Sunday, May 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 300

கிருஷ்ணரும் சில பிய்ந்துபோன செருப்புகளும் !

கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பிறகும், சென்னை அயோத்தியா மண்டபமும் அதன் சுற்றுப் பகுதியும், ஜெயந்தியின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. சென்னையின் அக்மார்க் பார்ப்பன ஆண்களும், பெண்களும் பிளாஸ்டிக், பித்தளை பூக்கூடை, பேப்பர், மெட்டல், களிமண், பிளாஸ்ட் ஆஃப் பேரிஸ் இவற்றாலான கிருஷ்ணன் பொம்மைகளுடன் தங்கள் கலாச்சார உடையான கச்சம், மடிசார் பூண்டு குடும்பம் சகிதமாக குறுக்கும் நெடுக்குமாகப் போய்க் கொண்டிருந்தனர்.

பரபரக்கும் சாலையின் நடைபாதையில் சாயம்போன, ’மூலியான’ கிருஷ்ணன் பொம்மைகள் யாரும் கவனிப்பாரின்றி கிடந்தன. அருகில் நடுத்தர வயதுள்ள ஒருவர் பிய்ந்துபோன செருப்புக் குவியல்களுக்கிடையே வாடிக்கையாளர்களை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்தார்.

கிருஷ்ணனுக்கு அருகே பிஞ்ச செருப்பா, என்று பக்தர்கள் வருந்தும் வண்ணம் அந்தக் கோலமிருந்தது. ஆனால், செருப்புத் தைக்கும் தொழிலாளி எந்தச் சலனமும் இல்லாமல், “என்ன வேண்டும்” என்று கண்களால் ஏறிட்டார்.

“என்ன இது கிருஷ்ணன் சிலையும் செருப்புகளும் ஒரே இடத்தில்?”

“ஓ… அதுவா… நான் பெயின்டர். ரியல் எஸ்டேட் – பில்டிங் படுத்ததிலேருந்து வேல இல்ல, இப்படி சீசனுக்கு ஏத்தத் தொழில செஞ்சிகிட்டிருக்கேன். மொதல்ல, செருப்புக் கட போடலாமுன்னு இதே எடத்துல பங்க் கட போட்டேன். போலீசு, அதிகாரிங்க வந்து, பப்ளிக் நியூசென்சுன்னு சொல்லி தூக்கிட்டாங்க. சரின்னு அப்படியே கோனிய விரிச்சு கீழே உக்காந்துட்டேன். இப்படி இருக்க எங்கிட்டே புது செருப்பு வாங்க வருவாங்களா? அதான் பழைய செருப்புகளை தைக்க ஆரம்பிச்சேன். எதுவாயிருந்தாலும் நமக்குத் தொழில்தான். கூடவே பக்கத்திலிருந்த பொம்மைக் கடைக்குப் போயி, ஒடஞ்சி போன புது பொம்மைகள பெவிக்கால், எம்சீல் போட்டு ஒட்டி, பெயிண்ட் அடிச்சு புதுசாக்கிடுவேன்.

குமார்.

கடைக்கு வர்றவங்க, இதப் பாத்துட்டு, ‘எங்கிட்டே பழய பொம்மை இருக்கு, சீர் பண்ணி தருவீயா?’ன்னாங்க. அதுலேருந்து இந்தத் தொழில் பிக்கப் ஆயிடுச்சு. பண்டிகைக் காலங்கள்ல நல்லா போகுது. இப்போ பழைய பொம்மைக்கு பெயிண்ட் அடிக்கிற வேலைக்கு ரெண்டு பெயின்டர கூட்டா சேத்துகிட்டேன்” என்றார் குமார்.

அவரிடம் பணிபுரியும் சேலத்தைச் சேர்ந்த பரமேஸ்வர்:

“ஊர்ல கொத்தனார் வேல பாத்தேன். பூசுவேல, கட்டு வேல எல்லாம் செய்வேன். அங்கே வேல இல்லாததனால சென்னை வந்தேன். இங்கே வீடுகளுக்கு சுண்ணாம்பு, பெயிண்ட் அடிக்கிறதுனு பல வேலங்க செஞ்சேன்.

பரமேஸ்வர்.

ஃப்ரெண்டு ஒருத்தரு சிலைக்கு பெயிண்ட் அடிக்கிறத பத்தி சொன்னாரு. பண்டிகை சீசனுல இங்கே வருவேன். கிருஷ்ண ஜெயந்திக்கு முன் வந்தா, கார்த்திகை தீபம் முடிஞ்சி போவேன். சாப்பாடு, தூக்கம் எல்லாம் இந்த பிளாட்பாரம்தான். குளிக்க பைசா கொடுத்து போற இடம்தான். செலவுன்னு பாத்தா, ஒரு நாளைக்கு 300 ரூபா ஆயிடும். மீதி இருந்தாத்தான் வீட்ட பத்தி நெனப்பு வரும். சில நாளு ஐநூறு, ஆயிரமுன்னு வேல வரும். பால நாளு அம்பது, நூறுதான் கெடைக்கும்.

வாடிக்கையாளர்கள்.

ஒரு பொம்மைய சீர் செய்ய 50, 100-ன்னு கேட்டா ரொம்ப படுத்துவாங்க. வர்றவங்க பெரும்பாலும் ஐயருங்கதான். முழம் நீள பொம்மைய எடுத்து வந்து, அதன் பெருமையப் பத்தி ஒரு கிலோ மீட்டர் நீளம் பேசுவாங்க. ‘எங்க தாத்தா வச்சிருந்தது, அத்திம்பேர் கொடுத்தது, ராசியான சிலெ. இது இல்லேன்னா எங்கக் குடும்பமே இல்ல, இத பழசுன்னு தூக்கிப் போட்டா எம் மாட்டுப் பொண்ணு கோச்சுக்கும்’ – இப்படி ஏதேதோ சொல்வாங்க.

அந்த இத்துப் போன பொம்மைய காமிச்சு, ‘கிருஷ்ணரோட சிரிப்பப் பாரு, அதோட முகத்துல களையைப் பாரு, இதே மாதிரி மாசு மரு இல்லாம – ரிப்பேர் பண்ணுனது தெரியாம இருக்கனு’முன்னு சொல்லிட்டு கடைசியில ‘கூலிய பாத்துக் கேளு’ன்னு முடிப்பாங்க.

வர்றவங்க எல்லாரும் சொல்லி வச்சாப்ல ஒரே மாதிரிதான் பேசுவாங்க. நாம பொம்மைக்கு ஏத்த மாதிரி இது மூனு அடி பொம்மை, நீங்க கேக்குற மாதிரி வேணுமுன்னா, 15, 20 ஷேடு அடிக்கணும், வேல அதிகம், 700 ரூபா ஆகுமுன்னு சொல்லி முடிக்குறதுக்குள்ள, ‘இத 200 ரூபாய்க்குத்தான் வாங்கினேன்’ என்று சொல்லி, அதன் மதிப்ப அவங்களே கொறைச்சிடுவாங்க. கடைசில 300 ரூபாய்க்கு ஒத்துக்க வைக்கிறதே பெரும்பாடு.

பெயின்டிங் செய்யிறத விட, அவங்ககிட்ட பேசுறதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கும்; திரும்பவும் பொம்மைய வாங்கும் போதும் அதையே பேசுவாங்க; காதே வலிக்கும். அப்புறம் எதிர்பார்த்த ரிசல்ட் வரலன்னு கொற சொல்ல ஆரம்பிச்சுடுவாங்க. ‘பொம்ம அப்படி இல்ல, இப்படி இல்ல, சொன்ன மாதிரி இல்ல, சிரிச்ச மூஞ்சி போயிடுச்சு, அந்தக் கொழந்த சிரிப்பே காணோமுன்னு’ மூடவுட்டாயிடுவாங்க. நமக்கோ பயமாயிடும். பணம் கொடுக்கலேன்னாகூட பரவாயில்ல, பொம்மைய எடுத்துப் போனாலே போதுமுன்னு எங்க சாமிகிட்டே வேண்டிப்போம்.

அதுக்கு நாங்க செஞ்ச வேல கொஞ்சமில்ல. மொதல்ல உப்புக் காகிதம் தேய்ச்சு, அழுக்கெடுப்போம். பிறகு வார்னிஷ் அடிச்சு மெருகேத்துவோம். ஒடஞ்ச மூஞ்சு, கையி எல்லாம் களிமண்ணோ, பேப்பரோ, எம்சீலோ எடத்துக்கு ஏத்தமாதிரி ஓட்டைய அடைப்போம். சிலையில ஒட்டி வச்சிருக்கிற மாலை மணி இத்துப் போயிருந்தா, அத பெவிக்கால் வச்சி ஒட்டுவோம். அதுக்கப்புறம் நல்லா வெயில்ல காயவைப்போம். கடைசில 15 கலர், 20 கலருன்னு உருவத்துக்கு ஏத்த மாதிரி கலர் கொடுப்போம்.

உப்பு காகிதம், தின்னரு, வார்னிஷ், எம்சீல், பெவிக்கால், பிரஷ், காட்டன் வேஸ்ட் இப்படி ஆயிரத்தெட்டு செலவு. நமக்குத் தேவையான அளவு மட்டுமே வாங்க முடியாது, சிலது மொத்தமாத்தான் கிடைக்கும். இந்த முடிச்சு கூலி வாங்குறதுக்குள்ள எங்களுக்கு மூச்சே முட்டிடும்.

என்ன இருந்தாலும் நிழலோடு வேல, உக்காந்த எடத்துல செய்யிறோம்” என்று சொல்லிவிட்டு, நம்மைப் பார்த்து ஒரு ஞானியைப் போல சிரித்தார்.

சிவலிங்கம்.

பக்கத்தில் இருந்த இன்னொரு ஆர்ட்டிஸ்ட் சிவலிங்கம், “சார் அவன் சொன்னது கொஞ்சம்தான். ஒரு நாள் நீங்க இங்கே உக்காந்து வர்ற கஷ்டமர் பேசுறத கவனிங்க, நாங்க எவ்வளவு வேதனைய அனுபவிக்கிறோமுன்னு தெரியும். வர்ற ஐய்யருங்க எத்தன விதவிதமா பேசினாலும் அவங்க சொல்ல வர்ற விசயம் சிம்பிள் சார். நாமதான் புரிஞ்சிக்கணும். ‘என் எடத்துக்கு நீ வர முடியாது, உன் இடத்துக்கு நான் வரமாட்டேன், அத நீ புரிஞ்சிக்கோ’. இதுக்குத்தான் சார் ஐயருங்க நம்மகிட்டே நீள நீளமா பேசுறாங்க. அதுக்குதான் சார் அவங்க படிக்கிறாங்க. அவங்க ஒழப்பும் பொழப்பும் அதுதான் சார். இத எவன் புரிஞ்சிகிட்டாலும் இங்கே குப்ப கொட்டலாம்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?
ரிசர்வ் வங்கி அள்ளிக் கொடுத்த ரூ. 1,76,000 கோடி : யாருக்கு லாபம் ? யாருக்கு இழப்பு ?

இதவுட கொடுமை ஒன்னு இருக்கு சார். பல வருசத்துக்கு முன்னாடி ஒரு பொம்மைய சீர் பண்ணிகிட்டுப் போயிருப்பாங்க, அது ஒடஞ்சிருச்சின்னா, என்னதான் ரிப்பேர் பண்ணுனியோ, ஒழுங்காவா செஞ்சிருக்கேன்னு சொல்லி, நம்மளயே குற்றவாளியாக்குவாங்க. அதுமட்டுமல்ல, ஓசியில திரும்பவும் ரிப்பேர் பண்ணிகிட்டுப் போயிடுவாங்க.

நாம சத்தம் போட்டு நியாயம் கேட்டா, பொறுக்கி மாதிரி நம்மள காமிச்சுக்குவாங்க, போனாப் போகுதுன்னு விட்டுத் தொலைச்சிடுவோம்” என்று செருப்புகளை தைக்க ஆரம்பித்தார். அவரது கைகளின் இசைவிற்கேற்ப அழகிய வடிவம் பெற்றது, அந்தப் பிய்ந்துபோன செருப்புகள்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

அரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல் | பொருளாதாரம் கற்போம் – 33

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 33

அரசியல் பொருளாதாரம் இராபின்சன் குரூசோக்களை விரும்புதல்

அ.அனிக்கின்

டேனியல் டிஃபோ எழுதிய இராபின்சன் குரூசோ என்ற நாவலின் முதல் பதிப்பு 1719-ம் வருடத்தில் லண்டனில் வெளியானது. அந்தப் புத்தகம் அசாதாரணமான சிறப்பைப் பெற்றது. ஒரு பக்கத்தில், வீரசாகஸக் கதை என்ற வகையில் அது அங்கீகாரம் பெற்ற பேரிலக்கியம். மறுபக்கத்தில் இராபின்சன் குரூசோ என்ற நாவலைப் பற்றி தத்துவஞான ரீதியாகவும் கல்வித்துறையின் கோணத்திலும் அரசியல் பொருளாதார அடிப்படையிலும் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கின்ற நூல்கள் ஒரு நூலகத்தை நிரப்புகின்ற அளவுக்கு அதிகமாக இருக்கின்றன.

ஒரு தனி மனிதன் (சில சமயங்களில் மனிதர்கள் கோஷ்டி) சமூகத்துக்கு வெளியே வாழ்க்கை நடத்துகின்ற, உழைக்கின்ற நிலைமைகளை ஒரு எழுத்தாளர் அல்லது சிந்தனையாளர் கற்பனையாக எழுதுவதற்கு “இராபின்சனாதல்” என்று பெயர். அதுவும் ஒரு பொருளாதார மாதிரிப் படிவம் என்று கூறலாம். அதில் மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகள், அதாவது சமூக உறவுகள் விலக்கப்பட்டு, ஒதுங்கிவாழ்கின்ற தனிநபர் இயற்கையோடு கொண்டிருக்கும் உறவுகள் மட்டுமே இருக்கின்றன. அரசியல் பொருளாதாரம் இராபின்சனாதலை விரும்புகிறது என்று மார்க்ஸ் சொன்னார். இது மார்க்சுக்கு முந்திய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தைக் காட்டிலும் மார்க்சுக்குப் பிந்திய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்துக்கு அதிகம்மாகப் பொருந்துகின்றது என்று நாம் சேர்த்துக் கொள்ளலாம்.

டிஃபோ இராபின்சன் குரூசோ என்ற நாவலைத் தன்னுடைய அறுபதாவது வயதில் எழுதினார்; அதற்குப் பிறகும் சில நாவல்கள் எழுதினார். இந்த நாவல்கள் சிறப்பானவை என்று கருதப்பட்ட போதிலும் டிஃபோ தன்னுடைய வாழ்க்கை முழுவதிலும் அவற்றை மிகச் சாதாரணமானவை என்று தான் கருதினார். தான் எழுதியிருக்கும் ஏராளமான அரசியல், பொருளாதார, வரலாற்றுப் புத்தகங்களே தன்னுடைய மறைவுக்குப் பிறகு தனக்குப் புகழ் தேடித்தரக் கூடியவை என்று அவர் கருதினார். கலாச்சார வரலாற்றில் இப்படிப்பட்ட கற்பனைகள் ஏற்படுவதுண்டு.

Political-Economy-Daniel-Defoe
டேனியல் டிஃபோ

அவருடைய சொந்த வாழ்க்கையே ஒரு வீரசாகஸக் கதையைப் போன்றதாகும். அவர் 1660-ம் வருடத்தில் (அவர் பிறந்த வருடம் நிச்சயமில்லை) லண்டனில் பிறந்தார்; 1731-ம் வருடத்தில் அங்கே மரணமடைந்தார். பரிசுத்தவாதியான சிறு கடைக்காரரின் மகனான டிஃபோ தன்னுடைய சொந்தத் திறமை, ஊக்கம், அறிவு ஆகியவற்றின் மூலமாக வாழ்க்கையில் முன்னேற்றமடைந்தார். இங்கிலாந்தின் அரசரான இரண்டாம் ஜேம்சுக்கு எதிராக 1685-ம் வருடத்தில் நடைபெற்ற மான்மு கலகத்தில் அவர் பங்கெடுத்துக் கொண்டார். அந்தக் கலகம் நசுக்கப்பட்டது; அதில் ஈடுபட்டவர்கள் சிரச் சேதம் செய்யப்பட்டனர் அல்லது காலனிகளுக்கு நாடு கடத்தப்பட்டனர். ஆனால் டிஃபோ அதிர்ஷ்டவசமாகத் தப்பிவிட்டார். முப்பது வயதாகும் பொழுது அவர் பணக்கார வணிகராக இருந்தார்; ஆனால் 1692-ம் வருடத்தில் அவர் நொடித்துப் போனார், 17,000 பவுன் கடன்கள் அவருக்கு ஏற்பட்டிருந்தன.

இந்த சமயத்தில் தான் அவர் அரசியல் பிரசுரங்கள் எழுத ஆரம்பித்திருக்க வேண்டும்; ஹாலந்தின் மூன்றாம் வில்ஹெல்ம் மற்றும் அவருடைய நெருக்கமான ஆலோசகர்களின் நம்பிக்கையைப் பெற்றார். 1698ம் வருடத்தில் அவர் திட்டங்களைப் பற்றி ஒரு கட்டுரை என்ற பொருளாதாரப் புத்தகத்தை எழுதினார்; அதில் துணிச்சலான பொருளாதார, நிர்வாகச் சீர்திருத்தங்களைக் குறிப்பிட்டிருந்தார்.

அவரை ஆதரித்த அரசர் மரணமடைந்த சிறிது காலத்துக்குப் பிறகு, 1703-ம் வருடத்தில் அவர் பரிசுத்தவாதிகளை ஆதரித்தும் ஆங்கிலத் திருச்சபையைக் கண்டித்தும் எழுதிய காரசாரமான பிரசுரத்துக்காக தண்டனைக் கட்டையில் மாட்டப்பட்டார், சிறையிலடைக்கப்பட்டார். டோரிக் கட்சியின் தலைவர் ராபர்ட் ஹார்லி அவரைச் சிறையிலிருந்து (18 மாதங்கள் சிறையிலிருந்த பொழுது அவர் ஏராளமாக எழுதிக் குவித்தார்) விடுதலை செய்தார். இந்த உதவிக்கு நன்றியாக டிஃபோ தன்னுடைய எழுத்துத் திறமையை அன்றைக்கிருந்த மிகச் சிறந்த பத்திரிகையாளரின் எழுத்துத் திறமையை – டோரிக் கட்சிக்கும் தனிப்பட்ட வகையில் ஹார்லிக்கும் அர்ப்பணித்தார். அவர் ஹார்லியின் சார்பில் இரகசியமான பிரதிநிதியாக ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளுக்கும் போய் அவர் ஒப்படைத்திருந்த முக்கியமான இரகசியப் பணிகளை நிறைவேற்றினார்.

ஆன் அரசியின் மரணமும் ஹார்லியின் வீழ்ச்சியும் அவ ருடைய பணிகளைத் திடீரென்று முடிவுக்குக் கொண்டுவந் தன. 1715-ம் வருடத்தில் அரசியல் அவதூறுக் குற்றம் சாட்டப்பட்டு அவர் மறுபடியும் சிறையிலடைக்கப்பட்டார். அவர் மறுபடியும் இரகசிய வேலைகளைச் செய்வதற்காக, புதிய அரசாங்கத்துக்கு விரோதமான பத்திரிகைகளை உள்ளேயிருந்து கவிழ்க்கும் வேலைக்காக விடுதலை செய்யப்பட்டார்.

படிக்க:
வாயில் மண்ணை திணித்து … மின்சாரம் பாய்ச்சி … காஷ்மீர் கொடூரங்கள் !
பொருளாதார வீழ்ச்சி : மறைக்கும் நிர்மலா ! வீதிக்கு வரும் ஆதாரங்கள் !

இராபின்சன் குரூசோவின் ஆசிரியர் ஏராளமான அனுபவச் செல்வத்தைக் கொண்டிருந்தார். யார்க் நகரத்திலிருந்து புறப்பட்ட மாலுமியின் வீரசாகஸங்களைப் பற்றிய கதைக்கு ஆழத்தைக் கொடுத்தது இதுவே. டிஃபோவுக்குத் தன்னுடைய கடைசி நேரம் வரையிலும் அமைதியுமில்லை, ஓய்வுமில்லை. ஒரு மனிதர் தன்னுடைய அறுபதாவது வயதுக்கும் எழுபதாவது வயதுக்குமிடையில் பல பெரிய நாவல்களையும் கிரேட் பிரிட்டனைப் பற்றி பொருளாதார, பூகோள ரீதியாக மிக விரிவான வர்ணனையையும் ஏராளமான வரலாற்றுக் கட்டுரைகளையும் (ருஷ்ய சக்கரவர்த்தியான முதலாம் பீட்டரைப் பற்றியும் ஒரு கட்டுரை உட்பட) பேய்கள், மந்திர தந்திரங்களைப் பற்றியும்(!) வரிசையாகப் பல புத்தகங்களையும் அதிகமான வித்தியாசத்தைக் கொண்ட பல தலைப்புகளில் ஏராளமான சிறு கட்டுரைகளையும் பிரசுரங்களையும் எழுதியது அரிய சாதனை, நம்ப முடியாத அளவுக்குப் பெரிய சாதனை. 1728-ம் வருடத்தில் இங்கிலாந்தின் வர்த்தகத்துக்கு ஒரு திட்டம் என்ற தலைப்புடைய பொருளாதார நூலையும் எழுதினார்.

