Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 280

அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு

டந்த ஏப்ரல் 28 அன்று கொரோனா தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமையைப் பற்றி மாநில முதல்வர்களுடன் விவாதித்த பிரதமர் நரேந்திர மோடி, வழக்கத்துக்கு மாறானதொரு பெருமையை உரிமையுடன் கூறிக் கொண்டார். அதாவது, பல நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறும் என்றும், அவற்றை வரவேற்று இந்தியாவில் முதலீடு செய்யவைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, ஏராளமான மனித ஆற்றல், தொழில் திறமை, மேம்பட்ட அடிக்கட்டுமானம் ஆகியவற்றை இந்தியா கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடனே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, “ஒட்டுமொத்த உலகத்தில் சீனாவுக்கும் சீனப் பொருளாதாரத்துக்கும் எதிரான வெறுப்புணர்வு நீடிக்கிறது… அத்தகைய அருவருப்பினூடாக இதுவொரு மகிழ்ச்சியான செய்தி… இந்தியாவுக்கும் இந்திய முதலீட்டாளர்களுக்கும், குறிப்பாக குறுந்தொழில், சிறுதொழில், நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கும் (micro,small and medium enterprises – MSME) ஒரு நல்வாய்ப்பு… இந்தியாவுக்கு ஒரு நல்வாய்ப்பு; அந்நிய முதலீட்டுக்கு நல்வாய்ப்பு” என்று ஒரு தொலைக்காட்சியில் தொழில் வர்த்தகம் தொடர்பான செய்தியில் குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து, “சீனாவிலிருந்து புலம்பெயர ஆலோசித்துவரும் நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க இந்தியா தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது” என்று நாளேடுகளில் செய்திகள் வெளிவரத் தொடங்கின. உலகளாவிய முதலீடுகளை இந்தியாவில் செய்யுமாறு ஊக்கமளித்தும், இடர்ப்பாடுகளை எளிதாக்கும் கொள்கையையும் ஆயுதமாகக் கொண்டுள்ள “இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்” என்ற இந்திய அரசின் கொள்கையின் மூலமாக, ஏற்கெனவே ஏறத்தாழ 1,000 உலகளாவிய நிறுவனங்கள், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

“சீனாவிலிருந்து வெளியேறும் தொழில் – வர்த்தக நிறுவனங்களைக் கவர்ந்திழுக்க, ஐரோப்பாவின் லக்சம்பர்க் நகரத்தைப் போல இரு மடங்கு நிலத்தை அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒதுக்கீடு செய்து, அபிவிருத்தி செய்து வருகிறது. …நாடு முழுவதும் 4,61,589 ஹெக்டேர் பரப்பளவுக்கு நிலங்கள் இனங்காணப்பட்டுள்ளன” என்று பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் ஒரு செய்தித் துணுக்கு வெளிவந்தது. அசாம் மாநிலத்தில் உற்பத்தியைத் தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்து, சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களைக் கவர்ந்திழுக்கத் திட்டமிட்டுள்ளதாக அசாம் மாநில அரசாங்கம் அறிவித்தது.

திடீரென பா.ஜ.க. ஆளும் உ.பி மற்றும் ம.பி அரசாங்கங்கள் அடுத்த நான்காண்டுகளுக்கு ஒரு டஜனுக்கும் மேலான அனைத்து தொழிலாளர் சட்டங்களைக் கிட்டத்தட்ட முடக்குவதாகவும், சில சட்டங்களை முற்றாக ரத்து செய்வதாகவும் அறிவித்தன. ஏனெனில், முதலாளிகள் கடும் சுமையாக உள்ள தொழிலாளர் சட்டங்களைப் பற்றி புகார் கூறினார்களாம்; அவர்களது ஆட்சியின் கீழ் “இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம்” (தொழிற்சாலைக் கண்காணிப்பாளர்கள் மூலம் சோதிக்கும் முறை) ஓங்குவதால், அது வளர்ச்சியைத் தடுக்கிறதாம்; எனவே, தொழிலாளர் சட்டங்களை முடக்குவதன் மூலம் அரசாங்கம் பல்லாயிரம் கோடி டாலர்களைக் கவர்ந்திழுக்கப் போகிறதாம்.

படிக்க:
மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
♦ பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

அப்படி நடக்குமா என்ன? ஒரு கடுகளவான அந்நிய முதலீடு சீனாவிலிருந்து முட்டிமோதி வெளியேறி இந்தியாவுக்கு வருகிறது என்று வைத்துக் கொண்டால் கூட, அது எனக்கு ஆச்சரியத்தைத்தான் ஏற்படுத்தும். அதற்கான காரணங்கள் இவை:

  1. உண்மையில், எந்த முதலாளியாவது சீனாவிலிருந்து வெளியேறுகிறாரா?

நாடுகள் என்பன, வேறுபட்ட விலையில் ஒரே பொருளை விற்கின்ற பலசரக்குக் கடைகள் அல்ல; நுகர்வோரை ஊக்குவித்து, ஒரு கடைக்குப் பதிலாக வேறு கடைக்கு மாற்றுவதைப் போன்றதுமல்ல என்று பொருளாதாரவாதியும், சீன விவகாரத்தில் நிபுணருமான டாக்டர் சுப்பிரமணியசாமி குறிப்பிடுகிறார்.

ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கான இத்தகைய முடிவுகள் உணர்ச்சிவயப்பட்டதல்ல. ஒரு நிகழ்வின் உந்துதலுமல்ல. மாறாக, இவை மிகவும் சிக்கலானவையாகும்.

சீனாவிலுள்ள அமெரிக்க முதலாளிகள் சங்கம் (AmCham China), கடந்த மார்ச் மாதத்தில் தமது சங்கத்தில் அங்கம் வகிக்கும் முதலாளிகளிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதன்படி, சீனாவில் கொரோனா தாக்குதல் நிலவும் சூழலில், 70 சதவீதத்துக்கும் மேலான நிறுவனங்கள் தங்களது உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நடவடிக்கைகளை சீனாவிலிருந்து இடம் மாற்றப் போவதில்லை என்றும், சீனாவுக்கு வெளியே அவற்றைத் தொடங்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் அறிவித்துள்ளன. இதில் வியப்படைய ஒன்றுமில்லை.

அந்நிய முதலாளிகள் சீனாவை விட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள் எனப்படும் இந்த எல்லா அனுமானக் கட்டுக்கதைகளும் பொய்யானது. இதற்கான காரணம் என்ன?

பெருமளவிலான விநியோகச் சங்கிலிகளின் செயல்திறன், தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் மற்றும் உலகத் தரமான அடிக்கட்டுமானம் ஆகியவையே அந்நிய நிறுவனங்கள் சீனாவுக்குச் செல்ல முதன்மையான காரணங்களாகும். மேலும், சீனாவில் மிகப் பெரிய உள்நாட்டுச் சந்தை இருப்பதால்தான் அந்நிய முதலாளிகள் அங்கே செல்கிறார்கள். ஒரு தொற்றுநோய் இதனை மாற்றிவிட முடியாது என்பது மட்டுமல்ல; நடைமுறையில், கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் வெளிப்பட்ட சீன அரசின் திறமை ஆகியவற்றையும் பன்னாட்டுக் கம்பெனிகள் பார்த்தன.

சீனாவிலுள்ள அமெரிக்க முதலாளிகள் சங்கத்தின் தலைவரான ஆலன் பீபி, “கொரானா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்குக்குப் பிந்தைய மாதங்களில் சீனா தனது பொருளாதாரத்தை மறுதொடக்கம் செய்து, குறுகிய காலத்தில் பழைய நிலைக்குக் கொண்டு வந்ததில் பிற நாடுகளைவிட சீனா முன்னணியில் இருந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தக் காரணங்களுக்காக அந்நிய நிறுவனங்கள் சீனாவை நாடி வந்தனவோ, அந்தக் காரணங்கள் இன்னமும் நீடிக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் அனைவரும் உற்சாகமாக இருப்பதற்காகத்தான், சீனாவிலிருந்து தொழிலும் வர்த்தகமும் வெளியேறி இந்தியாவுக்கு வருகின்றன என்று கூறப்படுகிறதா? ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உண்மையில், பெருமளவில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ள தானியங்கித் (ஆட்டோமொபைல்) தொழில் போன்ற நிறுவனங்கள், திடீரென சீனாவிலிருந்து கிளம்பி வேறொரு நாட்டில் தம்மை நிறுவிக் கொள்வதென்பது ஒருக்காலும் சாத்தியமே இல்லை. மேலும், ஒருக்கால் சில தொழில் – வர்த்தக நிறுவனங்கள் சீனாவிலிருந்து வெளியேறினாலும், அவை பிற நாடுகளுக்குச் செல்லாமல் இந்தியாவுக்குத்தான் வந்தாக வேண்டுமா என்ன?

  1. அந்நிய முதலீட்டாளர்களின் கவனத்தைக் கவரக்கூடிய நாடாக இந்தியா இல்லை

உலகின் முன்னணி 1,000 நிறுவனங்களின் அந்நிய நேரடி முதலீடு (FDI) பற்றியும், பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ள முதல் 25 நாடுகளின் தரவரிசையைக் கணக்கீடு செய்த பட்டியலையும் ஏ.டி. கியார்னே (A.T. Kearney) என்ற அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ள முன்னணியிலுள்ள முதல் 10 நாடுகள் என்ற வரிசைப் பட்டியலில் முதன்முறையாக 2015-இலிருந்து இந்தியா இல்லாமல் போய்விட்டது. அதேசமயம், தென்கிழக்காசிய நாடுகள் அந்நிய நேரடி முதலீட்டைப் பெறுவதில் முன்னணியில் இருப்பதோடு, கடந்த 2018-இல் அவை 11 சதவீத அளவுக்கு அதிகரிப்பையும் கொண்டுள்ளன. அதன் பிறகு இந்தப் புள்ளிவிவரமானது, தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் (DPIIT) கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. அது, 2018-19ஆம் ஆண்டில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு சரிவைச் சந்தித்துள்ளதைப் படம் பிடித்துக் காட்டியதோடு, முதன்முறையாக கடந்த ஆறு ஆண்டுகளில் இவ்வாறு நிகழ்ந்துள்ளதையும் வெளிப்படுத்தியது.

இல்லை; இந்தியாவானது அந்நிய முதலீட்டாளர்களைக் கவரக்கூடியதாக இல்லவே இல்லை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவையனைத்தும் சமமான முக்கியத்துவமுடையவை. இது வெறும் நில ஒதுக்கீடு அல்லது கடுமையான விதிகளைக் கொண்ட தொழிலாளர் சட்டங்களால் ஏற்பட்டதல்ல. மாறாக, சிவப்பு நாடாத்தனம் (கடுமையான விதிமுறைகளைக் காட்டி இழுத்தடிப்பது), மிரட்டிப் பணம் பறிப்பது, கடந்தகால நோக்கிலான பின்னோக்கிய சட்டத் திருத்தங்கள், விதிகளில் மனம்போன போக்கிலான மாற்றங்கள், வரி பயங்கரவாதம், மோசமான உற்பத்தித் திறன், துறைமுகங்களில் பைத்தியக்காரத்தனமான தாமதங்கள், இறையாண்மைக்கு ஆபத்து என்ற பெயரில் தடைகள், இன்னும் பலவாறானவற்றால் உருவானவை.

  1. உள்நாட்டு முதலாளிகளுக்குக்கூட கவரக்கூடிய நாடாக இந்தியா இல்லை

நல்லது. அந்நிய முதலீடு பற்றிய இத்தகைய எல்லா வண்ணமயமான விவாதங்களும் வெறும் வேடிக்கைப் பேச்சுதான். ஏனெனில், இந்திய முதலாளிகள் கூட இந்தியாவில் பெருமளவு முதலீடு செய்ய விரும்புவதில்லை என்பது யாவரும் அறிந்ததுதான். கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டில் முதலீடு மிகவும் மந்தமான நிலையில் உள்ளதை பொருளுற்பத்திக்கான இயந்திரச் சாதனங்கள், மின்சார சாதனங்கள், பொறியியல் சாதனங்கள் முதலானவற்றை உற்பத்தி செய்யும் மூலதன அழுத்தம் கொண்ட நிறுவனங்கள் துறையில் நிலவும் மந்தநிலைமைகளே படம் பிடித்துக் காட்டுகின்றன.

உள்நாட்டில் தேவை (demand) மிகவும் குறைந்து வற்றிப்போன நிலைமை, மறுபுறம் ஆலைகள் அதிகத் திறன் கொண்டுள்ள நிலைமை, பொதுத்துறையில் அரசின் மிகக் குறைவான முதலீடு – ஆகியன இதற்குக் காரணங்களாக உள்ளன. இதன் விளைவாக, உள்நாட்டுத் தொழில் – வர்த்தகத்தில் முதலாளிகள் கூடுதலாக முதலீடு செய்வதில் ஊக்கமற்ற நிலைமையே உள்ளது. எவ்வாறாயினும், தனியார் முதலீட்டில் நிலவும் வறட்சியால் இந்திய நாடானது பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய மூன்று அம்சங்களும், குறிப்பாக கடைசி இரண்டு அம்சங்களும் யாவரும் அறிந்தவைதான். நிலைமை இப்படியிருக்க, சீனாவிலிருந்து வெளியேறி அந்நிய முதலீடுகள் இந்தியாவுக்கு வரும் என்ற நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? அதேபோல, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளின் நடவடிக்கைகள் எங்கிருந்து ஊற்றெடுக்கின்றன?

படிக்க:
காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?
♦ திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

இது, கொரோனா தாக்குதலை எதிர்கொள்ள அரசாங்கம் எத்தகைய திட்டங்களைச் செயல்படுத்துகிறது என்ற கேள்விகளையும் நிர்பந்தங்களையும் தடுக்கும் நோக்கத்துடன், ஊடகங்கள் மூலம் பரபரப்பான செய்திகளை வெளியிட வைத்து, பொருத்தமற்ற செய்திகளின் பின்னே நாட்டு மக்களை ஓடவைக்க அரசியல்வாதிகள் கையாளும் உத்தியாகவே தெரிகிறது. இது, பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டது. அந்நிய நேரடி முதலீடுகள் சீனாவிலிருந்து புலம்பெயரப் போவதாகவும், இதுவொரு நல்வாய்ப்பாக அமையும் என்றும் அவர் மாநில முதல்வர்களிடம் கூறினார். இருப்பினும், இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் உடனே களத்தில் குதித்தன. இதேபோன்ற கூச்சலை எழுப்பி பக்கமேளம் வாசிக்கத் தொடங்கின.

இங்கே ஒரு சுவையான முரண் உள்ளதை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது. கடந்த 2014-15ஆம் ஆண்டின் அந்நிய நேரடி முதலீடுகளின் எண்ணிக்கையை வைத்து பெருமிதம் கொண்ட பிரதமர், மகிழ்ச்சியில் பூரித்துப் போனார். அதன் பிறகு, அந்நிய முதலீடுகளின் எண்ணிக்கையில் தொய்வு ஏற்பட்டபோது, அரசின் சாதனைப் பட்டியலிலிருந்து அந்நிய நேரடி முதலீடு பற்றிய செய்திகள் கைவிடப்பட்டன. முட்களால் மூடப்பட்டிருக்கும் இந்தப் பாதையில் சென்று, கூடுதலாக அந்நிய நேரடி முதலீட்டைக் கவர்ந்திழுக்க மத்திய அரசின் பல்வேறு அமைச்சர்கள் முயற்சித்து தோல்வியடைந்துள்ள நிலையில், சீனாவிலிருந்து வெளியேறுவதாகச் சொல்லப்படும் அந்நிய நேரடி முதலீடுகளைக் கவர்ந்திழுக்க, இப்போது மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படுகின்றன.

– புதியவன்

(11.5.2020 தேதியிட்ட பிசினஸ் ஸ்டாண்டர்டு ஆங்கில நாளேட்டில் தேபஷிஸ் பாசு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?

0

ந்த நாட்டின் தற்போதைய காலத்தின் வரலாறு எழுதப்படும்போது, ஒரு நெருக்கடியை நிர்வகிப்பதில் தற்போதைய ஆட்சியின் தோல்வியை மட்டும் அது பதிவு செய்யாது; அரசாங்கத்தின் எவ்வித உதவியும் இன்றி, நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற எளிய மக்கள், தொழிலாளர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களின் போராட்டங்களையும் அது பதிவு செய்யும்.

அப்படிப்பட்ட பல கதைகளில், தைரியமும் விடாமுயற்சியும் கொண்ட ஜோதி குமாரியின் கதையும் ஒன்று. பீகாரின் தர்பங்காவைச் சேர்ந்த 15 வயதான ஜோதி குமாரி, காயமடைந்த தனது தந்தையை சுமந்து ஹரியானாவின் குர்கானில் இருந்து தனது கிராமத்திற்கு 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்திருக்கிறார்.

ஜோதியின் தந்தை மோகன் பாஸ்வான் கடந்த 20 ஆண்டுகளாக குர்கானில் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ஜனவரி 26 அன்று, அவர் ஒரு சாலை விபத்தை சந்தித்து காயமடைந்தார். அதைத் தொடர்ந்து ஜோதி மற்றும் அவரது தாயார் அவரை கவனித்துக்கொள்வதற்காக ஜனவரி 31 அன்று குர்கானுக்கு வந்தனர்.

ஜோதியின் தாயார், ஃபுலோ தேவி, அங்கன்வாடியில் சமையல்காரராக பணிபுரிவதால், அவரால் குர்கானில் 10 நாட்களுக்கு மேல் தங்க முடியவில்லை. மோகனைக் கவனிப்பதற்காக ஜோதியை அங்கேயே விட்டுவிட்டு, அவர் தர்பங்காவுக்குத் திரும்பினார்.

அனைத்தும் வழக்கமாக சென்றுகொண்டிருந்தது, மோகனும் குணமாகி வந்தார். அப்போது திடீரென்று கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக மார்ச் 24 அன்று தேசிய அளவிலான ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தொடக்கத்தில், மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த காலகட்டத்தின் முடிவில், ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. பின்னர், மூன்றாவது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, தற்போது, நாம் நான்காவது கட்டத்தில் இருக்கிறோம்.

படிக்க:
மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !
♦ “அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !

மோகன் பாஸ்வானைப் போல, ஊரடங்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான இடம்பெயர் தொழிலாளர்களை பாதித்தது. அவருக்கு வருமான ஆதாரங்கள் எதுவும் இல்லை, இருந்த உணவுப் பொருட்களும் தீர்ந்துகொண்டு வந்தன. அவர்கள் வாடகை செலுத்த பணம் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டது.

“ஊரடங்குக்குப் பிறகு சிக்கல்கள் அதிகரித்தன” என்கிறார் ஜோதி. “எங்கள் வீட்டு உரிமையாளர் எங்களை தங்கியிருந்த அறையிலிருந்து வெளியேற்ற விரும்பினார். நாங்கள் வாடகை செலுத்தாததால் அவர் இரண்டு முறை மின் இணைப்பையும் துண்டித்து விட்டார். நாங்கள் உணவில்லாமல் இருந்தோம். நாங்கள் எதை சாப்பிட முடியும்? அப்பாவுக்கு எந்த வருமானமும் இல்லை, எனவே எப்படியாவது வீடு திரும்ப வேண்டும் என முடிவு செய்தோம்”

மே 8 ஆம் தேதி, ஜோதி குர்கானில் இருந்து தனது சைக்கிளில் தந்தையை பின்னால் அமர வைத்துக்கு கிளம்பினார். நடுவில் ஒரு லாரி ஓட்டுநர் அவர்களுக்கு ஒரு குறுகிய தூரத்தை கடக்க உதவியைத் தவிர, தனது கிராமத்துக்கு திரும்பும் முழு தூரத்தையும் சைக்கிள் மிதித்தே வந்தார்.

