Wednesday, June 17, 2026
முகப்பு பதிவு பக்கம் 279

இருளில் ஆட்டோ ஓட்டுநர்களின் எதிர்காலம் | சி.ஐ.டி.யு. தோழர் பா.பாலகிருஷ்ணன் நேர்காணல்

லாக்டவுன் காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து, சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலர் தோழர் பா.பாலகிருஷ்ணன் அவர்களிடம் நடத்திய நேர்காணல்.

தோழர் பா.பாலகிருஷ்ணன், தென்சென்னை மாவட்டச் செயலர், சி.ஐ.டி.யு.

ஊரடங்கு முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரியம் வாயிலாக மாதமொன்றுக்கு ஆயிரம் வீதம், நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் சொல்லப்பட்டதே, அவை எந்தளவுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது?

தமிழகம் முழுவதும் 2,65,000 ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 96,000 பேர். இதில் முறைசாரா ஓட்டுநர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளோர்கள் வெறும் 2,400 பேர்தான். அதிலும் முறையாகப் புதுப்பித்திருப்பவர்கள் 929 பேர் மட்டுமே. அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் நிதியுதவியைப் பெறும் தகுதியுடையோர் இவர்கள் மட்டும்தான். இந்த 929 பேருக்கும்கூட பல்வேறு நடைமுறை சிக்கல்களின் காரணமாக முழுமையாக போய்ச்சேரவில்லை என்பதுதான் உண்மை.

சென்னையில் 96,000 ஆட்டோ ஓட்டுநர்களில் 929 பேர்தான் முறையாகப் பதிவு செய்திருக்கின்றனர் என்பது அதிர்ச்சியளிக்கிறதே? ஏன் மற்றவர்கள் பதிவு செய்யதில்லை?

ஓட்டுநர் உரிமம், பேட்ஜ் தவிர, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக் கணக்கு விவரம் ஆகியவை உள்ளிட்ட ஏழு வகையான ஆவணங்களைக் கொண்டுதான் நலவாரியத்தில் ஒருவர் தன்னை உறுப்பினராக பதிவு செய்துகொள்ள முடியும். இதில்தான் சிக்கலே இருக்கிறது. ஓட்டுநர் உரிமம் ஒரு முகவரியில் இருக்கும், ரேஷன் கார்டு வாங்கியபோது ஒரு வாடகை வீட்டில் குடியிருந்திருப்பார். ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்தபோது வேறு ஒரு வாடகை வீட்டில் குடியிருந்திருப்பார். ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகிய மூன்றும் ஒரே முகவரியில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை ஓட்டுநர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

வழக்கமான நாட்களிலேயே, இப்படி எல்லாத்தையும் மாத்தனும்னா தாலுகா ஆபிசுக்கு போயி எழுதி கொடுத்து மாத்தணும். பொழப்பை விட்டுட்டு இதுக்காக அலைஞ்சி வாங்க முடியாது. இதைவிட, இப்படி மெனக்கெட்டு பதிவு செய்தாலும் இதனால் தனக்கு பைசா காசு பிரயோசனமில்லை என ஆட்டோ ஓட்டுநர்கள் கருதுவதும் ஒரு முக்கிய காரணம்.

முன்பு ஆண்டுக்கொருமுறை புதுப்பிக்க வேண்டுமென்ற நிலையில், தற்போது அதனை ஐந்தாண்டுக்கு ஒருமுறை என மாற்றியிருக்கிறார்கள். அப்படியிருந்தும் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ஓட்டுநர் உரிமம், பேட்ஜை மட்டும் வைத்து நலவாரியத்தில் பதிவு செய்வதையும் புதுப்பிக்கும் நடைமுறையையும் எளிமையாக்கப்பட வேண்டும். அரசிடம் இதை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.

இக்கட்டான நேரத்திலும், நலவாரியத்தில் பதிவு செய்திருந்தால்தான் நிவாரணம் என்று நிபந்தனை விதிப்பது எவ்வகையில் நியாயம்?

உண்மைதான், அரசு அப்படித்தானே சொல்கிறது. நலவாரியத்தில் உறுப்பினராக இருந்தால்தான் நிவாரணம் கிடைக்கும் என்று நிபந்தனை விதிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. முடிதிருத்தும் தொழிலாளிகள், நெசவாளிகள் நலவாரியத்தில் பதிவு செய்யவில்லை என்றாலும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறது. அதுபோல, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் அறிவிக்க வேண்டும்.

ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி ஷேர் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் என பொதுப்போக்குவரத்துக்கான வாகனத்தை இயக்குவதற்கான பேட்ஜ் பெற்றவர்கள் தமிழகம் முழுவதும் 16 இலட்சம் பேர் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய முழு விவரம் அந்தந்த ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் இருக்கிறது. ஆதார் கார்டு, தொலைபேசி எண், கை ரேகை என அனைத்தையும் பதிவு செய்துதான் இவற்றையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். ஆதாருடன் இணைக்கப்பட்டு கணிணி மயமாக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில், நாடு முழுவதுமே ஒரு நபர் ஒரு ஓட்டுநர் உரிமம்தான் வைத்திருக்க முடியும். அவரது கையெழுத்து முதற்கொண்டு ஆர்.டி.ஓ. அலுவலக ரெக்கார்டுகளில் பதிவாகியிருக்கிறது. இதை வைத்தே மிக எளிமையாக ஓட்டுநர்களுக்கான நிவாரணங்களை அரசு வழங்க முடியும். இதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

நலவாரியங்களின் செயல்பாடுகளைப் பற்றி உங்களது கருத்து என்ன? உங்கள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அதில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கிறார்கள்தானே?

நலவாரியத்தில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தொழிலாளர் நல அதிகாரிகள் போன்றோர் மட்டுமின்றி தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது சரிதான். ஆனாலும், ஆலோசணைக் கூட்டங்களை அவர்கள்தானே கூட்ட வேண்டும். நாங்கள் எத்தனைமுறை வலியுறுத்தினாலும், போர்டு மீட்டிங்கை கூட்டுவதில்லை. இன்னொன்று, பெரும்பாலும் அந்தந்த நல வாரியங்களில் அந்தந்தத் துறை சார்ந்த நபர்கள் இடம்பெறுவதில்லை. அதனால் அந்த வலி அவர்களுக்கு புரிவதில்லை. நலவாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்குள்ள உரிமைகள் – கடமைகள் அரசு தரப்பில் செய்யவேண்டியது என்ன என்பது குறித்தெல்லாம் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால், சிஸ்டம் சரியாக இருக்கிறது; ஆனால், அவை எல்லாம் பேப்பரில் மட்டும்தான் இருக்கிறது.

புதிய வாகனத்திற்கான பதிவு, எஃப்.சி. கட்டணம் உள்ளிட்டு வாகனம் தொடர்பாக அரசு தரப்பில் வசூலிக்கப்படும் வரிகள் அனைத்திலிருந்தும் 1 முதல் 3 சதவீதம் வரையில் வாரியத்திற்கு போகிறது. இந்தத் தொகையே பல நூறு கோடி ரூபாய் அதன் இருப்பாக இருக்கிறது. இதிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை, உதவிகளை செய்ய முடியும். ஆனால், இப்படி ஒரு நலவாரியம் செயல்படுவதையே அரசு விரும்பவில்லை.

குறிப்பாக, நலவாரியத்தில் போதுமான பணியாளர்கள் இல்லை. இதன் காரணமாகவே குளறுபடிகள் நடக்கிறது. வேலை நடப்பதில்லை. ஆட்டோ ஓட்டுநர்கள் பெரும்பாலும் பள்ளி படிப்பை முடித்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் அணுகும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

லாக்டவுனுக்குப் பிறகான காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?

நிலைமை சீராக எப்படியும் ஒரு வருடம் ஆகும். அதுவரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பல சிக்கல்களை சமாளித்தாக வேண்டும். லாக்டவுன் காலத்தில் எஃப்.சி. முடிந்த வண்டிகள் நிறைய இருக்கும். அந்த வண்டிக்கெல்லாம் எஃப்.சி. எடுத்தாக வேண்டும். எஃப்.சி. செய்யாமல் ஆட்டோவை இயக்க அனுமதி என்று நாங்கள் கோரிக்கை வைக்க முடியாது; பயணிகளின் பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தியாக வேண்டுமல்லவா?

ஆனால், எஃப்.சி.க்கான அனைத்துவித கட்டணத்தையும் அரசால் ரத்து செய்ய முடியும். வண்டியை பழுதுபார்த்து முழுத்தகுதியோடு கொண்டுவருவதை வேண்டுமானால் ஆட்டோ ஓட்டுநரின் கடமையாக்கலாம். அதற்கு ஆகும் செலவுக்குக்கூட அரசு குறைந்தபட்சம் 20,000 வட்டியில்லா கடனாக வழங்க வேண்டும். ஆட்டோ டிரைவருக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை. பெரும்பாலும் சேட்டுக்களிடம்தான் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் இதில் நீடிக்க முடியாமல் வேறு தொழிலுக்கு போக நேரிடும் அவலம் இருக்கிறது. கடும் சிரமத்திற்கு அப்பால் ஆட்டோவோடு ரோட்டுக்கு வந்தாலும், இதுவரை ஆட்டோவை நம்பிவந்த வாடிக்கையாளர்கள் பழையபடி வருவார்களா என்பதற்கு உத்திரவாதமில்லை.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான், ஆட்டோ ஓட்டுநர்களின் பிரதானமான வாடிக்கையாளர்கள். பொதுவாக, பொருளாதார ரீதியில் நடுத்தர மக்களை மூன்று வகையாகப் பிரிக்கிறோம். அதாவது, மேல்நிலை, இடைநிலை, கீழ்நிலை வர்க்கம். இதில், மத்திய தர வர்க்கத்திலேயே மேல்நிலையில் இருப்பவர்கள் கால்டாக்ஸியின் வாடிக்கையாளர்கள்; இடைநிலை – நடுத்தர வர்க்கம்தான் ஆட்டோவில் செல்பவர்கள்; மத்திய தர வர்க்கத்திலேயே கீழ்நிலையில் இருப்போர் ஷேர் ஆட்டோவின் வாடிக்கையாளர்கள்.

இதுவரை பொதுப் போக்குவரத்துக்கு ஆட்டோவைப் பயன்படுத்தி வந்த அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் இந்த லாக்டவுனில் பாதிப்படைந்திருக்கிறார்கள். மனைவி வேலையை இழந்திருப்பார்; சம்பளக்குறைப்பு நடந்திருக்கும். இப்படி பலவகைகளில் இதுவரை கிடைத்து வந்த வருமானத்தில் துண்டு விழும்போது, வழக்கமான செலவுகளை குறைத்துத்தான் ஆகவேண்டும். அவ்வாறு அவர்கள் குறைக்க வேண்டும் என நினைத்தால் முதலில் ஆட்டோவில் ஏன் போக வேண்டும், ஷேர் ஆட்டோ அல்லது பேருந்தில் பயணிக்கலாம் என்றுதான் முடிவெடுப்பார்கள். இந்த நிலைமை, ஆட்டோ ஓட்டுநர்களை கண்டிப்பாக பாதிக்கும்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தமிழக அரசு என்ன செய்ய வேண்டும் எனக் கோருகிறீர்கள்?

முதலில், ஆட்டோ ஒன்றுக்கு பயணிகள் இருவரை ஏற்ற அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிக்க முடியாது என்றால், லாக்டவுன் முடிவுக்கு வரும் வரையில் குடும்பம் ஒன்றுக்கு 7,500/- நிவாரணம் வழங்க வேண்டும். எஃப்.சி.யின் பொழுது வசூலிக்கப்படும் வரிகள் உள்ளிட்ட அனைத்துவிதமான கட்டணங்கள் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும். எஃப்.சி.க்கு வாகனத்தை சீர்படுத்த 20,000 ரூபாய் வட்டியில்லா கடனாக வழங்க வேண்டும். இவைதான் இப்போதைய உடனடி கோரிக்கைகள்.

மாதிரிப் படம்

அடுத்து, சென்னையில் மட்டும் 96,000 ஆட்டோக்கள் ஓடுகிறது. ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுநரும் குறைந்தபட்சம் நாளொன்றுக்கு 2 லிட்டர் பெட்ரோல் தினமும் போடுகிறார்கள் என்றால்கூட, பெட்ரோல் – டீசல் – காஸ் மூலமாக வரியாக மட்டுமே சரிபாதியை அரசுக்கு செலுத்திவருகிறார்கள். தனக்கு வரிவருவாய்க்கு ஆதாரமான ஆட்டோ ஓட்டுநர்களை குறைந்தபட்சம் ஒரு நுகர்வோன் என்ற அளவிலாவது அரசு பார்க்கிறதா?

அண்ணாச்சி கடையில் பொருள் வாங்கப்போனால், கூட வந்த சிறுவர்களுக்கு பொட்டுக்கடலையோ கற்கண்டையோ கொடுப்பார்கள். இத்தகைய ஒரு பண்பாட்டை ஒரு பேரிடர்க் காலத்தில்கூட முதலாளிகளிடம் பார்க்க முடிவதில்லை. சமூகப் பொறுப்பிலிருந்து, ஆட்டோ தொடர்பான உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களை விலக்கிக் கொள்கிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் அவன் உற்பத்தி செய்த ஆட்டோவை வாங்குவதால்தான் அவன் அந்த தொழிலில் இலாபத்தை ஈட்ட முடிகிறது. ஆகையால், கிடைக்கும் இலாபத்திலிருந்து குறைந்தபட்சம் 1% நலவாரியத்திற்கு வழங்க வேண்டும்; அரசு இதை சட்டமாக்க வேண்டும். அவன் முதலீட்டில் ஒன்றும் பங்கு கேட்கவில்லை. இலாபத்திலிருந்து மிகச் சொற்பமாக 1% ஒதுக்கினாலே, கோடிக்கணக்கான ரூபாய் நலவாரியத்திற்கு கிடைக்கும். அதிலிருந்து ஆட்டோ தொழிலாளர்களின் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த முடியும்.

ஆட்டோ ஓட்டுபவனை சொந்த தொழில் செய்பவனாகப் பார்ப்பதே தவறு. அவன் என்ன குடும்பத்துக்காகவா வண்டி ஓட்டுகிறான். பேருந்துகளைப் போல பொதுப்போக்குவரத்திற்கான வாகனத்தைத்தானே ஓட்டுகிறான். பேருந்து ஓட்டுநருக்கு இருப்பதைப்போல இவனுக்கு மட்டும் ஏன் இ.எஸ்.ஐ., பி.எஃப். உரிமைகள் மறுக்கப்பட வேண்டும்?

ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமின்றி, ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள், டாடா மேஜிக் ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள் என பலரின் நிலையும் பரிதாபகரமானதாகத்தான் இருக்கிறது. காலாண்டு வரியைக் கட்டச் சொல்லி நிர்ப்பந்திக்கிறார்கள். கட்டவில்லையென்றால் பர்மிட் ரெனிவல் ஆகாது. காலாண்டு வரியை தள்ளிவைப்பதல்ல, முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். சர்வதேச சந்தையில் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வந்தாலும், அதன்மீதான வரியைக் கூட்டிவருகிறது அரசு. இதனைக் கைவிட்டு, சர்வதேச கச்சா எண்ணெய் விலை அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இவற்றையெல்லாம் அரசு செய்தால்தான் குறைந்தபட்சம் ஆட்டோ தொழிலாளி மீண்டு வருவான்.

படரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா !

அமெரிக்கா கிட்டத்தட்ட பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

ஜார்ஜ் ஃப்ளாயிட் என்ற கருப்பினத்தவரை ஒரு போலீஸ் காரணமே இல்லாமல் கழுத்தில் மிதித்தபடி எட்டு நிமிடம் அமுக்கி மூச்சுத் திணற வைத்து துள்ளத் துடிக்க கொலை செய்திருக்கிறது.

ஒட்டு மொத்த அமெரிக்க சமூகமும் கொதித்தெழுந்திருக்கிறது.

அமெரிக்க சமூகம் என்று பொதுவாக ஏன் சொல்கிறோம் என்றால் கொதித்தெழுந்திருப்பது வெறும் கறுப்பினத்தவர் மட்டுமல்ல.. வெள்ளை, பழுப்பு, மஞ்சள், கறுப்பு கலந்த ஒட்டுமொத்த அமெரிக்க சமூகமும்தான் கொதித்தெழுந்திருக்கிறது. நம் ஊரில் சிஏஏவுக்கு எதிராக மத வேறுபாடு இல்லாமல் முஸ்லிம்களோடு அனைவரும் கை கோர்த்தோமே.. அந்த மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள்.

விதவிதமான போராட்ட வடிவங்களை கையில் எடுத்திருக்கிறார்கள்.. அதில் முக்கியமான வடிவம் மண்டியிட்டு குரல் கொடுத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்வது.. (Kneel down) ஆச்சரியகரமாக அதில் வெள்ளை இனத்தவர் மட்டுமல்ல.. சில போலீசாரே பங்கெடுத்து அரசுக்கு எதிராக மண்டியிட்டு தங்களது எதிர்ப்பை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

கைகள் பின்னால் கட்டப்பட்டு கழுத்தின் மீது முழங்கால் அழுத்தப்பட்டு உயிர் போய்க் கொண்டிருந்த கடைசி நிமிடத்தில் ஃப்ளாய்டு மறுபடி மறுபடி சொன்னது ஒன்றே ஒன்றுதான்.. : I can’t breath.. என்னால் மூச்சு விட முடியவில்லை.. அல்லது மூச்சுத் திணறுகிறது.

இதுவே எதிர்ப்பாளர்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறது. அனைவரும் இந்த I can’t breath என்ற வாசகங்களை கையிலேந்தி போராடிக் கொண்டிருககிறார்கள்.

பல்வேறு நகரங்களில் நடக்கும் எதிர்ப்புப் பேரணிகள் கலவரங்களாக மாறி பல கார்கள் எரிக்கப்படுகின்றன.. போலீஸ் நிலையங்கள் முற்று முழுக்க எரிக்கப்படுகின்றன.. கலவரக்காரர்களை அடக்க ரப்பர் குண்டுகளால்தான் சுட்டோம் என்று போலீஸ் சொல்லுகிறது. ஆனாலும் துப்பாக்கிச் சூட்டில் ஓர் இளைஞர் பலியாகி இருக்கிறார்.

போலீஸ் தரப்பிலும் பலர் காயம்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்..

ட்ரம்ப்புக்கு சொந்தமான ட்ரம்ப் டவர் கட்டிடங்களின் முன்புதான் இந்த ஆவேசப் போராட்டங்கள் உச்சமாக நடந்து வருகின்றன.

உங்களது தகவலுக்காக சொல்கிறேன். இந்த ட்ரம்ப் டவர் வணிகக் கட்டிடங்கள் உலகெங்கும் உள்ளன.. இந்தியாவிலும் ட்ரம்ப் டவர்கள் உள்ளன.. சமீபத்திய ட்ரம்ப்பின் இந்திய விசிட்டின் முக்கிய காரணங்களில் ஒன்று இந்த ட்ரம்ப் டவர்கள் என்கிறார்கள். இந்தியாவில் கொரோனா பேரிடருக்கு முன்பே ரியல் எஸ்டேட் துறையின் பெரும் வீழ்ச்சி துவங்கிவிட்டது. அதன் காரணமாக இந்த ட்ரம்ப் டவர்களின் பெரும்பான்மை வணிக மையங்கள் விற்பனையாகாமல் இருந்தன.. அந்த நஷ்டங்களைத் தவிர்க்க தனக்கு பல சலுகைகள் வேண்டும் என்று நம்ம மோடியிடம் அதட்டிப் பெற்றிருக்கிறார் டொனால்டு டிரம்ப்.

இந்த எதிர்ப்புகள் இப்போது ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் துவங்கி இருக்கின்றன.. அனைத்து நாடுகளின் அமெரிக்கத் தூதரகங்கள் முன்பும் மக்கள் ஒன்றிணைந்து தங்கள் எதிர்ப்பை காட்டத் துவங்கி இருக்கின்றனர்.

