Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 281

டில்லி : மாற்றுக் கருத்துக்களை நசுக்க ஊரடங்கைப் பயன்படுத்தும் அரசு !

0

ந்தியாவில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கின் நிழலுக்கு மத்தியில் மத்திய அரசால் கட்டுப்படுத்தப்படும் டில்லி போலீசு, கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு துளியும் சம்பந்தமில்லாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. வீடுகள் மற்றும் அலுவலகங்களில் தேடுதல் நடத்துவது, தொலைபேசிகள், ஆவணங்களையும் பறிமுதல் செய்வது, தடுப்புக்காவலில் அடைப்பது, விசாரணை செய்வது, பெருவாரியான நபர்களைக் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளே அதன் நிகழ்ச்சி நிரலில் நிரம்பியுள்ளன.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் நெரிசலைக் குறைக்குமாறு உச்சநீதிமன்றம் அனைத்து அரசாங்கங்களுக்கும் வழிகாட்டுதல் கொடுத்துவரும் வேளையில், இந்தக் கைதுகள் நடந்து வருவதுதான் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

கைது செய்யப்பட்டவர்களின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும், இந்தியாவின் குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்படும் பாகுபாடுமிக்க திருத்தங்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்ததோடு தொடர்புடையவை. மேலும் கடந்த பிப்ரவரி மாதம் வடகிழக்கு டில்லியில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தினரின் குடியிருப்புகளைச் சுற்றி வன்முறைமிக்க மதவெறிப் படுகொலைகளைத் தூண்டிவிட்டு, அதில் பங்கேற்றதாகவும் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

1947-ம் ஆண்டு பிரிவினை சமயத்தில் தலைநகர் டில்லியில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு நடந்த மிகப்பெரிய இந்து – முஸ்லீம் கலவரம் இதுதான்.
நாடுதழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்குப் பின்னர், கடந்த மார்ச் மாத இறுதியில் உள்துறை அமைச்சகம் குற்றப் பிரிவு போலீசுக்குக் கொடுத்த வழிகாட்டுதல்களுக்குப் பிறகுதான், இந்த தடுப்புக் காவல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

வடகிழக்கு டில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கடந்த மார்ச் 22 முதல் ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை மட்டும் 25 முதல் 30 கைதுகள் வரை நடந்துள்ளன என்று ‘தி இந்து’ நாளேடு தெரிவிக்கிறது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகை செய்தியின்படி ஊரடங்கின்போது மட்டும் சுமார் 50 கைதுகளும், மொத்தத்தில் 802 கைதுகளும் நடந்துள்ளன. மேலும் சில தரப்புகளிலிருந்து வரும் தகவல்கள் கைது எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்கின்றன. ஒவ்வொருநாளும் சுமார் ஆறு முதல் ஏழு கைதுகள் நடைபெறுவதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஊரடங்கின் கீழ், ஊடகங்கள் மற்றும் சட்ட சேவைகளின் மீதான கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக சரியான எண்ணிக்கையை உறுதி செய்வதென்பது கடினமானது. டில்லி படுகொலை நிகழ்வுகளைத் தொடர்ந்த வாரங்களில் அப்பகுதி மக்களோடு நெருங்கிப் பணியாற்றிய எனது வழக்கறிஞர் நண்பர்களால் இந்த மதிப்பீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சஃபூரா சர்கார்

அப்பகுதி முசுலீம் மக்கள் குறிவைக்கப்பட்டதைத் தொடர்ந்து உமர் காலித், ஜாமியா மிலியா இசுலாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்பு தலைவர்களான மீரான் ஹைதர், சஃபூரா சர்கார் ஆகியோரை உள்ளடக்கிய இளம் இசுலாமிய செயற்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான குற்றவியல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் சஃபூரா சர்கார் கர்ப்பிணிப் பெண் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் அனைவரின் மீதும் கருப்புச்சட்டமான ஊபா சட்டத்தைப் பாய்ச்சியுள்ளது மோடி அரசு. பின்னர் இந்த தேடுதல்வலை இடதுசாரி மாணவர் தலைவர்களுக்கும் விரிவாக்கப்பட்டது. அனைத்திந்திய மாணவர் கழகத்தின் மாணவர் தலைவர் கன்வால்ஜித் கவுர் வீட்டில் தேடுதலை மேற்கொண்ட போலீசு அவரது அலைபேசியை பறிமுதல் செய்தது.

டில்லி போலீசின் இந்த “தொடர்பற்ற கைதுகள்” குறித்து கவனத்தில் எடுத்துக் கொண்ட டில்லி சிறுபான்மையினர் கமிசனின் தலைவர், டில்லி போலீசு கமிசனருக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஊரடங்கு காலத்திலும் “ஒவ்வொரு நாளும் டஜன்கணக்கான முசுலீம் இளைஞர்களை போலீசு கைது செய்வதாக” அதில் குறிப்பிட்டிருந்தார். பெருந்தொற்றுச் சூழலை வகுப்புவாதமாக்குவதாக விமர்சனம் செய்ததற்காக சிறுபான்மையினர் கமிசன் தலைவர் மீது தேச விரோத வழக்கைப் பதிவு செய்துள்ளது டில்லி போலீசு.

படிக்க:
உங்கள் முறை வருவதற்கு முன் நீங்கள் பேசிவிடுங்கள் ! – ஆனந்த் தெல்தும்டேவின் திறந்த மடல் !
♦ பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம் ! நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள் !

கைதுகளையும், தடுப்புக் காவல் நடவடிக்கைகளையும் போலீசு இரட்டிப்பாக்கிக் கொண்டிருக்கையில், சட்ட உதவிகள் ஊரடங்கின் கீழ் அனுமதிக்கப்பட்ட “அவசிய சேவைகள்” பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் அடிப்படை உரிமைகளை இடைநீக்குவது என்பதே இதன் பொருள்.

சட்டப்பூர்வ நெறிமுறைகளுக்கு மதிப்பேதுமில்லை. போலீசின் பிடிக்குள் கொண்டுவரப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முதல் தகவல் அறிக்கையின் நகல் கூட கொடுக்கப்படவில்லை. பெரும்பாலும் அவர்கள் இந்தக் கைதுகளின் முகாந்திரத்தை புரிந்து கொள்ள முடியாதவர்களாகவும், சட்ட உதவிக்கு ஏற்பாடு செய்ய போதுமான சமூக தொடர்பும் நிதியாதாரமும் இல்லாதவர்களாகவும், பயமடைந்த குழப்பமடைந்த சூழலில் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

அவர்கள் அனைவரும் பெரும்பாலும் ஊரடங்கு மற்றும் டில்லி படுகொலையால் தங்களது வாழ்வாதாரங்களை இழந்த குறு வணிகர்களாகவும் அல்லது தினக்கூலிகளாகவும் இருப்பதன் காரணமாக அவர்களின் கையறுநிலை தீவிரமாகியுள்ளது.

கைது செய்த 24 மணிநேரத்திற்குள் நீதிபதி முன்பு குற்றம்சாட்டப்பட்ட நபர் நேர்நிறுத்தப்பட வேண்டும் என்ற சட்டப்பூர்வ தேவை வெறும் கண் துடைப்புக்கானதாக சுருக்கப்பட்டது. திறந்த நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், சிறைகளிலேயே அது நடைபெற்றது. சிறை வளாகத்திலேயே குற்றம்சாட்டப்பட்ட நபர்கள் நீதிபதிகளின் முன்னர் நேர்நிறுத்தப்பட்டதோடு, தங்களுக்காக வாதிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டனர். ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் விதிமுறைகளைக் காரணம் காட்டி, இந்த வழக்கு கேட்பிற்கு வழக்கறிஞர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. கீழ் நீதிமன்றங்களில் வீடியோ கான்பெரன்சிங் வழக்குக் கேட்பு வசதியும் கிடையாது.

பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைப் போராளிகளுக்கு, போலீசு நடவடிக்கைகளால் குறிவைக்கப்பட்டவர்களை நெருங்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே இருந்தது. பயம் மற்றும் இரகசியத்தின் திரைமறைவுகளை சில ஊடக அறிக்கைகள் மட்டுமே ஊடுருவின. இந்த சுகாதார அவசரநிலையில், நீதி என்பது அவசியத் தேவையில்லை. சட்டத்திற்கு முன்னர் அனைவரும் சமம் என்ற கொள்கையும் தன்னளவில் ஊரடங்கிக் கொண்டது.

பெருந்தொற்று காலகட்டம் என்பதைக் காரணமாக வைத்துக் கொண்டு உலகெங்குமுள்ள வலதுசாரி சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஜனநாயக உரிமைகளை நசுக்குதல், குடிமக்கள் இயக்கங்களின் மீது முன்னெப்போதுமில்லாத பெரும் அதிகாரத்தை செலுத்துவது குறித்து பல செய்திகள் இருக்கின்றன. ஆளும் இந்திய அரசு நிறுவனம் அந்த நெறிமுறைகளைக் கடன் வாங்கியிருக்கின்றன என்பது கண்கூடாகத் தெரிகிறது.

தீவிரமான நம்பிக்கை மற்றும் அமைதி நிறைந்த ஜனநாயக உறுதிப்பாட்டைக் கொண்ட நிலைமைகளை இந்தியா காணுறுவது என்பது ஏற்கெனவே பழங்கால நினைவுகளாகி வருகின்றன. குடிமக்களுக்கான உரிமைகளை மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டும் அரசாங்கத்தின் முயற்சியிலிருந்து, இந்தியாவின் மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்ட அறங்களைக் காக்க பல்வெறு மத அடையாளங்கள், வர்க்கம், சாதி, பாலினம் மற்றும் மொழியைக் கொண்ட குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எழுந்து நிற்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்திற்குப் பின்னர், முன்னெப்போதுமில்லாத வகையிலான அளவும் அறமுனைப்பும் கொண்ட இந்த இயக்கத்தின் வெற்றி ஆளும் அரசை மோசமாக கலகலக்கச் செய்துள்ளது. ஏனெனில் இது ஆளும் அரசின் பெரும்பான்மைவாத திட்டத்தின் ஆன்மாவில் அறைந்துள்ளது.

இந்தியாவின் குடியுரிமைச் சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்கள் அனைத்தும் வன்முறையானவை மற்றும் தேசவிரோதமானவை என்ற புனைகதையை உருவாக்குவது மற்றும் பெருந்தொற்றுப் பிரச்சினையைக் காரணம் காட்டி அனைத்து மாற்றுக் கருத்துக்களையும் இழிவான வகையில் அழித்தொழிப்பது என்ற வகையிலேயே ஆளும் அரசு இந்த மக்கள் எழுச்சிக்கு எதிராகக் கடுமையாகப் போரிடுகிறது என்பது கண்கூடு.

அரசின் இந்தப் போர், அதன் போக்கில் தடுத்து நிறுத்தப்படவில்லை எனில் ஜனநாயகம் மற்றும் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டமும் தீவிரமாக பலவீனமடையும்.


கட்டுரையாளர் : ஹர்ஸ் மந்தேர், அமிதான்ஷு வர்மா

தமிழாக்கம் : நந்தன்
நன்றி : ஸ்க்ரால். 

பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம் ! நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள் !

பத்திரிக்கைச் செய்தி

19.05.2020

  • கரூர் எம்பி ஜோதிமணியை இழிவாக பேசிய பாஜக கரு.நாகராஜனின் காலித்தனத்தை கண்டிக்கிறோம்!
  • நியுஸ் 7 தொலைக்காட்சியே மன்னிப்பு கேள்!
  • ஆர்.எஸ்.எஸ் சங்கிகளை புறக்கணிப்போம்!

10.05.2020 அன்று நியூஸ்7 தொலைக்காட்சியில் விவாதத்தின் போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ. ஜோதிமணி அவர்களை ஆபாசமாகவும் இழிவாகவும் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன் என்பவர் பேசியுள்ளார் .

கரு. நாகராஜனுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி எச்.ராஜா தன் புத்தியை காட்டியிருக்கிறார்.

ஜோதிமணிக்கு ஆதரவாக இருப்பதாக பலரும் #I_standwith_Jothimani என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கியுள்ளனர். ஜோதி மணியும், சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதியும் இதுபோன்ற பிஜேபியினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள் .

பாஜக கரு நாகராஜன்

கரு. நாகராஜன், எச்.ராஜா போன்ற பிஜேபி மற்றும் அதிமுகவினர் விவாதத்தின்போது கேட்கும் கேள்விகளுக்கு நேர்மையாக பதில் சொல்வதற்கு வக்கில்லாத போதெல்லாம் எதிர்த்தரப்பில் இருப்பவர்களை ஆபாசமாக பேசுவதும் இழிவாக நடத்துவதும் உலகம் அறிந்த உண்மை தான். இதை தொலைக்காட்சி நிர்வாகங்கள் அனுமதித்ததும் உலகறிந்த உண்மை தான்.

இப்படி நடைபெற்ற போதெல்லாம் கரு.நாகராஜன் போன்ற நபர்கள் தொலைக்காட்சி நிர்வாகத்தால் வெளியேற்றப்படவில்லை, தண்டிக்கப்படவும் இல்லை.
அதன் தொடர்ச்சியாகவே இப்பொழுது எல்லை மீறி பேசியிருக்கிறார்.

கரு. நாகராஜன் போன்ற பிஜேபி நபர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்பது உலகம் அறிந்தது தான். அதுவல்ல பிரச்சனை. இப்பிரச்சனைக்கு பின்னரும் கரு. நாகராஜனை விவாதத்தில் தொடர்ந்து பங்கேற்க வைத்து இருக்கிறது நியூஸ்7 தொலைக்காட்சி.

படிக்க:
♦ நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்
♦ ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !

இந்த மோசமான செயலுக்காக நியூஸ்7 தொலைக்காட்சி பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.

ஏற்கனவே தோழர் திருமுருகன் காந்தியை மிகவும் இழிவாகப் பேசிய கரு. நாகராஜன் விவாதத்தில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டார்.

தமிழக மக்களிடம் கொஞ்சமும் செல்வாக்கு இல்லாத பாஜக ஆர்எஸ்எஸ் அமைப்பினர், மத்திய அரசதிகாரத்தினை காட்டி தொலைக்காட்சி நிர்வாகங்களை மிரட்டி விவாதங்களில் தங்களது வலதுசாரி நிபுணர்களுடன் பங்கேற்பதும், தமிழகத்தில் மக்கள் குரலை ஓங்கி ஒலிக்கும் மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம், மே.17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை அழைத்தால் நாங்கள் வர மாட்டோம் என மிரட்டுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.

இந்த ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலின் மிரட்டலுக்கு இந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் பணிந்து போகலாம். தமிழக மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது.

சக மனிதர்களை இழிவாக நடத்தக்கூடிய இதுபோன்ற ஆர்எஸ்எஸ் பிஜேபி நபர்களை அனுமதிக்க மாட்டோம் என்று தொலைக்காட்சி நிர்வாகங்கள் உறுதியளிக்கும் வரை விவாதங்களில் பங்கேற்க கூடாது என்ற முடிவை தமிழக அரசியல் கட்சிகள் எடுக்க வேண்டும்.

மேலும் ஜோதிமணி அவர்களை இழிவாகவும், ஆபாசமாகவும் பேசிய கரு.நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

தங்கள்
மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு மற்றும் புதுவை
தொடர்புக்கு : 99623 66321

ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !

PP Letter headபத்திரிக்கை செய்தி

20.05.2020

  • ஸ்டெர்லைட் படுகொலை தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !
  • கருப்பு கொடி, முழக்க அட்டையுடன், மே.22, 2020 : காலை 10-மணி வீட்டிலிருந்து நினைவு அஞ்சலி !

தூத்துக்குடியின் சுற்றுச்சூழலை சீரழித்து மக்களை நோய்வாய்ப்படுத்திய நாசகார ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூடக் கோரி 2018ம் ஆண்டு மே.22 அன்று பேரணியாக தூத்துக்குடி மக்கள் சென்ற போது, காவல் துறையின் துப்பாக்கி சூட்டிற்கு, பெண்கள், ஆண்கள் என 15 நபர்கள் கொல்லப்பட்டனர்.

இப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்கள் அதிகாரத்தின் தோழர் செயராமன் உள்ளிட்ட அனைத்து தியாகிகளுக்கும் இரண்டாம் நினைவுத் தினத்தை முன்னிட்டு எங்களது வீரவணக்கங்களை உரித்தாக்குகிறோம். சுற்றுச்சூழலையும், மக்களின் வாழ்வையும் அழிக்கின்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான உலகளாவிய போராட்டங்களுக்கு முன்னுதாரணமானது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம்.

தமிழக மக்களின் உறுதியான போராட்டத்தால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைத்தது தமிழக அரசு. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்குவதற்காக ஒத்திவைத்துள்ளது. தீர்ப்பு எவ்வாறு வந்தாலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு எனும் மற்றுமொரு சுற்று இருக்கின்றது என காத்திராமல் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையினை தூத்துக்குடியினை விட்டு நிரந்தரமாக அகற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தங்கள் மண்ணில் நாசகார ஆலை வேண்டாம் என மக்கள் முடிவெடுத்து போராடி அதற்காக தங்களின் இன்னுயிரையே தந்து நிற்கும் போது அதனை ஒட்டித்தான் அரசு நிர்வாகங்கள் நிற்க வேண்டும்.

தூத்துக்குடி மக்களின் எதிர்ப்பினையும் மீறி நலத்திட்ட உதவிகள் எனும் நயவஞ்சகத் திட்டத்தின் கீழ் ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து வட்டாரப் பகுதியில் செயல்பட அனுமதிப்பது. அதை எதிர்க்கும் மக்களை முன்னணியாளர்களை பொய் வழக்கில் கைது செய்வது ஆகியவை தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறது. எனவே மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

தமிழக காவல்துறை போராடிய மக்கள் மீது நூற்றுக்கணக்கான முதல் தகவல் அறிக்கைகள், ஒப்புதல் வாக்குமூலங்கள் என தங்கள் கைவண்ணத்தில் மக்கள் வன்முறை, அமைப்புகளின் தூண்டுதல் என மக்கள் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி கதை எழுதி நூற்றுக்கணக்கானோரை கைது செய்து சிறைப்படுத்தினர். தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்பு சட்டம் என முன்னணியாளர்கள் வழக்கறிஞர்கள் மீது ஏவப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நீண்ட சட்டப் போராட்டத்தில் உயர்நீதிமன்றம் அனைவரையும் விடுதலை செய்ததுடன், அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றி உத்திரவிட்டது. வழக்கும் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) புலனாய்வுக்கு விசாரணையும் மாற்றப்பட்டது.

துப்பாக்கி சூட்டினை நேரில் பார்த்தவர்கள் குறிப்பான விவரங்களுடன் சிபிஐக்கு புகார்கள் கொடுத்தபிறகும் எந்த போலீசாரும் கைது செய்யப்படவில்லை. துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்ட வருவாய்துறை அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. 15 பேரின் படுகொலைக்கு காரணமான அதிகாரிகள், போலீசார் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக சுற்றுச்சூழல் சட்டவிதிகள் திருத்தம், விரைவான அனுமதி, கனிம இயற்கை வளங்களை வரைமுறையின்றி சூறையாட பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு திறந்து விடுதல் என மோடியின் கார்ப்பரேட் பாசிச ஆட்சி தீவிரமான தாக்குதலை இந்திய மக்கள் மீது தொடுத்துள்ளது.