மே 17 அன்று இரவு 9 மணியளவில் அவர்கள், 10 நாட்கள் பயணத்திற்குப் பிறகு சிர்ஹுல்லியை அடைந்தனர். “டிரக் டிரைவர் எங்களுக்கு சிறிது தூரம் ஒரு லிப்ட் கொடுத்தார், ஆனால் அவர்கள் வேறு பாதையில் செல்வதால் நாங்கள் கீழே இறங்க வேண்டியிருந்தது”

மோகன் தற்போது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருக்கிறார், ஜோதி வீட்டில் இருக்கிறார். மே 17 அன்று முசாபர்பூரை அடைந்ததும், ஜோதி தனது குடும்பத்தினரிடம் இரவில் வீட்டிற்கு வருவதாக அறிவித்தார். மற்ற கிராமங்களைப் போலவே, சிர்ஹுல்லியில் உள்ளவர்களும் கொரோனா வைரஸைப் பார்த்து பயப்படுகிறார்கள், வெளியில் இருந்து யாரையும் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. அந்த நாளில் வேறு சிலரும் ஊருக்கு வந்த நிலையில், இவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.

தனது சைக்கிள் பயணத்தைப் பற்றி பேசும் ஜோதி, “நான் ஒவ்வொரு நாளும் 100 கி.மீ.க்கு மேல் சைக்கிள் ஓட்டினேன். நாங்கள் ஒரு பெட்ரோல் பம்பில் நிறுத்தி, அங்கே இரவைக் கழித்துவிட்டு, மறுநாள் காலையில் எங்கள் பயணத்தைத் தொடங்குவோம். நாங்கள் நிறுத்திய அனைத்து பெட்ரோல் பம்புகளிலும், மக்கள் எங்களுக்கு உணவு மற்றும் பானங்களை வழங்கினர். அவர்கள் எங்களை நன்றாக நடத்தினார்கள்”

படிக்க:
குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
♦ திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

மோகன் பாஸ்வானுக்கு எந்த நிலமும் இல்லை. இவருக்கு மூன்று மகள்களும் இரண்டு மகன்களும் உள்ளனர். ஒரு மகள் ஜோதியை விட மூத்தவள், மற்றவர்கள் இளையவர்கள்.

தன் தந்தையுடன் சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் எண்ணம் எப்படி வந்தது? “வீட்டில் எந்த உணவுப் பொருட்களும் இல்லை, மக்கள் நடைப் பயணமாக, மிதிவண்டிகளில் வீடு திரும்பும் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டு உரிமையாளர் எங்களை வெளியே தூக்கி எறிந்தால், எங்களுக்கு தங்குவதற்கு இடமும் சாப்பிட ஒன்றும் இருக்காது என்று நான் பயந்தேன்”என்கிறார் ஜோதி.

“நான் என் தந்தையிடம் சைக்கிளில் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக சொன்னபோது, அவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னால் அதை சமாளிக்க முடியாது என அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தார்” என தொடர்ந்தார் ஜோதி.

மோகனுக்கு சந்தேகம் இருந்திருக்கலாம், ஆனால் ஜோதி நம்பிக்கையுடன் இருந்தார். “நான் கிராமத்தில் இருந்தபோது, அதிகமாக சைக்கிள் ஓட்டுகிறேன். தந்தை வீட்டுக்கு வரும்போது, நான் அவரை அமர வைத்து சைக்கிள் ஓட்டுவேன். எனவே, நான் அதற்குப் பழகி விட்டேன். அதனால் அவரை பாதுகாப்பாக கிராமத்திற்கு அழைத்துச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. என் தந்தை என்னை ஒரு மகனைப் போலவே நடத்துகிறார், எனவே ஒரு மகன் என்ன செய்வானோ அதை செய்ய நினைத்தேன்”

சாலை விபத்துக்குப் பிறகு, மோகன் பாஸ்வானால் வேலை செய்ய முடியவில்லை. “ஆட்டோவின் உரிமையாளர் எங்களை அழைத்து கணவரின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தரமுடியாது என கூறினார்” என ஃபூலோ தேவி கூறுகிறார்.

“ஆகவே, நான் ரூ. 38,000 வங்கிக் கடனை எடுத்து ஜனவரி 31 அன்று குர்கானுக்குச் சென்றேன். இதில் குறிப்பிட்ட பணம், அவரது சிகிச்சைக்காக செலவிடப்பட்டது. மீதமுள்ளதை நான் ஜோதிவிடம் ஒப்படைத்துவிட்டு வீடு திரும்பினேன்”

“இதற்கிடையில், நான் ஒவ்வொரு மாதமும் எனது சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை அனுப்பிக் கொண்டிருந்தேன், ஆனால் ஊரடங்குக்குப் பிறகு இது கடினமாகி விட்டது. நான் இதைப் பற்றி அவர்களிடம் கூறினேன்” என்கிறார் அவர்.

“ஜோதி என்னிடம் சைக்கிளில் வீடு திரும்ப இருப்பதாகக் கூறினாள். ஆரம்பத்தில், நான் அவளை அனுமதிக்க மறுத்துவிட்டேன், ஆனால் வேறு வழியில்லை” என்று அவர் கூறுகிறார்.

ஜோதி வீடு திரும்பிய சைக்கிள் மே 8 அன்று வாங்கப்பட்டது. “அருகில் வசித்த ஒரு அறிமுகமானவரிடமிருந்து நான் அதை வாங்கினேன்” என ஜோதி நினைவு கூர்ந்தார். “அவர் அந்த சைக்கிளுக்கு ரூ. 1,600 கேட்டுக் கொண்டிருந்தார். மத்திய அரசு வங்கியில் போட்ட ரூ. 1,000 பணத்திலிருந்து அவரிடம் ரூ. 500 கொடுத்துவிட்டு, மீதமுள்ளதை பின்னர் கொடுப்பதாகக் கூறினேன். கொடுத்ததுபோக மீதியிருந்த 500 ரூபாயுடன் தந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன்”

கடினமான பயணத்தைத் தவிர, தனது தந்தையை அமர வைத்து அழைத்து வந்ததைப் பார்த்து கேலி செய்தவர்களை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது என ஜோதி கூறுகிறார். “அப்பா பின்னால் அமர்ந்திருக்கும்போது ஒரு மகள் சைக்கிளில் சவாரி செய்வதைக் கண்டதால் மக்கள் எங்களை கேலி செய்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களைக் கேட்கும்போது அப்பா வருத்தப்படுவார், ஆனால் அவர் காயமடைந்திருக்கிறார் என மக்கள் அறியமாட்டார்கள் என்பதால் கவலைப்பட வேண்டாம் என்று நான் அவரிடம் சொன்னேன்” என்கிறார் அவர்.

“என் அப்பாவின் காயங்களைப் பற்றி எனக்குத் தெரிந்ததால் அவர்கள் எங்களை கேலி செய்தார்கள் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. அந்த மக்களுக்கு தெரியாது” என்கிறார் ஜோதி.

நீண்ட மற்றும் கடினமான பயணம் ஜோதியை சோர்வடைய வைத்துள்ளது. “அவள் திரும்பியதிலிருந்து, அவள் உடல் வலி பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறாள். அவள் சோர்வாக இருக்கிறாள், தூங்க விரும்புகிறாள்” என ஜோதியின் தாய் கூறுகிறார்.

ஜோதி குமாரி எட்டாம் வகுப்பு வரை படித்திருக்கிறார். “எனக்கு படிப்பது பிடிக்கும், எங்கள் நிதி நிலைமை அதற்கு உகந்ததாக இல்லை” என்று அவர் கூறுகிறார். “நான் பள்ளிக்குச் சென்றால், நாங்கள் நிதி நெருக்கடியை எதிர் கொள்வோம். எனவே, நான் ஒரு வருடம் முன்பு பள்ளியை விட்டு நின்று விட்டேன். ஆனால், நான் மேலும் படிக்க விரும்புகிறேன். யாராவது எனக்கு உதவி செய்தால், நான் படிப்பேன்”

ஜோதி குமாரியின் கதை ஊடகங்களில் வெளியான பிறகு, அவருடைய அவல நிலை மகிமைப் படுத்தப்பட்டது. ஜோதியையும் அவரைப் போன்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் இந்த நிலைக்குத் தள்ளிய அரசாங்கத்தின் கையாலாகத்தனத்தை கேள்விக் கேட்பதைத் தவிர்த்து, ஜோதியின் சைக்கிள் ஓட்டும் ‘திறமை’யை விதந்தனர். சைக்கிள் ஓட்டும் பயிற்சிக்கு வந்து, இந்தியாவுக்கு பதக்கம் வாங்கித்தர அழைத்தது சைக்கிள் ஃபெடரேசன். அமெரிக்க அதிபரின் மகள், ஜோதியைப் பார்த்து இந்தியாவே பெருமைப்பட வேண்டும் என்றார்.

ஆனால், எளிய பெண்ணான ஜோதிக்கு தனக்கு எது தேவை என தெரிந்திருக்கிறது. இவர்களின் வெற்று கைத்தட்டல் ஒன்றுக்கும் உதவாது என ஒதுக்கிய அவர், தனக்கு படிப்பு கிடைத்தால் போதும் என கூறிவிட்டார். ஜோதிக்கு படிப்பாவது கிடைத்தது, மற்றவர்கள் இந்த ஆட்சியாளர்களால் 60 நாட்களுக்குப் பிறகும் நடந்தபடியே இருக்கின்றனர்.


கட்டுரையாளர் : உமேஷ் குமார் ரே

தமிழாக்கம் : கலைமதி
நன்றி : த வயர். 

மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !

லகை அரசியல், பொருளாதார ரீதியில் மேலாதிக்கம் செய்து வருகின்ற ஒரே ஒரு மேல்நிலை வல்லரசான அமெரிக்காவின் வலிமையும் செல்வாக்கும் கடந்த பத்தாண்டுகளாக குறைந்து வருகிறது. அமெரிக்காவை எதிர்க்கின்ற சக்திகளின் பலமும் குரலும் அதிகரித்துக் கொண்டு வருகின்றன.

ஆசியாவில் வடகொரியா, மத்திய கிழக்கில் ஈரான், தென்னமெரிக்காவில் வெனிசுலா என எதிரணி வலுத்துக்கொண்டு வருகிறது. அதன் நெருங்கிய கூட்டாளிகளான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்தே குறிப்பாக ஜெர்மனி, ஃபிரான்சு ஆகிய நாடுகளிடமிருந்து தொழில், வர்த்தகப் போட்டியும் வரிவிதிப்புகளும் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. நேட்டோவின் மீதான அமெரிக்க நாட்டாமையை எதிர்த்து ஃப்ரான்சின் குடியரசுத் தலைவர், பகிரங்கமாக டிரம்பை மேடையில் வைத்துக்கொண்டே தாக்கிப் பேசியதும் அண்மை ஆண்டுகளில் அமெரிக்கா சந்தித்துவரும் அவலங்கள்.

கொரோனா கிருமித்தொற்றின் பரவலைத் தடுக்கக் கூடத் தகுதியற்று உலகிலேயே அதிகம் பேர் கொரோனா தொற்றால் இறந்த நாடாக அமெரிக்கா மாறியிருக்கிறது.இது அமெரிக்க அரசின் அருகதையை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி மந்தத்தை (Depression) நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நான்கு கோடி பேர் வேலையின்றித் தவிக்கின்றனர். அதன் பொருளாதார வளர்ச்சி 4 சதவீதம் விழுந்துவிட்டது. நெருக்கடியில் இருந்து தப்பிக்க வழிவகையின்றி நிற்கிறது அமெரிக்கா. இந்நிலையில் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப், அமெரிக்க மேல்நிலை வல்லரசின் சரிவையும் தனது ஆட்சியின் தோல்வியையும் மறைக்க சீன எதிர்ப்புவெறியை அன்றாடம் கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்துக்கு தொழில், வர்த்தகம், முதலீடுகள், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் சீனா கடும் போட்டியாளராக வளர்ந்துள்ளது. இத்துறைகளில், சீனாவின் திறனுக்கு முன் நிற்க முடியாமல் பின்தங்கியுள்ள அமெரிக்கா, தனது செல்வக்கைத் தொடர்ந்து இழந்து வருகிறது. எனவே, சீனாவின் முதலீடுகளை நிராகரித்தல், சீனப் பொருட்களின் மீதான வரிகளை உயர்த்துதல், சீனத்தின் நவீனத் தொழில்நுட்பங்களை அமெரிக்காவிற்குள் நுழையவிடாமல் செய்தல் என அமெரிக்கா பனிப்போர் நடத்தி வருகின்றது.

தனது அமெரிக்க எஜமானனின் உத்தரவுப்படி இந்தியத் தரகு அதிகார வர்க்க பெருமுதலாளிகளின் பெரும்பிரிவினரும் அவர்களின் அரசியல் அடியாளான ஆர்.எஸ்.எஸ். –  மோடி அரசும் தீவிர சீன எதிர்ப்பு-புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். புவிசார் போர்த்தந்திரரீதியில், அமெரிக்காவின் தெற்காசிய பிராந்திய அடியாளாகவும் இந்தியா செயல்பட்டு வருகின்றது. இன்னொரு பக்கம், தனது பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு கட்டுமானச் சீர்த்திருத்தங்களைச் செய்வதில் மோடி அரசு மேலும் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கெனவே, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த, இந்தியப் பொருளாதாரம் கொரோனா கிருமித் தாக்குதலை ஒட்டிய ஊரடங்கின் விளைவாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் மூழ்கிவிட்டது. இந்த ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0% தான்  இருக்குமென்று நிபுணர்கள் சொல்கின்றனர்.

நெருக்கடிக்குத் தீர்வாக மோடி அரசு, தனியார்மய-தாராளமய-உலகமயக் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை மேலும் தீவிரமாக மேற்கொள்வதைத்தான் முன்வைக்கிறது. புதிய தாராளவாதக் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை வளர்ச்சிக்கான சிறந்த வழி என்று பெருமையடித்துக் கொண்டு அமுல்படுத்துவது; அதில் நெருக்கடி ஏற்பட்டால், அதற்குக் காரணம் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை அரைகுறையாகவும் ஒருசில துறைகளிலும் மட்டும் அமுல்படுத்தியதே என்று சொல்லி, தீர்வாக புதுப்புதுத் துறைகளுக்கும் முழுமையாகவும் இன்னும் தீவிரமாக அமுல்படுத்துவதே என்று செயல்படுவதும்தான் உலகம் முழுவதும் கையாளப்பட்டு வருகிறது.

இதே சறுக்குப் பாதையைத்தான் மோடி அரசும் பின்பற்றப் போகிறது என்பதை 13-05-2020 அன்று 20 இலட்சம் கோடி ரூபாய் பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை அறிவித்த போது பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

படிக்க:
இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !
♦ திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

கொரோனா தாக்குதலால் ஏற்பட்டுள்ள நிலைமைகளைப் பற்றி ஏப்ரல் 28-ம் தேதி நான்காவது முறை மாநில முதல்வர்களுடன் விவாதித்த மோடி தனது அறிவிப்பில் முக்கியமான ஒரு செய்தியை உற்சாகமாகக் குறிப்பிட்டார். அதாவது, பல வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறப் போகின்றன என்றும் அவற்றை ஒன்றுவிடாமல் வரவேற்று இந்தியாவில் முதலீடு செய்யவைத்து இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்றப் போவதாகவும் அறிவித்தார். அவரது பேச்சின் உட்கிடக்கை அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் தரகு அதிகாரவர்க்க முதலாளியப் பிரிவினரின் உள்ளக்கிடக்கையாகும். 2020 ஏப்ரல் மாதத்திற்கு முன்பே இந்தியாவில் எச்.டி.எஃப்.சி. நிறுவனத்தின் 1%க்கும் மேற்பட்ட பங்குகளை சீன நிறுவனம் வாங்கியதை மோடி அரசு சாதாரணமாகப் பார்க்கவில்லை. சீன நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு என்று பார்த்த மோடி அரசு இந்தியாவோடு நில எல்லை ரீதியாக தொடர்பு கொண்டுள்ள ஏழு நாடுகளில் உள்ள சீன நிறுவனம் எதுவும் இந்தியாவில் அன்னிய நிறுவன முதலீடுகள் செய்ய தடை விதித்தது.

இன்னொருவகையில் பார்த்தால், மருந்து, எலெக்ட்ரானிக்ஸ் போன்ற சில துறைகளில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் கச்சாப் பொருட்கள், இடைநிலை உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றை நம்பியே இந்தியப் பொருளாதாரம் இருக்கிறது. உலகின் உற்பத்திக் கூடமாக (Manufacturing Hub) சீனா வளர்ந்திருப்பதை இந்திய ஆளும் வர்க்கங்களால், குறிப்பாக, அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் அடிவருடிக் குழுவினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இந்தியாவில் சீன முதலீடுகளைத் தடுப்பது, சீனப் பொருட்களை இந்தியாவிலும் அண்டைநாடுகளிலும் விற்பதை ஒழிப்பது, அந்த இடத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்ற பேராசையுடன் இந்திய ஆளும் வர்க்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா கிருமித் தாக்குதலை ஒட்டி சீனா மீது அமெரிக்கா தொடுத்துவரும் தாக்குதல் – புறக்கணிப்பை அமெரிக்காவுடன் அடிபணிந்து நெருக்கமாக்கிக் கொள்வதன் மூலம் தனது இந்த நோக்கத்தைச் சாதித்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறது.

சீனாவில் செயல்பட்டுவரும் மருத்துவத்துறைக் கருவிகளைத் தயாரிக்கும் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனியான அப்பாட் லேபரேட்டரீஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள், தங்களது உற்பத்தி நிலையங்களை இந்தியாவிற்குக் கொண்டுவந்து அமைக்க வேண்டுமென்று அமெரிக்க கார்ப்பரேட் முதலாளிகளிடமும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் டிரம்ப்பிடமும் பணிவுடன் கேட்டு வருகிறது மோடி அரசு. வெளியில் பெயர் சொல்ல விரும்பாத, இந்திய அதிகாரிகள் வட்டம் சொல்வது என்னவென்றால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கக் கம்பெனிகளிடமும் வெளியுறவுத்துறை உட்பட, இந்திய அரசின் நிறுவனங்கள் மூலமும் சீனாவில் இருந்து வெளியேற இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்கு வரவேண்டுமென்று ஏப்ரல் மாதத்திலேயே இந்திய அரசு கேட்டு வருகின்றது. மருத்துவத்துறை உபகரணங்களை அளிப்பவர்கள், உணவுப் பதப்படுத்தும் கம்பெனிகள், ஜவுளி, தோல், தானியங்கித்துறைப் பொருட்கள் உட்பட, 500-க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் கம்பெனிகளிடம் விவாதங்கள் நடந்துள்ளன.

மோடி அரசைப் பொருத்தவரையில் கொரோனா ஊரடங்கால் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நிகர உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) 15% ஆக உள்ள பொருள் உற்பத்தித்துறையின் பங்கை 2022-ல் 25% ஆக உயர்த்த வெளிநாட்டு முதலீடுகள் மிகவும் தேவை என்று பார்க்கிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக 12.2 கோடி மக்கள் வேலையிழந்துள்ளனர். எனவே, வேலைவாய்ப்பை உருவாக்குவது உடனடி அவசியமாகவும் உள்ளது.

படிக்க:
வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்
♦ பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

தெற்கு மற்றும் தென்கிழக்காசியப் பகுதிகளில் இந்தியா கடுமையான போட்டியைச் சந்தித்து வருகிறது. இந்தப் போட்டியில் நின்று வளரவேண்டுமானால், அடிக்கட்டுமானத் துறையிலும் நிர்வாகத்துறையிலும் பெரிய முன்னேற்றங்களைக் கொண்டுவர நிறைய முதலீடுகள் தேவையாக உள்ளன. இப்படிச் செய்வதன் மூலமே உலக விநியோகச் சங்கிலியில் இந்தியா தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்க முடியும் என்று முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள், நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், முதலீடுகளை ஈர்க்க வழக்கமாக புதிய தாராளவாத சித்தாந்தவாதிகளும் பொருளாதார நிபுணர்களும் பரிந்துரைப்பது என்னவென்றால், எந்தப் புதிய தாராளவாதக் கட்டுமானச் சீர்த்திருத்தங்கள் (தனியார்மய-தாராளமய-உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள்) பொருளாதாரப் படுகுழியில் தள்ளியுள்ளனவோ, அந்தக் கட்டுமானச் சீர்த்திருத்தங்களை இன்னும் அதிகமாகவும் முழுமையாகவும் மேற்கொள்ள வேண்டுமென்பதே அது.

