Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 362

பாசிச கட்டத்தில் ஜனநாயகத்துக்காக நாம் ஏன் போராட வேண்டும் ?

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் |  பாகம் – 5

டோக்ளியாட்டி

கையால், பாசிஸ்டு சர்வாதிகாரமானது பூர்ஷுவா மற்றும் குட்டி பூர்ஷுவாக்களை அணி திரட்டுவதன் மூலம் ஒரு வெகுஜன இயக்கத்தைப் பெற்றிட முயற்சிக்கிறது.

இந்த இரு இயக்கங்களையும் இணைப்பது மிகவும் சிரமமானது. ஒன்றிற்கு பாதகம் ஏற்படும் விதத்தில் மற்றொன்றை வலியுறுத்தாமலிருப்பது மிகவும் சிரமமானது. உதாரணத்திற்குச் சொல்வதென்றால் ரோம் படையெடுப்பு நடைபெறுவதற்கு முன்னர் இத்தாலிய பாசிசம் வளர்ந்து வந்தபொழுது, கட்சி இந்த முக்கியமான பிரச்சினையை அலட்சியம் செய்தது. அதாவது அதிருப்தி அடைந்துள்ள குட்டி பூர்ஷுவா பகுதியினரை பெரும் பூர்ஷுவா வர்க்கத்தினர் தம் பக்கம் ஈர்க்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தும் முக்கியமான பிரச்சினையை உதாசீனம் செய்தது. அச்சமயத்தில் இந்தக் குட்டி பூர்ஷுவாப் பகுதியினரில் முன்னாள் இராணுவத்தினர், பணக்காரர்களாக முயற்சித்துக் கொண்டிருந்த ஏழை விவசாயிகளின் பல பிரிவுகள் மற்றும் யுத்தத்தினால் சீர்குலைந்துபோன ஏராளமான தறுதலைகள் அடங்கியிருந்தனர்.

இவையனைத்துக்கும் அடிப்படையாக ஒரு இத்தாலிய சமூக அம்சம் இருந்து வருவதை நாம் புரிந்துகொள்ளவில்லை. அதைத் தீர்மானிக்கக் கூடிய ஆழமான சமூகக் காரணங்களை நாம் காணவில்லை. முன்னாள் இராணுவத்தினர், தறுதலைகள் ஆகியோர் யாரோ தனி நபர்கள் அல்ல என்பதையும், மாறாக அவர்கள் ஒரு வெகுஜனப் பகுதியினர் என்பதையும் வர்க்க அம்சங்கள் கொண்டுள்ள ஒரு நிகழ்வுப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ளவில்லை. எப்படியேனும் போய்த் தொலையுங்கள் என்று நாம் அவர்களிடம் சொல்ல முடியாது என்பதையும் நாம் புரிந்து கொள்ளவில்லை. உதாரணமாக யுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்டுவிட்டு வீடு திரும்பியவர்களை எடுத்துக் கொள்ளுங்கள். யுத்தத்தின்போது அதிகாரம் செலுத்திவந்தது போன்றே இப்போதும் தொடர்ந்து உத்தரவுகள் பிறப்பிக்க இவர்கள் விரும்பினர். நடப்பிலுள்ள அமைப்பை விமர்சனம் செய்தனர். நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய பல பிரச்சினைகளை எழுப்பினர்.

இந்த வெகுஜனங்களில் ஒரு பகுதியை நம் பக்கம் ஈர்ப்பதும் மற்றொரு பகுதியை செயலற்றதாக்குவதும் இதன்மூலம் பூர்ஷுவாக்களின் சூழ்ச்சி வலையில் அவர்கள் வீழ்ந்து விடாதபடி தடுப்பதும் நமது கடமையாக இருந்தது. ஆனால் இந்தக் கடமைகளை நாம் புறக்கணித்தோம்.

இது நமது தவறுகளில் ஒன்றாகும். இந்தத் தவறு இதர இடங்களிலும் நடைபெற்றது. மத்தியதரப் பகுதி மக்களிடம் ஏற்பட்ட மாற்றத்தையும், பூர்ஷுவா வர்க்கத்தினர் தொழிலாளி வர்க்கத்திற்கெதிராக பயன்படுத்தக் கூடிய போக்குகள் குட்டி பூர்ஷுவாக்களிடம் உருவாகி இருப்பதையும் கவனியாது விட்டுவிட்டோம்.

போர்டிகா (Amadeo Bordiga)

நம்முடைய தவறுகளில் மற்றொன்றானது பாசிச சர்வாதிகாரத்தின் வர்க்கத் தன்மையை போதுமான அளவுக்கு எப்பொழுதும் வலியுறுத்திக் கூறாததாகும். முதலாளித்துவத்தினுடைய பலவீனம்தான் பாசிச சர்வாதிகாரம் தோன்றுவதற்கான காரணம் என்று நாம் சுட்டிக் காட்டினோம். போர்டிகாவினுடைய ஓர் உரையானது பாசிசத்தை உருவாக்குவதில் முதலாளித்துவத்தின் மிகப் பலவீனமான சக்திகளின் – கிராமப்புற பூர்ஷுவா வர்க்கத்தினரின் – பங்கை வன்மையாக வலியுறுத்தியது. இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பாசிசம் என்பது ஒரு பலவீனமான முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளுக்குரிய ஒரு ஆட்சிமுறை என்ற அனுமானத்திற்கு வந்தோம். நாம்தான் முதலில் பாசிசத்தை எதிர்கொண்டவர்கள் என்ற முறையில் இந்தத் தவற்றின் ஒரு பகுதி நமக்குத் தெரிய வந்தது. ஜெர்மனியில் பாசிசம் எவ்வாறு உருவெடுத்தது என்பது போன்றவற்றை நாம் பின்னால் கண்டோம்.

அதே நேரத்தில் மற்றொரு தவறையும் செய்தோம். இத்தாலியப் பொருளாதாரத்தின் தன்மையை நிர்ணயிக்கும் பொழுது நாம் கிராமப்புறத்தில் உற்பத்தியானது எவ்வளவு, நகரங்களில் உற்பத்தியானது எவ்வளவு என்பதைக் காண்பதோடு மட்டும் நிறுத்திக்கொண்டோம்.

இத்தாலி என்பது தொழிலும், மூலதனமும் மிக அதிகளவில் குவிந்துள்ள நாடுகளில் ஒன்று என்ற அம்சத்தை நாம் காணத்தவறினோம். விவசாயத்தின் பங்கைக் கவனித்தால் மட்டும் போதாது. மாறாக இத்தாலிய மூலதனத்தின் மிக வளர்ச்சியடைந்த உள்ளார்ந்த இயைபையும் நாம் கவனித்திருக்க வேண்டும் என்பதையும் நாம் காணத்தவறி விட்டோம். இத்தாலிய முதலாளித்துவம் என்பது ஒரு பலவீனமான முதலாளித்துவம் அல்ல என்ற முடிவுக்கு வருவதற்கு மூலதனக் குவிப்பு, ஏகபோகங்கள் போன்றவற்றைக் கணக்கிலெடுத்துக் கொண்டாலே போதுமானதாயிருந்திருக்கும்.

இந்தத் தவறைச் செய்தவர்கள் நாம் மட்டுமே அல்ல. இந்தத் தவறை பொதுப்படையானது என்று கூறலாம்.

உதாரணத்திற்குச் சொல்வதென்றால் 1931-ம் ஆண்டில் பாசிச இயக்கத்தினுடைய வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் ஜெர்மனியில் இதேபோன்று ஒரு தவறு செய்யப்பட்டது. பாசிசம் முறியடிக்கப்பட்டுவிட்டது என்றும், ஜெர்மனியைப் போன்ற ஒரு வளர்ச்சியடைந்த நாட்டில், தொழிலாளி வர்க்க சக்திகள் நன்றாக ஸ்தாபன ரீதியாக அணி திரண்டிருக்கும் ஒரு நாட்டில் அத்தகைய ஆபத்து ஏதும் இல்லை என்பதால் பாசிச சர்வாதிகார அச்சுறுத்தல் கிடையாது என்றும் சில தோழர்கள் கூறினார்கள். பாசிசத்திற்கான பாதையை நாங்கள் தடுத்துவிட்டோம் என்றும் அவர்கள் கூறினார்கள். விரிவடைந்த நிர்வாகக் குழுவின் 11-வது கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட பல உரைகளிலும் இதே சாயல் காணப்பட்டது. இதே தவறைத்தான் நாமும் செய்தோம். பாசிச வெகுஜன இயக்கம் வளர்ச்சியுறுவதற்கு அதற்குள்ள உள்ளார்ந்த ஆற்றலைக் குறைத்து மதிப்பிட்டோம். 1932-ம் ஆண்டில் இதே தோழர்கள் புரூனிங் அரசாங்கத்தின் தலைமையின்கீழ் பாசிச சர்வாதிகாரம் ஏற்கெனவே நிறுவப்பட்டு விட்டதென்றும், எனவே பாசிச இயக்கத்திற்கெதிராக மேலும் போராட வேண்டிய தேவை இல்லையென்றும் கருதினார்கள்.

இதுவும்கூட ஒரு தவறுதான். பாசிசம் என்பது பூர்ஷுவா அமைப்புகளின் பிற்போக்குத்தனமான ஓர் உருமாற்றம் என்றுதான் அவர்கள் பாசிசத்தைக் கண்டனர். ஆனால் புரூனிங் அரசாங்கமானது இன்னும் பாசிச சர்வாதிகாரமாக ஆகிவிடவில்லை. அவ்வாறு ஆவதற்கான ஒரு முக்கியமான ஆக்கக்கூறு அதனிடம் இல்லை. அதாவது தொழிலாளி வர்க்கத்தை வெற்றிகரமாக முழுக்க முழுக்க முறியடித்து அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்திற்குப் பாதை செப்பனிட்டுத் தரக்கூடிய ஒரு பிற்போக்கான வெகுஜன அடித்தளம் அதற்கு இல்லை

பகுத்தாய்வு தவறாக இருக்குமானால் அரசியல் திசைவழியும் தவறாகவே இருக்கும் என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

முசோலினியின் இத்தாலி பாசிசக் கட்சியின் தலைமை அலுவலகம்.

இது சம்பந்தமாக மற்றொரு பிரச்சினையும் எழுகிறது. பாசிச சர்வாதிகாரம் உருவாக்கப்படுவது பூர்ஷுவா வர்க்கம் பலப்படுவதைக் குறிக்கிறதா அல்லது பலவீனமாவதைக் குறிக்கிறதா என்பதுதான் அந்தப் பிரச்சினை.

இது குறித்து அதிக அளவில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக ஜெர்மனியில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. பாசிச சர்வாதிகாரம் என்பது பூர்ஷுவா வர்க்கத்தின் பலவீனத்தின் அறிகுறியே என்று சில தோழர்கள் தவறாக வாதிட்டார்கள். அவர்கள் இவ்வாறு கூறினார்கள்; பூர்ஷுவா வர்க்கத்தினர் பழைய முறைகளில் ஆள முடியாததால் பாசிசத்தை கடைப்பிடிக்கிறார்கள். எனவே இது இவர்களது பலவீனத்தைத்தான் காட்டுகிறது.

உள் முரண்பாடுகள் தீவிரமடைந்து ஜனநாயக வடிவங்களைப் பூர்ஷுவா வர்க்கத்தினர் கலைக்கும்படியான நிர்ப்பந்தம் ஏற்படுவதன் விளைவாகவே பாசிசம் வளர்கிறது என்பது உண்மையே. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து காணும் பொழுது, நாம் ஒரு ஆழமான நெருக்கடியை எதிர்நோக்குகிறோம் என்பதும், ஒரு புரட்சிகர நெருக்கடி உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதும், அதை பூர்ஷுவா வர்க்கத்தினர் சந்திக்க விரும்புகிறார்களென்பதும் தெள்ளத் தெளிவாகிறது. ஆனால் இந்த அம்சத்தை மட்டும் காண்பது பின்வரும் தவறான முடிவை எடுப்பதற்கு இட்டுச் செல்லும்: பாசிச இயக்கம் எந்த அளவுக்கு அதிகமாக வளர்கிறதோ அந்த அளவுக்குப் புரட்சிகர நெருக்கடி மிகவும் கூர்மையடையும்.

இவ்வாறு வாதிடும் தோழர்கள் குட்டி பூர்ஷுவாக்களைத் திரட்டுவது என்ற இரண்டாவது அம்சத்தைக் காணத் தவறி விடுகிறார்கள். இவ்வாறு திரட்டுவது பூர்ஷுவா வர்க்கத்தினர் ஜனநாயக முறையினின்று மாறுபட்ட வெவ்வேறு முறைகளில் ஆட்சி புரிய அனுமதிக்குமளவுக்கு அந்த வர்க்கத்தினரைப் பலப்படுத்தும் ஓர் அம்சமாக உள்ளது என்பதையும் அவர்கள் காணத் தவறி விடுகிறார்கள்.

ராடெக் (Karl Radek)

மற்றொரு தவறு எதுவென்றால் எல்லாம் நடக்கிறபடிதான் நடக்கும் என்ற போக்கில் போவதாகும். ராடெக் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்; அவர் கூறுவதாவது: இந்தத் தோழர்கள், முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஒரு மாற்றமடையும் காலகட்டம் இருக்கும்; அது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாகத்தான் இருக்கும் என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். இதற்கிடையில் ஒரு விஷயத்தை சேர்க்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். அதாவது முதலாளித்துவத்திற்கும் சோசலிசத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் பாசிச சர்வாதிகாரக் காலகட்டம் இருக்குமென்பதைச் சேர்க்க வேண்டும் என்று இந்தத் தோழர்கள் கருதுகிறார்கள்.

இந்தத் தவறானது, தொலைநோக்குப் பார்வையை இழக்கச் செய்து, பாசிசம் ஒருமுறை அதிகாரத்தைக் கைப்பற்றினால் அனைத்தும் முடிந்துவிட்டது என்ற கருத்தில் போய்த்தான் முடியும். அதற்குப் பதிலாக பிரான்சில் என்ன நடந்தது என்பதைப் பாருங்கள். பூர்ஷுவா வர்க்கத்தினர் தங்கள் சக்திகளைத் திரட்டியது போன்றே பாட்டாளி வர்க்கத்தினரும் தங்கள் சக்திகளைத் திரட்டி அதற்குத் தக்க பதிலடி கொடுத்தனர். கம்யூனிஸ்டுக் கட்சியானது பாசிசத்தை முன்னேற விடாமல் மிகத் திறமையாக அதன் பாதையில் தடைக்கற்களை ஏற்படுத்தியது.

புகாரின் (Nikolai Bukharin)

இன்று பிரான்சில் பாசிசம் சம்பந்தப்பட்ட பிரச்சினை பிப்ரவரி 6-ம் தேதியிலிருந்ததைப் போன்று இல்லை 4 : சக்திகளின் பரஸ்பர பலம் இப்போது மாறியுள்ளது. பாசிச அபாயம் கடந்துவிடவில்லை; ஆனால் அதற்கெதிராகப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதுவே முதலாளித்துவ வர்க்கத்தின் நெருக்கடியை ஆழமாக்கியுள்ளது. பாசிசம் எதிர்த்தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதை முறியடிக்க நாம் தயாராக வேண்டும். இவ்வாறு நோக்கவில்லை என்றால் இந்தப் பிரச்சினையை நாம் புரிந்து கொள்ள முடியாது. வர்க்கப் போராட்டமாக இதைக் காண வேண்டும்.

பூர்ஷுவா வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்குமிடையே நடக்கும் போராட்டமாக இதைக் காண வேண்டும். இதில் பூர்ஷுவா வர்க்கம் மிக அப்பட்டமான வடிவத்தில் தன்னுடைய சர்வாதிகாரத்தை நிறுவ வேண்டுமென்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. பாட்டாளி வர்க்கமோ தன்னுடைய அனைத்து ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதன் மூலம் தன்னுடைய சொந்த சர்வாதிகாரத்தை நிறுவுவதை இலட்சியமாகக் கொண்டிருக்கிறது.

பியாதகோ (Georgy Pyatakov)

இதனால்தான், ஜனநாயக உரிமைகளுக்காக நாம் ஏன் போராட வேண்டும் என்று போர்டிகா ஏளனமாகக் கேட்டதன் மூலம் மிகப் பெரிய தவறிழைத்தார். சொல்லப் போனால் நடப்பு காலகட்டத்தில் நிலைமை மிக மோசமாகக் கூடும். கட்சியின் வேலைத் திட்டம் குறித்து புகாரினுடனும், பியாதகோவுடனும் நடத்திய வாதப் பிரதிவாதங்களின்போது சில கேள்விகளுக்கான விடையை 1919-ம் ஆண்டிலேயே லெனின் அளித்துள்ளார்.

ஏகாதிபத்தியக் கட்டம் என்பது வந்து விட்டதால் முந்தைய கட்டங்களை கணக்கிலெடுக்க வேண்டிய தேவை கட்சியின் வேலைத் திட்டத்திற்கு இனியும் அவசியமில்லை என்று புகாரினும் பியாதகோவும் கூறினர். ஆனால் லெனின் இதற்கு இவ்வாறு பதில் கூறினார்: இல்லை, இத்தகைய கட்டங்களை நாம் கடந்து விட்டோம்; ஆனால் இக்கட்டங்களில் தொழிலாளி வர்க்கம் பெற்ற ஆதாயங்கள் மதிப்பில்லாமல் போய்விடவில்லை. இத்தகைய ஆதாயங்களைப் பாதுகாக்க பாட்டாளி வர்க்கம் போராடியாக வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கு ஒரு போர்முனை இப்போராட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அடிக்குறிப்புகள்:

4. 1934 பிப்ரவரி 6-ம் தேதி பிரான்ஸில் நடந்த வலதுசாரிக் கலகங்கள், காவல்படையால் ஒடுக்கப்பட்டன. பாசிஸ்டு ஆட்சி அமைப்புகள் மேலும் பரவுவதற்கான அபாயம் பற்றி பிரான்சின் இடதுசாரிகளையும் அகிலத்தையும் விழிப்படையச் செய்ய உதவின. எனவே பொதுஜன அணிக் கொள்கைக்கு இந்த சம்பவம் வழிவகுத்தது.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

பெருங்குடி : விஷவாயு தாக்கி மூவர் பலி – PRPC அறிக்கை !

பெருங்குடி : கிணறை சுத்தம் செய்தவர்கள் விஷவாயு தாக்கி மூவர் பலி !

பெருங்குடி : கிணறை சுத்தம் செய்தவர்கள் விஷவாயு தாக்கி மூவர் பலி!
தீயணைப்புத் துறையினர் காப்பாற்றுவதில் அலட்சியம்!

பெருங்குடி திருவள்ளூர் நகரை சார்ந்த சொந்த வீட்டு உபயோகத்திற்காக இருந்த கிணற்றில் இறங்கி சுத்தம் செய்தவர்கள் ஒருவரை காப்பாற்ற இன்னொருவர் என இறங்கி மூவர் இறந்துவிட்டனர். மேலும் மூவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!

”இது எங்க ஏரியா இல்லை” என கைவிரித்த அருகில் இருந்த தீயணைப்புப்படை.  10 நிமிடத்தில் தெரிவித்து, 2.30 மணி நேரம் கழித்து ஆடி அசைந்து வந்த தீயணைப்பு படையினர்.

அருகில் இருக்கும் கழிவு நீர் குட்டையால் தான் வீட்டு கிணறுகளில் விசவாயு தாக்கம்.  கழிவு நீர் குட்டையை பராமரிக்க தவறிய மாநகராட்சி நிர்வாகம்.

♦ ♦ ♦

பலியான  காளிதாஸ், சந்தோஸ், அன்பு – மூவரின் குடும்ப நிலவரம் :

காளிதாஸ், சந்தோஸ், அன்பு என்கிற அன்பழகன் என மூவரும் விசவாயு தாக்கி இறந்த செய்தி அறிந்து பெருங்குடி பகுதிக்கு சென்று  விசாரித்தோம்.

பெருங்குடி பகுதி கள்ளுக்குட்டை என்னும் இடத்தில் திருவள்ளூர் நகரை நாங்கள் சென்றடைந்த பொழுது, மூவர் இறந்த செய்தியை மக்கள் துயரத்துடன் பேசிக்கொண்டு இருந்தனர்.