டிரம்ப் அரசுக்கு இது மாபெரும் தலைவலியாக மாறி வருகிறது. அடக்க அடக்க போராட்டங்கள் அமெரிக்கா முழுக்கப் பரவி வருகின்றன..

டிரம்ப் கோபமாக அடங்கவில்லை என்றால் சுடப்படுவீர்கள் என்று ட்வீட் செய்திருந்தார்..

படிக்க:
♦ செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !
♦ தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

இந்த ட்வீட் சமூக விதிமுறைகளுக்குப் புறம்பானது என்று ட்விட்டர் நிர்வாகமே ட்வீட்டை ரிமூவ் செய்திருக்கிறது. ட்ரம்ப் கொதித்துப் போயிருக்கிறார்.

இந்தப் போராட்டங்களுக்கு யாரும் தலைமை ஏற்கவில்லை.. நம் நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் மாதிரி, தூத்துக்குடி போராட்டம் மாதிரி மக்கள் தன்னெழுச்சியாக புறப்பட்டு வீதிக்கு வருகிறார்கள். கொரோனா அச்சுறுத்தலை மீறி தெருவுக்கு வந்து ஆக்ரோஷமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ட்ரம்ப் அரசு திணறி வருகிறது.

இந்த நிலையில் ட்ரம்ப்பின் உளவுத்துறை ஒரு விஷயத்தை கண்டுபிடித்து சொல்லி இருக்கிறது. அமெரிக்காவில் ஒரு சமூகம் இருக்கிறது. அதை ஏன் சமூகம் என்று சொல்கிறோம் என்றால் அது ஓர் அரசியல் அமைப்பு அல்ல.. கட்சியும் அல்ல. ஏன் இயக்கம் கூட இல்லை.. அதற்கு தலைவர்கள் என்று யாரும் இல்லை.. ஒருங்கிணைப்போர் என்றும் யாரும் இல்லை. பொதுவாக கார்ப்பரேட்டுகளிடமும் பெரும் செல்வந்தர்களிடமும் பணம் குவிவதையும் சாதாரண குடிமக்கள் வரி என்கிற பெயரில் வஞ்சிக்கப்படுவதையும் எதிர்ப்பவர்கள் இவர்கள்.. தங்களது நம்பிக்கைக்கு Antifa என்று பெயரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் விரிவாக்கம் Anti-fascist (பாசிச எதிர்ப்பு) என்பதாகும்.

இது ஒரு பொதுவான நம்பிக்கையாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

பொதுவாகவே கம்யூனிசம் என்றாலே முதலாளித்துவத்துக்கு பற்றிக் கொண்டு வரும்.. இவர்கள் பேசுவது கிட்டத்தட்ட கம்யூனிசம் மாதிரி இருக்கிறது என்கிறார்கள்.. இதை extreme and far left movements என்று brand செய்ய ட்ரம்ப் அரசு முயன்று வருகிறது.

இதை ஓர் இயக்கம் என்றும் இந்த இயக்கம்தான் இப்போராட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறது என்றும் டிரம்ப் அரசு நினைக்கிறது.

இன்று டிரம்ப் கடும் கோபத்துடன் ட்வீட் செய்திருக்கிறார் : ஆன்ட்டிஃபா மாதிரியான இயக்கங்கள் தீவிரவாத இயக்கம் என்று முத்திரை குத்தப்பட்டு தடை செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது அந்த வலதுசாரி அரசு.

இவர்கள் யாரை இதன் காரணம் என்று தடை செய்யப் போகிறார்கள்.. யாரை கைது செய்யப் போகிறார்கள் என்றுதெரியவில்லை.. சட்ட வல்லுனர்கள் இந்த மாதிரி செய்ய அமெரிக்க அரசியல் அமைப்பிலேயே வழியில்லை என்று கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் ட்ரம்ப்போ தனது அமைச்சரவை சகாக்கள், தீவிரவாதத் தடுப்புத் துறை என்று அனைவரோடும் ஆலோசனைகளைத் துவங்கிவிட்டார்.

டிரம்ப்பின் கையில் ஃபாக்ஸ் நியூஸ் போன்ற பெரும் கார்ப்பரேட் செய்தி சேனல்களும் உள்ளன.. அந்த சேனல்களைப் பயன்படுத்தி பொய் செய்திகளைப் பரப்பி எப்படியாவது இந்த போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கிவிட டிரம்ப் அரசு துடிதுடித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட இயக்கம் என்றால் அதன் தலைமைகளை கைது செய்து போராட்டங்களை அடக்கி விடலாம். ஆனால் இது போன்ற தன்னெழுச்சிப் போராட்டங்களை ஒடுக்க அரசுகள் கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் படுகொலைகள்தான்.

தூத்துக் குடியில் நடந்ததை நம்மால் மறக்க முடியுமா என்ன..?

ஆக பிணங்களின் மீது அரசியல் செய்யும் மோடி, எடப்பாடியின் அரசியலை டிரம்ப்பும் கையில் எடுக்கக் கூடும் என்று பரவலாக அரசியல் வல்லுனர்கள் கணித்தபடி இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு இதே போலதான் march towards wall street என்றொரு இயக்கம் 2010 வாக்கில் அமெரிக்காவில் பரவியது. அதே கார்ப்பரேட் எதிர்ப்பு மற்றும் செல்வந்தர்களிடமே செல்வக்குவிப்பு நடப்பதை எதிர்த்துதான் இது துவங்கியது.

இப்போது அந்த இயக்கம் இருந்த இடமே தெரியாமல் சுவடற்றுப் போய்விட்டது. இப்போது மறுபடி ஓர் இடதுசாரிப் பார்வையுடனான போராட்டம் புறப்பட்டிருக்கிறது.

என்ன நடக்கப் போகிறது என்பதில்தான் ஒட்டுமொத்த முதலாளித்துவ நாடுகளின் எதிர்காலமும் அடங்கி இருப்பதாக நான் நினைக்கிறேன்.

இந்தப் போராட்டம் வெற்றிபெற்றால் உலக அளவில் பெரும் அரசியல் மாற்றங்கள் வர வாய்ப்பிருக்கலாம்..

தோல்வியுற்றால்..?

சில பிணங்களை கையில் வத்துக் கொண்டு நாம் கொஞ்ச காலம் அழுதுகொண்டிருப்போம்.. அவ்வளவுதான்..

நன்றி : ஃபேஸ்புக்கில் நந்தன் ஸ்ரீதரன் 

தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

“ஸ்டெர்லைட்டின் கடைசி செங்கலை அகற்றும் வரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போர் ஓயாது” என்பதை நிரூபித்த தியாகிகளின் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் 22-05-2020 அன்று தூத்துக்குடியில் அனுசரிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் சுற்றுவட்டார கிராமங்களிலும், மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளின் படங்களை வைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு அமைப்புகள், திமுக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, அமமுக, விசிக, தமிழ் புலிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் கட்சி உட்பட பலரும் நினைவஞ்சலி செலுத்தினர்.

கடந்த ஆண்டு (2019) மே-22 முதலாமாண்டு நினைவு தினம் நெருங்குகையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம பிரதிநிதிகள், மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு-107 ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாவட்ட சார்பு ஆட்சியர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர். மேலும் காவல்துறையால் இளைஞர்கள்-மாணவர்களின் முகநூல், வாட்ஸ்அப் கண்காணிக்கப்பட்டு அவர்கள் சட்டவிரோத விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். உளவுத்துறை மூலம் நேரடியாக கண்காணிக்கப்பட்டனர். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த நீதிமன்றத்தை நாடியவர்கள் மீதும் குவி.மு.ச பிரிவு 107-ன் படி பெண்களென்றும் பாராமல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் நினைவஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கும், அமைப்புக்களுக்கும், கட்சிகளுக்கும் ‘சட்டம் ஒழுங்கு கெடும், என்ற பொய்யான காரணத்தைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வாண்டில் நினைவு தினம் வருவதை ஒட்டி நினைவு தினத்தை அனுசரிக்கவிடாமல் நெருக்கடிகள் முன்னணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஸ்டெர்லைட் எதிர்ப்பில் தொடர்ந்து உறுதியுடன் உள்ள குமரெட்டியாபுரம் கிராமத்தில் வெள்ளையம்மாள், பண்டாரம்பட்டியில் கிராம நாட்டாமைகள், சகாயம், சந்தோஷ், கன்னியம்மாள், சுதா, மாரியம்மாள் உள்ளிட்டோர் மீது பெண்களென்றும் பாராமல் ஸ்டெர்லைட் கைக்கூலிகளிடமிருந்து புகார் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மீளவிட்டானைச் சேர்ந்த A.S.முத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், கைது செய்யப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த காவல்துறை ஒடுக்குமுறையின் பின்னணியில் மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது இங்கு கவனிக்கவேண்டியது.

ஆனாலும் இந்த பொய் வழக்குகளும் கைதுகளுகம் இவர்களின் உறுதியை அசைத்துக் கூட பார்க்கவில்லை. “துப்பாக்கி குண்டுகளை சந்தித்தவர்கள் இந்த பேப்பர் குண்டுகளுக்கு பயந்து விடுவோமா” என்கிறார்கள்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி சட்டப்படியான விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி கேட்டும் காவல்துறை கொரானோவை காரணம் காட்டி மறுத்தது. ஆனாலும் இந்தாண்டு இத்தனை ஒடுக்குமுறைகளையும் தாண்டி இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் பொதுமக்கள் என பல்வேறு பிரிவினரும் நினைவஞ்சலி செலுத்தியதோடு, நினைவு தினத்தை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் நினைவஞ்சலி செய்திகளை பதிவு செய்தனர். கடந்தாண்டை விடக்கூடுதலாக பல இடங்களிலும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு நினைவஞ்சலியை சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் பகிர்ந்தனர்.

காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட அச்சத்தை தகர்த்து இந்த ஆர்வத்தை ஏற்படுத்தியவர்கள் யார்?

இன்னும் ஸ்டெர்லைட் எதிர்ப்பில் விடாப்பிடியாக உள்ள கிராம – மாநகர பகுதி மக்களும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் உறுதியாக களத்தில் நிற்கும் இளைஞர்களும் ஆவார்கள்.

படிக்க:
♦ ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !
♦ தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

காவல்துறை மற்றும் அதிகாரவர்க்கத்தின் ஒடுக்குமுறை, ஸ்டெர்லைட்டின் பணபட்டுவாடா, ஸ்டெர்லைட் கைக்கூலிகளின் பிரித்தாளும் சூழ்ச்சி உட்பட இவற்றையெல்லாம் இடைவிடாமல் எதிர்கொண்டு, புறமுதுகு காட்டாமல் இறந்த போராளிகளை நெஞ்சிலேந்தி வழக்கு-கைதுக்கு அஞ்சாமல் எதிர்வினையாற்றும் சாதாரண பாமர மக்கள்தான், அவர்களுடைய போராட்டம்தான், நிரந்தரமாக மூடாமல் ஓயமாட்டோம் என்று ஒலிக்கும் அவர்களுடைய குரல்கள் தான் இன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்களின் அச்சத்தை தகர்த்துள்ளது.

தனி ஒரு கிராமமாக பகுதியாக போராடி சோர்வு கொள்ளாமல், தங்களுக்குள் ஒன்றிணைந்து உருவாக்கிய ஒரு அமைப்பு முறையில்தான், ஒரு கூட்டமைப்பு முறையில்தான் மத்திய-மாநில, சர்வதேச அரசுகளின் ஆசி பெற்ற பெரும் வேதாந்தாவை உறுதியோடு எதிர்கொண்டு போராடி வருகின்றனர்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
தொடர்புக்கு : 9443584049, 7811940678, 8122275718,
7305172352, 9787195783, 9952763686, 9965345695, 9894574817.

கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !

0

ந்தியா முழுவதுமே கொரோனா பாதிப்புகளால் முடங்கிப் போயிருக்கிறது. மாநில அரசுகள் கடுமையான நிதிச் சுமையில் சிக்கியுள்ளன. மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகள் கூடுதல் கடன் பெறுவதற்கு நிபந்தனையாக 4 முக்கிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தும்படி மாநில அரசுகளை நிர்பந்தித்துள்ளது மோடி அரசு.
பொதுவாக மாநில அரசுகள் தங்களது நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 3.5% அளவிற்கான தொகையை மத்திய அரசிடமிருந்து கடனாகப் பெறலாம்.

கொரோனா பிரச்சினையால் அனைத்து மாநிலங்களும் நெருக்கடியில் உள்ளநிலையில், மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கொடுக்கும் கடன் தொகையை மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.5% என்ற அளவில் இருந்து 5% வரை கொடுக்கத் தயாராக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்துள்ளது. ஆனால் கூடுதலாக கொடுக்க இருக்கும் 1.5% தொகைக்கு 4 முக்கிய சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறது மத்திய அரசு.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம், தொழில் செய்வதற்கான நிலைமையை மேம்படுத்துதல், மாநில மின் விநியோக நிறுவனங்களை இலாபமாக இயக்கும் வகையில் சீர்திருத்தங்கள், நகர உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் வருவாயை அதிகரித்தல் ஆகிய நான்கு சீர்திருத்தங்களையும் அமல்படுத்த வேண்டும் என்று நிபந்தனையிட்டிருக்கிறது.

மொத்தமுள்ள 1.5% கூடுதல் தொகையில் ஒவ்வொரு நிபந்தனைகள் நிறைவேற்றப்படுவதற்கும் 0.25% அதிகரிக்கும். ஆக நான்கு நிபந்தனைகளுக்கு மொத்தமாகச் சேர்த்து 1% வரை அதிகரிக்கப்படும். மீதமுள்ள 0.5% கூடுதல் தொகை, மூன்று நிபந்தனைகளோ அதற்கு மேலோ நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். ஒருவேளை இரண்டு நிபந்தனைகளை மட்டும் நிறைவேற்றும் மாநிலங்களுக்கு 0.5% மட்டுமே கூடுதல் கடன் வழங்கப்படும். மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றும் மாநிலங்களுக்கு 1.25%-மும், நான்கையும் நிறைவேற்றும் மாநிலங்களுக்கு மட்டுமே 1.5% மூம் கூடுதல் கடனாக வழங்கப்படும்.
மத்திய அரசின் இந்த நிபந்தனைகளுடன் கூடிய கடனை, தமிழகம், கேரளா, மேற்குவங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் எதிர்க்கின்றன. இதில் மற்ற மாநிலங்கள், தங்களுக்கு மத்திய அரசு வரி வருவாயில் தர வேண்டிய பணத்திற்காக தொடர்ந்து குரல் எழுப்பிப் போராடி வருகின்றன. ஆனால் தமிழக அரசோ பாஜக அரசின் கொத்தடிமையாக இருந்து வருகிறது.

உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார நெருக்கடியில், கொரோனா கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதே வேளையில் முதலாளித்துவம் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார வீழ்ச்சியின் பழிபாவத்தைத் தன் மீது ஏற்றுக் கொண்டுள்ளது கொரோனா. “எரியும் வீட்டில் பிடுங்கிய மட்டும் லாபம்” என்ற வகையில்தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

வருவாய் இழப்பு, வாழ்வாதார இழப்பில் சிக்கிக் கிடக்கும் மக்களை இன்னும் வக்கிரமாகச் சுரண்டும் வகையிலேயே மாநில அரசுகளுக்கான இந்த நிபந்தனைகளை விதித்துள்ளது. முதல் நிபந்தனையான, ஒரே நாடு, ஒரே ரேசன் கார்டு போன்ற திட்டங்கள் அனைத்தும், மாநில சுயாட்சியை ஏட்டுச் சுரைக்காயாக மாற்ற கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும். ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து ராஷ்டிரக் கனவின் ஒரு பகுதியாகவும், கார்ப்பரேட்டுகளின் திறந்தவெளிக் கொள்ளைக்கு ஏற்றவகையிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் மலிவான மனித உழைப்புச் சக்தி தட்டுப்பாடில்ல்லாமல் கிடைக்கவும் ஏற்றவகையில்தான் “ஒரே நாடு ஒரே ரேசன்” திட்டத்தை நடைமுறைப்படுத்த துடிக்கிறது மோடி அரசு.

இரண்டாவது நிபந்தனை, தொழில் தொடங்க ஏற்ற சூழலை ஏற்படுத்துதல். இந்தியா முழுவதும் தொழில் தொடங்கும் தனியார் நிறுவனங்கள், பல்வேறு விதிமுறைகளை சட்டத்துக்குப் புறம்பாக மீறி சுற்றுச் சூழல் சீர்கேடுகள், தொழிலாளர்களை சுரண்டுதல், வரி ஏய்ப்பு, மின்சாரத் திருட்டு ஆகியவற்றை செய்து வருகின்றன. அதனை சட்டப்படி அவர்களுக்கு செய்து கொடுப்பதற்கான உபாயத்தை மேற்கொள்ள வலியுறுத்துகிறது மத்திய அரசு. யோகி ஆதித்யநாத் உட்பட பாஜக ஆளும் மாநிலங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களை மூன்றாண்டுகளுக்கு முடக்கி வைத்திருப்பது ஒரு உதாரணம்.

அடுத்ததாக மின் விநியோகம் தனியார்மயமாக்கும் மசோதாவை இரண்டு மாதங்களுக்கு முன்பே கருத்துக் கேட்புக்கு விட்டிருந்தது மத்திய அரசு. அதன் சாராம்சமே மின் விநியோகத்தை முழுக்க முழுக்க தனியார்மயப்படுத்துவதும், மின் தட பராமரிப்பை மட்டும் அரசின் தலையில் கட்டுவதும் தான். அதன் ஒரு அம்சமாக மாநில மின்சார வாரியங்கள் மானியங்களைக் குறைத்து இலாபமீட்டலில் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியது மோடி அரசு.

படிக்க:
♦ செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !
♦ தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

மாநில அரசுகளுக்கு விவசாயிகள் நலனில் அக்கறையில்லை என்றாலும்கூட தங்களது ஓட்டு வங்கியில் அக்கறையுண்டு. அதற்காகவாவது, விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தின் மீது கைவைக்கத் தயங்குவார்கள் என்பது மத்திய அரசுக்கு தெரியாத ரகசியமல்ல. இலவச மின்சாரத் திட்டத்திற்கு மாநில அரசின் நிதியில் இருந்து கொடுக்கப்படும் மானியத் தொகையை ரத்து செய்வது, அதன் மூலம் மின்சார விநியோகத்தை முழுக்க தனியார் கையில் எவ்விதப் பிரச்சினையுமின்றி தாரைவார்க்கவே இந்த நிபந்தனையையும் மோடி அரசு வைத்திருக்கிறது.

நான்காவதாக, நகர உள்ளாட்சி நிர்வாக அமைப்புகளின் வருவாயை அதிகரிக்க வேண்டுமென்கிறது. சொத்துவரி, தொழில்வரி, தண்ணீர்வரி உள்ளிட்டவற்றை அதிகரிப்பதுதான் அத பொருள். மக்களிடமிருந்து வரி மூலம் கூடுதல் பணத்தைக் கறக்க மாநில அரசுகளை நெட்டித் தள்ளவே இந்த நயவஞ்சக கடனளிப்பு ‘சலுகையை’ வழங்கியிருக்கிறது மோடி அரசு.

இந்திய போன்ற மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்ட ஐ.எம்.எஃப்., உலக வங்கி ஆகிய ஏகாதிபத்திய சேவை நிறுவனங்கள் கையாளும் மிகக் கீழ்த் தரமான நடைமுறைதான் கடன் கொடுத்து அடிமைத் தனமான ஒப்பந்தங்களில் கையெழுத்திடச் செய்வது. இதனையே தனது சொந்த மாநிலங்களுக்கு நடைமுறைப்படுத்துகிறது மத்திய அரசு
மாநிலங்களின் வரி உரிமையை ஜி.எஸ்.டி மூலம் பறித்ததோடு, மாநிலங்களுக்கான பங்கையும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது மோடி அரசு. ஏழைகளின் இக்கட்டான தருணங்களில், “பணம் வேண்டுமா.. நான் சொன்ன இடங்களில் எல்லாம் கையெழுத்துப் போடு” என மிரட்டி அவர்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச சொத்தையும் கொள்ளையடிக்கும் கந்துவட்டிக் கும்பல் போல, கொரோனா நெருக்கடியும், தொழில் முடக்கமும் மக்களை முடக்கியிருக்கும் சூழலில், மாநில அரசுகளுக்கு பணத்தைக் கடனாகக் கொடுக்கக் கூட அடிமைச் சாசனத்தில் கையெழுத்துப் போட்டு வாங்குகிறது மோடி அரசு.


நந்தன்
நன்றி : த பிரிண்ட். 

புதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !

புதுச்சேரி : வேல் பிஸ்கட்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! இது தொழிலாளர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி !

வேல் பிஸ்கட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதுச்சேரி திருபுவனை பகுதியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. ஐ.டி.சி பன்னாட்டு நிறுவனத்தின், சன் பீஸ்ட், மேரி கோல்டு போன்ற உண்ணும் பிஸ்கட்டுகளைத் தயாரித்துக் கொடுக்கும் ஜாப் ஒர்க் நிறுவனம் தான் வேல் பிஸ்கட்ஸ் நிறுவனம்.

இந்த நிறுவனத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமும், சிறுபான்மைச் சங்கமாக INTUC சங்கமும் செயல்படுகின்றன. அதில், பு.ஜ.தொ.மு சங்கத் தொழிலாளர்களைக் குறிவைத்து தொடர்ச்சியாக அடக்குமுறைகளை ஏவி வந்தது நிர்வாகம்.

ஒவ்வொரு ஊதிய உயர்வு ஒப்பந்தத்தின் போதும் சங்க முன்னணியாளர்கள் மீது பொய்யான குற்றம் சுமத்தி நடவடிக்கை எடுத்து, அதன் மூலம் ஊதிய உயர்வை தனக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல், சங்க முன்னணியாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்து, சங்கத்தையும் கலைத்து விட வேண்டும்! என்பதை நிர்வாகம் ஒரு உத்தியாகவே கையாண்டு வருகிறது. இருந்த போதிலும், ஒவ்வொரு முறையும் எமது சங்கம் சட்டரீதியாகவும், பு.ஜ.தொ.மு வழிகாட்டுதல்களாலும், தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தாலும் நிர்வாகத்தின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சென்ற முறை கிட்டத்தட்ட 52 நாட்கள் உள்ளிருப்புப்_போராட்டம் நடந்த போது, உற்பத்தியை நடத்த வேண்டும் என்பதற்காக, போட்டி சங்கத்தையும், ஒப்பந்த தொழிலாளர்களையும், சங்கத்திற்கு எதிராக திருப்பி விட்டது. தொழிலாளர் என்ற பெயரில் உள்ளூர் ரவுடிகளை இறக்கி விட்டு மோதலை உருவாக்க முயற்சித்தது. ஆனால், நிர்வாகத்தின் அத்தனை தகிடுதத்தங்களையும் முறியடித்து போராட்டம் வெற்றிகரமாக முன்னேறியது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

எவ்வளவு குடைச்சல் கொடுத்தாலும் தொழிலாளர்களையும், தொழிற்சங்கத்தையும் ஒன்றும் செய்ய முடியவில்லை! முக்கிய சங்க நிர்வாகிகளை மாதக்கணக்கில் வெளியே தூக்கிப் போட்டாலும், அந்த இழப்புக்களை எல்லாம் தாங்கிக் கொண்டு வெட்ட வெட்ட முளைக்கும் மரம் போல, மீண்டும் – மீண்டும் எழுந்து நிற்பதைப் பார்க்க நிர்வாகத்தால் பொறுக்க முடியவில்லை. அதனால், ஆத்திரம் தலைக்கேறி, இந்த முறை, “நம்மை எதிர்ப்பவர்கள் யாரும் இந்த ஏரியாவிலேயே இருக்கக் கூடாது!” என்று முடிவு செய்தது. தான் செய்வது சட்ட விரோதம் என்று தெரிந்தும், சங்க முன்னணி தோழர்கள் வேலை செய்யும் லைன் III-யில் உற்பத்தி ஆர்டர் இல்லை என அந்த லைனை பிரித்து கம்பெனியிலேயே வைத்துக் கொண்டது. இயந்திரத்தில் வேலை செய்த தொழிலாளர்களை சேல்ஸ் டிவிசனுக்கு மாற்றுவதாகச் சொல்லி கம்பெனியே இல்லாத ஊர்களிலும், கடைகளுக்கும் என 09 பெண் தொழிலாளர் உள்ளிட்டு 25 பேரை கண்மூடித்தனமாக பந்தாடியது. ஏற்கனவே எலக்ட்ரீசியனாக வேலை பார்த்த ஒரு தொழிலாளியை கும்பகோணத்தில் உள்ள கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைக்கு மாற்றிய ‘இழி பெருமை’ இந்நிறுவனத்திற்கு உண்டு என்பது தனிக்கதை.

இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமென்றால் பணியிட மாற்றத்தை தொழிலாளர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் முடிக்க வேண்டும் என்று இப்பிரச்சினையின் ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பணியிட மாற்ற நடவடிக்கைகள் சட்டவிரோதம் என தொழிலாளர் துறையில் முறையீடு செய்த போது, பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. நீதிமன்றத்தில் பெற்ற தடை உத்தரவையும் மதிக்கவில்லை. பணியிட மாற்றத்தை எப்படியாவது நிறைவேற்றி, சங்கத்தையே இல்லாமல் ஒழித்து விடுவது என்பதில் தான் நிர்வாகம் விடாப்பிடியாக இருந்தது. மேலும், பணியிட மாற்றத்தில் செல்லாததைக் காரணம் காட்டி தற்காலிக பணிநீக்கம் செய்வதை அடுத்தகட்ட மிரட்டலாகக் கையில் எடுத்தது.

இதற்கிடையில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது. இந்த கொரோனா கால நெருக்கடியை பயன்படுத்தி, தொழிலாளர்களை இன்னும் கூடுதலாக பழிவாங்கத் துடித்தது நிர்வாகம். அதன்படி நிறுவனம் செயல்படும் பகுதி கொரோனா தொற்று சிவப்பு மண்டலமாக புதுச்சேரி சுகாதாரத் துறையால் அறிவிக்கப்பட்டு பகுதி சீல் வைக்கப்பட்ட போதும், “தொழிலாளர்கள் வேலைக்கு வந்தால் தான் ஊதியம் தர முடியும்” என அச்சுறுத்தியது.

படிக்க:
செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !
♦ கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !

மேலும், ஊரடங்கு காலத்திற்கு எந்த சம்பளமும் தரமுடியாது என அடாவடியாக மறுத்ததுடன், பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டியது. குடும்ப நெருக்கடி, வறுமையின் காரணமாக வேறு வழியின்றி கொரோனா வைரஸ் தொற்று அபாயம் மிகுந்த சூழலிலும், அந்தப் பகுதியில் வசித்த சில தொழிலாளர்கள் மறைந்து மறைந்து பணிக்கு செல்லும் அவலத்திற்கு தள்ளியது. இந்த நிலைமையை அந்தப் பகுதி போலிசு நிலையத்தில் முறையிட்ட அடிப்படையில், நிறுவன அதிகாரிகளை அழைத்து போலிசு இன்ஸ்பெக்டர் சத்தம் போட்டு அனுப்பிய பிறகு தான், தொழிலாளர்களை பணிக்கு வரக் கட்டாயப்படுத்துவதை நிறுத்தியது. இருப்பினும், இன்று வரை ஊரடங்கு காலத்திற்கு ஊதியம் தராமல் மறுத்து வருகிறது.

இந்த நெருக்கடியான கால கட்டத்தில், வெளியூருக்கு பணியிட மாற்றம் செல்வது சாத்தியமில்லை என்றும், கொரோனா முடிந்து போக்குவரத்து உள்ளிட்ட ஊரடங்கு தளர்வுகள் நடைமுறைக்கு வரும் வரை, அரசின் அறிவுறுத்தலின் படி உள்ளூர் தொழிலாளர்களை பணிக்கு அனுமதிக்கக் கோரியும், பணியிட மாற்றம் குறித்து பேசி முடிவெடுக்கலாம் எனக் கேட்டும், பணியிட மாற்றம் சென்று தான் ஆக வேண்டும் என்று கூறி வம்படியாக மறுத்து விட்டது.

பணியிட மாற்றம் என்ற பெயரில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் வறுமை, பசி, பட்டினி என கடும் நெருக்கடியுடன், கொரோனா தொற்று சூழலும் சேர்ந்து, ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் முடங்கி விட்ட சூழலில், நிர்வாகத்தின் ஈவு இரக்கமற்ற செயல்களும், பழிவாங்கும் நடவடிக்கைகளும் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை அதிகமாக்கியது.

அதனால் வேறு வழியின்றி, கடந்த மே-27 அன்று காலை 06.00 மணிக்கு உள்ளிருப்புப் போராட்டம் துவங்கப்பட்டது. நிறுவனத்தின் உள்ளேயும், வெளியிலும் ஆண், பெண் தொழிலாளர்கள் என அனைவரும் இரவு, பகல் என்றும் பாராமல், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
போராட்டத்தை அறிவித்தவுடனேயே, உள்ளூர் போலீசைக் குவித்து மிரட்ட ஆரம்பித்தது. மற்றொரு சங்கமான ஐஎன்டியூசி சங்கத் தொழிலாளர்களை வைத்தும், ஒப்பந்தத் தொழிலாளர்களை இறக்கியும் உற்பத்தியைத் துவங்க முயற்சித்தது.

ஆனால், நமது தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தையும் தாண்டி, தொழிலாளர் துறை, போலீசு துறை அதிகாரிகளை உடனுக்குடன் அணுகி, பிரச்சினைப் பற்றிய சரியான பார்வையை உருவாக்கியதாலும், நமது பு.ஜ.தொ.மு வழிகாட்டுதல்களை சங்க நிர்வாகிகள் கடைபிடித்து, தொழிலாளர்களை உணர்வூட்டி நடத்திய ஒற்றுமையான, விடாப்பிடியான போராட்டத்தாலும், உற்பத்தியை துவக்கும் நிர்வாகத்தின் முயற்சி பலனளிக்காமல் போனது. நமது சங்கத்தின் நோக்கம், உற்பத்தியை நிறுத்துவதோ, முடக்குவதோ அல்ல என்பதையும் தொழிலாளர்களின் உடனடி கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என உள்ளூர் போலீசு முதல் தொழிலாளர் துறை வரை ஏற்கனவே தொடர்ச்சியாக பேசி வந்தோம்.

மறுபுறம், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் நமது முயற்சிகள் பற்றியும், நிர்வாகத்தின் அடாவடிகளைப் பற்றியும் போலீசும் அறிந்திருந்தது. மேலும், தொழிலாளர்களின் விடாப்பிடியான போர்குணமிக்க தொடர் போராட்டத்தினால் வேறு வழியின்றி காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தினால் தான் பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற முடிவுக்கு வரவைத்தது. அது காவல்துறையை தொழிலாளர்கள் எதிர்கொண்ட விதம்தான் காரணமாக அமைந்தது. எனவே வேறு வழியே இல்லை என போலீசு பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லி நிர்வாகத்திற்கு அறிவுறுத்த ஆரம்பித்தது.

இதனால், வேறு வழியின்றி, நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு வந்ததுடன், பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்திற்கும் தள்ளப்பட்டது.
தொடர்ச்சியாக 25 தொழிலாளர் குடும்பங்கள் நான்கு மாதங்களுக்கும் மேலாக பணியின்றி இருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்பதை பிரதானமான கோரிக்கையாகவும், மற்ற கோரிக்கைகளை அடுத்தடுத்து பேசுவது எனவும் முன் வைக்கப்படது. அதன் அடிப்படையில் பெண்கள் பணியிட மாற்றத்தில் செல்வதை தடுப்பது, வெளி மாநில பணியிட மாற்றத்தை நிறுத்துவது, காலவரையற்ற பணியிட மாற்றத்தை ஆறு மாத காலமாக வரையறுப்பது என்ற நிபந்தனைகளுடன், தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் யார் மீதும் எந்த விதத்திலும் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது,
தற்போதைய உடனடி நிலைமைகள் தமக்கு சாதகமில்லை என்பதை உணர்ந்த நிர்வாகம், நமது நிபந்தனைகளை ஏற்றதுடன், இந்தப் போராட்டம் காரணமாக ஏற்பட்ட உற்பத்தி இழப்பை மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் உற்பத்திச் செய்து ஈடுகட்ட வேண்டும் என்ற நிர்வாகத்தின் வேண்டுகோளுடன் போராட்டத்தை நான்கு நாட்களுக்குப் பிறகு மே-30 அன்று இரவு 07.00 மணிக்கு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

இப்போராட்டம் தொழிலாளர்களுக்குக் கிடைத்துள்ள முழு வெற்றியாகக் கொள்ள முடியாது. எனினும், முதலாளித்துவத்தை நிலைகுலையச் செய்துள்ள பொருளாதார நெருக்கடியை, கொரோனா வைரஸ் தொற்றின் பெயரால், ஒட்டு மொத்தமாக தொழிலாளர்கள் வர்க்கத்தின் மீது ஏவி வருகிறது. தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான மோடியின் சட்டத் திருத்த நடவடிக்கைகள் மற்றும் சட்டத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கைகள் என நம்முன் கார்ப்பரேட் காவி பாசிச அபாயம் சூழ்ந்துள்ள இந்த சூழ்நிலையில் வரம்புக்குட்பட்ட வகையில் தொழிலாளர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் சிறு, சிறு போராட்டங்களையும் தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின் ஒற்றுமையை நிலைநிறுத்துவதற்கான நம்பிக்கையாக கொள்ள வேண்டியுள்ளது.
அந்த வகையில் இப்போராட்ட வெற்றியை தொழிலாளி வர்க்கம் இனிப்போடு கொண்டாடுவதை விட, தொழிலாளர்களை வர்க்க உணர்வோடு வளர்த்தெடுப்போம்!

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: 95977 8980

செக்யூரிட்டி வேலையாவது கிடைக்காதா ? ஆட்டோ தொழிலாளர்களின் அவலம் !

றுபது நாட்களைக் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்? லாக்டவுனுக்குப்பிறகு அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்ன?

”இந்த மூனு மாசமும் ஹிந்திக்காரன்தான் சார் எனக்கு சோறுபோட்டான். பத்து அடிக்கு பத்து அடி போலீசா நின்னுச்சு அதையும் மீறி வண்டி ஓட்டுனேன். கிண்டி ஸ்டேஷனிலிருந்து சென்ட்ரலுக்கு போக வழக்கமா 300 – 350 வாங்குவோம். அஞ்சு அஞ்சு பேரா ஏத்திகிட்டு சவாரி போனேன். ஆளுக்கு அம்பதோ நூறோ அவன்கிட்ட இருந்தத வாங்கிட்டு ஓட்டுனேன். வயசான ஒருத்தரு 100 ரூபாய்தான் இருக்கு, என்ன அங்க விட்டுருன்னாரு. வழக்கமா அவர் சொன்ன இடத்துக்கு போக 300 வாங்குவோம். என்ன பன்றது, கஷ்டத்துல இருக்கவங்களுக்கு ஏதோ நம்மால ஒரு உதவி. ஒன்னும் இல்லாம இருக்கிற நமக்கு அவரு கொடுக்குற நூறு ரூபா உதவினு நினைச்சுதான் ஓட்டுனேன். ஏதோ போயிருச்சி, இனிதான் என்ன ஆகுமுன்னு தெரில.

வீட்லே இரு வீட்லே இருன்னு சொன்னா எப்படி சார் இருக்க முடியும்? குடும்பத்த யாரு பாக்கிறது? தில் இருந்தாதான் பிழைக்க முடியும். அதான் கொரோனாவது எதாவதுனு வண்டி ஓட்டிட்டுருக்கேன். இதுவரைக்கும் ரெண்டு வாட்டி போலீசு மறிச்சிச்சு. பத்திரிகைக்காரர் ஒருத்தர விட்டுட்டு திரும்புறப்ப ஐஸ்ஹவுஸ் பக்கம் போலீசு மறிச்சி, லத்தி உடையற அளவுக்கு அடிச்சது. அப்புறம் இன்ஸ்பெக்டர் வந்து ஊசி போடவச்சி அனுப்பிவச்சாரு. இந்தா இன்னும் கைய வழக்கம் போல மடக்க முடியல. அப்புறம் கோயம்பேடு பக்கம் போனப்ப மதியம் 2 மணிக்கு புடிச்சி ராத்திரி 11 மணி வரைக்கும் ஸ்டேஷன்ல ஒக்கார வச்சி திட்டி அனுப்பினாங்க.

இந்த மூனு மாதமா இந்திகாரன்தான் எனக்கு சோறு போட்டான். கிண்டியிலிருந்து சென்ட்ரலுக்கு அஞ்சு அஞ்சு பேரா ஏத்திட்டுப் போவேன்; ஆளுக்கு அம்பதோ நூறோ கொடுப்பாங்க என்கிறார் மோகன்ராஜ்.

”அதான் கவருமெண்ட் வண்டி ஓட்டக்கூடாதுனு சொல்லிருக்குல்ல… அப்புறம் ஏன் ஓட்டுறனு” கேட்டாரு ஒரு போலீசுகாரர். ”நான் திருடன் ஆயிட்டா சந்தோஷமா? வழிப்பறிக் கொள்ளை செஞ்சா ஒன்னும் பண்ண மாட்டீங்களா?”னு கேட்டேன். வண்டிய ஓட்ட விட்டா, ஏதோ கிடைக்கிறத வச்சி கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு பொழப்ப ஓட்டிட்டு போயிடுவோம்” என்கிறார், மோகன்ராஜ்.

”மனைவியின் சேமிப்பிலிருந்து மார்ச் மாசம் சமாளிச்சிட்டோம். தெரிந்த நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கி ஏப்ரல் மாசத்தை ஓட்டிட்டோம். அடுத்து என்னதான் பன்றதுனு குழப்பத்துல இருக்கிறப்பவே, வாட்சப் குரூப் வழியா தொடர்புகொண்ட பள்ளி நண்பர் ஒருவர் தாமாக முன்வந்து கொடுத்த உதவியிலிருந்து மே மாசத்தையும் கடந்தாச்சி. அடுத்து என்ன என்பது கேள்விக்குறிதான்.

நானே ராஜா, நானே மந்திரி எவன்கிட்டயும் கைகட்டி வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் ஒரு சுயதொழிலாக நினைத்து ஆட்டோ ஓட்ட வந்தேன். 23 வருசத்தையும் அப்படித்தான் கடந்திருக்கிறேன். தற்போது, பள்ளி நண்பர் ஒருவர் எனது நிலைமையைப் பார்த்து உதவி செய்திருக்கிறார். இருந்தாலும், சுயமாக சம்பாத்தியம் இல்லை என்பது மனசுக்கு பாரமாகத்தான் இருக்கிறது. வாங்கிய பணத்தை சூழ்நிலை பொறுத்து திரும்பக்கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம். ஆனாலும் மனதை அறுக்கிறது” என்கிறார், ஜெயராமன்.

மூனுமாசம் வாடகை குடுக்கல; கிடைக்கிறத வச்சி எப்படியோ சமாளிச்சிட்டோம்; இனி என்ன செய்யப்போறோமுன்னு தெரியல… என்கிறார் ராஜேஷ்.

”22 வயசுல ஆட்டோ ஓட்ட வந்தேன். பத்து வருசமா ஓட்டிட்டிருக்கேன். பேங்க் பேலன்ஸ் பத்து பைசா இல்லை. அன்றாடம் வரவுக்கும் செலவுக்கும்தான் சரியா இருக்கும். அதவச்சி குடும்பம் ஓட்றதே பெரும்பாடு. மூனுமாசம் வாடகை குடுக்கல. கிடைக்கிறத வச்சி எப்படியோ சமாளிச்சிட்டோம்.” என்கிறார் ராஜேஷ்.

”யார் கையையாவது எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். இப்பக்கூட பக்கத்து தெருவில் நாலுமணிநேரம் காத்திருந்து நிவாரண உதவி வாங்கியாந்தேன். ஹவுஸ் ஓனருக்கு முழுசா வாடகை கொடுக்கலை. கிடைச்ச காசுல கொஞ்சம் கொடுத்திருக்கேன். முந்தி மாதிரி அவரும் நம்மகிட்ட சரிவர பேசுறதில்லை; ஒருமாதிரி நடத்துறாரு. அதுவே மனசுக்கு கஷ்டமா இருக்கு.

ஆட்டோ தொழிலுக்கு வர்றதுக்கு முன்னாடி, குடிசைத்தொழில் மாதிரி, அஞ்சு ரூபா பாக்கெட்ல மசாலா பொருள் போட்டு மளிகைக்கடைக்கு சப்ளை பண்ணிகிட்டு இருந்தேன். முத மாசம் அந்த தொழில செய்வோம்னு ஆரம்பிச்சேன். அடுத்த மாசம் அதக்கூட தொடர முடியல. 400 ரூபாய்க்கு வித்த பொருள் 600 ரூபாய்க்கு வித்தா அஞ்சு ரூபாய்க்கு நான் எப்படி பாக்கெட் போட முடியும்? வேற வழி என்னன்னு வீடுங்களுக்குத் தண்ணீர் கேன் போட்டுகிட்டு இருக்கேன். இப்படித்தான் போகுது” என்கிறார், முத்து.

பயணிகள் யாரேனும் வரமாட்டார்களா என மவுண்ட் ரோட்டின் ஒரு ஓரத்தில் காத்திருந்தார் மணி. சென்னையில் ஆட்டோக்கள் ஓடக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்களே, நீங்கள் எப்படி வேலைக்கு வந்திருக்கிறீர்கள்? என்று பேச்சு கொடுத்தோம்.

ஒருபக்கம் போலீசு, மறுபுறம் வயிற்றுப்பசி. நிற்காதே, ஓடு என இரண்டுமே துரத்துகிறது. மவுண்ட் ரோட்டில் பயணிகள் யாரேனும் வரமாட்டார்களா எனக் காத்திருக்கும் மணி.

”வீட்டில இருந்தா யாரு சாப்பாடு போடுறது? முப்பது வருசமா ஆட்டோ ஓட்டிக்கிட்டிருக்கேன். அரசாங்கம் என்ன உதவி செஞ்சிருச்சி? ஆயிரம் ரூபாய வச்சிகிட்டு எத்தன மாசத்தை ஓட்டுவீங்க? ரேஷன்ல அரிசி போட்டோம்னு சொல்றாங்களே, சட்டதிட்டம் போடுறவன் தின்பானா சார் அந்த அரிசியை? ஆட்டோ தொழில விட்டா எனக்கு வேற தொழில் தெரியாது. அம்பது வயசாவுது இனிமே நான் எந்த வேலைக்கு போறது. நல்லதோ கெட்டதோ, ஆண்டவன் விட்ட வழி அப்படியே போய்கிட்டே இருக்க வேண்டியதுதான்” என்கிறார், மணி.

சொந்தமாக தொழில் செய்த நாங்கள், அடுத்தவர் உதவியை எதிர்பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்கிறார், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கத் தலைவர் முத்து.

”ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், கிண்டி ரயில்வே கிளையின் தலைவராக இருக்கிறேன். நான் ஆட்டோ ஓட்ட வந்தப்ப இதே கிண்டி ரயில்வே ஸ்டேஷன்ல 32 பேர் இருந்தோம். இப்ப பழைய ஆளுங்க 4 பேருதான் இருக்கோம். வருமானம் இல்லைன்னு, எல்லாம் வேற வேற தொழிலுக்கு மாறி போயிட்டாங்க. ஸ்டேண்ட்ல இப்போ 16 ஆட்டோதான் ஓடுது. ஸ்டாண்டுக்கு வெளியே ஒரு 30 – 40 ஆட்டோ நிற்கும். ஓலா உபேர் வந்து எங்க பொழப்ப கெடுத்தது இல்லாம, மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைப்பு வாகனம்னு விட்டதுல எங்களுக்கு பெரிய அடி. கிண்டி ஸ்டேஷன்லருந்து டி.எல்.எஃப்.க்கு ரெகுலர் சவாரி கிடைக்கும். வேற வழியில்லாம, நாங்களும் மூனுபேரு நாலு பேர சேர்த்துக்கிட்டு ஷேர் ஆட்டோ மாதிரிதான் ஓட்டிகிட்டு இருந்தோம். இப்போ அதுவும் இல்லாமப் போச்சு. இந்த நிலைமையில ஆட்டோவுக்கு ஒருத்தரத்தான் ஏத்தனும்னா வண்டி ஓட்ட முடியுமா?” என்கிறார், முத்து.

ஈகிள் ஃபிளாஸ்க் கம்பெனி மூடினதால ஆட்டோ ஓட்ட வந்தேன்; இப்ப ஆட்டோ ஓட்டவும் வழியில்ல, 50 வயசுக்கும் மேலே இனி, எந்தத் தொழிலுக்குப் போக முடியும் எனப் புலம்புகிறார், முகம்மது ரபி.

”வண்டி புதிதாக போட்டு 4 மாசம்தான் ஆகுது. மாசம் 7600 டியூ கட்டனும். இன்னும் 3 வருசம் கட்டியாகணும். டியூ கட்ட டெய்லி 250 ரூபா தனியா எடுத்து வச்சிருவேன். உடம்புக்கு சுகமில்லைன்னாலும் அந்த காசுல கை வைக்க மாட்டோம். சோத்துக்கே வழியில்லை, இப்போ டியூ எங்க கட்றது? டியூ கட்டலைன்னு வண்டிய எடுக்க வந்தான்னா, உன் பொருள் எடுத்துட்டுபோனு விட்றுவேன். வேறு என்ன பன்ன சொல்றீங்க” என்கிறார், முகம்மது ரபி. கிண்டி தொழிற்பேட்டையில் இயங்கிவந்த ஈகிள் பிளாஸ்க் காண்டிராக்டராக பணிபுரிந்து வந்த முகம்மது ரபி, கம்பெனி மூடிய பிறகு, ஆட்டோ தொழிலுக்கு மாறியவர். மீண்டும் நான் எந்தத் தொழிலுக்குப் போக முடியும் எனப் புலம்புகிறார், அவர்.

”பத்துவருசம் ஓடுன வண்டிக்கு எல்லாம் பெர்மிட் புதுப்பிக்கப் போறதில்லைனு பேசிக்கிறாங்க. அப்படி ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா என்னால இப்போ இருக்குற நிலைமைக்கு புது வண்டி போட முடியாது. வருசம் 3000 இருந்த இன்சூரன்ஸ் பத்தாயிரமாச்சு. எப்.சிக்கு 25,000 ரூபாய் எடுத்து வைக்கணும். எல்லாமே கடன்தான் வாங்கியாகணும். எங்களுக்கு பேங்க்ல கடனும் கொடுக்க மாட்டான்; சேட்டுக்கிட்டதான் வண்டிய ரீ பைனான்ஸ் போட்டு காசு வாங்கியாகணும்.

டீ பத்து ரூபாய் ஆனபோதே கடையில் டீ-சிகரெட் குடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். யாரா இருந்தாலும் சென்னையில் மிக சாதாரணமா பத்தாயிரம் இல்லாமல் குடும்பம் நடத்த முடியாது. பத்தாயிரத்துக்கு என்ன வழி? தொழிலை தொடரமுடியாது. இதுவரை ஆட்டோவை நம்பி, வாங்கிய கடனை கட்டிவந்தோம். இனி அந்த நேர்மையை காப்பாற்ற முடியாது என்ற அச்சம் வாட்டுகிறது.”

வீட்ல கொஞ்சம் நல்லா சமைப்பாங்க, அதவச்சி சின்னதா ஒரு டிப்ஃபன் கடை போடலாமானு யோசிச்சுகிட்டிருக்கேன் என்கிறார் ஜெயராமன்.

”இனிமே குனிஞ்சு நிமிந்து வேற வேல செய்ய முடியுமா? உக்காந்தே வேலை செஞ்சு உடம்பு பழக்கமாயிடுச்சு. கூரியர் கம்பெனிக்கு போலாமா? செக்யூரிட்டி வேலைக்குப் போலாமான்னு யோசனையில் இருக்கேன். வீட்ல கொஞ்சம் நல்லா சமைப்பாங்க, அதவச்சி சின்னதா ஒரு டிப்ஃபன் கடை போடலாமானு யோசிச்சுகிட்டிருக்கேன். பொண்ணுக்கு ஆண்டுக்கு 25,000 ரூபாய் கல்விச்செலவு ஆகும். இறுதியாண்டு முடிக்க வேண்டும். பையன் பி.எச்.டி. படிக்க ஆசைப்படுகிறான். மகனை வேலைக்குப் போ என தொரத்துகிறார் மனைவி. இதையெல்லாம் எப்படி சமாளிப்பது என்பது குடைச்சலாக இருக்கிறது.” என்கிறார் ஜெயராமன்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான “ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்”, கிண்டி ரயில் நிலையம் (மேற்கு) பகுதியின் பொருளாளராக இருப்பவர் ஜெயராமன் கூறும்போது. ”முன்னெல்லாம் ஸ்டாண்டுக்கு வந்தா எப்படியும் 600 ரூபாய்க்கு வண்டி ஓட்டிரலாம்னு நம்பிக்கை இருந்துச்சி. டெய்லி வீட்டுக்கு 300 ரூபாய கொடுத்துட்டு, வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு, கைச்செலவுக்கு 100 ரூபாய எடுத்துட்டு, சங்க வேலை பார்க்க கிளம்பிவிடுவேன். ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம், தொழிலாளர்களை சந்திக்கிறதுனு அரசியல் வேலை செய்வேன். இருக்கிற நிலைமையில அதையெல்லாம் தொடர முடியுமானு அச்சமா இருக்கு” என்கிறார்.

”வண்டி ஓடலை, வருமானம் இல்லைனு இப்போ அமைதியா இருக்காங்க; இதே நிலை தொடர்ந்துச்சின்னா, சும்மா இருப்பாங்களா?. இப்பவே, குடும்பத் தேவைன்னா உன்கிட்டதானே கேட்கமுடியும்னு சொல்லி சண்டை போடுறாங்க; இது மேலும் அதிகமாகி, அவங்க ஒன்னு பேச நா ஒன்னு பேச குடும்பத்துல பிரச்சினைதான் வரும். வீட்டில் அவமானத்தை சந்திக்க நேரிடும்” என்கிறார் முத்து.

சுனாமி வந்தப்போ மீன் வெட்டுறத விட்டுட்டு, ஆட்டோ ஓட்ட வந்தேன்; இப்ப கொரோனா வந்ததால திரும்பவும் மீன் வெட்ட போகவேண்டியதுதான் என்கிறார், தனசேகர்.

”இதுக்கு முன்ன, கிழக்கு கடற்கரையில மீன் வெட்டிகிட்டு இருந்தேன். சுனாமி வந்திச்சி, பொழப்பும் போயிருச்சு, ஆட்டோ ஓட்ட வந்துட்டேன். பதினஞ்சி வருசம் ஓடிருச்சி. இந்தா இப்ப கொரோனானு இன்னொரு சுனாமி வந்துருக்கு; திரும்பவும் கிழக்கு கடற்கரைக்கு ஓட வேண்டிதான்” என்கிறார், தனசேகர்.

மேலும் படங்களுக்கு :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !

“1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார்.

“சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கிவிடுவார்கள். சாவர்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை” என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.

நிரஞ்சன் தக்லேவின் கருத்துப்படி, “15 நாட்களுக்கு ஒருமுறை கைதிகளின் எடை அளவிடப்படும். சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, 112 பவுண்டுகள் எடை இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினோல்ட் கிரீடோக்கிடம் அவர் நான்காவது முறை மன்னிப்பு கேட்டபோது, அவரது எடை 126 பவுண்டுகளாக அதிகரித்திருந்தது. அதாவது அவர் சிறையில் தண்டனை அனுபவித்தக் காலத்தில் அவரது எடை 14 பவுண்டுகள் அதிகரித்திருந்தது. ”

“தன் மீது கருணை காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள எதேனும் ஒரு சிறைக்கு அனுப்புமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திந்தார். பதிலுக்கு, அவர் எந்தவொரு நிலையிலும் அரசாங்கத்திற்காக பணியாற்ற தயாராக இருந்தார்.”

சிறையில் இருந்து வெளியேறவே இந்த உத்தி செய்யப்பட்டது

பகத் சிங்கிற்கும் மன்னிப்பு கேட்கும் தெரிவு இருந்தது, ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.

“இந்துக்கள், சீக்கியர்கள், பெளத்தர்கள் மற்றும் சமணர்கள் மட்டுமே இந்தியாவை புனித நிலமாக கருதுவார்கள். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இது புனித நிலம் அல்ல. இந்த வரையறையின்படி, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் இந்த நாட்டில் இருந்தாலும் ஒருபோதும் குடிமக்களாக இருக்க முடியாது” என்கிறார் சாவர்கர்.

“அவர்கள் இந்துக்களாக மாறினால் மட்டுமே இங்கே அவர்கள் இருக்க முடியும் என்று நினைத்தார் அவர். ஒருவர் இந்துவாக இருந்தாலும் கூட இந்து மதத்தையோ, மத நம்பிக்கையையோ பின்பற்றாமல் இருக்கலாம் என்ற முரண்பாட்டை அவர் ஒருபோதும் புரிந்துக் கொள்ளவில்லை”.

எந்த அரசியல் நடவடிக்கையிலும் பங்கேற்கக்கூடாது; ரத்னகிரி மாவட்ட ஆட்சியர் அனுமதியின்றி மாவட்டத்தை விட்டு வெளியேறக்கூடாது என்ற இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் 1924 ஆம் ஆண்டில் புனேவில் உள்ள எர்வாடா சிறையில் இருந்து சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார்.

படிக்க:
கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !
♦ பிரிட்டிஷ் கைக்கூலியாகவும் தயார் ! என்னை விட்டுவிடுங்கள் | ‘வீர’ சாவர்க்கர் கடிதம் !

“ஆங்கிலேயர்கள் அவருக்கு ஓய்வூதியமாக மாதம் அறுபது ரூபாய் வழங்கினார்கள். அவருக்கு மாத ஓய்வூதியம் கொடுக்கும் அளவிற்கு ஆங்கிலேயருக்கு அவர் என்ன சேவை செய்தார்? அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கப்பட்ட காரனம் என்ன என பல கேள்விகள் எழுகின்றன. அதேபோல், இப்படிப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற்ற ஒரே நபர் சாவர்க்கர் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது” என்கிறார் நிரஞ்சன்.

அவருக்கு சாக்லேட்டுகளும் ‘ஜிண்டான்’ பிராண்ட் விஸ்கியும் மிகவும் பிடித்தமானது.

“சாவர்க்கர் சிகரெட் மற்றும் சுருட்டுகளையும் புகைப்பார். ஆனால் அதில் அவருக்கு நாட்டம் இல்லை. எப்போதாவது மது அருந்துவார். காலை உணவில் வேகவைத்த முட்டைகள் இரண்டை சாப்பிடுவார். அதிலும் குறிப்பாக மீன் மிகவும் பிடித்தமானது. ”

1949 இல் காந்தி படுகொலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட எட்டு பேரில் சாவர்க்கரும் ஒருவர் என்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் உறுதியான ஆதாரங்கள் இல்லாததால் இறுதியில் அவர் விடுவிக்கப்பட்டார். காந்தி கொலை தொடர்பாக சாவர்க்கர் மீதான சந்தேகம் எப்போதும் மறையவே இல்லை. சாவர்கருக்கு தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்க முடியாது என்று கபூர் கமிஷன் அறிக்கையிலும் தெளிவாக கூறிவிட்டது.”

“நீங்கள் சாவர்க்கரை மதிக்க விரும்பினால், காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் பின்தள்ள வேண்டும். அதேபோல் காந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை நிராகரிக்க வேண்டும்”.

கீழே உள்ள புகைப்படத்தில்: நானா ஆப்தே, தாமோதர் சாவர்க்கர், நாதுராம் கோட்சே, விஷ்ணுபந்த் கர்கரே, திகம்பர் பட்கே, மதன்லால் பஹாவா (வலதுபுறம் நிற்பவர்), கோபால் கோட்சே, சங்கர் கிஸ்தய்யா (இடமிருந்து வலமாக அமர்ந்திருப்பது)

கரோனா ஊரடங்கை காரணம் காட்டி இணையவழி கற்பித்தலை கட்டாயமாக்கும் மோடி அரசு !

ரோனா வைரஸ் (Covid-19) பரவலின் காரணமாக அனைத்து நாடுகளும் பள்ளிகளையும் கல்லூரிகளையும் மூடிவிட்டன. இந்தியாவிலோ மார்ச் 17-ஆம் தேதியில் இருந்து மறுதேதி குறிப்பிடாமல் கல்வி நிலையங்களை மத்திய அரசு மூடியுள்ளது. கரோனா வைரஸ்ஸின் பரவல் அதிகரிக்கும் நிலையில் உயர்கல்வி தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றிய வாய்ப்புகளை ஆராய்வதற்காக பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஹரியானா மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேரா. குஹத் தலைமையில் குழுவை அமைத்தது.

இக்குழு இப்பருவத்திற்கான பாடங்களை முடிப்பது, தேர்வுகளை நடத்துவது அடுத்த பருவத்திற்கான மாணவர் சேர்க்கை நடத்துவது மற்றும் ஆராய்ச்சிகளை தொடர்வது பற்றிய பரிந்துரைகளை பல்கலைக்கழக மானியக்குழுவிற்கு அளித்தது. அதனடிப்படையில் ஏப்ரல் 27-ஆம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு Covid-19 சூழலில் உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

அதில் தேர்வுகளை ஜுலையில் நடத்துவது, அடுத்த பருவத்திற்கான (Odd semester) வகுப்புகளை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குவது, முதலாமாண்டு வகுப்புகள் செப்டம்பரில் தொடங்குவது, இந்த பருவத்திற்கான (Even semester) முடிக்காதப் பாடப்பகுதிகள் மற்றும் இறுதியாண்டு மாணவர்களின் ஆய்வுரைகளை இணையதள வாயிலாக நடத்தி முடிப்பது போன்ற வழிக்காட்டுதல் உள்ளடக்கிய சுற்றறிக்கையை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ளது. வருங்காலங்களில் Covid-19 போன்ற சூழலை எதிர்கொள்ளவதற்கான முன்தயாரிப்பாக மொத்த பாடத்தில் 75%-த்தை வகுப்புகளிலும் 25%-த்தை இணையதளம் வழியாகவும் (Online mode) நடத்தவும் UGC கூறியுள்ளது. (கலை-அறிவியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நுழைவுத்தேர்வின் அடிப்படையில் நடத்த குழு அறிக்கை பரிந்துரைத்ததாக செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அப்பரிந்துரையையை UGC தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது).

மார்ச் 26-ஆம் தேதி மத்திய பள்ளிக் கல்விக் குழு (CBSE Central Board of Secondary Education) தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 23,000 பள்ளிகளுக்கு “Lockdown-A Golden Opportunity for Education” என்று தலைப்பிட்டு அனுப்பியிருந்த சுற்றறிக்கையில் மாணவர்கள் கல்வி இணையதளங்களை (Online Education Platform) பயன்படுத்திக்கொண்டு தங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் ஆசிரியர்கள் இணையவழியில் பாடம் எடுப்பதற்கு தேவையான திறமைகளை வளர்த்துகொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசின் CBSE பள்ளிகளான கேந்திர வித்யாலயா பள்ளிகளில் பணிபுரியும் 35,000 ஆசிரியர்களுக்கு இணையவழியாக வகுப்பு நடத்துவது, பற்றிய பயிற்சி வகுப்புகளை நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. மத்திய அரசு மேற்கண்ட அறிவிப்புகளை கரோனா நெருக்கடி காலத்திற்கானதாக கூறிக்கொண்டாலும் அத்திட்டத்தின் நோக்கம் அதன் விளைவுகள் பெரும்பான்மை மக்களுக்கு மிகவும் தீங்கானதாகும்.

படிக்க:
என்னால் மூச்சுவிட முடியவில்லை ! அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !
♦ வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?

***

ந்தியா மட்டுமின்றி கொரோனா தனிமைப்படுத்தலின் காரணமாக வளர்ந்த நாடுகள் தொலைக்காட்சி, ரேடியோ, இணையம் போன்ற தளங்களின் வாயிலான கற்பித்தல் முறைக்கு மாறிவருகின்றன (இதற்கான கட்டமைப்பு வசதிகளை இந்நாடுகள் உருவாக்கியுள்ளது). அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா அரசு பல்கலைக்கழகம் (CSU) தன்னுடைய 23 கல்லூரிகளிலும் அடுத்த பருவத்தை (Fall Semester) இணைய வழியில் நடத்தபோவதாக அறிவித்துள்ளது. சீனா ஊரடங்கை அறித்த சில வாரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி வகுப்புகளை இணையதள முறையில் பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தது. சீனா கல்வி அமைச்சகமும் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து (அலிபாபா-DingTalk) இதனை செய்துள்ளது. ஆகான் மாகாணத்திலுள்ள பள்ளி மாணவர்களில் 81% பேர் (7,30,000 மாணவர்கள்) Tencet K-12 online school என்ற இணையதள வகுப்பின் வாயிலாக பயிற்றுவிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் ZOOM, Google class room செயலிகள் உதவியுடன் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. மத்திய அரசின் MOOCs’ ஆன SWAYAM இணையக் கல்வி தளத்தை பயன்படுத்துமாறு பல்கலைக்கழகங்களை UGC வலியுறுத்தியுள்ளது. மேலும் Coursera’, Edx, Udacity, Khan Academy, BYJU’S, Mindspark, Simple learn, Toppr போன்ற தனியார் இணையக் கல்வி தளங்களில் மாணவர்கள் அதிகமாக படிக்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு 700 கல்லூரிகள் இணையதள வாயிலாக பாடங்களை நடத்த Coursera உடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. இதம் மூலம் Coursera-ல் உள்ள 4,100 தலைப்புகளிலான பாடங்களை இக்கல்லூரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு BYJU’S-ன் இணையவழி கல்வியில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 200 மடங்கு அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. கரோனா ஊரடங்கு தனியார் இணையக் கல்வி தளங்களின் வளர்ச்சியை தீவிரப்படுத்தியுள்ளது.

உலகளவில் கல்வி தொழில்நுட்பச் (EduTech) சந்தையில் செய்யப்பட்டுள்ள முதலீடு 18.66 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது 2025-க்குள் 350 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவிலோ கல்விதொழில்நுட்பச் (EduTech) சந்தையின் மதிப்பு 2021-ல் 1.96 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என கூகுள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. கரோனா ஊரடங்கு இந்த மதிப்பீடுகளை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. குறிப்பாக பெங்களூரை அடிப்படையாகக் கொண்ட BYJU’S உலகிலேயே அதிக மதிப்புள்ள கல்வி தொழில்நுட்ப நிறுவனமாகும்.

2020 ஜனவரியில் இந்நிறுவனத்தின் மதிப்பு எட்டு பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இதில் Tiger global, Atlantic போன்ற நிதிநிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. 2019 ல் Coursera-வின் மதிப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணியக்கப்பட்டது. இந்த கல்வி இணையதளங்கள் Microsoft, Google, Facebook மற்றும் இணையதள சேவை வழங்குபவர்கள் ஆகியோரின் (Tech giants) நிதி மற்றும் தொழில்நுட்பக் கூட்டுடனே செயல்படுகிறது. பல private equity மற்றும் venture capital நிறுவனங்கள் இணையக் கல்வி சந்தையில் முதலீடு செய்துள்ளன.

இணையவழிக் கல்வியை மத்திய அரசு ஊக்குவிப்பதற்கு இரண்டு பிரதான நோக்கங்கள் இருப்பதாகத் தெரிகிறது.

  1. இணையவழி பட்டப்படிப்புகளை வழங்க அனுமதிப்பதன் மூலம் உயர்கல்வி நிறுவனங்கள் தங்களுக்கான நிதியை தாங்களே ஈட்டிக்கொள்ள செய்வது. NIRF தரப்பட்டியலில் முதல் 100 கல்லூரிகள் பட்டப்படிப்புகளை இணையவழியில் வழங்குவதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் பிப்ரவரி மாதம் செய்திருந்தார். முதல் 100 கல்லூரிகளில் 75 கல்லூரிகள் மத்திய மாநில அரசால் நடத்தப்படுகின்ற இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் (ஐ.ஐ.டி, என்.ஐ.டி, மத்திய பல்கலைக்கழகம், மாநில பல்கலைக்கழகம்). இக்கல்லூரிகள் தங்களுக்கான நிதியை உருவாக்கிகொள்ள வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே மோடி அரசு அழுத்தம் கொடுத்து வந்தது. அதையொட்டி கல்விக் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. தற்போது இக்கல்லூரிகளுக்கு இணையவழி படிப்புகளுக்கான ஒப்புதல் வழங்கியிருப்பதின் மூலம் இக்கல்லூரிகளுக்கு அரசு வழங்கி வந்த நிதியை (தேவையை விட குறைவு தான்) அரசு நிறுத்திவிடும். மேலும் இத்திட்டத்தினை இதர பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளுக்கு விரிவுப்படுத்தவும் செய்யும். (பல்கலைக்கழகங்கள் தொலைதூரக் கல்வியின் வருவாயைக் கொண்டே நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கின்றன. இணையவழி பட்டப்படிப்பு திட்டத்தின் மூலம் தொலைதூரக் கல்விமுறையை விட குறைந்த செலவில் அதிக வருவாய் பெறமுடியும்).
  2. உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கையை (GRE) 2030-க்குள் 50%-மாக உயர்த்துவது என மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது. (2019-ல் GRE 25%-மாக உள்ளது). தற்போதைய அளவைவிட (1.36 கோடி) கூடுதலாக 1.5 கோடி இளைஞர்களுக்கு உயர்கல்வி வழங்குவது. இதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், பேராசிரியர்கள் நியமனங்கள் என அதிக முதலீடுகளை மத்திய மாநில அரசுகள் ஒதுக்க வேண்டி வரும். இணைய வழி பட்டப்படிப்பு திட்டத்திற்கு முக்கியத்துவம் தருவதன் மூலம் நிதி ஒதுக்கீடு மற்றும் கல்வி வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்தே அரசு தன்னை படிப்படியாக விடுவித்துக் கொள்ளலாம். (தேசிய கல்விக் கொள்கையில் கல்லூரிகளின் எண்ணிக்கையை குறைப்பதையும் இணையவழியில் பட்டப்படிப்புகளை வழங்குவதற்கான பரிந்துரைகளையும் முன்வைத்திருந்தது)

கரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு இணையவழிக் கல்வி முறையை new normal (புதிய இயல்புநிலையாக்க) ஆக்க மோடி அரசு திட்டமிடுகிறது. தனியார் கல்வி முதலாளிகளோ குறைவான ஆசிரியர்களைக் கொண்டு கல்லூரிகளை இயக்கலாம், பராமரிப்பு செலவுகள் குறைவு, NIRF ranking பெறலாம் என்ற கனவுகளிலிருந்து இணையவழி கற்பித்தல் முறைக்கு ஆதரவாக உள்ளனர்.

MOOCs (Massive Online Open Courses) எனப்படும் இணையவழி கற்கும் முறையில் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்புகளை வழங்குகின்றன. இதற்காக அதிகக் கட்டணங்களை வசூலிக்கின்றன. உதாரணமாக ஜான் ஹோப்கின் பல்கலைக்கழகம் இணையவழி கணிப்பொறி பட்ட மேற்படிப்பிற்காக (Online degree – Master of computer science) 42,500 டாலர் (சுமார் 29,75,000 ரூபாய்) கட்டணமாகப் பெறுகிறது. USC’s பல்கலைக்கழகம் இணையவழி Master of Social work படிப்பிற்கு 107,484 டாலர் (சுமார் 75,23,880 ரூபாய்) கட்டணமாக பெறுகிறது. Coursera, Udacity நிறுவனங்கள் பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து இணையவழி பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. அப்படிப்புகளின் சந்தை தேவையை பொறுத்து அதற்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. (Machine learning, IoT படிப்புகளுக்கு கட்டணம் அதிகம்). வகுப்பறைகள் குறைவு, கல்லூரி பராமரிப்புக்கான செலவுகள் இல்லை, குறைவான ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என மிகக் குறைவான முதலீட்டில் மிக அதிக லாபத்தை அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் ஈட்டுகின்றன. பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி Coursera. Udacity, Biju’s போன்ற MOOCs தளங்கள், மென்பொருள்-இணைய சேவை நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களும் லாபத்தை பங்கிட்டுக் கொள்கின்றன. உதாரணமாக, அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்ற இணையவழி படிப்புகளுக்கான விளம்பரங்களினால் Google, Facebook நிறுவனங்கள் ஒரு பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இணையவழி கல்வி என்பது ஒரு பொன்முட்டையிடும் வாத்து. எனவே தான் கல்வித்துறையில் அடுத்தகட்ட வளர்ச்சி என்றும் ஊரடங்கு காலகட்டத்தில் சிறந்த தீர்வு என்றும் கல்வியாளர் என்ற போர்வையில் முதலாளித்துவ ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.

இணையவழி பட்டப் படிப்பிறக்கான மத்திய அரசின் அனுமதி, 25 சதவிகித படிப்புகளை online முறையில் வழங்குவதற்கான UGC-ன் வழிகாட்டுதல், GER-ஐ 50 சதவிகிதமாக உயர்த்துவது என்ற தேசிய கல்விக் கொள்கையின் இலக்கு ஆகியவை இந்திய கல்வி சந்தையானது குறிப்பாக உயர் கல்வியானது இணையவழி கற்பித்தல் முறையை (Online Education Mode) நோக்கி நகர்கிறது என்று கூறலாம். இணைய கல்வித் தளங்கள் – மென்பொருள் / தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என்ற ஒரு சிறு குழுவின் கட்டுப்பாட்டிற்குள் செல்லும். அச்சிறு குழுவே ஒட்டுமொத்த கல்வியையும் கட்டுப்படுத்துகின்ற பிரதான சக்தியாக இருக்கும். இவர்கள் தரமான கல்வி என்ற போர்வையில் தற்போது நடைமுறையில் உள்ள ஆசிரியர்-மாணவர்-பள்ளி கல்லூரி கட்டமைப்பை சிதைப்பதுடன் மொத்த கல்வியையுமே கட்டுப்படுத்துவதின் வாயிலாக தடையற்ற கொள்ளைக்கு முயற்சிக்கின்றனர். இதற்கு தோதாக இணையதளக் கல்வியின் வாயிலாக பட்டப்படிப்புகளை வழங்குவதற்கான திட்டத்தை தேசியக் கல்விக்கொள்கை பரிந்துரைத்திருந்தது. உடனே தேசிய தரப் பட்டியலில் (NIRF) முதல் 100 இடங்களில் உள்ள கல்லூரிகள் இணையதள வழி பட்டப்படிப்புகளை வழங்கலாம் என 2020 பட்ஜெட்டில் நியமைச்சர் அறிவித்தார். கூடவே உயர்கல்வியில் அந்நிய நேரடி முதலீடும் (FDI), Extra Commercial Borrowing (ECB)-யும் அனுமதிப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.

இணையவழி கல்வி முறைக்கு மாறுவது பற்றிய அதீத ஆசை ஆளும் வர்க்கத்திற்கு இருந்தாலும் அதனை அமல்படுத்துவதற்கு தேவையான இணைய தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இந்தியாவில் இன்னும் உருவாக்கவில்லை . கல்வி பற்றிய 2017-18 தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி (NSSO-75″ round on education) இந்திய குடும்பங்களில் 23.8% குடும்பங்களில் மட்டுமே இணையதள வசதியைக் கொண்டுள்ளது. (14.9% கிராமப்புற குடும்பங்கள் 42% நகர்புறக் குடும்பங்கள்), கணிப்பொறி, மடிக்கணினி (Desktop, laptop, Tap) போன்றவற்றை வைத்துள்ள குடும்பங்கள் வெறும் 11% மட்டுமே. முக்கியமாக 8% குடும்பங்கள் மட்டுமே கணிப்பொறி மற்றும் இணையதள வசதி இரண்டையும் பெற்றுள்ளன. இந்நிலையில் UGC மற்றும் CBSE-யின் வழிகாட்டுதல்களை எவ்வாறு அமல்படுத்துவது? இது மேட்டிக்குடி மக்களுக்கு மட்டுமே சத்தியம்.

உயர்கல்விக்கான திட்டங்களும் நிதி உதவிகளும் NIRF ranking/NAAC மதிப்பெண் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது. NIRF/NAAC/NBA-ன் மதிப்பீடுகளுக்குள் செல்லாத ஆயிரக்கணக்கான அரசு உயர்கல்வி நிறுவனங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்கிவருகின்றன. இக்கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளோ, ஆய்வகங்களோ கிடையாது. இக்கல்லூரிகளில் இணைய தொழில்நுட்ப வசதிகள் என்பது பெருங்கனவு. அரசுப் பள்ளிகளிலும் இதே நிலைதான் உள்ளது. இச்சூழலில் இணையவழி கல்வி முறையையானது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வகையில் சாத்தியம்?

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி மிகச்சிக்கலான கருதுகோள்களையும் மிக எளிமையாக மாணவர்களுக்கு விளக்கமுடியும். நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்க முடியும் என்பது உண்மைதான். ஆனால், அதற்கான நடவடிக்கைகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் செய்யாமல் இருக்கின்ற கல்வியமைப்பை சீர்குலைத்து அதனை தொழில்நுட்ப நிதி ஏகபோகங்களின் கைகளில் ஒப்படைப்பதின் ஆரம்பகட்ட நடவடிக்கையாக இந்த கரோனா ஊரடங்கு காலக்கட்டத்தை மோடி அரசு பயன்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கல்வியானது அனைவருக்குமானதாக ஒருபோதும் இருந்ததில்லை. ஒருவருடைய சாதிய-சமூக-பொருளாதார ஏற்றத்தாழவுகளுக்கு தகுந்தாற் போலவே கல்வி கிடைக்கும் வாய்ப்பும் இருந்து வந்துள்ளது. கடந்த இருபதாண்டுகால புதிய பொருளாதர கொள்கையோ கிடைத்துவந்த ஒருசில கல்விச் சலுகைகளுக்கும் தடைப்போட்டு கல்வியை சரக்காகவே மாற்றியுள்ளது. இந்நிலையில் இணையவழிக் கல்விமுறை என்பது ஏற்கனவே இருந்துவந்த ஏற்றத்தாழ்வுகளை இன்னும் ஆழமாக்குவதன் மூலம் பெரும்பான்மையான மக்களை கல்வியிலிருந்தே வெளியேற்றச் செய்யும்.

– மலரவன், சமூக அரசியல் ஆர்வலர்.

குறிப்பு :

1. MOOCs – Massive Open Online Courses

2. இந்தியாவில் மத்திய அரசின் MOOCs ஆன SWAYAM என்ற இணைய கல்வி தளம் உயர்கல்வி பாடங்களை (கலை, அறிவியல், பொறியியல், பொருளாதாரம், மருத்துவம்) தருகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், மருத்துவர்கள் என பணியில் உள்ளவர்கள் பலரும் SWAYAMல் தங்களுடைய துறை சார்ந்த பாடங்களை தேர்ந்தெடுத்து படித்துக்கொள்ளலாம். SWAYAM இணைய கல்வி தளத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு (System integrator) மைக்ரோசாப்ட்டிடம் மத்திய அரசால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி மைக்ரோசப்ட்டிடம் ஒப்படைத்தாக பேராசிரியர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

3. Courdera, Edax, Udacity, Khan Academy ஆகியவை அமெரிக்க நிறுவனங்கள். BYJU’S, Khan Academy, MindSpark போன்றவைகள் பள்ளி மாணவர்களுக்கானது.

disclaimer

என்னால் மூச்சுவிட முடியவில்லை ! அமெரிக்காவில் தொடரும் இனவெறிப் படுகொலைகள் !

2

மெரிக்காவின் மின்னெசொடா மாநிலத்தைச் சேர்ந்த மின்னியபொலிஸ் நகரில்,
கடந்த திங்கள் கிழமை (25.05.2020) கருப்பின வாலிபர் ஒருவரின் கழுத்தை அழுத்திக் கொன்றது போலீசு. அதனைத் தொடர்ந்து அந்நகரத்தில் நடைபெற்ற போராட்டங்களின் உச்சமாக கடந்த வியாழனன்று (28.05.2020) இரவு போலீசு நிலையம் தீவைத்து எரிக்கப்பட்டது.

அமெரிக்க சமூக வலைத்தளங்களில் கடந்த திங்கள்கிழமை ஒரு காணொளி மிகவும் வைரலாகப் பரவத் தொடங்கியது. அந்தக் காணொளியில் ஒரு கருப்பின வாலிபரைத் தரையில் படுக்க வைத்து அவரது கழுத்தில் போலீசு தனது முட்டியை வைத்து அழுத்துகிறது. அந்த வாலிபரோ, “ என்னால் மூச்சு விடமுடியவில்லை. குடிப்பதற்கு தயவு செய்து தண்ணீர் அல்லது ஏதேனும் தாருங்கள். எனது வயிறு, கழுத்து மற்றும் உடலெல்லாம் வலி எடுக்கிறது.” என்று அந்த கருப்பின வாலிபர் மூச்சுத் திணற பேசும் காட்சியும் பதிவாகியிருந்தது.

ஜார்ஜ் ஃபிளாய்ட்

இந்தக் காணொளி பார்ப்பவர்களை அதிர்ச்சியடையச் செய்தது. போலீசால் கழுத்து நெறிக்கப்பட்ட நபரின் பெயர் ஃபளாய்ட். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், போலீசின் இந்த இனவெறித் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார். அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருகின்றனர்.

ஃப்ளாய்டை பட்டப்பகலில் இனவெறிப் படுகொலை செய்த போலீசின் பெயர் சௌவின். சௌவின்-ஐயும் அவரது கூட்டாளிகளான 4 போலீசையும் கைது செய்யக் கோரி, மின்னாபோலிஸ் நகரின் வீதிகளில் கடந்த நான்கு நாட்களாக மக்கள் குவிந்து போராடத் துவங்கியுள்ளனர்.

அமெரிக்காவில் நடைபெறும் இனவெறிப் படுகொலைகள் நமது நாட்டில் அன்றாடம் நடைபெறும் சாதியப் படுகொலைகளுக்கு நிகரானவையே. மிகப்பெரும் அளவில் சமுக வலைத்தளங்களில் பேசப்படும் படுகொலைகள் வெகு சிலவாக இருக்கும் போது, சட்டப்பூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் அன்றாடம் நடத்தப்படும் படுகொலைகள் ஏராளம்.

