மக்கள் அதிகாரத்தின் சீர்காழி பகுதி தோழரும் நக்சல்பாரி புரட்சியாளருமான தோழர் அம்பிகாபதி மறைவுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பஞ்சலி செலுத்துகிறது!
மக்கள் அதிகாரம் சீர்காழி பகுதி தோழர் அம்பிகாபதி இன்று (27/06/2021) மறைவெய்துள்ளார். 37 ஆண்டுகளுக்கு மேலாக நக்சல்பாரி புரட்சியாளராக இருந்து இறுதிவரை ஆளும் வர்க்கத்துக்கும் எதிரிகளுக்கும் எதிராக மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடித்தவர் அவர்.
பு.ஜ வாசகர் வட்டத்தை 37 ஆண்டுகளுக்கு முன் துவக்கிவைத்து சீர்காழி பகுதி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளராக இருந்து பின்னர் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளராக பல ஆண்டுகள் இருந்து வந்தார்.
சீர்குலைவுவாதிகள், பிழைப்புவாதிகளுக்கு எதிராக உறுதியாக நின்று மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கையையும் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடித்தவர் அவர். விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்திய பல்வேறு போராட்டங்களில் தலைமையேற்று நடத்தி வாழ்ந்தவர் அவர். இறால் பண்ணைக்கு எதிரான போராட்டத்தினை நடத்தி ஆளும் வர்க்கத்தின் நெருக்கடிகளையும் போலீசின் அடக்குமுறையையும் எதிர்த்த போராட்டத்தில் தோழரின் பங்கு அளப்பரியது.
மார்க்சிய – லெனினிய மாவோ சிந்தனைக்கெதிராக சீர்குலைவுவாதிகள் சதி செய்தபோது உறுதியாய் எதிர் கொண்ட தோழர் அம்பிகாபதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பஞ்சலி செலுத்துகிறது .
கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தின் போது டாஸ்மாக் கடைகளை மூடிய திமுக அரசு, பின் கொரோனா சற்று குறைய ஆரம்பித்ததும் டாஸ்மாக்கை திறந்துவிட்டது. மக்களிடம் வருமானம் இல்லாத நேரத்தில் சாராயக் கடைகள் திறப்பது குறித்து பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்னர் அதற்குப் பதில் கூறிய தி.மு.க அரசு, கள்ளச்சாராயம் பெருகக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் டாஸ்மாக் திறந்தோம் என்றது.
கொரோனா காலத்தில் எதற்கு டாஸ்மாக் கடைகள்? மூடு டாஸ்மாகை !! என்று மக்கள் அதிகாரம் அமைப்பு தொடர்ந்து தமது கண்டனத்தை பதிவு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகாரம் தருமபுரி தோழர்கள் மூடு டாஸ்மாக்கை என்று பாடிய பாடலை தற்போது வெளியிடுகிறோம்
காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!
பாடல் வரிகள் :
மூடிடு மூடிடு டாஸ்மாக்கை மூடிடு!
சாகுது சாகுது சமுதாயம் சாகுது!
வருமானம் வருமென்று டாஸ்மாக்கை தொறந்தாயே
தமிழ்நாட்டை சீரழிக்க துணைநின்று போனாயே
டாஸ்மாக்கை தொறந்தாயே
கட்சிகளை நம்பி பயனேதுமில்லை|
போராட்டமில்லாமல் விடிவேதுமில்லை
பள்ளிகளை திறக்காமல் படிப்பேதுமில்லை
வேலையே இல்லாமல் விலைவாசி தொல்லை
வருகாலம் இருளாச்சி
வாழ்க்கையே சருகாச்சி
போராட்டம் ஒன்றுதான் முடிவான தீர்வாச்சி
வருங்காலம் நமக்கானதே – தோழா..!
எடப்பாடி ஸ்டாலினும் வெவ்வேறு இல்லை
சாராயக்கடை திறந்து அடிச்சாங்க கொள்ளை
மதுவாலே தொடருது தினமிங்கு தொல்லை
மதுகடையை மூடாமல் விடிவேதுமில்லை
மனுகொடுத்து மூடாது
மன்றாடி தீராது
போராடி வீழ்த்தாமல்
டாஸ்மாக்கு மூடாது
வாருங்கள் போராடுவோம்
ஒன்று சேருங்கள் நாம் வெல்லுவோம்..!
தேர்தலில் வாக்களித்து தீர்வேதும் இல்லை
வாய்க்கரிசி பணத்தாலே வாழ்வேதும் இல்லை
கருஞ்சட்டை போட்டு நீ கடை மூடு சொன்னாய்
அதிகாரம் வந்தவுடன் கடை திறந்து நின்றாய்
கொரோனா வந்தாச்சி
ஊரெல்லாம் பிணமாச்சி
மதுகடை தொறந்தாச்சி
நாடு சுடுகாடாச்சி
அஞ்சாமல் போராடுவோம் – தோழா
அஞ்சாமல் போராடுவோம்..!
பாடல் : மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்.
சமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள் !
Gopinath.P A/C 6720415617. Indian Bank Pennagaram Branch IFSC NO : IDIB000P076.
பாடல் – இசை :
புரட்சிகர கலைக்குழு, தருமபுரி
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்.
செல் : 9790138614
பாசிசம் என்றுமே தமது செயல்திட்டங்களை எவ்வித ஈவிரக்கமின்றியும் நடைமுறைப்படுத்துபவர்களையே அதிகாரத்தில் அமர வைக்கும். அந்த வகையில் இந்திய அளவிலான பாசிச சக்தியான ஆர்.எஸ்.எஸ்.-ஸால் பிரதமர் பதவிக்கு அமர வைக்கப்பட்டவர்தான் நரேந்திர மோடி.
இந்திய ஒன்றியத்தின் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கபரிவாரக் கும்பலின் கார்ப்பரேட் ஆதரவு இந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தும்வகையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதற்குப் பொருத்தமான அதிகாரிகளின் மூலமாகவும், ஆளுநர்கள் மூலமாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இலட்சத் தீவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிரஃபுல் படேல் எனும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவரை அதன் நிர்வாகியாக நியமித்துள்ளது மோடி அரசு. பிரஃபுல் படேலை அந்தப் பதவிக்கு மோடி அரசு தேர்ந்தெடுத்தது ஏன்? அவரது பின்னணி என்ன ? என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
யார் இந்த பிரஃபுல் படேல்?
குஜராத்தில் மோடியின் ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர், இந்த பிரஃபுல் படேல். இவர் மந்திரியான மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு ஒன்பது கோடியாக உயர்ந்தது.
அடுத்து நடந்த தேர்தலில் மக்களிடம் மதிப்பிழந்து தோற்றுப் போனார் இந்த பிரஃபுல் படேல். மோடி மாநில அரசியலிலிருந்து விலகி தேசிய அரசியலில் புகுந்து 2014-ல் பிரதமர் ஆனதும் மக்களால் விரட்டப்பட்டு பதவியில் இல்லாதவர்கள் கவர்னர்கள் ஆக்கப்பட்டனர்.
இப்படியாக டிசம்பர், 2016-ல் தத்ரா – நாகர் ஹவேலி பகுதியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார் இந்த பிரஃபுல் படேல். இங்கு பதவிக்கு வந்ததும் ஜனநாயக உரிமைகள் ஒன்று பாக்கியில்லாமல் ஒழிக்கப்பட்டு, தனது விருப்பத்திற்கேற்ப ஆட்டம் போட்டார் படேல். இதற்குப் பரிசு போல புதிய யூனியன் பகுதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட டையூ-டாமன் மற்றும் தத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பகுதியின் நிர்வாகி மற்றும் லெப்டினண்ட் கவர்னராக ஜனவரி 2020-ல் நியமிக்கப்பட்டார்.
டையூ-டாமன் மற்றும் தத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பகுதி வளம் மிக்க தொழில் பகுதியாக மட்டுமின்றி பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. ரிலையன்ஸ், ஸ்டெர்லைட் உட்பட பல பகாசுர பன்னாட்டுக் கம்பனிகள் இங்கு தொழில் செய்து வருகின்றன. இராசயன நிறுவனங்கள், உயிர் காக்கும் மருந்துக் கம்பனிகள் உட்பட பல நிறுவனங்களின் உற்பத்திகள் இங்கு நடக்கின்றன. சுற்றுலா மையம் என்ற பெயரில் குடி, கூத்து, கும்மாளம் என சீரழிவுக் கலாச்சாரம் இங்கு சகஜமாக நடக்கிறது.
2% வரி குறைப்பு கூட பல கோடிகளை இங்கு மிச்சம் பிடிக்கும். இந்த யூனியன் பகுதியில் தாதாக்கள் வைத்ததே சட்டம் என மாஃபியா கும்பலின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. சிறு நிறுவனங்களிடம் மிரட்டிக் காசு பறிப்பது ஒரு வகை வசூல். உள்ளூர் ஆட்களிடம் மிரட்டி குறைந்த விலையில் நிலங்களைப் பறித்து, கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் விலையில் விற்கும் ரியல் எஸ்டேட் இன்னொரு வகை வசூல் என எல்லா இடங்களிலும் நடப்பதைப் போலவே இங்கும் நடந்து கொண்டிருந்தது.
பிரஃபுல் நிர்வாகியாக, லெப்டினண்ட் கவர்னராக பொறுப்பேற்றதும், வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட பல வரிகள் விசம் போல ஏறின. ஒன்றிரண்டு மடங்கல்ல, அதிகபட்சமாக 1000% வரை வரி உயர்வு. சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்வு சூறையாடப்பட்டது என்றால் மிகையல்ல. அப்பாவி மக்களுக்கு வரி உயர்வு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை என மோடியின் வழியில் தப்பாமல் நடந்தார் படேல்.
இதுவும் போதாது என்று ஹோட்டல்களில் உள்ள பார்களின் அனுமதியை மீண்டும் பரிசீலிப்பதாகக் கூறி ஏற்கெனவே அங்கு பார்கள் வைத்திருந்த மண்ணின் மைந்தர்களிடம் இருந்து அனுமதியை மறுத்து, தனக்கு வேண்டிய குஜராத் பணியாக்களுக்கு புதியதாக அனுமதி வழங்கினார்.
இவை பற்றி உள்ளூர் தலைவர்கள் கேள்வி எழுப்பலாம், போராடலாம் என்பதாலேயே குஜராத் மாநிலத்தின் 1985-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சமூக விரோத செயல் தடுப்புச் சட்டம் டையூ-டாமன் யூனியன் பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டது. யூனியன் பகுதியின் மொத்த ஜனநாயக உரிமைகளும் ஒழித்துக் கட்டப்பட்டன. அதன்பின் படேலின் ஆட்டம் தொடங்கியது.
ஏற்கனவே இங்கு சட்டமன்றம் இல்லாததால் வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசாங்கம் இயங்கி வந்தது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறித்து தனக்கு வேண்டிய அதிகாரிகளின் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்தார் படேல். அவர்களின் உத்தரவுப்படி ஆட்சி நடக்கத் தொடங்கியது.
டையூ-டாமன் மற்றும் தத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பகுதி
இங்கிருந்து ஒரு எம்.பி தேர்வு செய்யப்படுவார். அவரும் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருப்பார். படேல் அதிகாரத்திற்கு வந்ததும் இந்த எம்.பி.-யும் ஓரம் கட்டப்பட்டார். கடைசியாக எம்.பி.-யாக இருந்த 58 வயதான மோகன் டெல்கர், இதற்கு முன்னர் 7 முறை எம்.பி.-யாக இருந்தவர். சுயேட்சையாகவே நின்று வெற்றி பெற்ற மக்கள் செல்வாக்குள்ளவர். இவர் மும்பையில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். 15 பக்க கடிதம் மூலம் நிர்வாகி பிரஃபுல் படேல், எஸ்.பி, கலெக்டர் ஆகியோர்தான் தனது தற்கொலைக்குக் காரணம் என விலாவரியாக எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துயுள்ளனர். அவர் நடத்தி வந்த மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியை ‘நமோ’ என்ற மற்றொரு மருத்துவக் கல்லூரிக்கு தானமாகத் தர நிர்ப்பந்தித்து, தானமாகத் தந்தவுடன் எம்.பி-யின் மருத்துவக் கல்லூரியை படேலும் அவரது அதிகாரிகளும் புல்டோசர் கொண்டு வந்து தகர்த்துத் தரைமட்டமாக்குகிறார்கள். இந்த எம்.பி கட்டிய ‘ஆதிவாசி கல்யாண் பவன்’ என்ற கட்டிடத்தையும் தகர்த்தெறிகின்றனர்.
இந்த பகுதியில் உள்ளூர் மக்கள் நிரந்தரமாக்கப்படாமல் தற்காலிக அரசு ஊழியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். கொரோனா காலத்தில் பகுதி மக்களின் வேலையைப் பாதுகாக்க எம்.பி முயல, பிரஃபுல் படேலோ அவர்களை வேலையிலிருந்து துரத்தவே முயல்கிறார். எம்.பி தமது பூர்வகுடி மக்களுக்கு சேவை செய்ய அனுமதி மறுத்து, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவரை அவமானப் படுத்துகிறார்கள். தமிழகத்தில் ஒரு அரசு விழாவுக்கு எதிர்க் கட்சி எம்.பி.யை அழைக்காவிட்டால் அதை மிகப்பெரும் பிரச்சனை ஆக்குவதோடு ஒப்பிட்டுப் பாருங்கள், அந்த தீவின் ஒரே ஒரு எம்.பி.க்கு எந்த அளவு மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
எம்.பி-யின் கடிதப்படி பிரஃபுல் படேல் மற்றும் பிற அதிகாரிகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், இன்று வரை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த டாமன் பகுதியின் எல்லா ஒப்பந்தங்களும் படேல் பதவியேற்ற நாள் முதல் சில குஜராத் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே போகிறது. குறிப்பாக குஜராத்தின் கோத்ராவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கமலேஷ்குமார், நவீன் சந்த்ரா ஷா என்பவரது ’ஆர்கேசி இன்ஃப்ரா பில்ட்’ என்ற நிறுவனத்திற்கே பெரிய ஒப்பந்தப் பணிகள் செல்கின்றன. இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் இரண்டு பெரிய ஒப்பந்தங்கள் அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச டெண்டர் தொகையை விட 41.8% மற்றும் 33% அதிகப்படியான டெண்டருக்கு இந்த நிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ளது.
அரசு விதிகளின்படி அரசு நிர்ணயித்த தொகையை விட 30%க்கு அதிகமாக டெண்டர் கோரப்பட்டால் அவை மறு டெண்டர் விடப்பட வேண்டும். இந்த விதி மீறல் பற்றி படேலிடம் கேட்டதற்கு இதுவரை அவரிடமிருந்து பதில் இல்லை. இந்த விதி மீறலில் சம்பத்தப்பட்ட ’ஆர்கேசி இன்ஃப்ரா பில்ட்’ நிறுவனத்திடம் கேட்டதற்கும் இப்போது வரை பதில் இல்லை. இங்கும் குஜராத் போலவே வேறு யாரும் டெண்டர் கேட்கக் கூடாது என வாய் வழி உத்தரவு போடப்பட்டதாக செய்தி. இது பற்றி படேலிடம் கேட்டதற்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்தப் பின்னணியில்தான் இலட்சத் தீவில் நடப்பதைப் பரிசீலிக்க வேண்டும்.
இப்படி குஜராத் பணியா கும்பலுக்கு விசுவாசமாக சேவை செய்ததால்தான் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய இந்த படேலுக்கு இலட்சத் தீவு யூனியன் பகுதியின் லெப்டினண்ட் கவர்னர் பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது.
ஓரளவு ஜனநாயகமாகச் செயல்படும் பகுதிகளையும் மக்களையும் கண்டாலே இந்த பாசிச கும்பலுக்கு ஆகவே ஆகாது. தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் அன்றாடம் நடக்கும் அரசியல் நடவடிக்கைகளைக் கண்டாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். நாட்டிலுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு இலட்சத் தீவு பற்றி இதுவரை பெரிய அளவு எதுவும் தெரியாது. இந்தியாவிலேயே குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடக்கும் பகுதி இந்த இலட்சத் தீவு யூனியன் பகுதிதான். இந்தப் பகுதி மக்கள் மீன் பிடித்தலும், சுற்றுலாவுமே தீவின் முதன்மை தொழில்கள்.
ஆனால், பிரஃபுல் படேல் பொறுப்பேற்றதும் முதலில் செய்த வேலை இப்பகுதியில் குண்டர் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது தான். கிரிமினல் குற்றம் இல்லாத பகுதிக்கு குண்டர் சட்டத்தின் தேவை என்ன? தன்னைப் போலவே பிறரையும் நேசி என்பது இதுதானோ? போகட்டும் ! தமது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தினால் மக்கள் போராடுவார்கள் எனத் தெரிந்தே குண்டர் சட்டம் போடப்பட்டது. அதுதான் இப்போது அங்கு நடந்து கொண்டிருப்பதும் கூட. மாடுக்கறிக்கு தடை, 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்கத் தடை, உள்ளூர் மக்களின் மீன்பிடித் தொழிலை ஒழிப்பது என அடுத்தடுத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
தீவின் சுற்றுச்சூழல், ஜனநாயக – சமூக வாழ்வியலை ஒழித்துக் கட்டும் அதே வேலையில் டையூ-டாமன், தத்ரா-நாகர் ஹவேலியில் செய்தது போலவே வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு கட்டுமானப் பணிகள், சேவைகளுக்கு டெண்டர் கோரப்பட்டது. ஏற்கனவே, இருந்த பல பழைய ஒப்பந்தங்கள் – அமுல் பால் வினியோகம், கப்பல் போக்குவரத்து என பலவும் – புதிய நிறுவனங்களுக்கு மாற்றி விடப்பட்டன. உள்ளூர் மக்களின் நிரந்தரமற்ற அரசு வேலைகள் ஒழிக்கப்பட்டன. 150 கோடிக்கு புதிய கட்டுமான, கட்டிடப் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. என்னென்ன பணிகள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
டையூ-டாமன், தத்ரா-நாகர் ஹவேலி தீவுகளில் இறக்கி விடப்பட்ட நிர்வாகிகள் தற்போது இலட்சத் தீவுகளுக்கு மாற்றப்படுகின்றனர். அங்கு செய்தது போலவே இங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் ஓரம் கட்டப்படுகின்றனர். தீவின் பூர்வகுடிகளின் உணவு, வேலை, பொருளாதாரம் என அனைத்தும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. பாசிச கும்பலின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் வேகமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது.
கொரோனா முதல் அலையில் இங்கு ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. பிரஃபுல் படேல் பொறுப்பேற்ற ஒரே மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகளால் 65,000 மக்கள் தொகை கொண்ட இங்கு இன்று தினமும் 1,000 பேருக்கு மேல் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தொற்று தொடங்கியதும் சாவு எண்ணிக்கை கூடிக் கொண்டுள்ளது.
அமைதியான அந்தத் தீவு மக்கள் தமது தீவின் சுற்றுச் சூழலைக் காப்பாற்ற மட்டுமல்ல, தமது வாழ்வை, வாழ்வாதாரத்தைக் காக்கவும் போராடி வருகின்றனர். வழக்கம் போல மக்கள் வாழ்வைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி தமது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை, கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கான சேவைகளை நடைமுறைப் படுத்துவதிலேயே குறியாக உள்ளது பார்ப்பன இந்து மதவெறி பாசிச கும்பல்.
மக்களின் போராட்டத்தைக் கண்டு கேரள உயர் நீதிமன்றம் தனது 22-06-’21 தேதிய தீர்ப்பு மூலம் பிரஃபுல் படேலின் அவசர சட்டங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதை மட்டும் நம்பி இருக்காமல் மக்கள் தமது விடாப்பிடியான உறுதியான போராட்டத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்!
நாகராசு செய்தி ஆதாரம் : The Wire, Countercurrents.
இந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாம் அலையில் பிணவறைகள் நிரம்பிக் கொண்டிருந்தபோது, தடுப்பூசி போடுவதை மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டு தொலைக்காட்சியில் தோன்றி நீலிக்கண்ணீர் வடித்தார் பிரதமர் மோடி. இரண்டாம் அலை ஓய்ந்த நிலையில், தடுப்பூசி போடுவதை மாநிலங்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டதோடு, ஒரே நாளில் அதிகபட்சமாக தடுப்பூசி போட்டு புதிய ‘உலக சாதனை’ படைத்ததாக தனக்குத்தானே பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டது மோடி அரசு.
கடந்த திங்களன்று (21.06.2021) மட்டும் 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டதாக பா.ஜ.க. அரசு கூறிக்கொள்ளும் ‘உலக சாதனை’யின் உண்மைத்தன்மை என்ன என்பதை ஸ்கரால் இணையதளம் தரவுகளுடன் தோலுரித்துள்ளது.
அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை மத்தியப் பிரதேச மாநிலம் போட்டது. திங்களன்று 16.9 லட்சம் தடுப்பூசிகள் மத்திய பிரதேசத்தில் போட்டப்பட்டன. ஆனால், அதற்கு முந்தைய நாள், வெறும் 692 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே அங்கு போடப்பட்டதாக மத்திய அரசின் தடுப்பூசி தளமான கோவின் கூறுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் ஜூன் 17 முதலே தடுப்பூசி போடுவதில் மந்தநிலை தொடங்கியுள்ளது. ஜூன் 16 அன்று 338,847 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டாலும், அடுத்த நான்கு நாட்களில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதைக் காட்டிகிறது புள்ளி விவரம். ஜூன் 17 அன்று 124,226 டோஸ், ஜூன் 18 அன்று 14,862 டோஸ், ஜூன் 19 அன்று 22,006 டோஸ், மற்றும் ஜூன் 20 அன்று 692 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முந்தைய நான்கு நாட்களுக்கான தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டு கணக்குக் காட்டுவதற்கென்றே, ஜூன் 21-ஆம் நாளன்று அதிக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இப்போது விமர்சனம் செய்யப்பட்ட பின்னர், தினசரி 17 லட்சம் தடுப்பூசிகளை போட வேண்டிய நிலைக்கு மத்தியப் பிரதேச அரசு தள்ளப்பட்டுள்ளது.
இப்படி அதிகப்படியான தடுப்பூசி போடப்படுவதற்கு முக்கியக் காரணம், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை 18-44 வயதினருக்கும் போடலாம் என மத்திய அரசின் அறிவித்ததுதான்.
ஒரே நாளில் 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டதுதான் உலகத்திலேயே அதிகளவு சாதனை என சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ட்வீட் செய்தார். ஆனால், ஜூன் 9-ம் தேதி அன்று நேச்சர் இதழ், சீனாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக நாளொன்றுக்கு இரண்டு கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறியுள்ளது. இந்தச் செய்தியே மோடி அரசின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது.
இதே போன்ற உத்திகளைத்தான் பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் கையாளப்பட்டிருக்கிறது. முந்தைய நாளான ஜூன் 20-ம் தேதி தடுப்பூசி மிகக் குறைவாகவே போடப்பட்டிருக்கிறது.
அதிகப்படியான தடுப்பூசி போடப்பட்ட மாநிலங்களில் இரண்டாவதாக உள்ள கர்நாடகத்தில், ஜூன் 21-அன்று 11.21 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை ஜூன் 20 அன்று 68, 172 தடுப்பூசிகளே போடப்பட்டுள்ளன. இதைக்காட்டிலும் இதற்கு முந்தைய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் ஜூன் 6-ஆம் நாள் 1,26,386 பேருக்கும் ஜூன் 13-ஆம் நாள் 96,956 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் திங்களன்று 7,25,898 தடுப்பூசிகளை போட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெறும் 8,800 என்ற குறைந்த அளவிலேயே போட்டது. இது முந்தைய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்பட்ட சராசரி அளவை விட 35% குறைவாக இருந்தது.
குஜராத் மாநிலத்தில் திங்களன்று 5,10,434 தடுப்பூசி போட்டப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 1,89,953 தடுப்பூசிகளே போட்டப்பட்டன. இது 17 நாட்களில் மிகக் குறைந்த அளவாக உள்ளதாக புள்ளி விவரம் காட்டுகிறது.
தொடர்ந்து நான்கு நாட்கள் அசாமில் தடுப்பூசி வரைபடம் உயர்வில் இருந்துவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜூன் 20 அன்று 33,654 தடுப்பூசிகளே போடப்பட்டு கூர்மையான வீழ்ச்சியைப் பதிவு செய்தது. திங்களன்று 360,707 என்ற அதிகபட்ச சாதனையை எட்டியதாக பா.ஜ.க. அரசுகள் வெற்றிக் கூச்சலிட்டன.
பா.ஜ.க. ஆட்சிபுரியாத பல பெரிய மாநிலங்களும் ஜூன் 20 அன்று தடுப்பூசி அளவைக் குறைத்தன. ஆனால், இது ஞாயிற்றுக்கிழமைகளில் காணப்படும் வழக்கமான வீழ்ச்சிக்கு ஏற்ப இருந்தது. அதுபோல, ஜூன் 21 அன்று தடுப்பூசி அளவு முந்தைய நாட்களை விட மிக அதிகமாகவும் இல்லை.
உதாரணமாக, மகாராஷ்டிரா ஜூன் 21 அன்று 3,83,495 தடுப்பூசி மருந்துகளை வழங்கியது, ஜூன் 19 அன்று வழங்கப்பட்ட 3,81,765 அளவுகளை விட இது மிக அதிகமானது இல்லை. ஜூன் 20 அன்று 1,13,109 தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால், முந்தைய ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்ட 87,273 என்ற அளவுகளை விட அதிகமாக இருந்தது .
ராஜஸ்தானிலும் இதே நிலைதான், ஜூன் 11 அன்று செய்ததைப் போலவே, ஜூன் 21 அன்று 4.46 லட்சம் தடுப்பூசி மருந்துகளை வழங்கியது.
இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அரசியல் போட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், மையம் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு வழங்கியது. இருப்பினும், கோவிட்-19இன் கடுமையான இரண்டாவது அலையின்போது போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்காமல் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டின.
எனவே ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு கொள்முதல் கொள்கையை மாற்றியது. மேற்கு வங்கத்தைத் தவிர்த்து, 18-44 வயதுடையவர்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வாங்க மாநிலங்களை அனுமதித்தது. இதற்கிடையில், மத்திய அரசு 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாநிலங்களுக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கியது.
உச்சநீதிமன்றம், இளைய வயதினருக்காக தடுப்பூசி போடும் முடிவைக் கைவிட்டு, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கும் மத்திய அரசின் கொள்கையை விமர்சித்துள்ளது.
“உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றின் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கும் அரசு 18 – 44 வயதுடையவர்களுக்கு மட்டும் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்தது? எனவும் கேள்வி எழுப்பியது. இது தன்னிச்சையானது, பகுத்தறிவற்றது” எனவும் விமர்சித்திருந்தது.
ஜூன் 7-ம் தேதி, மத்திய அரசு தனது கொள்கையை பகுதியளவு மாற்றியமைத்தது; மாநிலங்களுக்கான தடுப்பூசிகளை வாங்குவதற்கான பொறுப்பை திரும்பப் பெற்றது. தடுப்பூசிகள் இப்போது அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என அறிவித்தது. இருப்பினும், தனியார் நிறுவனங்களுக்கு உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நேரடியாக சேவை கட்டணமாக ஒரு டோஸுக்கு ரூ.150-ஐ மட்டுமே செலுத்தி தடுப்பூசிகளை வாங்க அனுமதித்தது.
இத்தனை குளறுபடிகளுக்கு மத்தியில், ஒரே நாளில் உலகின் உச்சபட்ச அளவாக தடுப்பூசி போடப்பட்டதாக இட்டுக்கட்டப்பட்ட பொய்யை பா.ஜ.க.-வினர் கூறி வருகின்றனர். பா.ஜ.க அரசின் இந்தப் பொய்யை எந்தவித ஆய்வும் இன்றி வெகுமக்கள் ஊடகங்களும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
சேலம் : போலீஸ் நடத்திய படுகொலை ! போலீஸின் அதிகாரத்துக்கு எதிராக அணிதிரள்வோம் !
கண்டன அறிக்கை !
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பாப்பநாயக்கன் பட்டியில் ஏத்தாப்பூர் காவல் நிலைய தற்காலிக சோதனை சாவடியில் நேற்று போலீசால் ஒரு படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது.
இடையப்பட்டி முருகேசன் தன் இரு நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் வந்த போது மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு SSI பெரியசாமி தன் கையில் இருந்த லத்தியால் முருகேசனை கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இதில் முருகேசனின் உடலெங்கும் அடிபட்டதோடு பின்மண்டை உடைந்துள்ளது. முருகேசன் தன்னால் வலிதாங்க முடியவில்லை அடிக்க வேண்டாம் என்று கதறியும் தடுத்தும் கூட கேட்காமல் எஸ்.ஐ.பெரியசாமி அடித்ததில் மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் முருகேசன்.
வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்த முருகேசனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் செல்ல அவர்களை சேலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்திருக்கிறார்.
இச்சம்பவத்தில் சிறப்பு எஸ்.ஐ.பெரியசாமி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஊருக்கும் டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு ஊத்திக் கொடுக்கிறது அரசு. குடித்துவிட்டு வருபவர்களை தாக்கிக் கொல்கிறது போலீஸ்.
எத்தனை படுகொலைகளை செய்தாலும் அரசு அதிகாரிகளும் நீதிமன்றமும் நம்மை காப்பாற்றும் என்ற சிந்தனைதான் போலீஸே மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களை செய்யத் தூண்டுகின்றன.
யாரையும் தாக்கி, சித்திரவதை செய்து கொலை செய்யும் போலீஸ் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்காமல் இனி வாழவே முடியாது என்ற சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது போலீஸ். மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கம் மீண்டும் மேலெழும் என்பதற்கு போலீஸின் இந்த படுகொலையே இன்னொரு எடுத்துக்காட்டு.
தமிழக அரசே!
கொலைக்கு உடந்தையாக இருந்த அத்தனை போலீஸ்காரர்களையும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய் !
கொலை செய்யப்பட்ட முருகேசனின் குடும்பத்திற்கு உதவித் தொகை 25 லட்சம் ரூபாய் வழங்கு !
அவர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கு !
தோழமையுடன் தோழர் வெற்றிவேல் செழியன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
நீட் பற்றி நீட் ஆதரவாளர்களுள் சிலர் வைக்கும் கேள்விகள் ; அனைவருக்கும் சமூக நீதி என்கிறீர்கள், ஆனால் இதற்கு முன்பு இருந்த நுழைவுத்தேர்வு இல்லாத முறையிலும் கூட நாமக்கல் மற்றும் அதைச்சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பள்ளிகள் தானே அதிகம் மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டிருந்தன. அப்போதும் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு தானே இருந்தனர் என்று கேட்கின்றனர்.
எனது பதில் இதோ, நமது சமூகத்தை பொதுவாக பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து மூன்று தரநிலையாக பிரிக்கலாம்.
முதல் வகை : இவர்களால் தங்களது பிள்ளைகளுக்கு தேவையான கல்வியை அடைய எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய முடியும். பணம் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால், தங்களது பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் அது தான் இவர்களது ஆசை. க்ரீமி லேயரின் முதல் தட்டு இவர்கள். இவர்களுக்கு நீட் போன்ற பரீட்சை இருப்பது சாதகம் போன்று தோன்றினாலும் நீட் இல்லாமல் போனாலும் கூட இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
இரண்டாவது வகை : இவர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க என்ன செலவு வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள். அதற்காக தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்தை இழக்கத்துணிவார்கள். ஒரு சொத்தை விற்றாவது படிக்க வைப்பார்கள். இவர்களது பிள்ளைகளும் எளிதில் அனைத்து வகை கல்வி சார்ந்த வசதிகளை பெற்று விடும். இவர்கள் மேல்தட்டில் க்ரீமி லேயருக்கு அடுத்த வகையினர் நிச்சயம் இவர்கள் நீட்டினால் பாதிப்புக்குள்ளாகும் படிநிலையில் வருவர்.
மூன்றாவது வகை : மிடில் க்ளாஸ் எனப்படும் சமுதாயம் இவர்களுக்கு கல்விக்கு ஒதுக்க தனியே பெரும் சொத்தோ செல்வமோ இருக்காது. ஆனாலும் இவர்கள் பிள்ளை நன்றாக படித்தால் அதற்காக கடன் வாங்கியாவது படிக்க வைப்பார்கள். இவர்களால் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு தொகையை சீராக ஒதுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். தங்களிடம் இருக்கும் நகைகளை அடமானம் வைத்தோ அல்லது வங்கிகளில் வட்டிக்கு கடன் வாங்கி கல்விக்கு செலவு செய்வார்கள் நில்லுங்கள் இவர்களோடு கதை முடிந்து விடுவதில்லை.
நான்காவது படிநிலையில் ஒரு பெரும் கூட்டமே நமது நாட்டில் இருக்கிறது. இவர்களுக்கு கல்வி என்பது இலவசமாக கிடைத்தால் மட்டுமே உண்டு. அவர்களது சொந்த ஊரில் கிடைத்தாக வேண்டும். மேலும், கல்வியால் ஏற்படும் எந்த பொருள் செலவையும் இவர்களால் தாங்க இயலாது. கடன் யாரும் கொடுக்க மாட்டார்கள். வங்கிகள் இவர்களை மதிக்காது. இவர்களிடம் அடமானம் வைக்கவும் எதுவும் இருக்காது. இவர்கள் தான் நமது நாட்டில் பெரும்பான்மை மக்கள்.
இப்போது சொல்லுங்கள் நீட் என்பது நான் கூறிய இந்த படிநிலையில் யாரை பாதிக்கிறது என்று? பலரும் நான்காம் படிநிலை என்று கூறுவோம். ஆனால், கூர்ந்து நோக்கினால் தெரியும்.
நீட் என்பது முதல் தரத்தை தவிர மீதம் உள்ள மூன்று படிநிலைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் ஒரு பரீட்சை. இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் – மிடில் க்ளாஸ் சமுதாயம் தான். இரண்டாம் தர மக்கள் தங்களிடம் உள்ள பொருளை சொத்தை வித்தாவது கல்வியை அடைவார்கள்
நான்காம் தரத்தில் உள்ள மக்களுக்கு அடுத்த வேலை சாப்பாட்டுக்கே பிரச்சனை எனும் போது நீட் பற்றி பெரிய கவலை எல்லாம் இருக்காது. ஆனால் மூன்றாம் படிநிலையான மிடில் க்ளாஸ் மக்கள் தான். நீட் வந்ததில் இருந்து பெரும் பிரச்சினைக்கு உள்ளானவர்கள்.
சரி.. இதற்கு முன்பு இருந்த சமச்சீர் கல்வி முறை மற்றும் அதன் மூலம் மருத்துவர்கள் தேர்வான முறை எப்படி இருந்தது? அந்த முறையில் நான்கு தரத்தில் உள்ள மக்களின் பிள்ளைகளும் ஒரே சிலபஸ் பயின்றார்கள். அவர்கள் பயின்ற பள்ளிகள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம்.
ஆனால், பயின்ற புத்தகங்கள் ஒன்று. அவர்கள் வாழும் இடங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஒருவர் சென்னையில் இருக்கலாம். மற்றொருவர் சிவகங்கை ; இன்னுமொருவர் கொடைக்கானல் அருகே உள்ள ஏதோ ஒரு மலைக்கிராமமாக கூட இருக்கலாம். ஆனால், அனைவரும் பனிரெண்டாம் வகுப்பு பயில அவர்களது ஊரிலேயே சமமான வாய்ப்புகள் கிடைத்தன.
பனிரெண்டாம் வகுப்பு அவர்கள் இடத்திலேயே பரீட்சை எழுதுவார்கள். பரீட்சை எழுதவென தனியே மெனக்கெட்டு எங்கும் செல்லத்தேவையில்லை. அவர்கள் ஊரிலேயே தேர்வு சென்டர் இருக்கும். பெரும்பாலும் அவர்களது பள்ளியிலேயே தேர்வு நடக்கும். தேர்வு முடிவுகள் வரும். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண் கொண்டு அவர்கள் மருத்துவராவது முடிவாகும்.
ஆனால், நீட் புகுத்தப்பட்ட பின் நிலைமை என்ன ? நீட் எனும் பரீட்சை என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தின் மூலம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், சி.பி.எஸ்.சி. சிலபசில் எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் கூட மீண்டும் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ ஸ்பெசல் கோச்சிங் சென்டரில் படித்தால் தான் நீட்டை க்ராக் செய்ய இயலும் என்ற நிலை இருக்கிறது. பிறகு என்.சி.இ.ஆர்.டி. சிலபசின் தேவை என்ன இருக்கிறது?
சரி.. என்.சி.இ.ஆர்.டி சிலபசில் பரீட்சை கேள்விகள் எடுக்கப்படுகின்றன என்றால், அதுதான் உலகிலேயே தலை சிறந்த பாடத்திட்ட முறையா என்றால் அதுவும் இல்லை. காரணம் அந்த சிலபசில் படித்த மாணவர்களால் கூட நேரே கோச்சிங் இல்லாமல் சிவில் சர்வீஸ் / பேங்கிங் ; ஏன் நமது டி.என்.பி.எஸ்.சி. வைக்கும் குரூப் 2 , 4 தேர்வுகளை சந்திக்க இயலாது எனும் போது இந்த நீட் தேர்வின் நோக்கம் தான் என்ன? என்.சி.இ.ஆர்.டி. சிலபசின் அவசியம் தான் என்ன?
சரி.. படிநிலையில் முதல் நிலையில் இருப்போர். தங்கள் பிள்ளைகளை ஒரு வருடமோ இரண்டு வருடமோ நீட் கோச்சிங் செய்ய வைக்க இயலும் அடுத்த நிலையில் உள்ள மக்கள் கூட சொத்தை வித்தாவது படிக்க வைக்க இயலும். மூன்று மற்றும் நான்காவது நிலை மக்களை யோசித்து பாருங்கள். இவர்கள் தான் பெரும்பான்மை. ஆனால், இவர்கள் நீட் கோச்சிங் மற்றும் இரண்டு வருடம் படிக்க வைப்பது பற்றி யோசிக்க முடியுமா?
மேலும், நீட் பரீட்சை என்பது அந்த மாணவன் எங்கு பயின்றானோ அங்கு நடப்பதில்லை. ஏதோ ஒரு இடத்தில்.. ஒரு நகரத்தில் பரீட்சை நடக்கும். இந்த பரீட்சை எழுத சென்றுவர தேவையான வசதிகள் மற்றும் பணம் கூட இல்லாத நான்காவது படிநிலை மக்களை யோசித்து பார்த்ததுண்டா?
அடுத்து ரிசல்ட் வருகிறது. பெர்சண்டைல்.. குவாலிஃபிகேசன்.. என்று ஒரு குழப்பு குழப்புவார்கள் பாருங்கள். நாம் நன்றாக பரீட்சை எழுதினோமா.. எழுதவில்லையா என்று எழுதியவனுக்கும் தெரியாது.
மேலும் பதினோறாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களுக்கு மதிப்பு இல்லை என்று கூறுவதால் பல பெரிய பள்ளிகள் நேரே நீட் பரீட்சைக்கு தங்கள் மாணவர்களை தயார் செய்கிறார்கள். இதுவும் நீட்டுக்கு முன்னர் நாமக்கல் பள்ளிகள் என்ன செய்ததோ அதை ஒத்தே இருக்குமாறு இருக்கிறது.
நீட் தேர்வால் என்ன பயன் ? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ஒரு வரை முறை உருவாக்கப்பட்டுள்ளது. மினிமம் க்வாலிஃபிகேசன் என்பது நீட் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
சரி.. அது ஓகே என்று ஏற்றுக்கொண்டால்.. அவர்களுக்கு மட்டும். அதாவது தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் அந்த முறையை வைக்க வேண்டியது தானே. ஏற்கனவே வெளிநாடுகளில் பயின்று வரும் மருத்துவ மாணவர்களுக்கு Foriegn medical graduate exam என்ற ஒன்று உள்ளது. அதைப்போல அவர்களுக்கும் அதே பரீட்சை வைத்து ரேங்கிங் போட்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கலாம். எதற்கு அரசுகளின் சீட்டுகளில் கை வைக்க வேண்டும் ?
நீட் வருவதற்கு முன் அரசு மருத்துவ கல்லூரிகள் அனைத்து தரப்பு மக்களும் நுழைவதற்காக தங்கள் வாயிற் கதவுகளை திறந்து வைத்திருந்தன. தற்போது முதல் இரண்டு படிநிலை மக்களே பெரும்பான்மை நுழைந்துள்ளனர். மிடில் க்ளாஸ் மக்களின் நுழைவு குறைந்துள்ளது. நான்காம் நிலை மக்கள் இனி மருத்துவராவது பகற்கனவாகிவிட்டது.
முந்தைய அ.இ.அ.தி.மு.க. அரசானது அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய 7.5% இட ஒதுக்கீட்டின் பலனால் அரசு பள்ளி மாணவர்கள் கடந்த முறை நிறைய பேர் எம்.பி.பி.எஸ். சீட் பெற்றது குறிப்பிடத்தக்கது. இது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று.
ஆனாலும், நீட் பரீட்சைக்கு குவாலிஃபை ஆகக்கூட சிறந்த கோச்சிங் பெற வேண்டிய நிலை அனைத்து படிநிலை மக்களுக்கும் வருகிறது. இது அனைவராலும் முடிந்த காரியமில்லை.
சமூக நீதி என்பது அனைவருக்கும் கல்வி என்ற பாதையை நோக்கி செல்ல வேண்டும். அதாவது, அவர்கள் வாழும் இடத்திலேயே கல்வி கிடைக்க வேண்டும். அதே இடத்தில் பரீட்சை நடக்க வேண்டும். இது தான் சமூக நீதி. நீட் என்பது சமூக நீதியை கொல்வதாகும்.
எனது கிளினிக்குக்கு வந்த மிக நன்றாக படிக்கும் மருத்துவராக ஆசைப்படும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளிடம் “நீ மருத்துவர் ஆவாய்” என்று நம்பிக்கை ஊட்டி வந்தேன். இப்போது நான் அவ்வாறு அவளிடம் கூறுவதில்லை. ஆனாலும், அவரது தந்தை ஒவ்வொரு முறை என்னிடம் வரும் போதும் தனது மகளும் மருத்துவர் ஆவார் என்றே கூறுகிறார். இவ்வாறு தான் அந்த நான்காம் படிநிலை இருக்கிறது. தனக்கு என்ன நேருகிறது என்றே அவர்களுக்கு தெரியாது. ஒன்று கூறுகிறேன்.
இன்று முதல் மற்றும் இரண்டாம் படிநிலையில் இருக்கும் மக்களே.. உங்கள் பாட்டனோ பூட்டனோ கண்டிப்பாக மூன்றாம் மற்றும் நான்காம் படிநிலையில் தான் இருந்திருப்பார்கள். நாளை உங்கள் கொள்ளுப்பேரனோ பேத்தியோ அடுத்த இரு பிரிவுகளுக்கு செல்ல மாட்டார்கள் என்ற எந்த உறுதியும் இல்லை. ஆகவே சமூக நீதிக்கு குரல் கொடுப்போம். எப்போதும் நீதி வெல்வதே எக்காலத்திற்கும் நல்லது.
இந்தியா ஆராய்ச்சிக்கு போதுமான நிதி ஒதுக்குவதில்லை என்கிற புலம்பல் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருந்தாலும், பொதுவாகவே ஆராய்ச்சிகளுக்கு ஒதுக்கப்படுகிற பணம் எவ்வளவு, எந்தெந்த ஆராய்ச்சிக்கு எவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது என்கிற மேலோட்டமான தகவல்களைப் படித்தாலே பிரமிப்பாக இருக்கும்.
அணு ஆராய்ச்சி, வைரஸ் குறித்த ஆராய்ச்சி போன்ற பெரிய இடத்து ஆராய்ச்சிகளை விடுங்கள், மானுடவியல் இலக்கியம் போன்ற துறைகளே கூட பாதாள கிணறு போன்றவை. நரிக்குறவர்களின் பேச்சு மொழி, பண்டைய தமிழனின் குறுவாள் எப்படி இருந்தது போன்ற ஆராய்ச்சிகளுக்குக் கூட பெருமளவில் பணம் ஒதுக்கப்படுகிறது. அது மிகப்பெரிய லாபியிங் நெட்ஒர்க். அதைக் கையாள்பவர்கள் மிகவும் தந்திரசாலிகள். நம்மைப்போன்ற துக்கடாக்கள் கவனம் செலுத்தும் இடமே அல்ல அது.
இந்த கொரோனா வைரஸ் விவகாரம் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கிட்டத்தட்ட உலகம் ஸ்தம்பித்திருக்கிறது. அதைச் சுற்றி நிகழும் conspiracy theory யில் மிகவும் முக்கியமானது, “இந்த கொரோனா வைரஸ், சீனாவின் வுஹான் சோதனைக் கூடத்தில் இருந்து கசிந்ததுதான்” எனும் தியரி. அதை சீனா மறுத்திருக்கிறது. WHO மூலம் சீன வைரஸ் ஆராய்ச்சிக் கூடங்களை சோதனையிட வேண்டும், அங்கு என்னென்ன ஆராய்ச்சிகள் நடக்கின்றன, அவை சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கின்றனவா என்பதை ஆராய வேண்டும் என்றெல்லாம் அமெரிக்காவிலும் மேற்கிலும் குரல்கள் கேட்கத் துவங்குகின்றன.
நோய்த்தொற்று குறித்த ஆராய்ச்சிகள், புதிய மருந்துகளுக்கான ஆராய்ச்சிகள், மரபணு மீதான ஆராய்ச்சிகள், குளோனிங் போன்ற ஆராய்ச்சிகள் என இதன் எல்லைகள் பரந்து விரிந்தவை. அந்தக் கயிறின் நுனி எங்கு தொடங்குகிறது எங்கு முடிகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது.