குறிப்பாக, இந்தியாவைப் பொருத்தவரையில், நிலங்களைக் கையகப்படுத்துவது, தொழிலாளர் நலச்சட்டங்கள், வரிவிதிப்பு ஆகிய துறைகளில் சீர்த்திருத்தங்கள் செய்வது கட்டாயம் என்று தற்போது மோடி அரசு கருதுகிறது. குறிப்பாக, நடப்பில் இருக்கின்ற தொழிலாளர் நலச்சட்டங்கள் தான் புதிய முதலீடுகள் வருவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளன என்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே கூறிவருகின்றனர். அதேபோல, இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் பரிமாற்ற வரியை நீக்க வேண்டுமென இ-வணிக நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

தொழிலாளர் நலச்சட்டங்கள் மற்றும் வரிவிதிப்பு முறைகளில் தங்களுக்குச் சாதகமாக என்னென்ன மாற்றங்கள், சலுகைகள் கொண்டுவர வேண்டுமென்ற தங்களது விருப்பங்களை விரிவாக முன்வைக்குமாறு அமெரிக்கக் கம்பெனிகளிடம் இந்தியாவின் வர்த்தக அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது என அந்த அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், நீண்டகால நோக்கில் என்னென்ன தீர்வுகளை முன்வைக்கலாம் என்று மத்திய அரசு மாநில அரசுகளிடம் ஆலோசித்து வருகிறது. குறிப்பாக, கம்பெனிகளை உடனடியாக தொடங்குவதற்கு ஏதுவாக தேவையான நிலங்களைக் கையகப்படுத்தி நிலவங்கிகளை உருவாக்க விரைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. டிரம்ப் பதவிக்கு வந்த பின்னர், அவர் சீனாவுடன் வர்த்தகப் போரை நடத்தத் தொடங்கியதிலிருந்து அமெரிக்கக் கம்பெனிகள் சீனாவைத் தவிர்த்து இந்தியாவிற்கு வரவிரும்பின.

ஆனால், அப்போது மேலே சொன்ன துறைகளில் முதலீட்டாளர்களுக்கு உவப்பான சீர்த்திருத்தங்கள் செய்யப்படாததால் அவை வியட்நாமுக்கும் வேறு நாடுகளுக்கும் சென்றுவிட்டன. இவ்வாறு இழந்ததை மீட்டெடுக்கும் வகையில், அவர்கள் மனம் குளிரும் வகையில், அவர்களின் வேட்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் என்னென்ன சீர்த்திருத்தங்கள் வேண்டுமோ அவற்றையெல்லாம் பணிந்து, குனிந்து செய்யக் கைகூப்பி நிற்கிறது பிரதமர் மோடி – நிதியமைச்சர் லேடி கும்பல்.

பாசிச மோடி இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்ததில் இருந்தே டிரம்ப்புடன் நெருக்கமான உறவைப் பேணுவதில் கண்ணுங்கருத்துமாக செயல்பட்டு வந்தார். அப்போதிருந்தே (ஏனென்றால் அப்போதே இந்தியப் பொருளாதாரம் மிகவும் பாரதூரமான, திக்குத்தெரியாத நெருக்கடியில் வீழ்ந்துவிட்டது) அமெரிக்க முதலீடுகளுக்கும் கம்பெனிகளுக்கும் இந்தியாவை அகலத் திறந்துவிட திட்டம் போட்டு செயல்பட்டு வந்தார். டிரம்புடன் சேர்ந்து மோடி அமெரிக்காவிலும் (ஹூஸ்டன்) இந்தியாவிலும் (அகமதாபாத்) நடத்திய பிரம்மாண்ட பேரணிகள், கார்ப்பரேட்டுகளின் வரியைக் குறைத்தது, 300 கோடி அமெரிக்க டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து இராணுவத் தளவாடங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டது, கடைசியாக, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை உடனடியாக அனுப்பி வையுங்கள், இல்லாவிட்டால் எதிர்நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிரம்ப் பகிரங்கமாக உலகறிய மிரட்டல் விடுத்ததை ஒட்டி, அடித்துப்பிடித்துக் கொண்டு அவசர அவசரமாக அவைகளை மோடி அனுப்பி வைத்தது ஆகியவையெல்லாம் இதற்கான முயற்சிகளே.

சீனத்தில் முதலீடு செய்துள்ள கம்பெனிகளைக் கவர்ந்திழுக்க தொழிலாளர் நலச்சட்டங்கள், விவசாய நிலங்களையும் தொழிற்சாலைகள் கட்டவும் பிற பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளுக்குக் கையகப்படுத்தவும் விதிகளைத் தாராளமாகத் தளர்த்த வேண்டுமென்றும் இவை தொடர்பாக கொள்கைரீதியான முடிவுகளை எடுப்பதோடு, அவற்றில் ஊன்றி நின்று அவை தொடர்ந்து நீடிக்க உத்தரவாதம் அளிப்பதும் மிகமிக அவசியம் என்றும் வல்லுநர்கள் வற்புறுத்துகின்றனர்.

கடற்கரையோர பொருளாதார மண்டலங்களை சீனா நிறுவியது வெளிநாட்டு நிறுவனங்களைக் கவர்ந்திழுப்பதில் முக்கிய பங்காற்றியது என்று நிதி ஆயோக்கின் முன்னாள் தலைவர் அரவிந்த பனகாரியா கூறியுள்ளார். இந்தியாவிற்கோ இந்தோனேசியாவுக்கோ வராமல் வியட்நாமுக்கும் பங்களாதேசத்திற்கும் சீனாவில் இருந்து வெளியேறும் கம்பெனிகள் செல்வதற்குக் காரணம் இந்தியா அளிக்கின்ற சலுகைகளை, ஊக்குவிப்புத் திட்டங்களைவிட தொழில் நடத்துவதற்கு உகந்த சூழ்நிலைகளை, எளிதான சாதகமான விதிமுறைகளை உருவாக்கித் தராததுதான்.

எடுத்துக்காட்டாக, புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு கார்ப்பரேட் வரியாக 17% மட்டுமே விதிக்கிறோம். இந்தச் சலுகை, ஊக்குவிப்பைவிட தொழிலாளர் சந்தை மற்றும் நிலச்சந்தைகளில் முதலீட்டாளர்களின் முகம் சுழிக்கும்படி நமது ஏற்பாடுகள் உள்ளன. தன்னாட்சி பெற்ற வேலைவாய்ப்பு மண்டலங்களை இவர் வலியுறுத்துகிறார். இந்தத் தன்னாட்சி பெற்ற வேலைவாய்ப்பு மண்டலங்கள் ஏறத்தாழ 300 – 350 ச.கீ.மீட்டர் பரப்பளவு கொண்டதாகவும் மிகச்சிறப்பாக செயல்படக் கூடிய நில மற்றும் தொழிலாளர் சந்தைகளை வழங்கவும் எளிதான மற்றும் விரைந்து அனுமதியளிக்க கூடிய சுங்கச் சாவடிகளைக் கொண்டதாகவும் இந்த மண்டலங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டுமென்று ஆலோசனைகளை முன்வைக்கும் அரவிந்த பனகாரியா, சீனாவில் ஷென்ஜென் (Shenzhen) பிராந்தியத்தில் தாங்களே வரி, நிலம் மற்றும் தொழிலாளர் நலன் தொடர்பான சட்டங்களை இயற்றிக் கொள்ளும் அதிகாரம் கொண்ட, சுங்கவரியில் இருந்து விலக்கு பெற்ற 300-500 ச.கீ.மீட்டர் கொண்ட தன்னாட்சி கொண்ட வேலைவாய்ப்பு மண்டலங்கள் உள்ளதாகக் கூறியுள்ளார். இப்படிப்பட்ட கடற்கரை ஓர பொருளாதார மண்டலங்களால், நகரத்தில் இயங்கிவரும் கம்பெனிகளின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்க முடிகின்றது என்கிறார்.

முன்பு, தென்கிழக்கு சீனாவில் அமைதியான ஒரு மீன்பிடிக் கிராமமாக ஷென்ஜென் இருந்தது. சுதந்திரப் பொருளாதார மண்டலமாக அதை ஆக்கியதன் விளைவாக இன்று மெட்ரோபாலிடன் பெருநகரமாக மாறிவிட்டது. தனது சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு ஒரு மாடலாக இந்தப் பெருநகரத்தை சீன அரசு காட்டுகிறது. மகாராஷ்டிராவில் உள்ள வாதவான் (Vadhawan) பகுதி, மேற்குவங்கத்தில் உள்ள சாகர் (Sagar) பகுதிகளில் 14 கடற்கரையோர பொருளாதார மண்டலங்களை உருவாக்க இந்தியா திட்டமிட்டிருக்கிறது. தொழில் நடத்துவதை எளிதாக்குவது (Ease of Doing Business) என்பதை இந்தியா உத்தரவாதப்படுத்த வேண்டும். குறிப்பாக, இது தொடர்பான கொள்கை முடிவுகளை பதவிக்கு வருகிற கட்சியின் எண்ணத்திற்கு ஏற்ப மாற்றுவதுதான் பிரச்சினை; அப்படி மாற்றும்போது முந்தைய அரசின் கொள்கைகளால் ஏற்பட்ட விளைவுகளையும் மாற்றங்களையும் புதிய அரசு தனது புதிய கொள்கை காரணமாக மாற்றி அமைக்கின்றது.

இதற்கேற்ப கம்பெனிகள் தங்களது செயல்பாடுகளை மாற்றியமைக்க வேண்டியுள்ளது. இது அவைகளுக்குப் பெருத்த இடையூறுகளையும் தொல்லைகளையும் பாதகங்களையும் ஏற்படுத்துகின்றது. எனவே எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கொள்கை முடிவுகளில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலையை உருவாக்குவது மிகமிக அவசியம் என்று முன்னாள் தலைமை புள்ளியியல் நிபுணர் பிரனோப் சென் கூறியுள்ளார்.

இன்று, உலகளாவிய அளவில் எல்லா நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் உள்ளன. அமெரிக்கா உட்பட பல வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும் வீழ்ந்துவிட்டன. கீழ்நோக்கிய வளர்ச்சிதான் அதிகரித்து வருகின்றது. அதேவேளையில் சீனாவின் நிகர உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி, ஐ.எம்.எஃப்.-ன் மதிப்பீட்டின்படி 2020-ல் 1.2% இருக்கும். மேலும், சீனாவின் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டுமான அமைப்புகளும் தொழில்நடத்தத் தேவையான எல்லாச் சூழ்நிலைகளும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மனம் குளிரத்தக்க வகையில் உள்ளன. அந்நாட்டின் வினியோக அல்லது மதிப்புச் சங்கிலியின் அமைப்பு முன்னேறியது.

உலகளாவிய வினியோகச் சங்கிலியுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. 2020-ல் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் நிகர உள்நாட்டு உற்பத்தி முறையே -7.2%, -7.0%, -6.5% தான் இருக்கும் என்று ஐ.எம்.எஃப். கணித்துள்ளது. எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீனாவில் இயங்கும் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பான் போன்ற நாடுகளின் கம்பெனிகள் சீனாவை விட்டு வெளியேறுவதற்கான எந்தத் தூண்டுதலோ, தொழில் வர்த்தக ரீதியான ஆதாயத்திற்கான தர்க்கமோ ஏதும் இல்லை. உலக மேலாதிக்கப் போட்டி எனும் அரசியல் சித்தாந்தக் காரணங்களுக்காக டிரம்ப் எவ்வளவு ஆவேசமாக சீன எதிர்ப்புப் பேசி சீனாவிலுள்ள முதலீடுகளை எடுத்துக்கொண்டு அமெரிக்கக் கம்பெனிகள் வெளியேற வேண்டும் என்று கரடியாகக் கத்தினாலும் அவைகள் வெளியேற எவ்விதக் காரணமும் இல்லை. சீனாவிலேயே தங்களை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்வதோடு தங்களது இலாப விதிதங்களை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்யலாம் என்றுதான் அவை சிந்திக்கும்.

இந்த எதார்த்தத்தை இந்தியத் தரகு அதிகாரவர்க்க முதலாளிகளும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.-மோடி கார்ப்பரேட்-காவி பாசிசக் கும்பலும் எதிர்கொண்டுள்ளனர். 2019-ல் இரண்டாவது முறையாக மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே அவர்கள் எதிர்கொண்டுவரும் இந்த உலகப் பொருளாதார-முதலீட்டுச் சூழ்நிலையயை, இன்று கோவிட்-19 கொள்ளை நோய் பன்மடங்கு தீவிரமாக்கி விட்டுள்ளது. இது அவர்களை தாங்கள் ஏற்கனவே பின்பற்றி வந்த நாட்டை மறுகாலனியாக்கும் புதிய தாராளவாதக் கொள்கைகளையும் அமெரிக்க சார்பு – சீன எதிர்ப்பு நிலையையும் இன்னும் தீவிரமாகக் கொண்டுச் செல்ல நிர்பந்தித்துள்ளது. அவர்கள் முன் நிற்கும் ஒரே வழியும் இதுமட்டுமே.

பன்னாட்டு நிதியாதிக்கக் கும்பல்களும் கார்ப்பரேட்டுகளும் வரி, சுற்றுச்சூழல், தொழிலாளர் சட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் போன்று பல துறைகளில், முனைகளில் எண்ணற்ற கட்டுமானச் சீர்த்திருத்தங்களைச் செய்ய உத்தரவிடுகிறார்கள். அவற்றை எவ்வித அடிப்படையும் இன்றி அப்படியே ஏற்று அமுல்படுத்தி பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு மட்டுமே உகந்ததாகக் கருதப்படும் வியட்நாம், தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகள் கொடுக்கும் சலுகைகள், காட்டும் பவ்வியம், அடிவருடித்தனம் ஆகியவற்றைக் காட்டிலும் அதிகமாக வழங்கி அவர்களது மனங்களை எந்த அளவிற்கு குளிர்விக்க, குதூகலம் கொள்ளச் செய்ய முடியுமோ அந்த அளவிற்கும் பரிமாணத்திற்கும் செய்ய, எல்லாவற்றையும் துறக்கத் தயாராகிவிட்டார்கள். அதற்கேற்ப எந்த அளவுக்கு மக்களை ஈவிரக்கமற்ற கொடூர முறைகளில் அடக்கி ஒடுக்கி கசக்கிப் பிழிய, மக்கள் தொகையில் 10-15% பேர் மடிந்து மண்ணாகிப் போனால்தான் இது நடக்கும் என்று நன்றாகத் தெரிந்தும் மக்களின் மென்னியை நெறித்துச் சுரண்ட, கொடிய பாசிசச் சட்டங்களைப் போட்டு – சமூகத்தையும் அரசின் எல்லாத் துறைகளையும் பாசிசமயமாக்கி வருகிறார்கள்.

இதன் வெளிப்பாட்டு அறிவிப்புதான் 20 இலட்சம் கோடி மீட்புத்திட்டம். இதற்கு அவர்கள் வைத்துள்ள பெயர், “ஆத்மநிர்பார் பாரத் அபியான் – சுயசார்பு பாரதத் திட்டம்” ஆனால் உண்மையில் அது ஆத்மகுலாம் பாரத் அபியான்சுய அடிமை பாரதத் திட்டம் என்பதே சரி!

– புதியவன்

கட்டுரை ஆதாரங்கள்:

08-05-2020 தேதியிட்ட பிஸினஸ் ஸ்டாண்டர்ட் இதழில் வெளிவந்த கட்டுரைகள்

  • India to attract 1,000 US firms out of China – Blooberg
  • Offer Stable policy regime to woo companies: Experts – BS reporters

திருச்சி சாலையோர வியாபாரிகளின் வாழ்க்கை அவலம் !

3

திருச்சியில் சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் அதிகமாக நடக்கும் சின்னக்கடைவீதி, கல்யாணி கவரிங் பஸ் ஸ்டாப் ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள கடைகள் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக திறக்கவில்லை. தற்போது அறிவித்துள்ள தளர்வின் காரணமாக சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களிடம் தற்போதைய நிலைமை குறித்து விவாதித்தோம்.

ராணி (வயது:45)

“என் கணவர் இறந்து 20 வருசமாகுது. நான் இளநீர் வியாபாரம் பன்றேன். ரெண்டு மாசமா வியாபாரம் இல்ல. இப்பத்தான் இருவதாயிரத்துக்கு காய் வாங்கி ரெண்டாயிரத்துக்கு வித்தேன். அதயும் காய்க்காரன் வந்து வாங்கிட்டு போயிட்டான். இன்னைக்கு வித்ததே ரெண்டு இளநீதான். பர்சுல நூறூ ரூவாதான் காசு இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரத்துல போலிசுக்காரன் வந்து எடு எடுனு சொல்லுவான். இந்த நூறு ரூவாய வச்சி வாடக கட்டனும், கரண்டு பில் கட்டனும், காய்கறி வாங்கனும் என்ன பன்றது? இதுல வேற இந்த போலிசு வந்து கடையை போடதனு இளநீயயும், கத்தியயும் துக்கிட்டு போகுது.

500 ரூவா பணத்த கட்டித்தான் வாங்கிட்டு வந்தேன். ரொம்பக் கஷ்டமா இருக்கு. எனக்கு ரெண்டு புள்ளைங்க ஒருத்தன் ஆட்டோ ஒட்டுறான். இப்ப வேலைக்கு போகல. அவனுக்கு பொம்பள புள்ளைங்க இருக்கு. எங்க எல்லாத்துக்கும் இந்த நூறு ரூவா பத்துமா? இதுல வேற ஒருபக்கம் பஸ் டிக்கெட், பால் விலைனு ஏத்துறானுங்க. இன்னொரு பக்கம் சாராய கடையை திறந்து சாவடிக்குறானுங்க. கொரானாவால சாகறமோ இல்லையோ சாரயத்தால சாவறது உறுதி.

மோடியும் எடப்பாடியும் என்ன ஆட்டம் போடுறானுங்க நம்ம கிட்ட போக முடியுமா? போலிசு பந்தோபஸ்து. எல்லா வசதியும் எல்லாம் இருக்குது அவனுங்கல என்ன செய்றது, அவனுங்கள நாலு நாளைக்கு இளநீ வியாபாரம் பண்ண விடனும். நாலு இளநீ வெட்டறதுக்குள்ள நாப்பது பிரச்சனை வந்துடுது, நாம் தான் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கிறோம். இவனுங்க நம்ம பிரச்சனைய எதுவும் தீர்க்க மாட்டனுங்க அடுத்த முறை ஓட்டு கேட்டு வரட்டும் வெட்டு… தான்.”

சண்முகம், பழ வியாபாரி (வயது:45)

“ரெண்டு மாசமா கடையே போடவிடல. இப்பத்தான் ரெண்டு நாளா கடை போடுறோம். மொத்த வியாபார கடையில 10,000-த்துக்கு 15,000-த்துக்கு சரக்கு எடுப்போம். அதை வித்து அவங்க கடனை அடைச்சிட்டு அதுல மீதி தான் வருமானம். இப்ப கட ஓடவேயில்ல. அடுத்தவன் காசுல கடன் வாங்கி திங்குற மாதிரிதான் எங்க வாழக்கை. அத்தியாவசியப்பொருள், பழம் விக்கலாம்னு சொல்லுறாங்க, ஆனா போலிசு வந்து கடையை மூடுன்னு சொல்லுது. போலிசு வரப்போ மூடிக்குறோம், அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி வியாபாரம் பாக்குறம். ரொம்ப சிரமமாத்தான் இருக்கு வீட்டு வாடகை ரெண்டு மாசமாக கட்ட முடியல, பால் டீ குடிக்கிறதயே நிறுத்திட்டோம்.

