Tuesday, August 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 796

ஸ்பெக்ட்ரம் ஊழல் : மறுகாலனியாக்கத்தின் “பம்பர் பரிசு”!

42

ஸ்பெயின் தேசத்து காளை போல ஸ்பக்ட்ரம் ஊழல்!

ஸ்பெயின் தேசத்துக் காளைகளை வீரர்கள் ‘அடக்குவதை’ நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்; கட்டுக்கடங்காத கோபத்தோடு அந்தக் காளை பாயும். ஆனால் எதைப் பார்த்து? அதில் தான் இருக்கிறது அந்த ‘வீரத்தின்’ சூட்சுமம். காளையை அடக்கும் வீரன் கையில் ஒரு வண்ணத் துணியைப் பிடித்து அதன் முன் ஆட்டிக் கொண்டிருப்பான். அதை ஏதோ விரோதமான ஒன்று என நினைத்து ஏமாறும் காளை அதன் மேல் பாயும். இப்படி தொடர்ந்து பாய்ச்சல் காட்டிக் காட்டி தனது சக்தியை எல்லாம் இழந்த ஒரு தருணத்தில் அந்த வீரன் தன் கையில் இருக்கும் கத்தியை காளையின் மேல் பாய்ச்சுவான். இது அக்காளையைப் பொருத்தவரையில் ஒரு கண் கட்டி வித்தைதான். அதன் கண்களைக் கட்டி ஏமாற்றி – அதனை வெல்கிறான் அந்த வீரன்.

இப்போது இந்திய தேசத்தை அந்தக் காளையாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பாய்ச்சலை இந்தத் தேசத்து மக்களின் ஆத்திரம் என்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வண்ணத் துணி தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா. அவரைப் பிடித்து ஆட்டும் கைகள் தான் மன்மோகன் சிங். அந்தக் கைகளை இயக்கும் மூளை தான் பன்னாட்டு நிறுவனங்களும் உலக வங்கியும். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் களம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.

இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்த வேண்டுமானால், ஒரு மாபெரும் பந்தி நடந்து முடிந்துள்ளது – அதில் பரிமாறப்பட்டது நமது நாட்டின் முக்கியமான ஒரு இயற்கை வளம். பந்தியை நடத்தியது மன்மோகன் தலைமையிலான ஆளும் வர்க்கமும் பா.ஜ.க, காங்கிரசு, திமுக உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகளும் – தின்று ஏப்பம் விட்டது பன்னாட்டுக் கம்பெனிகள் முதல் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் வர்க்கம் வரை – பந்தி பரிமாறியது ஆ.இராசா. இப்போது விவகாரம் வெளியானவுடன் பரிமாறியவனை மட்டும் பலி கொடுத்து விட்டு மற்றவர்கள் எஸ்கேப்பாகப் பார்க்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம்: மக்களுக்குச் சொந்தமான ஒரு இயற்கை வளம்!

ஸ்பெக்ட்ரம் எனப்படும் மின் காந்த அலைக்கற்றையை ஒரு வளம் என்று எப்படிக் கொள்ள முடியும்? நமது நாட்டில் இதற்கு முன் ஆறுகளையும் மலைகளையும் நிலங்களையும்…. ஏன் கடலையே கூட பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுத்துள்ளனர். அவையெல்லாம் பௌதீக உருவகமாக நம் கண் முன்னே நிற்பதால் அந்த திருட்டுத்தனம் நமக்கு எளிதில் புரிந்தது. ஆனால், திருட்டு என்று வந்து விட்டபின் கண்ணுக்குத் தெரியும் பொருளானால் என்ன கண்ணுக்குத் தெரியாத மின்காந்தப் புலமாக இருந்தால் என்ன?

நடந்து முடிந்துள்ள இந்தத் திருட்டைப் புரிந்து கொள்ளும் முன், மின்காந்த அலைக்கற்றையை ஒரு இயற்கை வளமாகக் கொள்வது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

இன்று நமது சட்டைப் பைக்குள் திணித்து வைக்கப்பட்டுள்ள செல்போனில் இருந்து கருணாநிதி ‘பாசத்தோடு’ அளித்துள்ள இலவச தொலைக்காட்சி வரையில் வளி மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் தான் இயங்குகின்றன. கிழட்டு எந்திரனை நமது படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்க வைத்ததையும், நாம் செல்லும் இடமெல்லாம் ‘கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க’ என்று நுகர் பொருட்களின் விளம்பரங்களை நமது காதுகளுக்குள் திணிப்பதையும் சாத்தியப்படுத்தியிருப்பது இந்த அலைவரிசைகளில் இயங்கும் தொலைக்காட்சிகளும் பண்பலைகளும் தான்.

நிலத்தின் வளங்கள் எப்படி இயற்கையின் கொடையோ அதே போல் வளி மண்டலத்தின் படர்ந்திருக்கும் மின்காந்த அலைவரிசையும் இயற்கையின் கொடையே.

சந்தை – மக்களை இணைக்கும் முக்கிய ஊடகமே அலைக்கற்றை!

ஆறுகள், நிலங்கள், மலைகள், சமதளங்கள், காடுகள், கடல்கள், கனிவளங்கள் உள்ளிட்ட புவியியல் அம்சங்களை உள்ளடக்கி வரையப்பட்டுள்ள எல்லைக்கோடுகள் மட்டுமே இந்தியா எனும் தேசத்தை உண்டாக்கி விடவில்லை. அதனுள் இரத்தமும் சதையுமாய் வாழும் பல்வேறு இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த மனிதர்களும் சேர்ந்ததே இந்நாடு.

எனில், முந்தைய புவியியல் அம்சங்களை மட்டும் தனது எஜமானர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டால் கடமை முடிந்தது என்று இந்திய அதிகாரவர்க்கத் தரகர்கள் சும்மா இருந்து விடமுடியாதல்லவா. அடுத்து இந்த எல்லைக்கோடுகளுக்குள் வாழும் உயிரியல் அம்சங்களை என்ன செய்வது? முதலாளிகளைப் பொருத்தளவில் இந்த நூறுகோடி மக்களும் ஒரு பெரிய சந்தை.

அவர்கள் உற்பத்தி செய்து குவிக்கும் பொருட்களுக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ – அவற்றை இந்த சந்தை நுகர்ந்தாக வேண்டும். அதை எப்படித் தள்ளி விடுவது? முகேஷ் அம்பானி நமது செவ்வாய்க்கிழமை மார்க்கெட்டில் ஜமுக்காளத்தில் பிளாஸ்டிக் பொம்மைகளை கடை விரித்து ‘பத்து ரூவாய்க்கு ரெண்டு’ என்று கூவும் அப்பாவி வியாபாரியா என்ன?

இவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகம் தேவை. அந்த ஊடகங்களுக்கு தமது பிரதான நிகழ்ச்சிகளான விளம்பரங்களையும் சைடு கேப்பில் அழுகுணி சீரியல்களையும் ஒலிபரப்ப அலைவரிசை தேவை. இது சென்ற தலைமுறையினருக்கு – அடுத்த தலைமுறையினருக்கு? செல்போன்கள்!

‘இதோ நான் தூங்கி எழுந்து விட்டேன்’ என்பதில் தொடங்கி, ‘இதோ இப்போது நான் கக்கூசில் இருக்கிறேன்’ என்பதில் தொடர்ந்து, ‘இதோ எனக்கு கொட்டாவி வருகிறது’ என்பது வரைக்குமான ‘மிக முக்கிய’ தகவல்களை நண்பர்களோடு ட்விட்டரில் பகிர்ந்து கொள்வதாகட்டும்; என்ன சினிமா பார்க்கலாம், எதை வாங்கலாம், எங்கே வாங்கலாம் என்பது வரைக்குமான சகல கேள்விகளுக்குமான பதில்கள் இணையத்தில் இருக்கிறது – அது செல்போனுக்கும் வருகிறது. இது போதாதா முதலாளிகளுக்கு?

எதிர்காலத்தில் தீர்மானகரமானதொரு  ஊடகமாக உருவெடுக்கும் சாத்தியம் செல்போனுக்கு உள்ளது. இதை நாம் வார்டு கவுன்சிலர் தேர்தலில் “எனக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று எச்சிலூற இறைஞ்சு வரும் எஸ்.எம்.எஸ் அளவுக்கு சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. ஒரு பெரும் சந்தையை எளிதில் தடையில்லாமல் அணுகுவதற்கான பாதை தான் அலைக்கற்றைகள். அந்தப் பாதையை, யார் – எப்படி – எந்த விதத்தில் – எந்த அளவுக்குப் – பயன்படுத்துவது என்பதை நிர்ணயம் செய்யும் அதிகாரம் உலகளவில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கே உரித்தானது.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை ஒதுக்கியதில் பதுங்கிய மாபெரும் ஊழல்!

வானொலி, தொலைக்காட்சி, பண்பலை, செல்போன்கள் எல்லாம் குறிப்பிட்ட அலைவரிசைகளில் இயங்குவது தான். இந்த அலைவரிசை என்பதை ஒரு சாலை என்பதாக உருவகப்படுத்திக் கொண்டீர்கள் என்றால், மேலே செல்லப்பட்டுள்ள சேவைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட சாலைகள் இருக்க வேண்டும். இப்போது, ஒரே நேரத்தில் நூறு அடி அகலம் கொண்ட சாலையில் எத்தனை வாகனங்கள் பயணிக்க முடியும்? இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று இணையாக செல்லலாம் அல்லவா?

அதே போலவே, செல்போன் சேவைக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள அலைக்கற்றைகளில் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் தான் நிறுவனங்கள் இயங்கி சேவை வழங்க முடியும். இந்த அடிப்படையில் எந்தெந்த நிறுவனங்கள் சேவை அளிக்கலாம் என்பதை மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் முறையான டெண்டர் கோரி ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு சுமார் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்கள் வருவாய் கிடைத்திருக்கும். அந்த வருமானம் நாட்டுக்கு கிடைக்காமல் செய்யப்பட்டுள்ளது என்பது தான் மத்திய தணிக்கைத் துறையினரின் அறிக்கை வைக்கும் குற்றச்சாட்டு.

செல்போன்கள் ஒரு பெரும் சந்தையின் மக்களை நுகர் பொருட்களை நோக்கி கவர்ந்திழுக்கும் ஒரு பாதை என்பதைக் கடந்து, அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால் – அதுவே ஒரு பெரிய சந்தை. உலகமயமாக்கலைத் தொடர்ந்து நுகர்தலையே கலாச்சாரமாகக் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க / மேல் நடுத்தர வர்க்கத் தலைமுறை உருவெடுத்துள்ளது. விதவிதமான செல்போன்கள் மட்டுமல்ல, அதனூடாய்க் கிடைக்கும் சேவைகளின் மேம்பாடும் இவர்களுக்கு மிக முக்கியம்.

அந்த வகையில் இந்நூற்றாண்டின் துவக்கத்தில் புழக்கத்தில் இருந்த செல்போன்களை விட தற்போது புழக்கத்தில் உள்ள செல்போன்கள் அதிக வசதிகளைக் கொண்டது. இது நுகர்வு வெறியால் தூண்டப்பட்ட இந்த புதுப்பணக்கார கும்பலை மிக அதிகளவில் செல்போன்களை நுகரச் செய்து, அதையே ஒரு பெரும் சந்தையாக நிலை நாட்டியுள்ளது. ஒருவரே இரண்டுக்கும் மேற்பட்ட செல்பேசிகளை வைத்துக் கொள்வதும், ஒரே செல்பேசியில் இரண்டு இணைப்புகளை வைத்துக் கொள்வதும் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒரு தொலைபேசி என்பதைக் கடந்து, பாடல்கள் கேட்க, படம் பார்க்க, இணையத்தை பாவிக்க என்று அணைத்து வசதிகளையும் உள்ளடக்கிய செல்போன் கருவிகள் தற்போது சந்தையில் குவிந்துள்ளது.

தொன்னூறுகளின் மத்தியில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையில் இயங்கும் செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது. அப்போது சந்தையில் இருந்த செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கான அலைவரிசையே 2001ம் ஆண்டு ஒதுக்கீடு செய்து சேவை அளிப்பதற்கான லைசென்சுகள் விற்கப்பட்டது. அப்போதே அந்த லைசென்சுகளை அடிமாட்டு விலைக்குத் தான் விற்றுள்ளார்கள். வருவாயில் ஒரு சொற்ப சதவீதம் பங்கு எனும் அடிப்படையில் விற்கப்பட்ட போதும், செல்போன் சேவை நிறுவனங்கள் அதையும் தராமல் பட்டை நாமம் சாற்றினர்.

2001ல் நான்கு மில்லியன்களாக இருந்த செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2008ல் 300 மில்லியன்களுக்கு மேலாக உயர்ந்துள்ளது. சீனத்துக்கு அடுத்து உலகிலேயே இந்தியாசின் செல்போன் பயன்பாட்டுச் சந்தை மிகப் பெரியது. இந்நிலையில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலைக்கே ஏழு ஆண்டுகள் கழித்து 2008ல் சேவை துவங்குவதற்கான புதிய லைசென்சுகளை விற்றுள்ளனர். அதுவும் முறையான டெண்டர் இல்லாமல் முதலில் வருவோருக்கு முதலில் அனுமதி (First-come-first-serve basis) எனும் அடிப்படையில், அதிகாலை ஐந்து மணிக்கே ஒப்பந்தங்களை ஏற்றும், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே பேரத்தை நடத்தியும் முடித்துள்ளனர்.

ஒப்பந்தங்களை வென்ற ஒன்பது நிறுவனங்களில் ஸ்வான், யுனிடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு செல்போன் சேவையில் எந்த முன் அனுபவமும் கிடையாது. 13 மண்டலங்களுக்கான உரிமத்தை 1537 கோடி ரூபாய்களுக்கு வாங்கிய ஸ்வான் நிறுவனம் அதை வெறுமனே கைமாற்றி 4200 கோடிகள் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.

இந்த போலி நிறுவனங்கள் பல அரசியல்வாதிகள், முதலாளிகளுக்கு சொந்தமானவை. இது போக ரிலையன்சு நிறுவனமும் பினாமி பெயரில் அடித்து சென்றிருக்கிறது. மற்றபடி சந்தை மதிப்பை விட கொள்ளை மலிவில் பிக்பாக்கட் அடித்தவர்களில் ஏர்டெல், ஏர்செல், வோடாபோன் என எல்லா நிறுவனங்களும் உண்டு.

ராசாவுக்கு பின்னே மறைந்து கொள்ளும் முழு பெருச்சாளிகள்!
இந்திய ஊழல் தொகையின் பதினேழாண்டு மதிப்பு 73 இலட்சம் கோடி ரூபாய்கள்!!

ஊழல் நடந்துள்ளது என்பது சர்வநிச்சயமாக எல்லோருக்கும் தெரிந்தே தான் இருக்கிறது. இதற்குப் பெரிதாக மூளையைப் போட்டுக் கசக்கிக் கொள்ளத் தேவையே இல்லை. ஒரு பொருளுக்கான தேவை 100 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், அதை ஏழு வருடங்களுக்கு முன்பு விற்ற அதே விலையில் விற்றதில் ஊழல் நடந்துள்ளது என்பதை பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட சொல்லி விடுவான். ஆனால், இதற்கெல்லாம் காரணமாக எல்லோராலும் கைகாட்டப்படுவது ஆ.இராசா மட்டும் என்பதில் தான் சூட்சும்ம் ஒளிந்திருக்கிறது.

கிராமப்புறங்களில் ஒரு வழக்கு உண்டு, கூட்டத்தில் நிற்கும் திருடன் – ‘அதோ திருடன்; இதோ திருடன்’ என்பானாம். இன்று சர்வ கட்சிகளும் போடும் கூச்சல்களும் அசப்பில் அப்படியே தான் உள்ளது.

அவுட்லுக் பத்திரிகை கணக்கெடுப்பு ஒன்றின் படி 1992ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் நடந்துள்ள மொத்த ஊழலின் மதிப்பு 73 லட்சம் கோடி ரூபாய்கள்! அதாவது – 73000000000000 ( எழுபத்தி மூன்று போட்டு பன்னிரண்டு சைபர்களையும் போட வேண்டும்!) ( தகவல் http://www.outlookindia.com/article.aspx?262842 ).

இந்தாண்டு இந்தியா பட்ஜெட் பற்றாக்குறைக்காக வாங்கியுள்ள அதிகாரப்பூர்வ கடனே மூன்று லட்சத்து நாற்பத்தையாயிரம் கோடிகள் தான். என்றால், இந்த ஊழல் பணத்தைக் கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு பற்றாக்குறையில்லாத பட்ஜெட் போட்டிருக்க முடியும்? நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியான 53 லட்சம் கோடிகளை விட இது 27% அதிகமாம்.

இதெல்லாம் இந்த நாட்டின் செல்வங்கள், வளங்கள், மக்கள் பணம் என்று கொள்ளை போன வகையில் கணக்கில் வரும் தொகை. இன்னும் வெளியாகாத குற்றச்சாட்டுகள் எத்தனை, ‘விஞ்ஞானப்பூர்வமான’ நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் தலையே சுற்றுகிறது. எந்த உலகமயமாக்கம் நல்லாட்சியைத் தரும் என்று உலகமய தாசர்கள் பீற்றிக் கொள்கிறார்களோ அந்த உலகமயத்திற்குப் பின் தான் இத்தனையும் நடந்துள்ளது.

இங்கே அடிக்கடி அதியமான் வந்து ‘உலகமயம் தனியார்மயம் தாராளமயம் நிறைய ‘வாய்ப்புகளைத்’ திறந்து விட்டிருக்கிறது’ என்று வாதாடியதைப் பார்த்திருக்கிறோம். பொதுவான வாசகர்களுக்கு அதன் மெய்யான அர்த்தம் ஒருவேளை புரிந்திராமல் இருக்கும் – இப்போது தெரிந்து கொள்ளுங்கள், அந்த ‘வாய்ப்புகள்’ இந்த பன்னிரண்டு சைபர்களுக்குள் தான் எங்கோ பதுங்கிக் கிடக்கின்றன.

கடந்த இரு பத்தாண்டுகளில் ஒவ்வொரு முறை ஊழல் குற்றச்சாட்டுகள் எழும் போதும் ஊடகங்கள் அதைவைத்து ஒரு வாரம் பத்து நாளைக்கு நோண்டி கொண்டாடி விட்டு பின் மீண்டும் நடிகர்களின் படுக்கையறைகளுக்குள் பதுங்கிக் கொள்கின்றன. எதிர்கட்சிகளின் கூச்சல்களும், “நமக்குக் கிடைக்காதது இவனுக்குக் கிடைத்து விட்டதே” என்கிற பொறுக்கித் தின்னும் ஏக்கத்தின் வெளிப்பாடுகள் தான். அதைத் தான் விஜயகாந்த் ஓரளவு நேர்மையுடன் “எங்களுக்கும் ஒரு வாய்ப்புத் தாருங்களேன்” என்று கேட்கிறார். சிறிய அலையை பெரிய அலை விழுங்குவதைப் போல் ஒரு ஊழல் ஏற்படுத்திய அதிர்ச்சியை அடுத்த ஊழல் விழுங்கி விடுகிறது.

இதெல்லாம் கருணாநிதியின் செல்லமான அடிமைப் பிள்ளை ஆ.இராசாவுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியாமல் இருக்காது. அதனால்தான் அவரால் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “ஊழல் நடந்துள்ளதை நிரூபித்துப் பாருங்களேன்” என்று தைரியமாக சவடால் அடிக்க முடிகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் “எல்லாம் பிரதமருக்குத் தெரியும்; பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில் தான் மொத்த விற்பனையும் நடந்தது” என்று சொல்கிறார்.

தேசத்தின் வளங்களை கேள்விமுறையில்லாமல் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பது தான் உலகமயமாக்கல் அரசிடம் கோரி நிற்கும் செயல்பாடு. அதைத் தான் அவர்கள் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள், ‘அரசு நிர்வாகத்தை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்; வியாபாரத்தை முதலாளிகள் பார்த்துக் கொள்வார்கள்’ என்கிறார்கள். அதன் மெய்யான அர்த்தம், “நீ பங்கு பிரித்துக் கொடுப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்; மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்பதாகும்.

ஸ்பெக்ட்ரம் என்பது பௌதீகமாக கண்டுணர முடியாத வளம்; ஆனால், நாம் பௌதீகமாக கண்டுணர்வதோடு, நமது வாழ்க்கைக்கான ஜீவாதாரத் தேவையான நீர் வளத்தையே பட்டா போட்டுக் கொடுத்து விட்ட ஒரு நாட்டில், அதையே செயல்திட்டமாகக் கொண்ட ஒரு உலகவங்கியின் கைக்கூலி ஆட்சி செய்யும் போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வருமான இழப்பு ஏற்படுத்தினார் என்று அதுவும் வேறுவழியின்றி தணிக்கை அறிக்கை வெளிவந்த பிறகு ஒரு இராசாவை தள்ளிவிட்டுவிட்டு மற்ற பெருச்சாளிகள் தப்பிக்க பார்க்கிறார்கள்.

தி.மு.கவின் பாரம்பரிய அரசியல் உத்தியான “நீ மட்டும் என்ன யோக்கியமா” என்கிற கேள்வியை இராசா திருப்பிக் கேட்டுவிட்டால் அங்கே காங்கிரசுக்கு கிழிசலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கடைசிக் கோவணத்துண்டும் அவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. அதன் ஒரு சின்ன சாம்பிள் தான் “எல்லாம் பிரதமரின் வழிகாட்டுதல் தான்” என்று உண்மையைச் சொல்வது. எனவே ஓரளவுக்கு மேல் இறுக்கிப் பிடிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தி.மு.க சார்பான அலாவுதீன் என்ற பினாமிக்கு பங்கு இருப்பதை விட காங்கிரசு ஆதரவு முதலாளிகளின் பங்கு அதிகம். தேனெடுத்து புறங்கையை நக்குவதல்ல இது. தேனிக்கள் வாழும் முழுக்காட்டையும் தின்று விழுங்குவது.

இதோ, இப்போதே தயாநிதி அழகிரியின் திருமண வரவேற்பிற்கு காங்கிரசு உள்ளிட்ட அனைத்து கட்சி மத்திய மற்றும் மாநில பெருச்சாளிகள் வரிசை கட்டியிருக்கிறார்கள். இப்போதைக்கு ஆ.இராசாவை இராஜினாமா செய்ய வைத்திருப்பது விவகாரத்தை முடிந்த வரைக்கும் ஆ.இராசா மட்டும்சம்பந்தப்பட்டது போல மடைமாற்றிக் காட்டவே. மற்றபடி காங்கிரசு இதில் காட்டப் போகும் நாடகமான “தீவிரம்” என்பது மாநிலக் கூட்டணிக் கணக்குகளை வைத்தே தீர்மானிக்கப்படும்.

நாட்டை விற்கும் கூட்டுக் களவாணிகள்!

ஊடகங்களைப் பொறுத்த வரையில், கதையில் ஒரு வில்லன் வேண்டும்; அவன் தோற்க வேண்டும். கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவில் நடந்து வரும் இந்த ‘ஊழல்’ மெகா சீரியலின் இப்போதைய எபிசோடில் வில்லன் ஆ.இராசா. அவர் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததன் மூலம் தோற்று விட்டார். இதை இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு கொண்டாடுவார்கள். பின்னர் அனைத்தும் மறக்கப்படும்; மறக்கடிக்கப்படும். அடுத்து இன்னும் சில மாதங்களில் வேறு ஏதாவது இரண்டு லட்சம் கோடி ஊழல் ஒன்று வெளிப்படும் நாளில் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த என்ன உத்தியைக் கடைபிடிக்கலாம் என்று விவாதிப்பதில் அவர்கள் ‘பிஸியாகி’ விடுவார்கள். இதற்கிடையே அந்த 1.76 லட்சம் கோடிகளின் கதி? அது வழக்கம் போல என்றென்றைக்கும் திரும்பி வரவே போவதில்லை.

மேலே உள்ள அந்த எழுபத்தி மூன்று லட்சம் கோடிகளும் திரும்ப தேசத்திற்குக் கிடைத்து விட்டதாகவோ அல்லது அதில் இருந்து ஒரு குண்டூசி முனை அளவுக்காவது திரும்பி வந்தது என்பது போன்ற தகவல்களோ இல்லவே இல்லை.

முன்பு வி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு டாடாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, லாபத்தில் இயங்கிய மாடர்ன் பிரட்டை யுனிலீவருக்கு சல்லிசாக அள்ளிக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, அரசுத் துறை அலுமினிய உற்பத்தி நிறுவனமான ‘பால்கோ’வின் பங்குகளை குறைவாக மதிப்பிட்டு ஸ்டெர்லைட்டுக்கு விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ, நல்ல லாபத்தில் இயங்கி வந்த இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் மதிப்பைக் குறைத்து விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ – அதே போன்ற விளைவு தான் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டிற்கும் ஏற்படும்.

