Wednesday, August 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 361

தெய்வம் தொழாஅள் : பெண்ணடிமைத்தனமா ? பார்ப்பனிய எதிர்ப்புக் குரலா ? – வி.இ. குகநாதன்

”தெய்வம் தொழாஅள்” என்ற குறளானது பெண்அடிமைத்தனம் அல்ல,
மாறாக இது ஒரு பார்ப்பனிய எதிர்ப்புக்கலகக் குரல் – வி.இ.குகநாதன்

ள்ளுவரின் பின்வரும் குறளானது பெரிதும் அறியப்பட்ட ஒன்றாகும்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் : 55)

இந்தக் குறளிற்கான விளக்கத்தினைப் பலரும் “வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!” என்ற பொருள் படவே கூறிவருகின்றார்கள். உண்மையிலேயே கணவனைக் கடவுளிலும் மேலாக வழிபடச்சொல்லும் ஒரு பெண் அடிமைத்தனக் குறளாகவா இக் குறள் உள்ளது எனப் பார்ப்போம். கணவனை வழிபடச்சொல்லுகின்றார் என வைத்தாலும் ஏன் கடவுளைக் கும்பிட வேண்டாம் என்கின்றார்? ஒருவேளை கடவுளையே கும்பிடவேண்டாம் எனப் பகுத்தறிவு பேசுகின்றார் என்றால், அந்தப் பகுத்தறிவு பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துமா? போன்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன. பிறப்பால் எல்லோரும் சமன் (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்) என்று கூறிய வள்ளுவர் எவ்வாறு பிறப்பினடிப்படையிலான பால் வேறுபாட்டினை நியாயப்படுத்துவார்? மேற்கூறிய காரணங்களால், குறித்த இக் குறளிற்கு ஏற்கனவே பலர் கூறிய விளக்கம் பொருத்தமற்றது எனத் துணிந்து கூறலாம்.

எனவேதான் இக் குறளிற்கான விளக்கத்தினை வேறு வகையில் பார்க்கவேண்டியுள்ளது. இக் குறளினை எளிமை கருதி மூன்று பகுதிகளாப் பிரித்துப் பொருள் கண்டு, பின்னர் முழுமையாகப் பார்ப்போம்.

“தெய்வம் தொழாஅள் ; கொழுநன் தொழுதெழுவாள் ;
பெய்யெனப் பெய்யும் மழை.”

இந்த மூன்றுபகுதிகளிற்குமான பொருளை பின்னிருந்து முன்னாகப் பார்ப்போம் (இது ஒரு வகையில் தேர்வில் எளிமையான கேள்விகளை முதலில் அணுகுவது போன்ற ஒரு முறை).

பெய்யெனப் பெய்யும் மழை :

“பெய் எனப் பெய்யும்” மழை என்பதற்கு “மனைவி ஆணையிட மழை பெய்யும்” என்பது போன்றே இதுவரைப் பலராலும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிற்குப் பொருந்தாத “மந்திரம் ஓத மாங்காய் வரும்” போன்ற கருத்தை வள்ளுவர் வேறு எங்குமே கூறாதபோது, இந்த விளக்கம் பொருத்தமில்லை என்பதே எனது கருத்து. பொதுவாக இன்றும் பெரு மழை பெய்யும்போது பேச்சுவழக்கில் “மழை பெய்யோ பெய் எனப் பெய்தது” என்கின்றோம். இங்கு பெய் என்று கூறியவுடன் பெய்கின்றது என்ற பொருள் அல்லவே. அதுபோன்றே இங்கும் ‘’பெய் எனப் பெய்யும்’’ என்பதனைத் தேவைப்படும்போது பெய்யும் மழை என்றே கொள்ள வேண்டும். மழை பொதுவாக நன்மை தருவது என்றாலும், பொருத்தமற்ற நேரங்களில் பெய்யும் மழையால் உழவர்களிற்கு அழிவும் ஏற்படலாம். எனவேதான் பொருத்தமான நேரத்தில் பெய்யும் மழை முதன்மை பெறுகின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், உழவர் மழை பெய்ய வேண்டும் என நினைக்கும்போது மழை பெய்தால், அதுவே சிறப்பானது, அத்தகைய மழையினையே வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

திருக்குறள் இடம்பெறும் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எனும் அதே தொகுதியினுள் இடம்பெறும் இன்னொரு நூலான நல்லாதனார் எழுதிய திரிகடுகம் நூலிலும் ‘’பெய் எனப் பெய்யும் மழை’’ என்ற தொடர் உள்ளது (இவ்விரு நூல்களுமே காலத்தால் ஏறக்குறைய சமனானவை).

‘’கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன்; இவர் மூவர்
பெய் எனப் பெய்யும் மழை’’ திரிகடுகம் (96) – நல்லாதனார்

இங்கு அன்பால், அறிவால் ஆளும் பெண்டாட்டி (பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி), தவசி (தன் நெறிக்கு உண்டான நோன்புகளை, முறைப்படி செய்து முடிப்பான் தவசி), மக்களுக்கு வரும் கொடுமைகளை நீக்கி நல்லது செய்யும் அரசன் ஆகிய மூவரும் எந்தவித பயனும் கருதாமல் தேவைப்படும் போது பெய்யும் மழைக்குச் சமனானவர்கள் என்ற பொருளிலேயே பாடல் இடம்பெற்றுள்ளது (இங்கு தவசியோ அல்லது அரசனோ கணவனை வழிபடுபவர்கள் அல்ல). எனவே, இதே விளக்கத்தினையே நாம் குறளில் இடம்பெறும் பெய் எனப் பெய்யும் மழைக்கும் கொடுக்கலாம்.
கொழுநன் தொழுதெழுவாள்:

இத்தொடரில் கொழுநன், தொழு, எழுவாள் ஆகிய மூன்று சொற்களின் பொருள்களைப் பார்ப்போம். இங்கு கொழுநன் என்பது கணவனையும், எழுதல் என்பது படுக்கையிலிருந்து எழுந்திருத்தல் என்பதையும் குறிக்கும் என்பது பல உரையாசிரியர்கள் கூறியது போன்று சரியானவையே. எஞ்சியிருக்கும் ‘’தொழு’’ என்ற வினைச்சொல்லிற்கான பொருளிலேயே இக் குறளிற்கான விளக்கத்திற்கான திறவுகோலே உண்டு. ‘’தொழு’’ என்ற சொல்லினை ‘’வழிபடு’’ என்றே பலரும் கருதியிருந்தனர். இங்கு அச் சொல்லிற்கு வேறு பொருள் இருக்கின்றதா? எனப் பார்ப்போம். தொழு என்ற வினைச்சொல்லிற்கு பல்வேறு வகைகளில் பொருள் கொள்ளலாம் எனினும் இங்கு பொருத்தமாக வருவது சேர்தல் / இணைதல் என்பதாகும். இதனைச் சற்று விரிவாகவே பார்ப்போம்.

இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொகுதி (கூட்டம்) என்ற சொல் தொழுதி என்ற சொல்லின் மருவிய வடிவமேயாகும். ‘’பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி’’ என்ற பாடலில் (நெடுநல்வாடை-15) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் கூறும் தொழுதி என்ற சொல்லும், ‘’பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி’’ (குறுந்தொகை-175) என்ற பாடலிலும் இச் சொல்லின் (தொழுதி) பயன்பாட்டினைக் காணலாம். இவற்றில் தொழுதி என்ற சொல் கூட்டம் (இணைந்து வாழுமிடம்) என்ற பொருளிலேயே இடம்பெற்றுள்ளது. பெயர்ச்சொற்கள் எல்லாம் வினைச்சொல் அடியினை ஒட்டியே பிறக்கின்றன என்ற தமிழறிஞர்களின் கருத்துப்படி, இங்கு தொழுதி என்ற சொல்லிற்கு அடிப்படையாக அமைந்த வினைச்சொல் ‘’தொழு’’ (சேரல்) என்பதேயாகும். இன்றும் மாடுகள் வாழுமிடத்தை ‘’தொழுவம்’’ என்று அழைக்கின்றோம்.

“தொழுவினிற் புலியானான்’’ (கம்பராமாயணம் மூலபல-181) என்ற பாடலில் கம்பர் விலங்குகள் சேர்ந்து வாழுமிடத்தை தொழு என்கின்றார். ‘’தொழு’’ என்ற சொல் இணையர் (கணவன்-மனைவி) சேர்ந்து வாழ்வதனைக் குறிக்கும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு சீவக சிந்தாமணியில் உள்ளது.

தொழுவில் தோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூது எயில் போல் கிளர்வுற்றதே
– சீவக சிந்தாமணி-856

இப் பாடலில் ‘’தொழுவில் தோன்றிய’’ என்பதற்கு ‘’இல் வாழ்வில் உண்டான’’ என்ற பொருளே கொள்ளப்படுகின்றது (இங்கு தொழு = இல்வாழ்வுச் சேரல்). இதனைக் கொண்டு தொழுதல் என்பதனைச் சேரல் (புணர்தல்) எனவும் கூறலாம். உங்களிற்கு இந்த ‘’தொழு’’ என்ற சொல் இப்போது என்னவாயிற்று என்ற கேள்வி எழலாம். இப்போது ‘’தொழு’’ என்ற அந்த வினைச்சொல் ‘’தொகு’’ என்ற வினைச்சொல்லாக மருவியுள்ளது (மழவு – மகவு, முழை – முகை போன்று மருவியுள்ளது). இன்றும் ‘’தொகு’’ என்ற சொல்லிற்கு சேர்த்தல் என்ற பொருள் உள்ளபோதும், மனிதர்களின் இல்லறச் சேரலை அச்சொல் இப்போது குறிப்பதில்லை. அதே போன்று ‘’தொழு’’ என்றால் இப்போது ‘’வழிபடு’’ என்ற பொருளே பெருமளவிற்குப் பயன்படுத்தப்படுவதாலேயே, குறளிற்கான விளக்கத்தில் குளறுபடி நடந்துவிட்டது. உண்மையில் குறளின் விளக்கத்தினை நாம் அந்தக்காலப் பொருளிலேயே (இல்வாழ்வுச் சேரல்) கொள்ளவேண்டும்.

மேற்கூறிய விளக்கங்களின்படி, ‘’கொழுநன் தொழுதெழுவாள்’’ என்பது கணவனுடன் சேர்த்து (புணர்ந்து) படுக்கையிலிருந்து துயில் எழுபவள் என்ற பொருளே கொள்ளவேண்டும்.

தெய்வம் தொழாஅள்:

இப்போது குறளின் மூன்றாவது பகுதிக்கு வந்தால், இங்கு ‘’தொழாஅள்’’ என்பது ‘’சேர மாட்டாள்’’ என்ற பொருளில் (நாம் ஏற்கனவே பார்த்த விளக்கத்தின்படி) வரும். இங்கு நாம் பொருள் காண வேண்டியது `தெய்வம்` என்ற சொல்லிற்கே ஆகும். தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்றுவருகிறது. இங்கு நாம் முதன்மையாகப் பார்க்கும் ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற குறள் தவிர்த்த ஏனைய ஐந்து குறள்களையும், அவற்றில் தெய்வம் என்ற சொல்லினை என்ன பொருளில் பயன்படுத்துகின்றார் எனவும் பார்ப்போம்.

“தெய்வத்தால் ஆகா(து) எனினும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” – (குறள்: 619)
{தெய்வம் = ஊழ்}

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.” – (குறள்: 1023)
{தெய்வம் = ஊழ்}

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்ந்தோர்}

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (குறள்: 43)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்வோர்}

“ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,
தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்” (குறள்: 702)
{ தெய்வம் = ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்ல மனிதன்}

மேலே ‘’தெய்வம்’’ என்ற சொல் இடம்பெறும் ஐந்து குறள்களிலும், அச் சொல்லானது வெவ்வேறு பொருள்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைக் காணலாம். இந்த வகையில் ஆறாவது குறளிலும் (குறள்: 55) தெய்வம் என்ற சொல் வேறொரு பொருள் கொள்ளலாம் என்பது தெளிவாகின்றது.

இப்போது திருக்குறள் எழுதப்பட்ட காலத்தினை கவனத்திற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே நான் இன்னொரு கட்டுரையில் (வினவு இணையத்தளத்தில் இடம்பெற்ற திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) குறிப்பிட்டது போல, ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். எவ்வாறு முன்னைய குறள்களில் ஆசீவகக் கருத்தான ஊழ் என்பதனை தெய்வமாகவும், வேறு இடங்களில் தமிழரின் நீத்தார் வழிபாட்டினைத் (வாழ்வாங்கு வாழ்ந்து நீத்தார்) தெய்வமாகவும் கொண்டாரோ, அதேபோன்று இங்கு வைதீகத் தெய்வத்தினைக் குறிப்பிடுகின்றார் (இத்தகைய வெவ்வேறு தெய்வங்கள் எல்லாம் தமிழர்களிடையே அன்று காணப்பட்டமையாலேயே, அத்தகைய வெவ்வேறான தெய்வங்களை வெவ்வேறு குறள்களில் வள்ளுவர் கையாளுகின்றார்). சரி, அந்த வைதீக தெய்வம் யாதென வேதத்தின் வழியே பார்ப்போம்.

தெய்வாதீனம் ஜகத் ஸர்வம் = உலகம், தெய்வப் பிடியில்
மந்திராதீனம் ச தேவதா = தெய்வமோ, மந்திரத்தின் பிடியில்
தே மந்த்ரம் பிராமணா தீனம் = மந்திரமோ, பிராமணப் பிடியில்
பிராமணோ மம தேவதா = பிராமணர்களே, நம் தெய்வங்கள்!

ஆம், அந்த வைதீக தெய்வம் பார்ப்பனரே ஆகும். இந்தப் பார்ப்பனக் கடவுளிற்கும், ‘’தொழாஅள்’’ என்பதற்கும் என்ன தொடர்பு? என யோசிக்கின்றீர்களா? இதற்கு இன்றும் திருமணங்களில் ஓதப்படும் வடமொழி மந்திரமான “ஸோம: ப்ரதமோ…” (மந்திரத்தையும், அதற்கான விளக்கத்தினையும் படத்தில் காண்க) என்பதனை அறியவேண்டும். இந்த மந்திரமானது ரிக் வேதத்தில் (Rig veda 10, 7:85) இருந்து தொகுக்கப்பட்டவையே. சூர்யா என்ற தேவப் பெண்ணிற்கு ஒன்றின் பின் ஒன்றாக பல தேவர்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது சொல்லப்பட்டவையே இத் திருமண மந்திரங்கள். இதனையே இன்றும் திருமணங்களில் பார்ப்பனர்கள் ஓதிவருகின்றார்கள்.

இதற்கு வேறு விளக்கங்கள் கொடுக்க அண்மைக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இராமானுசர், ஆளவந்தார் (யாமுனாசார்யர்) போன்ற வேத விற்பனர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளார்கள். இன்று வெறும் மந்திரங்களாகவே உள்ள இந்த இழிநிலையினை பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் நடைமுறைப்படுத்தவே முனைந்துள்ளார்கள். இதனை நாம் இன்றும் கேரளாவிலுள்ள தறவாடு முறையின் எச்சங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். மற்றொரு கேரளா முறை “கெட்டு கல்யாணம்’’.

(“கெட்டு கல்யாணம்” என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் உரிமை கொடுக்கப்படும்). கேரளாவிற்கு ஏன் போகவேண்டும். தமிழ்நாட்டிலேயே எமக்கு கடந்த காலத்தில் “இயற்பகை நாயனார்” என்ற எடுத்துக்காட்டு உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? சிவாச்சாரியார் ஒருவர் நாயனாரின் மனைவியினைக் கேட்டபோது, நாயனார் கூட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல், குறுக்கே வந்த உறவினர்களையும் வெட்டிச் சாய்த்தவர்.

படிக்க:
உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா
திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் | பொ. வேல்சாமி

சிலர், சிவனே பிராமண வேடத்தில் வந்ததாகவும் கூறுவார்கள். இவ்வாறு தெய்வத்தின் வடிவம், தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி ) வடிவம் தாமே என, வேதத்தினைக் காட்டி பார்ப்பனர்கள் தமிழ் மணப்பெண்களை புணர முனைந்திருந்தார்கள். (இந்த தறவாடு, இயற்பகை நாயனார் போன்ற நிகழ்வுகள் யாவும் குறளிற்குக் காலத்தால் பிந்தியவை என்றாலும், அவை கடந்த கால நடைமுறைகளின் / நடைமுறைப்படுத்த முயன்றவற்றின் எச்சங்களே). இதனாலேயே பார்ப்பனர்கள் தமது சாதி தவிர்த்த ஏனையோரினை சூத்திரர்கள் என அழைப்பார்கள். இங்கு “சூத்திரர்” என்பது “வைப்பாட்டி மக்கள்” என்றே பொருள் கொள்ளப்படும் என மறைமலை அடிகளார் தனது நூலான “தமிழர் மதம்” என்ற நூலின் 52-வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற தொடர் தெளிவாக விளங்கும் என்று நினைக்கின்றேன். அதாவது வள்ளுவர் இங்கு வேதங்கள் கூறுவது போன்று பார்ப்பனத் தெய்வத்துடன் தொழ (புணர) வேண்டாம் என்று கூறுகின்றார்.

குறளின் விளக்கம்:

இப்போது மேலே பார்த்த மூன்று பிரிவுகளையும் ஒன்றாக்கினால் குறளின் விளக்கம் தெளிவாகும். (பார்ப்பனத்) தெய்வத்துடன் புணராமல், கணவனுடன் சேர்ந்திருந்து துயில் எழும் மனைவியானவள் தேவைப்படும்போது பெய்யும் மழை போன்றவள் என்பதே இக்குறளின் விளக்கமாகும்.

பார்த்தீர்களா! பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்தும் ஒரு பிற்போக்குத்தனமான குறள் என்று இதுநாள் வரை நாம் கருதியிருந்த ஒரு குறளானது, உண்மையில் எவ்வளவு முற்போக்குத்தனமான பார்ப்பனிய எதிர்ப்புக்குரலாக அமைந்துள்ளது என.

குறிப்பு: இக் கட்டுரையானது பேரா. ந. கிருஷ்ணன், ராமானுஜ தாத்தாச்சாரியார், முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான் ஆகியோரது பல்வேறுபட்ட எழுத்துகளிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

வி.இ. குகநாதன்

`

பாலுறவை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறோமா நாம் ?

1

முதன்முதலாக ஒரு ஆணை நிர்வாணமாக பார்த்தபோது, நான் அழுதேன். கட்டுப்பெட்டித்தனமான கத்தோலிக்க குடும்பத்தில் வளர்ந்த எனக்கு, என் உடல் உறுப்புகளைக்கூட நான் பார்த்ததில்லை. மேலும், சுயஇன்பம் கொள்வதற்காக நான் நரகத்துக்குப் போவேன் என நினைத்தேன். பாலுறவை தவிர்ப்பது என்பது மட்டும்தான் எனது பள்ளியிலும் வீட்டிலும் சர்ச்சிலும் நான் கற்றுக்கொண்டது. இது என்னை பல ஆண்டுகளாக அவமானத்திலும் தனிமையிலும் பயத்திலும் வைத்திருந்தது.

கோலரோடா, உட்டா, இடாஹோ போன்ற இடங்களில் பரந்துபட்ட பாலியல் கல்விக்கு அனுமதி குறித்த சமீபத்திய சச்சரவுகளை கவனித்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளுக்கு இது எவ்வளவு முக்கியமானது என்பது எனக்குத் தெரியும். பாலியல் கல்வியாளராகவும் தொழில்முனைவோராகவும், நான் ஆயிரக்கணக்கான தவறாக கற்பிக்கப்பட்ட இளைஞர்களுடன் பேசியிருக்கிறேன். இது எத்தகைய மன மற்றும் உடல்நல சேதத்தை உருவாக்கிவிடுகிறது என்பதை நான் அறிவேன்.

பாலுறவு குறித்து குழந்தைகளுடன் பேசுவது பெற்றோருக்கு ஏற்படுத்தும் சங்கடங்களை பற்றி அமெரிக்கர்கள் சிரிப்பதுண்டு. கடந்த 20 ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது பரந்துபட்ட பாலியல் கல்வியை ஒருசில மாணவர்கள் பெறுகின்றனர். 1990-களிலிருந்து பழமைவாத செயல்பாட்டாளர்கள், பழமைவாத அதிபர்களின் துணையுடன் பாலியல் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை தடுத்துவிட்டார்கள். பள்ளிகள் உள்ள ஒரே திட்டம் பாலுறவை தவிர்க்க சொல்வது என்பது மட்டும்தான்.

அமெரிக்காவில் பாதிக்கும் மேலான பள்ளிகளில் எந்தவொரு பாலியல் கல்வியும் இல்லை. மீதமுள்ளவற்றில் பாலுறவை தவிர்க்க சொல்வது மட்டும் தான் ஒரே அறிவுறுத்தல். கருவுறுவதலை தடுப்பது குறித்தோ, பாலுறவால் பரவும் நோய்களை தடுப்பது குறித்தோ, ஒப்புதலுடன் பாலுறவு குறித்தோ எந்த கற்பித்தலும் இல்லை.

சொல்லப்போனால், 18 மாகாணங்களில் உள்ள பயிற்றுநர்கள், திருமணத்துக்குப் பிறகான பாலுறவே ஏற்றுக்கொள்ளத்தக்கது என மாணவர்களிடம் சொல்கிறார்கள். ஒருபாலின மாற்றுப் பாலினத்தினர் குறித்து பேசுவது ஏழு மாகாணங்களில் ஆசிரியர்கள் பேசுவது தண்டனைக்குரியது. ஒரு பாலினத்தை எதிர்த்தோ, எச்.ஐ.வி. தொற்று குறித்தோ பேசுவதற்கும் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள். பத்து மாகாணங்களில் மட்டுமே பாலியல் வன்முறை அல்லது மனமொத்த பாலுறவு குறித்து பாலியல் கல்வியில் சொல்லித்தரப்படுகிறது.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !

மேலும், விரிவான பாலியல் கல்வி சொல்லித்தரப்படும் மாவட்டங்களில் தங்கள் பிள்ளைகளுக்கு இத்தகைய கல்வி தேவையா இல்லையா என்பதை பெற்றோர் முடிவு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

பாலியல் கல்வி அளிப்பது அரசின் பணியல்ல என பழமைவாதிகள் எப்போதும் சொல்லிவருகிறார்கள். பாலியல்பு மற்றும் உறவுகள் குறித்து பெற்றோர் மட்டுமே சொல்லித்தர வேண்டும் என்பது அவர்களுடைய வாதம். ஆனால், பெரும்பாலான பெற்றோர் அத்தகைய வழிகாட்டுதலை தருவதில்லை. குழந்தைகளுக்கு தங்களுடைய பாலியல் வளர்ச்சி குறித்து மருத்துவ ரீதியிலான சரியான தகவல்களை வழங்க மறுப்பது கருத்தியல் அல்ல, அது அலட்சியம்.

