வங்கிகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் கடனைப் பெற்று திரும்பச் செலுத்தாதவர்களை கௌரவித்து தப்பியோட வைக்க, இந்திய விமானநிலையங்களில் சிறப்பு கௌவுண்டரை திறந்து வைத்திருப்பது போல் தெரிகிறது.
லலித் மோடி, மல்லையா, நீரவ் மோடி வரிசையில் ரூ. 5000 கோடி வங்கிக் கடனை திருப்பி செலுத்தாமல் சமீபத்தில் தப்பி ஓடியிருக்கும் ‘தொழிலதிபர்’ நிதின் சந்தேசரா. டெல்லி அருகே வதோதரா பகுதியில் ஸ்டெர்லிங் பயோடெக் என்ற நிறுவனத்தை நடத்திவந்தார். இவர் ஒரு குஜராத்தியும்கூட. வழக்கம்போல, வாலை ஆட்டி குழையும் ஊடகங்களால் இந்த விசயம் கண்டுகொள்ளப்படவில்லை.
சந்தேசரா துபாயில் குடியேற முயற்சித்தபோது அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக கடந்த மாதம் செய்தி வெளியானது. இப்போது தன்னுடைய தளத்தை நைஜீரியாவுக்கு மாற்றிவிட்டதாகவும் செய்திகள் சொல்கின்றன. தேடப்படும் நபர்களை ஒப்படைக்கும் ஒப்பந்தம் எதையும் அந்நாட்டுடன் இந்தியா செய்துகொள்ளவில்லை. எனவே அவரை கொண்டுவருவதில் பிரச்சினை இருக்கும் என்கிற செய்தி இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியானது.
இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான செய்தி, சந்தேசரா மட்டும் தனியாக விமானம் ஏறவில்லை. அவருடைய சகோதரர் சேத்தன் சந்தேசரா, அவருடைய மனைவி தீப்திபென் சந்தேசரா ஆகியோரும் உடன் சென்று நைஜீரியாவில் பதுங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின்படி, சந்தேசராக்கள் மீதும் ராஜ்பூஷன் ஓம்பிரகாஷ் தீட்சித், விலாஸ் ஜோஷி, கணக்காளர் ஹெமந்த் ஹதி, ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குனர் அனூப் கார்க் ஆகியோர் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. 2018 ஜுன் மாதம் அமலாக்கத்துறை இயக்குனரகம் இந்நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியது.
300 போலி நிறுவனங்கள் அடங்கிய குழுமத்தை சந்தேசராக்கள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உருவாக்கி ரூ. 5000 கோடி பணத்தை கடத்தியதாக தெரியவந்துள்ளது. இவர்களுக்கு முன் ஜதின் மேத்தா ரூ, 6712 கோடியை சுருட்டிக்கொண்டு ஓடினார். செயிண்ட் கிட்ஸ்-நேவிஸ் தீவு நாட்டில் அவர் குடியுரிமை பெற்றுள்ளார். 2013-இல் அவர் வெளியேறினார், ஆனால் இந்தியாவுக்கு அவரை கொண்டுவர முடியவில்லை.
பிரதமரின் ‘நம்முடைய சகோதரர் மெஹுல்’ (சில காலத்துக்கு முன் மோடி, மெஹுல் சோக்ஸியை அப்படித்தான் அழைத்தார்!) அட்டிகுவா நாட்டில் புதிய குடியுரிமை பெற்றவர். இவருடைய உறவுக்காரர் நீரவ் மோடி, பசிபிக் தீவு நாடான வனுவாட்டு-இல் குடியுரிமை பெற முயற்சித்தார், இதுவரை அது நடக்கவில்லை.
நீரவ் மோடியும் மெஹுல் சோக்ஸியும் சேர்ந்து ரூ. 13, 500 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள். விஜய் மல்லையாவை எடுத்துக்கொள்ளுங்கள், அவர் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து சில நிமிடங்களை செலவழித்த பின்பே, தன்னுடைய சிறந்ததொரு ஓட்டத்தை எடுத்தார். மல்லையாவை சந்தித்ததை ஜெட்லியும் ஒப்புக்கொண்டார். நிதியமைச்சர் இதை அவர் தப்பியோடிய முதல் நாளிலேயே சொல்லியிருக்கலாம். மல்லையாவே இதை சொன்னபிறகுதான், வேறு வழியில்லாமல் ஜெட்லி வாயைத் திறந்திருக்கிறார்.
இப்படி ஓடிப்போனவர்களில் பலர் குஜராத்திகள்… நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, நிதின் சந்தேசரா, ஜதின் மேத்தா. . எளிதாக சொல்வதென்றால், இங்கே சிறப்பு சலுகை அளிக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. விதிமுறைகள் இவர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டிருப்பதும் தெரிகிறது. ‘இந்தியாவிலிருந்து சுருட்டுங்கள்; நாட்டை விட்டு ஓடுங்கள்’ என்ற புதிய திட்டம் ஒன்றை இந்திய அரசு கொண்டுவந்துள்ளதுபோல தோன்றுகிறது. தப்பியோடியவர்கள் வங்கிகளில் ரூ. 35,000 கோடி கடன் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள்.
- படிக்க:
- வங்கிகளின் வாராக்கடன் : இடிதாங்கிகளா பொதுமக்கள் ?
- மக்களின் பணம் ! மல்லையாவின் அரசு !!
- வராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு !
சமீபத்தில் டெல்லியில் பேசிய பா.ஜ.க. தலைவர் அமித் ஷா கோடிக்கணக்கான மக்கள் இந்தியாவில் ஊடுருவி உள்ளதாக தெரிவித்தார். அவர் எல்லோரையும் ஊடுருவல்காரர்கள் என முத்திரை குத்திய நேரத்தில், அவருடைய பேச்சை கேட்பதை நிறுத்திவிட்டு, தேவையானதை எடுத்துக்கொண்டு ஓட மக்கள் எத்தனித்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான ஊடுருவல்காரர்கள் போய்விட்டபிறகு, அமித் ஷா மட்டும் தனியாக இருப்பார். அப்புறம், அவர் அடுத்த 50 ஆண்டுகளையும் ஆளலாம். பொதுமக்கள் எவரும் இல்லாதபோது, அமித் ஷா, வங்கள தேசத்தவர்களை திருப்பி அனுப்புவது குறித்தோ, குஜராத்துக்கு அவப்பெயரை பெற்றுத்தந்த நிதின் சந்தேசரா, நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி குறித்தோ கேட்கப்போவதில்லை.
அமிஷா அண்ணே, மக்களின் பணத்தை மூலதனமாகக் கொண்ட வங்கிகளிலிருந்து கடன் பெற்று, இந்திய மக்களை ஏமாற்றியவர்களை முதலில் நீங்கள் பிடியுங்கள். வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை கொண்டு வருவதாக நீங்கள் பேசியதை நினைத்துப் பாருங்கள். நல்லது, உங்கள் ஆட்சியில்தான் பணம் பறிபோயுள்ள சூழல் உருவாயுள்ளது.
ஆனால், நீங்கள் அடுத்த 50 ஆண்டுகளிலும் வரப்போகும் தேர்தல்களில் வெல்வது எப்படி என யூகம் வகுத்துக்கொண்டிருக்கிறீர்கள். பிரித்தாளும் அரசியல் செய்வதன் மூலம், அதாவது இந்தியர்களை வங்காள தேசத்தவர்கள் என முத்திரை குத்துவதன் மூலம் தேர்தலில் வெல்லப் பார்க்கிறீர்கள். நீங்கள் தேர்தலில் வெல்லவில்லை எனில், மக்களின் நுண்ணறிவுக்குத்தான் அது அவமானமாக இருக்கும்.
ஆனால், மக்கள் உங்களுக்கு நிரூபிப்பார்கள். அவர்கள் குறித்து நீங்கள் மதிப்பிட்டதை நிரூபிப்பார்கள்.
நன்றி: The Wire ‘Fleece India, Flee India’ – Has Narendra Modi Launched a New Scheme?
தமிழாக்கம்: