மாருதி தொழிலாளர்கள் 13 பேருக்கு ஹெச். ஆர். அதிகாரியை கொலை செய்ததாக பொய்க்குற்றம் சாட்டி ஆயுள் தண்டனையும், வன்முறை தீயிடல் குற்றங்களுக்காக 4 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 14 பேருக்கு 03 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது குர்காவ்ன் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம். 10.03.2017 அன்று குற்றத்தை உறுதி செய்த நீதிமன்றம், 18.03.2017 அன்று மேற்படி தண்டனையை வழங்கியது. இவர்களைத் தவிர, கைது செய்யப்பட்ட 117 பேரை விடுதலை செய்த நீதிமன்றம், அவர்கள், இருக்கின்ற வழக்கின் படியே நான்கரை ஆண்டுகள் சட்டவிரோதமாக அனுபவித்த சிறைத் தண்டனை பற்றியோ அவர்களது வேலை பறிபோய், வாழ்வே கேள்விக்குள்ளானது பற்றியோ வாயே திறக்கவில்லை.
மாருதி தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள அநீதியான, சட்டவிரோதமான தீர்ப்பை கண்டித்தும் அவர்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் வகையிலும் 04.04.2017 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இப்பிரச்சினையின் துவக்கத்திலிருந்தே பல்வேறு போராட்டங்களை நடத்திவருவதன் தொடர்ச்சியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தை புஜதொமு-வின் புதுச்சேரி மாநில துணைத் தலைவர் தோழர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாருதி தொழிலாளர் போராட்டத்தின் நியாயத்தை விளக்கியும், மாருதி நிர்வாகத்தின் சூழ்ச்சிகள், நரித்தனங்கள், வஞ்சகங்களை விளக்கியும், போலீசு, நீதிமன்றத்தின் கூட்டுச் சதியை விளக்கியும், உரையாற்றினார். மேலும், குற்றமே நிரூபிக்கப்படாத போதும், மாருதி தொழிலாளர்களுக்கு தண்டனை வழங்கும் நீதித்துறை, புதுச்சேரியில் வெட்ட வெளிச்சமாக நடந்த ரவுடி கொலையை செய்தது, அரசியல்வாதிகளின் தூண்டுதலில் தான் என்று தெரிந்த போதும், சாட்சிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்கிறது என்று நீதித்துறையின் தொழிலாளர் விரோதப் பண்பை அம்பலப்படுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய புஜதொமு-வின் திருபுவனை வட்டாரக் கிளைப் பொருளாளர் தோழர் சங்கர், ” தொழிலாளர் விரோதமாகச் செயல்படும் தொழிலாளர் துறையைச் சாடியதுடன், தொழிலாளர் போராட்டம் என்பது மட்டுமில்லை, எந்தப் போராட்டமானாலும், அதைத் தீர்க்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளோ, துறை அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ வருவதில்லை. முண்டியடித்துக் கொண்டு வருவது போலீசு தான். அவர்களும் பிரச்சினையைத் தீர்க்க வழி சொல்லாமல், போராட்டத்தை கலைப்பதற்கு, பேச்சுவார்த்தை நாடகமாடுவது, அதையும் மீறி மக்கள் உறுதியாக இருந்தால், அவர்களை வழக்கு போட்டு மிரட்டுவது என்பதையே வேலையாகச் செய்து வருகிறது. உண்மையில் அரசின் உறுப்புகள், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதில்லை. மக்களை ஏமாற்றுவதற்கும், மிரட்டுவதற்கும் தான் உள்ளது. இந்த அரசுக் கட்டமைப்பு மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காது என்பதும், மக்களுக்கு எதிராக மாறிவிட்டது என்பதும், தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. எனவே, இந்த அரசுக் கட்டமைப்பை நம்பிப் பலனில்லை. அதைத் தகர்த்தெறிந்து, நமக்கான அரசுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்; அதற்கான போராட்டங்களைக் கட்டியமைக்க அமைப்பாகத் திரள வேண்டும்” என்று அறைகூவி உரையாற்றினார்.
அடுத்ததாக, சேதுராப்பட்டு தொழிற்பேட்டைக் கூட்டமைப்பைச் சேர்ந்த தோழர் ரமேஷ், தொழிலாளர் பிரச்சினையைப் பற்றிய போராட்டத்தில் பேச அழைத்ததை பெருமையாகவும், கடமையாகவும் கருதி உரையைத் தொடங்கியவர், ”புதுச்சேரி தொழிலாளர் அதிகாரிகளின் முதலாளிகளின் ஆதரவான நடவடிக்கையைப் பற்றி அவர்களிடம் பேசும் போது, தங்களது நடவடிக்கையைப் பற்றி குற்ற உணர்வு ஏதுமின்றி, தொழிலாளர்களால் என்ன செய்ய முடியும் ? மிஞ்சிப் போனால், போஸ்டர் அடித்து ஒட்டியும், மைக்கைப் பிடித்துக் கத்தியும் போராட்டம் செய்வீர்கள் ? என அதிகாரத் திமிரோடு பேசியதை அம்பலப்படுத்திய தோழர், தொழிலாளர்களை வன்முறையைத் தூண்டுவதற்கு இது போன்ற அதிகாரிகளின் தொழிலாளர் விரோத சட்ட விரோத நடவடிக்கைகள் தான் காரணம் என்பதை விளக்கினார். மேலும், தொழிலாளர் பிரச்சினைகளுக்காக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இது போன்ற முன்னெடுப்புக்களுக்கு எப்போதும் துணை நிற்போம்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக உரையாற்றிய, புதுச்சேரி புஜதொமு-வின் மாநில இணைச் செயலாளர் தோழர் லோகநாதன், மாருதி தொழிலாளர்களின் போராட்டம் குறித்து விளக்கி, அத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு என்பது, அவர்களை மிரட்டி தொழிலாளர் போராட்டங்களை நசுக்குவதற்குத் தான். அதன் வெளிப்பாடு தான் தீர்ப்பு வழங்கப்படும் தினத்தில் மாருதி நிறுவனம் அமைந்துள்ள மானேசர் தொழிற்பேட்டை வட்டாரத்தில் பல்லாயிரக்கணக்கான கலவரத் தடுப்புப் போலீசாரைக் குவித்து, தொழிலாளர்கள் மீண்டும் சேர்ந்து தங்களது எதிர்ப்பைக் காட்டி விடக்கூடாது என அச்சுறுத்தியது. ஆனால், அந்த அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான தொழிலாளர் ஒன்று கூடி தீர்ப்புக்கு முன்னதாக தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மேலும், தொழிலாளர்களை மட்டுமல்ல, ஒட்டு மொத்த உழைக்கும் மக்களையும் ஒடுக்கும் கருவியாகத் தான் அரசு உள்ளது என்ற மார்க்ஸின் வரிகளைச் சுட்டிக் காட்டி, கருப்புப் பண ஒழிப்பு என்று சொல்லி, பணமில்லாப் பரிவர்த்தனை, வங்கி இருப்பு அதிகரிப்பு என மக்களைச் சுரண்டுவது, உலக நாடுகள் வரையிலும் பேசப்படும் டெல்லியில் நடக்கும் விவசாயிகளின் போராட்டத்தை, மோடி கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் தவிர்ப்பது, என உழைக்கும் மக்கள், விவசாயிகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு அம்பலப்படுத்தினார். மேலும், தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் ஒடுக்குவதில் அரசும், இவ்வொடுக்குமுறைகளை மூடி மறைப்பதன் மூலம் பத்திரிக்கைகளும் தங்களுக்குள் கள்ளக் கூட்டு வைத்துச் செயல்படுவதையும் தோலுரித்தார்.
ஆனால், அரசு நினைப்பதைப் போல், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள் என உழைக்கும் மக்களின் போராட்டங்களை கண்டும் காணாமல் புறக்கணிப்பதன் மூலமோ, போலீசு, நீதிமன்றங்களின் மூலமோ, நசுக்கி ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும் என்பது அறிவியலுக்கு புறம்பானது. ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வு என்பது நீரில் மிதக்கும் காற்றடைத்த பந்தைப் போன்றது. அதை என்ன தான் முயற்சி செய்து தண்ணீருக்குள் அமிழ்த்தினாலும், இறுதியில் அது நீரின் மேலே தான் எழும்பி நிற்கும்.
உழைக்கும் மக்களின் ஒவ்வொருவர் மனதில் எழும்பி நிற்கும் உணர்வை அரசின் எந்த ஒடுக்குமுறையாலும் நசுக்கி விட முடியாது. அந்த உணர்வை ஒன்று பட்ட வர்க்க உணர்வாக மாற்றி, முதலாளித்துவத்தை அடித்து நொறுக்கி அமிழ்த்துவதன் மூலம், உழைக்கும் மக்களுக்கான உண்மையான அதிகாரத்தைப் படைத்து நமது பிரச்சினைகளை தீர்க்க முடியும். அதற்கான சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் போராட்டமாக இதை மாற்றுவோம் என்று கூறி நிறைவு செய்தார்.
இறுதியாக நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது.
மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்!
போலிசு – நீதிமன்றம் – போலிசு கூட்டுச்சதியை முறியடிப்போம்!
ஆயுள்தண்டனையை ரத்து செய்யும் வரை போராடுவோம்!
தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக தக்க பதிலடி கொடுப்போம்!
முதலாளிகளைப் பாதுகாக்கும் அரசுக் கட்டமைப்பை அடித்து நொறுக்குவோம்!
பாட்டாளி வர்க்க அரசை கட்டியமைப்போம்!
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி.
தொடர்புக்கு தோழர் பழனிசாமி, 95977 89801.
மார்ச் -23 பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் – நினைவுதினம் !
1991 – தனியார்மயம், தாராளமயம், உலகமயம் இந்தியாவில் திணிக்கப்பட்டதன் விளைவுகளை இன்று காண்கிறோம். இன்று விவசாயம் அழிவை நோக்கி நகர்கிறது, இளைஞர்களுக்கான வேலையில்லா திண்டாட்டம், கல்வி காசுக்காகவும், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாகவும், இயற்கை வளங்களை சூறையாடவும் இதனை எதிர்க்கும் மக்களின் சுய உரிமையை பொசுக்க ராணுவம், காவல்துறை கட்டவிழ்த்தும் விடப்படுகிறது.
மேலும் இதற்கு பொருத்தமாய் பார்ப்பனியத்தை கடைபிடிக்கும் RSS-BJP-ABVP கும்பல் முதலாளிகளுக்காக வேலை செய்கிறது.
இயற்கை வைட்டமின் நிறைந்த மாட்டுக்கறியை சாப்பிட்டால் அடித்துக் கொல்கிறது
தொழில் நிமித்தம் மாட்டுத்தோலை உரிக்கும் தலித்துக்களை பிடித்து அடிக்கிறது BJP
ரோகித் வெமுலா படுகொலை, கண்ணையகுமாருக்கு அடி, சிறை, தலையை துண்டிப்பேன் என மிரட்டல், என் தந்தை போரில்தான் இறந்தார் என்று சொன்ன மாணவியை பாலியல் பலாத்காரம் செய்வேன் என மிரட்டுகிறது ABVP வானரக் கும்பல்
பார்ப்பனிய சித்தாந்தத்திற்கு எதிராக உள்ள தமிழக மக்களையும் தொடர்ந்து நசுக்கிறது. காவிரி நீர் – மேலாண்மை வாரியம் மறுப்பு, விவசாயிகளுக்கு நிவாரணம் – கடன் தள்ளுபடி இல்லை, நியூட்டிரினோ, மீத்தேன் ஹைட்ரோ கார்பன், கெயில், இணையம் துறைமுகம், ரேசனில் பொருட்கள் இல்லை, நீட் தேர்விற்கு விலக்கு இல்லை என்று பல்வேறு திணிப்புகளை செய்கிறது. எனினும் தமிழகத்தின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டு அனுமதி மறுப்புக்கு எதிராக RSS – BJP மோடிக் கும்பலை கிழித்தெறிந்தது, தமிழகத்தின் இளைய சமூகம்.
இதே மெரினா புரட்சியை நாளை விவசாயிகளுக்காகவும், சமூக மாற்றத்திற்கான கல்விக்காகவும், ஏகாதிபத்திய முதலாளிகளின் மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் போராட பகத்சிங் நினைவுகளை நெஞ்சிலேந்துவோம். இது தொடர்பான துண்டறிக்கைகள் பரவலாக விநியோகிக்கப்பட்டு, சிதம்பரம் – விருதை பகுதிகளில் கிராமங்களிலும், கல்லூரிகளிலும் கூட்டங்கள் நடைபெற்றன. பெருந்திரளான மக்களும், மாணவர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொண்டனர்.
பெரிய குப்பம்
கோ.பூவனூர்
கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி(விருதை)
கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி(விருதை)
அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி(சி.முட்லூர் – சிதம்பரம்)
அரசு கலைக்கல்லூரி மாணவர் விடுதி(சி.முட்லூர் – சிதம்பரம்)
தகவல் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி
விருதை – சிதம்பரம்.
புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 4
நாங்கள் குர்காவ்ன் மானேசரில் அமைந்துள்ள தேவிலால் பூங்காவில் இருந்தோம். மார்ச் 23-ம் தேதி வியாழக்கிழமை. மாருதி தொழிலாளர் வழக்கில் கீழமை நீதிமன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்பால் தண்டிக்கப்பட்ட 31 தொழிலாளிகளை விடுவிக்க கோரியும் வேலையிழப்புக்கு ஆளான 2340 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க கோரியும் “சலோ மானேசர்” என்ற ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று அன்றைய தினம் ஏற்பாடாகியிருந்தது.
தேவிலால் பூங்கா
மாலை நான்கு மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட நிகழ்வுக்கு குர்காவ்ன் – மானேசர் பகுதியில் உள்ள உற்பத்தி ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. வேலையிழப்புக்கு ஆளான மாருதி தொழிலாளர்கள் பலரும் அந்த ஆர்பாட்டத்திற்கு வரவுள்ளதாக எமக்குத் தகவல் சொல்லப்பட்டிருந்ததால் அன்றைய தினம் காலையிலேயே நாங்கள் மானேசர் சென்று காத்திருந்தோம்.
நேரம் நண்பகலைக் கடந்த சமயத்தில் பத்துக்கும் குறைவான தொழிலாளிகளே இருந்தனர். ராம் நிவாசுடன் வந்த தொழிலாளர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். அப்போது உடனிருந்த ராஜஸ்தான் தோழர் மொழி பெயர்த்தார்.
”வேலை இழந்த மாருதி தொழிலாளிகள் என்னவானார்கள் ? அவர்களுக்கு வேலை கிடைத்ததா ? அவர்களின் குடும்பங்கள் என்னவாயின ?” என்றோம்.
“வேலை இழப்பு ஒருபுறம், கொலைப்பழி இன்னொரு புறம். அவர்களுக்கு வேறெங்கும் வேலை கிடைப்பது அத்தனை சுலபமாக இல்லை. சில காலம் இங்கேயே சுற்றித் திரிந்தனர். பெரும்பாலானவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை. சிலர் சொந்த ஊர்களுக்கே திரும்பினர். சிலருக்கு வேறு தொழிற்சாலைகளில் வேலை கிடைத்தது. வாழ்க்கை சென்றாக வேண்டும் அல்லவா ? உயரத்தில் இருந்து விழுந்தால் தானே பிரச்சினை. நாம் தரையில் இருப்பவர்கள் தானே? எப்படியோ பிழைத்துக் கொண்டோம். முதலாளிக்கு ஒரு தொழிற்சாலை, தொழிலாளிக்கு ஆயிரம் தொழிற்சாலைகள்” என்றவர் பலமாகச் சிரித்தார்.
”தொழிற்சங்க முன்னோடிகள்?”
“பன்னிரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை கொடுத்துள்ளனர் அல்லவா ? ராம் நிவாஸ் போல் ஒருசிலரை ஜூலை 18 சம்பவத்துக்கு முன்பே வேறு வேறு காரணங்கள் சொல்லி வேலை நீக்கம் செய்திருந்தனர். ராம் நிவாஸ் இப்போது வரை தொழிலாளர்களின் பராமரிப்பில் தான் இருக்கிறார். தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கிறார்”
”வேலையிழப்பு ஆளான தொழிலாளர்களின் குடும்பங்களைச் சந்திக்க திட்டமிட்டிருதோம். அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருப்பார்கள் தானே?”
“இங்கே வாழ்க்கையே சிரமம் தான் நண்பரே. மாருதியால் மேலும் கொஞ்சம் சிரமத்துக்கு ஆளானோம் என்பது உண்மை தான். ஆனால் தாக்குப்பிடித்துக் கொண்டோம். பெரும்பாலான தொழிலாளிகள் வெளியிடங்களில் இருந்து வந்தவர்கள் தான். அதிலும் பலருக்கு திருமணம் கூட ஆகியிருக்கவில்லை. எனவே அவர்களின் குடும்பங்கள் வெளியூர்களில் தான் இருக்கின்றன”
“நீங்கள் சொன்ன பிறகு தான் கவனிக்க முடிந்தது. தொழிலாளர்கள் பலரும் இளம் வயதினராக இருக்கிறார்களே? முதிய தொழிலாளிகளை அதிகம் காண முடியவில்லையே ?”
“இங்குள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் என்ன செய்வார்கள் என்றால், ஐ.டி.ஐ படித்த இளைஞர்களை இருபது வயதுகளின் துவக்கத்தில் ட்ரைனியாக எடுப்பார்கள். பின்னர் அப்பிரண்டிஸ் ஆக்கி சில ஆண்டுகள் கழித்து கான்டிராக்ட் தொழிலாளியாக்குவார்கள். ஒரு தொழிலாளி வேலைக்குச் சேர்ந்து முப்பது வயது கடந்த பின்னரே வேலை நிரந்தரம் செய்யப்படுவார். வருடங்கள் கூடக் கூட உற்பத்தி இலக்குகளும் வேலை நிலைமைகளும் கடினமாக்கப்படும், முப்பத்தைந்து வயதுக்குப் பின் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு கடினமாக உழைக்க முடியாது. ஒரு கட்டத்தில் மருத்துவ ரீதியில் வேலைக்குத் தகுதியில்லை (Medically unfit) என்கிற சான்றிதழைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். நாற்பத்தைந்து வயதுக்குள் எல்லாம் முடிந்து போகும்.”
”இதையெல்லாம் தொழிற்சங்கங்கள் தட்டிக் கேட்காதா?”
மணி நான்கைக் கடந்த போது சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களால் அந்தப் பூங்காவின் பின்பகுதி நிறைந்தது.
”தொழிற்சங்கம் வலுவாக இருக்கும் ஆலைகளில் இப்படிச் செய்ய முடியாது. எனவே தான் அவர்கள் தொழிற்சங்கங்களை அனுமதிப்பதில்லை. அப்படியே அனுமதித்தாலும் சிவப்புச் சங்கங்களை விட மஞ்சள் சங்கங்களை அனுமதிப்பார்கள். மீறி சிவப்புச் சங்கங்களைக் கட்ட முயற்சித்தால் எல்லா வகையிலும் தடை போடுவார்கள்”
”ஆனால், சட்டப்படி தொழிற்சங்கம் துவங்குவதைத் தடுக்க முடியாதே? சட்டப் பாதுகாப்பு உள்ளது தானே?”
”தோழரே. சட்டம் எங்கே உள்ளது? காகிதத்தில் தானே? அது பின்பற்றப்படுகிறதா இல்லையா என்பதை யார் கண்காணிப்பது? அரசாங்கம் தானே? நீங்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் ? இப்போது ஒரு ஆலையில் தொழிற்சங்கம் துவங்கினால் அதை முதலில் பதிய வேண்டும். பதிவு அலுவலகத்தில் கொண்டு போய் அதற்கான மனுவைக் கொடுத்தால் அந்தக் காகிதங்கள் அப்படியே தேங்கி நிற்கும். அதற்கு நடையாய் நடக்க வேண்டும். பல வாரங்கள் தொடர்ந்து பிச்சைக்காரர்களைப் போல் அதிகாரிகளின் டேபிள்களுக்கு முன் கைகட்டி நிற்க வேண்டும். பின் அந்தக் காகிதத்தில் ஏதோ எழுத்து குறைகிறது என்று முகத்தில் எரிந்து துரத்தி விடுவார்கள். நீதிமன்றத்துக்குப் போக வேண்டும். அதற்கு வேலையை விட்டுவிட்டு அலைய வேண்டும். இதற்குள் ஒரு சில மாதங்கள் கடந்திருக்கும். இதற்கிடையே சங்கம் துவங்க முன்னே நிற்பவர்களை விலைக்கு வாங்கும் பேரத்தை நிர்வாகம் துவங்கியிருக்கும். ஒருவேளை படிந்து வந்தால் மஞ்சள் சங்கமாக உடனடியாக பதிந்து விடலாம். சங்க முன்னோடிகள் பேரத்துக்குப் படியவில்லை என்றால் ? மேலும் சில மாதங்கள் நீதி மன்றத்துக்கு அலைய வேண்டியிருக்கும்.”
நேரம் மாலை நான்கு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. ராம் நிவாசும் அவருடன் வந்த தோழர்களும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க விரைந்தனர். நாங்கள் அந்த வளாகத்தைச் சுற்றி வந்தோம். பூங்கா எனச் சொல்லப்பட்டாலும் பூச்செடிகளோ புல்வெளியோ சரியான பராமரிப்போ இன்றி வறண்டு கிடந்தது. சில பத்து ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடந்த அந்தப் பூங்காவின் ஒரு முனையில் முன்னாள் ஹரியாணா முதல்வர் தேவிலாலின் சிலை ஒன்று நின்றது.
தேவிலாலின் சிலையைச் சுற்றிலும் அகழி போல் அமைத்திருந்தனர். அதன் ஓரத்தில் நீரூற்றுக்கான குழாய்கள் துருப்பிடித்த நிலையில் தென்பட்டன. பூங்காவுக்கு நேர் எதிரே இருந்த சாலையில் மேம்பால வேலை நடைபெற்று வந்தது. அருகிலேயே வேறு சில கட்டுமானப் பணிகளும். தேவிலாலின் சிலை எதிரே புழுதி பறந்து கொண்டிருந்த குர்காவ்ன் மானேசர் சாலையையும் உயிரற்ற அந்த நகரத்தின் எந்திரகதியான இயக்கத்தையும் வெறித்துக் கொண்டே நின்றது.
ஆளரவமற்றுக் கிடந்த அந்தப் பூங்காவின் மறுகோடியில் மெல்ல மெல்ல தொழிலாளிகளின் நடமாட்டம் தென்படத் துவங்கியது. சரியாக 3:45 மணிக்கு சாரை சாரையாக அணிவகுக்கத் துவங்கிய தொழிலாளிகள் எழுப்பிய கோஷங்களால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.
பள்ளமான நிலத்தை நான்கு திசைகளிலும் பாய்ந்து சூழ்ந்து கொள்ளும் காட்டாற்று வெள்ளம் போல் வெவ்வேறு திசைகளில் இருந்தும் தொழிலாளர்கள் அணியணியாக பூங்காவினுள் நுழைந்தனர். தொழிலாளர்களில் சிலர் அப்போது தான் ஷிப்டு முடித்திருந்தனர்; அவர்கள் நிறுவனத்தின் சீருடைகளோடு செங்கொடியேந்தி அணிவகுத்து வந்தனர். மணி நான்கைக் கடந்த போது சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களால் அந்தப் பூங்காவின் பின்பகுதி நிறைந்தது.
அதன் பின்னும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து சில பத்து பேர் கொண்ட குழுக்களாக தொழிலாளிகள் வந்த வண்ணமிருந்தனர். அங்காங்கே ஜே.என்.யூ-வைச் சேர்ந்த இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் காண முடிந்தது. நம்முடன் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ராஜஸ்தானி தோழர் இருந்தார்; எனினும், தொழிலாளிகளின் வெள்ளத்தில் ஆளுக்கொரு திசையாக அடித்துச் செல்லப்பட்டு விட்டோம்.
இந்தி மட்டுமே தெரிந்த தொழிலாளிகளிடம் ஆங்கிலமும் தமிழும் உடைந்த இந்தியும் கலந்து பேச்சுக் கொடுத்தோம். தமது பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ள நாட்டின் தென்கோடியிலிருந்து வந்தவர்கள் என்பதே அவர்களுக்கு உற்சாகமூட்டியது. ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக இந்தியிலும், உடைந்த ஆங்கிலத்திலும், சைகை பாஷையிலும் என மூன்று முறை பதில் சொன்னார்கள். பதிலைப் புரிந்து கொண்டோம் என்பதை தலையசைப்பில் நாம் உறுதி செய்ததைக் கண்டு தோழமையுடன் சிரித்தார்கள்.
”தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு” மானேசரில் நடைபெற்ற தொழிலாளர்களின் பேரணி
”பாஷா கோயி தக்லீஃப் நஹி ஹேய்” என்ற ரஜேந்தர் சிங், (மொழி ஒரு பிரச்சினையே அல்ல) வலதுகையை இடது மார்பில் வைத்து விட்டு நமது தோளைத் தட்டினார். அவரிடம் மேலே எழுப்பப்பட்ட கோஷங்களின் பொருளைக் கேட்டு விளங்கிக் கொள்ள முயற்சித்தோம். அவர் விளக்கியதில் இருந்து நாம் புரிந்து கொண்டது.
”ஆவாஸ் தோ ஹம் ஏக் ஹே” – ”உரக்கச் சொல், நாம் ஒன்று என” ” பர்க்காஸ்ட் மஸ்தூர் கோ பஹால் கரோ.” – “தொழிலாளிகளின் பறிக்கப்பட்ட வேலைகளை திரும்பக் கொடு” “”இன்குலாப் ஜிந்தாபாத். மோடி சர்க்கார் முர்தாபாத்” – “புரட்சி ஓங்குக. மோடி அரசு ஒழிக”
கூட்டத்தில் மாருதி ஆலையில் தற்போது பணிபுரிந்து வரும் தொழிலாளிகளைத் தேடினோம். சீருடையின்றி சிலர் வந்திருந்தனர். அவர்களுடன் பேச்சுக் கொடுத்தோம்.
”2012, ஜூலை 18 அன்று நடந்த சம்பவத்துக்குப் பின் தொழிற்சங்க நடவடிக்கைகள் என்னவாயின?” பெயர் குறிப்பிட மறுத்த அந்த தொழிலாளியிடம் கேட்டோம்.
”தொழிற்சங்கம் மொத்தமும் முடக்கப்பட்டது. இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்களின் வேலை பறிக்கப்பட்டன. வெளியில் இருந்து மீண்டும் ஒப்பந்த தொழிலாளிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், அதே பழைய சுரண்டல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. அதிகாரிகள் எங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். மேலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை முதலாளிகளாகவே கருதிக் கொண்டு செயல்பட்டனர்”
”தற்போது மானேசர் ஆலையில் எத்தனை தொழிலாளிகள் பணிபுரிகின்றனர்”
”சுமார் ஐயாயிரம் பேர். வழக்கம் போல இதில் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த தொழிலாளிகள் தான்”
”தொழிற்சங்க நடவடிக்கைகள்?”
அதே பழைய சுரண்டல் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. அதிகாரிகள் எங்களை ஏளனமாகப் பார்ப்பார்கள். மேலாளர்கள் ஒவ்வொருவரும் தங்களை முதலாளிகளாகவே கருதிக் கொண்டு செயல்பட்டனர்
“நாளுக்கு நாள் நிர்வாகம் தொழிலாளர்களின் மீது கட்டவிழ்த்து விடும் சித்திரவதைகள் அதிகரித்து வந்தன. சரியாக இரண்டே ஆண்டுகளில் நாங்கள் மீண்டும் ஒரு சிவப்புத் தொழிற்சங்கத்தைக் கட்டினோம். எங்கள் அதே பழைய கோரிக்கைகளை தூசி தட்டி கையிலெடுத்தோம். ”சமமான வேலை, சமமான கூலி, சமமான சலுகைகள்” என்பதை முன்வைத்தோம். ஒப்பந்த தொழிலாளிகளை நிரந்த தொழிலாளிகளாக்குவது, வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை என்பதை முன்வைத்து மீண்டும் போராடத் துவங்கினோம். அதே போல் 44 நொடிகளுக்கு ஒரு கார் என்கிற உற்பத்தி இலக்கை தளர்த்தக் கோரினோம்”
”இந்தக் கோரிக்கைகளை வென்றெடுத்தீர்களா ?”
“சிலவற்றில் எங்களுக்கு சாதகமான முடிவுகளை நிர்வாகம் எடுக்கும் அளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறோம். உதாரணமாக 42 நொடிகளுக்கு ஒரு கார் என்கிற இலக்கை தற்போது 60 நொடிகளாக தளர்த்தியுள்ளனர். வேலை பறிக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்கிற கோரிக்கையை நாங்கள் இன்னும் விடவில்லை. எப்படியும் விரைவில் வெல்வோம்” என்றவர் நம்மிடம் விடைபெற்றுக் கூட்டத்தில் கலந்தார்.
மாருதி ஆலையில் இருந்து வந்த தொழிலாளர்கள் உற்சாகமாக இருந்தனர். அந்த பூங்கா முழுவதிலும் நிறைந்திருந்த தொழிலாளர்களிடம் ஒருவிதமான அச்சமற்ற களிப்பைக் காண முடிந்தது. தாங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல என்கிற நம்பிக்கையை அந்தக் கூட்டம் அவர்களுக்கு ஏற்படுத்தியதா? அல்லது இந்திய அரசின் ஆதரவையும் சர்வ வல்லமையையும் கொண்ட ஒரு ஜப்பானிய கோலியாத்தைப் பணிய வைத்த வர்க்கப் பெருமிதமா? அல்லது இறுக்கமான சாதிய கட்டுமானத்தின் நடுமையத்தில் சாதி கடந்த வர்க்க ஒற்றுமை ஒன்றைச் சாதித்த வெற்றிச் செருக்கா?
தேவிலால் பூங்காவில் எதிரொலித்த முழக்கங்களில் வெளிப்பட்ட வர்க்க கோபத்தின் அடியாழத்தில் இருந்த தோழமைப்பூர்வமான மகிழ்ச்சியின் நினைவுகளோடு நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.
கோழி கூவும் முன்னே எழுந்து இரவு படுக்கச் செல்லும் வரை கிராமப்புறப் பெண்களுக்கு ஓய்வில்லை. அப்படி இடையறாது உழைத்தும் அவர்களது வாழ்க்கை என்பது ஏதோ ஓடிக் கொண்டிருக்கிறது. வேலை செய்தே வாழவேண்டும் என்பதில் இங்கே வயது வித்தியாசம் இல்லை. ஆதிக்க சாதியானாலும், ஒடுக்கப்படும் சாதியானலும் இப்பெண்கள் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த கட்டுரையில் இடம்பெறும் பெண்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரத்தைச் சேர்ந்த கிராமங்களில் வாழ்பவர்கள்.
95 வயது தொழிலாளி பெரியம்மாள்.
சாலப்பாளையத்தைச் சேர்ந்த பெரியம்மாளுக்கு 95 வயதாகிறது. தள்ளாத வயதிலும் தடியூன்றி (மரவள்ளிக்கிழங்கு குச்சி) உழைக்கிறார். அவரது முதுகு கூனினாலும் சுயமரியாதைக்கு கூனில்லை. தென்ன ஓலை உரித்து ஈக்குமாறு தயாரித்து விற்பனை செய்கிறார். ஒரு நாளைக்கு நான்கைந்து செய்வார். ஒரு ஈக்குமாறுக்கு 15 ரூபா கிடைத்தால் அதிகம்.
கல்லக் கொடி (நிலக்கடலை செடி) சுமந்து வரும் செல்லம்மாள்.
சிக்கநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த சிறு விவசாயியான செல்லம்மாவிற்கு 60 வயது இருக்கும். அவருக்கு இரண்டரை ஏக்கர் நிலமிருக்கிறது. பல ஆண்டுகளாக அந்த நிலத்தில் கரும்பு பயிரிட்டு வந்ததாகக் கூறும் அவர் இந்த ஆண்டு மழையும் காவிரியும் பொய்த்து விட்டதால் ஒரு ஏக்கரில் மட்டுமே கரும்பு பயிரிட்டவர் இந்த நிலைமையே இன்னும் நீடித்தால் அதுவும் வந்து சேராது என்கிறார். அவரது கணவர் அரசு பள்ளியில் கிளர்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டு, தற்போது எல்.ஐ.சி ஏஜென்டாக வேலை பார்க்கிறார். விவசாயம் பக்கமே எட்டிப் பார்ப்பதில்லை அவர்.
செல்லம்மாவின் வயலில் வேலை செய்யும் பாப்பா கூறுவது போல அதிகாலை 3-லிருந்து 4 மணிக்குள் செல்லம்மாவின் நாள் ஆரம்பிக்கிறது. வீடு, வாசல் மற்றும் கட்டுத்தாரை(மாட்டுத் தொழுவம்) பெருக்குவது, வாசலுக்கு சாணம் தெளிப்பது, எருமை மாடுகளுக்கு களநீர் காட்டுவது, பால் கறப்பது, சமையல் வேலை என்று பம்பரமாய் சுழல்வதில் எட்டு மணியாகி விடுகிறது. அதன் பின்னர் கரும்பு சோவை உரிக்க சென்று நண்பகலுக்கு தான் வருகிறார். மதிய உணவை முடித்து விட்டு எருமை மாடுகள் மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு முடுக்கி விடுகிறார். மீண்டும் பால் கறத்தல், சமையல் என்று இரவு 8 மணிக்கு அவரது அன்றைய ஒரு பகலும் இரவும் ஒருவாறாக முடிகிறது.
இருப்பினும் இங்கு ஒரு பெண்ணை விவசாயி என்று சமூகம் அழைப்பதில்லை. அது ஆண்களுக்குரியதாகவே இருக்கிறது.
பாப்பா செல்லம்மாவின் ஊரைச்சேர்ந்த ஒரு விவசாயக் கூலி. அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்துவிட்டு 7 மணிக்கு கூலி வேலைக்குச் செல்கிறார். காலை 8 மணிக்கு தொடங்கும் வேலை மாலை 5 மணிக்கு முடிகிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நூறு ரூபாயாக இருந்த கூலி தற்போது 200 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. நூறு நாள் வேலைத்திட்டம் வந்தபிறகுதான் பாப்பா போன்ற கூலி விவசாயிகளுக்கு கூலி உயர்ந்திருக்கிறது.
நாங்கள் பார்த்த அன்று செல்லம்மாவும் பாப்பாவும் காய்ந்த நிலக்கடலைக் கொடியை சுமந்து வந்து சாலையோரத்தில் போட்டுக் கொண்டிருந்தார்கள். செல்லம்மாவின் நிலத்தில் இருந்து அவர்களது ஊர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வெள்ளாளக் கவுண்டர் எனும் ஆதிக்கச்சாதியை சேர்ந்தவர் செல்லம்மாள். அருந்ததியர் எனும் தாழ்த்தப்பட்டச் சாதியைச் சேர்ந்தவர் பாப்பா. இன்றும் செல்லம்மாவின் தெருக்கு சென்றாலும் வீட்டிற்குள் பாப்பா போக முடியாது. இருப்பினும் இருவருமே உழைத்து கருத்தவர்கள்.
புகைப்படம் எடுத்த பிறகு பாப்பா அவர் வீட்டிற்கு சாப்பிட அழைத்தார். இருப்பினும் “எங்க வீட்டில் நீங்கள் சாப்பிடுவீங்களா?” என்று சந்தேகமாகக் கேட்டார். “அவர்கள் டவுனில் இருக்கிறார்கள் அதனால் வித்தியாசம் பார்க்கமாட்டார்கள்” என்று செல்லமாள் பதிலளிக்கிறார்.
மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் மோகனாம்மாள்.
மோகனாம்மாளுக்கு நான்கு வயதில் ஒரு மகன். காலையில் வீடு வாசல் பெருக்கிய பின்னர் ஆறு மணி அளவில் சமையல் வேலையில் ஈடுபடுகிறார். அவரது கணவரும் கட்டுத்தாரை பெருக்குவது, பால் கறப்பது என்று வேலைகளில் ஈடுபடுகிறார். பையனை பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு கரும்புச் சோவை (தோகை) உரிக்கச் சென்று பிற்பகல் பன்னிரெண்டு மணிக்கு தான் மோகனாம்மாள் வீடு திரும்கிறார். குளித்த பின்னர் மதிய உணவை (மூன்று வேளையும் சோறு மற்றும் பருப்புக் குழம்பு) முடித்துவிட்டு எருமை மாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்று மாலை 4 மணிக்கு வீட்டிற்குத் திரும்புகிறார். ஆடு மாடுகளுக்கு தண்ணீர் காட்டிவிட்டு மீண்டும் வீட்டு வேலைகள்… மோகனாம்மாளின் உழைப்புக்கு மாத சம்பளம் கொடுப்பதாக இருந்தால் எவ்வளவு கொடுக்கலாம்?
விதைக்கரும்பு ஊன்றும் வேலையில் ரேவதி.
கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரேவதி. பறையர் சாதியைச் சேர்ந்த அவருக்கு 10-வது படிக்கும் ஒரு மகளும் 10-வது வகுப்பில் பாதியிலேயே நின்றுவிட்ட ஒரு மகனும் இருக்கிறார்கள். அவருடன் அவரது பகுதியைச் சேர்ந்த 10 பெண்கள் கரும்பு வெட்டுவது, கரும்புக் கரணை (விதைக் கரும்பு) ஊன்றுவது உள்ளிட்ட விவசாயம் சம்மந்தப்பட்ட வேலைகளைக் குத்தகையாக(Contract) எடுத்து செய்கிறார்கள். வெளியூர் வேலைக்கு என்றால் 10 பெண்களும் அதிகாலை 3 மணிக்கே கிளம்பி விடுகிறார்கள். வேலைக் குத்தகைக்கு வரும் வருமானத்தை பத்து பேரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
அவரது மகள் வீட்டு வேலைகளில் உதவி செய்தாலும் 10 ஆம் வகுப்பு படிப்பதனால் வீட்டுவேலை செய்வதிலிருந்து ரேவதி தடுத்து விட்டார். அவரது கணவரும் கூலி வேலைக்குத்தான் செல்கிறார். உடல் வலிக்காக குடிக்கத் தொடங்கியவர் தொடர்ந்து அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாக கூறுகிறார் ரேவதி. “பொம்பளைங்களும் தான் உடம்பு வலிக்க வேலைச் செய்யறாங்க. அவங்களும் குடிச்சா குடும்பம் என்னத்துக்கு ஆகும்? பொம்பளைங்க வேலையை எந்த ஆம்பளை மதிக்கிறாங்க? ஒரு நாள் பொம்பளைங்க வீட்டு வேலைக்கு லீவு போட்டா அன்னைக்கு தெரியும் அவுங்களுக்கு பொம்பளைங்களோட அருமை” என்கிறார்.
விளக்குமாறு தயாரிக்கும் வேலையில் இலட்சுமி.
கொளத்துப்பாளையத்தைச் சேர்ந்த இலட்சுமிக்கு 65 வயது. கணவர் ஓராண்டிற்கு முன்பு காலமாகி விட்டார். அவருக்கு திருமணமான 2 மகள்களும் ஒரு மகனும் இருகிறார்கள். காவிரித் தண்ணீர் வராததால் தன்னுடைய நான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் மட்டுமே கரும்பு பயிரிட்டுள்ளார். 100 நாள் வேலைக்கும் செல்கிறார். கிடைக்கும் நேரத்தில் ஈக்குமாறும் உரிக்கிறார். “பொழைக்கணும்னா ஏதாச்சும் வேலை செஞ்சுகிட்டே இருக்கணும். சும்மா இருக்க முடியாதுல்ல”.
கடை விற்பனையோடு வீட்டு சமையலுக்கான காய்களையும் நறுக்குகிறார் வகிதா பீவி.
வெள்ளியம்பாளையத்தைச் சேர்ந்த வகிதா பீவிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். மதிய உணவிற்காக காய்கறியை நறுக்கிக்கொண்டே தனது சிறிய மளிகை கடையைக் கவனித்துக் கொண்டு பேசினார். கடைக்குத் தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வருவது மட்டும் தான் பாயுடைய(அவரது கணவர்) வேலை. மற்றபடி கடையைத் தானே கவனித்துக் கொள்வதாக கூறுகிறார். காலை 6 மணியில் இருந்து வீட்டு வேலைகளை பரபரப்புடன் முடித்து விட்டு கடைக்கு செல்கிறார். இரவு 9 மணிக்கெல்லாம் கடையை அடைத்து விட்டு 9 அல்லது பத்து மணிக்கு உறங்கச் செல்கிறார்.
ஒரு செங்கல் அறுத்தால் 55 காசு என்கிறார் ஐந்து இலட்சம்!
விழுப்புரத்தைச் சேர்ந்த கலகலப்பான பெண் “ஐந்து இலட்சம்”. அவரது பெயரே அதுதான். கொக்கராயன்பேட்டையில் ஒரு செங்கல் சூளையில் கூலி வேலைச் செய்கிறார். தனக்கு முன் பிறந்த 5 குழந்தைகளும் இறந்து விட்டதால் அரிய பொக்கிஷமாக பிறந்த தனக்கு ஐந்து இலட்சம் என்ற பெயரை பெற்றோர்கள் வைத்ததாக பெயரின் பின்னணியை விளக்குகிறார். ஒரு செங்கல்லிற்கு 55 காசுகள் கிடைக்கும் என்று கூறுபவர் தனது கணவருடன் சேர்ந்து ஒரு நாளைக்கு 1500 செங்கற்கள் வரை அறுக்கிறார். அதன்படி இவர்களுக்கு ரூ 855 கிடைக்கும். சூளை முதலாளியிடம் பெற்ற முன்பணம் 70 ஆயிரம் ரூபாயில் மாதம் மாதம் கொஞ்சம் கொஞ்சமாக கழித்து வருகிறார்கள். ஆண்டிற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தனது சொந்த ஊரான விழுப்புரத்திற்குச் செல்கிறார்.
