Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 694

மோடி அலையில் மூச்சுத் திணறும் வைகோ !

17

மிழக ஊடகங்களில் பெரும்பாலனவை அதிமுக, பாஜகவை ஆதரித்து செய்தியா, கருத்தா என்று இனம் காண முடியாத வகையில் எழுதி வருகின்றன. அம்மாவுக்கு வாக்கப்பட்ட குமுதம் தேர்தல் கணிப்பின் முதல் பகுதியை வெளியிட்டிருக்கிறது. அதில் பெரும்பாலும் அதிமுக வெல்லுமாம். அதே போல துக்ளக்கும் அதன் நிருபர்களை வைத்து தொகுதி நிலவரத்தை அதிமுகவிற்கு ஆதரவாக வெளியிடுகிறது.

பாஜக கூட்டணி
வைகோ, விஜயகாந்த், மோடி, ராமதாஸ்

இன்று வந்த ஜூவியில் தமிழருவி மணியன் ஐந்து பக்கத்தில் காங்கிரசுக்கு நீதி உபதேசம் செய்கிறார். அடுத்த ஜூவியில் பெண்கள் சர்வேயாம். கண்டிப்பாக மோடியும், பாஜகவும் முதல் இடத்தில் இருக்கும் என்பதை வரும் சனியன்று தெரிந்து கொள்ளலாம். மோடியை கைவிடாத துக்ளக், அம்மாவைதான் முதன்மைப்படுத்துகிறது. கிராமங்களில் மோடி அலை இல்லை என துக்ளக் செய்தியாளர்கள் எழுதுகிறார்கள். அப்படி மோடி அலை வீசுவதாக எழுதிய ஜூவியை விட சோ-தான் மோடியை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய முதல் பிரபலம் என்பது உண்மை.

“மக்கழே, மக்கழே” என்று எங்கே ஆரம்பித்தோம், எதில் முடிப்போம் என்று யாரும் ஊகித்தறியாதபடி விஜயகாந்த் த்ரில்லர் அரசியல் பேசுகிறார். வேட்பாளரை அறிமுகப்படுத்தும் போது “ஏம்பா உன் பேரென்ன” என்று எதார்த்தமாக மூன்று மைக்குகளை வைத்துக் கொண்டே கேட்கிறார். இரவில் யாரும் ஆதித்யா சேனலை பார்க்காமல் கேப்டன் டிவியை பார்த்து சிரிக்கிறார்களாம். கேப்டனை காமடியனாக அழகு பார்க்கும் ஊடகங்கள் எழுதி வைத்து ரம்பம் போல அறுக்கும் ஜெயாவை அப்படி காமடி செய்வதில்லை. அம்மா பயம் என்றால் சும்மாவா?

மதுரை ஆதீனம் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்தை செய்து வருகிறார். அம்மா பிரதமராக ஆன பிறகு ஓபி முதலமைச்சராகவும் பிறகு ஓபியின் மகன் முதலமைச்சராக வருவார் எனவும் பேசுகிறாராம். இது உளவுத் துறை மூலம் அம்மா வசம் போனால் என்ன செய்வது என்று ஓபி மகன் திகிலில் இருக்கிறாராம். பிரச்சினைகள் ஆண்டைகள் மூலம்தான் வரவேண்டுமென்பதல்ல, அது மதுரை ஆதினம் போன்ற அடிமைகளின் மூலமும் வரலாம். ஆதீனத்தின் வளர்ப்பு வாரிசு நித்தியானந்தா ஏன் இன்னும் அம்மா புகழ் பாட வரவில்லை, தெரியவில்லை.

எனினும் நக்கீரன் இதழ் மட்டும் திமுக ஆதரவு கொண்ட ஒரே பத்திரிகையாக ‘உறுதி’யுடன் வெளிவருகிறது. அந்த வகையில் அந்த நிலையில் இருந்து பத்திரிகையை சமநிலை குன்றாமல் இருப்பது போல காட்டிக் கொண்டு நடத்துவது ‘பெரிய’ விசயம்தான். அதிமுக, பாஜக ஊடகங்கள் தமிழகத்தின் தேர்தல் வெற்றி குறித்து அவரவர் கட்சி சார்பில் மட்டையடியாக சொல்லும் போது நக்கீரன் 50-50 என்று சொல்ல வேண்டியிருக்கிறது. கூடவே அதன் நியாயங்களையும் தேடி யோசித்து எழுத வேண்டியிருக்கிறது. இதனாலேயே நக்கீரனது தேர்தல் செய்திகள் மற்ற ஊடகங்களை விட கொஞ்சம் யதார்த்தமாக இருக்கிறது.

வைகோ
பம்பரம் தாத்தா வைகோ

“பம்பரத் தாத்தா வர்றாருடோய்..- சிறுவர்களைக் கவரும் வைகோ” என்று இன்றைய நக்கீரன் இதழில் வந்திருக்கும் விருதுநகர் தேர்தல் செய்திகள் உண்மையில் ஒரு காவியத்தின் சுவை குன்றாத கலைத் தகுதியைக் கொண்டிருக்கிறது. இந்தத் தலைப்பை பார்த்தால் வைகோவே மகிழ்ச்சியடைவார். வருங்கால இளைய சமூகத்தின் மனதில் ஒரு தலைவர் அதுவும் அவர்களது விளையாட்டு பொருளால் நினைவு கூறப்படுவது யாருக்கும் கிடைக்காத பேறுதான்.

ஆனாலும் பம்பரம் சின்னம் பட்டியலிலேயே இல்லை, ஒரே சின்னத்தில் போட்டியிடும் அங்கீகாரமும் இல்லை என்ற ஒளியில் இத்தலைப்பு கொஞ்சம் சோகம் பெறுகிறது. வைகோவின் சந்தர்ப்பவாதமும், துரோகமும் கம்பீரமாக இல்லாமல் சோகத்துடனும், அவலத்துடனும்தான் வெளிப்பட வேண்டுமா என்பது இதுவரை தத்துவஞானம் விடை அறியாத கேள்வி.

விருதுநகர் தொகுதியின் எல்லா பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திப்பது என்று வைகோ முடிவு செய்திருப்பது ஏதோ மக்கள் பால் உள்ள அன்பினால் மட்டுமல்ல. அப்படியாவது ஒரு சோக சிம்பதியை கிளப்பி வாக்குகள் ஏதும் தேறுமா என்ற வரலாற்றுக் கட்டாயத்தில் வைகோ இருக்கிறார். ‘மாவீரன்’ பிரபாகரனுடன் வன்னிக்காட்டில் புலிக் குட்டிகளுடன் விளையாடிய இந்த புயல் இன்று கரிசல் காட்டில் முள்ளுக் காட்டில் எல்லாம் சென்றாவது தினசரி ஓரிரு வாக்குகளை சேகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதைப் பார்த்தால் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் கண்ணீர் விடுவார்கள். வைகோவை இப்படி அனாதரவாய் சுற்ற விட்ட தமிழ்நாட்டு மக்களை திட்டி தீர்ப்பார்கள்.

அவரது வேனில் படுக்கை வசதிகளோடு டாய்லெட் வசதியும் இல்லை. இயற்கை உபாதைகளுக்கு கூட அவர் மக்களைப் போல முள்ளுக்காட்டு பக்கம்தான் ஒதுங்குகிறார். ஒரு தொகுதிக்குள்ளேயே சுற்றி வருவதால் அவர் வீடு போன்ற வசதிகள் கொண்ட வேன் தேவையில்லை என்று நினைத்திருக்கலாம். மேலும் குண்டும் குழியுமாக உள்ள விருதுநகர் நாட்டுப்புறத் தடங்களில் செல்லும் ஆடம்பர வேன்கள், கரகாட்டக்காரனில் வரும் கவுண்டமணி கார் போல உட்கார்ந்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து மோடி அலையில் அடுக்கு மாடிகளை கட்ட வேண்டிய வைகோ இங்கே ஆளில்லாத கரிசல் காட்டு கிராமங்களில் அம்போவென சுற்ற வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்வியும் அடுத்து வருகிறது.

ஏன் இப்படி வசதிக் குறைவுகளோடு பிரச்சாரம் செய்கிறீர்கள் என்று கேட்டால், மதிமுகவை ஏழைகளின் கட்சி என்கிறார் வைகோ. இதனால் மதிமுக பணக்காரர்கள் மற்றும் முதலாளிகளிடம் பணம் வாங்காது என்பதல்ல. யார் கொடுப்பார்கள்? விருதுநகரிலிருந்து இந்தியாவிற்கே வணிகம் செய்யும் நாடார், ரெட்டியார் முதலாளிகள் பலரும் திமுக, அதிமுக என்று கனமாக கவனித்தாலும், பாஜகவும் அவர்களது குட்புக்கில் உள்ள கட்சி என்றாலும் மோடியை முதன்முதலில் தோளில் தூக்கிச் சுமந்த இந்த மறத்தமிழனை தோற்றுப் போகும் ஓய்ந்து போன குதிரையாகவே அவர்கள் பார்க்கிறார்கள். எனில் இங்கே ஏழைகள் கட்சி என்பது விரும்பிப் பெற்ற சிறப்பல்ல. சோகமாக இருந்தாலும் வைகோவே இதை மனமொப்பி ஒப்புக் கொள்வார். பண விசயத்தில் யாரும் பொய் பேச முடியாதே?

வைகோ பிரச்சாரம்
ஒவ்வொரு இடத்திலும் டிரம்ஸ் வாசிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள்.

இதனால் வைகோவின் அன்றாட பிரச்சார தினங்கள் அழுது வடிவதாக அர்த்தமல்ல. அவர் பேசும் ஒவ்வொரு இடத்திலும் டிரம்ஸ் வாசிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள். இரண்டும் வைகோ உலாவில் ஏற்பாடு செய்யப்பட்டு உடன் வருகின்றன. அருகில் சிவகாசி இருப்பதாலும், நமத்துப் போன பட்டாசுகளை நன்கொடையாக வாங்குமளவு அவருக்கு செல்வாக்கு இருப்பதாலும் வெடிகளுக்கு குறைவில்லை. ஆனாலும் அம்மா கட்சி போல 1000, 10,000 வாலாக்களுக்கு வழியில்லை. டிரம்ஸ் வாசிக்கும் தொழிலாளிகளும் பட்ஜெட் குறைவினால் மாதம் முழுவதும் அதே சாயம் போன கோட்டு சூட்டுகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும் வைகோவின் உற்சாகத்தை இவை குறைத்து விடவில்லை. உற்சாகம் என்ற ஒன்று இருந்தால் அல்லவா குறைவதற்கு?

செல்லுமிடங்களில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களோ இல்லை யாராவது வேலை இல்லாத ஊர்த் தலைவரோ வைகோவை பாராட்டி சால்வை போடுகிறார்கள்.  கூட்டணி பொறுப்பாளர்களில் பலர் பிளக்ஸ் பேனரில் கூட இடம்பிடிக்காத அளவுக்கு செல்வாக்கு கொண்டிருந்தாலும் வைகோ அவர்களது பாராட்டை மனம் நிறைந்து ஏற்கத்தான் செய்கிறார். இல்லை மறுத்துவிட்டால் என்ன சாதித்துவிட முடியும் நண்பா? இதன்றி செல்லுமிடங்களில் திரளான மக்கள் சேர்வதில்லை. சிறுவர்கள் மட்டும் பம்பரத் தாத்தா என்று ஓடி வருகின்றனர். கிரிக்கெட்டை மட்டுமே விளையாட்டாக பார்க்கத் தெரிந்த நாட்டில் பம்பரத்திற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கும் சிறுவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது மோடி பாணியில் சொன்னால் வளர்ச்சியா, வீழ்ச்சியா?

பத்து பேர் அல்லது இருபது பேர் நின்றாலும் அதைக் கண்டு வைகோ முகம் சிறுத்தாலும் ஒரு நிமிடம் பேசுகிறார். ஆயிரம், இலட்சங்களுக்கு ஆசைப்பட்டு ஐந்து, பத்துக்களை இழந்து விடக்கூடாது என்ற அவரது பொறுப்பு மலைக்க வைக்கிறது. ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் என்றால் இரண்டு நிமிடங்கள். நூறைத் தாண்டினால் மட்டும் 8 நிமிடங்கள் பேசுகிறார். இவையெல்லாம் ஆட்களைப் பார்த்தாலே வாட்சைப் பார்க்காமலேயே கச்சிதமாக நிறைவேறி விடுகிறது. காலமும், மனிதர்களும், அரசியலும் இப்படி உயர் கணித சூத்திரங்கள் தோற்கும் அளவுக்கு கனகச்சிதமாக போடப்பட்டிருப்பது அனைவரும் வியப்படையும் ஒன்று.

விஜயகாந்த் - வைகோ
வைகோ தவிர்க்காமல் பேசுவது “எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு” என்பதைத்தான்

இந்த நிமிடக்கணக்கிலும் கூட அவர் தவிர்க்காமல் பேசுவது “எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு” என்பதைத்தான். இதிலிருந்தே பாஜக கூட்டணியில் 14 தொகுதிகள் மட்டுமல்ல அதற்கும் மேலேயே பெறுவதற்கு விஜயகாந்திற்கு அருகதை உண்டு என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். புரட்சிப் புயல் இப்படி கேப்டனது ஆதரவிலாவது ஒரு சில வாக்குகளைத் தேற்ற முடியுமா என்று நினைத்திருப்பது வெறும் பணிவு மட்டுமல்ல, உயிர்த்திருப்பதின் போராட்டமும் கூட.

இந்த இலட்சணத்தில் தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது, மோடி பிரதமர் ஆவது உறுதி என்ற வழக்கமான பிரச்சாரத்தை அவர் பல கிராமங்களில் தவிர்க்கிறார். இத்தகைய கிராமப்புறங்களில்தான் மோடியே அடுத்த பிரதமர் என்று மக்கள் தெரிவித்ததாக ஜூவி எழுதியிருக்கிறது. அதை திருமாவேலனின் மனங்கவர்ந்த வைகோவே பொய் என நிரூபித்திருப்பது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

நேர்மறையில் மோடி அலையை மட்டுமல்ல, எதிர்மறையில் எந்தக் கட்சியையும் எதிர்த்து வைகோ பேசுவதில்லை. இது நாகரீகம் என்று படித்தவர்கள் சொல்லலாம். ஆனால் மற்ற கட்சிகளைத் திட்டி, இருக்கும் இரண்டு வாக்குகளைக் கூட இழக்க விரும்பாத வைகோவின் சரணடைவு என்று நம்மைப் போன்ற பாமரர்கள் அதை கண்டுபிடிக்கலாம். மேலும் பம்பரத் தாத்தா என்று பிள்ளைகள் ஓடிவரும் போது, ‘குழந்தைகளுக்கு பிடிக்குமென்றுதான் பம்பரத்தை தேர்ந்தெடுத்தேன், அப்பா அம்மாவிடம் சொல்லி எனக்கு வாக்களிக்க செய்யுங்கள்’ என்று குழந்தைகள் சேனல்கள் மொழியில் பேசுகிறார். குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு பொருளை வைத்துத்தான் வாக்குகளை வாங்க முடியும் என்றால் இது என்ன வகை அரசியல்?

பெண்களை பார்த்தால் மதுவுக்கு எதிராக வெயிலிலும், மழையிலும் 1500 கி.மீட்டர் நடந்ததை சொல்லி அதை டிவியில் பார்த்திருப்பீர்களே என்று இவரே கேட்டுக் கொள்கிறார். அம்மாவின் டாஸ்மாக்கையும், குடிக்கும் ஆண்களையும் இந்த பெரியவர் என்ன செய்து விட முடியும் என்று அந்த பெண்கள் அடுத்த வேலையை பெருமூச்சுடன் செய்ய திரும்பி விடுகிறார்கள். குடி எதிர்ப்பு கூட பெருமளவு வாக்குகளை திரட்டி விடுவதில்லை.

தேவர் சாதி மக்கள் வாழும் பகுதிகளில் முத்துராமலிங்கத்தை தேசியம், தெய்வீகம் இரு கண்கள் என்ற அந்த இத்துப்போன டயாலக்கை சொல்லி முடித்து விடுகிறார். அப்படிப் பார்த்தாலும் தேவருக்கு அம்மா தங்கம் கொடுத்தார், வைகோ என்ன கொடுத்தார் என்று மக்கள் ஆய்ந்தால் என்ன செய்வது? தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் பரமக்குடி துப்பாக்கி சூட்டில் காயம்பட்ட ஜெயப்பிரகாஷ் எனும் தலித் சகோதரனுக்கு அப்பல்லோவில் சிகிச்சை பார்க்க ஏற்பாடு செய்தேன் என்று என்ஜிவோ பாணியில் பேசுகிறார். பரமக்குடி துப்பாக்கி சூட்டை கண்டிக்காமல் மருந்து வாங்கி, பிளாஸ்திரி ஒட்டினேன் என்று பேசினாலே போதும் என்றால் தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்வளவு இளித்தவாயர்களா என்ற கேள்வி வருகிறது. இங்கேயும் வைகோவின் சந்தர்ப்பவாதம் இயல்பாகவே சொதப்புகிறது.

“பெரிய கட்சிகளோடு கூட்டணி வைக்காமல் கிராமத்தில் ஆட்கள் எப்படி வருவார்கள், பட்டிக்காட்டுல பிரச்சாரம் பண்ணி, உடம்பை கெடுத்துக்கிட்டு, டயத்தை வேஸ்ட்டு பண்ணுறாரு” என்று நந்திரெட்டிப்பட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் அக்கறையுடன் கேட்கிறார். ஓகோ வைகோவை அரசியலில் இருந்து ஓய்வெடுக்கச் சொல்கிறாரோ? வைகோவை கேட்டால் இது ராஜபக்சேவின் சதி என்பார். வைகோவை தோற்கடிக்க ராஜபக்சே ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் வைகோ எனும் ஆளுமையிலும் இல்லை, விருதுநகநர் தொகுதியிலும் இல்லை. இனி சிஐஏ சதி என்று சொல்லாததுதான் பாக்கி. இருப்பினும் ஓரிரு கிராமத்து பெண்கள் மஞ்சள் காமாலை தடுப்பூசி போட்ட வைகோவிற்குத்தான் எனது ஓட்டு என்று காதில் தேன் பாய்ச்சாமல் இல்லை.

வைகோ
சாதனைகளை விட வேதனைகளையே அதிகம் முன்வைக்கிறார்.

தேவர், தலித் பகுதிகளில் பேசுபவர் நாயக்கர், ரெட்டியார் சாதி மக்கள் பகுதிகளில் என்ன பேசுவார் என்று நக்கீரன் எழுதவில்லை. மற்ற சாதி வேட்பாளர்களால் சாதி வாக்குகள் பிரிந்து தெலுங்கு பேசும் மக்கள் வாக்குகள் நம்மை காப்பாற்றிவிடாதா என்று வைகோவிற்கு ஒரு கணக்கு உண்டு. இதன்றி அவர் விருதுநகரை தெரிவு செய்ய வேறு காரணங்கள் இல்லை. ஆனாலும் கே.கே.எஸ்.எஸ்.ஆர் போன்ற பெரிய கட்சி பிரமுகர்கள் சொன்னால் கேட்கும் இந்த பிரிவு மக்கள் வைகோவிற்கு அனுதாபத்தை தருவார்களே அன்றி வாக்குகளை தருவார்களா என்பது கேள்விக்குறி. அந்த வகையில் சுயசாதிப் பெருமையும் இங்கே காப்பாற்றிவிடும் என்று உறுதியளிக்க முடியாது.

சின்னமூப்பன்பட்டி என்ற ஊரில் இரவு நேரத்திலும் மக்கள் ஓரளவுக்கு கூடியிருந்தார்கள். வைகோவின் உற்சாகத்திற்கு சொல்ல வேண்டுமா என்ன? வேறு எங்கும் இப்படி ஒரு கூட்டத்தை பார்க்கவில்லை என்று மனதாரா பாராட்டிவிட்டு தான் வெளிப்படையாக பேசுபவன் என்றும் பாராட்டிக் கொள்கிறார். பிறகு என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்வதா என்று வெட்கத்துடன் அடுத்த கருத்துக்கு போகிறார். இந்த கூட்டத்திலும் அவர் மோடி அலை, ஆளும் கட்சி, ஊழல், மக்கள் பிரச்சினைகள் என்று எதுவும் பேசவில்லை. பிறகு என்ன பேசினார்?

“வெளிநாட்டில் யாரும் விபத்தில் மாட்டிக்கிட்டா, உடனே வைகோவுக்கு போனப்போடுன்னு சொல்றாங்க. நான் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனா எப்படியோ பிரதமர்ட்டயோ யார்ட்டயோ சொல்லி அவங்கள காப்பாத்த முயற்சி பண்ணுறேன்” என்று உலகத் தமிழர்கள் அனைவரும் நமக்கு ஒருத்தன் இருக்கிறான் என்று நினைப்பதை பெருமையுடன் பேசுகிறார். கடைசியில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மொழியில், “ஆபத்து வந்தால் உதவும் வைகோ” என்று சிறுத்துப் போய்விட்டார். என்றாலும் ஈழம், முல்லைப் பெரியாறு என்று வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருப்பேன் என்று முழங்கவும் அவர் மறக்கவில்லை.

அதே நேரம் இந்த போராட்ட வீரத்தின் அளவும், தகுதியும் வைகோவே அறிந்த ஒன்றுதான். யாரும் அதைச் சொல்லி அவருக்கு புரியவைக்கத் தேவையில்லை. ஆதாரம்? அடுத்து அவர் பேசும் சோகப்பாட்டுதான்…..

கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட ரணத்தை வைகோ இன்னமும் மறக்கவில்லை. மக்களுக்கு நினைவுபடுத்தாமலும் இருப்பதில்லை. சென்ற தேர்தலில் மற்ற கட்சிகள் அதிக பணம் கொடுத்து மக்கள் வாக்குகளை விலைக்கு வாங்கியதை அவர் தன்னெஞ்சு அழுகும் அணியலங்காரத்தில் செல்லுமிடங்களிலெல்லாம் மீண்டும் மீண்டும் விவரிக்கிறார். இந்தத் தேர்தலிலும் அதை தடுக்க முடியாது என்று பயந்து பேசும் வைகோ, என்றாலும் அந்த பணத்தை வாங்கினாலும் நீங்க நன்றாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று முடித்துக் கொள்கிறார்.

ஊசி போட்டார், ஆபத்திற்கு குரல் கொடுத்தார் போன்ற சாதனைகளை விட இத்தகைய வேதனைகளையே அதிகம் முன்வைக்கிறார் என்று வைகோவின் சுற்றுப்பிரயாண சாரத்தை நக்கீரன் பதிவு செய்திருக்கிறது. இதனால் நக்கீரன் திமுக ஆதரவோடு வைகோவை அம்பலப்படுத்துகிறது என்று பொருளல்ல. உண்மையில் வைகோவின் வேதனையைத்தான் நக்கீரன் பகிர்ந்திருக்கிறது.

ராம் ஜெத்மலானியைக் கூட்டி வந்து பாராட்டுக் கூட்டம் நடத்தினார். ஆனால் தமிழினவாதிகளோ அம்மாதான் எழுவர் விடுதலைக்கு காரணம் என்று பட்டம் சூட்டி விட்டார்கள். தமிழருவி மணியன் தனக்கென ஒரு தொகுதியை கேட்டு மதிமுகவிற்கு கொடுத்தார். இருப்பினும் வைகோவிற்கு ஈரிலக்க தொகுதிகள் கிடைக்கவில்லை. அழகிரியை நாணிக் கோணி சென்று பார்த்தார். விருந்தினர்களை வராதே என்று எப்படி சொல்ல முடியும் என்பதற்கு மேல் அழகிரி அருளவில்லை. மோடி கூட்டத்திற்கு சத்யாவை அனுப்பினார். மோடியை ஓட்டலில் சென்று சந்தித்தார். ராஜ்நாத் சிங்கை விமான நிலையம் சென்று வரவேற்றார். இருப்பினும் பாஜக பிரஸ் மீட்டில் அவர் அருகே அமர கூட வைகோவிற்கு வழியில்லை. தமிழக முன்னேற்ற முன்னணி ஆரம்பித்த சிவாஜி கணேசனின் இடம் இன்றளவும் வைகோவால் பிடிக்கப்பட்டிருக்கிறதோ?

சோகம் மேல் சோகம் வந்தாலும் இந்த மனிதனை வாழ வைப்பது எது? சந்தர்ப்பவாதம் அவ்வளவு பலமான ஒன்றா?

இப்படி அன்றாடம் தேர்தல் பரப்புரையில் பேசி முடித்த பின் வைகோ இரவு தங்கலுக்கு சென்று விட்டு என்ன செய்வார்? உணர்ச்சிகளின் தொடர் விளைவு மற்றும் மனித உளவியலின் அடிப்படை விதிகளின்படி அவர் விடியும் வரை கதறி கதறி அழுதிருக்க வேண்டும். அதை பதிவு செய்ய நமக்கு ஊடகங்கள் இல்லை என்பதால் வினவு அதை உரிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்து தருகிறது.

மோடி அலையில் ஒரு சந்தர்ப்பவாதியின் மூச்சு திணறல் எந்த அளவு சித்திரவதை தரும் என்பதை உணர வேண்டுமானால் நீங்கள் வைகோவாக பிறந்து வைகோவாக வாழ்ந்து பார்க்க வேண்டும்.

ஐபிஎல்லையும் மோசடியையும் பிரிக்க முடியாது யுவர் ஆனர் !

1

ந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியிலிருந்து, இந்தியா சிமென்ட்சின் தலைவர் சீனிவாசன் தற்காலிகமாக பதவி விலக வேண்டும், என்பது முதலான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட இரண்டாவது நாள்.

அந்த தொலைக்காட்சி விற்பனை அங்காடிக்கு வெளியில் சிறிய கூட்டம் கூடியிருந்தது. உள்ளே இருப்பவர்கள் பார்க்கும்படியாக ஒரு டிவி மட்டுமின்றி வெளியே தெருவை பார்த்தபடி ஒரு டிவியும் வைக்கப்பட்டிருந்தது. வெளியில் கூடி நின்றவர்கள், வீட்டில் டிவி இல்லாதவர்கள் அல்லது வீடே இல்லாதவர்கள். வட மாநிலங்களில் இருந்து சென்னைக்கு வந்து வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளர்கள்.

தொலைக்காட்சி விற்பனை கடையின் முன்பு கிரிக்கெட்
தொலைக்காட்சி விற்பனை கடையின் முன்பு கிரிக்கெட்

அனைவரது கவனமும் தொலைக்காட்சித் திரையில் ஓடிக் கொண்டிருந்த இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான டி-20 உலகக் கோப்பை போட்டியில் நிலைத்திருந்தது. திரையில் விராட் கோலி பேட் செய்கிறார். ஆஸ்திரேலிய வீரர் வாட்சன், விராட் கோலிக்கு பந்து வீசுகிறார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியில் விழுந்த பந்தை மிட்-ஆனுக்கும், மிட் விக்கெட்டுக்கும் நடுவில் நளினமாக திருப்பி விட பந்து எல்லைக் கோட்டை தாண்டுகிறது. கேமரா பந்து வீச்சாளரின் முகத்தையும், ஆஸ்திரேலிய தடுப்பாளர்களின் முகங்களையும் காட்டுகிறது. ஏமாற்றமும், குழப்பமும் கலந்த உணர்ச்சிகள்.

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருப்பவர்களின் முகங்களில் கிளர்ச்சி, புன்னகை, மகிழ்ச்சி. அந்த வெள்ளைத் தோல் ஆஸ்திரேலியர்களை தாங்களே தோற்கடித்து விட்டது போல ஒரு நிறைவு. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலேயே அனைவரும் ஒருமித்த உணர்வை அடைகிறார்கள். இது கிரிக்கெட். இருபத்தியோராம் நூற்றாண்டின் மதம்.

கண்ணைக் கவரும் கிரிக்கெட் காட்சிகளில் தமது மாலைப் பொழுதை கரைத்து விட்டு தாம் வேலை செய்யும் கட்டிட வளாகத்தில் தூங்குவதற்கு போய் விடுவார்கள், அந்த தொழிலாளிகள். நேரம் இருந்தால், செல்போனில் பேலன்ஸ் இருந்தால் 1,600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டுக்கு தொலைபேசியில், மனைவியிடமும் குழந்தைகளிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசியும் விடுவார்கள். அடுத்த நாள் காலையில் தமக்காகவும், தமது குடும்பத்துக்காகவும் உழைக்கும் இன்னொரு நாளை எதிர் கொள்வார்கள். இந்த தொழிலாளிகளை மட்டுமல்ல, நடுத்தர வர்க்கத்தையும் சொக்க வைத்து கட்டிப்போட்டிருக்கும் கிரிக்கெட்டின் செல்வாக்கு அத்தனை பெரிது. ஆனால் பார்ப்பவருக்கு இருக்கும் கிரிக்கெட்டின் கவர்ச்சி, மரியாதை, புனிதம், விளையாட்டு என்ற வார்த்தைகளின் பாவனை கூட கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் முதலாளிகளுக்கு இல்லை. ஐபிஎல் மோசடிகள் மூலமும் நிரூபணமான உண்மை இது.

குருநாத் மெய்யப்பன்
குருநாத் மெய்யப்பன்

பீகார் கிரிக்கெட் சங்கத்தின் செயலர் ஆதித்ய வர்மா மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த பொது நல வழக்கு தொடர்பான மேல் முறையீடுகளின் மீதான விசாரணை கடந்த மார்ச் 25 அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. ஐபிஎல் 2013-ல் சூதாட்டம், மேட்ச் ஃபிக்சிங் ஆகியவற்றில் ஈடுபட்டதாக சென்னை அணி முதலாளி குருநாத் மெய்யப்பன் மீதும், ராஜஸ்தான் அணி முதலாளி ராஜ் குந்த்ரா மீதும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் குழுவே விசாரணை நடத்துவது கண்துடைப்பு வேலை என்று மனுதாரர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் மற்றும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன முதலாளி சீனிவாசன்தான் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர். சூதாட்டத்தில் ஈடுபட்ட குருநாதன் மெய்யப்பன் சீனிவாசனின் மருமகன். இந்நிலையில் சீனிவாசன் தலைவராக இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியமே குருநாத் மெய்யப்பன் பற்றிய விசாரணையை நடத்தினால் நியாயம் கிடைக்காது என்று இந்த வழக்கை தொடர்ந்திருந்த பீகார் கிரிக்கெட் சங்கத்தின் பின்புலமாக இருப்பவர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சுபோத் காந்த் சகாய். அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கைப்பற்ற போட்டியிட்டுக் கொள்ளும் முதலாளிகளில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜக்மோகன் டால்மியா குழுவை ஆதரிப்பவர்.

வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு வந்த போது சூதாட்டம் மற்றும் மேட்ச் ஃபிக்சிங் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையில் ஒரு விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

சீனிவாசன் சார்பில் சென்னை அணியின் நிர்வாகியாக செயல்பட்டு வந்த அவரது மருமகன் குருநாத் மெய்யப்பன் சூதாட்டத்தில் ஈடுபட்டதை முட்கல் கமிட்டி உறுதி செய்திருந்தது; உள் தகவல்களை சூதாட்ட தரகர்களுக்கு சொல்லி ஆதாயம் பார்த்ததாகவும், சூதாடிகளின் தேவைக்கேற்ப அணியை விளையாட வைத்ததாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கத் தகுந்தவை என்று பரிந்துரைத்திருந்தது; கூடவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதலாளி ராஜ் குந்த்ராவும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், அந்த அணி வீரர்கள் மூன்று பேர் காசு வாங்கிக் கொண்டு சூதாட்டத் தரகர்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஓவரில் குறிப்பிட்ட எண்ணிக்கை ஓட்டங்களை விட்டுக் கொடுத்ததற்கான ஆதாரங்களையும் திரட்டியிருந்தது.

சீனிவாசன்
இந்திய கிரிக்கெட்டையே இந்தியா சிமெண்ட்சின் துணை நிறுவனமாக நடத்தி வந்திருக்கிறார் சீனிவாசன்.

இந்திய கிரிக்கெட் என்ற இந்த சாக்கடையில் மூழ்கித் திளைத்துக் கொண்டிருந்த இன்னாள், முன்னாள் ஆட்டக்காரர்கள், நிர்வாகிகள், முதலாளிகள் அனைவர் மீதும் அழுக்குகள் ஒட்டிக் கொண்டிருந்தன. இந்த அழுக்கிலிருந்து கிரிக்கெட்டை காப்பாற்றுவது போன்ற இறுதி நம்பிக்கையாக உச்சநீதிமன்றம் களத்தில் இறங்கியிருந்ததாக நினைத்துக் கொண்டார்கள், கிரிக்கெட் ரசிகர்கள்.