குளோனிங்கில் டாலி என்கிற ஆட்டுக்குட்டியை உருவாக்கியதும் அது பரபரப்பான சம்பவமாக பேசப்பட்டதும் நினைவில் இருக்கலாம். கடவுளின் வேலையை நாம் செய்வதா? இது உலக அழிவுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்று மத அமைப்புகள் ஒரு பக்கம் கண்டனம் செய்தன. உலகம் உருண்டை என்று சொன்னாலே கூச்சலிட்ட பிற்போக்கு அமைப்புகள் அவை, எப்போதும் அவர்கள் அறிவியலுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்கள் என்று மத அமைப்புகளை இந்த ஆராய்ச்சிக்கு ஆதரவான அமைப்புகள் எதிர்கொண்டன.
மத அமைப்புகள் எப்போதும் அரசின் உறுப்புகள் ஆகையால் அவற்றின் குரல் ஒரு அளவுக்கு மேல் எழவில்லை. ஆனால், இவற்றில் இருக்கும் அறம் சார்ந்த கேள்விகளுக்கு ஆராய்ச்சி அமைப்புகள் முகம் கொடுக்கவே இல்லை. அவற்றை எழுப்பியது மத அடிப்படைவாதிகள் அல்ல. மானுடவாதிகள். ஆராய்ச்சிக் கூடங்கள், கார்ப்பரேட்டுகள், நவ முதலாளித்துவ அரசுகள் எனும் கூட்டை அவர்கள் சந்தேகத்துக்கு உள்ளாக்கினார்கள். இது வழக்கமான முரட்டு இலுமினாட்டி தியரி அல்ல. மாறாக, அவர்கள் மானுட விழுமியங்களின் அடிப்படையில் தங்களது அதிருப்திகளையும் சந்தேகங்களையும் முன்வைத்தார்கள். அந்த உரையாடல்கள் மேற்கில் இன்னும் சமூக அரங்கில் இருந்து கொண்டே இருக்கின்றன.
சீனா, குளோனிங்கில் மனிதனை உருவாக்கும் சோதனையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது என்கிற செய்தி இரண்டு ஆண்டுக்கு முன்பே கசிந்தது. இந்த கொரோனா அலையில் அது பரவலாக விவாதிக்கப்படாமல் இருக்கிறது. சீனாவின் வெளிப்படைத் தன்மை உலகம் அறிந்ததுதான். கல்வான் பள்ளத்தாக்கில் ஒரு குளோனிங் படைவீரனோடு இந்திய வீரன் மோதும்போதுதான் நமக்கே தெரியவருமோ என்னவோ. போகட்டும், அது ஜீயின் கவலை. நாம் இந்த கொரோனா ஆராய்ச்சிக்குத் திரும்புவோம்.
இந்த கொரோனா வைரஸ் ஆராய்ச்சி விவகாரத்தில் முக்கியமான விவாதமாக இருப்பது, விஞ்ஞானிகள் வவ்வாலின் மீது செய்து கொண்டிருக்கும் ஆராய்ச்சிகள். சும்மா இணையத்தில் Bat Woman என்று அடித்து தேடிப்பாருங்கள். சீனாவின் பிரபலமான ஒரு பெண் விஞ்ஞானி, வுகான் என்று நம்மை பல இடங்களுக்கு அது கூட்டிப் போகும். பொழுது போகவில்லை என்றால் அவற்றைப் படித்து ஜாலியாக பீதியடையலாம். கொஞ்சம் அரசியல் பிரக்ஞயை இருந்தால், இப்போது நான் செய்வது போல, ராணுவம் + மருத்துவம் + நவ முதலாளித்துவம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து யோசித்து முடியைப் பிய்த்துக் கொள்ளலாம்.
இதை ஏன் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், நாகாலாந்தில் நடந்த வவ்வால் மீதான வைரஸ் ஆராய்ச்சி குறித்த செய்திகளையும், அந்த சோதனைத் திட்டத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் மீறப்பட்டிருக்கிறதா என இந்தியா விசாரணைக்கு ஆணையிட்டிருந்ததும், அதன் அறிக்கை இப்போது வெளிவந்திருப்பதையும் இரண்டு வாரங்களுக்கு முன்பு The Hindu கவனப்படுத்தியிருந்தது. அதையொட்டி நேற்று ஒரு செய்தி வந்திருக்கிறது. நாகாலாந்தில் நடந்த ஆராச்சிகளின் முடிவில் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணத்தில் co-researcher-ஆக இருப்பவர் ஒரு வுஹான் மருத்துவ விஞ்ஞானி.
நமது முகநூல் பக்கத்தில் இருக்கும் மருத்துவர்கள் யாராவது இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி, அது பற்றி வரும் செய்திகளைப் பற்றி எளிய மொழியில் நமக்குப் புரிவது மாதிரி விளக்கி எழுதலாம். ஆனால், எனக்குப் பிடித்த இரண்டு மூன்று மருத்துவர்கள் netflix, amazon prime போன்ற தளங்களில் ரிலீசாகும் ஏதாவது மொக்கை தமிழ்ப் படங்களைப் பார்த்துவிட்டு வந்து மன உளைச்சலோடு சினிமா குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். போகட்டும். இருந்தாலும் நமக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது அல்லவா.
நான் இந்த நாகாலாந்து ஆராய்ச்சிகள் குறித்து மேலோட்டமாகப் படித்தேன்.
அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் முகமைகள் அதாவது ஏஜென்சிகள் யாரென்று பார்த்தால் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த ஆராய்ச்சிக்கான நிதி எங்ஙனம் வந்திருக்கிறது என்று The Hindu குறிப்பிட்டிருப்பதை அப்படியே தருகிறேன் பாருங்கள்.
//the research was funded by U.S. Dept of Defense, U.S. Naval Biological Defense Research Directorate, and Indian Department of Atomic Energy, and credits researchers at Duke-NUS Singapore, U.S. Uniformed Services University as well as Shi Zhengli and Xinglou Yang from the Wuhan Institute for “writing- review and editing” the paper.//
இவர்களுக்கும் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா பாருங்கள். இந்த ஆராய்ச்சித் திட்டங்கள் ராணுவ அமைப்புகளால் நடத்தப்படுகின்றன.
இப்போது நாகாலாந்தில் ஆராய்ச்சியையொட்டி நடந்த விசாரணையில் கூட, “சேகரிக்கப்பட்ட ஆபத்தான மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் எங்கு சேகரித்து வைத்திருக்கிறார்கள், அவை பாதுகாப்பான இடத்தில்தான் உள்ளனவா” என்கிற கோணத்திலேயே விசாரணை நடந்து அறிக்கை வெளிவந்திருக்கிறது.
அமெரிக்க ராணுவம், இந்திய அணுசக்திக் கழகம், வுஹான் வைராலஜி, சிங்கப்பூர் அமைப்பு என்று இந்த வலைப்பின்னலைப் பாருங்கள். இத்தகைய வைரஸ் ஆராய்ச்சிகளுக்கும் ராணுவத்துக்கும் தேசப் பாதுகாப்புக்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். ஆனால், பயோ வார் என்ற அடிப்படையில் அணு ஆயுதங்களைப் போல செறிவூட்டப்பட்ட வைரஸ்களை ஆயுதமாகப் பயன்படுத்தும் போர் வியூகம் மற்றும் அவ்வாறு தாக்குதல்கள் நடக்கையில், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் என்ற அடிப்படையில் மிகுந்த பொருட்செலவுடன் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
இன்று இந்த கொரோனா வைரஸ் பரவி உலகத்தை முடக்கியிருப்பது நம்மைப் போன்ற குடிமக்களுக்கு surprise-ஆக இருக்கலாம். ஆனால், மருத்துவ விஞ்ஞானிகளுக்கு அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். பாதுகாப்பு குறைபாடு எங்கோ நடந்திருக்கிறது, அதனால்தான் வைரஸ் கசிந்திருக்கிறது என்ற அளவிலேயே அவர்கள் சிந்திப்பார்கள்.
இவற்றையெல்லாம் படிக்கையில் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. எப்படி அணுக்கழிவை அல்லது அணு ஆயுதத்தை அழிக்க முடியாதோ அதே போல வைரஸையும் அழிக்க முடியாது, அவற்றுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறைகளை வேண்டுமானால் அதிகரித்துக் கொள்ளலாம் என்பதே அது. அணுவுக்கு எதிரான பாதுகாப்புக்கும், இந்த வைரஸுக்கு எதிரான பாதுகாப்புக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
காவிரி உரிமைக்காக போராடினால் பொய் வழக்கு ! தொடரும் தமிழக போலீஸின் அடக்குமுறை !
பத்திரிகைச் செய்தி
19.06.2021
கடந்த 13. 03. 2019 அன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் திரு. வேல்முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் , மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி , திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் தபசி குமரன் , தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் தோழர் பொழிலன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் வன்னியரசு உள்ளிட்ட 20 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் 21.06.2021 அன்று மதியம் 12 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் அழைப்பாணை கொடுத்துள்ளனர்.
இதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் இவ்வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா செயல்பட்டு வரும் இந்த சூழலில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்திய பழைய வழக்குகளை தூசிதட்டி எடுப்பது என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.
அரசியல் கட்சித் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் என்று பெரிய அளவில் விளம்பரம் செய்த திமுக அரசு அவர்கள் குறிப்பிட்ட தலைவர்களை மட்டும் விடுவித்துவிட்டு மற்றவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை அப்படியே பராமரித்து வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 2019-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் கொந்தளித்தது. பல லட்சக்கணக்கான மக்கள் தமிழகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்தார்கள்.
சென்னை வந்த மோடி மூத்திர சந்தில் செல்லுமாறு பணிய வைக்கப்பட்டார். திரும்பும் பக்கமெல்லாம் ஆர்ப்பாட்டம் மறியல் கருப்பு பலூன்கள் என ஒட்டுமொத்த தமிழகமே போர்க்களமாக காட்சியளித்தது என்றால் அது மிகையல்ல. அந்தப் போராட்டங்களில் திமுக உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது. அதன் விளைவாகத்தான் வேறு வழியின்றி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டது.
அதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்களை திட்டமிட்டு பழிவாங்கவே சிபிசிஐடி போலீஸ் முடிவு செய்துள்ளது என்பதை அறியமுடிகிறது.
காவிரி உரிமைக்கான போராட்டம் என்பது தமிழர்களின் போராட்டம். இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கீழ்க்கண்ட பிரிவுகளைக் கொண்ட முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இரு சமூகத்தினர் இடையே வன்முறையை தூண்டும் வகையில் பேச்சுக்கள் இருப்பதால் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் இந்த FIR–ஐ தாக்கல் செய்திருக்கிறார் . இந்திய தண்டனைச் சட்டம் 153, 153A (1)(a), 153A (1)(b), 501 (1)(b), 501(1)(c) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட பிரிவுகளுக்கான விளக்கம் கீழே உள்ளது.
கலகத்தை விளைவிக்கும் கருத்தோடு வேண்டுமென்றே ஆத்திரம் ஊட்டுதல்; சமய, இன ,மொழி வட்டார வகுப்பினர் சாதிகள் அல்லது சமூகங்களுக்கு இடையே ஒற்றுமையை நிலவுவதற்கான குந்தகமான பொது அமைதியை குலைப்பது அல்லது அனேகமாகப் குலைக்க கூடியதுமான செய்கை செய்வது; பொது மக்களுக்கு அல்லது பொதுமக்களில் ஒரு பிரிவினருக்கு பயம் அல்லது பீதியை விளைவிப்பதன் மூலம் அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய அதனால் தூண்டப்படலாம் என்று பயம் அல்லது பீதியைப் விளைவிக்கும் உக்கிரத்துடன் அல்லது அது அனேகமாக விளைவிக்கின்ற ஒரு செயல்
வகுப்பு அல்லது சமூகம் எதனையும் சார்ந்து ஆட்களை வேறு வகுப்பு அல்லது சமூகத்துக்கு எதிராக குற்றம் எதனையும் செய்யத் தூண்டும் உட்கருத்துடன் அல்லது அனேகமாக தூண்டுகின்ற உரை ,வதந்தி அல்லது அறிக்கை எதனையும் வெளியிடுகின்ற செயல் ..
மேற்கூறிய சட்டப் பிரிவுகளுக்கான விளக்கமான அத்தனை தவறுகளையும் செய்தது மோடி அரசு. மோடி அரசின் நடவடிக்கைகளால் தான் இப்படிப்பட்ட போராட்டம் நடைபெற்றது. மேற்கண்ட சட்டப்பிரிவுகள் மோடி அரசின் மீது போடப்படவேண்டும். மாறாக காவிரி நதிநீர் உரிமைக்காக போராடியவர்கள் மீது இந்த பிரிவுகள் போடப்பட்டு இருக்கின்றன.
காவிரி உரிமை போராட்டம் மட்டுமல்ல தமிழின உரிமைக்காக கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் செய்த போராட்டங்கள் எண்ணிலடங்காதவை. அப்படிப்பட்ட போராட்டங்களின் விளைவாக தான் அதன் அறுவடையை தவிர்க்க இயலாமல் திமுக நாடாளுமன்ற தேர்தலிலும் சட்டமன்ற தேர்தலிலும் ஈட்டியிருக்கிறது .
1 of 2
காவிரி நதிநீர் உரிமையை பறித்தது தவறு அல்ல; மாறாக அதற்கு எதிராக போராடியது தான் தவறு என்ற ஒரு நீதியை நமக்கு கற்றுக் கொடுக்கிறது அரசு. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மக்களுக்காக தமிழ் உரிமைக்காக செய்யப்பட்ட அனைத்து போராட்ட வழக்குகளும் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் மக்களுக்காக போராடுபவர்களை வழக்காடு மன்றங்களுக்கு அலைய விடுவதன் மூலம் முடக்குவது என்ற கடந்த அரசின் யுத்தியையே இந்த அரசும் பின்பற்றுகிறது.
கார்ப்பரேட் – காவி பாசிசம் மக்களின் வாழ்வை சூறையாடிக் கொண்டிருக்கும் பொழுது தன்மானமுள்ள எந்த மனிதனாலும் அமைதியாக இருக்க முடியாது. மக்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து உள்ள அமைப்புகளும் போராளிகளும் நிச்சயமாக அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்பார்கள் அதை யாரும் தவிர்க்க முடியாது.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மத்திய மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடியோர் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
போலீசின் பொய் வழக்குகளை எதிர்கொள்வோம்! மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்!
தோழமையுடன்
தோழர் மருது ,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள மன்னார் நகரமானது, மன்னார் மாவட்டத்தின் பிரதான நகரமாகும். பிரபலமான மடு ஆலயம் இங்குதான் அமைந்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ராமேஷ்வரம் பகுதிக்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள இந்தத் தீவுத் தொகுதியில் பெரும்பான்மையாக வசிப்பவர்கள் கத்தோலிக்கர்கள் என்ற போதிலும், இன, மத ரீதியாக பல்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் பல்வேறு தரப்பட்ட மக்களும் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். வெவ்வேறு அடையாளங்களோடு பல சமூகங்கள் இங்கு வாழ்ந்து வரும் போதிலும், செய்யும் தொழில், மொழி போன்றவற்றால் அவர்களது சமூக வாழ்வியல் ஒன்றாகப் பிணைக்கப்பட்டே காணப்படுகிறது.
நீண்ட நெடுங்காலமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இலங்கையின் தனித்த மூலையொன்றில் அமைந்திருக்கும் இந்தத் தீவின் மக்களுக்கு, இன்றும் கூட அமைதியான, இயல்பான வாழ்க்கை மறுக்கப்பட்டிருக்கிறது. இவற்றிடையே இங்குள்ள பெண்களும் பல்வேறு மட்டங்களில் பல்வேறு விதமான துன்புறுத்தல்களுக்கு தினந்தோறும் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். கீழே தரப்பட்டுள்ள அனைத்தும், அவ்வாறான ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டுள்ள பெண்கள் இதுவரை வெளியே சொல்லாத வாக்குமூலங்களாகும்.
தற்கால நவீன உலகில் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சனைகள் மிகவும் குறைந்துள்ளதாக மார் தட்டிக் கொண்ட போதிலும், இன்றும் புராதன காலத்தைப் போலவே பெண்கள் தமது சமூகத்துக்குள்ளேயே நிறைய பிரச்சனைகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதற்கு மன்னாரில் வசிக்கும் இந்தப் பெண்களின் கதைகள் ஒரு உதாரணம் மாத்திரமே.
இவ்வாறு உலகறிய வேண்டியதும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதும், விரைவில் தீர்க்கப்பட வேண்டியதுமான பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, சம்பந்தப்பட்ட பெண்களுடன் கலந்துரையாடி சமூகத்திற்கு வெளிக்கொண்டு வந்திருக்கிறார் சமூக சேவகியும், பெண் சட்டத்தரணியுமான சஞ்சுலா பீற்றர்ஸ்.
இதை வாசிக்கும் தமிழ் சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆதங்கத்தோடு அந்த உரையாடல்களை தமிழில் தந்திருக்கிறேன்.
000
ரோஸ்மேரி : எனது கணவன், நான்கு பிள்ளைகளோடு என்னைக் கைவிட்டுச் சென்ற போது மூத்த பிள்ளைக்கு 13 வயது. ஆரம்பத்தில் பிள்ளைகளோடு தெருவோரம் வசித்து வந்தேன். பிறகு, பாடுபட்டு ஒரு குடிசையை அமைத்துக் கொண்டேன். கடலில் இறால்களையும், கடலட்டைகளையும் பிடித்துத்தான் வாழ்ந்து வருகிறேன். இந்தப் பிரதேசத்திலுள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட குடும்பத் தலைவிகள் பெரும்பாலானோரின் ஜீவனோபாயத் தொழில் அதுதான். இருந்தாலும் தொழிலுக்குத் தேவையான எவ்விதமான உபகரணங்களும் இல்லாமல்தான் அவர்கள் அனைவருமே தமது தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமது கைகளைக் கொண்டே அவர்கள் இவற்றைப் பிடிக்கிறார்கள். ஆகவே, அடிக்கடி பல விபத்துக்களைச் சந்திக்கிறார்கள். குடும்பத் தலைவி, மீனவத் தொழிலில் ஈடுபடும் பெண்ணொருத்தி ஆகிய பொறுப்புகளைக் கொண்டுள்ள பெண் என்ற காரணத்தால் பலவிதமான ஒடுக்குமுறைகளுக்கு நான் அடிக்கடி ஆளாகிக் கொண்டிருக்கிறேன். எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எடுத்துக் கூற நான் முன்வரும் போது, ‘அதைப் பற்றிப் பேச ஒரு பொம்பளையான நீ ஏன் முன்வருகிறாய்?’ என என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். பெண்ணாக இருப்பதாலேயே பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது நான் அவமானப்படுத்தப்படுகிறேன்.
ரோஸ்மேரி
ஆண்களை மாத்திரம் உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இப் பிரதேசத்தின் மீனவர் சங்கம் ஆனது, மீனவத் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு உதவி செய்ய முன்வராத காரணத்தால் பெண்களால் மகளிர் மீனவர் சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. எமது மகளிர் மீனவ சங்கத்தால் வீடற்ற ஒரு குடும்பத்துக்கு வீடு கட்ட உதவி செய்தோம். பிரதேசத்தின் ஆடவர் மீனவர் சங்கமானது, நாம் அவர்களை மீறிச் செயல்படுகிறோம் என்று எம்மை அவமதித்து இடையூறு விளைவித்தது.
எமது ஊரில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தின் அனுமதி இல்லாவிட்டால், எமக்கு கடலில் இறங்க அனுமதி கிடைப்பதில்லை. இரவில்தான் கடல் அட்டைகளைப் பிடிக்க முடியும். அந்த நேரத்தில் கடற்படை இராணுவம் எமக்கு கடலுக்குப் போக அனுமதி தருவதில்லை. கடற்படை முகாமைச் சுற்றியுள்ள பகுதியை துப்புரவாக்கிக் கொடுத்தாலே கடலுக்குப் போக அனுமதியளிக்கும். இந்தக் கடற்தொழிலால்தான் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். ஆகவே அவர்களுக்குத் தெரிவிக்காமல் கடலுக்குச் சென்று வந்ததை அவர்கள் அறிந்து கொண்டால் எம்மிடம் ஐந்து கொப்பிகள், பத்துக் கத்திகள், கண்ணாடிக் குவளையொன்று, மின்சூள் விளக்கொன்றை வாங்கித் தருமாறு விதவைப் பெண்களான எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இவ்வாறான இடையூறுகளால் எம்மால் எமது வாழ்க்கையைக் கொண்டு செல்ல முடிவதில்லை.
இந்தக் காலத்தில்தான் கடலட்டைகள் அதிகளவில் அகப்படும் என்ற போதிலும் இதுவரை எமக்கு கடலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படாததால், ஏனைய மீனவர்கள் நாங்கள் தொழிலில் ஈடுபடும் எமது எல்லைக்குள்ளிருக்கும் கடலட்டைகளைப் பிடித்துச் செல்கிறார்கள். தலைமன்னாரிலிருந்து வரும் ட்ரோலர் கப்பல்களும் எல்லாவற்றையும் பிடித்துக் கொண்டு போவதோடு, அவற்றுடனே எமது வலைகளையும் அறுத்துக் கொண்டு போய் விடுகின்றன. அவ்வாறான நாட்களில் எமக்கு எதுவுமே கிடைப்பதில்லை. நாங்கள் வெறுங்கையுடன் வீட்டுக்குப் போக நேரும். அதனால், வலை வாங்கவென எடுத்த வங்கிக் கடனைச் செலுத்த வழியற்று சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் பெண்கள் என்பதால் இவ்வாறான தொந்தரவுகளும், இடையூறுகளும் தொடர்ந்தும் நடந்து கொண்டேயிருக்கின்றன. ஆதரவற்று தனித்துப் போன பெண்களான நாங்கள் எமது சுய முயற்சியில் வாழ்க்கையைக் கொண்டு செல்ல மீனவத் தொழிலில் ஈடுபட்டுள்ள போதிலும் எமக்கு அதை ஒழுங்காகச் செய்வதற்கான வாய்ப்பேயில்லை.