அதுகூட பயனுள்ளதாக இல்லை. பாலுறவை தவிர்க்க வேண்டும் என்பதை மட்டுமே பாலியல் கல்வியாக சொல்லித்தரப்பட்ட மாகாணங்களில் அதிக அளவிலான பதின்பருவ கர்ப்பம் நிகழ்ந்துள்ளது.

ஒபாமா ஆட்சி காலத்தின் போது, பாலுறவை தவிர்க்க வேண்டும் என சொல்லித்தரப்பட்ட பாலியல் கல்வி, மேலும் விரிவடைந்த கல்வியாக சொல்லித்தரப்பட்டது. பதின்பருவ கர்ப்பம் தரித்தல் தேசிய அளவில் 41 சதவீதமாக குறைந்தது. டிரம்பின் அரசு, பாலுறவை தவிர்ப்பது மட்டுமே போதும் என முந்தைய கல்வி முறையை திருத்தியது. 200 மில்லியன் டாலர் அளவிலான நிதி ஒதுக்குதலையும் நிறுத்தியது.

இருந்தபோதிலும் சமூக பழமைவாதிகளின் கனவுகளுக்கிணங்க, சில பதின்பருவத்தினர் பாலுறவை தவிர்க்கின்றனர். சில ஆய்வுகளின் அடிப்படையில் பள்ளி படிப்பை முடிக்கும்போது கிட்டத்தட்ட 60% மாணவர்கள் பாலுறவு கொள்கின்றனர். ஆணுறைகள், தொற்று, மனமொத்த உறவு குறித்து தங்கள் பெற்றோரிடமிருந்தோ அல்லது பள்ளியிலிருந்தோ எந்தவித அறிவுறுத்தலையும் பெறாமல் பலர் இதைச் செய்கின்றனர்.

அதனால்தான், நான்கில் ஒரு அமெரிக்க பெண் தன்னுடைய 20 வயதை அடையும்போதே கர்ப்பம் தரிக்கிறார். அல்லது முன்னெப்போதும் இல்லாத வகையில் பதின்பருவத்தினர் பாலியல் தொற்றுநோய்களுக்கு ஆளாகிவருகின்றனர்.

வெறும் 41% அமெரிக்க பெண்கள் மட்டுமே தங்களுடைய முதல் பாலுறவு அனுபவம் விரும்பத்தக்க வகையில் இருந்ததாக தெரிவிக்கிறார்கள்.

நாம் பாலுறவு குறித்து கற்பிக்க மறுக்கும்போது, பாலுறவை தடுப்பதில்லை. மாறாக, நாம் மேலும் அதை ஆபத்தானதாக மாற்றுகிறோம். இது பாலியல் தொற்று நோய்கள் தொடர்பானது மட்டுமல்ல.

தங்களது உடல் குறித்தோ தங்களுடைய உடலுக்கு தாம் மட்டுமே உரிமையாளர்கள் என்பது குறித்தோ அறிவற்ற குழந்தைகள் சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள். திருமணத்துக்கு முந்தைய பாலுறவு தவறானது என சொல்லித்தரப்படும்போது, பாலியல் வன்முறை அல்லது அத்துமீறல் குறித்து அந்த குழந்தையால் எதிர்த்து போராடவோ அல்லது புகார் அளிக்கவோ முடிவதில்லை.

பாலுறவை தவிர்க்கச் சொல்லித்தருவது, மனமொத்த பாலுறவை குறைக்கிறது. நான் பதின்பருவத்தில் இருந்தபோது, ஆண்கள் என்னிடமிருந்து பாலுறவை பெற எதிர்ப்பார்ப்பார்கள் என்றும் அதற்கு எதிர்ப்பது என்னுடைய வேலை என்றும் சொல்லித்தரப்பட்டது. பாலியல் வன்முறையோ அல்லது அத்துமீறலோ ஏற்பட்டால் அது என்னுடைய தவறுதான் என எண்ணவைத்தது அது. எல்லாவிதமான பாலியல் செயல்களும் தவறானவை. ஒரு பையன் என்னுடன் டேட்டிங் வந்தால், அவனை தொட அனுமதிப்பது என்னுடைய தவறு என்பதாக அவை சொல்லித்தரப்பட்டன.

குழந்தைகளை இருள் சூழந்த சூழலில் வைப்பது, வேட்டையாளர்களுக்குத்தான் வசதியாய் மாறும். அவமானம் கொண்டு அமைதியாக இருப்பது கலாச்சாரம் என நம்புகிறார்கள். கன்னித்தன்மை உயர்ந்த மரியாதையாக புகழப்படும்போது, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுபவர்கள் தங்களை மதிப்பற்றவர்களாக உணர நேர்கிறது. அவமானம் மற்றும் குழப்பம் காரணமாக பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார் அளிக்கவும்கூட அவர்கள் தயங்கக்கூடும்.

ஒருபாலின – மாற்று பாலின குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பாலியல் கல்வியில் இவர்கள் குறித்து சொல்லித்தரப்படாதது, அவர்களை மேலும் தனிமைப்படுத்துகிறது; அவமானப்படுத்துகிறது. ஒருபாலின-மாற்று பாலின குழந்தைகளுக்கு ஒரளவே தரவுகள் கிடைக்கின்றன. ஆனால் அதிகப்படியான பிரச்சினைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை புகார் தெரிவிக்கும்போது உடல் ரீதியிலான தாக்குதலிருந்து வீடில்லாமல் தவிப்பது வரை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மருத்துவ அடிப்படையிலான பாலியல் நலனை சொல்லித்தருவதை தவிர்த்து பாலுறவை தவிர்ப்பது என்பதை மட்டும் சொல்லித்தந்தால், அது இளைஞர்களின் வாழ்நாள் முழுக்கவும் உடல் மற்றும் மன ரீதியிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இது இப்படியான வழிகளில் இருக்கக்கூடாது. பல நாடுகளில் பாலியல் நலன் குறித்த துல்லியமான தகவல்களை அளிப்பது முதன்மையானதாக கருதப்படுகிறது. நெதர்லாந்தில் மழலையர் வகுப்பிலிருந்தே பாலியல் கல்வி கற்றுத்தரப்படுகிறது. டச்சுக்காரர்களைக்காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக அமெரிக்க பதின்பருவத்தினர் பிரசவிக்கின்றனர். பெரும்பாலான டச்சு பதின்பருவத்தினர் தங்களுடைய முதல் பாலுறவு குறித்து நேர்மறையாக கருத்து தெரிவிக்கின்றனர்.

பாலுறவை சொல்லித்தருவது கடினமாக உள்ளதாக நாம் சிரித்துக் கொள்கிறோம். நம்முடைய பெற்றோர் அதுகுறித்து பேசவில்லை என்பதால், நாமும் நம்முடைய குழந்தைகளிடம் அதுகுறித்து பேசுவதில்லை என்கிறோம். அடுத்த தலைமுறையினர் விரிவான பாலியல் கல்வியைப் பெற இந்த சுழற்சியை நாம் உடைக்கலாம். நம்முடைய அவமானத்தைவிட அவர்களுடைய பாதுகாப்பு முக்கியமானது.


கட்டுரை: ஆண்ட்ரியா பாரிகா
தமிழாக்கம்: கலைமதி
நன்றி: நியூயார்க் டைம்ஸ்

 

குழந்தைகள் என் ஆசிரியர்கள் , ஆசான்கள் என்கிறார் ஒரு ஆசிரியர் !

0

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 1 | பாகம் – 1-அ

அமனஷ்வீலி

அத்தியாயம் ஒன்று

குழந்தைகள் – என் ஆசிரியர்கள்

கல்வியாண்டு துவங்கும் தருவாயில்(*) (ஆகஸ்டு 31) …

ஜார்ஜிய சோவியத் சோஷலிசக் குடியரசின் தலைநகரமாகிய திபிலீசியில் ஆகஸ்டு மாதக் கடைசியில் எப்போதும் வெப்பமாக இருக்கும். தார் உருகி ஓடும், மக்களுக்கு எதன் மீதுமே அக்கறையில்லாததைப்போல் தோன்றும்.

தெருக்களில் குழந்தைகள் அதிகமில்லை. இவர்களில் பெரும்பாலோரை பெற்றோர்கள் கோடை ஓய்விடங்களுக்கும், சொந்த கோடையில்லங்களுக்கும், பயனீர் முகாம்களுக்கும், குறிப்பாக கிராமங்களில் உள்ள தாத்தா, பாட்டி மற்ற உறவினர்களிடமும் அனுப்பி விட்டனர்.

கிராமத்திற்குச் செல்லவும் அங்கேயுள்ள கிராமச் சிறுவர் சிறுமியருடன் சேர்ந்து விளையாடவும் அவர்களோடு சேர்ந்து காடுகளுக்குச் சென்று பழங்களைச் சேகரிக்கவும் கூடை பின்னவும் குழந்தைகளுக்குப் பிடிக்கும். காஹேத்தியாவின் சமவெளிகளில் நான் கழித்த குழந்தைப் பருவம் என்னுள் இப்போது விழித்துக் கொண்டது. நான் கிராமக் குழந்தைகளோடு சேர்ந்து ஆற்றில் குளிக்க ஓடியதுண்டு, சமவெளியில் மேய்ந்து கொண்டிருந்த குதிரை மீதேறி அமர்ந்து களைப்பின்றி சவாரி செய்ததுண்டு; மக்காச்சோளமும் கோதுமையும் நிறைந்த மூட்டைகளைத் தோள்கள் மீது சுமந்து கொண்டு நீர் சக்தியால் இயங்கும் அரவை இயந்திரத்திற்கு எடுத்துச் சென்றதுண்டு;

தானியக் களஞ்சியத்தினுள் மணம் மிகு மாவைக் கொட்டியபடி தட்டையான பெரும்வட்டக் கற்கள் சுற்றுவதைப் பார்க்க சுவாரசியமாக இருக்கும்; மல்யுத்தப் போட்டிகள் நடக்கும்போது அவற்றைக் கண்டு களிப்பதற்காக கிராமம் முழுவதுமே சிறு திறந்த வெளியில் கூடும். குழந்தைகளுக்கு கிராமத்திற்குச் செல்ல மிகவும் பிடிக்கும். இது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் நானும் குழந்தையாக இருந்தவன், அங்கே நிறைய மகிழ்ச்சி கிடைக்கும், அதிக சுதந்திரம் உண்டு, ஆர்வமிக்க, ஆபத்தான அதிசாகசச் செயல்களுக்கு அங்கே பரவலான இடமுண்டு.

ஆகஸ்டில் திபிலீசியில் கடும் வெப்பம் நிலவும். செப்டெம்பர் 1-ம் தேதி விரைவிலேயே வரவிருக்கிறது. ஆனால் தெருக்களில் இன்னமும் குழந்தைகளின் ஆரவாரத்தைக் காணோம், குறைந்த அளவே குழந்தைகள் காணப்படுகின்றனர்.

கடும் வெப்பத்தின் காரணமாக கல்வியாண்டு இம்முறை செப்டெம்பர் 1-ம் தேதி துவங்கப் போவதில்லை, இரண்டு வாரமோ, ஒரு மாதமோ கழித்துதான் வகுப்புகள் ஆரம்பமாகும் என்றொரு வதந்தி மின்னல் வேகத்தில் பரவுகிறது. தம் கனவுகள் பலிக்கின்றன என்று குழந்தைகளுக்குத் தோன்றுகிறது.

பெற்றோர்களும் நம்புகின்றனர். ஏனெனில் வகுப்புகளை ஒத்திப் போடுவதற்கான காரணங்கள் நிறையச் சேருகின்றன.

ஆனால் ஆகஸ்டு மாதத்தின் கடைசி நாட்களில் இக்கனவுகள் கலைகின்றன. ”பள்ளிக்கூடங்களில் வகுப்புகள் கோடை விடுமுறைக்குப் பின் செப்டெம்பர் 1-ம் தேதி மீண்டும் துவங்கும்” என்ற பத்திரிகைச் செய்திகள் இதற்கு வழிகோலுகின்றன.

பள்ளி அழைக்கிறது! இது ஒரு புனிதமான அறைகூவல்.

பாடங்கள் விரைவில் ஆரம்பமாகும்! இரண்டு மூன்று நாட்களில் சூரிய வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் நகரம், மனதைக் கிறங்க வைக்கும் வாசனையுடன் கூடிய ஒரு பெரிய, அழகிய, பல வண்ண மலர் விரிவதைப் போல் காட்சியளிக்கிறது. இந்த மலரை உயரே, பறவைகள் பறக்கும் உயரத்திலிருந்து பார்த்தால் அது எவ்வளவு அழகிய, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும் தெரியுமா!

குழந்தைகளுக்கு கிராமத்திற்குச் செல்ல மிகவும் பிடிக்கும். இது எனக்கு நிச்சயமாகத் தெரியும், ஏனெனில் நானும் குழந்தையாக இருந்தவன், அங்கே நிறைய மகிழ்ச்சி கிடைக்கும், அதிக சுதந்திரம் உண்டு, ஆர்வமிக்க, ஆபத்தான அதிசாகசச் செயல்களுக்கு அங்கே பரவலான இடமுண்டு.

நகரத்திற்கு உயிர் வருகிறது, உத்வேகம் வருகிறது, நகரம் தலையை உயர்த்தி, மெல்லிய காற்றில் ரோஜா செடியின் தண்டு ஆடுவதைப் போல் மெதுவாக ஆடத் துவங்குகிறது. ஒரு உண்மையை (இது ஒருவேளை இதுவரை தெரியாமலேயே இருந்திருக்கலாம்) நன்கு உணருகிறோம்: 1,500 ஆண்டுகட்கும் மேலாக நிலவிவரும் இந்நகரத்தில் இதன் மிகச் சிறு குடிமக்களாகிய குழந்தைகள் இல்லாவிடில் நகரமே வெறிச்சோடிக் களையிழந்து உள்ளது.

சத்தம்! தெருவில்தான் எவ்வளவு சத்தம், மகிழ்ச்சி, உற்சாகம்! குழந்தைகள் அவசர அவசரமாகப் போகின்றனர், ஓடுகின்றனர். பாதசாரிகளுக்கான இடங்களில் போவோர் வருவோர் மீது படாமல் வளைந்து வளைந்து மிதிவண்டி ஓட்டுகின்றனர். அமைதியாக, நிதானமாக நாம் தெருக்களில் நடப்பதற்கு அவர்கள் இடையூறு செய்கின்றனர், ”என்ன வெப்பம்” என்ற நமது வழக்கமான கோடைக்காலப் பேச்சின் போக்கை மாற்றுகின்றனர். வருவோர் போவோரின் முகங்களில் ஒருவிதக் களை, கவலை, மகிழ்ச்சி – குழந்தைகள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்!

வெப்பமானியில் வெப்பம் இறங்கவேயில்லை. ஆனால் குழந்தைகளுக்கு வெப்பமானியைப் பற்றி என்ன கவலை!

இன்று 38 டிகிரி. அவர்களுக்கு வெப்பமாக இல்லையா என்ன ?

இல்லை, குழந்தைகளுக்கு வெப்பமாயில்லை. அவர்களுக்கு வேறு கவலை – அவர்கள் பள்ளி செல்லத் தயாராகின்றனர். பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள், ஸ்கேல்கள், வரைபடச் சாதனங்கள், வண்ணப் பென்சில்கள் முதலியவற்றை வாங்க வேண்டும். இவற்றையெல்லாம் பள்ளிப் பையில் வைக்க வேண்டும். சீருடையை ஒழுங்குபடுத்த வேண்டும். அழகாகக் காட்சியளிக்க வேண்டும்….

ஆசிரியர்களாகிய நாங்களும் எம் அறைகளில் குழுமியிருக்கின்றோம். பரஸ்பரம் முகமன் கூறிக் கொண்டோம், கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். புதிய கல்வியாண்டிற்கான புதிய போதனை முறைத் திட்டங்களும் புதிய நம்பிக்கைகளும் நம்மிடமும் இருக்க வேண்டும், சிறுவர் சிறுமியரைச் சந்திக்கும் ஆர்வம் மிக்க எதிர்பார்ப்பு நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்க வேண்டும்.

மகிழ்ச்சியும் பதட்டமும் கலந்த ஒரு தெளிவற்ற நிலை ஒருவேளை உங்களை ஆட்கொள்ளக் கூடும்; கல்வி கற்பித்தல் எனும் விஞ்ஞானம் மற்றும் கலையின் சாரத்தை நம்மால் அறிய முடியுமா என்ற அச்சம்கூடத் தோன்றலாம்.

இத்தகைய உணர்வுகள் உண்மையிலேயே உங்களை ஆட்கொண்டால் அது நல்லது, நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளின் அன்பு, நம்பிக்கை எனும் மிக கெளரவமான பரிசு உங்களுக்கு கிடைக்கும். உங்களுடைய எதிர்கால வகுப்புகளைப் பற்றிய எண்ணமே, கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய விரும்பாத இவர்களுடனான சந்திப்பைப் பற்றிய எண்ணமே உங்களைத் துன்புறுத்தினால் என்ன செய்வது?

அதுவரை விஷயம் போகாமலிருந்தால் நல்லது…. எப்படி நடந்து கொள்வதென நீங்களே முடிவு செய்யுங்கள்.

நான், ஆகஸ்டு மாதக் கடைசி நாட்களில் நள்ளிரவு வரை என் மேசையில் அமர்ந்து வேலை செய்கிறேன். நன்கு சிந்திக்கிறேன், திட்டமிடுகிறேன், மதிப்பிடுகிறேன், பொதுமைப் படுத்துகிறேன், என்னுடனேயே விவாதித்துக் கொள்கிறேன்; என் ஆசிரியர் பயிற்சி அனுபவத்தை யோசித்துப் பார்க்கிறேன். பல தலைமுறைகளைச் சேர்ந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய நான் என் குழந்தைகளோடு சேர்ந்து வளர்ச்சியடைய விரும்புகிறேன்.

அவர்களைவிட ஒரு நல்ல அனுகூலமான நிலையில் நான் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எனது ஆறு வயதுக் குழந்தைகளுக்கு நான் ஒருவன்தான் ஆசிரியன், எனக்கோ முப்பத்தாறு அல்லது அதற்கும் அதிகமான ஆசிரியர்கள். இவர்கள் அனைவரும் எனது மிக விடாப்பிடியான ”ஆசிரியர்களாக” விளங்குவார்கள்.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
புதிய கல்விக் கொள்கையில் என்ன பிரச்சினை ?

நான் அவர்களுக்கு படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் வரையவும் பாடவும் சொல்லித்தர அவர்கள் எனக்கு மிக உயர்வான போதனை முறைக் கல்வியைத் தருவார்கள். குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட ஆசிரியர் வேண்டும் என்பதை அறிய தன்னை கல்வி கற்பவனாக, வளர்க்கப்படுபவனாக உணர வேண்டும். என் மேசை முன் அமர்ந்து, புதிய தயாரிப்பு வகுப்புடனான சந்திப்பைப் பற்றிச் சிந்திக்கும்போது ஒரு தாளில் பின்வருமாறு எழுதிக் கொள்கிறேன்:

குழந்தைகளுடைய மனதின் ரகசியத்தையும், ஆசிரியர் பயிற்சி எனும் கலையையும், ஆசிரியனின் திறமையையும் அறிய முற்படுகையில், ஒவ்வொரு குழந்தையிடமும் நான் எனது ஆசிரியனை, ஆசானைக் காண்பேன்.

இந்த வாசகத்தின் உண்மையை – பயனை இருபத்தொன்பது முறை நான் சோதித்து சரிபார்த்திருக்கிறேன். முப்பதாவது தடவையாக சரிபார்க்கப் போகிறேன்.

அடிக்குறிப்பு:
* சோவியத் நாட்டில், பள்ளியில் கல்வியாண்டு செப்டம்பர் 1-ம் தேதி ஆரம்பமாகும்.-(ப-ர்.)
(தொடரும்)

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

உடலுக்கும் மனதுக்கும் ஒரு நாள் பட்டினி நல்லது ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

விரதம் நல்லது !

மது மூதாதையர்களிடம் யாராவது “நீங்க எதுக்கு இவ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கிறீங்க? ஏன் காடு கழனில கிடந்து மாடா தேயிறீங்க?” என்று கேள்வி கேட்டிருந்தால் அவர்கள் உடனே;

Great Famine of Madras
பஞ்சத்தில் வாழ்ந்த முன்னோர்கள்.

“இந்த அரை சாண் வயித்துக்கும் பசிக்கும் தான் இப்டி வேலை பாக்குறேன். மூனு வேளை பசி தெரியாம சாப்ட்டா போதும்னு இருக்கு” என்று கூறியிருப்பார்கள்

இப்போது நம்மிடம் யாராவது வந்து ஏன் இப்படி உழைக்கிறீர்கள் என்று கேட்டால் நமது பதில் என்னவாக இருக்கும். “எனது பிள்ளைகள நல்ல பள்ளிகூடத்துல படிக்க வைச்சு டாக்டராவோ கலெக்டராவோ ஆக்கணும். இடம் கொஞ்சம் கெடக்கு. அதுல பெருசா ஒரு வீடு கட்டோணும்” என்று அவரவர் இருப்பிடம் பொறுத்து கூறுவோம்

காரணம் என்ன ?

ஒரு காலத்தில் சோற்றுக்கு அல்லல்படும் நிலைமை இருந்தது உண்மை. இப்போது அது மெல்ல மெல்ல மாறி வருகிறது. மிக மிக குறைவான சம்பளம் / கூலி வாங்கும் மக்கள் வீட்டில் கூட பட்டினி இல்லை. மூன்று வேலையும் உணவு கிடைத்து விடுகிறது. (தமிழகத்தில் அரிசியை இலவசமாகத் தரும் அரசுகளுக்கு இதற்குரிய நன்றிகள் உரித்தாக வேண்டும்)

உணவின்றி தவித்த நாம் இப்போது அளவின்றி அரிசியை உண்ணும் நிலைக்கு வந்திருக்கிறோம். இதில் இருந்து மெல்ல மெல்ல சரியாகி நாம் அரிசி உண்ணும் அளவை குறைக்கும் கட்டத்துக்கு நகர்ந்து செல்வோம்.

இருப்பினும் வாரம் ஏழு நாளும் மூன்று வேளையும் உணவு எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் என்ன இருக்கிறது? பசி, பட்டினி பற்றி நாம் கொஞ்சம் அறிந்திருந்தால் தான் என்ன? ஏன் ஒரு தலைமுறையை பசியே தெரியாமல் வளர்த்து வருகிறோம்?

திடீரென போர்கள் / உலக பொருளாதார சூழல் இவற்றால் செயற்கையாக பஞ்சம் உருவாக்கப்படுமானால் அப்போது பசியை எப்படி திடீரென கட்டுப்படுத்துவது?

உண்மையில் பட்டினி கிடப்பது நல்லதா? கெட்டதா?

பட்டினி கிடப்பது நல்லது. உடலுக்கும் மனதுக்கும் வலிமையை ஏற்றும் தன்மை கொண்டது பட்டினி. இதைத்தான் விரதம் என்று பல சமயங்களிலும் மார்க்கங்களிலும் கடைபிடித்து வருகிறோம்.

தினமும் ஒரு வேளை உணவை உண்ணாமல் இருப்பது விரதத்தின் மிகக்குறைந்த நிலை. தினமும் ஒரு வேளை மட்டுமே உண்பது என்பது விரதத்தில் உட்ச நிலை.

உங்களது நாட்குறிப்பில் வாரம் ஒரு நாள் மட்டும் விரதத்திற்கு ஒதுக்குங்கள். உதாரணம் சனிக்கிழமை அன்று விரதம் என்று வைத்துக்கொள்வோம். வெள்ளி அன்று இரவு உணவோடு அடுத்த உணவை சனிக்கிழமை இரவு உண்ண வேண்டும்.

படிக்க:
♦ உடல் பருமன் : வரலாற்றில் பாடம் படிப்போம் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா
♦ குடும்பச் செலவுக்கு கடன் வாங்கிய தோழர் ஸ்டாலின் | வரலாற்றுத் துளிகள் | கலையரசன்

இடையில் தண்ணீர் எவ்வளவு வேண்டுமானாலும் பருகலாம். ப்ளாக் டீ/ ப்ளாக் காபி / க்ரீன் டீ ( சீனி/ சர்க்கரை மற்றும் எந்த இனிப்பும் இல்லாமல் பருகலாம்) இது மூலம் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைக்கப்படும்.

எடை கூடாமல் பாதுகாக்கப்படும். ஜீரண மண்டலம் புத்துணர்வு பெறும். உடலின் எதிர்ப்பு சக்தி தன்னை மீளுருவாக்கம் செய்ய இந்த 24 மணிநேரங்களை எடுத்துக்கொள்ளும்.

நமது போனில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் கடைசியாக “Restore factory settings or Reset” என்ற ஆப்சனை பயன்படுத்துவோம் தானே… அதைப்போல இந்த வாரம் ஒரு முறை 24 மணிநேர தண்ணீர் விரதம் செயல்படும்.

நீங்கள் எந்த உணவு முறையில் இருந்தாலும் சரியே. வாரம் ஒரு முறை இந்த விரதத்தை கடைபிடியுங்கள். மாற்றங்களை உணர முடியும். நல்ல உடல் நிலையில் இருக்கும் யாரும் தாராளமாக விரதம் இருக்கலாம்.

யாரெல்லாம் 24 மணிநேர விரதத்தை கடைபிடிக்கக்கூடாது ?

1. மாத்திரைகளால் சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தும் நீரிழிவு நோயாளிகள்.
2. இன்சுலின் ஊசி போடும் டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயாளிகள்.
3. மிக அதிக ரத்த அழுத்தம் இருந்து அதற்கான மாத்திரை எடுப்பவர்கள்.
4. இதய நோயாளிகள்.
5. சிறுநீரக நோயாளிகள்.
6. கர்ப்பிணிகள்.
7. தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள்.
8. 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
9. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
10. கீமோ தெரபியில் இருக்கும் கேன்சர் நோயாளிகள்.
11. வயிறு மற்றும் குடல் சார்ந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்கள்.
12. வயிற்றுப்புண்(gastric ulcer) இருந்து அதற்கு சிகிச்சை எடுப்பவர்கள்.
13. மனநல சிகிச்சை எடுப்பவர்கள்.
14. குழந்தைப்பேறுக்கு முயல்பவர்கள்.
15. நீண்ட தூர வண்டி ஓட்டுநர்கள்.

இவையல்லாமல் இருக்கும் ஆண் பெண் இருபாலரும் இந்த விரதத்தை இருக்கலாம்.

24 மணிநேரம் உணவு இல்லாமல் இருக்கும் போதுதான் நம் முன்னோர்கள் பசியில் அடைந்த கஷ்டங்களை நம்மால் உணர முடியும். இன்னும் பசியில் தவிக்கும் ஏழைகளின் உணர்வையும் புரிந்து கொள்ள முடியும்.

ஏன் அரசாங்கம் அரிசியை இலவசமாகத்தருகிறது? என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும். ஏன் சத்துணவு என்ற பெயரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு இலவசமாக உணவு வழங்குகிறது? என்பதும் நாம் பசியோடு ஒரு முழு நாள் கழித்தால் மட்டுமே உணர முடியும். பசியை உணர்வோம். பசி நம்மிடம் இருக்கும் அத்தனை கெட்டதையும் அழித்தொழிக்கும். உடல் மனம் இரண்டில் இருந்தும்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

க்கள் அதிகாரம் அமைப்பின் ‘எதிர்த்து நில்’ மாநாடு கடந்த பிப்ரவரி 23, 2019 அன்று திருச்சியில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் மருதையன் பங்கேற்று உரையாற்றினார். அதில் பேசுகையில்,

“மோடியின் ஐந்தாண்டுகால ஆட்சியில் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாநாட்டில் காவி கார்ப்பரேட் பாசிசம் என்ற தலைப்பு வைத்ததற்கு காவி இந்தியக் கொடியில் இருக்கும் நிறம் என்பதால், அதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதாகத் தெரிவித்தது திருச்சி மாநகர போலீசு. சிறுமி ஆசிபா-வைக் கொன்ற குற்றவாளியை விடுதலை செய்ய தேசியக் கொடியை ஏந்திக் கொண்டு பாஜக ஊர்வலம் போனபோது, யாரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லையே ஏன் ?

படிக்க:
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்த ஃபேஸ்புக் பதிவுகள் !

பாசிசம் இன்று அதன் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. நோட்டீஸ் கொடுக்க அனுமதி வாங்கினாயா எனக் கேட்கிறது போலீசு. மோடியை விமர்சிக்கக் கூடாதாம்.. ஜனநாயக நாட்டில் பிரதமரை விமர்சிக்கக் கூடாது என்று கூறுகிறது பாஜக. கட்ந்த 2014-ம் ஆண்டில் மோடியை சர்வ வல்லமைமிக்கவராகக் காட்டின ஊடகங்கள்.

விவசாயிகளின் விளை பொருளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுத்த மோடி, ஆட்சிக்கு வந்தபின்னர் அதனை செய்யவில்லை. அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்று கூறியது மோடி அரசு. தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்க நீம் தேர்வுகள், எங்கும் நீடிக்கும் வேலைவாய்ப்பின்மை, 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, மருத்துவப்படிப்புக்கு நுழைவுத் தேர்வு என கல்வியில் மீளும் பார்ப்பனியம் – இதுதான் பாசிச மோடி அரசின் சாதனைகள்.

மக்களை இழிநிலைக்குத் தள்ளியிருக்கும் மோடிதான், அதானிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டேட் வங்கியின் தலைமை அதிகாரியை அழைத்துச் சென்று அவருக்கு சுரங்கம் வாங்கித் தருகிறார். அனில் அம்பானிக்காக முறைகேடான முறையில் ரஃபேல் விமானம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் செய்திருக்கிறார். அனில் அகர்வாலிடம் முறைகேடாக பணம் பெற்றுக் கொண்டு தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்கியிருக்கிறார்.

மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் முடக்கப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். கவுரி லங்கேஷ் உள்ளிட்ட முற்போக்காளர்கள் கொலை முதல் தற்போது நடைபெறும் சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது வரை பாசிசம் தலைவிரித்து ஆடுகிறது. ஒடுக்கப்படும் மக்களைக் கொன்றொழிக்கும் அதே வேலையில் அவர்களுக்காக குரல் கொடுக்கும் ஜனநாயகவாதிகளை மிரட்டி முடக்கப்பார்க்கிறது, மோடி தலைமையிலான கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பல் ! இதனை முறியடிக்க நாம் வீதியில் இறங்க வேண்டும்.” என்று பேசினார். (முழு உரையைக் காண)

பாருங்கள் ! பகிருங்கள் !

பொள்ளாச்சி : குற்றவாளிகளை நடமாட விடாதே – வீதியிலிறங்கிய மாணவர்கள் !

பொள்ளாச்சி பாலியல் வன்முறைக் குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரியும் அதிமுக பொறுக்கிகளை பாதுகாக்கும் எடப்பாடி போலீசு கும்பலுக்கு எதிராகவும் தமிழகமெங்கும் மாணவர்கள் தன்னெழுச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் மாணவர்களை ஒருங்கிணைத்து ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

பாதுகாக்குது ! பாதுகாக்குது ! அதிமுக பொறுக்கிகளை போலீசும் அரசும் பாதுகாக்குது ! கிடைக்காதய்யா கிடைக்காது! நமக்கு நீதி கிடைக்காது! நடமாட விடாதே! நடமாட விடாதே! குற்றவாளிகளை நடமாட விடாதே! தமிழகமே திரளட்டும் ! குற்றவாளிகளை தண்டிக்கட்டும்!” என்பது உள்ளிட்ட முழக்கங்களையும் இந்த ஆர்ப்பாட்டங்களில் கேட்க முடிந்தது. இத்தகைய போராட்டங்கள் தமிழகம் முழுவதும் வீச்சாக நடைபெற்று வருகின்றன. மாணவர்களோடு கைகோர்த்து நாமும் களமிறங்க வேண்டிய நேரமிது !

பொள்ளாச்சியில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்:

நெல்லை – அரசு சட்டக் கல்லூரி :தருமபுரி – அரசு சட்டக்கல்லூரி:

மதுரை – அரசு சட்டக்கல்லூரி:

விழுப்புரம் – அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி :

திருச்சி – தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக் கல்லூரி :

இரண்டாவது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை – பச்சையப்பன் கல்லூரி :

சென்னை – எம்.ஜி.ஆர். கலை அறிவியல் கல்லூரி :

தொகுப்பு:

 


படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை முதல் அறிவுரை வன்முறை வரை ! வறுத்தெடுக்கும் ஃபேஸ்புக் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

நாவில் இனிப்பு ஊறும் கருப்பட்டி – எரிந்து போன வாழ்க்கை ! | சரசம்மா

0

நெல்லையில கந்துவட்டி கொடும தாங்க முடியாம கலெக்ட்ரு ஆபீசு முன்னாடியே தீயில கருகின இசக்கிமுத்து குடும்பத்த அம்புட்டு சீக்கிரம் நம்மாள மறந்துட முடயாது. குடிச்ச பாலு கொடும்புல (வாயில்) இருக்க அந்த பிஞ்சு… உசுரு பிரிஞ்ச கோரத்த இன்னைக்கி நெனச்சாலும் மனசு திக்குனுருக்கு.

அதே ஊரு (திருநெல்வேலி), அதே கந்துவட்டி, அதே நெருப்பு வேற.. வேற காரணத்துக்காக முத்துமாரிங்கற பொண்ணையும் சுட்டுருக்கு.

பாதையோரமா கருப்படி விக்கிற பொண்ணு முத்துமாரி. தீயில வெந்து ஒடம்பு பூறா கருப்பாவும், கழுத்து நரம்பு அத்தனையும் தொண்டைக்கும் நெஞ்சுக்குமா அறுந்து தெரிச்சிற்றாப் போல இழுத்துகிட்டு நிக்கும்.

அந்த பொண்ண தாண்டி போரப்ப வாரப்பல்லாம் பேசனுமுன்னு தோனும். அன்னைக்கி அதுக்கு தோதான நேரம் அமஞ்சது. தாழ்பா கொண்டி இல்லாத மாநகராட்சி கழிப்பிடத்துகு உள்ள போயிவர, நாங்க ரெண்டேரும் ஒருத்தருக்கு ஒருத்தரு வெளிய காவலுக்கு நின்னதால நெருக்கமானோம்.

“பொண்ணுக்கு பொண்ணு பொறாமெப்படனும் அம்புட்டு அழகாருப்பேன். இன்னைக்கி அப்புடி நான் சொன்னா நம்புவீங்களா நீங்க.?”

கண்டிப்பா. உங்க உருவம் உருகொலைய காரணமாருந்த ஊரும்.. ஒறவுந்தாங்க அசிங்கம். ஒழச்சு பொழைக்கிற நீங்க என்னைக்கிமே அழகுதான்.”

“அடுத்த மொற நீங்க வா..ர்ரப்ப என்னோட பழய போட்டவ காட்றேன் பாருங்க ஆச்சர்ய படுவீங்க. அது ஒரு காலம்!… தாமரபரணி ஆத்துல ஆட்டம் போட்டுட்டு, ஊரச்சுத்தி வெளையாண்டு திரிஞ்சுட்டு, படிப்பு மண்டையில ஏறாம, பள்ளிக்கூட வாத்தியாருட்ட அடிய வாங்கிட்டு பெயிலாப் போன அந்த பதினாரு வயசோட போச்சு அழகெல்லாம்.

பருவம் வந்த பெறவு..தான் அழகப்பத்துன நெனப்பு, ஆசை எல்லாம் பொம்பளைக்கி வரும். பதினாரு வயசுல வயசுக்கு வந்து பதினேழு வயசுல கல்யாணம் முடிச்சு பதினெட்டு வயசுல இப்படி கரிக்கட்டையா பொசுங்கிட்டேன். அல்ப ஆயிசுல பொட்டுன்னு போறாப்போல பருவா வயசுலேயே அழகு அலங்கோலமா ஆயிடுச்சு.”

பிரச்சனை இல்லாத பொம்பள பொழப்பு ஏது? அதுக்கோசரம் தற்கொலை பன்னிக்க நெனைக்கலாமா நீங்க?”

“தற்கொலையா? இப்புடி இருக்கையிலயும் இழுத்து போத்திகிட்டு யாவாரம் பாக்குறே என்ன போயி இப்புடி கேட்டுபுட்டிங்க. அந்தமாதிரி கோழ கெடையாது நானு. சொந்த மாமா பையனுக்கு தான் கட்டிக்குடுத்தாங்க. அவனுக்கு வேற பொண்ணு மேல ஆசை. அதுக்கு எடஞ்சலா இருப்பேன்னு நெனச்சானொ என்னவோ தூங்கின எம்மேல மன்னெண்ணைய ஊத்தி கொளுத்திட்டான்.

சொந்தத்துல குடுத்தா பொண்ணு சொகுசா வாழுன்னு எங்க அம்மா நெனச்சுச்சு. எங்க அம்மா ஆசையெல்லாம் மொதலுக்கே மோசமா போச்சு. வீட்டுக்கு ஒரே பொண்ணு நானு எங்க அம்மா அண்ணனுங்க எல்லாம் உயிர கொடுத்து என்ன காப்பாத்துனாங்க.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ பாரதி : ஒரு அபலையின் கதை! – சந்தனமுல்லை

அவன் மேல போலீசு கம்ளேண்டு கொடுக்க சொல்லி ஊருக்குள்ள பல பேரு சொன்னாங்க. அவனோட அக்கா இன்ஸ்பெக்டரு, இன்னொரக்கா டீச்சரு, அண்ணனுக்கு ஆஸ்பத்திரியில வேலை எல்லாருமே அரசாங்கத்து உத்தியோகம் நமக்கு ஞாயம் கெடைக்கிமா சொல்லுங்க. மேக்கொண்டு செலவு செய்யிற அளவுக்கு தெம்பும் கொடையாது. ஆண்டவனே நீ கேளுன்னு சொல்லிட்டு வந்துட்டோம்”

திருநெல்வேலியில இருந்து சென்னைக்கி எப்படி வந்தீங்க?”

“ரயில்லதான்” பழைய ஜோக்குதான் ஆனா அத சொல்லிட்டு அழகா சிரிச்சது அந்த பொண்ணு.

அட போங்க! சொல்லுங்கன்னா கலாய்க்கிறீங்க

“அண்ண..ங்களுக்கு கல்யாணம் ஆனதும் நானும் அம்மாவும் தனியாதான் இருந்தோம். நாலு லட்சம் பொறுமானம் உள்ள வீடு இருந்துச்சு. தெனசரி வருமானத்துக்கு ஒரு எடத்துல வேலைக்கி போனேன். எந்த பிரச்சனையும் இல்லாம அப்போதைக்கி நல்லபடியா போயிட்டு இருந்துச்சு.

எங்க சாதிய (தேவர்) சேந்த பொண்ணு ஒருத்தி வட்டிக்கி கடன் வாங்குனா. அதுக்கு சாட்சி கையழுத்து போட்டேன். வாங்குன கடனுக்கு ஒரு வருசம் போல வட்டி கட்டிட்டுருந்தவ திடீர்னு காதலிச்ச பையனோட ஓடிட்டா. அவ காதல் கீதல்னு நெனப்புல இருந்தான்னு நம்பளுக்கு தெரியாது.

எங்க சாதியில காதலிச்சாலே ஆவாது… இதுல சாதிமாறி காதலிச்சா ஏத்துப்பாங்கலா. பயந்து போயி கண்ணுக்கு எட்டாத தூரமா ஓடிட்டா. அந்த பொண்ண பெத்தவங்களும் தேடுனாங்க, நாங்களும் தேடுனோம் இப்ப வர எங்க இருக்கான்னே தெரியல.

நீதான் வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டுருக்க பணத்துக்கு நீதான் பெருப்புன்னு கடன குடுத்தவ..ன் வாசல்ல வந்து நின்னுட்டான். வட்டிகடன்னு தெரியும் கந்துவட்டின்னு தெரியாது. ஏதோ ரெண்டு போப்பர்ல கையழுத்து போட்டதால பெரும் பிரச்சனையா போச்சு. எங்களால எதுத்து நிக்க முடியல. வீட்ட வித்து, நகைய வித்து, தெரிஞ்சவங்க கிட்ட கடன வாங்கி கந்துவட்டிய குடுத்து முடிச்சோம். வாங்குனது அம்பதாயிரம் வட்டியும் மொதலுமா அவனுக்கு நாங்க தெண்ட..ம் அழுதது ஆறு லட்சம்.

கல்யாணமும் இந்த கதியாச்சு. இருந்த வீடும் போச்சு. இனிமே இந்த பொட்டபுள்ள எங்குட்டு போவாலோன்னு நெனச்சு நெனச்சு அழுது அம்மாவுக்கு பிரம்ம புடுச்சு போச்சு. வீட வித்த அன்னியிலேருந்து 46 நாளு சாப்புடாம கெடந்து உயிர விட்டுடுச்சு.

என்ன செய்றது ஏது செய்றதுன்னு ஒன்னும் புரியல. கண்ண தொறந்தாலே பயமாருந்துச்சு. நமக்கு கீழ எத்தனையோ கோடி பேத்துக்கு இந்த கதி அதுக்குன்னு சொனங்கி படுத்துட கூடாதுன்னு தைரியத்த கூட்டிகிட்டேன்.  கல்யாணம்… நெருப்பு… கடனு… அம்மா… எல்லாத்தயும் ஒரு பக்கம் ஒதுக்கி வச்சுட்டு அண்ணெங் குடும்பத்தோட சேந்து சென்னைக்கி வந்துட்டோம்.”

அடுக்கடுக்கா எப்புடிதான் இத்தன வலிய தாங்கினியலோ. எத்தனையோ எடஞ்சலுக்கு மத்தியில மனசு உறுதியா வாழ்ற ஒங்களப்போயி தற்கொல அப்புடி இப்புடி சொல்லிப்புட்டேனே!.. ப்ச்..”

“நான் விக்கிற கருப்பட்டிதாங்க நாக்குல எச்சி ஊறும் இனிப்பு. எங்கதயோ.. மொகம் சுழிக்கிற கசப்பு. அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்.”

படிக்க:
♦ தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !
♦ பிள்ளைய பெத்துட்டு வாழ்க்கைய வெறுத்து ஓட முடியுமா ?

எனக்கு கூறே கெடையாது திரும்பவும் அதையே நெனவுபடுத்துறெ.. பாருங்க. பொறவு அங்கன ஊருக்குல்லேயே இருந்தா அதே நெனப்பு வருமுன்னு இங்க சென்னைக்கி வந்தியலா

“எடத்த மாத்துனா நெனப்பு போயிருமா என்னா? பொழப்ப தேடிதாங்க இங்க கூடி வந்தோம்.

பெரியம்மா பையங்க இங்கனக்குள்ள கருப்பட்டி யாவாரம் பாத்தாங்க. அவங்க கூட நாங்களும் சேந்துகிட்டோம். அண்ணெ.. மாசத்துக்கு ஒருக்கா திருந..வேலி போயி கருப்பட்டி காச்சுர எடத்துல தேவையான கருப்பட்டிய எடுத்துட்டு வந்துருவாரு. அதெ பிரிச்சு எடுத்து ஆளுக்கொரு பக்கமா நாங்க யாவாரம் பாத்துப்போம்.

ஒரு வீட வாடகைக்கி எடுத்து எட்டு பேரு தங்கியிருக்கோம். வருமானம் தனி. வாடக.. சமையலு.. சாப்பாட்டு செலவு.. எல்லாம் பொதுவுல. சேந்துருக்கதால செலவு கம்மி. பாதுகாப்பா இருக்கு. ஒரு நா இருநூறு.. முன்னுறு கெடைக்கும் திடிர்னு ஆயிரமும் கெடைக்கும். புடிமானமா சொல்லனுன்னா ஒரு நாளைக்கி நானூறு மேனி கெடைக்கும்.

ரெண்டு வருசமா யாவாரம் பாத்து செலவு போக கந்துவட்டி கடன அடைக்க வாங்குன ஒரு லட்சம் பணத்துல அம்பதாயிரத்த அடச்சுருக்கேன். ஏதோ நல்ல மனுசங்க அந்த நேரத்துல வட்டியில்லாமெ கடங்குடுத்து ஒதவுனாங்க. உயிரு இருக்கும்மட்டும் மறக்க மாட்டேன்.”

“ரெண்டு குடும்பத்த சேந்தவங்க சேந்துருந்தாலே நீயா.. நானா..ன்னு சிக்கல் வந்துருமே பலபேரு கூடிருக்குற எடத்துல நெலமய எப்புடி சமாளிப்பீங்க.?”

“சண்ட சச்சரவு இருந்தாதா.. அது குடும்பம், இல்லாட்டி எப்புடி. கோவம் வந்தா திருப்பிக்க வேண்டியதான் பொறவு சந்தோசமா கூடிக்க வேண்டியதான். ஒரு கூட்டுல பறவைங்க எறதேடிட்டு பொழுதுக்கா கூடு திரும்பையில ஒன்னோட ஒன்னு கொத்திகிட்டு அடிச்சுக்கும்… ஆனா காலையில மறுபடியும் சந்தோசமா எற தேட ஆறம்பிக்கும். அது போலதான் மனுச வாழ்க்கையும்.”

இத்தன வலிய தாங்கி வைராக்கியமா வாழ்கையில போராடுற ஒங்களப் பாத்து நெறையா கத்துக்கனும்...”

சரசம்மா

குடும்பச் செலவுக்கு கடன் வாங்கிய தோழர் ஸ்டாலின் | வரலாற்றுத் துளிகள் | கலையரசன்

2

லகை தனது கொடையின் கீழ் கொண்டுவருவேன், என கொக்கரித்த பாசிச ஹிட்லரின் கனவை சுக்குநூறாக்கி, ஏகாதிபத்தியங்களுக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்தவர் தோழர் ஸ்டாலின். ஹிட்லரிடம் இருந்து ரசியாவை மட்டுமல்லாது உலகையே காப்பாற்றிய ரசிய மக்களின் தலைவர் தோழர் ஸ்டாலின்.

ஆனால் அவரையும் ரசியப் பாட்டாளிகளின் தியாகத்தையும் வரலாற்றில் இருந்து மறைக்கப் பார்க்கிறது முதலாளிவர்க்கம். “வெட்ட வெட்ட துளிர்க்கும் மருதாம்பாய்” நிற்கிறது அவரின் புகழ்.

ஸ்டாலின் அவர்களின் நினைவு நாளான மார்ச் 5 அன்று தோழர்  கலையரசன் அவரது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட சில படங்கள் இதோ உங்களுக்காக…

***

ஸ்டாலின் ம‌ர‌ண‌ம‌டைந்த‌ நேர‌ம் கொரியாவில் போர் ந‌ட‌ந்து கொண்டிருந்த‌து. அப்போது அமெரிக்க ஆக்கிர‌மிப்புப் ப‌டைக‌ளின் அச்சுறுத்த‌ல்க‌ளுக்கு ம‌த்தியிலும் கொரிய‌ ம‌க்க‌ள் தாங்கள் செல்லுமிடமெல்லாம் தோழர் ஸ்டாலினின் படத்தைக் கொண்டு சென்று அவரை நினைவுகூர்ந்த‌ன‌ர்.

 

***

ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌ வ‌ர‌லாறு. 1947, சுத‌ந்திர‌த்திற்குப் பின்ன‌ர் இந்தியாவில் ஏற்ப‌ட்ட‌ உண‌வுப் ப‌ற்றாக்குறையை போக்குவ‌த‌ற்கு உத‌வி கோர‌ப் ப‌ட்ட‌ நேரம், தோழர் ஸ்டாலின் விரைந்து ந‌ட‌வ‌டிக்கை எடுத்து ஏற்கெனவே வேறு பகுதிக்கு தானியங்களை ஏற்றிச் சென்று கொண்டிருந்த தமது நாட்டுக் கப்பலை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப உத்தரவிட்டார். அப்போது குறுக்கிட்ட ஒரு ரசிய அதிகாரி, “இன்னும் ஆவணங்கள் கையெழுத்தாகவில்லை” எனத் தெரிவிக்க, அதற்கு தோழர் ஸ்டாலின் அளித்த பதில், “ஆவணங்கள் காத்திருக்கலாம். ஆனால் பசி காத்திருக்காது”.

(இந்த உரையாடலை, ரசியாவிற்கான இந்தியத் தூதுவர் P.ரத்தினம் மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பத்திரிகையாளர் குழுவில் தெரிவித்தார்)

***

தோழர் ஸ்டாலினின் மரணச் சடங்கில் அலைகடலென திரண்டு வந்த மக்கள் வெள்ளம்.

***

ஸ்டாலின் சோவியத் அதிபராக ஆட்சி செய்த காலத்தில், தனது குடும்பச் செலவுக்கு கூட பணமில்லாமல் கஷ்டப்பட்டு கடன் வாங்கி இருக்கிறார் !

அவரது வாழ்க்கைக் குறிப்புகளில் இருந்து :

ஸ்டாலினின் மனைவி நாடியா, அடிக்கடி குடும்பத்தை பராமரிக்க பணமில்லாமல் கஷ்டப் பட்டுள்ளார். ஒரு முறை ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
– “இப்போது கையில் எந்தக் காசும் இல்லை. 50 ரூபிளாவது அனுப்பி வையுங்கள்.”
அதற்கு ஸ்டாலினின் பதில்:
– “நான் மறந்தே விட்டேன். இன்றைக்கு புறப்படும் சக ஊழியரிடம் 120 ரூபிள் கொடுத்தனுப்புகிறேன்.”
சில தினங்களுக்குப் பின்னர் (3-1-1928), அரச பதிப்பக (GIZ) நிர்வாகி கலாட்டாவோவுக்கு, ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதினார்.
– “எனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுகின்றது. 200 ரூபிள் கடனாகத் தர முடியுமா?”

(நன்றி: Stalin: The Court of the Red Tsar)

ஊழல் கறை படியாத ஸ்டாலின், இறக்கும் போது வைத்திருந்த சொத்துகள்:
ஒரு சோடி காலணிகள்
இரண்டு இராணுவ உடைகள்.
வங்கிக் கணக்கில் 900 ரூபிள்கள்
பாட்டாளி வர்க்க அதிகாரம் ஒருபோதும் ஊழல்கறை படாது.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.” – குறள் 72

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !

பொள்ளாச்சி பாலியல் வன்முறை குறித்த முகநூல் பதிவுகள் தொகுப்பு …

ருநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பொள்ளாச்சியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பலர் கொந்தளிப்புடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் தொடர்புடைய குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்றும் எழுதிவருகின்றனர். சில முகநூல் பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறோம்…

இரா.கலையரசு

பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் குற்ற எண்.59/2019 ஆக இந்திய தண்டனை சட்டம் 354A, 354B, 392, தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66-E மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவு 4 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வாய்ப்புள்ளது. ஆனால், வழக்கில் ஆரம்பத்தில் கோவை மாவட்ட காவல்துறையினர் செய்த தவறுகள், வரும் காலத்தில் சிபிஐ அல்லது வேறு எந்த புலானாய்வு அமைப்புகள் விசாரித்தாலும் எதிரிகளுக்கு சாதகமாகத்தான் முடியப் போகின்றது.

1. எதிரிகளை பொள்ளாச்சி காவல் துறையினர் அவர்களுடைய காவலுக்கு (Police Custody) எடுத்து விசாரிக்கவில்லை. அவ்வாறு விசாரணைக்கு எடுத்து ஏன் விசாரிக்கவில்லை. அவர்களை எது தடுத்தது. அவ்வாறு விசாரித்திருந்தால் தான் அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார், சம்பந்தப்பட்டுள்ள பிற நபர்கள் யார், மிரட்டி பெறப்பட்ட பணம் மற்றும் நகையினை எங்கே வைத்துள்ளார்கள் என்ற விவரம் தெரிந்திருக்கும். ஆனால், அப்படி எந்த ஒரு விசாரணையும் நடத்த பெறவில்லை. ஒருவர் கைது செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் தான் காவல்துறை விசாரணைக்கு எடுக்க முடியும். வேறு எந்த விசாரணை அமைப்புக்கு மாற்றப்பட்டாலும் காவலுக்கு எடுத்து விசாரிக்க முடியாது.

2. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 161-ன் படி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தினை பெண் காவல் அதிகாரிதான் விசாரித்திருக்க வேண்டும். ஆனால், வழக்கு பதிவு செய்து விசாரித்தது பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய ஆண் காவல் ஆய்வாளர். அவர் எப்படி பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்திருப்பார். எப்படி அந்த பெண்ணும் தயக்கம் இல்லாமல் வாக்குமூலம் கொடுத்திருக்கும்.

3. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரினை வெளியிடக்கூடாது என பல்வேறு தீர்ப்புகளும் வழிகாட்டுதல்களும் உள்ளன. ஆனால், கோவை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரினை வெளியிட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பிற பெண்களும் புகார் கொடுக்க நிச்சயம் தயங்குவார்கள். ஏன் வேண்டுமென்றே காவல் துறையினர் அப்படி செய்தார்கள்.

4. காவல் துறையினர் ஆரம்பம் முதலே இந்த வழக்கினை சரியான முறையில் கையாளவில்லை என்றே தோன்றுகின்றது. காவல் கண்காணிப்பாளர் நான்கு வீடியோக்கள் மட்டும்தான் என உறுதிபட கூறுகின்றார். விசாரணை முடியும் முன்பே அவருக்கு இந்த விசயம் எப்படி தெரிய வந்தது. அவரை பொள்ளாச்சி எம்.பி. சந்தித்துவிட்டு செல்கின்றார். எம்.எல்.ஏ. வெளிப்படையாக புகார் கொடுக்கின்றார். ஆனால், அவர்கள் கொடுத்த புகார் மனு என்னவென்று பொது வெளியில் வைக்கவில்லை?.

5. ஆளும் கட்சியினை சார்ந்த நபர் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை அடித்ததாக கைது செய்யப்பட்டு உடனடியாக விடுதலையும் செய்யப்படுள்ளார். ஆனால், அவரின் பெயர் ஏன் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்படவில்லை? அதற்கு எந்த அரசியல்வாதி காரணம்?

6. தற்போது பாதிக்கப்பட்ட பெண், பொள்ளாச்சியில் ஒருவரும் உதவவில்லை ஆளும்கட்சி தலையீட்டில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறுகின்றார். அப்படியென்றால் சம்பவம் நடந்து 12 நாட்கள் நடவடிக்கை எடுக்காமல் பொள்ளாச்சி காவல் துறையினரை தடுத்த நபர்கள் யார்?

இந்திய வரலாற்றில் இல்லாதவகையில் ஒரு பாலியல் வழக்கினை குண்டர் சட்டத்தில் போட்டு, உடனே சிபிசிஐடிக்கு மாற்றி, அடுத்த 5 மணிநேரத்தில் சிபிஐக்கு மாற்றியது, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் மட்டுமே நடந்திருக்கும்.

7. முக்கிய எதிரி திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் ஆகியோரினை பிடித்து சில நபர்கள் விசாரிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வந்துள்ளன. அவர்கள் காவல் துறையினரிடம் ஒப்படைத்த பிறகு திருநாவுக்கரசினை கைது செய்யாமல் விடுவித்த அதிகாரி யார்? யாருடைய உத்திரவின் பேரில் அவ்வாறு செயல்பட்டார். திருநாவுக்கரசின் அம்மா தனது மகன் தலைமறைவாகவில்லை, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான் என 12.03.2019 அன்று பொள்ளாச்சி நீதிமன்றத்தில் எடுத்த வீடியோவில் கூறியுள்ளார். பிறகு எப்படி காவல் துறையினர் திருநாவுக்கரசு தலைமறைவு என கூறினார்கள்?

8. எஸ்.பி. புகார் வந்தால் மட்டுமே விசாரிப்போம் என்கிறார்கள். இந்த மாதிரி வழக்குகளில் காவல் துறையினர் புகார்தாரர்களை தேடிப்போக வேண்டும்.. வழக்கு முறையாக விசாரணை செய்யப்படவில்லை. எதிரிகள் காவலில் எடுத்து விசாரிக்ப்படவில்லை. அவர்கள் தொடர்பு குறித்து விசாரிக்கப்படவில்லை. யாரை காப்பாற்ற இப்படி செய்கின்றார்கள்?

மொத்தத்தில் காவல் துறையினரின் நடவடிக்கைகள் எதிரிகளுக்கு சார்பாகவே உள்ளது. இனிமேல் வேறு ஏஜென்சிக்கு விசாரணை மாற்றப்பட்டாலும் இவர்கள் செய்த தவறுகளால் நீதி கிடைப்பது அரிதுதான்.

நாச்சியாள் சுகந்தி:

இந்திய வரலாற்றில் இல்லாதவகையில் ஒரு பாலியல் வழக்கினை குண்டர் சட்டத்தில் போட்டு, உடனே சிபிசிஐடிக்கு மாற்றி, அடுத்த 5 மணிநேரத்தில் சிபிஐக்கு மாற்றியது, பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் மட்டுமே நடந்திருக்கும். முரணா, அதிசயமா, மாற்றமா? புரியவில்லை.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறித்து மகிழ்ச்சிதான். இதுவரை சிபிஐ-ஆல் விசாரிக்கப்பட்ட வழக்குகளில் எல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துள்ளதா? கை புண்ணுக்கு எதற்கு கண்ணாடி? சிபிஐ ஒரு வழக்கை முறையாக விசாரித்து இருந்தால் ஏன் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 28 வருடங்கள் 7 பேர் தண்டனை அனுபவித்துக்கொண்டு இருப்பர்?

சரி, இந்த சிபிஐ அமைப்புதான் எப்படிபப்ட்டது? கடந்த ஜனவரி மாதம் சிபிஐ இயக்குநர்கள் மாறி மாறி பதவி மாற்றப்படட்தும், உச்சநீதிமன்றமே தலையிட்டதும் அந்த இயக்குநர்களில் ஒருவர் சிபிஐ அமைப்பை மத்திய அரசு கட்டுப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டியதும் இன்னும் யாருக்கும் மறந்திருக்காது.

உலவும் பல மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. சிபிசிஐடிக்கோ அல்லது சிபிஐக்கோ வழக்கு சென்றால் நீதி கிடைக்கும் என்று, ஒரு வெங்காயமும் கிடைக்காது என்பதைத்தான் விஷ்ணுபிரியா ஐபிஎஸ் வழக்கில் உணர்ந்துகொண்டோம்.

சபரிராஜன் என்கிற குற்றவாளி முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராம். அதனால், அழுத்தம் அரை டவுசர்களிடமிருந்தும் அரை டவுசர்களின் தலைமை மோகன் பகவத் , அமித்ஷா, மோடியிடமிருந்தும் வராது என்பதற்கு யார் உத்திரவாதம்?

அதேவேளையில், வாச்சாத்தி வழக்கில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி நீதியை நிலைநாட்டிய இடதுசாரிகளின் போராட்டம் காலம் முழுவதுக்குமான நம்பிக்கையை அளிக்கவல்லது. இந்த வழக்கையும் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு சிபிஐ தான் விசாரித்தது. 215 பேருக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தது.

இதை அரசியல் ஆக்காதீர்கள் என கதறும் பொள்ளாச்சி ஜெயராமன், நேற்றிலிருந்து இரண்டு முறை ஊடகங்களைச் சந்த்தித்து ஏன் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்? கன்னத்து அறை புகழ், பாலியல் சீண்டல் புகழ் எஸ்.பி பாண்டியராஜன் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என சொல்வது போல், இதில் அரசியல் தலையீடு இல்லை என அழுத்திக் கூறுகிறார்?

சபரிராஜன் என்கிற குற்றவாளி முழுநேர ஆர்.எஸ்.எஸ். ஊழியராம். அதனால், அழுத்தம் அரை டவுசர்களிடமிருந்தும் அரை டவுசர்களின் தலைமை மோகன் பகவத் , அமித்ஷா, மோடியிடமிருந்தும் வராது என்பதற்கு யார் உத்திரவாதம்?

இந்த பதற்றத்தை உத்திரவாதப்படுத்துகிறது, பாதிக்கப்படட் பெண்ணின் ஆடியோ என சுற்றும் பதிவு. அதில் ஏன் ஜெயராமன் பெயர் திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறது? ஜெயராமன் மீடியாக்களுக்கு சொன்ன விஷயத்தை அந்த பெண்குரல் எப்படி அச்சுப்பிசகாமல் சொல்கிறது?

படிக்க:
எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

நம்புவோம், இந்த வழக்கில் நீதி கிடைக்கும். வாச்சாத்திப் பெண்களுக்கு கிடைத்ததைப் போல, காலம் தாழ்த்தப்பட்ட நீதி எனினும் நிச்சயம் கிடைக்கும் என நம்புவோம். அதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த வழக்குக் குறித்து சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் பேசி, குரல் கொடுத்து, அரசியலாக்கி நீதியைப் பெற்றுத் தர வேண்டும். குறிப்பாக அனைத்துக் கட்சிகளுமே.

நம்புவதுத் தவிர வேறு எதுவுமே நம் கையில் இல்லையே!

அதிஷா

ஒரு ரேப் போதுமாக இருக்கிறது தங்களுடைய துருப்பிடித்த யோனிப் பூட்டு அறிவுரைகளோடு ஆணாதிக்க சைக்கோக்கள் கிளம்ப… பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே…  ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்குப் போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை.

அறிவுரைகளைக் காண அருவருப்பாக இருக்கிறது. இதன் தொடர்ச்சிதான் பெண்கள் கல்லூரிக்குப் போகக்கூடாது, காதல் பண்ணக்கூடாது, புத்தகம் படிக்கக் கூடாது மாதிரியான வக்கிர எண்ணங்கள் எல்லாமே. பெண்கள் என்ன செய்ய வேண்டும் என இந்த உலகமகா உத்தம ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் . 24 மணிநேரமும் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஃப்ரிட்ஜூக்குள் போய் கால்மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவேண்டுமா.

பர்தா போட்டுக்கொண்டால் ரேப் நடக்காது என்று சொல்கிற மதவாத முட்டாள்களுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு. ஒட்டுமொத்த ஆண்சமூகமுமே குற்றவாளிகள் என்று சித்தரிப்பது இன்னொருவகை பைத்தியகாரத்தனம். எத்தனையோ ஆண் குற்றவாளிகள் இருந்தும் இரண்டு பாலினத்தவர்களிடையேயான பரஸ்பர நம்பிக்கையில்தான் பல கோடி ஆண்டுகளாக இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. இதை சாக்காக வைத்துக்கொண்டு அடிப்படைவாத அறிவிலிகளைப்போல காதலுக்கு எதிராக ஆண்பெண் நட்புக்கு எதிரான பரப்புரைகளை முன்னெடுப்பது இன்னும் கேவலம்… பாதுகாப்பாக இரு என்று அறிவுரை சொல்வது வேறு… ஆனால், குனிந்த தலை நிமிராமல் கட்டைவிரல் பார்த்து நட, அடக்க ஒடுக்கமாக இரு என்பது வேறு. அடிப்படைவாத மயிராண்டிகள் சொல்வது முடங்கிவிடு என்பதுதான்.

பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்துக்கொள்ளாதே, ஆண்களிடம் சாட் பண்ணாதே, டிக்டாக் வீடியோ பண்ணாதே, பெரியாரியம் மார்க்ஸியம் தலித்தியம் கற்றுத்தருவதாகக் கூறி ஏமாற்றிவிடுவான், உலக சினிமா பாக்காதே…  ஆண்களோடு ஊர்சுற்றாதே, ட்ரெக்கிங் போகாதே, போராட்டத்திற்குப் போகாதே, ஷால் போடு… எவ்வளவு அறிவுரை.

குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களில் பெரும்பாலான ஒற்றுமை ஒன்று உண்டு. இந்த அயோக்கியர்களின் முக்கியமான ஆயுதமே குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர்கள் மீது இருக்கிற அச்சம்தான். உலகிலேயே குழந்தைகள் தன் வீட்டில் போய் எதையாவது சொன்னால் குழந்தைகளையே சந்தேகித்து அவர்களையே குற்றவாளியாக்கி மிரட்டுகிற வினோதமான சமூகம் நம்முடையது. இந்த பாலியல் சைக்கோக்கள் இதைத்தான் பயன்படுத்துகிறவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளின் தவறுகளுக்காக காத்திருப்பார்கள். அந்த தவறை பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுவார்கள். தங்களிடம் பணியவைப்பார்கள். இதில் அந்தக்குழந்தையின் குற்றம் என்ன இருக்கிறது. பொள்ளாச்சியில் நடந்திருப்பதும் அவ்வகை குற்றமே.

குழந்தைகள் மீதான குற்றங்களில் மட்டுமல்ல பெண்கள் மீது நடக்கிற பெரும்பான்மை சைபர் குற்றங்களில் நடப்பது இதுதான். பொள்ளாச்சி வன்கொடுமையில் நடந்ததும் இவ்வகை குற்றம்தான். இந்த வீடியோவை வெளியிட்டால், இந்த புகைப்படத்தை இணையத்தில் பரவவிட்டால் வீட்டில் என்ன சொல்வார்களோ, சமூகம் தன்னை என்ன நினைக்குமோ என்கிற அச்சம்தான் இந்தப்பெண்களை எல்லாம் முடக்கிவிடுகிறது. இதுதான் இந்த குற்றவாளிகளுக்கு வசதியாக இருக்கிறது. இந்தியாவில் பாலியல் வன்கொடுமை ஒன்றில் மட்டும்தான் குற்றவாளிகளை விட்டுவிட்டு பாதிக்கப்பட்டவரை தண்டிக்கிற வினோத வழக்கமெல்லாம் வைத்திருக்கிறோம். Victim Shaming-ஐ ஒழிக்காமல் ஒரு மண்ணாங்கட்டி மாற்றத்தையும் நம்மால் உருவாக்கிவிட முடியாது.

நாம் தொடங்கவேண்டிய இடம் வீடு. குழந்தைகள் எத்தகைய தவறு செய்திருந்தாலும் அதை வீட்டில் வந்து உரையாடுவதற்கான வெளியை உருவாக்க வேண்டும். நாம் சொன்னால் பெற்றோர்கள் காதுகொடுத்து கேட்பார்கள் என்கிற நம்பிக்கையை விதைக்கவேண்டும். நாம் சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவார்களோ என்கிற அச்சம் உருவாகிவிடாத படி சிறுவயதிலிருந்தே வளர்க்க வேண்டும். பாலின பேதங்களின்றி வளர்க்க வேண்டும். ஆம்பளை சிங்கம், பொம்பளை மயில்… என்றெல்லாம் பிதற்றிக்கொண்டிருக்கக் கூடாது.

தவறு செய்தாலும் அதை திருத்திக்கொள்வதற்கான வாய்ப்பையும், பரவால்ல பாத்துக்கலாம் என்று தோள் தட்டிக்கொடுக்கிற நம்பிக்கையும்தான் இவ்வகை குற்றங்களை தடுக்கும். ஏனெனில், என்னதான் கல்வி வந்தாலும் இன்னமும் இங்கே சாதி இருக்கிறது, மதவெறி இருக்கிறது, ஆணாதிக்கம் இருக்கிறது. அதற்கெல்லாம் மேல் இவ்வகை பாலியல் மனநோயாளிகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இருப்பார்கள்.

லக்ஷ்மி சரவணகுமார்:

இரண்டு வருடங்களுக்கு முன்னால் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்ந்து பொது இடங்களில் பெண்களின் மீது பாலியல் அத்துமீறல் செய்த வழக்கில் கைதானவர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றவாளியின் மனநிலையைப் புரிந்து கொள்கிறார்.அவரது தீர்ப்பில் இப்படி ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்.

‘பெண்கள் குறித்தான எந்தவித அடிப்படை புரிதல்களும் இல்லாமல் நீங்கள் வளர்க்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு குறைந்தபட்சம் பெண்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே சிக்கலாய் உள்ளது. பதினைந்து நாட்களுக்கு கொடைக்கானல் மதர் தெரஸா பெண்கள் கல்லூரி வளாகத்தில் அவர்களோடு தங்கி நன்னடத்தைக் கடிதம் பெற்று வரவேண்டுமென’’ இந்த வழக்கிற்கு பிறகு அந்த மனிதன் என்னவானார் என்பது தெரியாது. ஆனால், அந்த நீதிபதி குறிப்பிட்ட மிக முக்கியமான விஷயம் நீ பெண்கள் குறித்த எந்தவிதமான புரிதல்களும் இல்லாமல் வளர்க்கப்பட்டிருக்கிறாய். இது இந்தியச் சூழலில் 90 சதவிகித ஆண்களுக்கு பொருந்தும். ( என்னையும் சேர்த்து.)

இங்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு எல்லையில் தங்களின் யோக்கியத்தனத்தையும் அயோக்கியத்தனத்தையும் நிறுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் ஒரு குடும்பத்தின் தனிப்பெரும்பான்மை சொத்தாக பார்க்கப்படுவதிலிருந்து தான் அவர்களின் மீதான எல்லா வன்முறைகளும் துவங்குகிறது. அப்பாவுக்கு பணிந்து போகும் அம்மாவை அக்காவை தங்கைகளை பார்த்து வளரும் ஒருவன் பருவ வயதில் அப்பாவைப் போலவே மாறுகிறான். பெண்கள் தனது விருப்பங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் என்கிற மனோபாவம் மிகச் சிறிய வயதிலிருந்தே ஆண்களுக்கு ஆழமாக மனதில் ஊன்றி வளர்ந்து விடுகிறது. குடும்பத்தில் பொதுவெளியிலென எல்லா இடங்களிலும் ஆண் ஆணாகவே மாறிப்போவதற்கான முதல் காரணம் அவன் குடும்பம் அவனை சரியான புரிதல்களோடு வளர்ப்பதில்லை.

இந்த உலகமகா உத்தம ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள் . 24 மணிநேரமும் உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு ஃப்ரிட்ஜூக்குள் போய் கால்மடக்கி உட்கார்ந்து கொள்ள வேண்டுமா? வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடவேண்டுமா.

2005-ம் வருடத்தின் மாட்டுப் பொங்கல் நாள். அப்போது ஒரு மருத்துவமனையோடு சேர்ந்த என்.ஜி.ஓ. வில் வேலை செய்து கொண்டிருந்தேன். மாலை நேரம், ஆட்டோவில் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். நாற்பது வயதிருக்கும். இடைக்குக் கீழ் உடையெங்கும் குருதி. பாதி மயக்கநிலை. பதறியடித்து அவரைத் தூக்கிக் கொண்டு போய் சிகிச்சைக்கு அனுப்பினோம். விசாரித்த போது அவர் பாலியல் தொழிலாளி என்று தெரிந்தது. முந்தைய நாள் மாலை இரண்டு இளைஞர்கள் அவரை அழைத்துக் கொண்டு ஊருக்கு வெளியிலிருக்கும் கன்மாய்க்கு சென்றிருக்கிறார்கள். இவர்கள் உறவு கொள்ளும் போது பக்கத்து கிராமத்திலிருந்த ஆண்கள் கொஞ்சம் பேர் அங்கு வர இவர்கள் பயந்து அங்கிருந்து ஓடிவிட்டார்கள். அதன்பிறகு 16 பேர் சேர்ந்து தொடர்ந்து மாறி மாறி அந்தப் பெண்ணை பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கியுள்ளார்கள். இறுதியாக ஒருவன் முற்றிய போதையில் அந்தப் பெண்ணின் குறியில் க்ளிட்டை கடித்து துப்பியிருக்கிறான். கேட்கும் போது தலை சுற்றி மயக்கம் வந்தது.

தன்னை நம்பி வரும் ஒரு பெண்ணுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பைக் கூட தரமுடியாத அளவிற்கு முட்டாள்தனமும் கோழைத்தனமும் நிரம்பிய இவர்களைப் போன்று இன்னும் எத்தனை பேர். கூட்டாக சேர்ந்து பாலியல் வன்முறை செய்வது யதார்த்தமானது, அதுவொரு சுவையென இவர்களை எது நம்பச் செய்கிறது? பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வீடியோவை என்னால் முழுமையாய் பார்க்க முடியவில்லை. அந்தப் பெண்களின் அலறல் ஒன்றாய் நூறாய் ஆயிரமாய் எதிரொலிக்கிறது. தெரிந்த பழகிய ஒவ்வொரு பெண்களின் குரல்களும் அதன் பின்னால் இருப்பதான வேதனை மனமெங்கும் எழுந்தபடியே இருக்கிறது. பாலியல் ரீதியிலான வன்முறைக்கு இணங்க வைப்பதற்காக ஒரு இளம் பெண்ணை பெல்ட்டால் அடிப்பதும் அந்தப் பெண் அடிக்க வேண்டாமென கெஞ்சுவதும் இதெல்லாம் ஒரு சாதாரண மனிதன் செய்யக் கூடியதுதானா என்கிற அச்சத்தை உருவாக்குகிறது.

அதிலும் ‘உன்ன நம்பித்தானடா வந்தேன், லூசாடா நீ இப்டிலாம் பன்ற? ‘ என அந்தப் பெண் சொல்லும் நொடியில் வீடியோவை நிறுத்திவிட்டேன். அவள் அவனை எத்தனை நேசித்திருந்தால் இதை சொல்லி இருக்கக்கூடும். ஒரு மனிதன் தான் எதிர்கொள்ளும் எந்தப் பெண்ணையும் நேசிக்காமல் ஏமாற்றிக் கொண்டே இருக்கிறான் என்றால் பெண்கள் குறித்து வாழ்க்கை குறித்து அவனது புரிதல் தான் என்ன? இவர்கள் எப்படி தங்கள் வீட்டுப் பெண்களை தோழிகளை இயல்பாக பார்ப்பார்கள்? இந்தக் குற்றவாளிகளில் சாதாரண ஆட்களில் இருந்து பெரும் அரசியல்வாதிகள் வரை பட்டியல் நீண்டபடி இருப்பது ஒரு அதிர்ச்சியென்றால் அவர்கள் என்னென்ன காரியத்திற்கெல்லாம் இதை செய்திருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் நெருங்கி விசாரித்தால் அதைவிடவும் அதிர்ச்சியாக இருக்கிறது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒரு நண்பருடன் இது குறித்து பேசிக் கொண்டிருக்கையில் இந்த கேங் பொள்ளாச்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரின் மனைவியை இதேபோல் தங்கள் வலையில் வீழ்த்தி வீடியோவும் எடுத்து அதிலிருந்து மீள வேண்டுமானால் எண்பது லட்ச ரூபாய் தர வேண்டுமென மிரட்டி வாங்கி இருக்கிறார்கள். இதுவெறும் சாம்பிள்தான். இதுபோல் ஏராளமான ப்ளாக் மெயில்கள் ஒருபுறமென்றால் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்குவது இன்னொரு வகை. இதில் ஆளுங்கட்சியின் பல முக்கியஸ்தர்களும் அடக்கம்.

பெண்களை இத்தனை துட்சமாக நினைக்கும் ஒரு கட்சி மாநிலத்தை ஆண்டால் மயிரா விளங்கும்? கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள், மாணவிகள் குடும்பப் பெண்கள் என இவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை. இத்தனையாண்டு காலம் யாரிடமும் மாட்டிக் கொள்ளாமல் இவர்களால் இதை செய்ய முடிந்திருக்கிறதென்றால் இவர்களுக்குப் பின்னால் இருந்து யாரோ பலமாக சப்போர்ட் செய்கிறார்கள் என்பதுதான் தெளிவாக விளங்குகிறது.

ஒரு சமூகத்தில் குடும்பம் அரசு யாவும் பெண்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருப்பதை முற்றிய மனநோய் என்று சொல்வதா? கூட்டு வன்முறை என்று சொல்வதா?

ஒரு சமூகத்தில் குடும்பம் அரசு யாவும் பெண்கள் குறித்த புரிதல்கள் இல்லாமல் இருப்பதை முற்றிய மனநோய் என்று சொல்வதா? கூட்டு வன்முறை என்று சொல்வதா? இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனைகள் என்ன? அல்லது எப்போது இவர்களுக்கான நீதி கிடைக்கும்? தனக்கு உடமையில்லாத ஒரு பெண்ணின் உடல் மீது எல்லாவிதமான வன்முறைகளையும் செய்துவிட்டு அதுகுறித்து எந்தவிதமான குற்றவுணர்வுகளுமில்லாமல் அலையும் இவர்களோடு சேர்ந்த ஒவ்வொருவரையுமே நாம் சந்தேகிக்கத்தானே வேண்டும்.

பரஸ்பரம் புரிந்துணர்வுடன் நடக்கும் ஒவ்வொரு காதலின் மீதும் உடல் உறவுகள் மீதும் சந்தேகங்களையும் அவருவருப்புகளையும் இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். இரண்டு பேர் பொதுவெளியில் நேசத்தோடு இருப்பதை பார்க்க முடியாதளவிற்கு சூழலை மாற்றிப் போட்டிருக்கிறார்கள். மாலை அயலகத்திலிருந்து அழைத்த நண்பர் ஒருவர் ஏன் உங்கள் தேசத்தில் மனிதர்கள் இத்தனை மனச்சிக்கல் கொண்டவர்களாய் இருக்கிறார்களென வருத்தப்பட்டார். இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பில் அவர் மருத்துவமனை சென்று வந்திருக்கிறார்.

300-க்கும் மேற்பட்ட பெண்கள் என பத்திரிக்கைகள் சாதாரணமாக சொல்லும் போது நமக்குத் தெரிந்த நம்மோடு இருக்கும் பெண்கள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்கிற நம்பிக்கைகள் எல்லாம் உடைந்து நொறுங்குகிறது. பாலியல் குற்றங்களை புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நம்மோடு இயல்பாக பழகும் இவர்கள் எல்லோருக்கும் சகிக்கமுடியாத இன்னொரு பக்கமுண்டு. பெண்களை இத்தனை இழிவாக நடத்தக்கூடிய இவர்களால் எந்தக் குற்றங்களையும் எளிதாக செய்ய முடியும்.

பாலியல் குற்றங்களை புரிகிற ஆண்கள் தனியாக எங்கிருந்தோ வருகிறவர்கள் அல்ல, நம்வீட்டில் நம் தெருவில் நமக்குத் தெரிந்தவர்களில் இருந்துதான் உருவாகிறார்கள். நம்மோடு இயல்பாக பழகும் இவர்கள் எல்லோருக்கும் சகிக்கமுடியாத இன்னொரு பக்கமுண்டு.

நேசத்தை தேடி வந்த ஒரு பெண்ணை கூட்டு பாலியல் வன்முறை செய்து அடித்து துன்புறுத்துகிறவனை முதலில் மனிதன் என்று சொல்வது சரியா? எதிர்பாலினத்தின் மீதான பாலியல் இச்சை, காதல் இதுவெல்லாம் இயல்பான விஷயங்கள். இவை எந்தப் புள்ளியில் சாடிஸமாக மாறுகிறது. ஆயிரத்தில் ஒன்றல்ல, இலட்சத்தில் ஒரு முறைதான் பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. பல வழக்குகள் என்னவாகின்றன என்பதே தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் வரிசையில் நாம் முதலாவதாக இருக்கிறோம் என்று பெருமையொடு சொல்லிக் கொள்ளலாம்.

நீங்கள் எதிர்கொள்ளும் பத்தில் நான்கு பெண்கள் ஏதோவொரு சமயம் பாலியல் அத்துமீறலை எதிர்கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனம். எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்று கூடி இந்தப் பிரச்சனையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவும் போராட வேண்டும். ஏனெனில், இந்த பிரச்சனை நம் குடும்ப அமைப்புகளின் அடிப்படியை சிதைக்கக் கூடியதொன்று. பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகள் கடுமையாக்கப்படுவதோடு அவை விரைவாக விசாரிக்கப்பட்டு நீதி வழங்குவதற்கான வழிகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் குடுப்பதைப் போலவே, சிறு வயதிலிருந்தே பெண்களுடனான நட்பு அவர்களைப் புரிந்து கொள்வது குறித்து சரியான முறையில் கற்றுக் கொடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். இந்த அநீதிகளுக்குப் பின்னாலிருக்கும் ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்றால் இடைவிடாத போராட்டம் மட்டுமே ஒரே தீர்வு.

ராஜசங்கீதன்:

பெண்ணை குடும்பத்தின் சொத்தாக நினைக்கும் நிலப்பிரபுத்துவ முறையும் நுகரும் பண்டமாக ஆக்கும் கார்ப்பரேட் மூலதனமும் ஒன்றிணைந்திருக்கும் காலத்தில் பெண் இன்னுமே அதிக ஒடுக்குமுறைக்கும் பிற்போக்குக்கும் ஆளாகிறாள்.

உயிரியல் ரீதியாக எழும் விருப்பங்களின் பின் பின்னப்படுகிற குடும்பத்தின் கவுரவமும் கார்ப்பரேட்டின் சுதந்திரக் கனவும் அவளுக்கான சுமைகளை அதிகமாக்குகிறது.

‘என்னை விட்டுடுங்க’ என ஒரு பெண் கதறும் சம்பவத்தின் மறுமுனையில் ‘என் மகன் நல்லவன்’ என கதறும் தாயும் நிற்கிறாள். ஒரு இழி சம்பவத்தின் இரு முனைகளிலும் பெண்ணையே கையறுநிலையில் நிற்க வைத்து வேடிக்கை பார்க்கிறது ஆண் கட்டிய சமூகம்.

பெண்ணின் உண்மையான விடுதலை குடும்பத்திலிருந்தும் நுகர்வு உற்பத்தியிலும் இருந்துதான் தொடங்குகிறது. ஆண் கட்டிய அதிகாரத்தை மறுப்பதிலிருந்துதான் தொடங்குகிறது.

அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக பேட்டி கொடுக்கும் எஸ்பி விசாரணை தொடங்கும் முன்னமே அரசியல் தொடர்பு இல்லை என அறிவிக்கும் அளவுக்கு தீர்க்கதரிசனம் கொண்டிருக்கிறார். எந்தெந்த அதிகார மட்டங்களுக்கு இந்த கோரம் நீண்டிருக்கிறது என அறியப்பட வேண்டும். மொத்தமாக இந்த அதிகார அமைப்பு கவிழ வேண்டும். கோவையின் மீசை முறுக்குகளின் கவுரவத்தை அம்பலம் ஏற்றப்பட வேண்டும்.

பெண்ணுரிமை மற்றும் விடுதலையில் அரசின் பங்கை கட்டாயமாக்க வலியுறுத்துவோம். இச்சம்பவம் சமூகத்தின் இழிவு எனில், இந்த இழிவில் பங்கெடுத்திருக்கும் ஆளும் அரசை பொறுப்பேற்க வைப்போம்.

பெண்ணின் விடுதலையே சமூக விடுதலை. ஆண், பெண் சமத்துவமே சமூகத்தின் சமத்துவம். ஆகவே வா. திரளுவோம்.

சுசிலா:

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிர்ச்சிதரும் பல தகவல்கள் வருகின்றன. இதுல என்ன கொடுமையென்றால், 2 ஆண்டுகளுக்கு முன்பே இதைப்பற்றி புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் காவல்துறை இதனை அலட்சியமாக உதாசீனப்படுத்தியிருக்கிறது. இதை அப்போதே பரிசீலினை செய்து, விசாரிக்கப்பட்டிருந்தால், கடந்த இரண்டு ஆண்டுகள் நடந்த குற்றங்களையாவது தடுத்திருக்க முடியும். இது உண்மையில் அலட்சியமா அல்லது யாரை காப்பாற்ற அரசு மூடிமறைத்திருக்கிறது என்ற உண்மை வெளிவரவேண்டும். அரசியல் பிரமுகர்கள், பெரும்புள்ளிகள் என பலர் இதில் தொடர்புடையவர்களாக இருப்பார்கள் போல… அதனால் தான் இப்போதும் புகார் கொடுத்த உடனே, நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தியுள்ளனர். புகார்கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கியுள்ளனர். புகார்கொடுத்தவர் பெயரை வெளியில் தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இவர்கள் எப்படி நம்பி போனார்கள்’ என்ற கேள்வியை தயவுசெய்து முன்வைக்காதீர்கள்.’ நம்பிவந்த பெண்ணை இப்படி சீரழித்திருக்கிறார்களே ‘ என்ற கேள்வியை முன்வையுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் கொஞ்சமாவது சிந்திப்பார்கள்!

இப்போது என்னவென்றால், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாகவும், தேர்தல் சமயம் என்பதாலும், இந்த நால்வரை குண்டர்சட்டத்தில் அவசரம் அவசரமாக, போட்டிருக்கிறது. மேலும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட சிலமணி நேரங்களிலேயே, சிபிஐ க்கு பரிந்துரைத்திருக்கிறது தமிழக அரசு.!

ஆனால், விசாரணை நேர்மையாக நடந்தால் மட்டுமே உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. பாதிக்கபட்டபெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், மீண்டும் இதுபோல் கொடூரக்குற்றங்கள் நடைபெறாவண்ணம் தடுக்கப்படவேண்டும்.!

கடைசியாக, சில ஆண்களுக்கும், பெண்களுக்கும், பெற்றோர்களுக்கும் :

இந்த பெண்கள் மீதும் தவறு இருக்கிறது. இவர்கள் எப்படி நம்பி போனார்கள்’ என்ற கேள்வியை தயவுசெய்து முன்வைக்காதீர்கள்.’ நம்பிவந்த பெண்ணை இப்படி சீரழித்திருக்கிறார்களே ‘ என்ற கேள்வியை முன்வையுங்கள். அப்போது தான் உங்கள் வீட்டு ஆண்பிள்ளைகள் கொஞ்சமாவது சிந்திப்பார்கள்!

இரா. முருகவேள்:

பொள்ளாச்சியில் நடந்திருப்பது ஒரு குற்றச் செயல். ஒரு குற்றக் கும்பல் தங்களது கேளிக்கைக்காகவும், அதிகாரம் படைத்தவர்களின் நுகர்வுக்காகவும், மிரட்டிப் பணம் பறிக்கவும் பெண்களைக் கொடூரமாக வதைத்து வந்திருக்கிறது.

இந்த அயோக்கியர்களோடு, விடுதிகளை நடத்துபவர்கள், தரகர்கள் என்று ஒரு வலைப்பின்னல் இதில் இயங்குகிறது. பொள்ளாச்சியில் இத்தகைய கும்பல்கள் எப்போதுமே இருந்து வந்துள்ளன என்று தோழரும் வழக்குரைஞருமான இளங்கோவன் கூறுகிறார்.

தமிழகம் முழுவதும் உள்ள இத்தகைய கும்பல்களைப் பிடிப்பதும் இக் கொடுமைக்கு முடிவுகட்டுவதுமே சமூகத்தின் முன்னுள்ள கடமை. சமூக வலைத்தளங்களில் மக்கள் வெளிப்படுத்திய கோபமே இந்த வழக்கை ஊற்றி மூட இருந்த அரசைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஒட்டு மொத்த ஆண் சமூகமும் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும்; எல்லோருக்கும் இதில் பொறுப்பு உண்டு; எல்லா ஆண்களும் குற்றவாளிகள் தான் என்பது போன்ற பதிவுகள் இணைந்து நிற்க வேண்டியவர்களை விலகிப் போகச் செய்யும்.

பெண்ணியம், பெண்விடுதலை என்பவை குறித்து எந்தவிதமான கருத்தும் இல்லாத, ஒருவர் கூட இந்த நிகழ்வுகளால் சீற்றம் கொண்டு போராட முன்வந்தால் அவரையும் இணைத்துக் கொள்ள வேண்டுமே தவிர சங்கடமான கேள்விகள் எழுப்புவது திரண்டு வரும் மக்கள் சக்தியை பலவீனப்படுத்தவே செய்யும்.

சாத்தியமான அனைவரையும் இணைப்பதும், எதிரிகளைத் தவிர மற்ற அனைவரும் நண்பர்கள் என்பதுமே ஐய்க்கிய முன்னணி தந்திரம். அதுவே மக்கள் விரோதிகளைத் தனிமைப்படுத்தும்.

கொடுங்குற்றவாளிகளைத் தண்டிப்பதும் தடுத்து நிறுத்துவதுமே இப்போதுள்ள பணி. ஆண் – பெண் உறவுகளில் சமத்துவமும் முழுமையான ஜனநாயகமும் எந்த ஒரு நல்ல சமூகத்துக்கும் முக்கியமான இலட்சியமாகும். இரண்டும் ஒரு நீண்ட நெடிய பாதையில் அடுத்தடுத்த கட்டங்கள். ஒன்றிற்காக ஒன்றைப் புறக்கணிக்க முடியாது.

இளங்கோ கிருஷ்ணன்:

“நான் எதுக்கு வெட்கப்படணும்; நீங்கதான் வெட்கப்படணும்… என் மகன் நிரபராதி” என்று பொங்குகிறார் திருநாவுக்கரசின் தாய். உடனே ஆவேசமாக அவரைத் திட்டித் தீர்க்கிறார்கள் இங்கே. மறுபுறம் புனிதமான தாய் பாசம் அதைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்கிறார்கள் வேறு சிலர். நம் சமூகம் இதற்கு மேல் சீழ்பிடித்து நாற முடியாது.

அந்தத் தாய் செய்தது எவ்வகையிலும் ஏற்புடையது இல்லை நமக்கு. ஆனால், வேறு எப்படி அவர் நடப்பார். என் மகன் குற்றவாளி எனக் கூனிக்குறுகி அழுவார் என்று நினைத்தீர்களா? அதெல்லாம் நமது சினிமாக்களிலும் நாவல்களிலுமே சாத்தியம். நடைமுறையில் பெரும்பாலான தாய்மார்கள் இங்கு இப்படித்தான். ஜெயிலுக்குள் இருக்கும் மகனுக்கு பீடிக்கட்டு கொடுத்துவிடுவதெல்லாம் இங்கு சர்வ சாதாரணம்.

அவளுக எதுக்கு வந்தாங்க என்று நேற்று சில மேதைகள் கேட்டன அல்லவா? அதையேதான் தாய் மனமும் கேட்கும். நம் சமூகத்தின் குரூரமான எதார்த்தம் இது. தாய் என்று இல்லை. அந்தக் குற்றவாளி குடும்பத்தினர் அனைவரின் மனநிலையுமே இதுவாய் இருந்தாலும் நாம் வியக்க ஒன்றும் இல்லை. அவ்வளவு சமூக சுரணையற்று வாழப் பழகிவிட்டன நம் குடும்பங்கள்.

குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். குடும்பமும் தனி மனிதனுக்காக எதையும் செய்யும் எனும் ஏற்பாட்டில் சமூகம் என்பதன் விழுமியங்கள் எல்லாம் பொய்த்துவிடும்.

அறமார்ந்த விழுமியங்களை போதித்து தம் பிள்ளைகளை வளர்க்கும் குடும்பங்களும் இருக்கவே இருக்கின்றன. ஆனால், ஒரு பிரச்சனை என்று வந்தால் அந்தக் குடும்பம் நீதியின் பக்கம் நிற்பது என்பது எல்லாம் அரிதான குணங்களாகிவிட்டன. எப்படியாவது தன் குடும்ப உறுப்பினரைக் காத்தால் போதும் என்றே பெரும்பாலான குடும்பங்கள் நினைக்கின்றன.

சமூகம் x குடும்பம் என்று இரு எதிர்வுகள். இதற்கு இடையிலான உறவுகளை எப்படி சிவிக் முதிர்ச்சியோடு கையாள வேண்டும் என்பதை எல்லாம் நாம் போதுமான அளவு வளர்க்கத் தவறிவிட்டோம். தனி மனிதர்களை, குடும்பங்களோடு இணைத்து, குடும்பத்தை சாதியோடு இணைத்து, அவற்றை மதங்களோடு இணைத்து குடும்பம் என்ற அமைப்பையே சீர்குலைத்து வைத்திருக்கிறோம்.

சமூகம் என்பது குடும்பத்திலிருந்து ஒருவன் கிளம்பிப் போய் வேட்டையாடி வருவது. குடும்பத்தால் வென்றெடுக்கப்பட வேண்டியது என்ற மனநிலையை ஆழமாக வளர்த்துக்கொண்டுள்ளோம்.

குடும்பம் என்பதன் விரிவான வடிவமே சமூகம். சமூகத்தின் மீச்சிறு அலகே குடும்பம் என்பதை எல்லாம் உணர்வுப்பூர்வமாய் நாம் புரிந்ததே இல்லை.

படிக்க:
பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

திருநாவுக்கரசின் தந்தை ஒரு லேவாதேவித் தொழில் செய்பவராம். இன்னொரு குடும்பத்திடமிருந்து அராஜகமாய் அடித்துப் பிடிங்கி வட்டிக் காசை கொண்டு வந்து தரும் கணவனிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல் அதை வாங்கி பீரோவில் வைத்துப் பூட்டும் ஒரு மனைவிக்கு சக குடும்பம் பற்றி என்ன உணர்வு இருக்கும்.

இன்னொரு குடும்பத்தின் உணவுத்தட்டிலிருந்து தன்னுடைய செல்வத்தைத் திரட்டிக்கொண்டு வெற்றியுடன் வீடு திரும்பும் குடும்பத் தலைவனுக்குத்தான் என்ன விழுமியம் இருக்க முடியும். அதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை என ஆதங்கப்பட…

குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம். குடும்பமும் தனி மனிதனுக்காக எதையும் செய்யும் எனும் ஏற்பாட்டில் சமூகம் என்பதன் விழுமியங்கள் எல்லாம் பொய்த்துவிடும்.

வி. சபேசன்:

முன்னர் தமிழ்ச் சினிமாக்களில் ஒரு ரவுடிக் கதாநாயகன் மீது கதாநாயகிக்கு நல்லெண்ணம் வர வேண்டும் என்பதற்காக ஒரு வசனத்தை வைப்பார்கள். ‘விபச்சாரியைக் கூட அனுமதி இல்லாமல் நான் தொட மாட்டேன்’ என்று கதாநாயகன் வசனம் பேசுவான். இதைக் கேட்டதுமே கதாநாயகிக்கு அவன் மீது காதல் வந்து விடும்.

ரஜினிகாந்த் நடித்த ‘தங்க மகன்’ படத்தில் ஒரு காட்சி வரும். பூர்ணிமா ரஜினிகாந்தை கேலி செய்து பாட்டுப் பாடுவார். ‘ஆம்பிளையோ இவன் சோதிக்க வேணும்’ என்று வரி வருகின்ற போது ரஜினிகாந்த் கொதித்து எழுவார். பூர்ணிமாவை வன்புணருவதற்காக துரத்துவார். புதைகுழியில் ரஜினிகாந்த் விழுந்து விட, பூர்ணிமா அவரைக் காப்பாற்றி, தன்னை வன்புணரத் துரத்தியது நியாயம்தான் என்றும் சொல்லி, ரஜினி மீது காதல் வசப்படவும் செய்வார்.

ஒரு பெண்ணுக்கு காதலையும் காமத்தையும் தேடவும், நாடவும் முற்று முழுதான உரிமை இருக்கிறது. இந்தத் தேடல்கள் அவளிடம் அத்துமீறுகின்ற உரிமையை ஆணுக்கு வழங்கி விடாது.

இப்பொழுதெல்லாம் மேற்படியான வசனங்களோ, அல்லது காட்சிகளோ தமிழ்ச் சினிமாவில் வருவது இல்லை. பெண்ணுக்கு அவளுடைய உடல் சார்ந்து இருக்கின்ற உரிமை பற்றிய சிந்தனை தமிழ் சமூகத்தில் வளர்ந்திருப்பதே அதற்குக் காரணம் என்று நம்பியிருந்தேன்.

ஆனால், பொள்ளாச்சி சம்பவத்திற்கு பெண்களை குற்றஞ்சாட்டுபவர்களும் பரவலாக இருப்பதைப் பார்க்கின்ற போது, இந்தக் கூமுட்டைகள் இன்னும் திருந்தவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

ஒரு பெண்ணுக்கு காதலையும் காமத்தையும் தேடவும், நாடவும் முற்று முழுதான உரிமை இருக்கிறது. இந்தத் தேடல்கள் அவளிடம் அத்துமீறுகின்ற உரிமையை ஆணுக்கு வழங்கி விடாது. அவளுடைய உடல் மீதான முழு உரிமையையும் அவளே கொண்டிருக்கிறாள்.

காதல், காமம், நட்பு, ஈர்ப்பு என்று ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு பெண் ஒரு ஆணுடன் பொது இடத்திலோ, தனியிடத்திலோ சந்திப்பது அவளுடைய உரிமை.

பெண்ணுக்கு உள்ள இந்த உரிமைகளை சமூகம் ஏற்கின்ற போதுதான் பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் குறையும். இந்த உரிமைகளை சமூகம் ஏற்கவில்லை என்பதையே பொள்ளாச்சியின் குற்றவாளிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி, பெண்களை தொடர்ந்தும் மிரட்டி பணிய வைக்கின்றார்கள். பெண்கள் பணிந்து போகின்றார்கள். அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீது குற்றம் சாட்டுபவர்கள் அந்த பெண்களை வன்கொடுமை செய்தவர்களுக்கும், செய்பவர்களுக்கும் துணை நிற்கின்ற குற்றத்தை செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

கிருஷ்ண பிரபு:

துயர் நடுவில்…

சக மனிதர்களை உடலளவிலோ மனதளவிலோ காயப்படுத்தியும் கட்டாயப்படுத்தியும் காரியம் சாதித்தல் அரக்கக் குணத்திற்கு ஒப்பானது. நாம் முகமூடி அணிந்த மனிதர்களுடன்தான் உறவாடுகிறோம்.

பத்திரிகை, சினிமா, இலக்கியம், நுண்கலைகள் என எல்லா இடத்திலும் அத்துமீறல்கள் இருக்கிறது.

பாலியல் இன்பம் என்பது விருப்பத்துடன் சேர்த்து சம்மதத்தையும் கோரி நிற்பது. அதை அதிகாரப் படிநிலை கொண்டு அபகரிக்க நினைப்பதும் மிரட்டுவதும்தான் பிரச்சனையாகிறது. பொள்ளாட்சி சம்பவம் #MeToo குரல்களின் நீட்சி.

200 பெண்களின் 1500 ஆபாசக் காணொளிகள் என்பது மிரள வைக்கும் செய்தியாக இருக்கிறது. இந்த ஏழு ஆண்டுகளில் அதில் எத்தனை எத்தனைக் காணொளி வீடியோக்கள் நம் வாட்ஸ் ஆப் குழுமங்களில் வந்து போனதோ, தெரியவில்லை.

எந்த விதப் பயிற்சியும் மேற்பார்வையும் பாதுகாப்பும் முதிர்ச்சியும் அளிக்காமல்தான் நாம் ஒரு தலைமுறைக்கே டிஜிட்டல் ஆயுதத்தைக் கைகளில் திணித்திருக்கிறோம்.

கைமீறிப் போகும் விஷயங்களைக் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கைதான் பார்க்க முடிகிறது. பொள்ளாட்சி சம்பவம் பெருந்துயர்.

தொகுப்பு:

நவீன மருத்துவம் எப்படி சரியானது ? | மருத்துவர் அர்சத் அகமத்

எது மருத்துவம் ?

வீன மருத்துவம் (Modern Medicine) எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதை விளக்கும்  இரு படங்கள். முதலாவது படம் 1962-ம் ஆண்டு ஒரு ‘சிறு பிள்ளை வைத்திய’ நிபுணரினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள மருந்துச் சிட்டினது பிரதி.

இரண்டாவது படம் குறை மாதத்தில் அதாவது கருத்தரித்து 26 வாரங்களில் (6 மாத குறைப்பிரசவம்) பிறந்த முதிராச் சிசுவின் பிறந்த நிலைத் தோற்றத்தையும், நான்கு மாதங்கள் பூர்த்தியான இன்றைய தோற்றத்தையும் காட்டி நிற்கின்றது.

இவை இரண்டிற்கும் என்ன சம்பந்தம்  என்று நீங்கள் யோசிப்பது வாஸ்தவம்தான். கடந்த  ஐம்பது ஆண்டுகளில் மருத்துவத்துறை கண்ட வளர்ச்சியின் அளவை இதை விட தெளிவாக கட்டுரையிலும் சொல்ல முடியாது. இற்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன் குறை மாதத்தில் அபார்ஸன் ஆகி விட்டது, உயிர் வாழ முடியாதது என்று  குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அல்லது குழியிலே போடப்பட்ட குழந்தைகள்  எல்லாம் இன்றைய  நவீன மருத்துவ விஞ்ஞானத்தின்  உதவியினால்  நன்றாக பராமரிக்கப்பட்டு கண்ணாடிப் பெட்டியிலிருந்து  (incubator)   நல்ல வளர்ச்சி  அடைந்த குழந்தைகளாக  வெளியேறி வருகின்றன.

நவீன மருத்துவம் கூடாது,  இயற்கை வழி, பாட்டி வழி வைத்தியம் மட்டுமே ஆரோக்கியமானது என்று  நம்பியிருந்திருந்தால் இந்தக் குழந்தையும் இன்று இயற்கை எய்தி, உக்கி நல்ல சேதன உரமாக மாறியிருக்கும். இக் குழந்தையின் தாயும் பிள்ளை  இல்லாத மலடி என்ற வசைச் சொல்லோடு செத்துத் செத்து வாழ்ந்து கொண்டிருப்பாள்.  அது போல நானும்  எனது தந்தை வழி பரம்பரைத் தொழிலான யூனானி வைத்தியத்தையும், அந்த தேன்பாணியையும், அந்த எலுமிச்சை சாற்றையும்  இன்றும் மருந்தாக கொடுத்துக் கொண்டிருந்திருப்பேனோ தெரியாது. (இதைத் தான் அன்றைய சிறு பிள்ளை நிபுணரும் கொடுத்திருக்கிறார். படம் 1-ஐ பார்க்க)

படிக்க:
ஏழைத்தாயின் மகன் # 2 – நீரவ் மோடியின் லண்டன் ‘அகதி’ வாழ்க்கை !
♦ அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

இன்றைய நவீன மருத்துவமும்  அடிப்படையில் ஆயுர்வேத, யூனானி, அக்குபஞ்சர் போன்ற மற்றைய  எல்லா மருத்துவ முறைகள் போலவும் அதே இயற்கை மருந்துகளான இலை, குழைகளை, மரச்சாறுகளை, தேன் போன்ற பாணிகளை அடிப்படையாக கொண்டவை தான். ஆனால்  கால ஓட்டத்தில் அது மற்றைய எல்லா மருத்துவ முறைகளை விடவும் முன்னணி பெற்றுள்ளமைக்கு இரண்டு அம்சங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆராய்ச்சியும் தேடலும் (Research and Development) அதோனோடிணைந்த  விஞ்ஞானபூர்வ வைத்திய முறைமைகளும் (Evidence Based Treatment) தான் அந்த முதலாவது முக்கிய அம்சம். இன்றைய  இந்த நவீன மருத்துவத்துவத்துறையை மற்றைய எல்லா மருத்துவ முறைகளை விடவும் மிகப்பெரிய அளவில் முன்னேறியதாக வளர்த்து எடுத்திருக்கின்ற மிக முக்கியமான காரணியும்  இதுவாகத்தான் இருக்கிறது.

இந்த ஒரு இயல்புதான் இந்த மருத்துவத்தின் தனிச்சிறப்பாகவும் காணப்படுகிறது.  இதனால் இந்த மருத்துவத்தில் யாரும் எதையும் கண்டபடி அடித்து விட முடியாது. வாயில் வருவதையும், பேப்பரில் வாசிப்பதையும், பேஸ்புக்கில் வருவதையும் எவரும் மருத்துவம் என்று இங்கே செய்து விட முடியாது. நவீன மருத்துவத்தில் மருந்து  அல்லது மருத்துவம் என்று சொல்லப்படுகின்ற, செய்யப்பட்டுகின்ற ஒவ்வொரு வைத்திய முறைகளும், Treatmentகளும்  கண்டிப்பாக  உரிய  ஆய்வுத் தராதரங்களை கொண்டிருக்க வேண்டும்(Research  Evidence).

அது போலவே அந்த வைத்திய முறை அந்த நோய்களைப் சுகப்படுத்தியதற்கான சான்றுகளையும் நிரூபிக்க வேண்டும்  (Evidence Based). இவை இரண்டையும்  எந்த மருத்துவ முறை கொண்டிருந்தாலும் அதை நவீன மருத்துவம் இரு கரம் நீட்டி வரவேற்கும்,  உச்சி முகர்ந்து ஏற்றுக் கொள்ளும், தலையில் வைத்துக் கொண்டாடும்.

இது கீழைத்தேச நடைமுறை, இது திப்புன் நபவி, இது ரிஷிகளின் வழக்கம்  என்று ஒதுக்கும், வேறுபாடுகள் காட்டும் தன்மை இங்கே கிடையாது. அது போலவே மேற் சொன்ன இரு நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யாத  எந்த மருத்துவ முறையும்  இங்கே நிராகரிக்கப்படும், அது மேற்கத்தேய முறையாக இருப்பினும் சரியே. இந்த ஒரு அடிப்படைதான் இந்த மருத்துவத்தின்  வெற்றிக்கான ஆதாரமாக விளங்குகிறது.

உதாரணத்திற்கு சொல்வதானால் “பப்பாளிச் சாறு குடித்தால் டெங்கு சுகப்படும்” என்ற  இந்த ஸோ கால்ட் “மருத்துவ  ஆலோசனை” பட்டி தொட்டியெல்லாம் மிகப்பிரபலமான ஒன்று. இப்பொழுது இது ஏற்றுக் கொள்ளப்படும் மருத்துவ முறைதானா என்பதை சோதித்தறிய மேற்ச்சொன்ன இரு நிபந்தனைகளையும் இது பூர்த்தி செய்கிறதா என்று பார்த்தாலே போதும், உண்மை விளங்கி விடும். இந்த  அடிப்படை அளவு கோலை எந்த மருத்துவமுறையிலும் உரை கல்லாக பாவித்தால் நிறைய மருத்துவம் சார்ந்த போலிகளின் சாயம் வெளுத்துவிடும்.

இன்றைய நவீன மருத்துவத்தின் வெற்றிக்கான இரண்டாவது மிகப் பெரிய அம்சம்  நோய்க்காரணிகளை இனம்கண்டு மருத்துவம் செய்தல். அதற்காக வேண்டி பொறியியல், பௌதீகவியல், இரசாயனவியல், கணிதவியல், தொழில்நுட்பவியல், சமூகவியல் போன்ற இன்னும் பல துறைகளிலும் உள்ள உள்ளீடுகளை, கண்டுபிடிப்புகளை இந்த மருத்துவ துறைக்குள் அனுமதித்து மருத்துவத்தின் ஒரு பகுதியாக  அதை ஏற்றுக்கொண்டிருத்தல். இந்த  இயல்பு மற்றைய மருத்துவ துறைகளில் இல்லாமை தான் இந்த  நவீன மருத்துவத்தின் வியாபித்த வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது. இந்தப் பல் துறை உள்ளீடுகள்  நோய் நிலைகளை துல்லியமாக இனம் காணவும், அதனை மிகச் சிறப்பாக தீர்க்கவும் மிகப் பெரும் உதவிகளை செய்து வருகின்றன.

படிக்க:
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ பாஜகவின் மத வெறிப் பிரச்சாரத்தில் மண்ணள்ளிப் போட்ட சர்ஃப் எக்செல் விளம்பரம் !

மாற்று மருத்துவங்களான ஆயுர்வேதா, யூனானி, சித்தா, ஹோமியோபதி போன்ற  எல்லாமே ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன் கொடி கட்டிப் பறந்த மருத்துவ முறைகள்தான் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. உரிய ஆய்வுகள், ஆராய்ச்சிகள், முறையான கற்பித்தல்கள் இல்லாத காரணத்தினால்  இவைகள் வழக்கொழிந்து வருகின்றன என்பது ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய உண்மை.

எனினும்  இந்த எல்லா மருத்துவ  முறைகளின் அடிப்படையிலிருந்து வளர்ந்த  இன்றைய நவீன மருத்துவம் அதிலுள்ளவர்களின் விஞ்ஞான பூர்வமான தேடல்களாலும், ஆய்வுகளாலும் இன்னும் இன்னும் வளர்ந்து வருகின்றன ஒரு பேரரசாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்தப் பேரரசுக்குள் சில பண முதலைகளும், மருத்துவ மாஃபியாக்களும் தங்களது வியாபாரத்தை விருத்தி செய்யும் வழி வகைகளைத் தேடி  அலைந்து கொண்டிருக்கின்றன என்ற யதார்த்தத்தையும் நாம்  உணர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது  என்பதுதான், இதன் மற்றைய பக்கத்தில் உள்ள கசப்பான உண்மையாக இருக்கிறது.

மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL)
Senior Registrar in Peadiatrics, 
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka

எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா ? பெண்களைக் குறை சொல்லும் சமூகம் !

“புள்ளைகளுக்கு அறிவில்லையா? படிக்கிற புள்ளைகதானே? எவனோ கூப்புட்டா கார்ல ஏறிடறதா?

இதுக்குதான் புள்ளைகளுக்கு செல்போனே குடுக்கக்கூடாது. எல்லாம் இந்த செல்போன், வாட்ஸ்அப், பேஸ்புக்கால வந்ததுதான்.

அப்பா – அம்மாக்கு புத்தியில்ல? புள்ளைக என்ன செய்யுது, எங்க போகுது வருது, புள்ளைககிட்டே என்ன மாதிரி மாற்றம் தெரியுதுன்னு கவனிக்க வேணாமா?

இதுக்குத்தான் புள்ளைகளை காலாகாலத்துல கட்டிக் குடுத்துடணும்கிறது. சும்மா சுதந்திரம் அது இதுன்னு பேசறதைவிட, படிப்புக்குச் செலவு செய்யற காசுல கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டுப்போலாம்.”

ப்ளா… ப்ளா… வாதங்களுடன் உபதேசங்கள் நிறையவே வரும். இவ்வளவு உபதேசங்களும் சொல்கிற யாரையும் பாருங்கள் – ஆண் பிள்ளைகளை உருப்படியாக வளர்க்க வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள்.

இதுபோன்ற குற்றச் செயல்களில் விக்டிம்களுக்குத்தான் உபதேசங்கள் குவியும். போகட்டும்…

செல்போனைக் கொடுக்கும்போதே செல்போனை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுக்க வேண்டியதுதான். குட் டச் – பேட் டச் மாதிரி சமூக வலைதளங்கள் குறித்தும் எச்சரிக்க வேண்டியதுதான். பெற்றோராக பிள்ளைகளை கவனிக்கவும் வேண்டியதுதான்.

விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், குழு உரையாடல்கள் நடத்துங்கள். பாலியல் கல்வி கொடுங்கள். இவை எல்லாம் எப்போதும் செய்ய வேண்டிய விஷயங்கள்தான் செய்யுங்கள்.

ஆனால் இப்போது பேச வேண்டியது – அந்தக் கொடூரக் குற்றவாளிகளை கூண்டோடு மொத்தமாகக் கைது செய்ய வேண்டும், ஆளும்கட்சிக்காரன் என்பதற்காக காவல்துறை மழுப்பல் வேலையில் ஈடுபடாமல் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டும். வெட்கம்கெட்ட அரசாங்கத்தையும், இதைப்பற்றி கண்டுகொள்ளாமல் கள்ளமவுனம் சாதிக்கும் ஊடகங்களையும் உரித்துத் தொங்க விட வேண்டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்தி கடும் தண்டனைகளை வாங்கித்தர வேண்டும்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
நுகர்வு வெறி ஏவிவிடும் பாலியல் வன்கொடுமை

ஏனென்றால், இது வெறும் பாலியல் குற்றம் மட்டுமல்ல. காலம் காலமாக நிலவிவரும் சமூக வழக்கங்களிலிருந்தும் தளைகளிலிருந்தும் விடுபட்டு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக எழுந்து நிற்க முயன்று கொண்டிருக்கும் பெண் சமூகத்தை, மேலே குறிப்பிட்ட வாதங்களால் மீண்டும் பழைய குழிக்குள்ளேயே தள்ளிவிடக்கூடிய படுபாதகச் செயல்.

உண்மையில் சொல்லப்போனால், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பதே சரியாக இருக்கும். ஆனால் சிபிஐ-யை ஆட்டுவிக்கிற பாஜக அரசும், தமிழக ஆட்சியில் இருக்கும் அதிமுக-வும், இந்த கொடூரச் சம்பவங்களின் பங்குதாரர்களாக இருக்கும் ஜாதிக் கட்சியினரும் கூட்டாக இருக்கும்போது சிபிஐ வேண்டும் என்று கோருவதில் பயன் விளையுமா என்ன?

நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின்கீழ் விசாரணை நடந்தால்தான் முழு உண்மைகள் வெளிவரும்.

#Arrest_Pollachi_Rapists

நன்றி : ஃபேஸ்புக்கில் ஷாஜகான்

பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !

பொள்ளாச்சியில் 273 பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கிரிமினல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும், இதற்கு துணை நின்ற அதிமுக எம்எல்ஏ பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று பாலியல் குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினார்கள்.

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர்.

♦ ♦ ♦

பொள்ளாச்சி பாலியல் வெறியர்களை தூக்கிலிட வேண்டும் எனவும் அரசு அவர்களை தண்டிக்காது நாம்தான் தண்டிக்க வேண்டும் எனவும் நேற்று (12.03.19) செவ்வாய் கிழமை திருச்சி அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வாயிலில் முழக்கமிட்டு பின் பேரணியாகச் சென்றனர். போலீசின்  தடையை மீறி நடைபெற்ற பேரணி மற்றும் சாலைமறியல் போராட்டத்தில் பங்கேற்ற 80 க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசு கைது செய்தது.

தகவல்:
அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள்,
திருச்சி.

♦ ♦ ♦

“பொள்ளாச்சி: மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை ! அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு !” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழகம் தழுவிய அளவில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர்.

சென்னை:

காஞ்சிபுரம்:

கோவை:

வீட்டில் முடங்கியது போதும்! வீதிக்கு வா!!ம.க.இ.க. கலைக்குழு தோழர் லதா :

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் கிரிமினல்களை பாதுகாக்கும் போலீசு கும்பலை அம்பலப்படுத்தும் முழக்கங்களை எழுப்பினர்.

பாதுகாக்குது ! பாதுகாக்குது !
அதிமுக பொறுக்கிகளை
போலீசும் அரசும் பாதுகாக்குது !

எங்கே போனார் கவர்னரு?
எங்கே போனார் எச்சை ராஜா?

இங்கு பணக்காரனுக்கு ஒரு சட்டம்!
அதிகாரிக்கு ஒரு சட்டம்!

கிடைக்காதய்யா கிடைக்காது!
நமக்கு நீதி கிடைக்காது!

நடமாட விடாதே! நடமாட விடாதே!
குற்றவாளிகளை நடமாட விடாதே!
தமிழகமே திரளட்டும்!
குற்றவாளிகளை தண்டிக்கட்டும்.

தகவல்:
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

♦ ♦ ♦

“பொள்ளாச்சி பாலியல் காம வெறியர்களை, போலீசும் நீதி மன்றமும் தண்டிக்காது, மாணவர்கள் இளைஞர்கள் நாம்தான் வீதியில் இறங்கி தண்டிக்க வேண்டும்” என திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி வாயிலில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் பிருத்திவ், தோழர் சுரேஷ் மற்றும் சில மாணவர்கள் பிரச்சாரம் செய்தனர். மதியம் 1 மணியளவில் கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் என்றும் அறிவித்தனர்.

இதே சமயத்தில் அருகில் உள்ள சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். போலீசு தடையை மீறி பேரணியாக சென்று 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைதாகியுள்ளனர். மாணவர்களின் போராட்டத்தைக் கண்டு மிரண்டு  போன போலீசு, போராட்டங்கள் பரவாமல் தடுக்க அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கியது போலீசு. அன்று ஈ.வெ.ரா.  கல்லூரி முன்பு சில மாணவர்களுடன் போரட்டம் குறித்து தோழர் பிருத்திவ் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த உளவுப்பிரிவு போலீசு, உடனே போலிசு ஜீப்-ஐ அழைத்து வந்தது. அதிலிருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட போலீசு, தடதடவென வந்து தோழரை சுற்றி வளைத்து வேகமாக இழுத்து ஜீப்-பில் ஏற்றினர்.

அருகில் நின்ற மாணவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டத்தில் நின்று கொண்டிருந்தனர். அச்சமயத்தில் கல்லூரி முடிந்து வந்த தோழர் சுரேஷ் ஓடி வந்து போலீசிடம், “யார் சார் நீங்க ? யாரை எங்க கூட்டிட்டு போறீங்க ?” என்று வேகமாக யுடர்ன் அடித்து நின்ற போலீசிடம் கேட்டார்.

“என்னையவே நீ யாருனு கேட்குறியா?” எனக் கூறி அவரையும் வாகனத்தில் ஏற்றிச் சென்றது. செல்லும் வழியில் அந்த போலீசு, “என்னையவே யாருனு கேட்கிறீயா? வா, இன்னைக்கு உன்னை ரிமான்ட் பண்ணி, கல்லூரியே படிக்க விடாம பண்றேன்” என்றார். “ ரிமான்ட்டுக்கெல்லாம் நாங்க பயப்படல.. முதலில் எதுக்கு எங்களை இழுத்துட்டு போறீங்கன்னு சொல்லுங்க” என கேள்வி கேட்டனர் தோழர்கள்.

தோழர்கள் இருவரையும் ஸ்டேசனில் இருத்தி வைத்துவிட்டு, அவ்வப்போது சிலர் வந்து மிரட்டியுள்ளனர். தோழர்களும் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். பின்னர் அப்பகுதி வழக்கறிஞர்கள் வந்து புமாஇமு தோழர்களை அழைத்துச் சென்றனர். இந்நிலையில் தோழர்களைக் கைது செய்ததைக் கண்டித்து மாணவர்கள் கல்லூரியின் உள்ளே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவெனில், குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என நாம் போராடினால் நம்மை இந்த போலீசும் உளவு பிரிவும் அதிகாரத்தில் இருப்பவர்களும் குற்றவாளிகளாக மாற்றுகிறார்கள். எனவே குற்றவாளிகளை பாதுகாப்பதும் இந்த அரசுதான் அதற்காக நீதி கேட்டு போராடுபவர்களை குற்றவாளிகளாக்குவதும் கொல்வதும் இந்த அரசுதான்.

இப்போது சொல்லுங்கள்…
பொள்ளாச்சி சம்பவத்தில் யார் குற்றவாளி ? காம வெறியர்களா ? காப்பாற்றும் அரசா ?

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி. 99431 76246.

தொகுப்பு:

கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

0

டந்த பிப்ரவரி 22, 2019 அன்று கரூரில் கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்துநில் மாநாட்டை ஒட்டி பஸ் பிரச்சாரம் செய்து நோட்டீஸ் கொடுத்ததற்காக சுரேந்தர் வினோத் ஆகிய இரு தோழர்களையும் கைது செய்தது, கரூர் போலீசு.

முதல் தகவலறிக்கை பதிவு செய்து ரிமாண்டும் செய்தது. அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்களின் தொடர் போராட்டங்களால் தோழர்கள் இருவரும் மார்ச் 1, 2019 அன்று நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தனர்.

தோழர் வினோத்

இந்நிலையில் கடந்த மார்ச் 5-ம் தேதி அன்று போலீசு நிலையத்தில் கையெழுத்திட எதிர்த்து நில் டீ-சர்ட் அணிந்து சென்ற தோழர்களை அங்கு கையெழுத்துப் போட வந்த இந்து முன்னணி காலிகள் கண்டு பொறுமியுள்ளனர்.

கடந்த மார்ச் 12 அன்று வழக்கம் போல தோழர் வினோத் கையெழுத்து போட்டு விட்டு போலீசு நிலையத்திலிருந்து வெளியில் வந்தார்.

இந்து முண்ணனி நிர்வாகிகள், தோழரை அழைத்து, “காவல் நிலையத்தில் டிசர்ட் போட யார் உனக்கு அனுமதி கொடுத்தது, என்ன டிசர்ட் இது? நீ மே பதினேழா?” என்றனர். “இல்லை, நான் மக்கள் அதிகாரம் ” என்றார் தோழர் வினோத். அதனைத் தொடர்ந்து காவி பாசிசம் என்றால் என்ன என்று கேட்டு தகராறு செய்திருக்கிறது இந்து முன்னணி கும்பல்.

“மாநாடு நடத்தியுள்ளோம் இணையத்தில் பாருங்கள். ஆசிபா போன்ற குழந்தைகளை காவிகள் சீரழிப்பதை தான் நாங்கள் பாசிசம் என்கிறோம். பேச்சுரிமை கருத்துரிமை நசுக்கபடுவது தான் பாசிசம்” என்று கூறியிருக்கிறார் தோழர் வினோத்.

“காவிகளின் நாட்டில் இருந்து கொண்டு, காவிகளையே எதிர்க்கிறாயா? அப்போ நீ பாகிஸ்தானுக்கு போ. உனக்கு என்ன தைரியம்? இந்து மதத்தை புண்படுத்தும் நீங்கள் மக்கள் அதிகாரம் எல்லாம் நக்சலைட்” என்று கூச்சலிட்டனர் இந்து முன்னணியினர்.

“இல்லை. நாங்கள் மக்களுக்காக போராடுபவர்கள். இந்துக்கள் என்று சொல்லும் நீங்கள் ஏன் அரியலூர் நந்தினி, அனிதா பிரச்சினைகளுக்கு எட்டிக் கூட பார்க்கவில்லை” என்ற தோழரின் கேள்விக்கு காவிகளிடம் பதில் இல்லை.

காவல் நிலையத்திற்குள் தோழரை இழுத்துச்சென்று, “இவன் மோடி ஒழிக; காவி பாசிசம் ஒழிக! என்று காவல் நிலையம் முன்பு கோசம் போட்டான். இவன் மீது நான் கேஸ் கொடுக்கிறேன். நீங்கள் நடவடிக்கை எடுங்கள்.” என்றது காவிக் கூட்டம்.

பிற தோழர்களுக்கு தகவல் கொடுக்க தோழர் வினோத் போனை எடுத்த போது செல்போனை புடுங்கி, “போலீஸ் ஸ்டேசனிலேயே போன் பேசுறியே அவ்வளவு திமிரா?” என்றார் ஒரு போலீசு. இவர்கள் எல்லாம் காக்கியை வெளியில் மாட்டிக் கொண்டு காவிக்குச் சேவகம் செய்வதற்காகத்தான் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்குகிறார்கள் போலும்.

இந்து முன்னணி பிரமுகர்

பாஜக மாவட்ட செயலாளர், இந்து முண்ணனி மாவட்ட செயலாளர் என காவி கும்பல் போலீசு ஸ்டேசனுக்குள் நுழைந்தது. “பாஜக நபர் ஒருவர் காவிகளையே எதிர்க்கிறாயா? என்ன துணிச்சல் வெளியே வா…” என்றதற்கு, “பார்க்கலாம் அண்ணா” என்றார் தோழர்.

“தம்பி வெளியே என்ன நடந்தது?” என்றார் காவல் ஆய்வாளர் உதயகுமார். அதற்கு தோழர் நடந்த விவரங்களை கூற “உனக்கு எதுக்கு வம்பு? டிசர்டை மாநாடு முடிந்தும் போடலாமா? காவி ஒழிக என்று கோசம் போட்டியா?” என கேள்விகளை அடுக்கினார்.

“காவி பாசிசம் இன்றோடு முடியக் கூடிய பிரச்சினை இல்லை. தொடர்ச்சியாக தொடரும் விசயம் அதனால் டீசர்ட்டை போடுவது தவிர்க்கமுடியாது. நான் கோசம் போடவில்லை. நீங்கள் வலுவாக கேஸ் போட வேண்டும் என்பதற்காக அவர்கள் பொய் சொன்னார்கள். பாஜக-விற்கு பொய் சொல்லவா கத்துக்கொடுக்கணும்?” என்று பதிலுரைத்தார் தோழர் வினோத்.

“விசாரனை நடத்தி வெளியில் விடுகிறேன். காத்திருங்கள்.” என்றார் ஆய்வாளர் உதயகுமார்.

அடுத்து வந்த கரூர் மாவட்ட டிஎஸ்பி கும்மராஜா, “ஏன்டா நாயே, உங்க மக்கள் அதிகாரத்திற்கு போலீசுக்கு தொந்தரவு கொடுப்பதுதான் வேலையா?” என்றார்.

அதற்கு தோழர் வினோத், “மரியாதையாக பேசுங்கள்” என்று கூறியதற்கு

“தெருவில் போற நாய்ங்க மாதிரி எப்ப பாத்தாலும் பிரச்சனை பண்ணுறீங்க.. உனக்கு என்னடா மரியாதை. டி சர்ட் போட்டுட்டு காவல் நிலையத்திற்கு உள்ளே வர உனக்கு யார் அனுமதி கொடுத்தது.” என்றார்.

படிக்க:
♦ விரைவில் வெளிவருகிறது ! கார்ப்பரேட் – காவி பாசிசம் புதிய நூல் !
♦ கார்ப்பரேட் காவி பாசிசம் எதிர்த்து நில் | திருச்சி மாநாடு | live streaming | நேரலை

“நான் டிசர்ட் போடுவதுதான் உங்க பிரச்சனையா?” என்று தோழர் வினோத் பதில் கேள்வி கேட்க,

“ஸ்டேசனுக்குள்ள டிசர்ட் போடுன்னு உங்க மக்கள் அதிகாரம்  சொல்லி அனுப்புதா? சொல்லுடா நாயே !” என்றார் டி.எஸ்.பி. காவிகளுக்கு அந்த டீசர்ட்டைப் பார்த்தால் கோபம் பொங்குவது நியாயம். டி.எஸ்.பிக்கும் கோபம் பொங்குவது ஏனோவென்று தெரியவில்லை.  எஜமானனைச் சொன்னால் ஏவலாளிக்கு கோபம் வருவதுதான் நியாயம். டி.எஸ்.பி-க்குமா ?

சுற்றி இருந்த உளவு போலீசு, இன்ஸ்பெக்டர், டி.எஸ்.பி என்று எதற்கும் அச்சப்படாமல், “ஆமாம், என்ன பிரச்சனை?” என்றார் தோழர் வினோத்.

அவர் அப்படி சொன்னதும், அவரை நோக்கி டி.எஸ்.பி, “மரியாதை கொடுக்கமாட்டியா?” என்றதற்கு “என் யூனிபார்ம்க்கு நீங்கள் மரியாதை கொடுக்கல.. நானும் கொடுக்க மாட்டேன்” என்றார்.

உடனே டி.எஸ்.பி கும்மராஜா, “இவனுக்கு எவ்வளவு திமிரு கொண்டு போய் ரிமாண்டு பண்ணுங்க. அப்பதான் புத்தி வரும்” என்றார். பதிலுக்கு தோழர்,  “சந்தோசம்” என்று சொல்லி விட்டு வெளியே வந்தார்.

உளவுத்துறை போலீசு தோழரிடம் வந்து, “உயர் அதிகாரிகளுக்கு மரியாதை கொடுக்கணும்பா” என்றார்.

காவல் நிலையத்திற்கு வெளியில் தோழர்களுடன் வினோத்

அதற்கு தோழர் அவரிடமும், “என் யூனிபார்முக்கு மரியாதை இல்லை. நானும் கொடுக்க மாட்டேன்” என்று கூறியிருக்கிறார். வெறுப்படைந்த உளவுத்துறை போலீசு, “உன்னிடமெல்லாம் பேச முடியாது” என்று போய்விட்டார்.

இச்சமயத்தில் மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, சாமானிய மக்கள் கட்சி, மே 17 இயக்கத் தோழர்களும் வழக்றிஞர்கள் தோழர் ஜெகதீஸ், தமிழ் இராசேந்திரன் மற்றும் அவர்களது ஜீனியர் வழக்கறிஞர்கள் போலீசு நிலையத்திற்கு வந்துவிட்டனர்.

தோழர்கள் டிஎஸ்பி-யிடம், “என்ன சார் பிரச்சனை, ஏன் தோழரை பிடிச்சீங்க” என்றதற்கு மேற்கண்ட விவரங்களை கூறி, “என்னங்க, அந்த பையன்… ஒரு டிஎஸ்பி-ங்குற மரியாதை கூட இல்லாம இவ்வளவு திமிரா பேசுறார். கொஞ்சம் மரியாதை கொடுக்கச் சொல்லுங்க.. நான் ஒன்னும் செய்யலங்க.. விட்டுவிடுகிறேன்..” என்றார் தோழர்களிடம்.

இறுதியில், தோழரை ரிமாண்ட் செய்ய காவிகள் போட்ட திட்டம் மண்ணைக் கவ்வியது. மக்கள் அதிகாரம் அமைப்பின் டீசர்ட், காவிகளின் வயிற்றில் புளியை கரைக்கிறது. காவிகள் கதறுகின்றனர். காவிகளை தொடர்ந்து கதற விடுவோம்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர்

சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்துராஜ்யம் | நாடகம் | பாகம் – 2

சி.என். அண்ணாதுரை

காட்சி – 3
இடம் : இந்துமதி வீடு
உறுப்பினர்கள் : இந்துமதி, சந்திரமோகன்

(மோகன் வர, அவன் கழுத்தில் இந்து மாலை அணிவிக்கிறாள்.)

இந்து : கண்ணாளா இந்த ஆறு மாதங்களாக இருந்து வந்த மனவேதனை அவ்வளவும் இந்த ஒரு வினாடியில் ஒழிந்து விட்டது. அப்பப்பா… எவ்வளவு பயங்கரமான செய்திகள். போரிலே நமது படை சின்னாபின்னமாகி விட்டது. கோட்டையைச் சுற்றி எதிரிகள் சூழ்ந்து கொண்டார்கள்… ஆயுதச் சாலையைப் பிடித்துக் கொண்டனர் என்றெல்லாம் வந்து கூறுவார்கள். அப்போதெல்லாம் என் நிலை… அடடா!

மோகன் : கலங்கித்தான் போயிருப்பாய் கண்மணி. களத்திலே கடும் போர்தான். ஆபத்துக்கள் நிறைய உண்டு. ஆனால், ஆற்றல் மிக்க நமது தலைவர் அளித்த தைரியம். எங்களுடைய பலத்தை பல மடங்கு அதிகமாக்கிற்று.

கண்ணே உன் காதலனும் கோழையல்ல; உன்னைக் கண்டதும் என் விழியிலே கனிவு வழியும். அதைக் கண்டு இந்தக் கண்களுக்கு இதுதான் இயல்பு என்று எண்ணி விடாதே. ஆபத்து என்ற உடனே இந்தக் கண்கள் நெருப்பைக் கக்கும். உன் மலர்க் கரத்தையும் மதுரம் தரும் அதரத்தையும் தொட்டு விளையாடும் இந்தக் கரத்திலே வாள் ஏந்தியதும், எதிரியின் தலை என் தாளிலே விழும் வரை புயலெனத்தான் சுற்றித்
திரிவேன் களத்தில்.

இந்து : போதும், போர்க்களச் செய்திகள். இனிமேல் இந்த மாளிகையிலே ஆடிப்பாடி விளையாட வேண்டும் நாம். மராட்டிய சாம்ராஜ்யத்தை கிருஷ்டிக்கும் மாவீரன் என்
காதலர் என்று ஊரெல்லாம் புகழ்கிறது.

மோகன் : ஊரெல்லாம் புகழ்ந்தாலும், உலகமே புகழ்ந்தாலும், உன் அப்பா மட்டும்…

இந்து : அவர் மட்டும் என்ன ? உங்கள் வீரதீரத்தைப் பழிக்கிறாரா? உங்கள் மீதுள்ள
அளவு கடந்த அன்பினால் போருக்குப் போக வேண்டாம் – ஆபத்து ஏற்படக்கூடும் என்று கூறுகிறார்.

மோகன் : வேடிக்கையான சுபாவம் உன் அப்பாவுக்கு வாள் ஏந்தும் கடமையை என் போன்ற வாலிபர்கள் மறந்தால் அனைவரும் சேர்ந்து எதிரியின் தாள் ஏந்த வேண்டுமே! தாயகம் அடிமையாகிவிடுமே! நாடு பரிபூரணவிடுதலை பெற்று நமது ஆட்சி நிலைநாட்டப்படும் வரையில் போரிட்டுத்தானே ஆக வேண்டும். மராட்டிய சாம்ராஜ்யம் கிருஷ்டித்தான பிறகுதான் நமது காதல் ராஜ்யம். ஆகா! இன்பமே! நமது காதல் ராஜ்யம் அமைந்து விட்டால்…

இந்து : அமைந்துவிட்டால்….

மோகன் : புயலும் தென்றலாகும். பொற்கொடியே! அந்த ராஜ்யத்திலே வாளும் வேலும் என்ன செய்ய முடியும்?

இந்து : உங்கள் அன்பு மொழியால் என்னைப் பைத்தியமாக்கி விடுகிறீர்கள் கண்ணாளா!

மோகன் : என் மொழி உன்னை பைத்தியமாக்குவதாகச் சொல்கிறாய். இன்பவல்லி! உன் விழி என்னைப் பைத்தியமாக்கிவிடுகிறதே.

இந்து : போதும் போங்கள்! உங்களுக்கு எப்போதும் கேலிதானா?

♦ ♦ ♦ 

காட்சி – 4
இடம் : வீதி
உறுப்பினர்கள் : சந்திரமோகன், சாது.

(சாது நாட்டைப் பற்றி பாடி வருகிறார். மோகன் அதைக் கேட்டு விட்டு..)

மோகன் : பெரியவரே களிப்புக் கடலில் மூழ்கினேன். உமது கீதத்தைக் கேட்டு சாது இனிமையாக இருந்ததா தம்பி?

மோகன் : மதுரமாக இருந்தது மதிவாணரே!

சாது : இதைவிட இனிமை உண்டு , வானத்திலே வட்டமிடும் வானம்பாடியின் கீதத்தைக் கேட்டால். உற்றுக் கேட்டால் வீரனே! சிற்றருவிப் பாய்ந்தோடும் போது இனிமையான கானம் கேட்கவில்லையா? இயற்கை சதா நேரமும் இசைபாடிக் கொண்டுதான் இருக்கிறது.

மோகன் : உண்மைதான் பெரியவரே.

சாது : குழந்தையின் மழலை, குமரியின் கொஞ்சுமொழி. தென்றலிலே படும் கொடிகளின் அசைவு – இவைகளிலே இல்லாத இனிமை என் இசையிலே
ஏதப்பா ?

மோகன் : அய்யா இனிமை மட்டுமே அந்தச் சமயங்களிலே காண்கிறேன். ஆனால், தங்கள் இசையிலேயோ இனிமையுடன் பொருளும் இருக்கக் கண்டு களித்தேன்.

சாது : நல்லவனப்பா நீ! கீதத்தைக் கேட்டுவிட்டு கருத்தை கவனியாதிருப்பவரே அதிகம். நீ கவனித்தும் இருக்கிறாய்; ரசித்தும் இருக்கிறாய்!

மோகன் : ரசிக்காமல் இருக்க முடியுமா? புதுமணம் வீச வேண்டும், நாடு பொன்னாடாக வேண்டும், மக்களின் வாழ்வு மகிழ்ச்சியோடு துலங்க வேண்டும். மதிமிக வேண்டும் என்ற கருத்துக்களை நாட்டுப் பற்றுடைய யார்தான் ரசிக்காமல் இருக்க முடியும்?

சாது : அதிலும் நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ. உன் மனம் மகிழத்தான் செய்யும்.

மோகன் : உயிரைத் துரும்பென்றெண்ணி எண்ணற்ற வீரர்கள். தாயகத்தின் விடுதலைக்காகப் போரிட்டனர். குருதியைக் கொட்டினர். வெற்றியும் கிடைத்திருக்கிறது.

சாது : வெற்றி மேல் வெற்றி கிடைக்கிறது வீரர்களுக்கு …..

மோகன் : பெரியவரே! என்ன, ஏதோ சிறு சஞ்சலம்?

சாது : வெற்றியைப் பெற்றுத் தருகிறார்கள். ஆனால் வீணர்கள் விதைத்த விஷப்பூண்டு இன்னும் அழியவில்லையே. ராஜ்யத்துக்கு எதிரிகளால் நாசம் ஏற்படாமல் தடுக்க வீரர்களின் தியாகம் தேவைப்படுகிறது. ஆனால், அந்த வீரத்தையும் தியாகத்தையும் விழலுக்கிறைத்த நீராக்கும் விபரீத காரியம் நடைபெறுகிறதே.

மோகன் : பெரியவரே! என்ன, ஏதாவது சதி நடைபெறுகிறதா?

சாது : ரகசியமாக நடைபெறுவதல்லவா சதி? இது சதி அல்லப்பா, சாதி. அந்த சாதித் தொல்லை உள்ள மட்டும் சமூகத்துக்கு சதா ஆபத்துதானே? வீரப்போர் புரியும் போது தாய் நாட்டவர் என்ற பாசமும், எதிரி வெற்றி பெற்று விட்டால் என்ன செய்வது என்ற பயமும் மராட்டிய வீரர்களை ஒன்றாக்கி வைக்கிறது. பாசமும் பயமும் வெற்றிக் கொடி பறந்ததும், பறந்தே போய்விடும். பழையபடி ஜாதி தலைதூக்கும். அதை எண்ணித்தான் நான் சஞ்சலப்படுகிறேன்.

மோகன் : நாட்டு மக்களுக்கு ஜாதி கேட்டினைத்தான் செய்யும். அந்தக் கேட்டினை நாட்டை விட்டு ஒட்டிடலாம். அய்யா! ரத, கஜ துரக பதாதிகளையா கூட்டி வரும் இந்த ஜாதி?

சாது : அதற்கேனப்பா நால்வகைச் சேனை? அந்த ஜாதி சனியனால் தகப்பனே மகனுக்கு விரோதியாக்க முடியும். அண்ண னும் தம்பியும் போரிட்டு மடிவர், அது தூபமிட்டால், குடும்பம் கொலைக்களமாகும். ஊர் இரண்டு படும்! அது தூபமிட்டால், அந்த ஜாதித் சனியனுக்கு கோட்டைகள், மலைகள், மீதியிருந்தால் மாவீரர்கள் சென்று தாக்கித் தகர்த்துவிட முடியும். அந்த ஜாதிச் சனியனுக்குக் கோட்டைகள் நம்மவர்
மனதிலேயே இருக்கின்றன.

மோகன் : பெரியவரே! இதுவரை இருந்தது போல் இனியும் இருக்கும் என்று எண்ணாதீர்கள். புதிய ராஜ்யம் ஏற்படுகிறது. புனிதப் போருக்குப் பிறகு ஏற்படும் ராஜ்யம் இது. இதிலே புல்லர்களுக்கு ஆதிக்கம் இருக்காது. ஒற்றுமை நிலவும்; தோழமை மலரும்; சமரச மணம் வீசும் ; சன்மார்க்கம் நிலைக்கும்; ஜாதி மடியும்.

படிக்க:
பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !
அம்மாவின் தவ வாழ்க்கையும் 2 லட்சம் கேரட் வைரமும் !

சாது : நல்வாக்குக் கொடுக்கிறாய், நாடாள நீயே வந்தாலும் நடவாக் காரியங்களை மடமடவெனக் கொட்டிக் காட்டுகிறாய் ஆர்வ மிகுதியால்… நீயே நாளைக்கு ராஜா ஆகிவிடுகிறாய் என்று வைத்துக் கொள்.

(மோகன் திகைத்துப் பார்க்க)

ஏனப்பா அப்படிப் பார்க்கிறாய்? அவலட்சணங்களெல்லாம் அரசர்களானபோது நீ ராஜா ஆகவா முடியாது? ஆளைப் பார்த்தால் ராஜா போலத்தான் இருக்கிறாய்; ராஜாவாகி விடுகிறாய் என்று வைத்துக் கொள். அப்போது நான் சொன்ன ஜாதிச் சனியனை விரட்டப் போரிடுவாயோ?

மோகன் : ஏன் முடியாது?

சாது : பைத்தியம் உனக்கு. நீ ராஜாவானால் உடனே உனக்கு ஒரு ராஜகுமாரி வேண்டும். ரத, கஜ, துரக பதாதிகள் வேண்டும். அரண்மனை ஐஸ்வரியங்கள் வேண்டும். அந்தப்புரம் வேண்டும். அழகுள்ள ஆடும் பெண்கள் வேண்டும். ஆலவட்டம் வீச ஆட்கள் வேண்டும். யானை மீது அம்பாரி வேண்டும் என்று இவைகள் மீது அக்கறை பிறக்குமே தவிர ஜாதிபேதத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் வராது.

மோகன் : ஏன் வராது? கட்டாயம் வரும்.

சாது : வராதப்பா.

மோகன் : கட்டாயம் வரும்.

சாது : வராதப்பா வராது. வந்தாலும் ராஜா வேலை உனக்கு நிலைக்காது.

மோகன் : ஏன்?

சாது : ஏனா? உயர்ந்த ஜாதிக்காரர் என்பவர்கள் உன்னை எதிர்த்து ஒழித்தே விடுவார்கள்… சிவாஜியின் வீரத்தைக்கூட அந்த வீணர்கள் பொருட்படுத்த
மாட்டார்கள்.

மோகன் : பெரியவரே! முன்பு நடந்தது போல் இனியும் நடக்கும் என்று வாதாடுவது முறையாகாது. சிவாஜியின் கண்களிலே இந்தக் கொடுமைகள் தென்படாமல் இல்லை. அவர் தனக்காக, தாய் நாட்டுக்காக உயிர் கொடுத்த உத்தமர்களை உயர்ந்த ஜாதி என்று உரிமை பேசுவோரிடம் அடிமைப்பட விடமாட்டார். அவர் குடியானவர் வகுப்பு. குலப்பெருமை பேசும் கும்பலில் பிறந்தவரல்ல. அவர் சகலரையும் சமமாகவே நடத்துவார்.

சாது : ஆர்வம் ததும்புகிறது உன் பேச்சிலே. அனுபவமில்லாததால் ஆர்வம் அளவுக்கு மிஞ்சியிருக்கிறது. அனுபவம் பெறுவாயப்பா. நீ மராட்டியத்தின் மறுமலர்ச்சி துதூவன். போய் வா!

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை

பிரேமலதா : தி ரியல் தியாகத்தலைவி !

0

வில்லவன்
ராஜாஜிக்குப் பிறகு ஒரு நல்ல பிராமண பீஸுக்காக மயிலை ஆன்மாக்கள் பன்னெடுங்காலம் காத்திருந்த வேளையில் குத்துமதிப்பான அய்யரான எம்.ஜி.ஆர் வாய்த்தார். சுயபுத்தியும் சொல்புத்தியும் இல்லாத சுயத்தை சொறிய மட்டுமே தெரிந்த அவர்தான் நேற்றைய ஜெயாவுக்கும் இன்றைய மோடிக்கும் முன்னோடி.

கழிசடையாக இருந்தாலும் பார்ப்பனியம் கால்நூற்றாண்டு தவத்தில் பெற்ற பிள்ளை இல்லையா? ஊடகங்கள் முட்டுக்கொடுத்து முட்டுக்கொடுத்து “சோறுபோட்ட மஹாராஜா” என பாமர மக்களை நம்பவைத்தார்கள். அவரால் அடித்து மெண்ட்டலாக்கப்பட்ட ஆட்களோ, அடியாட்களுக்கு பட்டா போடப்பட்டு கொல்லப்பட்ட ஏரிகளோ கணக்கில் வரவேயில்லை.

அடுத்து கோமளவல்லி வந்து சேர்ந்தார். அக்ரஹாரவாசிகள் எல்லோரும் கும்பலாய் போய் போயஸ்கார்டனில் கொண்டாடலாம் என்றால் அங்கே ஏற்கனவே நந்தி போல சசி கும்பல் உட்கார்ந்துவிட்டது. ‘விருந்து வைத்து வாயைத் தைத்ததைப்போல’ ஆயிற்று அவர்கள் நிலை. ஜெ ஊழலின் பெரும் பங்கை சூத்திர தோழியின் குடும்பம் தின்ன, மீண்டும் பார்ப்பனியம் விரல் சப்பியபடியே சாபமிட்டு காலம் கழித்தது.

ஆரிய மாமா சோ ராமசாமியே ஜெயாவை திட்டிவிட்டு எதிரணியை ஆதரிக்க வேண்டியாயிற்று. ஆனாலும் ஜாதிப் பாசம் விட்டுபோகுமா? அந்த டபுள் பாசிஸ்ட்டை நிர்வாகப்புலி என பிரச்சாரம் செய்து ஒப்பேற்றினார்கள். சாராய ஆலை ஓனர் எனும் தட்சணையைக்கூட சோ காலம் போன கடைசியில்தான் வாங்கினார். ஜெ ஒரு சோத்து சோம்பேறி என்பதால் சோ தட்சணை பெறும் காலம்வரை இருந்தார். இல்லாவிட்டால் எதிர்த்து பேசிய காலத்திலேயே சந்திரலேகா டைப் டிரீட்மெண்ட்டை பெற்றிருப்பார்.

படிக்க:
♦ கேப்டன் பீரங்கியிலிருந்து வெடிப்பது குண்டா குசுவா ? | வில்லவன்
♦ சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட தேமுதிக விஜயகாந்த் : யார் காரணம் ? கருத்துக் கணிப்பு

அந்தம்மா போன பிறகு வாய்த்த சுமார் மூஞ்சிகள் எல்லாம் புரோக்கர் வேலையே போதும் என செட்டில் ஆயின. புரோக்கர் வேலைக்குக்கூட லாயக்கற்ற எச்.ராஜா, குருமூர்த்தி, எஸ்.வி.சேகர் போன்ற கொழுப்பெடுத்த கூமுட்டைகள் தலைவன் தோரணையில் பேசி மீதமிருக்கும் பர்னிச்சர்களை உடைத்தன. எம்ஜியார் காலம் என்றால்கூட இந்த கூமுட்டைகளை இண்டலெக்சுவல்ஸ் எல்லாம் அப்படித்தான் இருப்பா என தடவிக் கொடுத்திருப்பார்கள். சமூக ஊடகங்கள் வந்த பிறகு தடவிக்கொடுக்கும் கைகளில் ‘ஷண’ நேரத்தில் துப்பிவிடுகிறார்கள். பெரியார் காலத்தில்கூட பார்ப்பனர்கள் அறிவாளிகள் எனும் அந்தஸ்துக்கு ஆபத்து அவ்வளவாக இல்லை. பேஸ்புக் காலத்தில் வெறும் ஸ்டேட்டஸ்கள் போட்டே அந்த ஸ்டேட்டசுக்கும் எள்ளும் தண்ணீரும் தெளித்துவிடுகிறார்கள்.

பார்ப்பனர்களின் முக்கால் நூற்றாண்டு அனுபவத்தில் அரசியலுக்கு வரும் சொந்தப்பிள்ளைகள் அவர்கள் கவுரவத்தை சந்தியில் நிறுத்தும் வாய்ப்பே அதிகமாக இருந்திருக்கிறது. ஆகவே பார்ப்பனியத்தின் பிளான் பி ஆனது அடிமை சூத்திரர்களை இறக்கி அவர்கள் வழியே அதிகாரத்தை தக்கவைக்கலாம் என்பதாக இருந்தது. இது சேர, சோழ காலத்து அரத பழசு டெக்னிக்தான். என்ன செய்வது பார்ப்பனியத்தை இன்றும் கிழடு கட்டைகள்தானே காப்பாற்ற வேண்டியிருக்கிறது?

பிளான் பி மூலம் முதலில் அவிழ்த்துவிடப்பட்ட நாய்கள் சாதிச் சங்கங்கள். அவர்கள் படையெடுப்புக்குப் பிறகு பார்ப்பனர்களின் சாதி வெறிக்கு ஒரு பாதுகாப்பு கிடைத்தது. பாதுகாப்புக்கு சரி, அதிகாரத்தை தக்க வைக்க? அதற்குத்தான் விஜயகாந்த் வரைமுறையில்லாமல் ஊடகங்களால் ஆராதிக்கப்பட்டார். அவர் கட்சி துவங்கும் முன்பே அதற்கான நேர்மறை முன்னோட்டங்கள் வெள்ளமென பாய்ந்தன. பார்ப்பனர்கள் விரும்பியிருக்காவிட்டால் ஊடக நடத்தை இப்படி இருந்திருக்காது. பெயரளவுக்குகூட சித்தாந்தம் இல்லாத, ஓரளவு ஓட்டுக்களை திரட்டக்கூடிய கொழுப்பெடுத்த முட்டாள்கள் பார்ப்பன லாபிக்கு தேவை. அதற்கு ‘சப்ஜாடாக’ பொருந்தி வந்தவர் விஜயகாந்த். நீங்கள் சந்திக்கும் பார்ப்பனர்களிடம் பேசிப் பாருங்கள், விஜயகாந்தின் வீழ்ச்சி அவர்களை சங்கடப்படுத்தியிருக்கும்.

விஜயகாந்தும் அவர்களின் கொஞ்சலுக்கு உகந்த நியாயத்தை செய்தார். அரை ஜெயாவான மனைவி, அரை பிரேமாவான மச்சான், பணக்கார திமிரைத்தவிர வேறு தகுதியே இல்லாத பிள்ளைகள் கூடவே சினிமாக்காரனுக்கே உண்டான அதிகார மிதப்பு என எல்லா சிக்கல்களையும் தாண்டி அவர் 2011-ல் ஜெயாவை ஆதரித்து பார்ப்பனியத்துக்கு சேவை செய்தார். பிறகு ம.ந.கூ-வில் இருந்தும் ஜெவுக்கு உதவினார் (அப்படித்தான் பிரேமலதா சொல்லியிருக்கிறார்). இப்போதும் பார்ப்பனியத்துக்கு ஒரு பார்ப்பனனால்கூட செய்ய இயலாத சேவைகளை செய்யும் அதிமுகவை ஆதரிக்கிறார்.

இவற்றின் கிரெடிட் முழுமையும் விஜயகாந்துக்கு போய் அதன் பாவங்களை மட்டும் அண்ணியார் சுமக்கிறார். விஜயகாந்தை ஆதரிக்கும் மயிலை ஜீவன்கள்கூட அண்ணி பிரேமலதாவை சபிக்கிறார்கள். ஸ்டாலினுக்கு கடும் போட்டி கொடுத்திருக்க வேண்டிய ஆளை கரடி பொம்மைபோல செட் பிராப்பர்ட்டியாக மாற்றிவிட்டார் எனும் அவச்சொலை நீங்கள் கபாலி கோயில் மாடவீதிகளில் இப்போதும் கேட்க இயலும். ஆனால் உண்மை அதுவா?

2006 -ல் மட்டுமே விஜயகாந்த் ஓரளவுக்கு கோர்வையாக பேசினார். 2009 -ல் இருந்தே அவர் பேச்சு கோளாறானதாகவும் புரிந்துகொள்ள முடியாததாகவும் ஆகிவிட்டது. கேப்டன் டிவி லைவில் அவர் பேச்சு ஒளிபரப்பாகையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் உடனே ஒலி மட்டும் நிறுத்தப்பட்டு “நீ பொட்டு வச்ச தங்கக்குடம்” பாட்டை ஓடவிடுவதற்கென்றே ஒரு சிறப்பு டீம் ஒன்று செயல்பட்டது. ஊடகங்களிடம் ஏடாகூடமாக பேசுவது, கூட இருப்பவனை எகிறியடிப்பது போன்ற கூடுதல் இம்சைகள் வேறு. ஆனால் இத்தனைக்கும் மத்தியில் கடந்த பத்தாண்டுகளாக விஜயகாந்தை ஒரு போணியாகும் சரக்காக வைத்திருக்க அண்ணியார் எத்தனை சிரமப்பட்டிருக்க வேண்டும்? ஒரு சூத்திர நிர்மலா சீதாராமனுக்கு இது எத்தனை பெரிய சவால் என்பதை யாருமே யோசித்துப் பார்ப்பதில்லை.

படிக்க:
மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம் ! சமூக அக்கறையை வளர்க்கும் முயற்சி இது !!
♦ நிர்மலா சீத்தாராமன் X 24-ம் புலிகேசி – வீடியோ

இப்போது அதிமுக கூட்டணியில் கொஞ்சம் கூடுதலாக ஜாதி ஓட்டுக்களை ஓட்டிக் கொண்டுவரும் சூழலில் இருப்பது மாங்கா கும்பல்தான். குடிசைகளை கொளுத்தி, காதலித்து மணம் புரிந்த பல குடும்பங்களை சிதைத்து (பல கிராமங்களில் வன்னியர்-தலித் தம்பதிகளை ஒதுக்கி வைத்த நிகழ்வுகள் இளவரசன் மரணத்துக்குப் பிறகு நடந்தது) அடைந்த பலன் இது. அதிமுக-பாஜக-பாமக கூட்டணிக்குப் பிறகு சமூக ஊடக மக்கள் அடித்த அடியில் மாங்கனிகள் நசுங்கி மண்ணில் விழுந்திருக்கும். ஆனால் கேப்டனின் மகனும் மச்சானும் அதன் தாக்கத்தை குறைத்திருந்த வேளையில், அண்ணியார் வாய் திறந்த வினாடியே மாங்கா மைந்தனும் அப்பா மாங்காவும் சமூக ஊடகங்களில் நிபந்தனையற்ற ஜாமீன் பெற்றார்கள். இது அம்மனின் அருளுக்கு இணையான வரம். அந்த வகையில் கூட்டணிக்காக அதிகம் தியாகம் செய்தது அண்ணிஜிதான்.

இதுநாள் வரை வாய்க்கொழுப்பின் ஒற்றை பிரதிநிதியாக நிம்மி மாமியே இருந்து வந்தார். ‘ஜெ’கூட தன் திமிரை வார்த்தைகளால் பொதுவெளியில் காட்டியவரல்ல. ஆனால் ஊறுகாய் மாமியோ பிரஸ்மீட்டுக்கு 1000 ஓட்டு வீதம் தொலைக்கும் அளவுக்கு சனியை நாக்கில் குடிவைத்திருப்பவர். ஒரே பிரஸ்மீட் முலம் அந்த சனிநாக்கு நாயகி பட்டத்தை பிரேமா தட்டிப்பறித்து நிம்மி மாமியை காத்தருளியிருக்கிறார். இனி மீம்ஸ்களில் வாய்க்கொழுப்பு டெம்ப்ளேட்டுக்களை பிரேமலதாவே ஆக்கிரமிப்பார். ராஜேந்திர பாலாஜிக்கு மோடி டாடியானதில்கூட சில லாஜிக் மீறல்கள் இருக்கலாம், ஆனால் நிம்மிக்கு பிரேமாதான் மம்மி என்றால் அதை மறுக்க அகிலத்தில் யாருக்கும் திராணி இருக்காது.

யாசகம் பெற்ற அடுத்த வகையறா ஊடகவியலாளர்கள், எஸ்.வி சேகர் போன்ற சினிமா பிட்டுக் காமெடியன்களானாலும் சரி எச்.ராஜா போன்ற அரசியல் பிட்டுக் காமெடியன்களானாலும் சரி, துப்பினால் துடைத்துக் கொண்டு போவதே ஊடகங்களின் தலைவிதியாக இருந்தது. எஸ்.வி சேகர் வீட்டு வாசலில் ஆர்பாட்டம் செய்த பத்திரிக்கையாளர்கள் தங்கள் நிறுவன விசாரணைக் கமிசனை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போதோ பிரேமா அண்ணி விவகாரத்தில் தங்கள் எதிர்ப்பை கொஞ்சம் போல காட்டிக் கொள்ள அவர்கள் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். காட்சி ஊடகங்கள் விவாதங்கள் நடத்தின. நிம்மி மாமி செருப்பால் அடித்திருந்தாலும் பத்திரிக்கையாளர்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை பரிசீலித்தால் இது எத்தனை பெரிய வாய்ப்பு என்பது உங்களுக்கு புரியும்.

வெறும் அரசியல்வாதியாக மட்டும் அவர் தியாகம் செய்தவரல்ல, ஒரு தாயாக, அக்காவாக, மனைவியாகவும் அவர் தியாகியே. தனியே போய் ஒரு தீக்குச்சி கடன் வாங்கிவரக்கூட தகுதியில்லாத திமிரெடுத்த பிள்ளையை வைத்துக் கொண்டு அவரையும் பொதுக்கூட்டத்தில் பேச அனுப்பினார். அது ஊரில் இருக்கும் கட்சிகள் எல்லாவறையும் ஒரே வாக்கியத்தில் ஒரண்டை இழுத்தது. வீட்டுக்காரர் ஃபேஸ் வேல்யூவின் கடைசி அறுவடையை எடுக்க வேண்டும். பிள்ளையின் வாயிலோ மூதேவி மல்லாக்கப் படுத்த வாக்கில் காலாட்டிக் கொண்டிருக்கிறது. இந்த துயரங்கள் போதாதென்று புரோக்கரேஜில் பாண்டித்யம் போதாத தங்கத் தம்பியோ இரண்டு கட்சிகளுக்கும் ஒரே நாளில் லவ் லெட்டர் கொடுத்து அம்பலப்பட்டிருக்கிறார்.

இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியில் எந்த மனிதரும் நிதானமிழப்பார்கள். ஆனால் அண்ணியோ திட்டமிட்டு நிதானமாக நிதானமிழந்தார் என்பதை அந்த பேட்டியை பார்த்த யாராலும் கணிக்க முடியும். தன்னை பலியிட்டு தம் பிள்ளையையும் தம்பியையும் காப்பாற்றிய தியாகத்தாய் அவர் என்பதை அறிய இந்த ஒரு உதாரணமே போதும். ஜென்டில்மேன் படத்தில் மகன் படிப்புக்காக தன்னைத்தானே தீயிலிட்ட மனோரமாதான் தமிழகத்தின் தியாகத்தாய்க்கு உதாரணமாக இருந்தார். அண்ணி பிரேமா அதனிலும் மேலானவர் என்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும்.

ஜெய்ஹிந்த்..

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.