விசாகப்பட்டினம் விசவாயு மரணங்கள் போல் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கும் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க ஸ்டெர்லைட் போராட்டம்தான் முன்னுதாரணமான போராட்டம் ஆகும். மீத்தேன், ஹைட்ரோகார்பன், மின்வழித்தடம், பெட்ரோ-கெமிக்கல் மண்டலம், வணிகத் துறைமுகம் என வேதாந்தா, அம்பானி, ஆதானி போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தினை சுற்றி வளைக்க உள்ளன. இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும், சுற்றுசூழலை நாசமாக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக உறுதியாகப் போராடவும், தூத்துக்குடி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்த உறுதியேற்போம்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான மே.22 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தங்களின் இருப்பிடங்களுக்கு முன்போ, தெருவிலோ கருப்பு உடையணிந்தோ அல்லது கருப்பு கொடி ஏந்தியோ

மே.22 ஸ்டெர்லைட் படுகொலை!
தூத்துக்குடி தியாகிகளுக்கு நெஞ்சார்ந்த அஞ்சலி!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று!
போராடிய மக்களை சுட்டுக் கொன்றவர்களுக்கு தண்டனை வழங்கு!
கார்ப்பரேட்டுகளுக்காக சுற்றுச்சூழல் சட்டத்தினை திருத்தாதே!

ஆகிய முழக்கங்களுடன், சமூக இடைவெளியுடன் நின்று தூத்துக்குடி தியாகிகளின் நினைவை போற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜூ
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு மற்றும் புதுவை
தொடர்புக்கு : 99623 66321

“அவர்கள் எங்களை கைவிட்டு விட்டார்கள்” தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் !

ப்போதுவரை யாரும் எங்களுக்கு உதவவில்லை. இப்போது யாராவது எங்களை காப்பாற்ற வருவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை என்று கூறுகிறார். 30 வயதுடைய  கட்டிட தொழிலாளியான சமீர்குமார்.

மே13 அன்று சென்னையின் வடப்புற எல்லையில் கொல்கத்தா நெடுஞ்சாலையில் நடந்துசெல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள். (படம் அறிவரசன்)

வியாழன் அன்று, சென்னையையும் கொல்கத்தாவையும் இணைக்கின்ற என்எச் 16 அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டியில் சுமார் 2000 புலம்பெயர் தொழிலாளர்கள் குழுமினர்.

சென்னையிலிருந்து கும்மிடிபூண்டிவரை ஏற்கனவே 45 கிலோமீட்டர் தூரம் நடந்து வந்திருந்த அவர்கள், உத்திரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், கொல்கத்தா, ஒரிசா, மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள தங்களின் வீடுகளை நோக்கி புறப்பட்டனர்.

மே14 அன்று, சென்னையில் உள்ள என்எச்16ல் ஹௌராவை நோக்கி நடந்துசென்றுகொண்டிருந்த புலம்பெயர் குடும்பத்தை சேர்ந்த குழந்தை,  தன்னார்வ தொண்டர்களிடமிருந்து நிவாரண பொருட்களை பெறும் காட்சி(படம் அறிவரசன்)

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அரசாங்கம் தங்களை தங்களின் சொந்த வீடுகளுக்கு அழைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையின்றி காத்துக் கிடக்கின்றனர். உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் குஜராத் அரசுகள்  மூன்று ஆண்டுகளுக்கு தொழிலாளர் சட்டங்களை தளர்த்தி மாற்றியிருக்கிற போது, இதற்கிடையில், கர்நாடக அரசோ  திரும்பவும் இங்கேயே தங்கிக்கொண்டு பொருளாதாரத்திற்கு புத்துயிர் கொடுங்கள் என்று  புலம் பெயர் தொழிலாளர்களை  கேட்டுக்கொள்கிறது.

போலிசின் தாக்குதால் ஊனமுற்ற போதிலும் தமிழகத்தின் ஓசூரிலிருந்து 340 கிலோமீட்டர் சிரமத்துடன் நடந்துவந்திருந்த சமீர் குமார் என்ற கட்டிடத் தொழிலாளி கூறுகிறார், ”இனிமேலும் என்னால் காத்திருக்க முடியாது.  உத்திரபிரதேசத்தில் உள்ள பல்லியாவிற்கு எப்போது போய் சேருவேன் என்று எனக்கு தெரியவில்லை. என்னிடம் பணமும் இல்லை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையும் இல்லை. இப்போது வரை யாரும் எங்களுக்கு உதவி செய்யவில்லை. இப்போது யாரும் எங்களை காப்பாற்ற வருவார்கள் என்று நினைக்கவில்லை. மாதம் ரூ 4000 சம்பாதித்தேன். மார்ச் மாதம்  வரைதான் வேலைசெய்தேன். என்னைச் சார்ந்திருக்கின்ற என் வயதான பெற்றோர்களும், மனைவி மற்றும் பிள்ளைகளும் எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரயில் சேவைகள் குறைவாகவே உள்ளது. தமிழகத்தின் போலிசு எங்களை லத்தியால் தாக்கியது. நாங்கள் 19 பேர் இந்த பயணத்தை மேற்கொள்கிறோம்”.

கட்டுமான இடங்களிலும், சிறு தொழில் நிறுவனங்களிலும் ரெஸ்டாரண்டுகளிலும் இன்னும் பல முக்கிய இடங்களிலும் பணியாற்றி அந்த நகரத்தை இயக்கிய தொழிலாளர்கள், அவசியமான பொருட்களை மூட்டை முடிச்சுகளாக கட்டிக்கொண்டு அவர்களின் வாழ்வாதாரமாக இருந்த அப்பகுதிகளை விட்டு  விலகிச் சென்றனர்.

படிக்க:
♦ நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்
♦ கொரோனா ஊரடங்கு : நெருக்கடியில் திருச்சி குட்ஷெட் தொழிலாளர்கள் !

விளிம்பு நிலை மக்களுக்காகவும், தற்போது வழி நெடுக செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்களும் தண்ணீர் பாட்டில்களும்  வினியோகம் செய்துவரும் சேவை கரங்கள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் திலக்ராஜ் கூறுகிறார்”,  நான்காம் கட்ட ஊரங்கு உத்தரவு வர இருக்கின்ற நிலையிலும்,  இந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளை புலம்பெயர் தொழிலாளர்கள் நம்புவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்த அரசாங்கம் அழைத்துச் செல்லும் என்று காத்திருந்து அவர்கள் உயிரை தியாகம் செய்யமுடியாது. அவர்கள் தங்களுடைய கூலிகளை பெறவில்லை. வீட்டு வாடகையும் கட்டமுடியாது. ஏன் அவர்கள் இங்கே இருக்கவேண்டும்? இந்த துரோகத்தை உணர்வதற்கேனும் அவர்கள் உயிரோடு இருக்கட்டும்.

ஏப்ரல் 22 அன்று, சுமார் 40 புலம்பெயர் தொழிலாளர்களை கொண்ட முதல் பிரிவுகளில் ஒன்று சென்னையிலிருந்து விசாகப்பட்டினம் வரை பத்து நாட்களில் 800 கிலோமீட்டர் பயணித்திருந்தது. தொழிலாளார்கள் தங்களுடைய இருப்பிடத்தை அடைந்த போது, அந்த மாநில அரசாங்கத்திற்கு  தெரிவித்தனர். அவர்களில் சிலர் அரசின் மையங்களிலும் வைத்து தனிமைபடுத்தி பராமரித்தது. மற்றவர்களை  தனிமைபடுத்தியது.

மே 13 அன்று, சென்னை ஹௌரா தேசிய நெடுஞ்சாலை 16ல் நடந்துசெல்லும் புலம்பெயர் தொழிலாளிகள். (படம் அறிவுக்கரசு)

”கடந்த வியாழன் அன்று, சிரிபெரம்புதூரில் உள்ள தொழிற்சாலைகளிலிருந்து கைக்குழந்தைகள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட மற்றொரு தொழிலாளர்களின் குழு ஆந்திராவை நோக்கி நடக்க தொடங்கியிருந்தது. அவர்கள் ஏற்கனவே 40 கிலோ மீட்டர் தூரத்தை ஒரே நாளில்  கடந்திருந்தனர். பத்து தொழிலாளர்களை கொண்ட ஒரு குழு மத்திய பிரதேசத்திற்கு சென்று கொண்டிருந்தது. இன்னொரு குழு கொல்கத்தாவை நோக்கி நடந்து கொண்டிருதது. இந்த முழு காலகட்டத்திலும் அவர்கள் கண்டு கொள்ளப்படாத நிலையில், மாற்றம் உடனே வர இருக்கிறது என்ற நிச்சயமான நம்பிக்கையில் அவர்கள் இருக்கவேண்டும் என்று  நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?” என்றார், திலக்.

இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த மூன்று புலம்பெயர் தொழிலாளர்களும் அங்கே நடந்து கொண்டிருந்தனர். அவளில் இருவர் வயதானவர்கள் ஒருவர் மாற்றுத் திறனாளி. அவர்கள் சொந்த நகரத்திற்கு செல்வதற்கான பயணச்சீட்டு பெற்று வைத்திருந்த போதிலும் போலிசு அவர்களின் மொழியை  புரிந்து கொள்ளாததால் அவர்கள் ரயிலில் பயணிக்கும் வாய்ப்பை இழந்தனர். டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் அவர்கள் இருந்தனர். எனினும் மேற்குறிப்பிட்ட நிகழ்வின் காரணமாக அவர்கள் திருப்ப அனுப்பபட்டனர்.

அந்த இருவரும் ஒரு மாதகாலமாக அவர்களுடைய மாநில அரசு அலுவலர்களை தொடர்பு கொள்ள முடியாததால் தற்போது மற்ற தொழிலாளர்களை போல் சமூக இடைவெளியை கடைபிடித்து  வீட்டிற்கு நடந்து செல்வதற்கு முடிவு செய்துள்ளனர் என்று கூறுகிறார், அவர்.

ஷிராமிக் எக்பிரஸ் வண்டியில் செல்வதற்கான டிக்கெட் பதிவு செய்திருந்தாலும், சிலர் அரசின் மீது நம்பிக்கை வைக்காமல் மிதி வண்டி வாங்கியுள்ளனர். உணவை விட மிதி வண்டி மிதித்து செல்வதில்,  நம்பிக்கையை ஆதாரமாக கொண்டுள்ளனர்.

உத்திரபிரதேசத்தில் உள்ள லக்னோ, பூதான், ஜான்பூர் ஆகிய நகரங்களுக்கு மே 13 அன்று, நடந்துசென்றுகொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள். (படம் அறிவரசு)

மத்திய உள்துறை அமைச்சகம் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு ஷிராமிக் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்வதையும் அவர்களை நடந்து செல்ல கூடாது என்பதை உத்திரவாதம் செய்யுமாறும்  மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஒவ்வொரு ரயிலும் அதிகபட்சம் 1200 பேரை ஏற்றிச்செல்லும். கிட்டத்தட்ட 9000 பேரை சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பியுள்ளதாக மே 11 அன்று  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, சென்னையில் மட்டும் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 50,000. ஆனால் இதற்கு மாறாக உண்மை நிலவரமாக 15 இலட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இவர்களில் 5 இலட்சம்பேர் மட்டுமே சென்னையில் மட்டுமே உள்ளனர். இது, தமிழகத்தில் எத்தனை பேர் புலம்பெயர் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதையும் அவர்களுக்கு உதவி செய்ய மறுப்பதையும் காட்டுகிறது. அத்தொழிலாளர்கள் குறித்து தனிஒரு பதிவேட்டை பராமரித்து எல்லாம் சிறப்பாக நடப்பதாக வைத்திருக்கிறது. அரசு. ஆனால் களநிலவரம் வேறாக உள்ளது. அத்தொழிலாளர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஒவ்வொரு 60 கிலோ மீட்டர் தூரத்திற்கும் வகை பிரித்து   நிறுத்தங்களை அமைத்து பணியாற்றும் போது களநிலவரம் வேறாக உள்ளது என்கிறார்.

75,000 உறுப்பினர்களை கொண்டு சமூகத்தின் புதிய முகம் என்ற ஃபேஸ்புக் குழுவை நடத்தி தன்னார்வ தொண்டு வேலைகளை செய்துவரும் திலிப் சீனிவாசன். நாம் ஒரு ஜனநாயகத்தில் வாழ்ந்தாலும் அதன் உள்ளடக்கம் அதற்கு அப்பாற்பட்டதாக மாற்றப்பட்டிருக்கிறது. பணமோ அரசியல் ஆதரவோ இல்லாத்தாலும் மேலும் உங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படுவதாலும் அந்த புலம்பெயர் தொழிலாளர்களை  கட்டாயமாக துப்பாக்கி முனையில் ஊருக்கு செல்லவிடாமல் திரும்ப பெற்று வைத்திருப்பது சரியா? இது கொத்தடிமைத்தனம் இல்லையா? என்று கேட்கிறார் ஒரு ஜெயேந்திர பூபதி என்ற தன்னார்வலர்.

குறிப்பாக காஞ்சிபுரம், திருப்பூர், கோயம்புத்தூர் போன்ற மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளை ஒவ்வொரு மணிநேரத்திற்கும் சுமார் 200 புலம்பெயர் தொழிலாளர்கள் வரை கடக்கின்ற அளவிற்கு தமிழகத்தின் நிலை கொதிப்பாக உள்ளது என்கிறார், ’புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சென்னை குடிமக்களின் கோவிட் ஃபண்ட்’ என்ற அமைப்பின் தன்னார்வளர் டி. வெங்கட்.

”இனிமேலும் அவர்களை இங்கேயே தங்கிக் கொள்ளுங்கள் என்று அவர்களை நாம் கேட்க முடியாது. ஏனென்றால் அவர்களை ஊருக்கு அனுப்புவதற்காக இயக்கப்படும்  ரயில்களின் எண்ணிக்கை சொற்பமாகவும் உத்திரவாதமற்றதாகவும் உள்ளது. அவர்கள் பதற்றத்துடன் உள்ளனர். ஏனெனில் அவர்களில் அனேகமானோர் ரயில் டிக்கெட்பெற இயலவில்லை. மேலும்  அவர்களை ஏற்றாமலேயே ரயில் புறப்பட்டு விடுகிறது என்பது அவர்களுக்கு தெரிகிறது. ஊருக்கு அனுப்பி வைப்பதில் அரசாங்கம் யாருக்கு, எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பதற்றத்துடன் கூடிய அழைப்புகள் எங்களுக்கு வருகிறது. எங்களால் உதவி செய்யமுடியவில்லை.  பெரிய அளவில் புலம்பெயர் தொழிலாளர் கூட்டம்  வெளியேறியதை வடமாநிலம் சந்தித்தித்த போது, ஏற்பட்ட ஒரு பிரச்சினையாக இது இல்லை. ஆனால் இப்போது அவர்கள் கைவிடப்பட்டு விட்டார்கள். கடந்த மூன்று நாட்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் உயர்வை பார்த்துவருகிறோம்,” என்றார், அவர்.

மே 15 அன்று, தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரபிரதேசம் வரை நடந்து சென்றிருந்த இடம்பெயர்வு தொழிலாளர்களை லாரிகளில் பிடித்து அடைத்து மீண்டும்   கொண்டுவந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் எந்த முறையுமின்றி இறக்கி விட்டனர். இறுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் அடைத்து விட்டனர். தமிழ்நாட்டின் எல்லை பகுதிக்கு அனுப்புவதற்கு முன்பு ஆந்திரபிரதேச போலிசு அந்த இளைஞர்களை பலமாக லத்தியால் அடித்தது.. அவர்கள் பசியோடு திரும்ப அனுப்பப்பட்டனர். அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டபோது, அடிபட்ட காயத்தை ஆற்றிக் கொள்வதற்காக ஒரு வலிநிவாரண தைலம் கேட்டனர்.

சுமார் 300 புலம் பெயர் தொழிலாளர்கள்   சிரமத்துடன், தங்களால் முடிந்த அளவு  நடந்து விஜயவாடா வரை சென்று விட்டவர்களை பிடித்து மூன்று டிரக் வண்டிகளில் வைத்து தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டனர்.  ஒரு ட்ரக் வண்டி இறக்கிவிட்ட சென்னை சென்ரல் ரயில்வே நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் மீது மீண்டும் போலிசு தடியடியை நிகழ்த்தியது. ”அரசு அலுவலர்கள் அவர்களை சொந்த நகரங்களுக்கு அனுப்ப உறுதிகொடுத்த போதிலும்,  அவர்களை வீட்டிற்கு பாதுகாப்பாக அனுப்ப்ப்படும் வரை அவை வார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. இதற்கிடையில், எல்லைகள் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையிலும் அவர்கள், யார் மீதும் முழுமையாக நம்பிக்கை வைப்பதாக இல்லை,” என்கிறார் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த நகரங்களுக்கு அனுப்பிவைப்பதில் உதவி செய்துவரும் இயற்கை விவசாயிகள் சந்தை என்ற அமைப்பிலிருந்து செயல்பட்டுவரும் ஆனந்தூ என்பவர்.

மே 14 அன்று, சென்னை- ஹௌரா என்எச்16 ல் நடந்துசெல்லும் இடம் பெயர் தொழிலாளர்கள். (படம் அறிவரசு).

மே 16 ஆம் தேதி வரையிலான காலத்தில், 9000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்தியாவிலேயே மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. இங்கு இப்போது 10,108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 71 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், தமிழகத்தின் தலைநகரத்தின் அருகில் , நிலைமை மாறாமல் அப்படியே உள்ளது. நொய்டா – கிரேட்டர் நொய்டா அதிவிரைவு பாதை வழி நெடுக  புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்து ஊர்களுக்கு செல்லும் அவர்களுக்கு,  உச்சநீதி மன்றத்தில் பதிவு பெற்ற வழக்கறிஞர் அனஸ் தன்விர் சித்திக் உணவளித்து உதவிவருகிறார் .

“தொழிலாளர்களின் இந்த இயக்கம் ஊரடங்கு எப்படியோ அப்படியே தீர்க்கப்படாமல் உள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களின் முதல் இடம்பெயர்வு அலையை பொருத்தவரை அச்சம் காரணமாக கூட இருக்கலாம்.   ஆனால் இப்போதும் ஏன் அவர்கள் திரும்ப நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்? கொரானாவை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொறுமை காக்க நிர்பந்திக்கப்பட்டு ஊடங்கு உத்தரவு போட்டது போலவே ஒருபோதும் வராத உதவிக்காக  தொழிலாளர்கள் காத்திருந்தனர். முழு ஊரடங்கு காலம் முழுதும் அவர்கள் பசியோடு இருந்து வந்தனர்.  இது, நடுத்தர வர்க்கத்திற்கும், மேட்டுக்குடி வர்க்கத்திற்கும் உதவ முடிந்தவர்களின் கூட்டு தோல்வியும் ஆகும். அது அவர்களுடைய கூலி கொடுப்பதை தொடர்ந்து  கொடுத்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்யவில்லை.  மேலும், கார்ப்பரேட்டுகள் தங்களின் ஏராளமான சொத்துக்களை வேறு வழியில்  வியாபாரத்தை பெருக்குவதற்கு பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் அவர்கள் இப்போது தங்களைவிட பல மடங்கு கீழான நிலையில் உள்ள தொழிலாளர்களிடம் கருணை கேட்டுக் கொண்டிருக்கின்றனர். இது, தொழிலாளிகள் என்போர் எப்போதுமே  தன்மை ரீதியாகவே மதிப்பற்றவர்கள், ஆனால் தன் சொத்தை பெருக்கி கொள்வதற்கு இவர்களுக்கு பயன்படக்கூடிய ஒரு சரக்கு என்ற கசப்பான உண்மையை  உணரச் செய்திருக்கிறது,” என்கிறார் அவர்.

அனஸ், அனைக்குமான இஃப்தார் என்ற இயக்கத்தின் நிறுவனருமாவார்.  2018 ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம்,   போதிய உணவு கிடைப்பதில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வு இருப்பதால்  உரிமைகள் மறுக்கப்படும் விளிம்புநிலை மக்களுக்கும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும், அங்குள்ள அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும்  நம்பிக்கையோடு இஃப்தார் உணவளித்து ரம்ஜானை கொண்டாடி வருகிறது.

அனுசுக்கும் அவரது இயக்கத்தின் உறுப்பினர்களுக்கும் இந்த ரம்ஜான் என்பது  மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. இந்தியாவின் தொலைதூர பகுதியிலிருப்பவர்களிடமிருந்தும் பட்டினி போக்க கோரும்   அழைப்புகளை இவர்கள் பெற்று வருகின்றனர். முதல்கட்ட ஊரடங்கு காலத்திலேயே இவர்கள், சில மசூதிகளையே சமூக சமையலறையாகவும் உணவு வழங்கும் மையங்களாகவும் மாற்றினார்கள். “இந்த முன்முயற்சியில் காவல்துறையினர் உதவிகரமாக இருந்தனர்,” என்கிறார் அவர்.

ஊரடங்கு காலத்தில் 8 உறுப்பினர்களை கொண்ட ஒரு புலம்பெயர் தொழிலாளியின் குடும்பம் ஒரு ஜூகத்   ஸ்கூட்டர் ரிக்ஷாவை விட்டுவிட்டு உபியில் உள்ள ஒரு அஜம்கார்க்கிற்கு  சென்றனர்..  அவர்களிடமிருந்து ஒரு தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.

தமிழாக்கம் : முத்துக்குமார்
நன்றி : த வயர். 

நகர்ப்புற இந்தியர்கள் புலம்பெயர் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை : பி. சாய்நாத்

0

கோவிட் 19 பெருநோய்தொற்று அபாயம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கின் விளைவாக , சிக்கித் தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் அவலங்களை நாள்தோறும் பார்த்து வருகிறோம். ஆனால், அவர்களுடைய அவலங்கள் புதியவை அல்ல; சமகால வரலாற்றில் நாட்டின் பொருளாதாரத்தின் கண்ணுக்கு தெரியாத அம்சமாக இருந்து வரும் ஒரு பிரச்சினை, நகர்ப்புற இந்தியாவின் கவனத்துக்கு வந்துள்ளது.

கிராமப்புற இந்தியாவின் மக்கள் காப்பகம்(PARI) என்ற அமைப்பின் நிறுவனரும் ரமோன் மாகசேசே விருது பெற்ற பத்திரிகையாளருமான பி. சாய்நாத், பல தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர் நிலையை எழுதி வருகிறார். இந்த நேர்காணலில், தொழிலாளர்களின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னோக்கி செல்லக்கூடிய வழி ஆகியவற்றை அவர் விவரிக்கிறார்.

பி. சாய்நாத்

சமீபத்தில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ரயிலில் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இறந்த தொழிலாளர்கள் ஏன் ரயில் தண்டவாளத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்பதுதான் நமது முதல் எதிர்வினையாக இருந்தது, அவர்களை வீட்டிற்கு நடந்து செல்லும் நிலைமைக்கு தள்ளியவர்கள் பற்றி ஏன் கேள்வி எழுப்பப்படவில்லை?

எத்தனை ஆங்கில பத்திரிகைகள் ரயிலில் நசுக்கப்பட்ட தொழிலாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டன? அவர்களை முகமில்லாமல், பெயரின்றி செல்ல வேண்டியிருந்தது. இதுதான் ஏழைகள் மீதான நமது அணுகுமுறை. இதுவே ஒரு விமான விபத்தாக இருந்திருந்தால், தகவல்களை வழங்கும் ஹெல்ப்லைன்களையும் சேர்த்தே நாளிதழ்கள் வெளியிட்டிருக்கும். இந்த விபத்தில் 300 பேர் கொல்லப்பட்டிருந்தாலும், அவர்களின் பெயர்கள் செய்தித்தாள்களில் வந்திருக்கும்.

ஆனால், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 ஏழை எளியவர்கள், அவர்களில் எட்டு பேர் கோண்ட் பழங்குடியினர், அவர்களுக்கு யார் பெயர் தருவார்கள்? வீடு அடைய அவர்கள் அந்த ரயில் பாதைகளில் நடந்து கொண்டிருந்தார்கள். எப்படியாவது ரயில் நிலையத்திலிருந்து ரயில் பிடித்து வீடு போய் சேர்ந்து விடலாம் என அவர்கள் நம்பிக் கொண்டிருந்தார்கள். நடந்த களைப்பில் அவர்கள் ரயில் தடங்களில் தூங்கியிருக்கிறார்கள். அநேகமாக அந்த பாதைகளில் ரயில் வராது என நம்பித்தான் தூங்கியிருக்கிறார்கள்.

இந்தியா மிகப்பெரிய தொழிலாளர் ஆற்றல் உள்ள நாடு, அரசாங்கங்கள் தொழிலாளர்களுடன் தொடர்புகொள்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

1.3 பில்லியன் மனிதர்களைக் கொண்ட ஒரு நாட்டில் அவர்களின் வாழ்க்கையை முடக்குவதற்கு நான்கு மணி நேரம் அவகாசம் மட்டுமே அளித்தோம். முன்னாள் ஆட்சிப்பணி அதிகாரியான எம்.ஜி.தேவாசகாயம், ‘ சிறிய காலாட்படை படை நான்கு மணி நேர கால அவகாசம் மட்டுமே தரப்பட்டு, ஒரு பெரிய நடவடிக்கைக்கு தள்ளப்பட்டிருக்கிறது’ என்கிறார்.

புலம்பெயர் தொழிலாளர்களுடன் நாம் உடன்படுகிறோமோ இல்லையோ, வெளியேறுவதற்கான காரணம் முற்றிலும் சரியாகவே இருந்தது. அவர்களுடைய அரசாங்கங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நம்மைப் போன்ற நடுத்தர வர்க்க ஊழியர்கள் எவ்வளவு நம்பத்தகாதவர்கள், சிந்தனையற்றவர்கள், கொடூரமானவர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள், ஒவ்வொரு மணிநேரமும் அதை நாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். அவர்களின் இயக்க சுதந்திரத்தை சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என நம்புகிறோம்.

நீங்கள் பேரச்சத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். நெடுஞ்சாலைகளில் மில்லியன் கணக்கானவர்களுடன் நாட்டை முழுமையான குழப்பத்திற்கு உள்ளாக்கியிருக்கிறீர்கள். மிக எளிதாக திருமண மண்டபங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் சமூக மையங்களை புலம்பெயர்ந்தோர் மற்றும் வீடற்றோருக்கான தங்குமிட வீடுகளாக மாற்றியிருக்கலாம். வெளிநாட்டிலிருந்து திரும்பும் மக்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக நட்சத்திர ஹோட்டல்களை அறிவித்தோம்.

படிக்க:
♦ கொரோனா ஊரடங்கு : நெருக்கடியில் திருச்சி குட்ஷெட் தொழிலாளர்கள் !
♦ அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் !

புலம் பெயர்ந்தோருக்கான ரயில்களை ஏற்பாடு செய்யும்போது, அவர்களிடம் முழு கட்டணம் வசூலிக்கிறோம். பின்னர் ஏசி ரயில்களிலும், ராஜ்தானி வகுப்பு கட்டணத்திலும் ரூ. 4,500 வைத்தோம். அதை மேலும் மோசமாக்கும் வகையில், டிக்கெட்டுகள் அனைத்தையும் ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பதாக கருதி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என்று கூறுகிறீர்கள். அவர்களில் சிலர் அந்த டிக்கெட்டுகளை வாங்குகிறார்கள். ஆனால் கர்நாடகாவில், அடிமைகள் தப்பிக்கிறார்கள் என்று கூறும் பில்டர்களை முதலமைச்சர் சந்திப்பதால் அவற்றையும் ரத்து செய்கிறார்கள். எதிர்பார்த்த அடிமை கிளர்ச்சியைத் தணிப்பதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நாம் எப்போதும் ஏழைகளுக்கு ஒரு தரத்தையும் மற்றவர்களுக்கு ஒரு தரத்தையும் வைத்திருக்கிறோம். இருப்பினும், நீங்கள் அத்தியாவசிய சேவைகளை பட்டியலிடும்போது, மருத்துவர்களைத் தவிர, ஏழை மக்கள் மட்டுமே அத்தியாவசியம் என்பதை நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள். பல செவிலியர்கள் நல்ல நிலைமையில் இல்லை. அவர்களைத் தவிர, தூய்மை தொழிலாளர்கள், ஆஷா தொழிலாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள், மின்சாரத் தொழிலாளர்கள், மின் துறை தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் உள்ளனர். திடீரென்று இந்த நாட்டிற்கு உயரடுக்கு எவ்வளவு இன்றியமையாதவர்கள் அல்லர் என்பதை நீங்கள் கண்டுபிடித்துள்ளீர்கள்.

இடம்பெயர்வு பல தசாப்தங்களாக நடந்துள்ளது. ஊரடங்குக்கு முன்பே அவர்களின் நிலை படுமோசமான வகையில் இருந்தது. நம்முடைய புலம்பெயர் தொழிலாளர்களை நாம் பொதுவாக நடத்தும் விதத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

பல வகையான குடியேறிகள் உள்ளனர். ஆனால் குடியேற்றத்தின் வர்க்க வேறுபாடுகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சென்னையில் பிறந்தேன். உயர் கல்வியை டெல்லியில் முடித்தேன், அங்கு நான் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தேன். பின்னர் நான் மும்பைக்கு குடிபெயர்ந்தேன், நான் இங்கு 36 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். நான் செய்த ஒவ்வொரு இட மாற்றமும் எனக்கு பயனளித்தது. ஏனெனில் நான் ஒரு குறிப்பிட்ட வகுப்பு மற்றும் சாதியைச் சேர்ந்தவன். எனக்கு சமூக மூலதனம் மற்றும் வலைபின்னல்கள் உள்ளன.

நீண்ட காலமாக குடியேறிகள் உள்ளனர், A இலிருந்து B க்கு வெளியேறி B இல் நிரந்தரமாக இருப்பவர்கள்.

பின்னர் பருவகால குடியேறிகள் உள்ளனர். உதாரணமாக, மகாராஷ்டிராவில் உள்ள கரும்புத் தோட்டத் தொழிலாளர்கள் ஐந்து மாதங்களுக்கு கர்நாடகாவுக்கு குடிபெயர்கிறார்கள், மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் நேர்மாறாக – அங்கு வேலைசெய்து தங்கள் கிராமங்களுக்கு மீண்டும் செல்கிறார்கள். காலஹந்தி குடியேறிகள் சுற்றுலாப் பருவத்தில் ராய்ப்பூருக்குச் சென்று ரிக்‌ஷாக்களை இழுக்கும் பணியைச் செய்கின்றனர். ஒடிசாவின் கோராபுட்டிலிருந்து ஆந்திராவின் விஜயநகரத்தின் செங்கல் சூளைகளுக்கு சில மாதங்கள் செல்வோர் உள்ளனர்.

மற்ற குழுக்களும் உள்ளன – ஆனால் நாம் மிகவும் அக்கறை கொள்ள வேண்டிய நபர்கள் தான்தோன்றி குடியேறிய தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களே. இப்படிப்பட்ட குடியேறிகளுக்கு இறுதி இலக்கு குறித்த தெளிவான யோசனை இல்லை. அவர்கள் ஒரு ஒப்பந்தக்காரருடன் மும்பைக்கு வந்து ஒரு கட்டுமான இடத்தில் 90 நாட்கள் வேலை செய்வார்கள். அந்த காலகட்டத்தின் முடிவில், அவர்களுக்கு எதுவும் இருக்காது. பின்னர் ஒப்பந்தக்காரர் அவர்களை மகாராஷ்டிராவின் வேறு ஏதேனும் ஒரு பகுதியுடன் தொடர்புகொண்டு, அவர்களை அங்கே விடுவார். இது முடிவில்லாமல் இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும். செல்கிறது. இது மொத்தமாக, பாதுகாப்பில்லாத, முடிவற்ற ஒரு மோசமான வாழ்க்கை. அப்படியானவர் மில்லியன் கணக்கில் உள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை எப்போது மோசமடையத் தொடங்கியது?

இடம்பெயர்வு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆனால் அவை கடந்த 28 ஆண்டுகளில் பெரு வெடிப்பாக அமைந்தன. 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு, 2001 மற்றும் 2011 க்கு இடையில், சுதந்திரத்துக்குப் பிறகான வரலாற்றில், இந்தியா மிக அதிக அளவிலான புலம்பெயர்ந்தோரைப் பார்த்துள்ளது.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1921 க்குப் பிறகு முதன்முறையாக நகர்ப்புற இந்தியா அதன் மக்கள்தொகையில் சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிராமப்புற இந்தியா அதன் மக்கள்தொகையில் சேர்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. நகர்ப்புறங்களில் மக்கள்தொகை விகிதத்தின் வளர்ச்சி மிகவும் சிறியது, ஆனால் நகர்ப்புற இந்தியாவின் மக்கள்தொகையில் இன்னும் அதிகமானவர்களை சேர்க்க வேண்டியுள்ளது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின் இந்த உண்மைகளுக்கு முழுமையாக பேசிய தொலைக்காட்சி நிபுணர்களுடன் குழு விவாதம் அல்லது நேர்காணலைத் தேடிப் பாருங்கள். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறம், கிராமப்புறத்திலிருந்து கிராமப்புறம் மற்றும் பலவற்றிற்கு இடம்பெயர்ந்த நிகழ்வின் தீவிரம் குறித்து எத்தனை பேர் விவாதித்தனர்?

படிக்க:
♦ குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
♦ தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் !

இடம்பெயர்வு பற்றிய எந்தவொரு கலந்துரையாடலும் கிராமப்புற துயரங்கள் இல்லாமல் முழுமையடையாது, அதுதான் குடியேற்றத்தின் மூலத்தில் உள்ளது, இல்லையா?

நாம் விவசாயத்தை அழித்து ஒழித்தோம்; மில்லியன் கணக்கான வாழ்வாதாரங்கள் சரிந்தன. கிராமப்புறங்களில் உள்ள மற்ற வாழ்வாதாரங்களும் படுமோசமாக உள்ளன. விவசாயத்துக்குப் பிறகு கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களும் நாட்டில் மிகப்பெரிய பணி வழங்குபவையாக இருந்தன. படகுகாரர்கள், மீனவர்கள், பனைஏறும் தொழிலாளர்கள், பொம்மை தயாரிப்பாளர்கள், நெசவாளர்கள், சாயம் ஏற்றுபவர்கள்; ஒன்றன் பின் ஒன்றாக, அவை சரிந்து செல்கின்றன. அவர்களின் முன்னே எந்த தேர்வு உள்ளது?

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவார்களா என்று நாம் யோசிக்கிறோம். அவர்கள் ஏன் முதலில் இங்கு வந்தார்கள்?

கணிசமான எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் நகரங்களுக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இது நீண்ட காலம் எடுக்கும். ஆனால் கிராமங்களில் அவர்கள் வைத்திருந்த தேர்வுகளை நாம் நீண்ட காலத்திற்கு முன்பே அழித்துவிட்டோம், அவர்களை மலிவான உழைப்பாளிகள் படையாக உறுதிபடுத்தியிருக்கிறோம்

பல மாநிலங்களில் தொழிலாளர் சட்டங்களின் முன்மொழியப்பட்ட தளர்வுகளை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

முதலாவதாக, இது அரசியலமைப்பையும், தற்போதுள்ள சட்டங்களையும் அவசர சட்டம் மூலம் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். இரண்டாவதாக, இது அவசர சட்டத்தின் மூலம் ஒரு பிணைக்கப்பட்ட தொழிலாளர் பிரகடனத்தை வெளியிடுவதாகும். மூன்றாவதாக, இது உண்மையில் முறைபடுத்தப்பட்ட அப்பணிபுரியும் நேரத்தை 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி அமைக்கிறது. மிக அடிப்படையான விஷயம் என்னவென்றால், உலகில் தொழிலாளர் தொடர்பான ஒவ்வொரு ஒப்பந்தமும் நாளில் எட்டு மணி நேர பணியை ஏற்றுக்கொண்டுள்ளது.

குஜராத் அறிவிப்பைப் பாருங்கள். தொழிலாளர்களுக்கு கூடுதல் நேரத்துக்கு சம்பளம் வழங்கப்படாது என்று அது கூறுகிறது. ராஜஸ்தான் அரசாங்கம் கூடுதல் நேரங்களுக்கு கூடுதல் நேர ஊதியத்தை வழங்குகிறது, ஆனால் வாரத்திற்கு 24 மணிநேர வரம்புடன். அதாவது தொழிலாளர்கள் முழுமையாக ஆறு நாட்களுக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்வார்கள்.

இவை அனைத்தும் தொழிற்சாலைகள் சட்டத்தில் விதிவிலக்குகள் மற்றும் விதிவிலக்குகளை மேற்கோள் காட்டி செய்யப்பட்டுள்ளன. ஒரு தொழிலாளி வேலை செய்யக் கேட்கக்கூடிய அதிகபட்ச மணிநேரம் – கூடுதல் நேரம் உட்பட – 60 மணிநேரம் என்று அது கூறுகிறது. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் எனக் கணக்கிட்டால், இவை 72 க்கு வருகின்றன.

மிக முக்கியமாக, தொழிலாளர்கள் கூடுதல் மணிநேரம் பணி செய்ய விரும்புகிறார்களா இல்லையா என்று அவர்களால் தேர்வு செய்ய முடியாது. நீண்ட வேலை நேரம் பணிபுரிந்தால் உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என்று ஒரு அனுமானம் உள்ளது. ஆனால் இது வரலாற்றில் செய்யப்பட்ட பல ஆய்வுகளுக்கு எதிரானது. கடந்த நூற்றாண்டில் நிறைய தொழிற்சாலைகள் 8 மணி நேர பணியை ஏற்றுக்கொண்டன, ஏனெனில் சோர்வு மற்றும் களைப்பு காரணமாக கூடுதல் மணிநேரங்களில் உற்பத்தித்திறன் வலுவாக வீழ்ச்சியடைவதாக அவர்களின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதைப் பொருட்படுத்தாமல், இது அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதல். இது உழைப்பின் அடிமைத்தனம். மாநிலங்கள் அடிப்படையில் ஒரு ஒப்பந்தக்காரராக செயல்படுகின்றன, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பிணைக்கப்பட்ட தொழிலாளர்களை அவை வாங்குகின்றன. இது தலித்துகள், பழங்குடிகள் மற்றும் பெண்கள் போன்ற மிகவும் பலவீனமான பிரிவுகளை பாதிக்கும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தியாவில் தொண்ணூற்று மூன்று சதவிகித தொழிலாளர்கள் முறைசாரா துறையில் பணிபுரிவதால் அவர்கள் எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றிய எந்த உரிமையும் அவர்களுக்கு இல்லை. “மீதமுள்ள ஏழு சதவிகிதத்தினரின் உரிமைகளையும் அழிப்போம்” என்று நீங்கள் கூற முயற்சிக்கிறீர்கள். தொழிலாளர் சட்டங்களின் மாற்றத்தை கொண்டு வந்தால் முதலீடு வரும் என்று மாநிலங்கள் வாதிடுகின்றன. ஆனால் சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த நிலைமைகள் மற்றும் பொதுவாக ஒரு நிலையான சமூகம் உள்ள இடங்களுக்கு மட்டுமே முதலீடு வருகிறது. உத்தரபிரதேசத்தில் ஏதேனும் இருந்திருந்தால், இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் குடியேறும் மாநிலமாக அது இருந்திருக்காது.

இந்த நடவடிக்கையின் விளைவுகள் என்னவாக இருக்கும்?

தொழிலாளர்களின் உரிமைகலுக்கு வேட்டு வைக்கும் பாஜக கும்பல்.

உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள், அரசியலமைப்பு மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக தங்களால் மாற்றமுடியாத மூன்று அல்லது நான்கு சட்டங்களைத் தவிர்த்து, அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்துள்ளன. நிலைமைகள் எவ்வளவு மோசமானவை என்பது முக்கியமல்ல, தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். நீங்கள் மக்களை மனிதநேயமற்றவர்களாக ஆக்குகிறீர்கள், அவர்களுக்கு காற்றோட்டம், கழிப்பறைகள் மற்றும் இடைவேளை போன்ற உரிமை இல்லை என்று கூறுகிறீர்கள். இது முதலமைச்சர்களின் அவசர சட்டம், இதன் பின்னணியில் எந்த சட்டமன்ற நடவடிக்கையும் இல்லை.

முன்னோக்கிச் செல்ல நாம் என்ன செய்ய வேண்டும்?

நாட்டில் தொழிலாளர் நிலைமைகளை நீங்கள் மேம்படுத்த வேண்டும். தொற்றுநோய் நம் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் காரணமாக அது செய்யும் விதத்தில் அவர்களைப் பாதிக்கிறது. பல சர்வதேச தொழிலாளர் மரபுகளை மீறுவதற்கு நாம் சாட்சியாக உள்ளோம்.

பி.ஆர்.அம்பேத்கர் இதை தெளிவாகக் கண்டார். நாங்கள் பேச வேண்டியது அரசாங்கத்தைப் பற்றியது அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டார். தொழிலாளர்கள் வணிகத்தின் தயவில் இருப்பது பற்றி நாம் பேச வேண்டும். அவர் கொண்டுவர உதவிய சட்டங்களை மாநிலங்கள் இடைநிறுத்துகின்றன, அதற்கான காரணங்களை அவர் முன்வைத்தார்.

மாநில அரசுகளில் தொழிலாளர் துறை உள்ளது. அதன் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?

மாநிலத்தில் தொழிலாளர் துறையின் பங்கு தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும். ஆனால் உங்களிடம் ஒரு மத்திய அமைச்சர் இருக்கிறார், அவர் நிறுவனங்களுக்கு செவிசாய்க்கும்படி தொழிலாளர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். நீங்கள் ஏதாவது மாற்ற வேண்டும் என்றால், உங்கள் சமூக ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும். கிரகத்தின் மிகவும் சமத்துவமற்ற சமூகங்களில் ஒன்றுடன் நீங்கள் உரையாற்ற முடியாவிட்டால், அதைப் பற்றி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. இது மிக விரைவாக, மோசமான நிலைமைக்கு இட்டுச் செல்லும்..

படிக்க:
♦ சாபு மண்டல் ஒரு தொழிலாளி – கொரானாவும், முன்னேற்பாடு ஏதும் செய்யாத அரசும் அவரை கொன்றுவிட்டன !
♦ புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் !

வீடு திரும்பும் தொழிலாளர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், கோபமுள்ளவர்கள். நாம் எரிமலையில் அமர்ந்திருக்கிறோமா?

எரிமலை வெடிக்கிறது. நாம் அதைப் பார்க்க முயற்சிக்கிறோம். அரசாங்கங்கள், ஊடகங்கள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் நம்மை ஒரு சமூகமாக, அதில் உள்ள பாசாங்குத்தனத்தை பாருங்கள்.

மார்ச் 26 வரை, புலம்பெயர்ந்த தொழிலாளியைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. திடீரென்று, மில்லியன் கணக்கானவர்களை தெருக்களில் காண்கிறோம். நாம் நமது சேவைகளை இழந்துவிட்டதால் அதை உணர்கிறோம். மார்ச் 26 வரை நாங்கள் செய்யவில்லை. அவர்களை சம உரிமை கொண்ட மனிதர்களாக நாம் கருதவில்லை.

ஒரு பழமொழி உண்டு: ஏழைகள் கல்வியறிவு பெறும்போது, பணக்காரர்கள் தங்கள் பல்லக்கு தூக்கிகளை இழக்கிறார்கள். திடீரென்று, நாம் பல்லக்கு தூக்கிகளை இழந்தோம்.

இடம்பெயர்வு குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை எவ்வாறு பாதிக்கிறது?

இது குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பேரழிவை ஏற்படுத்துகிறது. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் சுகாதார அடிப்படையில் நம்பமுடியாத அளவுக்கு பாதிக்கப்படக் கூடியவர்களாக உள்ளார். இளம் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அரிதாகவே பேசப்படுகின்றன. நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மில்லியன் கணக்கான சிறுமிகளுக்கு இலவச சுகாதார நாப்கின்கள் வழங்க உரிமை உண்டு – திடீரென்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மாற்று வழிகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே மில்லியன் கணக்கானவர்கள் சுகாதாரமற்ற மாற்றுகளுக்குத் திரும்புகின்றனர்.

வீடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் என்னென்ன?

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும்பாலும் நீண்ட தூரம் நடந்து வந்திருக்கிறார்கள். உதாரணமாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலை அல்லது குஜராத்தில் உள்ள நடுத்தர வர்க்க முதலாளிகளிடமிருந்து தெற்கு ராஜஸ்தானுக்கு திரும்பிச் செல்கின்றனர்.

ஆனால் அவர்கள் அதை வெவ்வேறு சூழ்நிலைகளில் செய்தார்கள்.

அவர்கள் 40 கிலோமீட்டர் தூரம் நடந்து, ஒரு தபா அல்லது ஒரு தேநீர் கடையில் நிறுத்தி, அங்கே வேலை செய்கிறார்கள், பதிலுக்கு ஒரு உணவைப் பெறுகிறார்கள். காலையில், அவர்கள் புறப்படுவார்கள். அடுத்த பெரிய பேருந்து நிலையம் – அங்கேயும் அவர்கள் அப்படியே செய்கிறார்கள். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வருவது அப்படித்தான். அந்த இடங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், அவர்கள் நீரிழப்பு மற்றும் பசி, வயிற்றுப்போக்கு மற்றும் பிற நோய்களுக்கு ஆளாகின்றனர்.

அவர்களின் நிலையை மேம்படுத்த எதிர்காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும்?

நாம் தேர்ந்தெடுத்த வளர்ச்சியின் பாதையை ஒரு முழுமையான நீக்குதல் மற்றும் உடைத்தல் மற்றும் சமத்துவமின்மை மீதான பாரிய தாக்குதலை செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துன்பங்கள் அவர்களின் சமத்துவமற்ற சூழ்நிலையிலிருந்து எழுகின்றன.

உங்கள் அரசியலமைப்பில் உட்பொதிக்கப்பட்ட “அனைவருக்கும் நீதி: சமூக, பொருளாதார மற்றும் அரசியல் …” என்ற முக்கியத்துவத்தை உணராமல் நீங்கள் அதை செய்ய முடியாது. சமூக மற்றும் பொருளாதார அரசியல் முன் ஒரு விபத்து அல்ல. அதை எழுதியவர்களில் எதற்கு முன்னுரிமை என்பது பற்றிய தெளிவான உணர்வு இருந்தது என்று நான் நினைக்கிறேன். உங்கள் அரசியலமைப்பு உங்களுக்கு வழி சொல்கிறது.

இந்திய உயரடுக்கும் அரசாங்கமும் வழக்கம் போல் நாம் மீண்டும் வழக்கமான வணிகத்திற்கு செல்ல முடியும் என்று நினைக்கிறோம், அந்த நம்பிக்கை நம்பமுடியாத அடக்குமுறை, அழுத்தம் மற்றும் வன்முறைக்கு வழிவகுக்கும்.

பி.சாய்நாத் நேர்காணல்: பார்த் எம்.என்.
தமிழாக்கம் – கலைமதி

நன்றி : ஃபர்ஸ்ட் போஸ்ட்.  

கொரோனா ஊரடங்கு : நெருக்கடியில் திருச்சி குட்ஷெட் தொழிலாளர்கள் !

மிழகத்தில் 24 மணி நேரமும் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட திருச்சி குட்ஷெட்டில் 400க்கு மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் 11 மேஸ்திரிகளின் தலைமையில் ‘செட்’ முறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சரக்குகளை இறக்கி ஏற்றி வருகின்றனர். மாதத்தில் ஒரு சில நாட்கள் கிடைக்கும் இவ்வேளையை நம்பித்தான் அவர்களது குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

கொரோனா ஊரடங்கு அறிவித்த நிலையில் அத்தியாவசிய பொருட்களான அரிசி, நெல், கோதுமை இறக்கி ஏற்றுவதற்கு தமிழக அரசு அனுமதித்தது. ஆனால் அதில் ஈடுபடக்கூடிய சுமைப்பணி தொழிலாளர்கள் வந்து செல்வதற்கு எந்த வாகன வசதியோ, சுகாதார வசதிகளையோ அரசு ஏற்படுத்தித் தரவில்லை.

அருகமையிலிருந்தும் 30 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கிராமங்களிலிருந்தும் பல தொழிலாளர்கள் சொந்த முயற்சியில் இருசக்கர வாகனங்களில் வரும் பொழுது ஊரடங்கை காரணம் காட்டி போலீசார் வாகனங்களை மறித்து பறித்துக்கொண்டு விரட்டியடித்தனர்.

இதையும் தாண்டி…. ஒருநாள் வேலை கிடைத்தால் போதும் குடும்பத்தை ஓட்டலாம் என்று நடையாக நடந்து வந்து அரிசி, நெல் தானியங்களை இறக்கி லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு அனுப்பிவைத்தனர். தொழிற்சங்கங்கள் தொடர் முயற்சியால் காண்ட்ராக்ட் காரர்கள் மூலமாக இரயில்வே நிர்வாகத்திலிருந்து – குறிப்பிட்ட வேலைக்கான அனுமதி கடிதம் கிடைக்கப் பெற்றதை காண்பித்து வந்து செல்கின்றனர். இரயில்வேயிலிருந்து இன்று வரை அடையாள அட்டை தரப்படவில்லை.

குட்செட்டில் பராமரிக்க பணியாளர்கள் இல்லாததால் பூட்டப்பட்ட கழிப்பிடம், சுகாதாரமற்ற குடிநீர்! உணவு, மாஸ்க் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கும் இரயில்வே துளியும் பொருப்பெடுத்து செய்து தராத நிலையில் சொந்த செலவிலேயே பராமரித்துக்கொண்டும் சிலநேரம் பட்டினியுடனும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பொதுவாக, அந்தந்த செட் வேலையில் கூடுதலாக சரக்கு ஏற்றி இறக்க தொழிலாளர் பற்றாக்குறை வரும் நேரங்களில் அடுத்தசெட் தொழிலாளர்களை கூப்பிட்டு 4 அல்லது 5 பேர்களுக்கு வேலை கொடுப்பதும், அந்த 4 பேர் வேலையை அதே செட்டை சேர்ந்த கூடுதல் தொழிலாளர்கள் இணைந்து வேலை செய்வதும், கிடைக்கும் சொற்ப கூலியை பிரித்துக்கொள்வதும் வழக்கம். 200, 300 ரூபாய் கிடைப்பதே அரிது. காலை 5 மணிக்கே வீட்டைவிட்டு குட்செட்டிற்கு வந்து மாலை வரை வண்டிகளுக்காக காத்திருந்து பணிசெய்கின்றனர். 50கிலோ மூட்டைசுமந்து, அட்டிபோட்டு பணிசெய்யும் தொழிலாளர்களுக்கு உரத்தின் கெமிக்கல் கசிந்து முதுகு, தோல் பட்டைகள் புன்னாகிவிடும். சூடாக அடுக்கப்பட்ட சிமெண்ட் மூட்டைகள், குட்ஸ்வேகன் அனலை கக்கும், தோலையே கருக்கி, ஆஸ்மா, நுரையீரல் கோளாறுகளால் அவதிப்படுகின்றனர் பலர். ஊக்கு போடக்கூடாது என நிபந்தனையால் கைகள் கொப்பளித்து ரனமாகும்.. ஒருவேளை உணவுகூட உண்ணாமலேயே பலர் வீடுசெல்லும் துயரம்! பல நேரங்களில் குழந்தைகளிடமோ குடும்பத்தினர்களுடனோ பேசக்கூட முடியாது. உறவினர்களின் சுக, துக்கங்களில் பங்கேற்கவும் முடியாது.

படிக்க:
♦ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல !
♦ புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் !

கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஓரிருநாள் வேலையை வைத்து எப்படி வாழ்வது? வாடகை கொடுப்பதா? குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்ற இயலுமா?. ஒப்பந்ததாரர்களின் கீழ் பணிசெய்வதால் (கிளியரிங் அண்ட் பார்வேர்டிங் கான்ராக்டர்கள்) பணிப்பாதுகாப்பு இல்லாத அவலத்தை உணர்ந்த தொழிலாளர்கள், தொழிற்சங்க வழிகாட்டுதல்படி 10 ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கு தாங்களே கூலியை பிடித்து PF கணக்கு துவங்கி பராமரித்து வரும் நிலையில் மத்திய அரசு கூறும் PF கணக்குப்படி 12% விகிதத்தில் 2% விகிதம் கட்டவேண்டாம் என்ற கண்துடைப்பு நடவடிக்கையால் கான்ராக்ட் முதலாளிகளுக்குத்தான் லாபமே தவிர தொழிளாளர்களுக்கு பலனில்லை !. எனவே..,

மத்திய, மாநில அரசுகளே, தொழிலாளர் நிவாரணத்தொகையாக மாதத்திற்கு ரூ.6000/- வழங்கு! குட்செட் முழுவதும் கொரொனா தடுப்பு நடவடிக்கையை எடு! – பணிபாதுகாப்பிற்காக தொழிளாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கு! இரயில்வேதுறையே, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடு! கழிப்பிடத்தை சுகாதாரமாக பராமரிக்கபணியாளர்களை நியமி!

சுமைப்பணித் தொழிலாளர்கள் பாதுகாப்புச்சங்கம், திருச்சி குட்செட்(TPJY)

தகவல் :
சுமைப் பணித் தொழிலாளர் பாதுகாப்புச் சங்கம்,
இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு .

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு : கேட்டது விலக்கு – விளக்கம் அல்ல !

3

த்தாம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான தேதிகள் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா நோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழலில் மாணவர்களது நலன் கருதி தேர்வுகளுக்கு விலக்கு கேட்கப்படும் வேளையில், அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமல்ல கல்வியாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின், மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் அவர்களின் பேட்டி பு.மா.இ.மு தளைத்தில் வெளியாகியுள்ளது அதன் காணொளியை இங்கே வெளியிடுகிறோம். பாருங்கள்… பகிருங்கள்…

விழுப்புரம் சிறுமி எரிப்பு : இன்னும் எத்தனை நாள் பொறுப்பது ?

பெண்கள்- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் குடும்ப வன்முறைகள் முதல் படுகொலைகள் வரை தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் கொடூரமாக நடந்தேறி வருகிறது. உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா தான் முதல் இடத்தில் உள்ளது. ஊடகங்களில் இதுபோன்ற வன்முறை வெறியாட்டங்கள் இன்று அன்றாட செய்தியாகி விட்ட நிலையில் நாம் அனைவரும் அவற்றை எளிமையாக கடந்து செல்ல நம்மை நாமே பழக்கப்படுத்தி கொண்டு வருகின்றோம். இது பெண்களை  மேலும், மேலும் பாதுகாப்பற்ற அபாயகரமான சூழ்நிலைக்கு நெட்டித் தள்ளுகின்றது.

அதன் அடிப்படையில் தான் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆசிஃபாவின் படுகொலையும் நடந்தது. அந்த 8 வயது  சிறுமியை கோயில் கருவறையிலே வைத்து பாலியல் பலாத்காரம் செய்து குற்றுயிரும், கொலையுயிருமாக இருந்த அக்குழந்தையைக் கல்லை போட்டு படுகொலை செய்து காட்டில் வீசினர்கள். கேரளா கன்னியாஸ்திரி ஒருவர் பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக வெளியுலகிற்கு சொன்ன காரணத்தால் அவரையே ஒழுக்க கேடனவராக சித்தரித்தது பணியை விட்டு நீக்கியதோடு அவரை மனநோயாளி என்றது திருச்சபை.

தமிழகத்தில்  அரியலூர் நந்தினி என்ற 15 வயது சிறுமியை இந்து முன்னணியைச் சேர்ந்த பொறுக்கிகள் பாலியல் வன்கொடுமை செய்து அவளின் பிறப்புறுப்பை சிதைத்து  வயிற்றிலிருந்த சிசுவை வெளியே எடுத்து எரித்துவிட்டு கிணற்றில் தள்ளி கொலை செய்தார்கள். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்  அயனாவரத்தில் வாய் பேச முடியாத 11 வயது சிறுமியை ஏழு மாதமாக 13  பேர் கொண்ட  கும்பல் பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். இப்படி பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை முதல் தற்போது அரங்கேறியுள்ள நாகர்கோயில் காசியின் பாலியல் வன்முறை வெறியாட்டங்கள் வரை இந்தக் கொடூரங்கள் அனைத்தும் நமது நெஞ்சை உலுக்கி எடுப்பவை மட்டுமல்ல இது ஒரு சில எடுத்துகாட்டுகள் மட்டுமே.

இன்னும் வெளியுலகிற்கு வராதது எண்ணில் அடங்காதவை. அந்த வரிசையில் மேலும் ஒரு கொடுரமான வன்முறை சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது. இது பெண்களை மேலும் நிலைகுலைய செய்துள்ளது.

விழுப்புரம் ஜெயஸ்ரீ படுகொலை ;  

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ (10 ஆம் வகுப்பு படித்து வந்தார்) இவரை அதே ஊரை சேர்ந்த 50 வயது மதிக்கத் தக்க யாசகம் (எ) கலியபெருமாள் மற்றும் முருகையன் ஆகியோர் ஞாயிறு (10.05.2020) அன்று காலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். பின்பு வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வரும்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வெளிப்புறம் தாழிட்டு இருந்த கதவை திறந்து உள்ளே சென்று தீயை அனைத்ததாக கூறப்படுகின்றது.