000
அப்துல் கஃபூர் நஜீபா : நான் 2001-ஆம் ஆண்டிலிருந்து காதி நீதிமன்றத்துக்கு போய் வருகிறேன். பெண்ணின் வாக்குமூலத்தைக் கேட்க அங்கே பெண்ணொருவர் நியமிக்கப்பட்டிருப்பதில்லை. ஆகவே, எமது பிரச்சனைகளை அங்கு எம்மால் வெளிப்படையாகக் கதைக்க(பேச) முடிவதில்லை. ஆண்களிடம் கூற முடியாதவற்றை வெளிப்படையாக முறையிட்டுக் கூற அங்கு எவரும் இருப்பதில்லை. பெண்களின் கண்ணீர்க் கதைகளை காதி நீதிமன்றத்தில் கூறப் போய் பெண்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு கூறப் போய் காதி நீதிமன்றத்தில் வைத்து காதி நீதவானே(நீதிபதியே) என்னை தூஷண(தகாத) வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியிருக்கிறார். குறைந்தபட்சம் நாங்கள் யாரென்று கூட அவர் விசாரிப்பதில்லை. நாங்கள் அனைவரும் சுய மரியாதையோடு வாழ வேண்டும். காதி நீதிமன்றத்தால் எனக்கு எந்த வித நீதியும் வழங்கப்படாத காரணத்தால் இப்போதெல்லாம் நான் காதி நீதிமன்றம் செல்வதில்லை.
அப்துல் கஃபூர் நஜீபா
போலீஸும் ஆண்களின் பக்கமே சார்ந்திருக்கிறது. போலீஸுக்குப் போனாலும் எம்மிடம் பணம் இருந்தால் மாத்திரமே உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அங்கும் பெண்ணென்ற காரணத்தால் கீழ்த்தரமாகத்தான் நடத்துவார்கள். ஐந்து வருடங்களுக்கு முன்பு நான் ஒரு முறைப்பாடு கொடுக்கப் போயிருந்த வேளையில் அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் மிகவும் மோசமான விதத்தில் என்னிடம் கதைத்தார்கள்(பேசுவார்கள்). ‘நீங்கள் போலீஸ் என்பதால்தானே இப்படியெல்லாம் பேசுகிறீர்கள். பெண்கள் விளையாட்டுப் பொருட்களில்லை. எங்களுக்கும் சுய கௌரவம் இருக்கிறது. அதனால் என்னிடம் இவ்வாறெல்லாம் பேச வேண்டாம்.’ என்று கூறி விட்டு வந்தவள்தான். அதற்குப் பிறகு ஒருபோதும் நான் எந்தப் பிரச்சனைக்கும் போலீஸுக்கே போகவில்லை.
நான் வாழும் சமூகத்திடமிருந்து எவ்விதமான உதவி உபகாரங்களும் கிடைக்கப் பெறாததால் நான் இப் பிரதேசத்திலுள்ள மகளிர் சங்கமொன்றில் இணைந்திருக்கிறேன். இணைந்ததன் பிறகு, எனக்கு உதவி கிடைத்தது. நான் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பிள்ளைகளை வாழ வைப்பதற்காகவே பாடுபடுகிறேன். நாங்கள் ஆணின் துணையற்று தனித்து வாழும் பெண்கள் என்பதால் அனுபவிக்க வேண்டிய அனைத்து அநீதங்களுக்கும்(அநீதிகளுக்கும்) முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
000
அந்தோனி அம்மா : போலீஸுக்குப் போனாலும் நேரடியாக எமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியாது. அதிகாரிகள் அனைவரும் சிங்கள மொழி பேசுபவர்கள் என்பதனால் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் ஊடாகத்தான் எமது பிரச்சனைகளை எடுத்துக் கூற வேண்டியிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர் அவர்களிடம் என்ன சொல்கிறார், அதைக் கேட்டு சிங்களத்தில் என்ன எழுதிக் கொள்ளப்படுகிறது என எதுவும் எமக்குத் தெரியாது. மொழிபெயர்ப்பாளர் ஒரு சொல்லையெனும் தவறாகச் சொல்லி விட்டால் நாம் கூறியதற்கு முற்றிலும் மாறுபட்ட விடயங்கள் குறித்துக் கொள்ளப்படலாம், இல்லையா? ஆகவே விசாரணை நடக்கும்போது உரிய மொழி அல்லாத காரணத்தால் நாங்கள் பலவிதமான சங்கடங்களை எதிர்கொள்ள நேர்கிறது.
அந்தோனி அம்மா
மன்னாரின் பிரதான தொழில் மீனவத் தொழில் ஆகும். பொதுவாக ஆண்கள் மீனவத் தொழிலில் ஈடுபடுவதோடு பெண்கள் இல்லத்தரசிகளாக இருப்பார்கள். பெண்கள் சொந்த வீடு கட்ட போன்ற பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காக ஓரோர் நிறுவனங்களிடமிருந்தும் கடன் வாங்க முன்வருகிறார்கள். அந்த நிறுவனங்களும் பெண்களை இலக்காகக் கொண்டே கடன்களை வழங்குகின்றன. இன்னும் அதிக வட்டிக்கு பிற ஆட்களிடமும் பெண்கள் கடன் வாங்குகிறார்கள். தங்க நகையை அடகு வைத்து பணம் பெறுகிறார்கள். இவ்வாறாக, கடன் பிரச்சனை மன்னார் பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
இந்தப் பிரச்சனையைத் தீர்த்துத் தருமாறு கோரி நாங்கள் பிரதேச சபை அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் கூட நடத்தியிருக்கிறோம். எனினும், நாங்கள் பெண்கள் என்ற காரணத்தால் எமது பிரச்சனைகள் அவர்களால் பொருட்படுத்தப்படவேயில்லை. மன்னார் பிரதேச பெண்கள் ஈடுபட விவசாயம், கைத்தொழில்கள் அல்லது வேறு தொழில் வாய்ப்புகள் எதுவுமேயில்லை. குடும்பங்களில் ஆண்கள்தான் சம்பாதிக்கிறார்கள். பெண்களிடம் பொருளாதார பலம் இல்லாத காரணத்தால் கணவனிடம் ஒரு அடிமையைப் போல இருக்க நேர்ந்திருக்கிறது. இல்லாவிட்டாலும், பெண் என்ற காரணத்தால் எதிர்கொள்ள நேரும் ஒடுக்குதல்கள், அநீதங்களுக்கு முடிவேயில்லாமல் இருக்கிறது.
000
டிலானி குரூஸ் : நான் நகர சபை உறுப்பினர். எமது நகர சபையிலிருக்கும் 16 உறுப்பினர்களில் பெண்கள் மூவர் இருக்கிறார்கள். நான் தமிழ் பேசும் பெண்ணாக, அரசியலில் ஈடுபட்டுள்ளதால் சமூகத்தில் வேறுபாடுகள் காண்பிக்கப்படுகிறது. அரசியல் கட்சி மீதுள்ள வெறுப்பால் அவ்வாறு செய்யப்படுவதில்லை. பெண்ணாக இருப்பதாலேயே அவ்வாறு செய்யப்படுகிறது. பெண்களான நாங்கள் நகரசபை உறுப்பினர்களாக ஆகியுள்ளதால் எம்மை மனரீதியாகத் துன்புறுத்த, அவதூறு கூறுகிறார்கள். ‘பொம்பளைதானே நீ, உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
டிலானி குரூஸ்
அரசியலில் ஈடுபட்டுள்ள சில ஆண்கள் எமது நடத்தை குறித்து பலவிதமான அவதூறான கதைகளை சோடித்து சமூகத்தில் பரப்பி விடுகிறார்கள். அவற்றுக்கு அன்றாடம் முகம்கொடுத்தவாறே பணி புரிவதென்பது மிகுந்த மன அழுத்தத்தைத் தருகிறது. ஒரு பெண்ணைப் பற்றி அவ்வாறு மோசமான கதைகளைப் பரப்பி விட்டால் பெண்கள் பயந்து போய் அடங்கி விடுவார்கள் என்று அவர்கள் கருதிக் கொண்டிருக்கக் கூடும். பெண்களை அரசியல் ரீதியாக முன்னேற விடாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதுதான் அவர்களது விருப்பம். நாங்கள் நான்கு வருடங்களுக்கே பதவி வகிக்கப் போகிறோம். பதவி வகிக்கும் எமக்கே இந்த நிலைமை என்றால், இந்தப் பதவிக் காலம் முடிந்த பிறகு சமூகப் பிரச்சனைகளில் தலையிட முடியாமலே போய் விடும்.
எமது நாட்டில் பெண்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுக்காக சேவை செய்யவே பாடுபடுகிறோம். நாங்கள் குரல் எழுப்புவது சிறுவர்களினதும், பெண்களினதும் பிரச்சனைகளுக்காக என்பதை அறிந்திருந்தும் சில பெண்கள் எமக்கெதிராகப் பேசுகிறார்கள். பெண்களே பெண்களுக்கு எதிராக, ஆணாதிக்கத்துக்கு ஆதரவாக வேலை செய்கிறார்கள். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பெண்கள்தான் வெளிக் கொண்டு வர வேண்டும். பெண்களால் சாதிக்க முடியும் என்று தைரியமூட்ட வேண்டும். பெண்களுக்கு அரசியல் உரிமையை வழங்கவே வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு சமூகத்தைக் கொண்டு வர வேண்டும். நாங்கள் இன்று செய்யும் இந்தப் போராட்டம் எப்போதாவது ஒரு நாளில் மற்றுமொரு பெண்ணுக்கு பலமாக அமையும் என்று நம்புகிறேன்.
000
என்டன் ஜோய் செல்வநாயகி : என்னுடைய கணவர் ஒரு மாற்றுத் திறனாளி. அவரால் நடக்க முடியாது. சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பார். அவரை அங்கே, இங்கே அழைத்துப் போய் வர ஒவ்வொரு நாளும், ஆட்டோ வைத்திருப்பவர்களிடம் உதவி கேட்க நேர்ந்தது. அவ்வாறு உதவி செய்ய முன் வரும் ஆண்கள் என்னிடம் வேறு விடயங்களை எதிர்பார்த்துத்தான் அவ்வாறு எமக்கு உதவி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டதன் பிறகு, ‘எனக்கு ஆட்டோவை ஓட்டத் தெரிந்திருந்தால் எவரது உதவியும் தேவைப்படாது அல்லவா?’ என்று தோன்றியது. நான் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன். ஆட்டோவுக்கு கணவரை ஏற்றவும் நான் எவரதும் உதவியை எதிர்பார்ப்பதில்லை. நான் பெண் என்பதால் என்னால் அவரைத் தூக்கிச் சுமக்க முடியாது என்றே எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் தனியாகத்தான் அவரைத் தூக்கிச் சுமந்து ஆட்டோவில் ஏற்றிக் கொள்கிறேன். திடீரென்று ஆட்டோ செயலிழந்து போனால் எவ்வாறு பழுதுபார்ப்பது என்றும் நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டேன்.
என்டன் ஜோய் செல்வநாயகி
நான் தண்ணீர் மோட்டார்களை பழுது பார்க்கிறேன். மின்சார வேலைகளையும், கட்டுமான வேலைகளையும் செய்கிறேன். ஆட்டோ ஓட்டாத நேரங்களில் விற்பதற்காக ஆடைகளைத் தைத்து வருகிறேன். சில நிறுவனங்களிலிருந்து தாமாகவே, உதவி செய்யவென வந்தார்கள். அவர்களிடம் ‘எம்மால் ஏதாவது உழைத்துக் கொள்ள முடியும். எம்மை விடவும் நிர்க்கதி நிலையில் இருக்கும் எதுவுமே செய்ய வழியில்லாதவர்களுக்கு அந்த உதவிகளைச் செய்யுங்கள்’ என்று நாங்கள் கூறினோம்.
மன்னார் பிரதேசத்திலேயே ஆட்டோ ஓடும் ஒரே பெண் நான்தான். நான் ஆட்டோ ஓட்டுவதற்கு, ஆட்டோ ஓட்டும் ஆண்கள் கேலி, கிண்டல் செய்கிறார்கள். நான் பெண் என்பதால் எவரேனும் அவ்வாறு என்னைக் கேலி செய்யும்போது நான் அவரிடம் ‘எனக்கு ஆட்டோ ஓட்டத் தெரியும். உங்கள் மனைவிக்கும் வாகனம் ஓட்ட கற்றுக் கொடுங்கள்’ என்று உபதேசிப்பேன்.
எனது கணவர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். நான் உறுதியான பெண் என்று அவர் அடிக்கடி கூறுகிறார். சமூகத்தில் என்னைப் பற்றி பேசப்படும் அவதூறுகளை அவர் பொருட்படுத்துவதில்லை. நாங்கள் இருவரும் திருமணம் முடித்து இப்போது 20 வருடங்கள் ஆகின்றன. நான் பணம் சேர்த்து ‘ஆண்கள் மாத்திரம் ஓடக் கூடியது’ என எல்லோரும் எண்ணியிருக்கும் பெரிய மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியிருக்கிறேன். நான் பெரிய மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறேன் என்று எனது கணவரின் சகோதரர்கள் அவருடன் கதைப்பதில்லை.
ஒரு நாள் போக்குவரத்து போலீஸார் எனது மோட்டார் சைக்கிளைத் துரத்தி வந்து ‘நீ ஒரு பெண் என்பதால் இவ்வாறான பெரிய மோட்டார் சைக்கிள்களை ஓட்டக் கூடாது. பெண்களுக்கு அது பொருந்தாது. வேண்டுமென்றால் ஸ்கூட்டர் சைக்கிளொன்றை ஓட்டு’ என்றார்கள். ‘உங்களுக்கு வேண்டும் என்றால் உங்கள் மனைவிக்கு ஸ்கூட்டி ஒன்று வாங்கிக் கொடுங்கள். இது நான் பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய சைக்கிள். இதை ஓட்ட எனக்கு உரிமை இருக்கிறது. அதைத் தடுக்க நீங்கள் யார்?’ என்று அவர்களிடம் கேட்டேன். பிறகு போலீஸுக்குப் போய் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு கொடுத்தேன். இங்குள்ள அநேகமான பெண்கள் என்னைப் பாராட்டுகிறார்கள். ‘அக்கா, உங்களைப் போல நாங்களும் ஆக வேண்டும்’ என்கிறார்கள். சில ஆண்களும் கூட என்னைத் தாண்டிப் போகும்போது பாராட்டி விட்டுப் போயிருக்கிறார்கள்.
இலங்கையில், “கொழும்பு துறைமுக நகரம்” (Clombo Port City) என்ற பிரம்மாண்டமான நகரத்தை சீனா அமைக்கவுள்ளது. அந்நகரத்தை நிர்வகிக்கும் ஆணையம் தொடர்பான “கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டம்” (Colombo Port City Economic Commission Act) அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் கடந்த மே 19-ஆம் தேதியன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
2014-ல் சீன அதிபர் ஷி ஜின்பிங் இலங்கைக்கு வருகை தந்தபோது, 1.4 பில்லியன் டாலர் தொகையை தொடக்க மூலதனமாகக் கொண்டு ராஜபக்சே அரசுடன் சீன அரசு போட்டுக் கொண்ட பெருந்திட்டமே கொழும்பு துறைமுக நகரத் திட்டமாகும்.
இலங்கையில் ராஜபக்சே கும்பலுக்குப் பின்னர், ஆட்சிக்கு வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே – அதிபர் மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசாங்கம் சுற்றுச்சூழல் காரணங்களை முன்வைத்து 2015-இல் இத்திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இது, உலக மேலாதிக்க அமெரிக்கா மற்றும் பிராந்திய மேலாதிக்க இந்தியாவின் ஆதரவைப் பெற்ற அரசாங்கமாகும். 2019-இல் சீன ஆதரவு ராஜபக்சே கும்பல் மீண்டும் அதிகாரத்துக்கு வந்த பிறகு இத்திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படுகிறது.
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய திட்டம் என்று கோத்தபய ராஜபக்சே அரசால் வர்ணிக்கப்படும் இத்துறைமுக நகரத் திட்டமானது, உண்மையில் அந்நாட்டின் மீதான சீனாவின் ஆதிக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்தோடு, தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவத் தளமாக இலங்கையை மாற்றுவதில் முக்கியமான நகர்வைத் தொடங்கியுள்ளது.
சீனாவின்ஆதிக்கத்தில்இலங்கை
ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா தொடர்ந்து முயன்று வருகிறது. அதற்காக இக்கண்டங்களில் உள்ள பல நாடுகளுக்கு திருப்பி செலுத்த முடியாத அளவுக்கு கடனை அளித்து, அந்நாடுகளைத் தனது போர்த்தந்திர நோக்கத்திற்கேற்ப பயன்படுத்திக் கொள்ளும் உத்தியை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்க மேலாதிக்க வல்லரசானது, ஈராக் மீது போர் தொடுத்து அந்நாட்டை ஆக்கிரமித்து தனது காலனியாக்கிக் கொண்டது என்றால், சீனாவானது, வளரும் நாடுகளுக்குக் கடன் கொடுத்து, அக்கடனுக்கு ஈடாக அந்நாட்டின் சில பகுதிகளைத் தனது காலனியாக்கிக் கொண்டு வருகிறது. இவ்வாறு சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் செல்லும் நாடுகளின் பட்டியலில், தெற்காசியப் பிராந்தியத்தில் அண்மைக்காலச் சான்றாக இலங்கை விளங்குகிறது.
தெற்காசியப் பிராந்தியத்தில், ஆசிய – ஐரோப்பிய கடல் போக்குவரத்தின் நடுவே இலங்கை அமைந்திருப்பதால், புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின் (Belt & Road) வாயிலாக அந்நாட்டைத் தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர சீனா தொடர்ந்து தீவிரமாக முயற்சித்தது.
2010-ஆம் ஆண்டில், 361 மில்லியன் டாலர் தொகையை தொடக்க மூலதனமாகக் கொண்டு அம்பாந்தோட்டை (Hambantota) எனும் இடத்தில் துறைமுகம் அமைப்பதற்காக, சீனாவின் அரசு வங்கியான எக்சிம் வங்கியானது 85% பணத்தை (306 மில்லியன் டாலரை 6.5% வட்டிக்கு) இலங்கைக்குக் கடனாக அளித்தது. மேலும், 2012-க்குப் பின்னர், இரு தவணைகளாக, முறையே 300, 600 மில்லியன் டாலரைக் கடனாக அளித்தது.
2017-இல், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% அளவுக்கும் மேலான இக்கடன் சுமையானது, இலங்கையின் கழுத்தை நெறித்தது. வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் சீனாவின் அரசு நிறுவனமான சீனா மெர்ச்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் (China Merchants Port Holdings) என்ற நிறுவனத்திடம் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றுக் கொண்டு அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 70% பங்கையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலப்பரப்பையும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு இலங்கை அரசு சீனாவுக்கு எழுதிக் கொடுத்தது. அப்போது இலங்கையில் கடும் அந்நிய செலாவணி பற்றாக்குறை இருந்ததால், தனது இந்த அடிமைத்தனமான ஒப்பந்தத்தை சாதனையாகப் பீற்றிக் கொண்டது அப்போதைய ரணில் விக்ரம சிங்கே அரசு. தெற்காசியப் பிராந்தியத்தில், ஆசிய – ஐரோப்பிய கடல் போக்குவரத்தின் நடுவே அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்றுவதில் சீனா தீவிரமாக இருந்துள்ளதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
கொழும்புதுறைமுகநகரம் : இலங்கையில்ஒருசீனத்தீவு
இலங்கையின் தலைநகரான கொழும்புவின் கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில், 269 ஹெக்டேர் (660 ஏக்கர்) நிலப்பரப்பை மீட்டமைத்து (land reclamation – அதாவது, கடலை நிலமாக்கி) வானுயரக் கட்டிடங்களுடன் வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், வங்கிகள், பங்குச்சந்தை நிறுவனங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள் – என ஒரு பிரம்மாண்டமான நகரத்தைக் கட்டுவதும், அந்நகரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை (Special Economic Zone – SEZ) நிறுவுவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். 2040-இல் இத்திட்டம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“இது, இலங்கையின் வரலாற்றிலேயே மிகப்பெரிய திட்டம்; இதன் மூலம் ஆண்டுக்கு 11 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும்; இலங்கையின் கடன்கள் அனைத்தும் தீர்க்கப்பட்டு, நாடு முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்; துபாய், சிங்கப்பூர், ஹாங்காங்கைப் போல, தெற்காசியாவின் நுழைவாயிலாக கொழும்பு நகரம் மாறும்; மிகப் பெரிய வணிக நகராக வளரும்; ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்; ஏராளமான அந்நிய முதலீடுகளை ஈர்க்கும்” – என்றெல்லாம் இத்திட்டத்தைப் பற்றி ஊதிப் பெருக்கி பிரச்சாரம் செய்கிறது, கோத்தபய அரசு. ஆனால், இத்திட்டம் “சீனாவின் காலனியாக இலங்கையை மாற்றுகிறது” என முதலாளித்துவ பத்திரிகைகளே எழுதுகின்றன.
சீனத் துறைமுகப் பொறியமைப்பு நிறுவனம் (China Harbour Engineering Company – CHEC) என்ற சீன அரசின் நிறுவனம், இந்த நில மீட்டமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இத்திட்டதிற்காக 1.4 பில்லியன் டாலர்களை இலங்கையில் சீனா முதலீடு செய்துள்ளது. அதற்குக் கைமாறாக மீட்டமைக்கப்பட்ட 269 ஹெக்டேர் நிலப்பரப்பை சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு அளித்துள்ளது, இலங்கை.
இவ்வாறு கட்டப்படும் நகரத்தை நிர்வகிக்கும் அதிகார அமைப்பு தொடர்பான சட்டம்தான் மே 19-இல் நிறைவேற்றப்பட்ட “கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணையச் சட்டம்” (Colombo Port City Economic Commission Act) ஆகும். மார்ச் 23-இல் இச்சட்டம் மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டபோதே கடும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் கிளப்பியது. மிக முக்கியமாக, இம்மசோதாவில் உள்ள பல கூறுகள் இலங்கையின் அரசியலமைப்புக்கும் அந்நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானவையாக உள்ளன என்றும், இம்மசோதா மீது மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கோரி எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் 19 மனுக்களை இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தன.
கொழும்புவின் கடலில் இருந்து மீட்டமைக்கப்பட்டுள்ள 660 ஏக்கர் நிலப்பரப்பு
அந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் உச்சநீதி மன்றத்தால் சரிபார்க்கப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, இம்மசோதாவுக்கெதிரான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், இலங்கை அரசுக்கு இரண்டு பரிந்துரைகளைச் செய்தது.
ஒன்று, இதை அப்படியே சட்டமாக்க வேண்டுமானால், மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவது அவசியம். இரண்டாவது, இதில் உள்ள சில கூறுகளைத் திருத்திவிட்டால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைக் கொண்டு இதைச் சட்டமாக்கிக் கொள்ளலாம் என்று கூறியது. இந்த இரண்டாவது வழிமுறையின் மூலம், மசோதாவை நிறைவேற்ற அரசுக்கு வழியமைத்துக் கொடுத்தது நீதிமன்றம்.
எல்லோரும் எதிர்பார்த்ததைப் போல இரண்டாவதைத் தேர்வு செய்தது, கோத்தபயா அரசு. அடிப்படையில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் இம்மசோதாவில் சில திருத்தங்களை மட்டும் செய்து, 225 பேரைக்கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 149 பேரின் பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளது.
