Friday, June 12, 2026
முகப்பு பதிவு பக்கம் 848

புலிகளின் வீழ்ச்சியும், சர்வதேச சூழ்ச்சியும்

27

பிரபாகரனும் நோர்வே தூதுவரம்

பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்தாலும் எந்தத் தாக்கத்தையும் கொண்டு வரப் போவதில்லை.

ஈழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடர வேண்டும், என்று தமிழ் நாட்டு தமிழர்களும், புலம்பெயர்ந்த தமிழர்களும் எதிர்பார்க்கலாம். ஆனால் கள நிலைமை அதற்கு மாறாக உள்ளது. ஈழத்தில் இருக்கும் தமிழரும், புலம்பெயர்ந்த தமிழரும் ஒரே நேர்கோட்டில் பயணம் செய்யவில்லை. அவர்களின் நலன்கள் வேறுவேறாக உள்ளன. அன்றாடம் அவலங்களை வாழ்க்கையாக கொண்டிருந்த ஈழத் தமிழர்கள், போரிட வலுவற்று துவண்டு போயுள்ளனர். அவர்கள் இன்னொரு போரை எதிர்கொள்ளும் சக்தியற்றுக் கிடக்கின்றனர். தமிழ் ஊடகங்கள் கூறியது போல, வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் 25000 தமிழ் மக்கள் அழிக்கப் பட்டதாக இருக்கலாம். இதுவரை காலமும் கொடூரமான இனவழிப்புப் போருக்கு முகம் கொடுத்த எஞ்சியிருக்கும் ஈழத் தமிழ் மக்கள், மீண்டும் ஒரு இனவழிப்பை எதிர்கொள்ள தயாராக இருப்பார்களா என்பது சந்தேகமே. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தான், அதன் வலியும், வேதனையும் புரியும்.

2001 ம் ஆண்டு, ஈழத்திலும், உலகிலும் நிலைமைகள் வெகு வேகமாக மாறி விட்டிருந்தன. இந்த மாற்றத்தை பலர் கவனிக்கத் தவறி விட்டார்கள். அப்போது யாழ் குடாநாட்டை கைப்பற்றும் அளவிற்கு புலிகள் பலமாக இருந்தனர். இலங்கை இராணுவம் பலவீனமான நிலையில் இருந்தது. அப்படி இருந்தும் யாழ் குடாநாட்டு போரில் இருந்து புலிகள் பின்வாங்கிச் சென்றனர். இதன் காரணத்தை தலைவர் பிரபாகரன் பின்னர் தனது மாவீரர் உரையில் ஏற்கனவே குறிப்பிட்டார். (இந்தியா போன்ற) வெளி நாடுகளின் அழுத்தம் காரணமாக குடாநாட்டை கைப்பற்றும் முயற்சி கைகூடாமல் போனதை சூசகமாக தெரிவித்தார். இந்தியா மீண்டும் தனது இராணுவத்தை அனுப்பி, யாழ் குடாநாடு புலிகளின் கைகளில் போகாமல் தடுக்க தயாராக இருந்தது. போரில் திருப்புமுனையாக, பாகிஸ்தான் பல் குழல் பீரங்கிகளை இலங்கை இராணுவத்திற்கு அனுப்பி வைத்தது. இலங்கை இராணுவத்தின் கண்மூடித் தனமான அகோர குண்டு வீச்சிற்கு இலக்காகி சாவகச்சேரி என்ற நகரமே வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. சிங்கள பேரினவாதம் தனது கோரப்பற்களை அப்போதே காட்டி விட்டது.

மறுபக்கத்தில் வருடக்கணக்காக சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வந்த வன்னித் தமிழ் மக்கள், புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வெளியேற தலைப்பட்டனர். அரசு ஏற்படுத்திய நீண்ட கால பொருளாதாரத் தடை, வன்னியில் மக்கள் இனி வாழ முடியாது என்ற நிலையை உருவாக்கியது. குழந்தைகள் போஷாக்கின்மையால் இறந்து கொண்டிருந்தனர். 2002 ம் ஆண்டு, சமாதான உடன்படிக்கை உருவாவதற்கு வன்னி வாழ் தமிழ் மக்களின் அழுத்தம் ஒரு காரணம். மக்கள் 20 வருட தொடர்ச்சியான போரினால் களைப்படைந்து விட்டனர். எப்படியாவது சமாதானம் வந்தால் நல்லது என்ற எண்ணம் மட்டுமே அவர்கள் சிந்தனையில் இருந்தது.

இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. உலக வல்லரசான அமெரிக்காவும், பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஆதரவு வழங்கின. அப்போது மீண்டும் போர் தொடங்கினால் என்ன நடக்கும் என்று அமெரிக்க தூதுவர் பகிரங்கமாகவே தெரிவித்தார். “தமிழீழ இராஜ்யம் உருவாக விட மாட்டோம். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எங்கே நடக்கிறது போன்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசின் கரங்களை வலுப்படுத்துவோம்.” 9/11 க்குப் பின்னான காலமது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்கா முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்தது. 2006 ம் ஆண்டு, மீண்டும் போர் தொடங்கிய போது, தெற்கில் சில குண்டுவெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றன. இவற்றை அரசு சர்வதேச ஆதரவை தேட பயன்படுத்திக் கொண்டது. சில குண்டுவெடிப்புகள் அரச புலனாய்வுத் துறையின் கைவரிசையாக இருந்திருக்கலாம். இருப்பினும் பயங்கரவாத சம்பவங்களை எதிர்க்காத புலிகளினதும், தமிழ் மக்களினதும் சந்தர்ப்பவாத மௌனம், இலங்கை அரசிற்கு சாதகமாகிப் போனது. பெரும்பான்மை சிங்கள மக்களினதும், சர்வதேச நாடுகளினதும் ஆதரவை கேள்விக்கிடமின்றி பெற்றுக் கொள்ள முடிந்தது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒரு போதும் ஏகாதிபத்தியத்தின் அரசியலை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களைப் பொறுத்த வரை உலகில் உள்ள ஒரேயொரு ஏகாதிபத்தியம் “சிங்கள ஏகாதிபத்தியம்” மட்டுமே. வலதுசாரி அரசியல் கோட்பாடுகளில் இருந்தே இது போன்ற சிந்தனை பிறக்கின்றது. வர்க்கம் என்றால் ஆண், பெண் என்ற பாலியல் பிரிவாக புரிந்து கொள்பவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்? அவர்களை சொல்லிக் குற்றமில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களை தலைமை தாங்கும் நிலையில் உள்ள படித்த மத்திய தர வர்க்கம், எப்போதும் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் பெருமை கொள்கின்றது. மேலைத்தேய நாடுகளில் அவர்களின் வர்க்க நலன்கள் பிரிக்க முடியாதவாறு பின்னிப் பிணைந்துள்ளன.

உலகம் முழுவதும் இனப்படுகொலைகளை அரங்கேற்றி அதிகாரத்தைப் பிடித்த, காலனிய மக்களை அழித்து செல்வம் சேர்த்த மேற்கத்திய நாடுகளிடம், இலங்கையின் இனப்படுகொலை பற்றி இடித்துரைப்பதில் அர்த்தமில்லை. நான் கூட ஒரு காலத்தில் மேற்கத்திய அரச அதிகாரிகளுக்கு, அரசியல்வாதிகளுக்கு, ஊடகங்களுக்கு இலங்கை நிலவரம் பற்றி விலாவாரியாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். எல்லாவற்றையும் கவனமாக கேட்டுக் கொள்ளும் அவர்களது இராஜதந்திரம், செயலில் மட்டும் தமது தேச நலன் என்பதற்கு அப்பால் செல்ல விடுவதில்லை. உலகின் எந்த மூலையிலும் ஒரு பிரச்சினையை உருவாக்கவோ, தீர்க்கவோ வல்ல சாணக்கியர்கள் அவர்கள். உலகில் ஒவ்வொரு நாட்டுடனும் எவ்வாறு நடந்து கொள்வது, அந்த நாட்டைப் பற்றிய எமது நிலைப்பாடு என்ன, எனபன குறித்து மேற்கத்திய அரசுகள் தெளிவாகவே கொள்கை வகுத்துள்ளன. அதிலிருந்து அவை மாறப் போவதில்லை.

சர்வதேச நாடுகள் புலிகளின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. நோர்வேயின் அனுசரணையிலான சமாதான பேச்சுவார்த்தையின் போது, இலங்கை அரசாங்கமும், விடுதலைப் புலிகளும் அதிகாரத்தை பங்கு போட்டுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்த்தன. இரண்டு பக்கமும் இதயசுத்தியுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றவில்லை. போர்நிறுத்தம் என்பதை போருக்கான தயார்படுத்தல் என்று புரிந்து கொண்டார்கள். சமாதான காலத்தில் புலிகள் ஆயுதக் கடத்தலை மேற்கொண்ட போது, இந்திய செய்மதிகள் காட்டிக் கொடுத்தன. அமெரிக்காவில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட முகவர்கள் கைது செய்யப்பட்டனர். புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும், ஆயுதங்களை வாங்கி அனுப்புவருமான கே.பி. பத்மநாதன் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதாக செய்தி வந்தது. அவரை இலங்கை அரச அதிகாரிகள் பொறுப்பெடுக்க சென்ற போது, ஆள் அங்கே இல்லை. இடையில் என்ன நடந்தது என்பது இன்னமும் துலங்காத மர்மம். பத்மநாதன் C.I.A., RAW ஆகிய சர்வதேச உளவுத்துறையினரின் கண்காணிப்பில் இருப்பவர். புலிகளின் ஆயுதக் கொள்வனவு எந்த விதப் பிரச்சினையுமின்றி தொடருமானால், அது வேறு பல விடுதலை இயக்கங்களையும் ஊக்குவிக்கும் என்று சர்வதேசம் அஞ்சியது.

புலிகளுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற அதே கால கட்டத்தில், இந்தோனேசியாவில் அச்சே விடுதலை இயக்கம், சூடானில் கிறிஸ்தவ தென் பகுதியின் சுதந்திரத்திற்கு போராடிய இயக்கம், ஆகியன உலகமயமாக்கலின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டன. அதற்கு மாறாக இலங்கையில் மட்டும், இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் நாட்டமற்று போருக்கு தயாராகின. இலங்கை அரசு யுத்தநிறுத்தை ஒரு தலைப்பட்சமாக முறித்திருந்தாலும், தமிழர் தரப்பு தொடர்ந்து சமாதானத்திற்காக போராடி இருந்திருக்க வேண்டும். அப்படியான நிலையில் இலங்கை அரசின் மீது சர்வதேச அழுத்தம் அதிகரித்திருக்கும். ஏனெனில் இலங்கையில் மீண்டும் யுத்தம் ஏற்படுவதை சர்வதேச சமூகம் விரும்பவில்லை. இது அவர்களின் நலன்களுக்கு பாதகமானது.

மேற்குல நாடுகளின் ஊடகங்கள், இலங்கையில் நடக்கும் போரை, அல்லது தமிழின அழிப்பு யுத்தத்தை, முக்கியமற்ற செய்தியாக மட்டுமே தெரிவித்து வருகின்றன. தமது மக்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கும் நிலையில் ஊடகங்கள் உள்ளன. அனேகமாக பத்திரிகைகளில் மட்டும், சர்வதேச செய்திகளுக்காக ஒதுக்கிய பக்கத்தில் தீப்பெட்டி அளவில் தான் இலங்கைப் போர் பற்றிய செய்தி பிரசுரமாகும். இனப்படுகொலை என்று சொல்லக் கூடிய அளவிற்கு, மூவாயிரம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டாலும், அந்தச் செய்திக்கு தீப்பெட்டி அளவு தான் இடம் ஒதுக்கப்படும். மே 16 ம் திகதி, எதிர்பாராவிதமாக புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் பத்மநாதன் தெரிவித்த, “புலிகள் ஆயுதங்களை மௌனமாக்குகின்றனர்” என்ற செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும் முதல் பக்கத்தில் இடம்பெற்றது. “தமிழ்ப் புலிகள் தோற்று விட்டனர்” என்று அந்தச் செய்திக்கு தலைப்பிடப் பட்டிருந்தது. பத்மநாதன் சொன்னதை யார் எப்படி மொழிபெயர்த்துக் கொண்டாலும், மேற்குலகைப் பொறுத்த வரை, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சரணடைவதாகத் தான் புரிந்து கொண்டார்கள். மேற்குலக அரசுகள் புலிகளின் தோல்வியை எப்போதோ எதிர்பார்த்திருந்ததை, செய்திக்கு அளிக்கப் பட்ட முக்கியத்துவம் எடுத்துக் காட்டுகின்றது.

மேற்குலக பொருளாதாரம் இறங்குமுகமாக இருக்கும் காரணமாக, நிதி நெருக்கடி தோற்றுவித்த பொருளாதார தேக்கம் காரணமாக, இலங்கையில் போர் முடிவுக்கு வருவது அவர்களுக்கு தேவையாகப் படுகின்றது. மேற்குலக நாடுகள், ஆண்டு தோறும் வருகை தரும் இலங்கை அகதிகளை கட்டுப்படுத்த, முடியுமானால் ஒரேயடியாக நிறுத்த விரும்புகின்றன. இலங்கையில் போர் தொடரும் பட்சத்தில், மனிதாபிமான காரணத்தினால் அகதிகளின் வருகையை தடுக்க முடியாது. இலங்கையில் போரை எதோ ஒரு வகையில் நிறுத்துவதன் மூலம், அதை நிறைவேற்றிக் கொள்ளலாம். தற்போது போர் முடிவுக்கு வந்து விட்டதால், தமிழ் அகதிகள் இனிமேல் பெருமளவில் திருப்பியனுப்பப் படுவார்கள்.

இலங்கைப் பிரச்சினையில், ஒன்றில் பேச்சுவார்த்தை மூலம் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும், அல்லது போரில் யாராவது ஒருவர் வெல்ல வேண்டும். இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் எப்போதோ எடுத்து விட்டன. ஒரு காலத்தில் இலங்கையின் உள் நாட்டு யுத்தம், தமிழ்-சிங்கள இனங்களைப் பிரித்து வைக்கும், அதனால் அந்நியத் தலையீட்டுக்கு வழி பிறக்கும் என நம்பினார்கள். தற்போது அந்தப் போர், உலகமயமாக்கலுக்கு தடையாகத் தெரிகின்றது. புலிகளின் தலைமையை காட்டிக் கொடுத்த சர்வதேச சூழ்ச்சியை, இதன் பின்னணியிலேயே புரிந்து கொள்ளப்பட வேண்டும். புலிகளின் வீழ்ச்சியால், ஏகாதிபத்தியம் திருப்தியடைந்து விடவில்லை. ஏகாதிபத்தியமானது ஈழத் தமிழர்களை மட்டுமல்ல சிங்களவர்களையும் தனது மறுகாலனிய அடிமைகளாக்க கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றது. இப்போதே காலனிய அடிமைப் படுத்தலை நியாயப்படுத்த தொடங்கி விட்டார்கள். மேலைத்தேய விழுமியங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உலகமயமாக்கப்பட்ட சிறந்த குடிமக்களாகும் படி அழைப்பு விடுக்கின்றனர்.

நன்றி: கலையகம்

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

ராஜபக்சே கும்பலை போர்க் கிரிமினலாக அறிவிக்கக் கோரி ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !

சிங்கள இனவெறி ராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் வீரமரணமடைந்த நிலையில் ராஜபக்சேவை போர்க் கிரிமினலாக நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ம.க.இ.க தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டங்களை இன்று நடத்தியது.

சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் பெருந்திரளாக வந்திருந்தது பத்திரிகையாளர்களுக்கு ஆச்சரியத்தை தந்தது. ஆர்ப்பாட்டம் முழுவதும் தோழர்கள் எழுச்சியான முழக்கங்களை

எழுப்பினர். முழக்கங்களை காண விரும்புவோர் நேற்றைய ” துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! தோள்கொடுப்பார்கள் தமிழக மக்கள்” என்ற இடுகையைப் பார்க்கவும்.

பு.ஜ.தொ.மு வின் மாநில அமைப்புச் செயலர் தோழர் வெற்றிவேல் செழியனின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.முவின் மாநில தலைவர் தோழர் முகுந்தன் சிறப்புரையாற்றினார்.

அவரது உரையில் “நம்மைத் துயரத்தில் ஆழ்த்தும் வகையில் ஈழவிடுலைப் போர் ஒரு பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இது புலிகள் அமைப்பின் தோல்வி மட்டுமல்ல. ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டமே சந்தித்திருக்கும் பெரும் பின்னடைவு. இத்தகையதொரு நிலைமை நெருங்குகிறது என்பதைக் கடந்த சில மாதங்களில் அனைவருமே புரிந்து கொள்ள முடிந்தது எனினும், இந்த முடிவு பெரும் சோகத்தில் நம்மை ஆழ்த்தவே செய்கிறது.”

“புலிகள் இயக்கத்தை ஒழிப்பது என்று கூறிக்கொண்டு ராஜபக்சே அரசு நடத்திய இந்த ஈழத்தமிழின அழிப்புப் போரில், இந்திய அரசு துணை நின்று இறுதிவரை இலங்கை அரசை வழிநடத்தியிருக்கிறது. தேர்தல் முடிவதற்காகவே காத்திருந்து, நாள் குறித்து, இந்த இறுதிப் படுகொலை அரங்கேற்றப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவது கண் முன்னே தெரிந்தபோதும், செஞ்சிலுவை சங்கம், ஊடகங்கள் ஆகிய அனைவரும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டும், மேற்குலக நாடுகள் வாயளவுக்குக் கண்டனம் தெரிவித்தனவே ஒழிய, இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் தலையிடவில்லை. ஏகாதிபத்திய உலகத்தின் ஆசியுடன், சீனா, ரசியா, பாகிஸ்தானின் ஆதரவுடன், இந்திய மேலாதிக்கத்தின் வழிகாட்டுதலில் இந்த இன அழிப்புப் போரில் வெற்றி பெற்றிருக்கிறது சிங்கள அரசு.”

“யூதர்களின் வதைமுகாம் போன்ற ராணுவக் கண்காணிப்பு முகாம்களில் முள் கம்பி வேலிகளுக்குப் பின்னே, ஈழத்தமிழ் மக்கள் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழினத்தையே தோற்கடித்துவிட்ட வெற்றிக் களிப்பில் கூத்தாடுகிறது சிங்கள இனவெறி. உலகம் முழுதும் உள்ள ஈழத்தமிழ் மக்களோ, அவமானத்தால் துடிக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் இரவு பகலாகத் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது புலம் பெயர் தமிழர்களின் போராட்டம்.”

“ஈழத் தமிழினம் துவண்டுவிடாது. விடுதலைப் போராட்டம் தொடர்ந்து நடக்கும். ஈழத் தமிழினத்திற்கு தமிழக மக்கள் துணை நிற்பார்கள். சிங்கள இனவெறியர்களின் வக்கிரக் களியாட்டம் நீண்டநாள் நீடிக்காது. ஃபீனிக்ஸ் பறவையாய் ஈழப்போராட்டம் மீண்டெழும்” என்று தமிழக மக்களுக்கு புதிய போராட்டச் செய்தியை அறிவித்தார்.

வங்கக் கடலின் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தின் செய்தி தமிழக மக்களின் ஆதரவோடு கடல் கடந்து ஈழத்திலும் எதிரொலிக்கும் நாள் வெகு தொலைவிலில்லை.

இந்த ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை கீழே வெளியிட்டுள்ளோம்.


இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்!

ராஜீவ்-காந்தி-கொலை

ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ராஜீவ் எனும் இந்த ஆயுதம் மட்டும் 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் முனை மழுங்காமல் தமிழ் மக்களுக்கு எதிராகப் பாய்ந்து கொண்டே இருக்கிறது. காரணம், அதனை யாரும் எப்போதும் திருப்பித் தாக்கியதில்லை என்பதுதான்.

இன்று கூட (21.05.09) ராஜீவின் இறந்த நாள் என்பதற்காக நாளிதழ்களில் பல பக்க விளம்பரம், அவரது கனவை நனவாக்குவோம் என்ற உறுதி மொழியோடு வந்திருக்கிறது. ஈழத்தை சுடுகாடாக்கிவிட்டு மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் காங்கிரசு கயவாளிகள், இப்போது புலிகளை முற்றாக இலங்கை அரசுடன் இணைந்து வீழ்த்திவிட்டோம் என்ற இறுமாப்பு இந்த விளம்பரங்களில் துருத்துகிறது.

ராஜீவ் கொலை குறித்த பிரச்சினை எழுப்பப் படும்போதெல்லாம், “அதனை மறந்து விடக்கூடாதா, மன்னித்து விடக்கூடாதா” என்று மன்றாடுகிறார்கள் பல தமிழுணர்வாளர்கள். ஆனால் இந்த ராஜதந்திரம் பார்ப்பனக் கும்பலிடம் இதுவரை பலிக்கவில்லை. பிரபாகரன் மரணமடைந்து விட்டதாக கொழும்பில் சிங்கள மக்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் இங்கே ஆங்கில செய்தி சேனல்களும் அதே உணர்வுடன் கொண்டாடினர். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்றும், இனி அந்த வழக்கு முடிகிறது என்றெல்லாம் மகிழ்ச்சியுடன் அலசினர். ராஜீவ் கொலை வழக்கு முடிந்துவிட்டதாக அவர்கள் கருதுவது சட்டப்படியும், அறத்தின்படியும் சரியானாதா? இந்தியாவில் ராஜீவ் ஆட்சி செய்தபோதும், இலங்கையில் ராஜீவ் அமைதிப்படை அனுப்பியபோதும் நடந்த படுகொலைகளுக்கு யார் காரணம்?

இந்திய அமைதிப்படையால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் மக்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் யார்? அந்தக் கொலைமுயற்சியில் உயிரிழந்த 1300 இந்திய சிப்பாய்களின் மரணத்துக்காகத் தண்டிக்கப்பட்டவர்கள் யார்? போபால் விசவாயுப் படுகொலைக்காக, டெல்லி சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படாதவர்கள் யார்? அயோத்தியைக் கிளறி இந்துப் பாசிசப் பேய்க்கு உயிர் கொடுத்தது யார்? இந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டியது யார்?

மேற்சொன்ன கேள்விகளை யாரும் எப்போதும் எழுப்பியதில்லை. எனவே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி ஆகியோருடன் தேசியப் புனிதர்களின் படவரிசையில் ராஜீவ் காந்தியும் சேர்ந்து விட்டார்.

‘மரித்தவர்களைக் குறைகூறுதல் மனிதப் பண்பில்லையாம்’. ‘அரசியல் நாகரீகம்’ எனும் பட்டாடைக்குள் ஒளிந்து கொண்டிருப்பதால், இந்த அரசியல் பிழைப்புவாதத்தைப் பலர் அடையாளம் காண்பதில்லை.

1991 மே 21 அன்று தமிழகம் முழுவதும் திமுகவினர் தாக்கப்பட்டார்கள். 2 இலட்சம் திமுகவினரின் உடைமைகள் எரிக்கப்பட்டன. ராஜீவுக்காக கண்ணீர் சிந்துமாறு தமிழகமே அச்சுறுத்தப்பட்டது. அன்று தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக கண்ணீர் விட்டவர்கள் இன்றும் ஈழத்தமிழ் மக்களுக்காக கண்ணீர் விடுகிறார்கள் – இதுவும் ஒரு வகை அரசியல் நிர்ப்பந்தம்தான். பிரணாப் முகர்ஜி கலைஞர் சந்திப்புடன் தமிழகத்தின் “கண்ணீர் விடும் போராட்டம்” முடிவுக்கு வருகிறது. ஈழத்திலோ அழுவதற்கு கண்ணீர் வற்றிய நிலையில் அவலம் தொடர்கிறது.