கடந்த 2014-ம் ஆண்டு இதே போன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்தது. எரிக் கார்னர் என்பவரின் கழுத்தை நெறித்துக் கொன்றது நியூயார்க் போலீசு. “என்னால் மூச்சுவிட முடியவில்லை” என கார்னரும் அந்தப் போலீசிடம் கெஞ்சினார். ஈவிரக்கமற்ற முறையில் கார்னரைப் படுகொலை செய்தது நியூயார்க் போலீசு. ”கொல்லப்படும் போது எரிக் கார்னருக்கு இருந்த வயதுதான் தற்போது கொல்லப்பட்டிருக்கும் ஃப்ளாய்டுக்கும் இருக்கும். இது, எனது மகன் மறுபடியும் கொல்லப்பட்டதற்கு இணையானது” என்கிறார் எரிக் கார்னரின் தாய் க்வென் கர்.

46 வயதான ஃப்ளாய்டின் மரணத்திற்கு நீதி கேட்டு மக்கள் வீதியில் போராடத் தொடங்கிய பின்னர்தான் அமெரிக்க அரசியல்வாதிகள் வாயைத் திறக்க ஆரம்பித்தனர். அதுவும் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்களே தவிர, தவறு செய்த அதிகாரியைக் கைது செய்யக் கோரவில்லை.

ஃப்ளாய்டின் கழுத்தில் கால்முட்டியை வைத்து போலீசு அழுத்திக் கொண்டிருப்பது காணொளியில் மிகத் தெளிவாகத் தெரிகிறது. அதிகாரத் திமிரும், இனவெறியும் ஒருங்கே சேர்ந்த மிருகமாய் ஃப்ளாய்டின் கழுத்தை அழுத்தும் அந்த அதிகாரிக்கான தண்டனை பணி நீக்கம் மட்டும்தான். அவன் மீது கொலை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

இவையெல்லாம் மக்களின் ஆத்திரத்தை அதிகரித்தது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் நூற்றுக்கணக்கான மின்னியாபோலிஸ் மக்கள். “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்ற ஃப்ளாய்டின் வாசகத்தை அட்டைகளில் ஏந்தி வீதியில் இறங்கிப் போராடுகின்றனர்.

ஃப்ளாய்டைப் படுகொலை செய்த போலீசு அதிகாரி சௌவின், தனது 19 ஆண்டுகால போலீசுப் பணியில் இதற்கு முன்னர் மூன்று துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் என்பதோடு இவர் மீது இதுவரையில் 17 புகார்கள் எழுந்துள்ளன. இப்படிப்பட்ட குற்ற வரலாறு கொண்ட போலீசு அதிகாரிக் சௌவினின் வீட்டிற்கு ஆயுதமேந்திய போலீசு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

சௌவினின் மீது கொலைவழக்குப் பதிவு செய்யும்படி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில்., புதன் கிழமை இரவு சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போலீசு நிலையத்திற்கு முன்னர் நடந்த இந்தப் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த தடுப்பரண்களுடன் போலீசார் தயாராக இருந்தனர். கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து கண்ணீர்ப்புகை குண்டை வீசி கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். போராட்டக்காரர்களும் கற்களையும், தம் மீது விழுந்த கண்ணீர்ப்புகை குண்டுகளையும் போலீசு நிலையத்தின் மீது திருப்பி வீசித் தாக்கினர். புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் பல்வேறு கட்டிடங்களும் கடைகளும் சூறையாடப்பட்டன.

வியாழன் அன்று இரவு மக்களின் மீது ரப்பர் குண்டுகளை சுட்டு போராட்டத்தைக் கலைக்க முயற்சித்தது போலீசு. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மக்களும் திருப்பி அடித்தனர், ஒரு கட்டத்தில் மக்கள் ஆத்திரமடைந்து போலீசு நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டிடத்திற்கு தீவைத்துக் கொழுத்தினர். இதனால் பீதியுற்ற போலீசு, உடனடியாக போலீசு நிலையத்திலிருந்து வெளியேறி தப்பிச் சென்றது. அதன் பின்னர் போலீசு நிலையத்திற்கும் தீ வைத்தனர் மக்கள்.

ஃப்ளாய்ட் மரணம் குறித்து வாய் திறக்காத டிரம்ப், இந்த தீவைப்பு சம்பவத்திற்குப் பிறகு திருவாய் மலர்ந்துள்ளார். ”இந்த பொறுக்கிகள் ஜார்ஜ் ஃப்ளாய்டின் நினைவை அவம்ரியாதை செய்துள்ளனர். அவ்வாறு நடப்பதை நான் அனுமதிக்கமாட்டேன். அம்மாநில கவர்னர் டிம் வால்ஸ்-இடம் இராணுவம் அவருக்குத் துணையாக எப்போதும் இருக்கும் என்று கூறினேன். ஏதேனும் சிரமம் இருந்தால், நாங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்வோம். கொள்ளை துவங்கும்போது, துப்பாக்கிச் சூடு துவங்கும். நன்றி !” என்று தனது டிவிட்டரில் மிரட்டல் விட்டுள்ளார். வலதுசாரி ட்ரம்பிடம் இதை மட்டுமே எதிர்பார்க்க முடியும்.
https://twitter.com/realDonaldTrump/status/1266231100780744704
ஆறாண்டுகளுக்கு முன்னர், ”கருப்பினத்தவர்களின் உயிரும் முக்கியமானது” என்ற முழக்கத்தின் கீழ் அமெரிக்காவில் பெரும் போராட்டங்கள் நடக்கத் துவங்கின. கருப்பினத்தவருக்கும், வெள்ளையினத்தவர்களுக்குமான நீதியில் பாரபட்சம் கூடாது என்பதுதான் அவர்களது அதிகபட்சக் கோரிக்கையே. அவர்களது கோரிக்கைகளுக்கு இன்றுவரை செவிசாய்க்கப்படவில்லை. அமெரிக்காவில் இன்று நடக்கும் தீவைப்பு, சூறையாடல், கலவரம் ஆகியவற்றிற்கான காரணத்தை இப்போராட்டத்தில் காணப்பட்ட பதாகைகள் சுட்டிக்காட்டின.
“கலகம் என்பது செவிசாய்க்கப்படாதவர்களின் மொழி” – மார்ட்டின் லூதர் கிங்.

– நந்தன்
As heated protests over George Floyd’s death continue, Minnesota governor warns of ‘extremely dangerous situation’

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு – காரணம் என்ன ?

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு

கொரோனா தொற்று ஏற்கெனவே பெரும் உயிரிழப்புகளையும் பொருளாதார இழப்புகளையும் தொடர்ந்து ஏற்படுத்திவரும் நிலையில் locust swarm எனப்படும் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களின் விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்திவருவது அதிர்ச்சியளிக்கிறது.

வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை

இப்போது விளைநிலங்களை ஆக்கிரமித்திருக்கும் வெட்டுக்கிளிகள் நாம் சாதாரணமாக நம் பகுதிகளில் காணும் வெட்டுக்கிளிகளுக்கு நெருங்கிய உறவினர்கள். ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் வாழ்வுமுறை மிகவும் விசித்திரமானது.

பொதுவாகத் தனித்தனியாகக் (Solitary Phase) குறைந்த எண்ணிக்கையில் ஆங்காங்கு நிலத்தில் காணப்படும் இந்த வெட்டுக்கிளிகள் எப்போதும் ஆபத்தானவை அல்ல. வறட்சி ஏற்படும் காலகட்டங்களில் ஆங்காங்கே உதிரிகளாய் இருக்கும் இவை பசுமையான சிறிய நிலப்பரப்புகளுக்கு வந்து சேர்கின்றன. அவ்வாறு பல வெட்டுக்கிளிகள் ஒரே இடத்தில் நெருங்கி உணவுதேட நேரும்போது அவற்றின் நரம்புமண்டலம் தூண்டப்பட்டு செரட்டோனின் (serotonin) என்னும் வேதிப்பொருள் அதிக அளவில் அதன் உடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. அப்போதுதான் அவை ஆபத்தான அச்சுறுத்தும் உயிரினங்களாக மாற்றம் பெறுகின்றன.

வெட்டுக்கிளிகளின் அச்சுறுத்தும் படிநிலை

இந்த செரட்டோனின் உடலில் சுரந்த சில மணி நேரங்களில் அவற்றின் குணநலங்களில் பெரும் மாறுதல் ஏற்படுத்துகிறது. தனித்து வாழும் வெட்டுக்கிளிகள் அப்போதுதான் சமூகமாய் ஓத்துழைத்து வாழும் கூட்டு வாழ்வுக்குத் (Gregarious phase) தூண்டப்படுகின்றன. அவற்றின் உணவு உண்ணும் பழக்கம், நடத்தை, வேகம் என அத்தனையும் மாற்றமடைகின்றன. இந்நிலையில் சரியான ஈரப்பதமும் ஈரமண்ணும் வாய்க்கப்பெற்றால் அவற்றின் முட்டைகளிலிருந்து வெளிவரும் அடுத்த தலைமுறை வெட்டுக்கிளிகள் உருவ அமைப்பிலும் நிறத்திலும் ஏன் மூளை அளவிலும்கூட மாறுதல் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் முட்டைகள் பொரித்தபின் அவற்றின் வளரிளம் பருவத்தில் (Nymph) நடைபெறுகின்றது. பெற்றோரிடமிருந்து முற்றிலும் தோற்றத்திலும் நடத்தையிலும் வேறுபட்ட இந்தத் தலைமுறை பெரிய மூளை, குட்டையான கால்களுடன் அதிக தூரம் பயணிக்கும் தகவமைப்பைப் பெறுவதோடு பெரும் அழிவு சக்தியாக உருவெடுக்கின்றது.

படிக்க:
சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !
♦ சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !

பலநூறு முட்டைகளையிடும் ஒரு வெட்டுக்கிளி தன் வாழ்நாளில் மூன்று முறைகள் வரை முட்டையிடுகிறது. இவை இலைகளில் மட்டுமின்றி மண்ணிற்கு அடியிலும் முட்டையிடுகின்றன. பெரும் கூட்டமாக மிகக்குறைந்த கால அவகாசத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையில் பெருகும் இந்த வெட்டுக்கிளிகள் தம் கண்ணில் படும் பசுமை அத்தனையையும் அழித்து உண்டபடி பெரும்பசியுடன் கூட்டமாய் அடுத்தடுத்த பசுமை நிலங்களை நோக்கி நகர்கின்றன. இவற்றின் கண்ணில்படும் எந்தத் தாவரமும் தப்ப முடியாது. இவை ஒரு நாளைக்கு நூறு கிலோமீட்டர்களுக்கும் மேல்கூட பயணிக்க வல்லவை. தொடர்ந்து பசுமையை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும் இவை செங்கடலையே தரையிறங்காது தாண்டக் கூடியவை. சில ஆண்டுகள்கூட தொடர்ந்து அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டே தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கும் திறன் கொண்டவை. பாலைவன லோகஸ்ட் என்ற வெட்டுக்கிளி இரண்டரை மாதங்கள் முதல் ஐந்து மாதங்கள்வரை வாழக்கூடியது.

ஆச்சரியகரமாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் அவை தாமாகவே தமது முந்தைய solitary phase ஐ அடைந்து மீண்டும் ஆபத்தற்ற ஒன்றாக மாறிவிடுகின்றன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெட்டுக்கிளி இனங்களில் வெறும் 22 இனங்களே இந்த Locust swarm எனப்படும் அழிவு சக்தியாக மாற்றம் பெறும் திறனுள்ளவை.

உலகின் மொத்த நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதியை அழித்து பத்தில் ஒரு பங்கு உலக மக்கட்தொகையை பட்டினிக்குத் தள்ளும் அளவுக்கு அவை திறன் பெற்றவை என்று National Geographic இவற்றைப்பற்றி பெரும் கவலைதரும் தகவலைப் பதிவு செய்கிறது.

இந்த ஆபத்தை உலகம் எப்படிக் கையாளுகிறது?

அடுத்ததாக இந்த ஆபத்தை எப்படி உலகம் எதிர்கொள்கிறது என்று பார்க்கும்போது ஏறக்குறைய கொரோனா போன்ற கையறு நிலையே காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகளின் விரைவான இனப்பெருக்கம், தொடர்ந்த வலசை (migration), பெரும் பரவல் மற்றும் எண்ணிக்கையால் இவற்றைக் கட்டுப்படுத்துவது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. தற்போதைய சூழலில் வானிலிருந்து தெளிக்கப்படும் வேதிப் பூச்சிக்கொல்லிகளே உலகம் முழுதும் இதற்கு தீர்வாகக் கருதப்படுகிறது. இந்திய அரசும் மாலத்தியான் எனப்படும் பூச்சிகளின் நரம்பு மண்டலத்தைத் (!) தாக்கி அழிக்கும் நச்சை இந்த வெட்டுக்கிளிகளுக்கு எதிராகப் பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இது அதிகம் நீர்க்கப்பட்டுதான் (Ultra Low Volume) பயன்படுத்தப்பட வேண்டும் என்றாலும் இதன் நச்சுத்தன்மை விவசாயத்துக்கு நன்மை செய்யும் பூச்சிகளையும் சேர்த்தே அழிக்கும் என்பதோடு அதன் நச்சு எச்சம் நீரிலும் நிலத்திலும் கலக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த வெட்டுக்கிளிகள் விரைவில் தொடர்ந்து இடப்பெயற்சி அடைந்து விடுவதாலும் பல சதுரகிலோமீட்டர் தொலைவுகளுக்கு இலட்சக்கணக்கான எண்ணிக்கையில் காணப்படுவதாலும் இந்த பூச்சிக்கொல்லித் தெளிப்பு பெரிய அளவில் பயனளிப்பதில்லை. இந்நேரத்தில் இயற்கையிலேயே பூச்சிகளை கட்டுப்படுத்தும் பறவைகள் மற்றும் விலங்குகளை நாம் பெருமளவில் ஒழித்து விட்டதையும் வருத்தத்துடன் நினைவுகூர வேண்டியிருக்கிறது.

விழிப்புடன் இருக்கிறதா தமிழகம்?

ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்டு அரேபியாவைக் கடந்து ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பயணிக்கும் இந்த வெட்டுக்கிளிகள் சாதாரணமாக தம் வலசையை இராஜஸ்தானின் மேற்கு எல்லையோடு முடித்துவிடுவது வழக்கம். ஆனால் 27 ஆண்டுகளுக்குப்பிறகு இவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை நாம் நம்முடைய உணவுப் பாதுகாப்பின் மீதான பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இவை தமிழகத்துக்கு வராது என்று அரசு கூறினாலும் இவற்றின் இடப்பெயற்சியை சரியாக யாராலும் கணிக்கமுடியாது என்பதே அறிவியல் உண்மை. இவை தமிழகத்துக்கு வராது என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது என்று பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் சொல்வதைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. மேலும் இதுகுறித்த பேட்டி ஒன்றில் பேராசிரியர் அவர்கள் தமிழக அரசும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருக்கவேண்டும் என்று குறிப்பிடுவதோடு வேதிப் பூச்சிக்கொல்லிக்கு மாற்றாகச் சில பாதுகாப்பான மாற்றுகளையும் முன்வைக்கிறார்.

படிக்க:
தொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் !
♦ உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !

கொரோனா விஷயத்தில் முதலில் அரசு மெத்தனமாக இருந்துகொண்டு பின்னர் கைவிரித்தது போன்றில்லாது இப்போதே நம்மிடமிருக்கும் மக்களையும் மண்ணையும் நேசிக்கும் நிபுணர்களிடம் கலந்தாலோசித்து உரிய தயாரிப்புடன் இருப்பதே விவேகமானது. ஆபத்து நெருங்க வாய்ப்புகள் இருக்கும் நேரத்தில் எவ்வித தாமதமும் இன்றி சில சோதனை முயற்சிகளைச் செய்து முடித்துவிடுவதே விவேகமானது.

தொடரும் அச்சுறுத்தல்களும் காலநிலை மாற்றமும்

வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இவ்வுலகத்துக்குப் புதியதல்ல. இஸ்ரயேலர்களிடமிருந்த எகிப்தியர்களைக் காக்க எகிப்தியர்களின் நிலத்தின்மீது கடவுள் வெட்டுக்கிளிகளை ஏவியதான குறிப்புகள் பைபிளில் காணக் கிடக்கின்றன. அக்காலத்திலேயே வெட்டுக்கிளிகள் ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவே இருந்திருக்கின்றன. எனினும் இன்றைய அதிகரிக்கும் புவி வெப்பமும் காலநிலை மாற்றமும் இந்த அழிவு சக்திக்கு இன்னும் அதிக சாதகமாக இருப்பதை அறிவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆபத்தற்ற solitary phase இல் வாழும் வெட்டுக்கிளிகளை ஆபத்தான Gregarious phase க்கு மாற்றுவது அவற்றின் சுற்றுச்சூழலும் காலநிலையுமே. அதிகரிக்கும் கடல்களின் வெப்பநிலை அதிக ஈரப்பதத்தையும் அபூர்வமான புயல்களையும் கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தில் ஏற்படுத்தி இந்த வெட்டுக்கிளிகளின் Gregarious phase க்கு மேலும் மேலும் தூண்டக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

கொரோனா உட்பட உலகெங்கும் நடக்கும் விசித்திரமான தொடர் நிகழ்வுகள் நமக்குச் சுட்டிக்காட்டுவது ஒன்றே ஒன்றுதான். காலநிலை மாற்றம். உலக வெப்பமயமாதலின் விளைவுகளை நம் தலைமுறை ஏற்கெனவே சந்திக்கத் தொடங்கிவிட்டது. உலக வெப்பமயமாதல் பூச்சிகளின் பெருக்கத்திலும் நடத்தியிலும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அறிவியலாளர்கள் ஏற்கனெவே எச்சரித்திருக்கின்றார்கள்.

வரலாறு காணாத மழை, வரலாறு காணாத வெள்ளம், வரலாறு காணாத வெப்பம், வரலாறு காணாத வறட்சி, என புதிய புதிய மொழியில் இந்த பூமி மனிதனிடம் ஏதேதோ பேச முயல்கிறது. கூர்மதியுள்ள மனித சமூகமும் அதை ஆளும் வல்லரசுகளும் எப்போது பூவுலகின் குரலுக்குச் செவிசாய்க்கப் போகிறார்கள்?

– பூவுலகின் நண்பர்கள்

நன்றி : ஃபேஸ்புக்கில் Sundar Rajan 

disclaimer

கொரோனா தொற்று அபாயம் : தோழர் வரவர ராவை விடுதலை செய் !

கீழே தரப்பட்டுள்ளது தோழர் வரவர ராவின் உறவினரும் பத்திரிகையாளருமான வேணுகோபால் அவர்களின் முக நூல் வழியான கடிதம் ஆகும்.

தோழர் வரவர ராவ் தற்போது மாற்றப்பட்டுள்ள சிறையில் ஒரு சிறைவாசி கொரானா தொற்று உயிரிழந்திருப்பது நமக்கு மிகவும் கவலை அளிக்கிறது.

80 வயதிற்கு மேல் ஆகிவிட்ட, பல்வேறு தீவிர உடல்நல சிக்கல்கள் கொண்ட தோழர் வரவர ராவை குறைந்தபட்சம் பரோலில் கூட விட மறுக்கும் காவல்துறையின் மனிதாபிமானமற்ற செயலை அனைத்து ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும்.

இது மறைமுகமாக அவரை படுகொலை செய்வதற்கு ஒப்பானதாகும்.

மேலும் பல்வேறு சிறைகளில் உள்ள எண்ணற்ற அரசியல் கைதிகள் யு.ஏ.பி.ஏ போன்ற கொடும் சட்டங்களின் காரணமாக பிணை கிடைக்காமல் இதே அபாயத்தை எதிர் கொள்கின்றனர்.

வரவர ராவின் நிலை இதற்கு ஒரு உச்சகட்டமான எடுத்துக்காட்டாகும். எனவே தோழர் வரவர ராவ்,தோழர் சாய்பாபா மற்றும் இதர அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.

***

நன்றி…

கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில், வரவர ராவின் உடல்நிலை தொடர்பாக, அவருடன் தொடர்பு கொள்ள முடியாத மோசமான சூழ்நிலையை பகிர்ந்து கொண்டதிலிருந்து, ஆதரவும் அக்கறையும் கொண்ட பல விசாரிப்புகளும் எதிர்வினைகளும் வந்த வண்ணமுள்ளன..

நூற்றுக்கணக்கான நண்பர்கள் எங்களை அலைபேசியில் அழைத்தனர், அவர்கள் வரவர ராவின் குடும்பத்திற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அவர்கள் சிறை அதிகாரிகளை தாமே அழைத்துப் பேசினர், மகாராஷ்டிரா அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் தொடர்பு கொள்ள முயன்றனர். பத்திரிகை அறிக்கைகளை வெளியிட்டனர்.

சமூக ஊடகங்களில் தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர்… அவர்கள் தமது கவலை, கோபம், அக்கறை, ஆதரவு ஆகியவற்றை சாத்தியமான அனைத்து வழிகளிலும் வெளிப்படுத்தினர்.

தெலுங்கானாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் (சிபிஐ, சிபிஎம், டி.ஜே.எஸ், சிபிஐ எம்.எல்., விப்லவ ராச்சாய்தலா சங்கம், பூரா ஸ்பந்தனா வேதிகா (வாரங்கல்), தெலுங்கானா வித்யவந்துலா வேதிகா மற்றும் பல அமைப்புகள்) அவரை விடுவிக்கக் கோரி அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

வரவர ராவின் மகள்களின் முறையீட்டை தி இந்து, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆந்திர ஜோதி ஆகிய இதழ்கள் வெளியிட்டுள்ளன.

சிறை அதிகாரிகளும் மாநில அரசு அதிகாரிகளும் “வரவர ராவ் நலமாக உள்ளார்” என்று கூறுவதாக நண்பர்கள் மூலம் நாங்கள் அறிந்தோம். இதன் அர்த்தம் என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை என்றாலும், வி.வி “நலமாக இருப்பார்” என்று நம்புகிறோம்.

எப்படியிருந்தாலும், நாளை அவரது ஜாமீன் மனு மீதான நீதிமன்ற விசாரணை வருகிறது. அப்போது சிறை அதிகாரிகள் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

கடந்த மூன்ற வாய்தாக்களிலும் நீதிமன்றம் இந்த அறிக்கை குறித்து அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

படிக்க:
<சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !
♦ <செயல்பாட்டாளர்கள் ஆனந்த் தெல்தும்டே – கௌதம் நவ்லகா மீதான அடக்குமுறையைக் கைவிடு !

ஆனால் துறை அதிகாரிகள் அதை கண்டு கொள்ளவில்லை. குறைந்தபட்சம் நாளைய வாய்தாவிலாவது அவர்கள் வரவர ராவின் உடல்நிலை குறித்த சமீபத்திய அறிக்கையை தாக்கல் செய்வார்கள் என்றும், உண்மையான நிலையை எங்களுக்குத் தெரிவிப்பார்கள் என்றும் நம்புகிறோம்.

அதுவரை நாங்கள் பதட்டத்துடன் தான் இருக்க வேண்டியுள்ளது.

இருப்பினும், , குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சார்பாக, இதயத்தின் ஆழத்திலிருந்து, தங்களால் இயன்றதைச் செய்ய முயன்ற ஒவ்வொருவருக்கும் நன்றி கூறுகிறோம்…

நன்றி : ஃபேஸ்புக்கில்Venugopal

disclaimer

சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் கட்டணம் ரூ. 60,000 !

நேற்று மதியம் தொலைபேசியில் எனக்கு நெருக்கமான இளம் பெண்ணின் தந்தை, அவளுக்கு ஒரு வாரக் காய்ச்சலுக்குப் பின் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகச் சொன்னார். மேலும் வடபழனி அருகிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு நாளொன்றுக்கு 60,000 ஆகும் என்று சொன்னார்கள் எனவும் கூறினார்.

நான் நம்பும் சென்னை அரசு பொதுமருத்துவ மனைக்கு (RGGH) அவளை அழைத்துச் செல்லுமாறு பரிந்துரைத்தேன்.

rajiv_gandhi_GHஇரவு அவள் எப்படி இருக்கிறாள் என்று கேட்க தொடர்பு கொண்டால் அவளே தொலைபேசியில் –

மதியம் அரசு பொது மருத்துவமனை சென்றால், இரண்டு மணி நேரக் காத்திருப்புக்குப் பின், இது எங்கள் zoneல் வராது, kmc போகச் சொன்னார்கள்,
அங்கே ஒரு மணி நேரம் கழித்து இப்போது காய்ச்சல் இல்லை, வீட்டுக்குப் போகலாம், நாளை மாநகராட்சியிலிருந்து வந்து ஏதாவது quarantine கூட்டிப் போவார்கள் என்றார்கள்.

அருகில் உள்ள வேறொரு மருத்துவமனையில் ஒரு நாள் கட்டணம் 15,000 என்று சொன்னதால் அங்கே சேர முடிவு செய்ததாகச் சொன்னாள்.

பரிசோதனையில் தொற்று என்றால் வீட்டில் இருந்து மற்றவர்க்கும் தொற்று வரலாம், மருத்துவமனைக்குப் போ என்று நான் தான் சொன்னேன். அவள் அப்படி அநாயாசமாகச் செலவழிக்கக் கூடிய பணக்கார வர்க்கத்தைச் சார்ந்தவளும் அல்ல.

இப்படி எத்தனை பேர் இருக்கிறார்களோ.. இனி யாராவது என்னிடம் தொற்று இருக்கிறது என்ன செய்யலாம் என்று கேட்டால் எங்கே அனுப்புவது என்று தெரியவில்லை.

அதே போல் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்க என்ன மண்டலக் கட்டுப்பாடு என்பதும் புரியவில்லை.

குறிப்பு : எந்த மண்டலத்துக்கு எந்த மருத்துவமனை போக வேண்டும் என்று மாநகராட்சி / சுகாதாரத்துறை மக்களிடம் சொல்வது இப்போது அவசரம், அவசியம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் ருத்ரன் மனநல மருத்துவர்.,

சுற்றுச் சூழலை அழிக்க வரும் “சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020” !

0

ந்தியாவில் பெருநிறுவனங்களும், ஆலைகளும், சுரங்கங்களும் பின்பற்ற வேண்டிய சுற்றுச் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மதிப்பீடு செய்து கட்டுப்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா -2006- ஐ ரத்து செய்துவிட்டு, அதனை கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான வகையில் திருத்தி சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020 என்ற பெயரில் ஒரு சட்ட வரைவை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ஆலைகள், சுரங்கங்கள் மற்றும் பல்வேறு கட்டுமானங்களால் உண்டாகும் சுற்றுச் சூழல் பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான விதிமுறைகளை உள்ளடக்கி கொண்டுவரப்பட்டதுதான் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2006. இந்த மசோதாவில் உள்ள பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை நீக்கிவிட்டு இந்த புதிய மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.

தொழில் செய்வதை எளிமையாக்குவது மற்றும் நிறுவனங்கள், ஆலைகள், சுரங்கங்களின் விரிவாக்கத்தை எளிமைப்படுத்தும் விதமாகவும் இந்த புதிய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020 கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

குஜராத், கர்நாடகா, சட்டீஸ்கர், ஒடீசா ஆகிய மாநிலங்களில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மீறப்படுவதால் பாதிக்கப்பட்ட சமூகத்தினர் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் கொள்கை ஆய்வுக்கான மையமும் நமதி சுற்றுச்சூழல் நீதித் திட்டத்தைச் சேர்ந்த நிபுணர் குழுவும், தற்போதைய சு.பா.ம. மசோதா – 2020 (சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா 2020) – வரைவில் உள்ள பல்வேறு குளறுபடிகளை எதிர்த்துக் குரல் எழுப்பியிருக்கிறது.

இந்த வரைவில், சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் ஆலைகள், நிறுவனங்கள், சுரங்கங்களுக்கான மூன்றாம் தரப்புக் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தெளிவாக கொடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகின்றனர்.
“தேசிய முக்கியத்துவம் கொண்ட அரசு நிறுவனங்கள் மூன்றாம் தரப்பு கண்காணிப்பில் ஈடுபடலாம் என்று இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டுக்கான மத்திய கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில், சுமார் 201 திட்டங்களைக் கண்காணிப்பதில் மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள சுணக்கங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்களின் நம்பகத்தன்மை பல சமயங்களில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.” என்கிறார் கொள்கை ஆய்வுக்கான மையத்தைச் சேர்ந்த மஞ்சு மேனன்.

படிக்க:
குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
♦ உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !

இந்த புதிய வரைவில் மூன்றாம் தரப்பு கண்காணிப்பு நிறுவனங்கள் குறித்த தெளிவான விளக்கம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும், ஏற்கெனவே மூன்றாம் தரப்பு கண்காணிப்பில் பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் போன சுமார் 235 திட்டங்களில், சுற்றுச்சூழல் விதிமீறல்கள் நடந்துள்ளன. இதனால் சுமார் 3 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுற்றுச் சூழலிய வழக்கறிஞர் மணீஷ் ஜேஸ்வானி இது குறித்துக் கூறுகையில், ”தற்போது முன் மொழியப்படும் வரைவு அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமானால், இந்த நாட்டின் சுற்றுச் சூழலுக்கு, மிகப்பெரும் சூழலியல் பேரழிவைக் கொண்டுவரும். காட்டுவாழ் விலங்குகள், காடுகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய அனைத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.” என்கிறார்.

சுற்றுச்சூழலியல் நடைமுறையில், பொதுமக்கள் கருத்துக் கேட்பு, ஆலோசனை ஆகியவை அனைத்தும் அதன் ஒருங்கிணைந்த பாகமாகும். இது பகுதி மக்களுக்கும், பங்குதாரர்களுக்கும் அத்திட்டத்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து தங்களது அக்கறையைக் காட்டவும், குரலை எழுப்பவும் உரிமை வழங்குகிறது. சட்டத்தில் இந்த வழிமுறைகள் இருக்கும்போதே கார்ப்பரேட் நிறுவனஙக்ள் அதனை மீறிச் செயல்படுகின்றன. இந்த புதிய வரைவு பல்வேறு திட்டங்களுக்கு இத்தகைய ஒப்புதல் எதையும் நிறுவனங்கள் பெறத் தேவையில்லை என்று கூறுகிறது.

பாசனத் திட்டங்கள், கட்டிடங்கள், கட்டுமானங்கள் மற்றும் பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை நவீனப்படுத்துதல், உள்நாட்டு நீர்ப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் அகலப்படுத்துதல், தேசியப் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள், மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ”சிறப்பம்ச திட்டங்கள்”, எல்லைப் பகுதிகளில் குழாய் பதிப்பு, 12 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடல்சார் திட்டங்கள் ஆகியவற்றிற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பிலிருந்து விலக்கு வழங்குகிறது இந்த மசோதா.

”சிறப்பம்ச திட்டங்கள்” என்ற பதம் புதியதாக இந்தமுறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவான இந்தப் பதத்தைப் பயன்படுத்தி, எந்த ஒரு திட்டத்தையும் இந்த வகையினத்திற்குள் கொண்டுவந்து பொதுமக்கள் கருத்துக் கேட்பில் இருந்து மத்திய அரசு நினைத்தால் விலக்கு அளிக்க முடியும்.

அதே போல மொத்தத்தில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கான கால அவகாசத்தை 30 நாட்களிலிருந்து வெறும் 20 நாட்களாக சுருக்கி விட்டது அரசு. இந்த 20 நாட்களில் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கொண்டு வரப்படும் புதிய திட்டத்தைப் புரிந்து கொண்டு, அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பரிசீலித்து தங்களது கருத்துக்களைப் பதிவு செய்வது சாத்தியமற்றது. கருத்துக் கேட்கக் கூடாது. ஒரு வேளை கேட்டாலும் அது பெயரளவிற்கு இருக்க வேண்டும் என்பதே மோடி அரசின் நோக்கமாக உள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சு.பா.ம.மசோதாவில், திட்டங்களை செயல்முறைப்படுத்துவோர் 6 மாதத்திற்கு ஒருமுறை, சுற்றுச் சூழல் விதிமுறையை ஒழுகுவதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இந்த புதிய 2020-ம் ஆண்டு மசோதா, அதனை ஓராண்டிற்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதும் எனகுறிப்பிடுகிறது.

மேலும் கடந்த காலங்களில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் பல்வேறு உத்தரவுகளை மறுதலிக்கும் வகையில் பல்வேறு பிரிவுகள் இந்த சட்ட வரைவில் உள்ளன. மொத்தத்தில் இந்த புதிய சுற்றுச் சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா – 2020, கார்ப்ப்பரேட் நிறுவனங்களின் பகாசுரக் கொள்ளைக்குத் துணை நிற்கும் வகையிலும், சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படப் போகும் பாதிப்பு, திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அந்தப் பகுதி மக்களோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை.

உலகளாவிய சூழலியல் மாற்றங்கள் ஏற்படுத்தும் அதீத மழை, அதீத வறட்சியால் பாதிக்கப்படப் போவது நாமும்தான் என்பதை நினைவில் கொள்வோம். !


நந்தன்
நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா. 

தொழிலாளிகளுக்கு நெருங்கிக் கொண்டிருக்கிறது இருண்ட காலம் !

கொரோனா ஊரடங்கு காலத்தில், முதலாளிகள் தமது தொழிலாளிகளுக்கு முழுமையாக சம்பளம் கொடுக்க வேண்டுமென உத்தரவிட்டது மத்திய அரசு. உடனே, “தொழிலாளிகள் எந்தவொரு வேலையும் செய்யாதபோது, சம்பளம் கொடுக்காமல் இருக்க ஒரு முதலாளிக்கு உரிமை உண்டு” என்று முதலாளின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றது உச்ச நீதிமன்றம். மத்திய அரசோ, நீதிமன்றத்துக்குச் சென்று பதில் அளிக்கும் வரைகூட காத்திராமல், தான் போட்ட உத்தரவை உடனடியாக வாபஸ் வாங்கியது.

கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு நிவாரணமாக அமைந்திருக்கும் இந்த உதவியை அரசு திரும்பப் பறித்துக் கொண்டது என்பது தற்செயலானதல்ல, அரசு தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு உத்தரவைப் போட்டதுதான் தற்செயலானதாக உள்ளது.

கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை இத்தனை ஆண்டுகாலம் குறைந்த கூலி கொடுத்து சுரண்டிக் கொழுத்த முதலாளிகளும், கமிசன் வாங்கிய ஒப்பந்தக்காரர்களும் கைவிட்ட நிலையில், அரசின் நிவாரணமோ உணவோ கிடைக்காதததால், உயிரைப் பணயம் வைத்து வேகாத வெயிலில் சொந்த கிராமங்களை நோக்கி நடந்து கொண்டிருக்கிறார்கள் தொழிலாளார்கள்.

காலில் செருப்பில்லாமல் நடப்போர், கைக்குழந்தையுடன் செல்வோர், கால் ஒடிந்த மனைவியைத் தோளில் சுமக்கும் கணவன், வெயில்கொடுமைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பாதிவழியில் செத்துமடியும் குழந்தைகள் – தொழிலாளிகள் எனக் காண்போரைக் கண்ணீர்விடச் செய்கின்றன புலம்பெயர்த் தொழிலாளரின் துயரங்கள்.

வருடக்கணக்கில் அடிமாட்டுக் கூலி கொடுத்து 12, 14 மணி நேரம் வேலைவாங்கிய முதலாளிகளுக்கு ஈவிரக்கம் இல்லாமல் போனது ஏன்? தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும் போதும், கோடிக்கணக்கான மக்களைப் பட்டினி போடுகிறதே அரசு, இது நியாயமா? உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் இப்படி நடக்கலாமா? என்றெல்லாம் பலரும் கேள்விகளை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
அந்நிய நேரடி முதலீடு சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்கிறதா ? – ஒரு வேடிக்கைப் பேச்சு
♦ மறுகாலனியாக்கமும் சுயசார்பு பொருளாதார மாயமும் !

ஆனால், எதார்த்தம் வேறுமாதிரியாக உள்ளது. ஊரடங்கு காலத்தில் சம்பளம் கொடுக்காமல் தொழிலாளிகளை விரட்டியிருப்பது மட்டுமல்ல, ஊரடங்கிற்கு பிறகு வேலைக்கு வரும் தொழிலாளி வர்க்கத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்றல்லவா இந்த அரசு அறிவிக்கிறது.

ஆம், இனி இந்த ‘ஜனநாயக’ நாட்டின் பல மாநிலங்களிலும் தொழிலாளிகள் 8 மணிநேர வேலையையோ, தமது உழைப்புக்கேற்ற ஊதியத்தையோ கேட்க முடியாது. தமது உரிமை கேட்டுப் போராட சங்கம் வைக்க முடியாது. குடிநீர், உணவு, கழிவறை, காற்றோட்டமான சூழல், பாதுகாப்பான வேலைநிலைமை என எந்தவித அடிப்படைத் தேவைகளையும் கேட்க முடியாது. முதலாளிகளின் பொருளாதார வளர்ச்சிக்காக, தொழிலாளி வர்க்கத்தை வலுக்கட்டாயமாக ‘தியாகம்’ செய்ய வைத்திருக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

இதையெல்லாம் மீறி, 8 மணி நேரத்துக்கு மேல் உழைக்க மறுத்தாலோ, உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டாலோ, முதலாளியின் அனுமதியின்றி சிறுநீர் கழிக்கச் சென்றாலோ அவை தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படும். இதற்காக, வேலைநீக்கம் என்ற பழைய பாணியில் முதலாளிகள் நடந்து கொள்வார்கள் என்று நாம் கருதக் கூடாது; உரிமை கேட்ட தொழிலாளியைக் கட்டிவைத்து அடிப்பது அல்லது போலீசை வைத்து தாக்குவது, சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறைகளைத்தான் இனி எதிர்பார்க்க நேரிடும்.

இந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சியோ, வேலையில் இருந்து துரத்தப்பட்டோ வெளியேறுபவர்கள், வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை பெருகினால் என்ன நடக்கும். நாடு முழுவதும் கொள்ளையும், கொலையும் பெருகி சமூகமே சீரழியும். பிச்சைக்காரர்கள், நாடோடிகள் கூட்டம் அலைமோதும். ஆனால், அரசு இவர்களை எல்லாம் குற்றவாளிகள் என அறிவித்து கொடூர அடக்குமுறைகளை ஏவும். இது உங்களுக்கு மிகையான கற்பனை போலத் தோன்றலாம், ஊரடங்கின் போது வெளியே வந்தவர்களையே கொடிய குற்றவாளிகள் போல போலீசு தாக்கியதையும் சொந்த ஊருக்குத் திரும்ப விரும்பும் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்துவதும், அவர்களை சிறையில் அடைப்பதையும் நாம் இன்றைக்கு அன்றாட செய்திகளாகப் பார்த்து வருகிறோம் அல்லவா? இதில் இருந்தே, எதிர்காலம் எப்படி இருக்குமென ஊகிக்க முடியும்.

***

ப்படியெல்லாம் நடக்குமா, முதலாளிகளும் ஆட்சியாளர்களும் அவ்வளவு கொடூரமானவர்களா என அப்பாவித்தனமாக நம்மில் பலர் கேட்கலாம். உங்களது இந்தக் கேள்விக்கு வரலாறு விடை தருகிறது.

இந்த முதலாளிகள் தாம் உருவான காலந்தொட்டே தொழிலாளி வர்க்கத்தை அடிமை நிலைக்குத் தாழ்த்தி அவர்களின் உழைப்போடு சேர்த்து இரத்தத்தையும் உயிரையும் குடித்து வளர்ந்தவர்கள்தான் என்பதை தனது “மூலதனம்” என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் பேராசான் காரல்மார்க்ஸ்.

முதலாளி வர்க்கமானது அரசு அதிகாரத்தின் துணையோடு, விவசாய நிலவுடைமை வர்க்கத்தினரை உடைமையிழக்கச் செய்து ஏதுமற்றவர்களாக மாற்றியது குறித்தும், கொடிய சுரண்டல் மிகுந்த உழைப்புக்கு அவர்களைப் பழக்கப்படுத்த அரசுகள் போட்ட கொடூர சட்டங்கள் – தண்டனை முறைகள் குறித்தும் தனது மூலதனம் நூலில் விளக்கியிருக்கிறார்.

தொழிற்புரட்சி ஏற்பட்ட நவீன தேசங்கள் எனப் புகழப்படும் இங்கிலாந்திலும், பிரான்சிலும் பாட்டாளி வர்க்கமானது இரத்தச்சகதியில் தோய்த்தெடுத்து உருவாக்கப்பட்டது. இதைத் தமது மூலதனம் நூலின் முதல்பாகத்தில், “உடைமை பறிக்கப்பட்டோருக்கு எதிரான கொலைகாரச் சட்டங்கள்” என்ற தலைப்பிலான 28-வது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார் மார்க்ஸ்.

“… முதலில் விவசாயக் குடிகளின் நிலவுடைமையை வலுவந்தமாகப் பறித்து, அவர்களை வீடுவாசல்களில் இருந்து விரட்டியடித்து, வேலையற்ற ஊர்சுற்றிகளாய் மாற்றி, பின்னர் கசையால் அடித்து, சூட்டுக் குறியிட்டு, அகோரமான பயங்கரச் சட்டங்களால் வதைத்து கூலியுழைப்பு முறைக்கு வேண்டிய கட்டுப்பாட்டுக்குப் பணிய வைத்தார்கள்.” என்கிறார் மார்க்ஸ்.

1530-ஆம் ஆண்டு முதலே உழைப்பாளிகளுக்கு எதிரான கொடிய சட்டங்கள் இங்கிலாந்தில் போடப்பட்டு வந்தன. அதில் ஒருவகை மாதிரிதான், எலிசபெத் இராணியின் ஆட்சியில் 1572-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டம்:

“14 வயதுக்கு மேற்பட்டவர்கள் உரிமம் இல்லாமல் பிச்சையெடுத்தால், யாரும் அவர்களை ஈராண்டு காலத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் அவர்களுக்கு கடும் கசையடி தந்து, இடது காதில் சூட்டுக்குறி பொறிக்க வேண்டும். மீண்டும் குற்றம் புரிந்தால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களானால், யாரும் அவர்களை ஈராண்டு காலத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளாதபட்சத்தில் மரண தண்டனை கிடைக்கும். மூன்றாவது முறை குற்றம் புரிந்தால், கடுங்குற்றவாளிகளாகக் கருதி கருணை காட்டாமல் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும்.”

கிராமத்தில் விவசாயக் குடிகளாக இருந்தவர்களை, சொந்த நிலங்களில் இருந்து விரட்டியதோடு அல்லாமல், நகரங்களில் அவர்களுக்கு வேலையும் கொடுக்காமல், வேலையற்றவர்கள் – ஊர்சுற்றிகள் என்று முத்திரை குத்துவது எவ்வளவு கொடூரமானது. தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்து கொண்டிருக்கும் புலம்பெயர்த் தொழிலாளர்களின் எதிர்காலம் இப்படித்தானே இருக்கப் போகிறது.

தொழிலாளி வர்க்கத்தை நாள் முழுக்கக் கசக்கிப் பிழிந்த பின்னரும் முதலாளிகளின் இலாபவெறி அடங்கவில்லை. அதே சமயத்தில், கடுமையான சுரண்டலுக்கு ஆளாகும் தொழிலாளி வர்க்கத்தைக் கண்டு அவர்கள் அஞ்சவும் செய்தார்கள். தனது உழைப்புக்கேற்ற்ற கூலி கேட்பதே, மிகப்பெரிய குற்றம்; தாம் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாய்திறவாது உழைக்க வேண்டுமென முதலாளிகள் கருதினார்கள். இதைச் சட்டமாகவும் ஆக்கிக் கொண்டார்கள்.

படிக்க:
காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?
♦ வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்

இங்கிலாந்தில் மூன்றாம் எட்வர்டு மன்னனின் ஆட்சியில் 1349 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தொழிலாளர் சட்டத்தில்,

“நகரத்துக்கும் கிராமத்துக்கும், பலன்வீத வேலைக்கும் நாள்வீத வேலைக்கும் கூலி விகிதம் சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டது. விவசாயத் தொழிலாளர்கள் ஆண்டுக்கு இவ்வளவு கூலி என்ற அடிப்படையில் வேலைசெய்ய வேண்டும்; நகரத் தொழிலாளர்கள் “பகிரங்கச் சந்தை” நிலவரப்படி கூலிக்கு வேலைசெய்ய வேண்டும். சட்டத்தால் நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் உயர்ந்த கூலி கொடுப்பது தடை செய்யப்பட்டது; தடையை மீறினால் சிறை தண்டனை கிடைக்கும். ஆனால், உயர்ந்த கூலி கொடுப்பதற்குரிய தண்டனையைவிட பெறுவதற்குரிய தண்டனை கடுமையானதாக இருந்தது. [இவ்வாறே எலிசபெத்தின் பழகு தொழிலாளர் சட்டத்தின் பிரிவுகள் 18,19 இல், உயர்ந்த கூலி கொடுத்தால் 10 நாள் சிறைத் தண்டனையும், பெற்றால் 21 நாள் சிறைத் தண்டனையும் விதிக்க ஆணையிடப்படுகிறது]” என்று உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்பதையே மாபெரும் குற்றமாகக் காட்டப்பட்டிருக்கிறது.

தொழிலாளிக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கலாம் என்று வரம்பிடுவதில், அரசு எவ்வளவு அயோக்கியத்தனமாக, முதலாளி வர்க்க ஆதரவாக நடந்து கொண்டது என்பதை,

“அரசானது கூலிக்குத் திட்டவட்டமான உச்சவரம்பு விதிக்கிறதே தவிர, எவ்விதத்திலும் அடிவரம்பு நிர்ணயிக்கவில்லை.” என்று அம்பலப்படுத்துகிறார் மார்க்ஸ்.

அடுத்தடுத்து வந்த நூற்றாண்டுகளில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை மென்மேலும் மோசமடைந்து விட்டதைப் பின்வரும் வரிகளில் மார்க்ஸ் விளக்குகிறார்.

“16-ஆம் நூற்றாண்டில் தொழிலாளர்களின் நிலைமை இன்னும் படுமோசமாகி விட்டதென்பது தெரிந்ததே. பணக் கூலி உயர்ந்தது; ஆனால் பணத்தின் மதிப்பிறக்கத்துக்கும், அதையொட்டி சரக்குகளின் விலைகளில் நேரிட்ட உயர்வுக்கும் ஏற்ற விகிதத்தில் உயரவில்லை. எனவே உண்மைக் கூலி குறைந்தது. ஆனால், கூலி உயர்ந்து விடாமல் தடுப்பதற்கான சட்டங்கள் அமலில் இருந்தன;”

கூலியைத் தொடர்ந்து குறைத்துக்கொண்டே வந்ததோடு மட்டுமல்லாமல், இந்த அடிமாட்டுக் கூலிக்கு உழைக்க மறுத்த தொழிலாளர்களைக் கொடுமையான முறையில் ஆட்சியாளர்கள் தண்டிக்கவும் செய்திருக்கிறார்கள். “யாரும் வேலைக்கு எடுத்துக் கொள்ள விரும்பாத ஆட்களை” காதறுப்பதும், சூட்டுக் குறியிடுவதும் நூற்றாண்டுகள் கடந்தும் தொடர்ந்து நீடித்தன.

கூலி கேட்பவர்களையும், குறைவான கூலிக்கு உழைக்க மறுப்பவர்களையும் தண்டித்த முதலாளிகள், தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளர்கள் சங்கமாக ஒன்றுசேர்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. 200 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியொரு சட்டத்தைப் போட்டதன் மூலம், இப்போதைய மோடிக்கும் ஆதித்யநாத்துக்கும் முன்னோடிகளாக இருந்திருக்கிறார்கள் பிரெஞ்சு ஆட்சியாளர்கள்.

“பிரெஞ்சு முதலாளிகள், 1791 – ஜூன் 14 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை மூலம், தொழிலாளர்கள் சங்கங்கள் யாவும், “சுதந்திரத்திற்கும் மனித உரிமைகள் பிரகடனத்திற்கும் எதிரான முயற்சி” என்று அறிவித்தார்கள்; இந்தக் குற்றத்தைச் செய்தால் அதற்குத் தண்டனையாக 500 லீவர் அபராதம் விதிக்கப்படும்; செயல்படும் குடிமகனுக்குரிய உரிமைகளையும் ஓராண்டு காலத்துக்கு இழக்க நேரிடும்.” என்று அறிவித்தார்கள்.

அன்று முதல் இன்று வரை தொழிலாளி வர்க்கம் அமைப்பாக, சங்கமாக சேர்வதை, உரிமைகள் கேட்பதையே வெறுத்து வருகிறார்கள் முதலாளிகள். அவர்களது விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கும் ஆட்சியாளர்கள் மன்னராட்சி முதல் ‘மக்களாட்சி’ வரை தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார்கள். அன்று ஆறாம் ஹென்றி, எட்டாம் ஜேம்ஸ் என்றால் இன்று மோடி, ஆதித்யநாத்.

தன்மீது ஏவப்பட்ட இத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு, அமைப்பாய் – சங்கமாய்த் திரண்டு அடக்குமுறைகளுக்கு எதிராய் சமர் புரிந்து, எண்ணற்ற தொழிலாளிகளின் உதிரத்தையும், உயிரையும் கொடுத்து பல்வேறு உரிமைகளைப் பெற்றது தொழிலாளி வர்க்கம்.

ஆனால் இன்றோ, தனது தேவைகளுக்காக கிராமத்து விவசாயிகளின் உடைமைகளைப் பறித்து நகரங்களில் குவித்து, குறைந்த கூலிக்கு அவர்களைச் சுரண்டிக் கொண்டிருந்த முதலாளி வர்க்கம், தனக்கு தேவை குறைந்தபின், தொழிலாளி வர்க்கத்தை ஊரைவிட்டே விரட்டுகிறது.

16, 17-ஆம் நூற்றாண்டுகளில் ஆலை முதலாளித்துவ வர்க்கத்தால் ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னோடிகள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்த அந்த இருண்ட காலம் இப்போது மீண்டும் நம்முன் விரிகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் தமது இரத்தச்சுவடுகளைப் பதித்து, இருண்ட காலத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கிறது இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் மிகப்பெரும் பகுதி.

தொழிலாளிகளை கிராமங்களை நோக்கி விரட்டி சிதறவைத்து, முதலாளிகளும் ஆட்சியாளர்களும் காலச்சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற நினைப்பதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? அல்லது அமைப்பாய்த் திரட்டி அடிமைத்தளையை உடைக்கப் போகிறோமா?

– புதியவன் (அரசியல் சமூக ஆர்வலர்)

disclaimer

உணவின்றியும் வெப்பத்தாலும் ரயிலில் செத்துமடியும் தொழிலாளர்கள் !

1

ரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஒரு மாதத்திற்கும் மேலாக காத்திருந்தபின், பெரிய நகரங்களின் தீவிர நிச்சயமற்ற தன்மையிலிருந்து தற்காலிக நிவாரணம் கிடைக்கும் என்று நம்பி ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். ஆனால், நெரிசல் மற்றும் உயரும் வெப்பநிலை காரணமாக ரயில்கள் வெவ்வேறு பாதைகளுக்கு திருப்பி விடப்படுவதால், இந்த ரயில்களில் பலர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ரயில் நிலையம் ஒன்றில், தனது தாய் இறந்து விட்டதைக்கூட அறியாமல், தாய் மீது போர்த்தியிருக்கும் துணியை இழுத்து, அவரை எழுப்ப முயற்சிக்கும் சிறுவனின் வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாகி, பல செய்தி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டது.

இந்த வீடியோ பீகார் முசாபர்பூரில் உள்ள ஒரு நிலையத்தில் எடுக்கப்பட்டது என்றும், இடம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயிலில் 23 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கு வந்திருக்கிறார் என்றும் என்.டி.டீ.வி சேனல் கூறியது.

ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் இருந்து ரயில் ஏறியதாக, அவரது குடும்பத்தினர் கூறியதாக தொலைக்காட்சி சேனல் தெரிவித்துள்ளது. ரயிலில் தண்ணீர் மற்றும் உணவு இல்லாததால், அவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். ரயில் முசாபர்பூருக்குள் செல்லத் தொடங்குவதற்கு சற்று முன்பு, அவர் மயங்கி விழுந்ததாக என்.டி.டீ.வி தெரிவித்துள்ளது.

தனது சகோதரியின் குடும்பத்தினருடன் கதிஹார் சென்ற அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் ரயிலில் இறந்துவிட்டதால், முசாபர்பூர் ரயில் நிலையத்தில் அவருடைய குடும்பத்தினரை இறங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.

மற்றொரு, ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் டெல்லியில் இருந்து பாட்னாவுக்குச் செல்ல 39 மணிநேரம் பிடித்ததால், பசியால் அழுத நான்கு வயது சிறுவனின் மரணம் குறித்து டெலிகிராப் செய்தி வெளியிட்டுள்ளது. டெல்லியிலிருந்து பாட்னாவுக்குச் செல்ல 39 மணி நேரம் என்பது வழக்கமான நேரத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

தையல்காரராக பணிபுரிந்த பிந்து ஆலம், தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன், ஊரடங்கின் மூன்றாவது நீட்டிப்புக்குப் பிறகு டெல்லியை விட்டு வெளியேற முடிவு செய்திருந்தார்.

மே 23 சனிக்கிழமை காலை மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவர்கள் , அன்று மதியம் 2 மணிக்கு ஆனந்த் விஹார் நிலையத்திலிருந்து டெல்லியில் இருந்து புறப்பட்டனர்.

ரயில் லக்னோவை அடைந்ததும் உணவு விநியோகிக்கப்பட்டது. 16 பேர் கொண்ட அவர்களின் பயணக் குழுவுக்கு ஐந்து பாக்கெட்டுகள் மட்டுமே கிடைத்தன. அவர்கள் அனைவரும் 10 பூரிகளை பகிர்ந்து கொண்டனர், குழந்தைகள் டெல்லியில் இருந்து கொண்டு பாலைக் குடித்தனர்.

படிக்க:
குஜராத்திலிருந்து உத்தர பிரதேசம் கிளம்பிய தொழிலாளி வீடு சேரும் முன் உயிரிழந்தார்
♦ காயமடைந்த தந்தையுடன் 1,200 கி.மீ சைக்கிளில் பயணித்த பெண் : அவலமா ? பெருமையா ?

ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் பாட்னாவை அடைவதற்கு பதிலாக, ரயில் நாள் முழுவதும் ஊர்ந்து, ஆங்காங்கே நின்றது, வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் அடைந்தது. பகலில் உணவு எதுவும் விநியோகிக்கப்படவில்லை.

“இறுதியாக திங்களன்று அதிகாலை 5 மணியளவில் ரயில் பாட்னாவை அடைந்தது … என் மகன் (நான்கு வயது முகமது இர்ஷாத்) உணவுக்காக அழுகிறான், ஆனால் பாட்னா சந்திப்பில் உணவு எதுவும் கொடுக்கப்படவில்லை” என்று ஆலம் கூறினார்.

பாட்னாவில், பயணிகள் தங்களது ஊர்களுக்குச் செல்ல பேருந்துகளைப் பிடிக்க வேண்டியிருந்தது, போக்குவரத்து குறைவாக இருந்ததால் குழப்பம் ஏற்பட்டது.

“ஒரு சிறிய டிரக் வாடகைக்கு கிடைத்தது, நாங்கள் அதை தானாபூருக்கு கொண்டு சென்றோம். தானாபூரிலும் உணவு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. முசாபர்பூருக்குச் செல்ல வேண்டிய ரயிலில் ஏறினோம். இது ஒன்றரை மணி நேரம் ஆனது, நாங்கள் காலை 10 மணியளவில் அடைந்தோம். எல்லா நேரங்களிலும் குழந்தைகள் உணவுக்காக அழுது கொண்டிருந்தார்கள்” என ஆலம் கூறுகிறார்.

முசாபர்பூர் நிலையத்தை அடைந்ததும், மேற்கு சம்பாரனுக்கான பேருந்தைக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர், அவர்களில் ஒருவர் இர்ஷாத் நகரவில்லை என்பதைக் கண்டார். “நாங்கள் சோதித்தோம், அவன் இறந்துவிட்டான். நாங்கள் அழுதோம்; கதறினோம். அவன் பசியாலும் வெப்பத்தாலும் இறந்துவிட்டான் என நான் நினைக்கிறேன்” என்கிறார் ஆலம்.

கூடுதல் மாவட்ட நீதிபதி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த பின்னர், ஈத்-க்கு ஒரு நாள் கழித்து இர்ஷாத் அவர்களின் கிராமமான துலரம் காட்டில் அடக்கம் செய்யப்பட்டான்.

“அவர்கள் எங்கள் மூத்த மகனை எங்களிடமிருந்து பறித்துக் கொண்டார்கள். அதுவும் ஈத் நாளில். இந்த விழாவை என் வாழ்க்கையில் இனி எப்போதும் கொண்டாட முடியாது, இந்த தவறான நிர்வாகத்திற்கு முதலமைச்சர் நிதீஷ் குமாரை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்” என ஆலம் மேலும் கூறினார்.

முசாபர்பூர் மாவட்ட நீதிபதி சந்திரசேகர் சிங், கடந்த சில நாட்களாக பயணிகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் இதனால் உணவு ஏற்பாடு செய்வது கடினமாகி விட்டது என்றும் கூறுகிறார்.

“பல ரயில்கள் எந்த தகவலும் இல்லாமல் வருகின்றன. எங்களுக்கு தகவல் வழங்கப்பட்ட ரயில்கள் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன, ஒரு ரயிலில் 1,200 அல்லது 1,500 பயணிகளின் பட்டியல் இருந்தால், சுமார் 2,000 அல்லது 2,500 பேர் வருகிறார்கள்” என்று சிங் கூறினார்.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் நீண்ட கால தாமதத்திற்கு, ரயில் பாதையில் நெரிசல் இருப்பதே காரணம் என ரயில்வே அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

முன்னதாக சனிக்கிழமை, 46 வயதான புலம்பெயர்ந்த தொழிலாளி, ஷ்ராமிக் சிறப்பு ரயிலில், ஜான்பூருக்கு பயணம் செய்யும் போது, 60 மணி நேரம் தண்ணீர் அல்லது உணவு கிடைக்காததால் இறந்தார். கோரக்பூருக்கு சென்ற மற்றொரு ரயிலில் திங்கள்கிழமை ஒரு மாத குழந்தை வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக இறந்தது.

மற்றொரு ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் புதன்கிழமை, மாண்டுவாடி ரயில் நிலையத்தில் மற்ற பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிய போது, இரண்டு பயணிகள் இறந்து கிடந்ததை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.

இறந்தவர்களில் ஒருவர் மும்பையில் இருந்து ஜான்பூரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 20 வயது தஷ்ரத் பிரஜாபதி மற்றும் மற்றொரு 63 வயது ராம் ரத்தன் கவுட் என அடையாளம் காணப்பட்டனர்.

பிரஜாபதி சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே தெரிவித்துள்ளது, அதே நேரத்தில் கவுட் “பல நோய்களுடன்” போராடிக்கொண்டிருந்தார் என தெரித்துள்ளது.

மத்திய,மாநில அரசுகள் கைவிட்ட நிலையில், நடந்து சென்று செத்துமடிந்தவர்கள், இப்போது ரயிலில் செத்து மடிகிறார்கள். இதுதான் இந்த அரசுகள் மக்களை காப்பாற்றும் இலட்சணம். இந்த அநீதிக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம்?


 கலைமதி
நன்றி : த வயர்.