியதைத் தின்று எடுக்கும் வாந்திதான், தனியார்மயத்துக்கு ஆதரவாக மன்மோகன் சிங் முதலானோர் தயாரித்துப் பரிமாறும் வாதங்கள்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கத் தொடங்குவதற்கு முன், அரசும் ஆளும் வர்க்கங்களும் முன்வைத்த வாதங்களை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். ‘நட்டம் வரும் பொதுத்துறைகளை முட்டுக் கொடுத்து நிறுத்துவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது என்றும், அதனால் அவற்றை மட்டும் தனியாருக்கு விற்கப்போவதாகவும்’ சொல்லித்தான் தனியார்மயத்தை துவக்கத்தில் நியாயப்படுத்தியது அரசு. ஆனால், அரசின் புள்ளிவிவரங்களின் படியே 1992-98 காலத்தில் பொதுத்துறையின் இலாப விகிதம் 20.9% ஆகவும், தனியார் துறையின் இலாப விகிதம் 14.7% ஆகவும் இருந்தது. 1997-98 இல் அரசுத்துறையின் இலாப விகிதம் 26.9%. தனியார் துறையின் இலாபம் 2.5%.

இந்தப் புள்ளி விவரங்களையெல்லாம் புதைத்து விட்டு, அரசுத் துறைகள் நட்டத்தில் நடப்பதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்து, நாட்டை ஏமாற்றித்தான் அன்றைய நிதி மந்திரியாக இருந்த மன்மோகன் சிங் முதல் பா.ஜ.க. ஆட்சியில் தனியார்மயமாக்கலுக்கான அமைச்சராக நியமிக்கப்பட்ட அருண்ஷோரி வரையிலான எல்லா யோக்கிய சிகாமணிகளும் தனியார்மயத்தை நியாயப்படுத்தினர்.

முதன் முதலாக 1991-92 – இல் (மன்மோகன் நிதியமைச்சராக இருந்தபோது) விற்கப்பட்ட பொதுத்துறைப் பங்குகள் அனைத்தும் சந்தை விலையை விடக் குறைவான விலைக்குத் தனியார் முதலாளிகளுக்கு விற்கப்பட்டதால், இந்த விற்பனையை ஒரு ‘மோசடி’ என்று  அன்றைய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை குற்றம் சாட்டியிருக்கிறது. பொதுத்துறை பங்கு விற்பனை குறித்த கணக்குத் தணிக்கையாளரின் 20 ஆண்டு அறிக்கைகளைத் தொகுத்தால், ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த மோசடியின் மொத்தத் தொகை பல இலட்சம் கோடிகளாக இருக்கும்.

இலாபத்தில் நடக்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றால், அந்த அயோக்கியத்தனத்தை மக்கள் மத்தியில் நியாயப்படுத்துவது கடினம் என்பதால், அத்தகைய நிறுவனங்களின் உபரியை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் அவற்றை நட்டத்தில் தள்ளும் சதிகளில் அரசு இறங்கியது. விற்கப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்பை நிர்ணயம் செய்யவும், விற்பனையை நியாயப்படுத்தும் வகையில் நட்டக் கணக்கு காட்டவும் மெக்கின்சி, பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் போன்ற உலக வங்கியால் சிபாரிசு செய்யப்படும் ஆலோசனை நிறுவனங்கள் அரசால் அமர்த்திக் கொள்ளப்பட்டன. இந்துஸ்தான் லீவருக்கு மாடர்ன் ஃபுட்ஸ் பங்குகளும், ஸ்டெரிலைட்டுக்கு பால்கோவின் பங்குகளும், டாடாவுக்கு வி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் பங்குகளும் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டன. வாங்கிய மறுகணமே இந்நிறுவனங்களின் சில சொத்துகளை மட்டுமே விற்று, போட்ட முதலுக்கு மேல் அவர்கள் காசு எடுத்து விட்டார்கள்.

இன்று, “2-ஜி அலைக்கற்றை உரிமங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்றுக் கொள்ளையடிக்க சில நிறுவனங்களுக்கு உதவினார்” என்பதுதான் ராசா மீது கூறப்படும் குற்றச்சாட்டு. ஆனால், இந்த ‘ராசா தந்திரம்’தான் எல்லாப் பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனையிலும் நடந்திருக்கிறது. சில நூறு கோடிகளுக்குப் பொதுத்துறை பங்குகளை வாங்கி, கம்பெனியின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொண்டு, அதன் மூலம் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள அந்நிறுவனங்களின் சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்வதற்கும், விற்றுக் காசு பார்ப்பதற்கும் ஏற்ற ‘கொள்கையை’ வகுத்துத் தருவதற்காகவே ‘டிஸ்இன்வெஸ்ட்மென்ட் கமிட்டி’ என்றொரு கமிட்டி (அதாவது பொதுத்துறை முதலீடுகளை விற்பதற்கான கமிட்டி) நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது. அந்தக் கொள்கையை வகுத்துத் தந்த கோமான், ரங்கராஜன் என்பவரின் பெயரால் அது ரங்கராஜன் கமிட்டி என்று அழைக்கப்பட்டது.

இந்தியாவின் அந்நியக் கடன்களை அடைப்பது, உலக வங்கியின் ஆணைப்படி பொதுத்துறையைத் தனியார்மயமாக்குவது என்ற இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான ஒரு குறுக்கு வழியை  இவர் முன்வைத்தார். சர்வதேசக் கடன் நிறுவனங்களிடம் இந்திய அரசு வாங்கிய கடனுக்கு ஈடாக, பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை அவர்களுக்கு விற்றுவிடலாம் என்பதே அந்த யோசனை. சில ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்குவதன் மூலம் பல இலட்சம் கோடி பெறுமானமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் ஆலைகளையும் சொத்துக்களையும் அந்நிய நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்ள முடிந்தது என்பதே இந்த யோசனையின் விளைவு.(இப்பேர்ப்பட்ட அரிய யோசனையை வழங்கிய அந்த ரங்கராஜன்தான் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கின் முதன்மை பொருளாதார ஆலோசகர்!)

பிறகு வந்த பா.ஜ.க. ஆட்சி பொதுத்துறை தொழில்களை விற்பதற்கு ஒரு அமைச்சரையே நியமித்தது. டிஸ் இன்வெஸ்ட்மென்ட் துறை என்றழைக்கப்பட்ட இந்த அமீனாத் துறையின் அமைச்சராக இருந்தவர் அருண் ஷோரி. 1999 முதல் 2003 வரை அருண் ஷோரியின் அமைச்சகத்துக்கு செயலராகவும், 2004 முதல் 2006 வரை தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் இருந்து ‘கொள்கைபூர்வமாக’ பொதுத்துறையை முதலாளிகளுக்கு உடைமையாக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் பெயர் பிரதீப் பெஜால். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 2007-இல் இவர் நீரா ராடியாவிடம் வேலைக்குச் சேர்ந்து, 2-ஜி அலைக்கற்றைகளை டாடாவுக்குச் சகாய விலையில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இப்போது சி.பி.ஐ. அவரைத் துருவித்துருவி விசாரிக்கிறதாம். பெஜால் என்ன பதில் சொல்வார்? “1999 முதல் 2006 வரை அரசு அதிகாரி என்ற முறையில் நான் தனியார்மயக் கொள்கை வழி நடந்தேன். ஓய்வு பெற்ற பின்னரும் கொண்ட கொள்கையிலிருந்து மாறாமல் தனிப்பட்ட முறையில் அதனை அமல்படுத்தினேன்” என்று தனது வரலாற்றுக்கு அவர் சீர் பிரித்து இலக்கணம் கூறக்கூடும். ஓய்வு பெற்றபின் அவர் நீரா ராடியாவின் நிறுவனத்தில் மட்டும் பணியாற்றவில்லை; நெஸ்லே, ஜி.வி.கே. பவர்ஸ் அண்டு இன்ப்ஃராஸ்ட்ரக்சர்ஸ், பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் போன்ற நிறுவனங்களிலும் அவர் பதவி வகிக்கிறார்.

பொதுத்துறை விற்பனைகளுக்கு விலை நிர்ணயம் செய்த முறை குறித்து அவரிடம் சி.பி.ஐ. கேட்குமானால், அந்த சூத்திரத்தை சொல்லிக் கொடுத்தவர் ரங்கராஜன்தான் என்று அவர் வாக்குமூலம் தருவார்; ரங்கராஜனைக் கேட்டால் தனது பொருளாதார ஞானகுரு என்று மன்மோகன் சிங்கை அடையாளம் காட்டுவார்; மன்மோகன் சிங்கோ “நான் ஐ.எம்.எஃப். – க்குப் பிறந்தவன் என்ற உண்மையை எந்தக் கமிட்டியின் முன்னாலும் சொல்லத் தயார். இதைத் தவிர என்னிடம் மறைப்பதற்கு ஏதுமில்லை” என்று பதிலளிக்கக்கூடும்.

நேற்று தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக இருந்த பெஜால், இன்று நெஸ்லே என்ற ஏகாதிபத்திய தொழில் நிறுவனத்தின் இயக்குநர். நேற்று ஐ.எம்.எஃப். என்ற ஏகாதிபத்திய கந்து வட்டி நிறுவனத்தின் அதிகாரியாக இருந்த மன்மோகன் சிங்,  இன்று பிரதமர். இரண்டுக்கும் என்ன வேறுபாடு? தனியார்மயத்துக்கும் ஊழல்மயத்துக்கும் என்ன வேறுபாடோ அதே வேறுபாடுதான்! ஒழுக்க சீலர் மன்மோகனுக்கும் அயோக்கியன் பெஜாலுக்கும் என்ன வேறுபாடு? சங்கிலியைத் திருடுவதற்காக பெண்ணின் கழுத்தை மட்டும் அறுக்கும் ‘நல்லவனுக்கும்’, கற்பழித்துவிட்டு அதன்பின் கழுத்தை அறுக்கும் ‘அயோக்கியனுக்கும்’ உள்ள வேறுபாடு!

விலையைக் குறைப்பது ஊழல் – வரியைக் குறைப்பது?

2-ஜி அலைக்கற்றைகளைச் சரியான விலைக்கு விற்றிருந்தால் அரசுக்கு கிடைத்திருக்கக் கூடிய வருவாய் 1,76,000 கோடி ரூபாய் என்று அனுமானமாகக் கூறுகிறது, தலைமைக் கணக்காளரின் அறிக்கை. வருவாய் இழப்பு 30,000 கோடி ரூபாய்தான் இருக்கும் என்பது அருண் ஷோரியின் அனுமானம். இத்தகைய அனுமானங்கள் எதற்கும் இடம் வைக்காமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆண்டொன்றுக்கு 3 இலட்சம் கோடி முதல் 5 இலட்சம் கோடி ரூபாய் வரையில் புதிது புதிதான நேர்முக வரித் தள்ளுபடிகள், ஒவ்வொரு பட்ஜெட்டிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றன.

வரி வருவாய் பற்றாக்குறை என்று காரணம் சொல்லி, விவசாயிகளுக்கான மானியங்கள் வெட்டப்பட்டு அவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்படுவதையும், அதே நேரத்தில் முதலாளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இத்தகைய வரித் தள்ளுபடிகளையும் அம்பலப்படுத்திப் பத்திரிகையாளர் சாய்நாத் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

“வரிகளை எந்த அளவு குறைக்கிறோமோ அந்த அளவுக்கு அதிகமாக முதலாளிகள் அனைவரும் வரியைச் செலுத்துவார்கள்; எனவே அரசின் வரி வருவாயைக் கூட்டுவதற்காகத்தான் முதலாளிகளுக்கு வரியைக் குறைக்கிறேன்” என்று தத்துவ விளக்கம் அளித்தார் ப.சிதம்பரம். “அலைக்கற்றைகளின் விலையை முதலாளிகளுக்குக் குறைத்துக் கொடுத்தால் கட்டணத்தையும் குறைப்பார்கள்; செல்பேசிகளின் பயன்பாடு பன்மடங்கு அதிகரிக்கும்; அதனால்தான் விலையைக் குறைத்தேன்” என்று கூறுகிறார், ராசா. சிதம்பரம் ஆங்கிலத்தில் விளக்குவதைத்தானே ஆ.ராசா அழகு தமிழில் விளக்குகிறார். தமிழ் ஊழலென்றால் ஆங்கிலமும் ஊழல்தானே!

“செல்பேசிகள் 60 கோடியாக அதிகரித்து விட்டன” என்று காட்டுவதற்கு ஒரு கணக்காவது ராசாவிடம் இருக்கிறது. ஆனால், கார்ப்பரேட் முதலாளிகள் மீது விதிக்கப்பட்டு வந்த எல்லா வகையான நேர்முக வரிகளையும் தள்ளுபடி செய்த 1991-2008 காலகட்டத்தில் மட்டுமே 6,37,296 கோடி ரூபாய் இந்தியாவிலிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு கடத்தப்பட்டிருப்பதாக “குளோபல் பைனான்சியல் இன்டெக்ரிடி” என்ற அமைப்பு ஆதாரங்களுடன் விளக்குகிறது. அலைக்கற்றை விற்பனையை ஊழல் என்று அழைத்தால், வரித் தள்ளுபடியை என்ன பெயரிட்டு அழைப்பது? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தி.மு.க.வைப் பேயாப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும்போதே, நோக்கியாவுக்கு 600 கோடி ரூபாய் வரி மானியத்தை வாரி வழங்குகிறார், கருணாநிதி. இதனை ஊழல் என்று சொல்வாரில்லை. தயாளு அம்மாளுக்கு தயாநிதி மாறன் கொடுத்ததாக ராடியா கூறும் 600 கோடி மானியம் மட்டும்தான் “சோ” வுக்கு ஊழலாகத் தெரிகிறது.

ராடியா டேப் அதை மட்டுமா சொல்கிறது? வரித்தள்ளுபடி குறித்த முடிவுகள் நாடாளுமன்றத்தில் எப்படி நிறைவேறுகின்றன என்ற இரகசியத்தையும்தான் விளக்குகிறது. முகேஷ் அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட எரிவாயு வயல்களின் உற்பத்தியின் மீது முன் தேதியிட்டு 91,000 கோடி ரூபாய் வரித்தள்ளுபடி செய்வதற்கு 2009 – ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சிதம்பரம் வைத்த முன்மொழிதலை, எதிர்க்கட்சித் தலைவர் வெங்கையா நாயுடு தீவிரமாக ஆதரித்துப் பேசுகிறார். ‘தேசிய நலனுக்காக’ ஆளும் கட்சியுடன் ஒன்றுபட்டு நிற்கும்படியான இத்தகைய ‘தேசிய உணர்வை’ பா.ஜ.க.வுக்கு ஊட்டியவர் நீரா ராடியாதான் என்ற உண்மையையும்தான் புட்டு வைக்கிறது.

இந்த 91,000 கோடி என்பது அலைக்கற்றை ஊழல் போல அனுமான இழப்பு அல்ல; பருண்மையான இழப்பு. எனினும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் நாடாளுமன்றத்தில் இதனைக் கூட்டாக நிறைவேற்றியிருப்பதனால்தான்,  இதற்கு “நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை வேண்டும்” என்று பா.ஜ.க. கோரவில்லை போலும்! அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் பாரதிய ஜனதா அரசு பின்பற்றிய ‘முதலில் வருபவருக்கு முதலில்’ என்ற கொள்கையையே தானும் பின்பற்றியதாகக் கூறுகிறார், ராசா. சில சில்லறைத் தில்லுமுல்லுகளை மட்டும் தவிர்த்திருப்பாரேயானால், கருணாநிதி சொன்னதைப் போல “தி.மு.க.- வின் தகத்தகாயமாக மின்னும் கொள்கைத் தங்கமாகவே” ராசா நீடித்திருந்திருப்பார். தேசிய நலனை முன்னிட்டு அம்பானிக்குப் படைக்கப்பட்ட 91,000 கோடியைப் போலவே, இந்த 1,76,000 கோடியும் தேசத்துக்கு வைக்கப்பட்ட படையலாகவும், தனியார்மயக் ‘கொள்கை வழியில்’ தேச முன்னேற்றம் கருதி எடுக்கப்பட்ட முடிவாகவுமே விளக்கப்பட்டிருக்கும்.

“பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட அலைக்கற்றை விற்பனையால் 1.43 இலட்சம் கோடி இழப்பு” என்று ஒரு குண்டை தற்போது அமைச்சர் கபில் சிபல் வீசியிருக்கிறார். இந்தத் தொகை மொத்தமுமே தேசிய நலனுக்கு படைக்கப்பட்ட பொங்கல்தானா, அல்லது தம்பி தயாநிதியும், அண்ணன் அருண் ஷோரியும் இதில் கொஞ்சம் வழித்து நக்கியிருப்பார்களா? தரகு முதலாளிகளுக்கிடையே சமாதான உடன்படிக்கை எதுவும் ஏற்படாமல் யுத்தம் நீடித்தால், மேலும் பல உண்மை கசியக்கூடும்.

ராசா..! அரண்மனைக்கு அடியில்
எத்தனை பெரிய பெருச்சாளிப் பொந்து!

‘ராசா ஊழல்’ என்று சித்தரிக்கப்படும் இந்த அலைக்கற்றை ஊழலுக்குள் கையை விட்டால், அந்தப் பெருச்சாளிப் பொந்து அரண்மனை முழுவதற்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.  ராசாவிடம் அலைக்கற்றை உரிமத்தை வாங்கியிருக்கும் நிறுவனங்கள், அரசு வங்கிகளிடமே ஒரு இலட்சம் கோடி ரூபாயைக் கடனாக வாங்கி, அரசுக்குப் பணம் கட்டியிருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்டதும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அதிர்ந்து விட்டார்களாம். பொதுத்துறை நிறுவனங்களை வளைத்துப் போடும் இந்தியத் தரகு முதலாளிகள், எந்தக் காலத்திலும் தம் கைக்காசைப் போட்டு அவற்றை வாங்கியதில்லை என்ற உண்மை, ‘கற்றறிந்த’ நீதிபதிகளுக்குத் தெரியாது போலும்! அரசு வங்கிகள்தான் அவர்களுக்குக் கடன் கொடுத்திருக்கின்றன. மருத்துவத்துக்கும் மக்கள் நலத் திட்டங்களுக்கும் செலவிட அரசாங்கத்திடம் பணமில்லையென்பதால்தான் பொதுத்துறைப் பங்குகளை விற்க வேண்டியிருப்பதாகச் சொல்லி தனியார்மயத்தை நியாயப்படுத்தினார், அன்று நிதியமைச்சராக இருந்த சிதம்பரம். முதலாளிகளோ அதே நிதியமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு வங்கிகளின் கையை வெட்டி அரசுக்கே சூப் வைத்துக் கொடுத்திருக்கிறார்கள். இது சிதம்பரம் அறியாத இரகசியமல்ல. மக்களுக்கு மட்டும்தான் இதெல்லாம் சிதம்பர இரகசியம்.

தனியார்மய-தாராளமயக் கொள்கைகளின் கீழ் நடைபெறும் ஊழல்களும் மோசடிகளும், “ஸ்பெக்ட்ரம் ஊழல், வீட்டுக்கடன் ஊழல், கேதன் பரேக் ஊழல்” என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், அவை அனைத்தும் ஒரு தாய்ப்பிள்ளைகளே. அலைக்கற்றை ஊழலிலிருந்து ஒரு கிளை வலப்புறம் பிரிந்து வீட்டுக் கடன் ஊழலுடன் இணைகிறது. அங்கிருந்து அது இடப்புறம் திரும்பி அரசு வங்கியுடன் போய் இணைகிறது. அரசு வங்கியிலிருந்து பிரியும் பைபாஸ் சாலை மீண்டும் ஸ்பெக்ட்ரம் நெடுஞ்சாலையில் சங்கமிக்கிறது.

வீட்டுக் கடன் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் டி.பி.ரியால்டீஸ் என்ற நிறுவனம், அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டிருக்கும் எடிசாலட் டி.பி. என்ற நிறுவனத்தின் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறதாம். அதாவது, இல்லாத வீட்டை அடமானம் வைத்து அரசு வங்கியில் வீட்டுக் கடன் வாங்கிய டி.பி.ரியால்டீஸ் நிறுவனம், கடன் வாங்கிய பணத்தை வைத்து, தொலைபேசிச் சேவையே நடத்தாத ‘தொலைத்தொடர்புக் கம்பெனியான’ எடிசாலட் டி.பி. என்ற தனது பினாமி நிறுவனத்தின் பெயரில் அலைக்கற்றை உரிமத்தை விலைக்கு வாங்குகிறது. அந்த லைசன்சு காகிதத்தை அடமானம் வைத்து மீண்டும் வங்கியில் கடன் வாங்குகிறது. பிறகு அந்த உரிமத்தை வங்கியிலிருந்து மீட்டு, அதனை 4 மடங்கு விலைக்கு விற்று சில ஆயிரம் கோடிகளையும் சுருட்டுகிறது.

அலைக்கற்றை உரிமத்தை வாங்கி வைத்திருக்கும் பினாமி ‘உப்புமா’ கம்பெனிகள் இழப்பதற்கு ஏதுமற்றவர்கள். உரிமத்தை ரத்து செய்தால் திவாலாகப்போவதும் அவர்களல்ல, உரிமக் காகிதத்தை அடமானம் வாங்கிக்கொண்டு ஒரு லட்சம் கோடி கடன் கொடுத்திருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளே. எனவேதான், இவர்களுடைய உரிமத்தை ரத்து செய்வது தேசிய நலனுக்கு உகந்ததல்ல என்று முடிவு செய்துவிட்டார், அமைச்சர் கபில் சிபல்.

விவசாயிகளுக்கும், சிறு தொழில்களுக்கும் கடன் கொடுக்க ஆயிரம் நிபந்தனை விதிக்கும் அரசாங்கத்தின் வங்கிகள்தான், இந்தச் சூதாடிகளுக்குக் கடனை வாரி வழங்கியிருக்கின்றன. தனியார்மய – தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய காலத்திலிருந்து நடைபெற்ற ஹர்சத் மேத்தா, யூ.டி.ஐ., போலிப்பத்திர ஊழல் என்பன போன்ற எல்லா மோசடி களுக்கும் மூலதனம் தந்து, அவற்றை பிரம்மாண்டமான ஊழல் காவியமாகப் படைக்க உதவியவை அரசு வங்கிகளே. இப்படிப்பட்ட கடன் வழங்கும் கொள்கையைப் பின்பற்றுமாறு அரசு வங்கிகளுக்கு உத்தரவிடுவது அரசுதான். முதலாளிகளின் வாராக்கடன் தொகையை சுமார் ஒரு இலட்சம் கோடி அளவுக்கு உயர்த்தியதும் இதே தனியார்மய, தாராளமயக் கொள்கைகள்தான்.

எது இலஞ்சம், எது ஊழல், எது கொள்கை?
விடை காண முடியாத தத்துவஞானக் கேள்வி!

ஸ்பெக்ட்ரம் மோசடிக்காக முன்னாள் அமைச்சர் ராசா முதல் அவரது குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரின் வீடுகளையும் தேடிச் செல்கிறது சி.பி.ஐ. ஆனால், ஸ்பெக்ட்ரம் பணத்தை விழுங்கிச் செரித்த டாடா, மித்தல், அம்பானி போன்றோரை வீடு தேடிச் சென்று சந்தித்து, புதிய தொலைத்தொடர்புக் கொள்கையை வகுப்பதற்கு அவர்களிடமே ஆலோசனை கேட்கிறார், அமைச்சர் கபில் சிபல். இதுவும் பா.ஜ.க. அரசு ஏற்கெனவே போட்ட பாட்டின் ரீ மிக்ஸ்தான்.  அரசு வங்கிகளிடம் கடன் வாங்கி ஏப்பம் விட்ட முதலாளிகளைத் தண்டிப்பதற்கு ஒரு சட்டம் இயற்றப் போவதாக 2003 – இல் சொன்னார் வாஜ்பாயி. இந்தச் சட்டத்துக்கான முன்வரைவைத் தயாரிக்கும் பொறுப்பு, ரூயா, பிர்லா, ராஜீவ் சந்திரசேகர் முதலான தரகு முதலாளிகள் அடங்கிய கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றைய தேதியில் அரசு வங்கிகளுக்கு ரூயா வைத்திருந்த கடன் பாக்கி 1577 கோடி, பிர்லா 212 கோடி, சந்திரசேகர் 56 கோடி. இதுதான் அந்தக் கமிட்டி உறுப்பினர்களின் தகுதி!

திருடர்களுக்குக் கடனை வாரிவழங்குமாறு வங்கிகளுக்கு அரசு கொடுத்த வழிகாட்டுதலாகட்டும், திருடர்களைத் தண்டிப்பதற்கான ‘சட்ட முன்வரைவினை’ தயாரிக்கும் பொறுப்பைத் திருடர்கள் கமிட்டியிடமே ஒப்படைத்ததாகட்டும்;   இவையெல்லாம் சிதம்பரமும், யஷ்வந்த் சின்காவும், வாஜ்பாயியும் மேற்கொண்ட கொள்கை முடிவுகள்தான். ‘முதலில் வந்தவர்களுக்கு முதலில்’ என்று அலைக்கற்றையை வாரி வழங்கியதும்கூட ‘கொள்கை முடிவு’ என்றுதான் ராசா சொல்கிறார். மேற்கூறிய எடுத்துக்காட்டுகளில் ‘கொள்கை’ முடியும் இடம் எது – ‘ஊழல்’ தொடங்கும் இடம் எது? இதனை எவ்வாறு கண்டறிவது?

தனியார்மயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவரான மான்டேக் சிங் அலுவாலியா இதற்கான விடையை சூசகமாகத் தெரிவித்திருக்கிறார்.  “40,000 கோடி வீட்டுக்கடன் ஊழலை, ‘ஊழல்’ என்று அழைப்பது தவறு. அது வழக்கமான இலஞ்சம் மட்டுமே” என்று விளக்கியிருக்கிறார். நமக்குத் தெரிந்த இலஞ்சங்களான டிராபிக் போலீசு லஞ்சம், தாலுக்கா ஆபீஸ் லஞ்சம், ஆர்.டி.ஓ. ஆபீஸ் லஞ்சம் போன்றவை மூன்று நான்கு பூச்சியங்களைத் தாண்டியதில்லை. நாடு வல்லரசாகி வரும் காரணத்தினாலும், கோடீசுவரர்களின் எண்ணிக்கை பெருகிவரும் காரணத்தினாலும் இலஞ்சத்தின் இலக்கணம் தற்போது மாறியிருக்கக் கூடும். எத்தனை பூச்சியங்கள் வரையில் ‘இலஞ்சம்’, எத்தனை பூச்சியங்களுக்குப் பின் ‘ஊழல்’, எத்தனை பூச்சியங்களுக்கு மேல் ‘கொள்கை’ என்பது குறித்து நாடாளுமன்ற விவாதம் ஒன்றை நடத்தி, தேசிய பொதுக்கருத்தை எட்டினால் மட்டுமே, ஊழல் விவாதங்களினால் சர்வதேச அரங்கில் களங்கப்பட்டிருக்கும் தேசிய கவுரவத்தைக் காப்பாற்ற முடியும் போலும்!

நீரா ராடியா அல்லது சல்வா ஜுடும்!

அலைக்கற்றைகளாக இருக்கட்டும், ஆலைகள், சுரங்கங்கள், காடுகள், விளைநிலங்களாக இருக்கட்டும்; அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் தடையற்ற கொள்ளைக்குத் திறந்து விடுவதுதான் தனியார்மயம் என்ற கொள்கை. காசை வாங்கிக் கொண்டு,  கதவைத் திறந்து விடக் காத்திருப்போரிடம் டாடா – அம்பானிகளின் சார்பில் ராடியா பேச்சுவார்த்தை நடத்துவார். ராடியாக்களுடன் பேச மறுக்கும் மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் போன்றோரிடம் டாடாவின் சார்பில் இந்தியத் துணை இராணுவப்படை பேசுகிறது.

ராடியா ஒரு அதிகாரத் தரகர் என்பதால் அவர் நடத்திய பேரங்கள் ஊழல் என்றும் முறைகேடு என்றும் அழைக்கப்படுகின்றன. இதே நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் ரங்கராஜன் கமிட்டி கொடுத்த அறிக்கையையோ, சட்டிஸ்காரில் துணை இராணுவப் படைகள் நடத்தும் காட்டுவேட்டையையோ ஊழல் என்று யாரும் அழைப்பதில்லை.

ஒரு கொள்கைக்குரிய கவுரவத்துடன் அழைக்கப்படுகின்ற ‘தனியார்மயம்’ என்பதும் கூட தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் நடத்திக் கொண்டிருக்கும் தீவட்டிக் கொள்ளைதான். தீவட்டிக் கொள்ளையர்களைத் தமது நாயகர்களாக எந்த சமூகமும் கொண்டாடியதில்லை. ஆனால் டாடா, அம்பானி, மித்தல் போன்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். “பில் கேட்ஸை முந்தி முதலிடத்தைப் பிடித்துவிடுவார் முகேஷ் அம்பானி” என்ற செய்தி, இந்தியா வல்லரசாகிக் கொண்டிருக்கிறது என்ற நற்செய்தியாக மொழிபெயர்க்கப்பட்டு மக்களின் காதில் ஓதப்படுகிறது.

“இந்திய முதலாளிகளின் தொழில் முனைப்பைத் தனியார்மயக் கொள்கை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது” என்று போற்றப்படுகிறது. அதே கொள்கைதான் டில்லியில் ராடியாவையும் சட்டீஸ்கரில் சல்வாஜுடுமையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. கொள்ளையர்கள் கட்டவிழ்த்து விடப்படுவதனால் நேரும் விளைவு பகற்கொள்ளையே அன்றி முன்னேற்றமல்ல. 200 ஆண்டுகள் இந்தியாவைக் கொள்ளையிட்ட வெள்ளையர்களும் கூட “இந்தியாவை முன்னேற்றுவதே எங்கள் நோக்கம்” என்றுதான் கூறிக்கொண்டார்கள். 200 ஆண்டுகளில் அவர்கள் அடித்த கொள்ளையை விட, தனியார்மயம் அமலாகத் தொடங்கிய 20 ஆண்டுகளில் இந்தியத் தரகுமுதலாளிகள் அடித்திருக்கும் கொள்ளையும், வெளிநாட்டு வங்கிகளில் சேர்த்திருக்கும் பணமும் அதிகம் என்கின்றன ஆய்வுகள்.

அரசுத் தலையீடின்மை, வெளிப்படைத் தன்மை, திறமை:
முதலாளித்துவ மூலமந்திரங்களின் உட்பொருள்!

இவையெதுவும் தம் தொழில் முனைப்பினாலோ, திறமையினாலோ அவர்கள் உருவாக்கிய செல்வம் அல்ல. அமெரிக்காவின் சப் பிரைம் மோசடியில் தொடங்கி இந்தியாவின் ஸ்பெக்ட்ரம் மோசடி வரை கார்ப்பரேட் வர்க்கம் நிரூபித்திருக்கும் திறமை என்பது, சூதாடிகளும் பிக்பாக்கெட் திருடர்களும் கொண்டிருக்கும் திறமையை மட்டும்தான்.

ஐ.பி.எல். என்ற கிரிக்கெட் சூதாட்டத்தைக் கண்டுபிடித்த லலித் மோடி, “முதன் முதலில் எனது உறவினர்களை வைத்தே கிரிக்கெட் டீம்களை ஏலம் எடுக்க வைத்து, கொள்ளை இலாபம் கிடைத்ததாக அவர்களை ‘சாட்சியம்’ சொல்லவைத்து, அதைக் காட்டியே மற்றவர்களையெல்லாம் கவர்ந்திழுத்தேன்” என்று லண்டன் பத்திரிகையொன்றிற்கு பெருமை பொங்க பேட்டி கொடுத்திருக்கிறார். இதுதானே, நம்மூர் மூணு சீட்டுக்காரன் மக்களைக் கவர்ந்திழுப்பதற்கு அன்றாடம் செய்து கொண்டிருக்கும் தந்திரம்!

பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளைச் சூறையாடியதும், வரி விலக்குகளால் கோடி கோடியாக ஆதாயம் அடைந்ததும், அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இலஞ்சம் கொடுத்து காடுகளையும் விளைநிலங்களையும் தம் உடைமையாக்கிக் கொண்டதும்தான் இவர்களது சொத்து மதிப்புகள் குறுகிய காலத்தில் பன்மடங்கு உயர்ந்ததற்குக் காரணம். 1667 கோடிக்கு ராசாவிடம் அலைக்கற்றை உரிமத்தை வாங்கி, அதில் 28 சதவீதத்தை மட்டும் (சுமார் 400 கோடி மதிப்பு) 13,000 கோடி ரூபாய்க்கு டோகோமோ நிறுவனத்துக்கு விற்றிருக்கிறார் டாடா.

இதனைக் கொள்ளை என்பதா, ஊழல் என்பதா அல்லது டாடாவும், அம்பானியும், ராடியாவும் வெளிப்படுத்தியிருக்கும் திறமை என்பதா?

தொழில் – வர்த்தகத் துறைகளில் நிலவும் அரசுத் தலையீடுகள்தான் ஊழலுக்கு அடிப்படை என்றும், அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, அரசு நடவடிக்கைகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மையைக் (transparency) கொண்டுவருவதன் மூலம்தான் ஊழலை ஒழிக்க முடியும் என்றும் அவ்வப்போது பேசி வரும் இந்த கார்ப்பரேட் யோக்கிய சிகாமணிகள்தான், அரசாங்கத்துடன் தாங்கள் போட்டுக்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (MoUs) மட்டும் அரசாங்க இரகசியமாகப் பேணச் சொல்கிறார்கள். தமிழக அரசு நோக்கியாவுக்கு வழங்கியுள்ள சலுகைகள் நோக்கியா நிறுவனம் போட்டிருக்கும் மூலதனத்தை விட அதிகம் என்ற உண்மையும், குஜராத்தில் நானோ காருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை காரின் உற்பத்திச் செலவுக்கே இணையானது என்ற உண்மையும் தோண்டித் துருவி வெளியே எடுக்கப்பட்ட பின்னர்தானே தெரியவந்தது! தனியார்துறை – அரசுத்துறை கூட்டு என்ற பெயரில் சாலைகள், உள்கட்டுமானங்கள் ஆகியவற்றில் போடப்படும் ஒப்பந்தங்கள், கனிமவளங்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலைகள் ஆகியவை அனைத்தையும் அரசாங்க இரகசியங்களாக மறைக்கச் சொல்கிறார்கள் கார்ப்பரேட் முதலாளிகள். இந்தத் தடையே ஊழலா, அல்லது இத்தகைய தடைகளின் பின்னால் ஒளிந்து கொண்டு ராடியாக்கள் நடத்தும் தரகு வேலைகள் மட்டும்தான் ஊழலா, எது முதற்பெரும் ஊழல் என்பதே கேள்வி.

“கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை மக்களுக்குத் தெரியாத  இரகசியமாக இருக்க வேண்டும். அந்தக் கொள்ளையை அவர்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்வது மட்டும் கொள்ளையர்களுக்கிடையே வெளிப்படையாக இருக்க வேண்டும்” என்பதுதான் அவர்கள் கோருகின்ற வெளிப்படைத் தன்மை (transparency).

‘அரசின் தலையீடுகளை அகற்றுதல்’ என்ற அவர்களுடைய தாராளமயக் கோரிக்கையின் உட்பொருள், ‘கார்ப்பரேட் நிறுவனங்களின் முறைகேடுகளைக் கட்டுப்படுத்தும் வகையிலான அரசின் தலையீடுகளை’ நீக்கவேண்டும் (deregulation) என்பது மட்டும்தான். மற்றபடி, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக நிலத்தைப் பிடுங்கிக் கொடுப்பது, எதிர்த்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவது, தொழிற்சங்கங்களை ஒடுக்குவது போன்ற விசயங்களில் அவர்கள் அரசின் உறுதியான தலையீட்டை வரவேற்கவே செய்கிறார்கள். டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கூடினாலும் குறைந்தாலும் அதற்கேற்ப ஏற்றுமதியாளருக்கும் இறக்குமதியாளருக்கும் மானியம் வழங்குவது, பணப்புழக்கத்தை கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் தேவைக்கேற்ப அதிகரிப்பது அல்லது குறைப்பது, கல்வி வியாபாரம், கார் வியாபாரம், ரியல் எஸ்டேட் வியாபாரம் உள்ளிட்ட அனைத்தும் சுறுசுறுப்பாக நடப்பதற்கு ஏற்ப நுகர்வோர் கடன்களை வாரி வழங்குமாறு அரசு வங்கிகளைத் தூண்டுவது போன்ற விசயங்களிலும் அவர்கள் அரசின் அக்கறையுள்ள தலையீட்டைக் கோரவே செய்கிறார்கள். மக்களுடனான முரண்பாட்டில் சிங்குரிலும் நந்திக்கிராமிலும் அரசு தங்கள் சார்பாகத் தலையீடு செய்ததை கார்ப்பரேட் முதலாளிகள் வரவேற்கவே செய்தார்கள்.

அலைக்கற்றைப் போரில் எழுந்த முரண்பாடோ கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலானது. டாடா – மித்தலுக்கு இடையிலான இந்த பாரதப் போரில் அரவான் களப் பலி ஆ.ராசா. சாம்ராச்சியச் சண்டையான பாரதப்போர், தரும யுத்தமாகச் சித்தரிக்கப்படுவதைப் போலவே, இந்த கார்ப்பரேட் யுத்தமும் ஊழலுக்கு எதிரான போராக சித்தரிக்கப்படுகிறது. தனியார்மயக் கொள்கையின் அமலாக்கத்திலிருந்து ஊழலை மட்டும் நீக்கிவிட்டால் சொர்க்கலோகத்தைக் கண்டு விடலாம் என்றும், அதற்குத் தடையாக இருப்பவர்கள் ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் என்றும் கயிறு திரிக்கிறார்கள், கார்ப்பரேட் வியாசர்கள். முதலாளித்துவத்திடமிருந்து ஊழலை நீக்குவதென்பது அதன் இதயத்தையே நீக்குவதாகும். இலாபம்தான் அதன் இலட்சியம். அதனை அடைவதற்கு எத்தகைய வழிமுறையையும் பின்பற்றலாம் என்பதே முதலாளித்துவ நிர்வாகவியலின் முதல் விதி.

மோதிக்கொள்ளும் கார்ப்பரேட் கொள்ளையர்கள் தமக்கிடையிலான போட்டியில் யுத்த தருமத்தையும், ஒழுக்கத்தையும் எந்தக் காலத்தில் பின்பற்றியிருக்கிறார்கள்? ஒரு விமானக் கம்பெனி தொடங்க விரும்பியதாகவும், அதற்கு 15 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதால், விமானக் கம்பெனி தொடங்கும் யோசனையையே கைவிட்டு விட்டதாகவும் கூறி, தனக்குத் தானே ஒளிவட்டம் சூட்டிக்கொண்டார் ரத்தன் டாடா. அடுத்த வந்த நாட்களில் நல்லொழுக்க சீலர் டாடாவின் யோக்கியதையை ராடியா டேப்புகள் நாட்டுக்கே ஒளிபரப்பின.

பா.ஜ.க.-ராடியா கள்ள உறவு குறித்த செய்திகளைக் கசியவிட்டு பதிலடி கொடுக்கிறது காங்கிரசு. ராடியாவை ஆளாக்கி வளர்த்ததே பா.ஜ.க. அமைச்சர் ஆனந்த்குமார் தான் என்றும், பா.ஜ.க. வின் ஆட்சிக் காலத்தில்தான் ராடியா தனது தொழிலில் கொடி நாட்டினார் என்றும், டில்லியில் ராடியாவின் ஸ்பான்சர்ஷிப்பில் பேஜாவர் ஸ்வாமிகள் நடத்திய வைபவத்துக்கு அத்வானி வருகை புரிந்தார் என்றும் செய்திகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. தனியார்மயத்தின் முதல் பத்தாண்டுக்கு, ஹவாலா ஊழல் – ஜெயின் டயரி. இரண்டாவது பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் – ராடியா டயரி!

இந்திய நாடாளுமன்றத்துக்கு கீழே ஒரு நிலவறை இயங்குவதும், நிஜ உலக ஜனநாயகத்தில் பரிமாறப்படும் கதை – வசனங்கள் அனைத்தும் நிலவறையின், கார்ப்பரேட் சமையலறையில் தயாராவதும் அம்பலமாகிச் சந்தி சிரிப்பதைக் கண்டு இந்திய ஜனநாயகத்தின் புனிதப் பூசாரிகள் சங்கடத்தில் நெளிகின்றனர். ‘முழுதும் நனைந்த பின்னே முக்காடு எதற்கு?’ என்று எண்ணிய கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், “லாபியிங் (தரகு வேலை) ஒரு ஜனநாயக உரிமை. அதை முறைப்படுத்த முடியுமே தவிர, தடை செய்ய முடியாது” என்று பிரகடனமே செய்து விட்டார். “வரி ஏப்பு அதிகரித்தால் அதற்குத் தீர்வு, வரிகளை நீக்குதல்; கறுப்புப் பணம் அதிகரித்தால் அதற்குத் தீர்வு, அவற்றை வெள்ளையாக்கும் திட்டத்தை அறிவித்தல்’’ – இதுதானே புதிய தாராளவாதக் கொள்கையின் ஒழுக்கவிதி!