மார்ச் 25-ம் தேதி விசாரணையில் இந்தியா சிமென்ட்ஸ் முதலாளி சீனிவாசன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் ஏன் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் ஆரியமா சுந்தரத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அவர் தானாக பதவி விலகா விட்டால் அவர் பதவி விலகும்படி நாங்கள் ஆணை பிறப்பித்து விடுவோம் என்று மிரட்டினர். ஊழலில் ஈடுபட்ட சென்னை அணியையும், ராஜஸ்தான் அணியையும் ஐ.பி.எல் 7-வது பருவத்திலிருந்து விலக்கி வைக்கும்படி உத்தரவிடப் போவதாகவும் கூறினர்.

பீகார் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஆஜரான நாட்டிலேயே மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான ஹரீஷ் சால்வே, சீனிவாசனின் இந்தியா சிமென்ட்ஸ் ஊழியர்களில் பலர் இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்புகளில் இருப்பதை அம்பலப்படுத்தினார்.

தமிழ்நாடு மாநில  கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் கே.எஸ். விஸ்வநாதன், தேசிய கிரிக்கெட் அகாடமி மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் புதிய பகுதிகளை வளர்ப்பதற்கான துணைக்குழு இவற்றின் உறுப்பினர்; கே பிரசன்னா, இந்தியன் பிரீமியர் லீகின் முதன்மை நிதி அலுவலர்; தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச் செயலாளரான ஆர் ஐ பழனி கிரிக்கெட் வாரிய மண்டல அகாடமிகள் குழுவின் உறுப்பினர்; தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவரான பி.எஸ்.ராமன் கிரிக்கெட் வாரியத்தின் சட்ட ஆலோசகர். இவர்கள் அனைவரும் சீனிவாசனால் படியளக்கப்படும் இந்தியா சிமென்ட்சின் ஊழியர்கள்.

அதாவது, சீனிவாசனுக்கு சொந்தமான, இந்தியா சிமென்ட்சின் ஆட்களால் நிர்வகிக்கப்படும் சென்னை அணியை ஒழுங்குபடுத்தும் பொறுப்பிலும், கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய பொறுப்புகளிலும் இந்தியா சிமென்ட்சின் ஆட்களை நிரப்பியிருந்தார் சீனிவாசன்.

குருநாதன் மெய்யப்பன் தோனியுடன்
குருநாதன் மெய்யப்பனுக்காக பொய் சாட்சி சொன்ன தோனி.

மேலும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இருக்கிறார். ஐபிஎல் சென்னை அணியின் கேப்டனாகவும் இருந்து வரும் தோனி, “குருநாதன் மெய்யப்பன் வெறும் விளையாட்டு ஆர்வலர் மட்டும்தான், சென்னை அணியுடன் வேறு எந்த தொடர்பும் அவருக்குக் கிடையாது” என்று முட்கல் கமிட்டியிடம் சாட்சி அளித்திருந்தார். இது முற்றிலும் பொய் என்று முட்கல் கமிட்டி ஆதாரங்களுடன் நிறுவியிருக்கிறது. முதலாளியின் பணத்துக்காக கூசாமல் பொய் சொல்லும் தோனிதான் இந்திய இளைஞர்களின் ஆதர்ச நாயகனாம்.

மேலும் இப்போதைய ஆட்டக்காரர்களான பந்துவீச்சாளர் அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக், ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், வர்ணனையாளர் சிவராமகிருஷ்ணன் ஆகியோரும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் சம்பளப் பட்டியலில் இருக்கின்றனர்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், இந்திய கிரிக்கெட் அணி இவற்றை கைப்பற்றி இந்திய கிரிக்கெட்டையே இந்தியா சிமெண்ட்சின் துணை நிறுவனமாக நடத்தி வந்திருக்கிறார் சீனிவாசன். சீனிவாசன் மட்டுமின்றி இதற்கு முன்பு அதிகாரத்தில் இருந்த இனிமேலும் அதிகாரத்தைப் பிடிக்கப் போகிற சரத் பவார், ஜக்மோகன் டால்மியா போன்ற மற்ற கிரிக்கெட் முதலைகளும் இதே நடைமுறையை பின்பற்றி தமது அடியாட்களை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி கொள்ளை அடித்து வந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐபிஎல் முதன்மை செயல்பாட்டு அலுவலரான சுந்தர் ராமன், சீனிவாசனின் கையாள். 2008-ம் ஆண்டு ஐபிஎல்-ஐ உருவாக்கிய லலித் மோடி, விளம்பரத் துறையைச் சேர்ந்த சுந்தர்ராமனை முதன்மை செயல்பாட்டு அலுவலராக பணிக்கு அமர்த்தினார். 2010-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் மூலம் லலித் மோடி துரத்தி அடிக்கப்பட்ட பிறகு அவரது இடத்தைப் பிடித்திருந்த இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சீனிவாசனுடன் சுந்தர் ராமன் ஒட்டிக் கொண்டார்.

முட்கல் கமிட்டியின் விசாரணையின் போது “ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார் என்று தெளிவாக சொல்வது சாத்தியமில்லை” என்று சீனிவாசனையும் குருநாத் மெய்யப்பனையும் பாதுகாக்கும் வகையில் சுந்தர் ராமன் வாக்குமூலம் கொடுத்திருந்தார். மேலும், பிற ஐபிஎல் அணிகளைப் பற்றிய தகவல்களை குருநாத் மெய்யப்பனின் சூதாட்டத்துக்கு உதவும் வகையில் சுந்தர் ராமன் சொல்லி வந்தார் என்பது சூதாட்ட தரகர்களுக்கு இடையேயான பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலில் தெரிய வந்திருக்கிறது.

சீனிவாசனுடன் காவஸ்கர்
சீனிவாசனின் தயவில் ஆண்டுக்கு ரூ 3.6 கோடி வருமானம் தரும் வருணனையாளர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்த காவஸ்கர்.

இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்த உள்கமிட்டி சீனிவாசனின் மருமகன் குருநாதன் மெய்யப்பன் எந்த தவறும் செய்யவில்லை என்று நற்சான்றிதழ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. குருநாதன் மெய்யப்பன் இப்போது தலைமறைவாக இருக்கிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் வெளியில் வந்து எதிர்காலத்தில் கிரிக்கெட் வாரிய தலைவராகக் கூட ஆகலாம். மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது 323 பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்ட விரோதமாக பெற்று தனது வீட்டிலேயே எக்ஸ்சேஞ்ச் நடத்தியது, ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனமான மேக்சிசுக்கு விற்கும்படி அழுத்தம் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுக்களுக்குள்ளான தயாநிதி மாறன், தனது பாவங்களை கரைத்து விட்டு இப்போது தேர்தலில் நிற்கிறார்; ஜெயித்து ஒரு வேளை மத்திய அமைச்சர் கூட ஆகி விடலாம் இல்லையா?

இதற்கிடையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுடன் கை கோர்த்து இம்மூன்று நாடுகளையும் உலகக் கிரிக்கெட்டின் பெரியண்ணன்களாக மாற்றும் திட்டத்தை நிறைவேற்றிய சீனிவாசன் பன்னாட்டு கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் பதவியை ஏற்கவும் திட்டமிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பட்னாயக் ஒரு கிரிக்கெட் ரசிகராம். ஐ.பி.எல் என்ற புழுத்து நாறும் ஊழல் விளையாட்டுக்கு மரியாதை பெயின்ட் அடிப்பது எப்படி என்று யோசித்த அவரது சட்ட மூளையில் காவஸ்கரை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமித்தால் என்ன என்று தோன்றியிருக்கிறது.

இந்திய ஞானமரபின் நவீன வடிவமாக கட்டமைக்கப்பட்டு நடத்தப்படும் இந்திய கிரிக்கெட்டில் இப்போது விராட் கோலியும், கடந்த 20 ஆண்டுகளாக சச்சின் டெண்டூல்கரும் பிம்பங்களாக நிறுத்தப்பட்டது போல 1980-களின் புனித பிம்பமாக தூக்கி நிறுத்தப்பட்டவர்தான் சுனில் காவஸ்கர்.

நீதிபடி பட்னாயக், காவஸ்கரின் நீண்ட இன்னிங்ஸ்களை கண்டு கழித்த விசிறியாக இருந்திருக்க வேண்டும். ‘காவஸ்கர் எங்கே இருக்கிறார்? அவர் நல்லவர், வல்லவர், அனுபவமிக்கவர், நாலும் தெரிந்தவர், இந்த ஊழல் பேர்வழி சீனிவாசனை நீக்கி விட்டு காவஸ்கரிடம் கிரிக்கெட் வாரிய தலைமைப் பொறுப்பை ஒப்படைக்கும்படி உத்தரவிட உத்தேசித்திருப்பதாக’ அவர் கிரிக்கெட் வாரிய வழக்கறிஞரிடம் கூறினார். காவஸ்கரும் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக இருந்த சீனிவாசனின் தயவில் ஆண்டுக்கு ரூ 3.6 கோடி வருமானம் தரும் வருணனையாளர் ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சத்யமேவ ஜெயதே என்ற முழக்கத்தை முன் வைத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் நீக்கப்பட்டால்தான் ஐபிஎல் போட்டிகள் நடக்க அனுமதிப்போம் என்று வீரம் காட்டினார்கள். “யாருக்கும் அறங்களைப் பற்றி கவலை இல்லை. இப்படி இருந்தால் அதிகாரத்தில் இருக்கும் நபர்கள் மற்றவர்கள் சொல்வதை எப்படி கேட்பார்கள்? ஆனால், வாய்மையே வெல்லும் என்று நாங்கள் நம்புகிறோம். கொஞ்ச காலம் பிடித்தாலும் உண்மை ஒரு கட்டத்தில் வெளி வந்தே தீரும்.” என்று சொல்லி கிரிக்கெட்டின் நலன்களுக்காகவும் தேசத்தின் நலன்களுக்காகவும் கறாரான முடிவுகளை எடுக்கப் போவதாக நீதிபதிகள் கூறினர்.

சுனில் காவஸ்கர்
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் ஆதரித்து வந்ததோடு அதில் நாறிக் கொண்டிருக்கும் ஊழல்களைப் பற்றி ஒருமுறை கூட தன் வாயைத் திறந்ததில்லை காவஸ்கர்.

இந்தியா சிமென்ட்ஸ் ஊழியர்களை இந்திய கிரிக்கெட் வாரிய பதவிகளிலிருந்து நீக்கும்படி ஆணை பிறப்பிக்கும் உத்தேசம் இருப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.

சர்வியாபகியாக இந்திய கிரிக்கெட் கம்பெனியை ஆண்டு கொண்டிருந்த சீனிவாசனின் நிலைமை ஆட்டம் கண்டது. வாரியத்தின் 5 துணைத்தலைவர்களில் 3 பேர் அவருக்கு எதிராக கருத்து தெரிவித்தனர்.

சீனிவாசனின் இடத்தில் நியமிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த காவஸ்கரோ, “நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றம் கூறும் போது அதை கேட்டுத்தான் ஆக வேண்டும். கிரிக்கெட் வாரியத் தலைவர் பொறுப்பை நான் நிறைவேற்ற முடியும் என்று நீதிமன்றம் கூறியிருப்பது என்னை கவுரவப்படுத்துகிறது” என்றிருக்கிறார்.

சென்னை, ராஜஸ்தான் அணிகள் ஊழலில் ஈடுபட்டதை அடுத்து ஐபிஎல் 7 ரத்து செய்யப்பட வேண்டுமா என்று கேட்கப்பட்ட போது. “அது கிரிக்கெட்டுக்கு எப்படி உதவும் என்று எனக்குத் தெரியவில்லை. 14 ஆண்டுகளுக்கு முன்பு பணத்துக்காக போட்டிகளில் விளையாடியவர்கள் பற்றிய விவகாரம் வெடித்த போதும் கிரிக்கெட் இடைவிடாமல் தொடர்ந்தது,” என்றார். சென்னை, ராஜஸ்தான் அணிகளை நீக்கி வைப்பது குறித்து கூறுகையில், “சென்னை அணி மூன்று முறை சேம்பியன் ஆகியிருக்கிறது, ராஜஸ்தான் அணி ஒரு முறை வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அணிகளை விலக்கி வைக்க நேர்ந்தால் அது மிகவும் வருத்தப்படக் கூடியது” என்றிருக்கிறார்.

காவஸ்கரைப் பொறுத்த வரை அவரும் கிரிக்கெட்டும் ஒன்றுதான், அவருக்கு எது நல்லதோ அதுதான் கிரிக்கெட்டுக்கும் நல்லது. அவருக்கு கோடி கோடியாக பணத்தைக் கொட்டும் வகையில் கிரிக்கெட் சூதாட்டங்களோடும், மோசடிகளோடும் இயங்குவதுதான் கிரிக்கெட்டுக்கும் நல்லது, அவருக்கும் நல்லது.

சீனிவாசன் பதவி விலகாமல் விடாப்பிடியாக இருப்பது பற்றி கேட்ட போது, “குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை எல்லோரும் நிரபராதிகள்தான் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். சீனிவாசன் குறித்து நான் தீர்ப்பு சொல்ல முடியாது. அது தொடர்பாக எனக்கு எந்த அனுபவமும் இல்லை.” என்றார்.

உண்மைதான், 2002-ம் ஆண்டு மும்பையில் காவஸ்கரின் ஓய்வறை இழுப்பறையில் ரூ 7  லட்சம் ரொக்கம் கண்டு பிடிக்கப்பட்ட பிறகு கூட காவஸ்கரின் கிரிக்கெட் தொடர்பான பணிகளை யாரும் நிறுத்தி வைத்து விடவில்லை. அவர் தொடர்ந்து கனவான்களின் விளையாட்டான கிரிக்கெட்டில் கோடிக்கணக்கான ரூபாய்களை ஈட்டி வருகிறார். அதற்கு விசுவாசமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் ஆதரித்து வந்ததோடு அதில் நாறிக் கொண்டிருக்கும் ஊழல்களைப் பற்றி ஒருமுறை கூட தன் வாயைத் திறந்ததில்லை.

இந்நிலையில் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகப் பொறுப்பை காவஸ்கரிடம் ஒப்படைப்பது என்பது நில மோசடிகள் தொடர்பாக விசாரிக்கும் சி.பி.ஐ-யின் பொறுப்பை ராபர்ட் வதேராவிடம் ஒப்படைப்பது போன்றதுதான். ஒரு நாள் முதல்வர் போல ஒரு சீசனுக்கு  இடைக்காலத் தலைவராக இருக்கும் காவஸ்கர் சீனிவாசனுக்கும், இந்தியா சிமென்ட்சுக்கும் பாதகமாக எதையும் செய்து, பதவிக் காலத்திற்குப் பிறகு வருணனையாளர் ஒப்பந்தத்துக்கு வேட்டு வைத்துக் கொள்ள மாட்டார் என்று உறுதியாக நம்பலாம். எனவே சீனிவாசனது நலன்களுக்கு குந்தகம் வராமல் எல்லாம் நல்லபடியாக நடத்தி முடிக்கப்படும்.

மேலும், கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை நீக்குவதற்கு வாரியத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான வழிமுறையே அதன் அமைப்பு விதிகளில் இல்லை. அவர் தானாக பதவி விலகினால்தான் உண்டு. இவ்வளவுக்கும் பிறகும் சீனிவாசன் பதவி விலக முன்வரவில்லை.

இதற்கிடையில் மேற்கு வங்க விளையாட்டுத் துறை அமைச்சர் மதன் மித்ரா, “சவுரவ் கங்குலி கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்றுக் கொள்ளலாம். அவர்தான் நமது மிகச் சிறந்த அணித்தலைவராக விளங்கியவர். அவருக்கு தூய்மையான இமேஜ் உள்ளது. அவர்தான் வாரியத்தின் பொறுப்பை எடுத்துக் கொள்வதற்கு சரியான ஆள்” என்று கூறி தீதியின் கட்சியையும் களத்தில் இறக்கி விட்டார்.

ஐபிஎல் முதலாளிகளின் காபி கிளப்
ஐபிஎல் முதலாளிகளின் காபி கிளப்

ஆனால் கிரிக்கெட் முதலாளிகள் தொலைக்காட்சி ரேட்டிங்குகளையும், கூட்டம் நெருக்கும் விளையாட்டு மைதானங்களையும் சுட்டிக் காட்டி ஊழல் எதுவும் இல்லை என்று மக்களே தீர்ப்பு சொல்லி விட்டார்கள் என்கிறார்கள். நடுத்தர வர்க்க அம்பிகள், ஊழல்கள் எதையும் பொருட்படுத்தாமல் மாலை நேரத்தின் மனதை கவரும் கொண்டாட்ட நிகழ்வுகளாக தொலைக்காட்சியிலும், நேரிலும் கிரிக்கெட்டை போற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உச்சநீதிமன்ற வழக்கின் அடுத்த கட்டமாக வியாழக்கிழமை நடந்த வாதங்களின் போது சீனிவாசன் பதவி ஒதுங்கத் தயார் என்று அவரது வழக்கறிஞர் நீதிபதிகளிடம் தெரிவித்தார். ஐபிஎல் ஊழல் தொடர்பான விசாரணை முடிவது வரை கிரிக்கெட் வாரிய விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கியிருப்பதாகவும், விசாரணையை காலக்கெடு விதித்து முடிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

கிரிக்கெட் வாரியம் சென்னை, ராஜஸ்தான் குத்தகைகளை ரத்து செய்ய வேண்டாம் என்று மன்றாடி கேட்டுக் கொண்டது. “அப்படி இரண்டு அணிகள் நீக்கினால், ஆறு அணிகள் மட்டும் விளையாடுவது போட்டித் தொடரின் கட்டமைப்பையே சிதைத்து விடும். தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள், விளம்பரதாரர்கள், புரவலர்கள், ஆட்டக்காரர்கள் ஆகிய அனைவரும் அதன் விளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்” என்றது. வாரியத்தின் வழக்கறிஞர் சி ஏ சுந்தரம், குத்தகைதாரர்களுடன் ஒப்பந்தத்தை எளிதாக ரத்து செய்ய முடியாது என்றார்.

இரண்டு அணிகள் விலக்கி வைக்கப்பட்டால், ஐ.பி.எல் அதன் கவர்ச்சியை இழந்து விடும் என்று பதறினார்கள் அணி முதலாளிகள். போட்டிகளுக்கு பெயர் இடும் உரிமையை வாங்கியிருக்கும் பெப்சி தனது குளிர்பானங்களின் ஆண்டு விற்பனையே ஐ.பி.எல் போட்டிகள் தடையின்றி முழுமையாக நடைபெறுவதில்தான் அடங்கியிருக்கிறது என்று கூறியது.

முதலாளிகளின் இத்தகைய இக்கட்டான சூழலையும், காவஸ்கரின் கருத்துகளையும் கருத்தில் எடுத்துக் கொண்டோ என்னவோ வெள்ளிக் கிழமை இந்த வழக்கில் இடைக்கால ஆணை பிறப்பித்த நீதிமன்ற அமர்வு, “ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கவிருக்கும் ஐ.பி.எல்-ன் ஏழாவது பருவம் தடையின்றி நடப்பதுதான் முக்கியமானது என்பதால் ஐ.பி.எல்லில் விளையாடுவதிலிருந்து எந்த ஒரு கிரிக்கெட் வீரரையும், எந்த ஒரு அணியையும், (அவர்கள் எவ்வளவுதான் ஏமாற்றியிருந்தாலும், எவ்வளவுதான் நிதி மோசடி செய்திருந்தாலும்) தாம் தடுக்கப் போவதில்லை” என்று கூறியது.

ஒரு குழந்தைகள் இல்லத்தில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகிறார்கள் என்று ஆதாரம் வெளியானால், அதன் மேலாளரை மட்டும் நீக்கி வைத்து விட்டு, கையாட்களை கண்டுகொள்ளாமல் ‘மற்ற எந்த ஊழியரையும் நீக்கப் போவதில்லை. குழந்தைகளின் நன்மைக்காக இல்லம் தொடர்ந்து வழக்கம் போல நடைபெற அனுமதிப்போம்’ என்பது போல தீர்ப்பு சொல்லியிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் மனுநீதி.

அனுமார் பக்தரான அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி ராமர் சிலைக்கு பூஜை செய்ய பாபர் மசூதியின் கதவுகள் திறந்து விடப்பட வேண்டும் என்று தீர்ப்பு சொன்னது போல, தான் ஓய்வு பெறுவதற்கு முன்பு நல்ல காரியம் செய்து புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிதம்பரம் கோயிலை தீட்சிதர்கள் கையில் ஒப்படைத்து தீர்ப்பு சொன்னது போல தீவிர கிரிக்கெட் ரசிகரான பட்னாயக் ஐ.பி.எல் தடையின்றி நடக்க வழிகாட்டி தீர்ப்பளித்திருக்கிறார்.

இந்தியா சிமென்ட்சும், விஜய் மல்லையாவும், பெப்சி கோலாவும், முகேஷ் அம்பானியும், சூதாடிகளும், சூதாட்டத் தரகர்களும் இந்த தீர்ப்பினால் எந்த தொந்தரவுக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள். கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை கொக்கி போட்டு இழுக்கும் ஐ.பி.எல்லின் ஆபாச நடனம் தடையின்றி நடக்கலாம். இதுதான் நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் தீர்ப்பு.

உண்மையில் ஐஎம்ஜி என்ற விளையாட்டு நிர்வாக நிறுவனம்தான் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தப் போகிறது. அனுமதிச் சீட்டுகள், அணி அலுவலர்கள், போட்டிகள், போட்டி அதிகாரிகளை நியமிப்பது அனைத்தும் ஐஎம்ஜியால் நிர்வாகிக்கப்படுகிறது. எனவே தலைமையைப் பொறுத்த வரை யாரும் எதுவும் செய்து விட முடியாது என்கிறார் ஒரு ஐபிஎல் அணியின் மேலாளர். அதாவது உச்சநீதிமன்றம் நியமித்திருக்கும் காவஸ்கர் எந்த அதிகாரமும் இல்லாத ஒரு டம்மி பீஸ்தான்.

ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகவிருக்கும் ஏப்ரல் 16-ம் தேதியை வழக்கின் அடுத்த கட்ட விசாரணை தேதியாக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. நீதிபதி பட்நாயக் தான் ஏற்பாடு செய்து கொடுத்த போட்டிகளை கண்டு களிப்பதற்கு வசதியாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை போட்டிகள் தொடங்கும் நேரத்துக்கு முன்பே முடிந்து விடும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், அவர் ஏதாவது ஷோரூமுக்கு வெளியில் நின்று கிரிக்கெட் பார்க்க வேண்டியிருக்காது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பதால் சொந்தமாக ஒரு வீடும், அதில் கிரிக்கெட் பார்க்க அகலத் திரை தொலைக்காட்சியும் அவரிடம் இருக்கும்.

– அப்துல்.

மேலும் படிக்க

தேர்தல் திருவிழாவின் ரெக்காடு டான்ஸ் பார்ட்டி யார் ?

3

ரசியல் ரீதியாகச் சொன்னால், எல்லா ‘கமிசன்’களையும் ஒழுங்குபடுத்தும் ஒரு அரசு உறுப்புதான் தேர்தல் கமிசன். இதில் எல்லை தாண்டி விளையாடாமல் கட்சிகள் வரவு செலவு பண்ணி, மக்கள் காறித்துப்பி எத்தி எறிந்த இந்த போலி ஜனநாயகத்தின் மீது புதுப்புது கவர்ச்சிக் காட்டி சுண்டி இழுக்கும் திருவிழா டான்ஸ் பார்ட்டிகள்தான் தேர்தல் கமிஷன் எனும் இந்த அதிகாரவர்க்கக் கும்பல்.

வாகன சோதனைலஞ்ச, ஊழலற்ற ஆட்சி – நிர்வாகத்தை நடத்த எந்த உத்திரவாதமும் இல்லாத இந்த ஜனநாயகத்தில், தேர்தலையாவது நாங்கள் சுத்தபத்தமான முறையில் நடத்திக் காட்டுகிறோம் என்று வாகனத் தணிக்கை கைகளில் அமுக்கியது போக ஊடகங்கள் வாயிலாக தினம், தினம் தனது திரில்லர் மசாலா படங்களை ஓட்டிக் காட்டுகிறது தேர்தல் கமிசன். வழக்கம் போல ஊர் சொத்தை தனதாக கைவைத்து இரண்டு எஸ்.ஐ.க்கள் மாட்டிக் கொண்டது தனி காமடி ட்ராக்!

ஏற்கனவே உள்ள அதிகாரவர்க்க கட்டமைப்பு மூலம் ஊழல் பெருச்சாளி, தேர்தல் செலவாளி யார்? யார்? எனத் தெரியாதது போலவும், சுரண்டிக் கொள்ளையடிப்பவனை வீட்டில் வெண்சாமரம் வீசி விட்டு, ரோட்டில் மடக்குவது போல பறக்கும் படை, அமுக்கும் படை என்று இந்த கறக்கும் படையில் கடமையாற்றும் புலிகள் யார்? அன்றாடம் மக்களிடம் ரூம் போட்டு மிரட்டி சம்பாதிக்கும் உள்ளூர் போலீஸ் அதிகாரிகள், தாசில்தார்கள், வி.ஏ.ஓ.க்கள், மாவட்ட ஆட்சியர்கள், என்ற மாமூலான பேர்வழிகள் தான் இந்த திடீர் தேர்தல்உத்தமர்கள்.

சமூக வாழ்க்கையில் அன்றாடம் பல ஊழல் காண்ட்டிராக்டர்கள், போர்ஜரி முதலாளிகள் போன்றவர்களிடம் கல்லாகட்டும் இந்த யோக்கியர்கள்தான் தேர்தல் பணப்பட்டுவாடாவை மடக்குகிறேன் பேர்வழி என்று மாட்டு வியாபாரியிலிருந்து, மளிகை சாமான் வியாபாரி வரை முறையாக ஆவணத்தை சோதிக்கிறார்களாம். வரி ஏய்ப்பு செய்து விட்டு, ஊரறிய ரோட்டு மேலேயே கடையை போட்டுக்கொண்டு உள்ளூரில் எல்லா ஓட்டுக் கட்சிகளையும் சேர்த்து அசெம்பிள் செய்து திமிராக உட்கார்ந்திருக்கும் நோக்கியா முதலாளியிடம் ஒரு சல்லிக்காசைக் கூட பிடுங்க முடியாத அதிகாரவர்க்கம் மாட்டு வியாபாரியிடம் போய் மடியைப் பார்க்கிறது. இருநூறு வாய்தா வேகத்தோடு மேலே பறக்கும் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரைப் பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்ளும் இந்த கண்ணியவான்கள் தான் கால் டாக்சிகளை மடக்கி கடமையாற்றுகின்றனர்.

தேர்தல் பணம்நேர்மையாகவும், முறையாகவும் தேர்தலை நடத்தி மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்குவதற்காக கடமையாற்றுவதாக சீன்போடும் தேர்தல் கமிசனிடமிருந்தே இருக்கிற போலி ஜனநாயகத்தையும் காப்பாற்றிக் கொள்ள கட்சிகளே முனகுகின்றன. தேர்தல் நடத்தை என்ற பெயரில் பெரியார், அம்பேத்கர் சிலைகளையே கோணி போட்டு மூடுவது, பிரியாணி கடைகளை கிளறுவது, கல்யாண மண்டபங்களை நோட்டம் பார்ப்பது, பத்து மணிக்கு மேல கூட்டம் போட்டு பேசக் கூடாது, அதை பேசக் கூடாது, இதை பேசக்கூடாது என்று அரசியலில் தலையிடுவது ஒருபுறம்.

மறுபுறம் ஆளும் வர்க்க அரசியல் திட்டத்தோடு இயங்கிக்கொண்டு, ஏதோ அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்புபோல நம்ப வைக்க முயற்சி செய்கிறது தேர்தல் கமிசன். தேர்தலுக்காக மாட்டுச் சந்தையை மிரட்டும் இந்த ஆளும் வர்க்க கோமாரி கொசுக்கள் பங்கு சந்தை பண பரிவர்த்தனையை தடுக்கப் பறக்குமா? பாயுமா? தேர்தல் நடத்தைக்காக எத்தனை பிரியாணி பொட்டலம் என்று கணக்குப் பார்க்கும் இந்த கறார் அதிகாரிகள், தேர்தல் நேரத்தில் இத்தனை கோக், பெப்சிதான் முதலாளி விற்க வேண்டும், இத்தனை கார்தான் முதலாளி விற்க வேண்டும் இத்தனை செல்போன் தான் விற்கவேண்டும், என்று கட்டுப்பாடு விதிக்கத் தயாரா?

ஏற்கனவே இருக்கிற முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு ஒரு போலி ஜனநாயக அரசை தேர்ந்தெடுப்பதுதான் இவர்களின் மொத்த திட்டமே.  இதில் இடையில் போடும் சீன்கள்தான் இந்த கெடுபிடி காட்சிகள். கேவலம், தேர்தல் வரை இவர்களின் அறநெறிப்படி, மக்களை ‘நிதானமாக’ சிந்திக்க விட டாஸ்மாக் கடையை மூடக் கூட தயாராயில்லாத இந்த நிரந்தரக் கொள்ளைக் கும்பல்தான், தற்காலிக திருடன், போலீசு விளையாட்டு காட்டி ஜனநாயகம் போராடிக்காமல் கிலு கிலுப்பு ஊட்டுகிறது.

vehicle-check-2தேர்தல்னாலே பணம்புரளும், கட்சிகள்னாலே ஊழல் என்று கருத்து மக்களிடம் முழுதாக அம்பலமாகிப் போனதால், இதற்குக் காரணமான இந்த ஜனநாயக கட்டமைப்பையே மக்கள் தெரிந்து, புரிந்து தூக்கி எறியாதவாறு, ‘நான் அவனில்லை’, என்று நம்மிடம் ‘நல்ல தேர்தலை நடத்திக்காட்டும்’ இந்த அதிகாரவர்க்கம்தான் நாட்டில் உள்ள கட்சிகளின் மொத்த ஊழலுக்குமே உறை கிணறு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். தேர்தல் ஜனநாயகத்தை கட்டிக் காப்பதற்கு இன்று தெருவுக்கு வந்திருக்கும் இந்த அதிகார வர்க்க படையின் உண்மையான ஜனநாயக யோக்கியதை என்ன?

மற்ற நேரங்களில் இவர்களின் அலுவலகம் தேடிப்போய் மக்கள் ஒரு குறைகளைச் சொல்லப்போனால் இந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் வர்க்கம் மக்களை மதித்ததுண்டா? ஜனநாயகப்படி மக்களை கேள்வி கேட்க அனுமதித்ததுண்டா? மக்களுக்கு எட்டாத உயரத்தில் உட்கார்ந்து கொண்டு ஒரு மனுவை வாங்கக்கூட இழுத்தடிக்கும் இந்த அதிகாரவர்க்க கும்பல் தான், ரோட்டில் இறங்கி மக்களுக்கு ஜனநாயகத்தை சலித்து, தூசு இல்லாமல் தரப்போகிறதாம், யாராலும் நம்ப முடியுமா?

நம்ம ஊர் போலீஸ் ஸ்டேசன் தான் என்று, எஸ். ஐ.யை இயல்பாக மக்கள் சந்தித்து ஒரு புகாரைக் கொடுக்க முடிகிறதா? ஊரறிய கல்விக் கொள்ளை அடிக்கும் ஒரு முதலாளி மேல் மக்கள் புகார் கொடுத்தால், நடவடிக்கை புகார் கொடுத்தவர்கள் மேலே அல்லவா பாய்கிறது!

ஊரே குப்பை, சாக்கடை தெருவில் ஓடுது, பொது சுகாதாரமே சீரழிகிறது, போய் குறைகளைச் சொல்ல போனால், மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளைப் பார்க்க முடிகிறதா? எப்போது போனாலும் மக்களை சந்திக்க நேரமில்லாமல் எந்த குப்பையில் கிடக்கிறானோ அந்த அதிகாரி! ஜனநாயகமாக ஒரு மனுவைக் கொடுத்தால் அதையும் குப்பையாக்கும் இந்த அதிகாரவர்க்கம், மக்களை மதிக்காத இந்த திருட்டுக் கும்பல், மக்களுக்கு நேர்மையான ஜனநாயகத்தை வழங்கத்தான் தேர்தல் பணியாற்றுகிறது என்பதை விஜயகாந்தைத் தவிர வேறு எந்த சுயநினைவில்லாதவனும் கூட நம்பத் தயாராயில்லை!

வாகன சோதனைஇந்த நேரத்தில் நேர்மை, நடத்தை, ஜனநாயகம் என்று இவ்வளவு பரபரப்பூட்டும் இந்த அதிகாரிகள்  மற்ற நேரத்தில் எங்கே போய் இருந்தார்கள்? இப்போதும் கிளைமாக்ஸ் காட்சிகள் முடிந்தபின்பு திரும்பிப்போய் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டு என்ன கிழிக்கப் போகிறார்கள்? ஏற்கனவே இவர்கள் கையில் ஜனநாயகத்தை கொடுத்து கொள்ளைக்காரனை உள்ளே தள்ளு என்று சொன்னால், அவனோடு சேர்ந்து கொண்டு ஐ.பி.எல் சூதாட்டம் வரை பங்கு போட்டு திண்ணும் அதிகாரிகள் தான் இந்த போலீசுத் துறை! உனக்குள்ள அதிகாரத்தை வைத்து ஊர் சொத்தை காப்பாற்று! ஆறுகள், ஆற்றுமணலை காப்பாற்று என்று சொன்னால் அதற்கு வக்கில்லாமல் மணல், ரியல் எஸ்டேட், கிரானைட் மாஃப்பியாக்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஊரை அடித்து உலையில் போடுபவர்கள் தான் இந்த தாசில்தார், வி.ஏ.ஓ, கலெக்டர்கள்…

இப்படி ஒவ்வொரு துறையிலும் நாட்டையும் மக்களையும் சுரண்டி முதலாளிகளுக்கு எடுப்பு வேலை பார்ப்பதோடு மட்டுமல்ல, எதிர்க்கும் மக்களை தடி கொண்டு தாக்கும் இந்த அதிகார வர்க்க கும்பல்தான் குடியரசை குண்டுமணி குறையாமல் நம் கைக்கு வழங்கப் போகிற மகான்களாம்! இருக்கிற ஜனநாயகத்தை வைத்து பொறுக்கித் தின்பதையே தமது பிழைப்பாக கொண்டுள்ள இந்த ஒட்டுண்ணி வர்க்கம்தான் தேர்தலை உத்தமமாக நடத்தும் காவலர்கள் என்றால் கலெக்டர் வீட்டு நாய் கூட காலைத் தூக்கி சிரிக்கும்!

இருப்பினும், கலெக்டர், தாசில்தார், போலீசு என்று பெரிய அதிகார வர்க்க படையே தேர்தல் களத்தில் முன் நின்று வேலை பார்ப்பது நமக்கு ஜனநாயகத்தை வழங்கும் கடமைக்காக அல்ல, ”இவங்கள இப்படியே விட்டா அழுகி நாறும் ஜனநாயகத்தோட, அதுல புழுத்து நாறும் நம்மளையும் சேர்த்து புதைச்சுடுவாங்க! அதுக்கு முன்னால நாம இவங்கள ஓட்டுப் பெட்டியில புதைச்சுடுவோம்!”  என்ற முன் ஜாக்கிரதை தான். இது புரியாமல் இந்த அதிகார வர்க்கத்திடம் திரும்ப திரும்ப நம்மை மாட்ட வைக்கும் போலி ஜனநாயகத் தேர்தலை எச்சரிக்கையாக புறக்கணிப்பதும், மக்களுக்கு எல்லா நிலைகளிலும் அதிகாரமுள்ள ஒரு மாற்று புதிய ஜனநாயகத்தை பற்றி சிந்திப்பதும்தான் இந்த தேர்தலில் நமக்கான நல்ல நடத்தை விதியாகும்!

–          துரை.சண்முகம்

ஆம் ஆத்மி : வெளக்குமாத்துக்கு டாலர் குஞ்சம் – கார்ட்டூன்

4

 

aam-aadmi-vinavu

படம் : ஓவியர் முகிலன்

cure-for-all-vinavuபடம் : ஓவியர் முகிலன்

மோடி வெற்றிக்கு ஜூவி நடத்தும் ஊடக யாகம்

24

மோடிக்கு பகிரங்கமாக பனிக்கட்டி ராகம் வாசிக்கும் ஜூவி இதழ், அதன் ஆசிரியர் திருமாவேலன் குறித்தும் வினவில் விரிவாக எழுதியிருந்தோம். அந்தக் கட்டுரை ஆயிரக்கணக்கில் படிக்கப்பட்டதோடு, ஊடக உலகிலும் கவனிக்கப்பட்டு வரவேற்கப்பட்டது. திருமாவேலனது நடுநிலைமை ஊடக தர்மமும் சந்திக்கு இழுத்து வரப்பட்டது.

ஜூவி சர்வே
சைவாள் கஃபேயின் ஊசிப் போன தயிர்சாதம்

விகடனின் சினிமா செய்திகளை தவிர்த்து விட்டு பார்த்தால் அதன் அரசியல் செய்திகள், கட்டுரைகளை இணையத்தில் படிக்கும் வாசகர்களை விட வினவின் கட்டுரைகளை அதிகம் பேர் படிக்கிறார்கள் என்பது எங்கள் மதிப்பீடு. குறிப்பிட்ட கட்டுரைகள் அந்தந்த வலைத்தளங்களின் இடத்திலிருந்து, சமூக வலைத்தளங்களில் பகிரும் எண்ணிக்கையை வைத்துக்கூட இதை கண்டுபிடிக்கலாம். இப்படி ஜூவியின் நாடி, காவிக் கும்பலின் வெற்றிக்காக துடிக்கிறது என்ற உண்மையை, அதன் மோசடியான நடுநிலைமையையெல்லாம் கேள்விக்குள்ளாக்கியும் கூட இவர்களுக்கு சூடு சுரணை வரவில்லை.

காசு வாங்கிப் படிக்கும் வாசகர்களை அவ்வளவு மடையர்களாக கருதுகிறது விகடன் நிர்வாகம். இடையில் தேமுதிக, பாமக கட்சிகளெல்லாம் முரண்டு பிடிக்கும் நிலையில் பாஜக கூட்டணி அமையாது போகுமோ என்ற நிலையில் கூட ஜூவி தனது தந்திரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. அப்போது மோடிக்கு தாளமடிப்பதை கொஞ்சம் இடைக்காலமாக நிறுத்திக் கொண்டு பாஜகவுக்கு எதிராக தமிழகத்தில் உள்ள கூட்டணிகள், கட்சிகள், கொள்கைகள் குறித்து அம்பலப்படுத்தி எழுதினார்கள்.

பிறகு அவர்கள் எதிர்பார்த்தது போல பாஜக கூட்டணி அமைந்து விட்டதுதான் தாமதம், திருமாவேலனும், ஜூவியும் தமது நாடிகளில் காவி லேகியத்தை ஏற்றிக் கொண்டு, ஊடக அதிகாரத்தை வைத்து மீண்டும் நரியின் மொழியில் இசைக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்போது நேரடியாக பாஜக கூட்டணியின் வெற்றிக்காக அண்ணாசாலையில் விகடன் வளாகத்தில் தேர்தல் அலுவலகம் திறந்து 24X7 சர்வீசில் வேலை பார்க்கிறார்கள்.

02.04.2014 தேதியிட்ட ஜூவி இதழில் “கிராமப்புற மக்கள் ஆதரவு யாருக்கு” என்று ஒரு சர்வே கட்டுரை. கூட்டணிகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூவி அணி தமிழக கிராமங்களில் 5,587 பேரை சந்தித்து எடுக்கப்பட்டதாம்.

சர்வே முடிவுகள் என்ன? சைவாள் கஃபேவுக்கு போய் விட்ட பிறகு போட்டி வறுவலையா எதிர்பார்க்க முடியும். அதே ஊசிப்போன தயிர் சாதம்தான்.

அடுத்த பிரதமராக யார் வர வேண்டுமென்ற ஜூவியின் கேள்விக்கு 41.49%பேர் நரேந்திர மோடி என்றும், ராகுலுக்கு 9.95%, ஜெயலலிதாவுக்கு 16.72%, சோனியா, மன்மோகன் சிங்கிற்கு ஐந்துக்கும் குறைவாகவும் பதிலளித்தார்களாம் நமது கிராம மக்கள். நரேந்திர மோடி எனும் பெயரை கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று கேட்டால் கூட அதிகம் தெரியாது என்பதே அதிக பதிலாக இருக்கும்.

ஜூவி கணக்கு
பாஜ கூட்டணிக்காக பல மாதங்களாக வேலை செய்த ஜூவி.

அதே போல யாருக்கு வாக்களிப்பீர்கள் எனும் கேள்விக்கு, பாஜக கூட்டணிக்கு 27.55%, அதிமுகவுக்கு 24.34%, திமுக கூட்டணிக்கு 19.56%, காங்கிரசுக்கு ஏழு, கம்யூனிஸ்ட்டுக்கு நாலு என மக்கள் பதிலளித்தனராம். இதன்படி ஐந்து கூட்டணிகள் மோதும் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் ஒரு கட்சி, இரண்டாவதிருக்கும் கட்சியை விட சுமார் மூன்று சதவீதம் அதிகம் வாக்கு வாங்கும் என்றால், அனைத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டும். அல்லது பெரும்பான்மை இல்லை பாதி என்று வைத்தால் கூட தமிழகத்தில் 20 தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்ல வேண்டும். இது உண்மையென்றால் பொன் இராதாகிருஷ்ணனுக்கோ, இல.கணேசனுக்கோ பைத்தியம் பிடித்து விடாதா? விகடன் ரீல் விடுவதில் கூட ஒரு ‘நாகரிகத்தை’ கடைபிடிக்க தயாரில்லை. வாசகர்களை காட்டுமிராண்டிகளாக கருதும் போது அங்கே நாகரிகம் ஏது, நரம்போடு பேசும் நாக்கு ஏது?

இந்த முக்கிய கேள்விகளைத் தாண்டி ஜூவி தயாரித்திருக்கும் மற்ற பொருளாதார, வாழ்க்கை பிரச்சினை குறித்த கேள்விகளும் கூட மறைமுகமாக பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றே யதார்த்தமாக புனையப்பட்டிருக்கிறது. ஐந்தாண்டு மத்திய அரசில் விவசாயம் வளர்ச்சி எப்படி எனும் கேள்விக்கு வளர்ச்சி, மோசம், அப்படியே உள்ளது எனும் பதில்களை வைத்தால் மக்கள் மோசமென்றுதான் பதிலளிப்பார்கள். சரி, வாஜ்பாயி ஆட்சியில் இதே கேள்வி கேட்டாலும் மக்கள் மாற்றி கூறுவார்களா?

இன்னும் திமுக, அதிமுக ஆட்சிகளிலும் இதுவேதான். இருப்பினும் மத்தியில் ஆளும் கட்சிக்கு மாநிலத்தில் எதிர்ப்பலை இருப்பதாக படித்த நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திற்கு புகட்ட நினைக்கிறது ஜூ.வி. இதற்குத்தான் இந்த நாட்டுப்புறக் கண்ணீர்.

சரி இதே விவசாயத்தை சீரழித்திருப்பதற்கு மாநில அரசுக்கு பங்கில்லையா? என்று ஜூவி கேட்கவில்லை. அடுத்து மாநிலத்தை ஆளும் அதிமுகவிற்கு, வாக்குகள் போடும் மனநிலையில் மக்கள் இல்லை என்று காட்ட நினைக்கிறது ஜூ.வி. குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து, சாலை, கல்வி அடிப்படை தேவைகள் எப்படி எனும் கேள்விக்கு நிறைவேறியிருக்கிறது, நிறைவேறவில்லை, அப்படியே இருக்கிறது என்று பதில்களை வைத்தால் மக்கள் கண்ணை மூடிக் கொண்டு இல்லை என்றோ, மாற்றமில்லை என்றோ கூறுவார்கள். முக்கியமாக பாராளுமன்ற தேர்தலுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற கேள்விகள் எதற்கு? கவுன்சிலர் அல்லது ஊராட்சி வேலைகளை எப்படி பாராளுமன்ற உறுப்பினர் செய்ய முடியும்?

அதிமுக மேல் மக்கள் நாட்டத்துடன் இல்லை என்பதால் உங்கள் பொன்னான வாக்குகளை மறந்து, மயங்கி இலைக்கு போடாமல் பாஜக கூட்டணிக்கு போடுங்கள் என்று நடுத்தர வர்க்கத்திற்கு மறைமுகமாக உத்திரவு போடுகிறது ஜூ.வி. இதே போல மின்வெட்டு கேள்வியும் இருக்கிறது. திருமாவேலன் மனது விரும்பியபடி மோடி ஆட்சி அமைத்து விட்டால் தமிழகத்தில் மின்வெட்டு தீர்ந்து விடுமா? தீராது என்று விகடனுக்கு மட்டுமல்ல, விகடனை வாங்கி படிக்கும் வாசகர்களுக்கும் தெரியும். இருப்பினும் மின்வெட்டு குறித்த மக்களின் அதிருப்தியை வைத்து பாஜகவிற்கு ஆதாயம் தேடத்துடிக்கிறது விகடன் குழுமம்.

மோடி - ஜெயலலிதா
அதிமுக மேல் மக்கள் நாட்டத்துடன் இல்லை என்பதால் உங்கள் பொன்னான வாக்குகளை மறந்து, மயங்கி இலைக்கு போடாமல் பாஜக கூட்டணிக்கு போடுங்கள் என்று நடுத்தர வர்க்கத்திற்கு மறைமுகமாக உத்திரவு போடுகிறது ஜூ.வி

இதே கேள்வியை மாற்றிப் போட்டு மோடி ஆட்சி அமைத்தால் தமிழகத்தில் மின்வெட்டு தீரும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டால் மக்கள் என்ன கூறுவார்கள்? அல்லது பச்சமுத்து, ஏசி சண்முகம், விஜயகாந்த் போன்ற சுயநிதிக் கல்லூரிகளை நடத்தும் கல்வி முதலாளிகளைக் கொண்ட பாஜக கூட்டணி, கிராமப்புறத்தில் கல்வி வசதி கொண்டு வரும் என்று நம்புகிறீர்களா? என்று கூட கேட்கலாமே திருமாவேலன்? பதில்களை முடிவு செய்து கேள்விகளின் வரம்பை குறுக்கி கேட்டால் எல்லா கணிப்பையும் கணினியே செய்து விடுமே?

ஓட்டுக்காக பணம் கொடுத்தால்? என்று கேட்டு விட்டு வாங்குவேன், வாங்க மாட்டேன், வாங்கி விட்டு பிடித்த கட்சிக்கு போடுவேன் என்று பதில்களை வைத்திருக்கிறார்கள். இதன்படி வாங்க மாட்டேன் என்று பாதிக்கும் மேற்பட்டோரும், முப்பது சதவீதம் பேர் வாங்கிவிட்டு பிடித்த கட்சிக்கு போடுவேன் என்றும் கூறியிருக்கிறார்கள். அதாவது அதிமுக மற்றும் திமுக அதிகம் பணம் கொடுத்தாலும் அது பாஜக வெற்றியை பாதிக்காது என்று மயிலாப்பூர் பார்த்தசாரதிகளுக்கு ஆறுதல் சொல்கிறது ஜூவி. இதே பதில்களில் பணம் வாங்கிக் கொண்டு இன்னொரு கட்சிக்கு மாற்றி வாக்களிக்கும் நன்றி கெட்டத்தனம் எனக்கில்லை என்று வைத்தால் மக்கள் இதைத்தானே அதிகம் ஏற்பார்கள்?

இவர்களது நரி மூளையை அறுவை சிகிச்சை செய்து பார்ப்பதற்கு இங்கு யாருக்கும் அறிவில்லை என்று விகடன் முதலாளிகளும், ஆசிரியர்களும் எகத்தாளமாக நினைத்திருக்கிறார்கள். விகடனது இந்த பகிரங்கமான மோடி ஆதரவு என்பது வெறுமனே அதன் ஆசிரியர்களோடு முடிந்து விடும் விசயமல்ல. விகடன் முதலாளிகளும் சேர்ந்துதான் இப்படி ஒரு ஊடக யாகத்தை சிரமேற்கொண்டு வருகிறார்கள்.

ஜூவி இதழில் சில மாதங்களாக “மகாத்மா முதல் மன்மோகன் வரை!” எனும் தொடர் வருகிறது. இதை தேசபக்தன் எனும் புனைபெயரில் எழுதுவது, ஜூவியின் ஆசிரயரோ, இல்லை ஆசிரியர்கள் பெயரில் எழுதும் கோஸ்ட் ரைட்டர்களோ  தெரியவில்லை. ஆனால் இந்த தொடர் காங்கிரசு கட்சி மேல் வெறுப்பை வரவழைத்து பாஜகவிற்கு செல்வாக்கை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காவே திரைக்கதை எழுதி தயாரிக்கப்பட்டிருக்கிறது.

காங்கிரசின் ஊழல்களை அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை அம்பலப்படுத்தும் ஜூவி, “காந்தி கொலை முதல் குஜராத் கொலை வரை” என்று காவிக் கூட்டத்தின் கொலைகார வரலாற்றை இன்னொரு தொடராக எழுதியிருந்தால் அதன் நடுநிலைமையை மெச்சியிருக்கலாம். மாறாக தேர்தல் காலத்தில் மோடியின் இமேஜுக்காக மட்டுமே காங்கிரசு பெருச்சாளியின் ஊழல்களை பேசுகிறது என்றால் என்ன பொருள்?

அதே போன்று இதே இதழில் வைகோவின் விருதுநகர் தொகுதி தேர்தல் பிரச்சாரத்திற்கு, மூன்று பக்கத்தை ஒதுக்கியிருக்கிறது ஜூ.வி. டாஸ்மாக்கை மூட வேண்டுமென்று பாதயாத்திரை சென்ற வைகோ அதில் கட்சிக்கொடி, சின்னம் இல்லாமல் அரசியல் நோக்கமில்லாமல் சென்றதை பேசுகிறார். ஆனால் இந்த அரசியல் அற்ற நோக்கத்தை தேர்தல் கூட்டமொன்றில் வாக்களிக்க வேண்டும் என்ற அரசியல் நோக்கத்திற்காக அவர் பகிரங்கமாக பேசுவதை ஒரு பத்திரிகை என்ற முறையில் கண்டித்திருக்க வேண்டுமல்லவா? ஆனால் எப்படியாவது அவருக்கு வாக்களியுங்கள் என்று கேட்காத குறையாக இருக்கிறது ஜூவியின் அந்த கவரேஜ்.

பாஜக கூட்டணி முடிவாவதற்கு முன்னர் இவர்கள் விஜயகாந்தை மிரட்டியது, அதற்கென்றே சர்வேக்களை வெளியிட்டதையெல்லாம் சென்ற முறை எழுதியிருந்தோம். இப்போது கூட்டணியை எப்படியாவது வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற நிலை வந்துவிட்டதால் மற்ற கூட்டணிக் கட்சிகள் குறித்து கிண்டலாகவும், எதிர்மறையிலும் எழுதும் ஜூவி, பாஜக கூட்டணிகளை மட்டும் மானே, தேனே போட்டு எழுதுகிறது.

“வெற்றி தோல்வியை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை!” என்று சிபிஐ மகேந்திரன் பேட்டியைக் வெளியிட்டிருக்கும் ஜூவியின் நோக்கம் என்ன? எதற்கு அந்த கட்சிக்கு விரயமாக ஓட்டு போடுகிறீர்கள் என்பதே. இப்படித்தான் முழு ஜூவியும் தந்திரமான முறையில் ஆனால் எளிதில் கண்டுபிடிக்க முடியும் மலினமான முறையில் பாஜக ஆதரவைப் பேசுகிறது.

குஜராத்தில் ஜூ.விஇதற்காக இவர்கள் அம்மாவையும் நாசுக்காக கண்டித்து எழுத தயங்குவதில்லை. முந்தைய ஆனந்த விகடன் இதழில் அம்மா சொல்லும் வாக்குறுதிகளெல்லாம் சும்மா என்று ஜெயாவின் வரலாறு, உரைகளை வைத்தே திருமாவேலன் எழுதியிருந்தார். பாஜகவிற்காக ஜெயாவை செல்லமாக கண்டிக்கும் நிலையினை தினமலரும் கூட செய்து வருகிறது. ஜெயாவே கூட மோடியையும், பாஜகவையும் விமரிசிக்காமல் பேசி வருவதன் காரணம் தேர்தலுக்கு பிறகு மோடியின் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்பதே. அந்த காரணத்தை வைத்துக் கொண்டே  ஜூவி போன்ற தரகு வீரர்கள் அம்மாவையும் ‘தைரியமாக’ எதிர்க்கிறார்கள். ஆனால் என்ன, இதற்கும் அம்மா ஆசி இருக்கிறதே என்ன செய்ய!

நக்கீரன் திமுக ஆதரவு ஏடு, துக்ளக் அதிமுக ஆதரவு ஏடு போன்ற கட்சி சார்பு இல்லாமல் நடுநிலைமை என்ற பெயரில் உலா வரும் விகடன் குழுமம் இந்த தேர்தலில் அப்பட்டமான காவி ஆதரவு வேலையை செய்து வருகிறது. தற்போது குஜராத்தில் ஜூவி என்ற தொடரையும் தேர்தல் கருதி வெளியிட்டு வருகிறார்கள். மேலோட்டமாக மோடியை பற்றி விமரிசனங்கள் சிலவற்றை வைத்துக் கொண்டு, ஆழமாக மோடியை பூதாகரமாக ஆதரிக்கும் இந்த தொடர் ஒன்றே ஜூவியின் நோக்கத்தை கூறிவிடும்.

விகடன் ஏடுகளை அப்பாவித்தனமாக வாங்கி படிக்கும் வாசகர்கள், தாம் இத்தனை மலிவாக ஏமாற்றப்படுகிறோம் என்பதை உணர வேண்டும். வாசகர்களிடம் விலையையும், முதலாளிகளிடம் விளம்பரத்தையும் வாங்கிக் கொண்டு  பத்திரிகை நடத்தும் இவர்களுக்கு என்று எந்த அறமும், நடுநிலைமையும் எப்போதும் இருந்தது கிடையாது.

இந்திய ராஜபக்சே மோடியின் தமிழக ஊடக துதிபாடியாக இருக்கும் விகடனை கண்டியுங்கள்!

ரசியாவை மிரட்ட முடியாமல் திணறும் அமெரிக்கா

4

மெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்(டிசி)-க்கும் உக்ரைன் தலைநகர் கீவ்-க்கும் இடையேயான தூரம் 7,800 கிலோமீட்டர். இருப்பினும் இவ்வளவு தொலைவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அமெரிக்க அரசு குய்யோ முய்யோவென பறக்கிறது. அமெரிக்க அதிபர் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து அணி திரட்டுகிறார், சவுதி அரேபியாவுக்கு போய் ஷேக்குகளின் பண மூட்டையையும் உத்தரவாதப் படுத்திக் கொள்கிறார்.

சவுதியில் ஒபாமா
சவுதி அரேபியாவுக்கு போய் ஷேக்குகளின் பண மூட்டையையும் உத்தரவாதப் படுத்திக் கொள்ளும் ஒபாமா.

என்ன நடக்கிறது?

‘உலகத்தில் எங்கெல்லாம் ‘தரும’த்தின் தடம் எப்போதெல்லாம் மறையத் தொடங்குகிறதோ, அப்போதெல்லாம் அங்கு நான் வருவேன்’ என்பதுதான் அமெரிக்காவின் ஏகாதிபத்திய கீதை. அப்படி ஒரு புனித கடமையுடன் அமெரிக்க குடியரசு ஏற்படுத்தப்பட்டதாக அந்நாட்டு ஆளும் வர்க்கங்கள் எப்போதும் ஜபித்து வருகின்றன. பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக தோற்றுவிக்கப்பட்ட அந்த தருமம் எப்போதும் ஓய்வதில்லை.

“படையெடுப்புகள் மூலம் நாடுகளின் எல்லைகளை மாற்றக் கூடாது, பன்னாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும், ஒவ்வொரு நாட்டு மக்களுக்கும் எதிர்காலத்தை தாமே தீர்மானிக்க உரிமை உண்டு போன்ற ஐரோப்பிய நாடுகள் அனைவரும் ஏற்றுக் கொண்ட அறங்களை ரசியா உடைத்திருக்கிறது” என்கிறார் ஒபாமா.

ஆனால், அமெரிக்க ஆதரவு கட்சிகளால் பதவி இறக்கப்பட்ட உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் 2009-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவர். உக்ரைன் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைக்கும் ஒப்பந்தத்தை நிராகரித்து ரசிய ஆதரவு நிலையை அவர் எடுத்திருந்தார். இப்படி உக்ரைன் மக்கள் தமது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களது பிரதிநிதி மூலம் தீர்மானிப்பது விரோதமானது என்று முடிவு செய்த அமெரிக்கா ஆட்சி மாற்றத்திற்கு ஆதரவு அளித்தது. இதுதான் பன்னாட்டு சட்டங்களையும், ஜனநாயகத்தையும் அமெரிக்கா மதிக்கும் இலட்சணம்.

உக்ரைன் நெருக்கடியை பற்றி எழுதும் நியூஆர்க்கின் ரட்கர்ஸ் பல்கலைக் கழக பேராசிரியரான அலக்சாண்டர் மோடில் “உக்ரைன், போஸ்னியா, தாய்லாந்து, வெனிசுலா முதலான பல நாடுகளில் பெரும்பான்மையினரின் ஆட்சி என்ற பொருளிலான ஜனநாயகத்தை ‘மக்கள்’ விரும்பவில்லை. நடுத்தர வர்க்கங்கள் தமது ஒளிமயமான எதிர்காலத்தை தடுத்து வைத்துக் கொண்டிருக்கும் ஊழல் அரசுகள் என்று தாம் கருதுபவற்றை எதிர்த்து போராடுகிறார்கள்” என்று நடுத்தர வர்க்கத்தை பாசிசமயப்படுத்தும் ‘ஜனநாயகத்தை’யே அமெரிக்கா ஆதரிக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

பினோச்செட்
அமெரிக்கா ஆதரித்த சிலி ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் பினோசெட்

யனுகோவிச் அரசை எதிர்த்து போராடிய, பாசிச கட்சிகள் உள்ளிட்ட நடுத்தர வர்க்க சிறுபான்மைக்கு, அமெரிக்கா நிதி உதவியும், அரசியல் ஆதரவும் கொடுத்து ஊக்குவித்தது. 4 மாத தெரு போராட்டங்களுக்குப் பிறகு ஆட்சி மாற்றம் நடந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான தரப்பு ஆட்சியைப் பிடித்தது.

மொத்தத்தில் அமெரிக்கா முன் வைக்கும் பொருளாதார பாதையை ஏற்றுக் கொண்ட கட்சிகளை ஒரு நாட்டின் மக்கள் பெரும்பான்மை ஆதரவுடன் தேர்ந்தெடுத்து விட்டால் பிரச்சனையில்லை. இல்லா விட்டால், அமெரிக்க உளவுத் துறை, அமெரிக்க நிதி பெறும் தொண்டு நிறுவனங்கள் ஆதரவுடன் சிறுபான்மை நடுத்தர வர்க்க மக்கள் ஊழலை எதிர்த்து போராடி ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார்கள். இரண்டும் நடக்கவில்லை என்றால் அமெரிக்க ராணுவம் இருக்கவே இருக்கிறது.

ஈரானில் 1951-ம் ஆண்டு பெட்ரோலிய துறையை நாட்டுடைமையாக்கிய பிரதமர் முகமது மொசாதின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கவிழ்த்து தனது தனது கைப்பாவையாகிய ஷாவின் ஆட்சியை ஏற்படுத்தியது. அதே போல 1973-ல் தென் அமெரிக்க நாடான சிலியில் ஜனநாயக முறையில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சோசலிஸ்டு பிரதமர் சால்வடார் அலண்டே சிலியின் சுரங்கங்களை நாட்டுடமை ஆக்கியதைத் தொடர்ந்து அவரைக் கொன்று ஜெனரல் பினோசெட்டை ராணுவ சர்வாதிகாரியாக ஆட்சியில் அமர்த்தியது அமெரிக்கா. 1980-களில் ஈரானுக்கு எதிரான போரில் தான் ஆதரவளித்த சதாம் உசைனை 1990-களில் ஈராக் மக்கள் கலவரம் செய்து பதவி இறக்க முன் வராமல் போகவே, 2002-ல் தனது இராணுவத்தை அனுப்பி ஆட்சி மாற்றத்தை நடத்தியது. அமெரிக்க ‘ஜனநாயக’த்துக்கான சேவையெனும் பெயரில் அமெரிக்க ஆதிக்கம் தொடர்ந்து நடக்கிறது. இது போன்று பல டஜன் சர்வாதிகார ஆட்சிகளை உலக நாடுகளில் தூக்கிப் பிடித்து வந்திருக்கிறது அமெரிக்கா.

அதாவது, அமெரிக்க முதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் சக்திகள் அதிகாரத்தில் நீடிக்கும் வரையில் ஒரு ஆட்சி நீடிக்கலாம் என்பதே அமெரிக்காவின் அறம். இதற்கு மனிதாபிமானம், ஜனநாயகம், சுதந்திர சந்தை, கம்யூனிச எதிர்ப்பு என்று பல பெயர்கள் சூட்டினாலும் சாராம்சம் ஒன்றுதான். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலனுக்கு எங்கெல்லாம் தீங்கு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் அமெரிக்காவின் நிதி, அரசியல், ராணுவ கரங்கள் நீளும் என்பதுதான் கொள்கை.

1990-களில் சமூக ஏகாதிபத்தியமான சோவியத் யூனியன் உடைந்து 15 குடியரசுகளாக பிளவுபட்ட போது, ரசியாவில் அதிகாரத்துக்கு வந்த ரசிய முதலாளிகள், ரசிய மக்களையும், அண்டை குடியரசுகளையும் சுரண்டி தாம் கொழுக்க அமெரிக்க பாணி ஜனநாயகம் வந்து விட்டதாக கொண்டாடினார்கள். ஆனால், அமெரிக்காவோ தனது ஆதிக்கத்தை ரசிய செல்வாக்குப் பகுதியாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நீட்டியதோடு நில்லாமல், முன்னாள் சோவியத் குடியரசுகளையும் ஐரோப்பிய பொருளாதார ஒன்றியத்துக்குள்ளும், நேட்டோ இராணுவ கூட்டணிக்குள்ளும் இழுக்க ஆரம்பித்தது. இப்போது அதன் ஆதிக்கம் ரசியாவின் கொல்லைப்புறமான உக்ரைன் வரை நீண்டிருக்கிறது.

உக்ரைன், கிரீமியா,ரசியா
உக்ரைன், கிரீமியா,ரசியா வரைபடம்.

ரசிய ஆளும் வர்க்கத்திற்கு பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் உக்ரைன் ஆதாரமான பகுதியாக உள்ளது. ரசியாவின் இயற்கை எரிவாயு குழாய்கள் உக்ரைன் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றன. உக்ரைனின் வளமான விவசாய நிலங்கள் முழுமையாக மேற்கத்திய கட்டுப்பாட்டில் போவதை ரசியா ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

மேற்கத்திய ஆதரவு சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றியதைத் தொடர்ந்து உக்ரைனின் தென்கிழக்கில் ரசியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியான கிரீமியா சுயாட்சி பகுதி உக்ரைனிலிருந்து பிரிந்து ரசியாவுடன் சேர்வதற்கான கருத்துக் கணிப்பை நடத்தியது. அதில் 96.7% மக்கள் ரசியாவுடன் சேர்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர். பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற இந்த முடிவு உக்ரைனின் அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று அமெரிக்கா எதிர்க்கிறது.

ரசியா கிரீமியாவுக்குள் தன் படைகளை அனுப்பி அதன் மீது தனது ஆதிக்கத்தை ரத்தம் சிந்தாமல் நிறுவியிருக்கிறது. கிரீமியாவில் நிறுத்தப்பட்டிருந்த உக்ரைன் கடற்படை கப்பல்களை ரசியப் படைகள் கைப்பற்றி உக்ரைன் வீரர்களை தலைநகர் கீவுக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். உக்ரைனுடனான தனது எல்லையில் படைகளை தொடர்ந்து குவித்து வருகிறது.

இதைக் கண்டித்து மேற்கத்திய நாடுகள் ரசியாவையும் சேர்த்து ஜி-8 என்ற வல்லரசுகள் கிளப்பிலிருந்து ரசியாவை நீக்கி அதை ஜி-7 ஆக மாற்றியிருக்கிறார்கள். ஜூன் மாதம் சோச்சியில் நடைபெறவிருந்த ஜி-8 உச்சிமாநாட்டை ரத்து செய்து, அதை ஜி-7 மாநாடாக பிரஸ்ஸல்சில் நடத்தப் போவதாக அறிவிக்கிப்பட்டது.

“ரசியா சோச்சி குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி சம்பாதித்துக் கொண்ட பன்னாட்டு நல்லெண்ணத்தை இழந்து விட்டிருக்கிறது. அதே சோச்சியில் ஜி-8 மாநாடு நடத்துவதை ரத்து செய்வதன் மூலம் ரசியாவை தண்டித்திருக்கிறோம்” என்று ‘போர்ப்பிரகடனம்’ செய்திருக்கிறார் ஒபாமா. அமெரிக்கா வகுத்த விதிகளுக்கு அடங்கி இருக்கும் நாடுகள் மட்டும்தான் இந்த வல்லரசுகளின் குழுமத்தில் இருக்க முடியும் என்று இதற்கு பொருள்.

“பல பத்தாண்டுகளாக சோவியத் யூனியனுடன் நடத்திய போட்டியில் நாம் வெற்றி பெற்றோம். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு நாம் நமது எச்சரிக்கையை தளர்த்திக் கொண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்று எச்சரித்திருக்கிறார் ஒபாமா. 20-ம் நூற்றாண்டில் உலகளாவிய தனது மேலாதிக்கத்துக்கு தடையாக இருந்த சோசலிச நாடுகளுக்கு எதிராகவும், மூன்றாம் உலக நாடுகளில் தனது நலன்களுக்கு எதிரான தேசிய விடுதலை போராட்டங்களை ஒடுக்கி சர்வாதிகாரிகளை ஆட்சியில் அமர்த்தவும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற சக வல்லரசுகளின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவும் நடத்திய போட்டியைத்தான் ஒபாமா குறிப்பிடுகிறார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா
அமெரிக்க அதிபர் ஒபாமா

ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் சில ரசிய அரசு தலைவர்கள் மீது பொருளாதார மற்றும் பயணத் தடைகளை விதித்திருக்கின்றன.

ரசியா ஏற்கனவே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் உக்ரைன் பகுதியான கிரீமியாவைத் தாண்டி கிழக்கு அல்லது மேற்கு உக்ரைனுக்குள் படைகளை அனுப்ப முயன்றால் எரிசக்தித் துறை, ஆயுதத் துறை, நிதி சேவைகள் மற்றும் வர்த்தகத் துறைகளில் இன்னும் கடுமையான, விரிவான பொருளாதாரத் தடைகளை விரிக்கத் தயங்க மாட்டோம் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் எச்சரித்திருக்கின்றன.

ஜி-8 விளையாட்டிலிருந்து விலக்கி வைப்பது, எச்சரிக்கை விடுப்பது, ஒரு சில நபர்களை தமது நாட்டுக்கு வர அனுமதி மறுக்கும் தடை போன்ற நடவடிக்கைகள் ரசியா மீது பெரிய பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் இவற்றைத் தாண்டி இதை விட காட்டமான முறையில் ரசியாவுக்கு நெருக்கடி கொடுக்க முடியாத நிலையில் இப்போது அமெரிக்கா உள்ளது.

முதலாவதாக, முன்னாள் சோவியத் யூனியனின் வாரிசாக ஐ.நா பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்துடன் கூடிய நிரந்தர உறுப்பினர் தகுதி, அங்கீகரிக்கப்பட்ட அணு ஆயுதங்கள், அமெரிக்கா வரை பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணைகள் போன்ற கூர்மையான பற்கள் ரசியாவிடம் இருப்பதால் ராணுவ ரீதியில் தாக்கி அடிபணிய வைக்க முடியாத நிலை உள்ளது.

இரண்டாவதாக, ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும்  அமெரிக்காவுக்கு பெருமளவு இழப்புகளை ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு போர்களைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகளை புதியதொரு ஆக்கிரமிப்பு போருக்கு அனுப்புவதற்கு பெரும்பான்மை அமெரிக்க மக்களிடையே ஆதரவு இல்லை. அமெரிக்காவில் நடந்த கருத்துக் கணிப்பு ஒன்றில் 80% மக்கள் அமெரிக்கா ராணுவ ரீதியாக உக்ரைனில் தலையிடுவதை எதிர்த்துள்ளனர்.

மூன்றாவதாக, ஐரோப்பிய நாடுகள் தமது எரிசக்தி தேவைகளுக்கு ரசியாவின் இயற்கை வாயுவை சார்ந்து இருப்பதால் ரசியாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்தால் ரசிய எரிவாயு வழங்கல் தடைப்பட்டு நெருக்கடி ஏற்படும் என்று பயப்படுகின்றன.

கிரீமியாவில் படைகள்
கிரீமியாவில் படைகள்

மேலும் அமெரிக்க ஆதிக்கம் ஐரோப்பாவுக்குள் மேலும் அதிகரித்து தமது செல்வாக்கு குறைவதை ஐரோப்பிய வல்லரசுகள் விரும்பவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் தமது காலனி பகுதிகளை இழந்த முன்னாள் ஏகாதிபத்தியங்களில் இங்கிலாந்து அமெரிக்காவின் அடிவருடியாகி விட, பிரான்ஸ் ஐரோப்பாவுக்குள் அமெரிக்க ஆதிக்கத்தை மட்டுப்படுத்த முயற்சிக்கிறது. பொருளாதார ரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சக்தி வாய்ந்த நாடான ஜெர்மனி தனது செல்வாக்கு மண்டலத்துக்குள் அமெரிக்காவின் ஆதிக்கத்தை வரம்புக்குள் வைத்திருக்கவே விரும்புகிறது.

எனவே, உக்ரைன் எல்லையில் ரசிய படை குவிப்பை குறித்து கருத்து சொன்ன ஒபாமா “தனது எல்லைக்குள் படைகளை நிறுத்திக் கொள்ள ரசியாவுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதைத் தாண்டி வரக் கூடாது” என்று எச்சரித்திருக்கிறார்.

ரசியாவும் மேற்கத்திய நாடுகளை ஒரு அளவுக்கு மேல் முறைத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளது. பொருளாதார ரீதியாக மேற்கத்திய ஏகாதிபத்தியங்களுடன் பிணைக்கப்பட்டிருக்கும் ரசியா தீவிரமான பொருளாதார தடைகளை எதிர் கொள்ளத் தயாராக இல்லை. அதனுடைய பொருளாதாரம் வளர்ந்து வந்தாலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கு சவால் விடுமளவு இல்லை. கிரீமிய நெருக்கடியைத் தொடர்ந்து இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் $70 பில்லியன் மதிப்பிலான அன்னிய முதலீடு ரசியாவிலிருந்து போயிருக்கிறது என்று ரசியாவின் பொருளாதார துணை அமைச்சர் புலம்பியிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 29-ம் தேதி ஒபாமாவும் புடினும் 1 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றனர். ரசியா படைக்குவியலை நிறுத்த வேண்டும், கிரீமியாவிலிருந்து படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும், உக்ரைனில் ரசிய மொழி பேசும் மக்களுக்கு பாதுகாப்பு தருவது இவை குறித்து அவர்கள் விவாதித்தாக செய்தி வெளியிடப்பட்டது.

ராணுவ ரீதியாக ரசியாவை விட்டு வைத்தாலும், தான்தான் உலக தாதா என்று ஒபாமா தெளிவுபடுத்தியிருக்கிறார்.

“ரசியா ஒரு பிராந்திய சக்தி மட்டுமே, எங்கள் உலகளாவிய செல்வாக்கை எதிர்த்து ரசியா போட்டியிட முடியாது” என்றும் “ரசியா பலவீன நிலையிலிருந்து தனது அண்டை நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வலிமையின் அடிப்படையில் அல்ல.” என்றும் இதை விளக்கியிருக்கிறார் ஒபாமா. ‘உங்க பேட்டைக்குள்ள மட்டும் உன் அதிகாரத்தை வெச்சிக்கோ, உலகம் முழுக்க நான்தான் ரவுடி’ என்கிறார் அவர்.

ஈராக்குக்கு தனது படைகளை அனுப்பிய அமெரிக்கா “ஈராக் பகுதிகளை இணைக்கவோ, அதன் வளங்களை தனது பயன்பாட்டுக்கு அள்ளவோ செய்யவில்லை”  என்று சிரிக்காமல் ரசியாவுக்கு நல்லொழுக்க பாடம் எடுக்கிறார் ஒபாமா.

ராணுவத்தை அனுப்பாமலேயே பிற நாடுகள் மீது எப்படி ஆதிக்கம் செலுத்துவது என்பதையும் ஒபாமா விளக்கியிருக்கிறார். “அமெரிக்காவும் தனது அண்டை நாடுகள் மீது கணிசமான ஆதிக்கம் செலுத்துகிறது. ஆனால், அவர்களுடன் வலிமையான உறவை பராமரிக்க ராணுவ ரீதியாக ஆக்கிரமிப்பு நடத்துவது இல்லை” என்று அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக் கொள்கை இராணுவ வலிமையோடும், அதன் தயவில் இராணுவமற்ற முறையிலும் நிலவுவதை விளக்குகிறார் அதிபர் ஒபாமா.

புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் உக்ரைன் இடைக்கால அரசோ ஐ.எம்.எஃப் கடன் உதவியை கோரியிருக்கிறது. அந்த கடனுடன் சேர்ந்து வரும் பொருளாதார நிபந்தனைகளுக்கு நாட்டை உட்படுத்தி உக்ரைன் பொருளாதாரத்தை மேற்கத்திய கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்துக்கு சமர்ப்பித்திருக்கிறது.

அமெரிக்காவின் அண்டை நாடுகள், ஈராக், உக்ரைன் மட்டுமின்றி இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் அனைத்தின் மீதும் ஐ.எம்.எஃப்/உலக வங்கி மூலம் கொடுப்பது, நிதித்துறையை உலகமயமாக்கி கட்டுப்படுத்துவது, வர்த்தக சந்தையை திறந்து விட்டு அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை உறுதி செய்வது என்று தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது அமெரிக்கா. பொருளாதார ஆதிக்க நடவடிக்கைகளுக்கு அடிபணிய மறுக்கும் நாடுகளைப் பணிய வைப்பதற்காக தனது ராணுவத்தின் உலகளாவிய தாக்கும் சக்திகளை வளர்த்துக் கொண்டே போகிறது.

தற்போது உலகின் இயற்கை வளங்கள், உற்பத்தி சாதனங்கள் மற்றும் சந்தைகளை சில நூறு பெரு நிறுவனங்கள் கட்டுப்படுத்துகின்றன. முதலீட்டின் மீதான லாபத்திற்கான போட்டிதான் முடிவுகளை தீர்மானிக்கின்றது. வெவ்வேறு நிறுவனங்கள் சந்தையை தமக்குள் பங்கு போட போட்டியிடுகின்றன. சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களால் விழுங்கப்படுகின்றன.

உதாரணமாக, 1990-களில் கணினி இயங்குதளம் தயாரிக்கும் சந்தையில் நுழைந்த மைக்ரோசாப்ட், இயங்கு தள சந்தையில் ஏகபோகத்தை நிறுவிய பின், இயங்கு தளத்தில் மட்டுமின்றி அலுவலக மென்பொருள் சந்தையிலும் போட்டியாளர்களை ஒழித்துக் கட்டி தனது ஏகபோகத்தை நிறுவிக் கொண்டு அடுத்தடுத்த சந்தைகளில் விரிவாக்க முயற்சித்தது. அதன் முயற்சியை ஐ.பி.எம், ஆப்பிள் முதலான மற்ற பெரு நிறுவனங்கள் சட்ட ரீதியாகவும், பிற தொழில்நுட்ப முறைகளிலும் தடுத்து நிறுத்த முயற்சித்தன.

நவீன முதலாளித்துவத்தின் பெரிதும் மெச்சிக் கொள்ளப்படும் போட்டி என்பது இல்லாமல் ஒழிக்கப்பட்டோ, 2 முதல் 3 பெரு நிறுவனங்கள் மற்ற சிறு நிறுவனங்கள் அனைத்தையும் விழுங்கி சந்தையை தமக்குள் பங்கிட்டுக் கொள்வதாகவோ முடிகிறது. பேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் முதலான சமூக வலைத்தள சேவைகள் உட்பட 46 நிறுவனங்களை வாங்கி விரிவாகிக் கொண்டதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

லெனின்
100 அடிமைகளை வைத்திருக்கும் ஆண்டான், 200 அடிமைகளை வைத்திருக்கும் ஆண்டானுடன் அடிமைகளை நியாயமாக பங்கிடக் கோரி நடத்துவதுதான் உலகப் போர் – லெனின்.

கார்ப்பரேட்டுகள் வளர வளர சொந்த நாட்டில் மட்டுமல்லாமல் இயற்கை வளங்கள், மலிவான உழைப்பு, மற்றும் சந்தைக்காக உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டியிருக்கிறது.

இந்தப் போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலாளிகள், தமது உலகளாவிய விரிவாக்கத்துக்கு துணையாக தத்தமது நாட்டு அரசுகளை பயன்படுத்திக் கொள்கின்றன. ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் தமது சந்தை நலன்களை விரிவாக்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்குவதற்கான போட்டியில் இறங்குகிறார்கள்.

100 அடிமைகளை வைத்திருக்கும் ஆண்டான், 200 அடிமைகளை வைத்திருக்கும் ஆண்டானுடன் அடிமைகளை நியாயமாக பங்கிடக் கோரி நடத்துவதுதான் உலகப் போர் என்று முதல் உலகப் போர் குறித்து லெனின் வர்ணித்தார்.

இன்றைய ஒற்றைத் துருவ வல்லரசான அமெரிக்காவின் நிழலில் ஓய்ந்திருந்தாலும் பிரான்ஸ், ஜெர்மனி போன்ற மேற்கத்திய வல்லரசுகள் அமெரிக்காவோடு முரண்படாமல் இல்லை. கிழக்கில் ஜப்பான் நலிந்திருந்தாலும் போட்டியில் இருந்து விலகி விடவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் புதிய போட்டியாளராக உருவெடுத்திருக்கும் ரசியா ஏற்கனவே ஆயுத வலிமையில் அமெரிக்காவோடு போட்டி போடுவதால் தற்போது அந்த முரண்பாடு விரியத் துவங்கியிருக்கிறது. இந்த வல்லரசு நாடுகளின் போட்டியில் சிக்கிக் கொண்டு உலக நாடுகளும், மக்களும் சுரண்டப்படுவதோடு, போர் அழிவுகளையும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது.

மேல் நிலை வல்லரசுகளுக்கிடையே முரண்பாடு வளர்வதையே உக்ரைன் பிரச்சினை தெளிவாக்கியிருக்கிறது. இந்த முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்ளும் வண்ணம் பாட்டாளி வர்க்கம் பலமாக இல்லை என்பதோடு சோவியத் முகாம் என்ற ஒன்றும் இப்போது இல்லை. பாட்டாளி வர்க்கம் செல்வாக்கு அடையும் போதுதான் அமெரிக்கா மற்றும் இதர மேல் நிலை வல்லரசுகளின் கொட்டம் ஒடுக்கப்படும்.

–    செழியன்

மேலும் படிக்க

தேர்தலை விடுத்து புரட்சியை நடத்து !

42

தேர்தலை விடுத்து
புரட்சியை நடத்து!

பல வருசம் ஆச்சு
ஆத்துல தண்ணிய பாத்து,

பல வருசம் ஆச்சு
வயல்ல பச்சையப் பாத்து,

இந்தியா விவசாயம் - நாடாளுமன்றம்பல வருசம் ஆச்சு
மரத்துல காய்ப்பை பாத்து,

பல வருசம் ஆச்சு
வீட்ல மாடு கத்தி

பல வருசம் ஆச்சு
வண்ணத்துப் பூச்சி வீட சுத்தி,

பல வருசம் ஆச்சு
தறியில நூலப் பாத்து

பல வருசம் ஆச்சு
வலையில மீனப் பாத்து

பல வருசம் ஆச்சு
பணமில்லாம மருத்துவம் பாத்து,

பல வருசம் ஆச்சு
காசில்லாம கல்வியப் பாத்து,

பல வருசம் ஆச்சு
பெட்டிக்கடை அக்காவிடம் சிரிப்பை பாத்து,

பல வருசம் ஆச்சு
எட்டு மணிநேர வேலை என்ற பேச்சை கேட்டு

பல வருசம் ஆச்சு
தெருக்குழாயில் தண்ணி பாத்து

பல வருசம் ஆச்சு
தெருவோட கவுன்சிலரப் பாத்து

பல வருசம் ஆச்சு
மனு கொடுத்த கலெக்ட்டர பாத்து

பல வருசம் ஆச்சு
மாமூல் வாங்காத போலீசைப் பாத்து

பல வருசம் ஆச்சு
யோக்கியனா நீதி பதியைப் பாத்து

பல வருசம் ஆச்சு
மனிதனை மனிதனாய் பாத்து

பல வருசம் ஓட்டுபோட்டு
பாராளுமன்றமே உளுத்துப்போச்சு

மாத்தி மாத்தி ஓட்டு போட்டு
ஊரும் நாடும் பாழாப் போச்சு

செத்த பொணத்த காப்பாத்துமா
தேர்தல் சென்ட்டு பூச்சு!

மொத்த சமூகத்தையும் நாறடிக்கும்
இந்த போலி ஜனநாயகத்தை

புதைப்பதுதான் ஒரே மூச்சு!

– துரை.சண்முகம்

காட்டு யானைகளும் அதிகார வர்க்க யானைகளும் – விவிமு போராட்டம்

7

காட்டு யானைகளை விரட்டக் கோரி, அதிகாரவர்க்க மதம் பிடித்த அரசை நிர்பந்தித்து போராட அழைப்பு விடுத்து விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மேற்கொண்ட பிரச்சார இயக்கம்

மார்ச் -2014 பிரச்சார இயக்கம் ஒசூர், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் வி.வி.மு. பிரச்சாரம்

காட்டு யானைகள் விவசாயிகளையும் விவசாயத்தையும் அழித்து வருவது அனைவரும் அறிந்ததே. கர்நாடக வனப்பகுதியிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு தமிழக வனப்பகுதியில் நுழைந்த 120-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களில் கிராம மக்களை தாக்கி வருகிறது. இதுவரை சுமார் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமுற்றுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நாசமடைந்துள்ளன. இதுவரை யானைகள் காட்டிற்குள் விரட்டியடிக்கப்படவில்லை. தொடரும் இந்த துயரங்களை தீர்க்கஎன்ன வழி என்று திக்கித்தவித்த மக்களுக்கு இப்பகுதியில் செயல்படும் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாக விரிவான பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் துண்டு பிரசுர வினியோகம், தெருமுனைப் பிரச்சாரங்கள் மூலம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தப் பிரச்சாரம் மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்று தந்துள்ளன. காட்டு யானைகள் ஊருக்குள் வருவதற்கு அரசும், முதலாளித்துவ கொள்கைகளும் தான் காரணம் என்ற பிரச்சாரம் மக்கள் புதிய விசயமாகப் பார்த்து வரவேற்பு கொடுக்கின்றனர். தொடர்ந்து சங்கமாக சேர்ந்து போராடினால்தான் தீர்வு கிடைக்கும் என்பதை உணர்ந்து பலரும் அமைப்பில் இணைய ஆர்வம் தெரிவித்து வருகின்றனர். இம்மாதம் முழுவதும் இப்பிரச்சார இயக்கத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இப்பிரச்சாரத்தின் போது யானைகளால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், யானைகளால் காயமுற்றவர்கள், பயிர்கள் நாசமடைந்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் என பலரையும் சந்தித்து பிரச்சரம் செய்து வருகிறோம்.

பிரசுரத்தின் உள்ளடக்கம்:

  • காட்டு யானைகளின் அட்டூழியம், விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கிறது!
    தமிழக அரசின் அட்டூழியம், யானைகளை விரட்டக் கோரும் மக்களை ஒடுக்குகிறது!
  • சுற்றுச்சூழலை அழிக்கும் காட்டுவளங்களைக் கொள்ளையிடும்
    தனியார்மயம், தாராளமயத்தை முறியடிப்போம்!
  • போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
    உழைக்கும் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கும் மக்கள் கமிட்டிகளைக் கட்டியமைப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சில மாதங்களுக்கு முன் போடுர் பள்ளம் வழியாக 120-க்கும் மேற்பட்ட யானைகள் மூன்று பிரிவுகளாக தமிழக எல்லைக்குள் நுழைந்தன. இவை தேன்கனிக்கோட்டை, ஒசூர் வனப்பகுதியில் சுற்றித்திரிகின்றன. காட்டுயானைகள் ஊருக்குள் வந்து ராகி, வாழை, நெல் போன்ற விவசாயப் பயிர்களை நாசம் செய்வதும் நாம் அனுபவித்து வருகின்ற கொடுமையாக உள்ளது. முன்பெல்லாம் இரவில் ஊருக்குள் வந்து தாக்கும் யானைகள் இப்போது பகலிலேயே மக்களை தாக்குகின்றன. சாலைகளை கூட்டமாக வந்து மறித்துக் கொள்கின்றன. பாத்தகோட்டா, ஜவளகிரி, சானமாவு, காமன்தொட்டி போன்ற கிராமங்கள் பெரிதும் பாதித்து வருகின்றன. காட்டை ஒட்டியுள்ள கம்பெனிகளையும் இந்த யானைகள் விட்டுவைக்கவில்லை.

மழையின்றி விவசாயம் பொய்த்துப் போயுள்ள இன்றைய காலங்களில், விவசாயம் செய்ய இயலாமல் அரசின் மூலம் பல்வேறு நெருக்கடிகளை அனுபவித்து வருகிறோம். கோமாரி நோய் தாக்கி பெருமளவு பசுமாடுகளை இழந்து நட்டமடைந்துள்ளோம். இந்நிலையில், இந்த காட்டுயானைகள் நாள்தோறும் வளர்ந்து வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

வனத்துறை, மாவட்ட ஆட்சியர் கூட்டம், காட்டுயானைகள் கூட்டம்: ஒருநாள் ஐ.பீ.எல். போட்டி!

காட்டுயானைகளை விரட்டுவதாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு, மற்றும் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகள் என்ன தெரியுமா? சில வனத்துறை ஊழியர்களை கொண்டு யானைக் கூட்டத்தை விரட்டுவதுதான். உண்மையில், இது கோமாளித்தனமானது! முட்டாள்தனமானது! வனத்துறை ஊழியர்கள் காட்டுயானைகளை விரட்டுவதற்காக மேற்கொள்ளும் இந்த முயற்சிகள், ஐ.பீ.எல். போட்டி போல மக்களை ரசிக்கவைத்து, காட்டுயானை கூட்டம் மக்களை கொல்வதையும் துன்புறுத்துவதையும் மறக்கடிக்கிறன. மக்களை ஏமாற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கைகள், வனத்துறை ஊழியர்களின் உயிரைப் பலிகொடுப்பதில்தான் போய் முடியும். அவ்வாறுதான் நடந்தும் வருகிறது.

வனத்துறையின் அறிவிப்பு– விவசாயிகள் தலையில் இடி!

விவசாயிகளுக்கு காட்டுயானைகளால் தொல்லை என்ற உடன், இதற்காக மகழிச்சியடைந்தவர்கள் இருக்கிறார்களா? ஆம், இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்த அரசும் வனத்துறையும் கார்ப்பரேட் முதலாளிகளும்தான். இதனை எப்படி சொல்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? இதோ, வனத்துறையின் அறிவிப்புகள்!

  • காட்டிற்குள் கால்நடை மேய்ப்பதை தவிர்க்கவும்
  • வனப்பகுதியில் தீமூட்டாதீர்கள்
  • யானை தாண்டா அகழிகளில் கல் மற்றும் மண்ணைக் கொட்டி தடைகள் ஏற்படுத்தாதீர்கள்
  • வனப்பகுதிகளில் நடமாட வேண்டாம்
  • வனப்பகுதியை ஒட்டி கரும்பு, நெல், வாழை, ராகி போன்ற பயிர்களை செய்ய வேண்டாம்

என அறிவித்துள்ளது. காட்டையே நம்பி வாழுகின்ற மேய்ச்சல் தொழிலை பிரதானமாக செய்கின்ற விவசாயிகளுக்கு மேற்கண்ட வனத்துறையின் அறிவிப்புகள் அதிர்ச்சியளப்பவையாக உள்ளன.

யாரைப் பாதுக்காக்க இந்த அறிவிப்பு!

யானைகளிடமிருந்து விவசாயிகளைப் பாதுகாக்கத்தான் இந்த அறிவிப்பு என்று சொல்கிறது வனத்துறை. இது சுத்தப்பொய்! ஏனென்றால்,

  • காட்டிற்குள் கால்நடை மேய்ப்பதை தவிர்க்க வேண்டுமாம்! வனப்பகுதியில் நடமாட வேண்டாமாம்! இது அயோக்கியத்தனமான அறிவிப்பல்லவா? காட்டிற்குள் கால்நடை மேய்த்தவர்கள் அரிதும் அரிதாகவே யானைகளால் தாக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் யானைகள் ஊருக்குள் வந்ததால்தான் பயிர்கள் நாசம் செய்வது, விவசாயிகளைத் தாக்கியதும் நடந்துள்ளது. இந்த உண்மை வனத்துறைக்கும் தமிழக அரசுக்கும் தெரியாதா?
  • வனப்பகுதியில் தீமூட்டுவது காலங்காலமாக நடக்கிறது. அதனால்தான் யானைகள் ஊருக்குள் வருகிறது என்பது உண்மையல்ல, பொய்!
  • * வனத்துறை வெளியிட்டுள்ள பிரசுரத்தில், மாடுகள் காட்டில் மேய்ப்பதால் யானைகளுக்கு தேவையான தீவனங்கள் குறைந்துவிடுகிறதாம்! அதனால்தான் யானைகள் ஊருக்குள் வருகிறதாம்! – இதுவும் சுத்தப் பொய்! ஏனென்றால், வறட்சியினால் மாடுகளே காட்டில் உள்ள காய்ந்த சருகுகளைத்தான் மேய்கின்றன. யானைகள் சருகுகளை மேய்வதில்லை!

இந்த அறிவிப்பின் மோசடிகள்!

  • முதலில் இந்த அறிவிப்பு விவசாயிகளைப் பாதுகாக்க அல்ல என்பதை மேலே எழுப்பியுள்ள கேள்வியிலிருந்து புரிந்து கொண்டிருப்பீர்கள்.
  • இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள பெயர் – யானைகளைப் பாதுகாக்கக் புதிய திட்டம் (பார்க்க தினமணி 29 மார்ச் 2013)
  • இத்திட்டத்தின் படி காட்டில் 117 லட்சம் தண்ணீர் தொட்டிகள் கட்டுவது, 180 லட்சம் ரூபாயில் வனத்தில் பயிர்சாகுபடி செய்து யானைகளுக்கு உணவு வழங்குவது!
  • * 150 கிலோ மீட்டார் தொலைவிற்கு யானைகள் தடுப்புப் பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளன.

இந்தத் திட்டங்கள் யானைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் விவசாயிகளை ஒழித்துக்கட்டும் அறிவிப்புகளாக உள்ளன.

யானைகள் ஊருக்குள் வருவதற்கு யார் காரணம்?

இரயிலில் அடிபட்டு இறந்த யானைகள்! – [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

காட்டு வளங்களை அழித்துப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், உள்நாட்டு தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கும் காட்டை தாரா வர்க்கிறது இந்திய அரசு. இவர்கள்…

  • காட்டில் உள்ள கிரானைட் உள்ளிட்ட கனிம வளங்களைக் கொள்ளையடிக்கவும்
  • யானை, மான் போன்ற விலங்குகளை வேட்டையாடி அவற்றிலிருந்து தந்தம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடிக்கவும்
  • சந்தனம், தேக்கு, அகில் போன்ற உயர்ந்த வகை மரங்களை வெட்டி காடுகளை கொள்ளையடிக்கவும்
  • காட்டையழித்து காப்பி, தேயிலை போன்ற பணப்பயிர் எஸ்டேட்கள் அமைப்பதாலும்
  • முக்கியத்திலும் முக்கியமாக, யானைகளில் வழித்தடங்களில் சுற்றுலா என்ற பெயரில், யோகா என்ற பெயரில் காட்டை ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்புவதாலும் (ஒகேனக்கல் சுற்றுலா தளம், பன்னார்கட்டா சுற்றுலா தளம்)

மேற்கண்ட இக்காரணங்களால் தான் காட்டிலிருந்து யானைகள் ஊருக்குள் வருகின்றன. மக்களுக்கு நாட்டிற்குள் ஜனநாயகமில்லை. யானைகளுக்கு காட்டில் வாழ்வுரிமை இல்லை!

வேறு காரணங்கள் உள்ளனவா?

தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் விளைவாக சுற்றுசூழல் கெட்டுப்போயுள்ளது. அதாவது, தொடர்ந்து அதிகரித்துவரும் கார்கள், நகரமயமாக்கம், ஏரி குளங்களை ஆக்கிரமித்து பஸ்ஸ்டாண்டு, கட்டிடங்கள் எழுப்புவது, நீர் நிலைகளை நஞ்சாக்குவது, பேப்பர் உற்பத்திக்காக நாள் தோறும் பல லட்சம் மரங்களை வெட்டுவது போன்ற காரணங்களே முக்கியமானவையாக உள்ளன. இதனால் பூமி வெப்பமடைந்துள்ளது. மழைப் பொய்த்துப் போயுள்ளது. காடுகள் அழிந்து வருகின்றன. வன விலங்குகள் ஊருக்குள் வந்து மக்களைத் தாக்குகின்றன.

ஆகையால், விவசாயிகளாலும் பழங்குடி மக்களாலும் காடு அழிகிறது என்பது சுத்தப்பொய்! காட்டை அழிப்பவர்கள் இந்த அரசும் முதலாளிகளும் தான் காட்டை அழிக்கின்றனர். இந்த உண்மையை மக்கள் உணரவேண்டும்.

யானைகள் மக்களை துன்புறுத்துகின்றன! அரசோ மக்களை ஒடுக்குகிறது!

தடியடி
யானையை விரட்டக் கோரிய கிராம மக்களை தடியடி நடத்தி விரட்டும் போலீசு

ஊருக்குள் யானை வந்து காமன்தொட்டியிலும் சானமாவிலும் விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், யானைகளை காட்டிற்குள் விரட்டுவதற்கு தமிழக அரசு உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமுற்ற சானமாவு, பீர்ஜேப்பள்ளி கிராமம் மக்கள் ஊருக்குள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக முடிவெடுத்தனர். விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் இந்த ஜனநாயக பூர்வமான எதிர்ப்பை கூட தமிழக அரசு விட்டுவைக்கவில்லை. போலீசைக் கொண்டு மக்களை தாக்கியது. ஊருக்குள் ஊரடங்கு உத்தரவு போட்டு மக்களை ஒடுக்கியது. உழைக்கும் மக்கள் தங்களது ஜனநாயக பூர்வ உரிமைகளை கூட கேட்காமல் யானைகளுக்கு அடிப்பட்டு சாகவேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம். இதற்கு காரணம், இந்த ஜனநாயகம் என்பதெல்லாம் போலி ஜனநாயகம்! முதலாளிகளுக்கு ஜனநாயகம்! உழைக்கும் மக்களுக்கு சர்வாதிகாரம்!

உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

  • உடனடியாக, தற்போது படையெடுத்து வந்துள்ள யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும். காட்டில் சந்தனமர கடத்தல் வீரப்பனை விரட்டுவதற்காக அதிரடிப்படையை கொண்டுவந்து இறக்கியது தமிழக அரசு. அதுபோல, இந்த யானைகளை அதிரடிப்படை கொண்டுவந்து விரட்டியடிக்க வேண்டும். அடுத்து, போடுர் பள்ளம் பகுதியிலிருந்து கரநாடக வனப்பகுதியில் உள்ள யானைகள் தமிழக எல்லைக்குள் நுழைவதை தடுக்க வேண்டும்.
  • காடுகளை ஆக்கிரமித்துள்ள சுற்றுலா தளங்களை (ஒகேனக்கல், பன்னார்கட்டா) இழுத்து மூட வேண்டும். அங்கு கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
  • காடுகளில் யானைகள் வாழ்வதற்கு தேவையான தீவனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அங்கு யானைகளுக்கு தேவையான நீர்நிலைகளை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமே உடனடியாக காடுகளில் இருந்து யானைகள் கிராமங்களை நோக்கி வருவதை தடுக்க முடியும்.
  • காட்டுயானைகளால் இறந்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காட்டு யானைகளால் சேதமடைந்த விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் ரூ.20,000 ஏக்கருக்கு நட்டஈடு வழங்க வேண்டும். தக்காளி, கோஷ், வாழை போன்ற பணப்பயிர் விவசாயிகளுக்கு கூடுதலாக, அவர்கள் போட்ட முழு தொகையையும் திருப்பி தரவேண்டும்.
  • வனப்பாதுகாப்புச் சட்டம், யானைகள் சரணாலயம் என்ற பெயரில் பன்னாட்டுக் கம்பெனிகளும் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் காடுகளை ஆக்கிரமிக்க செய்துதரும் மக்கள்விரோத ஒப்பந்தங்கள், திட்டங்கள் அனைத்தையும் கைவிட வேண்டும்.

மேற்கண்ட தீர்வுகளை வலியுறுத்தி அரசை நிர்பந்தித்துப் போராட வேண்டும். இதற்கு விவசாயிகள் சங்கமாக திரள வேண்டும். ஓட்டுக் கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க., வி.சி., பா.ம.க., காங்கிரசு, பா.ஜ.க. போன்றவைதான் முதலாளிகளின் நலனிற்காக மக்களை கொல்கின்றனர். அதனால், இவர்களை நம்பி இருப்பது வீண்வேலை. மற்றொருபுறம், இவர்களுடன் எப்பொழுதும் கூட்டணி வைத்து நக்கி பிழைத்துகாலம் கடத்தும் சி.பி.ஐ., சி.பி.எம்., யு.சி.பி.ஐ. போன்ற போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் ஓட்டுக்காகவும் சீட்டுக்காவும் எப்பஐ வேண்டிமானாலும் மாற்றி பேசுபவர்கள்தான். ஆகையால், நமக்கான ஒரு சங்கம் அமைத்து போராட வேண்டும். விவசாயிகளின் ஜனநாயகம், அதிகாரத்திற்காக போராடும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் கிளை ஒவ்வொரு கிராமத்திலும் கட்டியமைப்பதுதான் இன்று நம்முன் உள்ள ஒரே கடமை.

நிரந்தரத் தீர்வு என்ன?

காடு அங்கு வாழும் மக்களுக்கு அடிப்படை உரிமை. காலங்காலமாக வனமும் கிராமங்களும் வேறுபாடின்றி ஒன்றுகலந்திருந்தன. பழங்குடி மக்கள் காட்டின் ஒரு அங்கமாக இருந்தனர். காடும் விலங்குகளும் மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். நமது நாட்டை அடிமையாக்கிய ஆங்கிலேயர் வந்த பின்னர், வனச் சட்டத்தைக் கொண்டுவந்து காட்டில் மக்கள் சுந்திரமாக நடமாடுவதற்குத் தடைவிதித்தனர். இன்றைய போலிசுந்திர அரசோ வனப்பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் காட்டுப் பகுதியில் வாழும் மக்களையே ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்லி காட்டைவிட்டு விரட்டியடிக்கிறது. இன்று பன்னாட்டுக் கம்பெனிகளும், உள்நாட்டு தரகு முதலாளித்துவ கம்பெனிகளும் கனிம வளங்களைக் கொள்ளையடிக்க இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது நாடு மறுகாலனியாக்கத்திற்குள் தள்ளப்படுகிறது. யானைகள் பாதுகாப்பு என்ற பெயரிலும் நமது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் இதன் ஒருபகுதியே.

மேற்கு வங்கம், ஒரிசா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் காட்டை ஆக்கிரமிக்க வரும் இந்த கார்ப்பரேட் முதலாளிகளை மக்கள் போராடி விராட்டியடித்துள்ளனர். ஒசூரில் ஜி.எம்.ஆர். கம்பெனியின் மூலம் அமைக்க வந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தை அப்பகுதி விவசாயிகளுடன் சேர்ந்து எமது தோழமை அமைப்புகள் விரட்டியடித்தன. அதுபோல, யானைப் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் விவசாயிகளை விரட்டியடிக்கும் சதித்திட்டத்தை நாமும் சங்கமாக சேர்ந்து முறியடிக்கமுடியும்!

இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘நாங்க வந்தா பிரச்சனை தீர்ந்துவிடும்’ என எல்லா ஓட்டுக்கட்சிகளும் உங்களிடம் வந்து ஓட்டுக்கேட்க தொடங்கிவிட்டனர். ஆனால், தேர்தல் முடிந்து விட்டால் இவர்கள் நமது பிரச்சனையை கண்டு கொள்ளமாட்டார்கள். தொகுதி பக்கமே தலைகாட்ட மாட்டார்கள். காட்டுவளத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க புதிய திட்டங்களைத்தான் தீட்டிக்கொடுப்பார்கள்! ஆகையால், தேர்தலில் ஓட்டுப் போடுவதால் நமக்கு எந்த நன்மையும் விளையப் போவதில்லை. அதுமட்டுமல்ல, புதிய தாக்குதல்கள்தான் வரப்போகின்றன.

இன்றுள்ள இந்த போலிஜனநாயக அரசு இருக்கும் வரை விவசாயிகளுக்கு இது போன்ற புதிய புதிய தாக்குதல்கள் வந்து கொண்டுதான் இருக்கும். சுற்றுச்சூழல் நாசமடைவதைத் தடுக்க முடியாது. ஆகையால், இந்த போலி ஜனநாயக அரசை தகர்த்தெறிந்து மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் வழங்கும் புதிய ஜனநாயகக் குடியரசமைக்க அணிதிரள்வோம்! ஊர்தோறும் மக்கள் கமிட்டி அமைத்து அதிகாரங்கள் அனைத்தையும் விவசாயிகள் கையிலெடுப்போம்!

தமிழக அரசே!

  • காட்டு யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடி! போடூர் பள்ளத்தில் தமிழக எல்லையை மூடு!
  • காட்டிற்குள் யானைகள் நிரந்தமாக தங்கும் வகையில் நீர் நிலைகளை உருவாக்கு! யானைகளுக்கு தேவையான தீவனங்களைப் பயிரிடு!
  • காட்டில் ஆடு, மாடு மேய்ப்பதற்கும் மக்கள் காட்டிற்குள் சென்றுவருவதற்கும் தடைவிதிக்காதே! விவசாயிகளின் வாழ் உரிமையைப் பறிக்காதே!
  • யானைகளால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கு!
  • காட்டுயானைகளால் நாசமடைந்த பயிர்களுக்கு குறைந்த பட்சம் ஏக்கருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கு! பணப்பயிர்களுக்கு விவசாயிகள் செய்த மொத்த தொகையையும் திருப்பிக்கொடு! பயிர்களுக்கு அரசின் மூலம் பயிர் காப்பீடு செய்துகொடு!

உழைக்கும் மக்களே! விவசாயிகளே!

  • காடு என்பது நமது உரிமை! காட்டிற்குள் நடமாடுவதைக் கட்டுப்படுத்துவதை எதிர்த்து முறியடிப்போம்!
  • யானைகள் பாதுகாப்புத் திட்டம் என்பது விவசாயிகளை காட்டிவிட்டு விரட்டியடிக்கும் சதித்திட்டம்! இதனை முறியடிக்க ஓரணியில் திரள்வோம்!
  • சுற்றுச்சூழலையும் நாசப்படுத்தும், காட்டு வளத்தை சுரண்டும் தனியார்மயம்–தாராளமயம்–உலகமயம் என்ற மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!
  • போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! விவசாயிகள் கையில் அதிகாரம் வழங்கும் புதிய ஜனநாயகக் குடியரசமைக்க ஒன்றிணைவோம்!

காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்த விவசாயிகளுக்கு எமது அஞ்சலி!

கடந்த 2012–13 ஆண்டுகளில் மரணமடைந்த விவசாயிகளில் சிலரின் பெயரை இங்கு குறிப்பிடுகிறோம்.

மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்த அப்பண்ணா, பன்னப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ், பீர்ஜேப்பள்ளிச் சேர்ந்த விவசாயி திருமைய்யா, கெலமங்கலம் ஏ.கொத்தப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா, பாத்தகோட்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முனுசாமி, சூளகிரி சின்னசிகரலப்பள்ளியைச் சேர்ந்த சாலம்மா, தளி தேவர்பட்டாவைச் சேர்ந்த புட்டண்ணா, தே.கோட்டை மலசோனியைச் சேர்ந்த ராஜநாயக், தே.கோட்டை காடுகல்லச் சந்திரத்தைச் சேர்ந்த லட்சும்மையா, கெலமங்கலம் அருகே யூ.கொத்தப்பள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணப்பா.

விவசாயிகள் விடுதலை முன்னணி
அஞ்செட்டி ஒன்றியம் & ஒசூர் ஒன்றியம்
தொடர்புக்கு :
தோழர்.சரவணன் 97513 78495
தோழர்.ஜெயராம், 89039 092472

பிரசுரங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தொழிலாளிகளை கசக்கும் டொயோட்டாவின் இலாப வெறி !

0

ந்தியாவில் இன்னோவா கார்களை உற்பத்தி செய்யும் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் சுமார் 4,200 தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தி அவர்களுடைய வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

டொயோட்டா
டொயோட்டா லாக்அவுட்

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகிலுள்ள பிடதியில் சுமார் 432 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் டொயோட்டா தொழிற்சாலையில் மொத்தம் 6,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் ஒற்றுமையை பிரிக்கும் நோக்கத்துடனும் குறைந்த கூலியில் வேலை வாங்கும் நோக்கத்துடனும் 4,200 நிரந்தரத் தொழிலாளர்களுடன் 1,500 ஒப்பந்த தொழிலாளர்கள், 800 பயிற்சியாளர்களையும் உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது நிர்வாகம். நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டும் டொயோட்டா கிர்லோஸ்கர் தொழிற்சங்கமாக திரண்டிருக்கிறார்கள்.

டொயோட்டாவின் நிரந்தரத் தொழிலாளிகளுக்கு அடிப்படை ஊதியமாக ரூ 16,000-ம், சராசரி மாத ஊதியமாக ரூ 25,500-ம் வழங்கும் நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சொற்ப கூலியாக ரூ 8000-ம், பயிற்சியாளர்களுக்கு ரூ 6000-ம் மட்டும் தந்து சுரண்டுகிறது. இந்த அடிப்படையில் டொயோட்டா நிறுவனத்தின் மொத்த ஊதியச் செலவு மாத விற்பனை வருவாயில் 2%-ஐ விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மார்ச் மாதம் வழங்கப்படும் வருடாந்திர ஊதிய உயர்வாக இவ்வாண்டு மாத சம்பளத்தை சராசரி ரூ 8,500 உயர்த்த வேண்டுமென சென்ற ஆண்டு மார்ச் மாதமே தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தது. ரூ 2,400 மட்டுமே தர முடியுமென நிர்வாகம் கூறியது. கடந்த 11 மாதங்களாக நிர்வாகத்துடன் 48 முறைக்கும் மேல் – 8 முறைக்கும் மேல் தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் – நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை சராசரி ரூ 4,000 உயர்வு என குறைத்துக் கொண்டனர். ஆனால், ரூ 3,050 மட்டுமே ஊதிய உயர்வு தருவதாக பிடிவாதம் பிடித்தது நிர்வாகம். சென்ற நிதியாண்டில் கொடுக்கப்பட்ட அதே ஊதிய உயர்வையே தாங்கள் கோருவதாகவும், இச்சராசரி உயர்வு வழங்கப்பட்டாலும் கூட 4,200 தொழிலாளர்களில் 20% பேர் மட்டுமே அதிகபட்சமான ரூ 3,050 ஐ பெறுவார்கள் எனவும், 80% பேர் வரை பணி அனுபவத்தின் அடிப்படையில் குறைவான உயர்வையே பெறுவார்கள் என்பதால், சென்ற ஆண்டின் உயர்வான ரூ 4,000-ஐ இவ்வாண்டுக்கும் வழங்கும்படி தொழிலாளர்கள் கோரி வருகின்றனர்.

கார்கள்
டொயோட்டா பிடதி ஆலை உற்பத்தி செய்து குவிக்கும் கார்கள்

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தொழிற்சாலையின் உற்பத்தியை 1.6 லட்சம் கார்களிலிருந்து 2.1 லட்சமாக (33% அதிகரிப்பு) உயர்த்தியிருக்கிறது டொயோட்டா. உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மிக மோசமான பணியிடச்சூழல் நிலவுவதாகவும், அதிக வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக சில தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், சிலர் வேலையை விட்டு சென்று விட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து தனது விற்பனை வருவாயையும், லாபத்தையும் மேலும் மேலும் பெருக்கி வருகிறது டொயோட்டா. ஆனால்,  பணவீக்க வீத அளவுக்கு கூட ஊதிய உயர்வு கொடுக்காமல் தொழிலாளர்களின் உண்மையான சம்பளத்தை மேலும் குறைக்க முயற்சிக்கிறது நிர்வாகம்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10, 28 ஆகிய நாட்களில் தொழிற்சங்கம் அடையாள வேலைநிறுத்தம் நடத்தியது. இதையடுத்து தொழிலாளர் ஆணையருக்கும், தொழிலாளர்கள், தொழிற்சங்கத்திற்கும் முன் அறிவிப்பு செய்ய வேண்டும் என்ற சட்டபூர்வமான விதிமுறைகளை மதிக்காமல், மார்ச் 16 முதல் தொழிற்சங்கத்தில் இருக்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும் லாக்அவுட் அறிவித்து உற்பத்தியை நிறுத்தியது நிர்வாகம். ஆனால், 1,600 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், 800 பயிற்சியாளர்களுக்கும் லாக் அவுட் அறிவிக்காமல் அவர்களை சட்ட விரோதமாக உற்பத்தியில் ஈடுபடுத்த முயற்சித்ததை தொழிலாளர்கள் அம்பலப்படுத்தினர்.

25 நாட்களில் தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கைகளால் 2,000 கார்கள் வரை உற்பத்தி குறைந்ததால் இழப்பு ஏற்பட்டதாகவும், மாருதி தொழிற்சாலையைப் போல் நிர்வாக ஊழியர்களுக்கு தொழிலாளர்கள் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் புலம்பியது. அதாவது தொழிலாளர்கள் வேலை செய்யா விட்டால் உற்பத்தி இல்லை என்பதுதான் நிதர்சனம் என்றாலும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட மதிக்காமல் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது நிர்வாகம்.

டொயோட்டா
தொழிலாளர்களை சுரண்டும் டொயோட்டா

இப்பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்து பெங்களூரில் போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து கர்நாடக மாநில தொழிலாளர் துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாக சொல்லி  தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கப் போவதாக நிர்வாகம் அறிவித்தது. ஆனால், தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பும் முன்னர் மன்னிப்பு கடிதமும், இனி இம்மாதிரியான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என உறுதிமொழி கடிதமும் தரவேண்டுமென பிடிவாதம் பிடித்தது.

சட்ட விதி முறைகளை துளியும் மதிக்காத நிர்வாகம், தொழிலாளிகளை வன்முறையாளர்களாக முத்திரை குத்தி உற்பத்தியை நிறுத்தியதுடன், அவ்வுற்பத்தி நிறுத்ததிற்கும் தொழிலாளர்களையே பொறுப்பாக்குகிறது. மேலும் தொழிற்சங்கத்தை சேர்ந்த முன்னணியாளர்கள் 17 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தது. நிர்வாகத்தின் முதன்மையான நோக்கம் தொழிற்சங்கத்தை முடக்கி, தொழிலாளர்களின் போராட்ட உணர்வை முறியடிப்பதே.

தொழிலாளிகள் மன்னிப்பு கடிதம் எழுதித்தர முடியாதெனவும், அனைவரையும் நிபந்தனையற்ற முறையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் போராடி வருகின்றனர். ஆனால், தற்போது புதிதாக வேலைக்கு அமர்த்திய சுமார் 1,000 ஒப்பந்தத் தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் சட்டவிரோதமாக ஈடுபடுத்தி பகுதியளவில் உற்பத்தியை தொடங்கியுள்ளது டொயோட்டா.

பேச்சுவார்த்தையின் போது, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக (அதாவது, ஜப்பானுக்கு அள்ளிச் செல்லும் லாப வீதம் முன்பை விட சிறிது குறைந்திருக்கலாம்), சம்பள விகிதத்தை உயர்த்த முடியாதென கூறிய நிர்வாகத்திடம்  நிறுவனத்தின் வரவு-செலவு ஆண்டறிக்கையை தொழிற்சங்கம் கேட்டதற்கு, “தனியார் பங்கு நிறுவனம் (பிரைவேட்-லிமிட்டெட் கம்பெனி)” என்பதால் ஆண்டறிக்கையை தரமுடியாது என திமிர்த்தனமாக பதிலளித்துள்ளது.

டொயோட்டா பிடதி ஆலை
டொயோட்டா பிடதி ஆலை

1997-ல் தொடங்கப்பட்ட டொயோட்டா கிர்லோஸ்கர் கார் உற்பத்தி நிறுவனத்தில் ஜப்பானின் டொயோட்டா நிறுவனம் 89% பங்குகளும், இந்தியாவின் கிர்லோஸ்கர் நிறுவனம் 11% பங்குகளும் கொண்டுள்ளன. டொயோட்டா போன்ற நிறுவனங்கள் தனது விற்பனைக்கான கார்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்வதற்காக இந்தியாவிலும் பிற மூன்றாம் உலக நாடுகளிலும் தொழிற்சாலைகளை தொடங்கி பெரும் லாபத்தை குவிக்கின்றன. ஆனால், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச அடிப்படை ஊதியம் கூட கொடுக்க மறுத்து, வேலை நிறுத்தம், லாக் அவுட், வேலை நீக்கம் என்று அவர்களது உரிமைகளை பறித்து அடாவடிகள் செய்கின்றன.

டொயோட்டா மட்டுமின்றி மாருதி சுசுகி, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சங்கமாக திரளும் உரிமை உட்பட எந்த அடிப்படை உரிமையையும் அங்கீகரிப்பதில்லை. இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் இந்நிறுவனங்களில் மோசமான பணியிடச்சூழல், அதிக வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக விபத்துக்கள் பலமடங்கு அதிகரித்துள்ளதுடன், தற்கொலைகளும் அதிகரித்துள்ளன.  உழைப்பிற்கும், உற்பத்திக்கும் இலக்கணமாக ஜப்பானிய வழிமுறை (Japanese way) என்று பீற்றிக்கொள்ளப்படுவதற்கு பின்னால் இம்மாதிரியான தொழிலாளர்களின் மீதான ஒடுக்குமுறை தான் உள்ளது.

முன்னதாக 2006-லும் டொயோட்டா இதே போல் 15 நாட்களுக்கும் மேல் கம்பெனியை மூடி தொழிலாளர்களை நெருக்குதலுக்குள்ளாக்கியது. அதற்காக இன்று வரை நிர்வாகத்தின் மீது எந்த வித நடவடிக்கையையும் எடுக்காத அரசு மற்றும் தொழிலாளர் துறை ஒரு புறமும், தீர்வை எட்டாத கையறு நிலை மறுபுறமும், சட்டவாத நடவடிக்கைகளிலும், ஓட்டுக் கட்சிகளிடமும் இதற்கான தீர்வு இல்லை என்பதை தொழிலாளர்கள் தமது சொந்த அனுபவத்தினூடாக உணரச் செய்துள்ளன.

டொயோட்டா தொழிற்சங்கத்தினர் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதோடு, நாட்டின் பிற பகுதிகளின் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுவதுதான் தமது உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள ஒரே வழி. வடக்கே மாருதி நிறுவனத்தில் துவங்கிய போராட்டம் இப்போது தெற்கே பெங்களூருவை எட்டியிருக்கிறது. மறுகாலனியாக்க சுரண்டலுக்கு எதிரான இப்போராட்டம் மற்ற பிரிவு தொழிலாளிகளையும் கவரும் போது முதலாளிகளின் திமிர் முறியடிக்கப்படும். கூடவே பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடி பிடிக்கும் அரசும் அதனுடைய நிர்வாக-நீதி அமைப்புகளும் கேள்வி கேட்கப்படும். தொழிலாளிகளை சுரண்டுவது இனி பகற்கனவு என்பதையே டொயோட்டா தொழிலாளர்களின் போராட்டம் உணர்த்துகிறது.

–    மார்ட்டின்.

மேலும் படிக்க

 

அமெரிக்க டாலரில் ஆம் ஆத்மி – நியாயப்படுத்தும் ஞாநி

58

ஜெமினியில் விக்ரம் “ஓ” போடச் சொல்லி பாடுவதற்கு முன்பேயே தமிழக வாக்குச் சாவடிகளில் ‘ஓ’ போடப் சொல்லி காலம் எல்லாம் இசைத்தவர் பத்திரிகையாளர் ஞாநி சங்கரன். அவரது ‘கோரிக்கையை ஏற்று’ தேர்தல் ஆணையமும் “நோட்டா” பொத்தானை இந்த தேர்தலில் அறிமுகப்படுத்துகிறது. ஆனால் இன்று நோட்டாவுக்கு ஓ போடச் சொல்லும் நிலையில் ஞாநி இல்லை.

ஞாநி
ஓ போடச் சொன்ன ஞாநியை மாற்றியது அமெரிக்க ஆத்மியின் ‘யானம்’ !

ஆம். அவர் தேர்தல் அரசியலில் போட்டியிடும் ஞானத்தை பெற்று விட்டார். ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பாகப் போட்டியிடப் போகிறார். இதைத் தொடர்ந்து அவரை ஆதரித்தும், விமர்சித்தும் சமூக வலைத்தளங்களில் பலர் எழுதி வருகின்றனர். அதில் முக்கியமானது, ஆம் ஆத்மி கட்சி மீதான விமரிசனங்களை ஞாநி எப்படி எதிர்க்கொள்கிறார் என்பது. இந்த எதிர்கொள்ளலிலிருந்தே அவரது ஆம் ஆத்மி ஞானத்தை உண்மையில் யானத்தை (24-ம் புலிகேசியின் ஞானம்) அறியலாம்.

“ஏதோ நம்மாலான தானம்” என்று கோவில் படிக்கட்டு பிச்சைக்காரர்களுக்கு தர்மமளிக்கும் ‘வள்ளல்கள்’ போல “ஏதோ நம்மாலான தொண்டு அரசியல்” என்று மட்டும் ஞாநியின் ஆம் ஆத்மி ஞானத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அதே சமயம் தமிழகத்தில் ஞாநியோ இல்லை ஒட்டுமொத்த ஆம்ஆத்மியையோ கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து ஆய்வு செய்யுமளவு அவர்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை. ஆனால் சாதிக்காத போதே இவர்களது சந்தர்ப்பவாதம் எப்படி விசுவரூபமெடுக்கிறது என்பதை முக்கியத்துவம் கொடுத்துத்தான் பார்க்க வேண்டும்.

ஒருவகையில் நடுத்தரவர்க்கத்தை தலைமை தாங்கும் கருத்துக்களாக இவை இருப்பதால் நமது அன்பிற்குரிய நடுத்தர வர்க்கத்தை அந்த போதையில் இருந்து மீட்பது அவசியம்.

ஆம் ஆத்மி கட்சி, தனது தேர்தல் செலவுக்கான நிதி சேகரிக்கும் வழிகளில் ஒன்றாக அரவிந்த் கேஜ்ரிவாலுடன் விருந்து சாப்பிட கட்டணம் வசூலிக்கிறது. ‘டின்னர் வித் கேஜ்ரிவால்’ என்று இதை விளம்பரப்படுத்தி ஒரு நபருக்கு 20 ஆயிரம் முதல் சில லட்சங்கள் வரை வசூலிக்கிறார்கள். மேற்குலக நாடுகளில் மிகவும் பிரபலமான, இந்த பணக்காரர்களிடம் நிதி திரட்டும் முறையை இந்தியாவுக்குள் இறக்குமதி செய்திருக்கிறது ஆம் ஆத்மி. இதிலிருந்தே இந்த கட்சியின் இயக்கம் பாமரர்களை சார்ந்து அல்ல, மேட்டுக்குடியை சார்ந்தது என புரிந்து கொள்ளலாம். தேர்தலை பண வசூலும், அந்த வசூலை இது போன்ற மேட்டுக்குடியிடம் திரட்டுவதுமே தீர்மானிக்குமென்றால், இந்தக் கட்சி காங்கிரஸ், பாஜகவின் புதுப் பங்காளி என்று காட்டி விடுகிறது.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு நடந்த இணைய விவாதம் ஒன்றில் ஞாநியும் பங்கேற்றார். அப்போது அவரிடம், அர்விந்த் கேஜ்ரிவாலின் என்.ஜி.ஓ. அல்லது அரசு சாரா நிறுவனத் தொடர்புகள் குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு ஞாநி என்ன பதில் அளித்தார் என்பதை தெரிந்துகொள்ளும் முன்பு கேஜ்ரிவாலின் அரசு சாரா நிறுவன தொடர்பு குறித்து பார்த்து விடுவோம்.

கேஜ்ரிவால் நடத்தும் தொண்டு நிறுவனங்களில் ஒன்று, Public Cause Research Foundation. சுருக்கமாக பி.சி.ஆர்.எஃப். 2006-ம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட மகசேசே விருதுடன் கொடுக்கப்பட்ட பணப்பரிசை முதலீடாகக் கொண்டு இந்த தொண்டு நிறுவனத்தை துவங்கினார் கேஜ்ரிவால். இவருடன் பத்திரிகையாளர் மனிஷ் சிசோதியா, அபிநந்தன் சேக்ரி ஆகியோரும் இணைந்திருந்தனர். அண்ணா ஹசாரேவின் செட்டப் எழுச்சிக்குப் பிறகு நாடு முழுவதும் படித்த மேல்தட்டுப் பிரிவினர் மட்டுமல்ல சாதாரண மக்களும் ஊழலே இந்தியாவின் தலையாய பிரச்சினையாக சீற்றம் கொள்கின்றனர். அதற்கு தோதாக மாபெரும் ஊழல்கள் இந்தியாவில் அணிவகுக்க ஆரம்பித்தன.

அரவிந்த் கேஜ்ரிவால்
தேர்தல் மேளா கங்கையில் குளித்து காவி கெட்டப்பில் கேஜ்ரிவால். கும்பமேளா கங்கையில் குளித்த ஜெயமோகனது இந்துஞானமரபு அமெரிக்க ஆத்மியை ஆதரிப்பதில் வியப்பென்ன?

ஹசாரேவுடன் கேஜ்ரிவாலும் இணைந்து கொள்கிறார். அப்போது இவர்கள் எல்லோரும் இணைந்து ஊழலுக்கு எதிரான இந்தியா (India Against Corruption -IAC) என்ற அமைப்பைத் தொடங்குகின்றனர். பிறகு கேஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சித் துவங்கி அரசியல் அதிகாரத்தில் மேலே வந்த பிறகு அண்ணா ஹசாரே உறவு முடிந்தது. இவர்களுக்கிடையே இருந்த கோஷ்டி மோதல் முதலில் மறைவாகவும் விரைவிலேயே பகிரங்கமாகவும் வெளிவரத் துவங்கியது. அச்சமயத்தில் ஹசாரேவும், சுவாமி அக்னிவேஷ் போன்றோரும் கேஜ்ரிவால் மீது ஒரு குற்றச்சாட்டைக் கூறினார்கள்.

‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் நிதி சுமார் 70 லட்சம் ரூபாயை, அர்விந்த் கேஜ்ரிவால், தன் சொந்த தொண்டு நிறுவனத்திற்கு திருப்பி விட்டுள்ளார். இந்தப் பணம் ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்புக்காக நன்கொடையாகப் பெறப்பட்ட தொகை. அதை இப்படி திருப்பிவிட்டது முறைகேடானது’’ என்றார்கள். இதற்கு பதில் அளித்த கேஜ்ரிவால் குற்றச்சாட்டு பொய் என்றோ, பணத்தை திருப்பி விடவில்லை என்றோ கூறவில்லை மாறாக, ‘‘ஊழலுக்கு எதிரான இந்தியா என்பது ஓர் இயக்கமாக இருந்ததே ஒழிய, நிறுவனமாக இருக்கவில்லை. பி.சி.ஆர்.எஃப். (அவரது தொண்டு நிறுவனம்) என்பது ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பின் தலைமை அலுவலகம் போல செயல்பட்டது’’ என்று சொன்னார்.

அதாவது ஊழலுக்கு எதிரான இந்தியாவின் இயக்க செயல்பாடு மற்றும் நிதி செயல்பாடு உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் அவரது தொண்டு நிறுவனம் இயக்கியிருக்கிறது. இந்த பணத்தை தமது சொந்த நிறுவனத்தின் செலவிற்காக பயன்படுத்தவில்லை என்பதைத் தவிர கேஜ்ரிவால் வேறு எதையும் மறுக்கவில்லை. இதெல்லாம் தெரிந்துதான் அன்று ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அண்ணாவை ஆதரித்தது. எனில் அந்த தொண்டு நிறுவனம் இதை இலவச சேவையாக செய்ததா, அதன் நோக்கம் என்ன? அதன் நிதி வள மூலம் என்ன?

அடுத்தது, கேஜ்ரிவால் காபிர் (Kabir) என்ற மற்றொரு தொண்டு நிறுவனத்தையும் வைத்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மையப்படுத்தி இயங்கும் இந்த நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து இரண்டு முறை நிதிபெற்றுள்ளது. ‘‘2005-ம் ஆண்டு 1,72,000 டாலர் நிதியும், 2008-ம் ஆண்டு 1,97,000 டாலர் நிதியும் ‘காபிர்’ நிறுவனத்திற்க்கு அளிக்கப்பட்டுள்ளது’’ என்கிறார் ஃபோர்டு பவுன்டேஷன் இந்தியா பிரதிநிதி ஸ்டீவன் சோல்நிக். இதை கேஜ்ரிவாலும் ஒப்புக்கொண்டுள்ளார். ‘‘நாங்கள் நிதி பெற்றது உண்மைதான். ஆனால் அவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டன. பழையனவற்றை இப்போது கிளறுவது அண்ணா ஹசாரே அணியினரின் வேலை’’ என்கிறார் அவர்.

ஸ்டீவன் சோல்னிக்
கேஜ்ரிவாலுக்கு படியளந்த அமெரிக்க பகவானின் இந்திய பிரதிநிதி : ஸ்டீவன் சோல்னிக்

ஆனால் இது குறித்து அண்ணா ஹசாரே மட்டுமின்றி பிற ஜனநாயக சக்திகளும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.  ‘‘ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து சுமார் 4 லட்சம் டாலர் அளவுக்கு கேஜ்ரிவாலின் தொண்டு நிறுவனம் நிதியுதவி பெற்றுள்ளது’’ என்று தனது கட்டுரை ஒன்றில் அருந்ததி ராய் குறிப்பிட்டார்.

மாசுமருவற்ற மகானாக கேஜ்ரிவால் சித்தரிக்கப்பட்ட சமயத்தில், அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக உருவாக்கப்பட்ட ‘இன்டெலக்சுவல்’ மற்றும் தொண்டு நிறுவன கையாளான ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து நிதிபெற்ற விஷயம் திரும்பத் திரும்ப அவரைச் சுற்றி வரத் தொடங்கியது. கடுப்பான கேஜ்ரிவால், ‘‘இந்தக் கேள்வி தொடர்ந்து என்னிடம் எழுப்பப்படுகிறது. ஃபோர்டு பவுன்டேஷன் தவறானது என்றால், முதலில் அதைத் தடை செய்யுங்கள். இந்திய சட்டப்படி அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பிடம் இருந்து நிதிபெறுவதில் என்ன தவறு?’’ என்று கேட்டார். உண்மையில் இது நெத்தியடி கேள்விதான்.

ஏனெனில் இன்றைக்கு ஆம் ஆத்மியை தொண்டு நிறுவனங்களின் சதி என்று பிலாக்கணம் வைக்கும் பாஜக வீரர்கள் எவரும் தமது வீராதி வீரனான மோடியை வைத்து ஃபோர்டு பவுண்டேஷன் உள்ளிட்ட அன்னிய சேவை நிதி நிறுவனங்கள் தடை செய்யப்படும் என்று பேசவைக்க முடியுமா? காங்கிரசும், பாஜகவும் அமெரிக்காவின் அணுசக்தி ஒப்பந்தத்தையே பாராளுமன்றத்திற்கு தெரியாமல் நிறைவேற்றி அழகு பார்த்தவர்கள், பவுண்டேஷனுக்கு மட்டும் சவுண்டு விட முடியுமா? அதனாலேயே கேஜ்ரிவாலின் சவால் அப்படியே இருக்கிறது. ஆனால் பாஜக போன்ற மதவெறியர்கள் மற்றும் அமெரிக்க அடிமைகள் வேண்டுமானால் இதை கேட்பதற்கு அருகதை இல்லாதவர்களாக இருக்கலாம். நாம் கேட்போம்.

மகசேசே விருது கமிட்டிக்கும், ஃபோர்டு பவுன்டேஷனுக்கும் உள்ள தொடர்புகள் குறித்துக் கேட்கப்பட்டதற்கு அதைப்பற்றி தனக்குத் தெரியாது என்று சொன்னார் கேஜ்ரிவால். இந்தியாவில் எப்படி கிராம சுயராஜ்ஜியம் கொண்டு வரவேண்டும் என்று ஆய்வு செய்தவருக்கு இந்த உலகறிந்த விசயம் கூடத் தெரியாதாம். சந்தர்ப்பவாதத்திற்காக அறியாமை அடித்து பிடித்து தேடி வருகிறது.

இந்தப் பின்னணியில் நாம் ஞாநியிடம் திரும்ப வருவோம். அவரிடம், ‘இப்படி உங்கள் கட்சித் தலைவர் ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதிபெற்றிருக்கிறாரே?’ என்று கேட்கப்பட்டதற்கு ‘‘கேஜ்ரிவால், தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிதிபெறுவதை நிறுத்தி விட்டதாக தெளிவாக சொல்லிவிட்டார். மேலும் ஃபோர்டு பவுன்டேஷன் நாடு முழுக்க பல கலை அமைப்புகளுக்கு நிதி உதவி செய்தது; செய்தும் வருகிறது. ‘கூத்துப்பட்டறை’ கூட ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து நிதிபெற்றுள்ளது. (என்னுடைய ‘பரீக்‌சா’ நாடகக் குழுவுக்கு ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதியுதவி பெறும் சாத்தியம் இருந்தும் நாங்கள் மறுத்துவிட்டோம்). தமிழ்நாட்டு நாட்டுப்புற கலைகள் தொடர்பான செயல்பாடுகளில் ஃபோர்டு பவுன்டேஷனின் நிதியுதவி குறிப்பிடத்தகுந்தது’’ என்று ஞாநி சொல்கிறார்.

தலித் ஆதார மையம்
மதுரை அரசரடி இறையியல் மையத்தில் இருக்கும் தலித் ஆதார மையம். தமிழகத்தில் தோற்றுவிக்கப்படும் தன்னார்வக் குழுக்களின் மெக்கா.

அவரது இந்த எட்டு வரி விளக்கமே எண்ணிலடங்கா கேள்விகளையும், விமரிசனங்களையும் கேட்க வைக்கின்றன. முதலில் கேஜ்ரிவால் ‘முன்னாடி வாங்கினேன். இப்போது வாங்கவில்லை’ என்றுதான் சொல்கிறார். ‘அப்போது வாங்கியது தவறு’ என்று சொல்லவில்லை. மேலும் இந்திய அரசு அங்கீகரித்த நிறுவனத்திடமிருந்து காசு வாங்குவதில் என்ன தவறு என்று ஏற்கனவே கேட்டிருக்கிறார். அப்படி தவறு என்றால் தடை செய்யுங்கள் என்றும் சவால் விட்டிருக்கிறார். அதாவது, ‘குடுக்குறான், வாங்குறேன். தப்புன்னா முதலில் அவனை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்தறேன்’ என்று மணிரத்தினத்தின் குரலில் சொல்கிறார்.

இந்நிலையில், ‘அது போன மாசம்’ என்று கைப்புள்ள கணக்காக கேஜ்ரிவாலும், அவரை அடியொற்றி ஞாநியும் கூறும் விளக்கம் எந்த வகையிலும் ஏற்கத் தக்கது இல்லை. அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினால் என்ன, 20 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினால் என்ன… ஒரு குற்றத்தின் தன்மை அது செய்யப்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது என்பதில் இருந்து தீர்மானிக்கப்படுவது இல்லை. அதன் தன்மையில் இருந்துதான் அதை முடிவு செய்ய வேண்டும். அந்த வகையில் ஃபோர்டு பவுன்டேஷன் என்ற அமெரிக்காவுடன் பின்னிப்பிணைந்த ஒரு அமைப்பிடம், அமெரிக்க மேலாதிக்கத்தை உலகம் முழுவதும் கொண்டு வர கலை, சேவை, இலக்கிய, அறிவுஜீவித் துறைகளில் செயல்படும் ஒரு சதிகார நிறுவனத்திடம் நிதி பெற்றது சரியா, தவறா என்பதுதான் இங்கு பேச வேண்டிய விஷயம். அதற்கு ஒரு பதிலை கூறாமல் கடந்து செல்வது ஞாநியின் அயோக்கியத்தனம்.

ஒரு குற்றவாளி குற்றத்தை ஒப்புக்கொள்வதன் நோக்கம் செய்த தவறுக்கு மனம் வருந்துவதும், எதிர்காலத்தில் அத்தகைய தவறுகளை செய்யாமல் இருப்பதும்தான். இத்தகைய குறைந்தபட்ச நாணயம் கூட இல்லாத ஆம் ஆத்மி கும்பல்தான் முழு இந்தியாவிற்கும் நேர்மைன்னா என்னவென்று சொல்லித் தரப்போகிறதாம். இதை நம்புங்கள் என்று நம்மையும் சித்திரவதை செய்கிறார் ஞாநி.

இங்கு கேஜ்ரிவாலிடம் ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதி பெற்றது குறித்த வருத்தம் இல்லை என்பதோடு பெருமையும் இருக்கிறது. எதிர்காலத்தில் வாங்கமாட்டோம் என்றும் உத்தரவாதம் ஏதும் இல்லை. சொல்லப்போனால் 2014-ம் ஆண்டும் அவரது ‘காபிர்’ தொண்டு நிறுவனம், ஃபோர்டு பவுன்டேஷனிடம் நிதியுதவி கோரியிருக்கிறது. ‘‘2014-ம் ஆண்டுக்கு நிதியுதவி கோரி கேஜ்ரிவாலின் ‘காபிர்’ என்.ஜி.ஓ. விண்ணப்பித்துள்ளது. நாங்களும் நிதி தர இசைந்துள்ளோம்’’ என்கிறார் ஃபோர்டு பவுன்டேஷன் இந்தியப் பிரிவின் பிரதிநிதி ஸ்டீவன் சோல்நிக். ஆக இப்போது வரை கேஜ்ரிவால் நிதி பெறுவதில் முனைப்போடு இருக்கிறார் என்பது உறுதியாகிறது. எனில் ஞாநியின் விளக்கத்தில் அறிவு நாணயம் ஏதும் இருக்கிறதா?

கூத்துப்பட்டறையின் நா. முத்துசாமி
ஃபோர்டு பவுண்டேசனிடம் கூத்துப்பட்டறையை விற்ற நா. முத்துசாமி

ஞாநி தனது முகநூல் விவாதத்தில், ஃபோர்டு பவுன்டேஷனிடம் இருந்து கூத்துப்பட்டறை நிதிபெற்றது என்பதை சொல்கிறார். இது உலகறிந்த விசயம்தான். ஆனால் ஞாநியின் கோணத்தில் இந்த நிதி பெறுவதில் தவறில்லை என்றால், ஏன் அவர் தனது ‘பரீக்சா’வுக்கு வாங்க மறுக்க வேண்டும்? நீங்களும் நிதி வாங்க வேண்டியதுதானே.. நிதியை மறுத்ததை இப்போது பெருமையாக அறிவித்துக்கொள்கிறார் என்றால் நிதிபெற்றதை அவர் சிறுமையாக கருதுகிறாரா? எனில் அந்த சிறுமையை இப்போது வரை செய்து கொண்டிருப்பவரை எப்படி அவர் தலைவராக ஏற்றுக்கொள்கிறார்?

கூத்துப்பட்டறை ஆரம்பத்தில் நாடகம் குறித்து அறிந்து கொண்டு வளர விரும்பிய எளிய அமைப்பாகத்தான் இருந்தது. பின்னர் நா.முத்துச்சாமி அதைக் கைப்பற்றி ஃபோர்டு பவுண்டேசனிடம் விற்று விட்டார். கூத்துப் பட்டறை மட்டுமல்ல, பல்வேறு இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் ஃபோர்டு பவுண்டேசன் நிதிபெறுவதை 80-களின் ஆரம்பத்திலேயே மகஇக மட்டுமே அம்பலப்படுத்தி போராடியிருக்கிறது. அதன் பிறகு தொடர்ச்சியாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை அம்பலப்படுத்தியும் வருகிறது. அப்போதே ஞாநி இத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கவில்லை. மேலும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களது நிகழ்ச்சிகளுக்கு செல்வது, பேசுவது, அவர்களுக்கு தேவையான ஆவணப்படங்கள் எடுத்துக் கொடுப்பது போன்றவற்றை செய்திருக்கிறார். இன்றைக்கும் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பெண்ணியவாதிகள் இதைத்தான் செய்கிறார்கள். அதைப்பட்டியலிட்டால் எவரும் மிஞ்சமாட்டார்கள் என்றே நம்புகிறோம்.

பத்திரிகையாளராக தனது பணியை நடத்திக் கொண்டு பகுதி நேரமாக பரிக்-ஷா போன்ற நாடக முயற்சிகளை செய்ததால் அவருக்கு தொழில் முறையில் இயங்கும் கூத்துப்பட்டறைக்கு அவசியமாக இருந்த நிதி தேவைப்படவில்லை. மற்றபடி அவர் கொள்கை காரணமாக ஃபோர்டு பவுண்டேசனிடமிருந்து பணம் வாங்கவில்லை என்பதை இங்கே ஓங்கிச் சொல்கிறோம்.

மல்லிகா சாராபாய்
ஆம் ஆத்மியின் மல்லிகா சாராபாய் : அமெரிக்க டாலர் வாங்கிக் கொண்டு இந்திய நடனம் ஆடுவதில் வல்லவர்..

ஆகவே ஆம் ஆத்மியின் தன்னார்வத் தொண்டு நிறுவனத் தொடர்பு குறித்து நமக்கு ஏற்படும் கோபமும், விமரிசனமும் ஞாநிக்கு ஏற்படாது. மாறாக அவரது போன மாசம், இந்த மாசம் உளறலுக்கு காரணம் பொதுவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே அம்பலப்பட்டு போயிருப்பதுதான்.

கேஜ்ரிவாலும், ஞாநியும் மட்டுமே இந்த வளையத்திற்குள் இல்லை. ஆம் ஆத்மி என்ற கட்சியே என்.ஜி.ஓ.க்களின் கூடாரமாக இருக்கிறது. குறிப்பாக ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதிபெறுபவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி என்ற சரடின் கீழ் ஒன்றிணைந்துள்ளனர். இந்தக் கட்சியின் பொருளாதார கொள்கைகளுக்கான தேசிய குழு உறுப்பினராக மீரா சன்யால் என்பவர் இருக்கிறார். ‘ராயல் பேங்க் ஆஃப் ஸ்காட்லாந்து’ வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த இவர் இதற்கு முன்பாக 2009-ம் ஆண்டு மும்பை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டார். இப்போது இவர்தான் ஆம் ஆத்மியின் மும்பை தெற்குத் தொகுதி வேட்பாளர். இவரது ‘பிரதான்’ தொண்டு நிறுவனத்திற்க்கு ஃபோர்டு பவுண்டேசன் பெருமளவு நிதி அளிக்கிறது.

மல்லிகா சாராபாய் என்கிற பிரபல நாட்டியக் கலைஞரும் ஆம் ஆத்மியில் ஐக்கியமாகியுள்ளார். இவரது ‘தர்பனா’ (Darpana)  என்ற தொண்டு நிறுவனமும் ஃபோர்டு பவுண்டேசனிடம் நிதி பெறுகிறது. தேர்தல் கணிப்பாளராக புகழ்பெற்றிருந்த யோகேந்திர யாதவ் இப்போது ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஐ.சி.எஸ்.எஸ்.ஆர். அமைப்பிடம் இருந்து நிதிபெறுகிறார். இந்த அமைப்புக்கு நிதி உதவி செய்வது ஃபோர்டு பவுன்டேசன்.

கவிதா ராமதாஸ்
கப்பற்படை தளபதி ராமதாஸின் மகள் கவிதா ஃபோர்டு பவுண்டேசனின் இந்தியத் தலைவர். இந்திய ராணுவமே சி.ஐ.ஏ கையில் இருக்கும் போது ஆம் ஆத்மி இருப்பதில் வியப்பென்ன?

இப்போது கேஜ்ரிவாலுக்கு நெருக்கமான ஆலோசகராக இருப்பவர், இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் (இவரும் மகசேசே விருது பெற்றவர்). இவரது மகள் கவிதாதான் டெல்லியில் உள்ள ஃபோர்டு பவுன்டேஷன் அலுவலகத்தின் தலைமை செயல் அதிகாரி. இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஃபோர்டு பவுன்டேசன் வழங்கும் நிதியை அனுமதிப்பதும், ஒழுங்குப்படுத்துவதும் இவர்தான். அது மட்டுமின்றி மகசேசே விருதை வழங்கும் ‘ராக்பெல்லர் பவுன்டேசனின்’ நிதியளிக்கும் அமைப்பான ‘ராக்பெல்லர் பிரதர்ஸ் ஃபண்ட்’டின் தலைமை உறுப்பினராகவும் உள்ளார். இந்த கவிதாவின் கணவரும் லேசுபட்டவர் இல்லை… பாகிஸ்தானைச் சேர்ந்த சுல்பிகர் அஹமத் என்ற அவர், ‘பெர்க்லீஸ் நாட்டிலஸ் இன்ஸ்டிடியூட்’ என்ற அமைப்பின் தெற்காசிய பகுதி பொறுப்பாளர். தெற்காசியப் பகுதிகளின் அணு உலைகளில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து நிறுத்துவதும், அமெரிக்க சார்பை உறுதிபடுத்துவதும்தான் இந்த அமைப்பின் முக்கியமான பணி.

இப்படி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ள பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் என்.ஜி.ஓ.க்களாகவே உள்ளனர் என்று நாகரீகமாக சொல்லலாம். சரியாகச் சொல்வதாக இருந்தால் அமெரிக்க கைக்கூலிகள். கேஜ்ரிவாலே, ‘பரிவர்த்தன்’ என்ற மற்றொரு தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அருணா ராய், கோபால் ராய், மேதா பட்கர் என ஆம் ஆத்மியில் உள்ள மற்றவர்களும் நேரடியான என்.ஜி.ஓ. தொடர்பிலும் அந்த பாணி அரசியலும் உள்ளவர்களே.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கிறிஸ்டினா சாமி, கரூரைச் சேர்ந்தவர். இவரும் இவரது கணவர் ஆரோக்கியசாமி என்பவரும் சேர்ந்து கரூரில் அரெட்ஸ் (AREDS -Association of Rural Education and Development Services), ஸ்வாதி (SWATE – Society for Women in Action for Total Empowerment) ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டுக்கும் கடந்த காலங்களில் உலகின் பல நிதி உதவியளிக்கும் நிறுவனங்களிடம் இருந்து நிதி வந்துள்ளது. முக்கியமாக Catholic Committee against Hunger and for Development (CCFD-France)  World Solidarity, an organisation of Christian Workers Movement in Belgium (WSM) ஆகிய இரண்டும் கிறிஸ்டினா சாமியின் முக்கியமான நிதி மூலங்கள். கிறிஸ்டினாவுக்கு கிறிஸ்துகள் காசு கொடுக்கிறார்கள்.

கிறிஸ்டினா சாமி
ஆம் ஆத்மியின் தமிழகத் தலைவர் கிறிஸ்டினாவுக்கு படியளப்பது ஏகாதிபத்தியங்களின் அறக்கட்டளைகள். பதிலுக்கு கிறிஸ்டினா தாலியறுப்பது எதை?

இதைப் பற்றி எல்லாம் ‘ஜெயமோகனின் ஆசிபெற்ற வேட்பாளரான’ ஞாநி தவறாக கருத மாட்டார். ஜெயமோகனுக்கும் அப்படியே. ஆனால் ஒரு சிறிய வேறுபாடு உண்டு. ஞாநி ஒரு பத்திரிகையாளர் என்பதால் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிடம் காசு வாங்குவதெல்லாம் தவறல்ல என்று எளிமையாக சொல்கிறார். ஜெயமோகனோ மெகா சைஸ் புக் போடும் எழுத்தாளர் என்பதால் அதை சுற்றி வளைத்து சொல்லும் இழுப்பு தேவையாக இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஃபோர்டு பவுண்டேசன் தொடர்பாக எம்.டி.முத்துக்குமாரசாமிக்கும், ஜெயமோகனுக்கும் நடந்த இணைய விவாதம் ஒன்றில் ‘‘இத்தகைய நிதிகள் எப்போதுமே முதல்பார்வைக்கு ‘சரியான’ பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு நேர்மையான தோற்றமுள்ள பண்பாட்டு அமைப்புகள் வழியாகவே அளிக்கப்படுகின்றன. அவற்றின் உள்நிபந்தனைகள் பெறுபவர்களுக்கும் தெரியும்… நிதிபெற்றவர்களெல்லாம் அயோக்கியர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் நிதி பெற்றவர்களின் கருத்துக்களையும் செயல்பாடுகளையும் அந்த நிதியையும் கணக்கில் கொண்டே யோசிக்கவேண்டும் என்கிறேன். அந்த நிதியும் நம் பண்பாட்டுச் சூழலில் பேசப்பட்டாக வேண்டும் என்கிறேன்’’ என்று கூறியிருந்தார் ஜெயமோகன்.

அதாவது ஃபோர்டு பவுண்டேசனது நிதியை வாங்கிக் கொண்டு ஜெயமோகனுக்கு ஆதரவான கருத்துக்களை கூறினால் பகவான் மன்னிப்பார். எதிரான கருத்துக்களை கூறினால் பகவான் கொஞ்சம் பதட்டப்படுவார்.

ஜெயமோகன்
ஃபோர்டு பவுண்டேசனிடம் காசு வாங்குபவர்கள் கருத்தளவில் ஜெயமோகனை எதிர்க்காமல் இருந்தால் அன்னாரது அருள் நிச்சயம் கிடைக்கும்.

ஜெயமோகனுக்கு இன்னும் அமெரிக்க என்ஜிஓக்களின் அருள் நமக்குத் தெரிந்து கிடைக்க வில்லை என்றாலும் அவரது ஆஸ்திரேலிய, மலேசிய, பயணங்களின் யோக்கியதை குறித்து வினவில் ஏற்கனவே எழுதியிருக்கிறோம். இவையெல்லாம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பாவக்கணக்கில்தான் வரும். பகல்கொள்ளைக்காரர் பச்சமுத்து, திமுக அமைச்சர் தம்பி எஸ்கேபி கருணா, இந்துதேசியத்தின் ஆகாசவாணி மணிரத்தினம்- கமல்ஹாசன், பொள்ளாச்சி மகாலிங்கம் ஆகியோருக்கு மட்டுமல்ல, மூப்பனாருக்கும் காவடி தூக்கியவர்தான் ஜெயமோகன். என்ஜிவோக்களில் கூட உள்நாடு வெளிநாடு, இந்துஞான மரபு, மேலைத்தேய கிறித்தவம் என்று பாகுபாடு பார்க்கிறார் ஜெயமோகன். அவ்வளவுதான் அவரது வேறுபாடு.

மேலும் ‘அஞ்ஞாடி’ நாவல் எழுத எழுத்தாளர் பூமணி, ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதி பெற்றிருப்பது தனக்கு ஏமாற்றமாக இருப்பதாகவும் ஜெயமோகன் சொல்லியிருக்கிறார். கவனியுங்கள், கண்டிக்கவில்லை, ஏமாற்றம்தான். ஜெயமோகனுக்கு பிடித்தவர்கள் பவுண்டேசனிடம் நிதி பெற்றால் ஏமாற்றம், பிடிக்காதவர்கள் வாங்கினால் அவர்களை மட்டும் எதிர்த்து விட்டு பவுண்டேசனிடம் நிதி வாங்கி வேலை செய்வது தவறில்லை என்று சமாளிப்பது – இதுதான் இவரது அறம்.

ஜெயமோகனோடு நடந்த விவாதத்தில் ஃபோர்டு பவுன்டேசனிடம் நிதிபெறுவதில் தமிழ்நாட்டில் முன்னோடியான எம்.டி.முத்துகுமாரசாமி, ‘‘என்.சி.இ.ஆர்.டி., நேஷனல் புக் ட்ரஸ்ட் போன்ற நிறுவனங்கள் ஃபோர்டின் நிதியுதவியுடன்தான் நிறுவப்பட்டன. க்ரியா பதிப்பகம் வெளியிட்ட ‘தற்கால தமிழ் அகராதி’ கூட போர்டு பவுன்டேஷன் ஃபண்டிங்தான். அதற்காக இதை எல்லாம் தவறு என்று சொல்வீர்களா?’’ என்று பல ஆதாரங்களை வெளியே எடுத்துவிட்டார். மொத்தமாக தொகுத்துப் பார்க்கும்போது ஃபோர்டு பவுன்டேசன் மொத்த அறிவுலகத்தையும் தத்து எடுத்திருக்கிறதோ என்று தோன்றுகிறது.

எம்.டி.முத்துக்குமாரசாமி
சைவப்பிள்ளை எம்.டி.முத்துக்குமாரசாமி மலேசியாவுக்கும் போவார், மங்காத்தாவைப் பற்றி ஆய்வும் செய்வார்.

பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் நாட்டுப்புறவியல் துறையில் வேலை பார்த்து விட்டு வெளியே பருப்பு வடையும், டிகிரி காபியும் குடித்து வந்த முத்துக்குமாரசாமி பின்னொரு நாளில் ஃபோர்டு பவுண்டேசனின் ஆசிய நிர்வாகிகளில் ஒருவராக பரிணமிப்போம் என்று கருதியிருக்க நிறையவே வாய்ப்பிருக்கிறது. நமது மக்கள் நாளைக்கு கால்வயிற்று கஞ்சி கிடைக்குமா என்று அஞ்சிய அந்தக் காலத்து நாட்களில் திருநெல்வேலி சைவப்பிள்ளை கூட்டம் எதிர்காலத்தில் நாம் எங்கே என்ன செய்து கொண்டிருப்போம் என்று குறிப்பான ஐந்தாண்டுத் திட்டங்கள் போட்டு கற்பனை செய்து கொண்டது. பார்ப்பனர்களுக்கு சற்றும் குன்றாத இந்த சாதியின் நீதியை எம் டி எம் நன்றாகவே பராமரிக்கிறார்.

அமெரிக்கா ரிட்டர்ன் என்.ஆர்.ஐ அம்பியான பத்ரி சேஷாத்ரி ஞாநியின் தேர்தல் செலவுக்கு எளிய நிதி உதவி அளிப்பதை பெருமையுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டார். இந்த உதவி ஞாநியின் மூலம் ஆம் ஆத்மியிடம் சென்று அமெரிக்காவுக்கு சேவை செய்கிறது. ஆனால், அதே அமெரிக்காவில்தான் பத்ரி சம்பாதித்தார் என்பதால் இது ஒரு பெரிய ‘குற்றம்’ இல்லை.

மானுடவியல், சமூகவியல், நாட்டுப்புறவியல், இயற்கை விவசாயம், மருத்துவம், இயற்கை வளம் என்று ஒன்று விடாமல் எல்லா துறைகளையும் குறித்து உலகம் முழுவதும் உள்ள அறிவு தேடல் மற்றும் ஆய்வுகளை அமெரிக்காதான் பிரதானமாக நடத்துகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கூத்தோ இல்லை கோலாட்டமோ, இருட்டு கடை அல்வாவோ அந்த அல்வாவின் சுவைக்கு காரணமான, தாமிரபரணி தண்ணீரோ இன்னபிற விவரங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களின் கையில். இதனால் என்ன ஆதாயம்? பிளாச்சிமடாவில் உள்ள சுவை நீர், கங்கைகொண்டானில் உள்ள தாமிரபரணியின் இனிமை நீர் இரண்டிலும் அமெரிக்க கோக் நிறுவனம் வந்து ஆலை திறந்து உறிஞ்சுவது இத்தகைய ஆதாயங்களுக்கு ஒரு சான்று.

மேலும் அரசியல், பொருளாதாரம், மதம், சாதி, தொன்மம், பால் என்று ஏராளமான துறைகளில் பயன்படத்தக்க இந்த விவரங்களை ஏகாதிபத்தியங்கள் சேகரித்துக் கொள்கின்றன. நேரம் மற்றும் தேவை வரும் போது அதை எடுத்து விடும். பயன்படுத்திக் கொள்ளும். மேலும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள அறிஞர்கள் மற்றும் கலைஞர்கள் அனைவரும் வர்க்க போராட்டம் மற்றும் புரட்சிகர அரசியலுக்கு சென்று விடக்கூடாது என்பதோடு அவர்களை சிந்தனை மற்றும் வாழ்வியல் ரீதியாக ஊழல்படுத்த வேண்டும் என்ற காரணங்களுக்காகவும், இப்படி காசு கொடுத்து ஆய்வு வேலைகளை கொடுத்தும் வருகின்றன ஏகாதிபத்தியங்கள்.

ஆனால் இந்த சதிகார அரசியலை விடுத்து, நாங்கள் அகராதி போட்டோம், ஆமை வடை கண்டுபிடித்தோம், மகாபாரதம் ஆராய்ச்சி செய்தோம், விளிம்பு நிலை ஆய்வு செய்தோம் என்று இந்த சோரம் போன அறிவாளிகள் வியாக்கியானம் செய்கிறார்கள். இதைப் பற்றி எல்லாம் ஞாநிக்கு கருத்து வேறுபாடு இல்லை.

கேஜ்ரிவால்-அஷூதோஸ் குப்தா
கேஜ்ரிவாலுடன் ஐ.பி.என்&7&ன் முன்னாள் நிர்வாக ஆசிரியரான அஷூதோஸ் குப்தா : அமெரிக்க ஆத்மியில் அணிவகுக்கும் ஆங்கில பத்திரிகையாளர்கள்.

இந்தியா முழுவதுமே ஏராளமான பத்திரிகையாளர்கள் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜீ செய்தியின் முன்னாள் பத்திரிகையாளர் மனிஷ் சிசோதியா, சி.என்.என்.-ஐ.பி.என்.னில் தேர்தல் நிகழ்ச்சி நடத்திய யோகேந்திர யாதவ், ஐ.பி.என்7-ன் முன்னாள் நிர்வாக ஆசிரியரான அஷூதோஸ் குப்தா, முன்னாள் பத்திரிகையாளர் சேஸ்யா இல்மி, பிரபல பத்திரிகையாளர் அனிதா பிரதாப் என பட்டியல் நீள்கிறது (பட்டியலில் உள்ளவர்களை முழுமையாக ஆய்வு செய்தால் இந்த எண்ணிக்கை கூடலாம்). பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல… அறிவுஜீவிகள் என்று தங்களை கருதிக்கொள்வோர் பலர் ஆம் ஆத்மியுடன் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் இருக்கின்றனர். வாராது வந்த மாமணி போல ஆம் ஆத்மியை சித்தரிக்கும் இவர்கள், இதுநாள் வரை இந்த தேவதூதனின் வருகைக்காகத்தான் காத்திருந்ததைப் போல கதையளக்கிறார்கள்.

காங்கிரஸின் ஊழல், பா.ஜ.க.வின் இந்துமத வெறி இரண்டுக்கும் மாற்றுபோல ‘ஆம் ஆத்மி’யை முன்னகர்த்தும் இந்த அறிவுஜீவிகள் உண்மையில் யாருக்காக உழைக்கிறார்கள் என்பது இப்போதாவது உங்களுக்கு புரிகிறதா? ஏனெனில் அடுத்து வரும் பத்தாண்டுகளில் இந்திய நடுத்தர வர்க்கத்தின் மோகத்துக்குரிய கட்சியாக, அவர்களின் கனவுக் கட்சியாக ஆம் ஆத்மியை ஊடகங்களில் சித்தரிக்கப் போவது இந்த அறிவுஜீவிகள்தான். செத்து வீழ்ந்து கொண்டிருக்கும் இந்த போலி ஜனநாயகத்திற்கு செயற்கை சுவாசம் வழங்குபவர்கள் இவர்கள்தான்.

முக்கியமாக இந்தியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை இயக்கும் அமெரிக்கா இப்போது நேரடி அரசியலிலும் தனது கிளையை துவங்கிவிட்டதன் அடையாளம்தான் ஆம் ஆத்மி. ஏற்கனவே அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற பல்வேறு கட்சிகளுக்கு விருந்து கொடுத்து உத்தரவு போட்ட அமெரிக்கத் தூதர் வாழும் தில்லியில் இனி அந்த தேவை இல்லை. அமெரிக்காவிற்கு பல்வேறு கட்சிகளில் தூதர்கள், புரோக்கர்கள் இருந்தாலும், காங்கிரஸ் மற்றும் பாஜக போன்ற கட்சிகளே முழு அடிமைகளாக இருந்தாலும் போதவில்லை. புரட்சிகர முழக்கங்களுடன், புத்திசாலித்தனத்துடனும் ஒரு புதிய கட்சி அதுவும் சொந்தமாக இருந்தால் என்ன என்று யோசித்ததன் விளைவுதான் ஆம் ஆத்மி.

ஆம் இது அமெரிக்காவின் ஆத்மி.

மேலும் படிக்க

செம்படையில் பெண்கள் – திரைப்படம்

0

சீனாவில் பல நூறு ஆண்டுகளாக மத பிற்போக்குத்தனங்களில் கட்டுண்டு, நிலப்பிரபுக்களின் பண்ணைகளில் விலங்குகளை போல அடிமைப்பட்டு இருந்தார்கள், பெண்கள். அப்படிப்பட்ட சீனாவில், புரட்சியில் இணைத்துக் கொண்டு, தங்கள் அடிமைத்தளைகளை உடைத்து, சீனாவின் முதல் புரட்சிகர பெண்கள் செம்படையை கட்டியமைத்த வரலாற்றை பற்றிய திரைப்படம் தான் “தெ ரெட் டிடாச்மென்ட் ஆஃப் விமென் – பெண்களின் செம்படைப் பிரிவு”.

திரைப்படம் – பாலே வடிவத்தில்

யூடியூபில் திரைப்படம் – சுட்டிகள்

1961-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மிகச் சிறப்பான ஒரு படைப்பு இந்த திரைப்படம். படத்தின் கதை சற்றே விரிவாக:

பெண்களின் செம்படைப் பிரிவு1930-ம் ஆண்டு சீனாவின் தென்கோடியில் உள்ள ஹைனான் தீவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படையின் விரிவாக்கமாக பெண்கள் ராணுவப் பிரிவு ஒன்று அந்தப் பகுதி பெண்களால் உருவாக்கப்படுகிறது. பெண்கள் செம்படைப் பிரிவு பற்றிய செய்திகள் மக்கள் மத்தியில் பரவுகின்றன.

வூ சிங்-குவா, விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண். ஹைனான் தீவின் மிகப் பெரும் நிலப்பிரபுவான நான்-பா-தியன், சிங்-குவாவின் தந்தையை கொலை செய்து சிங்-குவாவை அடிமையாக கட்டி வைக்கிறான். அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கும் சிங்-குவாவை பிடித்து கட்டி வைத்து சவுக்கால் அடிப்பது, முட்டி அளவு நீர் நிரப்பப்பட்ட அறையில் அடைத்து வைப்பது என்று துன்புறுத்தப் படுகிறாள்.

சிங்-குவா இந்த சிறையில் இருந்து தப்பித்து சென்று செம்படை பெண்கள் பிரிவில் இணைந்து நான்-பா-தியானை பழி வாங்க வேண்டும் என்று சிந்திக்கிறாள். ஆனால், சிறையில் இருந்து தப்பிக்கும் அவளின் முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன.

ஹைனான் தீவிற்கு வரும் திருவாளர் ஹோங் எனும் பணக்காரரை சந்தேகப்பட்டு கைது செய்கிறார்கள் நான்-பா-தியனின் அடியாட்கள். அவரை சிறைக்கு அழைத்து செல்லும் போது, அங்கு சிங்-குவாவை பார்க்கிறார் திருவாளர் ஹோங். திருவாளர் ஹோங்கின் பெட்டிகளை சோதனையிடும் நான்-பா-தியனிற்கு அவர் ஒரு பெரிய பணக்காரர் என்ற விடயம் தெரிய வருகிறது. அவரின் பண உதவியுடன் நிறைய ஆயுதங்கள் வாங்கினால், அந்த தீவில் செம்படையின் ஆதிக்கத்தை அடக்கவும், அதே நேரம் சீனாவின் வெள்ளை படையினரை தனக்காக போரிட அழைக்கவும் உதவியாக இருக்கும் என திட்டமிடுகிறார். திருவாளர் ஹோங்-ற்கு ஒரு ஆடம்பரமான விருந்தை ஏற்பாடு செய்து அதில் தன் திட்டத்தை பற்றி கூறி அவரை பணம் தர சம்மதிக்க வைக்கிறார்.

திருவாளர் ஹோங்  விடை பெறும் போது, தனக்கு உதவி புரிய ஒரு ‘அடிமைப் பெண்’ வேண்டும் என்று கேட்கிறார். குறிப்பாக சிங்-குவாவை கொடுக்குமாறு கேட்கிறார். முதலில் தயங்கும் நான்-பா-தியன் அவள் வெறிப்பிடித்தவள், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறிவிட்டு சிங்-குவாவை அவருடன் அனுப்புகிறான்.

உண்மையில் திருவாளர் ஹோங் பணக்காரர் இல்லை, அங்கு புதிதாக உருவாகி உள்ள பெண்கள் செம்படை பிரிவின் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர். பெண்கள் படைக்கு சேர்ந்த நிதி வசூலை கொண்டு செல்ல அவர் சாமர்த்தியமாக இப்படி மாறுவேடத்தில் வருகிறார். அதே நேரம் நான்-பா-தியனிடம் நெருங்கிப் பழகியதில் அவன் திட்டத்தையும் தெரிந்து கொள்கிறார்.

சிங்-குவாவை பாதி வழியில் விடுவிக்கும் ஹோங் தன்னைப் பற்றி எதுவும் கூறாமல், அவள் ஆசைப்படி செம்படையில் சேர புறப்படுமாறு கூறுகிறார். வழியில் அவள் உணவு செலவுக்கு 4 வெள்ளி காசுகளை கொடுக்கிறார்.

பெண்களின் செம்படைப் பிரிவுசெம்படையினரை தேடி செல்லும் வழியில் ஒரு இரவு நேரம் குடிசையில் நுழைகிறாள் சிங்-குவா. அங்கு லியான் எனும் பெண்ணை சந்திக்கிறாள். இருவரும் நட்பாகிறார்கள். அந்த பெண் சீன கிராமப்புற வழக்கப்படி புத்தருக்கு மணம் முடிக்கப்பட்டவள். நம் ஊரில் கோயிலுக்கு பொட்டு கட்டி விட்ட பெண்ணை போன்றவாள். அந்த சமூகத்தையும் பிற்போக்குத் தனத்தையும் வெறுக்கும் அவள் சிங்-குவா உடன் செம்படையில் சேர அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறாள்.

இருவரும் செம்படை பெண்கள் பிரிவு பயிற்சி நிலையத்தை அடைகிறார்கள். செம்படையில் சேர்த்துக் கொள்ளுமாறு கோரிக்கை வைக்கிறார்கள். ஏன் செம்படையில் சேர வேண்டும்? என்ற கேள்விக்கு, சிங்-குவா தன் உடலில் உள்ள தழும்புகளை காட்டி இதற்கு காரணமான நிலப்பிரபுவை பழி வாங்கத் தான் என்று கூறுகிறாள். செம்படை பிரிவில் இருவரும் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்கள்.

ஒரு நாள் நான்-பா-தியானை உளவு பார்க்க சிங்-குவாவும், லியானும் அனுப்பப்படுகிறார்கள். பழி வாங்கும் வெறியில் இருக்கும் சிங்-குவா தன் வேலையை மறந்து நான்-பா-தியானை கொல்ல முனைகிறாள். இருவரும் நான் படைகளிடமிருந்து மயிரிழையில் உயிர் தப்புகிறார்கள். இதற்காக சிங்-குவா தனிமையில் தன் தவறைக் குறித்து சிந்திக்கும்படி தண்டிக்கப்படுகிறாள்.

தண்டனையை ஏற்கும் சிங்-குவா தன் தவறை உணருகிறாள், தனது சிறு தவறு செம்படைக்கு பெரிய ஆபத்தை விளைவித்திருக்கலாம் என்பதை புரிந்து கொள்கிறாள். அதே நேரம் செம்படை நான் –பா-தியானை தாக்கி அந்த கிராமத்தை விடுவிக்கத் திட்டமிடுகிறது.

நான்–பா-தியானின் கிராமம் வெற்றிகரமாக விடுவிக்கப்படுகிறது. ஆனால் ‘நான்’ தந்திரமாக தப்பித்து விடுகிறான். பின்பு வெள்ளை படையினரால் காப்பாற்றி அழைத்து செல்லப்படுகிறான். நான்-பா-தியனை துரத்தி செல்லும் சிங்-குவா துப்பாக்கிச் சூட்டில் காயமடைகிறாள்.

ஆனால், சில மாதங்களுக்கு பின் வெள்ளை ராணுவத்தின் பெரும் படையுடன் வரும் நான்-பா-தியன், ஹைனான் தீவை சுற்றி வளைத்து தாக்குவதின் மூலம், கம்யூனிச படையை ஒழித்துவிடலாம் என திட்டமிடுகிறான்.

பெண்களின் செம்படைப் பிரிவுஆனால் செம்படை வேறு போர் தந்திரத்தை வகுக்கிறது. படையை மூன்றாக பிரித்து மூன்று இடங்களில் தாக்குதல் நடத்துமாறும், அதில் முக்கிய படையான நான் படையை சிறிது நேரம் ஆட்டம் காட்ட பெண்கள் செம்படை பிரிவு கட்சி பொறுப்பாளரால் தலைமை தாங்கப்பட்டு அழைத்து செல்லப்படுகிறது.

நான் மற்றும் இதர தலைமை கமாண்டர்கள் பெண்கள் செம்படைப் பிரிவை முக்கிய படை என கருதி தவறான வியூகத்தை வகுக்கிறார்கள். இதனால் நானின் படை வெற்றிகரமாக எதிர் கொள்ளப்படுவதுடன், அழித்தொழிக்கவும் படுகிறது.

சீன பெண்கள் செம்படை பிரிவு இந்த முதல் வெற்றியுடன் தன் புரட்சிகர பயணத்தை துவக்குகிறது.

ல ஆயிரம் வருட பாரம்பரியம், வரலாறு கொண்ட சீனாவில் பெண்களின் நிலைமை மிக மோசமாகவே இருந்தது. அவர்கள் சீன சமூகத்தின்  பிற்போக்குத்தனங்களால் கட்டுண்டு கிடந்தார்கள். பின்பு சீனாவை நோக்கி வந்த ஏகாதிபத்திய நாடுகளும் இந்த நிலைமையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விடவில்லை.

ஒரு பக்கம் கிராமத்தில் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பால் ஒடுக்கப்பட்ட சீனப் பெண்கள், பிற்போக்குத் தனமான தந்தை வழி குடும்ப அமைப்பிலும் ஆண்களுக்கு அடிமைகளாக இருந்தனர். மறுபுறம் நகரங்களில் தொழிற்சாலைகளில் பல்வேறு அடக்கு முறைகளாலும் சமமான கூலி வழங்கப்படாமல், உடலை வருத்தும் சூழ்நிலையில் சக்கையாக பிழியப்பட்டனர்.

சீனாவில் நிகழ்ந்த உழைக்கும் வர்க்க எழுச்சியும், அதனைத் தொடர்ந்த புரட்சிகர போராட்டங்களும் சீனப் பெண்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டன. நிலப்பிரபுத்துவத்தையும், ஏகாதிபத்தியத்தையும் எதிர்த்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் புரட்சிக்கான திட்டத்தின்படி, அதன் போரட்டங்களில் பங்கெடுப்பதின் ஊடே பெண்கள் பிற்போக்குத் தனங்களுக்கும் தங்கள் அடிமை வாழ்க்கைக்கும் எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திச் சென்றார்கள்.

அதன் நடைமுறை உதாரணம் தான் பெண்கள் செம்படைப் பிரிவு. புரட்சிக்கு வேலை செய்வதில் ஆணுக்கு நிகர் பெண்கள், பெண்கள் விடுதலை பெறுவதற்கு இந்த பிற்போக்கு சமுகத்தை அழிக்க அவர்கள் ஒரு பெரும் சக்தியாக ஒன்று திரட்டப்பட வேண்டும் என்பது தான் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம். அதன் ஒரு பகுதியாக ஆயுதம் தாங்கியப் பெண்கள் செம்படை கட்டப்படுகிறது.

பெண்களின் செம்படைப் பிரிவுஇதுதான் இந்த படத்திற்கான பின்புலம். ஆனால் செம்படையில் சேர்ந்து விடுவதாலேயே ஒருவர் முழு பாட்டாளியாக உருவாகி விடுவதில்லை, அவர் அந்த போராட்டத்தின் ஊடே கற்பதின் மூலம் தான் பாட்டாளியாக உருவாகிறார்.

சிங்-குவா இயல்பில் ஒரு விவசாயப் பின்னணியை கொண்ட ஏழைப் பெண் தான். ஆனால் அவளிடம் பழி வாங்கும் குணம் இயல்பிலேயே இருக்கிறது. ஆனால் அவள் எப்பொழுதும் அவசரப்படுகிறாள். தனக்கு மட்டும் ஏதோ தனியாக  குற்றம் நிகழ்ந்து விட்டதை போல பாவிக்கிறாள். ஆனால் செம்படையில் பயிற்சியின் போது அவள் பழகும் பலரிடமும் நிலப்பிரபுக்களின் கொடுமைகளை பற்றிய கதைகள் உள்ளது. அவர்கள் அனைவருமே நிலப்பிரபுக்களால் துன்புறுத்தப்பட்டவர்கள் தான். சமூகமே நிலப்பிரபுக்களாலும், ஏகாதிபத்திய முதலாளிகளாலும் சித்திரவதை செய்யப்படுகிறது. இதை மெல்ல கற்கும் அவள், ஒரு நான்-பா-தியனை பழி வாங்குவது மட்டும் இலக்கு அல்ல, அதன் மூலம் தனது விடுதலையை சாதிக்க முடியாது, அதை சாதிக்க ஒட்டு மொத்த சீன சமூகத்தையும்  விடுவிக்க வேண்டும், அதற்கு உழைக்கும் மக்கள் அனைவரின் ஒற்றுமை அவசியம் என்பதை உணருகிறாள்.

செம்படைப் பிரிவின் கட்சிப் பொறுப்பாளர் சாங்-சிங் கட்சியில் இணைந்து இரண்டே வருடத்தில் மிக குறிப்பான வளர்ச்சியை அடைந்திருப்பதை பற்றி சிங்-குவாவும், லியனும் விவாதிக்கும் காட்சி மிக முக்கியமானது. இது கம்யூனிஸ்ட்டுகளின் இயல்பை துல்லியமாக விளக்கும் காட்சி.

இருவரும் சாங்-சிங்கை பார்த்து பொறாமைப் படவில்லை, அதிசயமாகவோ ஆச்சரியமாகவோ அவரை பார்க்கவில்லை. எப்படி இரண்டே வருடத்தில் அவர் தன்னை வளர்த்துக் கொண்டார் என்பதை பற்றி விவாதிக்கிறார்கள். பின்பு தாங்களும் மிக வேகமாக தங்களை வளர்த்துக்கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக வேண்டும் என்று திட்டமிட்டுக் கொள்கிறார்கள்.

இறுதிப் போரின் போது ராணுவப் படையில் பெண்களை பார்க்கும் நான்-பா-தியன் அதை வெறும் தந்திரம் என புறந்தள்ளுகிறான், அவன் மதிப்பீடு அவனையும் அவன் படையையும் முழுவதுமாகவே அழிக்கிறது. சரி தான், சமூகத்தில் பெண்கள் குறைத்து மதிப்பிடப்படுவது அழிவை நோக்கி தான் அழைத்து செல்லும்.

சீன நிலைமைக்கு இந்திய நிலைமை சற்றும் குறைந்ததல்ல, ஒரு புறம் சாதி, மத சடங்குகளின் பிடியிலும், மறுபுறம், நுகர்வு கலாச்சார கவர்ச்சி பொம்மைகளாகவும், பெண்கள் வாழ்வை கசக்கி பிழிந்து துப்பிக் கொண்டிருக்கிறது இந்திய சமூகம். இதை எதிர்த்து போராடி சமூக அமைப்பையே மாற்றி அமைப்பதன் மூலம்தான் பெண்கள் விடுதலை பெற முடியுமே தவிர இந்த சமூகத்தின் உள்ளேயே செய்யப்படும் சில சீர்த்திருத்தங்களால் அல்ல. அதற்கு இந்தப் படம் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.

–    ஆதவன்.

கழிப்பறைத் தொழிலாளியை கழுவிலேற்றும் சமூகம் !

5

சென்னையின் சுறுசுறுப்பான பேருந்து பணிமனைகளில் ஒன்று. பெரிய பள்ளம் பறிக்கப்பட்டிருந்த நுழைவாயிலில் விழுந்து எழுந்து உள்ளே நுழையும் பேருந்து ஒன்று உயரமான ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுக்கு கீழ் பயணிகளை உதிர்க்கிறது. சோகையான வெயில் கொஞ்சம் காட்டமாகவே அடிக்கிறது. ஓட்டுனர்களும், நடத்துனர்களும் நேரப் பதிவு செய்து விட்டு கிடைக்கும் ஒரு சில நிமிட இடைவேளையில் டீ குடிக்கவோ, புகை பிடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ இடம் தேடி ஓடுகிறார்கள். பக்கத்து பேருந்து முதலில் புறப்பட்டு விடுமோ என்ற குழப்பத்துடன் கூடிய பதற்றத்துடன் பேருந்துகளின் உள்ளே பயணிகள் உட்கார்ந்திருக்கிறார்கள்.

பேருந்து நிறுத்துமிடத்திலிருந்து சிறிது தள்ளி இருக்கும் பணிமனையிலிருந்து மெதுவாக நடந்து வரும் காக்கி உடை உடுத்த ஒருவர் தயங்கி தயங்கி அணுகினார்.

“செக்யூரிட்டிட்ட வந்து பேசிட்டு போனது நீங்கதானே …”. போக்குவரத்து பணிமனை தொழிலாளர்களின் வாழ்க்கை போராட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் வந்திருந்த எங்களிடம் விரக்தியுடன் அறிமுகம் செய்து கொண்டார்.  அவர் சொன்ன விவரங்கள் அந்த விரக்தியின் நியாயத்தை அங்கீகரித்தன.

“ஆமா, சொல்லுங்க, நீங்களும் இங்கதான் வேலை பார்க்கிறீங்களா? மெக்கானிக்கா இருக்கீங்களா”

“இல்லைங்க கிளீனிங் வேலை செய்றேன்”

“அப்படியா, பஸ் எல்லாம் கிளீன் செய்வீங்களா?”. ஒவ்வொரு நாள் இரவும் டெப்போவில் கொண்டு விடப்படும் பேருந்துகளின் உள், வெளிப்புறங்களை பெருக்கி, தூசி தட்டி கழுவி விடும் வேலை செய்கிறாரோ என்று கேட்டோம்.

“முன்ன அதைத்தான் செஞ்சிட்டு இருந்தேன். 15 வருஷமா அந்த வேலை செஞ்சு, தூசி எல்லாம் உள்ள போயி பிரச்சனை ஆயிருச்சி. இங்க பாருங்க” என்று சட்டையைத் தூக்கி வயிற்றைக் காட்டுகிறார். சுமார் 10 இஞ்ச் நீளத்துக்கு ஒரு அறுவை சிகிச்சை தழும்பு நெஞ்சிலிருந்து வயிற்றை நோக்கியபடி அழுத்தமாக இருந்தது. 15 ஆண்டுகள் மாநகர பேருந்து கழகத்துக்கு உழைத்து தனது நுரையீரலை கரைத்து விட்டிருக்கிறார்.

“மூச்சுப் பிரச்சனைன்னு சொல்லி ஜி.எச்லதான் ஆப்பரேசன் செஞ்சாங்க. இனிமேலும் தூசி, கெமிக்கல்ஸ்ல வேல செஞ்சா உயிருக்கே ஆபத்துன்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. அப்புறமா இந்த காண்டிராக்டர போய் பார்த்து அவரு டாய்லெட் கழுவுற வேலை செய்யச் சொன்னாரு”. அவரை அப்படி நட்டாற்றில் விட்டு விடாமல் வேலை வாய்ப்பு கொடுத்த காண்டிராக்டரின் ‘கருணை’யை பற்றி கேட்க நினைத்து, மேல் விவரங்களை விசாரித்தோம்.

“அப்பிடியா, எத்தன டாய்லெட் கிளீன் பண்ணணும்”

“அஞ்சு, பதினைஞ்சு,…” கணக்கு போடுகிறார். “ஆபீசருங்களுக்குன்னு இங்க இருக்குற 20 டாய்லெட்டுங்களை கழுவணும்.”. 20 கழிவறைகளை பராமரிக்க ஒரே தொழிலாளியை வைத்திருக்கிறார் அந்த தொழில் முனைவு மிக்க காண்டிராக்டர்.

இந்தியா - நிலப்பிரபுத்துவம்
மாதிரிப் படம் : இணையத்திலிருந்து

“எவ்வளவு சம்பளம் கெடைக்குது”

“மாசம் 4,000 ரூபா சம்பளம். ஏதாவது ஒரு நாள் லீவு போட்டா கூட சம்பளத்துல  பிடிச்சிருவாங்க. அதனால லீவே எடுக்காம தினமும் வந்துருவேன்.”

“எத்தனை மணிக்கு வேலைக்கு வரணும்?”

“காலையில 6 மணிக்கு வரணும். லேட்டா வந்தா செக்யூரிட்டி சம்பளத்த கட் பண்ண சொல்லிருவான்.”

“6 மணிக்கு வரணும்னா எத்தனை மணிக்கு புறப்படுவீங்க. வீடு எங்க இருக்கு”

“வீடு ஆவடில இருக்கு. காலையில 4 மணிக்கு எந்திரிச்சி, குளிச்சி, பழையது சாப்பிட்டுட்டு வந்துருவேன். டிரெயின் பாஸ் எடுத்து வெச்சிருக்கேன். இறங்கி, ஷேர் ஆட்டோ பிடிச்சு வருவேன். தெனமும் ஷேர் ஆட்டோ செலவு 10-15 ரூபா ஆகும்.”

“ஏங்க நீங்க வேலை செய்றது எம்.டி.சி டெப்போல, பஸ்ல வரலாமில்லையா?”

“எங்கங்க, பஸ் டிக்கெட்டு காசு அதிகம், கட்டுப்பிடியாகாது.”

“டெப்போல வேலை பார்க்கிற நீங்க டிக்கெட் எடுக்கணுமா என்ன?”

“எங்க? ஒரு 50 பைசா கொறைஞ்சாலே கண்டக்டருங்க எறக்கி விட்டுருவாங்க, டிக்கெட் இல்லாமலா வர முடியும்? ஐடி கார்டு இருந்தாத்தான் டிக்கெட் எடுக்காம வர விடுவாங்க”

“உங்ககிட்ட ஐ.டி. கார்டு இல்லையா?”

“கார்டு தரச் சொல்லிக் கேட்டா, ‘நீதான சம்பளம் வாங்கற, பஸ்சுக்கு காசு கொடுத்துதான் வரணும். நீ என்ன, எம்.டி.சி-யில வேலை பார்க்கிறியா என்ன? கூலிதான’-ன்னு கத்துவாங்க”. டெப்போவில் வேலை செய்யும் தொழிலாளியை காண்டிராக்டர் பொறுப்பில் விட்டு போக்குவரத்துக்குக் கூட வசதி தராமல் சுரண்டுகிறது மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகார வர்க்கம்.

“ஏங்க இவ்வளவு தூரம் அலையிறீங்க. உங்க வீட்டு பக்கத்திலே ஆவடிலேயே பஸ் டெப்போ இருக்கே, அங்க வேலை தரச் சொல்லி காண்டிராக்டர் கிட்ட கேக்க வேண்டியதுதானே?”

“அவர்கிட்ட போயி அப்படி எல்லாம் கேக்க முடியாதுங்க… ‘உனக்கு பெரிய ஆளுன்னு நினைப்பா, இஷடம் இருந்த வேலை செய்யி, இல்லன்னா விட்டுட்டு போயிடு, இந்த வேலைக்கு நூறு பேரு காத்துகிட்டு இருக்கானுங்க’ன்னு திட்டி தொரத்திருவாரு.”

“கேட்டா கூட அவ்வளவு திட்டுவாரா என்ன?”

“ஆமாங்க, ஒரு தடவ பி.எம். (டெப்போ கிளை மேலாளர்) கேட்டப்போ பினாயில் தீர்ந்திருச்சின்னு சொல்லிட்டேன். அடுத்த மாசம் சம்பளம் வாங்கப் போனா, ‘நீ பி.எம். கிட்ட பினாயில் இல்லன்னு சொன்னேல்ல, அவர்கிட்டயே போய் சம்பளம் வாங்கிக்கோ. உனக்கு என்ன கெவர்ன்மென்ட் ஸ்டாஃபுன்னு திமிரா’ன்னு சம்பளம் தராம வெரட்டிட்டாரு. வழக்கமாவே 10-ம் தேதிக்குள்ள சம்பளம் தர மாட்டாங்க, 15 தேதி வரை ஆகிடும். அந்த மாசம் பல தடவ இழுத்தடிச்சி 23-ம் தேதிதான் சம்பளப் பணம் கொடுத்தாரு”. வேலை கொடுத்து சுரண்டுவதையே பெரிய கருணை என்று நினைக்கும் இந்த பண முதலைகள், கடைநிலை தொழிலாளிகள் தம்மிடம் பேசுவதை கூட தமது அதிகாரத்துக்கு இழுக்காக கருதுகின்றனர்.

“வேலை நிறைய இருக்குமா?”

“காலையில 6 மணிக்கு வந்ததும் 20 டாய்லெட்டையும் ஆசிட் ஊத்தி கழுவி, பினாயில் தெளிச்சி சுத்தமா வைச்சிருக்கணும். ஆஃபிசருங்கல்லாம் வர்றதுக்குள்ள முடிக்க, 11 மணி ஆகிடும். மதியம் 2 மணிக்கு இன்னொரு தடவை தண்ணீ அடிச்சி விடணும். சாயங்காலம் போறதுக்கு முன்னால ஒரு தடவ. 5 மணிக்கு கையெழுத்து போட்டுட்டு புறப்படுவேன். வீட்டுக்குப் போய்ச் சேரும் போது ஆறரை, ஏழு ஆகிடும்.”

“மதியம் டெப்போல இருக்குற கேன்டீன்ல சாப்பிடுவீங்களா?”. போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்காக மானிய விலையில் மதிய உணவு வழங்கும் உணவகம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள். ரூ 1 விலையில் கூப்பன் வாங்கி சாப்பிட்டுக் கொள்ளலாம்.

“கேன்டீன்ல நாமெல்லாம் சாப்பிட முடியாது. ஸ்டாஃபுக்கு மட்டும்தான் கொடுப்பாங்க.”

“நீங்களும் இங்கதானே வேலை செய்றீங்க. யூனியன் இருக்கே. அவங்ககிட்ட போய் உங்களுக்கும் கேன்டீன்ல சாப்பிடறதுக்கு வசதி வாங்கித் தரச்சொல்லி கேட்க வேண்டியதுதானே.”

“ஒரு தடவ கேட்டிருக்கேன். ‘இன்னைக்கு நான் சொல்லிர்றேன், போய் சாப்பிட்டுக்கோ’-னு சொன்னாங்க. அதே போல தெனமும் போய் கேக்க முடியுமா? நமக்கு கூப்பன் தர மாட்டாங்க. ‘அதெல்லாம் ஸ்டாஃபுக்குத்தான் நீ இப்படி கேக்குறது தப்பு’ன்னுட்டாங்க. பகல்ல கடையில ஒரு டீ குடிச்சிட்டு சமாளிச்சிடுவேன். சாயங்காலம் வீட்டில போயி சாப்பிடுவேன்”.

சங்க உறுப்பினர்களாக இருக்கும் ஓட்டுனர், நடத்துனர்களிடமே ஒவ்வொரு விஷயத்துக்கு லஞ்சம் வாங்கி கொழுக்கும் ஆளும் கட்சி யூனியன் ஒட்டுண்ணிகளுக்கு இவரைப் போன்ற ஒப்பந்தத் தொழிலாளி பட்டினியாக இருந்தால் என்ன, பரதேசம் போனால் என்ன?

“வீட்டிலிருந்து கொண்டு வரலாம். இல்லைன்னா, வெளியில சாப்பிடலாம் இல்லையா?”

எம்.டி.சி பேருந்து
எம்.டி.சியில் பணி புரியும் தொழிலாளி போக முடியாத மாநகரப் பேருந்து.

“அதுக்கெல்லாம் கட்டுப்படியாகாதுங்க. வீட்டு வாடகையே மூவாயிரத்தைந்நூறு ரூவா ஆயிடுது. அது போக கரண்டுக்கு ஒரு யூனிட்டுக்கு ஆறு ரூபா வச்சு வாங்கறாங்க. மக எட்டாங் கிளாசு முடிச்ச உடனேயே டெய்லர் வேலைக்கு போகச் சொல்லிட்டேன். மக சம்பளத்த வாங்கி வாடகை கொடுத்துட்டு என் சம்பளத்தில மத்த செலவுகளை பார்த்துப்போம். நானும், வீட்டுக்காரம்மாவும், ரெண்டு மகள்களும்தான் இங்க இருக்கோம். பையனுங்க ரெண்டு பேரையும் ஊர்ல இருக்கற தாத்தா, பாட்டி கூட அனுப்பியிருக்கேன்”. நவீன உழைப்புச் சுரண்டல், குடும்பத்தை அரைப்பட்டினியாக உழைக்க வைத்து, ஒரு பகுதியை சிதறடித்து, படிப்பை நிறுத்தி எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

“நீங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவை ஊருக்குப் போயிட்டு வருவீங்களா”

“எங்க ஊருக்கு போக கடப்பாலேர்ந்து (ஆந்திரா) 60 ரூபா டிக்கெட் எடுக்கணும். ஊருக்குப் போறதுக்கு லீவு போட்டா நமக்கு பணம் செலவாகுதுல்ல. அதனால, நான் ஊருக்கே போறதில்ல, பையனுங்க மட்டும் இங்க வந்துட்டு போறதுக்கு காசு கொடுப்பேன்.”

“நீங்க ஊர்லேர்ந்து எப்போ சென்னைக்கு வந்தீங்க”

“அது ஆச்சுங்க 20 வருஷத்துக்கு மேல. ஊர்ல ரெட்டிங்கதான் பெரிய ஆளுங்க. நான் எட்டாங் கிளாஸ் படிக்கும் போது, ‘ஏண்டா, நமக்கு சாப்பாட்டுக்கே வழியில்ல, படிப்பை நிறுத்திட்டு ரெட்டி வீட்டுல வேலைக்குப் போ’ன்னு சொல்லிட்டாரு.

ரெட்டி வீட்டில தினமும் போய் வேலை செய்யணும். மாடு மேய்க்கறது, தொழுவத்தை சுத்தம் பண்றது, வயல் வேலைன்னு அவங்க சொல்றத செய்யணும். நாள் முழுக்க வேலை செஞ்சா, சாயங்காலம் சோறு போடுவாங்க. மத்தபடி, ஏதாவது உடம்பு சரியில்ல, கஷ்டம்னு போய் சொன்னா நாலைஞ்சு கிலோ கேழ்வரகு கொடுப்பாங்க.”

“ஏங்க, அப்படில்லாம் கூலி இல்லாம வேலை பார்த்தீங்க. போக மாட்டேன்னு சொல்லலையா?”

“அது எப்படிங்க, முடியாதுன்னு சொல்ல முடியும். நம்ம அப்பா எல்லாம் அப்படித்தான் வேலை பார்த்தாரு. நாம வேலை செய்ய மாட்டோம்னு சொல்ல முடியுமா. அப்புறம்தான் மெட்ராசுக்கு கிளம்பி வந்தேன்”. நிலப்பிரபுத்துவ கொடுங்கோன்மை ஊறிப் போன மண்ணிலிருந்து வந்திருக்கும் அவர் பின்னணி, காண்டிராக்டரையும், டெப்போ நிர்வாகத்தையும் எதிர்த்து ஒரு சொல் கூட கேட்காத காரணத்தை உணர்த்தியது.

“உங்க ஊர்ல வேலை கெடைக்காதா.”

“இது மாதிரி கெடைக்காது சார். அதுவும் ரெட்டி எங்களையெல்லாம் கோயிலுக்குள்ள விட மாட்டான் சார். நான் கல்யாணம் ஆன பொறகு கிறிஸ்டியனா மாறிட்டேன்.

“அப்படியா, ஞாயித்துக்கிழமை தோறும் சர்ச் போவீங்களா”

“ஞாயித்துக் கெளம லீவு எடுத்தா சம்பளம் கட்டாயிரும். தெனமும் வேலை செஞ்சாத்தான 4,000 ரூபா வரும். அதனால எப்பவாவதுதான் போவேன்”. கிராமத்து கொடுமையிலிருந்து விடுபட நகரத்துக்கு வந்தவருக்கு அரை வயிற்றில் வாரத்துக்கு 7 நாள் வேலை செய்யும் ‘விடுதலை’யை வழங்கியிருக்கிறது, நவீன இந்தியாவின் வளர்ச்சி.

“சர்ச்சில உங்களுக்கு எதாவது உதவி பண்ணுவாங்களா”

“சர்ச்சில பார்த்த ஒருத்தரு மாசம் 1,000 ரூபா பென்ஷன் வர்ற மாதிரி ஏற்பாடு செய்றேன், ஒரு 10,000 ரூபா செலவாகும்னாரு. ஊர்லே அப்பா அம்மாகிட்ட 5,000 கடன் வாங்கி அனுப்பச் சொல்லி, சம்பளப் பணத்தையும் போட்டு கொடுத்தேன். பணத்தை வாங்கிட்டு போன அந்த ஆளு அப்படியே மாயமாயிட்டான், கண்லயே படல.” ஏழைகளைச் சுரண்டுவதில் கர்த்தருடைய ஆலயமும் விதிவிலகல்ல.

“சம்பளம் இவ்வளவு குறைவா இருக்கே, வீட்டில பால், தண்ணி செலவுக்கே கஷ்டமா இருக்குமே?”

“பால் தினசரி வாங்க முடியுமா சார். என்னா வெலை விக்கிது. அப்புறம் சம்பளம் அதுக்குத்தான் சரியா இருக்கும். ரெண்டு மூணு நாளைக்கு ஒருதடவை 12 ரூபாய்க்கு ஒரு கப் டீ வாங்கி நாலு பேரும் குடிச்சிப்போம்.” காலையில் ஃபில்டர் காஃபி குடிக்கா விட்டால் தலைவலி வந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் ஒரு டீ குடிக்கக் கூட இவ்வளவு கணக்கு போட வேண்டியிருக்கிறது.

“ஏதாவது அவசரத் தேவைன்னா கடன் எல்லாம் வாங்குவீங்களா”

“நம்ம நம்பி யார்ங்க கடன் கொடுப்பாங்க. அப்படியே கொடுத்தாலும் வாங்க மாட்டேன். கட்ட முடியலைன்னா வீட்டுக்கு முன்ன நின்னு சத்தம் போடுவான். அதனால, காசு இருந்தா சாப்பிடுவோம், இல்லைன்னா பட்டினியா கெடப்போம்னு முடிவு பண்ணிட்டேன்”.

“வேற எப்படித்தான் சமாளிப்பீங்க”

“எங்க வீட்டம்மா நாலைஞ்சு வீடுகள்ல வேலை செய்ய போய்கிட்டு இருந்தாங்க, இப்ப அவங்களுக்கு முடியாம போயிடுச்சி. ரெத்த அழுத்தமாம். அதனால அவங்க வேலைக்கு போறதில்ல.”

“ரேசன் கார்டு எல்லாம் வச்சிருக்கீங்களா?”

“அதெல்லாம் பக்காவா இருக்குங்க, ரேசன்ல  பச்சரிசி 5 கிலோ, புழுங்கலரிசி 5 கிலோ கொடுப்பாங்க. இலவச டிவி, மிக்சி, கிரைண்டர், ஃபேன் எல்லாம் கூட கொடுத்திருக்காங்க”

“தேர்தல்ல ஓட்டு போடுவீங்களா?

“ஆமா, கண்டிப்பா போட்டுருவேன். நம்ம தெருவுல ஒரு கவுன்சிலர் இருக்கான். அவன்தான் ஒவ்வொரு தேர்தல்லையும் யாருக்கு ஓட்டு போடணும்னு சொல்லுவான். உள்ளதை சொல்லணும், போன எலக்சனுக்கு 100 ரூபா வீட்டுக்கே வந்து கொடுத்துட்டான்”. நடுத்தர வர்க்கம் மெச்சிக் கொள்ளும் ‘ஜனநாயகம்’ கொடுத்த ஓட்டுரிமை இவருக்கு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை, சில நூறு ரூபாய் கொடுத்து அந்த ஒரு நாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிட வழி செய்கிறது.

“கறி, மீன் எல்லாம் எப்பவாவது வாங்குவீங்களா?”

“சம்பளம் வாங்குன அண்ணைக்கு மட்டும் கொஞ்சம் மாட்டுக்கறி வாங்கி சமைப்போம். அவ்வளவுதான்”.

“உங்க பொண்ணுக்கு ஊர்ல போய் கல்யாணம் செய்து வைப்பீங்களா? சென்னையிலா?”

“சாப்பாட்டுக்கே வழியில்லாத நெலமைல, பொண்ணுக்கு கல்யாணம் செய்யறத பத்தியெல்லாம் யோசிக்கவே இல்ல சார்”.

ஆளும் கட்சி யூனியன் ஆட்கள் ஜெயா பிறந்த நாளுக்காக பேனர் கட்டிக் கொண்டிருந்தார்கள். அவரிடம் அது பற்றி கேட்டோம்.

“அம்மா பொறந்த நாள்னு ரெண்டு நாளைக்கு முன்னாடி எல்லாரையும் ரத்தம் கொடுக்க . கூட்டிட்டு போனாங்க. நானும் போனேன். ஆனா, என் ரத்தத்தில சத்து இல்லைன்னு ரத்தம் எடுக்கல.”

தூரத்தில் செக்யூரிட்டி வருவதைப் பார்த்ததும் “என்னடா பேசிக்கிட்டு இருக்கேன்னு மிரட்டுவான் சார்” என்று சொல்லிக் கொண்டே நகர்ந்து போய் விட்டார்.
____________
ஆந்திராவில் ரெட்டிகளின் கொடுங்கோன்மை. தப்பி பிழைக்க வந்த சென்னையில் அரசு – அதிகார வர்க்கம் – தனியார் ஒப்பந்ததாரர்களின் ஒடுக்குமுறை. பேருந்து கழுவும் வேலையில் நுரையீரலுக்கு அறுவை சிகிச்சை. பிறகு 20 கழிப்பறைகள். 4000 ரூபாய் சம்பளம். கால் வயிற்றுக் கஞ்சி. தொழுவதற்கு என்றைக்காவது அருள் கொடுக்கும் கர்த்தர். ஊரிலும் வீட்டிலும் பிரிந்து கிடக்கும் குடும்பம். எங்கும் எப்போதும் பேச முடியாத அடிமை வாழ்வு. இன்னும் எத்தனை நாள் இவரை அந்த உடம்பு சுமந்து செல்லும்?

ஊழலிலும், ஒடுக்குமுறையிலும் வயிறு வளர்க்கும் அதிகார வர்க்கம் தனது சிறுநீரை கழித்து விட்டு அதனை கழுவுவதற்கு வைத்திருக்கும் ஒரு அடிமையின் கதை இது. அவருடைய கதை மட்டுமல்ல. நாடெங்கும் நாடோடிகளாய் சுற்றிவரும் உழைக்கும் மக்களின் கதைகளும் ஏறக்குறைய இதுதான். இந்தியாவும் அதனுடைய ஜனநாயகமும் அருளியிருக்கும் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது.

20/20 கிரிக்கெட்டிலும், பேஸ்புக் லைக்கிலும், தேர்தல் அரட்டையிலும் இன்பகரமாக பொழுதை கழிப்பவர்கள் இந்த இத்துப்போன ஒரு கழிப்பறைத் தொழிலாளியின் வாழ்க்கைக்கு என்ன சொல்வார்கள்?

–    வினவு செய்தியாளர்கள்

[பெயரும் ஊர்களும் மாற்றப்பட்டுள்ளன]

வாக்களிப்பது சடங்கா, குழப்பமா – கோயம்பேடு மக்கள் கருத்து

0

தேர்தல் திருவிழா முன்பு போல களைகட்ட வாய்ப்பில்லை என்றாலும் ஏதோ கொஞ்சம் ‘கட்ட’ ஆரம்பித்து விட்டது. இந்தக் களையில் குறையிருந்தாலும் ஜனநாயக ‘தீவிரவாதிகளின்’ கடமை உணர்ச்சிக்கு மட்டும் எப்போதும் குறைவில்லை. தேர்தல் ஆணையத்தில் ஆரம்பித்து,  கருப்புப் பண சினிமா நட்சத்திரங்கள் வரை ஓட்டளிப்பதன் அவசியம்  குறித்து மக்களுக்கு ‘ஜனநாயக’ வகுப்பெடுக்கிறார்கள். அப்பேற்பட்ட இந்த ஜனநாயகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிய கோயம்பேடு கிளம்பினோம்.

கோயம்பேடுமுதலில் இனிப்பிலிருந்து ஆரம்பிக்கலாமென்று பழங்கள் பிரிவிலுள்ள திராட்சை மொத்த விற்பனைக் கடையின் இரு தொழிலாளிகளிடம் பேச்சு கொடுத்தோம்.

அறிமுகப்படுத்திக் கொண்டு, தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு என்றதும் உற்சாகமாக பேச ஆரம்பித்தார்கள்.

“தேர்தலில் ஓட்டு போடுறது பற்றி என்ன நினைக்கிறீங்க?”

“அதுவா அது நம்ம கடம! போட்டுதான ஆவனும்.”

“எதுக்காகண்ணே கடமைனு சொல்றீங்க? என்ன காரணம்?”

“(யோசிக்கிறார்) இல்லப்பா, கடமனா…………………………… அது கடம தான்.”

“இல்லண்ணே இப்போ நம்ம அப்பா அம்மா இருக்காங்க; நம்மள பெத்து வளத்து கவனிச்சிருக்காங்க, வயசான காலத்துல அவங்கள பாத்துக்கணும்; அது நம்ம கடமை. இது மாதிரி கடமைனா ஏதாவது காரணம் இருக்கணும்ல?”

” ம்ம்ம்……………  ஓட்டு போடலனா…..(இழுக்கிறார்)  நாம ஏதும் பேசமுடியாது. ரோடு கீடு போடல, தண்ணி வரலனு நாம போயி சொன்னா என்ன கேப்பான்? நீ ஓட்டு போட்டியானுதான கேப்பான்?”

“ஆமா… சரிதான்”

“வோட்டு போட்டாதான நாம கேள்வியே கேக்க முடியும். அதுக்கு தான் வோட்டு போடனும்.”

“ம்.. சரிண்ணே இதுவரைக்கு எத்தனை முறை உங்க எம்.பிக்கிட்ட கேள்வி கேட்டிருக்கீங்க?”

“அது எதுவும் கேட்டதில்லப்பா”

“ஏண்ணே?”

“அது எப்படிப்பா நாம கேக்க முடியும். ஓட்டு கேக்க வந்ததோட சரி அதுக்கப்புறம் எட்டி கூட பாக்க மாட்டாங்களே.”

“நீங்க உங்க எம்.பி வீடு அல்லது வேறு எங்கேயாவது மீட்டிங்ல பார்த்த இடத்தில் போய்,  ‘ஏம்பா நீ சொன்ன எதயுமே பண்ணலயே’ அப்படினு கேக்க வேண்டியது தானே?

“(அதிர்ச்சியுற்று)  வீட்டுக்கா.  இதெல்லாம ஆகுற காரியமா? . அப்படி போயி கேட்டுட்டு திரும்பி வர முடியுமா?”

“நீங்க தான சொன்னீங்க ஓட்டு போட்டாதான் கேள்வி கேக்க முடியும், அதுனால தான் ஓட்டு போடுறேனு. ஆனால் இப்போ கேக்கவே முடியாதுனு சொல்றீங்க. அப்புறம ஏன் ஓட்டு போடுறீங்க.”

“(சிரித்துக் கொண்டே) நம்மெல்லாம் எப்படிப்பா கேக்க முடியும்.”

கோயம்பேடு“இது ஜனநாயக நாடு. தேர்தல் நடக்குது, எழுத்துரிமை, பேச்சுரிமை, கேள்வி கேட்கும் உரிமை எல்லாம் இருக்குனு ‘படிச்சவங்க’ சொல்றாங்களே?”

“அப்படிலாம் எதுவும் இங்க இல்ல.”

“அப்போ ஜனநாயகமே இல்லனு சொல்ல வாரிங்களா? அப்புறம் எதுக்கு ஓட்டு போட்டுகிட்டு?”

“யாராச்சும் நல்லவங்க வருவாங்கனு தான் ஓட்டு போடுறோம். போன தடவ ரெட்ட இலைக்கு போட்டேன், இப்ப விஜயகாந்துக்கு போடலாம்னு இருக்கேன். “

“சரி சரி… ஆமா,  உங்களை மாதிரி கடைகளுக்கு, ரிலையன்ஸ் கடைகள் வந்ததால பிரச்சனைனு சொல்றாங்களே. இப்போ கூட ஏதோ வெளிநாட்டு கம்பெனி,  வால்மார்ட் ஏதோ வருதுனு போராட்டமெல்லாம் நடந்துச்சே. போராட்டம் என்னணே ஆச்சி? “

“அது இன்னும் அப்படித்தான் இருக்கு. எதையும் மாத்தல.”

“நீங்க ஓட்டு போடுற கட்சி ஆட்சிக்கு வந்தா அத மாத்திருவாங்களா?”

“அதெப்படி மாத்துவான். முதல்ல எங்களுக்குள்ளேயே ஒத்தும இல்ல, அதுதான பிரச்சனையே. கோயம்பேட்ல இருக்குறவங்க எல்லாரும் சேந்து போராட்டம் பண்ணா எப்படி இருக்கும்? அப்படி இல்லைல. அப்படி பண்ணா தான கவர்மெண்டு கேக்கும்”

“சரி தான். ஆனா எதுக்கு போராடணும். நீங்க தான் ஓட்டு போடுறீங்கல்லையா? அப்புறம் ஏன் தண்ணி வரலைனாலும் போராட்டம் நடத்துறீங்க, ரிலையன்சுக்கு எதிரா போராட்டம்னு பன்றீங்க.  போராட்டம் பண்ணி தான் மாத்த முடியும்னா எதுக்கு ஓட்டு போடனும்?”

“ (சற்று நேரம் யோசித்தவர்) ஆமா ஏன் ஓட்டு போடுறோம்?”

“நீங்க தான் சொல்லணும்?”

“கேள்விக்குறி தான்.  நீங்க என்ன தான் சொல்ல வர்ரீங்க?  போடனும்னுறீங்களா? போடவேணாம்னுறீங்களா?”

“நான் எதுவும் சொல்ல வரல. நீங்க என்ன காரணத்துக்காக ஓட்டு போடுறீங்கனு கேக்குறேன் அவ்வளவுதான். நீங்கதான் ஓட்டு போடுறீங்க நீங்கதான் சொல்லனும்.”

யோசித்துவிட்டு “இப்போ……………… ஊருல கோயில் திருவிழானா போறம்ல. ஏன் போறோம்? ஏன், எதுக்குனு கேட்டுகிட்டா இருப்போம். அதுமாதிரிதான். எல்லாரும் ஓட்டு  போடுறாங்க நாமளும் போடனும். “

“எல்லாரும் தெவசம் குடுக்குறாங்க நாமும் கொடுக்குறோம். தெவசம் மாதிரினும் சொல்லலாம் அப்படிதான? ”

கோயம்பேடுஆமோதிப்பது போல சிரித்தார்கள்.

“கடைசியா ஒரு சந்தேகம்ணே. இப்போ உங்க ஊரு கவுன்சிலரு, எம்.எல்.ஏ, சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் இவங்கள்ள யாருக்குனே பவர் அதிகம்.”

“ஜட்ஜ்க்குத்தான். அரசியல்வாதி என்ன பண்ணாலும் அவரு தீர்ப்பு குடுத்து மாத்திரலாம். இவங்களையே ஜெயில்ல போடுற அதிகாரம் ஜட்ஜ்க்குதான இருக்கு.”

“அப்படினா பவர் இல்லாத ஆளதான் நாம தேர்ந்தெடுக்கிறோமா. நியாயப்படி பவர் அதிகமான ஜட்ஜதான நாம தேர்ந்தெடுக்கனும். நம்ம ஓட்டே வேஸ்டா அப்போ?”

“ஆமா…. குழப்பமா இருக்கு…..”

“சரிண்ணே யோசிங்க” என்றபடியே கிளம்பினோம்.

டுத்து, சற்று தூரத்தில் வாழப்பழ மண்டியில் ஒரு இளைஞர் கல்லாவில் அமர்ந்திருந்தார்.  அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

“நீங்க இந்த தடவை ஓட்டு போடுவீங்களா?”

“கண்டிப்பா போடணும், போடலைனா ரேசன் கார்டை தூக்கிருவாங்க.” உறுதியாக சொன்னார்.

“என்னது தூக்கிருவாங்களா? யாரு இப்படி சொன்னாங்க?”

“எங்க ஊருல தான். .  ஊருல இது பேராவே (பேச்சாகவே) இருக்கு. போடலைனா ரேசன் கார்டை தூக்கிருவாங்க“

“நமக்கு எந்த் ஊர்ண்ணே?”

“திருவாரூரு, கருணாநிதி இருக்காருல அவரு ஊரு தான். திருகொவள. ரேசன்கார்ட் இல்லைனா மண்ணெண்ணெய், அரிசி எதுவும் கெடைக்காது, அதுதான் நமக்கு ஒரு அடையாளம். எல்லா எடத்துலேயும் அந்த கார்டதான கேக்கான்……………”

“நீங்க போடலைனு எப்படி தெரியும்”

“ஊர் பஞ்சாயத்துல லிஸ்ட் வெச்சிருப்பான். அத பாத்துட்டு வந்து ஏன் போடலைனு கேப்பான்?”

கோயம்பேடு“யாரு கேப்பாங்க? அதிகாரிகளா? கட்சிக்காரங்களா?”

“அதிகாரிக்கெல்லாம் எங்கூர்ல வேலையில்ல. அடிச்சுபுடுவாங்க. கட்சிகாரன்தான் கேப்பான்.“

“ஏன் எங்க கட்சிக்கு ஓட்டு போடலைனு கேப்பாங்களா?”

“தெரிஞ்சா அதுவும் கேப்பான். இப்ப பாருங்க எங்க ஊரு திமுக தொகுதி. எந்த ஒரு இதுவுமே இருக்காது…..”

“எப்பயுமே திமுக தானா என்ன?”

“இல்ல இல்ல இந்தவாட்டி தான். நம்மாளு (கருணாநிதி)ன்னு சொல்லி ஓட்டு வாங்கிட்டாரு. கடைசி தேர்தல் ஓட்டுபோட்டிருங்கன்னாரு. எல்லாரும் போட்டாங்க. இப்ப ஒன்னுமில்ல. ரோடு கீடுக்கும் மண்ணு ஜல்லி எல்லாம் அடிச்சாங்க. மறுபடி அத நிப்பாட்டிடாங்க.”

“இப்படி இருக்கே ஏன் ஓட்டு போடுறீங்க. “

“அதான் சொன்னேன்ல, போடலைனா ரேசன்கார்ட துக்கிருவாங்க.”

“அப்படினா எந்த வேட்பாளரையும் பிடிக்கலனாலும், காசு செலவுபண்ணி ஊருக்கு போய் ஓட்டு போடனுமா?”

“ஆமா ஆமா. வயசான கெழவிகூட வந்து  ஓட்டு போடனும். இல்லனா கார்ட் கெடைக்காது.”

“இப்படி கட்டாயப்படுத்தி ஓட்டு போட சொல்றாங்களே இது தான் ஜனநாயகமா?”

“ஜனநாயகம்லாம் இல்ல. அராஜகம். முன்னாடி ஜனநாயகம் இருந்திச்சு, இப்ப இல்ல. அரசியல்வாதி எவனுமே நல்லவன் கிடையாது. எலெக்சனப்ப வருவாங்க, திட்டம் அறிவிப்பாங்க. அப்புறம் எங்கன்னே தெரியாது. இப்பனு இல்ல எப்பயுமே அப்படிதான். எதுத்து கேட்டா எதுவும் பண்ணிருவாங்க. நாமவுண்டு நம்மா சோலியுண்டுனு தனியா ஒதுங்கியிருக்க வேண்டியதுதான்.”

“எதயும் பண்ணவும் மாட்டான், கட்டாயப்படுத்தி ஓட்டும் போட சொல்லுவான்னா எப்படி? “

“என்ன பன்றது. இளைஞர் சக்தி தான் எதாவது பண்ணனும், டெல்லில ஆம் ஆத்மி…. அந்த கெஜ்ரிவால் அது மாதிரி பண்ணனும்.”

“அவரே இப்போ ஆட்சியில இல்லயே? அவரும் மோசம்னு சிலர் சொல்றாங்களே?”

கோயம்பேடு“ஆமா. பக்கத்துல இருக்க ஆளுங்க அதையும் இதையும் சொல்லி கெடுத்திருவாங்க. பணம் தான எல்லாம். பணம்னா பொணமும் வாய பொளக்கும்.”

“யாரா இருந்தாலும் பணத்தை கொடுத்து மாத்திருவாங்கனா அப்போ என்ன தான் தீர்வு?”

“என்ன தீர்வுன்னா? பழைய மொறைக்கே போயிற வேண்டியதுதான். மாலைய தூக்கி போட்டு, யாரு மேல விழுதுனு பாத்து ஆள எடுத்தா,  நாட்டுக்கும் எந்த செலவும் இருக்காது. இந்த தேர்தல்னால எவ்வளவு செலவு தெரியுமா உங்களுக்கு?”

“எவ்வளவு?”

“எவ்வளவு ஊழல் தெரியுமா? எவ்வளவு டிஸ்டபன்ஸ் தெரியுமா?”

“நீங்க சொல்ற முறை சரியாதான் இருக்கு. ஆனா ஊழல் பண்றவங்க மேல மாலை விழுந்துட்டா என்ன பண்றது?”

“(சற்று யோசித்தவர்) கெஜ்ரிவால் மாதிரி பத்து பேர தனியா நிக்கவெச்சி அவங்க மேல வீசுற மாதிரி பண்ணிறனும்.”

“சரி. இப்போ மாலைய வீசுறது யாரு?. நான் தான் வீசுவேன்னு எல்லாரும் சண்ட போடுவாங்களே?.”

“ஆமா…… அதுக்கு மக்கள் கிட்ட கருத்துக்கணிப்பு வெச்சி எடுக்கனும்.”

“அததான் இப்போ தேர்தல்னு சொல்லி உங்கள ஓட்டு போட கட்டாயபடுத்துறாங்க?.”

“சற்று யோசித்தவர், என்ன கேட்டா தேர்தலே வேண்டாங்குறேன் ஏகப்பட்ட செலவு. யாரோட காசு? நம்மோட வரிப்பணம். அவங்க எடுத்து செலவு பண்றாங்க.”

“சரி உங்களுக்கு ஆம் ஆத்மி தெரிஞ்சதால கேக்குறேன். இப்போ டில்லில முதலமைச்சரே இல்ல. ஆனாலும் பஸ் ஓடுது, ரோடு போடுறாங்க எல்லா  வேலையும் சரியா நடக்குதே எப்படி?”

“அதுவா…. இப்போ இந்த கடைனா அதுக்கு சொந்தமா ஆளு இருப்பாங்கள்ள அதுமாதிரி அரசாங்கத்திலயும் அது அதுக்கு ஆளு இருக்காங்க.  அரசியல் கட்சி அப்படிங்குறது விருந்தாளி மாதிரி, வருவாங்க, நினைச்ச விருந்த சாப்பிடுவாங்க, வேணும்கிறத கட்டிக்கிருவாங்க. ஐந்து வருசம் கழிச்சி கிளம்பிருவாங்க. அதிகாரி சொந்தகாரன் மாதிரி அங்கேயா தான் இருக்கணும்கிற கட்டாயம்”.

“இந்த முறைல, அரசியல்வாதி அஞ்சி வருசம் தான் கொள்ளையடிக்கிறான் ஆனால் அதிகாரி காலமுழுக்க கொள்ளையடிப்பானே? “

“ஆமா. வி.ஓ க்கு கீழ ஒருத்தன் இருக்கானே அவங்கிட்ட ஒரு கையெழுத்துக்கு போனா ஐநூறு ரூபாய் கேக்குறான்.”

“அப்போ நீங்க சொல்றமாதிரி அரசியல்வாதி விருந்து சாப்பிட்டுட்டு கிளம்பிறான், ஆனா இந்த அதிகாரிகள் தினமும் நடுவீட்ல உக்காந்து சாப்பிடுறானே. அவன மாத்த மக்களுக்கு அதிகாரம் இல்லையே.”

“அதுக்காக தெனம் ஒரு அதிகாரிய மாத்தவா முடியும். அதிகாரிய மாத்துற அதிகாரம் எந்த நாட்லயும் மக்களுக்கு கிடையாது தெரியுமா?”

“அதுதான் ஏன் மக்களுக்கு அதிகாரம் கொடுக்க மாட்டுறாங்க?”

கோயம்பேடு“கொடுத்தால் பிரச்சனை.”

“யாருக்கு?”

“யாருக்கா அதிகாரிகளுக்கு, அரசாங்கத்துக்கு, மக்களுக்கு எல்லாருக்குமே பிரச்சனை தன்.”

“மக்களுக்கு என்ன பிரச்சனை? உங்ககிட்ட கேட்டமாதிரி லஞ்சம் கேட்டா மக்கள் அவனை மாத்திட்டு இன்னொரு வி.ஓவை போட போறாங்க. இதுல மக்களுக்கு என்ன பிரச்சணை?”

“ஆமா. இது நல்லா தான் இருக்கு.ஆனா இங்க அப்படி இல்ல. அதிகாரியோட சர்வாதிகாரமா தான் இருக்கு.”

தன் சொந்த அனுபவத்திலிருந்து இது போலிஜனநாயகம், ஆளும்வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்பதை உழைக்கும் மக்களுக்கு தெரியாமல் இல்லை. ஆனால் வாழையடி வாழையாக இதுதான் மாற்ற முடியாத யதார்த்தம் என்று ஒரு மத-கடவுள் நம்பிக்கை போல நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை தர்க்கப்படி உடைத்துப் பார்த்தால் அதில் நியாயமான காரணம் என்று ஒன்றுமே இல்லை. இது அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் இது வெறும் நம்பிக்கை.

“சரிண்ணே பாக்கலாம்” என்றபடி கிளம்பினோம்..

ற்று தூரத்தில் லோடு ஆட்டோவில் ஒருவர் அமர்ந்திருந்தார் அவரிடம் பேச்சு கொடுத்தோம்.

“தேர்தலில் ஓட்டு போடுறதை சிலர் கடமைனு சொல்றாங்க சிலர் உரிமைனு சொல்றாங்க? நீங்க சரியா சொல்லுங்கண்ணே ஓட்டு போடுறது கடமையா, உரிமையா?”

“ரெண்டும்தான்.”

“நீங்க எதுக்குனே ஓட்டு போடுறீங்க?”

கோயம்பேடு தொழிலாளர்கள்“போனவாட்டி ரெட்டை இலைக்கு போட்டேன். இப்போ விஜயகாந்துக்கு போடலாம்னிட்டு இருக்கேன்.”

“அதகேக்கலைனே.. என்ன காரணத்துக்காக ஓட்டு போடுறீங்க?”

“மக்களுக்கு எதாவது நல்லது பண்ணுவாங்கனுட்டு தான். “

“இதுவரைக்கும் என்ன நல்லது பண்ணிருக்காங்க?”

“என்ன பண்ணிருக்காங்க. இந்தா இந்த வண்டி தான் ஓட்டுறேன். தெனம் டீசல் வெல கூடுது. முன்னாடியாச்சி எப்பயாது கூடும்.இப்போலாம் அடிக்கடி கூடுது. பழ லோட எடுத்துட்டு போய் கடைகள்ல போடனும், அதுல கெடைக்குறதுதான். டீசல் வெல கூடுனா வெலவாசியும் கூடிரும். இதுல வீட்ட பாத்துக்கனும், புள்ளைகள படிக்க வெக்கனும். இதெல்லாம் அரசியல்வாதி எங்க யோசிக்குறான்.”

“ஆனாலும் ஓட்டு போடுறீங்களே அதுதான் ஏன்னு கேக்குறேன்”

“வேற என்ன பண்றது. ஜனநாயக உரிமைல”

“நீங்க டிரைவரா இருக்கிறீங்க,  சொல்லுங்க. டிராஃபிக் போலீஸ்கிட்டயோ இல்ல போலீஸ் ஸ்டேசன்லயோ போய் ஜனநாயக உரிமைனு  பேசமுடியுமா?”

“அங்க நமக்கெல்லாம் ஏது மரியாதை. போலீஸ்காரனுக்கே தெரியும் நம்ம பக்கம் தான் நியாயம் இருக்குனு. ஆனா யாருகிட்ட பணம, காசு இருக்கோ அவனுக்கு ஆதரவாதான் பேசுவான். அது தான் நீதி”

“அப்போ ஜனநாயக உரிமையே இல்லைனு சொல்ல வாரீங்களா?

“எங்க இருக்கு, எதுவும் இல்ல.”

“அப்புறம் ஏன் ஓட்டு போடுறீங்க”

“இப்படி ஏன் எதுக்குனு யோசிச்சி பாத்தா ஓட்டே போடக்கூடாது. அதுனாலதான் யோசிக்குறதே இல்ல. யோசிச்சி மட்டும் என்ன ஆயிட போவுது. போடாம விட்டுறவா? நீங்களே சொல்லுங்க (ஓட்டு போடுவதற்காக நாம் விழிப்புணர்வு செய்வதாக நினைத்துக் கொண்டார்)” விரக்தியாக பேசினார்.

“அது போடுங்க, போடாம இருங்க. ஆனா யோசிச்சி பாத்தாதான் என்ன?”

“என்னைக்காவது ஒரு நாள் சாவு வரதான் போறோம். அதுக்காக அதையே நெனச்சிகிட்டு ஒன்னும் பண்ணாம இருக்கமுடியுமா? அதுமாதிரிதான். யாரையாவது நம்புறோம் ஏமாத்திறான். திருந்திட்டேனு சொல்றான் சரினு போட்டா, மறுபடியும் ஏமாத்துறான். நாம என்ன பண்ணமுடியும். நம்பிக்கைதனே வாழ்க்கை. நம்புறோம் ஏமாத்திருதான்”

“இப்படி அம்பது அறுபது வருசமாக ஏமாந்துட்டே இருந்தா நாம முட்டாளுனுதான அர்த்தம்.”

சட்டென்று கோபமாகிவிட்டார். சற்றே குரலை உயர்த்தி

“நான் முட்டாள் எல்லாம் கிடையாது. அவங்கதான் என்ன ஏமாத்துறாங்க” என்றார்.

கோயம்பேடுருவர் பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள். மற்றவர்களிடம் கேட்ட கேள்விகளையே கேட்டோம்.

“ஜனநாயகமெல்லாம் இருக்கு. ஆனா மக்களுக்குதான் எப்படி பயன்படுத்துறதுனு தெரியல. இப்போ இங்க ஒரு 50 முதலாளி இருக்கானு வெச்சிக்குவோம். ஏதாவது கட்சியில இருப்பாங்க. தேர்தல் அன்னைக்கு வேல பாக்குறவங்க கிட்ட நூறோ இருநூறோ குடுத்து அவங்க அவங்க கட்சிக்கு ஓட்டு போட சொல்றாங்க. இவங்களும் மாத்தி போடுறதில்ல.

அன்னைக்கு தேவய தான் பாக்குறான். விழிப்புணர்வு இல்ல.”

“அவங்க வாழ்நிலைமை அப்படி இருக்கு அதுனால வாங்குறாங்க?”

“சரி வாங்கிட்டு மாத்தி போடலாம்ல”

“யாருக்கு போடுறது. எல்லாரும் அயோக்கியனால இருக்கான்.”

“நல்லவங்க இருப்பாங்க. நாம தான் தேடனும். நான் அப்படி தேடிதான் என் தலைவனை கண்டுபிடிச்சேன்.”

“உங்க தலைவரு வந்தா எல்லாம் மாறிருமா?”

“கண்டிப்பா மாறிரும். ஒரு குடும்பத்துல குடும்ப தலைவன் ஸ்டிராங்கா இருந்தாதான் குடும்பம் நடக்கும். அதுமாதிரி என் தலைவன் வந்தா எல்லாம் மாறும்.”

“என்ன மாறும்?”

“இப்போ பாருங்க விவசாயம் பண்றவன் யாரோ ஒருத்தன். அந்த விவசாயிகிட்ட ஐந்து ரூபாய்க்கு வாங்கி, அத இன்னொருத்தன்கிட்ட அதிகவிலைக்கு விக்குறான். அப்படி கைமாறி கைமாறி கடைசில இங்க வரும்போது பல மடங்கு வெல அதிகமாயிருது. அரசாங்கமே எடுத்து நடத்தனும். அப்போ விலை கம்மியா இருக்கும்.”

“சரி. உங்க தலைவர் வந்தா இத பண்ணுவாரா?”

“கண்டிப்பா பண்ணுவார்”

“உங்க தலைவர் யாருண்ணு தெரியல… ஆனாலும் ஒன்னு கேக்குறேன். நீங்க நியாயமா சொல்லணும். உங்க கட்சியில இருக்குற மாவட்டம் வட்டம் இப்படி பெரிய தலைகள் இப்படி தனியார் தொழில்தான பண்றாங்க. ?”

“ஆமா. ”

“அப்போ எப்படி உங்க தலைவர் வந்தா மட்டும் எப்படி எல்லாம் மாத்துவார்?”

“ம்ம்ம்ம்ம். அப்போ இப்ப இருக்குற மாதிரி இருக்காது. கொஞ்சமா அடிப்பாங்க.”

மக்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறதா என்று கேட்டதற்கு அரசு அலுவலகத்தில் தனக்கு நேர்ந்த அவமானங்களை விளக்கினார்.

“நீங்க தான் ஜனநாயகம் இருக்குனு சொன்னீங்க. எதுத்து கேக்க வேண்டியதுதான?”

“ஜனநாயகம் இருக்கு. ஆனா கம்மியா இருக்கு”

“சரி உங்க தலைவரு யாருன்னு சொல்லவேயில்லயே?”

“நான் கம்யூனிஸ்டு கட்சி”

“அப்போ தா.பாண்டியனா?”

“இல்ல சி.பி,எம்.“

“ஜி.ராமகிருஷ்ணனா?”

“ஆமா.”

“உங்கள தான் ஜெயலலிதா அடிச்சி ஓட ஓட வெரட்டிட்டாங்களே?”

“அப்படிலாம் இல்ல. நாஙக பிரிஞ்சிட்டோம். அவங்க தான் கூட்டணின்னு சொன்னாங்க இப்போ இல்லைனு சொல்றாங்க.”

தலைவன் தலைவன் என்று கம்யூனிஸ்டு கட்சியில் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணம் இருந்ததால் கூட இருந்த தோழரிடம் “இவர் சி.பி,எம் ஆக இருக்க முடியாது, பொய் சொல்றாரு” என்றேன்.

“இல்ல தோழர் இவர் 100%  சி.பி,எம் தான்”

“எப்படி சொல்றீங்க”

“கடைசியா பார்த்த தொழிலாளியிடம் முட்டாளா என்று கேட்டதும் அவருக்கு வந்த கோபத்த பாத்தீங்களா? அது உழைக்கும் மக்களோட சுயமரியாதை குணம். இவர் கட்சிய பத்தி நாம் இவ்வளவு சொல்லியும் ஏதாவது கோவம் வந்திச்சா? இவர் வேற கட்சிகாரரா இருக்குறது கஷ்டம். கண்டிப்பா சி.பி,எம் இல்ல சிபிஐ தான்.”

தேர்தல் ஜனநாயகத்தை மலை போல நம்பி பருவந்தோறும் தவறாமல் விரதமிருந்து மாலை போட்டு யாத்திரை செல்லும் சிபிஎம் உருவாக்கியிருக்கும் ஜனநாயக விழிப்புணர்ச்சியே இதுதான் என்றால் மற்றவர்களை பற்றி குறை சொல்ல ஒன்றுமில்லை.

கோயம்பேட்டில் நாம் சந்தித்த பெரும்பாலான தொழிலாளிகள் ஏறக்குறைய இப்படித்தான் பேசினார்கள். அதாவது வாக்களிப்பது  காரண காரியங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சடங்கு. அந்த சடங்கு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு இருக்கும் குறைந்த பட்ச உரிமைகள், அங்கீகாரம் முதலியவை போய்விடும். இந்த பயத்தைத் தாண்டி இந்த ஜனநாயகத்தின் மேல் அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த ஜனநாயகத்தின் மூலம் ஆதாயம் அடைபவர்கள் தேர்தலில் வாக்களிப்பதை தெய்வீக கடமையாக சித்தரிப்பதும், பலனேதும் அற்ற பெரும்பான்மை மக்கள் அதை சலிப்புடனான சடங்காக கருதுவதுமான விசித்திரமான முரண்பாட்டிற்கு பதில் தெரிந்தால் நீங்கள் வாக்களிக்கமாட்டீர்கள். மாற்று வழிகளைத் தேடுவீர்கள். வாருங்கள் காட்டுகிறோம்.

–    வினவு செய்தியாளர்கள்.

படங்கள் : இணையத்திலிருந்து