அது என்னவென்று கேட்கிறீர்களா? மௌனம். ஆழ்ந்த மௌனம். வெட்கம் கெட்ட மௌனம். கேடு கெட்ட மௌனம். வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. ஊடகங்களின் இப்போதைய ஆர்வமெல்லாம் அந்த ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் என்ற பெரிய எண்ணிக்கை ஏற்படுத்தும் அதிர்ச்சி மதிப்பீட்டில் இருந்து நேயர்களிடையே எத்தனைக்கு எத்தனை அறுவடை செய்ய முடியும் என்பதில் தான்.

ஸ்பெக்டரம் ஊழலும், அரசியல் கட்சிகளின் கூட்டணி கனவுகளும்!

இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எதிர்க்கும் பாரதீய ஜனதா ஆட்சியில் தான் பொதுத்துறை நிறுவனங்களையும் தேசத்தின் இயற்கை வளங்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்க தனியாக ஒரு அமைச்சரையே வைத்திருந்தனர். இன்றைக்கு எந்த கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையை கைகளில் வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்களோ, அதே கணக்குத் தனிக்கைத் துறை 2006ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சமர்பித்த அறிக்கை ஒன்றில் 1999ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரையிலான பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்ததில் நடந்த முறைகேடுகளை பட்டியலிட்டு விபரமாக அறிக்கையும் சமர்பித்திருந்தனர்.

தற்போது கூட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் விசாரணைக்கு கூக்குரலிடும் பா.ஜ.கவின் கோரிக்கை தேவையில்லை என்பதை அருண் ஷோரியே தெரிவித்திருக்கிறார். முந்தைய பா.ஜ.க அரசில் பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு அனுப்பிய புண்ணியவான் இவர்தான். அதனால்தான் அவர் ‘நீதி’வழுவாமல் பேசுகிறார்.

அ.தி.மு.கவுக்கு ஒரே பிரச்சினை தான் – அது கூட்டணி. அது கொலைகாரனோ, கொள்ளைக்காரனோ, கேப்மாரியோ, மொள்ளமாரியோ… எவனாக இருந்தாலும் சரி. தமிழகத்தில் குத்து மதிப்பாக பத்து சதவீதம் வாக்குகள் இருக்கும் கட்சியாக காங்கிரசு இருப்பதால், இதை வைத்து எப்படியாவது தி.மு.கவை கழட்டி விட்டு தன்னோடு காங்கிரசு சேர்ந்து விடாதா என்று ஏங்குகிறார். மற்றபடி ஸ்பெக்டரம் ஊழலெல்லாம் அம்மணியின் பேராசைக்கு முன்னே கால் தூசு.

போலி கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை ஆ.இராசா விலக வேண்டும் – விலகியாச்சு. பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டி வேண்டும் – அதுவும் கொஞ்ச நாள் பிகு பண்ணி விட்டு காங்கிரசு அமைத்துக் கொடுத்து விடும். அந்தக் ‘கூட்டில்’ பா.ஜ.கவும் இருக்கும்; எல்லாம் ஒரே மலக்குட்டையில் முழுகி முத்தெடுத்த பன்றிகள் தானே… எனவே காங்கிரசுக்கு ஒரு பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டியை அமைத்து விடுவதனால் பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வேறு நடக்கிறது; எப்படியும் “சட்டம் தனது கடமையைச் செய்யும்” – அந்தக் ‘கடமை’ என்னவென்பது அரசியல் அணிசேர்க்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

ஆனால், இவர்கள் யாருமே தவறியும் கூட 2ஜி ஏலத்தை மீண்டும் நடத்த வேண்டும் என்றோ, அடிமாட்டு விலைக்கு வாங்கி லாபம் பார்த்தவர்களிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றோ, அந்த 1.76 லட்சம் கோடியை கைபற்ற வேண்டும் என்றோ சொல்ல வில்லை என்பது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. மட்டுமல்லாமல், இந்த ஊழலுக்கு மிக அடிப்படையாய் இருக்கும் உலகமயமாக்களைப் பற்றியோ, இப்படி வளங்கள் கொள்ளை போய் நாடு மீண்டும் காலனியாவதைப் பற்றியோ கூட எவரும் வாயைத் திறக்கவில்லை.

இப்போது ட்ராய் ஏதோ நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்திகளைக் கசியவிடுகிறார்கள்; அதுவும் எப்படியாம்…? ஒரு நிறுவனம் லைசென்சை எடுத்து விட்டு சேவை அளிப்பதில் தாமதப்படுத்தினால் மிகப் பெரிய அளவில் “அபராதம்” விதிக்கப்போகிறார்களாம். அந்த அபராத விபரம் என்ன தெரியுமா? லைசென்ஸை எடுத்த நிறுவனம் முதல் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10% சேவையை அளிக்கத் துவங்கியிருக்க வேண்டும். தாமதமாகும் முதல் 13 வாரங்களுக்கு 5 லட்சம் அபராதமாம், அடுத்த 13 வாரத்துக்கு 5 லட்சம் அபராதமாம்;  இப்படி லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப் போகிறார்களாம். ஸ்வான் என்கிற நிறுவனம் மட்டுமே லைசென்சை வாங்கி இந்தக் கையில் இருந்த அந்தக் கையில் மாற்றிய வகையில் 4200 கோடிகள் அடித்திருக்கிறார்கள்; அவர்களுக்கு இந்த அபராதமெல்லாம் சும்மா கொசு கடித்தது போலத் தான்.

இதற்கிடையே டிராயின் இந்த அறிக்கை வந்தவுடன் ஸ்வான் நிறுவனம் தான் லைசென்சு எடுத்த எல்லா சர்கிளிலும் சேவையை ஆரம்பித்து விட்டதாக அறிவித்து, அரசையும் மக்களையும் பார்த்து “பப்பி ஷேம்” பாடியுள்ளது தனிக் கதை. ( தகவல் http://in.biz.yahoo.com/101113/50/bawixo.html)

ஸ்பெக்டரம் ஊழல் இல்லையாம், தொழிலதிபர் பத்ரியின் ஆதங்கம்!

பொதுவாக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பதிவுலகில் நிலவும் மனப்போக்கிற்கு எதிராக கிழக்கு பதிப்பகத்தின் அதிபரான பத்ரி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் இந்த 1.76 லட்சம் கோடிகளும் இல்லாத பணம் என்றும்; அதற்குள் அது ராசாவின் ‘பைக்குள்’ போய் விட்டதைப் போல் மக்கள் பேசுவதாகவும் குறிப்பிடுகிறார். இதை தம்மால் ஒரு ஊழல் விவகாரமாகக் காண முடியவில்லை என்கிறார். ஆனால், ஸ்பெக்ட்ரம் என்பது பௌதீகமாக காண முடியாவிட்டாலும் அது ஒரு நாட்டின் இயற்கை வளம் தான். ஒரு சரக்கை திட்டமிட்டு சந்தை விலையை விட குறைத்து விற்பதால் ஏற்படும் நட்டத்தை ஊழல் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? அந்த 1.76 லட்சம் கோடிகளும் இல்லாத பணம் தான்; ஆனால் இருந்திருக்க வேண்டிய பணம்!

அடுத்து இந்தத் தொழிலில் ஈடுபடும் கம்பெனி, லைசென்ஸ் பெற்றதோடு நில்லாமல் அதை வைத்து லாபம் சம்பாதிக்க இருக்கும் நீண்ட ப்ராசஸ் பற்றி சொல்கிறார். என்னவோ மேற்படி கம்பெனிகளின் முதலாளிகள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுபட்டு லாபம் பார்ப்பது போல ஒரு பில்டப்பு அதில் தொனிக்கிறது – இதை ஏதோ ஒரு பெட்டிக்கடை சிறு முதலாளியின் உழைப்புக்கு ஈடானதொன்றாக அம்முதலாளிகளின் ‘உழைப்பை’ எடுத்துக் கொண்டு விடலாகாது.

இத்துறையில் எந்தவித முன் அனுபவமும் இன்றி, போலியான ஆவணங்களைக் கொடுத்தும், மோசடியான முறைகளைப் பின்பற்றியும் எடுத்த லைசன்ஸை சும்மா கைமாற்றிய வகையிலேயே அவர்கள் லாபத்தைப் பார்த்து விட்டார்கள். அடுத்து, செல்போன் சேவைகளின் மூலம் மக்களிடம் அடிக்கப் போகும் பிக்பாட்டின் மதிப்பெல்லாம் தனிக் கணக்கு.

பத்ரி, அவரது முந்தைய பதிவு ஒன்றில், “ஸ்பெக்ட்ரம் (அலைப் பரவல்) என்பது மிக முக்கியமான வளம். கனிம வளங்களைப் போல, நிலத்தைப் போல, இதுவும் மிக முக்கியமானது.” என்று குறிப்பிட்டு விட்டு, தொடர்ந்து – “இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் எப்பொதுமே கொள்கைக் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்.” – என்றும் சொல்கிறார்.

தேசத்தின் வளம் ஒன்றை பயன்படுத்துவதில் என்ன குழப்பம் இருக்க முடியும்?  அதைக் கொள்ளையடிப்பதில் உள்ள போட்டியும் மூர்க்கமும் பத்ரிக்கு குழப்பமாக தெரிகிறது. ஒன்று அதை நேரடியாக அரசுக் கட்டுப்பாடில் இருக்கும் நிறுவனம் பயன்படுத்த வேண்டும்; அல்லது அதை தனியாருக்கு விற்பதாக இருந்தால், அரசு நடத்தினால் கிடைக்கப் போகும் லாபத்தையோ அல்லது அதை வாங்கும் நிறுவனம் நடத்தினால் வரும் லாபத்தில் கணிசமான பங்கையோ கட்டணமாக நிர்ணயித்திருக்கலாமே? இப்படி அடிமாட்டு விலைக்கு; அதுவும் மோசடியான முறையில் விற்பதன் அடிப்படை என்ன?

இதற்கு மேல் பத்ரி கூறும் விசயமென்றால் செல்பேசி சேவை மலிவாக இருக்கவேண்டுமென்றால் அலைக்கற்றை ஒதுக்கீட்டை மலிவாகத்தான் விற்க முடியுமாம். ஆக மக்களுக்கு மலிவு சேவை கிடைப்பதை வைத்து பார்த்தால் இதில் ஊழல் என்று எதுவும் இல்லையாம். சரி, இருக்கட்டும்.

பத்ரி ஐயாவுக்கு புரியும் வித்த்தில் ஒரு சான்றைப் பார்ப்போம். தாமிரபரணியின் தண்ணீரை ஆயிரம் லிட்டருக்கு ஐந்து காசு என்ற வீதத்தில் அரசு கோகோ கோலாவிற்கு விற்கிறது என்று வைப்போம். அதை கோகோ கோலா மினரல் வாட்டராக பாட்டிலில் அடைத்து லிட்டருக்கு பத்து ரூபாய்க்கு விற்கிறது என்றால், பத்ரி என்ன கூறுவார்? “மக்களுக்கு குடிநீர் அதுவும் தரமான தரத்தில் மலிவாக கிடைக்க வேண்டுமென்றால் கோகோ கோலாவுக்கு அரசு மலிவாக தண்ணீர் விற்க வேண்டும். அது ஊழல் இல்லை.” பத்ரி அண்ணே சரிதானே?

முதலாளிகளின் மோசடி இலாபம் என்ற கொள்ளையடிக்கப்பட்ட பொருள் பத்ரியின் கண்ணுக்கு மட்டும் மக்களுக்கு கிடைக்கும் மலிவான சேவை என்று தெரிவதற்கு காரணம் அண்ணன் பத்ரி சக முதலாளியாக இருந்து ஒரு முதலாளியின் ‘துயரத்தை’ பகிர்ந்து கொள்கிறார் என்பதே. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட ராசாதான் பேசப்படுகிறாரே ஒழிய அவருக்கும் அல்லா கட்சிகளுக்கும் கட்டிங் வெட்டிய முதலாளிகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த ஊழல் குறித்து இதுவரை இந்திய முதலாளிகளின் சங்கங்கள் எதுவும் மூச்சுக் கூடவிடவில்லை.

மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மக்கள் போராடும் போதே ஊழல் பெருச்சாளிகளை வேட்டையாட முடியும்!

ஸ்பெக்ட்ரம் ஊழலின் அடிப்படை இந்த அரசின் அமைப்பில் இருக்கிறது. இந்த அரசியல் அமைப்பே தேச நலனையும் வளங்களையும் பன்னாட்டுக் கொள்ளைக்காரர்கள் கொள்ளையிட்டுச் செல்ல உதவும் தரகு வர்க்கத்தால் நிர்வகிக்கப் படுகிறது. அதற்கு காங்கிரசும், பாரதீய ஜனதாவும் இன்ன பிற கட்சிகளும் அடியாள் வேலை செய்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இங்கே ஒரு வைசிராய் இருந்தார் – அவருக்கு பொன்னிற முடியும் வெள்ளைத் தோலும் இருந்தது. இப்போது இருக்கும் வைசிராய்களுக்கு அந்த அடையாளங்கள் இல்லை. அந்த ஒரு வித்தியாசத்தைத் தவிர்த்து வேறெந்த வித்தியாசமும் இல்லை. இதைத் தான் மறைமுக காலனியாதிக்கம் – மறுகாலனியாதிக்கம் – என்கிறோம்.

வல்லரசு நாடுகளுக்கு இந்தியாவை கூறு போட்டு விற்கும் இந்த அரசமைப்பைக்கும் அதன் அடியாட் படைக்கும் எதிராக நாட்டு மக்கள் தொடுக்கும் போராட்டம் மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும். அந்த களப்பணியில் இணைவது மட்டுமே இந்த ஊழலுக்கு நாம் காட்டும் உண்மையான எதிர்ப்பாக இருக்க முடியும்.

________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்

கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்

நீதிபதி கோவிந்தராஜன் கமிட்டி தனியார் மெட்ரிக் பள்ளிகளுக்குப் பரிந்துரை செய்திருந்த கல்விக் கட்டணத்தின் மீது உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் நீதிபதி விதித்திருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்ற ஆயம் தீர்ப்பளித்திருக்கிறது. இதன்படி பார்த்தால், தமிழகத்திலுள்ள 10,000- க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகள் தற்போதைக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்திற்கு மேல் ஒரு பைசாகூடக் கூடுதலாக வசூலிக்கக் கூடாது என அவ்வாயம் நேர்மறையான தீர்ப்பை அளித்திருக்க வேண்டும். ஆனால், உயர் நீதிமன்றமோ பாம்பும் சாகக் கூடாது; தடியும் நோகக்கூடாது என்ற உத்திப்படித் தனது தீர்ப்பை அளித்திருக்கிறது.

6,400 தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளன. இம்மேல்முறையீடுகளின் மீதான முடிவை நவம்பருக்குள் எடுக்கும்படி கோவிந்தராஜன் கமிட்டிக்கு உத்தரவிட்டிருக்கும் உயர் நீதிமன்றம், அதுவரை கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பொறுத்துக் கொள்ளுங்கள் என இந்த 6,400 பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கவில்லை.

இதற்கு மாறாக, அந்த 6,400 தனியார் பள்ளிகளும் கடந்த கல்வியாண்டில் வசூலித்த கட்டணத்தையே நடப்புக் கல்வியாண்டிலும் வசூலித்துக் கொள்ளலாம் என அப்பள்ளிகளுக்குச் சலுகை அளிக்கப்பட்டிருக்கிறது. இப்படி வசூலிக்கப்படும் கட்டணம் கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டணத்தைவிட அதிகமாக இருந்தால் – குறைவாக எப்படியிருக்கும்? – அக்கூடுதல் தொகையைத் தனியாக வங்கிகளில் போட்டு வைக்க வேண்டும் என உத்திரவிட்டுள்ளது, உயர் நீதிமன்றம்.

கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யாத 4,000 பள்ளிகளும்கூட அக்கமிட்டி நிர்ணயம் செய்திருக்கும் கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என இத்தீர்ப்புக் கட்டாயப்படுத்தவில்லை. மாறாக, அப்பள்ளிகளும் கூடுதலாக வசூலித்த கட்டணத்தைத் தனியாக வங்கிகளில் போட்டு வைக்க வேண்டும் என இத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவிந்தராஜன் கமிட்டி ஒரு சிவில் நீதிமன்றத்திற்குரிய அதிகாரம் கொண்டதெனக் கூறப்படுகிறது. இக்கமிட்டியின் விதிகளின்படி தான் நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூல் வேட்டை நடத்தும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம்; அப்பள்ளிகளின் முதலாளிகளுக்கு ஏழாண்டு வரை சிறை தண்டனை அளிக்கலாம்.

வெளிப்படையாகவே கட்டணக் கொள்ளை நடத்தி வரும் கல்வி வியாபாரிகளுக்கு இத்தண்டனையை அளிக்க உயர் நீதிமன்றத்திற்கு மனது வரவில்லை. அதே சமயம் வசூலித்த கூடுதல் கட்டணத்தைப் பெற்றோர்களிடம் திருப்பிக் கொடுக்கச் சொல்லி உத்தரவிடவும் நீதிமன்றம் விரும்பவில்லை. நீதிமன்றத்தின் இந்தக் கருணை முடிந்த அளவிற்குக் கட்டணக் கொள்ளையை நடத்திக் கொள்ளும் துணிச்சலைப் பல பள்ளிகளுக்கு வழங்கிவிட்டது.

இவ்வழக்கில் உயர் நீதிமன்றம் நவம்பரில் இறுதித் தீர்ப்பு வழங்கிய பிறகு, பள்ளிகள் வசூலித்த கட்டணம் கூடுதலாக இருந்தால், அதனைப் பள்ளிகள் பெற்றோரிடம் திருப்பி வழங்கிவிடும் என நீதிபதிகள் நம்மை நம்பச் சொல்கிறார்கள். யானை வாயில் போன கரும்பு திரும்பி வருவது சாத்தியமென்றால், இதனையும் நாம் நம்பலாம்.

கூடுதலாக வசூலித்த கட்டணத்தைத் தனியாக வங்கிகளில் போட்டுவைக்க வேண்டும் என்ற பெயரில், கல்வி வியாபாரிகள் இக்கொள்ளையைப் புறக்கடை வழியாக அனுபவிக்கும் உரிமையை அளித்திருக்கிறது, உயர் நீதிமன்ற ஆயம். உயர் நீதிமன்றத்தின் இந்தக் கபடத்தனத்தையும் கூட்டுக் களவாணித்தனத்தையும் எதிர்த்துப் போராட வேண்டிய வேளையில் பெற்றோர்களோ உயர் நீதிமன்றம் தங்களின் வயிற்றில் பாலை வார்த்திருப்பதாகப் பிதற்றிக் கொண்டுள்ளனர்.

கொள்ளையடிக்கும் தனியார் பள்ளிகள் தடவிக் கொடுக்கும் உயர் நீதிமன்றம்

கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்காகத் தமிழ்நாடு பள்ளிக் கட்டண ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவந்து, அதன் அடிப்படையில் கோவிந்தராஜன் கமிட்டியை நிறுவியிருந்தாலும், தமிழக அரசின் நடைமுறை இப்பிரச்சினையில், “நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீ அழுகிற மாதிரி அழு” என்பதாகத்தான் அமைந்துள்ளது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்த தமிழக அரசு, கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டண விகிதத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மிகவும் தாமதமாகத்தான் மேல்முறையீடு செய்தது.

கோவிந்தராஜன் கமிட்டி நிரணயம் செய்த கட்டணங்களை உடனடியாக வெளியிடாமல் அமுக்கி வைத்திருந்ததன் மூலம், தனியார் பள்ளிகள் தமது விருப்பம்போல கட்டணக் கொள்ளையை நடத்தத் துணை நின்றது, தமிழக அரசு.

கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயம் செய்த கட்டண விகிதத்தை மூன்றாண்டுகளுக்கு மாற்ற முடியாது என அதனின் விதி கூறுகிறது. ஆனால், இக்கட்டண விகிதத்தை எதிர்த்துக் கூச்சல் போட்ட கல்வி வியாபாரிகள் முதலமைச்சரைச் சந்திக்கிறார்கள்; அங்கு என்ன பேரம் நடந்ததோ, உடனடியாக அவர்களை மேல்முறையீடு செய்ய அனுமதிக்கிறது, தமிழக அரசு; அம்மேல்முறையீட்டின் மீதான முடிவை நவம்பருக்குள் எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இப்படியாக அவ்விதி செல்லாக்காசாக்கப்பட்டது.

நடப்புக் கல்வியாண்டு தொடங்கும் முன்பே தனியார் பள்ளிகள் கட்டணக் கொள்ளையைத் தொடங்கி விட்டன என்பதும், கூடுதலாக வசூலிக்கும் பணத்திற்கு பள்ளிகள் எந்த ரசீதும் தருவதில்லை என்பதும், கூடுதல் கட்டணத்தைச் செலுத்த முடியாத மாணவர்களைத் தனியார் பள்ளிகள் மாற்றுச் சான்றிதழ் கொடுத்துச் சட்டவிரோதமாகப் பள்ளியிலிருந்து நீக்கி விடுகின்றன என்பதும் தமிழக அரசின் கண் முன்னேதான் நடந்து வருகின்றன. ஆனால், தமிழக அரசோ பள்ளிகள் மீது பெற்றோர் எந்தப் புகாரையும் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தைக் கூறியே, தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.

தமிழக அரசின் இந்த அனுசரணையான போக்கு ஒருபுறமிருக்க, தமிழகத்திலுள்ள பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகள் சிறுபான்மையினரின் பெயராலும், டிரஸ்டுகளின் பெயராலும்தான் நடத்தப்படுகின்றன. இப்படிச் செயல்படும் பள்ளிகள் தங்களின் பணத்தேவைக்குப் புரவலர்களைத்தான் அணுக வேண்டுமேயொழிய, கட்டணம் என்ற பெயரில் பெற்றோர்களைக் கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது. ஆனால், தமிழக அரசு அமைத்த கோவிந்தராஜன் கமிட்டியோ டிரஸ்டுகளின் பெயரால் நடத்தப்படும் பள்ளிகளும் ஆண்டொன்றுக்குக் குறைந்தபட்சம் 15 சதவீதம் இலாபத்தைப் பெறும்படிதான் கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்திருக்கிறது. மேலும், பேருந்துக் கட்டணம் போன்ற பிற வழிகளிலும் பெற்றோர்களைக் கொள்ளையடிப்பதற்கும் அப்பள்ளிகளுக்கு அனுமதி அளித்திருக் கிறது.

விபச்சாரத்தை ஒழிக்க முடியாது; அதனைச் சட்டபூர்வமாக்குவதுதான் மாற்று வழி என்பது போல, தனியார் பள்ளிகள் நடத்திவந்த கட்டணக் கொள்ளை யைச் சட்டபூர்வமாக்கியதுதான் தமிழக அரசும் கோவிந் தராஜன் கமிட்டியும் செய்திருக்கும் ‘சாதனை’.

கல்வி தனியார்மயமாக்கப்படுவதை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் இக்கட்டணக் கொள்ளையை ஒழித்துக்கட்ட முடியும்.

ஆனால், ஆங்கிலக் கல்வி மோகத்தால் தனியார் மெட்ரிக் பள்ளிகளைப் புறக்கணிக்க விரும்பாத பெற்றோர்கள், அக்கல்வி வியாபாரிகள் தர்மகர்த்தாக்களைப் போல நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படி அவர்கள் நடக்காதபட்சத்தில் அரசும் நீதிமன்றமும் தலையிட்டு அவர்களுக்குக் கடிவாளம் போட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இது, ஆடு ஓநாயிடம் நீதியைக் கேட்கும் புத்திசாலித்தனம் போன்றது.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

விடுதலைப் புலிகள் மீதான தடை நீட்டிப்பு: பாசிச ஒடுக்குமுறைக்கான இன்னுமொரு ஆயுதம் !

ராஜீவ் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்தோடு கடந்த 1992-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பின்னர், மத்திய அரசு இத்தடையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ந்து நீட்டித்து வருகிறது. கடந்த மே மாதத்தில் பிறப்பிக்கப்பட்ட இத்தடை நீட்டிப்பு உத்தரவு, நடுவர் மன்றத்தில் ஆறு மாதங்களுக்குள் உறுதி செய்யப்பட வேண்டும். இச்சடங்கின்படி, தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமஜித் சென் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இலங்கை அரசே புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், இங்கு மீண்டும் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க எந்த நியாயமுமில்லை. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில், நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதாக அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணத்தில் கூட்டம் நடத்தப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இதை அமெரிக்க அரசு தடுக்கவோ அவ்வமைப்பின் செயல்பாடுகளை முடக்கவோ இல்லை. ஆனால், அவ்வமைப்பையும் அபாயகரமானதாகச் சித்தரிக்கிறது, இந்தியா.