எனவே, லாபியிங் உரிமையை முறைப்படுத்துதவதற்கான வழிமுறைகள் விவாதிக்கப்படுகின்றன. “அமெரிக்காவில் இருப்பதைப் போல, எந்த நாடாளுமன்ற உறுப்பினர் எந்த கார்ப்பரேட் நிறுவனத்திடம் பணம் வாங்குகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை இந்திய மக்களுக்கும் இருக்கவேண்டும்” என்று ஊழல் ஒழிப்புக்கான ‘அமெரிக்க வழி’யை முன்மொழியத் தொடங்கிவிட்டனர், முதலாளித்துவ அறிவுஜீவிகள். ‘கட்டுப்பாடுகளை நீக்குதல்’ என்ற புதிய தாராளவாதத்தின் பொருளாதாரக் கொள்கைக்கு, ‘ஒழுக்கத்தை நீக்குதல்’ என்ற கலாச்சார கொள்கை பொருந்தித்தான் வருகிறது

மற்றெல்லா உரிமைகளையும் பறித்துக் கொண்டாலும், புதியதோர் உரிமையை மக்களுக்கு வழங்கியிருக்கிறது தனியார்மயம்! நமக்கு வழங்கப்படவிருக்கும் இந்த உரிமைக்குப் பொருள்தான் என்ன?

எந்த எம்.பி., எந்த கார்ப்பரேட் முதலாளியிடம் பணம் வாங்குகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் உரிமை! அல்லது டாடா-அம்பானி-மித்தல்-அகர்வால்-ரூயா போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்கள், எந்த அமைச்சரின் உதவியுடன் நமது சட்டைப் பைக்குள் கை விடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் உரிமை. அரசு அதிகாரத்தின் உண்மையான பொருள் கார்ப்பரேட் முதலாளிவர்க்கத்தின் அதிகாரம்தான் என்று தெரிந்து கொள்ளும் உரிமை!

இனி இந்தக் கட்டுரையின் முதல் வரிக்கு மீண்டும் செல்வோம். அட, இந்த உரிமையை தனது நாட்டு மக்களுக்கு சென்ற நூற்றாண்டிலேயே வழங்கியிருக்கிறாரே முசோலினி!
________________________________________________

– மருதையன், புதிய ஜனநாயகம், ஜனவரி-2011

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவர் நீரே!

26

பங்குச் சந்தையின் புள்ளிகளைப் பதற்றத்துடன் அண்ணாந்து உற்று நோக்கும் பங்குதாரர்கள் போல, பங்குச்சதையின் திருப்பலியைக் கேட்க மண்டியிட்டு அண்ணாந்து பரிதாபமாக இறைஞ்சும் அப்பாவி ஏசுவின் குழந்தைகள்.

‘பங்குத்தந்தை’ – குழப்பம் வேண்டாம். ஊரை அடிச்சிப் பங்குப் போட்டுக் கொள்வது, அவ்வளவுதான். ஆடு, மாடு திருடு போயிட்டால் ஊர் நாட்டில் சொல்வார்கள்… ‘எவனோ பங்கு போட்டுத் தின்னுட்டான் பாவி’ என்று. பாவம், மந்தைகளைக் காப்பாற்ற மீண்டும் ஒருமுறை மீட்பர் உயிர்த்தெழுவாரா?!

பங்குகளை பிரித்துக்கொள்வதில் சாதிகளைப் போலவே படிநிலைகள் உண்டு. அதாவது பெரிய பங்கு, சிறிய பங்கு, மீடியம் பங்கு என்று. திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரையில் இது ஒரு பெரிய மறை மாவட்டம். எழுபது, எண்பது பங்குகள் இருப்பதாக கிருத்துவ வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன. இருக்கட்டும், பரவாயில்லை. இதற்கெல்லாம் பாஸ் யார்ர்ர்…ரான்னா ‘சேசு சபை’ என்கிற ‘அந்தப்புற’ குருக்கள் சபைதான். அந்த அந்தப்புறத்திலொரு மகராஜன்தான் நம்மூரு சாமி யாரு? ராஜரத்தினம்.

இவரை Father  என்றும் அழைப்பார்கள். ‘சாமியாரா? Father ? ரெண்டுல எதாவது ஒண்ணு சொல்லுங்க’ என்று கேட்காதீர்கள். ரெண்டுமே ஒண்ணுதான் பிரதர்…! அதாவது Father  ரா குடித்தனம் பண்ணி, பிறகு சாமியாரா ஆனவங்க பலபேர். ஆனா சாமியாரே Father ஆகி புதுக்குடித்தனம் நடத்துறது இப்பவெல்லாம் ஃபேஷன்.

ஸ்தோத்திரம் ஆண்டவரே!

இதை பிளாரன்ஸ் மேரியிடம் கேட்டால்… ‘பாஸ்டேட்’ என்கிறார் ஆத்திரத்துடன். சரி அத்த விடுங்க சார்… பங்குக்கு வருவோம். ரொம்ப கொழப்பம் வேண்டாம்…. சிறிய பங்கு எம்.எல்.ஏ மாதிரி, பெரிய பங்கு எம்.பி மாதிரி. ஏதோ தன்னால முடிஞ்ச அளவு கர்த்தரிடம் மன்றாடிப் பங்குப் பெறுபவர் சிறிய பங்குத்தந்தை. முழங்கை வரையிலும் கையை விட்டு, கர்த்தரிடம் முழங்காலிட்டு அள்ளிக் கொள்பவர்தான் பெரிய பங்குத் தந்தை; அவ்வளவுதான் மேட்டர்.

அதாவது ஏசு அப்பத்தைப் பங்கிட்ட மாதிரி இப்படித்தான் சிறுசும், பெருசும் சுமார் ‘ச்சேர்’ பண்ணிக்கிறாங்க. பங்குன்னா… ஏதோ நம்மூர் திருவிழாவுல ஊருக்கே ரெண்டு கெடா வெட்டி, வீட்டுக்கு பிடி கறிய எடுத்துக்கிட்டுப்போற சாதாரண விவகாரமில்ல இந்தப் பங்கு. உண்டியல் காசு, கண்ணுக்கெட்டாத தூரம் நெல்வயல், நூறு, இருநூறு ஏக்கர்ல தென்னந்தோப்பு, வாழத்தோப்பு, மாந்தோப்பு, அதன்பிறகு வரி வசூலிக்க கல்யாணம், கருமாதி, ஞானஸ்ஞானம், ஈஸ்டர், கிருஸ்துமஸ், இதுபோதாம ‘புது நன்மை’னின்று புடுங்கிறதெல்லாம் பங்குத் தந்தையின் நன்மைக்கே.

இப்படியாக குவிகிறது தந்தையின் பங்கு. இந்தப் பங்குச் சந்தையில் மட்டும் புள்ளிகள் எப்பவும் ஏறுமுகத்திலேதான் இருக்கும். இதுல இன்னொன்னு என்னான்னா… மகாஜன சங்கம், தேவர் பேரவை மாதிரி ‘பங்குப்பேரவை’யின்னு ஒன்று உண்டு. அதாவது ஃபாதர் சங்கம், மதர் சங்கம், பிரதர் சங்கமெல்லாம் போதாதாம். மாதர் சங்கம், இளைஞர் சங்கம், பாலர் சங்கம், சிறுவர் மன்றம், சிறுவர் பாராளுமன்றம்… இப்படியாக பட்டியல் நீள்கிறது. கிருத்துவ வட்டாரங்களை தன் நிர்வாகத்தின் கீழ் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ளவே இந்தச் சங்கங்கள். சொல்லப்போனால் வெள்ளைக்காரன் காலத்து ஏயத் வாரி, பகல் வாரி மாதிரிதான் இவைகள்.

இந்த கலைகளுக்கு ஒரே ஒரு கண்டிஷன். ஒரு கன்னத்தில் அடித்தால்… மறு கன்னத்தைக் காட்டாமல், எவனாவது ரோசப்பட்டு திருப்பி அடித்தவன் கன்னத்தில் அடித்தால், அவன் பேரவைகளில் அங்கம் வகிக்க முடியாது.

மேற்கண்ட நிர்வாக முறைகளைக் கட்டுக்கோப்பாக நடத்திச் செல்ல ஒரு தலைமை அலுவலகம் வேண்டுமல்லவா…?  அதுதான் மாயத்தீவு தூய வளனார் கல்லூரி, திருச்சி – 02. அந்த சாம்ராஜ்ஜிய ராஜாதான் ஸாட்சாத் Father  ராஜரத்தினம், நிற்க.

”தனக்கு சவக்குழியைத் தோண்ட தானே அதற்கு ஆட்களையும் தயார் செய்கிறது முதலாளித்துவம்” – என்று ஆசான் கார்ல் மார்க்ஸ் சொன்னது நினைவுக்கு வருகிறது. அது இந்த பாதிரிக்கு எப்படியோ கச்சிதமாக பொருந்துது பாருங்க…!

சில பல வருஷங்களாக கட்டாயப்படுத்தி ஒரு கன்னியாஸ்திரிய கெடுத்திருக்கிறாரு இந்த ராஜரத்தினம். பிளாரன்ஸ் மேரி கேட்காத போதே முன் வந்து பல பரிசு பொருட்களை காஸ்ட்லியாக வாங்கித் தந்திருக்காரு இந்த ராஜரத்தினம். ‘எதையோ வாங்கித் தந்து விட்டுப் போகட்டும் எழவ எடுக்க. அந்த செல்ஃபோன் எதுக்கு? நம்ம Father  வாங்கித் தரணும்? இப்ப பாத்தீங்களா, குதிர குப்புற தள்ளினதுமில்லாம, குழியும் பறிக்குதில்ல’ என்று சக குருக்கள் கொழப்புறாங்க.

எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு. ‘கிணத்த சுத்தி விளையாடுகிற புள்ளைக்கு கிணத்துலதான் சாவு’ என்று. இப்போது பிளாரன்ஸ் மேரி கொடுத்த டைரிய நம்ம ஏட்டம்மாவே படிச்சிட்டு முகஞ்சுழிக்குது. ‘இது ராஜரத்தினத்திற்கு தேவைதானா? சரி! அத்த உடுங்க பிரதர், எதஎத பங்கு போடறதுன்னு ஒரு வெவஸ்தையே இல்லையா?’ என்று சாதாரண ஏழைக் கிருத்துவன் கேட்பது நியாயம்தான். என்ன பண்றது?! பங்குத் தகராறுன்னா… கொஞ்சம் அப்பிடி, இப்பிடி இருக்கத்தான் செய்யும். தெரியாமலா ‘சர்ச்ல இதெல்லாம் சகஜமப்பா…ன்னு’ மதுரை சேசு சபை தலைவர் தேவதாசு சொன்னாரு. அவருக்கு இருக்கிற ‘வெத்தலப்பெட்டி’ அனுபவம் நமக்கெல்லாம் வருமா?

வேளைக்கு மூணு வகை கறிய வறுத்துப்போட்டு, சாம்பல் மாறாத சிம்லா ஆப்பிளையும், ஊட்டி ஆரஞ்சையும் வயிறுமுட்ட திங்க வச்சு, பூசைக்கு பூசை ஒயின்ன ஊத்திவுட்டு, கரந்த பாலுல துளி தண்ணி கலக்காம சுரண்ட காய்ச்சி எடுத்து, அதுல பிஸ்தா பருப்பைக் கொட்டி மெதக்கவுட்டு, அதை இதமான சூட்டுல கழுத்து வரைக்கும் முங்க வச்சு, மினிஸ்டர் காட்டன்ல அங்கி தச்சி போட்டுவுட்டு, அதுக்கு நாடாவையும் கோத்துக்குடுத்து, இலவம்பஞ்சு மெத்தையும் போட்டுவுட்டு, படுக்கப்போற நேரம் பாத்து… நீ தனியாகத்தான் படுக்கணுமின்னா… எந்த மழுமட்டையாவது கேக்குமா?! கொஞ்சமாவது இந்த சேசு சபைக்கு ‘புத்தி வேண்டாமா?! இல்ல… சேசு சபையில இருக்கிற முக்கால்வாசி குருக்கள் அப்படியா வளர்ந்தவங்க?

சினிமாவுல புது மாப்பிள்ளைய First Nightக்கு ‘ஏற்பாடு’ பண்ணி அனுப்புறத நாம பார்த்திருக்கிறோம். அதுவும் அஞ்சு நிமிசத்துல அந்த காட்சி முடிஞ்சிறும். ஆனால் வருசம் முச்சூடும் பல Fatherகள் மந்தைகளின் வரிப்பணத்தில் தங்களை இப்படித்தானே ‘தயார்’ செய்துக்கொள்கிறார்கள். அப்புறமென்ன… கன்னிமேரிக்கு தொண்டூழியம் செய்யப்போயி… கன்னித்தன்மை இழந்தது தானே மிச்சம் பிளாரன்ஸ் மேரிகளுக்கு.

தான் கற்பம் அடைந்ததைப் பற்றி ராஜரத்தினத்திடம் பிளாரன்ஸ் மேரி  சொன்னபோது… ‘வெரி சிம்பிள் கருவ கலைச்சிடு’ என்று தமிழ் சினிமா வில்லன் மாதிரி சொல்லிவிட்டு புனித லூர்து அன்னை ஆலயத்தின் உச்சியில் இருக்கிற சிலுவை அதிர்ந்த மாதிரி எகத்தாளமாக சிரித்திருக்கிறார் Father Mr. ராஜரத்தினம். என்ன செய்வது Fatherரச் சொல்லி குத்தமில்ல. மந்தைகளைச் சொல்லணும். ‘Father ஸ்தோத்திரம்… Father ஸ்தோத்திரம்’னு நீயே ‘அப்பா’ ஸ்தானத்தைக் குடுத்துட்டு, அப்புறம் Motherஐ வச்சிக்கிறது தப்புன்னா… எந்த ரத்தினம் கேக்கும். இல்ல சேசு சபைதான் இதை காதிலே போட்டுக்குமா?! கேட்காது.

ஏனென்றால் அந்தப் புள்ளியில்தான் தூயவளனார் நிறுவன சாம்ராஜ்ஜியத்தின் ஒளிவட்டம் பாதுகாக்கப்படுகிறது.

ஓ… மந்தைகளே! அப்பத்தை ஏசுவின் சதையென்றும், ஒயினை ஏசுவின் ரத்தமென்னும் பாதிரிகள் உங்களுக்கு தந்துவிட்டு, ஆனால் அவர்களோ நீங்களெல்லாம் தாயாக மதிக்கின்ற கன்னியாஸ்திரிகள் சதையையும், ரத்தத்தையும், கற்பையுமல்லவா உறிஞ்சுகிறார்கள். ‘நம்ம சாமியார்’ என்று நீங்கள் இன்று மௌனம் சாதிக்கலாம். பிளாரன்ஸ் மேரி இடத்தில் நம்முடைய அக்கா, தங்கை இருந்திருந்தால்… என்ன செய்திருப்பீர்கள்?! மறு கன்னத்தைக் காட்டியிருப்பீர்களா?! சொல்லுங்கள்.

ஒரு துறவிக்கு மிதமிஞ்சி பூர்த்தி செய்யப்பட்ட மற்ற எல்லா சுகபோகங்களும் சேர்ந்துதான் பாலியல் என்கிற காமத்தைக் கோருகின்றன. துறவி என்று நம்பி சாந்தமாக நீங்கள் ஜெபிக்கும் போதெல்லாம் பாதிரியின் எண்ணம் விஸ்வாமித்திரன் ரூபத்தில் வந்து எள்ளி நகையாடுகிறது. துறவு என்கிற அந்த போலியான உண்ணாவிரத முறையிலேயே ‘பழச்சாரு’ என்கிற அந்த முடிவும் அடங்கியுள்ளதை நீங்கள் பார்க்க மறுப்பதன் விளைவுதான் ராஜரத்தினங்கள்.

குடும்பம் இருப்பவனுக்கு ஒரு சாப்பாடு. சத்திரத்தில் இருப்பவனுக்கு ‘பல’ சாப்பாடு. – இந்த இரண்டாவது வகையறாதானே பாதிரிகளும், சாமியார்களும். ஒரு மனிதனாக பிறந்தவனுக்கு பாலியல் தேவையென்பது ஒரு சாதாரண எதார்த்தத் தேவைதான். இதில் ஆச்சரியத்திற்கோ, அதிசயத்திற்கோ ஒன்றும் இடமில்லை. ஆனால் அதைமூடி மறைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றி, மடமையில் ஆழ்த்தி, நம்பவைத்து கருவறுக்கின்ற காரியத்திற்கு ‘துறவு’ என்று ஒளிவட்டத்திற்குள் சல்லாபம் புரியும் இந்த கேடுகெட்ட கிரிமினல் கும்பலை, கும்மாளம் போடவிட்டு இன்னும் எத்தனை காலம் வேடிக்கைப் பார்ப்பீர்?!

இல்லை. இதற்கெல்லாம் எந்த சேசு சபை வந்து பதில் சொல்லப்போகிறது. 16வது அல்ல 100வது பெனடிக்ட் வந்தாலும் உங்களுக்கு பதில் கிடைக்கப்போவதில்லை. மாறாக கர்த்தர்மேல் பாரத்தைப் போடச் சொன்னார்கள். இருந்தே இருக்கிறது தவறாமல் எல்லாருக்கும் மறுகன்னம்.

இப்படியே தான் நாட்டின் ஒரு பெருங்கூட்டத்தை பக்தி என்கிற ஒரு கஞ்சா போதையில் வைத்திருக்கின்றன மதங்கள். ‘மதம் என்பது அபினி போன்றது’ என்று இந்த அவலத்தைத்தான் கார்ல் மார்க்ஸ் விளக்கினார்.

இனி கன்னியாஸ்திரிகளை கற்பழிக்க எங்கோ வெளியிலிருந்து சோத்து மூட்டை கட்டிக்கொண்டு ஒரு காமுகன் வரத்தேவையில்லை. அத்தகைய காமுகர்கள் அங்கிக்குள்ளேயே உலாவுகிறார்கள். சங்கராச்சாரி, பிரேமானந்தா, நித்தியானந்த வரிசையில் மற்றவர்களை தள்ளிவிட்டு நிற்கிறார்கள் பாதிரிகள். காமத்திற்கேது மத பேதங்கள்.

”இவர்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள். தேவனே! இவர்களை மன்னியும்” என்று தன்னை சிலுவையில் அறைந்தவர்களை, தான் சாகும் தருவாயில் கூட, ஏசுவின் மன்னிக்கின்ற பெருந்தன்மையை குறிக்கின்ற புகழ்பெற்ற விவிலியத்தின் வசனம் இது. இதை அப்படியே ராஜரத்தினத்திற்குப் பொருந்தினால், அவர் ஒருமுறை அல்ல, நூறு முறை மன்னிக்கப்படுவார். இந்தப் பாவ மன்னிப்புத்தான் அடுத்தடுத்த பொறுக்கித்தனத்திற்கு அடியெடுத்துக் கொடுக்கிறது. எனவே பாவ மன்னிப்புகள் இருக்கும்வரை பாவத்திற்கு பஞ்சமில்லை. ஆனால் ‘கர்த்தர் ஆயிரம்முறை பாவமன்னிப்பு வழங்கினாலும், நான் விடப்போவதில்லை’ சொல்லுகிறார் பிளாரன்ஸ்மேரி. வாழ்த்துக்கள், அப்படியே செய்யக் கடவதாக…!

பாதிரிகளின் இந்த ஆபாசத்தையும், ஆணாதிக்கத்தையும் விரும்பாதவர்கள் ஒன்று தங்களின் கைகளில் கனக்கும் ‘புதிய, பழைய ஏற்பாடுகளை’ வீசியெறிய வேண்டும். அல்லது எல்லாம் கர்த்தருடைய கிருபை’ என்று சிலுவையைப் போட்டுக் கொண்டு மழுங்கிக் கிடக்க வேண்டும். ஒரு பாதிரியார் ‘ஒரு தேடப்படும் கிரிமினல் குற்றவாளி’ என்று ஆனப்பிறகும், ‘தினமும் போலீஸ் ஸ்டேசனில் காலையும், மாலையும் கையெழுத்திடவேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டபின்பும், நமக்கு ரோசம் வருவதில்லை. பதிலாக உடனிருந்த பெண்ணின்மீது பழி சுமத்த மட்டும் உங்களுக்கு என்ன யோக்கிதை இருக்க முடியும். ஆண்களாக பிறந்த ஒவ்வொருவரும் தலைகுனிய வேண்டிய விசயமில்லையா இது.

கருவை சுமந்த கன்னியாஸ்திரியின் சீருடையை உருவி எரியும் இந்த சேசு சபைக்கு, அதற்கு காரணமான ராஜரத்தினத்தின் அங்கியை கழட்ட, ஏன் துப்பில்லை? ஏனென்றால் அப்படி ஒன்று நடந்து விட்டால், அந்த சேசு சபையே அம்மணமாக நிற்க வேண்டி வரும் என்று அந்த சபைக்கே தெரியும். ‘இது மேல் சாதி சாமியார்களின் சதி’ என்று ராஜரத்தினம் சொல்வது உண்மையானால் அந்த சாமியார்களின் பெயர் பட்டியலை வெளியிட முடியுமா?! முடியாது. ஏனென்றால் எல்லா சாதி தில்லுமுல்லுகளும் சேர்ந்துதான் கூட்டாஞ்சோறு தின்னுகிறார்கள். மாட்டிக்கொண்ட பிறகு ‘நானில்லை, அவனில்லை’ என்று லாவணிப்பாடுகிறார்கள்.

திருடியதில் சமமான பங்கும், சரியான எடையும் இருக்கின்றவரை இவர்களுக்குள் பிரச்சனை வராது, என்பதுதான் திருடர்களின் பெருந்தன்மையின் எல்லை. எனவேதான் முறை தவறி திருடும் இவர்கள் முறையான பங்கை எதிர்பார்க்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பில் மண்விழும்போதுதான் ஆளுக்காளு போட்டுக்கொடுப்பதும் அடியாள் சேர்ப்பதும் நடக்கிறது.

பாதிக்கப்பட்ட பிளாரன்ஸ் மேரி பக்கம் நிற்க ஒரே ஒரு சேசு சபை குருவுக்கும் ஆண்மை கிடையாது. மன்னிக்கவும்… யோக்கியதை கிடையாது.

முதலாளிகளால் ஓசோன் படலம் ஓட்டை

பாதிரிகளால் தூயவளனார் சாம்ராஜ்ஜிய குடையில்

சல்லடைகண் ஓட்டை

ஸ்தோத்திரம் ஆண்டவரே!

கர்த்தராகிய ஏசுகிருத்து ராஜரத்தினத்துடன்

இருப்பாராக…!

கா…ம…ன்

____________________________________________________________________

 

– சா.செல்வராசு, ம.க.இ.க மையக் கலைக்குழு

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தலைமைச் செயலகமா தரகர்களின் தொழுவமா?

15
விண்ணுயர நிமிர்ந்து நிற்கும் புதுதில்லி சவுத் பிளாக்கை முட்டுக் கொடுத்து தாங்கிநிற்பவர்கள் தரகர்களே!

சென்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அதே நேரத்தில் முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழரின் சுதந்திரத் தாயகக் கனவுகளுக்கு ஒரு இரத்தமயமான முடிவு எழுதப்பட்டிருந்தது. உலகெங்கிலுமிருந்த தமிழரின் இதயம் வேதனையால் துடித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் கோபாலபுரத்திலும் சி.ஐ.டி காலனியிலும் இருந்த சிலருக்கும் இதயம் துடித்துக் கொண்டிருந்தது – அது வேதனையால் அல்ல; எதிர்பார்ப்பினால்.

தமது உறவுகளின் நிலையறிய உலகெங்கும் இருந்த புலம்பெயர்த் தமிழர்கள்  தொலைபேசிகளின் அருகிலேயே தவிப்போடு அமர்ந்திருந்த நேரத்தில்  கருணாநிதி குடும்பத்தினரும் ஆவலோடு தொலைபேசிகளின் அருகே அமர்ந்திருந்தனர் நீரா ராடியாவின் குரலைக் கேட்க.

விண்ணுயர நிமிர்ந்து நிற்கும் புதுதில்லி சவுத் பிளாக்கை முட்டுக் கொடுத்து தாங்கி நிற்பவர்கள் தரகர்களே!

தில்லி தெற்கு பிளாக்கின் அழுக்கேறிய அரசாங்கக் கட்டிடங்களில் செயல்படும் பல்வேறு அமைச்சக அலுவலகங்களும், தேசத்தின் விதியை சில பச்சைக் கையெழுத்துகளிலேயே மாற்றிவிடும் வல்லமை கொண்ட முக்கியமான அரசு அலுவலகங்களும்  செங்கல், சிமென்ட்டால் கட்டப்பட்டதோ என்னவோ – அவைகளின் கட்டுமானத்தில் மிக முக்கியமான ஒரு அங்கம் – தரகர்கள். தரகர்கள் இன்றி இந்த அலுவலகங்களில் ஒரு தூசி துரும்பு கூட அசைந்து விடாது.

இவ்வலுவலகங்களைச் சேர்ந்த அரசு அதிகாரிகளை விட அரசு நடைமுறைகள், விதிகள், தொடர்புடைய சட்டங்கள், அரசு உத்தரவுகள் மற்றும் இவற்றினூடே உள்ள சகல சந்து பொந்துகளும் இந்தத் தரகர்களுக்கே அத்துப்படி. கற்பனையான ஒரு வாதத்துக்கு இந்தத் தரகர்கள் ஒரு நாள் ‘டிங்’ என்று மறைந்து காணாமால் போய் விடுகிறார்கள் என்று  வைத்துக் கொண்டால், பல அதிகாரிகளுக்கு தங்கள் வேலை என்னவென்பதைக் கற்றுக்கொள்ளவே சில மாதங்கள் பிடிக்கலாம். இந்தியாவின் இன்றைய ஜனநாயகமும் அமைச்சர்களை வெறும் ரப்பர் ஸ்டாம்புகளாக வைத்திருப்பதால் – தேசமே சில மாதங்களுக்குத் தடுமாறும் நிலை கூட ஏற்பட்டால் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

“தரகர்” என்றவுடன் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் காணும் நபர்களையொத்த ஒரு தோற்றத்தை நீங்கள் கற்பனை செய்துகொள்ளத் தேவையில்லை; சவுத் பிளாக் தரகர்கள் அழகான சூட்டுக் கோட்டுகளில் கழுத்தில் டையுடன் நேர்த்தியான மேக்கப்புகளில் காணப்படுவார்கள். இவர்களுக்கான ஒரு கௌரவமான பெயர் தான் – “லாபியிஸ்ட்”. இப்படி அரசாங்க மற்றும் அதிகார மட்டங்களில் தனியார் தரகுப் பெருமுதலாளிகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் தரகு வேலை செய்து தரும் சில நிறுவனங்களை நடத்தும் ஒரு தரகர் தான் நீரா ராடியா.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ஒட்டி வெளியான நீரா ராடியாவின் உரையாடற் பதிவுகளை ஒட்டி சகல ஊடகங்களிலும் வெளியாகும் செய்திகளில் ஏதோ இந்தியாவின் ஒரே தரகர் நீரா ராடியா என்பது போல் தோன்றும் படிக்கு செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஆனால், எதார்த்தம் அதுவல்ல. தில்லியிலுள்ள ஒரு மத்திய அரசு அலுவலகத்திலிருந்து – இங்கே  உசிலம்பட்டியிலிருக்கும் பஞ்சாயத்து ஆபீஸ் வரையில் சகல மட்டங்களிலும் தரகர்களால் இந்தியா நிரப்பப்பட்டுள்ளது. சில சிறப்பான தரகர்களுக்கு வெளியே சொல்லிக் கொள்ள கவுரவமான வேறு பெயர்கள் இருக்கலாம் – உதாரணமாக பத்திரிகையாளர்கள் எனும் போர்வையில் துக்ளக் சோ, இந்து ராம், அரசியல்வாதியாக சு.சுவாமி, இறந்து போன பிரமோத் மகாஜன், முலாயம் கட்சியிலிருந்த அமர்சிங், மக்கள் தொடர்பு ஆலோசகராக (PR consultant) நீரா ராடியா.

‘ஜனநாயகப்பூர்வமாகத்’ தேர்ந்தெடுக்கப்படுவதாக சொல்லிக் கொள்ளப்படும் இந்த சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சிகளில் மெய்யாகவே ஜனநாயகம் என்பது இருந்திருந்தால் கூட்டணிக் கட்சியோடு பதவிப் பங்கீடு தொடர்பாகப் பேச செயற்குழு மூலமோ கட்சியின் உயர் நிலைக் குழு மூலமோ ஒரு கமிட்டியோ குழுவோ அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கோ  பெரும்பாலும் கட்சிகள் ஜனநாயகத்தின் வாசம் கூட இல்லாத குடும்ப கார்ப்பரேட்டுகளாகவே இருப்பதால் அவர்கள் நீரா போன்ற தரகர்களின் கால்களில் விழ வேண்டியிருக்கிறது.

நீரா ராடியாக்கள் சுயம்புவாகக் கிளர்ந்து எழுந்து வந்த மேனகைகளும் அல்ல; ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் விசுவாமித்திரர்களும் அல்ல. இந்த ஜனநாயகமற்ற அரசியல் அமைப்பு முறையின் தவிர்க்கவியலாத தேவை தான் தரகர்கள். இருளின் போர்வையினுள் இயங்கும் தன்மை கொண்ட தரகு வேலைகளில் இனி நீராவால் செய்ய முடியாது – அதனால் இனிமேல் தரகர்களே இல்லாமல் போய் விடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்போதும் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்; இனி எப்போதும் இருப்பார்கள் – இந்தப் போலி ஜனநாயகத்தை வீழ்த்தும் வரை இருப்பார்கள்.

நீராவும் தி.மு.க கார்ப்பரேஷனின் பங்குதாரர்களான கருணாநிதி குடும்ப உறுப்பினர்களும் பேசிக் கொண்ட உரையாடல் பதிவுகள் வெளியானதைத் தொடர்ந்து ஆங்கில இணைய ஊடகங்களில் – குறிப்பாக இவ்விவகாரத்தில் மாட்டிக் கொள்ளாத  பத்திரிகைகளிலும், தமிழ் இணையங்களிலும் ஒரு பரபரப்புக் கிளம்பியது. அதிலும் குறிப்பாக இதில் தி.மு.க சம்பந்தப்பட்டிருப்பதாலும், தி.மு.க குடும்பத்தினரின் உள்வட்ட குழிபறிப்புகளும், குழுச்சண்டைகளும் வெளிச்சத்திற்கு வந்திருப்பது இவர்களுக்கு போனசாகக் கிடைத்த ஒரு கிளுகிளுப்பு அம்சம்.

தி.மு.க இன்று (திராவிட) வாசம் போன காலி பெருங்காய டப்பாவாக இருந்தாலும், அதன் பெயரில் ஒட்டிக் கொண்டிருக்கும் ‘திராவிட’ எனும் வார்த்தை கிளப்பும் கடுப்பும் கணிசமான அளவுக்கு இவ்விவகாரம் பற்றி ஒரு சிலர் தொடர்ச்சியாக எழுத பேச காரணம். அரசியலில் தரகர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் இவர்களில் பலர், முந்தைய காலங்களில் அ.தி.மு.கவுக்கு தரகனாகச் செயல்பட்டு வந்த சோ மற்றும் ஆ.நடராசன் போன்றோரின் இடையீடுகளை விமர்சித்திராதவர்கள் – இப்போதும் விமர்சிக்க மறுப்பவர்கள்.

இவர்கள் இந்த விவகாரத்தின் அரசியல் உள்ளடக்கத்தை உருவியெறிந்து விட்டு அதன் கிசு கிசு அம்சத்தை மட்டுமே திரும்பத் திரும்ப பேசி /எழுதி வருகிறார்கள்.  இதைப் பற்றி தொடர்ச்சியாக எழுதும் தமிழ் பத்திரிகைகளில் ஜூனியர் விகடனின் உட்சபட்ச எதிர்பார்ப்பே அ.தி.மு.க – காங்கிரசு கூட்டணி பற்றியது தான். நக்கீரனுக்கு தி.மு.க – காங்கிரசு கூட்டணி. கூட்டணிக் கிசு கிசு பற்றி எழுதுவதற்கு  இடையிடையே மானே தேனே போட்டுக் கொள்வது போலத் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி எழுதுகிறார்கள்.

நீரா ராடியா எனும் தரகர் திமுக தலைமையோடு பேசினார் என்பதைப் பெரிதாக எழுதும் முதலாளித்துவ ஊடகங்கள், அவர் யாருக்காகப் பேசினார், எதற்காகப் பேசினார், அந்தப் பேச்சினால் விளைந்த பலன்கள் என்ன, அவைகளின் பௌதீக மதிப்பு என்னவென்பதைப் பற்றி போகிற போக்கில் குறிப்பிட்டு விடுகின்றன. 1.76 லட்சம் கோடிகளையும் ஆ.ராசாவும் கருணாநிதியும் பங்கிட்டுக் கொண்டுவிட்டதைப் போன்றதொரு தோற்றம் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது.

வடநாட்டு அரசியல்வாதிகளையோ பார்ப்பனியத்தையோ விமர்சித்து மறுமொழி எழுதினால் கடுமையாக மட்டுறுத்தும் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் இணையதளத்தில் வந்துள்ள ஒரு மறுமொழியைக் கவனியுங்கள் –

How Tamil Nadu looting India :- 1. A Raja – Telecom Scam 2. Chief Justice of India – balakrishnan 3. Law minister – Verappa Moily 2. Nira Radia – Spectrum Scam 3. Chandrasekhran – Subhiksha Scam 4. Ramlinga – Satyam Fraud 5. Ramchandran – LIC Scam 6. Chidambram – Rise of Maosim 7. Srinivsan – IPL corruption 8. Jairam Ramesh – Vedanta and Posco scams 9. Mining Scam _- Reddy All above people are from Madras . Followers of fake brahmans like ravans , mahisasura , surpanakha ,hirnakashaypa and narkasura.

http://expressbuzz.com/opinion/op-ed/sonia-gandhi-and-the-hidden-trail/233507.html

மேற்கண்ட கட்டுரையின் தலைப்பு – சோனியா காந்தியும் ரகசிய பிண்ணனியும்! தமிழர்களை இழிவுபடுத்தும் இந்த மறுமொழி இந்த நிமிடம் வரை பாரம்பரியமிக்க ‘தேசிய’ நாளேட்டின் இணையதளத்தில்  மட்டுறுத்தப்படாமல் இருக்கிறது. யாரோ ஒரு முகம் தெரியாத அனாமதேயம் எழுதிய கருத்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் அல்ல – அது எதிர்க்கப்படாமலும், நீக்கப்படாமலும் இருக்கும் தடித்தனத்தின் பின் இருப்பது என்னவோ அது தான் ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பற்றி எழுதும் ஆங்கில ஊடகங்கள் பெரும்பாலானவற்றுக்கு உள்ள ஆர்வம்.

நீரா ராடியாவின் நிறுவனங்களில் தரகு வேலைகளை செய்யப் பணிக்கப்பட்டுள்ள உயரதிகாரிகளில் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்; அமைச்சகங்களின் துறைச் செயலாளர்களாகப் பணியாற்றியவர்கள். காங்கிரசு மட்டுமின்றி பாரதிய ஜனதா ஆட்சிக் காலத்திலும் செல்வாக்கான பதவிகளில் இருந்தவர்கள்.

அரசுப் பொதுத்துறைகளை தனியாருக்குத் தாரைவார்ப்பதற்காகவே பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் ஒரு அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டிருந்தது அத்துறையின் தலைமைச் செயலராக இருந்தவர் ப்ரதீப் பாய்ஜால் என்கிற ஐ.ஏ.எஸ் அதிகாரி. பின்னர் அருண் ஷோரி தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது ட்ராய் செகரெட்ரியாக நியமிக்கப்பட்டவர். அதற்கு முன்பு BPL போன்ற கம்பெனிகள் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை விலை கொடுத்து வாங்கியது போல் அல்லாமல், வில் போனுக்கு (WLL – Wireless in Local Loop) வாங்கிய உரிமத்திலேயே செல்பேசி சேவை அளிப்பதற்கான அனுமதியை டாடாவுக்கும் ரிலையன்சுக்கும் அளித்த ‘கொள்கை(ளை)’ முடிவை அருண் ஷோரி எடுப்பதற்கு காரணகர்த்தாவாய் இருந்தவர். இதே ப்ரதீப் பாய்ஜால் தான் தனது ஓய்விற்குப் பின் நீரா ராடியாவுடன் கூட்டாக நுவோஸிஸ் நிறுவனத்தை ஆரம்பித்து அதே டாடாவுக்கும் ரிலையன்சுக்கும் தரகு வேலை பார்க்க ஆரம்பித்தார்.

பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவரான வாஜ்பாயின் நெருங்கிய உறவினரான ரஞ்சன் பட்டாச்சார்யா நீராவுக்குத் தேவையான காரியங்களை காங்கிரசிடம் சாதித்துக் கொடுக்க குலாம் நபி ஆசாத்துடன் தொடர்பில் இருந்துள்ளார்.

அரசின் பல்வேறு மட்டங்களில் வலுவான வலைப்பின்னல் கொண்ட நீராவைப் போன்று எண்ணிறந்த தரகர்களே அசையும் அரசு இயந்திரத்தின் போல்ட்டு நட்டுகளாய் உள்ளனர். ஆனால் எவருமே, நீரா ராடியாக்களுக்கான தேவை ஏன் வந்தது என்றோ, இந்தியாவில் இருப்பது ஒரே நீரா ராடியா தானா என்பதைப் பற்றியோ, இது போன்ற நீரா ராடியாக்களால் யாருக்கு லாபம் என்றோ கேள்விகளை எழுப்பவில்லை.

இருக்கும் இயற்கை வளங்களோ குறைவு – போட்டியோ அதிகம். அரசுக்கு வளங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் வரம்புக்குட்பட்டது – அந்த வரம்பும் இவர்களே விரும்பி கையெழுத்திட்ட காட் ஒப்பந்தத்தின் விளைவு தான்.  இந்நிலையில் தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் கடுமையான கழுத்தறுப்புப் போட்டிகளில் குறுக்குவழியில் சென்றாக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளுகிறது.

இது ஒரு பக்கமென்றால், உட்கட்சி ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்ட ஓட்டுக் கட்சித் தலைமைகளுக்கு யாருக்குப் பதவி என்பதை பிற எம்.பிக்களோ அல்லது இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட கட்சிக்காரர்களுக்கோ தெரிவிக்காமல் பின்வாசல் வழியே தனது குடும்பத்தினரை அமைச்சரவையில் நுழைத்து வைக்கவேண்டும் என்கிற முனைப்பு. இதில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் தராசின் ஒரே தட்டில் தான் அமர்ந்துள்ளனர். இந்த இடைவெளியைத் தான் நீரா ராடியாக்கள் நிரப்புகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால், உலகமயதாசர்கள் பொதுவாக தனியார்மயத்தை உயர்த்திப் பிடிக்க அரசாங்க அதிகார மட்டங்களில் இருக்கும் இது போன்ற தரகர்களைக் குறைசொல்லி, எல்லா பொதுத்துறைகளும் தனியார்மயமாக்கப் பட்டு முதலாளிகளிடம் தாரை வார்க்கப்பட்டு விட்டால் இடைத்தரகர்களே ஒழிந்து போவார்கள் என்றும் அதற்கான தேவை இல்லாமல் போய் விடும் என்றும் சொன்னார்கள். இன்றோ எதார்த்தத்தில் தரகர்கள் செழித்துக் கொழிக்க வைத்திருப்பதே தனியார் முதலாளிகள் தான்.

ஐந்து கண்டங்களையும் ஆதிக்கம் செய்யும் முதலாளித்துவத்தின் நாடி நரம்புகளாசய் தரகர்கள்!