இறந்த காளிதாசுக்கு லட்சுமி என்கிற மனைவி, யுவராணி (15), நித்தீஸ் (13) என இரு குழந்தைகள் உள்ளனர்.  இவர் செண்டிரிங் வேலை செய்துவந்தார்.

இறந்த சந்தோஷ்-க்கு லட்சுமி என்கிற மனைவி சாதனா (6), தர்ஷினி (3) என இரு குழந்தைகள் உள்ளனர்.  இவர் போர்டு (Ford) கார் நிறுவனத்தில் ஷோரூமில் வேலை செய்து வந்தார்.

இறந்த அன்பு என்கிற அன்பழகனுக்கு தீபா என்கிற மனைவி, யோகேஷ்(14), சுதன் (12) என்கிற இரு மகன்களும் உள்ளனர்.  இவரும் காளிதாசை போலவே செண்டிரிங் வேலை செய்துவந்தவர்.

கிணற்றுக்குள் இறங்கியவர்களை விசவாயு தாக்கியது :

சம்பந்தப்பட்ட கிணறு இறந்த சந்தோஷ் என்பவருக்கு சொந்தமானது ஆகும்.  நீரை அவருடைய வீட்டு தேவைக்காக பயன்படுத்தியுள்ளார்கள். அந்த நீர் குடிக்க பயன்படாத உப்புநீர் ஆகும்.

கிணற்றில் உள்ள கழிவுநீர் சுரப்பைத் தடுக்கவும், கிணற்றில் உள்ள கழிவுகளை அகற்றவும் முடிவு செய்து, முதலில் காளிதாஸ் இறங்கியுள்ளார்.   அவருக்கு உதவியாக கோவிந்தசாமியும் உடன் இறங்கியுள்ளார்.  கிணற்றை சுத்தம் செய்ய முயலும் பொழுதே கோவிந்தசாமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட அவர் மேலே வந்துவிட்டார்.  சிறிது நிமிடங்களில் காளிதாஸ் மயக்கமடைய, பதறிப்போன சந்தோஷ் கிணற்றில் இறங்கி அவரும் மயக்கமடைய, இருவர் மாட்டிக்கொண்டார்களே என அன்பும்  கிணற்றிற்குள் இறங்கியுள்ளார். சில நிமிடங்களில் அவரும் விசவாயு தாக்குதலுக்குள்ளானார்.

தீயணைப்பு படையின் அலட்சியம் :

சந்தோஷ் கிணற்றில் இறங்கும் பொழுதே அங்கிருந்த மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கும் உடனே தகவல் தெரிவித்தனர்.  தீயணைப்பு படை வராததால்,   சிவா என்பவர் நேரடியாக அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு சென்று அழைத்த பொழுது, “அது எங்க ஏரியா இல்லை. எங்க ஏரியா பேபி நகரோடு முடிந்துவிட்டது” என பொறுப்பே இல்லாமல் தெரிவித்துள்ளனர்.   சம்பவம் ஏற்பட்ட இடத்திற்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் உள்ள தொலைவு 10 நிமிட பயணத் தொலைவு தான்.

அந்த பகுதியின் எல்லைக்குட்பட்ட துரைப்பாக்கம் தீயணைப்பு வண்டி ஆடி அசைந்து வந்த பொழுது  மாலை ஐந்தாகிவிட்டது.  சம்பவம்  நடந்தது மதியம் 2.30 மணி. தகவல் சொன்னது மதியம் 2.40. வந்து சேர்ந்ததோ மாலை 5 மணி.

படிக்க:
மோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து
24 மணிநேரமும் பார் நடத்திக்கோ ! போலி சரக்கு ஓட்டிக்கோ ! மாமூல் மட்டும் குறையக்கூடாது !

தீயணைப்பு படையில் வந்தவர்களும் எவ்வித முறையான கருவிகளுடன் வராமல் சாதாரணமாக செயல்பட்டுள்ளனர்.  உரிய நேரத்திற்குள் வந்திருந்தால், இரண்டு உயிர்களையாவது கண்டிப்பாக காப்பாற்றி இருக்கலாம் என மக்கள் ஆதங்கமாகவும், கோபமாகவும் தெரிவித்தார்கள்.

இதற்கிடையில் கிணற்றில் விழுந்தவர்களை காப்பாற்ற சேகர் என்னும் தொழிலாளி கிணற்றுக்குள் இறங்கினார்.  இறங்கும் பொழுதே ஏணியில் இருந்து தவறி கிணற்றில் விழுந்துவிட்டார்.   அவர் இறங்கும் பொழுது அன்பு பாதி மயக்கநிலையில் இருந்ததை பார்த்துள்ளார்.  சேகரை காப்பாற்ற ராஜ் என்பவர் உள்ளே இறங்கி அவரை மட்டும் காப்பாற்றினார்.  ராஜுக்கும் விசவாயு தாக்கியதால், மேற்கொண்டு மற்றவர்களை மீட்க முடியவில்லை.

மருத்துவமனையில் ஐசியூ வார்டில் அனுமதி :

கோவிந்தராஜ், சேகர், ராஜ் மூவரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சேகரை மருத்துவமனையில் சந்தித்து பேசிய பொழுது, “கிணற்றில் விழுந்தவர்களை  காப்பாற்ற தீயணைப்பு படைவீரர்கள் உரிய நேரத்திற்கு வராததால்தான், நான் உள்ளே இறங்கினேன்” என்றார். உடல்நிலை குறித்து கேட்ட பொழுது “இதயம் கடுமையாக வலி எடுக்கின்றது.  மேலும் மூச்சுவிடும் பொழுது ஒருவிதமான எரிச்சல் இருக்கிறது ” என்றார். மற்றவர்களுடன் பேசமுடியவில்லை.

வழக்கு நிலவரம் குறித்து !

துரைப்பாக்கம்  போலீஸ் ஸ்டேசனில் விசாரித்த பொழுது,  அங்கிருந்த துணை ஆய்வாளர் “இந்த வழக்கை ஆய்வாளர்தான் விசாரணை செய்கிறார்.  எதுவாக இருந்தாலும், அவரிடம் கேளுங்கள்” என தட்டிக்கழித்தார்.

நாம் தொடர்ந்து கேட்டதால்,  சிஎஸ்.ஆர் (CSR) எண்ணையும் (279), ஐபிசி 304A பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார்.     ஆய்வாளரை தொலைபேசியில் பேச முயற்சி செய்தோம். ஆனால், அவர் அழைப்பினை ஏற்கவில்லை.  அங்கிருந்த ஒரு கான்ஸ்டபிள்  ”இது போன்ற சம்பவம் ஆறு மாதத்திற்கு முன்பும் நிகழ்ந்துள்ளது” என கூறினார்.

கழிவுநீர் குட்டையை மாநகராட்சி பராமரிக்கவில்லை !

மூன்று உயிர்களின் இழப்புக்கு காரணம் கிணற்றுக்கு அருகில் இருந்த குட்டை தான் என விசாரித்த பொழுது மக்கள் தெரிவித்தார்கள்.  அந்த குட்டை இருக்கும் இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது.   துவக்கத்தில் இந்த குட்டையானது மழை பெய்தால் நீர் சேகரித்து வைக்கும் இடமாக இருந்தது.   நாளடைவில் இதில் கழிவு நீரை கொட்டியும்,  குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டதாலும்  அந்த குட்டை சுகாதாரமற்ற நிலையில் துர்நாற்றம் வீசும் குட்டையாக மாறிவிட்டது.  இந்த குட்டையால் தான் நன்றாக இருந்த வீட்டு கிணறுகள் கெட்டுப்போயுள்ளன. விசவாயும் உற்பத்தியாகிறது.

மாநகராட்சி அந்த குட்டையை சுத்தமாக பராமரித்திருக்கவேண்டும் அல்லது அதை உரியமுறையில் மூடியிருக்கவேண்டும். இரண்டும் செய்யாமல் கழிவுநீர் குட்டையாக்கி அந்த பகுதியை மிகவும்  சுகாதாரமற்று வைத்துள்ளது.

மூன்று இளைஞர்கள் இறந்ததற்கு விசவாயு மட்டும்தான் காரணமா?

அலட்சியமாக பதில் சொன்ன, மிகவும் தாமதமாக வந்த தீயணைப்புப் படை காரணமில்லையா?

குட்டையை பராமரிக்கத் தவறிய மாநகராட்சிக்கு இதில் பங்கில்லையா?

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.

நொறுங்கிய பாதங்களுடன் 18 நாட்கள் தவழ்ந்தும் ஊர்ந்தும் தப்பிய வீரன் !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 1

சேனைத் தலைவரின் வேண்டுகோளின் பேரில் அலெக்ஸேய் மெரேஸ்யெவும் அவனுக்குத் துணையாக லெப்டினன்ட் குக்கூஷ்கினும் மாஸ்கோவின் தலைசிறந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

போருக்கு முன்பு இது ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவப் பயிற்சிசாலையாக இருந்தது. புகழ் பெற்ற சோவியத் விஞ்ஞானி ஒருவர் நோயும் காயமும் உற்ற பிறகு மனித உடலை விரைவாக மீள்முன் நிலைக்கு கொண்டு வருவதற்குரிய புதிய முறைகளை அங்கே ஆராய்ந்து வந்தார். இந்த நிலையத்துக்கு என உறுதியாக அமைந்த மரபுகளும் உலகப் புகழும் இருந்தன.

போர் தொடங்கியதும் விஞ்ஞானி தமது ஆராய்ச்சி நிலையத்தின் மருத்துவப் பயிற்சிச்சாலையை இராணுவ அதிகாரிகளுக்குரிய மருத்துவமனையாக மாற்றிவிட்டார். அந்தக் காலத்தில் முன்னணி விஞ்ஞானம் அறிந்திருந்த எல்லா வகை சிகிச்சைகளும் இங்கே நோயாளிகளுக்கு முன் போலவே அளிக்கப்பட்டன. தலைநகருக்கு அருகே சீறிக் கொண்டிருந்த போரின் காரணமாகக் காயமடைந்தவர்கள்

சாரிசாரியாகக் கொண்டுவரப்பட்டமையால் கட்டில்களின் எண்ணிக்கையை மருத்துவமனையில் இருந்த இடவசதியைவிட நான்கு மடங்கு அதிகமாகப் பெருக்க நேர்ந்தது. அக்கம் பக்கத்திலிருந்த அறைகள் எல்லாம் வார்டுகளாக மாற்றப்பட்டன. சோதனைக்கூடத்துடன் இணைந்த தமது வேலை அறையைக் கூட விஞ்ஞானி காயமடைந்தவர்களுக்காகக் காலிசெய்து விட்டு முன்பு பொதுமருத்துவருக்கு உரியதாயிருந்த சிறு அறைக்குத் தம் புத்தகங்களுடனும் வழக்கமான சாமான்களுடனும் சென்றுவிட்டார். அப்படியும் சில வேளைகளில் கட்டில்களை ஆளோடிகளிலும் போட நேர்ந்தது.

மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் – தகுதிமிக்க விஞ்ஞானியும் சுப்ரீம் சோவியத் உறுப்பினருமான தலைமை மருத்துவர் முதல் மருத்துவத் தாதிகள், உடுப்பறைப் பணிப்பெண்கள், வாயிற் காவலாளி மாதர்கள் வரை – களைத்துப் போயிருந்தார்கள். சில வேளைகளில் அரைப் பட்டினியாக இருந்தார்கள். சோர்ந்து தள்ளாடினார்கள். போதிய தூக்கம் கூட இல்லாமல் உழைத்தார்கள். ஆயினும் இவர்கள் எல்லோருமே தங்கள் நிறுவனத்தின் ஒழுங்கு முறைகளை நம்பமுடியாத அளவு கண்டிப்புடன் தொடர்ந்து கடைபிடித்து வந்தார்கள். தொடர்ந்தாற்போல இரண்டு அல்லது மூன்று ஷிப்டுகள்கூட வேலை செய்த வார்டு மருத்துவத்தாதிகள் கிடைத்த ஒய்வு நேரத்தை எல்லாம் துப்புரவு செய்வதிலும் கழுவுவதிலும் தரையைச் சுரண்டிப் பெருக்குவதிலும் செலவிட்டார்கள். மெலிந்து, களைப்பினால் தள்ளாடிய நர்ஸ்கள் முன்போலவே வெளுத்துக் கஞ்சிபோட்ட மேலங்கிகள் அணிந்து வேலைக்கு வந்தார்கள். மருத்துவர்கள் இட்ட பணிகளை முன் போலவே கச்சிதமாக, அப்பழுக்கின்றி நிறைவேற்றினார்கள். மருத்துவர்கள் படுக்கைத் துணிகளில் சிறுமாசு மறு இருந்தாலும் குற்றங்கண்டார்கள். சுவர்கள், மாடிப்படி அழிகள், கதவுப் பிடிகள் ஆகியவை துப்புரவாயிருக்கின்றனவா என்று கைக்குட்டையால் துடைத்துப் பார்த்தார்கள்.

தலைமை மருத்துவர் சிவந்த முகமும், உயர்ந்த நெற்றிக்கு மேல் நரையோடிய அடர் முடியும், மீசையும் அடர்ந்த வெள்ளித் தாடியும் கொண்டவர். ஆவேசமாகத் திட்டி நொறுக்கும் வழக்கம் உள்ளவர். போருக்கு முன்பு போலவே இப்போதும் அவர் கஞ்சிபோட்ட மேலங்கிகள் அணிந்த மருத்துவர்களும் உதவியாளர்களும் புடை சூழ நாள் தோறும் இரண்டு தடவை குறித்த நேரத்தில் வார்டுகளைப் பார்வையிட்டார். புதியவர்களின் நோய் நிர்ணயிப்பைப் பார்த்தார், தீவிர நோயாளிகளின் விஷயத்தில் சிகிச்சைக்குரிய ஆலோசனை கூறினார்.

ஊழியர்களில் யாரையேனும் கவனக் குறைவுக்காக விளாசும் பொழுது அவர் இரைந்து ஆவேசமாகக் கத்துவார். அதுவும் தவறு நிகழ்ந்த இடத்திலேயே, நோயாளிகளின் முன்னிலையில். கலவரம் நிறைந்த, இருட்டடிப்பு செய்யப்பட்ட போர்க்கால மாஸ்கோவில் பணியாற்றும் தமது மருத்துவக்கூடம் முன் போலவே ஆதர்ச மருத்துவமனை என்றும், இந்த ஹிட்லருக்கும் கோயெரிங்குகளுக்கும் எல்லோருக்கும் அவர்கள் அளிக்கும் பதில் இதுவே என்றும் போரினால் ஏற்பட்டுள்ள சிரமங்களைப் பற்றிக் கேட்கவே தாம் விரும்பவில்லை என்றும் அவர் இத்தகைய சந்தர்ப்பங்களில் சொல்வது வழக்கம். வேலைக்குச் சோம்புபவர்களும் கதுப்புணிகளும் எங்கு வேண்டுமானாலும் போய்த் தொலையலாம் என்றும், எல்லாம் ஒரே கடினமாக இருக்கும் இந்த சமயத்தில்தான் மருத்துவமனையில் சிறப்பாகக் கண்டிப்பான ஒழுங்கு கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் அடித்துக் கூறுவார். தமது பார்வையீடுகளை அவர் துல்லியமான நேரக் கண்டிப்புடன் நிறைவேற்றி வந்தார். ஆகையால் மருத்துவத்தாதிகள் வார்டுக் கடிகாரங்களை அவரது வருகையைக் கொண்டு முன் போன்றே சரி பார்ப்பார்கள். விமானத் தாக்குக்கு அபாய அறிவிப்புகள் கூட இந்த மனிதரின் நேரக் கண்டிப்பைக் குலைக்கவில்லை. ஊழியர்கள் அற்புதம் விளைத்ததற்கும் நம்பவே முடியாத நிலைமைகளில் போருக்கு முந்திய ஒழுங்கு முறையைக் கடைபிடித்ததற்கும் இதுவே காரணமாயிருக்க வேண்டும்.

தலைமை மருத்துவரை வஸீலிய் வலீலியேவிச் என்று அழைப்போம். ஒரு நாள் காலை அவர் வார்டுகளைச் சுற்றிப் பார்க்கையில் மூன்றாம் மாடிப்படி மேடையில் இரண்டு கட்டில்கள் அக்கம் பக்கமாகப் போடப்பட்டிருந்ததைக் கண்டார்.

“இது என்ன கண்காட்சி?” என்று இடிமுழக்கம் செய்து, மயிரடர்ந்த புருவங்களைச் சுளித்து மருத்துவரை அவர் பார்த்த பார்வையில், உயரமான, சற்று கூரிய அந்த நடுத்தர வயதுள்ள மனிதர் – மரியாதைக்குரிய தோற்றம் கொண்டவர் – பள்ளிச் சிறுவன்போல அடக்க ஒடுக்கமாக விடையளித்தார்:

“இரவில் தான் இவர்கள் கொண்டுவரப்பட்டார்கள் …. விமானிகள். இதோ, இவனுக்குத் தொடையும் வலது கையும் முறிந்திருக்கின்றன. நிலைமை சாதாரணமாக இருக்கிறது. அதோ அவன்”- இவ்வாறு கூறி, மூடிய கண்களுடன் அசையாமல் கிடந்த மிக மெலிந்த ஒரு மனிதனைச் சுட்டிக் காட்டினார் அவர். “அந்த மனிதனின் வயதை அவனது தோற்றத்தைக் கொண்டு நிர்ணயிக்க முடியவில்லை. இவனுடைய நிலைமை அபாயமானது. கால் விரல் எலும்புகள் நொறுங்கியிருக்கின்றன. இரண்டு பாதங்களிலும் தசை அழுகல் ஏற்பட்டிருக்கிறது. எல்லாவற்றிற்கும் முக்கியமானது அளவுகடந்த சோர்வு. இவன் நொறுங்கிய பாதங்களுடன் பதினெட்டு நாட்கள் தவழ்ந்தும் ஊர்ந்தும் ஜெர்மானியப் பின்னணியிலிருந்து வெளியேறியதாக இவர்களுடன் வந்த இராணுவ மருத்துவர் எழுதியிருக்கிறார். நான் இதை நம்பவில்லை. கட்டாயமாக இது மிகைக்கூற்று….

மருத்துவரின் சொற்களைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் வஸீலிய் வஸீலியெவ் போர்வையைச் சிறிது திறந்தார். கைகளை மார்பின் மேல் இணைத்தவாறு படுத்திருந்தான் அலெக்ஸேய் மெரேஸ்யெவ். புத்தம் புதுச்சட்டை, துப்பட்டி, இவற்றின் வெண்மையின் மீது பளிச்சென வேறுபட்டுத் தெரிந்தன கருந்தோலால் மூடப்பட்டிருந்த அந்தக் கைகள். இவனுடைய எலும்புக் கட்டமைப்பை அந்தக் கைகளைக் கொண்டே ஆராய்ந்தறிய முடிந்தது. தலைமை மருத்துவர் விமானியைக் கம்பளியால் பதபாகமாகப் போர்த்துவிட்டு, சிணுங்கும் பாவனையில் மருத்துவரின் பேச்சை இடை முறித்தார்:

“எதற்காக இவர்கள் இங்கே கிடத்தப்பட்டிருக்கிறார்கள்?”

“ஆளோடியில் இடம் இல்லை… நீங்களே…..”

“என்ன ‘நீங்களே’, ‘நீங்களே’! நாற்பத்து இரண்டாவதில்?”

“ஆனால், அது கர்னல்கள் வார்டு ஆயிற்றே.”

“உன் போன்றவர்களை ஏமாற்றுவது பாவம். சதையழுகல் ஏற்பட்டிருப்பது மெய்தான். ஆனால், உளம் சோராதே. தீரா வியாதிகள் உலகிலே கிடையா, வெளியேற வகையற்ற நிலைமைகள் எப்படிக் கிடையாவோ அப்படியே.

“கர்னல்கள் வார்டா?” என்று திடீரென வெடித்துச் சீறினார் தலைமை மருத்துவர்.” “எந்த மடமட்டியின் யோசனை இது? கர்னல்கள் வார்டாம்! மடையர்கள்!”

“சோவியத் யூனியனின் வீரன்’ பட்டம் பெற்றவர்களுக்காக இடங்களைச் சேமிப்பில் வைத்திருக்கும் படி நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறதே.”

“‘வீரர்களாம்’ ‘வீரர்கள்’! இந்தப் போரில் எல்லாருமே வீரர்கள் தாம். நீங்கள் எனக்கென்ன பாடம் படிப்பிக்கிறீர்கள்? இங்கே தலைவன் யார்? என் உத்தரவு பிடிக்காதவர்கள் இந்தக் கணமே வெளியேறி விடலாம். இப்போதே இந்த விமானிகளை நாற்பத்தி இரண்டாம் வார்டுக்கு மாற்றுங்கள். என்னென்னவோ அசட்டுக் கற்பனைகள் செய்து கொள்கிறீர்கள்: ‘கர்னல்கள் வார்டாம்’!”

வாயடைத்துப்போன உதவியாளர்கள் புடை சூழ அப்பால் நகர்ந்தவர் சட்டெனத் திரும்பி, அலெக்ஸேயின் கட்டில் மீது குனிந்து, தொற்று நீக்கிகளால் ஓயாமல் கழுவப்படுவதன் விளைவாக அரிக்கப்பட்டுத் தோலுரிந்து கொண்டிருந்த தமது உப்பிய கையை அவன் தோள்மேல் வைத்து, “நீ இரண்டு வாரங்களுக்கு மேல் ஊர்ந்து ஜெர்மானியப் பின்புலத்திலிருந்து வெளியேறியது உண்மைதானே?” என்று கேட்டார்.

“எனக்குச் சதை அழுகல் ஏற்பட்டுவிட்டதா என்ன?” என்று ஈன சுரத்தில் வினவினான் அலெக்ஸேய்.

படிக்க:
உண்மையில் பாசிசம் என்பது என்ன ?
ஆரியருக்கு அடிப்பணியாதீர் ! அரசியலில் அவர்களுக்கு ஆதிக்கம் அளிக்காதீர் !

தலைமை மருத்துவர் கதவருகே நின்ற உதவியாளர்களைக் குத்திவிடுபவர் போன்று சினந்து நோக்கினார். அலெக்ஸேயின் பெரிய கரு விழிகளை நேரிட்டுப் பார்த்தார். அவற்றில் ஏக்கமும் கலவரமும் குடிகொண்டிருந்தன. திடீரெனத் தலைமை மருத்துவர் சொன்னார்:

“உன் போன்றவர்களை ஏமாற்றுவது பாவம். சதையழுகல் ஏற்பட்டிருப்பது மெய்தான். ஆனால், உளம் சோராதே. தீரா வியாதிகள் உலகிலே கிடையா, வெளியேற வகையற்ற நிலைமைகள் எப்படிக் கிடையாவோ அப்படியே. இதை நினைவில் வைத்துக்கொள், என்ன?”

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

மோடி உருப்படியா செஞ்சது ஒன்னு சொல்லுங்க பாப்போம் | மக்கள் கருத்து

“திருட்டுத்தனம், பொய்த்தனம் இதெல்லாத்தையும் பண்ணிதான் மோடி வந்துட்டாரு.. வோட்டு மிஷினக் கூட மாத்துறதுக்கு வாய்ப்பிருக்கு… ஏன்னா தேர்தல் ஆபிசருங்க எல்லாம் அவரு கையில…“

”400 ரூபா இருந்த கேஸ் சிலிண்டர் இவரு ஆட்சில வந்ததுமே 800 ரூபா ஆகிடுச்சி… நம்ம காச வாங்கி நம்மளையே ஏமாத்துறாங்க … “

“சாதி பிரச்சினைய வச்சி ஜெயிச்சிட்டாப்புல சார்… இந்தாளு என்ன பண்ணான் ? ஒன்னு சொல்லுங்க பாப்போம்… ”

மோடி தேர்தலில் வெற்றி பெற்றது குறித்து சென்னை மக்கள் இன்னும் அதிகமாகவே சொல்கிறார்கள் …

பாருங்கள் .. பகிருங்கள் …

வினவு களச் செய்தியாளர்கள்

மோடி ஆதரவு சங்கியை விரட்டியடித்த சாமானியர்கள் ! | காணொளி

“மோடி வடநாட்டுல நல்லாத்தான் பண்ணிருக்காரு. அவரோட வேவ்ஸ் இங்க தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் ரீச் ஆகல … அவரு ஜெயிச்சிருக்கார்.. நாம ஏத்துக்கிட்டுதான் ஆகணும்” என்கிறார் ஒரு கேரளாக்காரர்.

இந்தக் காணொளியில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் மோடியை ஆதரித்துப் பேசுகிறார். உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள் தெரியுமா?

பாருங்கள் ! பகிருங்கள்..

வினவு களச் செய்தியாளர்கள்

முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச் செல்லும் போக்கு !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | பாகம் – 4

டோக்ளியாட்டி

பாசிசத்தைக் குறித்து விளக்கும்போது ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகள் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்கள் என்பதைக் காண்போம். பாசிசமானது பெரிய பூர்ஷுவா வர்க்கத்தினரிடமிருந்து அதிகாரத்தை வென்றெடுத்து அதைக் குட்டி பூர்ஷுவா பகுதியினருக்குக் கிடைக்கச் செய்கிறது. அந்தக் குட்டி பூர்ஷுவா வர்க்கம் இந்த அதிகாரத்தை பெரிய பூர்ஷுவா வர்க்கத்துக்கு எதிராகப் பயன்படுத்துகிறது என்று அவர்கள் கூறினார்கள். நீங்கள் இந்த நிலைப்பாட்டை துராத்தி, டிரவெஸ் 2 போன்ற இத்தாலிய சமூக ஜனநாயக எழுத்தாளர்களின் எழுத்துக்களில் காண முடியும். இந்த நிலைப்பாட்டிலிருந்து அவர்கள் தங்களுடைய நீண்டகால நடைமுறைக் கொள்கையை உருவாக்கிக் கொண்டார்கள். பாசிசத்திற்கெதிரான போராட்டமானது அனைத்து சமூக மக்கள் பகுதியினராலும் நடத்தப்படும் என்பதே அந்த நடைமுறைக் கொள்கை. இவ்வாறுதான், பாசிசத்திற்கெதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் செயல்பாடு குறித்த பிரச்சினையை அவர்கள் தவிர்த்தார்கள்.

விஷயத்திற்கு வருவோம். 1932-ல் ஜெர்மனியில் கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்த துண்டு துக்கானிக் குழுக்கள் உள்ளிட்டு பல எதிர் – நீரோட்டங்கள், பாசிசமானது குட்டி பூர்ஷுவாக்களின் சர்வாதிகாரத்தை பெரிய பூர்ஷுவாக்களின் மீது ஏற்படுத்துகிறது என்று வலியுறுத்தின. இது தவறான அனுமானமாகும். இதிலிருந்து தவறான அரசியல் திசைவழி தவிர்க்க இயலாதவாறு பெறப்படுகிறது. “வலதுசாரிகளின்” எல்லா எழுத்துக்களிலும் அதைக் காண முடியும்.

மற்றொரு விளக்கம் குறித்தும் நீங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். “போனபார்டிசம்” என்று பாசிசத்தைக் குறித்து சொல்லப்படும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டிராட்ஸ்கீயத்தின் யுத்தக் குதிரையான இந்தச் சொற்றொடரானது மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் ஆகியோருடைய சில அறிக்கைகளிலிருந்து (லூயிபோனபார்ட்டின் 18-வது புருமேர் போன்றவற்றிலிருந்து) எடுக்கப்பட்டதாகும். ஆனால் மார்க்ஸ், எங்கெல்சினுடைய பகுப்பாய்வானது முதலாளித்துவத்தின் வளர்ச்சி சகாப்தமான அந்தக் காலகட்டத்திற்குப் பொருத்தமானதாகும். ஆனால் அதை, ஏகாதிபத்திய காலகட்டமான இன்று எந்திரகதியில் பிரயோகிப்பது சரியல்ல.

பாசிசத்தை “போனபார்டிசம்” என்று சொல்லும் இந்த விளக்கத்திலிருந்து என்ன தெரிகிறது? இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அதிகாரத்திலிருப்பது பூர்ஷுவா வர்க்கத்தினர் அல்ல; மாறாக அவர்களிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிய முசோலினியும் அவருடைய ஜெனரல்களும்தான் அதிகாரத்தில் இருக்கின்றனர் என்பதாகும்.

டிராட்ஸ்கி.

புருனிங் அரசாங்கத்தை டிராட்ஸ்கி விளக்கிய விதத்தை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்: “ஒரு போனபார்டிஸ்டுகளுடைய அரசாங்கம்” டிராட்ஸ்கியவாதிகள், பாசிசம் குறித்து இத்தகைய கருத்தையே எப்பொழுதும் கொண்டுள்ளனர். அதனுடைய வேர் எது? பாசிசம் என்பது பூர்ஷுவா வர்க்கத்தினரின் சர்வாதிகாரம் என்ற விளக்கத்தை நிராகரிப்பதேயாகும்.

பூர்ஷுவா வர்க்கத்தினரின் அப்பட்டமான சர்வாதிகாரமான பாசிசம் இன்று ஏன் தோன்றியுள்ளது? குறிப்பாக இந்தக் காலகட்டத்தில் ஏன் தோன்றியுள்ளது?

இதற்கான விடையை லெனினிடமிருந்தே பெறலாம். ஏகாதிபத்தியம் குறித்து அவர் எழுதியுள்ளவற்றில் நீங்கள் காணலாம். ஏகாதிபத்தியம் குறித்து நீங்கள் அறிந்திருக்கவில்லையென்றால் பாசிசம் என்ன என்பது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள முடியாது.

ஏகாதிபத்தியத்தின் பொருளாதார அம்சங்களை நீங்கள் அறிவீர்கள். லெனின் அளிக்கும் விளக்கமும் உங்களுக்குத் தெரியும். ஏகாதிபத்தியம் என்பது பின்வருமாறு குணாம்சப்படுத்தப்படுகின்றது:

1) உற்பத்தி மற்றும் மூலதனக் குவிப்பு, பொருளாதார வாழ்வில் ஒரு தீர்மானகரமான பங்கை வகிக்கக்கூடிய ஏகபோகங்களின் உருவாக்கம்;

2) வங்கி மூலதனமும் தொழில் மூலதனமும் இணைக்கப்படுதல், நிதி மூலதனத்தின் அடிப்படையில் ஒரு நிதி கோஷ்டி உருவாதல்;

3) மூலதன ஏற்றுமதி மூலம் அடையப்படும் பெரும் முக்கியத்துவம்;

4) சர்வதேச முதலாளித்துவ ஏகபோகங்களின் தோற்றம். இறுதியாக, பெரும் முதலாளித்துவ  நாடுகளிடையே உலகை மறு கூறுபோடுதல், இந்தப் பணி இப்போது பூர்த்தியடைந்து விட்டதாகவே கருதலாம்.

இவைதான் ஏகாதிபத்தியத்தின் அம்சங்கள். இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு பிற்போக்கான உருமாற்றத்தை அடையும் போக்கு அனைத்து பூர்ஷுவா அரசியல் அமைப்புகளிலும் காணப்படுகிறது. இதையும் கூட நீங்கள் லெனின் எழுத்துக்களில் காணலாம். இத்தகைய அமைப்புகளைப் பிற்போக்கானதாக ஆக்கவேண்டுமென்ற போக்கு உள்ளது. இந்தப் போக்கு பாசிசத்துடன் மிகவும் இணக்கமான வடிவங்களில் தோன்றுகிறது.

ஏன்? ஏனென்றால், வர்க்க உறவுகள் மற்றும் தங்களுடைய இலாபங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய தேவையை வைத்துப் பார்க்கும் பொழுது, தொழிலாளிகள் மீது மிகுந்த நிர்ப்பந்தம் செலுத்துவதற்கான வடிவங்களைப் பூர்ஷுவாக்கள் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. மேலும், ஏகபோகங்கள் அதாவது பூர்ஷுவா வர்க்கத்தின் தலையாய சக்திகள், குவிப்பின் மிக உயர்ந்த கட்டத்தை அடைகின்றன. அப்போது ஆட்சியின் பழைய வடிவங்கள் அவற்றின் விரிவாக்கத்திற்குத் தடைக்கற்களாக ஆகிவிடுகின்றன. இதனால் பூர்ஷுவா வர்க்கம், தான் உருவாக்கியதற்கெதிராகவே திரும்ப வேண்டியுள்ளது; ஏனென்றால் ஒரு சமயம் அதனுடைய வளர்ச்சிக்கான அம்சமாக இருந்தது இன்று முதலாளித்துவ சமுதாயத்தைப் பாதுகாப்பதற்கு ஒரு இடையூறாகவே இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் பூர்ஷுவா வர்க்கத்தினர் பிற்போக்காளர்களாக மாறி பாசிசத்தைக் கடைபிடிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

இந்த நேரத்தில் மற்றொரு தவறுக்கெதிராகவும் நான் உங்களை எச்சரிக்க வேண்டும். அதுதான் முன்னிலைப்படுத்துவதாகும். முதலாளித்துவ ஜனநாயகத்திலிருந்து பாசிசத்திற்கு மாறிச் செல்லும் போக்கு முடிந்துபோன, தவிர்க்க இயலாத ஒன்று எனக் கருதாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏன்? ஏனென்றால் ஏகாதிபத்தியத்திலிருந்து பாசிச சர்வாதிகாரம் அவசியம் தோன்றியே தீரும் என்பது கிடையாது. இங்கு நாம் சில நடைமுறை உதாரணங்களைக் காண்போம்.

ஜெர்மன் – நாஜிகளின் பேரணி.

உதாரணத்திற்கு இங்கிலாந்து ஒரு பெரும் ஏகாதிபத்திய நாடு. அங்கே ஜனநாயக வழிப்பட்ட நாடாளுமன்ற அரசாங்கம் (இதிலும் கூட பிற்போக்கான அம்சங்கள் இல்லையென்று கூறிவிட முடியாது) உள்ளது. பிரான்சையும் அமெரிக்காவையும் எடுத்துக் கொள்வோம், இந்நாடுகளில் பாசிச வடிவில் சமூகத்தை உருவாக்கும் போக்கு உள்ளதை நீங்கள் காண்பீர்கள். ஆனால் இங்கே நாடாளுமன்ற வடிவங்கள் இன்னும் உள்ளன. பாசிச வடிவிலான அரசாங்கத்தை நோக்கிச் செல்லும் போக்கு அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. என்றாலும் பாசிசம் எல்லா இடங்களிலும் வந்தே தீரும் என்று இதற்குப் பொருளாகாது.

இத்தகையதொரு கூற்றை நாம் விவாதித்தோமென்றால் அது ஒரு விஷயத்தை தவறாக முன்னிலைப்படுத்தும். எதார்த்தத்தில் இல்லாததை அது உண்மை என உறுதிப்படுத்துபவர்களாகிறோம். அதே சமயத்தில் ஒரு பெரும் அரசியல் தவறை நாம் செய்து விடுகிறோம். தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட உணர்வின் வீச்சு மற்றும் ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பதில் அதனுடைய திறன் ஆகியவற்றை வைத்தே பாசிச சர்வாதிகாரம் உருவாக்கக் கூடிய சாத்தியப்பாடுகள் ஏற்படுகின்றன என்பதை நாம் காணத் தவறிவிடுகிறோம். பாட்டாளி வர்க்கம் எதிர்க்குமானால், இத்தகைய அமைப்புகளைத் தூக்கியெறிவது கடினம். ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான இந்தப் போராட்டம் விரிவடைந்து அதிகாரத்திற்கான போராட்டமாகிவிடும்.

இதுதான் பாசிசத்தைக் குறித்து விளக்கும் பொழுது சொல்லப்பட வேண்டிய முதல் அம்சம்.

படிக்க:
அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !
100 வருசமானாலும் இங்க பிஜேபி வர முடியாது – மக்கள் கருத்து | காணொளி

இரண்டாவது அம்சம் பாசிசத்தினுடைய வெகுஜன அமைப்புகளின் தன்மையில் அடங்கியுள்ளது. பாசிசம் என்ற பதம் பிற்போக்குத் தனம், கொடுங்கோன்மை போன்றவைகளுக்கான மறு பெயராக துல்லியமற்ற முறையில் பயன்படுத்தப்படுகிறது. இது சரியல்ல. பாசிசம் என்பது பூர்ஷுவா ஜனநாயகத்திற்கெதிரான போராட்டம் என்பதை மட்டுமே குறிக்கவில்லை. அந்தப் போராட்டத்தை மட்டுமே நாம் எதிர்நோக்கியிருக்கும் பொழுது இக்கருத்தை இந்தப் பொருளில் நாம் பயன்படுத்த முடியாது. ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்றவற்றில் நாம் காண்பது தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டம் குட்டி பூர்ஷுவா தன்மையிலான ஒரு புதிய வெகுஜன அடித்தளத்தின் மீது உருவாகும்போதுதான் – எங்கெல்லாம் இவ்வகையான பாசிசம் இருக்கிறதோ – அங்கெல்லாம் இந்தப் பதத்தை நாம் பயன்படுத்தலாம்.

அடிக்குறிப்புகள் :

பிலிப்போ துராத்தி (Filippo Turati )

2. பிலிப்போ துராத்தி (1857-1932) 1892 இல் இத்தாலிய சோஷலிஸ்டுக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து தலைமை தாங்கியவர். அவரது தத்துவார்த்த அரசியல் நிலைகள் இரண்டாவது அகிலத்தின் சீரழிந்த சீர்திருத்தவாதத்தை ஒத்திருந்தது. அவரது தலைமையில் வடக்குப் பகுதியின் தொழிற்சாலை பூர்ஷுவாக்களுடன் தெளிவான ஆனால் வெளிப்படையாகத் தெரியாத கூட்டுறவை சோஷலிஸ்டுக் கட்சி ஏற்படுத்தியது. அப்பொழுது கட்சியில் வளர்ந்து வந்த மாக்ஸிமலிஸ்டுகள் (அதிக எண்ணிக்கை உள்ளவர்கள்) அணியினரை துராத்தி எதிர்த்துப் போராடினார். மாக்ஸிமலிஸ்டுகளுடன் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த சண்டை, புரட்சிகரவாதிகள் என்ற முறையில் பயனற்றவர்களாக இருந்தனர் என்பதை மையமாகக் கொண்டிருந்தது. ஆனால் சோஷலிஸ்டுப் புரட்சிக்கு மாற்றாக ஒன்றில் துராத்தி அக்கறை கொண்டிருந்தார்.

கிளாடியோ டிரவெஸ் (Claudio Treves)

பூர்ஷுவாக்களில் விவரமறிந்த புத்திசாலித்தனமான பகுதியுடனும் குட்டி பூர்ஷுவாக்களுடனும் ஒரு முற்போக்கு சீர்திருத்த கூட்டணி ஏற்படுத்துவதற்கு இவர்கள் முக்கிய தடங்கலாக இருப்பார்கள் என்று (துராத்தி) பார்த்தார், 1922 இல் சோஷலிஸ்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, இத்தாலிய யூனிட்டரி சோஷலிஸ்டுக் கட்சி என்ற சீர்திருத்தவாதக் கட்சியை துராத்தி ஸ்தாபித்தார். 1926 இல் இத்தாலியில் பாசிசத்திற்கு முந்திய கால ஜனநாயகத்தின் அடிச்சுவடு எதுவுமில்லாமல் “விசேட சட்டங்கள்” அழித்தபோது அவர் பிரான்சுக்கு தப்பி ஓடினார்.