பிளவுவாத, பிரிவினைவாத, பயங்கரவாத, தீவிரவாதப் பீதியூட்டி அரசியல் ஆதாயமடைவதே பார்ப்பன பாசிச சக்திகளின் நிரந்தரக் கொள்கையாக உள்ளது. தேவையானபோது அரசியல் எதிரிகள் மீது கருப்புச் சட்டங்களை ஏவிவிட்டுப் பழிவாங்குவதே அவற்றின் நடைமுறையாக உள்ளது.

தமிழகத்தில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை தடையை நீட்டிப்பதற்கான முகாந்திரங்களை உருவாக்கும் நோக்கத்தில் புலி ஆதரவாளர்கள் மீது பொய்வழக்குகள் போட்டு, முதல் தகவல் அறிக்கை தயாரித்து அதைக் காட்டியே பயங்கரவாத அபாயமாகச் சித்தரிப்பதை உளவுத்துறை போலீசார் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். புலி ஆதரவாளர்கள் மீது போடப்பட்டுள்ள எந்த வழக்கும் எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படவில்லை. புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதற்கு ராஜீவ் கொலை மட்டுமே ஒரே காரணமாகக் காட்டப்படுகிறதே தவிர, தகுந்த தடயங்கள் – ஆதாரங்கள் இதுவரை முன்வைக்கப்படவுமில்லை.

இத்தடை விதிக்கப்பட்டதிலிருந்து ஈழம் என்று பேசினாலே குற்றமாகி, தடா – பொடா சட்டங்களின் மூலம் தமிழனின் வாயை மூடியது இந்திய அரசு. ஈழ அகதிகள் அனைவரும் புலி ஆதரவாளர்களாகச் சித்தரிக்கப்பட்டு வதைக்கப்பட்டனர். பொடா சட்டத்தின் கீழ் சிறையிடப்பட்ட பழ.நெடுமாறன்  உள்ளிட்டு, ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும்  இயக்கத்தினர் அனைவரும் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு வருகின்றனர். பொதுகூட்டம் நடத்தக்கூட  ஈழ விடுதலை ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அனுமதி பெறவேண்டியுள்ளது. 19 ஆண்டுகளாகியும் ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள நளினி, இன்னமும் விடுதலை செய்யப்படாத கொடுமை தொடர்கிறது.

காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய தேசிய இன உரிமைப் போராட்டங்களை மட்டுமின்றி, இலங்கை, நேபாளம், பூடான் முதலான அண்டை நாடுகளிலும் தலையிட்டு விடுதலைப் போராட்டங்களையும் இயக்கங்களையும் ஒடுக்கி வரும்  தெற்காசியாவின் பிற்போக்கு எதிர்ப்புரட்சி கோட்டையான இந்திய அரசு, இந்தியத் தமிழினத்துக்கும் ஈழத் தமிழினத்துக்கும் எதிரிதான். ஆனால், நெடுமாறன் முதலான தமிழினவாதிகள் இதை மறுத்து, இலங்கையின் இனவெறி பாசிச ராஜபக்சே அரசு சீனாவின் பக்கம் சாவதால் இந்தியாவுக்கு ஆபத்து என்றும்,  சில மலையாள அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு காங்கிரசு ஆட்சியாளர்கள் தவறான முடிவுகள் எடுப்பதாகவும் கூறி இந்தியாவைத் தாஜா செய்வதையே நடைமுறையாகக் கொண்டுள்ளனர்.  எதிரி யார், நண்பன் யார் என்பதை வரையறுப்பது ஓர் அரசியல் இயக்கத்துக்கு அடிப்படையான – அவசியமான உயிர்நாடியான விசயம். தமிழினவாதிகளின்  எல்லா தவறுகளும் இங்கிருந்துதான் தொடங்குகின்றன.

இச்சந்தர்ப்பவாதப் போக்குகளை அம்பலப்படுத்தி, ஈழ விடுதலை ஆதரவாளர்களையும் புரட்சிகர-ஜனநாயக இயக்கங்களையும் ஒடுக்குவதற்கான இன்னுமொரு ஆயுதமாகவே பயன்படுத்தப்படும் இத்தடை நீட்டிப்புக்கு எதிராக தமிழக மக்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

டாடா குழுமத்தின் கோரமுகம் -1

ரத்தன்_டாடா
ரத்தன் டாடா
ரத்தன்_டாடா
ரத்தன் டாடா

டாடா குழுமம், ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான தேசங்கடந்த தொழிற்கழகம். 2005-ஆம் ஆண்டு கணக்குப்படி 76,500 கோடி ரூபாய் சொத்துக்களைக் கொண்டது. நாட்டில் அக்குழுமத்துக்கு அநியாயத்துக்கு ஒரு நல்ல பெயர் உள்ளது. ஜார்கண்டிலும் ஒரிசாவிலும் பெரும் அளவிலான பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டதன் மூலமும், ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமும் கிழக்கிந்தியக் கம்பெனியுடனும் சந்தர்ப்பவாத – சமரசத் தொழில் கூட்டுக்கள் போட்டுக் கொண்டதன் மூலமும் டாடா குழுமத்தின் தலைமைக் கம்பெனியான டாடா எஃகு நிறுவனம் செல்வங்களைக் குவித்தது.

தாராளமயம் புகுத்தப்பட்டதற்கு முன்புவரை, லைசென்சு (தொழில் துறையின் மீது உரிமக் கட்டுப்பாடு) ஆட்சியில் முடிசூடா மன்னர்களாக டாடாக்கள் இருந்தார்கள். வாரிக் கொடுக்கும் தாராள வள்ளல் தன்மைகள் மூலம் மனித உரிமை மீறல், தொழிலாளர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் முறைகேடுகள் ஆகிய அவர்களின் திரைமறைவுச் செயல்களை மூடி மறைத்து வந்தார்கள். உலகமயமாக்கச் சூழலில் இத்தகைய உண்மைகள் சாக்கடைக் கழிவுகளாக வெளிப்படத் தொடங்கியபோது, அவர்களின் விசுவாச ஊழியர்கள் உட்பட மேலும் மேலும் கூடுதலான மக்கள் டாடாக்களைப் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்.

தேசத்தைக் கட்டியெழுப்புவது, கூட்டுப் பங்கு நிறுவனத்தின் சமூகப் பொறுப்புகள் ஆகிய டாடாவின் பசப்பு வார்த்தைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள். டாடா கம்பெனிகளின் சொந்தப் பங்குதாரர்கள் தவிர, வேறு யாருடைய நலனுக்கும் பொறுப்பானவர்களாக அவர்கள் இல்லை என்பதையும் அறிந்தார்கள். டாடா குழுமத்தின் அருமை-பெருமைகள் எல்லாம் அவர்களின் வெற்றிகரமான மக்கள் தொடர்புப் பொதுத்திட்டத்தின் விளைவுதானே தவிர, உண்மையைப் பிரதிபலிப்பவை அல்ல என்று பின்வரும் தொகுப்புச் செய்திகள் காட்டுகின்றன.

================

கொலைகார கார்பைடுக்கு டாடாவின் உதவி

1984 டிசம்பரில் போபால் நச்சுவாயு பேரழிவு நிகழ்வதற்குக் காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டபோது, அதைக் கண்டித்த ஒரு சில இந்தியர்களில் ஒருவராக ஜே.ஆர்.டி.டாடா இருந்தார். செலவுகளைக் குறைப்பதற்காகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீக்கியதாலும், நச்சு ஆலையில் சோதித்தறியப்படாத தொழில்நுட்பத்தைப் புகுத்தியதாலும் நிகழ்ந்த பேரழிவுக்கு ஆண்டர்சன் நேரடிப் பொறுப்பாளராகிறார். முக்கியமாக, போபால் நச்சு ஆலையின் கழிவு மற்றும் பயன்பாட்டுச் சாதனங்கள் டாடா பொறியியல் கம்பெனி (Tata Consulting Engineers) யால் கட்டியமைக்கப்பட்டவை.

போபாலில் உள்ள நச்சு ஆலையில் யூனியன் கார்பைடு கம்பெனி விட்டுச் சென்றுள்ள நச்சுக் கழிவுகளை அகற்றும் தர்ம காரியத்துக்குத் தலைமையேற்று யூனியன் கார்பைடு நிறுவனத்தைக் காப்பாற்றுவதற்கும், அதன் புதிய சொந்தக்காரரான டௌ கெமிக்கல்சின் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் 2006 நவம்பரில் ரத்தன் டாடா முன் வந்தார். அக்கழிவுகளை அகற்றுவது டௌ கெமிக்கல்சின் கடப்பாடு என்றும், அதற்காக அந்த அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம் 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசு அப்போது வாதாடிக் கொண்டிருந்தது. டௌ கெமிக்கல்ஸ் கடப்பாடுடையது என்கிற சட்டப்படியான முயற்சியைப் பலவீனப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதுதான் டாடாவின் தர்மகாரிய முன் வருகை. மேலும், இந்த முன்வரவின் நோக்கம் இந்தியாவில் டௌ கெமிக்கல்சின் முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கமுடையது என்பதும் ஒப்புக் கொள்ளப்பட்டதுதான். போபால் நச்சுவாயு வெளியேற்றத்துக்குப் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான இயக்கத்தால் இந்தியாவில் டௌ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தொழில் திட்டங்கள் நிலைகுலைந்து போகும், அதன் எந்தவொரு தொழில் முனைப்பும் அதிகரித்த சிக்கலுக்குள்ளாகும் என்ற பயத்தின் காரணமாக பெருமளவிலான முதலீடுகளை டௌ நிறுவனம் தானே மட்டுப்படுத்திக் கொண்டிருந்தது.

ஜனநாயகத்துக்கு மாறான கொல்லைப்புற அதிகாரம்

இந்தியக் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் டாடாவின் கட்டளை:

2005-ஆம் ஆண்டு, மன்மோகன் சிங் அரசாங்கம் மற்றும் புஷ் நிர்வாகம் ஆகியவற்றின் கார்ப்போரேட் (கூட்டுப் பங்கு) கம்பெனிகளிடம் நட்புப் பாராட்டும் முனைப்புகளால் தூண்டுதல் பெற்று, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழில்நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரிகளில் தெரிந்தெடுக்கப்பட்ட ஒரு கும்பலைக் கொண்ட இந்திய-அமெரிக்கத் தலைமை நிர்வாக அதிகாரிகள் பேரவை என்ற அமைப்பை அமெரிக்கா மற்றும் இந்தியத் தொழில் – வர்த்தக நிறுவனங்கள் உருவாக்கின. “தொழில் வர்த்தகத் துறையில் இரு நாடுகளிடையே அதிகரிக்கும் அளவிலான பங்காளிகளாவது மற்றும் கூட்டுறவுக்கான ஒரு பாதை வரைபடத்தை வகுப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டதாக அந்தப் பேரவை இருக்கும்” என்று பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்களுக்கு மேலும் சாதகமான வகையில் தற்போதைய சட்டத்தைத் திருத்தியும், புதிய கொள்கைகளை நிறுவியும், புதிய சட்டங்களை வகுப்பதற்கான பல பரிந்துரைகளை, ரத்தன் டாடாவை இணைத் தலைவராகக் கொண்ட அந்தப் பேரவை செய்துள்ளது. பலவீனமான தொழிலாளர் சட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வசதிகள், பட்ட மேற்படிப்புக்குக் கூடுதலான முனைப்பு, நட்டஈடு கடப்பாடுச் சட்டங்களைத் தளர்த்துவது, சர்ச்சைக்குரிய வழக்குகளை-குறிப்பாக போபால் பேரழிவு போன்ற நிகழ்வுகளை ஒட்டி எழும் வழக்குகளை விரைந்து முடிப்பது ஆகியவற்றைப் பேரவை முன்தள்ளுகிறது. இந்திய மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் உச்சமட்டத்திலான ஒப்பிசைவு காரணமாக இப்போது சட்டமியற்றும் அதிகாரம் கொண்ட, நாடாளுமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்டதாகப் பேரவை மாறியுள்ளது.

கார்ப்போரேட் சர்வாதிகாரப்பிடி

இந்தியாவிலுள்ள ஒரே ஒரு தனியார் நகரை டாடாக்கள் சொந்தமாகக் கொண்டு நடத்துகிறார்கள். 1904-ஆம் ஆண்டு ஜாம்சேத்ஜி டாடா நிறுவிய ஜாம்சேத்பூர் என்ற எஃகு நகர், ஒரு நகராட்சியோ, தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு எந்த உள்ளூராட்சியோ இல்லாத ஒரு சில இந்திய நகரங்களில் ஒன்று. ஆறு லட்சம் மக்களைக் கொண்ட அந்த நகரை டாடா எஃகு நிறுவனத்துக்குச் சொந்தமான ஜாம்சேத்பூர் பயன்பாடுகள் மற்றும் சேவைகள் கம்பெனிதான் நிர்வகிக்கிறது. இந்திய அரசியல் சட்ட அமைப்பின் 74-ஆவது திருத்தம், நகராட்சி போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதோடு, அம்மாதிரியான உள்ளூராட்சிகளுக்குக் காலக்கிரமப்படி தேர்தல்கள் நடத்துவதற்கான சட்டங்களை இயற்றுமாறு எல்லா மாநிலங்களையும் வேண்டுகிறது. ஆனால், அம்மாதிரி ஜனநாயகபூர்வ உள்ளூராட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் டாடாவின் கட்டுப்பாட்டிலுள்ள நகரை மாற்றுவதற்கு டாடா எஃகு நிறுவனம் கடும் எதிர்ப்பைக் காட்டியது. ஒரு ஜனநாயக அமைப்பைவிட டாடா எஃகு நிறுவனம் போன்றதொரு பரோபகார ஆட்சியின் கீழ் அந்நகரம் இருப்பதுதான் அதிகப்படியாக விரும்பத்தக்கது என்றார்கள். “ஒரு நூறாண்டு காலம் வெற்றிகரமாக இருந்துவரும் மாதிரிக்கு மாற்றாக, எவ்வளவுதான் உயர்ந்த நோக்கமுடையதாக இருந்தாலும் இன்னமும் சோதித்தறியப்படாத வேறொரு மாதிரியைக் கொண்டுவர நீங்கள் விரும்புவீர்களா?” என்று கேட்கிறார், டாடா எஃகு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பி.முத்துராமன்.

இராணுவ சர்வாதிகார கும்பலுடன் – தொழில் வர்த்தகக் கூட்டு

அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்காக உலகே வெறுத்து ஒதுக்கிய மியன்மார் இராணுவ சர்வாதிகார அரசாங்கம் இந்தியாவில் ஒரு நண்பனைக் கொண்டிருக்கிறது-அவன்தான் டாடா. ஜனநாயக சக்திகளுக்கு வழிவிட வேண்டுமென்று மியன்மார் இராணுவ அரசாங்கத்தை நிர்பந்திக்கும் ஒரு முயற்சியாக, பெப்சி கம்பெனி போன்ற பல பன்னாட்டுத் தொழில்கழகங்கள், அந்நாட்டில் இருந்து வெளியேறிய ஒரு சமயத்தில், அந்த ஒடுக்குமுறை ஆட்சிக்கு கனரக மற்றும் மோட்டார் வாகனங்கள் வழங்குவதாக டாடா மோட்டார் நிறுவனம் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்கிறது. பரவலான பாலியல் வன்முறை மற்றும் கொள்ளையில் ஈடுபடுவதாகவும், மியன்மாரின் செழிப்பான இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்குத் தேவையான கட்டுமானப் பணிகளில் கட்டாயப்படுத்தித் தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாகவும், மியன்மார் சர்வாதிகார இராணுவக் கும்பல் குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கிறது. இரண்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக இராணுவ சர்வாதிகார கும்பலுக்கு எதிராகப் பழங்குடிக் குழுக்கள் கடுமையான வன்முறைப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். (தற்போது விடுவிக்கப்பட்டுள்ள – வினவு) நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூகி, 1989 முதல் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட இராணுவ பாசிச சர்வாதிகாரக் கும்பலுடன்தான் டாடாக்கள் தொழில் வர்த்தகக் கூட்டுச் சேர்ந்துள்ளனர்.

பழங்குடி மக்களின் நிலங்களை களங்கப்படுத்தும் டாடாக்கள்

பூமியைத் தீக்கிரையாக்கும் தந்திரங்கள்

டாடா எஃகு நகரம் உருவாக்கப்பட்ட இடம், சில வளமிக்க இரும்புக் கனிமங்களின் குவியல்களைப் பெற்றுள்ள, அடர்ந்த காட்டு நிலங்களுக்கு மிக அருகாமையில் உள்ளது. அந்த நிலங்களுக்கு முன்போ, இப்போதோ உரிமைப் பட்டா, பத்திரங்களைப் பழங்குடியின மக்கள் பெற்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் சில கிராமங்களை உள்ளடக்கிய 364 ஏக்கர் நிலங்களை 46.32 கோடி ரூபாய்க்கு டாடா கம்பெனி விலைக்கு வாங்கியது. நோவா முடியில் உள்ள இரும்புக் கனிமச் சுரங்கத்துக்காகவும், ஜாம்சேத்பூர் நகரியம் அமைக்கவும் ஆங்கிலேயர்களது கட்டுப்பாட்டில் இருந்த இந்திய அரசாங்கம் டாடாக்களுக்கு நிலங்களைக் கையளித்தபோது பழங்குடி மக்கள் அகற்றப்பட்டார்கள்.

1907-ஆம் ஆண்டு இரும்புக் கனிமங்களைத் தோண்டி எடுப்பதற்காக நோவாமுடி பகுதியை டாடாக்கள் கையகப்படுத்தியபோது, உள்ளூர்ப் பழங்குடி மக்கள் இரும்புச் சுரங்கங்களில் வேலை செய்ய மறுத்தனர். அவர்களை அடக்கித் தம் வழிக்குக் கொண்டு வருவதற்காக குசும்காஜ் (கோசம்) என்ற அரக்கு மரங்களை டாடாக்கள் வெட்டிச் சாத்தார்கள். இந்த மரங்களில் கூடு கட்டும் அரக்குப் புழுக்களிடமிருந்து அரக்கு சேகரிப்பதை பழங்குடி மக்கள் தமது வாழ்வாதாரமாகக் கொண்டு, இம்மரங்களைத்தான் நம்பி இருந்தனர். நம்பிக்கை இழந்ததனாலும், வாழ்க்கைத் தேவைகளுக்கு வேறு வழியில்லாமல் போனதாலும் பழங்குடி மக்கள் மேலும் மேலும் அதிகமாக டாடாக்களுக்காக இரும்புக் கனிமங்களைத் தோண்டத் தொடங்கினர். 2000-ஆம் ஆண்டு பூமியைத் தோண்டும் புல்டோசர் இயந்திரத்தைக் கொண்டு அப்பகுதியிலிருந்த ஒரு நீரூற்றை டாடாக்கள் அழித்து விட்டார்கள்; அந்த நீரூற்றுதான் டாடாக்களது நிலக்கரி சுரங்கத்தின் விளிம்பில் உள்ள 22 குடிகளைக் கொண்ட குக்கிராமமான அகாடிய தோலாவின் பழங்குடி மக்களுடைய ஒரே நீராதாரமாக இருந்தது. அவர்களுடைய நீராதாரமாக விளங்கியதோடு, அந்த நீரூற்று அருகிலுள்ள கிராமத்தவர்களுக்கான சமூக உறவாடுதலுக்கான மையமாகவும் இருந்தது.

குரோமிய நச்சு

சுகிந்தா பள்ளத்தாக்கை உச்ச அளவுக்கு மாசுபடுத்தப்பட்ட பகுதியாக அங்குள்ள குரோமைட் சுரங்கங்கள் ஆக்கிவிட்டன என்று இந்திய அரசாங்கத்தின் பொதுத் தணிக்கை அதிகாரி தனிச்சிறப்பாகக் குறிப்பிடுகிறார் என்று ‘டவுன் டு எர்த்’ என்ற பத்திரிக்கை எழுதியுள்ளது. அந்தப் பள்ளத்தாக்கில் மிகப் பெரிய அளவுக்கு குரோமைட் வெட்டி எடுக்கும் நிறுவனங்களில் ஒன்று டாடா கம்பெனியாகும். அளவுக்கு அதிகமாகக் குவித்து வைத்துள்ள கிடங்குகளில் இருந்து கசியும் ஹெக்சாவேலண்ட் குரோமியம் என்ற நச்சு இரசாயனத்தால், அபாய அளவுக்கு மேல் மாசுபட்ட தோம்சாலா ஆறு மற்றும் 30 ஓடைகள் இப்பள்ளத்தாக்கு வழியாக ஓடுகின்றன. சுவாசக் குழாயில் எரிச்சல், மூக்குக் குழலில் புண், எரிச்சலுடன் தோல் புண், மூச்சுத் திணறல், நிமோனியா காச்சல் ஆகியவை ஹெக்சாவேலண்ட் குரோமியத்தால் ஏற்படுகின்றன. ஒரிசா சுற்றுச்சூழல் திட்டத்தின் கீழ் நார்வே அரசாங்க நிதி உதவியுடன் நடந்த ஆய்வுப்படி அப்பகுதியிலிருந்து ஒரு கிலோமீட்டருக்குள் வாழும் 25 சதவீத மக்கள் இந்த மாசுபடுதலால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புலிகளின் புகலிடத்தில் அமைந்துள்ள சொகுசு விடுதி

1990-களில், கர்நாடகா மாநிலம்-நகராஹோல் தேசியப் பூங்கா மற்றும் புலிகளின் புகலிடம் அமைந்துள்ள பகுதியின் மத்தியில் ‘கேட்வே டஸ்கர் லாட்ஜ்’ என்ற சொகுசு விடுதி கட்டுவதற்காக டாடாவுக்குச் சொந்தமான தாஜ் ஓட்டல்கள் குழுமம் ஒரு பகுதி நிலத்தை குத்தகைக்கு எடுத்தது. ஒரு வனமுகாம் என்ற முன்மொழிதலைக் காட்டி, ஆனால் முழுமையான சுற்றுலா வசதிகள், மின்உற்பத்திக்கான டீசல் ஜெனரேட்டர் மற்றும் கலந்துரையாடல்களுக்கான அறைகள் ஆகியவற்றுடன் கூடிய ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிக்காகத் திட்டமிடப்பட்டது. ஒரு தேசியப் பூங்காவிற்குள் எந்த நடவடிக்கைக்கும் மிகவும் கண்டிப்பான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தபோதும், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறப்படவே இல்லை. இத்திட்டத்துக்குப் பெருமளவு பழங்குடி மக்களின் எதிர்ப்பு மற்றும் அதற்கு எதிரான சட்டமுறைப்பாடு காரணமாக இறுதியில், புலிகளின் புகலிடத்திலிருந்து டாடாக்கள் பின்வாங்கும்படி நிர்பந்திக்கப்பட்டனர்.

டாடாக்களின் வன்முறைகளும் படுகொலைகளும்:

கலிங்கா நகர் நந்திகிராமம்

குவா படுகொலைகள்

பழங்குடி மக்களுக்கு எதிரான அரசு வன்முறை, குறிப்பாக கிழக்கு இந்தியாவின் சுரங்கத் தொழில் மாவட்டங்களில் சர்வசாதாரணமானது. நோவாமுடியில் டாடாவின் விமான நிலையம் ஒன்றுக்கு இடமளிப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. 1980 செப்டம்பர் 7 அன்று, நிலத்தைப் பறி கொடுத்த கிராமத்தவர்கள், டாடா எஃகு நிறுவனத் தலைவர் ரூசி மோடியை எதிர் கொண்டு மனு அளிப்பதற்காக விமான நிலையத்துக்குப் போனார்கள். கும்பலைப் பார்த்ததும், மோடியினுடைய விமானம் அங்கே தரையிறங்காமல் ஜாம்சேத்பூருக்குத் திரும்பியது. இவையெல்லாம் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்த, பீகாரின் ஜார்க்கண்ட் பகுதியைத் தனிப் பழங்குடி மாநிலமாக்குவதற்கான போராட்டம் உச்சத்தில் இருந்தபோது நடந்தது. பழங்குடிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசாங்கத்தை டாடாக்களும் பிற சுயநலக் கும்பல்களும் நிர்பந்தப்படுத்தின. செப்டம்பர் எட்டாம் நாளே அவ்வாறான கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது; பழங்குடியினரின் கொந்தளிப்பை அடக்குவதற்காக குவா நகரின் சந்தையில் வைத்து அப்பாவிப் பழங்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது; தொடர்ந்து மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே நிராயுதபாணிகளான எட்டுப் பழங்குடியினர் கொல்லப்பட்டனர்.