திடீர்னு ஊரடங்குனு சொல்லுறாங்க கடன் கொடுக்குறவன் கூட கடன் தர யோசிக்கிரான். இருந்த காச வைச்சி ஒரு வாரம் ஓட்டுனோம். அப்புறம் அஞ்சு வட்டிக்கு கடனா வாங்கித்தான் பொழப்ப ஒட்டுறோம். வீட்டுக்காரவங்க வாடகை கேக்குறாங்க. வேலைக்கு போயி தறோம்னு சொல்லி சமாளிக்கிறோம்.

கவர்மெண்டு 1000 ரூவா பணம் கொடுத்துது. அதை வாங்க போனப்ப வண்டிக்கு 500 ரூவா ஃபைன் போட்டு புட்டுங்கிகிச்சு. வியாபாரிகளுக்கு 10,000 கடன் உதவினு அறிவிச்சுருக்கான் நாம போயி கேட்டா எந்த பேங்குல தருவான். எவனும் தரமாட்டன். கேட்டா வருமான வரி, பான் கார்டு இருக்கா, என்ன வருமானம் அப்படினு ஆயிரம் கேள்வி கேட்பான். அரசியல்வாதி திட்டத்த அறிவிக்கிறது எல்லாம் கவர்ச்சிக்கு தான் அடுத்த முறை ஒட்டு வாங்கத்தான். நமக்கு ஒன்னும் கிடையாது.”

கெஜலட்சுமி (வயது 32)

“வீட்டு வேலை செய்யுறேன். ரெண்டு மாசமா அப்பார்ட்மெண்டுக்கு வேலைக்கு போகல. கொரானா பயத்துல வர வேணாம்னு சொல்லிட்டாங்க. வார்த்தையால சொல்ல முடியல அந்த அளவுக்கு கஷ்டத்த அனுபவிச்சிட்டோம். இப்படி ஒரு நெருக்கடி இதுவரைக்கும் பார்த்தது இல்லை. 1000 ரூபாய் காசு எம்மாத்திரம். கூலி வேலைக்கு போறவங்க எதை வைச்சி சாப்பாடுவாங்கனு தெரியவேணா. வீட்டு வாடகை, குழுக்கடன் எப்படி கொடுக்க போறேனு நினச்சாவே தூக்கம் வர மாட்டங்குது.”

படிக்க:
இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !
♦ விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை !

உஷா

“கணவர் பெயிண்ட் அடிக்குற வேல… அன்னாடம் வேலைக்கு போனாதான் காசு. இப்ப ரொம்ப கஷ்டம். 40 நாளா குடிக்காம அவரும் நிம்மதியாக இருந்தாரு, நாங்களும் நிம்மதியா இருந்தோம், பிள்ளைங்களோடயும் பாசமாக இருந்தாரு. சாரய கடைய திறக்கிறாங்கனு சொன்னவுடனேயே பிள்ளைங்க அழுதுடுச்சி. மறுபடியும் அவரு யார் கிட்டயோ கடன் வாங்கி குடிச்சிட்டு வந்துட்டாரு. மக்களுக்கு நல்லதே செய்யாதா கவர்மெண்ட் எதுக்கு? இப்படி ஏழைகள போட்டு கஷ்டப்படுத்துது.

ஸ்டாலின் கட்சி காரங்க 5 கிலோ அரிசி கொடுத்தாங்க அதுவும் நல்லா இல்ல. ஏதோ கிடச்சதுனு தின்னோம். குழம்புக்கு காசு இல்லை. துவையல், புளிரசம், தக்காளி கடஞ்சி திங்கிறோம். 1000 ரூபாய் டீ செலவுக்கே சரியா போயிடுச்சி. இவங்கள கேக்க ஆளே இல்லையா, மோடியாலயும் நமக்கு எதுவும் இல்லை. எடப்பாடியாலயும் புண்ணியமில்லை.”

ஊரடங்கால் திறக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தள்ளுவண்டிக் கடைகள்.

ரேவதி (வயது 40)

“கோயில் வாசால்ல பூ கட்டி விக்கிறேன். கோயில் மூடியதால வேலைக்கும் வழியில்லாமல் போய்டுச்சு. இந்நேரம் ஏப்ரல் தொடங்கி எங்களுக்கு நல்லகாலம். திருவிழா, பண்டிகைன்னு நிறைய வேலை கிடச்சிருக்கும். நம்பி கடன் வாங்கலாம் வியாபாரம் பண்ணி அடைச்சிக்கலாம்னு நினச்சோம் ஆனால் கடனாளி ஆயிட்டோம். ஜூன் மாதம் பொறந்தா பள்ளிகூடம் பீஸ் கட்டனும், லாக்டவுன் முடிஞ்சா குழுக்கடன் கட்டனும். வீட்டுல இருந்தா கடன் கட்ட முடியுமா. கவர்மெண்ட் அரிசியை மாடு கூட திங்காது. மோசமான கவர்மெண்டுங்க… போராடுனாலும் ஒன்னும் செய்யமாட்டான். நம்ம கஷ்டத்த நாம தான் பாத்துக்கனும்.”

செல்வி அயனிங் வண்டி

“துணி அயனிங் தரவங்க மாடி வீட்டுல இருக்காங்க. 2 மாசமா துணி கேட்டதுக்கு வீட்டுக்கு வரவேண்டாம் நாங்க கூப்பிடறப்ப வாமான்னு சொல்லிட்டாங்க. துணியை தேய்த்து தான் வீட்டு வாடகை, சாப்பாடு எல்லாம் பாக்கனும் ஏதோ கையில இருந்து கொஞ்சம் காச வச்சி செலவு செய்தாச்சு இனியும் ஊரடங்க நீட்டினால் என்ன செய்ய போறோம் தெரியாது. காசு இல்லை, நகையும் இல்லை. ரேசன் பொருள வச்சிதான் சாப்பிடறோம் கூலி வேலை செய்றவங்கள அரசு கவனிக்கல. எடப்பாடி, மோடி ஏழைகளுக்கு இல்ல. எங்கள பொழைக்க விட்டா தேவல்ல. இன்னும் என்னத்த தான் குறைக்கிறது.” என்று வேதனையுடன் பேசினார்.”

அலமேலு (வயது 38)

“ஓட்டலில் வேலை செய்பவர், பாத்திரம் விளக்குவது, கூட்டுவது, என முழு நாளைக்கும் வேலை மாசம் 6000 ஆயிரம் கொடுப்பாங்க. கொரானா வந்ததால 2 மாசமா வேலை இல்லை. இப்ப ஒட்டல் திறந்தாச்சுனு சொன்னாங்க போன் பண்ணி கேட்டா அப்புறம் சொல்லுறோம்னு முதலாளி சொல்றாரு. ரெண்டு புள்ளைங்கள வைச்சிகிட்டு எப்படி சாப்புடுறது. அவருக்கும் பொழப்பு இல்லை. இன்னும் மிச்ச நாள கடத்த என்ன செய்ய போறோம்னு தெரியல. பால் வாங்றது இல்லை. வெறும் வரக்காபித்தான். ஒரு நாளைக்கு சாப்பாடு இரண்டு நேரம் தான். காய் போட்டு குழம்பு வச்சி ரொம்ப நாளு ஆச்சு. அரசாங்கத்த பத்தி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை.”

இப்படி மக்கள் அன்றாடம் தங்களால் சொல்ல முடியாத துன்ப, துயரங்களை சந்தித்தித்து வருகின்றனர். ஆனால் அரசியல் வாதிகளோ ஆளும் வர்க்கத்தின் நலனை பாதுகாப்பதற்காக பல லட்சம் கோடிகளில் சலுகைகளை வாரி வழங்குவதையே தனது பொருளாதாரக் கொள்கையெனக் கொண்டுள்ளது. சமீபத்தில் அரசு அறிவித்த 20 லட்சம் கோடி பொருளாதார திட்டமும் மக்களுக்கு கானல் நீராகவே உள்ளது. ஆனால் கொழுத்த முதலாளிகளுக்கோ அறுசுவை விருந்தாகியுள்ளது.

நமது வாழ்க்கை பிரச்சனையை தீர்க்க நாம் ஒன்று பட்டு நிற்க வேண்டும். போராட வேண்டும்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.

கன்னியாகுமரி பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்ட உதவி !

நாகர்கோவில் காசி, பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், திருமணம் ஆகாத இளம்பெண்கள், திருமணமான பெண்கள் என சுமார் 100 பெண்களை திட்டமிட்டு ஏமாற்றியதால் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் ஒருவர் புகார் தைரியமாக கொடுத்ததன் அடிப்படையில் இன்று காசியும் அவனது கூட்டாளியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காசியோடு இந்த அயோக்கியத்தனத்தில் இன்னும் பலருக்கு தொடர்பு உள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெற்று இந்த அயோக்கியத்தனத்தில் காசியுடன் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

காசியுடன் இந்த அயோக்கியத்தனத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமெனில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக புகார் அளிக்க வேண்டும், அவர்களுக்கு அவர்களுடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட அயோக்கியர்கள் அனைவரும் தண்டிக்கப்படவும், இதுபோன்ற அயோக்கியத்தனங்கள் மேலும் நடைபெறாமல் இருக்கவும் காசி உள்ளிட்ட அயோக்கியர்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் வழக்கு கட்டணம் வாங்காமல் அனைத்து விதத்திலும் சட்ட உதவி செய்ய தயாராக இருக்கின்றோம்.

படிக்க:
விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை !
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : மறைக்கப்படும் உண்மைகள் ! புதிய கலாச்சாரம் ஏப்ரல் மின்னிதழ்

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுடைய பெயர் முகவரி உள்ளிட்ட அடையாளங்கள் வெளியே தெரிய வேண்டாம் என்று கருதினால் அது குறித்த ரகசியம் காக்கப்படும்.

மேலும் இந்த வழக்கு விசாரணை முறையாக நடை பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் ஆரம்பம் முதல் இறுதிவரை இந்த வழக்கு விசாரணை நேர்மையான இயக்கங்கள், நேர்மையான வழக்கறிஞர்கள், நேர்மையான பத்திரிக்கையாளர்கள், உள்ளிட்ட பலராலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றோம்.

இவன்
க. சிவராஜ பூபதி, வழக்குரைஞர், நாகர்கோவில்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்.
தொடர்பு எண் – 9486643116.

விகடன் பணி நீக்கம் : என் பெயர் முஹம்மது இல்யாஸ், எனக்கு வேறு பெயர் இல்லை !

விகடன் குழுமத்தில் நடைபெறும் ஆட்குறைப்பின் மூலம், சமூகம், அரசியல் சார்ந்த படைப்புகள் எழுதி வரும் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். நிர்வாக நலனிற்கேற்ற அரசியலைப் பின்பற்றாத காரணத்தால், சமூகம், அரசியல் ஆகிய துறைகளின் எழுதி வந்த பத்திரிகையாளர்கள், கடந்த 3 ஆண்டுகளில் வெளியேறியுள்ளனர் / வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நான் கடந்த மார்ச் மாதம் விகடன் நிறுவனத்தின் பணிகளில் இருந்து விலகினேன். அதற்கான காரணத்தை, கடிதமாக விகடன் குழுமத்தின் ஆசிரியர் ச.அறிவழகனுக்கும், அதன் நகலை நிர்வாக இயக்குநர் பா.ஸ்ரீனிவாசனுக்கும் அனுப்பியிருந்தேன். தற்போது அதனைப் பொதுவெளியில் வெளியிடுகிறேன்.

***

ணக்கம் சார்,

கடந்த மார்ச் 16 அன்று, தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட எனது பணி விலகல் தொடர்பான கடிதத்திற்குத் தாங்கள் அளித்த பதில் கடிதத்தின்படி, கடந்த ஏப்ரல் 15 அன்று விகடன் குழுமத்தின் பணிகளில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன். ஊடகத்துறையில் எனது முதல் அனுபவமாக அமைந்தது விகடன். கடந்த ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு அனுபவங்களை இந்தப் பணியில் கற்றுக் கொண்டேன். விகடன் குழுமத்தின் ஊழியராக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பணிபுரிந்திருந்த போதும், இந்த நிறுவனத்திற்கும் எனக்குமான உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு, சுட்டி விகடன் இதழின் ‘பேனா பிடிக்கலாம்; பின்னி எடுக்கலாம்’ திட்டத்தின் கீழ் சுட்டி ஸ்டாராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு, நான் முயன்றும் என்னால் இந்தத் திட்டத்தில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது இருந்தே ஊடகத்துறை மீதான ஈர்ப்பினால், எனது இளங்கலை, முதுகலை ஆகியப் பட்டப்படிப்புகளில் இதழியல் துறையைத் தேர்ந்தெடுத்தேன். 2018ஆம் ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் திட்டத்திலும், அதன்பிறகு விகடன் ஊழியராகவும் பணிபுரிந்தேன். ஊடகத்துறை மீதும், இதழியல் மீதும் எனது சிறுவயதிலேயே ஈர்ப்பை உருவாக்கிய விகடன் குழுமத்தில் பணியாற்றியது என் வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாக எனக்குத் தெரிந்தது. தற்போது மிகுந்த மன வருத்தத்துடன் நான் மிகவும் நேசித்த ஊடகத்துறையை விட்டும், அதுகுறித்த விதையை என்னுள் விதைத்த நிறுவனத்தை விட்டும் வெளியேறுகிறேன்.

எனது பணிவிலகல் தொடர்பாகத் தங்களிடம் பேசிய போது, Freelance செய்யுமாறு அறிவுறுத்தினீர்கள். அதை நானும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டேன். அதன்பிறகு, நீங்கள் சொன்னவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘ர.முகமது இல்யாஸ்’ என்ற எனது பெயரை, கட்டுரைகளில் இடம்பெறச் செய்தால் ‘வாசகர்கள் முன்முடிவோடு கட்டுரையை அணுகக் கூடும்; பி.ஜே.பிக்கு எதிரான கட்டுரை என்று வாசகர்கள் உங்கள் பெயரை வைத்து முடிவு செய்துவிடுவார்கள்’ என்று கூறினீர்கள். மேலும், எனது பெயருடன், மற்றொரு நிருபரின் பெயரையும் சுட்டிக்காட்டி, அவரது கட்டுரைகளுக்கும் இந்தப் பிரச்னை பொருந்தும் என்றும் நீங்கள் சொன்னது வருத்தத்தை ஏற்படுத்தியது. நான் ஏப்ரல் 15 அன்று பணியில் இருந்து விலகும் போது, தங்களிடம் இதுகுறித்து பேசிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். எனினும், கொரோனா லாக்டௌன் பிரச்னையால் அது நடைபெறவில்லை. அதனால் எனது கருத்துகளை எழுத்து வடிவில் பதிவு செய்கிறேன்.

உங்கள் வாதப்படி, முஸ்லிம் பெயரில் நான் எழுதும் கட்டுரைகளில் வாசகர்கள் ‘பி.ஜே.பி எதிர்ப்புக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்தால், இந்துப் பெயரில் பிறர் எழுதும் கட்டுரைகளை வாசகர்கள் ‘பி.ஜே.பி ஆதரவுக் கட்டுரை’ என்று முன்முடிவு செய்வார்களா என்று தெரியவில்லை. பி.ஜே.பியின் 40 ஆண்டு குறித்து கடந்த ஏப்ரல் 6 அன்று, நான் எழுதிய கட்டுரையில் எனது பெயரைச் சேர்ப்பதும், நீக்குவதுமாக இருந்தார்கள். எனது கட்டுரைகளில் இந்தியா மதப் பெரும்பான்மைவாதத்தை நோக்கி நகர்வதைக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதில் இருந்து எனது பெயரை நீக்கி, பெரும்பான்மைவாதத்திற்கு ஆதரவாக செயல்படவே விரும்புகிறீர்கள். தங்களைப் போன்ற நீண்ட கால அனுபவம் ஏதும் எனக்கு இல்லையென்ற போதும், இதுதான் நீங்கள் அடிக்கடி வலியுறுத்தும் நடுநிலைமையா என்று கேட்கத் தோன்றுகிறது.

நடுநிலைமை குறித்தும் எனது கட்டுரைகளில் தங்களுக்கு விமர்சனம் இருப்பதாக எனக்கு தோன்றியது. சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனக் குழு தொடர்பாக ஜூ.விக்கு எழுதிய கட்டுரை ஒன்றில் இந்தப் பிரச்னை வெளிப்பட்டது. “The job of the newspaper is to comfort the afflicted and afflict the comfortable” என்ற இதழியல் தொடர்பான பிரபல வாசகத்தை, முதுகலைப் பட்டப்படிப்பின் போது, எனது ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தனர். என்னால் இயன்ற வரை, அதன்படி செயல்படுகிறேன். சர்வ வல்லமை பொருந்திய, நிறுவனமயமாக்கப்பட்ட அரசுக் கட்டமைப்பையும், உதிரிகளாக எந்த நிறுவனப் பிடிப்பும் இல்லாமல், பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கும் எளிய மக்களையும் என்னால் ஒரே தராசு கொண்டு அணுக முடியவில்லை. பாதிக்கப்பட்டவனிடமும், பாதிப்பை ஏற்படுத்தியவனிடமும் கருத்து கேட்டு பதிவுசெய்வது மட்டுமே இதழியல் என்று நான் கற்றுக்கொள்ளவில்லை.

படிக்க:
வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்
♦ பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

நான் மேலே குறிப்பிட்டவற்றுள், தங்களுக்கு விமர்சனங்கள் இருக்கலாம்; இவை மிகச் சாதாரண ஒன்றாகத் தோன்றலாம். எனினும், இது என்னுடைய ஆதங்கத்தின் வெளிப்பாடு. ஒரு மனிதனாக, சக ஊழியனாகத் தங்களுடன் நான் பணியாற்றிய போதும், எனது மதிப்பு என்பது முதலில் எனது கருத்தாகவும், பிறகு எனது பெயராகவும், எனது பெயரில் இருக்கும் சிறுபான்மை மத அடையாளமாகவும் சுருக்கப்பட்ட பிறகு என்னால் இங்கு தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. பிற ஊடகங்களிலும், எனக்கு இதே பிரச்னைகள் எழும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்தத் துறையை விட்டு தற்போது தற்காலிகமாக விலகுகிறேன். நான் கற்றுக்கொண்ட இதழியல் பண்புகளை எனது தலைமுறை இளைஞர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் பொருட்டு, தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்துள்ளேன்.

தங்களுக்குக் கீழ் பணியாற்றியதில் பலவற்றைக் கற்றுக் கொண்டேன். பணியில் சேர்ந்த முதல் நாளில், நான் வேலை செய்த முதல் கட்டுரை infograph ஒன்றை அச்சிடச் செய்து, அதில் நீங்கள் செய்து தந்த பிழைதிருத்தங்களை இன்றுவரை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பதையும் இந்தக் கடிதத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

இதழியல் துறை பெரும்பான்மைவாதத்திற்குப் பலியாகியுள்ளது.

எனது பணிவிலகல் அதற்கு ஓர் சான்று.
மிகுந்த மன வருத்ததுடன்,

ர. முகமது இல்யாஸ்.
(இது மட்டுமே எனது பெயர்; எனக்கு வேறு புனைப்பெயர்கள் கிடையாது)
20/04/2020

முகநூலில்:Ilyas Muhammed Raffiudeen

disclaimer

வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்

ந்தியாவின் ஐ.டி. துறையானது சுமார் 191 பில்லியன் டாலர் சந்தை மதிப்புடைய சேவைகளை உலகெங்கிலும் வழங்கி வருகிறது. ஏறத்தாழ 5 மில்லியன் மனித வளத்தைக் கொண்டது இத்துறை.