கிளாடியோ டிரவெஸ் (1858-1933) சோஷலிஸ்டுக் கட்சியில் துராத்தியுடன் மிக நெருக்கமாக ஒத்துழைத்தவர். 1922 அக்டோபரில் வெளியேற்றப்பட்டு துராத்தியைத் தொடர்ந்து புதிய சீர்திருத்தவாதக் கட்சியில் சேர்ந்தார். அவரைப் போலவே 1926 இல் தேசத்தைவிட்டு ஓடினார்.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

நூல் அறிமுகம் : சாதியற்ற தமிழர் – சாதியத் தமிழர்

சாதி பற்றி ஏராளமான ஆய்வுகள் வந்துள்ளன. இன்னும் வந்து கொண்டேயிருக்கின்றன. அனைத்திந்திய அளவிலும் தமிழ்மண்ணிலும் அதன் தோற்றுவாய் குறித்து இன்னும் நுண்ணிய ஆய்வுகள் தேவைப்ப்டுகின்றன. இச்சிறுநூல் அத்திசையில் ஒரு முக்கியமான முன்னெடுப்பை நிகழ்த்துகிறது. தமிழ்ச்சமூகத்தில் இயங்கும் சாதியத்தின் அகக்கட்டுமானத்தை இந்நூலில் மானுடவியல் அறிஞர் தோழர் பக்தவச்சல பாரதி கட்டுடைத்துப் பார்க்கிறார். சாதியற்ற ‘குடிச்சமூகமாக’ இருந்து சாதிக்கு அருகாமையில் வந்து நின்று பின் செங்குத்துப் படிநிலைகளோடு கூடிய சாதியாக மாறிய தமிழ்ச்சமூகத்தின் அகவரலாற்றை இந்நூல் தரவுகளோடு விளக்குகிறது.

பிராமணியக் கோட்பாடு மட்டுமன்றி, பொருளியல் கட்டமைப்பு எவ்விதம் சாதியத்தின் தோற்றத்துக்கு ஒரு முக்கிய காரணியாக விளங்கியது என்பதையும் இந்நூல் விவாதிக்கிறது.

அண்ணல் அம்பேத்கார், ஹோகார்ட், துய்மோன் ஆகிய மூவர் முன் வைத்த சாதியின் தோற்றம் குறித்த கோட்பாடுகளை ஒப்பீட்டாய்வு செய்து தமிழ்ச்சமூகத்தில் சாதி தோன்றி வலுப்பட்ட வரலாற்றை அக மற்றும் புறச்சான்றுகளோடு பேசுகிற இந்நூல் பல புதிய திறப்புகளைக் கொண்டுள்ளது. இன்னும் புதிய விவாதங்களுக்குச் சாளரங்களைத் திறந்து விடுகிறது. (ச. தமிழ்ச்செல்வன் எழுதியுள்ள அறிமுகப் பகுதியிலிருந்து…)

சாதி என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் வேதகாலம் தொடங்கி வளர்ந்துவிட்ட ஒரு தனித்துவமான சமூக வடிவம். சாதியமைப்பின் எளிமையான வடிவம் ஆப்பிரிக்கா, பிஜி, ஜப்பான், தொங்கா, சமோவா, தென் பசிபித் தீவுகள் முதலான பகுதிகளில் உள்ளது. இலங்கையில் சற்று அடர்த்தியான வடிவமாக உள்ளது. அதன் சிக்கலான வடிவம் (complex form) இந்தியாவில் மட்டுமே உள்ளது. இந்தச் சமூக முறையில் நன்மைகளைவிடத் தீமைகள் மிகுதி. அகமணம், படிநிலை, மூடிய தன்மை , தீட்டு, தீண்டாமை, ஒதுக்குதல், ஒடுக்குதல் முதலானவை இதன் கொடூரமான பண்புகளாகும்.

தமிழ்ச் சூழலில் சாதியத்தின் வன்மத்தை ஒழிப்பதற்கு நீண்டகாலக் கருத்தியல் முன்னெடுப்புகளும் செயல்திட்டங்களும் முன்வைக்கப்பட்டன. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் முன்னெடுத்த திட்டங்கள் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தாலும், முழுமையான சமூக மாற்றத்தைக் காணவில்லை. ஆனால், சாதியம் புதிய புதிய வடிங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சாதியற்ற தமிழராய் வாழ்வது இன்னும் சாத்தியப்படவில்லை. உடனடியான எதிர்காலத்திலும் அத்தகைய சூழல் தென்படவில்லை. அதனால் இன்னும் தொடர்ச்சியான முன்னெடுப்புகள் அவசியமாகின்றன.

… அனைத்திந்திய அளவிலும் தமிழ்ச் சூழலிலும் சாதியத்தின் படிமலர்ச்சியை மேலும் நுண்ணாய்வு செய்ய வேண்டும். அதன் தோற்றுவாய் ஆராயப்பட வேண்டும். அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகள் பற்றிய தெளிவும் தேவை. சாதி பற்றி ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. எண்ணற்ற தளங்களில் விவாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும், அதன் அகவயக் கட்டுமானத்தைக் கட்டுடைக்க வேண்டியுள்ளது. அணுவைப் பிளந்ததால் அதன் உட்கூறுகளைக் காண முடிந்தது. அது போலச் சாதியத்தின் அணுவை நாம் அகவயமாக நின்று கட்டுடைக்க வேண்டும். தளப்பார்வையில் (synchronic) கிடைத்துள்ள கட்டுமானத்தைக் காலப்பார்வையோடும் (diachronic), தொடர்நிலை உறவில் (Syntagmatic relationship) கண்டவற்றைச் செங்குத்து உறவோடும் (paradigmatic Relationship) இணைத்துக் கட்டுடைக்க வேண்டியுள்ளது.

இந்தக் குறுநூலின் நோக்கம் மேற்கூறிய எல்லாவற்றையும் பேசி விடுவதன்று. இவையெல்லாம் விரிவான களங்கள். ஒரு புள்ளியில் நின்று மிகச் சுருக்கமாக விவாதிப்பதே இந்த நூலின் நோக்கமாகும். ஆதியில் தமிழ்ச்சமூகம் ‘குடி’ சமூகமாக இருந்தது என்றும், அது பாண் சமூகத்தை (பாணர்கள் சமூகம்) ஒரு துணைச் சமூக அமைப்பாக (para – Social system) ஏற்றுக் கொண்டிருந்தது என்றும், அது வீரயுகக் காலத்திற்கான தேவைகளை நிறைவு செய்தது என்றும் இந்த நூல் விவாதிக்கிறது. (நூலின் அறிமுக பகுதியிலிருந்து…)

ஆதியில் ஆரியர்கள் இந்தியாவிற்குள் இரண்டு அலைகளாக வந்தடைந்தனர் என்ற கோட்பாடு (two wave theory) ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் உள்ளது. ஒரு அலை யில் வந்தவர்கள் இத்துணைக் கண்டத்தின் பூர்வகுடிகளுடன் முரண்பட்ட அணுகுமுறையில் உறவாடினார்கள். இன்னொரு அலையாக வந்தவர்கள் இணக்கமான அணுகுமுறையுடன் சேர்ந்து வாழ முற்பட்டனர். மேற்கு வங்க பிராமணர்கள் உள்ளிட்ட இன்னும் சில குழுவினர் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். இன்றைக்கும் ஒப்பிட்டுப் பார்த்தால் மேற்கு வங்கப் பிராமணர்கள் திருமணத்திலேயே மீன் குழம்பு பரிமாறுகிறார்கள்; புலால் உண்கின்றனர். தென்னிந்தியச் சமூகத்தாரின் பழக்க வழக்கங்களோடு நெருங்கிக் காணப்படுகின்றனர்.

ஆரியர்கள் ஒரு கட்டத்தில் இங்குள்ள மண்ணின் மைந்தர்களால் அச்சத்திற்கு ஆளாகியிருந்தார்கள். இன ரீதி யாக அவர்கள் வேறுபட்டிருந்ததால், அந்த வேறுபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்க சடங்கியல் பணிகளைச் செய்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும் நன்கு தகவமையத் தொடங்கினார்கள் (ஹால் 1986: 62-3), இதன் பொருட்டு அவர்கள் செய்து வந்த சடங்கியல் கலை (குறிப்பாக யாக, வேள்விச் சடங்குகள்) தனித்துவமானதாக இருந்ததால் அது அவர்களுக்குக் கைகொடுத்தது; அரசர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.

தமிழ் வேந்தர்களும் சங்க காலத்திலேயே பிராமணர்களை ஆதரிக்கத் தொடங்கினார்கள் பிராமணர்களின் வேள்வி, யாகங்கள் மீது கவரப்பட்டார்கள். பிந்தையகாலத் தமிழ் வேந்தர்கள் அவர்களை அரசுமுறை பூசகர்களாகவே நியமித்துக் கொண்டார்கள். இதன் மூலம் அரசர்களுக்கு நெருக்கமானவர்களாக மாறியதுடன் சதுர்வேதி மங்கலங்கள், அக்ரஹாரங்கள், தேவதான மானியங்கள், பிரம்மதேயங்கள் எனும் வகைகளில் நிலத்தைத் தானமாகப் பெற்றார்கள். தமக்குக் கிடைத்த அந்நிலங்களில் பயிரிடுவதற்கு வேளாண் குடியினரை நியமித்தார்கள். பிராமணர்களுக்குக் குடியாக ஆனவர்களே பின்னாளில் ‘குடியானவர்’ என்றாகினர்.

தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும் பற்றி ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள் நொபொரு கராஷிமாவும், எ. சுப்பராயலுவும் (2017: iv) ஒரு கருத்தை வலியுறுத்துகின்றனர். சாதி உருவாக்கத்துக்கு மனுதர்ம பிராமணியக் கோட்பாட்டை ஒரு முக்கிய காரணியாகக் குறிப்பிட்டாலும், அடிப்படையில் பொருளாதாரமே ஒரு முக்கிய காரணியாக வரலாறு காட்டும் நிலவுடைமை ஒருவரின் சமூக, நிலைப்பாட்டையும் அதிகாரத்தையும் நிர்ணயித்தது என்கின்றனர்.

படிக்க:
மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்

சாதியமைப்பின் இன்னொரு பரிமாணத்தையும் நாம் பொருளியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும். சாதியமைப்பு அடிப்படையில் தொழிற் புரட்சிக்கு முந்தையது (pre-industrial). சந்தைப் பொருளாதார முறை தோன்றுவதற்கு முந்தையது (pre market 5 NSTEIn), பணப் பொருளாதாரம் தோன்றுவதற்கு முந்தையது (Pre market System) தொழில், சந்தை , பணம் ஏதும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் சமூக வாழ்வு முழுமை பெறுவதற்குப் பல்வேறு குடிகளும் தங்கள் ஊழியங்களையும் தாம் கொண்டிருந்த பொருட்களையும் (goods and services) மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். பூசகர்கள் சடங்குத் தொழிலை மற்றவர்களுக்குப் பகிர்ந்தார்கள். துணி வெளுப்போர் மற்றவர்களுக்குச் சலவை ஊழியத்தை அளித்தார்கள். அம்பட்டர் சவர வேலையைச் செய்தார்கள். விவசாயிகள் தம்மிடம் இருந்த தானியங்களையும் உணவுப் பொருட்களையும் மற்றவர்களுக்குக் கொடுத்தார்கள்.

இவ்வாறு குடிகள் தங்கள் ஊழியங்களையும் பொருட்களையும் பரிமாறிக் கொண்ட குடி ஊழிய முறை’ (jajmani system) பணம் தோன்றுவதற்கு முன்னர் இருந்தது. இவ்வாறே சந்தைப் பொருளாதார முறை தோன்றுவதற்கு முன்னர் குடி ஊழிய முறையே பொருளியல் தேவைகளை நிறைவு செய்தது. மொத்தமாகச் சொல்லப்போனால் தொழில்துறை தோன்றுவதற்கு முந்தைய, பணப் பொருளாதாரம் தோன்றுவதற்கு முந்தைய நிலையில் சமூகத் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருந்த சமூக வடிவமாகக் குடி ஊழிய முறை இருந்தது. இதன் சமூக வடிவமே சாதிமுறை. (நூலிலிருந்து பக். 67-68)

நூல் : சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்
ஆசிரியர் : பக்தவச்சல பாரதி

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண்: 044 – 2433 2424.
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 72
விலை: ரூ 60.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

இணையத்தில் வாங்க : puthinambooks | periyarbooks | commonfolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளின் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 11

பெற்றோர் கூட்டம்

ன்புள்ள பெற்றோர்களே, வணக்கம். நமது முதல் கூட்டத்திற்கு உங்களில் பெரும்பாலானோர் தாயும் தந்தையுமாகச் சேர்ந்து வந்துள்ளது குறித்து மகிழ்ச்சி. உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ளது. இது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி. என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இன்று முதல் உங்கள் குழந்தைகளின் வாழ்வில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கல்விதான் அவர்களுடைய நடவடிக்கையில் முக்கிய அம்சமாகும்.

“உங்கள் குழந்தை சமுதாயத்தில் நல்லவனாக விளங்குமாறு குழந்தையை வளர்க்க நீங்கள் விரும்புகின்றீர்களா?” என்று நான் கேட்டால், அனேகமாக நீங்களனைவரும் ஒரே மனதாக “ஆம், நிச்சயமாக!” என்று கூறுவீர்கள். ஆனால், ஆசைப்படுவது ஒரு விஷயம், இவ்வாறு உண்மையாக வளர்ப்புப் பணியில் ஈடுபடுவது வேறு விஷயம்.

குடும்பத்திலும் பள்ளியிலும் குழந்தை வளர்ப்புத் தன்மைகள் ஒன்றிற்கொன்று எதிராக இருக்கக் கூடாது. குழந்தைகள் வளர்ப்பிலும் அவர்களுக்குக் கல்வி போதிப்பதிலும் பள்ளிதான் மையமாக விளங்குவதால், குடும்ப வளர்ப்பின் விஷயத்தில் குறிப்பிட்ட கோரிக்கைகளைப் பெற்றோர்களின் முன் வைக்க பள்ளிக்கு உரிமையுண்டு.

நம் சோவியத் நாட்டில் மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் உயர்வான மானுடக் கோட்பாடுகளின் அடிப்படையிலானவை. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் பன்முக நடவடிக்கையும் நம் சமுதாய அமைப்பின் உண்மையான மனிதாபிமானத்தை உருக்கொண்டிருக்க வேண்டும், வளர்க்க வேண்டும், ஊர்ஜிதப்படுத்த வேண்டும். மனிதாபிமான அடிப்படைகள் தான் நமது வளர்ப்புப் பணியை வழி நடத்த வேண்டும்.

இது எளிதானதாக இருக்குமா? இருக்காது.

ஏனெனில் இப்படிப்பட்ட வளர்ப்பு அனுபவம் நம்மிடையே அதிகமில்லை. குழந்தைகளின் பால் மனிதாபிமான உறவைக் கொள்ள வேண்டுமெனில், இப்படிப்பட்ட வளர்ப்பின் மாற்றியமைக்கும் சக்தியை நம்ப வேண்டும், ஒவ்வொரு குழந்தையின் எல்லையற்ற உள்ளாற்றல்களை நம்ப வேண்டும், ஒரு ஆசிரியருக்கே உரித்தான பெரும் பொறுமை வேண்டும், அவர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும், குழந்தையின் மனதை ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதாபிமான அடிப்படைகளில் வளர்ப்புக் கடமைகளை நிறைவேற்றுவது என்பது, குழந்தையை முரட்டுத்தனமாக அடக்கி ஒடுக்குவதன் மூலம் இவற்றிலிருந்து தப்புவதை விடப் பன்மடங்கு சிக்கலானது.

இக்கருத்தை அடையாளச் சிறப்போடு விளக்கும் ஒரு சம்பவத்தை இப்போது சொல்வேன்.

குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் ஒரு கடையில் ஒரு சிறுவன், தனக்கு பெரிய குதிரைப் பொம்மையை வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டான். மகனுடன் அன்பாக நடந்து கொள்ள வேண்டுமென முடிவு செய்த தந்தை தன் பைகளைத் துழாவினார். ”நான் உனக்கு அந்தச் சிறிய குதிரைப் பொம்மையை வாங்கித் தரட்டுமா?” என்றார் தந்தை. ”சிறிய பொம்மை வேண்டாம், பெரிய குதிரைப் பொம்மைதான் வேண்டும்!” தந்தை தொடர்ந்து தன் பைகளைத் துழாவினார். “பார், இந்தச் சிறிய பொம்மை எவ்வளவு அழகாக உள்ளது!” “பார்க்க மாட்டேன்… பெரிய பொம்மை வாங்கித் தா!” “என்னிடம் போதுமான பணமில்லையே, நாளை வாங்கித் தரட்டுமா?” விளக்கினார் தந்தை. “நாளை வேண்டாம், இப்போதே வாங்கித் தா!” சிறுவன் கத்தினான். தந்தைக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

அப்போது வெள்ளை மேலங்கி அணிந்த ஒருவர் அன்பாகச் சிரித்தபடியே அங்கு வந்தார். ‘நான் குழந்தைகளைக் கவனித்து கொள்ளும் ஆசிரியர், இக்கடையில் வேலை செய்கிறேன். என்னுடன் உங்கள் பையனை இரண்டு நிமிடங்களுக்கு அனுப்புங்கள். அவர் புன்சிரிப்புடன் சிறுவனைத் தன்னறைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு நிமிடங்கள் கழித்து அச்சிறுவன் அமைதியாக அறையிலிருந்து வெளியே வந்தான். அந்த ஆசிரியரோ அடிக்கடி கடைக்கு வரும்படி புன்சிரிப்போடு அழைப்பு விடுத்தார். ‘நீ அந்த மாமாவுடன் போயிருந்த போது நான் கைப்பையில் இன்னும் பணம் கண்டுபிடித்தேன். எனவே இப்போது பெரிய குதிரைப் பொம்மை வாங்கலாம்” என்றார் தந்தை. “’வேண்டாம், அப்பா, எனக்குப் பெரிய பொம்மை தேவையில்லை, சிறிய பொம்மையே வாங்கித் தா!” என்றான் மகன். “நீ பெரிய பொம்மை வேண்டுமென்று பெரிதும் ஆசைப்பட்டாயே!” தந்தை ஆச்சரியப்பட்டார். “எனக்கு பெரிய பொம்மை வேண்டாம், சிறியதையே வாங்கித் தா!” என்று மகன் கோரினான். தந்தை சிறு குதிரைப் பொம்மையை வாங்கித் தந்தார், இருவரும் வீதிக்கு வந்தனர்.

படிக்க:
இராஜஸ்தான் : பண்டாரம் பரதேசிகள் உருவாக்கிய பள்ளி பாடத்திட்டம் ! என்ன எழவு நாடிது ?
மருத்துவர் பாயல் தாத்வியைக் கொன்ற படித்த சாதிவெறியர்கள் !

“அந்த வெள்ளை மேலங்கி அணிந்திருந்த மாமா உன்னிடம் என்ன சொன்னார்?” என்று அக்கடை ஆசிரியரின் இரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காக மனிதாபிமான உணர்வு மிக்க தந்தை கேட்டார். அந்த மாமா அருகில் இருக்கின்றாரா என்று பயந்தபடியே சிறுவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பின் தன் தந்தையின் காதில் மெதுவாகச் சொன்னான்: ”நீ இப்போது அழுவதை நிறுத்தி, சிறிய பொம்மைக்கு ஒத்துக் கொள்ளாவிடில் உன்னை அடிக்கும் அடியில் கடையிலிருந்து பறந்து போவாய்’ என்றார் அந்த மாமா”.

இங்கு பார்த்தீர்களா, குழந்தைகள் கடையின் ஆசிரியர் வளர்ப்புப் பிரச்சினை ஒன்றை மிக எளிதாகத் தீர்க்கிறார். மனிதாபிமான உணர்வு மிக்க தந்தையோ, வளர்ப்புப் பிரச்சினைகளை இதற்குகந்த வழிகளிலேயே எப்படித் தீர்ப்பது என்று இன்னமும் யோசித்து கொண்டிருக்கிறார். ஏனெனில், மனிதாபிமான வளர்ப்புதான் உண்மையான வளர்ப்பு முறையாகும்.

அந்தக் குழந்தைகள் கடையின் ஆசிரியரைப் போல் இருக்க விரும்புகின்றீர்களா?

விரும்பமாட்டீர்களென எண்ணுகிறேன். மனிதாபிமானக் கோட்பாடுகளின் அடிப்படையில் வளர்க்க விரும்புகின்றீர்களா?

இது உங்கள் முகங்களில் நன்கு தெரிவது குறித்து மகிழ்ச்சி.

சரி, மனிதாபிமான அடிப்படையிலான வளர்ப்பின் சாரம் என்ன?

குழந்தையை மாற்றியமைப்பதற்காக நமது வளர்ப்புக் கடமைகளுக்குக் குழந்தை இயல்பாக ஒத்துவருமாறு செய்ய வேண்டும், இந்த வளர்ப்புப் பணியில் குழந்தையையே நமது கூட்டாளியாக்கிக் கொள்ள வேண்டும்; குழந்தைக்கு ஞானத்தின் பால் விருப்பம் உண்டாகவும் சுயமான கல்வி, அறிதல் நடவடிக்கையின் மீது ஆர்வம் ஏற்படவும் உதவ வேண்டும்.