90% தீ காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி ஒருநாள் உயிருக்கு போராடிய நிலையில் வீட்டில் மீட்கப்பட்டதில் இருந்து மருத்துவமனையில் இருந்தவரை பலமுறை தான் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தனது மரண வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு மறுநாள் உயிரிழந்தார். அதில் தான் வீட்டில் தனியாக இருந்த போது யாசகனும், முருகையனும் வீட்டிற்கு வந்து என் கை, கால்களை கட்டி போட்டுவிட்டு வாயில் துணியை திணித்து முகத்திலேயே குத்தினார்கள் பிறகு பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துவிட்டு கதவை வெளியில் தாழிட்டு சென்றுவிட்டனர் என்று கூறியுள்ளார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கொலைக்கான பின்னணி ;

கொலையாளியான கலியபெருமாள் வீட்டருகே சிறுமி ஜெயஸ்ரீயின் தந்தை ஜெயபால் ஒருவரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார். ஏற்கனவே ஜெயபாலின் தம்பி கையை வெட்டியது தொடர்பாக இவர்களுக்கு முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இந்த முன் விரோதம் காரணமாக ஜெயபாலை நீ அந்த நிலத்தில் விவசாயம் செய்யக்கூடாது எனவும் அந்த நிலத்திற்கு செல்லும் பொதுப் பாதையை அடைத்து அடிக்கடி தகராறு செய்து ஜெயபாலை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் நடந்த முதல்நாள் ஜெயபால் நடத்திவரும் பெட்டிகடை இரவு 10.30 மணிக்கு மேல் பூட்டப்பட்ட பிறகு அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் கதவை தட்டி ஏன் அதற்குள் கடையை அடைத்தாய் தனக்கு பீடி வேண்டும் என்று கூறி ஆபாசமாக திட்டி தகராறு செய்ததோடு இல்லாமல் ஜெயபாலின் மூத்த மகனை தாக்கியுள்ளார். அதில் அவரின் காதில் ரத்தம் வந்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர்கள் காலையில் வீடு திரும்பிவிட்டு மீண்டும் பிரவீன்குமார் மீது காவல் நிலையத்தில் புகார் செய்வதற்காக தந்தையும், மகனும் சென்றுவிட்டனர். தாய் மற்றும் தங்கை இருவரும் நிலத்திற்கு சென்றுவிட்ட நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை தீ வைத்து எரித்துள்ளனர். அதன் பிறகு கொலைகாரர்களின் குடும்பத்தின் மீது ஊர் மக்களுக்கு உள்ள அச்சம் காரணமாக அந்த சிறுமியின் குடும்பத்தை பாதுகாக்க நினைத்த பகுதி இளைஞர்கள் 10 ஆம் தேதி இரவு பொது இடத்தில் கூடி கூட்டம் நடத்தியுள்ளனர்.

ஜெயபாலின் தம்பி.

அப்போது காவல்நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு அங்கு வந்த கலியபெருமாளின் மகன் வீரன் என்ன தைரியம் இருந்தால் எங்களுக்கு எதிராக கூட்டம் நடத்துவீர்கள். ஒருத்தரும் உயிரோடு இருக்க மாட்டீர்கள் குடும்பத்தோடு கொளுத்திவிடுவேன், என்னோட அப்பாவை கைது செய்துட்டாங்கன்னு நினைக்குறீங்களா? நாளைக்கே வெளியில் கொண்டுவரேன் பாக்குறீங்களா? என்று சினிமாபட பாணியில் ‘வீர வசனம்’ பேசியுள்ளான். பின்பு வீரனோடு அவர்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பிற்கு வந்த போலீசார் இரண்டு அடி கொடுத்து உன்னிடம் காவல்நிலையத்தில் என்ன சொல்லி அனுப்பினார்கள் நீ என்ன செய்யுற என்று கூறி அழைத்து சென்றுவிட்டனர். என்று இளைஞர்கள் கூறுகின்றனர். சிறுமி இறந்த பின்பும் கொலை செய்தவர்களின் குடும்பத்தை ஊரைவிட்டே துரத்தவேண்டும் அப்போதுதான் நங்கள் நிம்மதியாக வாழ முடியும் அதுவரை பிணத்தை எடுக்க விடமாட்டோம் என்று கூறி அப்பகுதி இளைஞர்கள் 50 கும் மேற் பட்டோர் தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

கொலையாளிகளை வளர்த்தெடுத்த அதிகார வர்க்கம் :

கொலையாளிகளான யாசகம் (எ) கலியபெருமாள் மற்றும் முருகையன் ஆகியோர் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகித்து வருகின்றனர். இதனை பயன்படுத்தி அப்பகுதியில் பல்வேறு அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் ஊருக்கு சொந்தமான பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இவர்களை எதிர்த்து கேட்பவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ஆளும் கட்சியின் ஆதரவோடும், காவல்துறையின் துணையோடும் எவ்வித வழக்குமின்றி தாதாக்களை போன்று செயல்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் இவர்களை கண்டு தற்போது வரை அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2013 –ல் சிறுமி ஜெயஸ்ரீயின் சித்தப்பாவை இவர்களின் ஒட்டுமொத்த உறவினர்களும் சேர்ந்து ஊரே பார்க்க கம்பத்தில் கட்டிபோட்டு அடித்து உதைத்து அவரது கையை வெட்டியுள்ளனர். இந்த வழக்கு தற்போதுவரை கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில் சிறுமியின் மரணத்திற்கு பிறகு அந்த பிரச்சனை வெளியில் வரவே அது சம்பந்தமான ஆவணங்களை தேடும்போது காவல்துறையிடம் இருந்த வழக்கு குறித்த ஆவணங்கள், நீதிமன்றத்தில் இருந்த வழக்கு சார்ந்த கோப்புகள் அனைத்தும் காணமல்போனது தெரியவந்துள்ளது.

அந்த ஆவணங்கள் இவர்களின் அதிகார பலத்தை பயன்படுத்தி காவலர்களின் உதவியோடு திருடப்பட்டு இருக்கலாம் என காவல்துறை வட்டாரத்திலேயே பேசப்படுகின்றது. இப்படி காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட காரணத்தால் தான் இன்று அவர்கள் கொலையே செய்தாலும் நாம் காவல்துறை மற்றும் கட்சியின் ஆதரவோடு எளிமையாக தப்பித்துவிடலாம் என கருதி இந்த கொலையை செய்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய பின்பே வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

ஒரு சாதாரண கீழ்மட்ட பதவியில் இருப்பவர்களுக்கே காவல்துறை இவ்வளவு ஆதரவாக செயல்படுகின்றது என்றால், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இவர்கள் எப்படி செயல்பட்டு இருப்பார்கள். 5 பேர் கொண்ட கும்பல் 200 க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி அதை செல்போனில் பதிவு செய்து அவர்களை தொடர்ச்சியாக மிரட்டி பணம் பறித்துள்ளனர். இது அனைத்தும் வீடியோ ஆதாரத்தோடு செய்திகள் வெளிவந்தும், இதில் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் ஈடுபட்டு இருப்பதாலும், மற்றவர்களும் அதிமுக வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும், குற்றவாளிகளை பாதுகாக்கவே துடித்தது காவல்துறை. இவர்களே பல வீடியோ ஆதாரங்களை அழித்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்த பிரச்சனைக்கு எதிராக அன்று மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தியதால் தான் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இன்று பிணையில் விடுதலையாகி சுகந்திரமாக உலாவருகின்றனர்.

படிக்க:
♦ விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !
♦ சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு !

“ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வந்த மாற்று திறனாளியாக சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி உள்ள பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் பல ஆண்டுகளாக பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.” ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் சூழலிலும் பொள்ளாச்சி  குற்றவாளிகளை போலவே நமக்கும் எளிமையாக பிணை கிடைத்துவிடும் என்ற தைரியத்தின்  விளைவாகவே இன்று நாகர்கோயில் காசியும் உருவாகி உள்ளார். இவர் நூற்றுக்கணக்கான விஐபி வீட்டு பெண்களிடம் நெருங்கி பழகி அதனை செல்போனில் வீடியோ எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களின் அம்மாவிடம் காண்பித்து அவர்களையும் மிரட்டி பாலியல் வன்முறை செய்துள்ளார்.

இவனுக்கு காவல்துறையில் பலர் நெருக்கமானவர்கள் என்பதால் இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் பேச மறுப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இவனை கைது செய்த பின்பு காவல்நிலையத்தில் காவலர்களின் முன்னிலையில் மேசையில் அமர்ந்தவரே பத்திரிக்கையாளர்களுக்கு தனது கையால் ஆர்ட்டின் சிம்பில் காண்பிக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அவன் காவல் துறையினரை எதற்கு சமமாக நினைக்கின்றான் என்பதை சொல்லித்தான் புரிய வைக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இந்த வழக்கு விசாரணை எப்படி இருக்கும் என்பதும் பெரும் கேள்விக்குறியே?

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுவதைவிட, பாலியல் சித்தரவதைகளும், படுகொலைகளும் ஒரு பெரிய குற்றமில்லை என்று ஆட்சியாளர்களும், நீதிபதிகளும் கருதுகிறார்கள். இதற்குக் காரணம்  பார்ப்பனியப் பண்பாடும், அது நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஊட்டி வளர்த்த  ஆணாதிக்கமும் தான். பெண்களை அனுபவிக்க கூடிய ஒரு போகப் பொருளாக மட்டும் பார்க்கும் மனநிலையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்தியுள்ளது. அது இன்று மறுகாலனியாக்க கொள்கைகளின் கீழ் அதிரடியாகத் திணிக்கப்படும் நுகர்வுவெறியும், இணையதள ஆபாச வீடியோக்களும், அரசே முன்னின்று நடத்தும் டாஸ்மாக் உள்ளிட்ட போதை பொருட்களாலும் கடந்த 15 ஆண்டுகளில் தான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பெண்கள் மீதான வன்முறை தற்போது அதிகரித்து வருகின்றது.

இவை அனைத்தும் நமது சாதி, மதம் சார்ந்த நம்பிக்கைகள், கலாச்சாரம், வாழ்க்கை நடைமுறைகள், கட்டமைப்புகள் அனைத்திலும் பெண்ணடிமைதனமும், ஆணாதிக்கமும் செல்வாக்குச் செலுத்தி இவ்வன்முறைகளை நிலைத்திருக்க செய்கின்றன. இந்த அனைத்து சமூக விழுமியங்களையும் பாதுகாப்பதே பார்ப்பனியமும், ஆளும் அதிகாரவர்க்கமும், அரசு கட்டமைப்புகளும் தான் இவற்றை தகர்த்து எறியாமல் பெண் விடுதலை சாத்தியமில்லை. இனி இதை உணர்ந்த சமூக முற்போக்காளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்கள் மத்தியில் இதற்கான பிரச்சாரங்களை கொண்டு செல்வதன் மூலம்தான் நாம் நமது பிரச்சனையை தீர்க்க முடியும்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் டவுண்லோட் !

புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

புதிய ஜனநாயகம் முகவர்கள், சந்தா தாரர்கள் மற்றும் வாசகர்களுக்கு, செவ்வணக்கம்!

நிர்வாகச் சிக்கல்களின் காரணமாக எம்மால் மார்ச் 2020 மாத இதழை வெளியிட முடியவில்லை. ஏப்ரல் 2020 இதழைக் கொண்டுவர எமது தரப்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள், மார்ச் இறுதியில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவையடுத்து முடங்கிப் போயின. – மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதாலும், சென்னை நகரில் நோய்ப் பரவல் தீவிரமாக இருப்பதன் காரணமாகவும் மற்றும் இதழின் அச்சாக்கம், அச்சிட்ட பிரதிகளை முகவர்களுக்கு அனுப்பி வைப்பது மற்றும் அச்சில் வந்த இதழை முகவர்கள், வாசகர்களுக்கு விநியோகிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் மார்ச், ஏப்ரல், மே இதழ்களை ஒன்றாக இணைத்து மின்னிதழாக வெளியிடுகிறோம்.

இவ்விதழை வாசகர்கள் எவரும் கட்டணம் எதுவுமின்றி இலவசமாக வாசிக்கத் தருகிறோம். கரோனா தொற்று தொடர்பான கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்திருக்கும் இம்மின்னிதழை முகநூல், மற்ற பிற சமூக வலைத்தளங்கள் வாயிலாக விரிவான அளவில் கொண்டு செல்லுமாறு முகவர்களையும், வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

அச்சுப் பிரதிக்கான சந்தா தொகை செலுத்தியுள்ள வாசகர்களுக்கு விடுபட்டுள்ள இதழ்கள் அவர்கள் கணக்கில் நேர்செய்யப்பட்டு, அவர்களின் சந்தா காலம் அதற்கேற்ப நீட்டிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். முகவர்கள், சந்தாதாரர்கள், வாசக நண்பர்கள் அனைவருக்கும் 135-ஆவது மே தினப் புரட்சிகர வாழ்த்துக் களையும்; பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனினின் 151-ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்களையும்; இ.பொ.க. (மா-லெ)வின் 52-ஆவது நிறுவன நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

– ஆசிரியர் குழு

***

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

  1.  தலையங்கம் – தீவிரமடையும் பாசிசத் தாக்குதல்கள்
  2. கரோனாவும் ஊரடங்கும்: இடிதாங்கிகளா ஏழைகள்?
  3. ஊரடங்கின் கீழ் இருவேறு இந்தியாக்கள்
  4. மோடி – எடப்பாடி: ஜாடிக்கேத்த மூடி!
  5. கரோனாவை விட அபாயகரமானது பார்ப்பனியம்!
  6. உழைப்பின் மீதான மூலதனத்தின் சர்வாதிகாரம்!
  7. புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம்!
  8. அமெரிக்க மக்களைக் காவு வாங்குவது தனியார்மயமே!
  9. ஒரு வைரஸும் சில உண்மைகளும்
  10. பேரழிவு முதலாளித்துவம்
  11. மருத்துவர்களே நீங்கள் எந்தப் பக்கம்?
  12. உத்திரப் பிரதேசம்: இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச்சாலை!
  13. இந்திய இறையாண்மை: தேசபக்தாளின் மற்றொரு பூச்சாண்டி!
  14. பெண்கள் மீதான வன்முறைகள்: தோற்றுப்போன சட்டங்கள்!

புதிய ஜனநாயகம் மே 2020 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது வழக்கு !

PP Letter headபத்திரிக்கை செய்தி

நாள் : 15.05.2020

துக்கம் விசாரித்தால் வழக்கா? பொய் வழக்கு போட்ட போலீசு மீது நடவடிக்கை எடு !

திமுகவைச் சேர்ந்தவர்களால் எரித்துக்கொல்லப்பட்ட விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறியதற்காக விழுப்புரம் மாவட்ட மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் மற்றும் எட்டு மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் விடுதலை சிறுத்தைகள்கட்சி, தேமுதிக,பாஜக, முஸ்லீம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மீதும் விழுப்புரம் திருவெண்ணை நல்லூர் போலீசால் 143,188,269, 3 of Epidemic disease act, 51 of Disaster management act ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக கலியபெருமாள் மற்றும் முருகனுக்கு ஆதரவாக இருந்து அவர்களின் அனைத்து குற்றங்களுக்கும் துணை போன விழுப்புரம் மாவட்ட போலீசு துக்கம் விசாரிக்கச் சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்திருப்பதென்பது கண்டிக்கத்தக்கது.

படிக்க:
♦ விழுப்புரம் சிறுமி எரித்துக் கொலை ! காவல் துறையின் தோல்வியே காரணம் !
♦ மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா ?

குற்றத்தை தடுப்பதில் தோல்வியடைந்த போலீசு மக்களுக்காகப் போராடுவோர் மீது பொய்வழக்கு புனைகிறது. துக்கம் விசாரிக்க சென்றவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் திரும்பப்பெற வேண்டும்.

பொய்யான புகார் அளித்த விஏஓ சஸ்பெண்ட் செய்யப்படவேண்டும். மேலும் பொய்வழக்கு போட்ட போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தங்கள்
மருது
செய்தித்தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

மருத்துகளுக்கு காப்புரிமை இல்லாத ஒரு உலகம் சாத்தியமா ?

தொற்றுநோய் தடுப்பும் அதற்கெதிராக காப்புரிமையும் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், அர்ஜுன் ஜெயதேவ், அச்சால் பிரபாலா

(ஏப்ரல் 27, 2020, பிசினஸ் ஸ்டாண்டர்டு நாளேட்டில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்துடன் கூடுதலாக சில விவரங்கள்)

***

ஒரு புதிய உலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள் !

ந்த உலகத்தில் அனைத்து நாடுகளையும் இணைக்கும் வலைப்பின்னலைக் கொண்ட மருத்துவத்துறை வல்லுனர்கள், உருவாகிவரும் தொற்றுநோய்க் கிருமிகளின் பாணிகளைக் கண்காணிக்கிறார்கள்; அவற்றை காலமுறைப்படி அவ்வப்போது புதிய தரவுகளுடன் செழுமைப்படுத்தி, ஒரு புதிய சூத்திரத்தை – விதிமுறையை நிறுவுகிறார்கள். அக்கிருமிக்கு எதிராக நோய்த்தடைக் காப்பு மருந்தை செலுத்தி அதை அழித்து, அதன் பின்னர் இந்தத் தகவல்களை உலகெங்குமுள்ள நிறுவனங்களுக்கும் நாடுகளுக்கும் கொடுக்கிறார்கள் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்!

மேலும், இந்தப் பணியானது அறிவுசார் சொத்துரிமை (intellectual-property – IP) ஏதுமின்றி, மக்களை நிர்கதியான நிலைக்குத் தள்ளி உச்சகட்ட லாபத்தைக் கொள்ளையிடும் ஏகபோக மருந்து நிறுவனங்களின் சுரண்டல் ஏதுமின்றி நடந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்!

இதுவொரு கற்பனாவாத மாயக்கதையாகத் தோன்றலாம். ஆனால், கடந்த 50 ஆண்டுகளில் ஃபுளூ காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பதற்கான உண்மையான விளக்கம்தான் இது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கீழ், உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பின் (Global Influenza Surveillance and Response System – GISRS)  நிபுணர்கள் ஆண்டுக்கு இருமுறை கூடி, உருவெடுக்கும் ஃபுளூ கிருமிகளின் புதிய பாணிகளைப் பற்றிய தரவுகளைக் கொண்டு விவாதித்து, அவற்றைப் பகுத்தாய்கிறார்கள். இவற்றின் மூலம் ஒவ்வொரு ஆண்டிலும் போடப்படும் புதிய நோய்த்தடைக் காப்பு மருந்துகளில் எத்தகைய பாணிகளைச் சேர்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறார்கள். ஏறத்தாழ 110 நாடுகளில் விரிவடைந்துள்ள இத்தகைய வலைப்பின்னலுக்கு பெரும்பாலும் இந்நாடுகளின் அரசாங்கங்களே (பகுதியளவுக்கு சில அறக்கட்டளைகளும் உள்ளிட்டு) நிதியுதவியைச் செய்கின்றன. யேல் பல்கலைக்கழக சட்டத்துறைக் கல்விக் கழகத்தின் பேராசிரியரான எமி காப்சைன்ஸ்கி (Amy Kapczynski) கூறுவது போல இது “திறந்தவெளி அறிவியல்” ஆகும்.