இச்சட்டத்தின்படி, அந்நகரத்தை நிர்வகிக்க “கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையம்” என்ற அதிகார அமைப்பு நிறுவப்படவுள்ளது. அந்நகரில் வரிவசூலித்தல், திட்டங்களை வகுத்தல், நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் இவ்வாணையத்துக்கே வழங்கப்படவுள்ளது. இலங்கையில் ஒரு ஆட்சி இருக்கும்போதே, அதற்குக் கட்டுப்படாத தனித்த அதிகார அமைப்பாகச் செயல்படும் தன்மை கொண்டதாக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலமைப்பின் மிக முக்கியமான 25 சட்டப் பிரிவுகளிலிருந்து இவ்வாணையத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சட்டத்தின்படி, துறைமுக நகருக்குள் வரக்கூடிய முதலீட்டாளர்கள், நிலம் வாங்குபவர்கள், வீடுகளை வாங்குபவர்கள், வர்த்தக நடவடிக்கைகள் ஆகிய அனைத்துக்கும் இவ்வாணையமே அனுமதி வழங்கும். துறைமுக நகருக்குத் தேவையான கொள்கைகளை வகுத்தல், நிர்வாக ரீதியிலான தீர்மானங்களை எடுத்தல், அனுமதிகளை வழங்குதல், விதிவிலக்குகளை மேற்கொள்ளுதல், தேவையான அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட விடயங்களையும் இவ்வாணையமே மேற்கொள்ளும்.
“இலங்கை குடிமகன் ஒருவர், கொழும்பு துறைமுக நகருக்குள் செல்வதற்குக் கட்டுப்பாடுகள் இருக்கும்; விசா-வை ஒத்த சிறப்பு அடையாள அட்டை நடைமுறையொன்று அமல்படுத்தப்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது; அந்நகருக்கு சென்று திரும்புவதற்கு குறிப்பிட்ட கட்டணம் நிர்ணயிக்கப்படவும் வாய்ப்புள்ளது” என்று இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர்.
7 பேரைக் கொண்ட இவ்வாணையத்தை இலங்கை அதிபர்தான் அமைப்பார் என்ற போதிலும், நாடாளுமன்றத்தால் இதைக் கட்டுப்படுத்த முடியாது. மேலும், சீனர்களையும் இவ்வாணையத்தில் நுழைக்கக் கூடிய அதிகாரம் அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, இவ்வாணையத்தால் தீர்மானிக்கப்படும் வெளிநாட்டு நாணயமே – சீனாவின் யுவான் நாணயமே – இந்நகரத்தில் புழக்கத்தில் இருக்கும் என்றும் இச்சட்டம் கூறுகிறது.
இவையனைத்தையும் தொகுத்துப் பார்த்தால், கொழும்பு துறைமுக நகரம் என்பது இலங்கையின் நிலத்தில் ஒரு சீனத் தீவாகவே இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ஆணையத்தின் வழியாக, இலங்கையின் நிலப்பரப்பில் சீனா தனது சொந்த ஆட்சியையே நடத்தவிருக்கும் சித்திரம் நம்முன் தெரியும்.
கொழும்பு துறைமுக நகரம், அம்பாந்தோட்டை துறைமுகம் இரண்டையும் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ள சீனா, அவற்றை வணிக நோக்கங்களுக்கு மட்டுமின்றி, இராணுவத் தளமாகவும் பயன்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
ஒருபுறம், ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு “குவாட்” கூட்டணியை அமெரிக்கா நிறுவியுள்ளது. மற்றொருபுறம், தெற்காசியப் பகுதியில் நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், மியான்மர், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா துடிக்கிறது. தெற்காசியப் பிராந்தியத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டாபோட்டி தீவிரமடைந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் மட்டும் 8 பில்லியன் டாலரை இலங்கையின் ‘வளர்ச்சித் திட்டங்களுக்கு’ சீனா கடனாக வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழினவாதிகளும்இலங்கையின்எதிர்க்கட்சிகளும்
நிலைமையோ இவ்வாறு இருக்க, ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தின்போது இந்தியாவை நம்பச் சொல்லி அம்மக்களுக்குத் தொடர்ச்சியாக துரோகம் செய்த தமிழினவாதிகளோ, இப்பிரச்சனையை இந்தியாவின், தமிழ்நாட்டின், ஈழத் தமிழர்களின் நலனுக்கு மட்டுமே எதிரானது என்பது போலப் பேசி வருகின்றனர்.
ம.தி.மு.க-வின் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீனாவின் இராணுவத் தளமாக இப்பகுதி மாறிவிடும் அபாயம் உள்ளது. கன்னியாகுமரியில் இருந்து 290 கி.மீ. தொலைவில் சீனாவின் கடற்படைத் தளம் உருவானால், அது இந்தியாவின் பூகோள நலனுக்கு எதிராகப் போய்விடும் என்பதை இந்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும். ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க இலங்கைக்குத் துணை நின்ற சீனா, தமிழ்நாட்டுக்கு மிக அருகில் அமைந்துள்ள கடற்பகுதியில் இராணுவத் துருப்புகளை நிறுத்தத் துணிந்தால் தமிழ்நாட்டிற்கு கேடு விளையும். எனவே, ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று சீனவுக்கெதிராக மோடி அரசுக்கு கொம்பு சீவி விடுகிறார்.
அதேபோல, பா.ம.க-வின் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்தியப் பாதுகாப்புக்கு, குறிப்பாக தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு இதுவரையில்லாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும்; அதன்மூலம் இந்தியாவைக் கண்காணிக்க வேண்டும் என்பது சீனாவின் நீண்ட நாள் கனவாகும். தென்னிந்தியாவில் இலங்கை தாக்குதல் நடத்த முயன்றால், இலங்கை வழியாகத்தான் நடைபெறக் கூடும் என்பதை நான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறேன்.” இதை எதிர்கொள்ள “ஐ.நா மூலம் ஈழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழம் அமைத்துக் கொடுத்து, இந்தியாவின் வலிமையை இலங்கையில் அதிகரிக்க வேண்டும்” என்று கூப்பாடு போடுகிறார்.
இந்திய வெளியுறவுத்துறையே “இதை நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும்” என்று அறிக்கைவிட்டு அடக்கி வாசிக்கும்போது, இவர்களோ இந்தியாவுக்கு ஆபத்து, தமிழகத்துக்கு ஆபத்து, மோடி அரசே எதாவது செய்யுங்கள் என்று பொங்குகிறார்கள்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் என்னவென்றால், இவர்கள் அனைவரும் இந்தியாவின் (குறிப்பாக பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலின்) சீன எதிர்ப்பு நிலைப்பாட்டில் ஒத்துப்போவதோடு, சீனாவுக்கெதிராக தமிழ் மக்களிடம் தேசியவெறியைக் கிளப்புவதன் மூலம், நாடெங்கும் சீனாவைக் காட்டி தேசவெறியைக் கிளறிவிடும் மோடி அரசுக்குச் சேவை செய்கிறார்கள். ஒருவேளை இதைச் சாக்கிட்டு தமிழகத்தின் எல்லையோரங்களில் இராணுத்தை குவிக்க மோடி அரசு முற்பட்டால், “வேறுவழியில்லை, இப்போதைக்கு மோடி அரசை ஆதரிக்க வேண்டும்” என்றும் இவர்கள் பேசக்கூடும்.
இன்னொருபுறம் ஈழத்தில் உள்ள தமிழினவாதிகளோ, “தமிழ் வின்”, “லங்கா ஸ்ரீ”, “குறியீடு” போன்ற இணைய தளங்களில் எழுதும் கட்டுரைகளில், “இலங்கை நிரந்தரமாக இந்தியாவின் கையைவிட்டுப் போகிறது” என்றும், “ஈழத் தமிழர்களை இந்தியா கைவிட்டதால்தான் அவர்களில் சிலரிடம் சீனாவுக்கு ஆதரவான மனநிலை உருவாகியுள்ளது” என்றும் எழுதுகிறார்கள். இதன் உச்சமாக, “இரண்டுபடும் உலக ஒழுங்கு: இலங்கை யார் பக்கம்? ஈழத்தமிழ் மக்கள் யார் பக்கம்?” என்ற கட்டுரை நேரடியாக, ஈழத் தமிழர்களை அமெரிக்கா தலைமையிலான இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்கிறது.
அதாவது, ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கத் துணைநின்ற சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை சென்று கொண்டிருக்கிறது என்பதற்காக, ஈழத் தமிழர்கள் இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் செல்ல வேண்டும் என்று கூவுகிறார்கள்.
உண்மை என்னவென்றால், ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை சிதைக்கவும், அதை ஒடுக்கவும் இந்தியா (காங்கிரசு, பா.ஜ.க. இரு அரசுகளுமே) செய்த அட்டூழியங்கள் ஏராளம். ஈழ விடுதலைப் போராட்டக் குழுக்களை சிதைக்க இந்திய உளவுத் துறையான “ரா” வேலை செய்தது, இலங்கைக்குப் ‘அமைதிப் படைகளை’ அனுப்பி ஈழ மக்களை கொன்றது, பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, இறுதிப் போரின் போது இலங்கை அரசுக்கு ஆதரவாக நின்று இந்திய ராணுவத்தின் மூலம் வியூகம் வகுத்துக் கொடுத்தது – என இலங்கை அரசோடு துணைநின்று இனப்படுகொலையை நிகழ்த்திய குற்றவாளிதான் இந்திய அரசு.
தமிழின அழிப்புப் போரின் இறுதி நேரம் வரை ஈழத்திலும் தமிழ்நாட்டிலுமுள்ள தமிழினவாதிகள் எல்லோரும் இந்தியாவை நம்புமாறு, இந்தியாவின் மீதான பிரமையை உருவாக்கினார்கள். இப்போதும் கூட ஈழத் தமிழர்களின் மீதான இனப் படுகொலையை ஐ.நா. மன்றத்தில் சீனா நேரடியாக ஆதரிக்கிறது என்றால், இந்தியா மறைமுகமாக ஆதரிக்கிறது. இவற்றையெல்லாம் மூடிமறைக்கும் இத்தமிழினவாதிகள் ஈழ மக்களுக்கு மீண்டும் துரோகத்தையே செய்கிறார்கள்.
இந்தியாவின் ஆதரவில்தான் தனித் தமிழீழம் அமையும், அதற்கு இந்தியாவையும் அமெரிக்காவையும் எப்படியேனும் பயன்படுத்தலாம் என்ற பிரமையை மக்களிடம் உருவாக்குவது, அமெரிக்காவின் அடியாளாக தெற்காசியப் பிராந்தியத்தில் செயல்படும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்க நோக்கங்களை மூடிமறைப்பது, இலங்கையில் முதலீடு செய்துள்ள டாடா, அதானி போன்ற தரகு-அதிகாரவர்க்க முதலாளிகளின் நலன்களுக்கேற்பத்தான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இருக்கும் என்பதை மூடி மறைப்பது, ஈழத் தமிழர்களின் எதிரிதான் இந்தியா என்பதை மூடி மறைப்பது, இலங்கையும் சீனாவும் மட்டுமே எதிரிகள் என்ற கருத்தை மக்களிடம் உருவாக்குவது – ஆகிய இந்திய அடிவருடித்தனத்தைத் தொடர்ச்சியாக இவர்கள் செய்து வருகிறார்கள்.
தேசிய இன விடுதலைப் போராட்டங்களை ஒடுக்குவதில் ஏகாதிபத்திய, பிராந்திய மேலாதிக்க சக்திகளிடையே கொள்கை வேறுபாடு எதுவும் இல்லை என்பதை நாம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறோம். ஆனால் தமிழினவாதிகளோ, ஈழத் தமிழர்களை மீண்டும் இந்திய அரசை நம்புமாறு பிரமைகளை உருவாக்குகிறார்கள்.
இதுவொருபுறமிருக்க, “வரலாற்று ரீதியாக இந்துமாக் கடலில் முதன்முதலில் கடல் கடந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியவர்கள் தமிழர்கள். அதாவது, சோழர்கள்தான். அவர்கள் ஏறக்குறைய தென்கிழக்காசியா முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். இதன் மூலம் சோழர்களின் நீச்சல் தடாகமாக அது விளங்கியது. 16–ஆம் நூற்றாண்டில் அது ஐரோப்பியர்களின் நீச்சல் தடாகமாக மாறியது. ஆனால், இன்று பசிபிக்கில் மையம் கொண்டுள்ள இந்து சமுத்திர நாடல்லாத சீனா, (அழுத்தம் நம்முடையது) இந்து சமுத்திரத்தில் கால் பதித்துள்ளது” என்று குறிப்பிடுகிறது தமிழ் வின் இணைய தளத்தில் வெளியான மேற்சொன்ன கட்டுரை.
பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அகண்ட பாரதக் கனவும், தமிழினவாதிகளின் ‘சோழ சாம்ராஜ்ஜியப் பெருமை’யும் இணையும் புள்ளி இதுவாகும். இந்தியாவின் ஆதிக்கத்தின் கீழ் ஈழ விடுதலையைப் பேசி வந்த தமிழினவாதிகளில் ஒரு பிரிவினரின் உண்மையான முகம் இதிலிருந்து பளிச்சென வெளிப்படுவதை நாம் காணலாம். மேலும், தமிழ்நாட்டிலும் ‘சோழ சாம்ராஜ்ஜியப் பெருமை’ பேசும் சீமான் போன்றோரின் கருத்துகளும் இதே வகையில் இருக்கும் அதிசயத்தையும் நாம் பார்க்க வேண்டும்.
இன்னொருபுறம், இத்திட்டத்தை எதிர்த்துச் சவடால் அடிக்கும் ஐக்கிய மக்கள் முன்னணி (SJB), மக்கள் விடுதலை முன்னணி (JVP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உள்ளிட்ட இலங்கையின் எதிர்க்கட்சிகளும் சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிரானவை அல்ல. ஈழத்தில் நடந்த இன அழிப்புப் போரின் போது இராஜபக்சே அரசை ஆதரித்த கட்சிகள்தான் இவை.
எனவே, இனவாதிகள் சொல்வது போல், சீனா அமைக்கும் இத்துறைமுக நகரம் இந்தியாவுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் மட்டும் எதிரானதல்ல; அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த மேலாதிக்கத்திற்கான போட்டாபோட்டி தீவிரமடைந்து வருவதானது, ஈழத்தமிழ் மக்களுக்கும் இலங்கை உழைக்கும் மக்களுக்கும், ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகளின் மக்களுமே எதிரானது. இதில் எந்தவொரு தரப்பையும் தெற்காசிய நாடுகளின் உழைக்கும் மக்கள் ஆதரிக்க முடியாது.
மேலும், உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவோ, அல்லது அதனுடன் போட்டியிடும் சீனாவோ, அமெரிக்க விசுவாச பிராந்திய மேலாதிக்க வல்லரசான இந்தியாவோ ஈழத் தமிழர்களுக்கு எக்காலத்திலும் விடுதலையைப் பெற்றுத் தராது. சிங்கள, தமிழின உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து போராடுவதன் மூலமே ஈழத் தமிழ் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க முடியும்.
எனவே, ஈழத் தமிழ் மக்களும் சிங்கள உழைக்கும் மக்களும் ஒன்றிணைந்து, சொந்த நாட்டைச் சீனாவுக்குத் தாரைவார்க்கும் கோத்தபய அரசுக்கு எதிராகவும், இலங்கையில் நடந்துவரும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஏகாதிபத்தியங்களுக்கும் அவற்றின் உள்நாட்டுச் சேவகர்களுக்கும் எதிராகவும், இந்தியப் பெருங்கடலில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டா போட்டிக்கு எதிராகவும், தெற்காசிய பிராந்திய அடியாளான இந்தியாவுக்கு எதிராகவும் உடனடியாகப் போராடியாக வேண்டிய காலம் இது.
அமேசன் தொலைக்காட்சித் தொடர் ஃபேமிலி மேன் 2 பற்றிய விமர்சனம்.
சுருக்கமாக சொன்னால் ஒரு மொக்கைத் தொடரை சர்ச்சைக்குள்ளாக்கி வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இறுதியில் அமேசன் தளத்திற்கு அதிகளவு சந்தாதாரர்களை சேர்த்துக் கொடுத்ததுதான் மிச்சம். சில நேரம் எதிர்ப்புக் கூட, ஒரு படத்திற்கு விளம்பரமாகி விடும் என்பதற்கு ஃபேமிலி மேன் ஒரு சிறந்த உதாரணம்.
இதுவும் வணிக நோக்கில் தயாரிக்கப்படும் பிற திரைப்படங்கள் போன்று, ஹிந்தி பேரினவாத கோணத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்திய தேசபக்தி படம்தான். இந்தத் தடவை குறிப்பாக தமிழர்கள் மீது இனவாத வன்மம் காட்டி இருக்கிறார்கள் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. இதிலும், காஷ்மீரிகளுக்கு எதிரான வன்மம், பாகிஸ்தான் எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்பு (லவ் ஜிகாத்) என்று வழமையான இனவாத மசாலாக்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு குப்பைப் படம். இதற்கு இந்தளவு ஆரவாரம் செய்யத் தேவையில்லை. இதைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தாலே தோல்வி அடைந்திருக்கும்.
இதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்ட நாளில் இருந்து இன்று வரையில், so called “புலி ஆதரவாளர்கள்”, அல்லது வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள், கொஞ்சம் ஓவராகவே பொங்கிப் படைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். புலிகள் தொடர்பாக அவர்கள் கட்டமைத்து வைத்திருக்கும் புனிதப் பிம்பம் உடைக்கப்படும் போது ஏற்பட்ட வலி காரணமாக கதறி இருக்கிறார்கள். “புலிகளைப் பற்றி உனக்கென்ன தெரியும்?” என்ற கணக்காக பொரிந்து தள்ளிவிட்டார்கள். ஒருவர், ஹிந்திக்காரர்களுக்கு தமிழ் புரியாதே என்ற ஆதங்கத்தில், யூடியூப்பில் ஆங்கிலத்தில் பேசி வெளியிட்டு இருந்தார்.
பேமிலி மேன் தொடர் புலிகளை கொச்சைப்படுத்தி உள்ளது என்பது உண்மை தான். ஏற்கனவே, காஷ்மீர் போராளிகளை கொச்சைப் படுத்தியவர்கள் புலிகளை மகிமைப் படுத்துவார்கள் என எதிர்பார்ப்பது எமது மடமைத்தனம். ஆனால், பார்வையாளர்கள், (தமிழர் அல்லாத வேற்றின) மக்கள், இந்தப் படத்தை பார்த்துதான் புலிகளை மதிப்பிடப் போகிறார்கள் என நினைப்பது வேடிக்கையானது.
உண்மையில் ஃபேமிலி மேன் தொடர் புலிகளை சித்தரித்துள்ள விதம் சிறுபிள்ளைத்தனமானது. நகைப்புக்குரியது. தொடக்கத்தில் இருந்து “குறிப்பிட்ட ஐந்து நபர்களைத் தான்” படம் முடியும் வரை காட்டுகிறார்கள். ஒரு சிறு குழுவின் சாகசக் காட்சிகளை பார்த்தால், அதை ஒரு போராட்டம் என்று எவனும் நம்ப மாட்டான். சுருக்கமாக சொன்னால், ஒரு மாபியாக் குழு மாதிரி சித்தரித்து இருக்கிறார்கள். இதை எத்தனை படங்களில் பார்த்து விட்டோம்? புலிகளை மறந்துவிட்டு பார்த்தால், இதுவும் அரைத்த மாவை அரைத்த அரைவேக்காட்டு படம்தான்.
ஏற்கனவே, செய்திகளில் கேள்விப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு படக்கதை எழுதப் பட்டிருந்தாலும், யதார்த்த அரசியலில் இருந்து வெகுதூரம் சென்று விடுகின்றது. அதனால், ஒரு செயற்கைத்தன்மை உண்டாகின்றது. இதைவிட சில வருடங்களுக்கு முன்பு வெளியான மெட்ராஸ் கபே திரைப்படம், ஓரளவு வரலாற்று உண்மைகளுடன் ஒத்துப் போகின்றது. அதனுடன் ஒப்பிட்டால் ஃபேமிலி மேன் வெறும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்ட சராசரி மொக்கைப்படம்.
உண்மையில், வடஇந்திய ஹிந்திக்காரர்கள் என்றாலும், அன்றாடம் செய்தி வாசிப்பவர்களுக்கு புலிகளைப் பற்றி நன்றாகத் தெரியும். அவர்களுக்கு, சிறு குழந்தைக்கு கதை சொல்வது மாதிரி, புலிகள் இந்தப் ஃபேமிலி மேன் படத்தில் வருவது மாதிரி இருப்பார்கள் என்று சொல்லி ஏமாற்ற முடியாது. அரசியலில் நாட்டமில்லாத மக்கள் மட்டும், இதையும் இன்னொரு “காஷ்மீர் தீவிரவாதிகள் பற்றிய படம்” என்பது மாதிரி பார்த்து விட்டு கடந்து செல்வார்கள். (அவர்களில் பலருக்கு இலங்கை எங்கே இருக்கிறது என்றும் தெரியாது.) அதற்கு ஏற்றவாறு கதாசிரியர் காஷ்மீர், ISI பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஈழத்திலும் பொதுவாக புலிகளை ஆதரிக்கும் தமிழர்களின் விகிதாசாரம் மிகக் குறைவாகத்தான் இருக்கும். நாற்பது சதவீதம் ஆதரிக்கிறார்கள் என்பதே ஒரு மிகைப்படுத்தல்தான். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்தவர்களிடமும் புலிகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன. இருப்பினும், அதே மக்கள் வெளியுலகில் புலிகளுக்கு தார்மீக ஆதரவு வழங்குவது போன்று காட்டிக் கொள்வார்கள். இது அவர்களது இருப்பு சார்ந்த விடயம்.
குறிப்பாக, சிங்கள அல்லது ஹிந்தி பெரும்பான்மையினத்தின் அடக்குமுறையை, பேரினவாத மேலாண்மையை எதிர்கொள்ளும் போதெல்லாம், தமிழர்கள் தமது முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு ஓரினமாக ஒன்று சேர்ந்து எதிர்ப்பார்கள். ஈழத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் காணப்படும் இந்த ஒற்றுமை உணர்வு தான் ஃபேமிலி மேன் படத்தில் மிகுந்த வெறுப்புடன் அணுகப் படுகின்றது. அதை நெறியாளர் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்துகிறார்.
கவனிக்கவும்: “தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை” என்று தமிழினவாதிகள் (வலதுசாரிகள்) மட்டும்தான் சொல்லிக் கொள்கிறார்கள். அது அவர்களது வழமையான அரசியல் பிரச்சாரம். ஆனால், வெளியுலகம் தமிழர்களை அப்படிப் பார்ப்பதில்லை. சிங்களவர்களை அல்லது ஹிந்திக்காரர்களை கேட்டால், தமிழர்களிடம் உள்ள ஒற்றுமை தமது மக்களிடம் இல்லை என்பார்கள் !
இதை “ஆரிய – திராவிட முரண்பாடு” என்று சொல்லலாம். அதை ஏற்க மறுப்பவர்கள் “சிங்கள – தமிழ் முரண்பாடு” அல்லது “ஹிந்தி – தமிழ் முரண்பாடு” என்று சொல்லலாம். அது அவரவர் அடையாள அரசியல் குறித்த பிரச்சினை. எது எப்படி இருப்பினும் ஹிந்தி மொழி பேசும் வடஇந்தியர்களுக்கும், தமிழ் மொழி பேசும் தென்னிந்தியர்களுக்கும் இடையில் ஏதோ ஒரு பரம்பரைப் பகை இருந்து வருவது மட்டும் உண்மை. இந்த இன முரண்பாட்டை ஃபேமிலி மேன் படம் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவே காட்டி விடுகின்றது.
இந்தப் படத்தில் வடஇந்திய புலனாய்வுத் துறை அதிகாரிகளாக வரும் கதாபாத்திரங்கள் (திவாரி, ஜேகே, மிலிந்த்) வாழும் இடங்களைப் பார்த்தால் ஐரோப்பா மாதிரி இருக்கிறது. அவர்களது வீடுகளும், வேலை செய்யும் இடங்களும் மிக நவீனமாக உள்ளன. அவர்களது நடை, உடை, பாவனை, கலாச்சாரமும் மேற்கத்திய நாட்டவர் போன்றிருக்கிறது. நிச்சயமாக, குடும்பக் காட்சிகளை பார்க்கும் ஐரோப்பியர்கள் அதில் தங்களைப் பொருத்திப் பார்க்க முடியும். அந்தளவு மேற்கத்திய வாடை அடிக்கிறது.
ஆனால், கதை சென்னைக்கு நகர்ந்ததும் காட்சியமைப்புகள் தலைகீழாக மாறி விடுகின்றன. அப்போதுதான் மக்கள் நெருக்கடியும், இரைச்சலும் மிக்க, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ள ஒரு மாநிலத்தை பார்க்கிறோம். “இதுவும் இந்தியாவிலா இருக்கிறது?” என்று ஆச்சரியப்பட வைக்கிறார்கள். ஃபேமிலி மேன் படம் தமிழ்நாட்டை சித்தரிக்கும் காட்சிகளை பார்ப்பவர்கள், அது எங்கோ ஆப்பிரிக்காவில் இருப்பதாக நினைப்பார்கள். அந்தளவு மோசமாகக் காட்டி இருக்கிறார்கள்.
ஃபேமிலி மேன் காட்டும் தமிழ்நாடு எந்த வித மாற்றமும் இல்லாமல் எழுபது வருடங்களுக்கு முந்திய பழைய வீடுகளுடன் உள்ளது. தமிழர்களின் உடுத்துவதிலும் எந்த மாற்றமும் இல்லை. அதே “பழைய பஞ்சாங்கம்” தானாம் ! காலனிய காலத்தில் வெள்ளையர்கள் தமக்கு கருப்பர்களை நாகரிகமயப்படுத்தும் கடமை இருப்பதாக கருதிய மாதிரித்தான், வடஇந்தியர்கள் தமிழர்களை பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. தெருவில் மக்கள் குடங்களுடன் குழாயடியில் தண்ணீருக்காக காத்திருக்கிறார்கள். வெயில் கொடுமை தாங்க முடியவில்லை என்று வட இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அடிக்கடி புலம்புகிறார்கள். அவர்கள் எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருந்து வந்திருக்கிறார்கள் போலிருக்கிறது !
இதெல்லாம் படத்தில் எந்தளவு தூரம் தமிழர்களுக்கு எதிரான இனவாதம் கட்டமைக்கப் படுகின்றது என்பதற்கான உதாரணங்கள். இந்தக் காட்சியமைப்புகளுக்கு பின்னால் ஒரு மேட்டுக்குடி மனப்பான்மை மட்டுமல்லாது, தமிழர்களுக்கு எதிரான இனவாத வெறுப்புணர்வும் காணப்படுகின்றது. இது தான் நாங்கள் எதிர்க்க வேண்டிய விடயம்.
பொதுவாகவே, வடஇந்தியர்கள் தம்மை உயர்வாகவும், தென்னிந்தியர்களை தாழ்வாகவும் கருதும் போக்கு உள்ளது. இருப்பினும், பிற தென்னிந்திய மாநிலங்களை விட்டு விட்டு தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்து எதிர்ப்பதற்கு சில விசேட காரணங்கள் உள்ளன.
இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் ஹிந்தி மொழி மேலாதிக்கம் தீவிரமாக எதிர்க்கப்பட்டு வருகின்றது. அரசியல் களத்தில் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்பவர்கள் மத்தியில் கூட தமிழ் மொழி பேசுவதில் ஒரு பெருமிதம் இருக்கும். இந்த விடயத்தில் வலதுசாரிகளும், இடதுசாரிகளும் கட்சி வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். புலி ஆதரவு, புலி எதிர்ப்பு வேற்றுமை கூட அங்கே மறைந்து விடும். தமிழர்களின் இந்த ஒற்றுமை உணர்வு வடஇந்தியர்களுக்கு மிகுந்த எரிச்சல் ஊட்டி வருகின்றது.
இதனை என்னுடன் பேசிய சில வடஇந்திய நண்பர்கள் நேரடியாகவே தெரிவித்துள்ளனர். அதிலும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் கடல் கடந்து வாழும் ஈழத்தமிழர்கள் மீது காட்டும் “தொப்புள்கொடி உறவு பாசம்” கண்டு அவர்கள் இன்னும் பல மடங்கு எரிச்சல் அடைகிறார்கள். இந்த வெறுப்புணர்வை பேமிலி மேன் படத்தில் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தமிழர்கள் ஈழத்தவர் என்றாலும், தமிழ்நாட்டவர் என்றாலும் நம்பத் தகுந்தவர்கள் அல்ல என்று இந்திய நடுவண் அரசுக்கு “போட்டுக்” கொடுக்கிறது. தமிழ்நாட்டில் பேரினவாத மொழியான ஹிந்தியும் பேசத் தெரிந்த அதிகார வர்க்கத்தினரை நம்பலாம். ஆனால், தமிழ் மட்டுமே பேசும் மக்களை நம்ப முடியாது. ஆகவே, தமிழ்நாட்டை விரைந்து ஹிந்தி மயப்படுத்துவதே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு. இது தான் இந்திய அரசுக்கும், பார்வையாளர்களுக்கும் ஃபேமிலி மேன் தெரிவிக்கும் செய்தி.
உதாரணத்திற்கு, புலனாய்வுத் துறை அதிகாரியாக வரும் முத்து அரசுக்கு விசுவாசமாக இருக்கிறார். அதே மாதிரி இயக்கத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டே காட்டிக் கொடுக்கும் இன்போர்மர் செல்வமும் ஹிந்தி பேசுகிறார். துரோகிகள் ஆட்சியாளர்களின் நண்பர்கள் என்பது உண்மை தானே? இதன் இன்னொரு வடிவம்தான், லண்டனில் இயங்கும் நாடு கடந்த ஈழ அரசின் தலைவராக காட்டப்படும் தீபன் என்ற பாத்திரம். அவரும் தனக்குத் தெரிந்த இரகசியங்களை எல்லாம் இந்திய அரசுக்கு தெரிவித்து விடுகிறார். படத்தின் முடிவில் இவர்களுக்கு மெடல் கொடுத்து கௌரவிக்காதது மட்டுமே குறை.
எப்போதும் இந்திய மத்திய அரசுடன், அதாவது ஹிந்தி பேரினவாதத்துடன் ஒத்தோடிக் கொண்டிருக்கும் வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகளை இந்த ஃபேமிலி மேன் படம் ஏமாற்றமடைய வைத்திருக்கிறது. அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. அதைத் தான் அவர்களது கதறல்களும் வெளிப்படுத்துகின்றன. தங்களுக்கு “தமிழீழம் பிரிவது மட்டுமே முக்கியம் என்றும், தமிழ்நாடு எப்போதும் போல இந்திய இறையாண்மையை ஏற்று நடக்கும் என்றும்…” வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் சொல்லி வருகின்றனர்.
அதற்கு ஃபேமிலி மேன் சொல்லும் பதில் என்ன?
“நீங்கள் இலங்கையின் இறையாண்மையை எதிர்க்கிறீர்கள் என்றால், இந்தியாவின் இறையாண்மையையும் எதிர்க்கிறீர்கள் என்று அர்த்தம் ! அதனால் நாங்கள் உங்களை பாகிஸ்தான் ISI உடனும், காஷ்மீர் தீவிரவாதிகளுடனும் சேர்த்துத் தான் பார்ப்போம் !”
இங்கே சில உதாரணங்களை பார்ப்போம் :
இந்தப் படத்தில் முக்கிய பாத்திரமாக வரும் ராஜி என்ற பெண் போராளியை, ஒரு கட்டத்தில் வேதாரணியத்தில் (பெயர் மாற்றி இருக்கிறார்கள்) பிடித்து உள்ளூர் போலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்தக் கிராமத்தில் வாழும் தமிழ் மக்கள் எல்லோரும் இயக்கத்திற்கு ஆதரவானவர்கள். அதனால், உளவுத்துறையினரின் விசாரணையில் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். மாறாக, மக்கள் ஒன்று சேர்ந்து புலனாய்வுத் துறை அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். போலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி பெண் போராளி ராஜியை விடுவித்து விடுகிறார்கள். இந்தத் தாக்குதலுக்கு தலைமை தாங்குவது ஒரு காஷ்மீர் போராளி !
லண்டனில் மறைந்து வாழும் “புலிகள்”(?) இயக்கத் தலைவருக்கு உற்ற நண்பனாக வருபவர் ஒரு ISI அதிகாரி. யாருக்கும் தெரியாமல் இயக்கத் தலைவர் பாஸ்கரனை பாதுகாப்பாக பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அந்த இயக்கத்தின் “உப தலைவர்” தீபனை கூட நம்ப முடியாது. ஏனென்றால் அவர் இந்திய அரசுடன் ஒத்துழைப்பவர். இறுதியில், தீபனின் காட்டிக்கொடுப்பால் தலைவர் பாஸ்கரன் சயனைட் கடித்து தற்கொலை செய்து கொள்கிறார்.
அதாவது, பாகிஸ்தானிகளும், காஷ்மீரிகளும் ஈழத்தமிழர்களுடன் மிகுந்த மனிதாபிமானத்துடன் நடந்து கொள்கிறார்கள். ஆனால், இந்தியர்களை (ஹிந்தி பெரும்பான்மையினரின் அரசு) வெறுக்கிறார்கள்.
உலகப் புகழ் பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டோ, சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தனது மேஜை மீது விளம்பரநோக்கில் வைக்கப்பட்டிருந்த கோக் பாட்டில்களை அகற்றிவிட்டு, தனது தண்ணீர் பாட்டிலை உயர்த்திக் காட்டி மேஜை மீது வைத்தார். ஏற்கெனவே கோக் நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், ரொனால்டோ கோக்கை புறக்கணித்தது, சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. கோக்கின் ஆரோக்கியமற்ற தன்மை குறித்துப் பலரும் பேசத் துவங்கினர். இதன் காரணமாக, கோக் நிறுவனத்திற்கு ஒரே நாளில் ரூ. 29,337 கோடி பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டது.
ஒரு முன்னணி வீரராக இருந்துகொண்டு கோக்கின் ஆதிக்கத்தை ஒதுக்கித் தள்ளிய ரொனால்டோவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மூடு டாஸ்மாக்கை ! மீண்டும் வெடிக்கட்டும் டாஸ்மாக்கிற்கு எதிரான போராட்டம் !
கொரோனா கால ஊரடங்கு தளர்வுகளோடு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா கால உதவித்தொகையாக இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 கொடுக்கப்பட்ட நாளன்று டாஸ்மாக் திறக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆட்சியின் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் “அரசு கொடுக்கும் உதவித் தொகையானது வேறு வழியில் அரசுக்கே வந்து சேரும்” என்று கூறியதை மெய்ப்பிக்கின்றது இந்நிகழ்வு. யார் ஆட்சிக்கு வந்தாலும் குடிகெடுக்கும் டாஸ்மாக்கை மூட மாட்டார்கள். மக்கள் போராட்டம் ஒன்றே டாஸ்மாக்கை மூடும் என்ற உண்மயையும் அறிவிக்கிறது.
டாஸ்மாக் திறக்கப்பட்ட இரு நாட்களுக்குள்ளேயே எத்தனை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதை ஆராய வேண்டும். ரேசன் கடையில் இருந்து உதவித் தொகையை மனைவியிடம் இருந்து பிடுங்கிக்கொண்டும் / தானே உதவித் தொகையை பெற்றுக் கொண்டும் நேரடியாக டாஸ்மாக் செல்கிறார்கள்.
திருச்சி – கரூர் மாவட்ட எல்லைப்பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் சரக்கு வாங்க குடிமகன்கள் ஆர்வமாக இருந்ததாகவும், இதில் இளையவர்களுக்கு போட்டியாக முதியவர்களும் களத்தில் இருந்ததாகவும் பாலிமர் செய்தியில் ‘சுவாரசியமான’ குறிப்பு வாசிக்கப்படுகின்றது.
காத்திருந்தவர்களின் வீடுகளில் நேற்று எத்தனை சண்டை – சச்சரவுகள் ஏற்பட்டிருக்கும்? பெண்கள் மீதான தாக்குதல்கள் – வன்கொடுமைகள் நடத்தப்பட்டு இருக்கும்? எத்தனை விபத்துக்கள் நடந்திருக்கும்?
இளம் பெண் ஒருவர் “பிராந்தி வேண்டாம், மூணு பாட்டில் பீர் கொடுங்க” என்று கேட்டு வாங்கிச் செல்கிறார். உடனே “பெரியார் பேத்தியைப்பார்!” என்று பிஜேபி கும்பல் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்க, அதற்கு பதிலடியாக பெரியார் இயக்க ஆதரவாளர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணமான அரசைப் பற்றி துளியும் விமர்சிக்க தயாராக இல்லை.
கள்ளச்சாராயம் – போலி மதுவினை தடுப்பதற்காக கடும் விமர்சனங்களுக்கிடையில் டாஸ்மாக் திறக்கப்படுவதாகவும் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் டாஸ்மாக் மூடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடந்த ஆட்சியின் ஊரடங்கின் போது “ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு?” என்று அவர் பிடித்திருந்த முழக்கத்தட்டிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார் மு.க.ஸ்டாலின்.
அவருக்கு ஆதரவாக தமிழகத்தின் அமைச்சர்களும் அவரது கட்சியினரும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
கடந்த ஆட்சியில் எடப்பாடியும் அவரது அமைச்சர்களும் மக்களின் நலனுக்காகவே டாஸ்மாக் திறக்கப்படுவதாக கூறியதையே ரீமேக் செய்து திமுக அரசும் கூறுகிறது. கள்ளச்சாராயமும் போலி மதுவும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும், அதனால் டாஸ்மாக் திறக்கிறோம் என்பது எவ்வளவு கேவலமான வாதம்? அதை தடுக்க வக்கில்லாமல்தான் ஒரு அரசு இருக்கிறதா?
மூடு டாஸ்மாக்கை !
11 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் ஒரு நாளில்மட்டும் ரூபாய் 165 கோடி டாஸ்மாக் மூலம் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது.கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பின்றி மக்கள் வாடிக்கொண்டு இருக்கும் சூழலில் மக்களின் பொருளாதாரம் ரூபாய் 165 கோடி சுரண்டப்பட்டு இருக்கிறது. இந்த உண்மையில் இருந்தல்லவா இப்பிரச்சினையைப் பார்க்க வேண்டும் ?
டாஸ்மாக் அரசியல்
தனியார்மயம் – தாராளமய காலகட்டத்திற்கு பிறகு அரசின் அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகின்றன. இச்சூழலில் சேவைத் துறைகளும் பாதுகாப்புத் துறையும் கூட கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படுகின்றன.
இந்த தனியார்மய – தாராளமய – உலகமயப் பொருளாதாரம் தனக்கான நுகர்வுப் பண்பாட்டை உருவாக்குகிறது. போதை – நுகர்வு – பாலியல் சீரழிவு என அனைத்தையும் இந்தப் பொருளாதாரம் உருவாக்குகிறது. கடந்த 30 ஆண்டுகளில் சுரண்டல் தீவிரமாகியுள்ளது. 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பதெல்லாம் காணாமல் போய்விட்டன. சுரண்டல் தீவிரமடைய தீவிரமடைய அதற்கெதிரான போராட்டங்கள் தீவிரமடையும். அதை மட்டுப்படுத்தவும் ஒழித்துக்கட்டவுமே சீரழிவு பண்பாட்டை பரப்புகின்றது அரசு.
மதுவிலக்கு அன்றும் இன்றும்
2015 – 2016-ஆம் ஆண்டில் மக்கள் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்தார்கள். டாஸ்மாக் கடைகள் முற்றுகை, டாஸ்மாக் கடைகள் உடைப்பு என திரும்பும் பக்கமெல்லாம் போராட்டங்கள் நடைபெற்றன. அதில், மக்கள் அதிகாரம் அமைப்பின் பங்கு மிகவும் முக்கியமானது. திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் (அதிமுக, பாஜக, பாமக.. தவிர) சந்தித்து “டாஸ்மாக்கை மூடு” என்ற கோரிக்கைக்கு ஆதரவு திரட்டினோம். திமுக தனது தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக்கை மூடுவோம் என்று அறிவித்தது. ஜெயயலலிதா படிப்படியாக டாஸ்மாக்கை மூடுவோம் என்று அறிவித்தார்.
2016-ஆம் ஆண்டு மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் வைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மாநில நெடுஞ்சாலைகளை, மாவட்ட நெடுஞ்சாலைகளாக மாற்றி அங்கே டாஸ்மாக் கடைகளை திறந்தார். அந்த நடவடிக்கைகளை எல்லாம் திமுக கடும் விமர்சனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2021-ஆம் ஆண்டு திமுக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற வாக்குறுதி எதுவும் கொடுக்கவில்லை. ஆட்சிக்கு வருவதற்கு மக்களின் உணர்வுகளை பயன்படுத்திக் கொள்வது என்பதைத் தாண்டி திமுக-விடம் ஏதும் இல்லை. 2016-ஆம் ஆண்டு கொடுக்கபட்ட வாக்குறுதிகள் 2021-ஆம் ஆண்டு செல்லுபடியாகாது என்பதை தனது செயல்மூலமாக அறிவித்திருக்கிறது.
திமுக ஆதரவு கட்சிகள், அறிவுஜீவிகளின் மவுனம்
திமுக-வின் ஆதரவு கட்சிகள் டாஸ்மாக் திறப்பு விசயத்தில் வெளிப்படையாக பச்சோந்தித்தனமான வாதம் செய்கின்றன. டாஸ்மாக் திறக்கவில்லை என்றால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் என்கிறார் ப.சிதம்பரம். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலோ பூரண மதுவிலக்கு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மற்ற
திமுக ஆதரவு கட்சிகள் இப்பிரச்சினை குறித்து நேரடியாக எதுவும் பேசவில்லை.
ஆனால், அக்கட்சிகளைச் சேர்ந்தோர் ஊடகங்களில் வேறுவகையான விவாதங்களை கிளப்பி வருகின்றனர். “டாஸ்மாக்கை மூடு” என்ற கோரிக்கைக்கு 2016-ஆம் ஆண்டு ஆதரவாக இருந்தவர்கள் தற்போது “படிப்படியாகத்தான் மதுவிலக்கு அமல்படுத்த முடியும், உடனே டாஸ்மாக்கை மூட முடியாது, குடிகாரர்கள் பாதிக்கப்படுவார்கள்” ஆகிய பச்சோந்தித்தனமான கருத்துக்களை பரப்பி மொத்த இலக்கையே திசை திருப்புகின்றனர். இதை ஏன் 2016-ஆம் ஆண்டு பேசவில்லை?
டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று மாங்குமாங்குவென கட்டுரைகளை எழுதிய அறிவுஜீவிகள் அமைதியாக இருக்கிறார்கள். இன்னும் சிலரோ “மூடு டாஸ்மாக்கை” என்ற கோரிக்கைக்கு எதிராக பூரணமதுவிலக்கு சாத்தியமல்ல என்று கூறுவதும், வெளிநாட்டு சரக்கு அடித்துக் கொண்டு இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதன் நோக்கம் என்ன? ஏன் இதையெல்லாம் 2016-ம் ஆண்டுகளில் செய்யவில்லை? திமுக ஆட்சி மீது எவ்விதத்துரும்பும் படாமல் பாதுகாத்து பரிசில் பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் போல.
அதிமுக – பிஜேபி ; அயோக்கியர்களின் புகலிடம் மக்கள் பிரச்சினை
டாஸ்மாக் திறக்காதே ! என்ற தலைப்பில் பிஜேபி-யினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தியுள்ளனர். ஓ.பன்னீர்செல்வமோ “டாஸ்மாக் திறக்கக் கூடாது” என்று அறிக்கை கொடுத்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே புதுச்சேரியில் சாராயக்கடைகளை அப்பிரதேச ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் திறந்தார். கர்நாடகாவில் சாராயக்கடைகளை திறந்தது பிஜேபி-யின் எடியூரப்பா. இவர்களுக்கு எல்லாம் தமிழகத்தில் டாஸ்மாக்கை திறக்க வேண்டாம் என்று சொல்வதற்கு தகுதி உள்ளதா என்ன?
சோமபானம், சுராபானம் என்று போதை வஸ்துகளை புனிதமாக கருதிய புராண காலம் முதல் இப்போது வரை போதை, பாலியல் சீரழிவுகளின் கூடாரமான பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் கும்பல் இப்போது டாஸ்மாக் பிரச்சினையை கையில் எடுத்திருக்கிறது.
கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைக்கு எதிராகப் போராடியோரின் மீது போடப்பட்ட வழக்குகள் அளவிடமுடியாது. திருப்பூர், சாமளாபுரத்தில் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய ஒரு பெண்ணை கன்னத்தில் அறைந்த பாண்டியராஜன் என்ற ஏ.டி.எஸ்.பி-க்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. டாஸ்மாக் எதிர்ப்பு போராளி சசி பெருமாள் கொல்லப்பட்டது முதல் டாஸ்மாக்கிற்கு எதிராகப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும் ஏராளம். தமிழகத்தையே மொத்தமாக சுரண்டி கொழுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு டாஸ்மாக் பற்றிபேச என்ன தகுதி இருக்கிறது?
இப்படி தமிழகத்துக்கு, தமிழினத்திற்கு எதிரான அதிமுக – பிஜேபி கும்பல் தங்களை இருப்பு வைத்துக் கொள்வதற்காக டாஸ்மாக் பிரச்சினையில் பதுங்கிக் கொள்கிறார்கள். டாஸ்மாக் திறப்புக்கு எதிராக தமிழகத்தின் முற்போக்கான அமைப்புகள் எல்லாம் கொதித்து எழுந்திருந்தால் பிஜேபி – பாமக-வின் போராட்டங்கள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இனி மக்கள் பிரச்சினையில் அதிமுக – பிஜேபி-யினர் தொடர்ந்து தலையிடுவார்கள். திமுக மீது தூசு படக்கூடாது என்று எதிர்பார்த்துக் கொண்டு இருந்தால் தமிழகம் இன்னொரு புதுவையாக மாறுவதை யாரும் தடுக்க முடியாது.
முழக்கம் மட்டுமல்ல; மூளையே மாற்றம் அடைந்திருக்கிறது !
டாஸ்மாக் பிரச்சினை எதிரிகளான அதிமுக – பாஜக-வை மட்டுமல்ல துரோகிகளையும் அம்பலப்படுத்தி இருக்கிறது. “மூடு டாஸ்மாக்கை !” என்ற முழக்கம் ‘டாஸ்மாக்கை திறக்காதே !’ என்றும் ‘தமிழக முதல்வருக்கு டாஸ்மாக் மூடுவது சாத்தியமே’ என்றும் மாறி இருக்கிறது.
ஏன் மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கத்தை இவர்கள் பயன்படுத்துவதில்லை? மூடு டாஸ்மாக்கை என்பது மக்களின் ஆணை, அதை இப்போது திமுக-விற்கு பயன்படுத்த முடியுமா? குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே என்ற முழக்கம் காணாமல் போய் தமிழக முதல்வருக்கு சாத்தியம் என்று கெஞ்சிக்கொண்டு இருப்பதில் போய் அல்லவா முடிந்திருக்கிறது.
பாசிசம் பற்றிய அரசியல் புரிதல் இல்லை என்பதல்ல பிரச்சினை; அரசு அதிகாரத்துடன் கூடிக்குலாவி தங்களின் கோரிக்கைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நவீன யுத்தியே இந்த முழக்க மாற்றத்துக்கு காரணம்.
இனி வருங்காலம் ???
திமுக அரசின் தவறான செயல்பாடுகளை முற்போக்கு அமைப்புகள் எல்லாம் எப்படி டீல் செய்யப்போகின்றன என்பதற்கு டாஸ்மாக் பிர்ச்சினை என்பது ஒரு தொடக்கமே. டாஸ்மாக் திங்கட்கிழமை திறக்கப்பட்டதும் அன்றைய தினம் பொறுக்கி கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்ட செய்தி பிரபலமாக்கப்பட்டதும் வேறு வேறான சம்பவங்கள் அல்ல. திமுக-வின் ஐ.டி டீமை விட பெரிய நெட்வொர்க்கையும் ஆளும் வர்க்க ஆதரவையும் கொண்டது ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி.
அதனால்தான் மயிரிலும் மலராது என்று பெருமை பீற்றிக் கொண்டிருந்த தமிழ்நாட்டில் 4 பேர் பிஜேபி-யின் எம். எல்.ஏக்களாகி இருக்கின்றனர். மொடக்குறிச்சியின் திமுக வேட்பாளரான திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசனின் தோல்வி எப்படி நேர்ந்தது என்பதை கவனியுங்கள். இதுவரை யாரென்றே கேள்விப்படாத சரஸ்வதியை வைத்து தோற்கடித்திருக்கார்கள். ஒரு தொகுதியில் வருடக் கணக்காக வேலை செய்து யாரையும் தோற்கடிக்க முடியும் என்பதை தெரிவிக்கிறார்கள். கடந்த பத்தாண்டு அதிமுக அட்சியின் அவலங்களையும் மீறி அறுபதிற்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக வென்றிருக்கிறது.
ஆட்சி அதிகாரத்துக்கு அரிதாரம் பூசியபடியே பாசிசத்தை வீழ்த்த முடியாது. கார்ப்பரேட் – காவி பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களை எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் கட்டமைக்கிறோமோ அதுமட்டுமே பாசிசத்தை வீழ்த்துவதற்கான துவக்கமாக இருக்கும்.
மக்களோடு துணை நிற்பது மட்டுமே நமது கடமை
“மூடு டாஸ்மாக்கை!” என்ற கோரிக்கையானது மக்கள் மத்தியில் தற்போது பரவலாக இல்லை. மக்கள் அதிகாரம் அமைப்பாகிய நாங்கள் மட்டுமே இக்காலகட்டத்தில் முதலில் முன்வைத்தோம். தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மனிதி உள்ளிட்ட அமைப்புக்கள் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன.
தேர்தல் பாதை இடதுசாரிகள் – பெரியாரிய அமைப்புக்கள் – முற்போக்காளர்கள் – அறிவு ஜீவிகள் என யாரின் துணையின்றியும் மக்களுடன் மட்டுமே களத்தில் நிற்கிறோம்.
ஒரு பிரச்சினைக்கு மக்கள் ஆதரவு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை வைத்து முடிவு எடுக்க முடியாது. இப்போது “மூடு டாஸ்மாக்கை” என்ற முழக்கம் மேலெழாமல் இருக்கலாம். ஆனால், கார்ப்பரேட் சுரண்டல் டாஸ்மாக் மட்டுமல்ல அனைத்துவிதமான பிரச்சினைகளையும் மேலெழ வைக்கும். அதற்கு, மக்களோடு துணை நிற்பது மட்டுமே நமது கடமை.
ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகலும்
மத்திய ஆசியாவைச் சுற்றி நடக்கும் காய் நகர்வுகளும்!
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கா, தனது படைகளைத் திரும்பப் பெறப்போவதாக கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து வட அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளும் (நேட்டோ – NATO) தங்கள் படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அறிவித்துள்ளன. ஆப்கானை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள 9,500 படைவீரர்களில் 2,500 பேர் அமெரிக்காவையும் மீதம் 7,500 பேர் அதன் நேட்டோ கூட்டணி நாடுகளையும் சேர்ந்தவையாகும். மே 1–ம் தேதி தொடங்கி செப்டம்பர் 11–ம் தேதிக்குள் – இரட்டை கோபுரத் தாக்குதலின் 20–ம் ஆண்டு – படிப்படியாக படைகள் திரும்பப் பெறப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதனை விளக்கியுள்ளார்.
2001 செப்டம்பர் 11–ல் உலக வர்த்தக மையம், பெண்டகன் ஆகியவை அல்கொய்தா பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதை முகாந்திரமாகக் கொண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் ஆப்கானின் மீது போர்ப் பிரகடனம் செய்தார். “பயங்கரவாதத்துக்கு எதிரான உலகப் போர்” என்றும் “இந்த நூற்றாண்டின் – ஆயிரமாவது ஆண்டின் முதல் போர்” என்றும் அவரால் அறிவிக்கப்பட்ட “அமெரிக்க வரலாற்றின் நீண்ட போரை” முடிவுக்குக் கொண்டுவந்து விட்டதாக பைடனும் அவரது ஏகாதிபத்தியக் கூட்டாளிகளும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, பைடனின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார். “ஆப்கான் போரை நடத்தும் நான்காவது அதிபர் நான். ஐந்தாவதாக ஒரு அதிபரின் கையில் அதை ஒப்படைக்க மாட்டேன்”, “அமெரிக்கப் படைகள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டிய காலம் வந்துவிட்டது” என்றெல்லாம் படைவிலக்கத்தை பெருமையுடன் குறிப்பிடுகிறார், பைடன்.
பைடனின் இந்த அறிவிப்பையும் மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் நகர்வுகளையும் புரிந்துகொள்ள, ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் வரலாற்றைச் சுருக்கமாகவேனும் பார்ப்பது நமக்கு அவசியமாகும்.
ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் வரலாறு
1978–ல் ஆப்கானில் “ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி” ஆட்சியை அமைத்தது. 1979–ல் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்க நோக்கத்திற்காக ஆப்கான் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்தது. அதன்பிறகு, 1986–ல் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியான நஜிபுல்லா-வின் தலைமையிலான அரசு அமைந்தது. பெண் கல்வி உள்ளிட்ட சில சீர்திருத்த நடவடிக்கைகளை நஜிபுல்லா அரசு மேற்கொண்டதாகப் பேசப்பட்டாலும், சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்த சொந்த நாட்டு மக்கள் 80,000-க்கும் மேற்பட்டோரை கொன்றொழித்தது.
சோவியத் சமூக ஏகாதிபத்தியம், அமெரிக்க ஏகாதிபத்தியம் – என இரு மேல்நிலை வல்லரசுகளுக்கு இடையில் தீவிரமான பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்த காலம் அது. மத்திய ஆசியப் பகுதியில் தனது செல்வாக்கை நிலைநாட்ட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்கு, ஆப்கானை சோவியத் ஆக்கிரமித்தது ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. 1979–ல் அப்போதைய அமெரிக்க அதிபரான ஜிம்மி காட்டரும் அவரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஸ்பிக்னியேவ் ப்ரெஸ்சின்ஸ்கியும், பாகிஸ்தான் அரசின் உளவுத்துறை நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யுடன் சேர்ந்து – சோவியத்தை எதிர்ப்பதற்காக – இசுலாமிய அடிப்படைவாத கும்பலான முஜாகிதின்களை வளர்த்து விட்டார்கள்.
ஆப்கான் மீதான சோவியத்தின் ஆக்கிரமிப்பை “இசுலாத்தின் மீதான நாத்திக, கம்யூனிஸ்டுகளின் ஆக்கிரமிப்பு” என்றும், “சோவியத்தை எதிர்த்த புனிதப் போர்” என்றும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவையனைத்துக்கும் பின்னிருந்து நிதியுதவியும் ஆயுத உதவிகளும் செய்தவை அமெரிக்காவும் அதன் (அப்போதைய) கூட்டாளியான பாகிஸ்தானுமே ஆகும். பாகிஸ்தானில் தொடர்ச்சியாக முஜாகிதின்கள் ஆயுதப் பயிற்சியும் மதப் பயிற்சியும் பெற்றனர். ஆப்கான் மீது சோவியத் சமூக ஏகாதிபத்தியம் நடத்திய ஆக்கிரமிப்புப் போரில் உடைமையிழந்த, அகதிகளான இளைஞர்கள்தான் இந்த முஜாகிதின்களில் பெரும்பாலானோர் என்பது சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் மீதான அவர்களின் வெறுப்புக்கு இன்னொரு முக்கியமான காரணமாகும்.
இதன் விளைவாக, முஜாகிதின்களோடு நடந்த தொடர்ச்சியான போரில் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் தோற்றது. 15,000 சோவியத் துருப்புகளை இழந்த பின்னர், 1989–ல் தன் படைகளை ஆப்கானிலிருந்து விலக்கிக் கொண்டது. ஆப்கான் மீதான சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் தோல்வியானது, அமெரிக்காவின் கை மேலோங்குவதில் முடிந்தது. அதன் பின்னர் சோவியத் ஒன்றியம் உடைந்து பல நாடுகளாகச் சிதறியது.
முகமது நஜிபுல்லா
1992–ல் சோவியத் எடுபிடியான நஜிபுல்லா ஆட்சியை முஜாகிதின் குழுக்கள் வீழ்த்தினர். அதன் பிறகு, முஜாகிதின் குழுக்களிடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டது. அதில், பத்தானிய இனத்தைச் சேர்ந்த குல்புதின் ஹெக்மெத்யார் தலைமையிலான “ஹிஸ்ப்-இ இஸ்லாமி” என்ற குழுவை ஓரங்கட்டிவிட்டு, தாஜிக் இனப்பிரிவைச் சேர்ந்த ரப்பானி மற்றும் அகமத் ஷா மசூத் ஆகியோர் தலைமையிலான “ஜமாத்-இ இஸ்லாமி குழு” என்ற குழு அதிகாரப் போட்டியில் வென்றது.
அதன்பிறகு, 1994–ல் சன்னி மதப் பிரிவு மற்றும் பத்தானி இனப்பிரிவைச் சேர்ந்த தாலிபானும் அதிகாரப் போட்டியில் குதித்தது. அப்போதைய அதிபர் ரப்பானி மற்றும் இராணுவத் தளபதி முகமது ஷா மசூத்-க்கும் முல்லா உமரைத் தலைமையாகக் கொண்ட தாலிபான்களுக்கும் இடையில் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் 1996–ல் தாலிபான்கள் நாட்டின் பெரும்பகுதியைக் – 95 சதவீதத்தைக் – கைப்பற்றினர். இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக, ஐ.நா அலுவலகத்தினுள் பதுங்கியிருந்த ‘கம்யூனிஸ்டு’ அதிபர் நஜிபுல்லாவைக் கொன்று தூக்கிலிட்டனர், தாலிபான்கள்.
பின்னர், ஏழு ஆண்டுகள் (1996–2001) தாலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி ஆப்கானில் நடந்தது. ஷரியத் சட்டத்தின் ஆட்சி என்று சொல்லப்பட்ட தாலிபான் ஆட்சியில் பெண்கள் மீது எண்ணற்ற கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. பெண்கள் கல்வி கற்பது, வேலைக்குச் செல்வது தடை செய்யப்பட்டது. பர்தா அணியாத பெண்கள் கல்லால் அடித்தே கொல்லப்பட்டனர். ரப்பானி அரசை அதுவரை ஆதரித்து வந்த அமெரிக்கா, தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றியதும் அவர்களை ஆதரிக்கத் தொடங்கியது.
அப்போதைய அமெரிக்க அதிபர் கிளிண்டன்-இன் அரசு தாலிபான்களை அங்கீகரித்தது. ஐ.நா.விலும் அவர்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்தர முயன்றது. இதற்குக் காரணம், ஆப்கானின் பூகோள முக்கியத்துவமே ஆகும். ஈரானைக் கண்காணிப்பதும், சோவியத் ஒன்றியம் உடைந்து உருவாகியுள்ள தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மேனிஸ்தான், காசக்ஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளில் உள்ள எண்ணெய் – எரிவாயு வளங்களைக் கைப்பற்றி, அவற்றை ஆசிய, ஐரோப்பியச் சந்தைக்கு கொண்டுசெல்ல ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக் கடல் வழியாக பாதை அமைப்பதே இதன் நோக்கமாகும். சுருங்கச் சொன்னால், மத்திய ஆசியப் பகுதியில் தன் மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதே ஆகும்.
ஆனால் 1996–க்குப்பின், பின்லேடனுடன் தாலிபான்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டனர். தன் நோக்கத்திற்கேற்ப செயல்படாமல் தாலிபான்கள் வேறு திசையில் பயணித்ததால், அமெரிக்கா அப்போது செய்வதறியாமல் திகைத்தது. ஆப்கானின் உள்விவகாரத்தில் தலையிட்டு எப்படியாவது தனது நோக்கத்திற்கேற்ப அங்கு ஒரு பொம்மை அரசை அமைக்க வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்த அமெரிக்காவுக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்புதான் செப்டம்பர் 11, 2001-ல் நடந்த அமெரிக்க இரட்டை கோபுரத் தாக்குதல். உலக வர்த்தக மையமானது, அல்கொய்தா எனும் பயங்கரவாத அமைப்பால் தாக்கப்பட்டதைச் சாக்கிட்டு, உடனே ஆப்கானில் படைகளைக் குவித்து தாலிபான்களை அழித்துவிட்டு தனது கைக்கூலி அரசை நிறுவ வேண்டும் என அமெரிக்கா தீர்மானித்தது. இதுதான் “பயங்கரவாத எதிர்ப்புப் போர்” என்று பீற்றிக் கொள்ளப்படும் ஆப்கான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னணி.
அதாவது, எந்த இசுலாமிய பயங்கரவாத அமைப்புகளை சோவியத் சமூக ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அமெரிக்கா வளர்த்துவிட்டதோ, அவற்றையே பின்னர் எதிரிகளாகவும் உலகை அச்சுறுத்தும் பயங்கரவாதிகளாகவும் அறிவித்து – அவற்றிடமிருந்து உலகைக் காக்க வந்த மீட்பன் போலத் தன்னைக் காட்டிக் கொண்டு – தன் ஆக்கிரமிப்புக்கு நியாயம் கற்பித்தது, அமெரிக்கா.
இதுஒருபுறம் இருக்க, 1996–இல் அதிகாரப் போட்டியில் தோற்ற ரப்பானி மற்றும் மசூத் குழுவானது, தோஸ்தம் என்ற யுத்தப் பிரபுவுடன் சேர்ந்துகொண்டு சில கிராமப்புறப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு தாலிபான்களை எதிர்த்து வந்தது. இது “வடக்குக் கூட்டணி” என அழைக்கப்பட்டது. இந்த வடக்குக் கூட்டணியை ஒழிக்க 1996–களில் அமெரிக்கா தாலிபான்களுடன் சேர்ந்து கொண்டது. ஏனெனில், இக்கூட்டணியானது ரசியா மற்றும் ஈரானின் ஆதரவைப் பெற்றிருந்தது.
2001–ல் அமெரிக்க, பிரிட்டன், நேட்டோ படைகள் ஆப்கானை ஆக்கிரமித்து கொலைவெறித் தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டதால், தாலிபான்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. அவர்கள் காபூலைக் காலிசெய்துவிட்டு பத்தானியர்கள் அதிகமுள்ள மலைகளில் போய் பதுங்கிக் கொண்டனர். தாலிபான்கள் காபூலைக் காலிசெய்யும் செய்தி அறிந்ததும், வடக்குக் கூட்டணியானது காபூலைக் கைப்பற்றிக் கொண்டது. அப்போது அமெரிக்கா வடக்குக் கூட்டணியை ஆதரித்தது. அதாவது, 1996–களில் வடக்குக் கூட்டணியை ஒழிக்க தாலிபான்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்ட அமெரிக்கா, 2001–ல் தாலிபான்களை ஒழிக்க வடக்குக் கூட்டணியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது.
ஆனாலும் வடக்குக் கூட்டணியை முழுமையாக அமெரிக்கா நம்பவில்லை. ஏனெனில், அந்நாட்டில் பத்தானிய இனப்பிரிவைச் சேர்ந்த இஸ்லாமிய சன்னி மதப்பிரிவு மக்கள்தான் பெரும்பான்மையாகும். இக்கூட்டணியோ தாஜிக், உஸ்பெக் ஆகிய சிறுபான்மை இனத்தவர்களின் சேர்க்கையாக இருந்ததால், இவர்களின் ஆட்சி நிலையானதாக இருக்காது என்பதே இதற்குக் காரணமாகும்.
சி + சி5
எனவே, தனது மறுகாலனியக் கொள்கைக்கு ஏற்ப ஆப்கானில் ஒரு இடைக்கால அரசை அமைக்க அமெரிக்கா முயன்றது. அதன்படி, அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயர், பாகிஸ்தான் அதிபர் முஷாரப் ஆகியோரின் திட்டப்படி ஜெர்மனியில் கூட்டம் நடத்தி, பத்தானிய இனத்தைச் சேர்ந்த ஹமீது கர்சாய் என்பவர் தலைமையில் 2001-ல் ஒரு கைப்பாவை அரசை அமெரிக்கா அமைத்தது. பின்னர் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒரு தேர்தல் நாடகம் நடத்தப்பட்டு, 2004 மற்றும் 2009-இல் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்று, கர்சாய் அதிபரானார். அதன் பின்னரும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளின் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறாமல் அங்கேயேதான் இருந்து வந்தன. அதன் பின்னர், தாலிபான்களின் அச்சுறுத்தல்களுக்கு நடுவே மிகக் குறைவான வாக்குப்பதிவுடன் நடந்த 2014 இத்தேர்தலில் அஷ்ரப் கானி வெற்றி பெற்று அதிபரானார். பின்னர் 2019-இல் நடைபெற்ற தேர்தலிலும் இரண்டாம் முறையாக அவரே வெற்றி பெற்று அதிபராக நீடிக்கிறார்.
ஆப்கானில் தாலிபான்களின் வளர்ச்சியும், அமெரிக்கா ‘பின்வாங்குவதன்’ பின்னணியும்!
அமெரிக்கா தனது படைகளைத் திரும்பப்பெறும் அறிவிப்பை இப்போது வெளியிட்டிருப்பது ஒன்றும் வியப்பான விடயமல்ல. இது, அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, கடந்த 20 ஆண்டுகளில் தாலிபான்களின் வளர்ச்சியாகும்.
தாலிபான்களின் வளர்ச்சிக்கு முக்கியமான மூலாதாரம் கஞ்சா (அபினி) உற்பத்தி. 2001–இல் பின்னடைவுக்குப்பின் தாலிபான் யுத்தப் பிரபுக்கள் சில கிராமப்புறப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டு, அங்கு அபினி பயிரிடுவதைச் செய்து வந்தனர். 2003–இல் 3,600 டன்கள் அளவுக்கு நடைபெற்ற அபினி உற்பத்தியானது, 2007–இல் 8,200 டன்களாக உயர்ந்தது. இது, உலகின் மொத்த சட்டவிரோத அபினி உற்பத்தியில் 93 சதவீதமாகும். அக்காலத்திலேயே தாலிபான்கள், படிப்படியாக கிராமப்புறங்களைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரத் தொடங்கினர்.
ஆப்கானில் தனது கைப்பாவையான கர்சாய் அரசின் பிடி தளர்ந்து வருவதைக் கண்டு அஞ்சிய அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ், தாலிபான்களைக் கட்டுப்படுத்த, 7 பில்லியன் டாலர்களைச் செலவு செய்து “போதை மருத்து ஒழிப்புப் போர்” என்ற பெயரில் ஒரு தாக்குலை நடத்தினார். அதன் பின்னர் 2009–ல் ஒபாமா நிர்வாகம், 1,00,000 துருப்புகளை அங்கே குவித்தது. தாலிபான்களைக் கட்டுப்படுத்துவதில் ஓரளவு வெற்றியடைந்தாலும், அபினி பயிரிடுவதை அமெரிக்காவால் அழிக்க முடியவில்லை. மீண்டும் 2014–ம் ஆண்டு தாலிபான்கள் ஆப்கான் அரசுப் படைகள் மீது தாக்குதல் தொடுக்கத் தொடங்கினர். 2017–ல் அபினி சாகுபடி 9,000 டன்களாக உயர்ந்தது.
தற்போது பெரும்பாலான கிராமப்புறங்களைத் தாலிபான்கள் தங்கள் பிடியில் கொண்டுவந்து விட்டனர். கடந்த பிப்ரவரியிலிருந்து, அஷ்ரப் கானி அரசின் செல்வாக்கிலுள்ள கேந்திரமான கந்தகார், குண்டூஸ், ஹெலமந்த், பக்லான் ஆகிய பகுதிகளை அச்சுறுத்தி வருகின்றனர். பல பகுதிகளில் ஆப்கான் போலீசு மற்றும் இராணுவத்தின் பிடி தளர்ந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் விரைவில் அமெரிக்க–ஆப்கான் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் போர் மூளும் என்பதை அமெரிக்கா நன்கு உணர்ந்துள்ளது.
ஏற்கெனவே ஆப்கான் போரில் மட்டும் ஏறத்தாழ 2 டிரில்லியன் டாலர் (2 லட்சம் கோடி டாலர்) அளவுக்கு அமெரிக்கா செலவு செய்துள்ளது. மேலும் 2,500–க்கும் மேற்பட்ட படைவீரர்களை அது இழந்துள்ளது. 57 சதவீத அமெரிக்க மக்கள் ஆப்கான் போரை எதிர்ப்பதாகக் கூறுகிறது, 2007–ல் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு. எனவே, மேலும் மேலும் ஆப்கான் போருக்காக அதிக செலவுகள் செய்தால், அது அமெரிக்க மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்க அரசு உணர்ந்துள்ளது. அதனால், ஆப்கானிலிருந்து துருப்புகளைத் திரும்பப் பெறுவது, போரை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியன பற்றி நீண்ட காலமாகவே அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டணி நாடுகளின் அரசுகள் விவாதித்து வந்தன.
இப்பின்னணியில், டிரம்ப் அதிபராக இருந்தபோதே, 2019 பிப்ரவரியில் தாலிபான்களும் அமெரிக்காவும் கத்தார் நாட்டின் தோஹா நகரில் கூடி ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டனர். இதன்படி, அமெரிக்கா ஆப்கானிலிருந்து வெளியேறுவதாக முடிவானது. அந்த ஒப்பந்தத்தைத்தான் பைடன் இப்போது செயல்படுத்துகிறார். இனி படிப்படியாக ஆப்கான், தாலிபான்களின் பிடியில் செல்லும் என்பது உறுதியாகிவிட்டது.
“பயங்கரவாதத்தை எதிர்த்த உலகப் போர்” என்றும், “ஆப்கானில் நீடித்த சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கான போர்” என்றும் அமெரிக்காவால் சித்தரிக்கப்பட்ட இந்தப் போர், அதன் நோக்கங்களில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை என முதலாளித்துவ பத்திரிக்கையாளர்களே கேலி செய்கின்றனர். ஆனால் பைடனோ, “அமெரிக்கா தான் வாக்களித்த கடமைகளையெல்லாம் நிறைவேற்றிவிட்டதாகவும், அல்கொய்தாவை அழித்துவிட்டதாகவும்” கூச்சமின்றிப் பேசுகிறார்.
மதவெறி – பயங்கரவாத யுத்தப் பிரபுக்களான தாலிபான்கள் மீண்டும் ஆப்கானை ஆளப்போகின்றனர். இதுதான் அமெரிக்கா மீட்டெடுத்த ‘ஜனநாயகம்’. தனது மேலாதிக்க நோக்கங்களுக்கு அமெரிக்கா நடத்திய இந்த ஆக்கிரமிப்புப் போரில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் கொல்லப்பட்டனர். காயமுற்றவர்களும் உடைமையிழந்தவர்களும் உடல் ஊனமானவர்களும் அகதிகளானவர்களும் எண்ணிலடங்காதோர்.
மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவின் கேந்திரமான தளம் ஆப்கான்!
ஆப்கானிலிருந்து தன் படைகளைத் திரும்பப் பெறுவது, சீனாவின் பக்கம் பாகிஸ்தான் இருப்பது – ஆகிய இவையெல்லாம் மத்திய ஆசியப் பகுதியில் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும், அதன் உலக மேலாதிக்கத்திற்கு மிகப்பெரிய சரிவு என்றும் பலராலும் கருதப்படுகிறது. ஒருபுறம் அது உண்மைதான் என்ற போதிலும், இன்னொருபுறம் அவ்வளவு எளிதில் ஆப்கானை அமெரிக்கா விட்டுவிடாது. “ஆசியா ஒரு விமானம் என்றால், அதில் விமான ஓட்டியின் அறைதான் ஆப்கான்” என்றது, அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ் நிர்வாகம். இப்போதும் அமெரிக்கா ஆப்கானை அப்படித்தான் பார்க்கிறது. சுருக்கமாகச் சொன்னால், 20 ஆண்டுகளாகத் தொடரும் மிக நீண்ட போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நோக்கம் எதுவும் அமெரிக்காவுக்கு இல்லை. அதை வேறு வழிகளில் தொடர்வதற்கு மட்டுமே திட்டமிட்டுள்ளது.
உலக அரங்கில் தனக்குப் போட்டியாக வளர்ந்துவரும் சீனாவையும், ரசியா, ஈரான் ஆகிய நாடுகளையும் கட்டுப்படுத்த ஆப்கானை ஒரு முக்கியமான தளமாகவே அமெரிக்கா கருதுகிறது. “ஆப்கானில் அமெரிக்கா இருப்பதற்கு மூன்று நோக்கங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று, சீனாவைக் கட்டுப்படுத்துவதே” என்று அமெரிக்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி லாரன்ஸ் வில்கர்சன் 2018–இல் கூறியுள்ளார். அதிபர் பைடன் பதவியேற்றதும் பெண்டகன் எனும் அமெரிக்க இராணுவத் தலைமையகத்துக்கு வந்தபோது, “சீனாதான் 21–ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால். சீனாவின் சவாலைச் சந்திப்போம். எதிர்காலத்துக்கான போட்டாபோட்டியில் வெற்றி பெறுவோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.
சீனாவுக்கும் ஆப்கானுக்கும், பாகிஸ்தானுக்கும் எல்லைப் பகுதியாக உள்ள ஷின்ஜியாங் (Xinjiang) என்ற சீனாவின் தன்னாட்சி பெற்ற மாநிலமானது, உய்குர் சுயாட்சிப் பிரதேசம் என்று குறிப்பிடப்படுகிறது. இப்பகுதியிலுள்ள துருக்கி மொழி பேசும் தேசிய இனச் சிறுபான்மையினரான முஸ்லிம்களே உய்குர்கள் என்றழைக்கப்படுகின்றனர். உய்குர் முஸ்லிம்கள், இப்பிராந்தியத்தை “கிழக்கு துர்கிஸ்தான்” என்று குறிப்பிடுகின்றனர். தற்போது உய்குர் பிரதேசத்தில், துர்கிஸ்தான் இஸ்லாமிய கட்சியும் (TIP) இன்னும் சில ஆயுதக் குழுக்களும் தனிநாடு கோரிக்கையுடன் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இக்கட்சியும் இதர ஆயுதக் குழுக்களும் ஆப்கானில் பயிற்சி பெற்றதோடு, பயங்கரவாதி பின்லேடன் தலைமையிலான குழுவினர் மூலம் நிதியும் ஆயுதங்களும் பெற்றுள்ளன. 2009-லிருந்து தொடர்ச்சியாக உய்குர் பிராந்தியத்திலும், சீனாவிலும், சீனத் தூதரகம் அமைந்துள்ள நாடுகளிலும் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தி வந்துள்ளன. சிரியாவில் அமெரிக்கா தூண்டிவிட்ட ஆட்சி மாற்றத்திற்கான போரில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் உய்குர் பயங்கரவாதிகளும் பங்கேற்றுள்ளனர்.
அமெரிக்க – சீன மோதல் தீவிரமடைந்துள்ள தற்போதைய சூழலில், உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரின் மனித உரிமைகளைப் பறித்ததாகக் குற்றம்சாட்டி மூன்று சீன அரசு அதிகாரிகளைத் தனது நாட்டுக்குள்ள நுழையக் கூடாதென அமெரிக்க வல்லரசு தடை விதித்துள்ளது. மறுபுறம், “வெளிநாட்டில் இயங்கும் கிழக்கு துர்கிஸ்தான் அரசாங்கம்” என்ற அமைப்பும், “கிழக்கு துர்கிஸ்தான் தேசிய விழித்தெழும் இயக்கம்” என்ற அமைப்பும் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இயங்கி வருகின்றன.
சீனாவின் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தின்படி (BRI), மேற்காசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் முக்கியப் பகுதியாக ஷின்ஜியாங் மாநிலம் அமைந்துள்ளது. எனவே, உய்கூர் பிரச்சினையைப் பயன்படுத்தி, அங்குள்ள இஸ்லாமிய ஆயுதக் குழுக்களை வளர்த்துவிட்டு சீனாவுக்குத் தீராத தொல்லைகளையும் நெருக்கடியையும் உருவாக்க வேண்டும் என்று ஒபாமாவின் ஆட்சிக் காலத்திலிருந்தே அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அமெரிக்காவின் இத்திட்டத்திற்கு ஆப்கான்தான் கேந்திரமான தளமாக இருக்கப் போகிறது.
மேலும், கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானில் அமெரிக்கா ஒரு பெரிய புலனாய்வு வலையமைப்பை நிறுவியுள்ளது. ஆப்கானின் பாதுகாப்புப் படையில் 17,000–க்கும் மேற்பட்டோரை “பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள்” எனும் பெயரில் அமெரிக்கா நுழைத்துள்ளது. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆயுதந்தாங்கியவர்கள். படைகளைத் திரும்பப்பெறும் பைடனின் திட்டத்தில் இந்தப் “பாதுகாப்பு ஒப்பந்ததாரர்கள்” பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
மேலும், “ஆப்கானில் நாம் இராணுவ ரீதியாக ஈடுபாடு கொண்டிருக்க மாட்டோம் என்றாலும், அரசு தந்திர, மனிதாபிமான பணிகள் தொடரும். ஆப்கானிஸ்தான் அரசுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிப்போம்”, “ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் பிராந்தியத்தில் பயங்கரவாத அபாயத்தைத் தொடர்ந்து நாங்கள் கண்காணிப்போம், அதற்கு எதிராக தொடர்ந்து சண்டையிடுவோம்” என்று கூறியுள்ளார் பைடன். “ஆப்கானை அமெரிக்கா கைவிடுவது என்பது, அதோடு கொண்டிருக்கும் தொடர்பின் வடிவத்தை மாற்றுவதுதான்” என்று கூறியுள்ளார் ஆப்கானில் நல்லிணக்கத்துக்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதியான, சால்மே கலீல்சாத்.
படைகளைத் திரும்பப் பெறும் பைடனின் அறிவிப்புக்குப் பின்னர், அமெரிக்க இராணுவ தளபதி கென்னத் பிராங்க்ளின் மெக்கென்சி, “அமெரிக்கா அப்பகுதியில் தனது இராணுவ செல்வாக்கை தொடர்ந்து பராமரிக்கும். மேலும், ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திறனையும் உறுதி செய்யும்” என்று கூறியுள்ளார்.
இவற்றின் மூலம் ஆப்கானில் அமையவுள்ள அரசை அமெரிக்கா மறைமுகமாகக் கட்டுப்படுத்தவே முயலும். தனது ஆதிக்கத்தைத் தொடரவே முயலும். நேரடியாகப் படைகளைக் குவித்து, ஆக்கிரமிப்பைச் செய்து ஒரு நாட்டைக் கட்டுப்படுத்துவதைக் காட்டிலும், இவ்வகையான மறைமுகமான நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு – சர்வதேச ரீதியில் அவப்பெயர் இல்லை என்பதால் – சாதகமானதே ஆகும்.
இன்னொருபுறம், சீனாவோ ஆப்கானுடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள 2017–இல் இருந்து முயன்று வருகிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர், ஆப்கானில் தாலிபான்களையும் அஷ்ரப் கனியையும் உள்ளடக்கியதொரு ‘ஜனநாயக’ அரசை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறது. “ஆப்கானின் வளர்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும்” என 2020–ஆம் ஆண்டு நடந்த ஷாங்காய் கூட்டுறவு (SCO) உச்சி மாநாட்டில் பேசியுள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங். தன்னுடைய புதிய பட்டுப்பாதைத் திட்டத்தில் ஆப்கானை இணைத்துக் கொள்ளவும் சீனா முயற்சிக்கிறது.
சீனாவின் ஷின் ஜியாங் பகுதி
இதுவொருபுறமிருக்க, அமெரிக்காவின் திட்டங்களை முறியடிக்கும் நோக்கத்துடன் மத்திய ஆசியாவின் ஐந்து நாடுகளுடன் சீனா ஒரு கூட்டணியைக் கட்டியமைத்துள்ளது. அது சி+சி5 (C+C5) என்று குறிப்பிடப்படுகிறது. (சீனா + காசக்ஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளின் கூட்டணி) கடந்த மே 12 அன்று இந்தக் கூட்டணியின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில், மத்திய ஆசியப் பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு, ஒத்துழைப்பு, பயங்கரவாதத்தை முறியடிப்பது, புதிய பட்டுப்பாதைத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் முதலானவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, அமெரிக்கப் படைவிலக்க அறிவிப்புக்குப் பின்னர் எழுந்துள்ள புதிய நிலைமைகளையொட்டி கடந்த ஜூன் 5-ஆம் தேதியன்று ஆப்கான், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அரசுகள் இணையவழி கூட்டத்தையும் நடத்தியுள்ளன.
புதிய போர் அபாயம் ஏற்படுமா ?
ஏற்கெனவே ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் தனது செல்வாக்கை விரிவுபடுத்த சீனா முயற்சித்து வருவதற்கு எதிராக இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு “குவாட்” கூட்டணியை அமெரிக்கா அமைத்துள்ளது. இப்போது மத்திய ஆசியப் பகுதியிலும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதால், இக்கூட்டணியானது சீனாவுக்கு எதிரான போரில் இறங்கவும் வாய்ப்புள்ளது. இப்போரானது, ஆப்கான், பாகிஸ்தான், ஈரான், சீனா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளும், மத்திய ஆசிய நாடுகளும் ஈடுபடக்கூடிய மிகப் பெரிய போராக மாறவும் வாய்ப்புள்ளது.
அமெரிக்காவின் விசுவாசக் கூட்டாளியாகவும், தெற்காசியாவில் பிராந்திய மேலாதிக்கம் செய்யும் பெரிய நாடாகவும் உள்ள இந்தியா, ஆப்கானில் அமெரிக்காவின் பொம்மை அரசு அமைந்த பிறகு, அமெரிக்காவின் தயவில் ஆப்கானில் மறுசீரமைப்பு – கட்டுமானப் பணிகளைச் செய்யத் தொடங்கியது. இதன் மூலம் ஒருபுறம் இந்தியத் தரகு முதலாளித்துவ நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்கும், மறுபுறம் உலக அரங்கில் மனிதாபிமான முகமும் இந்தியாவுக்குக் கிடைக்கும் என்று கருதியது.
ஆப்கானில், தாலிபான்களை வீழ்த்தி, அந்நாட்டை மீண்டெழச் செய்யும் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதன் மூலம் தெற்காசியா மட்டுமின்றி, மத்திய ஆசியப் பகுதியிலும் தனது வல்லரசு பராக்கிரமத்தையும் செல்வாக்கையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்ற உத்தியுடன் தனது அரசு தந்திரக் கொள்கையை அமைத்துக் கொண்டது. ஆனால், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பழிதீர்க்க இந்தியத் தூதரகத்தின் மீதும், இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்கள் மீதும் தாலிபான்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
அமெரிக்காவின் தயவில் பெயரளவிலான ஒரு அரசு ஆப்கானில் நீடிக்கும் வரை, உதவி என்ற பெயரில் இந்தியாவும் ஆப்கானில் தலையிடுவதற்கு ஒரு வாய்ப்பாக இருந்தது. ஆனால், இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேறுவதால், அமெரிக்காவின் தயவிலான அரசும் நீடிக்க இயலாமல் போய், தாலிபான்களின் கை மேலோங்குவதால், இந்திய அரசின் நோக்கங்கள் தோற்றுப்போய் புஸ்வாணமாகிவிட்டன. இதனால்தான் அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கும் இடையில் கடந்த பிப்ரவரி 2020-ல் ஒப்பந்தம் கையெழுத்தானதும், “இது தாலிபான்களுக்கும் பாகிஸ்தானுக்கும் கிடைத்த வெற்றி” என இந்திய அரசு சித்தரித்தது.
பைடனின் படைவிலக்க அறிவிப்புக்குப் பின்னர், ஆப்கானில் அனைத்து தரப்பினரும் போர் நிறுத்தத்தைச் செயல்படுத்துமாறு மோடி அரசின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கோரியது. இல்லையேல், இது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் சிக்கல்களை உருவாக்கும் என்று கவலை தெரிவித்தது.
ஏற்கெனவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மற்றும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையில் முறுகல் நிலை நீடிக்கிறது. இந்நிலையில் ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படை விலகலையொட்டி அங்கு தமது தரகு முதலாளிகளின் முதலீடுகளைத் தொடர்வது குறித்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போட்டி உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினைகள் சுமுகமாகத் தீர்வதற்கான வாய்ப்பும் இல்லை. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், அது இந்தியாவுக்குச் சாதகமாக இருக்க வாய்ப்பு இல்லை.
மத்திய ஆசியாவில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த அமெரிக்கா ஒருபுறம் முயற்சிக்கும் வேளையில், தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவுடன் “குவாட்” கூட்டணி அமைத்து போர் சூழலை உருவாக்கியுள்ளது. ஒருவேளை, அமெரிக்காவின் மத்திய ஆசியாவைக் கைப்பற்றும் போரிலோ, தென் கிழக்கு ஆசியாவில் சீனாவுக்கு எதிராக நடத்தப்படும் ‘குவாட்’ இராணுவ நடவடிக்கைகளிலோ இந்திய அரசு ஈடுபட்டால் அது புதைசேற்றில் இந்திய மக்களைத் தள்ளுவதாகவே போய் முடியும்.
தீரன்
உதவிய கட்டுரைகள் :
ஆப்கான் : மதவெறி – யுத்தப்பிரபுக்களின் காலடியில் – புதிய ஜனநாயகம், டிசம்பர் 1996.
ஆப்கான் போர் : புதைமணலில் சிக்கியது அமெரிக்க வல்லரசு, பகுதி 1, 2 – புதிய ஜனநாயகம், நவம்பர், டிசம்பர் 2001.
சேவா பாரதி அமைப்போடு திமுக-வின் அமைச்சர்கள் இருவர், எம்.எல்.ஏக்கள் கூட்டு சேர்ந்து கொரோனா வார்டு திறந்து வைத்ததையும், பாரத மாதாவுக்குப் பூஜை செய்ததையும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாது.
திமுக-வுக்கு வாக்கு கேட்ட முற்போக்கு பேசும் தோழர்கள், யூட்யூப் சேனல்கள், இயக்கங்கள் முதலானவை சேவா பாரதியின் அழைப்பின் பெயரில் திமுக-வினர் கலந்து கொண்டுள்ளனர் என்று normalise செய்வதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், சேவா பாரதியின் வரலாறு அப்படிப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மக்கள் சேவைப் பிரிவுதான் சேவா பாரதி. அவர்களின் அகராதியில் ‘சேவா’ என்பது வெறும் சேவை கிடையாது. ’சேவா’ என்றால் சாதியால் பிரிந்திருக்கும் இந்துக்களை ஒரு அணியில் திரட்டுவதற்கும், இந்துக்கள் அல்லாத கிறித்துவ, இஸ்லாமியர்களை மீண்டும் தாய் மதம் திருப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் பணியாகும்.
2001 குஜராத் பூகம்பத்தின் போது, வெளிநாட்டு நிதியைப் பெற்றுக் கொண்டு உயர்சாதி இந்துக்களுக்கு மட்டும் சேவை செய்த அமைப்பு சேவா பாரதி. மற்ற அமைப்புகள் பணியாற்றுவதைத் தடுத்து, தங்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகளை வைத்து இந்துக் கோயில்களைக் கட்டியிருக்கிறது இந்த அமைப்பு.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து பழங்குடிச் சமூகங்களைச் சேர்ந்த ஏறத்தாழ 31 சிறுமிகளை குஜராத், ராஜஸ்தான் முதலான மாநிலங்களுக்குக் கடத்தி, அவர்களை இந்துக்களாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது சேவா பாரதி. இது குறித்து அவுட்லுக் இதழில் 2016-ஆம் ஆண்டு விரிவான கட்டுரை ஒன்று வெளிவந்தது.
சேவா பாரதியின் சர்வதேச அமைப்பான சேவா இண்டர்நேஷனல் அமைப்புக்கு குஜராத் பூகம்பத்தின் போது, பிரிட்டிஷ் மக்கள் அளித்த நிதி, 2002 குஜராத் படுகொலையின் போது முஸ்லிம்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாக அப்போதைய பிரிட்டிஷ் தொலைக்காட்சி நிறுவனம் சேனல் 4 செய்தி வெளியிட்டது.
கடந்த ஆண்டு, சாத்தாங்குளம் லாக்கப் மரணத்தில் சேவா பாரதி அமைப்பு ஊடுறுவிய Friends of Police குழுவுக்குத் தொடர்பு இருந்தது. தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக கோவை, திருப்பூர் முதலான கொங்கு பகுதிகளில் காவல் நிலையங்களிலும், சட்டமன்ற உறுப்பினர்களைச் சுற்றியுள்ளவர்களிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சேவா பாரதி தொண்டர்களைப் பார்க்க முடியும்.
இப்படியான வரலாற்றைக் கொண்டிருக்கும் சேவா பாரதியோடு மேடையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறது திமுக. மேலும், Heartfulness என்ற மற்றொரு தொண்டு நிறுவனமும் இதில் இடம்பெற்றிருக்கிறது. இது ஸ்ரீ ராமசந்திரா மிஷன் என்ற பெயரில் செயல்படும் கார்ப்பரேட் சாமியார் கமலேஷ் படேலின் நிறுவனம். கமலேஷ் படேலின் பணிகளைப் பிரதமர் மோடி தொடர்ந்து பாராட்டி வருகிறார். சர்வதேச அளவில் யோகாவை பரப்புவதற்காக இந்த அமைப்பின் பணிகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னிறுத்தியிருக்கிறார்.
This slideshow requires JavaScript.
Heartfulness அமைப்பின் கொரோனா உதவிச் சேவையை சென்னையில் திறந்து வைத்திருக்கிறார் திமுக-வின் மாநில இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின். எதிர்காலத்தில் இந்த அமைப்பு மற்றொரு ஈஷாவாக உருவாகும் போது, அப்போது இவை பயனற்றதாக இருக்கும்.
திமுக அமைச்சர்கள் பங்குபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, தனது பதவியில் இருந்து விலகிய முன்னாள் மேகாலயா ஆளுநர் சண்முகநாதன், பிஜேபி துணைத் தலைவர் அண்ணாமலை, தமிழக ஆர்.எஸ்.எஸ் மூத்த பொறுப்புதாரிகள் முதலானோர் பங்கேற்றுள்ளனர்.
வாக்கு அரசியலுக்காக சிறுபான்மையினரிடம் பாசிச பாஜக பூச்சாண்டி காட்டியும், ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி எதிர்ப்பு அரசியலை முன்வைக்கும் இயக்கங்களின் போராட்டங்களை அறுவடை செய்தும் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, இந்துப் பெரும்பான்மைவாதத்தின் திராவிட முகமாக மாறுவதற்கான ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.
எப்படி தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான சாதிவெறி, திராவிடக் கட்சிகளால் வாக்கு வங்கிக்காக கண்டிக்க இயலாத அளவுக்கு normalise ஆகியிருக்கின்றதோ, அதே போல இந்துப் பெரும்பான்மைவாதமும் மாறப் போகிறது.