கட்டாயமான, அதிகாரத் தொனியிலான வளர்ப்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. குழந்தையின் மீதான நிர்ப்பந்தத்தை அதிகப்படுத்தி, தன் கடமையைச் செய்யுமாறு கட்டாயப்படுத்தினாலே போதும். பல நுட்பமான கட்டாய, நிர்ப்பந்த வழிகள் வளர்ப்புப் பிரச்சினைகளை எளிதாக அகற்றி விடுகின்றன. ஆனால், இப்படிப்பட்டதொரு சூழ்நிலை குழந்தை பன்முக ரீதியாக, முழுமையாக வளர்ச்சியடைய வழிகோலுவதில்லை, குழந்தையின் முழு மன வளர்ச்சிக்கு உதவுவதில்லை.

இப்பிரச்சினைகளை மனிதாபிமான அடிப்படையில் தீர்க்க எது நமக்கு இடையூறாக உள்ளது? குழந்தையின் இயல்புதான் இடையூறாக உள்ளது!

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

மக்களிடம் பரவி இருக்கும் மயக்கத்தைப் போக்கு ! அறிவாயுதம் வீசு !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | இறுதிப் பாகம்


காட்சி : 28

இடம் : வீதி
உறுப்பினர்கள் : சாது, ரங்குப்பட்டர்.

(சாது பாடிக்கொண்டு வர, ரங்கு எதிரே வந்து)

ரங்குப்பட்டர் : இது யாருடைய பாடல்?

சாது : ஐயனுடைய பாடல்?

ரங்குப்பட்டர் : அது யாருடா அவன் ஐயனும் மெய்யனும்?

சாது : கோபமாகப் பேசும் தங்களையும், சாமான்யனான என்னையும் எவன் படைத்தானோ அவனே சர்வ லோகங்களிலும் நடக்கும் காரியத்துக்குக் கர்த்தா. அவன் அருளால் இந்தக் கீதம் பாடினேன். ஆகவேதான் தாங்கள் யாருடைய பாடல் என்று கேட்டவுடன் ஐயனுடைய பாடல் என்று சொன்னேன்.

ரங்குப்பட்டர் : ஏண்டா நீ பெரிய வாயாடியா இருப்ப போல இருக்கே. சமஸ்கிருதம் தெரியுமோ, நோக்கு ?

சாது : தெரியாது.

ரங்குப்பட்டர் : காயத்திரி தெரியுமோ?

சாது : தெரியாதய்யா.

ரங்குப்பட்டர் : டே ஐயா பட்டம் போடாதே. இனி என்னை ஸ்வாமி என்று அழைக்கணும்.

சாது : ஐயன் கட்டளையோ?

ரங்குப்பட்டர் : இந்த ஐயன் கட்டளை. ஏன் கேக்கப்படாதோ? இந்த ஐயனின் குரு பிறப்பித்த கட்டளையைக் கேட்டு இந்த மண்டலாதிபதி அதன்படி நடந்தான் தெரியுமோ நோக்கு. நான் யார் தெரியுமோ? சாட்சாத் காகப்பட்டருடைய சீடனாக்கும்.

சாது : ஐயா! சாதிப் பித்தம் உள்ளவரிடம் இதைப் போய்க் கூறும்.

ரங்குப்பட்டர் : நீ மகா மேதாவியோ? சாதி ஆச்சாரத்தை ஒழிக்கப் போறியோ? அட, மண்டு மன்னாதி மன்னர்களெல்லாம் இந்த மடி சஞ்சியிடம் பயபக்தியுடன் இருக்கா. நோக்கு ஏண்டா இந்த மண்ட கெர்வம்?

சாது : மன்னாதி மன்னர்களெல்லாம் தனது மண்டலங்களையும் மற்ற மண்டலங்களையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஆசைக்கும், அச்சத்துக்கும் அடிமைப்பட வேண்டியிருக்கிறது. எனக்கு அவ்விதமில்லை. இந்தப் பூலோகம் முழுவதும் என் ராஜ்யம். எனக்கு யாரும் அடிமையில்லை. நான் யாருக்கும் அடிமையில்லை.

ரங்குப்பட்டர் : ஓஹோஹோ அந்தப் பயல் ஒருவன் இது போலத்தான் கொக்கரிச்சான். என்ன நடந்தது தெரியுமோ? தேசப்பிரஷ்டம்.

சாது : யாரோ தங்களை ஏமாற்றியிருக்கிறார்கள்.

ரங்குப்பட்டர் : இந்த ரெண்டு கண்ணாலேயும் பார்த்தது.

சாது : உண்மை அதுதான். சந்திரமோகனை அறிவுப்படை திரட்டி வரும்படி மன்னர் அனுப்பியிருக்கிறார். சமரசத்தின் தூதுவனாக அவன் விளங்க அனுப்பியிருக்கிறார்.

ரங்குப்பட்டர் : பித்தன்! ஏதோ உளறிண்டிருக்கான்.

(போகிறான்)

♦ ♦ ♦ 

காட்சி : 29
இடம் : மன்றம்
உறுப்பினர்கள் : சிவாஜி, மோகன், இந்து, சாந்தாஜி.

இந்து : அப்பா வாள் ஏந்தக் கூடாது, வாள் ஏந்தக் கூடாது என்று கூவினார். தண்டனையும் அதுபோலவே ஆகிவிட்டது.

மோகன் : இந்து அவர் உன் க்ஷேமத்தைக் கருதி அவ்வாறு கூறி வந்தார். நீயும் ஒரு நாள் வாள் – கேவலம். ஒரு இரும்புத்துண்டு என்று கூறினாய். நிலைமையும் அப்படித்தான் ஆகிவிட்டது. நான் மராட்டியத்தின் மானத்தை மீட்கப் போர் புரிய வாள் ஏந்தி நின்றேன். மன்னன் ஆரிய குருவுக்கு அடி பணிந்துவிட்டார். இனி யார் வாளேந்தி என்ன பயன்? மராட்டிய வீரனுக்கு வாள் இருப்பது புகழ் தரும். ஆரிய ஏவலராக மராட்டியர் ஆன பிறகு வாள் எதற்கு?

(இந்து போக, மன்னர் வருதல் மோகன் தாள் பணிந்து)

மகராஜ் மகராஜ்! தாங்களா?

(மண்டியிட்ட மோகனைத் தூக்கி)

சிவாஜி : மங்காத மராட்டியமே எழுந்திரு உன்னை நான் இழக்க வேண்டிய அளவுக்கு என் நிலை ஆகிவிட்டது. தோழா! உன்னை நான் தண்டித்தேன். என்றுதானே கருதிக் கொண்டாய்? தண்டனையல்லடா தம்பி அது. சாந்தாஜி யின் மகளை நீ அடைய, உனக்கு விடுதலை தந்தேன். என் பொருட்டு அல்லவா இந்துவை நீ இழக்க இருந்தாய்.

மோகன் : மகராஜ் என்ன இது என் தண்டனை ரத்தாகிவிட்டதா? இனி நான் வாள் ஏந்தலாமா?

படிக்க:
வைப்பு நிதியில் போடும் பணம் குறையுமா – இனி குறைந்தாலும் குறையும் !
தூத்துக்குடி தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தினால் எடப்பாடிக்கு என்ன பிரச்சினை ?

சிவாஜி : இனி நீ வாள் ஏந்திப் பலன் என்ன? மோகனா! பழமையின் தாள் ஏந்திய மன்னனிடம் இனி வாள் ஏந்துவோர் இருந்து பலன் இல்லை. ஆம் ! இவ்வளவு வயது வரை போரிட்டுப் போரிட்டு சிருஷ்டித்த ராஜ்யத்தை நான் ஆசி பெறாமல் ஆள முடியாத அளவுக்கு மக்களிடம் மனமயக்கம் இருக்கிறது. மோகன், நாம் மன்னர்களை எதிர்க்கலாம்; எதிரிகளை அடக்கலாம்; ஆனால் நம் மக்களையே என் மீது ஏவி விட முடியும் அவர்களால், இன்றைய நிலையிலே! ஆகவேதான் நான் பணிந்தேன்.

மோகன் : ஆகா, மகராஜ் நான் எதிர்ப்பார்த்தபடியே இருக்கிறது.

சிவாஜி : மோகன் நான் ஏற்படுத்திய ராஜ்யம் நிலைக்கும் என்று நான் நினைக்கவில்லை. சந்தர்! மராட்டிய மண்டலத்திலே ஏரி, குளம், குட்டை , ஆறு, மடு எல்லாம் வறண்டுவிட்டன. வயல்கள் வெடித்து கிடக்கின்றன. போர் செயலினால் மக்கள் ஏழைகளாயினர். இந்த நிலையிலே – வறுமை தாண்டவமாடும் இந்த நேரத்திலே பதினோராயிரம் பிராமணர் குடும்பங்களுக்கு நான்கு மாதங்கள் சமாராதனை, தங்கள் உயிரை எனக்காக அரசுக்காக அளித்த மராட்டிய வீரருக்கு, என்னால் விருந்திட முடியவில்லை. என் செலவில் வீணர்கள் உண்டு, கொழுத்தனர். துலாபாரம், அதனால் வேறு செலவு.

சந்திரமோகன்! என் அரசு ஆரம்பமாகும் போதே பொக்கிஷம் சூன்யமாகிவிட்டது. ஒரு கோடியே நாற்பத்து எட்டு இலட்சமடா நான் கொட்டி அழுதேன். நம் தரணி இப் பாரத்தைத் தாங்காது. ஆகவே வீரனே! அஞ்சா நெஞ்சு படைத்த நீ. மக்களிடம் பரவி இருக்கும் மயக்கத்தைப் போக்கு, வாளால் அரசுகளை அமைத்து விடலாம். ஆனால் அது நிலைக்க அறிவு தேவை. அந்த ஆயுதத்தை வீசு . நாடு முழுவதும் வீசு . பட்டித் தொட்டிகளெல்லாம் வீசு, மக்களை வீரர்களாக்கும். சந்திரமோகனா சகலரையும் சந்திரமோகன்களாக்கு போய் வா! ஜெயம் பெறுவாய்.

(சிவாஜி போக, சாந்தாஜி, இந்து வருதல். சாந்தாஜி மோகனிடம் மாலையைத் தருதல் இந்துவும் மோகனும் மாலை மாற்றிக் கொண்டு பாட்டு)

(முற்றும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

இந்த நாட்டை சுடுகாடாக்கப் போறார் மோடி ! – மக்கள் கருத்து | காணொளி

மீண்டும் மோடி ஆட்சிக்குஇ வந்தது குறித்து என்ன சொல்கிறார்கள் சென்னை மக்கள் ?

சென்னை கோயம்பேட்டில் பொது மக்களிடம் வினவு செய்தியாளர்கள் எடுத்த நேர்காணல் …

“பண மதிப்பழிப்பின் காரணமாக ஏற்பட்ட இழப்பிலிருந்து இப்போதுதான் மீண்டு வருகிறோம்… மோடி தமிழ்நாட்டுக்கு என்ன பண்ணுனாருன்னு சொல்லச் சொல்லுங்க… ஒண்ணுமே செஞ்சதில்ல..”

“மோடி இங்க வந்து என்ன பண்ணுவாரு ?.. எங்க மேல குண்டு போட்றுவாரா ? எடப்பாடி பழனிச்சாமி என்ன பண்ணாரு ? ஆட்சிக்கு எதுக்கு வந்தார் எடப்பாடி ? என்ன செஞ்சாரு மக்களுக்கு … கஷ்டப்படுற ஜனங்கள பிடிச்சு ஜெயில்லதான் போட்டாரு …”

”மொத்தமா இந்த நாட்டையே சுடுகாடாக்கப் போறாரு மோடி …”

பார்க்க … பகிர …

வினவு களச் செய்தியாளர்கள்

கணவனின் எச்சில் தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகுமாம் !

5

மிழ் சமூக ஊடகங்களில் ‘தமிழர் பண்பாடு’ என்ற பெயரில் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எதை வணங்க வேண்டும் என ஆரம்பித்து ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’ என முடிக்கும் பதிவுகளை அதிகம் காண முடியும்.

இப்போது அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் ‘இந்துத்துவ’ கும்பல் அறிவியலை துணைக்கு அழைத்து பல கட்டுக்கதைகளை பரப்பத் தொடங்கியிருக்கிறது. அதில், முத்தாய்ப்பாய் எழுதப்பட்ட முகநூல் பதிவு ஒன்று கடந்த இரண்டு நாட்களாய் விவாதிக்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது. எழுதியவர் ஸ்ரீரங்கத்தான் என தன்னை விளித்துக்கொள்ளும் ராமன் ஐயங்கார் என்பவர்.

ராமன் ஐயங்கார் புகைப்படம் முகநூல் பக்கத்திலிருந்து.

இதுபோன்ற கட்டுக்கதைகள், அவதூறுகளை எழுதி, இழிபுகழ் பெற்று, சிறை சென்ற சங்கி கல்யாணராமன், ‘வேந்தர் டிவி’யின் விவாத நிகழ்ச்சியை நடத்தும் நெறியாளர் ஆகிவிட்டபடியால் இனிவரும் ஐந்தாண்டுகளில் ராமன் ஐயங்கார் மேன்மேலும் உயரத்துக்குச் செல்லக்கூடிய பிரகாசமான வாய்ப்பு அவருடைய பதிவுகளில் தெரிகிறது. எனவே, அவரை பதிவு செய்யும் வரலாற்று கடமையும் நமக்கு உள்ளது.

ராமன் ஐயங்கார் அப்படி என்ன எழுதிவிட்டார்? எதற்காக தமிழ் முகநூல் பதிவர்கள் அவருடைய பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்? பகடி செய்கின்றனர்?

ராமன் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இப்படி எழுதியிருக்கிறார்…

இந்து மதத்தில் மட்டுமே அறிவியலையே உணர முடியும். எவன் ஒருவன் இந்துவாக பிறந்து – இந்துவாக வாழ்கிறானோ அவனுக்குத்தான் நமது மத சடங்குகளில் உள்ள அறிவியல் புரியும். என் மூதாதயர்கள் நாசா விஞ்ஞானிகளை விட மேலானவர்கள்.

இதோ இதை படியுங்கள்:

கணவன் உண்ட அதே இலையிலோ அல்லது தட்டிலோ மனைவி உண்ண காரணம் !!

கணவனுக்கு பரிமாறப்பட்ட உணவை கணவன் உண்ணும்போது எல்லாவற்றையும் உண்ண மாட்டான், அவனுக்கு சில உணவுகள் பிடிக்கும் சில உணவுகள் பிடிக்காமல் இருக்கும் அப்படி பிடிக்காமல் இருக்கும் உணவை அவன் அப்படியே மிச்சம் வைத்து விடுவான்.

அவனுக்கு பின் அதே இலையில் அல்லது தட்டில் உணவு உண்ணும் மனைவிமார்கள் கணவன் மிச்சம் வைத்த அவனுக்கு பிடிக்காத உணவு வகைகளை எளிதாக அடையாளம் கண்டு மறுமுறை சமைக்கும் பொழுது அந்தந்த உணவுகளை சமைக்காமல் தவிர்த்து விடலாம். பிடித்ததை அடுத்த முறை நிறைய பரிமாறலாம். அதற்காக ஏற்படுத்தப் பட்டதே இந்த பழக்கம் ஆகும். கணவனில் எச்சிலில் இருக்கும் புதிய ஜீன்கள் சாப்பாட்டின் மூலம் மனைவியின் உடலில் கலந்து அது அவள் பாலூட்டும் குழந்தைக்கு கிடைக்கவே (ஜீன் அப்டேசன்) இந்த ஏற்பாடு.

என்னதான் கணவனின் ஜீன் குழந்தைக்குள் இருந்தாலும் அது லேட்டஸ்டாக அப்டேட் ஆகவே இந்த ஏற்பாடு. மேலும் இது வயிற்றிற்குள் இருக்கும் குழந்தையின் முதல் ஆறு மாதத்திற்குள் உண்டாகும் வளர்சிதை மாற்றங்களுக்கும், பிறந்தபின் முதல் ஆறு மாதங்களுக்கு ஏற்படும் வளர்ச்சிக்கும் மிக மிக அத்தியாவசமாகிறது என்று மேல்நாட்டு அறிவியல் வல்லுனர்கள் கண்டறிந்து ஆச்சரியப்படுகின்றனர்.

இபொழுது சொல்லுங்கள் கணவன் உண்ட அதே இலையில் மனைவி உண்டால் ஆணாதிக்கமா?.

அக்மார்க் சங்கியின் குரலாக ஒலிக்கும் இவருடைய பதிவில் 600-க்கும் மேற்பட்டோர் பின்னூட்டம் இட்டு கழுவி ஊற்றிய பிறகும், ராமன் தன்னுடைய அறிவிலித்தனத்தைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

***

இந்தப் பதிவுக்கு பத்திரிகையாளர் கார்த்திகா குமாரி எச்சிலை உண்டால் பாக்டீரியாதான் பகிரப்படும் என அறிவியல் விளக்கம் தர முயற்சித்திருக்கிறார்.

“Dna வை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது. சாப்பாடு, kissing மூலமா dna, பாக்டீரியா மட்டும் பகிரப்படும். ஆனால் நம் digestive system ல இருக்கற enzymes and acidic nature அதை எளிதில் கரைச்சிடும். அதிகபட்சம் 1 மணி நேரம் அதன் ஆயுள். வைரஸ்கள் மட்டுமே நம்முடைய dna வை உடைச்சு அதன் rna வை புகுத்தி genome sequence இல் மாற்றம் செய்யக் கூடியவை.

கேன்சருக்கான human pappilloma வைரஸ், hepatitis வகைகள் இதெல்லாம் நம்ம genome sequence ஐ மாற்றி அடுத்தடுத்த தலைமுறைக்கும் தாவக் கூடியவை… if we survive from them. உணவில் இருந்து dna போகுதோ இல்லையோ rotovirus போக நிறையவே வாய்ப்பு இருக்கு… அப்படின்னா முன்னோர்கள் முட்டாள்களா ஐயா?

டிஸ்கி 1: இதை எல்லாம் இப்பவே வெளக்கலைன்னா, எதிர்க்கலைன்னா cbse பாடத்திலேயே சேர்த்திருவாங்களோன்னு பயம் தான்… எச்சிலில் dna கிடையாதான்னு கேட்கிற நிறைய பின்னுட்டங்களை பார்த்திட்டேன்.

டிஸ்கி 2: ஆனாலும் இவனுக போற போக்கிலே அடிச்சு வுடறதுக்கெல்லாம் நாம கொஞ்சம் அதிகம் மெனக்கெட வேண்டி இருக்குன்ற வருத்தம் இல்லாம இல்ல”

***

அனைத்து மதங்களும் ஆணாதிக்க குப்பைகள் என்கிறார் மருத்துவர் ஷாலினி, தன்னுடைய முகநூல் பதிவில்,

“கணவன் எச்சிலை சாப்பிடுவதில் ஆரம்பித்திருக்கிறார்கள்… அப்படியே, பதிவிரதா தர்மம், பாலிய விவாகம், விதவை முறை, சதி ஏறுதல், முக்காடு அணிதல், பெண் கல்விக்கு தடை என்று படிப்படியாக நம்மை “இந்துத்துவா” என்கிற பெயரில் அப்படியே பின்னால் இழுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

ராமசாமியும், அம்பேட்கரும், நேருவும் போராடி எமக்கு பெற்றுத்தந்த வாழ்வை இந்த கழிசடைகள் கெடுத்துவிடும் போலிருக்கிறது! எல்லா மதங்களும் பெண்களுக்கு எதிரானவை…இந்து மதமாவது பொந்து மதமாவது” என்கிறார்.

***

கணவன் உண்ட தட்டில் மனைவி உண்டால் ஜீன் அப்டேட் ஆகும் என சொல்வது கலாச்சார, பண்பாட்டு அயோக்கியத்தனம் என்கிறார் ஆனந்தி. முகநூலில் அவர் எழுதியுள்ள பதிவில்,

“பெண்ணின் பிறப்புறுப்பில் செலுத்தப்படுகிற ஆணின் விந்துதான் குழந்தை பிறப்பிற்கு காரணம் என்ற அறிவியலை கண்டுபிடித்தவர்கள் ஆண்வழி சமுதாய மக்கள். பெண்ணின் மாதவிடாய் சுழற்சிக்கும் குழந்தை பிறப்பிற்கும் சம்பந்தம் உண்டு என்ற அறிவியல் ஆறாவது அறிவிற்கு எட்டினாலும் அதை லாவகமாக ஓரங்கட்டி வைத்து,  பெண்ணிற்கு அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தை மீது உரிமை இல்லை என்று ஆணாதிக்க ஆண்வழித் திமிரை நிலைநாட்ட மதங்கள் அத்தை மகளையும், சித்தி மகளையும் திருமணம் செய்ய வழிவகுத்தது.

அதாவது பெண் வெறும் குழந்தை பெறும் carrier உடல் மட்டுமே… பொருள் வாங்க எடுத்து செல்வோமே plastic bag, கூடை… அதுபோல. வெறும் பொருள். Object. Sex object.

ஒரே குடும்பத்தில், ஒரே பகுதியில், ஒரே சாதியில் திருமணம் செய்யாதீர்கள்; மந்தமான பிள்ளைகள் பிறப்பார்கள் என்று அறிவியல் அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறது. ஆனாலும் பணக்காரர்கள், ஏழைகள் என்ற பாகுபாடின்றி அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் மனப்பாடம் செய்து மார்க் வாங்கிய மடையர்கள் இன்றும்கூட சொத்து விட்டுப் போகக் கூடாது, சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று அத்தை, மாமா மகள்களை, ஒரே சாதிப் பெண்ணை வளைத்துப் போடும் முட்டாள்தனமே தொடர்கிறது.

இவனுங்க அறிவு எச்சில் இலை gene updateல் நின்று விடுவது வெறும் அறியாமை அல்ல. அயோக்கியத்தனம். இந்த கலாச்சார, பண்பாட்டு அயோக்கியத்தனத்தை எதிர்ப்போம் பெண்களே.” என்கிறார்.

படிக்க:
♦ மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவ கும்பல் !
♦ “ராடாரேந்திர மோடி !” – மோடியை வறுத்தெடுத்த வலைத்தளவாசிகள் !

***

உயிரியல் படித்திருக்கும் ஷோபா நாராயணன்,

“திரு ராமன் ஐயங்காரே… கண்ண தொறந்திட்டிங்க. ஏழு வருசம் உயிரியல் படிச்சேன். பாழாப்போன புரபசருங்க விந்தணுவில் இருக்கற ஜீன்கள் தான் குழந்தைக்கு போகும்னு பொய்ய சொல்லி நானும் அதையே எழுதி யுனிவர்சிட்டி ராங்கெல்லாம் வாங்கிட்டேனே.. மேலும் தனக்கு எது புடிக்காதுனு சொல்லக்கூட தெரியாத ஒரு வாயில்லாப் பூச்சிகளான ஆணினத்தை தவறா பேசிட்டேனே.. எச்சில் இலையில சாப்பிடறது சுகாரதக்கேடுனு வேற டாக்டருவோ தப்பு தப்பா சொல்லிட்டாங்கோ.. அதெல்லாம் கிடக்கட்டும் ரெண்டே டவுட்டு.. கிளியர் பண்ணுங்க சார்.

என் கணவரோட எச்சில் இலைல சாப்பிட்ட பசு மாடு போட்ட கன்னுக்குட்டி எங்க வீட்டு சொத்தா? கோனாருதா? ஏன் ஜீன் பாருங்க.. அடுத்து சார்வாள் நாசாவில் என்ன போஸ்ட்டில இருக்கிங்க? ஏன்னா அறிவு வேஸ்ட் பண்ணப்பிடாது.” என பகடி செய்திருக்கிறார்.

***

அதிஷா

“வீட்டில் நாய்சாப்பிட்ட தட்டில் இருக்கிற மிச்சத்தை நாமும் சாப்பிட்டால் அந்த நாய்க்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக தெரிந்துகொள்ளலாம். அதுக்கு எந்தெந்த ஐட்டங்கள் பிடிக்கவில்லை என்பதை புரிந்துகொண்டு இனி வரும் காலங்களில் அதையெல்லாம் நாம் சமைக்கும்போது தவிர்த்துவிடலாம்.

அதோடு, அந்த நாயின் எச்சில் பட்ட அந்த உணவை சாப்பிடும்போது நாயின் ஜீன் நம் உடம்புக்கு ட்ரான்ஸ்பர் ஆகி அதன் நன்றியுணர்வு நாயின் எனர்ஜி பவர் எல்லாம் நமக்கும் வந்துவிடும் என்று ரமணன் ஐயங்கார் எனும் அறிவியல் அறிஞர் வேத சாஸ்திரங்களை வைத்து கண்டுபிடித்துள்ளார். ”நன்றியுள்ள இந்துமதம்” என்கிற நூலில் இதை பதிவு செய்துள்ளார்.

இந்த அரிய கண்டுபிடிப்பை மறைக்கும் முயற்சிகளில் நாசா விஞ்ஞானிகள் இறங்கியுள்ளார்கள். அதிகம் ஷேர் செய்து இந்த தமிழனின் சாதனையை பரப்புங்களேன் பிரண்ட்ஸ்.” என கேலி செய்து எழுதியுள்ளார்.

***

ராஜ் சிவா

“எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நான் வாழும் ஒட்டுமொத்த சமூகத்திடமிருந்தே சமூக ரத்து (விவாகரத்து போல சமூக ரத்து) கோரலாமா என்று சிந்திக்கிறேன். இதுபோல, என்னை அப்பப்போ சிந்திக்க வைக்கும் செயல்கள் நடக்கும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில்-சாட்லைட் விவகாரம் பாடசாலை பாடநூலில் இணைக்கப்பட்ட அபத்தம் நடந்தது. இதுபற்றி நான் ஃபேஸ்புக்கில் இணைந்த சில நாட்களிலேயே, அதாவது பல வருடங்களுக்கு முன்னரே தெளிவாக எழுதியிருந்தேன். ஆனால், இவ்வளவு வருடங்கள் கடந்தும் உயிருடன் இந்தக் கருத்து இருக்கிறது. அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுகிறது.

இப்போ, எச்சிலால் மனைவிக்கு ஜீன் மாற்றம் நடைபெறுமாம். அடப்பாவிகளா! நீங்கள் சொல்வது சரியென்றால், இப்படிக்கூட யோசிக்க மாட்டீர்களா? அவர்கள் கணவன் மனைவி என்றால், உடலுறவு கொள்வார்களே! எதுக்கு எச்சில் உணவை உண்ணனும்? கொஞ்சம்கூட யோசிக்க மாட்டீங்களா? இதில் நாஸாவை வேறு சாட்சிக்கு அழைத்து..” என நொந்து கொள்கிறார்.

***

முனைவர் அன்புசெல்வம் எழுதியுள்ள பதிவு…

“புருசன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிட்டா குழந்தைக்கு அப்பாவின் ஜீன் அப்டேட் ஆகுதாம்யா?? இதப் படிச்ச ஒரு இந்துவிரோதி கேட்கிறார்… இதுக்கு எதுக்கு எச்சில் இலை… தகப்பனார் நேரடியாவே தெனமும் கொழந்த வாயிலயே மூணுதடவ துப்பலாமேன்னு… சரியாத்தான கேட்கிறார்…”

படிக்க:
♦ ஆரியபட்டரின் அறுபதாவது சீடர் ஸ்டீபன் ஹாக்கிங் !
♦ ஆர்.எஸ்.எஸ் மாட்டு மூத்திர விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகள் !

***

ஆவணப்பட இயக்குநர் திவ்ய பாரதி, மனைவி உண்ட தட்டில் கணவன் உண்டு வந்தால் கிடைக்கும் ‘நன்மை’களை பட்டியலிட்டுள்ளார்.

“மனைவி உண்ட இலையில்/தட்டில் கணவன் உண்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள்…

1) முதலில் ஒரு இலை/தட்டு மிச்சமாகும்
2) அந்த தட்டை கடைசியில் கணவன் மட்டும் கழுவி வைத்தால் போதுமானது. (தண்ணீர் சிக்கனம்)
3) “பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் நீ பாதி தின்று மீதி தந்தால் லட்ச ரூபாய்” என்ற பாடலுக்கிணங்க மனைவி மிச்சம் வைத்ததையும் சேர்த்து உண்டு வந்தால் அந்த கணவன் மோட்சம் அல்லது உச்சம் பெறுவான்.
4) மனைவி சாப்பிட்ட எச்சில் இலையில் மீந்து இருக்கும் அவளின் Nail polish/மெஹந்தி/மருதாணி துகள்களையும் சேர்த்து உண்டு வருவதால் “”ஆண்மை*#**” அதிகரிக்கும். மேல்நாட்டு அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்து உரைத்தது…

இப்போது சொல்லுங்கள் மனைவி உண்ட அதே இலையில் கணவன் உண்டால் பெண்ணாதிக்கமா….? ” எனவும் கேட்கிறார்.

***

வடமாநில சங்கிகளைப் போல இந்து மத போர்வையில் அறிவிலித்தனத்தை திணிக்க இங்கேயிருக்கும் சங்கிகள் தொடங்கியிருக்கிறார்கள்.

ஊடகங்கள் இந்த சங்கிகளுக்கு வாய்ப்பளித்து இவர்களுடைய மூடக் கருத்துக்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் கூத்துக்களும் நடக்கலாம். முற்போக்கு மரபு சொல்லிக் கொள்வதோடு மட்டுமல்லாது இந்த விச கருத்துக்களை ஒருமித்துக் களைவது நம் முன் உள்ள கடமை.


தொகுப்பு : அனிதா

அரியானாவில் திருட்டுத்தனமாக பயிரிடப்படும் பி.டி. கத்திரிக்காய் !

விதை உற்பத்தி நிறுவனமான மஹைகோ (Mahyco), தன் பி.டி. கத்திரிக்காய் விதைகளுக்காக விதை கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் கடந்த 2010-ம் ஆண்டு அனுமதி கேட்டது. அப்போது பி.டி. கத்திரி பயிரிடப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல இந்திய மற்றும் வெளிநாட்டு  உயிரியல் விஞ்ஞானிகள், உயிரியல் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிய எச்சரிக்கை விடுத்தனர். அப்போது இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நான்கு மாதங்கள் அறிவியல் விசாரணை, மக்கள் கருத்துக் கேட்பு என்று பல தகிடுத் தத்தங்களுக்கு பிறகு தற்காலிகமாக , பி.டி. கத்திரி பயிரிடப்படுவதை இந்தியாவில் நிறுத்தி வைத்தார்.

இந்த நிறுத்தி வைப்புக்கு, பல்வேறு சர்வதேச விஞ்ஞானிகளின் அறிவுரை ஒரு காரணமாக இருந்தது. இந்த பி.டி. கத்திரியானது உயிரியல் பாதுகாப்பு அம்சத்தில் ஏற்படுத்தும் குறைபாடு மற்றும் பி.டி. கத்திரியின் நச்சுத்தன்மை, மனித உடல்நலத்திற்கு ஏற்படுத்தும் தீங்கு ஆகியவையே ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பில் இருந்தும் பி.டி. கத்திரிக்கு வந்த எதிர்ப்பாக இருந்தது. அதனால் பி.டி. கத்திரி பயிரிடப்படுவதற்கான தடை இன்று வரை நீடிக்கிறது.

ஆனால் அரியானாவில் பி.டி. கத்திரி பயிரிடப்படுவது கடந்த ஏப்ரல் மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் சட்டவிரோதமாக இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர் பயிரிடப்பட்டது எப்படி? என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு இந்த பி.டி. பயிர்கள் எப்படி பரப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு (Genetic Engineering Appraisal Committee) என்ற அரசு நிறுவனம்தான் மரபணு தொழில்நுட்பத்திற்கான ஒரு கட்டுப்பாட்டு ஆணையமாக ( Regulatory Body ) செயல்படுகிறது. இந்த ஆணையமானது மரபணு தொழில்நுட்பத்தின் அபாயங்களிலிருந்து சுற்றுச்சூழல், இயற்கை மற்றும் மனித உடல் நலத்தை காப்பது ஆகும்.

ஆனால் 2017 -ல்  குஜராத்தில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்ட சோயாவிற்காக, GEAC-யிடம் அளித்த புகாரில் மெத்தனமே மேலோங்கி இருந்ததாக குஜராத்தில்  ஜட்டன் டிரஸ்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் கபில் ஷா கூறுகிறார்.

படிக்க:
மான்சாண்டோ : பருத்தி விவசாயத்தைச் சுற்றி வளைத்திருக்கும் மலைப்பாம்பு !
♦ பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

இந்தியாவின் முதல் மரபணு மாற்றப்பட்ட பயிரான பி.டி. பருத்தி இப்போது சட்டப்பூர்வ முறையில் பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பி.டி. பருத்தியானது, 2001-ம் ஆண்டு, குஜராத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மறைமுகமாக சட்ட விரோதமான முறையில் உயிர் தொழில்நுட்ப நிறுவனங்களால் பயிரடப்பட்டதுதான்.  இப்படி பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரடப்பட்ட பிறகு தான் அது பி.டி. பருத்தி என்று வெளிஉலகுக்கு தெரிய வந்தது. அப்போது பி.டி. பருத்தியானது மரபணு பரிசோதனை கட்டத்தில்தான் இருந்தது. ஆனால் மார்ச் 2002-ம் ஆண்டு பி.டி. பருத்தி பயிரடப்படுவதற்கு GEAC ஒப்புதல் வழங்கியது.

உயிரியல் துறையைச் சேர்ந்த (உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட GEAC -யின் பார்வையாளர் ) புஷ்பா பார்கவ் 2015-ல் விவசாயிகளுக்கு , ஒப்புதல் வழங்காத மரபணு மாற்றப்பட்ட விதைகள் விற்கப்பட்டன என்று கூறுகிறார். 2008-ம் ஆண்டு மரபணு மாற்றப்பட்ட வெண்டை பயிரிடப்பட்டதைச் சுட்டிக் காட்டுகிறார்.

பங்களாதேஷில் 2013-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்கு எதிராக விஞ்ஞானிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போராட்டம் நடத்தினர்.

சட்டவிரோதமாக மரபணு மாற்றப்பட்ட HT சோயாபீன்ஸ் குஜராத்தில் 2017-ம் ஆண்டு விளைவதாக தகவல் வெளியானது. 2018-ம் ஆண்டு சட்டவிரோதமாக மரபணு மாற்றப்பட்ட HT பருத்தி  இந்தியாவில் வளர்வதாக தகவல் வெளியானது.

இந்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரமே மரபணு மாற்றப்பட்ட பூசணி, கடுகு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, பப்பாளி, சோளம் போன்ற பயிர்களின் விதைகளை அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு GEAC -ன் ஒப்புதல் பெற வேண்டிய அவசியமின்மை என்பதன்படி இறக்குமதி செய்து வருகிறது.

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், கடந்த 2018-ம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 65 உணவு மாதிரியில் நடத்திய பரிசோதனையில் 32 சதவீதம் மரபணு மாற்றப்பட்டது என்று உறுதியானது. சில  நிறுவனத்தின் உணவு மாதிரிகள் மரபணு  மாற்றப்பட்ட உணவு வகைகள் சார்ந்தவை அல்ல என்று அச்சிடப்பட்டு இருந்தாலும் அவைகள் மரபணு மாற்றப்பட்டவை என்பது தெரியவந்தது.

இப்படி மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்காக எந்த ஒரு அறிவியியல்பூர்வ ஆய்வும் இல்லாமல், இந்தியாவில் இந்த GM பயிர்கள் விளைவிக்கபடுகின்றன.

GEAC ஆனது  மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்காக  எப்படி பரிசோதனை செய்கிறது என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை :

  • அதன் விதைகளைத் திரும்பப் பயன்படுத்த முடியுமா?
  • மரபணு மாற்றப்பட்ட விதைகளில் இருந்து வரும் உணவை அது எந்த உயிரினத்தின் மீது பரிசோதனை நடத்தும்?
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களால், பக்கத்து பயிர்களில் மகரந்தச் சேர்க்கை மூலம் நடக்கும் வேதியியல் உயிரியியல்  மாற்றங்கள் என்ன? பக்கத்து நிலத்துப் பயிர்கள் தன் தன்மை இழக்காமல் இருக்குமா?
  • மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கான உள்ளீடுகள் என்னென்ன? அவை மண்ணில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்னென்ன?

இது போன்ற கேள்விகளுக்கான ஆய்வுகள் எல்லாம் இல்லை.

மரபணு மாற்றப்பட்ட விதை நிறுவனத்தின்  விண்ணப்பங்களை பாரதூரமாக சீர் தூக்கி, அறிவியல் வழியில் முடிவெடுக்கும் ஒரு அமைப்பாக GEAC இல்லை. அப்படி அறிவியல்பூர்வமான ஆய்வு முறைகளும், பரிசோதனை வழிகளும் இந்தியாவில் இல்லை.

GEAC ஆனது  உயிரியல் தொழில்நுட்பத்தின் அபாயகரமான விளைவுகளிலிருந்து மக்களையும், மண்ணையும், விவசாயத்தையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் என்று சொல்லிக் கொள்கிறது. ஆனால் அது செயல்படும்விதமானது, மரபணு விதைகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கட்டற்ற வசதிகளும், அனுமதியும் அளிப்பதாகவே உள்ளது!

படிக்க:
குஜராத் விவசாயிகள் மீது பெப்சி நிறுவனம் தொடுத்த போர் !
♦ சட்டவிரோதமாக மரபீனி உணவுப் பொருட்களை அனுமதிக்கும் இந்திய அரசு !

ஜெய்ராம் ரமேசின் பி.டி. கத்திரி நிறுத்தி வைப்புக்குப் பிறகு, GEAC, பி.டி. கத்திரி விதையை உருவாக்கிய மஹைகோவின் பி.டி. கத்திரி விதைகள், இதே போல மரபணு மாற்றப்பட்ட விதை ஆராய்ச்சி செய்யும் கோவை வேளாண் பல்கலைக் கழகத்தின் விதைகள், தார்வார்ட் வேளாண் அறிவியல் பல்கலைக் கழகத்தின் விதைகள் அனைத்தும் , மொத்தமாக மரபணு மாற்ற விதைகளை சேமித்து வைக்கும் NBPGR என்ற மரபணு விதைகளை சேமித்து வைக்கும் அரசு நிறுவன சேமிப்புக்  கிடங்கில் சேமித்து வைத்திருக்கப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்து இருக்க வேண்டும்.

2010  பிப்ரவரி மற்றும் மே மாதம் நடைப்பெற்ற GEAC மாதக் கூட்டக் குறிப்பில் மஹைகோ நிறுவனம் மற்றும் மேற்கூறிய பல்கலைக் கழகங்களிடமிருந்து விதைகளை NBPGR -ல் சேமித்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறது. ஆனால் அப்படி சேமித்து வைக்கவில்லை.

ஆனால் NBPGR -ன் இயக்குநர் குல்தீப் சிங், “மஹைகோ மற்றும் யாரும் அப்படி எந்த ஒரு விதையையும் சேமித்து வைக்கவில்லை” என்று மாங்கோபே என்ற சுற்றுச்சூழல் பத்திரிகை  நடத்திய கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.

பிரதி மாதம் ஒவ்வொரு  இரண்டாவது புதன்கிழமை கூடும் என்ற அறிவிப்போடு இருக்கிறது GEAC இணையம். அதற்கான தேதி எதுவும் குறிப்பிடப் படவில்லை. மார்ச் மாதம் 20-ம் தேதிக்குப் பிறகு கூட்டம் நடந்தாக பதிவு ஏதும் இல்லை. காண்ட்ராக்ட் விடுவதற்கு எதற்கு மாதக் கூட்டம் ? என்று நினைத்திருப்பார்கள் போலும்.