அவரது மகன் விழுப்புரத்தில் 12-ம் வகுப்பு படிக்கிறார். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அரசு வேலை கிடைத்தும் தன்னுடைய மகளை அவரது கணவர் வேலைக்கு அனுப்ப மறுத்து விட்டதாக கூறுகிறார். தனது மருமகனை விட தனது மகள் நன்கு படித்திருந்ததாகவும் ஆனால் தன குடும்பத்திற்கு சமையல் செய்து கொண்டு வீட்டை கவனித்து கொண்டாலே போதுமானது என்று மகளின் கணவர் கூறி விட்டாராம். தனது மகள் தன்னைப் பார்க்க வருவதற்கு அவரது மருமகன் மறுப்பதை நினைத்து மனம் வெதும்புகிறார். விடைபெறும் போது “அடுத்த முறை நீங்க கண்டிப்பாக வரணும். நான் நாட்டுக்கோழி அடிச்சு கொழம்பு வெச்சு போடுறேன்” என்று அன்புடன் அழைக்கிறார்.
செங்கல் அறுக்கும் பச்சியம்மாள்.
பச்சியம்மாள் ஓமலூரைச் சேர்ந்தவர். வயது 60 ஆகிறது. தனது கணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் குடும்பமாக கொக்கராயன்பேட்டை செங்கல் சூளையில் வேலைச் செய்கிறார். தினமும் காலை 4 மணிக்கு செங்கல் அறுக்கும் வேலையைத் தொடங்குகிறார். அறுக்கும் செங்கலின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூலி கிடைக்கும். ஆயினும் பொதுவாக பெண்கள் 500 செங்கல்கள் வரையும் ஆண்கள் 1000 வரைக்கும் அறுக்க முடியும் என்கிறார். ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு “ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் புதன்கிழைமைகள் செங்கல் சூளைக்கு விடுமுறை” என்கிறார். ஆனால் அந்த இரு நாட்களிலும் கிடைக்கும் விவசாய கூலி வேலைகளுக்குச் செல்வதாக கூறுகிறார்.
கணவர், மகன், மருமகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் பச்சியம்மாள்.
பச்சியம்மாளின் மருமகள் மல்லிகாவிற்கு ஐந்தாவது படிக்கும் ஒரு மகளும் 3 வது படிக்கும் ஒரு மகனும் இருக்கிறார்கள். சமையல் வேலைகளை முடித்துவிட்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு அவரும் செங்கல் அறுக்கும் வேலையில் ஈடுபடுகிறார். அவரது குழந்தைகள் கொக்கராயன்பேட்டை அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.
மணத்தக்காளி விற்கும் தங்கம்மாள்.
கணவனை இழந்த கூலி விவசாயியான தங்கம்மாளுக்கு 60 வயதாகிறது. தொட்டிக்காரப்பாளையத்தைச் சேர்ந்த அவருக்கு திருமணமான மூன்று மகன்கள் இருந்தாலும் தனியேதான் வாழ்கிறார். முதன்முதலாக கீரை விற்க (மிளகு தக்காளி கீரை அல்லது மணத்தக்காளிக் கீரை) கொக்கராயன்பேட்டைக்கு வந்தாராம். “பொண்ணுன்னு ஒன்னு இருந்தா ஒடம்பு சரியில்லேன்னா நாலு துணிய தொவச்சு போடும் சோறுதண்ணி ஆக்கிபோடும் அனுசரணையா ரெண்டு வார்த்தை பேசும். ஆனா கொள்ளி வைக்க மட்டும் தான் பசங்க ஆவாங்க” என்று தனது இயலாமையை நினைத்து கண் கலங்குகிறார். இருந்தும் தம்முடைய உடலில் வலு இருக்கும் வரை தன்னால் தனித்து வாழ முடியும், பின்னாடி கடவுள் விட்ட வழிதான் என்கிறார்.
வேங்கிபாளையத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் பெண்கள்.
பொதுவாக நீர்வளம் குறைந்த பகுதியாக இருந்தாலும் இந்த ஆண்டு வேங்கிபாளையத்தை வறட்சி கடுமையாக தாக்கியிருக்கிறது. ஆடு மாடுகளை வைத்து சமாளிப்பது மிகவும் சிரமம் என்கிறார்கள் அந்த ஊரைச் சேர்ந்தவர்கள். நிலங்கள் தரிசானதால் நிலமுள்ளவர்கள் நிலமற்றவர்கள் என்ற பேதமில்லாமல் அனைத்து பெண்களும் 100 நாள் வேலைக்கு செல்கிறார்கள்.
பேராசிரியர் சாய்பாபாவுக்கு ஆயுள்தண்டனை!
சிவில்-ஜனநாயக உரிமைகளை நசுக்கும் நீதிமன்றங்கள் !
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரைக் கிளை சார்பாக கடந்த 2-4-17 ஞாயிறு அன்று “ பேராசிரியர் சாய்பாபாவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய் ! கருத்துரிமையை நசுக்கும் ஊபா (UAPA) சட்டத்தைநீக்கு!” என்ற முழக்கத்தை முன் வைத்து கருத்தரங்கம் நடைபெற்றது.
பெங்களூரு வழக்கறிஞர் தோழர் பாலன்“மாபெரும் அபாயமாய் மின்னணு சாட்சியங்கள் ! சிந்தனைக்கு தண்டனை விதிக்கும் நீதிமன்றங்கள் !” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தோழர் பாலன்
நரசிம்மராவ் – மன்மோகன் சிங் இணைந்து தனியார்மயம் தாராளமயம் உலக மயம் கொள்கையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தார்கள். பகத் சிங் ஏகாதிபத்தியத்தை முற்றிலும் ஒழிக்கப் போராடி உயிரைத் தியாகம் செய்தார். இப்போது நரேந்திர மோடி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தரகர் வேலை பார்க்கிறார். பறந்து பறந்து பன்னாட்டு முதலாளிகளை இந்தியாவுக்கு அழைக்கிறார். ஆனால் அவன் நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தை சொந்த நாட்டுத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கச் சொல்லிக் கேட்பதில்லை. கடமையைச் செய் ! பலனைக் கேட்காதே என்று கீதையில் கண்ணன் சொன்னதை மோடி அமல்படுத்துகிறார்.
நமது தாய் நாட்டின் வளங்களை எல்லாம் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கிறார். தண்டகாரண்யா மலைப் பகுதியிலே எண்ணற்ற கனிம வளங்கள் நிறைந்துள்ளன. அவற்றைக் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிக்கத் தடையாக இருப்பவர்கள் பழங்குடி மக்கள். ராணுவத்தை ஏவி அந்த மக்களைக் காட்டை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை பேராசிரியர் சாய்பாபா எதிர்த்துப் போராடினார். அவர் டெல்லியில் இருக்கிறார். மராட்டிய மாநிலம் கட்ஜ்ரோலி மாவட்டக் கோர்ட் அவருக்கு தண்டனை கொடுத்துள்ளது. எப்படி? அந்தப் பகுதியிலுள்ள இரண்டு பேருக்கு சாய்பாபாவைத் தெரியும் என்பதை வைத்து வழக்குப் போட்டு ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர் பிணையில் வந்தார். இப்போது அந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட லேப் டாப், பென் டிரைவ், சி.டி., டி.வி.டி. போன்ற மின்னணு சாதனங்களை சாட்சியங்களாக வைத்து அவருக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது. மின்னணு சாதனங்கள் முதல் நிலை சாட்சியங்கள் அல்ல. இந்த சாட்சியங்கள் செல்லத்தக்கவை அல்ல என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தீர்ப்பு வழங்கியுள்ளார். அது 7 நீதிபதிகள் அமர்வில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டில் உள்ளது. எனவே மின்னணுக் குப்பைகளை வைத்துச் சொல்லப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு சட்டவிரோதமானது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்(ஊபா) ஒரு மக்கள் விரோதக் கருப்புச் சட்டம். குடிக்கத் தண்ணீர் கேட்டால் அது சட்ட விரோதம். ஆற்று நீர், நிலத்தடி நீரைக் கொள்ளையடித்தால் அது சட்டப் பூர்வம். வேலை கேட்டால் சட்டவிரோதம். வேலையை விட்டுத் தூக்கினால் சட்டப்படியானது. மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடினால் சட்டவிரோதம். வாழ்வாதாரங்களைக் கொள்ளையடித்தால் அது சட்டவிரோதம் இல்லை. தாடி வைத்துள்ள இசுலாமியருக்கு ஊபா.
மதுரை வழக்கறிஞர் முருகன் ஊபா சட்டதில் கைது செயப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் செய்த குற்றம் என்ன? மாவோயிஸ்டுகள் என்று சொல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சில தோழர்களுக்காக அவர் கட்டணம் வாங்காமல் வாதாடினார். அவர் கடமையைச் செய்தார். பலனை எதிர்பார்க்கவில்லை. அதுதான் குற்றம் என்று ஊபா அவர் மீது பாய்ந்துள்ளது. சட்டவிரோதம் என்று எதை வேண்டுமானாலும் அரசு சொல்லலாம். அதை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்கின்றன. அதுதான் பெரிய அபாயம்.
ஒரு நாயைக் கொன்றால் அதை ஏன் கொன்றாய் என்று கேட்டால் அதற்குப் பைத்தியம் என்று சொல் என்றான் ஹிட்லர். அதுபோலத்தான் மக்களுக்காகப் போராடுகிறவர்களை நக்சலைட்டுகள். பயங்கரவாதிகள், தேச விரோதிகள் என்று சொல்லி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தான் மோடியின் வேலை. ஹிட்லரின் முடிவு மோடிக்கும் ஏற்படும் என்று சொல்லி தனது சிறப்புரையை முடித்தார் வழக்கறிஞர் தோழர் பாலன்.
முன்னதாக தலைமையுரையாற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் “ பேராசிரியர் சாய்பாபா முதலில் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன. ஆனால் இப்போது அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் எழ வேண்டிய எதிர்ப்புக் குரல்கள் குறைந்துள்ளன. இந்த நிலைமை மிகவும் ஆபத்தானது படித்த அறிவுஜீவி தரப்பினர் அமைதிகாப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. எங்கோ இருக்கிற சாய்பாபாவுக்குத்தானே வந்திருக்கிறது. நமக்கு வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்துவிட முடியாது. மதுரையில் வழக்கறிஞர் முருகனுக்கு எதிராக இந்தக் கருப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. நாளை நெடுவாசலில், தஞ்சையில், கூடங்குளத்தில், மெரினாவில் போராடுகிற மாணவர்கள் – இளைஞர்கள் மீது பாயலாம். டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மீது, என் மீது தேச துரோக வழக்குப் போடப்பட்டுள்ளது. நீதிமன்ற ஊழலுக்கு எதிராகப் போராடிய வழக்கறிஞர்கள் மீது நிரந்தரத் தொழில் தடைவரை தண்டனை சட்டப் புறம்பாக மின்னணு சாட்சியங்களை வைத்து விதிக்கப்பட்டுள்ளது.
தோழர் வாஞ்சிநாதன்
சாய்பாபா 90% உடல் ஊனமுற்ற மாற்றுத் திறனாளி. சக்கர நாற்காலியில் தான் அவரால் இயங்க முடியும். அவருடைய சிந்தனைக்கு, கருத்துக்குத் தண்டனை தரப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுள்ளது. மக்களுக்காகப் போராடுகிற முன்னணியாளர்கள், அமைப்புகள், இயக்கங்கள் அறிவுஜீவிகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர்.
ஆஜ்மீர் தர்கா, மாலேகான், ஹைதராபாத் போன்ற பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இந்துமத வெறியர் அசீமானந்தா குண்டு வைத்ததை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட பின்பும், பத்திரிகைகளில் நேரடியாக பேட்டி கொடுத்து தண்டனையும் எதிர்பார்த்திருந்த போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு போதிய சாட்சியங்கள் இல்லையாம். ஆனால் நேரடி சாட்சியங்களே இல்லாத நிலையில் இரண்டாம் தர சாட்சியங்களை வைத்து சாய்பாபாவுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது. பார்ப்பன இந்து மத வெறிக் கும்பலின் பாசிசக் கொடுங்கரங்கள் நீதிமன்றங்களின் மீது அதிகாரத்தைச் செலுத்தி தன் வசமாக்கி வருகின்றன. எனவே மக்கள் உரிமைகளுக்காகப் போராட விரும்புகிற, ஜனநாயகத்தின் மீது பற்றுக்கொண்டுள்ள அனைவரும் செயலை நோக்கி முன்வரவேண்டிய தருணம் இது “ என்று கூறி முடித்தார்.
அதன் பிறகு கேள்வி-பதில் நிகழ்வு நடை பெற்றது. மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள் என்று பல தரப்பினர்களும் தங்கள் ஐயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டனர். மின்னணு சாட்சியங்கள் பற்றியும், தற்போதைய அரசியல் சமூக சூழலில் நீதிமன்றங்களை நாம் பயன்படுத்த முடியுமா? சாய்பாபா பிரச்சினைக்கு உடனடித் தீர்வு என்ன? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.பொருத்தமான முறையில் பாலன் பதில் சொன்னார். மேல்முறையீட்டில் அவருக்குப் பிணை கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறினார். லாட்டரி விழுவது போல் சில வேளைகளில் தீர்ப்புகள் வருவதுண்டு என்று தெளிவுபடுத்தினார்.
நிறைவாக கிளைச் செயலாளர் லயனல் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் பேராசிரியர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், அரசு ஊழியர்கள், வங்கி அலுவலர்கள் பெண்கள் போன்ற பல்வேறு தரப்பிலிருந்தும் சுமார் 250 பேர்வரை கலந்து கொண்டனர். 5000- துண்டறிக்கை, சுவரொட்டி மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பலர் செல்பேசி மூலம் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். சட்டம், நீதி சார்ந்த பல அறிஞர்களின் மேற்கோள்கள் பிளக்ஸில் அச்சிட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது பலரையும் கவர்ந்தது.
தகவல் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக் கிளை, தொடர்புக்கு – 9443471003
பொய்வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை அனுபவித்து வருகின்ற மாருதி ஆலைத்தொழிலாளர்களது சிறை மீட்புக்காக 4.4.2017 அன்று நாடுமுழுவதும் ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டங்கள், பேரணிகளை நடத்த மாருதி சுசூகி தொழிலாளர்கள் சங்கம் அறைகூவல் விடுத்திருந்ததையடுத்து, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
திருவள்ளூர் (மேற்கு) மாவட்டக்குழு சார்பில் 4.4.2017 அன்று காலையில் ஆவடியை அடுத்துள்ள டி.ஐ மெட்டல் பார்மிங் ஆலைவாயிலிலும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள சாய்மிர்ரா ஆலைவாயிலிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
மெட்டல் பார்மிங் ஆலைவாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தோழர் சக்திவேல் தலைமை தாங்கினார். மாநிலப்பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார். சாய்மிர்ரா ஆலைவாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தோழர் ராஜா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் தோழர் முகிலன் கண்டன உரையாற்றினார். இரண்டு ஆர்ப்பாட்டங்களிலும் நிரந்தர தொழிலாளர்தள், கான்டிராக்ட் தொழிலாளர்கள் ஆகிய இருபிரிவினரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு வர்க்க ஒற்றுமையையும், போராட்ட மரபையும் உயர்த்திப்பிடித்தனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (மேற்கு) தொடர்புக்கு: 9445368009
***
ஏப்ரல் 4 2017 ல் மாருதி தொழிலாளர்களின் சிறை மீட்புக்கான நாடு தழுவிய போராட்டங்கள் – கும்மிடிப்பூண்டி
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கும்மிடிபூண்டி
***
ஏப்ரல் 4 2017 ல் மாருதி தொழிலாளர்களின் சிறை மீட்புக்கான நாடு தழுவிய போராட்டங்கள் – திருவொற்றியூர்
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவொற்றியூர்
***
மாருதி தொழிலாளிகளை விடுதலை செய்! ஓசூரில் போராட்டம்!
ஒசூரில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் 4.4.2017 அன்று மாலை 5 மணியளவில் ஒசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு.வின் மாநில துணைத் தலைவர் தோழர்.பரசுராமன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் செந்தில் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தோழர் செந்தில் தனது கண்டன உரையில், ஓசூரில் செயல்பட்டுவரும் கமாஸ் வெக்ட்ரா ஆலை மாருதி சுசுகி ஆலையைப் போலவே ஒரு பன்னாட்டு நிறுவனம். அங்கே மாருதி ஆலை நிர்வாகம் தொழிலாளர் மீது நடத்துகின்ற தாக்குதல் அத்தனையும் இங்கேயும் தொழிலாளர் மீது ஈவிரக்கமற்றமுறையில் தொடுத்து வருகிறது என்பதையும் அதற்கு தொழிலாளர் நலத்துறை நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டுவருவதையும் ஆதாரங்களுடன் முன்வைத்து அம்பலப்படுத்தினார். அந்தவகையில் மாருதி தொழிலாளர் போராட்டம் நாம் சந்திக்கின்ற பிரச்சினையை முன்வைத்து நடக்கின்ற போராட்டம் இதனை ஆதரிப்பது என்பது நமது உயிராதாரமான கடமை என்பதை வலியுறுத்திப் பேசினார்.
அடுத்ததாக, பேசிய தோழர் பரசுராமன் தனது உரையில், உழைப்புக்கேற்ற ஊதியம், சட்டப்படியான ஒய்வு, தொழிற்சங்க உரிமை இவைகள் பெறவே மாருதி தொழிலாளர்கள் தங்கள் ஆலையில் சங்கமாக சேர்ந்தார்கள். மாருதி நிர்வாகமோ இதனை அங்கீகரிக்க மறுத்து சங்கத்தை ஒழித்துக்கட்ட சதி செய்தது. அதன் விளைவாக தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளின்மீது பொய்யாக அவர்களாலே திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு வன்முறை நிகழ்வை காரணமாக வைத்து அவர்கள்மீது கொலைப்பழி போடப்பட்டது. தற்போது ஒரு தொழிலாளி உட்பட 12 சங்க நிர்வாகிகளுக்கு ஆயுள் தண்டனை, 19 பேருக்கு சிறைத் தண்டனை விதித்திருக்கிறது, மாருதி நிர்வாகத்தின் அடியாளாக செயல்படும் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
இத்தீர்ப்பின் நோக்கம் தொழிலாளர் வர்க்கம் சங்கமாய் திரளக் கூடாது என ஆளும் வர்க்கம் கருதுகிறது. இந்த அரசுக்கட்டமைப்பு முழுவதும் அதற்காக செயல்பட்டுவருகிறது என்பதையும் பார்க்கமுடிகிறது. ஆனால் தீவிரமாகும் கார்ப்பரேட் கொள்ளைகள் உழைக்கும் மக்களை போராட்ட பாதைக்கு தள்ளுகிறது. இதற்காக ஆர்.எஸ்.எஸ் மோடியின் சட்ட திருத்தங்களும் புதிய திட்டங்களும் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் மக்களையும் கடுமையான பாதிப்புக்குள்ளாக்குகிறது. அரசும் அதன் போலீசு, நீதிமன்றம் போன்ற அதன் உறுப்பும் மக்களுக்கானதல்ல என்பதை மாருதி தொழிலாளர்கள் தங்களது வழக்கின் மூலம் நிரூபிக்கும் வகையில் சாட்சியமாகி நிற்கிறார்கள். நாம் மாருதி தொழிலாளர்களின் விடுதலைக்காக வர்க்கமாய் திரண்டு போராடுவோம் என்று அறைகூவி அழைத்து பேசினார். இறுதியாக தோழர் முருகேசன் நன்றியுரையாற்றினார்.
தோழர் முருகேசன்
தோழர் பரசுராமன்
தோழர் செந்தில்
தோழர் பரசுராமன்
இலங்கை ஆர்ப்பாட்டம்
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 9788011784
சவுதி அரேபியாவின் தலைமையிலான இராணுவ ஆக்கிரமிப்பின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளில் ஏமன் தலைநகர் சானாவில் பல பத்தாயிரக்கணக்கான ஏமன் மக்கள் பெருந்திரளாக அணிதிரண்டனர். 2017, ஜனவரியில் ஏமனைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் அதிகமான பெண்கள் சவுதியின் இராணுவத் தலையீட்டை எதிர்த்தும் நாட்டின் அமைதியை மீட்டெடுக்கவும் ஏமன் மக்களுக்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது.
2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் துனீசியாவில் மல்லிகைப் புரட்சியாகத் துளிர்த்த அரபு வசந்தம் ஆள அருகதையற்ற ஏகாதிபத்தியங்களுடன் கள்ளக்கூட்டணி வைத்திருந்த சர்வாதிகார ஆட்சிகளை எதிர்த்து ஜனநாயகத்தின் தேவைக்காக வட ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் எங்கிலும் வெடித்துக் கிளம்பியது. ஆயினும் இப்போராட்டங்களின் விளைச்சலை இசுலாமிய மத அடிப்படைவாதிகளும் மறைமுகமாக ஏகாதிபத்திய நாடுகளும் அறுவடை செய்து கொண்ட கேலிக்கூத்துகளுடன் வசந்தம் முடிவுக்கு வந்தது. அரபு வசந்தத்தால் ஏமனில் 2012 ஆம் ஆண்டு தூக்கியெறியப்பட்ட அலி அப்துல்லா சலே (Ali Abdullah Saleh) மீண்டும் தலைவராக போராட்டக்காரர்களால் அழைக்கப்பட்டிருப்பது அந்த கேலிக்கூத்துகளில் ஒன்று.