சென்ற ஆண்டின் முதல் காலாண்டு இறுதி வரையில் மட்டுமே ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்காவின் பார்பௌர் கிரிஃபித் & ரோஜர்ஸ் (Barbour Griffith & Rogers) எனும் அமெரிக்க நிறுவனத்திற்கு 1,90,000 டாலர்களைக் கொடுத்துள்ளது. இது எதற்கு என்று நினைக்கிறீர்கள்? ஈரானோடு பெட்ரோலிய வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களோடு அமெரிக்கா வர்த்தகத்தை முறித்துக் கொள்ளவும் அப்படி அமெரிக்காவில் தொழில் அலகுகளைக் கொண்டுள்ள நிறுவனங்களிடம் பெனால்டி விதிக்கவும் வகை செய்யும் மசோதா ஒன்றைக் கொண்டு வர அப்போது அமெரிக்க செனேட் முயற்சித்துக் கொண்டிருந்தது. செனேட் உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து அதிலிருந்து ரிலையன்ஸுக்கு விலக்குப் பெறவே இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் H1-B விசாக்களைப் பெறுவதற்கான விதிமுறைகளை கடினமாக்குவதைத் தாமதப்படுத்த நாஸ்காம் (National Association of Software Companies) எனும் இந்திய மென்பொருள் நிறுவனங்களின் முதலாளிகள் சங்கமும் அமெரிக்காவிலிருக்கும் அதிகாரவர்க்கத் தரகர்களுக்கு கோடிக்கணக்கில் வாரி வழங்கியுள்ளனர். தனியார்மயம் அமல் படுத்தப்படும் முன் இருந்த அரசுகளை “லைசென்சு ராஜ்” என்றும் அப்போது தொழில் தொடங்க நிறைய தடைகள் இருந்தது என்றும் இடைத்தரகர்கள் தேவைப்பட்டனர் என்றும் இதற்போது அப்படியான தடைகளோ தரகர்களோ இல்லாததால் சிரமமின்றி தொழில் தொடங்க முடிகிறது என்றும் சொல்லிக் கொள்ளும் இவர்கள், தமது லாப நலனுக்கு என்று வரும் போது சென்று நிற்பது அதே தரகர்களிடம் தான்.

நிரா ராடியா ரத்தன் டாடாவுடன் பேசியதைப் பதிவு செய்யப்பட்டதிலிருந்து வெறு சில உண்மைகளும் அம்பலமாகிறது. அதாவது, அனில் அம்பானிக்கு உள்நாட்டில் நிறைய கடன் என்றும் அவருக்குத் தற்போது உள்நாட்டிலிருந்து பணத்தைத் திரட்டுவது மிகவும் கடினம் என்றும் ராடியா டாடாவிடம் சொல்கிறார். அதற்கு டாடா, அது பற்றிய செய்திகள் ஏன் பத்திரிகைகளில் வெளியாவதில்லை என்று கேட்கிறார். அதற்கு பதிலளிக்கும் ராடியா, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தினர், தமது நிறுவனங்களின் பெயருக்கு பங்கம் ஏற்படுத்தும் செய்திகள் ஏதும் பத்திரிகைகளில் வெளியாவதைத் தடுத்து நிறுத்துவதை உத்திரவாதப்படுத்திக் கொள்ள ஒரு தரகர்படையே வைத்திருப்பதாகவும், அவர்கள் பத்திரிகைகளுக்கு அளிக்கும் விளம்பரங்களை  வைத்து அப்படியான செய்திகள் வரவிடாமல் செய்து விடுகிறார்கள் என்றும் தெரிவிக்கிறார்.

இப்படி தமக்குச் சாதகமான “செய்திகளை” வரவழைத்தும் தேவைப்படாத “செய்திகளைத்” தடுத்து நிறுத்தியுமே தமது நிறுவனத்தின் பெயரை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். அதன் அடிப்படையில் இருந்தே கம்பெனிகளின் பங்கு மதிப்புகள் முதலீட்டாளர்களிடையே நிர்ணயம் ஆகிறது. இதற்கு வேறு பல காரணிகள் இருப்பினும், பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளுக்கான மதிப்பை அதன் மேல் நிலவும் “நல்லெண்ணமே” பெருமளவில் தீர்மானிக்கிறது. அந்த நல்லெண்ணம் என்பது இப்படிப்பட்ட தரகர்களாலேயே “உற்பத்தி” செய்யப்படுகிறது. தனியார்மயத்தை ஆதரித்து இணையதளங்களிலும் வலைப்பூக்களிலும் தொண்டைகிழியப் பேசிக் கொண்டிருக்கும் இணையத் தவளைகள் அப்பிராணித்தனமாய் நம்பிக் கொண்டிருப்பது போல் இவர்கள் எவரும் “Free & Fair” கொள்கைகளில் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை.

பன்றியுடன் படுத்துப் புரண்டால் சந்தன வாசமா வீசும்? பன்னாட்டு முதலாளிகளோடும் உள்நாட்டு தரகு முதலாளிகளோடும் புழங்கி, அவர்கள் நலனுக்காகன கையாளாக செயல்படும் இந்திய அரசு முதலாளித்துவத்தின் சகல கசடுகளையும் வரித்துக் கொண்டுள்ளது. அமெரிக்க செனட் உறுப்பினர்களை வளைத்து தமக்குச் சாதகமான கொள்கைகளை வகுக்க, இந்திய அரசும் தரகர்களையே சார்ந்துள்ளது. இங்கே அரசின் நலன் என்பதை உள்ளூர் தரகு முதலாளிகளின் நலன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு காலாண்டும் பார்பௌர் கிரிஃப்பித் & ரோஜர்ஸ் எனும் தரகு நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான மக்கள் வரிப்பணத்தை வாரி விட்டுக்கொண்டுள்ளனர். இதில் யார் தரகர்களுக்கு அதிக பணம் கொடுப்பது என்பதில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் கடும் போட்டி நிலவுவதாகச் சொல்லிக் கொள்கிறார்கள் முதலாளித்துவ ஊடக வட்டாரங்களில்.

குவாத்ரோச்சி எனும் பெயரை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 84ஆம் ஆண்டு இந்தியாவிற்கு 30 கிலோ மீட்டர் ரேன்ஜ் கொண்ட ஹவிட்ஸர் வகை மோர்ட்டார் பீரங்கிகள் தேவைப்பட்ட போது ப்ரென்ச் தேசத்தின் சோஃப்மா வகை பீரங்கிகள் தான் முதலில் சோதனைகளின் அடிப்படையில் தேர்வானது. சோஃப்மா 29.2 கிலோ மீட்டர் வரை குண்டுகள் எரியும் திறன் கொண்டதாகவும் போஃபர்ஸ் பீரங்கியோ 21.5 கிலோ மீட்டர்கள் வரை தான் குண்டுகளை எரிய முடிந்தது என்றும் சோதனைகளில் தெரியவந்தது. அதன் அடிப்படையில் இராணுவ அதிகாரிகள் முதலில் போஃபர்ஸை நிராகரிக்கிறார்கள். இடையில் புகும் குவாத்ரோச்சி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியாவுடன் தனக்கிருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி

போஃபர்ஸை தேர்வு பெற வைக்கிறார். இதற்காக அவர் ஏ.ஈ சர்வீஸஸ் எனும் டுபாக்கூர் கம்பெனி ஒன்றையும் வைத்திருந்திருக்கிறார். அதே போன்று அதிகார மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் தரகு வேலை செய்யும் நிறுவனங்களைத் தான் இப்போது ராடியாவும் நடத்தி வருகிறார்.

சென்ற ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில், சுதீர் சவுத்ரி மற்றும் சுரேஷ் நந்தா எனும் இரண்டு இடைத்தரகர்கள் இசுரேல் இந்திய இராணுவத்திற்கு விற்றுள்ள ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள யுத்த தளவாடங்கள் சம்பந்தமான பரிவர்த்தனைகளில் கமிஷனாக மட்டுமே நூற்றுக்கணக்கான கோடிகளை அடித்துள்ளது அம்பலமானது. சுதீர் சவுத்ரி மேல் சி.பி.ஐ விசாரணை செய்யத் துவங்கியவுடன் அவர் பாதுகாப்பாக லண்டனில் சென்று மறைந்து கொண்டார். இசுரேலின் முக்கிய ஆயுத தயாரிப்பு நிறுவனங்களிடம் பெருமளவில் தரகுக்கூலி பெற்றிருந்த சுதீர், அதிலொரு பகுதியை இந்திய இராணுவத்தின் உயரதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கொடுத்து ஒப்பந்தங்களை இசுரேல் நிறுவனங்களுக்கு சாதகமாக முடித்துக் கொடுத்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க, 2001ஆம் ஆண்டே ஆயுத கொள்முதலில் இடைத்தரகர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் விதிகளை இந்தியா தளர்த்தி விட்டது. இப்போது இந்தியா லட்சக்கணக்கான கோடிகளைக் கொட்டி கொள்முதல் செய்யும் ஆயுதங்களை ஏஜெண்டுகள் மூலமாகவே பன்னாட்டு ஆயுத வியாபாரிகள் விற்கிறார்கள். இதற்கு அவர்களுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு மட்டுமல்ல; அரசிடம் இருந்து தரகுக் கூலியும் கிடைக்கிறது. இப்படி தரகர்கள் மூலமாக சர்வதேச ஆயுத வியாபாரிகளிடம் இருந்து அள்ளி வந்திருக்கும் கழுதை விட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டு தான் “நானும் ஒரு பேட்டை ரவுடி தான்” என்று துள்ளுகிறது இந்தியா.

முதலாளித்துவம் என்பதே அழுகுணி ஆட்டமாக இருப்பதால், அவர்களுக்கிடையிலான நாய்ச்சண்டைகளில் சட்டம், அதிகார வர்க்கம் போன்றவைகளை வளைக்க இடைத்தரகர்கள் தேவைப்படுகிறார்கள். ஆக, ராடியாக்களின் தேவையென்பது முதலாளித்துவத்தின் இயல்பு. முதலாளித்துவத்தின் சகல கசடுகளையும் அப்படியே வரித்துக் கொண்டிருக்கும் ஓட்டுப் பொறுக்கி ஆளும் வர்க்கக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக உள்கட்சி ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்து விட்டதால், திரைமறைவு காய் நகர்த்தல்களைச் செய்ய தரகர்கள் தேவைப் படுகிறார்கள்.

மொத்தத்தில் தரகுத்தனம் என்பதன் விளைநிலமாக இருப்பதே இந்தப் போலி ஜனநாயக அமைப்பு முறை தான். மக்களின் பங்கேற்பு என்பது எரியும் கொள்ளியில் எந்தக் கொள்ளி என்கிற தேர்வு மட்டும் தான். கொலைகாரனுக்கும் கற்பழிப்பாளனுக்கும் இடையில் யார் நல்லவன் என்று தேர்ந்தெடுப்பதற்கான ‘உரிமையை’ ஜனநாயகம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். இந்தப் போலி ஜனநாயகத்தின் அழிவும், உண்மையான ஜனநாயாகப் புரட்சியுமே இழிந்த இந்த நிலைக்கு ஒரே மாற்று.

__________________

– தமிழரசன்
__________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மக்கள் மருத்துவர் பினாயக்சென்னை விடுதலை செய்! ஆர்ப்பாட்டம்!!

பினாயக் சென்
பினாயக் சென்

மனித உயிரை காக்கும் மருத்துவ சேவை, பணம் பறிக்கும் தொழிலாக மாறியிருப்பதையும், பணத்திற்காக உடல் உறுப்புகளை திருடி விற்கும் மருத்துவர்கள் பெருகி வருவதையும் நாம் அறிவோம். ஆனால் ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களை பார்ப்பது அரிது. அதிலும் மருத்துவத்தோடு நில்லாமல் மக்கள் படும் துன்பங்களுக்காகப் போராடும் மருத்துவர்களை காண்பது அரிதிலும் அரிது. அத்தகையதொரு அற்புதமான மருத்துவர்தான் பினாயக்சென். குழந்தைகள் நல மருத்துவத்தில் உயர்படிப்பு படித்து, மருத்தவத்துறையில் பிரபலமானவர் – கிராமபுறங்களுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் குதிரைக் கொம்பாகிவிட்ட இக்காலத்தில் சத்தீஸ்கரில் மலைவாழ் பழங்குடி மக்களுக்கு பல ஆண்டுகளாக மருத்துவச் சேவை செய்து வருபவர் டாக்டர் பினாயக்சென்.

மேற்குவங்கம், ஒரிசா, சத்தீஸ்கர் மாநிலங்களில் புதைந்து கிடக்கும் ஏராளமதான கனிவளங்களை கொள்ளையடித்துச் செல்ல தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தாராள அனுமதி கொடுத்துள்ளது மன்மோகன் அரசு. அதற்காக அப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை பலாத்காரமாக அப்புறப்படுத்தி வருகின்றன மத்திய, மாநில அரசுகள். தங்களின் வாழ்விடங்களை பாதுகாத்துக்கொள்ள போராடுவரும் பழங்குடி மக்கள் மீது, போலீசு மற்றும் இராணுவத்தைக் கொண்டும், “சல்வாஜூடும்” போன்ற சட்டவிரோத கொலைகார குழுக்களைக் கொண்டும் காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையை ஏவிவருகிறது மன்மோகன் அரசு. இந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவர்தான் மருத்துவர் பினாயக்சென்.

நமது இயற்கை வளங்களை அன்னியர்கள் கொள்ளையடித்துச் செல்ல அனுமதித்து வரும் தேசத் துரோக ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் சேவகர்களான மக்கள் விரோத போலீசுக்கும் மக்கள் நலனுக்காக செயல்படும் பினாயக்சென்னின் செயல்பாடு ஆத்திரம் கொள்ள செய்திருக்கிறது.

“பினாயக்சென்” மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டார், இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டார்” என்று பொய் குற்றம் சாட்டி போலியான ஆவணங்களைக் காட்டி பொய் வழக்கு போட்டது சத்தீஸ்கர் போலீசு. காவல்துறையின் போலியான ஆவணங்களை அப்படியே ஏற்றும் பினாயக்சென் தரப்பு உண்மையான ஆதாரங்களை ஏற்க மறுத்தும் மருத்துவர் பினாயக்சென், தோழர் நாராயன் சன்யால், பிஜூஷ்குஹா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது, ராய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம்.

இந்நீதிமன்ற தீர்ப்பை, “தீர்ப்பு வழங்கும் நெறிமுறைக்கே எதிரானது” என விமரிசத்து பினாயக்சென்-ஐ விடுதலை செய்யகோரி உள்ளது, சர்வதேச பொது மன்னிப்பு சபை. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங், “நான் அறிந்தவரை பினாயக் சென் அற்புதமான மனிதர். அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இத்தீர்ப்பிற்கு எதிராக இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

நாமும் மருத்தவர் பினாயக் சென் விடுதலைக்காக குரல் கொடுப்போம்.

மக்கள் மருத்துவர் பினாயக்சென்னை விடுதலை செய்!
மக்கள் மருத்துவர் பினாயக்சென்னை விடுதலை செய்!

____________________________________________________________

– தகவல், புகைப்படங்கள்: ம.க.இ.க, பு.மா.இ.மு, தஞ்சை

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!

16

தொடர் மழையை காரணமாகச் சொல்லி வெங்காயம், தக்காளி, பூண்டு உள்ளிட்ட காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. ஒரு முருங்கைக்காயின் விலை பதினைந்து ரூபாய். முந்தானை முடிச்சு படமா ஓடுகிறது இந்த விலை விற்பதற்கு? சந்தையில் நண்பர் ஒருவரை சந்தித்தேன். சந்தையை ஒரு சுற்று சற்றிவிட்டு அப்பாடா என ஒரு பெருமூச்சுவிட்டபடி என்னிடம் வந்தார்.

“என்ன பை காலியா இருக்கு. எதுவும் வாங்கலியா?” என்றேன்.

“வெலயக் கேட்டா பயமா இருக்கு. நான் ஏதோ அப்பிடி இப்பிடி எதையாவது வாங்கிக்கிட்டு போயிடுவேன். ஆனா சாதாரண ஜனங்க,  அதுவும் மாசம் மூவாயிரம்,  நாலாயிரம் சம்பாதிக்கிறவங்க என்ன செய்வாங்க பாவம்?” என்றார்.

கை நிறைய சம்பளம் வாங்குபவரையே மிரள வைத்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.

விலைவாசி உயர்வு, உயிர்வாழும் உரிமையைப் பறித்துவருகிறது. இதே நிலை நீடித்தால், ஒன்று பட்டினிச்சாவுகள் அதிகரிக்கும் அல்லது ஊட்டச்சத்துக் குறைவால் பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆட்படுவதும், தொடர் மரணமும் அன்றாட நிகழ்வாகிவிடும்.

மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாய்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் மிகவும் பிரசித்திப் பெற்ற மதுரை மல்லி கிலோ ஆயிரம் ரூபாயாம். சென்ற வாரம் மல்லி என்றால் இந்த வாரம் கனகாம்பரம். கனகாம்பரமும் ஒரு கிலோ ஆயிரம் ரூபாயாம்.

சமீபத்திய தொடர் மழை காரணமாகவும், கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காரணமாகவும் விளைச்சல் வெகுவாகக் குறைந்துவிட்டதாம். நூறு கிலோ கிடைத்த ஒரு ஏக்கரில் இப்போது ஒரு கிலோதான் கிடைக்கிறதாம்.

விளைச்சல் குறைந்துவிட்டதே என விவசாயிகள் கவலைப்படுவதில் நியாயம் இருக்கிறது. நம்பி மல்லியைப் பயிர் செய்துவிட்டார்கள். விளைச்சல் இல்லை என்றால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறிதான்.

பூ பயிரிடும் விவசாயிகள் மட்டுமல்ல இத்தொழிலையே நம்பி வாழும் பூக்களைக் கொய்வோர்,  பூக்களைக் கொள்முதல் செய்வோர்,  பூக்களை மொத்தமாக வாங்கி உதிரியாக விற்பனை செய்வோர், பூக்களைக் கோர்த்து முழம்போட்டு விற்பனை செய்வோர் என ஒரு பெரும் கூட்டமே பூக்களின் விலை உயர்வால் பாதிக்கப்படுவர்.

விளைச்சல் குறைவாலும், விலை உயர்வாலும் நுகர்வோருக்கு பாதிப்பில்லாமலா? பூக்களின் விலை உயர்வைக் கண்டு அங்கலாய்த்தாலும், கொத்துக் கொத்தாகக் கொண்டையில் பூச்சூடிக்கொள்ளும் மகளிர் பூச்சூடாமல் நிறுத்திக் கொள்வார்களா? இன்று மல்லி முழம் ஐம்பது ரூபாய். ஐம்பது  ரூபாய் என்ன, நூறு ரூபாயானாலும் பெண்ணுக்கு அழகு பூச்சூடுவதுதானே! விடுவார்களா என்ன? பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை. அப்படித்தானே நமது மகளிர் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் பெண்கள் காலையிலும், வீட்டோடு இருக்கும் பெண்கள் மாலையிலும் பூச்சூடிக்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். கொண்டையில் சூடியப் பூக்கள் வாடி வதங்கி இறுதியில் குப்பைக்குத்தான் செல்கின்றன. யாருக்காகப் பெண்கள் கொண்டையில் பூக்களை சுமக்கிறார்கள்?

கோயிலுக்கோ அல்லது திருமணத்திற்கோ பூச்சூடாமல் சென்றுவிட்டால் இச்சமூகம் சும்மா விடுவதில்லை. சமூகத்திற்குப் பயந்தே பெரும்பாலான பெண்கள் பூச்சூடிக்கொள்கிறார்கள். பெண்களைப் போகப் பொருளாக மாற்றுகின்ற வேலையைத்தான் பூக்கள் செய்கின்றன. பிறருக்காகத்தான் அதாவது ஆண்களை கவருவதற்காகத்தான் நாம் பூச்சூடுகிறோம் என்பதை அறியாமலேயே பெண்கள் இதை ஒரு பண்பாடாகக் கருதி செய்து வருகிறார்கள். இன்று நடுத்தர மற்றும் மேட்டுக்குடிப் பெண்களிடம் வளர்ந்து வரும் குட்டைக்கூந்தல் கலாச்சாரம் பூக்களை சற்றே ஓரம் கட்டி வருவது ஒருவித முன்னேற்றம்தான்.

நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு ஆகிய விசேட நாட்கள் என்றால் பூக்களுக்கு ஏக கிராக்கிதான்.

ஆட்டோக்களிலும், லாரிகளிலும், பேருந்துகளிலும், அலுவலகங்களிலும், வீட்டுப் பூசை அறைகளிலும், கோயில்களிலும் உறையும் கடவுள் சிலைகளுக்கும், படங்களுக்கும் பூ அபிஷேகம் செய்து, பூ மாலைகள் சூடுவதை கிலோ ஆயிரம் ரூபாய் என்பதற்காக பக்தர்கள் நிறுத்தவா போகிறார்கள்? அறியாமையும் இயலாமையும் குடி கொண்டிருக்கும் நம் மக்களிடம் இதை எதிர்பார்க்க முடியாதுதான்.

எவ்வளவுதான் விலை ஏறினாலும் சந்தனக்கூடுகளிலும், பூச்சொறிதல்களிலும், பாடைகளிலும், மணமேடைகளிலும், தலைவர்களுக்காக வைக்கப்படும் அலங்கார வளைவுகளிலும்-மலர்ப்பாதைகளிலும்-வரவேற்பு மேடைகளிலும் கொட்டப்படும் பூக்கள் குறையவா போகிறது?

பிறந்த நாள் பொக்கேக்கள், பிரபல தலைவர்களின் சிலைகளுக்கும்-இறந்தவர்களின் உடலுக்கும்  மலர் மாலை-மலரஞ்சலி என மலர்களின் பயன்பாடோ விரிந்து செல்கிறது.

மேற்கண்டவைகள் அவசியமான அடிப்படைத் தேவைகள் இல்லை என்றாலும், மக்களிடையே நிலவும் அறியாமையின் காரணமாகவும் அற்ப பந்தாவுக்காகவும்தானே பூக்கள் இவ்வாறு கொட்டப்படுகின்றன.

நமது மண் வளமும், நீர் வளமும் நம் சொந்தங்களின் உழைப்பும் இது போன்ற அவசியமற்ற, அர்த்தமற்ற தேவைகளுக்காக வீணடிக்கப்பட வேண்டுமா?  மருந்துகளுக்காவும் உணவுக்காவும் பயன்படும் மலர்களை மட்டும் பயிர் செய்வது அவசியமானது. மற்ற தேவைகளுக்காக மலர்களை உற்பத்தி செய்வது அர்த்தமற்றது; அவசியமற்றது.

இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்படும் காலத்திலிருந்து நமது விவசாயம் என்பது சுதேசித் தேவையை விடுத்து பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக மாற்றப்பட்டும் அந்த விதத்தில் அழிக்கப்பட்டும் வருகிறது. சுயதேவைக்காக இருந்த உணவுப் பயிர்களின் இடத்தில் பணப்பயிர்கள் ஆக்கிரமித்துவிட்டன. அதுவும் கூட விவசாயிகளை வாழவைப்பதாக இல்லை. பூக்களின் விலை உயர்வின் பின்னே உள்ள காரணம் இதுதான். மேலும் அழகு, நுகர்வு என்ற பெயரில் பூக்களை வைத்து மிகப்பெரிய நுகர்பொருள் சந்தை உருவாக்கப்பட்டிருக்கிறது.

அர்த்தமற்ற முறையில் இயற்கை வளமும், மனித வளமும் விரயமாக்கப்படுவதற்கு பூக்கள் ஒரு எடுப்பான உதாரணம். இந்தப் பொருளாதாப் பின்னணியோடு பெண்களை அழகு சாதனமாகவும், துய்த்தெறியும் பொருளாகவும் பார்க்கும் பண்பாட்டு காரணமும் இணைந்திருக்கிறது. அந்த வகையில் பூக்களின் மாய உலகிலிருந்து பெண்கள் வெளியேற வேண்டும்.

____________________

– ஊரான்
____________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஸ்பெக்ட்ரம் ஊழல்: தனியார்மயத்தை மறைக்கும் பரபரப்பு கிசுகிசுக்கள்!

21

சமீப நாட்களாக தமிழகத்தில் பெட்டிக் கடைகளின் முன் தோரணமாய்த் தொங்கும் தமிழ்க் கிசு கிசு பத்திரிகைகளின் போஸ்டர்களில் காணப்படும் தலைப்புச் செய்திகளின் அடிப்படையில் பார்த்தால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தி.மு.க ஏதோ மகாப்பெரிய இக்கட்டில் சிக்கியிருப்பதாகவும், காங்கிரஸ் ஏதோ ‘கூட்டணி தர்மத்துக்காக’ காப்பாற்றி வருவதாகவும்; அரசியல் தரகர்களோடு தொடர்பில் இருந்ததால் ராசாத்தியம்மாள் மேல் கருணாநிதி கோபம் கொண்டு சி.ஐ.டி காலனி வீட்டுக்குச் செல்வதையே நிறுத்திக் கொண்டது போலவும்; மொத்தத்தில் கருணாநிதி குடும்பமே பிளவு பட்டு விட்டது போலவும் நம்பத் தோன்றுகிறது.

இதே இந்திய அளவிலான ஆங்கில ஊடகங்களைக் கவனித்தால், ஏதோ ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தொடர்ந்து  சம்பந்தப்பட்ட அனைவரும் இக்கட்டில் இருப்பது போலவும், சி.பி.ஐ ஏதோ வரம் பெற்று வந்த யோக்கியவானகள் போலவும் சித்தரிக்கிறார்கள். நீரா ராடியாவோடு பேசிய அரசியல்வாதிகள் யார் யார்; அவர்கள் பேசிய கிசு கிசுக்கள் என்ன? என்பது போன்ற ‘அதி முக்கியமான’ கேள்விகளுக்குள் சுருண்டு விட்டன. குறிப்பாக பேருந்தில் அகப்பட்ட ஜேப்படித் திருடனை கும்பலாகப் போட்டு கும்முவதைப் போல ஆ.ராசாவைப் போட்டு ஆங்கில ஊடகங்கள் கும்முகின்றன.

நீரா ராடியாவின் பிற உரையாடற் பதிவுகளின் உள்ளடக்கங்களில் தங்களைப் பற்றிய குறிப்புகள் இல்லையென்பதை உறுதி செய்து கொள்ளும் வரை கமுக்கமாய் இருந்த பிற முதலாளித்துவ ஊடகங்கள், உறுதியானதும் நீராவோடு தொடர்பில் இருந்த தமது போட்டிக் குழுமத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி சாமியாடித் தீர்த்து விட்டன.

காங்கிரஸ், தி.மு.க, சோனியா, மன்மோகன், கருணாநிதி, ராசா ஏன் சில பத்திரிகைகள் பா.ஜ.கவையும் அதன் இறந்து போன தலைவரான பிரமோத் மகாஜனும் கூட இந்த ஊழலில் சம்பந்தப் பட்டவர்கள் என்று எழுதியுள்ளன. இதெல்லாம் இருக்கட்டும்; இந்தக் கொள்ளைக்குக் காரண கர்த்தாக்களும் கொள்ளையில் பலனடைந்தவர்களும் யார்?

அது தான் இவ்விவகாரத்தின் விசேஷம். ஸ்பெக்ட்ரம் ஊழலில் கொழுத்த லாபமடைந்த டாடா குழுமத்தின் ரத்தன் டாடா, ரிலையன்ஸின் அனில் அம்பானி, பாரதி டெலிகாமின் சுனில் மிட்டல் ஆகிய மூன்று தரகுப் பெருமுதலாளிகளும் தொலை தொடர்புத் துறையின் இப்போதைய அமைச்சரான கபில் சிபலைச் சந்தித்து ‘தொழிலுக்கு எந்த பாதிப்பும் வந்து விடாது’ என்கிற உறுதி மொழியைப் பெற்றுத் திரும்பியுள்ளனர்.

ஒரு வழியாக களவாணிகளின் மேலிருந்து மக்களின் பார்வையைத் திருப்பி விடுவதில் அவர்களின் கூட்டாளிகான காங்கிரசு, பா.ஜ.க உள்ளிட்ட ஓட்டுக் கட்சிகளும் பங்காளிகளான பத்திரிகைகளும் வெற்றி பெற்றே விட்டன. இன்றைக்கு விவகாரம் புகைய ஆரம்பித்து ஏறக்குறைய இரண்டாண்டுகள் ஆகிறது, பற்றியெறிய ஆரம்பித்து இரண்டு மாதங்களாகிறது, ஆனால் இத்தனை காலமும் இல்லாத தீவிரத்தை சி.பி.ஐ தனது விசாரணைகளிலும் சோதனைகளிலும் காட்டுகிறது – அல்லது – அப்படி ஊடகங்கள் மூலமாகச் சொல்லப்படுகிறது. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது – ராசாவுக்கோ இல்லை மன்மோகனுக்கோ இல்லை ஆதாயதமடைந்த முதலாளிகளுக்கோஆதாரங்களை அழிக்கவே இந்த அவகாசம் தேவைப்பட்டுள்ளது என்பதைத் தான். இதோ நாங்கள் வீரப்பனின் ஜட்டியைப் பிடித்து விட்டோம் என்று அதிரடிப்படை சொன்னதைப் போல, இதோ நாங்கள் ராசாவின் டைரியைப் பிடித்து விட்டோம் என்று சி.பி.ஐ சொல்லிக் கொள்கிறது.

பொதுவில் இப்போது வெளியாகும் ஊழல்கள் என்பது குறைந்தது சில ஆயிரம் கோடிகளை அபேஸ் செய்த கதைகளாகவே இருப்பதும், அதில் இந்திய வரலாற்றிலேயே முதன் முதலாய் லட்சம் கோடிகளைக் கடந்த சாதனையை ஸ்பெக்ட்ரம் ஊழல் புரிந்திருப்பதும் பொதுவில் பலரின் அதிர்ச்சியின் அளவைக் கொஞ்சம் கூட்டி விட்டுள்ளன.

ஸ்பெக்டிரம் ஊழல் பற்றி இணையதளங்களில் தமது அதிர்ச்சியையும் திகைப்பையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பதிவர்களும், டவிட்டர்களும் பெரும்பாலானோர் இந்த அமைப்புமுறையை மனதார நம்புகிறார்கள். ஹிந்து எடிட்டோ ரியலுக்கு லெட்டர் போடும் மயிலாப்பூர் பார்த்தசாரதிகளைப் போல் இந்த விவகாரங்கள் எல்லாம் நீதிமன்றங்களால் முறையாக விசாரித்து தீர்க்கப்பட்டுவிடும் என்று ஏங்குகிறார்கள். எதிரே பற்றியெறிவது மகர ஜோதியல்ல; யாரோ மனிதர்கள் தான் கொளுத்துகிறார்கள் என்பது தெரிந்தும் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் ஐயப்ப பக்தனைப் போல பிதற்றுகிறார்கள்.

ஆனால், எவராலும் சர்வநிச்சயமாய் இந்த ஊழலின் பின்னுள்ள சகலரும் தண்டிக்கப்படுவார்கள் என்றோ, திருடப்பட்ட பணம் திரும்பக் கிடைக்கும் என்றோ சொல்வதில்லை; அது நடக்காது என்று இவர்களுக்குத் தெரியும். எல்லாம் தெரிந்தும் தெரியாதவர்கள் போல நடிக்கிறார்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கைகள் எனப்படும் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் ஆகிய மறுகாலனியாக்கச் செயல்திட்டங்கள் அறிமுகப்படுத்தி பதினெட்டு ஆண்டுகள் கழிந்து விட்டது. இன்று அதன் பின்விளைவாக நுகர்தலையே ஒரு கலாச்சாரமாகக் கொண்டு நடுத்தர, உயர்நடுத்தர வர்க்கத்திலிருந்தும் பணக்காரவர்க்கத்திலிருந்தும் ஒரு தலைமுறையே உருவெடுத்துள்ளது. இடது கையில் கோக் டின்னும் வலது கையில் லேட்டஸ்டு மாடல் செல்போனும் நுனி நாக்கில் ஆங்கிலமுமாய் அலையும் இந்த யுப்பிகளுக்கு தரமான சேவை, நிறைந்த போட்டியால் குறைந்த விலை, நிறைய தேர்வுகள் என்பதை தனியார்மயம் உத்திரவாதப்படுத்தியுள்ளது. ஆனால் இவைகளே ஊழல்களின் மிக அடிப்படையாய் இருப்பதை இவர்கள் உணர்வதில்லை.

சிரீபெரும்புதூரின் நோக்கியா தொழிற்சாலையில் அபரிமிதமாய் அதிகரித்தாக வேண்டிய உற்பத்தி வேகத்திற்குப் பலியான அம்பிகா எனும் பெண்ணின் மரணத்திற்கு நேரடியாக நோக்கியாவின் லாபவெறி காரணம் என்றாலும் மறைமுகமான காரணி இந்த யுப்பிகள் தான். வினவில் அம்பிகா மரணம் பற்றிய செய்திக் கட்டுரைகள் வெளியான போது அதற்கு மறுமொழியாய் “என்ன செய்வது, இன்றைக்கு நோக்கியா போன் குறைந்த விலையில் கிடைக்கிறதே” என்று கூச்சநாச்சமே இல்லாமல் இவர்களைப் பேச வைப்பது எதுவோ அதுவே ஸ்பெக்டிரம் ஊழலின் அடிப்படை.

நாளையே ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடித்த தொகையை தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஒழுங்காக அரசுக்குக் கட்டி விடும்; ஆனால் அதன் பின் ஒரு அலைபேசி அழைப்பு 3 ரூபாய் ஆகிவிடும் என்கிற நிலை வந்தால் – இவர்கள் இந்த ஊழலை நியாயப்படுத்தவும் தயங்கமாட்டார்கள்.

இந்த தனியார்மய தாசர்கள் சொல்வது போல் “சுதந்திரமான வெளிப்படையான போட்டி Free and Fair competition” என்பது முதலாளிகளிடையே எங்கும் எப்போதும் வெளிப்பட்டதில்லை. இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலும் கூட மிகத் தெளிவாய் அம்பலமாகியிருப்பது முதலாளிகளிடையேயான கழுத்தறுப்புக்களும், உள்ளடி வேலைகளும், நாய்ச்சண்டைகளும் தான். நுஸ்ஸிவாடியா, திருபாய் அம்பானி காலத்தில் நடந்த புதுப்பணக்காரன் vs பரம்பரைப்பணக்காரன் சண்டைகளின் இன்றைய நீட்சியாகத் தான் ராடியாவின் உரையாடல்கள் வெளியானதன் பிண்ணனி உள்ளது.

அரசுத்துறை என்றாலே திறமையின்மை, லஞ்சம், மொன்னையான நிர்வாகம் (bureaucracy) என்றும், அரசுத்துறை ஊழியர்கள் பொறுப்பற்றவர்கள் என்பதும், அவர்களுக்கு போட்டியில்லை என்பதால் ஒழுங்காக நிறுவனத்தை நடத்தமாட்டார்கள் என்பதும் தனியார்மயம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து இன்று வரையில் தனியார்மய தாசர்கள் பாடும் பல்லவி. அதே நேரம், சந்தையை எல்லோருக்கும் திறந்து விட்டுவிட்டால், போட்டி எழும்; அதன் காரணமாக சேவை தரமாகக் கிடைக்கும், விலை குறையும், நிர்வாகம் ஒழுங்காக இருக்கும் என்றெல்லாம் தனியார்மயத்தை உயர்த்திப் பிடித்தார்கள். மேலும், அரசுக்கு தொழில்களை நடத்த வேண்டிய தேவை என்ன? எனவே அரசுத்துறை நிறுவனங்களை

தனியாருக்கு விற்றுவிடுவதே நுகர்வோருக்கு நல்லது என்றெல்லாம் பலவாறாக இவர்கள் தனியார்மயத்திற்கு முட்டுக் கொடுத்தார்கள்.

ஆனால், எந்தத் தனியார்மயம் சிறந்த, ஒளிவில்லாத நிர்வாகத்தையும் (Fair & transparant) தரவல்லது என்று இவர்கள் சொன்னார்களோ அதே தனியார்மயத்தின் விளைவாக களத்தில் இறங்கியிருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளும் தான் வளங்களைக் கைப்பற்ற வெறித்தனமான போட்டியில் இறங்கியுள்ளனர். ஸ்பெக்ட்ரம் வளத்தைக் கைப்பற்ற முதலாளிகள் அமைத்த சிண்டிகேட்டும், அதன் விளைவாய் நடந்துள்ள ஊழலும் தண்டகாரண்யாவில் நடப்பதும் சாராம்சத்தில் ஒன்று தான். அது வெளிப்படும் விதத்தில் தான் வேறுபடுகிறது. ஸ்பெக்டிரம் விவகாரத்தில் அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளது கண்ணுக்குப் புலப்படாத சூட்சுமமானதொரு வளம் என்றால், தண்டகாரண்யாவில் ஏலம் விடப்பட்டிருப்பது ஸ்தூலமாய் கண்ணெதிரே நிற்கும் மலைகள்.

தனியார் கம்பெனிகளுக்கு இந்த அலைக்கற்றை வளத்தை பங்கீடு செய்ததில் ஆ.இராசா தனியார் நிறுவனங்களுக்கு சார்பாக செயல்பட்டார் என்பது தானே குற்றச்சாட்டு? அதைத் தானே ஊழல் என்கிறார்கள்? எனில், வேதாந்தாவுக்கு வழக்கறிஞராகவும், அதன் போர்டு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்த செட்டிநாட்டுச் சிதம்பரம், அமைச்சரானவுடன் அதே வேதாந்தாவுக்கு மலைகளை அடிமாட்டு விலைக்கு தாரை வார்த்துக் கொடுத்ததை எந்தப் பெயரிட்டு அழைப்பது? விஸ்.என்.எல் நிறுவனத்தை விற்றதோடு அல்லாமல், அதோடு சேர்ந்த அசையாச் சொத்துக்களான ஏராளமான நிலங்களையும் இலவச இணைப்பாய் அள்ளிக் கொடுத்ததும், அந்நிறுவனத்தின் ரிசர்வ் நிதியை டாடா டெலிசர்வீசஸுக்கு மாற்றிக் கொள்ளவும் அனுமதியளித்த பாரதீய ஜனதாவின் நடவடிக்கைக்குப் பெயர் என்ன? இதெல்லாம் பச்சைத் திருட்டு இல்லையா?

தனியார்மயம் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த பதினெட்டு ஆண்டுகளில் இப்படிக் கொள்ளை போன வளங்கள் எத்தனை, அதன் மூலம் ஏற்பட்ட இழப்புகள் எத்தனை லட்சம் கோடிகள்? அவுட்லுக் ஏட்டின் கணக்குப் படி அது 73 லட்சம் கோடிகள். இன்றைக்கு ஆ.இராசா பதவியை இராஜினாமா செய்து விட்டார். வேண்டுமானால் ஏதாவது ஓய்வுபெற்ற நீதிபதியைக் கொண்டு “விசாரணைக் கமிசன்” அமைப்பார்கள். அதன் பின் “சட்டம் தனது கடமையைச் செய்யும்” – ஆனால், வாரா வாரம் ஒரு புதுப்படம் ரிலீஸ் ஆவது போன்று புதுப்புது ஊழல்கள் வெளியாகிக் கொண்டேதான் இருக்கும். இதுவரையில் ஊழலைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட விசாரணைக் கமிசன்கள் எத்தனை ஊழல்வாதிகளைத் தண்டித்து சிறையில் அடைத்துள்ளன? எத்தனை முறை மக்கள் பணம் மீட்கப்பட்டுள்ளது?

கூட்டுப் பாராளுமன்ற கமிட்டி கோரி பாராளுமன்றத்தில் சாமியாடும் பாரதிய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் (1999இல்) தொலைத் தொடர்புத் துறையின் விதிகளில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களே அனைத்து முறைகேடுகளுக்கும் காரணம் என்று குற்றம் சாட்டிய கபில் சிபல், அதன் காரணமாக தேசத்திற்கு 1.43 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார். இதற்கு பதிலளிக்கும் பாரதிய ஜனதா, அப்படி விதிகளைத் தளர்த்தியது செல்பேசி சேவையை பரவலாக்கவே என்கிறது. இதன் பொருள், தனியார் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து அவர்கள் லாபத்தை வாரிக் குவிக்க வேண்டுமானால், இயற்கை வளத்தை அடிமாட்டு ரேட்டுக்கு பிரித்துக் கொடுப்பதில் தவறில்லையென்பதாகும்.

பாரதிய ஜனதாவின் அதே வாதத்தை நாலு வருடங்களுக்குப் பிறகு, ஆ.இராசாவும் சொல்லக் கூடும். நான் ஸ்பெக்டரம் அலைவரிசையை சல்லிசாக வாரி வழங்கியதால் தான் உங்களால் ஐந்து பைசாவுக்கு ஒரு செல்பேசி அழைப்பு செய்ய சாத்தியமானது என்று ராசா சொல்வாரானால், இன்றைக்கு இணையத்திலும், ஆங்கில செய்தி ஊடகங்களிலும் சாமியாடிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ அடிவருடிகள் வாயைப் பொத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

பஞ்சாயத்து ஆபீஸில் பைப் லைன் வாங்க ஐம்பது ரூபாய் லஞ்சம் கொடுப்பதையும் இந்த மெகா ஊழல்களையும் ஒரே விதமாய்ப் புரிந்து கொள்வது தவறு. முந்தையது சிறிய அளவிலான நிர்வாகக் கோளாறு என்றால், பிந்தையது பச்சையான பகல் கொள்ளை. தனியார்மயமாக்கம் அறிமுகம் செய்யப்பட்ட பின் ஆட்சிக்கு வந்த சகல ஓட்டுக் கட்சிகளும் கர்ம சிரத்தையாய் இப்படித்தான் வளங்களை ஏலம் விட்டிருக்கின்றது. அப்போதும் ஒவ்வொரு முறையும் அதை எதிர்த்து குரல்கள் எழுப்பப்பட்டன, அந்நடவடிக்கைகளினால் ஏற்பட்ட இழப்புகளை மத்திய தணிக்கைத் துறை சுட்டிக் காட்டத்தான் செய்தது; ஆனால் அதனால் ஏற்பட்ட விளைவு என்ன?

தனித்தனியாக ஒவ்வொரு முறையும் ஊழலை எதிர்த்துக் குரல் கொடுப்பதும், அப்படிக் குரல் கொடுக்கும் போதும் கவனமாக அதன் மூலகாரணமான தனியார்மயத்த்ஐ தவிர்த்து விடுவதுமான இந்தக் கண்ணாமூச்சி ஆட்டத்தின் விளைவு தான் இந்த 1.76 லட்சம் கோடி பகல் கொள்ளை. இந்த முறை இன்னுமொரு சிறப்பு என்னவென்றால் இதனோடு சேர்ந்திருக்கும் கிசு கிசுக்களும் சம்பந்தப்பட்ட கட்சியொன்றின் பெயரில் இருக்கும் ‘திராவிட’ என்கிற வார்த்தையும் தான்.

இந்த ஊழல்களின் அச்சு (Crux)  எங்கேயிருக்கிறது? ஆ.இராசாவிடமா? இல்லை. ஊழல் என்பது வளங்களை சில தனியார் நிறுவனங்களிடையே பங்கீடு செய்த முறையில் மட்டும் இல்லை. மக்களுக்குச் சொந்தமான – மக்களுக்குப் பூரண உரிமையுள்ள இந்த வளங்களை ஒரு சிலரின் லாபத்துக்காக கூறு கட்டி வைத்துள்ளதில் தான் இவை அனைத்தின் அச்சும் உள்ளது. தொண்ணூறுகளுக்குப் பிந்தைய ஊழல்களால் மட்டுமே தேசம் எழுபத்தி மூன்று லட்சம் கோடிகளை இழந்துள்ளது எனும் செய்திலிருந்தே இந்த எளியஉண்மை உங்களுக்குப் புலப்படவில்லையா?

உதாரணத்துக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரத்தையே பார்ப்போமே, தொண்ணூறுகளின் மத்தியில் செல்போன்கள் இந்தியாவுக்கு அறிமுகமான போது முதலில் அது தனியார்களுக்குத் தான் திறந்து விடப்படுகிறது. அரசுத் தொலை தொடர்புத் துறை செல்போன் சேவை வழங்குவதில் இருந்து தடுத்து வைக்கப்பட்டது. அப்போது தேசம் முழுவதையும் 20 இருபது சர்கிள்களாகப் பிரித்து, ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஒரு சில கம்பெனிகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கிறது அரசு. கிட்டத்தட்ட தனியார் நிறுவனங்கள் வலுவாகக் காலூன்றிய பின், 2001ம் ஆண்டு தான் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு செல்போன் சேவை அளிப்பதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.

அரசுத்துறைக்கு செல்போன் சேவைகளை அளிப்பதில் திறமையில்லை என்பதால் அது தடுத்து வைக்கப்படவில்லை; மாறாக இப்படி அரசுத்துறையை தொழில் துவங்க விடாமல் தடுக்க வேண்டும் என்பது தான் நரசிம்மராவ் தலைமையில் மன்மோகன் சிங் வழிகாட்டுதலில் இந்தியா கையெழுத்திட்ட காட் ஒப்பந்தத்தின் விதிகள்.

1880ஆம் ஆண்டு முதன் முதலாக ஓரியண்டல் டெலிபோன் கம்பெனி அப்போதிருந்த பிரிட்டிஷ்-இந்திய அரசிடம் தரைவழி தொலைபேசி சேவையைத் துவங்க அனுமதி கேட்கிறது. முதலில் தொலைபேசிச் சேவையை அரசே அளிக்கும் என்று அனுமதி மறுத்த அரசு, பின்னர் தனது முடிவுகளை ‘ஏதோ காரணங்களுக்காக’ மாற்றிக் கொண்டு அதே தனியார் நிறுவனத்திற்கு 1881ஆம் ஆண்டு அனுமதியளிக்கிறது. அதற்கும், தற்போது செல்போன் சேவை விஷயத்தில் அரசு நடந்து கொண்டதற்கும் ஏதேனும் வேறுபாட்டை உணர முடிகிறதா? அதைக் காலனிய காலம் என்று அழைத்தால், இது மறுகாலனிய காலம்! அவ்வளவு தான் வித்தியாசம்.

“அடடா.. அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை வரவிடாமல் செய்து விட்டாரே ஆ.இராசா” என்று அங்கலாய்க்கிறார்கள் சிலர். ஆனால், வராத வருமானம் எங்கே தங்கியதோ அங்கே இருந்து அதைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று சொல்ல அவர்களுக்கு வாய் வருவதில்லை. ஆ.ராசாவைத் தண்டிக்க வேண்டும் என்று ஆங்கில ஊடகங்கள் இப்போது சொல்லத் துவங்கியுள்ளன; ஆனால், அவர் இப்படிச் செயல்பட ஊக்கம் அளித்தவர்களையும், செயல்பட்டு மாட்டிக் கொண்டு அம்பலமாகி நிற்கும் போதும் காத்து நிற்பவர்களையும் பற்றிப் பேச மாட்டேனென்கிறார்கள். ஸ்பெக்டிரம் ஒதுக்கீட்டு முறையில் ஊழல் என்பவர்கள்; அந்த ஒதுக்கீடே ஒரு ஊழல் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.

இந்த ஊழலைச் செய்யாமல் தவிர்க்கும் உரிமையோ வேறு தேர்வுகளோ இந்த ஆளும் வர்க்கத்திற்கு இல்லை. இவர்களைக் கட்டுப்படுத்தும் விதிகளை இவர்களின் எஜமானர்கள் தீர்மானிக்கிறார்கள். அரசாங்கத்தை தொழில்துறையில் இருந்து விலக்கி வைத்து விடுவோம் என்றும், பொதுத்துறைகளை தனியாருக்கு விற்று விடுவோம் என்றும், மக்களுக்குச் சொந்தமான் இயற்கை வளங்களின் மேல் பன்னாட்டு நிறுவனங்களைத் திறந்து விடுவோம் என்றும் ஏற்கனவே எழுதிக் கொடுத்து விட்டு வந்துள்ளார்கள். அதற்கு மாறாக அவர்களால் ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போட்டு விட முடியாது -அந்த அதிகாரத்தை அவர்கள் ஏற்கனவே தமது எஜமானர்களிடம் அடகு வைத்து விட்டு வந்துவிட்டார்கள்.

மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. தேசத்தின் அரசியல் அமைப்பு என்கிற நிலம் பண்பட்டிருப்பதே ஊழலின் விதை இன்று விருட்சமாய் நிமிர்ந்து நிற்கக் காரணமாய் உள்ளது.

__________________

– தமிழரசன்
__________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சொகுசான கார்களுக்கு மத்தியில் சுருங்கும் டிராக்டர்கள் – பி.சாய்நாத்

விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில், பென்சு காருக்கு கடன் வழங்க போட்டி!

மெர்சிடீஸ் பென்ஸ் என்ற சொகுசு கார்களின் வரவால் மராத்வாடா மாநிலத்தில்ஊரக மறு மீட்சி என ஊடகங்கள் கொண்டாடும் அதே நேரத்தில் மறு மீட்சி ஆண்டில் விவசாயிகள் 17,368 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது

பிற்படுத்தப்பட்ட மராத்வாடா மண்டலத்திலுள்ள அவுரங்காபாத்தில் அக்டோபர்  மாதத்தில் மட்டும் 150 மெர்சிடீஸ் பென்ஸ் சொகுசு கார்கள் ரூ 65 கோடி அளவிற்கு வாங்கப்பட்டதால் ஊடகங்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்தது.  பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சுமார் 40 கோடி அளவிற்கு கார் வாங்குவதற்கு கடனுதவி செய்துள்ளது.  அவுரங்காபாத்  மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க தலைவர் திரு டேவிதாஸ் துல்சாபுர்கர் இதை தெரிவித்ததோடு வட்டி விகிதம் 7 சதவீதம் என்றார்.

பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில் “இந்த வியாபாரத்தில் பங்கு வகித்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இனிவரும் நாட்களிலும் இதுபோன்றவற்றிற்கு சேவை செய்ய காத்திருக்கிறோம் “என்றார்.

விவசாயிகள் தற்கொலை செய்யும் நாட்டில், பென்சு காருக்கு கடன் வழங்க போட்டி!

இந்த மெர்சிடீஸ் சொகுசு கார் பரிவர்த்தனை என்பது ஏறக்குறைய மராத்வாடா மாவட்டத்திலுள்ள பத்தாயிரக்கணக்கிலான வீடுகளின் வருட வருவாய்க்கு ஈடானது.  எண்ணிலடங்காத பல விவசாயிகள் தங்கள் விவசாயத் தொழிலுக்கு கடன் பெற இயலாமல் போராடி வருகின்றனர். இந்திய விவசாயிகள் 7 சதவீத வட்டியில் கடன் பெறுவதற்கு ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகியுள்ளது என்பதுடன், பத்தாயிரக் கணக்கில் தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளது.  பெரும்பாலும் விவசாயிகளுக்கு கடன் என்பது எழுத்தில் மட்டுமே உள்ளது.

2005க்கு முன்பாக யார் வங்கிக் கடன் பெற்றாலும் வட்டி விகிதம் என்பது 9 முதல் 12 சதவீதமாக இருந்தது.  பெரும்பாலானவர்கள் விவசாயம் சாராத கடனாக கூடுதல் வட்டியில் பெற நிர்பந்திக்கப்பட்டனர்.  ஒரு சொகுசுக் காரை வாங்க 7 சதவீத வட்டியும், விவசாயத்திற்கு பயன்படும் டிராக்டரை வாங்கு 12 சதவீத வட்டியும் என்பது அங்கே யதாரத்தமாக இருந்தது.  இதனால் புற்றீசல் போல் தோன்றிய சிறு சிறு நிதி நிறுவனங்கள் 24 முதல் 36 சதவீத வட்டி மற்றும் அதற்கும் கூடுதலாக வட்டி பெற்றுக் கொண்டு கடன்கள் வழங்கின.

கடன் தொல்லையினால் பட்டினிக்கு ஆளான விவசாயிகள் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை நோக்கி திரும்ப ஆரம்பித்தனர்.  1991இலிருந்து 10 ஆண்டு காலத்தில் இந்திய விவசாயிகள் தங்கள் நிலங்களை, பண்ணைகளை அடகு வைப்பது என்பது 26 சதவீதத்திலிருந்து இரட்டிப்பாகி 48.6 சதவீதமாகியது.  இது கூட குறைத்து மதிப்பிடப்பட்ட அலுவல் ரீதியான எண்ணிக்கைதான்.  அதே நேரத்தில் அரசின் கொள்கை சார்ந்த பயங்கர தாக்குதல்களையும் விவசாயிகள் சந்திக்க நேர்ந்தது.

ஒரு புறம் விவசாய விளைபொருளுக்கான உற்பத்தி செலவு என்பது சந்தை சார்ந்த விலை என அதிகமாகவும், மறுபுறம் விளைந்தவற்றை விற்க செல்லும் போது வணிக ரீதியாக விலைகுறைந்தும், வலிமைமிக்க தரகு முதலாளிகளால் குறைக்கப்பட்டும் விலைபோயின.  எனவே விவசாயத்தில் முதலீடு என்பது முற்றிலும் சரிந்தது.  வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தருவதிலிருந்து மாறி நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை முறையை உயர்த்திக் கொள்வதற்கு கடன் வழங்க துவங்கியதால், விவசாயிகள் கடன் தொல்லையால் பிழிந்தெடுக்கப்பட்டனர்.  கடந்த 13 ஆண்டுகளில் இரண்டு லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும் கடன் தொல்லையினால் இறந்தவர்களே மிக அதிகம் (அத்தகைய நசுக்கும் நடவடிக்கையில் சிறு சிறு நிதி நிறுவனங்களே பெரும் பங்கு வகிக்கின்றன)

விவசாயக் கடன்கள் பல கடத்தப்பட்டுவிட்டன.  ஆகஸ்ட்டு 13 இந்து நாளிதழில் வெளியான விபரம் அந்த அதிர்ச்சி தரும் தகவலை நமக்கு காண்பிக்கிறது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் 2008இல் வழங்கப்பட்ட விவசாயக் கடனில் பாதி ஊரக வங்கியினால் வழங்கப்படாமல் நகர மற்றும் மாநகரக் கிளைகளினால் வழங்கப்பட்டுள்ளது.  சுமார் 42 சதவீதக் கடன் மும்பையில் வழங்கப்பட்டுள்ளது.  அதுவும் சிறு விவசாயிகளுக்கு கிடைக்காமல், வலிமையின் அடிப்படையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டுள்ளன.

தேசிய குற்றப் பதிவு குழுமத்தின் பதிவுகள் பல ஊடகங்களுக்கு வந்த போதிலும் சொகுசுக் கார் விற்பனையை மிகவும் பெரியதாகவும் ஊரக மறு மீட்சி போலவும் ஊடகங்களினால் கொண்டாடப்பட்டது. ஊரக மறுமீட்சி என்று சொல்லப்பட்ட 2009இல் அதீதமாக அதிகரித்து ஏறக்குறைய 17,368 விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.  அவை 2008ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகம் என்பதுடன், 2004இலிருந்து பார்க்கையில் மிகவும் மோசமானதாகவும், உள்ளது.  இவற்றோடு சேர்த்தால் 1997 முதல் 2009 வரை விவசாய தற்கொலை சாவுகள் 2,16,500 ஆகிறது.  இந்த தற்கொலைகளுக்கு பல்வேறு காரணங்கள் உள்ள போதிலும், விளை பொருளுக்கு விலைகிடைக்காமல் கடனில் வாழ்வை முடித்துக் கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை எச்சரிக்கத்தக்க வகையில் மிக அதிகமாக உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான தேசிய குற்றப் பதிவு குழுமம் விவசாயிகள் தற்கொலை சம்பந்தமான பதிவுகளை 1995 முதல் சேகரித்துள்ளது.  ஆனால் ஆராய்ச்சியாளர்கள் 1997 முதல் உள்ள பதிவுகளையே கவனத்தில் கொள்கின்றனர்.  ஏனெனில் 1995 மற்றும் 1996ஆம் ஆண்டு பதிவுகள் முற்றுப் பெறாமல் அரைகுறையாக இருக்கின்றனவாம். 1995இல் இந்த கணக்கெடுப்பு எடுக்கும் முறை புதியது என்பதால் இரண்டு பெரிய மாநிலங்களில் அதாவது தமிழ்நாடும், ராஜஸ்தானும் அந்த வருடத்தில் தங்கள் மாநிலத்தில் தற்கொலையே இல்லை என தெரிவித்திருந்தன.  ஆனால் 2009ல் பார்க்கும் போது அந்த இரண்டு மாநிலங்களில் மட்டும் 1900 விவசாய தற்கொலைகள் பதிவாகியுள்ளது.  1997 லிருந்து எல்லா மாநிலங்களும் பதிவுகளை முழுமையாக கொடுத்துள்ளன.

தேசிய குற்றவியல் பதிவு குழுமத்தின் 2009ஆம் ஆண்டு பதிவுகள் தற்போது முற்றுப் பெற்றுள்ளது.  ஆனால் 2010ல் 16,000 விவசாயிகள் தற்கொலை இருக்கலாம் என நாம் அனுமானிக்க முடிகிறது. கடந்த 6 ஆண்டு சராசரியைப் பார்க்கிற போது ஆண்டிற்கு 17,104 உயிரிழப்புக்கள் நேரிடுகிறது.  இந்த 16,000 ஐயும் 2,16,500 உடன் சேர்த்துக் கொண்டு, 1995/96ஆம் ஆண்டுகளுக்கு நிறைவடையாத பதிவுகளாக உள்ள 24,449 தற்கொலைகளையும் சேர்த்தால் 1995 முதல் 2010ற்குள் 2,56,949 உயிரிழப்புக்கள் வருகின்றது.  ஒரு கணம் இந்த எண்ணிக்கையை நினைத்துப் பார்ப்போம்.

அதாவது 1995இலிருந்து கால் கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.  அதாவது இந்த நாட்டில் கடந்த 16 ஆண்டு கால மனிதகுல வரலாற்றில் மிக அதிகமான தற்கொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதாவது இந்த தற்கொலைகளினால் ஏறக்குறைய ஒன்றரை கோடி குடும்ப உறுப்பினர்கள் மன வேதனைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனர்.  கோடிக்கும் அதிகமானோர் தற்கொலையை நோக்கி துரத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான கிராமத்தினர் தங்கள் அருகிலேயே இத்தகைய சோகமான முடிவுக்கு தள்ளப்படுவதை அன்றாடம் கண்ணுறுகின்றனர்.  அரசின் கொள்கைகள் மாறாததால் இத்தகைய முடிவைத் தேடிக் கொள்வது வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது.  முதன்மையானதாக கருதப்படும் இந்தியர்களில் எங்களை தனித்து விடுவித்து விடுங்கள் என்ற இந்த இதயமற்ற போக்கினை கற்பனை செய்து பார்க்க இயலாததாக உள்ளது.

சொல்லப்போனால் இந்த பதிவுகளும் குறைத்து மதிப்பிடப்பட்டவைகளின் துவக்கம்தான்.  பல பெரிய விவசாய குழுக்களெல்லாம் இந்த உள்ளூர் எண்ணிக்கையில் சேர்க்கப்படுவதில்லை.  குறிப்பாக சமூகத்தில் ஒரு பெண் விவசாயி தற்கொலை செய்து கொண்டால் அது சாதாரண தற்கொலையாகத்தான் கணக்கில் கொள்ளப்படுகிறது.  ஏனெனில் நிலங்கள் பெண்கள் பெயரில் இருப்பது மிகக் குறைவே.

இந்த வஞ்சனையான, பொய்யான கணக்கை பல அரசுகள் மேற்கொள்கின்றது.  மகாராஷ்டிரா அதற்கு குறிப்பிடத்த்க உதாரணம்.  ஒரே வாரத்திற்குள் மூன்று முறை வெவ்வேறான பொய்யான எண்ணிக்கையை சொல்லியுள்ளது.  இந்த ஆண்டு மே மாதத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட விதர்பா மாவட்டத்தில் விவசாயத் தற்கொலை 5500 சதவீதம் மாறுபட்டது.  நான்கு மாதத்தில் மிகக் குறைவான 6 என சொல்லப்பட்டது.  (பார்க்க தற்கொலக்கு தகுதியாவது எப்படி? தி இந்து 13 மே 2010 நாளிதழ்)

தேசிய குற்றவியல் பதிவு குழுமம் பதிவுகளின்படி மகாராஷ்டிராவில் 2009இல் 2872 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.  நடைபெற்றுக் கொண்டிருக்கும் பத்தாண்டுகளில் இதுதான் விவசாய தற்கொலையின் மிக மோசமான எண்ணிக்கை.  அது தற்போது 930இற்கு குறைந்துள்ளது உண்மையானால் மகிழ்ச்சிக்குரியதே.  ஆனால் உண்மை நிலையை பொய்யாக்க எந்த மாநிலமும் கடுமையாக முயற்சித்ததாக தெரியவில்லை.

விடிவே இல்லாத விவசாயிகள் வாழ்க்கை!

ஆனால் 13 வருடங்களில் மகாராஷ்டிர மாநிலம் நம்பமுடியாத தற்கொலை எண்ணிக்கை உயர்வையே கண்டிருக்கிறது.  திடீரென 2008இல் 430ம்- 2009இல் 930ம் குறைந்ததாக பதிவு செய்துள்ளது எவ்வாறு?  கடந்த 4 ஆண்டுகளில் சிரமம் அதிகமுள்ள விதர்பா மாவட்டத்தில் செயல்பட்ட அரசு அதிகாரி குழுக்கள் பல தற்கொலைகளை விவசாயம் சார்ந்த காரணமல்ல என தள்ளுபடி செயவதிலேயே கவனம் செலுத்தின. மகாராஷ்டிர அரசு இறப்பு எண்ணிக்கையை கணக்கெடுப்பதை விட பிரச்சனைகளை கணக்கெடுப்பதில் கவனம் செலுத்தியது.

இன்னும் பிரச்சனைகள்தான் அதிகரித்துள்ளது.  மகாராஷ்டிராவின் மக்கள் தொகையோடு ஒப்பிட்டால் மேற்கு வங்கத்தை ஒப்பிடலாம்.  சில கோடி மக்கள் குறைவாக இருப்பினும் அங்கு விவசாயிகள் எண்ணிக்கை அதிகம். இரண்டு மாநிலங்களும் 1995இலிருந்து 15 ஆண்டுகளுக்கான பதிவுகள் வைத்துள்ளன.  அந்த மாநிலத்தின் விவசாய தற்கொலைகள் 3 ஐந்தாண்டுகளாக பிரித்துப் பார்த்தால் வர,வர கணிசமாக குறைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 1999 உடன் முடிவடைந்த ஐந்தாண்டில் 1963 என்ற எண்ணிக்கை அடுத்த 5 ஆண்டில் (2004) 3647 எனவும், பின்னர் 2009இல் 3858 எனவும் உயர்ந்துள்ளது.  மேற்கு வங்கத்தின் ஆண்டு தற்கொலை இறப்பு சதவீதத்தில் கணிசமான குறைவு உள்ளது.  1999இல் 1454, 2004இல் 1200 எனவும், 2009இல் 1014 எனவும் குறைந்துள்ளது.  அங்கு விவசாயிகள் அதிகம் பேர் இருந்த போதிலும் மகாராஷ்டிரா மாநில இறப்பு எண்ணிக்கையில் 3இல் ஒரு பங்குதான் இங்கு நிகழ்ந்துள்ளது.  பிந்தைய மாநிலத்தின் எண்ணிக்கை 1999 லிருந்து தற்போது இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

தற்கொலை நிகழும் 5 முக்கிய மாநிலங்களான மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா- மத்திய பிரதேசம் மற்றும் சதீஸ்கரில் 3இல் 2 பங்கு தற்கொலைகள் விவசாயி தற்கொலையாகவே உள்ளது.  28 மாநிலங்களில் ஏறக்குறைய 18இல் 2009ல் விவசாய தற்கொலை அதிகரித்துள்ளது.  சிலவற்றில் எண்ணிக்கை உயர்வு புறந்தள்ளும் வகையிலும், மற்றவற்றில் அவ்வாறில்லாமலும் உள்ளது.  மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் 2008இல் 512 ஆக இருந்தது, 2009ல் 1060 என மிக அதிகமாக உயா்ந்துள்ளது.  மேலும் எண்ணிக்கை உயர்வில் 3ஆவதுபெரிய மாநிலமாக ஆந்திரா 309 அதிகரித்து 2009ல் பதிவு செய்துள்ளது.

கர்நாடகா, கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இத்தகைய உயிரிழப்பு எண்ணிக்கை சராசரி கடந்த 6 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துள்ளது.  2004 முதல் 2009 வரை பார்க்கையில் கடந்த 7 ஆண்டுகளை விட சராசரியாக 350 குறைந்துள்ளது.

தற்போதுள்ள விவசாயக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரப்படவில்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகும்.  சொல்லப் போனால் கடந்த 13 ஆண்டுகளில் தற்கொலை எண்ணிக்கையை குறைத்த மாநிலங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.  உதாரணத்திற்கு கேரளாவை எடுத்துக் கொண்டால் ஆண்டு சராசரி விவசாய தற்கொலை 1371 இறப்புகள் என 1997 முதல் 2003 வரை இருந்தது.  2004 முதல் 2009 ல் சராசரி 1016 என 355 குறையத் துவங்கியது.  இருப்பினும் கேரளா வரும் ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கப்பட உள்ளது.  உலகமயமாக்கலினால் அனைத்து மாநிலத்திற்குமான பொருளாதார பாதிப்பு இது. இங்கு பெரும்பாலான பயிர்கள் பணப்பயிர்கள் ஆகும்.

காப்பி, ஏலம், தேயிலை, வெனிலா, மிளகு, அல்லது ரப்பர் போன்றவற்றின் உலக அளவிலான விலை மாற்றங்கள் இந்த மாநிலத்தையும் பாதிக்கும்.  சில பெருமுதலாளி கார்ப்பரேட் நிறுவனங்களால் உலக அளவில் இவற்றின் விலைகள் கையாளப்படுகின்றது.  தெற்கு ஆசிய சுலப வணிக உடன்பாட்டினால் ஏற்கனவே கடுமையான தாக்குதலுக்குள்ளான கேரளா தற்போது நாம் பாதிக்கப்பட்டுள்ள ஏசியன் என்பதாலும் பாதிக்கப்படப் போகிறது.  ஐரோப்பிய நாடுகளுடனான சுலப வணிக ஒப்பந்தமொன்றும் காத்திருக்கிறது.  கேரளா அதற்கான விலை கொடுக்கப் போகிறது.  2004க்கு முன்பாக இலங்கை மிளகை வாங்கிக் குவித்ததினால்(பெரும்பாலும் பல நாடுகளிலிருந்து மிளகு இலங்கை வழியாகவே வந்தது) கேரள மாநிலம் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியது.

தற்போது அத்தகைய குவிப்பிற்கு வரையரைகளை நாம் வகுத்துள்ளோம்.  இந்தியாவில் விவசாய தற்கொலைகள் என்ற ஆய்வுக் கட்டுரையின் எழுத்தாளரான பொருளாதார பேராசிரியர் திரு கே.நாகராஜ் இவ்வாறு கூறுகிறார்.  “சமீபத்திய விவரங்களிலிருந்து விவசாய இன்னல் என்பது குறைந்தபாடில்லை, முடிவுக்கும் வரவில்லை, மாறாக அரசின் கொள்கைகள் அவற்றை துரத்துவதும் குறையவில்லை, முடிவிற்கும் வரவில்லை என்கிறார்.  மேலும் அவரது ஆய்வில் ஒருபுறம் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகையில் அவர்களின் தற்கொலை இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதிலிருந்து விவசாயம் சார் இன்னல் இன்னும் எரிந்து கொண்டுதான் உள்ளது” என்கிறார்.

________________________________________________________________________

– திரு பி.சாய்நாத், நன்றி – தி இந்து 28/12/2010

தமிழில் – சித்ரகுப்தன்

________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

பதிவுலகில் பெண்கள்

23

26.12.2010 அன்று கீழைக்காற்று புத்தக வெளியீட்டு விழாவில் பதிவர் சந்தனமுல்லை ஆற்றிய உரையை இங்கு வெளியிடுகிறோம்.

வினவு

_____________________________________________________________________

இங்கு கூடியிருக்கும் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் சித்திரக்கூடம் என்ற வலைப்பதிவில் எழுதி வருகிறேன். பெரும்பாலும் எனது மகளைப் பற்றி, என்னை பாதித்த/ நான் பார்க்கின்ற விஷயங்களை அங்கு பகிர்ந்துக்கொள்கிறேன். இது போல பல தளங்கள் இருக்கின்றன. அரசியல், சமூக விமரிசனங்கள், நகைச்சுவை, சமையல் குறிப்புகள், குழந்தை வளர்ப்பு, சினிமா விமரிசனங்கள், தனி மனித வலைப்பதிவுகள் என்று ஏராளம் இருக்கின்றன. தமிழ்மணம் என்ற திரட்டியின்  மூலம் பெரும்பாலான தளங்கள் திரட்டப்பட்டு வாசகர்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.

இதில் வலைப்பதிவுகளை வைத்திருக்கும், அதிலும் தொடர்ந்து  இயங்கும் பெண்கள் மிகக் குறைவு. விரல் விட்டு எண்ணி விடலாம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதில் பெண்களின்  நிலை எப்படி இருக்கிறது? எதை நாங்கள் எழுதுகிறோம்? நாங்கள் நாங்களாகவே எங்களை முற்றிலும் வெளிப்படுத்திக் கொள்ள முடிகிறதா? என்றால் இல்லை என்பதுதான் பதில்.

முதலில் பயனர் கணக்கிலிருந்து ஆரம்பிப்போம். வலைப்பதிவு வைத்திருக்க வேண்டுமாயின் முதலில் ஒரு பயன்ர் கணக்கு தொடங்க வேண்டும். அதாவது ஐடி. நமது சுயவிபரங்களை  உள்ளடக்கியது அது. ஆணா பெண்ணா, பிறந்த வருடம், உங்களுக்கு பிடித்தமானவை பற்றி, பிறகு  படம் – இது போன்ற விபரங்களை, அதாவது வலைப்பதிவர் பற்றிய ஒரு சுயஅறிமுகம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். அதில், ஆண்கள் தங்களுடைய விபரங்களை, புகைப்படத்தை எதைப்பற்றியும் யோசிக்காமல் கொடுத்துவிடலாம்.ஆனால், எங்களால் அப்படி இருக்க முடியாது.

அதிலும் எங்களது  புகைப்படங்களையோ, உண்மையான வயதையோ இருமுறை யோசிக்காமல் சொல்லிவிட முடியாது. அவற்றை வெளியிடுவதன் மூலம் வரும் பாலியல் தொல்லைகள்தான் காரணம். அதாவது, பெண்ணாக இருப்பதனாலே வரும் ரிஸ்க்தான் அது. வயதை, புகைப்படத்தை போட்டுவிட்டால் வரும் தொல்லைகளை சமாளிக்கவே இணையத்தில் புர்காவுக்குள் வலம் வரவேண்டியிருக்கிறது. அப்படியும் புகைப்படத்தை அல்லது சுயவிவரங்களை வெளியிடவேண்டுமானால் அதை சமாளிக்கும் திறன் கொண்டவராக அல்லதுஒரு பின்புலம் உள்ளவராக இருந்தால் தைரியமாக  போட்டுக்கொள்ளமுடியும்.

இணையத்தை வெர்ச்சுவல் வேர்ல்ட் அல்லது மெய் நிகர் உலகு என்று கூறுகிறார்கள். உண்மையில், எங்களுக்கு மெய் உலகும் சரி,  மெய் நிகர் உலகும் சரி, இரண்டும் ஒன்றுதான். பெரிதாக வேறுபாடுகள் ஒன்றும் கிடையாது.  இங்கு என்ன சமூக நிர்பந்தங்களுக்கு உள்ளாகிறோமோ, அத்தனையும் மெய் நிகர் உலகிலும் உள்ளன. சொல்லப்போனால், இரண்டுமடங்கு அதிகமாக என்று கூட சொல்லலாம்.

ஃபேஸ்புக், ட்விட்டர் என்று சமூக இணையத்தளங்களில்  பங்கேற்க  ப்ரைவசி செட்டிங்க்ஸ் மிக முக்கியமாக இருக்கிறது. எங்கள் கருத்துகள்/புகைப்படங்கள் “நண்பர்கள் மட்டும்”,ட்வீட்கள் – “ப்ரொக்டட்”என்று பூட்டு போட வேண்டியுள்ளது. தனிப்பட்ட விவரங்களை ஆன்லைனில் கொடுக்க வேண்டாம் என்றுதான் ஆண்கள் பெண்கள் எல்லாருக்கும் அனைவரும் அறிவுறுத்துகிறார்கள். இருந்தாலும், ஒரு ஆண் சர்வசாதாரணமாக  அனுபவிக்கக் கூடிய சுதந்திரத்தை அளந்து அளந்து – யோசித்து யோசித்துதான் நாங்கள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சமூக சூழல் போலத்தான் இணையச் சூழலும்  இருக்கிறது.

இது குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே தொடங்கி விடுகிறது இல்லையா. ஆணை வளர்ப்பதும் பெண்ணை வளர்ப்பதும் நிச்சயம் வேறு வேறுதானே.’வெளிலே போறியா,  தம்பியை கூட்டிட்டு போ.’  ‘ட்யூஷனுக்கு போறியா, கூட யாராவது துணைக்கு’  இப்படிதான் பெரும்பாலான பெண்களை வளர்க்கிறோம். ‘ஏழு மணியாகிடுச்சா, வீட்டு வந்து சேர்’  ‘விளக்கு வைக்கிற நேரமாகிடுச்சா, அவ்ளோ நேரத்துக்கு மேல உனக்கு என்ன வேல” என்றுதானே கேள்விகள்.

அதற்கு ஏற்றாற்போலத்தான் எத்தனை கதைகளைக் கேள்விப்படுகிறோம். பின்னால் தொடர்ந்து வந்து கலாட்டா செய்வது, கேலி கிண்டல் பேச்சுகள், பாலியல் தொந்திரவுகள், அவமானங்கள்…இரவு எட்டு அல்லது ஒன்பது  மணிக்கு மேல் பெண்களை தெருவில் பார்க்க முடியுமா?ஆனால் ஒரு நாளும் நமது அம்மாக்களும், ஆயாக்களும் தம்பிகளைப் பற்றியோ அல்லது அண்ணன்களைப் பற்றியோ இபப்டி  கவலைப்பட்டிருக்க் மாட்டார்கள். என் தம்பி தைரியமாக இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்டால் நான் எப்போதும் பாதுகாப்பாக இருப்பது எப்படி என்றுதான் அறிவுறுத்தப்பட்டேன். இதுதான் மெய் உலகு.

இதற்கு சற்றும் குறைந்ததில்லை மெய்நிகர் உலகு..குழந்தை வளர்ப்பு, காதல் கவிதைகள், சமையல் குறிப்புகள் என்றெல்லாம் பெண்கள் எழுதலாம்.  யாருக்கும் எந்த பிரச்சினையுமில்லை. இதுவே, பெண்கள் உரிமைகள் அல்லது  ஆணாதிக்கம், மதம், மூட நம்பிக்கைகள் பற்றி எழுதினால் போதும். மேலோட்டமாக பார்த்தால், இன்றைய சமூகத்தில் பெண்ணடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் பற்றி ஒரு இடுகை எழுதினால் அதுக்கு சப்போர்ட் செய்யும் ஆண்கள்தான் அதிகம். அதுவும்,” நாம எதுவும் சொல்லலைன்னா,  நம்மையும் பெண்களுக்கு விரோதின்னுசொல்லிடுவாங்களோ, இல்லன்னா பிற்போக்குவாதின்னு நினைச்சுடுவாங்களோன்னு” ஓடி ஓடி வந்து ‘செமயா, பிரிச்சு மேய்சுட்டீங்க’ ‘சூப்பர் போஸ்ட், புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி’ , – அதாவது இவர் புரிந்துக்கொண்டவாராம். வாழ்க்கையில் பெண்ணடிமைத்தனம் இல்லாமல் வாழ்ப்வராம். பார்த்தால்இவர்தான்  ஐயப்ப சாமிக்கு மாலை போட்டு பெண்கள் தொட்டால் தீட்டு என்று   ஆச்சாரமாக வாழ்ந்துக்கொண்டிருப்பார்’ ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன்…-  என்றெல்லாம் இமெஜுக்காக மறுமொழிகள்  இடுவார்கள். பாராட்டுவார்கள். ஆனால்,பெண்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும் போது வெளுத்துவிடும்  இவர்களது சாயம். நான் எல்லா ஆண்களையும் குற்றம் சொல்லவில்லை. பதிவுலகின் பொதுப் போக்கு குறித்தே பேசுகிறேன்.

அதிலும், பெண்கள் பிரச்சினைகள் பற்றி எழுதினால்,  பெண்களுக்கு அள்ளி தெளித்துவிடும் அறிவுரைகள் இருக்கிறதே, அதைப் பற்றி பேச ஒரு நாள் போதாது. அதிலும் இலக்கியவாதிகள்,மெத்த படித்தவர்கள்  என்று  சொல்லிக்கொள்வார்களது விஷயத்தில் அவர்களது கருத்துகள் கூட பார்த்தால் சகித்துக்கொள்ள முடியாமல் இருக்கும்.

ஒரு பெண் எழுதியிருந்தார் – “திருமணமாகிவிட்டால்  குடும்பத்திற்காக, குழந்தைக்காக வேலையை விட வேண்டியிருக்கிறது. ஆணுக்கு அப்படிபட்ட நிலை இல்லை” என்று எழுதியிருந்தார். அதற்கு, நிறைய புத்தகங்கள் படிக்கிறவர் என்று  சொல்லிக்கொள்பவர் எழுதிய மறுமொழி ஆச்சரியமாக இருந்தது. “கல்யாணம் ஆனா பெண்கள் வேலையை விட்டுவிடுவதுதான் சிறந்தது. எனக்குத் தெரிந்த பெண்கள் கல்யாண  பத்திரிகை வைக்கும்போதே நான் அவங்களுக்கு கொடுக்கிற அட்வைஸ் என்னன்னா,முதல்ல வேலையை விட்டுடுன்னுதான்”. இவர்கள் மெத்த படித்து  என்ன? உலக இலக்கியங்களை தேடித் தேடி கரைத்து குடித்துதான் என்ன? பெண்கள் வேலைக்குப் போகத் தேவையில்லை என்றுதானே மதங்கள் முதல் நமது சினிமா ஸ்டார்கள் வரை கருத்து தெரிவிக்கிறார்கள்? வேலையா குடும்பமா என்று வந்தால் குடும்பமே பெண்ணுக்கு அழகு என்று வலியுறுத்தப்படுகிறது. இதில் பெண்களை விட சமூகமே தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

பொருளாதாரத் தேவைகளுக்காக வீட்டிலும் வெளியிலும் உழைக்கும் பெண்களே அதிகம். நிறைமாதமாக இருந்தாலும் ஆணுக்கு இணையாக ஜல்லி, செங்கல்  சுமந்து வீடு கட்டும் பெண்கள், பிளாஸ்டிக் பாட்டிலில் சணல் கட்டி காலில் அணிந்துக்கொண்டு சாலை போடும் பெண்கள் என்று ஆணுக்கிணையாய் உழைக்கும் பெண்களுக்கு இவர் சொல்லும் அட்வைஸ்\ சரி வருமா? சொல்லப்போனால், அப்படி உழைக்கும் பெண்களுக்கு ஆணுக்கு சமமான கூலி கூட கிடையாது. அவ்வளவு ஏன், ஐடி துறைகளில் 10 ஆண் மேனேஜர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெண் மேனேஜரைத்தான் பார்க்க முடிகிறது. கணவனால்  கைவிடப்பட்ட, கணவனை இழந்த பெண்கள் என்னதான் தன் சம்பாத்தியம் கொண்டு பிள்ளைகளை வளர்த்திருந்தாலும் அவர்களுக்கு ஒரு திருமணம் என்று வரும்போதுகூட தன் உறவினர்களிலிருந்து இன்னொரு ஆணை அழைத்துதான் முன்னின்று நடத்தச் சொல்ல வேண்டிவரும்.

இதில் பெண் விடுதலை என்பது பெண்களின் பிரச்சினையா?

இல்லை அது, சமூகத்தின் பிரச்சினை. அதைக் களைவதில் ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே சமமான கடமைகள் உண்டு. ஆணாதிக்கம் என்றால் ஆண்கள் மட்டும் என்று நினைத்துவிட வேண்டாம், சமயங்களில் அதை தலையில் சுமந்து சிதைக்காமல்  பாதுகாக்கும் வேலையை பெண்கள் பெண்கள்தான் செய்கிறார்கள்.

எனக்கு ஒரு இடுகை நினைவுக்கு வருகிறது. சமையல் வேலைகளில் ஆண் உதவ வேண்டும் என்று ஒரு பெண் எழுதியிருந்தார். அதற்கு பல மறுமொழிகள். அதில்  மறக்க முடியாதது. “மனைவிக்கு  உடம்பு சரியில்லைன்னா  கணவன் உதவி செய்யலாம், தப்பில்லை, ஆனா, எனக்கு வர்ற மனைவி சமைச்சதை குறை சொல்லிக்கிட்டே சாப்பிடனும், அதுதான் அன்பு” என்ற ரீதியில் எழுதியிருந்தார். அவரது அன்பிற்கான விளக்கம், அந்த லாஜிக் எனக்கு சுத்தமாக புரியவில்லை.

இதைத்தாண்டி, நீங்கள் எதிலாவது எதிர்கருத்துகள் கொண்டிருந்தால் அதை வெளிப்படுத்தினால் அவ்வள்வுதான். இருக்கவே இருக்கிறது, தனி நபர் தாக்குதல்கள். அப்படியும் ஈகோவை தணித்துக்கொள்ள முடியவில்லையா, இருக்கவே இருக்கிறது பெண்ணின் நடத்தையை கேள்விக்குள்ளாக்குவது. இது உட்சபட்ச ஆயுதம். பாலியல் ரீதியாக குதறிப் போடுவது. மெய் உலகிலும் இப்படித்தானே நடைபெறுகிறது. ‘விபச்சாரி’ எனறு சொன்னால் போதும், ஒரு பெண்ணை  இழிவுபடுத்துவதற்கு. மெய்நிகர் உலகத்திலும் இதுதான். ஒரு பெண்ணை கருத்து ரீதியாக் எதிர் கொள்ள முடியவில்லையா, உடனே கிசுகிசுக்களையும், வதந்திகளையும் போலியான  ஐடிகளிலிருந்து எழுத வேண்டியது. இதுக்கும் குட்டிசுவரில் அமர்ந்துக்கொண்டு கேலி பேசும் ரவுடிகளுக்கும் பெரிதாக வேறுபாடு எதுவும் இல்லை. அவர்களுடன் நட்பாக இருக்கும் ஆண் நண்பர்களுடன் தொடர்புபடுத்தி பேசுவது…மெத்தப் படித்தவர்கள், உயர்ந்தவர்கள் என்று நாம் நினைக்கும் கன்வான்கள்தான்  இப்படி  நடந்துக்கொள்கிறார்கள். கழிப்பறை சுவர்களில் அவதூறுகளை கிறுக்கி வைக்கும் செயலுக்கு சற்றும் குறைந்தது இல்லை இது. பாவம்,  ஒழுக்கம் என்பது  இருபாலருக்கும்  பொதுவானது என்பது தெரியாதவர்கள் இவர்கள்.

இதற்கு எத்தனையோ பெண்கள் பலியாகி இருக்கிறார்கள். பதிவுகள் எழுதுவதிலிருந்து விலகி இருக்கிறார்கள். அல்லது எழுதும் பொருளை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இல்லையேல்,  ‘தோல் கெட்டியாக’இருக்க வேண்டும். அதாவது எருமை மாட்டுத் தோல் கொண்டிருந்தால் நீங்கள் தொடர்ந்து இயங்கலாம். இதுதான் பெரும்பாலான பெண்பதிவர்களுக்கு  கிடைக்கும் அறிவுரை. “இந்த அவதூறுகளை எல்லாம் கண்டுக்கொள்ளாதே, புறக்கணி, பெரிசா எடுத்துக்காதே, அப்புறம் உனக்குதான் மன உளைச்சல்.” சொல்லப்போனால், பெண்கள்  எல்லா இடங்களிலும் இதை சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பேருந்துகளில், வேலை செய்யும் இடங்களில், தெருக்களில் என்று…

இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு  அமைதியாக் கடந்து போ அல்லது இதுவும் கடந்து போகும் என்று அறிவுரை செய்வதை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியவில்லை. அல்லது அப்படி கடந்து செல்வதுதான் நாசுக்கு அல்லது டீசன்ட் என்று உணர்த்தப்படுகிறது. இதே அறிவுரைதானே, ‘அட்ஜஸ்  பண்ணிக்கோ’ என்று சொல்வதுதான் காலம் காலமாக பெண்கள் மேல் திணிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், “கணவன் அடித்தால் வாங்கிக்கொள்வேன், கணவன் செய்தால் சரியாக இருக்கும்” என்று பெண்களால் நீயா நானாவில் பேச முடிகிறது. எதிர்த்து நிற்கும்படியோ அல்லது  உன்னுடன் நானும் எதிர்த்து குரல் கொடுப்பேன் என்றோ பொதுவாக பார்க்க முடிவதில்லை. அப்படி குரல் கொடுக்கும் ஒன்றிரண்டு பேரின் குரல்களும் மற்றவர்கள் எழுப்பும் விமரிசன குரலில் காணாமல் போய்விடுகிறது. இல்லையெனில், “நீ ஏன் இதயெல்லாம் வர வைச்சுக்கிற, நீ ஒழுங்கா இருந்தினா ஏன் இப்படில்லாம் வரப்போகுது?”  என்ற எதையும் விவாதிக்காமல், கணக்கில்கூட எடுத்துக்கொள்ளாமல், அந்தப் பெண்கள்தான் அதற்குக் காரணம் என்பது போல திருப்பி விடப்படுகிறது.

கல்லூரி ஹாஸ்டலுக்குச் செல்ல பத்து மணி நேரம்  ரயில் பயணம் செய்து செல்ல வேண்டும். அப்போதெல்லாம் , நான் கிளம்பும்போதெல்லாம் என் ஆயாவிற்கு மிகுந்த பதட்டமாக இருக்கும், தனியாக  போகிறேனே என்று. ஒவ்வொரு முறையும், சின்னக்குழந்தைக்கு சொல்வது போல அறிவுரை சொல்வார். “ட்ரெயின்லே யார் கேட்டாலும் உன் பேரை, ஊரை காலேஜை எல்லாம் சொல்லிடாதே” என்று. நானும் அப்படியே செய்துமிருக்கிறேன். யாராவது நட்பாகக்  கேட்டால் கூட, வேறு ஏதோ பெயரை, தவறான கல்லூரியை பொய் சொல்லியிருக்கிறேன். ஏன், ஒரு பெண் எப்போதும் பாதுகாப்பாக நடந்துக்கொள்ள வேன்டிய நிர்பந்த்ததிலேயே வாழ வேண்டிய சூழலாகவே இருக்கிறது. இன்றும் அது, பெரிதாக மாறிவிடவில்லை என்று  நினைக்கிறேன்.

அதுவும் ஆண்களுக்கிடையே இருக்கும் இந்த “மேல் பாண்டிங்” எனபதை கண்கூடாகக் காணலாம். இதுவரை பதிவுலகில், பதிவுகள் வைத்திருக்கும் ஆண்கள் எண்ணற்ற  சந்திப்புகளை முன்னெடுத்திருக்கிறார்கள். சந்தித்திருக்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு பெண்களும் கலந்துக்கொண்டும் இருக்கிறார்கள். ஆனால், பொதுவாக இதுபோன்ற சந்திப்புகளில் பெண்கள் கலந்துக்கொள்ளவதுமில்லை. இதைக் குறித்து ஆண்களும் அங்கலாய்க்கலாம். அதனால் என்ன, பயமென்றோ அலல்து தயக்கமோ வேலை பளுவோ ஏதோ ஒன்று….பெண்கள் கலந்துக்கொள்வதில்லை. அப்படியும்  நாங்கள் பெண்கள் மட்டும் ஒரு முறை ஒரே முறை சந்தித்தோம். அவ்வளவுதான். அதை ஒட்டி சில பரபரப்புகள் கிளம்பின. சண்டைகள், விவாதங்கள். அடுத்த முறை பெண்கள்  மட்டுமே சந்திப்பதற்கான முகாந்திரமே இல்லாமல் போய்விட்டது. எதற்குச் சொல்கிறேனென்றால், “மேல் பான்டிங்க்” –  மற்றும் ஆண்கள் எல்லாவற்றையும் ஈசியாக எடுத்துக்கொள்வார்கள்,  கருத்து ஒற்றுமை இல்லாவிட்டால் கூட நட்பாக இருக்க முடியும், எங்கே பெண்கள் நாலு பேரை கொஞ்சம்நேரம் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கச் சொல்லுங்கள்” என்ற பொதுபுத்தியை  நிலைநாட்டுவதற்குதான்.பெண்கள் கூட்டு முயற்சிகள் கேலி செய்யப்பட்டு நகைப்புக்கு ஆளாக்கப்படுகின்றன. கருத்து மோதல்களும் முரண்களும் ஆண்களிடையே இல்லாதது போல  பேசப்படுகின்றன. பிரச்சினைகளை பேசிக்கொள்வதும் அதைப்பற்றி விவாதிப்பதும் கூட சிறந்தவைதான்.

இன்னொன்று, நீங்கள் புரட்சிகர கருத்துகளை  முற்போக்கான கருத்துகளை தைரியமாக வெளிப்படுத்த வேண்டுமென்றால்,  ஒன்று உங்களுக்கு பலமான பின்னணி இருக்க வேண்டும். அல்லது பதிவுலகின் ஆண்களின் சப்போர்ட் இருகக் வேண்டும். இப்படிபட்ட சூழல்தான் இன்று பதிவுலகில் நிலவுகிறது.

மேலும், நான் கவனித்த இன்னொரு ஆட்டியூட் : சகோதரர் என்று  அழைப்பது. சகோதர அன்பிற்கெல்லாம் நான் எதிரியல்ல. ஆனால், பாதுகாப்பிற்காக அப்படி சொல்லும்போது அது சுத்த ஹம்பக்காகத் தோன்றுகிறது. அல்லது நீங்கள் அண்ணா என்றோ சகோதரி என்றோ சொல்லாதவர்களை  அல்லது சகோதரி அல்லாதவர்க்ளை நான் கண்ணியமாக நடத்தமாட்டேன் என்பது என்னவகை மனோபாவம் என்று  எனக்குப் புரியவில்லை.

மத நம்பிக்கைகளை, மூட நம்பிக்கைகளை அதிலிருக்கும் பெண்ணடிமைத்தனத்தைக் நீங்கள் கேள்வி கேட்டால் போதும். எங்கிருந்துதான் வருவார்ர்களோ தெரியாது, ‘சாமி கண்னைக்  குத்திடும்’ ரேஞ்சிலேருந்து ‘உனக்கு சொர்க்கம் கிடைக்காது’ என்பதில் தொடங்கி ‘எச்சரிக்கை செய்கிறேன் புரட்சி புதுமை எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது’ என்பது வரை மிக  நாகரிகமாக மிரட்டல்கள் விடப்படும்.

சிலமாதங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில்   வலைப்பதிவுகளைக்  குறித்து ஒரு கட்டுரை வாசித்தேன்.  இணையத்தில், தமிழில் எழுதப்படும் வலைப்பதிவுகள், அரசியல்,  நகைச்சுவை, மாற்றுக்கருத்துகள் மற்றும் இணையத்தில் காணப்படும் பெண்கள் பதிவுகள் குறித்த கட்டுரை அது. அதில், எனக்குத் தெரிந்த சிலரது பதிவுகள் மற்றும் எனது பதிவும்  குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், வலைப்பதிவுகள் எழுதும்  பெண்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்றும் இருந்தது.

“‘எப்போவும் அந்த கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்துக்கோ” என்று பெரிம்மா திட்டிக்கொண்டிருக்கிறாரே, நான் ஒன்னும் நேரத்தை வீணாக்கவில்லை என்று உணர்த்த விரும்பி பெரிம்மாவிடம் அந்தக் கட்டுரையைக் காண்பித்தேன். அவரும்  வாசித்துவிட்டு அசால்டாக சொன்னார்,  “உன்ன மாதிரி, எத்தன பொண்ணுங்களுக்கு நேரம் இருக்கு? எல்லாரும் குழந்தைய பார்ப்பேனா, மாமியாரை பார்ப்பேனான்னு வீட்டுக்கும்,  வெளிலே வேலைக்கும் ஓடிக்கிட்டிருக்காங்க. இதுல எங்க ப்லாக்கிங்?” என்று.

இதுதான் யதார்த்தம். கணினி தொடர்பான வேலையில் நான் உள்ளதால், எனது அலுவல்களின் இடையில் ஒரு புத்துணர்ச்சிக்காக வலைப்பதிவுகள் பக்கம்  வரத் தொடங்கினேன். அப்படிதான் வலைப்பதிவுகள் எனக்கு பரிச்சயமாயின. இணையத்தில் வலைப்பதிவுகள்  பற்றிய பரிச்சயம் உள்ள யாரைக் கேட்டாலும் சொல்வது இதுதான். பதிவுகள் எழுதும் பெண்கள் மிகவும் குறைவு. இன்னும் பெண்கள் எழுத வர  வேண்டும்.  யாருக்குத்தான் இந்த ஆசை இல்லை?  நேரமும், வீட்டுப்பணிச் சுமைகள் குறித்த கவலைகள் மட்டும் இல்லாமல் இருந்தால் ‍  எழுத விரும்பாத அல்லது எழுத வராத பெண்கள்தான் யார்?  நிச்சயம் பல பெண்கள் எழுத வருவார்கள். சொல்வதற்கும் பேசுவதற்கும்தான் எத்தனை இருக்கிறது.

இதிலும் ஆண்பதிவர்களிடம் கேட்க எனக்கு ஒன்றுண்டு. அதிகமாக பெண்கள் எழுத வர வேண்டும் என்று சொல்பவர்களில் எத்தனைப் பேர் தங்கள் வீட்டுப் பெண்கள் பதிவுகள் எழுதுவதை  ஊக்குவிப்பார்கள்? அப்படி ஒன்று இருப்பதைப் பற்றி பகிர்ந்துக் கொண்டிருப்பார்கள்? விரல் விட்டு எண்ணி விடலாம். எல்லோரும், எங்கிருந்தாவது பெண்கள் எழுத வர வேண்டுமென்றுதான்  விரும்புகிறார்களே ஒழிய தங்கள் வீட்டிலிருந்து அம்மாவோ, மனைவியோ தங்கையோ எழுத வரவேண்டும் என்று முயற்சிகள் எடுத்திருப்பார்களா  என்று கேட்க வேண்டும்போல  தோன்றுவதுண்டு.

சாதியமும், பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும் நிறைந்த சூழலாகவே மெய்நிகர் உலகும் இருக்கிறது. ஒரு பெண்ணை இழிவுபடுத்த அவளைப் பற்றி கீழ்த்தரமாக  புனைவெழுதலாம். அதே மூடத்தனத்தில் ஊறிப் போயிருக்கும் உங்கள் நண்பர்களும் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள், பிறகென்ன கண்ணியமான மனிதர் போல உலா வரலாம். சமூகத்தின்  மேல் அக்கறை இருப்பவராக, இலக்கியவாதியாக, கவிஞராக படம் காட்டிக்கொள்ளலாம். இவர்களை தொடர்ந்து அம்பலப்படுத்தவும், சூழலை மாற்றவும் நாங்கள் தொடர்ந்து இயங்குவதே பதிலடியாக இருக்க முடியும்.

அதற்கு பெண்கள் மட்டுமல்லமால் ஆண் பதிவர்களும் முன்வர  வேண்டும். நாம் பாதுகாப்பிற்காக எழுதும் மொக்கைகளே எவ்வளவு ஆபத்தானதாக வந்து முடிகிறது என்பதை உணர வேண்டும். என் மனக்குமுறல்களையும், எண்ணங்களையும் பகிர்ந்துக்கொள்ள வாய்ப்பளித்த தோழர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!

_________________

– சந்தனமுல்லை
_________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சோறு திருடினான் மகன்! தற்கொலை செய்தாள் தாய்!!

14

தினகரன் - 27.11.2010

தன்மகன் போரிலே புறமுதுகில் அம்பு தைத்து மாண்டு போனான் என்று கேள்விப்பட்டதும் அந்த கோழைக்கு இந்த மார்புகளா பாலூட்டியது என்று சினம் கொண்டு தன் மார்புகளை அறுத்தெரிந்தாளாம் ஒரு புறநானூற்றுத் தாய். இலக்கியத்தில் பதிவான அந்த வீரத்தாயின் வரிசையில் உண்மையாகவே ஒரு தாய் இருக்கிறாள். நாமக்கல் மாவட்டம் மேற்கு பாலப்பட்டி என்ற கிராமத்தில் கூலி வேலைச் செய்து பிழைப்பை ஓட்டும் ஒரு பாவப்பட்ட கூலி ஏழை சந்திராதான் அந்த தாய். 45 வயதான இந்த தாய்க்கு 16 வயதில் ஒரு மகன்.

தன் மகன் ஒரு திருடன் என்று கேள்விப்பட்டவுடன் தூக்கு மாட்டிக்கொண்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் அந்த உத்தமி. அந்தத் தாய் செய்த தவறு ஒன்றே ஒன்று தான்.  கூலி வேலை செய்து சம்பாதித்த அற்பத் தொகையில் தன் மகனை 11ஆம் வகுப்பு வரை படிக்க வைக்கத்தான் முடிந்தது.  வயிறார அவனுக்கு இரண்டு வேளை சோறு  போட முடியவில்லை.  வாழ வேண்டிய வயதிலேயே தன் கணவனைப் பறிகொடுத்த அந்த அனாதைத் தாயால் உழைக்;க முடிந்தது அவ்வளவுதான். 

அவளது மகன் திருடியது வேறு எந்த அபூர்வமானப் பொருளையும் அல்ல. கேவலம் ஒத்த ரூபாய் புழுத்த அரிசி சோத்தைத்தான்.  சோத்தைத் திருடித் தின்ற இந்தக் கொடுமையை அமெரிக்கா நுழைந்து குதறிய சோமாலியாவில் கூட கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அவளுடைய 16 வயதுடைய மாணவன் இளவரசன், அடுத்த வீட்டில் சோத்தைத் திருடித் தின்னும் வழக்கத்தைக் கொண்டிருந்தான். என்னென்ன கற்பனைகளோடு அவனுடைய அப்பாவி பெற்றோர்கள் அவனுக்கு இளவரசன் என்று பெயர் வைத்தார்களோ. பாவம் சோத்துத் ‘தரித்திரம்’ அவனை விடாது விரட்டியது.

அவனுக்கு சொந்த பந்தங்கள் இருந்தும் அந்தப் பாலகனின் பசியால் வாடிய முகத்தைப் பார்த்தும் கூட ஒருவாய் சோறு போட யாரும் முன் வரவில்லை.  அடுத்தவர் சாப்பிடும் போது தெரு நாய் பார்ப்பது போல வாயையும், கையையும் பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி, இறுதியாக முடிவெடுத்தான், திருடித்தின்றாவது பசியாற்றுவதென்று.  ஒருநாள். இரண்டு நாள் அடுத்த நாளென்று வெற்றியின் ஊடாக திருட்டுத் தொழில் தொடர்ந்தது.

பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்என்ற பழமொழி உண்மையாயிற்று. எச்சில் கையோடு கைது செய்தது சேந்தமங்கலம் போலீசு.  சுற்றி வளைத்துப் பிடித்துத் தந்தது சோத்துக்கு சொந்தக்காரர் கூட அல்ல,  அக்கம் பக்கத்து வீட்டு அரிச்சந்திரர்கள் தான். வெறும் சோத்தைத் திருடினான் என்றால் வழக்கு போட முடியாது என்று கருதிக்கூட  நகையைத் திருடி விட்டான் என்று பிடித்துக் கொடுத்திருக்க அதிகம் வாய்ப்புள்ளது. தனது வயதையொத்த பணக்கார குலக் கொழுந்துகள் பள்ளிக்குச் செல்லும் சொகுசுக்காரைத்; திருட அவன் துணியவில்லை.  விதவிதமான துணிமணிகளைக் கண்டு அதைத் திருடி மினுக்கிக்கொள்ளலாம் என்று அவன் எண்ணியதில்லை. 

உணவுக்கு கையேந்த வேண்டுமா, வாளேந்த வேண்டுமா?

பல இளைஞர்கள் தமது காதல் ஜோடிகளுடன் கைகோர்த்துச் செல்வதைக்கண்டு  தானும் அப்படி இருக்கலாமென்று அவன் நினைத்துக்கூட பார்த்ததில்லை. உணவு விடுதிகளில் விதவிதமாக உண்பவர்களைப் பார்த்து வயிற்றொpச்சல் அடைந்ததில்லை. அதை ஈடுசெய்ய உமிழ்நீரைத்தான்  விழுங்கிக் கொண்டான்.  இறுதியில் அவனால் சோத்தைத் தான் திருட முடிந்தது.  எந்தப் பொருளைத் திருடுவது என்பதைத்கூட வர்க்கம் தானே தீர்மானிக்கிறது.

இந்தச் சமூக விரோத பெருங்குற்றத்திற்கு யார் காரணம்?! அவனா இல்லை அவனையும், அம்மாவையும் அனாதையாக விட்டு விட்டுச் செத்துப் போனாரே.அவனுடைய அப்பா, அவரா?! இல்லை, பச்சப்புள்ளையைப் பார்க்க வைத்துத் தின்றார்களே அவனுடைய சொந்த பந்தங்கள்.. அவர்களா?! இல்லை…’எப்படியாவது சாந்துச்சட்டி சுமந்து தன் மகனை காலேஜ் வரைக்கும் படிக்க வச்சா. ஒரு நல்ல வேலை கெடச்சி, மகன் கஞ்சி குடிச்சி பொழச்சிக்குவான் என்று அந்தக் கனவிலேயே உடைந்து போன உடலோடும், வாழ்க்கையோடும் சித்தாள் வேலைக்குப் போய் 11ஆம் வகுப்பு வரைப் படிக்க வைத்தாளே, அந்த மானமுள்ளத் தாயின் தவறா?! இப்படித்தானே நீங்களும் யோசிப்பீர்கள்?

நியாய விலைக் கடைகளில் கலைஞர் சிரிக்கிறார். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி! மகிழ்ச்சி.  அந்த ஒத்த ரூபாய் அரிசிகூட கிடைக்காமல் ஏன் அந்த இளவரசன் சோத்தைத் திருடினான்? இதற்கு நியாயமாக பதில் சொல்ல கலைஞரால் முடியுமா?! இல்லை பூச்சியும், எலியும் தின்றால் கூட அந்த அரிசியை ஏழைகளுக்குத் தரமாட்டேனென்று  அடம் பிடிக்கிறாரே பிரதமர் அவர் பதில் சொல்வாரா?! கலைஞர் வேண்டுமானால் தம்பிக்கு கடிதம் எழுதி தப்பித்துக் கொள்ளலாம்.  இந்தக் கொடுமைக்கு அவரது குடும்பமே ஒன்று  சேர்ந்தால் கூட பதில்  சொல்ல முடியாது.  ஒரு வேளை கடந்த நவம்பர் 17ஆம் தேதி தன் பேரன் துரை தயாநிதிக்கு நடந்த திருமணத்தில் ரேசன் அரிசி சோத்தை வேகவத்து விருந்து போட்டிருந்தால், இதற்கு பதில் சொல்லத் தகுதியிருந்திருக்கும் கலைஞருக்கு.  ஆனால் ஊருக்குத்தான் ஒத்த ரூபாய் அரிசி!

சின்ன வயதிலேயே தகப்பனை எடுத்து விழுங்கிவிட்டு, வீட்டுக்காரர்கள் வந்து விடுவார்களோ என்ற பதற்றத்தில் கவளம், கவளமாக திருட்டுச் சோத்தை கண்ணில் நீர்வர விழுங்கி விட்டு, கடைசியில் ஒரே ஆதராவாக இருந்த தாயையும் எடுத்து விழுங்கி விட்டு, இப்போது சேலம் சிறுவர் கூர் நோக்கு இல்லத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறான் இளவரசன். 

சட்டம்   தன் கடமையைச் செய்கிறது.  இருக்கட்டும், நல்லது.

சோறு திருடினான் என்பதைக்கூட அந்த தாயால் தாங்க முடியவில்லை. குற்ற உணர்ச்சி அழுத்த தன் உயிரை துறந்திருக்கிறாள். ஆனால் இந்த மான உணர்ச்சி ஏழைகளுக்கு மட்டும்தான் சொந்தமோ? ஸ்பெக்ட்ரம் ஊழலின் அளவு ஒத்தை ரூபா அரிச போன்றது அல்ல. ஒன்னே முக்கால் இலட்சம் கோடிக்கு எத்தனை பூஜ்ஜியம் என்று கூட அந்த ஏழைகள் அறியமாட்டார்கள். ஆனால் அந்த பூஜியங்களை அறிந்தவர்களுக்கும், அபகரித்தவர்களுக்கும் மான உணர்ச்சி கிஞ்சித்தும் இல்லையா? கலைஞர் குடும்பம், டாட குடும்பம், மந்திரிகள், அதிகாரிகள், முதலாளிகள் எங்கும் யாராவது ஒருவர் கூட தற்கொலை செய்ய வில்லையே? சோறு திருடுவதுதான் மானக்குறைவா, இலட்சம் கோடிகளில் திருடினால் அது பெருமையா?

காமன்வெல்த் போட்டிக்கு ஏற்பாடு செய்ததில், கேவலம் மலம் துடைக்கும் பேப்பரில்கூட கமிஷன் வச்சிகாசு திருடினாரே காங்கிராஸ் கல்மாடி அவருடைய வீட்டுப் பெண்கள் யாராவது ரோசத்தோடு தூக்கு மாட்டிக் கொண்டிருக்கலாமே. ஏன் செய்யவில்லை? நம்ம நாட்டுல  தேசபக்திக்கு மட்டும்  குறைச்சலே இல்லை. நடிகர் அர்ஜுனையே விஞ்சிவிடுவார்கள். வீரமரணம் அடைந்த கார்கில் வீரர்களின் விதவை மனைவிமார்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுத்ததில் தன்னுடைய மாமியார், மைத்துனி,  மைத்துனர் ஆகியோருக்கும் வீட்டு வசதி செய்து கொடுத்தாரே மகாராஷ்டிரா முதல்வர் அசோக்சவான் அவருடைய களவாணித்தனம் தெரிந்து அவருடைய வீட்டுப் பெண்களோ, ஆண்களோ இல்லை அவரோ ஏன் ஒருவர் கூட ஏன் தூக்கு மாட்டிக் கொள்ளத் துணிய வில்லை!!

இதற்கெல்லாம் மன்மோகனும், சிதம்பரமும் பதில் சொல்வார்களா? பதில் சொல்ல பிரதமருக்கு ஏது நேரம்! 10 ஆயிரம் கோடி செலவு செய்து அம்பானி கட்டியிருக்கிற அன்டிலியா வீட்டுக்கு பால்காய்ச்சவே நேரம் போதவில்லை.

ஆயிரம் கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை தன் பிள்ளைகளுக்கு நோகாமல் எடுத்துத் தந்தாரே மதவெறியன் கர்நாடகா முதல்வா; எடியூரப்பா அவர் வீட்டில் யாராவது தேசப்பற்றோடு ஏன் தூக்கு மாட்டிக்கொள்ளவில்லை?!

தோல்வி மனப்பான்மையால் தற்கொலை செய்துக்கொள்வதில் எமக்கு உடன்பாடில்லை என்பது வேறு விசயம்.  ஆனால் அந்தத் தாயின் தன்மான உணர்ச்சி சுயமாpயாதையுள்ள அனைவரையும் தலைகுனிய வைக்கிறது.  ஆனால் நாட்டையே திருடும், கூட்டிக் கொடுக்கும் திருடர்கள் தலை நிமிர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்களே அதைப் பார்த்து பொறுத்துக் கொண்டிருப்பது நமக்கெல்லாம் அவமானமில்லையா?!

முதலாளிகள் போடும் எச்சில் காசில் வாழும் இந்த மானங்கெட்ட அரசும், அதிகாரவர்க்கமும், அரசியல்வாதிகளும் இனிமேலும் நாட்டையும், நாட்டின் கௌரவத்தையும் காப்பாற்றுவார்கள் என்று உங்களால் நம்ப முடிகிறதா?!  ஒன்றே ஒன்றுதான் இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும். ஓன்று அவர்களாகவே தூக்கு மாட்டிக் கொள்ள வேண்டும். அது நடக்கப் போவதில்லை. ஏனென்றால் எல்லாரும் சொரணை கெட்டவர்கள். நாம்தான் அவர்களை  தூக்கிலேற்ற வேண்டும்

மானமுள்ள எம் உழைப்பாளி மக்களே உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள்.  வறுமைக்கும், தரித்திரத்திற்கும் காரணமானவர்களின் உயிரை எடுங்கள்.  இந்தத் தினவெடுத்த முதலாளித்துவத்திற்கு ஒரு உணவுக் கலகம் விடை சொல்லட்டும். அந்த உணவுக் கலகம் என்பது புரட்சிதான் என்பதற்கு முன்னோட்டமாக இருக்கட்டும்.

_________________________________________

– சா.செல்வராசு, ம.க.இ.க – மையக்கலைக்குழு
_________________________________________


வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

113

உங்களின் கவனத்திற்கு: 26.12.2010 அன்று சென்னையில் நடந்த கீழைக்காற்றின் நூல் அறிமுக விழாவில் தோழர் மருதையன் பேசிய உரையை இங்கு வெளியிடுகிறோம். சுமார் 6000 வார்த்தைகள் கொண்ட இந்த நெடிய கட்டுரை வாசிப்பு குறித்த முக்கியமான பிரச்சினைகளை சமூக நோக்கத்துடன் விரிந்தும், ஆழமாகவும், ஆராய்கிறது. வழக்கமான இணைய வாசிப்பு பாணியில் அல்லாமல் சற்று தங்கி நின்று நிதானித்து படியுங்கள். அதென்ன இணைய வாசிப்பு என்ற கேள்வி இருந்தால் அதற்கான விடைதான் இந்த கட்டுரை

தோழமையுடன்
வினவு

__________________________________________________________________________________

காலத்தின் கசப்பை முறியடித்த கீழைக்காற்றின் வரலாறு!

தோழர்களே, இந்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்புரை என்றெல்லாம் போடுவதில்லை. பொதுவாக நூலை வெளியிட்டுப் பேசுவார்கள். இங்கு சிறப்புரை என்று போட்டிருக்கிறார்கள். இது எனக்கு வாய்த்த சிறப்பு ஒரு சுமை. மற்றவர்களைப் போல் இயல்பாக ஒரு கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையிலே பேச இயலாமல் உங்கள் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்க வேண்டியச் சூழலில் இந்த மேடையில் நிற்கும் நிலை. அது பற்றிக் கவலைப்படவில்லை. இந்தக் கூட்டம், வழமையான கூட்டங்களைப் போல் இல்லாமல் மாலை நேரத்தில் ஒரு நான்கைந்து பேர் அருகருகே அமர்ந்து கலந்துரையாடுதுவது போன்றச் சூழலையும் மனநிலையையும் ஏற்படுத்துவதால் அந்த வகையிலேயே இங்கே பேசுவது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

கீழைக்காற்று வெளியீட்டகம் பற்றி தோழர் துரை.சண்முகம் தன் தலைமை உரையில் சுருக்கமாகச் சொன்னார். கீழைக்காற்று வெளியீட்டகம் தொடங்கிய காலம் என்பது மிக முக்கியமானது. ரஷ்யாவிலே, கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலே போலி சோசியலிசத்தின் வீழ்ச்சி – “கம்யூனிசம் இறுதியாகத் தோற்று விட்டது, முதலாளித்துவம் வென்று விட்டது, இது தான் நாகரீகத்தின் முடிவு, சித்தாந்தங்களின் முடிவு” என்றெல்லாம் மேற்கத்திய அறிவுத்துறையினர் பேசிக்கொண்டிருந்த காலம்.

இங்கே தமிழகத்தை பொறுத்த வரையிலே உங்களுக்குத் தெரியும் NCBH  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் என்பது ஒரு இடதுசாரி அரசியல், கம்யூனிஸ்ட் அரசியல் முற்போக்கான விஷயங்கள் ஆகியவற்றை எல்லாம் தெரிந்து கொள்வதற்கு, 70களில் 80களில் இளைஞர்களுக்கு வாய்த்த ஒரு வரப் பிரசாதமாக இருந்தது. 10காசு 15காசு 25காசு 50காசுக்கெல்லாம் புத்தகங்கள் கிடைக்கும். அதன் பொருள் எல்லாக் கடைகளிலும் அந்த விலைக்குப் புத்தகங்கள் கிடைக்கும் என்பதல்ல. ரஷ்யாவிலே மலிவு விலைக்கு அச்சிடப்பட்டு இங்கே விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

அதை எண்ணிறந்த இளைஞர்கள், ஒரு வகையிலே சொன்னால் “நாலணாவிற்கு ஒரு புக் கிடைக்குது அது என்ன என்றுதான் வாங்கிப் பார்ப்போமே” என்றும், “யாரு நாலணாவிற்கு புக் விற்கிறார்கள்? 15காசு 20காசுக்கு யார் புக் விற்கிறார்கள்?” என்றும் வாங்கினார்கள். அரசியல் நூல்கள், குழந்தைகளுக்கான நூல்கள், கதைகள், அறிவியல் நூல்கள் இப்படிப் பல நேர்மறையான, சிந்தனையைத் தூண்டக்கூடிய நூல்கள் அப்போது தமிழகமெங்கும் பல இடங்களில் விற்பனைக்கிருந்தன. அதை நான் இத்தகைய முற்போக்கு நூல்களைப் படிக்கத் துவங்கிய காலம் என்று சொல்லலாம்.

தனிப்பட்ட முறையிலே அனுபவப் பகிர்தலாக – 70களின் இறுதியில் அல்லது 80பதுகளின் துவக்கத்திலே வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். கடன் ஏற்பாடு செய்து கொண்டு ஒரு 150-200ரூ எடுத்துக் கொண்டு NCBH சென்றால் ஒரு சைக்கிள் கேரியரில் இருபுறமும் நிறையக்  கட்டிக் கொண்டுவரும் அளவிற்கு புத்தகம் வாங்கலாம். அப்படிப் புத்தகங்களைப் வாங்கிக் கொண்டு வந்து லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூல்கள், அறிவியல் நூல்கள் ஆகியவற்றை அது என்ன ஏன் என்று தெரியாமல் எல்லாவற்றையும் படிப்பது.

அப்படி நான் மட்டுமல்ல, பரவலாக இடது சாரி இயக்கம், பெரியார் இயக்கங்களைச் சேர்ந்த பல இளைஞர்கள் என்னைப் போல NCBHஐ நூல்கள் வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த காலம் அது. ஆனால் இந்த ரஷ்ய, கிழக்கு ஐரோப்பியத் தோல்விகளையும் பின்னடைவுகளையும் ஒட்டி, இங்கேயும் ஏற்பட்ட இடது சாரி இயக்கங்களின் பின்னடைவு, சீரழிவு ஆகியவற்றையும் சேர்த்து அவர்கள் கடையைக் கட்ட ஆரம்பித்து விட்டனர்.

NCBH-ல் இனி இடதுசாரிப் புத்தகங்கள் கிடைக்காது என்றானது. சோவியத் ரஷ்யா இந்த நூல்களை வெளியிடுவதையும் நிறுத்திக் கொண்டது. சீனத்தில் இருந்து நூல்கள் அதிகமாக வராது, மிகக் குறைவாகத்தான் வரும். அதற்கு நிறைய மிரட்டல்கள் உருட்டல்கள் உண்டு.

அந்த காலம் பற்றி உங்களுக்குத் தெரியும் – தர்மபுரி வட ஆற்காட்டிலே கடுமையான போலி மோதல்கள் கொலைகள் நடந்த எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலம். அப்போது புத்தகங்கள் வாங்க வேண்டுமென்றால் கிளம்பி சென்னைக்கு வருவோம். தஞ்சையிலே NCBH கடையிலே வாங்குவோம். சென்னையிலே NCBH, சென்னை புக் ஹவுஸ், க்ரியா போன்ற கடைகளில் தேடித் தேடி புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போவோம்.

நான் சொன்ன, உலகம் தழுவிய அளவிலே ஏற்பட்ட மாற்றங்களை ஒட்டி, “இடது சாரி கருத்துக்களுக்குப் பின்னடைவு, இதை இனி யாரும் வாசிக்க மாட்டார்கள், இதெல்லாம் எடுபடாது” என்ற பிரச்சாரம் உலகம் தழுவிய அளவிலே நடத்தப்பட்ட போது, அதற்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாக தோழர்கள் கீழைக்காற்று என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்கள். மார்க்சிய லெனினியக் கருத்துக்களையோ, அல்லது பெரியார் அம்பேத்காரின் சாதி மறுப்புக் கருத்துக்களையோ, ஜனநாயக பூர்வமாக இந்தச் சமூகத்தில் பார்க்கின்ற கருத்துக்களையோ படிக்கக் கூடிய வாசகர்களுக்கு ஒரே இடத்தில் எல்லா நூல்களும் கிடைக்கப் பெற வேண்டும்.

இந்தக் கருத்துக்கள் எல்லாம் மக்களிடம் போனால் தானே இயக்கத்தைக் கட்டமைக்க முடியும். இந்தக் கருத்துக்களை எல்லாம் கொண்டு செல்வதற்கு யாரும் இல்லை. தோழர் சொன்னதைப் போல வணிகர்களை எடுத்துக் கொண்டால், அவர்கள் எவ்வளவு முற்போக்கு உள்ளம் கொண்டவர்களாக இருந்தாலும் தொழில் ரீதியாக அவர்களால் நட்டமில்லாமல் நடத்த முடியாது. லாபம் கிடைக்காதென்றால் இதிலெல்லாம் இறங்க முடியாது. நட்டம் வந்தாலும் இழப்பு வந்தாலும் இப்படி ஒரு நிறுவனத்தை நடத்த வேண்டும் என்று யார் சிந்திக்க முடியுமென்றால் யாருக்கு சமூக மாற்றத்தில் அக்கறை இருக்கிறதோ, யார் தங்களுடைய சொந்த வாழ்க்கையை இழப்பதற்கு தயாராக இருக்கிறார்களோ, அந்த மாதிரி தோழர்கள் தான் இந்த மாதிரி நிறுவனத்தை நடத்த வேண்டும். இது தேவை. இப்படி ஒரு கருத்துத் தளத்தை உருவாக்கினால் தான் பல இளைஞர்களை எதிர்காலத்தில் ஈர்க்க முடியும் என்பதையெல்லாம் மனதில் கொண்டு துவக்கப் பட்டது கீழைக்காற்று.

தோழர் தமிழேந்தி சொன்னது போல ஆரம்ப காலத்தில் அது ஒரு வாங்கி விற்கும் கடையாகத்தான் இருந்தது. சொந்தப் பதிப்புகள் மிக மிகக் குறைவு. அது என்.சி.பி.ஹெச்  புத்தகங்களாக இருக்கட்டும் அல்லது வேறு கடைகளின் புத்தகங்களாக இருக்கட்டும்; தோழர் துரை. சண்முகம் தேடித் தேடி தேனீ போலச் சேகரித்து வந்து இங்கே வைப்பார். இங்கே வருபவர்களுக்கு சாத்தியமான அளவுக்கு எல்லா நூல்களுமே இங்கே கிடைக்க வேண்டும் என்று அந்த நூல்களைக் கொண்டு வந்து சேமித்து வைத்து, இன்றைக்கு முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி என்று கீழைக்கற்றைப் பற்றி போட்டிருக்கிறார்களே, அந்த முகவரி கடும் உழைப்பினால் நம்மிடையே உருவாக்கப் பட்டது.

இன்று உண்மையிலேயே முற்போக்கு நூல்களுக்கான ஒரு முகவரியாக இருக்கிறது. கீழைக்காற்று அப்படி நிலை நிறுத்தப்பட்டப் பிறகுதான் அதைச் சார்ந்த அரசியல் இயக்கங்கள் ம.க.இ.க. போன்ற அமைப்புகள் களத்திலே செயல்படத் தொடங்கிய பிறகுதான் இதெல்லாம் முடிந்துவிட்டது என்று கருதிய வலது இடது கம்யூனிஸ்டுகளுக்கும் கூட “பரவாயில்லையே, இன்னும் இதற்கு எதிர்காலம் இருக்கிறதே” என்ற நம்பிக்கை வந்தது. தங்கள் புத்தகங்கள் இந்தக் கடையில் விற்கிறதே, ஏன் தங்கள் கடையில் விற்பதில்லை என்று வியந்தனர். இதெல்லாம் நேரில் தெரிந்த விஷயங்கள்.

ஏனென்றால் அந்தப் புத்தகத்தைப் படித்து யார் பயன்படுத்த முடியுமோ அவர்கள் இந்தக் கடைக்கு வருகிறார்கள்; அவர்களின் கடைக்கு போவதில்லை. இது யதார்த்தம்; தற்புகழ்ச்சியல்ல. இப்படி உருவாக்கப்பட்டது ஒரு ஜனநாயஜ பூர்வமான அரங்கமாக இருக்கிறது. நீங்கள் அங்கே விற்கும் புத்தகங்களைப் பார்த்திருக்கலாம். கீழைக்காற்று துரை.சண்முகம் ம.க.இ.க. தோழர் என்பதால் இந்தச் சார்புடைய வெளியீடுகள் மட்டும் கிடைக்கும் என்பதில்லாமல், மற்ற நூல்களும், ம.க.இ.க.வை விமர்சனம் செய்கின்ற மிகக் கடுமையாகத் தாக்குகின்ற நூல்களும் பத்திரிக்கைகளும் எல்லாக் கருத்துக்களுக்குமான இடமாக இங்கே விற்கப்படுகின்றன. எல்லோரும் அப்படிச் செய்வதில்லை. NCBH உள்ளிட்டு பல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்ந்த கடைகள் அவர்களை விமர்சித்து வரும் நூல்களையோ, பத்திரிக்கைகளையோ வைத்திருப்பதில்லை. “நூறு பூக்கள் மலரட்டும்” என்று மாவோ சொன்னாரே அதன் இலக்கணமாக கீழைக்காற்று வெளியீட்டகம் நடத்தி வருகிறது.

அது இன்றைக்கு இப்படி ஒரு நூல் வெளியீட்டு விழாவை இங்கே சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்துகிறது. தோழர் துரை.சண்முகம் “இதுதான் கீழைக்காற்றின் முதல் புத்தக வெளியீட்டு விழா” என்று சொன்னதும் கொஞ்சம் துணுக்குற்றது போல் இருந்தது. இத்தனை நாள் இதை இப்படி நாம் யோசிக்கவில்லையே என்று கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது. அதைப் பற்றிப் பரவாயில்லை. ஆனால், இத்தனை காலம் உழைத்த உழைப்பிற்கு இதை இன்னும் கொஞ்சம் முன்னாலேயே செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

கீழைக்காற்று நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களின் உழைப்பு என்பது மிகவும் கடுமையானது. அவர் சொன்னது போல சும்மா கடையில் அமர்ந்திருப்பது அல்ல. தமிழகம் முழுவதும் எங்கெல்லாம் கூட்டங்கள் நடக்கின்றனவோ, என்ன அரசியல் கூட்டமாக இருந்தாலும், பெரியார் இயக்கம், அம்பேத்கார் இயக்கம், சி‌பி‌ஐ, சி‌பி‌எம் எந்தக் கூட்டமாக இருந்தாலும் அங்கே போய் கடை போடுவது. அங்கே பல பிரச்சனைகள் வரும். இது ம.க.இ.க சார்பு இயக்கம் என்று அடையாளம் கண்டுகொண்டு “எங்களை விமர்சிக்கும் நீ இங்கே கடை போடக் கூடாது” என்பார்கள். இல்லை, இது பொதுவான கடை என்றால் நம்ப மாட்டார்கள்.

ஒன்றிரண்டு தோழர்கள் இது போன்ற இடங்களில் அமர்ந்து கொண்டு அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லி எதிர்கொண்டு போராடி இதை நிலை நாட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இந்த நிறுவனத்திற்கு கொஞ்சம் முன்னாலேயே இப்படி ஒரு வெளியீட்டு விழாவை நடத்தும் யோசனை சொல்லத் தவறியிருக்கிறோம் என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. எனினும் தாமதித்தேனும் மிகச் சிறப்பாக நடக்கின்ற இந்த நிகழ்ச்சி மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஓவியர் மருதுவின் ஓவியத்தை இரசிப்பதற்கு வரலாறு படித்திருக்க வேண்டும்!

ஒரு தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். “படித்து முடித்த பின்” என்று. ஓவியர் மருது அவர்கள் பேசும் போது விடுதலைப் போரின் வீர மரபுக்காக புதிய கலாச்சாரம் இதழிலே வெளி வந்துள்ள ஓவியங்கள், அவரதைப் பற்றிச் சிந்தித்த முறை இதெல்லாம் பற்றி விளக்கிச் சொன்னார். அதிலிருந்து இரண்டு ஓவியங்களை எடுத்துக் கொள்வோம். பெரிய மருது அமர்ந்திருக்கிறார் பக்கத்தில் சின்ன மருது நிற்கிறார். நீங்கள் பார்த்திருக்கக் கூடும். சின்ன மருது நிற்கின்ற ஒரு தோற்றம் அண்ணனுக்குப் பணிந்து கையைக் கட்டிக்கொண்டு சற்று தலை குனிந்து கண்களை மேலே ஏற்றி இது சின்ன மருதுவினுடைய பாத்திரம். சின்ன மருதுவின் ஓவியத்தை குதிரை மேல் வரும் போலப் போடலாம். பொதுவாக வீரனென்றால் எப்படிப் போட வேண்டுமென்ற இலக்கணங்கள், சினிமாத்தனமான இலக்கணங்கள் இருக்கின்றன. அந்த இலக்கணப்படி போடலாம்.

ஆனால் அந்தக் கோடுகளின், ஓவியத்தின் வலிமை என்னவென்றால் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அந்த வீரனின் வரலாற்றை, அந்த தனி மனிதனின் ஆளுமையை, அந்தக் கோடுகள் கண்முன்னால் கொண்டு வந்து நிறுத்துகின்றன. அதற்கு சின்ன மருதுவின் எழுத்தைப் படித்திருக்க வேண்டும். அந்தக் கோடுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சின்ன மருதுவின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும். இவன் இப்படித்தான் இருந்திருக்க முடியும். இதுதான் இந்தப் பாத்திரத்தின் சாரம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக கேலிச்சித்திரக்காரர்கள் அரசியல்வாதிகளை கேலிச் சித்திரம் போடும் போது அவர்கள் வழுக்கைத் தலை என்றால் தலையைப் பெரிதாகப் போடுவார்கள். மன்மோகன் சிங் என்றால் முண்டாசைப் பெரிதாகப் போடுவார்கள். மூக்கு நீளம் என்றால் மூக்கைப் பெரிதாகப் போடுவார்கள். அந்த மனிதருடைய உடற்கூறில் எது துருத்திக் கொண்டு இருக்கிறதோ, முக்கியமானதோ அதற்கு மிகை முக்கியத்துவம் கொடுத்து வரைவதென்று கேலிச் சித்திரக்காரர்கள் ஒரு இலக்கணம் சொல்லுவார்கள். அது வேறு. அது பொருளற்றது. இது அந்த மனிதனுடைய வரலாற்றுப் பாத்திரத்தை, வாழ்க்கையை அவன் வாழ்ந்த காலத்தை அந்தக் களத்தில் வைத்து விளக்குவது.

அதே போல கட்டபொம்மனின் ஓவியம். கட்டபொம்மன் என்றால் சினிமாக் கட்டபொம்மன் தெரியும். நான் கூட அதை ஒரு மிகை நடிப்பென்று நினைத்ததுண்டு. சிவாஜியின் நடிப்பில் மிகை நடிப்பு உண்டுதான். ஆனால் தூக்குமேடைக்கு செல்லும் காட்சியில் – பானர்மேன் எழுதிய அந்தக் குறிப்புகளிலேயே இது உண்டு, அந்தப் படத்திலேயும் தூக்கு மேடை வசனமாகவும் வரும் – “நான் அங்கேயே போரிட்டு மடிந்திருக்க வேண்டும். இவ்வாறு ஒளிந்ததற்கு எனக்கு இந்த நிலை தேவைதான்” என்று கட்டபொம்மன் சொல்வதாக. மருது வரைந்திருக்கும் ஓவியத்தில் அது இருக்கிறது.

அதாவது ஒரு இகழ்ச்சியும் வெறுப்பும் தான் மீதே உள்ள கடுங்கோபமும் கொண்ட நிலையிலே நிற்கின்ற கட்டபொம்மன். ஒரு அவமானம் அது. போரிட்டு மடியாமல் தூக்கிலே சாக வேண்டி இருக்கிறதே என்ற இழிவு. தலைக்குனிவு. அந்தத் தலைக்குனிவிற்கு ஆட்படுகின்ற ஒரு சுயமரியாதை உள்ள மனிதன் அந்த இடத்திலே எப்படி நடந்து கொள்வானோ அப்படி இருக்கிறது அந்த ஓவியம் – அவன் தூக்குக் கயிற்றை முத்தமிடுகிறேன், சிரிக்கிறேன் என்றெல்லாம் இருக்க முடியாது.

இந்த ஓவியத்திற்கு என்ன முக்கியத்துவம் என்பதை எப்படிப் புரிந்து கொள்வது? நன்றாக வரைந்திருக்கிறார் என்று எதை வைத்து சொல்வது? பெரியாரை நன்றாக வரைந்திருக்கிறார் அல்லது பகத்சிங்கை நன்றாக வரைந்திருக்கிறார் என்று சொல்கிறோம். நன்றாக வரைதல் என்றால் என்ன? ஓவியம் சிறப்பாக இருக்கிறது, பொருத்தமாக இருக்கிறது, அழகியல் நேர்த்தியுடன் இருக்கிறது என்று சொல்ல வேண்டுமென்றால் எதைப்பற்றி நீங்கள் கருத்து சொல்கிறீர்களோ, அந்த மனிதனைப் பற்றி, அந்த வரலாற்றைப் பற்றி, உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். நீங்கள் படித்திருக்க வேண்டும். அதைப் பற்றி புரிதல் இருக்க வேண்டும்.

படிப்பது என்றால் சும்மா படிப்பது என்று அல்ல. ஒரு ரசனை வேண்டுமென்றால் அதற்கு பின்புலத்திலே அறிவு வேண்டும். மார்க்ஸ் ஒரு இடத்தில் அழகாக எழுதுவார். “The most profound music is merely a sound to unmusical ears.”-   “மிகச் சிறந்த இசையாகவே இருந்தாலும் இசைக்காதுகள் இல்லையென்றால் அவர்களுக்கு அது வெறும் ஒலி தான்”. இசையை ரசிக்கக்கூடிய காதாக இல்லையென்றால் அது வெறும் சத்தம்தான். இசையை எப்படி ரசிப்பது? அதை ஒரு பயிற்சியின் மூலம் தான், உழைப்பின் மூலம் தான், படிப்பதன் மூலம் தான் பெற முடியும். படித்து முடித்த பின் என்ற தலைப்பை விட இன்றையச் சூழலை வைத்துப் பார்க்கும் போது, “பார்த்து முடித்தப் பின்” என்று தலைப்பு வைத்திருக்க வேண்டுமோ என்று தோன்றுகிறது.

நடுத்தர வர்க்கத்தின் காரியவாத படிப்பும், காலியாகும் ஆளுமையும்!

ஏனென்றால் “படித்து முடித்தப் பின்” என்றால் – சில நாட்களில் புத்தகக் கண்காட்சி நடக்கப் போகிறது அந்தக் கடைகளைப் போய் பாருங்கள். எங்கே கூட்டம் அலை மோதுகிறதென்று. நடுத்தர வர்க்கப் பெற்றோர்கள் பிள்ளைகளை அழைத்து வருகிறார்கள். அந்தப் பிள்ளையை ஆய கலைகள் அறுபத்து நான்கிலேயும் அதற்குள்ளே தயார் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்போது ஆய கலைகள் புதிதாக வேறு அறுபத்து நான்கு உள்ளன. பழையவை அல்ல. கம்ப்யூட்டர், இங்கிலீஷ், ஃபிரெஞ்சு மொழி என்று பல கற்றுக் கொள்ளவேண்டும் இதுக்கான ஒலித்தகடுகள், வீடியோக்கள் இதையெல்லாம் வாங்கி எதற்கு தயார் செய்கிறார்கள்?

பிள்ளையை விளையாட விடாமல் “படி படி” என்று கொல்கிறார்கள். இதையெல்லாம் பல நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் பார்க்கிறோம். நாமும் இங்கே படிக்க வேண்டுமென்று வலியுறுத்திப் பேசிக் கொண்டிருக்கிறோம். பின் என்ன பிரச்சனை? எதற்குப் படிக்கச் சொல்கிறார்கள் என்றால் படித்து முடித்த பின் வேலை. படித்து முடிக்கவே வேண்டாம். காம்பஸ் இன்டர்வியூவில் வேலை. முன்னாலேயே வேலை கிடைக்க வேண்டும். வேலைக்குப் போவதற்காக, நல்ல வேலைக்குப் போவதற்காக,  அமெரிக்கா போவதற்காக, பொருளீட்டுவதை உத்திரவாதம் செய்து கொள்வதற்காக, ஒரு வாழ்க்கை தகுதியைப் பேணிக் கொள்வதற்காகப் படி படி என்று சொல்கிறார்கள்.

படிப்பு என்பதைப் பற்றிய பார்வை பெற்றோர்களிடம் இப்படி இருக்கிறது. இது படிப்பு அல்ல. இதை நான் நிராகரிப்பதற்காகச் சொல்லவில்லை. இப்போது இந்தக் காய்ச்சல் என்பது பத்தாம் வகுப்பிலிருந்தே தொடங்குகிறது. இது முன்னர் கிடையாது. பிள்ளைக்குப் பத்தாவது பரீட்சை என்றால் பெற்றோர் எங்கும் போவதில்லை. தாயும் சரி தந்தையும் சரி கூடவே இருந்து சொல்லிக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஏனென்றால் போட்டி மிகுந்த உலகம். இதில் மதிப்பெண் வாங்கி வந்தால் தான் உண்டு. அரசுக் கல்லூரிகளில் ஒரு சீட்  கிடைக்க இவ்வளவு மார்க் வாங்க வேண்டும். இல்லையென்றால் சுயநிதிக் கல்லூரிகளுக்குச் சென்று பணம் கட்ட முடியாது. அரசுக் கல்லூரிகளில் வாங்க 98 மதிப்பெண் வேண்டுமென்றால் 97.5 வாங்கினாலும் போயிற்று, சீட் கிடைக்காது. அப்படி விரல் நுனியில் பையனை நெருக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

மரு.ருத்ரன் சொல்லுவார் இதனாலேயே பிள்ளைகள் மனநோய்களுக்கு, மன அழுத்தங்களுக்கு, பதட்டங்களுக்கு சிறிய வயதிலேயே ஆட்படுகிறார்கள் என்று. அப்படித் தள்ளுகிறார்கள் பெற்றோர்கள். ஏன்? பிள்ளைகள் நலத்தின் பொருட்டுத்தான் செய்கிறார்கள். பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் என்று தான் செய்கிறார்கள். அப்படி படித்து முடித்து செய்கின்ற பணி என்னவென்றால் ஒரு முதலாளியினுடைய தொழிற்சாலை இயந்திரத்தின் போல்ட் நட்டாகவோ, அல்லது ஒரு வர்த்தக இயந்திரத்தின் உப உறுப்பாகவோ அல்லது ஒரு விளம்பர இயந்திரத்தின் பகுதியாகவோ வேலை செய்யப் படிக்கிறார்கள். அங்கே ஆக்கபூர்வமானது எதுவும் இல்லை. அவன் சொல்வதைச் செய்வதற்கு முன்னாலேயே தயார் செய்து கொண்டு போகிறோம்.

இயந்திரத்தை முதலாளி கைக்காசு போட்டு வாங்குகிறான். ஆனால் இயந்திரத்தின் உப உறுப்புகளாகச் செல்லக் கூடியவர்கள் அது ஐ‌டி துறை ஊழியர்களாக இருக்கட்டும் வேறு யாருமாக இருக்கட்டும் எல்லாருமே தங்கள் சொந்தச் செலவில் தங்களைத் தயாரித்துக் கொண்டு போகிறார்கள். ஒரு மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கிற்கு செல்வாக்கில்லை. எலக்டிரிக்கல் இன்ஜினியரிங் படிக்க வேண்டும். அல்லது இன்ஜினியரிங் படிப்பு வேண்டாம் மல்டிமீடியா படித்தால் அதிக சம்பளம் வாங்கலாம். இன்ஸ்டிட்யூட்டில் ஒரு வருடம் படித்தால் நல்ல சம்பளம்.

இந்தச் சந்தையிலே மலிவு விலையிலே இந்த உப உறுப்புகளை வாங்குவதற்காக இதை மட்டும் படித்தால் போதும் என்ற மனநிலையை முதலாளித்துவம் பயிற்றுவிக்கிறது. அந்த முதலாளித்துவத்தின் சாட்டைக் குச்சிக்கு ஆடும் விலங்குகளைப் போலப் புத்தகக் கண்காட்சியில் கூட்டம் சேர்கிறது. இதை விட்டால் பக்தி நூல்கள், அதற்குப் பின்னர் நிறைய குருமார்கள் இருக்கவே இருக்கிறார்கள். வாழ்க்கையில் பதட்டத்தைத் தணிக்க என்று அவர்களுடைய நூல்கள். முதலில் நுழைந்தவுடன் பதட்டத்தை எவ்வாறு உருவாக்கிக் கொள்வது பின்னர் கொஞ்சம் தள்ளிப் போய் பதட்டத்தை எப்படித் தணிப்பது இப்படி நூல்களை வாங்கிக் கொண்டு வெளியே வந்து விடுகிறார்கள். இப்படித்தான் இன்றைய கல்வி என்பது இருக்கிறது. இந்தக் கல்வி மூலம் ஓவியர் மருதுவின் ஓவியத்தை – 5000, 10000, 20000க்குக் கூடப் புத்தகங்கள் வாங்கிப் படித்தாலும் – ரசிக்க முடியுமா? சாத்தியமில்லை. அவர்களுக்கு இது தெரியாது.

நாட்டுப்பற்றும், துரோகமும் வரலாற்றறிவு இன்றி புரியாது!

மருது, கட்டபொம்மன் போன்றவர்கள் இந்த மண்ணிலே வாழ்ந்தார்கள் என்பது நம்முடைய பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கும் கல்லூரியிலே படித்து வந்திருக்கிற இளைஞர்களுக்கும் தெரியாது. யாரும் படித்ததில்லை. சொல்லப் போனால் புதிய கலாச்சாரம் இந்த சிறப்பிதழைக் கொண்டு வருவதற்கு முன்னால் எனக்கும் கூட இவ்வளவு விவரங்கள் தெரியாது. இந்த மண்ணினுடைய பெருமை மிக்க வரலாறு என்பது, இந்த மண்ணினுடைய மிகச் சிறந்த மனிதர்கள், அவர்களுடைய வாழ்க்கை – தயவு செய்து இந்த நூலில் நீங்கள் திப்பு சுல்தானுடைய வரலாற்றையோ, சின்ன மருதுவினுடைய பிரகடனத்தையோ, ஊமைத்துரையின் போராட்டத்தையோ படித்துப் பார்த்தால் கண்ணீர் வரும். 200 ஆண்டுகளுக்கு முன்னாள் இப்படிப் பட்ட மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்களா என்று எண்ணிப் பார்க்க முடியாது.

ஆனால் இது தெரியாமல் நுனி நாக்கு ஆங்கிலம் பேசிக்கொண்டு ஒரு தக்கை மனிதர்கள்  கூட்டம் உருவாக்கப்படுகிறது. ‌இந்தத் தக்கை மனிதர்களுக்கு இதை எப்படி ரசிக்க முடியும்? சமீபத்தில் ஒரு தோழர் சொன்னார். அதுவும் இப்போது புதிய தகவல். இந்தப் பத்திரிக்கை கொண்டு வரும் போது எனக்குத் தெரியாது. இந்தியாவில் மன்னர் மானியம் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் ஒழிக்கப் பட்டது. ஆனால் ஆற்காட்டு நவாபிற்கு மட்டும் மானியம் ஒழிக்கப் படவில்லையாம். அவர்கள் வெப் சைட்டில் போட்டிருக்கிறார்கள். ஆற்காடு நவாபிற்கு மட்டும் மன்னர் மானியத்தில் இருந்து விலக்கு தரப்பட்டிருக்கிறது. ராயப்பேட்டையில் ஒரு பெரிய அரண்மனை இருக்கிறது. அமீர் மஹால் என்று பெயர். அதில் 600 பணியாளர்களுக்கு அரசாங்கம் பணம் கொடுக்கிறது. மத்திய பராமரிப்புத் துறை CPWD அதைப் பராமரிக்கிறது. மாநில அரசிலுள்ள அமைச்சர்களுக்குள்ள எல்லா உரிமைகளும் அந்தஸ்தும் ஆற்காடு இளவரசருக்கு உண்டு சுழல் விளக்கு உட்பட. பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிகள் அவரை அழைக்க வேண்டும். ப்ரோடோகாலில் அதற்கிடம் உண்டு.

யார் இந்த ஆற்காட்டு நவாப்? திப்பு சுல்தான் முதல் மருது, கட்டபொம்மன் என்று தென்னிந்தியாவின் விடுதலை வீரர்கள் அத்தனை பேரையும் நசுக்குவதற்கு துணை நின்ற துரோகி. துரோகத்தின் வரலாறு தான் ஆற்காட்டு நவாபின் வரலாறு. அந்தத் துரோகத்திற்கு வெள்ளையர் கொடுத்த சிறப்புப் பரிசு அது. 1870-இல் வட இந்தியச் சுதந்திரப் போராட்டம் முடிந்த பிறகு வெள்ளைக்காரன் ஆற்காட்டு “நவாப்” என்றெல்லாம் டெல்லி பாதுஷா கொடுக்கும் பட்டத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்று அதை எடுத்துவிட்டு மேற்கத்திய மரபில் Prince Of Arcot ஆற்காட்டு இளவரசர் என்று பேரை மாற்றச் செய்தான். அதே போல விஜயரகுநாதத் தொண்டைமான் என்று பலர் இருக்கிறார்கள்.

ஆனால் இந்த ஒரு விவரம் நம் கண் முன்னாலேயே இருக்கிறது. இப்போது அந்த ஆற்காடு இளவரசனுடைய வாரிசை ஏதும் செய்வதல்ல நமது நோக்கம். ஆனால் ஒருபக்கம் இப்படி ஒரு இளவரசர் அந்தஸ்து கொடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் மருதுவிற்கு விழா எடுக்கிறோம் என்கிறார்கள். அந்தப் பக்கம் கட்டபொம்மனுக்கு விழா எடுக்கிறோம் என்கிறார்கள். ஒருவேளை அந்த விழாக்களிலும் முதல் வரிசையில் ஆற்காட்டு நவாப் உட்கார்ந்திருப்பார். இது என்ன கேலிக் கூத்து? இந்த கேலிக்கூத்துப் பற்றி நமக்குத் தெரியாது. இப்படி இந்த மண்ணினுடைய வரலாறு கூடத் தெரியாமல், படிக்க விரும்பாமல் சரியாகச் சொன்னால் படிக்க முடியாமல் இருக்கக் கூடிய ஒரு தலைமுறை வளர்ந்து கொண்டு இருக்கிறது.

தொலைக்காட்சி உருவாக்கும் ஊனமுற்ற டிஜிட்டல் மூளை!

அதனால் தான் முன்பொருமுறை “படித்து முடித்தப் பின்” என்றில்லாமல் “பார்த்து முடித்தப் பின்” என்று தலைப்பை வைத்திருக்கலாம் என்று சொன்னேன். ஏனெனில் தொலைக்காட்சியின் ஆதிக்கம் அந்த அளவுக்கு இருக்கிறது. இது கீழைக்காற்றுக்கும் ம.க.இ.க. என்ற அமைப்பிற்கும் மட்டும் பிரச்சனை அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. படிக்க முடியாது என்ற சூழலை நோக்கி இளைய தலைமுறை உருவாக்கப்படுகிறது. இதில் நகர்ப்புறம், நாட்டுப்புறம் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. கலைஞர் டிவி கிராமத்திலும்தான் தெரிகிறது.

அமர்ந்து படிக்க முடியாது என்றால் வேறு என்ன செய்ய முடியும்? தொலைக்காட்சி பார்க்கலாம். அதில் ஒரு நொடிக்கொரு முறை மாறுகின்ற ஃபிரேம், காட்சிகள் மாறி மாறிப் போகின்றன. அது மாறுவது போதாது என்று ரிமோட்டில் வேறு மாற்றி மாற்றிப் பார்க்கின்றனர். இன்னும் வேகமாகப் பார்க்க வேண்டுமாம். பல சேனல்கள் மாற்றுகிறார்கள். இப்படித்தான் பாட்டுக் கேட்கிறார்கள், நியூஸ் பார்க்கிறார்கள், வேறு நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள். தொலைக்காட்சியில் என்ன வருகிறது என்பதற்கெல்லாம் நான் இப்போது போகவில்லை. இது பார்க்கும் முறை மட்டுமே.

மனிதர்கள் என்றாலும் இது ஒரு பௌதீக உடல். நடப்பதென்றால் அதில ஒரு தாள லயம் (ரிதம்) இருக்கும். இப்படித்தான் நடக்க முடியும்; ஓடுவதென்றால் இப்படித்தான் இருக்க முடியும். அது போல சிந்திப்பதென்றால் அதற்கென்று ஒரு வழிமுறை (பிராசஸ்) இருக்கிறது. இப்படித் தொலைக்காட்சி பார்த்து என்ன சிந்திக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. யோசித்துப் பாருங்கள், அப்போது மூளைக்குள் என்ன நடக்கிறது என்று.

நீங்கள் சன் டிவியிலிருந்து CNN IBN, NDTV, TIMES NOW  என்று எந்த டிவியானாலும் பாருங்கள். சீரியசாக நியூஸ் பார்ப்பவர்களுக்கே சொல்கிறேன். அவர்கள் ஒரு செய்தியைச் சொல்லும் முறையைப் பாருங்கள். காட்சிகள் எப்படி மாறுகின்றன? TIMES NOWவில் ஒரு செய்தி காண்பிக்கிறார்கள் இதோ ஸ்பெக்ட்ரம் ராஜா என்று ஒரு வட்டம் போடுகிறார்கள், ஜும் செய்து பெரிதாக்கிக் காட்டுகிறார்கள் பின்னால் ஒரு இசை வருகிறது- பயங்கரமான திகில் இசை, பின்னர் அதை விவரிக்கிறார்கள்.. இப்படிப் போகிறது. ஒவ்வொரு சானலிலும் வெவ்வேறு விதமாகப் பார்த்தாலும் இப்படித்தான் காட்டுகிறார்கள்.

இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் சுமார் ஒரு மாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு மாதமாக எல்லாத் தொலைக்காட்சிகளிலும் ஸ்பெக்ட்ரம் செய்திகளைப் பார்க்கின்றவர் உங்களிலேயே பல பேர் இருக்கலாம். அதிலிருந்து என்ன தெரிந்து கொண்டீர்கள்? ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி தொலைக்காட்சி பார்த்தவர்களுக்கு என்ன தெரியும்? 176000 கோடி ரூபாய் ஊழல். யார் செய்தது? ராஜா. அது கருணாநிதி குடும்பத்திற்குப் போயிருக்கும். சரி அப்புறம் அதற்கு மேல்? அப்பறம் ஏதோ டாடாவோட ஃபோன்ல பேசியிருக்கார்கள் என்று தெரியும். இது தான் CNN IBN  பார்க்கிறவனுக்கும் தெரியும், TIMES NOW பார்க்கிறவனுக்கும் தெரியும். இது தான் கிராமத்தில் தினத்தந்தி படிப்பவனுக்கும் தெரியும். உனக்கென்ன வேறு பிரத்யேக அறிவு இருக்கிறது இப்போது?

வேகமாக மாறக்கூடிய ஃபிரேமில் சொல்லக் கூடிய ஒரு வரி, அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் தேர்ந்தெடுத்து சொல்லக்கூடிய ஒரு வரி ராஜா ராஜா ராஜா. ஸ்பெக்ட்ரம் டாடா என்று சொல்லவேண்டும். ஏன் ராஜா என்கிறார்கள்? ஸ்பெக்ட்ரம் ஊழலில் முக்கியமாக ஆதாயம் அடைந்தது யார்?  ஆதாயம் அடைந்தது டாடா, அனில் அம்பானி, மிட்டல் – அவர்களல்லவா குற்றவாளிகள்? இதைப் பத்திரிக்கை படித்தாலே தெரிந்து கொள்வது கடினம். தொலைக்காட்சியில் இப்படித் திரும்பத் திரும்பக் காட்டி, அந்தக் காலத்தில் நம் பாட்டன்மார்கள் எம்‌ஜி‌ஆர் என்றால் ஹீரோ நம்பியார் என்றால் வில்லன் என்று நினைத்திருந்தார்களே அந்த அறிவு தான் இருக்கிறது.

படிக்காதவனுக்கும் ரேகை உருட்டுபவனுக்கு இருக்கும் அறிவுதான் இருக்கிறது. தொலைக்காட்சியில் மாறுகின்ற ஃபிரேமை ஒட்டிச் சொல்லப்படுகின்ற காட்சிகளில் உள்ள ஒன்றிரண்டு வரிகள், அதற்குப்பின் ஒரு தொலைக்காட்சி நிருபர் அந்தக் களத்திலே நின்று கொண்டு மூச்சு விடாமல் பேசுவார். ஒரு வார்த்தை புரியாது. லொட லொடவென்று தகர டப்பாவில் கோலிக்குண்டு உருட்டுவது போல பேசுகிறார்கள். அது எதற்கு என்று தெரியவில்லை. ஏதோ பரபரப்பா சொல்கிறார்களாம். அதில் ஒரு பரபரப்புச் செய்தியும் இருக்காது. இதைத் தான் எல்லாரும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதில் விஷயமில்லை என்பது ஒரு புறம். ஆனால் இதன் காரணமாக அதன் மூளையின் ஆற்றல் அழிகிறது.

உடலுழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பும் குறைவதால் வரும் விளைவுகள்!

நான் மரு.ருத்ரனிடம் இருந்து ஒரு புத்தகம் வாங்கிப் படித்தேன். ID என்ற புத்தகம் சூசன் கிரீன்ஃபீல்ட் என்ற நியூரோ சைக்காலஜிஸ்ட் எழுதியது. அந்த நூல் இதைத்தான் முக்கியமாகக் கையாள்கிறது. 21-ம் நூற்றாண்டு, அதற்குப் பிறகு இளைஞர்கள், படிக்கும் முறை எல்லாம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பேசுகிறது. அது ஒரு மிகப் பெரிய மூளை ஊனத்திற்கு இந்தச் சமூகம் ஆட்படப் போகிறது என்று சொல்கிறது. இதை எப்படிப் புரியவைப்பது?

நாம் நம் பெற்றோர் தலைமுறையை விடக் குறைவாக நடக்கிறோம். அவர்களை விடக் குறைவாக உழைக்கிறோம். நம்முடைய வாழ்க்கை முறை மாறி விட்டது. சுற்றுச்சூழல் மாறிவிட்டது. இதன் காரணமாக பல பிரச்சனைகள் உடலில் ஏற்படுகின்றன. டாக்டர்கள் வாக்கிங் போக உடற்பயிற்சி செய்யச் சொல்கிறார்கள். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என்று பல பிரச்சனைகள். இதற்கெல்லாம் 40-50 வகைப்பட்ட மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொன்றையும் குறிப்பாக ஆராய்ந்து சொல்கிறார்கள். இப்படி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் கருத்தியல் ரீதியாக ஒரு தாக்குதல் மூளைக்கு வருகிறதே இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதென்றா நினைக்கிறீர்கள்?

நான் சிந்தனையில் ஏற்படும் மாற்றத்தைச் சொல்லவில்லை. மூளை என்ற பருப்பொருளே காலப் போக்கில் செயலிழந்து போகிறது. உதாரணமாக, இந்தக் கையைப் பயன்படுத்தி நான் கடுமையாக உழைக்கும் பட்சத்தில் இந்தக் கைகள் வலிமையாக இருக்கும். நான் குமாஸ்தாவாக எழுதிக்கொண்டு தான் இருக்கிறேன், உழைப்பில் ஈடுபடவில்லை என்றால் இந்தக் கை இப்படித்தான் இருக்கும். உடல் அங்கமான மூளையைப் பயன்படுத்தி இந்தத் தொலைக்காட்சி ஃபிரேம் மாறுவதை பார்க்கும் போது என்ன செய்கிறார்கள்? இளைஞர்கள் சிந்திப்பதில்லை என்பதல்ல அவர்கள் சிந்திக்கும் திறனையே இழந்து வருகிறார்கள். அவர்களால் சிந்திக்க முடியாது.

அவர்கள் முற்போக்காக புரட்சி செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை; தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி சற்று நேரம் அமர்ந்து விலகிச் செல்லாமல் ஒரு பொருள் குறித்து ஆழமாக உரையாட முடியுமா? இன்றைய இளைஞர்களிடம் முயற்சி செய்து பாருங்கள். ஒரு குறிப்பிட்டப் பொருளைக் குறித்து எழுதிக் கொடுக்க முடியுமா? கேட்டுப் பாருங்கள். இல்லை, நம்மாலேயே விருப்பமான ஒரு விஷயம் குறித்து முடிகிறதா என்று யோசித்துப் பாருங்கள். முடியவில்லை என்றால், ஏன் முடியவில்லை? படித்திருக்கிறோம், எழுத்தறிவு இருக்கிறது, ஏன் முடியவில்லை?

அதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று சரக்கில்லை. ஸ்பெக்ட்ரம் பற்றி இரண்டு பக்கம் எழுதிக் கொடுக்கச் சொன்னால் எத்தனை பேர் எழுதித் தர முடியும்? இரண்டாவது அப்படி முனைந்து சிந்திக்கும் ஆற்றலை இழந்து விட்டோம். கிருபானந்த வாரியார் வந்து உட்கார்ந்தால் அப்படியே சிஸ்டத்திலிருந்து வருவது போல வடமொழி சுலோகங்கள், இலக்கியம் எல்லாம் வந்து கொண்டே இருக்கும். அவ்வளவும் மனப்பாடம். அப்படி ஒரு நினைவாற்றல். அது பழைய கல்வி முறையின் அங்கமாக இருந்தது.

அச்சுக் கலை வந்த பிறகு அப்படி மனப்பாடம் செய்து கொள்ள வேண்டிய தேவை போய்விட்டது. இப்போது கணினி வந்து விட்டது. வாய்ப்பாடு தேவை இல்லை கால்குலேட்டர் இருக்கிறது. தேவையான விஷயங்களை கணினி மூலம் சேமித்து வைத்துக் கொள்ளலாம். அதை நினைவில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த மாற்று நிலை என்ன செய்கிறது? அந்த ஆற்றல்களை நம்மிடமிருந்து மெல்ல மெல்ல வெளியே கொண்டு வருகிறது. முன்பு கிராமத்தில் சாமான் வாங்கினால் “நாலு பத்து நாப்பது என்று சொல்ல வேண்டியது தானே அதற்கெதற்கு கால்குலேட்டர்” என்று கிண்டல் செய்வார்கள். “இது கூடத் தெரியவில்லையா” என்று கேலி செய்வார்கள். இந்த ஆற்றல்களை இழப்பது போல நாம் சிந்திக்கும் திறனையும் இழக்கிறோம்.

இதைச்‌ சொல்லும்போது நவீன மாற்றங்களை எதிர்த்து நான் பேசுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நவீன மாற்றங்கள் வாழ்க்கையைக் கெடுத்து விட்டது என்று பழமைவாதியைப் போலப் பேசுகிறேன் என்று இருந்து விடக்கூடாது. அப்படி அல்ல. ஆனால், இந்த நவீன மாற்றங்கள் கேடான முறையில் மட்டும் திட்டமிட்டு நம் மீது ஒரு ஆயுதம் போலப் பிரயோகிக்கப் படுகின்றன.

காட்சி பார்த்து கருத்து வராது, குழந்தைகளான பெரியவர்கள்!

இப்படி வளர்க்கப்படுபவர்களால் கருத்தியல் (concept) ரீதியாகச் சிந்திக்க முடியாது. 2-3 வயதுக் குழந்தைகளால் எப்படி கருத்தியல் ரீதியில் சிந்தித்துப் பேச முடியாதோ அது போல் ஆகிறார்கள். குழந்தைகளால் “எனக்கு கஷ்டமாக இருக்கிறது” என்று சொல்ல முடியாது. அவர்களால் படிமங்களால் தான் சொல்ல முடியும். சுடும் என்றோ, வலிக்கிறது என்றோ சொல்லத் தெரியாத குழந்தை காலப்போக்கில் கருத்தியல் ரீதியாகக் கற்றுக்கொள்கிறது. அதற்கு முன் அந்த அனுபவத்தைத் தான் அந்தக் குழந்தை பேசுகிறது. ஏனென்றால் அதன் அறிவு காட்சிப் படிமங்களில் இருக்கிறது, அனுபவத்தில் இருக்கிறது. கருத்தியல் ரீதியான ஆற்றலே அந்தக் குழந்தையிடம் இல்லை. பின்தான் கொஞ்சம் கொஞ்சமாய் கற்றுக் கொள்கிறது. அந்தக் குழந்தையைப் போல இந்தத் தொலைக்காட்சிப் படிமங்களைப் பார்த்துப் பார்த்து கருத்தியல் ரீதியாகச் சிந்திக்கும் ஆற்றல் போய்க்கொண்டு இருக்கிறது.

ஜனநாயகம் என்றால் என்ன? கௌரவம் என்றால் என்ன? நீதி என்றால் என்ன? போன்ற கேள்விகளுக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேசுபவர்களால் பதில் சொல்ல முடிவதில்லை. அது எதுவும் தொலைக்காட்சியில் பேசப் படுவதில்லை. எதுவும் நின்று விவாதிக்கப் படுவதில்லை. ஏன் இவ்வாறு என்பது முக்கியமான கேள்வி. இவ்வாறு சிந்திக்கும் திறனற்ற, சிந்திக்கும் தேவை அற்ற உழைக்கும் மிருகங்களை உருவாக்குவதற்குத் தான் உலக முதலாளித்துவம் செயல்படுகிறது.

உழைக்கும் மிருகங்கள் என்று சொல்லும் போது உடல் உழைப்பு மட்டுமல்ல மூளை உழைப்பையும் சேர்த்தே சொல்லுகிறேன். மூளை உழைப்பிலும் அவனுக்குத் தேவையானப் பணியை செய்ய முடிந்த இயந்திரத்தின் உப உறுப்புகள் மட்டும்தான் தேவை. அவன் உட்கார்ந்து கருத்தியல் ரீதியாகச் சிந்திக்கத் துவங்கினால் அது பிரச்சினை.

பல புதிய விஷயங்கள் மொழி வழக்கில் வந்திருக்கின்றன. நடிகைகள், தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் இவர்கள் பேசுவதைப் பார்த்தீர்களேயானால் சில ஆங்கில வார்த்தைகள் புலப்படும். நாம் சந்தோஷமாக இருந்தோம், ஜாலியாக இருந்தோம் என்று சொல்வதை இவர்கள் We had fun என்று சொல்லுவார்கள். இது மேற்கத்திய மொழி.  இந்த மொழியில் என்ன பொருள் வருகிறதென்றால் அந்தக் கண நேர மகிழ்ச்சி என்பதுதான்.

மாடு போல ஒரு வாரம் முழுக்க வேலை செய்துவிட்டு சாயங்காலம் தண்ணி அடித்து விட்டு டான்ஸ் ஆடும் மகிழ்ச்சி அல்லது வேறு ஒரு நிகழ்ச்சி போன்றது. மகிழ்ச்சி என்பதன் முழுமையான பொருள்- அது ஒவ்வொருவருக்கும் வேறாகவே இருக்கட்டும், சுற்றுலா செல்லுவது மகிழ்ச்சியா? கோவிலுக்குப் போவது மகிழ்ச்சியா? அப்படியே இருக்கட்டும். ஆனால் இவர்கள் மகிழ்ச்சி ஒரு முழுமையான பொருளில் இருக்கிறதா?

உண்மையான மகிழ்ச்சியை பாப்கார்ன் தலைமுறை அறியாது!

உண்மையில் மகிழ்ச்சி என்பதைப் பார்க்காத ஒரு பாப்கார்ன் தலைமுறை உருவாக்கப் படுகிறது. மகிழ்ச்சியின் முழுமையைப் பற்றி ஒருவன் சிந்திக்கத் தொடங்கும் போதுதான் ஒரு நிலப்பிரபுத்துவ சிந்தனையிலிருப்பவன் கூட கம்யூனிஸ்ட்டாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிற்போக்குவாதியாக வறட்டு கௌரவம் பார்ப்பவனாக இருக்கட்டும். அவன் அந்த விழுமியங்களைப் பற்றி வாழக் கூடியவனாக இருக்கிறான். அப்படி இருக்கக் கூடியவனோடு மோதி, சாதி, வறட்டு கௌரவம் போன்ற விஷயங்களில் போராடி இதற்கு மாற்ற முடியும்.

ஆனால் இந்த பாப்கார்ன் தலைமுறை, விழுமியங்கள் இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கும் திறன் இல்லாத நொறுக்குத் தீனித் தலைமுறையாக வளர்க்கப் படுகிறது. அதனால் தான் இவர்களால் ஒரு புத்தகத்தைப் படிக்க முடியவில்லை. சிலர் “புதிய கலாச்சாரம்” பத்திரிகை ரொம்ப சீரியசாக இருக்கிறது, லைட்டாக இல்லை என்று சொல்லுவார்கள். லைட்டாக என்றால் அதைப் பார்த்த உடனேயே புரிந்துவிட வேண்டும். ஒரு புத்தகத்தில் பக்கம் நிறைய எழுத்து இருந்தாலே பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது.

நான் இணையத்தில் ஒரு வலைப்பூ பார்த்தேன் 11 seconds blog என்று பெயர். 11செகண்டில் அதில் இருப்பதைப் படிக்க முடியுமென்றால் எத்தனை வரி இருக்க முடியும்? ட்விட்டர், SMS என்று பரிமாறிக் கொள்ளலாம். இவையெல்லாம் வடிவம் என்று நினைக்கிறோம். இல்லை. இணையத்தில் படிக்கக் கூடியவர்களுக்கோ புத்தகமாகப் படிக்கக் கூடியவர்களுக்கோ அந்த நாலு வரிக்கு மேல் கண் நிற்க மாட்டேன் என்கிறது. அந்த ஆற்றலை இழந்து வருகிறோம். பாரிய விஷயம் இது!

அதே நேரம் 10வதிலிருந்து தொடங்கி இன்ஜினியரிங் வரை உயிரைக் கொடுத்து படிக்கிறார்கள். தொழிலுக்காக, வாழ்க்கைக்காக, வருவாய்க்காக என்று 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் படிக்கிறார்கள். ஆனால் அதற்கப்பாற்பட்ட சமூகம் குறித்த இலக்கியம், அது என்னவாவது இருக்கட்டும்- வைரமுத்து கவிதைகள் கூடப் படிப்பதில்லை. வைரமுத்து 6000 பாட்டு எழுதியிருக்காராம் அதில் 1000த்தைப்  புத்தகங்களாகப் போட்டிருக்கிறாராம். இன்று ஹிந்து பத்திரிக்கையில் ஒரு பெண் எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரை இப்படித் துவங்குகிறது: போன தலைமுறையைச் சேர்ந்த Tamil speaking youth காதலிப்பதென்றால் வைரமுத்து இல்லாமல் காதலித்து இருக்க முடியாது. எதற்கு Tamil speaking youth என்று எழுதவேண்டும். Tamil youth என்று எழுதினால் போதாதா? தமிழ் பேசும் இளைஞர்கள் என்று ஏன் எழுத வேண்டும்? தமிழ் இளைஞர்கள் என்று எழுதினால் போதாதா? அதற்கு ஹிந்துவிற்கு பிரச்சினை இருக்கக்கூடும்.

பிறகு யோசித்துப் பார்த்தால் சரி என்றே தோன்றுகிறது. தமிழ் இளைஞர்களில் தமிழ் பேசும் இளைஞர்கள் எத்தனை பேர்? வைரமுத்து கவிதையைப் படிப்பவனோ ரசிப்பவனோ எத்தனை பேர்? தமிழ் இளைஞர்களில் தமிழ் பேசும் இளைஞர்கள் குறைவாகிக் கொண்டே வருகிறார்கள். இப்படி சிந்திக்கும் திறனை இழந்தவர்கள் ஆகி வருகின்றோம்.

இடையே புத்தகக் கண்காட்சி முன்னிட்டு நடக்கும் பல புத்தக வெளியீட்டு விழாக்களில் பலர் பேசக் கூடும். தினமணி வைத்தியநாதன் உள்ளிட்டு “நாம் பழையவற்றைப் படிக்க வேண்டும், பாரதியார் படிக்கவேண்டும், கம்பராமாயணம் படிக்க வேண்டும், நம்முடைய இலக்கியச் செல்வங்களைப் படிக்கவேண்டும், மரபைப் படிக்க வேண்டும்” என்றெல்லாம் நிறைய உபதேசங்கள் கொடுக்கப்படும். அது அல்ல நான் சொல்வது. பொதுவாகப் படிப்பது இதற்கு தீர்வு அல்ல. அல்லது இது வெறும் தொழில் நுட்பத்தின் தாக்குதல் அல்ல. அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலாளித்துவம் உருவாக்கும் சிந்தனையற்ற விலங்குகளாய் நாம்!

இது முதலாளித்துவத்தின் தாக்குதல். அதைப் புரிந்து கொள்வதற்கு அதனை முறியடிப்பதற்கு அதிலிருந்து விலகி நின்று தற்காத்துக் கொள்வதற்கு ஆற்றல் தருபவற்றைப் படிக்க வேண்டும். படிக்காதவரையிலே இதிலிருந்து விடுபட முடியாது. புரட்சி செய்வதற்காக நான் படிக்கச் சொல்லவில்லை. புரட்சி என்று தனியாக ஒன்றுமில்லை. நாம் அறியாமையினால் இப்படி மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். பிள்ளைகள் ஏன் எப்படி மாறுகின்றனர் என்று பெற்றோருக்குத் தெரியவில்லை.

இளைஞர்கள் மனநல மருத்துவம் நாடி வருவது அதிகரித்துக் கொண்டு வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் மன அழுத்தத்திற்கான மருந்துகளை நம்மூரில் சாரிடான், ஆஸ்பிரின் வாங்குவது போல அங்கே விற்பனைக்கு அனுமதித்திருக்கிறார்கள். அந்த அளவிற்கு இருக்கிறது அந்தப் பிரச்சனை. ஏன், எதனால் இது? இங்கும் அது அதிகரித்து வருகிறது. 40000-50000ரூ சம்பளம் கொடுக்கக்கூடிய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் ஒரு யோகா டீச்சர். எல்லோரும் பிராணாயாமம் செய்கிறார்கள். வேலை நடக்க ஊழியன் உயிரோடிருக்க கம்பெனி செலவில் இது நடத்தப்படுகிறது. கம்பனி செலவில் அவனைப் பேண வேண்டியிருக்கிறது. காலையில் அடித்து ரிப்பேர் செய்துவிட்டு மாலையில் இது. எதற்காக இது நடக்கிறது? இது முதலாளித்துவத்தின் தாக்குதல் என்று புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே ஏதாவது ஒன்றைப் படியுங்கள் என்று பேசுவதற்கு அல்ல இங்கே வந்தது.

நோக்கமற்ற இன்பவாதப் படிப்பினால் பலனில்லை!

அந்தக் காலத்தில் கண்டதை வாங்கிப் படித்துக் கொண்டிருப்பேன். ஒரு சமயம் ஒரு தோழருடன் ஒரு நூல் பற்றி விவாதிக்க வேண்டி இருந்தது. அதைப் படிக்காமல் ஏதோ Sunday அல்லது India Today  வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர் நான் இன்ப நாட்டத்திற்காகவே படிப்பதாகக் கூறினார். அப்போது எனக்குப் புரியவில்லை. நாம் சீரியசாகத் தானே படிக்கிறோம். இதிலென்ன pleasure என்று நினைத்தேன். உங்கள் தனிப்பட்ட இன்பத்திற்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்று அவர் சொன்னார். அது உண்மை. அது ஒரு இலக்கற்ற படிப்பு. அப்படிப் படிப்பதிலேயே ரசனை கொண்ட ஒரு இலக்கியவாதக் கூட்டம் இருக்கிறது.

அவர்கள் தான் இந்தக் கூட்டங்களை எல்லாம் நடத்துவது. சங்கீத சீசனில் ம்யூசிக் அகாடமிக்கு கச்சேரி கேட்க வருகிறார்கள் இல்லையா அது போல ஜெயமோகன் புத்தகம் போட்டால் ஒரு கோஷ்டி வரும். கூட்டம் கூட்டி, அவர் இலக்கியத்தைப் பற்றி விதந்து பேசுவார், அதை ததாரினானாவிற்கு தலையாட்டுவது போல தலையாட்டி ரசிப்பதில் ஒரு சுவை. அப்பறம் படிக்கும் பழக்கமே குறைந்து போய்விட்டது, நம் கலாச்சாரம் என்னவாகும் என்று தெரியவில்லை, புத்தகங்கள் கேரளாவில் நிறைய விற்கிறது, இங்கே விற்க மாட்டேன் என்கிறது, இலக்கியம் அங்கே வளர்கிறது இங்கே வளரவில்லை இந்த மாதிரி கவலைகளைப் பகிர்ந்து கொண்டு கிளம்பிப் போய் விடுவார்கள். இவர்கள் இளைஞர்களாக இருந்தாலும் சிந்தனதையில் கிழடு தட்டிப் போனவர்கள்.

அந்தப் படிப்பு அல்ல நான் சொல்வது. நான் pleasureக்காக ரசிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. இன்பத்தை நுகர்வது என்பது மனிதனுடைய பண்புகளில் ஒன்று. ஆனால் இன்ப நாட்டத்தின் பின் ஓடுவது. அதற்காகப் படிப்பது. அது சொறிந்து விடுவது போல் உள்ளது, இன்பமாக இருக்கிறது என்பதற்காகப் படிப்பது என்பது பொருளற்றது. முக்கியமாக நோக்கமற்றது. நோக்கமில்லாமல் படிக்கின்ற எதுவும் மூளையில் தங்காது.

மூளை எதை வைத்துக் கொள்கிறது? எது நடைமுறைக்குத் தேவையோ அதை வைத்துக் கொள்கிறது. நடைமுறை என்றால் வேலை என்று மட்டும் சொல்லவில்லை. நாளை நீங்கள் பேச வேண்டுமென்று படித்தால், படிப்பதை வைத்துக் கொண்டு நாளை எழுத வேண்டுமென்றால், படிப்பதை வைத்துக் கொண்டு ஒருவருடைய பிரச்சினைக்குத் தீர்வு சொல்லப் போகிறீர்கள் என்றால், நீங்கள் படிப்பது ஒரு தத்துவஞானமோ, இலக்கியமோ, அழகியல் குறித்த கட்டுரையோ, ஓவியமோ, அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகப் படிப்பதாக இருந்தால் அது மனதில் நிற்கும்.

கற்றுக் கொள்ள வேண்டுமென்று படிப்பது என்ன? சும்மா படிப்பது என்ன? என்பதற்கு ஒரு இடைவெளி இருக்கிறது. சிலர் புதிய கலாச்சாரம் பத்திரிகையோ சில நூல்கள் கட்டுரைகளோ புரிய மாட்டேன் என்கிறது, ரொம்ப தலைக்கு மேலே போகிறது என்கிறார்கள். அது தடுக்க முடியாது. நாம் ஒரு குறிப்பிட்ட உயரம் தான் இருக்கிறோம். உயரம் என்றால், அறிவு வளர்ச்சி, நம்முடைய ஆற்றல் என்பதில். நாம் முதல் வகுப்பு படிக்கும் போது ஐந்தாம் வகுப்புப் பாடம் நம் தலைக்கு மேல் தான் இருக்கும். ஐந்தாம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடம் நம் தலைக்கு மேல் தான் இருக்கும். அப்போது என்ன செய்ய வேண்டும்? எழுத்தாளரே என் தலை மட்டத்திற்கு எழுதவும் என்று சொல்வதா? அல்லது நம் தலையை எழுத்தை நோக்கி உயர்த்திக் கொள்வதா? நம்முடைய தலையைத்தான் எழுத்து நோக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும். அதில் எழுத்தாளனின் திமிர், அகங்காரம் அதைப் பற்றி நான் பேசவில்லை.

மார்க்ஸ் நூலையோ லெனின் நூலையோ, அப்படி ஆய்வு பூர்வமாக அறிவியல் பூர்வமாக எழுதுகின்ற நூல்கள் அல்லது ஆழ்ந்து உணர்ந்து எழுதப்படக் கூடிய இலக்கியங்கள் கவிதைகள் இவையெல்லாம் SUN TV, TIMES NOW மாதிரி பார்க்க முடியாது. படிக்க வேண்டும். இன்னொரு முறை படிக்க வேண்டும். பிறகு அதில் தங்கி நின்று சிந்திக்க வேண்டும். புரியவில்லை என்றால் கேட்க வேண்டும். படித்தவர்களோடு விவாதிக்க வேண்டும். புரியாத இடத்தைக் குறித்து வைத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும். இதையெல்லாம் யார் செய்வார்கள்?

யாருக்குக் கற்றுக் கொள்ளவேண்டுமென்ற ஆர்வம் இருக்கிறதோ, யாருக்கு ஆய்வு நோக்கம் இருக்கிறதோ அவர்கள் தான் இதைச் செய்ய முடியும். படித்த உடனேயே புரியவேண்டும் என்றால் தினத்தந்தி கூடப் புரியாது. படித்த உடன், பார்த்த உடன் – இந்த உரையின் ஆரம்பத்தில் சொன்ன போது- சின்ன மருது என்றால் வீரர் அது மட்டும் தான் எனக்குத் தெரியும் வேறு எதும் தெரியாதென்றால் – என்ன இப்படி கைகட்டி நிற்கிறார் வீரர்? வீரர் என்றால் இப்படி நெஞ்சை நிமிர்த்தி அல்லவா இருக்க வேண்டும் என்று கேட்கலாம். அவ்வளவுதானே தெரியும். கற்றுக் கொள்வது என்றால் அதில் ஒரு துன்பம் இருக்கிறது. Pleasure ஆக இருக்க முடியாது. பயிற்சியாக இருக்க வேண்டும். அந்தத் துன்பத்தை ஏற்பதற்கும் அனுபவிப்பதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். அது எதைக் கற்பதிலும் இருக்கிறது.

ஒரு எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் என்றால் ஒரு ஆறு பக்கம் எழுதுவதற்கு அவர் சில நாட்கள் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும், இல்லையா? அந்தக் கட்டுரையைப் பற்றி சிந்திப்பதற்க்கும் அதைப் பற்றி ஆராய்வதற்க்கும் அதற்கு ஒரு வடிவம் கொடுத்து எழுதுவதற்கும் சில நாட்கள் ஆகியிருக்கும். ஒரு பக்கத்திற்கு 5நிமிடம் மேனிக்கு 5பக்கங்களுக்கு 25நிமிடம் அதற்குள் அதை அந்த எழுத்தாளன் என்ன புரிதலுடன் என்ன உணர்வுடன் எழுதியிருக்கிறானோ அதை இந்த 25 நிமிடத்திலே உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் நான் அந்த எழுத்தாளனின் தகுதிக்கோ அல்லது அதைவிட மேம்பட்ட தகுதியிலோ இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அதற்குள்ளே இறங்கி சிந்தித்து படிக்க வேண்டும். அந்த அனுபவம், அந்த ஆய்வு, நீங்கள் அதற்குள்ளே சென்று வர வேண்டும். அப்போதுதான் அதன் முழுப் பரிமாணம் தெரியும்.

மார்க்ஸின் பல நூல்களை பல எழுத்துகளை நான் 80களிருந்து ஒரு முப்பது நாப்பது முறையெல்லாம் படித்த நூல்கள் இருக்கின்றன. நான் 80களில் படிக்குப் போது எனக்குப் புரிந்ததற்கும் இன்று நான் படிக்கும் போது புரிவதற்கும் பாரிய இடைவெளி இருக்கிறது. அதே எழுத்து தான், ஒரு கமா முற்றுப் புள்ளி கூட மாறவில்லை. ஏன் இந்த வேறுபாடுகள் பின்னர்? ஏனென்றால் இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய அரசியல் அறிவு, சமூக அறிவு, அல்லது பொது அறிவு, 20 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட மேம்பட்டிருக்கிறது. அப்போது ஒரு வாக்கியத்தின் நுட்பத்தை, அழகை, nuance  என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும்  அழ்காகச் சொல்லிச் செல்லும் நெகிழ்வுத் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு ஒரு ஆற்றல் தேவைப்படுகிறது. இதை முதலில் ஒத்துக் கொள்ளவேண்டும்.

படிப்பு உழைப்பாக மாறும்போது சமூகம் அடிமைத்தளையிலிருந்தும் விடுபடும்!

இதைப் புரிந்து கொண்டுதான் படிக்க இறங்க வேண்டும். அப்போது படிப்பு என்பது ஒரு உழைப்பாக, முயற்சியாக இருக்கும். சும்மா அப்படிப் புரட்டிப் போட்டுப் போகும் வகையில் இருக்காது. புரட்டிப் போடுவது என்பது சில பேருக்கு பழக்கமாகக் கூட இருக்கிறது. ஊன்றி நின்று படிக்க முடியாது, ஊன்றி நின்று கவனிக்க முடியாது. எதுவாக இருந்தாலும் இந்த அளவுக்குள் சொல், இந்த நேரத்திற்குள் சொல் என்று கேட்கின்ற ஒரு பண்பாட்டிற்குள் நாம் இருக்கிறோம். அதற்குள் எதையும் செய்ய முடியாது. அப்படி நாம் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இது இளைஞர்களுக்கு மட்டுமல்ல. நமக்கும் பொருந்தும்.

நாம் தொலைக்காட்சி செய்தியைத் திரும்பத் திரும்ப பார்க்கிறோம். ஆனால் அதைப் பற்றி எவ்வளவு விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம். பல போராட்டங்கள் நடைபெறும் போது தொலைக்காட்சி நிருபர்கள் வருவார்கள். ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள்? என்ன பிரச்சினை? என்று கேட்பார்கள். அதை என்ன என்று சொல்லுவோம். அதைக் கேட்டுக் கொள்வார்கள். பிறகு டிவி ஆன் செய்கிறோம் சார் நீங்கள் சொன்னதை ஒரு இரண்டு நிமிடத்தில் சொல்லுங்கள் என்பார்கள். இரண்டு நிமிடத்தில் சொல்ல முடியாது இருபது நிமிடம் ஆகும் என்று சொல்ல முடியாது. ஆனால் அதோடு நிறுத்தினால் பரவாயில்லை.

நான் முதலில் ஒரு 20 நிமிடம், இந்த மாதிரி நடந்தது, இந்த இயக்கம், இதற்காக போராடுகிறோம் என்று அவரிடம் விளக்கியதைக் கேட்டிருக்கிறார் அல்லவா? உடனே இதிலிருந்து எது செய்தி என்று நிருபர்கள் முடிவு செய்கிறார்கள். நான் 2 நிமிடத்தில் சொல்ல வேண்டுமா என்றவுடன் இதுதான் பிரச்சினை, இந்த ஊர்களிலிருந்து வந்திருக்கிறார்கள், இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள், இந்த இயக்கம், இவங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சொல்லிவிடுங்கள் கரெக்டாக இருக்கும் என்பார்கள். உங்களுக்கு எத்தனை நிமிடத்தில் வேண்டும் என்று சொல்லுங்கள் அதற்குள் என்ன சொல்ல வேண்டுமென்பதை நீங்கள் சொல்லிக் கொடுக்காதீர்கள் என்று சொல்லும் நிலையில் இருந்திருக்கிறேன். இது அவர்களுக்கு உரைப்பதே இல்லை. அதற்கு இரண்டு காரணம். முதலில் இது ஒரு சீரியஸான பிரச்சினை என்றே அவர்களுக்குப் புரிவதில்லை.

இரண்டாவது எல்லாரும் தொலைக்காட்சிக்கு அலைபவர்களாக இருக்கும் உலகத்தில் அவர்கள் ஒரு மேலாண்மை செலுத்தும் நிலையில் – ஆங்கிலச் சானல்களில் பேட்டி எடுப்பவர்களைப் பாருங்கள் – எல்லாரையும் அதிகாரம் செய்யும் ஒரு தோரணையும் மிகப் பெரிய இடத்தில் உட்கார்ந்திருப்பது போலும் இருக்கிறார்கள். அப்படி எல்லாரும் அலைபவர்கள் போலக் கருதுவதால் ஒருவனிடம் இதைப் போலச் சொல் என்பது எவ்வளவு அநாகரீகமானது கேவலமானது என்று கூட உறைக்காத மனிதர்களாக இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு என்ன வேண்டும், எப்படி இருக்க வேண்டும் நியூஸ் என்று அவர்கள் முதலாளிகள் இயக்குநர்கள் சொல்லி விடுகிறார்கள்.

என் முகம் தெரிவது தான் எனக்கு முக்கியம் என்றால் அவர்கள் சொல்லச் சொல்லுவது போலச் சொல்லி விடலாம். இல்லை, செய்திதான் முக்கியம் என்றால் அதற்குத் தகுந்தாற்போலச் சொல்ல வேண்டும். எதற்கு சொல்கிறேனென்றால் இது இளைஞர்களுடைய பிரச்சினை மட்டுமல்ல. நமக்குள்ள பிரச்சனை. அதை எவ்வளவு விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்க மறக்கிறோம், அப்படிப் பழக்கப்படுத்தப் படுகிறோம் என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பழக்கத்திலிருந்து வெளியே வர வேண்டியிருக்கிறது நம்மையும் நம் எதிர்காலத் தலைமுறையையும் தற்காத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

கம்யூனிஸ்ட்டுகள் மனித குல நாகரீகத்தின் முழுமையையும் கற்கவேண்டும்!

ஒரு கம்யூனிஸ்ட் என்றால் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் நூலை மட்டும் படித்திருக்கிறேன் லெனின் படித்திருக்கிறேன் என்பது மட்டும் அல்ல. கம்யூனிஸ்ட் என்பது மனித நாகரீகத்தின் பிரதிநிதி. மனித நாகரீகத்தின் ஆகச் சிறந்த சாதனைகளனைத்தையும் தேடிப் பாதுகாப்பதையும் அதை முன்னெடுத்துச் செல்வதையும் நம்முடையக் கடமையாகக் கொள்ள வேண்டும். நம் மனித நாகரீகம் கண்ட கலைகள் இலக்கியங்கள் அரசியல் ஆய்வு பொருளாதாரம் எல்லாமே ஒரு கம்யூனிஸ்ட்டிற்கு தெரிந்திருக்க வேண்டும். எல்லாம் தெரிந்திருக்க முடியுமா? கஷ்டம்தான் முடியாது. ஆனால் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற பணிவு நமக்கு வேண்டும்.

இந்தியாவில் நாம் தான் முதல் பொருள்முதல்வாதிகளா? நமக்கு முன்னாள் 2500-3000 ஆண்டுகளுக்கு முன்பே கிரேக்க நாட்டிற்கு இணையான அற்புதமான பொருள்முதல்வாதிகள் இந்த மண்ணிலே இருந்திருக்கிறார்கள் – சார்வாகர்கள், லோகாயதர்கள் பின்னால் பௌத்தர்கள். அதையெல்லாம் என்ன செய்வது? 2500-3000 ஆண்டுகளுக்கு முன் அறிவியல் வளராத காலத்தில் கடவுளைப் பற்றி கேள்வி எழுப்பியவனை, ஆன்மா என்று தனியாக இல்லை என்று பேசியவனைப் பற்றி நமக்குத் தெரியவில்லை என்று சொன்னால் நாம் அந்த மரபை எப்படி வரித்துக் கொள்ள முடியும்? அதற்குப் பின்னாலே ஆயிரம் பேர் வந்திருக்கிறார்கள்.

இவ்வாறு வரலாற்றிலே நேர்மறையான சாதனையாளர்கள் எல்லோரும், யாரெல்லாம் மனித குலத்தின் மீது காதல் கொண்டு சிந்தித்தார்களோ, உழைத்தார்களோ அவர்களெல்லாம் ஆளும் வர்க்கங்களாலே நசுக்கப் பட்டிருக்கிறார்கள். அல்லது இருட்டடிப்பு செய்யப் பட்டு இருக்கிறார்கள். அவர்களைத் தேடி எடுத்துப் படிக்க வேண்டியது, சமூகத்திற்கு அறிமுகப்படுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பு. இன்றையத் தேவைக்காக எழுதுவது பேசுவது என்ற அளவிற்கு இணையான அளவிற்கு நம் மரபையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அது நம்முடைய கடமை.

அது முதலாளித்துவ எழுத்தாளர்களாகக் கூட இருக்கலாம். முதலாளித்துவம் தான் நம் எதிரி. முதலாளித்துவ சிந்தனை எனபது மனித குல வரலாற்றின் ஒரு கட்டத்தில் தோன்றிய ஒரு விஷயம். அதை இல்லை என்று நாம் நிராகரித்து விட முடியாது. மறுத்துவிட முடியாது. அற்புதமான எழுத்தாளர்கள் அதில் இருந்திருக்கலாம். அதை எல்லாம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏன் அவசியம் இருக்கிறது? இது “பொதுவாக எல்லாம் படிக்க வேண்டும், எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்ற நன்னெறி போதனை அல்ல. இது நடைமுறைக்கானது. உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்காக முன்னேற்றத்திற்காக நாம் பாடுபடுகிறோம் போராடுகிறோம் என்று சொன்னால் அதற்குரிய தகுதியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கோஷம் போடுவது, சண்டை போடத் தயாராக இருப்பது, உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பது இவை மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். இந்த சமூகம் முழுவதையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் என்றால் உங்கள் வீட்டு வாசலிலோ அல்லது எங்கள் வீட்டு வாசலிலோ ஒன்றும் போலீஸ் நிற்கவில்லையே?. பெரும்பான்மையான மக்கள் கருத்தியல் ரீதியான ஒரு ஆளுமைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்தச் சமூகம் தான் நியாயமானது இந்தச் சமூகம்தான் சாத்தியமானது என்று மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அநீதிக்கு உட்படுத்தப்படும் மக்கள் கூட இந்த அநீதி தவிர்க்கப்பட முடியாதது என்று ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டிருப்பதால்தான் அடங்கி இருக்கிறார்கள். அதற்குப் பிறகு அடங்காமல் போனால் தான் துப்பாக்கி முனை.

கருத்தியல் ரீதியான செல்வாக்கிற்கு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு நாம் அடக்கப்பட்டு இருக்கிறோம். அந்தக் கருத்தியல் ரீதியிலான அடக்கு முறை எல்லாக் கோணங்களிலிருந்து நம் மீது வருகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, நூல்கள், கட்டுரைகள் அல்லது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் ஆலோசகர்கள், பக்தி, மதம் எல்லாத் திசைகளிலிருந்தும் மக்களைச் சுற்றி அது மொய்க்கிறது. அதற்குள் மக்கள் ஆழ்த்தப்பட்டு இருக்கிறார்கள். அவர்களை வெளியே கொண்டுவர வேண்டுமென்றால் அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அந்த ஆற்றல் வேண்டுமென்றால் கற்க வேண்டும்.

நம்முடைய இலக்கியத்தை நம்முடைய நூல்களை மட்டுமல்ல, எதிரியின் இலக்கியத்தை எதிரியின் நூல்களையும் கூடப் படிக்க வேண்டும். இல்லாத வரையில் போராட முடியாது. புரட்சி முடிந்தவுடன் லெனின் சொல்வார்: “மிக விரைவாக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகளை (Proletarian Intellectuals) நாம் உருவாக்க வேண்டும்”.  பாட்டாளி வர்க்கத்தில் அறிவுஜீவிகள் கிடையாது. புரட்சி நடக்கும் பொது ரஷ்யாவில் எழுத்தறிவே 10சதவீதத்திற்கும் கீழே. எதற்காக பாட்டாளி வர்க்க அறிவுஜீவிகள் வேண்டும்? இல்லையென்றால் முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் முதலாளித்துவ தொழில்நுட்ப வல்லுனர்களிடம் அல்லது ஜார் ஆட்சியின் ராணுவ அதிகாரிகளிடம் சரணடைய வேண்டி இருக்கும்.

படிக்காத வரை அடிமைத்தனம், படிக்கும் போது விடுதலை!

ஆளும் வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தைப் பார்த்து சொல்வது என்ன? ஏன் திராவிட இயக்கத்தை, தலித் இயக்கங்களை, தாழ்த்தப்பட்டவர்களைப் பிற்படுத்தப்பட்டவர்களைப் பற்றி உயர்சாதிக்காரர்கள் என்று சொல்லக்கூடிய பார்ப்பன ஆதிக்க சக்திகள் சொல்வது என்ன? நீயெல்லாம் நாடாள்வாயா? உனக்கெல்லாம் விவரம் தெரியுமா? உன்னால் முடியுமா? என்று ஏளனச் சிரிப்பு சிரித்தார்கள். பிறகு படிக்கிறோம், மாற்றங்கள் வருகிறது. அது தானே வரலாறு. ஆளும் வர்க்கம் என்ன கருதுகிறது என்றால் இதை நிறுத்த இவர்களால் முடியாது என்று கருதுகிறது. ஒரு ஏளனப் பார்வை பார்க்கிறது. அது உண்மைதான். அது பொய் அல்ல. நாங்கள் தான் எங்கள் ரத்தம் வியர்வையால் உலகத்தைப் படைத்தோம் உண்மை. எல்லாவற்றையும் நாங்கள் தான் உருவாக்கினோம் உண்மை. அதெல்லாம் உண்மைதான். அதனால் நாங்கள் ஆளும் உரிமை படைத்தவ்ர்கள். உண்மை. ஆளும் ஆற்றல் இருக்கிறதா? நிர்வாகம் செய்யும் ஆற்றல் இருக்கிறதா? அவன் நம்மை அடக்கி வைத்திருப்பது போல அவனை அடக்கி வைக்கும் ஆற்றல் நமக்கு இருக்கிறதா?

அந்த ஆற்றலை எப்படி அடைவது? ஆயுதம் மூலமாகவா? அதற்கு கற்க வேண்டும். வேறு குறுக்கு வழி கிடையாது. அதனாலேயே லெனின் Proletarian Intellectuals உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார். அதனால் தான் போலிப்பகட்டு, போலி அறிவு, மேதாவித்தனம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளி வர்க்க இயக்கத்திலேயே சாதாரண தொழிலாளிகளாய் இருப்பவர்கள் கூட அதை வெளிப்படுத்தும் போது மார்க்ஸ் அதை கடுமையாகச் சாடுகிறார். அதனால் பலர் வருத்தப்பட்டதுண்டு.

இந்தப் படித்த அறிவு ஜீவிகளுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும். சோசலிசம் பேசிக் கொண்டிருந்த சாதாரண ப்ரூதோன் போன்ற மனிதர்கள். அறிவியல் பூர்வமற்ற எதையும் அவர் மென்மையாகப் பார்க்கத் தயாராக இல்லை. ஏங்கெல்ஸ் ஒரு இடத்தில் எழுதுவார் “இந்த சமூக அறிவியல் கல்வி என்பது ஒரு செங்குத்தான வழுக்குப் பாதையில் ஏறுவதற்கு ஒப்பாகும். இதற்குத் தயாராக இல்லாதவர்கள் விலகி விடுங்கள்”. இது விளையாட்டாகச் சொல்லப்பட்டது அல்ல. அத்தகைய உழைப்பு அதற்குத் தேவை. அப்படி உழைப்பு இருந்தால் தான் நாம் எந்த வர்க்கத்திற்கு சேவை செய்ய வேண்டும், எந்த வர்க்கத்தை விடுவிக்க வேண்டும் என்று நாம் கருதுகிறோமோ அந்த வர்க்கத்திற்கு தலைமை தாங்கவோ வழிகாட்டவோ விடுவிக்கவோ முடியும்.

படித்தவர்கள், அறிவுஜீவிகள், ஆற்றல் உள்ளவர்கள் என்பவர்கள் எல்லாம் எதிரிகளின் கையில் இருக்கிறார்கள். நல்ல உடல் பலம் உள்ளவர்கள் எல்லோரையும் அளந்து அளந்து பார்த்து ராணுவத்திலும் போலீசிலும் சேர்த்து வைத்திருக்கிறார்கள். படித்தவர்களை எல்லாம் IAS,  IPS என்று உயர் நிர்வாகப் பதவியில் வைத்திருக்கிறார்கள். ஆற்றல் மிக்க வழக்குரைஞர்கள் கணக்குத் தணிக்கையாளர்கள் எல்லாம் டாடா பிர்லா அம்பானி மிட்டல்களுக்காக வேலை செய்கிறார்கள். இப்போது இந்த ஸ்பெக்ட்ரம் விவாதங்களைப் பாருங்களேன். வாதிடுபவர்களெல்லாம் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் தான். பிரச்சனை பெரிதாக ஆக ஆக பெரிய கைகள் வந்து ஆஜராகின்றானர். டாடாவிற்கு ஹரீஷ் சால்வே வருகிறார். இன்னொருத்தருக்கு அதே போல் இன்னொருவர். இந்த வக்கீல்கள் எப்படிப் பட்டவர்கள்? ஒரு முறை சுப்ரீம் கோர்ட்டில் எழுந்து விட்டு உட்கார்ந்தால் 10லட்சம் ரூபாயை கட்டணமாக பெறுபவர்கள். வழக்கு நடக்கிறதா இல்லையா, பேசுகிறாரா இல்லையா என்பதல்ல விஷயம். Appearance Fees – ரஜினிகாந்த் கால்ஷீட் போல. படப்பிடிப்பு நடக்கிறதா இல்லையா என்பதெல்லாம் கணக்கில்லை. அந்த வழக்கறிஞர் எல்லாரும் என்ன செய்கிறார்கள்? மிக நேர்த்தியான மொழியில் ஊழலை நியாயப்படுத்தி வாதாடுகிறார்கள். மோசடியை நியாயப்படுத்தி வாதாடுகிறார்கள். அல்லது இங்கே இருக்கும் சோ போன்ற ஆட்கள் மிகத் திறமையாக வாதாடுகிறார்கள். அவனைத் பார்ப்பனத் திமிர் பிடித்தவன் பார்ப்பன பாசிசத்தின் கைக்கூலி என்றெல்லாம் மட்டும் சொன்னால் போதாது.  அவனை அறிவுரீதியாக ஏளனம் செய்து தூக்கி எரிகின்ற ஆற்றல் அவனை பற்றிய  பிரமைகளை வைத்திருக்கின்ற நம் மக்களுக்கு அவனொரு அற்பப்பதர் என்று காட்டக்கூடிய ஆற்றல் அது நமக்கு வேண்டும்.

அந்த ஆற்றல் வேண்டுமென்றால் உழைக்க வேண்டும். படிப்பதென்பது நமக்கு ஒரு உழைப்பு. அந்த உழைப்பில் தான் நாம் இன்பம் காண முடியும். உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம் என்று கேட்டாற்போல, கற்பதில் கூட துன்பத்தில் தான் இன்பம் இருக்கிறது. அந்தத் துன்பத்தை அனுபவிக்கத் தயாராக இல்லாதவர்களுக்கு எந்த இன்பமும் இல்லை. ஆராய்ந்து ஆராய்ந்து சிந்தித்து சிந்தித்து ஒரு கதவு திறக்கிறதே கேள்விக்கு அங்கு தான் மகிழ்ச்சி இருக்கிறது. அப்படியே மொட்டை அமிழ்த்தி உடனே பதில் வந்து விட்டால் அதில் மகிழ்ச்சி கிடையாது.

பாட்டாளி வர்க்க இயக்கமென்பது உலகளவில் இப்படி சாதாரண உழைக்கும் மக்கள், சீனப் புரட்சியிலே சாதாரண விவசாயப் பெண்கள் எல்லாம் பல்கலைக்கழகத் துணைவேந்தராக ஆகி இருக்கிறார்கள். அதற்குரிய தகுதியோடு அவர்கள் சென்றிருக்கிறார்கள். இன்று எதிரிகள் எல்லா அறிவுத் துறையினரையும் கையில் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனிலும் மேலாக முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனிதாபிமானமும் அற உணர்ச்சியும் நேர்மையும் இல்லாமல் இப்போது அறிவுஜீவிகள் தங்களை விற்றுக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.

நாமும் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக நம்மை அறிவுபூர்வமாக ஆயுதபாணியாக ஆக்கிக் கொள்ளத் தேவையாக இருக்கிறது.

ஸ்டாலின் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் கொடுங்கோலன், சர்வாதிகாரி, கொலைகாரர் என்று நிறைய எழுதித் தள்ளி இருக்கிறார்கள். இன்னொரு பாதி அவரை முட்டாள் என்று சித்தரித்து வைத்திருக்கிறார்கள்.  மார்க்ஸ் அறிவுஜீவி. ஏங்கெல்ஸ் அறிவுஜீவி, லெனின் கூட அறிவுஜீவி, ஸ்டாலின் ஒரு முட்டாள். சர்வாதிகாரி என்ற பிம்பம் முதலாளித்துவ அறிவுஜீவிகள் மத்தியில் பரப்பப்பட்டு இருக்கிறது. ஏனெனில் அவர் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்தவர், அதிலிருந்து படித்து வந்தவர். அவரை இழிவு படுத்தும் ஆயுதமாக இதனைப் பயன் படுத்துகிறார்கள்.

இதைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னால் FRONTLINE  ஆங்கில நாளேட்டில் AG நூரானி என்ற வழக்கறிஞர்/எழுத்தாளர் ஸ்டாலின் பற்றிய ஒரு நூல் பற்றி எழுதியிருந்தார். அதை எழுதும் போது வேற சில முக்கியமான எழுத்தாளர்களை மேற்கோள் காட்டிச் சொல்கிறார். “ஸ்டாலினுடைய தனி நூலகத்தில் 25000 நூல்கள் இருந்தன. அவருடைய சமகாலத்தில் வாழ்ந்த ரூஸ்வெல்ட் சர்ச்சில் போன்ற அனைவரையும் விட அரசியல், பொருளாதாரம் மற்றும் உலக வரலாற்று ஞானம் மிக மேம்பட்டதாக இருந்தது” என்று கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சொல்வதை இவர் மேற்கோள் காட்டுகிறார்.  அது என்ன விஷயம் என்றால் அவரும் செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன்தான். ஒரு நாட்டினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது, ஒரு கட்சியினுடைய தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது அந்தப் பொறுப்பிற்குத் தகுதியானவனாக தன்னை வளர்த்துக் கொள்வது அவரது விருப்பு வெறுப்பு சார்ந்தது அல்ல. அது ஒரு தார்மீகக் கடமை.

அவர் 20000 புத்தகங்கள் வைத்திருந்தாரா, 10000 புத்தகங்கள் வைத்திருந்தாரா என்பதல்ல பிரச்சனை. ஆனால், மிகச் சாதாரண வர்க்கத்திலிருந்து ஒரு மனிதர் மேற்கத்திய நாடுகளில் பிரபு குலப் பின்னணியில் வந்த கல்வி பயின்ற ஜனாதிபதிகள், பிரதமர்கள், ராஜ தந்திரிகளோடு இணையாகப் பேச வேண்டுமானால் அதற்குரிய அறிவு வேண்டும்.. எல்லாத் துறைகளிலும் அறிவு வேண்டும். இல்லை என்றால் வெறும் கொள்கைப் பற்று, நேர்மை, தியாகம், அர்ப்பணிப்பு என்ற பேச்சால் பயன் இல்லை. அறிவிற்கு அது மாற்றீடாகாது. அதை வைத்து இதைச் சரிக்கட்ட முடியாது. நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாது.

உழைப்பது என்றாலும் ஒரு சமூகம் எந்தத் துறையில் நம்முடைய உழைப்பைக் கோருகிறதோ அந்தத் துறையில் உழைக்கத் தயாராக வேண்டும். கருத்தியல் ரீதியாக இப்படி ஒரு தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் – நான் கம்யூனிஸ்டுகளை மட்டும் சொல்லவில்லை – பெரியார் இயக்கத்தில் இருக்கிறார்கள்; அம்பேத்கார் மீது பற்று கொண்டவர்கள் இருக்கிறார்கள். எல்லாருக்கும் வேலை இருக்கிறது. பார்ப்பன பாசிசம் என்பது ஓய்ந்து போனது அல்ல. அது மீண்டும் மீண்டும் பல வடிவங்களில் தலை எடுக்கக் கூடியது. அவற்றையெல்லாம் எதிர்த்து போராட வேண்டும் என்று சொன்னால் அதற்கு ஆற்றல் உள்ளவர்கள் தேவை.

எனக்குத் தெரிந்து இந்தத் திருவண்ணாமலை தீபம் கொஞ்ச நாள் முன்பு இல்லாமல் இருந்தது. இப்ப எந்த டீக்கடையில் நின்றாலும் திருவண்ணாமலை தீபத்திற்குப் போகிறேன் என்று பேசிக்கொள்கிறார்கள். எந்தக் கோயிலில் என்ன திருவிழா என்றாலும் கூட்டம் கூடுகிறது. இது பெரியார் பிறந்த மண்ணா? அவர் அவ்வளவு எழுதி இருக்கிறாரே. அவ்வளவு பேசி இருக்கிறாரே அதில் ஒரு 2 சதவீதம் ஒவ்வொருத்தரும் செய்தால் எவ்வளவு பயனடையலாம்? அதை ஏன் செய்ய முடியவில்லை என்று இந்த இடது சாரி முற்போக்கு எண்ணம் கொண்ட நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும்.

நூல்கள் படிப்பதென்பதை நம்முடைய விருப்பம் அல்லது விருப்பமின்மை என்ற வரையரையைத் தாண்டி அதை நம்முடைய கடமையாகக் கொள்ள வேண்டும். முதலாளித்துவம் தொடுத்த தாக்குதல், மனிதர்களை உழைக்கும் இயந்திரங்களாக உண்ணும் இயந்திரங்களாக, நுகரும் இயந்திரங்களாக மாற்றுவதற்கான தாக்குதல். நம் அறிவை செயலிழக்கச் செய்வதற்கான தாக்குதல். அந்தத் தாக்குதலில் நம்முடைய சிந்தனையும், மூளையும் ஊனமுற்றுப் போவதற்கு தெரிந்தே அனுமதிக்கக் கூடாது.

நம்மையும் நம்முடைய வருங்காலத் தலைமுறையையும் அதிலிருந்து மீட்டெடுப்பதற்கு படிக்க வேண்டும் விவாதிக்க வேண்டும் பல்துறை அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் அப்படிப் படிப்பதெல்லாம் ஒரு நோக்கத்திற்காக இருக்க வேண்டும் நடைமுறைக்காக இருக்க வேண்டும் அந்த நடைமுறை சமூக மாற்றத்திற்கு புரட்சிக்காகப் போராடுகின்ற நடைமுறைதான். அந்த நடைமுறைக்காக கற்கவேண்டும் என்று கூறி இந்த வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடை பெறுகிறேன்.

_______________________________

– உரை: தோழர் மருதையன்
– எழுத்தாக்கம்: உமா
_______________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சாதீ – முகிலனின் ஓவியங்கள் !

43

தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்திலிருந்து வெறுத்து ஒதுக்குவது மரண தண்டனையை விட கொடியது என்றார் டாக்கடர் அம்பேத்கர். ஆனால் அவருக்கு முன்பும், அவர் வாழ்ந்த காலத்திற்கு பின்பும் இந்திய சமூகச் சூழலில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆதிக்க சாதி வெறியர்களால் அவிழ்த்து விடப்பட்ட தீண்டாமை கொடுமைகள் ஆயிரம்..ஆயிரம். தஞ்சை மாவட்டம் கீழ் வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவாசாயத் தொழிலாளர்கள் உயிரோடு கொளுத்தப்பட்ட கொடூரம் இப்பொழுதும் நெஞ்சை விட்டு அகலாத வடு. இப்படி எண்ணற்ற வடுக்களை ஏற்படுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது இங்கு நிலவும் தீண்டாமை கொடுமை, அதை தூக்கிச் சுமக்கும் வர்ணாசிரமம், அந்த வர்ணாசிரமத்தை உயிருக்கு நிகராக பாதுகாக்கும் பார்ப்பனியம். இந்த சமூக அமைப்பின் கீழ் படிந்திருக்கும் இந்த வர்ணாசிரமக்க கசடுகளையெல்லாம் அகற்றாத வரை கீழ்வெண்மணிகள் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அப்படி தொடர்ந்த, தொடர்கின்ற வன்கொடுமையின் சித்திரப்பதிவுக்களே இவை!

கீழ் வெண்மனி தியாகிகளுக்கு வீர வணக்கம்

கூலி உயர்வுக்கு போராடிய கீழ் வெண்மனி விவசாயிகளை உயிரோடு எரித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

மேலவளவு

மேலவளவு – பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெற்ற காரணத்திற்காக ”நமக்கு மேல் இவனா” என்ற ஆதிக்க சாதி வெறி மேலோங்க முருகேசன் என்ற தாழ்த்தப்பட்டவர் உட்பட 6 பேரை வெட்டி படுகொலை செய்தனர் ஆதிக்க சாதி வெறியர்கள்

திண்ணியத்தில், கருப்பையா என்ற தலித் இளைஞனின் வாயில் மலத்தை தினித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

திருச்சி மாவட்டம், திண்ணியத்தில், கருப்பையா என்ற தலித் இளைஞனின் வாயில் மலத்தை திணித்த ஆதிக்க சாதி வெறியர்கள்

1992, வீரப்பன் தேடுதல் வேட்டையில் தரும்புரி வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது போலீசு நடத்திய மிருகத்தனமான தாக்குதல்

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி பழங்குடியின மக்கள் மீது போலீசு நடத்திய மிருகத்தனமான தாக்குதல்

பாப்பாபட்டி – கீரிப்பட்டியில் அரசை மிரட்டி தன்னை நிலைநிறுத்தி வரும் தேவர் சாதி ஆதிக்கம்

குரங்கு பேட்டையில், மரத்திலிருந்து வீழ்ந்த நாவல் கனியை தின்ற தலித் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட வண்கொடுமை
திருச்சி மாவட்டம், குரங்கு பேட்டையில், மரத்திலிருந்து வீழ்ந்த நாவல் கனியை தின்ற தலித் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை

மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வில்லூரில் தாழ்த்ப்பட்டவர்கள் தங்கள் தெருப்பக்கம் இரு சக்கர வண்டிகளை ஓட்ட தடைவிதித்தனர் ஆதிக்க சாதியினர்
மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகில் உள்ள வில்லூரில் தாழ்த்ப்பட்டவர்கள் தங்கள் தெருப்பக்கம் இரு சக்கர வண்டிகளை ஓட்ட தடைவிதித்தனர் ஆதிக்க சாதியினர்

பொது நீர் நிலைகளில் குடிநீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு தடை
பொது நீர் நிலைகளில் குடிநீர் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களுக்கு தடை

மனித மலத்தை மனிதன் சுமக்கும் அவலம்

மனிதனின் மலத்தை மனிதன் சுமக்கும் அவலம்

செருப்பு தைப்பது இன்னமும் ஒரு சாதிக்கு மட்டுமேயான தொழிலாக இருக்கிறது
செருப்பு தைப்பது இன்னமும் ஒரு சாதிக்கு மட்டுமேயான தொழிலாக இருக்கிறது

பொதுக்குவளைக்கு மறுப்பு - தனிக்குவளை அல்லது கையேந்த்தல் என்பதே நடைமுறையில் உள்ளது

பொதுக் குவளைக்கு மறுப்பு – தனிக்குவளை அல்லது கையேந்த்தல் என்பதே நடைமுறையில் உள்ளது

மதுரை மாவட்டத்தில் உள்ள 83 கிராமங்களில் 73 ல் இன்னமும் இரட்டை குவளை முறை அமலில் உள்ளது
மதுரை மாவட்டத்தில் உள்ள 83 கிராமங்களில் 73 ல் இன்னமும் இரட்டை குவளை முறை அமலில் உள்ளது

கோவிலில் சம வழிபாட்டு உரிமை கோரியதற்காக செந்தட்டியில் இரண்டு தலித்துகள் ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டன்ர்
கோவிலில் சம வழிபாட்டு உரிமை கோரியதற்காக செந்தட்டியில் இரண்டு தலித்துகள் ஆதிக்க சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டன்ர்

கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பத்து பெண்கள் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை
கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பத்து பெண்கள் ஆதிக்க சாதியினரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு படுகொலை

____________________

– ஓவியங்கள் முகிலன்
____________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

போக்குவரத்து தொழிற்சங்கம்: தி.மு.கவின் பிரியாணி, டாஸ்மாக், அதிகாரம் வென்றது!

போக்குவரத்து தொழிற்சங்கம்: தி.மு.கவின் பிரியாணி, டாஸ்மார்க்,அதிகாரம் வென்றது!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் தொழிற்சங்கங்களுக்கிடையேயான பிரதிநிதித்துவ அங்கீகாரத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது.  அதில் ஆளும் தி.மு.க வின் தொழிற்சங்கமான தொமுச 73,450 வாக்குகள் பெற்று (57% )வெற்றி பெற்றிருக்கிறது.

சட்டமன்ற இடைத்தேர்தலுக்கிணையாக பணம், (டாஸ்மாக்)சரக்கு, பிரியாணி, பிளக்ஸ் பேனர்கள் பல லட்ச ரூபாய் செலவு, ஆளும் அதிகார வர்க்க மிரட்டல் என எல்லா அம்சங்களும் இந்த தேர்தலில் இருந்தது.  ஆனால் இந்த தேர்தலின் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட குணாம்சம் ஓரங்கட்டப்பட்டு, பணத்தின் மூலம், அல்லது ஆளும் ஓட்டுக்கட்சி அரசியல் தலைமையின் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்கிற எண்ணம் தொழிலாளர்கள் மத்தியில் பரவி பார்த்தீனிய செடியாய் வேர்விட்டிருப்பதுதான்  மிகப் பெரிய அபாயம்.மேலும் இது புதிய பொருளாதார கொள்கையின் விளைவுதான் என்பதையும் இந்த கட்டுரை வழியாக அலச விழைகிறேன்.

கடந்த 1998ஆம் ஆண்டிற்கு முன்பு வரை போக்குவரத்துக் கழகங்களில் அனைத்து விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் திமுகவின் தொமுச, அதிமுக-வின் அண்ணா தொ.ச.பேரவை, காங்கிரசின் ஐஎன்டியுசி, எச்எம்எஸ்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிஐடியு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏஐடியுசி ஆகிய 6 தொழிற்சங்கத்தினர் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்கிற நிலை இருந்தது.

இதில் அந்தந்த காலத்திலான ஆளும் கட்சியாக இருக்கிற கட்சியின் சங்கமும், ஐஎன்டியுசி மற்றும் எச்எம்எஸ் ஆகிய சங்கங்களும் அனைத்துவிதமான ஒப்பந்தங்களிலும் கையொப்பமிட்டுள்ளன. ஆளும் கட்சியுடன்  கூட்டணியில் இருந்தால் கையொப்பமிடுவது, இல்லாவிட்டால் ஒப்பமிடாமல் குறை சொல்லி ஒரு புத்தகம் போட்டு தொழிலாளியிடம் விற்றுவிட்டு அதோடு ஒதுங்கிக் கொள்வது என்கிற நிலையை இரண்டு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்களும் செய்து வந்தன.

இந்நிலையில் 1998இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்துக் கழகங்களில் செயல்பட்டு வந்த ஓட்டுக்கட்சி சார்பில்லாத பணியாளார்கள் சம்மேளனம் என்ற அமைப்பு தொடர்ந்த வழக்கின் காரணமாக ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நடத்தி சங்க அங்கீகாரம் என்பது முடிவு செய்யப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.  இதில் பல்வேறு உதிரி சங்கங்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டு அவற்றை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு (தலைமை நீதிபதி மற்றும் ஒரு மூத்த நீதிபதி ஆகியோர்) நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அனைத்து சங்கங்களையும் கருத்து கேட்டபின் 10 சதவீத வாக்குகள் பெறும் சங்கம் அதன் சார்பாக ஒரு பிரதிநிதியை பேச்சு வார்த்தைக்கு அனுப்பலாம் என உத்திரவிட்டது.

அதன் அடிப்படையில் டிசம்பர் 1998ல் நடைபெற்ற தேர்தலில் அன்றைய ஆளும் கட்சி தொழிற்சங்கம் (2 பிரதிநிதிகள்)- அண்ணா தொழிற்சங்கம் 2ம் இடம் (2 பிரதிநிதிகள்)- பணியாளர்கள் சம்மேளனம் 17 சதவீதம் (1 பிரதிநிதி), சிஐடியு 14 சதம் (1 பிரதிநிதி) என்ற வகையில் தேர்வு பெற்றது. மற்ற ஐஎன்டியுசி, எச்எம்எஸ், மதிமுக சங்கம் என அனைத்தும் 3 சதவீதத்திற்கு கீழான வாக்குகளையே பெற்றன.

இந்த நடைமுறைக்குப் பிறகு 2001இல் ஆட்சிக்கு வந்த அதிமுக ஆட்சியில்  போக்குவரத்துக் கழகங்களின் போனஸ் பேச்சு வார்த்தையின் போது உடன்பாடு ஏற்படாமல் துவங்கிய வேலைநிறுத்தத்தின் போது எஸ்மா, டெஸ்மா சட்டங்கள் கொண்டுவரப்பட்டு அதன் தொழிலாளர்கள் 17 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டு நூற்றுக் கணக்கானோர் பல நாட்கள் தற்காலிக வேலை நீக்கத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.  அரசு ஊழியர்கள் ஒன்றேகால் லட்சம் பேர் ஒரேநாளில் டிஸ்மிஸ், என்ற நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

பொதுவாக வங்கிப் பணியாகட்டும், அரசு ஊழியா் பணியாகட்டும், அரசு போக்குவரத்துக்கழக பணி, மின்வாரிய பணியாளா்கள் பணி, சிவில் சப்ளை தொழிலாளர்கள் பணி எவற்றிலும் அவரவர் சார்ந்த துறை பிரச்சனைக்கு போராடும் போது அவர்கள் மட்டுமே போராடுகிறார்கள். போராடும் மற்ற பிரிவினருக்காக எப்போதும் போராடுவதில்லை. மேலும் தங்களது போராட்டத்தின் நியாயத்தை பொது மக்களிடம் விளக்கி அவர்களது ஆதரவையும் திரட்டுவதில்லை.

இவைகளே போக்குவரத்து மற்றும் அரசு ஊழியர்களின் போராட்ட நடவடிக்கைகள் மக்களின் ஆதரவைப்பெறாமல் தனித்து விடப்பட்டதற்கு காரணமாக அமைந்தன. கடந்த ஆட்சியின் போது நெடுஞ்சாலைத்துறையில் அன்றாடம் தார்ச்சாலை அமைக்கும் பணியில் இருந்த சாலைப்பணியாளர்கள் நூற்றுக் கணக்கானோர் இனி தேவையில்லை என மொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டு தெருவில் விடப்பட்டனர்.  அவர்களின் மீது நீதிமன்றங்களும் பெரிய அளவில் கருணை காண்பிக்கவில்லை.  அதே போல் அரசு ஊழியர் வேலைநிறுத்தத்தில் 1.25 லட்சம் பேர் பணிநீக்கத்தின் போது சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்றைய நீதிபதி (இன்று “மாமா நீதிபதிகள்” என சமீபத்திய முக்கிய வார, மற்றும் ஆங்கில நாளிதழ்களில் நீதித்துறையில் புரையோடியிருக்கும் ஊழலைப்பற்றி எழுதியிருந்த ஊடகங்களில் வருணிக்கப்பட்ட) திரு சுபாஷன் ரெட்டி வேலைநீக்கம் சரிதான் என தீா்ப்பளித்தார்.

பின்னர் வேலை  நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் போன்ற பெருச்சாளி வழக்கறிஞா்கள் ஆஜரானதிலோ என்னமோ வேலைநிறுத்தத்தின் நியாயத்தைக் குறித்தோ, தொழிற்தாவாச் சட்டத்தில் வேலை நிறுத்த உரிமை கொடுக்கப் பட்டிருப்பதையோ சுட்டிக்காண்பித்து வாதாடாமல் இந்த முறை மன்னித்து வேலை கொடுக்க உத்திரவிடுங்கள் என்ற வகையில்தான் வாதங்கள் அமைந்தன. உச்சநீதிமன்றம் வேலை கொடுக்க உத்திரவிட்டதுடன் வேலை நிறுத்தம் செய்ய உரிமையில்லை என்ற தீர்ப்பை வழங்கியது.

இந்த நிலையில்தான் அமைப்பு சார்ந்த தொழிலில் இருக்கும் பணியாளர்கள் போராட்டப் பாதையைப் பற்றி பயம் கொள்ளத் துவங்கியதுடன், அனுசரித்துப் போவதன் மூலமும், ஆளும் கட்சி முதல்வருக்கு பாராட்டு விழாக்கள் எடுப்பதன் மூலமும் காரியங்கள் சாதித்துக் கொள்ளலாம் என்கிற பாதையை தேர்வு செய்யத் துவங்கினர். புதிய பொருளாதாரக் கொள்கையினால் தொழிலாளர்கள் அமைப்பாக திரளக் கூடாது என்பதற்காக புதிய பொருளாதார மண்டலங்களில் தொழிற்சங்கங்களே அமைக்கக் கூடாது என மாநில அரசுகளுடன் முதலாளிவர்க்கம் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்வது ஒருபுறம்.

மறுபுறம் அமைப்பு சார்ந்த பணிகளிலும், அரசு, வங்கி, காப்பீடு போன்ற துறைகளிலும் தொழிலாளர்கள் ஒன்று திரளக் கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு போடப்பட்டவைதான் இந்த எஸ்மா, டெஸ்மா சட்டங்களெல்லாம். அந்த நேரத்தில் அவற்றை கடுமையாக எதிர்த்த ஓட்டுக்கட்சிகள் பின்னர் தாம் ஆட்சிக்கு வந்தபின் அந்த உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு சீராய்வு மனுத் தாக்கல் செய்ய தயாராக இல்லை. ஏனேனில் இவர்களுக்கும் தொழிலாளர்கள் அமைப்பாக திரண்டு விடக்கூடாது என்பதுதான் நோக்கம்.

இத்தகைய சூழலில் அதிமுக ஆட்சிகாலத்தின் இறுதியில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை என்ற நிலை வந்த போது, சில சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அதை விசாரித்த தனி நீதிபதி ஏற்கனவே தலைமை நீதிபதி மற்றும் ஒரு முதுநிலை நீதிபதி அமர்ந்த முதன்மை அமர்வு அளித்திருந்த தீா்ப்பிற்குள் செல்லாது, மைனாரிட்டி சங்கங்களின் கோரிக்கைகளையும் கேட்பதில் தவறில்லை என்கிற வகையில் ஒரு தீர்ப்பு அளித்தார். அதன் பேரில் 21 சங்கங்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு ஒப்பந்தம் என்ற பேரில் ஒரு நாடகம் நடந்து முடிந்தது.

அன்று பெரிய அங்கீகார தொழிற்சங்கம் என தன்னை அழைத்துக் கொள்ளும் திமுகவின் தொமுச பேரவைத்தலைவர் திரு செ.குப்புசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா முன்பு சென்று அமர இடம் கிடைக்காமல் (லெட்டர் பேடு சங்கங்களின் தலைவர்களெல்லாம் ஓடிச்சென்று முன்வரிசையில் அமா்ந்துவிட) கடைசி வரிசையில் அமர நேர்ந்தது.  அதோடு மட்டுமல்லாமல் கோரிக்கை குறித்து செ.கு. எழுந்து பேசுகையில் “குப்புசாமி” கேள்விப்பட்டிருக்கிறேன், தற்போதுதான் நேரில் பார்க்கிறேன் என ஜெயலலிதா கேலிபேசியல்லாம் நடந்தது.

பிறகு உடனடியாக இந்த தனி நீதிபதி தீா்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என அனைத்து சங்க கூட்டத்தில் தொமுச மற்றும் சிஐடியு போன்ற சங்கங்களெல்லாம் முடிவு செய்தன. அந்த வகையில் தொமுச வின் மாதாந்திர ஏடான “உழைப்பாளி” யில் கட்டுரையும் எழுதப்பட்டது.  ஆனால் சில தினங்கள் கழித்து யோசித்துப் பார்க்கையில் பல சங்கங்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டால்தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு தங்கள் ஆட்சி வரும் போது தொழிலாளர்களை ஏமாற்ற வசதியாக இருக்கும் என அந்த வழக்கு தொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு விட்டனா்.

பின்னர் “பணியாளர்கள் சம்மேளனம்” என்கிற அமைப்பு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை 5 ஆண்டுகளாக விசாரித்த உயா்நீதிமன்ற அமா்வு இறுதியில் ஏற்கனவே ஒரு முறை தேர்தல் நடத்தி சங்கங்கள் தேர்வு செய்தபின், பின்னர் அங்கீகாரத்திற்கு மாற்று முறை என்பது அனுமதிக்க முடியாது என்று 13/02/10 அன்று இறுதி விசாரணையில் கருத்து தெரிவித்துவிட்டு, தீா்ப்பை ஒத்திவைப்பதாக அறிவித்தனர்.

வெற்றியைக் கொண்டாடும் தி.மு.க பெருச்சாளிகள்!

அதன்பின் 6 மாதங்களாக அந்த வழக்கு கட்டு தூசி தட்டப்படாமலேயே இருந்தது.  இந்த நிலையில் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை துவக்கப்பட வேண்டிய செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்திரவிட்டது.  அதுவரை வழக்கு மன்றம் செல்லாத திமுகவின் தொமுச அவசர, அவசரமாக ஒரு வழக்கை தொடர்ந்து, பணியாளர்கள் சம்மேளனத்திற்கு ஆஜரான சீனியர் வழக்கறிஞரை தனது வழக்கறிஞராக வளைத்துப் போட்டு, நடைபெறும் தேர்தலில் உயர்ந்தபட்ச வாக்கு பெறும் ஒரு சங்கம் மட்டும் அங்கீகாரம் பெற்ற சங்கமாக கருத வேண்டுமென உத்திரவினை பெற்றது.  அதன்பின் இந்த கட்டுரையின் முதல் பத்தியில் சொன்னது போல் சரக்கு சகிதமாக தேர்தல் நடைபெற்றது.

முன்னதாக கடந்த 3 ஆண்டுகளில் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 40000 பேர் தலைக்கு 2 முதல் 2.5 லட்சம் வரை கொடுத்து ஓட்டுனர், நடத்துனர் பணிபெற்ற பல்லாயிரக்கணக்கானவர்களின் பணி இன்னும் நிரந்தரப்படுத்தப் படாமல் தினக்கூலியாகவே பணி வாங்கப்பட்டு வருகின்றனர். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இளவரசியிடம் விளக்கம் சொல்லும் ராமதாஸ் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் ஆனால் வாய்தான் காதுவரை நீளம்” என்று வசனம் பேசும் ஒரு காட்சி வரும்.

ஆனால் இன்றைய இளைஞர்கள் வேலைவாய்ப்பிற்காக பல வருடங்கள் காத்திருந்து துன்பப்பட்டு, திரைப்படங்களில் வருவது போல் பெற்றோர்கள், உடன் பிறந்தோர்களிடம் அவமானப்பட்டு ஒரு வழியாக லட்சங்கள் கொடுத்து அரசுத்துறை வேலையைப் பெறுவதால் அங்குவந்து வாய்பேசி காரியம் சாதித்துக் கொள்வதற்கு பதில் ஆளும் அரசியல் கட்சியிடம் சேர்ந்து காரியத்தை சாதித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தோடு வேலையில் சேருவதால் இவர்களுக்கு வாயும் நீளவேண்டிய இடத்தில் நீளுவதில்லை. “வேலைக்கு சேர்ந்தாகிவிட்டது.  நான் தினமும் பணிக்கு வந்தால் எனக்கு ஒரு பேருந்தின் பணி கொடுத்துத்தானே ஆகவேண்டும், இதில் ஆளும் கட்சி ஆதரவு எனக்கெதற்கு” என வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு கேள்வி எழலாம்.

ஆனால் எதார்த்தம் என்னவெனில் அனைத்து போக்குவரத்துக் கழக டிப்போக்களிலும் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அன்றாடம் பணி ஒதுக்கீடு செய்யும் பணி என்பது ஆளும் கட்சியை சேர்ந்த டிராபிக் கண்காணிப்பாளர் வசம் உள்ள பணியாகும்.  அவர் தனி மனிதனாக வரும் நபருக்கு காலையில் வந்தால் மாலை வரை பணி ஒதுக்காமல் மதியம் ஒரு வண்டியை ஒதுக்கி பணி செய்யச் சொன்னால் அவர் காலையிலிருந்து டிப்போவில் காத்திருந்த நேரமும், அவர் மதியம் துவங்கி பணி செய்யும் நேரமும் சேரத்து 20 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும்.  அதற்கு பதிலாக ஆளும் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து கப்பம் கட்டிவிட்டால் ரெகுலராக ஒரு தடத்தின் பணி ஒதுக்கப்படும்.  அன்றாடம் அவர் வீட்டிலிருந்து புறப்படுவது முதல் வீடு வந்து சேருவது வரை திட்டமிடமுடியும்.

இப்படிப்பட்ட புதிய பணியாளர்களையெல்லாம்  தனித்தனியாக கூப்பிட்டு “கவனித்த” ஆளும் கட்சி சங்கம் “உனது பணி நிரந்தரம் ஆக வேண்டுமென்றால் தொமுச-விற்கு வாக்களிக்க வேண்டும்.  1998ல் தேர்தல் நடைபெற்ற போது பல பணிமனைகளின் வாக்குகள் ஒரு அண்டாவில் கொட்டி கலக்கப்பட்டு எண்ணப்பட்டது.  ஆனால் தற்போது டிப்போ வாரியாக வாக்கு எண்ணப்படும்.  நீ மாற்றிப் போட்டாயானால் உனது பணி அம்போதான்” என “கனிவாக” அறிவுரை செய்யப்பட்டது.

ஏற்கனவே வீட்டிலிருந்த தாலியையும், வயல்களையும் அடமானம் வைத்து லட்சங்கள் கொடுத்து வேலைக்கு வந்த “உடன்பிறப்புக்கள்” “ரத்தத்தின் ரத்தங்கள்” அவர்களது பார்முலாப்படி வேண்டிய பணி வேண்டுமா அதற்கொரு தொகை, விடுப்பு வேண்டுமா அதற்கொரு தொகை இலகுபணி வேண்டுமா அதற்கொரு தொகை, தற்காலிக வேலை நீக்கத்தை விலக்கிக் கொள்ள ஒரு தொகை என கொடுத்துப் பழகியதால், கடந்த 36 ஆண்டுகளில் தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற பலன்களெல்லாம் புதியவர்கள் அகராதியில் பணத்தால் சாதி்க்க முடியும் என்கிற எண்ணம் வளர்ந்திருந்த சூழலில் இந்த தேர்தல் வந்தது.

எனவே கடந்த 3 வருடங்களுக்குள் இப்படியாக வேலைக்கு சேர்ந்த 40000 புதிய பணியாளர்கள் (அடிமைகள்) மற்றும் குறிப்பிட்ட தடங்களில் பணி புரிய வேண்டும் என்பதற்காகவே ஆளும் கட்சியை சார்ந்து இருக்கும் நிரந்தரப் பணியாளர்கள் என இவர்களை கருத்தில் கொண்டே ஒரு சங்க அங்கீகாரம் என்பதில் முனைந்த தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை வென்றதில் அதிசயப்பட ஒன்றுமில்லை.

தொழிலாளர் வர்க்கமாக ஒன்றிணைந்து போராடாமல் எதையும் பெற முடியாது என்கிற அனுபவ பாடத்தை புதிய தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள இன்றைக்கு உள்ள முதலாளித்துவ ஆளுமை சமுதாயத்தில் வெகு காலம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றே எண்ணுகிறேன்.

போக்குவரத்துக் கழகங்களில் புதிய, புதிய பேருந்துகள் நகரை வலம் வந்த போதிலும் அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக,

  • அவரவர் வருங்கால வைப்பு நிதி சேமிப்பிலிருந்தான கடன் தொகை வழங்கப்படாமல் நிலுவையிலுள்ளது.
  • புதிய பென்சன் திட்டம் வந்த போது வருங்கால வைப்பு நிதிச் சட்டத்திலிருந்து வெளிவந்து விட்டதால் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் வ.வை.நிதிப்பணத்தையும் கொள்முதல்களுக்கு கமிசன் தரும் பார்ட்டிகளுக்கு பணம் தரும் வகையில் ரொட்டேசனுக்கு பயன்படுத்தும் அவல நிலை அனைத்து கழகங்களிலும் உள்ளது.
  • சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் ஆயுள் காப்பீடு, வங்கிகளின் வீட்டு வசதி கடன், சொசைட்டி கடன், அஞ்சலக காப்பீடு, மாதாந்திர தொடர் சேமிப்பு போன்றவை அதனதன் கணக்கில் செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ளது
  • ஓய்வு பெற்றவர்களின் பணிக்கொடை, ஓய்வூதிய ஒப்படைப்பு போன்றவை நிலுவையிலுள்ளது
  • தவிர தினசரி புறநகர் பேருந்து என்றால் 14 மணி நேரத்திற்கும் மேல், நகரப் பேருந்து என்றால் 10 முதல் 11 மணி நேரத்திற்கு மேல் பணிபுரிய கட்டாயப்படுத்தப்படுகின்றனர்
  • பராமரிப்பில், அலுவலகப் பிரிவில் கடந்த 12 ஆண்டுகாக நியமனம் என்பதே இல்லாமல் ஓய்வு பெற்று, இறந்து வெளிச் செல்லும் தொழிலாளர்களின் பணிச்சுமை என்பது இருக்கும் பணியாளர்களின் மீது திணிக்கப்பட்டிருக்கிறது
  • விபத்தில் இறந்த பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு என்பது சுமார் 110 கோடி வரை நிலுவையிலுள்ளதால், அடிக்கடி பேருந்துகள் ஜப்தி என்கிற நிலை எழுகிறது.
  • ஜப்தி என்கிற நிலை வரும் போது அரசு கேள்வி கேட்கிறது என்பதற்காக பேருந்தின் ஓட்டுனர் தவறின்றி எதிரே வந்த வாகனத்தின், தனியார் வாகனத்தின் தவறால் விபத்து என்றாலும் கழக ஓட்டுனர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது

இத்தனையும் இருந்து பல ஆண்டுகளாக போராட்ட களத்தில் பழகி வந்த முதுநிலை பணியாளர்கள் கூட வர்க்கமாக ஒன்றிணைந்து உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டும் என பழக்கப்படுத்தப்படாமல், பல லெட்டர் பேடு சங்கங்களும் புரோக்கர்களாக  பணி பார்க்க தொடங்கியதால்- காசால் சாதித்து விடலாம் என்கிற மனப்போக்கு வளர்ந்த நிலையில், ஆளும் கட்சி சங்கம் மிக அதிகமான வாக்குகளைப் பெற்று வென்றிருக்கிறது. ஊதிய ஒப்பந்தம் என்பது இரண்டாவது சுற்றுப் பேச்சு வார்த்தை துவங்கிய சில நிமிடங்களில் அமைச்சரால் படாடோபமாக அறிவிக்கப்பட்ட இன்னமும் கணக்கிடும் முறைகள் வெளியிடப்படாமல் வாக்களித்த தொழிலாளர்கள் குழம்பி நிற்கின்றனர்.

அனைத்து மாநிலங்களிலும் தொழிற்சங்கங்கள் என்பது நசுக்கப்பட வேண்டிய ஒன்று என்று முதலாளித்துவ மேலாண்மை பரவி வருகின்ற இன்றைய சூழலில் ஒரு துறை போராடினால் மற்ற துறை தொழிலாளர்கள் வேடிக்கை பார்க்காமல் துறை கடந்த ஒற்றுமையை கட்டி புதிய பொருளாதார தாக்குதலை எதிர்த்து நிற்கும் அரசியலை தொழிலாளர் வர்க்கத்திற்கு கற்றுக் கொடுக்காமல் விட்டது இது போன்ற நிகழ்வுகளுக்கு காரணமாக அமைந்து விட்டது.

போராடாமல் காசு கொடுத்து எதையும் சாதித்துவிடலாம் என்று இன்றைய இளைய தொழிலாளர்களிடம் வேர் விட்டுக் கொண்டிருக்கிற அபாயம் களைந்தெடுக்கப்பட வேண்டும். கட்சி சாராத தொழிற்சங்கங்கள் அந்தந்த தொழில் மையங்களில் தொழிலாளர்களுக்கு மக்களின் துன்பங்களோடு இணைந்த பொது சூழல்களை புரியவைத்து, சம்பளத்திற்காக மட்டும் போராடுவது என்ற நிலைவிடுத்து, சமூகத்திற்காகவும், மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் போராடும் அரசியலை கற்றுக் கொடுப்பதே இது போன்ற நிகழ்விலிருந்து மீண்டு வர வழியாக அமையும்.

___________________________________________________

– சித்திரகுப்தன்
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கீழைக்காற்று வெளியீட்டு விழா! அறிவுப்பசிக்கு விருந்து !!

39
ஓவியர் மருது நூல் வெளியிட கவிஞர் தமிழேந்தி பெற்றுக்கொள்கிறார்
ஓவியர் மருது நூல் வெளியிட கவிஞர் தமிழேந்தி பெற்றுக்கொள்கிறார்

வெஜிட்டபிள் கட்லெட், மசால் தோசை, மசாலா இல்லாத தோசை, இஞ்சி டீ, சாதா டீ, சமோசா இதெல்லாம் புத்தக வெளியீட்டுக்கு முன்பு, முடிந்த பின் காக்டெயில், அப்சல்யூட் ஓட்கா, ரெமி மார்ட்டின். இந்தக் காட்சிகள் எல்லாம் சமீபத்தில் சென்னையில் நடக்கும் சில நூல் வெளியீட்டு விழாக் காட்சிகள். நுகரும் மூக்கின் வாசனை உணர்வுக்கும், நாக்கின் ருசிக்கும் எச்சிலை ஊற வைத்து கூவிக் கூவி அழைக்கிறார்கள், அந்த நூல் அறிமுக கூட்டங்களுக்கு. அப்படியும் அங்கே அரங்கு நிறைய சிரமப்படுகிறது.

மருத்துவர்-ருத்ரன்-நூல்-வெளியிட-பதிவர்-சந்தனமுல்லை-பெற்றுக்கொள்கிறார்
மருத்துவர் ருத்ரன் நூல் வெளியிட பதிவர் சந்தனமுல்லை பெற்றுக்கொள்கிறார்

கட் அவுட் இல்லை, கட்லெட் இல்லை, சமோசா இல்லை முக்கியமாக சொறிந்து விட அல்லக்கைகள் இல்லை, ஆனால் அந்த திறந்த வெளி அரங்கில் நூற்றுக் கணக்கில் போடப்பட்டிருந்த அத்தனை இருக்கைகளும் நிரம்பி பரந்த அந்த மைதானத்தில் நின்ற படியே கடைசி வரை கலையாமல் நின்றார்கள் மக்கள். 26-12-2010  அன்று ஞாயிற்றுக் கிழமை கீழைக்காற்று பதிப்பகத்தின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழாவில்தான் இந்த காட்சிகள்.  கூட்டம் துவங்குவதற்கு முன்னரே வந்திருந்த பார்வையாளர்கள் தள்ளுபடி விலையில் நூல்களை வாங்கிக் கொண்டனர்.

புரட்சிகர-மாணவர்-இளைஞர்-முண்ணனி-தோழர்களின்-பாடல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனி தோழர்களின் பாடல்

முன்னர் எல்லாம் தோழர்களின் கூட்டம் என்றால் ஒரு சில உளவுத்துறையினரே வருவார்கள். சமீபகாலமாக பல பத்து பேர் வந்து சத்தமில்லாமல் வந்து அமர்ந்து குறிப்பெடுக்கிறார்கள். தோழர்கள் என்ன பேசுகிறார்கள் என்று பதிவு செய்கிறார்கள். நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் கூட புரட்சிகர கருத்துகள் வெளியிடப்படும் ‘அபாயம்’ குறித்து அரசுக்குத்தான் எத்தனை கவலை!

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா- உரையாற்றிய மருத்துவர் ருத்ரன்
மருத்துவர் ருத்ரன்

ஓவியர் மருது, மருத்துவர் ருத்ரன், கவிஞர் தமிழேந்தி, பதிவர் சந்தனமுல்லை,தோழர் மருதையன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரையும் வரவேற்றுப் பேசிய கீழைக்காற்று பதிப்பக பொறுப்பாளர் தோழர் துரை. சண்முகம் பேசும் போது, தமிழகத்தில் படைப்புலகத்தை  நாசமாக்கி வருமானம் ஈட்டும் தொழிலாகப் பார்க்கும் பதிப்பக அரசியலை அம்பலப்படுத்திப் பேசினார். அரசு படிப்பகங்களுக்கு வாங்கும் நூல்களுக்காக பதிப்பகங்கள் எப்படி ஆளும் வர்க்கங்களுக்கு கால் கழுவி வாழ்கிறார்கள் என்பதைப் பேசிய துரை. சண்முகம் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கிற்கு வாசகர்களிடம் கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பை குறிப்பிட்டார்.

துரை-சண்முகம்
உரையாற்றிய துரை சண்முகம் – கீழைக்காற்று

“எங்கள் கடையில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்குக் கூட நூல்களை விற்பனை செய்கிறோம். அப்படி வாங்குகிறவர்களை மரியாதையாகவும் கௌரவத்தோடும் நடத்துகிறோம். ஏனென்றால் அவர்கள் வாடிக்கையாளர்கள் என்பதால் அல்ல, நாங்கள் ஒரு உயரிய அரசியல் நோக்கத்திற்காக இதை நடத்துகிறோம் என்பதால். நாங்கள் வெளியிடும் புரட்சிகரத் தலைவர்களின் நூல்களைப் பார்த்து விட்டு இப்போது சிலர் லெனின், மாவோ நூல்களை வெளியிடத் துவங்கியுள்ளார்கள். முன்னர் தோழர் ஸ்டாலினை  பாசிஸ்ட் என்று சொன்னவர்கள் இவர்கள். நாளை எங்களைப் பார்த்து இந்தப் பதிப்பகங்கள் ஸ்டாலின் நூலைப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”” என்று விற்பனை வெறியும், லாப வெறியும் கொண்டு இயங்கும் பதிப்பகங்களை விமர்சனம் செய்து பேசினார்  தோழர் துரை. சண்முகம்.

உரையாற்றிய கவிஞர்-தமிழேந்தி
கவிஞர் தமிழேந்தி

அடுத்துப் பேசிய கவிஞர் தமிழேந்தி கீழைக்காற்று நூலகத்தின் தேவை குறித்தும் அது புரட்சிகர இடதுசாரித் தோழர்களுக்கு மட்டுமல்லாது ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் அறிவுத் தேடலுக்கான களமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். வாழ்த்திப் பேசிய மருத்துவர் ருதரன் தனக்கும் தோழர்களுக்குமான நெருக்கம் குறித்து நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். “தன் மீது சொல்லப்படும் விமரிசனங்கள் குறித்து கவலைப்படவில்லை. எங்கும் எப்போதும் என்னை நான் மறைத்துக் கொண்டதுமில்லை” என்று பேசினார்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-ஓவியர்-மருது
ஓவியர் மருது

தனது ஓவியங்கள் குறித்துப் பேசிய ஓவியர் மருது “எனது ஓவியங்கள் எப்படியான வடிவில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினேனோ அப்படி அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் தோழர்கள். அந்த வகையில் எனக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியளிக்கிறது”” என்று பேசினார். பதிவரும் தோழருமான சந்தனமுல்லை ஒரு பெண்ணாக பதிவுலகிலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் ஆணாதிக்கத்தை நடமுறை வாழ்வியல் அனுபவத்திலிருந்து பேசினார். மிக இயல்பாகவும் எளிமையாகவும் இருந்த சந்தனமுல்லையின் உரையை முழுமையாக வினவும் விரைவில் வெளியிட இருக்கிறது.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-பதிவர்-சந்தனமுல்லை
பதிவர் சந்தனமுல்லை

இறுதியில் ””படித்து முடித்த பின்”” என்னும் தலைப்பில் மிகச் சிறந்த ஒன்றரை மணி நேர உரையை  நிகழ்த்தினார் தோழர் மருதையன். “அறிவுத்தேடல், ஏகாதிபத்திய அறிவுஜீவிகளை எப்படி எதிர்கொள்வது? வாசிப்பனுபவம், மூளையை ஊனமாக்கும் நவீன ஊடகச் செயல்பாடுகளை எப்படி எதிர்கொள்வது? எதை வாசிப்பது, எப்படி வாசிப்பது? எதிரிகளின் பிரச்சாரங்களை எப்படி எதிர்கொள்வது” என்று இன்றைய மறுகாலனியாக்க உலகில் நாம் எதிர்கொள்ளும் எல்லா சம காலப் பிரச்சனைகளையும் மிக அற்புதமாக படம் பிடித்துக் காட்டினார். விரைவில் தோழர் மருதையனின் முழு உரையும் வினவில் வெளிவரும்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-தோழர்-மருதையன்
தோழர் மருதையன்

மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்த கூட்டத்தில். கட்டுக்கோப்பாக இருந்து கடைசி வரை அமர்ந்திருந்து தோழர்களை உற்சாக மூட்டினார்கள் மக்கள்.  பசிதாங்க முடியாத நடுத்ததர வர்க்கத்தின் அறிவுப் பசிக்கும், நாக்கு ருசிக்கும், பந்தி வைத்து பரிமாறும் இலக்கிய மொக்கைகளின் கூட்டங்களுக்கு மத்தியில் மக்கள் விடுதலையை  நெஞ்சிலேந்தி அறிவை விசாலாமாக்கி அனைவருக்கும் உண்மையான விருந்தளித்த கூட்டம் இதுதான்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா- மக்கள்-திரள்
மேடையில்

நிகழ்ச்சிக்கு பல பதிவர்களும், வாசகர்களும் வந்திருந்தார்கள். விழாவில் எட்டு நூல்களும் செட்டாக நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விற்பனை ஆனது. அனைவருக்கும் கீழைக்காற்று, வினவு சார்பாக நன்றிகள்.கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-மக்கள்-திரள்

____________________

– வினவு செய்தியாளர்
____________________