இந்தியா தன்னகத்தே சுமார் 2,500 கத்திரி ரகங்களை கொண்டுள்ளது. இப்போது கத்திரி விளைச்சலில் எந்த ஒரு பற்றாக்குறையும் இல்லை. உணவுச் சங்கிலியில் ஒரு ஏகபோகத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த பி.டி ரக கத்திரி விதைகளை, மரபணு மாற்றப்பட்ட விதை நிறுவனங்கள் திருட்டுத்தனமாக இந்திய மண்ணில் பரவ விடுகின்றன.

மரபணு மாற்றப்பட்ட விதைகள், திருட்டுத்தனமாக சந்தையில் நுழைக்கப்படுவதை பி.டி. பருத்தி காலத்தில் இருந்தே இந்தியா பார்த்து வந்துள்ளது. பி.டி. பருத்தி பரவலுக்குப் பின்தான் இந்திய விவசாயிகள் தற்கொலைகள் அதிகமாகின.

நமது விதைகளை மட்டுமில்லை. ஒவ்வொரு பிடி மண்ணையும் மரபணு மாற்றம் செய்யப் பார்க்கிறார்கள். இந்த பூமி நம் குழந்தை! அது நம்முடையது!

பரணிதரன்


நன்றி: Scroll,  Couter Punch

காப்பாற்றிவிட்டான் … காப்பாற்றிவிட்டான் விமானத்தை !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 17

லெக்ஸேய் தனது விமான நிலையத்தை அடைந்தபோது அங்கே விமானப் பறப்பு மும்முரமாக நடந்து கொண்டுருந்தது. அந்தப் போர்க்கால வசந்தத்தின் எல்லா நாட்களையும் போலவே அன்றும் அங்கே வேலை அளவுக்கு மேல் நெரிந்தது.

விமான எஞ்சின்களின் இரைச்சல் ஒரு நிமிடங்கூட ஓயவில்லை. பெட்ரோல் நிரப்பிக் கொள்வதற்காகத் தரை இறங்கிய ஒரு விமான அணியின் இடத்தில் மற்றொரு அணியும் பிறதொரு அணியும் வானில் கிளம்பின. விமானிகளும் பெட்ரோல் ஓட்டிகளும் பெட்ரோல் போடும் பண்டக சாலைக்காரர்களும் எல்லோருமே அன்று ஒரேயடியாகக் களைத்துச் சோர்ந்து போனார்கள்.

எங்கும் ஒரே வேலை மும்முரமும் கெடுபிடிமாக இருந்ததாயினும் அலெக்ஸேய் மெரேஸ்யேவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

விமானிகள் தங்கள் விமானங்களைக் காப்பிடத்துக்கு ஓட்டிச் செல்வதற்கு முன்னே, “இன்னும் கொண்டு வரவில்லையா?” என்று எஞ்சின்களின் இரைச்சலுக்கு இடையே மெக்கானிக்குகளிடம் வினாவினார்கள்.

பெட்ரோல் மோட்டார்கள் தரையில் புதைக்கப்பட்டிருந்த பெட்ரோல் தொட்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக நெருங்குகையில் “அவனைப் பற்றி ஒன்றும் தகவல் இல்லையா?” என்று வினவினார்கள் ‘பெட்ரோல் மன்னர்கள்’.

அறிமுகமான ரெஜிமெண்ட் மருத்துவ விமானம் காட்டுக்கு மேலே எங்காவது கடகடக்கிறதா என்று எல்லோரும் உற்றுக் கேட்டார்கள்….

மீள்விசையுடன் அசைந்த ஸ்டிரெச்சரில் அலெக்ஸேய் உணர்வுக்கு வந்ததும், தெரிந்த முகங்கள் தன்னை நெருக்கமாகச் சூழ்ந்திருக்கக் கண்டான். விழிகளை அகலத் திறந்தான். கூட்டம் களிப்புடன் ஆராவாரித்தது. ரெஜிமெண்ட் கமாண்டரான மேஜரின் இளமுகம் அடக்கமாகப் புன்னகைத்தவாறு ஸ்டிரெச்சரின் மிக அருகில் தென்பட்டது. அவருக்குப் பக்கத்தில் படைக் காரியாலயத் தலைவரின் அகன்று பருத்த, வேர்வை வழியும் செந்நிற வதனம் காணப்பட்டது. விமான நிலைய சேவைப் பட்டாளத்தின் கமாண்டரது கொழுத்த வெண்ணிற முகங்கூடத் தெரிந்தது. எத்தனை பரிச்சயமான முகங்கள்! நெட்டையன் யூரா ஸ்டிரெச்சரை முன்னால் தூக்கிக் கொண்டு நடந்தான். பின்னே திரும்பி அலெக்ஸேயைப் பார்ப்பதற்கு அவன் ஓயாது முயன்றான். அந்தக் காரணத்தினாலேயே ஒவ்வோர் அடியிலும் தடுமாறினான். பக்கத்தில் தத்தி நடந்தான் விமானி குக்கூஷ்கின். இவன் சிறுகூடான மேனியன், இனிமையற்ற, சிடுசிடுத்த முகத்தினன். சச்சரவிடும் சுபாவம் காரணமாக இவனை விமானப்படையினருக்கும் பிடிக்காது. அவனும் புன்னகைத்தான். யூராவின் நீண்ட அடிவைப்புகளுக்கு ஒத்தாற்போல் நடக்க முயன்றான்.

தனக்கு இத்தனை நண்பர்கள் இருப்பதாக அலெக்ஸேய் நினைத்ததே இல்லை. இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் தானே ஆட்களின் உண்மை இயல்பு வெளிப்படுகிறது!

வெறுமையாக்கப்பட்ட பிர்ச் மரச் சோலை ஓரத்தில் உரு மறைக்கப்பட்டிருந்த வெள்ளி வண்ண மருத்துவ விமானத்துக்கு அலெக்ஸேய் பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டான். விமானத்தின் குளிர்ந்து போன எஞ்சினைத் தொழில்நுட்ப நிபுணர்கள் இறக்குவது தெரிந்தது.

அபாய அறிவிப்பு சங்கு ஏக்கத்துடன் ஊளையிட்டது. எல்லோருடைய முகங்களிலும் செயல் துடிப்பும் கவலையும் உடனே தென்படலாயின. மேஜர் சில சுருக்கமான உத்தரவுகள் இட்டார். ஆட்கள் எறும்பு போல் நாற்புறமும் விரைந்து ஓடினார்கள். சிலர் காட்டோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விமானங்களை நோக்கியும், சிலர் மைதானத்தின் விளிம்பில் குன்று போலத் துருத்தியிருந்த தலைமை இடக்காப்பரணுக்கும், சிலர் சோலையில் மறைவில் இருந்த மோட்டார்களை நோக்கியும் விரைந்தார்கள். பல வால்கள் கொண்ட ராக்கெட்டின் மெதுவாகப் பரவிய சாம்பல் நிறத்தடம் புகையால் தெளிவாக வானில் கோடிடப்பட்டதை அலெக்ஸேய் கண்டான். “விமானத்தாக்கு!”  என்று புரிந்து கொண்டான்.

லேனச்கா, மெக்கானிக் யூரா, இருவருமாக ஸ்டிரெச்சரைத் தூக்கிக்கொண்டு, ஓட்டமாகச் சென்று, பக்கத்திலிருந்த காட்டோரத்துக்கு அதைக் கொண்டு சேர்த்தார்கள்.

அலெக்ஸேயுடன் ஸ்டிரைச்சரைக் குறுகிய காப்பகமுக்குள் புகுத்த முடியவில்லை. அக்கறையுள்ள யூராவும் லேனச்காவும் அலெக்ஸேயைக் கைத்தாங்கலாகக் காப்பகமுக்குள் கொண்டு போக விரும்பினார்கள். அவனோ இதற்கு மறுத்து விட்டான். ஸ்டிரைச்சரைக் காட்டோரத்தில் இருந்த பருத்த பிர்ச் மர நிழலில் வைக்குமாறு கூறினான். அடுத்து வந்த நிமிடங்களில் சொப்பனத்தில் போல விரைவாக நடந்த நிகழ்ச்சிகளை மர நிழலில் படுத்தபடியே கண்கூடாகக் கண்டான் அலெக்ஸேய். விமானச் சண்டையைத் தரையிலிருந்து பார்வையிடும் வாய்ப்பு விமானிகளுக்கு அரிதாகவே வாய்க்கும். போரின் முதல் நாளிலிருந்தே சண்டை விமான அணிகளில் பறந்த அலெக்ஸேய்க்கு விமானச் சண்டையைத் தரையிலிருந்து காணும் வாய்ப்பு ஒரு தரம் கூட கிடைக்கவில்லை. வானில் போரிடுகையில் மின்வேகப் பாய்ச்சலுக்கு பழக்கப்பட்டவன் அவன். கீழேயிருந்து பார்க்கையில் விமானச் சண்டை விரைவாகவோ பயங்கரமாகவோ அற்றதாகத் தென்பட்டது. பழைய மொண்ணை மூக்குச் சண்டை விமானங்கள் மிக மெதுவாக இயங்குவது போலத் தோன்றியது. அவற்றின் மெஷின்களின் முழக்கம் மேலிருந்து தீங்கற்றதாக ஒலித்தது. தையல் இயந்திரத்தின் கடகடப்பு அல்லது காலிக்கோத் துணி மெதுவாகக் கிழிக்கப்படும் ஓசை போன்ற வீட்டு ஒலியை அது ஒத்திருத்திருந்தது. இவை எல்லாம் அலெக்ஸேய்க்கு வியப்பூட்டின..

படிக்க:
சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் !
சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்

விரைவில் எல்லாச் சந்தடியும் அடங்கி விட்டது. சண்டை விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இறங்கலாயின. வழக்கம் போல வானில் வட்டமிடாமல் நேராகத் தரையில் இறங்கி ஓடுகையில் காட்டோரத்துக்குத் திருப்பித் தங்கள் காப்பிடத்தை அடைந்தனர். விமான நிலையம் வெறுமையாகிவிட்டது. காட்டில் விமான எஞ்சின்களின் முழக்கம் அடங்கிவிட்டது. ஆனால், தலைமை இடத்தில் இன்னமும் ஆட்கள் நின்றுகொண்டு, கண்களில் வெயில் படாமல் அங்கைகளால் மறைத்தவாறு வானை நோக்கிக்கொண்டிருந்தார்கள்.

” ‘ஒன்பதாவது’ இன்னும் வரவில்லை! குக்கூஷ்கின் மாட்டிக்கொண்டுவிட்டான்!” என்று அறிவித்தான் யூரா.

எப்போதும் கடுகடுவென்றிருக்கும் குக்கூஷ்கினின் சிடு சிடுத்த சிறு முகத்தை அலெக்ஸேய் நினைவுபடுத்திக் கொண்டான். இதே குக்கூஷ்கின் இன்று எவ்வளவு அக்கறையுடன் ஸ்டிரெச்சரைத் தாங்கிக்கொண்டு நடந்தான் என்பதையும் எண்ணிப் பார்த்தான். ஒரு வேளை? மும்முரத்தில் இருக்கும் போது விமானிகளுக்குப் பெரிதும் பழகிப்போன இந்த எண்ணம், விமான நிலைய வாழ்க்கையின் தொடர்பு விட்டுப் போன இந்தச் சமயத்தில் அலெக்ஸேய்க்கு நடுக்கம் உண்டாயிற்று.

அப்போது வானில் எஞ்சின் ஓசை ஒலித்தது.

யூரா மகிழ்ச்சியுடன் துள்ளினான்:

“அவன்தான்!”

தலைமை இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஏதோ நடந்துவிட்டது. “ஒன்பதாவது” தரையில் இறங்காமல் விமான நிலையத்துக்கு மேலே அகன்ற வட்டம் இட்டது. அது அலெக்ஸேயின் தலைக்கு உயரே வந்த பொது அதன் இறக்கையின் ஒரு பகுதி உடைந்து விழுந்திருந்தது, தெரிந்தது. எல்லாவற்றையும் விட பயங்கரம்! – அதன் அடிச்சட்டத்திலிருந்து ஒரு “கால்”. அதாவது சக்கரம் – மட்டுமே தென்பட்டது. சிவப்பு வானங்கள் ஒன்றன் பின் ஒன்றாகக் காற்றில் சீறிப் பாய்ந்தன. குக்கூஷ்கின் மறுபடி தலைகளுக்கு மேலாகப் பறந்து சென்றான். சிதைந்த கூட்டுக்கு மேலே பறந்தவாறு, எங்கே உட்கார்வது எனத் தெரியாமல் திகைக்கும் பறவை போலிருந்தது அவனுடைய விமானம். இது மூன்றாம் தடவை வட்டம் இட்டது.

விமானத்தை இறக்குவது அசாத்தியம் ஆகிவிடும் இம் மாதிரிச் சந்தர்ப்பங்களில் உயரத்தில் கிளம்பி, பாராசூட்டின் உதவியால் விமானத்திலிருந்து குதித்துவிட விமானிகள் அனுமதிக்கப்படுவது உண்டு. “ஒன்பதாவது” இத்தகைய கட்டளையைத் தரையிலிருந்து பெற்றிருக்க வேண்டும். ஆயினும் அது பிடிவாதமாகத் தொடர்ந்து வட்டம் இட்டது.

வாலில் “ஒன்று” என்ற இலக்கம் பொறித்த சண்டை விமானம் நிலையத்திலிருந்து வழுகிச் சென்று வானில் கிளம்பியது. மேலே சென்றதும் அது அடிபட்ட “ஒன்பதாவதை” முதல் வட்டத்திலேயே மிகத் திறமையுடன் நெருங்கிவிட்டது. அந்த விமானத்தை பறப்பதில் பதற்றமற்ற தேர்ச்சி கொண்ட ஒரு ரெஜிமெண்ட் காமாண்டரே ஓட்டுகிறார் என்று அலெக்ஸேய் ஊகித்துக் கொண்டான். குக்கூஷ்கினுடைய ரேடியோ பழுதடைந்திருக்கும் அல்லது அவனே நிதானம் இழந்திருப்பான் என்று தீர்மானித்து அவர் விமானத்தில் அவன் அருகே போய் இறக்கைகளை அசைத்து, “நான் செய்வது போலச் செய்” என்று சைகை காட்டிவிட்டு, ஒரு புறம் விலகி மேலும் உயரே எழும்பலானார். ஒரு பக்கமாக விலகி விமானத்திலிருந்து குதிக்கும் படி அவர் குக்கூஷ்கினுக்குக் கட்டளை இட்டார். ஆனால், அதே சமயத்தில் குக்கூஷ்கின் வேகத்தைக் குறைத்துத் தரையை நோக்கி இறங்கினான். இறக்கை உடைந்து சிதைந்த அவனது விமானம் விரைவாகத் தரையை நெருக்கியவாறு அலெக்ஸேயின் தலைக்கு நேர் மேலாகப் பாய்ந்து சென்றது. தரையின் கோட்டுக்கு வெகு அருகில் அது சட்டென்று ஒரேயடியாக இடப்புறம் சாய்ந்து நல்ல “காலை” தரையில் ஊன்றி ஒற்றைச் சக்கரத்தில் சிறிது தூரம் ஓடிய பின் வேகத்தைக் குறைத்து வலப்புறம் விழுந்து, வெண்பனி படலங்களைக் கிளப்பியவாறு தனது அச்சைச் சுற்றிச் சுழன்றது.

கடைசிக் கணத்தில் விமானம் பார்வையிலிருந்து மறைந்து விட்டது. வெண்பனிப் புழுதி அடங்கியதும், அடிபட்டு விலாப்புறம் சாய்ந்திருந்த விமானத்திலிருந்து சற்றுத் தொலைவில் வெண்பனிமேல் ஏதோ கறுப்பாகத் தெரிந்தது. அந்தக் கரும்புள்ளியை நோக்கி ஆட்கள் ஓடினார்கள். மருத்துவ மோட்டார் சங்கு ஊதியவாறு முழு விரைவுடன் அதன் பக்கம் பாய்ந்தது.

“காப்பாற்றி விட்டான், காப்பாற்றி விட்டான் விமானத்தை! சபாஷ் குக்கூஷ்கின்!” என்று ஸ்டிரெச்சரில் படுத்தபடியே எண்ணமிட்டான் அலெக்ஸேய். நண்பன்மேல் அவனுக்குப் பொறாமை உண்டாயிற்று.

ஒருவராலும் நேசிக்கப்படாத இந்தச் சிறு மனிதன், இத்தகைய உளத் திண்மையும் சிறந்த தேர்ச்சியும் வாய்ந்தவனாகத் தன்னை திடீரென நிரூபித்துக் கொண்ட அந்த மனிதன் வெண்பனி மீது கிடந்த இடத்திற்குப் பாய்ந்து ஓட அலெக்ஸேய்க்கு ஆசை உண்டாயிற்று. ஆனால், அவன் துணிகளால் சுற்றிப் போர்த்தப்பட்ட ஸ்டிரெச்சர் கித்தானுடன் அழுத்தப்பட்டுக் கிடந்தான். பெருத்த வலி அவனை நசுக்கிக் கொண்டிருந்தது. நரம்பு இயக்கம் சற்று தளர்ந்ததுமே இந்த வலி முழு சக்தியுடன் அவனைத் தாக்கத் தொடங்கியிருந்தது…..

அலெக்ஸேயின் ஸ்டிரெச்சர் மருத்துவ விமானத்தின் தனிப்பட்ட கூடுகளில் பொருத்தப்பட்டது. பக்கத்து கதவு திறந்தது. இராணுவ மேல் கோட்டுக்கு மேலே வெள்ளை நீள அங்கி அணிந்த அறிமுகமற்ற ஒரு மருத்துவர் அதன் வழியாகவே உள்ளே வந்தார்.

“ஒரு நோயாளி ஏற்கனவே இங்கே இருக்கிறானா?” என்று அலெக்ஸேயைக் கண்டதும் கேட்டுவிட்டு, “மிகவும் நல்லது! மற்றவனையும் எடுத்து வாருங்கள், இதோ பறப்போம்” என்றார்.

விமான எஞ்சினின் தாலாட்டும் ஒரு சீரான ஓசையில் எல்லாம் குழம்பி மங்கி, சாம்பல் நிற மூட்டத்தில் கரைந்தன. யுத்தமோ, வெடிகுண்டுத் தாக்கோ இல்லை, கால்களில் சித்ரவதையான, இடைவிடாத, நச்சரிக்கும் வலியும் இல்லை …

யூராவின் உதவியுடன் ஒரு ஸ்டிரெச்சரைப் பிடித்து விமானத்துக்குள் ஏற்றினார் மருத்துவர். ஸ்டிரெச்சரில் கிடந்தவன் நீட்டி முனகினான். அது கூட்டில் வைக்கப்படும் போது துப்பட்டி விலகி நழுவியது. குக்கூஷ்கினின் வேதனையால் சுளித்த முகத்தை ஸ்டிரெச்சரில் அலெக்ஸேய் கண்டான்.

மருத்துவர் மன நிறைவுடன் கைகளைத் தேய்த்துக் கெண்டு விமான அறையைச் சுற்றிக் கண்ணோட்டினார், அலெக்ஸேயின் வயிற்றில் லேசாகத் தட்டினார்.

“ரொம்ப நல்லது, இளைஞரே, இதோ உமக்குத் துணையாள், பறக்கும்போது சலிப்பு ஏற்படாமல் இருக்க.. ஊம்? இப்போது வெளியாட்கள் எல்லோரும் இறங்கிவிடுங்கள்.”

இப்படிச் சொல்லிக் கொண்டே, அங்கே தயங்கி நின்ற யூராவை வெளியே தள்ளினார். கதவுகள் சாத்தப்பட்டன. விமானம் அதிர்ந்து, புறப்பட்டது, துள்ளி எழுந்தது, பின்பு எஞ்சினின் ஒரு சீரான கடகடப்புடன் குலுங்கல் இன்றிக் காற்றில் மிதந்து சென்றது. மருத்துவர் சுவரைப் பிடித்தவாறு அலெக்ஸேயின் அருகே வந்தார்.

“உடம்பு எப்படி இருக்கிறது? எங்கே, நாடியைப் பார்ப்போம்.” – இவ்வாறு கூறி அலெக்ஸேயை ஆவலுடன் நோட்டமிட்டுத் தலையை ஆட்டினார். “ம் ம். நிரம்ப மன வலிமை உள்ள ஆள் நீர்! உமது சாகசச் செயலைப் பற்றி நண்பர்கள் ஏதோ நம்பவே முடியாத, ஜாக் லண்டன் வருணிப்பது போன்ற ஒரு கதையைச் சொல்லுகிறார்கள்.”

அவர் தமது இருக்கையில் அமர்ந்து செளகரியமாக உட்கார்வதற்காகச் சற்று நேரம் இப்படியும் அப்படியும் அலை பாய்ந்தார், பின்பு உடலைத் தளரவிட்டுத் தலையைத் தொங்கப் போட்டவாறு அக்கணமே உறங்கிவிட்டார். இளமை கடந்து விட்ட அந்த வெளிறிய மனிதர் எப்படி ஒரேயடியாகக் களைத்துப் போயிருக்கிறார் என்பது துலக்கமாகத் தெரிந்தது.

படிக்க:
4 மாநிலங்களில் பாஜகவை வெல்ல வைத்த ஆர்.எஸ்.எஸ். !
தேர்தல் முடிவுகள் 2019 : மோடியின் வெற்றியா ? இந்தியாவின் வெற்றியா ?

“ஏதோ ஜாக் லண்டன் வருணிப்பது போன்ற கதை!” என்று நினைத்துக் கொண்டான் அலெக்ஸேய். பிள்ளைப் பருவத்தில் படித்த கதை அவனுக்கு நினைவு வந்தது. அமெரிக்க எழுத்தாளர் ஜாக் எழுதிய அந்தக் கதை கடுங்குளிர் தாக்கியதால் மரத்துப்போன கால்களுடன் பாலைவனத்தின் வழியே, நோயுற்று, பசித்திருந்த விலங்கால் பின்தொடரப்பட்டுச் சென்ற ஒரு மனிதனைப் பற்றியது. விமான எஞ்சினின் தாலாட்டும் ஒரு சீரான ஓசையில் எல்லாம் குழம்பி மங்கி, சாம்பல் நிற மூட்டத்தில் கரைந்தன. யுத்தமோ, வெடிகுண்டுத் தாக்கோ இல்லை, கால்களில் சித்ரவதையான, இடைவிடாத, நச்சரிக்கும் வலியும் இல்லை, மாஸ்கோவுக்குத் தன்னை ஏற்றிச் செல்லும் விமானமும் இல்லை, இவை எல்லாமே பிள்ளைப் பருவத்தில் தொலைதூரக் கமீஷின் நகரத்தில், தான் படித்த அற்புதக் கதையில் வரும் வருணனைகள் தாம் என்பதே உறங்கத் தொடங்கிய அலெக்ஸேயின் மனதில் கடைசியாக எழுந்த எண்ணம்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

ஓட்டுப் போடலங்குற கோவத்துல மோடி எதுனாலும் பண்ணலாம் – மக்கள் கருத்து | காணொளி

மீண்டும் மோடி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வந்தது குறித்தும், தமிழகத்தில் பாஜக வரமுடியாமல் போனதன் காரணம் குறித்தும் தமிழக மக்கள் பதிலளிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாது இன்னும் ஐந்தாண்டுகால பாஜக ஆட்சி என்ன அட்டூழியங்களை நடத்துமோ ? என்ற அச்சத்தையும் சென்னையில் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் தங்கள் கருத்துக்களில் வெளிப்படுத்துகின்றனர்.

பாருங்கள் ! பகிருங்கள் !

வினவு களச் செய்தியாளர்கள்

பழங்குடிகளின் நிலம் , மொழி , பண்பாட்டைக் காக்கும் நக்சல்கள் !

0

இந்த கட்டுரை கடந்த  2015-ம் ஆண்டு மே மாதம் தி வயர் இணையதளம் தொடங்கப்பட்ட போது வெளியிடப்பட்ட கட்டுரை. மக்களின் வாழ்க்கை பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் குறித்து உணர்த்தும் ஒரு கட்டுரை இது. கடந்த 2019, மே 11 அன்று தி வயர் இணையதளம் இக்கட்டுரையை மீள்பிரசுரித்தது.

மக்களின் மொழியில் நக்சல்கள் பேசும் போது

து டிசம்பர் மாத துவக்கம். கும்மிருட்டும், கடுங்குளிரும் பீஜபுர் காடுகளை ஒவ்வொரு நாளும் அலங்கரிக்கும். அப்படி ஒர் இரவில் மராட்டிய எல்லைக்கு அடுத்து இந்திராவதி ஆற்றின் கரையோரத்திலிருக்கும் பீட்ரே கிராமத்தில் உள்ளூர்வாசிகள் சிலர் சடசடவென்று எரிந்து கொண்டிருக்கும் நெருப்புக்கருகில் கூடியிருக்கின்றனர்.

அங்கு பெரும்பாலான குடும்பங்களில் தொலைக்காட்சி கிடையாது. மாலைப் பொழுதுகளில் நெருப்பருகே கூடியிருப்பதுதான் அவர்களுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. அதுதான் தக்க தருணமென்று ஒரு பாடலை போடுவதற்காக தன்னுடைய செல்பேசியை ஒரு அரசாங்க ஊழியர் எடுக்கிறார்.

நான் ஒரு மடத்தனமான பாலிவுட் பாடலைதான் எதிர்பார்த்திருந்தேன். சத்திஸ்கரை சுற்றிலும் பேருந்துகளில் இப்பாடல்களை நான் கேட்டிருக்கிறேன். உறுதியான நக்சல்கள் பிரச்சினையால் குண்டும்குழியுமான இந்த நீண்ட கரடுமுரடான சாலைகளில் பயணிக்கையில் இவைதான் மக்களுக்கு பிடித்தவையாக இருக்கின்றன.

ஆனால் ஒரு பெண்ணின் பூரிப்பான மற்றும் கம்பீரமான குரல் கோரஸுடன் அந்த போனிலிருந்து வெளிப்பட்டது.

அவள் தன்னுடைய காதாநாயகன் மீதுள்ள அன்பினால் பாடுகிறாள். அவளது நிலத்தினை பாதுகாக்க உயிர்துறந்த தியாகி அவளது கதாநாயகன். “நீ போராடி பாதுகாத்த இந்த கானகத்தின் அழகு உன்னை இழந்து வாடுகிறது. நீ எங்கே இருக்கிறாய்? உன்னுடைய குரல் எங்கே? எங்களால் அதை கேட்க முடியவில்லை”. இப்பாடலின் தோற்றுவாய் மற்றும் உண்மைத்தன்மையில் சற்றே சந்தேகம் இருக்கலாம்.

இது நக்சல்களை ஆதரிக்கும் பாடல். ஆனால் இக்கூட்டம் நக்சல்களின் கூட்டமல்ல. சாதாரண மக்களின் கூட்டம். அவர்கள் எதற்காக வெளிநபரின் முன் வெளிப்படையாக போராளிகளின் பாடலைப் பாடுகின்றனர்?

வானொலியில் போராளிகள் :

நக்சலின் பாடல்கள் எந்த அளவிற்கு எதிரானவர்களிடம் கூட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இது காட்டுகிறது. பழங்குடி மக்களின் கோண்டி மற்றும் ஹல்பி மொழிகளில் அவர்களது பாடல்கள் இருப்பதுதான் மக்களுடனான நக்சல்களின் ஐக்கியத்திற்கு காரணம்.

“எங்களது நேரத்தைப் போக்க எப்போதுமே இப்பாடல்களை நாங்கள் கேட்கிறோம். உள்ளூர் போலீஸ்காரர்கள் சிலர் கூட இந்தப் பாடல்களை வைத்திருக்கிறார்கள்” என்று ஒரு கிராமவாசி கூறினார். இப்பாடல்களை நகரிலுள்ள கடைகளில் வாங்கி தங்களது கைப்பேசியில் மக்கள் சேமித்து கொள்கிறார்கள்.

இந்தி அம்மக்களிடம் நெருக்கமாக இல்லாத சூழலில் பாடல்களையும் இன்னப்பிற பொழுதுபோக்கு அம்சங்களையும் பழங்குடி மக்களது தாய்மொழியில் கொண்டு சேர்ப்பது நக்சல்களின் உலகப்பார்வைக்கும் உள்ளூர் மக்களிடம் ஐக்கியமாவதற்கும் முதன்மையான காரணியாக இருக்கிறது. பழங்குடி மொழிகளை நக்சல்கள் பயன்படுத்தும் அதே நேரத்தில் உள்ளூர்மக்கள் மீது இந்தியை திணித்து அவர்களது மொழிகளை அரசாங்கம் புறக்கணிக்கிறது.

இந்திராவதி ஆற்றங்கரையின் புகைப்படம் (நன்றி – தி வயர்)

சத்திஸ்கரில் உள்ள பள்ளிகளில் இந்த திணிப்பை நாம் நன்கு அறியலாம். மாநில அரசு பழங்குடி மக்களின் மொழிகளை பாடநூல்களில் புறக்கணிக்கும் சூழலில் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் கோண்டி மொழிக்கு சிறப்பு கவனத்தை நக்சல்கள் கொடுக்கின்றனர். தண்டகாரன்யா வித்யா வைபக் (Dandakaranya Vidya Vibhag) மூலம் சில அரிய கணித மற்றும் அறிவியல் நூல்கள் இந்த ஆசிரியருக்கு கிடைத்தன.

தண்டகாரன்யா வித்யா வைபக் என்பது நக்சல்களது கல்விசார் அமைப்பு. இது பல்வேறு நூல்களை கோண்டி மொழியில் (பெரும்பாலும் சாதாரன கணிணி அச்சு பொறியில்தான் அச்சிடப்படுகிறது) வெளியிடுவது மட்டுமல்லாமல் கையாலும் எழுதப்பட்டு பகிரப்படுகிறது. இந்த குறிப்பிட்ட விசயத்தில் அரசாங்கத்தை விட நக்சல்களின் கை ஓங்கியுள்ளது.

கோண்டி மொழிக்கென புதிய எழுத்து முறையை நக்சல்கள் உருவாக்கியதாகவும் தற்போது அம்மொழி தேவனாகரி வடிவத்தில் எழுதப்படுவதாகவும் முன்னாள் நக்சல் போராளி ஒருவர் உறுதிப்படுத்தினார். இது பழங்குடி மக்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்கவும் அவர்களது மொழிக்கென சிறப்பான தகுதியை அளிப்பதற்கான ஓர் முயற்சி. கோண்டி எழுத்து சீர்திருத்த பரிந்துரைகளுடன் பல்வேறு அணிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை கூடினாலும் அம்முயற்சி முழுமையாக நடைமுறைபடுத்தப்படவில்லை.

படிக்க:
சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !
♦ சத்தீஸ்கர் : பெண்களின் மார்பில் மின்சாரம் பாய்ச்சும் அரசு பயங்கரவாதம் !

2013 -ல் வடிவமைத்து கொண்டிருந்த கடைசி எழுத்து ‘T’ என்று நினைக்கிறேன். பின்னர் D.V.V -விடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அடுத்தடுத்த வடிவமைப்பிற்கான ஒருமித்த கருத்திற்கு எங்களால் வர முடியவில்லை என்று அவர் கூறினார். மறுபுறம் 25 இலட்ச கோண்டி மொழி பேசுபவர்கள் இருந்தாலும் எட்டாவது அட்டவணையின் கீழ் அதற்கு அங்கீகாரம் அளிக்காமல் அதை விட குறைவான எண்ணிக்கை கொண்ட மொழிக்கு மாநில அரசு அங்கீகாரம் கொடுக்கிறது.

மொழி மற்றும் கலாச்சார ரீதியில் மக்களை தொடர்பு கொள்ளும் அவர்களது மற்றுமொரு அமைப்பு சேட்னா நாட்யா மஞ்ச் (Chetna Natya Manch) எனும் நாட்டுப்புற நாடக மற்றும் நடனக் குழு. மின் தொழில்நுட்ப ரீதியிலான பொழுதுபோக்குகள் இல்லாத நிலையில் உள்ளுர் மொழியில் இம்மதிரியான நேரடியான நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு அதிகம் கிடைக்கிறது.

இந்திய அரசாங்கத்தின் பழங்குடிகள் மற்றும் அவர்களது இயற்கை வளங்களுக்கு எதிரான சுரண்டல், முதலாளிகள் மற்றும் சாதிய ஒடுக்குமுறையாளர்களுக்கு இடையிலான கூட்டுச்சதி ஆகியவற்றை பற்றி அவர்களது நாடகம் மற்றும் பாடல்கள் பேசுகின்றன. இப்படி பழங்குடிகள் மையத்தில் சேட்னா நாட்யா மஞ்ச் வெற்றிகரமாக இயங்கி வரும் சூழலில் கடுமையாக பாதிக்கப்பட்ட சுக்மா மாவட்டத்தில் அரசுக்கு ஆதரவான பரப்புரை குழு ஒன்றை போலீசு இறக்கியுள்ளது.

பொதுவான மொழியை கண்டறிதல் :

விவசாயம் மற்றும் மருத்துவத்திற்கு உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவது மக்களுடன் நக்சல்களின் ஐக்கியத்திற்கு உதவுகிறது. விவசாயம் செய்வது குறித்தும் கால்நடை வளர்ப்பு குறித்தும் கோண்டி பாடநூல்களில் அறிவுரைகள் இருக்கின்றன. அதே போல ஆங்கில நூல்களிலிருந்து கோண்டி மொழிக்கு பெயர்க்கப்பட்ட மருத்துவ குறிப்புகளை மருத்துவ ஊழியர்கள் எங்கும் எடுத்து செல்கின்றனர். மனித உடற்கூறியல் குறித்த எடுப்பான படங்கள் கொண்ட நூல் ஒன்றை கட்டுரையாளரும் பெற்றிருக்கிறார்.

மனித உடற்கூறியல் குறித்த எடுப்பான படங்களுடன் கோண்டி மொழியில் வெளியிடப்பட்டுள்ள நூல்.

இது வெறுமனே கோண்டி மொழி குறித்த அறிவு என்று சுருக்கி விட முடியாது. உள்ளூர் தாவரங்கள் மற்றும் விலங்குகள் குறித்த பொறாமைப்படத்தக்க அறிவைத்தான் இது வெளிப்படுத்துகிறது. இதே எழுத்தாளாரின் வேறொரு நூலான “மாவா ஜங்கல், மாவா தவாய்”( Mava Jangal, Mava Dawai) – பாஸ்தாரிலுள்ள தாவரங்களைப் பற்றிய தகவல் களஞ்சியம் என்று பாராட்டப்பட்டது. சான்றாக, வயிற்றுப்போக்குக்கு யென் எனும் ஊள்ளூர் தாவரத்தின் வேரை பொடியாக்கி நாள்தோறும் சாப்பிட வேண்டும் என்று அது கூறுகிறது. மறுபுறமோ பழங்குடிகளது அறிவு வளத்தை பற்றி தெரிந்து கொள்ள அரசிற்கு அக்கறையில்லை. மாறாக மண்ணிற்கடியில் உள்ள வளத்தை பற்றிதான் அதிக அக்கறை கொள்கிறது.

உள்ளுர் மக்களது கோண்டி மற்றும் இதர மொழிகளை நக்சல்கள் ஆழமாக பயன்படுத்துவது என்பது அரசு ஒருபோதும் செய்யாத அல்லது செய்ய முடியாத ஒரு செயலாகும். நக்சல் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கோண்டி மொழியில் குழந்தைகள் படிக்க சத்திஸ்கரிலுள்ள பள்ளிகளோ சமீபத்தில்தான் அதுவும் சில குறிப்பிட்ட தலைப்புகள் மட்டுமே கோண்டி மொழியில் படிக்க உரிமையளித்துள்ளன.

நக்சல்களது கோண்டி பாடல்கள் உள்ளூர் மக்களை பல்லாண்டுகளாக மகிழ்வித்துக் கொண்டிருக்க அரசாங்கமோ வானொலி சேவையில் கூட பழங்குடி மொழிகளுக்கு இடமளிக்கவில்லை. பழங்குடியல்லாத மூத்த நக்சல் தலைவர்கள் கூட முயற்சி செய்து கோண்டி மொழியை கற்கும் அதே வேளையில் பல்வேறு மூத்த அரசு அதிகாரிகள் பழங்குடி மொழிகளை கற்க வேண்டிய அவசியத்தை உணரவில்லை.

அரசிற்கு படிப்பினை :

நக்சல்கள் பழங்குடிகளல்ல “வெளியாட்கள்” என்று தொடர்ந்து அரசாங்கம் முத்திரை குத்துகிறது. ஆனால் யார் இங்கே உண்மையான வெளியாள் என்கிறார் இந்திய கம்யுனிஸ்டு கட்சியை சேர்ந்த பாஸ்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மனிஸ் குஞ்சம். “பழங்குடி மக்களது மொழியையும் கலாச்சாரத்தையும் நன்கு கற்றுக்கொண்ட நக்சல் தலைவர் வெளியாளா? அப்படியென்றால் பழங்குடிகளை பற்றி ஒன்றுமே தெரியாத அரசாங்க அதிகாரி எப்படி உள்ளூர்வாசியாக இருக்க முடியும்?” என்று கேட்கிறார்.

படிக்க:
மராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது !
♦ #MeToo – வில் விடுபட்ட பழங்குடியின – பட்டியலின பெண்களின் ‘கண்ணியத்துக்கான பேரணி’ !

“பழங்குடிகளுக்கான முழுமையான குடிமக்கள் என்ற அங்கீகாரத்திற்கு முதலில் அவர்களது மொழிகளுக்குத் தேவையான இடத்தை அரசு ஒதுக்க வேண்டும்”. ஆனால் எதார்த்தத்தில் அது நடப்பதில்லை என்று இந்திய மக்கள் மொழியியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் கணேஷ் தேவி கூறுகிறார். புறக்கணிக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தப்பட்டதன் எதிர்வினைதான் வன்முறையாக வெடிக்கும் அவர்களது கோபம். ஒரு சரியான மொழி அங்கீகாரம், அந்த கோபத்தை சற்று ஆற்றுப்படுத்தும் என்று கூறினார்.

“இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு” எதிரான போரை வென்றெடுக்க அரசினுடைய திட்டத்தின் ஒரு அடித்தளமாக பழங்குடிகள் இருக்கிறார்கள் என்று பொதுவாக கூறப்படுகிறது. பாதுகாப்பை பராமரிப்பதற்கும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்குமான உறுதியான அணுகுமுறைகளுக்கு அப்பால், உள்ளூர் மொழிகளுக்கு மதிப்பை கொடுக்கும் மென்மையான அணுகுமுறைகளை அரசாங்கம் கையாள வேண்டும். இது வெறுமனே மொழியியல் சார்ந்து மட்டுமல்லாமல் அம்மொழிகள் மூலம் வெளிப்படும் பழங்குடிகளது வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் அறிவு ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்க வேண்டும்.

இதை அங்கீகரிப்பதிலும் அதன் மீது செயலாற்றுவதிலும் நக்சல்கள் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றனர். பழங்குடிகளது எதிர்காலத்திற்கு அவர்களது மொழிகளுக்கு சிறிய அளவே பங்கிருப்பதாகவே அரசாங்கம் பார்க்கிறது. தாண்டேவாடா ஆட்சியாளர் அலுவலகத்திலுள்ள ஒரு விளம்பர அட்டை எதிர்காலத்தை தெளிவாகக் காட்டுகிறது. சிப்பந்திகள் மற்றும் மெக்கானிக்குகளது புகைப்படங்களை ஏந்திக்கொண்டு உள்ளூர் தொழில்முறை பள்ளிக்கூடங்களுக்கு பழங்குடிகள் செல்வது போல அதில் காட்டப்பட்டிருக்கிறது. இக்கனவைதான் மண்ணின் மைந்தர்களுக்கு இந்த அரசாங்கம் விற்கிறது.

அதனால்தான் இதனை அவர்கள் மீதான அரசாங்கத்தின் மொழியியல் ரீதியான பராமுகம் என்கிறார் கோண்ட்வானா தர்ஷன் (Gondwana Darshan) எனும் பழங்குடி மாத இதழை நடத்தும் தாகூர் இரமேஸ் குஷ்ரோ. நேர்மைக்கு பதிலாக சம்பிரதாயமே அரசாங்கத்தின் செயல்பாடாக இருக்கிறது என்று மேலும் அவர் கூறினார்.


கட்டுரையாளர்: Debarshi Dasgupta
தமிழாக்கம்: சுகுமார்
நன்றி : தி வயர்