அரபு வசந்தத்தை அறுவடை செய்து ஆட்சியைப் பிடித்த சவுதி சார்பு அப்த் – ரப்பு மன்சூர் ஹதியின் (Abd-Rabbu Mansour Hadi ) ஆட்சியை அந்நாட்டு மக்கள் ஹூத்திகளுடன் (Houthis) சேர்ந்து 2015 ஆண்டில் தூக்கி எறிந்தனர். மீண்டும் அவரை அரியணையில் அமர்த்த சவுதி கூட்டுப்படை சதி வேலையிலும் குண்டு வீச்சிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. அதனை எதிர்த்து ஏமன் மக்களும் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்று கூறி கொண்டு எண்ணெய் வளங்களுக்காகவும் ஆசிய ஆப்ரிக்க நாடுகளில் தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காகவும் முசுலீம் மக்களுக்கு எதிராக குண்டுவீச்சுத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தி வருகிறது. முசுலீம் பயங்கரவாதத்திற்கு கருத்தும் காசும் கொடுத்து புரவலராக இருக்கும் சவுதி ஷேக்குகளிடம் மட்டும் அவர்களிடம் இருக்கும் பெட்ரோலுக்காகவும் ஷேக்குகளின் டாலர் மோகத்தினாலும் அமெரிக்கா கூடிக் குலாவுகிறது. அமெரிக்காவும் ஷேக்குகளுக்கு நவீன ஆயுதங்களை அனுப்பிச் சவுதியை மத்திய கிழக்கின் நம்பிக்கைக்குரிய அடியாளாக வைத்துள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க-சவுதிக் கூட்டணியை ஏமன் ஆதரிக்க மறுத்த ஒரே காரணத்திற்காகப் பத்து இலட்சம் ஏமன் தொழிலாளிகளின் விசாக்களை இரத்து செய்தது சவுதி அரேபிய அரசு.
சவுதிப் கூட்டணிப் படைகளின் குண்டு வீச்சுகளாலும் கொலைவெறித் தாக்குதல்களாலும் ஏமன் இன்று நிலைகுலைந்து இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான ஏமன் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல இலட்சக்கணக்கான மக்கள் பஞ்சம் பட்டினியில் வாடி வருகின்றனர். சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
நாதியற்ற இந்த ஏமனின் முசுலீம் அகதிகளை உலகின் ஒரே அக்மார்க் இசுலாமிய அரசான சவுதி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது என்பதுதான் ஆளும் வர்க்கங்களுக்கு பயன்படும் இசுலாத்தின் சர்வதேசத்திற்கு ஒரு எடுப்பான சான்று. குர் ஆனிலும், ஹதீசுகளிலும் மத்தின் பெருமையை தோண்டி எடுத்துப் பேசும் முசுலீம் மதவாதிகள் யாரும் சமகாலத்தில் சவுதி அரேபிய செய்து வரும் கொடுமைகளை கண்டிப்பதில்லை.
ஆயினும் ஏமன் மக்களது போராட்ட உணர்வுகளை அரசியல்படுத்தி ஏகாதிபத்திய மற்றும் இசுலாமிய அடிப்படைவாத சக்திகளிடம் இருந்து அதிகாரத்தை பறிக்கும் வரை அவர்களுக்கு விடிவுகாலம் இல்லை.
சவுதிக் கூட்டுப்படைகளின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்களில் கலந்து கொண்டேன். இந்தப் போரை நிறுத்துவதற்கு உலகின் காதுகளுக்கு ஒருவேளை எங்களது கூக்குரல் கேட்கக்கூடும் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூறினார்.
அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை இல்லையென்றாலும் குறைந்தது ஒரு இலட்சம் மக்கள் மத்திய சபீன் சதுக்கத்தில் (central Sabeen square) நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். சவுதியின் இராணுவத் தலையீட்டிற்குப பிந்தைய இரண்டு ஆண்டுகளில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய அரசியல் கூட்டம் இது.
2012 ஆம் ஆண்டு வலுக்கட்டாயமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட ஏமனின் முன்னாள் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவை மீண்டும் பதவியேற்க போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சலே, அந்தப் பேரணியில் சற்றுநேரம் கலந்து கொண்டார்.
2015 க்குப் பிறகு ஏமனில் நடந்து வரும் மோதலில் கொல்லப்பட்ட 16,000 பேர்களில் பொதுமக்களின் எண்ணிக்கை மட்டும் பத்தாயிரத்தைத் தாண்டும்.
30 இலட்சம் ஏமன் மக்கள் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டிருப்பதுடன் 70 இலட்சத்திற்கும் அதிகமானோர் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மன்றம் கூறுகிறது.
சவுதி மற்றும் அதன் சன்னி இசுலாமியக் கூட்டணியினால் 2017, ஜனவரி மாதம் ஏமனில் பலப்பத்து முறை வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவற்றில் பெரும்பாலானவை போர் குற்றங்களாக இருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.
“நீரின்றி அமையாது உலகு” என்பது குறள். உயிரின் ஆதாரமான நீரை லாபத்தின் ஊற்றாக கருதுகிறது உலக முதலாளித்துவம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மண் தனியார்மயமாகிவிட்டது. இது மழை தனியார்மயமாகி வரும் காலம்.
தமிழகத்துக்கு உரிமையான காவிரி நீரை கர்நாடகம் மறுப்பது நம் அனைவருக்கும் தெரியும். அதன் விளைவாக தஞ்சை பாலைவனமாகி வருவதும் தெரியும். தஞ்சை மட்டுமல்ல, தமிழகமே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. விவசாயிகள் சாகிறார்கள், கால்நடைகள் சாகின்றன, விலங்குகள் காடுகளிலிருந்து தண்ணீர் தேடி நகரத்துக்குள் நுழைகின்றன, மக்கள் குடிநீரைத் தேடி வீதி வீதியாக அலைகிறார்கள்.
கிருஷ்ணா நீருக்காக ஆந்திரத்திடம் கெஞ்சுகிறது தமிழக அரசு. கடல் நீரைக் குடிநீராக்குகிறது. குவாரிகளில் தேங்கியிருக்கும் நீரை குடிநீராக்குகிறது. அடுத்து சாக்கடைத் தண்ணீரைக் குடிநீராக்க முடியுமா என்று யோசிக்க வேண்டிய நிலையில் தவிக்கிறது தமிழகம்.
இப்படிப்பட்ட சூழலிலும், தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை உறிஞ்சி பாட்டிலில் அடைத்து விற்க அனுமதிக்கிறது தமிழக அரசு. தமிழகத்தின் இளைஞர் சமூகமும், வணிகர் சமூகமும் கோக் பெப்சிக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்புகின்றன. இந்த சூழலில் மோடியை சென்று சந்திக்கிறார் பெப்சி நிறுவனத்தின் தலைவர். கோக் பெப்சி நிறுவனத்து தண்ணீரை உறிஞ்சி விற்கும் உரிமை உண்டு என்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
ஒரு லிட்டர் கோக் தயாரிக்க ஏழு லிட்டர் கழிவுநீரை வெளியேற்றுகின்றன கோக்-பெப்சி ஆலைகள். வெளியேறும் ஒவ்வொரு லிட்டர் கழிவு நீரும் மேலும் எட்டு லிட்டர் நிலத்தடி நீரை மாசுபடுத்திப் பயனற்றதாக்குகிறது என்கிறார்கள் சூழலியல் ஆய்வாளர்கள்.
ஐ.நா. மதிப்பீட்டின்படி, 2025-ஆம் ஆண்டுக்குள் உலகில் 48 நாடுகள் குடிநீர் பற்றாக்குறையால் தவிக்க நேரிடும். ஆப்பிரிக்க – ஆசிய நாடுகளில் குடிநீரின்றி வெளியேறும் மக்களை “தண்ணீர் அகதிகள்”என்கின்றனர். இவர்கள் வானம் பொய்த்ததனால் அகதிகளானவர்கள் அல்ல. பணமில்லாத காரணத்தினால் அகதிகளானவர்கள். பட்டினிச் சாவை உலகுக்கு வழங்கிய முதலாளித்துவம், அடுத்தபடியாக தாகச்சாவை வழங்குகிறது. குளிர்பானங்கள் எனப்படுபவை தாகத்தை தணிப்பவை அல்ல, தாகத்தால் மக்களை தவிக்க வைப்பவை.
தண்ணீரைப் பண்டமாக்கி விற்பவர்கள் மனித குலத்தின் எதிரிகள், கொடிய பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதிகளுக்குத் துணை நிற்பவைதான் மத்திய மாநில அரசுகளும் நீதிமன்றமும் என்ற உண்மையை, காலிக் குடங்களுடன் சாலைகளை மறிக்கும் பெண்களுக்குச் சொல்லுங்கள்.
தோழமையுடன் புதிய கலாச்சாரம்.
கோக்-பெப்சி : கொலைகார கோலாக்கள் ! – புதிய கலாச்சாரம் ஏப்ரல் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 20-ம் (நூல் விலை ரூ 20, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் :
தண்ணீர் தனியார்மயம் : பேரழிவின் தொடக்கம் !
அம்பானி ஆய் கழுவ 5 இலட்சம் லிட்டர் குடிநீர் !
உலக வங்கி – சர்வதேச நாணயநிதியம் : பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள் !
ராஜஸ்தான் : கோக் பாட்டிலில் விவசாயிகளின் இரத்தம்
குடிக்க நீரில்லை, குளியலோ நீச்சல் குளங்களில் ! – சாய்நாத்
பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்
கோக் எதிர்ப்பு : பிளாச்சிமடா மக்களுக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி !
மானம் கெட்டவர்கள் குடிப்பது பெப்சி – கோக் !
காந்தியின் அரிஜன் ஏடு அம்பலப்படுத்தும் கோகோ கோலா !
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
₹1,500.00–₹6,000.00Price range: ₹1,500.00 through ₹6,000.00
SKU: N/A
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
ஏப்ரல் 04: மாருதி தொழிலாளர்களின் சிறை மீட்புக்கான நாடு தழுவிய போராட்டத்தை ஆதரிப்போம்!
கடந்த 18.06.2012-ல் தொழிற்சங்க உரிமைக்காகவும், சட்டவிரோத ஒப்பந்த முறைக்கு ஏதிராகவும் போராடிய மாருதி தொழிலாளர்கள் 148 பேரை சிறையிலடைத்தது, ஹரியானா போலிசு. அவர்களில் 13 தொழிலாளர்களுக்கு வாழ்நாள் சிறை. 4 தொழிலாளிகளுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 14 பேருக்கு 03 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அளித்து, கடந்த 18.03.17 தேதியில் தீர்ப்பளித்துள்ளது, ஹரியானா மாநில கீழமை விசாரணை நீதிமன்றம். தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க மாருதி நிர்வாகம் – ஹரியானா போலிசு – நீதிமன்றம் கூட்டுச்சதி செய்து போராடும் தொழிலாளர்களை பழி வாங்குகிறது.
நாடு முழுவதிலும் போராடுகின்ற தொழிலாளர்களை அச்சுறுத்தும் விதமாக அளிக்கப்பட்ட இந்த தண்டனையின் மூலமாக போலீசும் நீதிமன்றமும் தொழிலாளர்களுக்கானதல்ல என்பது மீண்டுமொரு முறை நிரூபணமாகியுள்ளது. இந்த அரசு உழைக்கும் மக்களுக்கானதாக இல்லாமல் முதலாளிகளுக்கு மட்டுமே சேவை செய்து வருகிறது என்பது நாளுக்கு நாள் அம்பலப்பட்டு வருகிறது.
இனியும் அரசை, நீதிமன்றத்தை நம்பி பயனில்லை. மாருதி தொழிலாளர்களை பாதுகாக்க நாட்டின் ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கமும் போராட வேண்டும். அது ஒன்றே சிறையில் இருக்கும் மாருதி தொழிலாளர்களை மீட்பதற்கான ஒரே வழி !
இந்த பாதையில் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. ஏப்ரல் 04-ம் தேதியில் நாடு முழுவதிலும், மாருதி தொழிலாளர்களின் சிறை மீட்புக்காக நடைபெறவுள்ள போராட்டத்தை எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆதரித்து கீழ்கண்ட இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளோம்.
பேருந்து நிலையம், கும்முடிப்பூண்டி
பெரியார் நகர், திருவொற்றியூர்
அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம்.
தாலுக்கா அலுவலகம் எதிரில், காஞ்சிபுரம்.
இந்த செய்தியை தங்கள் ஊடகத்தில் வெளியிட்டு ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இப்படிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்கள்.
9444461480, 9445368009, 8807532859, 8489735841
***
ஏப்ரல் 4: மாருதிதொழிலாளர்களின்சிறைமீட்ப்புக்கானநாடு தழுவியபோராட்டத்தைஆதரிப்போம்!
ஏப்ரல் 4 செவ்வாய்க் கிழமை,
மாலை 5 மணி – ராம்நகர் அண்ணா சிலை அருகில்,
ஓசூர்.
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்ததொழிலாளர்களே, தோழர்களே!
ஹரியானா மாநிலம், மானேசர் மாருதி தொழிற்சாலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 12 ஆம் தேதி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மாருதி நிர்வாகம் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே வெளியில் இருந்து ரவுடிகளையும், போலீசையும் வரவழைத்து தொழிலாளர்கள் மீது மிருகத்தனமான தாக்குதல் நடத்தியது. ரவுடிகளைக் கொண்டு வன்முறையை திட்டமிட்டு நிர்வாகமே நடத்தி, ஆலையின் ஒரு பகுதிக்கு தீ வைத்தது. அவினேஷ் குமார் என்ற எச்.ஆர். அதிகாரியைக் கொன்றது.
ஆனால், வன்முறையும் இந்தக் கொலையையும் காரணம் காட்டி 546 நிரந்தரத் தொழிலாளர்களையும் சேர்த்து மொத்தம் 2346 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது மாருதி நிர்வாகம். குர்கான் மாவட்ட நீதிமன்றம், எத்தகைய ஆதாரங்களும் இல்லாத நிலையில், நிர்வாகம் ஏற்பாடு செய்த போலியான சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு, மாருதி சுசுகி தொழிற்சங்கத்தின் (MSWU) நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள் தண்டனையும் 4 பேருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும் விதித்துள்ளது. மேலும், 14 பேருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்துள்ளது. இவர்கள் ஏற்கனவே இந்த தண்டனையை சிறையிலேயே கழித்துவிட்டனர்.
ஒப்பந்தத் தொழிலாளர் முறையை எதிர்த்தும், தொழிற்சங்க உரிமைகளுக்காகவும், அடிப்படை மனித உரிமைகள் கூட இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமையைப்போல நடத்தப்படுவதை கண்டித்தும் உறுதியுடன் போராடி வந்ததால், இவ்வழக்கில் மாருதி நிர்வாகம் – போலீசு – நீதிமன்றம் – ஹரியானா அரசினால் குறிவைத்து பழிவாங்கப்பட்டுள்ளனர்.
இது ஒரு “வர்க்கத் தாக்குதல்”. அதிகாரத்தில் இருப்பவர்களால், உரிமைக்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடும் தொழிலாளர்களை ஒடுக்குவதற்காகவே வழங்கப்பட்ட தீர்ப்பு இது.
ஆனால், இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக இந்தியா முழுவதும், உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மார்ச் 18-ம் தேதி வழங்கப்பட்ட அநீதியான தீர்ப்பை எதிர்த்து 30,000 தொழிலாளார்கள் குர்கானிலும், மானேசரிலும் வெலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.
தேசவிடுதலைப் போராளிகளான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளான மார்ச் 23-ம் தேதி மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கம் விடுத்த அழைப்பை ஏற்று, அரசு விடுத்திருந்த 144 தடையுத்தரவையும் மீறி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வர்க்க ஒற்றுமையை நிலைநாட்டினர்.
“சட்டப்பூர்வமாக” தொழிலாளர் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளவேண்டி அரசு நமக்கு வகுப்பெடுக்கிறது. பொய், பித்தலாட்டம், மோசடி மூலம் மாருதி தொழிலாளர்களை தண்டித்துள்ள இந்த அரசுக்கு அவ்வாறு கூறுவதற்கு அருகதை உண்டா? அன்னிய, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்துக்காக பெயரளவில் இருந்த தொழிலாளர் நலச்சட்டங்களை “தேர்ந்தெடுக்கப்பட்ட” அரசின் மூலம் முதலாளிகளின் கழிவறைக் காகிதங்களாக்கி விட்ட மோடி அரசுக்கு அந்த அருகதை உண்டா ? இல்லை, முற்றிலும் சட்டபூர்வமாகவே ஆள அருகதை இழந்துவிட்டது ஆளும் இந்த அரசுக் கட்டமைப்பு.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
இப்போது சட்டவிரோதமே சட்டமாக, அநீதியே நீதியாக, பொய்யே உண்மையாக, முதலாளி வகுத்த விதிகளே வழிகாட்டுதலாக முற்று முழுதாக அம்மணமாக நிற்கிறது. ஆம், சர்வாதிகாரத்தின் நிழல் பரவிவருகிறது. எதிர்த்து முறியடிக்காவிட்டால் இன்று மாருதித்தொழிலாளர்களின் நிலைதான் நம் அனைவருக்குமே. மாருதி நிர்வாகம் மற்றும் அரசின் கூட்டுத்தாக்குதலை தொழிலாளர் ஒற்றுமை கொண்டு முறியடிப்போம் !
ஏப்ரல் 4 மற்றும் 5 ம் தேதிகளில் இந்தியா மற்றும் உலக நாடுகளின் அனைத்து தொழிலாளர்களுக்கும் மாருதி தொழிலாளர்கள் சிறை மீட்புக்கான போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது, மாருதி தொழிலாளர் சங்கம். அந்த போராட்டம் வர்க்க ஒற்றுமையின் அடையாளமாகவும் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு மரண அடியாகவும் அமைய நாம் ஒன்றிணைவோம்!
மாருதி நிர்வாகம், போலீசு மற்றும் நீதித்துறையின் கூட்டுச் சதியை முறியடிப்போம்!
ஆயுள் தண்டனை உள்ளிட்ட அனைத்து தண்டனைகளையும் ரத்து செய்யும் வரை போராடுவோம்!
தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுப்போம்!
முதலாளிகளின் அடியாள் படையான இந்த அரசுக்கட்டமைப்பை அடித்து நொறுக்குவோம்!
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிலைநாட்டுவோம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784, ndlfhosur2004@gmail.com
உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம்: பன்னாட்டு தண்ணீர் நிறுவனங்களின் தரகர்கள்
தாகத்துக்குத் தண்ணீர் கேட்டால், மோர் கொடுத்து உபசரிக்கும் பண்பாட்டைக் கொண்டது நமது தமிழகம், ஆனால், இப்பொழுதோ, தாகத்துக்குத் தண்ணீர் கேட்கும் முன்பாக, பாக்கெட் தண்ணீர் வாங்கும் அளவிற்கு சட்டைப் பையில் காசு இருக்கிறதா எனப் பார்த்துக் கொள்ள வேண்டிய பண்பாடு நம் மீது திணிக்கப்படுகிறது.
நிலத்தடி நீரை உறிஞ்சி பாக்கெட்டுகளில், கேன்களில் தண்ணீரை அடைத்து விற்பது என்ற வரம்போடு இந்த தண்ணீர் வியாபாரம் நின்றுவிடவில்லை.
1985-ஆம் ஆண்டு வாக்கில் குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 750 ஆக இருந்ததாகவும், 1995-இல் இந்த எண்ணிக்கை 65,000 கிராமங்களாக அதிகரித்து விட்டதாகவும் அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது. கிராமத்து உழைக்கும் மக்கள் குடிநீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான், இந்தியாவெங்கும் தண்ணீர் வியாபாரம் சூடு பிடித்து நடக்கத் தொடங்கியது.
குடிநீர் பிரச்சினைக்கு வறட்சி, மழையின்மை, நிலத்தடி நீர் வறண்டு போவது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும், இந்தக் காரணங்களால் தண்ணீர் வியாபாரம் சிறிதளவுகூடப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியாவில் நடந்து வரும் தண்ணீர் வியாபாரத்தின் ஓராண்டு மதிப்பு மட்டும் 10,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நிலத்தடி நீரை உறிஞ்சி பாக்கெட்டுகளில், கேன்களில் தண்ணீரை அடைத்து விற்பது என்ற வரம்போடு இந்த தண்ணீர் வியாபாரம் நின்றுவிடவில்லை. சமூகத்தின் சொத்தாகப் பாவிக்கப்படும் ஆறுகள், ஏரிகளைத் தனியாருக்கு குத்தகைக்கு விடுவது; விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசனத்தைத் தனியார்மயமாக்குவது; அரசாங்கம் வழங்கி வரும் குடிநீர் சேவையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது எனத் தண்ணீர் வியாபாரம் ‘வளர்ச்சி’ அடைந்து வருகிறது.
இந்த அபாயகரமான வளர்ச்சிப் போக்கை, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகள் அனைத்திலும் விரைவுபடுத்துவதற்காகவே, “காட்ஸ்” என்ற பெயரில் பொது ஒப்பந்தம் ஒன்றை (சேவைகளில் வர்த்தகம் குறித்த பொது ஒப்பந்தம் – General Agreement on Trade in Services) உருவாக்குவது குறித்து உலக வர்த்தகக் கழகத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
உலகம் நாற்புறமும் நீரால் சூழப்பட்டிருந்தாலும், பூமி பந்தில் கிடைக்கும் மொத்த நீரில், 25% நீரைத்தான் மனிதன் குடிப்பதற்கும், தனது பிற தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த 2.5 சதவீத நன்னீரிலும், 68.9 சதவீத நீர், பனியாக உறைந்து கிடக்கிறது. இந்த உறைபனி போக, எஞ்சியுள்ள நன்னீர் ஆதாரங்களை ‘காட்ஸ்’ ஒப்பந்தத்தின் மூலம் கைப்பற்றுவதுதான் ஏகாதிபத்திய நிறுவனங்களின் நோக்கம். ஏனென்றால், எதிர்வரும் 2025-ஆம் ஆண்டில், உலக மக்களின் தண்ணீர் தேவை, தற்பொழுது இருப்பதைவிட, 56 சதவீதம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், ஏகாதிபத்திய நிறுவனங்கள் பெட்ரோல் வியாபாரத்தில் சம்பாதிக்கும் இலாபத்தில், 40 சதவீத இலாபத்தை, மிகவும் எளிதாக தண்ணீர் வியாபாரத்தின் மூலம் சம்பாதித்து விட முடியும் என்றும் கூறப்படுகிறது. ஏகாதிபத்திய நிறுவனங்களின் இந்த இலாப நோக்கம் ஒருபுறமிருக்க, நன்னீர் ஆதாரங்களைக் கைப்பற்றுவதன் மூலம், ஏழை நாடுகளின் மீது தொடுக்கப்படும் மறுகாலனியாதிக்க தாக்குதலை, அந்நிறுவனங்களால் இன்னும் மிகக் கொடூரமாக நடத்த முடியும் என்பதையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும். காட்ஸ் ஒப்பந்தத்தின் மூலம் தண்ணீர் என்பது மறுகாலனியாதிக்கத்தின் புதிய ஆயுதமாக ஏகாதிபத்தியங்களுக்குப் பயன்படும்.
அடித்தளம் போட்ட உலக வங்கி
அரசாங்கமும், பன்னாட்டு நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, ஆறுகளையும், குடிநீர் வழங்குவதையும் தனியார்மயமாக்குவது இன்று வெளிப்படையாகவே தெரிகிறது.
”காட்ஸ்” ஒப்பந்தத்தின் மூலம் உலகு தழுவிய அளவில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தத் திருப்பணிக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்ததே உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் தான். இந்த இரு நிறுவனங்களும், கடந்த இருபது ஆண்டுகளாக, மிகவும் கமுக்கமாகப் பல்வேறு நாடுகளில் தண்ணீரைத் தனியார்மயப்படுத்த முயன்ற விவரங்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளன.
வளரும் நாடுகளில் காணப்படும் ஏழ்மையை ஒழிப்பதற்காகக் கடன் கொடுக்கும் வள்ளல்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் இந்த நிறுவனங்கள், தண்ணீர் வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் 10 பன்னாட்டு நிறுவனங்களின் தரகனாகவே செயல்பட்டு வந்துள்ளன; கடன் வாங்கும் ஏழை நாடுகளின் நீர் ஆதாரங்களைப் பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றிக் கொள்வதற்காகவே ஐந்துவிதமான பொறிகளை உருவாக்கி, நடைமுறைப்படுத்தி வருகின்றன.
1. கடன் மற்றும் அங்கீகார முத்திரை
ஏழை நாடுகளின் குடிநீர் திட்டங்களுக்கும், கழிவுநீர் சுத்தப்படுத்தும் திட்டங்களுக்கும் உலக வங்கி கடன் கொடுக்கும் பொழுது, அத்திட்டங்களில் தனியாரும் பங்கு பெற அனுமதிக்க வேண்டும் என நிபந்தனை விதிப்பதன் மூலமே இந்தச்சேவைகளை உலக வங்கி தனியார்மயப்படுத்தி விடுகிறது.
குடிநீர் திட்டங்களுக்குச் செலவிடப்படும் மூலதனத்தை முழுமையாகத் திரும்ப எடுக்க வேண்டும் எனக் கோரும் உலக வங்கி, அதற்கு, ‘தண்ணீரைச் சந்தை விலைக்கு விற்க வேண்டும்’ என்றும் ‘சந்தை விலையைக் கொடுத்துத் தண்ணீரை விலைக்கு வாங்கும் அளவிற்கு நுகர்வோரின் வருவாயை அதிகரிக்க வேண்டும்’ என்றும் நிபந்தனைகளை விதிக்கிறது.
தற்பொழுது 530 கோடி அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட 86 குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டங்கள் உலக வங்கியின் மேற்பார்வையின் கீழ் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகின்றன. உலக வங்கி ஏழை நாடுகளுக்கு வழங்கும் ஏழ்மை குறைப்பு ஆதாரக் கடன் திட்டங்களில், மூன்றில் இரண்டு கடன்களில் தண்ணீர் தனியார்மயம் நிபந்தனையாக விதிக்கப்படுகிறது. உலக வங்கி மூலம் குடிநீர் அல்லாத திட்டங்களுக்கு வழங்கப்படும் கடன்களில், தண்ணீர் தனியார்மயம் ஒரு நிபந்தனையாகவோ அல்லது கொள்கை அறிவுரையாகவோ ஏழை நாடுகளின் மீது திணிக்கப்படுகிறது.
அரசாங்கம் வழங்கி வரும் குடிநீர் சேவையைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது எனத் தண்ணீர் வியாபாரம் ‘வளர்ச்சி’ அடைந்து வருகிறது.
”தண்ணீரை இலவசமாகப் பொது மக்களுக்கு வழங்கக் கூடாது; குடிநீர் வழங்குவது சேவை அல்ல; அதை வியாபாரமாகப் பார்க்க வேண்டும்” என்ற மனோ நிலையை ஏழை நாடுகளில் ஏற்படுத்துவதன் மூலம், பன்னாட்டு தண்ணீர் வியாபார நிறுவனங்கள் ஏழை நாடுகளில் மூலதனம் போடுவதற்கு ஏற்ற சூழலை, உலகவங்கி உருவாக்கிக் கொடுக்கிறது. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை நாடுகளில் நுழைவதற்கு முன்பாகவே, அந்நாட்டு அரசாங்கத்தையே தண்ணீர் கட்டணத்தை உயர்த்தச் செய்வதன் மூலம், பன்னாட்டு நிறுவனங்களின் தண்ணீர் கட்டண கொள்ளையை நியாயப்படுத்தி விட முயலுகிறது.
சர்வதேச நாணய நிதியம் 2000-ஆம் ஆண்டில் வழங்கிய 40 கடன்களில், 12 கடன்கள் தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் அல்லது தண்ணீர் திட்டத்திற்குச் செலவாகும் மூலதனத்திற்கு ஏற்ப தண்ணீர்க் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற நிபந்தனைகளோடுதான் வழங்கப்பட்டன. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்வாங்கும் ஏழை நாடுகள், அந்நிறுவனத்திடமிருந்து ஒப்புதல் முத்திரையொன்றைப் (Seal of Approval) பெற வேண்டும். அந்நிறுவனம் கடன் கொடுக்கும் பொழுது விதிக்கும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதைப் பொருத்துதான், இந்த ஒப்புதல் முத்திரையை அந்நிறுவனம் ஏழை நாடுகளுக்கு வழங்கும். இந்த ஒப்புதல் முத்திரையைப் பெற முடியாத ஏழை நாடுகள், பிற ஏகாதிபத்திய நிறுவனங்களிடமிருந்தோ, ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்தோ எவ்விதக் கடனோ, உதவியோ, மூலதனமோ, தொழில்நுட்ப உதவியோ பெற முடியாது. இந்த அதிகாரத்தைக் காட்டியே தண்ணீரைத் தனியார்மயமாக்கும் திட்டத்திற்கு ஏழை நாடுகளைச் சம்மதிக்க வைத்துவிடுகிறது, சர்வதேசநாணய நிதியம்.
2. சர்வதேச நிதிக்கழகம் மற்றும் பலதரப்பு முதலீட்டுகாப்புறுதி குழுமம்
ஏழை நாடுகளின் மின்சாரம், தொலைபேசி, குடிநீர் வழங்குதல் போன்ற அடிக்கட்டுமானத் துறைகளில் மூலதனம் போட விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கடன் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள அமைப்புதான் சர்வதேச நிதிக் கழகம்.
ஏழை நாடுகளின் குடிநீர் வழங்கும் திட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் போடும் மூலதனத்திற்கு ஏற்படும் அரசியல் ரீதியான இடர்ப்பாடுகளுக்கு எதிராகக் காப்புறுதி அளிப்பதுதான் பல்தரப்பு முதலீட்டு காப்புறுதி குழுமத்தின் நோக்கம்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இண்டர்நேஷனல் வாட்டர் சர்வீசஸ் – பி.வி என்ற நிறுவனம், ஈக்வடார் நாட்டின் குடிநீர் திட்டமொன்றில் 1.8 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்திருக்கிறது. உள்நாட்டுக் கலகம், போர், ஒப்பந்தத்தை மீறுதல் போன்ற அரசியல் காரணங்களால் இம்மூலதனம் பறிமுதல் செய்யப்படுவதில் இருந்து முதன்முதலாக பல்தரப்பு முதலீட்டு காப்புறுதி கழகத்தால் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
ஏழை நாடுகளின் மின்சாரம், தொலைபேசித் துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனம் போடுவதைப் போலவே, தண்ணீர் வியாபாரத்திலும் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்காகவே, இந்த இரண்டு நிறுவனங்களையும் தனது துணை அமைப்புகளாக உலக வங்கி இயக்கி வருகிறது. மேலும், ஏழை நாடுகளின் குடிநீர் திட்டங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனம் போடுவதற்கு வசதியாக, அத்திட்டங்களை இலாபம் தரும் திட்டம், இலாபம் தராத திட்டம் என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றும் கோருகிறது.
3. சட்டம், கண்காணிப்பு மற்றும் துறைசார்ந்த சீர்திருத்தங்கள்
பன்னாட்டு தண்ணீர் வியாபார நிறுவனங்கள் ஏழை நாடுகளில் எவ்விதக் கட்டுப்பாடுமின்றி எளிதாக மூலதனம் போடுவதற்கும், தங்களுக்குக் கிடைக்கும் இலாபத்தை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி சுதந்திரமாக எடுத்துச் செல்லுவதற்கும் வசதியாக சுங்கவரிகளை நீக்குவது தொடங்கி சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ஏழை நாடுகளின் பணத்தின் மதிப்பைத் தீர்மானிப்பது உள்ளிட்டு பல சீர்திருத்தங்களை உலக வங்கி கோருகிறது. ‘ஒருங்கிணைந்த சட்டகம்’ என உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம் – உலக வர்த்தகக் கழகம் என்ற சூலாயுதத்தால் அழைக்கப்படும் இச்சீர்திருத்தங்களின் கீழ்,
நீர் ஆதாரங்களின் மீதான உரிமை மற்றும் நீர் ஆதாரங்களைக் குத்தகைக்கு விடுவது தொடர்பாக வரையறுத்தல்;
பொது மக்களுக்குக் குடிநீர் வழங்கும் அரசுத்துறை நிறுவனங்களையும் தனியார் தண்ணீர் வியாபார நிறுவனங்களையும் சமமாக நடத்துவது தொடர்பாக சட்டம் மற்றும் கண்காணிப்பு முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருதல்,
தண்ணீர் வழங்குதலைக் கண்காணிக்க அரசின் தலையீடின்றி சுதந்திரமாகச் செயல்படக்கூடிய கமிட்டியை அமைத்தல்;
கிராமங்களுக்குக் குடிநீர் மற்றும் பாசன வசதிகள் செய்து கொடுப்பதை அரசின், பஞ்சாயத்துக்களின் பொறுப்பில் இருந்து கழட்டிவிடுவதோடு, அச்சேவைகளை வியாபார நோக்கில் தனியாரிடம் ஒப்படைத்தல்;
குடிநீர் வழங்கல் சேவையை இலாபம் தருவது, இலாபம் தராதது எனப் பிரித்தல்
என்ற ஆறு நிபந்தனைகள் ஏழை நாடுகளின் மீது விதிக்கப்படுகின்றன.
4. அறிவு வங்கி (Knowledge Bank)
ஏழை நாடுகள் பற்றிப் பல தகவல்களைத் திரட்டி வைத்துக்கொண்டு, அந்நாடுகளுக்கு ஆலோசனை வழங்குவது என்ற பெயரில், அந்நாடுகளின் எல்லா துறைகளிலும் சந்தை பொருளாதாரத்தைப் புகுத்திவிடும் அறிவு வங்கியாகவும் உலக வங்கி செயல்படுகிறது. பொது மக்களுக்குக் குடிநீர் வழங்குவதை அரசின் பொறுப்பாகக் கருதும் ஏழை நாடுகளின் அரசாங்கங்களுக்கு ‘இலவசக் குடிநீர் என்பது அபாயகரமானது’ எனப் ‘புரிய’ வைப்பதுதான் இந்த அறிவு வங்கியின் முக்கிய நோக்கம். குடிநீர்க் கட்டணங்களை உயர்த்தக் கோரி ஏழை நாடுகளை நிர்பந்திப்பது மூலம், குடிநீர் வழங்குவதை வியாபாரமாக்குவது; குடிநீர் திட்டங்களில் போடப்படும் மூலதனத்தை முழுமையாகத் திருப்பி எடுக்கும் வகையில் கட்டண விகிதங்களை மாற்றியமைப்பதன் மூலம் குடிநீர் வழங்குவதைத் தனியார்மயமாக்குவது என்ற அடிப்படையில் உலக வங்கி ஏழை நாடுகளை மூளைச் சலவை செய்கிறது. இந்த வேலையை மிகத் திறம்படச் செய்வதற்காக, ஒரு கூட்டணியை, வலைப் பின்னலையே உலக வங்கி உருவாக்கி வைத்திருக்கிறது.
5. கூட்டணி வலைப் பின்னல்:
ஏழை நாட்டு மக்களையும், அரசுகளையும் தண்ணீரை ஒரு பண்டமாக, வியாபாரப் பொருளாக கருத்து ரீதியாக ஏற்றுக் கொள்ளச் செய்வதற்காக, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தகக் கழகம், பன்னாட்டு தண்ணீர் வியாபார நிறுவனங்கள், ஐ.நா. மன்றத்தைச் சேர்ந்த அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து பல்வேறு சர்வதேச அமைப்புகளை நடத்தி வருகின்றன. இந்த அமைப்புகளுள், ‘உலக நீர் கவுன்சிலும்’, ‘உலக நீர் கூட்டணியும்’ முக்கியமானவை. கருத்தரங்குகள், மாநாடுகள், செயல் விளக்கக் கூட்டங்கள், சிறு வெளியீடுகள் எனப் பல வடிவங்களில் தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் எனப் பிரச்சாரம் செய்யும் இந்த அமைப்புகள், இதன் மூலம் ஏழ்மையையும், குடிநீர் பற்றாக் குறையையும் ஒழிக்க முடியும் எனப் பொது மக்களை மூளைச் சலவை செய்கின்றன. பன்னாட்டு தனியார் நிறுவனங்களின் தொழில்நுட்பத்தையும், மேலாண்மை திறமைகளையும் குடிநீர் வழங்குதலில் பயன்படுத்தும் பொழுது, ஏழை மக்கள் கூடப் பலன் அடைய முடியும் என்ற தேன் தடவிய அண்டப் புளுகை, இந்த கூட்டணி அமைப்புகள் அவிழ்த்து விடுகின்றன.
நாஃப்டா (NAFTA)வின் கள்ளக் குழந்தை “காட்ஸ்”
அமெரிக்கா தனது தலைமையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (நாஃப்டா – North American FreeTrade Agreement) என்ற பெயரில் பிராந்திய பொருளாதார வளையம் ஒன்றை உருவாக்கியிருக்கிறது. தண்ணீரைத் தனியார்மயமாக்க நாஃப்டாவில் என்னென்ன விதிகள் உருவாக்கப்பட்டதோ, அதே விதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் உலக வர்த்தகக் கழகமும் தண்ணீர் வர்த்தகம் குறித்த விதிகளை உருவாக்கியிருக்கிறது.
உலக வர்த்தகக் கழகம் தண்ணீரை இயற்கையின் கொடையாகவோ, சமூகச் சொத்தாகவோ பார்ப்பதில்லை. மாறாக, உ.வ.க. தண்ணீரை வியாபாரப் பண்டமாகப் பார்க்கிறது. உவ.க. உருவானதற்கு அடிப்படையாக இருந்த காட் விதிகள், ‘கடல் நீரைத் தவிர, பிற இயற்கையான தண்ணீர் அனைத்தும் வியாபாரப் பண்டம் தான்’ எனக் குறிப்பிடுகிறது. உவ.க., தண்ணீரை அடிப்படையான மனித உரிமையாகப் பார்ப்பதில்லை; “நீர் என்பது மனிதனின் தேவைகளுள் ஒன்று என்றும்; மற்ற தேவைகளைப் போலவே, அதனையும் வியாபாரத்தின் மூலம் பூர்த்தி செய்துகொள்ள முடியும்” என்றும் கூறுகிறது.
உலக வர்த்தகக் கழக விதிகளின்படி தண்ணீர் ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகத்தின் மீது எந்தவொரு நாடும் தடையோ, கட்டுப்பாடுகளையோ விதிக்கக்கூடாது.
உவ.க.வில் உறுப்பினராக உள்ள ஒருநாடு, சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவதைக் காரணமாகக் காட்டி தண்ணீர் ஏற்றுமதியைத் தடை செய்தால், அந்நடவடிக்கை வர்த்தகக் காப்பு நடவடிக்கையாகக் கருதப்பட்டு, உவ.க.வில் அந்நாட்டின் மீது வழக்குத் தொடர முடியும். தண்ணீர் வர்த்தகம், நீர் ஆதாரங்களையே மாசுபடுத்துவதாக, அழிப்பதாக இருந்தாலும்கூட, தனியார் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதை எந்தவொரு நாடும் தடை செய்யக்கூடாது என உ.வ.க. கட்டுப்பாடுகளை விதிக்கிறது. மேலும், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள எந்தவொரு சர்வதேச ஒப்பந்தத்தையும் காட்டி, தண்ணீர் வியாபாரத்தைத் தடை செய்யக்கூடாது என உவ.க.வில் விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
‘நாஃப்டா’ விதிகளின்படி உள்நாட்டு நிறுவனங்களுக்கும், அந்நிய நிறுவனங்களுக்கும் இடையே எவ்விதப்பாகுபாடோ, பாரபட்சமோ காட்டக் கூடாது; அவ்வாறு இருந்தால், அந்நிய நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்து நட்ட ஈடுகோரலாம்.
தண்ணீர் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள அந்நிய நிறுவனங்களின் மீது வர்த்தகத் தடையோ / கட்டுப்பாடுகளோ விதிக்கக் கூடாது. அவ்வாறு தடை விதித்தால் எதிர்கால இலாபம் கருதி வழக்குத் தொடர்ந்து நட்டஈடு கோரலாம்.
இந்த விதிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள “காட்ஸ்”, தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் அந்நிய நிறுவனங்களை உ.வ.க. உறுப்பு நாடுகள் தேசிய நிறுவனங்களைப் போல நடத்த வேண்டும் என்கிறது. மேலும், உள்நாட்டு நிறுவனங்களுக்குத் தரப்படும் சலுகை, மானியம் அனைத்தும் அந்நிய நிறுவனங்களுக்குத் தரப்பட வேண்டும் என்பதோடு, குடிமகன்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தரப் படவேண்டும் எனக் கோருகிறது.
உ.வ.க. உறுப்பு நாடுகள், தண்ணீர் வியாபாரத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்க முயன்றாலோ தர நிர்ணயம் செய்ய முயன்றாலோ, அந்தக் கட்டுப் பாடுகள் குறைந்தபட்ச சுமைகளைக் கொண்டிருக்க வேண்டும்; சர்வதேச அளவுகளின்படி, குறைந்தபட்ச கட்டுப்பாடுகள்தான் விதிக்க வேண்டும் என்கிறது “காட்ஸ்”.
தண்ணீர் தனியார்மயத்தை எதிர்த்து நடைப்பெற்ற போராட்டங்கள்
அதாவது, ஒரு நாடு, தனது தேவைக்கு ஏற்றபடி சட்டம் கொண்டு வர முடியாது; பன்னாட்டு நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பாதிக்காதவாறு தான் சட்டம், கட்டுப்பாடுகள், தர நிர்ணயம் இருக்க வேண்டும். மேலும், சட்டம் / கட்டுப்பாடுகள் கொண்டுவர எண்ணும் நாடுகள், இக்கட்டுப்பாடுகள் குறைந்தபட்ச சுமையைத்தான் கொண்டிருக்கும்; பன்னாட்டு நிறுவனங்களுக்கு இக்கட்டுப் பாடுகளால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என உலக வர்த்தகக் கழகத்தின் முன் நிரூபிக்க வேண்டும். இதற்கும் மேலாக, உ.வ.க. உறுப்பு நாடுகள் இயற்றும் சட்டங்கள் / கட்டுப்பாடுகளை ரத்து செய்யும் ”வீட்டோ” அதிகாரம் ”காட்ஸ்” ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும் எனக்கோரி, இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஒரு இரகசிய அறிக்கை, உ.வ.க.வால் அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
உவ.க.வில் உறுப்பினராக உள்ள ஏழை நாடுகள், உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைகளை மீறிச் செயல்பட முடியாத பொறியில் சிக்கிக் கொண்டுள்ளன. ஏனென்றால், உ.வ.க., வெறும் சர்வதேச வர்த்தக அமைப்பாக உருவாக்கப்படவில்லை. சட்டம் இயற்றவும் அதை மீறும் ஏழை நாடுகளைத் தண்டிக்கும் அதிகாரமும் கொண்ட “உலக அரசாக” உருவாக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் தனியார்மயம்: மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம்
அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்பதை உள்நாட்டு அரசாங்கம் முதல் ஐ.நா. மன்றம் முடிய, ஆளும் கும்பல் அனைவரும் ஒரு கொள்கையாகவே அறிவித்திருக்கிறார்கள். ஆனால், குடிநீர் வழங்கும் சேவையை வியாபார நோக்கில் தனியார்மயமாக்கினால், தற்பொழுது கிடைக்கும் ‘சுகாதாரமற்ற’ குடிநீர் கூடக் கிடைக்காமல் போய்விடும். ஏற்கெனவே குடிநீர் விநியோகம் தனியார்மயமாக்கப்பட்ட சில நாடுகளின் அனுபவங்களைப் பார்த்தே இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள முடியும்.
தென் ஆப்பிரிக்க நாட்டில், வெள்ளை நிறவெறி ஆட்சியை வீழ்த்திவிட்டுப் பதவிக்கு வந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசு கட்சி, 1997-ஆம் ஆண்டு தண்ணீரைத் தனியார்மயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்நாட்டின் குடிநீர் விநியோகம் பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களான விவாண்டி மற்றும் சூயஸிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்பின், செல்ஃபோன்களில் பயன்படுத்தப்படும் “ஃப்ரீபெய்ட் அட்டையைப் போல, தண்ணீரைப் பெற முன்பணம் கட்டும் ‘ப்ரீ-பெய்ட்” கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நாடு முழுவதும் ஏறத்தாழ 1 கோடி குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் ஏழை, நடுத்தர மக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதே குதிரைக் கொம்பானது. இதன்விளைவாக, தண்ணீர் தனியார்மயமான ஆறே மாதத்தில் அந்நாட்டில் காலரா நோய் பரவியது.
பொது மக்களுக்குக் குடிநீர் வழங்குவதைத் தடுத்து நிறுத்திவிட்ட தண்ணீர் நிறுவனங்கள், ”ஒரு மாதத்தில் ஐந்து முறை குளித்தால் போதும்; ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் கக்கூஸ்க்கு தண்ணீர் ஊற்றுங்கள்” எனத் தண்ணீர் சிக்கனம் பற்றிப் பொதுமக்களுக்குப் போதித்தது.
தென் அமெரிக்க கண்டத்திலுள்ள பொலிவியா நாட்டைச் சேர்ந்த கொச்ச பம்பா நகருக்கு குடிநீர் வழங்குவதை பெக்டெல் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைத்தது, அந்நாட்டு அரசு. 1999-ஆம் ஆண்டு இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடனேயே, கொச்ச பம்பா நகர மக்கள் தன்னுடைய அனுமதியின்றி மழை நீரைக் கூடச் சேகரிக்கக் கூடாது எனக் கட்டளையிட்டது, பெக்டெல். இதன் விளைவாக, மாதமொன்றுக்கு வெறும் 4,500 ரூபாய் சம்பாதிக்கும் குடும்பம், குடி தண்ணீருக்காக மாதாமாதம் 900 ரூபாய் செலவழிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இந்தக் கொள்ளைக்கு எதிராகவும் தண்ணீர் உரிமையைப் பாதுகாக்கவும் அந்நகர மக்கள் பெக்டெல்லை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். பெக்டெல்லைப் பாதுகாக்க அந்நகரில் இராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. எனினும், பெக்டெலுக்கு எதிராக பொலிவியா எங்கும் நடந்த போராட்டங்களின் விளைவாக, பெக்டெலுக்கு வழங்கப்பட்ட வியாபார உரிமை ரத்து செய்யப்பட்டது.
ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த 9 நாடுகளில் 1998-ஆம் ஆண்டு குடிநீர் வழங்கும் சேவை தனியார்மயமாக்கப்பட்டது. தண்ணீர் கட்டண உயர்வால், அந்நாடுகளைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் குளங்களிலும், குட்டைகளிலும் தேங்கிக் கிடக்கும் நீரைக் குடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதையடுத்து இந்நாடுகளில் பரவிய காலரா நோய்க்கு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; 25,000 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பிலிப்பைன்சு நாட்டிலும் தண்ணீர் தனியார்மயமான பிறகு, தண்ணீர் கட்டணம் 4 முதல் 10 மடங்கு வரை உயர்ந்தது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காததால் காலரா நோய் பரவியது.
எனவே, தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாதிக்கத்தின் கோர வடிவம். உணவு இல்லாமல் கூட பல நாட்கள் வாழ்ந்துவிட முடியும்; ஆனால், தண்ணீர் இல்லாமல், மனிதன் ஓரிரு நாட்கள் கூட வாழ முடியாது. எனவே, நாம் உயிர் வாழ வேண்டும் என்றாலே, இத்தனியார்மயத்தை எதிர்த்துப் போராடியே தீரவேண்டும்.
நாடு நம்மை அழைக்கிறது – பல்லடத்தில் பகத் சிங் நினைவு நாள் கூட்டம்
பல்லடம் செம்மிபாளையத்தில் அமைந்துள்ள ஜிடிஎன் கம்பெனியில் பணி புரியும் 220 தொழிலாளர்களும் போராடும் சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். ஆனால், நிர்வாகம் இதனை ஏற்க மறுத்து தொழிலாளர்களை பல்வேறு வகையில் பழிவாங்க ஆரம்பித்தனர். இதற்கு எதிராக தொழிலாளர்கள் கடந்த 24.03.2017 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் உள்ளனர். கம்பெனிக்கு நேர் எதிரில் போராட்ட பந்தல் அமைத்து செங்கொடிகளுக்கு இடையே போராட்டம் நடைபெறுகிறது. 31.03.2017 அன்று காலை 11 மணி அளவில் தோழர்கள் பகத் சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜிடிஎன் துணைத் தலைவர் தோழர் சந்திரஹாசன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் விளவை இராமசாமி தியாகத் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மாநில துணை தலைவர் விளவை இராமசாமி தியாகத் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
தொழிலாளர்களாகிய நமக்கு என்று ஒரு மரபு உண்டு. வரலாற்று தொடர்ச்சி உண்டு. அதனை தெரிந்து கொள்வதன் மூலம் இன்றைய தினத்தில் போராடுவதற்கான ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடியும். நம்முடைய மரபில் மகத்தான 1917-ஆம் ஆண்டு ரசியப்புரட்சி உள்ளது. இதிலிருந்து ஊக்கமும் ஆக்கமும் பெற்ற இந்திய தொழிலாளி வர்க்கம் போராடத் துவங்கியது. போராட்டத்தை நசுக்குவதற்கு வெள்ளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் விரோத சட்ட மசோதா கொண்டு வர எத்தனித்தது. இதனை எதிர்த்து இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதியாக தோழர் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டு வீசினார். வெறுமேன சத்தமும் புகையும் மட்டும் வரக்கூடிய குண்டுகளை வீசி வெள்ளை அரசாங்கத்தை அதிரச் செய்தார்.
அதன் பின்னர் தனது சிறை வாழ்க்கை மூலமும் நீதிமன்றங்களை பிரச்சாரம் செய்யும் மேடையாக மாற்றியதன் மூலமும் தனது வாழ்க்கையே போராட்டம் என்றார். தனது வாழ்க்கையே இந்திய மக்களுக்கு ஓர் செய்தி என்றார் தனது வாழ்க்கையே இன்பத்தின் ஊற்று என நிலை நாட்டினார். இந்திய தொழிலாளி வர்க்கத்துக்கு போராடுவதற்கு ஆற்றல்களை அள்ளித் தரும் மகத்தான மரபு இது. நாம் இன்று அனுபவித்து வரும் எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட இதர உரிமைகள் அனைத்தும் இதன் மூலமே நமக்கு வாய்த்தது என்பதை நெஞ்சு நிமிர்த்தி பூரிப்புடன் நினைவு கூறுவோம். இத்தகைய மாபெரும் வரலாற்றின் தொடர்ச்சி தான் இன்று நாம் நடத்தும் போராட்டம் என்று உணர்ந்து கொண்டால் போராடுவதற்கு நமக்கு இன்னும் உரம் கிடைக்கும்.
1930-களில் இந்திய பாராளுமன்றத்தில் தொழிலாளர் விரோத மசோதா கொண்டு வரப்பட்டது. மாபெரும் தோழர்கள் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் மூலம் இந்திய தொழிலாளர் வர்க்கம் பதிலடி கொடுத்தது.
ஜிடிஎன் கம்பெனியில் பணி புரியும் 220 தொழிலாளர்களும் போராடும் சங்கமான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்
2017 ஆம் ஆண்டும் தொழிலாளர் விரோத மசோதாக்கள் இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வந்து விட்டனர். இதனை இந்திய தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாக நின்று பகத்சிங் வழியை விட இன்னும் ஆயிரம் மடங்கு வீரியத்துடன் வரலாறு விதித்துள்ள கடமையை நிறைவேற்றும் இடத்தில் நாம் உள்ளோம். புஜதொமு தலைமையில் இதனை நிறைவேற்ற சபதமேற்போம்.
தோழர் பகத்சிங் தனது 23ஆம் வயதில் லாலா லஜபதி ராய் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றார். பத்திரிக்கை நடத்தினார். நான் நாத்திகன் ஆனது ஏன் ? போன்ற பல நூல்கள் எழுதினார். பாராளுமன்றத்தில் தொழிலாளர்களுக்காக குண்டு வீசினார். வெள்ளைக்கார நீதிமன்றங்களை நாட்டு விடுதலைக்கான பிரச்சார மேடையாக்கினார். கடுகளவும் கவலையின்றி கம்பீரமாக தூக்கு மேடை ஏறினார். இதற்கெல்லாம் அவருக்கு எந்தவித முன் அனுபவமும் இல்லை. அவர் தன் ஆளுமைக்கு முன் மாதிரியாக யாரையும் வரித்துக் கொள்ளவில்லை. தானே ஒரு முன்மாதிரியாக நடந்து கொண்டார்.
நாடு நம்மை அழைக்கிறது. அழைப்பை ஏற்று அணிவகுப்போம்
1931 மார்ச் 23 இல் மாலை 7.30 மணிக்கு தூக்கு மேடை ஏறும் போதும் தோழர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் எனும் நூலை படித்துக் கொண்டுள்ளார். 1917 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நூலை தடை செய்யபட்ட நிலையிலும் சிறைக்குள்ளே அதனை பெற்று படிக்கிறார் என்றால் தன்னை எப்போதும் புத்தாக்கம் செய்தே வைத்துள்ளார். இதுதான் நாம் பெற வேண்டிய படிப்பினை ஆகும். தோழர்களுடைய வாழ்க்கையின் பாடங்களை இது போல நாம் பயின்று இன்றைய புற நிலையை எதிர்கொள்ள வேண்டும்.
சேலம் உருக்காலை தொழிலாளர்களின் எதிர்ப்பையும் மீறி விற்கப்படுகிறது. தேசிய பஞ்சாலை கழக மில்கள் விற்கப்படுகிறது. 15 ஆயிரம் கோடி ரூபாய் பொதுத்துறை விற்பனை மூலம் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதன் மூலம் நமது குழந்தைகளுக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பதன் மூலம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் அழிக்கப்படுகிறது. காவிரியில் தண்ணீரை மறுத்து மணல் திருட்டு ஊக்குவிக்கப்படுகிறது. ஓசூரில் MBA Engineering படித்த 22 வயதான காதல் தம்பதிகள் வேலை கிடைக்காமலும் நுகர்வு வெறியின் காரணமாக கொள்ளைக்காரர்களாக மாறி வாழ்வை இழக்கிறார்கள்.
இப்படியாக தமிழ் சமூகம் புழுத்து நாறுகிறது. புரட்சியை எதிர்பார்த்து ஏங்குகிறது. பகத்சிங் தனது தந்தைக்கு எழுதிய கடிதத்தில் கூறியது போல நாடு நம்மை அழைக்கிறது. அழைப்பை ஏற்று அணிவகுப்போம் எனக் கூறி முடித்தார்.
தகவல் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
கோவை
பகத் சிங் சுகதேவ் ராஜகுரு நினைவு நாள். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்துவோம் ! அதற்கான களமாக தமிழகம் – புதுவையை மாற்றுவோம் !
இன்றைய மிக அசாதாரணமான போராட்டக் களமாக மாறியுள்ள அரசியல் சூழலில், சினிமா கழிசடைகளை தங்களது ஆதர்ச ஹீரோக்களாக எண்ணிக் கொண்டு அவர்களின் பின்னே அணிவகுக்கும் இளைஞர்கள், மாணவர்களுக்கு, உண்மையில் யார் நமக்கு ஹீரோவாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகவும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமை சேவகம் செய்வதையே சுதந்திரம் என்று சொல்லி நம்மை ஏமாற்றி வந்த ‘மகாத்துமா’வின் துரோகத்தை தோலுரித்து, ஏகாதிபத்திய எதிர்ப்புக் கனலை நாடெங்கும் விசிறியெழச் செய்து, சமூக மாற்றமே உண்மையான விடுதலை என்பதை உரக்கச் சொல்லி சுதந்திரத்திற்கு பிறகான இந்தியாவை வழிநடத்தும் அரசியல் கம்யூனிசமே என்பதை நடத்திக் காட்ட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையிலும், அதற்குத் தடையாக உள்ள ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் பார்ப்பன பாசிசத்தை மோதி வீழ்த்தவும், அதற்கான களமாக தமிழகம் – புதுவையை மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்த்தியும் மார்ச் 23 பகத் சிங், சுகதேவ், ராஜகுரு, நினைவு நாளில் புதுச்சேரி புமாஇமு, புஜதொமு சார்பில் வில்லியனூர் கோட்டமேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் புரட்சிகர – மாணவர் இளைஞர் முன்னணியின் புதுச்சேரி அமைப்பாளர் தோழர் பரத் தலைமை தாங்கினார்.
அடுத்ததாக, புஜதொமு புதுச்சேரி மாநில துணைத் தலைவர் தோழர் மகேந்திரன், பிரிட்டிஷ் காலனிய அரசால் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளர் நலன்களுக்கு எதிராக இருப்பதை அம்பலப் படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் குண்டு போட்டு, பிரிட்டிஷ் காலனியவாதிகளின் செவிட்டுக் காதுகளைக் கேட்க வைத்தார். தற்போது தொழிலாளர்களுக்கென 44 சட்டங்கள் இருப்பதாகச் சொன்னாலும், தொழிற்சங்கம் அமைக்கவோ, சட்டப்படியான உரிமைகள் கோரவோ முடியவில்லை. மாருதி, பிரிக்கால் தொழிலாளர்கள் மேற்படி உரிமைகள் கோரியதற்காக கொலைப் பழி சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இச்சட்டங்களும் தொழில் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருப்பதாகச் சொல்லி, ஒழிக்கப் பட்டு விட்டது. புதிய குலக்கல்வித் திட்டத்தை திணிக்கும் புதிய கல்விக் கொள்கை, சமூக நீதியை மறுக்கும் நீட் தேர்வு என மாணவர் கல்வி உரிமைகளை பறித்து வருகிறது மோடி அரசு, காவிரியில் தண்ணீர் விட மறுப்பது, மீத்தேன், ஷேல், ஹைட்ரோ கார்பன் என விவசாயத்தை முற்றிலும் அழிக்கும் நாசகர திட்டங்களை திணிப்பது என அனைத்து தரப்பு அடித்தட்டு மக்களையும் ஒழிக்கும் வகையில் செயல்படும் பார்ப்பன பாசிச மோடி அரசை வீழ்த்த வேண்டுமெனில், ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான இந்தப் போர் எங்களோடு தொடங்கியதுமில்லை, எங்கள் வாழ் நாளோடு முடியப் போவதுமில்லை என முழங்கிய பகத் சிங் உள்ளிட்ட தியாகத் தோழர்களின் வழியில் அப்போரைத் தொடர்ந்து நடத்தி முடிப்பது தான் தீர்வு என சொல்லி நிறைவு செய்தார்.
அடுத்து உரை நிகழ்த்திய எல் & டி பாட்டாளி தொழிற்சங்க செயலாளர், தோழர் மாதேஷ்வரன், இவ்வார்ப்பாட்டத்தில் பேச அழைத்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்து பேசத் துவங்கிய தோழர், தியாகிகளின் நினைவு நாளில் மகிழ்ச்சி என்ற வார்த்தையைச் சொன்னதன் பொருள், அத்தியாகத் தோழர்களின் பணியைத் தொடரவும், அதைப் பற்றி சிந்திக்கத் தூண்டியதற்குமாகத் தான் என்றார். மோடியின் மக்கள் விரோதத் திட்டங்களைச் சாடிய தோழர், இன்றைய சூழலில் மாற்று அரசியல் தேவை என்பதையும், ஓட்டுக் கட்சிகளை விட்டொழித்து, ஒன்றுபட்டுப் போராடுவது ஒன்று தான் வழி என்பதையும் உறுதிபடக் கூறி முடித்தார்.
இறுதியாக உரையாற்றிய புஜதொமு மாநில இணைச் செயலாளர், இன்று யார் கதாநாயகர்கள், மக்களின் உழைப்பை கோடி கோடியாய் சுரண்டும், கிரிக்கெட் கழிசடைகளும், சினிமா பொறுக்கிகளுமா நமக்கு கதாநாயகர்கள்? தங்களது செயல் மரணத்தைத் தான் பரிசாகத் தரும் என்று தெரிந்து தங்களது மரணத்தைக் கூட ஒரு அரசியல் செயல்திட்டமாக நடத்திக் காட்டி தியாகத்தின் ஒப்பற்ற தோழர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு தானே நமக்கு கதாநாயகர்களாக இருக்க முடியும். போராட்டம் என்பது அதன் வடிவத்தால் தீர்மானிக்கப்படுவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தால் தீர்மானிக்கப்படுகிறது. காந்தியின் போராட்ட வடிவங்கள் பிரிட்டிசாரின் நகத்தைக் கூட அசைக்கவில்லை. ஆனால், பகத்சிங்கின் அரசியல் உள்ளடக்கம் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை குலை நடுங்கச் செய்தது.
மேலும், மோதி வீழ்த்துவது என்பது நேருக்கு நேர் நின்று தெருவில் இறங்கி சண்டை போடுவது மட்டுமல்ல, நம்மீதான பொருளாதாரத் தாக்குதல்கள், சமூக ஒடுக்குமுறைகளை அவ்வப்போது போராடுவது என்ற அளவில் இல்லாமல், விடாப்பிடியாகவும், இறுதிவரையிலும் உறுதியாகப் போராடி வீழ்த்துவது தான்.
இன்று, அனைவருக்குமான நல்லாட்சி தருவதாக சொல்லி ஆட்சியைப் பிடித்த மோடி கும்பல், மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் கல்விக் கொள்கைகளையும், தொழிலாளர் உரிமையைப் பறிக்கின்ற தொழிலாளர் சட்டத் திருத்தத்தையும், விவசாயிகளின் உயிரைப் பறித்து, நாட்டையே பாலைவனமாக்கும் நாசகாரத் திட்டங்களையும் திணித்து வருகிறது. கருப்புப் பண ஒழிப்பு என்று சொல்லி, மக்களின் சிறு சேமிப்பையும் பிடுங்கி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எடுத்துக் கொடுக்க குறுக்கு வழிகளின் மூலம் முயற்சி செய்கிறது. ஓட்டுக் கேட்க வரும் முன் இத்திட்டங்களை எல்லாம் நடைமுறைக்கு கொண்டு வருவதாகச் சொல்வதில்லை. தான் சொன்னதையே செய்ய முடியாமல், மக்களுக்கு எதிராக செயல்படுகிறது மோடி அரசு.
மறுபுறம் அனைவருக்கும் பொதுவான அரசு என்று சொல்லிக் கொண்டு, தனது பார்ப்பன கொடுங்கரங்களால் எழுத்தாளர்கள், மாணவர்கள், அடித்தட்டு மக்களைக் கொலை செய்து கலவரங்களின் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என தனது இந்துத்துவத்தை திணிக்க பயங்கரவாதத்தை திணித்து வருகிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையை, உரிமையைக் காக்க வக்கற்றும், அமைதியான வாழ்வை உத்திரவாதப் படுத்த முடியாமல் பொருளாதாரத் தாக்குதல்களாலும், மதவெறி பயங்கரவாதத்தாலும் மக்களை நிலை குலையச் செய்து தான் மக்களுக்குச் சொன்ன எதையும் செய்ய முடியாமலும், எதிராகவும் மாறிப் போன இந்தக் கட்டமைப்பை மோதி வீழ்த்துவது தான் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவு நாளில் நாம் ஏற்க வேண்டிய சூளுரை என்று சொல்லி முடித்தார்.
இறுதியாக புமாஇமு தோழர் பிரகாஷ் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
தகவல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புதுச்சேரி. தொடர்புக்கு: 8124412013, 9597789801
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, சூரவாரிகண்டிகை கிராமத்தில் இயங்கி வரும் பாரத் டெக்ஸ்டைல்ஸ் & புரூஃபிங் லிமிடெட் ஆலையில் 51 நிரந்தர தொழிலாளர்களை கொண்டு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை சங்கம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தார்பாய் உற்பத்தியை நடத்தி வருகிறது.
இந்நிறுவனம் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள ’ஸ்ரீ சிட்டி’ என்னுமிடத்தில் தனது புதிய நிறுவனத்தை திறந்து இதே தார்பாய் உற்பத்தியை துவங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கிவரும் ஆலையை மூடவேண்டும் என்கிற நீண்ட நாள் திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பண்டிகைக்கால முன்பணம் வழங்காமல் இழுத்தடித்தது. இதை எதிர்த்து தொழிலாளர் துணை ஆணையரிடம் மனு செய்யப்பட்டது. அதற்கு நிர்வாகம் சமர்ப்பித்த விளக்க கடிதத்தில் “தங்கள் ஆலையில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்களுள் பலர் தமிழர்கள் அல்ல, தெலுங்கு பேசக்கூடியவர்கள். ஆகவே அவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடமாட்டார்கள் எனவும், பெரும்பாலும் அனைத்து தொழிலாளர்களும் விவசாயம் பார்ப்பவர்கள். தற்சமயம் நல்ல மழை பொழிந்திருக்கிறது. ஆகவே நல்ல லாபம் கிடைத்திருக்கும் என்பதால் அவர்களுக்கு பணம் தேவை ஏற்படாது” எனவும் நிர்வாகம் திமிராக பதிலளித்துள்ளது.
அந்த வகையில் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய சீருடை, பாதுகாப்பு காலனி, பண்டிகைக்கால முன்பணம் ஆகியன வழங்காததை எதிர்த்து சட்ட ரீதியாக எதிர்கொண்டு வந்த சூழலில் கடந்த 24.10.2016 தேதி முதல் 23.11.2016 வரையில் ஆலை லே-ஆஃப் விடப்பட்டது. ஒரு தொழிற்தாவா நிலுவையில் இருக்கின்றபோது தாவா சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் எந்த ஒரு நடவடிக்கையினையும் நிர்வாகம் மேற்கொள்ளக்கூடாது என்பது சட்டம். அதனை மீறி லே-ஆஃப் அறிவித்திருப்பது சட்டவிரோதம் என்பதை தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் தொழிற்சங்கம் சார்பில் மீண்டும் தொழிற்தாவா ஏற்படுத்தப்பட்டது.
நிர்வாகத்தின் அடுத்த கட்ட தாக்குதலாக 24.11.2016 தேதியிலிருந்து 14.12.2016 தேதி வரை லே-ஆஃப் -ஐ காலநீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டதுடன், 30 தொழிலாளர்களை, 02.12.2016 தேதியில் இருந்து ஆட்குறைப்பு செய்துள்ளதாகவும் அறிவிப்பு செய்தது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தாக்கல் செய்து 30 தொழிலாளர்கள் மீதான ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக 02.12.2016 தேதியில் இடைக்கால தடை ஆணை பெறப்பட்டது. தடையாணை பெறப்பட்ட தகவலை நிர்வாகத்திற்கு அதே தேதியில் தொழிற்சங்கத்தால் தெரியபடுத்தப்பட்டது. அச்சமயம் ஆலை லே-ஆஃப்-ல் இருந்தது. ஆகவே, ஆலை மீண்டும் இயக்கப்படும்போது அனைவருக்கும் பணி வழங்கப்படும் என தொழிலாளர்கள் நம்பியிருந்தனர்.
லே-ஆஃப் காலக்கெடு முடிந்து 15.12.2016 அன்று ஆலை இயக்கப்பட்டபோது பணிக்கு வந்த தொழிலாளர்களுள் ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு செய்திருந்த 30 தொழிலாளர்களை தொழிற்சாலைக்குள் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. நிர்வாகத்தின் இந்நடவடிக்கை சம்பந்தமாக அன்றைய தினமே பிற்பகலில் நிர்வாக இயக்குனர்களிடம் தொழிற்சங்கம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் பெற்றதாக தெரிவித்த தடையாணை நகலை பார்த்த பின்னரே எந்த முடிவையும் எடுக்க இயலும் எனவும், அதுவரை ஆட்குறைப்பு செய்யப்பட்டவர்கள் தொழிற்சாலைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என திட்டவட்டமாக நிர்வாகம் தெரிவித்துவிட்டது.
மேற்படி ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பெறப்பட்ட இடைக்கால தடையாணை நகல் 11.01.2017 அன்றுதான் தொழிற்சங்கத்திற்கு கிடைக்கப்பெற்றது என்பதையும், அதில் கீழ்க்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் 12.01.2017 தேதியிட்ட தொழிற்சங்க கடிதத்தின் வாயிலாக நிர்வாகத்திற்கு அனுப்பப் பட்டது.
ORDER: IN view of the retrenchment order dated 24.11.2016, there shall be an order of interim injunction as prayed for – “(ii) Grand interim injunction restraining the 3rd respondent from altering the service conditions of the members of the petitioner union whose names are annexure to this petition in any manner including discontinuance of their services, engaging outsiders in the production activities or removing the materials, machinery or closing the factory or any act which will make result in non – employment to them (in WMP.NO.36394/2016) pending disposal of above WP.No.42500/2016 respectively)
மேற்படி ஆட்குறைப்பு செய்யப்பட்ட தொழிலாளர்கள் 13.01.2017 தேதியில் ஆலை நிர்வாகத்திடம் வேலை செய்ய அனுமதிக்குமாறு கோரி ஆலை வாயிலில் காத்திருந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். ஆட்குறைப்பிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ள நிலையிலும் நிர்வாகம் அதை சிறிதளவும் மதிக்காமல் அலட்சியமாக நடந்து கொள்வது சட்டத்திற்கும், நியாயத்திற்கும் எதிரானதாகும்.
தொடர்ந்து 17.01.2017 தேதியன்று உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்தக் கோரியும், அனைத்து தொழிலாளர்களையும் வேலை செய்ய ஆலைக்குள் அனுமதிக்கக் கோரியும் ஆலை வாயிலில் காத்திருந்தனர். காலை முதல் மாலை வரை காக்க வைத்து பின் காவல் துறை ஆய்வாளரை வரவழைத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆலை நிர்வாகம் முயற்சித்தது. ஆலை நிர்வாகத்தின் தூண்டுதலின் பேரில் கும்மிடிப்பூண்டி காவல் துறை ஆய்வாளர் திரு.டில்லிபாபு தொழிலாளர்களை கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டார். அவரிடம் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை காண்பித்து நியாயம் கேட்டபோது நீதிமன்ற உத்தரவை மதிக்காத ஆலை நிர்வாகத்தை எந்த கேள்வியையும் கேட்காமல், ஆலை நிர்வாகத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மேற்கொள்ளுங்கள் என தொழிலாளர்களுக்கு காவல் துறை ஆய்வாளர் உபதேசம் செய்தார்.
அந்த வகையில் பாரத் டெக்ஸ்டைல்ஸ் & புரூஃபிங் லிமிடெட் ஆலை நிர்வாகம் எந்தவித சட்ட – திட்டங்களையும் மதிக்காமல் காவல் துறையின் உதவியோடு தொழிலாளர்கள் மீது ஒடுக்குமுறையையும், பழிவாங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழந்து குடும்பத்துடன் பொருளாதார ரீதியாக மிகுந்த கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.
இத்தகைய சூழலில்தான் கடந்த 29.03.2017 தேதி முதல் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளனர். ஆறு நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தொழிலாளர்களை சந்தித்து பிரச்சினைக்கு தீர்வுகான இதுநாள்வரை அரசு சார்பில் எந்தவொரு அதிகாரியும் முன்வரவில்லை. இருப்பினும் தங்கள் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தலைமையின் வழிகாட்டுதலின்படி போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
செய்தி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்- தொடர்பு எண்:9444461480.
கடந்த 20.03.2017 அன்று கடலூர் துறைமுகம் செல்லும் வழியில் பாதாளச் சாக்கடை தூர்வாரச் சென்ற மூன்று தொழிலாளர்கள் ஒருவர் பின் ஒருவராக பாதாளச் சாக்கடை குழிக்குள்ளே மாண்டு போனார்கள். உண்மையைச் சொன்னால் கொலை செய்யப்பட்டார்கள். மனித கழிவை மனிதன் அள்ளக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் மசுருக்கு சமம் என்பதற்கு சாட்சி தான் அரசு அதிகார வர்க்கத்தின் இந்த படுகொலை.
கடந்த 2008 முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சிதம்பரம் கடலூர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் கொண்டு வரப்படும்போதே தமிழகம் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் மண்சரிந்து உயிரோடு புதைந்து பிணமாகினர். அப்படி கடலூரிலும் எவ்வித பாதுகாப்பு உபகரணமும் இன்றி 8 பேர் செத்துபோனார்கள். இத்திட்டம் மக்களுக்கு பயன்பட்டதோ இல்லையோ அதிகாரிகளும், அமைச்சர்களும் ஒப்பந்ததாரர்களும் கொள்ளை அடிப்பதற்கே பயன்படுகின்றன. 20-ம் தேதி இறந்துபோன 3 பேரில் அப்பாகுட்டி என்கிற ஜெயகுமார், காண்ட்ராக்ட்காரர்கள் எஸ்,ஆர் என்கிற ராமச்சந்திரன் (ஓபிஎஸ் உறவினர்), ராவணன் (சசிகலா உறவினர்) ஆகியோரின் நிறுவனங்களில் பலவருடமாக வேலை செய்கிறார்கள்.
இறந்து போன தொழிலாளிகள் அப்பாகுட்டி (இடது), முருகன், வேலு
சம்பவம் நடந்த இடத்தில் நீண்டகாலமாக அடைப்பு இருந்து உள்ளது. அதை எடுக்க வேண்டுமென்று நீண்டகாலமாக வலியுறுத்தி உள்ளனர் காண்ட்ராக்ட் காரர்கள். தன்னால் உள்ளே இறங்கி வேலை செய்ய முடியாது அது மிக ஆபத்தான இடம் நவீன கருவி கொண்டு தான் வேலை செய்ய வேண்டும் என்று கடலூர் கொடிக்கால் காலனியைச் சேர்ந்த அப்பாகுட்டியும், வேலுவும் மற்றும் சோரியான்குப்பம் முருகனும் கூறி உள்ளனர்.
ஆனால் நீங்கள் இதை செய்தால் தொடர்ந்து வேலை கொடுப்போம். அரசு வேலைக்கும் ஏற்பாடு செய்வோம். இல்லையென்றால் இத்தோடு போய்விடுங்கள் என்று மிரட்டி இருக்கிறார்கள் கான்ட்ராக்ட்காரர்கள். இந்த மிரட்டலைப் பற்றி தன் தாயிடமும், அக்காவிடமும் பலமுறை வேதனையோடு புலம்பி இருக்கிறார் அப்பாகுட்டி. இறந்துபோன 3-பேரில் முருகனுக்கு திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். அப்பாகுட்டிக்கும், வேலுவுக்கும் திருமணம் செய்யப் பெண் பார்க்கப்பட்டு வந்த நிலையில் மணமகனாய் மேடை ஏறவேண்டியவர்கள். இன்று செத்த பிணங்களாய் சுடுகாட்டில் கிடக்கின்றனர். 20-ம் தேதி காலையில் தன் பேர பிள்ளைகளை பார்க்க வந்த முருகனின் மாமனார் மருமகன் இறந்த துக்கம் தாங்க முடியாமல் 23-ம் தேதி மாராடைப்பால் இறந்துவிட்டார்.
என் சாமியே போனபிறகு இனி நான் வாழ்ந்து என்ன செய்ய போகிறேன் என்று புலம்புகிறார் முருகனின் மனைவி. சம்பவத்தன்று 3 பேரும் மதிய உணவுக்கு சாப்பிட வந்தவர்களை சாப்பிட கூடவிடாமல், போன் போட்டு வேலைக்கு விரட்டி இருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள். இவர்களின் மிரட்டலால் முன் ஏற்பாடு ஏதுமற்ற நிலையில் பாதாள சாக்கடை குழிக்குள்ளே முதலில் இறங்கிய வேலு நீண்டநேரமாகியும் வரவில்லையே என்று உள்ளே இறங்கினார் முருகன். அவரும் சென்ற கொஞ்ச நேரத்தில் போனில் ஒப்பந்ததாரருடன் பேசிக் கொண்டிருந்த முருகன் இதோ வேலை நடக்கிறது முடித்து விட்டோம் என்று சொல்லி கொண்டே பாதாள சாக்கடையை எட்டி பார்க்க வேலை செய்த இருவரையும் காணவில்லையே என்று அதிர்ச்சி அடைந்து இவர்களை தேடி அப்பாகுட்டியும் உள்ளே இறங்கினார் அவரையும் காணவில்லை. கொஞ்சநேரத்தில் அங்கு வந்த அவரின் நண்பர்கள் அப்பாகுட்டியின் டூவீலரில் அவரின் செல்போன் ஒலிக்க எடுத்து பேசினார்கள்.
முருகன் அவர்களின் குடும்பம்
எதிர்முனையில் வடிகால் வாரிய அதிகாரிகள் என்ன முடிச்சிட்டியா என அதிகார தொனியில் கேட்க போனில் பேசிய அப்பாகுட்டியின் செல்லங்குப்பம் நண்பர்கள் சார் 3 பேரும் குழிக்குள் இறங்கி செத்துட்டாங்க சார் தயவு செய்து உடனே வாங்க என்று கதறியிருக்கின்றனர். அப்படியா என்று கேட்ட அதிகாரி நீண்டநேரமாகியும் வரவில்லை. பிற அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் தொடர்பு கொண்டபோது சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அப்பாகுட்டியின் நண்பர்களே 108 ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தந்தனர். இறந்துபோன அப்பாகுட்டி மற்றும் வேலுவின் உறவினர்கள் அங்கு கூடிவிட்டனர்.
ஒவ்வொருவராக தூக்கும்போது வேலுவும், முருகனும் முன்பே இறந்துவிட அப்பாகுட்டி மயக்கநிலையில் இருந்துள்ளார். அப்பாகுட்டியின் மண்டையிலும், கழுத்திலும் தீயணைப்பு துறை ஊக்குபோட்டு தூக்கும்போது தான் இறந்துவிட்டார் என்று அதிகாரிகளை குற்றம்சாட்டுகிறார் அப்பாகுட்டியின் அண்ணனும், அம்மாவும். மூன்று பேரின் உடல்களும் பிணவறையில் கிடக்க எந்த அதிகாரிகளும் வராத நிலையில் மருத்துவமனையின் எதிரில் பொதுமக்களும், உறவினர்களும் மக்கள் அதிகார தோழர்கள், விசிக, சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்களும் சாலை மறியல் போராட்டம் செய்தனர் 2 மணி நேரம் போராட்டம் தொடர்ந்தது. இறுதியாக பேச்சுவார்த்தைக்கு வந்தார் ஆர்.டி.ஓ வர்க்கிஸ். பேச்சுவார்த்தை அன்று இரவும், மறுநாள் காலையும் நீண்டநேரம் நடந்தது. முடிவில் ஈமச்சடங்கிற்கு ஐம்பது ஆயிரமும், நிவாரணமாக உச்ச நீதிமன்ற உத்தரவு படி 10 லட்சமும் தருவதாக மாவட்ட நிர்வாகம் ஒப்பு கொண்டபின் அதோடு முடித்து கொள்ளலாம் என்று இருந்த நிலையில் அதிகாரிகளை வேலைநீக்கம் செய்து கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும், கான்ட்ராக்டர்களை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டுமென்று முழக்கமிட்டு போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அழுத்தம் கொடுத்தது.
அப்பாகுட்டியின் தாயார்
மக்களும் இதை விடாமல் அழுத்தம் கொடுத்து பேசினார்கள். இதன் இறுதியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பென்ட் செய்வதாகவும், கான்ட்ராக்டட்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்வதாகவும் உத்தரவிட்டது மாவட்ட நிர்வாகம். இந்நிலையில் அதிகாரவர்க்கத்தின் இந்த சதிச்செயலை கண்டித்து மக்கள் அதிகார அமைப்பும், பல்வேறு அமைப்புகள், கட்சிகளை ஒருங்கிணைத்து தொடர் போராட்டங்களை நடத்துவதுடன் தொடர்ச்சியாக வரும் 6-ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தை பூட்டி முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
வேற்று கிரகங்களுக்கு பாயும் செயற்கை கோள்களை தயாரித்து அனுப்புகிறார்கள் விஞ்ஞானிகள். கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளை கண்டுபிடிக்கிறார்கள் ராணுவ விஞ்ஞானிகள். ஆனால் மனித மலக்கழிவுகளை அள்ளுவதற்கு பல நவீன கருவிகளை கண்டுபிடித்தாலும் பணம் சம்பாதிப்பதே எங்கள் நோக்கம் என்ற வெறியாலும், ஒடுக்கப்பட்டவர்களை மட்டுமே இதில் ஈடுபடுத்துவது என்ற பார்ப்பனியக் கொடுங்கோன்மையாலும், இந்த படுகொலைகள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுவருகிறது.
நாம் சட்டபூர்வமான போராட்டங்களை நம்பி கொண்டு இருந்தால் இந்த ஆளும் அருகதையிழந்த தோற்றுபோன இந்த அரசமைப்பு முறையில் எதையும் பெறமுடியாது. பாதாள சாக்கடையை விட அழுகி நாறும் இந்த அரசு கட்டமைப்பை தூர்வாறி மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவது தான் நமது உடனடி கடமை.
தகவல் : மக்கள் அதிகாரம், கடலூர், தொடர்புக்கு – 81108 15963
புது தில்லி துணை நகர தொழிலாளர்கள் நிலைமை – நேரடி செய்தியறிக்கை பாகம் 3
“ஒரு கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை எப்படியெல்லாம் நடக்க கூடாதோ அப்படியெல்லாம் இந்த வழக்கை நடத்தியுள்ளனர். அரசு தரப்பும் சரி, காவல் துறையும் சரி புகாரளித்த தரப்பான மாருதி நிர்வாகத்தின் பக்கம் நின்றே செயல்பட்டுள்ளனர்” என்கிறார் வழக்கறிஞர் ஹர்ஷ் போரா. பொய்யான கொலைப்பழி சுமத்தப்பட்ட மாருதி தொழிலாளர்கள் தரப்பில் வழக்கை எடுத்து நடத்திய மூத்த வழக்கறிஞர் ரெபேக்கா ஜோனின் உதவியாளரான ஹர்ஷ் போரா, இந்த வழக்கின் ஆரம்பகட்டத்தில் இருந்து நீதிமன்ற விசாரணையில் பங்கேற்று வாதாடியவர்.
வழக்கறிஞர் ஹர்ஷ் போரா
“நீங்கள் சொல்லும் போது, காவல் துறை, அரசு வழக்கறிஞர் மற்றும் மாருதி நிர்வாகம் ஒரே தரப்பாக நின்று செயல்பட்டிருப்பதாக குறிப்பிட்டீர்கள். நான் சட்ட அறிவற்ற சாதாரண மனிதனாக வழக்கின் தீர்ப்பையும் கணக்கில் கொண்டு கேட்கிறேன் – நீதிமன்றமும் கூட தொழிலாளிகளுக்கு எதிராக ஒரு தரப்பாக செயல்பட்டதாக ஏன் புரிந்து கொள்ளக் கூடாது?” என்றோம். கேள்வியை உள்வாங்கி விட்டு நீளமாய்ச் சிரித்தார்…
“நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்பதைக் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது, கூடாது. ஒரு வழக்கறிஞராக வழக்கு நடந்த முறை, போலீசார் விசாரணை செய்த முறை, தீர்ப்பு பற்றி எனது கருத்தை தெரிவிக்கிறேன். அதிலிருந்து நீங்கள் என்னவிதமான புரிதலுக்கும் வரலாம். ஒரு வழக்கறிஞராக இருக்கும் போது நீதிமன்றத்தின் பக்கச் சார்பற்ற தன்மையை நம்ப வேண்டும் என்பது ஒரு முன்நிபந்தனை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்” என்றார்.
“மூத்த வழக்கறிஞர்கள் பிருந்தா குரோவரும் ரெபெக்கே ஜோனும் இந்த தீர்ப்பு தொழிலாளிகளுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்கிறார்கள். 13 பேர் ஆயுள் தண்டனையும், 18 பேர் ஐந்து வருடங்கள் வரை சிறை தண்டனையும் பெற்றிருக்கும் நிலையில், இதை எப்படி வெற்றி என்று புரிந்து கொள்வது ?”
“குற்றமற்றவர்களாக விடுவிக்கப்பட்டிருப்பவர்கள் குறித்து நீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தைகளை படித்துப் பாருங்கள். அவர்கள் சுமார் நான்காண்டு காலம் அனுபவித்த சிறைக் காவல் மற்றும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவே முடியாதது என்று குறிப்பிடும் நீதிபதி, அதற்காக போலீசாரைக் கடுமையாக கண்டித்துள்ளார்.
இப்போது தண்டிக்கப்பட்டவர்களுக்கு வாருங்கள். விடுவிக்கப்பட்டவர்களை எந்த அடிப்படையில் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் கணிக்கிறதோ அதே அடிப்படைகள் இவர்களுக்கும் பொருந்துகிறது. இதைத் தீர்ப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தே எடுத்துக் காட்ட முடியும். எனவே வழக்கு மேல்முறையீட்டில் நிற்காது” என்றார் ஹர்ஷ் போரா.
“சரி, இந்த 31 பேரின் மேல் எந்த அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கருதியது?”
“ஒரு அடிப்படையும் கிடையாது. இந்த தொழிலாளிகள் தான் தீ வைத்தனர் என்றும் அதை நேரில் பார்த்த சாட்சிகள் இன்னின்னார் என்றும் அரசு தரப்பில் இருந்து நிர்வாகத்தினர் சிலரை சாட்சிகளாக ஆஜர் படுத்தினர். ஆனால், ஒரு சாட்சியால் கூட குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தின் முன் அடையாளம் காட்ட முடியவில்லை. போலீசு மற்றும் பிராசிக்யூசன் தரப்பால் ஒரே ஒரு சந்தர்ப்ப சாட்சியத்தை நிறுவ முடியவில்லை.”
ஒரு கிரிமினல் குற்ற வழக்கு விசாரணை எப்படியெல்லாம் நடக்க கூடாதோ அப்படியெல்லாம் இந்த வழக்கை நடத்தியுள்ளனர்
“பிறகு எப்படி நீதிமன்றம் இவர்களைக் குற்றவாளிகள் என்றது ?”
“இந்த தீர்ப்பில் உள்ள பல்வேறு முரண்பாடுகளில் இது முக்கியமானது. அதாவது, ஜியாலால் தன்னை சாதிப் பெயர் சொல்லி இழிவாகத் திட்டியதாக சங்கராம்ஜி என்கிற மேலாளரின் மீது ஒரு எதிர் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் தவறானது என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர் தீர்ப்பின் போது ஜியாலால் புகார் அளித்திருப்பதால், தொழிலாளிகள் கூட்டமாகச் சென்று நியாயம் கேட்டிருக்கிறார்கள் என்றும், சம்பவம் நடந்த இடத்தில் தொழிலாளிகள் இருந்ததற்கு இதுவே ஆதாரம் என்றும் கணக்கில் எடுத்து தீர்ப்பளித்துள்ளது.”
“இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாதத்தை வைத்து தள்ளுபடியான வாதத்தை கணக்கில் எடுக்கலாமா ?”
“எடுக்க கூடாது. அப்படி எடுக்க கூடாது என்பதற்கு வழிகாட்டியாக பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளே உள்ளன. 31 பேரைக் குற்றவாளிகள் என நீதிமன்றம் அளித்த தீர்ப்பே முழுக்க முழுக்க அனுமானத்தின் அடிப்படையிலானது; அந்த அனுமானமும், அப்படி அனுமானிப்பதற்கு வசதியான முறையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வைத்த வாதங்களில் தோதான பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்து சேர்த்துக் கொண்டதால் வந்தடைந்ததே. வேடிக்கை என்னவென்றால் குற்றவாளி என்று அறிவிப்பதற்கு வசதியாக செலக்டிவாக எடுத்துக் கொண்ட வாதங்களை வழக்கு விசாரணையின் போது நீதிமன்றமே தள்ளுபடியும் செய்திருக்கிறது. உங்களுக்கு இந்த முரண்பாடு புரிகிறதல்லவா?” என்றவரின் முன் வழக்கு தொடர்பான பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட தொகுதிகள் இருந்தன.
“புரிகிறது. ஆச்சரியமாகவும் உள்ளது” என்றோம்.
“அது மட்டுமல்ல, தொழிலாளிகள் தான் தீ வைத்தனர் என்பதற்கு போலீசார் நிறுத்திய சாட்சிகள் அனைவருமே நிர்வாகத்தைச் சேர்ந்தவர்கள். ஏன் தொழிலாளிகளில் ஒருவர் கூட சாட்சியாக கிடைக்கவில்லையா ? மானேசர் ஆலையின் காவலாளிகள் தரப்பில் இருந்து தீபக் என்பவரை சாட்சியாக நிறுத்தினார்கள். தொழிலாளிகள் தீ வைப்பதை சி.சி.டி.வி மூலம் பார்த்ததாக சொல்லும் அவரால் ஒருவரையும் அடையாளம் காட்ட முடியவில்லை. மேலும், சி.சி.டி.வி பதிவுகள் நெருப்பில் சேதமாகி விட்டதாகவும் தெரிவித்து விட்டார்கள்”
“அது சாத்தியமில்லையே. என்னதான் நெருப்பு பற்றியிருந்தாலும் கணினியின் ஹார்ட்டிஸ்குகளின் உள்ளே இருக்கும் மின்காந்த தகடுகள் உருகிப் போயிருப்பதற்கான சாத்தியங்கள் இல்லையே. ஒருவேளை சர்வர் எரிந்திருந்தாலும் கூட அதிலிருக்கும் ஹார்ட்டிஸ்குகளை கைப்பற்றி பாரன்சிக் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தால் வலுவான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்திருக்குமே?”
“போலீசார் செய்த குளறுபடிகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அரசு தரப்பில் நிறுத்திய சாட்சிகள் தெளிவாக இப்படிச் சொல்கிறார்கள் – ‘குர்காவ்னில் உள்ள ஜப்பான் ஹாஸ்டலில் தங்கியிருந்த போலீசார் எங்களைக் கூப்பிட்டு விசாரித்தார்கள்’ என்று. எனில், போலீசார் குற்றம்சாட்டியவர்கள் அளித்த தங்குமிடத்தில் வசித்துக் கொண்டு, அவர்கள் அளித்த பிற வசதிகளைப் பெற்றுக் கொண்டே தான் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் என்பது அவர்கள் தரப்பு சாட்சிகள் மூலமே தெளிவாகிறது. இவ்வாறு விசாரணை நடத்தினால் அதில் நடுநிலைமை இருக்காதென்றும், அப்படி விசாரிக்க கூடாதென்பதற்கும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் உள்ளன. அவை மீறப்பட்டுள்ளதை தீர்ப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை”
”இது ஒரு சிறிய தவறாக கூட இருக்கலாமே. போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்பதற்கு இது மட்டும் தான் உங்கள் வசமிருக்கும் வாதமா?” என்றோம்.
நன்றி: rebel politik
”அதுமட்டுமல்ல. உதாரணமாக கொலைக்கான ஆயுதம் கார் கதவின் பீம் என்று நீதிமன்றத்தில் போலீசார் பதிவு செய்துள்ளனர். ஆனால், முதல் தகவல் அறிக்கையின் படி முட்டுக் கம்புகள், இரும்பு ராடு, மண்வெட்டி மற்றும் இன்னபிற என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கார் கதவின் பீமை புத்திசாலித்தனமாக ‘இன்ன பிறவுக்குள்’ கொண்டு வந்து விட்டார்கள். என்ன புத்திசாலித்தனம் என்கிறேன் என்றால், கொலை ஆயுதங்களாக குறிப்பிடப்பட்ட மற்றவை கட்டிடம் கட்டும் போது பயன்படுத்தப்படுபவை. கட்டிமுடிக்கப்பட்ட ஒரு கட்டிடத்தில் இந்தப் பொருட்களுக்கு என்ன வேலை ? என்கிற கேள்வியை புத்திசாலித்தனமாக தவிர்க்க கார் கதவின் பீம் என்று புதிய பொருளை நுழைத்துள்ளனர்.” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“குற்றவழக்குகளைப் பொருத்தவரை கொலைக்கான ஆயுதம் சந்தேகத்துக்கிடமின்றி நிறுவப்பட வேண்டும் என்பது அரிச்சுவடி. கார் பீமை கொலை ஆயுதமாக பின்னர் சொருகிய போலீசார், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார் பீம்களை தொழிலாளர்கள் களவாடிச் சென்று தாக்கியதாக குறிப்பிடுகின்றனர். சரி, ஒரு வாத்ததிற்கு அதை ஏற்றுக் கொள்வோம். போலீசார் என்ன செய்திருக்க வேண்டும் ? கம்பெனியின் இன்வெண்டரி ரிக்கார்டுகளில் கார் பீம்கள் குறைந்திருப்பதை ஆவணப்பூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபித்திருக்க வேண்டும் – செய்யவில்லை. அதே போல் கைப்பற்றப்பட்ட கொலை ஆயுதத்தை பாரன்சிக் ஆய்வுக்கு அனுப்பி காயங்கள் இதனால் தான் ஏற்பட்டதென அறிக்கை பெற்று சமர்பித்திருக்க வேண்டும் – இதையும் செய்யவில்லை. அட குறைந்தபட்சம், இதோ கைப்பற்றப்பட்ட ஆயுதத்தில் உள்ள கைரேகைப் பதிவுகள் என பாரன்சிக் ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும் – அதையும் செய்யவில்லை. அடுத்து முக்கியமாக, கொலை ஆயுதத்தை போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவரிடம் அளித்து, இந்த ஆயுதத்தை இப்படித் தாக்கியதால் இவ்வாறான காயங்கள் ஏற்பட சாத்தியமுண்டு எனச் சான்று பெற்று சமர்பித்திருக்க வேண்டும் – அதையும் செய்ய வில்லை.”
“ஏகப்பட்ட முரண்பாடுகளுடன் விசாரணை நடந்துள்ளது போல் இருக்கிறதே ?”
“அதோடு நிற்கவில்லை. மாருதி மேலாளர் அவினேஷ் எரித்துக் கொல்லப்பட்டதாகத் தானே ஊடகங்கள் சொல்கின்றன ? ஆனால், போஸ்ட்மார்ட்டம் அறிக்கையின் படி அவர் மூச்சுத்திணறலால் (asphyxia) இறந்துள்ளார். அதாவது தொழிலாளிகள் அவரது கையையும் காலையும் முறித்து விட்டதால் நெருப்புப் பிடித்த கட்டிடத்திலிருந்து அவரால் வெளியேற முடியவில்லை என்றும், அப்போது சூழ்ந்த புகையில் மூச்சுத்திணறி இறந்துள்ளார் என்றும், அதன் பின்னரே அவரது உடல் தீயில் கருதியது என்றும் அரசு தரப்பு தெரிவிக்கிறது. அவர்கள் வாதப்படியே பார்த்தாலும் கூட தாக்கியவர்களுக்கு கொல்ல வேண்டும் என்கிற நோக்கம் இல்லை. காயம் ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். பிறகு எப்படி அவர்களுக்கு கொலைக்கான தண்டனையைக் கோரினார்கள்?” என்றார் ஹர்ஷ் போரா.
“அரசு தரப்பு கொலைக்கான தண்டனை கோரியதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டிருக்கிறதே?”
“எனவே தான் இந்த வழக்கு மேல் முறையீட்டில் நிற்காது என்கிறோம்”
“ஆனால், அரசு வழக்கறிஞர் எந்த அடிப்படையில் தூக்கு தண்டனை விதிக்குமாறு கோரினார்?”
“அதுவும் தவறு தான். தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பதற்கு அரசு தரப்பில் இருந்து சில தீர்ப்புகளை முன்னுதாரணமாக காட்டினார்கள். அதில் ராவ்ஜி என்பவருக்கும் ராஜஸ்தான் அரசுக்கும் நடந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனைத் தீர்ப்பு ஒன்று. ஆனால், இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து குறைத்துள்ளதை அரசு தரப்பு கவனிக்கவில்லை. மிக முட்டாள்தனமான விசயம் இது. எனது சந்தேகம் என்னவென்றால், அரசு தரப்பு வக்கீலின் ஜூனியர் கூகிளில் தூக்கு தண்டனை தீர்ப்புகளைத் தேடி எடுத்துக் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் கூகிளைக் கேட்டால் அது கேட்டதை மட்டும் கொடுக்கும் – ஆனால், மேல் முறையீட்டில் அந்த தண்டனை குறைக்கப்பட்டதைச் சொல்லாது. இவ்வாறு தண்டனை குறைக்கப்பட்டதை எல்லாம் முன்னுதாரணமாக காட்டக் கூடாது என்பது மிக மிக அடிப்படையானது. நாங்கள் இதை நீதிமன்றத்தில் தெரிவித்த போது அரசு தரப்பு வழக்கறிஞர்களின் முகங்கள் தொங்கிப் போனது. கூகிளை நம்பி வழக்கு நடத்தினால் அவமானப்படாமல் வேறு என்ன நடக்கும் சொல்லுங்கள் ?” என்று சிரிக்கத் துவங்கியவர், சற்று நேரம் கழித்து மீண்டும் தொடர்ந்தார்.
“…ம், தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக சுட்டிக்காட்டப்பட்ட இன்னொரு வழக்கின் தீர்ப்பு 1972-ல் வழங்கப்பட்டது. ஆனால், பாருங்கள் 73-ல் அந்தச் சட்டம் மாற்றப்பட்டது. அதாவது ஒரு சட்டத்தின் முந்தை வடிவத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தண்டனையை அந்தச் சட்டம் மாற்றப்பட்ட பின் அளிக்கப்படவுள்ள தீர்ப்புக்கு முன்னுதாரணமாக காட்டக்கூடாது என்பதும் அடிப்படையானது. இதுவும் அனேகமாக கூகிளின் வேலையாகத் தான் இருக்க வேண்டும். இங்கே எனது அலுவலக நண்பர்களிடம் கூகிள், இண்டெர்நெட் போன்றவைகளையெல்லாம் மிதமிஞ்சி நம்பாதீர்கள் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஏன் நம்பக் கூடாது என்று இப்போது அவர்கள் புரிந்திருப்பார்கள்…”
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகு கொண்டுசெல்லப்படும் மாருதி தொழிலாளர்கள்
”வழக்கின் விசாரணையின் போக்கில் உள்ள முரண்பாடுகளைக் குறித்து தெளிவாக விளக்கினீர்கள். போலீஸ் மற்றும் நீதிமன்றங்களின் விசாரணை நடைமுறை குறித்து தெரியாத சாதாரணமானவர்களுக்குப் புரியும் விதமாக இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்பதை எப்படி விளக்குவீர்கள்?”
”முதலில் கொலைக்கான ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 13 பேர். இதில் ஜியாலாலைக் கழித்துப் பார்த்தால் 12 பேர். அவர்கள் அத்தனை பேரும் தொழிற்சங்க நிர்வாகிகள். ஆக, தொழிற்சங்க நிர்வாகிகளாக குறிவைத்து கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருப்பதில் இருந்தே அவர்களது நோக்கம் தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கிப் போடுவது தான் என்பதை யாரும் புரிந்து கொள்ளலாம். அடுத்து, தாக்குதல் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் 135 பேர்களை எடுத்துக் கொள்ளுங்கள். இவர்கள் அத்தனை பேரின் பெயர்களும் அகர வரிசைப்படி அமைந்துள்ளது. அதே போல் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்டிய சாட்சிகளுக்கும் அகர வரிசைப்படியே குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.”
“இதைக் கொஞ்சம் புரியும் படி விளக்குங்களேன்”
”இதைப் புரிந்து கொள்ள சட்ட அறிவெல்லாம் தேவையில்லை நண்பரே. பொது அறிவே போதுமானது. அதாவது போலீசார் ஆரம்பத்தில் எழுதிய முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகளாக தொழிற்சங்க நிர்வாகிகளின் பெயர்களைச் சொல்லி விட்டு அவர்களுடன் ‘அடையாளம்’ தெரியாத நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் என்று குறிப்பிடுகின்றனர். தீவைப்புச் சம்பவம் நடந்த மறுநாள், கம்பெனியின் பதிவேட்டைக் கையில் வைத்துக் கொண்டு வரிசையாக ஒவ்வொருவராக கைது செய்து வழக்கில் சேர்த்துள்ளனர். எனவே தான் பெயர்கள் மிகச் சரியாக அகர வரிசைப்படி அமைந்துள்ளது.” என்றவர் மேலும் தொடர்ந்தார்.
“அடுத்து, கார் கதவின் பீமை பார்த்திருக்கிறீர்களா?”
“இல்லை”
“நானும் முன்பு பார்த்ததில்லை. இந்த வழக்கிற்காக நான் ஒரு கார் பீமை வாங்கி தூக்கிப் பார்த்தேன். சுமார் மூன்று கிலோ வரை இருக்கும். போலீசாரும் அரசு தரப்பு வழக்கறிஞரும் சொல்வதைப் போல ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் கொலைவெறியோடு இந்த மாதிரி பயங்கரமான ஒரு ஆயுதத்தைக் கொண்டு தாக்கியிருந்தால் அடிபட்டவர்களுக்கு எந்தமாதிரியான காயங்கள் ஏற்படும் சொல்லுங்கள் ?”
“பாரதூரமான காயங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.”
“ஆனால், அப்படி நடக்கவில்லை. ஓரிருவருக்கு கை கால் எலும்புகளில் மெல்லிய விரிசல் ஏற்பட்டது என்கிறது போலீசின் விசாரணை அறிக்கை. நான் ஒரு கிரிமினல் லாயர். எத்தனையோ கிரிமினல் வழக்குகளைப் பார்த்திருக்கிறேன். கொலை செய்ய வேண்டும் என்று நினைப்பவன் கை கால்களை மாத்திரம் குறிபார்த்து – அதுவும், மெல்லிய காயங்கள் ஏற்படும் படி அடிக்கவே மாட்டான். தலையில் அடிப்பான் அல்லது உடலில் குத்துவான். இதையெல்லாம் போலீசாரும் சரி, நீதிமன்றமும் சரி கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை.”
“எங்களுடன் நேரம் செலவழித்ததற்கும் பயனுள்ள இந்த உரையாடலுக்கும் மிக்க நன்றி திரு.போரா”
“நன்றி”
இரவு நேரம் பத்தைக் கடந்திருந்தது. நாங்கள் தில்லி டிபென்ஸ் காலனியில் இருந்த மூத்த வழக்கறிஞர் ரெபெக்கா ஜோனின் அலுவலகத்தில் இருந்து வெளியேறினோம். மறுநாள் மானேசர் சென்று தொழிலாளிகளைச் சந்திப்பது என திட்டம்.
மாருதி தொழிலாளர்கள் இந்த அநீதியான அடக்குமுறைகளுக்குப் பணிந்தார்களா ? அவர்களது தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கருவிலேயே சிதைத்து அழிக்க வேண்டும் என்ற மாருதி முதலாளியின் நோக்கம் நிறைவேறியதா ?
துப்பாக்கிக் சூட்டுக்கு மீனவர்கள் பலி, காவிரி துரோகத்திற்கு விவசாயிகள் பலி, கோகோ கோலாவிற்கு தாமிரபரணி பலி, ஹைட்ரோ கார்பனுக்கு நெடுவாசல் பலி… இப்படி தொடர்ச்சியாக தமிழகத்தில் சதித்தனமாக அழிவுத் திட்டங்களை கொண்டு வந்து அழிக்க துடிக்கிறது பாரதிய ஜனதா அரசு. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக போராடினால் தேசத்துரோகி என்கிறது மோடி அரசு. இதற்கு ஒத்தூதுகிறது சசிகலாவின் பினாமி அரசு! தமிழக விவசாயிகளின் பிரச்சினைக்காக சென்னையைச் சேர்ந்த அனைத்துக் கல்லூரி மாணவர்கள் சார்பாக எழும்பூரில் நாளை 1.4.2017 அன்று மாபெரும் தர்ணா போராட்டம் நடக்கவிருக்கிறது.
கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளிகள் அனைவரையும் அறைகூவி அழைக்கிறோம். வாருங்கள், அணிசேர்வோம், போராடுவோம், தமிழக விவசாயிகளின் உரிமையை மீட்டெடுப்போம்.
மெரினாவில் சாதித்த தமிழக மாணவர் சக்தியின் பலத்தை இங்கேயும் காட்டுவோம்.
தமிழகம் அடிமையில்லை என்பதை மோடி அரசுக்கு நிரூபிப்போம்.
நாங்கள்
காத்திருக்கமாட்டோம்…!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை
மூடாமல் ஓயமாட்டோம்…!
ஹைட்ரோ கார்பன்
திட்டத்தை உடனே மூடு!
விவசாயத்தையும்,
விவசாயிகளையும் வாழவிடு!
தமிழகத்தை அழிக்கும்
ஹைட்ரோ கார்பனை மூடச்சொன்னால்…
வறட்சி நிவாரணம் கேட்டால்…
விவசாயிகளை காக்க
மாணவர்கள் போராடினால்…
பத்திரிக்கையாளர்கள்
கேள்வி கேட்டால்…
தேசத்துரோகிகளா?
அடித்தாலும்
அடங்காது இது வேற தமிழ்நாடு!
தமிழனை அழிக்கத்துடிக்கும்
பி.ஜே.பி கும்பலே
தமிழகத்தை விட்டு ஓடு!
காளைக்காக கூடிய தமிழினமே
விவசாயிகளின்
கதறலுக்காகவும் கூடுவோம்!
இடம்: எழும்பூர் ரயில் நிலையம் அருகில் (தாளமுத்து நடராசன் மாளிகை எதிரில்) தேதி: 01-04-2017 நேரம்: காலை 11.30 மணி