கலிங்காநகர் படுகொலை

2006, ஜனவரி 2 அன்று, ஒரிசா மாநிலம் கலிங்கா நகரில், கொடூரமாக ஆயுதமேந்திய ஒரு போலீசுப் படை பழங்குடி கிராம மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பன்னெடுங்காலமாக பழங்குடியினருக்குச் சொந்தமான நிலத்தில் டாடா எஃகு நிறுவனம் சட்டவிரோதமாக சுற்றுச்சுவர் கட்டியதற்கு எதிராகப் பழங்குடி மக்கள் கண்டனப் போராட்டம் நடத்தியபோது தான் இது நடந்தது. டாடா எஃகு நிறுவனம் அங்கு வருவதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். அந்தப் படுகொலைக்கு முன்புதான் டாடா எஃகு நிறுவன நிர்வாகத்தினர் மூன்றுமுறை ஒரிசா முதலமைச்சரைச் சந்தித்தனர். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் என்று சிதைக்கப்பட்ட எட்டு உடல்கள் போலீசாரால் பிரேதப் பரிசோதனைக்கு தரப்பட்டன. இறந்து போயிருந்த ஒரு பெண்ணின் மார்பு அறுத்தெறியப்பட்டிருந்தது; துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட ஒரு சிறுவனின் ஆணுறுப்பு சிதைக்கப்பட்டிருந்தது. எல்லா உடல்களிலும் இருந்து உள்ளங்கைகள் வெட்டி வீசப்பட்டிருந்தன. “இச்சம்பவம் தீவினைப்பயனானது (துரதிருஷ்டவசமானது)” என்று சொன்ன டாடா, “எதிர்ப்பிருந்தபோதும் அதே இடத்தில் திட்டமிட்டபடி ஒரு எஃகு ஆலை நிறுவுவது தொடரும்” என்று அறிவித்தார்.

சிங்கூர் ஒடுக்குமுறை

2006-ஆம் ஆண்டு டாடாவுக்கு ஒரு பெரும் கொடை கிட்டியது. கொல்கத்தாவுக்கு அருகாமையில் உள்ள சிங்கூரில் 900 ஏக்கர் வளமான பூமி மேற்கு வங்க அரசாங்கத்தால் டாடா மோட்டார் நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டது. அங்கே லட்சம் ரூபாய்க்கு ஒரு கார் என்ற அறிவிப்புடன் கார் உற்பத்தி செய்யும் ஆலை அமைப்பதுதான் திட்டம். கட்டாயமாக நிலங்களைப் பறித்து, அவற்றை டாடாவுக்குக் கையளிப்பதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். டாடாக்கள் தார்க்குச்சி போட்டதால், மேற்கு வங்க அரசாங்கம் சிங்கூர் விவசாயிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தது; ஒரு காலத்தில் அமைதி தவழ்ந்த சிங்கூர் கிராமம் போர்க்களமாக மாற்றப்பட்டது; டாடா மோட்டார் நிறுவன இடத்தையும் அதன் ஊழியர்களையும் பாதுகாப்பதற்காக 24 மணிநேரமும் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. (தொடரும்)

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வட்டாட்சியர் அலுவலகமா? ஆதிக்க சாதிவெறியர்களின் கூடாரமா?

வட்டாச்சியல் அலுவலகமா ஆதிக்க சாதிவெறி கூடாறமா

வட்டாச்சியல் அலுவலகமா ஆதிக்க சாதிவெறி கூடாறமா

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் ஏறத்தாழ 5,000 பேர் கொண்ட குறவன் சாதியினர் 15 கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர். மிகவும் தாழ்த்தப்பட்டவர்களான, அனைத்துச் சாதியினராலும் ஒடுக்கப்பட்டவர்களுமான, கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகமிகப் பின்தங்கியவர்களுமான இவர்கள் சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தால், இடைத்தரகர்களை வைத்து ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை இலஞ்சம் வாங்கிக் கொண்டு, “இந்து குறவன் ” (SC)என்று வருவாத்துறை அதிகாரிகள் சாதிச் சான்றிதழ் தருகின்றனர். ஏழைகளான குறவன் சாதியினர் பணம் கொடுக்க முடியாவிட்டால் “குறவர் ” (DNC) என்று சாதிச் சான்றிதழ் தருகின்றனர். அரசின் சாதிப்பட்டியலில் குறவன் சாதியை தாழ்த்தப்பட்ட சாதி என்று குறிப்பிடும்போது, இங்கு மட்டும் அவ்வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர். சீர்மரபினர் (De notified Caste) என்று புதிய சாதியைக் குறிப்பிடுகின்றனர்.

குறவன் சாதிச் சான்றிதழ் தர 50 ஆண்டுகால ஆதாரம் கேட்கின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த முதல் மகனுக்கு “இந்து குறவன்‘”என்றும், இரண்டாவது மகனுக்கு “குறவர்” என்றும் இருவேறு சாதிகளைக் குறிப்பிட்டுச் சான்றிதழ்களைக் கொடுத்துத் தொல்லைப்படுத்துகின்றனர். ஆவணங்கள்-விண்ணப்பங்கள் காணாமல் போய்விட்டதாகக் கூறி, சாதிச் சான்றிதழ் தராமல் இழுத்தடித்து விண்ணப்பதாரர்களை கடும் மன உலைச்சலுக்கு ஆளாக்கி இழிவுபடுத்துகின்றனர். இந்த சீர்மரபினர் சான்றிதழை வைத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு பட்டியலில் மத்திய-மாநில அரசு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் குறவன் இன இளைஞர்கள் பரிதவிக்கின்றனர்.

வட்டாட்சியரான ஜோதி என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் பேசி இதற்கு முன்பு குறவன் (SC) சான்றிதழ் வழங்கி வந்தார். ஆனால், வருவாய் ஆய்வாளர்களும் கிராம நிர்வாக அலுவலர்களும் சாதி வெறியர்களுக்குத் துணைபோவதால், இப்போது இந்துக் குறவன் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. வட்டாட்சியர் மீது பொய்ப்புகார் சுமத்தியும், குறவன் எனச் சாதிச் சான்றிதழ் தரக்கூடாது என்றும் சாதிவெறியர்கள் துண்டுப்பிரசுரம் வெளியிட்டு எச்சரித்துள்ளனர். அந்த நேர்மையான அதிகாரி மீது இப்போது விசாரணை நடந்து வருகிறது.

குறவன் சாதி மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இந்த அநீதியை எதிர்த்தும், சாதி வெறியர்களை அம்பலப்படுத்தியும் “அரசியல் சாசனத்தை மீறும் வருவாய் ஆய்வாளர் நாகலிங்கம், கிருஷ்ணவேணி மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களையும் பணிநீக்கம் செய்! இந்து குறவன் சாதிக்கு அரசுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளவாறு சாதிச் சான்றிதழ் கொடு!” என்ற முழக்கங்களுடன் திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணி 11.10.2010 அன்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. தோழர் பொன்னுசாமி தலைமையில், திரளான உழைக்கும் மக்களின் பங்கேற்புடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க. மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் சிறப்புரையாற்ற, வி.வி.மு., மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு குறவன் மக்கள் சங்கம் ஆகிய அமைப்புகளின் முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

 

 

 

 

 

அயோத்தி தீர்ப்பு: பார்ப்பனப் புரட்டு!

ஒரு உரிமையியல் மூல வழக்கில் முஸ்லிம்களின் ஆவணச் சான்றுகளையும் அனுபோக உரிமையையும் புறக்கணித்துவிட்டு, ராமன்பிறந்த இடம் இதுதான் என்று தீர்ப்பளித்திருப்பதன் மூலம் பார்ப்பனப் புராணப் புரட்டுகளுக்கும் இந்துவெறி பாசிச சதிகளுக்கும் சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது, அலகாபாத் உயர்நீதி மன்றம். 1992-இல் நடந்த பாபர் மசூதி இடிப்பை அங்கீகரித்து, இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளைக்  கௌரவித்திருக்கிறது, இந்த அநீதி மன்றம். இந்துவெறி பயங்கரவாதிகள் இத்தனை காலமும் என்ன சொல்லி வந்தார்களோ, அதையே அயோத்தி வழக்கில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியன்று தீர்ப்பாக வழங்கியிருக்கிறார்கள், மூன்று பேர் கொண்ட அலகாபாத் உயர்நீதி மன்ற அமர்வு நீதிபதிகள்.

“பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கே உரியது. அதுதான் ராமன் பிறந்த இடம். கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது. இது, இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத முடியாது. அதன் மீது சன்னி வக்ப் போர்டுக்கு (முஸ்லிம்களுக்கு) எந்த உரிமையும் இல்லை” என்கிறார் நீதிபதி சர்மா.

“ராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் நீண்டகாலமாக வழிபட்டு வந்துள்ளார்கள். எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்குத் தரப்பட வேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜென்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகிய மூன்று தரப்பினருக்கும் தரப்பட வேண்டும்” என்பதே நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

“ஏற்கெனவே பாழடைந்து போயிருந்த கோயிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளதே தவிர, கோயிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை. மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாட்கள் முன்பாகவே அந்த இடத்தில் ராமன் பிறந்தார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. ராம்சபுத்ரா கட்டுமானங்கள் உருவாவதற்கு முன்னரே இந்துக்கள் மசூதியின் சுற்றுச்சுவர் அருகே வழிபாடு செய்து வந்துள்ளனர். தங்களது தனிப்பட்ட உரிமை குறித்த எந்த ஆவணத்தையும் இருதரப்பினராலும் தர இயலவில்லை. இது இருதரப்பினரது அனுபோக பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. மேற்கண்ட நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்குக் கீழுள்ள பகுதி இந்துக்களுக்குத் தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று தரப்பினருக்கும் தரப்பட வேண்டும்” என்பது நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

ஒரு நீதிபதி நேரடியாகவே பார்ப்பன மயமான தீர்ப்பை அறிவிக்கிறார். மற்றொருவருவர் அதையே சுற்றிவளைத்து வேறு வார்த்தைகளில் நியாயப்படுத்துகிறார். இன்னொருவரான கான், பிறப்பால் முஸ்லிமாக இருந்த போதிலும் அநீதிக்குத் தெரிந்தே துணைபோகிறார். இந்த அநீதிபதிகளின் தீர்ப்புப்படி, முஸ்லிம்களின் மனு செல்லாது என்று அடியோடு நிராகரிக்கப்படுகிறது. பின்னர், எதற்காக முஸ்லிம்களுக்கு ஒரு பகுதி நிலத்தைப் பிரித்துத் தர வேண்டும்? இது சட்டப்படியே செல்லுபடியாகாது. எனினும், இதன் மூலம் இந்துத்துவாவின் தாராள குணத்தைப் பறைசாற்றிக் கொள்ள முயலுகிறார்கள், பார்ப்பன பாசிஸ்டுகள்.

500 ஆண்டுகளாக முஸ்லிம்கள் வழிபாடு நடத்தி வந்த மசூதியை, முஸ்லிம்களின் அனுபோக உரிமையுள்ள மசூதியை முஸ்லிம்களுடையது அல்ல என்கிறது, அலகாபாத் உயர்நீதி மன்றம். பாபர் மசூதி அமைந்துள்ள இடம் இந்துக்களின் அனுபோக உரிமை உள்ள இடம்தான் என்று கூறி, அதைச் சட்டபூர்வமாக்கும் நோக்கத்தில் மசூதி இருந்த நிலத்தை மூன்றாகப் பங்கிட்டு, ஒரு பகுதியை சன்னி வக்ப் வாரியத்துக்கும் மற்ற இரு பங்கினை இந்துத்துவ அமைப்புகளுக்கும் கொடுக்க அடாவடித்தனமாக இந்த அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் கோயில் இருந்ததா, அது பாபரால் இடிக்கப்பட்டதா என்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கும் பொறுப்பைத் தட்டிக் கழித்த மைய அரசு, இதை உச்ச நீதி மன்றத்திடம் தள்ளிவிட்டபோது, “இவை எங்கள் ஆய்வு வரம்புக்கு அப்பாற்பட்டவை” என்று கூறி, அதனை நிராகரித்தது, உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் எதனை நிராகரித்ததோ, அந்தக் கேள்விகளுக்குள் புகுந்து தீர்ப்பும் சொல்லியிருக்கிறது, அலகாபாத் உயர் நீதிமன்றம். ஒரு உரிமையியல் வழக்குக்குத் தேவைப்படும் எவ்வித ஆதாரங்களுக்குள்ளும் போகாமல், இந்து நம்பிக்கையையே ஒரு தீர்ப்புக்கான அடிப்படையாகக் கூறியிருக்கிறார்கள், அலகாபாத் நீதிமன்ற நீதிபதிகள். இது சட்டத்துக்கும் இயற்கை நீதிக்கும் எதிரானது என்று நன்கு தெரிந்தேதான், இந்துவெறி பாசிச பயங்கரவாதிகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் இப்படித் தீர்ப்பளித்திருக்கின்றனர்.

அங்கு ராமன் கோயில் இருந்து, இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதற்கு ஆதரவாகத் தொல்லியல்துறை ஆய்வு இருப்பதாக இந்நீதிபதிகள் புளுகியிருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தொல்பொருள் துறையின் இயக்குனராக இருந்த இந்துவெறியன் பி.பி.லால் தலைமையில் அயோத்தியில் அகழ்வாராய்ச்சி நடத்தும்படி அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு இந்து கோயில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் அங்கு கிடைக்கவில்லை. இருப்பினும், நாட்டின் பல பகுதிகளிலிருந்து தொன்மைவாய்ந்த கற்தூண்களின் பகுதிகளை அகழ்வாராய்ச்சி குழிகளில் போட்டு, அவை ஏற்கெனவே இருந்த ராமன் கோயிலுடையதுதான் என்று பி.பி.லாலும் இந்துவெறியர்களும் கூத்தாடினர்.

இந்துக் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்பது பொய் என்றும், 2003-ஆம் ஆண்டில் பா.ஜ.க. ஆட்சியின் கீழ் தொல்லியல் ஆய்வுத்துறை நடத்திய ஆய்வு மோசடித்தனமானது என்றும் தொல்பொருள் ஆய்வாளர்களும் பிரபல வரலாற்றியலாளரான ரொமீலா தாப்பர், இர்பான் ஹபீப் முதலானோரும் அன்றே எதிர்த்திருக்கின்றனர். தொல்லியல் துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை இவர்கள் வெளியிடக் கோரிய போதிலும் நீதிமன்றமோ, அரசோ அதை இன்றுவரை வெளியிடவில்லை. அந்த மோசடி அறிக்கையிலிருந்து சில பகுதிகளை ஆதாரமாகக் காட்டி, அந்தப் பொய்யை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருப்பதுதான் இந்தத் தீர்ப்பு.

அன்று ராமன் பாலம் என்ற பார்ப்பனப் புனைகதையைக் காட்டி சேதுக்கால்வாய் திட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதித்து நிறுத்தியது உச்சநீதி மன்றம். அயோத்தியில் அகழ்வாராய்ச்சி நடத்தும்படி அலகாபாத் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதைப் போலவே, ராமன் பாலம் பற்றியும் சேதுக் கால்வாய்க்கு மாற்றுப்பாதை பற்றியும் ஆராய்ச்சி நடத்தும்படி நிபுணர் குழு அமைத்துள்ளது, உச்சநீதி மன்றம்.  இன்று பாபர் மசூதியை இந்து வெறியர்களுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம். 1992-இல் பாபர் மசூதியை இந்துவெறி கரசேவகர்கள் இடித்துத் தள்ளிய கொடூரத்தைப் பற்றி விசாரணை நடத்தி லிபரான் கமிசன் சமர்ப்பித்த  அறிக்கையைக் குப்பைக் கூடையில் வீசியெறிந்துவிட்டது இந்நீதிமன்றத் தீர்ப்பு. இந்துவெறிக்கு அப்பட்டமாக வலுவூட்டும் இத்தீர்ப்பின்படி, மசூதியை இடித்த இந்துவெறி பயங்கரவாதிகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு நிலமாம். மசூதியைப் பறிகொடுத்த முஸ்லிம்களுக்கு மூன்றில் ஒரு பங்கு நிலமாம். இதுதான் இந்திய அரசு பீற்றிக் கொள்ளும் மதச்சார்பின்மையின் யோக்கியதை!

அன்றைய இந்தியாவில் 10-12-ஆம் நூற்றாண்டுகளில் தென்னகத்தில் சோழர் ஆட்சிக் காலத்தில்தான் தனிக் கடவுளுக்கான கோயில்கள் இருந்தன. 12-ஆம் நூற்றாண்டில் ஓரிரு ராமன் கோயில்கள் மத்தியப் பிரதேசத்தில் மட்டுமே இருந்துள்ளன. 17-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும்தான் பீகார் மற்றும் உ.பி.யில் ராமனுக்குத் தனியாக கோயில்கள் உருவாக்கப்பட்டன. இதுதான் வரலாறு காட்டும் உண்மை.

மேலும், மசூதியின் மைய மண்டபத்துக்குக் கீழேதான் ராமன் பிறந்தான் என்பது பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை என்று கூறுவதும் பொய்யானது. இந்துக்களில் ஒரு பிரிவினர் ராமன் அயோத்தியில் பிறக்கவில்லை, பஞ்சாபின் பாட்டியாலாவிலுள்ள கார்ரம் என்ற ஊரில் அவனது தாய்வழி தாத்தா வீட்டில்தான் பிறந்தார் என்று நம்புகின்றனர். சுவாமி அக்னிவேஷ் முதலான இந்து துறவிகள், ராமன் அயோத்தியில் பிறந்தான் என்பதை நம்பினாலும், மசூதியின் மைய மண்டபப் பகுதியில்தான் பிறந்தான் என்பதை ஏற்கவில்லை. அயோத்தியிலுள்ள பல்வேறு மகந்துகள் தங்களது மடங்கள் உள்ள இடத்தில்தான் ராமன் பிறந்ததாக இன்றும் வழிபடுகின்றனர்.

மேலும், இந்து தர்மப்படி – ஆகம விதிகளின்படி நிறுவப்படாத கடவுள் சிலையையும் அந்த இடத்தையும் புனிதமானதாக ஏற்பதில் இந்துக்களிடையே வேறுபாடுகள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக,  பெரும்பாலான இந்துக்கள்  தங்களது கடவுள்கள் சொர்க்கத்தில் பிறந்தவர்களாகவும் கோயில் உள்ள இடத்தில் கடவுள் அருள் வழங்குவதாகவும்தான் கருதுகின்றனரே தவிர, கோயில் உள்ள இடத்தில்தான் கடவுள் பிறந்தார் என்று கருதுவதில்லை. இந்துக்களிலேயே சிறுபான்மையினரான இந்து வெறியர்கள் தமது இந்து ராஷ்டிரத் திட்டத்துக்கு ஏற்ப பாபர் மசூதிதான் ராமஜென்மபூமி என்று அடாவடி செய்வதை வைத்து, ‘இது பெரும்பான்மை இந்துக்களின் நம்பிக்கை’ என்று நீதிபதிகள் கூறுவது எவ்வாறு நியாயமாகும்?

அயோத்தி தீர்ப்பு

இப்படித்தான், ‘இது இந்துக்களின் நம்பிக்கை’ என்று கூறி காசி, மதுரா, துவாரகா எனத் தொடங்கி நாடெங்குமுள்ள 30,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களின் மீது உரிமை பாராட்டுகிறார்கள், இந்து மதவெறியர்கள். அவற்றைச் சட்டவிரோதமாகக் கைப்பற்றிக் கொள்ள மதக் கலவரங்களைத் தூண்டிவிட்டு நடத்துகிறார்கள். திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள தர்காவில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று அடாவடித்தனம் செய்கின்றனர்; அண்மையில் திண்டுக்கல் கோட்டையில் அம்மன் சிலையை வைத்துவிட்டு, அங்குள்ள தர்கா மீது உரிமை பாராட்டுகிறார்கள்.

கட்டம் கட்டமாக இந்துவெறியர்களின் சதித்திட்டத்திற்கு ஏற்ப காங்கிரசு கட்சி இத்தனை அட்டூழியங்களுக்கும் உடந்தையாக இருந்தது, இருந்து வருகிறது. 1949-இல் மசூதியின் பூட்டை உடைத்துத் திருட்டுத்தனமாக இந்துவெறியர்கள் ராமன் பொம்மையை வைத்தது காங்கிரசு ஆட்சியில்தான். பூட்டைத் திறந்து விட்டு வழிபட அனுமதியளித்ததும் காங்கிரசு ஆட்சியில்தான். 1989-இல் ராமன் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்து கொடுத்ததும் ராஜீவ் பிரதமாக இருந்த காங்கிரசு ஆட்சியில்தான். 1992-இல் துணை இராணுவப் படைகள் வேடிக்கை பார்த்து நிற்க, இந்துவெறியர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காங்கிரசு ஆட்சியில்தான் . இப்போது 2010-இல் அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் இந்துத்துவத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதும் காங்கிரசு ஆட்சியில்தான். மதச்சார்பின்மை வேடம் போடும் காங்கிரசுதான் இந்து மதவெறியின் அடிக்கொள்ளி என்பதை இவை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக அறிவித்திருக்கிறது, சன்னி வக்ப் போர்டு. மசூதி உள்ள இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்ற தங்களது வாதம் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுவிட்ட பூரிப்பில் பா.ஜ.க.வினர் இனிப்புகள் வழங்கிக் கூத்தாடுகின்றனர். அதற்கேற்ப, பாசிச பார்ப்பன துக்ளக் சோ, சுப்பிரமணிய சாமி, ஜெயலலிதா வகையறாக்கள்  இத்தீர்ப்பை வாழ்த்தி வரவேற்கின்றனர். “அலகாபாத் தீர்ப்புக்குப் பின்னர் இந்து-முஸ்லிம் உறவில் புதிய சகாப்தம் தொடங்குகிறது, இந்திய ஒருமைப்பாட்டில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது” என்கிறது பார்ப்பன பாசிச பாரதிய ஜனதா. முஸ்லிம்கள் இந்நாட்டின் இரண்டாம்தர குடிமக்கள், இந்து தேசியத்தை ஏற்றுக் கொள்ளாதவன் தேசவிரோதி, மதச்சார்பின்மை பேசுபவன் இந்து விரோதி என்பதே இந்தப் புதிய அத்தியாயத்தின் பொருள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, தீர்ப்பு வெளியானதும் அதை வரவேற்றார். பின்னர், ஆரிய-திராவிட நாகரிகம் பற்றிப் பேசி எச்சரிக்கையுடன் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டு எதிர்ப்பு காட்டுகிறார். அயோத்தி வழக்கில் தீர்ப்பு வந்ததும் சி.பி.எம். மறைமுகமாக ஆதரித்தது. பின்னர்,  “நம்பிக்கை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, ஆபத்தான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்” என்றார் சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளர் காரத். “இத்தீர்ப்பில் சிக்கலான பல விசயங்கள் உள்ளன, எனினும் மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டியது நம் அனைவரது கடமை” என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரான டி.ராஜா. சட்டப்படியும், இயற்கை நீதிப்படியும்  அந்த இடம் முஸ்லிம்களுக்கே சொந்தம் என்று போலி கம்யூனிஸ்டுகள் கூறவில்லை. வெறுமனே மத ஒற்றுமை பற்றிப் பேசுகிறார்கள். மதச்சார்பின்மை பேசும் கட்சிகளின் யோக்கியதை இவ்வளவுதான்!

முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்துப் பார்ப்பன இந்துவெறியர்களின் இந்து ராஷ்டிர திட்டத்துக்கு ஏற்ப அமைந்துள்ள இத்தீர்ப்பை நாம் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தினால், அது நாளை நாட்டின் பெரும்பான்மையான மக்களின் கழுத்துக்கு சுருக்குக் கயிறாக மாறும்.

ராமஜென்ம பூமி எனும் புராணப்புரட்டு இந்து நம்பிக்கை என்றால், சூத்திரன் தேவடியாள் மகன் என்பதும், தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் என்பதும், பார்ப்பனரல்லாதோர் அர்ச்சகர் ஆகக் கூடாது என்பதும், சமஸ்கிருதம் தேவபாசை, தமிழ் நீசபாசை என்பவையெல்லாம் இந்து சாத்திரங்கள் புராணங்கள் கூறும் நம்பிக்கைதான்.

சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் மதமே, பார்ப்பன இந்துமதம்.  இந்துத்துவாவை இந்திய மரபு என்று கூறியது, உச்சநீதி மன்றம். பார்ப்பன மரபுகளுக்குப் பாதுகாப்புக் கொடுக்கிறது, இந்திய அரசியல் சட்டம். நாடெங்கும் முஸ்லிம்களை வேட்டையாட இந்துவெறியர்களுக்குத் துணை நிற்கின் றன, போலீசும் இராணுவமும்.

இத்தகைய சூழலில், அலகாபாத் தீர்ப்பை வைத்து மீண்டும் படமெடுக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். நச்சுப்பாம்பை நசுக்குவதும், பார்ப்பன இந்து மதத்தையும் பார்ப்பன பாசிசத்தையும் பார்ப்பன தேசியத்தையும் முறியடிக்கப் போராடுவதே, மதச்சார்பற்ற-ஜனநாயக சக்திகளின் முன்னுள்ள உடனடிக் கடமை.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

அரசு மருத்துவமனையா? மரண வாசலா?

அரசு மருத்துவமனையா - மரண வாசலா

போதிய அளவுக்கு மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், செவிலியர்கள் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாமலும் தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. பறவைக் காச்சல், பன்றிக் காச்சல், சிக்குன்குனியா மற்றும் இன்னும் பெயர் தெரியாத பல புதிய நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பல அரசு மருத்துவமனைகளில் மருந்துகளும் இல்லை; குடிநீர், மின்சாரம், இரத்த வங்கி, எக்ஸ்ரே, ஈ.சி.ஜி., அவசர சிகிச்சைப் பிரிவு, ஆம்புலன்ஸ் முதலான வசதிகள் இல்லாமலும், அறுவை சிகிச்சை, தண்ணீர் சிகிச்சை, இதயநோய் சிகிச்சை, தோல்நோய் சிகிச்சை, குழந்தை நலம், எலும்பு முறிவு முதலானவற்றுக்கு மருத்துவர் இல்லாமலும், தண்ணீர் இல்லை, போதிய இடவசதி இல்லை என்று பல்வேறு காரணங்களைக் கூறியும் நோயாளிகளை விரட்டும் அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் தொடர்ந்து பல ஏழைகளின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழியில்லாமல், தங்களது சிறு உடமைகளை விற்றும் கந்துவட்டிக்குக் கடன் வாங்கியும் ஏழை நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறு நிர்பந்திக்கப்படுகின்றனர். இவற்றைக் கண்டித்து பலமுறை மனு கொடுத்தும் மருத்துவமனை நிர்வாகமோ, அரசோ அசைந்து கொடுப்பதில்லை. மறுபுறம், கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனைகள் கொழுப்பதற்காகப் பலநூறு கோடிகளை அரசு ஒதுக்குகிறது.

அரசின் அலட்சியத்தை எதிர்த்தும், அரசு மருத்துவமனையைப் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தி மக்களின் உயிரைக் காக்கக் கோரியும் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் இயங்கிவரும் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம், 11.10.2010 அன்று வாகனப் பேரணியையும், கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. கோத்தகிரி டானிங்டன் பகுதியிலிருந்து காமராஜர் சதுக்கம் வழியாக மார்க்கெட் திடலை இப்பேரணி வந்தடைந்ததும், அங்கு சங்கத்தின் தலைவர் தோழர் செல்வம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவமனை சீர்கேட்டை அம்பலப்படுத்தியும், அரசு மருத்துவமனைகளைப் புறக்கணித்துத் தனியார் மருத்துவமனைகளை ஊட்டிவளர்க்கும் கலைஞர் காப்பீடு திட்டத்தை எதிர்த்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் உள்ள அரசு மருத்துவமனை சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, கடந்த 2009-ஆம் ஆண்டின் இறுதியில் மாவட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், தலைமை மருத்துவமனை என்ற பெயர்ப்பலகை மட்டும்தான் இங்கு இருக்கிறதே தவிர, இங்கு போதிய மருத்துவர்களோ மருந்துகளோ இல்லை. மக்களின் அடிப்படைத் தேவைகளை அறவே புறக்கணித்துவரும் அரசை எதிர்த்தும், மருத்துவம் பெறுவது நமது அடிப்படை உரிமை, அதைச் செய்துதர வேண்டியது அரசின் கடமை என்பதை உணர்த்தியும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட பென்னாகரம் வட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, அதன் தொடர்ச்சியாக 11.10.2010 அன்று பென்னாகரம் அரசு மருத்துவமனை முன்பாக தோழர் சிவா தலைமையில் விண்ணதிரும் முழக்கங்களுடன் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

அரசு மருத்துவமனைகளைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் தமிழக அரசை எதிர்த்தும், தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையை எதிர்த்தும் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள், போராடாமல் அடிப்படை உரிமைகளை நாம் பெறமுடியாது என்பதை உழைக்கும் மக்களுக்கு உணர்த்து வதாக அமைந்தன.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இட்லருக்கும் இரங்க வேண்டுமா ஜெயமோகன்?

ஜெயமோகன்
ஜெயமோகன். படம் 10 Hot

ஜெயமோகனின் சிறுகதை மீதான விமர்சனம்: இட்லருக்கும் இரங்க வேண்டுமோ?

சுபமங்களா எனும் பத்திரிகையின் ஏப்ரல் 1991 இதழில் ஜெயமோகன் என்பவர் எழுதிய ஒரு சிறுகதை வெளியாகியிருக்கிறது. அதன் சுருக்கம் வருமாறு:

பல்கலைக்கழக விஞ்ஞான கருத்தரங்கில் நுழைய முனைந்த ஒரு வயதான நம்பூதிரியை நெட்டித் தள்ளுகிறான் வாயிற்காவலன். தடுமாறிக் கீழே விழுந்தபோதிலும் ஏதும் நடவாதது போல எழுந்து நடந்த அந்த நம்பூதிரியின் கம்பீரத்தில் மனதைப் பறிகொடுத்து அவரிடம் பேச்சுக் கொடுக்கிறார் ஜெயமோகன்.

விஞ்ஞானிகள் எனப்படுவோர் தன்னையும் தன் தத்துவத்தையும் உதாசீனம் செய்வதாகவும், அதற்குக் காரணம் அவர்களுக்கெல்லாம் மூளை இல்லை என்றும், பரிசுத்தமான ஆரிய மூளையை மனிதகுலம் இழந்து வருவதுதான் இதற்கெல்லாம் அடிப்படை என்றும் கூறுகிறார் நம்பூதிரி. இந்த உண்மையை உணர்ந்து இனக்கலப்பை எதிர்த்த இட்லரைக் கொன்று விட்டார்களே என்று வருத்தப்படுகிறார். பிறகு தனது தத்துவத்தை விளக்குகிறார்.

“பிரபஞ்ச செயல்கள் அனைத்துமே குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. அந்தக் கால இடைவெளியானது மாறாதது… இதை நமது முன்னோர்கள் ‘ஏகம்’ என்றும் ‘பிரணவம்’ என்றும் அழைத்தனர். காலப் பெருவெளியில் நமது பிரக்ஞை மட்டும் சுழன்று சுழன்று வருகிறது. பழைய ஞாபகங்கள் நம் அடிமனதில் தேங்கியுள்ளன. தியானத்தால் அதை மீட்க முடியும். நீட்சேக்கு நிகழ்ந்ததும் அதுதான்.”

இந்தச் சுழற்சித் தத்துவம் தவறு என்று ஐன்ஸ்டீனை ஆதாரம் காட்டி நம்பூதிரியிடம் வாதாடுகிறார் ஜெயமோகன். “பிரம்ம சங்கியாவை (சுழற்சித் தத்துவத்தை) தவறு என்று சொல்ல நீ யாரடா? உன் ஐன்ஸ்டீன் என் மயிருக்குச் சமம். பார்க்கிறேன் அதையும்” என்று சவால் விட்டுவிட்டுப் போகிறார் நம்பூதிரி. ஒரே மாதத்தில் ஐன்ஸ்டீனைப் படித்து முடித்துவிட்டு மீண்டும் வருகிறார். ஐன்ஸ்டீனின் தத்துவமும் சுழற்சித் தத்துவமும் ஒன்றுதான் என்றும் ஐன்ஸ்டீனும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்றும் விளக்குகிறார்.

எரிச்சலடைந்த ஜெயமோகன் அணுக் கொள்கையை விளக்கி மீண்டும் நம்பூதிரியை மறுக்கிறார். ஒரே மாதத்தில் அதையும் முடித்துவிட்டு வந்து அதுவும் சுழற்சித் தத்துவத்தில் அடங்குவதாக மகிழ்ச்சியுடன் விளக்குகிறார் நம்பூதிரி. ஆத்திரம் கொண்ட ஜெயமோகன் அவரை நெட்டித் தள்ளித் திட்டி அனுப்புகிறார்.

இதன்பிறகுதான் துவங்குகிறது ஜெயமோகனின் உள்மனப் போராட்டம். “என் தந்தைக்கு நிகரான வயோதிகரைப் புரட்டித் தள்ளியிருக்கிறேன். ஒரு வகையில் கபடு சூதற்ற குழந்தை அவர். மாபெரும் அறிவாளி… நான் ஏன் அவரிடம் இரக்கமே காட்டவில்லை? ஒரு சிறு திசை திரும்பல் மூலம் என்னுடைய லட்சியங்கள் கோட்பாடுகள் அனைத்தும் பைத்தியக்காரத்தனமாக ஆகிவிடலாம் என்ற அச்சம்தான் காரணமோ?” என்று அலைபாய்கிறார். பிறகு நீண்ட நாட்களுக்குப் பின் மருந்தும் மலமும் நாறும் ஆஸ்பத்திரியல் கிழிந்த பாயில் கிடக்கும் நம்பூதிரியைக் கண்டு இரங்குகிறார். அவரது தத்துவம் சரியானதென்று நிரூபிக்கப்பட்டு விட்டதாகவும் தான் அவரது சீடனாகிவிட்டதாகவும் பொய்சொல்லி அவரைத் தேற்ற முனைகிறார். ஆனால், எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லாத நம்பூதிரி தன் வாழ்வே வீணாகிவிட்டதாகப் பிரலாபிக்கிறார்.

பழமைக்கெதிரான போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சக்திகளையெல்லாம் தார்மீக ரீதியாக வலுவிழக்கச் செய்து கோழைகளாக்குகிறது இந்தச் சிறுகதை. வேறெந்தப் பத்திரிகையிலும் இச்சிறுகதை வெளியாகியிருந்தால் கதை வேறு. கோமல் சாமிநாதன் குறிவைக்கும் ‘அறிவு ஜீவி’ வாசகர்களைக் கொஞ்சநஞ்சம் மிச்சமிருக்கும் நம்பிக்கையையும் கைவிட்டு ‘சுழற்சி’த் தத்துவத்தில் சிக்கவைக்கும் பொறிதான் இக்கதை.

நீட்சேயும், சங்கரனும் ஒருபுறமும் ஐன்ஸ்டீனும், மார்க்ஸிசமும் ஒருபுறமுமாக நின்று தத்துவ விவாதம் நடத்தியிருந்தால், அல்லது ஜெயமோகனும் நம்பூதிரியும் தத்துவ விவாதம் மட்டும் நடத்தியிருந்தால், ‘தத்துவத்தின் மதியீனம்’ என்று நம்பூதிரியின் கோட்பாட்டை வாசகர்கள் புறந்தள்ளி விட முடியும்.

ஆனால், அந்தத் தத்துவத்தைத் தாங்கி வருபவர் ஒரு வயதான நம்பூதிரியாக இருக்கும்போது, இடைவிடாது முயன்ற நம்பூதிரியின் வீழ்ச்சிக்காக ஜெயமோகனுடன் சேர்ந்து வாசகரும் அனுதாபப்படுவதைத் தவிர வேறுவழி?

ஆனால், ஜெயமோகன் அவர்களே… தத்துவம் என்பது சூத்திரங்களாகவும் கோட்பாடுகளாகவும் நின்று வானவெளியில் மோதிக் கொண்டதாக ஏதாவது வரலாறு இருக்கிறதா? எதிரியின் தத்துவம் தூக்கி வளர்த்த தாயாக, ஆளாக்கிய தந்தையாக, ஒரே தட்டில் அமர்ந்துண்ட நண்பனாக, அறிவொளி தந்த ஆசிரியராக அல்லது நெஞ்சில் நிறைந்த காதலியாகத்தானே வந்திருக்கின்றது? வந்து கொண்டுமிருக்கின்றது? பல சந்தர்ப்பங்களில் கிழிந்த பாயில் கிடக்கும் நம்பூதிரியை விட அவல நிலையில் கிடந்தும் இவர்கள் தம் போராட்டத்தை நிறுத்துவதில்லையே. சொல்லப்போனால், நம்பூதிரி அளவுக்கு அறிவாற்றலும் இல்லாத இவர்களின் வாழ்க்கை அவலத்தின் வலிமை இன்னமும் கூடுதலாயிற்றே!

என்ன செய்வது? ஹிட்லரின் அவலத்திற்காகக் கண்ணீர் சிந்துவோமா? நம்பூதிரி ஹிட்லர் இல்லை என்பதுதானே ஜெயமோகனின் வலிமை? தனக்குத்தானே தீ வைத்துக் கொள்ளும் ‘இது நம்ம ஆளு’ பார்ப்பனத் தந்தைக்காகவும், மண்டல் எதிர்ப்பு ராஜீவ் கோஸ்வாமிக்காகவும் கண்ணீர் சிந்தச் சொல்கிறார் ஜெயமோகன். பிழைத்து எழுந்த ராஜீவ் கோஸ்வாமியின் பேட்டியை ஜெயமோகன் படித்துப் பார்க்கட்டும். ஒருவேளை நம்பூதிரி பிழைத்து எழுந்தாலும் நடக்கக் கூடியது அதுதானே!

தாக்குதலில் குரூரம், பின்வாங்குதலில் நயவஞ்சகம், தோல்வியில் அவலம் இவைதானே நிரந்தரமாக ஆளும் வர்க்கங்கள் கையாளும் உத்திகள்!

தத்துவம் என்ற மட்டத்தில் மட்டும் செயல்பட்டு வாழ்வில் வர்க்கம் கடந்த மனிதாபிமானியாக யாராவது இருந்ததாகத் தகவல் உண்டா ஆதிசங்கரன் உட்பட? தனது தத்துவத்திற்கே நேர்மையற்று, “பிரபஞ்சமே மாயை, ஆனால், எனது சோறும் துணியும் மட்டும் வியவகாரிக சத்யம்” (வியவகாரிக சத்யம்: நடைமுறை உண்மை) என்று தொந்தியைத் தடவிய கூட்டத்தின் வாரிசு தானே ஜெயமோகனின் நம்பூதிரியும்?

பல்கலைக்கழக வாயிற்காவலனோ, ஜெயமோகனோ தள்ளியவுடனே சரிந்துவிடவில்லை நம்பூதிரி. தோற்றுத் தோற்று, வயது முதிர்ந்து, உடல் தளர்ந்த பின்னர்தான் படுக்கையில் விழுந்தார். ஆனால், ஜெயமோகனோ படுக்கையில் விழுந்த நம்பூதிரியைப் பார்த்த மாத்திரத்திலேயே விழுந்து விட்டார்; வாசகர்களையும் காலை இடறிவிடுகிறார்.

ஆனால், நம்பூதிரியும் அவரது சுழற்சித் தத்துவமும் படுக்கையில் விழுந்துவிடவில்லை; எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

________________________________

– புதிய கலாச்சாரம், மே 1991
நினைவின் குட்டை கனவுநதி, சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தில் உறையும் அற்பவாத இதயம்! – (வெளியீடு) 2006
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பழங்குடியின வேட்டையே காட்டு வேட்டை!

போலீசாரால் கைது செய்து சித்திரவதை செய்யப்பட்ட சுனிதா துலாவி (19)
போலீசாரால் சித்திரவதை செய்யப்பட்ட சுனிதா துலாவி (19) – படம் thehindu.com

மாவோயிஸ்டுகள் சட்டீஸ்கர் மாநிலத்திலுள்ள காங்கேர் மாவட்டத்தில் ஆகஸ்டு 29, 2010 அன்று நடத்திய திடீர்த் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று சிப்பாய்களும் இரண்டு போலீசாரும் கொல்லப்பட்டனர்.  இத்தாக்குதல் நடந்து ஏறத்தாழ ஒரு வாரம் கழித்து, இத்தாக்குதலை நடத்திய 17 மாவோயிஸ்டுகளைப் பிடித்துவிட்டதாக காங்கேர் மாவட்ட போலீசார் அறிவித்தனர்.  காங்கேர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள வனப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தியபொழுது, இம்மாவோயிஸ்டுகளைக் கைது செய்ததாகவும் போலீசார் அறிவித்தனர்.

போலீசாரின் இந்த அறிவிப்பு வெளியான மறுநாளே, கைது செய்யப்பட்டுள்ள 17 பேரில் 15 பேர் காங்கேர் மாவட்டத்திலுள்ள ஆலூர் மற்றும் பசங்கி கிராமங்களைச் சேர்ந்த அப்பாவி பழங்குடியினர் என்பதும் அவர்களுள் ஆறு பேர் பெண்கள் என்பதும் அந்தப் பெண்களுள் இரண்டு பேர் பதினாறே வயதான சிறுமிகள் என்பதும் அம்பலமாகிவிட்டது.

மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்குப் பழிதீர்த்துக்கொள்ளும் வெறியோடு ஆலூர் மற்றும் பசங்கி கிராமங்களில் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்திய எல்லைப் பாதுகாப்புப் படையும் காங்கேர் மாவட்ட போலீசும் அக்கிராமங்களைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட ஆண்களை நிர்வாணப்படுத்தி மிருகத்தனமாகத் தாக்கியது.   நர்சிங் கும்ரா, சுக்ராம் நேதம், பிரேம்சிங் போதாயி, ராஜு ராம், பிட்டி போதாயி ஆகிய ஐவரின் ஆசனவாய்க்குள் குச்சிகளைச் செலுத்திச் சித்திரவதை செய்தது.  ஒரு இளம் பெண்ணும், ஒரு சிறுமியும் அரை நிர்வாணமாக்கப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டனர்.  அக்கிராமங்களின் மீதான இந்த அரச பயங்கரவாதத் தாக்குதல் செப்டம்பர் 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களிலும் நடந்துள்ளது.  இறுதியாக அக்கிராமங்களைச் சேர்ந்த 17 பேரை விசாரணை செய்யப் போவதாகக் கூறித் தனது சித்திரவதை கூடத்துக்கு இழுத்துச் சென்றது, எல்லைப் பாதுகாப்புப் படை.

எல்லைப் பாதுகாப்புப் படையால் இழுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்ட 19 வயதான சுனிதா துலாவி “தாங்கள் அனைவருமே கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் எல்லைப் பாதுகாப்புப் படையால் கடத்திச் செல்லப்பட்டதாக”ப் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ளார்.  எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்கள் இவரின் உடலெங்கும் மின்சார வயர்களைச் செருகி மின்சார அதிர்ச்சி கொடுத்துச் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

சுனிதா துலாவியின் தந்தை புன்னிம் குமார் துலாவி, “எல்லைப் பாதுகாப்புப் படையால் கிராமத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட அனைவரும் இருவேறு முகாம்களில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், தாங்கள் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என ஒப்புக்கொள்ளக் கூறி, அனைவருக்கும் மின்சார அதிர்ச்சி கொடுக்கப்பட்டதாகவும்” கூறுகிறார்.

புன்னிம் குமார் துலாவி அரசு ஊழியர் என்பதாலும், அவரின் மகள் சுனிதா துலாவி சித்திரவதைக்குப் பின் நோய்வாய்ப்பட்டதாலும் அவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.  அவரின் இன்னொரு மகளான 16 வயதான சிறுமி சரிதா துலாவி உள்ளிட்டு மீதி 15 பேரும் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அட்டூழியங்கள் அம்பலமானவுடன், அதனை மாவோயிஸ்டுகள் நடத்தும் அவதூறு பிரச்சாரம் எனக் கூறி மறுத்து வந்த எல்லைப் பாதுகாப்புப் படை, இப்பொழுது இது குறித்து விசாரணை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது.  இந்த விசாரணையின் முடிவு எப்படியிருந்தாலும், அரசு நடத்தும் காட்டு வேட்டை என்பது பழங்குடியின வேட்டைதான் என்பதற்கு இத்தாக்குதல் இன்னொரு சாட்சியமாக அமைந்துவிட்டது.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

மக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா

டாக்டர் கோட்னிஸ்
செம்படை கூட்டத்தில் உரையாற்றும் மருத்துவர் (1942) - சீனாவில் மருத்துவரின் சிலை

மகத்தான மக்கள் மருத்துவர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ் நூற்றாண்டு விழா !

பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்த போராளி டாக்டர் கோட்னிஸ் புகழ் நீடுழி வாழ்க !!

மருத்துவ வரலாறு எத்தனையோ தலைசிறந்த மருத்துவர்களைக் கண்டிருக்கிறது. ஆனால், வாழ்நாள் முழுவதும் உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவே தங்களையும் தங்கள் மருத்துவ அறிவையும் அர்ப்பணித்த மருத்துவர்கள் அரிதினும் அரிதே. அத்தகைய அரிய மருத்துவர்களில் ஒருவர்தான் டாக்டர் துவாரகாநாத் சாந்தாராம் கோட்னிஸ்.

இந்தியாவின் பெருமைக்குரிய புதல்வர்களில் ஒருவராகவும், உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு இந்தியா அளித்த தியாகிகளில் ஒருவராகவும், சீன மக்கள் இன்றும் தங்கள் நெஞ்சங்களில் ஏற்றிப் போற்றும் ஒப்பற்ற நண்பராகவும் திகழ்ந்தவர்தான் டாக்டர் கோட்னிஸ்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் சோலாப்பூரில் 1910-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் நாள் பிறந்த கோட்னிஸ், பம்பா கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று, அக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.

1938-ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பானின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக சீன மக்கள் போராடி வந்தனர். இந்நியாயமான விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து இந்தியா முழுவதும் சீன மக்களுக்கு உதவும் இயக்கம் அப்போது நடைபெற்றது. போராடும் சீன மக்களுக்கு உதவ இந்தியாவிலிருந்து ஐந்து பேர் கொண்ட சிறந்த மருத்துவர்கள் குழு அனுப்பப்பட்டது. அந்த ஐவரில் ஒருவர்தான் டாக்டர் கோட்னிஸ். சீனா சென்றதும் அவர் அன்றைய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவரான தோழர் சூயென்லா-ஐச் சந்தித்தார். பின்னர் மருத்துவ உதவி தேவைப்பட்ட யேனான் பகுதிக்கு 1939-இல் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே சென்றார்.அங்கு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் மாவோ கோட்னிஸ் குழுவை நேரில் வந்து வரவேற்றார்.

உலகப் புகழ்பெற்ற நெஞ்சக அறுவைச் சிகிச்சை மருத்துவராக விளங்கிய கனடா நாட்டு மருத்துவர் டாக்டர் நார்மன் பெத்தூன் சீன மக்களுக்காகவே உழைத்து சீனாவிலேயே மரணமடைந்தார். அவரையே தனது வழிகாட்டியாகக் கொண்டு டாக்டர் கோட்னிஸ் பாட்டாளி வர்க்க சர்வதேச உணர்வோடு சீன விடுதலைக்காகப் பாடுபட்டார். போர்முனையில் ஊனுறக்கமின்றி போர் வீரர்களுக்கு மருத்துவம் பார்த்தார், டாக்டர் கோட்னிஸ். அதைத் தொடர்ந்து சீன மக்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாக்கிய நார்மன் பெத்தூன் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியர் பொறுப்பேற்று, வசதிகளே இல்லாத போர்ச் சூழலில் அக்கல்லூரியை வளர்த்து மருத்துவர்களைப் பயிற்றுவித்தார். பல மைல் தூரம் சென்று விறகு பொறுக்கி வந்து உணவு சமைக்க வேண்டிய இடர்ப்பாடுகள் நிறைந்த சூழலிலும், அவர் தன்னலமற்றுப் பணியாற்றி சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக உயர்ந்தார்.

நார்மன் பெத்தூன் சர்வதேச அமைதி மருத்துவமனையின் இயக்குநராகப் பொறுப்பேற்று சீன மக்களின் பெருமதிப்பைப் பெற்றார் டாக்டர் கோட்னிஸ். இம்மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த குவோ குயிங்லான் என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு இந்திய-சீன நட்புறவைக் குறிக்கும் வகையில் “இன்குவா” என்று அவ்விளம் தம்பதிகள் பெயரிட்டனர்.

1942 ஜூலையில் டாக்டர் கோட்னிஸ் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். மருத்துவத்தைப் போதிக்கும் அளவுக்கு சீன மொழியை முயன்று கற்றார். ஓவின்றிக் கடுமையாக உழைத்ததால், கோட்னிஸ் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடுமையான வலிப்புநோய் தாக்கி தனது 32-வது வயதிலேயே, 1942 டிசம்பர் 9-ஆம் நாள் அவர் உயிர் துறந்தார்.

அவரது மரணச் செய்தி அறிந்த மக்கள், சீனா முழுவதும் துக்கம் அனுசரித்தனர். 1942 டிசம்பர் 30-ஆம் நாளன்று நடந்த இரங்கற் கூட்டத்தில் சீன மக்கள் இராணுவத்தின் தலைமைத் தளபதியான தோழர் சூடே முன்னிலை வகித்து டாக்டர் கோட்னிசுக்கு அஞ்சலி செலுத்தினார். அக்கூட்டத்தில் தோழர் மாவோ கைப்பட எழுதிய இரங்கல் கடிதம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

டாக்டர் கோட்னிசை தங்கள் முப்பாட்டனாகக் கருதும் சீன மக்கள், டாக்டர் கோட்னிஸ் நினைவாக ஹீபெ மாகாணத்தில் உள்ள ஷிஜியாஜுவாங் நகரில் உருவாக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலையையும்  நினைவு மண்டபத்தையும் இன்றும் போற்றி வருகின்றனர். “டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி” என்ற திரைப்படம் இந்தியாவில் வெளிவந்து அவரது புகழைப் பரப்பியது.

ஏழை நோயாளிகளைக் கொள்ளையடிப்பதே மருத்துவ தர்மமாக மாறிவிட்ட இன்றைய கேடுகெட்ட சூழலில், தன்னலமின்றி சீன விடுதலைக்கும் மக்களுக்கும் தன்னை அர்ப்பணித்த டாக்டர் கோட்னிஸ் நீலவானில் ஒரு சிவப்பு நட்சத்திரமாக மின்னுகிறார்.

கோட்னிஸ் தன்னலமற்ற மருத்துவர் மட்டுமல்ல, அவர் ஒரு சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் போராளி. அவரது நூற்றாண்டு விழா உலகெங்குமுள்ள பாட்டாளி வர்க்கத்தால் பெருமையுடன் கொண்டாடப்பட்டுவரும் இத்தருணத்தில், அவரது நினைவை நெஞ்சிலேந்தி அவர் கற்றுத்தந்த பாதையில் முன்னேறுவோம்!

டாக்டர் கோட்னிஸ் புகழ் நீடுழி வாழ்க!

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மணற்கொள்ளை: பேரழிவுக்குள் தள்ளப்படும் தமிழகம்!

தமிழ்நாடு-மணல்-கொள்ளை

தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையைப் பற்றி ஊடகங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றன. நீதிமன்றங்களில் பல வழக்குகள் போடப்பட்டுள்ளன. வெட்டவெளிச்சமாக நடக்கும் மணல் கொள்ளை பற்றி சட்டமன்றத்தில்கூட எதிர்க்கட்சியினர் முறையிட்டுள்ளனர். மணல் கொள்ளையைத் தடுக்க முயற்சித்த பல அரசு ஊழியர்களும் சமூக ஆர்வலர்களும் உயிரையே இழந்துள்ளனர். இவ்வளவுக்குப் பின்னரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், இப்போது தாமிரபரணி மற்றும் பாலாற்றில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளுவதற்கு மட்டும் தடைவிதிக்கிறது, தமிழக அரசு.

கடந்த 2006-ஆம் ஆண்டில் மணல் கடத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு, அப்படியே காற்றில் கரைந்து விட்டது. இப்போதும்கூட, மணல் கொள்ளை அறவே தடுக்கப்படும் என்று அரசு அறிவிக்கவில்லை. இயந்திரங்களை வைத்து மணல் அள்ளுவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்து. இயந்திரங்களைப் பயன்படுத்துவதில்லையே தவிர, கூடுதலாகக் கூலித் தொழிலாளர்களை இறக்கிவிட்டு இரவு பகலாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. தாமிரபரணி, பாலாறு மட்டுமின்றி, காவிரி, பவானி, அமராவதி முதலான ஆறுகளிலும் மணல் அள்ளத் தடை விதித்துக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசு எதுவும் செய்யவில்லை. வாணியம்பாடியிலிருந்து கழிமுகப்பகுதி வரை மணல் அள்ளப்பட்டதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதோடு, தோல் தொழிற்சாலைகளின் நச்சுக்கழிவுக் குட்டையாக மாறி, தமிழகத்தின் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஆறாக மாறிவிட்டது, பாலாறு.

தாமிரபரணியில் ஆறு மாதத்துக்கு 54,417 யூனிட் மணல் அள்ள அனுமதிக்கப்பட்டு, 35 நாட்களிலேயே 65,000 யூனிட் மணல் அள்ளப்பட்டுள்ளது. ஒரு யூனிட் என்பது 100 கன அடி மணல். ஒரு லாரியில் விதிப்படி ஒன்று முதல் ஒன்றரை யூனிட் வரை மணல் ஏற்றப்பட்டுள்ளதாகக் கணக்கு காட்டித் தொகையைச் செலுத்திவிட்டு, அரசு அதிகாரிகள் – போலீசின் துணையோடு அளவுக்கு அதிகமாக மணலை அள்ளி, மாஃபியாக்கள் கொழிக்கிறார்கள். தாமிரபரணியில் ஆய்வு நடத்திய குழுவினர் தாக்கல் செய்துள்ள அறிக்கையை நீதிமன்றம் வெளியிடும்போது மேலும் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவரலாம்.

தாமிரபரணியையும் பாலாற்றையும் மொட்டையடித்தாகிவிட்டது. இனி பாக்கியிருப்பது கொள்ளிடம் மட்டும்தான். கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் அதிக அளவில் மணல் படிந்திருப்பதால் அங்கிருந்து மணல் எடுத்துக் கொள்ள அனுமதித்து, அதையும் மொட்டையடிக்க மணல் மாஃபியாக்களுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறது, தமிழக அரசு.

தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு மணல் எடுத்துச் செல்வதற்கு 2009-ஆம் ஆண்டில் அரசு தடை விதித்தது. மணல் குவாரிகளில் தமிழக அரசு பதிவு பெற்ற லாரி, டிராக்டர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில், கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் உள்ள அரசு மணல் குவாரிகளில் பகலில் தமிழக லாரிகள் மணலை அள்ளி, ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லையில் இரவில் அண்டை மாநில லாரிகளுக்கு மாற்றிவிடும் அட்டூழியம் அரசு அதிகாரிகள் – போலீசு துணையோடு கேள்விமுறையின்றி நடக்கிறது.

அள்ளப்படும் மணல் வெளிமாநிலங்களுக்கு மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆற்றுமணல் அளவின் இலக்கு 2008-09 ஆம் ஆண்டில் 4.5 லட்சம் டன்னிலிருந்து 5.85 லட்சம் டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டில் இது 10.26 லட்சம் டன்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தாராள அனுமதியின் விளைவாக மணல் கொள்ளையும் மாஃபியாக்களின் ஆதிக்கமும் புது வேகத்தில் கொடிகட்டிப் பறக்கும்.

தொடரும் மணல் கொள்ளையைக் கண்டும் காணாமல் இருந்தால்தான் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு அதிகாரிகள் பதவியில் நீடிக்க முடியும் என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது. மணல் கொள்ளைக்கு எதிராக ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டம், லாரிகளைச் சிறைபிடிப்பது என ஆரவாரம் செய்த எதிர்க்கட்சிகள் இப்போது அமைதி காப்பதற்குக் காரணம், இக்கொள்ளையில் அவர்களும் கூட்டுச் சேர்ந்திருப்பதுதான்.

மணல் குவாரிகள் ஒருபுறமிருக்க, கல்குவாரிகள் மூலம் மலைகளையே விழுங்கும் அட்டூழியங்கள் கேள்விமுறையின்றித் தொடர்கிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பிரச்சினையும் விவசாயம் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது.

ஆற்று மணல் என்பது இயற்கை அளித்த கொடை. இது அடுத்த தலைமுறையின் சொத்து. இன்றைய இலாபத்துக்காக மணல் கொள்ளையை நியாயப்படுத்தினால், தமிழகத்தின் எதிர்காலமே சூனியமாகிப்போகும்.

தனியார்மயமும் தாராளமயமும் அரசின் பெயரளவிலான கட்டுப்பாடுகளைத் தகர்த்து, இயற்கையைச் சூறையாடி எதிர்காலத்தையே நாசமாக்குவதுதான் என்பதைத் தொடரும் மணல் கொள்ளையே நிரூபித்துக் காட்டுகிறது.

நடப்பது மக்களாட்சி அல்ல; மணல்குவாரி – கல்குவாரி மாஃபியாக்களின் ஆட்சி!

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

செயின்ட் ஜோசப் கல்லூரி: சாதியைக் கேடயமாகப் பயன்படுத்தும் பாதிரி ராஜரத்தினம் !!

விடுதலை சிறுத்தைகள் போஸ்டர்பிளாரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரியை மிரட்டி கடந்த நான்காண்டுகளாகப் பாலியல் வன்முறையை ஏவி வந்த,  திருச்சி ஜோசப் கல்லூரி முதல்வராகவும் பாதிரியாராகவும் உள்ள ராஜரத்தினத்தின் பாலியல் அட்டூழியம் அண்மையில் வெளிவந்து தமிழகமெங்கும் நாறத் தொடங்கியுள்ளது.

பாதிரியின் இப்பாலியல் அட்டூழியம் பற்றி அறிந்ததும், திருச்சி நகர ம.க.இ.க. தோழர்கள், தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணியுடன் நூற்றுக்கணக்கில் அணிதிரண்டு கடந்த 13.10.2010 அன்று காலை ஜோசப் கல்லூரி வாயிலை மூடி பூட்டுப் போடும் போராட்டத்தைத் திடீரென நடத்தினர். ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் ராஜா தலைமையில் காமவெறியன் பாதிரி ராஜரத்தினத்தைக் கைது செய்து தண்டிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும், சிறுபான்மை மத அடையாளத்துடன் காம வேட்டையாடும் இத்தகைய தனியார் பள்ளி – கல்லூரிகளை அரசே கையகப்படுத்த வேண்டும் என்றும் விண்ணதிரும் முழக்கங்களுடன் கல்லூரி வாயிலருகே ஆர்ப்பாட்டம் செய்த தோழர்கள், கல்லூரிக்குள் நுழைந்து அதன் வாயிலுக்குப் பூட்டுபோட முயன்றபோது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

“ஜோசப் கல்லூரி கல்விக்கூடமா, காமவெறியர் கூடாரமா?” என்ற தலைப்பிட்டு திருச்சி நகரமெங்கும் மேற்கொள்ளப்பட்ட சுவரொட்டிப் பிரச்சாரம் திருச்சபைகளின் யோக்கியதையைச் சந்தி சிரிக்க வைத்தது.

இந்தத் திடீர் ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர்தான் ராஜரத்தினத்தை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருக்கிறது. போலீசும் இப்பாதிரி மீது கொலைமிரட்டல், கற்பழிப்பு, கட்டாய கருக்கலைப்பு ஆகிய மூன்று வழக்குகளைப் போட்டுள்ளது. ராஜரத்தினமோ அதிகார வர்க்கத்தின் துணையுடன் தலைமறைவாக உள்ளார்.

பணபலமும் அதிகாரபலமும் ஆணாதிக்கத் திமிரும் கொண்டு பாலியல் வன்முறையை ஏவியுள்ள அயோக்கிய பாதிரி ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால்,  “இது நம்ம ஆளு!” என்று விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.க. ஆகிய கட்சிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளன. இப்பாதிரியார் தலித் என்ற ஒரே காரணத்துக்காக பழிவாங்கப்பட்டுள்ளார் என்றும், சேசுசபையிலுள்ள சாதிவெறியர்களின் தூண்டுதலின் காரணமாகவே வன்னியரான பிளாரன்ஸ் மேரி மூலம் இப்படியொரு கதை சோடிக்கப்பட்டுள்ளது என்றும்  இக்கட்சிகள் கூசாமல் புளுகுகின்றன.

ராஜரத்தினத்துக்கு ஆதரவாக நின்று பாதிக்கப்பட்ட பெண்ணை சேசுசபையிலிருந்தே விரட்டியுள்ள நிலையில், அந்தச் சபை ராஜரத்தினத்துக்கு எதிராக நிற்பதாகக் காட்டுவது யாரை ஏமாற்ற? ராஜரத்தினத்துக்கு ஆதரவாக செயல்பட்ட பாதிரி தேவதாஸ், பாதிரி சேவியர் வேதம் ஆகிய உயர் சாதியினரும் குற்றவாளி பட்டியலில் உள்ளபோது, எந்த சாதிவெறியர்களின் தூண்டுதலால் ராஜரத்தினம் மீது அவதூறு பரப்பப்பட்டுள்ளது – என எழுந்துள்ள  கேள்விகளால்  இக்கட்சிகள் மக்களிடம் மேலும் அம்பலப்பட்டுப் போயுள்ளன. மக்களிடம் உண்மையை விளக்கி பாதிரியின் பாலியல் அட்டூழியத்துக்கு எதிராக ம.க.இ.க. அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

துப்பாக்கி, தொற்று நோய்: இந்திய அரசின் இருமுனைத் தாக்குதல்!

21

1876 களில் விக்டோரியா ராணி ஒட்டுமொத்த இந்தியாவையும் கைப்பற்றியதற்காக இந்தியாவின் அன்றைய வைசிராயாக இருந்த லிட்டன் பிரபு டில்லியில் மிகப்பெரிய விழா மற்றும் விருந்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைத்து குறு நில ராஜா, ராணிகளும் கலந்து கொண்ட, ஒரு வார காலம் நடைபெற்ற இந்த விருந்து உலக வரலாற்றில் இதுவரை நடந்திராத மிகப் பெரிய விருந்தாக வரலாற்றாசிரியர்களால் கருதப்படுகிறது.

இந்தியாவின் ஒரு பக்கம் விருந்து, ஆடல் பாடல்களால் அலங்கரிக்கப்பட மறுபக்கம் அன்றைய மதராஸ் மாகாணத்தில் கடுமையான வறட்சியால் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தினால் லட்சக் கணக்கான மக்கள் உண்ண உணவில்லாமல் வீதிகளில் செத்து வீழ்ந்ததும் மிகச்சரியாக இக்காலகட்டத்தில் தான் அரங்கேறியது.

உலக வரலாற்றில் அதிக மக்களைக் காவு கொண்ட இவ்வறட்சி மற்றும் அதனால் ஏற்பட்ட உணவுப் பஞ்சத்தைப் போக்க அன்றைய வைசிராய் லிட்டன் பிரபு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. மாறாக மக்கள் மீது பரிதாபப்பட்ட அன்றைய மதராஸ் கவர்னராக இருந்த பக்கிங்காம் உணவு தானியங்களை உள்ளூர் சந்தைக்குக் கொடுக்க முனைந்த பொழுது, லிட்டன் பிரபுவால் தடுக்கப்பட்டு அவையெல்லாம் லிட்டனின் திருவிழாவிற்காக அனுப்பப்பட்டதாக வரலாறு பதிவு செய்திருக்கிறது.

இந்த மாபலித் திருவிழாவிற்கு சற்றேதும் குறைவில்லாமல் அதற்கு சரிநிகராக, ஒரு புறம் 70.000 கோடிக்கும் மேற்பட்ட செலவில் காமன்வெல்த் விளையாட்டுத் திருவிழாவும் மறுபுறம் அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களால் மத்திய இந்தியவில் நடைபற்றுவருகின்ற படுகொலைகளையும் உதாரணமாகக் கூறலாம்.

மத்திய இந்தியக் காடுகளில் காட்டு வேட்டை என்ற பெயரில் ஒட்டுமொத்த பழங்குடியின மக்களும் நேரடியாகப் படுகொலை செய்வது ஒருபுறமிருக்க மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டத்திங்களில் இருந்து அம்மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் உண்ண உணவின்றியும், சுகாதாரக் குறைபாடுகளாலும் அம்மக்கள் மறைமுகமாகப் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

கடந்த சில வாரங்களாகவே சத்திஸ்கரில் உள்ள தாண்டேவடா மாவட்டத்தில் வாந்தி, பேதி போன்ற சுகாதாரக் குறைவினால் ஏற்படும் நோய்களால் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால் அப்பகுதி மலைவாழ் மக்கள் கும்பல் கும்பலாகப் பிணங்களைத் தூக்கிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது, கடந்த வாரத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வாந்தி பேதியால் இறந்துள்ளனர்.

ஆந்திர – சத்தீஸ்கர் எல்லையில் உள்ள தாண்டேவடா மாவட்டத்தில் பெரும்பாலான மக்கள் சுகாதாரக் குறைவால் இறந்து வருகின்றனர். இந்த சாவு எண்ணிக்கை இந்திய அரசிற்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்து வரும் போரினால் ஏற்பட்டதை விட மிக அதிகமாகும். தாண்டேவடா மாவட்டத்தில் உள்ள தர்முத்லா, சிந்தகுப்ஹா, புர்கப்பால் மற்றும் சிந்தல்நார் பகுதிகளில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் வாந்தி பேதி மயக்கத்தினால் இறந்துள்ளனர். மேலும் பலர் நோய்பட்டு சிகிச்சையின்றி அவதியுறுகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பின் படி ஒரு வாரத்தில் மட்டும் 19 பேர் வாந்தி பேதியால் இறந்துள்ளனர், ஆயினும் புர்கப்பாலில் உள்ள மாதவி துலே போன்ற பல குழந்தைகள் இறந்தும் அவை மாவட்ட நிர்வாகத்தினால் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படாமல் புதைக்கப்பட்டுள்ளன.

பருவமழை பெய்கின்ற காலமாதலால் நீர் மூலம் பரவுகின்ற நோய்கள் இங்கு அதிகமாகி வருகின்றன. அடிகுழாய்ப் பம்புகள் யாவும் வேலைசெய்யாமல் இருப்பதால், குட்டைகளில் தேங்கி நிற்கும் நீரையே இம்மக்கள் அனைவரும் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாதாரணக் காய்ச்சலில் ஆரம்பித்து வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டு கடைசியில் சுயநினைவை இழந்து செத்து மடிகின்றனர். மேலும் உடம்பில் உயிரைத்தக்க வைத்துக் கொள்ளவே போதுமான சத்தில்லாத இவர்கள், நோயில் கிடக்கும் பொழுது மிச்சமிருக்கும் நீர்ச் சத்தையும் பேதியின் மூலம் இழந்து விடுகிறார்கள், இறுதியாக சுகாதாரமற்ற குட்டை நீரையும் பருகுவதால் உடல் நிலை இன்னும் மோசமாகிச் செத்து மடிகின்றனர்.

தாண்டேவடாவின் கிராமப்பகுதி முழுக்க அவசரத்திற்கு ஒரு மருத்துவர் கூட இல்லாத நிலையே இன்னும் நீடிக்கிறது. வத்தி என்றழைக்கப்படுகின்ற உள்ளூர் நாட்டு வைத்தியர்கள்தாம் பெரும்பாலும் மக்களுக்குச் சிகிச்சையளிக்கின்றனர். வத்திகளின் சிகிச்சையினால் அதிர்ஷ்டவசமாக இம்மக்கள் பிழைத்துக் கொண்டாலும் அதே குட்டை நீரைக் குடிப்பதால் மறுபடி நோய்தொற்று ஏற்பட்டு இறக்கின்றனர். ஏழு லட்சம் மக்கள் தொகை கொண்ட தாண்டேவடாவில் மொத்தம் 12 ஆங்கில மருத்துவர்கள்தான் உள்ளனர். இவர்களில் 3 பேர் பர்சூர், கிரண்டல் மற்றும் பச்சேலி போன்ற நகர்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்கின்றனர். மீதி 9 பேர் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை மற்றும் நிர்வாகம் சார்ந்த வேலைகளில் ஈடுபடுகின்றனர். இவர்களில் ஒருவர் கூட பழங்குடி மக்கள் அதிகமாக வாழும் இடங்களில் பணியாற்றவில்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையமும் போர்க்கால அடிபடையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த ஒரு ஆங்கில மருத்துவரையும், நாள்பட்ட நோய்களைக் குணப்படுத்த ஒரு ஆயுர்வேத மருத்துவரையும் கொண்டு செயல்பட வேண்டும் என்கிற நிலையில், தாண்டேவடா மற்றும் பீஜப்பூர் மாவட்டம் முழுக்க மொத்தம் 30 ஆரம்ப சுகாதார நிலையங்களே உள்ளன. அவற்றில் 24 நிலையங்களில் வெறும் ஆயுர்வேத மருத்துவர்களும், எஞ்சியுள்ள ஆறு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களே இல்லாத நிலைதான் நீடிக்கிறது. ஆயுர்வேத மருந்துகள் போர்க்கால அடிப்படையில் உடனடி நிவாரணம் கொடுக்காது என்ற போதிலும், இம்மருத்துவர்கள் தான் பழங்குடி மக்களுக்கு சிகிச்சையளிக்கின்றனர். மேலும் அவசரத்திற்கு கூட இவர்கள் ஆங்கில மருந்துகளைப் பரிந்துரை செய்யக் கூடாது என்ற சட்டமும் உள்ளதால் ஆயுர்வேத மருந்துகளையே இவர்கள் கொடுக்கின்றனர்.

தண்டேவடா மாவட்ட கலெக்டர் அதிகச் சம்பளம் கொடுத்து மருத்துவர்களை நியமனம் செய்ய முயற்சி எடுத்தாலும், நகரங்களிலேயே சொகுசாக வாழ்ந்து பழக்கப்பட்ட மருத்துவர்கள் இங்கு வந்து மக்கள் பணி செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.மேலும் மக்களுக்காகப் போராடிவரும் மாவோயிஸ்டுகளால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற பயமும் மேலோங்கியிருக்கிறது. ஆனால் இப்பகுதிகளில் பணி செய்து கொண்டு வரும் மருத்துவரில் ஒருவர் கூட மாவோயிஸ்டுகளால் குறைந்தபட்சம் தாக்கப்பட்டது கூட இல்லை என்பதே நிதர்சனம்.சமீப காலங்களாக தாண்டேவடா மட்டுமல்லாமல் பீஜப்பூர் மாவட்டத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிகள் இறந்தது அம்மாநிலத்தில் ஒட்டுமொத்த மருத்துவ மற்றும் குடிமை நிர்வாகமே செயலற்றுப் போயுள்ளதை உணர்த்துகின்றன. இது அப்பகுதிகளில் வாழும் அனைத்து மக்களையும் மத்திய மாநில அரசுகள் புறக்கணித்து வருவதையே காட்டுகிறது.

இந்தச் சூழ்நிலையில், இவையெல்லாவற்றுக்கும் மேலாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டில் உள்ள பஞ்சாயத்துக்களின் நிலை பற்றிய அறிக்கையை (State of Panchayat’s Report) வெளியிட்டார். குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள கிராமப்புற நிர்வாகவியலுக்கான கல்வி நிறுவனமும் (IRMA) பஞ்சாயத்து ராஜுக்கான அமைச்சரவையும் ஏற்படுத்திக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் (MOU) IRMA இந்த அறிக்கையை சமர்ப்பித்தது. அரசுக்கு அளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் 1996 ல் ஏற்படுத்தப்பட்ட சட்டத்திருத்த்தின்படி PESA (Panchayats – Extension to Scheduled Areas) என்கிற பட்டியலிடப்பட்ட பகுதிகளுக்கான பஞ்சாயத்தின் அறிக்கையும் இடம்பெற்றிருந்தது. IRMA அம்மலைப் பிரதேசங்களில் அரசின் நில ஆக்கிரமிப்பு உட்பட அங்குள்ள மக்களின் மிக மோசமான வாழ்நிலை வரை அனைத்தையும் பக்கம் பக்கமாக அம்பலப்படுத்தி அவ்வறிக்கையை சமர்ப்பித்தது.

ஆயினும் மேதகு மன்மோகன் சிங் அவர்களால் அறிக்கை வெளியிடப்பட்ட பொழுது அப்பக்கங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டு வேண்டுமென்றே நீக்கப்பட்டிருந்த்தது. சாதாரணமாக ஒரு அறிக்கை சமர்பிப்பதிலேயே அரசின் இலட்சணம் இவ்வாறு நேர்மையற்றிருக்கும் பொழுது, சுகாதாரக் கேட்டினால் கொத்துக் கொத்தாகச் செத்து மடியும் பழங்குடி மக்களின் நலவாழ்விற்காகப் தம் அரசு பாடுபடுகின்றது என்று வெற்றுக்கூச்சலிடும் ப.சிதம்பரத்திற்கு இம்மக்களின் மரண ஓலம் கேட்கிறதா எனத் தெரியவில்லை. பாதி வெளுத்துப்போன சாயம் முழுதாக வெளுத்துவிட்ட நிலையில், அரசின் உறுதிமொழிகள் நீரில் எழுதியவையாக மாயமாய் மறைந்துவிடுகின்றன.

ஒரு புறம் காட்டுவேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் மீது மாபெரும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் இந்திய அரசு மறுபுறம் தனது அலட்சியத்தினாலும் அம்மக்களை கொன்று வருகிறது. தண்டகாரண்யாவில் பாதுகாப்பு படைகள் செல்வதற்கு வசதியாக சாலைகளை அதிவேகத்தில் அமைக்கும் அரசு தொற்று நோய்களால் கூட்டம் கூட்டமாக இறக்கும் மக்களுக்கு குறைந்த பட்ச மருத்துவ வசதிகளைக்கூட செய்ய மறுக்கிறது.

மாவோயிஸ்ட்டுகளை பழங்குடி மக்கள் ஏன் ஆதரிக்கிறார்கள் என்று பலருக்கு புரிவதில்லை. அத்தகைய அறிஞர் பெருமக்கள் மேற்கண்ட செய்திகளை வைத்தாவது புரிந்து கொள்வது நல்லது.

_____________________________

– சிங்காரம் (வாசகர் படைப்பு)
_____________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

தினமலர்-பதிவுலகம் இணைந்து வழங்கும் “இதுதாண்டா போலீஸ்” ரீலோடட் !!

108

Elangovan – kuwait,குவைத்

2010-11-09 13:35:48 IST

நல்ல தீர்வு, சட்டம் ஒரு இருட்டறை குற்றவாளியை அதன் முன்னால் நிறுத்தினால் குளிர்காய்ந்து கொண்டிருப்பான் என்பதை உணர்ந்து செயல்பட்ட திரு சைலேந்திரபாபு அவர்களுக்கு நம் நாட்டு மக்கள் எல்லோர் சார்பாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சட்டங்கள் கடுமையாக்க பட வேண்டும்….

 

BALAMURUGAN – johor,மலேஷியா

2010-11-09 13:35:11 IST

… (இவனையெல்லாம் அப்படியே உயிரோடு வைத்து சித்திரவதை செய்து, அந்த குழந்தைகள் பட்ட துன்ப வேதனைகளையெல்லாம் இவன் அனுபவிக்காமல் ஒரே encounter லே போய்ட்டான் என்கிற ஆதங்கம் தான் வருது)…

 

சிவா– சென்னை,இந்தியா

2010-11-09 13:29:54 IST

இது போல கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு குழந்தைய ஒரு பொண்ணு கொன்னு போட்ட அவ பேரு புவிழலி’ன்னு நினைகரன். அவளையும் இப்படி போட்டு தள்ள முடியுமா???????? அப்படி போட்டு தள்ள ஆண்டவனை வேண்டுகிறேன். கோவை போலீஸ்’கு என்னுடைய ஆயிரம் நன்றிகள்….

 

selva – coimbatore,இந்தியா

2010-11-09 13:28:49 IST

ஆல் தமிழன்ஸ் ஒன்று சேர்வோம். எழுதுங்கள் சீப் மினிஸ்டருக்கு கோயம்புத்தூர் போலிசை பாராட்டி கமிஷ்நேர் சைலேந்திர பாபு தனது திறமையால் மக்கள் மனதை கவர்ந்து விட்டார் ஹாட்ஸ் ஆப் சார்…

 

சுரேஷ்குமார்– coimbatore,இந்தியா

2010-11-09 13:22:10 IST

அரசன் அன்றே கொல்வான். போலீஸ் (தெய்வம்) நின்று கொள்ளும். நன்றி. கோவை மக்களுக்கு தீபாவளி 5 ம் தேதி அல்ல. இன்று தான் உண்மையான தீபாவளி….

 

Raga – சென்னை,இந்தியா

2010-11-09 12:36:26 IST

To Coimbatore Police comissioner: Thanks for saving our Tax payers money and saving time of our judicial system for this kind of criminal activities. அவனை விவேக் ஒரு படத்தில் மைனர் குஞ்சுவை சுட்டது போல் சுட்டிருக்க வேன்டும்! இது மாதிரி விரைந்து தீர்ப்பு அளித்தால் நாட்டில் இது மாதிரியான குற்றங்கள் குறையும்! ஊழல், அக்கிரமும் செய்யும் அரசியல் வாதிக்களுக்கும், அரசாங்க வேலை யாட்ட்களுக்கும் இது மாதிரி உடனடி தண்டனை குடுத்தால் மிகவும் நல்லா இருக்கும்!!…

 

தமிழன்– சென்னை,இந்தியா

2010-11-09 12:35:03 IST

இது போன்ற நிகழ்வுகளில் மக்களின் ஒற்றுமையான உணர்வுகளின் வெளிபாடு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வெல்க நியாயம் வளர்க மக்களின் ஒற்றுமை ஓங்குக நமது காவல்துறையின் பணி. சிறப்பான இந்த காரியத்தை செய்து முடித்த நமது காவல்துறைக்கும், நமது முதல்வர் மு.க அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி……..

 

ஷபீர்– manama,பஹ்ரைன்

2010-11-09 12:33:03 IST

தமிழக அரசு , திரு.சைலேந்திர பாபு மற்றும் அவருடன் சேர்ந்து இம்முடிவினை எடுத்த அவரது சகாக்கள், என்கௌண்டர் செய்ய உதவி புரிந்த போலீசார் அனைவருக்கும் என் மணமாந்த வாழ்த்துக்கள்!!!. எது எதுக்கோ பரிசு வழங்குகிறார்கள். இந்த வீரர்களுக்கு பாரத ரத்னா போன்ற விருந்துகள் வழங்க வேண்டும்….

 

Krishnas – nj,யூ.எஸ்.ஏ

2010-11-09 12:28:42 IST

“போலிசே தண்டனை கொடுத்தால் சட்டம் என்ன ஊறுகாய் போடவா இருக்கிறது” இது சில மேதாவிகளின் கேள்வி இங்கு. இந்த மாதிரி குழந்தைகளை கடத்துவது, கொல்வது, கற்பழிப்பது போன்ற கொடூர செயல்களில் ஈடுபடும் மிருகங்களுக்கு எதற்கு சட்ட உதவி. நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி இந்திய மக்களின் வரிப்பணம் ஏன் வீணாகவேண்டும். அந்த மிருகங்களை குற்றவாளி என்று நிரூபணம் ஆனவுடன் அந்த இடத்திலயே கொன்று விடவேண்டும்…..

 

Kumaran – chennai,இந்தியா

2010-11-09 12:18:27 IST

இது மாதிரி சீன் விஜயகாந்த், அர்ஜுன் படத்தில ஏற்கனவே வந்துவிட்டது. இதை தான் நாங்களும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்தோம். ஆனாலும் ஒரு பண்ணி உயிரோட இருக்கு…தயவு செய்து அவனுக்கும் ஒரு பிளான் போடுங்க.. என் அருமை மனித உரிமை கமிஷன் தலைவர்களே கொஞ்சம் கண்ண மூடிக்கோங்க…. அடி பட்ட போலீஸ் சிங்கங்களுக்கு என் ஆறுதல்கள் அண்ட் வாழ்த்துக்கள்…….

 

Sankaran – chennai,இந்தியா

2010-11-09 12:18:17 IST

அது தான் ஐநூறு பேர் போலிசை பாராட்டியிருக்கிரார்களே என்று கருத்து எழுதாமல் இருக்காதீர்கள். ஐந்தாயிரம் பேர் எழுதினாலும் குறைவு தான். வெள்ளைக்காரனின் துருப்பிடித்த சட்டங்களை கட்டிக்கொண்டு அழும் அறிவுஜீவிகளுக்கு சாதா இந்தியனின் ஆத்திரமும் குமுறலும் என்று தான் புரியுமோ? கசாபுக்கும் இந்த முடிவு எப்போது என்று ஏங்கும் கோடானு கோடி இந்தியர்களின் சார்பாக,…

____________________________________________________________

இவை தினமலருக்கு வந்துள்ள 1000 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்களில் சில. கோவை முழுவதும் மார்வாடி சேட்டுகள் இனிப்பை வழங்கி பட்டாசுகளையும் அள்ளி தருகிறார்கள். சேட்டுகளின் தயவில் கோவையே சமூக தீபாவளியை கொண்டாடி வருகிறது. தமிழ் பதிவுலகிலும் அதே மனநிலைதான்.

இதில் குறிப்பிடத்தக்க விசயம் என்னவென்றால், கொல்லப்பட்ட மோகன்ராஜ் போலீசை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசு சுட்டதில் மோகன்ராஜ் செத்துப்போய்விட்டதாகவும் போலீசு கொடுத்துள்ள செய்தி கடைந்தெடுத்த பொய் என்பதை 1000 பின்னூட்டக்காரர்களும் அடித்துச் சொல்கிறார்கள். இருந்தபோதிலும் “பொய் வாழ்க, போலீசு வாழ்க, கொலை வாழ்க! ஜெய்ஹிந்த்!” என்று கருத்துக் கூறி முடித்திருக்கிறார்கள்.

வாசகர்களுடைய தர்ம ஆவேசம் தாங்க முடியவில்லை. இப்படி அறவுணர்ச்சி பொங்கி வழியும் தமிழகத்திலா லஞ்ச ஊழல் தாண்டவமாடுகிறது, பொதுச்சொத்துக்கள் கொள்ளை போகின்றன? இந்த தமிழ்நாட்டில்தானா சில போலீசுகாரர்கள் டூட்டி முடிந்தபின் மப்டியில் வந்து திருடுகிறார்கள், பல போலீஸ்காரர்கள் யூனிபார்மிலேயே திருடுகிறார்கள்..? நம்பமுடியவில்லை.

இருந்தாலும் ஒரு கேள்வி. ஒருவேளை… ஒருவேளை மட்டும்தான், மோகன்ராஜ் என்ற நபர் அப்பாவியாக இருந்து, உண்மையிலேயே அந்தக் குழந்தைகளைக் கடத்திக் கொன்றவர்கள் சேட்டுடைய சொந்தக்காரப் பையன்கள் என்ற சேதி கொஞ்சநாளைக்குப் பின்னர் வெளிவந்தால்? சில நாட்களுக்கு முன் சென்னையில் சிறுவனைக் கடத்தியதாக கைது செய்யப்பட்டிருப்பவர்கள் அவனது சொந்தக்கார இளைஞர்கள், ஹை டெக் கிரிமினல்கள். கேட்ட பணத்தைக் கொடுப்பது போலக் கொடுத்து பின்னர் அவர்களை மடக்கிப் பிடித்தது போலீசு என்ற செய்தியைப் படித்திருப்பீர்கள். அதனால்தான் ஒரு சந்தேகமும் வருகிறது.

“இப்படி பணத்தைக் கொடுத்து குற்றவாளியைப் பிடித்திருப்பது போலீசு துறைக்கே அவமானம்” என்றும், “மைனாரிட்டி திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் யோக்கியதை இதுதான்” என்றும் மறுநாள் ஜெயலலிதா விட்ட அறிக்கையையும் படித்திருப்பீர்கள்.

சட்டமன்றம் வேறு கூடவிருப்பதால், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை” என்று ஆத்தாளுக்கும் மக்களுக்கும் நிரூபிக்கும் விதத்தில், உடனே “கிடா வெட்டி பொங்கல் வைக்குமாறு” போலீசுக்கு உத்தரவிடப்பட்டதாகவும், கோவை போலீசுதான் “சேச்சே.. அப்படியெல்லாம் உடனே சுட்டுக்கொல்வது ஐ.பி.எஸ் பதவிக்கு அழகு இல்லீங்கய்யா, ரெண்டு நாளாவது போகட்டும்” என்று கூறி, கிடாவெட்டினை தள்ளி வைத்து நிறைவேற்றியதாகவும் ஒரு செய்தி உலவுகிறது. எப்படியோ, மோகன்ராஜ் என்ற நபருக்கு “எமன்” ஜெயலலிதா உருவில் வந்திருக்கிறான்.

ஜெயலலிதா மட்டும்தான் எமன் என்று சொல்லிவிட முடியாது. தேர்தல் நெருங்கும் வரை திமுகவின் காலை நக்கிப் பிழைத்துவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் தங்கள் “வலிமை”யை கருணாநிதிக்குப் போட்டுக் காட்டும் பத்திரிகைகளும், கருணாநிதி என்னதான் அள்ளிக் கொடுத்தாலும் “தானாடாவிட்டாலும் தசையாடும்” என்று இனப்பாசத்துடன் அம்மாவின் அறிக்கைகளை 5 ஆம் பக்கத்திலிருந்து முதல் பக்கத்துக்கு கொண்டுவந்திருக்கும் பார்ப்பன நாளேடுகளும் கூடத்தான் இந்த என்கவுன்டரில் பங்கேற்றிருக்கின்றன. இவர்கள் உருவாக்கிய தர்மாவேசம்தான், இந்தக் கொலையை ஒரு திருவிழாவாக கொண்டாடும் மனநிலைக்கு வாசகர்களைத் தயார்படுத்தியிருக்கிறது.

கும்பலோடு சேர்ந்து கொண்டு தர்ம அடி போடும் “வீரர்கள்” அடிவாங்குபவன் நல்லவனா, கெட்டவனா என்று தெரிந்து கொள்ள எப்போதுமே விரும்புவதில்லை. சொந்த முறையில் நேருக்கு நேர் எந்த அநீதியையும் தட்டிக் கேட்கும் துணிவோ, நேர்மையோ இல்லாத கோழைகள்தான் தரும அடி வீரர்களாக தினமலர் பின்னூட்டங்களில் அவதரிக்கிறார்கள்.

“பாலியல் வன்முறை நடந்திருப்பதாக பிரேத பரிசோதனை கூறுகிறது” என்று போலீசு சொல்கிறது. ஆனால் குழந்தைகளை கடத்தியவர்கள் “பணத்துக்காகத்தான் கடத்தினார்கள்” என்பது கூட இதுவரை உறுதியானதாகத் தெரியவில்லை. பணத்துக்கு கடத்தினார்களோ, பழி வாங்குவதற்காக கடத்தினார்களோ, எதற்காகக் கடத்தியிருந்தாலும் குற்றம்தான். அதில் சந்தேகமில்லை.

ஆனால் அந்தக் கொலை ஆதாயத்துக்காக செய்யப்பட்ட கொலையா (murder for gain), ஆத்திரத்தில் செய்யப்பட்ட கொலையா, அவசரத்தில் செய்யப்பட்ட கொலையா என்பதைப் பொறுத்து குற்றவாளிகளுக்கான தண்டனை ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை அதிகரித்துச் செல்லும். “எதற்காக கொன்றார்கள் என்ற ஆராய்ச்சி எல்லாம் தேவையா, கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல், கொலைக்கு கொலை… ” என்று முழங்குகிறார்கள் தினமலர் பின்னூட்டக்காரர்கள்.

அதுதான் நீதி என்றால், இதே போன்றதொரு என்கவுன்டரில் ஜெயேந்திரரை அன்று ஆந்திரா பார்டரில் வைத்தே போட்டுத் தள்ளியிருக்கலாமே! அந்தக் கிரிமினலின் கையால் வழங்கப்பட்ட ஒண்ணரை கிலோ எடையிலான தங்க கிரீடத்தை தலையில் சுமக்கும் துர்ப்பாக்கிய நிலையநிலிருந்து வெங்கடாஜலபதி பெருமாளும் தப்பியிருப்பாரே! கோவை என்கவுன்டரை ஆதரிப்பவர்கள் அப்படி ஒரு ஆந்திரா என்கவுன்டர் நடந்திருந்தால் அதனை ஆதரித்திருப்பார்களா?

அன்று “ஹ்யூமன் ரைட் வயலேஷன், மிஸ்யூஸ் ஆஃப் பவர், ஹாரஸ்மென்ட்” என்று பல மாமாக்களும் மாமிகளும் டிவிக்களில் பேட்டி கொடுத்தார்களே! “இந்த அநீதியைப் பொறுக்க முடியாமல்தான் சுனாமியே வந்தது” என்று கூட சென்னை அயோத்தியா மண்டபத்தின் பக்கம் பேசிக்கொண்டார்களே! அன்று சென்னை உயர்நீதி மன்றம் விடுமுறை நாளில் சங்கராச்சாரியின் பெயில் பெட்டிசனை விசாரித்ததே, பெரியவாளை ஜெயிலுக்கு அனுப்பாமல் ஜட்ஜ் பங்களாவிலேயே ரிமாண்டு பண்ண முடியுமா என்று ஒரு மாட்சிமை தங்கிய நீதிபதி அரசு வக்கீலிடம் கேட்டாரே அதெல்லாம் நினைவிருக்கிறதா?

“இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி” என்று பேட்டி கொடுத்திருக்கிறார்கள் அந்தப் பிள்ளைகளின் பெற்றோரான சேட்டுகள். வரதராஜப் பெருமாள் சந்நிதியில் சங்கரராமனை ஆள் வைத்துப் போட்டுத்தள்ளியதாக குற்றம் சாட்டப்பட்ட பெரியவாளையும் அன்றைக்கே போட்டுத்தள்ளியிருந்தால், சங்கரராமனின் மனைவியும் அன்று தீபாவளி கொண்டாடியிருப்பாரே! பாண்டிச்சேரிக்கு கேசை மாற்றி, இழுத்தடித்ததனால்தானே இன்றைக்கு சங்கரராமனின் ஆவியைத் தவிர எல்லா சாட்சிகளும் பல்டியடித்து விட்டார்கள்?

இது ஒரு உதாரணம் மட்டும்தான். இதே கோவை நகரில் போலீசுக்காரர் செல்வராஜ் கொலையைத் தொடர்ந்து இந்து முன்னணிக் காலிகளால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்களில் ஒருவருக்கு கூட இன்று வரை நீதி கிடைக்கவில்லை. ஆனால், பதிலுக்கு குண்டு வைத்த அல்உம்மாக் காரர்கள் மட்டுமின்றி பல அப்பாவிகளும் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.

“குஜராத் படுகொலையை எப்படி நடத்தினோம், எப்படி வன்புணர்ச்சி செய்தோம்” என்று ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் வீடியோவையே தெகல்கா வெளியிட்டதே.. அதன் பிறகு எத்தனை ஆர்.எஸ்.எஸ் காலிகள் என்கவுன்டரில் போட்டுத்தள்ளப்பட்டார்கள்? ரதயாத்திரையில் தொடங்கி மும்பை படுகொலை வரை கொல்லப்பட்ட பல்லாயிரக் கணக்கான முஸ்லிம் உயிர்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? தற்போது ஆஜ்மீர் முதலான பல குண்டுவெடிப்புகளை நடத்தியவர்களே சங்க பரிவாரத்தினர்தான் என்று குட்டு உடைந்தவுடன், “அரசியல் பழிவாங்கல்” என்று அவர்கள் ஏன் அலறுகிறார்கள்? அதைக் கேட்டு நமக்கு ஏன் கோபம் வரவில்லை?

“இப்படித்தான் கசாப்பையும் போட்டுத்தள்ளவேண்டும்” என்று பின்னூட்டம் போடுகிறவர், “ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தையும் இப்படித்தான் போட்டுத்தள்ளவேண்டும்” என்று ஏன் சொல்ல மறுக்கிறார்? அலகாபாத் தீர்ப்பு வந்தவுடன், “கடந்த காலக் கசப்புகளையெல்லாம் மறந்து விடுங்கள்” என்று முஸ்லிம்களுக்கு அறிவுரை சொல்கிறாரே பகவத், அதை பெருந்தன்மை என்று பாராட்டுகின்றனவே பத்திரிகைகள், அதையெல்லாம் எப்படி இயல்பாக எடுத்துக் கொள்ள முடிகிறது? அதே மாதிரி ஒரு அறிவுரையை சொல்லும் உரிமை கசாப்புக்கு கிடையாதா? மோகன்ராஜுக்கோ மனோகரனுக்கோ கிடையாதா?

1984 இல் டெல்லியில் கொல்லப்பட்ட சீக்கியர்களுக்காக “விதவை விகார்” என்று குடியிருப்பே கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறதே, அந்த விதவைகள் என்றைக்கு தீபாவளி கொண்டாடுவது? தண்டகாரண்யாவிலும் காஷ்மீரிலும் நடக்காத பாலியல் வன்முறையா, படுகொலையா? “இந்தியாவிலிருந்து விடுதலை” என்று காஷ்மீரே இன்று கையில் கல்லை எடுத்துக்கொண்டு நிற்கிறதே இந்த நிலையை ஏற்படுத்தியது யார்? இந்திய இராணுவமல்லவா?

“போலி என்கவுண்டரில் தங்களை பிள்ளைகளை போட்டுத் தள்ளிய இந்திய இராணுவத்தினரை பதிலுக்கு என்கவுன்டரில் போட்டுத்தள்ள வேண்டும்” என்று காஷ்மீர் மக்கள் கோரவில்லை. மனித உரிமை அமைப்புகளும் கோரவில்லை. “எல்லோரையும் போல அவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வேண்டும்” என்பதுதான் காஷ்மீர் மக்களின் கோரிக்கை. “எத்தனை கொலை செய்தாலும், வன்புணர்ச்சி செய்தாலும் எங்களை நீதிமன்றத்தில் நிறுத்தக்கூடாது” என்று இந்திய இராணுவத்தின் உயர் அதிகாரிகள்தான் மிரட்டுகிறார்கள். இந்த அதிகாரத்துக்குப் பெயர்தான் “ஆர்ம்டு போர்சஸ் ஸ்பெசன் பவர் ஆக்ட்”. கொல்லவும், வல்லுறவு கொள்ளவுமான “ஸ்பெஷல் பவர்”!

“இராணுவத்திற்கு கொடுத்திருக்கும் அப்படிப்பட்ட ஸ்பெஷல் பவரை எங்களுக்கும் கொடுங்கள்” என்பதுதான் போலீசின் கோரிக்கை. அதைத்தான் தினமலரின் பின்னூட்டக்காரர்கள் வழிமொழிகிறார்கள். வழக்குகளோ வாய்தாக்களோ இல்லாமல் வாச்சாத்தி, பத்மினி, ரீட்டா மேரி, அந்தியூர் விஜயா .. என்று லாக் அப்பை லாட்ஜாகவும், தூக்குமேடையாகவும் மாற்றிக் கொள்ளும் அதிகாரத்தைத்தான் போலீசு கேட்கிறது. ஏற்கெனவே நடப்பில் இருக்கும் அந்த அதிகாரத்தை, அதிகார பூர்வமாக, சட்டப்படியே வழங்க வேண்டும் என்பதுதான் போலிசின் கோரிக்கை.

தா.கிருஷ்ணனைக் கொன்ற கொலைகாரர்கள், மதுரை தினகரன் ஊழியர்கள் மூவரைக் கொன்ற கொலைகாரர்கள் இவர்களையெல்லாம் போட்டுத் தள்ளுவதற்காகவா இந்த அதிகாரத்தைக் கேட்கிறது போலீசு?

சென்னையில் ஒரு சரிகா ஷா என்ற பெண் ஈவ் டீசிங்கிற்கு பலியானவுடன் மீடியாவும் அரசும் கொந்தளித்தன. உடனே ஈவ் டீசிங்கிற்கு சட்டமெல்லாம் வந்துவிட்டது. இப்போது கோவை கடத்தல் கொலை நடந்தவுடனே என்கவுன்டரைச் சட்டமாக்கச் சொல்கிறார்கள் தினமலர் ரசிகர்கள். பணக்காரனும், பார்ப்பன மேட்டுக்குடியும், சேட்டுகளும் பாதிக்கப்பட்டால்தான்  இவர்களிடம் மனிதாபிமானம் கொப்புளித்து எழும் போலும்!

மேலவளவு படுகொலை நடந்தபோது இப்படியொரு தார்மீக ஆவேசத்தை நாம் மீடியாக்களில் பார்க்கவில்லையே! அந்த வழக்கில் “விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட பலரும் கொலைக்குற்றத்துக்காக தண்டிக்கப்படவேண்டியவர்களே” என்று சென்னை உயர்நீதி மன்றம் கூறிய பின்னரும், அவர்களை தண்டிப்பதற்கு திமுக, அதிமுக அரசுகள் முயலவில்லையே, அதையெல்லாம் யாரும் கேட்டதாக நினைவில்லையே! தற்போது பெண்ணாடம் மாணவன் பாரத் கொலை பற்றியும் வினவு தளத்தில் எழுதியிருக்கிறோம். அதனைப் படித்து வாசகர்களோ, பதிவுலகமோ பொங்கி எழவில்லையே!

சின்ன கவுண்டர், பெரிய கவுண்டர் என்று கூறிக்கொண்டு தலித் மக்களுக்கு எதிரான சாதிவெறிக் குற்றங்களையும் பாலியல் வன்முறைகளையும் கொலைகளையும் நடத்திக் கொண்டிருக்கும் கொங்கு மண்ணில்தான் இன்று தரும ஆவேசம் தலைவிரித்து ஆடுகிறது. என்கவுண்டருக்கு ஆதரவாக வெடி வெடிக்கிறார்கள். “என்” கவுண்டரோ, “உன்” கவுண்டரோ, யாராயிருந்தாலும் “நம்” கவுண்டர்தானே என்றுகூட அவர்கள் புரிந்து கொண்டிருக்கக் கூடும்.

கோவை என்கவுன்டரை பாராட்டும் ரசிகர்களே, பதிவர்களே உங்கள் முகத்தைக் கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மனிதாபிமான வேடம் உங்களுக்கே அருவெறுப்பாகத் தெரியவில்லையா?

தினமலர், தினகரன் போன்ற பத்திரிகைகளுக்கு பாலியல் குற்றங்களைப் பற்றி எழுதும் அருகதை உண்டா? இந்தக் குற்றங்களின் தோற்றுவாயே அவர்கள்தானே! “முதலிரவு காட்சியை லைவ் ஆகப் பார்ப்பதற்கான இணையதளம் இதுதான்” என்று லிங்க் கொடுத்த பத்திரிகை அல்லவா அது? அதன் உரிமையாளர் குடும்பத்தை சேர்ந்த அந்துமணி ரமேசின் மீதே பாலியல் குற்றத்துக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கவில்லையா? வாரமலரில் பா.கே.ப வில் வரும் சேதிகள் பலவற்றின் நிறம் நீலமில்லையா?

பலான படங்களைக் காட்டியே ஹிட்ஸை அதிகரித்துக் கொள்ளும் தினகரன் வெப்சைட் பாலியல் குற்றம் பற்றி மூச்சு விடலாமா? அல்லது தங்கள் திருக்குவளை குடும்பத் தகராறுக்கு “தினகரன் குடும்பத்தை” சேர்ந்த ஊழியர்கள் மூன்று பேரை காவு கொடுத்துவிட்டு, அப்புறம் மாமாவும் மச்சானும் சமரசமாகி, மந்திரியாகிக் கொண்ட கும்பலுக்கு மனிதாபிமானம் பற்றிப் பேசும் அருகதை உண்டா?

பதிவுலகத்தையே எடுத்துக் கொள்வோம். கோவை சிறுவர்கள் கொலைக்காக இணைய உலகில் ஓடிய கண்ணீரை வைத்து சென்னை நகருக்கே ஒருநாள் தண்ணீர் சப்ளை செய்து விடலாம். ஏ ஜோக்குகள், அரை நிர்வாணப் படங்கள், 18+ பதிவுகள் போட்டு தமது ஹிட்ஸை கூட்டிக்கொள்ளும் பதிவர்களும், அவர்களது ரசிகர்களும் இப்போது மோகன்ராஜின் பாலியல் குற்றம் கண்டு கொதித்து எழுகிறார்கள். மெய் குற்றத்துக்கு என்கவுன்டர், மெய் நிகர் குற்றத்துக்கு?

கேட்டால், “நாங்கள் எல்லா என்கவுன்டரையும் ஆதரிக்கவில்லை. சின்னஞ்சிறுவர்களைக் கொலை செய்த கொலைகாரர்கள் என்பதனால், இந்த என்கவுன்டரை மட்டும்தான் ஆதரிக்கிறோம்” என்று ஜகா வாங்குவார்கள். சீரியலுக்கு அழுவது, இந்திரா காந்தி செத்தால் ராஜீவ் காந்திக்கு ஓட்டுப் போடுவது, ராஜீவ் காந்தி செத்தால் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவது, ஜெசிகா லாலுக்கு மெழுகுவர்த்தி கொளுத்துவது ஆகியவை அனைத்தும் ஒரே ரகத்தைச் சேர்ந்தவைதான். இந்த விசயத்தில் படித்தவனும் பாமரனும் ஒன்றுதான்.

“உணவுக்கிடங்குகளில் மக்கிமடிந்தாலும் அந்த தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகத் தரமாட்டேன்” என்று கூறும் பிரதமரின் இரக்கமின்மையையும், கோவைக் கொலைகாரனின் இரக்கமின்மையையும் நாம் ஒப்பிட்டுப் பேசினால் அதை இந்தப் படித்தவர்களின் மனம் ஒப்புமா? நிச்சயம் ஒப்பதாது. “அதெல்லாம் குதர்க்கவாதம். மன்மோகன்சிங் சொல்வது ‘மாக்ரோ’ பாலிசி டெசிஷன். இது ‘மைக்ரோ’ அச்சாசினேஷன். ரெண்டும் எப்படி ஒண்ணாகும்?” என்று கேள்வி எழுப்புவார்கள்.

கொலையில் கூட பணக்காரன் ஏழை வித்தியாசம் பார்ப்பது வக்கிரமானது என்று சாடுவார்கள். தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்று வசை பாடுவார்கள். அப்படி வித்தியாசம் பார்த்து ஏழைக் குழந்தைகளின் சாவை அலட்சியப்படுத்துவதும், பணக்காரக் குழந்தைகளின் சாவுக்கு குடம் குடமாய் கண்ணீர் விடுவதும் யார் என்பதை அவர்கள்தான் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தலித், முஸ்லிம் மக்கள் மீதான படுகொலைகள், காஷ்மீர் படுகொலைகள், பட்டினிச்சாவுகள் போன்றவற்றுக்காக நாம் “இயல்பாக இத்தனை கோபத்துடன் குமுறி எழுந்திருக்கிறோமா, அவையெல்லாம் தமக்கு நேர்ந்தவை போலக் கருதி கண்ணீர் விட்டிருக்கிறோமா என்று அவர்களே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.  அப்போதெல்லாம் வராத கோபம் இப்போது மட்டும் நமக்கு வருகிறதே, அவ்வாறாயின் நமது “இயல்பு என்ன என்பதையும் அவர்கள் பரிசீலிக்க வேண்டும்.

மோகன்ராஜ் என்பவன் கேடியா, கிரிமினலா எங்களுக்குத் தெரியாது. அவன் எவனாக வேண்டுமானால் இருக்கட்டும். நீதிக்காகவும், வாழ்க்கைக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் காக்கை குருவிகளைப் போல சுட்டு வீழ்த்தப்படுகிறார்களே, பட்டினியால் செத்து மடிகிறார்களே அது குறித்துத்தான் நாம் முதன்மையாக கவலைப்படவேண்டும். இப்படி எவனோ ஒருவன் சாவது குறித்து எங்களுக்கு விசேடக் கவலை ஒன்றும் இல்லை.

இப்பிரச்சினையில் கவலைக்குரிய விசயம் ஒன்றுதான். கோவை சம்பவத்தை முன்வைத்து தற்போது தமிழகத்தில் ஓடிக்கொண்டிருப்பது, 1980 களில் வெளிவந்த “இதுதாண்டா போலீசு” என்ற திரைப்படத்தின் ரீ மிக்ஸ். ஏற்கெனவே தட்டிக்கேட்க ஆளில்லாமல் தறிகெட்டு அலையும் போலீசுக்கு, “விசாரணையே இல்லாமல் சுட்டுத்தள்ளும் அதிகாரத்தையும் வழங்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாசகப் பெருங்குடி மக்களும், பதிவுலக மேதைகளும் ஒரே ஒரு இரவை போலீசு லாக் அப்பில் கழிக்கும் பாக்கியத்தை இறைவன் வழங்க வேண்டும் என்பது மட்டும்தான் “எல்லாம் வல்ல எம்பெருமானிடம்” நாங்கள் செய்து கொள்ளும் பிரார்த்தனை.

மற்றப்படி இந்த மோகன்ராஜ் என்கவுன்டரின் விளைவாகத் தனது “கனவு கலைந்து” போன ஒரு ஜீவன் போயஸ் தோட்டத்தில் வருந்திக் கொண்டிருக்கிறது. அந்த தாயுள்ளத்துக்கு மட்டும் எங்கள் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

 

“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” – ஒபாமா..!

100
ஒபாமாவின்-அடிமை-மன்மோகன்-சிங்

 

ஒபாமாவின்-அடிமை-மன்மோகன்-சிங்

இந்து புராணக் குப்பைகளில் சூப்பர் ஸ்டார் அவதாரம்  என்று போற்றப்படும் கிருஷ்ணன், என்ற கிரிமினலின் லீலைகள் எப்படி வருணிக்கப்பட்டுள்ளன என்பதை நாம் படித்திருப்போம். கிருஷ்ணன் கோபியர்களின் சேலையைப் பிடித்து இழுத்தது, குளத்தில் குளிக்கும் போது எட்டிப் பார்த்தது போன்ற ‘ஈவ் டீசிங்’ வேலைகளை அன்றைய வியாசனில் இருந்து நேற்றைய கண்ணதாசன் வரை எப்படியெல்லாம் விதந்தோதி எழுதியிருந்தார்கள் என்பதைப் பார்த்திருக்கிறோம்.

அவன் துவாபர யுகத்தில் வெண்ணை திருடித் தின்றதையும், கோபியரோடு குத்தாட்டம் போட்டதையும் புராணமாகவும் வரலாறாகவும் போற்றும் ஒரு தேசத்திற்கு கலியுகத்தில் மீண்டும் ஒரு ‘அவதாரம்’ எழுந்தருளினால் காட்சிகள் எப்படியிருக்கும் என்பதை கடந்த சில நாட்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த மாதம் 6ம் தேதி இந்திய ஆளும் வர்க்கத்தின் சமூகத்திலும் தரகு முதலாளிகளின் சமூகத்திலும் ‘ஒபாமாவதார்’ எழுந்தருளியது. அவதாரம் சும்மா வருமா…? கூடவே உளவுத்துறை, ஒற்றர்கள், அமெரிக்க அரசு அதிகாரிகள், பாதுகாப்புக்காக கமாண்டோக்கள், பத்திரிகையாளர்கள் என்று தன்னோடு சேர்த்து ஒரு மூவாயிரம் பேரையும் கூட்டி வந்துள்ளார். இந்த மந்தையையும், மந்தையின் மேய்ப்பரையும் பாதுகாக்க அமெரிக்க அரசு நாளொன்றுக்கு 900 கோடி ரூபாய் செலவு செய்கிறதாம். மூன்று நாள் கணக்கு – சுமார் 2700 கோடிகள்! கொஞ்சம் காஸ்ட்லியான அவதாரம் தான். போகும்போது “பில்லை சார் கையில கொடுத்திடு” என்று மன்மோகன்சிங்கை கையைக் காட்டி விட்டு பரிவாரங்கள் கிளம்பிவிடும்.  2700 கோடி என்பது அமெரிக்காவின் செலவுக் கணக்கு தான் – இதற்குச் சற்றும் குறையாத வகையில் இந்திய அரசும் மொய் வைத்திருக்கும். மொய்க் கணக்கு நோட்டை நாம் எந்தக் காலத்திலும் பார்க்க முடியாது.

வந்து இறங்கியுள்ள துரைமார்களுக்கு துரைசானிகளுக்கும் மனம் கோணாமல் சேவை செய்து விட வேண்டும் என்ற பதைப்பில் இந்திய ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் நாணிக் கோணிக் கொண்டு நிற்பதைக் காணக் கண் கோடி வேண்டும். மும்பை தாஜ் ஓட்டலின் அத்துணை அறைகளையும் ஒபாமாவதாருக்கும் அவரின் சம்சாரவதாருக்குமாகச் சேர்த்து முன்பதிவு செய்து விட்டார்கள்.

சீமைத்துரைக்கும் அவரது பரிவார தேவதைகளுக்கும் லோக்கல் சோம பானமா ஊத்திக் கொடுக்க முடியும்?  இவர்களுடைய தாக சாந்திக்காக வாங்கப்பட்டிருக்கும் சீமை பானம் பாட்டில் ஒன்றின் விலை மட்டும் 5 லட்சம் ரூபாயாம்! மூவாயிரம் பேருக்கும் மூன்று நாட்களுக்கு “தண்ணி செலவு” மட்டும் எவ்வளவு ஆகுமோ தெரியவில்லை. தலைக்கு “ஆஃப்” அடித்தாலும் மூணு நாளுக்கு 225 கோடி ரூபாய் கணக்கு வருகிறது.

அப்புறம் இந்த 3000 பேருக்கும் கம்பெனி கொடுத்த வகையில் நம்மூர் அதிகாரிகள், அமைச்சர் பெருமக்களுக்கான செலவு, அனைவருக்குமான சாக்கனா செலவு இதெல்லாம் தனி. மொத்தத்தில் என்ன செலவு ஆகியிருக்கும் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டுத் தெரிந்து கொள்ள முடியாது. இதெல்லாம் அரசாங்க ரகசியங்கள். அமெரிக்க சக்ரவர்த்தி திவாலாகி டவுசர் கிழிந்த நிலையில் விஜயம் செய்யும்போதே இவ்வளவு தடபுடலான வரவேற்பு! இன்னும் இருக்கவேண்டிய படி இருந்தால் என்ன நடக்குமோ, கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.

“ரெம்ப நல்லவர்” என்று அமெரிக்காவிடம் பேரெடுத்தவரான, இதே மன்மோகன் சிங் தான் அழுகி வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு வழங்க அத்தனை பகுமானம் காட்டியவர்.  முதலாளித்துவ ஊடகங்களுக்கு இந்த ஆபாசங்களெல்லாம் ஒரு பொருட்டேயில்லை – மிஷேல் ஒபாமா “பாண்டி” விளையாண்டது, பல்லாங்குழி விளயாண்டது, புருசனோடு சேர்ந்து டப்பாங்குத்து ஆடியது போன்ற அவதார லீலைகளையெல்லாம் கதை கதையாக முன்பக்கத்தில் வெளியிட்டு வருகின்றன. இன்றைய செய்தி நாளைய வரலாறு. நாளன்னிக்கு புராணம்.

செத்துப் போன பார்ப்பன இந்து மதத்தைப் புதைக்காமல் விட்டதைப் போல இந்த அதிகாரவர்க்கத் தரகர்களையும் விட்டுவிட்டால் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின் இந்த ஒபாமாவதார ஆபாசங்களும் கிருஷ்ணாவதாரக் கதையைப் போல் ஒரு புராணமாக செட்டில் ஆகிவிடும் வாய்ப்பும் இல்லாமல் இல்லை.

இந்தியாவின் ‘பெரும்’ இடதுசாரிக் கட்சியான சி.பி.எம் கட்சி தமது பலத்தை அணிதிரட்டாமல் ஒபாமாவுக்கு வெறும் அடையாள எதிர்ப்பு காட்டப்போதாக அறிவித்ததையே பொறுக்க முடியாமல் ஆன்மீகப் பேரொளி சிரீ.சிரீ ரவிசங்கர் கண்டித்திருக்கிறார்.

ஆளும் வர்க்கத்துக்கே மிகவும் பிடித்தமான ‘தீவிரவாதப்’ பிரச்சினையில் தான் சரியாக ஒத்துழைக்கவில்லை என்பது அவர்களது மனக்குறை.  அதற்கே இந்த சாமியார் குதிக்கிறார்.  ‘அதிதி தேவோ பவ:’ என்ற ஹிந்து கலாச்சாரமே பாதிக்கப்பட்டு விட்டதாக பதறுகிறார். ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி விட்டதாகக்கூறி டாக்டர் ஸுப்ரமண்யம் ஸ்வாமி அவர்கள், ஸுப்ரீம் கோர்ட்டில் ஒரு ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன் போடக்கூடும். ஆர்.எஸ்.எஸ் டவுசர் பாண்டிகளும் களத்தில் குதிக்கக் கூடும்.

ஒபாமா-மன்மோகன்-சிங்-சோனியா-காந்தி

ஒபாமா வருகையின் ஒவ்வொரு நொடியும், ஆளும் வர்கத்தின் பவ்யமும், தரகு முதலாளி வர்க்கத்தின் ஏக்கப்பார்வைகளும் முதலாளித்துவ ஊடகங்களில் விரிவாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஒரு காட்சி தான் பாக்கி;  ஒபாமாவும் மிஷேலும் நடந்து வரும் போது ‘எசமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்…’ என்று பாடிக் கொண்டே சோனியாவும் மன்மோகனும் துண்ணூறு பூசிக் கொள்ளும் காட்சி!

வாராது வந்த இந்த மாமணி ஒன்றும் சும்மாங்காச்சுக்கும் இந்தியாவுக்கு இன்பச் சுற்றுலா வரவில்லை. இப்போது அமெரிக்காவில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. பொருளாதாரப் பெருமந்தத்தைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஒபாமா, தனது தேர்தல் வாக்குறுதிகளில் கூறியபடி அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க முடியவில்லை. அவர் கொண்டுவந்த காப்பீட்டு மசோதா அமெரிக்கர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது உள்நாட்டில் பணப்புழக்கத்தையும் வேலைவாய்ப்பையும் தூண்டிவிட்டாக வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

இந்தப் பின்னணியில்தான் இந்தியா இராணுவ தளவாட உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதத்திற்கு  உயர்த்தியுள்ளது.  வரும் மார்ச் மாதத்திற்குள் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் கோடிகள் ($30 Billion) மதிப்புக்கு இராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்ய இந்திய அரசு பட்ஜட் ஒதுக்கீடு செய்துள்ளதையும் இதனுடன் இணைத்துப் பார்த்தால் ஓரளவு தெளிவான சித்திரம் கிடைக்கும்.

மத்திய மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க அரசுச் செயலர் ராபர்ட் ஓ ப்ளேக்கின் கூற்றுப்படி, அமெரிக்காவின் F-16 ரக போர் விமானங்கள் இந்திய பாதுகாப்புத் துறையின் டென்டரில் பங்கேற்கிறது – இந்த டென்டரை அமெரிக்கா வென்றால் அது அமெரிக்காவில் 27,000 வேலைகளை உருவாக்கும் என்கிறார் பிளேக். அவர்கள் எப்போதுமே தொழிலாளிகளுக்கு கிடைக்கப்போகும் “ஜாப்” பற்றித்தான் கணக்கு சொல்வார்கள். முதலாளிகளுக்கு கிடைக்கப் போகும் இலாபக்கணக்கை சொல்வது அமெரிக்க மரபு அல்ல. அந்த இலாபமும், இந்திய பாதுகாப்புத் துறையின் சுயேச்சைத் தன்மையைக் குலைப்பதால் கிடைக்கப் போகும் பலனும் தனி கணக்கு. முதலில் F-16 ரக போர் விமானங்கள் டென்டரில் இருந்து நிராகரிக்கப் பட்டதையும், பின்னர் அதை திரும்பச் சேர்த்துக் கொண்டதையும் இப்போது நினைவு படுத்திப் பாருங்கள்.

இதுல ஒரு உள் குத்தும் இருக்கிறது. பாக்கிஸ்தான் விமானப்படையிலும் இந்த எஃப்-16 விமானங்கள் இருக்கின்றன. இந்தியாவிலும் வரப்போகின்றன என்றால் இரண்டில் எது உசத்தியான தேசபக்தி விமானமென்பது தெரியவில்லை.

மேலே சொன்னது இராணுவத் துறையில் மட்டும் தான். உலகளவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15% அணு சக்தியிலிருந்து உற்பத்தியாகிறது. அணு உலைகளினால் ஏற்படும் கதிர்வீச்சு ஆபத்துகளைக் கணக்கில் கொண்டு அங்கே கழித்துக் கட்டப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தை இந்தியாவின் தலையில் சுமத்தவும், அணு தொழில் நுட்பத்தில் இந்தியா பெற்றிருக்கும் சுயேச்சைத் தன்மையைக் குலைக்கவும் போடப்பட்டிருக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அணு உலைகளை அமைப்பதிலுயும் இந்திய அரசு அந்நிய முதலீடுகளை அனுமதித்திருக்கிறது.

இப்படி இறக்குமதி செய்து நிறுவப்படும் அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பில் இருந்து அந்நிய முதலாளிகளைக் கழற்றி விடும் வகையிலான சட்டத்தையும் அண்மையில்தான் மன்மோகன் அரசு நிறைவேற்றியிருக்கிறது தொழில்நுட்பக் கோளாறுகள், இயந்திரக் கோளாறுகள், பாதுகாப்புக் குறைபாடுகள் போன்றவற்றால் ஏற்படும் விபத்துகளுக்கான பொறுப்பில் இருந்து அமெரிக்க, அந்நிய முதலாளிகளைத் தப்புவிக்கும் CSC (Convention for supplimentary compensation for nueclear damage) ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்து இட்டுவிட்டது. எல்லாம் திட்டமிட்டபடி வரிசைப் படி செய்து முடித்ததற்காக தன் அடிமைகளை ஒரு வார்த்தை பாராட்டி விட்டு ஒரு மேஸ்திரி பார்வை பார்த்து விட்டுச் செல்லவும், அப்படியே சம்சாரத்தோடு தீவாளி கொண்டாடவும் ஒபாமா வந்து விட்டார்.

இந்திய அமெரிக்க அறிவுத்துறை முன்முயற்சி, விவசாயத்துறையில் அமெரிக்கா கொண்டு வரும் உமியையும், இந்தியா கொண்டுவரும் அவலையும் ரெண்டு பேரும் சேர்ந்து ஊதி ஊதித் தின்பதற்கான ஒப்பந்தம், அப்புறம் 4 கோடி குடும்பங்களின் வயிற்றுப் பிழைப்பான சில்லறை வணிகம் முதலான சில்லறை சமாச்சாரங்களை அமெரிக்காவுக்கு திறந்து விடுவதற்கான சுபமுகூர்த்த நாட்கள்.. போன்றவை இந்த விஜயத்தின் போது முடிவாக இருக்கின்றன.

திவான் பகதூர் மன்மோகன் சிங்கின் விசுவாசத்தையும் சேவையையும் மெச்சி, தெற்காசியப் பிராந்திய பாதுகாப்பு என்ற எல்லையைத் தாண்டி, ஆப்பிரிக்கா உள்ளிட்டு உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவின் சார்பில் ரோந்துப் பணியில் ஈடுபடும் “பங்களா நாய்” பதவியையும் இந்தியாவுக்கு வழங்கவிருக்கிறார் ஓபாமா.

குனிந்து, வளைந்து கும்பிடு போட்டு, கையது கொண்டு வாயது பொத்தி, “எசமான,.. அப்டியே இந்த பாகிஸ்தானை ‘லைட்டா’ கண்டிச்சி ஒரு வார்த்தை ஒங்க வாயால சொல்லிட்டு போனீங்கன்னா…” என்று ஒபாமாவிடம் இழுத்துப் பார்த்தார் மன்மோகன்சிங்.

“பாகிஸ்தானில் குழப்பம் நிலவுவது (அதாவது நீ குழப்பம் விளைவிப்பது) உனக்கு நல்லதல்ல. பாகிஸ்தான் வளமாகவும், வலிமையாகவும், ஸ்திரமாகவும் இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது” என்று கூறி நறுக்கென்று மன்மோகன் சிங்கின் தலையில் ஒரு குட்டு குட்டி விட்டார் ஒபாமா. டர்பன் மறைத்திருப்பதால், வீக்கம் வெளியில் தெரியவில்லை. “இருக்கட்டும்.. இருக்கட்டும்… அதனாலென்ன.. சும்மா ஒரு இதுக்கு சொன்னேன் மன்னா…” என்று தலையைத் தடவிக் கொண்டுவிட்டார் மன்மோகன்சிங்.

பரமசிவனுக்கு ஒரு பாம்பு. அமெரிக்காவின் கழுத்திலோ இந்தியா பாகிஸ்தான் என்று இரண்டு பாம்புகள். இருந்தாலும் “நீதான் நல்ல பாம்பு” என்று இந்தியாவுக்கு சான்றிதழ் கொடுத்திருக்கிறார் ஒபாமா.

மொதல்ல நல்லவரா இருந்தாதானே அப்புறமா இந்தியா வல்லவராக முடியும்?

திரும்பிச் செல்லும் போது ஒபாமார மிஷேலிடம் சொல்வாராயிருக்கும் – “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் ரெண்டு பேருக்கும் நாக்குதான் கொஞ்சம் நீளம். ஓயாமல் நக்கித் தொலைக்கிறார்கள் ” என்று!

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்