“இராபின்சன்களை” நோக்கித் திரும்புவோம். முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மூலச் சிறப்புடைய மரபுக்கு இயற்கையான மனிதனைப் பற்றிய கருத்து அடிப்படையாக இருந்தது. நிலப்பிரபுத்துவ சமூகம் பல வகையான ஒடுக்கும் உறவுகளாலும் கட்டுப்பாடுகளாலும் மனிதனைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது; இந்தச் “செயற்கையான நிலைக்குத்” தன்னையறியாமலே ஏற்பட்ட எதிர்ப்பாக “இயற்கையான மனிதனைப்” பற்றிய கருத்து தோன்றியது. ஆனால் புதிய முதலாளித்துவ சமூகத்தின் ”இயற்கையான” மனிதனை, இந்தக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமான போட்டி, சமமான வாய்ப்புக்களைக் கொண்ட உலகத்துக்குத் தயாராக்கப்பட்ட தனி மனிதவாதியை, -ஸ்மித்தும் ரிக்கார்டோவும் – அவர்களுக்கு முன் பிருந்தவர்களும் – ஒரு நீண்ட வரலாற்று ரீதியான வளர்ச்சியினுடைய விளைவாகக் கருதவில்லை; அதற்கு மாறாக, அதன் திருப்புமுனையாக, “மனித இயற்கையின்” கண் கூடான உருவமாகக் கண்டார்கள்.

முதலாளித்துவத்தின் கீழ் சமூக உற்பத்தியில் இந்தத் தனி மனிதவாதியின் நடத்தையை விளக்குவதற்கு முயற்சி செய்த பொழுது, அவர்கள் ”இயற்கைச் சட்டத்தின்” கருத்துக்களைத் தமக்கு ஆதாரமாகக் கொண்டார்கள்; சமூகத்தில் நடைமுறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் மீது தங்களுடைய கவனத்தைச் செலுத்தாமல், தன்னந்தனியான வேடன், மீன் பிடிப்பவன் ஆகியோரைப் பற்றிய கற்பனையான உருவத்தின் மீது கவனத்தைக் குவித்தார்கள். யாருமில்லாத தீவில் விடப்பட்டிருக்கும் ஸ்தூலமான இராபின்சன் குரூசோவை இந்த எழுத்தாளர்கள் சூக்குமமான தொடர் உருவகமாக, பெரும்பாலும் முற்றிலும் சம்பிரதாய பூர்வமான உருவகமாக மாற்றிக் கொண்டனர் என்பது இதன் பொருள்.

Political-economyRobinson-Crusoe-1ஆகவே இராபின்சனாதல் என்பது அவசியத்தின் காரணமாக எப்போதும் சமூகத் தன்மை கொண்டதும், வரலாற்று ரீதியான வளர்ச்சியில் ஸ்தூலமான ஒரு கட்டத்தோடு இணைக் கப்பட்டிருப்பதுமான உற்பத்தியின் விதிகளை, சமூகம் என்ற மிக முக்கியமான கூறை விலக்கியுள்ள சூக்குமமான மாதிரிப் படிவத்தைக் கொண்டு ஆராய்வதற்குச் செய்யப்பட்ட முயற்சியாகும். மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் இராபின்சனாதலை மார்க்ஸ் மிகவும் ஆழமாக விமரிசனம் செய்தார். இந்த விருப்பம் 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த “மிகவும் சமீபமான அரசியல் பொருளாதாரத்துக்கு” நகர்ந்து விட்டது என்று அவர் கூறினார்; அது தனக்குச் சாதகமான முறையில் ”இயற்கையான மனிதனின்” கற்பனை உலகத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்துக்கு உரித்தான பொருளாதார உறவுகளைப் பார்த்தது.

மார்க்சின் ஒரு வாக்கியத்தை மட்டும் இங்கே மேற்கோள் காட்டுவோம்: “சமூகத்துக்கு வெளியே தனித்து விடப்பட்ட நபரின் உற்பத்தி என்பது தற்செயலாக யாருமில்லாத தீவில் அகப்பட்டுக் கொள்கின்ற ஒரு நாகரிக முள்ள மனிதன் ஏற்கெனவே தன்னுள் சமூக சக்தியின் சுறுசுறுப்பைக் கொண்டிருக்கின்றபடியால் (அழுத்தம் என்னுடையது அ. அ.) அது அபூர்வமாக நடக்கக் கூடியதே. ஒன்று சேர்ந்து வாழ்கின்ற. பேசுகின்ற தனி நபர்கள் இல்லாமல் மொழி வளர்ச்சியடைவது போலவே இதுவும் அபத்தமானதாகும்.”(1)  

இந்த மேற்கோளில் அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும் பகுதி இராபின்சன் குரூசோவின் கதை அமைப்புத் தொடர்பாக சுவாரசியமானதாகும். இராபின்சன் எந்த அளவுக்கு சமூக சக்திகளைத் தன்னுள் கொண்டிருக்கிறார் என்பதைக் காண்போம். மாறியுள்ள சூழ்நிலையில் அவர் ”இயற்கையான மனிதன்” என்ற நிலையிலிருந்து வேகமாக மாறுகிறார்; முதலில் தந்தை வழி அடிமை உடைமையாளராக (வெள்ளிக் கிழமை என்ற உதவியாள்), பிறகு ஒரு நிலப்பிரபுத்துவப் பிரபுவாக (குடியேற்றத்தை ஏற்படுத்துகிறார்) மாறுகிறார். அவருடைய ”சமூகம்” தொடர்ந்து வளர்ச்சியடைந்திருந்தால் அவர் முதலாளியாகவும் மாறியிருப்பார்.

படிக்க:
காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்
♦ புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே ! பொதுக்கூட்ட செய்திகள் – படங்கள்

பொருளாதார நிகழ்வுகளைத் தனி நபர்களின் உணர்ச்சிகள், உளவியலின் அடிப்படையில் ஆராய்வதற்கு அரசியல் பொருளாதாரத்தின் அகநிலை மரபினோர் முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு இராபின்சனாதல் ஒரு உண்மையான கண்டு பிடிப்பாகப் பயன்பட்டது. 19ம் நூற்றாண்டின் எழுத்துக்களில் இந்தப் போக்கு ஆரம்பமாயிற்று; இவர்கள் “மிகச் சிறிய பகுதியான” தனி நபரின் மீது கவனத்தை ஒருமுனைப் படுத்தினர். அதற்கு இராபின்சன் குரூசோவைக் காட்டிலும் அதிகப் பொருத்தமான நபரை யாராலும் கற்பனை செய்யக் கூட முடியாது.

ஆஸ்திரியாவின் அகநிலை மரபைச் சேர்ந்த சிறப்புமிக்க பொருளியலாளரான பேம்-பவேர்க்கின் (1851-1914) இராபின்சனாதல் ஒரு சிறந்த உதாரணமாகும். இவர் தன்னுடைய வாதத்தில் மதிப்புத் தத்துவத்திலும் மூலதனத் திரட்சி பற்றிய தத்துவத்திலும் – இரண்டு சந்தர்ப்பங்களில் இராபின்சன் குரூசோவைத் திருப்புமுனையாகப் பயன்படுத்துகிறார். – 17, 18ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் கூட, மதிப்பு என்பது சமூக உறவு, பொருள்கள் பண்டங்களாக, சமூகத்துக்குள் பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்படும் பொழுது மட்டுமே அது இருக்கிறது என்பதை உணர்ந்து விட்டார்கள். மதிப்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்துவதற்கு யாரும் நுழையாத காட்டில் எல்லா விதமான தொடர்புகளுக்கும் அப்பாற்பட்ட இடத்திலிருக்கும் மரக்கூட்டில் வசிக்கின்ற ஒரு “குடியேற்றவாதி” போதுமென்று பேம்-வேர்க் கூறுகிறார். இந்த இராபின்சனிடம் ஐந்து மூட்டை தானியம் இருக்கிறது; கடைசி தானிய மூட்டையின் உபயோகத்தைக் கொண்டு தானியத்தின் மதிப்பு அளவிடப்படுகிறது. 

மூலதனம் என்பது உற்பத்திச் சாதனங்களை உடைமையாகக் கொண்டிருப்பவர்களுக்கும் அவற்றை இழந்திருக்கின்ற, உழைப்பை விற்பனை செய்கின்ற, சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பவர்களுக்கும் இடையே உள்ள சமூக உறவு . அது சமூக வளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தான் தோன்றுகிறது. ஆனால் பேம்-பவேர்க்கைப் பொறுத்தவரையிலும் பொருள் வடிவத்திலிருக்கின்ற உழைப்புக் கருவிகள் எவையும் மூலதனமே. எனவே இராபின்சன் காட்டில் விழுந்து கிடக்கும் பழங்களைப் பொறுக்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வரையிலும் அவனிடம் மூலதனம் கிடையாது. ஆனால் அவன் தன்னுடைய உழைப்பு நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி ஒரு வில்லும் சில அம்புகளும் தயாரித்தவுடன் அவன் முதலாளியாகிவிடுகிறான்; ஏனென்றால் இது மூலதனத் திரட்சியின் முதல் நடவடிக்கை. இங்கே மூலதனம் என்பது சாதாரணச் சேமிப்பாகச் சுரண்டலின் எந்த வடிவத்தோடும் சம்பந்தமில்லாததாக இருக்கிறது என்பதை நாம் காணலாம்.

முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தில் இராபின்சன் மரபு அதிகமான பலமுடையதாக இருப்பதால் இராபின் சனைக் குறிப்பிடாமல் பொருளாதாரத் தத்துவத்தைப் பற்றி ஒரு புத்தகம் கூட எழுத முடிவதில்லை. அமெரிக்காவைச் சேர்ந்த நவீன பொருளியலாளரான பி. சாமுவேல்சன் தன்னுடைய பாடபுத்தகத்தின் ஆரம்பத்தில் இராபின்சனை எதிர் நோக்கிய பொருளாதாரப் பிரச்சினைகள் ஒரு பெரிய சமூகத்தை எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து அடிப்படையில் மாறுபட்டிருக்கவில்லை என்று எழுதுகிறார். இது நம்ப முடியாத, தெளிவற்ற கருத்தாகும்.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)   K. Marx, Grundrisse der Kritik der Politischen Ökonomie, Moskau, 1939, p. 6..

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் நூல்

“காஷ்மீருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலத்தை உடைத்துத் தள்ளி விட்டது இந்திய அரசு” என்கின்றனர் காஷ்மீரிகள். கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் அரசியல் சாசன பிரிவு 370, 35A ஆகியவற்றை ரத்து செய்து அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தார் அமித்ஷா.

வரலாற்று ரீதியாக காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளும்போது கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது இந்திய அரசு.

இந்த அறிவிப்புக்கு முந்தைய நாளே, காஷ்மீரில் தொலைத்தொடர்பு, இணையம், போக்குவரத்து என அனைத்தையும் முடக்கி விட்டுக் கூடுதலான இராணுவத்தையும் குவித்திருந்தது இந்திய அரசு. மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊடகச் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டன.

இந்திய அரசின் துரோகத்தை எதிர்த்த காஷ்மீர் மக்களின் போராட்டம் பெல்லட் குண்டுகளாலும், தோட்டாக்களாலும், கைதுகளாலும் முடக்கப்பட்டன.

இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு, காஷ்மீரில் அமைதி நிலவுவதாக, பெரும் பான்மை ஊடகங்கள் அரசுக்கு ஆதரவாக எழுதின. காஷ்மீரில் நிலவுவது மயான அமைதி. காஷ்மீர் மட்டுமல்ல, இந்த ஜனநாயகப் படுகொலையைக் கண்டும் காணாதவாறு, மொத்த நாடே அமைதியில்தான் இருக்கிறது.

காஷ்மீருக்கு வளர்ச்சியைக் கொண்டு வருவதற்காகத்தான் இந்நடவடிக்கை என்றார் அமித்ஷா. காஷ்மீரில் பிறர் சொத்து வாங்குவதைத் தடைசெய்யும் சட்டப்பிரிவு 35A நீக்கத்திற்குப் பின், சில நாட்களிலேயே முகேஷ் அம்பானி காஷ்மீரில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவிக்கிறார். எனில் இது கார்ப்பரேட்டுகளுக்கான வளர்ச்சி அன்றி வேறென்ன?

இது வெறுமனே காஷ்மீரோடு முடியக் கூடிய விசயமல்ல. தமிழகத்தில் ஹைட்ரோகார்பன், சாகர்மாலா, எட்டுவழிச்சாலை, அதானி துறைமுகம் என ‘வளர்ச்சித் திட்டங்கள் வரிசைகட்டி நிற்க, காஷ்மீரில் பின்பற்றப்பட்ட அதே வழிமுறைகள் அரசால் இங்கும் பின்பற்றப்படுகின்றன.

இன்று நாம் காஷ்மீரின் வரலாற்றில் இருந்து கற்றுக்கொள்ள மறந்தால், நாளை தமிழகமும் இராணுவ ஆட்சியின் கீழ்வரும். இந்திய அரசின் இராணுவ ஆட்சியில் காஷ்மீர் மக்கள் படும் துயரங்களையும் அதை எதிர்த்து நிற்கும் அவர்களது நிலைமையையும் போராட்டக் குரலையும் தொகுத்து அளிக்கிறது இந்நூல்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

காஷ்மீர் : துயரமும் போராட்டமும் – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

“காஷ்மீர் : துயரமும் போராட்டமும்” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு
  • காஷ்மீர் : ஆவணப்படம் எடுத்த பிரெஞ்சு பத்திரிக்கையாளர் கைது!
  • தெருக்களே வகுப்பறை! கற்களே பாடநூல்கள்!!
  • காஷ்மீர் மக்களின் கண்களைப் பறிக்கும் இராணுவம்
  • காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ?
  • டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் காஷ்மீரிகள் தேவையில்லை!
  • பிரிவு 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம்!
  • இந்திய இராணுவத்தால் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் காஷ்மீர்!!
  • காஷ்மீர் வெள்ளம் – ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி!
  • கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது!
  • ஜம்மு காஷ்மீர் : சரத்து 370-ஐ ரத்து செய்த பாசிசம்!
  • இந்தியா தோற்றுவரும் யுத்தம்!
  • இறந்த குழந்தையை எடுத்துச் செல்ல இரண்டு நாட்கள்!
  • “தந்தையர் இல்லா காஷ்மீர்” – திரைப்படம் கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை!
  • இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்தில் காறி உமிழ்ந்த காஷ்மீர் மக்கள்!
  • காஷ்மீர் மக்களைக் கொன்ற இராணுவ அதிகாரி! விசாரிக்க மறுக்கும் நீதிமன்றம்!
  • பயங்கரவாதத்தையும் போர்ச் சூழலையும் வளர்க்கும் இந்தியா!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மீ டு இயக்கம்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மனுநீதி 2.0
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் ! நூல் – PDF வடிவில் !

0

கரிச்சான் குஞ்சு நினைவுகளும் காணாமல் போன முன்னுரையும்…

நண்பர்களே…

பொ.வேல்சாமி

.மார்க்ஸ், பொதிய வெற்பன் ஆகியவர்களின் நட்பினால் கரிச்சான் குஞ்சுவுடன் பேசி, பழகி, மகிழும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அந்தத் தருணத்தில் கரிச்சான் குஞ்சு அவர்கள் என் வேண்டுகோளுக்கு இணங்கி, “தேவிபிரசாத் சட்டோபாத்யாய” ஆங்கிலத்தில் எழுதிய “இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்” என்ற புகழ்பெற்ற நூலை தமிழில் அழகாகவும் செறிவாகவும் மொழிபெயர்த்துக் கொடுத்தார். இது தொடர்பான தகவல்களை இந்த மாதம் வெளியான “புதிய புத்தகம் பேசுது” இதழில் வந்துள்ள என்னுடைய நேர்காணலில் விரிவாக பேசியுள்ளேன். அந்தப் பேச்சை நீங்கள் படிப்பதற்காக அந்தப் பக்கங்களைக் கொடுத்துள்ளேன்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அந்தத் தகவல்களைக் கூறும் என்னுடைய பேட்டியில் கரிச்சான் குஞ்சு அவர்கள் அந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு ஒரு முன்னுரை எழுதியிருந்தார் என்று கேள்விபட்டேன். ஆனால் அது நூலில் இல்லை என்பதாகக் கூறியிருந்தேன். கரிச்சான் குஞ்சு இந்நூலின் மொழிபெயர்ப்பு சார்ந்த தகவல்களை உள்ளடக்கி ஒரு முகவுரை எழுதிக் கொடுத்ததாகவும் அந்த முகவுரையை நண்பர் மார்க்ஸ் சென்னை புக்ஸ் பொறுப்பாளர் தோழர் பாலாஜியிடம் கொடுத்ததாகவும் இன்று என்னிடம் சொன்னார். பின்னர் அந்த முகவுரை நூலில் ஏன் இடம் பெறவில்லை என்று நண்பர் மார்க்ஸ், தோழர் பாலாஜியிடம் கேட்டதாகவும் அதற்கு பாலாஜி அவர்கள் இந்த நூலின் கைப்பிரதியை சரிபார்த்து தரும்படி பேராசிரியர் வீ.அரசுவிடம் வேண்டி கொடுத்ததாகவும், அந்த வேலையை முடித்துக் கொடுத்த அரசு அவர்கள் முன்னுரையை மட்டும் கடைசிவரை தராததனால் முன்னுரை இல்லாமல் நூல் வெளிவந்து விட்டது என்று தோழர் பாலாஜி கூறியிருக்கிறார்.

உலக புகழ்பெற்ற இந்நூலின் சிறப்பான தமிழ் மொழிபெயர்ப்பை நீங்கள் அனைவரும் படித்து சுவைப்பதற்கு அந்த நூலின் இணைப்பை இத்துடன் தந்துள்ளேன்.

குறிப்பு : இந்நூல் இந்திய தத்துவ ஆராய்ச்சியின் நுட்பமான பகுதிகளையும் சட்டோபாத்யாய காலம்வரை இந்திய தத்துவங்களைப் பற்றி பேசிய பேராசிரியர்கள் தொடாது விட்ட பகுதிகளையும் தன்னுடைய மார்க்சிய கண்ணோட்டத்தின் வழியாக பேராசிரியர் சட்டோபாத்யாய விளக்குகிறார். எனவே இந்நூலை ஒரே ஒரு வாசிப்பில் படித்து புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். எனவே நண்பர்கள் ஒருமுறைக்கு இருமுறை நூலில் உள்ள சில ஆழமான பகுதிகளை மூன்றுமுறை கூட படிக்க வேண்டி இருக்கும் என்பதை என் அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

( பிடிஎஃப் டவுண்லோடு செய்ய )

இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

நூல் அறிமுகம் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?

சாதி ஒழிப்புப் பற்றி பல்வேறு தருணங்களில் தந்தை பெரியார் ஆற்றிய உரைகளை தொகுத்து சிறு நூலாக வெளியிட்டிருக்கிறது, திராவிடர் கழகம்.

சாதியின் கொடுமையால், நாற்றமெடுத்த மலத்தைவிட மனிதன் கேவலப்படுத்தப் படுகிறான். இது உண்மை , வாய்ப் பேச்சுக்காக நான் சொல்லவே இல்லை. எப்படி என்றால், மல உபாதைக்குச் சென்றவன் அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான். மலத்தைக் காலில் மிதித்துவிட்டால் அந்தக் காலைமட்டும் தண்ணீரை விட்டுக் கழுவிவிட்டால் அந்தக் குற்றம் போய்விடுகிறதாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட்டால் அவனைத் தொட்டதால் ஏற்பட்ட தோஷம், தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால்வரை குளிர, நனையக் குளித்தாலொழியப் போவதில்லை என்கிறார்கள். ஆகவே, மலத்தைவிட மனிதன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுகிறான் என்பதைப் பாருங்கள். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படுகிற கெடுதலென்ன? தோஷமென்ன? குற்றமென்ன ? எதுவுமில்லை. ஆனால், பிறகு ஏன் தோஷம் கூறப்படுகிறது? ஒருவரை ஒருவர் ஏமாற்றி வாழ்வதற்காகவே கூறப்படுகிறது. இதைவிட வேறு இரகசியமில்லை .

… வேறு சிலர், செத்த மாட்டைத் தின்னுகிறார்களே என்கிறார்கள். இதனால் என்ன தீட்டு, எந்த உருவாக வந்து அவர்களிடம் ஒட்டிக்கொள்கிறது? பதறப் பதற, கதறக் கதறமாட்டை அறுத்துச் சாப்பிடுவது பாவமா; மாண்டு மடிந்து மண்ணுக்குள் போவதை இல்லாத கொடுமையால் வயிற்றுக்குள் போடுவது பாவமா? புழுத் தின்னும் கோழியையும், மலந்தின்னும் பன்றியையும்விடப் புல்லையும் பிண்ணாக்கையும் தின்னும் மாடு கேவலமானதா? (நூலிலிருந்து பக்.3-5)

… சாதி வித்தியாசத்தையே அழித்தாக வேண்டும். சாதி வித்தியாசத்தைப் போக்குவதற்கு எல்லாவிதமான தியாகத்தையும் செய்வதற்கு முன் வரவேண்டும். இந்த மாநாட்டில் செய்கிற தீர்மானங்களைச் செய்கையில் நிறைவேற்றி, அதன்படி நடக்க எல்லோரும் முன்வரவேண்டும். ‘பள்ளர்’ என்று அழைப்பதா, ‘வேளாளர்’ என்று அழைத்துக் கொள்ளுவதா என்பதில் காலத்தை விருதாவாக்கி, அடித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை; அது கூடவே கூடாது. மேல்நாட்டில் ஆராய்ச்சி செய்வதில் அடித்துக் கொள்கிறார்கள். நாம் பெயருக்காக அடித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் தேவேந்திர குலப்பிராமணர் என்று வைத்துக்கொண்டாலும் சரி, பிராமணர்கள் என்று தங்கள் சாதிப் பெயர்களை வைத்துக் கொண்டு திண்டாடுவோரின் யோக்கியதை எனக்குத் தெரியும், விஸ்வப் பிராமணர், தேவாங்கப் பிராமணர், சவுராஷ்டிரப்பிராமணர் என்று தங்களை அழைத்துக் கொள்வதால் அவர்களுக்குப் புதிதாக முளைத்திருக்கும் யோக்கியதையை நான் அறிவேன். ஆதித் திராவிடன் எல்லார் வீட்டிலும், எவ்வளவு பாடி (வைது) இட்டாலும் தின்றுவிடுகிறான்; எந்த இடத்தில் வைத்து ஊற்றினாலும் குடித்துவிடுகிறான். ஆனால் விஸ்வப்பிராமணர் என்னும் பிராமணர்கள் வீட்டில் பச்சைத் தண்ணீரைக் கூடத்தொட மறுக்கிறான், இதன் காரணமென்னவென்று கேட்டால், நாங்களெல்லாம் வலக்கையர்கள், விஸ்வப்பிராமணர்கள் இடக் கையர்கள்; என்கிறார்கள். இம் மாதிரிதான். பிராமணர் பட்டத்தைத் தாங்கியவர்களெல்லாம் இருக்கின்றனர்.

தேவேந்திர குலம் என்பதும் எனக்கு இழிவாகத்தான் தோன்றுகிறது. என்ன காரணத்தின் பொருட்டு இந்தப் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது எனக்குத் தெரியாது. ஆனால், ‘தேவேந்திரன்’ என்றால் எனக்குப் பெருத்த அசிங்கமாகயிருக்கிறது. ஏனென்றால், தேவேந்திரனைப் பற்றிக் கூறும் புராணக் கதைகள்  தேவேந்திரனை அவ்வளவு இழிவாகக் கூறுகின்றன. அவன் வேசி மகனிலும் இழிந்த ஜென்மம் என்பதாகவே அவைகள் உரைக்கின்றன. பல்வேறு பெயர்களைக் கொண்டு சாதி பிரிந்துபோவது கூடாது. நாயக்கரிலும் பல வித்தியாசம்; செட்டியிலும் வித்தியாசம்; பள்ளனும் பிள்ளை என்று வைத்துக்கொள்ளுகிறான் என்று சொல்லிப் பட்டணத்திற்குப் போகும் பிள்ளைகளும் அங்கு இருக்கும் பிள்ளைகளும் ஆகாயக் கப்பல் வேகத்தில் தங்கள் பெயர்களை முதலியார்களாக மாற்றி வருகின்றனர். எனவே, இந்த விதமான போக்கெல்லாம் கூடாது. சாதி வித்தியாசம் என்கிற எண்ணத்தையே அடியுடன் இடித்துத் தள்ள வேண்டும். நாம் பிறந்த சாதியை இழிவாக மதித்து இன்னொரு சாதியை உயர்வாக மதித்து, அதனிடம் அடைக்கலம் புகுவதைவிட இழிவு வேறொன்று மில்லை. இவ் வழியில் இறங்கவே கூடாது. (நூலிலிருந்து பக்.7-8)

‘பள்ளர்’ என்று அழைப்பதா, ‘வேளாளர்’ என்று அழைத்துக் கொள்ளுவதா என்பதில் காலத்தை விருதாவாக்கி, அடித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை… தேவேந்திர குலம் என்பதும் எனக்கு இழிவாகத்தான் தோன்றுகிறது… ‘தேவேந்திரன்’ என்றால் எனக்குப் பெருத்த அசிங்கமாகயிருக்கிறது.

சாதியைக் காப்பாற்றும் பலசாதி அபிமானிகளே! ஆதியில் ஏற்பட்ட நான்கு சாதிகள் 4000 சாதிகளாகப் பிரிந்ததற்குக் காரணம் – ஒரு சாதியும், மற்றொரு சாதியும் மாறிமாறிக் கலந்ததால் ஏற்பட்டது என்று குறித்தோம். அப்படி இருந்தும் இன்னும் நம்ம வரிலேயே ஒரு கூட்டத்தார் அதாவது, தங்களை வேளாளர்’ என்று சொல்லுபவர்களில் ஒருசிலர் –  மேற்படி சாதிக் கிரமத்தை – அதாவது ஆதிசாதி என்பவைகளான பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், பஞ்சமன் என்கின்ற கிரமத்தை ஒப்புக்கொண்டு – தங்களை மாத்திரம் சற்சூத்திரர்’ என்று அழைத்துக் கொண்டும், மற்றும் சிலர் அச் சாதிக் கிரமவார்த்தைகளை வடமொழிப் பெயர்களால் சொல்லாமல் தென்மொழிப் பெயரால் சொல்லிக் கொண்டு – அதாவது அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நான்கு ஆகப் பிரித்து – அவை தமிழ் நாட்டில் ஆதியிலேயே – அதாவது ஆரியர் வருவதற்கு முன்னாலேயே இருந்தனவென்றும், அவற்றிலும் தாங்கள் நாலாம் சாதி என்றும் ஒரு கற்பனையைக் கற்பித்துக் கொண்டு அப்படிப்பட்டவர்களான தாங்கள் நால்வருக்கும் தொண்டு செய்ய – அடிமையாய் இருக்க வேறுபல சாதிகள் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள்தான் ‘பள்ளு, பறை பதினெட்டுச் சாதிகள்’ என்பது என்றும் ஒரு புதிய எற்பாட்டைச் சொல்லி ஒரு வழியில் திருப்தி அடைந்து வருகிறார்கள்.

அந்தப்படிக் கூறப்படும் ‘பள்ளு, பறை பதினெண் குடிமக்கள்’ என்பவர்களைக் குறிக்கும் முறையில் பணிசெய்யும் பதினெண்வகைச் சாதியார் என்னும் தலைப்பின் கீழ் குறிக்கப்பட்டிருப்பது என்னவென்றால் – இலை வாணிகன், உப்பு வாணிகன், எண்ணெய் வாணிகன், ஒச்சன், கல்தச்சன், கன்னான், குயவன், கொல்லன், கோயிற்குடியன், தச்சன், தட்டான், நாவிதன், பள்ளி, பறையன், பாணன், பூமாலைக்காரன், வண்ணான், வலையன் என்று அகராதியில் உள்ளது.

ஆனால் இதே பதினெண் மக்களை ‘அபிதானகோசம்’ என்னும் ஆராய்ச்சி நூலில் காண்கின்ற விவரப்படி குறிக்கின்றதென்ன வெனில், ஏவலாள்களாக சிவிகையர், குயவர், பாணர், மேளக்காரர், பரதவர், செம்படவர், வேடர், வலையர் திமிலர், கரையார், சான்றார், சாலியர், எண்ணெய் வாணிகர் அம்பட்டர், வண்ணார், பள்ளர், புலையர், சக்கிலியர், எனப் பதினெண் பெயர்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

இவை ஒருபுறமிருக்க, வேளாளர்களிலும் பல பிரிவுகளைக் காட்டியிருப்பதென்ன வெனில் – சூத்திரருள்ளே வேளாளர் தலையாயினார்; அவருள்ளே முதலிகள் தலையாயினார்; இவர்களுக்கு  அடுத்தபடி வேளாஞ்செட்டிகள். இதற்கு அடுத்த படியிலுள்ளோர் கார்காத்தார்; அடுத்த வரிசையிலுள்ளோர் சோழிய வேளாளர் – இவர்கள் சைவர்களாவார்கள் – சம்பந்தி போசனத்திற்கும் உரியவர்கள். இதற்கு அடுத்த படியிலுள்ளவர்கள் சோழிய, துளுவ, கொடிக்கால் முதலிய பலவகை வேளாளர் களாவார்கள். இவரில் தாழ்ந்தோர் அகம்படியர்; அவரில் தாழ்ந்தோர் மறவர்; அவரில் தாழ்ந்தோர் கள்ளர்; அவரில் தாழ்ந்தோர் இடையர்; இவர்களுக்கடுத்தபடியிலுள்ளோர் – கவரைகள், கம்மவர்கள்.

படிக்க:
சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை | அம்பேத்கர்
கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

இவற்றுள் எதிலும் பிராமணர்கள் விஷயத்தில் எவ்விதமான பாகுபாடும் தாழ்வுக் கிரமமும் சந்தேகமோ, ஆட்சேபணையோ சொல்லுவதற்கு இடமில்லாமல் செய்துகொள்ளப் பட்டிருப்பதைக் கவனித்தால் சாதியின் சூழ்ச்சித் தத்துவம் நன்றாய் விளங்கும். மற்றபடி க்ஷத்திரியர்களிலும் வைசியர்களிலும் இருக்கும் சண்டைகளும், ஆட்சேபணைகளும் – க்ஷத்திரியர், வைசியர் என்று சொல்லிக்கொள்ளுவதில் எவ்வித உயர்வுத் தத்துவமும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களில் வீண் வழக்காடிக்கொண்டு, பொதுஜனங்களாலும் ஒப்புக்கொள்ளப்படாமல் ஒருவரை ஒருவர் இழித்துரைத்துக் குறைவுபடுத்தி வருவதும் அனேக இடங்களில் பிரத்தியட்சமாய்க் காண்கிறோம். மற்றும் ஒவ்வொரு சாதியாரும் தங்கள் தங்கள் சாதிகளைப் பற்றி எவ்வளவு மேன்மை ஆதாரங்கள் கற்பித்துக்கொண்டாலும் – கண்டுபிடித்தாலும், எந்தவிதத்திலும் பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களுக்கு மற்றவர்கள் எல்லாம் கீழ்ப்பட்டவர்கள் தான் என்பதை நிலைநிறுத்துவதற்கு மாத்திரம் அவ்வாதாரங்கள் பயன்படுகின்றனவே தவிர, மற்றபடி எந்தக் கருத்தைக் கொண்டு கஷ்டப்பட்டு இவ்வித ஆதாரங்கள் கற்பிக்கப்பட்டதோ – கண்டுபிடிக்கப்பட்டதோ அவற்றிற்குச் சிறிதும் பயன்படுவதில்லை .

எனவே, இந்த நிலையில் இன்று நமது நாட்டில் பார்ப்பான் ஒருவனைத்தவிர மற்றவர்கள் தாழ்ந்த சாதியார்கள் – அதாவது பார்ப்பனனால் தொடவும், சமபந்தி போஜனம் பண்ணவும் மற்றும் சில பொது உரிமைகள் பெறவும் கூடாத சாதியார்கள் என்பதும்; அவனுக்கு அடிமையாய் இருக்கவும் விபச்சாரம்’, ‘கீழ் மேல் சாதிக் கலப்பு’ என்று சொல்லும்படியான இழிவுத் தன்மையில் பிறந்தவர்கள் என்பதும் இன்றைய நமது சாதித் தத்துவமாக இருக்கின்றது. (நூலிலிருந்து 10-13)

தோழர் காந்தியார் தீண்டாமையை ஒழித்துவிட வேண்டும் பெறு வரட்டுக் கத்து கத்திப்பார்த்து விட்டார்; பல இலட்ச ரூபாயும் வசூலித்து மேல் சாதிக்காரர், மேல் வருணக்காரர் என்பவர் கையில் ஒப்படைத்து விட்டாரே தவிர, மற்றபடி தீண்டாமையின் ஒரு சிறு தூசியைக்கூட அசைக்க முடியவில்லை. ஏனென்றால், அவர் மற்றொரு பக்கம் கீதையையும் மனுதர்ம சாஸ்திரத்தையும், வருணத்தையும், சாதிக் கிரமத்தையும் ஆதரித்து வருகிறார். இன்று தீண்டாமை விலக்க வேலையிலும், சாதி வித்தியாச ஒழிப்பு வேலையிலும் ஈடுபட்டிருப்பவர்களில் 100 -க்கு 100 பேரும் கீதை, மனுதர்ம சாஸ்திரம் ஆகியவற்றை நம்பும் – ஆதரிக்கும் சோணகிரிகளே ஆவார்கள். இவர்கள் எவ்வளவு நாளைக்குப் பாடுபட்டாலும் – அடியற்ற ஓட்டைக் குடத்தில் தண்ணீர் இறைக்கும் மூடர்களுக்கு ஒப்பானவர்களே யாவார்கள். ஆகவே, தீண்டாமை ஒழிப்புக்கோ, சாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள்  மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க உங்களால் முடியவில்லையானால் மதத்தைவிட்டு நீங்களாவது விலகியாக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒரு நாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ, பறைத் தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது கல்லுப்போன்ற உறுதி. உதாரணம் வேண்டுமானால், இதுவரையில் தீண்டப்படாதவர்களாயிருந்து மனித சமூகத்தில் தீண்டக் கூடியவர்களாக ஆன எவரும் தீண்டப்படாதவர்களாய் இருந்த போது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மதத்தை உதறித் தள்ளிவிட்ட பின்புதான், தீண்டத்தக்கவர்கள் ஆகி இருக்கிறார்கள். இதற்குக் கோடிக்கணக்கான மக்களை ஊர், பெயருடன் புள்ளி விவரத்தோடு காட்டலாம்.

படிக்க:
சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !

ஆதலால், மதத்தைக் காப்பாற்றிக் கொண்டு தீண்டாமையை விலக்கி விடலாம் என்று நினைத்து ஏமாற்றமடையாதீர்கள். தோழர் காந்தியார் ஒரு மதவாதியே யொழிய, மனித ஜீவ அபிமான வாதி’ அல்லவே அல்ல. அவர் தனது இந்து மதம் காப்பாற்றப்படுவதற்காகத்தான் தீண்டாமையை  அழிக்க வேண்டும் என்று சொல்லி வந்திருக்கிறாரே ஒழிய தீண்டப்படாத மக்களின் கொடுமைகள் தீரவேண்டுமென்பதை முக்கியமாய்க் கொள்ள இல்லை.  (நூலிலிருந்து பக்.20-21)

நூல் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?
ஆசிரியர் : தந்தை பெரியார்

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
84/1, (50), பெரியார் திடல், ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8161
மின்னஞ்சல் : info@periyar.org

பக்கங்கள்: 32
விலை: ரூ 15.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : dravidianbookhouse

தஞ்சை டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி அரசு !

தண்ணீர் வரத்தின்றி வறண்டு கிடக்கும் காட்டாறு.

தமிழக அரசே! டெல்டா விவசாயத்திற்கு 20,000 கன அடி நீரை
முறைவைக்காமல் திறந்துவிடு!

குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைந்த தஞ்சை டெல்டா தற்போது ஒரு போகம் கூட விளைவிக்க முடியாமல் அரசின் திட்டமிட்ட சதியால் சீரழிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு (2018) இதே சமயத்தில் சம்பா பயிரிட போதுமான உரம் இருப்பில் இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. அரசு முன்னெச்சரிக்கையாக செயல்படாமல் வேண்டுமென்றே விவசாயிகளை இழுத்தடித்தது. தொடர் போராட்டங்கள் நடத்திய பிறகு உரம் இறக்குமதி செய்தனர். பிறகு அறுவடை சமயத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாடு என்று சொல்லி கொள்முதல் செய்யவில்லை. டெல்டா முழுக்க விவசாயிகள் மறியல் போராட்டங்கள் நடத்திய பிறகே வேறு வழியின்றி கொள்முதல் செய்தது. இவற்றையெல்லாம் மீறி விவசாயம் செய்தாலும் காவிரி மேலணையை பராமரிக்காததால் கதவணைகள் உடைத்துக்கொண்டு தண்ணீரெல்லாம் கொள்ளிடம் வழியாக கடலில் கலக்கவிட்டனர். மேலணையை புனரமைக்க  ரூ 387.60 கோடி ஒதுக்கி ஒராண்டு ஆகியும் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது. இந்த சில உதாரணங்களே இந்த அரசு விவசாயிகள் மீது எவ்வளவு வன்மம் வைத்துள்ளது என்பதற்கு சான்று.

இந்த ஆண்டு ஆகஸ்டு 13-ம் தேதி மேட்டூரிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 17-ம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டனர். கிட்டத்தட்ட மேட்டூரில் திறக்கப்பட்டு 20 நாட்கள் ஆகியும் இன்னும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகள் கடைமடைப் பகுதிகளாகும். கடைமடைப் பகுதிவரை பாசனம் செய்ய நொடிக்கு 20,000 கன அடியாவது திறக்க வேண்டும். ஆனால், அரசு இதுவரை 10,000 கன அடிக்கு மேல்திறக்கவில்லை. 20,000 கன அடி திறக்க வேண்டும் என்று டெல்டா முழுக்க போராட்டம் செய்து வருகின்றனர்.

திருவாரூர் பகுதிகளில் கூட இன்னும் பாசனத்திற்கான நீர் திறக்கவில்லை. தூர்வாரும் பணி மற்றும் குடிமராமத்து பணி நடப்பதால் தாமதம் ஏற்படுகிறது என்று அலட்சியமாக மாவட்ட ஆட்சியர் பதிலளிக்கிறார். இன்னும் பல்வேறு இடங்களில் பாசன வாய்க்கால்கள் புதர் மண்டி கிடக்கின்றன, கஜா புயலுக்கு விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்படாமல் கிடக்கின்றன. தற்போது ஆமை வேகத்தில் தூர்வாருகின்றனர். அதுவும் கணக்கு காட்டுவதற்காகத்தான் என்று விவசாயிகள் அதிகாரிளைப் பற்றி புட்டு புட்டு வைக்கின்றனர்.

பெட்ரோ கெமிக்கல் மண்டலம், ஹைட்ரோகார்பன் மண்டலம் என்று அறிவித்துவிட்டு எப்படி அரசு விவசாயப் பணிகளை அனுமதிக்கும். முடிந்தவரை விவசாயிகளை அலைக்கழிப்பது, விவசாயத்திற்கு முட்டுக்கட்டைப் போடுவது, விவசாயிகள் போராட்டம் நடத்தினால் ‘விவசாயிகளின் நண்பனைப் போன்று’ நடிப்பது, அதை வைத்து கமிசன் அடிப்பது, இதுதான் அரசின் நிலை என்பதை விவசாயிகள் நன்கு அறிந்து வைத்துள்ளனர். இவற்றின் விளைவே விவசாயிகளின் தொடர் போராட்டங்கள். இத்தகைய அரசின் மெத்தனப்போக்கை மக்கள் அதிகாரம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசே!

♦ சம்பா சாகுபடிக்கு முறைவைக்காமல் 20,000 கன அடி நீரை உடனே திறந்துவிடு! கடைமடை வரை தண்ணீர் வரத்தை உத்தரவாதம் செய்!
♦ போர்க்கால அடிப்படையில் ஏரி, குளம், பாசன வாய்க்கால்களை தூர்வாரு! கதவணைகளை சரிசெய்!
♦ தேவையான உரம், இடுபொருட்களை இருப்பில் வை! தரமான விதைநெல்லை அரசே பொறுப்பேற்றுக்கொண்டு வழங்கு!
♦ 2018 – 19 காப்பீட்டு இழப்பீடு தொகையை உடனே வழங்கு! கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் நிபந்தனையின்றி விவசாய கடன் வழங்கு!
♦ நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வை!

விவசாயிகளே! பொதுமக்களே!

♦ டெல்டாவை ஹைட்ரோகார்பன் மண்டலமாக அறிவித்த அரசு, விவசாயத்தை பாதுகாக்காது என்பதை உணர்ந்து கொள்வோம்!
♦ அனைத்து தரப்பு மக்களும் விவசாயத்தை பாதுகாக்க களத்தில் இறங்குவோம்!

படிக்க:
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? நேரடி ரிப்போர்ட்

மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.
தொடர்புக்கு: 8220716242

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே ! பொதுக்கூட்ட செய்திகள் – படங்கள்

அணுக்கழிவை விட ஆபத்தான கழிவு மோடி – எடப்பாடி அரசு !

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்கும் அணுக்கழிவு – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிச்சாலை பேரழிவு திட்டங்களுக்கு எதிராக பொதுக்கூட்டம்.

புதுச்சேரி – தமிழகத்தை நாசமாக்காதே! என்ற தலைப்பின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கடந்த 01.09.2019 அன்று புதுச்சேரி மதகடிப்பட்டு பேருந்து நிறுத்தத்தில் விளக்கப் பொதுக்கூட்டமும் – புரட்சிகர கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது.

இந்தியப் பொருளாதாரம் சரிந்து வீழ்ந்து கிடக்கிறது. அதை நட்டமாக நிமிர்த்தப் போவதாகவும், அந்நிய முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டுவதற்காகவும், எடப்பாடி உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளதாகக் கூறிவருகின்றனர் அதிமுக அடிமைகள். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனும், உலகப் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தாலும், இந்தியா ஸ்திரமான நிலையில் இருப்பதாக தனது பங்கிற்கு பொய்யை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால், தமிழகம் ஏற்கனவே பேரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஸ்டெர்லைட் வேதாந்தா போன்ற சில கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்காக, ஹைட்ரோகார்பன், அணுக்கழிவு, எட்டுவழிச்சாலை உள்ளிட்ட பேரழிவுத் திட்டங்களால் ஒட்டுமொத்த தமிழக வளங்களும் அழிக்கப்படுகிறது.

இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் அடுத்த தலைமுறை வாழ்வதற்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறும். நமது மண்ணைக் காப்பதற்கு இந்த அழிவுத் திட்டங்களை எதிர்கொண்டு முறியடிக்க, வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை விளக்கும் வகையில் இப்பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இப்பொதுக்கூட்டத்தில், புதுச்சேரி மக்கள் அதிகாரத்தின் தோழர் E.K.சங்கர் தலைமை தாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில துணைச் செயலாளர் தோழர் திருநாவுக்கரசு, மக்கள் அதிகாரத்தின் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு, மக்கள் அதிகாரத்தின் தமிழ்நாடு மாநில தலைமைக்குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

PP Meeting Posterநிகழ்ச்சியில் பேசிய தோழர்கள், ஹைட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை, அணுக்கழிவு திட்டங்கள் ஏற்படுத்தப் போகும் பேரழிவுகளையும், இத்திட்டங்களின் பாதிப்புக்கள் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சுடுகாடாக மாற்றிவிடும் என்பதை விளக்கியும், இப்பேரழிவு திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் மக்களை ஒன்றுசேர விடாமல் சாதிவெறியையும், மதவெறியையும் தூண்டி எதிரிகளாக மாற்றும் வேலையைத்தான் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் செய்து வருகிறது என்பதை விளக்கியும் உரையாற்றினர். சமீபத்திய அம்பேத்கர் சிலை உடைப்பும், விநாயகர் சிலை வைப்பது ஊர்வலம் நடத்துவது என்பது சமீபத்திய உதாரணங்களாகச் சுட்டிக் காட்டியும் விளக்கினர்.

படிக்க:
கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?
புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?

நிகழ்ச்சியின் இடையிடையேயும், நிகழ்ச்சியின் இறுதியிலும் பாடப்பட்ட மகஇக-வின் புரட்சிகர பாடல்கள் மக்களை சிந்திக்க வைப்பதாகவும், போராட அறைகூவும் வகையிலும் இருந்தது.

தகவல்:
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.
தொடர்புக்கு: 87542 05589

சிந்திக்கும்போது அழகாய் மாறிவிடும் குழந்தைகள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 05

ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள உரிமை

ழுதுவதற்கான தாள்கள் வினியோகிக்கப்பட்டு விட்டன, பேனாக்கள் சரிபார்க்கப்பட்டு விட்டன, வேலை விளக்கப்பட்டு விட்டது.

“எழுதத் தயாராகுங்கள்!”

அதாவது, நிமிர்ந்து நேராக உட்கார்ந்து, பேனாவை எடுத்துக் கொண்டு, “நான் தயார்” என்று வலது கரத்தை உயர்த்த வேண்டும்.

ஒருவனைத் தவிர எல்லோரும் எழுதுவார்கள். அவனை மட்டும் வரையச் சொல்லியிருக்கிறேன். எல்லாம் சரியாக உள்ளது.

“தொடங்குங்கள்!” என்று நான் மெதுவாகச் சொல்கிறேன்.

இக்கட்டளைக்குப் பின் சாதாரணமாக வகுப்பறையில் பரிபூரண நிசப்தம் நிலவும். எழுதும் போது வேறெந்த அசைவுகளும் கூடாது, சத்தம் போடக்கூடாது, நண்பர்களிடம் கேள்விகள் கேட்டு அவர்களுக்கும் தனக்குத் தானேயும் தொந்தரவு செய்து கொள்ளக் கூடாது என்று சொல்லித் தந்திருக்கிறேன். யாருக்காவது எதையாவது கேட்க வேண்டுமானால் என்னிடம் வந்து மெதுவாகப் பேசட்டும் அல்லது கையை உயர்த்தினால் நானே அருகே வந்து பேசுவேன்.

குழந்தைகள் எழுதும்போது நான் பெஞ்சுகளிடையே நடக்க மாட்டேன், சத்தம் போட்டுப் பேச மாட்டேன், இன்னமும் எழுதி முடிக்காதவற்றைப் பார்க்க மாட்டேன். இதற்கு காரணம் என்ன என்பது தெளிவு. தாம் ஒரு முக்கியமான விஷயத்தில் ஈடுபட்டுள்ளோம், இதில் இடையூறு செய்ய யாருக்கும் உரிமையில்லை என்று குழந்தைகள் புரிந்து கொள்ளட்டும். மனிதன் சிந்திக்கும் போது, மூளையுழைப்பில் ஈடுபட்டுள்ள போது அவனுக்குத் தொந்தரவு தரக் கூடாது என்று அவர்கள் புரிந்து கொள்ளட்டும். “எப்போது சிந்திக்கின்றீர்களோ, சிந்தனையில் மூழ்குகின்றீர்களோ, ஏதாவது நல்ல காரியத்தைச் செய்கின்றீர்களோ அப்போதுதான் நீங்கள் மிக அழகானவர்களாவீர்கள்” என்று என் ஆறு வயதுக் குழந்தைகளிடம் அடிக்கடி சொல்கிறேன்.

இவ்வார்த்தைகளின் உட்பொருளை அவர்களால் புரிந்து கொள்ள முடியுமா? ஒருவேளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமலிருக்கலாம். ஆனால் இவற்றில் உள்ள கருத்தாழத்தை அவர்கள் உணருவார்கள். சில நேரங்களில் ஏதாவதொரு குழந்தையைக் கூப்பிட்டு இரகசியம் பேசுவேன், எனது கருத்துகளையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்வேன்: “ஏக்காவைப் பார், அவள் எப்படி சிந்தனையில் மூழ்கியிருக்கின்றாள்…. உலகில் எல்லாவற்றையுமே அவள் மறந்துவிட்டாள். அவளைப் பார்க்க, அவள் சிந்திப்பதை, கண்களைச் சுருக்கி கொண்டு அவள் எங்கோ நோக்குவதைக் காண எனக்கு எவ்வளவு பிடிக்கிறது! அற்புதமான காட்சி இல்லையா?”

வேலையிலிருந்து பிரித்ததற்காக மன்னிப்புக் கேட்டு விட்டு அவனை இடத்திற்கு அனுப்புகிறேன். அவன் மெதுவாக நடந்து சென்று கவனமாக இடத்தில் அமருகிறான், ஒரு நிமிடம் கழித்துப் பார்த்தால் அவனும் நெற்றியைச் சுருக்கியபடி கண்களால் எங்கோ பார்த்தபடி சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறான். ஒவ்வொரு பாடமும் செல்லச் செல்ல, “நீ இப்போது எவ்வளவு அழகாய் இருக்கின்றாய்! நான் உன்னைப் பார்த்து மகிழ்கிறேன்!” என்ற எனது வெளிப்படையான, திருப்தியான கண்ணோட்டத்தை அவன் உணர ஆரம்பிக்கிறான்; வேலையில் ஈடுபட்டிருக்கும் போது விளையாட்டுத் தனத்தைக் கைவிட்டு, சிந்தனையில் மூழ்கி, சிந்திக்கும் மனிதனின் அழகைப் பெறும் முயற்சி அவனிடம் வலுப்பெற்று வருகிறது.

இந்த முறையால் குழந்தை சிந்திக்கக் கற்றுக்கொள்ளாது என்று எனக்குத் தெரியும். ஆனால், இப்படி நடந்து கொள்வதன் மூலம் குழந்தை சிந்திக்கும் மனிதனின் அழகை விரைவிலேயே பெறுகிறான், கவனத்தை ஒரு முனைப்படுத்தும் சக்தியைப் பெறுகிறான், ஒருவன் சிந்திக்கும் போது அவனைத் தொந்தரவு செய்ய யாருக்கும் உரிமையில்லை, அதே போல் தனக்கும் மற்றவர்கள் சிந்திக்கையில் இடையூறு செய்ய உரிமையில்லை என்று புரிந்து கொள்கிறான். எனது “முதுமொழி” பாடங்களில் தன்னிச்சையாக நான் நடந்து கொள்வதைத் தடை செய்கிறது. ஏனெனில், பாடங்கள் குழந்தைகளின் சொத்தே தவிர என் சொத்தல்ல. அந்த “முதுமொழி” இது தான்:

பாடவேளைகளின் போது தர்பார் நடத்தக் கூடாது, படிப்பில் புதியவற்றை அறியும் யோசனையில் ஈடுபட்டுள்ள குழந்தைகளின் சிந்தனையைக் குலைக்கக் கூடாது. அமைதியாக வேலை செய்ய ஒவ்வொரு குழந்தைக்கும் உள்ள உரிமையைப் பேணிக் காக்க வேண்டும்.

நான் என் மேசையில் உட்கார்ந்து, புத்தகத்தைத் திறந்து, படிப்பது போல் பாவனை செய்கிறேன். ஆனால், குழந்தைகளுக்குத் தெரியாமலேயே அவர்களைக் கவனிக்கிறேன். பலர் ஏற்கெனவே எழுத ஆரம்பித்து விட்டனர். ஆனால் நீயா தனது முதல் கட்டுரையில் என்ன எழுதுவது என்று இன்னமும் யோசிக்கிறாள். தாத்தோ பேனாவைச் சுற்றிக் கொண்டிருக்கிறான், இன்னமும் எழுதத் துவங்கவில்லை. மாயா உதட்டைக் கடிக்கிறாள், புருவங்களை நெறிக்கிறாள், கண்களைச் சுருக்குகிறாள், அவள் யோசிக்கிறாள்.

குழந்தைகள் பெஞ்சில் தலை குனிந்து அமர்ந்திருக்கின்றனர். சில தலைகள் மிகவும் கீழாக இருந்ததால் மூக்கு நுனி கிட்டத் தட்ட தாளைத் தொடுகிறது. இப்படி உட்காரக் கூடாது. என்ன செய்வது? எனது முதல் ஆசிரியையின் நினைவு எனக்கு வந்தது. இவரும் நாங்கள் இப்படி உட்காரக் கூடாது என்பதற்காகப் பாடுபட்டார், ஆனாலும் அவரால் நினைத்ததைச் செய்ய இயலவில்லை. அப்போது அவர் ஒரு அற்புதமான யோசனையைக் கண்டு பிடித்தார். இதன் உதவியால் நாங்கள் சரியாக உட்காரும் பிரச்சினையை வெகு விரைவில் தீர்த்தார்.

“பாருங்கள் என் முதுகை!” என்று சொன்ன அவர் தன் நீல நிற அங்கியைக் கழட்டிக் காட்டியபடி வரிசைகளின் ஊடாக நடந்தார்.

எங்களது அன்பு ஆசிரியையின் முதுகில் ஏதோ அசாதாரணமான ஒன்று உள்ளதை நாங்கள் தடவிப் பார்த்தோம். அவர் நேராக நிமிர்ந்து நின்ற போது, முதுகு ஒரு அசாதாரண வடிவத்தில் இருந்தது தெரிந்தது.

“இது கூன் விழுந்துள்ள இடம். இது இப்படியாகக் காரணம், நானும் சிறு வயதில் உங்களைப் போல் நேராக நிமிர்ந்து உட்காராமல் இருந்தது தான்” என்று சொன்ன அவர் தொடர்ந்தார்: “யாருக்கெல்லாம் முதுகில் கூன் விழ ஆசையில்லையோ அவர்கள் எல்லாம் நேராக நிமிர்ந்து உட்காரட்டும்!”

படிக்க:
வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !
ஹெல்மெட் போடுவதால் விபத்துகள் குறையுமா ?

அவர் தன் நீல நிற மேலங்கியை அணிந்து கொண்டார், அது முதுகிலிருந்த கூனை மறைத்தது. “நேராக உட்காருங்கள்” என்று சொல்லும் அவசியம் அதற்குப் பின் அவருக்கு ஏற்படவே இல்லை. இதோ பல ஆண்டுகளுக்குப் பின் இன்று அவரை வருத்தத்தோடும் மகிழ்ச்சியோடும் நினைத்துக் கொள்கிறேன்.

எனது ஆறு வயதுக் குழந்தைகள் தோள்பட்டைகளைக் குறுக்கி, குனிந்தபடி எழுதுகின்றனர். எப்போதும் இவர்கள் நேராக உட்காரும்படி செய்யும் நம்பகரமான வழி இல்லாதது வரை நான் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தியாக வேண்டும். இதோ இப்போதும் அப்படித்தான்.

“குழந்தைகளே நிமிர்ந்து நேராக உட்காருங்கள்!” என்று நான் மெதுவாகச் சொல்கிறேன்.

உடனே எல்லோரும் நேராக உட்கார்ந்தனர்…..

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

அல்லேலுயா…. ஒரு மாணவியின் கல்லூரி அனுபவம் !

College-Girl-Allaeluia

ரு வாரமா விநாயகர் சதுர்த்தி லீவுக்கு வீட்டுக்கு போறத பத்தி பேசி பேசி வார கடைசிநாளான வெள்ளிக்கிழமையும் வந்தது. எங்க வார்டன் சிஸ்டர் திடீர்னு ஒரு குண்ட தூக்கி போட்டாங்க.

எங்க கல்லூரில “ரீடீரிட்”ங்குற (retreat) பேர்ல வருடத்துக்கு ஒருமுறை 3 நாள் ஆசிர்வாதம் சேனல் நிகழ்ச்சி நடத்துவாங்க. கிறித்தவர்கள் அல்லாதவர்களை கண்டிப்பா வீட்டுக்கு அனுப்பிடுவாங்க. ஆனா இந்த வருஷம் கேரளாவில இருந்த வரப்போற பிரதர் உங்க எல்லாரையும் பாக்க ஆசப்பட்றாரு. அதனால முதல் நாள் எல்லாரும் இருந்து கடவுளோட நேரடி ஆசிர்வாதத்த வாங்கணும்னு ரொம்ப பவ்யமா சொன்னாங்க.

வெள்ளிக்கிழமை சாயங்காலம் எல்லாரையும் சாப்பிட்டு முடிச்ச உடனே  ஆடிட்டோரியத்துக்கு வரசொல்லிட்டாங்க…

ஆடிட்டோரியம் வெளிய ஒருத்தர் வெள்ளத் தோல்ல, வெள்ள ஜிப்பா போட்டுட்டு காலேஜ் சிஸ்டர்ங்க கூட பேசிட்டிருந்தாரு. என் ப்ரெண்டு, “யாருடி இந்த பஜன்ல்லால் சேட்டு?” னு கேக்க எல்லாரும் சிரிச்சிட்டே ஆடிட்டோரியம் மேல்பகுதில போய் உக்காந்தோம்…

brother Mario joseph psycho spiritual counsellor
பிரதர் மரியோ ஜோசப்

உள்ள பெருசா ஒரு பேனர் வெச்சிருந்தாங்க. அதுல  “பிரதர் மரியோ ஜோசப் சைகோ ஸ்பிரிட்வல் கவுன்சிலர்” னு (brother Mario joseph psycho spiritual counsellor) பெரிய எழுத்துல போட்டிருந்தாங்க. அவர்தான் எங்க எல்லாரையும் பாக்க ஆசப்பட்டவரு. நாங்க வெளிய பாத்த அதே வெள்ள ஜிப்பா சிரிச்சுக்கிட்டே மேடை  ஏறினாரு… மேடையில், அவர் எப்படி? முஸ்லீமா இருந்து கிறித்தவராக மாறினேன்னு பேச ஆரம்பிச்சாரு. இன்னொருத்தர் பாடுவதற்காக வந்திருந்தார். பேசறவரு ரெஸ்ட் எடுக்குற நேரத்துல இவரு பாடுவாரு இருவரும் மாறி மாறிப் பேசி, பாடுனாங்க.

பேச்சை துவக்கிய, ஜோசப் பிரதர் இருக்கிற எல்லா மதத்துலயும் ஒருத்தர் இன்னொருத்தர பாத்தா எப்படி வணக்கம் சொல்வாங்கனு கேட்டாரு. கிறித்தவர்கள், “தோத்திரம்”. முஸ்லீம்கள் “சலாம் அலே கும்”. இந்துக்கள் என்ன சொல்வாங்கனு யாருக்கும் தெரியல. அதுக்கு அவரு பெரும்பான்மையா இருந்த கிறித்தவ பசங்கள பாத்து, “உங்க பக்கத்து நாடு அரேபியால எப்படி பேசுவாங்கனு உங்களுக்கு தெரியுது, பக்கத்து வீடு எதிர் வீட்ல இருக்குற இந்துக்கள் என்ன சொல்லுவாங்கனு தெரியல…. உங்களுக்கு வெட்கமா இல்லையா” னு கேட்டாரு..

நான் உங்ககிட்ட பாசமா பேசுனா நான்சொல்லறத நீங்க மறந்துடுவீங்க… உங்கள கோபமாக திட்டி கேட்டா மறக்கவே மாட்டீங்க… அதுதான் மனித இயல்பு அதனால நான் பாசமா பேசமாட்டேன். உங்க கிட்ட கோபமாத்தான் பேசுவேன் என்றார். இந்துக்கள், “ஓம் சாந்தி ஹி” னு சொல்லுவாங்கனு  சொன்னாரு! இவை எல்லாவற்றையும் அவர் வெச்சிருந்த ஆப்பிள் ஐ-பேட்ல எழுதிஎழுதி ப்ரொஜக்டர்ல  பெரிசா காட்னாரு.

இவரு நிறுத்தனவுடனே, “அல்லேலுயா” “அல்லேலுயா” எல்லாரும் சொல்லுங்கனு அந்த பாடகர் ஆரம்பிச்சிராரு. அவர், அந்த சவுண்ட்க்கு ஏத்தமாதிரி சின்ன சின்ன ஸ்டெப்போட்டு மேடையில டான்ஸ் பண்ணாரு. கூடவே எங்க எல்லாரையும் எழுந்து நின்னு எங்களையும் ஸ்டெப்ஸ் போட சொன்னாரு. அவரு சொல்றதெல்லாம் எதுவும்கேக்காத மாதிரி உட்கார்ந்திருந்தாலும் திரும்ப, திரும்ப அதே பாட்ட பாடி எங்க நடு மண்டைல ஆணி அடிச்சா மாதிரி பதியவெச்சாரு.

படிக்க:
புத்தகம் வைத்திருப்பது சட்ட விரோதமா ?
♦ தெரசா – நரகத்தின் தேவதை

என் அருகில் அமர்ந்திருந்த சக மாணவி ஒருத்தி, “என்ன ஸ்டடி ஹாலுக்கு கூட அனுப்ப சொல்லுடி, எனக்கு பிடிக்காத சப்ஜட்ட படிக்க தயாரா இருக்கேன் ஆனா இவர் பண்றத, பேசதற சகிக்க முடியல” என்றாள். அவர் பாட்டுக்கு, டான்ஸ்க்கு எழுந்துக்க சொல்லும்போது கொஞ்சம்பேர் எழுந்துக்கவே இல்ல. அவங்கள பார்த்து, அவருக்கு கோபம் வந்தது. “உங்களின் மனதில் சாத்தான் குடியிருக்கிறது” என்று அவங்கள பாத்து சொன்னாரு. அப்பவும் அவங்க எழுந்துக்கல.

பின்னாடி உட்கார்ந்திருந்தவள், “என்னடி இவரு பாடும்போதும், ஆடும்போதும் மானே தேனே பொன்மானே மாதிரி “அல்லேலுயா” “ஆமென்”னு அங்கங்க சேத்துக்குறாரு” என்றாள். எங்கள் அரட்டை அவரை கடுபேற்றியது. நேரம் ஆக ஆக அவரின் பாட்டு, டான்ஸ் வீரியம் அதிகமானது. கண்ணை மூடி கதறும் நிலைக்கு சென்றார். பக்கத்தில் இருந்தவள் துப்பட்டாவை எடுத்து காதை மூடி கொண்டாள். ஆனால் கீழே இருந்த கிறித்தவ மாணவர்கள் பக்தியில் திளைத்திருந்தார்கள். அவர்களிலும் சிலர்  விருப்பமில்லாமல் நெளிந்தார்கள். அவர் “அல்லேலுயா” “அல்லேலுயா” விடாமல் கத்த கத்த  தாளமுடியாத மனஅழுத்தத்தில் எங்களில் ஒருத்தி அழ, நிறுத்தாமல் அழுத அவளை சமாதானப் படுத்தவும் அவர் கத்தி முடிக்கவும் சரியாக இருந்தது.

பிறகு பிரதர் மரியோ ஜோசப் ஏசு கிறிஸ்துவின் பிறப்பை பேசி, நாளை காலை 6.30 மணிக்கு இங்கு இருக்கவேண்டும். இல்லைனா உங்களை சுட்ருவேன் என்று காமெடி பண்ணி அதற்கு அவரே சிரித்துவிட்டு சென்றார்.

எப்ப? விடுவாங்க என்று காத்திருந்த நாங்கள் வேகமாக விடுதி நோக்கி ஓடினோம். என் ரூமுக்கு போனால், அல்லேலூயா என்று அவர்களை ‘வெச்சு செய்துக் கொண்டிருந்தார்கள்.’ ஒரு கிறித்தவ மாணவியும் கூட அதில் சேர்ந்திருந்தாள். அடுத்த நாளை எப்படி கடப்போம் என்ற பயத்துடனே அன்றிரவு பாதி தூங்கினோம். மறுநாள், விடியற்காலை 5.30 மணிக்கெல்லாம் அனைவரையும் எழுப்பி விட்டார்கள்.

brother Mario joseph psycho spiritual counsellor
பிரதர் மரியோ ஜோசப் அவர் மனைவியுடன்

வார்டன்கள் எங்களை அவசரமாக குளிக்கவைத்து துரத்தினார்கள். அங்கு போனால், பிரதர் மரியோ ஜோசப் அவர் மனைவியுடன் தோட்டத்தில் இயற்கையை ரசித்து நடந்துக்கொண்டிருந்தார். அவரின் மனைவி கேரளத்துக்கே உரிய அழகுடன் இருந்தார். மாணவிகளுக்கு அவர் மனைவியை பிடித்துவிட்டது. நாங்கள் உள்ளே செல்வதற்கு முன்னரே பாடகர் “அல்லேலுயா” பாட ஆரம்பித்துவிட்டிருந்தார். மேடையில் பைபிள் வாசகத்தை ஒரு மாணவியை படிக்க வைத்து அதற்கு தன் கீபோர்டில் இசையமைத்து தனது நடனத்துடன் அதை எங்கள் மனதில் பதிய வைக்க பெரும் முயற்சி எடுத்தார் பாடகர்.

அப்போது, எங்கள் கல்லூரி முதல்வர் வந்து, “எல்லாரும் கடவுளின் ஆசிர்வாதத்தை முடிவில்லாமல் பெற என் வாழ்த்துக்கள்” என்று சொல்லிவிட்டு நழுவ பார்த்தார். எங்க வாடிய முகங்களை பார்த்த அவர், “how many are not feeling comfortable?” என்று கேட்டதுதான். ஆடிட்டோரியம் மேற்பகுதியில் இருந்த அனைவரும் கை தூக்கினர். அவர், “இன்று அவர் பொதுவாகதான் பேச உள்ளார் So, you will feel comfortable soon” என்று சொல்லி, சென்றார்.

ப்ரதர் மீண்டும் பேச ஆரம்பித்தார். பிடிக்கவில்லை என்று கை தூக்கியவர்களை மட்டும் பார்த்து, பார்த்து பேச ஆரம்பித்தார். கடவுளை பற்றி பேசுவதையே கேட்க உங்களுக்கு பொறுமை இல்லை என்றால், வாழ்க்கையை எப்படி பொறுமையாக கையாள்வீர்கள்? நான் உங்களுக்கு வாழ்க்கையைப் பற்றி  இப்போது சொல்லித்தருகிறேன் என்று எங்களிடம் நேசம் காட்டுபவர் போல் பேச ஆரம்பித்தார்.

SUCCESS என்ற வார்த்தைக்கு அர்த்தம் சொல்லித்தரப்போகிறேன் என்று. S க்கு  set your goal என்றும், U க்கு  unlock your hidden potentialities என்றும், C க்கு commitment and concentration என்றும் அர்த்தம் சொன்னார். அதை நோட்டில் எழுதிவைத்துக்கொள்ள சொன்னார்.

எங்கள் கல்லூரியில் பெரும்பான்மையாக கிராமத்திலிருந்து வந்த ஏழை மாணவிகளே இருப்பர். அதை தெரிந்த அவர் நீங்கள் ஏழ்மையின் பிடியில் இருந்தாலும் கடவுள் உங்களை மீட்பார் என்று மிகவும் பாவப்படுவதுபோல் பேசினார். “உலகில் உள்ள பல இடங்களுக்கும் சென்று இதேபோல் வகுப்பு நடத்தியுள்ளேன்.  உலக புகழ் பெற்ற பல பணக்காரர்களுக்கு வகுப்பு நடத்தியிருக்கிறேன். பல கல்லூரி மாணவர்களிடையே பேசியிருக்கிறேன். அவர்கள் உங்களை விட பல மடங்கு வேகமாக மேலேமேலே வளர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை பார்க்கையில் எனக்கு பாவமாக இருக்கிறது. சிலர் எனக்குதான்  எல்லாம் தெரியும் என்பதுபோல் கர்வமாக அமர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், கடவுள் கிருபை இல்லாமல் வாழ்க்கையில் எதையும் செய்ய முடியாது.” என்று எங்கள் வளர்ச்சிக்கு திடீர் பாடம் எடுத்தார்.

வாழ்க்கை நிலையில்லாதது, எப்பொழுது எது நடக்கும்? யார் எதுவரை உயிரோடுருப்போம்? என்று யாருக்கும் தெரியாது. ஆகையால் சீக்கரமே கடவுளை ஏற்றுக்கொள்ளுங்கள்… பாவத்திலிருந்து தப்பிப்போம் என்றார்.

படிக்க:
யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !
♦ ஏசு நாதர் போராட மாட்டாரா ?

அவர், திடீரென “நான் பலவேலைகளுக்கு மத்தியில் மேகாலயாவிலிருந்து உங்களை பார்க்க  வந்தேன். 3 நாள் முடிந்ததும் கொச்சின் செல்வதற்காக விமானத்தில் பிஸ்னஸ் க்ளாஸில் டிக்கெட் புக் செய்துள்ளேன்… அதற்கு, 10,000 ரூபாய் டிக்கெட்டுக்கு, என் அக்கௌண்ட்டிலிருந்து ரூபாய் 11,200 போயிருந்தது. என்னவென்று அந்த ரசிதை படிக்கையில், அம்பானி ரிலையன்ஸ் கம்பெனிகாரன் அந்த வரி, இந்த வரி என்று எனக்கு தெரியாமலேயே பிடித்திருக்கிறான் என்றார்.

பிறகு, எல்லா மதமும் ஒன்றைதான் கூறுகிறது. இந்து மக்களிடம் எனக்கு பிடித்தது ஒன்று இருக்கிறது. கிறித்தவர்கள் கொஞ்சம் சுயநலம் மிகுந்தவர்கள். கிறித்துவர்களில் நிறைய டாக்டர்களும், இன்ஜினியர்களும் இருப்பார்கள். ஆனால், இந்துக்கள்தான், பொதுவேலைகளிலும், அரசியலிலும் அதிகம் இருப்பார்கள். இந்த விஷயத்தில் அவர்களை நான் பாராட்டுவேன் என்று கூறினார். பேச்சின் கடைசியில் அனைத்து மதத்தவர்களையும் பேலன்ஸ் செய்தார்.

நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக, பாடகரும் இவரும் சேர்ந்து மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த மேடைக்கு வருமாறு அழைத்தனர். மாணவிகள் அவர்களை மிமிக்ரி செய்து “வெச்சு” செய்தார்கள். இதை எதிர்ப்பார்க்காத அவர்கள் நிஜமாகவே அதிர்ச்சி அடைந்தனர்.

College-Girl
மாதிரிப்படம்.

மேடையேறிய மாணவிகள், அல்லேலுயா… ஆஆ அல்லேலுயா.. ஆஆ என்று அடித்துகொண்டு புரண்டு அழுதார்கள். அரங்கம் கர ஓசையில் அதிர்ந்தது. இன்னொருத்தி “இப்ப நம்ம பிரதர் போல செய்துகாட்டுகிறேன்” ஒழுங்கா கவனிங்க இல்லன்னா சுட்ருவேன்… என்று கூறி, கீழே இருந்த கேமரா மேனிடம், “அஜ்மல் அந்த கேமராவ சரிப்பன்னுப்பா” என்று கீழே பார்த்து ஆரம்பித்து பிரதர் போல பேசி நடித்தாள். இரண்டு நாட்கள் எங்களை வாட்டிய பாதரை செமையாக கடுப்பேத்தினார்கள். இரண்டு நாள் இல்லாத அளவு அரங்கமே அதிர்ந்தது.

இதை எல்லாம் பார்த்து, உலகம் சுற்றிய பிரதர், “நான் பல நாட்டு பெண்களை பார்த்துள்ளேன். ஆனால், தமிழ்நாட்டு பெண்களை போல தைரியமுள்ள பெண்களை பார்த்ததில்லை” என்று கதறினார். நடுவில் தன் கடுப்பை மறைக்க மிமிக்கிரியை முடிக்க நினைத்தார். விசில் அடிக்க யாருக்கெல்லாம் தெரியும்? என்று அவர் திசைமாற்ற அதிலும் அவருக்கு ஆப்பு காத்திருந்தது. அவர், கேட்டு முடிப்பதற்குள்ளேயே அரங்கமே விசிலால் தெறித்தது. அவர் கீழே இருந்த சிஸ்டரை பார்த்து, “சிஸ்டர்… இது ஆண்கள் கல்லூரியா, பெண்கள் கல்லூரியா என்று எனக்கு தெரியவில்லை” என்று மிரண்டுபோனார்.

நடித்துகாட்டிய மாணவிகளுக்கும் வேறுவழியில்லாமல்  பரிசு வழங்கப்பட்டது. பரிசு, அவர் வைத்திருந்த பல வெளிநாட்டு டாலர்கள் மற்றும் விலையுயர்ந்த  வெளிநாட்டு பேனாக்கள் பரிசு வாங்கியவுடன் மாணவிகள், இரண்டு நாள் துக்கத்தை மறந்து புத்துணர்ச்சி பெற்றார்கள். அதே புத்துணர்ச்சியில், அவரும் திரும்பவும் கிறித்தவத்தை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு சாப்பிட பிரேக் விட்டார். பிரேக் முடிந்ததும் நீங்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் என் மனைவி பேச போகிறார். அவர் எங்கள் லவ் ஸ்டோரியையும் சொல்லுவார் என்று டிரெண்டிங்காக பேசி உசுப்பேத்தினார்.

அவர் மனைவி பேச ஆரம்பித்தார். “நான் சிறுவயதில் மிகவும் கவலைப்பட்டிருக்கிறேன். உடுத்த உடையில்லாமல், சாப்பிட உணவில்லாமல் எங்கள் வீட்டில் வறுமையில் வாடியிருந்தோம். கடவுளின் கிருபையால்தான் இந்த இடத்தில் இருக்கிறேன், நான் செவிலியருக்கு படித்துவிட்டு சென்னையில் இரண்டு வருடம் வேலை பார்த்தேன். அங்கே ஒருவன்மீது காதல். வேற்று மதம் என்பதால் வீட்டில் பெரிய பிரச்சனை. என்னை வீட்டில் அடைத்து வைத்தனர். நான் ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் கேரளாவிலுள்ள ஒரு கிறித்தவ  ரீடீரிட் சென்டருக்கு கவுன்சிலிங்குக்காக சென்றேன். அங்குதான் இவரை சந்தித்தேன்.”

அங்கு இருவருக்கும் காதல் மலர்ந்ததை சுவாரஸ்யமாக கூறினார். பிறகு, “உங்களை பற்றி பிறர்,பின்னாடி பேசுகிறார்கள் என்று கவலை படாதீர்கள் அவர்கள் பின்னாடி பேசுகிறார்கள் என்றால் நீங்கள் முன்னாடி இருக்கிறீர்கள் என்றுதானே அர்த்தம்” அப்படி கவலைப்பட்டிருந்தால், இன்று நான் ஒரு லட்சம் சம்பளத்தில் வேலையில் இருக்க மாட்டேன் எல்லாம் கடவுள் கொடுத்தது” என்றார்.

பக்கத்தில் இருந்த தோழி “நான், அரியர் இல்லாம கிரஜூவேஷன் வாங்குவேனான்னு தெரியல… இவருக்கு, ஒரு லட்சம் சம்பளமா கடவுள் கொடுத்தாராம்… நம்மள ரொம்ப கடுப்பேத்துறாங்க… டி” -னு அலுத்துக்கொண்டாள்.

பேசி முடித்ததும் பிரதர், இன்று பொதுவாக பேசி இந்த நாளை வீணடித்து விட்டோம். நாளை கிறித்தவர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையான ரீடீரிட் (retreat) நடத்தப்படும் என்ற கூறி எங்களைப் போன்ற சாத்தான்களை வழியனுப்பிவைத்தார்..

நாங்கள் ஆளை விட்டால் போதுமென்று கிளம்பினோம். “நீங்க மட்டும் எஸ்கேப் ஆவுறீங்களேடி…” என்பது போல் பார்த்தார்கள் கிறித்தவ மாணவிகள். பாவம் அந்த தேவதூதர்கள் !

– அவந்திகா

கேள்வி பதில் : சீமானின் அரசியலை மதிப்பிடும் அளவுகோள்கள் எவை ?

seeman-Naam-tamilar-NTK

கேள்வி: //சீமான் அரசியலை எந்தெந்த அளவு கோள்களை கொண்டு மதிப்பிடுவது? அல்லது சீமான் அரசியலை பகுப்பாயவும்.//

– ராஜேந்திரன்

ன்புள்ள ராஜேந்திரன்,

ஏற்கனவே நீங்கள் “நாம் தமிழர்” பற்றிக் கேட்டிருந்தீர்கள். அப்போது நாம்தமிழர் கட்சி குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள், உங்களது சந்தேகம் என்ன என்று கேட்டிருந்தோம். அதற்கு நீங்கள் இப்போதும் பதிலளிக்கவில்லை. கேள்வி பதில் பகுதி பொருளுள்ள வகையில் அமைய வேண்டுமென்றால் உங்களைப் போன்ற நண்பர்கள் உண்மையிலேயே கேள்விகள், சந்தேகங்கள் கேட்டால் பதிலளிக்க பயனுள்ளதாக அமையும். பரவாயில்லை, இப்போது பதிலளிக்கிறோம்.

நாம் தமிழர் கட்சியை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக சீமான் கருதுகிறார். நேர்காணல்களில் கட்சியையும் அவரையும் தொடர்புபடுத்தி ஏகப்பட்ட ‘நான்கள்’ வருகின்றன. அதனால்தான் பேரா. அருணனோடு நடந்த விவாதத்தில் சவால் விடும்போது சவாலில் தோற்றுவிட்டால் என் கட்சியை கலைத்து விடுவேன் என்றார். ஆகையால் நாம் தமிழர் கட்சியின் வாழ்வும் இருப்பும் சாவும் சீமானின் கையில்தான் இருக்கிறது. நாம் தமிழரின் நிரந்தரத் தலைவரும், தேர்தலில் வென்றால் ஒரே முதல்வரும் சீமான்தான். இது வாரிசு அரசியலுக்கு இணையான அரசியல்தான். கூட்டுத்துவம் இல்லாமல் ஒரு நபரை மட்டும் மையப்படுத்தி ஒரு கட்சி அல்லது இயக்கம் வளர்வது கடினம். அப்படியே வளர்ந்தாலும் அந்த வளர்ச்சியின் காலம் மிகவும் வரம்பிற்குட்பட்டது. இது முதல் விசயம்.

seemanவந்தேறிகள் ஆளக்கூடாது, தமிழன்தான் ஆளவேண்டும் என்று அனைத்து பிரச்சினைகளுக்கும் இனவாத அரசியலை முன்வைத்து உணர்ச்சியாக பேசுகிறார். யார் வந்தேறி, யார் தமிழன் என்ற கேள்வி தமிழ்ச் சாதிகள்தான் அதாவது ஆதிக்க சாதிகள்தான் தமிழர்கள் என்று வருகிறது. அந்த வகையில் அவருடைய தமிழ் தேசிய அரசியலில் சாதியம் கலந்திருக்கிறது. தமிழனுக்கு பொற்கால வரலாறு உண்டு, இன்று தமிழன் ஏமாந்து விட்டான், தமிழினத்தை மீட்க வேண்டும் என்பதையெல்லாம் நா புடைக்க, நரம்பு மிடுக்க அவர் பேசுகிறார். மேலோட்டமான அரசியல் புரிதலில் இருக்கும் மக்கள் பிரிவினரை இந்த உணர்ச்சிமயமான முழக்கம் ஆரம்பத்தில் ஈர்க்கும். மராட்டிய மாநிலத்தில் இப்படித்தான் “மதராசிகளை விரட்ட வேண்டும்” என்று பால் தாக்கரே பேசி தனது சிவசேனாவை வலுப்படுத்தினார். இன்று அந்த முழக்கம் அங்கேயே எடுபடுவதில்லை. சிவசேனாவும் பாஜக-வின் இளைய பங்காளியாக தேய்ந்து போனது. இது இரண்டாவது விசயம்.

சீமான் தனது மாற்று அரசியலாக தேர்தல் அரசியலையே முன்வைக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்று தான் கூறும் மாற்று அரசியல் தீர்வுகளை அமல்படுத்துவேன் எனக் கூறுகிறார். அதன்படி நாம்தமிழர் கட்சி இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிபெற வாய்ப்பில்லை. தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக வைப்போம். அப்போதும் அவரால் அவர் கூறியவற்றை செய்ய வாய்ப்பேதுமில்லை. கார்கள் எனப்படும் மகிழுந்து தயாரிப்பை நிறுத்துவேன், அதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது, ஏராளமான நீர் விரயமாகிறது என்கிறார். மகிழுந்து தேவைப்படுவோருக்கு வெளிநாட்டில் அதாவது ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வேன் என்று கூறுகிறார்.

படிக்க:
காஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை !
♦ தாக்கரேவின் தமிழ் அவதாரம் சீமான் !

இப்படி அனைத்திற்கும் ஒரு மாற்றைக் கூறி தமிழகத்தின் பஞ்ச பூதங்களையும் காப்பாற்றி சிங்கப்பூர் போல மாற்றுவேன் என்கிறார். கார் தயாரிப்பை நிறுத்தி இறக்குமதி செய்வது என்பது தேர்தல் அரசியலில் நடக்கிற காரியமா? இவை மத்திய அரசுடன் சம்பந்தப்பட்டதோடு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற முறையில் தனியார்மயம், தாராளமயத்தின் அடிப்படையில் தமிழகத்தில் கார் உற்பத்தி நடைபெறுகிறது. இதை எப்படி சீமானால் நிறுத்த முடியும்? பேச்சுக்கு நிறுத்துவதாகக் கொண்டால் ஒரு நீதிமன்ற உத்திரவு போதும் அதை செல்லாது என்று மாற்ற. மேலும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்தான் தேர்தல் அரசியலில் நிற்கவே முடியும். இன்று கல்வி, சுகாதாரம் தனியார்மயமாக்கப்பட்டிருக்கிறது. விரைவுப் பேருந்துகள் வழிதடத்தில் ஆம்னி பேருந்துகள் தனியார்மயமாகி கொள்ளையடித்து வருகின்றன. சீமான் இவற்றை அரசுடைமையாக்க முடியுமா? நிச்சயம் முடியாது. அதனால்தான் தனியார் கல்வியின் தரத்துக்கு ஏற்ப அரசு கல்வியை மாற்றுகிறேன் என்று தற்காப்பாக பேசுகிறார். அந்த தரத்திற்குரிய காசுக்கு எங்கே போவார்?

எனவே தேர்தல் அரசியலில் சீமான் கூறும் எதையும் அமல்படுத்த முடியவே முடியாது. அது போகாத ஊருக்குரிய அரசியலே அன்றி வேறல்ல. இந்த அமைப்பு முறையே இன்றைய சமூக அரசியல் பொருளாதார சீரழிவுகளுக்கு காரணம் எனும் போது அந்த அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வு தேடுவது அடிப்படையிலேயே தவறானது. இது மூன்றாவது விசயம்.

சீமான்ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும், மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போதும் சீமான் இவர்களை கடுமையாக விமரிசிக்கவில்லை. அடக்கி வாசித்தார்.  நாம்தமிழர் கட்சி திராவிட இயக்கத்தையே முதன்மையான எதிரியாக கருதுவதால் திமுக, திக போன்றவற்றை எதிர்ப்பது போல அதிமுக, பாஜக-வை எதிர்ப்பதில்லை. இதனால் பலநேரம் நாம் தமிழர் கட்சி தமிழ் ஆர்.எஸ்.எஸ் போன்றே காட்சி தருகிறது. இனவாதம் இயற்கையாகவே மதவாதம், சாதியவாதத்தோடு தொடர்புடையது என்பதற்கு இது ஒரு சான்று. இது நான்காவது விசயம்.

சென்ற 2019 பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஏறக்குறைய மூன்று சதவீதம் வாக்கு கிடைத்திருப்பது எப்படி? மக்கள் தேர்தல் அரங்கில் எப்போதும் புதியவர்கள், புதிய கட்சிகளுக்கு ஆதரவு தருகிறார்கள். திமுக, அதிமுகவின் அரசியலால் ஏமாற்றமடைந்து புதிய சக்திகள் என்ற முறையில் அப்படி ஆதரவு தருகிறார்கள். ஏற்கெனவே ஆரம்பத்தில் விஜயகாந்த் கட்சிக்கு அப்படி மக்கள் ஆதரவு தந்தார்கள். இன்று தேமுதிகவே திமுக – அதிமுக போல பழைய கட்சியாக மாறிவிட்டது. சென்ற  தேர்தலில் நாம் தமிழருக்கு இணையாக கமல்ஹாசனது கட்சிக்கும் மக்கள் வாக்களித்தார்கள். அதுவும் புதிய கட்சி என்ற முறையில்தான். நாளை ரஜினி நின்றாலும் அப்படி ஓரளவு பிரிவு மக்கள் வாக்களிப்பார்கள். இருப்பினும் இந்த தேர்தல் முறை யாரையும் தின்று செரித்துவிட்டு சந்தர்ப்பவாதிகளாக மாற்றும் என்பதால் புதிய கட்சிகளின் மீதான மக்களின் புதிய மோகம் தற்காலிகமாக ஓரிரு தேர்தலோடு முடிந்து விடும் ஒன்று. ஆதலால் இந்த புதிய கட்சிகள் இறுதியில் திமுக, அதிமுகவோடு கூட்டணி அமைத்து தமது அரசியல் இருப்பை உறுதி செய்கிறார்கள். நாம் தமிழரும் அப்படி கூட்டணி அரசியல் இன்றி தனிக்கடை போட்டு ரொம்ப நாள் ஓட்ட முடியாது. இது ஐந்தாவது விசயம்.

நாம் தமிழர் கட்சியை புரிந்து கொள்ள இந்த அளவுகோல்கள் போதுமா?

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 

pregnancy-Slider

ர்ப்பிணித்தாயாக இருக்கும் ஒரு சகோதரி, கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் தன்னை எவ்வாறு பிரசவத்திற்கு தயார் செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்த கட்டுரை ஒன்று வரையுமாறு கேட்டுக்கொண்டார்.

கர்ப்பிணிகள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விசயங்களை இந்த கட்டுரையில் விளக்குகிறேன்…

***

ர்ப்பமடைந்தது முதல் பிரசவம் வரை உள்ள இந்த பத்து மாத கால இடைவெளியை ஆரம்பம் முதல் குழந்தை பிறக்கும் வரை காண்போம்.

புதிதாக திருமணம் ஆனவர்கள் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தால், தாயாகப் போகும் பெண் Pre conceptional folic acid எடுக்க வேண்டும். வயிற்றில் கரு உருவாவதற்கு முன்பே எடுக்கப்படும் இந்த மாத்திரை உருவாகும் குழந்தைக்கு மூளை சார்ந்த குறைபாடுகள் ஏற்படாமல் பாதுகாக்கும்

மேலும், குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு பெண் தனக்கு வரும் சிறு சளி இருமல் காய்ச்சலுக்கு மருத்துவரை அணுகும் போது கட்டாயம் “நாங்கள் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்று மருத்துவரிடம் கூற வேண்டும். கர்ப்பபையில் குழந்தை இருந்தால் சில மருந்துகள் தவிர்க்கப்பட வேண்டும். அதை மருத்துவர் தவிர்க்க இது உதவும்.

pregnancy_testsதிருமணமான பெண் தனது மாதவிடாய் நிற்கும் நாட்களை கட்டாயம் குறித்து வைத்து இருக்க வேண்டும். மருத்துவர் Last menstrual period எப்போது என்று கேட்டால் சட்டென கூற உதவும். மாதவிடாய் தள்ளிப்போனால் கடைசி மாதவிடாய் நிகழ்ந்து நாற்பது நாட்கள் கழியும் போது சிறுநீர் மூலம் கர்ப்பமானதற்கான பரிசோதனையை செய்து பாருங்கள்.

கர்ப்பமாகி இருப்பது யூரின் கார்ட் மூலம் தெரிந்து விட்டாலும், கர்ப்பம் எங்கே நிகழ்ந்திருக்கிறது ? என்பது இன்னும் உறுதி ஆகவில்லை.

அதாவது நிகழும் கர்ப்பங்களில் பெரும்பான்மை கர்ப்பபை எனும் uterus -இல் நிகழும். எனினும் சிறிய அளவு கர்ப்பங்கள், சினைக்குழாய் எனும் fallopian tube இல் நிகழலாம். சிலருக்கு Blighted ovum எனும் கரு சிதைந்த நிலையில் கூட யூரின் கார்ட் டெஸ்ட் பாசிடிவாக வரும்.

ஆகவே வெளியே கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் முன்பு பொறுமை காத்துக்கொள்ளுங்கள். உங்கள் கர்ப்பம் கருப்பையில் தான் நடந்திருக்கிறது என்பதை உறுதி செய்ய ஒரு முக்கிய பரிசோதனை இருக்கிறது ?

அது என்ன?

படிக்க:
கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுப்பது எப்படி | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ நம் குழந்தைகளுக்கு ஏற்ற நல்ல உணவுமுறை எது ?

***

ர்ப்ப பையில் கரு தங்கிய ஐந்து முதல் ஆறு வாரத்திற்குள் இதயத்துடிப்பு தொடங்கும். தசையால் ஆன இதயம் தன் இசையை தொடங்கி அந்த கரு சிசுவாகி பின் சேயாகி பேதையாகி பின் பெதும்பையாகி மங்கையாகி மடந்தை நிலை கண்டு அரிவை தெரிவைக்கு பின் பேரிளம்பெண்ணாகி இறக்கும் வரை அந்த இசையை இசைத்துக்கொண்டே இருக்கும்.

ஒரு குழந்தை கர்ப்பையில் தான் உருவாகி இருக்கிறது என்பதை அறிய சரியான சோதனை “அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்” மட்டுமே. ஆகவே ஸ்கேன் செய்ய சரியான நேரம் கடைசி மாதவிலக்கான தேதியில் இருந்து ஐம்பது நாட்கள் சென்ற பின் அதாவது ஏழு வாரங்கள் கழித்து எடுத்தால், குழந்தை கர்ப்பபையில் இருப்பதையும், குழந்தைக்கு இதயத்துடிப்பு வந்து விட்டதையும் சேர்த்தே அறியலாம்.

இதை “Early pregnancy scan” என்கிறோம்

இந்த ஸ்கேன் செய்வதன் நோக்கம் மூன்று:

1 . கரு கர்ப்பபையில் இருக்கிறதா என்பதை உறுதி செய்தாயிற்று.
2. இதயத்துடிப்பை கண்டாயிற்று ( சிசு உயிரோடு இருக்கிறது ).
3. பெண் சொல்லும் தேதியும் குழந்தையின் வளர்ச்சியும் ஒத்துப்போகிறதா? முரணாகிறதா? என்பதை சரிபார்க்க உதவுகிறது.

சில நேரங்களில் பீரியட்ஸ் ரெகுலராக வராத பெண்களுக்கு எப்போது குழந்தை ஜனித்தது என்று தெரியாது. அவர்களுக்கு இந்த முதல் ஸ்கேன் உதவும்.

சரி.. இப்போது நீங்கள் ஒரு குழந்தைக்கு தாயாகப்போகிறீர்கள் என்பது உறுதி ஆகிவிட்டது. வாழ்த்துகள் அம்மா…👏

woman holding sonogram over pregnant belly

உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிரின் அடிப்படை வாழ்வியில் இயற்கை நியதி இன்னொரு உயிரை நமது சாயலில் நமது மரபணுவை ஏந்தி இவ்வுலகில் விட்டுச்செல்வதே.

“நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்று இன்னொரு உயிர்” தானே.

இனி நீங்கள் எக்ஸ் ரே, சிடி ஸ்கேன் போன்றவை எடுப்பதில் இருந்து தவிர்க்கப்பட வேண்டியவர்கள். மேலும் விமான / ரயில் நிலைய / இன்னும் பாதுகாப்பு கருதி வைக்கப்படும் மெட்டல் டிடெக்டர் கருவிகள் அனைத்திலும் இருந்தும் விலகி இருக்க வேண்டும்.

படிக்க:
குழந்தையின்மை சிகிச்சையும் பார்ட்னர்ஷிப்பும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ y choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா

நிச்சயம் தாங்கள் உண்ணும் ஒவ்வொரு மருந்து மாத்திரையையும் மருத்துவர் அறிவுரை இன்றி எடுப்பது தவறு. கரடுமுரடான சாலைகள் , குண்டும் குழியுமான சந்துகளில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.

இதற்கு முன் கர்ப்பங்களில் அபார்சன் ஆனவர்கள் / குழந்தைக்கு முயற்சி செய்து நீண்ட நாட்கள் கழித்து குழந்தை தங்கியவர்கள் உடலுறவை தவிர்ப்பது கூட அறிவுறுத்தப்படும்.

அடுத்து என்ன ?

நேராக மகப்பேறு மருத்துவரை சந்திக்க வேண்டியது தான்.

கர்ப்பத்தின் ஆரம்பத்தில் :

  • பெண்ணின் உயரம்
  • எடை
  • அடிப்படை ரத்தப்பரிசோதனை
  • ரத்த வகை மற்றும் பிரிவு
  • ரத்த சர்க்கரை அளவு
    சிறுநீர் பரிசோதனை
  • எச்.ஐ வி மற்றும் ஹெபாடைடிஸ் வைரஸ்கள் சோதனை

கணவருக்கும் வைரஸ் பரிசோதனை எடுக்கப்படும். உங்களுக்கென பிரத்யேக தாய் சேய் நல அட்டை உருவாக்கப்படும்.

picme-tamil-naduதமிழக அரசு கர்ப்பமாகும் ஒவ்வொரு தாயும் கட்டாயம் கர்ப்பத்தை பதிவு செய்ய ஆணையிட்டிருக்கிறது. ஒவ்வொரு கர்ப்பிணியின் முழுவிபரமும் PICME (pregnancy infant cohort monitoring and evaluation) எனும் மென்பொருள் மூலம் பதிந்து ஒரு பிரத்யேக எண் கொடுக்கப்படுகிறது.

அந்த எண் மூலம் தமிழகத்தின் எந்த மூளை முடுக்கில் நீங்கள் சென்று அட்மிட் ஆனாலும் உங்கள் முழு கர்ப்ப கால விபரங்களையும் எடுக்க முடியும்.

கர்ப்ப காலத்தின் முதல் மூன்று மாதங்களில் ஃபோலிக் அமில மாத்திரை வழங்கப்படும். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அந்த மாத்திரையை எடுக்க வேண்டும்.

இரண்டாவது மாதத்தின் இறுதியில் ஒரு முக்கிய பிரச்சனையை அனைத்து கர்ப்பிணிகளும் சந்தித்து ஆக வேண்டும்.

ஆம் அதே தான்…

“கர்ப்பகால குமட்டல்/ வாந்தி”

***

90-களின் கடைசி வரை கூட தமிழ் சினிமாவில் இந்த காட்சி தவறாமல் இடம்பெறும்…

ஒரு திருமணமான பெண் திடீரென வாயில் கையை வைத்து மூடிக்கொண்டு வீட்டின் முற்றத்துக்கு ஓடி வாந்தி எடுப்பார். உடனே அடுத்த சீன் வைத்தியர் வந்து நாடி பிடித்துப் பார்த்து பெண்ணின் கணவருக்கு வாழ்த்துகள் சொல்வார்.

திருமணமாகாத பெண் இதே மாதிரி வாந்தி எடுத்தால் அந்த சீனில் அவளது தாய் “என் வயித்துல புளிய கரைக்கிறியேடி.. இது பித்த வாந்தியா.. மசக்கை வாந்தியாடி.. இடிய எறக்கிப்புட்டாளே” என்பது போல மிக மிக முற்போக்குத்தனமான சீன்கள் எல்லாம் இருக்கும் .

அதாவது ஒரு பெண் கர்ப்பிணியாகிவிட்டதை ஒருகாலத்தில் அவள் காலையில் வாந்தி எடுப்பதை வைத்தே தெரிந்து கொண்டனர் நம் முன்னோர்.

படிக்க:
பெண்களைக் காப்பாற்றுவது மரபு வழிப் பிரசவமா ? நவீன மருத்துவமா ?
♦ கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?

நாம் யூரின் பீட்டா HCG டெஸ்ட் மூலம் எளிதாக கண்டுபிடித்து விடுகிறோம். வைத்தியர் வந்து நாடி பிடித்து பார்ப்பது என்பது கர்ப்பிணிகளுக்கு நாடித்துடிப்பு சிறிது அதிகமாகி இருக்கும். இதை Tachycardia என்போம்.

கர்ப்பிணிகளுக்கு கரு உண்டான ஒன்றரை மாதம் முதல் மூன்று மாதம் வரை
அதிகமான அளவு குமட்டல் வாந்தி வரும். இது பொதுவாக காலை வேளைகளில் தான் அதிகம் இருக்கும். இதை “Morning sickness” என்கிறார்கள்
அதாவது காலை நேரத்தில் வரும் நோவு என்று பொருள்.

Pregnancy-vomitingகுமட்டல் அதிகம் வந்தால் உள்ளே இருப்பது ஆண் குழந்தை, குழந்தைக்கு மண்டையில் முடி அதிகம் இருந்தால் அதிகம் வாந்தி வரும் என்று சில கட்டுக்கதைகள் உலாவந்தாலும்.

உண்மையாக ஏன் இப்படி கர்ப்ப காலத்தில் வாந்தி வருகிறது என்று ஆராய்ச்சி செய்ததில், கர்ப்பிணிகளுக்கு நுகர்தல் திறன் பன்மடங்கு அதிகமாகிறது அதனால் சாதாரண வாசனைகள் கூட மூளையில் உள்ள கீமோரிசப்டார் ட்ரிகர் சோன் எனும் இடத்தை தூண்டி குமட்டல் வாந்தி யை வரவழைக்கிறது.

பொதுவாக இந்த வாந்தி குமட்டல் எல்லாம் ஒரு கட்டுக்குள் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இந்த பிரச்சனை எல்லை மீறிப்போகும்.

  • எப்போதும் வாந்தி எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
  • உண்பது பருகுவது கூட நோயை உண்டாக்கும்.
  • நீரிழப்பு மிக அதிகமாக ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனையை நாடுவார்கள்.

இதை ” Hyper emesis gravidarum” என்கிறோம். கர்ப்ப காலத்தில் வரும் அதீத வாந்தி எடுக்கும் தன்மை.

நான் முன் சொன்ன காலை நோவுக்கு பெரிய சிகிச்சை தேவையில்லை. வாந்தியை தூண்டாமல் செய்ய சில எளிதான விசயங்கள் செய்தால் போதும்

1. காலை சீக்கிரம் விழிப்பது. விழித்தவுடன் சிறிதளவு உணவு உண்பது. காலை நேர குமட்டலை குறைக்கும்.

2. இரவு கடைசி உணவு ரொம்ப காரமாக, மசாலா அதிகம் இருப்பதாக இல்லாமல் இருப்பது நல்லது.

3. இரவு நடுவில் விழித்தால் வாழைப்பழமேனும் எடுப்பது நல்லது. வயிறு முழு பட்டினியாகவும் இருக்கக்கூடாது. முழுதும் நிரம்பியும் விடக்கூடாது.

4. உப்பு சேர்த்த உணவுகளை அதிகம் நா கேட்கும். உப்பு சேர்த்த உணவுகள் வாந்தியை குறைக்கும்.

5. இஞ்சி / எலுமிச்சை கலந்த சாறு குடிக்கலாம்.

6. இந்த காலங்களில் டயட் எடுக்கிறேன் என்றெல்லாம் இருக்கக்கூடாது. இருக்கவும் முடியாது. நா எதை மறுக்க கட்டளையிடுகிறதோ அதை மறுக்க வேண்டும். நா எதை கேட்கிறதோ அதை எடுக்கவும்.

7. அதீத இனிப்பு சுவை / அதீத காரம் வேண்டாம்

இதுபோன்ற வீட்டு மருத்துவங்கள் வேலைசெய்யாமல் போனால் இருக்கவே இருக்கிறது இதற்கென கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய சிறந்த மருந்து. அதை மருத்துவர் பரிந்துரையில் எடுக்கலாம். (மருத்துவர் பரிந்துரை இன்றி அந்த மருந்தை எடுக்க வாய்ப்புள்ளதால் பெயரை தவிர்த்து விட்டேன்)

விட்டமின் பி6 எனும் பைரிடாக்சின் சத்து அதிகமாகும் போது வாந்தி குமட்டல் குறைகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. விட்டமின் பி காம்ப்ளக்ஸ் குடும்பத்தில் அதுவும் ஒன்று. நம் உடலால் அதை உற்பத்தி செய்ய இயலாது. மீன், மாமிசம், ஈரல், பச்சைக்காய்கறிகள், முட்டைகள் போன்றவற்றில் இந்த விட்டமின் இருக்கிறது.

கட்டுக்கடங்காத வாந்தி குமட்டல் இருந்தால் உடனே மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதி பெற்று ரத்த நாளம் மூலம் திரவம் ஏற்றுதல் சிகிச்சையை பெற வேண்டும்.

மிக அதிக வாந்தி நோய் இருப்பவர்கள் முதல் மூன்று மாதத்திற்கேனும் உணவு தயாரிப்பில் இருந்து விடுப்பு எடுத்துக்கொள்வது நல்லது. உணவு தயாரிக்கும் போது வரும் வாசனைகள் குமட்டலை தூண்டி வாந்தியை அதிகமாக்கும்

மூன்றாவது மாதத்தில் செய்ய வேண்டிய முக்கிய பரிசோதனை ஒன்றைப்பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

கேள்வி பதில் : தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்ன ?

கேள்வி : // பொருளாதார நெருக்கடி பத்தி சொல்லுங்க, விலைவாசி உயர்வு ஏன் அதிகமாகுது, சந்தையில ஆட்டோமொபைல் ஏன் விக்க மாட்டேங்குது அதப்பத்தி கொஞ்சம் எளிமையாக விளக்குங்க! //

– தீபக்

ன்புள்ள தீபக்,

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு முக்கியமான காரணம் மிகை உற்பத்தியும் அதை வாங்குவதற்கு இயலாத மக்களும்தான். இந்திய மக்கள் தொகை 100 கோடியில் இருந்து 110 கோடி வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். இதில் முதலாளிகள் உற்பத்தி செய்யும் பெரும்பான்மை பொருட்கள் மற்றும் சேவையை நுகரும் சந்தை என்பது ஏறக்குறைய 10 கோடி மக்களுக்குள் அடங்கிவிடும். இந்த பத்து கோடி மக்கள் தான் கார்கள், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள், நவீன தொலைக்காட்சிகள், புதிய குளிர்சாதனப் பெட்டிகள், குளிர்சாதன கருவிகள், இலட்ச ரூபாய் செல்பேசிகள் இன்னபிற பொருட்களை நுகரும் சந்தையாக இருக்கிறார்கள். கூடவே வீட்டு மனைகள், அடுக்கக வீடுகளை வாங்கும் ரியல் எஸ்டேட் சந்தையும் இவர்களை நம்பித்தான் இருக்கிறது. இவர்களுக்கு அடுத்தபடியான விலையில் இருக்கும் பொருட்களை நுகரும் சந்தை இன்னுமொரு பத்து கோடிப் பேர் இருக்கலாம். இவர்கள்தான் பார்லே ஜி போன்ற விலை குறைந்த பிஸ்கெட்டுகளை வாங்கும் பிரிவினர்.

ஆக மொத்தம் இந்த இருபது கோடி மக்களை நம்பித்தான் இந்திய முதலாளிகள் பொருட்களை உற்பத்தி செய்து, சேவைத்துறை சேவைகளையும் அளிக்கின்றனர். மாதத்திற்கு சில இலட்சம் கார்களும், இருசக்கர வாகனங்களும் இப்போதும் விற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முந்தைய ஆண்டுகள், காலாண்டுகளை விட மிகக் குறைவாக விற்கிறது. மேலே சொன்ன அந்த பத்துக் கோடியில் பெரும்பான்மையினர் கடைசி பத்து ஆண்டுகளில் தங்களுக்குத் தேவையான நுகர்பொருட்களை வாங்கி விட்டார்கள். அந்த வாங்குதல் பூர்த்தி அடைய அடைய இங்கே புதிய விற்பனை தள்ளாடுகிறது. இதில் ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் ஓட்டுநர்களின் தலையில் புதிய கார்களை கட்டி கொத்தடிமைகளாக நடத்தினாலும் கார் சந்தை தேங்கித்தான் நிற்கிறது.

கார்களுக்கான இ.எம்.ஐ-யை குறைத்து வைத்தாலும், புதிய கார்கள் புதிய வசதிகளோடு வருவதால் பழைய கார்களை மாற்றிவிட்டு வாங்கலாம் என பல உத்திகளை கார் நிறுவனங்கள் செய்தாலும் விற்பனை கூடுவதாக இல்லை.

அதே போன்று இந்த பிரிவினர் வாங்கிய காலிமனைகள், புதிய வீடுகளும் ரியல் எஸ்டேட் சந்தையின் தேக்கத்தால் தேக்கமடைந்து நிற்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ரியல் எஸ்டேட் சந்தை மெல்ல மெல்ல சரிய ஆரம்பித்து தற்போது முட்டுச் சந்தில் நிற்கிறது. புதியவர்கள் யாரும் வாங்காததால் பழைய மனைகளும், வீடுகளும் வாங்குவார் இல்லாமல் வெறுமனே நிற்கின்றன. இப்போது வாங்கிப் போட்டால் பின்னர் பல மடங்கு விலை உயர்ந்து இலாபம் வரும் என நினைத்த நடுத்தர வர்க்கம் தற்போதைய தேக்கத்தினால் ஏமாற்றமடைந்து புதிய மனைகளை, வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. வாங்கிப் போட்டவர்களும் விற்பனை இல்லாமல் திகைத்து நிற்கின்றனர். தமிழகத்திலேயே சில இலட்சம் புதிய வீடுகள் வாங்குவார் இல்லாமல் காலியாக இருக்கின்றன.

படிக்க:
தோழர் கோபாட் காந்தி பத்தாண்டுகள் பழைய வழக்கில் கைது !
♦ இன்சுலின் எனும் அரு மருந்து ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

அதே போன்று கடைசி பத்து பதினைந்து ஆண்டுகளில் வங்கிகளில் இருக்கும் சேமிப்புக்கான வட்டி விகிதம் வெகுவாக குறைந்திருக்கிறது. வங்கிகள் தரும் கடன்களுக்கான வட்டியும் அதிகரித்திருக்கிறது. இதனால் கடன் வாங்கி கார்களையோ, வீடுகளையோ வாங்குவது சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வதாக நடுத்தர வர்க்கம் நினைக்கிறது. பொதுத்துறை வங்கிகளும் சில இலட்சம் கோடி வராக் கடனால் புதிய கடன்களை பெருவாரியானவர்களுக்கு கொடுப்பதாக இல்லை. வங்கிகளில் மக்கள் போடும் சேமிப்பும் குறைந்து போனது.

இது போக சிறு, குறு தொழில்களும் நசிந்து போயிருக்கின்றது. பணமதிப்பழிப்பின் போது இந்நிறுவனங்கள் ரொக்க சுழற்சி இல்லாமல் பாதிக்கப்பட்டு பல மூடப்பட்டு பல்லாயிரம் பேர் வேலை இழந்தனர். இந்த வேலையிழப்பை ஜி.எஸ்.டி வரி அதிகமாக்கியது. சாதாரண பாதையோரத்தில் விற்பனையாகும் பொருட்கள் கூட ஜி.எஸ்.டி ஸ்லாட்டில்  0%, 5%, 12%, 18% மற்றும் 28% என்ற பிரிவுகளில் மாட்டிக் கொண்டு விலைவாசி உயர்ந்தது. இதனால்தான் பார்லேஜி எனப்படும் ஐந்து ரூபாய் மலிவு விலை பிஸ்கெட் பாக்கெட்டில் பிஸ்கெட்டுகளை குறைத்து விற்றார்கள். அந்த நுகர்வும் குறைந்து போனதால் அந்த நிறுவனம் ஆட்குறைப்பை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.

GSTசிறு, குறு நிறுவனங்களும், சிறு வணிகர்களும்தான் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் பிரிவினராவர். அவர்களை கேட்பார் கேள்வியின்றி ஜி.எஸ்.டி சூறையாடியது. வரிப்பிடித்தம் திரும்பும் நாள்கள் அதிகமானதால் வணிகர்கள் ரொக்க சுழற்சி இன்றி திண்டாடினர். இதற்கு முன்னர் மறைமுக வரியாக செலுத்திக் கொண்டிருந்த நுகர்வோர் எனப்படும் பொது மக்கள் இப்போது ஜி.எஸ்.டி வரியாக கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிஸ்கெட், பேஸ்ட், சோப், நாப்கின், செல்பேசி கட்டணங்கள் என ஒன்று விடாமல் ஜி.எஸ்.டியால் விலை உயர்ந்தது. போதாக்குறைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை அதிகரித்தது. வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி- இவை எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களின் நுகர்வை வெகுவாகக் குறைத்து விட்டது.

மேலும் மேற்சொன்ன நிகழ்ச்சிப் போக்கில் பல இலட்சம் பேர் வேலை இழந்து போனதும் முக்கியமானது. வேலை இழப்பு அதிகமாக அதிகமாக மக்களின் வாங்கும் சக்தியும் குறைந்து நுகர்வும் வெகுவாக குறைந்து போயிருக்கிறது.

ஒரு எளிய சான்றுடன் இதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம். நூறு பேர் கொண்ட ஒரு ஊரில் முப்பது குடும்பங்கள் உள்ளன. இந்த முப்பது குடும்பங்களில் வாங்கும் சக்தி கொண்டவை பத்து குடும்பங்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த பத்து குடும்பங்களைக் கொண்ட சந்தையில் சோப், பேஸ்ட், கார் கம்பெனி தலா ஐந்து நிறுவனங்கள் உள்ளதாக வைத்துக் கொண்டால், இந்த ஐந்து கம்பெனிகளும் இந்த பத்து குடும்பத்தை மனதில் வைத்து உற்பத்தியை அதிகரிக்கின்றன. ஐந்து  பேரும் தலா பத்து பொருட்களை உற்பத்தி செய்யும் போது விற்பனை முப்பது போக இருபது தேங்கிப் போகிறது. இந்த தேக்கத்தால் ஆட்குறைப்பு செய்கிறார்கள். அதனால் இன்னும் விற்பனை குறைகிறது.

படிக்க:
தீபாவளி இனிக்காது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள் !
♦ கேள்வி பதில் : பா. ரஞ்சித் – தமிழ் அமைப்புகள் – வலது, இடது கம்யூனிஸ்ட்டுகள் !

இப்போது என்ன செய்யலாம்? வம்படியாக கார்களை தலையில் கட்ட வேண்டும். பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்கும் கார்கள், இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லலாம். அரசு நிறுவனங்கள் அனைத்தும் பழைய கார்களை விடுவித்து விட்டு புதிய கார்களை வாங்க வேண்டும் என்று முடிவு செய்யலாம். பணக்காரர்களுக்கும், முதலாளிகளுக்கும் வரி குறைப்பு செய்யலாம். இருப்பினும் இந்த முயற்சிகள் பெரும்பான்மை மக்களின் வாழ்வியலை எந்த விதத்திலும் மாற்ற முடியாது. இறுதியில் போராடும் மக்களை அடக்குமுறை கொண்டு ஒடுக்குவதே அரசு, ஆளும் வர்க்கங்களின் புகலிடமாக இருக்கிறது.

அமெரிக்காவில் 2008-ம் ஆண்டு துவங்கிய உலகளாவிய பொருளாதார கட்டமைப்பு நெருக்கடியின் தாக்கம் அதிகரித்து அடுத்த நெருக்கடிக்கு உலகம் தயாராக வேண்டும் என முதலாளித்துவ அறிஞர்களே நாளிதழ்களின் நடுப்பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகின்றனர். அந்த நெருக்கடி ஒரு வருடத்திலா, ஆறுமாதங்களிலா என்பதில்தான் வேறுபாடு இருக்கிறதே அன்றி நெருக்கடி வந்தே தீருமென்பதில் அவர்களிடம் மாற்றுக் கருத்தில்லை. அதை எதிர்கொள்ள முதலாளித்துவ உலகம் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சொன்னாலும் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதால்தான் இந்த நெருக்கடியே முற்றுகிறது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் முடிவில்லாமல் தொடரும் வர்த்தகப் போர் அதற்கு ஒரு சான்று.

இந்த நிலைமைகளும் இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கச் செய்கின்றன. இந்தியாவின் முதலாளிகள் பலர் தமது நிறுவனத்தின் மதிப்பைக் காட்டிலும் கடன்களை கணிசமாக வைத்திருக்கின்றனர். அனில் அம்பானி திவால் என்றால் முகேஷ் அம்பானி சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு பங்குகளை விற்று முதலீட்டை வாங்குகிறார். டாடா, அதானி உள்ளிட்ட நிறுவனங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமும், உள்ளூர் பொதுத்துறை வங்கிகளிடமும் கணிசமான கடன்களை வாங்கியிருக்கின்றனர். பங்குச் சந்தை சூதாட்டம், ஊக வாணிபத்தின் மூலம் இவர்களது நிறுவனங்களின் சொத்து காட்டப்பட்டாலும் உண்மையில் அவர்களும் நெருக்கடியில் உள்ளனர். இதையெல்லாம் தாண்டி அவர்களது தனிப்பட்ட சொத்துக்கள் மட்டும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.

இப்படி ஒரு சில முதலாளிகளது சொத்து அதிகம் சேர்வதும், பெரும்பான்மை மக்களோ வேலை இழப்பு, விலைவாசி உயர்வு காரணமாக வாங்கும் சக்தியை இழந்து, வருமானத்தை இழந்தும் நமது சமூகம் ஒரு முரண்பாட்டில் போய்க் கொண்டிருக்கிறது.

இந்த முரண்பாட்டை மக்களது போராட்டங்கள் தீர்க்குமா, முதலாளிகளின் பாசிச ஒடுக்குமுறைகள் மறுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

முழுக்க தனியார்மயமாகும் சென்னை மெட்ரோ ரயில் சேவை ! ஆதாயம் யாருக்கு ?

தொழிலாளர்களின் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே, மெட்ரோ ரயில்நிலைய கட்டுப்பாட்டாளர்கள் பொறுப்பும் இனி தனியார்வசம் ஒப்படைக்கப்படுவதாக அறிவித்திருக்கிறது, சி.எம்.ஆர்.எல். நிர்வாகம். நிர்வாகத்தின் இத்தகைய முயற்சி தொழிலாளர்களின் நிரந்தர வேலைக்கான வாய்ப்பை பறித்திருப்பதோடு, அன்றாடம் பயணிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இதனை எதிர்த்து கேள்விகேட்கும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தையும் தொடர்ந்து பழிவாங்கும் வேலையைச் செய்துவருகிறது, சி.எம்.ஆர்.எல். நிர்வாகம்.

கடந்த ஏப்ரல்-27, 2019-ல் தொழிற்சங்கம் அமைத்ததற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் 8 பேருக்கு உடனடியாக எந்தவித நிபந்தனையுமின்றி பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மெட்ரோ தொழிலாளர்கள் நடத்தினர். அப்போதே, சி.எம்.ஆர்.எல். நிர்வாகத்தைப் படிப்படியாக தனியார்மயமாக்க மேற்கொள்ளப்படும் சதிகளையும் இதனை எதிர்க்கும் தொழிற்சங்கத்தையும் தொழிற்சங்க நிர்வாகிகளையும் பழிவாங்குவதையும் ஆதரங்களோடு அம்பலப்படுத்தியிருந்தனர்.

சங்கம் தொடங்கியதற்காக, 8 தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு, இதனைக் கண்டித்து, சட்ட விதிகளின்படியே வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 9 பேரையும் தற்காலிக பணியிடைநீக்கம் செய்தது சி.எம்.ஆர்.எல். நிர்வாகம். இன்றுவரையில் அவர்களுக்கு பணிவழங்காமல், தொழிலாளர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, மெட்ரோ ரயில் இயக்குபவர், டிக்கெட் வழங்குபவர், நிலைய பரிசோதகர், பாதுகாப்புப் பணிகளில் என படிப்படியாக  தனியார் ஒப்பந்தப் பணியாளர்களைப் புகுத்தியது சி.எம்.ஆர்.எல். நிர்வாகம்.

இந்நிலையில்தான், சி.எம்.ஆர்.எல்-ல் இருந்துவரும் ஒரே நிரந்தரப்பணியான முக்கியப் பொறுப்பான நிலைய கட்டுப்பாட்டாளர் (Station Controller) பணியையும் பறித்து, அதற்கு பதிலாக Station Incharge என்ற பெயரில் எந்தவித பயிற்சி, அனுபவம் இல்லாத தனியார் ஒப்பந்த ஊழியர்களை நியமித்திருக்கிறது நிர்வாகம்.

மாதம் 28,000 சம்பளத்துக்கு நிரந்தரப் பணியாளர்கள் பணியில் சேர தயாராக இருக்கும்போது, ரூ.68,000-க்கு ஒப்பந்த பணியாளர்களை பணியிலமர்த்த துடிப்பது யாருக்காக? என்று கேள்வியெழுப்புகிறார்கள் மெட்ரோ தொழிலாளர்கள். இது தொடர்பாக, சென்னை மெட்ரோ இரயில் லிமிடெட் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பில் கீழ்க்காணும் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.

எச்சரிக்கை : முழுவதும் தனியார்மயமாகும் மெட்ரோ இரயில் நிலையங்கள்!!

சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் இதுவரை இருந்த CMRL-ன் ஒரே ஒரு நிரந்தர பணியாளர் ஆகிய நிலைய கட்டுப்பாட்டாளர் (Station Controller) இனி இருக்க மாட்டார்கள் என நிர்வாகம் அறிவிப்பு…!

அதற்கு பதிலாக Station Incharge என்ற பெயரில் எந்தவித பயிற்சி, அனுபவம் இல்லாத தனியார் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நமக்கு என்ன பாதகம்? என்று நினைக்கும் மெட்ரோவாசிகளே…!

♦ மெட்ரோ நிலையங்களிலோ அல்லது மெட்ரோ இரயிலோ நீங்கள் பயணம் செய்யும் போது, மெட்ரோ ரயில் பழுதாகி உங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உங்களை காப்பாற்ற திறம்பட செயல்படுவதற்கென டெல்லி, பெங்களூர் மெட்ரோக்களில் சிறப்பு பயிற்சி பெற்று, இதுநாள் வரை எவ்வித அசம்பாவிதமும் நடைபெறா வண்ணம் பாதுகாத்து சேவை செய்த நிரந்தர ஊழியர்கள் இனி இல்லை..! (சென்னை வெள்ளத்தின் போது சிறப்பாக மெட்ரோவை இயக்கியவர்கள் இந்த நிரந்தர ஊழியர்களே)

♦ முன்னர் பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் இரயில் ஒட்டுநர் பணிகளை தனியாருக்கு தாரை வார்த்த போது, பயிற்சியற்ற அத்தகைய ஒட்டுநர்களால் இரயில்கள் பழுதாகி நின்று மக்கள் பாதித்த போதெல்லாம், நிரந்தர ஊழியர்களாகிய இந்த நிலைய கட்டுப்பாட்டாளர்கள் தான் மக்களை காப்பாற்றினார்கள். இனி யார் காப்பாற்றுவார்கள்?

♦ மக்களை ஏமாற்றிட நினைக்கும் மெட்ரோ நிர்வாகம் தனியார் ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியரைப் போல் சீருடை கொடுத்து தில்லு முல்லு செய்துள்ளது. (மக்களே!!! சீருடையின் மேல் கைகளில் தனியார் நிறுவன பெயர் உள்ளதை கவனியுங்கள்)

மெட்ரோ தொழிலாளர்கள் போராட்டம். (கோப்புப் படம்)

♦ இந்தியாவில் எந்த மெட்ரோவிலும் நடக்காத வகையில், நிரந்தர பணிகளில் இவ்வாறு முறையற்ற தனியார் ஊழியர்களை ஈடுபடுத்தி பாதுகாப்பை கேள்வி குறியாக்கிடும் சென்னை மெட்ரோ நிர்வாகமே… தமிழர்கள் உயிர் என்ன சோதனை எலிகளா?

♦ உங்களின் வரிப்பணத்தை கொண்டு செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோவில், அதிகாரிகளின் பினாமி பெயரில் செயல்படும் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு இந்த Station Incharge பணியை கொடுத்துள்ளனர். இதற்கென மெட்ரோ நிர்வாகம் நபர் ஒன்றிக்கு செலவிடும் தொகை சுமார் ரூ. 65,000. இது நிரந்தர ஊழியர்களின் மாத சம்பளத்தை போல இருமடங்கு..!

அந்த குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பெறுவதோ ரூ. 18,000/- மீதம் அதிகாரிகளின் பாக்கெட்டிலா? இந்த தனியார்மயமாக்கலால் யாருக்கு லாபம்?

சில கேள்விகள் உங்களுக்காக..

1. இந்த பணிக்கு முறையாக டெண்டர் விடப்பட்டதா?

2. போதிய எண்ணிக்கையில் பயிற்சி பெற்ற நிரந்தர ஊழியர்கள் இருக்கையில் ஏன்‌ இந்த ஒப்பந்த ஊழியர்கள்?

3. டிக்கெட் கொடுப்பதும் அதை சரி பார்ப்பதும் ஒரே தனியார் நிறுவன ஊழியர்கள் என்றால் ஊழல் நடக்காதா? (மண்ணடி மெட்ரோ பார்க்கிங் தனியார் ஊழியரின் 2 இலட்சம் ரூபாய் ஊழலை கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்த நிரந்தர ஊழியர் இப்போது அந்த பணியிலேயே இல்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்)

4. தமிழக இளைஞர்களின்‌ நிரந்தர‌ வேலைவாய்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு எங்கே? இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில், கொத்தடிமைகள் போல் நம் பிள்ளைகளை தனியார் ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்தும் செயலை அரசு நிறுவனமே செய்யலாமா?

5.சென்னை மெட்ரோ நிர்வாகம் இதே பணிக்கு கடந்த 2016 ஆண்டு 41 காலி பணியிட அறிவிப்பு செய்து தேர்வு செய்யப்பட்ட  நிரந்தர ஆட்களை நியமிக்காமல் இப்படியான ஒரு அவசர தனியார்மயத்திற்கான அவசியம் என்ன?

6.ஊழலுக்கு துணை போகும் நிர்வாக அதிகாரிகளின் மேல் Vigilance நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம்? தமிழக அரசின் தலையீடா?

படிக்க:
சென்னை மெட்ரோ : பணிப்பாதுகாப்பு இல்லை ! பயணம் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா ?
சென்னை மெட்ரோ : நவீன ரயிலை இயக்கும் தொழிலாளிகளின் அவல நிலை !

மக்களே, சென்னைவாசிகளே சிந்தியுங்கள்…!

♦ இந்த மெட்ரோவிற்காக…

உங்கள் நிலங்களை இழந்தீர்கள்; பூங்காக்களை இழந்தீர்கள்; அதிக கட்டணக்கொள்ளையால் பணத்தை இழக்கிறீர்கள்; உங்கள் மகனோ மகளோ பெற வேண்டிய அரசு வேலையை இழக்கிறீர்கள்; இதுவரை அனுபவித்த விபத்தில்லா மெட்ரோ பயணத்தை இழந்து உயிரையும் உடைமைகளையும் இழப்பதற்கு முன்பு விழித்திடுங்கள்…!

மெட்ரோ நம் சொத்து…! தனியார்வசமாக்கி நாசமாக்க விடமாட்டோம்!!

#savechennaimetro

தகவல் : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
தொகுப்பு : வினவு செய்தியாளர்.

காஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை !

0
Chennai_LabourStatue_Slider

டந்த வாரத்தில் உலகம் முழுமைக்கும் நடந்த தொழிலாளர் தொடர்பான விசயங்களின் தொகுப்பு இங்கே…

♠ ♠ ♠ 

ஜம்மு காஷ்மீர் : பதட்டம் தொடர்வதால் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேற்றம் !

த்திய அரசின் 370-வது பிரிவை நீக்கும் முடிவால், கடந்த 27 நாட்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது ஜம்மு காஷ்மீர். தகவல் தொடர்புகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக காஷ்மீரின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கென சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

Jammu Kashmirஅல் ஜசீரா வெளியிட்ட செய்தி அங்கிருக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிப்பதோடு, பயத்தோடு வாழ்வதாக சொல்கிறது. தினக்கூலிகளாக உள்ள தொழிலாளர்களை வெளியேற்ற எந்தவித நோட்டீசும் வழங்கப்படவில்லை. வெளிமாநிலங்களிலிருந்து வந்திருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறைகள் எதுவும் நிகழவில்லை.

காஷ்மீரிகளிடமும் வெளிமாநிலங்களிலிருந்து வந்திருக்கும் தொழிலாளர்களிடமும் பரஸ்பர பதட்டம் நிலவுகிறது. 370 பிரிவு நீக்கப்பட்டதற்கு பின், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இங்கே நிலம் வாங்கக்கூடும் என்பதே பதட்டத்தின் பின்னால் உள்ள காரணம்.

இந்த நிலையில் ஊர் திரும்பிக்கொண்டிருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை ஹிந்துஸ்தான் டைம்ஸ் பதிவு செய்துள்ளது. சி.என்.பி.சி டிவி18 வெளியிட்ட செய்தி காஷ்மீரில் உள்ள தொழிலாளர்களில் 80% பேர் வெளியாட்கள்தான் என்கிறது. கட்டுப்பாடுகளால் முடங்கிப் போயுள்ள வளர்ச்சிப் பணிகள், கட்டடப் பணிகள், குறைந்துள்ள வர்த்தகம் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

♠ ♠ ♠ 

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி ஆந்திராவில் ஆஷா பணியாளர்கள் போராட்டம் :

ந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்கள் விஜயவாடாவில் உள்ள லெனின் மையத்தில் பெருந்திரளான போராட்டம் நடந்தினர். சிபிஐடி தொழிற்சங்கம் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்தது.

Jagan-Mohan-Reddy“தேர்தலுக்கு முன்பு பாத யாத்திரையின்போது, எங்களுடைய சம்பளத்தை ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாக ஜெகன் வாக்குறுதி அளித்திருந்தார். முதலமைச்சராக பதவியேற்றபின், சம்பள உயர்வை அறிவித்தார். ஆனாலும் எங்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை” என தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பி. மணி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த நான்கு மாதங்களாக மதிப்பூதியமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் ஆஷா தொழிலாளர்கள் உள்ளனர்.

முதன்மையான சுகாதார பணியாளர்களாக இந்தியாவின் கிராமங்கள் முழுமைக்கும் அரசின் திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருப்பவர்கள் ஆஷா பணியாளர்கள். ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும் தொடர்ச்சியாக ஊதியம் வழங்கக் கோரியும் தங்களை நிரந்தர அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கக் கோரியும் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல மாநிலங்களில் அவர்கள் ஊழியர்களாக அங்கீகரிக்கப்படவில்லை. குறிப்பிட்ட பணிகளைக் கொடுத்து அதற்கேற்ப ஊதியம் வழங்கப்படுவது நடைமுறையாக உள்ளது. அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்கள் ‘பராமரிப்பு தொழிலாளர்கள்’ அல்லது ‘திட்ட தொழிலாளர்கள்’ என அவர்கள் தரம் குறைத்து அழைக்கப்பட்டு குறைந்த ஊதியத்துக்கு பணியாற்ற வைக்கப்படுகிறார்கள்.

படிக்க:
இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய் அதிகரிப்பதன் காரணம் என்ன ?
♦ காஷ்மீரியத் செய்தி இணையதள ஆசிரியர் எங்கே ?

♠ ♠ ♠ 

பிகார், ஜார்க்கண்டில் மைக்கா சுரங்கங்களில் பணியாற்ற 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியை கைவிடுகிறார்கள் !

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (National Commission for Protection of Child Rights – NCPCR) வெளியிட்ட புள்ளி விவரத்தில் ஆறு வயது முதல் 14 வயது வரையான 5 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் கல்வியை கைவிட்டு பீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள மைக்கா சுரங்கங்களில் பணியாற்றுவதாக தெரிய வந்துள்ளது.

“மைக்கா சுரங்கப் பகுதிகளில் உள்ள சில பிரிவு குழந்தைகள் தங்களுடைய வாய்ப்புகளை நழுவவிட்டுள்ளனர். தங்களுடைய குடும்ப வருமானத்துக்கு உதவ அவர்கள் குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்” என அறிக்கை கூறுகிறது. மேலும், இந்த குழந்தைகள் வளர்ச்சி சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் எனவும் அவற்றின் உரிமைகள் மீறப்பட வாய்ப்பிருப்பதாகவும் அறிக்கை கூறுகிறது.

Mica-miningபீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள மைக்கா சுரங்கங்கள் உள்ள பகுதிகளான கொடெர்மா, கிரித், ராஜாவ்லி பகுதிகளில் இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

“கொடெர்மாவில் 93 சதவீதமும் நவடாவில் 92 சதவீதமும் கிரித்தின் 86 சதவீதமும் சிறார்கள் பணி தொடர்பான முறையான பயிற்சியைப் பெற்றிருக்கவில்லை” என அறிக்கை சொல்கிறது. இளம் சிறார்களுக்கும் பெண்களுக்கும் பணி சார்ந்த தொழிற்கல்வி படிப்புகளை வழங்க வேண்டும் எனவும் அறிக்கை பரிந்துரைக்கிறது.

இந்தப் பகுதியில் வாழும் குடும்பங்களுக்கு மைக்கா துண்டுகளை சேகரிப்பதே முதன்மையான வாழ்வாதாரமாக உள்ளது. தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதைக் காட்டிலும் மைக்கா துண்டுகளை சேகரிப்பதும் அவற்றை விற்பதையும் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

♠ ♠ ♠ 

காஸியாபாத்தில் கழிவுநீரை சுத்திகரித்தபோது ஐந்து தொழிலாளர்கள் மரணம் !

காஸியாபாத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த துப்புரவு தொழிலாளர்கள் ஐவர் நச்சு வாயு தாக்கி இறந்துள்ளனர். தனியார் ஒப்பந்தக்காரர்கள் சுத்திகரிப்பில் ஈடுபட்டிருந்த ஐவருக்கும், போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை என இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. உயிரிழந்த அனைவரும் பீகாரைச் சேர்ந்தவர்கள்.

“ஒரு மணியளவில் முதலில் ஒருவர் சாக்கடைக்குள் இறங்கியிருக்கிறார். அவர் வெளியே வராத நிலையில் நால்வர் ஒருவர் பின் ஒருவராக உள்ளே இறங்கியிருக்கின்றனர். ஐவரும் வெளிவரவில்லை. அதன்பின் ஒருவர் உள்ள இறங்கியபோது, ஐவரும் மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது” என இந்தியா டுடே செய்தி கூறுகிறது.

இந்தச் சம்பவம் ஊடகங்களில் பெரும் செய்தியான பின், உ.பி. முதலமைச்சர் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சத்தை நிவாரணமாக அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த விபத்துக்குக் காரணமான ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விசாரணை நடந்துவருவதாகவும் அரசு தரப்பில் கூறியுள்ளனர்.

2019-ம் ஆண்டில் முதல் ஆறு மாதங்களில் மட்டும் குறைந்தது 50 பேர் கழிவுநீர் சுத்திகரிப்பின் போது இறந்துள்ளதாக National Commission for Safai Karamcharis தெரிவித்துள்ளது. உபகரணங்கள் இல்லாமல் கழிவுநீர் சுத்திகரிப்புப் பணிகளில் ஈடுபடுவது 2013-ம் ஆண்டு முதலே தடை செய்யப்பட்டிருந்தாலும் 2013 முதல் 2018 வரை இந்தப் பணியில் ஈடுபடும் மரணங்கள் மூன்று மடங்காக அதிகரித்திருப்பதாக ‘தி வயர்’ இணையதளம் மேற்கொண்ட ஆர்.டி.ஐ. விசாரணையில் தெரியவந்துள்ளது.

படிக்க:
தலித்துகளின் உயிர்ப் பலி கேட்கும் சுவச்சு பாரத் !
♦ தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !

♠ ♠ ♠ 

போர்த்தளவாட தொழிற்சாலை பணியாளர்கள் வேலை நிறுத்ததை திரும்பப் பெற்றனர்:

41 பாதுகாப்பு உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியாற்றும் 82 ஆயிரத்துக்கும் அதிகமான பொது பணியாளர்கள் ஆகஸ்டு 20-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய இருந்ததை திரும்பப் பெற்றுக் கொண்டனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அரசு வாக்குறுதி அளித்ததை அடுத்து வேலை நிறுத்தம் கைவிடப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு உற்பத்தி தனியார்மயமாக்கப்படும் நிலையில் தங்களுடைய உரிமைகள் பறிபோகும் என தொழிலாளர்கள் கவலையுற்றிருக்கிறார்கள்.

♠ ♠ ♠ 

விரிவுபடுத்தப்பட்ட தொழிலாளர் திட்டத்தை வெளியிட்டார் பெர்னி சாண்டர்ஸ் :

“பெர்னி சாண்டர்ஸ் அமெரிக்க தொழிலாளர் சட்டத்தை அடிப்படையில் மாற்றியமைக்க விரும்புகிறார். தொழிலாளர்களின் உரிமைகளை விரிவுபடுத்துவதற்கும் ஒழுங்குபடுத்தி, வேலைநிறுத்தம் செய்வதற்கும் துறைசார்ந்து பேரம் பேசுவதற்கும் ஒரு புதிய அமைப்பை நிறுவுவதன் மூலமும் அதை செய்ய நினைக்கிறார்” என ப்ளூம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

Berniesandersஊதியம், சிறப்பு பயன்கள், பணிச் சூழல் ஆகியவற்றில் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ‘பணியிடத்தில் ஜனநாயக திட்டம்’ என்ற பெயரில் தனது இணையதளத்தில் பெர்னி சாண்டர்ஸ் அந்தத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் தொழிற்சங்க இயக்கத்தை புத்துயிர் பெறச் செய்யாவிட்டால், இந்த நாட்டின் நடுத்தர வர்க்கம் வளர வாய்ப்பில்லை. மில்லியன்கணக்கான தொழிலாளர்களுக்கு விரும்பியதைச் செய்ய வாய்ப்பளிக்க வேண்டும், அவர்கள் தொழிற்சங்கங்களில் சேர அனுமதிக்கப்பட வேண்டும்” என பெர்னி ஒரு நேர்க்காணலில் தெரிவித்துள்ளார்.

– அனிதா

தொழிலாளர் தொடர்பான மேலதிக செய்திகளை வாசிக்க :
♦ The Life of Labour: Migrant Workers in Kashmir Leave, 5 Die in Ghaziabad Sewer

கால்கள் அற்றவன் நடனம் கற்றுக்கொடுக்கச் சொல்கிறான் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 03

தெள்ளத் தெளிந்த ஆகஸ்டு மாத நண்பகல். அமைதி கொலுவீற்றிருந்தது. இயற்கையில் எல்லாம் மெருகேற்றப்பட்டுப் பளிச்சிட்டன. ஆயினும் இந்தத் தளதளப்பு வாடிவிடும் என்ற உள்ளார்ந்த துயரத்தை இன்னும் புலப்படாத எவையோ அறிகுறிகளால் வெதுவெதுப்பான காற்றில் இப்போதே உணர முடிந்தது. புதர்களுக்கு இடையே வளைந்து நெளிந்து சென்ற ஓடை போன்ற சிற்றாற்றின் சிறு மணற்கரையில் அந்த நண்பகலில் வெயில் காய்ந்து கொண்டிருந்தார்கள் சில விமானிகள்.

வெக்கையினால் சோர்ந்து அவர்கள் உறங்கி வழிந்தார்கள். களைப்பறியாத புர்நாஸியான்கூட, காயத்துக்குப் பின் சரியாகப் பொருந்தாத தனது ஊனமுற்ற காலைக் கதகதப்பான மணலில் புதைத்த வண்ணம் மெளனமாயிருந்தான். வெளியார் பார்வையில் படாமல் சாம்பல் நிறக் கொட்டை மர இலைகளின் மறைவில் அவர்கள் படுத்திருந்தார்கள். ஆனால் புல்லில் நீண்டு சென்றிருந்த ஒற்றையடிப் பாதை அவர்களுக்குத் தெரிந்தது. தனது காலுடன் சீராடிக் கொண்டிருந்த புர்நாஸின் தன்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு காட்சியை அந்தப் பாதையில் கண்ணுற்றான்.

ஆரோக்கிய நிலையத்துக்கு முந்திய நாள் வந்த இளைஞன் கோடிட்ட பைஜாமாக் காற்சட்டையும் பூட்சுகளும் அணிந்து சட்டை போடாமல் திறந்த மேனியாகச் சோலையிலிருந்து வெளிப்பட்டான். சுற்றும் முற்றும் கண்ணோட்டினான். எவரும் பார்வையில் படவில்லை. திடீரென அவன் முழங்கைகளை விலாக்களில் சேர்த்துப் பொருத்தியவாறு விந்தையாகத் துள்ளி ஓடத் தலைப்பட்டான். ஓர் இருநூறு மீட்டர்கள் ஓடிய பின், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்ட, நடக்கத் தொடங்கினான். சற்று இளைப்பாறிய பிறகு மறுபடி ஓடினான். ஓட ஓட விரட்டப்பட்ட குதிரையின் விலா போன்று அவனுடைய மேனி பளபளத்தது. புர்நாஸின் ஒன்றும் பேசாமல் தன் தோழர்களுக்கு ஓடுபவனைச் சுட்டிக் காட்டினான். புதர் மறைவிலிருந்து அவர்கள் அவனைக் கவனிக்கலாயினர். சிக்கலற்ற இந்த உடற்பயிற்சியால் புதியவனுக்கு மூச்சு திணறிற்று, அவன் முகம் வலியினால் சுளித்தது. சில வேளைகளில் அவன் முனகினான், எனினும் மேலும் மேலும் ஓடிய வண்ண மாயிருந்தான்.

“யார் இந்த சர்கஸ்காரன்? மூளை புரண்டவனா?” என்று விளங்காமல் வினவினான் புர்நாஸியான்.

தூக்கத்திலிருந்து அப்போதுதான் விழித்துக்கொண்ட மேஜர் ஸ்த்ருச்கோவ் விளக்கினான்:

“அவனுக்குக் கால்கள் இல்லை. பொய்க்கால்களில் பயிற்சி செய்கிறான். சண்டை விமானப்படைக்குத் திரும்ப விரும்புகிறான்.”

இதைக் கேட்டதும், சோர்ந்திருந்த அந்த ஆட்களுக்குக் குளிர் நீரை மேலே கொட்டியது போல் இருந்தது. அவர்கள் துள்ளி எழுந்தார்கள், ஏக காலத்தில் பேச ஆரம்பித்தார்கள். விந்தையான நடையைத் தவிர வேறு எதையும் தாங்கள் எவனிடம் காணவில்லையோ அந்த இளைஞன் கால்கள் இல்லாதவன் என்ற சேதி எல்லோரையும் பெரு வியப்பில் ஆழ்த்தியது. கால்கள் இல்லாமல் சண்டை விமானத்தை ஓட்டுவது என்ற அவனது எண்ணம் அசட்டுத்தனமாக, நம்ப முடியாததாக, துடுக்கானதாகக்கூட அவர்களுக்குப் பட்டது. கை விரல்கள் இரண்டை இழந்ததற்காக, நரம்புக் கோளாறுக்காக, அல்லது தட்டைப் பாதங்களுக்காக, இவை போன்ற அற்ப விஷயங்களுக்காக ஆட்கள் விமானப்படையிலிருந்து விலக்கப்பட்ட நிகழ்ச்சிகளை அவர்கள் நினைவுபடுத்திக் கொண்டார்கள். விமானிகளின் உடல்நலம் எப்போதுமே, போர்க்களத்தில் கூடக் கடினமான நிபந்தனைகளின் படி பரிசோதிக்கப்பட்டது. இந்த நிபந்தனைகள் மற்ற பிரிவினரிடம் கோரப்பட்ட நிபந்தனைகளுடன் ஒப்பிடுகையில் அளவிட முடியாதபடி கடினமாயிருந்தன. தவிர, சண்டை விமானம் போன்ற நுட்பமான, துல்லியமான இயந்திரத்தைப் பொய்க்கால்களைக் கொண்டு இயக்குவது சற்றும் இயலாததாகத் தோன்றியது.

மெரேஸ்யெவின் எண்ணம் ஈடேறாது என்பதில் எல்லோரும் ஒத்த கருத்து கொண்டிருந்தார்கள்.

“உன் நண்பன் ஒன்று கடைத்தேற வகையற்ற மூடன் அல்லது மாபெரும் மனிதன். நடுத்தர நிலை அவனுக்குக் கிடையாது” என்று விவாதத்தை முடித்தான் புர்நாஸியான்.

சண்டை விமானம் ஓட்டுவதற்கு ஆசைப்படும் கால்களற்ற மனிதன் ஒருவன் ஆரோக்கிய நிலையத்தில் தங்கியிருக்கும் செய்தி கணப்போதில் எல்லா அறைகளுக்கும் பரவிவிட்டது. மதியச் சாப்பாட்டு வேளைக்குள் அலெக்ஸேய் எல்லோருடைய கவனத்துக்கும் நடுநாயகமாக விளங்கினான். ஆனால் இந்த விஷயத்தை அவன் கவனிக்கவில்லை போலத் தோன்றியது. சாப்பாட்டு மேஜையில் அக்கம் பக்கத்தவர்களுடன் அவன் கலகலவென்று சிரித்துப் பேசினான், ஆர்வத்துடன் நிறையச் சாப்பிட்டான், வனப்பு வாய்ந்த பரிசாராகிகளுக்கு வழக்கப்படி கணக்காகப் பாராட்டுரைகள் பகர்ந்தான், தோழர்களுடன் பூங்காவில் உலாவினான், மரப்பந்து ஆடக் கற்றுக்கொண்டான், வாலிபால் கூட விளையாடினான். இவற்றை எல்லாம் கண்டு, கேட்டவர்கள் விரைவற்ற துள்ளுநடை தவிர வேறு எதுவும் அசாதாரணமானது அவனிடம் இருப்பதாக நினைக்கவில்லை. அவன் மிக மிகச் சாதாரணமான ஆள். ஜனங்கள் எடுத்த எடுப்பிலேயே அவனுக்குப் பழக்கமாகிவிட்டார்கள், அவன் மீது கவனம் செலுத்துவதை நிறுத்தி விட்டார்கள்.

பொய்க்கால்களைத் தன் விருப்பத்துக்குக் கீழ்படிய வைத்துவிட்டான் அவன்.
புதிதாகக் கற்றுத் தேர்ந்த
ஒவ்வொரு ஜதிவரிசையும்
அவனுக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளித்தது.
ஒவ்வொரு பதிய அடிவைப்பும் சிறுவன் போன்று
அவனுக்குக் களிப்பூட்டியது.

ஆரோக்கிய நிலையத்துக்கு வந்த இரண்டாம் நாள் பிற்பகலில் அலெக்ஸேய், அலுவலகத்தில் ஸீனாவிடம் போனான். சடங்கு பாராட்டாமல் மேஜையருகே உட்கார்ந்து, அவள் தனது வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறாள் என்று கேட்டான்.

“எந்த வாக்குறுதி?” என்று விற் புருவங்களை உயர நிமிர்த்தி வினவினாள் ஸீனா.

“எனக்கு நடனமாடக் கற்றுத்தருவதாக நீங்கள் வாக்குறுதி அளித்தீர்கள்.”

“ஆனால்…” என்று மறுதலிக்கப் பார்த்தாள் அவள்.

“நீங்கள் கற்பிப்பதில் பெருத்த திறமைசாலி என்று சொன்னார்கள். கால்கள் இல்லாதவர்கள் உங்களிடம் நடனம் ஆடுவார்களாம், மாறாக, சாதாரணமானவர்கள் கார்களை மட்டுமல்ல, இதயத்தையே பறிகொடுத்து விடுவார்களாம், பேத்யாவைப் போல. எப்போது தொடங்குவோம்? வீணாக நோத்தைக் கழிக்க வேண்டாம், சொல்லுங்கள்.”

இந்தப் புது ஆள் நிச்சயமாக அவளுக்குப் பிடித்து விட்டான். கால்கள் அற்றவன், நடனம் கற்றுக்கொடுக்கச் சொல்கிறான்! ஏன் கற்றுக் கொடுக்கக் கூடாது?

ஸீனாவின் வாழ்க்கையில் நடனம் முக்கியமான பெரிய இடத்தைப் பெற்றிருந்தது. நடனத்தில் அவளுக்கு விருப்பம், நடனமாடுவதில் உண்மையான தேர்ச்சி பெற்றிருந்த அவள். விஷயத்தை வளர்ப்பானேன்? அவள் இசைந்து விட்டாள். இதற்கு அவள் கடுமையான நிபந்தனைகள் விதித்தாள்: அவன் கீழ்ப்படிவுடன் பாடுபட்டுக் கற்க வேண்டும்; அவள் மேல் காதல் கொண்டுவிடாமலிருக்க முயல வேண்டும். ஏனெனில் காதல் கற்பிப்பதற்கு இடைஞ்சலாக இருக்கும். முக்கியமானது என்னவென்றால், மற்ற இளைஞர்கள் அவளை நடனமாட அழைக்கும் போது அவன் பொறாமைப்படக் கூடாது, ஏனெனில் ஒருவனோடு மட்டுமே நடனமாடினால் விரைவிலேயே அவள் தகுதியற்றவளாகக் கருதப்பட்டு விடலாம், மொத்ததில் இது சலிப்பூட்டுவது.

மெரேஸ்யெவ் இந்த நிபந்தனைகளை மறுப்பின்றி ஏற்றுக் கொண்டான். ஸீனா தனது தீக்கொழுந்துக் கூந்தலைச் சிலுப்பிச் சரிப்படுத்திக் கொண்டு, வடிவமைந்த சிறு கால்களை லாவகமாக அசைத்தவாறு அலுவலகத்திலேயே முதல் நடன அடிவைப்பை அவனுக்குக் காட்டினாள். ஒரு காலத்தில் மெரேஸ்யெவ் “ருஷ்ய” நடனத்தையும் பழைய நடனங்களையும் நன்றாக ஆடியதுண்டு. நெருப்பணைக்கும் பழைய வாத்தியக் குழு கமிஷின் நகரப் பூங்காவில் வாசிக்கும் இசைகளுக்கு ஏற்ப அவன் ஆடுவான். லயஞானம் அவனுக்கு இருந்தது. எனவே விரைவில் இந்தக் களிமிக்க கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டான். இப்போது அவனுக்கு ஏற்பட்ட சிரமம் எல்லாம், மீள் விசையும் துடிப்பும் கொண்ட உயிருள்ள கால்களால் அல்ல, வார்களால் முழங்கால்களுடன் அணைக்கப்பட்டிருந்த தோல் சாதனங்களின் உதவியால் லாவகமாகவும் பல திருப்பங்களுடனும் பயிற்சி செய்ய வெண்டியிருந்ததுதான். முழங்கால்களின் அசைவால், கனத்த, பாங்கற்ற பொய்க்கால்களை உயிர்த்து இயங்கச் செய்வதற்கு அமானுடப் பிரயாசையும் தசைகளின் இறுக்கமும் சித்தவுறுதியும் தேவைப்பட்டன.

பொய்க்கால்களைத் தன் விருப்பத்துக்குக் கீழ்படிய வைத்துவிட்டான் அவன். புதிதாகக் கற்றுத் தேர்ந்த ஒவ்வொரு ஜதிவரிசையும் அவனுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. ஒவ்வொரு பதிய அடிவைப்பும் சிறுவன் போன்று அவனுக்குக் களிப்பூட்டியது. அதைக் கற்றுத் தேர்ந்ததும் அவன் தன் ஆசிரியையைத் தூக்கித் தட்டாமாலை சுற்றத் தொடங்குவான். தன்மீதே தான் அடைந்த வெற்றிக்காக பெருமைபடுவான். சிக்கலான, வெவ்வேறு தன்மைகள் கொண்ட இந்தக் குதிப்புகள் அவனுக்கு எவ்வளவு வலி உண்டாக்கின, இந்தக் கலையைப் பயில்வதற்கு அவன் எத்தகைய விலை செலுத்த வேண்டியிருந்தது என்பதை யாருமே, முக்கியமாக அவனுடைய ஆசிரியை ஊகிக்கவே முடியவில்லை. சில வேளைகளில் அவன் முகத்து வியர்வையுடன் கட்டுக் கடங்காது மல்கிய கண்ணீரையும் அலட்சியமான கைவீச்சுடன் புன்னகை செய்தவாறு துடைத்துக் கொண்டதை ஒருவரும் கவனிக்கவில்லை.

படிக்க:
காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !
கேள்வி பதில் : தேவேந்திர குல வேளாளர் – பட்டியல் வெளியேற்ற கோரிக்கை !

ஒரு தடவை அவன் ஒரேயடியாகக் களைத்துச் சோர்ந்து, அதே சமயம் குதூகலம் பொங்க அறைக்குள் தத்திக் குதித்து வந்தான். அங்கே மேஜர் ஸ்த்ருச்கோவ் ஜன்னல் அருகே ஏதோ எண்ணத்தில் ஆழ்ந்தவராக நின்று கொண்டிருந்தார். வெளியே கோடைப் பகல் மெதுவாக முடிந்து கொண்டிருந்தது. கதிரவனின் கடைசிக் கிரணங்கள் மரமுடிகளுள் ஊடாக மஞ்சள் பொறிகளைச் சிதறின.

“நடனமாடக் கற்றுக்கொள்கிறேன்!” என்று மேஜரிடம் வெற்றிக் குரலில் அறிவித்தான் மெரேஸ்யேவ். மேஜர் ஒன்றும் பேசவில்லை. மெரேஸ்யெவ் அப்பாடாவென்று பொய்க் கால்களைக் கழற்றி வைத்துவிட்டு, வார்களின் இறுக்கத்தால் இரத்தங்கட்டிப் போயிருந்த கால்களை நகங்களால் அழுத்திப் பறண்டியவாறே, “கற்றுத் தேர்ந்துவிடுவேன், கட்டாயமாக!” என்று பிடிவாதத்துடன் மொழிந்தான்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை