நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும்
– தோழர் ஆதீர்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
நீட் தேர்வை முறியடிக்க களப்போராட்டங்களில் இறங்க வேண்டும்
– தோழர் ஆதீர்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஹரியானா மாநிலம் சோனிபட் நகரில் அமைந்திருக்கும் அசோகா பல்கலைக்கழகம் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். பா.ஜ.க வெற்றி பெற்ற 2019-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் குற்றம் சாட்டி அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதார உதவிப் பேராசிரியர் சப்யசாச்சி தாஸ் (Sabyasachi Das) ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். ஜூலை 25 அன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கட்டுரை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து உதவிப் பேராசிரியர் தாஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதற்கு பாசிச பா.ஜ.க கொடுத்த அழுத்தம் தான் காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை. பல்கலைக்கழக துணைவேந்தரும் தாஸ் எப்போது ராஜினாமா செய்வார் என்பதற்காகக் காத்திருந்ததைப் போல், ஆகஸ்ட் 14 அன்று அவரது ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக்கொண்டார். முன்னதாக ஆகஸ்ட் 1 அன்றே தனக்கும் இந்த ஆய்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு அறிக்கையை வெளியிட்டு பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியரைக் கைவிட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.
உதவிப் பேராசிரியர் தாஸ் “உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் ஜனநாயகப் பின்னடைவு” (Democratic Backsliding in the World’s Largest Democracy) என்ற பெயரில் 50 பக்க ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவிய தொகுதிகள் மற்றும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி முடிவான தொகுதிகளை அவர் ஆராய்ந்தார்.
ஆராய்வதற்கு மெக்ராரி சோதனை (McCrary test) எனப்படும் புள்ளிவிவர சோதனை முறையை தாஸ் பயன்படுத்தினார். பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய தொகுதிகளில், அதாவது இருவருக்கும் 50 சதவிகித வெற்றி வாய்ப்பு இருந்த தொகுதிகளில், பா.ஜ.க அதிக அளவில் வென்றுள்ளதை அவர் கவனித்தார். மேலும், இத்தொகுதிகள் பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் உள்ளவை என்பதையும் அவர் ஆவணப் படுத்தினார்.
இத்தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். ஒன்று, தேர்தலில் முறைகேடு நடந்திருக்க வேண்டும். மற்றொன்று, கடும் போட்டியை முறியடிக்கும் விதத்தில் பா.ஜ.க தீவிரமாகப் பிரச்சாரம் செய்திருக்க வேண்டும்.
படிக்க: நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்: காவிமயமாக்கல் தடைப்பட போவதில்லை!
வெற்றிக்கு பா.ஜ.க-வின் பிரச்சாரம் தான் காரணமா என்பதை அறிய, தாஸ் வளரும் சமூகங்களுக்கான மையம் (Centre for Developing Societies) நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பான தேசிய தேர்தல் கணக்கெடுப்பை (National Election Survey) நோக்கித் திரும்புகிறார். கணக்கெடுப்பின் தரவுகளோ நெருக்கமான போட்டி நிலவிய தொகுதிகளில் பா.ஜ.க-வை விட எதிர்க்கட்சிகள் களத்தில் கடுமையாக பிரச்சாரம் செய்துள்ளனர் என்பதை வெளிப்படுத்தியது.
பா.ஜ.க-வின் பிரச்சாரம் வெற்றிக்குக் காரணமில்லை என்று முடிவு செய்கிறார். அடுத்ததாக முறைகேடு எந்தெந்த விதங்களில் நடைபெற்று இருக்கலாம் என்று தாஸ் ஆய்வு செய்கிறார். அதில், வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களை பதிவு செய்வதில் மோசடி நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தாஸ் கூறுகிறார். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் வளர்ச்சியை ஒப்பிடுகிறார். ஒட்டுமொத்த மக்களவைத் தொகுதிகளுடன் ஒப்பிடும்போது தாஸ் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தொகுதிகளில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதை அவர் காண்கிறார். மேலும், முஸ்லீம்கள் அதிகமுள்ள தொகுதிகளில் இந்த நிகழ்வு அதிகம் நடந்திருப்பதைக் கவனிக்கிறார். இதன் பொருள் என்னவென்றால், அடுத்தடுத்த தேர்தல்களில் புதிய வாக்காளர்கள் இணையும்போது அத்தொகுதிகளில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்; ஆனால் குறைந்திருக்கிறது. குறைந்ததற்கான காரணம் முஸ்லீம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது தான்.
2019 தேர்தலுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் “பதிவான வாக்குகள் (voter turnout/votes polled) மற்றும் எண்ணப்பட்ட வாக்குகள் (votes counted)” என இரண்டு தரவுத் தொகுப்புகளை வெளியிட்டது. அதை தி குயின்ட் பத்திரிகை ஆய்வு செய்து, 373 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே பாரிய வேறுபாடு இருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அவ்வறிக்கையை தனது ஆய்வுக்காக தாஸ் பயன்படுத்திக் கொள்கிறார். தாஸ் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தொகுதிகளிலும் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்ட வாக்குகளும் ஒன்றோடொன்று மிகப்பெரிய அளவில் வேறுபட்டன.
இக்காரணங்களால் தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அவர் தனது ஆய்வுக் கட்டுரையில் எடுத்துரைக்கிறார். தேர்தல் முறைகேடு தேர்தல் ஆணையத்தின் துணையின்றி நடக்க முடியாது. எனவே, இவரது ஆய்வு தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குகிறது.
படிக்க: ஏ.பி.வி.பி குண்டர்களால் அச்சுறுத்தப்படும் பல்கலைக்கழகங்கள்!
இந்த ஆய்வுக் கட்டுரையை பாசிச பா.ஜ.க கடுமையாக எதிர்த்தது. அதன் தொடர்ச்சியாகத் தான் உதவிப் பேராசிரியர் தாஸ் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப் பட்டுள்ளார். உதவிப் பேராசிரியர் தாஸ் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டிக்கும் விதமாக பொருளாதாரப் பேராசிரியரான புலப்ரே பாலகிருஷ்ணன் உள்ளிட்ட இரண்டு பேராசிரியர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அசோகா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை, ஆங்கிலம் மற்றும் படைப்பாற்றல் துறைகளும் உதவிப் பேராசிரியர் தாஸ்-க்கு தங்கள் ஆதரவை வெளிபடுத்தி பல ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளன.
பல்கலைக்கழகங்களில் கருத்து சுதந்திரத்தின் மீதான காவிகளின் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அசோகா பல்கலைக்கழகம் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல.
முன்னதாக, 2021-ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று அரசியல் துறை பேராசிரியாராக இருந்த பிரதாப் பானு மேத்தா (Pratap Bhanu Mehta) ராஜினாமா செய்தார். பாசிச பா.ஜ.க அரசின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்து பேசியும் எழுதியும் வந்ததால் மேத்தாவுக்கு மறைமுகமான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அதைக் கண்டிக்கும் விதமாக அப்பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்த அரவிந்த் சுப்பிரமணியன் தனது பதவியை மார்ச் 18, 2021 அன்று ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி நிறுவனங்களை காவிமயமாக்கும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் நடவடிக்கைக்கு இடதுசாரி மற்றும் ஜனநாயக சிந்தனை கொண்ட பேராசிரியர்கள் பெருந்தடையாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்ட பேராசிரியர்களின் ஆய்வுகள் பாசிஸ்டுகளுக்கு அச்சுறுத்தலாக அமைகின்றன. காவி பயங்கரவாத கும்பலால் இதனை சகித்துக் கொள்ள முடிவதில்லை.
எனவே, அறிவுத்துறையினரை தங்களுக்கு அடிபணிய வைக்கும் வேலைகளில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு அடிபணிய மறுக்கும் அறிவுத்துறையினர் ஒழித்துக்கட்டப்படுகிறார்கள். ஒரு சிலர் ராஜினாமா செய்தே ஆக வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். மற்றும் சிலரோ ‘அரசுக்கு எதிராக சதி செய்தனர்’ என்று குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
![]()
பொம்மி
ஒரு மாதத்திற்கும் மேலாக உச்சத்திலிருந்த தக்காளி விலை ரூ.300, 200, 150-லிருந்து குறைந்து தற்போது ரூ.50 ரூபாய் வரை சரிந்துள்ளது. இருப்பினும் இப்போதும் அடிப்படை உழைக்கும் மக்கள் வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு தக்காளியின் விலை குறையவில்லை. தக்காளி எப்போது முன்பிருந்த விலையான ரூ.15, 20க்கு விற்கப்படும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், தக்காளிவின் விலை பழைய நிலைக்கு சரிந்தாலும் நம்மால் நிம்மதிகொள்ள முடியாது. இந்த மறுகாலனியாக்க காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் வெவ்வேறு பொருட்களின் விலை உயர்வதை தவிர்க்க முடியாது.
தக்காளி விலையுயர்வுக்கு என்ன காரணம்?
தற்போது ஏற்பட்டுள்ள இந்த தக்காளி விலை உயர்வால் சாதாரண உழைக்கும் மக்கள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர், தள்ளு வண்டியில் உணவை விற்பனை செய்வோர், சிறிய அளவில் ஓட்டல் கடை வைத்திருப்போர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இடைப்பட்ட காலத்தில் பலர் தக்காளி பயன்படுத்தி சமைப்பதையே நிறுத்திவிட்டனர்.
இந்த திடீர் விலை உயர்வுக்கு மோசமான வானிலை ஒரு காரணமாக கூறப்பட்டது. குறிப்பாக, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மோசமான வானிலை நிலவியதன் காரணமாகவும் வட மாநிலங்களில் கனமழையால் தக்காளி உற்பத்தி கடும் பாதிப்புக்கு உள்ளாகியதாலும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் 60 முதல் 80 லோடுகள் 30 ஆக குறைந்ததுதான் விலையேற்றத்திற்கு காரணம் என்று பேசப்பட்டது.
ஆனால், இவையெல்லாம் அடிப்படையான காரணங்கள் இல்லை. உலகமயமாக்கலுக்கு பிறகு, நாட்டின் சுயத்தேவையை நோக்கமாக கொண்ட பாரம்பரிய விவசாயமுறையை அழித்து வெறும் லாபத்திற்காக மட்டும் பயிரிடும் விவசாயமுறை விவசாயத்துறையில் கொண்டுவரப்பட்டதே முக்கியமான காரணம்.
1990களில் கொண்டு வரப்பட்ட உலகமயமாக்கல் கொள்கைக்கு பிறகு சந்தையின் முடிவே அரசின் கொள்கை முடிவானது. இந்த கொள்கையின் அடிப்படையில் ஆட்டோமொபைல் துறையில் மலிவு விலையில் கார், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின்னணு துறையில் சகல வசதிகளும் கொண்ட செல்போன், கணினி ஆகியவற்றின் விலைகள் வெகுவாக குறைந்தன. ஆனால், விவசாயத்துறையில் எதிர்மறையாக நடந்தது. அடிப்படையான உணவு பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எட்டாக்கனியாகியது.
படிக்க: விலைவாசி உயர்வு: காரணம் என்ன? தீர்வு என்ன? | தோழர் வெற்றிவேல்செழியன்
இதுபோன்ற விலை உயர்வு எப்போதாவது ஒருமுறை வரும் என்ற நிலை மாறி, உலகமயமாக்கலுக்கு பிறகு விலைவாசி உயர்வு என்பது நிரந்தரமான நிகழ்ச்சி போக்காக மாறியது.
சான்றாக, வானிலை இயக்கத்தை கண்காணித்து புயல் மழை வருவதற்கு முன் எச்சரிக்கை செய்யப்படுகிறது. அதேப்போல புதிய வகை நோய் பரவுகிறது என்றால் அதற்கும் எச்சரிக்கை விடப்படுகிறது. கணினியில் உலகையே கண்காணிக்கும் போது தக்காளி விளைச்சலை கண்காணித்து முறைப்படுத்த முடியாதா? முடியும், ஆனால் அது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது. இதன் பொருள், மாநிலம் அல்லது நாட்டின் உழைக்கும் மக்கள் நலனில் இருந்து பொருளாதார கொள்கை திட்டமிடப்படாமல் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படுவதே.
விவசாயதுறையை அரசு முதன்மைப்படுத்தி செயல்படக்கூடாது என கோரும் முதலாளித்துவ பொருளாதார கொள்கையின் விளைவுதான் விலைவாசி உயர்வு. அது வேலையில்லா திண்டாட்டத்தை ஒருங்கே கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, காய் கனிகள், சமையல் எண்ணெய் மற்றும் இதர பொருட்கள் விலையேற்றம், பெட்ரோல் டீசல் விலையுயர்வு என தேச அளவிலும் சர்வதேச அளவிலும் விலையேற்றம் என்ற பெயரில் மக்களின் சேமிப்பும் வாழ்க்கையும் சூறையாடப்படுகிறது.
பலரை சுரண்டி வெகு சிலர் சொகுசாக வாழ்வதை அடிப்படையாய் கொண்டிருப்பதை போல, விலையுயர்விலும், வேலையில்லா திண்டாட்டத்திலும் முதலாளித்துவம் உயிர் வாழ்கிறது!
கார்ப்பரேட் நலனே அரசின் கொள்கை முடிவு:
வருடத்தில் எல்லா காலங்களிலும் அல்லது எல்லா வருடங்களிலும் ஒரே மாதிரியான காலநிலை இருப்பதில்லை. அப்படியானால் இதனைத் கணக்கில் கொண்டு, காய்கறி பழங்களை பாதுகாத்து முறைப்படுத்த அரசிடம் பெயரளவிற்கு கூட திட்டம் இல்லை.
மாறாக, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அவர்களது உற்பத்திக்கு தேவையான கச்சா பொருட்களை கொண்டு செல்லவும், உற்பத்தியான பொருட்களை எடுத்துச் செல்லவும் நான்கு, ஆறு மற்றும் எட்டு வழி சாலைகள், துறைமுகம் – விமான நிலையம் விரிவாக்கம் என பல லட்சம் கோடிகளை முதலாளிகளின் நலனுக்கு அரசு வாரி இறைக்கிறது. ஆனால், தக்காளி மற்றும் இதர காய் கனிகள் விளைச்சல் அதிகமாக இருக்கும் போது அதனை குளிர் பதன கிடங்குகள் அமைத்து பாதுகாக்கவும் பிற அடிப்படை வசதிகளை செய்து தரவும் திட்டமிட்டே மறுக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.
படிக்க: விலைவாசி உயர்வு: அசாம் முதல்வர் சர்மா முஸ்லீம் வெறுப்பு பேச்சு!
அடுத்தது இடைத்தரகர்கள் கொள்ளையால்தான் விலையுயர்வு என சொல்வோர்கள் நம் நாட்டின் வணிக கட்டமைப்பை புரிந்து கொள்ளாதவர்கள். சிறு கடை, சிறு வணிகம், தரைக்கடை, தள்ளு வண்டி வியாபாரங்களானது மாநகர் முதல் சிறு நகரம், கிராமப்புறம் வரை நடைபெறுகிறது. சிறு வணிகம் நீடிக்கும் வரை இடைதரகர்கள் வணிக சங்கிலியில் நீடிக்கத்தான் செய்வார்கள்.
கார்ப்பரேட்டுகளுக்கு இடைதரகர்களை கண்டால் வேப்பங்காயாய் கசக்கிறது. இடைதரகர்கள் பிரபுத்துவ எச்சங்களுடன் அறநெறி பேசி சுரண்டுகிறார்கள் என்றால் கார்ப்பரேட்டுகள் தரம் – சுத்தம் என்ற பெயரில் சுரண்டுகிறார்கள். இரு தரப்பினருமே மக்களின் நலனிற்கு எதிரானவர்கள்தான். ஆனால், விலைவாசி உயர்வுக்கு இடைத்தரகர்கள்தான் காரணம் என்று பிரச்சாரத்திற்கு பின்னால் கார்ப்பரேட்களின் நலனுக்காக திட்டமிட்டே விவசாயம் அழிக்கப்படுவது மூடி மறைக்கப்படுகிறது.
மேலும், தக்காளி விலை உயர்வுக்கு மாநில அரசு மாற்றாக முன்வைத்த திட்டங்களும் பிரச்சினையை தீர்க்கவில்லை. அப்படியானால் அரசு என்ன செய்ய வேண்டும்? போர்க்கால அடிப்படையில் “வெளிமாநிலங்களிலிருந்து தனியார் வியாபாரிகள் – சங்கிலி தொடர் கார்ப்பரேட் நிறுவனங்கள் யாரும் தக்காளியை கொள்முதல் செய்யகூடாது” என உத்தரவிட்டு, அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு நியாயமான விலையில் கொடுக்கலாம் அல்லவா? ஸ்டெர்லைட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து மக்கள் போராடினால் அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாநிலத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து மக்களை ஒடுக்குகிறது. இங்கே சில நூறு அல்லது ஆயிரம் வியாபாரிகளிடம், “நிலைமை சீரடையும் வரை ஒத்துழைப்பு தாருங்கள்” என ஏன் உத்தரவிட முடியாது? ஆனால், அரசு அதை செய்யாது. மக்கள் நலனில் அக்கறை கொள்ள கூடாது என்பதே அரசின் கொள்கை முடிவு.
இதனை மக்கள் ஆழமாக புரிந்துகொள்ளாததின் விளைவுதான் விலையுயர்வு குறித்து கார்ப்பரேட் ஊடகங்கள் மக்களிடம் கேள்வி எழுப்பினால், “அரசாங்கம் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும்” என்கின்றனர். அரசியல் ரீதியில் சொல்வதென்றால், “அரசு என்பது ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தின் கைக்கருவி என்பதை மக்கள் உணராத வரை அரசியலில் மக்கள் முட்டாளாக்கப்படுவதை தடுக்க முடியாது” என்ற ஆசான் லெனின் கூற்றையே நாம் நடைமுறையில் பார்க்கிறோம்.
திட்டமிட்ட பொருளாதார கொள்கையே விலைவாசி உயர்வை கட்டுபடுத்தும்:
முதலாளித்துவத்தில் மற்ற பண்டங்களை போலவே உழைப்பு சக்தியும் பண்டமான பிறகு அதற்குரிய விலை கொடுக்கப்படுவதில்லை. ஆலைகளில் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் ரூ.15,000 அல்லது அதற்கு குறைவாகவே ஊதியம் பெறுகின்றனர். கார்மென்ட்ஸ் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 அல்லது ரூ.9,000 மட்டுமே ஊதியமாக தரப்படுகிறது. ஆக பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் உழைப்பு சக்திக்கு உரிய விலை கிடைப்பதில்லை.
உழைப்பு சக்தி மிக மிக மலிவான விலையில் கிடைக்கும் படியான சமூக நிலையை தொடர்ந்து பராமரிப்பதும் விலைவாசி உயர்வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் ஆசான் மார்க்ஸ் கூறுகையில், “தேவையும் (Demand) அளிப்பும் (Supply) ஒன்றின் ஏற்ற இறக்கத்தை இன்னொன்றின் ஏற்ற இறக்கத்தின் மூலமும், ஒரு விலையுயர்வு ஒரு வீழ்ச்சியின் மூலமும், ஒரு வீழ்ச்சி ஒரு விலையுயர்வின் மூலமும் ஈடுசெய்து கொள்கிறது. தேவையையும் அளிப்பையும் தொடர்ந்து சமன் செய்ய அன்றாடம் முயற்சிக்க வேண்டும்” என்றார்.
இம்மாதிரியான முதலாளித்துவ பொருளுதார கொள்கையின் விளைவு இன்றைய உலகமயமாக்கலுக்கு பொருந்துவதை பார்க்கிறோம். இதன் விளைவாய், இன்னும் சில மாதங்களில் தக்காளி விலை குறையும், ஆனால் வேறொரு பொருளின் விலை உயரும்.
முடிவே இல்லாமல் சுழலும் இந்த விஷ சுழற்சி மக்களை இதுபோன்ற அநீதிக்கு பழக்கப்படுத்தி சிந்திக்க முடியாத அளவிற்கு சலிப்படைய செய்யும். இதை நோக்கமாகக் கொண்டதே, அரசின் திட்டமிடல் மற்றும் கொள்கை முடிவு. விரல்விட்டு எண்ணக்கூடிய சிறு கும்பலுக்கான கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் நலனுக்காக நடத்தப்படும் ஆட்சியின் இத்தகைய பொருளாதார கொள்கை இப்படிப்பட்ட விலை உயர்வை தினந்தினம் கொண்டுவரும்.
ஆளும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அவர்களின் அடியாள் படையான அரசையும் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அமைக்கப்படும் சோசலிச சமூகம் – அதன் திட்டமிட்ட பொருளாதார கொள்கையே விலைவாசி உயர்வையும், வேலையில்லா திண்டாட்டத்தையும் கட்டுப்படுத்தும். ஏனெனில் தனியார் லாபம் என ஏதுமன்றி நாட்டு மக்களின் நலனே பாட்டாளி வர்க்க அரசின் கொள்கை முடிவு!
![]()
ஆ.கா.சிவா
காவிகள் கார்ப்பரேட்டுக்காகத்தான் கலவரத்தை தூண்டுறாங்க!
– தோழர் ஆ.கா.சிவா
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
வந்தே மாதரம் !
ப்ளீஸ் செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது சொல்லிவிடு !
வந்தே மாதரம்
வந்தே மாதரம்
இங்கு ஒருபோதும்
கிடைக்காது சுதந்திரம் !
மணிப்பூர் ,ஹரியானா
………. மறக்க முடியாத கனவுகள் இவை !
காஷ்மீர் தொடங்கி
பாபர் மசூதி வரை
கயர்லாஞ்சி தொடங்கி நாங்குநேரி வரை
ஒவ்வொரு ஆண்டும்
மறையாத வடுக்களின் எண்ணிக்கைகள் கூடிக் கொண்டே செல்கின்றன !
காலையில் கண்ணாடியை பார்க்கும் பொழுது தெரிகிறது
முகம் முழுக்க வடுக்கள்!
கல்வி முதல் காடு, மலை, கழனி வரை எல்லாம் தனியாருக்கு !
கோபுரம் முதல் கருவறை வரை அத்தனையும் அய்யருக்கு !
எங்கே இருக்கிறது சுதந்திரம்?
நடக்க
படிக்க
உடுக்க
சுவைக்க
விதைக்க
வழிபட
எதற்கும் இல்லை சுதந்திரம்!
இது சுதந்திர தினம்!
வேங்கை வயலில் என் முகத்தில் வழிந்த பீயை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா?
வந்தே மாதரம் !
மணிப்பூர் தாய்மார்கள்
கும்பல் பாலியல் வன்முறையில்…..
சிதறிய குருதியை துடைத்துக் கொண்டே சொல்லட்டுமா ?
வந்தே மாதரம் !
டாக்டருக்கு படிக்க
25 லட்சம் !
வழியின்றி அப்பனும் மகனும் தூக்கில் தொங்க
எரித்த சாம்பல் கண்ணில் விழுகிறது !
இருந்தாலும் சொல்லி வைக்கிறேன்
இதற்குப் பெயர்தான் சுதந்திரம் !
கல்வி நிலையங்கள்
தொழிற்சாலைகள்
விவசாய நிலங்கள்
சிறு தொழில்கள்
எல்லாம் மடிவதற்காக காத்திருக்கின்றன
கூடவே கோடிக்கணக்கான மக்களும் !
செத்துப் போவதற்குள் ஒருமுறையாவது சொல்லி விடுங்களேன் ! வந்தே மாதரம்
செத்துப் போவதற்குள் ஒரு முறையாவது செல்பி எடுத்து விடுங்களேன் !
ஜெய்ஹிந்த்
வந்தே மாதரம்
சுதந்திரம்
ஜனநாயகம்
புரியாத பாஷைகளை
ஜெபிக்க வேண்டுமாம்!
ஆண்டவர்
கழுத்தை அறுத்துக் கொண்டே கட்டளை இடுகிறார்!
ஆண்டவரையும் அதானிகளையும் எதிர்க்காமல் ஒருபோதும் நமக்கு சுதந்திரம் கிடைக்காது!
மூச்சு விடவும் முடியாது!
தெரியாமல் இல்லை என்னதான் இருந்தாலும் என்று இழுப்பவர்களுக்கு
கொடியை நெஞ்சில் குத்தாதீர்கள்
வாயில் குத்துங்கள்.
-மருது
மக்கள் போராடும்போது களத்தில் நிற்க வேண்டும் | தோழர் திலகவதி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
இந்தியா முழுவதுமுள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதுகலைப் பாட பிரிவில் புதிதாக சுவடியியல் (Manuscriptology) மற்றும் தொல்லெழுத்தியல் (Paleography) ஆகிய பாடங்களுக்கான பாடத் திட்டத்தை வடிவமைக்க சிறப்புக் குழு ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நிறுவியுள்ளது.
தேசிய சுவடியியல் திட்டக்குழுவின் முன்னாள் இயக்குநர் பிரபுல்லா மிஸ்ரா தலைமையில் 11 பேர் கொண்ட இக்குழுவில், ஐஐடி மும்பையின் பேராசிரியர் மல்ஹர் குல்கர்னி, குஜராத் பல்கலைக்கழகத்தின் மொழிப்பள்ளியின் முன்னாள் இயக்குநர் வசந்த பட் மற்றும் டெல்லி என்.சி.இ.ஆர்.டி.யின் சமஸ்கிருதப் பேராசிரியர் ஜதீந்திர மோகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவைக் கொண்டு சுவடியியல் மற்றும் தொல்லெழுத்தியல் ஆகிய பாடங்கள் சிறப்பு பாடமாகவோ அல்லது தேர்வு பாடமாகவோ (elective) வடிவமைக்கப்படும். சுவடியியல் பாடம் மூலம் கைகளால் எழுதப்பட்ட வரலாறு, இலக்கியம் ஆகியவற்றின் ஆவணங்களையும், தொல்லெழுத்தியல் பாடம் மூலம் பழங்கால, இடைநிலை எழுத்து முறைகளையும் ஆய்வு செய்யலாம் என்று கூறப்படுகிறது.
படிக்க : ஆசிரியர்களை கற்பித்தல் பணியில் இருந்து அகற்றும் திட்டமே மணற்கேணி | ஆசிரியர் உமா மகேஸ்வரி
இது தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்ட இந்திய அறிவு முறையை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாகும் என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் யுஜிசி தலைவருமான ஜெகதேஷ் குமார். மேலும், பல்வேறு இந்திய மொழிகளில் எழுதப்பட்ட பண்டைய கையெழுத்து பிரதிகள், தத்துவம், அறிவியல், இலக்கியம் மற்றும் மதம் உள்ளிட்ட பரந்த அளவிலான பாடங்களை இது உள்ளடக்கியது என்கிறார் ஜெகதேஷ் குமார். இத்தகைய பாடத் திட்டங்கள் பல்கலைக்கழகங்களால் உடனடியாக ஏற்றுகொள்ளப்படலாம் என்றும் கூறுகிறார்.
தத்துவம், அறிவியல், இலக்கியம் என்று இவர் கூறவருவது என்ன? பிள்ளையாருக்கு யானை தலையை ஒட்ட வைத்த பிளாஸ்டிக் சர்ஜரி தொழில்நுட்பம், புற்றுநோயை குணப்படுத்த மாட்டு மூத்திரம், ராமாயணத்தில் விமானம், அர்ஜூன் பயன்படுத்திய அணுசக்தி அம்புகள், மனுஸ்மிருதி தத்துவம், வேத இதிகாச வரலாறு என அடுக்ககடுக்கான பொய்களையும் புராண குப்பைகளையும் கொட்டுவதைதான்.
இதுமட்டுமல்ல மேற்கூறிய பாடங்கள் நாட்டின் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கும் அதன் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம்வாய்ந்ததாக இருக்கும் என்று புளுகுமூட்டையை கட்டவிழ்த்துவிடுகிறார்கள். ஆனால், இப்பாடத் திட்டத்திற்கான 75 சதவிகித கையெழுத்து பிரதிகள் சமஸ்கிருதத்தில்தான் உள்ளது என்றும் மற்ற பிராந்திய மொழிகளில் வெறும் 25 சதவிகிதம்தான் ஆவணப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
அதாவது இப்பாடத் திட்டத்தைக் கொண்டுவருவதன் மூலம் செத்து புதைந்து போன சமஸ்கிருத மொழியை மீட்டுருவாக்கம் செய்வதும் புராண குப்பைகளை ஆவணம் செய்வதும்தான் நடக்கபோகிறது.
படிக்க : அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி
பன்முகத் தன்மையை வளர்ப்பதாக கூறும் இவர்கள் கடந்த காலத்தில் சமஸ்கிருதத்திற்கும் பிற மொழிகளை மேம்படுத்தவும் எடுத்த நடவடிக்கைகளை ஒப்பிட்டு பார்த்தாலே புரிந்துகொள்ள முடியும். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு ரூ.22.94 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதுவே சமஸ்கிருதத்தை மேம்படுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.643 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது இதர 5 மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகியவற்றுக்கு செலவிடப்பட்ட மொத்த தொகையான ரூ.29 கோடியை விட 22 மடங்கு அதிகம் என மத்திய கலாச்சார அமைச்சகத்தின் தகவல்கள் கூறுகின்றன. மேலும், 2020-ஆம் வரை ஒடியா மற்றும் மலையாளம் மொழிக்களுக்கு வளர்ச்சி மையங்களே அமைக்கப்படவில்லை; நிதியும் ஒதுக்கப்படவில்லை.
இதனை சாதாரண விஷயமாக கடந்து செல்லமுடியாது. 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு, பள்ளி கல்வி பாடத் திட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வரும் பாசிச பா.ஜ.க.வின் கல்வியை காவிமயமாக்கும் மற்றொரு நடவடிக்கை இது.
ஆதினி
நேற்று அனிதா இன்று ஜெகதீஸ்வரன்:
நம்மை கேட்கிறார்கள் அநீதியான நீட்-ஐ ஒழியுங்கள் என்று | தோழர் செல்வம்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
ஃபயாஸ்தின்கள் உருவாகிறார்கள் ஜெகதீஷ்வரன்களால்!
தூரத்தில் கேட்டது இடிமுழக்கம்!
எங்கோ வானம் குமுற
நனையாமல் ஒதுங்கி நின்றான்!
இப்போது
அவனருகில் மரண ஓலம்!
வெடித்து எழாமல்
வேறு என்ன செய்வான்?
எத்தனை கணம் தெரியுமா உங்களுக்கு
ஜெகதீஷின் பிரேதம்!
தோளில் சுமந்தவனை கேளுங்கள்..
நிறைவேறா கனவும் சேர்ந்த சுமை அது!
போராட வருகிறேன் எனச் சொன்ன
தந்தையும் தனயன் வழி போகினார்!
இதயம் ஒன்றுதானே இருக்கிறது
இரண்டு வலிகளை எப்படி சுமப்பது?
அனிதா ஓரிடம்!
ஜெகதீஷோ வேறிடம்!
நீட் பலிபீடம் என்னவோ ஒன்றுதான்..
ஹேஷ்டேக்கில் நீதி தேவைவில்லை ஜெகதீஷ்வரன்களுக்கு!
களத்தில் இறங்குகிறார்கள் ஃபயாஸ்தின்கள்!
பணமிருப்பதால் பிரபஞ்சன்கள் மருத்துவர் ஆகிறார்கள்!
இல்லை என்பதால் ஜெகதீஸ்வரன்கள் மண்ணுக்குள் போகிறார்கள்!
இந்த உண்மையை புரிந்துகொண்டதால் ஃபயாஸ்தின்கள்
நீதி கேட்கிறார்கள்!
நாம் என்ன செய்யப் போகிறோம்?
தகுதியுள்ளது தப்பிப் பிழைக்கும்
அது டார்வின் தியரி!
பிழைத்திருக்க ஒரே தகுதி பணம் மட்டுமே
இது கார்ப்பரேட் தியரி!
பணம் மட்டுமே குறிக்கோள்!
அது ஃபயாஸின் பணமாயிருந்தால் என்ன?
ராபர்ட்டின் பணமாயிருந்தால் என்ன?
கார்ப்பரேட் ஏற்றுக் கொள்ளும்!
காவியும் வழிகாட்டும்!
அன்று அனிதாவிற்கு வைத்த கொள்ளி
இன்று ஜெகதீஷை பற்றிக் கொண்டது!
நாளை இது செந்தீயாய் சுழன்றடிக்கும்!
பாசிஸ்டுகளை அது கொளுத்தும்!
நாம் ஒன்றிணைந்தால் ஜெகதீஷ்வரன்கள் இறப்பதை தடுக்க முடியும்!
ஆனால் ஃபயாஸ்தின்கள் உருவாவதை அவர்களால் ஒருபோதும் தடுக்க முடியாது!
அனிதா, ஜெகதீஷ் போல முடிவெடுக்காதீர்கள் என கலங்குபவர்களே!
ஃபயாஸ்தின்கள் களமிறங்குகிறார்கள்
கரம் கொடுப்போம்!
– செங்குரல்
ஏன் ஆர்.எஸ்.எஸ் – பிஜேபியை தடை செய்ய வேண்டும்?
Why RSS – BJP should Ban? | Comrade Amirtha
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

16.08.2023
டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவரையே
குற்றவாளியாக்கும் திருவாரூர் போலீசு!
மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
திருவாரூர் மாவட்ட மக்கள் அதிகாரம் பொருளாளர் தோழர் முரளியை அச்சுறுத்தும் திருவாரூர் மாவட்ட போலீசை கண்டிப்பதுடன் தொடர்புடைய போலீசுக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
திருவாரூர் – விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்னர் தோழர் முரளி வைத்துள்ள பெட்டிக் கடையில் மதுவிலக்கு போலீசார் இரண்டு பேர் வந்து ” நீ சாராயம் விற்கிறாயா” என்று கேட்டுள்ளனர்.
படிக்க : மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை உடனே மூடு!
தோழர் முரளி மக்கள் அதிகாரத்தில் இருப்பதாகவும் “சாராயத்துக்கு எதிரானவன் எப்படி சாராயம் விற்பேன்” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பின் அந்த மதுவிலக்கு போலீசார் இருவரும் சென்றுவிட்டனர். ஆனால், இது குறித்து டி. எஸ்.பி இடம் புகார் அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி இது பற்றி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் “தவறுதலாக வந்து விட்டனர், இனிமேல் வர மாட்டார்கள்” என்று உறுதி அளித்துள்ளார்.
ஆனால் நேற்றைய தினம்(15.08.2023) தோழர் முரளி தன் கடையை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தபோது, கொரடாச்சேரி போலீசு நிலையத்தில் இருந்து இரண்டு போலீசு (ஒருவர் சீருடையும் மற்றொருவர் சாதாரண உடையிலும் இருந்தனர்) வந்து கள்ளச்சாவி போட்டு கடையை திறந்து உள்ளே சென்றுள்ளனர்.
இதை பார்த்த தோழர் முரளி யார் என்று கேட்டபோது, “நீங்கள் சாராயம் விற்பதாக செய்தி வந்தது. அதை உறுதிப்படுத்த சோதனை செய்கிறோம்” என்று கூறியுள்ளனர். பிறகு போலீஸ் அந்த இடத்திலிருந்து சென்றுள்ளது. பூட்டி இருக்கும் கடையை திருட்டுத்தனமாக திறந்து பார்ப்பதற்கு போலீசுக்கு யார் அதிகாரம் கொடுத்தது.
டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடுவோர் மீது திருட்டுத்தனமாக மது விற்ற வழக்கு போட முயல்கிறது. இதன் மூலம் டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது போலீசு.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாதிவெறி அமைப்புகளும், ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி போன்ற சங் பரிவார அமைப்புகளும் தங்குதடையின்றி செயல்படுகின்றன. மக்களுக்காகப் போராடுவோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சேர்ப்பது, ரவுடிகள் பட்டியலில் சேர்ப்பது போன்ற அநீதியான நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட போலீஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாகவே தோழர் முரளி மீது சட்டவிரோத மது விற்பனை என்ற பொய்யான காரணம் சொல்லி அச்சுறுத்தல் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது திருவாரூர் மாவட்ட போலீஸ்.
தோழர் முரளி மீதான அராஜக நடவடிக்கைகளை திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டப் போலீசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மேலும் மக்களுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு போடக்கூடிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
![]()
தோழமையுடன்
தோழர் குருசாமி,
மாநில இணைச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321
ஏன் தமிழ்நாட்டை பற்றி ஒரு மோசமான பிம்பத்தை உருவாக்குகிறார்கள்? | தோழர் மருது
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
இலாபவெறிபிடித்த முதலாளித்துவ சமூகத்தில்…
வியாக்கியானம் புதிதல்ல…
முதலாளித்துவம் தனது சவக்குழியை
தானே தோண்டுகிறது என
முன்னறிந்து சொன்ன மார்க்சின் தீர்க்கமாக
பார்வை புதிது!
மரணம் புதிதல்ல…
தூக்குமேடை ஏறி கண்களை திறந்து
மரணத்தை எதிர்கொண்ட
பகத்சிங்கின் துணிச்சல் புதிது!
வாழ்வது புதிதல்ல…
இட்லரை வீழ்த்த மகனை பறி கொடுத்த
ஸ்டாலின் போல வாழ்வது தான் புதிது…
போராட்டம் புதிதல்ல…
மக்களுக்கு புரிய வைத்து
போராடுவதுதான் புதிது!
முரண்பாடு புதிதல்ல…
அதை விவாதித்து
தீர்க்கமுயல்வது தான் புதிது!
உண்பது புதிதல்ல…
பகிர்ந்து உண்பதுதான் புதிது!
வாழ்வது புதிதல்ல…
நேர்மையுடன் வாழ்வதுதான் புதிது!
அரசியல் பேசுவது புதிதல்ல…
எந்த வர்க்கத்திற்காக பேசுகிறோம் என்ற
புரிதலுடன் பேசுவதுதான் புதிது!
கல்வி பயில்வது புதிதல்ல…
உழைப்போர் நலன்கருதி
செயல்படுவதுதான் புதிது!
புதியவன்
ஆதிக்கச் சாதி வெறியர்களை சமூகப் புறக்கணிப்பு செய்வோம் | தோழர் ரவி
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்
மோடி ஏன் அதிர்ச்சி அடைந்தார்? | தோழர் மருது
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!