ஏனென்றால், உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பானது (GISRS), லாபத்தைக் குவிப்பதைவிட மனித உயிர்களைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. இது, நோய்த்தடை காப்பு மருந்துகளை வளர்த்தெடுப்பதற்கான செயற்பாட்டு அறிவாற்றலுடன் அதனை விநியோகிப்பதிலும், சேகரிப்பதிலும், விளக்குவதிலும் ஆற்றலைக் கொண்ட தனித்துவமான அமைப்பாகும். கடந்த காலத்தில் இந்த அமைப்பின் அணுகுமுறையானது, ஆராய்வதற்கு முன்னரே உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அதன் சாதகங்கள் வெகுவிரைவிலேயே தெளிவாகத் தெரிகின்றன.

படிக்க:
♦ கொரோனா எதிர்ப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால் மக்களுக்கு கிடைக்குமா ?
♦ காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !

தொற்று நோயைப் பொறுத்தவரையில், மிக முக்கியமான சிகிச்சைக்கான அறிவைப் பகிர்ந்து கொள்வதில் உலகளாவிய அறிவியல் சமூகமானது குறிப்பிட்டத்தக்க விருப்பத்தைக் காட்டுகிறது. மருத்துவ பரிசோதனைகளை ஒருங்கிணைத்தல், புதிய மாதிரிகளை உருவாக்குவதில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைக் கொண்டிருப்பதோடு, தங்கள் கண்டுபிடிப்புகளை உடனடியாக வெளியிடவும் அவை விருப்பத்தைக் காட்டுகின்றன.

இத்தகைய புதிய ஒத்துழைப்பான சூழலில், வர்த்தக ரீதியான மருந்து நிறுவனங்கள் பல தலைமுறைகளாக இத்தகைய அனைவருக்குமான அறிவுவளத்தை தனியார்மயமாக்கி, பூட்டி வைத்துக் கொண்டு, உயிர் காக்கும் மருந்துகள் மீது எவ்விதத் தடையுமின்றி ஆதிக்கத்தையும் நீட்டித்துக் கொண்டுள்ளன. தேவையற்ற, அற்பமான அல்லது இரண்டாம்தர காப்புரிமைகளைக் கொண்டு, பொதுப்படையான மருந்துகளின் (generics) உற்பத்திக்கும் ஒப்புதலுக்கும் எதிராக அணிசேர முயற்சிக்கின்றன. இவற்றை நாம் எளிதாக மறந்துவிடுகிறோம்.

கோவிட் -19 இன் வருகையினூடாக, நோய்த்தடுப்பு மருந்துகளில் இத்தகைய ஏகபோகமானது, இப்போது மனித உயிர்களின் இழப்பில் வந்து கொண்டிருக்கிறது என்பது மிகவும் வேதனையானது. கிருமியைப் பரிசோதிக்கும் தொழில்நுட்பத்தில் ஏகபோகக் கட்டுப்பாடானது தடைக்கல்லாக உள்ளது.

உதாரணமாக, 3M (த்ரீ எம்) என்ற அமெரிக்க ஏகபோக நிறுவனம், கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு முகக் கவசங்களை “சுவாசக் கருவி” அல்லது “N95” என்று குறிப்பிடுகிறது. இது, 441 காப்புரிமைகளைக் கொண்டுள்ளது. இதனால், புதிய தயாரிப்பாளர்கள் மருத்துவத் தரத்திலான இத்தகைய முகக் கவசங்களை உற்பத்தி செய்வது மிகவும் கடினமாகிவிடுகிறது. (குறிப்பாக, சுகாதார தொழிலாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார் ஆகியோருக்கு கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள N95 முகக் கவசங்கள் மிக அவசியமானவை. இந்நிலையில் காப்புரிமை என்ற பெயரில் இந்நிறுவனம் N95 முகக் கவசங்கள் தயாரிப்பதை ஏகபோகமாக்கிக் கொண்டுள்ளது. இம்முகக்கவசங்கள் தயாரிக்கும் முதல் 10 சர்வதேச நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவை. இந்தியாவில் கூட ரூ.150-க்கு விற்கப்பட்ட N95 முகக் கவசங்கள் தற்பொழுது ரூ.500 வரை விற்கப்படுவதாக எக்கானாமிக் டைம்ஸ் நாளேடு தெரிவிக்கிறது.)

இதைவிடக் கொடுமை என்னவென்றால், கொரோனாவுக்கு மிகவும் உறுதியான சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்படும் ரெம்டெசிவிர் (remdesivir), ஃபெவிபிராவிர் (favipiravir), லோபினாவிர் அல்லது ரிடோனா விர்  (lopinavir/ritonavir) எனப்படும் மருந்துகள் உலகின் பெரும்பகுதிகளில் பல்வேறு வகையான காப்புரிமைகளுடன் தீவிரமான செயல்பாட்டில் உள்ளன. ஏற்கெனவே இத்தகைய காப்புரிமைகள், போட்டியைத் தடுக்கின்றன; புதிய மருந்துகளின் விநியோகத்தையும் மலிவு விலையில் அவை கிடைப்பதையும் தடுத்து அச்சுறுத்துகின்றன.

(கொரோனா தொற்றுக்கான பரிசோதனை தடுப்பு மருந்துகள் மற்றும் நோயாளிக்கான தற்காலிக மருந்துகள் என மேற்கூறியவற்றை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ஹைட்ராக்ஸி க்ளோரோ க்வைன் (HCQ) என்பது மலேரியாவுக்கான மருந்தாகும். தற்போது கொரோனா தொற்றுநோய்த் தடுப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு அடிபணிந்து ஹைட்ராக்ஸி க்ளோரோ க்வைன் (HCQ) மருந்தை மோடி அரசு அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது. ரெம்டெசிவிர் எனும் மருந்து எபோலா நோயைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால், அது சரியாகச் செயல்படவில்லை என்ற போதிலும் தற்போது கொரானாவிற்கு எதிராக நல்ல திறனுடன் செயல்படுவதாக கருதப்படுகிறது. இதனால், ரெம்டெசிவிர் மருந்தினை தயாரிக்கும் ஜிலீட் (Gilead) நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு அதிகரிக்க தொடங்கி விட்டது.)

இப்போது இரண்டு எதிர்காலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றை நாம் தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

முதலாவதாக, நாம் வழக்கம் போலத் தொடர்ந்து பெரிய மருந்து நிறுவனங்களைச் சார்ந்திருப்போம்; மருத்துவ பரிசோதனைகள் மூலமாக கொரோனாவுக்கான சில ஆற்றல் மிக்க சிகிச்சைகள் கிடைக்கும் என்று நம்பியிருப்போம்; மேலும், இதர தொழில்நுட்பங்கள் மூலம் நோயைக் கண்டறிதல், சோதித்தறிதல், நோயாளியைக் காப்பாற்றுதல் முதலானவை உருவாகும் என்று நம்பிக்கை வைப்போம்.

எதிர்காலப் போக்கில், இத்தகைய கண்டுபிடிப்புகளுக்கு ஏகபோக மருந்து விநியோக நிறுவனங்கள் கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்கு காப்புரிமையானது அனுமதிக்கும். இந்த ஏகபோக நிறுவனங்கள்  மருந்துகளை மிக அதிக விலைக்கு விற்பார்கள்; அதன் மூலம் நோயாளிகளைக் காப்பாற்றும் கடமையைக் கைவிடுமாறு நிர்பந்திப்பார்கள். இவற்றில் பொதுமக்களின் தலையீடு வலுவாக இல்லாத நிலையில், மனித உயிர்கள் பறிக்கப்படும் கொடுமை தொடரும். குறிப்பாக வளரும் நாடுகளில் இது தீவிரமாக இருக்கும்.

எந்தவொரு கோவிட் -19 தடுப்பு மருந்துக்கும் இதே பிரச்சினை பொருந்தும். அமெரிக்க மருத்துவரும் கிருமியியல் துறையின் முக்கிய ஆய்வாளருமான ஜோனாஸ் சால்க்-இன் (Jonas Edward Salk) போலியோ தடுப்பூசியானது உடனடியாகவே இலவசமாகக் கிடைத்தது. அவ்வாறின்றி, இன்று சந்தைக்கு வரும் பெரும்பாலான தடுப்பூசிகள் காப்புரிமை பெற்றவையாக உள்ளன. எடுத்துக்காட்டாக, Pneumococcal conjugate vaccine (PCV13) எனப்படும் பன்முகப் பாணிகளைக் கொண்ட தற்போதைய நிமோனியா தடுப்பூசியானது குழந்தைகளுக்கு போடப்படுகிறது. இது பல நூறு டாலர்கள் விலையைக் கொண்டது. ஏனெனில், இது ஃபைசர் (Pfizer) என்ற மருந்து நிறுவனத்தின் ஏகபோகச் சொத்தாக உள்ளது. கவி (Gavi) எனப்படும் தடுப்பூசி மருந்து நிறுவனங்களின் கூட்டணியானது, வளரும் நாடுகளில் தடுப்பூசியின் சில செலவுகளை மானியமாக வழங்குகிறது என்றாலும், ஏராளமான மக்களால் அதைக்கூட விலை கொடுத்து வாங்க முடியாத நிலைமையே நீடிக்கிறது.

இந்தியாவில், ஆண்டுதோறும் நிமோனியா காய்ச்சலால் 1,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் மரணமடைகின்றன. மருந்துகள் இலவசமாகவோ, அல்லது மலிவாகவோ கிடைத்தால் இந்த அவலத்தைத் தடுக்க முடியும். ஆனால், இந்தத் தடுப்பூசி மருந்தானது ஃபைசர் (Pfizer) நிறுவனத்துக்கு 500 கோடி டாலர் வருவாயைத் தந்து கொண்டிருக்கும்போது, அதை அப்பன்னாட்டு ஏகபோக நிறுவனம் இழக்க முன்வருமா?

இரண்டாவதாக, மருந்துகள் இலவசமாகவோ, மலிவாகவோ கிடைக்கும் நோக்கத்திற்கு நடப்பிலுள்ள கட்டமைப்பானது பொருந்தாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இக்கட்டமைப்பில், தனியார் ஏகபோகங்கள் அறிவுத் திறனிலிருந்து லாபம் பெறுகின்றன. இந்த அறிவுத் திறனானது பெரும்பாலும் பொதுத்துறை நிறுவனங்களால் உருவாக்கப்படுகிறது. உயிர் காக்கும் மருந்துகளைப் பெறுவதற்கான வாய்ப்பை மக்களுக்கு மறுப்பதன் மூலம், ஏகபோகங்கள் மக்களைக் கொலை செய்கின்றன என்று பொதுச் சுகாதார வழக்குரைஞர்களும் பிற அறிஞர்களும் நீண்டகாலமாகவே வாதிட்டு வந்துள்ளனர்.

இதற்கு மாறாக, ஒரு மாற்று கட்டமைப்பு உருவாகும் போதுதான் உயிர் காக்கும் மருந்துகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் மக்களுக்குக் கிடைக்கும். ஃபுளூ காய்ச்சலுக்கான மருந்தின் வருடாந்திர உற்பத்திக்கு உதவும் கட்டமைப்பு போன்றதுதான் அந்த மாற்றுகட்டமைப்பு அமையும்!

இத்தகைய மாற்று அணுகுமுறைகளுக்கு ஆதரவாக ஏற்கனவே சில இயக்கங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, கோஸ்டாரிகாவின் அரசாங்கம் அண்மையில் உலக சுகாதார அமைப்பை (WHO) அழைத்து, கோவிட் -19 சிகிச்சைகளுக்கான அறிவுசார் சொத்துரிமைகளைப் பொதுவாக்கிக் கொள்ளும் தன்னார்வ மையத்தை நிறுவுமாறு கோரியது; இது பல உற்பத்தியாளர்கள் புதிய மருந்துகளை விநியோகிக்க அனுமதியளிப்பதாகவும், நோயைக் கண்டறிவதை மலிவான விலையில் செய்வதாகவும் அமையும் என்று எடுத்துக் கூறியது.

காப்புரிமைகளைப் பொதுவாக்கிக் கொள்ளுதல் என்பது, புதிய யோசனை அல்ல. மருந்துகள் காப்புரிமை மையத்தின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார அமைப்பும் பல ஆண்டுகளாக எச்.ஐ.வி / எய்ட்ஸ், ஹெபடைடிஸ்-சி (மஞ்சள் காமாலை) மற்றும் காசநோய்க்கான சிகிச்சைகளுக்கான வாய்ப்பை அதிகரிக்க முயன்று வருகின்றன. மேலும், கோவிட் -19 ஐ உள்ளடக்கும் வகையில் இப்போது இத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளன.

தற்போது உயிர்காக்கும் மருந்துகள் எவ்வாறு உருவாக்கப்பட்டு மக்களுக்குக் கிடைக்குமாறு செய்யப்படுகிறதோ, அந்த முறையை மாற்றியமைக்கும் திட்டமாகும். பரஸ்பர ஒத்துழைப்பையும் பகிர்ந்கொள்ளப்பட்ட அறிவையும் அடிப்படையாகக் கொண்டு, ஏகபோகத்தால் இயக்கப்படும் இக்கட்டமைப்பை மாற்றுவதே இதன் குறிக்கோளாகும்.

சிலர் கோவிட் -19 நெருக்கடியைத் தனித்தன்மை வாய்ந்தது என்று நிச்சயமாக வாதிடுவார்கள்; அல்லது கட்டாய உரிமங்கள் பெறவேண்டிய அச்சுறுத்தல் காரணமாக, மருந்து நிறுவனங்கள் சிறப்பாக நடந்து கொள்ளுமாறு நிர்பந்தத்தை ஏற்படுத்தக் கூடிய வழிமுறையை இது உருவாக்குகிறது என்று வாதிடுவார்கள்.

ஆனால், உடனடியாக இலாபம் பார்க்க வேண்டும் என்று கருதாத முன்னணி ஆராய்ச்சியாளர்களைத் தவிர, பெரிய மருந்து நிறுவனங்கள் மட்டும் அவற்றின் பொறுப்புணர்வைப் புரிந்து கொள்ளவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, ரெம்டெசிவிர் (remdesivir) மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான ஜிலீட் (Gilead), “அனாதை மருந்து” என்று கைவிடப்பட்ட மருந்தின் நிலைக்கு விண்ணப்பித்ததன் மூலம் தற்போதைய கொரோனா நெருக்கடிக்குத் தீர்வு காண முயன்றது. இந்த விண்ணப்பத்தை ஏற்று அனுமதியளித்திருந்தால், இது அந்நிறுவனத்திற்கு ஒரு வலுவான ஏகபோக நிலையை உருவாக்கியிருக்கும். மேலும், பல லட்சம் டாலர் அளவுக்கு வரி விலக்கும் கிடைத்திருக்கும். (பொதுமக்களின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து, பின்னர் அந்நிறுவனம் தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.)

மிக நீண்ட காலமாக, இன்றைய அறிவுசார் சொத்துரிமையின் ஆட்சி மிக அவசியமானது என்ற கட்டுக்கதையை நாம் பெற்றுள்ளோம். உலகளாவிய குளிர்க் காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் மறுமொழி அமைப்பினுடைய (GISRS) பயன்பாடுகளின் நிரூபிக்கப்பட்ட வெற்றியும் மற்றும் பிற “திறந்த அறிவியல்” செயல்பாடுகளும் அது உண்மையல்ல என்பதைக் காட்டுகிறது. கோவிட் -19 இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான மனிதர்களை துன்பத்திற்கும் மரணத்திற்கும் சந்தடியில்லாமல் தள்ளுகின்ற ஒரு அமைப்பின் அறிவுத் திறனுக்கும் அறநெறிக்கும் எதிராக நாம் கேள்வி எழுப்ப வேண்டும்.

புதிய அணுகுமுறைக்கான நேரம் இது. ஏற்கெனவே பல கல்வியாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் இதற்காக முன்வந்துள்ளனர். அவர்கள் வெறுமனே லாபத்திற்கானதாக அல்லாமல், சமூகத்துக்குப் பயனுள்ள மருந்துகளைக் கண்டுபிடிப்பதற்கான, நம்பிக்கைக்குரிய பல்வேறு ஆலோசனைகளுடன் முன்வந்துள்ளனர். இதனைத் தொடங்குவதற்கான ஒரு சிறந்த நேரம் வேறெப்போதும் இருந்ததில்லை

– புதியவன்

***

கட்டுரையாளர்கள் பற்றிய சிறு குறிப்பு : 

ஜோசப் இ ஸ்டிக்லிட்ஸ், அர்ஜுன் ஜெயதேவ், அச்சால் பிரபாலா
  • ஜோசப் இ ஸ்டிக்லிட்ஸ், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்; கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்.
  • அர்ஜுன் ஜெயதேவ், அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியர்; புதிய பொருளாதார சிந்தனைக்கான நிறுவனத்தின் மூத்த பொருளாதார நிபுணர்.
  • அச்சல் பிரபாலா, ஷட்டில்வொர்த் அறக்கட்டளையின் ஆய்வு மாணவர்.
  • எமி காப்சைன்ஸ்கி, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் பேராசிரியர்; உலகளாவிய மருத்துவ – சுகாதார நீதிக்கான அமைப்பு, ஆய்வு ஒருங்கிணைப்பும் வெளிப்படைத் தன்மைக்குமான கூட்டுத்துவ அமைப்பு, யேல் பல்கலைக்கழக அரசியல் பொருளாதாரத் துறை ஆகியவற்றின் இணை இயக்குநர்; தகவல் கொள்கை, அறிவுசார் சொத்துரிமைச் சட்டம், அனைத்துலகச் சட்டம், அனைத்துலக நல்வாழ்வு முதலானவற்றில் ஆய்வுகளைச் செய்து வருபவர்.

கொரோனா பீதி : பார்ப்பன பாசிஸ்டுகளின் தாக்குதல் இலக்கு இசுலாமிய மக்கள் !

சில ஆண்டுகளாக இசுலாமிய மக்களை திட்டமிட்ட தாக்குதலுக்கு உள்ளாக்கி வந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பார்ப்பனப் பாசிசக் கும்பல் கொரோனா வைரஸ் பீதியை தங்களுக்கு சாதமாக்கிக் கொண்டிருக்கிறது. அவலத்திலும் ஆதாயம் தேடும் இந்து சனாதன சித்தாந்தத்தின் உண்மை முகம் இதுதான்.

***

டந்த சில ஆண்டுகளாக பசுக் கொலைகள், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைப் பறித்தது, பாபர் மசூதி தீர்ப்பு ஆகியவைகளைத் தொடர்ந்து தேசியக் குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் இசுலாமிய மக்களுக்கு எதிராகத் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது மோடி அரசு. மேலும் அரசாங்கம், இராணுவம், போலீசு மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பரிவார கும்பல்கள், அவற்றின் ஊதுகுழல் ஊடகங்களால் வெறுப்புப் பிரச்சாரங்கள், சமூக ஒதுக்குதல்கள், தாக்குதல்கள், கொலைகள், இனப்படுகொலைகளுக்கு ஆளாக்கப்பட்டு வந்த இசுலாமிய மக்களை மேலும் கடுமையாக அடக்கி ஒடுக்குவதற்கு கொரொனா வைரஸ் பீதியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் காவி பாசிஸ்டுகள்.

கொரோனா வைரஸ் பீதியை முன்னிறுத்தி திடீரென எந்த அவகாசமும் முன்னறிவிப்பும் இன்றி சில மணிநேர இடைவெளியில் அறிவிக்கப்பட்டு முடிவின்றி தொடரும் ஊரடங்கினால் மக்கள் பெரிதும் துன்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். இச்சூழலிலும் இசுலாமியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல் நடத்திவரும் வெறுப்புப் பிரச்சாரங்கள், தாக்குதல்களை ஜனநாயக உணர்வும் சமத்துவ உணர்வும் கொண்ட அனைவரும் எதிர்த்து முறியடிக்க வேண்டியது நமது அவசியக் கடமைகளில் ஒன்றாகும்.

படிக்க:
♦ ரயில் ரத்தானதால் கேரளத்தில் தற்கொலை செய்த  மேற்கு வங்கத் தொழிலாளி !
♦ டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !

***

கொரோனா பீதி தொடங்கியவுடனே அது இசுலாமியர்களுக்கு எதிரான தாக்குதலாக அமைந்துவிடவில்லை. கொரோனா பீதியை இசுலாமியர்களுக்கு எதிராக எப்படி மடைமாற்றுவது என்று காத்திருந்த ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. பார்ப்பன கும்பல், டெல்லி தப்லிக் ஜமாத் மாநாடு விசயத்தை வைத்து பீதியையும் பொய்ப் பிரச்சாரத்தையும் பரப்பத் தொடங்கினர்.

“கொரோனா ஜிகாதி”, “கொரோனா தப்லிக் குண்டுகள்”, “முசுலீம்கள் என்றால் பயங்கரவாதிகள்”, “தாலிபான் குற்றவாளிகள்” என்று பலவாறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. டெல்லியில் முசுலீம்கள் அதிகம் வசிக்கும் நிஜாமுதின் பகுதியில் இசுலாமியர்கள் கொரோனாவல் பாதிக்கப்பட்டு கடுமையாக அவதிப்படுவதைப் போல பொய்யான, எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோக்கள் பரப்பப்பட்டன. சிங்கப்பூரில் இசுலாமியர்கள் உணவை நக்குவது போன்ற பழைய வீடியோக்களை டெல்லியில் தற்போது நடந்தது போல வதந்திகளைப் பரப்பி இவை தப்லிக் மாநாட்டில் நடந்ததாகப் பிரச்சாரம் செய்தனர். இவ்வாறான ஆயிரக்கணக்கான வதந்திகளைப் பரப்பியதன் மூலம் கொரோனா பீதியை, இசுலாமியர் வெறுப்பு பீதியாக மாற்றியது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல்.

ஹரியானா பா.ஜ.க. பிரமுகரும் குத்துச்சண்டை வீராங்கனையுமான பபிதா போகாட், உத்தகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மகேந்திர பட், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கபில் மிஷ்ரா, மத்திய சிறுபான்மைத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி போன்ற பல பா.ஜ.க. பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தையும் இசுலாமியர்களுக்கு எதிரான பீதியையும் முன்னின்று பரப்பினர்.

அதனைத் தொடர்ந்து இசுலாமிய மக்கள் மீது நடந்த தாக்குதல்களின் வேகமும் வடிவங்களும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கொடியதாக அமைந்திருந்தன. இது காங்கிரசு – பா.ஜக. ஆளும் மாநிலங்கள் என்ற வேறுபாடு இன்றி இசுலாமிய வெறுப்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் காட்டுத்தீ போல பரவியது.

வடமாநிலங்கள் பலவற்றில் முசுலீம் மக்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் காய்கறி வாங்கச் சென்ற ஒரு இசுலாமிய முதியவர் தன்னுடைய ஆதார் கார்டை காட்டச் சொல்லி மிரட்டப்பட்டார்.

முசுலீம்கள் தான் கொரோனாவைப் பரப்புகிறர்கள் என்று சொல்லி கர்நாடகா, உத்தர்காண்ட் மாநிலங்களின் பல பகுதிகளில் இசுலாமியர்களின் கடைகளைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கடைகளை மூடியுள்ளனர். அருணாச்சலப்பிரதேசத்தில் பால் விற்பனை செய்யும் குஜ்ஜார் இசுலாமிய குடும்பத்தினர் மீது சமூகப் புறக்கணிப்பை விதித்துள்ளனர் இந்துமதவெறி குண்டர்கள். இதனை மீறி பாலை எடுத்துச் சென்று விற்க முயன்றதால், அவர்களது கால்நடைகளை அடித்து விரட்டியும் கொட்டகைகளைப் பிரித்துப் போட்டும் தாக்கியுள்ளனர்.

உத்திரப் பிரதேசத்தில் ஒரு மசூதி இடித்து நொறுக்கப்பட்டுள்ளது. மோடி விளக்குகளை அணைக்கச் சொன்ன ஏப்ரல் 5-ம் தேதியன்று அன்று கர்நாடகாவில் இரண்டு மசூதிகளில் விளக்கெரிந்ததற்காக மசூதிகள் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளன. இதேபோன்று டெல்லி, ஹரியானாவிலும் பல மாவட்டங்களில் மசூதிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கர்நாடகாவின் இராம்நகரில் உள்ள கைலஞ்சா கிராமத்தில் முசுலீம்களை ஊருக்குள் விடக்கூடாது என தண்டோரா அடித்து எச்சரித்துள்ளனர். அந்த ஊரில் ஏழைகளுக்கு ரேசன் பொருட்களை வழங்கியதற்காக இரண்டு இசுலாமியர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மசூதிகளுக்குள் தப்லிக் மாநாட்டில் கலந்து கொண்ட இசுலாமியர்களை மறைத்து வைத்துள்ளதாக பரப்பப்பட்ட புரளியை முகாந்திரமாக்கி பல நூற்றுக்கணக்கான மசூதிகளில் அடைக்கலம் புகுந்திருந்த ஏழை முசுலீம் மக்கள் கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 5-ம் தேதி விளக்குகளை அணைக்கவில்லை என்பதற்காக கர்நாடகா மற்றும் பல வடமாநிலங்களில் இசுலாமிய மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

குஜராத், உத்திரப்பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இசுலாமிய மக்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசு மருத்துவமனைகளில் கூட மருத்துவம் செய்துகொள்ள அனுமதிக்கப்படவில்லை. இராஜஸ்தானில் உள்ள பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இர்ஃபான் கானின் மனைவிக்குப் பிரசவம் பார்க்க மறுத்து அவரை வெளியே விரட்டியுள்ளனர். உத்திரப்பிரதேசத்திலும் பல இடங்களில் இசுலாமியர்களை மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை.

படிக்க:
♦ ஏழை இஸ்லாமியர்கள் தட்டில் மண்ணை அள்ளி போடும் வதந்திகள் !
♦ “கொரானா ஜிஹாத்” சங்கிகளின் பொய்ப் பிரச்சாரம் – பஞ்சாப் குஜ்ஜார் பழங்குடியின முசுலீம்கள் மீது தாக்குதல் !

பார்ப்பனப் பாசிஸ்டுகள், அவர்களது எடுபிடிகளாக இருக்கும் அரசு அதிகாரிகள், ஊடகங்களின் இருட்டடிப்புகளைத் தாண்டி வெளியே கசிந்தவைதான் மேற்கண்ட சம்பவங்கள். இவை கடந்த ஒரு மாதத்தில் நடந்தவை மட்டுமே. உண்மை நிலைமை இதனைவிட கொடியதாகவும், கோரமானதாகவும் இருக்கின்றன. அன்றாடம் இந்தமாதிரியான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

தமிழ்நாட்டில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகம்பேர் இசுலாமியர்கள் எனவும் அவர்கள் மூலமாக நோய் பரவுவதாகவும் ஊடகங்களும் பார்ப்பன பாசிஸ்டுகளும் பிரச்சாரம் செய்தன. அகில இந்திய அளவிலும் கொரோனா நோயினால் இறந்தவர்களில் இசுலாமியர்கள் அதிகமானவர்கள், பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருபங்கினர் தப்லீக் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் என்று பிரச்சாரம் செய்வதிலேயே அரசு அதிக முக்கியத்துவம் காட்டுகிறது.

***

சுலாமிய மக்களை கொரோனா வரைஸ் பரப்புபவர்களாகக் காட்டி, தாக்கி – அடக்கி ஒடுக்கும்  ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலின் நோக்கம் என்ன? கொரோனா தடுப்பு ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கோடான கோடி உழைக்கும் மக்களுக்கு இந்த அரசு செய்ய மறுக்கும் கடமைகளை மக்கள் உணர்ந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிராகத் திரள்வதைத் தடுக்கவும், தனது பார்ப்பன இந்துராஷ்டிரக் கனவை நோக்கி மக்களை அணிதிரட்டவுமான தந்திரமாக இசுலாமிய வெறுப்பு பிரச்சாரத்தை திட்டமிட்டு செய்து வருகின்றனர். இவற்றை நாம் அனுமதிக்கப் போகிறோமா? என்பதுதான் நம்முன்னே உள்ள கேள்வி.

– புதியவன்

காவிரி – மின்சாரம் – தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தப் பார்க்கும் மோடி அரசு !

காவிரி டெல்டா விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்பது தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் இதற்குப் பெரும் கேடு விளைவிக்கும் வகையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வளத் துறையின் கீழ் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

அரசியல் சட்டப்பிரிவு 77.3 பயன்படுத்தி அமைச்சகங்களுக்கு பணிகளை ஒதுக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரத்தின் படி 1961 பணிகள் ஒதுக்கீடு விதிகளின் கீழ் அறிவித்துள்ளது காவிரி நீர் மேலாண்மை வாரியம் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உருவாக்கப்பட்ட ஒரு தன்னாட்சி நிறுவனம் இதில் மத்திய அரசு மட்டுமின்றி தொடர்புடைய நபருக்கு மாநில அதிகாரிகள் கொண்ட அமைப்பு இந்த அமைப்பை நீர்வளத் துறையின் ஒரு பிரிவாக மாற்றி இருப்பதை நாங்கள் மிக வன்மையாக கண்டிக்கிறோம்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்ற தீர்ப்பை குறுக்கு வழியில் முடக்கும் செயல் மட்டுமின்றி உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலுமாகும் அரசியல் ஆதாயங்களுக்காக தமிழக விவசாயிகளின் பாசன குடி நீர் உரிமையை மத்திய அரசு மறுக்கும் ஆபத்து நிறைந்தது எனவே மத்திய அரசின் இந்த ஜனநாயக விரோத மக்கள் விரோத நடவடிக்கையை தமிழக அரசு தீவிரமாக எதிர்த்து தடுத்து நிறுத்த வேண்டும்

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மேலும் 2003 மத்திய மின்சார சட்டத்தில் கொண்டுவரப்பட்ட கொண்டுவரப்படவுள்ள சட்ட திருத்தம் மின் உற்பத்தி விநியோகம் விலை நிர்ணயம் அனைத்தையும் தனியார் மயமாக்குவது ஓடு விவசாயிகள் நெசவாளிகள் வீட்டு உபயோகம் ஆகியவற்றிற்கு வழங்கப்படும் சலுகை இலவச மின்சாரம் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கிறது மாநில மின் வாரியங்கள் அதன் கட்டமைப்பு ஆகியவற்றை தனியார் மின் உற்பத்தியாளர்களின் முகவர்களாக மாற்றுகிறது அண்டை நாடுகளுக்கு மின்சாரத்தை விற்கவும் சட்ட திருத்தம் வகை செய்கிறது மின்கட்டணத்தை தனியார் நிறுவனங்கள் எப்போதும் எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது திருத்தம் நடைமுறைக்கு வந்தால் விவசாயம் சிறு தொழில் அனைத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் பணம் இருப்பவனுக்கு மின்சாரம் என்ற நிலை உருவாகும் எனவே இதனையும் தமிழக அரசு நிராகரிக்க வேண்டும்

மேலும்.. தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலை உரிமையை பறித்து 12 மணிநேர வேலை என சட்டமாக்கி தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி முதலாளிகள் நோக்கத்திற்கு ஏற்ப செயல்படுகிறது. மேலும் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் நிதி தேவைகளை தர மறுப்பது மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி நிதியையும் பறித்துள்ளது. ஆகவே மாநில உரிமைகளை காக்க மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை முறியடிக்க வேண்டும். என்பதை கீழ் கண்ட அமைப்புகள் சார்பில் இன்று 13.05.2020 காலை 11 மணியளவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு கொடுக்க சென்றோம். போலீசு ஒரு நபர் மட்டுமே செல்ல வேண்டுமென கூறினர்.

படிக்க:
♦ கொரோனா பீதியை வைத்து இசுலாமியர்கள் தாக்கப்படுவதற்கு சில சான்றுகள் !
♦ ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !

ஆட்சியர் வீடியோ கான்பரசில் உள்ளதால் பிறகு அவரது நேர்முக உதவியாளர் வந்து கோரிக்கைகளை கேட்டு மனுக்களை பெற்று கொண்டார். மக்கள் அதிகாரம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் ஒற்றுமையான இந்த நடவடிக்கை போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் இருந்தது.

பங்கேற்ற அமைப்புகள்,

1. லெ.செழியன். திருச்சி மண்டல ஓருங்கிணைப்பாளர் . மக்கள் அதிகாரம்
2. ம.பா.சின்னத்துரை திருச்சி மாவட்டத் தலைவர் தமிழக விவசாயிகள் சங்கம்.( கட்சி சார்பற்றது)
3. ம. ஜீவா.மாவட்ட செயலர். மக்கள் கலைக் இலக்கியக் கழகம் திருச்சி
4. தமிழாதன் பெரம்பலுர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி .
5. கமலக்கண்ணன். மாவட்ட செயலர். தந்தை பெரியார் திராவிடர் கழகம் .
6. ரவிக்குமார். மாவட்ட செயலாளர். சமூக நீதி பேரவை
7. காவிரி உரிமை மீட்புக் குழு
9. கவித்துவன். தமிழ் தேசிய பேரியக்கம்
10. சம்சுதீன் மாவட்ட தலைவர் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி .
11. ஜோசப்.மாவட்ட து. தலைவர் மக்கள் உரிமைக் கூட்டணி
12. பஷீர். மாவட்ட தலைவர் மக்கள் உரிமை மீட்பு இயக்கம்.

தகவல்
மக்கள்அதிகாரம் .
திருச்சி
போன்: 94454 75157

கங்கையை சுத்தப்படுத்திய கொரோனா ஊரடங்கு !

ங்கை நதி சுகாதாரக் கேடடைந்து வருவதால், அதனைத் தூய்மை செய்ய வேண்டும் என்ற முயற்சி இன்று, நேற்றல்ல நூற்றாண்டைக் கடந்து நீடிக்கும் பிரச்சினை.

கங்கை நதியின் புனிதம், தூய்மை எல்லாம் புராணங்களில்தான் புகழ் பெற்றிருக்கிறது. ஆனால், கங்கைநதி ஒரு சாக்கடையாக ஓடுவதால் ஏற்படும் நாற்றமோ இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவில் ‘பிரசித்தி’ பெற்றிருக்கிறது. சுமார் 50 கோடி மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதாரமாக இருக்கும் கங்கை, உலகத்தில் அதிக சீர்கேடடைந்த நதிகளில் 6-வது இடத்தை வகிக்கிறது.

கங்கை நதியின் சுகாதார சீர்கேட்டுக்கான காரணங்களில் முதன்மையாதாக, கான்பூர், வாரணாசி, பிரக்யாராஜ் (லக்னோ), பாட்னா போன்ற நகரங்களில் உள்ள எண்ணற்ற சாயத் தொழிற்சாலைகள், நூற்பாலைகள், நெசவாலைகள், இரசாயன தொழிற்சாலைகள், தோல் பதனிடும் ஆலைகள் உள்ளன. குறிப்பாக நிலக்கரியைக் கொண்டு இயங்கும் மிகப்பெரிய அனல் மின்நிலையம் கான்பூருக்கு அருகில் கங்கையின் துணைநதி பாண்டுவின் கரையில் அமைந்துள்ளது. இவ்வாலையில் ஓராண்டுக்கு ஆறு இலட்சம் டன் நிலக்கரி எரிக்கப்படுகிறது. இதனால் உருவாகும் 2.1 இலட்சம் டன் சாம்பல் மழைக்காலங்களில் கரைந்து ஆற்றில் கலந்து வருகிறது. இந்தச் சாம்பலில் மிகவும் நச்சுத் தன்மை கொண்ட வேதிப்பொருட்களும், தனிமங்களும் கலந்துள்ளன.

அடுத்து, கங்கை நதியின் கரையில் 48 சிறிய நகரங்களும், ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பெரிய நகரங்களும் அமைந்துள்ளன. இந்த நகரங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் கங்கையில்தான் கலக்கின்றன.

மேலும், ‘கங்கையில் குளித்தால் பாவம் தீரும்’ என்ற பார்ப்பனப் புரட்டை நம்பி விழாக்காலங்களில் மட்டும் சுமார் 7 கோடி பேர் கங்கையில் குளிக்கின்றனர். வெறும் குளியலாக மட்டும் அது அமைந்து விடவில்லை. சடங்கு என்ற பெயரில் ஊரில் உள்ள குப்பைகளை எல்லாம் சேர்த்து வைத்தும் பூசை புனஸ்காரம் என்ற பெயரில் பல பொருட்களையும் ஆற்றோடு விட்டு வருகின்றனர்.  இவை மிகப்பெரும் சுகாதாரக்கேடாக அமைந்துள்ளன.

இதனைவிட மோசமானது என்னவெனில், இறந்தவர்களின் பிணத்தை ஆற்றில் விட்டுவிடுவது என்ற பிற்போக்குத்தனம்தான். பாதி எரிந்த நிலையில் பிணங்களை ஆற்றில் தூக்கிப் போட்டுவிடுவது என்பதையும் ஒரு மரபாகத் தொடர்ந்து செய்து வருகின்றனர். மேலும், இறந்தவர்களின் உடலை எரித்து அந்த சாம்பலை கங்கையில் சென்று கரைப்பது என்ற பார்ப்பன சடங்கு காசியில் மட்டும் ஆண்டுக்கு 40,000 பேருக்கு செய்யப்படுகிறது.

கங்கை நதியை சீர்கேடடையச் செய்பவை இவை மட்டும்தான் என்று கருதிவிட வேண்டாம். கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள சிறிதும் பெரிதுமாக ஆயிரக்கணக்கான நீரேற்று நிலையங்கள் (பம்பிங் ஸ்டேசன்) நதியின் நீரோட்டத்தைத் தடுப்பதில், கழிவுகள் தேங்குவதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

இப்படி முதலாளிகளின் கொள்ளை இலாபத்திற்காகவும் பார்ப்பன மூடநம்பிக்கைகளாலும் கங்கை நதி சாக்கடையாக மாற்றப்பட்டுள்ளது.

படிக்க:
♦ கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?
♦ கங்கையை சுத்தம் செய்தாரா மோடி ? கதை விட்ட வானதி சீனிவாசன் !

***

ங்கை நதியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டீஷ் ஆட்சியிலேயே எழுப்பப்பட்டிருந்தாலும் ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில்தான் முதல்முதலாக இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் “தூய கங்கைக்கான தேசிய மிஷன்” என்ற ஒரு துறை நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.

1986-ம் ஆண்டில் “கங்கை நடவடிக்கை திட்டம் 1” தொடங்கியது முதல் வாஜ்பாய் ஆட்சியில் “கங்கைத் தாய் தூய்மை செய்யும் திட்டம்” அதன் பின்னர் “கங்கை தூய்மைப் பணிகள்” என 2014-ம் ஆண்டு வரை ரூ.4000 கோடி ஒதுக்கப்பட்டது. இதனால் கங்கை நீர் மாசுபடுவது தடுக்கப்படவில்லை. மாறாக, மேற்கண்ட காரணங்களால் அசுத்தமாவது அதிகரித்தது.

இதன் பின்னர் 2014-ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க.-மோடி அரசாங்கம் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.28,970 கோடி ரூபாய் நிதியை கங்கை தூய்மைப்படுத்துவதற்கு ஒதுக்கியது. கங்கை நதியைத் தூய்மைப்படுத்த ஒதுக்கப்பட்ட இவ்வளவு பெரிய தொகையும் மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒதுக்கப்பட்டது தானே தவிர, கங்கைக் கரையிலுள்ள ஆலை முதலாளிகளிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி அல்ல.

2019-ம் ஆண்டுக்குள் கங்கையை முழுமையாக சுத்தம் செய்யப்படும் என உறுதி கூறப்பட்டது. பிரதமர் மோடியோ இது தனது சொந்தத் திட்டம் என்று வேறு கூறினார். ஆனால், 2019-ல் சிறிதளவு கூட முன்னேற்றமில்லாததால் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது.

கான்பூர் முதல் காசி வரையிலான நதியின் பகுதியில் (அழுகிய நலிந்த தண்டு என்று அழைக்கப்படும் பகுதி) ஓரிடத்தில் கூட குளிக்க முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் மோடி அரசின் மிகப்பெரும் பொருட்செலவு, ‘கடும்’ முயற்சிகளின் விளைவாக, முக்கியமான 70 இடங்களில் 5 இடங்களில் மட்டும்தான் குடிப்பதற்கும் 7 இடங்களில் ஓடும் நீரில்தான் குளிப்பதற்கும் பயன்படுத்த முடியும் என்ற அளவிற்குதான் ‘முன்னேற்றம்’ இருந்தது.

கங்கை நதியைத் தூய்மைப்படுத்த, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம், தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கங்கை தேசிய மிசன், தேசிய கங்கை நதிப் படுகை ஆணையம், தேசிய கங்கா கவுன்சில் போன்ற பல மத்திய அமைப்புகளும், இவற்றின் ஒவ்வொன்றின் கீழே உள்ள மாநில அளவிலான பிரிவுகள் மற்றும் கங்கை நதிக்காக மாநில அளவில் தனிப்பிரிவுகள், கும்பமேளாவை நடத்துவதற்கான அரசின் பிரிவு, தனியார் தொண்டு நிறுவனங்கள், கங்கைக் கரையில் அமைந்துள்ள கோவில்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அமைத்துள்ள தொண்டு நிறுவனங்கள், ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் பரிவாரங்கள் என பெரிதும் சிறிதுமான பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன.

மேலும், கங்கையைப் புனித நதியென்றும், கங்கைத் தாய் என்றும் போற்றுகின்ற பார்ப்பன சனாதனத்தைக் கொள்கையாகக் கொண்ட பா.ஜ.க. மோடி அரசாங்கமும், உ.பி.யில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான அரசாங்கமும் அதிகாரத்தில் இருந்தும் என்ன பயன்? அரசு அதிகாரத்தின் எல்லாத் துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். விசுவாசிகள் புகுத்தப்பட்டிருந்தும், கங்கை இயற்கை அதிரடிப் படையில் (Ganga EcoTask Force) நான்கு பட்டாலியன் வீரர்கள் இருந்தும், ஐ.ஐ.டி.யில் படித்த அறிவாளிகளைக் கொண்டு சுத்தமான கங்கைக்கான விதிமுறைகளை வகுத்து, அவற்றை மீறுவோரை தண்டிப்பது, தண்டம் வசூலிப்பது, சிறையில் அடைப்பது போன்ற சட்ட வசதிகள் செய்யப்பட்டிருந்தும் பலனேதுமில்லை. கங்கை புத்துணர்ச்சி படுகை மேலாண்மைத் திட்டம் (Ganga Rejuvenation Basin Management Programme) வகுக்கப்பட்டிருந்தும், கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் நிறைவேறியது என்னவென்றால், 7 இடங்களில் குளிக்கலாம், 5 இடங்களில் நீரைக் குடிக்கலாம் என்பதுதான்.

இன்னும் குறிப்பாக, கங்கை நதியின் தூய்மைக்காக மோடி அரசு ஒதுக்கிய தொகை மட்டுமின்றி மேற்கண்ட ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மூலம் இதைவிட பல மடங்கு பொருட்செலவு செய்யப்பட்டிருக்கும். இவற்றில், பக்தி என்ற பெயரில் மக்கள் கொடுத்த ‘காணிக்கை’கள்தான் பெரும்பாலானவை. இவையன்றி, கங்கையைச் சுத்தம் செய்வதற்கு என தனியாகத் திரட்டப்பட்ட நிதிகளும் இவற்றில் அடங்கும்.

படிக்க:
♦ ராம் கோயில் அறக்கட்டளைக்கு நன்கொடைகளை பெற வரி விலக்கு அளித்த மத்திய அரசு !
♦ தூய்மை கங்கை : மோடியின் மற்றுமொரு ஜூம்லா !

***

மோடி அரசும், ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரங்களும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் மேற்கொண்ட முயற்சிகளும் அவற்றின் விளைவுகளும் மேற்கண்டவாறு இருக்க, மார்ச் 24-ம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட முதல் ஒரு வாரத்திலேயே கங்கை நீரில் மாசு குறைந்திருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. அடுத்து வந்த ஏப்ரல் மாதத்தில் கங்கை நீரின் மாசு மிகபெரும் அளவில் குறைந்துவிட்டது. பெரும்பாலான பல இடங்களில் மக்கள் குளிப்பதற்கு ஏற்றவகையில் அமைந்திருப்பதாகவும், குடிக்கத்தக்கதாக இருப்பதாகவும் பலரும் ஆச்சரியத்துடன் தெரிவிக்கின்றனர். ஆற்று நீரில் இருந்து வரும் சாக்கடை நாற்றம் குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். இத்தனைக் காலம் கங்கையில் மிதந்து வந்த அழுக்கும் நுரையும், எங்கும் காணப்பட்ட கருநிற நீரும் மறைந்து தெளிவான நீரோட்டமும் மீன்கள் விளையாடுவதும் கண்டு பலரும் மகிழ்கின்றனர்.

சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அரசாலும் அதிகார வர்க்கத்தாலும் பக்தியின் பெயரில் மக்களைக் கொள்ளையடித்த கும்பல்களாலும் செய்ய முடியாததை, கொரோனா நோய்த்தொற்றை ஒட்டி அமலாக்கப்பட்ட நாடுதழுவிய ஊரடங்கு உத்தரவு செய்துள்ளது என்றால், இதனை எப்படிப் புரிந்து கொள்வது?

இந்த ஊரடங்கு காலத்தில் கங்கை நதிக் கரையில் இருந்த ஆயிரக்கணக்கான சாயத் தொழிற்சாலைகள், நூற்பாலைகள், நெசவாலைகள், இரசாயன தொழிற்சாலைகள், தோல் பதனிடும் ஆலைகள் இயங்கவில்லை. இதனால், ஆலைக்கழிவுகள் கங்கையில் கலப்பது 90% தவிர்க்கப்பட்டுவிட்டது. இதுதான் முதன்மையான காரணம்.

இரண்டாவது, இந்தக் காலத்தில் கோவில்களில் பண்டிகைகள் கொண்டாடுவது அறவே நிறுத்தப்பட்டது. பிணங்களை ஆற்றில் மிதக்கவிடுவது, சாம்பலைக் கரைப்பது போன்றவை இல்லை என்று சொல்லும் அளவிற்கு குறைந்து விட்டன.

இவையன்றி, பெருநகரங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் கங்கையில் கலந்து வருகின்றன. இருந்தாலும், இந்தக் கழிவுகளின் அளவும் வழக்கத்தைவிட சரிபாதியாக குறைந்து விட்டன. காரணம், நகரங்களில் கேளிக்கை மையங்கள், தங்கும் விடுதிகள், உல்லாச ஹோட்டல்கள், அன்றாட தேவைக்கான உணவகங்கள் போன்றவை இயங்காமல் இருந்ததால் இந்த மாற்றம் ஏற்பட்டது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், முதலாளித்துவ இலாப நோக்கத்தில் அமைக்கப்பட்ட ஆலைக்கழிவுகளும், பொறுப்பற்ற முறையில் சுத்திகரிக்கப்பட்டாத நகரக் கழிவுநீரை ஆற்றில் கலப்பதும் குறைந்து விட்டதுதான் கங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கின்ற தூய்மைக்கு முக்கியமான காரணம்.

***

இதேபோல டெல்லி, மும்பை, சென்னை போன்ற பல பெருநகரங்களில் காற்று மாசு பெருமளவு குறைந்துவிட்டது. முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரத்தின் அடிப்படையில் அமைந்த கார்களின் ஓட்டம் முற்றிலும் நிறுத்தப்பட்டதால் குறைந்தள்ள வாகனப்புகையும், ஆலைகள் மூடப்பட்டதால் குறைந்துள்ள நச்சுப்புகைகளின் வெளியேற்றமும்தான் இதற்கு முக்கியக் காரணம்.

சாக்கடையாகிப் போயிருந்த கங்கையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஆலைகளின் கழிவுகளும், நகரங்களின் கழிவுகளும் நேரடியாக கங்கையில் கலப்பது தடுக்கப்பட வேண்டும். இதனை இந்தக் கட்டமைப்பிற்குள் செய்ய முடியாது. இந்த அரசுக் கட்டமைப்பும் சமூகக் கட்டமைப்பும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் மடாதிபதிகளுக்கும்தான் சேவை செய்கிறதே ஒழிய, மக்களுக்கு சேவை செய்ய வக்கற்றதாக போய்விட்டன.

குறிப்பு : கங்கை நதிக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. உலகத்தின் அரிய உயிரினங்களில் ஒன்றான நன்னீர்வாழ் டால்பின்கள் கங்கையில் வாழ்கின்றன. மற்றொரு அரிய உரியினமான மெல்லோட்டு ஆமைகளும் கங்கையில் வாழ்கின்றன. இந்த வகை ஆமைகள் கங்கையின் அடி ஆழப்பகுதியில் வாழ்பவை. கங்கையின் சுகாதாரக் கேட்டின் காரணமாக இவை அழிந்து வருகின்றன.

– புதியவன்

ரயில் ரத்தானதால் கேரளத்தில் தற்கொலை செய்த  மேற்கு வங்கத் தொழிலாளி !

டந்த சனிக்கிழமை கேரளம், எர்ணாகுளம் மாவட்டத்தில் கொடநாடு பகுதியில் ஒரு மாமரத்தில் 22 வயதான ஆசிப் இக்பால் மண்டல் என்ற இளைஞன் தற்கொலை செய்துகொண்டார். பல நாட்களுக்கு முன்பே அவர் வைத்திருந்த உணவு, பணம் தீர்ந்து விட்டது. நம்பிக்கை இழந்த அவர் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தார். ஒரு முறையல்ல, இரு முறை கேரளத்திலிருந்து மேற்கு வங்கத்தில் உள்ள  சொந்த ஊரான முர்ஷிடாபாத்திற்கு முன்பதிவு செய்து பயணசீட்டு பெற முயற்சித்தார்.  ஆனால் இரு முறையும் பதிவு ரத்தானது.

வயர் இணைய தளம் இந்த துயரம் குறித்து விசாரித்த போது ஆசிப்பின் தந்தை ஜபேத், உடன் இருந்தார். “எல்லாம் முடிந்து விட்டது’’, என்று மனம் உடைந்து கண்கலங்கினார். ஆசிப்பின் அத்தை மகனான அன்வருள் ஃபோனை எடுத்து, “அவரால் இனி பேச முடியாது, அந்த  செய்தி வந்ததிலிருந்து வீட்டில் இதுதான் நிலை, ஆசிப்பின் தாய் பல முறை மயக்கமடைந்து விடுகிறார்’’ என்றார்.

ஆசிப்பின் இளைய தம்பி அன்வர் ஹூசைன், தான், ஆசிப்பை பார்க்க கடந்த வியாழன் அன்று சென்றதாக கூறினார். அவர் பயமடைந்தும் பதட்டமடைந்தும் இருந்தார். வீட்டிற்கு செல்வதிலேயே குறியாக இருந்தார்.

இறந்து போன ஆசிஃபின் தந்தை சகோதரர் மற்றும் அவரது தாயார். (படம் – நன்றி : த வயர்)

இரு முறை ரயில் டிக்கெட் ரத்தானதால் இனி ஒரு போதும் வீட்டிற்கு போக முடியாது என்று கருதினார். திரும்பவும் சென்றுவிட்டால் அங்கிருந்து ஒரு போதும் வரமாட்டேன் என்று ஆசிப் கூறினார் என்றார் அன்வர்.

சனிக்கிழமை இரவு அன்வரும் மற்றொரு நண்பரும் ஆசிப்பின் பிணத்தை ஒரு ஆம்புலன்சில் எடுத்துக்கொண்டு முர்ஷிதாபாத்திற்கு புறப்பட்டனர். “இம்மாதிரியான முறையில் நாங்கள் ஊருக்கு போவோம் என்று ஒரு போதும் நினைத்ததில்லை’’ என்றார் அன்வர். 2900 கிலோமீட்டர், 48 மணிநேர பயணத்திற்கு பிறகு வியாழன் அன்று காலை 6.30 மணிக்கு ஒரு வெள்ளை நிற குளிர்சாதனம் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் தொம்கல் பகுதி ஷிரோபரா கிராமத்திற்கு போய் சேர்ந்தது. காலை 8.30 மணிக்கு அக்கிராமத்தில் உள்ள ஒரு இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

“அவர் ரயிலில் வீட்டிற்கு வரவில்லை, இப்போது அவனது இறந்த உடல் ஒரு ஆம்புலன்ஸில் வந்துள்ளது. இதற்கு ஆன செலவு ரூ 1,30,000. நாங்கள் ரூ 1,00,000 அந்த ஓட்டுனருக்கு கொடுத்தோம். இன்னும் ரூ 30,000 தரவேண்டியுள்ளது. நாங்கள் அந்த ஓட்டுனரை இன்று இரவு வரை இங்கேயே தங்குங்கள்; அதற்குள் பணம் ஏற்பாடு செய்கிறோம் என்று கேட்டோம்”.

படிக்க:
♦ டாஸ்மாக் எதிர்ப்புப் போராளிகளுடன் ஒரு நேர்காணல் !
♦ கொரோனா : மோடி அரசின் பருப்பு வினியோகம் – உண்மை என்ன ?

ஆசிப்பின் மாமா ஆசருள் பிஸ்வாஸ் கூறினார், “அவர்களுடைய குடும்பம் மிக மிக ஏழ்மையானது; ஆசிப்பின் தந்தை மற்றொருவருடைய பண்ணையில் கூலியாக வேலைபார்க்கிறார். ஆசிப்தான் மூத்த சகோதரன், இந்த தொகை அவனுடைய உடலை ஊருக்கு கொண்டுவர எங்கள் கிராமத்தினர் முன்வந்து நன்கொடையாக கொடுத்தது.

ஆசிப்பின் தந்தை ஜாபத் ஒரு பண்ணையில் தொழிலாளியாக முர்ஷிபாத்தில் வேலை செய்கிறார். அதில் உருவாகும் மொத்த வருமானத்தில் 25% ஐ கூலியாக பெறுகிறார். இது குடும்பத்தை நடத்த மட்டுமே உதவுகிறது என்றனர் அந்த குடும்பத்தினர். பணத்தை சேமிப்பது என்பது எங்களுக்கு தொலைதூர கனவாகவே உள்ளது.

ஆறு மாதத்திற்கு முன்பு, ஆசிப்பும் அன்வரும் நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கேரளாவிற்கு சென்றனர். ஆசிப், கொடநாட்டில் உள்ள ஒரு செங்கல் சூலையில் தினசரி ரூ 450 கூலிக்கு வேலையில் தொடங்கினான். அன்வர், டைல்ஸ் தயாரிக்கும் ஃபேக்டரியில் தினசரி ரூ 600-ற்கு வேலைக்கு சேர்ந்தான்.

“ஆசிப் ஊருக்கு போகலாம் என்று முடிவெடுத்திருந்த நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மார்ச் 23 லிருந்து, அவன் வேலை செய்த அந்த செங்கல் சூளை மூடப்பட்டுவிட்டது. வேலையாட்களுக்கு கூலி பணம் கொடுக்கப்படவில்லை. ஆசிப் மனம் மிகுந்த வருத்தமடைந்தான். அவன் ஊருக்கு நடந்து சென்றுவிடவும் முடிவெடுத்தான். நிச்சயமற்ற இந்த 47 நாட்கள் அவனை கொன்றுவிட்டது”.

அந்த குடும்பம் இது வரை எந்த உதவியும் மாநில அரசிடமிருந்து வரவில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியோ, தன்னார்வ தொண்டு நிறுவனமோ ஆசிப்பின் உடலை வீட்டிற்கு கொண்டுவர எந்த உதவியும் செய்யவில்லை. அன்வருள், அந்த இறப்பு செய்தி சனிக்கிழமை காலையில் வந்த உடனே  தொம்கல் நகராட்சி தலைவர் ரஃபிகுள் இஸ்லாம் அந்த குடும்பத்தை பார்வையிட்டு தான் கொஞ்சம் பணம் ஏற்பாடு செய்வதாக கூறியதை உறுதிபடுத்திக்கொண்டார். வியாழன் மதியம் வரை எந்த பண உதவியும் அந்த குடும்பத்திற்கு வரவில்லை.

“ அவன் ரயில் மூலம் வீட்டிற்கு வர முயற்சித்தான். ஆனால் இரு முறையும் டிக்கெட் ரத்துசெய்யப்பட்டது. இப்போது நாங்கள் அவனது உடலை எடுத்து வர இலட்ச கணக்கில் செலவு செய்துள்ளோம். அரசு, முன்னரே ரயில் கிடைக்க ஏற்பாடு செய்திருந்தால் ஆசிப் உயிரோடு ஊருக்கு வந்திருப்பான்” என்றார் அன்வருள். பெங்கால் சம்ஸ்கிருதி மஞ்ச் என்ற சமூக அமைப்பு அரசின் இந்த செயலை வன்மையாக கண்டித்தது. இதற்கான விளக்கத்தை அரசு தரவேண்டும் என்று அது கோரிக்கை வைத்துள்ளது.

“மத்திய அரசின் இரக்கமற்ற செயலால் ஏழை புலம்பெயர் தொழிலாளர்கள் அன்றாடம் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். புலம் பெயர் தொழிலாளர்களை ஊருக்கு கொண்டுவரவும், அவர்கள் குடியமர்த்தவும் முறையான திட்டமிடல் வேண்டும் என்று நீண்ட நாட்களாக நாங்கள் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் அரசு பணக்காரர்களை  இந்தியாவிற்கு கொண்டுவர மட்டுமே கவனம் கொடுத்து செயல்படுகிறது. ஆசிப்பின் குடும்பத்திற்கு உரிய பொருளாதார நட்ட ஈடு தரவேண்டும் நாங்கள் உள்ளாட்சி நிர்வாகத்திற்குதெரிவித்துகொள்கிறோம்.” என்று அந்த இயக்கத்தின் செயலாளர் கூறினார்.

தமிழாக்கம் : – முத்துக்குமார்
நன்றி : த வயர்