சென்ற வாரம் “உங்கள் விருப்பம்” தலைப்பில் பல நண்பர்களும் தாங்கள் எடுத்த படங்களை அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு எமது நன்றிகள். இந்த வாரம் உங்கள் தலைப்பு “பொங்கல் – விவசாயம்”.
பொங்கல் காலத்தில் நீங்கள் பார்க்கும் விவசாயக் காட்சிகள் – பயிர், கரும்பு, மஞ்சள், காய்கள் – நிலங்கள், தோட்டங்கள், இவற்றின் நிலவியல் காட்சிகள், நிலவியலோடு மக்கள் காட்சிகள், பொங்கலுக்கான கிராம நகர சந்தைகள், ஒரு வீட்டில் கொண்டாடப்படும் பொங்கல் காட்சிகள், கோலங்கள், கிராம அளவிலான போட்டிகள், மாட்டுப் பொங்கல், மாடுகள், போன்றவற்றினை அனுப்பலாம்.
கஜா புயலால் நிலைகுலைந்திருக்கும் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு பொங்கல் கண்டிப்பாக மகிழ்ச்சியான விழாவாக இருக்காது. சோகத்தில் சிக்கியிருக்கும் அப்பகுதி மக்கள் – கிராமங்களையும், கஜா புயலுக்கு பிறகான இன்றைய காட்சிகளையும் படம் பிடிக்கலாம்.
பொங்கல் காலத்தில் நமது விவசாயத்தை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்கு ஒரு நல்ல காட்சி கிடைக்கும்.
வாழ்த்துக்கள்!
புகைப்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 17-1-2019
வினவு மின்னஞ்சல் vinavu@gmail.com அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணிற்கு (91) 97100 82506 புகைப்படங்களை அனுப்புங்கள். புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், நாள், அது குறித்த விவரங்கள் கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும் வெளியிடப்படும். அடுத்த வாரம் இன்னொரு தலைப்பு ! காத்திருக்கிறோம். நன்றி!
நட்புடன்
வினவு
புகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:
♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.
♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எடுக்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.
♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.
♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.
♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.
♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.
♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.
♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இருப்பது சிறப்பு.
♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.
♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.
♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.
♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் மிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).
புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
இந்தப் புத்தகத்தை புத்தகக் கண்காட்சி துவங்குவதற்கு முன்பே வாங்கிவிட்டேன். கிட்டத்தட்ட படித்து முடிக்கப் போகிறேன்.
பொருளாதாரம் குறித்து எழுதப்படும் புத்தகங்களை இதைவிட எளிதாக எழுதுவது மிகக் கடினம்.
நாட்டையே தெருவில் நிறுத்திய பண மதிப்பழிப்பு நடவடிக்கை குறித்து வெகுமக்களுக்காக எழுதப்பட்ட மிகச் சிறந்த புத்தகமாக இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம்.
புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த இந்த நடவடிக்கையினால், அமைப்புசாரா தொழில்துறையில் இருந்த கோடிக்கணக்கான இந்தியர்கள் எப்படி நடுத்தெருவுக்கு வந்தார்கள், விவசாயிகளும் வர்த்தகர்களும் எப்படி கடுமையான சிரமத்திற்கு உள்ளானார்கள். சிறிய, நடுத்தரத் தொழில்கள் நாசமாகிப்போயின என்று எளிய ஆங்கிலத்தில் விளக்குகிறார் மீரா சன்யால்.
உலகம் முழுவதும் எந்தெந்த நாடுகளில் எல்லாம் இதற்கு முன்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடந்திருக்கிறது, அவை பலனளிக்காமல் போனது, இந்தியாவில் இதற்கு முந்தைய பண மதிப்பிழப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்று ஒரு சுவாரஸ்யமான களஞ்சியம் இந்தப் புத்தகம்.
புள்ளிவிவரம், ஆய்வு, தகவல்கள், வரலாறு எல்லாம் ஒருங்கிணைந்த இந்தப் புத்தகம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஏன், எதற்காக, எப்படிச் செயல்படுத்தப்பட்டது என்று விளக்குகிறது.
புத்தகத்தை எழுதிய மீரா சன்யால், இந்தியாவின் சிறந்த வங்கி அதிகாரிகளில் ஒருவர். ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்தின் சிஇஓவாக இருந்தவர். பொருளாதார கொள்கைகளுக்கான தேசியக் கமிட்டியின் உறுப்பினர்.
A must read!!
ரூ. 600 விலையுள்ள புத்தகம் அமேசானில் 335 ரூபாய்க்கு கிடைக்கிறது!
ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்…. தமிழக அரசே.…. மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக கடந்த டிசம்பர்- 30 அன்று நடைபெற்ற அரங்கக் கூட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் ஆற்றிய உரை.
உண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டத்தின் ஆட்சி இங்கே நடைபெறுகிறதா? இல்லை. இங்கே நடப்பது கிரிமினல் கும்பல்களின் ஆட்சி. கஜா புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள வெறும் 12,000 ரூபாய்க்கு தன் மகனை மாடு மேய்க்க கொத்தடிமையாக விற்றதை கேள்விப்பட்டு தோழர்களை விசாரிக்க அனுப்பிய போது அந்த விவசாயி என்னிடம் எதுவுமே மிஞ்சவில்லை புயலிற்கு பிறகு பல நேரங்களில் குடும்பமே பட்டினியில்தான் இருக்கிறது. அரசின் நிவாரணம் எதுவுமே கைக்கு முறையாக வரவில்லை. என்னுடைய மகன் அங்கே வேலை பார்த்தாலாவது மூன்று வேளை சோறு சாப்பிடுவான் என்கிறார்.
ஆனால், இதே வேளையில் இ.பி.எஸ் – ஓ.பி.எஸ். இருவரும் சோடியாக சேர்ந்து அருகே திருச்சிக்கு காது குத்து நிகழ்வில் பங்கு கொள்கின்றனர். செருப்பை கழட்டி இவர்களை அடித்தாலென்ன என்ற கேள்வி எனக்குள் எழுகிறது. நாடு முழுவதும் பாராட்டப்பட்ட தமிழக சுகாதார துறை இன்று எய்ட்ஸ் பரப்பும் துறையாக மாறியுள்ளது. எனக்கு இதுவே மருத்துவ துறையை தனியார் மயமாக்கும் சதியோ என்று தோன்றுகிறது.
சத்துணவு திட்டத்தை ஊத்தி மூடுவதற்கு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. எண்ணிக்கை குறைவு என்பதை காரணம் காட்டி 13 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது அரசு. அதே சமயம் சாகர்மாலா, சேலம் எட்டு வழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் என்று தமிழகத்தை கார்ப்பரேட் மண்டலமாக்க திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஆளும் வர்க்கம். ஸ்டெர்லைட் வழக்கை விசாரித்த முறையிலிருந்தே இதை நீங்கள் பார்க்கலாம். இந்த வழக்கில் எதிர்தரப்பில் யாரையும் வாதாட அனுமதிக்காமல் மக்களிடமும் கிராமத்திலும் எந்த ஆய்வையும் செய்யாமல் ஒரு தரப்பாக தீர்ப்பு எழுதப்பட்டது. இதில் நிறுவனத்தின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழகத்தை சேர்ந்த நீதிபதிகளை விசாரிக்க விடாமல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதியாமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட், பசுமை தீர்ப்பாயம் என்று சென்று ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக தீர்ப்பு வருவதே இந்த அரசின் கார்ப்பரேட் சார்புக்கு ஒரு சாட்சி.
இன்னொரு புறம் இது இந்த கட்டமைப்பின் தோல்வி. எல்லா அரசுத் துறைகளும் பெரு நிறுவனங்களுக்கு சார்பாக நடக்கும் அளவிற்கு வந்து விட்டது. தேர்தல் அரசியல் கட்சிகள் கூட சம்பிரதாயமாக ஒரு மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரும் அளவிற்கு அதன் கட்டமைப்பிலும் மாற்றம் வந்துள்ளது. அதே சமயம் இத்தகைய திட்டங்களுக்கு எதிராக போராடும் எந்த அமைப்பையும் அவர்கள் போராட விடுவதில்லை. குறிப்பாக எங்களுடைய மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு எந்த மாவட்டங்களிலும் போராடவோ கருத்தரங்கம் நடத்தவோ அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த அரங்கத்தை அளித்தவர்களுக்கு இதற்காகவே நாம் குறிப்பாக நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளோம்.
நான் போலீசின் இத்தகைய அணுகுமுறையை நேரடியாக சென்னை டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு சென்றே கேட்டேன். அவர் மற்றவர்கள் எல்லாம் வேறு நீங்கள் வேறு. உங்களுக்கு அனுமதி அளிப்பது கடினம்தான். அது என்ன மக்கள் அதிகாரத்திற்கு மட்டும் சிறப்பு அணுகுமுறை? நமக்கு தெரியவில்லை. ஆனால், இந்த அரசு கட்டமைப்பில் மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு இல்லை. அதை இந்த அரசே நினைத்தாலும் கொடுக்கமுடியாது.
அதனால் மக்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது மற்றும் அரசை நிர்பந்திக்ககூடிய, தங்களை காத்துக்கொள்ளும் வகையில் ஜல்லிக்கட்டை போல் திரளான போராட்டங்களை கட்டமைப்பை உருவாக்கி வளர்ப்பது மட்டும்தான் ஒரே தீர்வு என்று மக்கள் அதிகாரம் கூறுகிறது. அதை மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ளார்கள். கட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்றும், பெரு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு போராட்டத்தை கட்டி எழுப்ப தேர்தலில் பங்கேற்க கூடிய எந்த அரசியல் கட்சிகளையும் அவர்கள் நம்ப தயாராக இல்லை.
எனவே அதிகாரத்தை மக்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்கின்ற நிலை உருவாகியுள்ளது.
மேலே சொன்ன கட்டுரைகளை எழுதிய அதே கட்டுரையாளர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு இரு தரப்புக்கும் இடையே சுங்க மற்றும் ஒற்றைச் சந்தை தொடர்பாக எத்தகைய உடன்பாடு இருக்க வேண்டும் என்பதில தொடரும் இழுபறி குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் உயர் பதவியில், செல்வாக்குடன் பணி புரிந்த ஒரு மேனேஜர் அந்த வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்து விட்ட பிறகு, வெளியில் அதற்கு இணையான செல்வாக்குடனும், வசதிகளுடனும் வேறு வேலை கிடைக்காமல் தவிப்பதுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே.
கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் கார்ப்பரேட் உலகமயமாக்கலின் விளைவான வேலை வாய்ப்பின்மை, வேலை இழப்புகள், பொது சேவைகள் ரத்து இவற்றை எதிர்த்து உழைக்கும் வர்க்கம் போராடுகிறது. அதற்கு தீர்வாக இனவாத, மதவாத அரசியலை முன் வைக்கும் கட்சிகள் உழைக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு ஈட்டுகின்றன. அத்தகைய ஒரு நிகழ்வில், 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற ஒரு கருத்துக் கணிப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது 51.9% வாக்குகளை பெற்றது.
ஆனால், ஸ்காட்லாந்தில் 62% வாக்காளர்கள் வெளியேறுவதை எதிர்த்தனர், வட அயர்லாந்தில் 55.8% எதிர்த்து வாக்களித்தனர். கார்ப்பரேட்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சிகளோ தொடர்ந்து உலகமயமாக்கல் கொள்கைகளை ஆதரிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதை உறுதி செய்ய விரும்புகின்றன. இந்த இழுபறியின் ஒரு வெளிப்பாடாக பிரெக்சிட் தொடர்பான நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.
அட்லாண்டிக் பெருங்கடலின் மறு பக்கத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக டிரம்ப் கார்ப்பரேட் உலக மயமாக்கலை கேலிக் கூத்தாக்கி வருகிறார். உலக வங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் வழிகாட்டலில் அமல்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கி, முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதை இவை காட்டுகின்றன.
முதலாளித்துவ உலகம் இதை விவாதிக்க மட்டும் செய்கிறது. இதற்கான தீர்வு பாட்டாளி வர்க்க சித்தாந்தத்திலும், பாட்டாளி வர்க்க அரசியலிலும்தான் உள்ளது.
பிரெக்சிட் – ஒரு சொதப்பலான கேரியர் (பணி வாழ்வு) நகர்வு
ஐரோப்பிய ஒன்றியம் (EU) பிரிட்டனைக் கொடுமைப்படுத்துவதாகவும் தண்டிப்பதாகவும் மிக அதிகமாக கூச்சலிடுபவர்கள் மத்தியில் சுதந்திர சந்தையை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்பவர்களும் உள்ளனர். இது கொஞ்சம் வேடிக்கையானதுதான். ஏனெனில், பிரெக்சிட் என்பதே பிரிட்டன் தனது சந்தை வலிமையையும் செல்வாக்கையும் நடைமுறையில் சோதித்து பார்ப்பதற்கான நடவடிக்கைதான். அந்த சோதனையின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் நம்மை அலட்சியப்படுத்துகிறது என்றால் சுதந்திர சந்தை விதிப்படி அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்
பிரெக்சிட்-ஐ நோக்கி நம்மை வழிநடத்திச் சென்றவர்கள், “பிரிட்டன் ஒரு பெரிய சக்தி, உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பை விட்டு வெளியேறுவது உண்மையில் நமக்கு இன்னும் அதிக நன்மைகளை கொண்டு வரும்” என்று உறுதி அளித்தனர். அதாவது, “நமக்கு ஏற்கனவே கிடைத்து வரும் நன்மைகளை தொடர்ந்து பெறுவோம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள மற்ற நாடுகள் நம்முடன் வர்த்தக உடன்படிக்கைகள் செய்து கொள்ள அதிக ஆர்வம் காட்டும்; ஐரோப்பிய ஒன்றியமோ தனது மிகப்பெரிய உறுப்பினர்களில் ஒன்றான பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டு அஞ்சி, பிரிட்டனுக்கு மிகச் சாதகமான ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்” என்றெல்லாம் ஆசை காட்டினார்கள்.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், நடப்பவை அவர்கள் எதிர்பார்த்தது போல இல்லை. இந்த வாரம் அடுத்தடுத்த வெளிவந்த செய்தி அறிக்கைகள் கூறுவது போல, பிரெக்சிட் எந்த வழியில் அமல்படுத்தப்பட்டாலும் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தபோது இருந்ததை விட மோசமான நிலைக்குத்தான் பிரிட்டனைத் தள்ளும்.
பிரெக்சிட்-டுக்கு பிறகு பிற நாடுகளுடன் போட்டுக் கொள்ளும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மிகச் சிறிய அளவு மாற்றத்தையே கொண்டு வரும் என்று பிரிட்டன் கருவூலத்துறையின் (Treasury) பிரெக்சிட் பற்றிய பகுப்பாய்வில் மிக வெளிப்படையாகவே காட்டப்பட்டுள்ளது. நாம் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கு சாத்தியமான நாடுகள் பற்றிய மிகச் சாதகமான அனுமானங்களின்படியே கூட அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படுத்தப் போகும் அதிகரிப்பு 0.2 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த அதிகரிப்பு ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உராய்வுகளினால் ஏற்படவிருக்கும் இழப்புக்களை சிறிதளவு கூட ஈடுகட்டப் போவதில்லை.
பிரெக்சிட்டுக்கான அனைத்து பாதைகளும் மோசமாக இருக்கின்றன; ஐரோப்பிய ஒற்றை சந்தையிலிருந்தும் சுங்க ஒன்றியத்திலிருந்தும் நாம் எவ்வளவு தூரம் விலகிப் போகிறோமோ அவ்வளவு தூரம் நிலைமை மோசமாக இருக்கும். பிரெக்சிட் ஆதரவாளர்கள் நம்மிடம் பிரச்சாரம் செய்து நம்ப வைத்ததை விட வெளியுலகம் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.
“இது நியாயமில்லை, ஐரோப்பிய ஒன்றியம் நாஜிகளைப் போல நடந்து கொள்வதோடு, ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக பிரிட்டனை தண்டிக்கிறது” என்றெல்லாம் பேசுபவர்கள், தனக்கு இதைவிட நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, வேலையை ராஜினாமா செய்த ஒருவர் தான் எதிர்பார்த்த, தனக்குக் கிடைத்தே ஆக வேண்டும் என்று விரும்பிய, நல்ல வேலை கிடைக்கா விட்டால் குழந்தைத்தனமாக புலம்புவதை போல நடந்து கொள்கின்றனர்.
என்னுடைய அனுபவத்தில் இத்தகைய நபர்கள் பலரை நான் அறிவேன். வேலையை விடும் அவர்களின் முடிவு பெரும்பாலும் சொதப்பலாகவே முடிகிறது. பெரும்பாலானவர்கள் புற உலக யதார்த்தத்தை பார்த்து பெரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பது என்னவென்றால், அவர்கள் வாங்கி வந்த சம்பளத்தின் ஒரு பகுதி ஒரு பெருநிறுவன (கார்ப்பரேட்) அமைப்பின் ஒரு பகுதியாக செயல்படுவதற்கானதாகும். ஒரே நிறுவனத்தில் சிறிது காலமாக வேலை செய்தால், அவர்களின் வளர்ச்சியின் ஒரு பகுதி அந்த நிறுவன நடைமுறைகளைப் பற்றிய அவர்களது அறிவையும் அதற்குள் வேலை செய்வதற்கான அவர்களின் திறமையையும் அடிப்படையாகக் கொண்டது.
மற்றவர்கள் அவர்ளுக்கு கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் அவர்களின் கார்ப்பரேட் பதவியை அடிப்படையாகக் கொண்டது. பிற நிறுவனங்களின் உயர் பதவி வகிப்பவர்கள் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குகின்றனர்; அவர்கள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்கிறார்கள்; கருத்தரங்குகளில் எல்லோரும் அவர்களுடன் பேச முயற்சிக்கிறார்கள். இவை எல்லாம் “ஆள் திறமையானவர்” என்பதால் இல்லை, மாறாக அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் செல்வாக்கினால் கிடைப்பவை.
கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்து விட்டு தனிப்பட்ட முறையில் வேலை செய்ய போகிறவர்கள் அடிக்கடி இந்த அதிர்ச்சியை சந்திக்கிறார்கள். “பெரிய கார்ப்பரேட்” நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருக்கும் போது உங்களோடு தொடர்பை பராமரிக்க எல்லோரும் விரும்புகிறார்கள். “நானும் நண்பர்களும்” நிறுவனத்தின் எம்.டியாகவே நீங்கள் இருந்தாலும் அதே அளவிலான அங்கீகாரத்தை பெறுவது மிகவும் கடினம்.
எனவே, கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு வெளியேறிய நமது நிர்வாகி அவர் நினைத்தது போன்ற அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பது புற உலகில் கடினமாக இருப்பதை எதிர்கொள்கிறார்.
ஆனால், அவர் அந்த நிதர்சனத்தை உடனே ஏற்றுக் கொள்வதில்லை. தனது தகுதிக்கு பொருத்தமில்லாத வேலை வாய்ப்புகள் வழங்கும் முட்டாள்களை பற்றி அவர் குடித்து விட்டு புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். “என்னுடைய மதிப்பு இதை விட அதிகம்” என்று அவர் உளறுகிறார். “எனக்கு என் மதிப்பு என்னவென்று தெரியும். அதற்கு தகுந்த வேலை கிடைப்பது வரை நான் காத்திருப்பேன்.”
நாம் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளா விட்டாலும் பிரிட்டனின் இன்றைய மதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதோடு தொடர்புடையது என்பதை பிரெக்சிட் முயற்சி வெளிப்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருக்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றன. காமன்வெல்த் நாடுகள் கூட, பிரிட்டன் உடனான வர்த்தக உறவுகளை விட ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை வளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றன. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனென்றால், பொருளாதார ரீதியாக ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனை விட மிகப்பெரியது.
“நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால் உங்களது செல்வாக்கை இழக்க நேரிடும்” என்ற அவர்கள் நம்மை எச்சரிக்கத்தான் செய்தார்கள்.. ஆனால், அவர்களின் எச்சரிக்கையை நாம் புறக்கணிக்க முடிவு செய்தோம்.
இன்றும் பிரிட்டன் உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று என்பது உண்மைதான், ஆனால், அதன் மதிப்புக்கும் செல்வாக்கும் மேற்கத்திய இராணுவ கூட்டணி, ஆங்கிலம் பேசும் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை இணைக்கும் புள்ளியில் நாம் இருப்பது பெரும்பகுதி காரணமாக உள்ளது. இவற்றில் முக்கியமான ஒரு இடத்தை கைவிடுவது பிறருக்கு நம்முடனான உறவில் இருக்கும் அக்கறையை குறைப்பதில்தான் முடியும்.
பிரெக்சிட்டை வேலையை ராஜினாமா செய்து விட்டு புதிய வாய்ப்பை தேடுபவருடன் ஒப்பிடுவதை மேலும் தொடர்ந்தால் , இதுவரையில் கிடைத்த அனைத்து புதிய வாய்ப்புகளும் பழைய பதவியை விட மோசமாக இருக்கின்றன. எல்லாவற்றிலும் ஏற்கனவே இருந்த வேலையை விட குறைந்த ஊதியம், குறைந்த பாதுகாப்பு மட்டுமே கிடைக்கிறது.
தற்போது உள்ளதில் சிறந்த வழி பழைய முதலாளியிடமே திரும்பிச் சென்று, முன்பு வாங்கியதை விட குறைந்த ஊதியத்தில், காண்டிராக்டராக சேருவதுதான். மேல்மட்ட நிர்வாகக் குழுவில் ஏற்கனவே வகித்த இடம் கிடைக்காது. இன்னும் மோசமான நிலை என்னவென்றால், முன்பு தன்னை விட ஜூனியர் என்று கருதிய நபர்களின் உத்தரவுகளை ஏற்று செயல்பட வேண்டிய நிலையும் ஏற்படும்.
ஆனால், அந்த அளவு கூட நிலைமை மோசம் இல்லை. ஆச்சரியம் என்னவென்றால், அவருடைய பழைய நிறுவனம் இன்னும் அவர் வேலைவாய்ப்பை அப்படியே வைத்திருக்கிறது. அதே ஊதியம், பிற சலுகைகள், நிர்வாகக் குழுவில் இடம் ஆகியவற்றுடன் எப்போது வேண்டுமானாலும் திரும்பிச் செல்லலாம்.
ஆனால், அவர் திரும்பிச்செல்ல மாட்டார், ஏனெனில் அது அவரை ஒரு முட்டாளாகக் காட்டும். அவர் இன்னும் மதுக்கடையில் அமர்ந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கையையும், பேரம் பேசும் திறமையையும் வளர்த்துக் கொண்டால் அந்த மதிப்புமிக்க பெரும் வாய்ப்பு கூடிய விரைவில் தன்னை வந்தடையும் என்று அடித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அவரது நண்பர்கள் அவரது பேச்சுக்களை அனுதாபத்தோடு கேட்டு விட்டு அவருக்குப் பின்னல் கேலி செய்து விட்டு கடந்து போகிறார்கள்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நுண்கடன் நிறுவனங்களின் அட்டூழியம் தொடர்ந்து நடக்கிறது. வருமான ஆதாரங்கள் அத்தனையையும் இழந்த மக்களிடம் கடனைக் கட்டுமாறு மிரட்டுவது அவமானப்படுத்துவது உள்ளிட்ட வேலைகளை செய்து வந்தன இந்நிறுவனங்கள். இதனைப் பொறுக்க முடியாமல் மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இப்போராட்டங்களின் விளைவாக கடந்த டிசம்பர் மாதம் 22-ம் தேதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் 6 மாத காலத்திற்கு நுண்கடன்களை வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
ஆனாலும், கலெக்டர் உத்தரவை மதிக்காத தனியார் நுண்கடன் நிறுவனங்களும், தேசிய வங்கிகளும் கடனைக் கட்டச் சொல்லி தொடர்ந்து அடாவடியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் அரசின் 100-நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வரும் சம்பளப் பணத்திலேயே வங்கிகள் அதற்கான நுண்கடனுக்கான பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள்.
இதனை ஒட்டி மக்கள் அதிகாரம் அப்பகுதிகளில் அனைத்து கிராமங்களிலும் பரவலாக ”பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டாம்” என இது குறித்து பிரச்சாரம் செய்து வந்தது.
வங்கிகள் மற்றும் நுண்கடன் நிறுவனங்களின் தொடர் நெருக்குதல்களுக்கு ஆளாகி இருக்கும் மக்கள் குறிப்பாக பெண்கள் நூற்றுக்கும் அதிகமானோர் திரண்டு கடந்த 07-01-2019 அன்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர். அவர்களைத் தடுத்து உள்ளே விட அனுமதி மறுத்தது போலீசு. இதனைக் கண்டித்து பெண்கள் அனைவரும் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களின் இப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் அனைவரையும் கைது செய்தது போலீசு. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். போராட்டத்தில் முன்னிலை வகித்த 6 மக்கள் அதிகாரம் தோழர்களைத் தனியாக கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. தோழர்களில் நால்வரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்திருக்கிறது போலீசு.
1 of 6
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
சட்டப்படியான உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்திற்காக கைது செய்கிறார்கள் எனில் நாம் என்ன ஜனநாயக நாட்டிலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ?
தகவல் : மக்கள் அதிகாரம், திருவாரூர்.
தொடர்புக்கு : 96263 52829
மாக்சிம் கார்க்கிசமையலறைக் கதவை யாரோ ஓங்கித் தட்டுவதைக் கேட்டு, திடுக்கிட்டு விழித்தெழுந்தாள் தாய். கதவைத் தட்டியது யாரோ? எனினும் இடைவிடாது பலத்துத் தட்டிக் கொண்டேயிருந்தார்கள். சுற்றிச் சூழ இருளும் அமைதியும் நிலவியிருந்தன. கதவைத் தட்டும் அந்த பலத்த ஓசை இருளினூடே பயபீதியை நிரப்பியொலித்தது. தாய் அவசர அவசரமாக எதையோ எடுத்து உடுத்திக்கொண்டு சமையலறைக்குச் சென்றாள். கதவருகே ஒரு கணம் தயங்கினாள்.
”யாரது?” என்று கேட்டாள்.
“நான்தான்” என்றது ஒரு பழகாத குரல்.
“யார்?”
“கதவைத் திறவுங்கள்” என்று தணிந்த குரலில் வந்தது பதில்.
தாய் நாதாங்கியைத் தள்ளினாள்; கதவைக் காலால் தள்ளித் திறந்தாள். இக்நாத் உள்ளே வந்தான்.
”நான் இடம் தவறி வந்துவிடவில்லை” என்று உற்சாகத்தோடு கத்தினான் அவன்.
அவனது இடுப்புவரையிலும் சேறு தெறித்துப் படிந்திருந்தது. அவனது முகம் கறுத்து, கண்கள் குழி விழுந்து போயிருந்தன. அவனது தொப்பிக்குள்ளிருந்து எல்லாப் பக்கத்திலும் அவனது சுருட்டைத் தலைமயிர் துருத்திக்கொண்டு வெளிவந்திருந்தது.
”நாங்கள் அபாயத்திலிருக்கிறோம்” என்று கதவை அடைத்துக் கொண்டே ரகசியமாகச் சொன்னான் அவன்.
“எனக்குத் தெரியும்.”
அவள் கூறியதைக் கேட்டு அந்த வாலிபன் ஆச்சரியம் அடைந்தான்.
“உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று திருகத்திருக்க விழித்தவாறே கேட்டான் அவன்.
அவள் சுருக்கமாக விளக்கிச் சொன்னாள்.
“உன்னுடைய அந்த இரண்டு தோழர்களையும் கூட அவர்கள் கொண்டு போய்விட்டார்களா?”
”அவர்கள் அங்கில்லை. ஆஜர் கொடுக்கச் சென்றிருந்தார்கள். மிகயீல் மாமாவையும் சேர்த்து இதுவரை ஐந்து பேரைக் கொண்டு போய்விட்டார்கள்.”
அவன் ஆழ்ந்த பெருமூச்செடுத்தான், லேசாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்.
”நான் மட்டும் தப்பிவிட்டேன். இப்போது அவர்கள் என்னைத் தேடித் திரிந்து கொண்டிருப்பார்கள்.”
”நீ எப்படித் தப்பிவர முடிந்தது?” என்று கேட்டாள் தாய். அடுத்த அறையின் கதவு லேசாகத் திறந்து கிடந்தது.
”நானா?” என்று கூறிக்கொண்டே ஒரு பெஞ்சின் மீது உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்தான் இக்நாத். “அவர்கள் வருவதற்கு ஒன்றிரண்டு நிமிஷங்களுக்கு முன்னால், அந்தக் காட்டு ஷிகாரி நமது குடிசைக்கு ஓடி வந்து ஜன்னலைத் தட்டினான். ‘ஜாக்கிரதையடா, பயல்களா! அவர்கள் உங்களைத் தேடி வருகிறார்கள்’ என்று சொன்னான்.”
அவன் அமைதியாகச் சிரித்துக்கொண்டே முகத்தைக் கோட்டுத் துணியில் துடைத்துக்கொண்டான்.
“சரி. கடப்பாரையைக் கொண்டு தாக்கினாலும், மிகயீல் மாமாவைக் கொஞ்சங்கூட அசைக்க முடியாது. அவன் சொன்னான். ‘இக்நாத் சீக்கிரமே நகருக்கு ஓடிப் போய்விடு, அந்தப் பெரிய மனுஷியை உனக்கு ஞாபகமிருக்கிறதா?’ என்று சொல்லிக்கொண்டே ஒரு சீட்டு எழுதினான். ‘இதோ, இதை அவளிடம் கொண்டு போய்க் கொடு’ என்றான். எனவே நான் புதர்களின் வழியாக ஊர்ந்து ஒளிந்து வந்தேன். அவர்கள் வரும் சத்தம் கூட எனக்குக் கேட்டது. அந்தப் பிசாசுகள் நாலா திசைகளிலிருந்தும் சுற்றி வளைத்துப் பதுங்கி வந்தார்கள். எங்கள் தார் எண்ணெய்த் தொழிற்சாலையையே சூழ்ந்து வளைத்துக் கொண்டார்கள். நான் புதர்களுக்குள்ளேயே பதுங்கிப் பம்மிக் கிடந்தேன். அவர்கள் என்னைக் கடந்து அப்பால் சென்றார்கள். உடனே நான் எழுந்து வெளியே வந்து என்னால் ஆனமட்டும் ஓட்டம் பிடித்தேன். இரண்டு நாள் இரவிலும். ஒரு நாள் பகலிலுமாக நான் நிற்காமல் நடந்து வந்திருக்கிறேன்.”
நான் செய்த காரியத்தை எண்ணி அவனே திருப்திப்பட்டுக் கொள்வது தெளிவாகத் தெரிந்தது. அவனது கபில நிறக் கண்களில் களிப்புத் துள்ளாடியது; பெரிய சிவந்த உதடுகள் துடிதுடித்துக் கொண்டிருந்தன.