இனியும் கண்ணீர் விடுவதை யாரேனும் தொடர்ந்தால் அது தீவிரவாத நடவடிக்கையாகக் கருதப்படும். அவர்களுக்கெதிராக ராஜீவின் ஆவியோ, ராஜத்துரோகச் சட்டமோ ஏவப்படலாம்.

அன்று தமிழகமே கண்ணீர்க் கடலில் அமிழ்த்தப்ப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்திலிருந்து வெளிவரும் புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் ஆகிய இரு இதழ்கள் மட்டுமே எதிர்ப்புக் குரல் எழுப்பின. அதன் விளைவாக போலீசின் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டன. “இவர்கள் ராஜீவுக்காக அழமாட்டார்கள்” என்ற தலைப்பில் ஜூன் 1991 புதிய கலாச்சாரம் இதழில் வெளியான உரைவீச்சினை இங்கே பதிவு செய்கிறோம்.

80 களுக்குப் பின் பிறந்த இளைய தலைமுறை அந்த வரலாற்றை அறிந்து கொள்ளவும், மீண்டும் மீண்டும் அரங்கேறும் கேலிக்கூத்துகளை பழைய தலைமுறை புரிந்து கொள்ளவும் இது உதவக் கூடும்

இவர்கள் ராஜீவுக்காக

அழமாட்டார்கள்!

ரோவா. எகிப்திய மன்னன்.
தான் இறந்தவுடன் தனது பட்டத்தரசியையும்,
ஆசை நாயகிகளையும், மந்திரிப் பிரதானிகளையும்,
தனது ஆடை ஆபரணங்களையும்,
பொக்கிஷங்களையும், அடிமைகளையும்
தன்னுடன் சேர்த்துப் புதைக்கச் சொன்னான் அந்த மன்னன்.
பூவுலக வாழ்வைச்
சுவர்க்கத்திலும் தொடரவேண்டுமென்பது அவன் ஆசை.
ஆசை நிறைவேற்றப்பட்டது.
பிறகு அவனுடைய வாரிசுகளும்
அவனைப் போலவே ஆசைப்பட ஆரம்பித்தார்கள்.
அவர்களுடைய ஆசைகளும் நிறைவேற்றி வைக்கப்பட்டன.
இது பொய்யல்ல, புனை கதையல்ல – வரலாறு;
சாட்சி – எகிப்திய பிரமிடுகள்.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஒருவேளை
பரோவாவைப் போல ராஜீவும் ஆசைப்பட்டிருந்தால்,
நாமே அதை முன்னின்று நிறைவேற்றியிருக்கலாம்.
சிதைந்து, அழுகி நாட்டின் அரசியல் பண்பாட்டு அரங்கில்
நாற்றத்தையும், நோயையும் பரப்பியபடி
இறக்கவிருக்கும் காங்கிரசு என்னும்
அருவெறுக்கத்தக்க மிருகத்தை
அவ்வாறு அடக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஒரு வகையில் பரோவா நல்லவன்.
தனது அதிகாரக் குடையின் நிழலில் ஆட்டம் போட்டவர்கள்
தன்னுடன் சேர்ந்து அடங்குவதே நியாயம்
என்று கருதியிருக்கிறான் போலும்!
தன்னுடன் குடிமக்களையும் சேர்த்துப் புதைக்குமாறு
அவன் உயில் எழுதவில்லை;
ஊரைக் கொளுத்திவிடுமாறு
உத்தரவிட்டதாகத் தகவல் இல்லை.

ராஜீவின் இறுதி ஆசையைப் பற்றி நமக்குத் தெரியாது.
ஆனால், பீரங்கி வண்டியில் ராஜீவின் உடல் ஏறுமுன்னே
நாடெங்கும் பல அப்பாவிகளின் பிணங்கள்
பச்சை மட்டையில் ஏறியது தெரியும்.
ராஜீவின் சிதைக்கு ராகுல் தீ மூட்டும் முன்னே
‘தொண்டர்கள்’ ஊருக்குத் தீ மூட்டியது தெரியும்.
மறைந்த தலைவனுக்கு மரியாதை செய்யுமுகந்தான்
ஊரைச் சூறையாடியது தெரியும்.

இருப்பினும் பேசக்கூடாது.

மரித்தவர்களைக் குறை கூறுதல் மனிதப் பண்பல்ல;
கருணாநிதியைக் கேளுங்கள் விளக்கம் சொல்வார்.
இருபத்தொன்றாம் தேதி இரவு 10.19 வரை
“ஆட்சியைக் கவிழ்த்த சூழ்ச்சிக்காரன்,
கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கிய கொள்ளைக்காரன்,
அக்கிரகாரத்தின் ஆட்சிக்கு அடிகோலும்
அவாளின் ஆள்”
ஆனால் 10.20-க்குப் பின் அமரர்,
அமரரைப் பழித்தல் தமிழ்ப் பண்பல்ல.
பாவத்தின் சம்பளம் மரணம்.
பாவமேதும் செய்யாதிருந்தும்
‘சம்பளம்’ பெற்றவர்கள் பற்றி….?

பேசக்கூடாது. இது கண்ணீர் சிந்தும் நேரம்.
உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம்.
ஆனால், கண்ணீர் சிந்தும் விஷயத்தில்
கருத்து வேறுபாடுகளை அனுமதிக்க இயலாது.
கண்ணீர் சிந்துங்கள். இல்லையேல்
கண்ணீர் சிந்த நேரிடும்.

சிரிக்காவிட்டால், சிறைச்சாலை;
கைதட்டாவிட்டால் கசையடி – இட்லரின்
ஆட்சியில் இப்படி நடந்ததாகக்
கேள்விப்பட்டிருக்கிறோம்.
அது பாசிசம்.

பேசாதே என்றால் பொறுத்துக் கொள்ளலாம்!
சிரிக்காதே என்றால் சகித்துக் கொள்ளலாம்,
அழாதே என்றால் அடக்கிக் கொள்ளலாம்.
ஆனால்
அழு‘ என்று ஆணை பிறப்பித்தால் அழ முடியுமா?
அச்சத்தில் பிரிவது சிறுநீர். கண்ணீரல்ல.
அடிமைச் சாம்ராச்சியத்தின் அதிபதி
பரோவா கூடத் தன் அடிமைகளுக்கு
இப்படியொரு ஆணை பிறப்பித்ததில்லையே!

ஆத்திரத்தையும் அழுகையையும் மட்டுமே
தன் மக்களுக்குப் பரிசாகத் தந்த
ஆட்சியாளனின் மறைவுக்கு
ஏன் கண்ணீர் சிந்த வேண்டும்?
அரசியல் சட்டக் காகிதங்களில் மட்டுமே இருந்த
உயிர் வாழும் உரிமையும்
தன் குடிகளுக்குத் தேவையில்லை என்று
கிழித்தெறிந்த கொடுங்கோலனின்
உயிர் பிரிந்ததற்காக
எதற்குக் கண்ணீர் சிந்த வேண்டும்?
இப்படியெல்லாம் கேட்கத்
தெரியாமலிருக்கலாம் மக்களுக்கு.
இருப்பினும் அவர்கள் கண்ணீர் சிந்தவில்லை.

புகழ் பெற்ற நான்கு உபாயங்களைத்
தலைகீழாகவே பயன்படுத்திப் பழகிய
எதிரிகள் – காங்கிரசுக்காரர்கள்
நான்காவது ஆயுதம் – தண்டம் –
தோற்றவுடனே மூன்றாவது ஆயுதத்தை
பேதம் – ஏவினார்கள். வீதிகள் தோறும்
சுடுகாடுகள். பயனில்லை. இரண்டாவது
ஆயுதம் – தானம் – பிரயோகிக்கப்பட்டது.
கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்
ஒலிபெருக்கிகளில் ஒப்பாரி வைத்தது.
மக்கள் கண்ணீர் சிந்தக் காணோம்.
முதல் ஆயுதம்
வன்மத்துடன் களத்தில் இறங்கியது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும்
வண்ணச் சுடுகாடு,
கறுப்பு வெள்ளைச் சுடுகாடு;
வானொலியில் முகாரி;
பத்திரிக்கைகளில் இரங்கற்பா…
“பார்… பார்… சிரித்த முகத்துடன்
எங்கள் தலைவனைப் பார்!
சூது வாது தெரியாமல்
மாலைக்குத் தலை நீட்டிய மன்னவனைப் பார்!
மக்களைத் தழுவ விரும்பியவன்
மரணத்தைத் தழுவிய கொடுமையைப் பார்!
அன்பு மனைவியும் அருமைச் செல்வங்களும்
அநாதையாக நிற்பதைப் பார்!
அமெரிக்க அதிபர் அழுகிறார்; ரசிய அதிபர் அழுகிறார்;
உலகமே அழுகிறது.
நீ மட்டும் ஏன் அழ மறுக்கிறாய்?
அழு… அழு…!”

ழுதார்கள்; அழுதீர்கள். அழுது
முடித்துவிட்டு அடுத்த வேலையைப்
பார்க்கலாம் என்று நகர்வதற்கு
இது ‘பாசமலர்’ அல்ல;
நீங்கள் அழுத பின்னால் அடுத்த வேலையை
அவர்கள் தொடங்குவார்கள்.
அவர்கள் கண்ணீரைக் கனியவைத்து
வாக்குகளாக்கும் ரசவாதிகள்.
உங்கள் கண்ணீர்த் துளிகளை மூட்டம்
போட்டிருக்கிறார்கள்.
காலம் கடந்துவிடவில்லை. கொஞ்சம்
சிந்தித்துப் பாருங்கள்.
இறந்தவரெல்லாம் நல்லவரென்றால்
இட்லரும் நல்லவனே.
கொலையுண்டவர்கள் எல்லாம் கோமான்களென்றால்
கொடுங்கோலன் என்ற சொல்லுக்கு
அகராதியில் இடமில்லை.


நினைவிருக்கிறதா? இப்படித்தான்,
இப்படியேதான் நடந்தது
ஏழு ஆண்டுகளுக்கு முன்பும்.
கையில் கொள்ளியுடன்
தாயின் பிணத்தருகே தலைமகன்
உங்கள் வாக்குகளைக் கொள்ளையிட்டான்.
அந்த ஐந்தாண்டு அரசாட்சியைக் கொஞ்சம்
அசை போட்டுப் பாருங்கள்!

இந்த நேரு குலக்கொழுந்து, அபூர்வ சிந்தாமணி
அரியணை ஏறும்போதே
ஐயாயிரம் தலைகளைக் காவு வாங்கியதே
மறந்து விட்டீர்களா?
குப்பை கூளங்களைப் போல
அப்பாவிச் சீக்கியர்களின் உடல்கள்
குவித்து வைத்துக் கொளுத்தப்பட்டனவே!
அவர்களது சாம்பலுக்கு
அஸ்திக்கலசமும் திரிவேணி சங்கமமும் வேண்டாம்;
ஆறுதலாக ஒரு வார்த்தை…
சொன்னதா அந்த அரசு?

ஐயாயிரம் கொலைகள் – ஐம்பதாயிரம் அகதிகள்.
அகதிகள் பெரும்பான்மையோர்
கைம்பெண்கள், குழந்தைகள்.
பிழைப்பதற்காகச் சொந்த மண்ணை விட்டு வந்து
வியர்வையும், ரத்தமும் சிந்தி
ஆசையாகக் கட்டி வளர்த்த வாழ்க்கையை
ஒரே நாளில்
குதறி எறிந்தன காங்கிரசு மிருகங்கள்.
நீதி கிடைக்கும் நிவாரணம் கிடைக்கும் என
ஏழு ஆண்டுகள் காத்திருந்து
குழந்தைகளையும், துயரத்தையும் மட்டுமே சுமந்து
சொந்த மண்ணுக்குத் திரும்பினார்கள்
அந்த இளம் விதவைகள்.
இன்று சோனியாவுக்காகக் கண்ணீர் சிந்துபவர்கள்
இவர்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள்?
கேளுங்கள்.

இந்திராவின் கொலையாளியைக் கண்டுபிடித்துத்
தூக்கிலேற்றியாகி விட்டது.
ஐயாயிரம் கொலைகளுக்கு
எத்தனை பேர் தண்டிக்கப்பட்டனர்?
தண்டிப்பது கிடக்கட்டும்; கொலையாளிகளைக்
கண்டுபிடிக்க கூட முடியாது என்று
கைவிரித்தார் ராஜீவ்.
நாடே காறி உமிழ்ந்த பின்
ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது.
“கண்டு பிடிக்க முடியவில்லை” –
கமிஷனும் அதையே சொல்லியது.

தூக்கிலேற்றப்பட வேண்டிய பிரதான குற்றவாளிகள்
ராஜீவின் தளகர்த்தர்கள் –
எச். கே. எல். பகத், ஜகதீஷ் டைட்லர்.
இன்று சோனியாவைப் பிரதமராக்க விழையும்
ராஜீவின் நண்பர்கள்.
அடுக்கடுக்காய் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன;
விளைவு, குற்றம் சாட்டியவர்களுக்குக்
கொலை மிரட்டல் வந்தது.
கமிஷன் கண்டுபிடித்த ஒன்றிரண்டு
கொலைகாரர்களின் பெயர்களையும்
அரசாங்க ரகசியமாக்கி
ஆணை பிறப்பித்தார் ராஜீவ்.

“இந்திரா நினைவு நாளோ,
குடியரசு தினமோ, சுதந்திர தினமோ எது வந்தாலும்
எங்களுக்கு நடுக்கமாக இருக்கிறது.
மீண்டும் தாக்கப்படுவோமோ என்று அச்சமாக இருக்கிறது.
அவர்கள் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டாம்;
“வருந்துகிறோம் என்று ஒரு வார்த்தைகூட
இன்று வரை அவர்கள்
வாயிலிருந்து வரவில்லையே”
அங்கலாய்த்தாள் ஒரு இளம்விதவை.

குடிமக்கள் நலம் பேணும் கொற்றவன் –
ராஜீவ் சொன்னார்.
“மரம் விழுந்தால் மண் அதிரத்தான் செய்யும்”.
சொன்ன மரமும் இப்போது விழுந்துவிட்டது.
டில்லி மாநகரமே கண்ணீர் விட்டுக்
கதறியது என்கிறார்களே,
அந்தச் சீக்கியப் பெண்களின்
கண்கள் கலங்கினவா என்று
விசாரித்துப் பாருங்களேன்.

போபால். இந்திய வரலாற்றின் மறைக்க முடியாத
தேசிய அவமானம்.
ராஜீவ் பதவிக்கு வந்தவுடனே
நடைபெற்ற பயங்கரப் படுகொலை.
ஒரே இரவில் பத்தாயிரம் பேரைப் பிணங்களாகவும்,
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உழைப்பாளி மக்களை
நடைப்பிணங்களாகவும் ஆக்கிய குண்டு வெடிப்பு;
அமெரிக்க இராணுவத்தின் விஷவாயுக் குண்டுக்கு
இந்தியாவில் நடத்திப் பார்த்த சோதனை.

இல்லை. உங்கள் நாட்டுத்
தொழிலாளிகளின் அலட்சியத்தால்
நேர்ந்த விபத்து இது என்றது
யூனியன் கார்பைடு.

ஆமோதித்தது ராஜீவ் அரசு.
“விஷ வாயுவைத் தயாரிக்க
உனக்கு உரிமம் கொடுத்தது யார்?” என்று
சீறினார்கள் இந்திய விஞ்ஞானிகள்.
காங்கிரசை ஓரக்கண்ணால் பார்த்துச்
சிரித்தது கார்பைடு.
ஆத்திரம் கொண்டு அமெரிக்க முதலாளிகளைத்
தாக்கத் துணிந்தது மக்கள் கூட்டம்.
முதலாளிகளுக்கு அரணாய் நின்றது
ராஜீவ் அரசு.

நீதி எங்கே, நிவாரணம் எங்கே என
அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு
தொடர்ந்தனர் மக்கள். நீதி கேட்பதும்,
நிவாரணம் பெறுவதும் “நீங்கள் தேர்ந்தெடுத்த”
எங்கள் அரசின் உரிமை என்று
அதையும் பிடுங்கிக் கொண்டது ராஜீவ் அரசு.
அந்தச் சுடுகாட்டின் நடுவில்
ஒரு சொர்க்கபுரியை நிறுவி
அதில் கவியரங்கம் நடத்தியது;
களியாட்டம் போட்டது.

ஆறு ஆண்டுகள் கடந்து விட்டன.
இறந்தவர்கள் மறக்கப்பட்டார்கள்.
இருப்பவர்களோ குருடரானார்கள், முடமானார்கள்.
பிறப்பவையும் சப்பாணிகள், சதைப் பிண்டங்கள்.
போபால் அழுது கொண்டிருக்கிறது.
அதன் கண்ணீருக்கு ராஜீவின்
மரணம்தான் காரணமோ?
கேட்டுத்தான் பாருங்கள்.

பதில் சாட்டையாய் உரிக்கும் – அது ராஜீவின்
மரணம் தோற்றுவித்த கண்ணீரல்ல,
துரோகம் தோற்றுவித்த கண்ணீர்.

னால், ஸ்ரீபெரும்புதூரில் குண்டு வெடித்தவுடனே
வெடிக்கிறார்கள் காங்கிரசுக்காரர்கள்.
“நன்றி கொன்றவர்கள், எங்கள் தலைவனைக்
கொன்று விட்டார்கள்! நயவஞ்சகர்கள்,
முதுகில் குத்திவிட்டார்கள்!
ஒவ்வொருவரையும் சோதனை போடுங்கள்!
எல்லோரையும் விரட்டுங்கள்!
ஈழத்தமிழன் எவனையும் நம்ப முடியாது!”
ஈழத் தமிழினத்திற்குத் துரோகத் தமிழினம்
என்று பெயர் சூட்டுகிறார்கள்.

யார் துரோகி? எவன் நயவஞ்சகன்?
விடுதலைப் போராளிகளைக்
கூலிப் பட்டாளமாக உருமாற்றியது யார்?
ஆதரவுக் கரம் என்று நம்பியவர்கள்
மத்தியிலே ஐந்தாம் படையை
உருவாக்கியது எந்தக் கை?
முகத்தில் சிரிப்பும், கைகளில் இனிப்புமாக
வரவேற்ற ஈழத்தைப் பெண்டாள முனைந்தது
யாருடைய ஆட்சி?
புறாக்களைக் காட்டி ஏமாற்றிக்
கழுகுகளைப் பறக்கவிட்டு அமைதியை
நிலைநாட்டியது யாருடைய படை?
“ஆத்தாள் சிக்கிம் வென்றாள், மகன்
ஈழம் கொண்டான்” என்று
கல்வெட்டில் பொறித்துக் கொள்வதற்காக
பாக். ஜலசந்தியில் குறுக்கு மறுக்காக
அடித்து விளையாட
ஈழத்தமிழன் என்ன பூப்பந்தா?

எது துரோகம்? யார் துரோகிகள்? ஆனந்த
பவனத்திலும், சத்தியமூர்த்தி பவனத்திலும்
பொருள் கேட்காதீர்கள்.
யாழ்ப்பாண மக்களிடம் கேளுங்கள்.
துரோகம் என்ற
சொல்லின் பொருள் ராஜீவ் என்பார்கள்;
வங்காள தேசத்தில் கேளுங்கள் – இந்திரா
என்று விளக்குவார்கள்;
பஞ்சாபில் விசாரித்துப் பாருங்கள் – மோகன்தாஸ்
கரம்சந்த் என்று வரலாறு சொல்வார்கள்
பகத்சிங்கின் வாரிசுகள்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, கரம்சந்த் காந்தி –
ஒரே சொல்லுக்கு
ஒவ்வொரு இடத்திலும் ஒரு பொருள்!
ஆனால், வேற்றுமையிலும் ஒரு ஒற்றுமை –
துரோகம் என்றால் காந்தி!
சோரத்தில் பிறந்து
துரோகத்தில் வளர்ந்த தங்கள் கட்சித்
தலைவனுக்காக உங்களைக்
கண்ணீர் சிந்தக் கோருகிறது.
சிந்தியுங்கள்!

தள்ளாத வயதில் ‘தலாக்’ என்று
கணவனால் தள்ளிவைக்கப்பட்ட ஷாபானு
என்ற முசுலீம் பெண்ணைக் கேளுங்கள்.
தான் போராடிப் பெற்ற நீதியை ஒரே நொடியில்
ராஜீவ் கொன்று புதைத்த கதையைச் சொல்வாள்.
திமிர் பிடித்த கணவனுடனும்,
வெறி பிடித்த முல்லாக்களுடனும்
சேர்ந்து கொண்டு ராஜீவ் தனக்கிழைத்த
கொடுமையைச் சொல்லி அழுவாள்.
ஊன்றிக் கவனியுங்கள்.
அவள் மட்டுமல்ல; பர்தாவுக்குள்ளே
முகம் புதைத்த இசுலாமியப் பெண்கள் பலர் விசும்புவதும்
கேட்கும்.

அயோத்தி நகர மக்களைக் கேளுங்கள்.
அவர்கள் சீந்தாமல் ஒதுக்கி வைத்த
பாபர் மசூதிப் பிரச்சினையை
ராஜீவ் தூண்டிவிட்ட கொடுமையைச்
சொல்லி அழுவார்கள்.
அருண் நேருவிடம் தனியே
விசாரித்துப் பாருங்கள். கோர்ட்டில்
உறங்கிக் கிடந்த வழக்கைத் தூசு தட்டி எடுத்து
மசூதியின் பூட்டைத் திறந்துவிட்டு
‘இந்து’ ஓட்டைப் பிடிக்கத்
தானும் ராஜீவும் போட்ட திட்டத்தைக்
குதூகலமாய் வர்ணிப்பார்.

ராஜீவின் உடலடக்கத்திற்கு வந்திருந்த
அமிதாப்பையும் வராத இந்துஜாவையும்
கேட்டுப் பாருங்கள்.
பீரங்கிப் பேரக் கமிஷனை ஒளிக்க
‘உடுக்கை இழந்தவன் கை போல’ வந்து உதவிய
திருவாளர் பரிசுத்தத்தை நாவாரப் புகழ்வார்கள்.

வச குண்டலம் போல ராஜீவை
விட்டுப் பிரியாதிருந்த அவரது
மெய்க்காவலர்களைக் கேளுங்கள்;
தண்டி யாத்திரை என்ற பெயரில்
ராஜீவ் நடத்திய கோமாளிக் கூத்தைச்
சொல்லிச் சிரிப்பார்கள்;
துப்பாக்கியைச் சட்டைக்குள் ஒளித்து
கதர்க்குல்லாய் மாட்டிக் கொண்டு
காங்கிரசுத் தியாகிகளாகத் தாங்கள் அவதாரம்
எடுத்ததைச் சொல்வார்கள்; ஒருமைப்பாட்டு ஓட்டத்தில்
தாங்களும் விளையாட்டு வீரர்களாக உருமாறி
ஓடிய கதையைச் சொல்வார்கள்.

ராஜீவின் பாதம் பட்ட இந்திய நகரங்களின்
மக்களைக் கேளுங்கள்.
அவரது பாதுகாப்பை உத்தேசித்துச்
சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளிகளை,
நடைபாதை வியாபாரிகளை, இளைஞர்களை
ஆயிரக்கணக்கில் அடையாளம் காட்டுவார்கள். அவர்களில்
எத்தனைப் பேர் ராஜீவின் மரணத்திற்காகக்
கண் கலங்கினார்கள் என்று கேட்டுத்
தெரிந்து கொள்ளுங்கள்.

மணி சங்கர் ஐயர், சுமன் துபே, ராஜீவ் சேத்தி,
சாம் பித்ரோடா, சதீஷ் சர்மா, எம். ஜே. அக்பர்… ராஜீவின்
நண்பர்களாகவும், ஆலோசகர்களாகவும்
இருந்த இந்த மேட்டுக்குடிக்
குலக் கொழுந்துகளைக் கேளுங்கள்.
கலாச்சாரத் திருவிழா, கம்ப்யூட்டர் மயமாக்கல்,
இருபத்தொன்றாம் நூற்றாண்டை விரட்டிப் பிடித்தல் –
எத்தனை கனவுகள்!
இதமான மாலை நேரங்களிலும், கிளர்ச்சியூட்டும்
பின்னிரவுகளிலும் நட்சத்திர விடுதிகளில் அமர்ந்து
இந்தியாவின் எதிர்காலத்தைத் திட்டமிட்டதை
அவர்கள் நினைவு கூறுவார்கள்.
அவர்களது கண்கள் பனித்திருக்கும் –
பிரிவாற்றாமையினால் அல்ல;
தங்களின் எதிர்காலம் இருண்டு விடுமோ
என்ற அச்சத்தினால்.

எதை நினைவுபடுத்துவது? எதை விடுவது?
ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்
இத்தனை அநீதிகளை
இழைக்க முடியுமா?
அதிர்ச்சியாயிருக்கிறது.
கொடுங்கோன்மைக்கு இரையானவர்கள்
கோடிக்கணக்கானோர்,
வகைக்கு ரெண்டு எழுதினால் கூட
வளர்ந்து கொண்டே போகிறது.

இன்னும் சொற்களில் அடக்க முடியாத
சோகங்களைக் காண வேண்டுமெனில்
காஷ்மீருக்கும் பஞ்சாபுக்கும்
அஸ்ஸாமிற்கும் சென்று பாருங்கள்.
இறந்தவர்கள் கதையை நான் கூறலாம் –
இன்னும் உயிரோடிருப்பவர்களை
நீங்களே விசாரித்தறியலாம்.
கருப்பு வெள்ளையில்
அச்சாகிக் கிடக்கும் வரலாற்றைப்
புரட்டிப் பார்க்கலாம்.
எதுவும் இயலாவிட்டால் உங்கள்
வாழ்க்கையையே உரைத்துப் பார்க்கலாம்.

அதன் பிறகு முடிவு செய்யலாம் – ராஜீவின் மரணத்திற்குக்
கண்கலங்குவது சரியா என்று!

புதிய கலாச்சாரம் – ஜூன் 1991 (அனுமதியுடன்)

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

இந்த கட்டுரையை ஒத்த பல அரிய உரைவீச்சுக்கள் ”போராடும் தருணங்கள்” எனும் கட்டுரைத் தொகுப்பில் (புதிய கலாச்சாரம் வெளியீடு) உள்ளது.

கிடைக்குமிடம்:

புதிய கலாச்சாரம்

18, முல்லைநகர் வணிக வளாகம்

இரண்டாவது நிழற்சாலை, 15-வது தெரு அருகே,

அசோக் நகர், சென்னை – 600 083

e-mail: pukatn@gmail.com

துவண்டுவிடாது ஈழத்தமிழினம்! துணை நிற்பார்கள் தமிழக மக்கள்!

புலிகளை போரில் வெல்வது என்ற பெயரில் இனப்படுகொலை செய்திருக்கும் ராஜபக்சேவை போர்க்கைதியாக விசாரித்து தண்டிக்க வேண்டும், இலங்கை அரசுக்கு உதவியாய் இருக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்க வேண்டும், இராணுவ வதை முகாம்களிலிருக்கும் மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும், இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக வெளியேறிய இடத்தில் சிங்களக் குடியேற்ற பகுதிகளாக மாற்ற நினைக்கும் சதியை முறியடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை  தமிழக மக்களிடத்தில் கொண்டு செல்லும் நோக்கில் 21.05.09 வியாழனன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் ம.க.இ.கவும் அதன் தோழமை அமைப்புக்களும் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கின்றன. சென்னையில் மெமோரியல் ஹால் அருகே காலை 10.30 முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. பதிவுலகின் நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் வருமாறு அழைக்கிறோம். இந்த முழக்கங்களை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகிறோம்.

முழக்கங்கள்

சிங்கள இனவெறிப் பாசிசத்தின்
இன அழிப்புப்போரை எதிர்த்துப் போராடி
விடுதலைப் புலிகள் வீரமரணம்!

ஓயமாட்டோம்!

ராஜபக்சே கும்பலை
போர்க்கிரிமினலாக அறிவித்து
தண்டனை வழங்கப் போராடுவோம்!

சிங்கள இராணுவத்தின் வதை முகாம்களிலிருந்து
ஈழத்தமிழர்களை மீட்டெடுப்போம்!

ஐ.நா மன்றத்தின் மூலம் மீள்குடியமர்த்தவும்,
உணவு-மருத்துவம் உடனே வழங்கவும் போராடுவோம்!

அரசியல் தீர்வு, மறுநிர்மாணம் என்ற பெயரில்
தமிழர் பகுதிகளை சிங்களக் காலனியாக்க முயலும்
இராஜபக்சே-இந்திய அரசு கூட்டுசதியை முறியடிப்போம்!

துவண்டுவிடாது ஈழத்தமிழினம்!
துணை நிற்பார்கள் தமிழக மக்கள்!

நீடிக்காது சிங்கள இனவெறியின் வக்கிரக் களியாட்டம்!
பீனிக்ஸ் பறவையாக மீண்டெழும் ஈழவிடுதலைப்போர்!

000

கண் திறந்து பார் தமிழகமே!

ஈழத்தமிழன் கழுத்தில் ஈரத்துணி சுற்றினார் கலைஞர்
இழுத்து அமுக்கியது இந்திய தேசிய காங்கிரசு
அறுத்து முடித்தது ராஜபக்சே அரசு!

இலங்கை அரசின் வெற்றிக்களிப்பு
சிங்கள வெறியின் கோரநடனம்!

முல்லைத்தீவின் கடறகரையெங்கும்
இரைந்து கிடக்கும் ஈழத் தமிழர் பிணம்!

முட்கம்பிச் சிறையின் உள்ளே துடிக்கிறது
முகம் சிதைந்த ஈழத்தமிழினம்!

படுகொலைக்கு நாள் குறித்த பாதகர்கள் – டில்லியில்
பதவி ஏற்பு விழா நடத்துகிறார்கள்!

பச்சைத்துரோகம் செய்த கருணாநிதி குடும்பத்துக்கு
பத்தாதாம் மந்திரிப் பதவி!

படுகொலைத் தலைவி சோனியாவின் மகனோ
பாரதத்தின் நாளைய பிரதமராம்!

“படை அனுப்பி ஈழம் அமைக்கும்” புரட்சித்தலைவியோ
படுத்துத் தூங்குகிறார் போயசு தோட்டத்தில்!

எனக்குத் தெரியாதென்று ஒதுங்க முடியுமா நம்மால்?

உன்னுடைய ஓட்டு, உன்னுடைய வரிப்பணம்,
உன்னுடைய பல்லிளிப்பு, உன்னுடைய ஏமாளித்தனம்,
உன்னுடைய மவுனம், உன்னுடைய அங்கீகாரம்,
நீ வழங்கிய அதிகாரம்..

நாம் பேசத்தவறினால் யார் பேசுவார்?

அமைதி காப்பது அவமானம்
அலட்சியம் காட்டுவது அநீதி
ஆர்த்தெழுவோம் இந்திய மேலாதிக்கத்துக்கு எதிராக!
வீழ்த்திடுவோம் சிங்கள இனைவெறிப் பாசித்தை!
மீண்டெழட்டும் ஈழ விடுதலைப் போராட்டம்!

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

ஈழம்: போர் இன்னும் முடியவில்லை !

62

வேலுப்பிள்ளை பிரபகரன்

பிராபகரன் கொல்லப்பட்டதாக பி.பி.சி, ராய்ட்டர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை ஒரு ஆம்புலன்சு வண்டி மூலம் ராணுவத்தை ஊடுறுவி வெளியேற முயன்றபோது பிரபாகரன், பொட்டு அம்மன், சூசை மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவம். நேற்றிரவு பிரபாகரனது மகன் சார்லஸ் ஆண்டனி, அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், செய்தித் தொடர்பாளர் புலித்தேவன்,  உட்பட சுமார் 250 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சார்லஸ் ஆண்டனி மரணமடைந்த காட்சிகளை இலங்கை அரசு தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து ஒளிபரப்புகிறது.

இன்று மாலை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே இந்தத் தகவல்களை அதிகாரப்பூர்வமாக தொலைக்காட்சியில் தெரிவிப்பார் என்று பி.பி.சி கூறுகிறது. அதற்கு முன்னர் இந்த விசயம் தொடர்பாக அவர் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தொலைபேசியில் பேசும் போது பிரபாகரன் கொல்லப்பட்டு போர் முடிவுற்றதாக பேசியிருக்கிறார். நேற்றே இராணுவத் தளபதி பொன்சேகா புலிகளின் கடைசி இடத்தையும் பிடித்துவிட்டதாகவும் தற்போது முழு இலங்கையும் பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதாகவும் பேசியிருக்கிறார். சிங்களர மக்கள் மத்தியில் இந்த செய்தி பெரும் ஆரவாரத்தையும், வரவேற்பையும் பெற்றிருக்கிறது. தலைநகர் கொழும்பில் தாரை தப்பட்டைகளுடன், இனிப்பு வழங்கி தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது. அதிபரின் பேச்சிற்குப் பிறகு நாளை தேசிய விடுமுறை அறிவிக்கப்படலாம். ஆனால் இந்த ஆர்ப்பாட்டங்களினால் இனவெறி ஊட்டப்பட்ட சிங்கள மக்கள் உண்மையில் நிம்மதியை இழப்பதன் துவக்கம்தான் என்பதை அவர்கள் இப்போது உணர வாய்ப்பில்லை.

பிரபாகரன் போர்க்களத்திலேயே இல்லை அவர் கிழக்கு மாகாணத்தின் காடுகளுக்கு பெயர்ந்திருக்கக்கூடுமெனவும், இறுதியில் அவர் சில மாதங்களுக்கு முன்னரே மலேசியா அல்லது இந்தோனேஷியாவுக்கு சென்றுவிட்டதாகவும் புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துக்கள் நிலவுகின்றன. இவை உண்மையா, பொய்யா என்று பார்ப்பதைவிட கள நிலவரம் யதார்த்தமாக உண்மையைச் சொல்கிறது.

முல்லைத்தீவின் முல்லைவாய்க்கால் பகுதியில் கடைசியாக முடக்கப்பட்ட புலிகளின் எண்ணிக்கை வெறும் ஐநூறைத் தாண்டாது என ராணுவமும், சுமார் 2000 போராளிகள், அவர்களது குடும்பத்தினர் 15,000, பொதுமக்கள் சுமார் 25,000பேர் இருப்பதாகவும்,  மொத்தத்தில் சுமார் ஒருஇலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இருப்பதாகவும் புலிகள் கூறிவந்தனர். நேற்று ஞாயிறு மதியம் ஒலிபரப்பப்பட்ட தளபதி சூசையின் தொலைபேசித் தகவலின்படி சுமார் 25,000 மக்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக தவிக்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை கொடுக்காத பட்சத்தில் விரைவில் இறந்து போவார்கள் என பதறியவாறு சூசை பேசுகிறார். எப்படியாவது செஞ்சிலுவைச் சங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டு உடன் செயல்படவேண்டுமெனவும் கோருகிறார். ஏற்கனவே செஞ்சிலுவைச் சங்கத்தை போர்க்களத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்ட இலங்கை அரசோடு மீண்டும் பேசி உடன்பாடு கொண்டாலும் களநிலவரப்படி நாங்கள் உடனடியாக செயல்பட இயலாது என அச்சங்கத்தின் சர்வதேச தொடர்பாளர் தெரிவித்தார்.

இத்தகைய கையறு நிலையில் தங்கள் துப்பாக்கிகள் இனி சுடாது எனவும், போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாத சர்வதேச சமூகத்தினால் மிகவும் கசப்பான முறையில் இந்தப் போர் ஒரு முடிவுக்கு வந்து விட்டதெனவும் புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன் நேற்று அறிக்கை விட்டார். உடனடி போர்நிறுத்தத்திற்கு தாங்கள் சம்மதிப்பதாக புலிகள் பலமுறை கூறயிருப்பினும் இலங்கை அரசு அசைந்து கொடுக்கவில்லை. பல ஆயிரம் மக்கள் செத்தாலும் பரவாயில்லை ஒரு புலி கூட தப்பக்கூடாது என்பதில்தான் சிங்கள இனவெறி அரசு கருத்தாய் இருந்தது.

கடந்த சில நாட்களில் மட்டும் 5000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சுற்றிலும் பிணங்கள் வீசிக்கிடக்க, அடிபட்டோர் அலறியவாறு வீழ்ந்து கிடக்க, இதற்கு மேல் உயிரோடிருக்கும் மக்கள் பதுங்கு குழிகளில் பிணங்களோடு படுத்துக் கிடக்க குடிநீரோ, உணவோ, மருந்தோ ஏதுமின்றி ஷெல்லடிகளின் சப்தத்தில் உறைந்து கிடந்தார்கள்.

இதற்குமேல் களநிலவரத்தை புரிந்து கொள்வதற்கு ஆதாரங்களும், புள்ளிவிவர எண்களும் தேவையில்லை. எண்களின் ஆய்வில் தொலைந்து போன வாழ்க்கை திரும்ப கிடைத்துவிடாது.

ஜனவரியில் கிளிநொச்சியில் இருந்து மக்கள் புலிகளோடு முல்லைத்தீவு நோக்கி கடும் பயணத்தை தொடர்ந்தார்கள். மொத்தம் மூன்று இலட்சம் மக்கள் இருக்கலாம். இந்த நான்கு மாதப் போரில் தற்போது சுமார் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இலங்கை ராணுவ கண்காணிப்பில் திறந்த வெளி முகாமில் எந்த அடிப்படை வசதிகளுமின்றி ஊனமுற்ற உடலோடும், துடிப்பை இழந்த மனதோடும் நாட்களை தள்ளுகிறார்கள். தொலைக்காட்சியில் படம் பிடிக்கப்படும் போதுமட்டும் அவர்களுக்கு கொஞ்சம் உணவு கிடைக்கிறது. மற்றபடி கால்வயிற்றுக் கஞ்சியோடு அத்துவான வெளியில் நிலை குலைந்து நிற்கிறார்கள். இந்தப் போர்க்காலத்தில் சுமார் 5000 முதல் 10,000 வரை மக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.

00

தெரிந்தே மரணத்தை வரவேற்கின்ற அவலத்தில் புலிகள் எப்படி சிக்கினார்கள்? இதனை தாக்குதலுக்கான பின்வாங்குதல் என்று கருதியவர்கள் உண்டு. ஆனால் போரில் மக்கள் கொல்லப்படுவதன் விளைவாக இந்தியா, மற்றும் சர்வதேச சமூகம் தலையிட்டு போரை நிறுத்துமாறு இலங்கையை நிர்ப்பந்திக்கலாம் என புலிகள் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் மக்களை இப்படிப் பணயம் வைப்பது பயன்படுத்துவது ராணுவரீதியிலும், அரசியல் ரீதியிலும் சரியானதா? இந்த மக்கள் யாரும் நிர்ப்பந்தமாக வரவில்லை, இலங்கை ராணுவத்தின் கைகளில் சிக்க விரும்பவில்லை என்பதாலும் அவர்களாகவே மனமுவந்தும்தான் வந்தார்கள் என்றே புலிகளின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். மேலும் புலிப்படையில் இருக்கும் போராளிகளது குடும்பத்தினரது கணிசமான எண்ணிக்கையும் இந்த மக்களில் அடக்கம் என்பதும் கூட உண்மைதான். இவர்களில் யாரொருவரை ராணுவம் பிடித்தாலும் புலி என்றே நடத்தும் என்பதும் உண்மைதான். ஆனால் மக்களின் நடுவே இருந்தால் இராணுவம் தங்களின் மேல் பாரிய தாக்குதல்கள் நடத்தாது என்று புலிகள் கருதியிருக்க கூடும்.

பொன்சேகாவும், ராஜபக்க்ஷேயும் இதெல்லாம் தூசு என்பது போல மக்களை கூட்டம் கூட்டமாக கொன்றதோடு, அதை சுட்டிக்காட்டிய சர்வதேச நாடுகளையும் உதாசீனம்  செய்தார்கள். இப்போது இந்த நெருக்கடி தலைகீழாக புலிகளின் மீது பாய்ந்தது. எந்த மக்கள் பாதுகாப்பு என்று நினைத்தார்களோ அந்த மக்கள் ராணுவ தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க, புலிகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இந்த கையறு நிலையில் மக்கள் ஆயிரக்கணக்கில் வெளியேற ஆரம்பித்தார்கள். புலிகளுக்கு இது உடன்பாடில்லை என்றாலும் அதை தடுக்க நினைத்தாலும் யதார்த்தத்தை தீர்மானிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. இப்படி மக்கள் தடுத்து வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை என்பதை புலிகள் மிகவும் தாமதமாகப் புரிந்து கொண்டார்கள். இருப்பினும் காலம் அதற்குள் வெகுதொலைவு சென்றுவிட்டது.

மக்கள் என்ற சொல் அதன் பாரிய அரசியல் பொருளில் புலிகளால் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒரு போராட்டமும், அதன் எழுச்சியும், ஏற்ற இறக்கமும் மக்களின் உணர்வு நிலையைக் கொண்டே தீர்மானிக்கப்படவேண்டும். இந்த மக்கள் கூட்டம் அரசியல் ரீதியில் திரட்டப்பட்டிருந்தால் ஐந்து இலட்சம் மக்கள் தெருவில் இறங்கி ஈழத்திற்காக குரல் கொடுத்திருந்தால் எந்தப் பெரிய இராணுவமும் ஒன்றும் செய்திருக்க இயலாது. அதை நேபாளத்தில் கண்டோம்.

மக்களின் அளப்பரிய ஆற்றலைக் கொண்டு மாபெரும் அரசியல் எழுச்சிகளை தோற்றுவிக்கமுடியும் என்பதை புலிகள் எந்தக் காலத்திலும் உணரவில்லை. அவர்களது கவனமெல்லாம் ஆயுதங்களின் நவீன இருப்பை கொள்முதல் செய்வதிலேயே இருந்தது. விமானப்படை வைத்த முதல் போராளிக் குழு என்ற பெயரெல்லாம் அவர்களைக் காப்பாற்றவில்லை என்பதை புலிகள் தாமதமாகவேனும் உணர்ந்திருக்கலாம்.

பயணம் நீண்டு போகப் போக புலிகள் பல ஆயுதங்களை விட்டுவிட்டு செல்லவேண்டிய நிலை. எந்த ஆயுதங்களை தமது விடுதலையின் அச்சாணியாக கருதினார்களோ அவையெல்லாம் பெருஞ்சுமையாக மாறிப்போயின. இதன் எதிர் நடவடிக்கையாக ராணுவம் நவீன ஆயுதங்களை வைத்து இழப்புக்களை வகை தொகையில்லாமல் கூட்டியது.

00

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் தேர்தலை ஒட்டி ஆட்சி மாற்றம் வரும், அதை வைத்து ஈழத்தில் போர்நிறுத்தத்தை கொண்டுவரலாம் என புலிகள் நம்பியதற்கு இங்கிருக்கும் புலி ஆதரவு அரசியல்வாதிகள் முக்கிய காரணமாக இருந்திருக்க கூடும். வைகோ, நெடுமாறன் முதலியோர் இப்படியொரு பிரமையை வளர்க்கும் விதமாக நடந்து கொண்டார்கள். தேர்தலில் ஈழ எதிரி ஜெயாவுடன் கூட்டணி வைத்தது, அவரையே தனிஈழம் தேவையென பிரகடனம் செய்ய வைத்தது, தமிழகத்தில் தொடரும் தீக்குளிப்புகளை வைத்து மாபெரும் ஆதரவு இருப்பதாக புலிகளை நம்பவைத்தது, அதுவே தேர்தலை தீர்மானிக்கும் சக்தியென நம்பியது, காங்கிரசுக்கு மாறாக பா.ஜ.க கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் அதன் மூலம் ஈழப்போர் முடிவுக்கு கொண்டுவரப்படும் என நம்பியது இப்படி பலவற்றை சொல்லலாம்.

சுருங்கக் கூறின் தற்போதைய ஈழப்போரை இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் சேர்ந்து இயக்குகிறது என்பதை புரிந்து கொள்ளாமல் சில அதிகாரிகள், காங்கிரசின் சோனியா முதலான தனிநபர்கள் நடத்துவதாக கற்பித்துக் கொண்டு ஒரு வகையான லாபி வேலை செய்தால் போர்நிறுத் தத்தை சாதித்து விடலாம் என குறுக்குப் பாதையில் சென்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளை வைத்து தப்பலாம் என நம்புமளவுக்கு புலிகள் அரசியல் ரீதியில் பலவீனமாக இருந்தார்கள். தமிழகத்திலோ விருப்பு வெறுப்பின்றி உண்மையைப் பேசும் நண்பர்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை.

மறுபுறம் புலிகளை அழிப்பதற்கான விரிவான திட்டமும், கால அட்டவணையும், ஆயுதங்களும் இந்தியாவால் சிங்கள அரசுக்கு தரப்பட்டன. அதன்படி தேர்தலுக்கு முன்பு வரை புலிகளை பெருமளவு ஒடுக்குவது, முடிந்த பின் தலைமையை அழிப்பது என்ற திட்டம் இலங்கை ராணுவத்தால் கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது. இந்தியாவின் இந்த மேலாதிக்கத்தை அறிந்தததினாலேயே மேலை நாடுகள் ஒப்புக்கு ஈழப்பிரச்சினை குறித்து பேசின. அதுவும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் நெடிய போராட்டத்தினால்தான் அந்த ஒப்புக்கு சப்பாணி அறிக்கைகளும் வந்தன. மற்றபடி இந்த கண்டனங்களை ராஜபக்ஷே எதிர்கொண்ட முறையிலிருந்தே அதன் பின்னணியையும் நம்பகத் தன்மையைபயும் புரிந்து கொள்ளலாம். ஆனால் மேலைநாடுகள் நிச்சயமாக தலையிடுமென புலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் மலைபோல நம்பினார்கள். அந்த அளவுக்கு அவர்களது உலக அரசியல் கண்ணோட்டமும், ஏகாதிபத்திய கட்டமைப்பில் ஒரு தேசிய இனம் விடுதலை அடைவது எவ்வளவு சிக்கலானது என்பன போன்ற அரசியல் பார்வையெல்லாம் புலிகளிடமோ, அவர்களுக்கு நல்லெண்ணத் தூதர்களாக செயல்பட்ட தமிழக அரசியல் தலைவர்களிடமோ இல்லை.

மற்றபடி பல மேலைநாடுகள் தங்களை பயங்கரவாதிகள் எனத் தடை செய்திருப்பதற்கான உலக அரசியல் சூழல் மற்றும் காரணங்களை அவர்கள் ஆழமாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. அந்த நாடுகளின் அரசியல் மேலாதிக்கத்தை எதிர்ப்பதன் ஊடாகவே தமது விடுதலைப் போராட்டம் வளரமுடியும் என்பது குறித்தெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. மற்ற நாடுகளின் மக்கள் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிப்பதன் ஊடாக ஒடுக்கப்பட்ட இனங்கள், மக்களின் ஒற்றுமையை வளர்த்தெடுப்பது என்ற பார்வையும் அவர்களிடம் இல்லை.

சிங்கள ஆளும் வரக்கத்தை நடுங்கச் செய்வதாக கருதிக்கொண்டு புலிகள் மேற்கொண்ட தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள், புலிகளை பயங்கரவாத இயக்கமாக முத்திரை குத்துவதற்கு இலங்கை அரசுக்குத்தான் பயன்பட்டது.

ஒவ்வொரு முறையும் தற்கொலைப் போராளியின் உடல் சிதறி குண்டு வெடித்து எதிரி அழியும் போது தங்கள் போர் ஒரு படி முன்னேறுவதாக புலிகள் எண்ணியிருக்கலாம். இந்த நடவடிக்கைகளே தங்களை சர்வதேச சிவில் சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தும் என்பதையோ, இக்கட்டான காலத்தில் தமது நியாயமான கோரிக்கையை உதாசீனப்படுத்துவதற்கு இந்த தனிநபர் பயங்கரவாத நடவடிக்கை ஒரு துருப்புச்சீட்டு போல பயன்படுத்தப்படும் என்பதையோ அவர்கள் அறியவில்லை. கடந்த காலத்தை பரிசீலிப்பது நமக்கு உவப்பாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் விளைவுகளிலிருந்து நிகழ்காலம் தப்பிவிட முடியுமா என்ன?

00

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது, அதன் நியாயத்தை அப்போதே நாங்கள் தமிழகமெங்கும் பேசியிருக்கிறோம். எனினும் தனிநபர்களை அழிப்பதென்பது, விடுதலைப் போராட்டத்தின் போராட்டமுறையாக ஆக முடியாது. ஒரு பண்ணையாரை அழித்தால் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு அழிந்து விடுமென 70களில் நக்சல்பாரி கட்சியினர் இழைத்த தவறைப் போன்றதே இது.

ராஜீவுக்கும் பதில் மன்மோகன்சிங்கும், பிரமேதாசாவுக்கு பதில் ராஜபக்ஷேயும் வந்து அந்த இடத்தை நிரப்பிவிட்டு அடக்குமுறையை தொடரத்தான் செய்கிறார்கள். எனவேதான் தனிநபர்களினூடாக, ஆளும்வர்க்கத்தை புரிந்து கொள்வது தவறு என்கிறோம். இவர்களை இந்த அமைப்பின் பிரதிநிதிகளாக பார்த்திருந்தால் அத்வானியையும், ஜெயலலிதாவையும் நண்பர்களாகக் கருதும் பிழையும் நேர்ந்திருக்காது.

புலிகள் செய்யாத மக்கள் திரள் அரசியல் நடவடிக்கைகளை ராஜபக்ஷே கச்சிதமாக செய்து வருகிறார் அல்லது பயன்படுத்திக் கொள்கிறார். புலிகளை அழிப்பேன் என்று சொல்லி தேர்தலில் வெற்றி பெற் ராஜபக்சே, இப்போது போரின் ஒவ்வொரு வெற்றியையும் சிங்கள மக்களின் வெற்றியாக பிரச்சாரம் செய்கிறார்.

ஈழத்தின் துரோகிகளை அழித்த புலிகள் ஈழத்திற்காக உண்மையாக அர்ப்பண உணர்வோடு போராடும் நல்ல தோழமைகளைக் கூட கொன்றார்கள். புரட்சிக்கான தலைமை என்பது வேறுபட்டிருக்கும் மக்கள் கூட்டத்தின் ஆற்றல்களை பொது நோக்கத்திற்காக ஒன்றிணைக்கும் கலை அல்லது அறிவியல் பற்றியது என்றால் பேராசான் ஸ்டாலின். புலிகளோ தம்மை நேர்மறையில் விமரிசனம் செய்வர்களைக்கூட எதிரிகளாக பார்த்தார்கள். அதனால்தான் அவர்களுக்கு இவ்வளவு அடக்குமுறைக்கு உள்ளான சமூகத்திடமிருந்து எண்ணிறந்த தலைவர்கள் அதாவது புரட்சிக்காக மக்களை அணிதிரட்டும் வல்லமை கொண்ட தலைவர்கள் கிடைக்கவில்லை. எல்லாம் ஆயுதங்களின் அபரிதமான நம்பிக்கையில் புதையுண்டு மீளமுடியாமலேயே போயின.

எல்லாவற்றுக்கும் மேலாக புலிகளுக்கு அவர்களது கடைசி பத்து ஆண்டுகளில் அரசியல் ரீதீயாக முன்னேறுவதற்கு நல்ல வாய்ப்பு போர் நிறுத்தத்தின் மூலம் கிடைத்தது. அதை செயலுத்தியாக பயன்படுத்திக் கொண்டு தமிழ் மக்களின் பல்வேறு சக்திகளை ஒன்று சேர்த்து பலப்படுத்திக் கொள்வதை விடுத்து நவீன ஆயுதங்களை சேகரிப்பதற்கான காலமாக பார்த்தது அடுத்த தவறு. இந்த போர்நிறுத்தத்தை அரசியல் ரீதியில் ஒரு வரம்புக்குட்பட்டு என்றாலும்கூட பயன்படுத்தியிருக்க வேண்டும்.

00

இப்போது மீண்டும் இன்றைய யதார்த்திற்கு வருவோம். தமிழகத்தில் தேர்தல் முடிந்தது. புலிகளும் அவர்களது தமிழக ஆதரவாளர்களும் எதிர்பார்த்தபடி முடிவுகள் அமையவில்லை. தேர்தல் முடிவுகள் அவர்கள் விரும்பியபடி அமைந்தாலும் இதில் மாற்றமில்லை என்பது வேறு விசயம். இடையில் புலம்புயர்ந்த நாடுகளில் நடக்கும் மக்கள் போராட்டத்தால் ஒரு தீர்வு கிடைக்கும் என புலிகள் நம்பினார்கள். அதற்கு தோதாகவே போராட்டங்கள் உண்மையில் வீச்சாக நடந்தன. ஏற்கனவே கூறியதைப் போல ஆசியாவின் முக்கியநாடுகளான இந்தியாவும், சீனாவும் இந்தப் போருக்கு குறிப்பாக இந்தியா இன்னும் அதிகமாக காரணமாக இருப்பதாலும், இந்த அங்கீகாரம் அமெரிக்காவின் அனுமதியுடன்தான் நடக்கிறது என்பதாலும் மேலை நாடுகளின் அரசுகள் வெறுமனே மனிதாபிமானக் கண்டனங்களை மட்டும் தெரிவித்தன.

இப்படி எல்லாவகையிலும் ஆதரவை இழந்து நின்ற புலிகள் உயிர் துறக்கும் வரை போராடினார்கள். தாங்கள் எப்படியும் மரிக்கத்தான் போகின்றோம் என்ற கணத்திலும் அவர்கள் சரணடையவில்லை. பல இளைஞர்கள், சிறார்கள் ஒரு நாட்டை கட்டியமைக்க வேண்டிய காலத்தில் போரிட்டு மாண்ட காட்சி நம் நெஞ்சை உலுக்குகிறது.

இந்தியா போருக்கு பின்புலமாக அமைந்தது என்றால் சர்வதேச அரசியல் பின்புலத்தை சீனாவும், இரசியாவும் தந்தன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தப் பிரச்சினை விவாதிக்க கூடாது என்பதற்கு இருநாடுகளும் தடை விதித்தன. இதன் பின்னணியில் ஏற்கனவே பயங்கரவாதிகள் என தடைசெய்யப்பட்டிருந்த புலிகளுக்காக இப்போதும் பரிந்து பேச யாருமில்லை. இப்படி எல்லா அரசியல் புறவய சாதகங்களையும், அகநிலையாக சிங்கள மக்களை இனவெறி ஆதரவோடும், களத்தில் ஆயுதங்களின் வலிமையுடன் இறங்கிய அரசும், இராணுவமும் இந்த சூழலை நன்கு பயன்படுத்திக் கொண்டன.

இந்த இனவெறியின் கருணையற்ற போரை, பல ஆயிரம்மக்களை கொன்று குவித்த அநீதியை, சிங்கள இனவெறி நீண்ட காலம் எதிர்பார்த்திருந்த கனவை நனவாக்கிய வெற்றியை அறிவித்துவிட்டார் ராஜபக்சே. இலங்கை முழுவதும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கிறது.

ஆனால் இந்த கொண்டாட்டம் விரைவிலேயே முடிவுக்கு வரும். சிங்கள வெறியர்கள் எதிர்பார்த்திருந்த அமைதி நிச்சயம் குலையும். பேரினவாத இராணுவத்தால் குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்வைக் கழித்த அந்த மண்ணிலிருந்து, இது வரை ஈழ மக்களின் சுயநிர்ணய போராட்டத்தின் சரி தவறுகளை உள்வாங்கிக் கொண்டு, சிறு தளிர்கள் மெல்ல முளைக்கும். வளரும்.

தன்நாட்டில் தங்களைப் போலவே சம உரிமை கொண்ட அந்த தமிழ் மக்களை அடக்கி ஆண்டுவிட்டோம் என நினைத்திருக்கும் சிங்களப் பேரின வாதத்திற்கு பலியான மக்கள் தங்கள் தவறினை விரைவில் உணர்வார்கள். கிளிநொச்சியும், முல்லைத்தீவும் வீழ்ந்தாலும் இரத்த்தின் உழுவையில் பதம்பார்க்கப்பட்ட அந்த ஈழத்து மண் விரைவில் தன் தவப்புதல்வர்களை  பிரசவிக்கும்.

0000

எமது கருத்துகளின் பால் ஈர்க்கப்பட்ட ஒரு ஈழத்தமிழர் அவ்வப்போது தொலைபேசியில் பேசுவார். இப்போது இந்த துயரமான தருணத்தில் அவர் பேச ஆரம்பித்த உடனே அடக்கமுடியாமல் கண்ணீருடன் இந்த தமிழினத்திற்கு ஒரு நல்லகாலம் வராதா என்று குமுறுகிறார். புலம்பெயர்ந்த நாட்டில் தான் நல்ல வாழ்க்கை வாழும்போது தாய்நாட்டில் மக்களும் புலிகளும் இப்படி ஈவிரக்கமின்றி அழிக்கப்பட்டதை அவரால் எண்ணிப் பார்க்க முடியவில்லை. இவ்வளவிற்கும் அவரும் புலிகளால் கைது செய்யப்பட்டு வதை பட்டவர்தான்.

ஆனாலும் களத்தில் இருக்கும் அவர்களை வைத்தே ஈழத்தின் போராட்டம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதில் நம்பிக்கை கொண்டவர். இந்தியாவும், தமிழக அரசியல்வாதிகளும் செய்திருக்கும் துரோகத்தைப் பற்றி ஆவேசத்துடன் கேட்கிறார். அப்போது நான் இந்தியாவின் குடிமகன் என்ற சாபக்கேட்டினால், அந்த சீற்றத்தை ஏற்கிறேன். இந்திய அரசை முடிந்த மட்டும் எதிர்த்தோம். மக்களிடம் அம்பலப்படுத்தினோம். எனினும் இந்த அநீதியை எம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவருடைய அறச்சீற்றத்தையும் என்னால் எதிர்கொள்ள முடியவில்லை.

புலம்பெயர்ந்த நாடுகளில் துடித்துக் கொண்டிருக்கும் ஈழத்து மக்களையும் அவர்களது உணர்ச்சிப் போராட்டத்தையும் புரிந்து கொள்கிறோம். முப்பதாண்டுகளாக பல ஏற்றங்களும் இறக்கங்களும் கண்ட சமரிது. இந்த நாளை, இந்தத் தருணத்தை, இந்தக் கண்ணீரை நாம் கடந்து செல்வோம்.

போர் இன்னும் முடியவில்லை.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

000000000000000000000000000000000000000000000000

இலண்டன் ஆர்ப்பாட்டம்

பிரபாகரனைக் கொன்றுவிட்டோம், புலிகளை போரில் வென்றுவிட்டோம் என்ற பெயரில் ராஜபக்சே ஈழத்தில் நடத்தும் இனப்படுகொலையை சர்வதேச நாடுகள் கண்டும் காணாமல் இருப்பதைக் கண்டித்து லண்டனில் இந்நேரம் மாபெரும் சாலை மறியல் இங்கிலாந்துப் பாரளுமன்றத்திற்கு எதிரே நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமது போராட்டத்தை நடத்துகின்றனர். இருபுறமும் வாகனங்கள் நகரமுடியாமல் தேங்கி உள்ளன. இத்தகைய எழுச்சிமிக்க போராட்டத்தை எதிர்பாராத போலீசு எப்படி போராட்டத்தை முடக்குவது என திகைத்து நிற்கின்றனர். எமது இலண்டன் நண்பர் அனுப்பிய புகைப்படங்களை இங்கே வெளியிடுகிறோம். தமிழகத்தில் ஈழம் குறித்த செய்தி இன்னும் பரவவில்லை என்றாலும் ஆங்காங்கே சாலை மறியல்கள் நடந்ததாக அறிகிறோம்.

ஈழத்தின் இரத்தத்தை வியாபாரம் செய்யும் பா.ம.க ராமதாஸ் !

46

ராமதாஸ்-ராமதாசு-ராமனடிமைபடத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

தமிழகத்தின் அரசியல்வாதிகளில் சந்தர்ப்பவாதத்திலும், பிழைப்புவாதத்திலும், காரியவாதத்திலும்,  பச்சோந்தித்தனத்திலும், பொறுக்கித்தின்பதிலும் கொட்டை போட்டவர் ராமதாஸ். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ இந்த வாதங்களில் ராமதாசை மிஞ்சமுடியாது என்றாலும் அது மிகையல்ல.

தனது குடும்பத்தினர் அரசியலுக்கும் கட்சிப் பதவிகளுக்கும் வரமாட்டார்கள் என்றும் அப்படி வந்தால் தன்னை முச்சந்தியில் செருப்பால் அடிக்கலாம் என்று சவடால் அடித்தவர், தமிழனுக்கு மறதி அதிகமென்பதாலும், நினைவு வந்தாலும் அடிக்க மாட்டார்கள் எனும் நம்பிக்கையாலும் தனது மகன் சின்னய்யா அன்புமணியை வாரிசாக்கி கேபினட் அமைச்சராக்கியும், தமிழோசை நாளிதழ், மக்கள் டி.வி அனைத்திலும் தனது குடும்பத்தினரை வைத்தும் பா.ம.க கம்பெனியை நடத்துகிறார்.

பா.ஜ.க அமைச்சரவையிலும், காங்கிரசு அமைச்சரவையிலும் வளமான துறைகளைப் பெற்று தைலாபுரத்தின் சொத்துக்களை பிரம்மாண்டமாக விரிவாக்கினார். குறுகிய காலத்திலேயே நாளிதழ், டி.வி என தனது சுயநலத்தையே பொதுநலமாக பிரச்சாரம் செய்ய பலகோடி முதலீட்டில் உருவாக்கிக் கொண்டார். இவையெல்லாம் தொலைந்து போகட்டும்.

தற்போது ஈழப்பிரச்சினையில் காங்கிரசும், கருணாநிதியும் துரோகமிழைத்துவிட்டனர் என அவர்களோடு கூடிக்குலாவியதை மறைத்துவிட்டு வெட்கம் கெட்ட முறையில் கூச்சநாச்சமின்றி பேசிவருகிறார். அவரது மக்கள் தொலைக்காட்சியில் தேர்தலுக்கு முந்தைய நாளான இன்று 12.05.09 முழுவதும் ஈழத்தின் துயரக்காட்சிகளை திரும்பத் திரும்பக் காட்டி மாம்பழத்திற்கு வாக்கு சேகரிக்கிறார். ஈழத்தின் மக்கள் பிணங்களாகவும், ஊனமுற்றவர்களாகவும், அழுது அரற்றுபவர்களாகவும் இருக்கும் காட்சியை இதயத்தை அதிர்ச்சியூட்டும் விதத்தில் காட்டி இந்தப் போரை நிறுத்தமுடியாத, போருக்கு உதவி செய்கின்ற இந்திய அரசு, காங்கிரசு கட்சி, இவர்களுக்கு துணைபோகின்ற கருணாநிதி ஆகியோரை இந்தத்தேர்தலில் விரட்டி அடிக்கவேண்டுமென அந்தப் படத்தில் காட்டப்படுகிறது.

காங்கிரசுக்கு எதிராக பெரியார் திராவிடர் கழகம் தயாரித்திருந்த ஒளிக்குறுந்தகடுகளை மக்களிடம் காட்டுவதற்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததை வைத்து அந்தக் குறுந்தகடுகளை திரும்பத் திரும்ப மக்கள் தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். இங்குதான் ஈழத்தில் கொல்லப்பட்ட மக்களை வைத்து கறிவியாபாரம் செய்யும் ராமதாசின் ஆபாசம் திருத்தமாக வெளிப்படுகிறது.

2006இலிருந்தே இலங்கை அரசு புலிகளுக்கு எதிரான போரை துவக்கி அதன் பெயரில் ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்று வருகிறது. சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் அந்த இன ஒழிப்புப் போர் உச்சத்தை அடைந்திருக்கிறது. இதற்கு ஒத்தூதுகின்ற மத்திய அரசில் இவ்வளவு நாட்களும் பொறுக்கித் தின்ன ராமதாசின் அமைச்சர்கள் எவரும் காபினட் மீட்டிங்கில் கூட ஈழத்தைப் பற்றி வாய்திறந்ததில்லை. இந்த உண்மையை செட்டி நாட்டு சிதம்பரம் போட்டுடைத்தார்.

ஆக ஐந்து ஆண்டுகளும் சம்பாதித்துவிட்டு, அப்போது ஈழத்தின் மக்களைக் கொல்லும் பணிக்கு உதவும் இந்திய அரசில் பங்கேற்று விட்டு அல்லது ஈழத்தின் மக்களை அழிக்கும் பணிக்கு தலைமையேற்றுவிட்டு இப்போது அதுவும் தேர்தல் அறிவித்த பிறகு அ.தி.மு.க கூட்டணியில் சேருவதற்காக பதவி விலகி அப்போதும்கூட காங்கிரசு, மன்மோகன் சிங், சோனியா பற்றி எந்த விமரிசனமும் செய்யாததோடு நிற்காமல் அவர்களை மனங்குளிரப் பாராட்டிவிட்டு இப்போது தேர்தலுக்காக அவர்கள் துரோகிகளாம், அதற்காக தமிழக மக்கள் ராமதாசுக்கு வாக்களிக்க வேண்டுமென்றால் தமிழனே அந்த அளவுக்கு நீ கேனயனாக இருக்கிறாய் என்றுதானே பொருள்?

புதுவையில் திரைப்படத்துறையினர் நடத்திய கூட்டத்தில் இயக்குநர் சீமான் உணர்ச்சி பொங்க ஈழத்தின் துயரை வருணித்துவிட்டு அதை துடைக்கவும், அதற்கு காரணமான காங்கிரசைத் தோற்கடிக்கவும் மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று பேசினார். இவ்வளவு நாளும் அந்த மாம்பழம் கையுடன் இணைந்து ஈழத்தில் குண்டு வீசிய கதை சீமானுக்கு தெரியாதா? காங்கிரசைத் தோற்கடிக்கவேண்டுமென்றால் அந்த காங்கிரசுக்கு முந்தாநாள் வரை தொள்கொடுத்திருக்கும் ராமதாசை செருப்பால் அடிக்க வேண்டும் என்று பேசியிருந்தால் சீமானின் பேச்சில் அர்த்தமிருக்கும். இல்லை நாளைக்கே தேர்தல் முடிந்து ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணி சேரமாட்டார் என்பதற்கு அவரது ட்ராக் ரிக்கார்டே ஆதாரத்துடன் பதிலளிக்குமே?

இப்போது நம் கேள்வி ராமதாசுக்கல்ல, மாறாக அவரை சொக்கத்தங்கமாக தமிழீழத்தின் புனிதத் திருவுருவமாக கட்டியமைக்கிறார்களே தமிழின ஆர்வலர்கள் அவர்கள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும். நாளைக்கு தேர்தல் முடிந்ததும் பா.ம.க வெற்றி பெற்றதாக வைத்துக் கொள்வோம். அப்போது ராமதாசு ஈழப்போரை நிறுத்தியாக வேண்டும். இல்லையேல் அரசியல், பதவிகள் எல்லாவற்றையும் துறக்க வேண்டும். இவை நடக்காத பட்சத்தில் ராமதாசுக்கு வால்பிடிக்கும் திருப்பணியில் ஈடுபட்டவர்கள் அதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டுமென கோரியவர்கள் இப்போதே தங்களுக்குரிய தண்டனை என்ன வேண்டும் என்பதை அறிவித்துவிட்டால் நல்லது.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

ஈழம்-இந்தியா-தேர்தல் புறக்கணிப்பு !

eelam_oviyam_004

ஈழத்தின் மீதான போரை வழிகாட்டி நடத்தி வருவது இந்திய அரசுதான் என்பது இன்று தெளிவாகவே அம்பலமாகிவிட்டது. இந்தியா இந்தப் போரை ஏன் வழிநடத்த வேண்டும்? அதனால் இந்தியாவிற்கு என்ன இலாபம்? என்ற கேள்விகளுக்கான உண்மையான பதிலைத் தமிழக மக்கள் தெரிந்துகொண்டால்தான், இந்தப் போரை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளை மிகச் சரியான முறையில் வகுத்துக் கொள்ள முடியும்.

வை.கோ., நெடுமாறன் போன்றோர் இலங்கை விரித்த வலைக்குள் இந்தியா சிக்கிக் கொண்டுவிட்டதாக நெடுங்காலமாகக் கூறி வருகிறார்கள். வல்லரசாகவளர்ந்து வரும் இந்தியா, ஒரு குட்டி நாடு விரித்த வலையில் சிக்கிக் கொண்டுவிட்டதாகக் கூறுவதைக் கேட்பதற்குக்கூடக் கூச்சமாக இருக்கிறது.

இதுவொருபுறமிருக்க, “பல நேரங்களில் இலங்கை இந்தியாவிற்கு எதிராக நடந்து கொண்டிருப்பதால், சிங்களர்களை இந்தியா நம்பக் கூடாது; தமிழீழம் அமைய விடுதலைப் புலிகளுக்கு இந்தியா உதவுவதுதான், அதற்கு நல்லதுஎன்றும் இவர்கள் ஆலோசனை கூறி வருகிறார்கள். விடுதலைப் புலிகளின் நிலைப்பாடுகூட இதுதான். சுதந்திரதமிழீழம் என்பது இந்தியாவின் அடியாளாக இருக்கும் என்று உத்தரவாதம் அளிக்கும் நிலைக்குக்கூட இவர்கள் சென்றிருக்கிறார்கள்.

இந்தியாவோ விடுதலைப் புலிகளை நம்பாமல், சிங்களப் பேரினவாதக் கும்பலைத் தான் நண்பனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது. இதற்குக் காரணம் கேட்டால், வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த மலையாள அதிகாரிகள்தான் தமிழின வெறுப்போடு தவறாக வழிகாட்டுவதாக இவர்கள் அப்பாவித்தனமாகக் கதைக்கிறார்கள். அப்படியென்றால், வெளியுறவுத் துறைச் செயலராக ஒரு தமிழன் இருந்திருந்தால், இந்த அவல நிலைமை ஏற்பட்டிருக்காதா? ஒரு சில அதிகாரிகளின் விருப்பு வெறுப்புதான் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையைத் தீர்மானிக்கிறதா? என்ற கேள்விகள் இங்கே தவிர்க்க முடியாமல் எழுந்து விடுகின்றன.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் தமிழினவாதக் குழுக்கள், “சோனியா காந்தி தனது கணவர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதை மனதில் வைத்துக்கொண்டு, ஈழத் தமிழினத்தையே அழித்தொழிக்க சிங்களப் படையின் மூலம் போர் நடத்துவதாக’’க் குறிப்பிடுகின்றன. அப்படியென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு தோற்றுப் போய், பா.ஜ.க.வோ அல்லது மூன்றாவது அணியோ ஆட்சிக்கு வந்துவிட்டால், இந்திய அரசு சிறீலங்கா அரசுக்கு இராணுவ உதவிகள் அளிப்பதும் வழிகாட்டுவதும் நின்று விடுமா?” என்ற கேள்விக்கு இக்குழுக்கள் பதில் சொல்லியாக வேண்டும். அந்த நப்பாசையில்தான், தமிழினக் குழுக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு தமிழக மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்தியா, சிறீலங்கா அரசுக்கு இராணுவ உதவிகள் அளிப்பதை ஆதரிக்கும் கோஷ்டியினர், “இந்தியா உதவி அளிக்காவிட்டால், அந்த இடத்தை சீனா, பாகிஸ்தான் போன்ற இந்தியாவின் எதிரி நாடுகள் பிடித்துக் கொண்டுவிடும்என்று பீதியூட்டுகின்றனர். இதன் மூலம், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை பற்றிய கேள்வியை வெறும் அரசியல் தந்திரப் பிரச்சினையாகச் சுருக்கி விடுகின்றனர்.

இந்தப் பதில்கள் அனைத்தும் அம்புஜா, டாடா, மித்தல் போன்ற இந்தியத் தரகு முதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசின் வர்க்கத் தன்மையையும்; அம்முதலாளிகளின் நலனில் இருந்துதான் இந்திய அரசின் வெளிநாட்டுக் கொள்கை தீர்மானிக்கப்படுகிறது என்பதையும்; அம்முதலாளிகளின் நலனுக்காகத்தான் இந்திய அரசு தெற்காசியப் பகுதியில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முயலுகிறது என்பதையும்; இந்த அடிப்படைகளில் இருந்துதான் இந்திய அரசு சிங்களப் பேரினவாத ராஜபட்சே அரசுக்கு இராணுவ உதவிகளை அளித்து வருகிறது என்பதையும் பார்க்க மறுக்கின்றன; அல்லது மூடிமறைக்கின்றன.

1987க்கு முன்பு விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஈழப் போராளிக் குழுக்களுக்கு இந்திய அரசு ஆயுதப் பயிற்சி அளித்ததற்கும்; 1998க்குப் பிறகு இந்தியா சிறீலங்கா அரசுடன் நெருக்கமாகி, இன்று ஈழப் போரை வழிநடத்துவதற்கும் நாம் மேலே குறிப்பிட்டுள்ள அடிப்படைகள்தான் காரணமாக அமைகின்றன. மாறாக, இந்திரா, எம்.ஜி.ஆர்., சோனியா போன்ற தனிப்பட்ட தலைவர்களின் விருப்பு வெறுப்போ, தலைமைப் பண்போ காரணமாக அமைவதில்லை. 1998க்குப் பிறகு இந்தியா சிறீலங்கா அரசுகளிடையே ஏற்பட்டுள்ள வர்த்தக மற்றும் இராணுவ நெருக்கம் மட்டுமின்றி, 2001க்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும்; இந்தியா அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள நெருக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஈழப் போரை இந்தியா வழிநடத்தி வருவதற்கான உண்மையான காரணங்களைக் கண்டு கொள்ள முடியும்.

···eelam_oviyam_002

இலங்கையில் புகுந்த இந்திய அமைதி காக்கும் படை விடுதலைப் புலிகளிடம் அடிபட்டுத் திரும்பிய பிறகு, இந்திய அரஈழப் பிரச்சினையில் @நரடியாகத் தலையீடு செய்வதைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டது. இதற்குக் காரணம், இந்தியா சைவப் புலியாக மாறிவிட்டது என்பதல்ல. மாறாக, அக்காலக் கட்டத்தில் சோவியத் யூனியன் சிதைந்து உருவான அமெரிக்காவின் ஒற்றைத் துருவ மேலாதிக்கத்தின் கீழ், இந்தியா தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அரசியல், பொருளாதார, இராணுவ மட்டங்களில் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வதன் மூலம், இந்தியா அமெரிக்காவின் ஆசியோடு தெற்காசியாவில் தனது செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளை எடுத்து வந்தது.

இதே காலகட்டத்தில், 1998ஆம் ஆண்டு, சி.பி.எம்.இன் ஆதரவுடன் நடைபெற்று வந்த ஐக்கிய முன்னணி ஆட்சியின் பொழுது (தி.மு.க., த.மா.கா., சி.பி.ஐ., ஆகியவை இந்த ஐக்கிய முன்னணி ஆட்சியில் உறுப்புகளாக இருந்தன.) இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு நாடுகளும் பரஸ்பரம் தமக்குள் முதலீடு செய்வதற்கு இருந்து வந்த தடைகளை நீக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்த இந்த ஒப்பந்தம், 2002ஆம் ஆண்டு வாஜ்பாயி தலைமையில் நடந்து வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியில் முழுமையாக நடைமுறைக்கு வந்தது.

இதற்கும் மேலாக, இந்தியா சிறீலங்கா அரசுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகளில் மேலும் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக, “முழுமையான பொருளாதாரக் கூட்டு ஒப்பந்தத்தைஉருவாக்குவதற்கான பேச்சு வார்த்தைகளும் அப்பொழுதே தொடங்கின. இந்தப் பொருளாதார நெருக்கத்திற்கு இணையாக இராணுவப் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் 2002ஆம் ஆண்டே வாஜ்பாயி, ரணில் விக்கிரமசிங்கெ கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.

இதே சமயத்தில், அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின், அனைத்துலக அரசியல் நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏவிவிட்ட ஆக்கிரமிப்புப் போர்களை இந்தியாவும், சிறீலங்கா அரசும் ஒருசேர ஆதரித்தன. தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றும் இந்தியாவும் சிறீலங்காவும் ஒரே அணியில் இருப்பதை அமெரிக்கா மகிழ்வோடு வரவேற்றது.

இந்தியா, அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களை ஆதரித்ததன் பலனாக, அமெரிக்காவுடனான அதனின் இராணுவ உறவுகள் பலப்பட ஆரம்பித்தன. கூட்டு இராணுவப் பயிற்சிகள் என்பதையும் தாண்டி, அமெரிக்காவுடன் இராணுவ ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம் போட்டுக் கொள்வதற்கான அடிப்படைகள் அக்காலக்கட்டத்தில்தான் உருவாயின. மேலும், இந்தியாவை வல்லரசாக்கப் போவதாக அறிவித்ததன் மூலம், அமெரிக்கா தெற்காசியாவில் தனது அடியாளாக இந்தியாவை அங்கீகரித்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி, அவ்வமைப்பை அமெரிக்காவிலும் கனடாவிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் தடை விதித்ததன் மூலம், இலங்கையின் மனதையும் குளிர வைத்தது, அமெரிக்கா. நார்வே நாட்டின் மேற்பார்வையில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கும் இடையே சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்த சமயத்திலும்கூட, விடுதலைப் புலிகள் மீதான தடையை அமெரிக்கா நீக்கவில்லை.

அமெரிக்காவின் இந்த நிலையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சிறீலங்கா அதிபர் சந்திரிகா குமாரதுங்கே, சமாதான பேச்சு வார்த்தைகளையும் போர் நிறுத்தத்தையும் சீர்குலைக்கும் முயற்சிகளைச் செய்து வந்தார். அதே பொழுதில், இந்தியப் பிரதமர் வாஜ்பாயியும் சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கெயும் இணைந்து அக்டோபர் 2003இல் வெளியிட்ட கூட்டறிக்கையில், “இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான தற்காலிக ஏற்பாடுகள் எதும், இலங்கையின் ஒற்றுமை, பிரதேச ஒருமைப்பாடு என்னும் சட்டகத்திற்குள்ளேதான் உருவாக்கப்பட வேண்டும்என்று கோரியதோடு, “பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் ஒன்றிணைந்து போராடும்என்றும் அறிவித்தனர்.

இலங்கையில் மகிந்த ராஜபட்சே கூட்டணியும், இந்தியாவில் காங்கிரசு கூட்டணியும் ஆட்சியைப் பிடித்த பிறகு, இந்தியா சிறீலங்கா உறவில் நெருக்கம் மேலும் அதிகமானது. இலங்கையில் ராஜபட்சே கூட்டணி நவம்பர் 2005இல் பதவியேற்றபொழுது, “சிறீலங்காவின் தேசப் பாதுகாப்பிற்கு இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது; சிறீலங்காவின் இறையாண்மையையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்கு இந்தியா தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும்என்று சிறீலங்காவிற்கான இந்தியத் தூதர் நிரூபமா ராவ், சிறீலங்காவின் பிரதமரிடம் தெரிவித்தார். இதன் மூலம் இந்திய அரசு, இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமையும்; தெற்காசியப் பகுதியில் தனது மேலாண்மையை உறுதிசெய்து கொள்ளும் உரிமையும் தனக்கு உண்டு என வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஜனதா விமுக்தி பெரமுன, ஜாதிக ஹெல உருமய ஆகிய இரு சிங்களப் பேரினவாதக் கட்சிகளும், “விடுதலைப் புலிகளுடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளை முற்றிலுமாக மாற்றியமைக்க வேண்டும்என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் ராஜபட்சே அரசுக்கு ஆதரவளித்தன. இதுவொருபுறமிருக்க, சரிந்து வரும் இலங்கைப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த வளர்ந்துவரும் இந்தியப் பொருளாதாரத்துடன் அதை இணைப்பதே நல்லது என சிறீலங்காவின் ஆளும் வர்க்கங்கள் கருதின. இவை இரண்டையும் சிரமேற்கொண்டு செய்து முடித்தார், மகிந்த ராஜபட்சே.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மட்டுமின்றி, இரட்டை வரியைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தம், இரு தரப்பு முதலீட்டுப் பாதுகாப்பு மற்றும் ஊக்குவிப்பு ஒப்பந்தம் ஆகியவற்றோடு, விமானப் போக்குவரத்து, சிறு தொழில்கள், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைப்பதற்கான ஒப்பந்தங்களும் போடப்பட்டன. இப்பொருளாதார நெருக்கம் ஒருபுறமிருக்க, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு ஒப்பந்தம், தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை அந்தந்த நாடுகளிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தம் போன்ற அரசியல்ரீதியான ஒப்பந்தங்களும் இந்தியா சிறீலங்காவிற்கு இடையே கையெழுத்தாகின.

இந்த நெருக்கத்தின் பயனாக, சிறீலங்காவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு ஆறில் ஒரு பங்காக அதிகரித்தது; 2007ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு 280 கோடி அமெரிக்க டாலராக உயர்ந்தது; இலங்கையில் முதலீடு செய்துள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா 4ஆம் இடத்தைப் பிடித்தது; இந்தியா வெளிநாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு வழங்கும் மொத்த உதவித் தொகையில் ஏறத்தாழ ஆறில் ஒரு பங்கை இலங்கைக்கு வழங்கத் தொடங்கியது.

இந்தியப் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இலங்கையில் 170 இடங்களில் எண்ணெய் இறைக்கும் பம்புகளை இயக்குவதுடன், திரிகோணமலை எண்ணெய்த் தொட்டிப் பண்ணையை பராமரித்தும் வருகிறது. எரிசக்தித் துறையில் இந்தியாவின் தேசிய அனல் மின்சாரக் கழகமும், சிறீலங்கா மின் வாரியமும் இணைந்து 500 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்தைக் கட்டத் திட்டமிட்டுள்ளன.

இந்தியாவைச் சேர்ந்த தாஜ் ஓட்டல் நிறுவனம், லார்சன் அண்ட் டூப்ரோ, அம்புஜாஸ், டாடா, அசோக் லேலண்ட் ஆகியவை இலங்கையில் இயங்கும் முக்கியமான தனியார் நிறுவனங்களாகும். இலங்கையின் கைபேசி சேவையில் பாரதி ஏர்டெல் நுழைந்திருக்கிறது. மேலும், ஏசியன் பெயிண்ட்ஸ், என்.ஐ.ஐ.டி., அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ், சியட் உள்ளிட்டு பல்வேறு இந்திய நிறுவனங்கள் உருக்கு, சிமெண்ட், ரப்பர், சுற்றுலா, கணினி மென்பொருள், மின்னணுத் தொழில்நுட்பப் பயிற்சி ஆகிய இலாபகரமான தொழில்களில் இலங்கையில் முதலீடு செய்துள்ளன. 1991இல் 74 இலட்சம் இலங்கை ரூபாய் மதிப்புள்ள 23 இந்தியத் தொழில் திட்டங்கள் இலங்கையில் நடந்து வந்தன. இது, 2000ஆம் ஆண்டில் 1,250 கோடி இலங்கை ரூபாய் மதிப்புள்ள 150 இந்தியத் தொழில் திட்டங்களாக அதிகரித்துள்ளன.

2001க்குப் பிறகு இந்தியத் தரகு முதலாளிகளின் ஆதிக்கம் இலங்கையில் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இப்பொருளாதார ஆதிக்கம் குறித்து சிறீலங்கா அதிபர் தேர்தலில் ராஜபட்சேவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோற்றவரும், ஐக்கிய சோசலிசக் கட்சியைச் சேர்ந்தவருமான சிறீதுங்கா ஜெயசூர்ய பின்வருமாறு கூறியிருக்கிறார்; “இலங்கையில் மோட்டார் வாகனத் தொழிலில் ஆதிக்கம் செலுத்துபவை அசோக் லேலண்ட், மாருதி, பஜாஜ் ஆகிய நிறுவனங்களாகும்; டீசல், பெட்ரோல் விநியோகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகம்; இப்போது சிலோன் தேயிலைஎன ஏதும் இல்லை; இலங்கையிலுள்ள தேயிலைத் தோட்டங்கள் பெரும்பாலானவை டாடாவுக்குச் சொந்தம். எனவே நாம் இப்போது குடிப்பது இந்திய டாடா சிலோன் தேயிலைதான். இவை சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே. இவற்றுக்குப் பின்னால் உள்ள செயல்திட்டம் பீதியூட்டக்கூடியதாகும்.

2002ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பத்தத்தை அப்பட்டமாக மீறும் வகையில் ராஜபட்சே அரசாங்கம் 2006 ஆகஸ்டு, செப்டம்பரில் நடத்திய இராணுவத் தாக்குதல்களின் மூலம் திரிகோணமலை மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சம்பூர், முத்தூர் கிழக்கு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றியது. அங்கு ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்த 14 கிராமங்களைச் சுற்றி ஒரு அதி பாதுகாப்பு மண்டலத்தை சிறீலங்கா இராணுவம் உருவாக்கியது. அந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில்தான் 35 கோடி அமெரிக்க டாலர் முதலீட்டில் இந்தியாவின் எரிசக்தித் துறையும், சிறீலங்கா மின்வாரியமும் இணைந்து அனல் மின் நிலையத்தை அமைக்கும் ஒப்பந்தத்தில் டிசம்பர் 2006 இல் கையெழுத்திட்டன.

இலங்கை உள்ளிட்ட தெற்காசியப் பகுதியில் அமெரிக்காவும் பிற வெளிநாடுகளும், மின்னணுத் தொழில்துறை முதலியவற்றில் பெரும் முதலீடு செய்திருப்பதால், அங்கு அமைதிஏற்பட, இலங்கை இனப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு ஏற்பட வேண்டும் என அமெரிக்க மற்றும் இந்திய முதலாளிகள் விரும்பினர். ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒடுக்கப்படுவதற்கு பின்னே மறைந்துள்ள இந்தியத் தரகு முதலாளிகள் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை வெளிச்சம் போட்டுக்காட்ட இந்த இரு எடுத்துக்காட்டுகள் போதுமானது.

இந்திய முதலாளிகளின் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகளையும், பொருளாதார ஆதிக்கத்தையும் காக்கும் நோக்கத்தில்தான் இந்தியா, சிறீலங்காவிற்கு அனைத்துவிதமான இராணுவ உதவிகளையும் செய்து வருகிறது. சுதந்திரதமிழீழத்தைவிட, ஒன்றுபட்ட சிறீலங்காதான் இந்தியத் தரகு முதலாளிகளின் பொருளாதாரச் சுரண்டலுக்கும்; அவர்களின் புவிசார் ஆதிக்கத்திற்கும் உகந்ததாக இந்திய ஆளும் கும்பல் கருதுகிறது. இந்தியா, தனது இந்த ஆதிக்க நோக்கங்களை மூடிமறைத்துக் கொள்ளவே சிறீலங்காவின் தேசிய ஒருமைப்பாடு” “புலிகளின் பயங்கரவாதத்தை எதிர்ப்பதுஎன்று பஜனை பாடுகிறது.

பதுக்கல் வியாபாரிகளின் கட்சியான பா.ஜ.க.வை விட்டுவிடுங்கள். பாட்டாளிகளின் தோழனானசி.பி.எம். அமைத்துள்ள மூன்றாவது அணி ஆட்சியைப் பிடித்தால்கூட, ஈழப் போரில் இருந்து விலகிவிட மாட்டார்கள். ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைவிட, இந்தியத் தரகு முதலாளிகளின் பொருளாதார நலன்களையும்; தெற்காசியாவை அம்முதலாளிகளுக்காக வளைத்துப் போடுவதையும்தான் முக்கியமாகக் கருதுவார்கள். எனவே, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடிப்போம் எனக் கூறிக் கொண்டு, அத்வானியையும், ஜெயலலிதாவையும் ஆட்சியில் அமர்த்தும் ஆழ்வார் வேலையில் இறங்குவதற்குப் பதிலாக, தேர்தலைப் புறக்கணித்து, இந்தியாவின் மேலாதிக்கப் போருக்குப் பதிலடி கொடுப்பதுதான் தமிழக மக்களின் கடமையாகும்!

*புதிய ஜனநாயகம், மே-2009

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

ஈழத்தமிழர் ரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பிப் போ! படங்கள்! வீடியோ!

tamilnadu1

முல்லைத் தீவில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இலங்கை ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டு எங்கும் சுடுகாட்டு ஓலம் கேட்கும் சமயத்தில் சென்னை வந்த சோனியா, மத்திய அரசின் முயற்சியால் ஈழத்தில் போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக வெட்கமின்றி புளுகியிருக்கிறார். போரினால் அல்லல்படும் தமிழ் மக்களின் துன்பங்களை அறிந்து அவர்களது புனர்வாழ்விற்கு தேவையான உதவிகளை காங்கிரசு கூட்டணி அரசு செய்வதாகவும் பெருமையடித்தார்.

கருணாநிதியின் கவலையோ ஜெயலலிதா ஈழம் குறித்து பேசுவதால் அவரும் பேச வேண்டியிருக்கிறது என்பதைத் தாண்டி தேர்தலில் தொகுதிகளை வெல்வதைத் தவிர வேறு இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய குலக்கொழுந்து ராகுல்காந்தி அ.தி.மு.கவை பாராட்டியதால் சினமைடைந்த கருணாநிதியை சமாதானப்படுத்துவதற்காக டெல்லியிலிருந்து தனி விமானத்தில் வந்திறங்கிய கல்லுளி மங்கன் மன்மோகன் சிங், பத்திரிகையாளர் சந்திப்பில் அகதிகளாக வாழும் ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மத்திய அரசு ஈழப்பிரச்சினையில் அக்கறை கொண்டிருப்பதாக அருளினார். நல்ல அக்கறை!

சிங்கள ராணுவத்திற்கு ஆயுதங்கள் கொடுத்து, அதிகாரிகளை அனுப்பியும் அக்கறை கொண்டிருக்கும் காங்கிரசு பெருச்சாளிகள் என்ன திமிரிருந்தால் தங்களால் போர் நிறுத்தம் ஏற்பட்டதாக பேசுவார்கள்? போரை நிறுத்தவில்லை என அன்றாடம் எக்காளமிட்டு வரும் ராஜபக்க்ஷே அரசு இறுதி யுத்தம் என்ற பெயரில் பாதுகாப்பு வலையப் பகுதியில் மிச்சமிருக்கும் மக்களை கூண்டோடு அழித்து வருகிறது. இந்த கொலை பாதகச் செயலுக்கு இந்திய அரசு உதவுவதை நன்றியோடு வெளிப்படையாகவே இலங்கை அரசு அடிக்கடி கூறிவருகிறது.

செருப்பை வீசினால் படக்கூடாது என்பதற்காக பாதுகாப்பான தூரத்தில் இருந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும் மன்மோகன் சிங், பயங்கரவாதிகள் தாக்குவது இருக்கட்டும், தன்னை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி கூட பறப்பதை அனுமதிக்க முடியாது என விமான நிலையத்திலிருந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாக வந்திறங்கும் சோனியா இருவர் மீதும் சிறு துரும்புகூட படக்கூடாது என்பதற்காக எவ்வளவு கோடிகள் செலவு, எத்தனை போலீசார் பாதுகாப்பு?

ஆனால் கேட்பார் கேள்வியின்றி கொத்துக் கொத்தாக கொல்லப்படும் ஈழதமிழ் மக்களின் பிணங்கள் எவ்வளவு என்பது கூட எண்ண முடியாத நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை நாடகங்கள்? ஈழத்தை பிணக்காடாக மாற்றும் இலங்கை அரசின் செயலுக்கு பால் வார்க்கும் காங்கிரசு அரசு, காங்கிரசு அரசுக்கு வக்காலத்து வாங்கும் கருணாநிதி அரசு, மத்தியில் பொறுக்கித் தின்பதற்காக தொகுதிகளை வெல்லவேண்டுமென்றால் கருணாநிதியை வீழ்த்த வேண்டுமென்பதற்காக ஈழத்தை வலிந்து பேசும் ஜெயலலிதா….இவர்கள் கையில் ஈழம்தான் என்ன பாடுபடுகிறது.

சென்னை விமான நிலையத்தில் இறங்கிய சோனியா அப்படியே ஹெலிகாப்டரில் பறந்து தீவுத்திடலில் இறங்கி ஒரு இருபது நிமிடம் பேசிவிட்டு, போஸ் கொடுத்து விட்டு, கையை ஆட்டிவிட்டு சென்றுவிட்டார். ஈழத்தமிழரின் இரத்தம் குடிக்கும் சோனியாவை தியாகத்தின் திருவிளக்கு என்றார் கருணாநிதி. அன்னை சோனியா வாழ்க என்று முழங்கிய திருமாவளவன் கைகளை மேலே கூப்பி எப்படியாவது ஈழத்தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று தொழுதார். தீவுத் திடலையே இராணுவக் கோட்டை போல முற்றுகையிட்ட போலீசின் பாதுகாப்பிற்குள் கூட்டிவரப்பட்ட கூட்டம் வேடிக்கை பார்க்க காங்-தி.மு.கவின் தேர்தல் கூட்டம் ஒருவழியாக முடிந்தது.

சோனியா சென்னையில் இருந்த நேரம் அவரை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ம.க.இ.கவுன் அதன் தோழமை அமைப்புக்களும் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையின் முன்பு இரத்தம் குடிக்கும் சோனியாவே திரும்பி போ என்ற முழக்கத்துடன் எழுச்சியாக ஆர்ப்பாட்டம் நடத்தின. பின்னர் பெண்கள், குழந்தைகள், பார்வையற்றவர்கள் தவிர 77 தோழர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் வராதபடி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின் பழ.நெடுமாறன், பாரதிராஜா தலைமையில் தமிழார்வலர்கள், திரைப்படத்துறையினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவர்களில் 109பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மெமோரியல் ஹால் அருகே தன்னார்வத்தொண்டு நிறுவனங்களின் பெண்கள் குழுவினர் முப்பது பேர் ஆர்ப்பாட்டம் செய்ததால் கைது செய்யப்பட்டனர்.

ம.க.இ.கவின் ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொளியை இங்கே வெளியிடுகிறோம்.

[flashvideo file=”https://www.vinavu.com/wp-content/files/arpattam.flv /]

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


ஈழப் ‘போர் நிறுத்தம்’: காங்கிரசு – தி.மு.க கம்பெனியின் கபட நாடகம்!

கருணாநிதி முதலைக் கண்ணீர்

ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு  தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன்  எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து போர் நிறுத்தத்தை வலியுறுத்திவிட்டு வந்துள்ளதாக ஏய்த்த பின்னரும்கூட, போர் நிறுத்தம் நிகழவில்லை. இதோ, இன்னும் இரண்டே நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதி கூறிய கெடு முடிந்த பின்னரும், ஈழத் தமிழின அழிப்புப் போர் நிறுத்தப்படவில்லை. இதனால், தமிழக மக்களின் வெறுப்பும் ஆத்திரமும் அதிகரிக்கும் முன்னே அதைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு, “இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சாகும் வரை உண்ணாவிரதம்” எனும் சூப்பர் நாடகத்தை கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அதிகாலைக் காட்சியாக அரங்கேற்றினார், இந்த ‘தமிழின’த் தலைவர்.

இதற்குக் கதை, வசனம், நடிப்பு, இயக்கம்  அனைத்துமே அவர்தான். கதாநாயகனும் அவர்தான். கதாநாயகிகள் இருவர். அவர்கள் கருணாநிதியின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் அமர்ந்து கொள்ள, அந்தச் சோகக் காட்சிக்காக ஆஸ்கார் பரிசு அளிக்காததுதான் பாக்கி. இந்த நாடகம் ஃபாஸ்ட் ஃபுட் உணவைப் போல, காலை 6 மணிக்குத் தொடங்கி பகல் 12 மணிக்குள் வெகு விரைவாக முடிந்து விட்டது. மற்ற ஓட்டுக் கட்சிகளெல்லாம் காலை உணவை முடித்துக் கொண்டு பகல் உணவை மட்டும் தவிர்க்கும் பழைய பாணி உண்ணாவிரத நாடகத்துக்குப் பதிலாக, அதிகாலையிலேயே உண்ணாவிரதத்தைத் தொடங்கி பகல் சாப்பாட்டுக்கு முன்னரே உண்ணாவிரதத்தை முடித்து, புதுமைப்பாணியில் அவர் இந்த நாடகத்தை நடத்தியுள்ளார்.

உண்ணாவிரதம் தொடங்கிய அடுத்த சில மணி நேரத்தில், “எனக்கு தொலைபேசி செய்தி வந்துள்ளது” என்று அவரே ஒரு அறிக்கை வாசித்து விட்டு, ‘ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி அவரே உண்ணாவிரத நாடகத்தை முடித்துக் கொள்கிறார். இந்த நாடகத்தின் துணை வசனகர்த்தாவான ப.சிதம்பரம், மைய அரசின் கோரிக்கையை ஏற்று ராஜபக்சே போர்நிறுத்தத்தை அறிவித்துள்ளார் என்று பின்பாட்டுப் பாடுகிறார். “கலைஞரின் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி! போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அறிவிப்பு!” என்று சன் டி.வி.யும் பிற ஊடகங்களும் பரபரப்பூட்டின. மாலையில் “இலங்கையைப் பணிய வைத்த கலைஞரின் உண்ணாவிரதம்” என்று கொட்டை எழுத்துக்களில் நாளேடுகளில் செய்திகள் வெளியாகின.

ஆட்சியதிகாரத்திலிருக்கும் கருணாநிதியின் அரைநாள் பட்டினிக்கே, இலங்கை அரசு அஞ்சி நடுங்கி போர் நிறுத்தத்தை அறிவிக்கிறதென்றால், அவ்வளவு வலிமை கொண்ட அவர் இதை ஏன் முன்னரே செய்யவில்லை? ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் செத்து மடிந்த பின் உண்ணாவிரதம் இருக்க வேண்டியதன் அவசியம்தான் என்ன? ஈழத் தமிழர்களின் கொலைகளைத் தடுத்து நிறுத்துமளவுக்கு அதிகாரம் கொண்ட அவர் இத்தனை காலமும் முடங்கிக் கிடந்தது ஏன்? தியாகி முத்துக்குமார் தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு தரப்பு மக்களும், புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களும் போர் நிறுத்தம் கோரி தொடர்ந்து போராடி வந்த நிலையில் அவர்களுடைய போராட்ட உணர்வுகள் மீதும் தியாகங்கள் மீதும் மலத்தில் தோய்த்தெடுத்த செருப்பால் அடித்தது போல் அமைந்திருக்கிறது, கலைஞரின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர் நிறுத்த அறிவிப்பு என்ற மோசடி.

போர் நிறுத்தமுமில்லை; புண்ணாக்குமில்லை என்று அடுத்த நாளே அறிவித்து விட்டது இலங்கை அரசு. “பயங்கரவாதப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் எந்தவிதத் தற்காலிக இடைநிறுத்தமும் இல்லை. போர்நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசும் ஊடகங்களும் கூறுவது தவறான தகவல்” என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது, இலங்கை இராணுவ அமைச்சகம். விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள நிலையில், இந்தியா மற்றும் உலக நாடுகளின் நிர்பந்தங்கள் காரணமாக இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது என ஊடகங்கள் திரிக்கப்பட்ட தவறான செய்தியை வெளியிட்டுள்ளன என்று இராணுவ அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

“புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகள் தர்க்க ரீதியாக அவற்றின் இறுதி முடிவை எட்டியுள்ளதாக இலங்கை அரசு கருதுகிறது. பொது மக்களுக்குப் பாதிப்பையும் உயிர்ச் சேதங்களையும் ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களைப் பயன்படுத்துவதையும் வான்வழித் தாக்குதல் நடத்துவதையும் முடிவுக்குக் கொண்டு வருமாறு ராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள தமிழ் மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. இது போர் நிறுத்தப் பகுதியில் ஏற்கெனவே நிலவி வரும் இராணுவ நடவடிக்கைகள் பற்றிய கொள்கையின் தொடர்ச்சியே தவிர, போர் நிறுத்தம் அல்ல. புலிகளைத் தாக்கி அழிக்கும் போர் நடவடிக்கையில் தமிழ் மக்களுக்கு உயிரிழப்பு ஏற்படாமல், பொதுமக்களின் பாதுகாப்பு விசயத்தில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறு இராணுவத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெற்றியை நெருங்கி விட்டதாக இராணுவ அமைச்சகம் கருதுகிறது” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் தான் போர் நிறுத்தம் எதையும் அறிவிக்கவில்லை என்கிறார்.

இருப்பினும், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழனை இளிச்சவாயனாகக் கருதிக் கொண்டு காதில் பூ சுற்றுகிறார் கருணாநிதி. இலங்கை இராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைக்கு புதிய விளக்கமும் பொழிப்புரையும் எழுதுகிறார் ப.சிதம்பரம். போர் நடவடிக்கைகள் அதன் இறுதி முடிவை எட்டியுள்ளன என்ற இலங்கை அரசின் கூற்றுக்கு, இதன் பொருள் போர் நடவடிக்கைகள் தற்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன என்று அயோக்கியத்தனமாக விளக்கமளிக்கிறார் அவர். கனரக ஆயுதங்களுடன் தாக்குதல் இருக்காது  பீரங்கித் தாக்குதலுக்குப் பதிலாக துப்பாக்கிச் சூடும் எறிகணைத் தாக்குதலும் தொடரும்  என்று இலங்கை இராணுவ அமைச்சகம் குறிப்பிடுவதை தொடரும் போர்த் தாக்குதல்கள் முடிவுக்கு வந்து விட்டதாக இந்திய அரசு பொருள் கொள்கிறது; இந்த அறிவிப்பு எமக்கு ஆறுதல் அளிக்கிறது என்று தமிழனைக் கேணையாகக் கருதிக் கொண்டு விளக்கமளிக்கிறார்.

கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துக் கொண்டே, மறுநாளே சிங்கள பாசிச இராணுவம் பீரங்கித் தாக்குதலையும் வான்வழித் தாக்குதலையும் நடத்தி, போர் நிறுத்தப் பகுதியிலேயே நூற்றுக்கணக்கானோரைக் கொன்றொழித்துள்ளது. கயவாளிகளின் புளுகு அடுத்தநாளே நாறியது. இருப்பினும் “மழை விட்டாலும் தூவானம் விடவில்லை” என்று இப்போர்த் தாக்குதலுக்கு வெட்கங்கெட்ட முறையில் விளக்கமளிக்கிறார், கருணாநிதி.

ஈழத் தமிழர்களின் குலையறுக்கும் இக்கொடிய போரின் சூத்திரதாரியே இந்திய மேலாதிக்க அரசுதான். எனவேதான் இந்தக் கயவாளிகள் சொல்லி வைத்த மாதிரி நாடகத்தைத் திறமையாக நடத்துகிறார்கள். தமிழகத் தேர்தலுக்கு முன்னதாக, பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்றொழித்து, புலிகளை அழித்தொழித்து, போர் வெற்றிக்கு இலக்கு தீர்மானித்துக் கொண்டு இந்தியஇலங்கை அரசுகள் போர்த் தாக்குதலைத் தீவிரப்படுத்தின. ஆனால் போர் நிறுத்தம் கோரி போராட்டங்கள் வலுப்பெற்று நிர்பந்தம் ஏற்பட்டதால் இந்திய அரசின் வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனும் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் இலங்கைக்குப் பறந்து ராஜபக்சேவிடம் விரைவில் இலக்கை நிறைவேற்றக் கோரி பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்படி 2 நாளில் இலக்கை முடித்துவிட ராஜபக்சே உறுதியளித்திருக்கிறார். அதைத்தான் 2 நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதியும் கூறிவந்தார். அந்த நல்ல முடிவு இலங்கை அரசிடமிருந்து அறிக்கையாக வெளிவரும் என்று தெரிந்துதான் அரசியல் ஆதாயமடையும் நோக்குடன் திடீர் உண்ணாவிரத நாடகத்தை நடத்தியுள்ளார். இந்தக் கபட நாடகத்துக்கு ஒத்தூதிக் கொண்டு தங்கபாலுவும் சேலத்தில் உண்ணாவிரதமிருந்ததுதான் கயமையின் உச்சகட்ட காட்சி.

காங்கிரசு  தி.மு.க. கம்பெனிகளின் இந்த மோசடி நாடகத்தை விஞ்சும் வகையில் பார்ப்பனபாசிச ஜெயா, தமிழனை அடி முட்டாளாகக் கருதிக் கொண்டு அதிரடி நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று கூட்டணி கூஜாக்களைத் திருப்திபடுத்த தேர்தல் பிரச்சாரம் செய்துவந்த அவர் இப்போது, “இந்தியாதான் இலங்கைக்கு ஆயுதங்கள் கொடுத்து இந்தப் போரை நடத்துகிறது. இதை நான் இரண்டு ஆண்டுகளாக எதிர்த்து வந்தேன். ஈழத் தமிழரின் துயர் போக்க தனி ஈழம் அமைக்கப் பாடுபடுவேன்” என்று சாமியாடத் தொடங்கிவிட்டார்.

தேர்தல் நெருங்க நெருங்க தமிழனைக் கேணையனாகக் கருதிக் கொண்டு, இக்கயவாளிகள் நடத்தும் மோசடி நாடகங்கள் தீவிரமாகலாம். ஈழத் தமிழின அழிப்புப் போருக்கு எதிராகப் போராடி வரும் தமிழக மக்கள், இக்கேடு கெட்ட மோசடி நாடகக் கூட்டத்தை முச்சந்தியில் கட்டி வைத்து தோலுரிக்காவிட்டால், இனித் தமிழினம் சூடு  சொரணையற்ற கூட்டம் என்ற அவப்பெயர்தான் வரலாற்றில் எழுதப்படும்.

-புதிய ஜனநாயகம், மே’2009

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

ஈழம் – பதுங்கு குழி – ம.க.இ.க வின் குறும்படம்

வன்னியிலும், முல்லைத்தீவிலும் எந்த அடிப்படைத் தேவைகளுமின்றி அகதிகளாயும், இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்டும், படுகாயமுற்றும் சிதறிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை அங்கிருந்து தப்பித்தவறி வரும் புகைப்படங்கள் மூலம் நாம் அறிவோம். அங்கே எந்தப் பன்னாட்டு சேவை அமைப்பும் நுழையக் கூடாது என்பதில் ராஜபக்ஷே அரசு உறுதியாக இருக்கிறது. போர் தொடர்பாக இலங்கை ராணுவம் கூறும் செய்திகளைத்தான் நம்பவேண்டும் என உத்தரவு போடுகிறார் ராணுவ அமைச்சர் கோத்தாய ராஜபக்ஷே. மேலும் இந்தப் போரை மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியிருக்காவிட்டால் இந்நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என்றும் அந்த அபயாத்தை தற்போது வென்று விட்டதாகவும் கூவுகிறார்.

போர் நடக்கும் பகுதிகளின் இன்னும் ஐம்பதாயிரம் மக்கள் இருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. இலங்கை இனவெறி ராணுவம் இதுவரை கொன்ற கணக்கிற்கு அளவில்லை, இனி கொல்லப்போவதற்கு வரம்பும் இல்லை. குண்டு வீச்சிலிருந்து தப்பித் தவறி வரும் மக்களும் கூட குடிநீரும், உணவுமின்றி பட்டினிச்சாவை எதிர் கொள்ளும் அவலத்தில் இருக்கிறார்கள். அன்றாடம் அவலத்தையும், மரணத்தையும் எதிர் கொண்டு இதற்கு விடிவே இராதா என உழலும் அந்த மக்களின் துடிப்பை ஒரு சில காட்சிகளால் உயிர்த்தெழவைக்க முயல்கிறது இந்த காட்சிப் படிமம்.

ஈழத்தின் துடிப்பு எந்த அளவுக்கு நமது உணர்ச்சியை தட்டி எழுப்புகிறதோ அந்த அளவுக்கு நாம் சரியான அரசியல் நிலைப்பாட்டோடு போராடவேண்டும். அதை மறுப்பதற்காகவே தமிழக ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் ஈழத்தை வெறும் உணர்ச்சிகரமான பிரச்சினையாக மாற்றயிருக்கின்றன. ஜெயவும், கருணாநிதியும் யார் ஈழத்திற்காக பிடுங்கப் போகிறார்கள் என்ற கூச்சலோடு சண்டையிடும் நேரத்தில் இந்திய அரசின் உதவியோடு ஈழத்தில் தமிழினத்தை கருவறுக்கும் வேலையை ராஜபக்ஷே அரசு ஆர்ப்பாட்டத்துடன் செய்கிறது.

இந்திய அரசையும், அதற்கு உதவியாய் நேரடியாகவும், மறைமுகமாகவும் பரப்புரை செய்கின்ற ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளையும் எதிர்கொண்டு சமர் புரிவதற்கு நமக்குள்ள ஒரே ஆயுதம் தேர்தல் புறக்கணிப்புதான் என்ற கடமையையும் இந்த வீடியோப்படம் நினைவுபடுத்துகிறது.

ஈழத்தமிழ் மக்களுக்கான அரசியல் நடவடிக்கையை எழுச்சி பெறச்செய்வதற்கு இந்த வீடியோ படத்தை அனைத்து பிரிவினரிடமும் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம். ம.க.இ.க மையக் கலைக்குழு தயாரித்திருக்கும் இந்த இசைச் சித்திரம் தமிழகத்தின் பலபகுதிகளில் நடந்த எமது பொதுக்கூட்டங்களில் மேடை நிகழ்வாக நடத்தப்பட்டது.

ராகுல் காந்திக்கு கருப்புக் கொடி! ம.க.இ.க தோழர்கள் கைது !! – படங்கள்

இலங்கை அரசு ஈழத் தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும் போருக்கு நேரடியாகவே உதவிகள் செய்யும் இந்திய அரசின் நிலையினை மறைப்பதற்குக் கூட மத்தியில் உள்ள காங்கிரசுப் பெருச்சாளிகள் பயப்படவில்லை. இந்தக்கயமையைக் கண்டித்தும் மத்திய அரசுக்கு ஒரு பாடம் புகட்டவேண்டுமெனவும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்கள் தமிழகமெங்கும் தேர்தல் புறக்கணிப்பு இயக்கத்தை வீச்சாக செய்து வருகின்றன.

இதன் அங்கமாக இன்று (8.5.09) தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த காங்கிரசு குலக்கொழுந்து ராகுல் காந்தியை எதிர்த்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஏற்கனவே போலீசு சோதனை, குண்டு துளைக்காத மேடை, டெல்லியிலிருந்து வந்திரங்கிய குண்டு துளைக்காத கார் என பாதுகாப்பு ஏற்பாடுகள் அமர்க்களப்பட்டன. இதையும் மீறி சிவகங்கையில் ராகுல் காந்தி உரையாற்றியபோது நான்கு தோழர்கள் கருப்பக்கொடி காட்டி முழக்கமிட்டனர். தோழர்கள் அருகே இருந்த காங்கிரசு அடிப்பொடிகள் தோழர்களை தாக்க வந்தனர். மேடைக்கருகே வந்த எதிர்ப்பைப் பார்த்து திகைத்து நின்ற ராகுல் அதன்பிறகு மொத்தம் பதினைந்து நிமிடத்தில் உரையை முடித்துக் கொண்டார். பதட்டத்தில் அவர் சிதம்பரம் பெயரையும், கை சின்னத்திற்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்வதற்கும் மறந்து மேடையை விட்டு இறங்க, உடனே சிதம்பரம் கையைப்பிடித்து இழுக்காத குறையாக ராகுல் மறந்து போனதைப் பேசுமாறு கூற ஒரு வழியாக கூட்டம் முடிந்தது.

சிவகங்கையை முடித்துவிட்டு திருச்சி உழவர் சந்தையில் ராகுல் காந்தி பேசுவதற்கு வந்தார். அவர் வந்த வாகன வரிசையை சாலையில் மறித்த பெண் தோழர்களையும் உள்ளிட்டு எழுபது தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டவாறு கருப்புக் கொடி ஏந்தினார்கள். எவ்வளவோ பாதுகாப்பு செய்து விட்டோமென இறுமாந்திருந்த போலீசு செய்வதறியாது ஒரு கணம் திகைத்து நிற்க அப்புறம் சகஜநிலைக்கு வந்து அனைத்துத் தோழர்களையும் கடுமையாக தடியடி செய்து கைது செய்தது. போலீசு வேன்களில் தோழர்கள் முழக்கமிட்டுச் செல்லும் காட்சியைப் பார்த்த ராகுல் காந்தியை போலிசார் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். சாலையிலேயே வந்த மறியலைக் கண்டு உள்ளூர் காங்கிரசுக்காரர்கள் தலை தெரிக்க ஓடினார்கள். இந்த எதிர்ப்புக் குறித்து தமிழக காங்கிரசு வேட்டிகள் அவர்களது இளவரசரிடம் மறைப்பதற்கு முயலலாம். ஆனால் மத்திய உளவுத்துறை காங்கிரசுக் கோமானிடம் உள்ளது உள்ளபடி தெரிவித்துவிடும்.

ஈழத்தமிழ் மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஒத்தூதும் காங்கிரசு பெருச்சாளிகள் தமிழகத்திற்கு நிம்மதியாக வந்து செல்லமுடியாது என்ற நிலையை ஏற்படுத்துவதற்கு இந்தக் கருப்புக் கொடி எதிர்ப்பு ஒரு துவக்கம்.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…


படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

ஜெ மாறிவிட்டார் ! விரக்தி ->பிரமை ->நம்பிக்கை ->சந்தர்ப்பவாதம்

14

jayalalithathumbநேற்று இடப்பட்ட ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்! கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்களுக்கான பதில் இந்த இடுகை. ,  புதிய வாசகர்கள் அந்தக் கட்டுரையையும் பின்னூட்டங்களையும் படித்துவிட்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்

// காரணம் எங்களிடம் வேறு தெரிவு இல்லை //

// கருணாநிதியை நண்பன் என நம்பினோம். அவர் ஏமாற்றி விட்டார் //

// குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் எம்மவருக்கு சரித்திரங்கள் தேவையில்லை. யார் குத்தினாலும் அரிசியானால் போதும்.//

// எமக்கு இந்திய உள் அரசியல் தேவையில்லாத விடயம்.//

ஜெயல்லிதாவின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய விவரத் தொகுப்பு ஒரு நினைவூட்டல். அவ்வளவே. மற்றப்படி சிடி பார்த்து ஜெயல்லிதா அடைந்த்தாக கூறிக்கொள்ளும் மனமாற்றம் என்பது விளக்கம் ஏதும் தேவைப்படாத ஒரு மோசடி. அதை விளக்கும் நோக்கிலும் இந்தப் பதிவு இடப்படவில்லை என்பதை ஆர்.வி புரிந்து கொள்வார் எனக்கருதுகிறோம்.

“எம்மிடம் வேறு தெரிவு இல்லை. சரித்திரங்கள் தேவையல்லை. இந்திய உள் அரசியல் தேவையில்லை” என்ற கருத்துகள் எவ்வளவுதான் வேதனையிலும் விரக்தியிலும் எழுதப்பட்டிருந்தாலும் அவை மிகவும் தவறானவை.

காங்-பாஜக, திமுக-அதிமுக, ஐக்கிய தேசியக் கட்சி-சிறீலங்கா சுதந்திரக் கட்சி, குடியரசுக்கட்சி-ஜனநாயக கட்சி..   – இவற்றை விட்டால் வேறு தெரிவு இல்லை என்ற நிலையையும் கருத்தையும் ஆளும் வர்க்கங்கள் தோற்றுவித்து இருக்கின்றன. இந்த சட்டகத்தை உடைக்காமல் நாம் ஒரு அங்குலம் கூட முன்னேறமாட்டோம். அவ்வளவு ஏன், ஈழத் தமிழ் மக்கள் “வேறு தெரிவு இல்லை” என்ற வலைக்குள் சிக்கியிருந்தால் ஈழ விடுதலைப் போராட்டம் என்பதே துவங்கியிருக்குமா?

1983 க்கு முந்தைய இலங்கைச் சரித்திரம்தான் தேர்தல் பாதையைக் கைவிட்டு ஆயுதப்போராட்டத்தை தெரிவு செய்ய வைத்தது. எத்தகைய துயரமான சூழலில் இருந்த போதும் “சரித்திரம் தேவையில்லை” என்று கூறிவிட இயலுமா? 1983 முதல் இன்று வரை இந்திய அரசை நண்பனாக கருதி ஈழப்போராட்டம் இழைத்த தவறுகளைக் கொஞ்சம் கூட பரிசீலிக்காமல் அதே பாதையில், இன்னும் ஆழமான படுகுழியில் கால்வைப்பது எந்த வகையில் அறிவுடைமை? உணர்ச்சிகள் மேலோங்கியிருந்தால் அறிவு விடைபெற்றுக் கொள்ளவேண்டும் என்பது விதியா என்ன? ஒரு வேளை, ஜெயலலிதா பிரதமராகி, அவர் கூறுவது போல ராணுவத்தை அனுப்பி, ஜெயா-ராஜபக்சா ஒப்பந்தம் ஒன்று போட்டு அமைதியை நிலைநாட்டினால், இன்னொரு அமைதிப்படை ஈழத்தில் இறங்காதா?

இந்தியாவின் உள் அரசியல் தேவையில்லை என்ற ஒற்றை வரியில், குஜராத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் மக்கள், ஒரிசாவின் கிறித்தவர்கள், இந்து வெறியர்களால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் தலித் மக்கள்.. போன்றோரின் துயரத்தை ஒதுக்கித் தள்ளிவிட முடியுமா என்ன? அல்லது பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் ஒருவேளை ஈழத்தமிழர்க்கு ஆசுவாசம் கிடைக்கலாம் என்பதற்காக, இந்திய மக்கள் உத்திரவாதமான பாசிசக் கொடுங்கோன்மைக்கு வாக்களிக்க வேண்டுமா? ஜெயா ஈழம் வாங்கித்தரட்டும். அதற்காக, குஜராத் படுகொலையை நடத்தி முடித்து, தேர்தலில் வெற்றி வாகை சூடிய மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு ஜெயலலிதா போய்வந்ததையும், ஜெயாவின் பார்ப்பன பாசிச அடக்குமுறைகளையும் மறந்து விட முடியாதல்லவா?

இன்று துக்ளக் சோ எழுதியுள்ள தலையங்கத்தில் க”கருணாநிதிக்கு ஏன் ஓட்டுப் போடக்கூடாது” என்று விளக்கியிருக்கிறார். “மத்திய அரசில் செல்வாக்கு இருந்த்தால், தமிழகத்தில் புலிப் பிரச்சாரத்தைப் பெரிய அளவில் தாராளமாக நடத்தியது” என்பது கருணாநிதிக்கு எதிராக அவர் கூறும் காரணங்களில் ஒன்று. ஜெயல்லிதாவுக்கு வாக்களிக்குமாறு கோரியிருக்கும் சோ, அவரது “தமிழ் ஈ.ழம் அமைப்போம்” முழக்கத்தை ஒரு விசயமாகவே கண்டுகொள்ளவிலைல. “அது சும்மா தேர்தல் நாடகம்” ஏன்று ஏற்கெனவே கூறிவிட்டார். அதே நேரத்தில், அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பா.ஜ.க ஆட்சியமைக்கப் பயன்படும் என்பதை மட்டும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

ஜெயலலிதாவை எதிர்த்தால் அவர்கள் கருணாநிதியின் ஆட்கள் என்று பார்ப்பதும், கருணாநிதியை எதிர்த்தால் ஜெயாவின் ஆட்கள் என்று பார்ப்பதும் அரசியல் பாமரத்தனம். தெரிந்தே இதனைச் செய்வது கீழ்த்தரமான தந்திரம்.

பெரியார் திகவினர் இந்திய அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிப் போராடுவது என்பது வேறு; அதிமுக ஆதரவு என்பது வேறு. குஜராத் இனப்படுகொலை நடந்தபோது திமுக பாஜகவின் அமைச்சரவையில் இருந்தது. வைகோ மோடிக்கு வக்காலத்து வாங்கிப் பேசினார். அதன் பின் பெரியார் திக எடுத்த தேர்தல் நிலைப்பாட்டுக்கு என்ன அளவுகோல்? பெரியார் திகவினர் ஆத்திரப்படாமல் சிந்திப்பது நல்லது.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது என்ற பேச்செல்லாம் நகைக்கத்தக்கவை. ஊழல், அடக்குமுறைகளுக்காக திமுக, காங், அதிமுக முதலான கட்சிகளுக்கு மக்கள் எத்தனை முறை “பாடம்” கற்பித்திருக்கிறார்கள்? இதனால் அவர்கள் அஞ்சிவிடுவார்கள், மாறிவிடுவார்கள் என்று நம்புவது அசட்டுத்தனம்.

அல்லது தமிழகத்தில் அதிமுக அணி வெற்றி பெற்றுவிட்டால் “அது இந்திய அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக தமிழகம் கூறிய தீர்ப்பு” என்று கருதி மகிழ்ந்து கொள்வதும் மிகையானது. ராஜீவ் பிணத்தைக் காட்டித்தான் 1991 இல் ஜெயா வெற்றி பெற்றார். “ராஜீவுக்காக மக்கள் எனக்கு ஓட்டுப் போடவில்லை” என்று அடுத்த சில மாதங்களிலேயே கூறி காங்கிரசின் முகத்தில் கரியைப் பூசினார். இன்று ஜெயாவுக்கு வாக்கு கேட்டு அலையும் தமிழ் உணர்வாளர்கள் ஒருவேளை இதையெல்லாம் மறந்திருக்கக்கூடும்.

ஈழத்தின் எதிரி ஜெ – ஆதாரங்கள்!

67

ஈழத்திற்கெதிரான பாசிச ஜெயாவின் குற்றப்பட்டியல்

இந்தியாவின் “வருங்காலப் பிரதமர்” ராகுல் காந்தி, கடந்த செவ்வாய்க்கிழமை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டிதான் இன்றைய பத்திரிகைகளின் முக்கியச் செய்தி. அந்தப் பேட்டிக்குள் இடம்பெற்ற முக்கியச் செய்தி ஒன்றும் உண்டு. பிகார் முதல்வர் நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு, ஜெயலலிதா ஆகியோரைப் பற்றி போகிறபோக்கில் புகழ்ந்துரைத்தார் ராகுல். திறமையாளர்கள் யாராக இருந்தாலும் போற்றுகின்ற கண்ணியவானின் தோரணையில் இந்தப் பாராட்டு கூறப்பட்டிருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியைக் குறி வைத்தே இது பேசப்பட்டிருக்கிறது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும்.

சில நாட்களுக்கு முன்னர் என்.டி.டி.வி சென்னையில் நடத்திய தேர்தல் விவாதத்தில் ஈழம் முக்கிய விவாதப் பொருளாக இருந்த்து. விவாதத்தின் இறுதியில் “தேர்தலுக்குப் பின் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று உறுதியாகச் சொல்வீர்களா?” என்று அதில் பங்கேற்ற அதிமுக மாநிலங்கள் அவை உறுப்பினர் மைத்ரேயனிடம் கேட்டபோது, “இந்தக் கேள்விக்கு நான் பதிலளிக்க மறுக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே கூறினார் மைத்ரேயன். “கூட்டணி அமைக்க மாட்டோம் என்று நீங்கள் சொல்லவில்லை. பதிலளிக்க மாட்டோம் என்றுதான் கூறுகிறீர்கள்” என்று கூறிச் சிரித்தார் தொலைக்காட்சி நிருபர். தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், ஈழப்பிரச்சினை பற்றிப் பேசும்போது கூட காங்கிரசை ஜெயலலிதா தாக்குவதில்லை. கருணாநிதியைத்தான் குற்றம் சாட்டுகிறார்.

இருப்பினும், ஜெயலலிதாவின் “தமிழீழ ஆதரவு போர்முழக்கத்தை” வைகோ, ராமதாசு, நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் வரவேற்றுப் புளகாங்கிதப் பட்டிருக்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகம் “ஜெயலலிதா மீது தங்களுக்கு எவ்வித பிரமையும் கிடையாது” என்று கூறிக்கொண்டே தீவிரமாக இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறது. “காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் நோக்கம்” என்றும் அவர்கள் கூறிக்கொள்கிறார்கள். “ம.க.இ.க வின் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் மறைமுகமாக காங்கிரசுக்கு உதவுவதாகவே அமையும்” என்றும் இவர்களெல்லாம் கருதுகிறார்கள்.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, தமிழகத்தில் பகுத்தறிவுப் பேச்சாளர்கள் பக்தர்களை இடித்துரைப்பதற்காக அடிக்கடி மேற்கோள் காட்டும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்” என்பது அந்தப் பாட்டு.  பாட்டைப் பாடிக்காட்டிவிட்டு,  “இவனையெல்லாம் திருத்தமுடியுமா?” என்று பக்தர்களை எள்ளி நகையாடுவார்கள் பேச்சாளர்கள். தற்போது “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், இரட்டை இலையை மறந்து விடாதீர்கள்” என்று வீதி தோறும் பிரச்சாரம் நடக்கிறது.

அம்மையாரின் தமிழ் விரோத, ஈழ விரோத நடவடிக்கைகள் பற்றி வைகோவுக்கும் நெடுமாறனுக்கும் தெரிந்த அளவுக்கு எங்களுக்குத் தெரியாது. எங்களுக்குத் தெரிந்தவரை அம்மாவின் வரலாற்றைக் கீழே தொகுத்துத் தந்திருக்கிறோம். வரலாறு தெரியாத தமிழகத்தின் இளம் தலைமுறையினருக்கும், புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இளைய தலைமுறையினருக்கும், வரலாற்றை மறந்துவிட்ட மூத்தோருக்கும் இது உதவக்கூடும். வரலாற்றை மறைக்க விரும்புவோருக்கும் தங்கள் சொந்த மூளையிலிருந்தே அவற்றை அகற்றிவிட விரும்புவோருக்கும் நிச்சயம் இவை உதவ மாட்டா.

காங்கிரசுக்குப் பாடம் கற்பிப்பது மட்டுமே தங்கள் இலக்கு என்று கூறிக்கொள்வோருக்கு ஒரு கேள்வி. காங்கிரசு எல்லாத் தொகுதிகளிலும் தோற்று, அதிமுக எல்லாத் தொகுதிகளிலும் வென்று, அம்மையார் டில்லியில் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து அரசும் அமைத்து விட்டால்…? அப்படி ஒரு விபரீதம் நடக்கக்கூடாது என்று இஷ்டதெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொள்ளலாம். மீறி அப்படி நடந்துவிட்டால்? அதை எப்படி விளங்கிக் கொள்வது?

“நம்மைப் பொருத்தவரை காங்கிரசுக்குப் பாடம் கற்பித்து விட்டோம். தன் பங்குக்கு ஜெயலலிதாவும் நமக்குப் பாடம் கற்பித்து விட்டார். இரண்டு பேருடைய நோக்கமும் நிறைவேறியது” என்று விளங்கிக் கொள்ளலாமா? ஜெயலலிதாவை வெற்றி பெறச் செய்வது என்பது காங்கிரசுக்குச் செய்யும் நேரடி உதவியா, மறைமுக உதவியா?

சிந்திக்க வேண்டும். “பாடம் கற்பிப்பதற்கு” முன், வரலாறு கற்பிக்கும் பாடத்தை நாம் கற்றுக் கொண்டிருக்கிறோமா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். ஏதோ “நேற்று ஜெயலலிதா ஈழத்தை எதிர்த்தார் – இன்று ஆதரிக்கிறார்” என்று மிகவும் எளிதாக இதனைக் கருதிக் கொண்டிருப்பவர்கள் இதனைப் படியுங்கள். உங்கள் கருத்தைப் பரிசீலியுங்கள்.

ராஜீவ் கொலைக்கு முன்:

தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ‘புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுஙகிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது’ எனப் பீதியைக் கிளப்பினார்.ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் கூறிய ஜெ, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே ‘விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்

ஜூலை 1991:

ராஜீவ் கொலையானவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார். ராஜீவ் கொலையான சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். இதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல் படை அமைத்து ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெ. ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களை கருணையுடன் நடத்துவோம் என்று முழங்கினார்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர் நலன்கள் என்ற பெயரில் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ.

செபடம்பர் 1991:

சிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய பெரியாரிய- மார்க்சிய பொதுவுடமைக் கட்சியினர் சிலர் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் ‘சுட்டுவிரல்’ கவிதைத் தொகுப்பு ஈழ ஆதரவு, புலி ஆதரவு எனக்கூறி நீக்கப்பட்டது. பாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும் வன்முறையையும் பிளவுவாதத்தையும் தூண்டுவதாகவும் சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்கள் கூட தடை செய்யப்பட்டு ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப்போவதாக மிரட்டினார்.

‘என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தறகொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுறுவி உள்ளனர். ராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்தி வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தை தகர்க்கவும் ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளனர்’ என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார். புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும் ‘புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது’ என்றார்.

1991- இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார். ராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெ, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து அகதி முகாம்களைத் திறந்த வெளிச்சிறைச்சாலையாக மாற்றினார். அதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார். ஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.

ஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார். அவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும் அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ளினார். வைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார். பத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.

ஈழ அகதிகள்-போராளிகள் உரிமைக்கும் ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார். ஈழப்போரில் அடிபட்டு சிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.கவினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.

ஜெயா-வாழப்பாடி கும்பல் கரடியாய்க் கத்தியதால் ராஜீவ் கொலைக்கு பின்னர் ஈழ அகதிகள் வாரம் ஒரு கப்பல் வீதம் கட்டாயாப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். போயஸ் தோட்டத்துக்கு முன்பு நரிக்குறவர்களையும், ‘வயர்லெஸ்’ கருவியுடன் இருந்த ‘கூரியர்’ நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெ.

1992

தமிழர் வாழ்வுரிமை மாநாடு நடத்தி, புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் ப.நெடுமாறன் உட்பட 7 பேர் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டாகக் குற்றம் சாட்டப்பட்டு ஜெ.அரசால் கைது செய்யப்பட்டனர்.

‘தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுறுவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர். அவர்களுக்கு நவீன ரக துப்பாக்கிகளும், சாதனங்களும் இன்று அவசியமாக உள்ளது’ என்று ஜெ கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்காக சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.

1992- செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய ‘தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை’ அடுத்து ‘தேசத் துரோக, பிரிவினை சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை’ எனப் பாய்ந்த ஜெ, ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், மற்றும் மாநாட்டில் தீவிரமாகப் பேசியதாகக் கூறி சுப.வீரபாண்டியன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நீதிபதி கந்தசாமிபாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124-ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.

தமிழகத்தின் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி 4 புலிகளை – அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி – கைது செய்ததாக ஜெ அரசு சொன்னது. மதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி ‘கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன் ‘ என்றும் சொன்னார்.

1993

புலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக ப.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார். பின்னர் போலி சாட்சியங்கள் – ஆதாரங்களைக் கொண்டு ப.நெடுமாறன் போன்றோரை ‘தடா’வின் கீழ் சிறை வைத்தார்.

1993 மே – ‘நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர். காவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்’ என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.

கோவை ராமகிருஷ்ணன், சிறு பொறியியல் தொழிலை கோவையில் நடத்திக் கொண்டு தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார். (தற்போது பெ.தி.கவின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) இவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச்செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ அரசு இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.

பெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில் அவர்களின் வீட்டில் அமர்ந்து தேச விரோதமாக சதி செய்தாகக் கூறிய ஜெ அவர்களை தடாக் கைதிகளாக்கினார். ‘திராவிடம் வீழ்ந்தது’ என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ தடாவில் உள்ளே தள்ளினார்.

ஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும். கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.  அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும் அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91 இல் க்யூ பிரிவு போலீசால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.கவை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்க ஐ.பி தயாரித்திருந்த சதித் திட்டத்திற்கு ஒத்துழைக்க அவரை மிரட்டினர். அவர் அதற்கு மறுக்கவே, சட்ட விரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தனர். தீலீபன் மன்றத்தில் தியாகு ( இன்றைய தமிழ் தமிழர் இயக்கத்தின் தலைவர்) தொடுத்த ஆட்கொணர்வு மனுவால் 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த ( அதாவது பாலச்சந்திரன் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய ) கொடைக்கானல் தொலைக்காட்சி கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டு வெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து குண்டு வைக்க சதித் திட்டம் தீட்டியதாக தே.பா.சட்டக்காவலுக்கான ஆணையில் காரணம் சொல்லப்பட்டது.( அதே தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார் ). தே.பா.ச.காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தும் தீர்ப்புக்கு எதிராக சிறப்பு முகாமில் ஜெ.அரசு அவரை அடைத்தது. கொடைக்கானல் வழக்கில் அதிகாரிகள் இவரை கொடைக்கானல் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லாததால் பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது. மீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டிய 14 ஏனைய நபர்களுக்கு அப்போது பிணை வழங்க நீதித் துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் அரசு அவரை வாட்டியது. இன்று ஈழத்துக்கு ஆதரவாக சவுடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் எவ்வாறெல்லாம் ஈழத்தமிழர்களை சித்திரவதை செய்தார் என்பதற்கு ஒரு உதாரணம்தான் பாலச்சந்திரனின் கதை.

1995 – இல் தஞ்சையில் ஜெ நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர். ஜெயின் கமிசன் விசாரணையில் ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்’ என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.

2002

புலிகளும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால் பேச்சுவார்த்தைகளில் இந்தியா ‘பார்வையாளர்’ ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர். இக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது என ஜெ கொக்கரித்தார். ஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகளின் பயங்கரவாதப் படுகொலைகளைப் பட்டியல் போட்டு, ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். அவரின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.

இதே ஆண்டில் ஜெயா சட்டசபையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி-தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்’ என்று தீர்மானமும் நிறைவேற்றினார்.

ஜூலை 2002:

விடுதலைப் புலிகளை ஆதரித்து மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதைக் காரணம் காட்டி வை.கோ மற்றும் 8பேர்கள் மீது ஜெ கொடிய பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார். பொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, ‘ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்; அதற்கான பரிசீலனையில் உள்ளோம்’ என எச்சரித்தார். ம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார். புலிகளின் ஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால் தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி ஜெ பிரிவினைவாதப் பீதியூட்டினார்.

செப்டம்பர் 2002:

பயங்கரவாத – பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர். இக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார். ஆள்பலமோ, மக்கள் செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன.

செப்டம்பர் 2007

தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத் துரோகக் குற்றத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெ கூறினார். கருணாநிதி எழுதிய இரங்கற்பாவை வைத்து தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். பதிலுக்கு கருணாநிதி ‘இலங்கையில் கொல்லப்படுவது ஒரு தமிழன். என் உடம்பில் ஓடுவது தமிழ் ரத்தம். அதனால்தான் இரங்கல் தெரிவித்தேன்’ என்றார். அதற்கு ஜெ ‘நானும் தமிழச்சிதான்’ என்று கூறி விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினார்.

2008:

அதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசுக்காரர்களிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில் ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்து துறை ரீதியான நடவடிக்கைக்கு எதிர்தரப்பினரை தள்ளிவிட்டனர். ஆனால் இச்சம்பவத்தைக் கூட ஜெ ‘கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத்தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுறுவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது’ என ஊளையிட்டார்.

மற்றபடி ஈழத்தமிழ் மக்கள் செத்து மடிவதைப் பற்றி ‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என திமிராகப் பேசினார். திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் அவர்களை கைது செய்யவேண்டுமென கருணாநிதிக்கு உத்தரவுபோட்டார். அதன்பிறகு திருமாவைக் கைது செய்யவேண்டுமென்றார். கடைசில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

இப்படி பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய் இப்போது நாற்பது சீட்டையும் வெற்றிபெற வைத்தால் தன் முந்தானையில் முடிந்துவைத்திருக்கும் ஈழத்தை தூக்கித் தருவதாக கூக்குரலிடுகிறது. ஈழப்பிரச்சினைக்காக அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டுமென முடிவெடுத்துள்ள அப்பாவிகள் இனியாவது திருந்துவார்களா?

ஈழம்…நேபாளம். தொடர்கிறது இந்தியாவின் மேலாதிக்க வெறி!

15

Nepal May Day

நேபாள பிரதமர் தோழர் பிரசண்டா ராஜினாமா செய்திருக்கிறார். நேபாள இராணுவத்தின் தலைமை ஜெனரல் ருக்மாங்கத் கட்வாலை பதவி நீக்கம் செய்து பிரசண்டா பிறப்பித்த உத்தரவை நேபாள ஜனாதிபதி ராம் பரன் யாதவ் நிராகரித்ததற்கான எதிர் நடவடிக்கை இது. இது ஜனாதிபதியின் அதிகார வரம்பை மீறியது என்றும் அரசமைப்பு முறைக்கு எதிரானது என்றும் அம்பலப்படுத்தி, தனது பதவி விலகலை தொலைக்காட்சி மூலம் அறிவித்திருக்கிறார் பிரசண்டா. “நேபாளத்தின் மக்களாட்சியைக் கருவிலேயே கொல்வதற்கு இந்தியா (அண்டை நாடு) சதி செய்கிறது” என்று குற்றம் சாட்டியுமிருக்கிறார்.

இந்திய ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்க கொலைக்கரங்கள் நேபாளத்தில் நடத்தி வரும் சதிவேலைகள் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாகவே வெளிவந்து கொண்டிருந்தன. தற்போது பிரசண்டாவின் ராஜினாமா அதனை முழுமையாக அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

நேபாள மன்னராட்சியைத் தூக்கியெறிவதில் மாவோயிஸ்டுகள் ஆற்றிய முதன்மைப் பாத்திரத்தை வெறிகொண்ட கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்களும் கூட மறுக்க முடியாது. மன்னராட்சியை அகற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு நேபாளத்தின் ஓட்டுக்கட்சிகள் பல ஆண்டுகளாக நடத்திய போராட்டங்கள் எதுவும் வெற்றி பெறவில்லை. அவ்வாறு அகற்றும் நோக்கத்துடன் அவர்கள் அந்தப் போராட்டங்களை நடத்தவும் இல்லை. மன்னராட்சியுடன் சமரசம் செய்து கொண்டு அதிகாரத்தில் அமர்ந்து ஆதாயங்களைப் பெறுவதை மட்டுமே செய்து வந்தனர். அதன் காரணமாகவே மக்களின் வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்டனர். இறுதியில் மன்னர் ஞானேந்திரா நாடாளுன்றத்தை முடக்கி, கட்சித் தலைவர்களை சிறை வைத்து அடக்குமுறையை ஏவிவிட்ட காலத்தில் செய்வதறியாமல் இந்திய அரசிடம் தங்களைக் காப்பாற்றுமாறு மன்றாடிக் கொண்டிருந்தன நேபாள காங்கிரசு, யு.எம்.எல் முதலான ஓட்டுக் கட்சிகள். மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டமும் அவர்கள் துவக்கி வைத்த மக்கள் எழுச்சியும்தான் ஞானேந்திராவைத் தூக்கி எறிந்தன. ஓட்டுக் கட்சித்தலைவர்களை சிறையிலிருந்து மீட்டன. இது உலகறிந்த வரலாற்று உண்மை.

எனினும், மாவோயிஸ்டுகள் அதிகாரத்துக்கு வராமல் தடுப்பதற்கும், மன்னராட்சியை எப்படியாவது காப்பாற்றுவதற்கும் இந்தியாவும் அமெரிக்காவும் இறுதிவரை பெரிதும் முயன்றன. எல்லா வகையான சூழ்ச்சிகளையும் செய்து பார்த்தன. ஏழு கட்சிக் கூட்டணி மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து ஒர் முன்னணி அமைத்து விடாமல் தடுப்பதற்கு இந்தியா எல்லா சூழ்ச்சிகளையும் செய்து தோற்றது. பிறகு, மன்னர் ஒழிக என்ற முழக்கத்துடன் இந்தியா ஒழிக என்று நேபாள மக்கள் தெருவில் முழங்கத் தொடங்கிய பின்னர்தான் வேறு வழியே இல்லாமல் மாவோயிஸ்டுகளின் வெற்றியை கசப்புடன் விழுங்கிக் கொண்டது இந்தியா.

பிறகு, மாவோயிஸ்டுகள் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக, தெராய் பகுதியில் மாதேசி மக்கள் மத்தியில் கலவரங்களைத் தூண்டியது. பின்னர் இந்து பாசிஸ்டுகளுக்கு ஆயுதம் கொடுத்து நேபாளத்துக்குள் அனுப்பி, (இதில் மட்டும் அத்வானி சோனியா கூட்டணி) நிராயுதபாணிகளாகத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த மாவோயிஸ்டு அணிகளைக் கொலை செய்தது. இத்தனைக்கும் பிறகு மாவோயிஸ்டுகள் பெற்ற தேர்தல் வெற்றி இந்தியாவின் மேலாதிக்க மகுடத்தில் இரண்டாவது செருப்படியாக இறங்கியது.

இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதை வாய் பேச்சுக்கு வரவேற்ற போதிலும், மாவோயிஸ்டுகளை அதிகாரத்திலிருந்து அகற்றும் தனது முயற்சியை இந்தியா நிறுத்தவில்லை. இராணுவ தலைமை ஜெனரல் கட்வால் விவகாரத்தில் இது வெடித்து வெளியே வந்திருக்கிறது.

ராயல் நேபாள் ஆர்மி என்று முன்னர் அழைக்கப்பட்ட நேபாள இராணுவத்தின் தலைமை ஜெனரல் ருக்மாங்கத் கட்வால், ஞானேந்திராவின் தந்தையான மன்னர் மகேந்திராவின் வளர்ப்பு மகன். நேசனல் டிஃபென்ஸ் அகாதமி, இந்தியன் மிலிட்டரி அகாதமி போன்ற இந்திய இராணுவ நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்பட்டவர். மன்னராட்சிக்கும் இந்திய மேலாதிக்கத்துக்கும் விசுவாசமான அடியாள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைந்த பிறகு, அதன் உத்தரவுகளுக்குக்  கட்டுப்படுவதாக வாயளவில் ஏற்றுக் கொண்டு, செயலில் நேரெதிராகச் செயல்பட்டார் கட்வால். மிக முக்கியமாக, மன்னராட்சிக்கும் இந்தியாவுக்கும் விசுவாசமான பல இராணுவ அதிகாரிகளுக்கு ஓய்வுக்காலத்துக்குப் பின்னரும் பதவி நீட்டிப்பு அளித்தார். மாவோயிஸ்டுகளின் மக்கள் படையைச் சேர்ந்த சிப்பாய்களை நேபாள இராணுவத்தில் சேர்த்துக் கொள்வது என்ற அரசின் நிராகரித்தது மட்டுமின்றி, தன்னிச்சையாக ஆளெடுப்பு நடத்தி, மன்னராட்சிக்கு சாதகமான ஆட்களை இராணுவத்தில் பெரும் அளவில் சேர்க்கத் தொடங்கினார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாள அரசின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்த காரணத்தினால், இவருக்கு விளக்கம் கோரும் நோட்டீஸ் அனுப்பினார் பிரசண்டா. அவரது பதில் திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தினால் இவரைப் பதவிநீக்கம் செய்தார். கட்வாலுக்கு நோட்டீஸ் அனுப்பிய உடனேயே “கட்வாலை நீக்கக் கூடாது” என்று பிரசண்டாவை மிரட்டியது இந்திய அரசு. ஏற்கெனவே மாவோயிஸ்டுகளை வேறு வழியின்றி சகித்துக் கொண்டிருந்த நேபாள காங்கிரசு, யு.எம்.எல் கட்சியினரை மாவோயிஸ்டுகளுக்கு எதிராகத் தூண்டி விட்டது. ஒரு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துவதற்கான சதிவேலைகளையும் இந்தியா தொடங்கியது.

இந்தியாவின் இந்த தலையீட்டுக்கு இரண்டாவது முக்கியக் காரணம், சீனாவுடன் நேபாள அரசு செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்த ஒப்பந்தம். ஏற்கெனவே நேபாளத்தின் மீது இந்தியா திணித்திருந்த மேலாதிக்க ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிவருகிறார்கள் மாவோயிஸ்டுகள். இந்தியாவின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் உணர்வு நேபாள மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றிருப்பதால், வேறு வழியின்றி பிற ஓட்டுக் கட்சிகளும் இதனை ஆதரிக்கவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்நிலையில் சீனாவுடன் நேபாளம் சுயேச்சையாக செய்து கொள்ளும் இந்த ஒப்பந்தம், தனது மேலாதிக்க நோக்கத்துக்கு எதிராக அமையும் என்ற காரணத்தினால், அந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னரே மாவோயிஸ்டு அரசை வீழ்த்திவிட வேண்டும் என்பது இந்திய அரசின் திட்டமாக இருந்திருக்கிறது. இதனை ஒட்டித்தான் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி வந்த முன்னாள் மன்னன் ஞானேந்திரா, சோனியாவை இரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்தப் பின்புலத்தில்தான் நடந்திருக்கிறது பிரச்ண்டாவின் ராஜினாமா. இப்போது தனது எடுபிடிக் கட்சிகள் அனைத்தையும் ஒன்று சேர்த்து நேபாளத்தில் ஒரு அரசாங்கத்தை உருவாக்க முனைந்திருக்கிறது இந்தியா.

இவை எதையும் “இல்லை” என்று இந்திய அரசு மறுக்வே முடியாது. அனைத்தும் அப்பட்டமாக அம்பலமாகி விட்டன. இந்தியாவின் நலனுக்கு அவசியமான நடவடிக்கைகள் என்ற கோணத்தில் இவற்றை நியாயப்படுத்தி எழுதுகின்றன ஆளும் வர்க்கப் பத்திரிகைகள். “இந்தியாவின் மேலாண்மையை இந்தப் பிராந்தியத்தில் நிலைநாட்ட காங்கிரசு தவறிவிட்டது” என்பதுதான் நேபாளம் குறித்த பா.ஜ.க வின் விமரிசனம். இன்னும் கொஞ்சம் சூழ்ச்சித் திறனுடன், குட்டு உடைபடாத வண்ணம் இதனை செய்திருக்க வேண்டும் என்பது ஆளும் வர்க்க அரசியல் விமரிசகர்கள் கூறும் விமரிசனம்.

மாவோயிஸ்டு அரசின் நடவடிக்கைகளில் இந்தியாவை அச்சுறுத்தும் மூன்று விசயங்கள் எவை என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா பட்டியலிடுகிறது. முதலாவதாக நேபாள இராணுவத்தில் மாவோயிஸ்டுகளின் மக்கள் படையின் வீரர்களைச் சேர்ப்பது. இதில் இந்தியாவுக்கு என்ன நோக்காடு? நியாயமாக மன்னராட்சி தூக்கியெறியப்பட்ட உடனேயே அதனைப் பாதுகாத்து நின்ற இராணுவம் கலைக்கப் பட்டிருக்க வேண்டும். நேபாளத்தின் சூழலும், இன்றைய உலகச் சூழலும் அதனை சாத்தியமற்றதாக்கியிருந்தன. எனவேதான் மக்கள் படையை இராணுவத்தில் சேர்ப்பது என்ற கோரிக்கையை மாவோயிஸ்டுகள் முன்வைத்தனர். மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்த அந்தக் காலத்தில் 7 கட்சிக் கூட்டணி இதனை ஏற்றுக் கொண்டது.

மன்னராட்சியை அகற்றி குடியரசை நிறுவுவதற்காகப் போராடி, பல்லாயிரம் உயிர்களைப் பலி கொடுத்த மக்கள் படைதான் குடியாட்சியைப் பாதுகாக்க முடியும். ஆனால் இந்த நடவடிக்கை நேபாள ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமல்ல, இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் பாதுகாப்பானது இல்லையே! அதன் விளைவுதான் இந்தியத் தலையீடு. ஞானேந்திரா சோனியா சந்திப்பு.

இரண்டாவதாக, இராணுவத்தில் ஊடுறுவுவதைப் போலவே, நீதிமன்றத்திலும் மாவோயிஸ்டுகள் ஊடுறுவி விடுவார்களாம். மக்கள் நீதிமன்றம் என்ற தங்களது அமைப்பை நீதித்துறைக்குள்ளும் புகுத்தி விடுவார்களாம். அந்த அபாயம் குறித்து நேபாள பிரபுக்குலம் மட்டுமின்றி, இந்திய மன்னர் குலமும், நேபாளத்தில் முதலீடு செய்திருக்கும் இந்திய தரகு முதலாளிகளும் கவலைப்படுகிறார்கள். இது இந்தியாவிற்கான இரண்டாவது அபாயம்.

மூன்றாவதாக, நேபாளம் சீனாவுடன் செய்து கொள்ள விரும்பும் ஒப்பந்தம். ஒரு இறையாண்மை மிக்க நாடு, வேறொரு நாட்டுடன் ஒப்பந்தம் போடுவதை இந்தியா எப்படி தடுக்க முடியும்? ஏனென்றால் தனது அண்டை நாடான சீனாவுடன் நேபாள அரசு ஒப்பந்தம் போடுவது இந்திய நலனுக்கு எதிரானதாம். நேபாளத்தில் தனக்குப் போட்டியாக சீனா கால் பதிப்பதை இந்தியா விரும்பவில்லையாம்.

அண்டை நாட்டின் இறையாண்மையை இந்தியா மதிக்கும் யோக்கியதை இதுதான். இலங்கையில் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்தக் கோரினால், “இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் உள்விவகாரத்தில் நாம் எப்படித் தலையிட முடியும்?” என்று கேட்கும் அதே வாயால்தான் இராணுவ ஜெனரலை பதவி நீக்கம் செய்யக் கூடாது என்று மாவோயிஸ்டுகளை மிரட்டுகிறது இந்தியா. ஆட்சிக் கவிழ்ப்புக்கும் சதித்திட்டம் தீட்டுகிறது. இராணுவ ஜெனரல் விவகாரம் கிடக்கட்டும். கேவலம் பசுபதிநாதர் கோயில் பூசாரியை மாற்றியதற்கே இந்தியா தலையிடவில்லையா?

இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசிய வட்டாரத்திலேயே தேசிய இனப் போராட்டமோ ஜனநாயகப் புரட்சியோ வெற்றி பெறுவதை இந்தியா ஒரு போதும் அனுமதிக்காது. அன்று ஐரோப்பியப் புரட்சிக்குத் தடையரணாக இருந்த ரசியாவின் ஜாராட்சியைப் போல, இன்று இந்திய அரசு தெற்காசியப் பகுதியில் பிற்போக்கின் காவலன், அமெரிக்காவின் அடியாள்.

தற்போது பொருளாதார வலிமை பெற்றிருக்கும் சீன முதலாளித்துவ அரசு, அமெரிக்காவுக்குப் போட்டியாக, தனது செல்வாக்கை தெற்காசியப் பகுதிக்கும் விரிவு படுத்தும் நோக்கத்தில் இலங்கையிலும் நேபாளத்திலும் பாகிஸ்தானிலும் மேற்கொண்டு வரும் முயற்சிகளைக் காரணம் காட்டித் தனது மேலாதிக்க நோக்கத்தை இந்திய ஆளும் வர்க்கம் மறைத்துக் கொள்ள முனையும். இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்த்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடியாளாக நியமனம் பெற்றுவிட்டதால், சீனப்பூச்சாண்டி காட்டி தனது அமெரிக்க அடிவருடித்தனத்தை நியாயப்படுத்திக் கொள்ளவும் செய்யும்.

ஆனால் அதில் கடுகளவும் உண்மை இல்லை. சீனாவின் தற்போதைய ஆசைகள் தான் புதியவை. ஆனால் இந்திய

ஆளும் வர்க்கத்தின் ஆசையும் ஆதிக்கமும் மிகவும் பழையவை. 1950 களிலேயே அது தொடங்கி விட்டது. இந்திய நேபாள ஒப்பந்தம் முதல், ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் வரை இதற்குப் பல சான்றுகள் உண்டு.

1990 களில் நேபாளத்தில் மன்னர் பிரேந்திராவுக்கு எதிராக நேபாள ஓட்டுக் கட்சிகள் நடத்திய ஜனநாயகத்துக்கான இயக்கத்தைப் பின்நின்று இந்தியா இயக்கியதற்கும், 1983 இல் இந்தியா ஈழப்போராளிக் குழுக்களுக்கு பயிற்சியும் அடைக்கலமும் கொடுத்ததற்கும் ஒற்றுமைகள் உண்டு. இன்று ராஜபக்சேவுடன் இணைந்து இனப்படுகொலையை நடத்துவதற்கும், சோனியா ஞானேந்திரா சந்திப்புக்கும் கூட ஒற்றுமை உண்டு. ஒருவேளை சோனியாவுக்குப் பதில் அத்வானியோ, ஜெயல்லிதாவோ பிரதமராக இருந்திருந்தாலும் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தே இருக்கும். ஈழத்து இனப் படுகொலைக்கும் இந்திய அரசின் ஆதரவு கிடைத்தே  இருக்கும்.

“ஹவாய் செருப்புக்கும் தோல் செருப்புக்கும் வித்தியாசமில்லையா?” என்று டெல்லிக்குக் காவடி எடுத்துக் கொண்டிருக்கும் அறிவாளிகளும் தமிழ் உணர்வாளர்களும் கொதித்தெழலாம். இல்லை என்று நாம் கூறவில்லை. அந்த வித்தியாசத்தைக் காட்டிலும், அவையிரண்டுமே ஆளும் வர்க்கத்தின்  கால்செருப்புகள் என்ற ஒற்றுமையே முதன்மையானது என்ற உண்மையைப் பணிவுடன் சுட்டிக் காட்டுகிறோம். வர்க்கம் என்ற சொல்லை தமிழ் உணர்வாளர்களும் ஈழ ஆதரவாளர்களும் எவ்வளவுதான் வெறுத்தாலும், கண்களை மூடிக்கொண்டாலும், ஆளும் வர்க்க நலன்தான் இந்திய அரசை இயக்குகிறது.

இறுதியாக, பிரசண்டாவின் பதவி விலகல் உரையிலிருந்து சில வாக்கியங்கள்:

“நாற்காலி ஆசைக்காக வெளிநாட்டவரின் தயவை எதிர்நோக்கிய காலம் முடிந்து விட்டது. தேசத்தின் கவுரவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்கு எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராகுமாறு நாட்டுப் பற்று கொண்டவர்களைக் கேட்டுக் கொள்கிறோம். தங்கள் உயிரை அர்ப்பணித்திருக்கும் பத்தாயிரக்கணக்கான மக்களின் இரத்தத்தின் மீது நின்று கொண்டு, “அந்நியக் கடவுளர்களின்” முன் நாம் தலைவணங்க மாட்டோம்.”

இறையாண்மை நாட்டுப்பற்று என்ற பெயரில் மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் ஆளும் வர்க்கங்களின் மிரட்டலுக்குத் நாமும் தலை வணங்க கூடாது.  தெற்கே ஈழம். வடக்கே நேபாளம். இந்திய மேலாதிக்கத்தின் கொலைக்கரங்கள் நீள்கின்றன. அவற்றை வெட்டி எறிவது நம் கடமை. மேலாதிக்கத்தின் தயவில் விடுதலையைச் சாதிக்கலாம் என்று நம்புவது மடமை.

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சில  தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மே 1 முதல் 8 தேதி வரை இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் அழிந்துவிட்டன. கூடிய விரைவில் அவற்றை மீட்க முயல்கிறோம். இனிமேல் வரும் பின்னூட்டங்களுக்கு பிரச்சினையில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம்.


ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! – ம.க.இ.கவின் மே தினப் பேரணி – புகைப்படங்கள் !

ஈழத்தின் மீதான இந்திய மேலாதிக்கப் போருக்கு பதிலடி கொடுப்போம்! தேர்தலைப் புறக்கணிப்போம்! என்ற தலைப்பில் மே 01 அன்று தஞ்சையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகியவை இணைந்து மேதினப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தை வீச்சாக நடத்தின.

தஞ்சை திருவள்ளுவர் திடலில் காலை எட்டு மணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன் அவர்களால் கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு 9 மணிக்கு ஓவியக் கண்காட்சியை தோழர் துரை. சண்முகம் துவங்கி வைத்தார். தோழர் முகிலன் வரைந்த அந்த ஓவியங்களில் ஈழம் பற்றிய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதமும், தேர்தல் கூட்டணி என்பதற்கு கொள்கை ஒற்றுமை கிடையாது என்பதை நிறுவும் அப்போலி ஜனநாயக தாசர்களின் வாக்குமூலமும் ஓவியங்களில் சிறப்பாக வெளிப்பட்டு இருந்தது.

பேருந்துகள் மற்றும் புகைவண்டிகளின் வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து தோழர்கள் வந்த வண்ணமிருந்தனர். மாலை 4 மணிக்கு சரியாக புகைவண்டி நிலையத்திலிருந்து கூட்டம் நடக்கவிருந்த திருவள்ளுவர் திடல் வரை ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. கம்பம் பகுதி விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் மோகன் தலைமையில் நடந்த இப்பேரணியில் ஈழப்பிரச்சினையில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்றோர் போடும் வேடங்களை அம்பலப்படுத்தியும், ஈழத்திற்கு எதிராக சிங்கள இனவெறி அரசை மேலாதிக்க நலனுக்காக ஆதரிக்கும் இந்திய தரகு முதலாளிகளை முறியடிக்க அறைகூவல் விடுத்தும், பணநாயகத்தை விடுத்து மானத்தோடு இருக்க வலியுறுத்தியும் முழக்கமிட்டவாறு பேரணி நடைபெற்றது.

ஓட்டுப் பொறுக்கிகளின் அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலை அதன் கூச்சத்தைக் கேட்டுச் சலித்த தஞ்சையின் வீதிகளில் எதிரொலித்த புரட்சிகர அரசியலின் நம்பிக்கையூட்டும் எழுச்சியான முழங்கங்களை மக்கள் ஆர்வத்துடன் கவனித்தனர். சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்ட இப்பேரணியில் குழந்தைகளும், பெண்களும் குறிப்பிடத்தக்க அளவில் கலந்து கொண்டனர்.

ஈழத்தின் அவலநிலையை எடுத்துக்காட்டும் காட்சிப்படிமத்தை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் சிறப்பாக ஊர்வலத்தில் நடத்திச் சென்றது பார்வையாளர்களைக் கவர்ந்தது. தேர்தல் புறக்கணிப்பு, ஈழப்போரில் இந்திய அரசின் தலையீட்டை எதிர்ப்பது, தனியார்மய தாராளமய உலகமயமாக்கல் எதிர்ப்பு போன்ற முழக்கங்களுடன் கூடிய பதாகைகளையும், அனைத்து தோழமை அமைப்புகளும் தத்தமது கொடிகளுடன் ஊர்வலத்தில் வந்தது பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் இருந்தது.

ஊர்வலம் மாலை 6 மணிக்கு திருவள்ளுவர் திடலை வந்தடைந்தவுடன் பொதுக்கூட்டம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் பரமானந்தம் தலைமையில் தியாகிகளுக்கான வீரவணக்கத்துடன் துவங்கியது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் சுப. தங்கராசு சிறப்புரை ஆற்றினார். ஈழப்பிரச்சினைக்கு அப்பாற்பட்டு இந்தியாவின் ஜனநாயகம் என்பது எப்படி பெரும்பான்மை மக்களை ஒடுக்கும் போலி ஜனநாயகமாக இருக்கின்றது, தேர்ந்தெடுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை இயற்றும் அதிகாரத்தைத் தவிர அமல்படுத்தும் அதிகாரமில்லை, உண்மையான அதிகாரம் கொண்ட மக்கள் சர்வாதிகார மன்றங்களைக் கட்டி புரட்சிகர அதிகாரத்தை மக்கள் கைப்பற்றுவதுதான் இதற்கு தீர்வு, நக்சல்பாரிகளின் தலைமையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டுமெனவும் தோழர் தனது உரையில் குறிப்பிட்டார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் சிறப்புரை ஆற்றினார். இந்திய அரசும், இந்திய ஆளும் வர்க்கங்களும் ஈழத்திற்கு எப்போதும் எதிரிதான் என்பதை ஈழத்தின் போராளிக் குழுக்களும், தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு இயக்கங்களும் புரிந்து கொள்ளாமல், இந்தியாவை நண்பனென்று ஆதரிப்பதையும் அதன் விளைவே இன்றைக்கு நடைபெறும் இனப்படுகொலை உச்சத்தை அடைந்திருப்பதாகவும் தோழர் குறிப்பிட்டார். இந்திய தரகு முதலாளிகளுக்கு ஒன்றுபட்ட இலங்கையின் சந்தை தேவைப்படுவதால் அவர்களின் நலனைக் காப்பதற்காக இந்திய அரசு நேற்றும், இன்றும், நாளையும் சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாகத்தான் இருக்கும் என்பதையும் விளக்கினார்.

அடுத்து இன்றைய ஈழத்தின் மீதான இனப்படுகொலைக்கு நேரடியாக உதவும் காங்கிரசு அரசிற்கு பாடம் கற்பிப்பதற்காக ஈழ ஆதரவுக் குழுக்கள் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவை ஆதரிப்பதன் அபாயத்தை தோழர் புரியவைத்தார். கருணாநிதி நாளைக்கே ஈழம் கிடைக்குமென்றால் தனது பாரளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாகவும் அது இல்லாத பட்சத்தில் ராஜினாமா செய்வதால் பலனில்லை எனவும் கூறுகிறார். ஜெயலலிதாவோ தனக்கு தமழிக மக்கள் நாற்பது தொகுதிகளையும் தந்தால் புதிய மத்திய அரசின் மூலமாக ஈழத்தை வாங்கித் தருவாதக கூறுகிறார். இதிலிருந்து இருவரும் தமது பதவி ஆதாயத்திற்காக ஈழத்தின் பிணங்களை வைத்து நாடகமாடுவதை தோழர் உணர்த்தினார்.

தோழர் காளியப்பனின் உரைக்குப் பிறகு ம.க.இ.கவின் மையக் கலைக்குழு உணர்ச்சிகரமாக நடத்திய கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஈழத்தின் அவலத்தை துல்லியமாக எடுத்தியம்பும் இசைச்சித்திரம் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

பெண்கள் விடுதலை முன்னணியின் தோழர் நிர்மலா நன்றியுரை நிகழ்த்தினார். பாட்டாளிவர்க்க சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் இரவு 10 மணிக்கு நிறைவு பெற்றது. மிச்சமிருக்கும் நாட்களில் தமிழகம் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தை இன்னும் வீச்சாக கொண்டு செல்லும் உறுதியுடன் தோழர்களும், ஆதரவாளர்களும் கலைந்து செல்ல மே தின நிகழ்ச்சிகள் தஞ்சையில் முடிவடைந்தது.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மேல் சொடுக்கவும்

தமிழிஷில் வாக்களிக்க…
தமிழ்மணத்தில் ஆதரவு வாக்களிக்க…
தமிழ்மணத்தில் எதிர் வாக்களிக்க….
வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

சில  தொழில்நுட்பப் பிரச்சினைகள் காரணமாக மே 1 முதல் 8 தேதி வரை இந்த இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் அழிந்துவிட்டன. கூடிய விரைவில் அவற்றை மீட்க முயல்கிறோம். இனிமேல் வரும் பின்னூட்டங்களுக்கு பிரச்சினையில்லை. சிரமத்திற்கு வருந்துகிறோம்.