மீப்பெரும் மின்தரவு மற்றும் பகுப்பாய்வு முறைமைகள் (Big Data Analytics) முதல் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) வரை நான்காம் தொழில்நுட்பப் புரட்சிக்கான அடிப்படையைக் கொண்டிருப்பது இத்துறைக்கான தேவை வளர்வதற்கான அடிப்படையாக உள்ளது.

இத்துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஆகப் பெரும்பான்மை நடுத்தர வர்க்கம் கனவுகாணும் வாழ்க்கைத் தேவைகளை, வேலைக்குச் சேர்ந்த குறுகிய காலகட்டத்திலேயே பூர்த்தி செய்துகொள்வதற்கான வாய்ப்புகள் இத்துறையில் இருக்கின்றன.

நடுத்தர வர்க்கத்தினரின் கனவுகளான சொந்தக் கார் வாங்குவது, வீடு வாங்குவது, வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவது முதலியன இத்துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு சில ஆண்டுகளிலேயே கிடைக்கப்பெறும் சாத்தியக்கூறு உள்ளது. இதற்கேற்ற வகையில், வங்கிகளும் தமது கிரெடிட் கார்டு சேவையை இத்துறையினரிடையே நன்கு பிரபலப்படுத்தி, அவர்களை இந்நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி இழுத்து இம்மோகத்தின் பின் ஓடத் தூண்டுகின்றன.

இவற்றுக்காகவே, தங்களை இயந்திரம் போல பாவித்து காலநேரம் பாராது உழைத்து வருகிறார்கள் ஐ.டி. ஊழியர்கள்.

மேலும், இத்துறையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளிடம் பிற துறையில் கணிசமாகக் காணவியலாத வேலைமுறை உண்டு. அதாவது, தான் வேலை செய்யும் அலுவலகத்திற்குச் செல்லாமல், மடிக்கணினி மூலம் அன்றைய தினத்திற்கான வேலையை வீட்டில் இருந்த படியே செய்ய முடியும்.

இந்த வேலை முறையானது, உற்பத்தித்துறை, கட்டிட வேலை போன்றவற்றிலோ அரசு வேலையில் ஈடுபடுவோருக்கோ கூட இதுநாள் வரை கிட்டியது இல்லை; கிட்டப்பெறுவதற்கான அடிப்படையும் இல்லை.

8 மணிநேரம் வேலை செய்யும் ஓர் ஆலைத்தொழிலாளி, தனது வேலைக்கு உரிய நேரத்தில் கிளம்பித் தயாராக வேண்டும். கால தாமதம் ஏற்பட்டு அவர் உரியநேரத்திற்கு வராமல் போனால், அவருக்கு அன்றைய தினத்திற்கான கூலி கிடைக்காது (ஆகப் பெரும்பான்மை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு). ஆனால், தனது சோர்வு காரணமாகவோ அல்லது தாமதமாக கிளம்ப நேரிட்டாலோ, ஓர் ஐ.டி. தொழிலாளி ஒரு முன்னறிவிப்பை மட்டும் தனது மேலாளரிடம் தெரிவித்து விட்டு, வீட்டில் இருந்தபடியே தனது வேலைகளைத் தொடர முடியும்.

அநேக நேரங்களில், தமது வீட்டுவேலைகளை கவனித்துக் கொள்ள வீட்டில் இருந்து வேலைசெய்யும் (WFH) இவ்வேலைமுறை  ஐ.டி. தொழிலாளர்களுக்கு ஒரு வரமாகவே இருந்து வருகிறது.

***

டந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்திலும் கூட, தமது பெரும்பான்மை தொழிலாளர்களை இந்த வேலைமுறை மூலம் வேலைசெய்யும் வலைபின்னலுக்கு ஐ.டி. நிறுவனங்களால் கொண்டுவர முடிந்தது.

ஊரடங்கின் துவக்கத்தில், ஐ.டி. துறையைச் சேர்ந்த பல்வேறு வர்க்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களும் தமது குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்கான நேரம் கிடைத்தது; தனது பிள்ளைகளின் படிப்பு மீது அக்கறை காட்ட இயன்றது என்றவாறெல்லாம் இவ்வேலைமுறையை விதந்தோதினர். ஆனால், ஊரடங்கு நீடிக்க நீடிக்க, வெளியே செல்ல இயலாமல் நான்கு சுவருக்குள் அடைபட்டிருப்பதும், பெருகிவரும் வேலை அழுத்தமும் சேர்ந்து ஒரு மன அழுத்தத்தை அவர்கள் மீது உருவாக்கின.

மேலும், முன்னர் சராசரியாக 7-8 மணிநேரம் வேலைசெய்த ஐ.டி தொழிலாளிகள் இப்போது ஊரடங்கு காலகட்டத்தில் 12-13 மணிநேரம் வேலைசெய்யப் பணிக்கப்பட்டனர். அலுவலகம் சென்ற நாட்களில் கூட அவர்களுக்கு தேநீர் இடைவேளை, உணவு இடைவேளை ஆகியவற்றிக்கு முறையே அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என்று இடைவேளை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த ஊரடங்கு காலகட்டத்திலோ, தலைமை நிர்வாகம் தனது கீழ் வேலைசெய்யும் அலுவலர்களுக்கு ஏற்படுத்திய வேலை அழுத்தத்தின் விளைவாக, தொழிலாளர்கள் சரியான நேரத்தில் உணவருந்தாமல்அதிக நேரம் கணினியில் – ஆன்லைனில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒரு சிறிய இடைவேளை எடுத்தால் கூட, உடனே ஒரு மின்னஞ்சல் அனுப்புவது, அதற்குக் குறிப்பிட்ட நிமிடத்தில் விடை தராவிடில் போன் செய்வது என இடைவெளியற்ற சுரண்டல் வடிவாக இந்த WFH வேலை முறை பரிணமித்துள்ளது.

ஒரு தொழிலாளி இந்த WFH வேலைமுறையில் முறையாக வேலை செய்கின்றாரா என்பதை பரிசோதித்தறிய பல்வேறு புதிய தொழில்நுட்பச் செயலிகள் வலம்வரத் துவங்கியுள்ளன. சாதாரணமாக, ஒரு புராஜெக்ட் முடிப்பதற்கு 2 வார காலம் ஆகுமென்றால், இந்த ஊரடங்கு காலகட்டத்தில், அந்தக் குறிப்பிட்ட வேலையை 10 நாட்களுக்குள் முடித்துக் கொடுக்க தனது அணிகளை நிர்பந்திக்குமாறு ஐ.டி நிறுவனங்களின் தலைமை நிர்வாகம் தமது மேலாளர்களுக்கு கட்டளையிட்டது. இதன் விளைவாக, குறிப்பிட்ட வேலைநேரம் என்ற வரைமுறை இல்லாமல் இராப்பகலாக, மேலாளர்களுக்குத் தனது வேலை குறித்து தெரிவிக்கும் சூழ்நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். (புரொஜக்ட்டின் காலக்கெடுவைப் பொருத்து இவ்வழுத்தம் மாறுபடுகிறது).

இத்தகைய, ஒய்வு – உறக்கமில்லாத கடும் வேலைப்பளுவுக்கு இடையில் வேலை பார்க்கும் ஐ.டி. தொழிலாளிகள், தமது ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க இயலாது தவித்தனர். குறிப்பாக, சென்னையில் ஓர் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த ஐ.டி தொழிலாளின் ஒருவர், ஏற்கனவே தனக்கு உடல் நிலை சரியில்லாத போதிலும் 12-13 மணி நேரம் பணிபுரிந்தார். அந்நிலையில் நிர்வாகத்தின் தொடர்ச்சியான, கடும் வேலைப்பளுவைத் தாங்க இயலாமல் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, வேறேதும் தொழில்செய்து பிழைத்துக் கொள்வதாகக் கூறி தனது சொந்த ஊருக்கே சென்று விட்டார்.

இது போன்றதொரு பரந்துபட்ட வேலை பணிச்சுமை சூழல்தான் தற்போது ஐ.டி துறை எங்கும் நிலவி வருவதைக் காண முடிகின்றது. இச்சூழலுக்கு எந்த வகையிலும், குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட பதிவு செய்யாமல் பல ஐ.டி. தொழிலாளிகளை வேலைசெய்யத் தூண்டுவது எது?

***

தற்கான காரணம், நாம் ஏற்கனவே, குறிப்பிட்டுள்ள வெவ்வேறு வர்க்க அடுக்குகள் கொண்ட ஐ.டி தொழிலாளிகளிடம், தமது வாழ்வாதாரத்தைப் பேணிக்காப்பது, வங்கிக் கடன்களை அடைப்பது, கிரெடிட் கார்டு கணக்குகளை கட்டிமுடிப்பது என்பன போன்ற பல்வேறு காரணங்களால், எப்பாடுபட்டாவது வேலையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருப்பது தான்.

ஐ.டி. தொழிலாளிகளின் ஓய்வு, உறக்க நேரம் உட்பட அவனது மொத்த மூளை உழைப்புச் சக்தியையும் இப்படி சக்கையாகப் பிழிந்து சுரண்டி எடுப்பதன் வாயிலாக, முதலாளித்துவ வர்க்கம் தனது தொழிலாளிகளின் உற்பத்தித்திறனை அதிகரித்துள்ளதாய் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாகவே, இன்போசிஸ், ஹெச்.சி.எல். போன்ற நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலகட்டத்தில், தமது நிறுவனத் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் முன்னைக் காட்டிலும் கணிசமான சதவீதம் அதிகரித்துள்ளதை கண்டு புளகாங்கிதமடைந்துள்ளன.

படிக்க:
இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !
♦ தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி !

மேலும், இந்த கொரோனா நோய்த்தொற்றுச் சூழல் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, ஏற்கனவே உலகெங்கிலும் மந்தமாகியிருந்த பொருளாதாரம், மேலும் தீவிரமாக வீழ்ச்சியடையத் துவங்கியது. இந்தச் சூழலைக் காரணம்காட்டி உலகெங்கிலும் உள்ள முதலாளி வர்க்கம் தமது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வேலைநீக்கம் செய்வது அதிகரித்துள்ளது. மேலும், இந்தப் பொருளாதாரம் மீண்டு எழுவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படாத நிலையில், வேலையிழந்தோருக்கு மீண்டும் வேலை கிடைப்பதற்கான எவ்வித அடிப்படையும் தென்படவில்லை.

இந்த உலகளாவிய புறச்சூழலை சாதகமாக்கி, இந்திய ஐ.டி. முதலாளி வர்க்கம், வேலை செய்ய மறுத்தாலோ, தயக்கம் காட்டினாலோ, எவ்வித முன்னறிவிப்புமின்றி வேலைநீக்கம் செய்துவிடுவதாக மிரட்டிப் பணிய வைத்து ஐ.டி. ஊழியர்களைச் சுரண்டி வருகின்றனர்.

8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் உறக்கம், 8 மணி நேரம் ஓய்வு என்னும் உரிமையென்பது தொழிலாளி வர்க்கம் தனது வியர்வையும் இரத்தமும் சிந்திய போராட்டங்களின் விளைபயனாக உதித்தது.

ஆனால், ஐ.டி. தொழிலாளி வர்க்கம் ஆட்படும் இந்த நவீன சுரண்டல் முறையானது, தொழிலாளியின் தார்மீக ஒய்வு, உறக்க நேரத்தையும் உறிஞ்சிக் கொழுத்து, குறைந்த கூலி கொடுத்து, தனது மூலதனத்தைப் பெருக்க முனையும் முதலாளி வர்க்கத்தின் லாபவெறியை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. அத்துடன், தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை இழந்து ஒரு கொத்தடிமை போன்ற வேலைமுறைக்கு செல்லும் அபாயத்தை துலக்கமாக புலனாக்குகிறது.

“சொல்வதைச் செய்; இல்லையேல் வெளியேறு (Do as instructed else  get out)” என்று முதலாளித்துவம் தொழிலாளி வர்க்கத்தின்மீது தற்போது தொடுத்துவரும் தாக்குதலை முறியடிக்க, ஐடி துறை ஊழியர்கள் சங்கமாக அணிதிரள்வது முன்னெப்போதைக் காட்டிலும் அவசியமாக உள்ளது.

– புதியவன்

இந்திய கொரோனா நிலவரம் : வாயில் வடைசுடும் மோடி அரசு !

1

வாயில் வடை சுடுவது மோடிக்கு கைவந்த கலை என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்திய அரசின் சார்பில் வெளியிடப்படும் கோவிட்-19 தாக்குதல் குறித்த அறிக்கைகளும்கூட வாயிலேயே வடை சுடுகின்றன. கடந்த 20-05-2020 அன்று மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் சார்பில் ஊடகங்களுக்கு கொடுக்கப்பட்ட செய்தியறிக்கை இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஊதிப் பெருக்கிக் காட்டப்பட்டுள்ளன.

சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால்.

மோடி அரசின் சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இந்தியாவின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை நிகழ்த்தினார். அதில் பேசுகையில் இந்தியாவில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,149-ஆக இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இதுவரை இந்தியாவில் இந்நோய்க்கு 3,303 பேர் பலியாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு முழுவதும், இந்தியாவில் கோவிட்-19 சோதனை விகிதம் குறித்த புள்ளி விவரங்களை எண்ணிக்கையில் பேசாமல், அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிற நாடுகளுடன் ஒப்பிட்டு, இந்தியா மிகவும் சிறப்பாக செயல்படுவதாகக் காட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்தியாவில் மொத்த மக்கள் தொகையை ஒப்பிடுகையில், 1 லட்சம் பேரில் 7.9 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதாகவும், உலக சராசரியைப் பொறுத்த வரையில் கோவிட்-19 பாதிப்பு, 1 லட்சம் பேருக்கு 62 பேர் என்ற விகிதத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தியாவை விட அதிக அளவிலான பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட நாடுகளின் மக்கள் தொகையில் 1 லட்சம் பேரில் சராசரியாக 100 முதல் 496 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிகம் பாதிக்கப்பட்ட 15 நாடுகளின் மக்கள் தொகையையும் இந்தியாவின் மக்கள் தொகையையும் ஒப்பிட்டுக் கூறிய லாவ் அகர்வால், இந்தியாவை விட அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ள 15 நாடுகளின் மொத்த மக்கள் தொகையும் சேர்த்து 143 கோடிதான் என்றும் இந்தியாவில் மட்டும் 137 கோடி பேர் இருப்பதாக தெரிவித்தார். இந்த மதிப்பீட்டின் படி பார்க்கையில் இந்த 15 நாடுகள் பட்டியலில் சீனா இடம் பெறவில்லை என்று தெரிகிறது.

படிக்க:
தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி !
♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !

இந்த நாடுகளில் மொத்தமாக 36 லட்சம் பாதிப்புகளும் 2.7 லட்சம் மரணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கையில், இந்தியாவில் இதுவரை 1 லட்சம் பேர்தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 3300 பேர் மட்டுமே மரணித்திருப்பதாகவும் ஒப்பிட்டார். அதாவது இந்த 15 நாடுகளில் இந்தியாவை விட 34 மடங்கு அதிகமான பாதிப்புகளும், 87 மடங்கு அதிகமான மரணங்களும் நிகழ்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறார் லாவ் அகர்வால்.

இந்தியாவில் தற்போது பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இருக்கும் சுமார் 61,000 பேரில் 2.94% பேர்களுக்கு மட்டுமே ஆக்சிஜனேற்றம் தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில், 3% பேர் மட்டுமே இருக்கின்றனர். இதில் 0.45% பேருக்கு மட்டுமே வெண்டிலேட்டர் அவசியம் இருப்பதாகவும் லாவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் 6.39% பேருக்கு மட்டுமே மருத்துவமனைத் தேவை இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே போல உலக அளவில் கோவிட்-19 மரண விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 4.2 பேர் என்ற அளவில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அது ஒரு லட்சம் பேருக்கு 0.2 பேர் என்ற அளவில் இருப்பதாகக் கூறினார். இந்தியாவை விட அதிக பாதிப்புகளைக் கொண்ட பிற 9 நாடுகளில் மரண எண்ணிக்கை லட்சத்திற்கு 10-க்கும் அதிகமாக இருப்பதாகக் கூறியிருக்கிறார் லாவ் அகர்வால்.

பாதிப்புகள் இந்தியாவில் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பது, நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் இதனை சோதனை விகிதத்தின் அடிப்படையில் ஒப்பிட்டால் மட்டுமே உண்மையான நிலைமை தெரியவரும்.

மொத்தம் 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, கடந்த செவ்வாய்க்கிழமை (19.05.2020) வரை சுமார் 1.26 கோடி பேருக்கு சோதனையை மேற்கொண்டுள்ளது. அதாவது தனது மொத்த மக்கள் தொகையில், 3.8% பேருக்கு கோவிட்-19 பரிசோதனை நடத்தியுள்ளது அமெரிக்கா. இந்திய மக்கள் தொகையான 135 கோடி பேரில் இதுவரை 25 லட்சம் பரிசோதனைகளை மட்டுமே இந்தியா மேற்கொண்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில், 0.19% மட்டுமே ஆகும்.
இங்கு பரிசோதனை விகிதத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வது முக்கியமானது. ஒரு நாட்டில் குறைவான அளவிலேயே கோவிட்-19 பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனில், ஒன்று அந்நாடு வைரசைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். அல்லது போதுமான அளவில் சோதனைகள் மேற்கொள்ளப்படாமல், இருந்திருக்க வேண்டும்.

இந்தியாவின் உறுதிசெய்யபட்ட பாதிப்புகள் குறைவாக இருப்பதன் காரணம், குறைவான பரிசோதனைகள் தான். இதனை உலகளாவிய அளவில் கோவிட்-19 புள்ளியியல் விவரங்களைக் கணக்கெடுக்கும் “வேர்ல்டோமீட்டர்” என்ற இணையதளம் வெளியிட்டுள்ள புள்ளி விவரக் கணக்கு உறுதி செய்கிறது. அந்த தளம் கொடுத்துள்ள தரவுகளின் படி, இந்திய மக்கள் தொகையில், 10 லட்சம் பேரில் 1800 பேர் என்ற விகிதத்தில்தான் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அமெரிக்காவில் 10 லட்சம் பேரில் 38000 பேர் என்ற விகிதத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட 25 லட்சம் பரிசோதனைகளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது 4% பாதிப்பு. இந்தியாவில் பரிசோதனை விகிதம் குறைவாக இருக்கும் வரையில் இங்கு கோவிட்-19 பாதிப்புகள் குறைவாகவே வெளியே தெரியவரும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமான பரிசோதனை மேற்கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு முழுமையான பாதிப்பு நிலவரம் வெளியே தெரியவரும்.

இந்தியாவில் நடத்தப்படும் குறைவான பரிசோதனைகளிலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறதே ஒழிய குறைந்தபாடில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசோ கொரோனாவோடு இருக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்று மக்களை அறிவுறுத்தியிருக்கிறது. மருத்துவ வசதிகளையும், பரிசோதனைகளையும் அதிகரிக்கக் கோரி போராடப் போகிறோமா அல்லது மரணத்தை எதிர்நோக்கி காத்திருக்கப் போகிறோமா ?


நந்தன்
நன்றி : த வயர். 

பணக்காரர்கள் மீது வரி போடலாம் என்றால் பதறும் அரசு !

லக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்திய அரசோ ஊரடங்கு மூலம் ஆகப் பெரும்பான்மையான மக்களை வீடுகளில் அடைத்து வைத்திருப்பதையே, நோய்த் தொற்று பரவலின் தாக்கத்தை குறைக்கும் முதன்மை நடவடிக்கையாக கடைபிடித்து வருகிறது. மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கப்படவில்லை என்பதோடு இத்தகைய சூழல் காரணமாக, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார நடவடிக்கையும் பெரிய அளவில் முடங்கியுள்ளது.