”சரி, நான் ஒரே நிமிஷத்தில் உனக்குத் தேநீர் தயார் செய்கிறேன்” என்று கூறிக்கொண்டே தேநீர் பாத்திரத்தின் அருகே சென்றாள் தாய்.
“இதோ அந்தச் சீட்டு”
அவன் மிகுந்த சிரமத்தோடு முணுமுணுத்துக்கொண்டும் வேதனையால் முகத்தை நெரித்துக்கொண்டும் தன் காலையெடுத்து பெஞ்சின் மீது போட்டான்.
நிகலாய் வாசல் நடையில் வந்து நின்றான்.
”வணக்கம். தோழா!” என்று கண்களைச் சுருக்கி விழித்தவாறே சொன்னான் அவன். “இருங்கள். நான் உங்களுக்கு உதவுகிறேன்.”
அவன் இக்நாதின் காலருகே குனிந்து காலுறைகளுக்குப் பதிலாக, காலில் சுற்றப்பட்டிருந்த அழுக்கடைந்த ஈரத் துணிகளை அவிழ்த்துவிட்டான்.
“புத்திசாலிகள் எங்கும்தான் இருக்கிறார்கள். தேவைதான் அவர்களை உருவாக்குகிறது. அவர்கள் அவரவர் இடத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சிரமமாயிருக்கிறது.”
“வேண்டாம்” என்று வியப்போடு கூறியவாறே அந்த வாலிபன் தன் காலை இழுத்துக்கொண்டே, தாயை அதிசயத்தோடு பார்த்தான்.
“அவனது கால்களை கொஞ்சம் ஓட்கா மது தடவித் தேய்த்துவிட வேண்டும்” என்று அவன் தன்னைப் பார்த்ததைக் கவனிக்காமலேயே கூறினாள் தாய்.
“ஆமாம்” என்றான் நிகலாய்.
கலக்கத்தால், கனைத்து இருமிக்கொண்டான் இக்நாத்.
நிகலாய் அந்தச் சீட்டை எடுத்தான். கசங்கியிருந்த அந்தச் சீட்டை நீட்டி நிமிர்த்தி தன் கண்களுக்கு அருகே கொண்டு போய் அதை வாசித்தான்.
”அம்மா! எங்கள் இயக்கத்தை நீ கவனிக்காமல் விட்டுவிடாதே. உன்னோடு வந்தாளே, அந்த நெட்டைப் பெண் அவளிடம் சொல்லி, எங்களது காரியங்களைப் பற்றி இன்னும் அதிகமாக எழுதச் சொல். போய் வருகிறேன். ரீபின்.”
நிகலாய் சீட்டை வைத்துக் கொண்டிருந்த கையை மெதுவாகத் தளரவிட்டான்.
“எவ்வளவு மகத்தானது!.” என்று அவன் முணுமுணுத்தான்.
தனது காலின் அழுக்கடைந்த விரல்களை ஜாக்கிரதையோடு தடவிப் பிடித்துக் கொடுத்தவாறே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான் இக்நாத். தாய் தன் கண்ணில் பொங்கும் கண்ணீரை மறைக்க முயன்று கொண்டே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவந்து அவனது காலை யெடுப்பதற்காகக் கீழே குனிந்தாள்.
”ஊஹூம். நீங்கள் செய்ய வேண்டாம்” என்று அவன் பயத்தோடு கத்திக்கொண்டு, காலை பெஞ்சுக்கடியில் இழுத்துக்கொண்டான்.
“நீ காலைக் கொடு. சீக்கிரம் வேலை முடியட்டும். ”நான் கொஞ்சம் ஓட்கா கொண்டு வருகிறேன்” என்றான் நிகலாய்.
அந்தப் பையன் தன் காலை மேலும் உள்ளிழுத்துக் கொண்டான்.
”என்ன நினைத்துக் கொண்டீர்கள்? நான் என்ன ஆஸ்பத்திரியிலா இருக்கிறேன்?” என்று முணுமுணுத்தான்.
தாய் அவனது அடுத்த காலில் சுற்றப்பட்ட துணிகளை அவிழ்த்தெறிந்தாள்.
“மிகயீல் இவானவிச்சை அவர்கள் அடித்தார்கள்” என்று நடுநடுங்கும் குரலில் சொன்னாள் தாய்.
“உண்மையாகவா?” என்று அமைதியோடு வியந்து கேட்டான் அந்த வாலிபன்.
“ஆமாம். நிகோல்ஸ்கிக்குக் கொண்டு வரும்போதே அவன் படுமோசமான நிலையில்தான் இருந்தான். அங்கே அந்தப் போலீஸ் தலைவனும், போலீஸ் ஸார்ஜெண்டும் அவனை அடித்தார்கள்! முகத்தில் அடித்தார்கள்! உதைத்தார்கள்! உடம்பெல்லாம் ரத்தம் காணும் வரையிலும் உதைத்தார்கள்.”
“அடிப்பது எப்படி என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். சரி, இருக்கட்டும்” என்று அந்த வாலிபன் முகத்தைச் சுழித்துக்கொண்டே கூறினான். அவனது தோள்கள் அசைந்து நடுங்கின. “அவர்களைக் கண்டால் – ஆயிரம் பேய்களைக் கண்ட மாதிரி நான் பயப்படுகிறேன். முஜீக்குகளும் அவனை அடித்தார்களா?”
”போலீஸ் தலைவனின் உத்தரவின் பேரில் ஒருவன் மட்டுமே அடித்தான். ஆனால் மற்றவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் அவன் பக்கமாகக் கூடச் சேர்ந்தார்கள். அவனை அடிப்பதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூச்சலிட்டார்கள்.”
“ம். அப்படியா?” யார் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள். ஏன் இருக்கிறார்கள் என்பதை முஜீக்குகள் உணரத் தொடங்கிவிட்டார்கள்.”
“அவர்கள் மத்தியிலே சில புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.”
“புத்திசாலிகள் எங்கும்தான் இருக்கிறார்கள். தேவைதான் அவர்களை உருவாக்குகிறது. அவர்கள் அவரவர் இடத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைக் கண்டுபிடிப்பதுதான் சிரமமாயிருக்கிறது.”
நிகலாய் ஒரு பாட்டில் ஓட்கா மதுவைக் கொண்டு வந்தான். தேநீர் அடுப்பில் கொஞ்சம் கரி அள்ளிப் போட்டான். பிறகு ஒன்றுமே பேசாமல் வெளியே சென்றான். இக்நாத் வாய் பேசாது அவனையே கவனித்தான்.
“இந்தக் கனவான் யார் – டாக்டரா?” என்று நிகலாய் வெளியே போன பிறகு தாயைப் பார்த்துக் கேட்டான் அவன்.
“நமக்குள்ளே கனவான்களே கிடையாது; இங்கே நாம் எல்லோரும் தோழர்கள்தான்.
”எனக்கு விசித்திரமாயிருக்கிறது” என்று சொன்னான் இக்நாத். அவனது புன்னகையில் அவனது சந்தேகமும் குழப்பமும் தெரிந்தன.
”எது விசித்திரம்?”
“பொதுவாக எல்லாம்தான். ஒருபுறத்தில் சிலர் மூக்கில் ரத்தக் கறை காணும்படி உதைக்கிறார்கள், இன்னொருபுறத்தில் சிலர் காலைக் கழுவிச் சுத்தம் செய்யவும் வருகிறார்கள். இந்த இரண்டுக்கும் மத்தியில் வேறு யாராவது இருக்கிறார்களா?”
”இரண்டுக்கும் மத்தியில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்திலே குத்துபவர்களின் கரங்களை நக்கிக்கொடுக்கிறார்கள். ரத்தம் பொங்கி வழியும் முகங்களைக் கொண்ட மனிதர்களின் உதிரத்தை உறிஞ்சுகிறார்கள். அவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள்.”
இக்நாத் அவனை மரியாதையோடு பார்த்தான்.
”உண்மையைத் தொட்டுவிட்ட மாதிரி இருக்கிறது” என்று ஒரு கணம் கழித்துச் சொன்னான் அவன்.
அந்த வாலிபன் எழுந்து, கொஞ்ச தூரம் நடந்தான். “புதுக் கால்கள் மாதிரியாகிவிட்டது. ரொம்ப நன்றி!” என்றான் அவன்.
பிறகு அவர்கள் சாப்பாட்டு அறைக்குள் தேநீர் பருகச் சென்றார்கள். உள்ளத்தைத் தொடும் ஆழ்ந்த குரலில் இக்நாத்தின் வாழ்க்கையைப் பற்றி அவர்களுக்குச் சொல்லத் தொடங்கினான்.
“நான்தான் நமது பத்திரிகையை விநியோகம் செய்கிறேன். நடந்து திரிவதில் நான்தான் சளைக்காதவன்.”
“கிராமப்புறத்தில் நம் பத்திரிகையை நிறையப் பேர் வாசிக்கிறார்களா?” என்று கேட்டான் நிகலாய்.
”படித்தவர்கள் எல்லாம்; அவர்கள் பணக்காரராயிருந்தாலுங்கூட, வாசிக்கிறார்கள். ஆனால் பணக்காரர்கள் அதை நேராக நம்மிடமிருந்து வாங்குவதில்லை ……. விவசாயிகள் பணக்காரர்களின் நிலங்களை எடுத்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதும், அப்பொழுது அந்த நிலத்தை நிலச்சுவான்தார்களிடமிருந்து பெற ரத்தத்தைச் சிந்தவும் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரிந்த விஷயம்தானே. பண்ணையார்களின் நிலத்தைப் பிடுங்கி அவற்றைப் பங்கிட்டு , பண்ணையாளர்களும் பண்ணையடிமைகளும் இல்லாதவாறு செய்யப்போகிறார்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியத்தான் செய்யும். பின் எதற்காக அவர்களோடு சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்?”
அவன் மனம் புண்பட்டுப்போனது மாதிரி தோன்றியது. அவன் நிகலாயை அவநம்பிக்கையோடும் எதையோ கேட்கும் பாவனையோடும் பார்த்தான். நிகலாய் புன்னகை புரிந்தான்; எதுவும் பேசவில்லை.
“இந்த உலகம் பூராவையுமே நாம் இன்று எதிர்த்துப் போராடி, எல்லாவற்றையும் அடக்கியாள முடிந்தாலும் நாளைக்கு மீண்டும் உலகமெங்கும் ஒருபுறத்தில் பணக்காரரும் இன்னொரு புறத்தில் ஏழைகளும் உற்பத்தியாகிவிடுவார்கள் – அப்புறம் இந்தப் போராட்டத்துக்கு என்ன அர்த்தம்? போதும், உங்களுக்கு ரொம்ப நன்றி, நீங்கள் எங்களை முட்டாளாக்க முடியாது – செல்வம் என்பது காய்ந்துபோன மணலைப் போலத்தான். அது ஓரிடத்தில் கிடக்காது. எல்லாத் திசைகளிலும் வாரியடித்துச் சிதறும். வேண்டாம், எங்களுக்கு அது வேண்டவே வேண்டாம்!”
”அதை நினைத்து நீ ஒன்றும் கோபவெறி கொள்ளாதே” என்று கூறிச் சிரித்தாள் தாய்.
”எனக்கு இருக்கிற கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான், ரீபின் கைதானதைப் பற்றிய துண்டுப்பிரசுரத்தை எப்படிச் சீக்கிரமே ஜனங்களிடம் பரப்புவது?” என்று யோசித்தவாறு கேட்டான் நிகலாய்.
இக்நாத் உஷாராகி நிமிர்ந்தான்.
”அப்படி ஒரு பிரசுரம் இருக்கிறதா?” என்று கேட்டான்.
”ஆமாம்.”
”அதை என்னிடம் கொடுங்கள். நான் கொண்டு போகிறேன்” என்று தன் கைகளைப் பிசைந்து கொண்டே சொன்னான் அந்த வாலிபன்.
அவனைப் பார்க்காமலேயே தாய் அமைதியாகச் சிரித்துக் கொண்டாள்.
“ஆனால். நீ களைத்து இருக்கிறாய். மேலும் நீ பயந்து கொண்டிருப்பதாக வேறு சொன்னாய்” என்றாள் அவள்.
இக்நாத் தனது அகன்ற கையால் தனது சுருட்டைத் தலைமுடியைத் தடவி விட்டுக்கொண்டு, நேரடியாகச் சொன்னான்.
“பயம் வேறு, சேவை வேறு., எதை எண்ணிச் சிரிக்கிறீர்கள்? நீங்கள் ஓர் அற்புத ஆசாமிதான்.”
”இரண்டுக்கும் மத்தியில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்கள் முகத்திலே குத்துபவர்களின் கரங்களை நக்கிக்கொடுக்கிறார்கள். ரத்தம் பொங்கி வழியும் முகங்களைக் கொண்ட மனிதர்களின் உதிரத்தை உறிஞ்சுகிறார்கள். அவர்கள்தான் மத்தியில் இருக்கிறார்கள்.”
”அட, என் செல்லக் குழந்தை!” என்று தன்னையுமறியாமல் கூறினாள் தாய். தன் மனத்தில் எழுந்த மகிழ்ச்சியை வெளிக்காட்டாதிருக்க முயன்றாள்.
”ஆமாம், குழந்தை!” அவன் வெட்கத்தோடு தனக்குள் முனகிக் கொண்டான்,
”நீங்கள் ஒன்றும் அங்குத் திரும்பிப் போகவேண்டாம்” என்று கண்களைச் சுருக்கி அவனை அன்போடு பார்த்தவாறே கூறினான் நிகலாய்.
“ஏன் கூடாது? நான் எங்கே போகிறேன்?” என்று எரிச்சலோடு கேட்டான் இக்நாத்.
“பிரசுரங்களை வேறு யாராவது கொண்டு போகட்டும். போகிற ஆளிடம் அவன் எப்படியெப்படிப் போக வேண்டும், வரவேண்டும் என்பனவற்றுக்கு மாத்திரம் விவரம் சொல்லிக் கொடுங்கள். அது போதும், சரிதானே?”
‘சரி’ என்று அதிருப்தியோடு சொல்லிக்கொண்டான் இக்நாத்.
”உங்களுக்கு ஒரு புது பாஸ்போர்ட் வாங்கி, காட்டுக்காவலன் வேலை வாங்கித் தருகிறோம்.”
“சரி. அப்படி வேலை பார்க்கும்போது முஜீக்குகள் வந்து விறகையோ வேறு எதையுமோ திருடிக்கொண்டு போனால் நான் என்ன செய்வது? அவர்களைப் பிடித்துக் கட்டி வைத்து உதைப்பதா? அந்த வேலை எனக்கு ஒத்துவராது.”
தாய் சிரித்தாள். நிகலாவும் சிரித்தான். அவர்களது சிரிப்பு அந்த இளைஞனின் மனத்தைக் குத்தியது; நிலைகொள்ளாமல் தவிக்கச் செய்தது.
”கவலைப்படாதே. எந்த முஜீக்கையும் கட்டி வைக்க வேண்டியிராது” என்று தேறுதல் கூறினான் நிகலாய். ”என் வார்த்தையையும் நம்பு.”
“ரொம்பச் சரி. அப்படியானால் சரிதான்” என்று மகிழ்ச்சி நிறைந்த புன்னகையோடு கூறினான் இக்நாத். ”ஆனால், எனக்குத் தொழிற்சாலை ஒன்றில் வேலை கிடைத்தால் நல்லது. மற்றவர்களை விடத் தொழிற்சாலை வேலைக்காரர்கள் புத்திசாலிகளாயிருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள்.”
தாய் மேஜையை விட்டு, ஜன்னலை நோக்கி நடந்தாள்.
“வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமாயிருக்கிறது!” என்று சிந்தித்தாள் அவள். ”ஒரே நாளில் ஐந்து தடவை அழுகிறோம்; ஐந்து தடவை சிரிக்கிறோம். சரி இக்நாத் நீ பேசி முடித்தாயிற்றா? தூங்குவதற்கு நேரமாகிவிட்டது.”
”நீங்க ரொம்பக் கண்டிப்பானவர் இல்லையா? சரி நான் போகிறேன். நீங்கள் கொடுத்த தேநீருக்கு ரொம்ப நன்றி….. அன்புக்கும்தான்…”
அவன் தாயின் படுக்கை மீது ஏறிப் படுத்தவாறு தன் தலையைச் சொறிந்துகொண்டே முனகினான்:
”இப்போது சாமான்களெல்லாம் தார் எண்ணெய் நாற்றம் எடுக்கப் போகிறது… இதிலெல்லாம் ஓர் அர்த்தமுமில்லை … எனக்குத் தூக்கமும் வரவில்லை…. அந்த ரெண்டுங்கெட்டான் ஜனங்களை இவர் எவ்வளவு சுளுவாகத் தாக்கிப் போசினார்… அந்தப் பிசாசுகள்…”
திடீரென்று அவன் தூங்கிப்போய் உரத்துக் குறட்டைவிட ஆரம்பித்தான். அவனது வாய் பாதி திறந்தவாறு இருந்தது, புருவங்கள் ஏறியிருந்தன.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள ஜனவரி 08, 09 அகில இந்திய வேலை நிறுத்தத்தை வர்க்க உணர்வோடு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம், தெருமுனைக் கூட்டங்கள் ஆலைவாயிற் கூட்டங்கள் வடிவில் முன்னெடுத்து சென்று வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்து வருகிறது.
திருவள்ளூர் கிழக்கு
2019 ஜனவரி 08, 09 இரு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம் என்கிற தலைப்பின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக கும்முடிப்பூண்டி தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
கார்ப்பரேட்களின் பிடியில், தொழிலாளர், விவசாயி, மாணவர், சிறுவணிகம் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் சிக்கித் தவிப்பதைப் போல காட்சியமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. செங்கொடிகள் பதாகைகள், விண்ணதிரும் முழக்கங்கள், பறையிசையுடன் நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டம் கும்முடிப்பூண்டி பஜாரில் உள்ள அனைத்து மக்களையும் ஈர்த்தது.
மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.
1 of 8
கும்மிடிப்பூண்டி காட்டுக்கொள்ளை தெருவில் தொடங்கி தபால் நிலையத்தை முற்றுகையிட சென்ற தோழர்களை போலீசார் கைது செய்தனர்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் – 94444 61480
திருவள்ளூர் மேற்கு
தொழிலாளர் உரிமையை மீட்க, பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலை வீழ்த்த, ஜனவரி 8-9 வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்! என்ற தலைப்பின் கீழ் ஜன-8 அன்று காலை, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் இணைப்பு சங்கமான டி ஐ மெட்டல் பார்மிங் நிறுவனத்தில் ஆலைவாயில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆலை சங்கத்தின் தலைவர் தோழர் ச.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, ‘’இன்றைய தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பதையும் மோடி அரசு நான்கரை ஆண்டுகளாக தொழிலாளர் நலச் சட்டங்கள் 44 யும் 4 தொகுப்புகளாக கார்ப்பரேட் முதலாளிகளுக்காக மாற்றியும் திருத்தியும் வருவதை கண்டித்து அதன் மூலம் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் விளக்கி உரையாற்றினார்.
இறுதியாக ஆலை சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் ரகுபதி நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.
கோவை
“தொழிலாளர் உரிமைகளை மீட்க பாசிச RSS – BJP கும்பலை வீழ்த்த 2019 ஜனவரி 8 – 9 வேலைநிறுத்தத்தை முன்னெடுப்போம்!” எனும் முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றது.
ஜன 8 அன்று காலை 10 மணியளவில் துடியலூர் பேருந்து நிறுத்தம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
1 of 4
ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்டிரீஸ் தலைவர் தோழர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பு.ஜ.தொ.மு. மாவட்டத் துணைத்தலைவர் தோழர் தேவராஜ், மாவட்ட பொருளாளர் தோழர் சரவணகுமார், கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் பொருளாளர் தோழர் செல்வராஜ், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் தோழர் சித்தார்த்தன் உள்ளிட்ட முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் எட்டாவது பாடல் ஒலிப் பேழையான காவி இருள் பாடல் தொகுப்பிலிருந்து “நெருங்குதடா… இருள் நெருங்குதடா… நெருங்குவது காவி இருளடா’’ என்ற பாடல் இப்பதிவில் இடம்பெறுகிறது.
இப்பாடல் வெளியான 1999-ம் ஆண்டில் நிலவிய அரசியல் சூழல் குறித்து இப்பாடலுக்கான அறிமுக உரையில் ம.க.இ.க.-வின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் குறிப்பிடுபவை எல்லாம், இன்றைய காலச் சூழலுக்கும் சரியாகப் பொருந்தும். பார்ப்பனக் கும்பலின் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள ‘உயர்’ சாதிகளுக்கு 10% இட ஒதுக்கீட்டை மோடி அரசு அறிவித்திருப்பது, இதற்கு ஒரு சான்று!
தோழர் மருதையனின் இப்பாடலுக்கான அறிமுக உரை இதோ :
”இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்நாட்டை அடிமைத்தளத்தில் ஆழ்த்திய அதே இருள். சாதிக்கொடுமை, பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கை, தற்குறித்தனம், காலனி அடிமைப்புத்தி ஆகிய அனைத்திற்கும் காரணமான அதே காரிருள்.
அந்தக் காவி இருள்தான், தன்னை எதிர்காலத்தின் நம்பிக்கை ஒளி என்று கூறுகிறது. பெயர் சொன்னாலே மக்கள் காரி உமிழ்ந்தார்களே, அந்தப் பார்ப்பனியம் எனும் இருள் இன்று ஆர்ப்பரித்து வருகிறது.
மத்தியில் பாரதிய ஜனதாவின் ஆட்சி, தமிழகத்திலோ கோவை கலவரம். அதைத் தொடர்ந்து குண்டு வெடிப்பு, ரதயாத்திரையின் போதும் மசூதி இடிப்பின்போதும் ஒப்பீட்டளவில் இந்துமத வெறியர்களால் பாதிக்கப்படாத தமிழகம் கோவை கலவரத்தின் விளைவாக திசை மாறுகிறது. இல்லை, மாற்றுகிறார்கள். முசுலீம்களை குறிப்பதற்கு மட்டுமே மதவெறி என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர் பத்திரிகைகள்.
ஆள்தூக்கி தடா சட்டம் பொடா என்ற பெயரிலே புதுப்பிக்கப் படுகிறது. சாதாரண மக்களுக்கு எதிராக குண்டுவைத்தவர்கள் அணைவரும் கண்டிக்கத்தக்கவர்கள்தான். இசுலாமியத் தீவிரவாதம் கண்டிக்கத்தக்கதுதான்.
ஆனால், இந்துக்கள் என்று தம்மைக் கருதிக்கொள்பவர்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லட்டும், கடந்த இருபது ஆண்டுகளில் இந்துவெறியர்களால் கொலை செய்யப்பட்ட முசுலீம்கள் எத்தனை ஆயிரம். அந்தக் கொலைகளுக்காக தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? கோவையிலும்கூட முசுலீம் மக்களின் படுகொலைக்கு எதிர்வினைதானே குண்டுவைப்புகள்.
குண்டுவெடிப்பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், கலவரத்தின் குற்றவாளிகள் அவர்களுக்குப் பதவி கிடைத்திருக்கிறது. இது என்னவகை நீதி? பாரதிய ஜனதா, முசுலீம்களுக்கு மட்டுமல்ல., அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எதிரான கட்சி.
சாதியின் பெயரால் மனுநீதியின் பெயரால் மக்களை ஒடுக்கிய பார்ப்பனியத்தின் புதிய அவதாரம்தான் பாரதிய ஜனதா கட்சி. முன்னாள் மன்னர்களும் பண்ணைகளும் ஆதீனங்களும் பார்ப்பன பனியா தரகு முதலாளிகளும் இவர்களது பங்காளிகள். ஜனநாயகத்தை அதன் வாசனைக்கூடத் தெரியாமல் ஒழித்துவிட விரும்பும் பாசிஸ்டுகள் இவர்கள்.
சகுணம் எதையும் காட்டாமல் பாசிசம் ஆட்சிக்கு வந்துவிடுவதில்லை. அணுகுண்டுவெடிப்பு, அயோத்தியில் சட்டவிரோதமாகக் கோயில் கட்டுவது, சிறுபான்மையினருக்கு எதிரானக் கலவரங்கள், ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அவர்கள் யார் என்பதைக் காட்டுகிறார்கள்.
இனிமேலும், தாமதிப்பதற்கு இல்லை. இப்போது நாம் போராடத் தவறினால், எப்போதும் போராட முடியாமல் நசுக்கப்படுவோம். இப்போது நாம் பேசத்தவறினால், நாம் பேச்சுரிமையே இழப்போம். இத்தனைகாலம் நாம் போராடிப்பெற்ற உரிமைகள் அனைத்தையும் நாம் இழப்போம்.
இந்த ஆட்சி நிலைக்குமா நிலைக்காதா என்பதல்ல பிரச்சினை நம்முடைய உரிமைகள் நிலைக்குமா என்பதுதான் பிரச்சினை. ஆம், நம் நாட்டின் மீது கவிழ்ந்து கொண்டிருக்கிறது, ஒரு இருள். காவி இருள்.”
சொட்டும் நீரில் பட்டுத் தெறிக்கிறது, டெல்டா சோகம்!
இடம்: திருவாரூர். படம்: கார்த்திக்.
***
நெருக்கடியை சந்தித்துவரும் பட்டாசுத் தொழில். அரசின் முன் வைத்த கோரிக்கைகள் நிறைவேறி ஆலை திறப்பது எப்போது? போராட்டக் களத்தில் கவலையுடன் காத்திருக்கும் முதியவர். படம்: மா.பேச்சிமுத்து
***
முதுமை .. வறுமை ..விவசாயி …!
படம்: கோபி நாராயணசாமி
***
கேலிகளும் நகைகளும் கேள்வியில்லை… வெற்றிகளும் தோல்விகளும் கவலையில்லை… வாழ்த்துதலும் போற்றுதலும் தேவையில்லை…
இகழ்வுக்கு இடமில்லை… இணக்கத்திற்கு தடையில்லை… இன்புற்று வாழும் இம் மழலைகளின் வாழ்வு கண்டு நாமும் மகிழ்ந்திருப்போமே… மகிழ்ந்திரு மானுடமே…
படம்: கோகுலன் கிருஷ்ணமூர்த்தி
***
அரக்க பறக்க வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, பொழுது புலரும் முன்னே தெருவை சுத்தம் செய்யக் கிளம்பும் தூய்மைப் பணியாளர்கள். உணவு இடைவேளையின் போதும்கூட சற்று களைப்பாற விடாமல் துரத்தும் ‘தாய்மை’ப் பணி.
இடம்: திருவண்ணாமலை, பேருந்து நிலையம். படம்: கலா
தஞ்சை பெரிய கோவில் : கல்பாறை சுமந்து, சுமந்த பாறைச் சரிந்து, சந்ததியிழந்த ஆயிரமாயிரம் அடிமைகளின் உழைப்பில் நிமிர்ந்து நிற்கும் கோவில்!
இடம்: தஞ்சை பெரிய கோவில், மாலை 4 மணி. படம்: தமிழினி
கடல் நீரில் நீந்திக்களித்த மீன்கள் கண்ணாடிக் கூண்டுக்குள் அடைபட்டு காட்சிப் பொருளானது. மீனுக்கு கண்ணாடிக் கூண்டு! நமக்கு கையடக்க ஆண்ட்ராய்டு!
இடம்: கனடா. படம்: அன்பழகன் பாலா
சிங்கார சென்னை என பெருமைப் பேச மேம்பாலங்களும் மெட்ரோ ரயிலும். பரபரப்பான இயந்திர வாழ்க்கைக்கு மத்தியில் தள்ளாடிச் செல்லும் மாட்டுவண்டி.
இடம்: கிண்டி மேம்பாலம். படம்: தமிழன்பன்
காலை ஆறு மணிக்கு சாலையோரம் கண்ட அந்த மனிதன், அந்தி சாய்ந்த பின்னும் அயராமல் அமர்ந்திருந்தார். இந்த வறுமைக்கு யார் காரணம் இரவு பகல் பாராது உழைக்கும் இந்த மனிதனின் நிலைமைக்கு யார் காரணம்…?
இடம் ஆதம்பாக்கம், ரயில்வே மேம்பாலம். படம்: தமிழன்பன்
ஸ்ரீ ஸ்ரீ பெட்ரோல் துணை! கழுதபடத்த மாட்டி வச்சா காடு விளையுமா? கார்ப்பரேசன் வாட்டரிலே காரு ஓடுமா? எந்த சாமி பேர துணைன்னு போட்டாலும் பெட்ரோல் இல்லாட்டி வண்டி ஓடாதுங்கோ… பகுத்தறிவோம்!
இடம்: திருச்சி. படம்: சரவணன்
தீவுகளைப்போல் சேறும் சகதியும் சூழ்ந்திருக்க… கம்பு கழிகளை நட்டு பிளாஸ்டிக் கூரைகளைப் போர்த்தியிருக்கும் இவைகளெல்லாம் ஆந்திர தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள். மாடுகளின் நலன் காக்கும் மோடி அரசில் இந்தியாவின் மக்கள் குடியிருப்பு வாழ்க்கை இது!
இடம்: காக்கிநாடா, ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்
ஆல்அவுட்டும், ஓடோமாசும் இல்லாது கடப்பதில்லை நம் இரவுகள். அன்றாடம் சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளோடு, ஒப்பிடுகையில் குளிரும் கொசுக்கடியும் பொருட்டே இல்லை என்கிறாரோ, இந்த உழைப்பாளி? எவ்வளவுதான் உழைச்சாலும் வயிறும் மனமும் நிறைந்ததேயில்லை ஒரு நாளும்.
இடம்: விஜயவாடா, ஆந்திரா. படம்: வினவு களச்செய்தியாளர்
வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் இருந்து தூணி செல்லும் உப்படா கடற்கரை சாலை. பாண்டிச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை என்றால்; காக்கிநாடாவிற்கு இந்த சாலை. அருகிலேயே கடலையொட்டி பரந்து விரிந்த வயல், அக்கம்பக்கமாக ஏராளமான தொழிற்சாலைகள் இருக்கின்றன. மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்திற்கான இடமாகவும் உருவெடுத்து வருகிறது காக்கிநாடா.
கடந்த டிசம்பர்-17ம் தேதி வீசிய பெய்ட்டி புயலால் இந்த கடற்கரை சாலையும், அதனையொட்டிய நெல் வயல்களும், மீனவர்களின் படகுகளும் பாதிக்கப்பட்டிருந்ததாகக்கூறி அதனைக் காண்பிக்க அழைத்துச் சென்றார் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாலெ) நியு டெமாக்ரசி கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் துர்கா பிரசாத்.
தோழர் துர்கா பிரசாத்
காக்கிநாடா நகரின் புயல் பாதிப்பு பற்றியும், அரசின் நிவாரணம் குறித்தும் கேட்டபோது, “கடந்த அக்டோபர் 11-ம் தேதி வீசிய டிட்லி புயல் விசாகப்பட்டினம்–சிறீகாகுளம் ஆகிய பகுதிகளை கடுமையாகத் தாக்கியது. பின்னர் டிசம்பர் மாதத்தில் வீசிய பெதாய் புயல் காக்கிநாடா-ஏனம் ஆகிய பகுதிகளையும் தாக்கியுள்ளது.
உப்படா கடற்கரை சாலை
இந்த புயலில் செல்போன் டவர்கள் சாய்ந்தன, மின் கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மூன்று நாட்கள் மின்சாரம் இல்லை. ஆங்காங்கே சில மரங்கள் விழுந்தன. மொத்தத்தில் இந்த புயலில் பாதிப்பு குறைவு என்பதால் உள்ளூர் கார்ப்பரேசன் ஆட்களே எல்லா வேலையையும் முடித்துவிட்டனர். இல்லையென்றால், இதைக்கூட சரி செய்யாமல் இருந்தால் மக்களிடம் வெறுப்பு வந்துவிடும்; ஊடகங்கள் அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்றஞ்சி விரைவாக சரிசெய்யப்பட்டது.”
“புயல் நிவாரணம் உண்டா?”
உண்டு. பொங்கலுக்கு அறிவித்திருக்கும் அரிசி பருப்புதான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம். இதுக்கு மேல எதாவது உண்டா..ன்னா வேற எதுவும் இல்ல. சந்திரபாபு நாயுடு “என்னிடம் காசு இல்லை” என்று ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கிறார். “மத்திய அரசு நம்மை வஞ்சித்து விட்டது” என்று சொல்லி தப்பிக்கப் பார்க்கிறார்.
புயலில் துக்கி வீசப்பட்ட கட்டுமரம்.
“அதிகாரிகளிடம், நீங்களே கணக்கெடுத்து நிவாரணம் கொடுங்க… அப்புறமா சென்ட்ரல் கவர்ன்மெண்ட்ல இருந்து நிதி வந்த பிறகு தறேன்” என்ற தொனியில் சொல்கிறார். அதிகாரிகள் மட்டும் எப்படி கொடுப்பார்கள்?
“ஏற்கனவே அடிச்ச புயலுக்கு நிவாரணம் இன்னும் வரல. அதுக்குள்ள இந்தப் புயல்” என்று பத்திரிக்கைகள் கிண்டல் செய்து எழுதுகிறது. அந்த அளவிற்கு நிவாரண உதவிகளை கேட்டுப் பெறுவதிலும், புயல் பாதிப்புகளை மதிப்பிடுவதிலும் அலட்சியம் காட்டி வருகிறது சந்திரபாபு நாயுடு அரசு.
டிட்லி புயலினால் ஏற்பட்ட இழப்பு ரூ.5,000 கோடிக்கும் மேல் இருக்கும். ஆனால் ரூ.2,800 கோடி என்று மதிப்பிட்டிருந்தது. அதேமாதிரி இந்த புயலுக்கு ரூ.1,000 கோடிக்கும் மேல் இருக்கும். ஆனால் ரூ.480 கோடி தான் இழப்பு என்று மதிப்பிட்டுள்ளது.
டிட்லி புயலுக்கு இடைக்கால நிதியாக ரூ.1,200 கோடி கேட்டார்கள். பிறகு ரூ.500 கோடிக்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். அதுவே இன்னும் வரல. இதுதான் புயல் பாதிப்புல இருந்து மக்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியா எதுவும் செய்யிறதில்லை. முதல்வர் நிதி, மாவட்ட ஆட்சியர் நிதின்னு அனுப்பிடுகிறாங்க. அந்த நிதியில் இருந்துதான் இதுவரை வேண்டிய செலவுகளை செய்து வருகிறார்களே தவிர அரசு நிதியில் இருந்து இல்லை. அதையாவது முழுசா செஞ்சாங்கள… இல்லையா? எவ்ளோ வந்தது? என்ற கணக்கு வழக்கே இல்லை.
“வாலண்டியர் வந்தாங்களா?”
எந்தப் புயலுக்கும் வாலண்டியர்கள் வருவதில்ல. நிவாரண நிதியோட நிறுத்திப்பாங்க. அரசுதான் செய்யனும்… ஆனா செய்யிறதில்ல. செய்யிறவங்களையும் புடிச்சி உள்ள போடுது…
“டிட்லி புயலுக்கு குண்டூர் ஏரியாவில் இருந்து இடதுசாரி-மக்கள் திரள் அமைப்பினர் நிவாரணப் பொருட்களை சேகரித்து சிறீகாகுளம்-பந்தாகுளம் பகுதியில் வழங்கியபோது ஒரு விசித்திரமான ஒரு சம்பவம் நடந்தது.
நிவாரணம் கொடுத்தவங்களை தடுத்து “நீங்க சட்ட விரோத செயலில் ஈடுபடுறீங்க..” எனக் கூறி கைது பண்ணி ரிமாண்ட் செய்துவிட்டது போலீசு. இந்தப் புயலுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் அவர்கள் வெளியே வந்தார்கள்.
“புயல் கடுமையா வீசிய பகுதி எது?”
ஜெக்கம்பேட்டா, சீத்தாநகரம், ஜிந்த்தூரு வி.ஆர். புரம், தூணி, கொத்தப்பள்ளி, காக்கிநாடா, ஏனம், பைரவ் பள்ளம் மற்றும் ராஜமுந்தரியில் சில ஏரியா…. அதுலயும் இந்தப் பகுதிகளில் அதிகம் பாதிக்கப்பட்டது விவசாயம்தான்.
நிவாரண முகாம் அமைச்சாங்களா?”
“கேம்ப் அமைச்சாங்க. ஆனா அதுல மக்கள் யாரும் தங்கல.. அதிகபட்சம் இரண்டு நாள் தங்கினாங்க… அவ்ளோதான்.”
“ஏன்?”
“அரிசி சோறும் சாம்பார்’ன்ற பேர்ல குழம்பும் ஊத்துனாங்க. சுத்தமா நல்லா இல்ல.. வேற எந்த வசதியும் ஏற்படுத்தி தரல. உடுத்த துணி இல்ல, மெடிக்கல் வசதி இல்ல. குடிக்க-குளிக்க தண்ணி இல்ல. இல்லை.. இல்லை… என்பதுதான் இருக்கிறது. இதனால நோய் தொற்று வரும்னு பயப்படுறாங்க. இதோடு சேர்த்து இன்னொரு பிரச்சனையும் இருக்கு. வீட்ட விட்டு வந்து கேம்ப்ல தங்கிட்டா வீட்டுல இருக்க பொருட்களை யாராவது திருடிட்டு போயிடுவாங்களோன்ற அச்சம் இருக்கு. புயல்ல போனது போக மிஞ்சி இருக்கிறதை கொண்டுதான் வாழ்க்கைய தேத்தனும் அதுவும் திருடு போயிட்ட என்னா பன்றது…” .என்று சொல்லிக் கொண்டே ஆட்டோவை நிறுத்தச் சொன்னார்.
சாலை அரிப்பு
இறங்கி பார்த்தபோது எதிர்பார்த்ததைவிட பயங்கரமாக ஏற்பட்டிருந்தது கடற்கரை சாலை அரிப்பு. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை எல்லாம் தூக்கி வீசியிருந்தது புயல். வழிபாட்டுக்காக மக்கள் வைத்திருந்த சாமி சிலைகளும் தப்பவில்லை. அரிக்கப்பட்டிருந்த அந்த அபாயகரமான சாலையில்தான் மக்கள் பயணித்து வருகிறார்கள். பரந்து விரிந்த வயலும் மக்கள் குடியிருப்பும் கடலையொட்டியே இருந்தது. கடலுக்கும் குடியிருப்புக்கும் மிஞ்சி போனால் இருபது மீட்டர் இடைவெளி இருக்கும் அவ்வளவுதான். இரண்டுக்கும் இடையில் பாதுகாப்பு அரணாக பெரும்பாறைகள் கொட்டப்பட்டிருந்தன.
இந்த கடல் அரிப்பு பற்றி கேட்டபோது சொன்னார். “தூணி வரைக்கும் போகும் இந்த சாலை மொத்தம் 15 கிலோ மீட்டர் இருக்கும். 2-3 வருஷத்துக்கு ஒரு முறை இந்த சாலையை போடுவாங்க. இப்ப நிக்குற இடத்திலிருந்து சுமார் இருநூறு மீட்டர் தள்ளி இருந்த சாலை இது… அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அரிச்சி இங்க கொண்டு வந்து விட்டிருக்கு. இனியும் இதை சரி பண்ணலன்னா பக்கத்துல இருக்க நிலங்கள் கடுமையா பாதிக்கும்.. அதைவிட முக்கியமா இந்த குடியிருப்புப் பகுதி தாக்கு பிடிக்காது.
கடல் அலையின் சீற்றம் காரணமாக ஒவ்வொரு முறையும் சாலை அறுத்துக்கொண்டு செல்வது வழக்கம்தான், எனினும் இந்த புயலில் கரையையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சாலையில் புரட்டிப் போடப்பட்டிருந்தது.
இந்த சாலையை டெண்டர் எடுப்பதற்கு ஒப்பந்ததாரர்களிடையே கடும் போட்டி நிலவும். ஒரு முறை டெண்டர் எடுத்தாலே போதும் பணம் கொட்டோ கொட்டென கொட்டும். அந்த அளவிற்கு இதில் ஊழல் மலிந்துள்ளது. இந்த கடற்கரை சாலையில் செல்ஃபி எடுக்கும்போது பாறைகள் சறுக்கி நிறைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
வழக்கமான சாலை அரிப்புக்கு காரணம் இங்கு இருக்கும் துறைமுகம்தான் என்றாலும் இந்த புயலில் வீசிய அலை சாலை அரிப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. குறைந்த வேகத்தில் வீசிய புயலுக்கே இது தாக்குபிடிக்கவில்லை. எனில் இந்த சாலைகளும், தடுப்புகளும் எந்த லட்சணத்தில் போடப்பட்டிருக்கிறது, அதில் எந்தளவிற்கு முறைகேடு நடக்கிறது என்பதை இயற்கை அம்பலத்திபடுத்தி விட்டது”.
“சரி…துறைமுகத்துக்கும்- சாலை அரிப்புக்கும் என்ன சம்பந்தம் இருக்கு’ன்னு நெனக்கலாம். இயற்கையோட சமநிலையை குலைக்கும்போது அது தன்னோட வேலையை செய்து விடும். மூன்று முக்கியமான சம்பவங்கள் உள்ளது.
முதலாவதாக, காக்கிநாடா இயற்கையான துறைமுகம்னு சொல்லுவாங்க. அந்த ஹார்பரை அகலப்படுத்துறது முதல் காரணம். அதன் பரப்பளவை அதிகரிக்க அதிகரிக்க அலையின் இயல்பான வேகத்துல இருந்து வேகமா அடிக்க ஆரம்பிச்சிடுது. அதனாலயே பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
இரண்டாவது, கிருஷ்ணா-கோதாவரி டெல்டாவுல கடற்கரையோரம் ரிலையன்சும்-குஜராத் பெட்ரோலியமும் இணைந்து எண்ணெய் துரப்பன கிணறு அமைச்சிருக்காங்க. கடலுக்குள்ள எண்ணெய் எடுக்கிறாங்க. ஏனம் அருகே கடற்கரையையொட்டி அதற்கான இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவதாக, காக்கிநாடா கிழக்குல மணல் அதிகமாக இருக்கக் கூடிய ஹோப் தீவும், வட-தெற்குல மடாக்காடும் இருக்கிறது. இதனால் புயல் மற்றும் கடல் கொந்தளிப்பு போன்ற அழிவிலிருந்து காக்கிநாடா காப்பாற்றப்படுகிறது.
கடலில் இருந்து எண்ணெய் எடுப்பதுபோல, இந்த தீவில் இருந்து குழாய் மூலம் மணல் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் தீவின் இயல்பான சமநிலை சீர்குலைக்கப்படுவதால் அலையின் வேகமும், புயல் காற்றின் வேகமும் சற்று அதிகமாகிறது. இன்னொரு பக்கம் மடாக்காடு புயலின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. இதனையெல்லாம் அழிப்பதால் என்ன நடக்கும் என்பதை நாங்கள் ஒவ்வொரு புயலிலும் உணர்ந்து வருகிறோம்” என்றார்.
உண்மைதான்! இயற்கை நல்லதா-கெட்டதா என்று கேட்டல்; அதன் வேலையை அது செய்கிறது. அந்த இயற்கையின் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாப்பது ஒரு அரசின் தலையாயக் கடமை. ஆனால் இங்கு அரசே தன் கடமையிலிருந்து நழுவிக் கொள்கிறது.
படம், செய்தி : வினவு செய்தியாளர்கள், ஆந்திரா, காக்கிநாடாவில் இருந்து..
ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்…. தமிழக அரசே.…. மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக கடந்த டிசம்பர்- 30 அன்று நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில், புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் குமரன் ஆற்றிய உரை.
”தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட்டிற்கு எதிரான இந்தப் போராட்டத்தைத்தான் மோடியும் எடுபிடி எடப்பாடியும் சேர்ந்து ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளனர். மன்னராட்சியில்தான் மக்களுக்கு ஜனநாயக மறுப்பு இருக்கும். ஆனால், ஜனநாயக நாடு என்று இவர்களே சொல்லிக்கொள்ளும் நாட்டில் இப்படி நடப்பது இது கார்ப்பரேட் ஆட்சி என்பதற்கு சாட்சி. இந்த பின்னணியில் இருந்துதான் பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த அனுமதியை நீங்கள் பார்க்க வேண்டும்.
மேலும், அதிகாரிகள் முதல் கட்சிகள் வரை ஸ்டெர்லைட்டின் நன்கொடை பாயாத இடமில்லை. பா.ஜ.க விற்கும் கூட பல கோடி ரூபாயை நன்கொடை கொடுத்துள்ளது ஸ்டெர்லைட். எனவே, இது ஸ்டெர்லைட் ராஜ்ஜியம் என்றால் மிகையல்ல. ஏற்கனவே ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தா ஜாம்பியா, தென்னாப்பிரிக்கா, சட்டீஸ்கர் என்று சென்ற இடமெல்லாம் போராடும் மக்களை எல்லாம் ரத்த வெள்ளத்தில் மிதக்க செய்துள்ளது.
இன்னொருபுறம் அரசின் கொள்கை வகுப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தேவையான தொழில் கட்டமைப்புகளை உருவாக்குவது, அதை மக்கள் நலனுக்காக உருவாக்குவது போல் நாடகமாடி அதற்கான செலவுகளை மக்களுடைய வரிப்பணத்தில் இருந்து செலவு செய்து பெரு நிறுவனங்களுக்கு படையல் வைப்பதுதான் உலகம் முழுவதும் அரசுகளின் கொள்கையாக இருக்கிறது. இதில் காங்கிரஸ் செய்யத் தயங்கியதை ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்ட் மோடி செய்து கொடுப்பார் எனத்தெரிந்துதான் பெரு நிறுவனங்கள் அவரை பிரதமராக கொண்டு வந்துள்ளனர். ஏனெனில், மோடி குஜராத் முதல்வராக இருந்த போதே புதிய தொழில்களை துவங்குவதற்கு ஏதுவாக சுற்று சூழல் விதிகளை மாற்றுவோம் என பொது மேடையிலேயே தெரிவித்தார்.
அடுத்ததாக ஜல்லிக்கட்டுபோராட்டத்தின் போதும் அதற்குப் பிறகும் காவல்துறை இத்தகைய போராட்டங்களை எப்படி அணுகுகிறது என்பதை கவனிக்க வேண்டும். எம்.கே. நாராயணன் என்பவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு சில நாள் பிறகு இந்து பத்திரிக்கையில் இப்படிப்பட்ட போராட்டத்தை எப்படி பார்க்க வேண்டும் என்றும், எப்படி ஒடுக்குவது என்றும் அரசிற்கு பாடம் நடத்துவதாக கட்டுரை எழுதியிருந்தார்.
அதாவது தற்போது நடக்கும் போராட்டங்கள் எல்லாம் மக்கள் எந்த அரசியல் கட்சிகளின் தலைமையிலும் இல்லாமல் தன்னிச்சையாக சொந்த அனுபவத்தில் இருந்து போராடுகிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சினையின் அளவிற்கு ஏற்ப முகநூல், வாட்ஸ் அப் என்று பயன்படுத்தி அணிதிரட்டி போராடுகிறார்கள். ஆனால், நம்முடைய காவல்துறையோ லத்திக்கம்பை மட்டும் நம்பி இருக்கிறது என்று நீட்டி எழுதியிருந்தார். நாம் அனைவரும் ஒரு எச்சரிக்கையாக அதை படித்து புரிந்து மாற்று வழியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அரசின் கொள்கையையும், அதன் ஒடுக்குமுறை வடிவத்தையும் தோலுரித்துக்காட்டினார்.
தகவல்,
மக்கள் அதிகாரம்,
மதுரை.
(இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மற்ற பேச்சாளர்களின் உரைகள் அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்)
இருபதாம் நூற்றாண்டில் நாம் பயன்படுத்தும் “பொருளாதாரம்” எனும் பதத்திற்கும், அரிஸ்டாட்டில் பயன்படுத்திய அதே பதத்துக்கும் என்ன வித்தியாசம். மேலும் பொருளாதாரத்திற்கும் – செல்வ இயல் என்பதற்கும் உள்ள வரையறை என்ன ? தெரிந்து கொள்வோம் படியுங்கள். கட்டுரையின் இறுதியில் கேள்விகள் இருக்கின்றன – விடையளிக்க முயலுங்கள்! -வினவு
*****
பொருளாதாரமும் செல்வ இயலும்
அரிஸ்டாட்டில் நமது கவனத்தைத் தூண்டும் வகையில் கூறியிருக்கும் பல கருத்துக்களில் ஒன்று பொருளாதாரத்துக்கும் செல்வ இயலுக்கும் அவர் காட்டிய வேறுபாடு என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இது விஞ்ஞான வரலாற்றில் மூலதனத்தை ஆராய்வதற்குச் செய்யப்பட்ட முதல் முயற்சியாகும்.
செல்வ இயல் (chrematistics) என்ற சொல்லை அவர் உருவாக்கினார்; ஆனால் அது ”பொருளாதாரம்” என்ற சொல்லைப் போல நவீன மொழிகளில் வேரூன்றவில்லை. அது சொத்து, பண்ணை ஆகியவற்றைக் குறிக்கின்ற chrema சொல்லிலிருந்து தோன்றியது. அரிஸ்டாட்டிலுக்குப் பொருளாதாரம் என்பது வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களின், பயன் மதிப்புக்களின் உற்பத்தியோடு தொடர்பு கொண்ட இயல்பான வீட்டுக்குரிய நடவடிக்கை.
அரிஸ்டாட்டில்
அது பரிவர்த்தனையையும் உள்ளடக்கியதுதான்; ஆனால் அது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான அளவுக்கு மட்டுமே இருக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படுவதும் இயற்கையாகவே ஏற்படும். ஒரு நபர் தனது சொந்த நுகர்வுக்குப் போதுமான அளவை அறிவோடு நிர்ணயித்துக் கொள்வார்.
அப்படியானால் செல்வ இயல் என்பது என்ன?
அது “செல்வத்தைத் திரட்டுகின்ற கலை”, அதாவது லாபம் அடைவதை, செல்வத்தை – குறிப்பாகப் பணத்தின் வடிவத்தில் – திரட்டுவதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் செல்வ இயல் என்பது மூலதனத்தை முதலீடு செய்வது, திரட்டுவதைப் பற்றிய “கலை”.
பண்டைக்கால உலகத்தில் தொழில்துறை மூலதனம் என்பது இருக்கவில்லை. ஆனால் வர்த்தக மூலதனமும் பண (வட்டி) மூலதனமும் முன்பே கணிசமான பாத்திரத்தை வகித்து வந்தன. அரிஸ்டாட்டில் பின்வருமாறு எழுதுகிறார்.
”…செல்வத்தைக் குவிக்கும் கலையைப் பொறுத்தவரை – இது வர்த்தக நடவடிக்கையில் வெளிப்படுகின்ற அளவுக்குப் பார்க்கும் பொழுது – தமது நோக்கத்தை அடைவதற்கு எந்த எல்லையும் ஒருபோதும் இருந்ததில்லை. இங்கே நோக்கமென்பது முடிவில்லாத அளவுக்கு செல்வமும் பணமும் திரட்டுவதாகும்…… பணச் செலாவணியில் ஈடுபட்டிருக்கின்ற ஒவ்வொருவரும் தனது மூலதனத்தை எல்லையில்லாத அளவுக்குப் பெருக்குவதற்கு முயல்கின்றனர்.” (1)
அரிஸ்டாட்டில் இவற்றை இயற்கைக்கு மாறானதென்று கருதினார்; ஆனால் கலப்பற்ற “பொருளாதாரம்” என்பது இயலாதது என்று புரிந்து கொள்கின்ற அளவுக்கு யதார்த்த வாதியாக இருந்தார்; துரதிர்ஷ்டவசமாகப் பொருளாதாரம் தவறாமல் செல்வ இயலாக வளர்ச்சி அடைகிறது என்கிறார். இந்தக் கருத்து சரியானதே. எங்கே பொருள்கள் பண்டங்களாகப் பரிவர்த்தனைக்கென்று உற்பத்தி செய்யப்படுகின்றனவோ அந்தப் பொருளாதாரத்தில் முதலாளித்துவ உறவுகள் தவிர்க்க முடியாதபடி வளர்ச்சி அடையும்.
அரிஸ்டாட்டில் பொருளாதாரத்தை இயற்கையானதாகவும் செல்வ இயலை இயற்கைக்கு மாறானதாகவும் கருதினார். பிற்காலத்தில் இந்தக் கருத்து ஒரு விசித்திரமான மாற்றத்துக்கு உட்படுத்தப்பட்டது. மத்திய காலத்தில் அறிஞர்கள் அரிஸ்டாட்டிலைப் பின்பற்றி வட்டித் தொழிலை முழுமையாகவும் வர்த்தகத்தை ஓரளவுக்கும் பணம் குவிப்பதில் அவை “இயற்கைக்கு மாறான” வழிகளைப் பின்பற்றுகின்றன என்று கண்டனம் செய்தார்கள். ஆனால் முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்ட பொழுது, பணம் திரட்டுவதற்குரிய எல்லா வழிகளுமே இயற்கையானவை என்று தோன்றின; ‘‘இயற்கைச் சட்டத்தால்” அனுமதிக்கப்பட்டவையாகத் தோன்றின.
இந்த அடிப்படையில்தான் பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டுகளில் சமூக – பொருளாதாரச் சிந்தனையில் ”பொருளாதார மனிதன்” என்ற உருவம் தோன்றியது; அந்த மனிதனின் எல்லா நடவடிக்கைகளையும் உந்தித் தள்ளுவது பணத்தைக் குவிக்க வேண்டுமென்ற ஆசையே. பொருளாதார மனிதன் தன்னுடைய சொந்த லாபத்துக்காக உழைப்பதன் மூலம் சமூக முன்னேற்றத்துக்குப் பாடுபடுவதாக ஆடம்ஸ்மித் கூறினார். எனவே ஸ்மித்துக்குத் தெரிந்த உலகங்களில் மிகச் சிறந்ததான முதலாளித்துவ உலகம் வெளித் தோன்றியது.
முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆடம் ஸ்மித்
பொருளாதார மனிதன் என்ற வார்த்தை அரிஸ்டாட்டிலுக்கு முற்றிலும் வேறான ஒரு அர்த்தத்தை, அதாவது தன்னுடைய நியாயமான தேவைகளை – அந்தத் தேவைகள் முடிவில்லாதவை அல்ல – பூர்த்தி செய்வதற்குப் பாடுபடுகின்ற மனிதனைக் குறித்திருக்கும். ஆனால் தசையும் இரத்தமும் இல்லாத இந்தக் கற்பனை உருவத்தை, ஸ்மித் காலத்தில் எழுதப்பட்ட பொருளாதாரப் புத்தகங்களின் கதாநாயகனை அவர் “செல்வ இயல் மனிதன்” என்று சொல்லியிருப்பார்.
இந்த மாபெரும் கிரேக்க அறிஞரை விட்டுவிட்டு நாம் இப்பொழுது இரண்டாயிரம் வருடங்களைத் தாவி பதினாறாம் நூற்றாண்டின் கடைசியிலும் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்த மேற்கு ஐரோப்பாவுக்குப் போக வேண்டும். ஆனால் இந்த இருபது நூற்றாண்டுகளில் பொருளாதாரச் சிந்தனையில் எத்தகைய சிறு வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று கருதிவிடக் கூடாது.
கிரேக்கத் தத்துவஞானிகள் அரிஸ்டாட்டிலின் கருத்துக்களில் சிலவற்றை மேலும் வளர்த்துச் சென்றார்கள். இன்று நாம் விவசாயப் பொருளாதாரம் என்று கூறுகின்ற துறையைப் பற்றி ரோமானிய எழுத்தாளர்கள் நிறைய எழுதினார்கள். மத்திய காலத்தில் அறிவுமிக்கோர் மதப் போர்வையை அணிந்திருந்தார்கள். அந்த மதப் போர்வையின் மறைவில் எப்பொழுதாவது தற்சிந்தனையுள்ள பொருளாதாரக் கருத்துக்களைக் காண்கிறோம். அரிஸ்டாட்டிலின் எழுத்துக்களைப் பற்றி உரை எழுதிய மதப் பண்டிதர்கள் ”நியாய விலை” என்ற கருத்தை உருவாக்கினார்கள், பொருளாதாரச் சிந்தனையின் வரலாற்றைக் கூறுகின்ற எந்தப் புத்தகத்திலும் இவை பற்றிய விவரங்களைப் படிக்கலாம்.
ஆனால் அது அடிமைகளை உடைமையாகக் கொண்டிருந்த சமூகத்தின் வீழ்ச்சிக் காலம்; நிலப்பிரபுத்துவம் வளர்ந்து ஆதிக்கம் வகித்த காலம். அந்தக் காலம் பொருளாதாரச் சிந்தனையின் வளர்ச்சியை ஊக்குவிக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சியில் பட்டறை உற்பத்தி ஏற்பட்ட கட்டத்தில், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி, முதலாளித்துவ உறவுகளின் முக்கியமான கூறுகள் முன்பே உருவாக்கமடைந்து கொண்டிருந்த பொழுது அரசியல் பொருளாதாரம் ஒரு சுயேச்சையான விஞ்ஞானமாகத் தோன்றியது.
(தொடரும்…)
அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : விஞ்ஞானத்துக்குப் பெயர் சூட்டல்
அடிக்குறிப்பு: (1) அரிஸ்டாட்டில், அரசியல், செயின்ட் பீட்டர்ஸ்பர்க், 1911, பக்கங்கள் 25- 26 (ருஷ்ய மொழிபெயர்ப்பு).
கேள்விகள்:
அரிஸ்டாட்டில் உருவாக்கிய “செல்வ இயல்” என்றால் என்ன?
உற்பத்தி செய்தவற்றை பரிவர்த்தனை செய்வதற்கும், பரிவர்த்தனைக்காகவே உற்பத்தி செய்வதற்கும் என்ன வேறுபாடு?
ஸ்டெர்லைட்டை திறக்க சொல்கிற பசுமை தீர்ப்பாய உத்தரவு கிடக்கட்டும்…. தமிழக அரசே.…. மேல்முறையீடு என்று ஏமாற்றாதே ! தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு!! என்ற தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மதுரை மண்டலம் சார்பாக கடந்த டிசம்பர்- 30 அன்று அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
இந்த அரங்கக்கூட்டத்தில் பங்கேற்ற நாணல் நண்பர்கள் குழுவை சேர்ந்த தோழர் துளிர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் கனியமுதன் ஆகியோர் ஆற்றிய உரை.
தோழர் துளிர், நாணல் நண்பர்கள் குழு.
“இயற்கையை பாதுகாக்க போராடிய நம்முடைய பெரும்பாட்டன் நம்மாழ்வாருடைய நினைவு தினத்தில் தியாகிகளான 14 பேரின் பலிகொடுத்த பெருந்துயரோடுதான் உங்களுக்கு முன் பேசுகின்றேன். புரட்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் வரிகளில் சொன்னால் ”இது வாழ்வதற்காக வந்த உயிர் அல்ல, சாவதற்காக வந்த உயிர்” ஜாலியன் வாலாபாக்கின் 100 ஆம் ஆண்டை அதிகாரவர்க்கம் 14 பேரை படுகொலை செய்து இனி ஜாலியன் வாலா பாக் போன்ற ஒடுக்குமுறைதான் தீர்வு என்பதை எச்சரிக்கை செய்கிறது. ஆனால், நாம் நேர்மைறையில் பல்வேறு தியாகம் செய்து உருவான இச்சமூகத்தை எப்பாடுபட்டும் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
இந்த ஆலை மக்களின் போராட்டங்களை ஒட்டி அவசர கதியில் அரசு மூடும் போது உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே கொள்கை முடிவெடுத்து ஆலையை மூடினால்தான் இந்த உத்தரவு நிற்கும் என்று சொன்ன போது அதிமுக அமைச்சர்கள் உச்ச நீதிமன்றம் அல்ல உலக நீதிமன்றமே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்றனர். ஆனால் இப்போது திறந்தாகி விட்டது. இதற்கும் அமைச்சர்கள் பல்வேறு விளக்கங்களை கூறுவார்கள். மீடியா அதையே வேறு வார்த்தைகளில் சொல்லிச்சொல்லி மக்களை பழக்கப்படுத்தும். ஆனால் வெறும் பிரேக்கிங் நியூஸ் மட்டுமே பார்த்து சமூகத்தை புரிந்து கொண்டுள்ள சாமானிய மக்களிடம் இதற்கு பின் உள்ள அரசியலை, சதியை புரியவைக்கும் விதத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
மேலும் நான் இதை இன்னொரு இனப்படுகொலையாக பார்க்கின்றேன். ஏனென்றால் தமிழ் சமூகம் மத்திய அரசிற்கு சவாலாக பலகட்ட எதிர்ப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறது. வரலாற்றில் தொடர்ச்சியாக இதை பற்றிய பதிவுகள் இருக்கிறது.
உதாரணத்திற்கு வ.உ.சி யின் சுதேசி கப்பல் நிறுவனத்திற்கு ஆதரவாக பிரிட்டீஸ் நாவிகேசன் நிறுவன கப்பலை துறைமுகத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுவரை 100 நாட்டு படகுகளில் சென்று விரட்டியடித்தனர் தூத்துக்குடி மீனவர்கள். இதை பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் பதிவுசெய்துள்ளார். மேலும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே தூத்துக்குடியின் முத்துநகரம் என்ற சிறப்பையும் அதனுடைய வர்த்தக திறனையும் தமிழ் இலக்கியங்களிலேயே பதிவு செய்துள்ளார்கள். மார்க்கபோலோ போன்ற உலக பயணம் மேற்கொண்டவர்கள் பலர் கூட இதை குறிப்பிட்டுள்ளனர்.
இன்னொரு புறம் தமிழக அரசின் ஒரு சட்டம் கூட தூத்துக்குடியை ஒரு பல்லுயிர் வாழ் கடற்பரப்பாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் இவ்வாறு ஜி.ஒ. போட்ட மாநில அரசாங்கமே மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கந்தக அமில கசிவை ஏற்படுத்தக்கூடிய நிறுவனத்தை அனுமதித்துள்ளது. மத்திய அரசு இவர்களுடைய கருத்தை எள்ளளவும் பரிசீலிக்கவில்லை. தற்போது அங்கே நிலவரம் என்ன? மக்கள் எதற்காக போராடுகிறார்கள். புற்று நோய், கருச்சிதைவு, கரு வளர்ச்சியின்மை, மருத்துவர்களே ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தூரமாக வந்து குடியேறுங்கள் என்று கூறும் அளவிற்கு உள்ளது.
ஆலையில் வேலை பார்க்கும் ஒரு வயதான தொழிலாளர் நான் ஆலையில் வேலை பார்க்கும் போது அடிக்கடி கண் எரிச்சல் ஏற்படும். கண்களில் தண்ணீரை அடிக்கடி ஊற்றித்தான் வேலை பார்ப்பேன். இப்போது பெருமளவு பார்வை போய்விட்டது. ஏதோ நிழற்படம் பார்ப்பது போல்தான் பார்த்து காலத்தை கழித்துகொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறார். ஒரு விவசாயி இதனால் பாதிக்கப்பட்டு அவருடைய வார்த்தைகளில் 7 மரக்கா மாத்திரை சாப்பிடுவதாக கூறுகிறார். இப்படி எல்லாம் பாதிப்பு வருகிறது என்பதால் ஒரு கட்டத்திற்கு மேல்தான் போராட்டம் அடுத்த படிநிலைக்கு செல்கிறது.
இதையெல்லாம் சமீபத்தில் வெளிவந்துள்ள தோழர் முகிலனின் 20 நிமிட காணொளி பதிவுசெய்துள்ளது. ஆனால் எதிர்தரப்பினரோ காப்பருக்கும் வேலை வாய்ப்பிற்கும் என்ன செய்வீர்கள் எனக் கேட்கிறார்கள். என்ன பெரிய வேலை வாய்ப்பு. 1200 நிரந்தர வேலை, 3500 கண்ட்ராக்ட் வேலை, அதிலும் 65% வெளி மாநிலத்தவர்கள். இப்படியான செய்திகளை சாமான்ய மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்” எனப்பேசினார்.
தோழர் கனியமுதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி.
” சிறப்பு சட்டம் இயற்றுங்கள், கொள்கை முடிவை எடுங்கள் என்றோம் ஆனால் இவர்கள் அதை செய்யவில்லை. பின் என்ன வழி. மக்கள் திரள் போராட்டம்தான் ஒரே வழி. தூத்துக்குடிமக்கள் 14 பேர் இறந்த பின்பும் இன்றும் போராட அவர்கள் தயார். ஆனால், அங்கிருந்து வரக்கூடிய அடக்குமுறை பற்றிய செய்திகள் அவர்கள் நினைத்தாலும் போராட முடியாத அளவிற்கு அரசின் அடக்குமுறை தீவிரமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. போராட்டத்தை வழிநடத்திய மக்கள் அதிகாரம் போன்ற பல அமைப்பை சேர்ந்தவர்கள் தூத்துக்குடியில் நுழையவே தடை. எனவே இதை நாம் பிற மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
ஸ்டெர்லைட் மட்டுமா மக்களில் வாழ்வியலை காவு வாங்குகிறது, எத்தனை எத்தனை ஆலைகள், திட்டங்கள் மக்களை நடைபிணங்களாக்குகிறது. எனவே ஆட்சியாளர்களை அம்பலப்படுத்துவது மட்டும் நமது வேலை அல்ல மக்களை உணர்வூட்டுவதும்தான் நமது வேலை. ஊர் ஊராக சென்று பரப்புரை செய்து மக்களை அணிதிரட்டுவதுதான் கார்ப்பரேட் நிறுவனங்களை விரட்டும் ஒரே வழி. அதற்கான பரப்புரைகளில் மக்கள் அதிகாரம் அமைப்பிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும்” என பேசினார்.
தகவல்
மதுரை.
(இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மற்ற பேச்சாளர்களின் உரைகள் அடுத்தடுத்த பதிவுகளில் இடம்பெறும்)
எத்தகைய டெக்னிகல் வேலையாக இருந்தாலும், நிரந்தரத்தன்மை கொண்ட வேலையாக இருந்தாலும், ஆபத்தான வேலையாக இருந்தாலும் கையில காசு; வாயில தோசை என்பது போல இன்று வேலை; நாளை டெர்மினேஷன்… இத்தகைய உத்தரவாதமில்லாத வேலைமுறையை அமல்படுத்த முதலாளிக்கு கட்டற்ற சுதந்திரம். வரி ஏய்ப்பு முதல் காண்டிராக்ட் முறை வரை எதை வேண்டுமானாலும் செய்து தங்குதடையின்றி லாபம் ஈட்டுவதற்கு சுதந்திரம்.
இந்த பின்னணியில்தான் ஆசியாவின் டெட்ராய்டு என்று பீற்றிக்கொள்ளப்பட்ட திருப்பெரும்புதூர் ஒரகடம் தொழிற்பேட்டைப் பிராந்தியத்தில் யமஹா, ராயல் என்ஃபீல்ட் போன்ற மோட்டார் வாகன உற்பத்தி ஆலைகளில் போராட்டம் வெடித்தது. சுமார் 55 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த போராட்டங்கள் சில தற்காலிக வெற்றிகளோடும், சமரசங்களோடும் முடிவுக்கு வந்துள்ளன. ஆனாலும், தினசரி விரிவடைந்தும், புதிய புதிய உற்பத்திகளைக் கையாண்டும், நவீனமாகியும் வருகின்ற மோட்டார் வாகனத்துறையில் நீடித்த தொழில் அமைதி ஒருபோதும் சாத்தியமில்லை. சமீபத்திய யமஹா, என்ஃபீல்ட் போராட்டங்களை முன்வைத்து இந்த கள உண்மையை பரிசீலிக்கலாம்.
முதலாவதாக, வாகன உற்பத்தித் துறை பற்றி முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வது என்ன?
இந்தியாவின் வாகன துறை, நடப்பு நிதியாண்டில் 14.5 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதில், பயணியர் வாகன உற்பத்தி 9.81 சதவீதம் வளர்ச்சியும், வணிக ரீதியிலான வாகன வளர்ச்சி 41.6 சதவீதமாகவும் உள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனை 44.27 சதவீதம் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகன விற்பனை வளர்ச்சி 11.50%, வாகன ஏற்றுமதி 26.96% வளர்ச்சி அடைந்துள்ளது.
உலக அளவில் மோட்டார் வாகன விற்பனையில் இந்தியா நான்காவது மிகப் பெரிய சந்தையாக திகழ்கிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், வாகனத் துறை 7.1 சதவீத பங்களிப்பு வழங்குகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் மோட்டார் வாகனங்களில் 13% ஏற்றுமதியாகிறது. வாகன ஏற்றுமதியிலும் ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து நாடுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் மோட்டார் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஹூண்டாய், நிசான் போன்ற நிறுவனங்கள் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் சப்ளை செய்வதைப் போல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்ற வகையில் இந்தியாவில் உற்பத்தியை செய்து வருகின்றன. உதாரணமாக 2008-ல் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்த கார்களில் 2 இலட்சத்து நாற்பதாயிரம் கார்களையும், நிசான் நிறுவனம் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் கார்களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன.
2018 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் வாகன உற்பத்தி எண்ணிக்கை 1.37 கோடியாக உள்ளது. இது, கடந்த ஆண்டு, 1.19 கோடியாக இருந்தது.
சர்வதேச அளவில் உள்ள முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. அதேபோல இந்தியாவைச் சேர்ந்த மோட்டார் வாகன நிறுவனங்கள் உலகம் முழுவதும் தங்களது தொழிலை விஸ்தரித்துள்ளனர். மத்திய அரசின் வாகன தொலைநோக்குத் திட்டம் 2026-ன் படி, உலக அளவில் முதல் மூன்று இடங்களில் இந்தியாவை கொண்டு வருவது, உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீத பங்களிப்பு வழங்குவது, கூடுதலாக, 6.5 கோடி வேலைவாய்ப்பு உருவாக்குவது ஆகியவை இத்துறைக்கான அரசின் தொலைநோக்கு பார்வை.
இவ்வளவு வளர்ச்சியும், லாபமும் முதலாளிகளும் அவர்களது குடும்பங்களும் வேலை செய்து வரவில்லை என்பது உலகத்துக்கே தெரியும். இனிமேலும் திட்டமிடப்படும் வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் உழைப்புதான் ஆதாரம் என்பது முதலாளிகளுக்கும் தெரியும். இந்தியாவின் மோட்டார் வாகன தயாரிப்புத்துறை இந்த அளவுக்கு இலாபமீட்டுவதற்கும், வளர்ச்சியடைந்ததற்கும் அரசின் ஒத்துழைப்பும், மலிவான கூலிக்கு கிடைக்கும் தொழிலாளர் சந்தையும் முக்கிய காரணங்கள்.
ஆனால் வாகன உற்பத்தித் துறையில் முதலாளிகள் காட்டும் ஒளிமயமான சித்திரத்துக்கு மாறாக தொழிலாளர்களின் நிலைமை தலைகீழாக உள்ளது. சங்கம் அமைத்த ‘குற்றத்துக்காக’ 2 சங்க நிர்வாகிகளை பணிநீக்கம் செய்தது, யமஹா நிர்வாகம். இதுதான் வேலைநிறுத்தம் வெடித்ததன் பின்னணி.
தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன என்று எடுத்துப் பார்த்தால்தான் யமஹா, மற்றும் ராயல் என்ஃபீல்ட் நிர்வாகத்தின் கோரமுகம் வெளிப்படும்.
வருடத்திற்கு 1000 ரூபாய் சம்பளம் உயர்வு கேட்டால் மிகப் பெரும் தவறு. 3 வருடம் வேலை செய்து விட்டேன் பணிநிரந்தரம் செய்யுங்கள் என்றால் என்றால் அது மிகப் பெரும் தவறு. எனது வீட்டில் சாவு 16-ஆம் நாள் காரியத்திற்கு லீவு கேட்டால் அது தவறு. ஏன் எங்களது சங்கத்தை அங்கீகரிக்க மாட்டார்களா என்று கேட்டால் அது மிகப் பெரும் துரோகம்.
யமஹா தொழிலாளர்களுக்கு ஆதரவாக ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம்.
முக்கியமாக அரசு இயந்திரமான தொழிலாளர் அலுவலகத்தை தொழிலாளர்கள் அணுகினால் அது மன்னிக்க முடியாத பெரும் குற்றம். எங்களுக்கு தேவையான மருத்துவ வசதி, கழிப்பறை வசதி, ஓய்வு, விடுப்பு, போனஸ் இதெல்லாம் கேட்டால் துரோகிகள் என்று முத்திரை. அவசர தகவல் தொடர்புக்காக செல்போன் பயன்படுத்துவது மாபெரும் குற்றம்.
இங்கிருக்கும் ஒவ்வொரு ஊழியரும் உயிரை பணயம் வைத்துதான் ஆலைகளில் வேலை செய்கிறார்கள். செலவைக் குறைக்க சென்சார் கருவிகளை நீக்கிவிட்டு இயந்திரத்தின் வேகத்தை அதிகரிப்பது, தொழில்நுட்ப பணிகளில் வேலை செய்ய போதிய முன்அனுபவமும், பயிற்சியும் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பயன்படுத்துவது போன்ற கிரிமினல் குற்றங்களை செய்கின்ற நிர்வாகமானது, விபத்து ஏற்பட்டால் அது, சம்பந்தப்பட்ட ஊழியரது குற்றமே என்று கை கழுவி விடுகிறது.
இதையெல்லாம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற இலக்கோடு தொழிலாளர்கள் போராடியபோது, அந்த போராட்டங்களை ஒடுக்குவதற்கு யமஹா, ராயல் என்ஃபீல்ட் நிர்வாகங்கள் செய்த சதிகள் ஏராளம். நிரந்தரத் தொழிலாளர்கள் ஈடுபட வேண்டிய நேரடி உற்பத்தியில் பயிற்சித் தொழிலாளர்களையும், ஒப்பந்தத் தொழிலாளர்களையும் ஈடுபடுத்தி, போராட்டத்தை ஒழித்துக்கட்ட எத்தனித்தது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன?
வருடம் 8,00,000 வாகனங்கள் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்ட்; போராட்டத்தால் 28,000 ராயல் என்ஃபீல்ட் வாகனங்கள் உற்பத்தி இழப்பு. வருடத்திற்கு 7.92 லட்சம் வாகனம் தயாரிக்கும் யமஹாவுக்கு, 55 நாட்கள் நடந்த போராட்டத்தால் சுமார் 40,000 வாகனம் உற்பத்தி இழப்பு என்று தோராயமாக கணக்கிடலாம். தொழிலாளி இல்லாமல் முதலாளி வர்க்கத்தால் ஒரு ‘ஆணியையும் புடுங்க முடியாது’ என்ற பேருண்மை உறைக்கிறது.
யமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்களின் வெற்றி மிகப் பெரியதா, இழப்புகள் எல்லாவற்றையும் ஈடுகட்டி விட்டார்களா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. ஆனால் இத்தகைய கேள்விகளோ, அவற்றுக்கான விடைகளோ இரண்டாம்பட்சமானவையே. எமது உரிமைகள் எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும் அவற்றை நிலைநாட்டும் வகையில் தொழிற்சங்க அமைப்பு மூலம் நடத்தப்படும் கூட்டுப்பேரத்துக்கான உரிமையை நிலைநாட்டி விட்டோம் என்று யமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்கள் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டாடலாம்.
யமஹாவில் பணி நீக்கம் செய்யப்பட்ட சங்க நிர்வாகிகள் 2 பேருக்கும் பணி வழங்க யமஹா நிர்வாகம் சம்மதம். வழக்குகள் வாபஸ். ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்களது கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. போராட்டம் வெற்றி.
போராட்டமே உரிமைகளைப் பெற்றுத்தரும் என்பதை, நிரூபித்த யமஹா தொழிலாளர்கள் போராட்டம்
மேற்படி செய்திகள் எல்லாம் அத்தகைய கொண்டாட்டத்துக்கான தகுதி வாய்ந்த செய்திகள் தான். இந்த வெற்றியோடு போராட்டம் முடிவதில்லை, முடியப்போவதில்லை. நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்பதை எதிரிகளே தீர்மானிக்கின்றனர். சட்டபூர்வ நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள் எல்லாம் பலனளிக்காதபோது, வேலைநிறுத்தம் தவிர வேறெந்த நடவடிக்கையும் பலன் தராது என்று உணர்ந்தனர், யமஹா மற்றும் ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்கள்.
அரசுத்துறை, போலீசு, நீதிமன்றம் ஆகிய அனைத்தும் கார்ப்பரேட்டுகள் பக்கம் நின்றபோதும், ஊதியமின்மை, குடும்ப நெருக்கடி ஆகியவை இடையறாது துரத்தினாலும், அவை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையாக நின்று கடும் வெயில், குளிர் பாராமல் தங்களது உரிமைகளுக்காக போராடிய 3,000 ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கும் 750 யமஹா தொழிலாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம். இந்த போராட்டத்தை ஆதரித்து களத்தில் துணைநின்ற தொழிலாளி ஒன்றிணைந்த பலம் இத்தகைய வெற்றிக்கு துணை நின்றது என்பதை உணர வேண்டிய தருணம் இது.
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 48 (தொடர்ச்சி)
மாக்சிம் கார்க்கிஅவன் தாயின் அருகே உட்கார்ந்தான். முதலில் தனது பிரகாசம் பொருந்திய முகத்தை ஒருபுறமாகத் திருப்பிக்கொண்டு, தனது. உணர்ச்சிக் குழப்பத்தை மறைப்பதற்காக, பிடரி மயிரைக் கோதி விட்டுக்கொண்டிருந்தான். ஆனால் சீக்கிரமே அவன் தாயைத் திரும்பி நோக்கினான். அவளோ தனது அனுபவங்களை ஒன்றுவிடாமல், தெள்ளத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுவதுபோல, எளிய வார்த்தைகளால் விவரித்துச் சொன்னாள்.
”பேரதிருஷ்டம்தான்.” என்று வியந்தான் அவன்: “உங்களைச் சிறையில் தள்ளுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் இருந்திருக்கின்றன, இருந்தாலும்… ஆமாம், விவசாயிகள் விழிப்புற்று எழத் தொடங்கிவிட்டார்கள் என்பது நன்றாகத் தெரிகிறது; அது ஒன்றும் அதிசயமில்லை, இயற்கைதானே! அந்தப் பெண் – அவளை நான் நன்றாகக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது… கிராமாந்திரப் பிரதேசங்களில் உழைப்பதற்கென்று நாம் சில பிரத்தியேக ஆட்களை நியமிக்க வேண்டும். ஆட்கள்! நம்மில் போதுமான ஆட்கள் இல்லையே! நமக்கு நூற்றுக்கணக்கான தோழர்கள் வேண்டும்!”
”பாவெல் மட்டும் வெளியில் இருந்தால் – அந்திரேயும் இருந்தால்!” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.
அவன் அவளைப் பார்த்தான்; உடனே கண்களைத் தாழ்த்திக்கொண்டான்.
“நீலவ்னா, நான் சொல்லப்போகும் விஷயம் உங்களுக்குச் சிரமம் தருவதாயிருக்கலாம். நான் பாவெலை நன்றாக அறிவேன். அவன் சிறையிலிருந்து தப்பியோடி வரவே மாட்டான். அதுமட்டும் எனக்கு நிச்சயம். அவன் விசாரணைக்குத் தயாராயிருக்கவே விரும்புகிறான். விசாரணையின் மூலம் தனது முழு உருவையும் காட்ட நினைக்கிறான். அதற்காகக் கிடைத்த சந்தர்ப்பத்தை அவன் உதறித் தள்ளமாட்டான். ஏன் தள்ள வேண்டும்? அவன் சைபீரியாவிலிருந்து ஓடி வந்துவிடுவான்.”
தாய் பெருமூச்செறிந்துவிட்டு மெதுவாகக் கூறினாள்:
“ஆமாம். அதெல்லாம் அவனுக்கு நன்றாய்த்தான் தெரியும்…”
“ஹூம்!” என்று தன் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்துக்கொண்டு மறுகணமே சொன்னான் நிகலாய். “உங்களுடைய அந்த முஜீக் தோழன் சீக்கிரமே வந்து நம்மைப் பார்ப்பான் என்றே நம்புகிறேன். ரீபினைப் பற்றி விவசாயிகளுக்கு ஒரு துண்டுப் பிரசுரம் எழுதியாக வேண்டும். அவன் இவ்வளவு பகிரங்கமாக வெளி வந்துவிட்டதால், இந்தத் துண்டுப் பிரசுரத்தால் அவனுக்கு எந்தக் கெடுதியும் விளையாது. நான் இன்றே எழுதிவிடுகிறேன். லுத்மீலா அதைச் சீக்கிரமே அச்சடித்துக் கொடுத்துவிடுவாள்……… ஆனால், இந்தப் பிரசுரத்தை அவர்களிடம் எப்படிக் கொண்டு போய்ச் சேர்ப்பது ?”
”நான் கொண்டு போகிறேன்.”
“இல்லை; நன்றி! நீங்கள் வேண்டாம்” என்று அவசரமாகச் சொன்னான் நிகலாய். “நிகலாய் வெஸோவ்ஷிகோவால் முடியுமா என்று யோசிக்கிறேன்.”
”அவனிடம் நான் கேட்டுப் பார்க்கட்டுமா?”
“முயன்று பாருங்கள். எப்படியெப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் அவனுக்குச் சொல்லிக்கொடுங்கள்.”
ஆனால், நான் என்ன செய்வது?”
”கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வேறு வேலை பார்க்கலாம்.”
அவன் எழுத உட்கார்ந்தான். மேஜையைச் சீர்படுத்திக்கொண்டே அவள் அவனைக் கவனித்தாள். வரிவரியாக வார்த்தைகளை நிரப்பிச் செல்லும் அவனது விரல்களினால் பேனா நடுநடுங்கிச் செல்வதைப் பார்த்தாள். சமயங்களில் அவனது கழுத்துத் தசை நெளிந்து அசைந்தது. அவன் தன் தலையைப் பின்னால் சாய்த்துக் கண்களை மூடியவாறு யோசிக்கும்போது, அவனது மோவாயின் நடுக்கத்தை அவளால் காண முடிந்தது. இது அவளது ஆர்வத்தைப் பெருக்கியது.
“தயாராகிவிட்டது” என்று கூறிக்கொண்டே, அவன் எழுந்தான். “இதோ, இந்தக் காகிதத்தை உடம்பில் எங்கேயாவது மறைத்து வைத்துக்கொள்ளுங்கள் – ஆனால் போலீஸார் வந்து உங்களைச் சோதனைபோட ஆரம்பித்துவிட்டால்………..”
“அவர்கள் நாசமாய்ப் போக!” என்று அமைதியாகச் சொன்னாள் அவள்.
அன்று மாலையில் டாக்டர் இவான் தனீல்விச் அங்கு வந்தான்.
”இந்த அதிகாரிகளுக்குத் திடீரென்று என்ன கொள்ளை வந்து விட்டது?” என்று கேட்டுக்கொண்டே அறையில் குறுக்கும் மறுக்கும் நடந்தான் அவன். “நேற்று ராத்திரி அவர்கள் ஏழு வீடுகளைச் சோதனை போட்டிருக்கிறார்கள், சரி, நோயாளி எங்கே?”
”அவன் நேற்று போய்விட்டான்” என்றான் நிகலாய். “இன்று சனிக்கிழமை. அரசியல் வகுப்புக்குப் போகாமால் அவனால் இருக்க முடியவில்லை.”
“அது முட்டாள்தனம், உடைந்துபோன மண்டையோடு அரசியல் வகுப்புக்குச் சென்று உட்கார்ந்திருப்பது முட்டாள்தனம்…”
”நானும் அவனுக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஒன்றும் பயனில்லை.”
“ஒருவேளை தான் அடிபட்டிருப்பதைத் தன் தோழர்களிடம் காட்ட வேண்டுமென்று விரும்பினானோ என்னவோ?” என்றாள் தாய். “இதோ என்னைப் பாருங்கள். நான் ஏற்கெனவே ரத்தம் சிந்திவிட்டேன்” என்று சொல்ல நினைத்தான் போலிருக்கிறது…..”
அந்த டாக்டர் தாயைப் பார்த்தான். போலிக் கடுமையோடு முகபாவத்தை மாற்றி முகத்தைச் சுழித்துக்கொண்டு சொன்னான்.
“அடேடே நீங்கள் எவ்வளவு கல் நெஞ்சுப் பிறவி!”
“சரி இவான்! நீ இங்கேயே இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. சீக்கிரமே போய்விடு. நாங்கள் ‘விருந்தாளிகளை’ எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். நீலவ்னா, அந்தத் தாளை இவனிடம் கொடுங்கள்.”
“இன்னொரு தாளா?” என்று வியந்தான் டாக்டர்.
“ஆமாம். அதை எடுத்துக்கொண்டுபோய், அச்சாபிசிலே, கொடுத்துவிடு.”
“சரி . நான் அதை வாங்கிக்கொண்டேன்! போய்க் கொடுத்து விடுகிறேன். வேறு ஏதாவது உண்டா?”
“ஒன்றுமில்லை. வாசல்புறத்தில் ஓர் உளவாளி நின்று கொண்டிருக்கிறான்.”
“அவனை நானும் பார்த்தேன். என் வீட்டு வாசலிலும் ஒருவன் நிற்கிறான். சரி, வருகிறேன். ஏ… கல் நெஞ்சுக்காரி! நான் வருகிறேன். தோழர்களே, சந்தர்ப்பவசமாக, அந்த இடுகாட்டுச் சம்பவத்தால் நன்மைதான் விளைந்திருக்கிறது. நகர் முழுவதுமே அதைப் பற்றித்தான் பேச்சாயிருக்கிறது. அதைப் பற்றி நீ எழுதிய பிரசுரம் ரொம்ப நல்ல பிரசுரம்; மேலும், அது சரியான சமயத்தில் வெளிவந்துவிட்டது. மோசமான முறையில் சமாதானமாவதைவிட, நல்ல முறையில் சண்டையிட்டுப் பார்ப்பதே மேலானது என்று நான் எப்போதும் சொல்லி வந்திருக்கிறேன்.”
“நீ மிகுந்த தயாள குணமுடையவன் என்று நான் சொல்ல மாட்டேன், நீலவ்னா. கை கொடுங்கள். அந்தப் பையன் நிச்சயம் முட்டாள்தனமான காரியத்தைத்தான் செய்துவிட்டான். அவன் எங்கு வசிக்கிறான் என்பது உனக்குத் தெரியுமா?”
நிகலாய் அவனது விலாசத்தைக் கொடுத்தான்.
“நாளை நான் அவனைப் போய்ப் பார்க்கிறேன். அருமையான பையன், இல்லையா?”
“ஆமாம்.”
”அவனை ஜாக்கிரதையோடு கவனிக்க வேண்டும். அவனுக்கு நல்ல மூளை இருக்கிறது” என்று வெளியே போகும்போது பேசிக்கொண்டே சென்றான் அந்த டாக்டர். “வர்க்க பேதமற்ற அந்த மேலுலகத்திற்கு நாம் செல்லும்போது அவன் மாதிரி நபர்கள்தான் பாட்டாளி வர்க்கத்தின் அறிவாளிகளாக வளர்ச்சி பெற்று உருவாக வேண்டும்.”
“இவான், நீ ரொம்ப ரொம்ப வாயளக்க ஆரம்பித்துவிட்டாய்.”
”ஏனெனில் நான் உற்சாக வெறியோடிருக்கிறேன். அப்படியானால், நீ சிறைக்குப் போவதைத்தான் எதிர்நோக்கி இருக்கிறாய் இல்லையா? போ… போ… போய் நன்றாக ஓய்வு பெற்றுக்கொள்.”
“நன்றி. நான் ஒன்றும் களைத்துப் போகவில்லை .”
அவர்களது பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த தாய் அவர்கள் அந்தத் தொழிலாளி வர்க்கச் சிறுவனின் மீது கொண்டுள்ள அன்பைக் கண்டு மிகுந்த மனமகிழ்ச்சி அடைந்தாள்.
டாக்டர் சென்ற பிறகு தாயும் நிகலாவும் சாப்பிட உட்கார்ந்தார்கள். தங்களது இரவு விருந்தினர்களை எதிர்நோக்கி அமைதியாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நாடு கடத்தப்பட்ட தோழர்களைப் பற்றியும், அவர்களில் தப்பியோடி மீண்டும் ஊருக்குள் வந்தவர்களைப் பற்றியும், வெவ்வேறு பெயர்களில் அவர்கள் தங்களது இயக்க வேலையைத் தொடர்ந்து செய்து வருவதைப் பற்றியும் நிகலாய் தாயிடம் விளக்கிக் கூறினான். புத்துலக சமுதாயத்தை உருவாக்குவதில் தங்களைப் பரிபூரணமாக அர்ப்பணித்துவிட்ட அந்தப் புனிதமான, அடக்கமான வீரர்களைப் பற்றிய கதைகளை அந்த அறைச் சுவர்கள் கேட்டன. நம்ப இயலாத வியப்போடு அந்தக் கதைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் எதிரொலித்தன. அறியப்பட முடியாத மனிதர்களின் மீது ஏற்படும் அன்புணர்ச்சியால் இதயத்திற்குச் சூடேற்றி, வெதுவெதுப்பான ஒன்று அப்பெண்மணியை இதமாகச் சூழ்ந்தது. அந்த வீரர்கள் அனைவரும் அச்சமென்பதையே அறியாத ஒரு மாபெரும் பேருருவாக உருண்டு திரண்டு உருப்பெற்று பூமியின் மீது மெதுவாக, எனினும் நிச்சயம் தீர்க்கத்தோடு, முன்னேறி வருவதாகவும், அழுகி நாற்றமெடுக்கும் பண்டைப் பொய்மைகளையெல்லாம் தமது பாதையிலிருந்து விலக்கித் தூர எறிந்து, எளிய நெளிந்த வாழ்க்கையின் உண்மைத் தத்துவத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டுவதற்காக முனைந்து முன்னேறுவது போலவும் தாய் கற்பனை பண்ணிப்பார்த்தாள். அந்த மாபெரும் உண்மை. புத்துயிர் பெற்ற அந்தச் சத்தியம், ஒரே மாதிரியாக எல்லோரையும் தன்னிடம் அழைக்கிறது. பேராசை, பொறாமை, பொய்மை – என்ற மூன்று ராட்சச மிருகங்கள் தமது வெறிபிடித்த சக்தியினால் உலகம் பூராவையும் அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தி வைத்திருப்பதையெல்லாம் தகர்த்து, ஒவ்வொருவருக்கும் உண்மையான விடுதலையை உத்தரவாதம் அளிக்கும்… இந்தக் கற்பனா சொரூபமான எண்ணம் அவளது மனத்தில் ஓர் உணர்ச்சியைக் கிளப்பியது. மற்ற நாட்களைவிட எளிதாக இருந்த அந்த நாட்களில் அவள் விக்ரகத்தின் முன் மண்டியிட்டுத் தொழும்போது அவள் உள்ளத்தில் எம்மாதிரி உணர்ச்சி பொங்கியதோ அம்மாதிரி உணர்ச்சிதான் அவளுக்கு இப்போதும் ஏற்பட்டது. இப்போதோ அவள் அந்த நாட்களையெல்லாம் மறந்துவிட்டாள். எனினும் அந்த நாட்களில் அவள் மனத்தில் எழுந்த உணர்ச்சி மட்டும் விரிந்து பெருகி, முன்னைவிடக் குதூகலமும் பிரகாசமும் பொருந்தியதாக வளர்ந்து. அவளது இதய பீடத்தின் ஆழத்திலே இடம்பிடித்து, ஒளிமயமான தீபச்சுடராக நின்றெரிந்தது.
”போலீஸ்காரர்கள் வருவதாகத் தெரியவில்லையே!” என்று திடீரெனச் சொன்னான் நிகலாய்.”
“அவர்கள் நாசமாய்ப் போகட்டும் என்றேனே” என்று அவனை விருட்டெனத் திரும்பிப் பார்த்தவாறே சொன்னாள் தாய்.
”உண்மைதான். ஆனால், நீலவ்னா, நேரமாகிவிட்டது. கொஞ்ச நேரமாவது படுத்துத் தூங்குங்கள். மிகவும் களைத்துப் போயிருப்பீர்கள். உங்களுக்கு அற்புதமான மனோதிடம் இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. இந்த அபாயத்தையும் அயர்ச்சியையும் ரொம்பவும் சுளுவாகத் தாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால், உங்கள் தலைமயிர் மட்டும் விறுவிறுவென்று நரை தட்டி வருகிறது. சரி, போய்ப் படுத்துக் கொஞ்ச நேரமாவது களைப்பாறுங்கள்.”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு