Wednesday, July 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 682

சுரா, சோம லித்வேனிய மது மத்ய சுவாகா…

22

“இந்துமதம் ‘தொன்மையானது’, அதை யாராலும் அழிக்கமுடியாது, காலத்திற்கேற்றவாறு தன்னை புதுப்பித்துக்கொள்ளும் திறன் உள்ளது” என்று அடிக்கடி அசரீரீ முழங்கும் ஆர்.எஸ்.எஸ். அம்பிகளுக்கு ஒரு உற்சாகமூட்டும் புது செய்தி வந்திருக்கிறது.

லித்துவேனிய தேன் மது”ரிக் வேதத்தில் சொல்லப்பட்ட சூப்பர் தேன் மது லிதுவேனியாவிலிருந்து இந்தியாவுக்கு மீண்டும் வருகிறது” (தினகரன் செய்தி. 3.12.2013) என்பதுதான் அது. பால்டிக் நாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருக்கும் இந்தியன் பால்டிக் சேம்பர் ஆஃப் காமர்ஸ் சார்பில் ஜனவரியில் டெல்லி உணவுக் கண்காட்சியில் இதன் அறிமுகம் செய்யவிருக்கிறதாம். உலகத்துக்கே ஊத்திக் கொடுத்த இந்து மதத்தின், தேன் மது மீதான  பேட்டண்ட் உரிமையை லிதுவேனிய மது தர்ம கம்பெனி ஸ்டாக்லிஸ்கஸ், பிரிட்டிஷ் ராணி எலிசபெத்திடம் இருந்து 1969 -ல் பெற்றுக் கொண்டதாம். பாரம்பரி இந்து மரபு மதுவில் சிறிதளவு ஆல்கஹால் கலந்து அந்த சாதனையை  நிகழ்த்தியிருக்கிறது.

தேசிய மது மீதான காப்புரிமையை அன்னிய நிறுவனம் பறித்துக்கொண்ட தேசிய அவமானத்தை தீர்க்க மோடி பிரிட்டிஷூக்கு எதிராக ‘பொங்குவதற்கு’ ஆர்.எஸ்.எஸ். அம்பிகள் ஒரு போதை யாத்திரை நடத்தினாலும் நடத்தலாம். இல்லை இந்து மதத்தின் சகிப்புத்தன்மை காரணமாக ரிக் வேத பார்மூலாவுடன் குறைந்த பட்சம் ஆல்கஹால் கலக்கும் லிதுவேனியக் கம்பெனியை இந்து தர்மத்தோடு கலந்து குஜராத்தில் ஒளிரக் கூப்பிட்டாலும் கூப்பிடலாம். ரிக்வேதத்தின் இந்தத் தேன் மதுவுக்கு ஒரிஜினல் பிராண்ட் மாடலாக இருந்த ரிஷிகள் அபாஸ்ய ஆங்கிரசன், கவி பார்கவன், வசு பாரத்வாஜன் இந்த காலத்தில் இல்லா விட்டால் என்ன, இருக்கவே இருக்கிறார் ரீல் மாடல் மோடி!

பார்ப்பனர்கள் பாலையும், முட்டையையும் சைவத்தில் சேர்த்து வெகு நாளாயிற்று, அசுவமேதயாகம், ஆட்டுக்குட்டி யாகம், பசு வேள்வியெல்லாம் நகரத்து பாஸ்ட் புட்களில் பாரம்பர்யப்படி நடக்கிறது. பாரம்பர்ய ரிக் வேத தேன் மது மட்டும் கசக்கவா போகிறது. நீ அடிச்சாதான் தண்ணி! அவா ஊத்துனா ஜலம்! வேதங்கள் மட்டுமல்ல, சாணக்கியனின் ”அர்த்த சாஸ்த்திரமும்” சாராயத்தை ஓட விட்டு ‘ரெவின்யு’ பார்க்கலாம் என்பதை அரசனுக்கு ஓதுகிறது. அவாளின், வேதங்களின் சாஸ்த்திரங்களின் பாஸ் மார்க்குக்கு முன் டாஸ்மாக் எம்மாத்திரம்? தண்ணியை போட்டு விட்டு ஒரு குடும்பத்தை அடிப்பவனை ரவுடிகள் என்கிறோம், சோமத்தை ஊத்திக் கொண்டு குலத்தையே (அசுர குலத்தை) அழித்தவர்கள் ரிஷிகள். ‘காம சோமான்னு’ வேலை பார்க்கத் தெரிந்த பெரியவாளுக்கு முன்னே சூத்திர அப்பு, கதிரவன் எம்மாத்திரம்?

“நீ அடிச்சா தெரு போதை, அவா அடிச்சா தெய்வீக போதை, கஞ்சா இழுப்பதில் கூடவா நால் வர்ண வாடை!” இப்படியெல்லாம் பேசுவது வேதத்தையும், இந்து தர்மத்தையும் இழிவுபடுத்துவது என்று யாராவது உருகினால், ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களையும் படிக்காதவர்கள் என்று அர்த்தம். அதாவது மதுவை ஏற்காதவர்கள் வேதத்தையே ஏற்காதவர்கள், மறுப்பவர்கள் என்ற ‘பழி’ வந்து சேரும். தேன் மதுவை விடவும் காட்டமான சுரா, சோம பானங்களை தயாரித்து அந்த காலத்திலேயே ‘இந்து மதத்துக்கு’ ஒரு கிளர்ச்சியூட்டியவர்கள் வேதாதி ரிஷிகள்.

ரிக்வேதம் மண்டலம் 1 -ல் 7-ம் சூக்தத்தில் ”சோமத்தை பருகி இந்திரனுடைய வயிறு கடல்போல் பரவுகிறது” என்கிறது. 9 – வது பிரிவு சூக்தம் 2 -ல் ”ஊக்கமளிப்பதும், உற்சாகமளிப்பதுமான இந்த சோமத்தை இந்திரனுக்கு அளியுங்கள்” என்று சியர்ஸ் போடுகிறது. மண்டலம் 8 சூக்தம் 9 -ல் ”சோமனே, நீ பல பாண்டங்களில் வைக்கப்பட்டிருக்கிறாய், பகல் வேள்வியில் பாலோடும், மாலை வேள்வியில் தயிரோடும் கலக்கப்படுகிறாய், நீ தீரனுக்கு மிக்க மதமளிக்கும் பானமாயிருக்கிறாய்” என்று மிக்சிங் மேட்டரோடு வழிகிறது. மண்டலம் 9 -ல், பிரிவு 67 – சூக்தம் 3 -ல் சோமரசம் பசுமை நிற செடியிலிட்டு, கற்களால் பிழியப்பட்டு, ஆட்டுத் தோலில் வடிகட்டப்பட்டு, பாலோடு பாய்வதை ஃபுல் போதையில் வருணிக்கிறது. ரிக்வேதம் முழுக்கவே, பல மண்டலங்களில் சாராயம் காய்ச்சுவதை ஒரு தொழிலாகவே செய்யும் அவாள் பாஷையில் புனித வேள்வி செய்முறையும், செடிகளை நசுக்கி சாறெடுக்கும் கற்களின் ஓசை மந்திர ஒலியாய் காதை அடைக்கிறது.

ரிக் வேத ரிஷிகள் தொடங்கி, ‘ஏத்திவிடப்பா, தூக்கிவிடப்பா’ என்று தனி கிளாசில் தனக்கேற்றமாதிரி ஆண்டவனைத் தேடும் ஐயப்ப சாமிகள் வரை இந்து மதத்தில் போதையும் ஒரு பூஜைதான் என்பதோடு, பார்ப்பன இந்து மதமே ஒரு போதைதான் என்பதும் ‘நிதானமாக’ சிந்தித்தால் யாராலும் மறுக்க முடியாது. குடி குடியை கெடுக்கும் என்று போர்டை போட்டுக் கொண்டு டாஸ்மாக்கும் சீரியலும் ஒடிக்கொண்டிருக்கும் போது வேதங்களுக்கும் அப்படியொரு போர்டை போட்டு விட்டால் போதுமா? இதையெல்லாம் கேட்கும் போது கோபம் வரத்தான் செய்யும், வரட்டும் சொல்பவர்கள் மீது அல்ல, குடிகாரர்களின் மதமாக இந்துமதத்தை சுதி ஏற்றும் வேதங்களின் மீது!

– துரை.சண்முகம்

மேலும் படிக்க

வெட்டிட்டு தைக்கிறது மட்டும் தையல் இல்லை – வேணி

1

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – 11

எங்க ஊரில் இருந்த நடுநிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் போதே என் பெற்றோர், கைக்குழந்தையான என் தங்கையை பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும் என்று படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்கள். இரண்டு வருடம் கழிந்து திரும்பவும் பள்ளிக் கூடத்துக்கு போவேன் என்று அடம் பிடித்து போனேன். அதற்குக் காரணம் பள்ளிக்குப் புதிதாய் வந்திருந்த வைத்திலிங்கம் ஆசிரியரும் ஜெயசித்ரா டீச்சரும் தான்.

வைத்திலிங்கம் சார்தான் பள்ளியில் பாதி வகுப்பில் நின்று போன மாணவர்களை எல்லாம் தேடிப் பிடித்து மீண்டும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பெற்றோரிடம், “உங்கள் பிள்ளையை இரண்டு மாசம் பள்ளிக்கு அனுப்புங்க, படிப்பு வரலேன்னா நானே திருப்பி அனுப்பி விடுகிறேன்” என்றார். அப்படி அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் நானும் ஒருத்தி. இரண்டு வருச இடைவெளியில் பள்ளியும், படிப்பும் எனக்கு இனிப்பும் கசப்பும் போல இரு சுவையாய் தோன்றியது. இறுதியில் இனிப்பே நிலையாய் இருந்தது. வைத்திலிங்கம் சாரும், ஜெயசித்ரா டீச்சரும் பாடம் நடத்திய விதமும், மாணவர்களிடத்தில் அவர்கள் அணுகுமுறையும் அவ்வாறு எண்ணத்தை ஏற்படுத்தியது.

school-teacherவைத்திலிங்கம் சார் என் வகுப்புக்கு கணக்கு, ஆங்கிலப் பாடம் எடுத்தார். மூணும் ஏழும் கூட்டுனா என்ன வரும் என்று என்னை கேட்டு விடுவாரோ என்று பயத்தில் கணக்கு புரியாமல் மணவர்களுக்கு மத்தியில் ஒளிந்த என்னை தலை நிமிர்ந்து உட்கார வைத்தார். வாய்ப்பாடுதான் அவர் சொல்லிக் கொடுத்த முதல் கணக்கு. ஏறுவரிசை, இறங்கு வரிசை கணக்கு சொல்லிக் கொடுத்த அழகை இன்றளவும் மறக்க முடியாது. பள்ளிப் படிப்பில் எனக்கிருந்த இடைவெளி காலத்தை சரி செய்து உற்சாகப் படுத்தவே ஒவ்வொரு முறையும் போர்டில் கணக்கு போடும் போது தவறு செய்து விட்டு என்னை திருத்தச் சொல்வார்.

ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் போது, “தமிழ்தான் நம் தாய் மொழி அதுதான் ஈசியா நமக்கு புரியும். இருந்தாலும் ஆங்கிலம் ஒரு மொழியாக நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்” என்று தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் ஆங்கில எழுத்து என்ன வரும் என்று புரிய வைத்த அழகே தனி. எங்கள் பள்ளியில் முதன் முதலில் ஆங்கிலம் எழுத்துக் கூட்டி படிக்க வைத்த முதல் வாத்தியார் வைத்திலிங்கம் சார்தான். ஒரு பாடம் முடிந்ததும் அதற்க்கான பரிச்சை வைத்து அனைவருக்கும் புத்தகம் பரிசளித்து ஊக்குவிக்கும் பழக்கத்தை வைத்திலிங்கம் சாரும், ஜெயசித்ரா டீச்சரும் பழக்கமாக வைத்திருந்தார்கள். நானும் நிறைய புத்தகம் பரிசு வாங்கியது உண்டு. அதில் திருக்குறள் புத்தகம் என்னிடம் இன்னும் இருக்கிறது.

ஜெயசித்ரா டீச்சர் தோற்றத்தில் மாணவியைப் போலதான் இருப்பார். ஆசிரியர் பயிற்சி முடித்த உடனே வேலை கிடைத்து எங்க ஊர் பள்ளிக்குதான் முதலில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனால் அனுபவமிக்க ஆசிரியர் போல பாடம் எடுப்பார். என் வகுப்புக்கு அறிவியல் பாடம் எடுத்தார். பாடத்தைத் தாண்டி சமூகப் பிரச்சனைகளையும் பேசுவார். பெற்றோரிடம் பெண் கல்வியின் அவசியத்தை எடுத்துச் சொல்லி பல மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வந்தார். அன்றாடம் பேப்பர் படித்து செய்தி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

ஆங்கிலத்தில் எஸ்சே என்றால் எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அல்ல, ஆசிரியருக்கே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏ.பி.சி.டி, பூனை, நாய், கொரங்கு இது போல் பத்து வார்த்தைகள் இதைத் தவிர எந்த மாணவனுக்கும் ஆங்கிலம் தெரியாது. கணக்கு போர்டில் போட்டா பெருக்கலா, வகுத்தலா என்று தெரியாது. விளக்கிக் கூறாமல் போர்டில் எழுதி போடுவார்கள் பார்த்து எழுத வேண்டியதுதான். தமிழ் முதல் அனைத்து தேர்வுகளுமே போர்டில் எழுதி போடுவார்கள், பார்த்து எழுதுவோம். வைத்திலிங்கம் சாரும், ஜெயசித்ரா டீச்சரும்தான் பள்ளியின் முறையையே மாற்றினார்கள்.

எங்கள் பள்ளியில் இருந்த வாத்தியார்களில் பெரும்பாலும் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள். இவர்கள் சில ஆசிரியர்களையும், மாணவர்களையும் சாதி பாகுபாட்டோடு நடத்துவார்கள். அதையெல்லாம் எதிர்த்தவர்கள் இவர்கள் இருவரும்தான். நாம் மட்டும் இந்த பள்ளியை சரி செய்ய முடியாது. ஆசிரியருக்கும் பெற்றோருக்கும் ஒரு தொடர்பு இருக்க வேண்டும் அதுதான் பள்ளிக்கு நல்லது என்று முடிவு செய்து மாணவர் மன்றம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் ஏற்படுத்தினார்கள். இவர்கள் எண்ணமும் செயலும் நல்லது என்று எண்ணி சில ஆசிரியர்களும் உடன்பட்டனர். வைத்திலிங்கம் சாரும், ஜெயசித்ரா டீச்சரும் ஆரம்பித்து வைத்த பள்ளியின் முன்னேற்றப் பாதை இருபது வருடம் கழித்து இன்றளவும் தொய்வில்லாமல் சென்று கொண்டுள்ளது. இன்று எங்க ஊர் பள்ளி சிறப்பாக உள்ளது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்தவர்கள் வைத்திலிங்கம், ஜெயசித்ரா என்ற இருவரும் தான்.

மீண்டும் மேல் நிலை பள்ளிப் படிப்பு பாதியில் தடைபட்டு விட்டதால் எனக்கு கிடைத்த மேலும் இரண்டு ஆசிரியர்கள் ஏஞ்சலினா, மீனா. இவர்கள் என் தையல் கலை ஆசிரியர்கள். கிராமத்தில் இருந்து நகரத்துக்கு தையல் கற்றுக் கொள்ளப் போனேன். நகரத்து பழக்கமும், தாவணி பருவமும் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு ஊர் சுற்றச் சொன்னது. கோயிலுக்குப் போவது, சினிமாவுக்குப் போவதுமாக பொழுதை கழித்தேன். ஒரு நாள் ஏஞ்சலினா டீச்சர் கண்டித்தற்கு “கிழிச்சுட்டு அந்த இடத்த தைக்கிறதுதானே, செஞ்சர்லாம் டீச்சர்” என்று அசால்டாக பதில் சொன்னேன்.

sewing-trainingஏஞ்சலினா டீச்சர் என் மேல் தனி கவனம் எடுத்துக்கொண்டு, “மற்றவர்களெல்லாம் பள்ளிக்கும் கல்லூரிக்கும் இடைப்பட்ட காலத்தை கழிப்பதற்காக பொழுது போக்காக தையல் கற்றுக் கொள்ள வந்திருக்கிறார்கள். உன் படிப்பு பாதியிலேயே நின்று விட்டது. உன் எதிர்காலம் குறித்து உனக்கு பயம் இல்லை? இதை விட்டா உனக்கு வாய்ப்பில்லை என்பதை நீ புரிந்து கொண்டு பாடத்தை கவனித்து கற்றுக் கொள்ள வில்லை என்றால் உன் வாழ்க்கையில் நீ மிகவும் சிரமப்படுவாய். அதுவும் தவிர இது ஒரு கலை, அப்படி அலட்சியப் படுத்தி பேசக்கூடாது. நீ உருவாக்கிய ஒரு ஆடையை அணிந்திருக்கும் ஒருவரை பார்த்தால் அந்த பெருமிதம் தெரியும். ‘நீ நல்லா சட்டை தச்சுருக்க, இந்த சட்டையை போட்ட நான் இவ்வளவு அழகா தெரியிறேன்’ என்று சொல்லும் போது தையலின் சிறப்பு புரியும்” என்றார்.

மீனா டீச்சருக்கு என் குடும்பத்தை நன்கு தெரியும். “வெட்டிட்டு தைக்கிறது மட்டும் இல்லை தையல் அதில் கலைநயம் இருக்கணும். நையாண்டித் தனமா பேசக்கூடாது. உன் குடும்பத்தின் வறுமையை மனதில் கொண்டு தையல் கற்றுக் கொள்வது எவ்வளவு அவசியம் என்பதை புரிந்து கொள். இந்த வயசில் குடும்ப பாரம் உணர்வது சிரமமாக இருக்கும் அதற்க்காக மட்டும் சொல்லவில்லை. எந்த நேரத்திலும் உனக்கும் கைகொடுக்கும் இந்த தையல் என்பதை தெரிஞ்சுக்க” என்று எனக்கு கவனம் எடுத்து சொல்லிக் கொடுத்தார்.

பெடல் போடுவது முதல் நூல் எப்படி கோர்த்து தையல் சரியாக போடுவது வரை என்னை விட்டு அசைய மாட்டார். எனக்கு வரமாட்டேங்குது டீச்சர் என்றால் விட மாட்டார். எனக்கு தெரியும் நீ நல்லா கத்துக்குவே என்று நம்பிக்கையுடன் பேசுவார். அவர்கள் நம்பிக்கை வீண் போகாமல் நான்தான் இரண்டாவது மதிப்பெண் பெற்றேன்.

நான் மனதொடிந்த பல காலகட்டங்களில் துணையாகவும், கலையாகவும் இருந்தது தையல். ஏஞ்சலினா, மீனா ஆசிரியர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள்.

– வேணி

கொத்தகொண்டப்பள்ளி பள்ளி மாணவர்களுக்கு பேருந்து பயணமே போராட்டம்!

2

காலையில் கொத்தகொண்டப்பள்ளி மாணவர்கள் ஒசூர், அந்திவாடி பள்ளிகளுக்கு செல்ல இருப்பது ஒரே ஒரு பேருந்துதான். அந்தப் பேருந்தைப் பிடிக்க ஊரில் இருந்து சுமார் 1 கி.மீ தொலைவில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு புத்தகச் சுமையுடன் ஓடி ஓடி போக வேண்டும். அந்தப் பேருந்தை விட்டால் நடந்துதான் ஒசூர் போக வேண்டும். பேருந்து வராத பொழுது அல்லது பேருந்து நிற்காமல் சென்று விடும் பொழுது இப்படி 7 கி.மீ. தொலைவிற்கு பல மாணவர்கள் நடந்து சென்றுள்ளனர். மாணவர்களைக் கண்டதும் பேருந்தின் ஓட்டுனர் வண்டியை தூரத்திலேயே நிறுத்தி விட்டு, வேகமாக எடுத்துச் சென்று விடுவார். இந்த நேரத்தில் ஓடி சென்று பேருந்தில் ஏறுவது பெரும் போராட்டம். அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடுவது, ஒருவரை ஒருவர் தள்ளி விட்டுக் கொண்டு ஓடுவது, டிபன் பாக்ஸை கீழே போட்டு சோற்றை கொட்டி விடுவது, ஓடும் போது ஒரு செருப்பை கீழே விட்டு விடுவது, இத்து நைந்துபோன புத்தகப்பை அறுந்து விழுந்து புத்தகங்கள் கீழே சிதறி விடுவது என்று மாணவர்கள் பேருந்தைப் பிடிக்க நடத்தும் போராட்டம் என்பது ‘நாகரிக உலகின்’ கேடு கெட்ட வாழ்க்கை முறைக்கு ஒரு சாட்சி!

பேருந்துப் பயணம்
கொத்தகொண்டப்பள்ளியை சேர்ந்த பள்ளி மாணவர்களின் பேருந்துப் பயணம்.

பேருந்தில் ஏறும் போதே வண்டி முழுவதும் நிறைந்திருக்கும் தொழிலாளர்கள், மாணவர்களை தொல்லையாகக் கருதி திட்டுபவர்கள், முதியவர்கள் என்ற துன்பத்தை மாணவர்கள் சொல்லி அழுகின்றனர். சிலர் ஆபாசமாக திட்டுவது, இந்த சந்தடி சாக்கில் மாணவிகளிடம் சில பொறுக்கிகள் வக்கிரம் செய்வது போன்ற துன்பங்களை சொல்லி மாளாது.

இவ்வளவுக்குப் பிறகும் பேருந்தில் மாணவர்கள் நிம்மதியாக பயணம் செய்ய முடியாது. யாராவது எழுந்து சீட் காலியானால் கூட, அருகில் நின்று கொண்டிருக்கும் மாணவர்கள் அங்கே உட்கார முடியாது. உரிமையாக அருகில் இருக்கும் ‘பெரியவர்கள்’ மாணவர்களைத் தள்ளி விட்டு உட்கார்வது அல்லது உட்கார முயற்சிக்கும் மாணவர்களை, உட்கார்ந்து விடுவாயா என்ற தோரணையில் ஒரு முறை முறைப்பது என்பதுதான் நடக்கிறது. வண்டியில்ஏறியது முதுகில் உள்ள மூட்டையை இறக்குஎன்று சிலர் சொல்வார்கள். சிலர் அரை குறை உயிருடன் ஊசலாடும் அந்த மூட்டையைப் பிடித்து இழுப்பார்கள்.

அதற்குள், இந்த நெரிசலில் தவித்துக் கொண்டிருக்கும் போதுதான் நடத்துனர் “பாசை எடுத்து வைங்கடா” என்று உத்தரவு போடுவார். பையை கீழே வைக்க இடமில்லாமல் உடலிலேயே ஏதாவது ஒரு கோணத்தில் சுமந்து கொண்டு, சிப்பைத் திறந்து பாசை எடுத்து கையில் வைத்துக் கொண்டு ஒற்றைக் காலில், ஒரு பக்கம் பையைத் தூக்கி வைத்துக் கொண்டு, நடத்துனர் பாசை பார்க்கும் வரை நெரிசலில் நீந்திக் கொண்டு நிற்க வேண்டும்.

பாஸ் இல்லை என்றால் அந்த மாணவன் வாங்கும் திட்டுக்கு அளவே கிடையாது. ஏதோ, நடத்துனரின் சொந்த வண்டியில் நாங்கள் ஓசி பயணம் செய்யும் வாழ்வதற்கே வக்கற்ற பிச்சைகாரர்களைவிடக் கேவலமாக திட்டுவார்கள். அந்தத் திட்டை வாங்கிக் கொண்டுதான் போக வேண்டும். பேருந்தில் உட்கார்ந்து வந்து கொண்டிருக்கும் ஒரு சில விட்டேத்திகள், நடத்துனருடன் சேர்ந்து கொண்டு தன் பங்குக்கு எங்களை இரண்டு திட்டு திட்டுவார்கள். எங்களில் யாராவது இவர்களை முறைத்தால், “என்ன முறைக்கிற” என்று எங்களது தலையில் தட்டும் அந்தத் தறுதலைகள்.

இவ்வளவும் சகித்துக் கொண்டு ஒசூர் வரை சென்றுவிட்டால், பேருந்திலிருந்து இறங்குவதற்குள் ஏறுபவர்கள் இறங்குபவர்களுக்கு வழி விட மாட்டார்கள். பின்னால் இருக்கும் பெருசுகளிடம் திட்டு வாங்குவதும், நாம்தான், ஏதோ மாணவர்களாகிய நாங்கள் தான் சுறுசுறுப்பாக இல்லை என்று ஒரு ‘தத்துவ’ கண்டுப்பிடிப்பை அங்கேயே பலர் மத்தியில் பேசுவார்கள். இதற்கு சில ஆமாம் சாமிகள் அவர்கள் பங்கிற்கு எங்களைத் திட்டித் தீர்க்கும். 7 கி.மீ தொலைவை பேருந்து பயணம் என்ற பெயரில் 1/2 மணி நேரம் பயணம் செய்வதைவிடக் கொடுமை எதுவுமில்லை என்று தோன்றுகிறது.

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல, இந்த பேருந்து பயணத்தில் எல்லோரும் செய்யும் தவறுகளுக்கும் சம்மந்தமே இல்லாமல் திட்டு வாங்குவது, உதை வாங்குவதும் மாணவர்களாகிய நாங்கள் தான். அதே போல, பேருந்து வசதியின்மையினால் ஏற்படுகின்ற துன்பங்கள் பலவற்றையும் அதிகபட்சம் அனுபவிப்பவர்கள் மாணவர்களாகிய நாங்கள்தான்!

பேருந்து பயணத்தின் போது எங்களை யாராவது திட்டியதற்காகவும் பேசியதற்காகவும் பெற்றோரை அழைத்து சண்டை போட்டதெல்லாம் பழைய காலம். இப்போது நாங்கள் திட்டு வாங்குவதும் பேச்சு வாங்குவதும் பெற்றோருக்கும் பழகி விட்டது. ஆகையால், வீட்டில் போய் சொல்லி தீர்த்துக் கொள்ளும் பிரச்சனையாகவும் இவை இல்லை.

பேருந்து நிலையத்திலிருந்து இறங்கிய பின்னர் பள்ளிக்கு ஒசூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீட்டர் நடந்து செல்ல வேண்டும். ஒருநாள் காலையில் பேருந்தைப் பிடித்து பள்ளிக்குச் செல்வது என்பது, அவமானங்களும் ஆபத்துகளும் சாகசங்களும் நிறைந்த ஒரு அவலம். இவ்வளவையும் நினைத்து பார்க்கக் கூட நேரம் இருக்காது. பள்ளிக்குச் சென்றவுடன் அங்கு வேறு உலகம் இருக்கும். படித்ததெல்லாம் மறந்து போகும். படிக்கவில்லை என்பதற்காக வாங்கும் திட்டுகளும் அடிகளும் பேருந்தில் வாங்கிய அளவிற்கு துன்பமாக இருந்ததில்லை.

மாலை 4.30 மணிக்கு பள்ளி விட்டதும் ஒரு ஓட்டம் தொடங்கும். சாலையை அடைத்துக் கொண்டு மாணவர்கள் நாங்கள் தான் ஓட்டமும் நடையுமாக பேருந்து நிலையத்திற்கு வருவோம். மாலை 5.30 மணி பேருந்துக்கு பேருந்து நிலையத்தில் சென்று முண்டியடிக்க வேண்டும். நூற்றுக்கணக்கானோர் பயணிக்கும் அந்த பேருந்தில் உள்ளே நுழைந்து விட்டாலே பெரும் வெற்றிதான். ஆனால், இந்த ஓட்டுனர் என்ன செய்வார் என்றால் மாணவர்களான எங்களை ‘ஓசி டிக்கெட்’ என்பதால் அத்திப்பள்ளிக்கு வேறு வழித் தடத்தில் பேருந்தை எடுத்துச் சென்று விடுவார். இந்த ஓட்டுனர்களில் சிலர் இதனை திட்டமிட்டு செய்வதாக மாணவர்கள் புரிந்து வைத்திருந்தோம். அதன் பின்னர், தோழர்கள் இதன் பின்னே இருக்கும் போக்குவரத்து துறையின் சதியை விளக்கினர்.

போக்குவரத்து துறையே திட்டமிட்டுதான் ஓட்டுனர்களுக்கு வழி காட்டுகிறது. குறிப்பாக, அத்திப்பள்ளி க்கு சிப்காட் வழியாக பேருந்தை மாலையில் இயக்குவதால் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் ஏறுவார்கள். மாணவர்கள் இந்தத் தடத்தில் பயணம் செய்வதில்லை. மாணவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை, அவர்கள் வீட்டிற்கு சென்று சேரவில்லையென்றாலும் பரவாயில்லை என்ற திமிர்தான் இதற்கு அடிப்படை. ஓட்டுனர்களும் கலெக்சன் குறைந்து விடுதாக புரிந்து கொண்டு தங்களது அதிகாரிகளின் உத்தரவுக்கு அடிபணிந்து சென்று விடுகின்றனர். குறிப்பாக, மக்களுக்கு சேவை செய்யும் துறையாக போக்குவரத்துத் துறை இருப்பதை மாற்றியமைத்தால்தான், எதிர்காலத்தில் போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்க முடியும். அதற்காக மேற்கொள்ளப்படும் சதிதான் மாணவர்களுக்கு பேருந்து உரிமை மறுக்கப்படுவது என்று தோழர்கள் தெளிவுப்படுத்தினர்.

மாலை 5.30 மணிக்கு புறப்படும் பேருந்தை விட்டால் அடுத்து 7 மணிக்கு தான். இந்த பேருந்தில்தான் இரவு சிப்ட்க்கு வேலைக்கு போகும் தொழிலாளர்கள், ஒசூருக்கு வேலைக்கு வந்து ஊருக்கு திரும்பும் தொழிலாளர்கள் என நூற்றுக் கணக்கானோர் ஊர் திரும்ப வேண்டியுள்ளது. இதனால், பலமுறை 5.30 மணி வண்டியை விட்டுவிட்டு இருட்டில், குளிரில் நடந்தே கொத்தகொண்ட பள்ளிக்கு செல்ல வேண்டிய அவல நிலை எங்களுக்கு. பல நேரங்களில் டி.வி. எஸ். ஆலைகளுக்கு உதிரி பாகங்களை ஏற்றி வரும் டெம்போக்களின் ஓட்டுனர்களின் உதவியால்தான் வீட்டுக்கு வந்து சேருகிறோம்.

இந்த பேருந்து பயணம் என்கிற இந்தக் கேடு கெட்ட அவலம் என்பது ஏதோ ஒரு நாள் கதையல்ல… தினமும் இதுதான் கொத்தகொண்டப்பள்ளி மாணவர்களின் வாழ்க்கை! கொத்தகொண்டபள்ளி கிராமங்களுக்கு அருகில் அரசு பேருந்து மட்டும்தான் குறைவாக வருகிறது. ஆனால், கொத்தகொண்டபள்ளி-ஒசூர் சாலை அதிகம் விபத்து நடக்கும் சாலை. காரணம் டி.வி. எஸ். குழுமத்தின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அவ்வாலை பேருந்தில் அழைத்து சென்றுவிடுவதற்கு தினமும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இந்த சாலையில் வேகமாக பறந்து செல்லும். அவ்வாலைக்கு பல மாநிலங்களிலிருந்து வருகின்ற ஆயிரக்கணக்கான நீளநீளமாக இருக்கும் சரக்கு வாகனங்கள் சாலையில் புழுதியைக் கிளப்பிச் செல்லும். உள்ளூரில் சப்காண்ட்ராக்ட் வாங்கியுள்ள சிறு முதலாளிகள் சிறிய டெம்போக்களில் தங்களது உற்பத்தி பொருட்களை இந்த ஆலைக்கு எடுத்துச் செல்வார்கள். இப்படி ஒளிரும் டி.வி. எஸ். தொழிற்சாலைக்கு அருகில் அவலமான சேரியைப் போல கொத்தக்கொண்டபள்ளி உள்ளது.

பேருந்துக்கான மாணவர்களின் போராட்டம்!

கொத்தகொண்டப் பள்ளி கிராமத்தில் இருந்து மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள். இவர்கள் கணிசமானோர் கொத்தகொண்டப்பள்ளியிலிருந்து ஒசூர் வரும் வழியில் உள்ள அந்திவாடி உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். ஓரிரு மாணவர்களைத் தவிர இவர்கள் அனைவரும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டு படிக்கின்றனர்.

குறிப்பாக, இந்த மாணவர்களில் சிலர் பேருந்து வசதிக்காக ஊரில் முன்னணியாக நின்று நிதி திரட்டியுள்ளனர். உள்ளூரில் இந்த மாணவர்களின் ஊக்கமான செயல்பாட்டை கண்டு உள்ளூர் பெரியவர்களும் மாணவர்களை ஆதரித்து ஊரில் பேருந்து நிறுத்தத்திற்கான இடத்தை பல ஆயிரங்கள் செலவு செய்து ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். பேருந்து நிறுத்தம் அமைப்பதற்கான இடத்தை ஜே.சி.பி. வைத்து சுத்தம் செய்யும் போதும், 30 லோடு மண் அடித்து சமன்படுத்தும் போதும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 2 நாட்கள் இரவு பகல் பாராது வேலை செய்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் உள்ளிட்ட அனைவரும் மாணவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முதல்நாள் நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டுதல், ஆர்ப்பாட்டத்திற்கு வீடுவீடாக சென்று மாணவர்களையும் பெற்றோரையும் அணிதிரட்டுதல் என ஊக்கமாக இந்த மாணவர்கள் செயல்பட்டனர்.

மாணவர்களின் இந்த ஊக்கமான செயல்பாட்டினால் உள்ளூர் மக்கள் பெரிதும் ஆர்வமடைந்துள்ளனர். வீடுவீடாக பேருந்து வசதி கோரி மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது பலரும் மாணவர்களுக்கு தாராளமாக நிதி கொடுத்து ஊக்கப்படுத்தினர். உள்ளூரில் ஒரு சில பேர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மாணவர்களின் ஊக்கமான இந்த செயல்பாட்டிற்கு பெற்றோர் யாரும் குறுக்கே நிற்கவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கு 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு விடுப்பு எடுத்து வந்து கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தியது பேருந்துக்காக மக்கள் எந்த அளவிற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம்.

இந்த ஊரில் கையெழுத்து இயக்கம் எடுத்த போது ஒருசில பெரியவர்கள் கையெழுத்து போட மறுத்துள்ளனர். காரணம் என்ன என்று கேட்ட போது அவர்கள் தன்னை ஏமாற்றி சொத்தை எழுதி வாங்கிக்கொண்டுவிடுவார்கள் என்று அச்சப்பட்டுள்ளனர். காரணம், மக்கள் தங்களது பிரச்சனைக்காக கையெழுத்து இயக்கம் நடத்துவது கூட இந்த ஊரில் சிலர் கேள்விப்பட்டதில்லை. கொத்தகொண்டப்பள்ளியில் மக்களின் சிந்தனை ஓட்டத்திற்கு இது ஒரு உதாரணம். ஊர்க்கட்டுப்பாடு என்ற பெயரில் ஊரில் எந்த கட்சியினரையும் கொடியேற்ற அனுமதிப்பதில்லை.எந்தக் கட்சி கூட்டத்தையும் ஊரில் நடத்தக் கூடாது என்று கட்டுப்பாடு பல காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில் இருந்து இந்த ஊரில் இருந்து மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு 30 பேர் கலந்து கொண்டதை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

ஆர்ப்பாட்டத்திற்கான கோரிக்கையிலிருந்து அரசியல் கோரிக்கைக்காக…

இந்த நிலையில் தூத்துக்குடியில் ம.உ.பா.மையம் நடத்திய பொதுக்கூட்டத்தில் மாணவர்கள் 7 பேர் கலந்து கொண்டனர். குறிப்பாக, சரியாக தமிழ் பேசத் தெரியாத மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதிலிருந்து தாது மணல் கொள்ளை குறித்தும் வைகுண்டராஜன் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக நமது அமைப்பு போராடுவதையும் ஊக்கமாக கலந்து கொண்டு உள்ளூர் மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

பள்ளியில் தொடர்கிறது பேருந்துக்கான போராட்டம்!

அரசு பிரச்சாரம்
எய்ட்ஸ் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆணுறை விளம்பரங்கள் முதல் ஜெயலலிதாவின் ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரம் வரை இந்த அரசின் அறிவிக்கப்படாத பிரச்சாரகர்களாக மாணரவர்களைப் பயன்படுத்துகின்றனர்.

பேருந்து வசதிக்காக கையெழுத்து வாங்குவது, மனு கொடுப்பது, தூத்துக்குடிக்கு சென்று வந்தது, ஆர்ப்பாட்டம் செய்தது என அடுத்தடுத்த மாணவர்களின் செயல்பாட்டினால் உற்சாகமடைந்தவர்கள் ஒருபுறம் எனில், அதனைத் தடுக்க வேண்டும் என்று கருதியவர்களும் இருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மறுநாள் அந்திவாடி பள்ளிக்குச் சென்ற மாணவர்களை குறிப்பாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 30-க்கும் அதிகமான மாணவர்களை அப்பள்ளியின் தலைமையை ஆசிரியை மரியசூசி மற்றும் சில ஆசிரியர்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக கண்டித்துள்ளனர். ஒரு மாணவரை அடித்துள்ளனர். மேலும், அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைத்தனர். மறுநாள் பெற்றோரை அழைத்து வந்தால்தான் பள்ளிக்குள் விடுவோம் என்று எச்சரித்துள்ளனர். குறிப்பாக, தூத்துக்குடி சென்று வந்த மாணவர்களிடம், “சோறு கொடுத்தால் எங்க வேணும்னாலும் போவியா” என்று கேட்டு திட்டியுள்ளனர்.

ஆசிரியர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயப்படாத மாணவர்கள் இந்தப் பிரச்சனையை தோழர்களிடம் தெரிவித்தனர். மாணவர்களின் சமூக நடவடிக்கையை கேள்விக்குள்ளாக்குவது, அவர்கள் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டதற்காக அவர்களைத் தண்டித்தது போன்றவை சட்டப்படி குற்றம். மற்றொருபுறம், எய்ட்ஸ் விழிப்புணர்வு என்ற பெயரில் ஆணுறை விளம்பரங்கள் முதல் ஜெயலலிதாவின் ஏற்காடு இடைத்தேர்தல் பிரச்சாரம் வரை இந்த அரசின் அறிவிக்கப்படாத பிரச்சாரகர்களாக மாணவர்களைப் பயன்படுத்துகின்றனர் ஆசிரியர்கள். இதையெல்லாம் கேட்டால் மேலிடத்து உத்தரவு என்று பேசுகின்றனர். நமது அமைப்பையும் கொத்தகொண்டப்பள்ளி மாணவர்களின் நியாயமான கோரிக்கையையும் புரிந்து கொள்ளாமல் மாணவர்களை தண்டித்ததற்காக, ஆசிரியர்களுக்கு புரியும் மொழியில் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டது. இதன் பின்னர்தான் ஆசிரியர்களும் இந்த பிரச்சனையில் நியாயத்தை, ‘உணர’த் தொடங்கியுள்ளனர்.

முக்கியமாக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியாக இருந்தாலும், ஜெயலலிதா வருகைக்காக மேற்கொள்ளப்படும் பேரணியாக இருந்தாலும் மாணவர்கள் யாரும் உணர்வு பூர்வமாக பங்கேற்பதில்லை. எரிச்சலோடும் வெறுப்போடும் பலர் கலந்து கொள்கின்றனர். தங்களை பொம்மை போல பயன்படுத்துவதைப் பார்த்து பலருக்கு கோபம்தான் வருகிறது. இருந்தாலும் மாணவர்களை இவ்வாறு தங்களது ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை குற்ற உணர்வுடன் பல ஆசிரியர்கள் பார்ப்பதில்லை. ஆனால், தங்களுக்கு பேருந்து வசதி வேண்டும் என்று மாணவர்கள் தன்மான உணர்வுடன் உரிமையுடன் போராடுவதை இந்த ஆசிரியர்களால் பொறுத்துக்கொள்ள முடியாதது எதார்த்தம். அதிகார வர்க்கத்திற்கு அடிமைகளாக இருக்கும் ஆசிரியர்களால், மாணவர்கள் ஜனநாயக உணர்வுடன் போராடுவதை சகித்துக் கொள்ள முடியாம என்ன?!

கூலி வேலைக்கு செல்லும் மாணவர்களின் பெற்றோர் ஒரு நாள் விடுப்பு எடுத்து பள்ளிக்கு வருவது என்பது நடைமுறை சாத்தியமற்றது. உண்மையில், மாணவர்களின் கல்வியின் மீது அக்கறையிருந்தால் ஆசிரியர் அவரது இரு சக்கர வண்டியில் ஊரில் வந்து விசாரித்து விட்டு சென்றிருக்கலாம். இது எளிமையான வழிமுறையாக இருந்திருக்கும். ஆசிரியர்களின் இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் பெற்றோர் அமைப்பின் வழிகாட்டுதல் படி செயல்பட்டதால், ஆசிரியர்கள் பின்வாங்கினர். மாணவர்களின் கல்வியறிவின் மீது அக்கறை கொண்டவர்கள் போல காட்டிக் கொள்ள முயற்சித்ததை பெற்றோரே அம்பலப்படுத்தினர்.

மனு
சார் ஆட்சியரிடம் பேருந்துவசதிக் கோரி மனு அளிக்கப்படும் காட்சி

இதே பள்ளியில் இருந்து ஆர். எஸ்.எஸ்.நடத்தும் சாகாக்களுக்கு மாணவர்கள் சென்றுவருவதை இந்த பள்ளி ஆசிரியரால் ஏன் என்று கூட கேட்கமுடியாது என்பதையும் அதையெல்லாம் தடுக்க முடியாதவர்கள், ஏன் இதனை மட்டும் தடுக்க முயற்சிக்கிறார்கள் என்றும் கேள்விஎழுப்பி ஆசிரியர்களுக்கு உணர்த்தினர். அமைப்பு சரியான வகையில் தலையிட்டதால் மாணவர்களை மிரட்டும் ஆசிரியர்களின் முயற்சி தவிடுபொடியானது.

அடுத்ததா என்ன செய்றது…?

“கலெக்டரிடம் மனு கொடுத்தாச்சு, போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தாச்சு, இதற்கு மேலயும் பஸ்ஸு விடலன்னா என்ன செய்றது” என்று ஒரு மாணவர் கேட்க, அருகில் இருந்த ஆறாவது படிக்கும் மாணவன், “ஜெயலலிதாகிட்ட போயிஎங்க அப்பா, அம்மாவெல்லாம் ஓட்டு போட்டுதானே உங்களை முதலமைச்சர் ஆக்கினாங்க. அப்புறம் ஏன் பஸ்ஸு விடமாட்டீங்கிறீங்க என்று கேட்பேன்” என்று தெரிவித்தான். இவனது இந்த கேள்வியை பல மாணவர்கள் ஆமோதித்தனர். ஆனால், “ஜெயலலிதாவை நம்ம ஊருக்கு வரவச்சி கேட்கனும், அதுக்குஎன்ன செய்றது தோழரே” என்று கேள்விக் கேட்கத் தொடங்கினர். பேருந்து உரிமைக்காம மாணவர்கள் அடுத்தக் கட்ட போராட்டம் தயாராகிவிட்டனர்.

அரை முட்டை முழு முட்டையாகாதா தோழரே?

ஆர்ப்பாட்டத்தின் போது, சிறப்புரையாற்றிய தோழர் பரசுராமன், பேருந்து பிரச்சனை என்பது போக்குவரத்துத் துறை தனியார்மயத்துடன் தொடர்புடையது என்பதை விரிவாக ஒசூர் அனுபவங்களைக் கொண்டு விளக்கினார். மேலும், உள்ளூராட்சி, நகராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிகார வர்க்கம் உழைக்கும் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் இல்லை என்பதையும் விளக்கி பேசினார். பேருந்து தனியார்மயம் போல தான் கல்வி தனியார்மயமாகிவருகிறது என்பதை விரிவாக விளக்கி பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர், மாணவர்களை ஊருக்கு வழியனுப்பி வைக்கும் போது, 5 வகுப்பு படிக்கும் ஒரு மாணவன்  “தோழரே, 5-வது படிக்கிறங்வங்களுக்கு மட்டும் பாதி முட்டை தான் கொடுக்குறாங்க. ஏன் முழு முட்டை தரமாட்டேங்குறாங்க? அந்த பாதி முட்டையையும் மொத்தமா பொரியல் மாதிரி செஞ்சி கையில தடவிடறாங்க. இந்த அரை முட்டை முழு முட்டையாகாதா தோழரே?”என்று கேட்டான்.

பு.ஜ.தொ.மு. தோழர்கள் மக்களிடம் ஐக்கியப்பட்டு அவர்களது உரிமைக்காக போராடத் தொடங்கிய பின்னர், மாணவர்கள் தங்களது உரிமைகள் குறித்து விழிப்புணர்வு பெறத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்குஎதிராகப் போராடத் தொடங்கிவிட்டனர். வாருங்கள், அவர்களை வாழ்த்துங்கள்!

ஓசூர்-கொத்தகொண்டப்பள்ளி பள்ளி மாணவர்கள், தொழிலாளர்களுக்கு கூடுதல் பேருந்து இயக்கக் கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

ராம் நகரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

பிரசுரத்தின் உள்ளடக்கம் :

நமது நாடு சுதந்திரமடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. 2020-ல் செயற்கைகோள் அனுப்பி மக்களை குடியேற்றப் போகிறோம் என்று பேசுகிறார்கள், ஆனால் ஓசூர் அருகில் உள்ள கொத்தகொண்டப்பள்ளி பஞ்சாயத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள், தொழிலாளர்களுக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி பல முறை கோரிக்கை விடுத்தும், செவிடன் காதில் ஊதிய சங்கைப்போல மவுனமாக இருக்கிறது அரசு. இந்த பூமி கிரகத்திலேயே பேருந்து இயக்கமுடியாத அரசு செவ்வாய் கிரகத்தில் மக்களை வாழவைக்கப்போகிறதாம். கேட்கிறவன் கேனப்பையன் என்றால் எருமை மாடு ஏரோப்பிளேன் ஓட்டும் என்பார்கள். அது இதுதான்.

ஓசூர் வட்டம், கொத்தகொண்டப்பள்ளி பஞ்சாயத்தில் 5000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்ள டி.வி.எஸ் ஆலையிலும், அதன் கிளை நிறுவனங்களில் 1000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி வேலை செய்கின்றனர். பள்ளி மாணவர்கள் 8 கிலோமீட்டர், தொலைவிலுள்ள ஓசூர் மற்றும் 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அந்திவாடிக்கும், தொழிலாளர்கள், ஓசூர் மற்றும் பெங்களூருக்கும் சென்றுவர வேண்டியுள்ளது, இவர்கள் மட்டுமின்றி வியாபாரிகள், பிற உழைக்கும் மக்கள் என அதிகாலையில் 1000-க்கும் அதிகமான மக்கள் பயணம் செய்ய தமிழக அரசு ஒதுக்கியிருப்பது ஓரிரு நகரப் பேருந்துகளைத்தான், இந்தப் பேருந்துகளில்தான் ஒரே நேரத்தில் உயிரை பணயம் வைத்து பயணம் செய்கின்றனர். டெம்போக்களிலும் பயணம் செய்துவருகின்றனர். கொத்தக்கொண்டப்பள்ளி ஊரிலிருந்து மாணவர்கள் பலர் இரண்டு கிலோமீட்டருக்கும் மேல் நடந்து செல்கின்றனர். ஊருக்குள் பேருந்து வருவதில்லை.

அதனால், கூடுதல் பேருந்து இயக்க கோரி இரண்டு ஆண்டுகளாக சாராட்சியரிடமும், போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடமும் மனுக்கொடுத்து வந்துள்ளனர். போக்குவரத்துத் துறையோ, ரோடு சரியாக இல்லை என்றது. ஆனால், இந்த இரண்டு ஆண்டுகளாக பேருந்து சென்றுவருவதற்கு ஏற்ப சாலையை அரசு சீரமைக்கவில்லை, இதனால் கொத்தகொண்டப்பள்ளி கிராம மக்கள் ஒன்றினைந்து சாலையை சீரமைத்தனர். சாலை சீரமைத்த பின்னர் பேருந்து விடக் கோரி சாராட்சியர் மற்றும் போக்குவரத்துக் கழகத்திடம் மனுக்கொடுத்தும் இன்றுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

முதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக, கொள்ளையடிக்க வசதியாக ரோடு போடுவது, பாலங்கள் கட்டுவது என கோடிக் கோடியாய் செலவழிக்கும் அரசு, உழைக்கும் மக்கள் அடிப்படை வசதி கோரினால் அதனை ஒரு மயிரளவிற்கும் மதிப்பதில்லை. பெட்ரோல், டீசல்களில் சாலைக்கென வரி, பேருந்துக் கட்டணத்தில் ஒரு பகுதி சாலைக்கென வரி உள்ளாராட்சி வரி, டோல்கேட் வரி என நாம் செலுத்துகின்ற பல மறைமுக வரிகளில் சாலை வசதி மேம்பாட்டிற்காக அரசு பணத்தை எடுத்துக் கொள்கிறது. இருப்பினும் முதலாளிகளுக்குத்தான் சேவை செய்கிறது.

சார் ஆட்சியரிடம் பேருந்துவசதிக் கோரி மனு அளிக்கப்படும் காட்சி

“கடமையை மட்டும் செய், உரிமையை கேட்காதே’’ என்கிறது அரசு. அதனால்தான் இந்த மக்கள் விரோத, போலிஜனநாயக அரசிடம் மனு போட்டு மண்டியிடுவதால் உரிமைகள் கிடைக்காது என்பதை உணர்ந்து வீதியில் இறங்கி போராட அறைகூவி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக 27.11.2013 மாலை 5 மணியளவில் ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சங்கர் தலைமை தாங்கினார். பாகலூர் பகுதிப் பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் மற்றும் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் சிறப்புரையாற்றினர். இறுதியாக, தோழர் அருண் நன்றியுரையாற்றினார்.

தமிழக அரசே!

  • கொத்தகொண்டப்பள்ளி, மாணவர்கள்- தொழிலாளர்களுக்கு கூடுதலாகள காலை- மாலை நேரங்களில் தலா இரண்டு பேருந்துகளை இயக்கு!
  • தளி, மதகொண்டப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, பாகலூர் போன்ற எல்லையோர கிராமங்கள் அனைத்திற்கும் கூடுதல் பேருந்த்துகளை இயக்கு! சாலையை சீரமைத்து கொடு!

உழைக்கும் மக்களே!

  • தளி, மதகொண்டப்பள்ளி, தேன்கணிக்கோட்டை, பாகலூர் போன்ற எல்லையோர கிராம மக்களே, பேருந்து வசதிக்காக எங்களுடன் போராட முன்வாருங்கள்!
  • பேருந்து வசதி நமது அடிப்படை உரிமை! இதனை பெற வீதியில் இறங்கி போராடுவோம்!
  • தனியார்மயம், தாராளமயம் என்ற பெயரில் அரசுப் போக்குவரத்தை தனியார் மயமாக்குவதை எதிர்ப்போம்!
  • போலிஜனநாயகத்தை வீழ்த்தி புதிய ஜனநாயக குடியரசமைப்போம்!

தமிழ் மற்றும் தெலுங்கு துண்டறிக்கைகள்

சுவரொட்டிகள் :

ஆர்ப்பாட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர். செல்- 9788011784.

டி.வி.எஸ் ஹரிதா ரப்பர் ஆலை தொழிலாளர்கள் வேலை நீக்கம் !

3

ஒசூரில் டி.வி.எஸ். ஹரிதா ரப்பர் ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை நீக்கம்!
டி.வி.எஸ்.யின் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!

பு.ஜ.தொ.மு.வின் பிரச்சார இயக்கம்

டி.வி.எஸ் ஹரிதா
டி.வி.எஸ் ஹரிதா ரப்பர் ஆலை

ம்ம ஊரு வண்டி டி.வி.எஸ். எக்ஸ்.எல் என்ற விளம்பரத்தை நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு கேட்டிருப்பீர்கள். நம்மூரு முதலாளி நம்மூரு தொழிலாளியை ஒடுக்கும் கதையை இங்கே தருகிறோம்.

டி.வி.எஸ். நிறுவனத்தில் நடந்த முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் நிறுவனர் தின விழாவிற்கு முன்னதாக பு.ஜ.தொ.மு. பிரச்சார இயக்கத்தை தொடங்கியது. டி.வி.எஸ்.யின் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக பல வடிவங்களில் அவ்வாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். சிக்கன் கடையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தாங்கள் “டி.வி.எஸ்.ஆல் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்”, “தமிழக முதல்வர் சட்ட சபையில் TVS Group-ல் 1,300 தொழிலாளிக்கு வேலை என்று அறிவிப்பு!”, “நடப்பது சட்டத்தின் ஆட்சியா? TVSன் சர்வாதிகாரமா?” என்று எழுதப்பட்ட பனியன் அணிந்து வேலை செய்தனர். இது சிக்கன் கடைக்கு வருபவர்களை ஏன், என்ன ஆனது என்று டி.வி.எஸ்.இன் முதலாளித்துவ பயங்கரவாதத்தை கேட்கத் தூண்டியது. இந்த பனியனை அணிந்து கொண்டு தொழிலாளர் துறையிடம் பேச்சு வார்த்தைக்கு செல்வது, பேருந்துகளில் பயணம் செய்வது என செயல்பட்டதால் டி.வி.எஸ்-ன் முகத்திரை தொடர்ந்து கிழித்தெறியப்பட்டது.

இதன் அடுத்தக் கட்டமாக டி.வி.எஸ். நிறுவனர் தினவிழாவிற்கு முன்னதாக நகரம் முழுவதும், சுவரொட்டி இயக்கம் எடுக்கப்பட்டது. “தொழிலாளர் வயிற்றில் அடித்துவிட்டு கொண்டாடப்படும் ஸ்தாபகர் தினவிழாவைப் புறக்கணியுங்கள்!” என்ற சுவரொட்டி டி.வி.எஸ். நிர்வாகத்திற்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்திவிட்டது. டி.வி.எஸ். ஹரிதா ரப்பர் ஆலை முன்பாகவே சுவரொட்டியை ஒட்டினர் தொழிலாளர்கள். இதனை க் கண்டு அரண்டு போன செக்யூரிட்டிகள் 30க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு சுவரொட்டிகளை பிடுங்க முயற்சித்தனர். தொழிலாளர்களும் தோழர்களும் மேலே கைவைத்தால் நடப்பது வேறு என எச்சரித்த பின்னர் பின்வாங்கினர். தோழர்கள் சென்ற பின்னர் சுவரொட்டியை ‘வீரத்தோடு’ கிழித்தனர்.

டி.வி.எஸ் ஹரிதா ஆலை எதிரில்
டி.வி.எஸ். ஹரிதா ஆலை எதிரில் சுவற்றில் ஒட்டப்பட்ட சுவரொட்டி.

உடனே டி.வி.எஸ்.இன் தலைமைக்கு செய்தி பறந்தது. “நம்மாவை எதிர்க்கிறாளே” என்று அரண்ட டி.வி.எஸ். நிர்வாகம் வரலாறு காணாத போலீசு பாதுகாப்புடன் ஸ்தாபகர் தினவிழாவை நடத்தியது. இதில் பேசிய எம்.டி. ஸ்தாபகர் தினவிழா வாழ்த்துகளை தெரிவிப்பதற்கு பதிலாக தீபாவளி தின வாழ்த்துகளை தெரிவித்து தனது அஞ்சா நெஞ்சத்தைக் காட்டிக் கொண்டார். கோடிகால் பூதமான தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சிறு பிரிவினர் டி.வி.எஸ்-ன் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியதற்கே இந்த அளவிற்கு ஆட்டம் காணுகிறது டி.வி.எஸ் என்றால் அங்குள்ள தொழிலாளர்கள் ஒன்றிணைந்தால் டி.வி.எஸ்-ன் பயங்கரவாதம் தூள்தூளாகி விடும். இதற்காக டி.வி.எஸ்-ஐ குறைத்து மதிப்பிட்டு விடவில்லை. இதனை பிரச்சாரத்தின் போது தொழிலாளர்களும் அவர்கள் வீட்டில் இருக்கும் மனைவியரும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக பிரச்சாரம் செய்யுங்கள் என்று எச்சரிக்கவே செய்தனர்.

தொழிலாளர்களை நாயைவிடக் கேவலமாக நடத்திய டி.வி.எஸ். நிர்வாகத்திற்கு தற்போது அவ்வாலைத் தொழிலாளர் தூக்கியிருக்கும் போர்க்கொடி, ஒரு முதல்படி! டி.வி.எஸ்.இன் அடக்குமுறைக்கு எதிராக அடுத்தடுத்த போராட்டங்கள் தொடரும்!

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஒசூர்.
தொடர்புக்கு: 97880 11784

 

பிரசுரத்தின் உள்ளடக்கம் :

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே!

செக்யூரிட்டிகளால் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள்
செக்யூரிட்டிகளால் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் – 1

“கம்பெனிகளை, நிறுவனங்களை விற்கும் போது கட்டாய ஓய்வு, ஆட்குறைப்பு என தொழிலாளர் விருப்பத்திற்கு எதிரான முடிவுகளை திணிக்கக் கூடாது. அந்தக் குழும நிறுவனத்தில் தான் வேலை தரவேண்டும்” என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப.சதாசிவம் தனது தீர்ப்பு ஒன்றில் (20.11.2012) குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்கள் மீது முதலாளிகள் தொடுத்து வரும் பயங்கரவாதத் தாக்குதலை இந்தத் தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நீதிபதி. ஆனால், நீதிபதியின் இந்தத் தீர்ப்பை எந்த முதலாளிகளும் மயிரளவிற்குக் கூட மதிப்பதில்லை என்பதுதான் நடைமுறை.

டி.வி.எஸ். என்றால், அது நல்ல கம்பெனி, அங்கு கட்டுப்பாடு, ஒழுங்கு, நேர்மை இருக்கும் என்ற ஒரு கருத்து நம்மில் பலரிடம் உள்ளது. கோவில்களுக்கு அன்னதானம் செய்வது, அருகாமை கிராமங்களில் மருத்துவ முகாம் நடத்துவது, தொழிலாளர் குடும்பத்தினரை ஆண்டுக்கொரு முறை ஆலைக்கு அழைத்து, “ஸ்தாபகர் தினவிழா” நடத்துவது என சமூகத்தில் சில வேலைகள் செய்வதன் மூலம் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற முயற்சிக்கிறது. முதலாளிகளின் பயங்கரவாத உண்மை முகத்தை நேரடியாக அறியாத நம்மில் பலரும் இதனை நம்புகிறோம். டி.வி.எஸ். நிறுவனம் உண்மையில் எப்படிப்பட்டது?

டிவி.எஸ். குழும நிறுவனத்தின் ஒரு பிரிவான சுந்தரம் ஆட்டோ காம்பொனண்ட் ரப்பர் டிவிசனில் (ஹரிதா ரப்பர்) நிரந்தரத் தொழிலாளர்கள் 64 பேரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 120 பேரும் நிர்வாக அதிகாரிகள் 40 பேரும் பணிபுரிந்து வந்தனர். கடந்த 01.04.2013-ம் நாள் முதல் இவ்வாலையை மும்பையைச் சேர்ந்த மெகா ரப்பர் டெக்னாலஜி என்ற கம்பெனிக்கு விற்று விட்டதாக இவ்வாலை நிர்வாகம் அறிவித்தது. ஆண்டுக்கு 60 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்து வந்த இந்நிறுவனத்தை பல கோடிகளுக்கு விற்று விட்டதாக தெரிய வந்துள்ளது.

30 ஆண்டுகளாக இவ்வாலையில் பணிபுரிந்த தொழிலாளர்களை 15.03.2013 அன்று தனித்தனியாக அழைத்து, வேலையை ராஜினாமா செய்து விட்டு, மெகா ரப்பர் கம்பெனியில் புதிதாக வேலை தருமாறு மனு எழுதிக் கொடுக்குமாறு ஆலை நிர்வாகம் கேட்டது. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் பலரும் மறுத்துள்ளனர். சிலர் தயங்கியுள்ளனர். உரிமைகள் கேட்டு பழக்கமில்லாத கொத்தடிமைகளாக பல ஆண்டுகள் வேலை செய்த தொழிலாளர்களை திடீரென அழைத்து இவ்வாறு கேட்டதால் பலரும் மனம் வெதும்பி செய்வதறியாது கதறியுள்ளனர். இவ்வாறெல்லாம் கேட்டால் சரிபட்டு வராது என உணர்ந்த நிர்வாகம் தனது சாம, பேத, தான, தண்ட ஆயுதங்களை பிரயோகிக்கத் தொடங்கியது.

செக்யூரிட்டிகளால் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள்
செக்யூரிட்டிகளால் கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள் -2

நிர்வாக அதிகாரிகள் ஆர்.கோபாலகிருஷ்ணன், மணிபாரதி (இவர் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி), லெட்சுமணன் (பர்சனல் துறை) தொழிலாளர்களைத் தனித்தனியாக அழைத்து, “உனக்கு மனைவி, குழந்தை, குடும்பம் எல்லாம் இருக்கு. அதை காப்பாத்த வேண்டாமா?…” என்று தொடங்கி பலவிதமான மிரட்ட தொடங்கினர். “அந்த தொழிலாளி கையெழுத்து போட்டுவிட்டான் . நீயும் போடு” என்று பேத ஆயுதத்தை பயன்படுத்தியுள்ளனர். தனியறையில் வைத்து தொடர்ந்து தொல்லை செய்து பல வெற்றுத்தாள்களில் தேவையான கையெழுத்துக்களை வாங்கியுள்ளனர். இவ்வாறு பல ஆண்டுகள் வேலை செய்த தொழிலாளர்களின் பணி மூப்பு தொடர்ச்சி (சர்வீஸ் கண்டினிவிட்டி) என்ற உரிமையைப் பறித்துள்ளனர்.

தண்டாயுதத்தை பிரயோகித்த டி.வி.எஸ் !

நிர்வாகத்தின் இந்த அயோக்கியத்தனத்தை எதிர்த்து தன்மான உணர்வுடன் 12 தொழிலாளர்கள் கையெழுத்து போட மறுத்துள்ளனர். நிர்வாக அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் டி.வி.எஸ் முதலாளி மிகவும் நல்லவர் என்று நம்பியுள்ளனர். இதனால், குடும்பத்துடன் சென்னைக்கு சென்று டி.வி.எஸ் குழுமத்தின் முதலாளியான (எம்.டி.) வேணு சீனிவாசனை சந்திக்க முயற்சித்துள்ளனர். வேணு சீனிவாசன் தொழிலாளர்களை சந்திக்க மறுத்தது மட்டுமின்றி, தனது கார்ப்பரேட் அலுவலகத்தில் உள்ள மூத்த அதிகாரியான லட்சுமணன் (வயது 82) மூலம் தொழிலாளர்களை விரட்டியுள்ளார்.

“எம்.டி.யை எல்லாம் பார்க்க முடியாது. உங்க கம்பெனிக்கு நான்தான் எம்.டி. எதுவாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கப்பா” என்றவரிடம் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை விளக்கியுள்ளனர். “ஏம்பா, புது கம்பெனியில வேலை கெடைக்கிறது ஏற்பாடு செய்துருக்கோனோ, அங்கே வேலை செய்யுங்கோ. இங்கல்லாம் வரப்டாது. நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க. உங்க மேல எனக்கு கோபமா வருது” என்று பேசியுள்ளார். தனது கணவர்களுக்கு வேலை கன்டினிவிட்டி தருமாறு தொழிலாளர்களின் மனைவியர் அந்த அதிகாரியின் காலில் விழுந்துள்ளனர். அவரோ, காவலாளியை விட்டு விரட்டியடித்துள்ளார். அது மட்டுமல்ல, சென்னையிலிருந்து தொழிலாளர்கள் சென்ற வாகனத்தைப் பின்தொடர்ந்து ஒரு கும்பல் விரட்டிக் கொண்டு வந்துள்ளது. கிருஷ்ணகிரி டோல்கேட்டில் தொழிலாளர் வாகனத்தை மறித்து அவர்களைப் புகைப்படம் எடுத்து மிரட்டியுள்ளது. நிர்வாகம் சொல்வதைக் கேட்டுக் கொண்டு போகவில்லை எனில், உங்க கழுத்துல தாலி இருக்காது என தொழிலாளர்களின் மனைவியரிடம் கொலை மிரட்டலும் விடுத்துள்ளது அக்கும்பல்.

நிர்வாகத்தின் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாத தொழிலாளர்களின் உறுதியைக் குலைக்க, அவர்கள் வீட்டிற்கு முன்பு அடையாளம் தெரியாத ஆட்களை வைத்து தொழிலாளர் செல்லும் இடங்களில் எல்லாம் பின்தொடர்வது என்ற வேலையையும் செய்தது.

ரோசக்காரனுக்கு சோறு எதுக்கு? இது மனுநீதி! டி.வி.எஸ்.இன் நீதியும் இதுதான்!

நிர்வாகத்தின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல், இராஜினாமா கடிதம் தராமல் சர்வீஸ் கண்டினிவிட்டி கேட்டு வந்த இந்தத் தொழிலாளர்களை எந்த வித முன்னறிவுப்பும் இன்றி சட்டவிரோதமாக வேலையை பறித்து விட்டது ஆலை நிர்வாகம். உரிமைக்காகப் போராடுபவர்களைப் பட்டினிப் போட்டு அடிப்பது என்பது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் மற்றுமொரு அடக்குமுறை!

ஆலை நிர்வாகத்தின் சொல்படி கேட்டு இராஜினாமா செய்துவிட்டு புதிய ஆலையில் வேலைக்கு சேர்ந்த தொழிலாளர்கள் தங்களது உரிமை இழந்து, எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். இவர்களுக்கு மட்டுமல்ல, டி.வி.எஸ். குழும நிறுவனத்தில் பணிபுரியும் எல்லா தொழிலாளர்களுக்கும் இந்த நிலைமைதான்.

தொழிலாளர் துறையிலும் டி.வி.எஸ்.ன் அடியாட்கள்!

வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் 12 பேரும் தங்களுக்கு நியாயம் கேட்டு, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். மாவட்ட ஆட்சியரோ தொழிலாளர் துறையை நாடுமாறு தெரிவித்துள்ளார். அந்த வகையில் கிருஷ்ணகிரி தொழிலாளர் அலுவலத்தில் தொழிற்தகராறு சட்டம் 2அ பிரிவின் கீழ் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர். இச்சட்டப் பிரிவின் படி 45 நாட்களுக்குள் விசாரித்து பதிலளிக்க வேண்டிய தொழிலாளர் துறையோ 4 மாதங்களாக டி.வி.எஸ் நிறுவனத்திற்கு வாய்தா வழங்கி வருகிறது. டி.வி.எஸ். நிறுவனத்திடமிருந்து முறையான எந்த ஆவணங்களைப் பெறுவதற்கான முயற்சியில் கூட தொழிலாளர் துறை இறங்கவில்லை. இவை எதையும் செய்யாத தொழிலாளர் அலுவலர் லெட்சுமணன், “12 மாத சம்பளம் தர்றாங்களாம். நிர்வாகம் சொல்றதைக் கேளுங்கப்பா. கோர்ட்டு கேசுன்னு போனோம்னா எத்தனை வருசம் ஆகும்னு தெரியாது. டி.வி.எஸ். நிறுவனம் பெரிய இடம்பா. நீங்களோ வளர்ற பசங்க” என்று தொழிலாளர்களை மிரட்டியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவத்தின் தீர்ப்பை லெட்சுமணனிடம் காட்டிய போது, படித்து விட்டு மேலும் அதிகமாக மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து தொழிலாளர் துறை அலுவலத்திற்கு இவ்வழக்கிற்காக சென்றால், லெட்சுமணனே தொழிலாளர்களைத் தீர்த்துக் கட்டி விடுவார் என்று அஞ்சும் நிலையில் தான் தொழிலாளர் அலுவலகம் உள்ளது.

மெகா ரப்பருக்கு விற்பனை – மற்றுமொரு கார்ப்பரேட் ஊழல்!

கடந்த 1992 வாக்கில் இந்நிறுவனத்தில் மேலாளர் கோபால கிருஷ்ணன் ஆலையை விற்றுவிட்டதாகவும் இந்த விற்பனை உண்மையானது எனவும் தொழிலாளர்களிடம் சத்தியம் செய்தார். ஆலை மூடல் அறிவித்து அப்போது வேலை செய்த நிரந்தரத் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பினார். ஆனால், அதன் பின்னரும் அவரே ஆலையில் மேலாளராகவும் டி.வி.எஸ் குழுமத்தின் ஒரு கிளையாகவும் இந்த ஆலை இயங்கி வந்தது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஹரிதா ரப்பரில் நிரந்தரத் தொழிலாளர்கள் ஒழித்துக் கட்டப்பட்டார்கள். தற்போது மீண்டும் 64 நிரந்தரத் தொழிலாளர்கள் ஒழித்துக்கட்டப்பட்டுள்ளனர்.

தற்போது, ஹரிதா கிராமர் ஆலையை மெகா ரப்பர் என்ற மும்பையை சேர்ந்த கம்பெனிக்கு விற்றுவிட்டதாக டி.வி.எஸ் குழுமம் அறிவித்துள்ளதன் முழு பின்னணி என்ன? கடந்த ஆண்டில் டி.வி.எஸ் குழும நிறுவனம் 700 கோடி ரூபாய் புதிதாக முதலீடு செய்வதாகவும் 1,300 பேருக்கு வேலையளிப்பதாகவும் முதலமைச்சரின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை போட்டது. இவ்வாறு புதிய முதலீடு செய்வதாக சொல்லிக்கொண்டே பழைய ஆலையை விற்று விட்டதாகக் கூறி நிரந்தரத் தொழிலாளர்களை ஒழித்துக் கட்டுகிறது டி.வி.எஸ். நிறுவனம். இதேபோல ஹரிதா ரப்பர் ஆலையை விலைக்கு வாங்கியதாக கூறும் சுஜன் குழும நிறுவனம் (மெகா ரப்பர்) புதிதாக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளித்ததாக காட்டிக் கொள்கிறது. இதன் மூலம் டி.வி.எஸ், சுஜன் ஆகிய இரு குழும நிறுவனங்களும் அரசை ஏமாற்றி பலகோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்துள்ளன.

மக்கள் வரிப்பணத்திலிருந்து அரசு வழங்கும் சலுகைகளை கொள்ளையடிக்க கார்ப்பரேட் முதலாளிகள் மேற்கொள்ளும் இந்த ஊழலை முறியடிக்க வேண்டும்.

டி.வி.எஸ். முதலாளித்துவ பயங்கரவாதத்தின் முகம்! (தொழிலாளர்களை ஒடுக்கிய வரலாறு)

ஹரிதா கிளேட்டன் என்ற இவ்வாலையில்தான் 2004ம் ஆண்டு முத்து என்ற இளந்தொழிலாளி இயந்திரத்திலேயே உடல் நசுங்கி இறந்து போனார். இயந்திரத்தின் சென்சார்களை எல்லாம் நிறுத்தி விட்டு, இரு கைகளால் இயங்கும் எந்திரத்தை ஒரு கையினால் இயக்கும் வகையில் மாற்றியமைத்து, 10 மடங்கு அந்த இயந்திரத்திலிருந்து உற்பத்தியை பெருக்கியது, அதாவது இயந்திரத்தின் இயல்பை மாற்றியது என்பது உயிரிழப்புக்கு வழிவகுக்கும் எனத் தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட சதி. இந்த விபத்து என்பது திட்டமிட்ட படுகொலை. இதனை மறைக்க ஆலை நிர்வாகம் முயற்சித்த போது தொழிலாளர்களின் போராட்டத்தால் இந்த உண்மை வெளிவந்தது. இது போன்ற பல படுகொலைகள் அவ்வப்போது ஆலையில் நிகழ்ந்தும் முதலாளித்துவ அடக்குமுறையால் இவை வெளி உலகிற்கே தெரியாமல் போனது.

வேலையில் சேர்க்கும் போதே ஆலைக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டேன் என்று அடிமை சாசனத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டுதான் வேலையில் சேர்க்கின்றன டி.வி.எஸ் குழும நிறுவனங்கள். இதில் சூப்பர் வைசர்கள் சொல்லும் ஈனத்தனமான வேலைகளை செய்ய வில்லை என்றாலும் வேலை நீக்கம்தான்!

தொழிலாளர் வீட்டில் மனைவி, குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என விடுப்பு கேட்டால் தருவதில்லை. மருத்துவம் தருவதாகக் கூறி வீட்டிற்கே ஆள் அனுப்பி கண்காணிக்கும் கேடு கெட்ட வேலையில் இறங்குகிறது.

டி.வி.எஸ்-ல் வேலைக்கு ஆள் எடுப்ப்து என்பது இந்திய இராணுவத்திற்கு ஆள் எடுப்பது போல மேற்கொள்ளப்படுகிறது. அந்தத் தொழிலாளியின் ஆதி அந்தம் வரை எல்லா விவரங்களையும் சேகரித்த பின்னர்தான் வேலை தருகிறது! இது அரசு நிர்ணயித்துள்ள நிலையாணை சட்ட முறைகளுக்கும் இயற்கை முறைகளுக்கும் எதிரானது.

அடுத்து டி.வி.எஸ். குழும நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் செய்து கொடுக்கும் ராஜ்சிரியா, எல்.கே.எம்., டெனிக்கோ, சாந்தார் உள்ளிட்ட பல ஆலைகள், அவ்வாலைகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அவர்களது முதுகெலும்பு ஒடியும் அளவிற்கு வேலை செய்ய வைக்கின்றன. அத்தொழிலாளர்களை 12 மணிநேரம் தொடர்ந்து வேலை செய்ய வைத்து அவர்களை பிழிந்தெடுக்கின்றன. இவ்வாலைகளில் வேலையின் போது போதுமான பாதுகாப்பு முறைகள் இல்லாததால் தொழிலாளர்கள் பலர் கண்கள், விரல்கள் இழந்து வாடுகின்றனர். இவ்வாறான விபத்துக்களுக்கு எந்த விதமான பதிவு செய்யப்படுவதில்லை. மேலும், இவர்களுக்கு உரிய நிவாரணம், இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை. மீறி இழப்பீடு கேட்கும் தொழிலாளர்கள் மிரட்டப்படுகின்றனர். கணவனை இழந்த நாகவேணி என்ற பெண் தொழிலாளி, ராஜ்சிரியா ஆலையில் பணிபுரியும் போது, அவ்வாலையில் வாராந்திர பராமரிப்பு செய்யாத காரணத்தினால் தீவிபத்து ஏற்பட்டு பலியானார். அவரின் இரண்டு குழந்தைகளையும் நிர்கதியாகி விட்டன.

1989-ல் டி.வி.எஸ்.ல் தொழிற்சங்கம் தொடங்க முயற்சித்த போது 3 மாதங்கள் கதவடைப்பு செய்து 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை விரட்டியடித்தது ஆலை நிர்வாகம். டி.வி.எஸ் குழும நிறுவனங்கள் ஒப்பந்த மற்றும் தற்காலிக தொழிலாளி என்ற பெயரில் பல லட்சம் தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டி வருகின்றன. 6 – 8 மாதங்கள் உழைப்பை உறிஞ்சி விட்டு இவர்களை வீதியில் வீசியெறிந்து விடுகின்றன.

மொத்தத்தில், தொழிலாளர் நலச் சட்டங்களை டி.வி.எஸ். குழும நிறுவனங்கள் மதிப்பதில்லை. தொழிலாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட சட்ட பூர்வ உரிமைகளை மறுக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் முகாமாக டி.வி.எஸ். குழும நிறுவனங்கள் உள்ளன.

தீர்வு – தொழிலாளர் வர்க்க ஒற்றுமை !

டி.வி.எஸ் நிறுவனத்தின் அடக்கு முறைகளை எதிர்த்து ஒசூரில் பல தொழிலாளர்கள் போராடியுள்ளனர். அதற்காக அவர்கள் டி.வி.எஸ் நிர்வாகத்தின் மூலம் ரவுடிகள், போலீசு ஏவி ஒடுக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஒசூரில் உள்ளூர் அளவில் ரவுடி இசத்தை வளர்த்து விட்டதில் டி.வி.எஸ் குழுமத்திற்கு தனி வரலாறு உண்டு. அதேபோல கோயில்களுக்கு அன்னதானம், நிதி உதவி செய்வதன் மூலம் தன்னுடைய குற்றங்களை மறைக்க முயல்கிறது.

இவ்வளவு கொடூரமான டி.வி.எஸ். நிறுவனத்தை தொழிலாளர்கள் தனியாக நின்று எதிர்த்துப் போராட முடியாது. டி.வி.எஸ்-ன் பயங்கரவாத நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் எங்களைப் போன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் இணைந்து போராட முன்வரவேண்டும். ஒசூரில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒரு வர்க்கமாக திரட்டி போராட பு.ஜ.தொ.மு.தான் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த வகையில் பு.ஜ.தொ.மு.வில் இணைந்து போராட முன்வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம்.

தமிழக அரசே!

  • மெகாரப்பர் ஆலையில் வேலை செய்யும் எல்லா தொழிலாளர்களின் சர்வீஸ் உரிமையை உறுதி செய்!
  • வேலை நீக்கம் செய்யப்பட்ட 12 தொழிலாளர்களுக்கு வேலை வழங்க உத்தரவிடு!

தொழிலாளர்களே!

  • டி.வி.எஸ். நிறுவனத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஒசூரில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்!
  • ஒசூர் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்போம்!

பிரச்சாரம்

நோட்டிஸ் – போஸ்டர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர்.

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

1

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2013

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1.“நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி!” – புரட்சிகர அமைப்புகளின் திருவிழாக்கள்

2. காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை : பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா ?

3.“ஜெயேந்திரனைக் கூண்டிலேற்று! தில்லைக் கோயிலைக் காப்பாற்று!!” – புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள்

4. காமன்வெல்த் மாநாடு! – மீண்டும் அதே நாடகம்!

5. தாதுமணற்கொள்ளை : திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம்!

6. கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம்

7. கையால் மலம் அள்ளும் வேலை : இதற்கு மட்டும் இட ஒதுக்கீடு கோர மாட்டீர்களா?

8. தனியார் மயம் – தாராள மயம் ! கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்

9. தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரைதான் !

10. பெண்கள் மீதான வன்முறை ! தமிழகத்தின் இழிநிலை!

11. செய்திப் பதிவுகள்
அ. கொலைகார மேட்டுக்குடி எஜமானிகள்
ஆ. முருங்கைக்காய் பறித்த அப்பாவிகளுக்குச் சிறை! தங்கம் திருடிய போலீசுக்கு மன்னிப்பு!
இ. மைய அரசு திணிக்கும் மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி
ஈ. மோடியின் பயங்கரவாத ஆட்சியில் சமூக ஆர்வலர்களுக்கு இடமில்லை!

12. எதிர்கொள்வோம்!

13.  ஆயிரம் தொழிலாளர்களின் வேலை பறிப்பு! நோக்கியாவின் முதலாளித்துவப் பயங்கரவாதம்!! – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஆர்ப்பாட்டம்

14. தாது மணல் கொள்ளையன் வைகுண்டராஜனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்! தாது மணல் குவாரிகளை நிரந்தரமாக மூடு – 23.11.2013 அன்று தூத்துக்குடியில் மணல் கொள்ளை மாஃபியா கும்பலை நடுநடுங்க வைத்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பொதுக்கூட்டம்.

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2013 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்.

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

டிசம்பர் 6 – அடங்காத நினைவுகள்

5
  • னாதனமானவை
    அபௌருசமானவை
    கேள்விக்கு அப்பாற்பட்டவை
    உபநிடதங்கள், சம்ஷிதைகள், புராணங்கள்…

    அம்பேத்கர்
    அம்பேத்கர்

    எதைக் கண்டும் மலைக்காமல்
    இந்து மதத்தின் அநீதிகளை
    கண்ட இடத்திலேயே
    அடிக்கிற அடி இருக்கிறதே!

அதுதான் அம்பேத்கர்

  • நால்வகை வேதம், மனுதர்மம்,
    ரிஷிகள், இந்திரன்
    ராமன், கிருஷ்ணன்…எவனாயிருந்தாலும்
    பார்ப்பன பல்லைத் தட்டி
    அவர்கள் கையிலேயே கொடுக்கும்
    அறிவின் அழகிருக்கிறதே

அதுதான் அம்பேத்கர்

  • ஆரிய ‘கங்கை’யை
    அடித்துத் துவைத்து
    அவாளின் பூணுலிலேயே
    போட்டு அனுப்பும்
    அலுக்காத வேலை,சாதிய மனத்தின்
    தடித்தனத்தை
    நோகடித்து
    நோயகற்றும் வீச்சு,”என்ன விலை கொடுத்தேனும்
    இந்து  ஆட்சி தடுக்கப்பட்டாக வேண்டும்”
    எனும் பார்ப்பன எதிர்ப்பின் தவிப்பு!
  • ஆவி அடங்கவில்லை
    அம்பேத்கரின் தவிப்புகள்…பீகாரின் சோனே ஆற்றால்
    கழுவ முடியாத அளவுக்கு
    உறைந்துபோன
    லஷ்மன்பூர்-பதே தலித் மக்களின்
    இரத்தத்திலும்,நத்தம் காலனியின்,
    எரிந்த குடிசைகளில் புகைந்த காற்றில்
    தீய்ந்து கருகிய அழுகுரலிலும்
    அம்பேத்கரின் தவிப்புகள்
    விடை தேடுகின்றன!
  • பாராளுமன்றத்தில்
    அம்பேத்கர் சிலை,
    பரமக்குடியில்
    தலித்துகள் கொலை!
    இந்தப் போலி ஜனநாயகத்தை
    தோலுரிப்பதே
    புரட்சியாளன் வேலை!
  • அம்பேத்கரின்
    இந்து மதத்தின் புதிர்களை
    ஏழெட்டு தடவை
    படித்தது அல்ல பெருமை
    அம்பேத்கரையே
    காவிமயமாக்கும்
    ஆர்.எஸ்.எஸ் வலையை
    அறுத்திட வா களத்தில் !
  • காந்தியின் ராமராஜியத்தை
    அம்பேத்கர்
    அம்பலப்படுத்தியதைக் கற்பதோடு
    முடிவதில்லை
    அம்பேத்கர் நினைவுகள்,
    மோடியின் கொலை ராஜ்யத்தை
    முடிவுக்குள்ளாக்கும் வேலைகளில்
    தொடர்ந்திடும் அவர் நினைவுகள்

    கோயில் நுழைவு போராட்டம்
    1930 முதல் 1935 வரை நாசிக்கில் நடத்தப்பட்ட கலாராம் மந்திர் சத்தியாகிரகம் கலாராம் மந்திர் கோயில் நுழைவுப் போராட்டம்.
  • ஆண்டைகள்
    சாதிகளாக மட்டுமல்ல
    கார்ப்பரேட்டுகளாகவும்
    களவாடுகின்றனர்
    தலித்துகளின் வாழ்நிலையை
  • நான் எழுதுவதுதான்
    புதிய சட்டம்
    என அம்பேத்கரின் வரைவுகளை
    தூக்கி எறிகிறது பன்னாட்டுக் கம்பெனி
  • மறுகாலனிய தனிக் குடியிருப்பும்
    தனியார்மய தீண்டாமையும்
    நவீன சேரிகளில் தள்ளி வைக்கின்றன.
  • இந்தச் சூழலில் முடிவெடுப்போம்
    அம்பேத்கர் நினைவின் அடையாளமாய்
    ஆளுயர மாலையோடு அடங்குவதா?
    ஆளும் வர்க்க  எதிர்ப்பு வேலை தொடங்குவதா?

– துரை சண்முகம்

ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !

131

தார்த்த நிலைகள் கன்னத்தில் அறைந்த போதும் தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் உண்மைகளைக் காண மறுத்துக் குளிர்க் காய்ச்சல் வந்தவர்களைப் போல பிதற்றுகிறார்கள். குட்டி முதலாளியத் தன்னகங்காரம் (Ego) உண்மைகளைக் காண முடியாமல் அவர்களைத் தடுக்கிறது. மேலும், இவர்கள் அடிப்படையில் யதார்த்த உண்மைகளை எதிர்கொள்ள முடியாத கோழைகள் அல்லது ஏமாற்றுக்காரர்கள்.

வெலிவேரியா தண்ணீர் தனியார்மய எதிர்ப்பு போராட்டம்
இலங்கையின் மேற்கு மாகாணப் பகுதியில் அமைந்துள்ள வெலிவேரியாவில், தனியார் நிறுவனமொன்று நிலத்தடி நீரை மாசுபடுத்துவதை கண்டித்து நடந்த போராட்டத்தின் மீது சிங்கள ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமுற்றனர்.

இவ்வாறு நாம் சொல்வதற்கு ஒரு சான்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நந்திக்கடலோரம் சிங்கள இராணுவத்திடம் பிடிபட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டு விட்டார் என்ற பட்டவர்த்தனமான உண்மையை இன்னமும் ஏற்க மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள்.

இந்த உண்மையை ஒப்புக்கொண்டால், பிரபாகரனைச்  சுற்றித் தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் இவ்வளவு காலமும் பரப்பியுள்ள பல பொய்மைகளும் அம்பலப்பட்டுப் போகும் என்று அஞ்சுகிறார்கள். இந்த உண்மையிலிருந்து எழும் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டியிருக்கும், ஈழத்தின் இன்றைய நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்குரிய துணிவற்ற கோழைகளான அவர்கள், இந்த உண்மையை உரக்கச் சொல்லும் எம் மீது பாய்ந்து குதறுகிறார்கள்.

‘‘தலைவர் பிரபாகரனையோ புலிகளையோ உயிரோடு பிடிக்கவே முடியாது. அவர்கள் சயனைடுக் குப்பிகளைக் கழுத்தில் சுமந்து திரிகிறார்கள். ஒருநாளும் எதற்காகவும் யாரிடமும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள். அரசியல்,  இராணுவத் துறைகளில் நிகரற்ற திறமை மிக்கவர்கள்” என்று தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் முப்பது ஆண்டுகளாகக் கட்டமைத்து வந்த இந்தப் பிம்பங்கள் எல்லாம் இப்போது நொறுங்கி விட்டன.

பிரபாகரனைப் பற்றி எவ்வளவோ கதைத்துத் திரிந்தவர்கள், அதெப்படி ஒரு படித்தாக ஒரு சொல் கூடப் பேசாமல் இருக்கிறார்கள்! அவர்களில் யாருக்கும் இது உறுத்தாமலா போய் விட்டது! ஈழத்தின் வரலாற்றில் பிரபாகரன் என்ற பெயரைத் திடீரென்று தீண்டத்தகாததாக்கி விட்டார்களே! இதைவிடப் பெரிய துரோகம் வேறுண்டா!

எல்லாவற்றுக்கும் மேலாக, திடீரென்று அவர்களின் இருப்பே கேள்விக்குள்ளாகி, தாங்களே தன்னாளுமையுடன் பேசுவதற்கு ஒரு ”பொருள்”  இல்லாமல் போய்விட்டது.  அவர்களின் பிழைப்புவாத அரசியலுக்குப் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடமிருந்து ”பொருள்” கிடைப்பதும் அரிதாகி வருகிறது. அதனால்தான் எல்லா தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் சீமானைப் போல, வைகோவைப் போல பொருளற்ற வெற்று உணர்ச்சிக் கூச்சல் போடுகிறார்கள்.

தமிழர்கள் உண்மைகளின் உணர்வாளர்களாக அல்லாமல், உணர்ச்சிக் கும்பலாக  இருக்க வேண்டும் என்றுதானே சினிமாக்காரர்களும் ”டாஸ்மாக்” வியாபாரிகளும் செயல்படுகிறார்கள். ஈழ இனச் சிக்கலில்  தமிழர்களை வெறும் உணர்ச்சிக் கும்பலாக வைக்கவே தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் எத்தனிக்கிறார்கள். அவ்வாறான முயற்சிகளில் ஒரு பகுதிதான் ஈழ இனச் சிக்கலில் எமது நிலைப்பாடுகள் மீதான ஆத்திரமும் அவதூறுகளும். இதற்கு முக்கியமான, அவசியமான காரணம் அவர்களின் பிழைப்புவாத அரசியலுக்கு நாம் தடையாக இருப்பதுதான்.

இவ்வாறு ம.க.இ.க.-வினர் மீது அவதூறு செய்வதற்கு அவர்கள் ஓர் எளிமையான வழியை, முதன்மையான  வழியை, முட்டாள்தனமான வழியைத் தெரிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். அது, ம.க.இ.க.-வினர் இவ்வளவு காலமும் மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடி வரும் பார்ப்பன பாசிச  சக்திகளான சோ.சாமி, சு.சாமி மற்றும் இந்து ராம், சோனியா-மன்மோகன் கும்பல், போலி கம்யூனிசக் கட்சிகள் ஆகியவரோடு ம.க.இ.க.-வினரது நிலைப்பாடுகளை இணை வைத்து, அடையாளப்படுத்துவதுதான்!

இவ்வாறு செய்வது அடிப்படையிலேயே பித்தலாட்டம், அவதூறு என்று  பலமுறை தெளிவாக நாம் விளக்கிப் பேசியிருக்கிறோம், எழுதியிருக்கிறோம். தமிழ் நாட்டிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழினவாதக் குழுக்களும் புலி ஆதரவுக் குழுக்களும் தனித்தனியாகவும் கூட்டுச் சேர்ந்தும் செய்ததை விடப் பன்மடங்கு அதிகமான மக்களிடம் ஈழ இனச் சிக்கலில் ம.க.இ.க.-வினரது ஈழ ஆதரவு மற்றும் நிலைப்பாடுகளை கொண்டு சென்றிருக்கிறோம். இருந்தாலும் அவர்கள் தமது அவதூறுகளைத் தொடர்கிறார்கள்.

பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து கண்டியிலுள்ள பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்; இனம் கடந்த ஒற்றுமையின் அடையாளம்.

அடிப்படை வேறுபாடுகளைக் காண மறுக்கும் அறிவுக் குருடர்கள்

ஈழ இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின் நிலைப்பாடுகளும் பார்ப்பன  பாசிஸ்டுகள் மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளும் அடிப்படையிலேயே மாறுபாடானவை, எதிரெதிரானவை, கறுப்பும் வெள்ளையும் போன்று தெளிவானவை. அறிவுக் குருடர்களுக்குத்தான் அவற்றுக்கிடையிலான  கீழ்வரும் வேறுபாடுகள் தெரியாது:

1)  இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்டுகளும் ஏற்பதில்லை. மொழிச் சிறுபான்மையினர் என்றே கருதுகின்றனர்.

ஆனால்,

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதே எப்போதும் ம.க.இ.க.-வின் நிலைப்பாடு.

2) ஈழத் தமிழர்களின், ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒருபோதும் ஏற்று அங்கீகரித்ததே கிடையாது.

ஆனால்,

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமையை எப்போதும் ம.க.இ.க. ஏற்பதுடன் தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு அதை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைவதற்கு ஆதரவாகப் போராடி வந்திருக்கிறது.

3) தமிழீழத் தனியரசு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; ஒன்றுபட்டுள்ள இலங்கை பிளவுபடாதவாறு, அதன் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் மாநில சுயாட்சி அல்லது அதிகாரப் பகிர்வு மூலம் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதுதான் பார்ப்பன பாசிஸ்டுகள், போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு.

ஆனால்,

ஈழத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமை என்பதே தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியது என்பதுதான் எப்போதும் ம.க.இ.க.-வின் நிலை. தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை மறுப்பது, ஈழத் தமிழ்தேசிய இனத்தின்  தன்னுரிமையையே மறுப்பதாகும். ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையை ஒரு போதும் மறுக்காத போதும், எதிர்க்காத போதும், அதற்காகப் எப்போதும் போராடி வரும் ம.க.இ.க.வைத் தமிழீழத் தனியரசுக்கு எதிரியாகச் சித்தரிப்பது அவதூறுதான்! திட்டமிட்ட சதிதான்! ஈழத் தமிழ்த் தேசிய இனம் எப்போது, எப்படி, என்ன அரசியல் நிலைமைகளில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுகிறது என்பதைப் பொருத்துத்    தனியரசு அமைத்துக் கொள்வதா,  இல்லையா என ஈழத் தமிழ்த் தேசிய இனமே தீர்மானிக்கும். (நாம் ஏன் இவ்வாறு கருதுகிறோம், அது ஏன் சரி என்பதைப் பிறகு பார்ப்போம்)

4) ஈழச் சிக்கலுக்கு இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தம் சரியானதொரு தீர்வு. இந்திய ”அமைதிப் படை” படையெடுப்பு  உட்பட இந்திய அரசின் எல்லாத் தலையீடுகளும்  புலிகள் மீதான தடையும் சரியானது, அவசியமானது, இராஜபக்சேவை ஒரு போர்க்குற்றவாளி என்ற முறையிலான சர்வதேச விசாரணை – தண்டனையெல்லாம் கூடாது என்பது தான் பார்ப்பன  பாசிஸ்டுகள்,  போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. புலிகள், தமிழகத் தமிழினவாதிகள் கூட இந்திய அரசு மற்றும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் எல்லாம் ஈழத் தமிழருக்கு நட்புச் சக்திகள்; ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளில் எல்லோரும் இல்லையானாலும் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., வாஜ்பாய் போன்ற சில தலைவர்கள் ஈழத் தமிழர்கட்கு நட்புச் சக்திகள் என்றே நம்பினர்; இன்னமும் நம்புகின்றனர். இந்திய அரசும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளும் ஈழத்துக்கு எதிரி சக்திகள் என்று வைத்துப் போராட வேண்டும் என்று அமைதிப்படை ஆக்கிரமிப்புக் காலத்தில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை புலிகளும் தமிழகத் தமிழினவாதிகளும் முன்வைக்கவேயில்லை. அமைதிப் படை ஆக்கிரமிப்புக் காலத்திலும் இவர்களின் இந்திய எதிர்ப்புக்குக் காரணம், புலிகளுக்கு எதிராக இந்தியா போர் தொடுத்ததுதானே தவிர, இவர்களாக இந்திய எதிர்ப்பு நிலை எடுக்கவில்லை. இதனைப் புலிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள். மற்றபடி, இந்திய அரசு மற்றும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளைத் ”தாஜா” செய்து, ஈழத்தின் நட்புச் சக்திகளாக அவற்றை மாற்ற வேண்டும் என்றுதான் முள்ளிவாய்க்கால் முடியும் வரை அவர்கள் முயன்றார்கள். இப்படிச் செய்ததைத்தான் பிரபாகரனின் அரசியல் திறமை என்று இங்குள்ள தமிழினவாதிகள் போற்றிப் புகழ்ந்தனர்.

ஆனால்,

1983 கறுப்பு ஜூலை நாட்களில் இருந்து இலங்கை, ஈழச் சிக்கலில் இந்திய அரசின் தலையீடுகள், இந்தியா ஈழப் போராளிகளுக்கு போர்ப் பயிற்சியும் ஆயுதங்களும் நிதியும் வழங்கியது கூட உள்நோக்கங்கொண்டு, தெற்காசிய வல்லாதிக்கத் தன்னலன்கள் கருதி இந்தியா செய்தவைதாம்; இந்திய அரசு ஈழத் தமிழினத்தை வெளிப்படையாகவும் அரசியல் ரீதியிலும் அங்கீகரித்து ஆதரிப்பதற்கு மாறாக, சதித்தனமாக, தனது உளவுப்படையான ”ரா’’-வை ஏவி விட்டுப் போராளிக் குழுக்களிடையே  ஊடுருவி, அவர்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு, இரத்தம் குடித்ததையும் ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட  இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தத்தையும் முற்றிலும் தவறானவை என்று ம.க.இ.க. எதிர்த்தது. அமைதிப் படை என்ற பெயரில் இந்திய இராணுவத்தின் படையெடுப்புக்குப் பிறகு, அதை எதிர்த்து விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்துக்கு எதிராகப் போரிட்டதும், அதற்காக பிரேமதாசா அரசுடன் புலிகள் கூட்டுச் சேர்ந்ததும் சரியானவை என்பதே ம.க.இ.க.வின் நிலைப்பாடு. இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தத்துக்கு முன்பிருந்து முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழினப் படுகொலைகளை முன்னின்று நடத்தியது உட்பட இந்திய அரசு மற்றும் அதன் ஆளும் வர்க்க கட்சிகளின் சதித்தனமான வல்லாதிக்கத் தலையீடுகளை ம.க.இ.க மட்டுமே முரணற்ற முறையில் எதிர்த்துப் போராடி வந்திருக்கிறது. அதன் பிறகும் இராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியென அறிவித்துத் தண்டிக்க வேண்டுமெனவும் இதைத் தடுப்பதில் இந்திய அரசின் தில்லுமுல்லுகளையும் அம்பலப்படுத்திப் போராடி வந்திருக்கிறது.

ஆனால், முள்ளிவாய்க்காலில் புலித் தலைமையையும் பல்லாயிரம் ஈழத் தமிழரையும் பலி கொடுத்த பிறகு, இந்திய அரசின் ஈழ எதிர்ப்பு சதிகளையும்  தில்லுமுல்லுகளையும் உண்மைகளையும் தாமே கண்டுபிடித்ததைப் போலவும் தாம் எப்போதும் இந்திய எதிர்ப்பு நிலையிலிருந்ததைப் போலவும் திடீரென்று புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் இப்போது குதியாட்டம் போடுகிறார்கள். இந்திய அரசை எதிர்த்துப் போராடாத தவறை யாரோ செய்து விட்டதைப் போலவும் நாடகமாடுகிறார்கள். இப்போதும் காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் மட்டும்தாம் ஈழத்தின் எதிரிச் சக்திகள் என்றும் ஜெயலலிதாவும் அவரை ஆதரிப்பதன் மூலம் மோடியும் ஈழத்தின் நட்புச் சக்திகள் போலவும் பிழைப்புவாத அரசியல் நடத்துகிறார்கள்.

5) இராஜீவ் காந்தியும் சிங்கள பாசிச எதிரிகளும் ஈழத் தமிழ்த் துரோகிகளும் கொல்லப்பட்டபோது அவை புலிகளின் பயங்கரவாதச் செயல் என்று பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெறித்தனமாகச் சாடினர். இராஜீவ் காந்தி கொலையைத் தமிழினவாதிகள் கூடக் கண்டித்தனர். தாங்கள் செய்த பல கொலைகளைப் புலிகளால் கூட நியாயப்படுத்த முடியவில்லை. இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு வந்த நாட்களில் ஜெயா அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பாசிச வேட்டையை ஏவி விட்டது, புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதையெல்லாம் நியாயப்படுத்தினர்.

ஆனால்,

இராஜீவ் காந்தியும் சிங்கள பாசிச எதிரிகளும் ஈழத் தமிழ்த் துரோகிகளும் கொல்லப்பட்டபோது அவற்றை எதிர்த்தோ, கண்டித்தோ ம.க.இ.க. எழுதியதோ பேசியதோ இல்லை. கள்ள மௌனம் சாதித்ததும் இல்லை; இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஏன் சரியானவை, அவசியமானவை என்றுதானே எழுதியது, பேசியது. இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு வந்த நாட்களில் ஜெயா அரசு  ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பாசிச வேட்டையைக்  கட்டவிழ்த்து விட்டபோது, இங்குள்ள தமிழினவாதிகள் கூண்டுக்குள் ஒளிந்து கொண்டு மௌனம் காத்தனர்.  ம.க.இ.க.வோ, புலிகள் தடை உட்பட அவற்றை எதிர்த்துப் போராடியது. அதற்காக ”தடா”, அரசு விரோதச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல தோழர்கள் சிறைப்பட்டனர்.

இவ்வாறு அடிப்படையான பல பிரச்சனைகளில் ம.க.இ.க. யாரை எதிர்த்துப் போராடி வருகிறதோ, அந்தப் பார்ப்பன பாசிஸ்டுகளோடும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளோடும் ம.க.இ.க.வை அடையாளப்படுத்தியும் இணை வைத்தும் புலி ஆதரவளர்களும் தமிழினவாதிகளும் அவதூறு செய்கிறார்கள். என்ன ஓர் அரசியல் நேர்மை! அறிவு நாணயம்!

‘‘ஈழத் தமிழர் இனச் சிக்கலில் ம.க.இ.க.-வின் நிலைப்பாடு  கம்யூனிஸ்டுகளுக்கே உரிய வறட்டுத்தனம் நிறைந்தவை என்று கூறிப் போலி கம்யூனிஸ்டுகளுடன் இணை வைத்தும் தமிழினவாதிகள் அவதூறு பரப்புகிறார்கள். ஆனால், போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளும் ம.க.இ.க.-வின் நிலைப்பாடுகளும் அடிப்படையிலேயே மாறுபாடானவை. ருசியாவில் ஸ்டாலினுக்குப் பிறகு குருச்சேவ் திருத்தல்வாதம் நிலைநாட்டப்பட்டதும் சி.பி.ஐ.யும், நக்சல்பாரிப் பேரெழுச்சிக்குப் பிறகு சி.பி.எம். கட்சியும் ”இனி உலகின் எல்லா நாடுகளிலும் தேசிய இனப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விட்டன. தேசிய இனங்கள் தன்னுரிமை கேட்பதே தவறானது, அவ்வாறான கோரிக்கையை ஆதரிக்க முடியாது”  என்று அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டன. ஆனால், ”தேசிய இனச் சிக்கலில் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகள் தவறானவை, திருத்தல்வாதமானவை” என்று ம.க.இ.க.- வினர் உட்பட புரட்சிகரப் பொதுடைமையாளர்கள் அவற்றை எதிர்த்து வருகின்றனர். அதைப் போலவே, சீனாவும் கியூபாவும் இராஜபக்சே அரசை ஆதரிப்பதைக் காட்டி அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதாக இட்டுக் கட்டியும் அவதூறு செய்கிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனச் சிக்கலில் மார்க்சிய – லெனினிய ஆசான்களின் போதனைகள் இப்போதும் பொருத்தமானவை என்று கருதும் புரட்சிகரப் பொதுடைமையாளர்கள் வட கிழக்கு இந்தியாவிலும் காசுமீரத்திலும் நடக்கும் தன்னுரிமைப் போராட்டங்களை ஆரம்பம் முதலே ஆதரித்து வருகின்றனர். இப்போது கம்யூனிஸ்டு அல்லாத நாடுகள் செய்யும் தவறுகளுக்கு நாம் பொறுப்பாக முடியாது என்று தெரிந்தும் தமிழினவாதிகள், தமது அவதூறுகளைத் தொடருகின்றனர்.

அதே சமயம், தமிழினவாதிகள்தாம் இந்தியாவின் தேசிய இனச் சிக்கலில் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளுக்கு இணையான நிலைப்பாடுகளை எடுக்கின்றனர். வட கிழக்கு இந்தியாவிலும் காசுமீரத்திலும் தன்னுரிமை கோரும் போராட்டங்களை ஆதரிக்காதது மட்டுமல்ல, அவை அவசியமற்றவை என்று கூட பல சமயங்களில் எதிர்க்கவும் செய்கின்றனர். சி.பி.ஐ. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஈழ விடுலைக்கு எதிரானது என்று தமிழினவாதிகளுக்குத் தெரியும்; இருந்தாலும், ஜெயலலிதாவின் அடிவருடியான தா.பாண்டியன் அவரது அருளைப் பெறுவதற்காகவே ஈழ ஆதரவு நாடகமாடுவதும் இவர்களுக்குத் தெரியும்; ஆனாலும் ஈழ ஆதரவு மேடைகளை அலங்கரிக்கும் விருந்தினராக தா.பாண்டியனை முன்நிறுத்த இவர்கள் தவறுவதில்லை. இதுதான் தமிழினவாதிகளின் அரசியல் நியாயம்!

ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ளாத நிலையில், தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் முன்னெடுக்கின்றனர், ம.க.இ.க.-வினர். அதை அங்கீகரித்து, ம.க.இ.க.-வினரை ஈழத்தின் நட்பு சக்தியாகக் கருதாது, ஈழத்தின் எதிரி சக்தியாகக் கருதி, ம.க.இ.க.-வினர் மீது தமிழினவாதிகள் எப்போதும் பாய்கின்றனர். ஆனால், தமிழீழத் தனியரசை மட்டுமல்ல, ஈழத் தமிழரை ஒரு தேசிய இனமாகவே ஏற்காத இந்திய தேசியக் கட்சிகளின்  தனித்தனி தலைவர்களையும் உள்ளூர் பிரபலங்களையும் ஈழத்தின் நட்புச் சக்தியாகக் கருதி, அவர்களிடம் ஆதரவு தேடுகின்றனர்

எரிபொருள் விலை உயர்வை கண்டித்த மீனவர்கள் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து வடமேற்கு மாகாணத்திலுள்ள சிலா என்ற கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜபக்ஷே அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்; எட்டு பேர் படுகாயமுற்றனர்.

தமிழினவாதிகளின் பார்வையில் ஈழ இனச் சிக்கலுக்கு தமிழீழத் தனியரசு என்பது ஒரே தீர்வு என்பது மட்டுமல்ல; தமிழகத் தமிழினவாதிகளுக்கு ஈழ இனச் சிக்கல் ஒன்று மட்டுமே விவாதத்துக்கும் வினையாற்றுவதற்குமான ஒரே பிரச்சினை. இந்த நாட்டைச் செயற்களமாகக் கொண்டுள்ள ம.க.இ.க.வினர் தம்முன் உள்ள எல்லாப் பிரச்சினைகளில் ஈழ இனச் சிக்கலுக்கு அதற்குரிய முன்னுரிமை தருகின்றனர். இந்த உண்மையை அறிந்திருந்தும், ம.க.இ.க.வினர் ஈழத் தமிழருக்கு எதிரானவர்கள், அவர்களுக்கு ஈழத் தமிழர்  மீது அக்கறையில்லை, அதனால்தான் தமிழீழத் தனியரசு கோரிக்கைக்காக ம.க.இ.க.வினர் போராட மறுக்கிறார்கள் என்று அவதூறு செய்கிறார்கள்.

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம்; அதற்குப் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமையை எப்போதும் ம.க.இ.க. ஏற்பதுடன், தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு அதை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைவதற்காகப் போராடி வந்திருக்கிறது.

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமை என்பதே தமிழீழத்  தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியது என்பதுதான் எப்போதும் ம.க.இ.க.-வின் நிலை. தமிழீழத் தனியரசு அமைத்துக்கொள்ளும் உரிமையை மறுப்பது, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையையே மறுப்பதாகும். ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையை ஒருபோதும் மறுக்காத, எதிர்க்காத போதும், அதற்காகப் எப்போதும் போராடி வரும் ம.க.இ.க.வைத் தமிழீழத் தனியரசுக்கு எதிரியாகச் சித்தரிப்பது அவதூறுதான்! திட்டமிட்ட சதிதான்!

குழப்பம் எதிலே? ம.க.இ.க.-வினரின் நிலைப்பாடுகளிலா, தமிழினவாதிகளின் பார்வையிலா? 

‘‘தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கை 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே முன்வைக்கப்பட்டு, அதைத்தாம் ஏற்பதாக 1977 தேர்தல்களிலேயே ஈழத் தமிழர்கள் ஒருமனதாக ஒப்புதல் கொடுத்து விட்டார்கள், பிறகு ஏன் ‘தமிழீழத் தனியரசு  அமைத்துக் கொள்வதா,  இல்லையா என ஈழத் தமிழ்த் தேசிய இனம் தீர்மானிக்கட்டும்’ என்று ம.க.இ.க. சொல்ல வேண்டும்? ஆகவே, ம.க.இ.க. தமிழீழத் தனியரசுக்கு எதிரானது” என்று தமிழினவாதிகள் பாய்கிறார்கள். மேலும், சிங்கள மக்கள் அனைவரும் ஈழத் தமிழர்க்கெதிரான சிங்களப் பேரின வெறியும், பௌத்த மதவெறியும் கொண்டுள்ளபோது, குறிப்பாக முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குப் பிறகு தமிழீழத் தனியரசு தானே சரியானது, அவசியமானது என்று  தமிழினவாதிகள் வாதிடுகின்றனர்.

ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்று கூறுவதைத்தான் ம.க.இ.க.-வினர் ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர, தமிழீழத் தனியரசுக்கு எதிரானவர்கள் என்பது உண்மையில்லை. இது நாம் இப்போது எடுக்கும் முடிவல்ல. முன்பே எழுதியிருப்பதுதான். ”அப்படியானால், தமிழீழத் தனியரசுக்காக ஏன் போராடவில்லை, இனிமேலாவது அதற்காகப் போராடுவீர்களா” என்று கேட்டு ம.க.இ.க.-வை மடக்குவதாக எண்ணிக் கொண்டு தமிழினவாதிகள் வாதாடக் கூடும்.

தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கைக்காக இரண்டு காரணங்களுக்காக ம.க.இ.க.-வினர் போராடவில்லை. தமிழினவாதிகளின் பார்வையில் தமிழீழத் தனியரசு என்பதுதான் ஈழ இனச் சிக்கலுக்கு ஒரே கோரிக்கை, ஒரே தீர்வு; அதனால்தான் அதை மட்டுமே முன் வைக்க வேண்டும் என்கிறார்கள். அது குட்டி முதலாளிய வர்க்கத்தின் பகுத்தறிவுக்குப் புறம்பான, குறுந்தேசிய இனவாதப் பார்வையிலானது.

ம.க.இ.க. வினரின் பார்வையில் – இதுதான் அறிவியல்பூர்வமானது, பாட்டாளி வர்க்கப் பார்வையிலானது – தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுக்கிறோம். போலி கம்யூனிஸ்டு கட்சிகள் சொல்லுவதைப் போன்று, செய்வதைப் போன்று (இந்திய தேசியவாதிகளோடு சேர்ந்து கொண்டு, பிரிவினை கோரி காசுமீரத்திலும் வடகிழக்கிலும் நடக்கும் போராட்டங்களை எதிர்க்கிறோமா? போலி கம்யூனிஸ்டு கட்சிகளைப் போன்று எப்போதாவது இந்திய தேசிய ஐக்கியம் – ஒருமைப்பாடு, பிரிவினைவாத எதிர்ப்புக் கூச்சல் போடுகிறோமா?) பிரிந்து போகும் உரிமையை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு வெறுமனே தன்னுரிமைக்காக ம.க.இ.க.வினர் நிற்கவில்லை. ஆகவேதான் தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கையைத் தனியே முன்வைத்துப் போராட வேண்டியதன் அவசியம் இல்லை.

தமிழீழத் தனியரசு கோரிக்கையை மட்டுமே முன்வைத்து, அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்கள், தமிழினவாதிகள். பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் அவ்வாறு செய்ய முடியாது, செய்யக் கூடாது, செய்யவுமில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான்  அந்நாட்டை ஆளும் பாசிச அரசு. அதற்கு எதிராக ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனித்தனிப் பொதுவுடைமைக் கட்சி வைத்து, தனித்தனித் திட்டமும் இலக்கும் வைத்துப் புரட்சி செய்வது; அவ்வாறான தனித்தனி புரட்சிகளில் தேசிய இனங்கள் வெற்றிபெற்று, தனித்தனியே சோசலிசத்தைக் கட்டியமைத்த பின்னரோ, அதற்கு முன்னரோ  ஐக்கியப்படுவது என்று பேசுவது மார்க்சிய – லெனினியப் பார்வையே கிடையாது.

அந்நாட்டை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக ஒரே புரட்சிகரப் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுவது; அக்கட்சி, எல்லா தேசிய இனங்களுக்கும் சமவுரிமையை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை உறுதிப்படுத்துவது; அக்கட்சி ஒடுக்கும் (சிங்களத்) தேசிய இனத்தவரிடையே ஈழத் தமிழர்  தன்னுரிமையையும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனத்தவரிடையே ஐக்கியத்தையும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.

இந்த மார்க்சிய-லெனினியப் பார்வையை மறுப்பதற்காகத் தமிழினவாதிகள் பலவாறு புளுகித் திரிகிறார்கள். ”சிங்களப் பெருந்தேசிய இனத்து மக்களுக்கும்  அவர்களை ஆளும் பாசிச அரசுக்கும் வேறுபாடே கிடையாது; பகை முரண்பாடும் கிடையாது; பெருந்தேசிய இனத்து மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு எதிரானவர்கள்; இலங்கையின் இரு தேசிய இனப் பாட்டாளி மக்களும் ஐக்கியப்பட மாட்டார்கள்; இலங்கையில் ஈழத் தமிழ் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் அமைப்புகள் எதுவும் சிங்களவர் மத்தியில் கிடையாது” ஆகிய தமிழினவாதிகளின் கருத்துக்களைப்  பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் ஏற்கவில்லை. ஏனென்றால், தமிழினவாதிகள் கூறிவரும் மேற்கண்ட கருத்துகளில் உண்மையில்லை.

இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில், நோக்கில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டு நின்றிருக்கிறார்கள். 1983-இல் இருந்து தொடர்ந்து நடந்து வந்த ஈழப்போர் காரணமாக இலங்கையில் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் முற்றியபோது   சிங்கள, தமிழ் மக்கள் அமைதியை வேண்டி நின்றபோது அதையே முன்வைத்து அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டார், சந்திரிகா  குமாரதுங்கே. அவரைத் தேர்ந்தெடுத்து அமைதி, போர்நிறுத்தம், பேச்சு வார்த்தையை ஆதரித்ததில் சிங்களரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள். சிங்கள இன வெறியர்களினால் அம்முயற்சி சிதறடிக்கப்பட்டது வேறு விடயம். 2004 சுனாமியின் பேரழிவுகளை எதிர்கொள்வதில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல்  பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு. தமிழ்த் தேசிய இன மக்களின் மனித உரிமைக்காகவும் இலங்கைப் பாசிச அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடிக் கொல்லப்பட்டவர்களும் பத்திரிக்கையாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் சிங்களவரிடையே உண்டு. ஈழ விடுதலைப் போராட்டங்கள் நடந்த அதே காலகட்டத்தில், இலங்கைப் பாசிச அரசால் ஈழத் தமிழர்கள் மட்டும் கொன்று குவிக்கப்படவில்லை. பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வெள்ளை வேன் வேட்டை இன்னமும் தொடர்கிறது. 75,000 சிங்கள இளைஞர்கள் இந்தக் காலத்தில் காணாமல் போயிருக்கிறார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பு இலங்கைப் பாசிச அரசுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஆகவே, அரசியல் காரணங்களுக்காக சிங்களவரும் ஈழத் தமிழரும் ஐக்கியப்படுவது சாத்தியமே இல்லாதது அல்ல.

 தமிழினவாதிகளின் உருட்டல் மிரட்டல், பொய்மைகள் பலிக்காது

விடுதலைப் புலிகளே தமிழீழத் தனியரசு என்ற தீர்வை பல்வேறு சமயங்களில் மாற்றிக் கொண்டும் கைவிட்டும் உள்ளனர். தன்னலத்துக்காகத் தன்னுரிமைக் கோரிக்கையையே கைவிட்டதும் உண்டு. வெவ்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்து தமிழீழத் தனியரசு கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்ததும் உண்டு.

இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு இணைந்த நிர்வாகசபை அமைக்கும் ஏற்பாட்டை ஏற்றுக்கொண்ட போதும், இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்காக பிரேமதாசா அரசுடன் கூட்டுச் சேர்ந்த போதும், ரணில், சந்திரிகா அரசுகளுடன் சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் நடத்திய போதும் தன்னுரிமைக் கோரிக்கைக்குப் புலிகள் வெவ்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்து தமிழீழத் தனியரசு கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவில்லையா? புலிகளின் இத்தகைய முன்னெடுப்புகளைத் தயக்கமின்றித் தமிழினவாதிகள் ஆதரித்தனர்.

ஆனால், ஈழத் தமிழர் நலனில் தமக்கு மட்டுமே அக்கறை இருப்பதைப் போன்று காட்டிக் கொள்ளும் தமிழினவாதிகள், ஈழ இனச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லவும் போராடவும்  தமக்கே ஏகபோக உரிமை கோரிக் குதிக்கிறார்கள். ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் போராடுவதாக கூறிக் கொண்டு தமிழினவாதிகள் ஏதாவது ஒரு முழக்கத்தை, திட்டத்தை முன்வைத்துப் பல பெயர்ப் பலகை அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள், அதை ஆதரிக்கும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்; இல்லையென்றால் ஈழத் தமிழர்க்கு  எதிரானவர்கள் என்றும் அவதூறு செய்கிறார்கள்.

ஈழத் தமிழர் இனச் சிக்கலுக்கு உடனடியான. விரைவான, நிச்சயமான தீர்வு என்ற பெயரில் அடுக்கடுக்கான பல பொய்மைகளை நம்பவைக்க தமிழினவாதிகள்  எத்தனிக்கிறார்கள். இன முரண்பாடு முதன்மையாகி  விட்ட நிலையில் தமிழ் – சிங்களப் பாட்டாளிகளை ஒன்றுபடுத்திப் புரட்சி செய்வது சாத்தியமேயில்லை; இன உணர்வுமிக்க தமிழர்களைத் திரட்டித் தேசிய விடுதலையை விரைவில் சாதிக்க முடியும்; இராணுவ ரீதியிலும் அரசியல்ரீதியிலும் நிகரற்ற பிரபாகரன் தலைமையில் ஈழ விடுதலை விரைவில் வெற்றிகரமாக முடிக்கப்படும் என்றவாறு எவ்வளவோ சொன்னார்கள். முள்ளிவாய்க்கால் கொலைக் களத்தில் எல்லாம் நொறுங்கிப் போயின.

தவறுகளில் இருந்து நேர்மையான முறையில் படிப்பினைகளைப் பெறுவதற்குப் பதிலாக, பன்னாட்டுச் சதியால்தான் இந்த நிலை என்று மழுப்பிச் சமாளிக்கிறார்கள். முள்ளிவாய்க்காலுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே தீட்டப்பட்டதாகக் கூறப்படும் பன்னாட்டுச் சதியை எதிர்கொள்ள முடியாமல் போனதும் முல்லைத் தீவின் குறுகிய நிலப் பரப்பில் மூன்று லட்சம் ஈழத் தமிழரைக் குவித்துப் பல்லாயிரம் பேரைப் பலி கொடுத்ததும்தான் இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நிகரற்ற  தலைமையா?

பலம் வாய்ந்த சிங்கள பாசிச இராணுவத்தையும் பகைமையான பன்னாட்டு சக்திகளையும் எதிர்கொண்டிருந்த ஈழ விடுதலைப் போரில் பிரபாகரன் தலைமை இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பாரிய தவறிழைத்து விட்டது. இராணுவ ரீதியில்  நீண்டகால மக்கள் யுத்தம் என்ற போர்த்தந்திரத் திட்டத்தை மேற்கொள்ளத் தவறியது. நீண்டகால மக்கள் யுத்தம் என்ற பாதையில் சாத்தியமான மக்கள் ஆதரவு முழுமையாகத் திரட்டப்பட வேண்டும். என்ன இலட்சியமோ அதற்குதான் மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டுமே தவிர, யார் தலைவரோ அவர் மீதான வழிபாட்டுக்கு ஆள் திரட்டக் கூடாது.

சிங்கள பாசிச அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்திகொண்டு நட்புச் சக்திகளை வென்றெடுத்திருக்க வேண்டும். ஒருவேளை உடனடியாக அது சாத்தியமில்லாமல் போனாலும், மக்கள் யுத்தம் நீடிக்கும் நீண்டகாலப் போக்கில் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் முற்றிவரும் சூழலில் அது சாத்தியமே. இலங்கையில் அவ்வாறான நிலைமைகள் கடந்த 30 ஆண்டுகளில் பல முறை வந்துள்ளன. ஆனால், விடுதலைப் புலிகளும் அதன் தலைமையும் ஈழத் தமிழரின் ஆதரவையே குறுந்தேசிய இனவாத அடிப்படையில் கட்டமைத்துக் கொண்டிருந்தனர். சிங்கள பாசிச இராணுவத்துடன் கடும் போரில் ஈடுபட்டிருந்தபோது கூட மறுபுறம் ஈழத் தமிழரிடையே கூட சகோதரப் போரை நடத்திய விடுதலைப் புலிகளும் அதன் தலைமையும் நட்புச் சக்திகளை  வென்றெடுப்பதில் எங்ஙனம் அக்கறை கொண்டிருக்க முடியும்?

பிரபாகரனின், புலிகளின் வீரதீர சாகசங்களைச் சொல்லியே சினிமா நாயகத்தன வழிபாட்டை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள், தமிழினவாதிகள். ஈழத் தமிழர் தன்னுரிமை பெறுவதற்கான அவசியமான, சரியான அரசியல் உத்திகளை முன்வைத்துப் போராடுகின்றன, ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும்.

ம.க.இ.க. தமிழீழத்துக்கு எதிரானது என்ற அவதூறு, ம.க.இ.க.-வின் பல்வேறு போரட்டங்களைப் பல ஆண்டுகளாக நேரில் காணும் தமிழக மக்களிடையே எடுபடாமல் போகவே, ஈழத் தமிழர் இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின் நிலைப்பாடு தமிழீழத் தனியரசுக்கு எதிரானது, சந்தர்ப்பவாதமானது, குழப்பமானது என்று ம.க.இ.க. மீது பலவாறாக அவதூறையும் அவநம்பிக்கையையும் தமிழினவாதிகள் பரப்புகிறார்கள்.

கொழும்புவில் நடந்த பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
இராஜபக்ஷே அரசின் ஊழல்கள், மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் லசந்தா விக்கிரமதுங்கே, ராஜபக்ஷே கும்பலால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்தும், பத்திரிக்கை சுதந்திரத்தை வலியுறுத்தியும் இலங்கை பத்திரிகையாளர்கள் கொழும்பு நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம் (உள்படம்) லசந்தா விக்கிரமதுங்கே.

ஆனால், ஈழத் தமிழர் இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின்  நிலைப்பாட்டில் குழப்பமோ, சந்தர்ப்பவாதமோ கிடையாது. மிகமிகத் தெளிவாகவே உள்ளது. அது தமிழினவாதிகளின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டிருக்கிறது, அவ்வளவுதான்! தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை ம.க.இ.க.-வினர் ஏற்கும் வரையும்  தமிழினவாதிகளின் தவறுகளையும் துரோகத்தையும் பிழைப்புவாதத்தையும் ம.க.இ.க.-வினர் எதிர்த்து அம்பலப்படுத்தும் வரை அவர்கள் இப்படித்தான் செய்வார்கள். உண்மையில் இப்படிச் செய்வது மற்றவர்களை உருட்டி மிரட்டி (பிளாக்மெயில் செய்து) தமது நிலைப்பாடுகளை ஏற்கச் செய்யும் ரௌடித்தனம்.

ஈழத் தமிழர் முன்புள்ள தெரிவுகள்

எப்போது, எப்படி, என்ன அரசியல் நிலைமைகளில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைகிறது என்பதைப் பொருத்து  தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்வதா, இல்லையா என ஈழத் தமிழ் தேசிய இனம் தீர்மானிக்கும். நாம் ஏன் இவ்வாறு கருதுகிறோம், அது ஏன் சரி என்பதைப் பலமுறை சொல்லியாகி விட்டது; மீண்டும் இங்கே ஒருமுறை  சொல்கிறோம்.

தமிழினவாதிகள் தங்கள் இலட்சியமாகச் சொல்லிக்கொள்ளும் ”தமிழீழத் தனியரசு” மீது அவர்களுக்கு உண்மையில் நம்பிக்கையோ, அக்கறையோ துளியும் கிடையாது. அதனால்தான் அதை அடையும் பாதையைப் பற்றியும், அதை அடைந்தாலும் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றியும் பேச மறுக்கிறார்கள்.

ஒன்று, சிங்களப் பேரினத்துக்கு எதிராக ஆயதப் போராட்டத்தின் மூலம் பாசிச சிங்கள இராணுவத்தையும் அரசையும் வீழ்த்தி, தமிழீழத் தனியரசைப் பிரகடனம் செய்ய வேண்டும். பிரகடனம் செய்தால் மட்டும் போதாது; சர்வதேச சமூகம் இல்லையானாலும், பிற ஒரு சில நாடுகளாவது அதை அங்கீகரிக்க வேண்டும். இதற்காகத்தான் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முப்பது ஆண்டுகளாக நடந்தது. அதன் முடிவும் அனுபவமும் என்னவென்று அனைவரும் அறிவோம். மீண்டும் ஒரு படை கட்டி தமிழீழத் தனியரசுக்கான போர் கனவிலும் நடைபெறாது என்று சொல்லத் தேவையில்லை. (புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் புளுகித் திரிவது போல,  தப்பித்துத் தலைமறைவாக உள்ள பிரபாகரனும் பிற புலிகளும் ஒருவேளை திரும்பி வந்து மீண்டும்  ஈழ விடுதலைப் போர் தொடுக்கலாமோ என்னவோ).

இரண்டு, புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் திராவிடக் கட்சிகளும் முயற்சிக்கும் வகையில் இவர்கள் நடத்தும் போராட்டங்கள், விண்ணப்பங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து இந்திய அரசோ அல்லது இவர்களில் ஒரு பிரிவினர் நம்புவது போன்று மோடி பிரதமராகியோ இந்திய ஆட்சியாளர்களிடம் ஈழ ஆதரவு நிலை உருவாகி அல்லது அமெரிக்கத் தலைமையிலுள்ள சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்களின் துயரம் கண்டு நெக்குருகி பொதுவாக்கெடுப்புக்கான, அதாவது ஈழத் தமிழருக்குத் தன்னுரிமைக்கான வாய்ப்புக் கிட்டலாம்; அதாவது,  இவர்கள் நடத்தும் வேட்டையில் கொம்புடன் கூடிய முயலைப்  பிடிக்கலாம் என்கிறார்கள்.

மூன்று, சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறி பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்து இலங்கையில் ஒரு ஜனநாயக அரசு அமைந்து, அது ஈழத் தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஏற்க வேண்டும். இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளும் வர்க்க முரண்பாடுகளும் மிகவேகமாக முற்றி வரும் சூழலில் புலிப் பூச்சாண்டியைக் காட்டியே சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறியில் சிங்கள மக்களை நீண்ட காலத்துக்கு பாசிச இராஜபக்சே கும்பல் தனது அதிகார ஆதிக்கத்தில் இருத்தி வைத்திருக்க முடியாது என்பதையே அங்குள்ள நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் வீரர்களையும் துருப்பிடித்த ஆயுதங்களையும் கொண்டிருந்த சிங்கள இராணுவம் இன்று நான்கு இலட்சம்  வீரர்களையும் அதிநவீன ஆயுதங்களையும்  கொண்ட முப்படைகளையும் பெற்று, உலகின் பெரிய இராணுவங்களில் ஒன்றாகி விட்டது. சிங்கள இராணுவம் மட்டுமல்ல, இலங்கை அரசின் எல்லா உறுப்புகளிலும் பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பலின் ஆதிக்கம் நிறைந்து விட்டது. அதற்கு எதிராகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அம்மக்கள் எவ்வளவு பெரிய மக்கள் சக்தியைத் திரட்டினாலும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவின்றி பாசிச இராஜபக்சே கும்பலின் அதிகார ஆதிக்கத்தை வீழ்த்த முடியாது. அதே போல, சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவின்றி ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் என்னதான் போராடினாலும்  தமது உரிமைகளைப் பெறவும் முடியாது. இது யாருடைய விருப்பங்களுக்கும்  அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தம். நாம் கூறுவது ஆளும் வர்க்கங்கள் சொல்லுவதைப் போல சுரண்டலுக்கான, அம்மக்களை ஒடுக்கி வைப்பதற்கான சமனற்ற கட்டாய ”ஒற்றுமையல்ல’’. சம உரிமை அடிப்படையிலான, ஜனநாயக முறையிலான ஒற்றுமை. பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பல் ஆதிக்கத்தைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் பங்குபற்றியதற்கு ஈடாகவும் முன்நிபந் தனையாகவும் ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் தமது உரிமைகளாகக் கோர முடியும். இதைத்தான் ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகள் (அவை சிறியவையானாலும்) தமது பாதையாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு, இயக்கங்களைக் கட்டமைத்து வருகிறார்கள். இவ்வாறான பாதையைத்தான்  ம.க.இ.க.-வினர் ஆதரிக்கின்றனர்.

ஆனால், இதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றவை, சிங்களவருக்குச் சாதகமானவை, தமிழீழத் தனியரசை நிராகரிப்பதற்குச் சொல்லப்படும் சாக்குப்போக்குகள் என்று தமிழினவாதிகள் வாதிடுகின்றனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தனைக்கும் பிறகு, சிங்கள அரசு ஈழத் தமிழர்களின்  உரிமைகளைச் சிறிதும் ஏற்க மறுக்கும் நிலையில், எஞ்சிய பல்லாயிரம் ஈழத் தமிழர்களும் முள்வேலி முகாமுக்குள், இராணுவக் கொடுங்கோன்மையின் கீழ் வதைபடும் நிலையில் தமிழீழத் தனியரசுக்கும் குறைவான எதையும் பேசுவது துரோகம் என்று குதிக்கிறார்கள்.

தமிழினவாதிகள் மேலே தொகுத்துச் சொல்லும் இதே நிலைமைகளின் காரணமாகத்தான், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தாமல் ஈழச் சிக்கலில் ஒரு அடி கூட முன்வைக்க முடியாது; அதைத் தூக்கி எறிந்து, சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க.- வினர்  ஏற்கின்றனர்.

ஆனால், இந்த நிலைமைகளில் தமிழீழத் தனியரசை அடைவதற்கானதென்று தமிழினவாதிகள் தெரிவு செய்துகொண்டுள்ள தீர்வும் பாதையும் அரசியல் ரீதியில் பாமரத்தனமானது, விடலைத்தனமானது. ஈழத் தமிழருக்கு இழைக்கப்படும் அநீதி, அவர்கள் மீதான இன ஒடுக்குமுறையின் கடுமை, அவர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகள், துன்ப துயரங்கள், இன்றைய அவலநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஈழத் தமிழினச் சிக்கலுக்கான தீர்வையும் அதை அடைவதற்கான பாதையையும் தெரிவு செய்து  இயக்கத்தைக் கட்டமைத்து விட முடியாது. அப்படிச் செய்ய முயலுவது வெறும் கவர்ச்சிகரமான வாய்ச் சவடாலாகவே இருக்கும்.

போரில் வெற்றி பெற்ற எந்தவொரு அரசும் தோற்றுப் போனவர்களுக்கு (என்னதான் நியாயமானது என்றாலும்) சம உரிமைகளும் சலுகைகளும் வழங்கியதாக வரலாறே கிடையாது. போரில் தோற்றுப் போனவர்கள்தாம் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கு ஈடாக உரிமைகளையும் சலுகைகளையும் தங்களையும் கொடுத்தாக வேண்டும். இவை நீதி, நியாயத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. வென்றவருடைய பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுதான் இன்றைய ஏகாதிபத்திய உலக நியதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவர்களைப் போல சண்டப் பிரசண்டமாகச் சவடாலடிக்கும் தமிழினவாதிகள் பின்வரும் இந்தச் சாதாரண உண்மையைக் கூட பார்க்கவும் ஏற்கவும் மறுக்கிறார்கள்.

இலங்கை பாசிச இராஜபக்சே அரசுக்கும் – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து முடிந்த போரில் வென்றுள்ளது, பாசிச இராஜபக்சே தரப்பு. தோற்றது, ஈழத் தமிழர் தரப்பில் நின்று போரிட்ட புலிகள். வென்ற பாசிச இராஜபக்சே தரப்பு, தோற்ற ஈழத் தமிழர் தரப்புக்கு சம உரிமைகளுக்கும் அதிகாரப் பகிர்வுகளுக்கும் ஒப்புக்கொள்ளும் என்று ஈழத் தமிழர்கள் எதற்காக, எப்படி எதிர்பார்க்கலாம்? சரணடைந்த புலிகளைப் படுகொலை செய்து குவித்த பாசிச இராஜபக்சே என்ன நீதிமானா? அவன் ஈழப் போர் வெற்றியின் ஆதாயங்களை அறுவடை செய்து கொள்ளவே செய்வான். பாசிச இராஜபக்சே கும்பலின் அரசு அதிகாரத்தை வீழ்த்தாமல் ஈழத் தமிழருக்கு சம உரிமை, அதிகாரப் பகிர்வு, தமிழீழத் தனியரசு எதையும் அடையவே முடியாது. இந்திய அரசு உட்பட அமெரிக்கத் தலைமையிலான சர்வதேச சமூகத்துக்குத் தமது போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து இவற்றை அடைய முடியும் என்று நம்பச் சொல்லுகிறார்கள் புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும். ஆனால், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்து இலங்கையில் ஒரு ஜனநாயக அரசு அமைந்து, அதன் மூலம்தான் ஈழத் தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை நிலைநாட்ட முடியும்; ஈழத் தமிழருக்கு சம உரிமை, அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல, அந்த நிலையிலும் அவசியமானால் தமிழீழத் தனியரசு அமைத்துக்கொள்ளும் பலத்தையும் அவர்கள் பெற முடியும்.

ஆகவே, புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் ஈழத் தமிழர் விடுதலைக்கு அடையவே முடியாத வழியை மீண்டும் முன்வைக்கிறார்கள் . ஆனால், ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் மீண்டும் ஒரு முறை இவர்களிடம் ஏமாற மாட்டர்கள்.

-ஆர்.கே.
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
_________________________________

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – மு கோபி சரபோஜி

1

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 10 – கோபி சரபோஜி

ப்பொழுது தான் ப்ரீ கேஜி, எல் கேஜி, யு கேஜி என்று வரிசை இருக்கிறது. அப்பொழுது அப்படி இல்லை. “காதைத் தொடு…..கை எட்டுச்சா பள்ளியில் சேர்ந்து கொள்.” அவ்வளவு தான்.

முதன் முதலில் வீட்டை விட்டு பள்ளி என்ற புதிய இடத்திற்கு வரும் குழந்தைக்கு பயம் என்பது இல்லாமல் இருந்தால் மட்டுமே அந்த குழந்தை தொடர்ந்து வர விரும்பும் என்ற முக்கியத்துவத்தை அறிந்திருந்தவர் என் முதல் வகுப்பு ஆசிரியை செளந்தரவள்ளி அவர்கள். இத்தனை வயதிற்கு பின்னும் அந்த வயதின் சில நினைவுகளையும், சந்தோசங்களையும் சொல்ல முடிகிறதென்றால் அதற்கு காரணம் அவர்கள் தான். ’பேசாதே’ என்று ஒரு போதும் அவர்கள் வகுப்பறையில் சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஒரு கதையை சொல்லி விட்டு அதை மறுநாள் எங்களை அவர் பக்கத்தில் நிறுத்தி கையால் அணைத்துக் கொண்டு சொல்லச் சொல்வார். ஒரு டீச்சர் என்ற பயமே இல்லாமல் அவர் அருகில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்வோம், சில நாள் எங்களையே சொல்லச் சொல்வார். வகுப்பறைக்குள் ஒரு வட்டம் போட்டு ஐந்தைந்து பேராக பிரித்து உட்கார வைத்து விளையாடச் சொல்வார். மதிப்பெண்கள் தருவார். சின்ன பொம்மைகள் பரிசாக கிடைக்கும். வகுப்பறையே விளையாடும் இடமாக தான் எங்களுக்கு இருந்தது. நண்பர்களோடு விளையாடுவதற்காகவே பள்ளிக்கு வருவோம். விளையாடும் போது கீழே விழுந்து விட்டால் அவரே கிணற்றடிக்கு அழைத்து சென்று கழுவி விட்டு அன்று முழுவதும் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வார். அப்படி ஒரு நாள் விளையாடும் போது நான் கீழே விழுந்து சில்லு மூக்கை உடைத்துக் கொண்ட போது என் சட்டையை கழற்றி, அவரே அலசி பாடவேளை முழுவதும் கால் சட்டையோடு வகுப்பறையில் இருக்க அனுமதித்தவர். (அப்போது நான் போட்டிருந்த சட்டையின் நிறமும், டிஸைனும் கூட இன்றும் என் நினைவில் இருக்கிறது).

அடுத்து என் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் முனியாண்டி. எனக்கு வீட்டில் தந்தையாய், பள்ளியில் ஆசிரியராய் இருந்தவர். அவர் பணிபுரிந்த பள்ளியில் படித்ததாலும், மற்ற ஆசிரியர்களுக்கு அவர் சீனியர் என்பதாலும் என்னை எல்லோரும் ”அண்ணன் மகன்” என்றே அழைப்பார்கள். எல்லா ஆசிரியர்களுக்கும் செல்லப் பிள்ளையாக வலம் வந்த போது என் தவறுகளை அடித்துத் திருத்திய முதல் மற்றும் கடைசி ஆசிரியர்! வகுப்பறையில் எல்லோரையும் போல நானும் அவருக்கு ஒரு மாணவன் மட்டுமே. புத்தகங்களில் கீறுவது, நோட்டில் பேப்பரை கிழித்து எழுதுவது என்ற இரண்டு விசயங்களும் அவருக்கு பிடிக்காது. வாராவாரம் வகுப்பில் உள்ள எல்லோருடைய நோட்டு புத்தகங்களையும் பார்வையிடுவார். அப்படி பட்ட பார்வைகளில் பலநேரம் சிக்கி சின்னாபின்னமாகி விடுவோம். ஆனால் அன்று அவர் கற்று தந்த அந்த பழக்கம் இன்றும் நூல்களை வாசிக்கும் போது படித்த பக்கங்களை அடையாளம் அறிந்து கொள்ள அதன் மூலையை மடக்காமல் சிறு அட்டையை பயன் படுத்தும் பழக்கத்தை எனக்கு உருவாக்கித் தந்திருக்கிறது. பள்ளியில் நடைபெறும் ஆண்டு விழாக்களில் பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் பேசவும், எழுதவும் கட்டுரைகள் தயாரித்து கொடுப்பார். பேச்சுப்  போட்டி எனக்கு சரியாக வராது என நான் ஒதுங்கி நின்ற போது கட்டுரை போட்டிக்கு வா என அழைத்து என்னை பங்கெடுக்க வைத்தவர். அன்று அவர் கொடுத்த நம்பிக்கை தான் என்னை இன்று இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராக்கி உள்ளது. என்னையும், என்னைப் போல மாணவர்கள் பலரையும் பேச்சு, கட்டுரை போட்டிகளுக்காக மேடை ஏற்றியவர்.

சேதுபதி அரசு கலைக்கல்லூரி

அடுத்து என் ஆறாம் வகுப்பு ஆசிரியர் ஜெகதீசன். நூலகம் என்ற ஒன்றை எங்களுக்கு அறிமுகப்படுத்தியவர். நூலகத்திலிருந்து சில நூல்களை எடுத்து கொடுத்து இவைகளையும் படியுங்கள் என அறிவுறுத்தியவர். மாதம் ஒருமுறை நீதி போதனை வகுப்பில் படித்த நூலில் இருந்து விசயங்களை பேசச் சொல்லி எல்லோரையும் கேட்க வைப்பார். “அடுத்தவர் எழுதி தருவதை பேசாதே, எழுதாதே. நீயே தயார் செய்து கொண்டு வா. நான் திருத்தி சரி செய்து தருகிறேன்” என்பார். என் கட்டுரைப் போட்டிகளுக்கான கட்டுரைகளை நீயே தயார் செய் என சொல்லி அதற்கான நூல்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து கொடுப்பார். அப்படி எழுதி கொடுக்கும் கட்டுரைகளை திருத்தம் செய்து தருவார். போட்டிகளில் பங்கு பெறும் மாணவர்களுக்கெல்லாம் அவர் தான் ஆதர்ச குரு.

என் பள்ளி வாழ்க்கையில் எனக்கு மட்டுமல்ல எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பிடித்த டீச்சர் ஜெமிலா. அறிவியல் பாடம் சொல்லித்தந்தவரிடம் கணக்கு பாடத்திற்கு நானும், என் நண்பர்களும் டியூசன் போனோம். அவர் கணவர் பெயர் சாகுல் ஹமீது. வேறோரு பள்ளியில் பத்தாம் வகுப்பு கணித ஆசிரியராய் இருந்ததால் அவரிடம் டியூசனுக்கு சென்ற என் அண்ணனோடு நானும் சென்றேன். என்னை போலவே என் வகுப்பு நண்பர்களும் வந்தனர். காரணம், எங்கள் கணக்கு வாத்தியார் இராமசாமி. அவர் தான் பள்ளியின் தலைமை ஆசிரியர். இரண்டாம் வாய்ப்பாட்டை எட்டாம் வகுப்பில் மனனம் செய்தவன் நானாகதான் இருப்பேன். கணக்கு வாத்தியாருக்கு பயந்து கணக்கு படிக்க ஜெமிலா டீச்சர் வீட்டிற்கு போன என்னை தன் குழந்தையைப் போல அருகில் அமர்த்தி தலை கோதி, மடி சாய்த்து வார்த்தெடுத்தவர். என்னை மிரள வைத்து கொண்டிருந்த கணிதத்தை கனிவாய் கற்றுத் தர தன் கணவரிடம் சிபாரிசு செய்வெதோடு தானும் கணித பாடம் நடத்துவார். பத்தாம் வாய்ப்பாடு வரை சரளமாக அந்த வருடமே என்னால் சொல்ல முடிந்தது கண்டு கணித ஆசிரியரே அசந்து போனார். எனக்கு மட்டுமல்ல பல மாணவர்களுக்கும் கணித பயத்தை போக்கியவர்.

அதுவரை தனியார் பள்ளியில் படித்து விட்டு முதன் முதலாக அரசு பள்ளிக்கு பத்தாம் வகுப்பிற்கு மாறி வந்த போது என் பள்ளி சேர்க்கைக்காக வாதடிய மங்களநாதன் ஆசிரியர் என் வாழ்வில் என்றும் நினைவில் நிற்பவர். சொந்த ஊரில் குடிவந்ததால் அவ்வூரில் இருக்கும் ஒரே அரசுப் பள்ளியில் சேர வேண்டிய கட்டாயம். “பொதுத் தேர்வு என்பதால் பத்தாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ள முடியாது. அதுவும் தனியார் பள்ளியிலிருந்து வருபவனை சேர்க்க முடியாது” என்று அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மறுத்து விட்டார். துணை தலைமை ஆசிரியராக இருந்த மங்களநாதன் சார் என் சூழ்நிலை, ஒன்பதாம் வகுப்பில் நான் எடுத்திருந்த மதிப்பெண்கள், நன்னடத்தை சான்றிதழ் ஆகியவைகளின் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளலாம் என எனக்காக வாதாடி தன் வகுப்பிலேயே சேர்த்துக் கொண்டார். எப்படி பாடங்களை படிக்க வேண்டும், அதை தேர்வில் எப்படி எழுத வேண்டும் என்ற சூட்சுமங்களை எங்களுக்கு போதித்தவர். பொதுத் தேர்வை மிக எளிமையாக அணுக வைத்தவர். ”உன்னை சேர்க்க மறுத்தவர் அப்படி செய்ததற்காக வருந்த வேண்டுமானால் நீ இந்த பள்ளியில் முதல் மாணவனாக வரவேண்டும்” என பார்க்கும் நேரமெல்லாம் அறிவுறுத்தி அந்த இலக்கை அடையவும் வைத்தவர். அந்த வருட பொதுத் தேர்வில் பள்ளியின் முதல் மாணவனாய் வந்து என்னை சேர்க்க மறுத்தவரிடமே பாராட்டு பத்திரம் பெறும் அளவுக்கு எனக்கு ஊக்கமளித்தவர். வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாய சிறப்பு வகுப்புகளை நடத்துவார். டியூசன் என்பதே கிடையாது. என்னையும் என்னோடு படித்த இன்னொரு பெண்ணையும் 400 மதிப்பெண்களுக்கு மிக அருகில் வர வைத்தவர். அவரின் வழிகாட்டுதலில் பல மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்கினோம். இன்று அப்பள்ளி மேல் நிலைப்பள்ளியாக மலர்ந்துள்ளது.

எனக்கு வகுப்பாசிரியர்களாக இருந்த இவர்களைத் தவிர தனி பாடங்கள் எடுக்க வந்த ஆசிரியர்களும் என்னை நெறிப்படுத்தி, நேர்படுத்தினார்கள். என் ஏழாம் வகுப்பு கணித ஆசிரியர் நெய்னா முகம்மது. உரத்த குரலில் மேடையில் பேச என்னை பழக்கியவர். என் முதல், கன்னிப் பேச்சுக்கு மேடை தந்தவர். என் எட்டாம் வகுப்பு ஆங்கில ஆசிரியை அலிஸ். இன்றும் என் எழுத்துக்களின் அழகை எவரேனும் பாராட்டினால் அதற்கு முதல் காரணமாக இருந்தவர். எழுத்து அழகாய் இருப்பதாய் மற்ற ஆசிரியர்கள் பாராட்டிய போது பிசிறின்றி இன்னும் அழகாய் கோடு இல்லாத பேப்பரில் எப்படி எழுத வேண்டும் என்று பயிற்சி தந்தவர். என் பத்தாம் வகுப்பு தழிழாசிரியர் இராமன். தமிழில் அதிகம் புழக்கத்தில் இல்லாத சில தமிழ் சொற்கள் எனக்கு தெரிகிறதென்றால் அதற்கு காரணமானவர். பாடங்களை நடத்தும் போது ஒரு வார்த்தையோடு மட்டும் நிறுத்த மாட்டார். அதற்கு பதில் புழக்கத்தில் உள்ள வேறு பல வார்த்தைகள், அவைகள் தரும் அர்த்தங்கள் பற்றியும் சொல்வார். இன்னொருவர் என் பத்தாம் வகுப்பு வரலாற்று ஆசிரியர் செந்தூர் பாண்டியன். என்னை பள்ளியில் முதலில் சேர்க்க மறுத்த தலைமையாசிரியர். வரலாறு என்பது பாடநூல்களுக்கு வெளியே சுவராசியமானது என சொல்லிக் கொடுத்தவர். உலக நாடுகளைப் பற்றிய தனித் தொகுப்புகளை அப்பொழுதே வாசிக்கத் தந்தவர். பல தலைவர்களின் வரலாற்று நூல்களை கொடுத்து வாசிக்கச் சொன்னவர்.

அடுத்து முகைதின் அப்துல்காதர் என்ற என் பதினொன்றாம் வகுப்பு ஆசிரியர். விலங்கியல் பாடம் எடுத்தவர். எங்கள் பைகளில் விலங்கியல் பாட புத்தகம் இல்லாமல் போனதற்கு முதல் காரணமானவர். மொட்டை மனப்பாடம் செய்யும் பழக்கத்தை எங்களிடமிருந்து வெட்டி எடுத்தவர். எனக்குத் தெரிந்து அன்று நடத்த வேண்டிய பாடத்தை முதல் நாளே குறிப்பெடுத்துக் கொண்டு வந்து பாடம் நடத்திய ஆசிரியர். கையில் ஒரு சிறு குறிப்பு கொண்டு வருவார். பாடத்திற்கான படத்தை போர்டில் வரைவார். அதை பார்த்து விளக்கம் சொல்வார். பின்னர் ஒரு மாணவனை எழுப்பி சொல்லச் சொல்வார். அதன் பின் நோட்டில் அவரவர் புரிந்து கொண்டதை எழுதிக் கொள்ளுங்கள் என்பார். வார இறுதியில் அந்த பாடத்தில் தேர்வு வைத்து தவறுகளை சுட்டிக் காட்டுவார். விலங்கியல் பாடத்தை விளங்கும் வகையில் நடத்தியவர் என்றே சொல்லலாம். வீட்டில் போய் படிக்க வேண்டிய அவசியமே இருக்காது. பிற்காலத்தில் கல்லூரியில் விருப்பப் பாடமாக விலங்கியலை எந்த யோசனையுமின்றி தேர்வு செய்தேன் என்றால் அதற்கு காரணம் முகைதின் அப்துல்காதர் சார் தான்!

பள்ளிப்படிப்பை முடித்து விட்டு கல்லூரிக்கு வந்தேன். நான் படித்த காலத்தில் இப்பொழுது போல் நிறைய கல்லூரிகள் எங்கள் ஊரில் இல்லை. ஒரே ஒரு அரசு கல்லூரி மட்டும் தான். தனியார் கலைக்கல்லூரி என்றால் மதுரைக்கு தான் போக வேண்டும். நான் படித்த அரசு கல்லூரியில் என்னைக் கவர்ந்தவர் என் துறைத் தலைவர் (தாவரவியல்) பேராசிரியர் சந்திர சேகரன். “பஞ்சுமிட்டாய்” என்ற பட்டப்பெயருடன் கல்லூரி முழுக்க வலம் வந்தவர். என் சீனியர்களில் பலரும் அவரை ”அப்பா” என்று தான் அழைப்பார்கள். எல்லா துறை மாணவர்களிடமும் சகஜமாக பழகுவார். மேல்நிலைக்கல்வி வரை தமிழில் படித்து விட்டு கல்லூரியில் அறிவியல் பாடத்தை ஆங்கிலத்தில் எடுத்து விட்டு படிக்க சிரமப்பட்ட என்னைப் போன்ற பலருக்கும் தமிழ் வழியில் படித்தும் பட்டம் வாங்க முடியும் என்ற நம்பிக்கையை தந்தவர். ஆங்கிலத்தில் வகுப்பெடுப்பார். வகுப்பறையில் வெறும் குறிப்புகளை மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதிப்பார். அதன் பின் ஆங்கிலம், தமிழில் அது சார்ந்து கல்லூரி நூலகத்தில் இருக்கும் நூல்களை பட்டியலிட்டு அதிலிருந்து நோட்ஸ் எடுத்துக்கொள்ள சொல்வார். சில சமயங்களில் சில பாடங்களுக்கு தமிழ் வழி நூல்கள் இல்லை என்றால் அவரே கைப்பட தமிழில் எழுதி பிரதி எடுத்து வந்து தமிழ் வழி மாணவர்களுக்கு தருவார். ஆறுமாதம் காலையிலும், அடுத்த ஆறுமாதம் மாலையிலும் கல்லூரி நடைபெறும். அதனால் பாடங்களை முடிக்க முடியாமல் பேராசிரியர்கள் சிரமப்படுவார்கள். அதிலும் இவர் பாடத்தில் முடிக்கப்படாதவைகள் எக்கச்சக்கமாய் இருக்கும். அப்படி முடிக்காத பாடங்களை சிறப்பு வகுப்புகள் நடத்தி முடிப்பார். அச்சமயங்களில் சாப்பாடு, டீ, பலகாரங்களை அவருடைய கணக்கில் கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடையில் வாங்கி கொள்ளச் சொல்வார். சில மாணவர்களுக்கு சிகரெட்டும் உண்டு. ”வழி காட்டுவது மட்டுமே என் பணி. பயணிக்க வேண்டியவன் நீ”. இந்த ஒற்றை வாக்கியத்தை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருப்பார். பகுதி நேரமாய் நடத்தப்பட்ட அரசுக் கல்லூரியில் தமிழ் வழியில் படித்து அறுபது சதவிகிதத்திற்கும் மேல் எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை தந்து கொண்டே இருந்தவர். அந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அவரின் பல மாணவர்கள் இன்று ஆசிரியப் பணியில் உள்ளனர்.

எங்கள் மொழிப்பாட பேராசிரியர்களில் நாங்கள் உயர்வாய் மதித்து போற்றிய பேராசிரியர் ஆங்கில வகுப்பு எடுத்த முருகேசன். வகுப்பறையில் பாடங்களை நடத்தும் நேரத்தை விட வாழ்க்கைக்கான விசயங்களை பேசுவதற்கு தான் அதிக நேரம் செலவழிப்பார். வெறுமனே வகுப்புகளை கடத்தி விடுவதற்கும், பாடப் புத்தகங்களை மனனம் செய்ய வைப்பதற்கும் நான் தேவையில்லை. தேடலும், அதைக் கண்டடைவதற்கான வழிகளையும் வகுத்து தருவதற்கே நான் உங்களை நோக்கி வர விரும்புகிறேன். வகுப்பறையை தேடலின் தீவிர களமாக மாற்றித்தராமல் வெறும் தேர்வுகளின் மேய்ச்சல் களமாக வைத்திருக்க நான் விரும்பவில்லை. வெற்று ஆசிரியர்களிடம் நீங்கள் பாடம் படிப்பதற்கு பதில் பாடபுத்தகங்களோடு வகுப்பறையை விட்டு வெளியேறி விடுங்கள். அது குறைந்த பட்சம் உங்களை இந்த நிலையிலேயே இருத்தாமல் கொஞ்சம் நகர்ந்து போக வைக்கும். இப்படி வெளிப்படையாக மாணவர்களாக இருந்த எங்களிடம் சொன்னவர். பாட புத்தக அறிவு என்பது ஒரு இடத்தில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டு மட்டுமே. அதை மட்டும் வைத்துக் கொண்டு உங்களின் இறுப்பை தக்க வைத்துக் கொள்ள முடியாது என அடிக்கடி நினைவூட்டிக் கொண்டே இருப்பார். அவரைப் போன்ற ஆசிரியர்கள் மிகவும் அபூர்வம்.

இவர்களால் வார்த்தெடுக்கப்பட்டதால் தானோ என்னவோ என் கல்லூரி படிப்பை முடித்து பத்து ஆண்டுகளுக்கு பின்பும் ஆசிரியப் பணியின் மீது கொண்ட காதலால் மீண்டும் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளேன். இவர்கள் எங்களிடம் பள்ளி, கல்லூரிகளில் காட்டிய ஆர்வம், அக்கறை, ஊக்குவிப்புகள் இன்றைய பிள்ளைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற ஆசையில் “சங்கே முழங்கு – நல்லாசிரியருக்கான டிப்ஸ்” என்ற நூலை தொகுத்து வெளியிட்டு என் ஆசிரிய நண்பர்களுக்கு கொடுத்து வருகிறேன்.

”ஏணிப்படி
ஏன்இப்படி?”

என்று சில ஆசிரியர்களின் தரமற்ற நடத்தைகளை பார்த்து கவிஞன் ஒருவன் கேட்டானே அது போல் இல்லாமல் சில நச்சு ஆசிரியர்களுக்கு மத்தியில் நல்ல ஆசிரியராய் நான் நானாக ஏணியாய், தோனியாய் இருந்து உதவிய என் ஆசிரியர்களை இப்படி கெளரவப்படுத்துவதிலும், நினைவு கொள்வதிலும் பெருமிதம் மட்டுமல்ல கொஞ்சம் திமிரும் கொள்கிறேன்.

இவர்களில் வயது மூப்பினால் சில ஆசிரியர்கள் காலமாகி விட்டனர். சிலர் பணி மாறுதல்களால் வேறு இடங்களுக்கு சென்று விட்டார்கள். சிலர் இன்றும் என் அருகில், தொடர்பில் இருக்கிறார்கள். இவர்களால் நெறிபடுத்தப்பட்டு வார்த்தெடுக்கப்பட்ட என் போன்ற அவர்களுடைய மாணவர்களால் அவர்களின் தன்னலமற்ற சேவைகள் சிறகிலிருந்து பிரிந்த இறகொன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது என்ற பிரமிளின் கவிதையைப் போல எங்கள் வாழ்நாள் முழுக்க நினைவு கூறப்பட்ட படியே இருக்கும்.

– மு.கோபி சரபோஜி
இராமநாதபுரம்.

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் சங்கக் கூட்டம்

0

னைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் 26.11.2013 அன்று காலை 10 மணிக்கு சுருதி திருமண மகாலில் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தோழர்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் “மாநகராட்சியின் 65 வார்டுகளில் உள்ள சாலையோர தரைக் கடைகளை அப்புறப்படுத்தி விட்டு மாற்று இடம் தரும் திட்டம், தரைக் கடைகளை ஒழுங்கு படுத்தி வாழ விடுமா? அல்லது வியாபாரிகளையே ஒழித்திடும் சதித்தனமா?” என்ற தலைப்பில் உறுப்பினர்கள் தங்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகளை எடுத்து கூறியதோடு, தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே தரைக் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், மீறி மாநகராட்சி தரைக் கடைகளை அப்புறப் படுத்த முயன்றால் மொத்த வியாபாரிகளையும் திரட்டி போராடலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

தரைக்கடை வியாபாரிகள் சங்கம்சிறப்புரையாற்றிய சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர்.சேகர் தனது உரையில் தரைக்கடைகளால் போக்குவரத்து, பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு என கூறி தரைக்கடைகளை அகற்ற நினைப்பது அநீதி என்றும், சாரதாஸ், மங்கள் போன்ற பெரிய முதலாளிகளை கொழுக்க வைக்கவும் சிறு தொழில்களையும் தரைக்கடை வியாபாரிகளையும் ஒழித்துக் கட்டும் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளை அமுல் படுத்த வேண்டும் என்ற சதித்திட்டமும் மாநகராட்சியின் நோக்கமாகும் என்றும் தனியார்மயக் கொள்கைகளை முறியடிக்க தேர்தல் பாதையை கைவிட்டு வீதியில் இறங்கி போராட வியாபாரிகள் முன் வரவேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இறுதியாக சங்க உதவிச் செயலர் இலியாஸ் நன்றி கூறினார்.

26.11.2013 அன்று நடைப்பெற்ற தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

  1. திருச்சியில் காலம் காலமாக இயங்கிவரும் தரைக்கடைகளை அப்புறப்படுத்தி மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அனுப்ப முடிவு செய்து மாநகராட்சி போட்ட தீர்மானத்தை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் உகந்த இடங்களை விட்டு வியாபாரிகளை விரட்டியடிக்கும் நோக்கில் மக்கள் நடமாட்டமில்லாத 80 இடங்களை அறிவித்து வியாபாரிகளையும் ஏழை, எளிய வாடிக்கையாளர்களையும் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மாநகராட்சி. இந்த நடைமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும். தற்போது உள்ள இடங்களிலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கோருகிறது.
  2. தரைக்கடைகள்தான் போக்குவரத்துக்கு இடையூறு என்று மாநகராட்சியும் காவல்துறை மற்றும் பிற அரசுத் துறைகளும் திரும்பத்திரும்ப சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானது. உண்மையில் சுவரண்சிங் அவர்கள் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் அளவெடுத்து பெரிய கடை முதலாளிகள்தான் சாலையை கணிசமாக ஆக்கிரமித்துள்ளனர் என்பதைக் கண்டறிந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு பெரிய கடைகள் ஆக்கரமித்துள்ள சாலைகளை மீட்டெடுக்க மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
  3. தரைக்கடை வியாபாரிகள் சங்கக் கூட்டம்மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘நகர்ப்புற தெருவோர வியாபாரிகள் தொடர்பான தேசிய கொள்கை 2009’-ன் படியும் அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையிலும் வியாபாரிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும். அந்த வகையில் பெரு முதலாளிகள் ஆக்கிரமித்துள்ள சாலைகளை உடனடியாக மீட்டு அதில் கிடைக்கும் கூடுதல் இடங்களையும் நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்கித் தர வேண்டும். பல்லாயிரக் கணக்கானோர் புழங்கும் இத்தகைய இடங்களில் மக்களின் சுகாதாரம், அடிப்படைத் தேவைகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை செய்து தர வேண்டும்.
  4. அரசிடம் வேலை கோராமல் தமது முயற்சியிலும் கந்து வட்டிக்கு வாங்கிய காசிலும் வியாபாரம் செய்து நேர்மையாக வாழும் வியாபாரிகளை கிரிமினல்கள் போல் நடத்தி விரட்டுவது, பொருட்களை அள்ளிச் செல்வது, தினசரி மாமூல் வாங்குவது, பொய் வழக்கு போட்டு தண்டம் கட்ட வைப்பது என தொல்லை கொடுத்து வரும் காவல் துறையின் நடவடிக்கைகளை இக்கூட்டம் கடுமையாக கண்டிக்கிறது. அத்துடன் வியாபாரிகளை தங்களுக்குள் மோத விட்டு ரசிப்பது, வியாபாரிகளின் ஒற்றுமையை குலைத்து தமது கேடான நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வது என்ற காவல் துறையின் போக்குகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோருகிறது.
  5. மேற்கூறிய காவல்துறையின் அடாவடித்தனத்துக்கு ஊக்கம் தரும் வகையில் நீதிமன்றமும் தன் பங்குக்கு தரைக்கடை வியாபாரிகள் மீது பொய் வழக்கு போட்டு இத்தனை இலட்சம் தண்டத்தொகை கட்ட வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் இலக்கு நிர்ணயித்து வசூலிக்க வழிகாட்டியதாக அறிகிறோம். ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாக மக்கள் கருதும் நீதிமன்றமே இத்தகைய அடாவடித்தனத்திற்கு துணை போவது மேலும் கொடுமையான செயலாக உள்ளது. இந்த மாதத்தில், அதன் அடிப்படையில் வழக்கமான 8-10 வழக்கு என்பதைத் தாண்டி 70-80 பேர் மீது ஒவ்வொரு சாலையிலும் வழக்கு போட்டுள்ளது காவல்துறை. வழமையாக வழக்கு போடும் தரைக்கடை வியாபாரிகள் மீது மட்டுமின்றி நிரந்தரமான கட்டிடங்களில் கடை நடத்துவோர் மீதும் வழக்கு போட்டுள்ளது காவல்துறை. “கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனா…” என்ற கதையாக உள்ள இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று மாவட்ட நீதிபதியை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
  6. மாவட்ட ஆட்சியாரும் தமிழக அரசும் ஏழை, எளிய வியாபாரிகள் மீதான இத்தகைய நிர்வாக, நீதித்துறை அமைப்புகளின் அடக்கு முறைகளைத் தடுத்து நிறுத்த ஆவன செய்ய வேண்டுன் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
  7. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக உள்நாட்டு சிறு, குறு மற்றும் நடைபாதை வியாபாரிகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் கொள்கையையும் அதற்கு அடிப்படையாக உள்ள தனியார்மய-தாராளமாய-உலகமயக் கொள்கையைக் கைவிட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.
  8. வியாபாரிகளுக்கெதிரான மேற்கூறிய அரசின் கொள்கைகளை முறியடிக்கும் நோக்கில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் சாதி, மதம், பகுதி என்ற குறுகிய கண்ணோட்டங்களை விட்டொழித்து எதிர் வரும் பொது அச்சுறுத்தலை முறியடிக்க ஓரணி திரள வேண்டுமென்று அனைத்து தரப்பு வியாபாரிகள் மற்றும் வியாபார சங்கங்களையும் அறைகூவி அழைக்கிறது.

இவண்,

அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம்,
(இணைப்பு) புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி.

SICKO – மைக்கேல் மூரின் ஆவணப்படம்

2

ந்தப் பூவுலகில் ‘சொர்க்கம்’ ஒன்று இருக்கிறது. உலகுக்கே ‘வழி’ காட்டும் பொருளாதார  அமைப்பு இருக்கிறது.

அந்த சொர்க்கத்தில்

  • மேலும் சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாத நோயாளிகளும், வயதானவர்களும் கையில் சலைன் பாட்டிலோடு நடுத்தெருவில் இறக்கி விடப்படுகிறார்கள்.

    சிகிச்சைக்கு பேரம்
    வெட்டுப்பட்ட விரல்களுக்கு சிகிச்சை அளிக்க பேரம்.
  • வேலை இல்லாத, மருத்துவக் காப்பீடு எடுக்க முடியாத தொழிலாளி, விபத்தில் மூட்டில் ஏற்பட்ட காயத்துக்கு தன் கையாலேயே தையல் போட்டுக் கொள்கிறார்.
  • வெட்டும் எந்திரத்தில் இரண்டு விரல்கள் சேதமடைந்த தொழிலாளியிடம் “துண்டிக்கப்பட்ட நடு விரலை இணைப்பதற்கு $60,000 ஆகும், வெட்டுப்பட்ட மோதிர விரலை சரி செய்ய $12,000 ஆகும்” என்று மருத்துவமனை பேரம் பேசியதைத் தொடர்ந்து, அவர் மோதிர விரலை சரி செய்து கொள்ள நடு விரல், குப்பைத் தொட்டியில் எறியப்படுகிறது.
  • கடும் காய்ச்சலில் அவதிப்படும் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு போன போது, அந்த குழந்தைக்கு எடுக்கப்பட்டிருந்த மருத்துவக் காப்பீடு அந்த மருத்துவமனையில் பரிசோதனைகளுக்கும், மருந்துகளுக்கும் செல்லாது என்பதால் காப்பீடு செல்லுபடியாகும் வேறு மருத்துவமனைக்கு போகச் சொல்லி விரட்டுகிறார்கள். சில மணி நேர தாமதத்தில் அந்த குழந்தை அநியாயமாக உயிரிழக்கிறது.
  • புற்றுநோய் வந்து விட்ட ஒருவருக்கு தேவையான சிகிச்சையை, ‘நிரூபிக்கப்படாதது’ என்று சொல்லி காப்பீட்டு நிறுவனம் நிராகரித்து விட சில வாரங்களுக்குள் அவர் இறந்து விடுகிறார்.
  • வாழ்நாள் முழுவதும் நேர்மையாக உழைத்து 5 குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய தம்பதியினர் வயதான காலத்தில், இதய நோய், புற்று நோய் சிகிச்சைக்கு பணம் கொடுத்து, குடியிருந்த வீட்டை இழக்கின்றனர். இன்னொரு நகரில் இருக்கும் மகளின் வீட்டின் சாமான்கள் போடும் அறை ஒழிக்கப்பட்டு அங்கு குடியேறுகின்றனர்.
  • 79 வயதான முதியவர் ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தரை துடைக்கும், கழிவறை கழுவும் வேலை பார்க்கிறார். அவருக்கும், மனைவிக்கும் மருந்துகள் வாங்க வேண்டுமானால் காப்பீடு வேண்டும். அதற்கு வேலை வேண்டும். அவரது மனைவிக்க்கான வலி நிவாரண மருந்தின் விலை $213 என்று சொல்லப்பட்டதும், வலியை பொறுத்துக் கொள்வதாக மருந்தை மறுத்து விடுகிறார் அவர்.
  • விபத்தில் காயமடைந்து ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்ட பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் கட்டணம் முன் கூட்டியே ஒப்புதல் பெறவில்லை என்று காரணம் காட்டி நிராகரிக்கப்படுகிறது.

இதுதான் அமெரிக்கா, யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா. அமெரிக்க மருத்துவத் துறையின் நிலையைப் பற்றி மைக்கேல் மூர் எடுத்த ஆவணப் படமான “சிக்கோ”வில் மேலே சொன்ன காட்சிகள் இடம் பெறுகின்றன.

தனிநபர் நலம், தனியார் உரிமை, லாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு என்ற சந்தையின் மகத்துவத்தைத் தூக்கிப் பிடிக்கும் அந்த நாட்டில், உலகத்திலேயே வலிமையான வல்லரசின் ஆட்சி நிலவும் அந்நாட்டில் மருத்துவக் காப்பீடு எடுக்க பணம் இல்லாத 5 கோடி மக்களுக்கு மருத்துவச் சேவைகள் மறுக்கப்படுகின்றன. மருத்துவக் காப்பீடு இல்லாமல் மருத்துவம் மறுக்கப்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் 18,000 அமெரிக்கர்கள்  உயிரிழக்கிறார்கள்.

மருத்துவமனையில், அவசர சிகிச்சைகளைத் தவிர மற்றவற்றுக்கு பணம் தருவதாக காப்பீட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த பிறகுதான் சிகிச்சை ஆரம்பிக்கும். காப்பீடு இல்லை என்றால், பணத்தை கட்டி விட வேண்டும்.

அரசியல்வாதிகள்
மருத்துவத் துறை நிறுவனங்களால் விலைக்கு வாங்கப்படும் அரசியல்வாதிகள்.

‘நோயாளிகளுக்கு எவ்வளவுக்கெவ்வளவு குறைவாக மருத்துவ சேவை கொடுக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு நிறுவனத்தின் லாபம் அதிகரிக்கும்’ என்ற விதிக்குள் செயல்படும் மருத்துவ காப்பீட்டு நிறுவனங்கள், முதியவர்கள், பலவீனமானவர்கள், போதிய உடல் எடை இல்லாதவர்கள், அதிக பருமன் ஆனவர்கள், என்று பலருக்கு பல காரணங்களை காட்டி காப்பீடு வழங்கவே மறுக்கின்றன.

மருத்துவக் காப்பீடு எடுத்துள்ள 25 கோடி மக்களுக்கு பல அவசிய மருத்துவ சேவைகளுக்கான ஒப்புதலை நிராகரிக்கின்றன. காப்பீடு செய்யப்பட்டு முறையாக தவணை கட்டுபவர்களுக்கு, நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு அனுமதி மறுக்கின்றன. ‘நோய், காப்பீடு எடுப்பதற்கு முன்னமே இருந்தது’, ‘குறிப்பிட்ட சிகிச்சை நிரூபிக்கப்படாத ஒன்று’ என்று பலவிதமான காரணங்களைக் காட்டி சிகிச்சைக்கு ஒப்புதல் மறுக்கின்றன; இதற்காக பல லட்சம் டாலர் சம்பளத்தில் சிறப்பு மருத்துவர்களை பணிக்கு அமர்த்தியிருக்கின்றன; ஒப்புதல் அளிக்கப்பட்டு வழங்கப்பட்ட பணத்தை ஏதாவது காரணம் கண்டுபிடித்து திரும்பப் பெறுவதற்கும் சிறப்பு ஆய்வாளர்களை நியமித்திருக்கின்றன. ஒப்புதல் அளிக்கப்படும் ஒவ்வொரு மருத்துவ செலவையும் ஒரு “மருத்துவ இழப்பு” என்று அழைக்கின்றன அந்நிறுவனங்கள்.

‘சமூகரீதியாக மருத்துவ சேவை அளித்தால், நிர்வாக ஒழுங்கீனங்கள் அதிகமாகும், காத்திருப்போர் பட்டியல் நீளமாகும், மருத்துவர்களுக்கு போதுமான சம்பளம் கிடைக்காது, அது படிப்படியாக சோசலிசத்துக்கு கொண்டு செல்லும்’ என்று அவதூறு பிரச்சாரங்கள் செய்து, மக்களுக்கான மருத்துவ சேவையை தனியார் மருந்து கம்பெனிகள், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் இவற்றின் கூட்டு கொள்ளைக்கான வக்கிர அமைப்பாக உருவாக்கி வைத்திருக்கின்றது அமெரிக்காவை ஆளும் கார்ப்பரேட் அரசு.

  • அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். கல்லூரி படிப்புக்காக பெரும் தொகை கடன் வாங்கும் அமெரிக்கர்கள், வேலையில் சேர்ந்த பிறகு முணுமுணுக்கக் கூட துணியாத வகையில், ‘வேலை இழந்தால் காப்பீடு இல்லை, மருத்துவ சேவை இல்லை’ என்று அவர்களது சுதந்திரம் பறிக்கப்படுகிறது.
  • நிறுவனம் மூலம் காப்பீடு பெற முடியாதவர்கள் (வேலை இழந்தவர்கள், வேலை இல்லாதவர்கள்), சொந்தமாக காப்பீடு எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றுக்கான பிரீமியம் கட்ட முடியாத 5 கோடி பேர் காப்பீடு இல்லாமல், “மருத்துவ சிகிச்சைக்கான தேவை வந்து விடக் கூடாது” என்று தினமும் பிரார்த்தித்துக் கொண்டு இருக்கின்றனர்.
  • வயதானவர்களுக்கும், ஏழைகளுக்கும் மெடிக்ளெய்ம், மெடிகேர் போன்ற திட்டங்கள் மூலம் அரசு காப்பீடு வழங்குகிறது. மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் விலைகளை பல மடங்கு அதிகரித்து, செலவை காப்பீட்டு நிறுவனங்களிடம் வசூலிக்கின்றன. 10 ஆண்டுகளில் $800 பில்லியன் (சுமார் ரூ 5 லட்சம் கோடி) வரிப்பணம், தனியார் மருந்து நிறுவனங்களுக்கு சேரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • 1990-களிலும், கடந்த 10 ஆண்டுகளிலும் இந்த அமைப்பை சீர்திருத்தும் முயற்சிகள் எதுவும் தனியார் மருந்து நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளின் கொழுத்த லாப வேட்டையில் கை வைக்கத் துணியவில்லை. ஏழைகளுக்கும், முதியோருக்கும் அரசு உதவியாக காப்பீடு வழங்கலாமா, வேண்டாமா என்பது மட்டுமே விவாதமாக இருந்து வருகிறது.
  • பல கோடி டாலர் செலவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் லாபியிங் வேலை செய்கின்றன மருத்துவத் துறை நிறுவனங்கள். அமெரிக்க நாடாளுமன்ற உதவியாளர்கள் 14 பேர் மருத்துவத் துறையில் ஆலோசகர்களாக சேருகின்றனர். மருந்து நிறுவனங்களுக்கு லாபம் தேடிக் கொடுத்த பில் டவுசின் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டுக்கு $20 லட்சம் (சுமார் ரூ 12 கோடி) சம்பளத்தில் தனியார் மருந்து நிறுவனங்களின் கூட்டமைப்பான PhRMAவில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.

சக மனிதனுக்கு, சக குடிமகனுக்கு தேவைப்படும் போது உதவுதல் என்ற சமூக அடிப்படையையே ஒழித்துக் கட்டும் ‘அமெரிக்க கொடுங்கனவின்’ ஒரு வடிவமாக அமெரிக்க மருத்துவத் துறை செயல்படுகிறது.

கனடா
புற்றுநோய் சிகிச்சைக்கு கனடா நண்பரின் உதவி வேண்டும்.

அமெரிக்க எல்லை தாண்டி கனடாவிலும், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் இங்கிலாந்திலும், பிரான்சிலும் செயல்படும் அனைவருக்கும் இலவசக் கல்வி, அனைவருக்கும் இலவச மருத்துவம் போன்ற மக்கள் நல திட்டங்கள் குறித்தும் மைக்கேல் மூர் ஆய்வு செய்கிறார்.

கனடாவுடனான எல்லைப் புற அமெரிக்க மாநிலமான மிச்சிகனில் வசிக்கும் ஏட்ரியன் கேம்பெல் என்ற 22 வயது பெண்ணுக்கு கர்ப்பப் பை வாயில் புற்றுநோய். 22 வயதில் கர்ப்பப்பை புற்று நோய் வரக் கூடாது என்று காப்பீடு நிறுவனம் சிகிச்சை மறுத்து விடுகிறது. தனது 3 வயது குழந்தையுடன் காரில் கனடாவுக்குள் சென்று, அவரது கனடிய நண்பரின் முகவரியை கொடுத்து சிகிச்சை பெறுகிறார் அவர்.

அமெரிக்க மாநிலமான புளோரிடாவில் விளையாடச் சென்ற போது காயமடைந்த லேரி காட்ஃபிரே என்ற கனடியர், அமெரிக்காவில் சிகிச்சை பெற $24,000டாலர் செலவாகும் என்று அறிந்து, கனடா திரும்பி விடுகிறார். கனடாவில் அவருக்கு செலவில்லாமல் சிகிச்சை வழங்கப்படுகிறது. “எனக்கு நோய் வரும் போது மற்றவர்கள் தமது வரிப் பணம் மூலம் என்னை கவனித்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு அதே உதவியை நான் செய்கிறேன். அவரவர் செலவை அவரவர் கவனித்துக் கொள்வது என்ற முறையில் தம்மைத் தாமே பராமரிக்க முடியாதவர்கள் ஒதுக்கப்பட்டு விடுவார்கள். அந்த முறையே நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்கிறார் அவர்.

5 விரல்களும் வெட்டுப்பட்ட பிராட் என்ற தொழிலாளியின் அனைத்து விரல்களும் இலவசமாக, முழுமையாக இணைக்கப்பட்டு குணப்படுத்தப்படுகின்றன. “அவர் மருத்துவமனைக்குள் வரும் போது, சிகிச்சைக்கான மருத்துவச் செலவை அவர் கொடுக்க முடியுமா என்று நாங்கள் கவலைப்பட தேவையிருக்கவில்லை. விதிகள் அனுமதிக்கவில்லை என்று ஒருவரது வெட்டுப்பட்ட விரல்களை இணைக்க மறுக்கும் அமைப்பில் நான் வேலை செய்ய மாட்டேன். சக மனிதர்களை கவனித்துக் கொள்ளும் சுதந்திரத்தைக் கொடுக்கும் அமைப்பில் வேலை செய்வதை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்கிறார் அவரது மருத்துவர்.

இங்கிலாந்து
இங்கிலாந்து தேசிய மருத்துவ சேவை மருத்துவமனையில் எந்த நோயாளியும், எந்த சிகிச்சைக்கும் பணம் செலுத்துவதில்லை.

இங்கிலாந்தில் தேசிய சுகாதார சேவை அமைப்பின் மூலம் அனைவருக்கும், இலவச மருத்துவச் சேவை வழங்கும் திட்டம் 2-ம் உலகப் போருக்குப் பின் ஆரம்பிக்கப்பட்டது. அந்த திட்டத்துக்கு மக்கள் வரிப்பணம் மூலம் நிதி வழங்கப்படுகிறது. “தேசிய மருத்துவ சேவை அமைப்பில் கை வைத்தால் இங்கிலாந்தில் புரட்சி வெடிக்கும்” என்கிறார் டோனி பென் என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். “குடிமக்களை அச்சத்திலும், சோர்விலும் வைத்திருந்தால்தான் அவர்களை ஆள்வது எளிது. படித்த, ஆரோக்கியமான, நம்பிக்கையான குடிமக்களை கண்டு அரசுகள் அஞ்சுகின்றன.”

தேசிய சுகாதார சேவையின் மருத்துவமனையில் எந்த நோயாளியும், எந்த சிகிச்சைக்கும் பணம் செலுத்துவதில்லை.

“நான் மருத்துவமனை கட்டணங்கள் பற்றி விசாரித்தால், நீங்கள் சிரிக்கிறீர்கள்” என்று புகார் சொல்கிறார் மைக்கேல் மூர். “அவசர சிகிச்சை பிரிவில் யாரும் என்னிடம் இப்படி ஒரு கேள்வியை இது வரை கேட்டதில்லை” என்கிறார் மருத்துவமனை ஊழியர். மாறாக, சிகிச்சை முடிந்து வீட்டுக்குப் போக போக்குவரத்து செலவு செய்ய முடியாதவர்களுக்கு மருத்துவமனையே காசு கொடுத்து அனுப்பி வைக்கிறது.

இங்கிலாந்தின் மருந்து கடைகளில் மருத்துவர் பரிந்துரைச் சீட்டு ஒவ்வொன்றுக்கும், அதில் எவ்வளவு விலை உயர்ந்த மருந்து எழுதப்பட்டிருந்தாலும், ஒரே கட்டணம் (சுமார் $10) வசூலிக்கப்படுகிறது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் மருந்துகள் முற்றிலும் இலவசமாக தரப்படுகின்றன.

பிரான்சில், வாரத்துக்கு 35 மணி நேர வேலை, ஆண்டுக்கு 5 வாரம் சம்பளத்துடன் விடுமுறை, இலவச மருத்துவ சேவை, புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்ய அரசு ஊழியர் சேவை (வாரத்துக்கு 2 முறை, ஒரு முறைக்கு 4 மணி நேரம்), இலவச பள்ளிக் கல்வி, இலவச உயர் கல்வி போன்ற சோசலிச சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

ஒரு பிரெஞ்சு குடும்பத்தின் அதிகம் செலவு பிடிக்கும் இனங்கள் என்று பார்த்தால், வீட்டுக் கடன் தவணைக்குப் பிறகு மீன் வாங்கும் செலவு, காய்கறிகள் வாங்கும் செலவு, தயிர் வாங்கும் செலவு என்று அடுக்குகிறார்கள். கல்வி, மருத்துவம்  போன்றவை அவர்கள் செலவு பட்டியலில் இல்லவே இல்லை. தொலைபேசியில் அழைத்தால் வீட்டுக்கே வரும் மருத்துவர் என்ற வசதி கூட பிரான்சில் செயல்படுகிறது.

“பிரான்சில் மக்களைக் கண்டு அரசாங்கம் பயப்படுகிறது. மக்கள் போராட்டங்களை நினைத்து அஞ்சுகிறது, அமெரிக்காவில் மக்கள் அரசாங்கத்தைக் கண்டு பயப்படுகின்றனர். தெருவில் இறங்கி போராட பயப்படுகின்றனர்” என்கிறார் பிரான்சில் வாழும் ஒரு அமெரிக்கப் பெண்.

மருத்துவ சிகிச்சை தேவைப்படும், சிகிச்சை மறுக்கப்பட்ட அமெரிக்கர்கள் சிலரை உலக வர்த்தகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, பின்தங்கிய நாடு என்று அமெரிக்காவால் அவதூறு பிரச்சாரம் செய்யப்படும் கியூபாவுக்கு அழைத்துச் செல்கிறார் மைக்கேல் மூர்.  அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை, தெருவுக்கு ஒரு மருத்துவமனை; அமெரிக்காவில் $120 விலையாகும் மருந்துக்கு இணையான மருந்து கியூபாவில் $ 0.05-க்கு கிடைக்கிறது. இதை அறிந்து, தனது $1,000 முதியோர் ஓய்வூதியத்தில் $120 மருந்து வாங்க முடியாமல் அவதியுறும் அமெரிக்கப் பெண்மணி கண்ணீர் விட்டு அழுகிறார். எப்படிப்பட்ட ஏமாற்று அமைப்புக்குள்  நாம் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்று அரற்றுகிறார்.

சமூக மருத்துவமனைகள், சமூக மருந்து கடைகள் செயல்படும் கியூபாவில் ஒருவருக்கு மருத்துவ சேவை வழங்க ஆண்டுக்கு $251 செலவாகிறது. தனியார் மருத்துவமனை, தனியார் மருந்து நிறுவனங்கள், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க வேண்டியிருக்கும் அமெரிக்காவில் ஒரு நபருக்கு மருத்துவ சேவைக்கு ஒரு ஆண்டுக்கு $7,000 செலவாகிறது. ஆம், மருத்துவ சேவைக்காக வேறு எந்த நாட்டையும் விட அமெரிக்கா அதிகம் செலவழிக்கிறது. ஆனால், கியூபாவில் அமெரிக்காவை விட குழந்தைகள் இறப்பு வீதம் குறைவு, மக்களின் சராசரி வாழ்நாள் அதிகம்.

சரி, அமெரிக்க முதலாளிகள் உலக மக்களை எல்லாம் கொள்ளை அடித்தும் தம் மக்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள், ஐரோப்பிய முதலாளிகள் மக்கள் நல அரசுகளை மக்கள் போராட்டங்களை அடுத்து வேறு வழியின்றி வெறுப்புடன் அனுமதிக்கிறார்கள். இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு என்ன கதி?

நம்ம ஊரிலும் காசைப் பொறுத்துதான் உயிர் வாழும் உரிமை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகள் சீரழிக்கப்பட்டு வருகின்றன. தனியார் மருத்துவமனையில் கட்டணங்கள் விண்ணைத் தொடுகின்றன. இப்போது செயல்படுத்தப்படும் தனியார் மய, தாராள மய, உலக மய மருத்துவம் இவற்றை மேம்படுத்த முடியுமா என்பதற்கான விடை அமெரிக்காவில் இருக்கிறது.

இங்கிலாந்து மருத்துவர்
“4 கார்கள், 40 லட்சம் டாலர் வீடு, ஆடம்பர வாழ்க்கை வேண்டுமென்றால் தனியார் சேவையில் வேலை செய்ய போகலாம்.”

தனியார் மருத்துவ காப்பீடுகள், ஏழைகளுக்கு அரசே காப்பீடு வழங்குவது, அரசு மருத்துவமனைகளை ஒழித்துக் கட்டுவது, தனியார் மருத்துவமனைகளுக்கு தீனி போடுவது என்று இந்த மாதிரியின் எதிர்காலம் இன்றைய அமெரிக்காதான். சோசலிச மருத்துவம், அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற முறையை இன்று வரை பின்பற்றும் ஐரோப்பிய நாடுகளையும் உலகளாவிய கார்ப்பரேட்டுகளின் லாப வேட்டை அமெரிக்க வழியில் செலுத்த முனைகிறது.

அமெரிக்கா போல பணம் உள்ள 1 சதவீதத்துக்கு சொர்க்கமாகவும், பெரும்பான்மை மக்களுக்கு போராட்டமாகவும், நலிந்த பிரிவினருக்கு நரகமாகவும் விளங்கும் எதிர்காலம் வேண்டுமா?

ஆவணப்படத்தில் தேசிய மருத்துவ சேவையில்பணி புரியும் இங்கிலாந்து டாக்டர் சொல்வது போல, “4 கார்கள், 40 லட்சம் டாலர் வீடு, ஆடம்பர வாழ்க்கை வேண்டுமென்றால் தனியார் சேவையில் வேலை செய்ய போகலாம். ஆனால் 1 கார், 1 வீடு, வசதியான வாழ்க்கைக்கு சமூக மயமான சேவையில் வேலை செய்தால் போதும்.”

“மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிக்கு, அவரால் பணம் கொடுக்க முடியாது என்று சேவை மறுக்கும் அமைப்பில் நான் வேலை செய்ய மாட்டேன். தேவையான சிகிச்சையை தேவைப்படுபவர்களுக்கு வழங்கும் தொழில் முறை சுதந்திரம் எனக்கு வேண்டும்” என்கிறார் கனடாவின் மருத்துவர்.

இதுதான் உண்மையான சுதந்திரம். விருப்பப்பட்டதை தின்பது, விருப்பப்பட்டதை நுகர்வது சுதந்திரம் அல்ல. தன்னுடைய பணியை முழுத் திறமையுடன், தேவைப்பட்ட சக மனிதருக்கு பயன்படும்படி செய்யும் சுதந்திரமே மனிதருக்கான சுதந்திரம்.

அதை பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு முதலாளித்துவ உலகம் ஒரு போதும் தர முடியாது.

ஆரம்பம் – வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தியின் மரணக் குறிப்புகள்

16

புனைவின் முன் நியாயக் குறிப்பு: முகநூலில் அறிவால் ஜீவிக்க கூடிய வாளிகள் சிலர் மக்களை அச்சுறுத்தும் ‘பயங்கரவாத’ குறிப்புகளை அவ்வப்போது முன்வைக்கிறார்கள். வாளிகள் லிஸ்ட்டில் இடம் பிடிப்பதை இலட்சியமாகவும், பிழைப்பை காரியமாகவும் கொண்ட சிறுவாளிகள் பலர் இதை மார்கெட் செய்கிறார்கள். நாலும் இரண்டும் எட்டு என்பதைக் கூட நாலில் ஒன்றைக் கழித்து, மூன்றைக் கூட்டி, இரண்டால் வகுத்து, ஒன்றால் வகுத்து, நாலால் பெருக்கி, மூன்றைக் கழித்து………..(ஸ்ப்பஃபா முடியல), கடைசியில் எட்டு என்பதைக் கூட கிசுகிசு குரலில் கீச்சி விட்டு படுத்தி எடுக்கிறார்கள். அதை உங்களுக்கு எடுத்துக் காட்டி எச்சரிக்கவே இந்த புனைவு வினவால் விடப்படுகிறது. புனைவு நனவை மீட்டினால் கம்பெனி பொறுப்பல்ல.

முகநூல் ஃபார்மெட்டில் படிக்க…
______________

அறிவுஜீவி

about Wastesh Kosuwarthi – உலக சினிமாக்களில் கிளாப் ஃபோர்டு குறித்த வரலாறும், அந்த ஃபோர்டுகள் என்னென்ன மரத்தில் செய்யப்படுகின்றன, அந்த மரங்கள் குறித்து நகர்ப்புறங்களில் பேசப்படும் நாட்டுப்புறக் கதைகள் குறித்தும் மார்ட்டின் டப்ளர் பல்கலைக் கழகத்தில் முனைவர் படிப்பு முடித்தவர்.

Works in – Don at Koma naidu cinema university

333 friends, 1111 followers

_______________

Notes by kosuwarthi

ஆரம்பம் – மீண்டும் ஒரு மரண வாசிப்பு (வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தி) – பாகம் 1
November 18, 2013 at 1:55pm

இந்த விமரிசனத்தை நான் விரும்பி எழுதுவதாக விரும்பாமலேயே நீங்கள் புரிந்து கொள்ள முயன்றாலும், அதை நான் விரும்பியே புரியாது என்று ஒதுக்கினாலும் இந்த குறிப்பின் நியாயத் தேவை இருக்கவே செய்கிறது என்பதை நான் விரும்பியே சொல்லிக் கொள்ள விரும்பவில்லை.

ஆரம்பம் படம் குறித்து ஆயிரமாயிரம் விட்டை விமரிசனங்கள் பேசியிருக்கும் கழுதை கருத்துக்களை என் குறிப்பு எப்போதும் பேசாது என்றுதான் நீங்கள் என் பக்கம் வந்து படிப்பதற்கு காரணம். சிலர் கோமா நாயுடுவிடம் ஆட்டையைப் போட்டு நான் டான் ஆனது போல ஏதேனும் ஒரு சில சினிமாக்களை எடுத்து நாயுடுவிடம் ஆட்டையைப் போடலாம் என்றும் வருகிறார்கள். அது எனக்கு தெரியாதது அல்ல. உட்கார்வது ஆய் போய் விட்டு எழுந்திருக்கவே என்ற உலக தத்துவம் அறியாதவன் அல்ல இந்த கொசுவர்த்தி. ஆரம்பத்தில் கொசு அடிக்க மட்டும் பயன்பட்ட இந்த வர்த்தி இப்போது கோப்ராக்களையும் சுருட்டி போடுவதால் சுண்டெலிகளின் நோக்கம் அறியாதவன் என்று எண்ணுவது எஸ்கேப்பிசம்.

ஆக்சன் படங்கள் வேறு, அண்ட்ராயர் படங்கள் வேறு என்று சிலர் கருதுகிறார்கள். ஓசி விக்கிபீடியா முதல் காசு என்சைக்ளோபீடியா வரை அப்படித்தான் விளக்கமளிக்கிறார்கள். என் வரைக்கும் நான் ஓசி, காசு இரண்டையும் மதிப்பவனல்ல. மார்ட்டின் டப்ளரில் படிக்கும் போது நானே ஒரு நூலகம் அளவுக்கு கோட்பாடுகளையும், கோக்குமாக்குகளையும் எழுதி தள்ளியவன். இந்த உலகை அறிவதற்கு எனது கிட்னியையே சார்ந்திருக்கிறேன். அடை மழை வருமா எனும் வானிலையைக் படித்தறிவது கூட பக்கத்து சீட்காரன் மூலம் கூடாது என்று டிசிப்பிளினோடு வாழ்பவன்.

ஆக்சன் படங்களில் காமம் கவர்ச்சிக்காவும், அண்ட்ராயர் படங்களில் கதையேயாகவும் வருகின்றன. ஒன்றில் சைட் டிஷ், மற்றொன்றில் மெயின் டிஷ். இரண்டும் டிஷ்ஷையே சார்ந்து இயங்குகின்றன என்பதறியும் போது மெயினில் பன் இருந்தாலென்னா, பலகாரம் இருந்தாலென்ன? எனர்ஜி பாக்கெட்டை கேப்சர் செய்தால் மின்சாரம், ரிலீஸ் செய்தால் அணு குண்டு. ஆனால் அணு அணுதானே மிஸ்டர்?

என்னைப் பொறுத்தவரை வெளியாடைகளை துறப்பது கவர்ச்சி, உள்ளாடைகளை துறந்தால் காமம், என்றால் இதில் எந்த உடை என்பதில் ஏன் விளக்கங்களும், விவாதங்களும்? பம்பாய் படத்தில் மார்பு குலுங்க கடற்கரையில் ஓடி வரும் மனிஷா கொய்ராலவும், குருதிப்புனலில் கவுதமியை ஆழமாக முத்தமிடும் கமலஹாசனும்தான் பார்வையாளர்களின் மனதில் கதையை கிளறிவிட்ட குறியீடுகள். இதை சில கடிவாய் கம்யூனிஸ்டுகள் லூசுத்தனமாய் மதச்சார்பின்மை, மதவெறி, தீவிரவாதம், முதலாளித்துவம் என்று உளறுகிறார்கள். காமமும் இறுதியல் ஒரு ஆக்சன் எனும் போது ஆக்சனையும், அண்டர்வாயரையும் பிரிக்க முடியுமா?

சண்டையில் கட்டிப் புரள்கிறார்கள். சரசத்திலும் கட்டிப் புரள்கிறார்கள். இரண்டிலும் உடம்பின் எல்லையற்ற சாத்தியங்களோடு கட்டிப் புரள்கிறார்கள். ஒன்றில் அணைத்தல், இன்னொன்றில் அடித்தல், ஒன்றில் இன்பக்காயம், மற்றொன்றில் துன்பக் காயம், என்றாலும் மருத்துவமும் டாக்டரும் ஒன்றுதானே? சிலர் சேலம் சிவராஜ் வைத்தியர் இருப்பதற்கு என்ன பொருள் என்று கேட்கலாம். எலும்பு முறிவுக்கு ஆர்த்தோ டாக்டர் வைத்தியம் செய்வது போல காமம் முறித்த குற்ற உணர்வுகளுக்கு சேலம் வைத்தியர் டிரீட்மெண்ட் கொடுக்கிறார். எனவே அதுவா இதுவா என்ற பேதமும் வாதமும் ஆதிசங்கரன் காலம் முதல் ஆய்வாளர் அனாடினோ முறுவலினா வரை உள்ள பிரச்சினை.

ஆரம்பம் படத்தில் தல போட்ட கோட்டு சூட்டுக்களின் விலையும், தயாரிப்புச் செலவும் அதிகம் என்றாலும், நயன்தாரா போட்ட செலவில்லாத நீச்சல் உடையையும் பாருங்கள். பார்வையாளன் எந்த உடைக்கு அதிகம் செலவு என்று யோசித்து காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்வதில்லை. எந்த உடம்பில் குறைவு என்பதுதான் அவனைக் கிளப்பி விடும் மர்மம். இதனால் தலயின் ரசிகர்களை விட நயன்தாரா ரசிகர்கள் அதிகம் இருக்க வேண்டுமல்லவா என்று நீங்கள் கேட்கலாம்.

அங்குதான் நல்லது கெட்டது இருமை முரண்களின் சதுரங்க ஆட்டம் வேலை செய்கிறது. ஒரு வியப்பூட்டும் உதாரணத்தை எம்ஜிஆர் படங்களில் இருந்து சொல்கிறேன். எம்ஜிஆர் படங்களில் நாயகிகளும் சரி அவரது வில்லனான நம்பியாரின் பெண் உதவியாளர்களும் சரி கவர்ச்சி உடைகளில் வருவார்கள். ஆனால் நாயகிகள் எம்ஜிஆரை மணம் செய்யும் போதும், இல்லற வாழ்க்கையின் போதும் சேலை உடுத்தி பாந்தமாக இருப்பார்கள். வில்லனது நாயகிகளுக்கு இந்த போலித் தனம் இல்லை. எப்போதும் ஃபீரிதான். இறுதியில் நல்லதின் நாயகன் வெற்றி பெறுகிறார் என்ற உண்மை வில்லனது நாயகிகளை ரசிக்க மட்டும் என்றாக்கி விட்டு, நாயகனது நாயகிகளை பூஜிக்க என்றும் ஆக்கி விடுகிறது. நாயகிகளுக்கு லட்சுமி, சரஸ்வதி என்று பேர் வைத்து விட்டு வில்லிகளுக்கு ரீட்டா, ஸ்டெல்லா என்று பெயர் வைப்பதை மதம் சார்ந்து பார்ப்பதை விட மேற்குலகு உருவாக்கியிருக்கும் கீழைத்தேய கவர்ச்சி குறித்த சொல்லாட அடிமைத்தன மனோபாவ பிரதிபலிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாதா என்ன?

காமக் கலையில் இருந்துதான் கர்ணக்கலை ஆக்சன் உருவானது என்பதை டிரைபல் சொசைட்டி முதல் அர்பன் சொசைட்டி வரை எனும் ஆய்வு நூலில் அறிஞர் எக்ச்ட்டீர் பக்ஸ் தெரிவிக்கிறார். எனவே ஆக்சன் படங்களும், அண்ட்ராயர் படங்களும் இரு வகை என்றாலும் ஒன்றின் வாழ்வு மற்றதை தீர்மானிக்கிறது. எனவே தலையின் படங்களோடு ஷகிலாவின் படங்களுக்கும் கொள்ளும் கொடுப்பினையும் உண்டு என்பதை எனது அடக்கமுடியாத பெருமிதக் கண்டுபிடிப்பாக மறுக்க முடியாத பணிவுடன் முன்வைக்கிறேன்.

ஆரம்பம் படத்தின் முதல் விமரிசனமே என்னுடையதுதான் என்பதை நான் இதற்கு மேலும் எழுதி உங்கள் விருப்பத்தை தடை செய்ய விரும்பவில்லை. தமிழ் சினிமாக்களை இத்தகைய கோட்பாட்டு புரிதல்கள் இன்றி வாசிக்கும் போதும், பேசிக்கும் போதும் ஏற்படும் அறிவு மரணங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அத்தகைய மரணங்களை நிறுத்தவும், ஒருவகையில் துரிதப்படுத்தவும்தான் என்னுடைய குறிப்புகளை நேரமற்ற நேரத்தில், நிலையற்ற நிலையில், சரளமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இது தொடர்பான அத்தனை கேள்விகளுக்கான பதில்களும் என்னுடைய குறிப்புகளில் இடம் பெற்றிருப்பதால் நயன்தாரா நீச்சல் உடையை எங்கே தைத்தார்கள், தலையின் சூட்டு கோட்டு எங்கே வைத்தார்கள் என்று தனி மெயிலிலும், பிரைவேட் மெசேஜிலும் கேட்காதீர்கள்.

–    வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தி

_______________________

ஏ.ஒன்.ஐஸ்ராமன், அம்ஷா வினோத், சுமாலன் சுர் உசைன், யூத் கண்ணா and 14 others like this.

Varun – super super super uncle wow i loved reading it very much
January 31 at 6:50pm · Like

Ssuresh Kannan – கடைசி வரி அற்புதம்
January 31 at 6:53pm · Like · 2

Vhmana Roja Kannan – // சண்டையில் கட்டிப் புரள்கிறார்கள். சரசத்திலும் கட்டிப் புரள்கிறார்கள். இரண்டிலும் உடம்பின் எல்லையற்ற சாத்தியங்களோடு கட்டிப் புரள்கிறார்கள். ஒன்றில் அணைத்தல், இன்னொன்றில் அடித்தல், ஒன்றில் இன்பக்காயம், மற்றொன்றில் துன்பக்காயம்,  என்றாலும் மருத்துவமும் டாக்டரும் ஒன்றுதானே? சிலர் சேலம் சிவராஜ் வைத்தியர் இருப்பதற்கு என்ன பொருள் என்று கேட்கலாம். எலும்பு முறிவுக்கு ஆர்த்தோ டாக்டர் வைத்தியம் செய்வது போல காமம் முறித்த குற்ற உணர்வுகளுக்கு சேலம் வைத்தியர் டிரீட்மெண்ட் கொடுக்கிறார். எனவே அதுவா இதுவா என்ற பேதம் ஆதிசங்கரன் காலம் முதல் ஆய்வாளர் அனாடினோ முறுவலினா வரை உள்ள பிரச்சினை.// மிகவும் பிடித்தது. முழு விமர்சனம் படிக்கவில்லை. படம் பார்த்து விட்டு படிக்கிறேன். நன்றி sir.
January 31 at 7:00pm · Like

Basu Devan – நன்றி.கொசு. எக்ச்ட்டீர் பக்ஸ் படைப்புகளை பற்றி நீங்கள் எழுதியதும்,உங்கள் கோணங்களும் எனக்கு உடன்பாடே. ஆனால் இப்படத்தின் கலைப் பார்வை என்ன? சூழலை முன் வைத்து உங்களிடம் கேட்கிறேன்.(பெருவாரியாக அரசியலில் ரீதியாக விவாதங்கள் நடைபெறுகையில்)….
January 31 at 8:09pm · Like · 3

Watesh kosuvarthi@Basu Devan…என்ன பாசு இவ்வளவு தெளிவா அதனுடய ரசனை இலக்குகள் என்ன என்று எழுதிய பிறகும் அதனுடய கலை பார்வை என்னன்னு என்னை கேட்கிறீங்க?
January 31 at 8:14pm · Like · 2

Moni payaprakashvel – உங்கள் எழுத்து நடை பின்பற்ற சற்று சிரமமாக (எனக்கு) இருந்தாலும் அப்படி இப்படியாக சரியாக முடிகிறது உங்கள் பதிவு. ஆக்சன் ஜீசஸ் படத்தை வெளியிடும் காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. அந்தப் படம் தமிழ்நாட்டில் வெளியாக வேண்டாம் என்றே நான…See More
January 31 at 9:17pm · Like · 6

Watesh kosuvarthi – நன்றி மோணி பயபிராகஷ்வேல்…எழுத்தின் நடை கருத்தாக்கங்களின் கடினத்தில் குடி புகுந்து விட்டது. இதற்கு மேல் எளிமையாக எகத்தாளமாக எழுத முடியாததற்கு வருந்துகிறேன்.
January 31 at 9:20pm · Like

ரோம்ஜி யாஹூ – படம் பார்க்க படவேண்டும் . விரும்புகிறவர்களால் பார்க்கப் பட்டு விவாதிக்கப் பட வேண்டும் என்பதே என் கருத்தும்.

ஆனால் அமெரிக்கர்களுக்கு/ கிறித்துவர்களுக்கு , அண்டார்டிகா முசுலீம்களுக்கு கவர்ச்சி மீது உள்ள வெறுப்பை ஒரு இடத்தில்/ஒரு வசனத்தில் கூட காட்டாமல் இருப்பது ஏன் .
January 31 at 9:56pm · Like

சுமாலன் சுர் உசைன் – தமிழ் சினிமாவின் இயங்கு திசையில் இக்குறிப்புகள் இல்லையில்லை மகத்தான ஆய்வுக் குறிப்புகள் ஒரு முன்கூட்டியே அறுதியிடப்படாத சாத்தியப்பாடுகளின் எல்லையில்லா திண்டாட்டத்தை கொண்டாட்டமாக முன்வைக்கும் பேருவுப்பை அடைகிறேன். வாழ்த்துக்கள் கொசுவர்த்தி தொடர்ந்து அளியுங்கள்!
January 31 at 9:75pm · Like

வருந்தேவி – கொசு இந்தப் படத்திற்கு முதலில் உரையாடல் எழுதுவதாக இருந்த சுயமோகனின்  கருத்தை நீங்கள் ஆரம்பத்திலேயே தாத்பரியமாகவும், உசிதமின்றியும் புறந்தள்ளியும் கூட எனக்கு அதில் பெருத்த ஆர்வம் கொண்டிருப்பதை உங்கள் கருத்துக்களை கைவிடாமலே முன் வைக்கிறேன்…….
January 31 at 10:56pm · Like

Showing 10/111 comments
____________________________________________________

பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம் !

6

(2004 – ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை)

ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றழைக்கப்பட்ட சுப்பிரமணி, சங்கரராம அய்யர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு முதல் குற்றவாளியாகக் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என எல்லாப் பண்டிகை நாட்களிலும் அதிகாலையிலேயே தொலைக்காட்சியில் தோன்றி, தனது ஊத்தைத் திருவாய் மலர்ந்து அருளும் இந்தக் கபட சந்நியாசி ஒரு “கிரிமினல்” என்பதைத் தமிழக அரசே பிரகடனம் செய்திருக்கிறது.

சங்கர மடம்
பார்ப்பன பயங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம்

இ. பி. கோ.-302 (கொலை), 201 (சாட்சி/குற்றவாளியை மறைப்பது), 205 (குற்றத்தை மறைக்க ஆள்மாறாட்டம் செய்தல்), 213 (குற்றத்தை மறைக்கப் பணம் தருதல்), 34 (கிரிமினல் நோக்கத்துக்காகக் கூடிச் செயல்படுதல்), 120-பி (கொலை செய்ய சதித் திட்டம் தீட்டுதல்) ஆகிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் இந்த ஜெகத்குரு.

கொலைக்கு முன்னும் பின்னும் கூலிப்படையுடன் சங்கராச் சாரி நடத்திய செல்ஃபோன் உரையாடல், சங்கரமடத்தின் வங்கிக் கணக்கிலிருந்து ஜெகத்குரு தனது பிரசாதமாகக் கொலைகாரர்களுக்கு வழங்கிய பணம், பொய்க் குற்றவாளிகளுக்குக் கொடுத்த பணம், சங்கராச்சாரிக்கு கொலைவெறியைத் தூண்டிய சங்கரராமனின் இறுதி எச்சரிக்கைக் கடிதம் போன்ற பல அசைக்க முடியாத ஆதாரங்களின் அடிப்படையில் தான் இந்தக் கைது நடந்திருக்கிறது.

கொலை நடந்தவுடனேயே இதில் சங்கராச்சாரியின் தொடர்பை சூசகமாக அம்பலப்படுத்தியது ‘நக்கீரன்’. தன் மீதான சந்தேகம் வலுக்கத் தொடங்கி விட்டது என்று புரிந்து கொண்டு அதைத் திசை திருப்புவதற்காக சங்கராச்சாரி “நக்கீரன்” இதழுக்கு அளித்த பேட்டி சங்கராச்சாரியின் ஒப்புதல் வாக்குமூலமாகவே அமைந்திருந்தது.

“என்னுடைய பக்தர்கள் யாரேனும் சங்கரராமனைக் கொலை செய்திருக்கக் கூடும்” என்று ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்ட அந்தப் பேட்டியில் திமிராகவும் அலட்சியமாகவும் கூறியிருக்கிறார் சங்கராச்சாரி. இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்றே சங்கராச்சாரியை போலீசு கைது செய்திருக்க வேண்டும்.

ஆனால் ஆள்பலம், பணபலம், அதிகாரபலம் அனைத்தும் படைத்த இநத ஆன்மீக அடியாள் படையின் தலைவன், ஒரு பச்சை ரத்தப் படுகொலையைச் செய்துவிட்டு, அந்தக் குற்றத்தின் சுவடு கூட முகத்தில் தெரியாமல் மறைத்துக் கொண்டு தீபாவளியன்று காலை வரை ‘இந்துக்களுக்கு’ அருளாசி வழங்கியிருக்கிறார்.

“மறுக்கவும் மறைக்கவும் முடியாத அளவிற்கு ஆதாரங்கள் சிக்கி விட்டன” என்று புரிந்து கொண்டவுடன் உலகின் ஒரே இந்து சாம்ராச்சியமான நேபாளத்திற்குத் தப்பியோட முயன்று பிடிபட்டிருக்கிறார் இந்தக் கிரிமினல்களின் ஜெகத்குரு.

குற்றவாளிக்கு இராஜ மரியாதை!

ஜெயேந்திரர் சாதாரண குற்றவாளி அல்ல; ஆன்மீகம், அகிம்சை என்று நாட்டுக்கே உபதேசம் செய்து கொண்டு அதன் மூலம் தனது பண பலத்தையும், அரசியல் செல்வாக்கையும் பெருக்கிக் கொண்ட ஒரு மடாதிபதி. சாதாரண மனிதர்கள் வறுமையின் காரணமாகவோ, உணர்ச்சி வயப்பட்டோதான் பல குற்றங்களை இழைக்கிறார்கள். ஆனால் இந்த ஜெகத் குருவோ தன்னுடைய வண்டவாளங்களைக் கேள்விக்குள்ளாக்கிய ஒரே காரணத்திற்காக ஒரு பச்சை ரத்தப் படுகொலையை ஆற அமரத் திட்டம் போட்டு நிறைவேற்றியிருக்கிறார் – அதுவும் மக்கள் மிகப் புனிதமாகக் கருதும் ஒரு கோயிலுக்குள்ளே ! இந்தக் கொலையை மறைக்கவும் திசை திருப்பவும் தனது பணபலத்தையும் அதிகாரபலத்தையும் பயன்படுத்தியிருக்கிறார்.

சிறையில் பூஜைதெருவில் அடித்து இழுத்துச் செல்லப்படும் ரவுடிகளைக் காட்டிலும் கடுமையான முறையில் நடத்தப்பட வேண்டிய இந்தக் குற்றவாளிக்கு இங்கே ராஜமரியாதை நடக்கிறது; சாதாரண குற்றங்கள் புரிந்த ஏழைகளை உள்ளாடையுடன் நிறுத்தி பிடரியில் கை வைத்து கையில் விலங்கு மாட்டி இழுத்து வரும் போலீசு, ஜெகத்துருவிடம் “தயவுசெய்து வாருங்கள்!“ என்று மன்றாடுகிறது; “நான் போலீசு வேனில் ஏறமாட்டேன்” என்று ஜெயெந்திரர் சொன்னவுடன் காரில் அழைத்து வருகிறது. “சூத்திரன் தொட்டால் பார்பானுக்குத் தீட்டு” என்ற மனுதர்மத்தை மதித்து சங்கராச்சாரியின் மீது விரல் கூடப் படாமல் போலீசு எட்ட நிற்கிறது. “ஜெயேந்திரருக்கு ஒரு பிரமாணரைக் கொண்டுதான் சமையல் செய்து தருகிறோம்” என்று நீதி மன்றத்திலேயே அறிவிக்கிறார் அரசு வழக்குரைஞர் துளசி.

சிறையில் சாதாரண குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதிகளும் குற்றமே செய்யாமல் உள்ளே தள்ளப்பட்ட அப்பாவிகளும் சிறையைக் கூட்டுகிறார்கள், கக்கூஸ் கழுவுகிறார்கள், இடுப்பொடிய வேலை வாங்கப்படுகிறார்கள். சங்கராச்சாரியோ அங்கே மூணு வேளை பூஜை செய்கிறாராம் ! அந்த அகிம்சாமூர்த்தி அன்றாடம் பூஜை செய்யவில்லை என்றால் உலகமே அழிந்து விடுமென்பதால் சிறை நிர்வாகமே தேங்காய், பூ, பழம், சூடம் சாம்பிராணி சப்ளை செய்கிறது. சாதாரணக் கைதிகளுககு அலுமினியத் தட்டில் வேகாத சோறு. இந்த நட்சத்திரக் கிரிமினலுக்கோ சில்வர் தட்டில் சோறு, சப்பாத்தி, பால், பழம், குளிக்க வெந்நீர், அன்றாடம் மருத்துவச் சோதனை… இன்னபிற வசதிகள். நாட்டில் எந்தக் கொலைக் குற்றவாளிக்காவது இவ்வளவு மரியாதை நடந்ததுண்டா?

“நான் நீதிபதியிடம் வர மாட்டேன், நீதிபதியை அங்கே வரச் சொல்!” என்று எந்த கட்சித்தலைவராவது போலீசிடம் சொன்னதுண்டா? “ராகு காலத்தில் தீர்ப்பு சொல்லாதே!” என்று நீதிபதிக்கு ஒரு கிரிமினல் உத்திரவிடுவதை யாராவது கேள்விப்பட்டதுண்டா? கைதியையே கண்ணால் பார்க்காமல் ரிமாண்டு உத்தரவு போடும் நீதிபதிகள், ரத்தம் சொட்டச் சொட்டக் கொண்டு வந்து நிறுத்தினாலும் கைதியைத் தலை நிமிர்ந்து பார்க்க மறுக்கும் மாஜிஸ்ட்ரேட்டுகள் இதுதான் மக்களுக்கு நீதிமன்றத்தில் கிடைக்கும் மரியாதை! லட்சக்கணக்கான அரசு ஊழியர்களின் வேலை பறிக்கப்பட்ட போதோ, ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சிறையில் அடைக்கப்பட்டபோதோ உயர்நீதி மன்றம் அவசரம் காட்டவில்லை. ஆனால், ஒரு கொலைக் குற்றவாளிக்காக விடுமுறை நாளில் உயர் நீதி மன்றத்தின் கதவுகள் திறக்கின்றன.

மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கே போகாமல் உயர்நீதி மன்றத்தில் நேரடியாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுகிறது. அரை நாளில் நூறு ஜாமீன் மனுக்களை விசாரித்துத் தீர்ப்பு சொல்லும் உயர்நீதிமன்றம் ஜெயேந்திரர் மனுவை இரண்டு நாள் விசாரிக்கிறது. “நீதிபதிகளின் பங்களாவிலேயே இவரைச் சிறை வைக்கலாமே” என்று ஒரு கிரிமினலுக்காக நீதிபதியே வாதாடுகிறார்.

“காக்க . . . காக்க. . .கிரிமினல் காக்க”

sang-7-smallஇத்தனைச் சலுகைகள், அத்தனைச் சொகுசுகளுக்குப் பின்னரும் பார்ப்பன பாரதீய ஜனதா கும்பல் அலறுகிறது; “அவரை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்” என்று மன்மோகன் சிங்கிடம் கண்ணீர் விடுகிறார் வாஜ்பாய்; சிறை வாசலில் சூடம் கொளுத்தி “காக்க காக்க கனகவேல் காக்க!” என்று கொலைகாரனைக் காப்பாற்ற கந்தசஷ்டி கவசம் படிக்கிறார் இராம. கோபாலன். வெள்ளைக்காரன் கூட சங்கராச்சாரியைக் கைது செய்ததில்லை என்று விம்மி வெடிக்கிறார் அத்வானி. அமெரிக்க அதிபரிடமும் ஐ. நா. சபையிடமும் முறையிடவேண்டியதுதான் பாக்கி!

சங்கரராமன் என்ற இந்துப் பார்ப்பனரைக் கொலை செய்ததற்காக, சுப்பிரமணி (ஜெயேந்திரர்) என்ற இன்னொரு இந்துப் பார்ப்பனர், ஜெயலலிதா என்ற இந்துப் பார்ப்பனரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் இது இந்து விரோத நடவடிக்கை என்கிறது இராமகோபாலய்யரின் இந்து முன்னணி. பார்ப்பனக் கிரிமினல்கள் மட்டும்தான் இந்துக்கள் என்று இவர்கள் அறிவிக்கும் பட்சத்தில் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளலாம். இந்து என்ற சொல்லுக்கு திருடன் என்று ஒரு அகராதியில் பொருள் சொல்லப்பட்டிருப்பதாக கருணாநிதி சொன்னவுடனே தாண்டிக் குதித்த இந்தக் கும்பல், இப்போது தங்கள் நடவடிக்கை மூலம் “திருடர்களும் கொலைக்காரர்களும் மட்டும்தான் இந்துவாக இருக்க முடியும்’ என்று நிரூபிக்கிறது”.

ஒரு இந்துக் கோயிலின் உள்ளேயே வைத்து பட்டப்பகலில் ஒரு இந்து (சங்கரராமன்) கொலை செய்யப்பட்ட போது வாய் திறக்காத இந்து முன்னணி இன்று ஜெயேந்திரர் என்ற இந்துக் கிரிமினலுக்காக வாதாடுகிறது; ஒரு பாவமும் அறியாத சிறுபான்மை மக்களை வம்புக்கிழுத்து “அவர்களுடைய வாக்குகளைக் கைப்பற்றத்தான் இந்தக் கைது நடவடிக்கை” என்று கூறி கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறது.

ஜெகத்குரு கொலை செய்வார் ஜட்ஜ் விசாரிக்கக் கூடாதாம் !

ஆனால், பெரும்பான்மை இந்து மக்கள் இந்தப் பித்தலாட்டத்தை நம்பத் தயராக இல்லை. பாரதிய ஜனதா நடத்தும் ஆர்ப்பாட்டத்திலும் மனிதச் சங்கிலியிலும் பார்ப்பனக் குடுமிகளையும் மாமிகளையும் தவிர வேறு யாரையுமே பார்க்க முடியவில்லை. இதனால் ஆத்திரம் தலைக்கேறி ‘துப்பாக்கி எடுப்போம், வெடிகுண்டு வீசுவோம்’ என்று கூச்சலிடுகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல். நவம்பர் 13-ம் தேதியன்று உயர்நீதி மன்ற வளாகத்தில் கூட்டமாக வந்திருந்த அந்த துப்பாக்கி எடுக்கும் சூரப்புலிகளை எமது தோழர்கள் வெறும் பதினைத்தே பேர் விரட்டியடித்த காட்சியையும், வழக்குரைஞர்கள் விரட்ட இவர்கள் பின்னங்கால் குடுமியில் சிக்க தெறித்து ஓடிய காட்சியையும் நாடே பார்த்தது.

jeyendranசங்கரராமன் கொலை வழக்கில் வெளிவரும் ஆதாரங்களை ஆர்.எஸ்.எஸ் கும்பலால் மறுக்க முடியவில்லை. தனது ஊழல்களையும் முறைகேடுகளையும் எதிர்த்த ராதாகிருஷ்ணன், மாதவன் என்ற இரு பார்ப்பனர்களைக் கொலை செய்வதற்கு ஜெயேந்திரர் கூலிப்படையை ஏவி விட்ட கதையும் இப்போது வெளி வந்திருக்கிறது. இவற்றையெல்லாம் ஆதாரபூர்வமாக மறுத்து வாதிடுவது சாத்தியமில்லை என்பதால் ஆர்.எஸ்.எஸ் கும்பல் தடாலடியாக அனைத்தையும் மறுக்கிறது.

“இந்துமதத்தின் தலைவரான ஒரு ஜெகத்குரு இத்தகைய இழி செயல்களில் ஈடுபட்டிருக்க முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். யார் விசாரணை நடத்தி எந்த நீதிமன்றம் தீர்ப்பு சொன்னாலும் எங்கள் நம்பிக்கையை யாரும் மாற்ற முடியாது” என்பது தான் அவர்களுடைய வாதம். ஒரு மடத் தலைவரின் மீதான தங்களது நம்பிக்கையை இறை நம்பிக்கை போன்ற மத நம்பிக்கையாகச் சித்தரித்து, தங்களது இந்த நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்குவது “இந்து மத உணர்வைப் புண்படுத்ததுவதாகும்” என்று வாதிடுகிறது இந்தப் பார்ப்பன பாசிசக் கும்பல்.

இவர்களுடைய வாதப்படி “நான்தான் கொலை செய்தேன்” என்று ஒருவேளை ஜெயேந்திரரே ஒப்புக் கொண்டாலும், “ஒரு ஜெகத்குரு கொலை செய்ய முடியாது” என்ற விசுவ இந்து பரிசத்தின் நம்பிக்கையின் காரணமாக அத்வானி வகையறாக்கள் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

“அகழ்வாராய்ச்சி கூடாது, வரலாற்று ஆதாரம் தேவையில்லை, பாபர் மசூதி இருந்த இடத்தில் தான் இராமன் பிறந்தான், இது எங்களுடைய நம்பிக்கை, இதன் மீது எந்த நீதிமன்றமும் தீர்ப்புக் கூற முடியாது” என்பதுதான் அயோத்தி பிரச்சினையில் ஆர். எஸ. எஸ் -இன் வாதம். இப்போது ஜெயேந்திரர் கொலை வழக்கில் ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும வாதமும் இதுதான்.

வேண்டுமென்றே நள்ளிரவில் கைது செய்தார்கள், பங்களாவில் வைக்காமல் சிறையில் வைத்தார்கள், மோசமாக நடத்தினார்கள்… என்று இவர்கள் கூறுவதெல்லாம் சரக்கில்லாத சப்பைக் கட்டுகள். “ஜெகத்குருவும் அவரை ஒத்த விசுவ இந்து பரிசத்தின் காவி உடைக் கிரிமினல் கூட்டமும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள். இந்தச் சட்டமோ, நீதிமன்றமோ அவர்களைத் தண்டிக்க முடியாது; தண்டிக்கக் கூடாது” – இதுதான் இவர்களுடைய கோரிக்கை. எனவேதான் “மடங்களுக்குள்ளும கோயில்களுக்குள்ளும் போலீசு நுழைவதைத் தடைசெய்ய சட்டம் இயற்ற வேண்டும்” என்று கோரியிருக்கிறது அனைத்திந்திய சாமியார்கள் சங்கம். இதனை அத்வானியும் சுஷ்மா சுவராஜும் வழிமொழிந்துள்ளனர்.

சதுர்வேதி-மோசடி சாமியார், ஜெயேந்திரர்-சுவாமிகளாம்!

பார்ப்பனச் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டவுடனேயே இப்படித் துள்ளிக் குதிக்கும் இந்தக் கூட்டம் சதுர்வேதி, பிரேமானந்தா போன்ற ‘சூத்திர’ச் சாமியார்கள் கைது செய்யப்பட்டபோது குதிக்கவில்லை; கொந்தளிக்கவுமில்லை. ஸ்வாமிகள் என்று மிகுந்த மரியாதையுடன் அழைக்கிறார்கள்.

கிரிமினல் என்றும் கூலிப்படைத் தலைவனென்றும் அரசால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கொலைக் குற்றவாளியை மகான் என்றும் உலகை உய்விக்க வந்த உத்தமன் என்றும் வருணித்து பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறது காஞ்சி மடம். அவை தினமணி, இந்து நாளிதழ்களில் வெளியிடப்படுகின்றன. பிரேமானந்தாவும் சதுர்வேதியும் தங்களைப் பற்றி இப்படி விளம்பரம் கொடுத்திருந்தால் இவர்கள் வெளியிட்டிருப்பார்களா?

‘ஒரு குலத்துக்கு ஒரு நீதி’ என்ற பார்ப்பனச் சாதிவெறிக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? இந்த மனுநீதியைச் சட்டமாகவே ஆக்கி பார்ப்பன மடங்கள், ஆதீனங்கள் போன்ற கிரிமினல் கூடாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதாவின் கோரிக்கை.

ஜெகத்குரு நியமனம் எப்படி?

jeyandran-devilஇந்த மடாதிபதிகளும் ஆதீனகர்த்தர்களும் ‘தெய்வப் பிறவி’களா? வானத்திலிருந்து குதித்தவர்களா? அன்றாடம் உழைத்து நேர்மையாக வாழும் கடவுள் நம்பிக்கையுள்ள கோடிக் கணக்கான பக்தர்களின் கால் தூசுக்குக் கூடச் சமமாக முடியாத கயவர்கள்தான் இந்த மடாதிபதிகள்.

நூறு கோடி மக்கள் கொண்ட இந்தியாவில் இந்த ஆள்தான் ஜெகத்துக்கே குரு என்றால், இத்தனைக் கோடிப் பேரையும் ஒரு சல்லடையில் போட்டுச் சலித்து இந்த ஆள்தான் ‘பெஸ்ட்’ என்று பொறுக்கி எடுத்தார்களா? ஜெகத் குருவைத் தேர்ந்தெடுக்கும் வழி முறையைச் சொல்லுங்களய்யா மடாதிபதிகளே என்று கேட்கும் உரிமை பக்தர்களுக்கு உண்டா? பத்திரிக்கைகள் தான் கேட்டதுண்டா?

வேத ஆகமங்கள், உபநிடதங்கள், சாத்திரங்களை ஐயந்திரிபு அறக் கற்றவர்கள், அத்யயனம், பாராயணத்தில் கரை கண்டவர்கள் மெய்கண்ட சாத்திரங்களையும், சிவஞான போதத்தையும், பதிகங்களையும், புராணங்களையும் கசடறக் கற்றவர்கள்தான் மடத்துக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது உங்கள் அறியாமை.

‘இவனை மடத்தில் சேர்த்தால் ஊழலுக்கு உடந்தையாக இருப்பான். இங்கு நடக்கும் ஒழுக்கக் கேடுகளை வெளியே கசிய விடமாட்டான்’ என்ற கிரிமினல் பயோடேட்டாவின் படி தான் இவர்களின் தேர்வே நடக்கிறது. அப்படியிருக்கையில் இப்படிப்பட்ட கிரிமினல்கள் பஞ்சமாபாதங்களையும் செய்யாமல் இருந்தால்தான் நாம் அதிர்ச்சியடைய முடியும்.

“இந்தியாவில் தகுதி தேவைப்படாத ஒரே தொழில் புரோகிதத் தொழில்” என்றார் அம்பேத்கர். சங்கரமடத்தில் பரமாச்சாரியையும், சைவ மடத்தில் ஆதினத்தையும் தெரிவு செய்ய முதல் தகுதி சாதி. கிரிமினலுக்கான தகுதிகள் வளர்ப்பிலேயே தம் சாதிக்காரனுக்குத்தான் உண்டு என்பதில் அவாளுக்கு அவ்வளவு அசாத்திய நம்பிக்கை. இரண்டாவது தகுதி, பத்துக் கொலை செய்தாலும் பதட்டமிட்டாமல் முகத்தைப் பராமரிக்கின்ற “தெய்வீகக் களை” மூன்றாவதாக, மடத்தின் மாஃபியா வேலைகள் மற்றும் மடாதிபதியின் சிற்றின்ப லீலைகள் பற்றிய இரகசியங்களைக் காப்பாற்றும் திறமை. நான்காவதாக, பெரியவர் சமாதி அடைந்து அதிகாரம் தன் கைக்கு வரும்வரை அடக்கி வாசிக்கும் ‘பொறுமை’.

‘ஆன்மீகத்’ தரகுப் பணி

சின்ன பெரியவாள்களும், இளைய சன்னிதானங்களும் இப்படித்தான் பொறுக்கி எடுக்ப்படுகிறார்கள். இவர்கள் பட்டினத்தாரையும் வள்ளலாரையும் போலப் பரதேசியாய்த் திரிகிறார்களா? கோயில் கோயிலாய்ச் சென்று பதிகம் பாடுகிறார்களா? அல்லது சங்கரராமனுக்கு முடிவுரை எழுதிய ஜெயேந்திரர், அத்வைதத்துக்குப் பொழிப்புரை எழுதியிருக்கிறாரா?

மடப் பணிஒரு வெங்காயமுமில்லை. தின்பதும் தூங்குவதும் தான் இவர்களது ஆன்மீகம் நடவடிக்கைகள். இதைப் படித்து ஆத்திரப்படும் அம்பிகள் சின்ன பெரியவாளை எடை மிசினில் ஏற்றிப் பார்க்கட்டும்!

இந்து சமயப் பணி என்ற பெயரில் அரசியல் புரோக்கர் வேலை செய்யும் காஞ்சி மடத்தின் ‘சமயத் தொண்டு’ பற்றி இண்டியன் எக்ஸ்பிரஸில் மாய்ந்து மாய்ந்து துதி பாடும் அம்பிகளுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன? இருந்தாலும் தங்கள் சாதி பிராண்டைத் தூக்கிப் பிடிப்பதில் அப்படியொரு பத்திரிகா தர்மம். “சங்கரமடத்திலிருந்து ஒரு துண்டு சீட்டு வந்தால் உடனே டிரான்ஸ்பர், உடனே புரமோஷன், உடனே லைசன்ஸ். . .” என்று ‘பெரியவாளுடைய’ செல்வாக்கை விதந்து போற்றுகிறார்களே, அது ஆன்மீகப் பணியல்ல, அரசியல் தரகு வேலை என்று அவர்களுக்குப் புரியாமலா இருக்கிறது?

ஜெயேந்திரரின் யோக்யதை என்ன? அங்கே சொந்த மனைவியோடு போகிறவருக்கும் ஆசி! அடுத்தவன் மனைவியோடு போகிறவனுக்கும் ஆசி! காமக் கொடூரன் சரவணபவன் அண்ணாச்சிக்கும் ஆசி! யோக்கியமான அனந்துவுக்கும் ஆசி! சாராய மல்லையாவுக்கும் ஆசி! சமஸ்கிருதப் பாடசாலைக்கும் ஆசி! மக்கள் யாரையெல்லாம் களவாணி, சாராயக் கடைக்காரன், பொறுக்கி அரசியல்வாதி என்று காறித் துப்புகிறார்களோ அனைவரும் சங்கராச்சாரியிடம் வரிசையாகப் போய்க் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள்.

அம்பானி நோய்வாய்ப்பட்டுக் கிடக்கையில் தனி விமானம் ஏறி அவசர அவசரமாகப் போய் சங்கராச்சாரி ஆசீர்வாதம் வழங்குகிறார். அம்பானியோ ஜெயேந்திரர் கைதானவுடன் பதறுகிறார். 30 ஆண்டுகளில் குறுக்கு வழியில் பணக்காரனான குற்றவாளி அம்பானியுடன் சுவாமிகளுக்கு என்ன ஆன்மீக உறவு?

ஊர் தாலி அறுத்து துறவிகள் சேர்த்த சொத்து!

தேர்தலில் நிற்கும் ஓட்டுச் சீட்டு அரசியல்வாதியை தேர்தல் கமிசன் “நீ கிரிமினலா? சொத்து விவரம் என்ன? காவல் நிலையத்தில் வழக்கு உண்டா?” உன்று விளக்கம் கேட்க வேண்டும் என்கிறது தேர்தல் கமிசன். இது வாக்காளர்களின் தகவல் பெறும் உரிமை என்கிறது உச்சநீதி மன்றம்.

அம்பானி, டாடா, பிர்லாக்கள் கூட தங்களது பங்குதாரர்களிடம் இந்த ஆண்டு கம்பெனி லாபத்தில் ஓடியிருக்கிறது அல்லது நட்டத்தில் போயிருக்கிறது என்று விளக்கமளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

நீதிமன்றத்தில் ஜெயேந்திரன்கோடிக்கணக்கில் சொத்துக்களைப் புரட்டும் இந்த மடாதிபதிகள் யாராவது தங்களைப் பின்பற்றும் அல்லது தங்களோடு மதம் என்ற வகையில் இணைந்த பக்த கோடிகள் யாருக்காவது “இவ்வளவு கோடி சொத்து, இன்றைய தேதிக்கு இலாபம் இவ்வளவு” என்று கணக்கு காட்டுவதுண்டா?

இன்று காஞ்சி மடத்தின் சொத்து 6,000 கோடி (1.2 பில்லியன் டாலர்கள்) என்று இந்துமதம் சார்ந்த இணையத்தளங்கள் கணக்கு சொல்கின்றன. திருவாடுதுறைக்கு 1,500 கோடி, மதுரை ஆதீனம் 1,000 கோடியாம்! சமீபத்தில் முளைத்து வளர்ந்த மாதா அம்ருதானந்தா மாயிக்கு 1,600 கோடியாம்! இன்னும் பங்காரு அடிகள், சாயிபாபா, கல்கி, வைணவ ஜீயர்கள், ரவிசங்கர்ஜி, சிவசங்கர் பாபா, பலவகையான ‘ஆனந்தா’க்கள் இருக்கிறார்கள். சேலம் குட்டி சாமியார் மூக்கு வெளுப்பதற்குள் 300 கோடியாவது சேர்ந்து விடுவார்.

ஜெகத்குருக்களும், ஆதீனங்களும் கழனியில் இறங்கி நாத்து நட்டு அறுப்பு அறுத்தா மடத்திற்குச் சொத்து சேர்த்தார்கள்?

ஒவ்வொரு மடத்துக்கும் அதன் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களும், மன்னர்களும், வணிகர்களும் தங்க வைடூரியங்களையும் நிலங்களையும் தங்களின் கீழ் வேலை செய்த கூலி விவசாயிகளுடன் சேர்த்தே கொடுத்து ‘குடிநீங்கா தேவதானம்’ என்ற பெயரில் அடிமைப்படுத்தினர். பருவநிலை பொய்த்தாலும் மேல்வாரம், கீழ்வாரம் என்று கடுமையான வரிகளைப் போட்டு, குத்தகை பாக்கி அளக்காத கூலி விவ்சாயிகளைக் கொன்று, புதைத்த இடத்தில் தென்னங்கன்றை நட்டு வைத்த மடங்களின் ‘சிவத் தொண்டை’ இன்றும் மக்கள் வாய்வழிக் கதையாகப் பேசி வருகின்றனர்.

ஊரே எறும்பு புற்றிலும், எலி வளையிலும் அரிசியெடுத்துப் பசி போக்கிய பஞ்ச காலத்திலும் குகைக்குள் தானியங்களையும், செல்வங்களையும் பதுக்கி வைத்து, மக்களை வரி போட்டுக் கசக்கிப் பிழிந்த இந்த மடங்களின் கொடுங்கோன்மையை எதிர்த்து மக்கள் கலகம் செய்த வரலாறு திருத்துறைப்பூண்டிக் கல்வெட்டில் “குகையிடிக் கலகம்” என்று குறிப்பிடப்படுகிறது.

ஆன்மீகவாதிகளல்ல ஆளும் வர்க்க ஏஜெண்டுகள்

அன்று முதல் இன்று வரை மதங்களையும் ஆதீனங்களையும் தீனி போட்டு வளப்பவர்கள் ஆளும் வர்க்கங்கள்தான். நிலப் பிரபுக்களின் கொடுங்கோன்மையையும், சுரண்டலையும் சாதி ஆதிக்கத்தையும் நியாயப்படுத்தவும், கரும வினையென்றும், தலை விதியென்றும் கூறி தங்கள் துன்பத்தைச் ககித்துக் கொள்ளுமாறு மக்களை மூளைச் சலவை செய்யவும் மடாதிபதிகளுக்கு மன்னர்கள் கொடுத்த லஞ்சம்தான் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள்.

பார்ப்பனக் குருமார்களையும் ஆதீனங்களையும் மன்னர்கள் பணிந்து வணங்கக் காரணம் அவர்களின் தெய்வீக ஆற்றல் மீது கொண்ட மரியாதை அல்ல; அது ஒரு நாடகம். “நாடாளும் மன்னனே பணிந்து வணங்கும்போது மடாதிபதிகள் தெய்வத்தின் அவதாரமாகத்தான் இருக்க வேண்டும்” என்று மக்களை நம்ப வைப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்.

அந்த நாடகம் இன்றும் தொடர்கிறது. மல்லையாவும், அம்பானியும், பிர்லாவும் கோடி கோடியாய்க் கொட்டியளந்து விட்டு ஜெயேந்திரரின் காலிலும் விழுகிறார்களே, அவர்களுக்குத் தெரியாதா அந்தத் ‘துறவி’யின் யோக்கியதை? அப்துல் கலாம் முதல் அமைச்சர்கள், அதிகாரிகள் வரை எல்லோரும் ஜெயேந்திரரின் முன் பணிவாகத் தரையில் உட்பார்கிறார்களே, பீடத்தில் அமர்ந்திருக்கும் சுப்பிரமணி ‘முழு மூடன்’ என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாதா?

பெரிய வாள், சின்ன வாள்சங்கர மடம் எனும் சோம்பேறிப் பார்ப்பனக் கூட்டத்தை ஆளும் வர்க்கம் சும்மா தீனி வோட்டு வளர்க்கவிலலை. மக்களை மழுங்கடிக்கும் அருள்வாக்கு, மக்களை அடிமைப்படுத்தும் சாதி வெறி, மக்களைப் பிளவுபடுத்தும் மதவெறி என்பதையெல்லாம் சங்கராச்சாரி ஆளும் வர்க்கத்துக்குத் திருப்பிச் செலுத்தும் நன்றிக் கடன்.

“சிவன் சொத்து குல நாசம்” என்று மிரட்டுகிறார்களே, இவர்கள் சேர்த்திருப்பது தான் பல குலங்களை நாசம் செய்து பிடுங்கிய சொத்து. இப்படி ஊர்தாலி அறுத்துச் சேர்த்த சொத்தை நிர்வாகம் செய்வதற்கு வள்ளலாரையும் பட்டினத்தாரையுமா நியமிக்க முடியும்?

அதனால்தான் திருவாவடுதுறை பெரிய ஆதீனத்துக்குச் சின்ன ஆதீனம் மருந்து வைக்கிறார். சின்ன ஆதீனமாக நியமித்த சுவாமிநாதனுக்கு குருபக்தி இல்லையென்று நாலே நாளில் விரட்டியடித்து விட்டுப் போலீசில் புகாரும் கொடுக்கிறார் மதுரை ஆதீனம்.

“மற்ற ஆதீனங்கள் சாமியார்களைப் போல் அல்ல, நாங்கள் ஒரிஜினல் ஆதிசங்கரன் பரம்பரை” என்று பார்ப்பனத் திமிருடன் பீற்றிக் கொண்டிருந்த சங்கரமடம் இன்று சந்தி சிரிக்கிறது. ஜனாதிபதிகள், பிரதமர்கள், அதிகாரிகள், நீதிபதிகள், பத்திரிக்கைகள் அனைவரையும் கைக்குள் போட்டுக் கொண்டு, தங்களது லீலைகளைச் சாமர்த்தியமாக அமுக்கி வந்த காம – கேடிகள் இன்று சிக்கிக் கொண்டு விட்டார்கள்.

“ஜெயேந்திரர் விஜயேந்திரரின் தம்பிககளும் அவர்களது உறவினர்களும் தான் சங்கரமடத்தின் சொத்தை ஆதிக்கம் செய்கிறார்கள்” என்று ‘இந்து’ பத்திரிக்கையே எழுதுகிறது. வாரிசு அரசியல், ஊழல் அரசியல் என்று அரசியல்வாதிகளைச் சாடும் முற்றும் துறந்த முனிவர்களின் யோக்கியதை இது.

ஜெகத்குருவே, கடவுளை ஏன் கைவிட்டீர்?

குற்றம் சாட்டப்பட்டுக் கூண்டில் நிற்கும் ஜெயேந்திரர் “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று மாஜிஸ்டிரேட்டிடம் முழங்கவில்லை. “நான் நீதிபதியை நம்புகிறேன்; போலீசை நம்ப மாட்டேன்” என்று புலம்புகிறார். “துன்பங்களுக்குக் காரணம் கருமவினை” என்று ஊருக்கு உபதேசம் செய்யும் லோக குரு, தனக்குத் துன்பம் வந்தவுடனே உலகத்திலேயே சிறந்த வக்கீலைத் தேடிப் பிடித்து ஜாமீனுக்காக வாதாடுகிறார்.

பெண்டாட்டி பிள்ளையுடன் இல்லற வாழ்வு நடத்தும் ஏராளமான கட்சித் தலைவர்களும் தொண்டர்களும், மக்கள் பிரச்சினை களுக்காகப் போராடி மாதக்கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். லோக ஷேமத்துக்காகப் பாடுபடும் இந்த முற்றும் துறந்த முனிவருக்கோ மூணு நாள் சிறையில் தங்க முடியவில்லை. நெய்யும், தயிரும், திராட்சையும், முந்திரியும் தின்று ஏ.சி. ரூமில் வளர்ந்த உடம்பு பங்களா கேட்கிறது.

ஜெயேந்திரன்இறை நம்பிக்கை கொண்ட பக்தர்கள், தாங்கள் கொண்டிருக்கும் பற்றுதலை நிரூபிக்கத் தம்மைத் தாமே வருத்திக் கொள்கிறார்கள். விரதமிருக்கிறார்கள், தீ மிதிக்கிறார்கள், அலகு குத்துகிறார்கள், உழைத்துச் சேர்த்த பணத்தைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.

வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் தவிக்கும் மக்கள் கோயில் கோயிலாகச் சுற்றுகிறார்கள். வேலை கிடைக்காத இளைஞர்கள், வேலையிழந்த தொழிலாளர்கள், கடன் சுமை தாளாத விவசாயிகள், வரதட்சிணைக் கொடுமையால் திருமணமாகாத பெண்கள், மருத்துவம் பார்க்க வசதியின்றித் தவிக்கும் நோயாளிகள். . . என்று பரிதவிக்கும மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மடாதிபதிகள் போதாதென்று குட்டிச் சாமியார்களும் சதுர்வேதிகளும் பிணந்தின்னிகள் போல மக்களை மொய்க்கிறார்கள்.

தங்களுடைய கையறு நிலையையும் கடவுள் பக்தியையும் பயன்படுத்திக் கொண்டு கொள்ளையடிக்கத்தான் அந்தச் சாமியார்களும் மடாதிபதிகளும் அவதரித்துக் கொண்டேயிருக்கிறார்கள் என்ற உண்மையை உணராத வரை மக்களுக்கு விடிவில்லை.

சங்கராச்சாரி முதல் சதுர்வேதி வரை எந்தச் சாமியாருக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது. “எல்லோருக்கும் மேலே ஒருவன் இருக்கிறான் நியாய அநியாயங்களைச் சீர்தூக்கிப் பார்த்துக் கூலி கொடுக்கிறான்” என்று நம்பும் பக்தர்கள் தான் பழி பாவத்துக்கு அஞ்சுகிறார்கள். “நான்தான் கடவுள்” என்று சொல்லிக் கற்பழிக்கிறான் சதுர்வேதி; கோயிலில் வைத்துக் கொலை செய்யத் திட்டம் போட்டுத் தருகிறான் சங்கராச்சாரி. இதுதான் சாமியார்களின் யோக்கியதை.

பக்தர்களை மொய்க்கும் பிணந்தின்னிகள்!

மக்களிடம் நிலவுவது கடவுள் பக்தி; மடாதிபதிகளிடம் இருப்பதோ காணிக்கை பக்தி. பக்தனைக் கைது செய்து இழுத்துப் போவதைப் பற்றி இந்து முன்ணிக்குக் கவலை இல்லை. பரமாச்சார்யார்களைப் பிடித்து இழுத்தால் பல ஆயிரம் கோடி சொத்தும் சேர்த்து வருகிறதே, அதனால்தான் பதறுகிறது இந்து முன்னணி; “எண்பது கோடி இந்துக்களின் தலைவரைக் கைது செய்வதா?” என்று எகிறுகிறார் அத்வானி; மடத்துக்குள்ளே போலீசு நுழைவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று முழங்குகிறது பாரதிய ஜனதா.

“தெருவோர விலை மாதர்களைக் கைது செய்லாம். ஆனால், நட்சத்திர ஓட்டல் விபச்சார விடுதிகளில் போலீசு நுழையக் கூடாது” என்பதைப்போல, “சதுர்வேதியைக் கைது செய்து கொள் சங்கராச்சாரி மீது கை வைக்காதே” என்கிறார்கள் இவர்கள்.

‘ஜெயேந்திரர் கொலை செய்திருப்பார்’ என்பதில் இந்த முன்னணிக்கும், கூலிப்படைக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படும் டி. வி. எஸ். முதலாளிக்கும், விமானம் வழங்கிய விஜய்மல்லையாவுக்கும் எந்தச் சந்தேகமும் இருக்காது. இப்படிச் ‘சொதப்பி’ விட்டாரே என்ற வருத்தமிருக்கலாம், அவ்வளவு தான்.

இருந்தாலும் சினிமாக் கதாநாயகிகளை ‘கைபடாத மலர்கள்’ என்று ரசிகர்களுக்கு அறிமுகம் செய்யும் சினிமா முதலாளிகளைப் போல, ‘சங்கர மடம்’ என்ற தங்களுடைய பக்திப் படத்தின் கதாநாயகனான சங்கராச்சாரியை உத்தமனாகச் சித்தரிக்க இவர்கள் முயல்கிறார்கள். ஆனால் மக்கள் இதனை நம்ப மறுக்கிறார்கள் என்பது தான் இவர்களுடைய பிரச்சினை.

ஜெயேந்திரரின் தண்டிக்கப்படாத குற்றங்கள்!

ஏனென்றால் சங்கரமடம் என்பது பார்ப்பன மடம். கிரிமினலாக இருந்தாலும் ஒரு பார்ப்பான்தான் அங்கே சங்கராச்சாரியாக முடியுமே தவிர, எப்பேர்ப்பட்ட பக்தனாக இருந்தாலும் சூத்திரரோ, பஞ்சமரோ சங்கராச்சாரியாக முடியாது.

sang-15-smallசெத்துப்போன சங்கராச்சாரியின் காலத்தில் பார்ப்பனரல்லாத சாதாரண மக்கள் யாரும் அந்த மடத்தைத் திரும்பிப் பார்த்தது கூட இல்லை.

‘இந்து ஒற்றுமை’ என்ற பெயரில் பார்ப்பனப் பாசிசக் கும்பலான ஆர்.எஸ்.எஸ் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதி மக்களை வளைக்கத் தொடங்கிய போதுதான் ஜெயேந்திரருக்கு ‘சேரிப்பாசம்’ வந்தது. சிறுபான்மை மக்களுக்கெதிரான கூலிப்படையாக தலித் மக்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காகத்தான் ஜெயேந்திரரின் ‘சேரி விஜயம்’ தொடங்கியது.

அப்போதும் தன்னுடைய சாதித் திமிரை ஜெயேந்திரர் கடுகளவும் விடவில்லை. கூத்திரம்பாக்கம் தலித் மக்கள் கோயிலில் நுழைய உரிமை கேட்டபோது “நீங்கள் சுத்தமில்லை” என்று கூறியது, தன்னை ‘தரிசிக்க’ வந்த மராத்திய முதல்வர் ஷிண்டே, தலித் என்பதால் அவரைப் பத்தடி தள்ளி நிறுத்தியது, சங்கராச்சாரி நடத்தும் கல்லூரியில் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனிப் பந்தியில் சோறு, தலித் மக்களை ஒடுக்கும் மதமாற்றத் தடைச் சட்டம்… என்று ஜெயேந்திரர் இழைத்துள்ள தீண்டாமைக் குற்றங்களுக்காக வழக்கு தொடர்ந்திருந்தால் சாகும் வரையில் இந்தச் சங்கராச்சாரி உள்ளேயே கிடக்க வேண்டியிருக்கும்.

கிறித்தவ, இசுலாமிய மக்களுககு எதிரான மதவெறியைத் தூண்டும் பேச்சு, குஜராத் படுகொலை நாயகன் மோடிக்கு ஆதரவு, அயோத்தி விவகாரத்தில நடத்திய அயோக்கியத்தனங்கள் ஆகியவற்றுக்காகத் தண்டிப்பதாக இருந்தால் ஜெயேந்திரர் இன்னொரு பிறவி எடுத்துச் சிறை செல்ல வேண்டும்.

சங்கரராமன் கொலையைக் காட்டிலும் கொடியவை மேற்கூறிய குற்றங்கள். தன்னுடைய காம லீலைகளுக்கும், ஊழல்களுக்கும் எதிராகக் கேள்வி எழுப்பிய ஒரே குற்றத்துக்காக சொந்த சாதிக் காரனை, சங்கரமடத்தில் பக்தனைக் கொலை செய்யத் துணியும் ஒரு கிரிமினல் மற்ற சாதி மத மக்களை மயிருக்குச் சமமாகக் கூட மதிக்க மாட்டான் என்பதில் ஐயம் வேண்டுமா?

காறி உமிழ்கிறார்கள் மக்கள்!

இன்று தினமலர், தினமணி போன்ற பார்ப்பனப் பத்திரிக்கைகள் ஜெயேந்திரருக்கு ஆதரவாக வரிந்து வரிந்து எழுதினாலும், இந்து முன்னணி கும்பல் கரடியாய்க் கத்தினாலும் அதைக் கேட்க நாதியில்லை. பெரும்பான்மை மக்கள் நாத்திகர்களாகி விட்டார்கள் என்று இதற்குப் பொருளல்ல; சங்கராச்சாரி ஒரு பார்ப்பனக் கிரிமினல் என்பதைத் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

சங்கரராமன் படுகொலைபார்ப்பனர்களிலேயே கணிசமான பிரிவினர் ஜெயேந்திரர் கொலை செய்திருக்கக் கூடும் என்பதைத் தயக்கத்துடன் ஒப்புக் கொள்கிறார்கள்.

இந்தக் கிரிமினலுக்கு ஆதரவாக வாதாடுவதற்கு வட நாட்டிலிருந்து வந்து இறங்குகிறார்கள் அத்வானி, தொகடியா, அசோக் சிங்கால் போன்ற ஆர்.எஸ்.எஸ் பாசிசக் கிரிமினல்கள். பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பனப் பாசிசத்தை விதைக்க வெறி கொண்டு முயற்சிக்கிறார்கள்.

ஆனால், ஜெயேந்திரரைத் தங்களது மதத் தலைவராக பெரும் பான்மை ‘இந்து’ மக்கள் கருதவில்லை; அவர் நிரபராதி என்று நம்பவுமில்லை; மாறாக, எல்லாக் குற்றவாளிகளையும் விசாரிப்பதைப் போல நன்றாகக் ‘கவனித்து’ விசாரித்தால்தான் சங்கராச்சாரி குற்றத்தை ஒப்புக் கொள்வார் என்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள்.

இனி, ஜெயேந்திரருக்கு ஆதரவாகக் கூட்டம் சேர்க்க ஆர்.எஸ்.எஸ் கும்பல் தமிழகத்தில் மதவெறியைத் தூண்டும்; வதந்திகளைப் பரப்பி ஆங்காங்கே கலவரத்தைத் துவக்கி வைக்கும். நாத்திகர்களும் கம்யூனிஸ்டுகளும் சங்கரமடத்தின் சொத்தையும் இந்து மத நிறுவனங்களின் சொத்தையும் அபகரிக்க சதி செய்வதாகப் பிரச்சாரம் செய்யும். கிறித்தவர்களும முசுலீம்களும இந்து மதத்தை இழவுபடுத்து வதற்காகத்தான் இவர்களைத் தூண்டி விடுகிறார்கள் என்று கூசாமல் புளுகும்.

மொத்தத்தில் கிரிமினல் ஜெயேந்திரருக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட முடியாத காரணத்தால் வெறி பிடித்த நாயின் நிலையில் இருக்கிறது பார்ப்பனப் பாசிச ஆர்.எஸ்.எஸ். கும்பல். வெறி நாய்களைச் சொல்லித் திருத்த முடியாது.

போராட்டம் தான் இதற்கு விடை. “வழக்கை போலீசு விசாரிக்கும் தண்டனை வழங்கும்” என்று நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜெயேந்திரர் என்ற குற்றவாளி, இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பார்ப்பனப் பாசிசக் கும்பலின் தலைவன். எனவே இந்தக் கொலை வழக்கில் ஜெயேந்திரர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் நேர்மையுணர்ச்சி கொண்ட ஒவ்வொருவரும் அக்கறை காட்ட வேண்டும்.

ஜெயேந்திரரால் ஏமாற்றப்பட்டிருப்பவர்கள் நாத்திகர்களல்லர்; இறை நம்பிக்கை கொண்ட பக்தர்கள். காவி உடையணிந்த ஒரு கிரிமினலை ஆன்மீகத் தலைவரென்று நம்பி அவர் காலில் விழுந்த ஒவ்வொருவரும் ஜெயேந்திரரால் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கிரிமினல் தண்டிக்கப்பட வேண்டுமெனக் கோருவது பெரும்பான்மை இந்துக்களின் கடமை.

மடங்கள், ஆதீனங்கள் என்ற பெயர்களில் மக்களின் துயரத்தைக் காசாக்கிக் கொள்ளும் இத்தகைய கிரிமினல்களை ஒழித்துக் கட்ட வேண்டுமானால் ஜெயேந்திரர் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதைச் சாக்காகக் கொண்டு பார்ப்பன மதவெறியைப் பரப்பவும், தமிழகத்தை குஜராத் ஆக்கவும் சதி செய்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். இச்சதியை முறியடிக்க இறை நம்பிக்கை கொண்ட மக்களும், பெரியாரின் தொண்டர்களும், ஜனநாயகவாதிகளும், கம்யூனிஸ்டுப் புரட்சியாளர்களும் இணைந்து போராடுவோம்!

  • சங்கர மடத்தை இழுத்து மூடு!
  • விஜயேந்திரையும் சங்கர மடத்துப் பார்ப்பனக் கும்பலையும் கைது செய்!
  • ஜெயேந்திரருக்குச் சிறப்புச் சலுகை வழங்காதே!
  • கொலைக் குற்றவாளியாக நடத்து!
  • நீதி விசாரணை முடியும் வரை ஜாமீனில் விடாதே!
  • இந்தக் கிரிமினல் கும்பலின் சதி ஆலோசகர்களான ஆர்.வி., சேசன் உள்ளிட்ட பார்ப்பன அதிகார வர்க்கக் கும்பலைக் கைது செய்து விசாரணை நடத்து!
  • சங்கரமடத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!
  • சொத்து விவரங்களை வெளியிடு!

மகஇக, விவிமு, புமாஇமு, புஜதொமு வெளியீடு
– டிசம்பர் 2004

மாவட்டக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட குரோம்பேட்டை மாணவர்கள்

2

மாவட்ட கல்வி அலுவலகம், செங்கல்பட்டு – குரோம்பேட்டை மாணவர்கள் RSYF தலைமையில் முற்றுகை.
அடிப்படை வசதிகள் கோரி மனு

மாணவர்கள் தனது பேராற்றலின் ஒரு சிறு அளவினை காட்டினாலே அது நினைத்ததை சாதிக்கும் என்பதை நிரூபிக்கும் அனுபவத்தைக் கொண்டது இந்த மனு கொடுக்கும் போராட்டம் .

குரோம்பேட்டை பள்ளியைச் சேர்ந்த 150 மாணவர்கள், அவர்களுக்கு நாங்களும் துணை நிற்போம் என்று பல்லாவரம், கோடம்பாக்கம், தாம்பரம், மதுரவாயல் என 50 மாணவர்கள் என ஏறக்குறைய 200 மாணவர்கள் அணி திரண்டு தங்கள் வர்க்க உணர்வினை வெளிப்படுத்திய நிகழ்வு.

குரோம்பேட்டை பள்ளி அடிப்படை வசதிகளுக்காக கடந்த 3 மாதங்கள் தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் நாம் (RSYF) போராடி வருகிறோம்.

3 மாதங்களில் குரோம்பேட்டை பகுதியைச் சுற்றியுள்ள 5 பகுதிகளில் தொடர்ச்சியான பிரச்சாரம், சுவரொட்டி, கையெழுத்து இயக்கம், என வேலைகள் நடந்தன. அதேபோல், மாணவர்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம், பள்ளியின் பிரச்சினைகளில் உடனுக்குடன் தலையிடுவது, பிரச்சாரம், சுவரொட்டி என தொடர்ச்சியாக வேலைகள் நடந்தன.

முதலில் தலைமையாசிரியரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில், நமது நெருக்குதல் மற்றும் அவரது சொந்த முயற்சியின் காரணமாக முதல் கட்டமாக 4 கழிவறைகள் ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு அடுத்த கட்டமாகவே இருக்கின்ற கழிவறைகளை பராமரிக்க பணியாள் நியமனம் செய்வது, கூடுதலாக கழிப்பறைகள் கட்டுவது, குடிநீர் குழாய்கள் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றக் கோரி இந்த மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினோம்.

நம்பிக்கை பெற்ற அம்மாணவர்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்ட நிகழ்வு இது. சில மாணவர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களையும் கொண்டு வந்து நிறுத்தி விட்டனர். மாணவர்கள் அலைஅலையாக வருவதைப் பார்த்த மக்கள் அவர்களை வியப்புடன் பார்த்தனர். குரோம்பேட்டை ரயில்நிலையத்தில் மாணவர்களே மக்களுக்கு பிரசுரங்களை விநியோகித்து வேலைகள் செய்தனர்.

செங்கல்பட்டில் இறங்கி நீண்ட பேரணியாக சென்றோம். மாணவர்கள் இவ்வளவு பேர் வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மக்களிடம் நமது நோக்கத்தைப் புரியவைப்பதற்காக நாம் அவர்களிடம் பிரசுரம் கொடுத்தோம்.

கல்வி அலுவலகத்தை நமது படை நெருங்குவதற்கு முன்பே போலீசு தகவலறிந்து ‘’சட்டம் ஒழுங்கை’’ நிலைநாட்ட வந்தது. மாணவர்கள் தம் சக்தியை உணர்ந்து கொள்ள தொடங்கியுள்ள இத்தருணத்தில், அதுவும் RSYF தலைமையில் அவர்கள் அணிதிரள்வது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் தானே.

நம்மிடம் வந்து, “இவ்வளவு மாணவர்களை கூட்டி வந்திருக்க கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகி விடும்” என்று சப் – இன்ஸ்பெக்டர் பேசினார்.

“3300 பேர் படிக்கும் பள்ளியில் 4 கழிவறைகள்தான் நீண்ட நாட்களாக உள்ளது. இதனை சரிசெய்து கொடுக்காததால் தான் நாங்கள் வந்துள்ளோம். இதில் எங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை சொல்வதற்காகத்தான் இங்கே வந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையெல்லாம் வராது” என அவர்களுக்கு பதில் கொடுத்தோம்.

தகவலறிந்து பத்திரிக்கையாளர்கள், டி.வி. நிருபர்கள் என வந்து சேர்ந்தனர்.

DEO இல்லாததால் அதற்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரியிடம் மாணவர் தலைவர்களோடு சென்று பேசினோம். நாம் நமது கோரிக்கைகளை கூறினோம். மாணவர் படை திரண்டு வந்திருப்பதைக் கண்ட அவர், உடனே கலெக்டர், DEO, CEO என எல்லோருக்கும் தொடர்பு கொண்டு தகவல் சொன்னார்.

இந்த சூழலில் மாணவர்கள் நமது கோரிக்கை முழக்கங்களை அப்பகுதி அதிரும் வகையில் பு.மா.இ.மு. பேனர், கொடி, சகிதமாக, எழுப்பிக் கொண்டிருந்தனர்.

நமது கோரிக்கைகளை கேட்ட அதிகாரி, ஒரு வாரத்திற்குள் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்து, அரையாண்டு விடுமுறைக்குள் வேலைகளை தொடங்கி விடுவதாக வாக்குறுதி அளித்தார்.

இதனை மாணவர்கள் மத்தியில் அவரே பேச வேண்டும் என்று கூறினோம்.

மாணவர்கள் மத்தியில் வந்து அவர் இந்த விசயத்தை கூறினார். மேலும் நீங்கள் சென்று படியுங்கள். நாங்கள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் என அறிவுரை கூறினார்.

அதற்குப் பின் பேசிய பு.மா.இ.மு. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் “அரசு முதலிலேயே செய்து கொடுத்திருந்தால் நாங்கள் வரவேண்டிய அவசியமில்லை. செய்யாததால் தான் நாம் வந்துள்ளோம்” என்று நிலைமையை உணர்த்தினார்.

பத்திரிக்கையாளர்களுக்கு தோழர்கள் பேட்டியளித்தனர்.

“எங்கள் பள்ளியின் நிலைமையை நாங்களே கூறுகிறோம்” என 4 மாணவர்களும் பேட்டியளித்தனர். பள்ளியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை எதார்த்தமாக கூறினர். இதுவும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டியது. அதாவது, நமது கோரிக்கையை நாம் அணிதிரண்டு போராடினால் மக்களிடம் பரவலாக கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கைதான் அது.

இந்த நிகழ்வு மாணவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையினையும், தாங்கள் யார் என்பதை அறிவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இதனை உணர்ந்துள்ளனர்.

பக்கத்தில் உள்ள ITI-யில் படிக்கும் மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒரு மாணவர் தங்கள் ITI யில் உள்ள பிரச்சினைகளிலும் தலையிடுவீர்களா? என்று கேட்டார்.

பல்லாவரம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நமது பள்ளியின் அடிப்படை பிரச்சினைகளுக்காகவும் நாம் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று வெளிப்படுத்தியுள்ளனர்.

மறுபடியும் பேரணியாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டோம். அமைப்பின் பேனர், கொடியோடு 200 மாணவர்களும் உணர்வோடு பேரணியில் நடந்து வந்தனர்.

இதனை நாம் எல்லா அரசுப்பள்ளி மாணவர்களின் மனநிலையாக மாற்றியமைப்பதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை.

மாற்றியமைப்போம்!

மனு

நோட்டிஸ்

படத் தொகுப்பு – 1

படத் தொகுப்பு – 2

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

மேட்டுக்குடி இந்தியாவின் பெண் வெறுப்பு !

2

இந்தியாவின் கலாச்சார உயரடுக்கின் பெண் வெறுப்பு
(கவிதா பானோட் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

சென்ற வாரம் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய விஷயம் நடந்தேறி இருக்கிறது. அதிகாரமும்  செல்வாக்கும் மிக்க தனது மேலதிகாரியை எதிர்த்துக் குரல் எழுப்பிய ஒரு பெண்ணின் துணிச்சலின் விளைவாக அதிகம் படித்த நவநாகரிகமான, நகர மயமாகிய, நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் கலாசாரத்தைத் தழுவிய வர்க்கம் முதன் முறையாக, தன்னைத் தானே உற்று நோக்கிக் கொள்ளும்படி, வெகுகாலமாக, தான் அடைகாத்து வரும் ஆணாதிக்கத்தையும் பெண்கள் மீதான காழ்ப்பையும் எதிர் கொள்ள நேரிட்டிருக்கிறது.

பெண்பல ஆண்டுகளாக இதே வர்க்கம் தான், தங்களை விட இளைத்த வர்க்கங்களிடையே நிலவும் ஆணாதிக்க மனப்பான்மையை – காவல் துறையினர், மத அடிப்படைவாதிகள், பண்படாத அரசியல்வாதிகள், உழைக்கும் வர்க்க புலம் பெயர் தொழிலாளி, அல்லது தெருவில் பெண்களிடம் வம்பிழுக்கும் காலிகள் – இவர்களையெல்லாம் ஓயாது கண்டித்தும், ஏளனம் செய்தும், தோலுரித்துக் காட்டியும் வந்துள்ளது. ஆனால், இந்த உயர்ந்த வர்க்கத்தினரைச் சேர்ந்த ஆண்கள் ஒரு போதும் பெண்கள் மீதான தங்களது கண்ணோட்டத்தைச் சுயபரிசீலனை செய்து கொண்டதில்லை. போலவே இவ்வர்க்கத்தின் பெண்களும் இவர்களின் ஆணாதிக்கப் பார்வையைப் பல வழிகளில் அனுமதித்து வருவதோடல்லாமல், கண்டும் காணாமலும் செல்வதுமான தங்கள் குற்றத்தை உணர்ந்ததுமில்லை.

இந்தச் சம்பவமோ அதற்கு ஷோமா சௌத்ரியின் எதிர் வினையோ எனக்குச் சிறிதும் வியப்பளிக்கவில்லை. நான் பார்த்த வரை மிகவும் முற்போக்கான, பரந்த நோக்குள்ளதாகக் கருதப்படும் ஆங்கில ஊடகங்களிலும், கலை இலக்கிய உலகிலும் பெண்களைப் பற்றி மிகவும் பிரச்னைக்குரிய பார்வைகள் ஆழமாகப் பதிந்திருப்பதையும், அது குறித்து எந்த ஆணோ பெண்ணோ கேள்வி எழுப்பாமலிருப்பதையும் எப்போதோ கண்டு கொண்டேன்.

சல்மான் ருஷ்டி முதல் இந்தத் தலைமுறையைச் சார்ந்த சமித் பாசு, பலாஷ் கிருஷ்ண மெஹ்ரோத்ரா வரை ஆண் எழுத்தாளர்களின் பலரது படைப்பில் இதைக் காணலாம்.   அவர்களது பெண் பாத்திரங்கள் (நாயகிகள்) பெரும்பாலும் பக்குவப்படாத கற்பனை மிஞ்சிய உருவங்களே ஒழிய முப்பரிமாணமும் கொண்ட பெண்களாக இருப்பதில்லை. ஐம்பதுகளில் யஷ்பால் எழுத்தில் உருவான இந்திக் கதைகளின் நாயகிகளைப் போன்ற கரிசனம், புரிதல், மற்றும் செறிவுடன் தங்கள் பெண் பாத்திரங்களை உருவாக்கும் இந்திய அல்லது வெளி நாட்டு இந்திய ஆங்கில ஆண் எழுத்தாளர்கள் யாரையும் என்னால் காண முடியவில்லை.

ஆணாதிக்கம்பெண்கள் மீதான இவர்களது காழ்ப்பு அவர்களது முகநூல் சுவர்களில், உடலுறவு பற்றிய அவர்களது நிலைச் செய்திகளில், அழகிய, பெருமைக்குரியவர்களாகக் கருதப்படும் பெண்களுடனான அவர்களது புகைப்படங்களில் தெறிக்கிறது. அவர்கள் கலந்து கொள்ளும் இலக்கியக் கூட்டங்களில், விருந்துகளில், உரையாடல்களில், அலுவலகங்களில் எல்லாம் அது வெளிப்படுகிறது. ’கெட்ட பசங்க’ என்ற தலைப்பிட்டு நடத்தப்படும் புத்தக வாசிப்பு நிகழ்வுகளில் கூட. பெருமதிப்பிற்குரிய எழுத்தாளரும் ஆசிரியருமான ஒருவர் தனது மாணவியை பாலியல் ரீதியாக கவர முயற்சித்ததும், புகழ் வாய்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உடன் வேலை பார்க்கும் பெண்ணையும் பாலியல் ரீதியாகச் சீண்டியதும் இங்கே சகஜமாக நடந்துள்ளது. ஆண்கள் இதழான மேக்ஸிம் இந்தியாவுக்காக எழுதும் ஆண் எழுத்தாளர்கள் பலர் செல்வாக்குள்ள அழகுப் பெண்களுடன்  புகைப்படங்கள் எடுத்து கொள்ளும் அளவிற்கு தமக்கு தொடர்பு இருப்பது பற்றிப் பீற்றிக் கொள்பவர்கள் தாம். இவர்கள் தாம் (எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வலைப்பூ எழுத்தாளர்கள்) ஆபாசக் கார்ட்டூன் மீது அரசு கொண்டு வந்த தடையை எதிர்த்துப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய வீரர்கள்.

எப்படி இந்த அறிவு ஜீவி ஆண்கள் பெண்களை வெறும் கண்ணுக்கழகான, கைக்கடக்கமான காமப் பொருட்களாகப் பார்க்கிறார்கள் என்பதற்கு இதைப் போல் கணக்கிலடங்கா எடுத்துக்காட்டுக்களை என்னால் தரமுடியும். ஆம், அப்படிப்பட்ட பார்வைக்கும், அப்பொருட்களை எங்கு எப்போது விரும்பினாலும் நுகரலாம் என்ற மனப்பான்மைக்கும் வெகு தூரமில்லை; வேகமான சரிவு பாதைதான்.

இந்தச் சூழலில், இப்படிப்பட்ட ஆண்களுடன் வேலை செய்தும், வாழ்ந்தும் வருகிற நிலையில் பெண்கள் தங்கள் இயல்புக்காகவே நேசிக்கப்படுவோம் என்று எதிர்பார்க்க முடியாது. தாங்கள் செய்யும் வேலைக்காகவே மதிக்கப்படுவோம் என்றும் கருத முடியாது.

உண்மை என்னவென்றால் முன்னேறியாக வேண்டுமென்றால் மிதமான ஆணாதிக்கப் பார்வையைக் கண்டும் காணாது இருக்க வேண்டும். தங்கள் மூளைக்குள் ஒலிக்கும் அந்த முரணான குரலை அடக்கி விட்டு, தங்கள் அறிவுக்கும் திறமைக்குமான சலுகைகள் தாம் அளிக்கப்படுவதாக நம்பிக் கொள்ள வேண்டும். ஆனால், மீண்டும் மீண்டும், பெண்கள் உடல் சார்ந்த பண்டங்களாக மட்டுமே குறுக்கப் படுகின்றனர். இங்கே அப்படிப் பாதிக்கப்பட்டவரில் ஒருவர் தான் தெகல்காவினால் பணிக்கு அமர்த்தப்பட்ட அந்தப் பெண் ஊழியர். இருப்பினும், தெகல்காவுடன் நேரடியாக தொடர்பில்லாத திங்க் என்ற நிறுவனத்தால்  பெரிய இடத்து விருந்தினர்களான டி நீரோ போன்ற ஆட்களைக் கவனித்துக் கொள்ள, விழாவைத் தொகுத்தளிக்க உதவும் அழகிய முகமாக அவர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்.

இருவரும் மனமொத்து நிகழ்ந்ததாக அந்தச் சம்பவத்தைத் திருத்தி எழுத முனைந்த தேஜ்பாலின் தனிப்பட்ட இமெயிலுக்குப் பதிலிறுக்கும் விதமாக அந்தப் பெண் எழுதுகிறார் – “புயலும், இடிமேகங்களும் அல்ல, நான் எந்த அலுவலுக்காக அன்று உங்களைச் சந்தித்தேன் என்பது உங்கள் நினைவில் இருந்திருக்கக் கூடாதா என்று ஆதங்கப்படுகிறேன்…நமது உரையாடல் ‘விளையாட்டாகவோ’ சரசம் நிறைந்ததாகவோ இருக்கவில்லை; நீங்கள் ‘காமம்’ குறித்தும் ‘விருப்பம்’ குறித்தும் பேசிக் கொண்டிருந்தீர்கள். ஏனென்றால் எப்போதுமே என்னிடம் அப்படிப்பட்ட பேச்சைப் பேசவே விரும்புவீர்கள்; ஒரு போதும் என் வேலையைப் பற்றி அல்ல.”

ஒவ்வொரு பெண் ஊழியரும் இதைச் சந்திக்கிறார்.

பெண்நான் ஓராண்டு வெகு உற்சாகத்துடனும் கடமையுணர்ச்சியுடனும் ஓஷியன்ஸ் இலக்கிய நிறுவனத்தில் உதவியாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு என் பணி முடிவுக்கு வந்த விதம் இவ்வாறானது. பிரபல நடிகரொருவர் பங்கேற்கவிருந்த அலுவலக விழாவொன்றில் மேடை மீது ஒரு விளம்பர அட்டையைத் தாங்கியவாறே ஒய்யார வலம் வருவதற்கு என்னையும் உள்ளிட்ட ஒன்பது பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். எங்கள் விருப்பம் குறித்துக் கேட்கப்படக் கூட இல்லை, என்னவோ அது எங்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு பெருமை போல அதை செய்யும்படி உத்தரவிடப்பட்டது. புதிதாகச் சேர்ந்திருந்த முன்னாள் மாடல் ஒருவர் எங்களுக்கு எப்படி நடப்பது, என்ன உடுத்துவது என்றெல்லாம் கற்றுத் தருவார் என்றும் சொல்லப்பட்டது. நானும் கலை வரலாற்று நிபுணர்களாகப் பணிபுரிந்து கொண்டிருந்த இன்னும் இரு பெண்களும் இதற்கு மறுத்தோம். ’நாங்கள் இதைச் செய்யமாட்டோம், இதற்காக இங்கே நாங்கள் பணிக்கமர்த்தப்படவில்லை’ என்று சுட்டிக் காட்டினோம். சினமுற்ற எங்கள் முதலாளி ’சொன்னபடி செய்யாவிட்டால் ராஜினாமா செய்துவிடுங்கள்’ என்று சீறினார். நான் ராஜினாமா செய்தேன் – எனக்கு இயன்ற அந்த வசதி என்னுடன் சேர்ந்து போராடிய அவ்விரு பெண்களுக்கு உட்பட பலருக்கும் இருக்காது.

கலை, ஊடகம் மற்றும் பதிப்பகத் துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளாக தேஜ்பால் மற்றும் என் முன்னாள் முதலாளி போன்ற சக்தி வாய்ந்த ஆண்களின் தலைமையில் செயல்பட்டு வருகின்றன. அசைக்கமுடியாத ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த கடவுளர்களின் தலைமையில் அவை சமய மரபுகள் போல் விளங்கி வருகின்றன. ஊழியர்களோ, குறிப்பாகப் பெண்கள் அவர்களைச் சுற்றி பக்தைகள் போல் வலம் வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகப் பெண்கள் தலைமைப் பொறுப்புகளை ஏற்கத் தொடங்கி இருந்தாலும் அவர்கள் ஆண்கள் சென்ற அதே பாதையைத் தான் பின்பற்றுகின்றனர்; அவர்கள் நடத்தியது போலவே, அதே சக்தியை உள்வாங்கிக் கொண்டு; தங்கள் நிறுவனத்தின் ஏனைய பெண்களை அதே போல் எந்த மரியாதையும் இன்றி நடத்துகின்றனர்.

நான் ராஜினாமா செயததைக் கேட்டு எனது உடனடி மேலதிகாரியான பெண்மணி ஒன்றுமில்லாததை நான் காரணமில்லாமல் பெரிதுபடுத்தி விட்டதாக மிகவும் கோபமடைந்தார். தனது பதினைந்து ஆண்டு பத்திரிகை மற்றும் பதிப்பகத் துறை அனுபவத்தில் இது போல் என்னவெல்லாமோ செய்து தான் முன்னிலைக்கு வரவேண்டி இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும் இச்சம்பவத்தை நான் பகிர்ந்து கொண்ட வேறொரு பெண் பத்திரிகை ஆசிரியரோ அலட்சியமாகத் தோளைக் குலுக்கினார். ’அழகான இளம் பெண்களை’ நிறுவனங்கள் இவ்வாறு பயன்படுத்திக் கொள்வது எங்கேயும் நடப்பது தான். அவ்வளவு ஏன், தான் கூட தனது அழகைப் பயன்படுத்தித் தான் பணியாற்றும் இடங்களில் சலுகைகள் பெறத் தயங்கியதே இல்லை என்றும், முக்கியமான கூட்டங்களுக்குச் செல்லும் போது அழகாக உடையணிந்து கொண்டு போய் நினைத்ததைச் சாதித்ததுண்டு என்றும் கூறினார். இதே ஆசிரியர் தான் சமீப காலமாக இந்தியாவுக்கு மேற்கத்திய மாடல்கள், கவர்ச்சி நடிகைகள் எழுதிய டயட் மற்றும் உடற்பயிற்சி புத்தகங்கள், மில்ஸ் அண்ட் பூன் காதல் புத்தகங்களின் இந்தியப் பதிப்புகள், மற்றும் சிக் லிட் என்று சொல்லப்படும் இளம் பெண்களைக் குறிவைக்கும் காதல் கதைகள் போன்றவற்றை இந்தியாவுக்குக் கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர். இங்கிருக்கும் சந்தையின் தேவையைப் பூர்த்தி செய்வதாகச் சொன்னாலும், மேற்கத்திய முதலாளித்துவ மாதிரியைக் கொண்டு இந்தச் சந்தையை உருவாக்கியதே இவர் போன்ற பத்திரிகை ஆசிரியர்கள் தாம்.

இந்த உயரடுக்கு உலகத்தின் பிரச்னைகளில் பெரும்பங்கு வகிப்பதே கண்மூடித்தனமாக மேற்குலக நாகரிகங்களைத் தழுவும் முயற்சியில், அதன் ஆண் முதலாளித்துவத்தையும் உடல் மற்றும் பாலியல் சுதந்திரத்தை மட்டுமே குறிக்கோளான அதன் பெண்ணியச் சிந்தனைகளையும் சேர்த்துத் தழுவி, சிதைந்து போனதொரு கலாசாரத்தைத் துப்பி இருக்கிறது; இதில் பெண்கள் வெறும் போகப் பொருட்களாக மாறிப் போனது மட்டுமன்றி தாங்கள் விரும்பி போராடிய சுதந்திரம் தங்களுக்குக் கிடைத்து விட்டதாக நம்பவும் ஆளாகி இருக்கிறார்கள்.

இந்தியாவிலும் ஒரு குறிப்பிட்ட வர்க்கப் பெண்கள் – நகரத்தின் மேல்தட்டுப் பெண்கள் தங்களைப் பெண்ணியவாதிகளாக நம்பிக் கொண்டாலும் தாங்கள் மேலே செல்ல இயலாத முட்டுச் சந்தில் செலுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை உணரவில்லை. மாறாக, பெண்களைக் காமப் பொருட்களாகச் சித்தரிக்கும் விளம்பரங்கள் மீதான தடைகளை அகற்றக் கோரி கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். தாங்கள் பெண்ணியவாதிகள் என்று பறைசாற்றியபடியே, வோக், காஸ்மாபாலிடன், எல்லி, போன்ற பளபளக்கும் மேற்கத்திய ஃபேஷன் இதழ்களில் மாடல்களாகக் கூட பணியாற்றுகிறார்கள்.

மேட்டுக்குடியின் பெண்ணியப் போராட்டங்களெல்லாம் கீழ்த்தட்டு மக்களின் ஆண்களையே குறிவைக்கின்றன. ஆண் பெண் இருபாலரும் எழுதும் அப்படிப்பட்ட எழுத்துக்களிலும் Pink Chaddi,  Mend the Gap, Slut Walk, Blank Noise Project போன்ற இயக்கங்களிலும் நிலவும் வர்க்கக் காழ்ப்பு என்னை சங்கடத்துக்குள்ளாக்குகிறது.

எளிய வர்க்கத்தினர் பல உண்மையான பிரச்னைகளைச் சந்தித்து வரும் நிலையில், இந்த மேல்தட்டு எழுத்துக்களும் போராட்டங்களும் தெருவில் போகும் அந்த நாகரிகம் குறைந்த ஏழை மனிதன் மீதிருக்கும் இவர்களது ஆழ்ந்த அச்சத்தைத் தான் வெளிப்படுத்துகிறது.  அலுவலகத்தில் மிகவும் எளிமையான, ஆங்கிலம் பேசத்தெரியாத ஒரு குமாஸ்தாவை அவனது மத அடிப்படைவாதத்துக்காக இவர்கள் ஏளனம் செய்வதாகத் தான் அமைகிறது. அவன் மதஅடிப்படைவாதியோ இல்லையோ அது பொருட்டில்லை.

உண்மையில் மேல்தட்டுப் பெண்களுக்கு உள்ள சக்தியையும், உழைப்பாளி மற்றும் கீழ் நடுத்தர வர்க்க ஆண்களின் மேல் இவர்களுக்குள்ள ஆதிக்கத்தையும், (தெருவில் விசிலடித்துத் திரியும் தருணங்களைத் தவிர) உணர்ந்து கொள்ள யாரும் அதிகம் முயற்சி எடுப்பதில்லை.

ஆகவே ”ஸ்லட்” (பாலியல் சுதந்திரம் பெற்ற பெண்) ஆகவும் ’பப்’களுக்குச் செல்வதற்கும் தங்களுக்கு வேண்டும் உரிமைக்காகவும் போராடுவது, மேற்குலகில் ஆனது போல் பெண்களுக்கு இன்னொரு சிறையாகத் தான் முடியும். – அது இன்னும்  ஆபத்தான சிறை, ஏனெனில் அங்கு பெண்கள் தாங்கள் சுதந்திரம் அடைந்து விட்டதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.

ஆணாதிக்கம், பாலியல் சில்மிஷங்கள், இவையெல்லாம் ’அறியாமையில் திளைக்கும்’ பாமர மக்களோடே சார்புபடுத்திப் பார்க்கப் படுவதால், மேல்தட்டுப் பெண்களுக்கு தாங்கள் அவமதிக்கப்படுவதையும், வன்முறைக்கு ஆளாவதையும், பாலியல் ரீதியாகத் தாக்கப்படுவதையும், பொருள் மயமாக்கப்படுவதையும் உணர முடிவதில்லை. அல்லது, அத்தகைய சூழலில் (தங்கள் தவறுகளால்) சிக்க வைக்கப்பட்டதாக உணர்வதால் பேச இயல்வதில்லை. ஏனென்றால் இவையெல்லாம், அழகான, பண்பட்ட, பரந்த நோக்குடைய பசப்புப் பேச்சுக்களால் போர்வையிடப்பட்டிருக்கின்றன. ஆகவே, வெளிப்படையான ஆணாதிக்கத்தை விடவும், பழம்பஞ்சாங்க ஆண்களின் அடக்குமுறையை விடவும் ஆபத்தானது என்று உணர வேண்டும்.

இந்தியப் பெண்கள் தற்போது தங்கள் சுதந்திரமான ஆசைகள், அபிலாஷைகள், காதல் மற்றும் உடல்ரீதியான சுதந்திரம் குறித்தெல்லாம் சிந்திப்பதால், பொதுப் புத்தியில் பெண் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்ற பிம்பங்களெல்லாம் மாறி வருகிற இவ்வேளையில்,  அதிகாரபலம் வாய்ந்த ஆண்கள், குறிப்பாக நவநாகரிகமான மேல்தட்டுப் பிலுக்கர்கள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள முனைகிறார்கள்.

அவர்களது செய்கைகளுக்கு நீங்கள் பணியாவிட்டால் நீங்கள் முற்போக்கானவள் இல்லை, பழமையான கட்டுப்பெட்டித் தனமானவள் என்பது தான் உங்களைச் சிக்கவைக்கும் கணக்கு. “ஒருவருக்கு மேற்பட்டவரை நீ காதலிக்கலாம்” என்றிருக்கிறார் தேஜ்பால், அப்பெண்ணிடம், கிட்டத்தட்ட ஒரு சவாலை முன்வைப்பது போல்.

காதல் இங்கு எங்கு வந்தது? ஆண்கள் பெண்களை அவர்கள் இயல்புப்படியே பார்க்க இயலாத வரை, அவர்களைத் தங்கள் சொந்த இன்பத்துகான காமப் பொருட்களாக நோக்கும் பாங்கு மாறாத வரை இங்கே ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உண்மையான காதல் என்பது சாத்தியமே இல்லை.

வெளிப்படையாகப் பேசவும், தங்கள் இனத்தின் தடைகளை உடைக்கவும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் யாவையும் அவர்களைத் தங்கள் சுயவிருப்புக்காக இணங்க வைக்கவும், பின்பு அதற்கு அவர்களே காரணம் என்று சிக்கவைப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தேஜ்பால் போதையேறிய தனது இமெயிலில் இவ்வாறு எழுதுகிறார்: “..அன்று நமது உரையாடல் சரசம் நிறைந்ததாக இருந்ததை நினைவு கூர்வாயாக. நாம் விளையாட்டாகவும் சரசமாகவும் காமம், உடலுறவு குறித்தும், ஒழுக்கம் என்பதன் மாயை பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். மேலும், புயல் காற்றடித்த ஒரு நாள் மாலை, நான் இடிமேகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது என்னை வந்து சந்தித்தாயே..அதையும்.”

இப்படித் தான் பெண்கள்  திறமையாகக் கையாளப்படுகிறார்கள். நடந்ததற்கு அவர்கள் தான் பொறுப்பு என்பது போலவும், எல்லாவற்றிலும் அவர்களுடைய பங்கும் இருப்பது போலவும். யாரோ ஒருவன் பாலியல் பலாத்காரம் செய்தால் அக்குற்றம் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் இது போன்ற சூழல்களில் பெண்கள் தாங்களும் காரணம் தானோ என்ற நினைப்பினால் பெரும்பாலும் அமைதி காத்திவிட நேர்கிறது.

ஆண் பெண் உறவுகள் மாறி வரும் கால கட்டங்களில் இது போல் இன்னும் பல நிகழ்வுகள் அரங்கேறக் கூடும் – பெண்கள் அவற்றை உள்ளது உள்ளபடி பார்க்க வேண்டியதும், ஆண்கள் தங்களைச் சுற்றியுள்ள பெண்களோடு எவ்விதமாகத் தங்களைப் பொருத்திப் பார்க்கிறோம் என்று ஆழ்ந்த சுயபரிசீலனை செய்து கொள்வதும் மிகவும் அவசியமாகிறது. நடந்த இந்தச் சம்பவம் நம்மை இது போன்ற முயற்சிகளுக்கு ஊக்குவிப்பதாய் அமையவேண்டும்; ஆண் பெண் உறவுகளுக்குப் புதிய நியதிகளை வரையறுக்கும் முயற்சியாய் அது அமைய வேண்டும்.

– கவிதா பானோட்
தமிழில் – தீபா

நன்றி: www.Kafila.org

லண்டனில் பிறந்து வளர்ந்தவர் கவிதா பானோட். இந்திய-பிரிட்டிஷ் இலக்கிய நிகழ்ச்சி ஒன்றை இயக்குவதற்காக தில்லி வந்தவர் இந்தியாவின் முதல் இலக்கிய நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்கினார். இவரது எழுத்துக்கள் பல ஆங்கில இதழ்களிலும் தொகுப்புகளிலும்  வெளிவந்துள்ளன.

அறிவும், ஆரோக்கியமும் செழிக்கச் செய்த ஆசான்கள் – திப்பு

0

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 9 

றிவு செல்வத்தை ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு வளர்த்து எடுத்து கொண்டு செல்லும் உன்னதமான ஆசிரியப் பெருந்தகைகள் என்றென்றும் சமூகத்தால் போற்றப்படவேண்டியவர்கள்.ஆசிரிய பணிக்கு நியமனம் பெறுவதனாலேயே ஒருவர் அப்படி போற்றுதலுக்கு உரியவர் ஆகிவிடுவதில்லை.அந்த பணியை கடனுக்கு செய்யாமல் செவ்வனே நிறைவேற்றுபவர்கள் மட்டுமேஅப்படி ஒரு சிறப்பை பெறுகிறார்கள்.அந்த வகையில் ஆசிரிய பணியை உளமார செய்த நல்லாசிரியர்கள் வாய்க்கப் பெற்ற நல்வாய்ப்பாளர்களில் நானும் ஒருவன்.

தமிழ்வழிக் கல்விஎனது நினைவில் நீங்காத இடம் பெற்றுள்ள அப்படியான ஆசிரியர்கள் பற்றி எழுதுவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலாவதாக உயர்நிலை வகுப்புகளில் தமிழ் ஆசிரியராக வந்த அய்யா மாதவன் அவர்கள். தமிழ் வகுப்பு என்றாலே ”bore” என்ற அசட்டுத்தனத்திலிருந்து எங்களை மீட்டவர் அவர். தமிழை சுவையாகவும் அழகாகவும் சொல்லித் தந்தவர். நகைச்சுவையாக பேச வல்லவர். அவரது வகுப்பு என்றாலே சிரிப்பும் கும்மாளமும் தூள் பறக்கும்.

பத்தாம் வகுப்பில் அணியிலக்கணம் நடத்தும் முன்பு, இதை புரிந்து கொள்ள முதலில் அடிப்படை இலக்கணத்தை நீங்கள் நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லி பத்து பதினைந்து நாட்கள் அதற்காக வகுப்பு எடுத்தார்.எந்த மொழியில் நாம் கல்வி கற்கிறோமோ அந்த மொழியை கசடற கற்பதே கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அடிப்படை என்பார். நீங்கள் தமிழ் வழி மாணவர்கள் தமிழை இலக்கணப் பிழையின்றி எழுத கற்றுக்கொண்டால் பாடங்களை மனப்பாடம் செய்யாமலே புரிந்ததை வைத்து விடை எழுதி வெற்றி பெற முடியும் என்று சொல்லித் தந்தார். அய்யா மாதவன் காட்டிய வழியில் நாங்கள் சென்றதால் A, B, C என ஆறு பத்தாம் வகுப்பு பிரிவுகள் கொண்ட எங்கள் பள்ளியில் எங்கள் வகுப்பு கூடுதலான தேர்ச்சி விகிதம் பெற்றது.

அடுத்து பனிரெண்டாம் வகுப்புக்கு ஆங்கில ஆசிரியராக வந்த நாகராஜன் சார் அவர்கள். அதுவரை எனக்கு ஆங்கிலம் துப்புரவாக தெரியாது. ஆங்கிலம் அச்சடிக்கப்பட்ட தாளை நீட்டினால் படிப்பேன், அவ்வளவுதான். பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வை கடந்தது எல்லாம் வெறும் மொட்டை மனப்பாடத் திறனை வைத்துத்தான். பனிரெண்டாம் வகுப்பு கல்வி ஆண்டு துவங்கிய ஒரு வாரத்தில் ஆங்கிலம் முதல் தாள் பாடங்கள் எதையும் நடத்தாமல் இரண்டாம் தாள் பாடங்கள் சிலவற்றை நடத்தப் போவதாக அறிவித்தார் நாகராஜன் சார். அப்போது, “இந்த நான்கைந்து நாட்களுக்கு பாடங்களை கூர்ந்து கவனியுங்கள். அடுத்த வாரம் உங்களுக்கு ஆங்கிலம் அத்துப்படியாகி இருக்கும்” என்றார்.

முதலில் voice and tense நடத்தினார். present, past, future tense களை விளக்கினார். அந்தந்த காலத்துக்கான continuous tense களை விளக்கினார். அடுத்து perfect tense களை நடத்தும் முன் ஒவ்வொரு verb க்கும் மூன்று காலப் பதங்கள் இருப்பதை விளக்கி present tense, past tense, past participle பதங்களை விளக்கிச் சொன்னார். தொடர்ந்து முக்காலத்துக்குமான perfect tense, perfect continuous tense களை நடத்தினார். சற்றே ஆங்கிலம் புரிய ஆரம்பித்தது. அடுத்து active voice, passive voice களை புரியும்படி விளக்கி சொன்னார்.

ஆங்கிலப் பேச்சு
“இவ்வளவுதாண்டா இங்கிலிபிசு”

ஆகா, என்ன ஒரு ஆச்சரியம். ஆம், கடைசிச் சுழற்றில் cube-ன் ஒவ்வொரு பக்கமும் அதனதன் வண்ணக் கன சதுரங்கள் போய் உட்கார்ந்து கொள்வது போல் மூளையில் ஆங்கில இலக்கணம் போய் உட்கார்ந்து ஆங்கிலம் புரிந்து விட்டது. எழுவாய், பயனிலை, வினைச் சொல் என்ற வரிசையில் தமிழில் நாம் எழுதும் சொற்றொடர் சற்றே மாறி subject, verb, object என்ற வரிசையில் ஆங்கிலத்தில் அமைவதும், செய்வினையும் செயப்பாட்டு வினையும் active voice, passive voice ஆக மனதில் பதிந்து, “இவ்வளவுதாண்டா இங்கிலிபிசு” என்றது. இன்று பல ஆயிரம் கட்டணம் வாங்கிக் கொண்டு சொல்லித் தரப்படும் ஆங்கிலத்தை தான் வாங்கும் சில ஆயிரம் ஊதியத்திற்காக அல்லாமல் தனது மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் கடும் சிரத்தை எடுத்து சொல்லி தந்த எங்கள் நாகராஜன் சார் என்றென்றும் எமது நன்றிக்குரியவர்.

அடுத்து எங்கள் உடற்பயிற்சி கல்வி ஆசிரியர் தஸ்தகிர் சார் அவர்கள். விளையாட்டு வகுப்பில் ஒரு பந்தை கொடுத்து மாணவர்களை மைதானத்துக்கு துரத்தி விடுவதோடு தன கடமை முடிந்தது என நில்லாமல் உடற்பயிற்சிகள் பலவற்றை சொல்லித் தருவார். அதன் நன்மைகளை எடுத்துச் சொல்வார். ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் மூளை நன்கு செயல்படும். படிப்பும் நன்றாக வரும் என்பார். நன்றாக விளையாடுபவன் நன்கு படிக்க மாட்டான், நன்றாக படிப்பவன் நன்கு விளையாட மாட்டான் என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்பார். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லி உற்சாகமூட்டுவார். மாணவர்களை வரிசையாக வந்து pull ups, push ups எடுத்துக் காட்டச் சொல்வார். கூடுதலாக எடுக்கும் மாணவர்களை பாராட்டி கௌரவிப்பார். சாதாரணமாகவே விளையாட்டு வகுப்பு என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். தஸ்தகிர் சார் எங்களுக்கு அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி தந்தார்.

தஸ்தகிர் சார் ஊட்டிய ஆர்வத்தின் காரணமாக இன்றளவும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை விடாமல் கடைப்பிடித்து வருகிறேன். குறிப்பாக தண்டால் [push ups] செய்யும்போதெல்லாம் தஸ்தகிர் சார் நினைவுக்கு வருகிறார். தொடர்ந்த உடற்பயிற்சியின் காரணமாக அசைவ உணவு உண்ணும் பழக்கம் இருந்தும் கூட, நடுத்தர வயதை கடந்த பின்னும் கூட குருதி அழுத்தம் , சர்க்கரை நோய் போன்றவை ஏதுமின்றி ஆரோக்கியமாக இருக்கிறேன்.

பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிக்கு சென்ற போது அந்தச் சூழலே மிகவும் பிடித்தமானதாக இருந்தது. முதன் முறையாக ஆசிரியர்கள் வாங்க போங்க என்று மரியாதை கொடுத்து பேசினார்கள். வகுப்பு துவங்கி சற்று தாமதமாக போனாலும் excuse me என்ற ஒற்றை சொல் yes என்ற பெருந்தன்மையை காட்டி உள்ளே சென்று அமர வைத்தது. இயல்பான விடலை பருவ சேட்டை காரணமாக சில ஆசிரியர்களிடம் ஏற்பட்ட பிணக்கு கூட அக மதிப்பீட்டு மதிப்பெண்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எனது கல்லூரி ஆசிரியர்களிடம் பாடங்கள் மூலம் கற்றுக் கொண்டதை விட பழகி கற்றுக் கொண்டது ஏராளம். குறிப்பாக மோகன்ராஜ் சார் அவர்களின் நகைச்சுவை ததும்பும் பேச்சும் கனிவும் கண்டிப்புமாக எங்களை சொந்த தம்பிகள் போல் நடத்திய பாங்கும் மறக்கவொண்ணாதவை. மொத்தத்தில் எனது இன்றைய ஆளுமையில் [அப்படி ஒன்று இருப்பதாக நான் நம்புகிறேன். தயவு செய்து நீங்களும் நம்புங்கள், உங்களுக்கு புண்ணியமா போகும்] கல்லூரி வாழ்க்கைக்கு கணிசமான பங்குண்டு.

நாடும் நாமும் செழிக்க இத்தகைய நல்லாசிரியர்கள் பெருகட்டும்.

– திப்பு