குறிப்பாக, நடப்பு நிதியாண்டின் (FY 2019-2020) இறுதிக் காலகட்டத்தில் இந்த நோய்த்தொற்று பரவியதால், அரசின் வருவாய்க்கான மூலங்கள் முற்றிலும் சுருங்கின. பல்வேறு நிதி நடவடிக்கைகள், குறிப்பாக, நிதியாண்டுக்கான வரி செலுத்துவது / வாங்குவது தொடர்பான நடவடிக்கைகள் பெரிதும் முடங்கிப் போயுள்ளன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 26-ஆம் நாள் டிவிட்டர் வலைதளத்தில் இந்திய வருவாய் துறையின் (Indian Revenue Service – IRS) அதிகாரபூர்வ பக்கத்தில், 50 இந்திய வருவாய்த் துறை அதிகாரிகளால் சேர்ந்து உருவாக்கப்பட்ட ஓர் அறிக்கை வெளியானது. நிதி திரட்டும் ஆதார வழிகள் மற்றும் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கை (F.O.R.C.E) என்ற பெயரிலான இந்த அறிக்கையானது, பல்வேறு துறைகளில் வரி வருவாயை அதிகரிப்பதற்கான பரிந்துரைகள் அடங்கிய ஓர் ஆய்வறிக்கை ஆகும்.

அந்த ஆய்வறிக்கை கூறும் பரிந்துரைகள் யாவை? மத்திய நிதியமைச்சகம் மற்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes) ஆகியன மறுநாளே அதற்கெதிராக நடவடிக்கைகள் எடுப்பதற்கான காரணம் என்ன?

F.O.R.C.E. – அறிக்கை வலியுறுத்தும் சில முக்கிய பரிந்துரைகள்:

1) பெரும் பணக்காரர்களுக்கான வரி விதிப்பு சதவீதத்தை உயர்த்துதல்:

43 பக்கங்களைக் கொண்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய அவ்வறிக்கை, கொரோனா நோய்த் தொற்றின்போது பல்வேறு நாடுகள் தங்களது பொருளாதாரத்தை மீட்டெடுக்க, புனரமைக்க, நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், இந்தியாவில் அரசின் வருவாயை அதிகரிப்பதற்கான குறுகிய, இடைக்கால, நீண்டகால இடைவேளைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளை தமது பரிந்துரைகளாக அவ்வறிக்கை கொண்டிருந்தது.

அவற்றில் பிரதானமாக, ஒரு பரிந்துரையானது பெரும் பணக்காரர்களைப் பற்றியது. அவற்றில்,

  • ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு தற்போது இருக்கும் 30 சதவீத வரியை 40 சதவீதம் வரை உயர்த்தலாம். அல்லது,
  • ஐந்து கோடி ரூபாய் மற்றும் அதற்கும் மேல் நிகர சொத்து மதிப்பு வைத்திருப்பவர்களுக்கு செல்வ வரி (Wealth Tax) மறு அறிமுகம் செய்வதன் மூலம் வரி விதிக்கலாம்.

– என இரு முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த வரி விதிப்பின் மூலம் இந்திய அரசிற்கு ரூ. 50,000 கோடி வரி வருவாய் வருவதை வைத்து, பொருளாதாரத்தில் தமக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த, அதிக செலவு தரும் 5 முதல் 10 திட்டங்களை அரசு கண்டறிய வேண்டும்; அந்தத் திட்டங்களுக்கான மொத்த செலவு மதிப்பையும் அரசு ஒரு பொது இணையதளம் உருவாக்கி வெளியிட வேண்டும்; அந்தத் திட்டங்களுக்கு ஆகும் மொத்த செலவையும், இந்த மேற்கூறிய வரி விதிப்பின் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, மொத்தமாக இந்த திட்டங்களுக்கு மட்டுமே தனியாகச் செலவிட வேண்டும்; மேலும், இந்தத் திட்டங்களுக்கு ஆகும் செலவினங்களையும் இந்த இணையதளத்தில் அரசு  வெளியிட வேண்டும் – எனப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய இந்த முக்கிய பரிந்துரையானது, பெரும் பணக்காரர்களுக்கு வரி விலக்கு செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ள நிதி அமைச்சகத்திற்குக் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தற்போது ஆளும் பா.ஜ.க., இதற்கு முன்னர் ஆட்சி செய்த காலத்தில்தான் இந்தச் செல்வ வரியானது ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாகவே, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், இந்தப் பரிந்துரை அறிக்கையைத் தயாரித்த 50 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளின் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

படிக்க:
♦ 176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் !
♦ ரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா ?

2) பரம்பரை சொத்து (Inheritance) வரியை மறுஅறிமுகம் செய்தல்:

அறிக்கையின் மற்றுமொரு முக்கிய பரிந்துரையானது, பரம்பரை சொத்து வரியை மறுஅறிமுகம் செய்வது பற்றியது. பரம்பரை சொத்து வரியானது, மேலை நாடுகளில் சுமார் 55 சதவீதம் வரை வரி விதிப்பு செய்யப்படுகின்றது. இந்தியாவிலும் கூட 1985 வரை நடைமுறையில் இருந்த பரம்பரை சொத்து வரி விதிப்பானது, நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளது என்று கூறி, பின்னர் ரத்து செய்யப்பட்டது.

இந்த வரி விதிப்பை மறுஅறிமுகம் செய்யும்போது, செல்வம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் குவிவது பெருமளவில் குறையும்; மேலும், இத்தகைய முடங்கியிருந்த செல்வம் வரி விதிப்பின் மூலம் பரவலான பயன்பாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புள்ளது; இதுதவிர, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் முன்னர் இருந்த பல்வேறு நடைமுறை சிக்கல்களின்றி, இவ்வரி விதிப்பை அமல்படுத்த முடியும் – என்பதாக ஒரு பரிந்துரை இடம் பெற்றுள்ளது.

மேற்கூறிய பரிந்துரை எந்த வர்க்கத்தின் நலனைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை அறிந்த மத்திய அரசும், மத்திய நேரடி வரிகள் வாரியமும் (Central Board for Direct Taxes) இந்திய வருவாய்த் துறையின் டிவிட்டர் வலைதளத்தில் வெளியான அறிக்கையானது, இத்துறையின் கருத்தாக கருத இயலாது – என அறிக்கை வெளியான மறுநாளே கூறியிருப்பதன் மூலம், இந்த அரசாங்கம் யாருக்கானது என்பதைத் தெளிவாக்கியது.

3) இணைய பயன்பாட்டுச் சேவைகள் / காம் சேவைகள் வழங்கும்  நிறுவனங்கள் மீதான வரி விதிப்பை உயர்த்துதல்:

ஊரடங்கின்போது ஆகப் பெரும்பான்மை மக்களை வீட்டுக்குள் முடக்கியபோது, அரசின் பல்வேறு பொருளாதார மூலாதாரக் கூறுகளும் முடங்கியபோது, கொரோனா பாதிப்பின்போது இயங்கிய பொருளாதாரம் என்பது டிஜிட்டல் / ஆன்லைன் / இணைய வர்த்தகத்தின் பொருளாதாரம் சார்ந்ததுதான். இச்சூழலானது, தமது தேவைகளுக்காகப் பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களான, அமேசான் (Amazon), நெட்பிளிக்ஸ் (Netflix), சூம் (Zoom), ஸ்விக்கி (Swiggy), சொமேடோ (Zomato) போன்ற நிறுவனங்களைத்தான் பெரிதளவில் மாத வருவாய் உள்ள மக்களை சார்ந்திருக்குமாறு செய்கிறது. ஆகவே, இந்தக் காலகட்டத்தில், அது தழைத்தோங்கும் பொருளாதாரமாக வளர்ந்து வருகிறது.

ஆகையால், தமது தொழிலைப் பெருமளவு விரிவுபடுத்த வாய்ப்புள்ள இத்தகைய நிறுவனங்களின் மீதான வரி விதிப்பை ஒரு சதவீதம் உயர்த்துவதன் மூலம், வரி வருவாயைப் பெருக்க இயலும் என அவ்வறிக்கை பரிந்துரை செய்திருப்பது மிகவும் ஏற்புடையதாகும். ஏனெனில், பல்வேறு அரசு / தனியார் துறைகளிலிருந்தும், கொரோனா நிவாரண நிதியாக பல்வேறு மக்களும் தம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்து வரும் வேளையில், இந்த நிலைமையில் இயங்கிவரும் ஒரே தொழிலான விளம்பரச் சேவைகளுக்கு 6-இலிருந்து 7 சதவீதம் வரி விதிப்பை அதிகரிப்பதும், இணைய வர்த்தக நிறுவனங்களிடம் 2-இலிருந்து 3 சதவீதமாக வரி விதிப்பை அதிகரிப்பதும் அநியாயமானது என்று கருத இயலாது.

அறிக்கை தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) மேற்கொண்ட நடவடிக்கைகள்:

இந்த அறிக்கை டிவிட்டர் வலைதளத்தில் கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி இரவு 10 மணியளவில் மக்கள் கருத்திற்காக வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை வெளியான மறுநாள் மாலை 5 மணியளவில் மத்திய நேரடி வரிகள் வாரியமானது, இவ்வறிக்கை வெளியாவதற்கு காரணமாக இருந்த 50 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளின் மீது தன்னிலை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 28-ஆம் தேதி, இந்த அறிக்கையைத் தங்களுக்கு கீழுள்ள இளம் அதிகாரிகளைத் தயார் செய்யுமாறு கோரியதாக துபே மற்றும் பகதூர் ஆகிய இருவர் மீதும், மேலும் இந்த அறிக்கையை டிவிட்டர் வலைதளத்தில் மக்கள் அறியும்படி வெளியிட்ட பூஷண் என்பவர் மீதும் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அரசை அழுத்தும் வருவாய் பற்றாக்குறையும், நிலவும் கட்டமைப்பிற்கு அப்பால் இருக்கும் தீர்வும்:

இந்த அறிக்கை உருவாவதற்கு முன்னோடிகளாக இருந்த, வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த 3 அதிகாரிகளும் சுமார் 10 ஆண்டு காலமாக இந்த துறையில் பணியாற்றியுள்ளனர். மேலும், அவர்கள் இந்த அறிக்கையை ஏப்ரல் 23-ஆம் தேதி அன்றே மத்திய நேரடி வரிகள் வாரியத்திடம் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு எந்தவித கருத்தையும் மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவிக்காத நிலையில், அவர்கள் ஏப்ரல் 26-ஆம் தேதி டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஊரடங்கு காலகட்டத்தில், ஏற்கெனவே பல்வேறு மாநிலங்கள் போதிய வரி வருவாய் இல்லாமல் மத்திய அரசிடம் தொடர்ந்து அதிகளவு நிவாரண நிதியைக் கோரி நிர்பந்தித்து வரும் வேளையில், இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை ஏற்கத்தக்கவை / ஏற்கத்தகாதவை என்றுகூட பரிசீலிக்காமல் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

மேலும், இந்த அறிக்கை வெளியாவதற்கு உதவி புரிந்த 50 ஐ.ஆர்.எஸ். இளம் அதிகாரிகளில் கணிசமானோர் இத்துறைக்கு வந்து 2 முதல் 5 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள். ஆக, தனது துறையின் (ஐ.ஆர்.எஸ்) வருவாயை அதிகரிப்பதற்கான சில பரிந்துரைகள் செய்வதென்பது, அந்தத் துறை இயங்குவதற்கான அடிப்படையான முன்முயற்சியாகும். அதனைக்கூட மறுப்பதென்பது, அரசின் அதிகாரத் திமிரையும், அரசின் பல்வேறு துறைகள் எவ்வாறு முடங்கியுள்ளன என்பதை உணர்த்துகிறது.

படிக்க:
♦ டில்லி : மாற்றுக் கருத்துக்களை நசுக்க ஊரடங்கைப் பயன்படுத்தும் அரசு !
♦ அவுரங்காபாத் விபத்து மட்டுமல்ல, கொரோனா ஊரடங்கால் 383 பேர் இறந்திருக்கிறார்கள் !

அமெரிக்காவில் வரி வருவாய் குறைந்துள்ளதன் விளைவாக, கொரோனா தாக்குதல் தீவிரமடைந்துள்ளதோடு, அடிக்கட்டுமான அமைப்பே நெருக்கடியில் இருப்ப்தை பல பொருளாதாரவாதிகள் சுட்டிக் காட்டுகின்றனர். இதன் விளைவாக, சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் தீவிரமடைகின்றன. எனவே, முதலாளித்துவ நாடுகளில் கூட சந்தைகளை இயங்க வைக்க முடியாமல் அரசுகள் தடுமாறுகின்றன. எனவே, சந்தைகளை இயங்க வைக்கவும், சந்தைகளின் ஆதாயங்களைப் பரவலாக விநியோகிக்கவும் தவிர்க்கவியலாமல் பெருமுதலாளிகளது செல்வத்தின்மீதும், கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களின் மீதும் வரி விதிப்பு வீதத்தை அதிகரிப்பது மிகமிக அவசியத் தேவையாக உள்ளது.

அரசாங்கத்தால் வரி குறைவாக உறிஞ்சப்படும்போது, தொழில் நிறுவனங்கள் தங்கள் லாபத்திலிருந்து அதிகமாக மறுமுதலீடு செய்யும் என்று வரி அதிகரிப்பை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இது எந்த வகையிலும் உண்மையில்லை என்று ஏற்கெனவே பல பொருளாதாரவாதிகள் நிரூபித்துள்ளனர். தொழில் நிறுவனங்கள் தங்களது லாபத்தை மறு முதலீடு செய்யாமல், வெள்ளையாகவும் கருப்பாகவும் இந்தச் செல்வத்தை வரியில்லா சொர்க்க நாடுகளுக்குக் கடத்திச் சென்று பதுக்குகின்றன என்பதே உண்மை.

கோடீசுவர முதலாளிகள் மீதும், அவர்களது கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதும் உலகளாவிய குறைந்தபட்ச வரிவிதிப்பை அனைத்து நாடுகளும் செயல்படுத்தப்படுத்த வேண்டுமென கொரோனா தாக்குதல் நிலவும் இத்தருணத்தில் பல்வேறு பொருளாதாரவாதிகளும் ஜனநாயகவாதிகளும் கோரி வருகின்றனர். ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி மக்கள் வரிப் பணத்தை வாரிவழங்கிய மோடி அரசு, இந்த நோய்த்தொற்று நெருக்கடி காலகட்டத்தில், அவர்களிடம் இருக்கும் கொள்ளை லாபத்தில் ஒரு சிறு சதவீதத்தை வரி என்ற வகையில் போட்டு வசூலிக்க வேண்டுமென பரிந்துரைத்தால்கூட, அதைக் கண்டு பதற்றமடைந்து எதிர்வினையாற்றுகிறது.

இந்த அறிக்கை தொடர்பான மோடி அரசின் இந்த நடவடிக்கையானது, எவ்வாறு அரசின் அனைத்து துறைகளும் கார்ப்பரேட் நலன்களின் சேவகனாக, தொங்கு சதையாக மாற்றப்பட்டு வருகின்றது என்பதைப் பறைசாற்றுகிறது. ஆக, ஒட்டுமொத்ததில், இந்த அரசுக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு பெரும்பான்மை மக்களுக்கு குறைந்தபட்ச நன்மை செய்வதுகூட சாத்தியமற்றது என தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அரசின் ஒவ்வொரு உறுப்பும், எவ்வாறு தான் ஏற்றுக்கொண்ட வேலைகளைச் செய்ய இயலாமல் போய், மக்களுக்கு எதிரானதாய் மாற்றமடைந்து வருகிறது என்பதை அரசின் தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகள் மேலும் மேலும் அப்பட்டமாகத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறது. ஜனநாயக சக்திகள் இதை புரிந்து கொண்டு மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுப்பது குறித்து முன்வரவேண்டும்.

– புதியவன்

தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி !

மே 22 அன்று மக்கள் அதிகாரம் கோவை பகுதி சார்பாக தூத்துக்குடி தியாகிகளின் 2 -ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மூர்த்தி தலைமையேற்று நடத்தினார். இதில் புரட்சிகர இளைஞர் முன்னணி கோவை மாவட்டப் பொறுப்பாளர் தோழர் மலரவன், தி.மு.க. பகுதிப் பொறுப்பாளர் திரு. ராஜன், திராவிடர் விடுதலை கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் நேருதாஸ், சமூக ஆர்வலர் திரு கோவை கதிர் மற்றும் திரளான பகுதி மக்கள் பங்கேற்றனர்.

தோழர் மூர்த்தி தனது தலைமை உரையில் ஸ்டெர்லைட் ஆலை பற்றிய விபரங்களையும், அதை மூடக்கோரி நடந்த போராட்டத்தையும் பற்றி சுருக்கமாக விளக்கிக் கூறினார். மக்கள் அதிகாரம் தோழர் ஜூலியஸ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசு கட்டமைப்புக்குள் எந்தத் தீர்வும் கிடைக்காது என்பதையும், பல்வேறு அமைப்புகளாக செயல்பட்டாலும் ஒற்றை நோக்கத்திற்காக இணைந்து வேலைசெய்ய வேண்டியதன் அவசியத்தை பற்றியும் பேசினார்.

தோழர் மலரவன், மக்களுக்கு எதிரான ஒரு அரசமைப்பு அது எத்தகைய பலம் வாய்ந்ததாக இருந்தாலும், மக்களின் போராட்டம் அவற்றையெல்லாம் தகர்த்தெறியும் என்று விளக்கினார். தோழர் நேருதாஸ் மற்றும் கோவை கதிர் ஆகியோர் இன்றைய சமூக நிலைமைகள் பற்றியும் அரசியல் நிலைமைகள் பற்றியும் விளக்கிப் பேசினார். மக்கள் அதிகாரம் தோழர் ராஜன் புரட்சிகர பாடலைப் பாடினார். நிகழ்ச்சி சிறந்த முறையில் பகுதி மக்களின், குழந்தைகளின் பங்கேற்புடன் நடைபெற்றது. மக்கள்  தோழர்களை உற்சாகப்படுத்தினர்.

தூத்துக்குடி தியாகிகளின் நினைவஞ்சலி நிகழ்வானது பகுதி மக்களுக்கு இந்த மக்கள் விரோத அரசுகள் குறித்த விழிப்புணர்வை ஊட்டுவதாகவும், மக்கள் போராட்டமே பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் என்பதை உணர்த்துவதாகவும் இருந்தது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கோவை.

***

ஸ்டெர்லைட்எதிர்ப்புபோராளிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  புவனகிரி வட்டம் பெரியகுப்பம் கிராமத்தில், மாணவர்கள் – இளைஞர்கள் என அனைவரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர்.

176 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யும் விகடன் குழுமம் !

அநீதியை தடுத்து நிறுத்த முன்வாருங்கள் !

1995ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி 4 மணிக்கு நான் சங்க அலுவலகத்திலிருந்த போது நான் உட்பட 5 பேரின் வேலைநீக்க உத்தரவு தரப்பட்டது. ஆனால், நாங்கள் வேலைநீக்கம் செய்யப்படுவோம் என்பதை உணர்ந்தே இருந்தோம். தொழிற்சங்க நடவடிக்கைக்காக அந்த வேலைநீக்கம் நடைபெற்றது. அன்றைய தினம் எங்களுக்கு அது ஒன்றும் பேரதிர்ச்சியாக இல்லை.

ஏனென்றால், அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த ஏறக்குறைய 90 சதவிகிதமான தொழிலாளிகளும் அவர்களது குடுத்தினர்களும் அதை தங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதாலாகவே உணர்ந்தார்கள். மீதமுள்ள 10 சதவிகிதம் பேரும் இந்தப் பெருவாரியான கருத்துக்களுக்கு முன்பு தங்களது கருத்தை வெளியில் சொல்லவில்லை. அந்த 10 சதவிகிதம் பேரில் பெருவாரியானவர்கள் சங்பரிவாரின் ஆதரவாளர்கள்.

நாங்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட அன்று மாலை வாயிற்கூட்டத்தில் நான் பேசினேன். பைபிளில் உள்ள ஒரு வாசகத்தை அப்போது நான் அவர்களிடம் சொன்னேன். உத்தேசகமாக அந்த வார்த்தை இயேசு சிலுவையேற்றி அழைத்துச் செல்லப்பட்ட போது அவருக்காக அழுத மக்களைப் பார்த்து அவர் எனக்காக அழாதீர்கள், உங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும், உங்கள் சந்ததியினருக்காகவும் அழுங்கள் என்று பேசியதாக என் நினைவில் இருந்ததைச் சொன்னேன்.

எல்லோர் தலையும் கவிழ்ந்திருந்தது. பலர் கண்ணீர் வடித்தார்கள். அப்போது எங்களில் யாருக்கும் 35 வயதைத் தாண்டவில்லை. எனக்கு வயது 32. எங்களில் இளையவருக்கு 29 வயது இருக்கும். திருமணமாகி 6 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆனால், நாங்கள் எல்லோரும் மிகவும் பாதுகாப்பாக உணர்ந்தோம். எங்களை வருடுகிற பார்வைகள், தங்களை விடவும் எங்களை நேசித்ததை நாங்கள் அறிவோம்.

நாங்கள் பணிபுரிந்த நிறுவனத்தையும் அதேசமயம் நாங்கள்தான் வேலைநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்று தெரியாமலும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எங்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு ‘உங்க கம்பெனில கொஞ்ச பேர டிஸ்மிஸ் பண்ணிட்டாங்களாமே, அவர்களை கொஞ்சம் நல்லா பாத்துகோங்கப்பா’ என்று சொன்னபோது உலகமே எங்களுக்கு ஆதரவாக நிற்பது போன்ற உணர்வை நாங்கள் பெற்றோம். இதையெல்லாம் சொல்வதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. இன்று அதுபோல ஒரு நிலை இருக்கிறதா?

இன்று ஊடகங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பு இவையெல்லாம் தூக்கத்தைப் பிடுங்கிக் கொண்டிருக்கிறது. சம்மந்தப்பட்டவர்களின் குடும்பங்கள் என்ன மாதிரியான மனஉளைச்சலுக்கும் நெருக்கடிக்கும் உள்ளாவார்கள் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

படிக்க:
♦ நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்
♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !

எங்கள் விசயத்தில் ஒரு போராட்டம். ஒரு நீண்ட நெடிய விசாரணை. அதன்பிறகு விளக்கம் கேட்பு. அதன் பின்பு வேலைநீக்கம் என்றிருந்தது. ஆனால், நேற்றைய தினம் ஆனந்த விகடன் குழுமத்திலுள்ள தொழிலாளிகளை திடீரென அழைத்து நாளை முதல் உங்களில் 176 பேரை வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

சுமார் 600 பேர் வேலை செய்கிற அந்த நிறுவனத்தில் இந்த முடிவுகளை எடுத்த சில பேரைத் தவிர, கடந்த 24 மணி நேரமாக ஒவ்வொரு குடும்பத்திலும் அது தங்கள் பெற்றோராக, தங்கள் பிள்ளையாக, தனது கணவராக அல்லது தனக்கு மருகமளாகவோ, மருமகனாகவோ இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருப்பார்கள்.

இது எத்தனை பெரிய கொடூரம். 176 பேர் என்று நிச்சயிக்கப்பட்ட பிறகு, வேறு யாருக்காகவாவது வந்துவிட வேண்டும் என்று மனிதத்தைச் சிதைக்கிற ஒரு சிந்தனைக்கு தூண்டும் இந்த முடிவை எவ்வித தயக்கமுமின்றி அந்த நிர்வாகம் எடுத்திருக்கிறது.

மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இவர்கள். கடந்த மாதமோ அதற்கு முன்பாகவோ இந்த நிறுவனம் தொழிலாளிகளை அழைத்து உங்களில் யாரையும் வீட்டிற்கு அனுப்பப் போவதில்லை. அதன் காரணமாகவே 30 சதவிகிதம் வரை சம்பளத்தை வெட்டுகிறோம் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்கள். இப்போது மூன்றில் ஒரு பகுதியை வெளியேற்றப் போகிறார்கள். இது திடீரென இறங்கிய இடி. யாரும் எதிர்பாராத ஒரு பெரும் திடீர் தாக்குதல்.

விகடன் சைத்தான்தங்களின் எந்த நேரடிக் காரணத்திற்காகவும் அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படவில்லை. லாபம் குறைந்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் வேலையை விட்டு அனுப்பப்படுகிறார்கள்.

பத்திரிக்கைகள் உருக்கமாக எழுதும் விழுமியங்கள், கருணைகள், அன்பு இவற்றிற்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. ஒரேயொரு அர்த்தத்தைத் தவிர. அதுதான் லாபம். அந்த லாபத்திற்கு முன்பாக அனைத்து மனித மாண்புகளும் விழுமியங்களும் அடித்து நொறுக்கப்படும். சிதைத்து அழிக்கப்படும்.

அந்த நிறுவனத்தின் தலைவர் சொன்னதாக சமீபத்தில் ஒரு கருத்தை பார்க்க நேர்ந்தது. “உங்கள் தொழிலாளிகளை வைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை எனில் அவர்கள் எத்தனை நல்லவர்களாக இருந்தாலும் அவர்களைக் குறைப்பதற்கு இரண்டு முறை கூட யோசிக்காதீர்கள்”. இதன் பொருள் உங்கள் லாபத்திற்கு பாதிப்பு வருமெனில் அவர் எத்தனை திறமையானவராக இருந்தாலும் சரி, எத்தனை நல்லவராக இருந்தாலும் அவரை வெளியே துரத்திவிடுங்கள், தாமதிக்காதீர்கள், இன்னொரு முறை கூட யோசிக்காதீர்கள் என்பதுதான்.

மனிதர்கள் முக்கிமல்ல, லாபம் மட்டும்தான் முக்கியம் என்பதுதான். ஒப்பீட்டளவில் நிரந்தரமான வேலை ஆனந்த விகடனில் பணிபுரிவது என்று ஊடகவியலாளர்களால் நம்பப்பட்டது. ஆனால், அந்த நிறுவனமே இப்படி செய்கிறது. மற்ற நிறுவனங்கள் இதையெல்லாம் செய்யாது என்று நம்புவதற்கு எந்தவிதமான தர்க்கமும் இடமளிக்கவில்லை.

இந்தப் பின்னணியில் இப்போதுள்ள நிலையில் இதிலுள்ள பலராலும் மாற்று வேலை தேடுவது சாத்தியமா என்ற கேள்விக்கு நம்பிக்கையோடு ஒரு பதிலை சொல்ல முடியவில்லை.

மத்திய பாஜக அரசு ஏதோ தொழிலாளிகளுக்கு ஆதரவாக இருப்பது போன்று கொரோனா காலத்தில் யாரையும் வேலைநீக்கம் செய்யக் கூடாது, சம்பளப் பிடித்தம் செய்யக் கூடாது என்று உபதேசித்துவிட்டு தன் பணி முடிந்ததாக ஒதுங்கிக் கொண்டது.

உலகின் பல முதலாளித்துவ நாடுகள் 60% முதல் 100% வரை தொழிலாளர்களின் சம்பளத்தை, இன்னும் சொல்லப்போனால் தொழிலாளர்களுக்கு ஆகிற செலவைக் கூட ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், இந்தியாவில் தொழிற்சங்க இயக்கமும், ஊடகவியலாளருக்கான அமைப்புகளும் பெருமளவிற்கு போராட்ட குணங்களை அதற்கு தேவையான அளவில் கொண்டிருக்காத நிலையில் மிக இயல்பாக கடந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

இதை அனுமதிப்பது சரியல்ல, நியாயமல்ல. அவர்கள் எல்லாம் யார் வீட்டுப் பிள்ளைகளோதான். ஆனால், அவர்கள் தாக்கப்படும்போது, நிராதரவாக விடப்பட்டால், நாளை நமது பிள்ளைகளுக்கு ஏற்படும்போது கேட்பதற்கு யாரும் இருக்கமாட்டார்கள்.இவையெல்லாவற்றையும்விட இந்த வேலைநீக்கங்கள் சட்ட விரோதம்.

வாசகர்களும் விளம்பரதாரர்களும் குறைந்தபட்சம் அவர்களின் செயலியிலாவது தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்.

இதற்கெதிராக அனைவரும் சாத்தியமான அனைத்து வகைகளிலும் வழிகளிலும் குரல் எழுப்ப வேண்டும்…

கே.கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர். CPIM

***

விகடனில் நடைபெற்றுவரும் ஊழியர்கள் வேலை நீக்கம் தொடர்பாக, சி.பி.எம். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் எழுதியுள்ள பதிவு…

இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !

ஊடக அறிக்கை

21.05.2020

கோவிட் 19 கொரோனா நச்சுக் கிருமியின் பெரும் தொற்றானது உலகளவில் பல லட்சம் மக்களைப் பாதித்தும், பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலிகொண்டும் வரும் அபாயச் சூழல் தொடர்கின்றது.

இலங்கையில் இதுவரை ஆயிரம் பேருக்கு மேல் இவ்வைரஸ் கிருமித் தொற்றுக்கு உள்ளானதுடன், 09 பேர் மரணமடைந்தும் உள்ளனர். இத் தொற்று சரியான முறையில் கையாளப்படாது விடப்படுவதனால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய அபாய நிலை காணப்படுகின்றது.

இதுவரை இப் பெருந்தொற்றினாலும், அதன்மீதான அச்சத்தினாலும், அதைத் தடுக்க முன்னெடுக்கப்படும் ஊரடங்கு மற்றும் முழு முடக்கம் போன்ற நடவடிக்கைகளினாலும் நாட்டின் பொருளாதார, சமூகத் தளங்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதில் அதிகம் பாதிப்பை எதிர்கொள்வோர், ஏகப் பெரும்பான்மையினரான உழைக்கும் மக்களே ஆவர். வருமான முடக்கம், உணவுப் பொருட்களின் விலையேற்றமும் தட்டுப்பாடும், விவசாய உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை, வேலையிழப்பு போன்ற பல்வேறு நெருக்கடிகள் இவர்களைப் பாதிக்கின்றன.

அரசாங்கம் வழங்குகின்ற 5,000 ரூபா நிதியானது அனைவருக்கும் சரியான முறையில் சென்றடையவில்லை. குறிப்பாகப் பல்வேறு வகையிலும் ஏமாற்றப்பட்டுவரும் லட்சக்கணக்கான பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இவ் ஐய்யாயிரம் ரூபா நிவாரண நிதியானது மறுக்கப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியது. இதிலும் ஆரம்பத்தில் சமுர்த்தி ஊடாகக் கடனாக வழங்கப்பட்ட நிதி தொடர்பான குழப்பம் மக்கள் மத்தியில் நிலவி வருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

அதேவேளை, அரசின் கொரோனா நிதியத்திற்கு இதுவரை நூறு கோடி ரூபாவுக்கு மேல் சேர்ந்துவிட்டபோதும், அதனைத் தேர்தல் உள்நோக்கத்துடன் ஜனாதிபதி தலைமையிலான ஆட்சியாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந் நிதியத்திற்கு அரசாங்க ஊழியர்கள் தமது ஒரு மாத கால சம்பளத்தை வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளரால் விடுக்கப்பட்ட அறிவிப்பானது மிகவும் அபத்தமான ஒன்று.

படிக்க:
♦ ரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா ?
♦ ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !

அதாவது, பல்வேறு ஊழல் மோசடிகளையும் செய்து மக்களின் பணத்தைச் சுருட்டிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரிடமிருந்து ஒரு சதத்தைத்தானும் மீட்க முடியாத இவ் ஆட்சியாளர்கள். அத்தகைய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் எவருக்கும் எதிராக இதுவரை சிறியதானதொரு விசாரணையைக்கூட முன்னெடுக்காத நிலையில், பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, பல்வேறு நெருக்கடிகளுடன் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவின் சுமையையும் கடன் தொல்லையையும் எதிர்கொண்டு போராடும் அரச ஊழியர்களிடம் அவர்களின் வருமானத்தைக் கோருவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும், இன்றைய அரசாங்கம் கொரோனா பெருந்தொற்றின் மறைவில் இனவாத, இராணுவ மயமாக்கல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்றமை கண்கூடு. இருபதுக்கு மேற்பட்ட இராணுவ அதிகாரிகள் சிவில் நிர்வாக உயர் பதவிகளுக்கு இதுவரை நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான செயலணிக்கு மருத்துவத் துறையைச் சேர்ந்தோரைத் தலைமையாக நியமிக்காமல், இராணுவத் தளபதியை நியமித்ததன் மூலம் அது இன்னும் ஆழமாக வெளிப்படுத்தப்பட்டது. ஆனால், முறையான விழிப்புணர்வோ, பாதுகாப்பு முன்னேற்பாடுகளோ இன்றிப் படையினர் இப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதன் மூலம், இன்று எமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இரட்டிப்பாக இவர்களின் இச் செயல் வழிவகுத்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு, மீண்டும் முழு வீச்சுடன் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதப் பிரச்சாரம் இப்போதும் தொடர்கின்றது. குறிப்பாக இந் நெருக்கடி நேரத்திலும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகப் பல இனவாத முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. கைதுகளும் விசாரணைகளும் தடுத்துவைத்தல்களும் முடுக்கிவிடப்பட்டு, சிங்கள மக்கள் மத்தியில் அச்சமும் வெறுப்பும் பரப்பப்படுகின்றன. இஸ்லாமிய பண்பாட்டு நடைமுறைகளில் தலையிட்டு முன்பு பெண்களின் ஆடை தொடர்பாக கட்டுப்பாடுகளை விதித்ததுபோல், இப்போது இறந்தோரைப் புதைக்கும் அவர்களின் வழக்கத்தில் கை வைக்கின்றனர்.

அதேவேளை தற்போதைய கோட்டாபய மகிந்த அரசாங்கமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணங்கிப் போவது போலவும், அடுத்த பாராளுமன்றத்தில் அரசியல் தீர்வு பற்றிப் பேசப் போவதாகவும், சிறைகளில் இருந்து அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுபோலவும் காட்ட முனைவது, அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குகளை இலக்குவைத்த ஏமாற்று நாடகமேயாகும்.

ஆனால், மலையகத் தமிழ் மக்களுக்கு கொடுத்த ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதான வாக்குறுதி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. ஏனெனில், எந்தவொரு ஆட்சியாளரும் தோட்டத் தொழிலாளர்களைத் தொடர்ந்தும் கொத்தடிமைகள் போல நடத்திவரும் தோட்டக் கம்பனிகளின் இலாபத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்துவதை விரும்புவதில்லை.

2015 க்கு முந்திய நிலையைப் போன்று, மீண்டும் இவ் ஆட்சியாளர்களின் குடும்ப சர்வாதிகாரப் போக்கு தொடர்வதுடன், எதிர்வரவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பாண்மையைப் பெறுவதன் ஊடாகத் தமது எதேச்சாதிகாரத்தைத் தொடர்வதை நோக்காகக் கொண்டே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே, இவ் அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, இலங்கையின் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அன்றாட உழைப்பாளர்கள், அரசாங்க தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் என அனைத்து உழைக்கும் மக்களும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களான தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும். இந்நிலையில் எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி உழைக்கும் மக்களுடன் நின்று அவர்களின் கோரிக்கைகளுக்காக உறுதியுடன் போராடும்.

இவ் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியற் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி. கா. செந்திவேல் அவர்களால் வெளியிடப்படுகின்றது.

சி.கா. செந்திவேல்,
பொதுச் செயலாளர்,
பு.ஜ.மா.லெ கட்சி.

மதுரை அப்பளத் தொழிலாளர்களின் அவல நிலை !

கொரோனோவால் பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளர்களின் வாழ்நிலை உண்மைகளை எந்த ஊடகங்களும் கூறுவதில்லை.மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் வாழ்நிலையைப் பற்றி நேரில் சந்தித்து தகவலை சேகரித்தோம்.

இதோ அவர்களின் வாழ்க்கை அவலங்கள்:

இப்பகுதியில் பெரும்பாலும் அப்பளக் கூலித்தொழிலாளர்கள். நாங்கள் இந்த 40 நாட்களில் சொல்லிமாளாத துயரத்தை சந்தித்துள்ளோம். எங்கள் சொந்தக்காரர்கள் தெரிந்தவர்கள் என இவர்களிடம் கடனை வாங்கி தான் பிழைப்பை நடத்துகிறோம். இந்த கொரோனோ ஓழியும் வரை எல்லோரையும் வீட்டிற்குள் இருக்க சொன்னார்கள். நாங்கள் அதை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் வேலை இழந்து வருமானம் இழந்து நிற்கிறோம். அதற்கு அரசு சரியான நிவாரண நிதி மற்றும் மளிகை பொருட்களை விநியோகம் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு நேரெதிராக இந்த அரசு கொடுத்த 1000 ரூபாய் 3 -வாரம் கூட தாங்க வில்லை எப்படி குடும்பம் நடத்துவது. இதே தொகையை நாங்கள் எடப்பாடிக்கு தருகிறோம் முதலில் அவர் இதை வைத்து குடும்பம் நடத்தட்டும் அப்புறம் எங்களுக்கு தரட்டும் என கொந்தளித்தனர்.

அரிசி என்று எதையோ கொடுத்தார்கள் கோழி கூட கொத்த மாட்டேங்குது இதை நாங்கள் எப்படி சமைத்து சாப்பிடுவது.தொடர்ந்து அவர், கொரோனோவுக்கு முன் ரேசனில் விநியோகிக்கப்பட்ட அரிசி கூட நல்லதாக தான் இருந்தது. இப்போது விநியோகித்த அரிசி மிகவும் கேவலமாக உள்ளது என அவர் சொல்லி முடிப்பதற்குள் ஒரு பெண்மணி, எங்கள் குடும்பம் இந்த அரிசியை தான் பொங்கி சாப்பிடுகிறோம் வேற வழி இல்லைங்க தம்பி என்றார்.

இப்போது தான் கொரோனோவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஆனால் அரசு இப்போது விமான நிலையம், பேருந்துகள்,போக்குவரத்து என அனைத்தையும் இயங்க வைத்துவிட்டார்கள் எங்களுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏற்கனவே நாங்கள் வறுமையில் வாழ்கிறோம் இப்போது கொரோனோவுடன் சாவதா? ஏற்கனவே நாங்கள் அப்பள உற்பத்தியாளர்களிடம் அட்வான்ஸ் தொகை வாங்கி உள்ளோம். மகளிர் சங்கம், விடிவெள்ளி, சேமம் என அனைத்திலும் கடனை வாங்கியுள்ளோம். அது போக இப்போது வெளிக்கடன் வேறு வாங்கி உள்ளோம். இனி இந்த ஊரடங்கு முடிந்தாலும் எங்கள் கேவலப்பட்ட பிழைப்பு முடிவுக்கு வராது. நாங்கள் இனி வேலை செய்து பணத்தை மிச்சம் செய்து கடனை அடைப்பதா?, வாடகை கொடுப்பதா?, இல்லை எங்கள் வயிற்றை நிரப்புவதா?.

இந்த அரசு எங்கள் கடன் தொகையை அனைத்தையும் தள்ளுபடி செய்தால் தான் எங்கள் வாழ்வு தழைக்கும். இதனை அரசிடம் கோரிக்கையாக வைக்கிறோம்.
எல்லா கடைகளும் மூடி எங்களோட வயிற்றில் அடித்த இந்த அரசு டாஸ்மாக் கடை மட்டும் திறந்து இன்னும் எங்கள் குரல்வளையை நெறிக்க பார்க்கிறது. இந்த 40 நாளில் அரை வயிற்று கஞ்சியை குடித்தாலும் நிம்மதியாக இருந்தோம் ஆனால் இந்த டாஸ்மாக் திறந்த இரண்டு நாளில் என் கணவன் என்னை அதிகம் துன்புறுத்தி விட்டார். உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம் இந்த டாஸ்மாக் கை மட்டும் தயவுசெய்து திறக்காதீர்கள் என வேண்டுகோளாக அரசுக்கு வைத்தார்கள்.

அப்பளம் உற்பத்தியாளர்கள்:

நாங்கள் இந்த 40 நாட்களில் எங்களுடைய வாழ்க்கை மிக மோசமாக இருந்தது. அரசு போதுமான நிவாரண நிதியோ பொருளோ தரவில்லை. நாங்கள் ஏற்கனவே வங்கியில் வாங்கிய கடன் தொகையை செலுத்த திணறுகிறோம். இரண்டு மாதம் கழித்து வட்டி கட்டலாம் என வங்கிகள் சொன்னாலும் அதற்கும் சேர்த்து தான் வட்டி கேட்பார்கள்.

இது போதா குறைக்கு மீண்டும் கடன் வாங்கும் நிலமையை அரசே ஏற்படுத்தி கொடுக்கிறது. பெரிய பெரிய பணக்காரர்களுக்கு கடனை தள்ளுபடி செய்யும் அரசு எங்களைப் போன்றோர்களின் கடனை தள்ளுபடி செய்தால் இனி வரும் நாட்களில் நாங்கள் மீள்வோம். இல்லையேல் கடினம்தான்.

எங்கள் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்து 60 பேர் சேர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தொழிலை தொடங்குவதற்கு அனுமதி கேட்டோம். அதற்கு அவர், (FSSAI ) “உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆனையம்” சான்றிதழ் இருந்தால் நீங்கள் உற்பத்தியை தொடங்கலாம் என கூறினார்.

படிக்க:
♦ ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு ! திருச்சி ஆட்சியரிடம் மனு !
♦ பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம் ! நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள் !

அதே பகுதியில் உள்ள அ.தி.மு.க உறுப்பினரின் உணர்வை அவருடைய பேச்சு வழக்கில் தருகிறோம்:

தம்பி நாங்க இந்த 40 நாளையும் ரொம்ப அவதிப்பட்டு தான் தாண்டிருக்கோம். இந்த 40 நாளும் வீட்டில் இருந்த மாதிரி இல்ல ஏதோ ஜெயில்ல இருந்த மாதிரி இருந்துச்சு தம்பி. கவர்மெண்ட் கொடுத்த 1000 ரூபா எந்த மூலைக்கு காணும். 1 சிலிண்டர் வெலையே 800 ரூபாங்கிறான் மீதியை வச்சு கடலை உடல வீட்டு சாமான வாங்கிரலாமா? இதுக்கலாம் பணத்த யார் கொடுப்பா?

நானும் அ.தி.மு.க காரேன் தான் தம்பி அதுக்காக சொந்த கட்சி செய்றதெல்லா சரின்னு சொல்ல முடியுமா. தப்புன்னா தப்புதா தம்பி. இவங்களாம் மக்கள எப்படித்தான் பாக்குறாங்கனு தெரியல. நா நெறைய பேப்பரு படிக்கிறேன் அதுல இருந்து தான் சொல்றே தம்பி. இங்க நடக்குறது ஆட்சியே இல்ல ஏதோ சர்வாதிகார ஆட்சி மாதிரி இருக்கு தம்பி.

வெறும் 1000 ரூபாவும் புளுத்துப்போன அரிசியை கொடுத்துட்டு வீட்டவிட்டு வெளியவராத அப்டின்னா எப்பிடிப்பா. இதுல வேற கொறைஞ்சது 50 ரூபாக்காவது பொறிகடல சோப்பு போல சாமான் வாங்குனா தான் அரிசி பருப்பு தருவேன்னுங்குறான். இருக்குறவன் வாங்குறான் அந்த பணமும் இல்லாதவேன் என்னா பன்னுவான் அவன் பட்டினியா கெடந்து சாகனுமா?…நான் நகையை அடமானம் வைச்சு தான் இந்த 40 நாள் கழிச்சு இருக்கேன்.

ஊரடங்கு முடிஞ்சு எங்க தொழில்ல தொடர்ந்தாலும் கஷ்டம் தாங்க. பழைய மாதிரி தொழிலு நடக்க 6 மாசம் ஆகுங்க. அதுவரைக்கும் நான் என் பிள்ளைகளுக்கு பீஸ் கட்டுவேனா?, கரண்ட்டு பில்லு கட்டுவேனா?, சாப்பிடுவேனா?, கடனத்தான் கட்டுவேனா…?

எங்க பகுதியில்ல “நலவாரிய திட்டத்தில்” முதல் தவணையா 1000 ரூபா கொடுத்தாங்க அதுவும் கட்டுமான தொழிலாளர்க்கு மட்டும் தான். கொரோனோ..வ ஒழிக்க முடியாமத்தான் இப்ப மக்கள வெளிய விட்டாங்க தம்பி. கொரோனோவோட வாழ்ந்து செத்துப்போன்னு அரசு நம்மளை கைவிரிச்சுருச்சு தம்பி என ஆதங்கத்துடனும் வேதனையுடனும் கூறி முடித்தார்.

***

ங்குள்ள அப்பளத் தொழிலாளர்கள் பெரும்பாலும் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியே உள்ளனர். எடப்பாடி அரசு கொடுத்த 1000 ரூபாய் 1 வாரத்திற்கே போதாது என்னும் சூழ்நிலையில் இவர்கள் அந்த தொகையை 3 வாரம் சமாளித்து இருக்கிறார்கள் என்றால் இதை நாம் எப்படி பார்ப்பது.

அடிப்படை தேவைகளை சுருக்கிக் கொண்டு அசைவ உணவுகளை தவிர்த்து ஊட்டச்சத்து குறைபாடுடன் வாழ்கிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாக புளுத்துப்போன அரிசியை அவர்கள் பொங்கி சாப்பிட்டதாக கூறியதும் முக்கியமான ஒன்று.

எங்களுக்கு வேறோன்றும் இந்த அரசு செய்ய வேண்டாம் எங்களுடைய கடனை தள்ளுபடி செய்தால் போதும் என்பது தான் அவர்களுடைய பிரதான கோரிக்கையாக உள்ளது. அவர்கள் இந்த நிலையிலும் அரசிடம் வைக்கும் கோரிக்கை தான் இந்த கையாலாகாத அரசை நாங்கள் நம்ப மாட்டோம் என்னும் கருத்து அவர்கள் வாழ்க்கையில் இயற்கையாகவே இருக்கிறது என்பதை காட்டுகிறது.

ஆனால் குறைந்த பட்சம் இந்த கோரிக்கையாவது அரசு நிறைவேற்றுமா என்றால் அதை இந்த அரசிடமிருந்து எதிர்பார்ப்பது தவறு என்பது போல் இருக்கிறது இந்த கார்ப்பரேட் அரசின் நடவடிக்கை.

ஊரடங்கிற்கு பிறகு தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக உயர்த்தி, ஏற்கனவே குற்றுயிரும் குலையுயிருமாக வருபவர்களை நொங்கி பிதுக்கி அவர்களிடம் இருக்கும் மீதமுள்ள இரத்தத்தை உறிஞ்சி அதில் வரும் இலாபத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொடுக்க முனைகிறது.

இனிமேல் தொழிற்சாலையில் ஆட்குறைப்பு, ஊதியத் தொகை குறைப்பு, சங்கம் வைக்கும் உரிமையை பறிப்பது இப்படி தொழிலாளர்களை ஒடுக்குவதற்கான வேலையை தான் இந்த கார்ப்பரேட் முதலாளிகளும் கார்ப்பரேட் அரசும் இணைந்து நடத்தப் போகிறது.

இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணமான கார்ப்பரேட் முதலாளிகளை காப்பது மட்டுமே இந்திய அரசின் தலையாய கடமை என்பது போல், அவர்களின் கடனை அதாவது பல ஆயிரம் கோடிகளை இந்த காலகட்டத்தில் தள்ளுபடி செய்கிறது.
இப்படிப்பட்ட இந்த அரசிடம் தான் நாம் மேற்கூறிய கோரிக்கையை வைக்கிறோம். இந்த அரசு நமது கோரிக்கையை நிறைவேற்றும் என்பது சந்தேகமே, நிறைவேற்ற தவறும் பட்சத்தில் நாம் போராடித்தான் பெறவேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

தகவல்:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை.

ரேசனில் போடும் புழுத்த அரிசிதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கையா ?

மிழ் நாட்டில் சுமார் 2 கோடியே 16 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏப்ரல்,மே, ஆகிய மாதங்களுக்கு இவர்களுக்கு அரிசி,துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்கள் தமிழக அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜூன் மாதத்திற்கும் இது நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும் தன் பங்கிற்கு 5 கிலோ அரிசி கொடுக்கிறது. இது போக பலசரக்கு சமான்களும் ரூ.500 மதிப்பில் தொகுப்பாக ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசு விளம்பரப்படுத்தியது.

ஆனால் ரேசன் கடைகளில் கேட்கும் போது பலசரக்கு சாமான்கள் இல்லை என்று பதில் வந்தது. ரேசன் பொருட்களாவது முறையாகக் கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை. முறைகேடாகத்தான் வினியோகிக்கப் பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டும் ரூபாய் 1000 அரசு அளித்த போது அதோடு சேர்த்தே ரேசன் பொருட்களும் வழங்கப்படவில்லை. காலதாமதமாக வழங்கப்பட்டது. இதில் நடைபெற்ற முறைகேடுகளை எதிர்த்து மக்கள் குரல் கொடுத்தனர்.

ரேசனில் வினியோகிக்கப்பட்ட பொருட்களும் தரமாக இல்லை. புழுத்த துர்நாற்றமடித்த அரிசி வினியோகிக்கப்பட்டது. அது வீடியோ எடுக்கப்பட்டு வாட்ச் அப்பில் வைரலாக வந்தது. இருந்தாலும் அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. சமைத்துச் சாப்பிடத் தகுந்த அரிசி மிகக் குறைவாகவே சப்ளை செய்யப்பட்டது. இது பற்றி கடை பொறுப்பாளரிடம் கேட்கும் போது எங்களுக்கு தரப்படுகிற பொருளை நாங்கள் கொடுக்கிறோம் என்று சொல்லி முடித்துக் கொள்கிறார்கள்.

புழுத்த அரிசி பெரும்பாலும் ஆடு,மாடு,கோழிகளுக்குத் தீவனமாகத் தான் பயன்படுகிறது. நல்ல அரிசி,பொருட்களை ஆளும் கட்சிக்காரர்களின் துணையோடு கடத்திவிடுவதாக மக்கள் சொல்கின்றனர். பொருட்களின் தரம், அளவு, முறைகேடுகளைக் கண்டித்து மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் அரசனி முத்துப்பட்டி சுற்று வட்டார கிராமங்களில் சென்ற மாதம் போடப்பட்ட அரிசி ஆக மோசமாக இருந்துள்ளது. பாதிக்குப் பாதி கருப்பு அரிசி கலந்து, புழுக்கூடு மற்றும் வண்டுகள் ஊர்ந்து கொண்டும் கெட்ட வீச்சம் அடித்துக்கொண்டும் இருந்துள்ளது. கடை ஊழியரிடம் நல்ல அரிசி வேண்டும் என்று மக்கள் கேட்டதற்கு அவர், ”வேறு அரிசி எதுவும் இல்லை. இதுதான் இருக்கிறது. வேணும்னா வாங்குங்க. இல்லைனா போங்க” என்று சொல்லிவிட்டார்.

இது பற்றி மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,மதுரை செயற்குழு உறுப்பினர் அய்யாக்காளையிடம் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கடைக்குப் போய் கேட்ட அவருக்கும் அதே பதில் தான் கிடைத்துள்ளது. கோபமடைந்த மக்கள் அரிசி வாங்க மறுத்ததோடு நல்ல அரிசி தரவேண்டும். உரிய அதிகாரிகள் வந்து பதில் சொல்ல வேண்டும் என்று கோரி தோழர் அய்யாக்காளை தலைமையில் கடையை முற்றுகையிட்டனர். குடிமைப் பொருள் வட்டாட்சியர், மற்றும் சிவகங்கை வட்டாட்சியருக்கு அய்யாக்களை போன் செய்தார் .மக்கள் கடையை முற்றுகையிட்டுக் காத்திருந்தனர். வெகு நேரம் கழித்து அதிகாரி ஒருவர் வந்தார். தாசில்தார் கொரோனா பிரச்சினைக்காக கள வேலையில் இருக்கிறார். இப்போதைக்கு அவரால் வரமுடியாது. இருக்கிற அரிசியை வாங்கிச் செல்லுங்கள்.பின்னர் பார்க்கலாம் என்று சொன்னார்.

புழுத்த அரிசியை அள்ளிக் காட்டிய பெண்கள் “இந்த அரிசியை நீங்களும் உங்கள் அதிகாரிகளின் குடும்பத்தினரும் பொங்கிச் சாப்பிடுவீர்களா?” என்று கேட்டனர். வந்தவர் பதில் சொல்ல முடியாமல் திரும்பிச் சென்றார். மக்களும் அரிசியை வாங்காமல் நாளைக்கு நல்ல அரிசி வரவேண்டும் இல்லாவிட்டால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்று எச்சரித்துவிட்டுச் சென்றனர். இந்த செய்தியை அய்யாக்காளை போனில் தாசில்தாருக்குத் தெரிவித்தார். மறு நாள் நேரில் வருவதாகச் சொன்னார் அதிகாரி. சொன்னது போலவே மறு நாள் இரண்டு அதிகாரிகளும் ஜீப்பில் வந்து இறங்கினர். மக்களும் கூடியிருந்தனர்.

அதிகாரிகள் அரிசியைப் பார்த்தனர். இந்த  நெருக்கடியான சூழ்நிலையில் இந்த அரிசியை வாங்கிப் போகச் சொல்ல அவர்களால் முடியவில்லை. அரிசியைக் கையில் அள்ளிப் பார்க்கக்கூட அவர்களால் முடியவில்லை. வண்டும் புழுவும் அவர்களது உடலில் கொரோனா போலப் பற்றிக்கொள்ளுமோ என்ற பயம். இதற்கிடையில் தோழர் அய்யாக்காளை சிவகங்கை நகர் ரேசன் கடை ஒன்றில் வழங்கப்பட்ட அரிசியைக் கொஞ்சம் எடுத்துவந்திருந்தார்.

அதை அதிகாரிகளிடம் காட்டி “நகர்ப்புறத்தில் ஓரளவுக்கு நல்ல அரிசியைப் போடுகிற நீங்கள் கிராமத்து மக்களுக்கு மட்டும் இப்படிப் புழுத்த அரிசியைப் போடுகிறீர்களே ஏன்?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு, “அந்த அந்த மாவட்டங்களில் கொள்முதல் செய்கிற நெல்லைத்தான் அரிசியாக்கி அந்த அந்த மாவட்டங்களில் வினியோகிக்கிறோம்” என்று குடிமைப் பொருள் வட்டாட்சியர் கூறியுள்ளார். அப்படியானால் உங்கள் மாவட்டத்தில் விளைகிற நெல்லின் தரம் இவ்வளவுதான் என்பது போல அவரது பேச்சு இருந்துள்ளது. அப்படியானால் நெல்லே விளையாத மாவட்டங்கள் மற்றும் சென்னை போன்ற நகரங்களுக்கு கம்பு, சோளம் கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள்தான் வழங்கப்படுகிறதா என்று கேட்கத் தோன்றுகிறது.

“அடுத்த மாதம் நல்ல அரிசி போட ஏற்பாடு செய்கிறோம்.இப்போதைக்கு இதை வாங்கிச் செல்லுங்கள் ” என்று சமாதானம் செய்தவரிடம் மக்கள் அடியோடு மறுத்துவிட்டனர். எனவே நளைக்கு வேறு நல்ல அரிசி போட ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள் அதிகாரிகள். மக்கள் முணுமுணுப்போடு கலைந்தனர்.

ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாட்கள் கழிந்தது. புது அரிசி வாங்குவதற்காக மக்கள் வந்தனர். அரிசி போடப்பட்டது ஆனால் அதே புழுத்த அரிசி. ஊர் பேர் தெரியாத கொள்ளை நோயால் வேலை இழந்து, வருமானம் இழந்து ரேசன் அரிசியை நம்பி பிள்ளை குட்டிகளுடன்  பசியைப் போக்க வேண்டிய  நிலையில் இப்படி சாப்பிட முடியாத புழுத்த அரிசியை எடப்பாடி அரசு போடுகிறது. என்ன செய்வது?

“அரிசிய வாங்காதிய. நல்ல அரிசிய போடுறேன்னு மூணு நாள் காக்க வச்சிட்டு பழையபடிக்கு அதே புழுத்த அரிசியப் போடுறானுக. இருங்க தாசில்தாருக்கு போன் போட்டு கேப்போம்” என்று தோழர் அய்யாக்காளை சொல்ல மக்கள் அதைக் கேட்காமல் கடைக்காரரிடம் வாய்க்கு வந்தபடி திட்டிக்கொண்டு அரிசியை வாங்கி மூடையைக் கட்டி தலையில் சுமந்துகொண்டு வீட்டை நோக்கி நடையைக்கட்டினர். அய்யாக்காளை கசங்கிய மனதோடு வெறித்துப் பார்த்தபடி அசையாமல் நின்றார்.

இந்தக் கையறு நிலைமையை அரசனி முத்துப்பட்டி கிரமத்து மக்கள் மட்டுமல்ல பல கோடி கூலி, ஏழை, நடுத்தர விவசாயிகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் வீடற்று வீதியில் வீசப்பட்டுள்ள பஞ்சைப் பராரிகளும் சந்தித்து வருகின்றனர். யாரையும் நம்பமுடியாத சூழலில் தன் காலை மட்டும் நம்பி தன்னையும் தன் குடும்பத்தையும் அதன் மீது ஏற்றி பல ஆயிரம் மைல் தூரம் நடக்கத் துணிந்துவிட்டனர். அவர்களது போராட்டத்தை மரணத்தை நோக்கித் திருப்பிவிட்டனர் மோடியும் அமித்ஷாவும் எடப்பாடியும்.

தகவல்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரைக் கிளை.

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரணம் வழங்கு ! திருச்சி ஆட்சியரிடம் மனு !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கம் சார்பாக கொரோனா ஊரடங்கு பாதிப்பில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ரூ.15,000/- நிவாரணம் வழங்கு! ஆட்டோக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்!
மீண்டும் ஆட்டோக்களை பழுது பார்த்து இயக்க ரூ.10,000/- வழங்கு! என்பன
உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர்கள் பாதுகாப்பு சங்க தலைவர் தோழர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள், பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர், உதவித்தலைவர் தோழர் சுந்தரராசு ஆகியோர் முன்னிலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பலர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க மாவட்ட ஆட்சியரகம் நோக்கி ஊர்வலமாக வந்தவர்களை, காவல்துறையினர் மெயின் ரோட்டிலேயே மறித்து “4 பேர் மட்டும் செல்லுங்கள் மற்றவர்கள் ஓரமாக நில்லுங்கள் !” என தடுத்தார்கள்.

ஆட்சியரக வாயிலிலேயே கொளுத்தும் வெயிலில் பெண்கள், குழந்தைகளுடன் என அமர்ந்து போராட்டம் நடத்தவே… காவல்துறை உள்ளே செல்ல அனுதித்து, “10 தோழர்கள் மட்டும் ஆட்சியரிடம் பேச வாருங்கள்…” என அழைத்து சென்றனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நிர்வாகிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
“அரசின் உத்தரவை பெற்று விரைவில் தீர்வு காண்பதாகவும், மாவட்ட நிதியிலிருந்து நிவாரணம் தர ஏற்பாடு செய்வதாகவும்,” மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

மக்கள் அதிகாரம், ம.க.இ.க., புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மனித உரிமை பாதுகாப்பு மைய தோழர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்விற்கு  ஆதரவளித்தனர்.

இறுதியாக சங்கத் தோழர்களுக்கு செயலர் மணலிதாஸ் நன்றி கூறினார்.

தகவல் :
ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்புச் சங்கம்
இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 97916 92512.